பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !

கட்சியின் கொள்கைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில் - ஏராளமானபேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில், 'பிராவ்தா நடுநாயகமாக நின்றது.

0
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகை மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்கு “பிராவ்தா” ஓர்  முன்னுதாரணமாக திகழ்ந்தது. கம்யூனிச ஆசான் கார்ல் மார்சின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, தற்போது தனது 110-வது உதய நாளை நிறைவு செய்கிறது.
பொதுவுடைமை கட்சியின் பத்திரிகையானது, அக்கட்சியின் அமைப்பாளனாக செயல்பட்டு உழைக்கும் மக்களை, தொழிலாளர்களை புரட்சிக்கு அணிதிரட்டும் கடமையை செய்ய வேண்டும். இக்கடமையாற்றிய “பிராவ்தா”வை பற்றி போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலில் இடம்பெற்ற ஓர் பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.
வினவு
போல்ஷ்விக் பத்திரிகை “பிராவ்தா”
நான்காவது அரசாங்க டூமாவில் போல்ஷ்விக் குழு
அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும், தன் செல்வாக்கை மக்களிடையே பரப்புவதற்கும் போல்ஷ்விக் கட்சி உபயோகப்படுத்திய வலுமிக்க ஆயுதம் “பிராவ்தா” (உண்மை) என்ற தினசரி செய்திப் பத்திரிகை. இது, பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. லெனின் கூறிய யோசனையின் பேரில் ஸ்டாலின், ஆல்மின்ஸ்கி, போல்டாயீவ் ஆகியோரின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டது. 1912-ம் வருடம், மே 5-ம் தேதியன்று இதனுடைய முதல் இதழ் வெளிவந்தது. இந்த நாள், தொழிலாளருக்கு ஒரு திருநாளாகும். “பிராவ்தா” வெளிவந்ததைக் கௌரவிப்பதற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும், மே மாதம் 5-ம் தேதி, “தொழிலாளர் பத்திரிகை தினமாக”க் கொண்டாடப்படுகிறது.
“பிராவ்தா” வெளிவருவதற்கு முன்பு, “ஸ்வெஸ்தா’ என்ற ஒரு வாரப் பத்திரிகையை போல்ஷ்விக்குகள் நடத்தி வந்தனர். அரசியலில் வளர்ச்சியடைந்த தொழிலாளருக்காக இது நடத்தப்பட்டது. லீனா தங்கவயல் நிகழ்ச்சிகளின் போது, “ஸ்வெஸ்தா” மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. லெனின், ஸ்டாலின் எழுதிய உணர்ச்சி மிகுந்த பல கட்டுரைகளைப் பிரசுரித்தது. போராட்டத்திற்காக அக்கட்டுரைகள் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டின. ஆனால், புரட்சி இயக்கம் ஓங்கி வளர்ந்தபோது போல்ஷ்விக் கட்சியின் தேவைகளை ஒரு வாரப் பத்திரிகையினால் பூர்த்திசெய்ய முடியவில்லை. தொழிலாளி மக்களில் சகல பகுதியினருக்கும் எட்டக்கூடிய அளவு, ஒரு பெரிய தினசரிப் பத்திரிகை அவசியப்பட்டது. “பிராவ்தா” அத்தகைய பத்திரிகையாக தொண்டு செய்தது.
