ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலீசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இச்செய்தியை அமெரிக்காவில் உள்ள வயர்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோர் 2018-ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் சாதி வன்முறையைத் தூண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பீமா கோரேகான் வழக்கில் வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் உட்பட 16 பேரை கைது செய்தது புனே போலீசு.
கடந்த பிப்ரவரி 2021-ல், அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் என்ற நிறுவனம், வில்சனின் மடிக்கணினிக்குள் ஊடுருவி malware-ஐ (ஒரு கணினி அமைப்பை சீர்குலைக்கவும், சேதப்படுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறவும் வடிவமைக்கப்பட்ட மென்பொருள்) பயன்படுத்தியதாகவும், அதில் குறைந்தது 10 குற்றஞ்சாட்டக்கூடிய கடிதங்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறியது.
படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு மாவோயிஸ்ட் போராளிக்கு எழுதப்பட்ட கடிதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சொல்லி ஓர் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவை இதில் அடங்கும்.
ஹேக்கிங்கை நடத்திய குழுக்களில் ஒன்று, வில்சனின் சாதனத்தில் ஆவணங்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. இப்போது, ​பீமா கோரேகான் வழக்கில் நெருக்கமாக தொடர்புடைய புனே போலீசு அதிகாரி ஒருவர் ஹேக்கிங்குடன் தொடர்புடையவர் என்று வயர்டு தெரிவித்துள்ளது.
முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு, கவிஞர் வரவர ராவ் மற்றும் ஆர்வலர் ரோனா வில்சன்.
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோரின் மின்னஞ்சல் கணக்குகளில் மீட்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த மீட்பு மின்னஞ்சலில் புனே போலீசுத்துறை அதிகாரியின் பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மின்னஞ்சல் முகவரி, குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றினால், அவர்களின் கணக்குகளை மீண்டும் அணுக போலீசுத்துறை அதிகாரியை அனுமதித்தது என்று சென்டினல்ஒன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மின்னஞ்சல் சேவை வழங்குநரின் பாதுகாப்பு ஆய்வாளர், ஏப்ரல் 2018-ல் வில்சனின் கணக்கில் phishing (கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த தனிநபர்களைத் தூண்டுவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பும் ஒரு மோசடி நடைமுறை) மின்னஞ்சலைப் பெற்றபோது, புனே போலீசுத்துறையுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் சேர்க்கப்பட்டது என்று கூறினார்.
வில்சன் கைது செய்யப்படுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு phishing மின்னஞ்சல்களை அனுப்ப ஆர்வலரின் மின்னஞ்சல் கணக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், “இவர்கள் பயங்கரவாதிகளைப் பின்தொடர்வதில்லை. மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பின்தொடர்கின்றனர். அது சரியல்ல” என்று ஆய்வாளர் கூறினார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் குடிமக்கள் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான ஜான் ஸ்காட்-ரெயில்டன், புனே போலீசுத்துறை பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான பின்னொட்டான pune@ic.in என முடிவடையும் மின்னஞ்சல் ஐடியுடன் மீட்பு தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளர், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து, டிசம்பரில் வில்சனின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அதே போலீசுத்துறை அதிகாரியின் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் முகவரியுடன் மீட்பு ஃபோன் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்-ரயில்டன் கூறியதாக வயர்டு செய்தி வெளியிட்டுள்ளது.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள். போலீசு அவர்களை குற்றவாளியாக சித்தரிப்பதற்கு மின்னனு சாதனங்களை ஹேக் செய்து தரவுகளை பதிவேற்றம் செய்துள்ளது. இது ஒரு சைபர் கிரைம். இந்த சைபர் கிரைமின் குற்றவாளிகள் புனே போலீசுத்துறை அதிகாரிகள்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி
போலியாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் பாபு மற்றும் வில்சன் உட்பட 12 பேர் தற்போது சிறையில் உள்ளனர். ராவ் அடுத்த மாதம் முடிவடையும் தற்காலிக மருத்துவ ஜாமீனில் வெளியே இருக்கிறார், அதே நேரத்தில் வழக்கறிஞர்- ஆர்வலர் சுதா பரத்வாஜ் டிசம்பரில் வழக்கமான ஜாமீன் பெற்றார். பழங்குடியினர் உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, மும்பையில் விசாரணைக்காக காத்திருந்தபோது ஜூலை 5 அன்று இறந்தார்.
முற்போக்காளர்களையும், சமூக ஆர்வலர்களையும், புரட்சியாளர்களையும் குற்றவாளிகளாக சித்தரித்து, கைது-சிறை-சித்திரவதை செய்வதற்காகவே இருக்கிறது போலீசுத்துறை என்பது இந்த சம்பவத்தில் அம்பலமாகிறது. தான் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்து சித்தரவை செய்யமுடியும் என்ற கட்டற்ற அதிகாரத்தை இந்த கிருமினல் போலீசுத்துறை பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க