Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 772

புதைமணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!

3

புதைமணலில் சிக்கியது இந்தியப்பொருளாதாரம்இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56,  57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு.

முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்து, கடந்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக வீழ்ந்து, இவ்வாண்டு ஏப்ரலில் 5.3% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய சரிவாகும். நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.1%லிருந்து 4.6% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் 2011-இல் 5.7 சதவீதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் 0.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று அரசே கூறுகிறது.

இவையெல்லாம் அரசாங்கம் அறிவிக்கும் புள்ளிவிவரங்கள்தான். உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், பால், முட்டை, சமையல் எண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 150%க்கு மேல் உயர்ந்து, உழைக்கும் மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 10.49% அளவுக்குத்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரக் கணக்குக்காட்டி அரசாங்கம்  காதிலே பூச்சுற்றுகிறது.

ஏதோ, இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பது போல ஆட்சியாளர்கள் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. தனியார்மயமும் தாரளமயமும் திணிக்கப்பட்ட பின்னர்,  விவசாயமும் சிறுதொழிலும் நசிந்து விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த போதிலும், அதனைப் பொருளாதார நெருக்கடியாக ஆளுங் கும்பல் ஏற்கவில்லை. பங்குச் சந்தை சரிவு, ரூபாய் மதிப்புச் சரிவு, அந்நிய முதலீடு வீழ்ச்சி என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடி பற்றி அங்கலாய்க்கின்றனர். பணவீக்கம் பற்றி பேசுகிறார்களே தவிர, விலைவாசி ஏறியதைப் பற்றி பேசுவதில்லை. பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர, வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்விக் கட்டணங்கள் கிடுகிடுவென அதிகரித்திருப்பதைப் பற்றி பேசுவதில்லை. இந்தியப் பொருளாதாரத்தின் தரம் தாழ்ந்துவிட்டதாக எச்சரிக்கும் ஸ்டேண்டர்டு அண்டு புவர், ஃபிட்ச் முதலான தர மதிப்பீட்டு நிறுவனங்களும்கூட, நாட்டின் தொழில் மற்றும் விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல், அந்நிய முதலீடு வீழ்ச்சியையும்  நிதி நெருக்கடியையும் பற்றித்தான் பேசுகின்றன.

“தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கம் தயக்கத்தையும் ஊசலாட்டத்தைக் கைவிட்டு, அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் வகையில் உறுதியுடன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதிகளில் தனியார்மயத்தைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும்” என்கிறது, ஸ்டாண்டர்டு அண்டு புவர் எனும் தர மதிப்பீட்டு நிறுவனம். அந்நிய முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையின்மை நிலவுவதால், தாமதப்படுத்தாமல் நிதிச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்கிறார், அரசின் நிதித்துறை ஆலோசகரான கௌசிக் பாசு.

நிதிப் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக  ஜி-20 மாநாட்டில் ஏகாதிபத்தியங்களிடம் அறிவித்த பிரதமர், அந்நிய முதலீட்டைப் பெருக்க அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம்; மானியங்களை மேலும் குறைப்போம் என்று உறுதியளித்துள்ளார். இதன்படியே,  இந்தியாவின் அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள், அந்நிய மத்திய வங்கிகள், காப்பீடு மற்றும் பென்ஷன் நிதி நிறுவனங்கள் 20 பில்லியன் டாலர் (ஏறத்தாழ ரூ.11 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி,  உள்கட்டமைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளிலிருந்து திரட்டும் நிதிக்கான வரம்பு அதிகரிப்பு, நீண்டகால வைப்புள்ள உள்கட்டமைப்புப் பத்திரங்களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 25 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி  என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அந்நிய முதலீடுகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மன்மோகன் அரசு.

புதைமணலில் சிக்கியது இந்தியப்பொருளாதாரம்ஆளும் கும்பல் முன்வைத்துள்ள தீர்வுகள் மீண்டும் ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் நலனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே தவிர, நெருக்கடிக்குத் தீர்வாக உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த திட்டம் ஏதுமில்லாததால், அது தவிர்க்கவியலாமல் மீண்டும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குத்தான் தள்ளும். உள்நாடுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த வேண்டுமானால், புரட்சிகரமான முறையில் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் வீழ்த்தப்பட்டு, நிலச்சீர்திருத்தமும் விவசாயத் துறையில் மாற்றங்களும் செய்வதோடு, அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் பெருமளவில் முதலீடும் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, முதலீடு பற்றாக்குறை என்ற வாதத்தை வைத்து அந்நிய நிதி மூலதனத்துக்குக் கதவை அகலத் திறந்து விடுவதுதான் ஆளும் கும்பல் முன்வைக்கும் தீர்வு. “குடிகாரனின் கைகால் நடுக்கத்தை நிறுத்த இன்னொரு பெக் ஊற்றிவிடு”  என்ற குடிகாரச் சிகிச்சையைத்தான் ஆட்சியாளர்களும் முன்வைக்கின்றனர்.

நெருக்கடியிலுள்ள அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மீண்டால்தான், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரமும் மீள முடியும் என்ற நச்சுச் சுழலில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளதால், அங்கே தலைவலி என்றால் இங்கே பேதியாகிறது. ஐரோப்பிய பொருளாதாரச் சரிவை மீட்க விழையும் ஏகாதிபத்தியவாதிகள், அதன் சுமையை வளரும் நாடுகளின் தலையில் சுமத்துவதால், அதற்கு விசுவாசமாக இந்தியாவும் 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்கப் போவதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

நான்காண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும், ஈராண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய பொருளாதாரம் குப்புற விழுந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்காமல் வலுவாக யானை போல உறுதியாக நிற்கிறது என்று உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து  ஆட்சியாளர்கள் பெருமை பேசினார்கள். ஆனால் இப்போது, உள்நாட்டுப் பொருளாதாரச் சரிவையும் தோல்வியையும் மூடிமறைத்து தப்பிக்கும் தந்திரமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரச் சரிவால்தான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று பழியை ஐரோப்பா மீது போட்டுத் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஏற்கெனவே ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி முதலாளித்துவக் கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாக முற்றியிருக்கிறது. இந்தியாவிலும் தனியார்மயம்தாராளமயம் எனும் மறுகாலனியக் கொள்கை படுதோல்வியடைந்திருக்கிறது.

இந்தத் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும் யோக்கியதையோ, நாணயமோ இல்லாத மன்மோகன் சிங் கும்பல், ஐரோப்பிய வீழ்ச்சிதான் நம் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறி, ஐரோப்பாவுக்கு வேட்டி கட்டிவிடுவதற்காக நமது வேட்டியை உருவுகிறது.

நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிடும் இக்கொடிய மறுகாலனியத் தாக்குதலை எதிர்த்துப் போராடாவிட்டால், கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

43

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! 

மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.

  1. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!-பாகம் 1
  2. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2

“வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்ற த.தே.பொ.க. முழக்கம் ம.க.இ.க.விற்கு எட்டிக் காயாய் கசக்கிறது. அம்முழக்கத்தைத்தான் பாசிசம் என்று பழிதூற்றுகிறது” என்கிறது மணியரசனின் கும்பல்.

உண்மைதான். ‘இச்சிக்கலில்’ மணியரசன் கும்பலின் நிலைப்பாடு, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு மட்டுமல்ல; எல்லாப் பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கங்களுக்கும் ‘எட்டிக் காயாய்’ கசக்கிறது. மணியரசன் கும்பலைப் போன்ற குட்டி முதலாளிய குறுகிய இனவெறியர்களைத் தவிர, எத்தனை தேசிய இனவாதக் குழுக்கள் இந்த நிலைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்?

“இது பாசிசமா? இல்லை. தற்காப்பு!” என்றும் “இது பாசிசமா? இல்லை. இது சனநாயகம்!” என்றும் வாதாடுகிறது மணியரசன் கும்பல்; அதேசமயம், இது பாசிசம்தான் என்கிற வகையில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறது.

“இட்லர் செயல்படுத்திய பாசிசம் என்பது என்ன? பல நூறு ஆண்டுகளாக, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த யூதர்களை வெளியேற்றுதல், கூட்டம்கூட்டமாகக் கொலைசெய்தல் போன்ற கொடுஞ்செயல்களைக் கொண்டது இட்லரின் பாசிசம்” என்று இட்லரின் பாசிசத்துக்கு விளக்கமளிக்கிறது.

அதற்கு முன்பாக, தமிழர்கள் தாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஏன் வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்பதற்கு பின்வரும் காரணத்தையும் கூறுகிறது.

“தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்க வேண்டும். வரைமுறையின்றி மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறினால், பிறகு, தமிழகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும். கலப்பினத் தாயகமாக மாறி விட்டால், சொந்த மண்ணிலேயே, தமிழர்கள் இரண்டாந்தர, மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றப்படுவர்.”

ஆம். மணியரசன்  முன்வைக்கும் இத்தகைய காரணத்துக்காகத்தான் இட்லரின் பாசிசம் யூதர்களை நரவேட்டையாடும் கொடுஞ்செயலை நடத்தியது. ஆரிய இனத்தின் இரத்தத் தூய்மையைப் பாதுகாக்கவேண்டும், தமது ஆரிய இன இரத்தம் யூதர்களின் செமட்டிக் இன இரத்தத்துடன் கலந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஐந்து இலட்சம் யூதர்களை ஆஷ்விட்ஸ் வதை முகாமில் பிடித்து வைத்து இரத்த ஆராய்ச்சி செய்து கொன்றதோடு, நாடு முழுவதும் மேலும் பல இலட்சம் யூதர்களைப் படுகொலை செய்தது, இட்லரின் பாசிச நாஜிப் படை. நல் வாய்ப்பாக மணியரசன் கும்பல் அதிகாரத்திலும் இல்லை; விடுதலைப் புலி பிரபாகரனைப் போல தனிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறிருந்தால், இசுலாமியர்கள் அனைவரும் ஈழத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கெடு வைத்து, மன்னாரில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த வழிபாட்டுத் தலத்துக்குள் புகுந்து பலரைச் சுட்டுக் கொன்ற புலிகளைப் போல, மணியரசன் கும்பலும் பாசிசக் கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கும். அதனால்தான் இப்போதைக்கு, தமிழ் மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள், தேசம் கலப்பினத் தாயமாக மாறிவிடும் என்று பூச்சாண்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறது.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி

தமிழின மக்களின் இரத்தத் தூய்மையைத் காத்துக் கொள்ளத் துடிக்கிறது மணியரசன் கும்பல். ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் மணியரசனுக்கு என்ன? ஏன் மணியரசனின் இரத்தம் கொதிக்கிறது? மணியரசன் முன்வைக்கும் இதே காரணங்களைக் கூறித்தான், அமெரிக்காவின் குகிளக்ஸ்கிளான், ஐரோப்பாவின் புதிய நாஜிக்கள் போன்ற வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து, மேலை நாடுகளில் குடியேறும் உழைக்கும் மக்களைத் தாக்குகின்றனர். இசுலாமிய மக்கட்தொகைப் பெருக்கம், கலப்பு மணங்களால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவர் என்ற பீதியைப் பரப்பித்தான் பார்ப்பன  இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதவெறிப் படுகொலைகளை நடத்துகிறது.

கிரிமினல் குற்றங்கள் பெருமளவாகி விட்டன என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவி இளைஞர்களைப் பிடித்து, கோணி ஊசியால் கண்களைக் குத்தி குருடாக்கியது பீகார் போலீசு; அதைப் போலவே, அப்பாவி இளைஞர்களின் கைகால்களை முறித்துப் போட்டது உ.பி. போலீசு. அதேபாணியில் போலி மோதல்களை அரங்கேற்றுகிறது, பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் போலீசு. மேலும், வடமாநிலத்தவர் கணக்கெடுப்பு, அவர்களை போலீசு நிலையங்களில் பிடித்து வைத்து வதை செய்வது, வாடகைக் குடித்தனக்காரர்கள் பற்றிய விவரங்களை, அடையாள ஆதாரங்களைப் போலீசுக்குத் தராத வீட்டு உடைமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு  தண்டனை நடவடிக்கைகளைப் போலீசு மேற்கொள்கிறது.

மணியரசன் கும்பலோ, போலீசின் போலி என்கவுண்டரைக் கண்டிப்பதாகக் கூறும் அதேசமயம், வடமாநிலத்தவர் என்றாலே கிரிமினல் குற்றவாளிகள் என்ற கருத்துருவாக்கம் செய்யும் முதலாளிய ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு, “வடமாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி, படிப்புத் தேடி தமிழகம் புகுந்தவர்களில் பலர் கொள்ளைக்காரர்களாக, கூலிக்குக் கொலை செய்வோராக, குழந்தைகளை வல்லறவு கொள்வோராகச் சீரழிந்தனர். அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த இவ்வகையான குற்றங்களில் அதிக விகிதத்தில் ஈடுபட்டோர் வடநாட்டவரே! எனவே, தமிழ்நாட்டில் குடிபுகுந்த வடநாட்டவர் பற்றிய கணக்கெடுப்பையும் பதிவையும் காவல்துறை செய்து வருகிறது” என்று கூறி போலீசின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. போலீசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கும் மனித உரிமை அமைப்பினரை  இனத்துரோகிகள் என்று வசைபாடுகிறது.

போலீசின் மேற்படி நடவடிக்கைகள் வடமாநிலத்தவர்க்கு எதிராகவோ, மணியரசன் கும்பல் கோருவதைப் போல அனைத்து வெளிமாநிலத்தவர்க்கு எதிராகவோ மட்டும் நின்றுவிடாது. பயங்கரவாத, தீவிரவாத முத்திரைக் குத்தி போலீசு வேட்டையாடும் மதச் சிறுபான்மையினர், கம்யூனிசப் புரட்சியாளர்கள் மட்டுமல்ல; பிரிவினைவாதிகள் என்று கூறி தமிழினக் குழுவினருக்கும் எதிராக ஏவிவிடப்படும். ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கைகள் புலம் பெயர்ந்து இங்கே வந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போலீசின் இத்தகைய நடவடிக்கைகள் வீட்டுச் சொந்தக்காரர்களைப் போலீசு உளவாளிகளாக மாற்றும்; இல்லையென்றால், அவர்கள் மீது கிரிமினல் குற்றஞ்சாட்டித் தண்டிக்கவும் செய்யும். இவையெல்லாம் மணியரசன்களின் மூளைக்கு ஏன் உறைக்கவில்லை?

“புதிதாக வந்த வெளிமாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கக் கூடாது. த.தே.பொ.க.வின் இந்நிலைப்பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியதுதான்!” என்று சாதிக்கிறது, மணியரசன் கும்பல்.

வலிய அழைத்து, மாபெரும் மணியரசனின் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும் புலம்பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் சொல்ல வேண்டும், இந்தக் கூற்று உண்மைதானா என்று! தமது சொந்த நாட்டு மக்கள் அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருக்கும் மேலைநாட்டு அரசுகள், புலம் பெயர்ந்த குடியேற்றக்காரர்களையும் அப்படித்தான் வைத்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், குடியேற்றக்காரர்களின் அடிப்படைத் தேவைகளையும், வாழ்வுரிமைகளையும் மறுக்கவில்லை. அவர்களுக்கு வேலை உரிமை, கல்விமருத்துவ உரிமை அளிப்பதோடு, வாழ்விடம் மற்றும் உணவுத் தேவைகளை உறுதி செய்கிறது. ஆனால், இங்கே குடியேறியவர்களுக்கு  இவற்றை மறுக்கச் சொல்லும் “த.தே.பொ.க.வின் நிலைப்பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியதுதான்!” என்று கூசாமல் புளுகுகிறது, மணியரசன் கும்பல்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி

“தமிழ்த் தேசியக் கொள்கைப்படி தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது. ஒரு தனிநாட்டில் அந்நாட்டின் தேவைக்கேற்ப விசா வழங்கி, வெளிநாட்டினரை அனுமதிக்கின்றனர். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், நுழையலாம், குடியிருக்கலாம் என்று எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதே நடைமுறை தமிழ் நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்”;  “ஈழம், காசுமீரம், வடகிழக்கு மாநிலங்களில் அந்நியர் குடியேற்றத்தை ம.க.இ,க எதிர்க்கிறது, ஆனால், தமிழ்நாட்டில் ஆதரிக்கிறது” என்கிறது, மணியரசன் கும்பல்

மேலும் சொல்கிறது, “இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசைதிருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன் முரண்பாடற்ற கொள்கை.”

“தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது” என்பதாலேயே ஒரு தனிநாடாக இருப்பதாகக் கொள்ள முடியாது. இது இன்னமும் இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவின் ஒரு மாநில மக்கள் வேறு மாநிலங்களில் குடியேறவும் சொத்துக்களை வாங்கவும் தொழில் புரியவும் உரிமைதரும் பொதுச் சட்டம்தான் உள்ளது. ஆனால், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்கள் தனிச்சிறப்பான வரலாற்று, அரசியல் சூழல்கள் காரணமாக தனிச்சிறப்பான சட்டங்களையும் தடைகளையும் கொண்டுள்ளன.

குறிப்பாக, காசுமீரமும் வடகிழக்கு மாநிலங்களும் இந்திய ஒன்றியத்துக்குள் வலுக்கட்டாயமாகவும் அரசியல் சூழ்ச்சியாலும் இணைக்கப்பட்டவை. அப்போதிருந்தே இந்திய  ஒன்றியத்துக்கும் அதன் இராணுவ ஆதிக்கத்துக்கும் அடிபணிய மறத்து அங்குள்ள மக்கள் எழுச்சியுற்றுப் போராடுகின்றனர். அவர்களுடைய எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல்தான் இந்திய அரசு, இந்தியாவின் பல சட்டங்களுக்கும் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தே நிறைவேற்றுகிறது. இதனாலேயே இந்தியாவின் பல சட்டங்களும் காசுமீரத்துக்குப் பொருந்தாது. வடகிழக்கில் அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தொடரும் மக்கள் எழுச்சி மற்றும் ஆயுதப் போராட்டங்களால்தான் இந்திய அரசு அவற்றின் தலைமையுடன் இந்தியாவுக்கு வெளியே இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காசுமீரச் சிறுவர்களின் கல்லெறிப் போராட்டங்களும், மணிப்பூரில் ஆயுதப் படை முகாமின் வாசலில் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கின. அதற்கு இணையான தமிழ் மக்களின் போராட்டம் எதையாவது திராவிட இயக்கத்தாலும் தமிழினக் குழுக்களாலும் கட்டமைக்க முடிந்ததா? “பாகிஸ்தான்காரன் வந்துவிடுவான், சீனாக்காரன் வந்து விடுவான்; இந்தியாவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஈழத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டு தானே இருக்க முடிகிறது! இதையெல்லாம் மறந்து  மறைத்து தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதியுடையது என்பதாலேயே தனிநாடாக ஆகிவிட்டதாகப் பாவித்து வாதங்கள் புரிகிறது, மணியரசன் கும்பல்.

