Wednesday, May 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 635

கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !

3

யாருக்கு-எதற்கு-ஏன் சுதந்திரம் என்பதறியாமல், 68-வது சுதந்திர தினத்தை அப்பாவித்தனமாக கொண்டாடும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் மோடி முதல் லேடி வரை ஊடகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை வலுக்கட்டாயமாக கொண்டாடச் சொன்ன இந்த சுதந்திரம் உண்மையில் எப்படி இருக்கிறது?

ஹுண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்துக் கொடுக்கும் ஜி.எஸ்.ஹெச் (GSH) என்கிற பன்னாட்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகிறது. பிற பன்னாட்டு கம்பெனிகளைப் போலவே ஜி.எஸ்.ஹெச் -ம் தொழிலாளர் நல சட்டங்களை மயிரளவு கூட மதிப்பதில்லை. அதற்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.ஹெச் ஒரு கொரிய நிறுவனம். இங்கே பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இந்த 300 நிரந்தரத் தொழிலாளிகள் செய்யும் வேலை ஒன்றென்றாலும் 100 பேரை தனியாகவும், 200 பேரை தனியாகவும் நிர்வாகம் பிரித்து வைத்திருக்கிறது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களில் 100 பேர் வெவ்வேறு நிறுவனங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகு இங்கே வேலைக்கு வந்தவர்கள், இயந்திரங்களை இயக்கும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள். ஆனால் அவர்களை தொழிலாளர்களாக வரையறுக்காமல் தொழிலாளிகளுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது.

மற்றொரு பிரிவினரான 200 பேரை தொழிலாளர்கள் என்று கூறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்குகிறது. இந்த 200 பேரில் யாருக்கும் தொழில்நுட்ப அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது. ஆனால் இவர்கள் அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுகின்றனர், வேலை செய்கின்ற நேரமும் குறைவு. இந்த 200 பேரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் இவர்கள் தொழிலாளிகள் என்கிற பெயரில் நிர்வாகத்தின் அடியாட்களாக ஆலைக்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் 100 பேராக உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க ஒற்றுமையுடன் 2013-ம் ஆண்டு மே மாதத்தில் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யில் தம்மை இணைத்துக் கொண்டு ஆலையில் சங்கத்தை துவங்கினர். சங்கம் துவங்கிய நாள் முதல் நிர்வாகம் பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தது. 2013 ஜூலையில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தின் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே 43 தொழிலாளிகளை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளர்களை இவ்வாறு நீக்குவது சட்டவிரோதமானது. தொழிற்தகராறு சட்டம் 1947, பிரிவு 33-ன் படி ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, மாறாக அவர்களின் வேலைக்கு உத்திரவாதமளிக்க வேண்டும்.

ஆனால் ஜி.எஸ்.ஹெச் எந்த சட்டத்தையும் மதிக்காமல் தொழிலாளர்களை வீதியில் விட்டெறிந்தது. நீக்கப்பட்ட 43 தொழிலாளிகளும் 10 பேர், 12 பேர் என்று நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு படிப்படியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். முதல் பிரிவு தொழிலாளிகள் வெளியேற்றப்பட்டதும் பு.ஜ.தொ.மு சார்பாக தொழிலாளர் உதவி ஆணையரிடம் இது சட்டவிரோதம் என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு முறையும் “அப்படியா சரி, ஒரு புகார் கொடுங்க” என்று புகாரை வாங்கி வைத்துக் கொண்ட தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீதமுள்ளவர்களை நீக்குவதற்குள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. “நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையிலிருக்கும் போதே நிர்வாகம் சட்டவிரோதமான முறையில் 43 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது, இது சட்டவிரோதமானது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையத்திடம் பல முறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு முடியும் வரை பிற தொழிலாளர்களை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்குவதோ வேறு எந்த நடவடிக்கையுமோ எடுக்கக்கூடாது” என்று நிர்வாகத்திற்கு எதிராக தடையாணை பெறப்பட்டது.

இதற்கிடையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர் விரோதப் போக்காகும் என்று திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்வாகத்தின் மீது குற்றவியல் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 2013 ஜூலையில் போடப்பட்ட இவ்வழக்கு 2014 ஜூலையில் முடிந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த உத்தரவும் போடவில்லை. ஏன் என்று கேட்டபோது சில டெக்னிக்கல் வேலைகள் இருக்கின்றன அவை முடிந்ததும் ஆர்டர் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

ஒரு புறம் சட்டவிரோத வேலை நீக்கத்திற்கு எதிரான வழக்கு, மறுபுறம் உரிமைகளுக்கான வழக்கு, தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிரான வழக்கு என்று நிர்வாகத்தின் மீது மொத்தம் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒரு வழக்கில் கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் வேலை நீக்க நடவடிக்கையில் இறங்கியது. 43 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான தடையாணை அமுலில் இருக்கும் போதே 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பிற்கு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுப்பட்டது. “இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19-ன் படி எங்களுக்கு சங்கம் அமைப்பதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் நிர்வாகம் அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது. எனவே ஒரு குடிமகன் என்கிற வகையில் எங்களுடைய அடிப்படை உரிமைகளை மாவட்ட ஆட்சியராகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்” என்று மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மீண்டும் ஜூலையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது, அதற்கும் பதில் இல்லை.

தொழிலாளர் ஆணையர், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என அதிகார மற்றும் நீதித்துறை அனைத்தும் கொரிய முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அனைத்து அரசு அதிகார அமைப்புகளும் ஜி.எஸ்.ஹெச் என்கிற பன்னாட்டு கம்பெனிக்கு விசுவாசமான நாய்களாக நடந்துகொண்டன. இறுதியில் 2014 ஜூலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியரை பார்த்து, “நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக குடும்பத்துடன் உண்ணவிரதம் இருப்போம்” என்று தொழிலாளர்கள் கூறினர். அவரோ, ”அது உங்க உரிமை, உங்க சுதந்திரம், நீங்க இருந்துக்கங்க” என்றார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 அன்று காலை, மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும் நேரத்தில் “இந்திய குடிமகனின் உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்கிறது இதில் கொடியேற்றம் ஒரு கேடா” என்று போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்காக தொழிலாளர்கள் வெவ்வேறு வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வந்து கொண்டிருந்த சிவப்பு சட்டை அணிந்திருந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி எங்க போற என்று விசாரித்து ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்களை மட்டும் கைது செய்தது.

கைது செய்ய காரணம் வேண்டும் அல்லவா? எனவே தமது வாகனங்களை தாமே அடித்து உடைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரனை விட்டு மற்றொரு போலீஸ்காரனை அடித்து காயமடைந்தது போல செட்டப் செய்துவிட்டு தொழிலாளர்கள் தான் தாக்கினர் என்று கூறி தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, கைது செய்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே போலீசு ரவுடிகள் மிகப்பெரியதொரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சாலைகளில் தடுப்பரண்களை போட்டு தொழிலாளர்களை சுற்றி வளைத்து தாக்கி கை கால்களை உடைத்திருக்கின்றனர். கைது செய்தவர்களை வாகனத்தில் ஏற்றும் போது முழக்கமிட்ட பல தொழிலாளர்களை குத்தியதில் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. வண்டியில் ஏற்றிய பிறகு வயிற்றில் குத்தி கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்கள். உடம்பில் அடிபடாத இடம் எதுவும் இல்லை என்கிற அளவுக்கு தொழிலாளர்களை அடித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கூடி தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை கேட்டதற்காக கிடைத்த சுதந்திர தின பரிசு. போலீசின் அனைத்து ரவுடித்தனங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டு தான் நின்றிருக்கிறார்.

தற்போது 150 தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஓய்வு பெற்ற ASP, DSP உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். பதவியில் இருக்கின்ற போலீசாரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கிழட்டு நரிகள் பன்னாட்டு கம்பெனியின் நலனுக்காக பேயாட்டம் போட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரின் முன் உரிமைக்காக போராடிய தொழிலாளிகளை ஒடுக்குவதே சட்டத்தின் ஆட்சி என்பதை நிரூபிக்கிறார்களாம். சுதந்திர தினத்தன்று தொழிலாளிகளின் போராட்டம் கருப்பு மையாக மாறிவிடக் கூடாது என அவர்களின் ரத்தத்தை சிந்த வைத்து சிவப்பாக்கி குதூகலித்திருக்கின்றனர்.

தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கிரிமினல்களை போல கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை. கடந்த வாரத்தில் இதே போல புதுச்சேரி மாநிலத்தில் போராடிய தொழிலாளார்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாருதி தொழிலாளர்களுக்கும் இது தான் நேர்ந்தது. இது தான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் போலியானது, பொய்யானது என்பதற்கு இவற்றை விட என்ன நிரூபணம் வேண்டும்?

இந்த சட்டங்களும், நீதிமன்றமும், சமூக அமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கு எதிரானவை என்பதற்கு இந்த போராட்டம் மட்டுமல்ல நாட்டில் நாள்தோறும் நடக்கும் பல்வேறு போராட்டங்களும் சான்றாக அமைகின்றன.

ஆகஸ்டு 15 சுதந்திரம் மக்களுக்கில்லை என்பதை சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போதே நிரூபித்திருக்கிறது இந்த அரச வன்முறை. இந்த தொழிலாளிகளுக்கு நேர்ந்ததுதான் தமக்கும் என்று உழைக்கும் மக்கள் உணரும் போது இந்த வன்முறை நேரெதிராக திரும்பும். உரிமைகளையும், உடமைகளையும் இழந்து வாழும் மக்களை எப்போதும் அடிமைகளாகவே நடத்தலாம் என்று ஆளும் வர்க்கம் நினைப்பது ஒரு போதும் தொடராது. சிந்திய ரத்தமும், சிறை வாசமும் அதே தொழிலாளிகளை இரும்பென உறுதிப்படுத்தும்.

அந்த உறுதி உழைக்கும் மக்களையும் பற்றும் போது ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவோ இல்லை ஆண்டவனோ கூட நினைத்தாலும் உடைக்க முடியாது. அடக்குமுறையை தொடர முடியாது.

பன்னாட்டு நிறுவனம் GSH ஏவி வருகின்ற உரிமை பறிப்பு அடக்கு முறைகளை முறியடிப்போம் !

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்)

–    வினவு செய்தியாளர்.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

24

“முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. முஸ்லிம்கள் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்கள் இந்துக்களை எதிர்த்துக் கொண்டே எத்தனை நாள் வாழ்ந்து விட முடியும்?

சுதர்சன் ராவ்
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பார்ப்பனக் கோமாளி சுதர்சன் ராவ்.

அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலும் மசூதியை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தற்போது மத்தியில் நடந்திருப்பதைப் போல மாநிலம் தோறும் இந்துக்களின் ஒருங்கிணைவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மோடி ஒரு முன்மாதிரியான ஆர்.எஸ்.எஸ். ஊழியர். முந்தைய (வாஜ்பாயி தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் போல அல்லாமல், இந்த முறை இந்துத்துவ திட்டங்களை மோடி நிறைவேற்றிக் காட்டுவார். எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனைச் சட்டப்படியே செய்து முடிப்போம்”

“இந்துஸ்தான் டைம்ஸ்” நாளேட்டிற்கு (ஜூலை, 14) விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் அளித்திருக்கும் பேட்டியின் சுருக்கம் இது.

இந்த அப்பட்டமான மதவெறிப் பேச்சுக்காக சிங்கால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை. “சிங்காலின் இந்தப் பேச்சுக்கு எதிராக எந்தவித கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, கோபத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், ஒரு தேசம் என்ற முறையில் பெரும்பான்மை சமூகத்தின் மதவெறியை ஒப்புக் கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று குமுறியிருக்கிறார் தீஸ்தா சேதல்வாத்.

முந்தைய வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் (1999-2004) இத்தகைய அறிக்கைகள் வெளிந்தால், உடனே “ஆர்.எஸ்.எஸ். -இன் இரகசியத் திட்டம் அம்பலம்” என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுவார்கள். உடனே வாஜ்பாயி அதனை மறுத்து, “நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை மீற மாட்டோம்” என்று பெயருக்கு ஒரு வாக்குறுதி அளிப்பார். இன்று குறைந்த பட்ச திட்டமும் இல்லை, கூச்சலும் இல்லை.

இந்து ராஷ்டிரத்தைச் சட்டப்படியே நிறுவ முடியும் என்று கூறுகிறார் சிங்கால். இந்து பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலமே முறியடித்து விட முடியும் என்று நம்புகிறவர்களும், நம்பச் சொல்கிறவர்களும்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

***

ளர்ச்சி என்ற சொல் அயோத்தி என்று காதில் ஒலிப்பது போலவும், முன்னேற்றம் என்ற சொல் இந்து ராஷ்டிரம் என்று பொருள் தருவதைப் போலவும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்குள் இந்து மதவெறியை பொதித்து வைத்துத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய மோடி, முதல் நாடாளுமன்ற உரையிலேயே தனது முகமூடியை விலக்கிக் காட்டிவிட்டார். 200 ஆண்டு கால பிரிட்டிஷ் காலனியாதிக்க அடிமைத்தனம் என்று நினைவு கூர்கின்ற மரபை மாற்றி, 1200 ஆண்டு கால அடிமை மனோபாவம் என்று பேசினார். முகலாய ஆட்சிக் காலத்தையும் அந்நிய ஆதிக்கமாகச் சித்தரிக்கும் அந்த மதவெறிப் பேச்சை மறுத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பவில்லை.

வென்டி டோனிகர்
பென்குயின் நிறுவனத்தால் அச்சிடப்பட்டு பின் அழிக்கப்பட்ட “இந்து மதம் – ஒரு மாறு வரலாறு” என்ற நூலின் முகப்பு அட்டை. (வலது) அந்நூலின் ஆசிரியர் வென்டி டோனிகர்.

மோடியின் பட்ஜெட்டிலோ, ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி மற்றும் தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார ரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வுத் திட்டம் போன்ற நேரடியான பார்ப்பன இந்துமதவாத திட்டங்களை எதிர்க்கட்சிகள் சாடவில்லை.

இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக பார்ப்பன வெறி பிடித்த சுதர்சன் ராவ் என்ற கோமாளியை நியமித்திருக்கிறது மோடி அரசு. “சாதியமைப்பு என்பது நமது சிறந்த பாரம்பரியம், அந்தக் கலாச்சார பாரம்பரியத்தை மீட்கவேண்டும்”; “ராமாயணமும் மகாபாரதமும் புனைவுகள் அல்ல, வரலாற்று உண்மை”; “இரான், இராக், ஆப்கானிஸ்தான் தொடங்கி தென்கிழக்காசியா வரையில் அகண்ட பாரதம் பரவியிருந்த காரணத்தினால், அங்கெல்லாம் நமது தொல்லியல் ஆய்வை விரிவுபடுத்த வேண்டும்” – என்பனவெல்லாம் சுதர்சன் ராவ் தெரிவிக்கும் கருத்துகள்.

குஜராத் மாநில அரசு இந்துத்துவ அறிவுத்துறை அடியாட்படையின் தலைவரான தீனாநாத் பாத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுதிய 9 நூல்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. அகண்ட பாரதம், ஆன்மீக பாரதம், ஒளிமயமான பாரதம், விஞ்ஞான பாரதம் என்ற பெயர்களிலான அந்த நூல்களில் காணப்படும் “அரிய” கருத்துகள் கீழ் வருவன:

“இன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் மகாபாரத காலத்திலேயே நமக்கு அது தெரியும். காந்தாரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டவுடன், வெளியேறிய சிதைந்த தசைப்பிண்டத்தை நூறு நெய்க்கிண்ணங்களில் போட்டு இரண்டாண்டுகள் பாதுகாத்த பின் அதிலிருந்து கவுரவர்கள் பிறந்தார்கள் என்று பாரதம் சொல்கிறது”;

“தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் என்கிறார்கள். மகாபாரத காலத்திலேயே யோக வலிமையால் திவ்ய திருஷ்டி மூலம் எங்கோ நடப்பதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் முனிவர்கள்”;

“அதேபோல, வேத காலத்திலேயே கார் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது”; “நம்முடைய பாரதபூமியை இந்தியா என்ற சூத்திர (இழிந்த) பெயரால் அழைத்து நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளக் கூடாது”; “நமது மதத்துக்காக உயிர் கொடுப்பது கவுரவம்; அந்நிய மதங்கள்தான் துயரங்களின் தோற்றுவாய்.”

– இவையெல்லாம் மேற்படி நூல்களில் காணப்படும் கருத்துகள். இந்த நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்ததற்காக மோடி எழுதியுள்ள பாராட்டுக் கடிதமும் அந்த நூல்களிலேயே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

தீனாநாத் பத்ரா, வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர். பத்ரா போட்ட வழக்கைத் தொடர்ந்து பென்குயின் வெளியீட்டு நிறுவனம் வென்டி டோனிகர் எழுதிய “இந்துமதம் – ஒரு மாற்று வரலாறு” என்ற நூலின் அச்சிட்ட பிரதிகள் அனைத்தையும் சென்ற பிப்ரவரி மாதம் அழித்தது. அடுத்து பிளாக் ஸ்வான் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்ட “மதவெறியும் பாலியல் வன்முறையும், அகமதாபாத் கலவரங்கள் பற்றிய ஆய்வு-1969 முதல்” என்ற நூலும் “நவீன இந்தியாவின் வரலாறு, பிளாசி முதல் பிரிவினை வரை” என்ற நூலும் சென்ற ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு செல்லாமல் முடக்கப்பட்டன. இவையெல்லாம் அசோக் சிங்கால் சொல்வது போல அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே இந்துத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகள்.

***

ட்டிஸ்கர் மாநிலத்தில் மக்கட்தொகையில் 1 சதவீதம் கூட இல்லாத கிறித்தவர்கள் இந்து மதத்துக்குத் திரும்புமாறு மிரட்டப்படுகிறார்கள். இந்து கோயிலுக்கு நன்கொடை தர மறுத்ததற்காக கிறித்தவர்களுக்கு ரேசன் மறுக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிப் புகார் செய்தவுடனே அம்மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லி மகாராட்டிரா பவனில் ரமலான் நோன்பிலிருந்த ஒரு இசுலாமிய ஊழியரின் வாயில் திமிர்த்தனமாக சப்பாத்தியைத் திணிக்கிறார் சிவசேனா எம்.பி. விச்சாரே. இந்த ரவுடித்தனம் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட போதிலும் அந்த ஊழியர் புகார் கொடுக்கவில்லை. போலீசும் வழக்கு பதிவு செய்யவில்லை. முசாபர்நகர் கலவரத்தை அம்பலப்படுத்தும் “ஏக் தினோ முசாபர்நகர்” என்ற ஆவணப்படத்துக்குத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்திருக்கிறது. கல்கத்தாவில் திரையிடுவதற்குக்கூட மம்தா அரசு அனுமதி மறுக்கிறது.

