கரூர் – தும்பிவாடி கிராமம், சிவன் காலனி பகுதியில் வசிக்கும் சுமார் 100 தலித் மக்கள், கவுண்டர், நாடார் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். தும்பிவாடி, 5 ரோடு, டீ கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனியாக டம்ளர் பயன்படுத்தும் முறை இன்றளவும் உள்ளது. பெஞ்சில் உட்காரக்கூடாது தள்ளித்தான் நிற்கவேண்டும்.
சிவன் காலனியில் உள்ள பால் சொசைட்டியில் கூட தலித் குழந்தைகளுக்கு பால் ஊற்றுவது இல்லை. அங்க பக்கத்தில் செல்லக்கூட அனுமதியில்லை. இந்த தீண்டாமை காரணமாக, சிவன் காலனியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது பாக்கெட் பால்தான்.
சிவன் காலனியில் நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். மேற்படி பெட்டிக்கடைக்கு கடந்த 18.02.2017 அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கஜேந்திரன், கண் மை வாங்குவதற்கு சென்றுள்ளான். அப்பொழுது கையில் வைத்திருந்த 6 ரூபாய் காசை கடையில் உள்ள மிட்டாய் டாப்பாவின் மீது வைத்தபோது அது தவறி கடைக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக கடைக்குள்ளே காலை வைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். உடனே, “சக்கிலிய நாயே, எதுக்குடா கடைக்குள் வர்றே”, என கெட்ட வார்த்தைகளால் திட்டி, இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்து, தலையை பிடித்து சுவரில் மோதியிருக்கிறார் கடை முதலாளி சரத்குமார். வலி பொறுக்க முடியாமல் கஜேந்திரன் கத்தவே, “அடித்ததை வெளியே சொன்னால் கல்லாவிலிருந்து காசை திருடினாய் என்று கம்ப்ளெயின்ட் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார். “கிழக்குத் தெருக்காரன் மேற்கு தெருவிற்கு வரக்கூடாது. சக்கிலி பசங்க இந்த பக்கம் வந்தால் செருப்பாலேயே அடிவிழும்” என்று சரத்குமாரின் பெரியப்பா கணேசன், மனைவி அன்புமலர் ஆகியோர் சேர்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர்.
மேற்படி சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி, “எதற்காக எங்கள் மகனை அடிக்கீறீர்கள்” என கேட்க, “உங்களால் என்னடி செய்ய முடியும்” என்று எகத்தாளமாகப் பேசியிருக்கின்றனர்.
தலித் மக்கள் ஒன்று கூடி சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பயனில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தகவல் வந்தவுடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சக்திவேல் மற்றும் தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறுநாள் 19.02.2017 அன்று அப்பகுதி மக்களுடன் சின்னதாராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரத்குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். புகாரை பதிவு செய்யாமல் சமரசம் செய்து திருப்பி அனுப்ப முயன்றது போலீசு. மக்களும் மக்கள் அதிகார தோழர்களும் உறுதியதாக இருந்ததால், வேறு வழியின்றி அரவக்குறிச்சி DSP வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். அடுத்த கணமே கஜேந்திரன் மீது சரத்குமார் திருட்டுப் புகார் கொடுக்க, அந்த பொய்ப்புகாரையும் பதிவு செய்து கொண்டது போலீசு. சரத்குமாரும் கணேசனும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாடார் சமூகத்தினர் எண்ணிக்கையில் குறைவானவர்களே என்ற போதிலும், அந்த வட்டாரத்தில் கவுண்டர் சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்தின் பின்புலத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. கடைக்குள் கால் வைத்த குற்றத்துக்காக ஒரு தலித் சிறுவனுக்கு இப்படிப்பட்ட கொடுமை! கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டதன் பின்புலம் இதுதான்.
இந்த கொங்கு மண்டலத்தின் தனியரசுதான் சபாநாயகர் தனபாலுக்காக தொலைக்காட்சிகளில் பொங்கினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். முதல்வர் நாற்காலியில் உட்கார்வதற்காக எடப்பாடி பிடித்த கால்கள் சசிகலாவின் கால்கள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.
அப்புறம் அந்த மளிகைக் கடை முதலாளியின் பெயரைக் கவனித்தீர்களா? “சுயமரியாதைச் சிங்கம்” விரட்டி விரட்டி அடித்தாலும் அம்மாவின் காலையே சுற்றி வந்த சரத்குமார்!
அவருடைய கட்சியின் பெயர் “சமத்துவ” மக்கள் கட்சி!
கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி அளித்த புகார்
கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி அளித்த புகார்
பதிவு செய்யப்பட்ட FIR
பதிவு செய்யப்பட்ட FIR
பதிவு செய்யப்பட்ட FIR
சாதி வெறியர்களின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி
நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.
தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அறிவியல் என்பது யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப திரியும் ஒன்றல்ல. அது இயற்கை குறித்து மனிதன் ஆய்வு நடத்தி கண்டறிந்து வரும் ஒரு துறை. இயற்கையின் விதிகளோடு ஆய்வு செய்து நிரூபிக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாரால் எதற்காக பயன்படுத்த்தப்படுகின்றது என்பதற்கேற்ப இந்த உலகமும், மக்களும் அழிவையோ முன்னேற்றத்தையோ சந்திக்கிறார்கள். இன்றையே வாழ்வின் பல்வேறு வளர்ச்சியினை அறிவியல் சாதித்திருப்பது உண்மை போலவே முதலாளிகளின் இலாபவெறி அணுகுண்டு, புவி வெப்பமடைதல் உள்ளிட்டு பல அழிவுகளுக்கும் அறிவியலை பயன்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவ சுரண்டலுக்காக உலகமெங்கும் பல தொழிலாளிகள் சுரங்கங்களிலும், கட்டுமானப்பகுதிகளிலும், ஆலைகளிலும், தொற்று நோயாலும் சாகின்றனர். அறிவியல் உண்மை பேசும் பாஜக கட்சியினரோ இல்லை தூய அறிவியல் பேசும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களோ எவரும் இந்த சாகும் பட்டியலில் இல்லை. அமெரிக்காவில் தேசபக்தி பேசும் குடியரசு – ஜனநாயகக் கட்சியின் காங்கிரசு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இல்லை இந்தியாவில் தேஷபக்தி பேசும் பாஜக – காங்கிரசு எம்பிக்களின் பிள்ளைகளோ போர்வீரர்களாக போரில் சாவதில்லை.
இங்கே இரண்டு வீடியோக்களை பாருங்கள். முதல் வீடியோவில் நெடுவாசலைச் சேர்ந்த சுரேஷ் என்பதவர் குவைத்தில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பணியாற்றுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அவர் தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். மக்கள் வாழாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்க போவதில்லை என்று கூறும் அவர் நெடுவாசல் போன்ற விவசாயம் செழிப்பாக இருக்கும் இடங்களில் அத்திட்டங்கள் ஏற்படுத்தும் அழிவை விளக்குகிறார். இதை மத்திய அரசிற்கும் அதன் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆகவே இவரை ஐ.எஸ் சதிகாரர் என்று ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்த முடியாது.
இரண்டாவது வீடியோ இது குறித்து முழுமையான பார்வையையும், அனுபவத்தையும், அழிவையும் ஆதாரங்களுடன் தருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோஷ் ஃபாக்ஸ் 1972-ல் தனது வீடு கட்டப்பட்டதையும் அங்கே தானும் தனது குடும்பத்தாரும் வாழ்ந்ததை விவரிக்கிறார். அதே ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனால் “சுகாதாரமான குடிநீர் சட்டம்” முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. அதாவது குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை குடியுரிமையாக ஏற்கப்படுகிறது. அந்தக் காலம்தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் ஆரம்பம் என்கிறார் ஜோஷ். 2009-ம் ஆண்டில் அவரது நிலம் ஒரு எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கடிதம் வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4750 டாலர் கிடைக்கும் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. அவரிடம் இருக்கும் 19.5 ஏக்கரை விற்றால் ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமான டாலர் கிடைக்கும். இது அவ்வளவு எளிமையானதா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஜோஷ்.
அமெரிக்காவில் இருக்கும் இயற்கை எரிவாயு வளத்தை பயன்படுத்தினால் அந்நாடு எந்த நாட்டையும் எரிசக்திக்காக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றகிறார் முன்னாள் துணை அதிபர் டிக் சென்னி. இதையேதான் வானதி சீனிவாசன் போன்ற தேஷ்பக்தர்களும் டிவி விவாதங்களில் கூறுகிறார்கள். 2005-ம் ஆண்டு துணை அதிபர் டிக் செர்னியால் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி முன்வரைவுச் சட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகிறது. எண்ணெய் எரிவாயுத் துறை எதற்கெல்லாம் விலக்கு பெறும்? பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டம், சுத்தமான காற்று சட்டம், சுத்தமான நீர் சட்டம், என பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஜனநாய முறைகளில் இருந்து எண்ணெய் எரிவாயுத் துறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
ஜோஷ்ஃபாக்சின் ஆவணப்படம் – கேஸ் லாண்ட் GAS LAND
அதன் பிறகு அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய ஹாலிபர்ட்டன் தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா எங்கும் துளைத்தெடுக்கிறார்கள். தற்போது 34 மாநிலங்களில் இந்த துளைகள் பரவி இருக்கின்றன. பூமியை குதறும் இந்த நுட்பத்திற்கு பெயர் “ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது. இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது. இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.
இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது என்கிறார் ஜோஷ். தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள் என்று அதன் அளவையும் மதிப்பிடுகிறார் ஜோஷ். அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து………………..
ஜோஷ்ஃபாக்ஸ்
இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை. ஆவணப்படத்தின் கடைசியில் இந்த படத்திற்காக நேர்காணலை மறுத்த நிறுவனங்கள் டைட்டிலாக வந்து போகின்றன. ஒருவேளை நாமும் அரசுத் துறைகளிடம் நமது நிபுணர்களை அனுப்பி நெடுவாசல் குறித்து கேள்வி எழுப்பினால் இதேதான் நிலைமை.
மேறகொண்டு முழு படத்தையும் நீங்களே பாருங்கள், வாய்ப்பிருப்பின் இந்தப் படம் குறித்து முழுமையாக எழுத முயல்கிறோம். இணையத்தில் எண்ணைய் எரிவாயு குறித்து ஏராளமான கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அறிவாயுதத்தோடும் நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுப்போம். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் என்ன அறிவியலாளர்களா என்று திமிருடன் கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜக மட்டுமல்ல அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.
இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? குடிநீர் பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சி ஆகியவை ஏதோ இயற்கை சார்ந்த துயரமாக பார்க்கப்படுவதால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம் தப்பிக்க நினைக்கிறது. ஆனால் உலக மக்களுக்கு எதிரி இயற்கையின் அழிவு அல்ல. இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்தான்.
நெடுவாசல் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
பிப்ரவரி 21 2017 அன்று மும்பை மாநகராட்சிக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி மும்பையின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றி ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்ட கட்டுரைத் தொடர்களின் சுருக்கப்பட்ட வடிவம். இது மும்பை கிழக்கு வார்டில் உள்ள தியோனர் குப்பைக் கிடங்கின் நிலைக் குறித்தக் கட்டுரை. வளர்ச்சி என்றால் அது அனைத்து மக்களுக்கென்றும், அதன் பொருட்டு சிலரோ சில மாநிலங்களோ தியாகம் செய்ய வேண்டும் என்றும் உளறும் பாஜக கும்பல்கள் ஒருபுறம். மறுபுறம் வளர்ச்சியை அறிவியலின் சாதனை என்றும் அதை எதிர்ப்போரை பழமை வாதிகள் என்றும் சித்தரிக்கும் அறிவுவீங்கிய கும்பல்கள். இன்னும் ஏழ்மையை மறைத்து விட்டு சூழலியல், இயற்கை நேசம், ஆர்கானிக் என்று சுத்தபத்தமாக பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் மறைக்கும் உண்மை என்ன? இந்தியாவில் வசதிபடைத்தோர் வாழ்வதற்காக ஏழைகளே அனைத்து அவலங்களையும் ஏற்குமாறு விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மீத்தேன் திட்டமோ, குண்டலினி யோகமோ, ஷாப்பிங் மால்களோ, அதி உயர் சாப்பாட்டுக் கடைகளோ, மல்டி பிளக்ஸ் திரையரங்கோ, சாட்டிலைட்டு சாதனைகளோ எதுவாகவும் இருக்கலாம். இதற்கான கழிவுகளை ஏழைகளும்- விவசாயிகளும், இதில் கிடைக்கும் செல்வங்களை பணக்காரர்களும், ஓரவளவு நடுத்தர வர்க்கமும் பகிர்ந்து கொள்கின்றனர். மறுப்பவர் கொஞ்சம் மூக்கை அடைத்துக் கொண்டு மும்பை தியோனர் கிடங்கில் குதியுங்கள்! – வினவு
தியோனர் குப்பைக் கிடங்கு
ஒன்பது வயது அஷ்ரபும் பதினோரு வயது ஷாருக்கும் நண்பர்கள். அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போல இவர்களும் நினைவு தெரிந்த நாள் முதல் வேலை செய்து வருகின்றனர். அது கிழக்கு மும்பை புறநகரான தியோனர். அந்தப் பகுதிச் சிறுவர்கள் சில நேரம் தங்களுடைய தந்தை, தாய் அல்லது வேறு உறவினர்களுடன் வேலைகளுக்குச் செல்வார்கள் – சில நேரம் தனியாகச் செல்வார்கள். வேலை இல்லாத ஒருசில நாட்கள் பள்ளிக்கூடத்திற்கும் செல்வதுண்டு.
பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்து நொறுங்கி விழும் நிலையிலிருப்பதால், வேலைக்குச் செல்வதே உயிருக்கு பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். அவர்களது வேலையிடம் தியோனரில் அமைந்துள்ள பழமையான திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு. அது தான் அவர்களுக்கு வீடு -. ஏன் அவர்களின் உலகமே அது தான். தியோனரின் குப்பைக் கிடங்கு எப்போதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.