“ஈழத் தமிழினப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர்க்கும் ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை, வெளியாரை வெளியேற்றும் த.தே.பொ.க.வின் நிலைப்பாட்டை பாசிசம் என்று சாடுகிறது. இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசைதிருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன் முரண்பாடற்ற கொள்கை” என்கிறது மணியரசன் கும்பல்.

ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன. மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண மறுக்கின்றது.

ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தாலும் அதன் அரசாலும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னும் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தற்போது பெருமளவு நடக்கும் உழைக்கும் மக்களின் புலம் பெயர்வும் குடியேற்றமும் அவ்வாறானது அல்ல. சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக் குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை. தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களின் பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு இந்தியா, ஒடிசா, வங்கம், பீகாரி  மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள். இவர்கள் எவரும் இந்திய தேசியத்தை சேர்ந்தவர்களும் இல்லை. மேலும், இந்திய தேசியம் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வேண்டி உருவாக்கிக் காத்துவரும் ஒரு கற்பிதம்தானே தவிர, எந்த சமூக, இன அடிப்படையிலான மக்களையும் கொண்டதில்லை. ஆகவே, தமிழகத்துக்குப் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் மக்களின் இடப்பெயர்வையும் சிங்கள அரசு நடத்தும் சிங்களக் குடியேற்றம் மற்றும் பிரதேச ஆக்கிரமிப்பும் ஒரே அடிப்படையையும் விளைவையும் கொண்டதாகச் சித்தரிப்பது மணியரசன் கும்பலின் வழக்கமான அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்றுதான்!

“தொழிலாளர்கள் அனைவரையும் புரட்சியாளர்கள்  முற்போக்கானவர்கள் என்று கருதக்கூடாது; காலனியாதிக்கக் கொள்ளையில் பங்கு பெறும் தொழிலாளிகள் ‘தொழிலாளர் பிரபு’க்களாகி, வர்க்க உணர்ச்சி இன்றி ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும் தொழிலாளர் பிரபுத்துவத்துடன் புரட்சிக்கு எதிரானவர்களாவது பற்றி மார்க்ஸ் கூறியிருக்கிறார்” என்பதைச் சுட்டி, அதைப்போல வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொழிலாளர் இயக்கத்தை பலவீனப்படுத்தி, முடக்கி, சீர்குலைத்து வருகிறார்கள் என்று மணியரசன் கும்பல் குற்றஞ்சாட்டுகிறது.

தமிழகத்திலுள்ள தொழிற்சங்க இயக்கங்கள்அமைப்புகள் எதுவும் வெளிமாநிலத் தொழிலாளர்களால் பலவீனப்படுத்தப்படுவதாகவும், சீர்குலைக்கப்படுவதாகவும் ஒருபோதும் கூறியதே இல்லை. தொழிலாளர் இயக்கத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் இல்லாத, தமிழக உழைக்கும் மக்களிடையே வேரும் விழுதும் இல்லாத அனாமதேய குட்டி முதலாளிக் குழுக்களைக் கொண்டு அடையாளப் ‘போராட்டங்களை’ மட்டும் நடத்திக் கொண்டுள்ள மணியரசன் கும்பல்தான் இவ்வாறான புனைகதைகள் எழுதுகின்றன.

சி.ஐ.டி.யு;  தொ.மு.ச. போன்ற பெரிய தொழிற்சங்கங்களுடன் போட்டி போட்டு பிரதிநிதித்துவம் பெருமளவு வேகமாகவும், போர்க்குணத்துடனும் வளரும் நமது தொழிலாளர் அமைப்பு அம்பத்தூரில் நடத்திய முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஒடிசா தொழிலாளி ஆற்றிய நேருரை தொழிலாளர்களிடையே எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது; தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நமது அமைப்பு நடத்திய மே தினப் பேரணியில் போலி கம்யூனிஸ்டுகள் இணைந்து நடத்தியவற்றை விடப் பலமடங்கு அதிகமாகத் தொழிலாளர்கள் திரண்டதும் மணியரசன் கும்பலுக்கு தெரியுமோ, தெரியாதோ! இருந்தாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நமது அமைப்பில் சேர்ந்து நமது “சீர்குலைவுப் பணிக்குப் பயன்படுவார்கள். தொழிலாளர் இயக்க வளர்ச்சிக்குப் பயன்பட மாட்டார்கள்” என்று சாபமிடுகிறார்கள்.

“வெளிமாநிலங்களில் நிலவும் வறுமையாலும் வேலையின்மையாலும் பிழைப்புத் தேடி வருகிறார்கள். அவற்றுக்கெதிராக அங்கெல்லாம் போராடாதவர்கள், இங்கு உரிமைகோரும் உளவியலை இழந்துள்ளார்கள். அதாவது மனத்துணிச்சலை இழந்துள்ளார்கள்” என்றவாறான விளக்கங்கள் கொடுத்து அவர்கள் தமிழகத் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானவர்கள் என்று மணியரசன் கும்பல் சித்தரிக்கிறது.

“வறுமை, வேலையின்மை காரணமாக பிழைப்புத் தேடி இடம் பெரும் உழைக்கும் மக்கள்” என்று அரதப் பழைய வழமையான வாதங்களை உச்சாடனம் செய்யும் மணியரசன் கும்பல், இன்றைய யதார்த்தத்தைக் காண மறுத்துக் கண்களை இறுக மூடிக்கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாகப் புகுத்தப்படும் உலகமயமாக்கக் கொள்கைகள்; அதன் விளைவாக மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை ஆகியவை உலகமயமாகி வருவதோடு, அதன் விளைவாக ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிகழ்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்கள், தேசங்கள், நாடுகளில் இருந்து முன்னெப்போதும் கண்டிராதவாறு உழைப்பாளிகளின் இடம் பெயர்வு மிகப் பெருமளவு இப்போது நடக்கிறது.

தமிழ்நாட்டிலேயே தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்ட நகரங்களுக்கும், வடக்கு மாவட்டங்களில் இருந்து சென்னை  புறநகரங்களுக்கும், தருமபுரி  கிருட்டிணகிரி மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கும் உழைப்பாளர் இடம் பெயர்வதும், இந்தியாவில் வளர்ச்சி குன்றிய, வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் உழைக்கும் மக்கள் தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதும் நிகழ்கிறது. எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடாகவும், தேசிய இனச் சிக்கலாகவும் ஒற்றைச் சட்டகப் பார்வையில் காணும் மணியரசன் கும்பலால் ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் விளைவுகளையும் காணமுடியவில்லை. ஏகாதிபத்திய உலகமயமாக்கத்திற்கு மாற்றாக, பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம் என்ற மாற்றுத்தீர்வையும் ஏற்க முடியவில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாக இருக்க முடியும் என்பதையும் குட்டி முதலாளிய, முதலாளிய தேசிய இனவாதிகளால் ஏற்க முடியாதுதான்.

ஏகாதிபத்திய உலகமயாக்கத்தின் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள்  நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும் பெருமளவு இடம் பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் எதிர்மறையில் பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு (பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு) எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய அடையாளங்களையும் கடந்த பாட்டாளிவர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், அந்தப் போக்குக்கு எதிரான நிலையை மணியரசன் கும்பல் போன்ற இனவாதக் குழுக்கள் எடுக்கின்றன.

ஆகவே, வெளிமாநில உழைக்கும் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டிவிடுவதும், இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் பிற அண்டை தேசிய இனங்களுக்கும் தமிழினத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பகை முரண்பாடாகக் கொள்வதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணை போவது; அதுமட்டுமல்ல, தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கும் எதிரானது.

“விடுதலை கோரும் ஒரு தேசிய இனத்திற்கு ஒரே ஒரு பகை முரண்பாடுதான் இருக்கும் என்று கருதக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்குள்ள பகை முரண்பாடுகளில் முதன்மையானது இந்திய அரசுடன் உள்ள முரண்பாடுதான். முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய லெனினியம் கூறவில்லை. மாசே துங்கும் அவ்வாறு கூறவில்லை. முதன்மை முரண்பாடு தவிர்த்த பிற முரண்பாடெல்லாம் பகையற்ற முரண்பாடாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோர் இன அடிப்படையில் தமிழர்களுடன் பகை கொண்டு மோதுகிறார்கள். இந்தப் பகை முரண்பாட்டையும் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும்.”

முரண்பாடு பற்றிய மணியரசனின் மேற்படி கூற்றுஅதன் முட்டாள்தனத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  ‘முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய லெனினியமும் மாசே துங்கும் கூறவில்லை’, ‘ஒரு தேசிய இனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம்’ என்பவற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள், தரவுகள், காரணங்கள் எதையும் முன்வைக்காமல் பகை முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கிறது, மணியரசன் கும்பல். ஓட்டுப் பொறுக்கிக் கும்பல்கள், மொழிஇனவெறிக் கும்பல்களின் சுயநலக் குறுகிய நலன்களுக்காக உருவாக்கப்படும் மோதல்களைக் காரணமாகக் கொண்டு, இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகக் கருதமுடியுமா? இன்று தமிழர்க்கும் மலையாளிகள், கன்னடர்க்கும் பகை முரண்பாடுகள்; நாளை பாலாறு பிரச்சினையை வைத்து தமிழர்க்கும் தெலுங்கருக்கும் இடையே பகை முரண்பாடு என்று சுற்றிலும்  பகை கொள்வதுதான் இந்திய தேசியத்துடனான முதன்மைப் பகை முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான வழியா? நன்று!  பாராட்டுக்குரியதுதான், மணியரசனின் உலகச் சிந்தனையின் ஊற்று!

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!

3

பீரங்கி ராஜீவ்…கேம்ஸ் கல்மாடி…டான்சி ராணி…சுரங்கம் ரெட்டி…

கரி சிங். தி கல்லுளிமங்கன்.

கரித்திருடன்-மன்மோகன்

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது. இந்த பகற்கொள்ளையைத்தான் ‘நிலக்கரி ஊழல்‘ என்று ஊடகங்கள் அழைக்கின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் இந்த ஊழல் குறித்த செய்தி இடம் பெற்றிருப்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (மார்ச் 22, 2012) அம்பலப்படுத்தியது.

2004 முதல் 2009 வரையிலான காலத்தில் நடந்திருக்கும் இக்கொள்ளையில் ஜிண்டால், டாடா, அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா, எஸ்ஸார், அதானி, ஆர்செலார்மிட்டல், ஜெய்ஸ்வால், அபிஜித் குழுமம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட், பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடெட் போன்ற பன்னாட்டுதரகு முதலாளிகளுக்கு நாட்டின் பொதுச்சொத்தை அறுத்து கறிவிருந்து வைத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்த அயோக்கியத்தனத்தை நியாயம் போல் காட்டுவதற்காகவே, பாதி நிலக்கரி வயல்கள் மத்திய  மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தாரை வார்க்கப்பட்டுள்ள நிலக்கரி வயல்களில் புதைந்திருக்கும் மொத்த நிலக்கரியின் அளவு 3316.9 கோடி டன்கள். இதைக் கொண்டு நாளொன்றுக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இதுதான் இந்தியாவின் தற்போதைய மின்சார உற்பத்தி) அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் இருப்பு கொண்ட வயல்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தரப்பட்டிருக்கின்றன.

உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14,000. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் மூலம் மானிய விலையில் விற்கப்படுவதால் இந்தியச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.2000 முதல் ரூ. 2500 வரை இருந்துள்ளது. மன்மோகன் அரசோ கருப்புத் தங்கமான இந்த நிலக்கரி இருப்பை, டன் ஐம்பதுக்கும் நூறுக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.

மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை.

தனியார் முதலாளிகள் பெற்றுள்ள 1700 கோடி டன் நிலக்கரி இருப்பின் மதிப்பு 42 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மதிப்பிடுவதாக கூறுகிறது இந்தியா டுடே (9.12.2011). இதன் மதிப்பு 51 இலட்சம் கோடி ரூபாய் என்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

கொள்ளை போன தொகை எவ்வளவு என்பது குறித்த மதிப்பீட்டில் வேறுபாடு இருந்தாலும், இது அலைக்கற்றை ஊழலைப் போல அனுமானமாகக் கூறப்படும் இழப்பல்ல. நிலக்கரியின் சந்தை விலையில்,  ஒரு டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு கோல் இந்தியா நிறுவனம் செய்யும் செலவைக் கழித்து, குறைந்தபட்சமாக கணக்கிட்டுத்தான் இந்தத் தொகையைக் கூறுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி வயல்களை ஏலத்திற்கு விட்டிருந்தால் 10.67 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும் என்கிறது அறிக்கை.

இச்செய்தி வெளிவந்தவுடனேயே பிரதமர் அலுவலகம் கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் இறங்கியது. சி.ஏ.ஜி. பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு, தனது கருத்தை சி.ஏ.ஜி. மாற்றிக் கொண்டுவிட்டதாகப்  பிரச்சாரம் செய்தது பிரதமர் அலுவலகம்.

அடுத்த நாளே முழுக் கடிதமும் ஊடகங்களில் வெளியானது. ஏல முறை கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள 10.67 இலட்சம் கோடி  இழப்பை, அரசுக்கு ஏற்பட்ட ‘நட்டம்’ என்று அழைப்பதா அல்லது, ‘மனமறியாமல் தரப்பட்ட ஆதாயம்’ என்று அழைப்பதா (Loss or Unintended Benefit) என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் சி.ஏ.ஜி. யின் கடிதம் தெரிவித்த கருத்து.

கடிதத்தை வெட்டி ஒட்டி இப்படியொரு கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் ஈடுபட்ட மன்மோகன் அரசு, ஒருபுறம் குற்றத்தை மறுத்துக்கொண்டே இன்னொருபுறம் 2006-2009 ஆண்டில்  நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை விசாரிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார், 2006-இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர். எனவே இவரை சி.பி.ஐ. விசாரிக்குமா, நிலக்கரித் துறை அமைச்சரான பிரதமரை விசாரிக்குமா என்ற விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.

சி.பி.ஐஇன் விசாரணை வலையத்தில் நிலக்கரி வயல்கள் நிறைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் பா.ஜ.க. அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியோரும் வருகிறார்கள்.  வலையை முடிந்தவரை அகலமாக விரித்துத் தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறது காங்கிரசு அரசு. இன்னொருபுறம், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16 நிலக்கரி வயல்களை ஒதுக்கப் போவதாகக் கூறி, மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு ஆசையும் காட்டி விலைபேசவும் முயற்சிக்கிறது. இந்தத் தீவட்டிக் கொள்ளையில் முக்கியமான இந்தியத் தரகு முதலாளிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதால், எல்லோருமே முடிந்தவரை அடக்கி வாசிக்கிறார்கள்.

கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையை இறுதியாக்கி மே 11ஆம் தேதியன்றே குடியரசுத் தலைவரிடம் தந்துவிட்டார். நிதியமைச்சகம் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும் என்பது மரபாம். குடியரசுத்தலைவர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனவே, இந்த மெகா ஊழல் அறிக்கை 50 நாட்களாக ராஷ்டிரபதி பவனில் உறங்குகிறது.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

சி.ஏ.ஜி. மதிப்பீட்டின்படி அலைக்கற்றை கொள்ளையைப் போல 6 மடங்கு பெரியது இந்த நிலக்கரிக் கொள்ளை. அலைக்கற்றைகளை ஏலம் விட்டு, அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு அதனை வழங்காமல், பிள்ளையார் கோயில் சுண்டலைப்போல ‘முதலில் வருவோர்க்கு முதலில்‘ என்று வழங்கிவிட்டார் என்பதுதான் ராசா மீதான குற்றச்சாட்டு. அலைக்கற்றை சுண்டலுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெறுவதற்கு அந்த சிரமமும் இல்லை. அமைச்சர்கள்,அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை (Screening committee) நியமித்து, அந்தக் குழுவின் மூலம் டாடா, பிர்லா, மித்தல், ஜின்டால் போன்ற ‘தகுதியான‘ தரகு முதலாளிகளைத் ‘தெரிவு‘ செய்து, அவர்களுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை விநியோகித்துவிட்டார் மன்மோகன் சிங்.

“மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையை ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தோம்” என்பது ராசாவின் வாதம். “மின்சாரம், இரும்பு, சிமெண்டு போன்றவற்றை மக்களுக்கு மலிவாக தருவதற்காகத்தான் நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுத்தோம்” என்கிறது மன்மோகன் அரசு.

ராசாவின் வாதத்திலாவது சிறிதளவேனும் உண்மை இருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாதம் கடைந்தெடுத்த பொய். தொலைபேசிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் பெயரளவிலாவது இருக்கிறது. சிமெண்டுக்கும் இரும்புக்கும் விலை நிர்ணயம் செய்பவர்கள் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

அதேபோல, தனியார் முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்யும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு, மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துவதற்குத்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 18 ரூபாய் வரை விலை வைத்து மாநில மின்வாரியங்களைத் திவாலாக்கும் ‘மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன்கள்’ எனும் தனியார் முதலாளிகளுக்கும் நிலக்கரி வயல்களை வாரி வழங்கியிருக்கிறார் மன்மோகன்.

பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் தரப்பட்டது என்பதும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றே பல்லாயிரம் கோடி இலாபம் பார்த்து விட்டனர் என்பதும் அலைக்கற்றை ஊழலின் குற்றச்சாட்டுகள். நிலக்கரி வயல்களையும் பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார் மன்மோகன். தமது உற்பத்தி இலக்கை பன்மடங்கு உயர்த்திக் காட்டி, நிலக்கரி வயல்களை வளைத்துப் போட்டிருக்கின்றன பல நிறுவனங்கள்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

ம.பி. மாநிலத்திலுள்ள பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000 கோடி இலாபமடைந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் நிலக்கரித் தேவை 50 இலட்சம் டன்; ஆனால் இந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன் நிலக்கரி இருப்புள்ள சுரங்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் 1,050 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கென வாங்கிய நிலக்கரிச் சுரங்கத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதித்துள்ளது.  இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

வயல்களைப் பெற்ற 90% நிறுவனங்கள் (Coal Block Allottees)  ஒரு கிராம் நிலக்கரியைக் கூட எடுக்கவில்லை. நிலக்கரி விலை உயரும்போது நல்ல விலைக்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட்டுகளைப் போல போட்டு வைத்திருக்கிறார்கள். வேறு சிலர், சுரங்கம் தோண்டும் நிறுவனங்களுக்கு (Mine Developer cum Operator) வயல்களை ஏலம் விட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தும் மன்மோகன் அரசுக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன.

அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தன் கையை மீறி நடந்து விட்ட தவறு, கூட்டணி நிர்ப்பந்தம் என்றெல்லாம் சொல்லி ராசாவையும் தி.மு.க.வையும் காவு கொடுத்து விட்டு தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார் மன்மோகன் சிங். அதற்கு ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் துணை நின்றன. நிலக்கரிக் கொள்ளைக் குற்றத்திலிருந்து மன்மோகன் அப்படி நழுவ முடியாது.

