ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (RKA) என்ற பெயரில் பசுக்களின் நலவாரியமாக துவங்கப்பட்ட அரசு அமைப்பு, எதிர்வரும் பிப்ரவரி 25-ம் தேதியன்று பசுக்களைப் பற்றிய நாடுதழுவிய இணையவழி தேர்வை  நடத்த இருக்கிறது.

ஆரம்ப மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும்,  உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், கல்லூரி மானவர்களுக்குத் தனியாகவும், பொதுமக்களுக்குத் தனியாகவும் என நான்கு நிலைகளில் இந்த தேர்வை நடத்துகிறது.

இந்த நாடுதழுவிய மிகப்பெரிய தேர்வில், மத்திய கல்வித்துறை அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், அனைத்து மாநில கவ் சேவா ஆயோக்குகளின் தலைவர்கள், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், அனைத்து பள்ளி முதல்வர்கள், அச்சு மற்றும் இணைய ஊடகங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பசு புரவலர்கள் என பலரும் பங்கு செலுத்துவார்கள் என்று ராஷ்டிரிய காமதேனு ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க :
♦ லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !
♦ உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்த தேர்வுக்கு படிப்பதற்கான 54 பக்க மின்னூல் ஒன்றை வெளியிட்டுள்ளது RKA. மேலும் பல இணையப் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் இதர ஆவணங்களைத் தரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வு குறித்துப் பேசுவதை விட, இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் தான் இங்கு நாம் பார்க்க வேண்டிய முக்கிய விசயம்.  அந்தப் பாத்திட்டத்தில், பசுக்க்களை வெட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதில் துவங்கி, ஜெர்சி வகை மாடுகள் இந்திய பசுக்களின் அளவுக்கு ஊக்கமாக இல்லாதது வரை நீண்டு செல்கிறது.  நாடுதழுவிய ஒரு தேர்வுக்கு துணையாக வழங்கப்படும் ஒரு ஆவணத்தின் அறிவு இலட்சணத்தை அறிய இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே.

தற்போது இந்தத் தேர்வை நடத்தவிருக்கும் இந்த ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்புதான் பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட தகடு, மொபைல் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் என்று சிலகாலத்திற்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் பசு அரசியல்

பசுக்கள் குறித்த வேதங்களின் பதிவு மற்றும் பண்டைய கால எழுத்துக்களில் உள்ள பதிவுகள், பசுக்களின் 5 பயன்பாடுகள் (பால், நெய், தயிர், பசு மூத்திரம், சாணி) மற்றும் பசுவின் வகையினங்கள் போன்ற பல்வேறு விசயங்களைக் கூறியிருக்கிறது.

மேலும், இந்திய பசுவின் பாலின் நிறம் மென் மஞ்சள் நிறம் என்றும் அதில் தங்கத்தின் தடயங்கள் இருப்பதாகவும் கூறுகிறது அந்த ஆவணம். ஜெர்சி பசுவின் பாலில் இது இல்லையென்றும், ஜெர்சி பசு அதிக அளவில பால் அளித்தாலும் அது தரம் குறைந்தது என்றும்  குறிப்பிட்டுள்ளது அந்த மின்னூல்.

இந்திய பசுக்களின் அறிவு குறித்தும் ஒரு சுவாரசியமான கதையைக் கூறியிருக்கிறது. இந்தியப் பசுக்கள் சுகாதாரமானவை என்றும் அவை அசுத்தமான இடங்களில் உட்காராத அளவுக்கு அறிவுள்ளவை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜெர்சி பசு ஒரு சோம்பேறி என்றும் அது நோய்களுக்கு எளிதில் ஆட்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது

ஜெர்சி பசுவுக்கும் இந்தியப் பசுவுக்கும் 38 வித்தியாசங்களை பட்டியலிட்டுள்ள அந்த ஆவணத்தில், இந்தியப் பசு முன்பின் தெரியாதவர்கள் அருகில் வந்தால் எழுந்து நின்றுவிடும் என்றும் ஜெர்சி பசு இதுபோன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பசுவின் ஐந்து பயன்பாட்டு பொருட்கள் மூலம் கிட்டத்தட்ட அனைத்து நோய்களையும் தீர்த்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது. பசும்பால், சொரியாசிஸ் நோயைக் குணப்படுத்டுமாம்.

மேலும், போபால் விசவாயு பிரச்சினை குறித்துக் குறிப்பிடுகையில் பசுஞ்சாணத்தால் மொழுகப்பட்ட சுவர்களைக் கொண்ட வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துயரங்களிலும் தங்களுக்குச் சாதகமான கட்டுக்கதைகளைத் தேடும் மனம் சங்கி கும்பலுக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபிக்கிறது.

ஆப்பிரிக்கர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக பசுஞ்சாண வறட்டியை எரிபொருளாகப் பயன்படுத்தி வந்ததாகவும் , 18, 19-ம் நூற்றாண்டில் அங்கு சென்ற கிறிஸ்தவ மிசனரிகள்  அதனை அநாகரிகச் செயல் என்று கூறி தடுத்ததன் காரணமாக மரங்களை வெட்டினர் என்றும் அதன் பின்னர்தான் அந்த கண்டம் மோசமடைந்தது என்றும்  குறிப்பிட்டுள்ளது.

படிக்க :
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
♦ பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

பசுவை கொல்வது மற்றும் மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்துப் பேசும்போது கர்மாவைக் குறிப்பிட்டு, இதன் காரணமாகவே நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறுகிறது. மேலும், இதற்கு ஒரு ஆய்வையும் துணைக்கு அழைத்து விளக்கியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த ஆவணம் முழுக்க முழுக்க பசுப்பாதுகாப்பு கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்கிறதே ஒழிய பசுவைப் பற்றிய அறிவையோ, வரலாற்றையோ கொடுக்கவில்லை. இந்தப் பசு குறித்த தேசிய அளவிலான தேர்வு மூலம், கட்டுக்கதைகளை இளம் தலைமுறைகளின் மனதில் பதியச் செய்து, அறிவும் சிந்திக்கும் ஆற்றலும் இழந்த அடுத்த தலைமுறை சங்கிகளை உருவாக்கவே சங்க பரிவாரக் கும்பல் திட்டமிடுகிறது.


கர்ணன்
நன்றி : The Wire