எதுவும் இலைமறை காயாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவை இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். -ன் சிந்தனைக் குழாமான விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசனில் நிரம்பியிருக்கும் ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினர்தாம் இப்போது மோடி அரசின் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். முன்னாள் உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநரும் விவேகானந்தா பவுண்டேசனின் நிறுவன இயக்குநருமான அஜித் டோவல்தான் தற்போது மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். அவசரச் சட்டத்தின் மூலம் மோடியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் நிருபேந்திர மிஸ்ரா, பவுண்டேசனின் செயற்குழு உறுப்பினர். கேந்திரமான துறைகள் அனைத்திலும் நியமிக்கப்படவிருக்கும் இந்த சிந்தனைக் குழாமின் பட்டியலை தெகல்கா இதழ் வெளியிட்டிருக்கிறது. ராம் நாயக், கேசரி நாத் திரிபாதி போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் களே கவர்னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உளவுத்துறை மூலம் ஊடகங்களில் கிசுகிசு செய்தி பரப்பப்பட்டு, வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியத்தின் நீதிபதி நியமனத்தை தடுக்கிறது மோடி அரசு. அதேநேரத்தில், குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் கொலைக் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான முகுல் ரோதகி உள்ளிட்டோர் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அமித் ஷா
மோடிக்கு அடியாளாகவும் “மாமா”வாகவும் வேலை பார்த்ததற்காக அமித் ஷாவிற்குக் கிடைத்த சன்மானம் பா.ஜ.க.-வின் தேசியத் தலைவர் பதவி.

இஷ்ரத் ஜகான் கொலை வழக்கின் குற்றவாளியும், மோடிக்காக பெண்ணை வேவு பார்த்து, அது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஒலிநாடாக்களை வெளியிட்டவருமான ஐ.பி.எஸ். அதிகாரி சிங்கால் குஜராத்தில் மீண்டும் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சோரபுதீன் ஷேக் கொலை வழக்கின் குற்றவாளியான தினேஷ் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை ராஜஸ்தான் அரசு மீண்டும் பணி நியமனம் செய்திருக்கிறது. முசாபர்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சஞ்சீவ் பலியானும், ராஜஸ்தானில் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிகால் சந்தும் மத்திய அமைச்சர்களாக நீடிக்கிறார்கள். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, மோடிக்காக போலி மோதல் கொலைகள் முதல் பெண்ணை வேவு பார்ப்பது வரையிலான எல்லா குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட அமித் ஷாவை பாரதிய ஜனதாவின் தலைவராக நியமித்திருக்கிறார் மோடி.

மோடி அரசின் எல்லாவிதமான பாசிச கிரிமினல் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்பின்றியும் அரங்கேறுகின்றன. “எங்களை ஆர்.எஸ்.எஸ். எதற்காக இயக்கவேண்டும்? எங்கள் உடம்பில் ஓடுவதே ஆர்.எஸ்.எஸ். ரத்தம்தான்” என்று திமிராகப் பேட்டி கொடுக்கிறார் உமா பாரதி. அது வெறும் திமிர்ப்பேச்சல்ல. இந்தித் திணிப்பு முதல் சமஸ்கிருத வார வரையிலான அனைத்து இந்துத்துவ திட்டங்களும் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

ஆட்சிக்கு வந்த கணத்திலிருந்தே ஒரு இனப்படுகொலையின் கோரத் தாண்டவத்துக்கு இணையான வேகத்துடனும் வெறியுடனும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் தீவிரமாக முடுக்கி விடப்படுகின்றன. சம்பிரதாயக் கூச்சல்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளிடமிருந்து இவற்றுக்கு வேறெந்த எதிர்வினையும் இல்லை.

“மசூதிகளை ஒப்படைத்து விடுங்கள்” என்று முஸ்லிம் மக்களுக்கு சிங்கால் விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கைக்கும், “காடுகள், நிலங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று பழங்குடி மக்களுக்கு பிரகாஷ் ஜவடேகர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கைக்கும் பாரிய வேறுபாடு இல்லை. மோடி அரசு இந்து ராஷ்டிரத்தை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நிறுவ விரும்புவதைப் போலவே, மறுகாலனியாக்கத்தையும் சட்டபூர்வமாகவே நிறைவேற்ற விரும்புவதால், சுற்றுச் சூழல் சட்டம் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் வரையிலான அனைத்தும் திருத்தப்படக் காத்திருக்கின்றன.

***

வற்றையெல்லாம் முறியடிப்பது எப்படி? முறியடிக்கப் போகிறவர்கள் யார்? “ஐந்தாண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்” என்பதுதான் எல்லா ஓட்டுக்கட்சிகளிடமும் உள்ள தீர்வு. அது அவர்களுக்கான தீர்வு. மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்வு அல்ல.

“மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் காங்கிரசின் கொள்கைகள்தான், குஜராத் மாடலே எங்களுடைய மாடல்தான்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ப.சிதம்பரம். உண்மைதான். நிதிஷ் குமாரில் தொடங்கி கருணாநிதி வரையில் எல்லோருடைய கொள்கையும் மன்மோகன் சிங்கின் கொள்கைதான். இதில் யாருக்கும் வேறுபாடு கிடையாது. திணிக்கும் வேகத்தில்தான் வேறுபாடு.

இந்து மதவெறி நடவடிக்கைகளைப் பொருத்தவரை, பாரதிய ஜனதாவின் எதிர்த்தரப்பாக காங்கிரசு தன்னைச் சித்தரித்துக் கொண்டாலும், அது ஒரு மிதவாத மதவாதக் கட்சி. இதுவரையிலான இந்து மதவெறிக் குற்றங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் தண்டிக்கப்படாமல் பாதுகாத்து வருவதும், பல குற்றங்களுக்கு உடந்தையாகவும் கள்ளக் கூட்டாளியாகவும் இருந்து வருவது காங்கிரசு கட்சிதான். மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளோ பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள். எல்லா கட்சிகளின் தலைமைகளிலும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் ஆதாயமடைந்த புதிய தரகு முதலாளிகளும் பணக்காரர்களும்தான் நிறைந்திருக்கிறார்கள். இக்கட்சிகளைப் பொருத்தவரை, இந்துத்துவ எதிர்ப்பு என்பது ஓட் டுப் பொறுக்குவதற்கான வாய்ச்சவடால் என்ற அளவுக்கு மேல் பொருளற்றது.

அதேபோல, புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்க்கமோ, புது வகைப் பார்ப்பனர்களாக, சாதித் திமிர் கொண்ட வர்க்கமாக உலா வருகிறது. சாதித்திமிரும் இந்துத்துவத் திமிரும் வேறல்ல. பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தாய்மொழிப்பற்று என்பனவெல்லாம் இந்த வர்க்கங்களுக்குத் தேவையற்றவையாகிவிட்டன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இம்மேட்டுக்குடி வர்க்கம் பார்ப்பன மேட்டுக்குடியுடன் சேர்ந்து வல்லரசுக் கனவு காண்கிறது. இந்த வல்லரசுக் கனவும் சுதர்சன ராவின் அகண்டபாரதக் கனவும் வேறல்ல. இவர்களெல்லாம் இத்தகைய கட்சிகளின் சமூக அடித்தளமாக இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஊர் ஊராக மோடியை அறிமுகப்படுத்தி, பா.ஜ.க.வுக்கு தளம் அமைத்துக் கொடுத்த வைகோ, ராமதாசு, விஜயகாந்த், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் முதலானவர்கள், “மோடி அரசு இந்துத்துவத்தை அமல்படுத்தாது” என்றும், “நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் என்றும், ராஜபக்சேவை அடக்கி வைக்கும்” என்றும் சான்றிதழ் கொடுத்தார்கள். தமது பதவிக்காகவும், பிழைப்புவாத ஆதாயங்களுக்காகவும் தெரிந்தே புளுகிவிட்டு, இன்று ஈழப்பிரச்சினை முதல் சமஸ்கிருத திணிப்பு வரையிலான அனைத்துக்கும் மோசடித்தனமாக ஒரு எதிர்ப்பு அறிக்கை விடுகிறார்கள்.

இது நாற்காலிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து திராவிட இயக்க மரபையும், பெரியாரையும் அகற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ற்கு இவர்கள் காலாட்படைகள். சாதி உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம்தான், தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்புணர்வு முதல் தமிழுணர்வு வரையிலான அனைத்தையும் ஒழிப்பது சாத்தியம் என்று திட்டமிட்டுத்தான் பாரதிய ஜனதாக் கட்சி இவர்களைக் களத்தில் இறக்கியிருக்கிறது. இனி இந்த வீடணர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பா.ஜ.க. பரவும். இதுநாள் வரை தமிழகம் இந்து வெறியர்கள் காலூன்ற இடம் கொடுக்காமல் அவர்களுக்குச் சவாலாக இருந்து வந்தது. இன்று மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் சவாலாக மாறியிருக்கிறது.

இன்று பார்ப்பன பாசிசம் அதிகாரத்துக்கு வந்திருக்கும் சூழல் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே புதிய தாராளவாதக் கொள்கைகள், மக்களின் வாழ்வுரிமை உள்ளிட்ட பல ஜனநாயக உரிமைகளைச் சட்டபூர்வமாகவே அரித்துத் தின்று விட்டன. அதனை நிறைவு செய்வதற்கு பார்ப்பன பாசிசம் வந்திருக்கிறது. இதனைத் தேர்தல் அரசியலுக்கு உட்பட்டு முறியடிக்க முயற்சிப்பது மட்டும்தான் நடக்கிற காரியம் என்றே பலரும் எண்ணுகிறார்கள்.

அது நடக்காத காரியம் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் தீஸ்தா. கல்லிலே நார் உரிப்பது போல இந்த நீதிமன்றத்தின் வழியாகவே குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள் பலரைச் சிறைக்கு அனுப்பியிருக்கும் தீஸ்தா, “ஒரு தேசம் என்ற முறையில் இந்துமதவெறியை ஒப்புக்கொள்வதற்கு நாம் பழகிவிட்டோம்” என்று கூறியிருப்பது வெறும் குமுறல் மட்டுமல்ல. அது கசப்பானதொரு உண்மை.

உயிரின் ஆதாரமான தண்ணீரை, காசுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கடைச்சரக்கு என்று மக்களை ஒப்புக்கொள்ள வைப்பதில் தனியார் மயம் எங்ஙனம் வெற்றி கண்டு விட்டதோ, அதே போல, முன்னர் மதவெறியாக கருதி வெறுக்கப்பட்ட நடவடிக்கைகளை இயல்பாக எடுத்துக்கொள்ளுமாறு பெரும்பான்மை மக்களைப் பழக்குவதிலும் இந்து பாசிசம் வெற்றி கண்டிருக்கிறது. அதனால்தான் பாபர் மசூதியை இடித்த டிசம்பர் 6-ம் நாளன்று, குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திமிராக உலா வர, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குற்றவாளிகளைப் போல அஞ்சி ஒடுங்கவேண்டியிருக்கிறது.

“யாருக்கான வளர்ச்சி, யார் இந்து?” என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குத் தீர்வு கூற முடிந்தவர்கள் மட்டும்தான் பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியும். இக்கேள்விகளை எழுப்பும் நேர்மையும் துணிவும் கொண்டவர்களும், அவற்றுக்கான விடை இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்ற உண்மையைக் கூறத் தயங்காதவர்களும் கம்யூனிச புரட்சியாளர்கள் மட்டுமே. வேறு யாரும் இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்க விழையும் ஜனநாயக சக்திகள் இந்த உண்மையை அங்கீகரிப்பதும் புரட்சிகர சக்திகளுடன் கைகோர்ப்பதும் அவசியம்.

– அஜித்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

இட்லரின் போப்: திருச்சபையின் பாசிச முகம்

3

(ஜனவரி 2000, புதிய கலாச்சாரம் இதழில் வெளியானது)

போப் வருகையையொட்டி ஆர்.எஸ்.எஸ். கிளப்பிய கிறித்தவ எதிர்ப்பு வெறியை குறித்து சென்ற இதழில் எழுதினோம். ஆனால் இந்து மதவெறி பாசிஸ்டுகளால் எதிர்க்கப்படும் போப்புகளும் ஹிட்லரின் அபிமானிகளாகவே இருந்தனர் என்பதை அடுத்த இதழில் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தோம். இதோ… இட்லரின் போப்!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
“போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன.”

ம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் வரியே கீழ்க்கண்டவாறுதான் துவங்குகிறது:

“ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன”

மார்க்சும் எங்கெல்சும் அன்றைய போப் ஒன்பதாம் பயஸ் கடைப்பிடித்த வெறிகொண்ட சோசலிச எதிர்ப்பை அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த போப்பாண்டவர்கள் அனைவருமே தமது நடத்தையின் மூலம் அறிக்கையின் முதல் வாக்கியத்தை தீர்க்கதரிசனமிக்க பிரகடனமாக்கிவிட்டனர்.

சென்ற மாதம் இந்தியாவிற்கு வந்த தற்போதைய போப் இரண்டாவது ஜான் பால், மறைந்த போப் 12-வது பயஸ் என்பவருக்கு புனிதர் பட்டம் வழங்கத் திட்டமிட்டிருந்தார். அது போலவே தெரசாவுக்கும் புனிதர் பட்டம் வழங்க வாடிகன் திட்டமிட்டுள்ளதை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

ஏசுவின் நேரடியான சீடர்கள் அனைவரும் புனிதர்களாகக் (Saints) கருதப்படுகின்றனர். புனிதர் என்று அழைக்கப்படுவோர் “இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்” என்ற தகுதியை உடையவர்கள். எல்லா போப்பாண்டவர்களும் கூட புனிதர்களாக அறிவிக்கப்பட்டு விடுவதில்லை. ஒருவரைப் புனிதர் என அறிவிக்க அவரது “தியாகம், சேவை, துறவு மனப்பான்மை, அற்புதங்களை நிகழ்த்தியிருத்தல்” போன்ற பல “கடுமையான” அளவுகோல்களை வாடிகன் வைத்திருக்கிறது.

கத்தோலிக்கத் திருச்சபை வழங்கும் பட்டங்களிலேயே அதியுன்னதமான இந்தப் பட்டத்தை ‘போப் 12-வது பயஸ்’க்கு வழங்குவது என்று தற்போதைய போப் முடிவு செய்திருக்கும் நிலையில் ஐரோப்பாவில் வெளிவந்துள்ள ஒரு நூல் கத்தோலிக்கத் திருச்சபையின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது.

ஜான் கார்ன்வெல்
ஜான் கார்ன்வெல் – நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்

ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு” எனும் நூலை ஜான் கார்ன்வெல் என்பவர் எழுதியுள்ளார். இவர் நாத்திகரோ, கம்யூனிஸ்டோ அல்ல. விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்.

போப்பையோ, வாடிகனையோ அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இவருக்கு ஆரம்பத்தில் எள்ளளவும் இல்லை. போப் – 12-வது பயஸின் வாழ்க்கை வரலாறு எழுதுவதுதான் இவரது திட்டம். இதற்கான தரவுகளைத் திரட்டுவதற்காக வாடிகனின் ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட இவர் அனுமதிகோரிய போதும் வாடிகன் நிர்வாகம் தயக்கமின்றி இவருக்கு அனுமதி வழங்கியது. இவரது முந்தைய நூல்கள் எதுவும் திருச்சபைக்கு எதிரானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.

ஹிட்லரின் இரத்தவெறி பிடித்த பாசிச ஆட்சிக்கும், அவன் நடத்திய யூதப் படுகொலைகளுக்கும் போப் 12-வது பயஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்தார் என்பதுதான் இந்நூலாசிரியரின் குற்றச்சாட்டு.

“வாடிகன் ஆவணங்களப் படிக்கப் படிக்க நான் தார்மீக ரீதியாகவே நிலை குலைந்து போனேன். இவற்றையெல்லாம் வெளிக் கொண்டு வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் கார்ன்வெல்.

ஐரோப்பா முழுவதும் இலட்சக் கணக்கான யூத மக்கள் நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய போப்பாண்டவரான 12-வது பயஸ் வாய்திறந்து ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கான விடை இந்நூலில் தரப்படுகிறது.

ஹிட்லரின் போப்
“ஹிட்லரின் போப் – 12-வது பயஸின் அந்தரங்க வரலாறு”

12-வது பயஸ் போப் ஆவதற்கு முன்னால் 1930-களில் வாடிகன் அரசின் செயலராக இருந்தார். 1933-ல் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி ஜெர்மன் அதிபராவதற்கு இவர் இரகசியமாக உதவினார் என்பதே முதன்மையான குற்றச்சாட்டு.

ஜெர்மன் மக்களில் பெரும்பான்மையினர் புரோட்டஸ்டென்ட் கிறித்தவர்கள். மக்கள் தொகையின் 1/3 பங்கினரான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் “கத்தோலிக்க மையக் கட்சி” எனும் கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு கிறித்தவ மையக் கட்சி உதவியது. பிறகு ஹிட்லர் அதிபராவதற்கு ஏதுவாக கத்தோலிக்க மையக் கட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டதாகவும் அறிவித்தது. 1933-ல் ஹிட்லருடன் இதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக்கினார் பயஸ்.

நாஜிக் கட்சியின் கட்டுப்பாடும் உறுதியான கம்யூனிச எதிர்ப்பும் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது. “நாஜிகள் மதப்பற்றுள்ளவர்களல்ல, எனினும் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் நல்லவர்கள் தான். மேலும் ஹிட்லர் ஆட்சியுடன் உறவு வைத்துக் கொள்வதே ‘பாவம்’ என்று கருத முடியாது” என்று குறிப்பெழுதியிருக்கிறார் 12- வது பயஸ்.

இப்படியொரு நாஜி ஆதரவு நிலையை போப் எடுக்காமல் இருந்திருந்தால், மக்கள் தொகையின் 1/3 பங்குள்ள கத்தோலிக்கர்களை ஹிட்லருக்கு எதிராகத் திருப்பியிருக்க முடியும். பல இலட்சம் யூதர்கள் கொல்லப்படுவதையும் ஓரளவேனும் தடுத்திருக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.

மாறாக நடந்ததென்ன? 1939-இல் ஹிட்லரின் எஸ்.எஸ். என்ற கொலைப் படையில் 25 சதவீதம் பேர் கத்தோலிக்கர்களாக இருந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட யூதக் கைதிகளை விஷவாயுக் கூடத்தில் அடைத்துக் கொல்வது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களை சித்திரவதை செய்து கொல்வது போன்றவற்றை இந்த கத்தோலிக்க நாஜிகள் கூசாமல் செய்தனர்.

சாமானிய கத்தோலிக்கர்களை விடுங்கள், ஐரோப்பா முழுவதும் யூதர்கள் படுகொலை செய்யயப்பட்டபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களும், பல அரசுகளும் போப் 12-வது பயஸிடம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதும் இந்தப் படுகொலைக்கெதிராக ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.

போப் - ஹிட்லர்
ஹிட்லர் – போப் பயஸ் 12

இப்படியும் ஒரு மனிதன் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று நமக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால் நூலாசிரியர் அடுத்து விவரிக்கும் சம்பவம் நம் ரத்தத்தை உறையவும் வைக்கிறது – கொதிக்கவும் வைக்கிறது.