தனியார்மயதாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதும், முன்னாள் நிலக்கரித்துறை செயலரான சாரி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிலக்கரி வயல்களைத் தனியாருக்கு விற்பதென்றால், ஒரு சுயேச்சையான குழுவின் கீழ் ஏலத்தின் மூலம்தான் விற்கப்படவேண்டும் என்று மே 1996-இல் கூறியது. அன்றைய மத்திய அமைச்சரவைக் குழு இதனை ஏற்று, சட்டத் திருத்தமாக கொண்டுவர சிபாரிசு செய்தது. ஆனால், அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சி சட்டத்தை திருத்தவில்லை.

2004-இல் “அமைச்சர் சிபு சோரனிடம் ஏலமுறைதான் சரியானது என்று கூறினேன். அவர் பொருட்படுத்தவில்லை. பிறகு பிரதமரிடம் சொன்னேன் அவரும் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் அன்றைய நிலக்கரித்துறை செயலர் பாரிக். (எகனாமிக் டைம்ஸ், ஜூன், 13, 2012)  விண்ணப்பங்கள் குவியத் தொடங்கவே, ‘28 ஜூன் 2004 வரை வந்த விண்ணப்பங்களுக்குத்தான் நிலக்கரி வயல்கள் தரப்படும் என்று திடீரென்று அறிவித்தது மன்மோகன் அரசு. அலைக்கற்றை விவகாரத்தில் ராசா வெளியிட்ட அறிவிப்பைப் போன்றதுதான் இதுவும்.

2005-இல் ‘இனிமேல் ஏலம்தான்’ என்று அறிவித்தது மன்மோகன் கையில் இருந்த நிலக்கரி அமைச்சகம்.  இதற்கேற்ப 1973-இல் இயற்றப்பட்ட சுரங்கங்களைத் தேசியமயமாக்கும் சட்டத்தை விரைவிலேயே திருத்தி விடுவோம் என்றும் கூறியது. ஆனால், சட்டம் திருத்தப்படவில்லை. நிலக்கரி வயல்கள் தனியார்மயமாக்கம் தொடர்ந்தது.

ஏப்ரல் 2005-இல் இரும்பு மற்றும் நிலக்கரிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (எதிர்க்கட்சியினரும் அடங்கியது) “சுரங்கங்களை ஒதுக்குவதற்கான முறை வகுக்கப்படும் வரை தனியார்மயத்தை நிறுத்த”க் கோரியது. ஜனவரி 2006-இல் முதலீட்டுக் கமிசன்  ‘ஏலமுறையில் மட்டுமே நிலக்கரி வயல்கள் தரப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியது. 2006-இல் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் எழுப்பின.

“சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் சட்டம் (1957)  ஐத் திருத்தி, தனியார்மயமாக்கப்படும் நிலக்கரி வயல்களில் பழங்குடி மக்களுக்கும் பங்கு தரப்போகிறோம்.  இச்சட்டத்திருத்தம் நிறைவேறும் வரை தனியாருக்கு நிலக்கரி வயல்களைத் தரமாட்டோம்” என்று 2006-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் அரசு அறிவித்தது. 2010 வரை சட்டத்திருத்தம் நிறைவேறவில்லை.

2006-2009 காலத்தில்தான் அதிகபட்சமான நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறார் மன்மோகன் சிங். 2006-09 காலத்தில் நடந்திருக்கும் இந்தக் கொள்ளையின் மதிப்பு 51 இலட்சம் கோடி என்று கூறும் பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஆஹிர், இந்தக் கொள்ளையை நிறுத்தக் கோரி 2008 முதல் பிரதமருக்கு பத்து கடிதங்கள் எழுதியதாகவும், ‘வரப்பெற்றோம்‘ என்பது மட்டும்தான் பத்து முறையும் தனக்கு கிடைத்த பதில் என்றும் கூறுகிறார்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

“அலைக்கற்றை உரிமங்களுக்கான விலையைக் குறைத்து நிர்ணயித்தார்” என்பதுதான் ஆ.ராசாவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு. கரித் திருடன் மன்மோகன் சிங் கும்பலோ, ‘ஏலத்தின் மூலம்தான் விற்பனை செய்யவேண்டும்’ என்பதைக் கொள்கை அளவில் ஏற்பது போல நயவஞ்சகமாக நடித்துக்கொண்டே, 1700 கோடி டன் கருப்புத் தங்கத்தை ஐம்பதுக்கும் நூறுக்கும் தரகுமுதலாளிகளின் தனிச் சொத்தாக்கியிருக்கிறது.

ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம், எரிவாயு, நிலக்கரி என ஊழல்கள் அளவில் ஒன்றையொன்று விஞ்சிச் செல்கின்றன. கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இந்த ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

தனியார்மயம்தான் முதற்பெரும் ஊழல். ஊழலற்ற தனியார்மயம் இல்லை. தனியார்மயத்தை அமல்படுத்துபவன் எவனும் உத்தமன் இல்லை. இருக்கவும் முடியாது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும்போதுதான், கரித் திருடன் மன்மோகன் சிங்கைத் தண்டிக்க முடியும். தனியார்மயக் கொள்ளையைத் தடுக்கவும் முடியும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________________

_______________________________________________________________

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

4

கல்வியில்-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு

கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு

2012 ஜூலை – 15 ஞாயிறு
மாலை 5.00 மணி

மணிகூண்டு மஞ்சக்குப்பம், கடலூர்.

தலைமை: தோழர். கருணாமூர்த்தி , செயலர், பு.மா.இ.மு. கடலூர்.

வரவேற்புரை: தோழர். முத்து, பொருளாளர். பு.மா.இ.மு. கடலூர்.

உரைகள்:

“கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார் மயத்தை ஊக்குவிக்கவே!”

– தோழர். மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றம். மனித உரிமை பாதுகாப்பு மையம், கிளை செயலர்.

“கல்வி தனியார் மயத்தை ஒழித்துகட்டு!”

– திரு. ஜானகி. இராசா, உதவிப் பேராசிரியர், கடலூர்.

“பொதுப்பள்ளி – அருகாமைப்பள்ளி முறை ஏன் தேவை!”

– திரு. கணேசன், மாநில அமைப்பாளர். பு.மா.இ.மு. தமிழ்நாடு.

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!”
– திரு. சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

நன்றியுரை: தோழர். நந்தா, இணைச் செயலாளர். பு.மா.இ.மு. கடலூர்.

மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவரும் வருக!

___________

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்!

நச்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவோம்!

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறைமையை நிலை நாட்டுவோம்!

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

_________________________________________________________

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கடலூர்.

rsyf.wordpress.com | 9442391009
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

9

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

2012 ஜூலை 17 காலை 10 மணி முதல், S.V. மஹால், மதுரவாயல், சென்னை (M.G.R. இன்ஜினியரிங் காலேஜ் எதிரில்)

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர். த. கணேசன், மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

மாநாட்டு உரை:

“கட்டண நிர்ணயம், 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே!”

– பேராசிரியர். திரு. அ. கருணானந்தன்
(சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்) வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் விவேகனந்தா கல்லூரி, சென்னை

“தனியார்மயக் கல்வியை ஒழித்துக்கட்டு!”

– மூத்தக்கல்வியாளர் திரு. ச. ராஜகோபாலன், சமச்சீர் பாடத்திட்டக் கமிட்டி உறுப்பினர்.

“பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை ஏன் தேவை?”

– பேராசிரியர். திரு. ஹரகோபால்,
மத்தியப் பல்கலைக் கழகம், ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம்.
Presidium, All lndia For Right To Educatin (ALFRTE)

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!”

– தோழர். துரை. சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம்

______________________________________________________________________________

மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வருக!
______________________________________________________________________________

கல்வியில்-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு

தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!

உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!

2012 ஜூலை மாதம், கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை சென்னை, திருச்சி, கரூர்,விழுப்புரம், கடலூர் ஆகிய 5 இடங்களில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்த உள்ளது. மாநாட்டிற்கு உழைக்கும் மக்களையும் , ஆசிரியப் பெருமக்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும், கல்வியாளர்களையும், ஜனநாயகப் பற்றாளார்களையும் அறைகூவி அழைக்கின்றது. 

 அன்பார்ந்த மாணவர்களே உழைக்கும் மக்களே!

மனித சமுதாயம் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்துவதற்கு அடிப்படை ” மருத்துவம் ”. உயிர் வாழ்வதை அர்த்தமுள்ளதாக்குவது ” கல்வி ”. இந்த இரண்டையும் சமுதாயத்தின் மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால் இவை இரண்டையும் தனியார் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு திறந்து விட்டுள்ளன மத்திய, மாநில அரசுகள்.

பல தனியார் பள்ளி/கல்லூரி முதலாளிகள் உருப்படியான ஒரு கட்டிடம் கூட இல்லாமல் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறார்கள். அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்றன. இத்தனியார் பள்ளி / கல்லூரிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தங்கள் கட்டணக் கொள்ளையை பகிரங்கமாகவே நடத்தி வருகின்றன. இப்பகற்கொள்ளையை சட்டப்பூர்வமாக்க ‘இந்த வகுப்புக்கு இவ்வளவு வாங்க வேண்டும் என்று ஒரு பெயருக்கு கட்டணம் நிர்ணயித்தது’ தமிழக அரசு. இதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படியெல்லாம் எங்களை நிர்ப்பந்தித்தால் ”பள்ளிகளை திறக்கமாட்டோம், உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்று அரசையே மிரட்டுகிறார்கள்.விதிமுறைகள் எல்லாம் அரசுக்குத்தான் இவைகளை தனியார் பள்ளி முதலாளிகள் மலம் துடைக்கும் காகிதங்களைப் போல் சுருட்டி எறிகின்றனர்.

கட்டணக் கொள்ளையை எதிர்த்துக் கேட்கும் பெற்றோர்களை கல்வி ‘வள்ளல்கள்’மிரட்டுகிறார்கள், மாணவர்களை பழிவாங்குகிறார்கள்.அதுமட்டுமல்ல பள்ளிக் கல்வி அதிகாரிகளையும் பிளாக் மெயில் செய்கிறார்கள்.போலீசோ அதற்கேயுரிய புத்தியோடு இவர்களின் ஏவல் நாயாக செயல்படுகிறது. பாதிக்கப்படுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுக்கலாம், ஆனால் தண்டிக்க முடியாது. இவர்கள் கட்டணத்தை உயர்த்தச் சொன்னால் மட்டும் உடனே தீர்ப்பு வரும். காரணம் கட்டண நிர்ணயக் கமிட்டியினர், அதிகாரிகள், அமைச்சர்கள், ‘சர்வ வல்லமை படைத்த நீதிபதிகள்’அனைவரும் இந்த கல்வி வள்ளல்களின் கரிசனப் பார்வைக்காகவும், கொடுக்கும் பெட்டிக்காகவும் கைகட்டி காத்திருப்பதுதான்.

‘தரமானக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, சிறந்த பயிற்சி , மூன்று வயது குழந்தைக்கும் கணினி வழியில் கல்வி(?)’என்று மூலை முடுக்கெல்லாம் தனியார்கல்வி நிலையங்களின் விளம்பரப் பலகைகள்,பத்திரிக்கைகளின் கல்விக்கான சிறப்பு மலர்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,கல்விக் கண்காட்சிகள் என வியாபார வலை விரித்து பெற்றோர்களை சிக்கவைக்கிறார்கள். இவையெல்லாம் கண்கட்டுவித்தை.

வாங்கிய பணத்திற்கு தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக பொதுத்தேர்வு எழுதும் தனியார்பள்ளி மாணவர்களுக்கு நிர்வாகமே ‘பிட்’ கொடுப்பது, மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்கும் பள்ளி என்று பெயர் எடுத்து மாணவர்களிடம் பல லட்சங்களை சுருட்டுவதற்காக, ஒரு மாணவனை மட்டும் சம்பத்தப்பட்ட பாட ஆசிரியர்களின் துணையோடு புத்தகத்தை வைத்து தனியாக தேர்வு எழுத வைப்பது ஆகியவற்றை இவ்வாண்டு பொதுத்தேர்வு சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றன. சென்னையில் ஆங்கிலோஇந்தியன் பள்ளியின் டார்ச்சரை தாங்க முடியாத ஒரு மாணவன் எதிர்ப்புக்காட்டி ஒரு ஆசிரியரை கொலை செய்திருக்கிறான். ஆங்கில வழியில் தேர்ச்சிபெற முடியாமலும், எதிர்ப்பைக் காட்ட முடியாமலும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உயிரோடு இருக்கும் பல மாணவர்கள் மனநோயாளிகளாகவே இருக்கிறார்கள். இதுதான் தனியார் பள்ளி/கல்லூரிகளின் தரம்,பயிற்சியின் யோக்கியதை. இவை கல்வி நிறுவனங்களல்ல கோடிகளும், கேடிகளும் கொழுக்கும் கிரிமினல் கூடாரங்கள்.

ஆம்,முதலே போடாமல் பாதுகாப்பாக லாபம் சம்பாதிக்கும் தொழிலில் முதலில் இருப்பது கல்வி என்றாகிவிட்டது. அதனால்தான் சாராய ரவுடிகள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்அமைச்சர்கள்,போன்றவர்கள் கல்வி வள்ளல்களாக வலம் வருகிறார்கள். தடுக்கவேண்டிய அரசு இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.காரணம்,அரசு நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயதாராளமய உலகமயக் கொள்கைகள் தான்.

அடிமை சாசனமான காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தப்படிதான் சேவைத்துறைகள் அனைத்தும் வியாபாரத்திற்கு திறந்துவிடப்படுகின்றன. மருத்துவம், சுகாதாரம், தண்ணீர், கல்வி என அனைத்தும் வியாபார சரக்காக்கப்பட்டுள்ளது. சரக்கு வியாபாரத்தை சந்தை விதிகள்தான் தீர்மானிக்கும் என்கிறது முதலாளித்துவ கொள்கை. உலகச் சந்தைக் கேற்ப கல்விக் கொள்கையை தீர்மானிக்கச் சொல்கிறது காட்ஸ் ஒப்பந்தம். இதன்படிதான் 1986 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையும் தனியார்மயம்தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. அரசுக் கல்வி சீர்குலைக்கப்பட்டது.

இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள் கல்வியாளர்கள் அல்ல, பிர்லா அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலிகளான ‘அறிவார்ந்த’ குழுவினரும் தான். 2000 ஆம் ஆண்டு உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் இணைந்து தாய்லாந்தில் உள்ள ஜோம்தியன் நகரில் நடத்திய கல்வியை தனியார்மயமாக்குவது தொடர்பான கருத்தரங்கு முடிவுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டது இந்த அரசு. அதன்படி கல்வி கொடுப்பது அரசின் கடமையல்ல, அது சமூகப் பொறுப்பு என்று முடிவு செய்தது. அதாவது, பெற்றவர்கள்தான் பிள்ளையை படிக்க வைக்கவேண்டுமே தவிர அதை அரசு செய்ய முடியாது என்பதுதான் இதன் அர்த்தம்.

கல்வி என்பது சமூக வளர்ச்சிக்கான அடைப்படையல்ல, அது உலகச் சந்தையை வளர்த்தெடுக்கும் மூலதனம் என்றானதன் விளைவுதான் பல நூறு மில்லியன் டாலர்கள் புழங்கும் கல்விச் சந்தையை முழுமையாக விழுங்வதற்காக கார்ப்பரேட் வல்லூறுகளும் வட்டமிட்டு வருகின்றன. இதுதான் மிகப்பெரிய அபாயம். இந்த அபாயத்தின் அறிகுறிதான் கல்லுளி மங்கன் மன்மோகன் அரசு கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்கல்வி தொடர்பாக சுமார் 13 மசோதாக்களை அறிமுகம் செய்திருப்பது. அதில் ஒன்றுதான் வெளி நாட்டுப் பல்கலைகழகங்களை இந்தியாவில் கடை விரிக்க அனுமதிப்பதாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதுப் புது பாட திட்டங்களை வகுப்பதும், புதுப் புது ஆய்வுகளை செய்வதையும், முதலாளிகளை எவ்வித கேள்வியும் கேட்காமல், சுயமாக சிந்திக்காமல் சுருக்கமாக, முதலாளிகளின் தேவையை அவர்கள் விரும்புகிறபடி மட்டுமே செய்து கொடுக்கிற கொத்தடிமைகளாக,மனித உணர்ச்சிகளே இல்லாத ரோபாட்டுகளாக மாணவர்களை உருவாக்குவது என்ற நோக்கத்தின்படி தனியார்மயக் கல்விக் கொள்கை படுதீவிரமாக அரங்கேற்றப்படுகின்றன.

இப்படி கல்வியை சந்தைப்படுத்தி கொள்ளையடிப்பது, கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்கேற்ப கல்வி முறையை மாற்றியமைப்பது என்பதையெல்லாம் செய்துவிட்டு இலவச கட்டாயக் கல்விச் உரிமைச் சட்டம்2009, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு , தனியார் பள்ளி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம், இந்த அரசு மக்களின்பால் கரிசனத்தோடும், அவர்கள் கல்வி கற்பதில் அக்கறையோடும் இருப்பதுபோல காட்டிக்கொள்ள முயல்கிறது. தனியார்மயக் கல்விக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டே அதற்கு நேர் எதிராக ஒரு அரசால் எப்படி செயல்பட முடியும்?

இவை ஏதோ தனியார்கல்விக்கு எதிரான,பெரும்பான்மை ஏழை மாணவர்கள் நலன் கொண்டவைகளைப் போல காட்டப்படுகின்றன. இது ஒரு மாயை. உண்மையில் இவையெல்லாம் தனியார்மயக் கல்விக் கொள்கையை இம்மியளவும் பிசகாமல், எதிர்ப்பே இல்லாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நடைமுறைப்படுத்தும் தந்திரம், பெரும்பான்மை மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகம்.

அரசுக் கல்வியை ஒழித்துக் கட்டி தனியார்மயக் கல்வியை முழுமையாக்குவதற்காக அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளைத்தான் ஆட்சியாளர்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும், முதலாளித்துவ அறிவு ஜீவிகளும், பத்திரிகைத் தொலைக்காட்சி ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ‘வராது வந்த மாமனியைப் போல ‘ வரவேற்று ஆ..கா… ஓ…கோ…. என்று ஊதிப் பெருக்குகிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், தங்கள் பிள்ளைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தனியார்பள்ளிகள் தான் ஏற்றவை என்று பெற்றோர்கள் கருதுகின்றார்கள். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளி, கல்லூரிகளை அரசே திட்டமிட்டு சீர்குலைத்து பெற்றோர்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கித் தள்ளி விடுகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்,எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றால், எல்லாக் குழந்தைகளும் கல்வியை தரமாக பெறுவதற்கு சம உரிமையையும், சம வாய்ப்பையும் அரசு தான் செய்து கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கிடையில் வேறுபாடில்லாமல் ஒரே பாடத்திட்டம்,ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை , ஒரே வசதிகள் கொண்ட பள்ளிகளை அரசே தனது செலவில் கட்டி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.

