Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 809

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.

39

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 9

இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்

குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்

இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்

தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்

பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்

குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது

அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்

______________________________________________

சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.

அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.

இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள்  சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.

சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக  பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே  மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம்.  போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ  என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.

எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால்  கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.

_____________________________________________________

தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி.  குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும்,  சமூகம் தந்த ஆறாத காயங்களும்  கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.

மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின.  பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.

ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை.  ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.

மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.

தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.

______________________________________

இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில்  பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.

ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.

இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.

அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.

ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.

நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.

சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.

___________________________________________

–     செல்வநாயகி.

அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/
________________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி

36

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 8

vote-012உதடுகளில் சாயத்தோடும், தோளில் பையோடும் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் உங்களைக் கடந்து போகும் போது நீங்கள் நினைக்கக்கூடும், ‘பாருங்கப்பா பெண்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்’ என்று. அப்படி நினைத்தீர்களானால் உங்களுக்கு பெண்களின் வாழ்நிலை குறித்தோ, அவளின் இருப்பு குறித்தோ எந்தவித அக்கறையும் இல்லை என்றே சொல்வேன். வார்த்தைகள் தடிப்பானவையாக இருக்கலாம். ஆனால் நண்பர்களே நான் சொல்வது உண்மையிலும் உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார்,  பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்…எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?

___________________________________________________

பெண்? திருமணத்துக்கு முன்…

“ஆண் குழந்தைகளோடு விளையாடக்கூடாது. தனிமையில் ஆடினாலும் சொப்பு வைத்து சோறு வடி. வீட்டு வாசலைத் தாண்டி தெருவுக்கு போய்விடக்கூடாது. அப்படி போனால் அப்போதே அவளின் எதிர்காலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரிந்துவிடும். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே இது இழுத்துக்கிட்டு போகப் போவுது பார்த்துக்க.

வீட்டை விட்டு வரக்கூடாது, ஆண்கள் வீட்டுக்குள் வந்தால் கக்கூஸுக்குள்ளோ கிச்சனுக்குள்ளோ அடைக்கலம் புகுந்து கொள். தலைவாரி-பொட்டு வைத்து-பூச்சூடு (பின்னாளில் கணவனை கவர்ந்து கைக்குள் போட்டுக் கொள்வதற்குத்தான்). பாத்திரம் கழுவு, வீட்டைக் கழுவு, அண்ணன்-தம்பி குண்டியைக் கழுவ (கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேரின் அத்தனையையும் கழுவ பயிற்சி) கற்றுக்கொள்.”

“வயசுக்கு வந்த பொண்ணுக்கு படிப்பெதுக்கு? சேர்த்து வைத்த தட்சணையை வரனுக்கு கொடுத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளை கரை சேர்த்துவிடலாமில்லையா? படிக்கப் போனவள் வீடு வந்து சேர்வதற்க்குள் மடியில் இருக்கும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும், எப்போ அவள் பத்திக்குவாளோ என்று. வீட்டு பட்ஜெட்டில் மாசமாசம் பெரிய்ய சேலையோ வேட்டியோ விழுந்தாலும் கூட படித்தவள் வேலைக்குப் போகக்கூடாது. வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொடுத்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. சீவிச் சிங்காரித்து (கவனிக்க…வீட்டில் இருக்கும்போது பயிற்சிக்காக மட்டுமே இதை செய்ய வேண்டும்) அப்படியே வேலைக்குப் போனாலும் வரதட்சணைப் பணத்துக்குத்தான் ஆகப்போகுது. காலகாலத்துல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்காம அப்படியே இருந்து புரட்சி செய்யப்போறீயா?”

______________________________________________

திருமணத்துக்குப் பின்…

“கணவன் + அவன் குடும்பத்தினர் அத்தனை பேரின் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு வீட்டு வேலையைச் செய். வேலைக்குப் போனாலும் இந்த சாஷ்டாங்க சடங்கை செய்தாக வேண்டும். புர்காவைப் போல சுடிதார் இருக்க வேண்டும். புடவை கவர்ச்சியான உடை என்பதை ஆண்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். கழுத்தில் தாலியும் கால்களில் மெட்டியும் குளிக்கும் போதுகூட கழற்றப்படக்கூடாது & அப்படி கழற்றினால் நீ வேசையாவாய்! ஏனெனில் தாலியும் மெட்டியும் இல்லாமல் உன்னைப் பார்க்கும் ஆண்கள், உன்னை வசீகரித்து, உன்னிடம் கள்ளக்காதல் கொள்ள ஏதுவாகப் போய்விடும்.”

“புத்தகம் படிக்கக்கூடாது, பேப்பர் படிக்கக்கூடாது. சிறந்த குடும்பப் பெண் ஆவது எப்படி என கற்றுத்தரும் சீரியல்களையும் கணவனை முந்தானையில் முடிந்து கொள்ளும் ரகசியத்தைச் சொல்லும் பெண்கள் பத்திரிகைகளையும் பார்க்கலாம், படிக்கலாம். திருமணம் ஆன அடுத்த நாளே வாந்தி எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் வாழைப்பழத்தோடு புள்ளைப்பூச்சியை விழுங்க வைத்து (டெஸ்ட் டியுப் பேபி போன்ற நவீன சிகிச்சை முறையெல்லாம் வந்துடுச்சே என்கிறவர்களுக்கு பாரம்பரியத்தை போதிக்க ஆட்டோவில் ஆள் அனுப்பப்படும்) பிள்ளை பிறக்க வழி செய்யப்படும். அப்படியும் எந்த பூச்சியும் பிறக்கவில்லை என்றால் காத்துக்கிடக்கும் மலடி பட்டம். மலடன் என்கிற வார்த்தை தமிழில் இல்லையாம்!  பிள்ளை பிறந்துவிட்டால் கழுவும் வேலையை செய். வேலைக்குப் போவதற்கு பெரிய முற்றுப்புள்ளி வை. பிறகு வாழ்க்கை முழுவதும் ஏராளமான முற்றுப்புள்ளிகளை வைக்கக் கற்றுக் கொள்.”

___________________________________________________

தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள். வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?

இதற்கு இந்த சமூகத்தின் ஒவ்வொரு துரும்பையும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கும். குற்றம் சொல்வது இருக்கட்டும், இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட இத்யாதி வகையறாக்கள் பெண்களுக்கு கண்ணும் கருத்துமாக போதிக்கப்படுகின்றன. ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.

______________________________________________

இறுதியாக இறைஞ்சுதல்…

பெண் உயர்ந்தவள்-ஆண் தாழ்ந்தவன் என்கிற தர்க்கம் இப்போது தேவையே இல்லை. பெண்ணை சக உயிராகக் கூட மதிக்காத சமூகத்தில் பெண்ணின் மேன்மை குறித்து பேச என்ன இருக்கிறது? என்னைச் சுற்றியுள்ள பெண்களின் நிலைமையை கூர்ந்து பார்க்கும்போது, மிகுந்த மனஉளைச்சலும் வெறுப்புணர்வும் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒருவகையில் பிரச்சினை என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு வகையிலும் பிரச்சினைதான். நான் பணியாற்றும் ஊடகத்துறையில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் எத்தனை பெண்கள் ஓடி மறைந்துவிட்டார்கள் தெரியுமா?

சக பணியாளர்களான ஆண்களின் கிசுகிசுக்களும் தன் குடும்பத்தாரின் நிர்பந்தமும் பெண்களை சமையலறைக்குள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. சினிமாவைப் பார்த்து பால் குடித்து, சினிமாவைப் பார்த்து உடையணிந்து, சினிமாவைப் பார்த்து மோகம் கொள்ளும் ஆண்களிடம் எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

சினிமாவில் பேண்ட் அணிந்த கதாநாயகியைப் பார்த்து காமுறும் கதாநாயகனை சுவீகரித்துக் கொண்ட ஆணுக்கு, தன் வீட்டுப் பெண் வசதிக்காக பேண்ட் அணியும் போது மற்ற ஆண்கள் அவளைப் பார்த்து காமுறக்கூடுமே என்கிற எண்ணம் மேலோங்குகிறது. அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.

திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன். திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் செல்லவில்லை. அதுவரைக்கும் இப்போதிருக்கிற அமைப்பில் இயங்குவது சமூகத்தை பின்நோக்கித்தான் செலுத்தும்.. நாம் வேண்டுவதெல்லாம் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதே. திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளும், இயக்கங்களும் இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்கிற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இப்போதிருக்கும் ஊடக வளர்ச்சியை ஏன் இந்த இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன?

திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். அதுதான் எங்கள் எல்லோருடைய இறைஞ்சுதலும். கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு புறம் அமைப்புகளை தூக்கி எறிந்து புரட்சி செய்கிற பெண்களின் மீது படும் முதல் கல், ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான். பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!

இத்தகையதொரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதற்கும், பங்கேற்க அழைத்தமைக்கும் வினவுக்கு நன்றி…

_________________________________________________

–   மு.வி.நந்தினி

(ஊடகவியலாளர், சென்னையில் வாழ்கிறார். நந்தினியின் வலைப்பூ:  http://mvnandhini.wordpress.com)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

429

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 7

வீட்ல யாரது?” கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.

“மீண்டும் வீடல யாரது?” என்று கேட்டதும் “யாரு?” என்று உள்ளிருந்து பதில் வினாவாக கேட்க…
“நான்தான் சாகித் வந்திருக்கிறேன். கஹாரின் இருக்காங்களா?”
“அவுங்க கடைக்கு போயிருக்காங்களே” பதிலாக பெண்குரல்.
அந்தக்குரல் எனது நண்பனுடைய துணைவியாரின் குரல் எனபது பழக்கப்பட்ட எனக்கு எளிதாக அடையாளம் தெரிந்தது.

“எப்ப வருவாங்க?”
“கொஞ்சம் நேரமாகும் என்று சொல்லிட்டுப் போனாங்க”
“அப்படியா! வந்தவுடன் நான் வந்துட்டுப் போனதாக சொல்லுங்க. அப்புறமா வர்ரேன்”
“சரி சொல்றேன்.”
கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்.
_____________________________________________

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், 1980களின் வாக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஒரு ஆடவரின் அனுபவம் இப்படியாகத்தானிருக்கும். பெரும் நகரங்களில் சற்று வேறுபாடாக கதவுகளில் மாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சங்கிலிக்கு அந்தப் பக்கமிருந்து சிறிது நீக்கப்பட்ட இடைவெளியில் பதில் கிடைக்கும். அதுவே சந்திக்கச் சென்ற நபர் வீட்டிலிருந்தால் கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதுக்கு முன்னே வீட்டினுள் தாராளமாக புழங்கிக் கொண்டிருந்த பெண்கள் உள் அறைகளுக்கோ அல்லது அடுப்படிப் பக்கமோ ஒதுங்கிக் கொண்ட பிறகே உற்ற நண்பராக இருந்தாலும், அந்நிய ஆண்களாக, ஓரளவு பழக்கமுள்ள உறவினர்களாக எவராக இருந்தாலும் வீட்டினுள் வரவேற்கப்படுவர். மாமா, மச்சான், சித்தப்பா என்று நெருங்கிய ஆனால் குடும்ப உறவில் அதிக தொடர்புள்ளவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு.

உங்களின் நண்பர் உங்களை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுக்காக தேனீர் தயாரிக்கச் சொல்லியிருந்ந்தால் அதனைத் தயாரித்துக் கொண்டுவரும் உங்கள் நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ஏங்க, டீ கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும், உங்களின் நண்பர் சென்று தேனீர் டம்ளரை பெற்றுவந்து உங்களுக்குத் தருவார். அல்லது வீட்டில் பருவமடையாத சிறுமிகளிருந்தால் அவர்கள் எடுத்து வருவர். நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ நல்லா இருக்கீங்களா? ஊட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரிப்பார். அநேகமாக அவர் பேசிய சொற்கள் அவ்வளவாகத்தானிருக்கும்.

நண்பரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஓடிவந்து “மாமா” என்று மடியில் உட்கார்ந்து கொள்ளும் அவரது மகள் பர்ஹானா பருவமடைந்து விட்டதால் தாய்க்கு அருகில் நின்று கொண்டே “மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.
____________________________________________

பொதுவாக இசுலாமியர்கள் ஒரு சிறு நடைப்பகுதி தலைவாசலில் இருக்குமாறுதான் தங்களின் வீடுகளைக் கட்டுவர். 70, 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுக்கட்டு முற்றம் உள்ள வீடுகளாக இருந்தாலும் தலைவாசல் பகுதியில் ஒரு அடைப்புச் சுவர் இருக்கும். இதுவே அந்நிய ஆடவர்களுக்கான எல்லையாக இருந்தது.

ஆனால் தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர். சமூக குற்றச்சாட்டுக்களும், உலமாக்களின் கண்டிப்புகளும் ஒரு ஆணோ பெண்ணோ மாற்றங்களை விரும்பினாலும் தடுக்கும் சக்திகளாக இருந்தன.

உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன. வண்ணாரப்பேட்டை ஜான் பாட்சா (இவர் மாந்திரீகர்) வீதியில் இருந்த அவருடைய லைன் வீடுகளில் (17வீடுகள் _ 1974களில் உள்ள நிலை) ஒரே ஒரு அறையும் அடுப்பாங்கரையாக இருந்த முன் நடையையும் தவிர மறைந்துகொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஏதும் அற்ற இல்லங்களில் வசித்த இசுலாமியர்களின் பண்பாடும், திருச்சி குத்பிஷா நகர் பீடி சுற்றும் தொழிலாளர்கள், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில் புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில் வாழும் அன்றாடங்காச்சிகள், பாலையங்கோட்டை பீடி சுற்றும் தொழிலாளர், ஓட்டு மண்வீடும் சில முந்திரி (நிலஅளவு 16 முந்திரி 1 ஏக்கர்) நிலமும் உடைமையாகக் கொண்ட இசுலாமிய விவசாயக் குடும்பங்கள் என தமிழமெக்கும் இவர்களின் பண்பாடு வேறாகத்தானிருந்தது.

எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.

உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.

இசுலமியப் பெண்களுக்கிடையே பண்பாடுகளின் மாற்றம், முன்னேற்றம் அகியவற்றினைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமானால் இந்த சிறு கட்டுரை போதாது. சமூக நலன் கருதி இப்படிப்பட்ட விரிவான ஒரு ஆய்வு வேண்டும். இது இங்கு முடியாது. மிகவும் பிரச்சனைக்குரிய முதன்மை தரக்கூடிய சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
__________________________________________

புர்கா

இசுலாமியப் பெண் எனள்ற விவாதம் தொடங்கினாலே முதன்மைப்படுத்தப்படும் பொருள் புர்காவாகத்தான் உள்ளது. தஸ்லிமா நஸ்ரினுடைய புர்கா பற்றி ஒரு கட்டுரையை கன்னடத்தில் மொழிபெயர்த்து (கன்னட நாளிதழ் நன்று) வெளியிட்டதற்காக லத்திஜார்ஜ் துப்பாக்கிசசூடு என்று பெரும் கலவரமே கர்நாடகாவின் பல நகரங்களில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. வினவில் கூட சுமஜ்லா என்ற பிளாக்கரின் புர்கா பற்றிய தம்பட்டத்தாலும் சூடான விவாதம் நடந்துள்ளது. இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?

பொதுவாக எந்த மதத்தினராக அல்லது மதம் சாராதவர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்களை எவராவது சைட் அடித்தாலோ, இல்லை சாதாரணமாக பார்த்தாலோ அல்லது காதலித்தாலோ ஏற்றுக் கொள்வதில்லை. தொண்டி என்ற சிறு நகரத்தின் வாலிபர்கள் பிற மதத்தின் பெண்களை சூன்காளி (அழகிய பெண்) பூதிகாளி (அசிங்கமான பெண்) என்று ஒன்றுகூடி விமர்சித்தாலும் தன் மதத்தினுடைய பெண்களை அவ்வாறு நாலுபேர் நின்று கமெண்ட் அடிக்கவிடுவதில்லை. தகராறுதான்! அடிதடிதான்! இதே நடைமுறையில் சைட்அடித்துக்கொண்டு திரிந்து இன்று அப்பாவாக தாத்தாவாக மாறியுள்ளவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களை பிறர் கமெண்ட் அடிக்க விடுவதில்லை. இது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிற மதத்தினரிடம் தன் வீடு என்று சுருங்கியுள்ள உணர்வு இசுலாமியர்களிடம் தம் சமூகம் என்று விரிந்துள்ளது. அதற்காக இசுலாமிய வாலிபர்களும் குமரிகளும் தமக்குள் ஒருவர் ஒருவரை காதலிப்பது இல்லையா என்று கேட்க வேண்டாம். அதனையும் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் “புர்கா” என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.

கண்கள் தவிர பிறவற்றை மறைக்க வேண்டும், திரை மறைவுக்குப் பின் நின்றே அந்நிய ஆடவர்களுடன் உரையாற்ற வேண்டும், என்று கோட்பாடு கூறினாலும் நடைமுறை அவ்வாறு இல்லை. புர்காவின் இன்றைய நிலைதான் என்ன? பொதுவாக தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கமில்லை என்பது நாம் அறிந்ததுதான். பத்தானியர்கள் (பட்டாணியர்கள்) என்றழைக்கப்படும் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம் அணிந்தனர். அதுவும் அவர்களிடம் ஒரு சடங்குத்தனமான மனநிலை இருக்கிறதேயொழிய கடவுள், கோட்பாடு, சொர்க்கம் என்ற உணர்விலெல்லாம் அணிவது இல்லை.

தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலை, சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. குமரிப் பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வது அத்திபூத்தது போன்று அரிதாக இருந்த அன்றைய நிலையில் புர்கா அணிந்து சென்றதில்லை. ஆனால் பரவலாக இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

மூன்று சகோதரிகளுடன் மட்டும் பிறந்து கல்லூரிக்குச் செல்லும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா தன் தமக்கைகளிடம் “இந்த பாரு யார் என்ன சொன்னாலும் பெரியவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக அப்படியே ஏத்துக்கக்கூடாது. நாமும் சிந்தித்து பார்க்கனும். ஆனாலும் அவர்களிடம் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காம காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகிட்டு நம்ம காரியத்தை சாதிக்கனும்” என்று கூறுகிறார். கணினித் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இவரும் இவரது தந்தைக்கும் புர்கா என்பதில் நம்பிக்கை இல்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாமே என்பது அவர்களின் கருத்து. இவரின் தாய்வழி சுற்றம் எந்த பெண்களையும் பருவமடைந்த பிறகு பள்ளிக்கூடம் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஸகனாஸ் கணினித் துறையில் பொறியியல் வல்லுனர். புர்கா இல்லாமல் கல்லூரிக்குச் சென்றதில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் பணிக்குச் செல்லும் போதும் புர்கா அணியவே செய்வார். புர்கா பற்றி பெருமையாகவும் சொன்னவர்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது ஒரிசாவைச் சார்ந்த மாணவரைக் காதலித்து முஸ்லீமாக ஒரு திருமணச்சடங்கு, ஒரிசா சென்று கணவரின் குடும்பத்தினருக்காக ஒரு இந்துமத திருமணச் சடங்கு. இன்று தாய் வீட்டுக்கு வந்தால் புர்கா, தனது வீட்டிலும் பணியிடத்திலும் அது இல்லை. பிள்ளைகளுக்கும் இரண்டிரண்டு பெயர்கள்.

மதுரைச் சேர்ந்த பாத்திமா, ராகேஷ்ஷுடன் இந்துவாக மாறித் திருமணம் செய்தார். திருச்சியைச் சேர்ந்த பானு, அகஸ்டின் தங்கராஜுடன் கிறித்தவராக மாறி திருமணம். இவர்களும் புர்காவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இன்று குடும்ப உறவுகளும் தொடரத்தான் செய்கிறது.

திருமணவிழா மண்டப்பத்திலே 18 வயது ஜுவைரியா புர்காவுடன் “வணக்கம் தோழர்” என்று எமது தோழர்களுக்கு கை கூப்பி வரவேற்கிறார். திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.

அன்று ஜவுளிக்கடை, நகைக்கடை, வளையல்கடை போன்றவற்றிற்கு மட்டும் ஆண்களுடன் சென்றுவந்த பெண்கள் இன்று தனியாகவும்
சென்றுவருகின்றனர். கடைத்தெருவுக்கு செல்லும் பெண்களை “ஊர் மேய்பவள்” என்று இழித்துரைத்த காலம் கண்ணாடி பெட்டகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டது. அன்றாடத் தேவைகளுக்கு ஆண்களே கடைத்தெருவுக்குச் செல்லும் காலமும் மலைஏறிவிட்டது. காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது. இதுவே அவர்களின் புர்கா பற்றிய கோட்பாடு சார்ந்த இன்றைய யதார்த்த மதிப்பீடுக்குச் சான்றாக உள்ளது. இன்னும் ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் இலக்கு 30, 35க்குள் உள்ள பெண்கள் மட்டுமே. சற்று வயதானவர்கள் தம் நிலையில் மாற்றமில்லாமலயே தொடரமுடிகிறது. புர்கா அணிபவர்களோ, “புர்காதானே அணிந்துவிட்டு போகிறோம், ஆனால் நாங்கள் வேலைக்கு போவதையே, படிப்பதையோ தடுக்க முடியாது” என்கின்றனர். இன்று பரவலாக இதில் மட்டுமே என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியப் பெண்கள் வேலை செய்வதை நாம் காண்கின்றோம். அவர்கள் அணியும் புர்காவே இதற்கு சாட்சியாகவும் உள்ளது.

________________________________________

பெண் உழைப்பு

“ஆண்கள், பெண்களை நிர்வகிப்பவர்கள். பெண்கள் உங்களுக்கு விளைநிலங்கள்” என்று குர்ஆன் கூறுகிறது. உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்.

ஆமினாம்மாள்! நெல் அவித்து அரிசி விற்பதில் கடந்த 40 ஆண்டுகாலமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து மேன்மைமிக்க குடும்பங்களுக்கு சேவை செய்து வயிறு பிழைக்கும் ஜமால்மாமி நடுத்தர வர்க்கத்தினராக வளர்ந்து வறுமையின் காரணமாக தொழில் செய்து பிழைப்பவர். இவர்களின் பண்பாடு வேறாகத்தான் உள்ளது. பருவமடைந்த அல்லது பருவம் அடையாத, திருமணமான அல்லது விதவைகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத பெண் உழைப்பு சமூகத்தின் கட்டாயமாகிவிட்டது.

“தானும் உயர்குடியே. தமக்கென்று ஒரு தராதரம் உள்ளது. தராதரத்திற்கேற்ற சமூகத்துடன்தான் நாம் பழக வேண்டும்” என்று கருதுபவர்கள், முதலாளித்துவப் பண்பாட்டினை செரித்துக்கொண்டு தாங்கள் வறுமையில் வாடினாலும் முதலாளித்துவம் வழங்கும் சமூக மதிப்பீடுகளுடன் உறவாடவே விரும்புகின்றனர். இதனை குட்டி முதலாளித்துவ பண்பாடு என்று சொல்லலாம். ஆனால் புதிய பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டு சாறுபழியப்பட்ட சக்கைகளாக வெளித் தள்ளப்பட்ட பின் இவர்களும் உழைக்கும் பெண்கள் அணியில் (தமது தராதர மதிப்பீட்டின் உண்மைநிலை உணர்ந்து) ஒன்றிணைகின்றனர். அகலத்திறந்த கதவுகளில் தஞ்சமடைகின்றனர். சமூக மதிப்பீடுகளும் மாறிவிட்டன..

ஃபாத்திமா. இவர் மின்னணு பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பறக்கும் படையில் ஒரு அதிகாரியாக கைநிறைய சம்பளம் வாங்கும் தொழில். கணவர் ஒரு ஆசிரியர். இவருக்கு வெளிநாட்டில் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. வீடு, கார், குடும்பத்திற்கான விசா என்று அனைத்தும் வழங்கப்படும் வேலை. கணவரை, வேலையை விட்டுவிட்டு உடன்வர அழைக்கிறார். ஆனால் “பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே ‘பொட்டையைப்’ போல் பிரிந்து வாழ்வதா?” சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்.

பாத்திமாவோ “எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது. அது “இருவர் சம்பளத்திலும் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை இழக்க முடியுமா” என்ற கனியில்பட்டு பறித்தெடுத்துவிட்டது. இன்று இவர்கள் வெளிநாட்டில் கோடிஸ்வரர்களாக!.

நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர். இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.

_________________________________________

தலாக் – விவாகரத்து

ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.

இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.

ஆனால் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆண் தலாக் செய்தால் தான் கொடுத்த மகர் தொகையை (திருமணத்தின்போது ஆண் பெண்ணிற்கு வழங்கப்படும் பொருள்) இரட்டிப்பாக்கித் தரவேண்டும். இது கோட்பாடு. நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன. ஜீவனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.

குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு. நடைமுறையில் ஒரு சிலர் அவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும் பலரும் அதனால் ஏற்படும் மறுமண வாழ்க்கைகான இடையூறுகளைக் கணக்கிட்டு ரொக்கத் தொகைக்கு விலை பேசிவிடுகின்றனர். ஆனால் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் ஆண்களின் பாசம் கரைகடந்து ஷரியத் சட்டம் கோலேச்சுகிறது. கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அதுவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பது இல்லை.

பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. “கல்லானாலும் கணவன்…” மலை ஏறிக் கொண்டிருக்கிறது.

______________________________________________________

இத்தா : காத்திருத்தல்

இத்தா என்பது பற்றிய விரிவான விளகத்தை பறையோசையில் கர்பப்பை இல்லாவிட்டாலுமா! படித்துக் கொள்ளுங்கள். அன்றும் இன்றும் என்ற ஒப்பீட்டை மட்டும் பார்ப்போம். இதன் மதிப்பீடு நானறிந்த வரையில் அன்றும் இன்றும் மாறவே இல்லை. கோட்பாட்டின்படி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை. அது அன்றைய நடைமுறையாக இருந்தால் அது இன்று இல்லை என்பது மட்டுமே மாற்றமாகும். இந்தியச் சூழ்நிலையில் அன்று “வெள்ளை புடவை” இந்துமதத்தைப் போல இவர்களும் அணிந்தாலும் இன்று அது நடைமுறையில் இல்லை.

தன் கர்பப்பையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியமற்ற காலச் சூழ்நிலையிலும், அது அவசியம் தான் என்றால் அறிந்துகொள்ள மிக நவீன கருவிகள் இருக்கும் இந்தக் காலத்திலும் இத்தா இன்னும் ஏன் தொடர்கிறது? கணவன் இறந்துவிட்ட துயரத்தில் உள்ள பெண் அந்த பசுமையான வாழ்க்கையின் நினைவாக இந்த இத்தாவை ஒரு சுமையாக கருதுவதில்லை. அது தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களும் இதில் தலையிட்டதும் இல்லை. அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இத்தாவைக் கடைபிடிக்கும் நிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. எனவே இப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்தவர் எவரேனும் இருந்தால் இங்கே எழுதுங்களேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத் தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. இந்த மாதம் மகளிர் மாதமாக உள்ள நிலையில் ஒவ்வொரு இசலாமியப் பெண்களும் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அதன் காரண காரியங்களையும் தன்சுய விருப்பு வெருப்புக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்து பெண்களின் உரிமைகளைப் பெற பங்காற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கைக்கும் இம்மாற்றத்திற்கும் இடையில் முடிச்சுவிழாமல் இதுவேறு அதுவேறு என பிரித்திட்டு செயலாற்ற வேண்டும்.

– சாகித்

http://paraiyoasai.wordpress.com/
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 6

ஆண் என்றும் பாராமல்
என்னைப் பேச அனுமதித்த
பெண்களுக்கு முதல் வணக்கம்.

பெண்களைத்
திட்டியே தீர்த்த ஆணாதிக்கத்தின்
சொற்கொலைகளையும் தாண்டி,
பெண்ணின் வர்க்க உணர்வுக்கு
வார்த்தைகளை உசுப்பிவிடும்
இறவா தமிழுக்கும் என் வணக்கம்.

கைத்தலம் பற்றி
நான்குசுவருக்குள் நயம்படச்சுரண்டி
தன்னைச்சுற்றி நடப்பதேதுமே
தெரியாததுபோல்,
பொய்த்தவம் பூண்டவர் மத்தியில்,

வலைத்தளம்பற்றி  சமூகம் பற்றி
வாழ்வின் சகலமும் சுற்றி, வாதம்புரிந்து
எதிரெதிர் பேசி, இணக்கமிலாவிடினும்
தன்னைத் தாண்டியும் சிந்திக்கும்
வினவாளர்களுக்கு உரிய வணக்கம்.
_______________________________________
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத
தந்திரக்கார சமூகமிது.

பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.

ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.

ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..

’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி…

ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும்
ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…

இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி
ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…

ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை
மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.

மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?

என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!

’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப்
பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள
ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது
பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல,
______________________________________
ஒரு பெண் சுதந்திரமாகத்
தன் காதல் உணர்வை
வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
முக்கியமானது
அவள் அரசியல் உணர்வை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்

அனுமதித்ததுண்டா
ஆணாதிக்கத் தந்திரம்

’லவ்வர்ஸ்டே’ மூலமாக
பெண் காதல் உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’மதர்ஸ் டே’ மூலமாக
தாய்மை உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’வெட்டிங் டே’ மூலமாக
குடும்ப உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

ஏன்?
’வயசுக்கு வந்ததையே’ உறுத்தலின்றி
ஊரறியச் சொல்வதற்கும் சம்மதம்.
ஆனால் ஒரு பெண்
கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக
தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும்
பயம்.. பயம்.. பயம்..
_______________________________________
பெண் பேசுவது பிறகு
விளக்கம் சொல்ல வந்தாலே
வாயை அடக்கு என – என்
தாயை அடக்கிய தந்தையைப் பார்த்து,
சின்ன வயதிலேயே
பெண் மீதான கொடுமையை
கண்ணெதிரே பார்த்து, பார்த்து
’ஆம்பிள்ளைத் தனத்தை’ வெறுத்ததுண்டு.

சொந்த அனுபவத்தில்
சொல்கிறேன் ஒன்று.
அந்த நாளில் அம்மாவுக்கு…
மோரு புளித்தால் அடி
நீரு வைக்க மறந்தால் வார்த்தைக் கடி
குழம்பு தன் சூடு மறந்தால்
கிளம்பும் கரண்டி,
ஒரு நாள் சோறு குழைந்ததற்காய் அடி

அழுதுகொண்டே தடுக்கப் போய் நானும் அடிவாங்கி
நோட்டில் எழுதிவைத்தேன் இப்படி;

’’அன்னம் குழைந்தாலென்ன?
அருமை குறைந்தாலென்ன,
தின்னும் உன் எருமை வயிறு
ஏற்காதா?
கன்னம் குழையும்படி
என்னமாய் அறைந்தாய்
என் அம்மாவை
சின்னஞ் சிறியவனாய் இருப்பதனால்
செய்வதறியாது நிற்கிறேன்
பின்னம் பெரியவனாய் ஆன பின்னே
உன்னை என்ன செய்கிறேன் பார்!’’

ஆசிரியப்பாவால்
அடித்தேன் அப்பாவை
என ஆற்றிக் கொண்டிருந்த மனதை
ஒருகீறு கீறிவிட்டாள் அம்மா…

’’அப்பாவைப் போல் இருக்காதே
பொம்பளையை அடிக்காதே
அவள் சொல்றதையும் கேளு!’’

எனக்கு திருமணமானவுடன்
என் அம்மா சொன்ன அறிவுரை இது.

என்ன இருந்தாலும்
நீயும் ஆம்பிள்ளைதாண்டா? எச்சரிக்கை!
என எனக்கு உணர்த்திய
அம்மாவின் வார்த்தையில் அர்த்தங்கள் ஆயிரம்
அனைவருக்கும் அதில் பொருத்தமுள்ளதால்
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

பெண்ணைப் பார்த்து
என்ன கொண்டுவந்தாய்
எனப் பேசுபவனுக்குத் தெரியுமா?

இந்த பூமியே
அவள் உனக்கு போட்ட பிச்சை.
_________________________________________________
விஷ மூச்செறியும் மலைப்பாம்புகள்,
வெறிகொண்டு இரைதேடும் விலங்குகள்,
பாறைகள் கரையும் சூறை மழை,
சூரியன் நடுக்கும் கோரப்பனி
இவையிடமிருந்து உயிர்க்கரு காத்து
விழிக்குடம் தளும்பினும் பனிக்குடம் தளும்பாமல்
கானகம் தெறிக்க அலறி தொண்டை நரம்புகள் குழறி
உயிர் ஈன்றவள் பெண்ணடா!

எந்தக் காலத்திலும் பெண்
சும்மாயிருந்ததில்லை…
காந்தள் மலர் கைகளெல்லாம்
தின்று தீர்த்து
வாந்தியெடுக்கவும் உதவி தேடும்
மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கே!
கறுத்துச் சிவந்த வாழைப்பூ தோலென
தடித்துக் காய்த்திருக்கும் தலைமுறையாய்
உழைக்கும் பெண்களின் கைகள்.

ஆட்டுடன், மாட்டுடன் சென்று
அதன் இயல்பறிந்து
பொறுமையாய் புல்மேய உடனிருந்து
புதிய மேய்ச்சல் நிலங்களை
கண்டறிந்தவள் பெண்
ஆணோ
அவளை ஆடு, மாடாய் நடத்தி
உழைப்பைக் கறந்தான்.

வேட்டைச் சமூகம் முடிந்து
பெண் சும்மாயிருந்தாளா?
முதலில் பயிரிடக் கற்று
விதைநெல்லைக் கொடுத்தாள்
ஆணோ உடனே அவளை
வீட்டினில் அடைத்தான்.

சிக்கி, முக்கி கல்லை உரசி
முதலில் நெருப்பைத் தந்தவள் பெண்
ஆணோ
சிக்கிக் கொண்டாள் இலவச வேலைக்காரி
என அவளை அடுப்பினில் வைத்தான்.

வெறும் பெருமை அல்ல உண்மை,
அன்று;
பெண் தலைமுறை பல விளைவித்த காரணத்தால்
தாங்கும் நிலமும் ’’தாய்மண்’’ ஆனது.

குடும்ப அமைப்பின் சுமைகளனைத்திற்கும்
தாங்கும் குவிமையமாக அவளே ஆனதால்
வீட்டின் முக்கியச் சுவரும் ’’தாய்ச்சுவரானது’’.

வரலாற்றில்
எதையெல்லாம் பெண்
கண்டறிந்து தந்தாளோ
அதைவைத்தே அவளை
சிறைவைத்தான் ஆண்.

வேட்டையாடி பெற்ற
பெண்ணின் சமநிலையை
வேளாண் சமூகத்தின்
உபரி பறித்தது..

காட்டு வாழ்க்கை வழங்கிய
கைகளின் சுதந்திரத்தை
வீட்டு வாழ்க்கை
வேலைக்காரியாய் அடக்கியது.
முதல் வர்க்க ஒடுக்குமுறை
பெண் குரல்நெறித்து துவங்கியது..

தொல்குடி வேட்டையில்
காட்டு விலங்கினை வேட்டையாடி
வெற்றி கண்டவள் பெண்.
கடைசியில் வீட்டு விலங்கிடம்
மனைவியாய் மாட்டிக்கொண்டு
இல்-குடி என வேட்டைக்கு இரையானாள்.

செல், கொல் என
இனக்குழுச் சண்டையில் தலைமையேற்று
சமர்க்களம் புரிந்த
பெண்ணின் அமர்க்களம் பார்த்து
சமமாய் நடந்தான் அன்று காட்டுவாசி.

நில், கேள், சொல்வதை மட்டும் செய்
எனப் பெண்ணை
அடக்கி ஆள்கிறான் வீட்டுவாசி.

பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை
புனிதமென்று விளைநிலத்தில் தெளித்து
பெண்ணைக் கொண்டாடினான் புராதனவாசி,
பெண்ணின் மாதவிடாயை
தீட்டு என்று வீட்டுக்குள்ளேயே
தள்ளி வைப்பவன் நாட்டுவாசி

காலத்தால் இவன் முன்னேறியவனாம்
மூளையிருந்தால் மாத்தி யோசி!
____________________________________________
ஒவ்வொரு சமூகக்கட்ட
உழைப்பினில் மட்டுமல்ல,
வரலாற்றில்
பெண்வாடையில்லாத
போராட்டம் ஏதுமில்லை..
பெண் கை கொடுக்காமல்
புரட்சிகள் ஜெயித்ததுமில்லை…

ஜான்சிராணியும், வேலுநாச்சியும்
அசரத்பேகமும்,
வெள்ளையனுக்கு எதிராகத்
தன்னையே தீம்பிழம்பாக வெடித்த
குயிலியும் இல்லாமல்
விடுதலைப் போரில்லை.

தில்லையாடி வள்ளியம்மை மட்டும்
இல்லையெனில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி கதை
முன்னமே முடிந்திருக்கும்.
இந்தியாவும் எப்பாதோ விடிந்திருக்கும்.
வ.உ.சிக்கு
தென்னாப்பிரிக்க மக்கள் கொடுத்த காசையே
தான் ஓசிக்கு அமுக்கிக் கொண்ட
தில்லாலங்கடி காந்தி பற்றி
பாவம்! தில்லையாடிக்கு தெரியவில்லை.

காந்தியத்திற்கும்
பெண்கள் பெரும்படையாய்
கதராடை உடுத்தினர்.
போராட்டத்திற்கு
கைவளையல்கள் கழட்டிக் கொடுத்தனர்.
பெண் படை தைரியத்தில்
காலை முன்வைத்த காந்தியும்
பெண் உணர்வு மதித்தாரா?

’’இச்சாபத்தியம்’’ எனும் பெயரில்
இரண்டு இளம்பெண்களுடன்
பாலியல் உணர்வை அடக்கிப் பழக
நிர்வாணமாய் கிடந்த காந்தியின்
ஆணாதிக்க அருவருப்பைப் பார்த்துதான்
காந்தியின் குரங்குப் பொம்மையும் கண்ணை மூடியது.

அந்நியத் துணி எரிப்புக்காய்
ஆங்கிலேயரால் துகிலுரியப்பட்ட
பெண்களின் நிர்வாணமோ
தேசத்தின் மானம்!

வெட்கத்தை எதிர்பார்த்த
அடக்கு முறையாளர்களிடம்
தம் வர்க்கத்தை காட்டி
எதிரியின் இரத்தத்தை
காறித்துப்பியவர்கள் உழைக்கும் பெண்கள்!

கீழத் தஞ்சை விவசாயி எழுச்சியில்
கருக்கரிவாளை
கம்யூனிச அரிவாளாய் உயர்த்திப் பிடித்து
நிலப்பண்ணைகளுக்கெதிராக
அறுவடை இயக்கம் செய்தவர் பெண்கள்.

தெலுங்கானாவிலோ
நிஜாம் நிலப்பிரபுத்துவக் குண்டர்களின் முகத்தில்
எண்ணையை காய்ச்சி ஊற்றி
தங்கள் அதிகாரத்தை
சமைத்தவர்கள் பெண்கள்

தெபாகா போராட்டமோ
தினஜ்பூர், ராங்பூர், மால்டா,
மிதுனப்பூர், குல்னா, பர்கானா,
என எல்லா மாவட்டங்களும்
சேலை கட்டிக் கொண்டுதான்
இந்து, முசுலிமாய் இணைந்து போராடின

ஆண்டைகளுக்கு அடியாளாய் வரும்
போலிசு கிராமத்திற்குள் நுழைந்தவுடனேயே
ஒரு பெண் சங்கெடுத்து ஊதுவாள்,
இன்னொரு பெண் மணி அடிப்பாள்
கேட்ட மாத்திரத்தில்
பால்குடிக்கும் குழந்தையையும்
பாதியில் கிடத்திவிட்டு
’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றெழும்
பெண்கள் கையில் விளக்கமாறும் ஆயுதமாகும்.

கையில் கிடைக்கும் போலீசை
கூட்டிப் பெருக்காமல்
பெண்கள் கூட்டம் கலையாது.
இது தெபாகா வரலாறு.

திருவாங்கூர் சமஸ்தானத்தின்
இராணுவத் தாக்குதலை
கல், அம்பு, ஈட்டியுடனும்,
எந்த ஆயுதங்களையும் எதிர்க்கும்
வர்க்கக் கோபத்துடனும்
எதிர்த்துப் பாய்ந்து தம் இரத்தத்தில்
நிலப்பிரபுத்துவத்தை மூழ்கடித்தவர்கள்
வயலார்-புன்னப்புரா போர்க்களப் பெண்கள்.

கய்யூர் விவசாயிகள் போராட்டக் காட்சிகளோ
உங்கள் கண்ணில் நீரை வரவழைக்காது!
அடக்குமுறைக்கெதிராக போராடியதால்
அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞாம்பு
ஆகிய நால்வரையும் தூக்கிலேற்றியது
பிரிட்டிஷ் அரசு.

நால்வரின் தாய்மாரே
நாட்டு மக்களைப் பார்த்து சொன்னார்கள்..
’’நாட்டுக்காக மரணத்தை துச்சமாக மதித்த
எங்கள் பிள்ளைகளின் பிணத்தைப் பார்த்து
யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம்
கனன்றெழும் கோபத்தை மட்டும்
தாருங்கள் என்றார்கள்!

மன்னன் கொட்டமடித்து வாழ
விழுப்புண் எய்திய மகனைப் பார்த்து
மகிழ்ந்து போவாளாம் தாய்.
என்னடா புறநானூறு!

உழைக்கும் வர்க்க உரிமைக்காக
பிரிட்டிஷ் செருக்கை அடக்கிய
பெண்களின் வீரகாவியம் கய்யூரு.
______________________________________________
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

இந்துமதம் என்பதைவிட – இதை
ஆணாதிக்க விந்துமதம் என்றால்
மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை
இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.

’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.

’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!

கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..

பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார  மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.

புத்தரும் கூட
மணலைப் போல உறுதியற்றவர்கள்
பெண்கள் என்று மட்டம் தட்டினார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.

’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’
______________________________________________
பெண்களைப் பற்றிப் பேசாதவன் யார்?
ஆனால்.. பெண்களுக்காகப் பேசியது யார்?

வேதாந்தமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்சியம் ஒன்றே
பெண்களை புரட்சி பேச வைத்தது!

வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில்
சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென
காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.

ஏன் தெரியுமா?

வேலைக்குப் போகும் ஆணின்
உழைப்பு நடவடிக்கைக்காக
வீட்டில் அவனுக்கு வேலைகள் செய்து
தன் உழைப்புச் சக்தியை செலவிடுபவள்
பெண் என்பதால்
ஊதியத்தின் பங்கு அவளுக்கும் சேரும் என
உறுதிபட விளக்கியது மார்க்சியம் மட்டுமே!

நெசவுத் தொழிலில்
பிழியப்பட்ட பெண்களின் கைகளுக்காக,
முதலாளித்துவத்தின் ஈரலை எடுத்தது
மார்க்சின் மூலதனமல்லவா!
’’இங்கிலாந்தில்  தொழிலாளி வர்க்கத்தின் நிலைமையில்’’
பெண்கள் மீதான அவலச்சுரண்டலை
எங்கெல்சின் எடுத்துக்களல்லவா
உலகுக்கு எடுத்துக் காட்டியது!

சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு உலகை
சோசலிச ரசியாவே படைத்துக் காட்டியது!

அதனால்தான்
தங்களின் புதிய உலகை
பறிக்க வந்த பாசிச இட்லரை
சோவியத் பெண்கள்
தெருவில் இறங்கி அவன் கருவைக் கலைத்தனர்.

பக்தி உணர்வால் பெற முடியாததை,
மத உணர்வால் பெற முடியாததை,
சமூக உணர்வால் ஆணோடு பெண்ணும் சமமென்று
சோசலிச உணர்வால் நிரூபித்தது ரசியா!

ஆணுக்கு பெண் எதிரியென
முதலாளித்துவம் மடை மாற்றியது
ஆணையும், பெண்ணையும் வர்க்கமாய் சேர்த்து
கம்யூனிசமே முதலாளித்துவ சுரண்டலை பழி தீர்த்தது!
பொது லட்சியத்தோடு இன்னும்
பெண் போக வேண்டிய இலக்குகளையும்
அடையாளம் காட்டியது…

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
முதலாளித்துவம் இரங்குமா?
ஒரு போதும் இரங்காது என
மூலதனத்தின் இரத்தத்தில்
ரசியா எழுதிக் காட்டியது.
ஆனால் முடியவில்லை சுரண்டல் இன்னும்
___________________________________
மூலதனத்தின் நகங்கள்
உன்னை நோக்கியே முளைக்கிறது பெண்ணே!

உனது சுயமரியாதைக்கான
கைத்தொழில், சிறுதொழிலை பிடுங்கி
மீண்டும் உன்னை
பண்ணையடிமையாக்குகின்றன
பன்னாட்டு கம்பெனிகள்!

அன்று உன் அன்னைக்கு
சொந்தமாக ஒரு மாடிருந்தது.
இன்று அதுவும் போய்
’நோக்கியா’ பட்டியில்
நீயே ஒரு கறவை மாடாய் கட்டப்பட்டுவிட்டாய்.

ஊர்மணக்க உனக்கிருந்த
விளைநிலம் பாழாகி
நீயோ தெருவுக்கு தெரு
ஊதிவத்தி விற்கிறாய்,

பார்க்கும் பெட்ரோல் பங்கிலெல்லாம்
வார்க்கப்படுகிறது உன் இள இரத்தம்

அதிரும் ஆயத்த தையற் கூடங்களிலெல்லாம்
உருவப்படுகிறது உனது நரம்பு,

எந்த முதலாளியின் சோப்பை விற்கவோ
வெயிலில் கரைந்து போகிறாய் நீ,

எந்த பன்னாட்டுக் கம்பெனி
கழிவறை கிளீனர் விற்கவோ
மாடிப்படிகள் ஏறி இறங்கி
நாறிப்போகிறது உனது வாழ்க்கை.

கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
கண்களை விற்று சம்பளம் வாங்கி
கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்
என்று கூலியுழைப்பின் பதைப்பிலேயே
துடிக்கிறது இதயம்  உனக்கு!

உனது சொந்தத் தறியை அறுத்தது யார்?
உன் துண்டு நிலத்தைப் பறித்தது யார்?
உனது தயிர்கூடையை பிடுங்கியது யார்?
உன் ஆடு, மாட்டை அடித்து ஓட்டியது யார்?
எந்த உரிமையும் இல்லாமல்
சந்தை மாடாய் பெண்ணே உன்னை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மூன்று முடிச்சில் கோர்த்தது யார்?

இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற
பச்சை அயோக்கியர்கள்தான் என்பது
உனக்குத் தெரியாதா என்ன?
அலுவலகத்திலும், வீட்டிலும்
உன் ரத்தத்தை முறிக்கும்
புல்லுருவிகளை எதிர்த்து போராட தயக்கமென்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே
பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

ஆணே ஒரு அடிமை
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
எப்படி விடுதலை தர முடியும்?

ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் வர்க்க உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!

போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன்
தந்தையாய், கணவனாய்,
தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும்
எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!

இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம்
இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே
நக்சல்பாரியே நல்லறம்…
நாடே எதிர்பார்க்குது உன்னிடம்..

போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம்
பொம்பளை வரமாட்டாங்க
என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!

உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத
ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!’’.

— துரை.சண்முகம்

________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!

220


vote-012ஒரு அரசு ஊழியர் முன்னர் சொன்ன உண்மைச் சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான்குளத்திற்கு ராஜீவ் காந்தி வருகிறார். அதாவது பயண வழிப்பாதையில் ஒரு நிறுத்தம். அவ்வூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்தோர் உடனே சென்னை தலைமைச் செயலகத்துக்கு போன் போட்டு ராஜீவ் குடும்பம் என்னென்ன சாப்பிடுவார்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகக் கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்தார்கள். விருந்தினர் விடுதிக்கு குளிர்சாதன வசதி. கூடவே மேற்கத்திய கழிப்பட அறை ஒன்றும் கட்டி முடித்தார்கள். விதவிதமான உணவு, பழங்கள், குளிர்பானங்கள் எல்லாம் தயார்.

முந்திய நாள்தான் கழிப்பறைக்கு டாய்லட் ரோல் அவசியமல்லவா என்பதை யாரோ கண்டுபிடிக்க நெல்லை, தூத்துக்குடியில் விசாரித்து இல்லை என்று ஆக உடனே ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து மதுரை சென்று வாங்கிவிட்டு நள்ளிரவில் திரும்பினார்கள். கடைசியில் ராஜிவ் அங்கே ஒரு ஐந்து நிமிடம் இறங்கி ஹாய் சொல்லிவிட்டு போனாராம். ஒரு துண்டு ஆப்பிளைக்கூட கடிக்கவில்ல. ஒரு நூறு மில்லி சிறுநீர் கூட கழிக்கவில்லை. செலவெல்லாம் என்ன கணக்கு என்று கேட்டதற்கு ஒப்பந்தாரர்கள் கணக்கு என்றார் அந்த ஊழியர்.

அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் எல்லாரும் திக் விஜயம் செய்யும் போது இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கின்றன. துளிக்கூட அழுக்கில்லாமல் மாற்றப்படும் சாலைகள், வெண்பட்டையான பிளீச்சிங் பவுடர்கள், அழகு தோரணங்கள், வி.ஜ.பி சமையல் கலைஞர்களின் விருந்துகள், வாயில் கைபொத்தி ஐயாவுக்கு என்ன வேண்டுமென்று கருத்தாய் கவனிக்கும் உள்ளூர் அதிகாரிகள்……… பல இடங்களில் அரசு வேலையே இதுதான் எனும் அளவுக்கு இவை அதி கவனமாகச் செய்யப்படுவதுண்டு.

ஆனால் ஒரு எழுத்தாளர் பயணம் செல்லும் போது இந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றால் என்ன அபாயம் ஏற்படுமென்பதை ஜெயமோகனைது பயண அனுபவத்தில் பார்க்கலாம். எழுத்தாளருக்கு அதிகாரம் இல்லை என்றாலும் பண்டைய ரிஷிமார்களின் பரம்பரை என்பதால் தங்களை வசதியாகவும், தூய்மையாகவும், பணிவாகவும் கவனிக்காத இடம், ஊர், சிப்பந்திகளை நாசமாகப் போங்கள் என்று சாபம் கொடுத்து விடுகிறார்கள்.

______________________________________

ஜெயமோகன் கேரள சுற்றுப்பிரயாணம் சென்றதை சமீபத்தில் எழுதியிருக்கிறார். இடங்கள், கடற்கரைகள், கோட்டைகள், போன்ற அஃறிணைகளின் அழகை, தனிமையை, வாழ்வின் வரலாற்றை மௌனமாக தேக்கி வைத்திருக்கும் விதத்தை………….. என்றெல்லாம் அவரது ரம்பமான இத்துப்போன போன சொற்றொடர்களின் மூலம் அளக்கும் அவர் கூடவே அவரது கண் பார்த்த அழுக்குகள், உடலுக்கு கிடைக்காத கவனிப்பு குறித்து மட்டும் அங்கலாய்க்கிறார். ஆனால் அது அங்கலாய்ப்பாக மட்டுமில்லை.

சுனாமிக்குப்பிறகு அமிர்தானந்தா மாயி கட்டிக் கொடுத்த சிமிட்டி வீடு குடியிருப்பை மீனவர்கள் குப்பைகள் கொட்டிக்கிடக்கும் கேவலமான சேரியாக மாற்றிவிட்டார்களாம். வீட்டுக்கு வீடு டி.வி இருந்தாலும் இப்படி சுகாதாரமற்ற வகையில் வாழுவதற்கு காரணம் வறுமை கிடையாதாம், அதற்கான மனப்பயிற்சி இல்லையாம். இதை விட வறுமையில் இருக்கும் ராசிபுரம் பழங்குடி மக்கள் சுத்தமாக வாழ்கிறார்களாம்.

கேரளாவில் நல்ல சுத்தமான ஓட்டல், நாக்குக்கு ருசியான சாப்பாடு கிடையாதாம். இத்தகைய ஓட்டல் வேலைகளுக்கு ஆள் தட்டுப்பாடாம். இந்த வேலையை அவமானமாகக் கருதும் ஓட்டல் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களிடம் திமிராக நடந்து கொள்வார்களாம். இடதுசாரி இயக்கம் தொழிலாளிகளிடம் இத்தகைய தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறதாம். வேலையே செய்யாமல் தொழிற்சங்கம் மூலம் கூலியை மட்டும் வாங்கிக் கொள்வது இப்போதும் இருக்கிறதாம்.

சுற்றுலா போன ஜெயமோகனது சொந்தப் பிரச்சினைகள் மூலம் சம கால கேரளாவின் வரலாறும் உருவாகிவிடுகிறது. நாக்கு ருசியும், ஓய்வறை வசதிகள் கூட ஒரு எழுத்தாளன் உருவாக்கும் வரலாறுக்கு காரணமாகிவிடுகிறது என்றால்………..நல்லவேளை, இவர்களெல்லாம் அரசியலில் இல்லை. இருந்திருந்தால் நான்காவது உலப்போர் முடிந்து ஐந்தாவதற்கு காத்துக் கொண்டிருந்திருப்போம்.

_____________________________________________

ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது  இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது.

“இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிடுகிறது. அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து, கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து………….” என்று போகும் அந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.

முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும்.

உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது. சுத்தத்திற்கு வறுமை காரணமில்லையாம். அதற்கு அவர் காட்டும் ஆதாரம் ராசிபுரம் மலைவாழ் மக்களின் சுத்தமான குடியிருப்புக்கள்.

என்னுடைய அனுபவத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் பல டீ எஸ்டேட்டுகள், ஆந்திரா, ஒரிசாவின் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிகளில் இருக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களையும் பார்த்திருக்கிறேன்.