இந்தக் காலத்தில், ஈடு இணையற்ற முறையில் “பிராவ்தா” அபூர்வமாகப் பணி புரிந்தது. ஏராளமான தொழிலாளர்களிடமிருந்து போல்ஷ்விஸத்திற்கு ஆதரவு திரட்டிற்று. தணிக்கை அதிகாரிக்குப் பிடிக்காத கட்டுரைகள் பல வெளியிடப்பட்டதனால், அதை போலீஸ் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தது. ஏராளமாக தண்டனை விதித்தது; அச்சடிக்கப்பட்ட பல இதழ்களைப் பறிமுதல் செய்தது. ஆகவே, அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அல்லும் பகலும் ஓயாது கொடுத்த ஆதரவினால்தான் பிராவ்தா உயிர் வாழ முடிந்தது. தொழிலாளரிடையே வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டுதான் பெரும் தண்டனைத் தொகைகளைப் பிராவ்தாவினால் கட்ட முடிந்தது. இவ்விதம் அடக்கப்பட்டபோதிலும், போலீஸார் பறிமுதல் செய்த “பிராவ்தா” இதழ்கள், எப்படியாவது வாசகர்களுக்கு கிடைத்துவிடும். உணர்ச்சிமிக்க, சுறுசுறுப்பான தொழிலாளிகள் யாருக்கும் தெரியாமல் அச்சுக்கூடத்திற்கு வந்து, பத்திரிகைக் கட்டுகளை எடுத்துச் சென்று வினியோகிப்பார்கள்.
இரண்டரை வருடங்களில், பிராவ்தாவை எட்டுதடவை ஜார் அரசாங்கம் அடக்கிற்று. ஆனால் ஒவ்வொரு தடவையும் அது தொழிலாளரின் வற்றாத ஆதரவைக்கொண்டு, அதே போன்ற பெயர்களில் திரும்பவும் வெளிவந்தது. உதாரணமாக “ஜ-பிராவ்தா’ (உண்மைக்காக), “புட்-பிரவ்தி”(உண்மை வழி), “ட்ரூடோவ்யா – பிராவ்தா (தொழிலாளர் உண்மை என்ற பெயர்களில் வெளிவந்தது.
பிராவ்தா இதழ்கள் ஒவ்வொன்றும் தினசரி சராசரியாக 40 ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. லச் (ஒளி) என்ற மென்ஷ்விக் பத்திரிகை 15 ஆயிரம் அல்லது 16 ஆயிரம் பிரதிகள் தான் சென்றது.
படிக்க :
♦ பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்
♦ என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
பிராவ்தாவைத் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்தப் பத்திரிகையாகக் கருதினார்கள். அதன்மீது மகத்தான நம்பிக்கை வைத்திருந்தனர்: அது விடுத்த அறைகூவல் ஒவ்வொன்றிற்கும் செவி கொடுத்தனர். ஒவ்வொரு பிரதியும் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாறி, டஜன் கணக்கான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டது. அது அவர்களுடைய வர்க்க உணர்ச்சியை உருவாக்கிற்று; அவர்களுக்கு அரசியலைப் போதித்தது; அவர்களை அமைப்புரீதியாக ஒன்றுபடுத்திற்று; போராட்டத்திற்கு அறைகூவி அழைத்தது.
பிராவ்தா எதைப்பற்றி எழுதிற்று?
டஜன் கணக்கில் தொழிலாளர் எழுதிய கடிதங்கள் அதன் ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்பட்டன. முதலாளிகளும், நிர்வாகிகளும், மேற்பார்வையாளர்களும் தங்களைக் கொடுமைப்படுத்தியதையும் தாங்கள் அனுபவித்த அவமானத்தையும், பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளையும், கொடூரத்தனமான சுரண்டலையும் அக்கடிதங்களில் தொழிலாளிகள் வர்ணித்தனர். இவை, முதலாளித்துவ நிலைமைகளைக் கண்டித்து அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்ட தீர்ப்புகளாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி, இனி வேலை கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையை இழந்து தற்கொலை புரிந்து கொண்ட தொழிலாளிகளின் செய்திகளை பிராவ்தா அடிக்கடி வெளியிட்டது.