தங்களுடைய சின்னக் கைகளால் அஷ்ரபும், ஷாருக்கும் அந்தக் குப்பைக் கிடங்கைக் கிளறுகின்றனர். சில நேரம் அந்த மாபெரும் குப்பைக் கடலின் மையப்பகுதி வரைக்கும் சென்றும் விடுகின்றனர்.
“மொத்த மும்பையின் கழிவுகளும் இங்கே வந்து எனது கைகளைக் கடந்து தான் செல்கின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் ஷாருக். அவனுக்கு தன்னுடைய பெயரோடு இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.
இங்கே உள்ள மற்ற பையன்களைப் போல அஷ்ரபும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் விலையுயர்ந்த செண்டுகள், அழுகுக் களிம்புகளின் பெயர்களை உதிர்க்கிறான்… “ஆனால் அவையெல்லாம் வேலை செய்யாது… நாங்கள் நாறிக் கொண்டு தான் இருப்போம்” அவனது குரலில் ஒரு உறைந்த தன்மைக் காணப்பட்டது.
அந்தப் பகுதியே கடுமையாக நாறுகின்றது. குடலைப் பிடுங்கும் நாற்றத்திற்குக் காரணமான அந்தக் குப்பைக் கிடங்கு ரஃபீக் நகர் சேரி மற்றும் நல்லா (nallaah) பகுதிகளுக்கு இடையில் அமைந்திருக்கின்றது. நாற்றம் தான் அந்தச் சேரிகளின் அடையாளம். அங்கே செல்லும் எவராலும் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைக் கழிவுகளைக் காணாமல் இருக்க முடியாது. இங்கே தான் மும்பை மாநகரம் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யும் 9,600 மெட்ரிக் டன் குப்பையில் சரிபாதி கொட்டப்படுகின்றது.
தினோனர் திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு 1927-ல் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் முலுந்த் மற்றும் கோராய் பகுதிகளில் வேறு இரண்டு குப்பைக் கிடங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தியோனர் குப்பைக் கிடங்கு சுமார் 111 ஹெக்டேர்களில் அமைந்துள்ளது. சுமார் எட்டு மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இங்கே கொட்டப்பட்டுள்ள அழுகிய மற்றும் காய்ந்த வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் என மொத்தக் கழிவுகளின் அளவு சுமார் 160 கோடி டன்கள் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ரபீக் நகர் சேரியிலிருந்து தியோனர் குப்பைக் கிடங்கிற்கு செல்லும் வழி
தியோனர் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள் மொத்த மும்பையையும் அடர்த்தியான புகையால் மூடிவிடும். கழிவுகளுக்கு இடையே கலந்திருக்கும் இரசாயனப் பொருட்கள் மற்றும் அதிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் நெருப்புப் பிடித்துக் கொள்ளும் போது அவற்றை அனைப்பதற்கு பலநாட்கள் ஆவதுடன், ஒட்டுமொத்த மும்பையின் நுரையீரலுக்கும் கான்சரைப் பரிசளித்துச் செல்கின்றன. மேலும் தற்போது கழிவுகளின் காரணமாக நிலத்தடி நீரும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ரஃபீக் நகர் வாழத்தகுதியற்ற இடமாக இருப்பினும், மும்பைக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளிகள் வேறு எங்கும் தங்குமிடம் கிடைக்காத நிலையில் கிழக்கு மும்பைச் சேரிகளான இந்தப் பகுதிகளில் ஒதுங்குகின்றனர். அதே போல் கிழக்கு மும்பை சேரிகளில் சில ஆண்டுகளாக வசிப்பவர்கள் பின்னர் வேறு பகுதிகளில் இடங்களில் வீடு தேடினாலும் ”கச்ராவாலாக்கள்” (குப்பை பொறுக்குபவர்) எனச் சொல்லி வீடுமறுக்கப்படுவதாகச் சொல்கிறார் 45 வயதான சவுக்கத் சயீத்
கிழக்கு ‘மும்பை’ எனச் சொல்லப்பட்டாலும் மும்பையின் ’அடையாளங்களென’ சொல்லிக் கொள்ளப்படும் பளபளப்பான ஷாப்பிங் மால்களோ, வழுக்கும் சாலைகளோ, நீச்சல் குளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளோ இந்தப் பகுதியில் இல்லை. தாராவியைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் இந்தப் பகுதியை ஏழ்மையான தாராவி எனப் புரிந்து கொள்ளலாம். மும்பை கிழக்கு வார்டின் 78 விழுக்காடு மக்கள் தொகை சேரிகளில் தான் வசிக்கின்றது.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமெனப் பீற்றிக் கொள்ளப்படும் மும்பையில் தான் 28 பில்லியனர்களும், 45,000 மில்லியனர்களும் வசிப்பதாகவும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 820 பில்லியன் டாலர்கள் (53.30 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்படுகின்றது (New World Wealth Report – 2016). இந்தப் பணக்கார மும்பையின் ஆசன வாயாகவே மும்பையின் சேரிகளை அரசு நிர்வாகம் மதிக்கின்றது.
இது வெறும் குப்பைக் கிடங்கு பற்றிய பிரச்சினை அல்ல. கடுமையான வறுமை, கீழ்த்தரமான வாழும் சூழல், சிவில் நிர்வாகப் பணிகள் புறக்கணிப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு, கல்வி நிலையங்களோ மருத்துவ வசதிகளோ இல்லாத நிலை, ரியல் எஸ்டேட்டிலிருந்து குடிநீர் சப்ளை வரை கட்டுப்படுத்தும் மாபியா கும்பல்கள், அந்த மாபியா கும்பல்களின் போதை வியாபார வலைப்பின்னல் என மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மும்பையின் சேரிகளைப் பராமரிக்கிறது அரசு நிர்வாகம்.
மோசமானவற்றில் முதலாவதாக நிற்கின்றன மும்பைக் கிழக்கு வார்டில் அமைந்துள்ள சேரிகள். குறிப்பாக தியோனர் குப்பைக் கிடங்கின் இருபுறமும் அமைந்துள்ள சேரிப் பகுதிகளின் நிலை விவரிக்கவொண்ணாததாக உள்ளது. 90 ஆண்டுகளுக்கு முன் தியோனர் பகுதியைக் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக உருவாக்கிய போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதிகள் இவ்வளவு அடர்த்தியானதாக இல்லை என்பதோடு அந்தக் காலகட்டத்தில் மும்பை உற்பத்தி செய்த கழிவுகளும் குறைவாகவே இருந்துள்ளது.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் நகரங்களை மட்டுமே – குறிப்பாக அதில் உள்ள பணக்காரர்களின் பகுதியை மட்டும் – குறிவைத்து வளர்த்தெடுத்த அதே சமயம், ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், கிராமப்புற நெசவு உள்ளிட்ட தொழில்களை அழித்தொழித்தது. ஊரகப் பகுதிகளில் பிழைப்பை இழந்த மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். நாடெங்கும் பிழைப்புத் தேடி அலைந்தவர்களை மும்பை ஈர்த்ததில் எந்த வியப்புமில்லை. அவ்வாறு வந்து குவிந்த உழைக்கும் மக்களைக் கொண்டு பணக்காரர்களின் உலகத்தை அழகுபடுத்துவதும், அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் நடந்தது. அதே சமயம், இவ்வாறு வந்து குவிந்த மக்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணித்தது – மக்கள் தியோனர் போன்ற சேரிகளில் வந்து விழுந்தனர்.
ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட்டுகளை அனுப்பியதாக இந்தியா பெருமை பீற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் தியோனர் குப்பைக் கிடங்கில் சிறுவர்கள் வெறும் கைகளால் கழிவுகளுக்கு இடையே ஏதாவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கழிவுகளைக் கையாள்வது, அவற்றை மட்கும் / மட்காத குப்பைகள் எனத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது என அனைத்தும் இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் “வல்லரசு” இந்தியாவின் எதிர்கால மன்னர்களோ குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக நாடு ஒன்றில் விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கிறீர்கள். அந்நாட்டு ஜனநாயகத்தை காக்கும் பொறுப்புள்ள போலீசு அந்த அனுமதியை ஆய்வு செய்து, விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசுவது வன்முறைக்கு வழிவகுக்கும், சீருடையுடன் கொடியும் தடியும் முதலான ஆயுதங்களை வைத்துள்ளீர்கள், ஏற்கனவே விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளித்து விட்டதால் நீங்கள் கூட்டம் நடத்துவது தேவையற்றது என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது. இது கற்பனை இல்லை. திருத்துறைப்பூண்டியில் மக்கள் அதிகாரம் நடத்த இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு இப்படித்தான் எழுதிக் கொடுத்திருக்கிறது. இதுதான் இந்தியா – தமிழகத்தில் நிலவும் அதி உயர் ஜனநாயகத் தரம். செத்துப் போன விவசாயிகள் குறித்து நீங்கள் கூட்டம் நடத்த தேவையில்லை என்று அலட்சியமாகவும் சாதரணமாகவும் கூறும் இந்த ஜனநாயகத்தின் பெயர் சர்வாதிகாரமா காட்டாட்சியா போலீஸ் ராஜ்ஜியமா? கீழே போலீசு எழுதிக் கொடுத்திருக்கும் ஆணவ ஆவணத்தை படியுங்கள்!
– வினவு
திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை
முன்னிலை :
திரு.M.கண்ணதாசன்
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
பொருள்:- காவல் – திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் – திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் அருகில் விளக்க பொதுக்கூட்டம் நடத்தக்கோரி மனு செய்தது – காவல் துறை அனுமதி மறுப்பது தொடர்பாக
பார்வை:- திரு முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு, அம்மையப்பன், திருவாரூர் என்பவரின் மனு…
தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும், இறந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் எதிர்வரும் 26.02.17 அன்று மாலை 17.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் திரு.காளியப்பன் அவர்கள் தலைமையில் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் அச்சடித்து தாங்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின் பேரிலும், மாவட்ட செயலாளராகிய தாங்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அணுகி பொதுக்கூட்டம் நடத்த கோரியிருந்த மனுவின் பேரிலும், பரிசீலனைக்கு பிறகு தங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அறிவிக்கப்பட்டு, தாங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது
1) தாங்கள் வலியுறுத்தியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான நிவாரணம் குறித்து ஏற்கனவே தமிழக அரசு கடந்த வாரம் நிவாரணம் அறிவிப்பு செய்துள்ளது. மேற்படி கோரிக்கைகளுக்காக தங்களது அமைப்பு நடத்தும், விளக்க பொதுக்கூட்டம் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் பொதுமக்கள் மத்தியில் வன்முறை போராட்டத்தினை தூண்டும் விதமாகவும், பொதுக்கட்டம் குறித்து வெளியிட்டு வரும் அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளதால் இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
2) மேலும் இதே போன்று விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிவாரணம் கோரி கடந்த 11.01.17 அன்று திருவாரூர் நகர காவல் சரகம், திருவாருர் புதிய இரயில் நிலையம் அருகில் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்த தாங்கள் திருவாருர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரியிருந்த மனுவின் பேரில் தங்களுக்கு நிபந்தனையுடன் செயல்முறை ஆணை வழங்கிய நிலையில் தாங்கள் நடத்திய தொடர்முழக்க ஆர்பாட்டத்தில் நிபந்தனைகளை மீறி உரை நிகழ்த்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாகவும், மேலும் போராட்டத்தின் போது தங்களது அமைப்பினர் சீருடை அணிந்து பெரிய அளவில் தடி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தமாறு அறிவுறுத்தியும் மீறி அத்தகைய ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளீர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலைய குற்ற எண். 08/17 u/s. 143, 188, 504, IPC r/w 109 IPC-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது
3) மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமானது மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகும். தங்களது பொதுக்கூட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அமைப்பினர் வாகனங்களில் வரும் சமயத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கண்ட காரணங்களால் தாங்கள் கோரிய விளக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
“காவிரிக்காக கர்நாடகவோடு மல்லுக்கட்டுகிறோம். ரொம்ப சரி, ஆனால், இங்கே என்ன செய்கிறோம்?” _ நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தனைச் சந்தித்து வறட்சியையும் விவசாயிகளின் சாவுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார்.
செக்கானுர் கதவணை உடைந்து வீணாக வெளியேறும் காவிரி நீர்.
“காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் வாய்க்கால்களும், டெல்டா மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் தூர் வாரப்படாமல் புதர்ச் செடிகள் மண்டியும், சிதிலமடைந்தும் கிடப்பது; தூர் வாருவது என்ற பெயரில் நடந்துவரும் ஊழல்; மேட்டூருக்குக் கீழே நீரைச் சேமித்து வைக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாமல் இருப்பது; தமிழகத்தின் காவிரிப் படுகையில் நடந்துவரும் மணல் கொள்ளை” – என நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு காட்டிவரும் அக்கறையின்மை, அலட்சியம் என்ற கிரிமினல்தனத்தைச் சாடுவதாக இருந்தது, அவரது கேள்வி.
இந்தக் கேள்வி தமிழகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது என்ற போதும், காவிரிப் படுகையைப் பொருத்தமட்டில் மிகுந்த முக்கியத்துவமுடையது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 ஆயிரம் மில்லியன் கனஅடி (டி.எம்.சி.) ஆகும். இதில், கர்நாடகா தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கு 192 ஆ.மி.க.தான். மேட்டூருக்கு மேல் பகுதியில் கிடைக்கும் நீரின் அளவையும் சேர்த்தால், மேட்டூருக்கு ஆண்டொன்றுக்கு வந்து சேரும் நீரின் அளவு 217 ஆ.மி.க. மீதமுள்ள 202 ஆ.மி.க. நீரும் மேட்டூருக்குக் கீழே தமிழகத்தின் பகுதிகளில் கிடைக்கும் நீர் ஆகும். (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி – பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் – 2013-14) நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகா மறுத்துவரும் இன்றைய நிலையில், தமிழகத்திலுள்ள காவிரிப் படுகையில் கிடைக்கும் நீரை முடிந்த அளவு சேமித்தும், சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்திக் கொண்டால்தான், மேட்டூர் அணை பாசனப் பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியையாவது உத்தரவாதப்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின், ஆளுங்கட்சிகளின் செயல்பாடுகளோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது.
” சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட கொள்ளிடம் ஆறு மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடும் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை எதுவும் இல்லாததால்,2013-ஆம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் நேராகக் கடலுக்குச் சென்றுவிட்டது. எனவே, தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ” 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
ஆற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் ஆற்று வழித்தடம் பள்ளம், மேடாகி நீரோட்டம் தடைப்பட்டு வீணாகும் நீர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவற்றுள் எத்துணை அணைகள் கட்டி முடிக்கப்பட்டன, கட்டி முடிக்கப்பட்டவை எந்த அளவிற்குத் தரமாக உள்ளன என்பதெல்லாம் பெரும் புதிராகவே உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மூத்த வேளாண் பேரவையினர், “மேட்டூருக்குக் கீழே கல்லணை வரையிலும் இருபத்து மூன்று தடுப்பணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, அதில் மூன்று தடுப்பணைகள் மட்டும்தான் இதுவரை கட்டப்பட்டுள்ளது என்றும், அப்படிக் கட்டப்பட்ட மூன்றில் செக்கானுர் தடுப்பணை கடந்த டிசம்பர் இறுதியில், அதாவது பல பத்தாண்டுகளில் காணப்படாத வறட்சி நிலவிய நேரத்தில் உடைந்துபோய், அரை டி.எம்.சி. தண்ணீர் வீணாகிப்போனதாக”க் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
கும்பகோணம் அருகே காவிரியின் கிளை நதியான அரசலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து போனதால், 2015-இல் பெய்த பெருமழையின் நீரையும் சேமிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் அந்தத் தடுப்பணை சீர்செய்யப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.
மேட்டூர் அணையை மிக நீண்ட காலமாகத் தூர் வாராததால், அதன் முழுக் கொள்ளளவான 93.4 அடிக்கு நீரைச் சேமிக்க முடியாதென்றும், அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும்போது அணையில் 74 அடி மட்டுமே நீர் தேங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியின் கிளை நதியான வெட்டாறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி ஆற்றின் வடிகாலில் ஒரு கதவணையை அமைப்பதன் மூலம் கீவளூர் பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் 25,000 ஏக்கரில் கோடைப் பயிர் செய்ய முடியும் என்றொரு யோசனையை விவசாயத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை பலர் இடத்தில் சொல்லிய பிறகும், அந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யக்கூட மறுக்கிறது, தமிழக அரசு எனக் குற்றஞ்சுமத்துகிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைப்பதன் மூலம், 10 டி.எம்.சி. தண்ணீரைப் பெற முடியும் எனக் கூறுகிறது, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையினர் வெளியிட்டுள்ள கையேடு.
இயற்கையின் வழியாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்க மறுப்பதில் மட்டுமல்ல, காவிரியின் நீர்வழித் தடங்களைப் பராமரிப்பதிலும் தமிழக அரசு பெரும் கிரிமினல் குற்றத்தையே இழைத்து வருகிறது. அதிலொன்று மணல் கொள்ளை. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடுகிறது என்றால், இன்னொருபுறம் ஆற்றில் நீர் ஓடுவதைத் தடுத்துக் குட்டை போலாக்கி, எதற்கும் பலன் இல்லாமல் வீணடிக்கிறது.
காவிரி – கட்டளைக் கால்வாயின் அவலமான நிலை.
“காவிரி நீர் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டால் போதும் என்ற நிலையில், மணல் கொள்ளையால் ஆற்றின் வழித்தடம் பள்ளமும் மேடுமாகித் தண்ணீர் செல்வது தடைப்பட்டுப் போவதால், 10,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டிய நிலையில் பொதுப்பணித் துறை உள்ளது. இந்த வேறுபாடு – வினாடிக்கு 3,000 கன அடி நீர் – எதற்கும் பயன்படாமல் வீணாகிறது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி.
மணல் கொள்ளைக்கு அடுத்து காவிரியின் நீர்வழித் தடங்களைத் தூர் வாருவது என்ற பெயரில் நடந்து வரும் ஊழல். “ஐந்து இலட்ச ரூபாய்க்குள் இருக்கும் தூர் வாரும் வேலைகளை உள்ளூர் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேலே இருக்கும் வேலைகள் அமைச்சரின் மச்சான், மாமன் – என உறவு முறைகளை வைத்து அமைச்சரின் குடும்பமே எடுத்துக் கொள்கிறது. காண்டிராக்டு எடுப்பதில் இப்படியான தில்லுமுல்லு என்றால், தூர் வாரும் வேலையோ கண் துடைப்பாகவே நடைபெறுகிறது. பத்து இலட்ச ரூபாய் வேலையில், ஒண்ணரை இலட்ச ரூபாய் பொக்லைன் மிஷினுக்கு, ஒரு இலட்ச ரூபாய் ஆபீசுக்கு, மீதியெல்லாம் காண்டிராக்டு எடுத்திருக்கும் கும்பல் சுருட்டிவிடும். எங்கள் ஊரில் இப்படித்தான் நடந்தது. நாங்கள் பொக்லைன் டிரைவருக்கும், மேனேஜருக்கும் சோறு கொடுத்து, படிக்காசும் கொடுத்து மேலும் இரண்டு கிலோ மீட்டர் வெட்டினோம்” என்கிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
இது மட்டுமல்ல, எப்போது தூர் வார வாருவார்கள் எனக் கிராம மக்களுக்கே தெரியாது. தண்ணீர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ராத்திரியோடு ராத்திரியாக வந்து வெட்டிவிட்டுப் போவார்கள். தாலுகா ஆபிஸில் இரண்டு பொக்லைன் மிஷின் இருந்தால், விவசாயிகளே டீசல் போட்டு உருப்படியாக வெட்டிவிடுவோம் என்கிறார், அவர்.
“நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் தூர்வாரும் பணிகள் “பேட்ச் ஓர்க்” பார்ப்பது போல நடைபெறும். வாய்க்கால்களை முறையாகத் தூர் வாருவது பற்றி அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இப்பொழுதெல்லாம் குடியானவர்களும் அக்கறை கொள்வதில்லை” என்கிறார், வேளாண் துறையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி.
நீர் வழித்தடங்களைப் புதர்ச் செடிகள் அண்டாமல், மணல் திட்டுகள் உருவாகாமல் முறையாகப் பராமரிப்பது, நீர் தடையின்றி ஓடுவதற்கு அவசியமானது என்ற பொதுப் புரிதல் அனைவருக்கும் இருக்கும் என்ற போதும், காவிரி டெல்டாவைப் பொருத்தவரை இந்தப் பராமரிப்புப் பணி இன்னும் கூடுதலாகக் கவனம் கொடுத்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
வெட்டாறு கடலில் கலக்கும் இடமருகே ஒரு கதவணையை அமைக்கக் கோரி வரும் நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடி, கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களின் எண்ணிக்கை 25,228. இந்த வாய்க்கால்கள், ஏ வகுப்பு, பி வகுப்பு எனத் தொடங்கி ஜி வகுப்பு என ஏழு விதமாகப் பிரிக்கப்பட்டு, 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்லுகின்றன. (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி கையேடு, 2016-2017, பக்.12)
டெல்டா பகுதி முழுவதுமே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமையாத பூகோள காரணத்தால், அதாவது, 2,000 அடிக்கு ஒரு அடிவீதம் உயர்ந்து கிட்டதட்ட சமநிலையில் உள்ளதால், காவிரி, அதன் துணை நதிகள், வாய்க்கால்களில் ஓடும் நீர் மெதுவாகவே கடலை நோக்கிப் பாய்கிறது. இந்தப் புவியியல் காரணம், ஆற்று வழித் தடங்களையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினாலும், தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகவே அலட்சியமாகவே நடந்து வருகிறது. அதுவும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிலைமை படுமோசம் என்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.
இந்த அலட்சியம் இரண்டு விதங்களில் விவசாயத்தை, விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கிறது. ஒருபுறம், தண்ணீர்ப் பற்றாக்குறை காலங்களில் நீர் சீராகப் பாய்வதற்கு ஏற்படும் தடைகளால் தண்ணீர் வீணாகிறது. பெருமழைக் காலங்களிலோ வாய்க்கால்கள் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டு, வயல்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்துகிறது. 2015-இல் வெள்ளத்தினால் டெல்டா மற்றும் கடலூர் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய்.
“டெல்டா பகுதியிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாததால், அதன் மொத்த கொள்ளளவில் 60 முதல் 65 சதவீத நீரை மட்டுமே எடுத்துச் செல்லும் அளவிற்குத் திறன் குறைந்து போயுள்ளன. இந்தத் திறனை 80 முதல் 85 சதவீதமாக அதிகப்படுத்தினால், பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். இதற்கு வாய்க்கால்களை முழுமையாகச் செப்பனிட்டுப் பராமரிப்பதற்கு, ஆண்டுக்கு 200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் போதும்” என்கிறார், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி.
டெல்டா மாவட்ட வாய்க்கால்கள் மட்டுமல்ல, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலுள்ள ஏரிகளும், குளங்களும், ஆற்று வழித் தடங்களும் மணல் கொள்ளையாலும், ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து கிடப்பதை, 2015-இல் பெய்த பெருமழை அம்பலப்படுத்திக் காட்டியது. நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ள நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன பழைய கட்டுமானங்களைச் சீரழித்ததோடு மட்டுமின்றி, புதிதாக உருவாக்குவதிலும் தமிழக அரசு அக்கறையற்றுதான் நடந்து வருகிறது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். கரூர் அருகேயுள்ள மாயனூரில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையிலிருந்து ஒரு ஈர்ப்பு கால்வாயை அமைத்து, வெள்ளக் காலங்களில் காவிரியில் பாயும் நீரை இக்கால்வாயின் வழியாகக் கொண்டு சென்று, அதனைக் குண்டாற்றில் இணைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 3.37 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். இத்திட்டத்திற்கு 3,516 கோடி ரூபாய் செலவாகும் எனப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் இன்னும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
இது போல கடந்த தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட திட்டமான தாமிரபருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
காவிரியின் முக்கிய துணை ஆறான பவானி நதியில் குறுக்கே கதவணைகளே இல்லை என்பதோடு, சிறுமுகை, சத்தியமங்கலம், பவானிசகார் உள்ளிட்ட 11 இடங்களில் கதவணைகள் கட்ட மைய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை முன்வைத்த பரிந்துரைகளும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
2012-இல் அமைக்கப்பட்ட காவிரி தொழில்நுட்பக் குழு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட முன்வைத்த பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது மற்றொரு செய்தி.
ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதுபோல விவசாயத்திற்குப் பாசன வசதி அடிப்படையானது. தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
வெறும் 650 கோடி ரூபாய் முதலீட்டைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்த நோக்கியா நிறுவனத்திற்கு, அது தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் தமிழக அரசும், மைய அரசும் வாரிக்கொடுத்த பல்வேறு சலுகைகளின் மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாயாகும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரி விலக்கோ பல பத்து இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டுகிறது. இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொதுப் பணத்தை வாரிக்கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, டெல்டா வாய்க்கால்களைச் சீரமைக்க மறுக்கிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்பு, தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு உள்ளிட்டு பல்வேறு திட்டங்களை மட்டுமல்ல, உரிய இடங்களில் கதவணைகள், தடுப்பணைகளை முறையாகக் கட்டிப் பராமரிப்பதில்கூட அக்கறையற்று இருக்கிறார்கள்.
இந்தியாவெங்கிலுமே விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், விவசாயிகள் மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும் அரசுகளின், ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றபோதும், விவசாயத்தைப் புறக்கணிப்பதில் தமிழக அரசோ இன்னும் மூர்க்கமாக நடந்துவருகிறது. ஆற்று மணல், தாது மணல், கிரானைட், நிலம் (ரியல் எஸ்டேட்) ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்தான் ஆளுங்கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் நிரம்பியிருப்பதால், தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரையிலான அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்தக் கும்பலின் கையாளாக இருப்பதால், தமிழக விவசாயத்தின் அழிவை இந்தக் கும்பல் நாலுகால் பாய்ச்சலில் துரிதப்படுத்துகிறது. விவசாயத்திற்கு ஆதாரமான நீர் ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் தூர்வாரிப் பராமரிப்பதற்கு 3,400 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர்-தமுக்கம், கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டம், தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்பதற்கானது. அப்போதே அதை விவசாயப் பெருமக்களின் வாழ்வுரிமைக்கான எழுச்சியாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை தீவிரவாத சமூகவிரோதிகளின் ஊடுறுவல் என்ற பெயரால் போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ஒடுக்கியது. ஆனால் அடங்காது, அத்துமீறும். இது வேறு தமிழகம்.
