Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 657

டியூப் புராடக்ட்ஸ் தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு வெற்றி !

5

ஆவடி டி.பி.ஐ தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு அணி மகத்தான வெற்றி!

சென்னை ஆவடியில் உள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் புராடக்ட்ஸ் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் 24.5.2014 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அணி சார்பாக மொத்தம் உள்ள 7 பதவிகளுக்கும் போட்டியிட்டோம். இந்த 7 பதவிகளுக்கும் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை நிலைநாட்டியுள்ளனர். பல்வேறு அவதூறுகள், அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள் புறக்கணித்து தொழிலாளர்கள் இந்த வெற்றியை சாதித்துள்ளனர்.

ஆவடி - டியூப் புராடக்ட்ஸ் இந்தியா
ஆவடி – டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (கோப்புப் படம்)

தலைவர் பதவிக்கு பு.ஜதொமு-வின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் போட்டியிட்டார். இந்த நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பு சார்பாக சி.ஐ.டி.யு-வின் அம்பத்தூர் நகர செயலாளரும், இதே சங்கத்தில் பல ஆண்டுகள் தலைவராக இருந்தவருமான ஏ.ஜி.காசிநாதன் போட்டியிட்டார். நமது தோழரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மற்றொரு அணியான பாரதி அணியினர் திரு.காசிநாதனை பொது வேட்பாளராக அறிவித்து வேலை செய்தனர். இந்த பொது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் நிர்வாகமும் களம் இறங்கி வேலை செய்தது.

செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு-வின் ஆவடி-அம்பத்தூர் பகுதிக்குழுவின் தலைவரான தோழர்.ம.சரவணன் போட்டியிட்டார். இதில் மும்முனைப் போட்டியை எதிர்கொண்டோம். இதே போல ஏனைய பதவிகளுக்கும் மும்முனைப் போட்டியினை எதிர்கொண்டோம்.

எதிரணியினர் ‘பு.ஜ.தொ.மு அணி வெற்றி பெற்றால் ஆலைமூடல் நடக்கும்’ என்கிற எச்சரிக்கை பிரசுரத்தை தேர்தலுக்கு முந்திய தினத்தில் இரவு 8 மணிக்கு மேல் விநியோகித்து பீதியூட்டினர். அதே இரவில் 11 மணிக்கு இதற்கு பதிலடி கொடுத்து பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. “எந்த ஆலை மூடலுக்கும் தொழிற்சங்கம் காரணமாக இருப்பதில்லை” எனவும், “முதலாளிகளது லாபவெறியே ஆலைமூடலுக்கு காரணமாக இருப்பது” எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.

இரண்டு தொழிலாளர் அணிகள் மற்றும் நிர்வாகம் ஆகிய 3 அணிகளையும் எதிர்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிட பு.ஜ.தொ.மு அணிக்கு வாக்களியுங்கள்” என்பதே நமது முழக்கமாக இருந்தது. நமது முழக்கம் தொழிலாளர்களிடம் உருவாக்கிய நம்பிக்கையே மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. இரண்டு அணிகள் நிறுத்திய பொதுவேட்பாளர் மண்ணைக் கவ்வியதற்கும் அதுவே அடித்தளமாக இருந்தது.

இந்த வெற்றியில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இந்த தொழிற்சங்கம் சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதன் நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றிருப்பது இது தான் முதல்முறை. முருகப்பா குழுமத்தின் பல்வேறு ஆலைகளில் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி உயர்வதற்கு இந்த வெற்றி கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !

11

இந்துத்துவ மோடியின் முகமூடி

இனக்கொலையாளி ராஜபக்சேவை அழைத்த மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

இடம் : சென்னை வள்ளுவர் கோட்டம்
நேரம் : காலை 11 மணி முதல் 12 மணி வரை

ந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை  அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்த பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.

இந்துத்துவ மோடியின் முகமூடி

மோடிக்கு சிவப்புக் கம்பளம்

மோடி இனப்படுகொலையாளி

மோடி - ராஜபக்சே - சோனியா

மோடி - சுஷ்மா சுவராஜ்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு
9444834519

ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்

21

மோடியின் பதவியேற்பு விழாவின் சிறப்பு விருந்தினராக கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்திருக்கிறது பாஜக அரசு. இது குஜராத்தின் இனக் கொலைக்குற்றவாளி, ஈழத் தமிழினக் கொலையாளிக்கு அளிக்கும் விருந்துபசாரம். மன்மோகன் அரசு ராஜபக்சேவுக்கு கள்ளத்தனமாக ஆதரவு கொடுத்தது என்றால், சிங்கள் இனவெறி அரசுக்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறார் மோடி.

VAIKO-cartoonஇந்த செய்தி வெளிவந்தவுடனேயே வைகோ நடிக்கத்தொடங்கி விட்டார். மோடி இப்படியொரு முடிவெடுப்பார் என்று வைகோ எதிர்பார்க்கவே இல்லையாம். இந்தச் செய்தி அவரது தலையில் ஒரு இடியைப்போல இறங்கியதாம். அதிகாரிகள் மோடிக்கு தவறாக வழிகாட்டி விட்டார்களாம். பொங்கி வரும் கண்ணீரோடு கும்பிட்ட கரங்களுடன் “ராஜபக்சேவை அழைக்காதீர்கள்” என்று தமிழர்கள் சார்பில் மோடியை வேண்டிக் கேட்டுக் கொள்கிறாராம். மோடி இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை. “ராஜபக்சே வருவதுதான் தமிழர்களுக்கு நல்லது” என்று பொன் இராதா கிருஷ்ணன் பதில் சொல்லி விட்டார். “ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் அரை வேக்காடுகள்” என்று அறிக்கை விட்டிருக்கிறார் பாஜக வின் எச்.ராசா.

ஈழத்தமிழ் மக்களுக்கு சம உரிமை பெற்றுத் தரப்போவதாகவும், தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தப்போவதாகவும் தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி அடித்த சவடால்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவையெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக வைகோ எழுதிக் கொடுத்த வசனங்கள்தான்.

மோடியின் பேச்சு முழுவதும் பொய் என்பதும், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், அது காங்கிரசைக் காட்டிலும் தீவிரமாக ராஜபக்சேவை ஆதரிக்கும் என்பதும் வைகோ, நெடுமாறன், ராமதாசு, விஜயகாந்த், தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். 2000 ஆண்டில் புலிகள் யாழ் குடாப் பகுதியைக் கைப்பற்றி, சிங்கள இராணுவத்தை முற்றிலுமாகத் தோற்கடித்திருந்த தருணத்தில், வாஜ்பாய் அரசு புலிகளை மிரட்டிப் பின்வாங்க வைத்தபோது, வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த யோக்கியர்தான் வைகோ.

“இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே அல்ல, சர்வதேச போர்க்குற்ற விசாரணை கூடாது, இனப்படுகொலை என்று சொல்லவே கூடாது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்ககக் கூடாது” என்பதெல்லாம்தான் பாரதிய ஜனதாவின் கொள்கைகள். இதை அவர்கள் பல முறை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். 2009-ல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில், அவர்கள் மன்மோகன் அரசுக்கு பக்கபலமாக நின்றார்களேயொழிய, போரை நிறுத்த வேண்டும் என்று பேச்சுக்கு கூடக் கோரியதில்லை.

சிங்கள இராணுவத்தின் இன அழிப்புக் குற்றங்கள் அம்பலமாகி, சர்வதேச அரங்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பாரதிய ஜனதாவினர்தான். ராஜபக்சே அரசின் பேராதரவுடன்தான் இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மோடியின் குஜராத் அரசுதான் ராஜபக்சே அரசுடன் சிறப்பான வர்த்தக உறவுகளை வைத்திருந்தது. இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து, காங்கிரசு மீதும் திமுக மீதும் தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பை தந்திரமாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக திருப்பி விட்டவர்கள்தான் வைகோ, தமிழருவி மணியன், நெடுமாறன் போன்றவர்கள்.

மோடி - வைகோ
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பொன் ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து, பாரதிய ஜனதாவை ஈழத்தமிழர்களின் நண்பன் என்று தமிழக மக்களை நம்பவைத்தவர்கள் இவர்கள்.

தமிழக மக்களை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. புலிகளையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள். இறுதிப் போரின் போது, 2009-ம் ஆண்டின் துவக்கத்திலேயே புலிகள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தனர். இருப்பினும் ‘மே 2009 தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறப்போகிறது என்றும், அடுத்த கணமே போர் நிறுத்தம் வந்து விடும்’ என்றும் புலிகளுக்கு இவர்கள் பொய் நம்பிக்கை ஊட்டினார்கள். டெல்லிக்கு காவடி எடுத்துச் சென்று, அத்வானிக்கு மேடை அமைத்துக் கொடுத்தார் வைகோ. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு கேட்டு தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வைத்தார்கள். மொத்தத்தில் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலின் மரணக்குழியில் சிங்கள இராணுவத்திடம் சிக்கும் வரை அரசியல் ஆலோசனை வழங்கியவர்கள் இவர்கள்தான்.

எந்த பாரதிய ஜனதாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு இவர்கள் புலிகளுக்கு ஆலோசனை சொன்னார்களோ அந்த பாஜக, ராஜபக்சேவுக்கு எதிராக “போர்க்குற்றம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதையே எதிர்த்தது. இருப்பினும் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு பொன் ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து, பாரதிய ஜனதாவை ஈழத்தமிழர்களின் நண்பன் என்று தமிழக மக்களை நம்பவைத்தவர்கள் இவர்கள்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2009 ஈழப்போரைக் காட்டி, காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்தான் தமிழருவி மணியன் என்ற புரோக்கர் தமிழகத்தில் தனது வேலையைத் தொடங்கினார். தமிழகத்தில் அநாமதேயமாக இருந்த பாரதிய ஜனதா கட்சி இன்று 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-க்கு காலாட்படை வேலை செய்வதும், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பார்ப்பனக் கும்பலுக்கு சொம்பு தூக்குவதும்தான் வைகோ, தமிழருவி, நெடுமாறன் ஆகியோர் நடத்தி வரும் அரசியல். தங்கள் நோக்கத்திற்கு ஈழப்பிரச்சினையை இவர்கள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

modi-rajapakseஇவர்களைத் துரோகிகள் என்று கூறுவதை விட, ஆர்.எஸ்.எஸ்-ன் ஐந்தாம் படையினர் என்று மதிப்பிடுவதே சரியானது. இந்த ஐந்தாம் படைதான், ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவிப்பது போல இன்று நடிக்கிறது. விஜயகாந்த், ராமதாசு போன்ற அருவெறுக்கத்தக்க பிராணிகளோ, ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வாய் திறக்காமல், பதவி எலும்புக்காக எச்சில் ஒழுக காத்திருக்கின்றனர்.

குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளியான மோடியை, இந்தியாவின் இராஜபக்சே என்று அழைப்பதே பொருத்தம் என்று நாங்கள் கூறியிருந்தோம். பசில் ராஜபக்சே அதனை வழிமொழிந்திருக்கிறார். “மோடி குஜராத்தில் சாதித்திருக்கும் வளர்ச்சியைத்தான் மகிந்த இலங்கையில் சாதித்திருக்கிறார் என்றும், எனவே மோடி இந்தியாவின் ராஜபக்சே” என்றும் கூறியிருக்கிறார் பசில். எனவே, வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.

தெற்காசிய விரிவாதிக்கமும் அமெரிக்க கைக்கூலித்தனமும் இணைந்ததுதான் பாஜக வின் இலங்கைக் கொள்கை. இதுவேதான் காங்கிரசின் கொள்கையும். அகண்ட பாரதம் என்பது அந்தக் கனவுக்குப் போடப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சாம்பிராணி. “பாகிஸ்தான் இராணுவம் நமது சிப்பாயின் தலையைக் கொய்து அனுப்பும்போது, அவர்களுக்கு சிக்கன் பிரியாணி போட்டு விருந்து வைக்கிறார் மன்மோகன் சிங்” என்று பேசிய மோடி, “அது நாற வாய், இது வேற வாய்” என்று கூறி இப்போது நவாஸ் ஷெரிபுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்ரவர்த்தியைப் போல எண்ணிக்கொண்டு தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மோடி. இதனைக் காணாததைக் கண்ட அற்பனுக்குரிய நடத்தை என்றும் கூறலாம். இந்தியத் தரகு முதலாளிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அடிமையின் நடத்தை என்றும் கூறலாம்.

தெற்காசிய நாணயமாக ரூபாயை மாற்றுவது, தெற்காசியா முழுவதற்குமான சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவை இந்தியத் தரகு முதலாளிகளின் நெடுநாளைய கோரிக்கைகள். அதை நிறைவேற்றித் தருவதற்கான துவக்கம்தான் இந்த முடிசூட்டு வைபவம்.

சவுதியில் நாத்திகர் கதி என்ன ?

53

தில்களுக்கு வழியில்லாத கேள்விகளால் துளைப்போரை ஓயாமல் ”வாங்கடா விவாதிக்கலாம்” என்று பணிவோடு அழைக்கும் தவ்ஹீதுவாதிகளையும் அவர்களின் ‘ஜனநாயக மாண்பையும்’ நாம் அறிவோம். பகிரங்க விவாதம் எனும் ஜனநாயக வழிமுறையை மதமோ இல்லை மார்க்கத்தை பின்பற்றும் இசுலாமிய நாடுகளோ அனுமதிப்பதில்லை.  ஏன் அனுமதிப்பதில்லை என்று கேட்டால் அப்படிக் கேட்பது மதத்தை இழிவுபடுத்துவது என்கிறார்கள்.

சவுதி மன்னர்
சவுதி மன்னர் – அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள்.

இவர்களே இப்படியென்றால் இவர்களுக்கு ஜனநாயக ’விழுமியங்களை’ கற்றுக் கொடுத்த சித்தாந்த மூலவர்களான சவுதி அரேபியாவின் அரசியல் சூழல் எப்படியிருக்கும்? சவுதியில் குழந்தைகள் மண்ணில் குழி தோண்டி விளையாடினாலே பெட்ரோலும் டீசலும் பீறிட்டு அடிக்கும் என்கிற  அம்புலிமாமா கதைகளை விடுத்து அங்கே ஜனநாயகம் என்கிற வஸ்து கிலோ என்ன விலைக்கு விற்கிறது என்ற இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி சவுதி அரசு தீவிரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ’தீவிரவாதம்’ என்றால் என்னவென்று அமெரிக்கா துவங்கி இந்தியா வரை உழைக்கும் மக்களை இனம், மொழி, மதத்தின் பெயரில் ஒடுக்குவதறத்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரசு தீவிரவாதத்திற்கு புதிய விளக்கங்களை அளிக்கிறது. மேற்படி சட்டப் பிரிவின் முதல் ஷரத்தின் படி “சவுதி நாட்டின் அடித்தளமான இசுலாமிய மதத்தின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோ, நாத்திக கருத்தை எந்த வடிவத்திலாவது கொண்டிருப்பதோ” தண்டனைக்குரிய குற்றம் என்றாகிறது.

தீவிரவாத தடுப்பு சட்டம் என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் இந்த கேலிக்கூத்தில், எது தீவிரவாதம் என்பதற்கான குறிப்பான விளக்கங்களே இல்லை. மாறாக, அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற இயல்பான கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாக சித்தரிக்கிறார்கள். சவுதி அரசால் ’தீவிரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்டவர் என்றால் ’குற்றத்தின்’ தன்மைக்கேற்ப தலையைக் கூட இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்க.

கடவுள் மறுப்பு மட்டுமல்ல, இசுலாத்தை மறுத்து வேறு மதங்களைத் தேர்ந்தெடுத்தாலும் (apostasy), சவுதியில் ஏற்கனவே நடப்பில் உள்ள ஷரியா சட்டங்களின் படி மரண தண்டனை தான். இசுலாத்தை உள்ளிருந்தே விமர்சிப்பதும் கூட மத விரோதம் என்கிற பிரிவுக்குள் அடங்கி உயிரை பலிவாங்கி விடக்கூடும். சுதந்திரம் என்கிற வார்த்தை மூளைக்குள் நுழையும் முன்பே தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.

சவுதியைச் சேர்ந்த ராயீஃப் பதாவி சொந்தமாக இணையதளம் ஒன்றை நடத்தும் இணைய எழுத்தாளர். ’சவுதியின் தாராள சிந்தனையாளர்களை விடுவி’ (Free Saudi Liberals) என்ற இணையதளத்தில் இசுலாத்தை விமர்சித்து எழுதிய ‘குற்றத்திற்காக’ 2012 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். மத விரோத (apostasy) குற்றச்சாட்டை எதிர்கொண்ட ராயீஃப் பதாவி, சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் தொடர்ச்சியான அவதானிப்பை அடுத்து கடந்த ஏழாம் தேதி 10 ஆண்டு சிறை வாசத்தையும் ஆயிரம் சவுக்கடியையும் ஒரு லட்சம் ரியால் அபாரதத்தையும் தண்டனையாகப் பெற்று தலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அரசரை கேலியாக பேசியவர்கள், இசுலாத்தை கிண்டலடித்து எழுதியவர்களெல்லாம் ஒன்று முதுகுத் தோல் உரிக்கப்பட்டு அலைகிறார்கள் அல்லது தலையைத் தொலைத்து விட்டு மண்ணுக்குள் உறங்குகிறார்கள். உலக சுதந்திரத்தின் ஒரே காவல் தெய்வமான அமெரிக்காவோ அதன் இன்னபிற அடிவருடி அறிவுஜீவிகளோ, இது வரைக்கும் சவுதியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அரசர் அணிந்து வீசிய கிழிந்த ஜட்டி போல பாலைவன புயலில் பறப்பதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

சவுதியில் நாத்திகர்கள்
சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

வானத்தில் துப்பிய எச்சில் ஏன் மூஞ்சியில் விழுகிறது என்று அதிசயப்பட்ட முல்லாவின் கதையை படித்திருப்போம். அது புவியீர்ப்பு விசையின் அடிப்படை விதி என்பதைப் புரிந்து கொள்ள அவரிடம் அறிவும் இல்லை, அதிகாரமுமில்லை – பின்னது இருந்திருக்குமானால் சவுதி அரசைப் போல், எச்சில் மூஞ்சியில் விழுவதைத் தவிர்க்க சட்டமியற்றியிருப்பார். சவுதி அரசு நாத்திகத்தைக் குறித்து அஞ்சுவதற்கும் இந்த தீவிரவாத அச்சத்திற்கும் காரணமில்லாமல் இல்லை.

சவுதியில் வஹாபிய பாணி இசுலாமிய மதமும் அதிகாரமும் வேறு வேறல்ல. சவுதி போன்ற நாடுகளில் அதிகாரத்திற்கு எதிரான எந்த சிந்தனையும் மதத் துறப்பிலிருந்தும் இறை மறுப்பிலிருந்தும் தான் இயல்பாகவே துவங்குகிறது – இந்தியாவில் பார்ப்பனிய படிநிலை சாதி அமைப்பைத் தொடாமல் ஜனநாயகம் குறித்து பேசவே முடியாது என்பதைப் போல.

சமீபத்தில் கல்லப் என்கிற வலைத்தளம் எடுத்த இணைய வாக்கெடுப்பில் சவுதியில் சுமார் 5 சதவீதம் நாத்திகர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ‘நாத்திகம் என்றாலே ஆபாசமானது, தீங்கானது, சபிக்கப்பட்ட பரலோக வாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது’ என்றெல்லாம் சவுதி மதகுருமார்களால் விளக்கமளிக்கப்படுகிறது. உலகிலேயே முத்தவீன்கள் எனப்படும் மத போலீசைக் கொண்டு தடிக்கம்பாலும் தலைவெட்டி தண்டனைகளாலும் மதப் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வெகு சில நாடுகளில் ஒன்றான சவுதியில், ஐந்து சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றால், அடக்குமுறைகள் விலகினால் அந்த சதவீதத்தின் அளவு எந்தளவுக்கு கூடும் என்பதை நாம் அனுமானிக்கலாம்.

சவுதியில் நாத்திகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

”யாரேனும் தங்களை இறை நம்பிக்கையற்றவர் என்று அறிவித்துக் கொண்டால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, குடும்பத்திலிருந்து முதலில் வெளியேற்றப்படுவார். அவரது வேலை பறிபோகலாம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியே பேசுவார்கள் – பிறரிடமும் அவரைக் குறித்து எச்சரிப்பார்கள். ஒருவேளை அவர் தாக்கப்படலாம், ஏன் கொலை கூட செய்யப்படலாம்” என்கிறார் ஜாபிர்.

ஜாபிர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் துடிப்பான இளைஞர். சவுதியின் மதிப்பு வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் கல்வி படித்தவர். கடுமையான இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவர். சொந்த முறையில் குரான் மற்றும் பிற ஹதீதுகளைப் படித்து அதன் முரண்பாடுகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் நாத்திகராக மாறியவர்.

’உங்கள் மத்திய கிழக்கு’ (your middle east) என்கிற பத்திரிகையின் செய்தியாளருக்கு தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஜாபிர் (மாற்றப்பட்ட பெயர்) அளித்த பேட்டியில் ’இது போன்ற சமூக நிலைமைகளில் ஒரு சவுதிக்காரனாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறார்’ என்று பேட்டியாளர் கேட்டதற்கு அவர் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார் –

”சவுதி ஒரு மதச்சார்பற்ற நாடல்ல என்கிற எதார்த்தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. எனது நாடு ஒரு மதச்சார்புள்ள நாடு என்பதும் இசுலாத்தின் அதிதீவிரமான பிரிவு ஒன்றை முன்மொழிகிறது என்ற எதார்த்தமும் என்னை அச்சுறுத்துகிறது. நான் இந்தச் சமூகத்தில் மாற்றங்களைக் காணவில்லை, அரச குடும்பத்தில் மாற்றங்களைக் காணவில்லை. வெளியுலகைப் பொருத்தவரை, இங்கே தாம் பிறந்த மதத்தை நம்ப மறுத்த எளிமையான காரணத்தை முன்வைத்து எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் எண்ணெய் மட்டும் தான்.”

“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களான இணையதளமும், சமூக வலைத்தளங்களுமே நாத்திகர்களின் ஒரே தொடர்பு சாதனமாக உள்ளது. பல்வேறு நகரங்களில் நாத்திக குழுக்கள் இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன.”

”இறை நம்பிக்கையற்ற நாங்கள் பல்வேறு நகரங்களில் எங்களது சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அவை பிறரின் அவதானிப்புக்கு வருவது கடினம் என்றாலும் நீங்கள் அந்தக் கூட்டங்களுக்குச் சென்றால் அங்கே கூடுபவர்களின் எண்ணிக்கையும், பல்வேறு சமூகத்தட்டுகளைப் பிரதிபலிக்கும் உறுப்பினர்களையும் பார்த்து வியப்படைவீர்கள்” என்கிறார் ஜாபிர்.

சவுதியில் நாத்திக வாழ்க்கை
“சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான்.”

மிர்ஸா காலிப் என்ற இந்திய முசுலீம் ஒருவரின் அனுபவமோ வேறு சில செய்திகளைச் சொல்கிறது. கடுமையான மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட மிர்ஸா காலிப், பணி நிமித்தமாக சுமார் பத்தாண்டுகளாக சவுதியில் வசித்துள்ளார். சவுதிக்குச் செல்லும் போது தீவிர மதப்பற்றாளராக சென்ற மிர்ஸா, திரும்பி வரும் போது நாத்திகராகத் திரும்பியுள்ளார். இங்கே வந்ததும் எழுபது வயதான தனது தந்தையிடம் சுமார் பத்தாண்டு காலம் விவாதித்து அவரது எண்பதாவது வயதில் அவரையும் நாத்திகராக மாற்றியுள்ளார்.

“நான் நாத்திகனாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. என்னோடு பணிபுரிந்த அரபிக்கள் என்னை மிக மோசமான முறையில் கேலி பேசியது அதில் பிரதானமானது. நான் ஒரு சரியான முஸ்லீம் இல்லை என்றார்கள். அது எனது மத பெருமிதத்தை இழிவு படுத்தியது. ஏனெனில், நான் ஒரு சிறந்த முஸ்லீம் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். பின்னர் இந்த உளவியல் சித்திரவதைகளைத் தாள முடியாமல், நானே சொந்த முறையில் இசுலாத்தை ஆய்வு செய்யத் துவங்கினேன்” என்கிறார் மிர்ஸா.

மேற்கத்திய நாடுகளுக்கு தனது எணணெய் கிணறுகளைத் திறந்து விட்டு, அவர்கள் அளிக்கும் எச்சில் காசில் கொட்டமடித்து வரும் சவுதி ஆளும் வர்க்கத்துக்கு மக்களின் அதிருப்தி தங்களை நோக்கித் திரும்பாமல் தடுக்கும் தடுப்பணையாக இசுலாம் பயன்படுகிறது. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ள நடுத்தர மற்றும் உயர் வர்க்க சவுதிகளோ தடித்தனத்தில் ஊறி வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்களையே கூட மிக இழிவாக நடத்துகிறார்கள். இந்த இனவெறியாலேயே சுயமரியாதை கொண்ட பிறநாட்டு முசுலீம் மக்கள் மனதளவில் இசுலாத்தை விட்டு இயல்பாகவே விலகுகிறார்கள்.

நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது. இது வேலையே செய்யாமல் கையெழுத்துப் போட்டு சம்பளம் மட்டும் வாங்கும் ஒரு பிரிவினரை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அமெரிக்காவின் எச்சில் காசில் சவுதி அரசு மக்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதும் வராமலிருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ள ஏராளமான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உள்ளது. மொத்த நாடும் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டிருப்பது குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சொரணையின் நெருப்பு தோலைச் சுடாதபடிக்கு வஹாபியம் அரணாக போர்த்திக் கொள்கிறது.

உள்ளூரில் விறைப்பு காட்டும் அதே வஹாபிய அதிகாரத் திமிர், பணக்கார சவுதிகளுக்கு நாட்டின் எல்லைகளை மத்திய கிழக்கின் விபச்சார சொர்க்கங்களை நோக்கி இருபத்து நான்கு மணி நேரமும் திறந்து வைத்திருக்கிறது. நாட்டிற்கு வெளியே விபச்சாரத்தில் மூழ்கித் திளைத்து விட்டு, நாட்டிற்கு உள்ளே ஐந்து வேளை தவறாமல் தொழுது தங்கள் ஈமானைக் காத்துக் கொள்ள, வசதியான ஷேக்குகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் பணக்கார ஷேக்குகளின் முதலீட்டு இலக்கே அமெரிக்கா தான் எனும் போது தனது சொந்த நாடு தொடர்ந்து அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் இயல்பான விருப்பம்.

சவுதி மாணவர்கள்
நடுத்தர வர்க்க சவுதிகளுக்கு அந்நிய நிறுவனங்களில் வேலைக்கான ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நிதாகத் என்கிற சட்டம் நடப்பில் உள்ளது.

ஆனால், சமூகத்தின் நிலைமை, சக மக்களின் இழிந்த வாழ்க்கை, ஏழை சவுதிகளை வாட்டும் வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் சுதந்திரம் பறிபோய் மேற்குலகங்களின் செருப்பாக சவுதி மாற்றப்பட்டிருப்பது என்கிற எதார்த்தமான உண்மைகளுக்கு முகம் கொடுத்து, நேர்மையாக பரிசீலிக்கும் திறன் உள்ளவர்கள் சவுதியில் அதிகாரமும் மதமும் பிரிக்கவொண்ணாதபடிக்கு இணைந்திருப்பதை சுலபமாக புரிந்து கொள்வார்கள்.