பல்வேறு பாக்டரிகளிலும், தொழிற்சாலைக் கிளைகளிலும் வேலைபார்த்த தொழிலாளரின் கோரிக்கைகளைப் பற்றியும், தேவைகளைப் பற்றியும் பிராவ்தா விரிவாக எழுதிற்று. கோரிக்கைகளை அடைவதற்காக ஆங்காங்கே தொழிலாளர்கள் எவ்விதம் போராடுகிறார்கள் என்ற விபரத்தைக் கூறிற்று. பல்வேறு பாக்டரிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களைப் பற்றி அநேகமாக தினசரி பிராவ்தா செய்தி தந்தது. பெரிய வேலை நிறுத்தங்கள் நடந்தபோதும் நீண்ட நாட்களுக்கு நீடித்துக்கொண்டேபோன வேலை நிறுத்தங்களின் போதும், வேலை நிறுத்தக்காரர்களுக்கு உதவி செய்வற்காக மற்ற பாக்டரிகலிலும், தொழிற்சாலைகளிலும் வேலைபார்த்த தொழிலாளரிடையே பணம் வசூல் செய்வதற்கு பிராவ்தா உதவி செய்தது; வசூல் இயக்கத்தை நிறுத்தாமல் ஒழுங்காக நடத்துவதற்குத் துணைபுரிந்தது. அந்தக் காலத்தில் சாதாரணமாக தினசரி 70 அல்லது 80 கோபெக்குகளுக்கு (100 கோபெக்குகள் : 1 ரூபிள்) மேல் பெரும்பாலான தொழிலாளர்கள் கூலி பெறவில்லை. இத்தகைய நிலைமையில், சிலசமயம் மிகப் பெரிய தொகையை – ஆயிரக் கணக்கான ரூபிள்களை – வேலை நிறுத்த நிதிக்காக பிராவ்தா
வசூல் செய்தது இது. பாட்டாளி வர்க்க ஒற்றுமை மனோபாவத்தையும், சக தொழிலாளருடைய நலன்களும் ஒன்றுதான் என்ற உணர்வையும் தொழிலாளரிடையே வளர்த்தது.
ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியைப் பற்றியும், அதன் தோல்வியைப் பற்றியும் அல்லது வெற்றியைப் பற்றியும் பிராவ்தாவிற்கு கடிதங்கள் எழுதியோ அல்லது வாழ்த்துக்கள் அனுப்பியோ, அல்லது கண்டனங்களை அறிவித்தோ தொழிலாளர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். நிகழ்ச்சிகளின் ஓசைக்கேற்றவாறு எதிரொலி செய்தனர். முரண்பாடுகள் எதுவுமில்லாத, நிலையான போல்ஷ்விக் கருத்துப்படி தொழிலாளிவர்க்க இயக்கம் செய்ய வேண்டியிருந்த வேலைகளைப் பற்றி பிராவ்தா தன் கட்டுரைகளில் விவாதித்தது. சட்டப்பூர்வமாக வெளியிடப்படும் பத்திரிகை, ஜார் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்று பகிரங்கமாகக் கூறக்கூடாது. ஆகவே, அது குறிப்பு வார்த்தைகள் – சூசக மொழிகளை – உபயோகப்படுத்த வேண்டியிருந்தது. அவ்வார்த்தைகளை வர்க்க உணர்ச்சிமிகுந்த தொழிலாளிகள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். உதாரணமாக, “ஐந்தாம் வருடத்தின் குறைவில்லா முழு கோரிக்கைகள்” என்று பிராவ்தா எழுதியபோது, அவை போல்ஷ் விக்குகளுடைய புரட்சி முழக்கங்கள் என்று தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர். அதாவது, “ஜார் ஆட்சி ஒழிக. ஜனநாயகக் குடியரசு ஓங்குக! நிலம் படைத்த பண்ணைகளைப் பறிமுதல் செய்! 8 மணி வேலை நேரம் வேண்டும்” என்ற முழக்கங்களைப் பற்றியே பிராவ்தா பேசுகிறது என்று தெரிந்து கொண்டனர்.