இன்று நெடுவாசலில் இயற்கை எரிவாயுக் கொள்ளை-அழிவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி மைதானத்தையும் முற்றுகையிட்டு எவ்வாறு தாக்கினரோ, அதே போல நெடுவாசல் கிராமத்தை சுற்றிவளைத்து போலீசும் அதிரடிப்படையும் உளவுப்படையும் குவிக்கப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம் சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கையான நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கே அலையும் பாலைவனமாக்கி, இந்திய கார்ப்பரேட் தரகு முதலாளிய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக விவசாயப் பெருமக்களை பஞ்சம் பிழைக்கும்படி வெளியேற்றியும், பேரழிவில் தள்ளியது. அதோடு நிற்காது, கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக, வளர்ச்சி என்ற பெயரால், மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர். நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். இதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. உள் மாவட்டங்களில் சிறு, குறு மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டு, நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகிறது. இந்த அழிவுகளையும் ஆபத்துகளையும் எதிர்த்து அண்டைமாநிலங்களில் மறுக்கப்படும் திட்டங்கள் எல்லாம் இங்கு மட்டும் இரகசியமாகவும் நைச்சியமாகவும் மூர்க்கமாகவும் திணிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே மீத்தேன் ஷேல் கேஸ் போன்ற பெயர்களில் நுழைய முயன்று மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த நிலையில் ஹைட்ரோகார்பன் என்று பெயரை மாற்றிக்கொண்டு நாசகரத்திட்டம் திணிக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வுரிமை பறிப்பு, மற்றும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியே தன்னெழுச்சியாக நடத்தும் நம் மக்கள், ஆட்சியாளர்களின் துரோகங்களாலும் பிற ஓட்டுக்கட்சிகளின் சமரசங்களாலும் ஏமாற்றப்படுகின்றனர். ஜல்லிக்கட்டு அனுமதி, மீத்தேன் ஷேல் கேஸ் கிணறுகள் மூடல் போன்ற ஒருசில தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் போல, நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு தற்காலிகப் பின்வாங்குதல், ஆபத்தில்லாமல் திட்டம் என்ற உறுதிமொழி, விவசாயிகளின் பாதிப்பிற்கு நிவாரணம் போன்ற குறுக்குவழிகள் மூலம் முடிவு கட்ட ஆட்சியாளர்கள் எத்தணிக்கிறார்கள். அமைப்பு சாரா நிறுவனங்களும் ( NGO –க்கள் ), சமரசவாத ஓட்டுக்கட்சிகளும், விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகளையும் மக்கள் போராட்டங்களையும் குறுக்கி சிதைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
மக்கள் தங்கள் பாதிப்புகளை எதிர்த்து உறுதியாக போராடினால் சமூகவிரோதிகள், தேசவிரோதிகள் என்று பூச்சாண்டி காட்டுவதும், போலீசே தீ வைப்பது, பின்லேடன் போன்ற பொய்ச்சாட்சியங்களை உருவாக்குவது, தடியடி – கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மட்டுமல்லாது, பெண்கள் குழந்தைகள் உள்பட போராளிகள் மீது வர்மப்பிடி – வக்கிர தாக்குதல்களை ஏவி ஆக்கிரமிப்பு இராணுவத்தைப்போல் ஒடுக்குகின்றனர். டெல்லியின் நேரடி எடுபிடியாக கொடூர தாக்குதல்களை நடத்துகிறது எடப்பாடியின் போலீசு.
நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு தடை போடும் போலீசு!
பின்குறிப்பு: புதுக்கோட்டையிலும், நெடுவாசலிலும் நடந்து வரும் போராட்டத்தில் பகுதி வாழ் மக்கள், பல்வேறு அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியோரோடு மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்று வருகின்றனர். ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் சேர்வதற்காக திரண்டு வரும் மக்கள் அதிகாரம் தோழர்களை போலீஸ் தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறது. நேற்று 26.02.2017 ஞாயிறு அன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூன்று வாகனங்களில் நெடுவாசல் சென்ற போது போலீஸ் அடாவடியாக அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது. பிறகு சில தோழர்கள் பேருந்தில் சென்ற போதும் இறங்குமிடத்தில் அவர்களை அடையாளம் கண்டு கிட்டத்தட்ட கைது செய்து போலீசு வாகனத்தில் கொண்டு சென்று புதுக்கோட்டையில் இறக்கியது. நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று போலீசு வெளிப்படையாக கூறுவதோடு அமல்படுத்தியும் வருகிறது.
இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கூறியவை அனைத்தும் நீட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள். இது குறித்து ஏற்கனவே ஒரு சிறு பதிவினை முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் எழுதி இருந்தவை எனக்கு நேரிடையாக நிகழும் என்று அப்பொழுது எண்ணவில்லை.
இந்த வருடம் எனது தங்கை 12 ம் வகுப்புத் தேர்வினை எதிர்கொள்ள உள்ளார். அதன் பிறகு மருத்துவம் பயில வேண்டும் என்று அவருக்கு விருப்பம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அதற்க்கான விண்ணப்பிக்கும் வேலைகளைத் தந்தை தொடங்கினர். இந்தத் தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். விண்ணப்பத்தின் முதல் பக்கத்திலேயே தேர்வரின் பெயர், பிறந்த தேதி போன்ற விபரங்களுடன் ஆதார் எண்ணும் நிரப்பப்படவேண்டும். விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விபரங்கள் ஆதார் விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல அனுமதிக்கும். எனது தங்கையின் ஆதார் அட்டையில் அவர் பெயருக்குப் பின் தந்தையின் பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. மற்ற சான்றிதழ்களில் தந்தை பெயரின் முதல் எழுத்து மட்டுமே இருக்கும்.
தமிழகத்தில் பெரும்பான்மையாக இந்த முறையில் மட்டுமே பெயர்கள் எழுதப்படும். ஆனால் கொடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் தந்தையின் முழுப்பெயர் விண்ணப்பதாரரின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர மற்ற பெரும்பான்மையான மாநிலங்களில் தனது பெயருக்குப் பின்னால் தான் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை இணைத்து எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. தமிழகத்தில் பெரியார் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகச் சாதி பெயரை இணைத்து எழுதும் வழக்கம் மறைந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் அந்த வழக்கம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆளும் காவி அரசு நேரிடையாக மதவாத சாதிய பிரிவினைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆதார் அட்டைகளில் தமிழத்தில் வழக்கத்தில் இல்லாத கடைசிப் பெயர் இணைக்கும் முயற்சியும் அதன் ஒருவகையே. இந்தப் பிரச்சனையின் காரணமாக விண்ணப்பம் முழுமை பெறாத நிலையில் எனது தந்தை ஆதார் விபரங்களைத் திருத்தும் முயற்சிகளைத் தொடங்கினார்.
எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அரசு ஆதார் மையம் ஒன்று உள்ளது. காலை 9 மணிக்கு முகாமை அடைந்தவர் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வருகிறார். இதே போல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் விபரங்கள் மாற்ற, புதிய அட்டை பெற என அங்கே கூடியிருந்த கூட்டம் மிக அதிகம். ஒரு வழியாக விபரங்கள் மாற்ற விண்ணப்பித்தாயிற்று, இரண்டு நாள் கழித்து அதே மையத்திற்குத் தொலைபேசி மூலமாக அட்டை பெற எப்பொழுது வர வேண்டும் என்று கேட்ட பொழுது, குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்குமே என்று அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுதான் அந்தக் குறுஞ்செய்தியைத் தேடி படிக்கிறார்கள். விண்ணப்பித்த அன்றே ஆதார் விபர மாற்றத்திற்கான தங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது.
இந்த மாதிரி செய்தி வரும் என்று சொல்ல வேண்டியக் கடமை யாருக்கானது என்று தெரியவில்லை. அலைபேசிகளை வெறுமனே பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்துபவர்கள், ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள், அலைபேசி இல்லாதவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சரி இந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது, மீண்டும் அதே முகாமிற்கு மீண்டும் விண்ணப்பிக்கச் செல்கிறார். விண்ணப்பித்துவிட்டு வீடு வந்து சேர்கிறார். இந்த முறை அலைபேசி குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறார். அன்று மாலைக்குள் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வருகிறது. அடுத்த நாள் அந்த முகாமிற்கு அழைத்துக் கேட்கிறார், எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று? அந்த முகாமில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை.
இப்போது என்ன செய்வது, யாரைப் போய்க் கேட்பது? இணையம் மூலமாகவும் இந்த விபரங்களை மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று நான் சொன்னேன். அங்கிருந்து சான்றிதழ்களை எனக்கு அனுப்பி நான் இங்கே விண்ணப்பிப்பதற்குப் பதில் அங்கேயே ஏதெனும் ஒரு தனியார் இணையச் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்து, ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். காலை விண்ணப்பம் பூர்த்திச் செய்யப்பட்டு அந்தச் சேவை மையத்திற்கு 50 செலுத்திவிட்டு வீடு வந்து சேர்கிறார். வந்து சேரும் முன்னரே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வந்து சேர்கிறது. மீண்டும் அந்த இணையச் சேவை மையத்தை அணுகி விசாரிக்கும் போது கொடுக்கப்பட்ட சான்றிதழ் தவறு என்று வந்துள்ளது. அதாவது வங்கி கணக்குப் புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டு இருந்தது. அதுவும் பாரத வங்கி கணக்குப் புத்தகம். அரசங்கத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய வங்கி கணக்குப் புத்தகம் ஆதார் அட்டை பெற ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் ரேஷன் அட்டையைச் சான்றாக வைத்து விண்ணப்பிக்கப்பட்டது. இந்த முறை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அலைபேசிக்கு செய்தி வரவில்லை. அதே வேளையில் நிராகரிக்கப்பட்டது என்றும் செய்தி வரவில்லை. ஒருவழியாக ஆதார் பெயர் மாற்று விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அனுமானித்துக் கொண்டு நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்க இணையச் சேவை மையத்திற்குச் செல்கிறார்.
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே
முதலில் ஆதார் பெயர் மாற்ற விண்ணப்பத்தினைப் பார்க்கிறார்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. புதிய ஆதார் மின்னணு அட்டையும் கிடைத்து விட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. முதல் பக்கம் முடிவில் பெயர் விபரங்கள் ஆதார் விபரங்களோடு ஒப்பீடு நடக்கிறது. ஒப்பீட்டின் முடிவில் கொடுக்கப்பட்ட பெயரும் ஆதார் விபரமும் ஒத்து போகவில்லை என்று வருகிறது. அப்படி என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விபரங்கள் அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்கள் மட்டுமே இந்த இணையத்தில் உள்ளீடு செய்யப்ட்டுள்ளது. புதிய விபரங்கள் இணைக்கப்படவில்லை. புதிய விபரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான வசதி செய்யப்படவில்லை. இப்போது என்ன செய்வது?? இதற்கிடையே நீட் அலுவலகத்தை அலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள நடந்த கூத்துகள் வேறு உள்ளது. அதைப் பின்னர்ப் பார்ப்போம். இப்போது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முதலில் முடித்து விடுவோம்.
இந்த முறையும் தோல்வி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து இருக்கத் தெரிந்த நபர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிறார். அவருக்கும் ஆதார் பெயரில் மாற்றம் செய்யப்படவேண்டி இருந்ததால் அந்தப் பணிகளை எல்லாம் ஏற்கனவே முடித்து வைத்து இருந்தார். அந்தப் பெண்ணுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. சரி, அவர்கள் என்ன முறையைப் பின்பற்றிப் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று விசாரித்தார். அவர்கள் பெயர் மாற்றம் செய்யவில்லை, புதிதாக ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்துப் பெற்று இருக்கிறார்கள். அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்களை மாற்ற முயற்சிக்கும் பொது அவர்களுக்கு இதே போல் பிரச்சனைகள் வந்து உள்ளது. ஆகையால் பெயர் மாற்றம் செய்ய மீண்டும் முயற்சிக்காமல் புதிய அட்டை விண்ணப்பித்துப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் புதிய யோசனை ஒன்று வந்தது. அதாவது விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கொடுக்காமல், ஆதார் பெயர் மாற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை கொடுத்து முயற்சிக்கலாம் என்று. விபரங்களைச் சரி பார்க்கும் போது இந்த விண்ணப்ப எண்ணை வைத்து தேடும் போது புதிய விபரங்கள் கொடுக்கப்படும் அப்பொழுது எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு வழியாக இந்த யோசனை மூலம் முதல் பக்கத்தைத் தாண்டி அடுத்தடுத்த பக்கங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு வழியாக விண்ணப்பம் பணம் செலுத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தேர்வு கட்டணம் ரூ.1400 ஆனால் இணையச் சேவை மையம் பெற்றுக் கொண்டது ,ரூ.1600 . நல்லது… ஒருவழியாக விண்ணப்பம் முடிந்தது. இன்று இரவு அவருடன் அலைபேசியில் உரையாடும் போது அவர் சொன்னதுதான் முக்கியம். இரண்டு வாரத்திற்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கப் போகிறேன் என்று. அதன் பிறகும் ஒன்றைச் சொன்னார் இதுக்கு மேல விண்ணப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார், நானும் அதையே நம்புகிறேன்.
இதற்கிடையே நீட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள நான் முயன்றேன். அவர்களது இணையதளத்தில் 5 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலை வரை 1000 முறைக்கு மேல் முயற்சி செய்து விட்டேன் ஒரு முறை கூட என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்நேரமும் பிஸி என்று தான் வந்தது. சனி ஞாயிறு விடுமுறை வேறு, வேலை நாட்களிலும் காலை 9 30 மணி முதல் மாலை 5 மணி வரைதான் சேவை. 5 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது, ஒன்றுக்கு கூட இது வரை பதில் இல்லை.
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது. அவர்களால் முடியாத பட்சத்தில் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் மாணவன் நேரடியாக இந்த வேலைகளைச் செய்ய இயலுமா என்பது கேள்விக்குறிதான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் மட்டும் இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்றால் அதுவும் இந்தக் கல்வி சந்தையில் கேள்விக்குறியே? ஆனால் நீட் தேர்வு இல்லாத சமயத்தில் கிடைக்கும் ஒன்று இரண்டு இடங்கள் கூட இப்போது கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
திருச்சியில் அரசு உணவகத்தில் “அம்மா” பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லாப் பொருட்கள், உப்பு முதல் உணவங்கள் வரை அனைத்திலும் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், மெரினாவில் அவரது சமாதியை அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கடந்த 15.2.2017 -ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அதன் பின்பு கடந்த 18, 20 தேதிகளில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.