அதிகாரத்திற்கு எதிரான அமைப்பாக திரளவோ, ஒரு கட்சியின் தலைமையில் சவுதி அரச குடும்ப சர்வாதிகார அரசை வீழ்த்தவோ சாதகமான சூழல் உடனடியாக இல்லை. ஆகவே இயல்பாகவே மதக் கடுங்கோட்பாட்டு வாதத்தின் பிடியில் இருந்து விடுபடுவதே சுதந்திரத்தை நேசிப்பவர்களின் முன் உள்ளே முதல் தேர்வாக உள்ளது. அடிவருடி அதிகார வர்க்கத்தின் மேலான கசப்பின் உடனடி விளைவாக அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே வஹாபிய இசுலாத்தின் எதிர் திசையை நோக்கி இருக்கிறது.

இது சவுதியின் பாசிச மன்னர் குடும்பத்திற்கும் தெரியும். அதனால் தான் நாத்திகர்களைத் தீவிரவாதிகள் என்று அறிவித்த முதல் ஷரத்தை தொடர்ந்து வரும் 2-வது ஷரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது –

”ஆட்சியாளர்கள் மேல் விசுவாசம் வைக்காதவர்கள் மற்றும் வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனை போக்குகள், நாட்டிற்கு உள்ளே – வெளியே உள்ள தனிநபர்களையோ குழுவையோ உணர்வுப்பூர்வமாக ஆதரிப்பவர்கள்” – இவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்கிறது சவுதி.

அரசரைத் தவிர, வஹாபியத்தைத் தவிர வேறு ‘சிந்தனைப் போக்குகள்’ கொண்டவர்களை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது தான் இதில் உள்ள கோணங்கித்தனத்தின் உச்சம். என்னதான் வல்லமை கொண்டதாயினும், மண்டையோட்டைத் துளைத்துக் கொண்டு மூளைக்குள் ஊடுருவி, அதன் நியூரான்கள் அல்லாவையும் அரசனையும் விடுத்து வேறு எதை யோசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பீராய்ந்து வந்து மதக் கோர்ட்டின் விசாரணைக் கூண்டுக்குள் நிப்பாட்டும் ஆற்றல் இசுலாத்திற்கு இல்லை. அதற்காகத்தான் வஹாபிய தடிக்கொம்பை வைத்திருக்கிறார்கள்.

இசுலாத்தால் இயலாதது எல்லாவற்றையும் வஹாபிய வெறி சாதிக்கும். ஏனெனில், மத நீதிமன்றத்தில் குருமார்கள் சொல்வது தான் சட்டம். எந்த அடிப்படையும் இன்றி சர்வதேச மனித உரிமை இயக்கங்களின் அழுத்தங்களைக் காலில் போட்டு மிதித்து விட்டு அப்பாவிப் பெண் ரிசானா நபீக்கின் தலையை ஊரே பார்க்க அறுத்தெறிந்த வாட்களுக்கும் அறிவும் இல்லை அதை இயக்கும் அதிகாரத்திற்கு மனசாட்சியும் இல்லை.

மெல்லிய சலசலப்பைக் கூட இசுலாமியத்துக்கே ஏற்பட்ட ஆபத்தாக அறிவித்து நாத்திகர்கள் என்று முத்திரை குத்தி எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி நடந்தால் அதற்கும் கூட்டம் போட்டு சவுதி அரச பரம்பரைக்கு வக்காலத்து வாங்கி சொம்படித்து நியாயப்படுத்த உலகெங்கும் வஹாபியர்கள் உண்டு. நம்மூரிலும் கூட ’மண்ணடி மார்க்க அறிஞர்கள்’ படை ஒன்று உள்ளதை நீங்களே அறிவீர்கள் தானே.

வஹாபியத்தை வாயில் திணித்து, தொண்டைக்குழிக்குள் கம்பால் அடித்து இறக்க முயலும் ஒரு தேசத்தில் நாத்திகர்களாகவும் அதன் வழி அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களாகவும் இருப்பது அசாதாரணமானது. மதப் பிற்போக்குவாதத்தை எதிர்த்து நீண்டதொரு பயணத்தைத் துவங்கியுள்ள சவுதி நாத்திகர்களின் பயணம் அதிகாரத்திற்கு எதிரானதாக வெகு விரைவில் மிளிர வேண்டும்.

தங்கள் நம்பிக்கைகளுக்கான தனிப்பட்ட சுதந்திரம் என்பதும் சமூகத்திற்கான பொதுவான சுதந்திரம் என்பதும் வேறு வேறு அல்ல என்பதை அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே உணர்வார்கள். அப்படி நடக்கும் போது ஜனநாயகத்துக்கான கோரிக்கை வலுப்பெற்று சவுதி அரச வம்சத்தினரை பாலைவனப் புழுதியில் விசிறியடிக்கும் நாள் வந்தே தீரும். அதைச் சாதிக்கப் போகும் அமிலத்தில் பூத்த அந்த மலர்களை நாம் வாழ்த்துவோம்.

–    தமிழரசன்

ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி

5

பேருந்து சிறுசேரி சிப்காட்டினுள் நுழைந்து, டி.சி.எஸ் முதல் கேட்டை தாண்டி விட்டிருந்தது. வழக்கம் போல, அரைத் தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு, காதிலிருந்து இயர் போனை கழற்றிவிட்டு, பையில் இருக்கும் அடையாள அட்டையை துளாவிக் கொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்தவர்கள் கலவரமாக சத்தமிட்டார்கள், சிலர் உச் கொட்டினார்கள். எதிர் திசையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் மோதி விழுந்திருக்கிறார். டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு சற்று தூரத்தில் தான் இந்த விபத்து நடந்தது.  பேருந்து மெதுவாக ஊர்ந்து அவரை நெருங்குவதற்குள், தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தேன். டி.சி.எஸ் வாயிலில் சிகிரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் என அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டதை பார்க்க முடிந்தது. சுற்றி நின்றவர்களின் கால்களுக்கு ஊடே ஒருவர் விழுந்து கிடப்பதும் அவரை சுற்றி இரத்தம் வழிந்தோடுவதும் தெரிந்தது.

பேருந்தும் நகர்ந்து விடவே விபத்து நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றினாலும், அலுவலகத்துக்கு ஏற்கனவே தாமதமாக செல்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கியதாலும் செய்ய வேண்டிய அமெரிக்க வாடிக்கையாளரின் பணிகள் மனதை நிறைக்க ஆரம்பித்ததாலும் பேருந்தில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடக்க ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும், ஒருவர் விழுந்து அடிபட்டு கிடக்கிறார், போய் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று மனசாட்சி கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பவே முடிவை மாற்றிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து கிடந்த நபரின் அருகில் சென்று பார்த்தேன்.

ஒரு இளைஞர் விழுந்து கிடந்தார், அவரைச் சுற்றிலும் இரத்தம். கோயில் கொடையில் கெடா வெட்டும் போது தான் இவ்வளவு இரத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அளவு இரத்தம் ஒரு மனிதனது மண்டையில் இருந்து கொட்டுகிறது. காது வழியே இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரின் கால்கள் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் சிந்தனையே மறந்து போனது. நாம் எவ்வளவு வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறோம் என்பதை பின்னால் யோசிக்கும் போது தான் தெரிகிறது.

நான் உட்பட சுற்றி இருந்தவர்களில் பலர் அருகில் செல்லவே பயந்தோம். சிலருக்கு உதவி செய்யப் போய் போலீஸ், கேஸ் என்று அலைய வேண்டும் என்ற பயமிருந்திருக்கலாம், என்னைப் பொறுத்த வரை தலையில் கைவைத்து அவரை தூக்கினால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். என் எண்ணத்தை பிரதிபலிப்பது போல ஒருவர் “நாம கைய வெக்க போயி மண்டை மேலும் பிளந்து இரத்தம் அதிகமாக வெளியேறினால என்ன செய்வது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மவுசில் தொழில் நுட்ப வித்தைகளை சுழற்றும் மூளைக்கு குறைந்தபட்ச முதலுதவி கூட செய்யத்தெரியாது என்ற உண்மையும் அச்சுறுத்தியது.

அருகில் இருப்பவர்கள் 108 அவசர ஊர்திக்கும், குளோபல் மருத்துவமனை அவசர ஊர்திக்கும் ஏற்கனவே தகவல் சொல்லி விட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வரை இவர் தாக்கு பிடிப்பது சிரமம் என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. வெளியேறும் இரத்தமும், உடல்துடிப்பதும், கால்கள் வெட்டுவதுமாக உயிரைப் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர முடிந்தது.

டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியில் மேலும் பல்வேறு தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு  அலுவலகத்திலும் கண்டிப்பாக அவசர ஊர்தி (ambulance) வைத்திருப்பார்கள். மேலும் நூற்றுக்கணக்கான கார்களும், பேருந்துகளும் வளாகங்களுக்குள் நின்று கொண்டிருக்கும்.

அவர் யார் என்பது அங்கு இருக்கும் எவருக்கும் அதுவரை தெரியாது. அவரின் சட்டைப் பையில்  “NPT கேப் சர்வீஸ்” என்று அடையாள அட்டை இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு பணிபுரியும் ஊழியர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் கேப் ஓட்டுநராக இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டோம்.

மருத்துவ ரீதியாக முதல் உதவிக்கான உபகரணங்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும். அதைக் கொண்டு ஏதேனும் உதவ முடியுமா என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். டி.சி.எஸ் அலுவலகத்தில் செட்டிநாடு மருத்துவமனையின் அவசர ஊர்தி எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று சொல்லியபடியே டி.சி.எஸ் அடையாள அட்டை அணிந்திருந்த நபர் அதன் வாயிலை நோக்கி ஓடினார். அருகில் இருந்த ஒருவர், தான் முன்பு சி.டி.எஸ் அலுவலகத்தில் வேலை செய்ததாகவும் அதன் அவசர தொடர்பு எண்ணுக்கு (Emergency) அழைத்து ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று பார்ப்பதாகவும் சொல்லி தொலைபேசிக் கொண்டிருந்தார்.

அவரவரவர்களுக்கு சாத்தியமான வழிகளில் ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நானும் சிலரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஐ.டி நிறுவனங்களுக்கு காரில் வேலைக்கு வரும் எவரும் காரை நிறுத்தி உதவி செய்யத் தயாரில்லை. வளர்ச்சியின் சின்னமான கார்களுக்கு ஒரு மனிதனை காப்பாற்றுவது முக்கியம் என்று தெரிந்திருக்கவில்லை. அடிபட்டவரோ இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறார்.

சி.டி.எஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டவரிடம், அந்த நிறுவனத்தினர், அடிபட்ட நபர்  தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவரா என்று கேட்டிருக்கிறார்கள். சி.டி.எஸ் ஊழியர் இல்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி எதிர் முனையில் போனை வைத்து விட்டார்கள் அந்த மனிதாபிமானிகள். தங்கள் நிறுவனத்திற்காக கேப் ஓட்டுபவராகக் கூட இருக்கலாம் என்று தெரிந்தே அவர்கள் கைவிரித்தார்கள்.

டி.சி.எஸ் நோக்கி ஓடியவர் கையுடன் ஒரு செக்யூரிட்டியை அழைத்துக் கொண்டு வந்தார். செக்யூரிட்டி என்றால் சாதாரணமானவர் அல்ல, அதன் அதிகாரியாக இருக்கக் கூடும். ஒரு போலீசுக்கே உரிய தோரணையுடன் கையில் வாக்கிடாக்கி சகிதமாக வந்தார். இந்தியில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து வாக்கிடாக்கியில் தகவல் கொடுத்துவிட்டு டி.சி.எஸ் ஊழியர் இல்லை என்றதும் கிளம்பி விட்டார். இத்தகைய பாதுகாப்பு சூரப்புலிகளின் காவலில்தான் உமா மகேஸ்வரியும் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அடிப்படை மனிதாபிமானம் கூட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருப்பதில்லை என்பது பளார் என்று முகத்தில் அறைந்தது போல புரிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கும் மனிதநேயத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை அந்த கணத்தில் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அடிபட்டவர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமில்லாமல், அவர் சாதாரண ஒரு கேப் டிரைவர் தானே என்று அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.

“கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பானிசிபிலிட்”டி என்று பெயரில் அலுவலகத்தில் நடந்த எண்ணற்ற விளக்கக் கூட்டங்களை நினைத்துப் பார்த்தேன். நிறுவன ஊழியர்களை  கொண்டு கடற்கரைகளில் பிளஸ்டிக் பொறுக்குவது, கேன்சருக்கு எதிராக மாரத்தான் ஓடுவது போன்று மொன்னையாக எதையாவது செய்துவிட்டு அதையே பெரிய சாதனையாக சித்தரிக்கும் இவர்களின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அன்று தான் பார்க்க முடிந்தது. வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்காகவும் சமூகத்தில் தங்கள் பிம்பத்தை உயர்த்துவதற்காகவும் மட்டுமே திட்டமிட்ட முறையில் ஊடக வெளிச்சத்தில் ‘சமூக அக்கறை’யை வெளிப்படுத்தும் இவர்களின் மூஞ்சியில் காறித் துப்பலாம் போல இருந்தது. இவர்களுக்காகவா பெருமையுடன் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. ஒன்றுக்கொன்று எதிரான கார்ப்பரேட் இலாப வெறியும், மனிதநேயமும் என்றைக்குமே சேர்ந்து இயங்க முடியாது என்பதை கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

நேரம் ஆக ஆக என்ன செயவது என்று செய்வது என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் நெருங்கும் சத்தம் எதுவும் அருகில் கேட்கவுமில்லை. நம்பிக்கையற்று இருந்த வேளையில் அந்த வழியாக வந்த ஒரு வாடகை வண்டி ஓட்டுநர் தன் வண்டியில் அடிபட்டவரை கொண்டு செல்ல அனுமதித்தார். ஏதோ வினவில் சொல்கிறார்கள் என்று இல்லை உண்மையில் உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம் தான். சக மனிதனின் வலி, வேதனைகளை இரத்தமும் சதையுமாக உணர்ந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். பல்லாயிரம் கோடிகளோடு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம் இல்லாத மனிதாபிமானம் சில ஆயிரங்களை மட்டும் ஊதியமாக பெறும் அந்த கார் ஓட்டும் தொழிலாளியிடம் இருந்தது.

அவரை வண்டியில் ஏற்றி சிப்காட் வாயிலை நெருங்கும் போது எதிரில் நல்ல வேளையாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அருகில் இருப்பது கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைதான் என்று முடிவு செய்து அங்கு போகச் சொன்னோம். முதலுதவி அளித்தபடியே வண்டி அங்கு போய்ச் சேர்ந்து அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அடிபட்டவரை மனிதர்களின் உயிரை காப்பாற்ற சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களின் உலகமான ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டோம், அதுவும் நவீன வசதிகளையும் திறமை வாய்ந்த மருத்துவர்களையும் கொண்ட இடம். அவரை மருத்துவ சிகிச்சைகள் சூழ்ந்து கொண்டு அவரை காப்பாற்றும் முயற்சி ஆரம்பித்து விடும் என்று பரபரப்பாக எதிர்பார்த்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.

“அவருக்கு நீங்கள் யார்?”

“யாருனு தெரியல மேடம். வழியில அடிபட்டு கிடந்தார், கூட்டிட்டு வந்தோம்”

“அப்படியா. நாங்க ஃபர்ஸ்ட் எய்ட் டிரீட்மென்ட் பண்றோம். நீங்க அவங்க ஃபேமிலிக்கு தகவல் சொல்லிருங்க. அவஙக வந்திரட்டும்”. அப்புறம்தான் சிகிச்சை ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்தது.

“காசு பிரச்சனையில்ல மேடம். நாங்க கட்டுறோம். நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டுமில்ல டிரீட்மென்டை கூட ஆரம்பிசிருங்க”

“அப்படியா. அப்படினா இந்தாங்க, இத ரிசெப்சென்ல கொடுத்து அட்மிட் போட்டுட்டுவாங்க, அன்கான்சியசா தான் இருக்காரு. ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கும்”. ஒரு பட்டியலை கையில் திணித்தார்.

“ம்ம்”

உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவரால் பணம் கட்ட இயலுமா என்பதை சோதனை செய்து விட்டுதான் ஆரம்பிக்கிறார்கள். காசில்லாதவனுக்கு என்ன மயித்துக்கு உயிர் வேண்டியிருக்கு என்பது தான் இவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது.

பணத்தைக் கட்டுவதற்கு போன இடத்திலும், மருத்துவமனை ஊழியர் கூடவே வந்து பணத்தை கட்டி விட்டீர்களா, ரசீது எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார். பணம் கட்டத்தான் வந்து விட்டேன், போய் சிகிச்சையை ஆரம்பியுங்கள் என்று கண்ணீரும் கோபமுமாக அவரை போய் சிகிச்சை ஆரம்பிக்க சொன்னேன்.  ஆனால், அவரது விதிமுறைகள் தெளிவானவை. காசு இல்லை என்றால் சிகிச்சை இல்லை காசு கட்டி ரசீது வந்தால்தான் எதுவும் ஆரம்பிக்கும் என்று தெளிவானது.

பணத்தைக் கட்டி விட்டு வந்து அடிபட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லலாம் என்று அவரின் பர்சை எடுத்து பார்த்தோம் அதில் சிறிது பணமும், நகை அடகு வைத்த இரசீதுகள் நாலைந்தும் இருந்தன. அவரது அலுவலக எண் கிடைத்தது. அதற்கு அழைத்து தகவல் கூறினோம். சற்று நேரத்தில் அவரின் அலுவலக நண்பர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்.

அடிபட்டவர் வாடகை வண்டி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்யும் மருதமுத்து . சிப்காட்டில் இயங்கும் ஐ-கேட் மற்றும் ஆஸ்பைர் நிறுவனங்களுக்கு வாடகை வண்டி சேவை செய்கிறது அந்நிறுவனம். இவரின் வயது 30-க்கு குறைவாக தான் இருக்கும், ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.

காலை 9-10 மணி வாக்கில் அலுவலகத்துக்கு போவதற்கு முன்பு, அலுவலக சம்பளம் போதாமல் கூடுதல் வருமானத்துக்காக அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவாராம். அதை முடித்து விட்டு, பல நாட்கள் காலை உணவு கூட சாப்பிடாமல் வேலைக்கு போய் விடுவாராம். இரவில் தாமதமாகப் போய் சில மணி நேரம் தூங்கி விட்டு அல்லது தூங்காமலே கூட அடுத்த நாள் அதிகாலையில் உழைப்பை ஆரம்பித்து விடுவார் என்று அவரது நண்பர்கள் கூறினார்கள். அரைப்பட்டினி, அதீத உழைப்பு என்று அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மேலும் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் அன்றுதான் வேலைக்கு சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவர் பசியிலும், வெயிலிலும், சோர்வடைந்து மயக்கமடைந்து விட வண்டி கட்டுப்பாடில்லாமல் நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதியிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

உறவினர்கள் வந்தபடியால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் கிளம்பி விட்டோம். அவ்வப்போது தொலைபேசி, எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தான் தகவல் கிடைத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். “ஏற்கனவே தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறீர்கள். இனி இன்னும் அதிகமாகும். உங்களால் முடியுமென்றால் இங்கே சிகிச்சை செய்கிறோம். இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுங்கள்” என்று செட்டிநாடு மருத்துவமனையில் கூறியிருக்கிறார்கள். செட்டிநாடு மருத்துவமனையை இயக்கும் பண ஓட்டம் வறண்டு போய் விடவே அடிபட்டவருக்கான சிகிச்சை நடைமுறையும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை ஆம்புலனசில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் போய்விட்டதை கூறியிருக்கின்றனர்.

அவரது விபத்தை அரையும் குறையுமாக பார்த்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல முதலில் முடிவெடுத்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. நிறுவனங்கள், மருத்துவமனைகளை விடுங்கள், ஒரு குடிமகனாக நானும் கூட முதலில் அலட்சியமாகத்தானே இருந்தேன்? இந்த அலட்சியம் என்னுள்ளே இயல்பாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கையை நிபந்தனையாகவும், பண்பாகவும் கொண்டிருக்கும் அனேக தமிழ் நாட்டுக் கிராமங்களில் எனது கிராமும் அடக்கம். ஊரிலே இருந்திருந்தால் உதவி செய்வதற்கு இத்தகைய இழுபறி போராட்டங்கள் இருந்திருக்காது. சென்னையில்?

இப்படியே அடுத்த சில நாட்களில் அவதிப்பட்டேன்.  ஊரிலிருந்து அம்மாவும், நண்பர்களும் அழைத்த போது கூட பேசத் தோணவில்லை. உலகமே என்னை புறக்கணித்துவிட்டது போல ஒரு தனிமை உணர்வு. முக்கியமாக அந்த விபத்தில் நானிருந்தால் எனக்கும் இதுதானே நிலைமை? இருப்பினும் இதை வெளியே கொண்டு வரவேண்டும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் உங்களது குற்ற உணர்வை கோபமாக மாற்றுங்கள் என்றார்கள். கோபமா? உதவி செய்ய தயங்கியவன் யார் மீது கோபம் கொள்ள முடியும்?

“நீங்கள் தயங்கினாலும் அன்று முழுவதும் மருத்துவமனைக்கு சென்று இறுதி வரை உடன் இருந்தீர்கள். ஆனால் ஓரிரு ஊழியர்களை அனுப்பி இந்த விபத்தில் உதவி செய்வதால், ஐ.டி நிறுவனங்களோ இல்லை மருத்துவமனைகளோ எதையும் இழக்கப் போவதில்லை. என்றாலும் பணம் மட்டுமே அவர்களது உலகம் என்பதால் ஒரு மனித உயிரை அலட்சியத்துடன் கொன்றிருக்கிறார்கள். அந்த தொழிலாளிக்கு உரிய வருமானம் இல்லாமல் சிரமப்பட வைத்து கொல்வதற்கு ஏற்ற உடல்நலக் கேட்டை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்தது என்று நீண்டது அந்த விவாதம். விபத்தின் இரத்தத்தின் பின்னே உள்ள மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தன.

என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை? இந்த உலகை இயங்க வைத்து பாதுகாக்கும் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு ஏழை என்பதாலேயே அவர் இறந்து போயிருக்கிறார். இல்லை கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்போது இந்தக் கொலைக்கு வருந்தி அழும் நிலையை கடந்து விட்டேன். வந்திருப்பதோ கோபம். இத்தனை வசதிகள் இருக்கும் சென்னை மாநகரில் ஒரு மனித உயிரைக் கொன்ற கொலைகாரர்கள் மீதான கோபம். அந்த கோபத்தீ என்னைத் தின்று செரிக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் நான் பழிவாங்க முடியும்.

இப்போது என்னிடம் குற்ற உணர்வு இல்லை.

( ஐ.டி துறை நண்பர் ஒருவரின் உண்மை அனுபவம்)

– வினவு செய்தியாளர்.

திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்

3

வுத்தி வேடியப்பன் மலைகள். நீண்ட நெடிய சாலையில் பயணித்தபடி பார்க்கும் போது தூரத்தில் மேகங்கள் கவிழ்ந்து தொடுவானத்திற்கு திரை போட்டது போல சாம்பல் நிறப் பரப்பாக விரிந்திருக்கும் இரண்டு மலைகள். இம்மலைகள் சார்ந்த பகுதியில் வாழும் 51 கிராம மக்களைப் பொறுத்த வரை அது அவர்களது வாழ்வுக்கு உயிர் கொடுக்கும் தாய்மையின் சின்னம். பருவமழை காலத்தில் சுமார் 40 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் ஓடைகளின் நீர் பிடிப்புப் பகுதி. பல வகையான அரிய விலங்கு, தாவர இனங்களின் தாயகம். 28,000 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயத்துக்கு உயிர் கொடுக்கும் ஆதாரம்.

கவுத்தி வேடியப்பன் மலை
கவுத்தி வேடியப்பன் மலை

இனாம் காரியந்தல் கிராமத்தில் 4 ஏரிகள், திருவண்ணாமலை குடிநீருக்கு பயன்படும் வேங்கிக்கால் ஏரி, ஆடையூர் ஏரி, ஊசம்பாடி ஏரி, தாங்கல் ஏரி, மன்னை ஏரி, கொளக்கரை வாடி ஏரி, வாய்விடந்தாங்கல் ஏரி, படூர், மேல் படூர், பெரியகுளம் ஏரி, நத்தவாடி ஏரி, வடமாத்தூர் ஏரி, நாச்சிப்பட்டு ஏரி, கன்னக் குரிக்கை பாய்ச்சல், பெரிய கோலப்பாடி, சின்ன கோலப்பாடி, பீமாநந்தல், தேவநந்தல், கருந்துவம்பாடி, பெரியகுளம், குலால்பாடி, ஏந்தல், ஆலத்தூர், பெரிய பாலிப்பட்டி, சின்ன பாலிப்பட்டி, புனல்காடு, தேவநந்தல் ஆகிய கிராமங்களின் நீர்நிலைகள் கவுத்தி வேடியப்பன் மலையை சார்ந்து இருக்கின்றன.

அந்த மலை அடிவாரத்தில் கொட்டிக் கிடக்கும் கற்கள் தம்முள் அடக்கியிருக்கும் இரும்புத் தாதுவின் பளபளப்பில் வெயிலில் மின்னுகின்றன. பல லட்சம் ஆண்டுகளாக இந்த கற்களுக்குள் உறைந்திருக்கும் இரும்புத் தாது அப் பகுதியில் வசிக்கும் 5 லட்சம் மக்களைப் பொறுத்த வரை அந்த மலையின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். கவுத்தி வேடியப்பன் மலைகளிலிருந்து இறங்கி வரும் நீருக்கு நோய்களை தீர்க்கும் அரிய மருந்து குணத்தை கொடுக்கும் ஜீவ சத்து. மக்களுக்கு சொந்தமான இந்த கனிம வளம் மக்களின் பொது நலனுக்காக கூட பயன்படப்போவதில்லை. அதை பறித்து தின்ன ஒரு தனியார் முதலாளி ஆலாய் பறக்கிறான்.

இம்மலைகள் அமைந்துள்ள திருவண்ணாமலையிலிருந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியானா மாநிலத்தின் ஹிசாரைச் சேர்ந்த ஜிண்டால் குடும்பத்தினரை பொறுத்த வரை அம்மலை, அவர்களது உருக்குத் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதற்கு தேவைப்படும் இரும்புத் தாதை பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பொதி மட்டுமே. மலையை உடைத்து வெளியில் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, உருக்கு ஆக்கப்பட்டு, கிராக்கி உள்ள இடங்களில் விற்று இலாபத்தை சுருட்டக் காத்திருப்பதுதான் அந்த இரும்புத் தாது. தனது உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் குவிக்க தேவைப்படுவதுதான் அந்த மலை. மக்களின் இரும்பு தாது கூட மக்களுக்கோ அரசுக்கோ பயன்படப்போவதில்லை.