1943 அக்டோபரில் ரோம் நகரிலேயே யூதர்களைச் சுற்றி வளைக்கிறது நாஜிப் படை. அடிமாடுகளைக் கொண்டு செல்வதற்கான லாரியில் அவர்கள் ஏற்றப்பட்டு கொலைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். லாரியின் உள்ளே காவலுக்கு நிற்கின்ற நாஜி இராணுவ அதிகாரிகள் அந்தப் புனித நகரத்தை வேடிக்கை பார்க்க வசதியாக, யூதக் கைதிகளின் கைகள் லாரிக்கு வெளியே தொங்க விடப்படுகின்றன. வெளியே தொங்குகின்ற பிஞ்சுக் குழந்தைகளின் கைகள் கடும் குளிரில் நடுங்குகின்றன.

‘செயின்ட் பீட்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் போப்பின் அரண்மனை வழியே செல்கிறது இந்த அடிமாட்டு லாரிகளின் ஊர்வலம். மாளிகையின் உள்ளே இருக்கிறார் போப். அப்பொழுதும் அவர் பேசவில்லை.

இந்தக் கிரிமினல் குற்றத்தினை நியாயப்படுத்த என்ன விளக்கம் தர முடியும்? எது சரி, எது தவறு என்று தீர்மானிப்பதற்கான அதிகாரத்தைத் தேவனிடமிருந்து பெறுகிறார்கள் போப்பாண்டவர்கள் என்று கூறப்படுகின்றது. எது கிறித்தவ நல்லொழுக்கம் என்பது போப்புக்குத் தெரியாது?

போப் பயஸ் 12
ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப் 12-வது பயஸ்

தெரியாமலென்ன? ஹிட்லரின் போருக்கும் படுகொலைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாத போப்  12-வது பயஸ் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஹிட்லரை ரசியா தோற்கடித்த பின் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

கம்யூனிசத்திற்குப் பெருகி வரும் ஆதரவைக் கண்டு பீதியுற்று, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களை படையாய்த் திரட்டினார். சோசலிச ரசியா ‘மனம் திரும்புவதற்காக’ உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

12-வது பயஸின் இந்த கொடூரமான மவுனத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார் நூலாசிரியர். “முதலாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் ஒரு சர்வாதிகாரி, எனவே ஹிட்லரின் உணர்வுகளை அவர் மதித்தார்; ரசித்தார்.”

“இரண்டாவதாக ஹிட்லரைப் போன்றே பயஸும் யூத, அராபிய எதிர்ப்பு இனவெறி கொண்டவர். ரசியப் புரட்சியைத் தொடர்ந்து 1919-ல் ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற தொழிலாளர் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய மாக்ஸ் லெவியன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடிகாரனைப் போலக் கண்கள், வெளிறிய முகம், விகாரமான தோற்றம் கொண்ட அழுக்கு மூட்டையான யூதன், ரசியன்” என்று எழுதுகிறார் 12-வது பயஸ். எனவே ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததைக் கூடப் போப் தனது அடிமனதில் ஆதரித்திருப்பார்.” – என்கிறார் நூலாசிரியர் கார்ன்வெல்.

தற்போது புனிதராக்கப்படுவதற்காக விண்ணுலகில் காத்திருக்கும் 12-வது பயஸ், மண்ணுலகில் துறவியாக வாழ்ந்திருந்த காலத்தில் விமானப் பயணம், அதிவேகக் கார்ப் பயணம் போன்றவற்றைப் பெரிதும் விரும்பியவராம், ஹாலிவுட் நடிகைகள் பற்றிய கிசுகிசுச் செய்திகளையும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்வாரம்.

போப் – 12-வது பயஸைத் தரிசித்து அவரது புறங்கையைப் பணிந்து முத்தமிட்டு அருளாசி பெற்ற ஒரு ஆங்கிலேயர், “போப்பின் கையில் அதிகாலைப் பனியின் தூய்மையான மணம் வீசியதாகவும், அது புனிதர்களின் உடலிலிருந்து மட்டுமே வீசக்கூடிய நறுமணமாக இருக்கக் கூடும்” என்றும் எழுதிவைத்துள்ளார்.

pope-teresa
“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” – போப் 2-வது ஜான் பால் புனிதர் ஆக்க முன் மொழிந்த தெரசா.

“கையை முத்தமிடும் பக்தர்களிடமிருந்து கிருமிகள் தொற்றிக் கொள்ளாமலிருப்பதற்காக, மணம் வீசும் கிருமி நாசினித் தைலத்தில் கையை முக்கி எடுத்துவிட்டுத் தான் பக்தர்களுக்கு அவர் தரிசனம் தந்திருக்கிறார்” என்று அந்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார் வாடிகன் ஆவணங்களைக் குடைந்த நூலாசிரியர்.

அன்பு, மனித நேயம் போன்ற கிருமிகள் தன்னைத் தொற்றிக் கொண்டால் விளையக் கூடிய அபாயத்தை போப் யோசித்திருப்பார் போலும்! 12-வது பயஸை புனிதராக அறிவிப்பதற்கான ‘புனித நறுமணம்’ என்ற கடைசி ஆதாரத்தையும் நாறடித்து விட்டார் கார்ன்வெல்.

***

ன்னைச் சுற்றிலும் கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் கல்லுளி மங்கனைப் போல மவுனம் சாதித்ததற்கான காரணத்தையும் 12-வது பயஸ் எழுதி வைத்துள்ளார். “ஒரு வேளை தான் ஹிட்லரை எதிர்த்துப் பேசியிருந்தால் கத்தோலிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்பதுதான் போப் கூறும் காரணம்.

இந்த விளக்கமே அநீதியானது என்பது ஒருபுறமிருக்க இது உண்மைக்கும் புறம்பானதாகும். ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரசியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நாஜிகளால் கொல்லப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களும்தான் அடக்கம்.

நாஜிகள் மீது நடத்தப்பட்ட நூரம்பர்க் விசாரணையில், அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் போப்பின் நடத்தை பரிசீலிக்கப்படவில்லை. ஏனென்றால் கம்யூனிசத்திற்கெதிராக அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் தொடர்ந்து நடத்திய யுத்தத்திற்கு வாடிகனின் ஆன்மீக அடியாள் படை அவர்களுக்குத் தேவைப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு என்ற பொது நோக்கத்திற்காகப் போப்பின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது.

போப் 2-வது ஜான் பால்
இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.

தற்போதைய போப்பான இரண்டாவது ஜான் பால் கூட ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போலந்துக்காரர்தான். இருந்தாலும் தனது கம்யூனிச எதிர்ப்பு ‘லட்சியத்தை’ அவர் கைவிட்டு விடவில்லை.

போலந்தின் லெக்வாலேசாவை ஆட்சியலமர்த்துவதற்கும், ரசியாவை உடைப்பதற்கும் அமெரிக்காவின் உளவுப் படையாகவே செயல்பட்டது வாடிகன். நிகராகுவாவில் அமெரிக்கக் கூலிப்படைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த சான்டினிஸ்டா இளைஞர்களுக்காக பிரார்த்தனை செய்யக்கூட மறுத்தவர்தான் இன்றைய போப். ஆழ்ந்த மதப்பற்றுள்ள தாய்மார்களும், இலட்சக் கணக்கான நிகராகுவா மக்களும் இந்தப் போப்பை விரட்டியடித்த காட்சியெல்லாம் வீடியோ படமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், ரசியாவிலும் போலி சோசலிசம் வீழ்ந்த பிறகு மேற்கத்திய ‘சுதந்திரச் சந்தை’ வேலையின்மையையும், பட்டினியையுமே அம்மக்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் மேலாதிக்கமே இப்போது பச்சையாக சந்தி சிரிக்கிறது.

நிலைமையைக் கணக்கில் கொண்ட போப் இரண்டாவது பால் “நான் கம்யூனிசத்தை எதிர்க்கிறேன் என்பதனால் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல; நான் கம்யூனிசத்தை எதிர்த்ததற்குக் காரணம்கூட அதன் பொருளாதாரக் குறைபாடுகளால் அல்ல; அது தனிமனித கவுரவத்தை குலைக்கிறது என்பதனால்தான்” என்று மெதுவாகத் தட்டைத் திருப்பிப் போடுகிறார். இது புதிய தந்திரம்.

***

“யாரிடமிருந்து காசு வாங்குகிறோம் என்பது பற்றிக் கவலையில்லை இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” என்று கூறி கொலைகார இராணுவ சர்வாதிகாரிகளிடம் நன்கொடை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அருளாசி வழங்கியதை நியாயப் படுத்தினார் தெரசா.

“நாஜிகளுடன் உறவு வைத்துக் கொள்வது ஒன்றும் பாவமல்ல” என்று தனது பாசிச ஆதரவை நியாயப்படுத்தினார் போப் – 12-வது பயஸ்.

இந்த இரண்டு பேரும்தான் ‘புனிதர்’ ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ‘இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஆத்மாக்கள்.’

கிறிஸ்துவுக்கும் கிறித்தவ திருச்சபைக்கும் உள்ள சிறிய வேறுபாட்டை ஒரே வரியில் விளக்கினார் கார்ல் மார்க்ஸ்:

“கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (கிறிஸ்து), மக்களின் ஆன்மாக்களுக்கு விமோசனம் கோரித் தமது உடம்பை தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ தமது சொந்த ஆன்மாவின் விமோசனத்திற்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்.”

குறிப்பு: போப்பை அம்பலப்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் குதூகலிக்கத் தேவையில்லை. அகில உலக ஹிட்லர் ரசிகர் மன்றத்தின் தலைவரே கோல்வால்கர்தான் என்பதை ‘ஞான கங்கையைப் படித்துத் தெரிந்து கொள்க.

வாட்டிகன் புகைமூட்டம்
வாட்டிகன் புகைமூட்டம் : கத்தோலிக்க குருமார்களின் பாலியல் வக்கிரங்கள் பற்றிய செய்திகள் உலகெங்குமிலிருந்து வெளியாகின்றன.

– சூரியன்
_______________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_______________________________
(படங்கள் இணையத்திலிருந்து)

மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !

1

ந்திய விவசாயத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் மோடி அரசு, அதனை “புரோட்டீன் புரட்சி” என அழைக்கிறது. அதாவது, மரபு சார்ந்த இந்திய விவசாயத்தை உயிரி தொழில்நுட்ப அடிப்படையைக் கொண்டு மாற்றியமைப்பதுதான் இந்த புரோட்டீன் புரட்சியின் அடிப்படையாகும். விவசாயத் துறையில் நான்கு சதவீத வளர்ச்சியைச் சாதிப்பதற்கும்; அதிகரித்துக்கொண்டே செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இந்த மாற்றம் அவசியமென்று கூறி, மோடி அரசு இந்தப் புரட்சியை நியாயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மரபு சார்ந்த விவசாயத்தை அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியமைக்கப் போவதைக் குறிக்கும் விதத்தில் “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு” என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.

கத்தரிக்காய்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)

இதுவொருபுறமிருக்க, விவசாய விளைபொருள் சந்தை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை ஒழித்து, சந்தையைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேசிய பொது சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் தனியார் சந்தை மற்றும் தனியார் விற்பனைக்கூடங்களை அமைப்பதை அனுமதிக்கும் நோக்கில் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டும், மரபு சார்ந்தும், ஓரளவிற்கு சுயேச்சைத் தன்மையோடும் இயங்கி வரும் விவசாயத்தையும்; அத்தியாவசிய விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது மற்றும் அவற்றைக் கொள்முதல் செய்வதில் அரசுக்குள்ள பாத்திரத்தையும் ஒழித்துக் கட்டி, இந்திய விவசாயத்தைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கமாகும்.

தேசிய பொதுச் சந்தையை உருவாக்கும் முதல் அடியாக நெல்லுக்கும் கோதுமைக்கும் மைய அரசு அறிவிக்கும் ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் அல்லது ஊக்கத்தொகையை மாநில அரசுகள் அறிவிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, மோடி அரசு. தமிழக அரசு சன்ன ரகத்திற்கு ரூ 70/-, சாதாரண ரகத்திற்கு ரூ 50/- என ஊக்கத் தொகை நிர்ணயித்திருக்கிறது. மோடி அரசு போட்டுள்ள உத்தரவை அமல்படுத்தினால் தமிழக விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல்லை ரூ 1,470/-க்குப் பதிலாக ரூ 1,400/-, சாதாரண ரக நெல்லை ரூ 1,410/-க்குப் பதிலாக ரூ 1,360/- என்ற விலையில் மட்டுமே கொள்முதல் செய்யமுடியும். நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ 2,500/- ஆக நிர்ணயிக்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கோரி வரும் வேளையில், மோடி அரசோ கிடைப்பதையும் தட்டிப் பறிக்கும் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதையும் மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மைய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கரும்பு ஆலை முதலாளிகளின் சார்பாக பேசியிருப்பதையும் இதிலிருந்து தனித்துப் பார்க்க முடியாது.

தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி 100 கோடி ரூபாய்தான். இதனை வைத்துப் பார்க்கும்பொழுது மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயா அறிவித்திருந்தாலும்,ஜெயாவின் “மைண்ட் வாய்ஸில்” பேசிவரும் தினமணி, “இப்படிப்பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குவதால்தான் அரிசியின் விலை சந்தையில் கூடிக் கொண்டே போவதாக” எழுதி மானிய வெட்டை நியாயப்படுத்தியிருக்கிறது.

இந்த ஊக்கத்தொகை வெட்டைத் தொடர்ந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து விற்கும் உரிமத்தை மான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஸ்.எஃப். ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது மரபணு பொறியியல் ஒப்புதல் கமிட்டி.

மரபணு பயிர் எதிர்ப்பு போராட்டம்
முந்தைய காங்கிரசு அரசு கொண்டு வந்த உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை எதிர்த்து நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்ததையடுத்து அம்முடிவை விலக்கிக் கொண்ட காங்கிரசு ஆட்சியாளர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்குப் புதிய அனுமதி எதுவும் தரப் போவதில்லை என்று வாய்வழி உத்தரவாதத்தையும் அளித்தனர். எனினும், தமது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க மன்மோகன் அரசு எடுத்த முடிவு, இந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என நம்பியிருந்த விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகச் செயல் இது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்யும் அனுமதி வழங்குவதைத் தடைசெய்யும் வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் கள ஆய்வுகளுக்கு பத்தாண்டு காலம் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்; இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவும் கள ஆய்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி இந்த அனுமதி அவசர அவசரமாக அளிக்கப்பட்டிருக்கிறது.

தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுகளுக்குத் தடை விதிப்போம் எனச் சவடால் அடித்த பா.ஜ.க., அதிகாரத்தில் உட்கார்ந்தவுடனேயே தட்டைத் திருப்பிப் போட்டு பன்னாட்டு விதை கம்பெனிகளுக்குச் சாதகமாகத் தட்டுகிறது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு எழத் தொடங்கியவுடன், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் குசும்புப் பேர்வழி போல, “இம்முடிவு அரசின் முடிவல்ல; தன்னதிகாரம் கொண்ட கமிட்டியின் முடிவு” எனக் கூறி, மோடி அரசைத் தப்ப வைக்க முயலுகிறார்.

அப்படியென்றால், இந்த நாட்டை ஆள்வது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அல்லது நிபுணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்திய அடிவருடிக் கும்பலா? கோடிக்கணக்கான விவசாயிகளின் உரிமையைவிட, மக்களுடன் எவ்விதத் தொடர்புமேயில்லாத நிபுணர் கமிட்டிகள், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு எடுக்கும் முடிவைத்தான் இந்த அரசு அமல்படுத்தும் என்றால், இது ஏகாதிபத்திய கைக்கூலி அரசு என்பதைத் தவிர வேறென்ன?

இந்த அனுமதியை ஆதரிக்கும் கைக்கூலி வல்லுநர்கள் அனைவரும், “இந்தியாவில் ஏழைகளின் பட்டினியைப் போக்குவதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க வேண்டும்; இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது” எனச் சாமியாடுகிறார்கள். ஏழைகளின் பட்டினிக்கு காரணம் தானிய உற்பத்தி போதிய அளவு இல்லை என்பது அல்ல.

இந்திய விவசாயிகள், தாம் கடன்பட்டாவது ஒவ்வொரு ஆண்டிலும் 100 கோடி டன் அரிசியை, 95 கோடி டன் கோதுமையை, 170 கோடி டன் காய்கறிகளை, 40 கோடி டன் சிறு தானியங்களை, 18 கோடி டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றைச் சமச்சீரான முறையில் விநியோகிக்கும் கொள்கையை வகுத்துச் செயல்படுத்த அரசு மறுப்பதுதான் இந்தியாவில் இன்னமும் பட்டினி நிலவுவதற்கான அடிப்படையாகும். 66 கோடி டன் உணவு தானியங்களைத் தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரசு, அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்க மறுப்பதுதான் ஏழைகளின் பட்டினிக்கு காரணம்.

marabanuபடம் : ஓவியர் முகிலன்

பருத்தி சாகுபடியில் மரபான விதைகளிடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைப் புகுத்திய பிறகு உற்பத்தியும் பெருகவில்லை; பருத்தி விவசாயிகளின் ஏழ்மையும் ஒழியவில்லை. மாறாக, மரபு சார்ந்த பருத்தி விதைகள்தான் ஒழிக்கப்பட்டன; மான்சாண்டோ கம்பெனியின் விதைகளின் விலைகள்தான் உயர்ந்துகொண்டே போனதே தவிர, விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. அம்மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவின் விதர்பாவிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்தன. இவைதான் கைமேல் கண்ட பலன்.

அறிவு நாணயத்தோடு சிந்திக்கக்கூடிய பல அறிவியலாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிரான கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்தக் கள ஆய்வுகளை விதை கம்பெனிகளும் அவர்களது கைக்கூலிகளாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும்தான் நடத்துகிறார்கள். எனவே, இந்த ஆய்வுகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; மேலும், இவ்வாய்வுகள் வெளிப்படைத்தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. இவ்விதைகளை ஆதரிக்கும் அரசுகள், அதிகார வர்க்க கமிட்டிகள், அறிவியலாளர்கள் அனைவரும் மான்சாண்டோ போன்ற விதை கம்பெனிகளின் ஆய்வறிக்கைகளைத்தான் கிளிப் பிள்ளை போலச் சொல்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால், அவ்வுணவுகளை உண்பதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற தாவரங்களும் தீராத கேடுகள் உண்டாகும் என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரேசிலில் பி.டி.சோயாவைப் பயன்படுத்தியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமை நோகள் ஏற்பட்டு, அதனால் பி.டி.சோயா திரும்பப் பெறப்பட்டது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் சிக்கில் செல் அனீமியா என்ற நோ ஏற்படும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் மாற்றம் அடைந்து ரத்தக் குழாக்குள் நுழையமுடியாத நிலை ஏற்படும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.

இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அனுமதி சிறுகச்சிறுக இந்திய விவசாயத்தில் நிலவிவரும் சுயேச்சைத்தன்மையை ஒழிப்பதோடு, நமது சுயசார்பான உணவு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றும்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் அவுரிச் செடியைப் பயிரிடக் கோரி இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியதை எதிர்த்து விவசாயிகளின் கலகம் வெடித்ததைப் போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும், அதனைத் திணிக்க முயலும் ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கும் எதிராக விவசாயிகளின் கலகம் வெடிக்க வேண்டும். இக்கலகம் அன்றி, வேறு வழிகளில் இந்திய விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயம் கிடைத்துவிடாது.

– திப்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

திருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !

1

சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கும் மோடி அரசின் சுற்றறிக்கை நகலை எரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் – சாலை மறியல்!

பார்ப்பனிய மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தனது இந்தி – இந்து – இந்தியா என்ற அகண்ட பாரத கனவை நிறைவேற்றும் விதமாக பார்ப்பனிய கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே ‘சமூக வலைத் தளங்களில் இந்தியில் தான் மத்திய அரசு அலுவலர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும்’ எனவும், ‘மத்திய அரசு சுற்றறிக்கைகளை இந்தியில் தான் அனுப்ப வேண்டும்’ எனவும் உத்தரவிட்டது. தமிழகத்தை சேர்ந்த 11 அதிகாரிகளுக்கு ‘இந்தி ஏன் தெரியவில்லை’ என்று நோட்டிஸ் அனுப்பியது. இப்படி தனது இந்துத்துவா கருத்துக்களை சட்டபூர்வமாகவே செயல்படுத்தத் துவங்கியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக செத்த மொழியான சமஸ்கிருதத்தை மீண்டும் சிங்காரித்து அரியணை ஏற்றி தனது இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், மத்திய அரசுப் பள்ளிகளில் (CBSE) ஆகஸ்ட் 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது. ‘இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழி சமஸ்கிருதம்’ என்ற வாசகத்துடன் தொடங்கும் படியான அந்த சுற்றறிக்கை நஞ்சை தூவியது.

இதன் அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், பார்ப்பனியத்திற்கு என்றுமே தலைவணங்காத தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடித்து இதனை எதிர்க்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 6-ல் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பெரியார் சிலை முன்பு சமஸ்கிருத வாரம் தொடர்பாக மோடி அரசு அனுப்பிய சுற்றறிக்கை நகலை எரித்து கைதாகினர்.

அதன் பிறகு இதனை கண்டித்து திருச்சி முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறுதியாக, ஆகஸ்ட் 13 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சட்டக்கல்லூரி கிளை சார்பாக மோடி அரசின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் 13 மாலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் சென்று “சமஸ்கிருத வாரத்தை ஏன் எதிர்க்க வேண்டும்” என்று விளக்கி பேசி மாணவர்களைப் போராட்டத்திற்கு அழைத்தனர். சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானார்கள். போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலாளர் சேக் தலைமை தாங்கினார்.

போராட்டம் நடக்கும் போது “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற தந்தை பெரியாரின் படம் போடப்பட்ட பிரசுரத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு மாணவர்கள் விநியோகித்து போராட்டத்தின் நோக்கத்தை விளக்கினர். பொது மக்களும் உடனிருந்து ஆதரவு தெரிவித்தனர். அரை மணி நேரம் முழக்கமிட்ட பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் மோடி அரசின் சுற்றறிக்கை நகல் எரிக்கப்பட்டது.

மீண்டும் முழக்கம் போட்டுக் கொண்டே மாணவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தி மீண்டும் நகலை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சுமார் 45 நிமிடம் அளவில் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதன் இறுதியில், போராட்டத்திற்கு வந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டக்கல்லூரி கிளை பு.மா.இ.மு தோழர்கள் உரையாற்றினர்.

இந்தப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபினை விசிறியெழச் செய்வதாக அமைந்தது. தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளிலும், சன் டிவி உள்ளிட்ட சில உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இப்போராட்டம் குறித்த செய்தி வெளியானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி
99431 76246

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

2

1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள்.

சூரத் காங்கிரசு அமைச்சர்
20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் நிரபராதி என்று விடுதலை – முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி.

இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது.

தற்போது சூரத் வழக்கில் 11 பேரை விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உள்ளிட்டு குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், தடா சட்டத்தின் கீழ் (சித்திரவதை செய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இல்லை என்றும் கூறியிருக்கிறது. மேலும் தடா சட்டத்தின் கீழ் தண்டித்தக்க ஒரு குற்றத்தை பதிவு செய்வதற்கு முன், அதற்கு மாவட்ட கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை மீறி, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலரிடம் ஒப்புதல் பெற்றிருப்பது முறைகேடானது என்றும் கூறி அனைவரையும் விடுவித்திருக்கிறது. இது வெறும் முறைகேடல்ல; இந்தப் பொய்வழக்கு மாநில அரசுத் தலைமையால் திட்டமிட்டு போடப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணம்.

சூரத் பொய்வழக்கு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. 1990-களின் துவக்கம் முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர். அவர்களில் சிலர்தான் இத்தகைய தீர்ப்புகளில் விடுவிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெறுவதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடுகிறது. வழக்காட முடியாத ஏழை முஸ்லிம்ளின் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.

அதே நேரத்தில் இத்தகைய அநீதிகளை இழைத்த கிரிமினல் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது. 2002 படுகொலையின் நாயகனை முதல்வராகவும், பிரதமராகவும் ஆக்குமளவுக்கு பெரும்பான்மை சமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது. எனவே, இந்த வழக்கின் பின்புலத்தை விளக்குவது அவசியமாகிறது.

1992, டிசம்பர் 6-ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பாரதிய ஜனதா திட்டமிட்டிருந்தது. மறுநாள், டிசம்பர் 7-ம் தேதியன்று, மசூதி இடிப்பைக் கண்டித்து சூரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு கல்வீச்சு மற்றும் தீவைப்பில் ஈடுபட்டது. அடுத்த கணமே 2000-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இந்து மதவெறிக் குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். முஸ்லிம் மக்கள் தப்பியோட முடியாவண்ணம் தெருக்களில் தடையரண்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் இந்துக்களும் கொல்லப்படுவார்கள் என்று கோயில் ஒலிபெருக்கிகளிலிருந்து அர்ச்சகர்கள் அறிவித்தனர். அடுத்த 6 நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சில இந்துக்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. சுமார் 20,000 பேர் உள்ளூரிலேய அகதிகளாகி முகாம்களில் சரணடைந்தனர். கலவரத்துக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் எடுப்பது போல முஸ்லிம் வீடுகளை இந்து வெறியர்கள் அடையாளம் கண்டு வைத்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. (மனுஷி, ஜன-ஏப், 1993)

1990-94 காலகட்டத்தில் சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதா தளம்(குஜராத்), ஜனதா தளம், காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சூரத் குண்டுவெடிப்பு என்பது 1993 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன. இவற்றில் ஒரு பள்ளிச் சிறுமி கொல்லப்பட்டாள். 30 பேர் காயமடைந்தனர். ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்புக்காக 22 முஸ்லிம்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் அனைவரையும் நிரபராதிகள் என்று விடுவித்தது நீதிமன்றம். 1995-இல் பா.ஜ.க. ஆட்சி வந்தது. ஏப்ரலில் நடந்த குண்டுவெடிப்புக்காக காங்கிரசு அமைச்சர் சுர்தி உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசு, ஜனவரி குண்டுவெடிப்புக்கும் சேர்த்து இவர்கள் மீது வழக்கு போட்டது. 2008-ல்தான் தடா நீதிமன்றம் இதனை விசாரித்து தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

அத்வானி - மோடி
பாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.

குஜராத்தில் பாரதிய ஜனதா மட்டுமின்றி, காங்கிரசு, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அனைத்துமே இந்துவெறிக் கட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சூரத் குண்டுவெடிப்பில் ஒரு உயிர் போனதற்காக 11 நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 1992-ல் 200 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய கலவரத்துக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. (மறந்துவிட்ட கலவரங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ், 17.12.2009)

கலவரத்தை விசாரிப்பதற்காக டிசம்பர் 1993-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சவுகான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. ஜூன் 1996 வரை அந்தக் கமிசனுக்கு ஊழியர்களே நியமிக்கப்படவில்லை. இந்த நிலையிலும் 30.6.1997-க்குள் 1300 சாட்சிகளை விசாரித்து பதிவு செய்துவிட்ட சவுகான், தனது அறிக்கையை வெளியிட மாநில அரசிடம் மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்டார். கால நீட்டிப்பு தரமுடியாதென்று மறுத்து கமிசனைக் கலைத்துவிட்டது வகேலா தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா அரசு.

இம்முடிவை எதிர்த்து மறைந்த வழக்குரைஞர் முகுல் சின்கா குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். எதிர் வழக்காடிய வகேலா அரசு, “1992 கலவரத்துக்குப் பின்னர் தற்போது மாநிலத்தில் மத நல்லிணக்கமும் அமைதியும் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலவரம் நடைபெற்ற சூழல் குறித்த விசாரணையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அத்தகைய விசாரணை மீண்டும் இரு பிரிவினருக்கிடையே துவேசத்தை தூண்டிவிடும்” என்று கூறி கமிசனைக் கலைத்ததை நியாயப்படுத்தியது.

இந்த வக்கிரமான வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “காலம் ஓடி விட்டது. மக்கள் அந்த கருப்பு நாட்களை மறந்து விட்டார்கள். அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அரசு கூறுவது சரிதான்” என்று சொல்லி முகுல் சின்காவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது குஜராத் உயர் நீதிமன்றம். (9.3.98)

இப்படித்தான், 2002 குஜராத் படுகொலையையும் மறந்து விடச் சொல்கிறார்கள். அரங்கேற்றப்படும் குண்டு வெடிப்பு நாடகங்கள், போலி மோதல் கொலைகள் – ஒவ்வொன்றிலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிரபராதிகளின் வாழ்க்கையை அழித்த இந்து மதவெறியர்களும், பொய் வழக்கு போட்ட போலீசு அதிகாரிகளும், பொய் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களைத் தண்டித்த நீதிபதிகளும் கூண்டிலேற்றப்படுவதில்லை. மறந்து விடச் சொல்கிறார்கள். எத்தனை அநீதிகளைத்தான் மறக்க முடியும்?

– அழகு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?

6
குண்டர்கள் சட்டம்

குண்டர்கள் சட்டம்“தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982”…..

மூச்சை இழுத்துப் பிடித்து ஒரே மூச்சில் படித்து விடுங்கள். இதுதான் குண்டர் சட்டம் அல்லது குண்டாஸ் என்று அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர்.

1982-ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் கடந்த 32 ஆண்டுகளில் திருட்டு வீடியோ, நில அபகரிப்பு, மணல் கொள்ளை என ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு ஊதிப் பெருத்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனால் இந்த சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் தமிழ்நாடு சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின்படி முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இந்த சட்டம் பிரயோகிக்கப்படலாம். இரண்டாவதாக, இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.

சமீப கால திட்டங்கள் அம்மா உணவகம், அம்மா நீர், அம்மா மருந்தகம், அம்மா பெட்டகம் என அழைக்கப்படுவ்வது போல இந்த சட்டத்தின் பெயர் “குண்டாஸ் சட்டம்” என்பதிலிருந்து “அம்மா சட்டம்” என்று மாற்றப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.

குண்டர்கள் சட்டம் தடுப்புக் காவல் சட்டம் என்ற வகையில் வருகிறது. ஒருவர் குற்றம் செய்வதற்கு முன்பே, அவர் குற்றம் செய்வதை தடுக்கும் விதமாக அவரை சிறையில் அடைத்து வைப்பதுதான் இந்த குண்டர் சட்டத்தின் நோக்கம். இதுவரை இச்சட்டம் அடிக்கடி குற்றம் செய்பவர்களை தடுப்புக் காவலில் வைக்க  பயன்படுத்தப்பட்டது. அடிக்கடி குற்றம் செய்பவர்கள் என்ற வரையறைக்குள் வருவதற்கு ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது 2-3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் போதும். தடையை மீறி நோட்டிஸ் கொடுத்தார், இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியிருந்தால் கூட, அந்நபர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட தகுதி உடையவர் ஆகி விடுவார்.

இதன்படி சமூக வாழ்வில் உள்ள அனைத்து செயல்களையும் முதல் முறை  குற்றம் செய்வோர் என்று காட்ட முடியும். சான்றாக நிர்வாகத்தை எதிர்த்து போராடும் தொழிலாளிகளைக் கூட வன்முறையாளர்கள் என்று முதல் முறை கைது செய்தாலே அடுத்த முறை குண்டர்கள் சட்டத்தின் படி உள்ளே தள்ள முடியும். முதல் முறையாக போராட்டத்தில் கைது செய்யப்படும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைவரையும் கூட இதில் கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. இதை விட என்ன அபாயம் இருக்கிறது?

இன்றைய சட்ட நடைமுறையின் படி, ஒரு காவலர் தெருவோரம் நிற்கிற ஒருவரை அழைத்துச் சென்று ஏதாவது வழக்கு பதிவு செய்து, அமர்வு நீதிபதி முன்பு நிறுத்தினால் அவர் கண்ணை மூடிக் கொண்டு 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு விடுவார். அதன்பிறகு வக்கீல், முறையீடு, பிணைக்கு மனு செய்வது என்று சட்ட நடவடிக்கைகள்  தொடரலாம். ஆனால், அப்படிப்பட்ட எந்த வசதியையும் பெற முடியாதவர்கள் 15 நாட்கள் வரை விசாரணை இல்லாமல் காவலில் வைக்கப்படலாம் என்பது நடைமுறை. எந்த ஒரு குடிமகனையும் 1 ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்கலாம் என்று காவல்துறையின் அதிகாரத்தை விரிவாக்குவதுதான் குண்டர் சட்டத்தின் நடைமுறை செயல்பாடாக உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. கீழ் மட்ட காவல் நிலையங்களில் தயாரித்து அனுப்பப்படும் உத்தரவுக்கு அவர்கள் ஒப்புதல் வழங்குவது நடைமுறையாக உள்ளது. அல்லது மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுக்கேற்ப தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கிறார்கள். இந்த ஆணையின் படி சம்பந்தப்பட்ட நபர் 1 ஆண்டு வரை சிறையில் அடைக்கப்படுவார். 1 ஆண்டு வரை அவர் மீது எந்த விதமான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டியதில்லை.

கைது செய்யப்பட்டவர், தான் நிரபராதி அல்லது இந்த சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்று முறையீடு செய்ய ஒரு மேல் முறையீட்டு குழு உள்ளது. அதில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி பங்கேற்பார்கள். அந்தக் குழுவின் முன்பு கைது செய்யப்பட்டவர் நேரில் முறையிடலாம். ஆனால், அவர் சார்பாக குழுவின் முன்பு எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முடியாது. வழக்கறிஞர் அல்லாத நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவர் சார்பில் பேசலாம். இந்த நடைமுறையில் 100-க்கு 99 வழக்குகளில் பாதிக்கப்படவரின் முறையீடு நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தக் குழு ஒரு நிர்வாக விசாரணைக் குழு என்பதால் வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, எந்த நீதிமன்ற தலையீடும் இல்லாமல் ஒரு தனிநபரை 1 ஆண்டு வரை அடைத்து வைக்கும் உரிமையை நிர்வாகத்துக்கு வழங்குகிறது இந்தச் சட்டம். சொல்லிக் கொள்ளப்படும் தனிநபர் சுதந்திரம் என்பதை அப்பட்டமாக பறிக்கும் நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா
என்னை எதிர்த்து எழுதுனா தொலைச்சுருவேன்!

முறையீட்டுக் குழுவில் நிராகரிக்கப்பட்ட பிறகு, கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு போடலாம். கீழமை நீதிமன்றங்களை அணுக முடியாது. உயர்நீதிமன்றம் இந்த கைது உத்தரவை ரத்து செய்தால் அவர் வெளியில் வந்து விடலாம். அரசுத் தரப்பு, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்குள் பல மாதங்கள் வரை நீட்டித்து விடுகிறது. காவல்துறை முறையாக கவனிக்கப்பட்டால், அரசு வழக்கறிஞர் எதிர்ப்பை வலுவாக முன் வைக்காமல் விரைவில் வெளியில் வர முடியும். காவல் துறையை கவனிக்கும் வசதி உடையவர்களுக்கு இந்த வசதி இருக்கிறது. மற்றவர்கள் நடைமுறையில் 6 மாதம் முதல் 8 மாதங்களுக்குப் பிறகே இந்த வகையில் விடுவிக்கப்படுவது நடக்கிறது.

இது வரையிலான நடைமுறையில் 5% தடுப்புக் காவல் உத்தரவுகள்தான் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், எஞ்சிய 95% வழக்குகளில் தடுப்புக்காவல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதற்கு முன் கைது செய்யப்பட்ட நபர் 6 முதல் 8 மாதங்கள் தடுப்புக்  காவலில் அடைக்கப்பட்டு விடுகிறார்.

இவ்வாறாக, இந்த சட்டம் காவல்துறை மிரட்டி பணம் பறிப்பதற்கான ஒரு ஊழல் சட்டமாகவும், ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் தமக்கு எதிரான கருத்துக்களை அடக்குவதற்கான அடக்குமுறை சட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது.

இந்த சட்டம் 1980-களில் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மாநிலங்களால் இயற்றப்பட்டது. இது போன்ற கடுமையான சட்டங்கள் மகாராஷ்டிரா அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டம், சத்தீஸ்கர் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்கள் தனிநபர் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சட்டத்துக்கு முரணானவை அல்ல என்று நீதிமன்றங்கள் உட்பட இந்திய ஆளும் வர்க்க அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதை இன்னும் சர்வாதிகார விதிகளுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டவையே தடா, பொடா சட்டங்கள். ரத்து செய்யப்பட்ட அந்த சட்டங்களை இன்னும் கடுமையாக மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பது பாஜகவின் திட்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழகத்தை பொறுத்த வரை குண்டர்கள் சட்டம் பொதுவில் ரவுடிகளை கைது செய்து முடக்கத்தானே பயன்படுகிறது என்று சிலர் கேட்கலாம். அதிலும் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருக்கின்றது. அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதை வைத்து ஜெயா அரசை கண்டிக்கும் தைரியம் இந்த ஊடக சூரப்புலிகளுக்கு இல்லை என்றாலும் மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் மாதிரி ஒரு கருத்து வெளியிட்டாலே போதும். அதிகார வர்க்கம், போலீசு, உளவுத்துறை, கிச்சன் கேபினட் மூலம் ஆட்சி செய்யும் ஜெயாவிற்கு நல்ல செய்திகள் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வருகிறது.