குற்றவாளியின் பெயரால் ஆட்சி நடத்துவது, அரசு திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு, இளைய தலைமுறைக்கு நாம் என்ன கற்றுத்தரப் போகிறோம் ? தீண்டாமை, குடி, போதைப்பழக்கம் ஆகியவை தவறென்றும் குற்றமென்றும் போதிக்கின்ற நாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் போற்றுவது சரியா ? குடி குடியைக் கெடுக்கும், புகைப்பழக்கம் உடல் நலத்துக்குக்கேடு, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு அதற்கு எதிராக செயல்படுவது சரியா ? என்று கேள்வி எழுப்பியதோடு, குற்றவாளி ஜெயலலிதாவின் படங்கள், சின்னங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயா படத்தை மக்களே அழித்து வருகின்றனர். இதைக்கண்டு அதிர்ந்துபோன திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ’அம்மா’ என்ற பெயரையும், ஜெயா படத்தையும் தாங்களே மறைத்துள்ளனர்.
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
***
சென்னையில் குற்றவாளி ஜெயாவின் படங்கள் அகற்றம்
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல் பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
***
திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது – பத்திரிகை செய்திகள்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நிலையை உணர்த்தும்விதமாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 முதல் 7,287 ரூபாய் வரை இழப்பீடு, பயிர் காப்பீடு மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 21,500 முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு, நூறு நாள் வேலைத் திட்டத்தை நூற்றைம்பது நாட்களாக அதிகரித்துத் தரும் வாக்குறுதி – இவைதான் வறட்சியால் விளைச்சலை இழந்து நிற்கும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம்.
விளைச்சல் பொய்த்துப் போனதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளுக்கு மட்டும்தான் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதி மரணங்களைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வாங்கப்படும் எனக் கூறி, வாய்க்கரிசி போட்டுவிட்டார் முதல்வர் ஓ.பி.எஸ்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியால் மரணமடைவதும் நவம்பர் மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டபோதும், அ.தி.மு.க. அரசு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில்தான் நிவாரண அறிவிப்பை வெளியிட்டது. இந்த அலட்சியத்திற்கும் தாமதத்திற்கும் காரணம், ஜெயாவின் உடல் நிலை, அவரது மரணம், அ.தி.மு.க.விற்குள் இருந்த அதிகாரப் போட்டி என்பது ஊரே அறிந்த உண்மை. ஊருக்கே சோறு போடுகின்ற பல இலட்சக்கணக்கான விவசாயிகளின், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையைவிட, ஒரு தனிநபரின் உயிர் எந்தவிதத்தில் உயர்ந்ததாக இருந்துவிட முடியும்? தனிநபர் துதி, ஊழல், கொள்ளை, வன்முறை என்பதையே கொள்கையாகவும் நடைமுறையாகவும் கொண்ட அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்குத் தமிழகத்திற்குக் கிடைத்த தண்டனை என்றே இதனைக் கொள்ளலாம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நிலையை உணர்த்தும்விதமாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
தாமதமாக அறிவிக்கப்பட்ட நிவாரணமும் விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லை என்பதோடு, இந்த நிவாரண அறிவிப்பு மோசடியாகவும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமுள்ளன. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டு எடுப்பதற்கு ஏறக்குறைய 25,000 ரூபாய் செலவாகும் சூழலில், இதற்குத் தமிழக அரசு கொடுக்கவிருக்கும் இழப்பீடு தொகை ரூ.5,465/- தான். மீதித் தொகையைக் காப்பீடு நிறுவனங்களின் வழியாகக் கிடைக்க ஏற்பாடு செய்வது என அறிவித்து, நழுவிக்கொண்டுவிட்டது, அ.தி.மு.க. அரசு.
தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்குவதற்கான கணக்கீடும்கூடப் பொங்கலுக்குப் பிறகுதான் தொடங்கவுள்ள நிலையில், அந்தச் சொற்பத் தொகைகூட விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கான காப்பீடு தொகையே இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டுக்கான காப்பீடு தொகை உடனடியாகக் கைக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மேலும், இதற்கு முந்தைய பயிர் காப்பீடு திட்டம் அரசு காப்பீடு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மோடி அரசு அறிவித்திருக்கும் புதிய பயிர் காப்பீடு திட்டமோ தனியார் காப்பீடு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்திடம்தான் பெரும்பான்மையான காப்பீடு தொகை செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார், வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இழப்புத் தொகையை வழங்குவதில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் காட்டும் அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் சந்தி சிரித்துவரும் நிலையில், விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு தொகை முழுமையாகவும் விரைவாகவும் கிடைப்பது குதிரைக்கொம்புதான்.
மேட்டூர் பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கான நடவு ஜூன், ஜூலையில் நடந்து முடிந்துவிடும். சம்பா சாகுபடிக்கான நடவு ஆகஸ்டு இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் தொடக்கம் வரையிலும்கூட நடைபெறும். பெரும்பாலான விவசாயிகள் கையில் காசு வைத்துக்கொண்டு நடவு வேலைகளைத் தொடங்குவதில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு மோடி அரசு தடை விதித்துவிட்ட நிலையில், கந்து வட்டிக் கும்பலும், தனியார் நிதி நிறுவனங்களும்தான் விவசாயிகளின் “ஆபத்பாந்தவனாக” உருவெடுத்தன. நகை தொடங்கி அண்டா குண்டா வரை அடகு வைத்து இந்த முறை வயலில் இறங்கியதாகக் கூறுகிறார்கள், வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர்.
விளைச்சலோ பொய்த்துவிட்டது. கிராமத்தை விட்டு வெளியேறிப் போனாலும், வேறு வேலைகள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. டீ குடிக்கக்கூடக் கையில் காசில்லாத அவலம் டெல்டாவின் கிராமப்புறங்களில் உருவாகி வருகிறது. இப்படிபட்ட நிலையில் அரசின் நிவாரணத் தொகையும், காப்பீடு தொகையும் கைக்கு வருவது தாமதமாகத் தாமதமாக, கடனுக்கான வட்டியே விவசாயிகளை விழுங்கிவிடும்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்யும் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
வடகிழக்குப் பருவ மழை பொய்க்காமல் பெய்து, காவிரியிலும் ஓரளவிற்காவது தண்ணீர் வரத்து இருந்தால், டெல்டா மாவட்டங்களில் ஜூன் தொடங்கி மார்ச் வரையிலும் விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். மே-ஜூனில் குறுவை பயிரிடுவதைத் தொடங்கும் விவசாயிகள், அதனை ஆகஸ்டு-செப்டம்பரில் அறுத்த பிறகு, தாளடி பயிரைப் பயிரிடுவார்கள். ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் தொடங்கும் சம்பா பட்டம் தையில் முடிவடையும். இம்மூன்று பருவப் பயிர்களும் முடிவடைந்த பிறகு, அதே வயலில் மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உளுந்து அல்லது பயறு வகைகள் பயிரிடப்படும். நிலத்தடி நீர் வாய்ப்புள்ள காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் கோடை கால நெற்பயிர் மார்ச்சுக்குப் பின் பயிரிடப்படும்.
சம்பா நெற்பயிரும், அதனைத் தொடர்ந்து உளுந்து, பயறு வகைகளும் பயிரிடும் வாடிக்கை கொண்டது, நாகப்பட்டினம் மாவட்டம், கீவளூருக்கு அருகிலுள்ள வடக்குவெளி கிராமம். ஓடம்போக்கி ஆறும், அதன் வாய்க்காலும் ஓடும் அக்கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சம்பா அறுப்பு வேலைகள் ஜனவரியில் தொடங்கி நாற்பது நாட்களுக்கும் மேலாக நடைபெறும் எனக் கூறுகிறார்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள். அறுப்பு சமயத்தில், காலையில் ஆறு மணிக்கு வயலில் இறங்கி மாலை ஆறு மணிக்கு வயலைவிட்டு வெளியேறும் ஒரு விவசாயக் கூலி, ஒரு மூட்டை நெல்லை ஒருநாள் கூலியாக எடுத்துவிடுவார் எனக் கணக்குச் சொல்லுகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசும், மைய பா.ஜ.க. அரசும் தமிழகத்திற்கு இழைத்த அநீதியும் வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதும் இந்த வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது. விவசாயிகளுக்காவது ஒரு கண்துடைப்பு நிவாரண உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள ஏறக்குறைய 90 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களை அம்போவென்று கைகழுவிவிட்டது, அ.தி.மு.க. அரசு.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 7.15 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்ற இரு டெல்டா மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை நிச்சயமாக பத்து இலட்சத்தையும் தாண்டக் கூடும். இவர்களுக்கும் விவசாயம் பொய்த்துப் போய் கடனாளியாக நிற்கும் சிறு விவசாயிகளுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை கொடுப்பதற்கு அம்மாவட்டங்களில் என்ன கட்டுமானம் இருக்கிறது?
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி வசுதா மிஸ்ரா தலைமையில் வந்த மையக் குழு, தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை வட்டப் பகுதிகளில் நடத்திய ஆய்வு.
குறுவையும், சம்பாவும் பொய்த்துப் போனதால், பொங்கலுக்கு சட்டி, பானை வியாபாரம்கூடப் பெரிதாக நடக்கவில்லை என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத தஞ்சாவூரைச் சேர்ந்த நெல் அரவை ஆலை அதிபர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் விவசாய இழப்பும் டெல்டா மாவட்டங்களில் இரட்டை இடியாக இறங்கியதால், தஞ்சாவூரிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருவதாகவும் கூறுகிறார், அவர். டெல்டா மாவட்டங்களைச் சுற்றி இயங்கி வந்த நெல் அரவை ஆலைகளில் ஏறக்குறைய 90 சதவீத ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்டு, அந்த ஆலைகளில் வேலைபார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கிராமத்திற்குத் திருப்பியனுப்பப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
பட்டப்படிப்பு முடித்துவிட்டு குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்த்துவரும் வடக்குவெளியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்று கட்டிட வேலை தேடி நாகப்பட்டினத்திற்கு சென்று வருகிறார். இந்த வேலையும் தினந்தோறும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார், அவர். திருப்பூருக்கு வேலைதேடிச் சென்ற இளைஞர்கள் போன கையோடு திரும்பி வந்துவிட்டதாக அக்கிராமப் பெண்கள் கூறுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தைத் தமிழக அரசு எப்பொழுது தொடங்கும் என்றுதான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
பாலைவனத்தில் தெரியும் கானல் நீரைப் பார்த்து ஏமாந்து போவதைப் போல, நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகுமோ என ஐயப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நூறு நாள் வேலைத் திட்டத்தையே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, அத்திட்டத்திற்குரிய நிதி ஆதாரங்களை மோடி அரசு வெட்டிவரும் சூழ்நிலையில், இத்திட்டத்தை நூற்றைம்பது நாட்களுக்கு நீட்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. விலையில்லா அரிசி வழங்குவதையே நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசிற்கு நெருக்கடி கொடுத்துவரும் மோடி அரசு, நூறு நாள் வேலையை நூற்றைம்பது நாட்களாக நீட்டிப்பதற்கு உடன்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வறட்சியைக் கருத்தில்கொண்டு நூறு நாள் வேலைத்திட்டத்தின் கூலியை நானூறு ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி ரூ.203/-தான். கூலி கூட்டிக் கொடுக்கப்படுமா, இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இத்திட்டத்தின் கீழ் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் மற்றைய கவர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. இத்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு, சட்டத்தின் வழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அச்சட்டம், இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் அவர்களுக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 2016 தொடங்கி இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளுக்குக் கூலி வழங்கப்படவில்லை என்றும், கிட்டதட்ட 2,954 கோடி ரூபாய் பெறுமான கூலி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. (தமிழ் இந்து, ஜனவரி 11, பக்.8)
மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியமர்த்தப்படும் கூலித் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கூலி கொடுக்கமால் இழுத்தடிப்பது வாடிக்கையாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறது, இந்து இதழ். மோடி பதவியேற்ற 2014-15 ஆம் ஆண்டில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மொத்தக் கூலியில் 27.43 சதவீதக் கூலிதான் பதினைந்து நாட்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இது 2015-16 ஆம் ஆண்டில் 31.97 சதவீதமாகச் சற்று உயர்ந்து, 2016-17 ஆம் ஆண்டில் 11.71 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.
வறட்சியால் விளைச்சலை இழந்த விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடும் உடனடியாகக் கிடைக்காது, பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய காப்பீடு தொகை எப்போது கிடைக்கும் என்பதும் தெரியாது, நூறு நாள் வேலைத் திட்டம் தொடங்கி, அதில் வேலை கிடைத்தாலும் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது என்றால், இதற்குப் பெயர் நிவாரணமா?
அழும் குழந்தைக்குப் பஞ்சு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அ.தி.மு.க. அரசோ, பஞ்சு மிட்டாய் எனக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து, அதனை நக்க வைத்துச் சமாதானப்படுத்த முயலுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக நின்று நாய்ச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மென்சக்தியை (Soft power) உலகறியச் செய்த, நடுத்தர வர்க்கத்தினரின் கனவான இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் குடுமிபிடிச் சண்டைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையேப் பின்னுக்கு இழுத்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள்.
”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.
“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.