தனியார் முதலாளிகள் கையில் கல்வி நிறுவனங்கள், ஏற்றத்தாழ்வான கல்வி என்பதெல்லாம் அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரானது. எங்கெங்கும் அரசுப் பள்ளிகள் ,ரேசன் கடைகள் போல ஒரு பகுதியிலுள்ள எல்லாக் குழந்தைகளும் அந்தப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதுதான் சம உரிமையாகும். இந்த வகை பொதுப் பள்ளி அருகமைப் பள்ளிகளைத் தான் நாட்டுப் பற்றும் ஜனநாயகப் பற்றும் கொண்ட கல்வியாளர்கள் நாடெங்கும் அமல்படுத்தச் சொல்கிறார்கள். பல அய்ரோப்பிய நாடுகளில் இந்த முறை தான் நடைமுறையில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் இதை அமல்படுத்தப் போராட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உழைக்கும் மக்களையும் , ஆசிரியப் பெருமக்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும், கல்வியாளர்களையும், ஜனநாயகப் பற்றாளார்களையும் அறைகூவி அழைக்கின்றது.

உழைக்கும் மக்களே!

  •  கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே!
  •  உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!

மத்திய , மாநில அரசுகளே!

  •  அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் ஒழித்துக் கட்டு !
  •  அனைத்து தனியார் பள்ளி/ கல்லூரிகளையும் அரசுடைமையாக்கி
  • அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கு!
  •  ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை,ஒரே வசதி கொண்ட பொதுப்பள்ளிஅருகமைப்பள்ளி முறையை அமல்படுத்து!

__________________________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

தொடர்புக்கு: (91)9445112675

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

29

சாதி-வெறி

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது.  அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக  இப்படிப் பல்வேறு வடிவங்களில் இந்த ஆதிக்க சாதித் திமிர் தலைவிரித்தாடி வருவதற்கு சமீப காலமாக நடந்துவரும் பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம்.

* திருவண்ணாமலை நகருக்கு அருகே அமைந்துள்ள ஆடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான குமார், அவ்வூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது இரண்டு மகன்களையும் அதே கிராமத்திலேயே செயல்பட்டுவரும் மற்றொரு அரசுப் பள்ளியான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் சேர்த்தார்.  இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர், அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து விலக்காவிடில், அவ்வூராட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தமது குழந்தைகளை ஆதிதிராவிடர் பள்ளியில்தான் சேர்த்து வரும் இந்த ஐம்பது ஆண்டு கால வழக்கத்தை குமார் மீறிவிட்டதாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரும்பாலோர் பொருமி வருகின்றனர்.  அரசு அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலிருந்து நீக்க மறுத்துவிட்டது; எனினும், ஆதிக்க சாதியினர் தமது பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்க்கப் போவதாகக் கூறி, இந்த நவீன தீண்டாமையை நடைமுறைப்படுத்த முயன்றனர்.

*  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த கல்கேரி கிராமத்தில் அமைந்துள்ள கரகம்மாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் வழிபாடு செய்வதை மறுத்து, ஆதிக்க சாதியினர் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.  தாழ்த்தப்பட்டோர் இத்தீண்டாமையை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தியதையடுத்து, அக்கோவில்களில் 2009, ஜனவரி 1 முதல் தாழ்த்தப்பட்டோரும் நுழைந்து வழிபாடு நடத்தலாம் என்ற உரிமை நிலை நிறுத்தப்பட்டது.

ஆனால், ஆதிக்க சாதியினர் மிகுந்த தந்திரத்தோடு, அக்கோவில்களில் இருந்த மூல விக்கிரகங்களைத் திருடி, தமது பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் வைத்துவிட்டு, இப்புதிய கோவில்கள் தமது சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, இக்கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்குத் தடைவிதித்து, ஆலயத் தீண்டாமையைப் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

* கடலூர் நகருக்கு அருகேயுள்ள நிறமணி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபட்டனர் என்பதற்காகவே, அக்கோவில் திருவிழாவையொட்டி நடைபெறவிருந்த தீமிதி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டான் ஆதிக்க சாதிவெறியனும் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவனுமான மணிவேல்.  இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மாரியம்மன் கோவில் இருந்தாலும், அக்கோவில் ஊருக்குள் இருப்பதால், ஆதிக்க சாதியினர் இக்கோவிலைத் தமது கோவில் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, “காலனியில் தனிக்கோவில் இருக்கும்பொழுது தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் இருக்கும் கோவிலுக்கு வழிபட வருவது ஏன்?” எனக் குதர்க்கமான கேள்வியை எழுப்பி, நவீன தீண்டாமையைப் புகுத்துகின்றனர்.

* கோவை மாவட்டம் பூவலப்பருத்தி கிராமத்தில் இன்றும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாகச்  செல்லும் தாழ்த்தப்பட்டோர், தமது செருப்புகளைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இது போல, தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டக் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தேநீரை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்குவது; வெளிப்பார்வைக்கு ஒன்றாகத் தெரிந்தாலும், அடியில் பெயிண்ட் தடவப்பட்ட கிளாஸ்களில் தேநீர் தருவது போன்ற நவீன வடிவங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்ந்து வருகிறது.

* தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள கிராமங்களில் தீண்டாமை எந்தளவிற்கு மூர்க்கமாகக் கோலோச்சி வருகிறது என்பதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சித் தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.  கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான கருப்பன், மன்றத் துணைத் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் தன்னைத் தரையில் அமர வைத்துத் தீண்டாமை பாராட்டுவதாக சமீபத்தில்கூடக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

இக்குற்றச்சாட்டை விசாரிக்க வந்த மாவட்ட ஆட்சியர், கருப்பன் அக்குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவித்த கையோடு, ஊராட்சி பணத்தில் 1.16 இலட்ச ரூபாய் அளவிற்குக் கையாடல் நடந்திருப்பதாகவும், அப்பணத்தைப் பங்குபோட்டுக் கொள்ளுவதில் கருப்பனுக்கும் துணைத் தலைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை வந்ததையடுத்துதான் கருப்பன் இக்குற்றச்சாட்டைக் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

தீண்டாமைக் குற்றச்சாட்டைத் தான் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதை மறுத்துள்ள கருப்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவரும் மன்ற உறுப்பினர்களும் தன்னை நிர்பந்தப்படுத்திக் காசோலைகளில் கையெழுத்து வாங்கி வருவதால், பணக் கையாடல் விவகாரத்தில் தனக்குச் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கிறார்.  “புகார் அளித்த கருப்பன் மீதே பொருளாதாரக் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதைப் பார்த்தால், சாதிப் பாகுபாட்டை மறைப்பதற்காகவே இந்த விசாரணை நாடகம் அரங்கேறியிருக்கலாம்” என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது, இந்தியா டுடே வார இதழ்.

சாதி-வெறி
பொள்ளாச்சி நகரையடுத்துள்ள பூவலப்பருத்தி கிரிஆமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்ற தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் சாட்சியம்

தீண்டாமையின் காரணமாகவும், சுயசாதிப் பெருமை, பற்றின் காரணமாகவும் கலப்பு மணம் புரிந்து கொள்ளத் துணியும் தம்பதியினரைக் கொன்று போடுவது சாதி சமூக அமைப்பில் புதிய விசயமல்ல.  இப்படிபட்ட கௌரவக் கொலைகள் வட மாநிலங்களில்தான் நடைபெறும்; சுயமரியாதை போராட்டங்கள் நடந்த தமிழ்நாட்டில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேறாது என்ற பொதுவான நம்பிக்கையை விருத்தாசலம் நகருக்கே அருகே 2003இல் நடந்த கண்ணகி  முருகேசன் தம்பதியினரின் படுகொலை கலைத்துப் போட்டது.  தமிழகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது கண்ணகி  முருகேசன் தம்பதியினரோடு தொடங்கவுமில்லை; அவர்களோடு முடிந்துவிடவுமில்லை.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம்  கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி  இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள்.  கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?

மிகவும் நேரடியாக, வெளிப்படையாக நடத்தப்படும் கௌரவக் கொலைகள் மட்டுமின்றி, சாதி மற்றும் குடும்ப கௌரவத்திற்காகத் தூண்டப்படும் கௌரவத் தற்கொலைகள், குறிப்பாக இளம் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும் தமிழகத்தில் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.  ஜனவரி 2008 தொடங்கி ஜூன் 2010 முடிய தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 1,971.  அகால மரணமடைந்த இப்பெண்களுள் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.  2010-இல் தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 629 பெண்களுள், 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 236.  இவ்வழக்குகள் குறித்து முறையாகப் புலன் விசாரணை நடத்தினால், அவற்றுள் பல கௌரவத் தற்கொலைகளாகவும் கௌரவக் கொலைகளாகவும் இருக்கும் உண்மை அம்பலத்துக்கு வரக்கூடும்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை வக்கிர எண்ணமும், கலப்பு மணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அகமண சாதிப் பண்பாடும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களும் இக்கொலைகளை நியாயமானதாகவே பார்க்கின்றனர். அதனால்தான், கிராமப்புறங்களில் கௌரவக் கொலைகள் பலரின் கண் முன்னாலேயே அல்லது ஊர்ப் பஞ்சாயத்தின் கட்டளைப்படியே நடத்தப்படுகின்றன.

பொறியியல் கல்லூரி மாணவியான கங்கவள்ளி, தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனது காதலனை மணமுடிப்பதில் உறுதியாக இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் தனது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுப் பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார்.  இச்சம்பவம் படித்த, நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மத்தியிலும் கலப்பு மணத்திற்கு எதிரான எண்ணம் ஊறிப் போயிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

சாதி-வெறிசாதி மறுப்பு கலப்பு மணத்தை எதிர்ப்பதில் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் நடத்தும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் தொடங்கி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அவர்களின் ஒவ்வொரு சமூக உரிமையையும் எதிர்ப்பதிலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் முன்னணியில் நிற்பதை கண்டதேவி கோவில் தேரோட்டம் உள்ளிட்ட பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.  நகர்ப்புறங்களில், அரசுதனியார் அலுவலகங்களில், நவீனமான ஐ.டி.துறையில் ஆதிக்க சாதிவெறி நுணுக்கமான வடிவங்களில் வெளிப்படுகிறது.

இச்சாதிவெறியைக் கொம்பு சீவிவிடும் வேலையில் ஆதிக்க சாதி சங்கங்கள் தற்பொழுது மும்மரமாக இறங்கியுள்ளன.  பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு, சமீபத்தில் நடந்த வன்னியர் சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” எனச் சாதித் திமிரெடுத்துப் பேசியிருக்கிறார்.  கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சமீபத்தில் கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியிருக்கிறது.  கலப்புத் திருமணத்தை எதிர்ப்பதற்குத் தமக்கு உரிமை உள்ளது எனப் பிரகடனம் செய்கிறது, தமிழ்நாடு பிராமணர் சங்கம்.

‘‘இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க” என ஆதிக்க சாதியினர் பேசிவருவது பகல் வேடம் என்பதை இந்த நிகழ்வுகள் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.  காலனிய ஆட்சிக் காலம் தொடங்கி தற்பொழுது வரை இந்திய சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற மாற்றங்கள்,  இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலும் ஒரு சிலர் கல்விரீதியிலும் பொருளாதாரரீதியிலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.  குறிப்பாக, தனியார்மயம்  தாராளமயத்தால் விவசாயம் சீரழிந்து போன பின்பு, வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கிச் செல்லுமாறு தாழ்த்தப்பட்டோர் விசிறியடிக்கப்பட்டிருப்பது, இனியும் பொருளாதாரத்திற்காக ஆதிக்க சாதியினரைத் தாம் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற நிலையை தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இம்மாற்றங்கள் தாழ்த்தப்பட்டோர் தமது சொந்த உழைப்பில் சம்பாதித்து நல்ல உடை உடுத்தவும், ஊருக்குள்ளேயே செருப்பணிந்து செல்லவும், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லவும், ஊர்க் கோவிலில் நுழைந்து வழிபாடவும், சம மரியாதையோடு நடத்தப்படவும், தன் சொந்த விருப்பத்தின் பேரில் சாதி மாறி காதலிக்கவும், கலப்பு மணம் புரிந்துகொள்ளவும் அவர்களைப் போராட வைத்திருக்கிறது.

நகரமயமாதல், தொழில்மயமாதல், தனியார்மயம்தாராளமயம் உள்ளிட்ட இதே ‘வளர்ச்சி’ப் போக்கு அனைத்து ஆதிக்க சாதிகள் மத்தியிலும், குறிப்பாகக் கிராமப்புற ஆதிக்க சாதிகளான ‘பிற்படுத்தப்பட்டோர்’ மத்தியிலும் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, அவர்களின் நியாயமான அரசியல் சமூக உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் ஜனநாயகப் பண்பாட்டினை அவர்களிடம் ஏற்படுத்தவில்லை.  மாறாக, இப்பொருளாதார மாற்றங்களினால் பலன் அடைந்துள்ள ஆதிக்க சாதியினைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள், கந்துவட்டி பேர்வழிகள், தனியார் பள்ளி  கல்லூரி முதலாளிகள் உள்ளிட்ட புதுப் பணக்கார கும்பல் ஓட்டுக்கட்சிகளில் உள்ளூர் தலைமையாகவோ,  சாதிக் கட்சி/ சங்கத் தலைவர்களாகவோ உருவெடுக்கின்றனர்.

சாதியைத் தள்ளிவைத்துவிட்டு ஓட்டுப் பொறுக்க முடியாது என்றவாறு தேர்தல் அரசியல் சீரழிந்துவிட்ட நிலையில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, சாதிக் கட்சிகளும், சாதி சங்கங்களும் தம் பக்கம் அணி திரட்டிக் கொள்வதும்; உழைக்கும் மக்களும் தமது சாதிக் கட்சிகள், சங்கங்களின் பின்னே கொடி பிடித்து ஓடுவதும் நடந்தேறி, இந்தக் கூட்டணி சுயசாதிப் பற்று, பெருமை, தீண்டாமை வெறிகொண்ட சாதி ஆதிக்கம், சாதிக் கலவரம் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புதிய தளத்திற்கு மூர்க்கமாக எடுத்துச் செல்லும் அபாயகரமான போக்கைத்தான் இப்பொழுது புரட்சிகர, ஜனநாயக சக்திகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3

1
கறுப்புப்-பணம்

வோடாபோன் தீர்ப்பைத் தொடர்ந்து ‘வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகள்‘ (General Anti-Avoidance Rules) என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக நிதி மசோதாவை அறிமுகப் படுத்திய பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

வரி ஏய்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரியில்லா சொர்க்கத் தீவுகளில் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீதும், வரி ஏய்ப்புக்காகவே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை வருமானவரித்துறை ஆணையர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அரசு கூறியது. இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பெயர்ப்பலகை கம்பெனியைத் தொடங்கி, அதன் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து விட்டால், தானாகவே வரிச்சலுகை கிடைத்து விடும் என்பதே தற்போதைய நிலை. இதனை மாற்றி,  இத்தகைய நிறுவனங்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் இருக்கின்றனவா, அல்லது அவை வெறும் பெயர்ப்பலகைகளா என்று ஆராயும் அதிகாரத்தை இந்தப் புதிய விதி வருவாய்த்துறை ஆணையருக்குத் தருகிறது.

அது மட்டுமின்றி, பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியக் கறுப்புப் பணப் பேர்வழிகளும், தங்களுடைய முகத்தை மறைத்துக் கொண்டு பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் இறக்கி வரும் வழியான, ‘பார்ட்டிசிபேட்டரி நோட்‘ என்ற முகமூடியணிந்த முதலீடுகள் விசயத்திலும், இந்த விதி “மூக்கை நுழைக்கிறது’’. வருமான வரித்துறை ஆணையர் கோரும் பட்சத்தில், வரி தவிர்ப்புக்கு அப்பாற்பட்ட பிற வணிக நோக்கங்களுக்காகவும்தான், பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நிரூபிக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த விதி.

இதனை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘சட்டத்திற்கு விளக்கமளிக்கவும் தீர்ப்பளிக்கவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென்றால், அந்தத் தீர்ப்பினை திருத்தும் வகையிலான சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரமிருக்கிறது‘ என்று முழங்கினார். உடனே, நீதிமன்றத்துக்கு எதிராகத் தமது தன்மானம் நிலைநாட்டப்பட்ட பெருமிதத்தில் மேசையைத் தட்டினார்கள் உறுப்பினர்கள்.

‘அந்நிய முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்பதற்காக, இந்தியாவை வரியில்லா சொர்க்கமாக நாம் அறிவித்து விட முடியாது. நினைவிருக்கட்டும். அந்நிய முதலீடுகள் வராத காலத்தில் நாம் ஒன்றும் பல்லிகளைத் தின்று உயிர் வாழவில்லை. இன்று வரை நமக்குத் தேவைப்படும் மூலதனத்தின் கணிசமான பகுதி, உள்நாட்டு சேமிப்பின் மூலம்தான் பெறப்படுகிறது. ஆகையினால், 120 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டை கே மேன் தீவுகளைப் போலவோ, வர்ஜின் ஐலேண்டு போலவோ நடத்த முடியாது. அப்படிப் பரிதவிக்கும் நிலையில் நாம் இல்லை. நம்மை அவர்களோடு ஒப்பிட முடியாது. இங்கே வரியைக் கட்டுங்கள், அல்லது நாங்கள் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாட்டைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தால், அங்கே வரியைக் கட்டுங்கள்‘ என்றார் முகர்ஜி.(தி இந்து, மே 8, 2012)

வோடாபோன் வழக்கின் தோல்வியைத் தொடர்ந்து கார்ப்பரேட் உலகின் நகைப்புக்குள்ளான ஓர் அமைச்சரின் உதார் என்பதற்கு மேல் இதில் சரக்கேதும் இல்லை.

ஏனென்றால், பிரைவேட் ஈக்விடி என்ற நிதிக்கருவியின் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு, 10% மூலதன ஆதாய வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு வரி விலக்கு, சுங்கவரி ஏய்ப்பு பிணையில் விட முடியாத கிரிமினல் குற்றமல்ல என்ற சட்டத்திருத்தம், தாங்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கார்ப்பரேட்டுகளை விடுவித்து, வரி ஏய்ப்புக் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை வருவாய்த்துறையின் தோள்களுக்கு மாற்றியது .. என்பன போன்ற பல சலுகைகளை கார்ப்பரேட் வர்க்கத்திற்கு பிரணாப் முகர்ஜி அருளியிருந்தார்.

இருந்த போதிலும், இந்தியாவின் நிதியமைச்சர் பன்னாட்டு மூலதனத்தின் முகத்தைப் பார்த்து பேசும் சூழல் குறித்து “கவலையடைந்த” அமெரிக்க அரசின் நிதித்துறை செயலர் டிமோதி கெய்த்னர், “அந்நிய மூலதனத்தை இந்தியா வரவேற்கிறதா,  இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு” பிரணாப்பை மிரட்டினார்.

“வரி தவிர்ப்புக்கெதிரான பொது விதிகள்” வரப்போகிறது என்பதால், சுமார் ஒரு மாத காலத்தில் 1000 கோடி டாலர் பன்னாட்டு நிதி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதாக அலறின முதலாளித்துவப் பத்திரிகைகள். பங்குச் சந்தைக் குறியீட்டு எண் வீழ்ந்தது. உடனே, இப்பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டியிருப்பதால், இதன் அமலாக்கம் ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டார் பிரணாப் முகர்ஜி.