நான்காவது அரசாங்க டுமாவிற்கு தேர்தல் நடைபெறவிருந்த தருணத்தில், அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த, தொழிலாளர்கள் அனைவரையும் பிராவ்தா ஒன்று திரட்டிற்று. மிதவாத முதலாளிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டுமென்று கூறிய “ஸ்டோலி பின் தொழிற்கட்சி” பிரச்சாரகர்களை, அதாவது மென்ஷ்விக்குகளை அம்பலப்படுத்திற்று. அவர்கள் செய்த துரோகத்தனமான காரியங்களை உடைத்துக் காட்டிற்று. “ஐந்தாம் வருடத்தின் குறைவில்லா முழு கோரிக்கைகளை” ஆதரித்தவர்களுக்கு – அதாவது, போல்ஷ்விக்குகளுக்கு – ஒட்டுப் போடும்படி தொழிலாளரை அறைகூவி அழைத்தது. தேர்தல்கள் நேர்முகமாக நடைபெறவில்லை; ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு பல கட்டங்களைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. முதலாவதாக, தொழிலாளர் கூட்டங்கள் சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தன; இந்தப் பிரதிநிதிகள், தங்களிடையே இருந்து வேறு சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்; இந்தப் பிரதிநிதிகளைத்தான் டூமாவிற்கு தொழிலாளர் பிரதிநிதியை முடிவில் தேர்ந்தெடுக்கும்படியான தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த மறைமுகமாக தேர்தல் தினத்தன்று, “பிராவ்தா” போல்ஷ்விக் வேட்பாளர் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தொழிலாளருக்கு சிபார்சு செய்தது. தேர்தலுக்கு முன்பே அந்தப் பட்டியலை வெளியிட முடியவில்லை. ஏனெனில், தேர்தலுக்கு முன்பாக அதை வெளியிட்டிருந்தால் அதில் கண்ட போல்ஷ்விக்குகள் கைது செய்யப்பட்டிருப்பர்.
ஆயிரம், பதினாயிரக் கணக்கில் பாட்டாளிகள் செயலில் இறங்கிப் போராடக்கூடிய விதத்தில் “பிராவ்தா” நடவடிக்கைகளை உருவாக்கிற்று. 1914-ம் வருடம் இளவேனிற் காலத்தில் ஒரு பெரிய கதவடைப்பு (Lock out) நடந்த சமயத்தில், இதற்காக பெரிய வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதென்பது அவ்வளவு உகந்ததாக இல்லாதிருந்தபோது, வேறுவிதமான போராட்ட முறைகளை மேற்கொள்ளும்படி ‘பிராவ்தா தொழிலாளருக்கு வழிகாட்டிற்று. அதாவது பாக்டரிகளில் பெரிய கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் வீதிகளில் பெரிய ஊர்வலங்களை நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டுமென்றும் அறைகூவி அழைத்தது. ஆனால் இதை பகிரங்கமாக பத்திரிகையில் கூறமுடியாது. இருந்தபோதிலும் “தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முறைகள்” என்ற பரம சாதுவான தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையைப் படித்தபோது, என்ன செய்வதென்று அரசியலில் வளர்ச்சியடைந்த தொழிலாளிகள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டனர். குறிப்பிட்ட சில சமயங்களில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வேறு சில முறைகளைக் கையாள வேலை நிறுத்தங்கள் வழிவகுக்க வேண்டுமென்று அதில் லெனின் எழுதியிருந்தார். பொதுக்கூட்டங்களைக் கூட்டவேண்டுமென்றும் ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டுமென்றும் இதற்கு அர்த்தம்.
இவ்விதம் போல்ஷ்விக்குகள் செய்துவந்த சட்டவிரோதமான காரியங்கள்; தொழிலாளரை ஒன்றுதிரட்டி உருவாக்கக்கூடிய சட்டபூர்வ மான பிரச்சாரத்துடனும் சட்டபூர்வமான அமைப்புடனும் பிராவ்தா மூலம் இணைக்கப்பட்டன.