உடனே காவல் துறை ஆணையர்கள் உள்ளூர் அளவில் இலக்கு கொடுப்பார்கள். அது இறுதியில் ஒரு காவல் நிலையம் ஒரு மாதத்திற்குள் ஐந்து பேரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து ‘ரிசல்ட்’ காட்ட வேண்டும் என்று அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக இதே காவல் நிலையங்கள் மாதத்திற்கு இத்தனை வழக்குகள் போட வேண்டும் என்று அமல்படுத்தி வருகிறார்கள். அதனால் சிறு குற்றங்கள் செய்வோரும், அப்படி செய்து பின்னர் திருந்தி வாழ்பவர்களும், குற்றமேதும் செய்யாத பாதையோர, சிறு வணிகர்கள், தள்ளு வண்டிகாரர்களை சந்தேக கேஸ் என்று காவல்துறை கைது செய்து சிறையலடைப்பது வழக்கம். இதுவேதான் குண்டர்கள் சட்டத்திலும் சற்று மேம்பட்ட அளவில் செயல்படுகிறது.

அதாவது கீழ்மட்ட போலிசிலிருந்து, ஆணையர், அமைச்சர், ஆளும் கட்சி வரை முரண்படும் நபர்களை கைது செய்வார்கள். அது இல்லாத போது சிறு அளவு குற்றவாளிகளை உள்ளே தள்ளுவார்கள். அத்தகைய ‘புகழ்’ வாய்ந்த சட்டத்தில்தான் தற்போது இரண்டு திருத்தங்களை சேர்த்திருக்கிறார்கள்.

பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாக ஜெயா அரசு கூறுகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கும் போது, இதற்கு என்ன அவசியம்? குற்றம் நடக்கும் முன்னே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பழையை நடத்தையை வைத்து கைது செய்யும் நடைமுறை இங்கே எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? அப்படிப் பார்த்தால் பெண்களை ஆபாசமாக சித்தரித்து, பாலியல் உணர்வை வெறியாக கட்டியமைக்கும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், சினிமாத் துறை நபர்களை கைது செய்வார்களா? மாட்டார்கள். தமிழகத்தில் அதிகம் பாலியல் வன்முறை நடக்கும் இடங்கள் என்ற முறையில் கண்காணிக்கப்பட வேண்டிய காவல் நிலையங்களில் உள்ள குற்றவாளி போலீசுக்காரர்களையும் இந்த சட்டப்படி கைது செய்வார்களா? மாட்டார்கள்.

மேலும் அமுலில் உள்ள குண்டர் சட்டப்படியே கூட மணற்கொள்ளையர்கள், கிரானைட் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என எவரும் கைது செய்யப்பட்டதில்லை. வைகுண்டராஜன் போன்றோர் எந்த தடையுமின்றி தொழிலை தொடர்வதே இதற்கு சாட்சி.

இணைய குற்றங்களையும் குண்டர்கள் சட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தனக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதற்கான தயாரிப்புகளை ஜெயா அரசு செய்து முடித்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப  சட்டத்தின் 66A பிரிவு பேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டவர்கள், கேலிச்சித்திரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள் என்று ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை ஒடுக்குவதற்கு பல முறை தவறாக பயன்படுத்தப்பட்ட இழிபுகழ் கொண்டது. ஜெயா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திருத்தமும் பொதுவான பொருளில் இருந்தாலும் அதில் இணையம் தொடர்பான எதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இணையத்தில் நடக்கும் பொருளாதாரக் குற்றங்கள், ஏமாற்று மோசடிகள், பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்கனவே போலீசு துறை அதிகம் விசாரித்துத்தான் வருகிறது. சைபர் கிரைமின் முக்கியமான வேலையாகவே இக்குற்றங்கள் இருக்கின்றன. ஆனால் கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம். இதில் எல்லாரையும் தனிநபர்களாக கைது செய்வது முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம்.

அது ஒரு பிரச்சினையே இல்லை. ஜெயாவை கண்டித்து ஒருவர் கார்ட்டூன் போட்டதை, மம்தா பானர்ஜி போல கைது செய்து உள்ளே தள்ளினால் பிறகு யார் கார்ட்டூன் போடுவார்கள்? தற்போதே தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் எதிர்த்து ஜெயா அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார். அப்படி தொடர்வதற்கு முன்னாடியே இதே ஊடகங்கள் தமிழக அரசு குறித்து மிகுந்த எச்சரிக்கையாவே எழுதிவருகின்றன. அது மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு தொடங்கி புரசைவாக்கம் குமுதம் வரை முதுகெலும்பு இல்லாத ஊடக அறமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தில் காத்திரமாக எழுதும் தனிநபர்களையோ இல்லை தளங்களையோ இப்படி ஒரிருவரை ‘கவனித்தாலே’ போதுமானது. மற்றவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள். அப்படி நடக்காது எனுமளவுக்கு தமிழகத்தின் அரசியல் சூழல் ஆரோக்கியமாக இல்லை.

இறுதியில் புரட்சிகர, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை முடக்குவதற்கே இத்திருத்தம் பயன்படும். இன்றைக்கு உடனே இத்திருத்தம் பயன்படாமல் போனாலும் என்றைக்கும் நம் கழுத்தின் மீது தொங்கும் கத்தியாகவே இருக்கும். தேவைப்படும்போது கத்தி கீழே இறங்கி கருத்து சுதந்திரத்தை அறுத்து விடும்.

இனிமேல், இந்த சட்டம் முறையாக “தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், இணையக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982” என்று அழைக்கப்பட வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் அடைப்பதுதான் ஜெயா அரசு முன் வைக்கும் வழிமுறை. அதே நேரம் இந்தியாவிலேயே அரசியல் போராட்டம் அதிகம் நடக்கும் மாநிலமான தமிழகம் பாசிச ஜெயா அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும். போராட வேண்டும்.

–    செழியன்.

மேலும் படிக்க:

Expanding Goondas Act puts personal liberty at stake

TN brings Sexual, Cyber Crime Offenders Under Goondas Act

மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

0

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 4 : மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

றிவை உருவாக்குதல், பயன்படுத்துதல், பரப்புதல் ஆகியவற்றின் மூலமாகத்தான் மொழி வளரும், புத்தறிவை இப்படித்தான் வளர்க்க முடியும். ஆனால் இதற்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாமர மக்களாக இல்லை. துளிர், விஞ்ஞானிகள் சிறகு போன்ற சிறு பத்திரிகைகள் ஓரளவு முயன்றாலும் அது இன்னமும் பாமர மக்களை சென்றடையவில்லை. இதனை தனியாக யாரும் செய்ய முடியாது. அரசுதான் முன்நின்று செய்ய வேண்டும்.

பாடத்திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினர். மக்களிடம் போனோம். மாணவர்களும் முன்வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மாணவியர்வந்த மாணவர்களில் ஒருவன், “ஐயா எங்களுக்கு பாவுக்கு ஒன்றென செய்யுள் பகுதிகள் வைத்தால் போதாதா, சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி என வகைவகையாக வைக்க வேண்டுமா” என்று கேட்டான். அதற்கு, “நமது நாடு பல மத நம்பிக்கை கொண்டவர்களை உடையது, அதனால் வகைக்கொன்றாக வைத்திருக்கிறோம்” என்றார் ஆசிரியர். “அப்படியானால் நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லித் தரப் போகிறீர்களா? மதம் சொல்லித் தரப் போகிறீர்களா?” எனக் கேட்டான் அம்மாணவன்.

ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி “இதெல்லாம் வேண்டாம், தற்கால தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்’’ என்றாள்.

அதைக் கேட்ட தமிழாசிரியரும், புகழ்பெற்ற பெரிய பள்ளியின் தலைமையாசிரியருமான ஒருவர் “ஏம்மா அப்படியானால் உனக்கு தமிழ் பண்பாடு தெரிய வேண்டாமா’’ என்று அக்கறையோடு கேட்டார்.

உடனே தமிழ் புத்தகத்தை எடுத்த அப்பெண் நளவெண்பா பகுதியை எடுத்து வாசித்தாள். அதில் நளன் தமயந்தியை நள்ளிரவில் விட்டு விட்டு போனான் என்ற படலம் வருகிறது. “ஐயா, கல்யாணம் பண்ணிக்கோ. நள்ளிரவில் பொண்டாட்டியை தனியாக தவிக்க விட்டுவிட்டுப் போ என்பதுதான் தமிழ்ப் பண்பாடா’’ என்று கேட்டாள். உடனே அந்த ஆசிரியர் அதனை கேட்டு வாங்கி பார்த்துவிட்டு, பாடநூல் நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த படலத்தை எடுத்து விட்டு வேறு படலத்தை அடுத்த ஆண்டு போடச் சொன்னார்.

பள்ளிக்கூடம் யாருக்கானது? பெற்றோர்களுக்கானதா? அரசுக்கானாதா? இல்லை, மாணவர்களுக்கானது. அங்கு அந்த மாணவர்களுக்கு முடிவெடுக்க ஏதாவது இடமிருக்கிறதா? குழந்தைகளால் அவர்களது தேவையை வெளிப்படுத்த இங்கே இடமேயில்லை. பெங்குவின் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான கடிதங்கள் அப்படி பதின்ம வயது மாணவர்கள் எழுதியவைதான். கற்றல், வகுப்பறை, பாடத்திட்டம் ஆகியன பற்றி நிறைய அவர்களது எண்ணங்களை பதிவுசெய்துள்ளது அப்புத்தகம். அப்படி நமது மாணவர்களை நாம் சிந்திக்க வைத்துள்ளோமா?

ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்?

“ஏனப்பா விதியை மீறி விட்டாய்?” என்று கேட்டேன்.

“யார் போட்ட விதி?” என்று கேட்ட அம்மாணவன் ஒரு மார்க்சிஸ்டு.

ஒரு விநாடி எனக்கு கோபம் வந்தாலும், ஒரு முப்பதாண்டு அனுபவம் உள்ள என்னிடம் ஒரு பொடிப்பயல் இப்படி கேட்கலாமா? என்ற கேள்வி எழுந்தாலும், அவன் கேட்பது நியாயம்தானே என்பதை என்னளவில் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் விதியை நாங்கள் போடவில்லை, நாங்களே பள்ளி கல்வித்துறை சொன்ன விதிமுறைகளைத்தானே பள்ளியில் வைத்துள்ளோம்.

ஆகவே அவனையே “விதிமுறைகளை நீயே வகுக்கிறாயா” என்று கேட்டேன்.

“சரி” என்றான்.

“அப்படியானால் நீ மட்டும் வகுப்பது சரியாக இருக்காது. வகுப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் தினசரி மாலை ஒரு மணி நேரம் கூடி விவாதித்து விதிகளை வகுத்து தாருங்கள்” கூறினேன். அதற்காக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பற்றிய புத்தகங்கள், குறிப்புகளை எல்லாம் அவனுக்கு தேடி எடுத்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு அவர்கள் வகுத்து தந்த விதிமுறையின் தலைப்பே ஒழுங்கு விதிகள் என்பதற்கு பதிலாக எனது வாழ்க்கை நெறிகள் என்று மாற்றியிருந்தார்கள்.

“நான் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி எனக்கும், எனது பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க முற்படுவேன்” என்று துவங்குகிறது அந்தப் பட்டியல். முதல் விதி “தினமும் நீ பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வராதே” என்பது நம்முடையது. அவர்கள் வகுத்த விதியில் “நான் தினமும் வகுப்புக்கு முன்னரே படித்து தயாரித்து விட்டு ஆயத்தமுடன் சரியான நேரத்துக்கு வருவேன்” என்று இருந்தது.

மாணவர்கள்இது தவிர நாம் சொல்லாத விதியாக, “ஆசிரியர் நடத்தும் பாடத்தை உன்னிப்பாக கவனித்து, அதில் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் எழுந்து நின்று கேட்டு நிவர்த்தி செய்து புரிந்து கொள்வேன்” என்றும் சொல்லி இருந்தார்கள்.

அவன் போட்ட 17-வது விதி என்னை மிகவும் கவர்ந்தது. அவன் பள்ளிக்கு வெளியிலும் விதியை வகுத்திருந்தான். “பேருந்தில் பெண்களோ, நோயுற்றவர்களோ, குழந்தைகளோ, முதியவர்களோ வந்தால் நான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிப்பேன்” என்று சொல்லியிருந்தார்கள்.

20 விதிகள் வரை போட்டார்கள்.

“இதனை நான் சொல்ல மாட்டேன். தினமும் இதனை நாளொன்றுக்கு ஒரு விதியாக இரண்டாயிரம் மாணவர்களிடமும் விளக்கி அனைவரிடமும் ஒப்புதல் பெறுங்கள்” என்று சொன்னேன். அப்படித்தான் அவர்கள் செய்தார்கள்.

அதே போல, “விதியை நடைமுறைப்படுத்துவதையும் நான் கண்காணிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். “நீ போட்ட விதியை நீதான் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு நீதான் பொறுப்பு” என்றேன்.

சிறப்பாகவே இப்படி எங்களது பள்ளிக்கு விதிமுறைகள் மாணவர்களால் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் இது நடைபெற்றது. நடந்து முப்பது ஆண்டுகளாவது இருக்கும். ஆனால் அந்த நடைமுறை இப்போது மாறிவிட்டது. இலக்கிய மன்ற கூட்டம் முறையாக அப்போது மாதந்தோறும் நடைபெற்றது.

சமூக அறிவியல் பாடத்தில் நடப்பு செய்திகள் என்ற பகுதியை எடுத்து விட்டார்கள். ஏன் தெரியுமா? பக்தவத்சலம் ஆட்சியில் அரசியலை ஆசிரியர்கள் பேசுகிறார்கள் என்று காரணம் காட்டி இதனை எடுத்து விட்டார்கள். நானே பெருந்துறையில் ஆசிரியராக இருக்கையில் மாணவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதற்காக பெரியார் கூட்டத்திற்கு உருமால் கட்டிக்கொண்டு போய் பார்ப்பேன். மாணவர்கள் பெருமளவு வருவார்கள். வகுப்பறையில் இல்லாவிட்டாலும் வெளியில் மாணவர்கள் அரசியலை தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். ஒருவேளை அதற்கு நீங்கள் தடைபோட்டாலும் தனிப்பட்ட ஒருவர் சிந்திப்பதற்கு நீங்கள் தடை போட முடியாதுதானே.

அதுபோலவே மாணவர்களையும், ஆசிரியர்களையும் என்னை மதிப்பீடு செய்யச் சொல்லி கோருவேன். என்னைப் பற்றிய மாணவரது அபிப்ராயம் தெரியும் பட்சத்தில் என்னைப் பற்றி அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். அல்லது தவறு என்பக்கம் இருக்கையில் திருத்திக் கொள்வேன். இதனை வெளிப்படுத்த விடாமல் தடுப்பதால் தான் மாணவர்கள் கழிப்பறைகளில் ஆசிரியர்களைப் பற்றி எழுத துவங்குகிறார்கள். அதனை முகத்துக்கு நேரே சொல்ல ஏன் வாய்ப்பளிக்க கூடாது?

ஆனால் இதனை பிற ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்தால் பிறகு எங்களைப் பற்றியும் மதிப்பீடு செய்ய கேட்பார்களே” என்று பயந்தார்கள். மாணவன் ஆசிரியரை பற்றி ஒரு அபிப்ராயத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பதால் தான் பொது இடத்தில் எழுதுகிறான். நாம் கருத்து சுதந்திரம் என்பதை ஊடகம் என்பதை தாண்டி இதற்கும் விரிவுபடுத்தி பார்க்க வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்

இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

10
ஏழை பணக்காரன் 3

ஏழை பணக்காரன் 3.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

கடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.

சிபுலால்
சிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா?

அது என்ன குடும்ப அலுவலகம் என்று கேட்கிறீர்களா? கடன் தவணை கட்டி, வரிச் சலுகை பெற இன்சூரன்ஸ் பாலிசி போட்டு, சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து, வருடக் கடைசியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு கணக்காளரை அணுகுவதுதான்  மாதச் சம்பளம் வாங்குவோரின் நடைமுறை.

ஆனால் ஒருவருக்கே பல நூறு வீடுகள், சில நூறு கோடிகள் சொத்திருந்தால் அவற்றை நிர்வாகம் செய்வது உடமையாளரால் மட்டும் சாத்தியமில்லை. சிபுலால் போன்ற பெரும் பணக்கார குடும்பங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து, முதலீடுகளை நிர்வாகம் செய்ய இருக்கும் தனிச்சிறப்பான நிறுவனங்களைத்தான் குடும்ப அலுவலகம் என்கிறார்கள். இந்தியாவில் சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

சிபுலால் குடும்ப அலுவலக நிறுவனத்தின் நிர்வாகியாக பெங்களூரு ஐ.ஐ.எம்மிலும் பிட்ஸ் பிலானியிலும் படித்த செந்தில் குமார் பணிபுரிகிறார். குடும்ப நிர்வாகம் என்பதால் காமோ சோமோ வென்று நிர்வாகம் பார்க்கும் வேலை இல்லை இது. அதனால்தான் உயர்தர மேலாண்மை அறிவுப் புலிகள் இங்கே தேவைப்படுகின்றன.

ஏழை பணக்காரன்“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுதான் உடனடி வருமானம் தருவதோடு, எதிர்காலத்தில் முதலீட்டின் மதிப்பை பெருக்குவதற்கும் உத்தரவாதமானது” என்கிறார் செந்தில் குமார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே தலைமை வகித்து நடத்திய சிபுலால் கூட, ‘நாலு வீட்டை வாங்கிப் போட்டால் பணத்துக்கு உத்தரவாதம்’ என்ற முறையில்தான் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். என்ன, சில லட்சம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கம் உள்ளூரில் வீடு வாங்கினால் பல கோடி குவித்திருக்கும் இவர் சியாட்டில், பெர்லின் என்று சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் தனது பணத்தை இறக்கியிருக்கிறார். இன்றைய சந்தை மதிப்பில் இவருக்கு சொந்தமான வீடுகளின் மொத்த மதிப்பு $10 கோடி (ரூ 600 கோடி)-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சிபுலால் அளித்த பேட்டி ஒன்றில், அவருக்கு சொந்தமான 700 வீடுகள் பற்றி கேட்டதற்கு, “என்னுடைய பணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதியான அடித்தளத்தோடு, போதுமான லாபம் வருவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ரியல் எஸ்டேட் முதலீடு ஒரு முக்கியமான வகை என்று சொன்னார்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.

சுருதி சிபுலால்
சுருதி சிபுலால்: அப்பா ஐ.டி துறை தொழிலதிபர், மகள் சுற்றுலாத் தொழில் தொழிலதிபர்…

மற்றபடி தனது சொத்தை தொழிற்துறையிலோ, இல்லை தனது துறையிலோ முதலீடாக்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமே என்று முதலாளித்துவ கனவின் ஆரம்பத்தில் இருக்கும் கோயிந்துகள் நினைக்கலாம். முதலாளித்துவமே வேலை வாய்ப்பு கொடுப்பதில் இல்லை, வேலை செய்வோரின் உழைப்பைச் சுரண்டுவதில்தான் இருக்கிறது என்பதால் சிபுலால் ‘சாமர்த்திய’மாகத்தான் சொத்து பெருக்குகிறார்.