கவுத்தி வேடியப்பன் மலைகளை வெடி வைத்து துளையிட்டு, 30 மீட்டர் அகலமான பள்ளங்கள் தோண்டி திறந்தவெளி சுரங்கம் வெட்டி ஆண்டுக்கு 10 லட்சம் டன் தாது எடுப்பதற்கு ஜிண்டால் திட்டம் தயாரித்திருக்கிறது. 1:0.36 என்ற விகிதத்தில் இரும்புத் தாது அடங்கியிருக்கும் கற்களிலிருந்து 1 டன்னுக்கு 360 கிலோ இரும்புத் தாது எடுத்து விட்டு 640 கிலோ சக்கையை கொட்டி விடும்.

ஓ.பி.ஜிண்டால்
ஓ.பி.ஜிண்டால்

இந்தப் பணிகளின் போது சுரங்கப்பகுதியில் 36.7 முதல் 56 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் சுற்று வட்டாரத்தில் 35.7 முதல் 52 டெசிபல் சத்தம் ஏற்படும் என்றும் ஜிண்டாலின் அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.35 லட்சம் லிட்டர் தண்ணீர் தூசியை தணிப்பதற்கும், மரம் வளர்ப்பதற்கு 30,000 லிட்டர் தண்ணீரும், குடிநீருக்காக 20,000 லிட்டர் தண்ணீரும், 4 லட்சம் லிட்டர் தண்ணீர் இரும்புத் தாதுவை செறிவூட்டவும் என மொத்தம் 560 கனமீட்டர் (5.6 லட்சம் லிட்டர்) தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று கூறுகிறது திட்ட அறிக்கை.

இந்த திட்டத்தின்படி எடுக்கப்படும் 1 டன் இரும்புத் தாதுவுக்கு  ஜிண்டால் அரசுக்கு ரூ 27 மட்டும் உரிமத் தொகை செலுத்தும். சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட தாதுவின் விலை ஒரு டன்னுக்கு ரூ 6,000 வரை விலை வைத்து விற்கும். மக்களுக்கு நாமம், ஜிண்டாலுக்கு பெரும் இலாபம். அரசோ தரகு வேலை பார்க்கிறது.

இந்தத் திட்டத்தில் சுமார் 180 பேர் வரை நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் இன்னும் பல நூறு பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறது ஜிண்டால். இந்த திட்டத்தின் மூலம் பகுதியில் கல்வி, நீர் வழங்கல், மின்சாரம், மருத்துவ வசதிகள் மேம்படும் என்றும் சேலத்தில் உள்ள உருக்கு ஆலைக்கு இரும்புத் தாது அனுப்பப்படும் என்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மலை தகர்க்கப்படும் என்றும் தாது மணல் லாரிகளில் பத்திரமாக மூடப்பட்டு கொண்டு போகப்படும் என்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் சுற்றுச் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஜிண்டால் உறுதி அளித்திருக்கிறது. இங்கு வெட்டப்படும் 2.2 லட்சம் மரங்களுக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் மரங்கள் வளர்க்கப்படும் என்று கூறியிருக்கிறது. நல்ல வேளை ஜிண்டாலின் தாயகத்திற்கு அருகில் உள்ள தார் பாலைவனத்தில் மரங்கள் வளர்ப்பதாக அவர்கள் கூறவில்லை.

இந்தத் திட்டத்துக்கு எதிராக “இப்போது எங்களுக்கு காது நன்கு கேட்கிறது. எங்களுக்கு உங்கள் திட்டமும் வேண்டாம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கு உங்கள் செவிட்டு மெசினும் வேண்டாம்.” என்றும் “இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டி விட்டு எங்கோ திருநெல்வேலியில் மரம் வளர்ப்பீர்கள் என்று என்ன உத்தரவாதம், அப்படியே வளர்த்தாலும் அதனால் எங்களுக்கு என்ன பயன்” என்றும் “இங்கு யாரும் வேலை இல்லாமல் சுத்திக் கொண்டிருக்கவில்லை, உங்கள் திட்டம் கொண்டு வரப் போகும் 150 வேலைவாய்ப்புகளை நீங்களே வைச்சுக்கோங்க, மீதி பேரை தினக் கூலி அகதிகளாக நகரங்களுக்கு விசிறியடிக்கும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்” என்றும், “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்றும் தமது நிலத்தையும், விவசாயத்தையும், வாழ்க்கையையும் பாதுகாக்க போராடுகின்றனர் மண்ணின் மைந்தர்களான திருவண்ணாமலை மக்கள்.

இம்மக்களுக்கும் இந்திய/தமிழக அரசுகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தால் ஆதரிக்கப்படும் ஜிண்டால் குழுமத்துக்கும் இடையேயான முரண்பாடு எப்படி தீர்க்கப்படும்?

சஜ்ஜன் ஜிண்டால்
சஜ்ஜன் ஜிண்டால்

ஓ.பி. ஜிண்டால் அரியானா மாநிலத்தின் ஹிசார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அம்மாநிலத்தின் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஜிண்டால் உருக்கு நிறுவனத்தின் (Jindal Steel Works Corporation) முதலாளியான அவரது மனைவி சாவித்திரி,  ஜிண்டால் அவரது மறைவுக்குப் பிறகு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அரியானா அமைச்சராகவும் இருந்து வருகிறார். நான்காவது மகன் நவீன் ஜிண்டால் குருக்சேத்திரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சுரங்கத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகாரவர்க்க முதலாளிகள் குடும்பத்தில் முக்கியமானவர்களாக பரிணமித்திருப்பவர்கள் ஜிண்டால் குடும்பத்தினர். சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 295-வது இடத்தையும் இந்தியாவில் 10-வது பெரிய பணக்காரராகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் மதிப்படப்பட்டுள்ளனர்.

ஓ.பி. ஜிண்டால் 2005-ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு தான் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது மனைவி சாவித்திரி ஜிண்டாலின் பெயருக்கு மாற்றியிருந்தார். பிருத்விராஜ் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், ரத்தன் ஜிண்டால், நவீன் ஜிண்டால் ஆகிய நான்கு மகன்களுக்கும் அந்த சொத்துக்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. ஆனால், சொத்துக்களின் உடைமை பல அடுக்கு பினாமி கம்பெனிகளை முன் வைத்து இந்து கூட்டுக் குடும்பம் என்ற வடிவிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையில் இயங்கும் ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிட்டெட் (JVSL) என்ற நிறுவனம் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் உருக்கு ஆலைகளை இயக்கி வருகிறது. பங்குதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு லாபத்தை அதிகரிக்க வேண்டும், அதற்கு  உருக்கு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும், அதற்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக இரும்புத் தாது தேவை. அந்த தேடலில் இருந்த ஜிண்டாலின் கண்ணில் விழுந்ததுதான் சேலத்தில் இயங்கி வந்த தென்னக இரும்பு/உருக்கு நிறுவனம் (Southern Iron and Steel Company – SISCOL).

சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்

1990-களில் கோவை லட்சுமி மில் வொர்க்ஸ் 40%, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) 10% ஆகியவற்றின் கூட்டு பங்கு நிறுவனமாக உருவாக்கப்பட்ட சிஸ்கால் ஆலைக்கு தேவையான கடன் கொடுக்காமல் இழுத்தடித்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தேடிப் பிடித்த புதிய முதலாளிதான் ஓ.பி.ஜிண்டால். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.பி. ஜிண்டால் லட்சுமி மில் வொர்க்சிடமிருந்து சிஸ்காலின் பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தை தனது குடும்பத்துக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அந்நிறுவனத்தில் 11% பங்குகளை வைத்திருந்தது டிட்கோ.

இது ஒருபக்கம் நடந்து முடிந்திருக்க, இதற்கு இணையாக அந்த ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலைகளில் புதைந்திருக்கும் 3.5 கோடி டன் இரும்புத் தாதை தோண்டி எடுப்பதற்கான கூட்டு நிறுவனம் அமைக்க எடுக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் கோரியது, டிட்கோ. அந்த மலையை குத்தகைக்கு விடப் போவது ஜிண்டாலுக்குத்தான் என்று ஏற்கனவே திரைமறைவு பேரங்களில் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் மக்கள் சொத்தை முதலாளிகளுக்கு ஏலம் விடுவதை விதிமுறைகளின் படி செய்வதாக போக்கு காட்டப்பட்டது. விண்ணப்பித்த 15 நிறுவனங்களில் 6 மட்டுமே தேவைப்படும் ரூ 250 கோடி நிகர சொத்து மதிப்பு கொண்டிருந்தன. கோவாவிலும், கர்நாடகாவிலும் இரும்புத் தாது வெட்டி ஏற்றுமதி செய்து நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வரும் 4 நிறுவனங்கள் கேட்கப்பட்ட விபரங்களை சமர்ப்பித்திருந்தன.

மே 4-ம் தேதி நடந்த டிட்கோ இயக்குனர்கள் கூட்டத்தில் ஜிண்டாலுக்கு ஒப்பந்தம் வழங்குவதாக முடிவு செய்து இயக்குனர் குழு சார்பில் ரமேஷ்ராம் மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். சரியாக 20 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் செயலராகவும் இருக்கும் ரமேஷ்ராம் மிஸ்ரா டிட்கோவுக்கு  ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட அனுமதி அளித்து கடிதம் அனுப்புகிறார். அடுத்த நாளே டிட்கோவுக்கும் ஜிண்டாலுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒரு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கே பல நாட்கள் இழுத்தடிக்கும் அரசு நடைமுறைகளுக்கு மத்தியில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் ஒரு சில மலைகளை தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தம் 3 வாரத்தில் போடப்பட்டு விட்டது என்ற சாதனையை எண்ணிப் பாருங்கள். ஐஏஎஸ் அதிகார வர்க்கம் இந்த நாட்டு தரகு முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் வேகத்தை பாருங்கள்!

ஜிண்டால் குடும்பம்
ஜிண்டால் குடும்பம்

டிட்கோவுக்கும், ஜிண்டாலுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் படி, ஜிண்டால் குழுமம் டிம்கோ (தமிழ்நாடு இரும்புத் தாது சுரங்க நிறுவனம்) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்; திட்டப்பணிக்கும் தேவையான அனுமதிகள் அனைத்துக்கும் ஜிண்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்; வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத் தாது சிஸ்கால் நிறுவனத்துக்கு தரப்பட வேண்டும்; டிட்கோ தன் பங்காக 1% முதலீடு செய்யும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டிட்கோ தனது பங்கு மூலதனத்தை ஜிண்டாலுக்கு விற்று விட வேண்டும்.

இந்நிறுவனத்தின் பெயரில் 99% பங்குகளை வைத்திருக்கும், 3 ஆண்டுகளில் அதை 100% ஆக உயர்த்திக் கொள்ளவிருக்கும், தனக்கு சொந்தமான சிஸ்காலுக்கு இரும்புத் தாதுவை எடுக்கவிருக்கும் ஜிண்டாலின் பெயர் அடையாளமே இல்லாமல், 1% வைத்திருக்கும் டிட்கோவை முன் வைத்து, டிம்கோ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிறுவனம் போல பிம்பத்தை கட்டியமைக்கின்றனர்.

இதற்கு 3 ஆண்டுகளுக்குள் 22.2.2008 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிஸ்கால் முழுமையாக ஜிண்டால் விஜயநகர் ஸ்டீலுடன் இணைக்கப்பட்டு செரிக்கப்பட்டு விட்டது என்பதை பார்க்கும் போது இந்த மோசடி அப்பட்டமாக புரிய வரும்.

2005-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி ஜிண்டாலின் பினாமி நிறுவனங்களான விருந்தாவன் சர்வீசஸ், சன் இன்வெஸ்ட்மென்ட் முதலானவற்றுக்கு 99% பங்குகள், தமிழக அரசு நிறுவனமான டிட்கோவுக்கு 1% பங்குகள் என்ற வகையில் புதிய நிறுவனமான டிம்கோ உருவாக்கப்படுகிறது.

டிம்கோ நிறுவனத்தில் பங்கு யார் பெயரில் இருக்கிறது என்று பார்த்தால் அது ஜிண்டால் -1, ஜிண்டால் -2, ஜிண்டால் -3 என்று வரிசையாக ஜிண்டால் குடும்பத்தினரையும் பல உறவினர்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

சன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓம் பிரகாஷ் ஜிண்டால், ரத்தன் கே ஜிண்டால், புரான் சந்த் சர்மா, பி ஆர் ஜிண்டால், சங்கீதா ஜிண்டால், ஓ பி ஜிண்டால் (இந்து கூட்டுக் குடும்பம்), சாவித்ரி தேவி ஜிண்டால், ஸ்மினு ஜிண்டால், திருப்தி ஜிண்டால், தாரிணி ஜிண்டால், தான்வி ஜிண்டால், அபுதய் ஜிண்டால், ஊர்வி ஜிண்டால், தீபிகா ஜிண்டால், நவீன் ஜிண்டால் என்று வரிசையாக ஓ.பி.ஜிண்டாலின் வீட்டில் பிறந்த குஞ்சு குளுவான்கள் வரை பங்குதாரர்களாக உள்ளனர். இன்னொரு முக்கிய நிறுவனமான விருந்தாவன் கம்பெனியை கட்டுப்படுத்தும் அளவு பங்குகளை வைத்திருப்பது சன் சர்வீசஸ் நிறுவனம். இப்படி ஒன்றுக்குள் ஒன்று என புரிந்து கொள்ள முடியாத இடியாப்பச் சிக்கலாக இருப்பவைதான் இந்திய தரகுமுதலாளிகளின் சொத்து விவகாரங்கள்.

மும்பை ஜிண்டால் ஹவுஸ்
மும்பை ஜிண்டால் ஹவுஸ்

ஆர்.எஸ்.எஸ்சின் பொருளாதார மேதை குருமூர்த்தி உலகுக்கே வழிகாட்டக் கூடியதாக முன் வைத்த இந்திய பாணி இந்து கூட்டுக் குடும்ப, சாதி அடிப்படையிலான முதலாளித்துவத்தின் லட்சணம் இதுதான்.

“நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன் ஊதி ஊதி தின்னலாம்” என்ற இந்த ஒப்பந்தத்திற்குள் இருக்கும் பூனைக் குட்டி 2 நாட்களுக்குப் பிறகு வெளி வந்தது. ஒப்பந்தத்தில் இரும்புத் தாதுவை பெறவிருக்கும் சிஸ்கால் நிறுவனமும் ஜிண்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. அதாவது, தமிழக மக்களுக்கு சொந்தமான இரும்புத் தாதுவை பெற்று லாபம் குவிக்கப் போவது ஜிண்டால், அதை வெட்டும் நிறுவனத்தின் உரிமையும் ஜிண்டாலுக்கு, ஆனால் பெயரளவில் பங்குதாரராக தமிழக அரசு நிறுவனமான டிட்கோ.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 26.5.2000 அன்று கவுத்தி-வேடியப்பன் மலையை உடைத்து 325 ஹெக்டேரில் இரும்புத் தாது எடுப்பதற்கு உரிமம் கோரி டிட்கோ மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு பொறுப்பான அடியாளாக செயலில் இறங்கிய டிட்கோ, தான் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை புதிய நிறுவனமான டிம்கோ (ஜிண்டாலுக்கு  சொந்தமானது) வுக்கு மாற்றிக் கொள்ளும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.

இவ்வாறு, கவுத்தி வேடியப்பன் மலையையும், டிம்கோ நிறுவனத்தையும் இவர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மாவின் பொற்கால ஆட்சியின் கீழ் இருந்த டிட்கோ நிறுவனம் முழு முயற்சிகளுடன் உழைத்தது. என்ன இருந்தாலும் ஜிண்டால் குடும்பத்தினர் பாசப் பிணைப்பும், தேசப் பற்றும் உடைய அற்புத மனிதர்கள். கவுத்தி வேடியப்பன் மலையைச் சார்ந்துள்ள 51 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மனிதர்கள் ஜெயலலிதாவுக்கு என்ன நிதி கொடுத்து விட முடியும். தேர்தல் வந்தால் தலைக்கு இத்தனை நூறு ரூபாய் என்று கொடுக்க வேண்டிய மக்கள் தொகைதான் அது, தரக் கூடியது அல்ல என்று ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும்.

3.3.2006 அன்று கவுத்தி மலையில் 30 ஆண்டுகளுக்கு இரும்புத் தாது எடுக்க டிம்கோவுக்கு அனுமதி வழங்கும் படி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்புகிறது. அடுத்த 10 நாட்களில் 13.6.2006 அன்று மத்திய அரசின் சுரங்கத் துறை கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத் தாது எடுக்க அனுமதியை வழங்கி விடுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் பிரச்சனைக்கோ, காவிரியில் நீர் விடச் சொல்லியோ தமிழகத்திலிருந்து எழுதும் கடிதங்களுக்கு ஆண்டுக் கணக்கில் நிவாரணம் கிடைக்காமல் இழுத்தடிக்கும் போது ஜிண்டாலுக்கு சென்னையில் அம்மா அடியாள் வேலை பார்க்க, மத்தியில் ஜிண்டால் குடும்பம் நேரடியாக செல்வாக்கு செலுத்த அனுமதிகள் மழையாக கொட்டியிருக்கின்றன.

கவுத்தி வேடியப்பனை மலைமேலும் கவுத்திமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தாது எடுப்பதற்காக 325 ஹெக்டேரில் 2.22 லட்சம் இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டுவதற்கும் இரும்பு தாதுவை சுத்தம் செய்தல் மற்றும் அடர்ப்பித்தல் ஆலை அமைப்பதற்கும் வன பாதுகாப்பு சட்டத்தின் படி அனுமதி கேட்டு டிம்கோ விண்ணப்பத்தது.

27.12.2008 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம் ராஜேந்திரன் மற்றும் வேலூர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  இளங்குமரன் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினர். டிம்கோ பிரதிநிதி விஜய் சர்மாவும், 1000-க்கும் அதிகமான மக்களும் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் கூட்டம் நடந்தது.

டிம்கோ சார்பாக ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் திட்டத்தினால் பகுதிக்கு வரப் போகும் வேலை வாய்ப்பு, சுற்றுச் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள், மருத்துவமனை திறத்தல் என பட்டியலிட்டிருக்கிறார்.

கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். “எங்களை கொன்று போட்டு விட்டு எங்கள் மலை மீது கை வையுங்கள்” என்று 80 வயதான மூதாட்டி ஒருவர் கூறியிருக்கிறார். திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த படூர் கே ரமேஷ் என்ற வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் மாவட்டத்தில் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை அனுப்பியிருக்கிறார். இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன.

அத்தோடு திட்டம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 2011-ம் ஆண்டு அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர்ந்த பிறகு ஜிண்டாலுக்கு மீண்டும் உயிர் துளிர்க்கிறது. 2014 பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் ஆய்வு செய்ய வருகிறார். அதைத் தொடர்ந்து  இனாம் காரியந்தல், பெரிய பாலியப்பட்டு, சின்ன பாலியப்பட்டு, அடி அண்ணாமலை உள்ளிட்டு 51 கிராம மக்கள் ஜிண்டால் திட்டத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.

சில இயக்கங்கள், தனிநபர்கள், உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்தை எதிர்த்து கிராமங்களில் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கிராம மக்களில் பலர் ஜிண்டால் நிறுவனம் இயங்கும் குதிரேமுக் பகுதிக்கு சென்று வந்திருக்கின்றனர் அந்த பகுதிகளில் விவசாயம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது; குடிநீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறைதான் விடப்படுகிறது; துங்கபத்ரா, நேத்ரா நதிகள் வறண்டு போயிருக்கின்றன என்ற அறிந்து தமது மலைகளை பாதுகாப்பதில் மேலும் உறுதியடைந்திருக்கின்றனர்.

ஜிண்டால் சாம்ராஜ்யம்
ஜிண்டால் சாம்ராஜ்யம்

கிராம இளைஞர்கள் ஆட்டோ வைத்து கிராமம் கிராமமாக ஜிண்டால் திட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கனிமவளத் துறை வண்டி ஒன்று வந்து கல்லை ஜீப்பில் எடுத்துச் செல்ல முயற்சித்த போது மக்களை அதை சிறைப்பிடித்து வைத்து, விட மறுத்திருக்கின்றனர்.

ஜனவரி மாதம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3 நாள் பைக் பிரச்சாரம் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் அணிதிரட்டப்பட்டு 2014 மார்ச் 14 அன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆடையூர், வேடியப்பனூர், சின்னபாலியப்பட்டு, பெரியபாலியப்பட்டு, வெங்காயவேலூர், தேவனந்தல், வடமாத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டத்தை எதிர்த்து பேசியிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரான இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் என்ற வழக்கறிஞர் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே, “நாம் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையை பாதுகாக்க, மார்ச் 17-ம் தேதி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களிடம் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் நடத்துவோம்” என்று போராட்டத்தை இந்துத்துவ பாதையில் திருப்ப முயற்சித்திருக்கிறார்.

அதன்படி, மார்ச் 17-ம் தேதி ஆதி அண்ணாமலையார் கோயில் அருகே கிரிவலப் பாதுகாப்பு குழு மற்றும் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். வேடியப்பன் சாமி அருள் வந்துவிட்டதாக கூறி 5 பெண்கள் ஆடியிருக்கின்றனர். உடனே வழக்கறிஞர் சங்கர் “அண்ணாமலை யாரை தவிர நமக்கு வேறு கதியில்லை. அதனால், அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் நாளை (இன்று) அங்க பிரதட்சணம் செய்து ஜிண்டால் திட்டத்தை எதிர்ப்போம்” என்று அறிவித்திருக்கிறார். அடுத்த நாள் அங்க பிரதட்சண போராட்டத்துக்கு சுமார் 50 பேர் போயிருக்கின்றனர். “எல்லாம் வல்ல அண்ணாமலையார் உங்களை காப்பாற்றுவார்” என்று சொன்னால் வேலைக்காகாது என்று சங்கரையும் தொண்டு நிறுவனத்தின் பண உதவியையும் துரத்தி விட்டிருக்கின்றனர் போராடும் மக்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஆரம்பித்து விட ஓட்டுக் கட்சிகள் படையெடுத்திருக்கின்றன. தி.மு.கவின் ஸ்டாலின் போராட்டக் குழுவினரை சந்தித்திருக்கிறார். “எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்ற அவரிடம், “நீங்களும் பணம் வாங்கி விட்டீர்கள்” என்று சந்தேகமாக இருக்கிறது என பொதுமக்களில் ஒருவர் கேட்டிருக்கிறார். “நான் இதைப் பற்றி கேள்விப்படவேயில்லை, எ.வ.வேலு சொல்லித்தான் தெரியும். எங்கள் ஆட்சியில் சில அனுமதிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்” என்றும் “இதை தடுப்பதற்கு மாநில அரசு எதுவும் செய்ய முடியாது, மத்திய அரசில் நாங்கள் பங்கேற்கும்படி நிலை வந்தால் செய்ய முடியும்” என்ற அவர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறியிருக்கிறார்.

“இந்த புராஜக்ட் ரத்து ஆகவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்” என்ற மக்களிடம், “அது பலன் தராது, தேர்தலை புறக்கணித்தால் உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்காது. போன தேர்தலில் அ.தி.மு.கவின் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஓட்டு போட்டீர்கள், அவர் என்ன செய்தார், இந்த தேர்தலில் அவரது கட்சியை தோற்கடிக்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள்” என்று தனது ஓட்டுப் பொறுக்கலில் குறியாக இருந்திருக்கிறார்.

கவுத்தி வேடியப்பன் மலைதொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஜிண்டாலும், ஜெயாவும் நிற்கும் போட்டோவை காட்டி பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பூமிக்கு கீழ் இருப்பவை பற்றி தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது. எனவே மத்தியில் நாம் கட்டுப்படுத்தும் ஆட்சி அமைய உதவுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஜெயா சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கவுத்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு கொடுப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார். தானே அனுமதிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இப்போது திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று முழங்கியிருக்கிறார்.

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அ.தி.மு.கவோ எதிர்க்கும் தி.மு.கவோ எதையும் செய்யப் போவதில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்று தி.மு.க மாவட்டச் செயலாளரும் கல்வி கொள்ளையருமான எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டாலும் அவரும் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகரசபைத் தலைவர் பாலச்சந்திரன் போன்றவர்களும் ஏற்கனவே மலையை உடைத்தும், கல்விக் கொள்ளை அடித்தும் சேர்க்கும் பணத்தை பெருக்கிக் கொள்ள புதிய காண்டிராக்ட் வாய்ப்புகளை அள்ளித்தரும் ஜிண்டால் திட்டத்தை தனிப்பட்ட முறையில் வரவேற்கவே செய்வார்கள்.

எது எப்படியோ ஜிண்டால் தரப்பில் அரசு தெளிவாக இருக்கிறது.

இது போன்ற இயற்களை வளங்கள் அடங்கிய இடத்தை கைப்பற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சி, இன்னொரு காலில் ஆயுதம் தரித்து போக வேண்டும் என்கிறார் சத்தீஸ்கர் மாநிலத்தில் நியமகிரி மலையை பாதுகாக்க போராடும் பழங்குடி மக்களை எதிர்த்து இறக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் இயக்குனர் விஜயகுமார்.

‘தேர்தல் ஆணையம் போல, ஆளும்/எதிர்க்கட்சி தலையீடுகள் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக காவல் துறை மாற்றப்பட்டால் இத்தகைய பிரச்சனைகளை எளிதில் முடித்து விடலாம்’ என்று இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் கூறியிருக்கிறார். இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்து.

naveen-jindal‘கவுத்தி வேடியப்பன் மலைப் பகுதி மக்கள் ஜிண்டால் தரவிருக்கும் 180 வேலை வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு தமது நிலங்களையும், நீராதாரங்களையும், மலையையும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை, அதை செய்தேதீர வேண்டும்’ என்பதுதான் அரசின் நோக்கம். அதை நிறைவேற்றுவதற்கு ஒரு காலில் வளர்ச்சியை தரித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் முதல், உள்ளூர் அரசியல்வாதிகள் வரை இறங்க, மறுகாலில் ஆயுதம் தரித்து ஆயுதப் படைகள் இறக்கப்படும். ஒரு கையில் பைபிள், இன்னொரு கையில் துப்பாக்கி கொண்டு போன காலனிய ஆட்சியாளர்கள் போல நம் மக்களின் நிலங்களையும், வாழ்க்கையையும் பிடுங்கும் மறுகாலனியாக்கத்தை செயல்படுத்துவதற்கான ஏஜெண்டாக இந்திய அரசு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் கேள்வி எளிமையானது : கவுத்தி – வேடியப்பன் மலையிலேயே இரும்புத் தாதுவை விட்டு வைப்பது, கிராம மக்களின் பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்ற அடிப்படையில் போராட யார் முன்வருவார்கள்?

தன்னார்வக் குழுக்களும், ஓட்டுக் கட்சிகளும் ஜிண்டாலுக்கு எதிராக போராடுவது போல போக்கு காட்டிவிட்டு துரோகம் செய்வார்கள். மக்களும், ஜனநாயக சக்திகளும், அறிஞர்களும் இந்த பிரச்சனையை கிராமங்களை சார்ந்த பெரும்பான்மை விவசாய மக்களின் விடுதலைக்காக போராடும் புரட்சிகர நக்சல்பாரி இயக்கங்களில் அணிதிரண்டு போராடுவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம். அதை புரிந்து கொண்டு மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களோடு இதை சேர்ப்பதும், போர்க்குணமிக்க வழிகளில் போராடுவதும் மட்டுமே சரியாக இருக்கும்.