எல்லா டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பும் வீடுகளும் சுத்தமாகத்தான் இருக்கும். காரணம் அங்கு வரும் எல்லாப்பொருட்களும் கீழே சமவெளியிலிருந்துதான் வரவேண்டும். அதனால் எதையும் வீணாக்க மாட்டார்கள். மலசல, குளியல்கள் நீர் கிடைப்பதைப் பொறுத்தது என்பதால் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவார்கள். அவையும் மலையில் வடிந்து விடும். தேங்காது. நகரங்களின் புழுதி, பெரும் நிறுவனங்கள், ஓட்டல்களின் குப்பைகள் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. உடை கூட அவ்வளவு சீக்கிரம் அழுக்கடைவதில்லை. பட்டினி கிடப்பவர்கள் கூட அங்கே பளிச்சென்றுதான் இருப்பார்கள். குளிருக்கான உடைகளை அணிந்து கொண்டு அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிதான் குடிக்கிறார்கள் என்பதை யாரும் நம்ப முடியாது.

மலைகளிலோ சமவெளிகளிலோ வாழும் பழங்குடி மக்கள் இன்னமும் மற்ற மக்களின் வாழ்க்கையை கண்டறியாதவர்கள். ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் அடர்த்தியான மலைகளில் இருக்கும் பழங்குடி மக்கள் கிராமத்தைப் பார்த்த போது அது கிராமம் என்று கூட சொல்ல முடியுமா தெரியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் 20 அல்லது 50 குடும்பங்களே இருந்தனர். 100 குடும்பங்கள் இருந்தால் அது பெரிய கிராமம். அந்த மக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் தமது கானக நிலங்களை கொஞ்சம் திருத்தி நிலையான விவசாயம் செய்கின்றனர். குடிசைகளில் இருக்கும் பொருட்களை எண்ணிவிடலாம். உடைகள், பாத்திரங்கள், வீட்டுப்பொருட்கள் எதுவும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு குறைவானது. வீட்டு முற்றத்தில் விவசாயம் சார்ந்த சில கருவிகளைத் தவிர அங்கே எதுவும் இல்லை. இப்படி பொருளே இல்லாத குடிசைகளில் குப்பை எப்படி சேரும்? இத்தகைய குடிசைகளை தமிழகத்தின் பின்தங்கிய சில மாவட்டங்களில்கூட பார்க்கலாம்.
சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான்.  பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும். சென்னையின் சேரி ஒன்றில் சிலவருடங்கள் வாழ்ந்தவன் என்ற முறையில் நானும் அப்படித்தான் ‘அசுத்தமாக’ வாழ்ந்திருக்கிறேன். சென்னையிலிருக்கும் எங்கள் தோழர்கள் பலர் இத்தகைய சேரிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது. கேரளாவில் இந்த நகரமயமாக்கத்தின் பிரச்சினைகள் அதிகம். கடல் எனும் இயற்கைத் தாயை எதிர்கொண்டு சற்றே கடினமான வாழ்க்கை வாழும் அம்மக்களிடம் நயக்கத்தக்க நடுத்தர வர்க்கத்தின் ‘நாகரிக’த்தை எதிர்பார்ப்பது அயோக்கியத்தனம்.

நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள்  இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். இதற்காக அந்த மக்களை கோவில் கட்டி வணங்குவது கூட அதிகம் என்று சொல்ல முடியாது. அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக்கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.
____________________________________________
கேரளாவின் அநேக நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். சிறு, நடுத்தர உணவு விடுதிகளில் சாப்பிட்டிருக்கிறேன். நெல்லையில் கோக் ஆலைக்கெதிரான போராட்டப் பிரச்சாரத்திற்காக தோழர்கள் திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்கி வேலை செய்தோம். தெரிந்தவர்கள் யாருமில்லாமல் குறைவான கட்டணமுள்ள விடுதிகளை மக்கள் உதவியுடன் கண்டறிந்து, ஒரே அறையில் பல தோழர்கள் தங்குவதை விடுதிக்காரர்கள் பிரச்சினையாக்காதது மட்டுமல்ல கூடுதல் படுக்கை விரிப்புகளையும் – ஏனைய வசதிகளையும் சலிக்காமல் செய்ததையும், சிறு உணவு விடுதிகளில் கேரளாவின் எல்லா பிரத்யோக உணவுகளையும் – ஃபீப் உள்ளிட்டு – ருசி பார்த்து, பத்திரிகை செய்தி வினியோகத்திற்காக மலிவு கட்டணத்தில் சேட்டன்களது ஆட்டோக்களை நாள் வாடகைக்கு ஏற்பாடு செய்து……..மொத்தமாகப் பார்த்தால் கேரள மக்களது உபசரிப்பில் திணறிப் போனோம்.

ஜெயமோகனுக்கு பார்த்த பரிசாரர்களது அலட்சியத்தை நாம் எங்கும் காணவில்லை. ஒருவேளை இவையெல்லாம் மேட்டிமைத்தனமாக பண்ணையார் மனோபாவத்துடன் வாழும் விலங்குகளுக்குத்தான் தோன்றும் போலும்.

“எந்தா வேண்டே” என்று கேட்கும் ஒரு சர்வர் தொழிலாளியது உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் எவரும் அவர்களது அணுகுமுறையில் எப்போதாவது கொஞ்சம் சலிப்பும், எரிச்சலும் தெரிந்தால்கூட பெரிதுபடுத்த மாட்டார்கள். நிச்சயம் அதை வைத்து ஜெயமோகன் போல கேரளா தொழிலாளிகளின் சமூக வரலாற்றை வன்மத்துடன் எழுதமாட்டார்கள்.

__________________________________________

பசிக்காக ஓட்டல்களுக்குப்போகும் சாதாரண மக்கள் என்ன சாப்பிடப் போகிறோம் என்பதை முதலில் தெளிவாக தெரிவித்து விடுவார்கள். ஒருவேளை அவர்கள் விசாரணை விலைப்பட்டியல் குறித்து மட்டும் இருக்கலாம். ஆனால் டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற எழுத்துலகப் பண்ணைகள் ஓட்டல்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?

சார் என்ன வேணும்?

சாப்பிட என்ன இருக்கு?

இட்லி, வடை, பொங்கல், கிச்சடி, சாதா, ஸ்பெஷல், பூரி, ரவா தோசை, ஆனியன் தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, புரோட்டா (எழுதும் போதே மூச்சு வாங்குது)

சூடா ரெண்டு இட்லி குடுங்க ( இதை முதலிலேயே சொன்னா என்னடா….சர்வர் நினைப்பார்)

சூடு கம்மியா இருக்கே?

இப்ப எடுத்ததுதான் சார், அடுத்து என்ன வேணும்?

சாப்பிட்டு முடித்து சொல்கிறேன்

(சர்வர் மற்றவர்களை கவனித்துவிட்டு வருகிறார்) என்ன கண்டுக்காம போறீங்க? ஒரு தோசை குடுங்க ( அதுவும் சாதாவா, ஸ்பெஷலா, மசாலாவா என்றெல்லாம் சர்வர்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்)

சட்னி கொடுங்க…

(சட்னி வந்தப்பிறகு) சாம்பார் கொடுங்க…

முதல்லேயே சொன்னா என்ன சார், ஒண்ணா கொண்டுவந்திருப்பேனே…

இதான் கஸ்டமர டீல் பண்ற இலட்சணமா, யார் உங்க மேனேஜர், அவாள கூப்பிடு, நான் பேசிக்குறேன், என்ன ஓசியிலயா கொட்டிக்கிறோம்
(மிரண்டு போன சர்வர் கோபத்தை மென்று முழுங்க)

காபி வேணுமா, இல்ல பில் போடலாமா?

இன்னும் சாப்பிட்டே முடியல அதுக்குள்ள பில்லுனு கத்துற, ஒரு காபி கொண்டா…(பயந்து போன சர்வர் காபி, டிகாஷன் ஸ்ட்ராங், சர்க்கரை அளவு எல்லாம் கவனமாக கேட்கிறார். பதட்டத்தில் குறிப்புகள் தவறாகப் போக காபி காம்பினேஷன் மாறுகிறது)

பிறகென்ன…. முதலாளி வந்து பண்ணைகளை சமாதானப்படுத்த அடுத்த நாள் பிளாக்கில் அந்த சர்வரை வைத்து ஆப்ட்ரால் சர்வர்கள் தங்களை அமெரிக்க அதிபர்கள் போல கருதி நடப்பதாக முக்கியமான கட்டுரை இரண்டு வலையேற்றப்படுகிறது.

____________________________________________

இந்த உலகில் கஷ்டமான வேலைகளில் ஒன்று ஓட்டல் சர்வர் வேலை. பசியோடு வரும் வாடிக்கையாளர்களின் கோபங்களை சமாளித்து ஒரே வேலையை அலுப்பூட்டும் விதத்தில் அலைந்தவாறு குறைந்த பட்சம் 12 மணிநேரம் செய்ய வேண்டும். அநேக ஒட்டல் தொழிலாளிகள் திருமணம், குடும்ப வாழ்க்கையை வாழமுடியாமல், பல நகரங்களுக்கு சுற்றியலைந்து  நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்குமிடம், உணவு இலவசம் என்ற இரண்டு பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பல கிராமப்புறத்து இளைஞர்களை கவரும் வேலை இதுதான்.

இன்று A, B வரிசை ஓட்டல்களை விடுத்துப் பார்த்தால் பல சிறிய ஓட்டல்கள் நடத்தமுடியாமல் சிரமப்படுகின்றன. விலைவாசி உயர்வினால் உணவுப்பண்டங்களை தொடர்ந்து உயர்த்த முடியாது. உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கப்படும். விலையைப் பற்றிக் கவலைப்படாத வாடிக்கையாளர்கள் வரும் சரவணபவன், உடுப்பி, வசந்தபவன் ஓட்டல்களைப் போன்று இந்த சிறிய ஓட்டல்கள் செயல்படமுடியாது. அதே போல வழக்கமான கூலிக்கு தொழிலாளிகளும் நிரந்தரமாக கிடைப்பதில்லை. இப்போது வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தொழிலாளிகள் இறக்கப்படுகின்றனர்.

ஓட்டல்களின் இந்திய நிலைமை இதுவென்றாலும் கேரளாவில் தொழிலாளிகளின் கோணத்தில் பார்த்தால் நிலைமை சற்றே மேம்பட்டிருக்கிறது. குறைந்த கூலிக்கு வடகிழக்கு மக்களை இறக்குமதி செய்யும் பணியை தொழிற்சங்கங்கள் தடுத்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் சர்வர்கள் கிரமமான நிலையான வாழ்க்கையை வாழும் வண்ணம் பணிநிலைமை மேம்பட்டிருக்கிறது.

கேரள இடதுசாரி இயக்கம் உருவாக்கிய இந்த தொழிலாளர் வலிமையின் முக்கியமான குறை என்வென்றால் அது முக்கியமாக பொருளாதார, தொழிற்சங்க வாதத்தில் மூழ்கடிக்கப்பட்டு அரசியல் ரீதியில் முன்னணிப்படையாக வளர முடியாமல் போனதுதான். தமக்கான பிரச்சினைகளுக்காகத்தான் தொழிற்சங்கம் என்ற மனநிலையில் உருவாக்கப்படும் அந்தத் தொழிலாளி மற்ற உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கி தீர்வு கண்டால்தான் தானும் விடுதலை அடைய முடியும் என்ற அரசியல் அறிவை பெறுவதில்லை. போலிக்கம்யூனிஸ்டுகள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அதை திட்டமிட்டே உருவாக்கவில்லை.

ஆனால் இந்தக் குறைபாட்டைத் தாண்டி ஒரு தொழிலாளி கொண்டிருக்க வேண்டிய தன்மானத்தையும், சுயமரியாதையையும் கேரள இடதுசாரி இயக்கம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதைத்தான் ஜெயமோகனும், டோண்டு ராகவனும் தாழ்வு மனப்பான்மை, பிச்சைக்காரத்தனம் என்று வசைபாடுகிறார்கள். ஒரு ஓட்டல் தொழிலாளி என்ற நிலையில் வாடிக்கையாளன் என்ற முறையில் வரும் ஒரு கொழுப்பெடுத்த மேட்டிமைத்தனத்தை கேரள தொழிலாளிகள் சகிப்பதில்லை. மற்ற மாநில ஓட்டல்களில் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் தொழிலாளி செய்வதறியாது திகைத்து நிற்பார். கேரளாவில் வலுவாக இருக்கும் தொழிற்சங்கத்தின் தைரியத்தில் இந்த அநீதிகளை ஒரு தொழிலாளி எதிர்ப்பதை மக்களை நேசிக்கும் எவரும் வரவேற்கத்தான் வேண்டும்.

இதனால் அங்கே தொழிலாளிகள் தமக்கான வேலைகளைச் செய்யாமல் எப்போதும் அலட்சியமாகவும், அகங்காரத்துடன் நடக்கிறார்கள் என்பது தமிழ்சினிமாவின் பா வரிசைப்படங்களில் பண்ணைகளின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் சேவகர்களை விரும்பும் மேட்டுக்குடி ஜென்மங்களுக்கு மட்டுமே தோன்றக் கூடிய மனவிகாரம். ஒரு ஓட்டல் தொழிலாளியை தொழிலாளியாகக் கருதாமல் அவரை ஒரு அடிமையாக கருதுவதுதான் இத்தகைய உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் இயல்பு.

கேரள ஓட்டல் தொழிலாளியில் உடல்மொழி, குரல், பாவனை எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் ஜெயமோகன் இன்னும் பீம்சிங் காலத்து திரைப்பட லயத்தில்தான் வாழ்கிறார். நவீன தொழிலாளியின் பாவனைகளில் அக்மார்க் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கும் அவரைப் போன்றவர்களுக்கு நவீன வாழ்க்கை மாறியிப்பது பற்றித் தெரியவில்லை.

அழுக்குப் பிடித்த வேட்டியோடு வியர்வையில் குளித்துக் கொண்டு தோசை மாவோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்தக்கால மாஸ்டர்களின் அவல வாழ்க்கை இன்றும் பெரிதும் மாறிவிடவில்லை என்றாலும் பொதுவில் நிறைய மாற்றங்களைக் காணலாம். முன்னர் இத்தகைய கடுமுழைப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் கிடைத்தார்கள். இன்று எல்லா பிற்பட்ட சாதிகளைச் சார்ந்தோரும் வேலை செய்கின்றனர்.

ஜீன்ஸ் பேண்டோடு, ஒரு கையில் செல்பேசியுடனும், மறுகையில் சிக்கன் ஃபிரைடு ரைசை தூக்கிப்போட்டவாறும் இருக்கும் இன்றைய மாஸ்டர்களை சாப்பிட வரும் இளைஞர்கள் “தலைவா ஆயில் கொஞ்சம் கம்மியாப் போடு” என்று உரிமையுடன் கேட்பதும், அதற்கு அந்த மாஸ்டர்கள் “சரி தல” என்று சகஜமாக பழகுவதும் இப்போது பரிசாரர்களுக்கும் சாப்பிட வருபவர்களுக்கும் ஒரு வித சமமதிப்பு உருவாகிவிட்டது. இதுதான் ஜெயமோகன்களுக்கு பொறுக்கவில்லை. கீழ்மட்ட ஓட்டல்களில் காணப்படும் இந்த சமத்துவம் பெரிய ஓட்டல்களில் இல்லை என்றாலும் அங்கும் கூட முந்தைய அடிமைத்தனம் இன்று இல்லை.

________________________________________

பொக்லைன் போன்ற எந்திரங்கள் வேலை செய்ய வேண்டி வந்தாலும் அதற்குப் பகரமாக அந்த எந்திரத்தினால் வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு நோக்கு கூலி என்று நிவாரணம் கொடுக்கப்படுகிறதாம் கேரளத்தில். அதே போல சுமைதூக்கும் தொழிலாளிகள் வேலையை யார் செய்தாலும் அவர்களுக்கும் அட்டிமறிக்கூலி என்று கொடுக்க வேண்டுமாம். டோண்டு ராகவன் இதை ஒரு மாபெரும் தொழிலாளி வர்க்க சுரண்டல் போல சித்தரிக்கிறார்.

சென்னையின் சென்டரல் நிலையத்தில் வந்திறங்கும் இந்தியப் பயணிகள் இப்போது சக்கரம் வைத்த சூட்கேஸ் மற்றும் ட்ராலி மூலம் தள்ளிக் கொண்டு போவதால் தாங்கள் வருமானமிழப்பதாக சுமைதூக்கும் தொழிலாளிகள் வருந்துகிறார்கள். கேரளாவில் வருந்தாமல் அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பாராட்ட வேண்டியதற்குப் பதில் அவதூறு செய்வதற்கு என்ன காரணம்?

ஜெயமோகன் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலையே செய்யாமல் போங்காட்டம் ஆடிவிட்டு உலகம் பூராவும் சுற்றுலாப்பிரயாணம் செய்து டன் கணக்கில் எழுதுவதை யாரேனும் கண்டித்திருக்கிறார்களா? டத்தோ சாமிவேலு போன்ற முழு பெருச்சாளிகளின் ஊழல் பணத்தில் மலேசியா போகும் ஜெயமோகனைப் போலவா போர்ட்டர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அன்றாடம் சுமை தூக்கினால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படி சுமை தூக்குவதில் வருமானமில்லை என்றால் அவர் என்ன செய்ய முடியும்?

சத்யம் தியேட்ரின்,  நல்லி சில்க்சின், சரவணபவனின் சேவையை உயர்தர விலையை கொடுத்து அனுபவிப்பவர்களுக்கு  தன்மானத்தோடு உழைக்கும் ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க மனம் வருவதில்லை.

எந்திரமயமாக்கமோ, கணினி மயமாக்கமோ எதுவனாலும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டுத்தான் கொண்டுவரவேண்டும் என்பதில் என்ன தவறு? சமீபத்தில் கூட அமெரிக்க தொழிலாளிகளின் நலனிற்காக ஒபாமா வெளிநாட்டில் அவுட்சோர்சிங் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்று கொண்டு வரப்போவதாக பேசுகிறார். இதெல்லாம் சரி என்றால் அந்த நீதி சுமை தூக்கும் தொழிலாளிக்கு மட்டும் கிடையாதா?