இந்திய அரசிடம் வரிச் சலுகை பெற்று, மாநில அரசுகளிடம் மலிவு விலையில் நிலம் பெற்று, படித்த இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு வேலை செய்ய வைத்து குவித்த பணத்தை சிபுலால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துகிறார். ஐ.டி துறை ஊழியர்களோ இந்த சூதாட்டத்தில் தம்மையும் சேர்த்து விளையாடுவது தெரியாமல் வாழ்க்கையால் விரட்டப்படுகிறார்கள். இணையத்தில் கே.ஆர்.அதியமான் முதல் பிரதமர் அலுவலகத்தில் மோடி வரை செய்யும் வளர்ச்சி குறித்த பஜனையின் ஒரு முகம் இது.

சிபுலால் 1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 7 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர். அவர், அவரது மனைவி குமாரி, மகள் சுருதி, மகன் சிரேயஸ் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2.2% பங்குகள் சொந்தமாக உள்ளன. இன்ஃபோசிஸ்சின் மொத்த சந்தை மதிப்பு $3000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம்) என்பதை வைத்துப் பார்க்கும் போது சிபுலால் குடும்பத்துக்கு சொந்தமான அதன் 2.2% பங்குகளின் மதிப்பு ரூ 3,900 கோடி.

ஏழை பணக்காரன் 2கொலம்பியா பிசினஸ் கல்லூரியில் மேலாண்மை பட்டம் படித்து மெரில் லிஞ்சில் வேலை அனுபவம் உடைய சிபுலாலின் மகள் சுருதி இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் முதலீடுகள் மூலம் பணத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவின் யூபி சிட்டியில் கேப்பர்பெரி, ஃபாவா உணவகங்கள் உள்ளிட்டு பல மேட்டுக்குடி உணவகங்களை நடத்தி வருகிறார். மாதச் கடைசியில் கையேந்தி பவன்களை நம்பி வாழும் நடுத்தர வர்க்க ஐ.டி ஊழியர்களின் கனவுகளை முதலீடாக்கி சுருதி, சுருதி சுத்தமாக ரோட்டரி கிளப் கனவான்களுக்கான உணவகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.

தமாரா கூர்க் என்ற 170 ஏக்கர் காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் விரிந்திருக்கும் ஆடம்பர தங்குமிடம் அவரது செல்ல திட்டம். தமாரா நிறுவனம் திருவனந்தபுரத்தில் தமாரா 100 அறைகளைக் கொண்ட விடுதியை கட்டி வருகிறது. கொடைக்கானலில் ஆடம்பர சுற்றுலா தங்குமிடம் உருவாக்கும் திட்டம் ஒன்று ஒப்புதல்களுக்கு காத்திருக்கிறது. இவையெல்லாம் மேட்டுக்குடி சீமான் – சீமாட்டிகளை வசதியுடன் தாலாட்டி வாழவைக்கும் புண்ணிய தலங்கள். எனவே தட்சணையும் அதிகம்.

தாமரா, கூர்க் இல்லம்
கர்நாடகா கூர்க் பகுதியில் மேட்டுக்குடி கனவான்களுக்காக சுருதி சிபுலால் கட்டியிருக்கும் கானக மாளிகை!

இத்தகைய பெரும் அளவிலான முதலீடுகளுக்கு ஒரு அடிக்குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது சிபுலால் குடும்பம். சிபுலாலின் அப்பா, அம்மா பெயரிலான சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை, 2004-ம் பதிவு செய்யப்பட்ட அத்வைத் அறக்கட்டளை மூலம் வசதி குறைந்த ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் மேல் படிப்புக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது சிபுலால் குடும்பம். இந்த பிச்சை உதவிக்கும், அந்த பெருந்தொழிலுக்கும் உள்ள முதலீடு மலைக்கும் மடுவுக்குமானது என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் மடுவின் ஒளியில் மலைகள் மறைந்து கொள்கின்றன.

தனிநபரிடம் குவியும் இத்தகைய செல்வம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகையாகவோ, சிபுலாலின் 700 அபார்ட்மென்டுகளாகவோ, ஆடம்பர சொகுசு கார்களாகவோ உருவம் எடுப்பதோடு, அவர்களது செல்வத்துக்கு அடிப்படையான உழைப்பை வழங்கும் கோடிக்கணக்கான மக்கள் மீதான சுரண்டலை அவை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்கின்றன. 21-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இத்தகைய திமிங்கலங்களை மட்டும்தான் உருவாக்குகின்றன.

ஆனால் இந்த திமங்கலைத்தான் “உழைத்து முன்னேறிய உத்தமர்கள்” என்று ஊடகங்கள் வாழ்த்து மழை பொழிகின்றன.

–    அப்துல்  

மேலும் படிக்க:

மீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி !

5

எழுந்தாய்! வாழி காவிரி!

பொங்கி வரும் காவிரியே – கொஞ்சம்
தங்கிச் செல்லாயோ!
கடைமடை இலை நரம்பு வரை
வந்து நில்லாயோ!

கிருஷ்ணராஜ சாகர்
பொங்கி வரும் காவிரியே – கொஞ்சம் தங்கிச் செல்லாயோ! கடைமடை இலை நரம்பு வரை வந்து நில்லாயோ!

தும்பி முகம் கழுவி
நாளாச்சு – எங்கள்
தூளி துணி அலசி
நாளாச்சு!

வெம்பி அழும்
எம் குழந்தை வேண்டுவது
தாய்ப்பால் மட்டுமல்ல,
தாயே, உன் தண்ணீர் பெருக்கின்
உலகூட்டும் ஓசையும்தான்.

மேட்டூர் மேலெழும்ப
காட்டூர் தென்னை மார் சுரக்கும்,
கல்லணை கண் திறக்க
உள் அணைகள் உயிர் சிலிர்க்கும்.

ஈரக்காற்று
சேதி சொல்ல
வரப்புதடு சிலுசிலுக்கும்.
நெடுநாள் காய்ந்த
வயலின் வெடிப்பும்
கெடுநாள் வெடித்த
உழவனின் நாவும்
ஈரம் பார்க்கும்
நேரம்… தவிக்கும்!

ஒகேனக்கல்
இலை, தழைகள் மனங்குளிர மட்டுமா? இதயம் குளிரவும் இலக்கியம் வரை பாய்ந்த காவிரியே…

இலை, தழைகள்
மனங்குளிர மட்டுமா?
இதயம் குளிரவும்
இலக்கியம் வரை பாய்ந்த காவிரியே…

பட்டினப் பாலையில்
பலவகை மிளிர்ந்தாய்

சிலப்பதிகாரத்தில்
சீர் தமிழ் ஒளிர்ந்தாய்!

மணிமேகலையிலும்
மதகு நுழைந்தாய்

கம்பனின் கவிதைச்
சந்தத்தில் கலந்தாய்!

ஆழ்வார் பாசுரம் குழைய
நீதான் ஈரம் காத்தாய்
அடியார் புராணங்களுக்கும்
நீதான் அள்ளிக் கொடுத்தாய்
தஞ்சை தண்டச் சோறுகளை
எங்கள் பெரியார் வாயால்
நீதான் பிரித்து மேய்ந்தாய்!

ஒகேனக்கல் காவிரி
இன்று போல் என்றும் நீ ஓடினால் அல்லவோ – எங்கள் எலும்பும் தோலும் உணர்ச்சிகள் பழகும்!

எதையோ தேடித் தேடி
ஓடி, ஓடி
கம்யூனிஸ்டுகளின் முகம் பார்த்து
கடைசியாய் அகம் நிறைந்து
காவிரியே!
லட்சிய நடை பயின்றாய்!

ஒரு நாள் அல்ல
பல நாள்
விவசாயி அழுத கண்ணீர்
துள்ளி வரும் காவிரியே
உன் துணையால் மட்டுமே விலகும்!
இன்று போல் என்றும்
நீ ஓடினால் அல்லவோ – எங்கள்
எலும்பும் தோலும்
உணர்ச்சிகள் பழகும்!

காவிரியே நீ நிறைந்தால்
எங்கள் கலயங்கள் நிறையும்.
காவிரியே நீ நடந்தால் – எங்கள்
கால்நடைகள் நடக்கும்!

காவிரியே நீ விரிந்தால்
பூச்சிகள் இறகு விரியும்!

காவிரிக் கண்ணே! உன் மென்மை
கரைப் பூக்களின் இதழ்களில் தெரியும்.

தழுவிடும் காவிரித் தாயே – எங்கள்
தலைமுறை உதிரம் கலந்தாயே!
ஓராயிரம் உயிர்களும் நீயே – எங்கள்
உணர்வுப் பெருக்கும் நீயே!

மேட்டூர் அணைக்கு அருகில்
சிறை உடைத்து வந்தாய் காவிரித் தாயே – பார்! எம் மண்ணைச் சிறைபிடிக்க மறுகாலனி மீத்தேன் வாயே.

சிறை உடைத்து வந்தாய்
காவிரித் தாயே – பார்!
எம் மண்ணைச் சிறைபிடிக்க
மறுகாலனி மீத்தேன் வாயே.
உயிர் தழைக்க
ஓடி வந்தாய் நீயே! – தலைமுறை
உயிரெடுக்க மீத்தேன் வாயே!

புதைந்து கிடக்கும்
படிம எரிபொருள் எடுத்து – மக்கள்
பகை முதலாளி லாபம் பார்க்க
நனைந்து கிடக்கும் மண்ணின்
குடலை அறுக்க
துணிந்துவிட்டது அரசு.

துள்ளிவரும் காவிரித்தாயே!
துணைபோகும்
துரோகிகள் முகத்தில் உரசு!

விளைந்து கொடுத்த
காவிரிப் படுகைமேல்
வெட்டு விழுந்தால்,
வெளியேறப் போவது
மீத்தேன் அல்ல – எங்கள்
விவசாயி வர்க்கத்தின் நெருப்பு!

உழவு நடந்தால்
ஊரே வாழும் – மீத்தேன்
இழவு நடந்தால்
ஊரே சுடுகாடாகும்!

திருச்சி
நன்னீர் கெட்டு தண்ணீர் உப்பாகும். பென்சீன், டொலுயீன் கலந்து இனி… புற்றுநோயே முப்போகம்!

நன்னீர் கெட்டு
தண்ணீர் உப்பாகும்.
பென்சீன், டொலுயீன் கலந்து
இனி… புற்றுநோயே முப்போகம்!

ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு
நாட்டை ஆளும்
வேஸ்ட்டர்ன் இந்தியன்களை விரட்டாவிடில்
நாம்
மண்ணின் மைந்தன் என்பதே தப்பாகும்!

நன்றி மறக்கமாட்டோம் காவிரி,
எங்கள் கரைகளில்
நம்பிக்கையோடு பூ விரி!

சூரியன் முதுகு தேய்க்க
எருமை ஊறிய குளங்கள்,

மணிக்கழுத்தை திருப்பி
மைனாக்கள் தெளிநீர் குடித்த
வரப்போடைகள்,

தூக்கு வாளி பழஞ்சோறுண்டு
வாய்க்காலில் கழுவ
நீராகாரம் அருந்த
நீண்டு வரும்
பொடிமீன் வரிசைகள்.

நாற்றாங்காலொடு
மல்லுக்கட்டும் காற்றுக்கு
வெள்ளைக் கொடி காட்டும்
செங்கால் நாரைகள்.

நாற்று நடவு
ஈ, எறும்பு, செடி, கொடி எல்லா உயிர்க்கும் ஈந்தாய் காவிரி, தன்மானம்!

பூச்சிகளின் துள்ளொலிக்கு
தலையசைக்கும் புது நாத்து
பச்சை மணம் கமழ
பயணக் களைப்பை
புத்துணர்ச்சியாக்கும் வயக்காத்து!

ஈ, எறும்பு, செடி, கொடி
எல்லா உயிர்க்கும்
ஈந்தாய் காவிரி, தன்மானம்!
ஊர் அழிய உள் நுழையும்
மீத்தேன் திட்டத்தை ஒழித்துகட்டி
உயிர்களனைத்தும் காப்போம்! உன் மானம்!

பலநூறு ஆண்டுகள்
உயிரினம் பழகி ஓடி – காவிரி
வண்டல் சேர்த்த வளத்தை
ஒரு பன்னாட்டுக் கம்பெனி லாபத்தில்
புதைப்பதுதான் வளர்ச்சித் திட்டமா?
பல்லாயிரம் உயிர்க்கு சோறு போடும்
சுற்றுச்சூழலை அழித்துவிட்டு
சில பணக்கார நாய்களுக்கு
எச்சிலை நம் நிலமா?

பூத்தேன் பொழிந்த
காவிரி மண்ணில்
மீத்தேன் தீயின் வெப்பம்.
தடுத்தேன், தகர்த்தேன் என
ஊர் திரளாவிடில் – தலைமுறைக்கே
தரிசாகிவிடும் கர்ப்பம்!

வயல் வெளி
பல்சக்கரத்தால் பன்னாட்டுக் கம்பெனி – உன் புல்முகம் சிதைத்தால் பொறுத்திடுவோமா? அவனை புதைத்த இடத்தில்
புல்லாய் எழுப்புவோம் உன்னையே!

எங்கிருந்தோ வரும்
கம்பெனி கொள்ளைக்காக
விவசாயம் அழித்து – நாம்
சொந்த நாட்டு அகதிகளாகும் துயரம்,
காவிரித் தண்ணீர் குடித்தவனென்றால்
கார்ப்பரேட் நரியை விரட்டியடிக்க
காவிரியோடு நம் கைகளும் உயரும்!

ஒரு சில முதலாளி சம்பாதிக்க
உதிரம்கலந்த காவிரி மண்முகம்
உப்புநீர் பூப்பதோ?
கழிவுநீரில் காவிரிமுகம் கருக்கினால்
அவன் கதை முடிக்காமல்
கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதோ!

நாணல் பூக்கள் முகம் நனைக்கும்
நதியே உன் தீரத்தில்
மீத்தேன் குழாய்கள் இறங்குமோ?
எதிரியின் நாடி நரம்புகள் அறுக்காமல்
எங்கள் உதிரம் என்ன உறங்குமோ!

நெல், கரும்பு, வாழை
வெற்றிலை, உளுந்து, பயிறு
ஓங்கிய தென்னை, பனை – எமை
தாங்கிய தமிழென
அனைத்தும் ஈன்ற காவிரி அன்னையே,
பல்சக்கரத்தால்
பன்னாட்டுக் கம்பெனி – உன்
புல்முகம் சிதைத்தால்
பொறுத்திடுவோமா?
அவனை புதைத்த இடத்தில்
புல்லாய் எழுப்புவோம் உன்னையே!

குடகு தாவி பாறை வீழ்ந்து
பால்போல் நுரைத்து,
பல்சுவை பயின்று பயின்று,
தெள்ளிய அறிவுபோல்
திகழ்ந்து விரிந்து
மாநிலம் சிறக்கும் மகளே காவிரி!
அடகு போகும் தேசம் காக்க
ஆர்த்தெழும் அரசியல் முழக்கொலி
நீயும் ஆதரி!

எங்கள் அடிவயிறு இறங்கும்
மீத்தேன் ஆழ்துளை கிணறுகள்
பாழ்படும் பயிர்நிலங்கள்!
விடமாட்டோம் என
மீத்தேன் களையை விரட்டியடிக்கும்
மக்களோடு
காவிரியே நீயும் போர்புரி!

அழிவுத்திட்டம் அமலானால்
கழிவாய்ப் போகும் காவிரி வாய்க்கால்.
எங்கள் குளங்களின் வாயில்
மீத்தேன் நஞ்சா?
எங்கள் குயில்களின் குரலில்
ஆசிட் வீச்சா?

பன்னூறு ஆண்டுகள்
பாசனம் செய்த பயிர்நிலமெல்லாம்
பன்னாட்டு கம்பெனி பூசனம் புடிக்க
இதுதான் வளர்ச்சியின் பேச்சா?

பொன்னி நதியே பொங்கிடுவாய்!
போராட்ட நதியால்
காவிரிப்படுகை எங்கும்
கலந்திடுவாய்!

– துரை.சண்முகம்

மோடி சுல்தானை அமெரிக்க பாதுஷா விரும்புவது ஏன்?

2

லகின் ஒற்றைத் துருவ அமெரிக்க வல்லரசு, நாளைய ‘வல்லரசு’ கனவில் மிதக்கும் மோடியின் இந்திய அரசை துரத்தி துரத்தி தனது காதல் வலையை வீசிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகான கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.

ஒபாமா, மோடி
கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.

அதுவும் ஜூலை 31 முதலான 8 நாட்களில் பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவு என ஒபாமாவின் மூன்று மூத்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு அணி வகுத்து வந்திருக்கின்றனர். இவர்களில் கடைசியாக வந்தவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தலைமையிலான அதிகாரிகள் குழு என்பது தற்செயலானது இல்லை.

ஹேகலுக்கு முன்பு ஜூலை 31 முதல் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கரும் பெருவாரியான அதிகாரிகள் பட்டாளத்துடன் டெல்லி வந்திருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கும் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை மேலும் முடுக்கி விடுவது, சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழகத்தின் சமீபத்திய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி பேசி விட்டு போனார்கள்.

மோடி பிரதமராவது உறுதியானதும், மோடிக்கு விசா மறுத்து எரிச்சலூட்டிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை உடனடியாக மூட்டை கட்டி அனுப்பினார்கள். 10 ஆண்டுகளாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருந்த மோடி இந்திய பிரதமர் ஆனதும், அதிபர் ஒபாமா அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

மோடி அரசு பதவி ஏற்ற 10 நாட்களுக்குள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இந்தியா வந்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அவரது தஜ்கிஸ்தான், சீனா பயணங்களுக்கு மத்தியில், வரலாறு காணாத வகையில் இந்துத்துவ பிரதமராக பதவியேற்றிருந்த மோடியின் புத்தம் புதிய அரசை எடை போட்டு பார்க்க டெல்லிக்கும் ஒரு நடை வந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் தொரைசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்திச் சென்றார்.

Rajnath_Singh_US_Deputy_Secy_State_William_Burns
சுதேசி ராஜ்நாத்சிங் விதேசி வில்லியம் பர்ன்சுடன்

அமெரிக்க வெளியுறவுத் துறையில் நிஷா பிஸ்வாலுக்கு மூத்தவரான துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் ஜூலை 2-வது வாரம் டெல்லிக்கு நேரில் வந்தார். மோடியை செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமாவின் அழைப்பை தனிப்பட்ட முறையில் கையளித்தார். இதன் மூலம் ஜூலை இறுதியில் வரவிருந்த ஜான் கெர்ரியின் ராணுவ நட்புறவு பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் ஏற்படுத்தினார். பெரும் விலைக்கு விற்கப்படும் தனது ராணுவ நட்புறவை இந்தியா மீது மேலும் சுமத்துவதற்காக அமெரிக்காவின் இந்திய படையெடுப்பு தொடர்ந்தது.