’சத்திரியர்கள்’ சண்டைக்கல்லவா போக வேண்டும். விசால் சிக்கா இராணுவத்தில் சேர்ந்து சியாச்சின் பனிமுகடுகளில் தனது சத்திரியப் பெருமையை நிலைநாட்டியிருக்க வேண்டும் – அல்லது குறைந்தபட்சம், லோக்கல் ரவுடியாக இருந்தாவது தனது போர்த் திறமைகளை நிரூபித்திருக்க வேண்டும். ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் தலைமைச்செயல் அலுவலருக்கும் பட்டாக்கத்திக்கும் என்ன சம்பந்தம் என ஐ.டி மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் நாராயணமூர்த்தி புலம்பிக் கொண்டிருக்கும் ”அறமதிப்பீடுகள்” அவருக்கு எப்போது நினைவுக்கு வந்தது? அமெரிக்க விசா பெறுவதற்காக பிராடுத்தனங்களில் ஈடுபட்டு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் நிலைக்கு 2013-ல் தள்ளப்பட்ட போது கூட அவருக்கு “அறமதிப்பீடுகள்” நினைவுக்கு வரவில்லை. அதே போல் விசால் சிக்கா தலைமைச்செயல் அலுவலராக நியமிக்கப்பட்டவுடன் ஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தப் போவதாக அறிவித்த போது, அந்நடவடிக்கையால் தமது ஊழியர்களில் 30 சதவீதம் பேர் வேலையிழக்கப் போகிறார்களே என்பதை நினைத்தும் கூட நாராயணமூர்த்திக்கு ”அறமதிப்பீடுகள்” குறித்த சொரணை உணர்ச்சி எழவில்லை.
நடுத்தரவர்க்கத்தின் கனவு இன்போசிஸ். சரியாகச் சொல்வதாக இருந்தால் உலகமயமாக்கலுக்கு முன் பொதுத்துறை வங்கி அல்லது அரசு வேலைகளை (இட ஒதுக்கீடு மற்றும் இடைநிலைச் சாதிகளின் அதிகரித்த ‘திறமையின்’ காரணமாக) ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்த ’அவாள்களின்’ புனித அக்கிரகாரமாக இன்போசிஸ் போற்றப்பட்டது.
எதார்த்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சல்லிசான விலையில் அத்துக்கூலிகளை அனுப்பி வைத்து கமிசனடிக்கும் ஆள்பிடி ஏஜெண்டு தொழிலில் (Body shop) தான் ஏராளமான வருமானத்தை வாரிக் குவித்தது இன்போசிஸ். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், ஹெச்1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்றும் இந்தியர்களால் வேலையிழப்புகளைச் சந்தித்த உள்ளூர் அமெரிக்கர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர்.
அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியேற்ற கொள்கைகள் விவாதப் பொருளாக இருந்த நிலையில், குடியேற்ற விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக திருத்தம் செய்ய வேண்டுமென அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தரகு வேலை(Lobbying) செய்வதற்காக இன்போசிஸ் உள்ளிட்ட எட்டு இந்திய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்துள்ளன.
லாபம் சம்பாதிக்க எந்த அளவுக்கும் இறங்கிச் சென்று சட்டவிதிகளை வளைக்கத் துணிந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தான் அரசியல்வாதிகளின் மேல் எங்கெல்லாம் ஊழல் முறைகேடு தொடர்பான புகார்கள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவதரித்து “நீதி நியாயங்களை” உபந்நியாசம் செய்பவர். “லஞ்சத்தை ஒழிக்க அதை சட்டப்பூர்வமாக்கி விடலாம்” (Why Infosys Chairman’s Advocacy of Legalizing Bribe-giving Is So Troubling) என்பது லஞ்ச ஊழலுக்கு எதிராக அன்னார் சண்டமாருதம் செய்த போது உதிர்த்த வேதவாக்குகளில் ஒன்றாகும்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் விஷால் சிக்கா
சமூகத்தில் ”திறமை இருப்பவர்கள் முன்னேறுவார்கள்” என்பது நாராயணமூர்த்தி பல்வேறு சந்தர்பங்களில் இளைஞர்களுக்கு சொன்ன வியாக்கியானம் – எனவே தங்களது நிறுவனத்தில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் தகுதி திறமையின் அடிப்படையிலேயே சேர்த்துக் கொள்ளப்படுவதாக சொல்லியிருக்கிறார். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த கடைநிலை ஊழியர் எவரையும் தலைமைச்செயல் அலுவலராகவோ நிர்வாகத்தின் உயர்ந்த பொறுப்புகளுக்கோ உயர்த்தப்படவில்லை. நாராயணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களால் துவங்கப்பட்ட இன்போசிஸ்-ன் உயர்நிர்வாகப் பொறுப்புகளில் சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்திருந்தனர்.
அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தி தனது வருமான ஆதாரத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போது பங்குச் சந்தை முதலீடுகளைக் கோருகின்றது இன்போசிஸ். தற்போது நாராயணமூர்த்தி தலைமையிலான ‘புரமோட்டர்களிடம்” சுமார் 15 சதவீத பங்குகள் உள்ளது – அதே நேரம், அந்நிய முதலீட்டு நிறுவனங்களிடமே இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.
இந்நிலையில் மாறி வரும் தொழில் மற்றும் பொருளாதாரச் சூழலில் அந்நிறுவனத்தின் உயர்நிர்வாகப் பொறுப்புகளுக்கு ”தகுதி திறமை” அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே நியமிக்க வேண்டுமென இன்போசிஸில் முதலீடு செய்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கின. 2004-ம் ஆண்டில் தான் முதன் முதலாக வெளிநபர் ஒருவரை தலைமைச்செயல் அலுவலராக நியமித்தது இன்போசிஸ்.
தற்போது வெடித்திருக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் பேசும் நாராயணமூர்த்தி ஆதரவாளர்கள், தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா மற்றும் சேர்மன் சேஷசாயி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஏராளமாக சம்பளம் வழங்கப்படுவது இன்போசிஸ் நிறுவனத்தின் அறமதிப்பீடுகளுக்கு எதிரானது என பொங்குகின்றனர். ஆப்பன்ஹெய்மர் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களோ லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய நிர்வாக குழு செயல்படுவதாகவும் அதன் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவு உண்டெனவும் அறிவித்துள்ளனர். மேலும் “தகுதி திறமை” கொண்டவர்களை பணிக்கமர்த்தி நிறுவனத்தின் வளர்ச்சியை உந்தித் தள்ள வேண்டுமெனில் சம்பள விசயத்தில் கஞ்சத்தனம் பார்க்க கூடாது என்றும் இத்தரப்பினர் முன்வைக்கின்றனர்.
இன்போசிஸில் நடந்து வரும் நாய்ச்சண்டையானது நீதி நியாயத்துக்கும் லாப வெறிக்கும் இடையிலானதாக நாராயணமூர்த்தியிடம் பரிசில் பெற்ற அவைப் புலவர்களான முதலாளித்துவ ஊடகங்கள் முழங்குகின்றன. இன்னொருபுறம், திறமையான மருமகளைப் பார்த்து பழைய மாமியாருக்குப் பொறாமை என முதலீட்டு நிறுவனங்களுக்கு பக்கவாத்திய கோஷ்டிகளாக செயல்படும் முதலாளித்துவ ஊடகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைந்து வருகின்றன.
ஆனால், இருதரப்பினருக்குமே நிர்வாகத்தைக் கைப்பற்றுவதைத் தாண்டி வேறு எந்த நோக்கமும் இல்லை. சண்டையின் போக்கில் இருதரப்பினருமே மாறி மாறி எதிர்தரப்பினரைக் குறித்த உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கார்ப்பரேட் புனித பசுவாக போற்றப்பட்ட இன்போசிஸின் சாயம் வெளுத்து வருவது ஒன்றே இதன் மூலம் நடந்திருக்கும் ஒரே நல்ல விசயம்.
போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தும் தண்ணீர் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் (புகைப்படம்) தந்தை ஆசைத்தம்பி.
“டெல்டாவில மழை பெஞ்சும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்” என்றார் வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு இடைநிலை அதிகாரி. கடந்த சம்பா பருவத்தின் (டிசம்பர் 2015) இறுதியில் பெய்த பெருமழையால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1.22 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, மகசூலுக்கு வரவேண்டிய 10 இலட்சம் டன் நெற்கதிர்கள் நாசமானதால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய். அந்த ஆண்டில் பெய்து கெடுத்த மழை, இந்தப் பருவத்தில் பெய்யாமல் கெடுத்துவிட்டது.
டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போனதைப் பிரதிபலிக்கும் நாங்குடி கிராம வயல்கள்.
டெல்டா என்றழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு 3.29 இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும், இம்மாவட்டங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மேட்டூர் அணை பாசனப் பகுதிகளையும் சேர்த்து 4.65 (3.29+1.36) இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும் சம்பா பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்காது. ஏனென்றால், சம்பா பயிரிடும் பரப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, சம்பா தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை வயலுக்குள் இறங்க வைக்கும் ஒரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்தது, அ.தி.மு.க. அரசு. ஆனால், நடவு செய்யப்பட்ட மொத்தப் பரப்பில், ஒரு பத்து சதவீத பரப்பிலாவது விவசாயிகள் கண்டு முதல் எடுத்திருப்பார்களா என்றால், நிச்சயமாக இல்லை.
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கீவளூருக்கு அருகேயுள்ள நாங்குடி கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 300 ஏக்கரில், ஒரு பத்து ஏக்கரில் அறுவடை நடந்தால் அதிசயம் என்கிறார்கள் அக்கிராம மக்கள். அந்தப் பகுதி விவசாயம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழையையும், வெண்ணாற்று வாய்க்காலில் வரும் நீரையும் நம்பித்தான் நடைபெறுகிறது. நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்பகுதியில் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகள் கிடையாது.
அதே நெடுஞ்சாலையில் கீவளூருக்கு முன்பாக, வடக்குத் திசையில் ஐந்தாறு கிலோமீட்டர் உள்ளே சென்றால் அமைந்திருக்கும் வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த நேரு நகர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு ஓடம்போக்கி ஆறையும், அதிலிருந்து பிரியும் வாய்க்காலையும் ஒட்டி அமைந்திருக்கிறது. ஆறும் வாய்க்காலும் வறண்டு போய்க்கிடப்பதால், அந்தப் பகுதியில் நடவு நட்ட வயல்களில் எல்லாம் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன.
‘‘ஒரேயொரு மழை பெய்தா போதும், இந்தப் பயிரைக் காப்பாற்றிவிடுவேன்’‘ என நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன்.
“ஒரு மழை பெய்தால், ஒன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் வளர்ந்து நிற்கும் பயிரை ஓரளவிற்காவது காப்பாற்றி விடுவேன்” என்றார் நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன் என்ற இளைஞர். நான் அவரைச் சந்தித்தது ஜனவரி 15-இல்; ஜனவரி 28-இல்தான் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார், விவசாயத் துறை அதிகாரி. வல்லரசனின் நம்பிக்கையும், அவரது பயிரும் என்னவாயிருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.
பத்து ஏக்கர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த நேரு நகர் வல்லரசனுக்கு, அடுத்த மழையை நம்பியிருக்கும் பயிர்கள் சாவியாகாமலிருந்தால் 50,000 ரூபாய் தேறும்; மழை இல்லையென்றால், அந்தச் சொற்பத் தொகையும்கூடக் கிடைக்காது. வயலில் போட்ட முதலீடு மொத்தமும் நட்டம்தான்.
2.5 ஹெக்டேர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து நட்ட பயிர்கள் காய்ந்து போனதாகக் கூறுகிறார், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழிமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இந்த நட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான் ஆசைத்தம்பியின் மகன் அரவிந்த்.
அகால மரணமடைந்த அரவிந்தின் வயது இருபத்தைந்து. சம்சாரி வாழ்வைத் தொடங்க வேண்டிய வயதில், அவன் வாழ்வு முடிந்து போனது. தகவல் தொழில்நுட்ப அறிவியலில் பட்டயப் படிப்பு முடித்திருந்த அரவிந்த், விவசாயத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக வேறு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவன் விரும்பிய தொழில் அவனை வாழவைக்கவில்லை.
இப்படி ஒவ்வொரு குறு, சிறு விவசாயியின் தலையிலும் இருபத்தைந்தாயிரம் தொடங்கி இரண்டு இலட்சம், மூன்று இலட்சமெனக் கடன் சுமை இந்த ஆண்டில் மட்டும் ஏறியிருக்கிறது. நாங்குடி கிராமத்தில் 100 ஏக்கரில் பயிர் செய்யும் ஜீவானந்தம் போன்ற பெரிய பணக்கார விவசாயிகளும் இந்த வறட்சியால் நட்டமடைந்திருக்கிறார்கள் என்றாலும், சிறு, குறு, குத்தகை விவசாயிகளின் பாடுதான் மிகவும் பரிதாபகரமானது. தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்து போன டெல்டா மாவட்ட விவசாயிகளின் பட்டியலைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் சிறுவிவசாயிகளாகவே இருப்பது தற்செயலானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தும் தண்ணீர் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் (புகைப்படம்) தந்தை ஆசைத்தம்பி.
விவசாயிகளின் தற்கொலைக்கும் அதிர்ச்சி சாவுகளுக்கும் இந்தக் கடன் சுமை ஒரு காரணம் என்றாலும், இந்தப் பொருளாதார விவகாரத்தைத் தாண்டியும் உணர்ச்சிகரமான காரணிகளும் உள்ளன. “விவசாயி பயிரை வளர்ப்பதில்லை, பிள்ளையை வளர்க்கிறான்” என்று அந்த உணர்ச்சியை எடுத்துச் சொன்னார், வல்லரசன்.
இதோ, வல்லரசனின் கதையைக் கேளுங்கள். அந்த உணர்ச்சியை நாமும் புரிந்துகொள்ள முடியும். வல்லரசனுக்குத் தந்தை கிடையாது. அவரது தாய்க்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்த சகோதரர் மாற்றுத் திறனாளி, இரண்டாவது வல்லரசன், கடைசிப்பிள்ளை சந்திரபோஸ். கீவளூரில் உள்ள பெரிய அக்ஷய கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறது, அவரது குடும்பம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடனை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு ஈடுகட்டிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த வல்லரசனுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், அரசு அறிவித்த சம்பா தொகுப்புத் திட்டமும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குத்தகைக்கு எடுத்துள்ள பத்து ஏக்கர் நிலத்திலும் பயிர் செய்வது என முடிவு செய்த வல்லரசன், துணைக்குத் தனது தம்பி சந்திரபோஸை அழைத்தார்.