தொழிலாளர் வாழ்க்கை பற்றியும், வேலை நிறுத்தங்கள் பற்றியும், ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் எழுதியதோடு பிராவ்தா நின்று கொள்ளவில்லை. விவசாயிகள் வாழ்க்கை பற்றியும், அவர்களை வாட்டி வதக்கிய பஞ்சங்களைப் பற்றியும், நிலப்பிரபுத்துவ நிலச் சுவான்தார்களின் சுரண்டலால் அவர்களுற்ற அவதியைப் பற்றியும் பிராவ்தா வர்ணித்தெழுதிற்று. ஸ்டோலிபின் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மூலம் எவ்விதம் விவசாயிகளின் நல்ல நிலங்களை யெல்லாம் குலாக்குகள் அபகரித்துக் கொண்டனர் என்பதை வர்ணித்தது. கிராமாந்திரங்களில் எங்கும் பரவியவாறு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த அதிருப்தியை, நகரங்களில் வர்க்க உணர்ச்சி மிகுந்திருந்த தொழிலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. 1905-ம் வருடப் புரட்சியின் லட்சியங்கள் இன்னும் ஈடேறவில்லை என்றும், இதனால் ஒரு புதிய புரட்சி வந்து கொண்டிருக்கிறது என்றும் பிராவ்தா பாட்டாளி வர்க்கத்துக்கு போதித்தது. இந்த இரண்டாவது புரட்சியில் பொதுமக்களுடைய உண்மையான தலைவனாகவும் வழிகாட்டியாகவும் பாட்டாளி வர்க்கம் பணி புரிய வேண்டுமென்றும், இப்புரட்சியில் வர்க்கம் போன்ற ஒரு மகத்தான வலுமிக்க கூட்டாளியைப் பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கும் என்றும் போதித்தது.
மென்ஷ்விக்குகள் இதற்கு நேர்மாறாக வேலை செய்தனர். புரட்சி என்ற எண்ணத்தைப் பாட்டாளி வர்க்கம் கைவிடும்படி செய்வதற்கும், மக்களைப்பற்றி, பசியால் வாடிய விவசாயிகளைப் பற்றி, “கருப்பு நூற்றுவர் நிலச்சுவாந்தார்களின் ஆதிக்கத்தைப் பற்றி பாட்டாளி வர்க்கம் சிந்திப்பதை நிறுத்துவதற்கும் பாடுபட்டனர். “சங்கம் சேரும் உரிமை”க்காக மட்டும்தான் பாட்டாளி வர்க்கம்
போராடவேண்டுமென்றும், இவ்வுரிமையைக் கேட்டு ஜார் அரசனிடம் “மனுக்கள் போடவேண்டும்” என்று பிரச்சாரம் செய்தார்கள்.
“உழவன் வாழ்க்கை” என்ற பகுதியில் ‘பிராப்தா’ என்ன எழுதிற்று?
1913-ம் வருடத்தில் வெளியிடப்பட்ட பல கடிதங்களில் சிலவற்றை இங்கே உதாரணமாகக் கவனிப்போம்.
“தோழரே, புகுல்மா மாவட்டத்தைச் சேர்ந்த நவோகாஷ் புலட் என்ற கிராமத்தில் விவசாயிகள் கம்யூனை விட்டு வெளியேறினர். அவர்களுக்கு கம்யூன் நிலத்தைப் பகிர்ந்து கொடுத்த கிராமக் கணக்குப் பிள்ளையின் வேலையில் “தலையிட்டதற்காக”க் குற்றஞ்சாட்டப்பட்டு 45 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று சமாரா என்ற இடத்திலிருந்து “ஒரு விவசாய செய்தி” என்ற தலைப்பில் வந்த கடிதம் கூறுகிறது.