ஜெயமோகனது ஒரு சுற்றுலாப் பயணத்திலேயே மீனவர் குடியிருப்பும், கேரள ஓட்டல் தொழிலாளியும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன காரணம்? ஜெயமோகனது இந்த தொழிலாளர் வன்மத்தை மட்டும் கண்டு அகமகிழ்ந்த டோண்டு ராகவன் அதற்கு லிங்க் கொடுத்து “கேரள தொழிலாளரை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்” என்று தலைப்பிட்டு தனிப்பதிவாக வெளியிட்டு கொண்டாடுவதற்கும் என்ன காரணம்?

ஒன்று அந்த தொழிலாளிகள் இந்த பதிவுகளை படிக்கமாட்டார்கள் என்ற தைரியம். இரண்டு அந்த தொழிலாளிகளின் வாழ்க்கையை உணராத, வலையுலகை வைத்து மட்டும் அறிவு பெற்ற நடுத்தர வர்க்கம்தான் படித்து வரவேற்கும் என்ற நம்பிக்கை.

ஆனால் இந்த ‘தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும்’ நிச்சயம் எதிர்காலமில்லை என்பதை அந்த தொழிலாளிகள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஏனெனில் இந்த உலகில் எதிர்காலத்தை கொண்டிருக்கும் ஒரே வர்க்கம் அதுதான்.

________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!

vote-0122008 ஆம் ஆண்டு நாளிதழ்களில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்களுக்கு கண்பார்வை பறிபோனதை படித்திருப்பீர்கள். இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC, ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) நடத்திய நீதிமன்ற போராட்டத்திற்கு இடைக்கால வெற்றி கிடைத்திருக்கிறது.

முதலில் அந்தப் பிரச்சினையை மீண்டும் நினைவு கூர்வோம். விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் கடுவனூர் பகுதியிலிருந்து 66பேரை மருத்துவர் அசோக் தலைமையிலான குழு தேர்வுசெய்து பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்தது. இப்படி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மூலம் அரசு பணம் 750 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இலவசம் என்று நாடகம் போடுகிறார்கள். மேலும் வெளிநாட்டில் இதை வைத்து பிரச்சாரம் செய்தும் நன்கொடை திரட்டுகிறார்கள்.

29.7.2008 அன்று கண் அறுவைச் சிகிச்சை செய்த அனைவரும் கடுமையான வலியால் அவதிப்பட்டதை மருத்துவமனை ஊழியர்கள் கூட பொருட்படுத்தவில்லை. மறுநாள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் பெரிய டாக்டர் வந்து மீண்டும் சிகிச்சை செய்கிறார். பலன் இல்லை. கண்களில் சீழ்பிடித்து தலைமுழுவதும் கடுமையான வலியில் அந்த ஏழைகள் அலறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூட அருகில் உறவினர்கள் யாருமில்லை. கொஞ்ச நேரத்தில் வலி சரியாகிவிடும், பத்து நாட்களுக்கு சொட்டு மருந்து போடுங்கள் என்று தேனொழுக பேசிய மருத்துவமனை நிர்வாகம் அந்த மக்களை கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு ஓடிவிட்டது.

கண் பறிபோய்விடுமோ என்ற அவலநிலையில் அந்த ஏழைகள் கையிலிருக்கும் சொத்து பத்துக்களை விற்று, கடன்வாங்கி வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அப்போதுதான் கண் சீழ் பிடித்துவிட்டது, இனி தெரியாது, வலியை மட்டும் நிறுத்த மருந்து சாப்பிடலாம் என்ற அதிர்ச்சி உண்மையை மக்கள் தெரிந்து கொண்டார்கள். கண்ணில்லாமல் வேலைக்கு கூட போகமுடியாது என்ற நிலையில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். வேறு சிலர் கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில் கலந்து கொண்டனர். அங்கேயும் கண் போனது போனதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

பிறகு மீண்டும் பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கே கண்ணுக்கு ஆபத்தில்லை, சொட்டு மருந்து போடுங்கள் சரியாகிவிடும் என்று கொஞ்சம் கூட கருணையோ மனிதாபிமானமோ இன்றி பச்சைப்பொய் சொன்னார்கள். மக்கள் கூடி நின்று இந்த அநீதியைக் கேட்டபோது டாக்டர்கள் “மருந்து கெட்டுவிட்டது நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கைவிரித்தனர். இதற்குப் பிறகுதான் அந்த மக்கள் நடுத்தெருவில் இறங்கி மறியல் செய்ய, கண் பறிபோன இந்த அயோக்கியத்தனம் வெளிவுலகிற்குத் தெரியவந்தது.

அதுவரை கோமாவில் இருந்த அரசு நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பது போல காட்டிக்கொண்டது. இலவச கண் சிகிச்சை முகாமுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அப்ரூவர் ஆன அரசு அதை மீறியதற்காக ஜோசப் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். கண்பறிபோனவர்களுக்கு ஆளுக்கொரு இலட்சம் என்று அறிவித்தார்கள். கண்பறிபோன செய்தி காட்டுத்தீயாய் பரவாமல் இருப்பதற்காக பொது விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்தது அரசு. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கெட்டுப்போன மருந்து அளித்திருந்தால் அந்தக் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு இலட்சம் பணம் அதுவும் அரசு பணம் வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தை அவர்களின் வார்த்தையிலேயே கேளுங்கள்:

மூகனூர் கிராமத்தின் சுப்பராயலு, “கண் தெரியாட்டியும் வலியில்லாமல் இருந்தா போதும்னு தாங்கமுடியாம தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்”. மூகையூரின் வள்ளியம்மை, “தலைவலின்னு போனேன், அப்போ கண் நல்லா தெரிஞ்சுது. டாக்டர் ஆப்பரேஷன் செஞ்சா சரியாயிடும் என்றார். என் பொண்ணுங்க வேணாண்ணு சொல்லியும் வலுக்கட்டாயமா அழைச்சிட்டுப்போய் கண்ணை கெடுத்துட்டாங்க, வலி தாங்க முடியல.” கடுவனூரைச் செர்ந்த புத்தி சுவாதினம் இல்லாத குப்புவின் அம்மா,” லேசா தெரிஞ்ச கண்ணை லென்சு வைச்சா சரியாயிடும்னு டாக்டர கூட்டிக்கிட்டு போய் சுத்தமா கெடுத்துட்டாங்க, என்ன செய்யறதுன்னு தெரியல” என்று கண்ணீர் விடுகிறார்.

நைனார்பாளையத்தின் மருதாயி” ஒரு கண்ணு தெரியலைன்னு போனேன், இப்ப ரெண்டு கண்ணும் தெரியலை, இந்த டாக்டர்களை விடக்கூடாது”. நாவம்மாள், ” இடது கண்ணு தெரியலைன்னு போனேன் வலது கண்ணுல ஆபரேஷன் செஞ்சு இரண்டு கண்ணும் தெரியலை” முருகேசன்,” கால் வலின்னு காட்ட போனேன், கண்ணுல ஆப்ரேஷன் செய்யனும்னு சொல்லி கட்டாயப்படுத்தி கூப்டாங்க. இப்போ கண் போச்சு”. மற்றொரு முருகேசன்,” ஒரு நாளைக்கு ஏர்மாடு ஓட்டி ரூ.500 சம்பாதிப்பேன். இப்போ முடியல, கண் போயிடுச்சு. என் காட்ட வித்து அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்சம் செக்கோடு நானும் ஒரு இலடசம் தாரேன், என் கண் பார்வை கிடைக்குமா” என்கிறார்.

இப்படி எல்லா மக்களின் துயரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் இம்மக்களை வற்புறுத்தி ஆடுமாடுகள் போல நடத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. மக்களுக்கு கண்பார்வையை பிடுங்கிய ஜோசப் மருத்துவமனை இந்த உண்மையை 25நாட்களுக்கு மறைத்து வைத்தது. மக்களிடமும் வெள்ளை மாத்திரை, சொட்டு மருந்து என்று ஏமாற்றி வந்தது. இந்த இடைவெளியில் எல்லா தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது.

அப்போது பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களை அணிதிரட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள் தோழர்கள். கண்பார்வை பறிபோனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியது அரசுதான், ஆனால் மருத்துவமனை உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கிரிமினல் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டுமென்று ம.உ.பா.மை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இறுதி தீர்ப்புக்கு முன் இடைக்கால தீர்ப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு கண்புரை சிகிச்சை வல்லுனர் குழுவைக் கொண்டு அளிக்க வேண்டுமென்றும் எதிர்காலத்தில் தனியார் மருத்துவமனையின் தகுதியை பறிசோதித்து உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

இறுதி தீர்ப்பில் ஜோசப் மருத்துவமனையும் கண் பறிப்புக்கு பொறுப்பான மருத்துவர்களும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு ஏழைகளுக்கு உரிய நீதியை பெறுவதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடுகிறது.

ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

32

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.

பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?

என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.

ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.

இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.

என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.

காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.

விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து  குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?

இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.

என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.

ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?

இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.

_______________________________________

இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.

இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.

–       ரதி.

_____________________________________________

ரதி ஈழத்தைச் சேர்ந்தவர். இனவெறிப் போரினால் அகதியாகி இப்போது கனடாவில் வாழ்கிறார். வினவில் “ஈழத்தின் நினைவுகள்” எனும் தொடர் எழுதுகிறார்.

அவரது வலைப்பு – http://lulurathi.blogspot.in/

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா

25

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 4

பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி.

பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அவை எல்லாம் ஏதோ பெரிய‌ம்மை, ப்ளேக் நோய் போன்ற‌ பெருவியாதிக‌ள்; அவை இக்கால‌த்தில் முற்றாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன; அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன். ப‌தின்ம‌ வ‌ய‌தில் முத‌ல் முத‌லாக‌க் க‌ண் திற‌ந்து என் தாயின் வாழ்க்கையையும், மாமியின் வாழ்க்கையையும் உற்றுப் பார்க்கும் வரை.

அவர்கள் என்னதான் மறுத்தாலும், தங்கள் வாழ்க்கைக்குச் சப்பைக்கட்டு கட்டினாலும், அவ‌ர்க‌ளின் ஆத‌ர்ச‌ க‌ண‌வ‌ரான‌ என் த‌ந்தை என்கிற‌ ஆல‌ம‌ர‌த்தின் நிழ‌லில் வெளுத்துச் சாம்பிய‌ செடிகள் என்றுதான்
தோன்றும்.

ஆண்தான் உய‌ர்ந்த‌வன்; பெண் அவ‌னுக்கு அடுத்த‌ ப‌டிதான் என்ற ந‌ம்பிக்கை என‌க்கும் அக்காவுக்கும் சிறுவய‌து முத‌லே ஊட்ட‌ப்ப‌ட்ட‌து. வீட்டில் அப்பா, தாத்தா ஆகியோரை ‘நீங்க‌ வாங்க’ என்று மரியாதையாகவும், அம்மா, பாட்டியை ‘நீ வா’ என்று ஒருமையிலும் விளிப்போம்.

என‌க்கும் என் அண்ண‌னுக்கும் சின்ன‌ வ‌ய‌தில் ஆகாது. சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்; போட்டியும் இருக்கும். அவ‌னோடு போட்டியிடுவ‌த‌ற்கே என‌க்குத் த‌குதியில்லை என்று என் ம‌ண்டையில் அடிக்க‌ப்பட்ட‌து என் ப‌தின்ம‌ வ‌ய‌தில். “அண்ண‌ன் சாப்பிட்ட‌வுட‌ன் அவ‌ன் த‌ட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ!” என்றார் அம்மா. அப்போது அவ‌னுட‌ன் எனக்கு ஏதோ சண்டை. ஆம்பளை த‌ட்டெடுக்க‌க் கூடாது, துடைப்ப‌த்தை எடுக்கக்கூடாது என்று காரணம் வேறு. நான் அதைச் செய்த போது என் மனம் வெதும்பியதும் அவன் கொக்கரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

திரும‌ண‌த்துக்குப் பின், ச‌மைக்க‌த் தெரியுமா என்று கேட்ட கணவனை அச‌த்த‌ வேண்டும், பாராட்டு ம‌ழையில் ந‌னைய‌ வேண்டும் என்று சில நாள் வ‌ரிந்து க‌ட்டிக் கொண்டு ச‌மைத்தேன்.  என்றைக்கு அது என் வேலைதான் என்று Taken for granted ஆன‌து என்றே புரிப‌டவில்லை. (திடீரென்று ஒரு நாள்  தான் மூளையில் அந்த பல்பு எரிந்தது!) அதற்கப்புறம் எனக்கு அதில் முன்பிருந்த ஈடுபாடு இல்லை. (இல்லை என்பதால் லேசான குற்ற உணர்வுதான் இருக்கிறது!)

தனிப்பட்ட முறையில் யோசித்தால், இதெல்லாம் ஒரு குறையா? வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுமை, மாமியார் கொடுமைன்னு நாட்ல‌ எத்த‌னை பெண்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை எல்லாம் பார்த்தால் ந‌ம‌க்கென்ன‌ குறை என்றும் தோன்றுகிற‌து.

இந்த‌க் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மைதான், ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னளவில் மட்டும் திருப்தியோ ஆத‌ங்க‌மோ அடையும் ம‌ன‌ப்பான்மையாலும்தான் பெண்க‌ளுக்குப் பொருளாதார‌ச் சுத‌ந்திர‌ம் அடைந்திருந்தாலும் இன்னும் முழுச்சுத‌ந்திர‌ம் கிடைக்க‌வில்லை என்று நினைக்கிறேன். இத‌ற்கு இன்னும் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கலாம்.

தோன்றுவதில் சில:

முதலாவது, ப‌யம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்ப‌த்தில் எல்லாரையும் அனுச‌ரித்துப் போக‌வேண்டும் என்று நமக்குக் க‌ற்றுத் த‌ர‌ப்ப‌ட்டிருக்கிறது. இன்னும் ந‌ம் நாட்டைப் பொறுத்த‌வ‌ரை பெண் என்ப‌வ‌ள் ஆணை ம‌ட்டும‌ல்ல‌,அவ‌ன் குடும்ப‌த்தையும் சேர்த்தே திரும‌ணம் செய்து கொள்கிறாள்.

அதனால்தான்: நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம், அதற்கு மறுக்கும் மறு நொடியே அவன் தன் கணவன் முகத்தைக் காட்டி “இப்போது மரியாதையில் அழைக்கச் ச‌ம்ம‌த‌மா, நான் இனி உன் ந‌ண்ப‌ன் இல்லை” என்ப‌து போல் ந‌ட‌ந்து கொள்வ‌தும் ந‌ட‌க்கிறது.

மாம‌னார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்ப‌த‌ற்காக, அலுவ‌ல‌க‌த்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாம‌ல், தின‌மும் நான்கு ம‌ணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, ச‌மைய‌ல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்ட‌ர் ப‌ஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் ப‌ய‌ணம் செய்து அலுவ‌லக‌த்துக்கு வ‌ந்து தூங்கி விழும் புதும‌ண‌ப்பெண்க‌ள் இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் படித்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் ஜோசியம் ஜாதகம் போன்ற அழுக்குகளை விட்டொழிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதனால்தான்: காத‌லித்துத் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ன், ஆண்மைய‌ற்ற‌வ‌ன் என்று மருத்துவரீதியாகத் தெரிந்த பின்னும், ஜோசிய‌ர் அடித்துச் சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையில், இல்லறம் ஆரம்பிக்கும், குழ‌ந்தைப் பேறுவ‌ரும் என்று ஆண்டுக்கணக்கில் க‌ன்னித் த‌வ‌ம் புரிந்து கொண்டு கணவன் வீட்டுக்குச் ச‌ம்பாதித்துக் கொட்டும் ஆஃபிஸ‌ர் பெண்க‌ள் இருக்கிறார்கள்.

ஊர் உல‌க‌ம் என்ன‌ சொல்லுமோ? குழ‌ந்தைக்குத் த‌க‌ப்ப‌ன் அவ‌ன் தானே.. என்ற‌ ம‌றுகலால்தான்: திரும‌ண‌மாகிப் ப‌த்தே மாத‌ங்க‌ளில் குழ‌ந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொட‌ர்ந்த‌ ம‌ன‌க்க‌ச‌ப்புகளாலும் கொடுமைக‌ளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திரும‌ண‌த்தை நினைத்தும் பார்க்க‌ முடியாம‌ல் எதிர்கால‌மே இருண்டுவிட்ட‌தாயக் க‌ண்ணீரில் நாட்க‌ளைக் க‌ரைக்கும்
பேதைக‌ள் இருக்கிறார்கள்.

கல்வி என்ப‌து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும் க‌ருவியாக‌ இருப்பதும் இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம்.ப‌டிப்ப‌தும் வேலைக்குச் சென்று ச‌ம்பாதிப்ப‌தும் ஓர‌ள‌வு த‌ன்ன‌ம்பிக்கையைப் பெண்க‌ள் ம‌ன‌தில்
விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் த‌ன்போக்கில் த‌ங்க‌ளுக்குப் பிடித்த‌ வ‌கையில் தீர்மானித்துக் கொள்ளும் சுத‌ந்திர‌ம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.

மேலும்,

சிக‌ப்ப‌ழகும், க‌ருமையான‌ நீண்ட‌ கூந்த‌லும், ச‌ம்க்கி ஒர்க் வைத்த‌ ப‌ட்டுப் புட‌வைக‌ளும்தான் உங்க‌ள‌து அத்தியாவ‌சிய‌த் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்ப‌ழுக்க‌ற்ற‌ கிச்ச‌ன் மேடைக‌ளும் உங்க‌ள் க‌ட‌மைகள்.

உங்க‌ளைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஆண்க‌ள் வாய் பிள‌ப்ப‌தும் த‌டுமாறிக் கீழே விழுவ‌தும்தான் உங்க‌ள் பெருமைக‌ள் என்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வ‌ந்த‌ மிச்ச‌ நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.

பெண்ணாக‌ப் பிற‌ந்த‌த‌ற்குப் பெருமைப்ப‌டும் வித‌மாக‌, என்னைக் கவ‌ர்ந்த‌ பெண்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்கள்!