தான் அறிமுகப்படுத்திய ‘வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகளை‘ கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்றுதான் பிரணாப் முகர்ஜி கூறினார். என்ற போதிலும், இதற்கெதிராக ஆத்திரம் கொண்டு வெடிப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

கறுப்புப்-பணம்

கறுப்புப் பணம் என்பது தீவிரவாதிகள் மற்றும் குற்றக் கும்பல்களின் பணம் என்றும் 2007-இல் இந்திய பங்குச்சந்தைக் கொழிப்புக்கு அதுதான் காரணமாக இருந்தது என்றும் கூறினார் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் இன்றைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன். சுவிஸ் வங்கி போன்றவற்றில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் பணமெல்லாம் ஊழல் அரசியல்வாதிகளுடையவை என்பது ஊடகங்கள் பரப்பியிருக்கும் பொதுக்கருத்து.

ஆனால், குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கறுப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் மூன்று சதவீதம்தான்.

மூன்றில் ஒரு பகுதி, அதாவது 33%, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்.

மேற்கூறிய பணத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலாளிகளும் முறையாக வரி கட்டுவார்களேயானால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 7.5 இலட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என்றும், இந்தத் தொகையானது தற்போதைய (2009-10) மொத்த வரி வசூலான 6.4 இலட்சம் கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கறுப்புப் பணமென்பது கார்ப்பரேட் பணமே என்று நிறுவுகின்றன மேற்கூறிய ஆய்வுகள்.

கார்ப்பரேட்டுகள் மீதான “அநியாய” வரிவிதிப்புதான் வரி ஏய்ப்பைத் தூண்டி, கறுப்புப் பணத்தை அதிகரிக்கச் செய்கிறது என்ற வாதம் பொய் என்பதும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. “1948 முதல் 2008 வரையிலான காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம் குறித்த ஆய்வு” என்ற கட்டுரையில், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பின்னர், அதாவது 1991 முதல் முதலாளிகள் மீதான நேர்முக வரிகள் படிப்படியாக குறைக்கப்படத் தொடங்கிய பின்னர்தான், வரி ஏய்ப்பும் கறுப்புப் பண வெளியேற்றமும் (outflow of illicit capital) அதிகரித்தன என்று கூறுகிறார், குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி நிறுவனத்தின் ஆய்வாளர் தேவ்கார். (எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, ஏப்ரல் 9, 2011)

“பொருளாதார சீர்திருத்த காலத்தில், வேகமான பொருளாதார வளர்ச்சி வேகமான கறுப்புப் பண வெளியேற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது; கறுப்புப் பண வெளியேற்றம் எந்த அளவுக்கு அதிகரித்ததோ அந்த அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வும் அதிகரித்திருக்கிறது. 2000க்குப் பின்னர் இந்த கறுப்புப் பண வெளியேற்றம் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதையொட்டி மீப்பெரும் கோடீசுவரர்களும் இந்தியாவில் அதிகரித்திருக்கிறார்கள்;  நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தளர்த்தியதும், கட்டுப்பாடுகளை அகற்றியதும் எங்ஙனம் பல மோசடிகளுக்கு வழி செய்து கொடுத்தன என்பதை நாம் வால் ஸ்டிரீட்டில் கண்டோம். தாராளமயக் கொள்கைகள் ஏற்றுமதி-இறக்குமதி மோசடிகளுக்கான வாய்ப்பை வழங்கி மூலதன வெளியேற்றத்தை (அதாவது கறுப்புப் பணத்தை) ஊக்கப்படுத்தியிருக்கின்றன” என்று அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் தேவ்கார்.

அதாவது கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதன வெளியேற்றம், தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தில் நேர்ந்த பிறழ்வோ முறைகேடோ அல்ல, மாறாக அதன் தவிர்க்கவியலாத விளைவு என்பதையே மேற்கூறிய விவரங்கள் நிரூபிக்கின்றன.

“வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரவேண்டும்” என்று கோரிக்கையை முன்வைத்து, சென்ற ஆண்டு அத்வானி யாத்திரை நடத்திக் கொண்டிருந்த போது, அக்டோபர் 2011-இல் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சிவ் பிரசாத், சுனிதா பல்தாவா, அமித்குமார் ஆகியோர் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டனர். 2009-10இல் 38 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவிலிருந்தான எஞ்சினியரிங் பொருட்களின் (ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட) ஏற்றுமதி 2010-11இல் 68 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. ஆனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் எஞ்சினியரிங் நிறுவனங்களின் கணக்கினைப் பரிசீலித்துப் பார்த்தபோது, ஏற்றுமதி வெறும் 1.38 பில்லியன் டாலர் மட்டுமே அதிகரித்திருந்தது. அப்படியானால் எஞ்சிய 28.62 பில்லியன் டாலர் எப்படி வந்தது?

அதேபோல, 2009-10இல் 8500 கோடி ரூபாய்க்கு நடந்த செம்பு ஏற்றுமதி, 2010-11இல் 36,700 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. செம்பு இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவிலிருந்து இவ்வளவு செம்பு எப்படி ஏற்றுமதியாக முடியும் என்ற கேள்விக்கும் விடை இல்லை.

2010-11இல் அந்நிய நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்குள் வந்த தொகை 22 பில்லியன் டாலர்கள். ஆனால், சர்வதேச நிதிநிறுவனங்களின் முதலீடுகள் குறித்து உலகளவிலான புள்ளிவிவரங்களைப் பராமரிக்கும் நிறுவனமான இ.பி.எஃப்.ஆர் (Emerging Portfolio Fund Research) போன்ற நிறுவனங்கள் திரட்டியிருந்த விவரங்களின் படி, 2010-11இல் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நிதி நிறுவன முதலீடு வெறும் 4.5 பில்லியன் டாலர் மட்டுமே. மீதமுள்ள 17.5 பில்லியன் டாலர்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு விடை இல்லை.

அக்டோபர் 21, 2011 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளேடு “புதிர்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. 2008-இல் 22 இலட்சம் டாலர்களாக இருந்த பஹாமா தீவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2010-இல் 280 கோடி டாலர்களாகத் திடீரென்று உயர்ந்திருப்பதைக் காட்டி இதெப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. இந்தப் புதிருக்கான விடை சில நாட்களுக்குப் பின்னர் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏட்டில் வெளியானது. ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் பஹாமா தீவுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டியிருந்தனர். வெறும் 3.5 இலட்சம் மக்கட்தொகை கொண்ட அந்தத் தீவில் உள்ளவர்கள் பெட்ரோலில் குளித்து, தாகத்துக்கும் பெட்ரோலையே குடித்திருந்தாலும்கூட அவ்வளவு பெட்ரோலைப் பயன்படுத்த முடியாது என்பதால், இது கறுப்பை வெள்ளையாக்கும் கள்ளக்கணக்கு என்பது அம்பலமானது.

கறுப்புப்-பணம்

பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கனிம வளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய கர்நாடகா லோகாயுக்தா கீழ்க்கண்டவாறு கூறியது. “ஏற்றுமதிக்கான சுங்கத்தீர்வைகள் விதிக்கப்படுவது குறித்த சுங்கத்துறையின் கணக்கையும், அந்த ஏற்றுமதிகள் குறித்த வங்கிக் கணக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்றுமதியும் ஏற்றுமதி வருவாயும் உண்மைதானா என்பதைக் கண்காணிப்பது ரிசர்வ் வங்கியின் கடமை. ரெட்டி சகோதரர்கள் 2006 முதல் 2010 வரை மொத்தம் 5000 முறை வெளிநாடுகளுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்துள்ளதாக சுங்கத்துறையின் கணக்கு கூறுகிறது. இவற்றில் 1000 ஏற்றுமதிகளுக்கான வங்கிக் கணக்குகள் மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் உள்ளன.

மீதமுள்ள 4000 ஏற்றுமதிகளில் நடந்திருப்பது என்ன? கறுப்புப் பணம் உருவாக்கப்பட்டிருக்கிறதா அல்லது கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பது ரெட்டிகளுக்கு மட்டுமே வெளிச்சம்!

கோடக் மகிந்திரா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்ற விவரங்களின்படியே, 2010-11இல் மட்டும் அந்நியச் செலாவணி வரவு என்ற பெயரிலும், அந்நிய மூலதனம் என்ற பெயரிலும் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் டாலர்களாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது.

“மொரிசியஸ் போன்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு நோக்கத்துக்காகவே தொடங்கியுள்ள பெயர்ப்பலகை முதலீட்டு நிறுவனங்களின் மூலம் அவர்களுடைய கறுப்புப் பணம் அந்நிய முதலீட்டாளர்கள் என்ற முகமூடியணிந்து உள்ளே நுழைந்திருக்கிறது இரண்டாவதாக, பெட்ரோல், ஆட்டோமொபைல், உலோகங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யாமலேயே, செய்ததாகக் கணக்குகாட்டி, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் தங்களுடைய கறுப்புப் பணத்தையே டாலராக அனுப்பி வைத்து, அந்நியச் செலாவணி வரவாக கணக்குக் காட்டியிருக்கின்றனர்” என்று இந்த 2 இலட்சம் கோடி குறித்த தமது ஐயங்களை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

கோடக் மகிந்திராவின் சில ஊழியர்களால் கண்டுபிடிக்க முடிந்த இந்த உண்மை, மன்மோகன், அலுவாலியா உள்ளிட்ட மாபெரும் வல்லுநர்களுக்குத் தெரியவில்லையா? “2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 2011-12இல் இந்தியாவின் ஏற்றுமதியை 20% அதிகரிக்க முடிந்தால் அதுவே பெரிய அதிருஷ்டம்தான்” என்று 2011ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதிப்பிட்டார் வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லார். ஆனால், ஏற்றுமதியோ இந்தக் காலகட்டத்தில் 53% அதிகரித்தது. எனினும் இந்தப் “புலிப்பாய்ச்சலின்” இரகசியம் என்ன என்ற கேள்வி அவருக்கு எழவில்லை.

“சென்செக்ஸ் உயர்ந்தால் பொருளாதார வளர்ச்சி; வீழ்ந்தால் பின்னடைவு” என்பதுதான் புதிய தாராளவாதக் கொள்கையின் மூலமந்திரம். அந்நியச் செலாவணியாகவும், அந்நிய முதலீடாகவும் வேடமணிந்த கறுப்புப் பணம், டாலராக அவதரித்து இந்தியாவுக்குள் நுழைந்து வெள்ளையாக மாறியிருக்கிறது என்பதையே நாம் இதுவரை கண்ட விவரங்கள் காட்டுகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், கருப்பை வெள்ளையாக்குவதற்கு அம்பானிகளும் டாடாக்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொண்ட தில்லுமுல்லுகள் சென்செக்ஸ் புள்ளிகளை உயர்த்தியதால், அதையே முன்னேற்றமெனச் சித்தரித்திருக்கிறது மன்மோகன் அரசு. கறுப்பை வெள்ளையாக்கும் (money laundering) இந்தக் குற்றத்தை முன்னேற்றமாகச் சித்தரித்துக் கொண்டே, கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறது.

(தொடரும்)

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பத்தாண்டு தடை தகர்த்த வேலூர் ம.க.இ.க பொதுக்கூட்டம்!

11
வேலூர் பொதுக்கூட்டம்
தோழர் இராவணன்

02.07.2012 அன்று மாலை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மின் வெட்டு – “மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வு ஏன்?” என்கிற தலைப்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

1980-களில் நக்சல்பாரிகளின் செல்வாக்குமிக்க மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்ந்ததால் காவல்துறையும் ஆளும் வர்க்கமும் நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர். வேலூரில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் 1980 களின் தொடக்கத்திலிருந்தே நக்சல்பாரி அரசியலை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றது. இதைக்கண்டு அச்சமுற்ற காவல்துறை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவத்தொடங்கியது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் எடுக்கும் மைய இயக்கங்களையொட்டி பிரசுரம் விநியோகித்தாலும், சுவரொட்டி ஒட்டினாலும், சுவரெழுத்து எழுதினாலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகளைத் தொடுப்பதை ஒரு வாடிக்கையாகவே செய்து வந்தது வேலூர் காவல்துறை. குறிப்பாக தோழர் இராவணன் மீது மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ம.க.இ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை விநியோகிப்பதற்குக்கூட பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர் இத்தகைய அடக்குமுறைகளால் தோழர்கள் துவண்டுவிடவில்லை. பொய்வழக்குகளை எதிர்கொண்ட அதே நேரத்தில் துவண்டுவிடாமல் பல்வேறு வழிமுறைகளில் தொடர்ந்து தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கக்கோரி பிரசுரம் விநியோகித்ததற்காக வேலூர் ம.க.இ.க தோழர்கள் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது ஜூன் மாத இறுதியில்தான் இவ்வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதான் கடந்த பத்து ஆண்டுகால வேலூரின் நிலைமை. இத்தகைய சூழலில்தான் 02.07.2012 அன்று ம.க.இ.க வின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. அனுமதியைக்கூட எழுத்து மூலமாகத் தரவில்லை. கடைசி நேரத்தில் அனுமதியை மறுப்பதற்காகவே இத்தகைய உத்தியை சில இடங்களில் காவல்துறை கையாள்கிறது.

வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து கொண்டேதான் இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இதனால் சுவரெழுத்து ஆட்டோ பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை.

எனினும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மூலம் பொதுக்கூட்டப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மக்களிடம் நிதிகேட்டு சென்றபோது பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் தாராளமாக நிதி கொடுத்துள்ளதிலிருந்து மின் வெட்டு – மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.

திட்டமிட்டபடி 02.07.2012 அன்று மாலை அண்ணா கலையரங்கம் அருகில் ம.க.இ.க வின் பொதுக்கூட்டம் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்றது.

வேலூரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளையும், நோயாளிகளைப் பரிசோதிக்க எக்ஸ்ரே பிலிம்கூட இல்லாமல் ‘ஃபிலிம் காட்டும்’ மாவட்ட தலைமை மருத்துவ மனையின் அவலத்தையும், ஒருபக்கம் பளபளப்பான தங்க நாற்கரச் சாலை – மறுபக்கம் இருசக்கர வாகன ஓட்டிகளையும் ஆட்டோக்களையும் கவிழ்க்கும் உள்ளுர்ச்சாலைகளின் கேவலமான நிலைமைகளையும், பாதாள சாக்கடை அமைக்கிறேன் என்கிற பெயரில் நகரச் சாலைகளை ஆண்டுக்கணக்கில் நாசப்படுத்தியதையும் அம்பலப்படுத்தி ஒரு உழைப்பாளிக்கே உரிய மொழியில் பேசி அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.

வேலூர் பொதுக்கூட்டம்
தோழர் காளியப்பன்

மின் வெட்டு – மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வு ஏன்? என்பதை விளக்கி ம.க.இ.க வின் மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றியனார்.

“பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் இனி பேருந்துகளை இயக்க முடியாது – புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த முடியாது” என்று சொல்லி போக்குவரத்துக் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியதைப் போலத்தான் “நட்டத்தில் இருக்கும் தமிழ்நாடு மின்வாரியத்தை மீட்க வேண்டும்” என்று கூறி மின்கட்டணத்தை ஜெயலலிதா  மூன்று மடங்கு உயர்த்தியதால் அதன் சுமையை இப்போதுதான் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்பதையும் காளியப்பன் அம்பலப்படுத்தினார்.

1980 வரை இலாபத்தில் இயங்கிய தமிழ்நாடு மின்வாரியம் ரூ.55 000 கோடி நட்டத்தில் மூழ்கியதற்கு முக்கியக் காரணம் அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட தனியார்கள் நடத்தும் ஐந்து மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.17 வரை விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால்தான் தமிழ்நாடு மின்வாரியம் நட்டத்தில் மூழ்கியது என்கிற உண்மையை புள்ளி விவரங்களோடு தனது உரையில் குறிப்பிட்டார் காளியப்பன்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டதால் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என மைய அரசு கூறுவது சுத்தப் பொய்;  சர்வதேசச் சந்தை என்பதே ஒரு மோசடி என்பதை அம்பலப்படுத்தினார். உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் என்பதையும் பெட்ரோல் மூலமாக மைய அரசு ஆண்டுக்கு ரூ.1 50 000 கோடி வரை மக்களிடம் வரியாக கொள்ளையடிப்பதையும்; அதேபோல மாநில அரசுகள் வரியாக பல கோடி ரூபாய் கொள்ளையடிப்பதையும் மேலும் அம்பானி போன்ற முதலாளிகள் கொள்ளை இலாபமடிப்பதற்காகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார். இத்தகைய கொள்ளைகளை தடுத்தி நிறுத்தினாலே ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30 க்கும் கீழே மக்களுக்குத் தரமுடியும் என்பதையும் விளக்கமாக ஆதாரத்துடன் எடுத்துரைத்தார்.

மின்கட்டண உயர்வும் பெட்ரோல் விலை உயர்வும் மைய – மாநில அரசுகள் அமுல் படுத்தும் தனியார் மயத்தின் கோர விளைவுகள் என்பதையும் இனி இக்கொள்கையை  தண்ணீருக்கும் விரிவுபடுத்தவிருக்கும் மைய அரசின் புதிய தண்ணிர் கொள்கையையும் அம்பலப்படுத்தினார்.

விலை உயர்வை மட்டும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே வரிச்சுமையிலிருந்து மக்கள் மீண்டுவிட முடியாது; மாறாக இதற்குக் காரணமான தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையையும் அதை அமுல் படுத்தும் ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி ஒரு புதிய ஜனநாய அரசை அமைப்பதன் மூலமே – அதைத் தொடர்ந்து அமைய விருக்கும் சோசலிச அரசமைப்பின் மூலம் மட்டுமே மக்கள் இத்தகைய கொடுமைகளிலிருந்து மீள முடியும் என புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார் காளியப்பன்.

வேலூர் பொதுக்கூட்டம்
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர் கலைநிகழ்ச்சி

“வேலூருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது எல்லோரும் கை தட்டுங்கள்” என பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்ததைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிட்டு கலை நிகழ்ச்சியைத் தொடங்கினார் தோழர் கோவன்.

“ஏறுது ஏறுது விலைவாசி… என்ன காரணம் நீ யோசி…”,

“எங்கே தேடுவேன் …கரண்ட்ட… எங்கே தேடுவேன்…”

“இருட்டு…. கும் இருட்டு… இருட்டு…… கும் இருட்டு….”

”தாகத்துக்கா தண்ணி இலாபத்துக்கா… நம் தாயை வித்தால் அது தேசபற்றா”

போன்ற மக்கள் பிரச்சனைகளையொட்டி பாடப்பட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

“கம்யூனிசம் வெல்லும்…முதலாளித்துவம் கொல்லும்…”

என்கிற எழுச்சியான பாடலோடு கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கிண்டலும் கேலியும் கோபமும் நிறைந்த இக்கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை ஒரு மணி நேரம் கட்டிப் போட்டதோடு புது உத்வேகத்தையும் அளித்தது.