ஜூலை மாத இறுதியில் இந்தியா வந்து சேர்ந்த ஜான் கெர்ரி, பென்னி பிரிட்ஸ்கர் குழுவினர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து அமெரிக்க – இந்திய பாதுகாப்பு நட்புறவு உரையாடல் கூட்டத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், “இந்தியர்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று சுஸ்மா சுவராஜ் கூறியதாக தலைப்புச் செய்திகள் வெளியாகின. அதைக் கூட பெருந்தன்மையாக சகித்துக் கொண்டு அனுமதித்தது அமெரிக்கத் தரப்பு. பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இந்த காமெடி செய்திகள்தானா பிரச்சனை?

ஜான் கெர்ரி நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியுடனும் பிரிட்ஸ்கர் வர்த்தத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது குறித்து விளக்கினார் கெர்ரி. இறுதியாக பிரதமர் மோடியை சந்தித்தார். தன்னை சந்திக்க மோடி கடைசி நேரத்தில்தான் ஒத்துக் கொண்டது கெர்ரியை வருத்தமடைய செய்தது என்று பெரியண்ணனையே நம்ம அண்ணன் காக்க வைத்து விட்டார் என்று பூரித்தன இந்திய ஊடகங்கள்.

ஜான் கெர்ரி
ஜான் கெர்ரி – பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது காமெடி செய்திகள்தானா பிரச்சனை?

மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் புதிய ஒப்பந்தமான, சுங்க விதிகளை தளர்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று மறுத்து, இந்திய மக்களின் நலன்களை பாதுகாப்பது தன்னைப் போன்ற உறுதியான தலைவரால்தான் முடியுமென மோடி நிரூபித்ததாக அவரது அடிப்பொடிகள் போற்றி மகிழ்ந்தனர்.

‘காசா முதல் உக்ரைன் வரை, சீனா முதல் ஆஸ்திரேலியா வரை அமெரிக்க அரசுக்கு உலகை பரிபாலிக்கும் ஆயிரம் பொறுப்புகள் இருக்கும் போது அமெரிக்கா இப்படி முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவை பாராட்ட வைத்த உறுதியான தலைவர் மோடி. இந்தியா உறுதியாக இருந்தால்தான் உலகம் நம்மை மதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது’வென மோடி பக்தர்கள் உள்ளம் பூரித்து போகின்றனர். ஆனால், போதுமான தேவைகள் இல்லாமல் அமெரிக்க அங்கிளின் தொப்பி ஒரு பக்கமாக சரிவதில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் மலிவு விலையில் உற்பத்தித் தளம் அமைத்துக் கொள்ளவும், மூலதனமிட்டு லாபம், வட்டி, உரிமத் தொகை என்று அள்ளிச் செல்லவும் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் காரணங்களோடு, 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளிலேயே அதிக அளவு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்பதுதான் அமெரிக்க காதல் சீராட்டலின் அடிப்படை.

குடியரசு தின பேரணி
டெல்லியில் பேரணியில் விடப்படும் ஆயுதங்கள்

ஒவ்வொரு ஆண்டும் உலகின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 10% இந்தியாவுக்கு வந்து சேருகிறது. இவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதன் மூலம் இந்தியா ராணுவ வல்லரசாகப் போகிறது என்று இந்துத்துவவாதிகள் கதை கட்டலாம். ஆனால், இந்தியாவின் ஆயுத ஒப்பந்தங்கள் இடைத்தரகர்கள் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கும், ஆயுத விற்பனை செய்யும் நாடுகளின் விருப்பத்திற்கும் ஏற்றபடிதான் போடப்படுகின்றன. அப்படி வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்ற நாட்டை சார்ந்தே இந்திய ஆளும் வர்க்கங்கள் இருக்க வேண்டியிருக்கிறது. அடுக்கி வைத்து ஆளும் வர்க்கங்கள் அழகு பார்க்கவும், டெல்லியில் பேரணி நடத்தவும் மட்டுமே இந்த ஆயுதங்கள் பயன்படும். இது இன்னொரு கோணத்திலும் உண்மையாக உள்ளது.

“இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே விற்கிறது, முன்பு ரசியாவிடம் வாங்கியது போல தாக்குதல் ஆயுதங்களை விற்பதில்லை” என்கிறார் பாதுகாப்புத் துறை வல்லுனர் பிரம்மா செல்லானி. “மேலும், இந்தியாவுடன் 2009 முதல் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்தி வரும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் 2004 முதல் பாதுகாப்பு உடன்பாடும், 2006 முதல் ராணுவ நட்புறவு உரையாடலும் நடத்தி வருகிறது. சீனாவுடன் 1997 முதல் ஆக்கபூர்வமான நட்புறவு உரையாடலை பராமரித்து வருகிறது”. இப்படி அனைத்து தரப்புகளுக்கும் ஆயுதம் விற்பதுதான் அமெரிக்க ராணுவ தந்திரம்.

ரசியாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் திரும்பியது அமெரிக்க ஆயுதத் துறைக்கு புதிய போனஸ் ஆக இருந்தது. 1970-களில் எகிப்திய அரசு, ரசிய வாடிக்கையாளராக இருந்ததை மாற்றி அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது இது என்கிறார் பிரம்மா செல்லானி. எகிப்து அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு கூட அமெரிக்க அரசு தானே நிதி உதவி அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், ‘உப்பு போட்டு தின்னும்’ இந்திய ஆளும் வர்க்கமோ, இந்திய மக்களின் பணத்தை ரொக்கமாகவே கொடுத்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன. எனவே, இந்தியாவுக்கு விற்பது அமெரிக்காவுக்கு வணிக ரீதியில் மேலும் விருப்பமானதாக இருக்கிறது.

கலாம், புஷ், மன்மோகன்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. அணுஉலைகளை விற்பது குறிப்பிடத்தக்க அளவு நடக்கவிட்டாலும் 2005-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பான வாக்குறுதியாக சேர்க்கப்பட்டிருந்த ஆயுத விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

10 ஆண்டுகளுக்கு $10 கோடியாக (ரூ 6,00 கோடி) இருந்த அமெரிக்காவின் ஆயுத விற்பனை இப்போது பல நூறு கோடி டாலர்கள் மதிப்பை தாண்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் இந்திய – அமெரிக்க உறவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக சித்தரிக்கப்பட்ட தேவயானி கோப்ரகடே விவகாரம் சூடுபறந்து கொண்டிருந்த போது, அமெரிக்க அரசை எதிர்த்து இந்திய ‘தேசமே’ வீரச்சவடால்கள் அடித்துக் கொண்டிருந்த போது மன்மோகன் அரசு $101 கோடி (சுமார் ரூ 6,000 கோடி) சி-130ஜே ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தத்தை ஒபாமா அரசுக்கு பரிசாக வழங்கியது. முன்னதாக, செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமாவை சந்தித்த போது கொண்டு போன பரிசுப் பொருட்களில் $500 கோடி (சுமார் ரூ 30,000 கோடி) மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தமும் இருந்தது.

சென்ற ஆண்டு  இந்திய அரசின் இணைய பாதுகாப்புத் துறை அமெரிக்காவிலிருந்து $190 கோடி மதிப்பிலான தளவாடங்களை இறக்குமதி செய்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிய மிகப்பெரிய வெளிநாட்டு வாடிக்கையாளர் என்ற பெருமையை சாதித்திருந்தது.

சக் ஹேகல்
“இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது”

தேவயானி விவகாரம், மோடியின் உரசப்பட்ட தன்மானம், மன்மோகன் போன்று ஒரு தொலைபேசி அழைப்பில் அமெரிக்க தேவைகளை சாதிக்க முடியாத மோடியின் இந்துத்துவ உறுதி, மன்மோகன் அரசை விட பல மடங்கு மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை வாரி வழங்கத் தயாராக இருக்கும் மோடி பாணி ‘வளர்ச்சி’ இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும் அமெரிக்க அரசு தனது கவரும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இருதரப்பு உறவுகளில் இருந்த இத்தகைய முணுமுணுப்புகளை வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரிகள வந்து சீர் செய்த பிறகு, வந்து இறங்கியது பீரங்கி வண்டி. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், “இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் கூறுவதை வரை காத்திருக்காமல், பாதுகாப்புத் துறையில் 49% வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மோடி அமைச்சரவை ஏற்கனவே எடுத்திருந்தது. “அந்த முடிவு இந்திய – அமெரிக்க ராணுவ உறவு முழு பரிமாணத்தை எட்ட உதவும்” என்று சக் ஹேகல் மோடி அரசின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும் நெருக்கடியான சூழலில் இந்தியாவில் இருந்த சக் ஹேகல், நடுவில் அமெரிக்க உயர் மட்ட குழு கூட்டத்தில் தொலை தொடர்பு மூலம் கலந்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியப் பயணம் அமெரிக்க ஆயுதத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இவ்வளவு சிரமத்துக்கிடையே இந்தியா வந்திருந்த அவர், “இந்திய அமெரிக்கக் கூட்டுறவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தொட்டறியத்தக்க பலன்களை தருவதாகவும், குறிப்பிடத்தக்க சாதனைகளை நோக்கியும் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதாவது, இந்தியா அப்பச்சே மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்களுக்கு $140 கோடி (சுமார் ரூ 8,400 கோடி) வருமானத்தை ஈட்டித் தரும் தொட்டறியத்தக்க பலனாக இருக்கும்.

குறிப்பான பலனளிக்க காத்திருக்கும் இன்னொரு சாதனை அடுத்த தலைமுறை ஜாவ்லின் பீரங்கி வண்டி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வாங்கும் ஒப்பந்தங்களை மோடி அரசு நிறைவேற்றி கொடுப்பது. அது குறித்தும் சக் ஹேகல் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, தெற்காசியாவில் இந்தியாவை அமெரிக்க அடியாளாக உறுதி செய்து விட்டு, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்த போயிருக்கிறார் சக் ஹேகல்.

மோடி தர்பார்
மோடி சுல்தானின் தர்பாரில் அமெரிக்க பாதுஷாவின் பிரதிநிதிகள்

மேலும் மேலும் தாகத்துடன் புதுப் புது ஆயுதச் சந்தைகளை தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்திய ஆளும் அதிகார தரகர்கள் தலையில் மேலும் மேலும் அதிக விலையிலான பளபளப்பான ஆயுதங்களை திணித்து இந்திய மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் செல்ல ஆர்வமாக உள்ளது. இதை சாதிப்பதற்கு மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவுடன் அதிக எண்ணிக்கையிலான கூட்டு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நடத்துகிறது. அதன் மூலம் அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு சாதகமான அரசியல் மற்றும் தொழில்நுட்ப சூழலை உருவாக்கித் தருகிறது.

இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் பெருமளவுக்கு போட்டியில்லாமல் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் மூலம் முடிக்கப்படுகின்றன என்கிறார் செல்லானி. 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டி விற்பனை முறையில் அழைக்கப்பட்ட போது அமெரிக்க நிறுவனங்கள் ஒன்று கூட தகுதி பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அவர். இதிலிருந்தே அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அரசை எவ்வளவு மொட்டை அடிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களின் மதிப்பு, அமெரிக்கா இசுரேலைத் தவிர்த்த எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கும் மானிய உதவியை விட அதிகமானதாகும். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மானியமாக ஆயுதங்களை தருகிறது. அதன் மூலம் இந்தியாவை கூடுதல் ஆயுதங்களை வாங்கத் தூண்டுவதோடு, பாகிஸ்தான் போன்ற சர்வ மானிய ஆயுத வழங்கல்களுக்கான செலவுகளையும் இந்தியா போன்ற போலி வல்லரசு கனவு நாடுகளிடம் வசூலித்துக் கொள்கிறது.

இந்திய ஆளும் வர்க்கங்களோ தேச வேறி, போர் வெறி என்று சவடால் அடித்து மக்கள் பணத்தை ஆயுத பேரங்களில் அள்ளி விடுகின்றனர்.

இந்தியாவில் கூட்டு உற்பத்தி சாலைகளை அமைப்பதன் மூலம் ஆயுத உற்பத்தியில் தற்சார்பை எட்டுவோம் என்று மோடி சவடால் அடிக்கிறார். ஆனால், கொடுப்பவன் மனம் வைத்தால்தானே எடுப்பவன் பெற்றுக் கொள்ள முடியும். அமெரிக்காவோ, ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை போன்ற சாதாரண ரகங்களுக்கான கூட்டு உற்பத்தியை காரட்டாக தொங்க விட்டு, இன்னும் பெரிய தொகையிலான ஆயுத தளவாடங்களை  இந்தியாவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி வருகிறது.

அடுத்த மாதம் மோடி அமெரிக்கா போகும் போது, இந்திய நலன்களை அமெரிக்காவிடம் மேலும் விற்பதற்கான உச்சகட்ட உடன்பாடுகளுக்கான தயாரிப்புகள் அமெரிக்க அதிகாரிகளால் கடந்த சில வாரங்களில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன

தேசம் விலை போய்க் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

– பண்பரசு

மேலும் படிக்க

நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !

0

ன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஃபேஸ்புக் இன்னபிற சமூக வலைத்தளங்கள் கருத்து சுதந்திரத்தை அளிக்கும் நவீன சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சுதந்திரத்தின் உண்மை நிலை என்ன?

பேஸ்புக் சோதனை
பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன

முகநூல் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கொண்டு அவர்களுடைய மன உணர்வுகளை தூண்டும் திறன் குறித்த ஆய்வை நடத்தியுள்ளது சமீபத்தில் வெளியானது. ஆங்கில ஊடகங்களில் பரவலான விமரிசனத்திற்கு உள்ளான இந்த ஆய்வு, கருத்து சுதந்திரம் குறித்த நமது கேள்விக்கு விடையளிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பயனர்கள் தங்களது முகப்பக்கத்தில் பெறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைத்து ஒருவர் தொடர்ச்சியாக நேர்மறை அல்லது எதிர்மறை கருத்துக்களை மட்டும் காணுமாறு செய்திருக்கிறது முகநூல் நிறுவனம்.

இதைத் தொடர்ந்து அச்செய்தி ஓடைகளை பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட இச்சோதனையில் சுமார் 7 இலட்சம் பயனர்களின் நிலைத்தகவல்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கான அவர்களது எதிர்வினையும், பேஸ்புக்கில் நடத்தையும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் ஆங்காங்கே இச்சோதனைக்கு எதிர்ப்பு கிளம்பிய போது, தனது சோதனை குறித்த தகவல், சரியான முறையில் பயனர்களுக்கு தெரிவிக்காததற்காக வருத்தம் தெரிவித்துள்ள ஃபேஸ்புக், தனது பயனர்களை சோதனயில் ஈடுபடுத்தியதற்காக மன்னிப்பு எதையும் கோரவில்லை.

சென்ற ஜூன் மாதம் இச்சோதனை குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக் பயனர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு பத்திரிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளும் முகநூல் நிர்வாகத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ட்விட்டர் தளத்திலும் கூட ஃபேஸ்புக்கிற்கு எதிர்ப்பை பதிவு செய்து அதை புறக்கணிக்குமாறும் நிலைத்தகவல்கள் பகிரப்பட்டன. இங்கிலாந்தின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பும்,  அமெரிக்காவின் FTC-யும் இப்பிரச்சனை தொடர்பாக பேஸ்புக்கிடம் விளக்கம் கோரியுள்ளன.

பேஸ்புக் சோதனை
நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

ஆனால் நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சொல்லப் போனால் இக்காலத்தில்தான் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடிமைத்தனத்தில் ஊறிய இந்திய மனங்களுக்கு ஃபேஸ்புக்கின் இந்த கண்காணிப்பு முறை பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தாமலும் இருந்திருக்கலாம்.

ஏற்கனவே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியான போதும் அப்போதைய மன்மோகன் அரசும் கள்ள மவுனம் சாதித்தது நினைவிருக்கலாம். மன்மோகனை செயலற்ற பிரதமர் என்று விமர்சித்து, தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று அறைகூவிய மோடியின் அரசும், பாஜகவை ஒட்டுக் கேட்க வேண்டுமென கூறிய அமெரிக்காவின் ஆவணங்கள் வெளியானதற்கு முணுமுணுப்பை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை.

மேலும் தேர்தல் காலத்தில் மோடி கோஷ்டியின் கார்ப்பரேட் விளம்பரப் படையெடுப்புக்கு பேஸ்புக் பெரிதும் பயன்பட்டது. பதிலாக பேஸ்புக்கிற்கு பாஜகவின் கார்ப்பரேட் நன்கொடைகள் பயன்பட்டது. அதை ஒட்டி மோடி அதிகம் தேடப்படும் தலைவர் என ஃபேஸ்புக் அதிகாரிகள் சொல்லியதும் நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் பார்த்தால் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் சோதனைக்கு எதிர்ப்பு இல்லை என்பதன் காரணம் புரியும்.

முன்னர் கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புடன் பகிர்ந்து கொள்வது குறித்து செய்தி வெளியான போதும் அந்நிறுவனங்களின் பயனர்களிடம் சிறு சலசலப்பு கூட எழவில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கண்காணிப்பதையும், உளவு நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதையும் சுட்டிக் காட்டும் போது, “ஆம் கண்காணித்தால் என்ன, நான் தவறு செய்யவில்லையே” – என சிலர் வாதிட்டார்கள். நாம் தவறு செய்வதை கண்காணிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்தது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. சொல்லப் போனால் இந்துத்துவம் உருவாக்கியிருக்கும் முசுலீம் எதிர்ப்பு சிந்தனையின் நீட்சியாக, தீவிரவாதிகளை கண்காணிக்க இத்தகைய தியாகம் அவசியம் என்றே இவர்கள் நியாயப்படுத்தினார்கள்.

பேஸ்புக் சோதனை
தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால் இங்கே ஃபேஸ்புக் ஆய்வு செய்தது தனது விளம்பர வருமானத்தை அதிகரித்துக் கொள்ள, பயனர்களின் மனோபாவம் எப்படி இருக்கும் என்று தூண்டில் புழு போட்டு ஆசை காட்டி மோசம் செய்ததற்கு நிகரானது. இப்படி தனது பயனர்களை சோதனையில் ஈடுபடுத்துவது பேஸ்புக்கிற்கு முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அந்நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானிகள், பயனர்களின் மன உணர்வுகளை செயற்கையாக பலமுறை தூண்டியுள்ளனர். இதை ஃபேஸ்புக்கின் முன்னாள் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிய ஆன்ட்ரூ லாட்வினா தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைக்கு எதிரான எதிர்ப்புகள் அனைத்திலும் முகநூல் தனது பயனர்கள் அறியாமல் அவர்களை உளவியல் சோதனைக்கு உட்படுத்தியதும், அவர்களது நிலைத்தகவல்களை கண்காணித்ததும், செய்தி ஓடைகளை மாற்றியமைத்ததும் மட்டுமே தார்மீகப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பிரச்சனையின் அபாயகரமான மறுபக்கம் இச்சோதனை முடிவுகளில் உள்ளது.