–          தீபா

_________________________

தீபா
ப‌டிப்பு: க‌ட்டிட‌ப் பொறியிய‌ல்
வ‌சிப்ப‌து: சென்னையில் க‌ண‌வ‌ர் குழ‌ந்தையுட‌ன்
வேலை: த‌னியார் நிறுவ‌ன‌த்தில்
வ‌லைப்பூ ஆர‌ம்பித்த‌ நோக்க‌ம்:  முதலில் எழுதிப் ப‌ழகத்தான். ஒத்த‌ சிந்த‌னையுடைய‌ ப‌லரின் ந‌ட்பு கிடைத்த‌தும், நல்ல எழுத்துக்களை வாசிப்பதும் என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்க‌ உத‌வுகிற‌து.

தீபாவின் வலைப்பூ:http://deepaneha.blogspot.com/

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.

45

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 3

எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. பின்னர், ஒரு பதிவு கூட ஒழுங்காக எழுதாத என்னையும் பெண் பதிவர் குழுவில் சேர்த்து மகளிர் தினத்தையொட்டி எழுதச்சொன்னதை வேறென்பது?! மறுத்தாலோ என் மேலேயே எனக்கு மரியாதை போய் விடும் அளவுக்கு இருந்தது வந்த அழைப்புக் கடிதம். அதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டேன்.

நண்பர் ஆணாதிக்கம், இன்றைய பெண்கள் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறார். எனக்கு பதில் சொல்ல நிறையத் தகுதிகள் கிடையாது. நான் இதை ஒரு பொய்யான தன்னடக்கத்தோடு சொல்லவில்லை. நிஜமாகவே நான் அவ்வளவு ஆணாதிக்கத்தினால் பாதிக்கப்பட்டேனா என்று நீண்ட நாட்களுக்குப்பின் யோசித்துப் பார்க்க வேண்டி வந்தது. எனக்கு அவர் கேட்டிருந்ததுக்கான பதிவாக இது அமையுமா என்று தெரியவில்லை. என்னுடைய சில அனுபவங்களையும் அதன் மூலம் வந்த அறிவையும் வேண்டுமானால் பகிரலாம்… இது மேலோட்டமாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு எழுதிய பின் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும், பல பெண்கள் என்னைப் போல இருக்கிறார்கள் என்பதால் இதை அனுப்பி வைக்கிறேன்.

_____________________________________

நான் சுதந்திரமானவளா?

அவசரப்படாமல் கொஞ்சம் என்னைப் புரிந்து கொண்டால் நான் இப்போது  A சென்டர் பெண். சரி தப்பு மீறி என் இன்றைய நிலை அதுதான். வேலையில் நல்ல பதவியில் இருக்கிறேன். பொருளாதார சுதந்திரம் உண்டு. கார் வாங்கி ஒட்டுகிறேன். உள்நாடு வெளிநாடு என்று தனியாக அலைகிறேன். பல நாட்டவரைச் சந்திக்கிறேன். தெரியாதவர்களோடு உணவருந்த வெளியே செல்கிறேன்; சில சமயம் சேர்ந்து ஒரே வீட்டில் அவர்களோடு தங்குகிறேன். அலுவலகத்தில் பல ஆண்கள் சில பெண்கள் எனக்காக/என்னோடு வேலை செய்கிறார்கள். இரவு கண்ட நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறேன்.

வீட்டில் மகாராணி. சுவாதீனம் சோம்பேறியாக்கும் அளவுக்கு உண்டு. வீட்டில் எல்லா விஷயத்திலும் seat in the table  உண்டு. என்னவாவது செய்து கொள் – டென்ஷன் ஆகாமல் இருந்தால் போதும் என்ற ஒரே விதி. நான் எதற்காகவாவது கவலைப்படாத வரையில் யாருக்கும் என்னைப் பற்றி கவலையில்லை.ஆனாலும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர லேட்டாகும்போது விசாரித்து ஃபோன் வரவில்லையென்றால் என்ன இப்படி கை கழுவி விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

நான் ஒரு முடிவெடுக்கும் முன்பு அவரைக் கேட்க வேண்டும் என்றால் புரிந்து கொண்டு ஆமோதிப்பவர்கள், அவர் என்னைக் கேட்டுக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால் அவரை “Hen Pecked” என்று கேலி பேசுவது கடுப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால்… சுத்தமாக இருட்டி மூடி விடுகிறது.

வீட்டில் இருக்கும் போது ஆஃபிசில் செய்யாத வேலைகள் ஞாபகம் வருகின்றன. ஆஃபிஸில் இருக்கும் போது வீட்டில் இல்லாத குற்ற உணர்வு வருகிறது.

அவ்வப்போது ரோட்டில் ஆண் டிரைவர்கள் நான் பெண் என்பதால் தவறு மட்டுமே செய்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். நான் வீட்டில் செய்ய மறந்த வேலைகளைப் போய் செய்யுமாறு ஞாபகமூட்டுகிறார்கள்.

பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கார்பெண்டர், கார் மெக்கானிக், மேஸ்த்ரி போன்ற டெக்னிக்கல் வேலை செய்பவர்கள் பொதுவாக நான் சொல்வது தவறு அல்லது எனக்குப் புரியாது என்று அலட்சியப் படுத்துகிறார்கள். நான் சொன்னதையே அவர் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள். “அவர் வயதும் தாடியும்தான் காரணம்… அவருக்கு ரிமோட் பயன்படுத்தவே நான் தேவை” என்று நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சில சமயம் சுருக்கென்று இருக்கத்தான் செய்கிறது.

அலுவலகத்தில் diversityக்காக பெண்களை சில விஷயங்களில் உப்புக்கு சப்பாணியாகச் சேர்த்துக் கொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. பிரசவத்திற்குப்பின் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண் ஊழியர்களை அல்லது பகுதி நேர வேலை செய்யும் பெண்கள் பற்றி இளக்காரமாகப் பேசிக் கேட்கும் போது கோபம் வருகிறது.

கணவரின் மேலாளர் என்ற முறையில் சில கஷ்டப்படும் மனைவிகள் என்னை அணுகி “வேலையிலிருந்து அனுப்பி விடு”, “இரவு வேலையாக மட்டும் கொடு” என்னும் போதெல்லாம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு வழியில்லை என்று மட்டும்தான் சொல்ல முடிந்திருக்கிறது.

தான் பெண் என்பதை சரியாக வேலை செய்யாத போது சமாளிப்பதற்காக பயன்படுத்தும் பெண்களும், ஆண்களை manipulate செய்யும் பெண்களும், சட்டத்தைக் கொண்டு ஆண்களை அலைக்கழிக்கும் பெண்களும் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விட அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

ஆஃபிஸில் நல்ல நண்பர்கள் கூட, ஆண்கள் கோபமாக விவாதித்தால் aggressive என்றும், பெண்கள் கோபமாக விவாதித்தால் (என்ன, கொஞ்சம் குரல் கிறீச்சீட்டு விடுகிறது) emotional  என்றும் சொல்வது விநோதமாக உள்ளது. அலுவலகத்தில் என்றாவது என்னை மீறி அழுதுவிட்டால் மறுநாள் விடியவே வேண்டாமென்று தோன்றுகிறது.

பல இடங்களில் வேலை பார்த்த, பல பெண்களின் அனுபவத்தில் – பொதுவாக ரொம்ப முக்கியமான பொறுப்பான வேலை, பயிற்சி என்றால் முதலில் ஆண்களைத்தான் அணுகுவார்கள்; அதே சமயம் கஷ்டமான அல்லது கோபத்திலிருக்கும் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தப் பெண்களைத் தேடி முன் நிறுத்தவும் செய்வார்கள் என்று தெரிகிறது.

எப்படியோ Glass Ceiling  கார்ப்பரேட் உலகத்தின் ஒரே உண்மை – சில விதிவிலக்குகளைத் தவிர. “இந்தப் பழம் புளிக்கும். கொஞ்சம் கீழேயே இருந்தால்தான் வீட்டு வாழ்க்கையையும் கொஞ்சம் வாழ முடியும்” என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. பணத்தேவை கருதி கணக்கில் வராத நாட்களாக வருடங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

________________________________________

இப்படி என் சொந்தக் கவலையெல்லாம் மீறி வசதி இருக்கும் போது நேரம் காலம் பார்த்து, பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை ஸ்கூல் ஃபீஸூக்காக கொடுத்த பணத்துடன் கடன் வாங்கியாவது விமர்சையாகக் கொண்டாட ஆசைப்படும் வீட்டு வேலை செய்து கொடுப்பவரை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

தேவநாதனின் பெண் குழந்தைகளை பள்ளியில் தொடரத் தடை செய்பவர்களையும், வன்புணர்ச்சிக்குள்ளான 12 வயது சிறுமி போலீசில் புகார் சொன்னதால் பள்ளியை விட்டு அனுப்பப் பார்ப்பவர்களையும் ஏதாவது செய்தால் கண்டிப்பாக முக்தி நிச்சயம் என்றே தோன்றுகிறது. Child Abuse என்று கேள்விப்பட்டால் பாடத்தில் சொல்லப்பட்ட Pedophilic என்ற வெறும் வார்த்தையையும் அதன் காரணங்களையும் தாண்டி அந்த கொடுமைக்காரன் மீது பாயத் தோன்றுகிறது.

மொத்தத்தில் கஷ்டப்படும் பிற பெண்களைப் பார்த்து holocaust survivor’s guilt வருகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டிருப்பதைப் போல சில பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே சமயம் பல பெண்கள் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.

இதற்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று தீர்மானமாகவில்லை. பெண்ணியவாதிகள், பெண்கள் இயக்கம் என்றெல்லாம் கேட்டால் ரொம்பத் தயக்கமாக இருக்கிறது.

________________________________

எப்படி இப்படி ஆனேன்?

நான் வளர்ந்தபின் சுதந்திரமாக இருப்பதற்காக, வளர்க்கப்பட்டேனா?

மிருகங்களை விட மனிதர்கள்தான் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமளவு வளர பல வருடங்கள் ஆகின்றதே. இந்த சார்புள்ள சூழலில் இருந்து சுதந்திரமானவளாக வளருவதுதான் எனக்கு சிறிது கடினமானதாக இருந்துள்ளது. நம்மால் நமக்கே உபயோகமாய் இருக்க முடியாத நிலை, வயது.

எனக்கு இருக்கும் கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நான் தேர்வு செய்யும் எந்த உறவும் நன்றாக இருப்பதற்கும் நாசமாய்ப் போவதற்கும் நான் மட்டுமே காரணம் என்று எல்லாச் சமயங்களிலும் சொல்லமுடியாது என்றாலும், என் பொறுப்பின் பங்கு அதில் அதிகமுள்ளது. ஆனால் தான் சுதந்திரமாக இல்லை என்று புரிந்து கொள்வதற்கும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வதற்கும் கூட வளர்ப்பின் பாதிப்பு தேவையாகிறது.

என் பிறந்த வீட்டில், நெருங்கிய உறவினர் வீடுகள் உட்பட, பெண் குழந்தைகள் மட்டுமே. ஒவ்வொரு முறை குழந்தை பிறந்த செய்திக்குப் பின் “இதுவும் பொண்ணாப் போச்சு, போ!” என்ற அங்கலாய்ப்பு நான் மூத்த பேத்தி என்பதால் கேட்டிருக்கிறேன். நானும் வீட்டில் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று பெரியவர்களோடு சேர்ந்து கொண்டு கவலைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து 9 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே தங்கையை அவள் பிறந்த அன்று பார்த்து தம்பியாகப் பிறக்கவில்லையே என்று அழுதிருக்கிறேன்.

பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லித்தான் வளர்க்கப்பட்டேன். ஆனால் அறிவு வளர்கையில் இப்படியும் இருக்கலாம் என்று படிக்க, பார்க்க, கேட்க முடிந்தது. அப்படி இருக்க ஆசைப்படுவதில் நாலில் ஒன்றாவது பெற பெற்றவரில் ஒருவரது ஆதரவாவது இருந்தது. தான் செய்ய முடியாததை என்னை செய்யவைக்க வேண்டி வந்த ஆசையா, இல்லை, பிள்ளைப்பாசமா என்று நான் புரிந்து கொள்ளும் முன்பே கிடைக்காத மூன்றை நினைத்து, கிடைத்த ஒன்றிற்கும் நன்றி மறந்திருக்கிறேன். “ஆம்பிளையாக வளர்கிறேன்! அடங்காப்பிடாரியாக ஆகிவிட்டேன்” என்று பேச்சு கேட்டால் இன்னும் கொஞ்சம் வீடு கட்டி ஆட்டம் காட்டி இருக்கிறேன். நான் வருத்தப்பட்டால் கலங்கிவிடும் சில உறவினர்களால் தப்பிப் பிழைக்க விடப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப பதின் வயதுகளில் பெண் ஆண் இருவருக்கும் வளர்ந்த பின் உள்ள பொதுவான எதிர்காலம் நான் வளர்ந்த ஒரு சிறிய டவுனில் உள்ளவர்களைப் பார்த்துப் புரிந்த பின் பயந்து நடுங்கியிருக்கிறேன். இரவு வேளைகளில் தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு பெற்றவர்கள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டிருக்கிறேன். ஒரு முறை, அவர்கள் ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” படித்து விட்டு, “இப்படியெல்லாம் நம் பெண்ணுக்கு நடந்து விடக்கூடாது; அதனால்தான் அவள் விருப்பத்திற்கு விடக்கூடாது” என்று (நாமொன்று எழுத அவர்களாக ஒன்று புரிந்து(!) கொண்டு படிக்கும் சில பதிவுலக நண்பர்கள் போல) பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்கள் பெற்ற பெண்ணாய் மழை நாட்களில் எங்கும் வெளியே செல்லாமல் கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தும் பார்த்தேன்!

சினிமா பாடல்கள் கேட்கக் கூடாது, யாரும் வீட்டுக் கதவைத் தட்டினால் பெண்கள் போய் திறக்கக் கூடாது என்ற விதிகளுக்கிடையில், வீதியில் நான் சைக்கிள் ஓட்டினதே ஒரு சாதனை ஆகியது. சல்வார் கமீஸ் இமாலய சாதனையாகியது. பத்தாம் வகுப்பில் தாவணி போட மறுத்தது பெரும் புரட்சி வெடித்ததாகக் கருதி அடக்கப்பட்டது. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் விஷயங்கள் ஏன் என்னை அப்போது அவ்வளவு பாதித்து வெறுப்பாக்கின என்று இன்றும் புரியவில்லை. ஏதோ நான் மட்டுமே அடக்கி ஆளப்படுகின்ற victim என்ற உணர்வு. காப்பாற்ற ராஜகுமாரர்கள் மட்டும் வரப்போவதில்லை என்ற ஒரே தெளிவு. புத்தகங்கள் மட்டும் கிடைத்திருக்கா விட்டால்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

நான் படித்த புத்தகங்களும், பேசிக் கேட்ட சில படைப்பாளிகளும் எதையோ திருகி விட்டனர்; சினிமாவில் நடிக்க ஊரை விட்டு சென்னை வரும் இளைஞர்களைப் போல, எள் விற்ற காசில் சினிமா எடுக்க ஆசைப்படுபவர்களைப் போல, நானும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி வேலைக்கு தயாராவது என்ற முடிவு எடுத்து விட்டேன். ஒன்று மட்டும் தெரியும் – “+2 வரை பொறுக்க முடியாது! பொருளாதார சுதந்திரம்தான் என் சர்வரோக நிவாரணி!”

என்றோ சுஜாதா படித்து, அவரால் கேம்பஸ் இன்டர்வியூ செய்யப்பட்ட பக்கத்து வீட்டு அண்ணன் பேசியதைக் கேட்டு கம்ப்யூட்டர் என்ற வார்த்தை மட்டும் நிலாவிடம் ஒட்டிக்கொண்ட ஜீனோ போல என்னோடு ஒட்டிக்கொண்டது. “15 வயசில கல்யாணம் பண்ணலைன்னா பின்னாடி கல்யாணத்தில் பிரச்சினை வரும். எட்டுல சனி” என்ற இரவு நேரப் பேச்சுக்கள் பீதி, பேதியைக் கிளப்ப, பத்தாவது ரிசல்ட் வந்தவுடன் அறிவித்து விட்டேன். “நான் இனிமே ஸ்கூல்க்கு போகப்போறதில்லை. கம்ப்யூட்டர் படிக்கப் போறேன்.” சுத்தமாக எந்த காலேஜ், எந்த இன்ஸ்ட்டிட்யூட், எந்த கோர்ஸ் என்று ஒண்ணும் தெரியாது. பேப்பரில் பார்த்த ஒரு விளம்பரம் மட்டும் கலங்கலாக ஞாபகம்.

அதற்கப்புறம் மூன்று வருடங்கள் ஹாஸ்டல், ஆறு மாதங்கள் கழித்து சென்னை மாநகரில் முதல் சம்பளம். Mission Accomplished but Partially பணம் சம்பாதிக்கும் பச்சைமண்!

பிறகு ருத்ரனைச் சந்தித்தல், அவரால் எல்லாவகையிலும் என் இப்போதைய வளர்ச்சி, உறவினர்களின் எமோஷனல் ப்ளாக்மெயில், நான் என் சுயநலம் பேணல், காசுக்காக அமெரிக்க வாசம், பெற்றோர் ஒரு வழியாக சமாதானமாதல் என்று பல அத்தியாயங்கள் தாண்டி, இப்போது.

என்னில் பிறர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்த முயலும் நேரங்களில் மரத்துப்போய் கடினமாக நின்றிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருக்கிறேன் என்றபோது நான் என் நிலையில் அழுத்தமாக இருக்கிறேன் என்று என்னையே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதில் எவ்வளவு என்னால் மட்டுமே முடிந்தது, இதில் எந்த நல்லது கெட்டதுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு, இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் இருக்கிறதா, கடவுள் காப்பாற்றியதா என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு என்னால் இன்னும் அன்னியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

______________________________________

என்ன சொல்ல வந்தேன்?.

இவ்வளவு நேரம் சுய புராண கொசுவத்திக்குப் பிறகு என்ன சொல்ல வந்தேன் என்றால்,

ஒரு பெண் மணந்து கொள்வதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது முதல், மணப்பதானால் யாரை மணந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும் அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்பதால் அவள் பொறுப்பும் அதிகம். சுதந்திரம் வேண்டுமென்றால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அலுவல், தொழிலும் அப்படியே.

மணந்தபின் வரும் உறவு முறைகளைச் சந்திக்க, சமாளிக்க அதற்குமுன் அவள் முழுவதும் தயாராகி இருக்க வேண்டும் – தேவைப்பட்டால் அந்த உறவுகளைத் துறந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவும் தயாராகி இருக்க வேண்டும். சொல்வது எளிது! ஆனாலும் அந்த நேரத்து விரக்தியை மீறி மீண்டு வரத் துணிவு, தேவை என்றவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தன்னிறைவுக்கான தகுதிகள் -அந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே தேவை.

இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது.

பள்ளிக்கல்வி கற்றுக் கொடுப்பதை விட இலக்கியம் கற்றுக் கொடுக்கும் என்பது, என் வாழ்க்கைப் பாடம். எப்படியும் கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆண் பெண் எல்லோருக்கும் கண்டிப்பாகத் தேவை. அதைத் தவிர, தன்னளவில் ஒரு பெண் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

  • உணர்வு பூர்வமான சார்பு நிலையிலிருந்து வெளியே வரமுடியாது – அதனால், அதைப் பற்றிய புரிதலாவது வேண்டும். உணர்வுகளை வைத்துச் செய்யப்படும் ப்ளாக்மெயில், குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி குளிர்காயப் பார்க்கும் கயமையை அடையாளம் கண்டு விலகுவது.
  • பெற்றோர் உறவினரிடமிருந்துப் பெற்ற சுதந்திரத்தை கணவன், பிள்ளையிடம் இழக்காமலிருப்பது.
  • பெற்ற பெண்ணை அடிமையாக இருக்கவும், ஆணை ஆதிக்கம் செய்யவும் பழக்காமல் இருப்பது.
  • மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது. Sometimes it is better to give up fighting wars to win battles

பிறர் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

  • ஒரு நாள், “மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” என்று எல்லோரும் கேட்குமாறு ஆக வேண்டும். சீக்கிரமாய் இந்த நாள் வர முடிந்ததைச் செய்யுங்கள்.
  • வீட்டிலும் வெளியிலும் ஆண்தான் அல்லது பெண்தான் செய்ய வேண்டிய வேலை என்று நிறைய வேலைகள் இல்லை. Dignity of Labour ஐ வீட்டிலும் ஆரம்பிக்கலாம்.
  • “உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?” என்று கேட்டு லொள்ளு பண்ணாமல் திருச்செங்கோடாய் இருக்க உதவி செய்யுங்கள். “Who wears the pants in your house?” என்பது அபத்தம். பாண்ட்டோ ஸ்கர்ட்டோ எப்போது எந்த சைஸாக இருக்கிறது, யார் அதை அணிந்தால் அந்த நேரம் பொருத்தம் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டியது.

–   உமா ருத்ரன்

______________________________

உமா ருத்ரன்:

படித்தது: கணினி தொழில்நுட்பப் பட்டயம், மனவியல் முதுநிலை, மேலாண்மை முதுநிலைப் பட்டயம், தர மேலாண்மை முதுநிலை, ஆய்வுப்படிப்பு இப்போதைக்கு ஆசை மட்டுமே.
பிடிப்பது: சினிமா, இலக்கியம், கலை, இசை
வேலை: தனியார் கணினி தொழில் நுட்ப நிறுவனமொன்றில் மேலாளர்
வாழ்வது: கணவர் டாக்டர் ருத்ரனுடன் சென்னை.
உமா ருத்ரனது வலைப்பூ:http://umarudhran.blogspot.com/

_______________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 2

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத  லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம்.  ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம்  தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர்,  கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி  சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள்  நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட  ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால்  லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட  சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை.  எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை  திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன.  ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில்  மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே  சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக  பெண்களே  இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன?  ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

–          சந்தனமுல்லை.

_______________________________________

சந்தனமுல்லை – ”எம் சி ஏ பட்டதாரி. பள்ளி படிப்பை இந்து மேனிலைப் பள்ளி,ஆம்பூரிலும், கல்லூரி படிப்பை அன்னை தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானலிலும் முடித்தேன். தற்போது,  ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். மகள் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சிறுவயது நினைவுகளை பதிவு செய்ய  தொடங்கிய வலைப்பூ, தற்போது  மகளுடனான தருணங்களையும், சமூகத்தில் என்னை பாதித்த  நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். ”

சந்தனமுல்லையின் வலைப்பூ: http://sandanamullai.blogspot.com/

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!


நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததில் குமுதத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் கூரூப் பத்திரிகைகள் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலைமுன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.2.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள். இந்த தீடீர் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து போலீசார் தயாராக குமுதம் அலுவலக வாசலில் குழுமியிருந்தனர்.

போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நித்தியானந்தனையும், அதற்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை ஆதரித்தனர். சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.

இறுதியில் போலீசின் தள்ளுமுள்ளுவிற்குப்பிறகு ஏ.சி, டி.சி அதிகாரிகளோடு காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தாவை உருவாக்கியும் இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை மக்களிடம் அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில் எழுப்பட்ட முழக்கங்கள்:

  • மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
    நித்யானந்தனை வளர்த்துவிட்ட
    குமுதமே மன்னிப்புக்கேள்!
  • தடைசெய்! தடைசெய்!
    தமிழக அரசே தடைசெய்!
    சாமியார்களின் பிரச்சாரத்தை
    தடைசெய்! தடைசெய்!
  • கைதுசெய்! கைதுசெய்!
    நித்யானந்தனைக் கைதுசெய்!
    பறிமுதல்செய்! பறிமுதல்செய்!
    அவன் சொத்துக்களை பறிமுதல்செய்!
  • விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
    சாய்பாபா, பிரேமானந்தா,
    சங்கராச்சாரி, தேவநாதன்,
    கல்கி, நித்தியானந்தா
    கழிசடைகளை விரட்டியடிப்போம்!
  • அடித்து விரட்டுவோம்! அடித்து விரட்டுவோம்!
    காவியுடைக்க கிரிமினல்களை
    நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!

______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழகம் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்ட சுவரோட்டிகளைக் கீழே பார்க்கலாம்.

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!


vote-012( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென  ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம்  ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு  சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா?  அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி.  இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது!  (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும்,  அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு..  காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.)

ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!

50

vote-012மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.

ஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)

________________________________________
உ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.

இவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.

இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.

வரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.

கட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.

இனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.

________________________________________________

மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

கவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை! அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.

ஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்!

____________________________________________

இன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா?

கட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா?

குடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா?

சகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.

ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.

குற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

_____________________________________

வரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.

பாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.

அந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி  என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.

தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal.    அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.

அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.

தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.

நிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.

அச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா? அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.

சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

97


பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும்

vote-012இந்து மதத்திற்கு பெரிய ‘களங்கம்’ ஏற்பட்டு விட்டது.

புனிதமான இந்து மதத்தைக் களங்கப்படுத்தி விட்ட நித்தியானந்தா, தான் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே வெளியில் நடமாட வேண்டும் என்று இந்துப் பாசிஸ்டுகளும், தமிழ் பெண்களையும் தமிழ் கலாசாரத்தையும் இழிவு படுத்திவிட்டார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலரும் கொதித்துப் போய் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்ரமங்கள் மீது தாக்குதல், சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து எரித்தல், உருவபொம்மை எரிப்பு என்று நமது மரபார்ந்த போராட்டங்கள் மீடியாவின் காட்சிப்படுத்தலோடு தடபுடலாக இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இலவசமாகக் கிடைத்த வீடீயோ க்ளிப்பிங்ஸ்சை வைத்து தனது ரேட்டிங்கையும் உயர்த்திக் கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி. தி.மு.க தலைவர்களின் மைனர் கால லீலைகளை படம் பிடித்திருந்தால் பல ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் வண்ணம் ஃபுட்டேஜ் கிடைத்திருக்கும். என்ன இருந்தாலும் தன்னையே படம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்களில்லை.

நித்தியை கார்ப்பரேட் தீர்க்கதரிசியாக உருவாக்கிய குமுதமோ நித்தியின் ஆபாச வீடியோவை தன் இணையத்தில் கூச்சமில்லாமல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டுகிறது. “ஏண்டா நாயே, நீதான்டா அந்த நாய்க்கு ஐந்து வருடமா பூஜை போட்டு கொண்டாடினாய்” என்று வாசகர்கள் செருப்பைக் கொண்டு அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் குமுதம் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கல்லாக்கட்டுகிறது

நித்தியின் ஆபாசத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்ட நக்கீரன் இணையமோ அந்த வீடியோவின் சில பகுதிகளை மட்டும் டிரெய்லர் மாதிரி போட்டு வாசகன் நித்தி மோனத்தில் ஆட்படும் வேளையில் எடிட் செய்யப்படாத முழு வீடியோவையும் காண சந்தா கொடுங்கள் என்று சுயமைதுனம் செய்வதோடு நைசாக பாக்கெட்டில் கைவைக்கிறது. ஆபாசப் படத்தை விற்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம். நக்கீரன் செய்து கொண்டிருக்கிற இந்த விற்பனைத் தந்திரம் என்பது சட்ட பூர்வ நீலப்பட விற்பனையல்லாமல் வேறென்ன?  முன்பு பிராபகரன் படத்தை மாஃபிங் செய்து ஆபாசமாக கல்லாக் கட்டியவர்கள் இன்று நித்தியின் கைங்கரியத்தில் இரண்டாவது பதிப்பு போட்டெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

ஈழப் போரின் போது கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு, தாங்கள் இழைத்த துரோகத்தை மறைத்து, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கிறது என்றெல்லாம் ஈழ மக்களின் துயரத்தை மறைத்தும் கொலைகார இந்தியாவுக்கு காவடி தூக்கியும் எழுதிவந்தார்கள். கடந்த சில வாரங்களாக வித விதமான ஆபாச சாமியார்களின் உல்லாச ஆசிரமங்கள், கருவறைக் களியாட்டங்கள், மோசடிகள், என்று ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

கருவறையில் செக்ஸ் லீலை செய்த தேவநாதனுக்கு முன்னரும் பின்னருமாக வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றன. வாசகர்களும் பழக்கப்பட்டுப் போன தங்களின் வக்கிர ரசனைகளுக்குத் தீனி போடுகிறது என்பதற்காக இவைகளைப் படித்துக் கொண்டே ஊர் ஊராக ஆஸ்ரமங்களுக்கு அலைகிறார்கள். கவர்ச்சி நடிகைகளின் இடத்தை சாமியார்கள் பிடித்துக் கொண்டதால் இனி இவை அடிக்கடி வாசகர்களுக்காக படைக்கப்படும்.

________________________________________

யார் இந்தச் சாமியார்கள்?

பெரியவா….. சின்னவா….எல்லோரது போதனைகளையும் போட்டு வெகு மக்களிடம் காசு பார்க்க முடியாத சூழலில் ஆனந்த விகடனால் இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுவாமி சுகபோதானந்தா. “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்ற தொடரைத் துவங்கி சுகபோதானந்தாவை பிரபலமாக்கியது ஆ.வி. இதே சுகபோதானந்தா பின்னர் குமுதம் இதழிலும் எழுதினார். பின்னர்தான் ஆ.வி சத்குருவைக் கொண்டு வந்தது. ஆனந்த விகடனின் இந்த போட்டியை எதிர்கொள்ள குமுதம் நித்தியானந்தாவைக் களத்தில் இறக்கியது.

இன்றைய தேதியில் சத்குரு நக்கீரன், ஆனந்த விகடன், விஜய் தொலைக்காட்சி என எல்லா இதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் எழுந்தருள்கிறார். கூடவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களைக் கொண்டு சத்குருவை வைத்து நேர்காணல் செய்து வெளியிட்டதும் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆக இந்தச் சாமியார்களை உருவாக்கியது ஊடகங்கள்தான்.

சுவாமி சுகபோதானந்தா, சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்.. திடீரென ஒரு நாளில் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்?  ஒரு நள்ளிரவிலோ ஒரு ஆதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மதவாதிகளும் கடைவிரிக்கிறார்களோ எங்கெல்லாம் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் காலம் தோறும் புதிது புதிதாக இந்த ஆபாச்ச் சாமியார்கள் உருவாகிவருகிறார்கள். இந்த சாமியார்களின் தேவை ஆளும் வர்க்கங்களின் அடிப்படைத் தேவை. எப்படி என்பதில்தான் இந்த காவியுடை காமப் பிசாசுகளின் உண்மை முகம் ஒளிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஆகமவிதி, மனுதர்மம், மதம், வேதம் என்று வருண தர்மத்தின் அடிப்படையின் பார்ப்பன மதம் பரப்பி வந்தார்கள். பழமையை விட்டுக் கொடுக்காமல் ஆகம விதிகளை கறாராகக் கடை பிடித்து பார்ப்பன வெறியை மக்கள் மீது திணித்து வந்த சங்கரமடம் மாதிரியான மடங்கள் ஒரு வகை. இந்த பார்ப்பன சாமியார்களோ கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். கட்டுப்பாடு என்றால் செக்ஸில் அல்ல செக்ஸ் விதிமுறைகளில். அதாவது இவர்கள் மனுதர்மப்படி பார்ப்பன பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார்கள். சூத்திரப் பெண்களைத் தொட்டால் தீட்டு அல்லவா?

இந்த பார்ப்பன அதிகார பீடங்களின் அடுத்த வடிவம்தான் கார்ப்பரேட் சாமியார்கள்.  மறுகாலனியாதிக்கம் அறிமுகமான தொண்ணூறுகளை ஒட்டிய காலப்பகுதியில் இவர்கள் அறிமுகமானார்கள். கார்ப்பரேட் சாமியார்கள்தான் நவீனமானவர்கள் அல்லவா? அவர்கள் பார்ப்பனர்களுடனும் உறவு வைப்பார்கள் சூத்திர பெண்களுடனும் உறவு வைப்பார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பதில்லை.ஆனால் கருவைறையில் செக்ஸ் வைத்தாலும் சரி மடத்துக்குள்ளேயே கொலை செய்தாலும் சரி பார்ப்பனச் சாமியார்களாக இருந்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியும், அதுவே சூத்திர பிரேமானந்தாவாக இருந்தாலோ ஏனைய சூத்திர மோசடிச் சாமியார்களாகவோ இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இந்து மதம் காப்பாற்றப்படும். இவர்களை தண்டிப்பதன் மூலம் ஜெயேந்திரன் செய்த பாவத்தை கழுவிக் கொள்கிறது, மனுதர்மம், ஆகமவிதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை தயார் படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகள், கருப்புப் பண முதலைகள் என எல்லோருமாகச் சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அவர்களே புதிய சாமியார்களையும் உருவாக்கினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியால் உருவான புதிய தலைமுறையைக் குறிவைத்து சாமியார்களை உருவாக்கியது ஊடகங்களே.

சாமிப்படங்களைக் காட்டுவதை விட இந்துமதத்தின் கருமக் கோட்பாடுகளை கொஞ்சம் மென்மையாக ஆடல் பாடலோடு போதித்து வந்தார்கள். இவர்களில் டான்ஸ் சாமியார் சிவசங்கரபாபாவும், யாகவா முனிவரும் லைம் லைட்டுக்கு வந்தது இப்படித்தான். இன்னொரு பக்கம் பங்காரு அடிகளார் என்னும் பெயரில் செவ்வாடை வழிபாட்டைத் துவங்கி மேல்மருவத்தூரையே தன் வசப்படுத்தினார். இன்று மலைமுழுங்கி மகாதேவன் மாதிரி தோற்றம் அளிக்கும் பங்காருவின் சக்தி பீடம் மிகப்பெரிய நிறுவனம்.

தனது பிறந்த நாளின் போது 100 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார் பங்காரு. அப்படி என்றால் எத்தனையாயிரம் கோடிகள் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார் இந்த செவ்வாடைச் சாமியார்? பார்ப்பன மடங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியவில்லையே என்று தயங்கி நின்ற திராவிட இயக்கத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.கவினர் இன்று பங்காரு அடிகாளாரின் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள். ( அமைச்சர் துரைமுருகன் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியதும், காஞ்சி மடங்களுக்குச் சென்று வருவதும் எல்லோருக்கும் தெரிந்த கதை)

சாய்பாபா என்னும் பன்றித்தலையன் பாபாவின் மோசடிகளை சில வருடங்களுக்கு முன்னர் வெளிக் கொண்டு அம்மணமாக்கும் முயற்ச்சியை வெளிக்கொண்டு வந்தது பி.பி.சி மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் உயரிய ஆளும் வர்க்கங்கள் வரம் வேண்டும் இடமாக இருக்கும் புட்டபர்த்தி ஒரு மர்மமான பிரதேசம் என்று பல ஊடகங்கள் எழுதியும் இந்திய ஆட்சியாளர்கள் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். சாய்பாபா ஒரு ஓரினச் சேர்க்கைப் ப்ரியன் என்பதையும் கட்டாயமாக பல இளைஞர்களை கரெக்ட் செய்து சிஷ்யப் பிள்ளைகளாக வைத்திருப்பதையும் அமபலப்படுத்திய வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு.

__________________________________

ரௌடி அரசியலின் காவி முகம்?

வேதாந்தியை உங்களுக்கு நினைவிருக்கும். சேதுக் கால்வாய் தொடர்பாக கருணாநிதி, ராமன் குறித்துத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த வேதாந்தி கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு என்று அறிவித்தான். அந்த காவி உடை மிருகத்தை நீங்கள் ராமனின் காவலனாக நினைக்கக் கூடும், ஆனால் அதுதான் இல்லை. இந்திய முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் திருட்டு வங்கியாக பணக்காரர்களுக்கு செயல்பட்டான் வேதாந்தி.

வேதாந்தி மட்டுமல்ல எவனெல்லாம் ஏழைகளுக்குச் சேவை செய்கிறோம் என்று அறக்கட்டளை நிறுவி சாமியார் போர்வையில் போதுச் சேவைக்கு வருகிறானோ அவன் எல்லாமே இம்மாதிரியான கருப்புப் பண பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறான். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு வரி விலக்கு அளிக்கிறது. கோடி கோடியாக பகதர்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆஸ்ரமம் என்ற பெயரில் பெரிய நவீன பாலியல் விடுதிகளைக் கட்டுகிறார்கள். ஒரு மோசடிச் சாமியார் மோசடி நிறுவனமாக மாறுவது இந்தியப் பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.

நித்தியின் உல்லாச வீடியோ குறித்துப் பேசுகிற ஊடகங்கள் என்றாவது நித்தியின் ஆஸ்ரமங்கள் குறித்தோ கோடிகளை ஈட்டி, மேல் மட்டத் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட விதம் பற்றியோ எழுதியிருக்குமா? தான் அடிக்கிற கொள்ளையில் கொஞ்சம் பணத்தை பிச்சைக்காசாக மக்களுக்கு இவர்கள் கொட்டி விடுவதால் சமூகச் சாமியார்களாகவும் உருவாகிவிடுகிறார்கள். தொண்ணூறுகளில் ரௌடி அரசியல் கூட்டு பற்றி ஆராய அமைக்கப்பட்ட வோரா கமிட்டி ரௌடி – அரசியல்வாதி – போலீஸ் கூட்டின் ஒரு அங்கமாக சாமியார்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. ஆமாம் பெரும் பண முதலைகளின் கூட்டு இல்லாமல் எந்த ஆஸ்ரமங்களும் செயல்படவே முடியாது. இப்படி பலப் பல கோடி ரூபாய்களைக் கொண்டு கொட்டி வைக்க சங்கரமடமும் பயன்படுகிறது, நித்தியானந்தா மடமும் பயன்படுகிறது…

__________________________________________

ரஞ்சிதாவுடன் காதலா?

ஒரு நண்பர் சொன்னான். அவர் ரஞ்சிதாவைக் கொண்டாடுகிறார். ரஞ்சிதாவும் அவருக்கு அன்புடன் பணிவிடை செய்கிறார். அதாவது அவர் சொல்ல வருவது ரஞ்சிதாவும் சாமியாரும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கிறார்கள் என்பதுதான். ஆமாம் ஏன் காதல் வராது? புகழ் போதையில் மூழ்கி கோடிகளைச் சம்பாதித்து அதில் சில லட்சங்களைக் ரஞ்சிதாவுக்குக் கொட்டி அவரை கொண்டாடவும் செய்கிற நித்தியின் காதல் ரஞ்சிதாவோடு முடிந்து போகிற ஒன்றா என்ன? இது மாதிரி எத்தனை ரஞ்சிதாக்களை பெங்களூர் ஆஸ்ரமத்தில் கொண்டாடியிருப்பார்? நித்தியாவின் ஆசிரமத்தில் முன்னாள் நீலப்பட நாயகிகளைக் கண்டிருப்பதாக நித்தியாவின் சீடர் சாருவே தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சிதா சினிமா, சீரியல்களில் நடித்து தனியாக சீரியல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதற்கு நித்தியா பைனான்சும் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் சம்பந்தப்படும் மேட்டுக்குடி விபச்சாரத்தில் ரஞ்சிதா போன்றுதான் பணிவிடை செய்யவேண்டும். ஏனெனில் இதற்கு சன்மானமாக பல இலட்சங்கள் தரப்படுகின்றது. அனுபவ் தேக்குமர நடேசனுக்கு இரவுப் பணிவிடை செய்யும் பெண்கள் குடும்பப் பெண் போல நடந்து கொள்ள வேண்டுமென்பது நிபந்தனையாம். இதெல்லாம் மேட்டுக்குடி விபச்சாரத்தில் சகஜம்.

இங்கே ரஞ்சிதாவை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து பரிதாப்படுபவர்கள் மேற்கண்ட விசயத்தை பார்க்கத் தவறுகிறார்கள். ரஞ்சிதா இடத்தில் ஒரு சாதரணப் பெண் இருந்திருந்தால் இந்தப் பரிதாபம் வந்திருக்காம என்பது ஐயமே. மேன்மக்களின் சோகம்தானே கீழே பரவும் நியதியைக் கொண்டிருக்கிறது.

முன்பு குஷ்பு கற்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதற்காக சுஹாசினி, ரேவதி எல்லாம் குஷ்புவுக்காக வரிந்து கட்டி வந்தார்கள். ரஞ்சிதாவோ, குஷ்புவோ, சுஹாசினியோ இவர்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை? காலையில் எழும்பி ஒரு டீயும் ஒரு பன்னும் வாங்கி தின்று விட்டு கிடைக்கிற கூலியில் கத்தரிக்காய் வாங்கி சுண்டக் குழம்பு வைத்தா  தினம் தோறும் தின்று கொண்டிருக்கிறார்கள்? அல்லது அண்ணாசாலை சாந்தி தியேட்டர் சப்வேயில் தன் வயிற்றுக்காக தன்னை விற்று அதையே பிழைப்பாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளியின் கற்பு பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர, உழைக்கும் மக்களின் காதல் ஒழுக்கத்தை காதல் மரபை முதலாளித்துவ ஒழுக்கங்களில் மூழ்கித்திழைக்கும் இந்த பிழைப்புவாத கும்பலின் உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?

______________________________

சாமியார்களின் மோசடி செக்சில் மட்டுமா?

சில சாமியார்கள் அரசியல் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள். சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். கருப்புப் பண வங்கிகளாக சிலரும், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில் என எல்லா கேடு கெட்ட தொழிலையும் காவி உடையில் செய்கிறார்கள். உழைக்காமல் முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக இந்து மதமும் ஏனைய மதங்களும் இவர்களுக்குப் பயன்படுகிறது. அடுத்தவன் நிலத்தை அபரித்து, மக்கள் நம்பும்படி மாஜிக் மாய்மாலங்கள் செய்து, கோடிகளைக் குவித்து, மாமா வேலை பார்க்கிற வரை இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,  இந்தச் சாமியார்களின் ஆஸ்ரம சாம்ராஜ்யங்கள் யார் கண்ணையும் உறுத்துவதும் இல்லை.

ஆஸ்ரமம் வளர வளர புற்றீசல் போல பக்தர்கள் படையெடுக்கிறார்கள். அவன் கொடுக்கிற போதை வஸ்துவை உண்டு மோனத்தில் ஆழ்ந்து அந்த மோனத்தையே முக்தி நிலை என்றும் நம்புகிறார்கள். ஆயிரம் பேரிடம் அவன் நடத்துகிற காமக் களியாட்டங்களுக்குப் பின்னர் ஏதோ ஒரு பெண் அட சாமியார் என்று போனோமே சுத்த கேடிப்பயலா இருக்கானே என்று சொன்ன பிறகு இந்து மதத்துக்கே கேடு, தமிழ் கலாசாரத்திற்கே தீங்கு என்று கதறுகிறார்கள்.

தேவநாதனின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இரு தாசாப்த கால வரலாறு உண்டு. இருந்தும் ஏன் இப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் லோக குருவாக வலம் வர முடிகிறது என்றால் ஜெ, கருணாநிதி ஆட்சி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அரசியல் கூட்டு இவர்களுக்கு இருக்கிறது.

ஜெயேந்திரனின் வழக்கில் எல்லா சாட்சிகளும் வரிசையாக பல்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கருவறை லீலை செய்த தேவநாதனுக்கு 94 நாட்களில் ஜாமீன் கிடைத்தது எப்படி?  கேட்டால் பொலீஸ் தரப்பு வாதம் வீக்காக இருந்தது என்கிறார்கள். தேவநாதன் சரணடைந்து 94 நாட்கள் ஆகியும் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால் அவனை ஜாமீனில் விட்டது காஞ்சிபுரம் நீதிமன்றம்.

ஆனால் அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய இருந்த நேரத்தில் தேவநாதன் வழக்கை விசாரித்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் அதைக் காரணம் காட்டியே அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான இன்றைய தமிழக அரசு ஜெயேந்திரன் வழக்கு, தேவநாதன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வழக்கு என சூத்திர மக்களுக்கான எல்லா நீதி போராட்டங்களிலும் தவறான வாதங்களையும் பார்ப்பனர்களுடன் கரிசனமான போக்கையுமே கொண்டிருக்கிறது.

பாதிக்கப்படும் பெண்களும் தாங்கள் சாமியாரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டோம் என்பதை சொல்ல முன்வருவதில்லை. ஏனென்றால் ஏமாறுகிற பெண்களில் சிலருக்கு கருவறை சாமியாரின் கதகதப்பு தேவையாக இருக்கிறது. அப்பாவி பகதர்களிடமும் சாமியார் தூண்டிலை வைக்கும் போது பிரச்சனையாகிவிடுகிறது. ஆனால் ரஞ்சிதாவின் விஷயத்தில் நடந்ததோ முற்றிலும் வேறு.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் உள்குத்து வேலைகளில் பாதிக்கப்பட்ட ஒருவர் முழு நீள படத்தை எடுத்து அதில் ஒரு பகுதியை மட்டும் இப்போது வெளியிட்டிருக்கிறார். இந்த இலவச திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நாம் விரைவில் காணலாம். பெங்களூருவின் சொத்து ஒன்றை வாங்கும் பிரச்சினையில் தோல்வியுற்ற ஒரு அரசியல் புள்ளி சாமியாரின் சீடர்களை ஏற்பாடு செய்து இதை வெளியிட்டிருக்கிறார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது இந்த இரகசியங்கள் இன்னும் வரும்போலத் தோன்றுகிறது.

___________________________________

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனின் கரிசனமும் நமது கேள்வியும்….

” எனக்கு அக்காட்சியைப் பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே. சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.” என்று எழுதி தனது கரிசனத்தோடு கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்களின் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்.

மிகப்பெரிய கோடீஸ்வரச்சாமியாரிடம் தமிழ் செல்வன் காட்டும் கரிசனம் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சிக்காக முழு நேரமும் உழைத்து தொழிற்சங்க தோழர்களின் நன்மதிப்பைப் பெற்று போலி மார்க்ஸ்சிஸ்ட் அரசியலில் நேர்மையாக இருந்த தோழர் வரதராஜன் கொலையில் கட்சித் தலைமையும் பிரகாஷ் காரத்தும் காட்ட மறுத்த கருணையை தமிழ்செல்வன் ஏன் கண்டிக்கவில்லை?  வரதராஜன் ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதரிக்கும் தமிழ்செல்வன் நித்தியானந்தா என்ற பொறுக்கியின் உணர்வுக்கு கண்ணீர் வடிக்கிறார். என்னே மனிதநேயம்?

வரதராஜனின் மரணம் என்பது தற்கொலை அல்ல கொலைதான் என்பதும் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட தீர்ப்பை ஒரு பொய்யான நீரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் வரதராஜன் மீது சுமத்தி அவரை போரூர் ஏரி நோக்கித் துரத்திய இரக்கமில்லாத தன் தலைமை குறித்தோ, அல்லது மோசடிப் பேர்வழியான பிரணாய் விஜயனை ஆதரித்து நிற்கிற இதே பிரகாஷ்காரத் அந்த பொருளாதார மோசடிகள் எதுவும் செய்யாத அப்பாவியான வரதராஜன் மீது நடவடிக்கை எடுத்ததோ தமிழ்ச் செல்வனுக்கு பிரச்சினை இல்லை.

__________________________________________

சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால……..

எதிர்பார்த்ததைப் போலவே சாரு நித்தியானந்தாவை அலட்டிக் கொள்ளாமல் உதறுவது போல காட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நித்யா பல நூறு மேதைகளுக்கு நிகரான ஒரு மேதையாம். பல புற்று நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறாராம். பல இலட்சம் பக்தர்களுக்காக நித்தியா மட்டுமே சிந்தித்தாராம். இவ்வவளவு வல்லமை கொண்டவர் தனது சக்தியை காமத்திற்கு கொடுத்து விட்டார் என்று பேசுகிறார் சாரு. அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாகவும், தன்னை நம்பி பல ஆயிரம்பேர் ஏமாந்து விட்டதாகவும் இதனால் சுய இரக்கம் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

அடிக்கடி நடிகையின் பின்புறத்தை நித்யா நக்குவதாக கூறிக்கொண்டு திட்டுவது போல காட்டிக்கொண்டு மேற்கண்ட மகத்துவங்களை பட்டியலிடுகிறார். பல இலட்சம் பக்தர்கள் மத்தியில் நித்யா மட்டும் சிந்திக்கும் சுமையை எடுத்துக் கொண்டால் இத்தகைய ரிலாக்சேஷன்கள் தவறில்லையே. ஒரு படைப்பை படைப்பாளியிடமிருந்து பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறும் சாரு நித்யாவின் காம லீலைகளை அவரு குண்டலனி யோகத்திலிருந்து பிரித்துத்தானே பார்க்க வேண்டும்?

ஊரே காறித்துப்புவதுதான் சாருவின் பிரச்சினை. புற்று நோயாளிகளை நித்யா குணப்படுத்தினார் என்று கூறும் சாருவை இந்திய மருத்துவச் சட்டப்படி கைதே செய்யலாம். ஊருப்பட்ட வியாதிகளுக்காக மக்கள் மருத்தவமனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கும் போது இந்த லேகியக்காரனை இப்படிச் சொல்லித்தானே பலரும் கொண்டாடினார்கள்? மற்றவர்கள் கூட இப்போது திருந்திவிட்டாலும் சாரு தனது விசுவாசத்தை விடுவதாக இல்லை.

தன்னை நம்பி பல்லாயிரம்பேர் நித்யாவிடம் ஏமாந்து விட்டதாக சாரு கூறுவது உண்மையானால் அதற்கு என்ன தண்டனை?

___________________________________

முதலில் வறுமையைப் பரிசளிப்போம்… சலிப்பைப் போக்க சிட்டுக்குருவி லேகியமும் உண்டு…..

நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி வறுமை காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி, ஏழைகளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்க இடியென இறங்கி இருக்கிறது பட்ஜெட் அறிவிப்புகள். இந்திய தொழில் கூட்டமைப்பின் சிந்தனையில் உருவான பட்ஜெட்டில் அத்தியாவசியப் பண்டங்களின் விலை எக்குதப்பாய் எகிறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்றால், நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் இதை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மன்மோகன்.

கருணாநிதியோ கலகமில்லாமல் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். மக்களை வைத்து கபடியாடிக் கொண்டிருக்கும் இந்த புரோக்கர்களுக்கு மத்தியில் ஒரு முருங்கைக்காயின் விலை ஐந்து ரூபாயாகி விட்டது. ஒரு கிலோ வெங்காயம் 36 ரூபாய். இன்னும் சில நாட்களில் லாரி வாடகை 20% அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்படி அதிகரிக்கிற அடுத்த நிமிடமே அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் பல மடங்கும் உயரும் சூழல் உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட் என்னும் பெயரில் மக்கள் மீது வீசியுள்ள இந்த குண்டை அடுத்து மாநில அரசு என்ன குண்டை வீசப் போகிறதோ என்ற கவலை மத்திய தர வர்க்கத்தை உசுப்பி வருகிறது.

மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். போதிய வருவாய் இல்லாமலும் வேலையிழப்பாலும் வறுமையை நோக்கி நகருகிற பெரும் மக்கள் கூட்டத்திற்கு போதை ஏற்றவும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை விடுவித்து போதையில் ஆழ்த்துவதற்காகவும் ஆளும் வர்க்க ஊடகங்களும், ஆட்சியாளர்களும் உருவாக்கும் சிட்டுக்குருவி லேகியம்தான் இந்த செக்ஸ் விவகாரங்கள்.

உலக மக்களின் எதிர்ப்பை மீறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அமெரிக்க மக்களின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி தடையில்லாமல் ஆயுத விற்பனையைத் தொடர கிளப்பிவிட்டதுதான் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவாகாரம். மக்கள் மோனிகாவின் கனவுகளில் ஆழ்ந்திருக்க கொடூரமான போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இதோ விஷம் போல் ஏறும் விலைவாசி என்னும் கசப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப, எங்கும் உருவாகி வரும் மக்கள் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் செக்ஸ் ஸ்கேண்டல் யுத்திதான் இந்த போலிச்சாமியார்களின் காம லீலைகள்.

__________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

யதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். போர், நிலங்கள் பறிப்பு, கனிமவளக் கொள்ளை, அடிப்படை சுகாதார வசதியின்மை, உணவு, உடை, உறைவிடத்தேவைகள் மறுக்கப்பட்ட நிலையை நாம் காண்கிறோம். நமது நாடு, நமது நகரம், நமது அரசு என்கிறார்கள். ஆனால் இது டாட்டா, பிர்லாக்களின், அம்பானிகளின் நாடாகவும் அவர்களின் அரசாகவுமே இருக்கிறது. நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை…….

___________________________________

–          இராவணன்.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!” புரட்சிகர அமைப்புகள் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்.
  2. முல்லைப் பெரியாறு: கருணாநிதி மறைக்கும் உண்மை
  3. விலைவாசி உலகத்தரமானது பட்டினி நிரந்தரமானது
  4. நெருப்பைப் பஞ்சால் அணைக்க முடியுமா?
  5. கிராமப்புற மருத்துவர்கள பஞ்சு மிட்டாய்த் திட்டம்!
  6. நூதனக் கல்வி்க் கொள்ளை: தி.க.வீரமணியின் ‘சாதனை’!
  7. நுண்கடன்… மீப்பெரும் கொள்ளை!
  8. வாழ்வுரிமைக்குப் போராடுவது தேசவிரோதச் செயலா?
  9. “உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது!” -போஸ்கோ நிறுவனத்துக்கு எதிராக ஒரிசா மக்களின் போராட்டம்
  10. தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
  11. “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம், மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணி வகுப்போம்! தமிழகமெங்கும் தொடரும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  12. கொலைகார ப.சிதம்பரத்தின் கொடும்பாவி எரிப்பு! மேற்குவங்கத்தை உலுக்கிய பேரணி-ஆர்ப்பாட்டம்!
  13. அறிவுத்துறையினர் மீது பாயும் அரசு பயங்கரவாதச் சட்டம்
  14. சி.பி.எம்.இன் பரிணாம வளர்ச்சி: முதலாளிகளே ஊழியர்களாக…
  15. சி.பி.எம். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கையாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம்!
  16. பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஐ.
  17. மராத்திய இனவெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள்!
  18. மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
  19. ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்திண்ணி அமெரிக்கா!

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்