இரண்டு முதுகலைப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பும் முடித்துத் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த சந்திரபோஸ், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயத்திற்குத் திரும்பினார். பத்து ஏக்கரிலும் பயிர்கள் முளைத்து வந்துகொண்டிருந்த நிலையில், காவிரியில் தண்ணீர் வருவது நின்று, ஓடம்போக்கி ஆறு வறண்டு போனது. பருவ மழையும் ஏமாற்றிவிட்டது. 10 ஏக்கரில் ஒன்றரை ஏக்கரில் வளர்ந்து நின்ற பயிர்கள் மட்டும்தான் கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்தன. அந்தப் பயிர் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முடிவு செய்த இரண்டு சகோதரர்களும் துணிந்து ஒரு முடிவை எடுத்தனர்.
ஓடம்போக்கி ஆறில் ஊறும் தண்ணீரை டீசல் இன்ஜினை வைத்து இறைத்து, ஹோஸ் பைப் மூலம் எடுத்துவந்து பயிரைக் காப்பாற்றுவது என்பதுதான் அந்த முடிவு. இது எளிதான காரியமல்ல. ஓடம்போக்கி ஆற்றுக் கரையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்கிறது அந்த ஒன்றரை ஏக்கர் நிலம். அத்துணை தொலைவிற்கு ஹோஸ் பைப் தேவை. மேலும், டீசல் என்ஜின் செட், அதற்கான டீசல் எனச் செலவும் எகிறிப் போகும்.
குத்தகை பாக்கி அனைத்தையும் உடனடியாகக் கட்டச் சொல்லி கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்கு இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ்
செலவைப் பற்றி அந்தச் சகோதரர்கள் கவலை கொள்ளவில்லை. பயிரைக் காப்பாற்ற வேண்டும், அதற்குத் தண்ணீர் வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கவலையாக இருந்தது. அவர்களிடம் சொந்தமாக டீசல் என்ஜின் இருந்தது. ஓடம்போக்கி ஆற்றுக்கும் அவர்களின் வயலுக்கும் இடையே இருந்த வயல்கள் அனைத்திலும் பயிர்கள் காய்ந்து போய்விட்டதால், ஹோஸ் பைப்புகளின் வழியாகத் தண்ணீரைக் கொண்டுவருவதிலும் பிரச்சினையில்லை. ஆனால், ஆற்றில் தண்ணீர் ஊறும் போது இறைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்குச் சவாலாக இருந்தது.
இதனால் சகோதரர்கள் இருவரும் மாறிமாறி 24 மணி நேரமும் ஆற்றின் கரையிலியே காத்துக்கிடந்தனர். தங்களால் முடியாதபோது, ஒரு கூலியாளை அமர்த்தினார்கள். ஒரு நாளல்ல, இரண்டு நாள் அல்ல, இப்படி பதினைந்து நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் ஊறும்போது, அதனை எடுத்துப் பயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஓடம்போக்கி ஆறில் தண்ணீர் ஊறுவது நின்றுபோனது.
“ஒரேயொரு மழை வந்தால் போதும், இதுகள காப்பாற்றிவிடுவேன்” என அந்தப் பயிரைக் காட்டி வல்லரசனும் சந்திரபோஸும் கூறியபோது, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே அவர்களது முகத்தில் தெரிந்தது.
தற்கொலை செய்து கொண்ட அரவிந்தும் பயிர்களைக் கருகி விடாமல் காப்பாற்ற புதிதாக இரண்டு போர்வெல்லைத் தோண்டினார். அவரது தந்தை ஆசைத்தம்பி தடுத்தும் கேளாமல், புதிய போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தார். இரண்டிலும் தண்ணீர் கிடைக்கவில்லை, பயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த வேதனையில்தான் பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார், அரவிந்த்.
பெத்த பிள்ளையைக் காப்பாற்ற யாரும் கணக்குப் பார்ப்பதில்லை. அதுபோலத்தான் விவசாயிகளும். மற்ற தொழில் செய்பவர்கள் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும், ஒரு விவசாயி மேலும் மேலும் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும் இத்தகைய வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையிலும் வல்லரசன் உள்ளிட்டு, நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்குப் பழைய குத்தகையை உடனடியாகக் கட்டச் சொல்லி இந்து அறநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. குத்தகை பாக்கியையும் கடனையும் எப்படி அடைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டேன். “கஷ்டம்தான் சார்… கடன்காரன் வந்து வீட்டு வாசல்படியில் நின்று கத்தும்போது நாண்டுகிட்ட சாகலாம் போலத் தோணும். வேறு வேலைக்குப் போவோம், அல்லது வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டுக்குப் போவோம்” என அண்ணனைத் தேற்றிவருகிறேன் என்றார், சந்திரபோஸ்.
நம்பிக்கையும் எதார்த்தமும் ஒத்துப் போவது மிகவும் அரிதானது. கீவளூருக்கு அருகிலுள்ள திருவாரூரிலும் நாகப்பட்டினத்திலும் மாற்று வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. திருப்பூருக்கு வேலை தேடிப் போன நேரு நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சுவற்றில் அடித்த பந்து போல, வேலை கிடைக்காமல், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் தங்களின் உழைப்பு மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக எதிர்காலம் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைதான் விவசாயிகளின் மரணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறதேயொழிய, அரசு அறிவித்திருக்கும் நிவாரணமோ, அவர்கள் போடும் இலவச அரிசியோ அல்ல.
நுண்கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த பெண்கள்.
நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !
நாகை மாவட்டம் கீழ்வேளுர் வடக்குவெளி கிராமம். சுமார் 200 தலித் குடும்பங்கள் மட்டும் வாழும் இக்கிராமத்தினர் அனைவரும், இங்குள்ள கோயில் நிலங்களை நீண்டகாலமாகக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2015-டிசம்பரில் பெய்த பெருமழையில் பகுதியளவு மகசூலைப் பறிகொடுத்த இப்பகுதி விவசாயிகள், நடப்பு வறட்சியில் முழு விவசாயத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறார்கள்.
“ஒவ்வொரு வருசமும் புதுநெல் அரிசியில்தான் பொங்கல் வைப்போம். அடுத்தநாள் கறிசோறு ஆக்குவோம். இந்த வருஷம் புது அரிசியும் இல்ல. பொங்கலும் இல்ல. கறியும் இல்ல. சாம்பார் சோத்துக்கே வழியில்லைங்க” என்று கண் கலங்குகிறார் 63 வயதான மணி என்ற விவசாயி.
“போன அறுவடையில் கிடைத்த நெல்லை வைத்து இந்த மாதத்தை வேண்டுமானால் சமாளிப்பாங்க. அதற்குப் பிறகு ரேசன் அரிசியிலதான் உயிர்வாழ முடியும். வேற வழியில்ல” என்கிறார் பக்கத்து கிராமத்தின் விவசாயி ஜீவானந்தம். நாகை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சியை கீழ்வேளூர் ஒன்றியம் பிரதிபலிக்கிறது.
“அடுத்த விவசாயம் செய்வதற்கு வரவிருக்கும் பருவமழைக்காக பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரையில் இந்த வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பெண்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தெரியலைங்க” என்பது மட்டும்தான். “எங்களுக்கு தெரிஞ்சது விவசாய வேலை மட்டும்தான். வேற வேலைக்குப் போகணும்னா இனிமேல் அதை பழகிட்டுத்தான் போகணும்” என்கிறார்கள் ஊர் மக்கள். தங்கள் வாழ்க்கையின் ஒரே ஆதாரமான விவசாயம் பொய்த்துப் போனதால், இன்று தெருவில் வீசியெறியப்பட்ட குப்பையாகச் சீரழிந்து கிடக்கிறது இவர்களின் வாழ்க்கை.
நுண்கடன் நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கான தவணையை வாராவாரம் கட்டுவதற்குத் திணறித் திண்டாடி நிற்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த வள்ளி.
சராசரியாக, ஒரு ஏக்கரில் நெல் பயிரிட 25,000 ரூபாய் செலவாகிறது. இதில் நேரடி விதைப்பிற்கு 2,000 ரூபாய், எந்திர நடவுக்கு 1,000 ரூபாய், களைக்கொல்லிக்கு 600 ரூபாய் – என அரசு தரும் மானியங்களைக் கழித்தாலும், ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல் விவசாயிகள் கையிலிருந்து செலவழித்தாக வேண்டும். “1,000 ரூபாய் செலவழித்து பட்டா, சிட்டா, அடங்கல் வாங்கிட்டு பயிர்க் கடன் கேட்டுக் கூட்டுறவு வங்கிக்கு ஓடினால், நாலுநாள் அலையவிட்டு அஞ்சாவது நாளில் 10 பேருக்கு மட்டும் கொடுத்துட்டுப் பணமில்லைன்னு கடையை மூடிருவான். அதன் பிறகு ஸ்டேட் பேங்க் மேனேஜரிடம் கெஞ்சினால், ஏக்கருக்கு 8,000 ரூபாய்தான் தருவாரு. மீதிப் பணத்தை மாத வட்டிக்கோ, மைக்ரோ பைனான்சிலோ வாங்கிச் சமாளிப்போம்” என்று விவசாயம் செய்வதற்கு தாங்கள் படும்பாட்டை விவரிக்கிறார் வள்ளி என்ற பெண் விவசாயி!
பயிர்க் கடனாக ஏக்கருக்கு 25,000 ரூபாய்வரை கடன் தரலாம் என்பது பொதுவிதியாக இருந்தாலும், நெல் விவசாயம் லாப உத்திரவாதம் இல்லாதது என்பதால் 10.000 ரூபாய்க்கு மேல் எந்த வங்கியும் பயிர்க் கடன் தருவதில்லை. சிறு, குறு விவசாயிகளுக்கு வெறுங்கையை விரிக்கும் கூட்டுறவு வங்கிகள், பணக்கார விவசாயிகளுக்கும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கும் பல இலட்சங்ககளை பயிர்க் கடனாக வாரிக் கொடுக்கத் தவறுவதில்லை. இதன் மூலம் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளைக் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் கும்பலிடம் திட்டமிட்டே தள்ளிவிடுகிறது அரசு.
ஈக்விடாஷ் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 30,000 ரூபாய் கடன் வாங்கிய ஈஸ்வரி குடும்பம், தங்களது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருக்கிறது. “வாங்குன பணத்தையெல்லாம் நிலத்துலத்தான் போட்டோம். வர்ற வருமானத்துல கடனை அடைச்சுரலாம்னு மூக்குத்தி, தோடுகளை வித்து 21 தவணை அடைச்சுட்டோம். போனவாரத் தவணை கட்ட கையில காசில்ல. 420 ரூபா தவணையைக் கட்டினாத்தான் போவேன்னு எங்களை கூட்டி உக்கார வச்சுட்டான். என்ன மாதிரி நாலுபேரு காசில்லாம அழுவுறதப் பாத்துட்டு அக்கம் பக்கத்துக்காரங்க கொடுத்து உதவுனாங்க. அடுத்த தவணைக்கு என்ன ஆகுமோ தெரியல” என்கிறார் கண்களில் பீதியுடன்!
கடன் தவணையைக் கட்டுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை அடகு வைக்கிறோம் எனக் கூறும் திருவாரூர் மாவட்டம், கரப்பூர் கிராம விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.
குடவாசல் அருகிலுள்ள பரத்தியூர் கிராமத்தின் வீ.கீதா, விவசாய செலவுகளுக்காக தனது நிலத்தை முத்தூட் பைனான்சில் ஈடுவைத்து 25,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு மாதவட்டி கட்டமுடியாத நிலையில், கிராம விடியல் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 15,000 ரூபாய் கடன்பெற்று முத்தூட் கடனுக்கு வட்டி கட்டியுள்ளார். “இப்போ வைத்த விவசாயம் கருகிப்போனாலும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியும், தவணையுமா மாதம் 2,500 ரூபாய் நாங்க கட்டியாவனும். அதுக்கு இந்த பைனான்ஸ்காரங்களையும், மாத வட்டிக்காரங்களையும் விட்டா வேற வழியில்ல எங்களுக்கு” என்று தனது எதார்த்த வாழ்க்கையின் அவலத்தை விளக்குகிறார் கீதா.
திருவாரூர் மாவட்டம் கரப்பூர் கிராமத்தின் 50 வயதான முத்துலட்சுமியோ, தான் “சுய உதவிக்குழுவில் வாங்கிய கடன் தவணைக்காக, திருமணச் சீராகத் தனது பெற்றோர் போட்டுவிட்ட மூக்குத்தியை 7,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், இனி வீட்டிலுள்ள சில்வர், பித்தளை பாத்திரங்களை உள்ளூர் அடகுக்கடையில் விற்றால்தான் அடுத்தடுத்த தவணையைக் கட்டமுடியும்” என்று கூறுகிறார்.
கீழ்வேளூர் ஒன்றியத்தில் மட்டும் இதுபோல 160 குழுப் பெண்கள் ஈக்விடாஷ் நிறுவனத்தின் கடன் வலையில் சிக்கியுள்ளனர். ஈக்விடாஷ், கிராம விடியல், ஹெச்.எஃப்.சி., போன்ற நிறுவனங்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் 5,000 குழுக்கள் மூலம் ஒரு லட்சம் பெண்களைத் தங்களது கடன்வலையில் சிக்க வைத்துள்ளன. இந்த நுண்கடன் நிறுவனங்களைத் தனியார் சிறு வங்கிகளாக (SMALL BANKS) ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது. சிறுவிவசாயிகளுக்கு 8,000 ரூபாய்க்குமேல் பயிர்க்கடன் தரமறுக்கும் பொதுத்துறை, தனியார் வங்கிகள், இந்தத் தனியார் நிறுவனங்களில் பலநூறு கோடிகளை முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, தனியார் பயிர்க் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., ஈக்விடாஷ் நிறுவனத்தில் ரூ.105 கோடியை சமீபத்தில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக விவசாயிகளுக்கு கடன்கொடுத்துக் கிடைப்பதைவிட, அதிக வட்டியும், அசல் உத்தரவாதமும் இருப்பதுதான் இந்த முதலீடுக்குக் காரணம்.