“ஐயா, பிஸிட்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிராம போலீஸ்காரனை எதிர்த்து ஆயுதம் தாங்கி சண்டைபோட்டனர். பலருக்குக் காயம். விவசாயத் தகறாரே இதற்குக் காரணம். இப்போது அந்தக் கிராமத்திற்கு ஒரு பெரிய போலீஸ் படை அனுப்பப்பட்டிருக்கிறது. மேல் அதிகாரிகளும் சென்று கொண்டிருக்கின்றனர்” என்று பஸ்கோவ் மாநிலத்திலிருந்து வந்த ஒரு சிறு கடிதம் கூறுகிறது.
“விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பங்கு நிலங்கள் நாளுக்குநாள் அதிகமாக விற்கப்படுகின்றன; பஞ்சமும், கம்யூன்களிலிருந்து வெளியேறுவது பற்றிய சட்டமும் ஏராளமான விவசாயிகளைத் தங்களுடைய பங்கு நிலங்களை இழக்கும்படி செய்கின்றன” என்று உபா மாகாணத்திலிருந்து வந்த ஒரு கடிதம் கூறுகிறது. போரிஷாவ்கா என்ற கிராமத்திலிருந்து வந்த கடிதத்தைக் கவனிப்போம். இங்கு மொத்தம் 27 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றிற்குச் சொந்தமாக மொத்தம் 543 டெஸ்ஸியாட்டின் (டெஸ்ஸியாட்டின் : சுமார் இரண்டரை ஏக்கர்) நிலமிருக்கிறது. பஞ்சம் வந்தபோது ஒரு டெஸ்ஸியாட்டின் விலை 25 ரூபிள் அல்லது 33 ரூபிள் வீதம் என்று மிகக் குறைவான விலைக்கு 31 டெஸ்ஸியாட்டியின் நிலத்தை 5 விவசாயிகள் விற்றுவிட்டனர். அந்த விலையைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக அந்த நிலம் மதிப்புள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கு 12 வீதம் வட்டி தருவதாக எழுதிக்கொடுத்து, ஒரு டெஸ்ஸியாட்டினுக்கு 18 அல்லது 20 ரூபிள்கள் வீதம் மொத்தம் 171 டெஸ்ஸியாட்டின் நிலத்தை 7 விவசாயிகள் 6 வருடங்களுக்கு அடமானம் வைத்திருக்கின்றனர். மக்களின் வறுமையையும் அக்கிரம வட்டி விகிதத்தையும் கவனித்தால், 177 டெஸ்ஸியாட்டின் நிலத்தில் பாதிக்குமேல் வட்டிக்குக் கடன் கொடுத்த பேர்வழியின் கைக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமே தோன்றாது. ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையை ஆறு வருடங்களுக்குள் கடன்வாங்கிய விவசாயிகளில் பாதிப்பேரால்கூட அடைக்கமுடியாது.
உறிஞ்சும் அட்டைபோன்ற நிலச்சுவான்தார்களுடைய கரங்களில் எவ்வளவு பிரம்மாண்டமான அளவில் நிலம் குவிந்துகிடக்கிறது என்பதை தொழிலாளரும் விவசாயிகளுக்கும் லெனின் அப்பட்டமாக எடுத்துக்காட்டினார். 30 ஆயிரம் நிலச்சுவான்தார்கள் மட்டும், தங்களுக்குள் 7 கோடி டெஸ்ஸியாட்டின் நிலத்தைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அதே பரப்பளவு நிலம் 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு சொந்தமாக இருந்தது. சராசரியாக ஒவ்வொரு நிலச்சுவான்தாருக்கும் 2,300 டெஸ்ஸியாட்டின் நிலமிருந்தது. குலாக்குகள் உள்பட விவசாயக் குடும்பங்கள் அவ்வளவையும் எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 டெஸ்ஸியாட்டின்களே இருந்தது. இதுமட்டுமல்ல. சிறிய விவசாயிகளின் குடும்பங்களுக்கு, அதாவது 50 லட்சம் குடும்பங்களுக்கு, அதாவது, விவசாயி வர்க்கத்தில் பாதிப்பேருக்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு டெஸ்ஸியாட்டினுக்கு மேலில்லை. இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டின? விவசாய மக்களின் வறுமைக்குக் காரணமான மூலவேர், பஞ் சங்கள் மீண்டும் மீண்டும் வந்ததற்கு காரணமான மூலவேர், நிலம் படைத்த பண்ணைகளில் – பண்ணை அடிமைத் தனத்திலிருந்து மிஞ்சி நின்ற சின்னங்களில் – புதைந்து கிடந்தது; தொழிலாளிவர்க்கம் நடத்துகிற ஒரு புரட்சியின் மூலமே, அதை விவசாயிகளால் நிர்மூலமாக்க முடியும் என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டின.