உணர்ச்சிமிகு பகிர்தல்களின் மூலம் அவ்வுணர்ச்சி நிலைகளை பயனர்களின் பகுத்தறிவுக்கு தெரியாமலேயே கடத்த முடியும் என முகநூலின் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது முகநூல் நிலைத்தகவல்கள் ஒருவரின் உணர்ச்சிகளின் மீது, மனநிலையின் (mood) மீது வினையாற்றுகின்றன என்பதோடு ஒருவர் காணுறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைப்பதன் மூலம் அவருடைய உணர்ச்சிகளையும் மாற்றியமைக்க முடியும் என்கிறன அம்முடிவுகள். நாளடைவில் அவர் என்ன அரசியல் பார்வையினை கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூட இதன் மூலம் செய்ய முடியும். தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் அத்தகையவை.

எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

மகிழ்ச்சி, துன்பம் இன்ன பிற மனித மன உணர்வுகளை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதாக நீங்கள் பயன்படுத்தும் வசதி, உங்கள் மன உணர்வுகளை செயற்கையாக தூண்ட முடிவதையும், உங்கள் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல மெய்நிகர் உலகின் மாய உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை ஃபேஸ்புக்கின் சோதனை நிருபித்திருக்கிறது. இனி நீங்கள் அழுவதும் , சிரிப்பதும் உங்கள் கையில் இல்லை. அவர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும், சிரிக்கச் சொன்னால் சிரிக்க வேண்டும்.

அப்போது அழுவதற்கும், சிரிப்பதற்கும் உரிய கருப்பொருளும், நிகழ்வுகளும் தலைகீழாக கூட மாறியிருக்கலாம். ஆக ஃபேஸ்புக் மூலம் நீங்கள் உங்கள் உலகை கட்டியமைக்க முடியாது. ஃபேஸ்புக்தான் உங்களது அறிவு, அரசியல் பார்வையினை கட்டியமைக்கும்.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

அம்மா போலீஸ் – கேலிச்சித்திரம்

0

amma-police-cartoon

படம் : ஓவியர் முகிலன்

அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

0

னியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பு என்பது இலைமறை காயாகக்கூட இல்லாமல், மிகவும் அம்மணமாகவே உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் தெரிவிக்கும் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றித் தரும் அறிக்கையாகவே மாறிவிட்டது. இப்படிபட்ட விசுவாசத்தைக் காட்டுவதில் நரேந்திர மோடி அரசின் பட்ஜெட் கொஞ்சங்கூட கூச்சநாச்சம் பார்க்கவில்லை என்பதே உண்மை.

2014 பட்ஜெட்ஆனால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திற்காகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பது போலவும் அதற்காகவே இந்த பட்ஜெட்டில் புதிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றுக்கு 2.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி வருகிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.குருமூர்த்தி.

பட்ஜெட் பற்றி குருமூர்த்தியும் ஊடகங்களும் உருவாக்கும் சித்தரிப்பு ஒரு மோசடி என்பதைப் புரிந்துகொள்ள “நாணயம் விகடன்” இதழ் (20.07.2014) வெளியிட்டுள்ள பட்டியலொன்றைக் கீழே தந்திருக்கிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அடிக்கட்டுமானத் திட்டங்களின் மூலம் கொழுத்த இலாபத்தை அறுவடை செய்யப் போகும் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ள அவ்விதழ், அந்நிறுவனங்களில் உடனடியாக முதலீடு செய்து இலாபம் பார்க்குமாறு நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.

  • துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை மேம்பாடு திட்டங்கள்: எல் அண்ட் டி., எஸ்ஸார் போர்ட்ஸ் மற்றும் ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா.
  • மின்சாரம், கச்சா எண்ணெ, இயற்கை எரிவாயு திட்டங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், ஜெய்பிரகாஷ் பவர், கே.இ.சி.இண்டர்நேஷனல்.
  • ரியல் எஸ்டேட், ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தித் துறை: சோபா டெவலப்பர்ஸ், டாடா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல், ஜே.கே. லட்சுமி சிமெண்ட்.
  • இந்த அடிக்கட்டுமானத் துறைகளுக்கு அப்பால், வங்கிகள் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய நீண்ட கால இன்ஃப்ரா பண்டுகளைத் திரட்ட அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவையும்;
  • * வீட்டுக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால், ஹெச்.டி. எஃப்.சி.வங்கி, கிருக் ஃபைனான்ஸ் நிறுவனங்களும்;
  • விவசாயத் துறையில் புதிய யூரியா கொள்கை அமலுக்கு வர உள்ளதால் தீபெக் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனமும், சூரிய சக்தி மற்றும் உணவுப் பதப்படுத்தலுக்கு பட்ஜெட்டில் தரப்பட்டுள்ள முக்கியத்துவத்தால் ஜெயின் இர்ரிகேஷன், கோஹினூர் ஃபுட்ஸ் நிறுவனங்களும்;
  • நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகையால் ஏற்படும் பணப் புழக்கத்தால் ஹெச்.யு.எல்., ஐ.டி.சி., கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நுகர்பொருள் நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருக்கிறது நாணயம் விகடன்”.

தேச வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயர்களில் கொண்டுவரப்படும் எந்தத் திட்டத்தை அறுத்துப் பார்த்தாலும் கிடைக்கக்கூடிய சித்திரம் இதுதான்.
_______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
_______________________________

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2

“நாங்கள் பிஷ்னோய்கள். நாங்கள் நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வோம். தீமை செய்தவர்களை மறக்க மாட்டோம்.  எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டும் தான். நாங்கள் ஏன் அமைச்சரைப் பார்த்து அஞ்ச வேண்டும்? அவர் தான் எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டம் அவரை தண்டிக்கவில்லை என்றாலும், நாங்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை”

நிகால் சந்த்ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்லால் பிஷ்னோய் 86 வயதான ஒரு ஏழை விவசாயி. அரசியலில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் பாலியல் வெறி பிடித்த மிருகம் ஒன்று தனது பேத்தியை கிழித்து சீரழித்துப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது அரற்றல்களில் ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்குகிறது.

பிரிஜ்லால் பிஷ்னோயின் பேத்தி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 20.12. 2010 அன்று ஓம் பிரகாஷ் என்பவனோடு திருமணம் முடிகிறது. ஓம் பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவன், பாரதிய ஜனதா கட்சியின் கீழ்மட்ட பொறுப்பு ஏதோவொன்றில் இருக்கிறான் என்பவை தவிர்த்து பிஷ்னோய் குடும்பத்தாருக்கு அவனைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாது.

”நாங்கள் கிராமத்தின் வெளியே விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தானிக்களில் (வயலின் நடுவே மரச்சட்டங்களால் தளம் உயர்த்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய மரக் குடிசை போன்ற அமைப்பு) வாழ்கிறவர்கள். கிராமத்தோடு எங்களுக்கு அவ்வளவாக தொடர்புகள் கிடையாது” என்கிறாள் பிரிஜ்லாலின் பேத்தி.

வெளியுலகம் தெரியாத அப்பாவி ஏழைகள் என்பதோடு, பிரிஜ்லாலின் பேத்திக்கு அடுத்ததாகப் பிறந்த இரண்டு தங்கைகளும் இருந்தனர். படித்து வழக்குரைஞராக வேண்டும் என்கிற தனது கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணத்திற்கு தயாரானாள் அந்தப் பெண்.

”நாங்கள் அவனுக்கு வரதட்சணையாக எங்கள் சக்திக்குட்பட்டு எவ்வளவோ கொடுத்திருந்தோம். என்றாலும், கல்யாணம் முடிந்த உடனேயே அவனது நடவடிக்கைகள் முற்றாக மாறின. மேலும் வரதட்சணை வாங்கி வர துன்புறுத்திக் கொண்டே இருந்தான்”

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஹரியானாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளான் ஓம்பிரகாஷ். தனது இளம் மனைவியை எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்தோடே கண்காணிப்பில் வைத்திருந்த ஓம்பிரகாஷ், வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளான்.

ஜெய்ப்பூரில் அவன் அடிக்கடி தனது வீட்டை மாற்றி வந்திருக்கிறான். மனைவிக்கு அவன் வாங்கிக் கொடுத்த உணவுப் பதார்த்தங்களில் ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறான்.

“நான் எப்போதும் ஒரு விதமான மயக்க நிலையிலும் ஆழ்ந்த தூக்கத்திலும் தான் இருந்தேன். விழிப்பான சொற்ப நேரங்களில் கூட அரைத் தூக்கத்திலேயே இருந்தேன். நான் மயக்கத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஏதோவொன்று நடந்துள்ளதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கிராமத்தைச் சேர்ந்தவள். நகரம் மிக அந்நியமாக இருந்தது. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. யாரோடு பேசுவதென்றும் தெரியாது. அங்கே ஒரு சிறைக் கைதி போல் வைக்கப்பட்டிருந்தேன்” என்கிறாள் அந்த இளம்பெண்.

தின்பண்டங்களில் ஏதோ கலந்திருப்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் ஓம்பிரகாஷ் கொடுத்த பதார்த்தங்கள் எதையும் சாப்பிட மறுக்கிறாள். கொஞ்சம் சுயநினைவோடு இருந்த சந்தர்பம் ஒன்றின் போது ஓம்பிரகாஷின் சகோதரன் தன்னோடு உறவு கொள்ளும் நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அந்த அயோக்கியத்தனத்திற்க்கு உடன்பட மறுத்துப் போராடியிருக்கிறாள்.

இது ஒன்றும் புதிது கிடையாது, பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் தான், அவளைத் தனது மனைவியாகவே கருதவில்லையென்றும், தனது அரசியல் வளர்ச்சிக்காக அவளைப் பயன்படுத்திக் கொள்வதே தனது நோக்கம் என்றும் எகத்தாளமாக சொல்லியிருக்கிறான் ஓம்பிரகாஷ். மேலும், அவளை மயக்க நிலையில் இருக்கும் இதே போல் பலரோடும் அனுப்பி வீடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான். அந்த வீடியோக்களில் சிலவற்றை அவளுக்கே காண்பித்து மிரட்டியும் இருக்கிறான்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்காமல் தொடர்ந்து இடங்களை மாற்றி வந்த ஓம்பிரகாஷ், விலை உயர்ந்த செல்போன்களையும் வாகனங்களையும் பயன்படுத்தியிருக்கிறான்.

நிகால் சந்த் மேக்வால்
நிகால் சந்த் மேக்வால்

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் சுமார் ஒன்பது மாதங்களாக இந்த சித்திரவதைகளை அந்தப் பெண் அனுபவித்து வந்திருக்கிறாள். ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். கிரிமினல் எம்..பிக்களை சகித்துக் கொள்ளவே மாட்டேன் என்று போர் குரல் எழுப்பியிருக்கும் உத்தமர் மோடியின் தற்போதைய அரசாங்கத்தில் உரத்துறை அமைச்சராக இருக்கும் அந்தப் பாலியல் குற்றவாளியின் பெயர் நிகால் சந்த் மேக்வால்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் கீழ் மட்ட பொறுப்பில் இருந்த ஓம் பிரகாஷ், பில்பங்கா ஜில்லா பரிஷத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக அரசியலில் ”வளர்கிறான்”. பிரிஜ்லால் பிஷ்னோயின் உறவினர் ஒருவரை ஜெய்ப்பூருக்கு வரவழைக்கும் ஓம் பிரகாஷ், பிஷ்னோய் குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தங்கள் பெண்ணை ஓம் பிரகாஷுக்கு எட்டு லட்சம் ரூபாய்களுக்கு விற்று விட்டதாக எழுதித் தரக் கேட்டு மிரட்டியுள்ளான்.

மிரட்டப்பட்ட உறவினரின் மூலம் அந்தப் பெண்ணின் பரிதாப நிலை பிஷ்னோய் சமூக மக்களின் கவனத்திற்குச் செல்கிறது. அவர்கள் கொந்தளித்துப் போகிறார்கள். என்றாலும் ஏழைகளான அவர்களால் பாரதிய ஜனதாவின் மேல் மட்டம் வரை நெருங்கிய தொடர்பு கொண்ட ஓம்பிரகாஷை எதிர்க்க முடியவில்லை. அவன் மேல் வரதட்சணை வழக்கு பதிய முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கூட பதிவாகாத படிக்கு தனது போலீசு செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து விடுகிறான் ஓம்பிரகாஷ்.

உள்ளூர் அளவிலான பிரச்சினையாக முற்றி, இறுதியில் சிர்ஸாவில் சாதி பஞ்சாயத்து ஒன்றின் முன் விசாரணைக்கு வருகிறது இந்த விவகாரம். அங்கே தனது உறவினர்களின் உதவியோடு தப்பிச் செல்லும் பிரிஜ்லாலின் பேத்தி தனது குடும்பத்தோடு சேர்கிறாள்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். என்னால் அவர்கள் அனைவரையும் அடையாளம் காட்ட முடியும். அமைச்சர் எங்கள் கிராமத்தவர்கள் மேல் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் நான், எனது வாக்குமூலத்தை மாற்றப் போவதில்லை. எனக்கு நடந்ததென்னவோ நடந்து விட்டது, ஆனால் இதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது” என்கிறாள் அந்தப் பெண்.

விஷயத்தைக் கேள்விப் பட்ட சிர்ஸா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஹெத்ராம் பெனிவ்வால் உடனடியாக அதில் தலையிட்டுள்ளார். போலீசில் புகார் கொடுக்க முற்பட்ட போது, சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளதால் தம்மால் அதில் தலையிட முடியாது என்று சிர்ஸா மாவட்ட போலீசார் கைகழுவியுள்ளனர். அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

மோடி அரசு
அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

சிர்ஸா மாவட்ட போலீசு கைவிட்டபின் அந்தப் பெண் ஜெய்பூர் மாவட்ட போலீசாரை நாடியிருக்கிறாள். அவர்களோ நாள் முழுவதும் அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் அமரச் செய்து விட்டு வழக்குப் பதிந்தால் உனக்குத் தான் அவமானம் என்று எச்சரித்துள்ளனர். பார்ப்பன ஆணாதிக்க கொடுங்கோன்மை என்பது இந்துமதவெறி பாரதிய ஜனதா கும்பலுக்கு மட்டுமா, ஒட்டுமொத்த போலீசு-அதிகார அடுக்குமே அதில் தான் ஊறித் திளைத்துக் கிடக்கின்றன.

அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த ஹெத்ராம் பெனிவால் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சௌத்ரி ஆகியோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார்.

நிகால் சந்த் மேக்வால் மத்திய அமைச்சராகும் வரை இந்த விவகாரம் குறித்து நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்த காங்கிரசு இத்தனை காலம் கழித்து இப்போது கோதாவில் குதித்து பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பாரீர் என்று போலியாக கூவுகிறது. காங்கிரசு கடைபிடித்து வந்த கள்ள மௌனத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாதிக்கப் பட்ட அந்தப் பெண் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் நிகால் சந்த் மேக்வால் உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் தலைவர்களோடு சில உள்ளூர் காங்கிரசு பெருச்சாளிகளின் பெயர்களும் அடக்கம். குறிப்பாக, ராஜஸ்தானின் முன்னாள் இளைஞர் காங்கிரசு தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் பெயரையும் அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறாள்.

மார்க்சிஸ்டு கட்சியின் ஹெத்ராம் பெனிவால் இந்தக் கொடுமையான சம்பவத்தை அதிகார அடுக்கின் பல மட்டங்களுக்கும் சுமந்து திரிந்துள்ளார். எங்காவது நியாயம் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கிரார். தேசிய மகளிர் ஆணையமும், ராஜஸ்தான் மகளிர் ஆணையமும் விசயத்தைக் கேட்டு விட்டு சம்பிரதாயமான பேச்சுடன் அடங்கி விட்டதாக ஹெத்ராம் குறிப்பிடுகிறார். அரசு மற்றும் அதிகார வர்க்கம் குறித்த மார்க்சிஸ்டு கட்சியின் புனித மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பட்டிருக்கும் அவர் மேல் பரிதாபமே மேலிடுகிறது. மக்களைத் திரட்டி போராட வேண்டிய இடத்தில் மயிலே மயிலே இறகு போடு என்று அதிகார வர்க்கத்திடம் இறைஞ்சுவதால் என்ன பயன்?

அதே நேரம் இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய முயற்சிகளே கூட அபூர்வம் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் இந்துமதவெறியர்களை தொந்தரவு செய்யாத அளவோடு நின்றுவிடுவதுதான் பிரச்சினை.

இதற்கிடையே மொத்தமாக மலத்தில் முங்கியெழுந்து விட்டு பன்னீராக மணக்கிறதே என்கிறது பாரதிய ஜனதா கட்சி. மொத்தமும் மோடியின் பெயரைக் கெடுக்க நடக்கும் அரசியல் சதி என்கிறார் அக்கட்சியின் ராஜ்நாத் சிங். மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பாக 2011-ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே பின்னாட்களில் மோடி பிரதமர் ஆகப் போகிறார் என்பதை எப்படி பிஷ்னோய் குடும்பத்தினர் அறிந்திருக்க முடியும் என்பது பற்றிய விஞ்ஞான விளக்கங்களை அவர் சொல்லவில்லை. ஒருவேளை அக்கட்சிக்கு இணையத்தில் சொம்படித்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் சொல்லக் கூடும்.

இப்போது மட்டும் என்ன நடக்கும்? அந்தப் பெண் நடத்தை கெட்டவள், காசுக்கு விலை போய்விட்டாள், காங்கிரசு ஏற்பாடு செய்த நாடகம் என்றெல்லாம் ஆதாரங்களை உற்பத்தி செய்து உலவவிடுவார்கள்.

தங்களது சொந்த வர்க்க அபிலாஷைகளுக்காக மோடியின் ஆசை வார்த்தைகளில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன சொல்வார்கள்? இது தான் பாரதிய ஜனதா கட்சியின் தராதரம் என்பதைப் புரிந்து கொள்வார்களா?

இந்தி பேசும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் செல்வாக்கோடு இருப்பதும், அந்த செல்வாக்கில் இத்தகைய ஆணாதிக்க பொறுக்கித்தனங்களை உள்ளிட்டு பல்வேறு கொடுங்கொன்மை செயல்கள் நடப்பதும் வேறு வேறு அல்ல. இந்தி இருக்கும் மாநிலங்களில் உள்ள இந்த பாரதப் பண்பாட்டைத்தான் முழு இந்தியாவிற்கும் பரப்ப துடிக்கிறது பார்ப்பனிய பாஜக கும்பல்.

மேலிருந்து கீழ் வரை ஒட்டு மொத்தமாக கிரிமினல்களையும் காமாந்தகார மிருகங்களையும் உள்ளடக்கிய குற்றக் கும்பல் தான் இந்துத்துவ கும்பல். இதை சட்டப்படியோ, நீதிமன்றத்தாலோ தண்டிக்க முடியாது. உழைக்கும் மக்கள் எடுக்கும் நேரடி நடவடிக்கையின் மூலமே இந்த நாட்டில் பார்ப்பனிய இந்துமதவெறி பாடைக்கு அனுப்ப முடியும். அது வரை பிரிஜ்லாலின் பேத்திகளுக்கு பாதுகாப்பு இல்லை.

–    தமிழரசன்.

தகவல் – Frontline பத்திரிகையில் வெளியான கட்டுரை

மேலும் படிக்க