நுண்கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த பெண்கள்.
இவை தவிர, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும் இயக்கி வருகிறார்கள். கிராமத்துப் பெண்களை விவசாய வேலைகள் தவிர்த்து தையல், சிறுவியாபாரம் போன்ற சுயவேலையில் ஈடுபடுத்தும் நோக்கில் அமலாகிவரும் இத்திட்டத்தில், குழுப் பெண்களுக்கு வங்கிகளில் கடன்வசதி செய்து தருகிறார்கள். இவ்வாறு, நாகை மாவட்டத்தில் மட்டும் 15,000 சுயஉதவிக் குழுக்களில் 2,33,400 பெண்கள் இணைந்துள்ளதாக மாவட்டப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்குவது ரூ.4,000 கோடி என்று கூறுகிறது தமிழக அரசு. ஆனால், மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கியதோ 7,600 கோடிரூபாய்.
நேரடியாக விவசாயத்திற்கு வழங்கும் கடனை விட, விவசாயமற்ற வேறுவகையினங்களுக்குக் கடன் வழங்குவதிலேயே அரசு தீவிர அக்கறை காட்டிவருகிறது. இதன் விளைவாகவே, விவாயிகள் தங்கள் சராசரி வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மைக்ரோ பைனான்ஸ், சுயஉதவிக் குழு, கந்துவட்டி கும்பலின் கடன்வலையில் சிக்கிவிடுகின்றனர்.இந்தக் கடன் நெருக்கடிதான் டெல்டா விவசாயிகளின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
டெல்டா மாவட்ட வறட்சி மற்றும் விவசாய மரணங்கள் குறித்து ஆய்வு செய்த உண்மை கண்டறியும் குழுவொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டுபோன ஒவ்வொரு விவசாயியும் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து 120% வட்டிக்குக் கடன் வாங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.
டெல்டாவில் எழவு விழுந்த பிறகு, பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதுபோல, கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவதாக அறிவித்த தமிழக அரசு, நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்டுத் தனியாரிடம் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் குறித்துக் கண்டுகொள்ளாமல் நழுவிக் கொண்டுவிட்டது. விவசாயிகள் செத்தாலும், தனியாரின் முதலீடுக்கும் இலாபத்திற்கும் பங்கம் வந்துவிடக் கூடாது எனக் கருதும் இந்த அரசுதான் மக்கள் நல அரசாம்!
17 ஜனவரி 2016, ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பைச்((Ambedkar student Association) சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா பார்ப்பன பாசிசத்துக்கு பலியான நாள். முன்னர் சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை, பின்னர் ரோஹித் வெமுலாவின் மரணம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்ற கல்விக்கூடங்களின் மீதான இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல் இப்போது மேலும் தீவிரமடைந்து பல்வேறு கல்வியிடங்களிலும் தன் தலையைக் காட்டுகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பு ஏபிவிபி-யால் தாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது அடுத்த நாள் காணாமல் போயுள்ளார். இவ்வாறு நாட்டை இறுகப்பற்றி வரும் பார்ப்பன பாசிசத்தையும், உயர்கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்திற்கான வெளி குறைந்து வருவதையும் எதிர்த்துக் கண்டனப் பேரணி ஒன்றை 17 ஜனவரி 2017 அன்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சென்னை ஐ.ஐ.டி-யில் ஒருங்கிணைத்திருந்தது. இக்கண்டன பேரணியில் 45 பேர் கலந்துகொண்டனர்.
மாலை 5:15-க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய ஆராய்ச்சி மாணவர் அனைவரையும் வரவேற்ற பின்னர், ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கான நீதிக்கான போராட்டத்தைப் பற்றி பேசினார், “ஒரு வருடம் கடந்த பின்னும் கூட ரோஹித்தின் மரணத்திற்கு காரணமான பாஜக-வின் ஸ்மிருதி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ராமச்சந்திர ராவ் மீதோ துணைவேந்தர் அப்பா ராவ் மீதோ சம்பந்தப்பட்ட ஏபிவிபி மாணவர்கள் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதிகோரும் நம் போராட்டத்தில் இன்னும் பெரிதும் அவநம்பிக்கையே நிறைந்துள்ளது. மேலும், நஜீபைக் கண்டுபிடிப்பதிலும் பெரிதும் மர்மம் நீடிக்கிறது. டெல்லிக் காவல்துறை தன் விசாரணையைத் தீவிரப்படுத்தக் கோரி நஜீபின் தாயார் பேரணி சென்ற போது, அவர் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டார். மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இப்போது அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. இந்துத்துவத்தின் இத்தகைய தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும், ரோஹித்தின் மரணத்துக்கு நீதியைப் பெறவும் இந்நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்கள் தீரவும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.”
மாணவர்கள் பேரணி
பின்னர் பேசிய ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர் “மாணவர்கள் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல்களை வெறும் சமூகரீதியான தாக்குதல்களாக மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொருளாதாரத் தளத்திலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலைச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் மிக அதிகமான கட்டணமுந்தான்.” அங்கு வந்திருந்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு முன்னும் பின்னும் அங்கு நடந்து வருவன பற்றி பேசினர். இன்னொரு மாணவர், அப்போது ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த ரோஹித் நினைவு தின நிகழ்ச்சியில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததைத் தெரிவித்தார். “ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு பின், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மணவர்களைக் கைது செய்த பின், பாஜக அரசும் அதன் சார்பான தேசிய ஊடகங்களும் ‘தேசியவாத – தேசவிரோத’ என்ற போலி விவாதத்தைக் கட்டமைத்தன. ஆனால் இவர்கள் சொல்லும் தேசமானது, பார்ப்பனிய ஒற்றைக் கலாச்சார இந்து-இந்தி-இந்துராஷ்ட்ரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது உண்மையில் ‘பார்ப்பனிய – பார்ப்பனியத்திற்கு எதிரான’ என்ற விவாதம் தான் என்பதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்போது கூட பண மதிப்பிழப்பினை நியாயப்படுத்தும் மோடி அரசு இத்திட்டத்தை விமர்சிப்பவரை எல்லாம் கருப்புப் பணம் வைத்திருப்போர் எனப் பழிபோடுகிறது. ‘தூய ஆட்சி செய்வோர் – கருப்புப் பணம் வைத்திருப்போர்’ என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த விவாதத்திற்குள் ஒளிந்திருப்பது என்ன?”
இவ்வாறு மாணவர்கள் பேசிய பின் பேரணி புறப்பட்டது. “மனுவாதத்திடமிருந்து ஆசாதி(விடுதலை)!” “பார்ப்பனியத்திடமிருந்து ஆசாதி!”, “ஆர்.எஸ்.எஸ். ஒழிக!”, “பாஜக ஒழிக!” “இன்குலாப் ஜிந்தாபாத்!” ஆகிய முழக்கங்களுடனும் பறையோசையுடனும் பேரணி நடந்தது.
தகவல்: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை ஐ.ஐ.டி
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம் ! பொதுக்கூட்டம்
நாள் : 26.02.2017 ஞாயிற்றுக் கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி.
அன்பார்ந்த விவசாயிகளே, பொதுமக்களே !
எடப்பாடி நீடிப்பாரா? மாட்டாரா? மறு தேர்தல் வருமா? வராதா? அடுத்த முதல்வர் யார்? என்பதல்ல தமிழக மக்களின் முக்கியப்பிரச்சினை. நமது வாழ்வாதரங்களும், வாழ்வுரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோகின்றன. கலாச்சாரம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக சிந்தனை ஆகியவை காட்சிப் பொருளாக்கப்பட்டு, காடுகளில் வாழும் மிருகம் போல் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னும், பேரவலம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறது. பெண்குழந்தைகள் மீதான பாலியல் வண்கொடுமைகள், கொலை, கொள்ளை இவை அபாயகரமாக அதிகரித்திருக்கின்றன. இது தான் தமிழகத்தின் இன்றைய அசாதரனமான பிரச்சினை.
தமிழக விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் செத்துமடிகின்றனர், வங்கி கடனும், கந்துவட்டி கடனும் அவர்களுக்கு தொடர்ந்து எமனாக நிற்கிறது. கருகிய பயிற்களுக்கும், இறந்த உயிர்களுக்கும், அறிவித்த தமிழக அரசின் நிவாரணம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிறது.
விவசாயம் செய்வது குற்றமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. தப்பிக்க வழிதெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். சிறைச்சாலையில் கூட கைதிகளுக்கு உணவு, உடை, மருத்துவம், என குறைந்த பட்சம் அரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது. விவசாயியோ, எந்தவித உத்திரவாதமும் இல்லாமல், திறந்த வெளிச்சிறைச் சாலையில் சிக்கிய கைதியாக செத்துமடிகின்றான். அழிந்துவரும் டெல்டா விவசாயத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், எந்த உருப்படியான திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை.
விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கும், சொசைட்டியில் வாங்கிய பாலுக்கு பணம் தராத அரசு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்த வேலைக்கு சம்பளம் தராத அரசு. செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. முழுமையான நிவாரணம் இல்லை. ஆனால் அம்பானி, அதானி, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 37 லட்சம்கோடி வரி தள்ளுபடியும், இரண்டுலட்சம் கோடி கடன்தள்ளுபடியும் செய்துள்ளது.
மேலும் பல லட்சம் கோடி கடனும் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றும் என்று எப்படி நம்புவது? ஏழு கோடி தமிழர்களை ஆள்வதற்கு, இந்த ஜனநாயக அமைப்பு முறையில் சசி-ஓபிஎஸ் போன்றவர்களைத் தான் முன்னிறுத்த முடிகிறது. இது அதிமுக-வின் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி. நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களும் இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வுகாண முடியாத நிலைக்கு வந்துள்ளன.
மங்காத்தா ஆட்டம் போல் தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவது தொடர்ந்தால் இன்று ஓபிஎஸ் – சசி நாளை சிம்பு தனுஷ் தான் கதி. காவிரி உரிமை, நீட்தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு, என தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை நசுக்கி வரும் மோடி அரசு, அதிமுகவை பிளந்து தமிழகத்தை அடக்கியாள முயல்கிறது. மறைந்த ஜெயா தலைமையிலான மன்னார்குடி சசி கொள்ளைக்கும்பலுக்கு 10 ஆண்டுகளாக வருவாய் துறை, பொதுப்பணி, நிதி அமைச்சர் என வசூலை அள்ளிக்கொடுத்த ஊழல் தளபதிதான் ஓபிஎஸ் வகையறா. சேகர் ரெட்டியோடு சிறைக்கு அனுப்பப்படவேண்டிய பன்னீர் செல்வத்தை மோடி அரசு ஆதரிப்பதில் இருந்து பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ஊழல் எதிர்ப்பு யோக்கியதைதெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் நடப்பது என்ன? ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகளில் ஆலைக்கழிவுகள், பெருநகரகழிவுகள் கொட்டப்படுகின்றன. வரன்முறையில்லாத மணற் கொள்ளையால் ஆறுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுக்கும், கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் கர்நாடகத்திற்கும், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. சாக்கடைக் கழிவுகளால், முள்காடுகளால் நமது ஆறுகள் மூடிக்கிடக்கின்றன. நீர் நிலைகள், புறம்போக்கு நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவில் தனியார் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியாவினாலும் அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதோ, நிவாரணத்தொகையைக் கூடுதலாகக்கேட்டு மன்றாடுவதோ பொருளற்றது. உணவுப்பொருள் இறக்குமதி மானியம் ரத்து, கொள்முதல் நிறுத்தம், நீர்நிலை பராமரிக்காமல் கைவிடுவது என திட்டமிட்டு விவசாயத்தை இந்த அரசு அழிக்கிறது. விவசாயிகள் தானாக விவசாயத்தை விட்டு ஓடட்டும் என்றுதான் அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?
இத்தகைய பேரழிவுகளுக்கு காரணம் ஏற்கனவே ஆண்ட – ஆளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான். தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, ஒட்டுமொத்த கட்டமைப்பும் மக்களுக்கெதிரானதாக மாறிவிட்டது.
தீப்பிடித்து எரியும் வீட்டைப் போன்ற நிலையில் இருக்கிறது நாடு. எரிகிற வீட்டுக்கு உள்ளேயிருந்து தீயை அணைக்க முடியாது. இந்த அரசுக்குகட்டமைப்புக்கு உள்ளேயிருந்து கோரிக்கை வைத்தோ, மன்றாடியோ விவசாயத்தைக் காப்பாற்றமுடியாது. அப்படி மட்டுமே சிந்தித்து சிந்தித்துதான் இந்தநிலைக்கு வந்திருக்கிறோம்.
மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.
டெல்டாவில் மட்டுமல்ல ஒட்டு மொத்த விவசாயிகளையும் காப்பாற்ற அத்தகைய போராட்டங்களை தமிழகம் கோருகிறது. காவிரி, ஜல்லிக்கட்டு, கல்வி, மருத்துவம், மீத்தேன், கெயில், கரும்பு, நெல்லுக்கு விலை என ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனி தனிப் போராட்டம் என்பதை மாற்றி மக்கள் அதிகாரத்திற்கான போராட்டமாக மாற்றுவதைதவிர வேறுவழியில்லை.
இந்த அரசுக் கட்டமைப்பில் விவசாயிகளின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. நமக்கு தேவை மக்கள் அதிகாரம் என்பதை விளக்கும், இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தாருங்கள். உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்.
தகவல் : மக்கள் அதிகாரம். திருச்சி – தஞ்சை -திருவாரூர் – நாகை மாவட்டங்கள். 94454 75157, 94431 88285, 96263 52829, 89037 36020.