படாடாபத்தோடு இலட்சக்கணக்கில் செலவு செய்தாலும் ஒரு ஐம்பது பேரைக்கூட திரட்டத் திணறும் ஓட்டுக் கட்சிகள் நடத்தும் கூட்டங்களை ஒம்பிடும் போது ம.க.இ.க வின் இந்தப் பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றி என்பதற்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டமே சாட்சியாய் அமைந்தது. உள்ளுர் மக்கள் மட்டுமல்ல பிற ஊர்களிலிருந்தும் புரட்சியை நேசிக்கும் பலர் தங்களது சொந்தச் செலவில் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டது மற்றுமொரு சிறப்பு.

மொத்தத்தில் இப்பொதுக்கூட்டத்தின் மூலம் வேலூர் அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது.

______________________________________________________

தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!

21
பிரணாப்-முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 14வது அரசுத் தலைவருக்கான வேட்பாளர்களாக, காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பாக பிரணாப் முகர்ஜியும், அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதன் கள்ளக் கூட்டாளிகளான ஜெயலலிதா, பிஜுபட்நாயக், மம்தா பானர்ஜி ஆதரவு பெற்ற பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். தகுதியும் திறமையும் வாய்ந்த, மரியாதைக்குரிய யாரையாவது அரசுத் தலைவராக்க வேண்டும் என்று நாட்டின் இருபெரும் அணிகளுமே கருதவில்லை.

வரும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் எந்த அணியும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல், தொங்கு நிலை நாடாளுமன்றம்தான் அமையும் என்பதை அவை நன்கு உணர்ந்தே உள்ளன. அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, தமக்குச் சாதகமான முடிவுகள் எடுத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய நபரை அரசுத் தலைவராகத் தெரிந்தெடுப்பதிலேயே அந்த அணிகள் குறியாக இருந்தன.

இந்த நோக்கில், வேட்பாளரைத் தெரிவு செய்யும் நிலையிலேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்து விட்டது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச இந்து மதவெறியன் நரேந்திர மோடி தலைமையில், ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் மௌனம் சாதித்து துணை நின்ற சுயநலக்காரியவாதியும், அப்போதைய அரசுத் தலைவருமான அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.கட்சி முயன்றது. ஆனால், அரசுத் தலைவர் வேட்பாளர் தெரிவின்போதே பிரதமர் பதவிக்கான  வேட்பாளர்  தெரிவில் போட்டியும் தே.ஜ.கூட்டணிக்குள் கூர்மையடைந்துவிட்டது.

அக்கூட்டணி மிகவும் நம்பியிருந்த அப்துல் கலாமும் இரண்டாவது முறையாக நயவஞ்சகச் செயலைச் செய்துவிட்டார்; பெரும்பான்மை ஆதரவு இருந்தால்தான் அரசுத் தலைவர் தேர்தலில் நிற்பது என்ற தனது கொள்கை காரணமாக, தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில் தானே விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார். வேறு வழியின்றி, பின்னாளில் ஜெயா-பிஜுவுடனான கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு செய்தது, தே.ஜ.கூட்டணி.

பிரணாப் முகர்ஜி அடுத்த அரசுத் தலைவராவது உறுதியாகி விட்டதென்று சொல்லலாம். ஐ.மு.கூட்டணி மற்றும் உற்ற துணைவர்களான முலாயம், மாயாவதி, லல்லு ஆகியோர் மட்டுமல்ல; போலி இடதுசாரிகள் மற்றும் எதிர்த்தரப்பிலிருந்து சிவசேனா உட்பட பெரும்பான்மையினர் ஆதரவு நிச்சயமாகிவிட்டது. இதற்காகவும், எப்போதும் பிரதமர் பதவிக்கான ஆசையை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியை அரசுத் தலைவராக்கி, ராகுல் காந்திக்கான பாதையை உறுதியாக்கிக் கொண்டதற்காகவும் சோனியாமன்-மோகன் கும்பல் மகிழ்ச்சியடையலாம்.

ஆனால், பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. நமது நாட்டில் மட்டுமல்ல, அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். அம்பானி குடும்பம் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிற்கழக முதலைகளின் விசுவாசி. இந்தத் ‘திறமை’களையும் செல்வாக்கையும் நாட்டு நலனுக்கும் மக்கள் சேவைக்கும் ஒருபோதும் பயன்படுத்தியவர் அல்ல. அமெரிக்காவுடன் அவர் கைச்சாத்திட்ட பல இரகசிய ஒப்பந்தங்களும், ஈழ இனப் படுகொலையை அரங்கேற்றி ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்திய தந்திரங்கள், கருணாநிதியுடன் சேர்ந்து ஆடிய நாடகங்கள் போன்றவை பிரணாப் முகர்ஜியின் பார்ப்பனிய நரித்தனத்துக்குச் சான்றுகள். இந்திரா காந்தியிடம் அரசியல் பாடம் கற்ற பிரணாப் முகர்ஜி, அவசியமாகும்போது தனது சுயநலத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் குடைக்கவிழ்ப்புகளையும் அரங்கேற்றத் தயங்கமாட்டார்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!

7

சட்டீஸ்கர்-அப்பாவிகள்-படுகொலை-2
படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் – படம் www.thehindu.com

ண்டகாரண்யா காடுகளை ஆக்கிரமிக்க இந்திய அரசு நடத்தும் போரில் ஒரு பெரிய வெற்றியை பாதுகாப்புப் படைகள் ஈட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். சத்திஸ்கர் மாநிலத்தின் பிஜபூர் மாவட்டத்தின் கோட்டாகுடா கிராமத்தில் பயங்கரமான நக்சலைட் தீவிரவாதிகள் 20 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின.

24/7 தொலைக்காட்சி சேனல்களில் நீளமாக ஒலித்த வெற்றி முழக்கங்களுக்கு பின்னணியாக, திரும்பத் திரும்ப நான்கைந்து காட்சிகள் காட்டப்பட்டன.  மருத்துவமனை ஒன்றில் காயம் பட்ட ஒருவருக்கு டாக்டர் பஞ்சால் மருந்து போடுவது, ஒருவர் ஒருக்களித்து படுத்திருப்பது, ஒருவர் படுக்கையில் படுத்திருப்பது, காவல் நிலையத்தின் பெயர்ப்பலகை ஒரு பக்கம் காட்டப்பட, இன்னொரு பக்கம் வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் உடல்களின் கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன, உடல் பகுதிகள் வீடியோவில் மங்க வைக்கப்பட்டுள்ளன. கிடத்தப்பட்டிருக்கும் உடல்கள் சாதாரண உடை உடுத்தியவை என்று தெரிகிறது, ஒருவர் மட்டும் ராணுவ சீருடை அணிந்திருக்கிறார்.

இந்தக் காட்சிகளை சுற்றிச் சுற்றிக் காட்டி அதன் பின்னணியில் செய்தி வாசிப்பவர்களும், பிஜபூரிலும், தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் முன்பும் நிற்கும் செய்தியாளர்களும் அரசாங்கத்தால் தரப்பட்ட தகவல்களை ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ‘வெற்றி, வெற்றி’ என்று சிஆர்பிஎப் ஜவான்களின் வீரத்தை புகழ்ந்து பாராட்டி தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசினார். சத்திஸ்கர் முதல்அமைச்சர் ராமன் சிங், நான்கு நாட்களுக்குப் பிறகு தனது மௌனத்தை கலைத்து, பல வேலைகளுக்கு மத்தியில் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார், உள்துறை செயலர் கே என் சிங் கடுகடுப்பாக பேசுகிறார். இவை அனைத்தும் மேலே சொன்ன காட்சிகள் சுற்றிச் சுற்றிக் காட்டப்படும் திரையிலேயே நடக்கின்றன.

மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் கூட்டம் ஒன்று நடப்பதாக கேள்விப்பட்டு, 600 பேர் கொண்ட சிஆர்பிஎப் படைக் குழுவினர் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு போனார்களாம். அவர்கள் மீது வழியில் யாரோ சுட்டதில் ஆறு பேர் காயமடைந்தார்களாம் (மருத்துவமனையில் படுத்திருப்பவர்கள்), திருப்பிச் சுட்டதில் 18 கொடிய பயங்கரவாதிகளை கொன்று விட்டார்களாம்.

பொதுவாக மாவோயிஸ்ட் போராளிகள் கொல்லப்பட்ட தமது தோழர்களின் உடல்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்றும் இந்த முறை அனைத்து உடல்களையும் அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன என்றும் சாதனையாக சித்தரித்தார்கள்.

அடுத்த நாள் கிராமத்திலிருந்து நேரடி தகவல்கள் கிடைக்கும் போது மாற்றி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ’20 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களில் ஒருவர் 15 வயதான பெண், 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், பாதுகாப்புப் படையினர் கூடியிருந்த கிராம மக்களை சுட்டு படுகொலை செய்து விட்டு சம்பவத்திற்குப் பிறகு தமது கதையை ஜோடிக்கிறார்கள்’ என்று மக்கள் சொன்னார்கள். ‘சிஆர்பிஎப் படையினர் சுற்றி வளைத்து சுட்டதில் தமது சக படையினராலேயே காயமடைந்திருக்கலாம்’ என்றும் கிராமத்தினர் தெரிவிக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட சோட்டு என்ற 14 வயது சிறுவன், தான் பாதுகாப்பு படைகளால் பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, காலில் சுடப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறான்.

‘மாவோயிஸ்டுகள் பொதுமக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள், அதனால் யாராவது பொது மக்கள் இறந்திருந்தால் அதற்கு பொறுப்பு நாங்கள் அல்ல, மாவோயிஸ்டுகள்தான்’ என்று கொடுங்கோலர்களால் சொல்லிச் சொல்லி புளித்துப் போன சாக்கைச் சொன்னார் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங். ஈழத்தில் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்கிய சிங்கள இனவெறி ராணுவமும் அரசியல் தலைவர்களும் சொன்ன அதே காரணத்தைச் சொல்லி கொலைகார படைகளின் செயலை நியாயப்படுத்துகிறார்.

உள்துறை செயலர் ஆர் கே சிங் கடுகடுப்பாக தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகிறார்.

  • ‘ஆறு ஜவான்கள் காயமடைந்திருக்கிறார்கள், அதிலிருந்தே தெரியவில்லையா இது உண்மையான என்கவுண்டர்தான்’
  • ‘இரவு 12 மணிக்கு கூட்டம் போட்டிருக்கிறார்கள், இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் நக்சலைட்டுகள்தான்’
  • ‘நக்சலைட்டுகளில் பெண் போராளிகளும் உண்டுதானே, அதனால் ஒரு 15 வயது சிறுமி கொல்லப்பட்டிருப்பது சரி என்று புரியவில்லையா’

என்று பாடம் எடுக்கிறார்.

தங்கள் பகுதிகளில் நடமாடும் சிஆர்பிஎப் ஜவான்கள் காயமடைந்தால், அவை எப்படி ஏற்பட்டிருந்தாலும், புல் தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டிருந்தாலும், பொது மக்கள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்வதன் பொருள். மேலும், இரவு நேரத்தில் தமது கிராமத்தில் கூடி பேசுபவர்கள் அரசு படைகளின் துப்பாக்கிகளை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மாவோயிஸ்டு போராளிகளாக பெண் தோழர்கள் செயல்படுவதால் எந்த பெண்ணையும் தாக்கி கொல்வதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

சட்டீஸ்கர்-அப்பாவிகள்-படுகொலை-1
ஒரு இளம் மாவோயிஸ்ட் போராளி (இந்தியாவின் பயங்கரமான உள்நாட்டு எதிரிகளில் ஒருவர்)

‘தாக்குதலின் போது பக்க விளைவாக (collateral damage) பொதுமக்கள் உயிரிழப்பதை கையாளும் சட்டங்கள் இல்லாததால், காவல் படைகள் தம்மால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறார் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அத்தகையை சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவோ அல்லது எளிமையான ஜனாதிபதியின் ஆணையாகவோ அவருக்குக் விரைவில் கிடைத்து விடக் கூடும்.

தேடுதல் வேட்டைக்குச் செல்லும் பாதுகாப்புப் படைகள் கையோடு மாவோயிஸ்ட் போராளிகள் அணியும் சீருடைகள் சிலவற்றை எடுத்துச் செல்வது வழக்கமாம். தம்மால் கொல்லப்பட்டவர்களின் உடலுக்கு அவற்றை அணிவித்து நிரூபணம் தயாரிப்பதற்கு அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாமே எடுத்துச் சென்ற ஆயுதங்களையும் கைப்பற்றப்பட்டதாக கணக்கு காட்டுவதும் போலீஸ் படையினரின் வழக்கமான நடைமுறை.

துணை ராணுவப் படைகளுக்கு வந்து சேரும் உளவு விபரங்கள் நம்பகம் அற்றவை என்று பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி, ‘கற்பனைகள் உளவு தகவல்கள் என்று அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்கிறார். ‘சுக்மா மாவட்டத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்ட மாவோயிஸ்ட் படையணியை தகர்க்க சென்ற பாதுகாப்பு படைகள் சுடப்பட்டதாக சொல்லப்படுவது அதற்கு 3 கிலோ மீட்டருக்கு முன்னதான இடம்’ என்கிறார் அவர்.

‘துப்பாக்கிச் சூடு இருட்டில் நடந்ததால் யாரை சுடுகிறோம் என்று படையினருக்கு தெரியவில்லை’ என்கிறார் பிஜபூர் மாவட்ட காவல் துறை தலைவர் பிரசாந்த் அகர்வால்.

கொவாசி லக்மா என்ற உள்ளூர் காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் சென்ற 11 பேர் கொண்ட உண்மை அறியும் குழு கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் மாநில அரசு மக்கள் மீது பயங்கரவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. மத்திய விவசாய துணை அமைச்சர் சரண்தாஸ் மகந்த் ‘மத்திய உள்துறை அமைச்சருக்கு தவறாக தகவல்கள் தரப்பட்டுள்ளன’ என்று குற்றம் சாட்டுகிறார்.

கொடூரமான ஒரு படுகொலைக்குப் பிறகு, ஆளும் அதிகார வர்க்கத்தின் பல்வேறு மட்டங்களில் வெளியாகும் முரணான தகவல்களும் அறிவிப்புகளும் அவர்களது பொய் வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. என்கவுண்டர் என்று இவர்கள் அறிவிக்கும் பல நடவடிக்கைகளின் உண்மை வெளிவராமலேயே போய் விடுகின்றன.

இந்திய ராணுவம் தனது சொந்த மக்கள் மீதும் அண்டை நாட்டு மக்கள் மீதும் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களின் நடைமுறைகளும் ஈவுஇரக்கமில்லாத படுகொலைகளும் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், பஞ்சாபிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மறுக்கும் எந்த ஒரு மக்களுக்கும் ஜனநாயக உரிமை அனைத்தையும் மறுக்கும் கொடுங்கோல் அமைப்புதான் இந்திய அரசு.

தண்டகாரண்ய காட்டுப்பகுதிகளில் அரசு செயல்படுவதில்லை, அதனால் காவல் நிலையங்கள் இல்லை, நீதிமன்றங்கள் இல்லை, அங்கு போய் வரும் பத்திரிகையாளர்கள் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இந்திய ஆளும் வர்க்கம் இன்னும் ஒரு மக்கள் படுகொலைக்கு ஆயத்தம் செய்து கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது. பொதுமக்கள் உயிரிழப்பு எத்தனை லட்சம் ஆனாலும் சரி, அந்தக் காடுகளை ‘மொய்த்துக்’ கொண்டிருக்கும், அல்லது ‘பீடித்திருக்கும்’ பழங்குடி மக்களை அச்சுறுத்தி அல்லது கொன்று அப்புறப்படுத்தி விட்டு தனது ஆட்சியை அமைப்பதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை இந்திய அரசு. இந்தப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் நமக்கெல்லாம் பழக்கமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜயகுமார்தான். அவர் ‘எங்களுடைய டிஎன்ஏவிலேயே சித்திரவதை, பொதுமக்களை கொல்லுதல் இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்.

டாடாவின் உருக்கு ஆலைகளுக்கு இரும்புத் தாதும், ஸ்டெர்லைட்டின் அலுமினிய ஆலைகளுக்கும் அலுமினிய தாதும் சுரங்கம் தோண்டி எடுக்கப்பட வேண்டும். அதற்கு நடுவே யார் நின்றாலும் அது 15 வயது சிறுமியாக இருந்தாலும் சரி, நள்ளிரவு ஒன்று சேர்ந்து விதைப்பு திருவிழாவுக்குத் திட்டமிடும் கிராம மக்களானாலும் சரி அவர்கள் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்தான்.

___________________________________________________

– செழியன்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!

9

ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனை

ஜெயா அரசு, தனது “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’’யைப் பற்றிச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த வேளையில், அவரது ஆதரவு ஏடான ஜூனியர் விகடன், “இந்த ஆட்சியில் எந்த வேலையையும் செய்ய ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை என்கிறாரே கருணாநிதி?” என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு இப்படி பதில் அளித்திருந்தது:

‘‘கமிஷன் தொகையையும் அதிகரித்துவிட்டார்கள்.  யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம்.  எப்படி வருவார்கள் ஒப்பந்தக்காரர்கள்?” (ஜூ.வி.,03.06.2012)

எதிர்க்கட்சியான தி.மு.க.வின் இந்தக் குற்றச்சாட்டை உண்மையென்று அவாள் ஏடு மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.  அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ஜெயாவும் உண்மைதான் என்று கூட்டம் போட்டு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் 169 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் வீட்டுக்கு மின் இணைப்பு தருவது தொடங்கி டாஸ்மாக் பார் வழியாக பிராத்தல் தொழில் நடத்துவது முடிய எந்தெந்த விதத்தில் எல்லாம் கமிஷன், கட்டிங் அடிக்கிறார்கள்; கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்ற விவரத்தைத் ‘துப்பறிந்து’ அறிக்கையாக ஜெயாவிடம் கொடுத்திருக்கிறது, உளவுத் துறை.  அதை வைத்துக் கொண்டு கவன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிய ஜெயா, “ரோடு போடுற காண்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்று விட்டது.  கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் (முந்தைய தி.மு.க. கவுன்சிலர்கள்) எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள்.  ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சிவிட்டீர்கள்” எனப் பிலாக்கணம் பாடியிருக்கிறார்.

மாட்டிக்கொண்ட இந்தத் திருடர்கள் அனைவரும் கூட்டம் முடிந்த பிறகு, “நாங்க மட்டும்தான் கமிசன் அடிக்கிறோமா?” எனப் பத்திரிகையாளர்களிடம் புலம்பித் தள்ளியதோடு, ஜெயா அரசில் தம்மைவிடப் பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் மற்ற திருடர்களைப் பற்றிய உண்மைகளையும் உளறிக் கொட்டினார்களாம்.