–    செழியன்

மேலும் படிக்க

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்

1

 

தொழிலாளர் கமிட்டி

அன்பார்ந்த தொழிலாளர்களே!

தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனசு, பி.எப்., ஈ.எஸ்.ஐ. உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளைக் கூட எந்த ஆலை முதலாளிகளும் மதிப்பதில்லை. ஒசூர் தொழிற்சாலைகளில் நடக்கும் அடக்குமுறைகளை காணும்போது இது ஒரு உச்சநிலையை அடைந்திருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, எல்லா ஆலை முதலாளிகளும் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான, பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதில்லை. சங்க நிர்வாகிகளை இடைநீக்கம், இடமாற்றம், பணிநீக்கம் செய்து சங்கத்தின் செயல்பாடுகளை முடக்குகின்றன. மேலும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆண்டுக் கணக்கில் நிறைவேற்றாதது மட்டுமல்ல, அவ்வாறு நிறைவேற்றுவதாக இருந்தால், ஆலை நிர்வாகம் விரும்புகின்ற சட்டவிரோத, கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தத்தை (தொழிற்தகராறு சட்டம், பிரிவு18 உட்பிரிவு 1 அடிப்படையில்) மட்டும் தான் போடுகின்றனர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சங்க நிர்வாகி உட்பட 3 பேர் பணிநீக்கம், ஒருவர் இடைநீக்கம், 7 பேர் கட்டாய பணி இடமாற்றம் என சங்கத்திற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவிட்டு கடந்த 7 மாதங்களாக, தனிநபருடன் ஹோட்டலில்தான் ஒப்பந்தம் பேசமுடியும் என கட்டப்பஞ்சாயத்து செய்கிறது ஆலை நிர்வாகம்.

முருகப்பா குழும நிறுவனமான கார்போரண் டம் ஆலையில் ஊதிய உயர்வு கோரிக்கைக்கான பேச்சுவார்த்தையை பெரும்பான்மை சங்கத்துடன் நடத்தினாலும் அதனை சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தமாக போட மறுக்கிறது. ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கும் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் 3 பேர் பணிநீக்கம், 3 பேர் இடைநீக்கம் மற்றும் ஒருவர் இடமாற்றம் என்று ஒட்டுமொத்த சங்க நிர்வாகிகளையே ஆலையைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு ஆலையில் பெரும்பான்மை சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது செல்போனில் படம் பிடிப்பது, கேமாரா முன்னால் நின்று டீ குடிக்க வேண்டும் என்பது, தொழிலாளர்களின் ஜட்டியில் கையை விட்டு சோதனை செய்வது, அவமானப்படுத்துவது போன்ற பல அடக்குமுறைகளை செலுத்தி, தொழிலாளர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு சங்கத்தை உடைப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது.

வெக் இந்தியா ஆலையில் பெரும்பான்மை சங்க நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல அடக்குமுறைகளை இவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பான்மை சங்கத்துடன் பேச மறுப்பது மட்டுமன்றி விரல்விட்டு எண்ணத்தக்க சிலரை வைத்துக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சட்டவிரோதமான (18/1) ஒப்பந்தம் போட இருப்பதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தொழிலாளர்களை ஆண்டுக்கணக்கில் ஏமாற்றி வருகிறது.

டி.வி.எஸ். குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலை 12 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணிமூப்பை ரத்து செய்துள்ளது. இங்கு சங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டு தொழிலாளர்கள் மீது டி.வி.எஸ். நிர்வாகம் செலுத்தும் அடக்குமுறைகள், பண்ணையடிமைத்தனத்தைவிட கேடானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.சி. ஆலையில் 36 மாதங்கள் ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுத்தடித்து, இறுதியில் 8 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த பிறகுதான் கட்டப்பஞ்சாயத்து ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது இவ்வாலை நிர்வாகம். ஜி.எம்.டி. ஆலையில் ஊதியஉயர்வு வழங்கால் 60 நாட்களாக தொழிலாளர்களைப் பட்டினி போட்டு பணிய வைப்பதற்கான அடக்குமுறையை அவ்வாலை நிர்வாகம் செலுத்தி வருகிறது.

எக்ஸைடு, குளோபல் ஃபார்மாடெக், அசோக் லேலாண்டு, பாராகோட் போன்ற பல ஆலைகளில் பெரும்பான்மை சங்கத்தை வைத்தே கட்டப் பஞ்சாயத்து (18/1) ஒப்பந்தங்களை திணித்துள்ளன அவ்வாலை நிர்வாகங்கள். பல ஆலைகள் சங்கமே வைக்க விடாமல் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துகின்றன.

லேலாண்டு, டி.வி.எஸ்., டைடான், வெண்ட் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக், லுக்இன்டியா உள்ளிட்ட பல ஆலைகளில் உற்பத்தியின் பெரும் பகுதி அவுட்சோர்ஸ், ஒப்பந்த – தற்காலிக தொழிலாளர்கள், டீம் லீடர், ஸ்டாப் ஒர்க்கர் போன்ற முறைகளைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. பணி நிரந்தரம், 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு, போனசு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

மொத்தத்தில், தொழிற்சாலைகளில் சட்டத்தைப் பற்றி பேசமுடியாது என்ற நிலையை முதலாளிகள் உருவாக்கிவிட்டனர். தொழிற்சங்க சட்டங்கள் நடைமுறையில் செல்லா காசாகி விட்டன. அறிவிக்கப்படாத பாசிச காட்டாட்சியை ஆலைக்குள் முதலாளிகள் செலுத்துகின்றனர்.

முதலாளிகளின் இந்த காட்டாட்சிக்கு அரசு எந்த அளவிற்கு துணை போகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்கள் முன் வைக்கிறோம். சென்ற 2012ம் ஆண்டு கமாஸ் வெக்ட்ரா ஆலையில் நடத்தப்பட்ட 105 நாள் உள்ளிருப்புப் போராட்டத்தின் இறுதியாக போலீசு, ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் உதவி ஆணையர் போன்ற அரசின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகம் தூக்கியெறிந்து விட்டது. ஒப்பந்த மீறல் – கிரிமினல் குற்றவாளிகளான இந்த ஆலை அதிகாரிகள் உள்ளே தள்ளப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பொதுவானது என்ற கூற்று நடைமுறையில் பொய் என்பது மட்டுமல்ல, முதலாளிகள் எவ்வளவு கொடிய குற்றங்கள் இழைத்தாலும் அவர்களை இந்த அரசு ஆதரிக்கும் என்பதையும் மேற்கண்ட இந்த சம்பவம் காட்டுகிறது.

மற்றொருபுறம், தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பது எந்தவித அடிப்படை சுகாதாரமும் அற்ற அடிப்படை வசதிகளற்ற நவீன சேரிகளாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, பேடர்பள்ளி பகுதி முழுவதும் கழிப்பிடம், குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த வசதிகளும் இல்லை. பெண்கள் துணி துவைப்பதற்கு அருகில் ஆண்கள் கழிப்பிடம் இருக்கும் அவலம் இங்கே நிலவுகிறது. குளிப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் குளிக்க வேண்டிய அவலமும் இங்கே நிலவுகிறது. மூக்கண்டப்பள்ளி, பேடர்பள்ளி, சின்ன எலசகிரி போன்ற பல பகுதிகளில் குடிநீர் மிகவும் உப்புத்தன்மையும், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் இலாயக்கற்ற நீராகத்தான் உள்ளது. சாலை வசதி, போக்குவரத்து வசதி எதுவும் திட்டமிட்ட வகையில் இல்லை. கொத்தகொண்டப்பள்ளி, மோரனப்பள்ளி தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகூட இன்றுவரை போதுமான அளவு இல்லை. தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சிறு பட்டறைகள் கூட எந்த அடிப்படை வசதிகளுமின்றி உழல்கின்றன. மொத்தத்தில், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க இந்த அரசு தயாராக இல்லை.

***

லைக்குள் தொழிலாளர் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆலைக்கு வெளியே தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்குகூட இந்த அரசு தயாராக இல்லை. முதலாளிகளுடன் சேர்ந்து நம்மை ஒடுக்குவதை மட்டும் செய்கிறது. இனி நாம் என்ன செய்வது என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். இந்த இழி நிலைமையை தீர்க்கக்கோரி யாரிடம் சென்று கேட்பது? கலெக்டரிடமா, போலீசிடமா, தொழிலாளர்துறை அதிகாரிகளிடமா, நீதிமன்றத்திடமா… இவர்கள் தான் முதலாளிகளின் ஏவாலாட்கள், கையாட்கள் தொழிலாளர்களின் எதிரிகள். பன்னாட்டுக் கம்பெனிகள், டாடா, லேலாண்டு, டிவிஎஸ், முருகப்பா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். அதனால், இவர்களிடம் போய் மண்டியிடுவதும் மனு கொடுப்பதும் நமது உரிமைகளை நாம் காவு கொடுத்து விட்டதாக ஒப்புக்கொள்வதற்கு சமமானது.

இதற்கு மாறாக, தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் மூலம் ஆலையில் சட்டபூர்வ உரிமைகள் அமுல்படுத்துவதைக் கண்காணிக்க வேண்டும். சட்டத்தை மீறி செயல்படும் ஆலை முதலாளிகள், அதிகாரிகளை இந்தக் கமிட்டிகளே தண்டிக்கவேண்டும். தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகள் தொழிலாளர் குடியிருப்பைப் பராமரிப்பது, சாலைகளை சீரமைப்பது, நமது அடிப்படைத் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது, தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கு கேடான முதலாளிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எல்லா தேவைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளுக்கே இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை நாம் எட்டமுடியுமா? நிச்சயம் முடியும். இதற்கு முதல் தேவை, ஒசூர் தொழிலாளர்களிடையே ஓர் ஒற்றுமை. இதனைக் கட்டியமைக்க வேண்டும். அண்மையில் திருப்பூர், ஈரோடில் உள்ள லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறித் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து போராடி ஊதிய உயர்வைப் பெற்றனர். அதுபோல, ஒசூர் தொழிலாளர்களும் ஓரணியாக சேர்ந்து முதலாளிகளுக்கு எதிரான நமது உரிமைகளை போராடி வென்றெடுக்க வேண்டும். ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும். இந்த நிலைமை மட்டும் தான் சங்கம் வைக்கும் உரிமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் சட்டத்தில் கொண்டுவரப்படாத பிற உரிமைகளையும் வென்றெடுக்கவும் நிலைநாட்டுவதை நோக்கி முன்னேறவும் உதவும். அப்படி ஒரு தொழிலாளர் வர்க்க எழுச்சியை ஒசூரில் கட்டியமைக்க ஓரணியில் திரள்வோம்!

_______________________________________

கருத்தரங்கம்

நிகழ்ச்சி நிரல்

நேரம்  : 25–05–2014, மாலை 4.30 மணி

இடம் : செங்குந்தர் கல்யாண மண்டபம்
சீனிவாசா தியேட்டர் எதிரில், ஒசூர்.

தலைமை :
தோழர் பரசுராமன்
,
மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு.,

சிறப்புரை :
தோழர் பா. விஜயகுமார்,
மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் சங்கர்,
மாவட்ட செயலாளர்.

தோழர் வேல்முருகன்,
மாவட்ட செயற்குழு.

மற்றும்

உரிமைக்காகப் போராடும் ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்களின் அனுபவங்கள்

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்க்கும் காட்சிப்படங்கள், விடியோ காட்சிகள், காட்சி விளக்கங்கள்

நன்றியுரை:
தோழர் சாந்தக்குமார்,
மாவட்டப் பொருளாளர்.

கம்யூனிசமே வெல்லும்! முதலாளித்துவம் கொல்லும்!
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

பணிநிரந்தரம், 8 மணிநேரவேலை,
ஊதிய உயர்வு, சங்கமாக சேருதல் உள்ளிட்ட
உரிமைகளுக்காகப் போராடுவோம்!

குடிநீர், பேருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட
உழைக்கும் மக்களின் அடிப்படை
வசதிகளுக்காகப் போராடுவோம்!

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று
அதிகார அமைப்புகளைக்
கட்டியெழுப்புவோம்!

[நோட்டிஸ், போஸ்டரை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம்
வெக் இண்டியா கிளைச் சங்கம்
கார்போரண்டம் யூனிவர்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்

ஒருங்கிணைப்பு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தரும்புரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்.

மோடி அழுதார் !

16

சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்படலாம், வரலாறு படைக்கின்ற அசாதாரணமான ‘மாமனிதர்’கள் உணர்ச்சி வசப்படலாமா?

குதுபுதீன்
குதுபுதீன் அன்சாரி

2002 குஜராத் இனப்படுகொலை. அகமதாபாத் வீட்டின் முன் உயிர்ப்பிச்சை வேண்டி அழுத கண்களும், பற்றிக் கொள்ள பிடிமானமின்றி கூப்பிய கைகளுமாய் தோன்றிய குதுபுதீன் அன்சாரியின் படம் உலகமெங்கும் பிரபலமானது நினைவிருக்கலாம். அந்த கண்ணீரின் துயரம் எத்தகையதொரு அவல நிலையிலிருந்து தோன்றியிருக்கும் என்பது வெறுமனே நினைவில் மட்டும் மீட்டிக் கொண்டு வரும் விசயமா? படம் வேறு பாடம் வேறு.

குதுபுதீன் அன்சாரியின் கையறு நிலை கோரிய கருணை, ஒரு விதத்தில் பார்ப்பனிய அடிமை சமூக அமைப்பில் சிக்கியிருக்கும் அடிமைகள், பிழைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய அன்றாட நடைமுறை. பசித்திருக்கும் ஏழைகளுக்கு பசி கிளப்பும் பண்ணையார்கள், உப்பரிகை மாளிகையின் முகடுகளில் நின்று காசுகளை வீசும் காட்சிகள் நமது  சினிமாக்களில் இன்றும் இடம் பெறுகின்றன.

தருமமும், கருணையும், வள்ளல் குணமும் பண்ணையார்களின் தயவில்தான் இந்தியாவில் விளக்கப்பட்டன. இந்த கருணைக் கடலில் துளி பங்கு வேண்டுமென்றாலும், குதுபுதீன் அன்சாரி போன்று அழுது அரற்றி தொழ வேண்டும். ஏழைகள் எனும் ஏதிலிகளின் போராட்டம் உரிமைக்காக அல்ல, கருணைக்காகவே நடந்தாக வேண்டும். ஆம். அன்சாரியின் கண்ணீரை கண்டு வருந்தியவர்கள் அனைவரும் பண்ணையார்கள் மீது கோபம் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உணர்ச்சிகளின் குழப்பம் மட்டுமல்ல, உணர்ச்சிகள் தோற்றுவிக்கும் மனிதாபிமானத்தின் குழப்பமும் கூட.

சக மனிதரின் மீதான அபிமானம் அவர்களிடம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாவதில்லை. அது மறுக்கப்படுவதால், அவர்களுக்கு வரும் துயரத்தினை, மறுப்பை ஆதிக்கமாக கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் சில நேரங்களில் பிழைத்துப் போ என்று மக்களுக்கு அருள் தரும். இதுதான் பார்ப்பனியத்தில் விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச கருணையின்  ‘அறம்’. இந்த ‘அறத்தால்’ பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் அறச்சீற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

எனினும் அன்சாரி ஒரு பாமரன். ஏழை. தனது குடும்பத்தை பராமரிக்க இன்றும் கடின உழைப்பில் ஈடுபடும் மற்ற இந்தியர்களில் அவரும் ஒருவர். அவர் கண்ணீர் விடுவது அசாதாரணச் செயலல்ல. அடிமைகள் வீறு கொண்டு எழுவதை தவிர, அன்றாடம் செத்துப் பிழைப்பதெல்லாம் தவிர்க்கவியலாத விதி என்றே இந்த நாடும் மக்களும் கருதியாக வேண்டும். அதுவே கர்மபலன். கர்மத்தின் காரணங்களை ஆராயாமல் இருத்தலே பலனை சகித்துக் கொள்வதற்கான வழிமுறை.

மோடி அழுதார்இந்தியாவில் ஒரு பாமர ஏழையின் வாழ்வில் வீடு, வீதி, பொதுஇடங்கள், பொருளாதார மையங்கள், அரசியல் தளங்கள், பண்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. அதுவே மதவெறிக் கலவரம் எனும் போதும், அவனே ஒரு இசுலாமியன் எனும் போதும் ஏற்படும் கையறு நிலைக்கு போதிய விளக்கமளிக்கும் மொழிவளம் நம்மிடம் போதுமானதாக இல்லை. சொல்லில் விளக்க முடியாத ஒரு துயரத்தின் உளவியல் அது. அதனால் ‘பாவம்’தான் நம்மிடம் தோன்றும். இது வேறு வழியின்றி தொழிற்படும் ஒரு பாவனையின் சிக்கலும் கூட.

ஆனால் மோடி ஒரு பாமரன் அல்ல. பண்ணையார்களின் மரபில் உதித்த ஒரு நவீன பண்ணையார். அவர் மீது நாம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ‘மோடி ஒரு உறுதியான நபர், கலங்காத ஆளுமை, பாரத மாதாவின் பெருமிதமான புத்திரன்’ என்றே ஊடகங்களும், சங்கபரிவாரங்களும் சான்றளிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் ‘போர்க்குணம்’ கொண்ட மராட்டிய சிவாஜி, சாவர்க்கர், விவேகானந்தர் போன்றோரே, ஸ்வயம் சேவகர்களின் ஆதர்ச (முன்னுதாரணமிக்க) நாயகர்களாக போற்றப்படுகின்றனர். மோடி இதில் கடைசியாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்.

இந்த ஆதர்ச மாமனிதர்களெல்லாம் அழுதார்களா என்பதை விட அவர்கள் கண்ணீர் விட முடியாத கரும்பாறை உறுதியைக் கொண்டவர்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் குழுமம் கதை பரப்புகின்றது. இன்னும் கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் அல்லது ரத்து செய்து விட்டு பார்த்தால் புராண ‘வரலாற்றி’லும் இத்தகையோரே கம்பீரமாக அமர்ந்திருக்கின்றனர். கீதை அருளிய கிருஷ்ணனோ, ஷத்திரியர்களை கொஞ்சம் கொல்ல வரம்புடன் வேட்டையாடிய பரசுராமனோ, கதாயுதத்துடன் வேங்கையாக சுற்றிய பீமனோ கூட அழுகை என்றால் என்னவென்றே அறியாத மாமனிதர்கள்தான். ராமன் சீதைக்காக அலைந்து திரிந்த போது சில சொட்டு கண்ணீர் துளிகளை சிந்தியிருந்தாலும் அதற்கு பிராயச்சித்தமாக அவளை உயிரோடு புதைத்துக் கொன்று விட்டான். ஆகவே, இவர்கள் அழுத தருணங்கள் கூட அடக்கிய பெருமிதத்தின் நீட்சியாகவே இருப்பதால், அது வெறுமனே அழுகை மட்டுமல்ல. இது மோடிக்கும் பொருந்தும்.

மகாபாரதமும், ராமாயணமும் எண்ணிறந்த கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள், இடைச்செருகல்களுடன் படைக்கப்பட்டாலும் அவற்றின் ஒரு வரி நீதி என்ன? அல்லது அறம்தான் என்ன?

இந்த உலகின் உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளை தோற்றுவித்து கட்டுப்படுத்தும் உணர்வுகளும் ஆள்வோரால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அதை கேள்வியின்றி பின்தொடருவதே ஆளப்படுவோரின் கடமை. இந்தக் கடமையை அனிச்சையாக செரித்துக் கொண்டு நடமாடும் போதுதான் மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் சலுகையினை ஏதோ கொஞ்சமாவது பெறுகிறார்கள். மீறி கேட்பவர்களுக்கு கதைகளும், நீதிகளும், தண்டனைகளும், வரலாறாய், எச்சரிக்கையாய், அறிவிப்பாய் தெரிவிக்கப்படும். கூத்து முதல் டிஜிட்டல் வரை இன்றும் புராணங்கள் உயிர் வாழ இந்த ஆளும் வர்க்க நீதியே அடிப்படை. அவற்றை கேட்காமலேயே பின்தொடர்வது நமது தெரிவின் பாற்பட்டதல்ல.

சாவார்க்கர்
சாவார்க்கர்

எந்த சோப்பை, பற்பசையை வாங்க வேண்டுமென நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்று  மனப்பால் குடித்தாலும் உங்கள் மூளையின் சேமிப்பு மடல்களில் அவை யாரோ சிலரால் ஏற்கனவே திணிக்கப்பட்டு உத்தரவிடுகின்றன. புராணங்களின் அறமும் அப்படித்தான், இரண்டறக் கலந்து உங்களது சொந்த தத்துவமாக, வழிகாட்டியாக காட்டிக் கொள்கின்றன. இது சுயசிந்தனை இல்லை என்ற பிரச்சினையின் பாற்பட்டதல்ல. சுயமே யாரால், எப்படி வடிவமைக்கப்படுவது குறித்த பிரச்சினை.

ஆகவே புராணங்கள் முன்வைக்கும் மாமனிதர்கள் ஆளப்படும் மக்களை சாமர்த்தியமாக எப்படி பிடிக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவர்களது மாமனித பெரு நடவடிக்கைகள் வியந்தோதப்படுகின்றன. ராமன் காலத்தில் அது ஏகபத்தினி விரதமாக இருக்கலாம். மோடியின் காலத்தில் அது ஏழைகளுக்காக அழுவதாக இருக்கலாம். ஒழுக்கங்களின் பெருவியப்பு சாதனைகள் நேற்று போல இன்றிருக்க தேவையில்லை.

இதையே பார்ப்பனியம் ஸ்ருதி – ஸ்மிருதி என்று வகுத்து வைத்திருக்கிறது. எளிய விளக்கத்தின் படி ஸ்ருதி நிலையானது, அடிப்படை ‘அறங்’களையும், தத்துவங்களையும், எப்போதும் மாற்ற முடியாது, மாற்றக் கூடாது என்பதால் அவை ஸ்ருதி. அந்த ஸ்ருதியின் நடைமுறை சார்ந்த விதிகள், நடவடிக்கைகள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றது. இது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்,

இவற்றுக்கு இன்னும் பல்வேறு விளக்கங்களை பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் அளிக்கிறார்கள். இறைவன் அருளிய நேரடி குரல் ஸ்ருதி என்றும், ஞானிகளின் நினைவில் கூறப்படுபவை ஸ்மிருதி என்றும் கூறுகிறார்கள். இது குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் கூட பொருந்தும். இது போக இன்னும் பல விளக்கங்களும் ஒன்றை ஒன்று மறுத்தவாறும் இருக்கின்றன. நாம் இந்த வியாக்கியானங்களுக்கும் சிக்கி விவாதிக்க வேண்டியதில்லை.

ஒரு சமூக பயன்பாட்டில் ஸ்ருதி, ஸ்மிருதியின் பொருள் என்ன? இருப்பவன், இல்லாதவன் என்று, உலகம் உடைமை வர்க்கங்களாய் பிரிக்கப்பட்ட பிறகு அந்த வேறுபாட்டை அரசு, அரசன், படை, தருமம் கொண்டு விதி போல நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. இப்படி பிரிந்திருப்பதே நிலையானது என்பதால் அது ஸ்ருதி என்றால், அந்த மாறா நிலையை, மாற்றக் கூடாத நிலையை அமல்படுத்தும் அல்லது ஒடுக்குமுறை மூலம் நிலைநாட்டும் வன்முறையை ஸ்மிருதி என்றும் அழைக்கலாம்.

அந்த வன்முறையின் வடிவங்கள், விளக்கங்கள் நேற்று போல இன்றிருத்தல் தேவையில்லை. அதைத்தான் ஸ்மிருதி, மாறுவது என்கிறார்கள். ஆனால் ஸ்மிருதியின் வடிவங்கள் மாறுமே அன்றி உள்ளடக்கம் மாறாது. அது போல ஸ்ருதியின் உள்ளடக்கம் மாறாதே அன்றி அதன் விளக்கங்கள் காலந்தோறும் மாறலாம். இப்படி இரண்டிலும் மாறும், மாறாது என இரண்டும் சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன.

சாணக்கிய நீதி
“சாம, தான, பேத, தண்ட” – சாணக்கிய நீதி

இதையே சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் “சாம, தான, பேத, தண்ட” என்று விளக்குகிறார். ஒடுக்குமுறையை நிலைநாட்ட அமைதி வழி, தானம் கொடுத்து வழிக்கு வரவைத்தல், ஒதுக்கி,பிரித்து எச்சரிக்கை விடுத்தல் இறுதியில் தண்டனை, போர் மூலம் செய்தல் – இவையே இந்த நான்கிற்கும் தரப்படும் விளக்கம்.

இன்னும் எளிய முறையில் சொன்னால் அடிக்கிற மாட்டை அடித்தும், பாட்டு கேட்கிற மாட்டை பாடியும் பால் கறத்தல் என்றும் சொல்லலாம். சாம, தான, பேத, தண்ட முறையினை மகாபாரதத்தில் கிருஷணனே பல முறை செய்து பார்த்திருக்கிறான். அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை வைத்து ராஜிய பரிபாலன விளையாட்டை இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் விளையாடுவதில் அவன் கைதேர்ந்தவனாக இருந்திருக்கின்றான். இந்த முறைகளின் பேதங்களை மறந்து வறட்டுத்தனமாக செய்தால் அந்த ஒடுக்குமுறையின் மூலம் ஆளும் அரசன் தேவையின்றி பலவற்றை இழப்பான். அது அரசனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்து வாழும் ஆளும் வர்க்கத்தின் இழப்பாகவும் மாறுகிறது.

மோடி தான் பிரதமர் பதவி ஏற்புக்காக அழுததும், இனக்கலவரத்தில் இசுலாமிய மக்களின் அழுகையை அலட்சியப்படுத்தியதற்கும், ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலம் கொட்டிக் கொடுத்ததும், வைகோ முதலான தமிழ் விபீடணர்களை பிரித்து ஒதுக்கியதும், சாணக்கியனின் “சாமா, தான, பேத, தண்ட” வழிமுறைகளின் சில பிரயோகங்கள்.

ஆகவே மோடியின் அழுகை இங்கே இந்த விதத்தில் தேவைப்படுகிறது. 2002 இனப்படுகொலையில் குஜராத்தின் முழு முசுலீம் சமூகமுமே அழுது அரற்றிக் கொண்டிருந்த போது மோடியின் கண்கள் இரக்கமற்ற பெருமிதத்தின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. “ஒரு நாய் அடிபட்டாலும் வருந்துவேன்” என்று இன்று ‘பெருந்தன்மையாக’ சொன்ன மோடி அன்று நரவேட்டையை கட்டளையிட்டு இயக்கினார். கோத்ராவின் எதிர்வினை என்று ‘அடக்கப்படும்’ இந்துமதவெறியின் கோரத்தாண்டவத்தை நியாயப்படுத்தினார்.