கிராமாந்திரங்களுடன் தொடர்புவைத்து வேலை செய்த ஊழியர்கள் வழியாக ‘பிராவ்தா கிராமங்களுக்குச் சென்றது. புரட்சிப் போராட்டத்தில் சேர்ந்து பங்குகொள்ள வேண்டு மென்று அரசியலில் வளர்ச்சியடைந்திருந்த விவசாயிகளைத் தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டிற்று.
‘பிராவ்தா தொடங்கப்பட்ட சமயத்தில் சட்டவிரோதமான சமூக ஜனநாயக அமைப்பு யாவும் போல்ஷ்விக்குகளிடம் இருந்தன. ஆனால், மறுபுறத்தில், சட்டசபையிலிருந்த சமூக ஜனநாயக குழு, அச்சுக்கூடம், நோயாளி நலச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள் முதலிய சட்டபூர்வமான அமைப்புகள் முழுவதும் இன்னும் மென்ஷ்விக்குகளின் கரங்களிலிருந்து பரிபூரணமாகப் பிடுங்கப்படவில்லை. சட்டபூர்வமான தொழிலாளர் அமைப்புகளிலிருந்து ‘கலைப்பாளர்களை அடித்து விரட்டுவதற்கு ஒரு திடமான போராட்டத்தை போல்ஷ்விக்குகள் தொடுக்க வேண்டியிருந்தது. ‘பிராவ்தா செய்த சேவையால் இப்போராட்டம் வெற்றி பெற்றது.
படிக்க :
♦ உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
கட்சியின் கொள்கைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில் – ஏராளமானபேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் மத்தியில், ‘பிராவ்தா நடுநாயகமாக நின்றது. போல்ஷ்விக் கட்சியின் சட்ட விரோதமான மத்தியக் குழுவின் கொள்கையை ஆதரித்து, அக்குழுவிற்கு பக்கபலமாக நிற்கும் வண்ணம் சட்டபூர்வமான அமைப்புகளைத் திரட்டிற்று; ஒரே ஒரு உருப்படியான லட்சியத்தை நோக்கி – ”புரட்சிக்கு தயாரிப்பு செய்வது” என்ற லட்சியத்தை நோக்கி – தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிராவ்தா வழிகாட்டி நடத்திற்று.
‘பிராவ்தா’விற்கு செய்தி தர ஏராளமாக தொழிலாளி நிருபர்கள் இருந்தனர். அது, ஒரு வருடத்தில் மட்டும் தொழிலாளரிடமிருந்து வந்த பதினோராயிரம் கடிதங்களைப் பிரசுரித்தது. ஆனால், தொழிலாளி வர்க்க மக்களுடன் கடிதங்கள் மூலமாக மட்டும்தான் பிராவ்தா தொடர்பு வைத்துக் கொண்டிருந்தது என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு நாளும் அதனுடைய ஆசிரியர் செயலகத்திற்கு பாக்டரிகளிலிருந்து அநேக தொழிலாளிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர். கட்சியின் அமைப்பு ரீதியான வேலைகளில் ஒரு பெரும் பகுதி ‘பிராவ்தா’ ஆசிரியர் செயலகத்தில் கவனிக்கப்பட்டது. கட்சிக்கிளை களிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் இங்கு கூட்டங்கள் நடத்தப் பட்டன. இங்கே பாக்டரிகளிலும் மில்களிலும் செய்யப்பட்ட கட்சி வேலைகளைப் பற்றிய அறிக்கைகள் வாங்கப்பட்டன; இங்கிருந்து தான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கமிட்டியின் உத்திரவுகளும், மத்தியக் குழுவின் கட்டளைகளும் வெளியே அனுப்பப்பட்டன.
ஏராளமான பேர் பங்குகொள்ளும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்காக இரண்டரை வருட காலம் விடா முயற்சியுடன் போராடியதன் பயனாய், 1914-ம் வருடம் கோடைகாலத் திற்குள் போல்ஷ்விக்குகள் பெரும் வெற்றியைக் கண்டனர்; ரஷ்யாவில் அரசியலில் வளர்ச்சியடைந்து சுறுசுறுப்புடன் அரசியல் வேலைகளில் ஈடுபட்டுவந்த மொத்தத் தொழிலாளிகளில் 5-ல் 4 பகுதியினருடைய ஆதரவை போல்ஷ்விக் கட்சிக்கும், பிராவ்தா போர்த் தந்திரங்களுக்கும் சாதகமாகப் பெற்றனர். கீழ்கண்ட விஷயத்தித்திலிருந்து இதை நன்கு தெரிந்து கொள்ளலாம். 1914-ம் வருடத்தில் தொழிலாளர் பத்திரிகை நிதிக்காக மொத்தம் 7000 தொழிலாளர் பிரிவுகள் தேசமெங்கும் பணம் வசூல் செய்தன. இப்பிரிவுகளில் 5,600 பிரிவுகள் போல்ஷ்விக் பத்திரிகைக்கு வசூலித்தன; 1,400 பிரிவுகள்தான் மென்ஷ்விக் பத்திரிகைக்கு வசூலித்தன. ஆனால் மறுபக்கத்தைக் கவனித்தால், மிதவாத பூர்ஷ் வாக்களுக்கிடையிலும், முதலாளித்துவப் படிப்பாளிகளுக்கிடையிலும் மென்ஷ்விக்குகளுக்கு அநேக “பணக்கார நண்பர்கள்” இருந்தனர். மென்ஷ்விக் பத்திரிகையை நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணத்தில் பாதிக்குமேல், இப் “பணக்கார நண்பர்கள்” கொடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் போல்ஷ்விக்குகள், “பிராவ்தாக்காரர்கள்” என்று கூப்பிடப்பட்டனர். புரட்சிகரமான பாட்டாளிகளின் தலைமுறைகளில், ஒரு தலைமுறை முழுவதுமே பிராவ்தாவின் போதனையால் வார்த்தெடுத்துப் பக்குவமாக்கப்பட்டது. இந்தத் தலைமுறைதான் பிற்காலத்தில் நவம்பர் சோஷியலிஸ்ட் புரட்சியைத் தலைமைதாங்கி நடத்திற்று. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பதினாயிரக்கணக்கான தொழிலாளிகளால் ‘பிராவ்தா’ ஆதரிக்கப்பட்டது. ஏராளமான பேர் பங்குகொள்ளும் போல்ஷ்விக் கட்சியைக் கட்டுவதற்கு மிகவும் உறுதியான அடித்தளம் போடப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தக் காலத்தில் ஜார் ஆட்சி தொடுத்த எத்தகைய அடக்குமுறை பாணங்களாலும் அசைக்கமுடியாது போன அடித்தளம் போடப்பட்டது.!
“1912-ம் வருடத்தில் ‘பிராவ்தா’ உதயமானதானது, 1917-ம் வருடத்தில் போல்ஷ்விஸம் வெற்றிபெறுவதற்கு அஸ்திவாரக் கல் நாட்டப்பட்ட விழாவாக திகழ்ந்தது” – ஸ்டாலின்.
(போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலிலிருந்து…)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க