“நாங்கள் லட்சக்கணக்கில்தானே வாங்குகிறோம்; அமைச்சர்கள் கோடிக்கணக்கிலே தலைமைக்குக் கொடுக்க வேண்டுமென்று சொல்லியே வாங்குகிறார்களே, அவர்களை யார் எச்சரிக்கை செய்வது?  உதாரணமாக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கே ஒரு நூறு கோடியாம்.  பீர் விலையை உயர்த்த சில நூறு கோடியாம்.  விரைவில் மற்ற மதுபானங்களின் விலையை உயர்த்தப் போகிறார்களாம்.  அதற்குப் பல கோடி வசூல் தொடங்கிவிட்டதாம்.  இதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பது? என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சில பத்திரிகையாளர்களிடம் கிண்டலாகச் சொன்னதாக” அம்பலப்படுத்துகிறார், மு.கருணாநிதி. (தினகரன், 22.06.2012)

கவுன்சிலர்களைக் கூட்டிவைத்து எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களைக் கூட்டிவைத்து, ஜெயா எச்சரிக்கை செய்யும் நல்ல நாள் விரைவில் வரலாம்.  அப்படி நடக்கும்பொழுது, அமைச்சர்கள் அம்மாவிற்குக் கொட்டிக் கொடுத்த விவரமும் அம்பலத்துக்கு வரும்.

கமிஷன், கட்டிங் விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த தி.மு.க. ஆட்சியில் என்னென்ன விதத்தில் அதிகாரமுறைகேடுகள், கொள்ளைகள் நடந்து வந்தனவோ, அவை அத்துணையும் அம்மா ஆட்சியிலும் தொடர்வது மட்டுமல்ல, முந்தைய ஆட்சியை விஞ்சும் அளவிற்கும் நடந்து வருகின்றன.  உதாரணமாக, மணல் கொள்ளையை எடுத்துக் கொண்டால், கடந்த ஆட்சியில் ஆற்றுப் படுகைகளில் நடந்து வந்த மணற்கொள்ளை, இந்த ஆட்சியில் குளம், ஏரி, கண்மாய் என விரிவடைந்திருக்கிறது.

“மாவட்டம், வட்டம், ஊராட்சி வாரியாகப் பொதுப்பணித் துறை புறம்போக்கு இடங்களின் வண்டல் மண்ணுக்கான ஏகபோக உரிமை ஆளுங்கட்சியினருக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் கொடுக்கப்படுகிறது” என ம.தி.மு.க. தலைவர் வை.கோ. அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனைஇடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, மணல் கொள்ளையிலும் தி.மு.க. பாணியையே அ.தி.மு.க.வும் பின்பற்றி வருகிறது.  “தமிழகத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் மணலைப் பொருத்தவரை கோவையைச் சேர்ந்த ஒரு தனிமனிதரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.  அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், ஒட்டுமொத்த மணல் காண்ட்ராக்டும் அந்த கோவை பிரமுகரின் கைக்கே மீண்டும் போய்விட்டது” என அ.தி.மு.க. ஆதரவு பத்திரிகைகளே உண்மையை மறைக்கமுடியாமல் எழுதும் நிலைக்கு வந்துவிட்டன.

இந்த மணற்கொள்ளையை எதிர்த்து நின்றதற்காக உடுமலை நகரின் அருகே அமைந்துள்ள தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணபுரம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்குக் குடிதண்ணீர் வழங்கும் கிணறுகளில் காப்பர் சல்பேட் என்ற இரசாயனப் பொருளைக் கொட்டி, அக்கிணறுகளைப் பாழாக்கியது மணற்கொள்ளைக் கும்பல்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதைத் தடுத்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மணல் மாஃபியாக்களால் லாரி ஏற்றுக் கொல்லப்பட்டார்.  அ.தி.மு.க. அரசு தனது முதலாண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஒரு கிராம உதவியாளரை மணல் மாஃபியாக்கள் உயிரோடு புதைத்துக் கொல்ல முயன்றனர்.  திருப்பத்தூர் பகுதியில் நடந்துவரும் மணற்கொள்ளையைத் தடுக்க முயன்றதற்காக  தருமராஜன் என்ற போலீசு கூடுதல் கண்காணிப்பாளர், அங்கிருந்து திருவள்ளூருக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

மதுரையில் மு.க. அழகிரியின் கொட்டத்தை அடக்கிய மூம்மூர்த்திகளெனப் பத்திரிகைகளால் கொண்டாடப்பட்ட அம்மாவட்ட ஆட்சியர் சகாயம், போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணப்பன் ஆகிய மூவரும் அம்மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.  இந்த மாறுதலின் பின்னே கிரானைட் குவாரி காண்டிராக்டர்களின் கைவரிசை இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இக்கும்பல்களின் கொட்டம் இருந்து வந்தாலும், மு.க. தனது சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்காவது, பள்ளிக் கல்வியில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தியது, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என ஒன்றிரண்டு காரியங்களைச் செய்துவிட்டுப் போனார்.  ஆனால், ஜெயா ஆட்சியில் . . .?  பொதுப் பாடத் திட்டத்திற்குக் குழி வெட்ட முயன்று, அதில் தோற்றுப் போனார்; கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்து, தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்குக் கதவை அகலத் திறந்துவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இழுத்து மூட முயன்று நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டார்; ஒரே கையெழுத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை வேலையை விட்டுத் துரத்தியடித்தார்; டாஸ்மாக்கில் டிலைட் பார்களை அறிமுகப்படுத்தினார்; கஜானா காலி, கஜானா காலி எனப் புலம்பியே, பால் விலை, மின் கட்டணம், பேருந்து கட்டணங்களை உயர்த்தியும் கூடுதலாக வரி போட்டும் ஆட்சியைப் பிடித்த ஒரே ஆண்டுக்குள் 18,000 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார்.

விலையில்லா அரிசி, கிரைண்டர் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவது சாதனையில்லையா எனக் கேட்பவர்களுக்கு,  அக்கவர்ச்சித் திட்டங்கள் பற்றி ஜெயாவின் துதிபாடிகளுள் ஒருவரான தமிழருவி மணியன் இப்பொழுது இப்படி எழுதுகிறார்: “இதற்கு எந்த அறிவுக் கூர்மையும் ஆட்சித் திறனும் அவசியம் இல்லை.”

இதுவொருபுறமிருக்க, கடந்த ஓராண்டில் ஜெயாவின் ஆட்சி மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையையாவது கண்டு கொண்டிருக்கிறதா?  “நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின் தட்டுப்பாடைத் தீர்த்து விடுவேன்” என நாக்கூசாமல் புளுகி ஆட்சியைப் பிடித்த ஜெயா, ஏதோ தனியாரின் கொள்ளையைச் சகித்துக் கொள்ளாதவர் போல, தமிழக மின் வாரியம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி வந்ததை ரத்து செய்தார்.  இதனால் மின்வெட்டு மேலும் தீவிரமாகும் எனத் தெரிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  பின்னர் இக்கடுமையான மின்வெட்டு பிரச்சினையையே முகாந்திரமாகப் பயன்படுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்கியதோடு, மின் கட்டணத்தையும் உயர்த்தினார்.  தனது இந்த நோக்கங்களைச் சதித்தனமாக நிறைவேற்றிக் கொண்ட பிறகு, மீண்டும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமது வாழ்வாதாரத்திற்காகத் தன்னெழுச்சியாக அணிதிரண்டு போராடத் தொடங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசு தாக்குதலை ஏவிவிட்டு ஒடுக்கினார்.

ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனை

கரும்பாலைத் தொழிலாளர்களின் போரட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவராமல் ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்தடித்ததால், விளைந்த கரும்புகளை வெட்ட முடியாமல் போய் விவசாயிகள் பெருத்த நட்டத்தை அடைந்தனர்.  இதனால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி முருகையன் என்ற விவசாயி இந்த உண்மையைக் கடிதமாக எழுதிவைத்துவிட்டு சிதம்பரம் நகரில் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக்தின் தென்பகுதியில் கடையநல்லூரில் தொடங்கிய டெங்கு காய்ச்சல் இப்பொழுது வடசென்னையையும் தொட்டுவிட்டது.  அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படியே இதுவரை இந்நோய்க்கு 42 பேர் பலியாகிவிட்டனர்.  கொசு ஒழிப்பு, சாக்கடையைச் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண பொது சுகாதாரத்தைப் பேணும் நடவடிக்கைகள் ஒழித்துக் கட்டப்பட்டதால் வந்த வினை இது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனைக்குள்ளேயே தாங்கள் தாக்கப்படுவதைக் காட்டிப் பயிற்சி மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் தவித்துப் போனார்கள்.  இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிடாமல், புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகுதான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனத் திமிராக அறிவித்தார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்திய மாணவர்களைச் சிறைபிடித்து வைத்துக்கொண்டு பெற்றோர்களை மிரட்டும் அளவிற்கு பள்ளி முதலாளிகள் கொட்டமடித்து வருகின்றனர்.  இந்த அடாவடித்தனத்தைக்  கண்டுகொள்ளாத ஜெயா அரசு, மறுபுறம் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோர்கள் நடத்திவரும் போராட்டங்களை போலீசைக் கொண்டு அச்சுறுத்தி அடக்கிவிடுவதில்தான் அதீத அக்கறை காட்டுகிறது.  பேருந்துக் கட்டணத்தை மலை போல உயர்த்திவிட்டு, மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்காமல் ஒரு மாதத்துக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறது.  எதிர்க்கட்சிகள் இந்த அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியவுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப் போவதாக பம்மாத்து காட்டுகிறது.

இப்படி எந்தவொரு மக்கள் பிரச்சினையானாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல், சர்வ அலட்சியத்துடன் நடந்துவரும் ஜெயா அரசு, ஓராண்டில் நூறாண்டு சாதனை நிகழ்த்திவிட்டதாகப் புளுகி வருகிறது.  மோடி பாணியில், தனது இந்த சுயதம்பட்டத்தை அனைத்திந்திய அளவில், 50 கோடி ரூபாய் செலவில் நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரமாக அளித்து, கஜானாவைக் கொள்ளையடிக்கிறது.

இப்படிபட்ட இருண்ட கால ஆட்சியை போலீசைக் கொண்டுதான் மக்களின் கோபத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசிற்குத் தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறார், ஜெயா.  போலீசு துறையில் புதிதாக 13,320 பேரை நியமிக்க நடவடிக்கை; போலீசுக்கு 36,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க 337 கோடி ரூபாய் ஒதுக்கீடு; போலீசாரின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு; போலீசு நிலையங்கள் என்பதே வதை முகாம்கள் என அம்பலப்பட்டுப் போன பின்னும், அந்நிலையங்களை ஏதோ மக்கள் வசதிக்காக நவீனப்படுத்துவதாகக் கூறி, அதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; இராணுவத்தினரைப் போல போலீசுக்கும் மது பாட்டில்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களை மலிவாக விற்கச் சிறப்பு அங்காடிகள் என இந்த ஓராண்டிற்குள் பல சலுகைகள் போலீசுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.

இச்சட்டபூர்வ சலுகைகள் ஒருபுறமிருக்க, குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் போலீசு நடத்தி வரும் கொட்டடிக் கொலைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட எல்லா வகையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் போலீசைப் பாதுகாக்கும் திருப்பணியையும் செய்து வருகிறார், ஜெயா.

ஜெயா ஆட்சி ஓராண்டில் நூறாண்டு வேதனைஉதாரணத்திற்குச் சொன்னால், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடந்த இருளர் இனப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் ஒருபுறம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண உதவி அளித்து விட்டு, இன்னொருபுறம் அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவில்லை என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் குற்றவாளிகளான போலீசாரைக் காப்பாற்றி வருகிறது, ஜெயா அரசு.  போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்தான் வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்களைச் சுட்டுக் கொன்றனர் என சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தயாரித்து அளித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழக்தில் நடந்து வரும் திருட்டு, கொலைக் குற்றங்களை போலீசால் தடுக்க முடியவில்லை என்பதோடு, காக்கிச் சட்டை கும்பலே திருட்டுக் கும்பலாகச் சீரழிந்து போய் நிற்கிறது.  சென்னை மதுரவாயல் பகுதியில் குணாராம் என்ற அடகுக் கடைக்காரரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த ராமஜெயம், தான் கொள்ளையடித்த நகைகளை ஜெய்சங்கர் என்ற போக்குவரத்து போலீசின் வீட்டில்தான் பதுக்கி வைத்திருந்தான்.  போலீசு ராமஜெயத்தின் படத்தைத் தொலைக்காட்சியில் வெளியிட்டு, குற்றவாளி பற்றித் தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துவந்த சமயத்தில்கூட, ராமஜெயத்தைத் தனது வீட்டிலேயே பதுங்கிக் கொள்ளச் செய்து, அவன் மேலும் திருட்டுத் தொழிலைத் தொடருவதற்கும் உதவி வந்திருக்கிறான் ஜெய்சங்கர்.

முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக போலீசு குற்றவாளிக் கும்பலைக் கண்டுபிடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, அக்கொலையைப் புலன் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் ராமஜெயத்தின் குடும்பத்தினர், உறவினர்களிடமிருந்து பெரிய அளவுக்குப் பணம் சுருட்டியதாகவும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு இளைஞனை மிரட்டியே பெரிய தொகையைக் கறந்து விட்டதாகவும் ஜூனியர் விகடன் (10.06.2012) கிசுகிசுச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

திருப்பூரில் நடந்த பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிதி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி, அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கோடிக்கோடியாகக் கறக்கத் திட்டம் போட்ட உயர் போலீசு அதிகாரிகள், இத்திட்டத்தை நிறைவேற்ற இரண்டு போலீசு ஆய்வாளர்கள், ஒரு துணை போலீசு துணைக் கண்காணிப்பாளரை இறக்கி விட்டனர்.  இதில் முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாய் வரை கைமாறியிருக்கிறது.  இவ்வழக்கு தொடர்பாக, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் தற்பொழுது கைது செய்யப்பட்டிருந்தாலும், பிரமோத் குமாரைக் காப்பாற்ற உயர் போலீசு அதிகாரிகளே முன்னின்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திண்டுக்கல்லைச் சேர்ந்த மில் தொழிலாளியான ராஜாவை ஒரு திருட்டு வழக்கு விசாரணை தொடர்பாக போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று, அவரை அவரது அண்ணன் அன்புச்செழியனின் கண் முன்னாலேயே அடித்துக் கொன்றது, திண்டுக்கல் நகர போலீசு.  இது, ஜெயா பதவியேற்ற பிறகு நடந்துள்ள இருபதாவது கொட்டடிக் கொலையாகும்.  இது பற்றி பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்த போலீசார், “விசாரணையில் கொஞ்சம் எசகுபிசகா ஆயிடுச்சு, அவ்வளவுதான்” என அலட்சியமாகக் கூறியுள்ளனர்.  ஜாடிக்கேத்த மூடி போல, கிரிமினல் ஜெயா கும்பலுக்கேற்ற  கிரிமினல் போலீசு!

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!

10

ஈழத்-தமிழ்-அகதிகள்

டந்த மாதம் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்ற 107 ஆண்கள், 19 பெண்கள்,   25 குழந்தைகள் உள்ளிட்ட 151 ஈழத் தமிழர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.  “30,40 பேர் மட்டுமே போகக்கூடிய அந்தச் சின்னப் படகில் 130 பேர் நெருக்கியடிச்சி நின்னுக்கிட்டிருந்தாங்க. ஆஸ்திரேலியாவுக்குப் போகணும்னா இப்படியே 15 நாள் பயணிச்சாகணும்.  15 நாளும் அவங்க இப்படியே நின்னுகிட்டே போக முடியுமா?  நாங்க மடக்காம இருந்திருந்தா அந்தப் படகு பாரம் தாங்காமல் நடுக்கடலில் மூழ்கிப் போயிருக்கும்.  எல்லோரும் ஜல சமாதியாகி இருப்பாங்க” என ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போகவிருந்த ஈழத் தமிழர்களின் அவலத்தையும், அவர்கள் எதிர்கொண்டிருந்த பயங்கரத்தையும் ஒரு கேரள போலீசுக்காரர் பத்திரிகையாளர்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியாவிட்டாலும் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு செத்துப் போகாத தமது அதிருஷ்டத்தை நினைத்து அவர்களுள் ஒருவர்கூட மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.   இலங்கையில் ராஜபட்சே அரசால் நடத்தப்படும் முள்வேலி முகாம்களுக்கும் தமிழகத்திலுள்ள ஈழ அகதி முகாம்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவுமில்லை என்ற பின்புலம்தான் ஈழத் தமிழ் அகதிகளைத் தமிழ்நாட்டை விட்டு கள்ளத் தோணியில் வெளியேற வைக்கிறது. தமிழக முகாம்களுக்குத் திரும்புவதைவிட, நடுக்கடலில் செத்துப் போயிருக்கலாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டுள்ளது.

2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.  இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளை வேண்டா விருந்தாளிகளாகத்தான் நடத்தி வருகின்றன என்பதை இம்முகாம்கள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமான நிலையில் இருப்பதிலிருந்தே புரிந்து கொண்டுவிடலாம்.  மேலும், இம்முகாம்கள் அனைத்தும் கியூ பிரிவு போலீசாரால் ஒரு அரை சிறைச்சாலை போலவே நடத்தப்படுகின்றன.  போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் அத்துமீறலை, அக்கும்பல் தம்மைக் கேவலமாக நடத்துவதைக் கேள்வி கேட்கத் துணியும் ஈழத் தமிழர்களைப் புலிகள் என முத்திரை குத்தி, ஆயுள் தண்டனை கைதிகளைப் போல அடைத்து வைப்பதற்காகவே செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இரண்டு சிறைச்சாலைகள் நடத்தப்படுகின்றன.

“மாலை 6 மணிக்குள் முகாமிற்குத் திரும்பிவிட வேண்டும்; வெளியிலோ, வேறு முகாமிலோ தங்கியுள்ள தமது உறவினரைப் பார்க்கப் போக வேண்டுமென்றால் வட்டாட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்; வெளியே வேலை தேடச் செல்லுவதற்கு ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்  என முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் குற்றவாளிகளைப் போலவே தமிழக அரசால் நடத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இருபது ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குச் சர்வதேசரீதியில் அங்கீகரிக் கப்பட்ட எந்தவொரு உரிமையும் வழங்க இந்திய அரசு மறுத்து வருகிறது.  அகதி முகாம்களிலேயே பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்த ஈழத் தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேருவதற்கு இருந்துவந்த உரிமையும் பறிபோய்விட்டது.

ஆஸ்திரேலியாவுக்குப் போக முயன்று தோற்றுப் போய்த் திரும்பியிருக்கும் நாதன், “மரணத்துக்குக்கூட எங்கள் மீது இரக்கம் இல்லை; அதுகூட எங்களை அழைத்துக்கொள்ள மறுக்குது” என்று கதறுகிறார்.  ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் முடியாது என்று எல்லாப் புறமும் சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?  முள்ளிவாய்க்கால் என்றா?

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!

5

கொலைகார-கேளரா-சிபிஎம்உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கொலைகாரக் கட்சி. கேரளத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து பிரிந்து சென்று “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை நடத்திவந்த டி.பி. சந்திரசேகரனை கடந்த மே மாதத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்ற சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம், இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

இப்படுகொலையும், “அரசியல் கொலைகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளோம்” என்று பொதுக்கூட்டத்திலேயே  இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி திமிராகப் பேசியிருப்பதும், சந்திரசேகரன் படுகொலையையொட்டி சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் கோஷ்டியும் பினாரயி விஜயன் கோஷ்டியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப்பதும், அரசியல் எதிரிகளைத் திட்டமிட்டு கொலை செய்வதை சி.பி.எம். கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை கேரளம் மட்டும் மட்டுமின்றி, நாடு முழுவதும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

கேரளத்தில் கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்கள் சி.பி.எம். கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாகும். நான்காண்டுகளுக்கு முன்பு கண்ணூர் மாவட்டம், வடகரா அருகிலுள்ள ஒஞ்சியத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி “புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஒஞ்சியம் வட்டாரத்தில் அவரும் அவரது கட்சியும் மக்களிடம் கணிசமான ஆதரவையும் பெற்று வந்தது. சந்திரசேகரனுக்கு சி.பி.எம். கட்சியின் கொலைகார முகம் தெரியும். அவரது கட்சி காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதால், சி.பி.எம். கட்சி நடத்தி வந்துள்ள கொலைகளைப் பற்றி அவர் வெளிப்படுத்தி விடுவார் என்று கருதி, பலமுறை அவரைக் கொல்ல முயற்சித்து வந்த சி.பி.எம். கட்சியின் கொலைக்கும்பல், கடந்த  மே 4-ஆம் தேதியன்று அவரைச் சுற்றிவளைத்து வெட்டிக் கொன்றுள்ளது.

படுகொலை நடந்த அடுத்த நாளில்,  சி.பி.எம். கட்சியின் கொன்னூத்துப் பரம்பு கிளைச் செயலாளர் மனோஜன் மற்றும் அவரது கூட்டாளி ஷனோஜும், அதைத் தொடர்ந்து கையிலே சி.பி.எம். கட்சிச் சின்னத்தைப் பச்சை குத்திக் கொண்டுள்ள சஜித் என்பவனும் இப்படுகொலைக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜூன் 7 அன்று மகாராஷ்டிரா  கோவா எல்லைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த டி.கே. ரஜீஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் மூலமாக, பிற கொலைகாரர்களைப் பற்றி அறிந்து,  ஜூன் 14 அன்று கண்ணூர் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த இதர கொலைகாரர்களைச் சுற்றிவளைத்து போலீசு கைது செய்துள்ளது.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த டி.கே. ரஜீஷ் என்பவன் மும்பையிலுள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு,  கட்சி அழைக்கும் போதெல்லாம் கேரளாவுக்கு வந்து அரசியல் எதிரிகளைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டவன். ரஜீஷைப் பற்றியும் இவனது கொலைகார கும்பலைப் பற்றியும் அவ்வப்போது “கொட்டேஷன் கேங்க்” என்று ஊடகங்களில் செய்திகள் வந்த போதிலும், இவனைப் பற்றிய வேறு எந்தத் தகவலோ, புகைப்படமோ வராத அளவுக்கு அவனும் சி.பி.எம். கட்சியும் இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

ரஜீஷும் அவனது கூட்டாளிகளான கொடி சுனி, கிர்மானி மனோஜ், ஷஃபி, சஜித் ஆகியோரும்தான் சந்திரசேகரனை வெட்டிக் கொன்றவர்கள் என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பானூர் ஏரியா கமிட்டி உறுப்பினரான குஞ்சானந்தன் என்பவர்தான் சந்திரசேகரனைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்  என்றும், அவரது வீட்டில்தான் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும் கொலைகாரர்கள் சாட்சியமளித்துள்ளனர்.  தலைமறைவாக இருந்த குஞ்சானந்தன் இப்போது கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்

தமது செல்வாக்கிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்களை அரசு எந்திரத்தில் அமர்த்துவதன் மூலம் அந்தப் பகுதியை ‘கட்சிக் கிராமமாக’ மாற்றுவது என்ற உத்தியுடன் கேரள சி.பி.எம். கட்சி நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறது. கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் கட்டுப்பாட்டில்  கட்டப்பஞ்சாயத்தில் பல ‘கட்சிக் கிராமங்கள்’ உள்ளன.  இக்கிராமங்களில் கொலைகாரர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து, கெடுபிடிகள் குறைந்த பின்னர் சி.பி.எம். கட்சி அவர்களைத் தப்ப வைக்கிறது. ஒருவேளை போலீசு புலன்விசாரணையில் சி.பி.எம். கட்சியினர்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் கசியத் தொடங்கி விட்டால், “கொட்டேஷன் கேங்க்” என்றழைக்கப்படும் இத்தொழில்முறை கொலைகாரர்களுக்குப் பதிலாக, தமது கட்சி ஊழியர் ஒருவரை முன்னிறுத்தி,  இவர்தான் கொலை செய்தார் என்று போலீசுக்குத் தெரிவித்துச் சரணடைய வைப்பது, அவர் சிறையிலிருக்கும் காலத்தில் அவரது குடும்பத்தைப் பராமரிப்பது, பின்னர் நீதிமன்றத்தில் போதிய ஆதாரம் இல்லை என்று வாதிட்டு, அந்த ஊழியரை விடுவிக்க ஏற்பாடு செய்வது  என நீதித்துறை, அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் துணையோடு சி.பி.எம். கட்சி இச்சதிகளையும் கொலைகளையும் திட்டமிட்டு நடத்தி வந்துள்ளது.

சந்திரசேகரனைக் கொன்றொழித்த பின்னர், கண்ணூர் மாவட்டத்திலுள்ள ‘கட்சிக் கிராமங்’களில் தங்க வைக்கப்பட்டிருந்த இக்கொலைகாரர்களைத் தேடி அடுத்தடுத்து போலீசு சோதனை நடத்தியதால், வெவ்வேறு கட்சிக் கிராமங்களில் மாறிமாறி அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ரஜீஷ் கோவாவுக்குத் தப்பிச் சென்ற பின்னர், கண்ணூர் மாவட்டம்  குழுக்குண்ணு பஞ்சாயத்திலுள்ள முடக்கோழி பெரிங்கான மலையிலுள்ள இரிட்டி எனும் ஊருக்கு அருகே, மக்கள் நடமாட்டம் இல்லாத  எளிதில் சென்றடைய முடியாத காடும் மலையும் சூழ்ந்த ஒரு தோட்டத்தில் மற்ற கொலைகாரர்கள் 15 நாட்களாகத் தங்கியிருந்துள்ளனர். போலீசார் மரம் வெட்டும் கூலிகளாகவும், லாரிகளில் செங்கல் அடுக்கும் கூலிகளாகவும் வேடமிட்டுக் கொண்டு மலைக்குச் சென்று, கொலைகாரர்களையும் சி.பி.எம். ஊழியர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.

“கண்ணூர் மாவட்டத்தில் கட்சி கிராமங்கள் உள்ளதாகக் கூறுவது கடைந்தெடுத்த பொய். காங்கிரசும் ஊடகங்களும் திட்டமிட்டு அவதூறு செய்கின்றன” என்று சீறினார், சி.பி.எம். கட்சியின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரான எலாமரம் கரீம். ஆனால்,  எம்.ஜி.எஸ். நாராயணன் எனும் பிரபல வரலாற்றியலாளர், “நான் கண்ணூர் மாவட்டத்தில் பல ‘கட்சிக் கிராமங்’களுக்குச் சென்றுள்ளேன். அங்கே கட்சி அனுமதி இல்லாமல் எந்த நல்லது கெட்டதும் நடக்க முடியாது.  இப்போது தொலைத்தொடர்பு வளர்ச்சியின் காரணமாக இத்தகைய கிராமங்களில் கட்சி தனது கட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைத்துள்ளது” என்று வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கொலைகார-கேளரா-சிபிஎம்1997 முதல் 2008 வரையிலான காலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 56 பேர் சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னூரில் பள்ளி ஆசிரியராகவும் காங்கிரசு யுவமோர்ச்சா தலைவராகவும் இருந்த கே.டி.ஜெயகிருஷ்ணன், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் விரட்டிவிரட்டி 1999-இல் சி.பி.எம். கொலைக்கும்பலால் கொல்லப்பட்டார்.  சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி என்.டி.எப். கட்சியில் சேர்ந்த  மொகம்மது பாசல் என்ற முக்கிய பிரமுகர்,  கடந்த 2006 அக்டோபர் 22 அன்று கொல்லப்பட்டார். இக்கொலையின் முக்கிய சதிகாரர்களான கண்ணூர் சி.பி.எம். மாவட்டக் கமிட்டி உறுப்பினரான கராயி ராஜன் மற்றும் திருவாங்காடு கமிட்டி உறுப்பினரான சந்திரசேகரன் எனுமிருவர் உள்ளிட்டு எட்டு பேரை மையப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஊழியரான 22 வயதான அப்துல் சுக்கூர் சி.பி.எம். கொலைகாரர்களால் நட்டநடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்டார். கேரளத்தில் சி.பி.எம். கட்சியின் செல்வாக்குள்ள பகுதிகளில் குத்தகைதாரர், தேயிலைமிளகு ஏலதாரர், வாடகை  சந்தா வசூலிப்பவர் முதலான தொழில்களை நடத்தும் எதிர்த்தரப்பினர், சி.பி.எம். கட்சிக்கு முறைப்படி கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதை மீறுவோரும் தகராறு செய்வோரும் அரசியல் எதிரிகளாகப் பட்டியலிடப்பட்டு சி.பி.எம். கொலைக்கும்பலால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

சந்திரசேகரன் படுகொலைக்குப் பின்னர், தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய இடுக்கி மாவட்ட சி.பி.எம். செயலாளரான எம்.எம். மணி, “ஆம்! நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொன்றொழித்தோம். ஒவ்வொரு முறையும் கட்சியின் எதிரிகளைப் பற்றி நாங்கள் பட்டியல் தயாரித்து அதன்படி கொன்றொழிப்போம். இன்னும் பலரைக் கொலை செய்வோம். அரசியல் எதிரிகளைக் கொல்வது சி.பி.எம். கட்சியின் வரலாறு. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டர்; ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார்; ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது” என்று 1983லிருந்து 13 காங்கிரசு ஊழியர்களைக் கொன்றதைப் பற்றி ஆணவத்தோடு சுயதம்பட்டம் அடித்துப் பேசியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் முக்கிய தலைவராக உள்ள இவர், பினாரயி விஜயன் கோஷ்டியின் முக்கியப் புள்ளியாவார்.

மணியின் திமிர்த்தனமான வாக்குமூலம் ஊடகங்களில் அம்பலமானதும், அவர் உணர்ச்சி வேகத்தில் இப்படித் தவறாகப் பேசிவிட்டார் என்று சி.பி.எம். கட்சி பூசிமெழுகியது. ஆனால், அவர் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வீடியோவாக இணையத்தில் வெளிவந்து அவர் ஆணவத்தோடு பேசியிருப்பதை நிரூபித்ததும்,  வேறுவழியின்றி கட்சித் தலைமை அவரைப் பொறுப்பிலிருந்து இப்போது நீக்கியுள்ளது.

கூரப்பாச்சல் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருந்த கொடிச்சாலி குஞ்சு என்பவர், பத்தாண்டுகளுக்கு முன்பு சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி, இப்போது காங்கிரசு ஆதரவாளராக உள்ளார். இடுக்கி மாவட்டத்தில் சி.பி.எம். கொலைக் கும்பலால் 1983 ஜனவரி 16 அன்று காங்கிரசு தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.யின் மண்டலத் தலைவரான முல்லஞ்செரா மத்தாயி வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர், கொலைக்கும்பலைத் தப்பிக்கச் செய்துவிட்டு, அன்று  தன்னைக் கொலைகாரனாக அறிவித்து சி.பி.எம்.கட்சி சரணடையவைத்த கதையை, இப்போது அவர்  பகிரங்க வாக்குமூலமாக அளித்துள்ளார். இவரைப் போலவே மேலும் 3 முன்னாள் சி.பி.எம் ஊழியர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் ஊடகங்களில் வெளிவந்து, சி.பி.எம். கட்சியின் கொலைகளும் சதிகளும் கேரளம் முழுவதும் நாறுகிறது.

கொலைகார-கேளரா-சிபிஎம்பினாரயி விஜயன்தான் தனது கணவரின் கொலைக்குக் காரணம் என்று கொல்லப்பட்ட சந்திரசேகரனின் மனைவி குற்றம் சாட்டியதால், கட்சிக்குத் துரோகமிழைத்த சந்திரசேகரனின் மரணத்துக்கு யாரும் அஞ்சலி செலுத்தச் செல்லக் கூடாது என்று சி.பி.எம். கட்சி விதித்த கட்டுப்பாட்டை மீறி, முன்னாள் சி.பி.எம். முதல்வரும் தற்போதைய கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், சந்திரசேகரனுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இத்தனை காலமும் சி.பி.எம். கட்சியின் படுகொலை அரசியலை எதிர்த்து வாய்திறக்காத அவர், இப்போது மாநிலச் செயலாளரான பினாரயி விஜயனின் தூண்டுதலாலேயே இப்படுகொலை நடந்துள்ளது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, விஜயன் கோஷ்டியைத் தனிமைப்படுத்த முயற்சித்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த விஜயன் கோஷ்டி,  அச்சுதானந்தனைக்  கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலக்  கமிட்டியை அவசரமாகக் கூட்டி விவாதித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்திலும் முறையிட்டது. அச்சுதானந்தனோ,  “தற்போதைய சூழலில் பினாரயி விஜயன் தலைமையிலுள்ள மாநிலக் கமிட்டியை  முற்றாகக் கலைத்து மறுஒழுங்கமைப்பு செய்யாவிடில், நான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்க இயலாது” என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுக்குக் கடிதம் எழுதி, அதைப் பகிரங்கப்படுத்தி விஜயன் கோஷ்டிக்கும் கட்சித் தலைமைக்கும் ஆப்பு வைத்துள்ளார்.

அச்சுதானந்தன் இப்படி உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கப்படுத்துவதை விமர்சித்த சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இப்போதைய சூழலில் அச்சுதானந்தன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது கேரளத்தில் கட்சியை மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படுத்திவிடும் என்பதாலும், கட்சி நடத்திவந்துள்ள படுகொலைகளைப் பற்றி அச்சுதானந்தன் அம்பலப்படுத்தி விடுவார் என்பதாலும் எந்த முடிவும் எடுக்காமல், அச்சுதானந்தனும் பினாரயி விஜயனும் வெளிப்படையாக சாடிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் உபதேசித்துள்ளது. படுகொலை அரசியல் அம்பலமாகி, கோஷ்டிச் சண்டை மூர்க்கமாகி சி.பி.எம். கட்சியே கேரளத்தில் ஏறத்தாழ பிளவுபட்டு, முடங்கி, செல்வாக்கிழந்து நிற்கிறது.

கேரளம் மற்றும் மே.வங்கத்தில் மூத்த சி.பி.எம். தலைவர்களைத் தவிர, பிழைப்புவாதத்தில் வளர்ந்து வந்துள்ள புதிய தலைமுறையினரான உள்ளூர் தாதாக்கள்தான் தலைமைக்கு வரமுடியும் என்ற நிலைக்கு சி.பி.எம். கட்சி சீரழிந்து போயுள்ளது. அதிகாரத்தில் இல்லாத பிற மாநிலங்களில் ஓட்டுக்கும் சீட்டுக்கும் மாறிமாறி ஆளும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதாக அதன் பிழைப்புவாதம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது அரசாங்க சலுகைகளையும் சன்மானங்களையும் பொறுக்கித்தின்று வளர்ந்த பிழைப்புவாதமும், ஆட்சி மாறும்போது அதை இழப்பதால் ஏற்படும் ஆத்திரமும் புதிய தலைமுறை சி.பி.எம். உள்ளூர் தலைவர்களை வன்முறைக் கும்பலாக வளர்த்துவிட்டுள்ளது. தமது செல்வாக்குள்ள பகுதிகளில் வழக்கமான வசூல், கப்பம் முதலானவற்றை எதிர்த்தரப்பினருக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்கிற அவர்களது பிழைப்புவாத வெறி, வன்முறைத் தாக்குதலாகவும் படுகொலைகளாகவும் வளர்ந்துள்ளது.

இத்தகைய வன்முறைகள்  படுகொலைகள் மூலமும் ஆட்சியதிகாரத்தின் மூலமும்தான் சி.பி.எம். கட்சி இம்மாநிலங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தேர்தல் வெற்றியைச் சாதித்துள்ள உண்மையும், 1967இல் நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்கியது முதல் சிங்கூர் நந்திகிராம் போராட்டங்களை ஒடுக்கியது வரையிலான அதன் கொலைவெறியாட்டமும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவப் பிழைப்புவாதக்  கட்சியாக, பயங்கரவாதக் கொலைகார கட்சியாக வேகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்தில் நடந்துள்ள கொலைவெறியாட்டங்களே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

 ________________________________________________

கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

10

கேரள-இனவெறி-அரசு-2முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்காகப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் அடாவடித்தனம் செய்யும் கேரள அரசை எதிர்த்தும், அணையை உடைக்கச்  சதிகளைச் செய்யும் கேரள போலீசை வெளியேற்றி, அணையைத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரியும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசின் இனவெறி அரசியலுக்குத் துணைபோகும் மைய அரசை எதிர்த்தும், 15.6.2012 அன்று உசிலை பேருந்து நிலையம் அருகே தேனி சாலையில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  அணைப் பாதுகாப்புக் குழு பொருளாளர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டார ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டூவீலர் மெக்கானிக் சங்கம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், ம.க.இ.க. ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

நீதிபதி ஆனந்த் குழுவின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கேரள காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஓட்டுக்கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கி, தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்காவிடில், முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றும் போராட்டமாகத் தமிழகம் கிளர்ந்தெழும் என்று பிரகடனப்படுத்துவதாக அமைந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேரள-இனவெறி-அரசு-1தமிழகத்தின்  கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் அடிப்படையாக உள்ள பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் கேரள எல்லைப் பகுதியில் 1978இல் அணை கட்ட முயற்சித்து தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் அத்திட்டங்களைக் கைவிட்ட கேரள அரசு, இப்போது மீண்டும் அவற்றைச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. முல்லைப் பெரியாறு நீரில் கேரள அரசின் இனவெறி  துரோகம் அம்பலப்பட்டுள்ளதால், தமிழகத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இதனைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. இது மட்டுமின்றி, தமிழக எல்லைப் பகுதிகளில் இரகசியமாக மருத்துவமனைக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் கொட்டித் தமிழகத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.

கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து 23.6.2012 அன்று செஞ்சிலுவைக் கட்டிடம் அருகே  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோவை மாவட்டத் தலைவர் ராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் திராவிடக் கழகம், பு.ஜ.தொ.மு; ம.க இ.க; ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், திரளான வழக்குரைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றுப் போராட அறைகூவினர்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

35

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 18

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”

ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கைஇரண்டாம் பாகம்பக்.170.

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.

______________________________________

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்