கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 1
கிறித்தவர்கள், முசுலீம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய நான்காந்தர குடிமக்களாக, உள்நாட்டு ஏதிலிகளாக மாற்றுவது; மனு நீதியின் படி ஆண்களை மகிழ்விப்பதற்காகவே படைக்கப்பட்ட பிறவிகளாக, பார்ப்பன ஆணாதிக்கத்திற்கு அடிமைச் சேவை செய்பவர்களாக பெண்களை நடத்துவது; விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை, தேவைகளை தேசத்திற்கு எதிரானதாகவும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை தேச நலனாகவும் முன்னிறுத்துவது; உழைக்கும் மக்களின் நலன்களைப் பேசக் கூடிய புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகளை அழித்தொழிப்பது; இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பன பாசிச அமைப்பு சொல்லும் ‘இந்துராஷ்டிரம்’. நாம் சொல்லும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
இத்தகைய இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னேறிவருகிறது என்பதுதான் இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பேரபாயம். உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகள், பாசிசக் கொடுங்கோன்மைக்கான முன்மாதிரிகள் என்று நாம் சொல்லிவந்தோம். ஆனால், அவை பழைய செய்திகளாகிவிட்டன. இன்று கர்நாடகா, திரிபுரா, அசாம் என பல புதிய சோதனைச் சாலைகளையும் உண்டாக்கியிருக்கிறது சங்கப் பரிவார கும்பல்.
சமீபத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், தொடர்ந்து அம்மாநிலத்தில் கிறித்துவ வழிபாட்டுத்தலங்கள் காவி குண்டர்களால் தாக்கப்படுவது; அசாமில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அரசால், செப்டம்பர் மாதம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் ஏழை இசுலாமிய மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி 800 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைத்ததோடு, இருவரை சுட்டுக் கொன்றது; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட பாசிச கொலைவெறி தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் பேரணியின் போது இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்கள் என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எல்லா இடங்களிலும் நிகழ்த்தும் வழமையான நிகழ்வுகளாகவோ, பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களாகவோ பார்க்க முடியாது. இவையாவும் இம்மாநிலங்களில் உள்ளூர வேர்விட்டிருக்கும் காவி பயங்கரவாதத்தின் வெளிப்படைத் தோற்றங்களே!
குஜராத், உத்தரப்பிரதேசம் போல கர்நாடகா, திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களும் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியிருக்கிறது என்று நாம் சொல்வதற்கான பொருள், இம்மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பன-இந்துமதவெறியின் செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.
படிக்க :
♦ கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
♦ கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
000
1993 முதல் 25 ஆண்டுகாலம் சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுராவில் எவ்வாறு ஒரே தேர்தலில் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது? 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க, 2018-ல் 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2013-ல் 1.5 சதவீதமாக இருந்த வாக்குகள் 2018-ல் 42.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் திரிபுராவில், 222 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 217 இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருக்கிறது.
அசாமில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, 29.5 சதவீத வாக்குகளுடன் 2016-ல் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 123 இடங்களில் 86-ல் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க மட்டும் 60 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களால் பா.ஜ.க தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2021 தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 33.2 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 11 இடங்களை பா.ஜ.க இழந்திருந்தாலும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே மேற்கண்ட வாக்கு சதவிகிதம் உறுதிசெய்கிறது.
தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க நேரடியாக ஆளும் மாநிலம் என்றால் அது கர்நாடகம்தான். இங்கு 2008 சட்டமன்றத் தேர்தலில், 33.6 சதவீத வாக்குகளுடன் 110 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களை இழந்து 104 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்கு சதவிகிதம் 36.2 ஆக அதிகரித்திருக்கிறது.
