Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 637

சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?

1

bank-theft-may-still-impact-consumersத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திலிருந்து ‘இரகசிய’ ஆவணங்கள் திருடு போனதாக வெளியான செய்தி, சிலருக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆவணத் திருட்டு விவகாரத்தில், பெட்ரோலியம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சகங்களைச் சேர்ந்த ஐந்து அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களைச் ஐந்து பேர்களும், சாந்தனு சாய்க்கியா எனும் முன்னாள் பத்திரிகையாளர் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடப்பட்ட ஆவணங்களில் பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேறவுள்ள நிதி நிலை அறிக்கை குறித்த இரகசியத் தகவல்களும், நிதி அமைச்சரின் உரைக்குத் தேவையான புள்ளி விவரங்களும் இருந்தனவாம். மேலும் எரிசக்தி, பெட்ரோலிய துறைகளில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள் மற்றும் இத்துறைகள் சார்ந்து இயங்கும் ஊக வணிகம் தொடர்பான முடிவுகள் குறித்த அடிப்படைக் குறிப்புகளும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தின் நகலெடுக்கும் எந்திரத்தின் அருகில் இரகசிய ஆவணம் ஒன்றின் பிரதிகள் காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தில்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வலைவிரித்ததாகவும், தில்லி போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் தான் இந்த ஐவர் குழு பிடிபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது பற்றி தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் ஒவ்வொன்றிலும் மோடி அரசின் ’கறார்த்தனம்’ பற்றிய விவரணைகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன. இதற்கிடையே, தில்லியின் புதிய முதல்வரான விளம்பர புகழ் கேஜ்ரிவால், ஆவணங்கள் களவு போன விவகாரத்தை தாம் சும்மா விடப்போவதில்லை என்று தானும் பயங்கர “டெரர்” பார்ட்டி தான் என்று தேசத்திற்கு அறிவித்துள்ளார்.

modiஊடகங்களோ, அரசு அலுவலகங்களின் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது, எங்கெல்லாம் கேமரா வைப்பது, கள்ளச் சாவி தயாரிப்பைத் தடுப்பது எப்படி என்றெல்லாம் அரசுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றன. அதிகார வர்க்கமே சிந்திக்கத் தடுமாறும் கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு, முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஆர்.கே ராகவனை வைத்து ஒரு நடுப்பக்க கட்டுரையை வெளியிட்டுள்ளது. அவரும் தனது போலீசு மூளையைக் கசக்கி திருட்டைத் தடுப்பது எப்படி என்று கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

ஆவணத் திருட்டு குறித்த செய்திகள் வெளியாகும் இணையதளங்களுக்கு படையெடுக்கும் மோடி பக்தர்கள் படை, காங்கிரசால் வளர்த்து விடப்பட்ட கார்ப்பரேட் பெருச்சாளிகளுக்கு மோடி ஆப்பு வைக்கத் துவங்கியுள்ளதாக குதூகலத்துடன் மறுமொழி எழுதி வருகிறார்கள். இதே வேலையில் சில ஆங்கில ஊடகங்களும் ஈடுபட்டு மோடி பக்தர்களுக்கு ”டஃப்” கொடுத்து வருகின்றன. மோடியின் கறார்த்தனத்தை போற்றும் பக்தர்களோ, அம்மாவுக்காக தன்னையே சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹுசைனியைப் பார்த்து வாய்பிளந்த தமிழக அமைச்சர்களின் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களைப் பொறுத்தவரை மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஆவணத் திருட்டு என்ற செய்தியே கடும் அதிர்ச்சியாக அவர்கள் தலையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசு போடும் பட்ஜெட்டே முதலாளிகள் சங்கமான சி.ஐ.ஐமுன் நிறைவேற்றப்பட்ட பின் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பது கடந்த சில பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மறைமுக நடைமுறை. மத்திய அரசு ஆண்டு தோறும் நிறைவேற்றும் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு அம்சமும், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானவை என்பது நேற்றுப் பிறந்த குழந்தை கூட அறிந்த அப்பட்டமான உண்மை.

மோடி அரசு பதவியேற்ற பின் கடந்த ஓராண்டுக்குள் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்துள்ள நன்மைகளை நூலாகத் தொகுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், அது ஆண்டுக்கணக்கில் ஓடும் மெகாத் தொடரையே விஞ்சிவிடும் என்பதால், பருந்துப் பார்வையில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

  • அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மோடியே நேரடியாக பாகிஸ்தான் பிரதமரிடம் புரோக்கர் வேலை பார்த்தார்.
  • இரயில்வே போன்ற துறைகளில் பாதியும் மற்ற பொதுத் துறை நிறுவனங்களில் 100 சதவீதமும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விட்டார்.
  • 88,000 கோடி ரூபாய்க்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
  • பாதுகாப்புத் துறையில் 100% நேரடி அன்னிய மூலதனத்தை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.
  • கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் நிலங்களை குவிக்கும் வகையில் நிலச் சீர்திருத்த சட்டதிருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார்.
  • கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கிய வரிச்சலுகையைவிட பல மடங்கு அதிகமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்.
  • அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட பிரதமரே நேரடியாகச் சென்று புரோக்கர் வேலை பார்த்ததோடு, அதற்கான முதலீடுகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ஆறாயிரம் கோடி கடனுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
  • விவசாயிகள் வாங்கும் டிராக்டர் கடன்களுக்கான வட்டி வீகிதத்தை விட மேட்டுக்குடியினர் வாங்கும் கார் லோன்களின் வட்டி விகிதங்கள் குறைவு.
  • கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதை உத்திரவாதப்படுத்த வனச் சட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சட்டங்களில் திருத்தம்.
  • கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு அரசுத் துறைகளில் அனுமதி வாங்கிச் சிரமப்படுவதைத் தவிர்க்க ஒற்றைச் சாளர முறை
  • வங்கிக் கார்ப்பரேட்டுகள் கொழுக்க ஜன் தன் யோஜனா.
  • தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, அதனால் முதலாளிகள் மனம் புண்பட்டுப் போவதைத் தடுக்க தொழிலாளர் நலச் சட்டங்களின் பற்கள் பிடுங்கப்பட்டது.
  • தொழிற்சாலையின் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்கு இருந்த வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது.

எதை விட எதை எடுக்க என்ற திணறலோடு இந்தப் பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.

ஒட்டுமொத்த அரசும், அரசின் நடவடிக்கைகளும், அது முன்வைக்கும் நிதி நிலை அறிக்கை என்ற மோசடியும் முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த தில்லி சாஸ்திரி பவனுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பும் அந்த தொடர்பை பராமரிக்கும் லாபியிங் நிறுவனங்களும் யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சாந்தனு சாய்க்கியா என்ற முன்னாள் பத்திரிகையாளர் சொந்தமாக ஒரு லாபியிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பெட்ரோலியம், எரிசக்தி மற்றும் நிலக்கரி அமைச்சகங்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அந்த அமைச்சகங்களின் கொள்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதாக சொல்லிக் கொள்ளும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பகாசுர தரகு முதலாளிகளே உள்ளனர்.

தரகு முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு லாபியிங் நிறுவனம் என்றில்லாமல், அரசின் நடவடிக்கைகளை முன்னரே உளவறிந்து தெரிந்து கொள்வதற்காக பல்வேறு லாபியிங் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல.

the thiefகாங்கிரசோ, பாரதிய ஜனதாவோ மாறி மாறி வரும் எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதே என்றாலும், அது எந்தளவுக்கு சாதகமானது, அதில் தனக்கு என்ன லாபம், தனது போட்டியாளருக்கு என்ன லாபம் என்று அறிந்து கொள்ள தரகு முதலாளிகளும் பெரும் கார்ப்பரேட்டுகளும் பெரும் ஆர்வம் காட்டுவதுண்டு.

சி.ஐ.ஐ, அசோசாம் போன்ற அமைப்புகள் மூலம் முதலாளிகள் அரசின் கொள்கைகளை தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு மக்களின் செல்வங்களைச் சூறையாட தமக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றன. என்றாலும், ஒவ்வொரு முதலாளியும் தனது போட்டியாளனை தீர்த்துக் கட்டி போட்டி நிறுவனத்தின் சந்தையைக் கபளீகரம் செய்தன் மூலமே உயிர்த்திருக்க முடியும் என்பது மூலதனத்தின் விதி.

2ஜி, காமன்வெல்த், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் போன்ற மக்களின் கவனத்திற்கு வரும் முறைகேடுகளும் கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும் அரசின் நேர்மை நாணயத்தின் விளைவாக வெளிப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்றும் கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடக்கும் நாய்ச்சண்டையின் விளைவு. கனிமொழிக்கும் நீரா ராடியாவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் வெளியானதும், அதைத் தொடர்ந்து 2ஜி ஊழல் பரந்துபட்ட அளவில் பேசு பொருளானதும் கார்ப்பரேட் சிண்டிகேட்டுகளிடையே நடந்த மோதலின் விளைவு தான்.

தற்போது நடந்திருக்கும் கைதுகளின் பின்னணியிலும், ’இரகசியங்களை’ முன்கூட்டியே அறிந்து கொள்ளத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளின் தவிப்பும், அதில் அவர்களுக்கிடையில் இருந்த போட்டியுமே வெளிப்படுகிறது. லாபியிங் நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்காத ஒரு நாட்டில், நாடாளுமன்ற விவாதங்களுக்கு முன்பே கார்ப்பரேட் கருவறையில் வைத்து நிதிநிலை அறிக்கை பூசிக்கப்படும் ஒரு நாட்டில், அதன் விவரங்களில் கொஞ்சம் கசிந்து விட்டதாக கூப்பாடு போடும் இந்த கேலிக்கூத்திற்கு காரணம் என்ன?

அடுத்து வரும் நாட்களில் கார்ப்பரேட்டுகளிடம் ’கட் அண்ட் ரைட்டாக’ நடந்து கொண்ட பிரதமர் சோட்டா பீம் பற்றிய பரபரப்புத் தகவல்களும், கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் இரகசியங்களை விற்ற காசில் எந்தெந்த நடிகைகளோடு ‘உல்லாசமாக’ இருந்தார்கள் என்ற ’அதிமுக்கியமான’ தகவல்களும் நாளிதழ்களின் பக்கங்களை அடைத்துக் கொள்ளப் போகின்றன. இந்த இடைவெளியில் எதிர் வரும் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவின் வளங்கள் சல்லிசான விலையில் அள்ளி வழங்கப்படும்.

2ஜி, நிலக்கரி ஊழல்கள் பரபரப்பாக பேசப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வரலாறு காணாத நிதிச் சலுகைகள் வரிவிலக்குகள் என்ற பேரில் அள்ளி வழங்கப்பட்டன, அதே காலகட்டத்தில் தான் பல்வேறு மக்கள் விரோத சட்ட திருத்தங்கள் பெரும் விவாதங்கள் இன்றியும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படாமலும் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு முறை பெரிய ஊழல் புகார்கள் வெடித்த போதும் நடந்தது இது தான். இம்முறை நாம் வெறுமனே திருட்டைப் பற்றி மட்டும் பேசப்போகிறோமா அல்லது திருட்டிற்கு காரணமான அரசின் கொள்கைகளைப் பற்றிப் பேசப் போகிறோமா?

–    தமிழரசன்.

கண்ணீர் அஞ்சலி

3

நான்காம் ஆண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி

நேற்றுவரை எம்மோடு இருந்தாய்
எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய்
காலமெல்லாம் எமைக் காத்திருப்பாய் என்றிருக்க
கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீ போனாய்
ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா
உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.

– உன் நினைவால் வாடும் குடும்பத்தார்.

ந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பாத்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அது செத்தவனுக்காக வந்த அழுகை அல்ல, பற்றியெறியும் ஆத்திரத்தை தணிக்க கண்கள் கொட்டிய நீர்.

கண்ணீர் அஞ்சலிஊரைச் சுத்தி எங்கெ பார்த்தாலும் இவனோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூஞ்சீல அடிச்சது. யோசிச்சுப் பார்த்தேன், இவன் செஞ்ச காரியத்துக்கு இவனைப் பெத்தவ கூட ஒரு சொட்டு கண்ணீரு வடிக்க மாட்டா. அப்படிபட்ட படுபாவிப்பயலு கண்ணீர் அஞ்சலி போஸ்டரெல்லாம் ஒரு கேடா?

ஊருல உள்ள பெரும் பணக்காரங்கள்ள இவனும் ஒருத்தன். பல ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரன். கல்யாணம் பண்ணி 25 வருசமா பிள்ளை கிடையாது. அவம் பெஞ்சாதிய கூட்டிகிட்டு போவாத ஆசுபத்திரியும் இல்ல, அவளுக்கு பண்ணாத வைத்தியமும் இல்ல. ஆனா பிரச்சின இவன்கிட்டதான்னு ஊருக்கே தெரியும்.

சொத்து பத்து வச்சிருந்தாலும் தனக்கு வாரிசு இல்லேங்கறத ஒத்துக்க மனசில்ல. பிள்ள இல்லன்னாலே பொம்பளைங்கள மட்டும் சோதிப்பது பொதுவான ஊர் நீதியா இருக்கிற பழக்கத்த அவன் மட்டும் மாத்துவானா என்ன? அதை நல்லா பயன்படுத்திக்கிட்டான்.

மூத்த பொண்டாட்டிய மலடின்னு முத்திர குத்திட்டு சொத்துக்கு வாரிசு வேணுமின்னு நடாயிய (நடு ஆயி) கட்டிக்கிட்டான் இந்தப் பாவிப்பய. இவங் கையாலாகதனத்தால இன்னிக்கு வாழ வேண்டிய வயசுல எல்லாத்தையும் எழந்துட்டு எதிர்காலம் என்னன்னு தெரியாம கேள்விக்குறியாகி நிக்கிறா ‘நடாயி’. நாலு ஆணு; மூணு பொண்ணு – இவங்களுக்கு மத்தியில பொறந்ததால இவ பேரு நடாயி.

நடாயியோட மூத்த அக்கா புருசன் செத்துப் போக, ரெண்டு பொம்பளப்பிள்ளையோட பெத்த வீட்டுக்கே அவ திரும்பி வந்து நாலு வருசமாச்சு. மூத்த அண்ணனுக்கு பஸ் டிரைவர் வேலை. நிதானமெல்லாம் பஸ்சுலேர்ந்து எறங்கற வரைக்கும் தான், வீட்டுக்கு வரும் போது நிதானத்த டாஸ்மாக்குல வித்துட்டு வந்துருவான். பொண்டாட்டி பிள்ளைங்க இருந்தும் வீட்டுக்கு பொறுப்பில்லாதவன்.

சின்ன வயசுலேயே கால பறிகொடுத்து கட்டக்கால் வச்சுகிட்டு வாழ்க்கை கெடைக்குமாங்கற கனவோட கல்யாண வயச கடந்தவன் இன்னொரு அண்ணன். பள்ளிக்கூடத்துல முதல் மார்க்கு வாங்கியும் பணம் கொடுத்தாதான் நல்ல படிப்பு படிக்க முடியுங்கற நெலமைக்கி பலியானவன் தம்பி. பேருக்குப் பின்னாடி போட மட்டுமே ஆகிற பார்ட் டயம் படிப்பும் மத்த நேரத்துல வாயிக்கும் வயித்துக்குமான உதிரி வேலையுமா அல்லாடிகிட்டிருந்தான் தம்பி. இத்தன கஷ்டம் குடும்பத்துல இருந்தாலும் காதலில் உறுதியா இருந்தா தங்கச்சி.

நடாயியோட குடும்பம் தத்தளிச்சுகிட்டு இருந்த நெலமைய தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு நடாயிக்கு வாழ்க்கை கொ(கெ)டுக்கறேன்னு வந்தவன்தான் இப்ப கண்ணீர் அஞ்சலி போஸ்டருல மொறைச்சிப் பார்க்கிறவன்.

ஊர்ல கிராமத்துல பெத்தவங்களுக்கு என்னத்த பொறுப்பு; ஆண்டவன் அவங் கடமைக்கு புள்ளைய குடுத்தான், நம்ம கடமைக்குப் பெத்துப் போட்டாச்சி. ஏதோ கால் வயிறோ அரை வயிறோ சோத்தை மட்டும் போட்டு வளத்து விட்டா போதும். கை, கால் நல்லாருந்தா அதுங்க தானா பொழச்சுக்குன்னு நெனச்சாங்க பெத்தவங்க. படிப்பு, வரதச்சனை, வேலையின்னு பிள்ளைங்க வாழ்க்கைக்கு இவ்வளவு நெருக்கடி வரும்னு யோசிச்சிருக்க மாட்டாங்க. யோசிக்கவும் தெரியாது.

குடும்ப நெருக்கடிகள் ஒண்ணு கூடி நடாயி தலையில இடியா விழுந்தது.

அம்பது வயசான ஆம்பளைக்கும் இருவத்தி அஞ்சு வயசான நடாயிக்கும் நடக்குற கல்யாணத்துல எந்தத் தடையும் வந்துரக் கூடாதுன்னு ரகசியமா பேசி முடிச்சுட்டு, மொத தாரத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடிதான் சொன்னாங்க. அவங்க பொறந்த வீட்டுக்கும் இதப்பத்தி தெரியப்படுத்தல. நெருங்கிய உறவுக்காரங்க மட்டும் கலந்துகிட்டு ஒரு கோயில்ல வச்சு காலையில 7 மணிக்கி கல்யாணம் முடிச்சது. ஓட்டல்ல சாப்பாடு முடிஞ்சு 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுச்சு கல்யாணக் கும்பல்.

கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துக்கெல்லாம் முதல் தாரத்து வீட்டுல விசயம் தெரிஞ்சு அவங்க சொந்தபந்தம் ஊர்க்காரங்கன்னு பெரிய கூட்டமா வந்தாங்க. “என் சம்மதத்தோடதான் நடக்குது எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க”ன்னு சொல்லிக் கொடுத்தத, சொல்லிக் கொடுத்தபடி சொல்ல வச்சிட்டாங்க. மலடின்னு பட்டத்த சொமத்தி இருவத்தஞ்சி வருசமா படாத பாடெல்லாம் படுத்தினவங்க இப்படி பேசலைன்னா என்னெல்லாம் செஞ்சிருப்பாங்களோ. ஆனா, நம்பிக்கையா வாழ அனுப்பிச்ச பொண்ணோட வாழ்க்கை கண்ணு முன்னாடி பறிபோச்சேங்கற ஆத்தரம் அடங்கல அவங்களுக்கு.

பொருந்தாத் திருமணம்
நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இருந்திருப்பா

“பிள்ள பெத்துக்க தகுதி இல்லாத மலட்டுப் பய நீ தான், என் தங்கச்சிதாண்டா உன்ன ஒதுக்கி வைக்கணும். ஒண்ணும் தெரியாத பொண்ண பயமுறுத்தி ஒத்துக்க வச்சிருக்கியா. இத இப்புடியே விட்டுட்டு போயிடுவோம்னு நினைக்காதே. யாருக்கு பிள்ள பெத்துக்க முடியலன்னு கோர்ட்டுல போயி தெரிஞ்சுக்குவோம். இன்னும் ஒரு மணி நேரத்துல போலீசோட வந்து ஒம்மானத்த சந்தி சிரிக்க வைக்கல, நாங்க ஒரு பக்கத்து மீசைய எடுத்துக்கிறோண்டா”ன்னு ஊரே பாக்க சத்தம் போட்டபடி வண்டிய எடுத்துகிட்டு கிளம்பிட்டாங்க.

தன்னோட ஆண்மை மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சு இருவத்தஞ்சி வருசமா போராடி தோத்தவன் அவன். வைத்தியத்தையும், மருந்தையும் கூட மொத தாரத்து தலைல சொமத்தி ஊருக்குள்ளே மீசைய முறுக்கிக்கிட்டு அலைஞ்சவன். அசட்டு நம்பிக்கையில ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுக்க துணிஞ்சி நின்னவனுக்கு முத தாரத்து குடும்பத்த சேர்ந்தவங்க சத்தம் போட்டுப் போன பின்னே திகிலடிச்சுப் போச்சு. அவங்க சொன்னா மாதிரி கோர்ட்டு கேசுன்னு போனா ரெண்டாவதா வந்தவ குடும்பத்து முன்னாடியும் ஊர் முன்னாடியும் அம்பலப்பட்டு போயிருவோமோ என்ற பயந்துட்டான்.

பவிசு கௌரவத்துல விட்டுக்கொடுக்காதவன் மலட்டுப்பட்டம்தான் கதின்னா என்ன செய்வான்?

அன்னைக்கி மதியம் மூனு மணியிருக்கும் ஊரே ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா கத்திகிட்டே ஓடுனாங்க. கரும்பு தோட்டத்து பம்பு செட்டுல வயலுக்கு வச்சிருந்த பூச்சி மருந்த குடிச்சுட்டு செத்துக் கிடந்தான் அந்த கௌரவக்காரன்.

“அய்யோ பாவமே எந்த ஊருல இப்படி ஒரு அநியாயம் நடக்கும். கடவுளே நீ இருக்கியா இல்லையா. எம்பது வருச வாழ்க்கையில இதுபோல நான் பாத்ததே கெடையாதே” என்று ஆளாளுக்கு ஆயாசத்த ஆச்சர்யமா பேசிட்டிருந்தாங்க கரும்புக் கொல்லையில.

காலையில கட்டுன பட்டுப்புடவ கசங்காம, புதுத்தாலி, மஞ்சள் குங்குமமுமா மணவறைக் கோலம் கலையாமல் இருந்த நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இந்தக் கல்யாணத்துக்கு முந்தி இருந்திருப்பா. ஆனா நெனச்ச வாழ்க்கை, பிடிச்ச வாழ்க்கை எல்லாம் பொம்பளைக்கி கெடைக்கிறது அவ்வளவு சுலபமில்லங்கறது தான் இவ விசயத்திலும் நடந்தது.

சோகம்
இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.

விரும்பாத இந்த வாழ்க்கை போனதை நெனச்சு சந்தோசப்படுவாளா?, இருந்ததும் போச்சேன்னு வருத்தப்படுவாளா? சில மணி நேரத்துக்கு முன்னாடி வந்துபோன வாழ்க்கை மேல் என்ன உணர்வு வரும் அவளுக்கு? எந்த உணர்ச்சியக் காட்ட முடியும் அவளால? உணர்ச்சியற்ற சிலையாய் எதிர்காலம் என்னவாகும் என்ற கலவரப்பட்ட முகத்தோடு கருங்கல்லாதான் நின்னா.

ஊர் கூடியது, கல்யாண வீடு எழவு வீடா மாறியது. கல்யாணப் பொண்ணு காட்சிப்பொருளா மாறிப் போனா.

“சொத்துபத்த ஆள பிள்ள வேணுன்னு என்னா ஆசையா கல்யாணம் பண்ணினான். கொஞ்சம் புத்திய செலுத்தி இருக்காமே, இப்படி அல்ப ஆயிசுல போய்ட்டானே பாவிப்பய”

“யாரு விட்ட வாசாப்போ அன்னைக்கே கட்டி, அன்னைக்கே அறுத்துட்டா. போன பிறவியில என்ன பாவம் செஞ்சாளோ”

“அந்தப் பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருந்துருக்கு, சரியா சாதகம் பாக்காம இப்படி பண்ணிட்டாங்க”

“தாலி கட்டிட்டான், இனி பொண்டாட்டி இல்லேன்னு ஆயிடுமா? இனிமேட்டு எப்ப பாக்கப் போறா. கிட்டக்க வந்து அழுக விடாமெ வீட்டுக்குள்ளேயே எதுக்கு உக்கார வச்சுருக்காங்க.”

“நாலு பேருக்கு எழவு கொடுக்கவே பந்தல்ல உக்கார வைக்காத அவங்க அப்பமூட்டு சனம். தாலி அறுக்குற சடங்கெல்லாம் செய்ய விடுவாங்களா?”

எழவுக்கடையில ஊர் சனங்களால அவளுக்கு எழுதப்பட்ட நீதி இப்படிதான் இருந்துச்சு. இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.

மறுமணம்
நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா?

இரவு ஏழு மணிக்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சதும் மொதோ தாரத்துக்கு தாலியறுக்கும் சடங்கு ஆரம்பமாச்சு. “சின்ன பொண்ணு பாவம், எதுவும் செய்ய வேண்டாம். மனசாட்சி வேணும் நமக்கும். காலையில தாலி கட்டி சாயந்தரம் அறுக்குறது ரொம்ப கொடுமை. இன்னும் ரெண்டு நாள் போகட்டும். அந்தப் பொண்ணையே கழட்டிட சொல்லலாம்”னு கூடியிருந்த ஆம்பளைங்க முடிவெடுத்தாங்க. அந்த அசிங்கத்த பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுத்ததா நெனச்சாய்ங்க அந்த பெரிய மனுசனுங்க.

நடாயி நெலைமை அந்தப் பெரிய மனுசங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு வருமா? வந்தாலும், இதே மாதிரித் தான் பெருந்தன்மையா பேசுவாங்களா? ரோசங்கெட்ட புழுவுக்கும் கூட நாலு குத்து சேர்த்துக் குத்தினா கோபம் வருமே. அந்த கோபங்கூட சம்பந்தப் பட்டவங்களுக்கு இல்லையே. நடந்தது கல்யாணமும் இல்ல, அவ பொண்டாட்டியாவும் இல்லன்னு ஊருக்கே தெரிஞ்சு தான் இருந்துச்சு. ஆனாலும் செஞ்ச தப்புக்கு விதியை காரணம் காட்டி அமைதியா இருந்தது தான் ஊர்க்கார பெரியமனுச நியாயம்.

கூடப் பொறந்தவன் செத்துப் போன இழப்பை விட அவன் விட்டுப் போன கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து பெரிசாச்சே. செத்தவனோட தம்பிக்காரனுக்கு போஸ்டரடிக்கிற செலவை விட அண்ணங்காரனால வரவு பல மடங்கு அதிகம். அதனால தான் வருசத்துக்கு ஒருதரம் தன் துக்கத்த வண்ண வண்ணமா கண்ணீர் அஞ்சலி போஸ்டறடிச்சு ஊரு பூரா வளைச்சு வளைச்சு ஒடறான் தம்பிகாரன்.

நடாயி வாழ்க்கைக்கு சவக்குழி தோண்டி நாலு வருசமாச்சு. அவளுக்கு ஏதாவது வழி செய்யறதா நெனச்சு சொத்துல பங்கு வேணுன்னு கோர்ட்ல கேஸ் போட்டாங்க. எதுவும் சட்ட பூர்வமா நடக்கல. கட்டபஞ்சாயத்து பேசி ஒன்ட்ர லச்சம் பணம் கொடுத்து ஒதுக்கி விட்டுட்டானுங்க. நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா? ஆனா, திரும்பத் திரும்ப ஊரு, மரியாதை, சாதி, சனமுன்னு அவ வாழ்க்கையை கெடுத்த சமூகத்துக்கு பயந்து அதுக்குள்ளேயே இன்னமும் சுத்தி வாராங்க. அவங்க ஊருல விதவைங்கன்னா ஆயுசு பூரா அடக்கவொடுக்கமா ஆயுள் கைதியா சுத்தி வரணும்.

நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?

– சரசம்மா

(உண்மைச் சம்பவம்)

சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

1

காட்டுமன்னார்குடி வட்டம் காவாலக்குடி கிராமத்தின் வெள்ளாற்று படுகையில் 10 ஆண்டுகளாக மணல் அள்ளியதால் ஆறு இறால் குட்டை போல் மாறி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயம் பாதிப்படைந்தது.

காவலக்குடி குவாரி முற்றுகை
மணல் குவாரியை மூடக் கோரி மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)

அதே வெள்ளாற்றுப் படுகையைச் சேர்ந்த கார்மாங்குடி கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சேர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் அப்பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் அள்ளுவதை நிறுத்தியதை அறிந்த காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.

ஆனால், அப்பகுதி மக்களின் மீது “அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக” PWD செயற்பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த பொய்ப் புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது; மேலும் கு.வி.மு.ச 107 சட்டப்பிரிவின் கீழ் சார் ஆட்சியர் விசாரணை நடந்து வருகிறது.

இதனைக் கண்டித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 24-2-2015 காலை 11 மணி அளவில் “சர்க்காரும், சட்டமும் யாருக்காக?” என்ற கேள்வியுடன் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் காவாலக்குடி, சாந்திநகர் பகுதி மக்களை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சிதம்பரம் பகுதி மாவட்ட இணைச்செயலாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, கடலூர் மாவட்டச் செயலாளர் செந்தில், கடலூர் மாவட்ட பொருளாளர் செந்தாமரைகந்தன் மற்றும் உறுப்பினர்கள் முஜிபூர் ரஹ்மான், செல்வக்குமார், ஜோதி ராமகிருஷ்ணன் மற்றும் சாந்தி நகர் காவாலக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 01.00 வரை முழக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் கண்டன உரைகளுடன் எழுச்சியோடு நடைபெற்றது.

முன்னதாக காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்
காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன உரைகள் :

வழக்கறிஞர் செந்தில், கடலூர்

ஏற்கனவே 100 அடி ஆழம் இருந்த போர் இன்று அளவுக்கதிகமாக மணல் அள்ளியதால் 200 அடி போட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஏற்கனவே மின்சார பிரச்சனையால் விவசாயிகள் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்; இருக்கும் நிலத்தடி நீரையும் நாம் இழக்க முடியாது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக 107 பிரிவில் வழக்கு போடச் சொல்லி யார் காவல்துறையிடம் புகார் கொடுத்தது?

ஆர்.டி.ஓ.-வைப் பார்க்க காலை 10 மணிக்கு வரவழைத்து மாலை 4 மணி வரை காத்திருக்க வைத்து மக்களை அலைக்கழிக்கிறார்கள்.

அதிகாரிகள் யாரும் சட்டத்தை மதிக்காதபோது நாம் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்

செங்குட்டுவன், காவலக்குடி வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்

அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வந்தால் ஆர்.டி.ஓ, “ஊருக்கு ஏதாவது செய்கிறோம். மணல் அள்ள விடுங்கள்” என்று கேட்கிறார். இவர் என்ன லஞ்சப் பணத்தை வைத்து எங்கள் ஊருக்கு நல்லது செய்யபோகிறாரா?

இந்த PWD இன்ஜினியர், 500 லோடு மணல் எடுத்துவிட்டு 100, 150 லோடு என்று கணக்கெழுதுபவர், எங்கள் மீது பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பொய் வழக்கு போட வைத்தார்.

“ஆற்றில் டெட்பாடி கிடக்கிறது” என்று அதை ஒரு கொலை வழக்குகாக புகார் செய்ய காவல் நிலையம் சென்றால், “அது என் எல்லை இல்லை” என பேசும் ஆய்வாளர் மணல் பிரச்சனை என்றவுடன் உடனே வழக்கு போடுகிறார்.

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். சட்ட விரோத மணல் குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும்.

கலையரசன், மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்

ஆற்றில் விதிமுறைகளுக்கு மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள். மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வதாரத்திற்காக போராடினால் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக” வழக்கு போடுகிறார்கள் என்றால் சட்டமும், சர்க்காரும் யாருக்காக என்று தெரிவதற்காக இந்தக் கண்டன ஆர்பாட்டம். இந்த வழக்குகளுக்கெல்லாம் பயந்து இந்த வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் பின்வாங்காது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்

கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் ஓய்வு (சாந்தி நகர்), வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்

மணல் அள்ளுவதால் ