வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும்
வ.உ.சி வாழ்ந்த காலம் 1872 முதல் 1936 வரை; இறக்கும்போது அவர் வயது 64.
இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயல்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளத்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கால் ஊன்றாத 1900-களின் தொடக்கத்திலேயே இட்டவர், விதை ஊன்றியவர், அன்றைக்கு யாராலும் கற்பனை செய்தும் இயலாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொருளாதார அடித்தளத்தை அசைத்துக் காட்டியவர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு பொருளாதார தளத்தில் பெரும் சவாலாக விளங்கி அச்சுறுத்தியவர் வ.உ.சி.
வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே, வணிகக் காரணங்களுக்காக அல்ல. அவர் அன்றைய நாளில் புகழ்பெற்ற வழக்கறிஞர், வருவாய்க்கு குறைவில்லை. வருவாயில் பெரும்பகுதியை பிறர்க்கு தானமாக கொடுத்த வள்ளல், எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் அவர்களின் வழக்குகளுக்கு வாதாடிய பெருந்தகை. காசுபணம் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்தது இல்லை.
வழக்கறிஞர் ஆன அவர், உயர்ந்த அந்தஸ்து பொருந்திய இரண்டாம் நிலை ப்ளீடர் பதவியை துச்சமாக மதித்து வெளியேறினார்.
படிக்க :
ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
1906 அக்டோபர் 4 அன்று கப்பல் வாங்கப்பட்டது, 16 அன்று சுதேசி ஸ்டீமர் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் வயது 34 மட்டுமே!
அவருக்கு முன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் இயங்கத்தான் செய்தன. ஆனால் அவை அனைத்தும் வணிக நோக்கில் ஆனவை. அரசியல் சார்பு இல்லாதவை. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஒழித்துக்கட்டியது.
சுதேசி கப்பல் கம்பெனியின் இலட்சியங்கள் : தற்சார்பு, சுயதொழில் வளர்ச்சி, அந்நிய பொருட்களையும் வணிகத்தையும் புறக்கணிப்பது ஆகிய இலக்குகளை அடைவது ஆகியவை மட்டுமே.
1906 அக்டோபர் 4 அன்று  விவேகபானுவில் அவர் எழுதினார் : “நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற்கு எதுவாக இருந்ததும், நமது சுதேசத்து பொருட்களை எல்லாம் அந்நிய நாட்டார் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரங்களை எல்லாம் அந்நிய நாடுகளுக்கு கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாக கைக்கொண்டு இருந்த கப்பல் தொழிலை நம்மிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது ஒன்றே ஆதலால், நாம் அதி சீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக்கொள்ளதக்கதும் கைக்கொள்ள வேண்டுவதும் ஆன தொழில் கப்பல்கள் நடத்துவது மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததே…”
அன்றைய நிலையில் 2 கப்பல்கள், 2 லாஞ்சுகள், வேலைக்கு மூலதனம் ஆகிய மூலதன செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய். கம்பெனியின் ஒரு பங்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
எஸ்.எஸ். லாவோ கப்பல் 1907 ஜூன் 11 அன்றும், எஸ்.எஸ். காலியா 1907 மே 16 அன்றும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன.
கப்பல்கள் வந்து சேர்ந்த பின் தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் “சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிவிட்டோம், பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. …அடுத்து பருத்தி வணிகம், அதை நாம் கைப்பற்றுவது மிக எளிது…” என்று தனது அடுத்த திட்டத்தையும் அறிவித்துள்ளார் வ.உ.சி!
பிரிட்டிஷாரின் ஒரே கொள்கை இந்தியாவில் உள்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதும் இலாபத்தை கடல் கடந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் என இருந்தபோது, அதே இலாபத்துக்கு வ.உ.சி.யால் பேராபத்து விளைகின்றது, அவரை அகற்றாமல் தமது காலனியாதிக்க வணிகத்தை ஓரடியும் நகர்த்த முடியாது என்ற மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுதான் அவருக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான கொடுமைகள், தடங்கலுக்கும், பின் தொடர்ந்த சிறைக்கொடுமைகளுக்கும் காரணம்.
1908-இல் அவர் பேசினார் : “அயல்நாட்டவரால் நடத்தப்படுகின்ற நிர்வாகம் சுதேசிகளின் பயன்கருதிச் செயல்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நீண்ட காலத்திற்கு அரசாங்கம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தால், இந்நாடு கட்டாயமாகப் பாதிக்கப்படும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றது. அதன் உண்மையான வளங்களை மீட்பதற்கு மூன்று வழிகள் உள்ளன : 1. சுதேசியம் 2. புறக்கணிப்பு 3. தொழிற்சாலை”.
அன்றைய திருநெல்வேலி கலெக்டர் எம்.எம். வின்ச், வ.உ.சி.யின் இப்பேச்சை “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மானப்பிரச்சினை” என்று பதிவு செய்தார்.
1908 பிப்ரவரி 27 கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. மார்ச் 6 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் முழு வேலைநிறுத்தம் நடந்தது. மக்களிடம் இருந்து திரட்டிய நிதி, தன் சொந்த பணம், மனைவி மீனாட்சியம்மாளின் நகையை அடகு வைத்து கிடைத்த பணம், கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு அளித்தவர் வ.உ.சி.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியை மூடிவிடுமாறு வ.உ.சி.க்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
அவரது கம்பெனியின் கூட்டாளிகள் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு விலைபோனது, பிரிட்டிஷ் நிர்வாகம் தன் மிருகபல அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதேசி கப்பல் கம்பெனிக்கு நட்டத்தை விளைவித்தது. கடன், ஊழியர்கள் செய்த ஊழல் ஆகியவை ஒன்றிணைந்து வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை ஒழித்தன.
கொண்ட கொள்கையில் உறுதியும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்தும் வந்த வ.உ.சி., தன்  வாழ்நாளில் 57 மாதங்கள், 22 நாட்கள் கொடுஞ்சிறையில் வாழ்ந்தார். அது கம்பீரம் மிக்க வீர வரலாறு.
40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் வ.உ.சி மட்டுமே. “மிக ஆபத்தான மனிதன்” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆவணங்களில் இவரை குறித்து வைத்தது.
***
இவை யாவும் நடந்த காலம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்துகொண்டு இருந்த காலம் என்பதை புரிந்து கொண்டால்தான் வ.உ.சி.யின் சிந்தனை முதிர்ச்சி, துணிச்சல், முன்னெடுப்பு, போராட்ட குணம் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். 1915-ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு திரும்புகின்றார். அதற்கு முன்பாகவே 12.3.1908 முதல் 24.12.1912 வரை 57 மாதங்கள், 22 நாட்கள், அதாவது நான்கே முக்கால் வருடங்கள் பிரிட்டிஷாரின் சிறையில் கற்பனைக்கு எட்டாத கொடுமைகளை அனுபவித்தார். முப்பத்து ஐந்தரை வயதில் சிறைக்கு சென்றவர் நாற்பதேகால் வயதில் விடுதலை ஆகின்றார்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை:
பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் விசாரணைக்கைதியாக
கோயம்புத்தூர் சிறையில் 30 மாதங்கள் : கடுங்காவல் / நாடுகடத்தல் தண்டனைக் கைதியாக 9.7.1908 முதல் 12.12.1910 வரை.
கேரளா கண்ணனூர் சிறையில் 24 மாதங்கள், 22 நாட்கள் கடுங்காவல் / தண்டனைக் கைதியாக. இங்கிருந்துதான் விடுதலை ஆனார்.
தனது 35-வது வயதில் சிறை செல்கின்றார், 40-வது வயதில் வெளியே வருகின்றார்.
(தகவல்கள் உதவி : கப்பலோட்டிய கதை, குருசாமி மயில்வாகனன், நீந்தும் மீன்கள் வெளியீடு)
***
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையை ஒப்பீடு செய்தால்
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது 1885இல்.
வ உ சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது 1907இல்.
காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1915இல்தான் இந்தியாவுக்கு வருகின்றார். 1921இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகின்றார்.
ஜவஹர்லால் நேரு பிறப்பு 1889. 1905-07 காலகட்டத்தில் அவர் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருந்தார். 1912இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பதிவு செய்கின்றார். 1912இல்தான் முதல்முறையாக பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
ராஜாஜி பிறப்பு 1878. 1906இல் அவர் வயது 28. 1906இல் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றார், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொள்கின்றார்.
வல்லபாய் படேல் : 1911இல் 36 வயது இவருக்கு. லண்டன் சென்று படிக்கின்றார். திரும்பி வந்து அஹமதாபாத்தில் வக்கீல் தொழில்தான் செய்து கொண்டு இருந்தார். ன்ற காந்தியை இவர் முதல் முறையாக சந்தித்தது 1917இல் தான்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்: 1905,6, 7 காலகட்டத்தில் அவர் படித்துக்கொண்டு இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ்: பிறப்பு 1897. 1906இல் படித்துக்கொண்டு இருந்தார்.
காமராஜர் பிறந்தது1903இல்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் (1888-1975): 1906இல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்.
பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன ஆர் வெங்கட்ராமன் பிறந்ததது 1910இல்.
***
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
கோழைகள், துரோகிகளின் வரலாறு என்ன சொல்கின்றது?
காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்ட வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளான நாதுராம் கோட்சே உள்ளிட்டவர்களின் சித்தாந்த தந்தை தாமோதர் சாவர்க்கர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின் அங்கிருந்து கொண்டு, “மாட்சிமைதங்கிய பிரிட்டிஷ் மகாராணி தன்னை விடுதலை செய்தால் சகல அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் தான் விலகி விடுவதாகவும், தன்னைப்போல ஒரு விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு தான் நடந்து கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்” பிரிட்டிஷ் அரசிக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதிக்கொண்டு மண்டியிட்டு கிடந்த கேவலமிகு வரலாறுதான் சாவர்க்கரின் வரலாறு.
1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்திமிக்க வீரர்கள் இரண்டு பேரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்து காட்டிக்கொடுத்த அவமானமிக்க வரலாற்றுக்கு சொந்தமானவர் அடல் பிகாரி வாஜ்பேய்.
ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் கைக்கூலிகளாக, அடிமையாக வாழ்வதே ஆனந்தம் என்று முடிவு செய்த கோழைகளுக்கும், இல்லாத ரயில் நிலையத்தில் டீ ஆற்றிக்கொண்டு இருந்ததாகவும், டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்தில் டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்ததாகவும், இமெயில் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இமெயில் அனுப்பியதாகவும் அள்ளிவிடும் அண்டப்புளுகர்களுக்கும், தன்னிகரில்லா விடுதலை போரராட்ட வீரரும் சுதேசிப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தன் சொத்துக்களை இழந்து கப்பல் கம்பெனியை நிறுவியவரும் வேறு எவரும் சந்தித்திடாத வெஞ்சிறைக் கொடுமைகளை அனுபவித்த தியாகியும் ஆன வ.உ.சி.யின், அவரைப் போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
உதவிய நூல்:  கப்பலோட்டிய கதை (குருசாமி மயில்வாகனன்)
***

முகநூலில் : மு இக்பால் அகமது
disclaimer