இந்தியாவின் பிரதமராக பதவியேற்பேன் எனும் நிலை அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல 2000 முசுலீம் மக்களின் உயிர்ப்பலி மோடியின் இதயத்தை அசைத்தோ, இல்லை தொட்டுவிடக்கூடவோ செய்யவில்லை. சி.ஐ.ஏ.வின் உயர் அதிகாரிகள் தமது அழகான வீடுகளில் அமர்ந்து கொண்டு அலங்காரமான மனைவியையும், துறுதுறுப்பான குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டு இருக்கும் போதே, தென்னமெரிக்காவில் போராடும் மக்களை குண்டு வைத்து கொல்லும் கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தன்னில்லத்தில் அன்பே உருவாக வாழ்பவர்கள் தொலைதூரத்தில் இரக்கமே இல்லாமல் ஆடுகிறார்கள் என்பது உண்மையில் ஒரு முரண்பாடல்ல.

இந்த இல்லற அன்பு இவ்வளவு வசதிகளுடன் தொடர வேண்டுமெனில் அங்கே அவ்வளவு இரக்கமின்றி கொலை செய்ய வேண்டும். ஆகவே நாம் கருதுவது போல அவர்கள் கருதிக் கொள்வதில்லை. ஆரியப் பெருமை பேசிய இட்லர் ஏனைய மக்களை காட்டுமிராண்டிகள் என்று கருதவில்லையா? இந்த உலகில் அன்பு, பாசம், காதல் அனைத்தும் இப்படி வர்க்கம் சார்ந்தே வேறு வேறு உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் சொல்வது போல இவற்றுக்கு உலகு தழுவிய அல்லது காலம் கடந்த பொதுமையோ ஒற்றுமையோ இல்லை.

நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை (20.05.2014) பேசிய நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது திட்டமிட்ட ஒன்றா இல்லை தற்செயலாக நடந்த ஒன்றா?

இதையே இப்படியும் விளக்கலாம். மன்மோகன் சிங்கை மறுகாலனியாக்கத்தை அமல்படுத்த இலாயக்கற்றவர் என்று வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆளும் வர்க்கங்கள் அதை திட்டமிட்டே முடிவு செய்தன. அந்த இடத்திற்கு மோடியை கொண்டு வரவும் அவர்கள் திட்டமிட்டே காய் நகர்த்தினார்கள். ஆனாலும் அந்த தகுதியைப் பெற்ற மோடி முதல் முறை முதலமைச்சராய் வந்தது தற்செயலானதுதான். கேசுபாய் பட்டேல் கோஷ்டியை வீழ்த்த அன்று ஒரு கோஷ்டிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை வரலாறு தற்செயலாகவே மோடிக்கு அளித்தது.

இன்று திட்டமிட்ட முறையில் அவர் பிரதமராக உருவானாலும் அந்த தற்செயல் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பாரதப் பேரரசின் பேரரசராக சிம்மாசனத்தில் அமரும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்காது. அந்த தற்செயல் விபத்துதான் இங்கே திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. ஆகவே இது கிளிசரின் கண்ணீராக இருக்கும் என்று புறந்தள்ள முடியாது. பந்தயக் குதிரை போல திட்டமிட்டு வளர்க்கப்படும் ராஜகுமாரர்களை விட தற்செயலாக மாறிய ராஜகுமாரர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த உணர்ச்சி ஒரு வாய்ப்பற்ற பாமரன் திடீரென்று மாபெரும் பணக்காரனாக அமர்த்தப்பட்டதால் வரும் பெரு மகிழ்ச்சியின் உணர்ச்சி. அதை வெறும் ஆனந்தக் கண்ணீர் என்று பார்ப்பதும் போதுமானதல்ல. பேரானந்தக் கண்ணீர் என்றால் சரியாக இருக்குமோ?

ஜூனியர் புஷ்ஷோடு போட்டியிட்ட அல் கோர் கூட உண்மையில் பந்தயக் குதிரை போல வாஷிங்டன் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ராஜதந்திரிதான். ஆனால் அவரை விட எந்த அறிவுமற்ற ஒரு மைனர் குஞ்சான புஷ்ஷே போதுமென்று அமெரிக்க மக்களும் முதலாளிகளும் முடிவு செய்தது வரலாறா, விபத்தா? ஏதோ ஒன்று. புஷ்ஷின் காலத்தில்தான் அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டுக்கான முக்கியமான ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. அதன் விரிபொருளை புரிந்து கொள்ளும் அளவுக்கு புஷ்ஷுக்கு அறிவோ, ஆற்றலோ கிடையாது. ஆப்கானோ இல்லை நைஜிரியாவோ நாடுகளா இல்லை கண்டமா என்று பிரித்தறியும் பொது அறிவு கூட அந்த மாங்கா மடையனுக்கு இல்லை. ஆனாலும் புஷ் ஆப்கான் போருக்கு முன் உரையாற்றிய போது அவரது போர்க்குணத்திற்காக கைத்தட்டல் வாங்காமல் இல்லை. ஒரு முட்டாளே பாசிஸ்டாக வந்தமர்ந்தாலும் அவனை ஒரு வீரன் போன்று சித்தரிக்காமல் ஆளும் வர்க்கம் இருப்பதில்லை. அவர்களது மேடைக்கு ஒரு கழுதை வந்தாலும் அது குதிரைதான்.

ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கிய வரலாறும், அது குதிரை என்று போற்றப்பட்டாலும் கழுதை வாயில் சிக்கிய காகிதம்தான். “பீகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்று பீகார் பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்? என்று ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு வரும் சந்தேகம் கூட மோடிக்கு கிடையாது. பாசிஸ்டுகள் முட்டாளாக மட்டும் இருப்பதில்லை, தாம்தான் அறிவாளிகள் என்றும் நம்புகிறார்கள்.

கிருஷ்ணன்இந்த நம்பிக்கையும் அவர்களால் சொந்தமாக பெறப்பட்ட ஒன்றல்ல. மோடிக்கு உரை எழுதிய மாபெரும் அறிஞர் கூட்டம் உருவாக்கிய மாயை அது. பாரதத்தில் கிருஷ்ணனுக்குரியதாக கூறப்படும் மதிநுட்பங்கள் கூட உண்மையில் வெண்ணெய் திருடி, கோபியர் சேலையை ஒளித்து வைத்த ஒரிஜினல் கிருஷ்ணனது சாமர்த்தியங்கள் அல்ல. அவை பார்ப்பன சித்தாந்தவாதிகளால் காலந்தோறும் ஏற்றி நுழைக்கப்பட்ட ஒரு கற்பனை. தனது அச்சங்களையும், ஆயுதங்களையும் கொடுத்து கடவுளை உருவாக்கிய ஆதிகால மனிதன் போல, பார்ப்பனர்களும், ஷத்திரியர்களும் தமது அரசாளும் நடவடிக்கைகளின் சரி தவறுகளை பரிசீலித்து அதாவது ஒடுக்குமுறையின் சாமர்த்தியத்தை புனைந்துரைத்து கிருஷ்ணனது பாத்திரத்தை வடிவமைத்தார்கள்.

கண்ணன் இப்படி இருந்தான் என்பதை விட இப்படி இருக்க வேண்டும் என்பதே அவர்களது உள்ளக் கிடக்கை. ஆளும் வர்க்க மேடைகளில் கண்ணன்கள், புஷ்கள் என்று யார் வேண்டுமானாலும் வரலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் அவர்களை எப்படி வாசிப்பது என்று பார்ப்பனியம் நமக்கு பயிற்றுவிக்கிறது. அதனால்தான் மோடி ஒரு போராளியாக நம்மிடம் பொருத்தமின்றி இருந்தாலும் திணிக்கப்படுகிறார்.

இதை அம்பி ஒருவரின் வாயாலேயே பார்ப்போம்.

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் அறிஞர் படையாக தங்களைத்தாமே நியமித்திக் கொண்ட செல்ப் ஜெனரல்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் நாகரீகமாக அறிவடியாட்கள் என்று அழைப்போம். அதில் ஒருவர் ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி பகிர்ந்திருந்தார்.

“ராமனுக்கு அனுமன் போல நரேந்திர மோதிக்கு அமித் ஷா. தருமத்தின் தனிமை தீர்ப்பான் !” என்று நான் முன்பு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஓரளவு இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் “தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்பது கம்பனின் புகழ்பெற்ற வரி என அறிந்திருக்கலாம். துணையின்றித் தனியாக இருந்த தர்மத்தின் வடிவங்களான இராம லட்சுமணர்களுக்குப் பேருதவியாக அனுமன் வந்து சேர்ந்தான் என்பது அதன் பொருள்.

அந்த ஒருவரிப் பதிவு குறித்து வினவு இணையதளம் இவ்வாறு எழுதியுள்ளது.

// நீதி: பயங்கர புகழ் மோடி, மர்மப் புகழ் அமித் ஷா உடனான கூட்டணி இல்லை என்று தருமம் தனிமையில் கேவிக் கேவி அழுததாம், கருமம், கருமம்! //

வழிந்தோடும் வசையைத் தவிர வேறு எந்த வகை இலக்கியத்தையும் அறியாத புரட்சித் தோழர்களுக்கு உருப்படியாகத் திட்டும் அளவுக்குக் கூட நான் எழுதிய வரி புரியவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.”

“தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்ற கம்பனது புகழ் பெற்ற வரியை, ராமனைப் போன்ற மோடி எனும் தருமகீர்த்தி புத்திரனின் தனிமையை அனுமன் போன்ற அமீத்ஷா உதவி செய்து தீர்ப்பார் என்பதின் இலக்கிய நயம் நமக்கு புரியவில்லையாம். போகட்டும்.

ராமன்முசாஃபர்நகர் கலவரத்தில் பழி தீர்ப்போம், முசுலீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று பகிரங்கமாக முழங்கிய அமீத் ஷாவையும், அவரது பாஸான மோடியையும் கம்பனது கவிச்சுவையோடு ஒப்பிட்டு பார்ப்பது இவர்களே சொல்லக்கூடிய அளவில், கம்பனை படித்தவர் செய்யக்கூடிய காரியமா?

புரியும்படிச் சொன்னால் ஷகிலா படத்தின் ‘விழுமியங்களை’ சாக்ரடீஸின் தத்துவஞானக் கேள்விகளோடு ஒப்பிட்டு விளக்கினால் படிப்பவருக்கு வாந்தி வருமா, பேதி வருமா? அல்லது அதே கம்பனது கவித்துவத்தை ஒப்பிட்டு விஜயகாந்தும், அர்ஜூனும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பந்தாடுவதை வைத்து ஒரு வெண்பாதான் பாட முடியுமா?

கம்பன் அவனது காலத்தின் படிமங்களை, விழுமியங்களை ஆகச்சாத்தியமான முறையில் அதீத கற்பனை வளத்தோடு சிக்கென்ற வார்த்தைகளோடு பாடினான் என்றாலும் அந்த கவிவித்தை ஆள்வோரின் அறத்தை பற்றி நின்றே அழகு காட்டுகிறது. அதை ரசிப்பது என்பது உங்களது வரலாற்று உணர்வின் தரத்தை பொறுத்தது. அந்த ‘தரம்’ நம்மிடமில்லை. ஒருவேளை அந்த கவித்திறனை ரசித்தே தீருவேன் என்று அடம் பிடிப்போர் அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட்டித்து மோடிக்கும், பாடிக்கும் நீட்டினால் அது கைப்புள்ளயின் கதியைத்தான் வந்தடையும்.

பம்பை நதியின் அழகை வருணிக்க வந்த கம்பன், எளிய சொற்களைக் கொண்டு பெரும் பொருள் ஆழத்தை காட்டும் சான்றோர் போல, பம்பை நதி அதி ஆழத்தில் உள்ள பாதாள உலகத்தை அருகில் காட்டும் தெளிவுடன் ஓடுகிறது என்கிறான். இதை மோடியின் உரையில் பீகாருக்கு அலெக்சாந்தர் படையெடுப்பு உளறலோடு ஒப்பிட்டு எளிமையாக, ஆழமாக பேசும் சான்றோர் போல பேசினார் என்று பாராட்ட முடியுமா?

அப்படித்தான் ஜடாயு உள்ளிட்ட அடியாட்கள் முதல் கார்ப்பரேட் ஊடகங்கள் வரை மோடியின் ஆளுமையை கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் பறக்க விடுகின்றன. பாரதக் கிருஷ்ணனது யோக்கியதையை நாம் நேரில் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய பாரதத்தில் நரேந்திர மோடியின் வார்த்தைகளை வசியம் செய்து மறைக்க முடியாது. மோடியோ, புஷ்ஷோ திணிக்கப்பட்ட பாசிச முட்டாள்கள் என்பதை ஒருவேளை கம்பனே இன்று உயிரோடு இருந்தாலும் தனது கவித்துவ திறனை வைத்து மறைக்க முடியாது. மறைப்பவர்களின் ரசனை என்ன என்பதை ஷகிலா படங்களை பார்த்தும், சாக்ரடீஸை படித்தும் புரிந்து கொள்க.

பாராளுமன்ற அரங்கில் பேசிய மோடி “நாம் ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம், புனிதமாக பணியாற்றுவோம்” என்று ஆரம்பித்தார். இந்த கோவிலில் ஹரேன் பாண்டியா, இஷ்ரத் ஜஹான், வன்சாரா போன்றோருக்கு என்ன நடந்தது என்பதறிவோம், முதலிருவர் மோடியின் பெருமை காக்க பலியிடப்பட்டார்கள். பின்னவர் பெருமை காக்கத் தவறியதால் தண்டிக்கப்பட்டார். ஜனநாயகக் கோவிலின் பெருமையும், புனிதமும் இந்த அழுகுணி ஆட்டங்கள் நடத்தித்தான் காப்பாற்றப்படவேண்டும் என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும்.

இதில் சரி, தவறு, நீதி, அநீதி, ஒழுக்கம், மீறல் என்று பார்க்க முடியாது. அதுதானே கீதை, கிருஷ்ணன்? ராஜிய பரிபாலனங்களை இருமைகளின் விதியால் எளிமைப்படுத்தி பார்க்கக் கூடாது என்பதே பார்ப்பனியத்தின் ராஜதருமம். அதுவும் ஒடுக்குபவனுக்கு அத்தகைய இருமைக் குழப்பம் வரவே கூடாது.

“என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியைவிட என் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.” – என்றார் மோடி. இது வழக்கமான ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் கூறும் ஒரு உத்தி. அதாவது ஜனநாயகத்தை உரிமையாக கோரினால், ‘இவர்கள் பதவி முக்கியமல்ல, பொறுப்பே முக்கியம்’ என்பார்கள். அப்படி பதவியும், பொறுப்பும், அதிகாரமும் வேறு வேறாக பிரிந்திருக்கிறதா என்ன?

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஸ்வயம் சேவகர்கள் வாக்களித்து தமது தலைவர்களையும், பிரச்சாரகர்களையும் தேர்வு செய்வதில்லை. ஹெட்கேவார் மரணத்திற்கு முன் கோல்வால்கரை நியமித்தார், கோல்வால்கர் சாவதற்கு முன் தேவரசை நியமித்தார். இந்த ஆதீன நடைமுறைதான் இன்றும் சங்க பரிவாரங்களில் தொடர்கிறது. மோடியைப் பொறுத்த வரை இந்த ஆதீன முறையில் பதவிக்கு வந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ் ஆண்டிகள் மட்டும் முடிவு செய்யவில்லை. ஆளும் வர்க்கமும் சேர்ந்தே முடிவு செய்திருக்கிறது.

ஆளும் வர்க்கம் அளித்திருக்கும் பொறுப்பினை நிறைவேற்றுவதைத் தவிர பதவிகள் முக்கியமல்ல என்றும் நாம் விளங்கிக் கொள்ளலாம். அதனால்தான் மன்மோகன் சிங் விரட்டப்பட்டு மோடி வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை மோடி போய் இன்னொரு  கேடியும் வரலாம். அந்த நிலை வரக்கூடாது என்பதால்தான் மோடி தனது வார்த்தைகளில் தினமும் 36 மணிநேரம் உழைப்பேன், ஐந்தாண்டுகளுக்கு அறிக்கை கொடுப்பேன் என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.

மோடிக்கு பதவி முக்கியமில்லை என்றால் அவர் ஆறுமாதங்களாக நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி வந்த போது குஜராத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை சரியாக ஆற்ற முடியவில்லை அல்லவா? அப்போதே ஒரு புதிய முதலமைச்சரை தெரிவு செய்யாமல் போன காரணம் என்ன? ஒருவேளை பிரதமர் போட்டியில் தோற்றால் குஜராத்தின் ஆதீன பதவி வேண்டும் என்ற பொறுப்புதானே அதை செய்ய விடாமல் தடுத்திருக்கும்.

இன்று கூட ஆனந்தி பென் என்ற 73 வயது ஆபத்தில்லாத பாட்டியை தனது முதலமைச்சர் பதவியில் நியமித்திருக்கிறார் என்றால் மோடியின் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்த மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த பாட்டி போய் இன்னொரு பூட்டன் வருவார். பாசிஸ்டுகள் தமது அருகில் இப்படிப்பட்டவர்களைத்தான் வைத்துக் கொள்வார்கள் என்பது மோடிக்கு மட்டுமல்ல நமது லேடிக்கும் பொருந்தும்.

christ-last-temptation“அரசு என்பது ஏழை மக்களைப் பற்றிச் சிந்திப்பதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர்களுக்காகவே இயங்க வேண்டும். எனவே, புதிய அரசு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” – என்று மோடி பேசிய போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அதானியும், அம்பானியும், அமெரிக்க தூதர்களும் கள்ளச் சிரிப்பு சிரித்திருப்பார்கள். தங்களைப் போன்ற ‘ஏழை’களுக்கு மோடி எனும் ஏழைக்காவலன் கிடைத்திருப்பதை வைத்து அந்த முதலாளித்துவ ஏழைகள் நன்றிக்கடனாய் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தால் கூட ஆச்சரியமல்ல.

“அத்வானி அவர்கள் பேசியபோது “இந்த முறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பா.ஜ.க-வுக்குக் கருணை செய்திருக்கிறார் மோடி” என்றார். அத்வானிஜி, நீங்கள் மீண்டும் இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள். (மோடியின் குரல் கம்மி, கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கிறது.)

ஒரு மகன் தனது தாய்க்குச் செய்யும் பணிவிடையை அவருக்குச் செய்யும் கருணை எனக் கூற முடியாது. தாய்க்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே, எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூற முடியாது.”

மோடி குறிப்பாக அழுத இடம் இதுதான். தாதாக்கள் தமது சமூக நடவடிக்கைகளில் எத்தகைய கொடூரங்களைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையான உறவில் மட்டும் இத்தகைய உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும். ஏனெனில் தாதாக்கள் எவரும் குட்டி தாதாக்களால் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பாக்கப்பட்டு வருவதில்லை.அது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தால் வருவது.

“கர்த்தரே என்னை ஏன் கைவிட்டு விட்டீர்” என்று ஏசுநாதர் கூட சிலுவையில் அறைந்த தருணத்தில் அழுதார். அது, தான் கொண்டிருந்த நன்னெறிகளுக்கு இறுதியில் இதுதான் தீர்வா என்று தளர்வுற்ற நேரம். மோடியோ இசுலாமிய மக்களை சிலுவையில் அறைந்ததால் அரசனானவர். அதனால் சிலுவையில ஆணி அடித்த ஒருவனுக்கு இத்தகைய பெரும் பதவியா என்று அவர் ஒரு கணம் நினைத்திருக்கக் கூடும்.

இங்கே ஏசுநாதர் இறுதியில் வந்தது தற்செயலானது என்பதோடு முடித்துக் கொள்கிறோம்.

நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!

67

டந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முன்னிரவு. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோ மாநிலத்திற்கு உட்பட்ட சிபோக் பகுதியினுள் டொயோட்டா ஜீப்புகளில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் நுழைகிறார்கள். சிபோக் ஒரு ஒதுக்குப்புறமான கிராமப் பகுதி. அங்கே இருந்த உறைவிடப் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுகளை எழுத நூற்றுக்கணக்கான மாணவிகள் குழுமியிருக்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்தை சுற்றி வளைக்கும் ‘ஜிகாதி’கள், அங்கே பரீட்சைக்காக கூடியிருந்த மாணவிகளில் சுமார் 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு நைஜீரியா – காமரூன் எல்லைப் பகுதியை ஒட்டிய சம்பீசிய வனப் பகுதிக்குள் புகுந்து விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்

கடத்தப்பட்ட மாணவிகளில் சுமார் 50 பேர் வரை செல்லும் வழியில் தப்பி விட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. எனினும், தப்பிய மாணவிகளின் எண்ணிக்கையையோ தீவிரவாதிகள் பிடியிலிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கையையோ இது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சுமார் 267 மாணவிகள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வந்துள்ளன. சில செய்திகள் 300 என்றும், வேறு சில செய்திகள் 276 என்றும், சில செய்திகள் 267 என்றும் வெவ்வேறு எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றது.

மாணவிகள் கடத்தப்பட்ட அதே நாளில் அருகில் இருந்த  இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மாணவிகள் கடத்தப்பட்ட சில நாட்களுக்குள் ‘ஜிகாதி’ தீவிரவாத குழுவின் சார்பாக காணொளிக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் அக்குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெகா, கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க தனக்கு அல்லா கட்டளை இட்டிருப்பதாகவும், அவ்வாறு விற்பதை இஸ்லாம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவிகளில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சர்வதேச சமூகங்களின் நீலிக் கண்ணீர்

தங்கள் அமைப்பை போகோ ஹராம் என்று அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கத்தின் பின்னணி குறித்தும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்தும் நாம் அறிந்து கொள்ளும் முன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவது நல்லது. அதற்கும் முன், இந்த சம்பவம் சர்வதேச அளவில் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளின் பரிமாணத்தையும் பார்த்து விடுவோம்.

மாணவிகள் கடத்தப்பட்டு ஒருவாரம் கழித்து நைஜீரியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் ஒபியாகிலி ஆற்றிய உரையில் ”எங்கள் பெண்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை இப்ராஹிம் அப்துல்லாஹி என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் தனிச்செய்தியோடைத் தலைப்பாக (ஹேஷ்டேக்) குறிப்பிடுகிறார்(#Bringbackourgirls). அடுத்த சில நாட்களுக்கு இந்த தலைப்பு மில்லியன் முறைகளுக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது.

மே மாத துவக்கத்தில் மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் போன்ற பிரபலங்கள் இதே தலைப்பில் கீச்சுகள் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. மே 11-ம் தேதி வரை சுமார் 30 லட்சம் பேரால் இந்தச் செய்தியோடைத் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நைஜீரிய பெண்களின் நிலைமை குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேற்கத்திய உலகின் பல்வேறு நகரங்களில் நம்மூர் ‘ஆம் ஆத்மி வகைப்பட்ட’ மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடத்தப்பட்ட பெண்களை மீட்க எந்த வகையான உதவிகளையும் செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளன. நைஜீரியாவுக்கு ’உதவி’ செய்யும் பொருட்டு தனது போர் விமானங்களையும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் நைஜீரியாவில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா.

#Bringbackourgirls

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போகோ ஹராம் : நதிமூலம்

”மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்’ (இறைத் தூதரின் போதனைகளையும் ஜிஹாதையும் முன்னெடுத்துச் செல்லும் கடப்பாடு கொண்டவர்கள்). 1995-ம் ஆண்டு இசுலாமிய இளைஞர்களுக்கான ஷபாப் என்கிற இயக்கம் துவங்கப்படுகிறது. அதன் தலைவராக இருந்த மல்லாம் லாவல் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து 2002-ம் ஆண்டு ஷபாப் இயக்கத்தை முகம்மது யூசூப் என்கிற அடிப்படைவாதி கைப்பற்றுகிறார். அதிலிருந்து இந்த அமைப்பு சுன்னி இசுலாத்தின் கடுங்கோட்பாட்டுவாத அடிப்படைகளைக் கொண்ட சலாஃபி (வஹாபி) பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

தாலிபான்களைப் போலவே, ‘பெண்கள் படிக்க கூடாது, வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது, குரானைத் தவிர்த்து எதையும் கற்க கூடாது’ போன்ற பல ’கூடாதுகளின்’ பட்டியல் ஒன்றை வைத்திருக்கும் போகோ ஹராம், அதை அமுல்படுத்துவதற்குத் தோதாக ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை நைஜீரியாவில் அமைப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று அறிவித்துக் கொண்டது. சில்லறைத் தாக்குதல்களையும், ஆட்கடத்தல்களையும் செய்து வந்த போகோ ஹராமின் மேல் இரண்டாயிரங்களின் இறுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக 2009-ம் ஆண்டு யூசூப் கொல்லப்படுகிறார்; அதிலிருந்து அமைப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அபூபக்கர்
போகோ ஹராம் தலைவன் அபூபக்கர்

அபூபக்கர் தலைமைக்கு வந்த காலகட்டத்தின் சர்வதேச அரசியல் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பதாக அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கும் பொருளாதார பெருமந்தம் உலகு தழுவிய அளவுக்கு முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியாக முற்றி வளர்ந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த சமயம் அது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ’வண்ணப்புரட்சிகள்’ நடப்பதற்கான சமூக பொருளாதார சூழல் ’கனிந்து’ வந்தது.

தனது சூதாட்டப் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் இது வரை, தான் கால் பதித்திராத பிரதேசங்களில் நுழைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் உள்விவகாரங்கள் வரை தலையிட்ட அமெரிக்கா, அந்நாடுகளின் பொதுத் துறைகளையும் இயற்கை வளங்களையும் பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விட பல்வேறு வகைகளில் நிர்பந்தித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பொருளாதார தர வரிசையை எஸ்&பி குறைத்ததையும் மன்மோகன் சிங்கை கையாலாகாதவர் (under acheiver) என்று டைம் பத்திரிகையில் முகப்புக் கட்டுரை வெளிவந்ததையும் இந்த இடத்தில் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டாயிரங்களின் இறுதியில் அரபு வசந்தத்திற்கான தயாரிப்புகளில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது.

அதே காலப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தை முற்று முழுதாக எந்தப் போட்டியுமின்றி கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போகோ ஹராம் அமெரிக்காவின் கைகளில் இருந்த துருப்புச் சீட்டுகளில் ஒன்று.

முகம்மது யூசூபின் தலைமையில் இருந்த வரை, போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பிராந்தியம் என்பது ஒரு சில மாவட்டங்களுக்குள் சுருங்கியிருந்தது. அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்ற கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நைஜீரியாவின் சரிபாதி பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள போகோ ஹராமின் வளர்ச்சி திகைப்பூட்டக்கூடியது. போகோ ஹராமின் நிதி வலைப்பின்னலைத் தொடர்ந்து சென்றால் அது இங்கிலாந்தில் உள்ள அல் முண்டாடா என்கிற அறக்கட்டளைக்கும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாள் சவூதி அரேபியாவினுள்ளும் அழைத்து செல்கிறது.

போகோ ஹராம்
போகோ ஹராம் தீவிரவாதிகள்

லிபியாவில் முவாம்மர் கடாஃபியை எதிர்த்துப் போராடிய கூட்டணியில் பங்கு பெற்றிருந்த இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா (Al-qaeda in Islamic Magreb / Magreb stands for North western African continent) என்கிற அமைப்பு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏவிடமிருந்து சவூதி வழியாக நேரடியாக ஆயுதங்களைப் பெற்றது. பின்னர் லிபியாவில் தனது அமெரிக்க அடிவருடிக் ’கடமையை’ முடித்துக் கொள்ளும் மேற்படி அமைப்பு, தனது கவனத்தை அல்ஜீரியாவை நோக்கித் திருப்புகிறது.

அமெரிக்கா பிச்சையாக அளித்த ஆயுதங்களுடனும், அமெரிக்கா வகுத்துக் கொடுத்த திட்டத்துடனும் அல்ஜீரியாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தவும், அமெரிக்க ‘ஜிகாத்’தை வழி நடத்தும் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா அமைப்பு தான் போகோ ஹராமின் ஆயுதப் புரவலர். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் அபூ மௌஸப் அப்தல் வாதௌத் என்பவர் நைஜீரியாவில் உள்ள கிருத்துவ சிறுபான்மையினரை எதிர்த்துப் போராட போகோ ஹராம் அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை வழங்கி வருவதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது – போதுமான வளர்ச்சியை போகோ ஹராம் அடைய வழங்கப்பட்ட இடைவெளி அது.

ஏனெனில், ஆப்கானிய முஜாஹின்கள், அல்-குவைதா, பின் லாடன் போலவே போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தான். நைஜீரியா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் போகோ ஹராம் செயல்பட்டு வருகிறது. இதே போன்ற இசுலாமிய கைக்கூலி அமைப்புகளை வேறு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.

சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-ஷபாப்,
அல்ஜீரியா மற்றும் மாலியில் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா,
எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ கூட்டணி
லிபியாவில் இசுலாமிய போராளிகள் கூட்டணி

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் அல்-குவைதா என்கிற குடை அமைப்பின் பல்வேறு கிளைகள் (Franchise). இசுலாமிய சர்வதேசியம் இயங்கும் முறையும் அமெரிக்காவின் மெக்டொனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவகம் செயல்படும் முறையும் ஏறக்குறைய ஒன்று தான்.

இசுலாமிய சர்வதேசியமும் மெக்டொனால்டு மயமாதலும்

உலகெங்கும் கிளைகளைப் பரப்பியிருக்கும் மெக்டொனால்டு துரித உணவகத்தின் பல்வேறு தின் பண்டங்கள் அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. அங்கே விற்கப்படும் குப்பை உணவுகளின் கச்சாப் பொருட்களான உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, ஏற்கனவே வெட்டி உறைய வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்ற சமாச்சாரங்கள் மையப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். கிளைகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள் பனிப்பெட்டியில் இருந்து கச்சாப் பொருளை எடுத்து அவ்வப்போதைக்கு பொரித்து அந்தந்த நாட்டின் உள்ளூர் சுவை பாரம்பரியத்திற்கு ஏற்ப மசாலாக்களை தடவி விற்பார்கள்.

போகோ ஹராம் ஆயுதங்கள்
போகோ ஹராம் ஆயுதங்கள்

இன்றைய தேதியில் ‘ஜிகாத்’ மெக்டொனால்டுமயமாகி இருக்கிறது (Mcdonaldization). ஒரு ‘ஜிகாத்’தை துவங்கி நடத்துவதற்கு போதுமான அளவிற்கு சலாபிசம் வஹாபியம் போன்ற சித்தாந்த பயிற்சிகளை சவூதி மதகுருமார்களை வைத்து அமெரிக்காவே அளித்து விடுகிறது. மற்றபடி எந்த நாட்டில் ‘ஜிகாது’ நடக்க உள்ளதோ அந்த நாட்டின் உள்ளூர் விவகாரங்களுக்கு ஏற்ப முழக்கங்களையும் வழங்கி விடுகிறார்கள். ‘ஜிகாது’க்கு பொருத்தமான முழக்கங்களையும் (அது சில வேளைகளில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாக கூட இருக்கிறது) கையில் தயாராக கொடுத்து விடுகிறார்கள்.

போகோ ஹராம் போன்ற ஜிஹாதிகளின் கடமை எளிமையானது. காஃபிர் அமெரிக்காவுக்கும், இசுலாமிய சவூதிக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்த அமெரிக்க ’ஜிஹாதின்’ கச்சாப் பொருளின் மேல் உள்ளூர் மசாலாவை (உதாரணம் – விசுவரூபம் எதிர்ப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை) தடவி யாவாரத்தை சிறப்பாக நடத்த வேண்டியது தான்.

அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? ஏன் சொந்த முறையில் போகோ ஹராம் போன்ற ‘ஜிகாதி’களை வளர்க்க வேண்டும்?

ஆப்பிரிக்காவின் வளம்

ஆப்பிரிக்க கண்டம் அள்ளித் தீராத இயற்கை வளங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலனியவாதிகளில் நடத்திய மாபெரும் சூறையாடல்களுக்கு ஈடு கொடுத்து இன்னமும் தன்னுள் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டிருக்கிறது. நைஜீரியா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் ஏராளமான எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

போகோ ஹராம் தலைவனின் பேச்சு
போகோ ஹராம் தலைவனின் பேச்சு

ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திர நாடுகள் அல்ல. பெரும்பாலும் தமது முந்தைய காலனிய காலத்து எஜமானர்களான ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாகவோ அமெரிக்காவை நேரடியாகவோ அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணித் தரகு வர்க்கங்களே ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. எனினும், நைஜீரியா போன்ற ஓரிரு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு திறந்து வைத்த அதே வாயிற் கதவை சீனாவுக்கும் திறந்து விட்டிருக்கின்றன.

நைஜீரியாவுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வரும் சீனா, அதன் தொலைத் தொடர்புத் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 2,300 கோடி டாலர்கள் மதிப்பில் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், எண்ணெய் துரப்பணம் மற்றும் புதிய எண்ணெய் வயல்களைக் கவளங்களைக் கண்டறிவதற்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீளத் துடிக்கும் அமெரிக்காவின் சுரண்டல் வெறியும் அடங்காத எண்ணெய்ப் பசியும் சிறு அளவுக்கு பெயரளவிலான போட்டியைக் கூட விரும்புவதில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவை விரட்டுவது, ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் செயல்பாடுகளை தனது தலைமையில் மறுஒழுங்கமைப்பது என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காம்

இரண்டாயிரங்களின் மத்திய காலப்பகுதி வரை அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரம் மற்றும் ஐரோப்பியாவிற்கான அமெரிக்காவின் இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரத்தின் பொறுப்பில் ஆப்பிரிக்கா இருந்தது. 2008-ல் ஜார்ஜ் புஷ்ஷின் இறுதி நாட்களில் ஆப்பிரிக்காவுக்கென தனிச்சிறப்பான இராணுவ கட்டுப்பாட்டுக் கேந்திரமாக ஆப்பிரிக்காம் (USAFRICOM – United States African Command) ஏற்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்காம்
ஆப்பிரிக்காம் – வரைபடம்.

ஆப்பிரிக்காமின் இராணுவ தளம் சூயஸ் கால்வாயின் முகப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபௌட்டியில் அமைந்திருக்கிறது. இசுலாமிய தீவிரவாதத்திலிருந்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்தும் வடகிழக்கு ஆப்பிரிக்க முனைக்கு விடுதலை அளிப்பது (Operation Enduring Freedom – Horn of Africa) என்கிற பெயரில் உள்ளே நுழையவும் கேம்ப் லெமான்னியர் என்ற தற்காலிய இராணுவ தளத்தை ஆப்பிரிக்காமின் நிரந்தரமான இராணுவ தளமாக அமைத்துக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தது ’ஜிஹாதிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நூறு இராணுவ வீரர்களோடு சோம்பிக் கிடந்த ஜிபௌட்டியின் லெமான்னியர் இராணுவ முகாம், இன்று ‘இசுலாமிய ஜிஹாதின்’ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் இராணுவ செயல் கேந்திரமாக குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ‘ஆர்மி டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

அமெரிக்க வைஸ் அட்மிரல் ராபர்ட் மில்லர், “ஆப்பிரிக்காவில் இருந்து உலகச் சந்தைக்கு இயற்கை வளங்கள் சுலபமாக சென்று சேர்வதை உறுதி செய்வது தான்” ஆப்பிரிகாமின் கடமை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார். அமெரிக்காவின் எண்ணெய் தேவையை உத்திரவாதப்படுத்தும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுவதே ஆப்பிரிகாமின் நோக்கம் என்கிறார் அமெரிக்க இராணுவ ஜெனரல் வில்லியம் வார்ட்.

ஆக, எந்த நாட்டிற்குள்ளும் அமெரிக்கா நுழைவதற்குத் தேவையான அடிப்படை முகாந்திரங்களையும் அரசியல் தேவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கைக்கூலிகள் தான் ஜிஹாதிகள். ”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம். இது போன்ற வீடியோக்களையும் சில சில்லறைத்தனமான தாக்குதல் சம்பவங்களையும் சி.என்.என் போன்ற ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் உருவாவது தான் ‘இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டி’.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20-ம் தேதி) இரவு போகோ ஹராம் தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களை தாக்கி 48 பேரை கொன்று குவித்திருக்கும் செய்தி இப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பரேஷன் நைஜீரியாவுக்கு அமெரிக்க ‘உதவி’

போகோ  ஹராமின் மூலம் நைஜீரியாவுக்கான இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டியை உருவாக்கி முடித்து விட்ட அமெரிக்கா, தனது தலையீட்டுக்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி முடித்துள்ளது. நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன் துவக்கத்தில் அமெரிக்க தலையீட்டை ஏற்பதில் சுணக்கம் காட்டுகிறார், உடனடியாக ஜொனாதன் எப்பேர்பட்ட கையாலாகாதவர் என்பதையும் மாணவிகள் கடத்தப்பட்ட அதே சமயத்தில் அவர் கலந்து கொண்ட குடி விருந்தில் அடித்த சரக்கின் விலை என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் ‘ஆய்வு’ கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக கசியத் துவங்கியன.

உடனே ‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், அமெரிக்காவின் உதவியைத் தாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடப்பதாக அறிவித்து முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார். அமெரிக்கா தற்போது மாணவிகளைத் ‘தேடி’ வருகிறது. விரைவில் இசுலாமிய பூச்சாண்டியை ஒழித்து அமெரிக்காவின் நிரந்தர இராணுவதளம் ஒன்றின் நிழலில் ‘ஜனநாயகத்தின்’ மகாத்மியம் நைஜீரியாவில் நிலைநாட்டப்படக் கூடும். மாலி, சூடான், சோமாலியா, அல்ஜீரியா, சாட், நைஜர் உள்ளிட்ட பிற வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ’ஜிகாத்’ உக்கிரமாக நடந்து வருகிறது – டாம்ஹாக் எரிகணைகள் ’ஜனநாயகத்தின்’ நற்செய்தியை ஓசையோடு அறிவிக்கும் ஆசையோடு லெமான்னியர் முகாமில் காத்துக்கிடக்கின்றன.

ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்களோ ‘ஜிகாத்’தையும் அதன் அப்பனான அமெரிக்காவையும் வீழ்த்தவல்ல வர்க்கப் போராட்டம் ஒன்றுக்காக நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

–    தமிழரசன்

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !

6

சில நாட்களுக்கு முன் திருப்பதியிலிருந்து சென்னை வந்த என் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தேன். திருப்பதியிலேயே தங்கி வேலை செய்து வருபவன் என்பதால், அவனிடம் ஆந்திர அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது திட்டம்.

holy-election-11ஆனால் அவனோ தேர்தல் பற்றி பேச்செடுத்தாலே எரிச்சலாக பேசினான். ”தேர்தல் எல்லாம் சுத்த ஹம்பக் (பொய்)” என்றான்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நான் தேர்தல் புறக்கணிப்பை பற்றி பேசினால், “அதெல்லாம் தப்பு, நாம் நிச்சயம் ஓட்டுப் போட வேண்டும், பிடிக்கவில்லை என்றால், 49-ஓ போட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தான் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறது” என்பான். ஆனால் இப்பொழுது திடீரென்று எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்திருக்கிறது, ஏன்?

ஆந்திராவில் இந்த முறை தேர்தலில் பணம் பயங்கரமாக விளையாடி இருக்கிறது. பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் என்றும், அது திராவிடக் கட்சிகள் மாத்திரம் செய்யும் அசிங்கமான வேலை என்றும் நினைப்பவர்கள் உங்கள் அறியாமையை மாற்றிக் கொள்ளுங்கள்! பா.ஜ.கவுடன் புனிதக் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ஆந்திர தேர்தல் களத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளன. போலி ஜனநாயகத்தையே உண்மை ஜனநாயகமாக கருதும் நடுத்தர வர்க்கம் அதில் பண நாயகம் இருந்தே தீரும் என்பதை அறியும் போது வெறுக்கிறது. இது என் நண்பனின் தேர்தல் அலர்ஜிக்கு முதல் காரணம்.

மேலும் மக்களும் பணம் வாங்கியதை பற்றி அனைவரும் வெளிப்படையாகவே பேசியபடி இருந்துள்ளனர்.

இவன் வழக்கமாக டீ குடிக்கும் டீக் கடையின் சொந்தக்காரர்,”எப்படியும் ஆந்திராவை பிரிச்ச காங்கிரஸுக்கு ஓட்டு போடக் கூடாது என நான் நினைத்தேன், ஆனால் யாருக்கு போடுவது? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கா? இல்ல தெலுங்கு தேசம் கட்சிக்கா? என குழம்பிய போது, அதிக பணம் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு எங்கள் ஓட்டை போட்டு விட்டோம்” என்றிருக்கிறார்.

“எங்கள்? என்றால் எத்தனை பேர்”

“ஆமாம் தம்பி எங்கள் வீட்டில் மொத்தம் 6 ஓட்டு”

“ஏன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பணம் கொடுக்கவில்லையா?”

“உண்மையில் சொல்லணும்ன்ன தம்பி எனக்கு ஒய்.ஆஸ்.ஆர் (ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி- முன்னாள் முதல்வர்) மேலே ஆசை இருந்தது, அதனால் தான் நான் முதல்ல அவங்க கிட்டதான் 6 ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்கன்னு கேட்டேன். ஓட்டுக்கு 500 ரூபா தரன்னு சொன்னாங்க, ஆனா பாருங்க தெலுங்கு தேசம் கட்சிகாரங்க ஓட்டுக்கு 1000 ரூபா தரன்னு சொல்லிட்டாங்க. நான் அப்பவும், நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.” என்றிருக்கிறார்.

tdp-ysrcஇந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு 64 கோடி ரூபாய், ஒய்எஸ்ஆர் – ஜகன்மோகன் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து ரூ 50.9 கோடிதான் என்பதையும் இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தியாவிலேயே வெற்றி பெற்ற எம்பிக்களின் சொத்து மதிப்பில் முதல் இடம் வகிப்பது ஆந்திராதான். எனில் சீமாந்திராவில் சாமானியர்களுக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும்?

தேநீர்க் கடையில் ‘பல்பு’ வாங்கி வாயடைத்துப் போன என்  நண்பன் அவன் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் இதை பற்றி பேசியிருக்கிறான். அவர் அரசாங்கத்தின் வருவாய் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். தேர்தல் பணிக்கு வேறு சென்று வந்தவர்.

அவரிடம் போய் ”சார் ஓட்டுக்கு காசு வாங்கி இருக்காங்க தேர்தல் கமிஷனுக்கு இதெல்லாம் தெரியாதா?” என்று வெள்ளேந்தியாகக் கேட்டிருக்கிறான்.

அவர், ”தெரியும்ப்பா. என்ன செய்ய முடியும்? அவங்களும் மனுஷங்க தானே. இதாவது பரவாயில்லை, தேர்தல் வேலைக்கு போகும் ஆபிஸருங்க அவங்க தபால் ஓட்ட 3,000 ரூபாய்க்கு வித்திருக்காங்க. இதுக்கு என்ன சொல்லுவ?” என்று அணுகுண்டை வீசியிருக்கிறார். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதாக நண்பனுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவனைப் பொறுத்த வரை ஏழைகள்தான் பணம் வாங்கி ஜனநாயகத்தை காலி செய்கிறார்கள் என்ற ஆய்வு முடிவை அவன் சார்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இரக்கமின்றி காலி செய்து விட்டார்கள்.

”தேர்தல் அதிகாரிங்களா?”

அவர் மிக தெளிவாகவும்,உறுதியாகவும், “தேர்தல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிங்களே தான்” என்று சொல்லியிருக்கிறார்.

“தேர்தல் கமிஷன் ஆட்களா? அப்படிப்பட்டவங்கள எப்படி சார் தேர்தல் கமிஷன் வேலைக்கு எடுத்தாங்க” என கேட்டிருக்கிறான்.

”தேர்தல் கமிஷன் ஆட்கள் இல்லப்பா. தேர்தல் பணியில் ஈடுபட்டவங்க” என்று விளக்கியிருக்கிறார்.

என் நண்பன் தேர்தல் கமிஷன் என்பது தனியான பல ஊழியர்களை கொண்ட ஒரு துறை என்று தான் இது வரை நினைத்திருக்கிறான்.

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை
தபால் ஓட்டுகள் எண்ணிக்கை (கோப்புப் படம்).

நான் இடையில் புகுந்து, “தேர்தல் கமிஷன் என்பது தனியாக இருந்தாலும், அதில் நாடு முழுவதும் ஒரு 1,000 பேர் வேலை செய்யலாம். ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், அது தன் வேலைகளுக்காக அந்தந்த மாநில அரசு ஊழியர்களையும், போலிஸ் துறையையும், மத்திய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்கள் போன்றவர்களையும்தான்  வேலை செய்ய அழைத்துக் கொள்ளும்” என்று விளக்கினேன். டொரண்டில் சுடச் சுட உலக/உள்ளூர் சினிமாக்களின் புத்தம் புதிய காப்பிகளை தரவிறக்கம் செய்யும் தொழில் நுட்ப கில்லியான என் நண்பனுக்கு இது தெரியவில்லை. அவன் தனியாக தேர்தல் கமிஷன் எனும் துறையில் ஆயிரக்கணக்கான நேர்மையான் அதிகாரிகள் கீழ்மட்டம் வரை வேலை செய்து தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் போலவே பலரும் உள்ளனர்.

நம் அரசு அலுவலகங்களில் 100, 500 என்று லஞ்சம் வாங்குபவர்கள், பிள்ளைகளுக்கு பொறுப்பாக பாடம் சொல்லிக் கொடுக்காமல், சம்பளம் மட்டும் குறியாக  வாங்கி அதை வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் போன்றவர்கள்தான் கூடுதல் வருமானத்துக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்கள்.

பொறுமையாக கேட்ட என் நண்பன், “என் வீட்டு சொந்தக்காரரும் இதைத்தான் சொன்னார். சரி உனக்கு தபால் ஓட்டுன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டான்?

நான் தெரியும் என்றேன். “தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள், போய் அவர்கள் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பணியிடத்தில் இருந்தபடி மேலதிகாரி ஒப்புதலுடன், தபாலில் வாக்கு செலுத்தலாம். இவை மாத்திரம் வாக்கு சீட்டு வடிவத்தில் இருக்கும்” என்றேன்.

“ஆமாம் இதுவும் என் வீட்டு ஓனர் சொல்லி தெரிந்து கொண்டேன். என் வீட்டு ஓனர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தபால் ஓட்டுக்கள் எண்ணும் போது 200-க்கு 50 ஓட்டுக்கள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள். அங்கே வந்த தெலுங்கு தேசம் கட்சி ஏஜென்ட், யாரையோ அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கி விட்டாராம்”

”சரி தான். தங்கள் கட்சிக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தால் கோபம் வரத் தானே செய்யும். அதுவும், படித்த அரசு ஊழியர்களே செல்லாத ஓட்டுக்கள் போட்டால் நிச்சயம் கோபம் தலைக்கு ஏறும்”

“அது தான் இல்லை. அவர் அந்தந்த இடங்களில் வேலை செய்த தம் கட்சிக்காரர்களை தான் திட்டியுள்ளார்.”

“ஏன்?”

“ஒவ்வொரு அரசு அதிகாரியிடமும் போய் தனித் தனியாக விலை பேசி தபால் ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் ரூ 2,000 முதல் ரூ 4,000 வரை வாங்கிக் கொண்டு அரசு ஊழியர்கள் விற்றுள்ளார்கள். பலர் ஓட்டுக்களை தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டில் அதில் மேலதிகாரி கையெழுத்து வாங்கி சமர்த்தாக கொடுத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் செல்லும். சில ஊழியர்கள், விசுவாசம் அதிகமாகி, கட்சிக்காரர்களிடமே ஓட்டுச் சீட்டை கொடுத்து விட்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு டிக் அடிக்க தெரிந்த கட்சிக்காரர்களுக்கு அதில் மேலதிகாரி (கெஸ்டட் ஆபிஸர் ) கையெழுத்து வாங்க வேண்டும் என்ற அறிவில்லை. அவை அனைத்தும் காசு கொடுத்தும் செல்லாதவை ஆகிவிட்டன” என்றான்.

எனக்கே கொஞ்சம் தூக்கி வாரி போட்டது. இந்த அரசு ஊழியர்கள் தான் தேர்தலை நேர்மையாக நடத்தி இருப்பார்கள் என்று நினைத்து ஜனநாயக கோவிலுக்கு ஐந்து  வருடத்திற்கொரு முறை விரதமிருந்த என் நண்பனுக்கு கடவுளும் ஃபிராடு, பூசாரியும் கேடு என்ற அறிவு வந்திருப்பது ஒரு சிறு மகிழ்ச்சி.

“பாருடா உங்கள் தேர்தல் லட்சணத்த” என்று நான் சிரித்தேன்.

அவன் “அது பரவாயில்லைடா, நான் என் ஓனருகிட்ட, நீங்க ஏதும் காசு வாங்கலையான்னு கேட்டேன்” என்றான்.

“ஆமாம், அவர் எவ்வளவு வாங்கினாராம்”

வீட்டு ஓனர் ”இந்த விஷயம் எனக்கு தெரியாமலேயே நடந்திடுச்சி. தெரிஞ்சா நான் ஒரு 3,000 ரூபா தேத்தியிருப்பேன். ஆனா அடுத்தமுறை நிச்சயம் ஒரு 4000-ஆவது தேத்திடனும்” என்றிருக்கிறார்.

கோபமான என் நண்பன் அவரிடம் ”சார் நீங்களுமா இப்படி பேசுறீங்க. அவங்க எதுக்கு இவ்வளவு காசு செலவு பண்றாங்கன்னு யோசிச்சிங்களா. புது ஆந்திராவுக்கு தலை நகர் உருவாக்கணும். தலை நகர் உருவாக்குறதுன்னா, எவ்வளவு கட்டுமான வேலைகள், எவ்வளவு ரியல் எஸ்டேட், எவ்வளவு கான்டிராக்ட். கோடிகள் விளையாடும். 3,000 முதல் போட்டு கோடிகள் சம்பாதிப்பாங்க.” என்று சிறு பிரசங்கம் நடத்தியிருக்கிறான்.

அதை கேட்டு அவர் முகம் வாடி விட்டது, எதையோ யோசித்தவராக தலை குனிந்திருக்கிறார்.

என் நண்பனுக்கு ஒருவராவது திருந்தி விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி.

அவர் மெல்ல “நீங்க சொல்றது சரி தான் பாபு, நான் இதை யோசிக்கல. எவ்வளவு பணம், எவ்வளவு கான்டிராக்ட், பல நூறு கோடிகள் கொள்ளையடிச்சிடுவாங்க.. ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தாதான் தான் என் தபால் ஓட்ட போடுவேன்” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

பிறகு என் நண்பனுக்கு போலி ஜனநாயகம் குறித்து மாங்கு மாங்குவென்று விளக்கம் கேட்கும் அவசியமில்லாமலேயே வீட்டுக்கு வெளியே இருந்த புளியமரத்தடியில் ஞானம் பிறந்தது.

இதுதான் என் நண்பன் தேர்தல் மாயையில் இருந்து விடுபட்ட கதை.

சரி, விடுங்கள். நீங்கள் ஞானம் பெற்றவரா இல்லை யானை பெற்றவரா?

–    ஆதவன்

அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !

4

நூல் அறிமுகம் : “கலைவாணர் கண்ட ரஷ்யா”

டறிந்த வரலாறு நெடுகத் தேடினாலும் கம்யூனிச – சோசலிச அரசியல், சித்தாந்தத்தைப் போல அவதூறுக்கு இலக்கான வேறெதையும் காண முடியாது. அதைப் போலவே தோழர் ஸ்டாலினைப் போல அவதூறுகளுக்கு இலக்கான வேறெந்த தனிநபரையும், தலைவரையும் காண முடியாது.

கலைவாணர் கண்ட ரஷ்யா1990-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியல் சமூகவியலாளர் ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா, “வரலாற்றின் முடிவைப்” பிரகடனப்படுத்தினான். பின்நவீனத்துவ ஞானோதயம் பெற்றவர்கள், தாம் முன்னறிவித்த தத்துவத்தின் முடிவும், புதிய சகாப்தத்தின் பிறப்பும் உறுதியாகி விட்டதாக குதூகலித்தனர். ஆனால் பத்தாண்டுகளுக்குள்ளாகவே, ஃபிரான்சிஸ் ஃபுக்குயுமா தனது முடிவு பொய்த்துப் போய்விட்டதாக அறிவித்து விட்டான்.

எரிந்து சாம்பலாகிப் போய்விட்டதாக எதிரிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கு மாறாக “ஃபீனிக்ஸ் பறவை”யைப் போல கம்யூனிச – சோசலிசமும், ஸ்டாலினும் உயிர்த்தெழுந்து விட்டார்கள்.

“புரட்சிக்குப் பிந்திய சமுதாய ஆய்வு” என்கிற பெயரில் கம்யூனிச – சோசலிச சமுதாயங்களின் தோல்வியில் இருந்த படிப்பினைகளைத் தொகுப்பதாக புறப்பட்ட முன்னாள் மார்க்சியர்கள் அனைவரும் ஃபிரான்சிஸ் ஃபுகுயுமாவின் சகபாடிகளுடைய அவதூறுகளை விழுங்கி வாந்தியெடுத்தார்கள். இவர்களால் கற்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை முறியடிக்கும் அனுபவ உண்மைகளோ ஏராளமாக உள்ளன.

அவற்றில் ஒன்றாக, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் சோசலிச சமுதாயத்தை நேரில் கண்டு வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், 1951-ம் ஆண்டு சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை இப்போது மீண்டும் மறுபதிப்பாகி வெளிவந்துள்ளது. சோவியத் சோசலிச சமுதாயம், கட்சி மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் பலவற்றுக்கு நேரடியான மறுப்பாகவே கலைவாணரது உரை அமைந்துள்ளது.

புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி ஆய்வு செய்த “அறிஞர்கள்” எல்லாம், சோவியத் சோசலிசத்தில் பெரியார், கலைவாணர் போன்றவர்கள் கண்டு சொன்ன அனுபவ உண்மைகளை அடியோடு நிராகரித்து விட்டார்கள். இந்த வகையில் இந்த “அறிஞர்கள்” அன்றைய காங்கிரசுக்காரர்களின் வழிகாட்டுதலையே பின்பற்றுகிறார்கள் என்பதைக் கலைவாணரது உரையிலிருந்தே காண முடிகிறது.

“சமீபத்திலே நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள். ‘ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப் பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.”

சோவியத் சோசலிச சமுதாயத்தைப் பற்றிய அணுகுமுறையிலேயே வர்க்கப் பார்வை இருப்பதை முதலில் கலைவாணர் விளக்குகிறார்.

கலைவாணர் கண்ட ரஷ்யா“ரஷ்யா பற்றி எல்லா நாடுகளிலுமே அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே ரஷ்யா என்றால் ஒரு பூதம் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அமெரிக்காவிலே பெரிய பெரிய பணக்காரர்களும் பிச்சைக்காரர்களும் வாழுகின்றனர். அங்கே ரஷ்யா என்று சொன்னவுடனேயே அப்படிப் பயம் ஏற்படுவது இயற்கை. இந்தியாவிலே ரஷ்யாவை அவ்வளவு சண்டாளர்களாக எண்ணுவதில்லை. பணக்காரர்களுக்கு அவர்களைப் பற்றிப் பயம். ஆனால் ஏழை மக்களுக்கு ஒரு நண்பன் ரஷ்யா நாடு. ஆகையினாலே பாதிப்பேர் ரஷ்யாவை விரும்புவதும், பாதிப்பேர் அந்த நாட்டில் ஒன்றுமே கிடையாது, வெறும் கட்டுப்பாடு, கலையை அனுபவிக்கத் தெரியாதவர்கள் உள்ள நாடு என்று நினைக்கிறார்கள்.”

“நான்கூட இதைப்பற்றி தெரிவதற்கு முன்னால் இப்படித்தான் எண்ணியிருந்தேன். எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? அது கட்டுப்பாடுகள் நிறைந்த நாடாகத்தானிருக்கும், எல்லோரும் பயந்துதான் இருப்பார்கள். ரஷ்யாவைப் பற்றி பத்திரிகைகளும், பணக்கார்களும் பலவிதமாகக் கூறி வந்தனர். ஆனால் அங்குச் சென்று பார்த்து வந்ததும் இந்த நிலை அடியோடு மாறிவிட்டது.”

சோவியத் ஒன்றியம் ஒரு இரும்புத் திரை நாடாக இருந்தது என்றும், வெளி உலகு பற்றிச் சோவியத் மக்களுக்கு எதுவும் தெரியாதவாறும், அங்கே என்ன நடக்கிறதென்று வெளியுலக மக்கள் அறியமுடியாதவாறும் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்வதுண்டு. இவற்றுக்கெல்லாம் மறுப்புரைக்கிறார், கலைவாணர்.

“இங்கே இதைச் சொல்வது ஏனென்றால், ரஷ்யாவில் சில க்ஷேமமான இடம் இருக்கும்; காரிலே ஏற்றி வைத்து, மூடிவைத்து, அந்த சுபிக்ஷமான இடத்திற்குக் கொண்டுபோய் கதவைத் திறந்து காட்டிவிட்டு, பிற இடங்களும் இம்மாதிரியே இருக்குமென்று கூறி பழையபடி கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைத்தோம். இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அப்படிக் கட்டுப்பாடு அங்கே கிடையவே கிடையாது.”

“எங்கு போய் பார்க்க வேண்டுமென்றாலும் போய்ப் பாக்கலாமென்று சொன்னார்கள். முதலிலே கொஞ்ச தூரமுள்ள இடங்களுக்குக் காரிலே சென்றோம். அப்புறம் பக்கத்திலே போக வேண்டிய இடங்களுக்கு நடந்து போனோம். தெருக்கள் வழியாகவும், கடைகள் வழியாகவும் நடந்து நடந்து ஒவ்வொரு இடத்திற்கும் போய்ப் பார்த்தோம். இரும்புத்திரை போட்டிருக்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இரும்புத் திரை இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு இரும்பு இருக்கிறது. திரையைக் காணோம்.”

சோசலிசக் கட்டுமானத்தில் மக்கள் பங்களிப்பும் உணர்வும் எவ்வளவு சிறப்பாக இருந்தது, சமுதாயம் எவ்வாறு இயங்கியது என்பதைக் கலைவாணர் வியந்து போய்ச் சொல்லுகிறார்.

“எல்லோரும் ரயிலிலே வந்து பின்பு பேசாமல் இறங்கிப் போய் விடுகிறார்கள். டிக்கட் கேட்பதில்லை; செக்கிங் கிடையாது. நாங்கள் வந்த ஏழாவது ஸ்டேஷனிலே இதைக் கண்டோம். அங்கு எங்களோடு ஒரு சினிமா டைரக்டர் வந்தார். என்ன இது, ஒருவரும் டிக்கட் கேட்கவில்லையே என்று கேட்டேன், நாங்கள் என்ன எங்கள் தேசத்தை ஏமாற்றுவோம் என்றா நினைக்கிறீர்கள்? கொஞ்சம் கூட நினைக்க வேண்டாம். இது எங்கள் அரசாங்கம். எங்கள் அரசாங்கத்தால் போடப்பட்ட ரயில்வே. அவர்கள் கொடுக்கும் சம்பளம், இதை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றுவோமோ? அப்படியானால் உங்கள் ஊரிலே அவ்வாறு நடக்குமா (கை தட்டல்) என்று கேட்டார். நடக்குமா எனக் கேட்டால் நான் என்ன சொல்ல? முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டேன். (கை தட்டல்) வேறு வழியில்லை.”

தோழர் ஸ்டாலினை பாசிச சர்வாதிகாரி இட்லருக்கு இணை வைத்து சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அன்றைய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சோசலிசத்தின் பிந்தைய தோல்விக்குக் காரணம் என்று அவதூறு செய்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது கட்சி சர்வாதிகாரமாகவும், கட்சி சர்வாதிகாரம் மத்தியக் குழு சர்வாதிகாரமாகவும், இதுவே தனிநபர் தலைமையின் சர்வாதிகாரமாகவும் குறுக்கப்பட்டதாக சி.பி.ஐ., சி.பி.எம்., மணியரசன் குழு உட்பட பலரும் புளுகுகின்றனர். ஆனால் தோழர் ஸ்டாலினின் கீழிருந்து தெரிவு செய்யப்பட்ட அரசியல் அமைப்பில் அனைவருக்கும் ஆயுதமேந்தும் உரிமை உட்பட எப்படிப்பட்ட ஜனநாயகம் நிலவியது என்று கலைவாணர் விளக்குகிறார்.

“எல்லா நாடுகளிலும் பட்டாளத்திற்கு ஆள் சேர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அங்கே பட்டாளத்திற்கு ஆட்கள் சேர்க்க வேண்டியதில்லை. பொது மக்கள் என்றாலும் பட்டாளம் என்றாலும் ஒன்றேதான். ஓட்டலிலே வேலை செய்து கொண்டிருப்பவன் சண்டை என்று கேட்டவுடனே அந்தப் பாத்திரங்களைக் கீழே போட்டு, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு செல்வான். குப்பை பெருக்குபவன் தன் கையிலுள்ளதைக் கீழே போட்டுவிட்டு துப்பாக்கியை ஏந்திச் செல்வான் தேசமே பட்டாளம்; எல்லோரும் வீரர்கள். ஒரு படைகூட அங்கில்லை.”

“பல பெரிய மியூஸியங்கள் போன்ற இடத்தைக் காப்பதற்கு மட்டும் அங்கு சில வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற ஆட்கள் எல்லோரும் வேலை செய்தாக வேண்டும். அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விடப் பெண்கள்தான் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். எந்தத் தொழிற்சாலையைப் போய்ப் பார்த்தாலும் அவர்கள் நூற்றுக்கு எழுபது பேர்களாக வேலை செய்கிறார்கள். அந்த அரசியல் அமைப்பைப் பற்றி நினைக்க ஆச்சரியமாகவே இருக்கும்.”

சோவியத் ஒன்றியத்தில் பல கட்சி ஜனநாயகம் இருக்கவில்லை. பலகட்சி ஜனநாயகத்தைப் புரட்சியின் மூலம் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருந்தது. கம்யூனிச இலட்சியத்தை அடையும் பாதையில் இது ஒரு இடைக்கட்டம் தான். எதிர்க் கட்சியோ, பல கட்சியோ இல்லாததை இயல்பாக எடுத்துக் கொள்ளும் கலைவாணர் கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இலக்குபற்றி சோவியத் மக்கள் அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்.

குருச்சேவ் – பிரஷ்னேவ் கும்பல் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதற்கு முன்பு வரை, சோவியத் ஒன்றியத்தில் நிலவி வந்த சோசலிச சமுதாயம் எத்தகைய உன்னத அமைப்பாக இருந்தது. இதைக் கலைவாணரின் எளிமையான, சுவையான உரை மூலம் நமது மக்கள் அறிந்திட இன்னொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

–  சாத்தன்
_____________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_____________________________

நூல் :
கலைவாணர் கண்ட ரஷ்யா
தொகுத்தோர் : பொ.க.சாமிநாதன், க. பரமசிவன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
10, ஔலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-2.
044 – 28412367

சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !

2

மீபத்தில் நடந்து முடிந்த, உலகிலேயே மிகப்பெரிய ‘ஜனநாயக’த் திருவிழாவான 16-வது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்/வாக்களிப்புக்கு மத்தியில் ஏப்ரல் 21-ம் தேதி நீதிபதி நரசிம்ம ரெட்டி, நீதிபதி எம்.எஸ்.கே ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு சுண்டூர் படுகொலை வழக்கு மேல்முறையீட்டில் தனது தீர்ப்பை வழங்கியது.

ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திர உயர்நீதிமன்றம்

ஆந்திர மாநிலம் சுண்டூர் கிராமத்தில் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 8 பேர், 400-க்கும் மேற்பட்ட ரெட்டி ஆதிக்க சாதி கும்பலால் துரத்தப்பட்டு, வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அக்காலத்தில் இந்தியாவையே அதிர்ச்சியுறச் செய்தது இப்படுகொலை சம்பவம்.

14 ஆண்டு கால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2005-ல் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், 2007-ம் ஆண்டு 56 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து தண்டனை வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில், ‘கொலை நடந்த சரியான நேரம், நடந்த இடம், தாக்கியவர்களின் அடையாளம் இவற்றை முன்வைத்து குற்றத்தை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது’ என்று கூறி உயர்நீதிமன்றம் அவர்களை இப்போது விடுதலை செய்திருக்கிறது.

ரெட்டிகளின் ஆதிக்க சாதிவெறிக்கு ஆதாரமில்லை என்று ஒரு ரெட்டி நீதிபதி தீர்ப்பளித்திருப்பது முரண்பாடான ஒன்றல்ல. ஒருக்கால் ரெட்டிக்கு பதில் வேறு ஆதிக்க சாதி நீதிபதிகள் இருந்தாலும் இல்லையென்றாலும் நீதிமன்றங்கள் என்னவோ, பார்ப்பன ஆதிக்க சாதி வன்கொடுமையை பற்றி நின்றே தீர்ப்பளிக்கும்.

ஆந்திராவின் கடலோர மாவட்டமான குண்டூரில் உள்ள சுண்டூர் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,800. அவர்களில் பாதிபேர் ரெட்டி சாதியினர்; மொத்த விவசாய நிலத்தில் பாதியை சொந்தமாக வைத்திருந்தனர். தெலகா அல்லது கப்பு சாதியினரிடம் 250 ஏக்கர் நிலமும், பார்ப்பனர்களுக்கு சொந்தமாக 100 ஏக்கரும், வைசிய சாதியினருக்கு சொந்தமாக 65 ஏக்கரும் இருந்தன.

சுண்டூர் ரயில் நிலையம்
சுண்டூர் ரயில் நிலையம்

தாழ்த்தப்பட்ட மாலா சாதியைச் சேர்ந்த நிலமற்ற விவசாய கூலிகள் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்காக இருந்தனர். 1990-க்கு முந்தைய சில பத்து ஆண்டுகளில் கல்வி, வேலை வாய்ப்புகளில் மாலா சாதி இளைஞர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 200 பேர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், 15 பேர் முதுகலை பட்டம் பெற்றிருந்தனர்.

மேலும், தெனாலி-சென்னை ரயில்தடத்தில் அமைந்துள்ள சுண்டூரில் பலருக்கு ரயில்வே, தொலை தொடர்புத்துறை மற்றும் வங்கித் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்ததோடு, ரயில் மூலம் வெளியிடங்களுக்கு காலையில் போய் வேலை செய்து விட்டு மாலை திரும்பும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால், ரெட்டி ஆதிக்க சாதியினரை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது குறைந்ததோடு, கல்வி, அரசு வேலைகளில் முன்னேறவும் செய்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த பொருளாதார சுதந்திரம் ரெட்டி சாதியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அன்று அப்போது நாக்பூரில் பட்ட மேல்படிப்பு படித்து வந்த ரவி என்ற இளைஞர், சுண்டூரின் திரைப்பட அரங்கில் முன் இருக்கையில் காலை நீட்டியிருக்கிறார். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த குர்ரி சீனிவாச ரெட்டி என்பவர் ரவியை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரெட்டிக்கள், ரவியையும் அவரது அப்பாவையும் மிரட்டி இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்க விடாமல் செய்திருக்கின்றனர். ஆனால், காவல்துறையில் புகார் கொடுக்க மறுத்த ரவி குடும்பத்துக்கு மாலா சாதி சார்பாக ரூ 25 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி மற்றும் பிற ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மாலா சாதியினரை சமூக புறக்கணிப்பு செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்திக் கொண்டனர். ஆதிக்க சாதியினரின் நிலங்களில் வேலை செய்ய அனுமதி மறுப்பு, ஊரின் ஆதிக்க சாதி பகுதிகளுக்கு வர தடை, நிலக்குத்தகை ரத்து என்று பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுத்து அம்மக்களை பணிய வைக்க முயற்சித்திருக்கின்றனர். தமது வயல்களில் வேலை செய்ய வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கின்றனர்.

மாலா மக்களோ இதற்கு அடிபணியாமல் வெளியூர்களுக்கு வேலை செய்யப் போக ஆரம்பித்திருக்கின்றனர். சாதி மோதலை தடுக்க கிராமத்தில் 50 காவலர்களை கொண்ட  போலீஸ் காவல்சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம்
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம்

ஜூலை 29-ம் தேதி தடை உத்தரவு நீக்கப்பட்டது. ஆகஸ்ட் 4,5 தேதிகளில் ரெட்டி சாதிக் கும்பல் ஒன்று வேலைக்கு போய்க் கொண்டிருந்த மாலா சாதியினரை தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதி பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த ரெட்டிகளையும் திரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றர்.

கொலைவெறித் தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், வேமூரு சப் இன்ஸ்பெக்டரும் 100 காவலர்களுடன் வந்து தலித்துகளை ஓடி விடும்படி எச்சரித்திருக்கின்றனர். இதைத் தவிர தாக்குதலை எதிர்கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் வன்னியர் சாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை எரித்தது சிதைத்தது போலவே போலீசின் கண்பார்வையிலேயே கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. போலீசும் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்குத்தான் பாதுகாப்பாக இருக்கும் என்பது சுண்டூர் முதல் பரமக்குடி வரை அப்பட்டமான உண்மை.

டிராக்டர்களிலும், ஸ்கூட்டரிலும் வந்த கொலை வெறி ரெட்டி சாதிக் கும்பல் ஓடிக் கொண்டிருந்தவர்களை துரத்தி வெட்டிக்கொன்றது; அத்துடன் ஆத்திரம் அடங்காமல் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, கண்டம் துண்டமாக வெட்டி சாக்கு பைகளில் திணித்து கால்வாயில் விட்டெறிந்தது. காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள்  பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

படுகொலைகள் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற விசாரணைக்குழு நியமிக்க வேண்டும், நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று சில உறுப்பினர்கள் குரல் எழுப்பியதோடு தனது ஜனநாயக கடமையை முடித்துக் கொண்ட பாராளுமன்றம் அடுத்த அக்கப்போர் பணிகளுக்கு நகர்ந்து விட்டது. அப்போது இந்த படுகொலைகளை கண்டித்து பேசிய பீகாரின் தலித்திய (இப்போது லோக் ஜனசக்தி கட்சி) அரசியல்வாதி  ராம்விலாஸ் பாஸ்வான், குற்றவாளிகளை விடுவிக்கும் உயர்நீதி மன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில் பீகாரில் தலித் மக்களை கொன்று குவித்த ரண்வீர்சேனாவின் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் ஓட்டு பொறுக்கிக் கொண்டிருந்தார். இப்போதும் மோடியுடன் பல்லிளித்தவாறு போஸ் கொடுக்கிறார். தலித்தியத்தின் சாதனை இப்படித்தான் அம்பலமேறியிருக்கிறது.

இந்தப் படுகொலைகள் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நாடெங்கிலும் 45-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தியாவின் 20 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனிய ஆதிக்க சாதி அடிமைத்தளை இன்று வரை உடைக்கப்படாமலேயே உள்ளது.

அனில்குமார் நினைவகம்
சுண்டூர் கொலையாளிகளை கைது செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த போது போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட அனில்குமாரின் நினைவிடம்.

சுண்டூர் படுகொலைகள் நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1996 ஜூலையில் பீகாரில் பதோனி டோலாவில் 21 தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.

1997-ம் ஆண்டு இட ஒதுக்கீடு, உயர் பதவிகளில் சில தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடம், என்று தலித்துகளுக்கு சமூகநீதி வழங்கி விட்டதாக மோசடி பிரச்சாரம் செய்யும் இந்திய ஆளும் வர்க்கம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கே ஆர் நாராயணனை குடியரசுத் தலைவர் ஆக்கியிருந்தது. தலித் அறிவுஜீவிகளும் இதை மாபெரும் சாதனையாக கொண்டாடியிருந்தார்கள்.

ஆனால், ‘குடியரசுத் தலைவராக ஒரு தலித் நியமிக்கப்பட்டுள்ளார், இனி நாம் ஒடுக்குமுறையை செலுத்தாமல் வாழவேண்டும்’ என்று ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ‘தெரிந்திரு’க்கவில்லை. 1997 டிசம்பர் 1 அன்று இரவு 11 மணிக்கு லட்சுமண்பூர் பதே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களான பூமிகார் சாதியினரின் குண்டர்  படையான ரண்வீர் சேனா நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 58 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள்.

உத்தமர் வாஜ்பாயி பிரதமராக ஆன பிறகு நவம்பர் 1998-ல் போஜபூர் மாவட்டம் நகரி கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த 10 மா.லெ ஆதரவாளர்களை, ரண்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி கூலிப்படையினர் கொன்று குவித்தனர்.

ஜூன் 2000-ல் அவுரங்கபாத் மாவட்டம் மியான்பூர் கிராமத்தில் 34 தாழ்த்தப்பட்டவர்களை ரண்வீர் சேனா குண்டர்கள் படுகொலை செய்தனர்.

லஷ்மண்பூர்-பதே படுகொலையை கே.ஆர். நாராயணன், தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்தார். இதைத்தாண்டி ஒரு தலித் குடியரசுத் தலைவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது பீகாரில் ஆட்சியில் இருந்த லல்லு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமிர்தாஸ் தலைமையிலான ஒரு ஆணையத்தை நியமித்தது.

பின்னர் 2006-இல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள – பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக் கலைத்து, அதன் விசாரணை அறிக்கையை முடக்கி வைத்தது. அந்த  நிதீஷ் குமார்தான் இப்போது தேர்தலில் தலித் ஓட்டுகளை பொறுக்குவதற்காக மகாதலித் ஜிதன் ராம் மஞ்சியை முதலமைச்சர் ஆக்குவதாக சமூகநீதி நாடகம் ஆடுகிறார்.

பதனி தோலா வழக்கில் 2012-ம் ஆண்டு ஏப்ரலில் குற்றவாளிகள் 23 பேரை பாட்னா உயர்நீதி மன்றம் விடுவித்துள்ளது.

நகரி கொலையாளிகள் 11 பேரை 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.

லஷ்மண்பூர்பதே படுகொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை, 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி உயர்நீதி மன்றம் விடுவித்தது.

மியான்பூர் வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டது பாட்னா உயர்நீதி மன்றம்.

சுண்டூர் வழக்கின் 23 ஆண்டு இழுத்தடிப்பு
சுண்டூர் வழக்கின் 23 ஆண்டு இழுத்தடிப்பு (படம் : நன்றி The Hindu)

இந்த சமூக, அரசியல் சூழலில்தான் சுண்டூரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி பெறும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

கொன்று சிதைக்கப்பட்ட உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் ரவிகுமார், அந்த கொடூரம் விளைவித்த மன அழுத்தத்தை சகிக்க முடியாமல் சில நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு மருத்துவருக்கு இருக்கும் குற்ற உணர்வு இங்கே காவலர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இல்லை என்பதோடு அது கொலை உணர்வாகவும் உரு மாறியிருக்கிறது.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 22 வயதான அனில் குமார் என்ற நேரடி சாட்சியத்தை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு  2005-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது.

ஆனால், கொலையாளிகளான ரெட்டி சாதியினர் நீதித்துறையிலும், அதிகார வர்க்கத்திலும், காவல்துறையிலும் தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை இழுத்தடிக்கவும், நீர்த்துப் போகச் செய்யவும் அனைத்து முயற்சிகளையும் செய்தனர். இந்த படுகொலைகள் நடக்கும் போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் காங்கிரசு கட்சியின் ஜனார்த்தன் ரெட்டி, உள்துறை அமைச்சராக இருந்தவர் மைசூரா ரெட்டி. படுகொலைகளுக்கு ஒன்றரை மாதம் முன்புதான் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக் கட்சியின் பி.வி.நரசிம்ம ராவ் என்ற பார்ப்பனர் நாட்டின் பிரதமராகியிருந்தார். அவரது தலைமையில் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அமெரிக்க பெப்சியும், கோக்கும், டி-20 கிரிக்கெட்டும் தலை விரித்து ஆட ஆரம்பித்து நாட்டை 21-ம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்து விட்ட பிறகும் சுண்டூர் படுகொலைகளுக்கும் சரி, தருமபுரி முதல் பாட்னா வரை நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்து வரும் பல தாக்குதல்களுக்கும் நீதி வழங்கப்படவில்லை.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதை எதிர்த்து மனு, அரசு வழக்கறிஞர் நக்சலைட் ஆதரவாளர் எனக் கூறி அவரை மாற்ற வேண்டும் என்று மனு, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி பெற்ற உரிமையான வழக்கை சுண்டூர் கிராமத்தில் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மனு, நீதிபதி பிரபாகர் ராவ் தலித் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என மனு என அடுத்தடுத்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூலம் வழக்கிற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர், ரெட்டி ஆதிக்க சாதிவெறியர்கள். இதன் விளைவாக நீதிபதி பிரபாகர் ராவ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அனீஸ் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டார்.

தலித் மக்கள்
நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்ற தலித் மக்கள்.

தலித் மக்களை விலைக்கு வாங்குவதற்கு பல வழிகளில் முயற்சிக்கப்பட்டது. ஆந்திர அரசும் ரெட்டிகளின் முயற்சிக்கு துணை நின்றது. சிலருக்கு வேலை வழங்குவது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற முயற்சிகளின் மூலம் நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களை மறந்து விடச் செய்ய முயற்சித்தது அரசு. குஜராத்தில் 2002-ல் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கு நீதிக்கு பதிலாக, தனது பாணி ‘வளர்ச்சி’யை தருவதாக மோடி சொன்னது அவரது சொந்தக் கண்டுபிடிப்பு இல்லை, பார்ப்பனிய மனுதர்மத்தின் அடிப்படையே இதுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், தலித் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.

தருமபுரியில் 400 வீடுகளை தீவைத்து கொளுத்தியும், ஒரு தலித் இளைஞனை துரத்தித் துரத்தி மரணத்துக்கு தள்ளியும்  வன்னிய சாதி வெறியை காட்டிய ராமதாசு பிற ஆதிக்க சாதியினரையும் இணைத்து ஒரு சாதி வெறி கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தது போல ரெட்டிகளும், தெலகாக்களும் இணைந்து, தலித் மக்களை ஒடுக்குவதற்காக ‘அனைத்து மக்களையும் முன்னேற்றுவதற்கான போராட்ட கமிட்டி’ ஒன்றை ஏற்படுத்தினர்.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் இறுதியில் 2007-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை, 35 பேருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ 2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 43 பேர் தொடர்பான சாட்சியங்களை நிராகரித்தும், 62 பேரை சந்தேகத்தின் பேரிலும், 20 பேர் தொடர்பாக போதுமான சாட்சியங்கள் இல்லை எனவும் மொத்தம் 123 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ரெட்டி சாதியினரில் செல்வாக்கு மிகுந்த பலரை விடுவிக்கும்படி பலவீனமான குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தண்டனை குற்றவியல் சட்டத்தின் கீழ்தான் வழங்கப்பட்டிருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி அனீஸ் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். ஒரு வகையில் இந்த தீர்ப்பே அவர்களை மேல் முறையீட்டில் விடுவிப்பதற்கான இடைக்கால ஏற்பாடு என்றும் சொல்லலாம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கோரியும், விடுவிக்கப்பட்ட 123 பேரை மீண்டும் வழக்கில் சேர்க்கக் கோரியும, வன்கொடுமை தடுப்புச்  சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தாம் குற்றமற்றவர்கள் என்றும் தம்மை விடுவிக்கும்படியும் மேல்முறையீடு செய்தனர்.

உயர்நீதிமன்றமோ, குற்றவாளிகளின் மேல்முறையீட்டை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ரெட்டி சாதியினர் சிறையில் வாடுவதால் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நியாயப்படுத்தினார் நீதிபதி நரசிம்மா ரெட்டி. அதை எதிர்த்து நீதிமன்ற அமர்வு மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய தலித் தரப்பை ஏளனம் செய்து, “வழக்கை விசாரிக்கும் போது எதிர் தரப்பின் விருப்பத்தின்படி ஆடினால், நீதித்துறை எப்படி செயல்பட முடியும்” என்று திமிராக பதிலளித்தார் நரசிம்மா ரெட்டி. ரெட்டி ரெட்டியுடன்தான் இனம் சேரும்.

இதே நீதித்துறை, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற வைத்த போதும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நீதிபதியை மாற்றக் கோரியபோதும் கைகட்டி, வாய் புதைத்து அந்த கட்டளைகளை நிறைவேற்றி சாதிக்கேற்ற சட்டம் என்ற மனுநீதியை தவறாமல் கடைப்பிடித்து வருகிறது.

ஏப்ரல் 21-ம் தேதி தீர்ப்பின்படி குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் தலித்துகள் மீதான தாக்குதலை நடத்தவில்லை என்றால் கொல்லப்பட்ட 8 தலித்துகளும் தம்மைத் தாமே வெட்டிக்கொண்டு, தமது உடலை தாமே சாக்குப் பையில் அடைத்துக் கொண்டு கால்வாயில் எறிந்து கொண்டார்கள் என்று நீதித்துறை கருதுகிறதா? என்று தலித் அமைப்புகள் குமுறுகின்றன.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தாக்குதலில் தொடர்பு உடையவர் என்பதற்கு நேரடியான எந்த ஆதாரங்களும் இல்லா விட்டாலும் நாட்டின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்துவதற்கு அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அனுப்பிய இந்திய நீதித்துறை, பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்த ரெட்டி ஆதிக்க சாதிவெறிக் கும்பலை சுதந்திர மனிதர்களாக உலாவ விட்டிருக்கிறது. தேசத்தின் கூட்டு மனசாட்சியோ மோடியின் குஜராத் பாணியிலான ஆட்சி, குஜராத் பாணியிலான கார்ப்பரேட் வளர்ச்சி என குஜராத் பாணியிலான ‘சமூகநீதி’க்கான கனவில் ஆழ்ந்திருக்கிறது. அந்த வகையில் மோடியின் ஆட்சி கூட ரெட்டிகளுக்குத்தான் வரப்பிரசாதம் என்பது உண்மை. சீமாந்திராவில் தெலுங்கு தேசம் எனும் ஆதிக்க சாதி கட்சியுடன்தானே பாரதீய ஜனதா கூட்டணி வைத்திருக்கிறது!

ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் தலித் தலைவர்கள்
ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சார்பாக தலித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில், “தனிநபர்களும் அமைப்புகளும் பரஸ்பர மரியாதையையும், மனித பண்புகளையும் வளர்க்க முயற்சிக்க வேண்டும். நடந்ததை மறந்து சமாதானமாக வாழுங்கள்” என ‘2002-ல் கலவரம் நடந்தது, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதனால் என்ன, கொலையாளிகள் உங்களுக்கு தரும் ‘வளர்ச்சி’யை வாயைப் பொத்திக் கொண்டு வாழுங்கள்’ என்று மோடி சொல்வது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ம் தேதி ஜலடி மோசஸ் என்பவர் தேர்தலை புறக்கணிக்கும் படி கேட்பதற்கு நடத்திய கூட்டத்தில் 1,600 குடும்பங்கள் கலந்து கொண்டனர். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு செய்தால், இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பயத்தில் பலர் புறக்கணிப்பு கோரிக்கையை எதிர்க்கவே அது கைவிடப்பட்டது. தமது மக்கள் கொல்லப்பட்டதற்கு தேர்தல் புறக்கணிப்பு எனும் ஜனநாயக உரிமை கூட இங்கே இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்!

உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி மடுகுலா மல்லிகார்ஜூனா ரெட்டி, வேமூரு தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மெருகா நாகார்ஜூனாவுக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். “சுண்டூருக்கு நீதி” என்ற இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளராக இருந்த மெருகா நாகார்ஜூனா, சுண்டூர் மக்களின் ரத்தத்தில் பெற்ற பிரபலத்தை ஓட்டுக் கட்சி அரசியலில் விற்றுக் கொண்டிருக்கிறார். கூடவே சுண்டூர் கொலைகாரர்களின் உதவியோடு தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.

மடிகா சாதியினருக்கு (நமது அருந்ததியினர் போன்ற சாதியினர்) உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தை முன்வைத்து ஆந்திராவின் தாழ்த்தப்பட்ட சாதிகளான மாலா, மடிகா சாதியினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது இதில் ஒரு கிளைக் கதை. மடிகா சாதியினர் இடஒதுக்கீடு போராட்ட கமிட்டி ஒன்றை ஏற்படுத்த மாலா சாதியினர் தலித் மாலா மாநாடு அமைப்பை உருவாக்கியினர். இந்த பிளவில் மடிகா சாதி மக்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜனநாயக உரிமையை எடுத்துக் கூறி தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய தலித் இயக்கங்கள் மாறாக பிளவு வேலையை செய்திருக்கின்றன. இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி கூட்டணிகள் மூலம் தமது தரப்பையும் விற்றிருக்கின்றன.

தலித்துகள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தின் கீழ், ஆதிக்க சாதி  அதிகார அமைப்புகளின் முதுகெலும்பை உடைக்கும் நக்சல்பாரி புரட்சிதான் கொடூரமான பார்ப்பனிய சாதி கட்டமைப்பை ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி.  அது வரை சுண்டூர் கொலையாளிகளும் அவர்களை பாதுகாத்து வரும் இந்த சமூக அமைப்பும் சற்றே இளைப்பாறலாம். அந்த இளைப்பாறுதல் நிரந்தரமல்ல என்பதை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

சுண்டூர் படுகொலைகளும், நீதி தவறிய நீதிமன்றங்களும் நமது மனசாட்சியை கேள்வி கேட்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம். பார்ப்பனி ஆதிக்க சாதிவெறியின் எலும்பை உடைப்போம்!

–    பண்பரசு

மேலும் படிக்க

பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

19

ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு ‘அடக்கமாக’ பேசினாலும் ஜனநாயகத்தை ஏற்காது என்பதற்கு மற்றொரு உதாரணமாக ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பாஜக அடிப்பொடி தலைவர் நிதின் கட்காரி நிரூபித்திருக்கிறார். ஆள் அரவமற்ற சிவன் கோவில் திண்ணையில் குடியும் சீட்டுமாக வாழும் ஒரு ரவுடி போல, அடாவடியாகவும், பொறுப்பின்றியும் பேசி, பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதாவை ஒருமையில் திட்டியிருக்கிறார் முன்னாள் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.

தாரிக் பிர்சாதா பாக் அரசில் பொறுப்பு வகித்தாலும், இந்தியா-பாக் உறவு குறித்து நாகரீகமாக பேசக் கூடியவர். அதன் பொருட்டே அவரை இந்திய தொலைக்காட்சிகள் அவ்வப்போது விவாதத்துக்கு அழைக்கின்றன. கட்காரியைப் போன்ற காட்டுமிராண்டிகள் காட்டுமிராண்டித்தனமாக பேசுவது அதிசயமில்லைதான். ஆனாலும் ஆட்சி அமைக்கும் பொழுதில், அமைச்சராக வாய்ப்புள்ள கியூவில் நிற்கும் ஒரு தொழிலதிபர், தறுதலை போல பேசியதுதான் குறிப்பிடத்தக்கது.

ஹெட்லைன்ஸ் டுடேவில் நடந்த விவாதத்தின் வீடியோவையும், உரை வடிவத்தையும் கீழே தந்திருக்கிறோம். பார்த்துவிட்டு இந்து மத வெறியர்கள் இந்தியாவின் குடிமக்களா இல்லை டிராகுலாக்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

++++++++++

உரை வடிவம்

ஹெட்லைன்ஸ் டுடேபா.ஜ.க அரசு அமைக்க தயாராகி வரும் இந்நேரத்தில் அக்கட்சி பாகிஸ்தான் மீது கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மூத்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொள்ளா விட்டால் … புதிய அரசாங்கம் பொருத்தமான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்திருக்கிறார் என்ற அறிவிப்போடு முந்தைய இரவு ஹெட்லைன்ஸ் டுடேவில் நடைபெற்ற விவாதப் பகுதியை காண்பிக்கின்றனர்.

கட்காரி (இந்தியில்) : நான் பாகிஸ்தானிய நண்பர்களை கேட்க விரும்புகிறேன். எங்களுடைய நான்கு வீரர்களின் கழுத்தை வெட்டி சென்றீர்களே, இது போன்ற வேலை செய்வது அவர்களுடைய மிலிட்டரிக்கு அழகு சேர்க்கிறதா, நாங்கள் பாகிஸ்தானோடு அமைதியே விரும்புகிறோம். ஆனால், அவர்கள் பயங்கர நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தால், அதற்கான பதிலடி நிச்சயம்உறுதியான வடிவில் கிடைக்கும். இது மன்மோகன் சிங், காங்கிரஸ் அரசு இல்லை, எங்களுடையது.

கட்காரி (ஆங்கிலத்தில்) : நாங்க பாகிஸ்தானோடு போரை விரும்பவில்லை, நாங்கள் அமைதியை வேண்டுகிறோம். ஆனால், அதே நேரம், நாங்கள் பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஜீரோ சகிப்புத் தன்மை கொண்டிருக்கிறோம். (இந்தியில்) பாகிஸ்தான் இதை நிறுத்தவில்லை என்றால், இதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். மன்மோகன் அரசு பேசாமல் இருந்தது, நாங்கள் அப்படி இருக்க மாட்டோம்.

தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : நான் பதில் சொல்லலாமா, ஆங்கிலத்தில் பேசவா, உருதுவில் பேசவா?. (ஆங்கில நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும், வேற்று நாட்டைச் சேர்ந்தவரிடம் நமது மொழி வெறியை காட்டக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் பேசும் கட்காரியின் தவறை நாகரீகமாக சுட்டிக் காட்டுகிறார் பிர்சாதா)

ஒருங்கிணைப்பாளர் : “முன்னாள் பா.ஜ.க தலைவரிடமிருந்து மிகவும் பரபரப்பான சவால் வந்திருக்கிறது. நீங்கள் எங்கள் படைவீரர்களின் கழுத்தை வெட்டிச் சென்றால் நாங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது” (இவர் பரபரப்பை ஏற்றி விடுகிறாராம்)

நிதின் கட்காரி
நிதின் கட்காரி

தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : கட்காரி மிகவும் தவறான எண்ணத்தில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். முதலில், பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நல்ல அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால், திரு மோடி அல்லது பா.ஜ.க தாவூத் இப்ராகிம் அல்லது வேறு ஏதாவது பயங்கரவாத குழு இந்தியாவுக்கு எதிராக ஏதோ செய்து விட்டது என்ற பொய்யான முகாந்திரத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்குள் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்தால், நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு.

கட்காரி (இந்தியில்) : திரு பீராதா வுக்கு இந்தியாவின் வலிமை தெரியாதா என்ன? அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்றால், எங்களிடம் இல்லையா என்ன? முதலில் நாம் அமைதியை விரும்புகிறோம்.

பிர்சாதா  (ஆங்கிலத்தில்): உங்களுக்கு பாகிஸ்தானின் வலிமை தெரியாது என்று நான் நினைக்கிறேன். எமது அணுஆயுத வலிமை இந்தியாவின் வலிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.

கட்காரி (இந்தியில்) : திரு பீராதா இந்த மிரட்டல்கள் எல்லாம் மன்மோகன் சிங் அரசிடம் வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் வேண்டாம். (தொடை தட்டுகிறாராம்)

பிர்சாதா (இந்தியில்) : இல்லை, இல்லை. இது மிரட்டல் இல்லை, பாகிஸ்தானின் வலிமையை பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினால் அவர்கள் புது தில்லியை துடைத்து அழித்து விட முடியும், எந்த நேரத்திலும். (பிர்சாதா அவரது இயல்புக்கு மாறாக கடுமையான கருத்தை சொல்கிறார்)

கட்காரி (இந்தியில்) : திரு பீர்ராதா, மூன்று முறை போரில் உங்களுக்கு என்ன கதி ஆனது என்று நினைவிருக்கிறதா. சிம்லாவுக்கு வர வேண்டி ஏற்பட்டது நினைவிருக்கிறதா? அதெல்லாம் மறந்து விட்டதா, அந்த வரலாறு உங்களுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா? உங்களுக்கு அமைதி வேண்டுமென்றால் இது போன்று தவறாக பேசாதீர்கள். இது மன்மோகன்சிங் அரசு இல்லை, இது எங்கள் அரசு. நாங்க பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் பார்த்து பயப்பட மாட்டோம். (ஏளனம் செய்து இன்னும் அவரை கோபப்படுத்த முயற்சிக்கிறாராம்)

தாரிக் பிர்சாதா
தாரிக் பிர்சாதா

பிர்சாதா  (ஆங்கிலத்தில்) : நீங்கள் உண்மைகளை திரித்து கூறுகிறீர்கள், பொய் சொல்கிறீர்கள். வரலாற்றை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு தெரியாது என்ன பேசுகிறோம் என்று. வங்கதேச போரைப் பொறுத்த வரை அது வங்க தேச மக்களுக்கானதாக போனது. 1965-ல் நாங்கள் உங்கள் விமானப் படையை அழித்து ஒழித்து விட்டோம். 1948-ல் பாகிஸ்தான் அப்போதுதான் புதிதாக உருவாகியிருந்தது. இன்றைய பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு. பாகிஸ்தானை மிரட்டி தாக்கும் தவறை செய்யும் நாளை நினைத்து கவலைப்படுங்கள். பதிலடி மிகவும் பயங்கரமாக இருக்கும்.

பிர்சாதா  (இந்தியில்) : மும்பை தாக்குதலை பொறுத்த வரை உங்களுக்குத் தெரியாது, வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. நாங்கள் உண்மை என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தியாவுடன் அமைதிக்காகவே எங்களது முயற்சி. பாகிஸ்தானிலிருந்து எந்த ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இந்தியா மீது நடக்கவில்லை, இனிமேலும் நடக்காது. நீங்கள் உங்கள் உளவுத் துறைகளிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நேபாள் எல்லையிலிருந்து பிடித்த ஆள் யார்? நீங்கள் ஒருவரை பிடித்து அவரது பெயரை வைத்துக் கொண்டு கதை உருவாக்கி வருகிறீர்கள். (இயன்ற வரை நிதானமாக தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்)

ஒருங்கிணைப்பாளர் (இந்தியில்) : நீங்க என்ன சொல்றீங்க, கசாப் எங்கேருந்து வந்தான், பாகிஸ்தானில் அவனுடைய அம்மா, அப்பா எல்லாம் இருக்கின்றனர். பாகிஸ்தானி சேனல் அந்த கிராமத்துக்கு போனது (எதிர் தரப்பின் கருத்துப் பற்றி கவலையே படாமல், தான் சொல்வது உலகறிந்த உண்மை என்ற விடலை பையன் போல பேசுகிறார்).

கட்காரி (இந்தியில்) : உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு பொய் சொல்லாதே, அல்லா மீது ஆணையாக உண்மை சொல்ல பழகு. அவனுங்க கராச்சியிலிருந்து வரவில்லையா…. (பொறுக்கி மொழியில் இறங்குகிறார்)

பிர்சாதா : நீங்கதான் பொய் சொல்கிறீர்கள்

(மூன்று பேரும் ஒரே நேரத்தில் பேசிக் கொள்கின்றனர்)

==========

‘பாகிஸ்தான் காரன் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துட்டு போறான், மன்மோகன் சிங் என்ற கோழை கையை கட்டிக் கொண்டு கவலையில்லாமல் இருக்கிறார்’ என்று இந்து மத வெறி, இந்திய தேச வெறி முரடர்கள் பேசுவது போல, பாகிஸ்தானிலும்,

‘இந்திய உளவுத் துறை வேண்டுமென்றே கதைகளை கட்டி பாகிஸ்தான் மீது அவதூறு செய்கிறது. பாகிஸ்தானை அழித்து விட இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று பாகிஸ்தானிய மதவெறி, தேச வெறியர்கள் பேசுவதில் ஆச்சரியமில்லை.

நிதின் கட்கரி - தாரிக் பிர்சாதா
நிதின் கட்காரி – தாரிக் பிர்சாதா

மேலும், இந்தியா பாகிஸ்தானை ஒரே நாளில் காலி செய்து விடும் என்று இந்த பக்கத்திலிருந்தும், பாகிஸ்தான் இந்தியாவை அழித்து ஒழித்து விடும் என்று அந்த பக்கத்திலிருந்து சவடால் விடும் போர்வெறியர்கள் இரு நாடுகளின் தெருக்களை நிரப்பியிருக்கிறார்கள்.

இந்திய உளவுத்துறைக்கும், பாகிஸ்தானிய உளவுத் துறைக்கும், அமெரிக்காவின் மேலாதிக்க திட்டங்களுக்கும் நடுவில் இருக்கும் உண்மையை மதவெறி, தேசவெறியை ஒதுக்கி விட்டு விவரங்களின் அடிப்படையில் பரிசீலித்து வந்தடைவதுதான் இரு நாடுகளிலும் உள்ள பொறுப்புள்ள ஜனநாயக சக்திகளின் கடமை. இருநாடுகளும் அமெரிக்க அடிமை என்பதோடும், உள்ளூரில் ஏழைகளை வாட்டுவதையும் ஒரே மாதிரி செய்கின்றன. இதை நாம் அம்பலப்படுத்தினால்தான் இருநாட்டு மக்களையும் இரு நாட்டு அரசுகளிடமிருந்து காப்பாற்ற முடியும். இதன்றி போர் வெறிப் பேச்சுக்களால் எப்பயனும் இல்லை.

பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதா அத்தகைய நிதானமான அரசியல்வாதி. ஆனால், நிதின் கட்காரியும், ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளரும், தொலைக்காட்சி சேனலிலேயே இந்திய-பாகிஸ்தான் போரை நடத்தி முடித்து விடுவது போல அடாவடியாக பேசுகின்றனர்.

நிதின் கட்காரி முதலான ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் உள்நாட்டில் படம் காண்பிப்பதற்காக தாரிக் பிர்சாதா போன்ற அமைதியான, முதிர்ந்த அரசிய்வாதியைக் கூட நிதானமிழக்க வைக்கும் வகையில் பேசினாலும் நிதர்சனம் வேறாக இருக்கிறது.

வாஜ்பாயி ஆட்சியின் போது கார்கில் போரை முடித்துக் கொள்ள அமெரிக்காவின் காலில் விழுந்து சமாதானம் செய்து வைக்க கெஞ்சியதும், காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட போது கைதிகளையும், பணத்தையும் கொண்டு கொடுத்து மீட்டு வந்ததும், இரு தரப்பிலும் நல்லுறவு வேண்டும் என்று தற்போது மோடி பேசியிருப்பதும்தான் யதார்த்தம். இல்லை காந்தகாரில் பணயக் கைதியை விட முடியாது என்று அப்போதைய பாஜக அரசு ஏன் பேசவில்லை? உயிருக்கு அஞ்சாத ஸ்வயம் சேகவ குஞ்சுகள் எங்கே போயிருந்தார்கள்?

இது இவர்களது விருப்பமல்ல என்றாலும் பாக்கோடு போர் அல்லது பதட்டம் என்பது இரு நாடுகளுக்கும் கேடு விளைவிக்கும். இதை ஒரு அளவு தாண்டி ஆட முடியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மேடைகளிலும், இணையங்களிலும் பாகிஸ்தானை கூண்டோடு காலி செய்வது போல உதார் விடுகிறார்கள்.

பாகிஸ்தான் பிரதமரும் சரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்த நிதர்சனங்களை உணர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். மோடியும் வேறு வழியின்றி பதவியேற்பு விழாவிற்கு பாக் பிரதமரை அழைத்திருக்கிறார். ஒரு வேளை இது அகண்டபாரதத்துக்கான சாணக்கிய தந்திரமென்று கூட இந்துமதவெறியர்கள் வியாக்கியானம் செய்யக்கூடும்.

நிலைமை இப்படி இருக்க பா.ஜ.கவின் நிதின் கட்காரி முதல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இணையத்தில் கமென்ட் போடும் இந்துத்துவா அடிப்பொடிகளும் விளைவுகளை தாம் எதிர் கொள்ளப் போவதில்லை என்ற தைரியத்தில் வெற்று வாய்ச்சவடால் அடித்து வருகிறார்கள்.

இந்த நிதின் கட்காரி ஒரு பெரும் தரகு முதலாளி என்பதோடு ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர். ராஜ்நாத் சிங்கிற்கு முன்னதாக அகில இந்திய தலைவராக இருந்தவர். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்க போகிறவர். இத்தகைய நபர் தொலைக்காட்சியில் பாகிஸ்தானை போருக்கு அழைக்கும் கொடுமையினை என்ன சொல்ல?

போர் என்று வந்தால் மோடியோ இல்லை வானரப்படையோ சண்டை போடப் போவதில்லை. இராணுவ வீரர்களும், காஷ்மீர் மக்களும் மற்றைய எல்லைப்புற மக்களும்தான் உயிரையும், உடமையையும் இழக்க வேண்டும். அப்படி போர் நடந்தால் கட்காரி தனது மும்பை வீட்டில் சேட்டுக்கடை ஜிலேபியையும், லட்டுவையும் விழுங்கிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.

இத்தகைய முட்டாள் பாசிஸ்டுகள்தான் இனி இந்தியாவை ஆளப்போகின்றனர் என்றால் இதை விட என்ன அபாயம் வேண்டும்?

– செழியன்.

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

36

காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வீரன், திப்பு சுல்தானின் மோதிரம் ஒன்று வரும் மே 22-ம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டி என்ற ஒரு தனியார் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வருகிறது. வழக்கமாக காந்தி கண்ணாடி, நேரு சட்டை, கென்னடி கடிதம் போன்றவைகள் ஏலம் வருவது போன்று திப்பு சுல்தானின் மோதிரம் ஏலம் வருவதைப் புறந்தள்ள முடியாது.

திப்புசுல்தானின் மோதிரம்
திப்புசுல்தானின் மோதிரம் (படம் : நன்றி The Hindu)

1799 மே 4-ம் தேதி நான்காவது மைசூர் போரில் திப்பு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது ஆட்சியளராக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி இம்மோதிரத்தைக் கைப்பற்றினார். பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து இன்னொரு யுத்த பிரபுவான ஃபிட்ஸ்ராய் சோமர்செட் என்பவரிடம் திருமணப் பரிசாக மோதிரம் கை மாறியது. தற்போது அவர்களது வழித் தோன்றல்கள் இதனை ஏலத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியா இந்த ஏலத்தில் பங்கெடுத்து மோதிரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இந்த குரலோடு நாமும் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு விடுதலை போரை காட்டிக் கொடுத்த எட்டப்பன், தஞ்சை சரபோஜி, புதுக்கோட்டை தொண்டைமான், ஆற்காடு நவாபு போன்ற அரசர்கள் போலன்றி திப்பு சுல்தான் சாகும் வரை சமரசமின்றி போராடி வீழ்ந்தார். ஒருவேளை வரலாறு வேறு மாதிரி அமைந்து திப்பு வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவில் நிலவுடைமை சமூக அமைப்பு அழிக்கப்பட்டு முதலாளித்துவ சமூக அமைப்பு கூட வந்திருக்கலாம். இன்னும் சாதிவெறி, மதவெறியை எதிர்த்து நாம் மூச்சுக் கொடுக்கும் சிரமத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் ‘ஒருவேளை’ என்று வரலாற்றை திருப்பி போட முடியாது.

இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள். அந்த அவதூறுக்கு இந்த மோதிரமே ஒரு பதிலை வைத்திருக்கிறது. 41.2 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தில் இந்து கடவுளான ராமனின் பெயர் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இசுலாமிய மன்னன் எப்படி “ராம்” பெயர் தாங்கிய மோதிரத்தை அணிந்தான் என்று இந்துமதவெறியர்கள் மட்டுமின்றி, இசுலாமிய மதவாதிகளும் கோபம் அடையலாம்.

வழக்கம் போல ‘பல இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் மதம் மாற்ற அவர் வற்புறுத்தினார், அதற்காக குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் திப்பு கொன்றார்’ என்ற கதையை இந்துத்துவாவாதிகள் இணையத்தில் கிளப்பி விட ஆரம்பித்து விட்டனர்.

திப்புசுல்தான்
திப்புசுல்தான்

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள். ஆனால் அந்த மராத்திய போர் வீரர்களது படையெடுப்பிலிருந்து சிருங்கேரி மடத்தை காப்பாற்றியவர் திப்பு என்பது பலருக்கும் தெரியாத வரலாற்று உண்மை. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு. மைசூர் ராஜ்யத்தில் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக வழங்கியவரும் திப்புதான். அவரது ஆஸ்தான அமைச்சர் பூர்ணய்யாவும் ஒரு இந்துதான்.

அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை “குடிமகன் திப்பு” என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்பு தோற்ற பிறகு தனது ராஜ்யத்தில் பாதியையும், தனது பிள்ளைகளில் இருவரை பணயக் கைதியாகவும் வெள்ளையர்களிடம் கொடுத்து பின்னர் மீட்டார். நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

முதன்முதலாக போர்ப்படையினருக்கு சம்பளம் தந்த திப்பு, தனது படைகள் கைப்பற்றும் பகுதிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது எனவும், தானியங்களை மக்களிடமிருந்து விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் தனது படை வீரர்களுக்கு உத்திரவும் போட்டார். மது விற்பனையை தடை செய்தார். கஞ்சா பயிரிடக் கோரி பிரிட்டிஷார், விவசாயிகளை வலியுறுத்திய போது திப்பு அதனை தடை செய்தார். டாடாவோ அபினை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வணிகம் செய்ய இங்கிலாந்திற்கு உதவினார்.

அடிமை விற்பனையை தடை செய்த திப்பு எந்த அரசு வேலைக்கும் கூலி கொடுக்காமல் மக்களிடம் வேலை வாங்க கூடாது என்று ஆணையிட்டார். “மக்கள் நலனை விட அரசின் கருவூலத்தை பெருக்குவதுதான் முதன்மையானதா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

பாலியல் தொழிலை தடை செய்ததுடன் தேவதாசி முறைக்கு எதிராகவும் ஆணைகளைப் பிறப்பித்தார். பார்ப்பனியம் இழிவுபடுத்திய இத்தகைய பல்வேறு கொடூரமான நடைமுறைகளை திப்பு தடை செய்தது முக்கியமானது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு மேலாடை அணிய உரிமை வழங்கியதுடன் நில உடைமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்திருந்தார் என்பதை எட்கர் தட்ஸன் எனும் அறிஞர் பதிவு செய்திருக்கிறார். எந்த சாதி மதங்களை சேர்ந்தவராயினும் உழுபவருக்குதான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன திப்பு, ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்திருந்தார்.

சேலம் மாவட்டம் வேலூர் தாலுகாவில் பிரிட்டிஷாரின் வரிக்கொடுமை தாங்காமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தான் ஆடசிபுரிந்த பகுதிக்கு 1792-க்கு பிறகு குடிபெயர்ந்தனராம். இதனை பின்னாட்களில் வந்த தாமஸ் மன்றோ பதிவு செய்கிறார். உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்த திப்பு மூன்றாவது மைசூர் போரின் தோல்விக்கு பிறகும் வெள்ளையரை தனது பகுதியில் வணிகம் செய்ய அனுமதிக்கவில்லை. இன்றைக்கோ பன்னாட்டு கம்பெனிகளில் வேட்டைக் காடாக இருக்கிறது தேசம்.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும். மொத்த ராணுவத்தின் கௌரவத்தை குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் ராணுவத்துக்கு ஆணையிட்டவர் திப்பு. விவசாயிகள் உட்பட அனைவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.

திப்பு இறந்து விட்டதாக அவரது பிள்ளைகள் சொன்னதை வெல்லெஸ்லி முதலில் நம்பவில்லை. மன்னர் ஒருவர் போர்க்களத்திற்கு போவார் என்பதை அவர்களால் கனவிலும் நம்ப முடியவில்லை. பிறகு திப்புவைத் தேடிப் போகிறார்கள். போர்க்களத்தில் இறந்து கிடக்கிறார் திப்பு. அங்கிருந்து தான் வெல்லெஸ்லி இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.

மோதிர ஏலத்தை தடுக்க வேண்டும் என எல்லோரும் யோசிக்கின்றோம். ஆனால் தேசமே ஏலம் விடப்பட்டு மொத்த நாடும் பன்னாட்டு கம்பெனிகளிடம் கைகட்டி நிற்பது தெரிந்தும் தெரியாதது போல நிற்கிறோம். திப்புவுக்கு மரியாதை செய்வதென்பது மோதிரத்தை மீட்பதோடு மட்டுமல்ல தேசத்தை மீட்பதோடும் சேர்ந்திருக்கிறது.

–    முத்து

மேலும் படிக்க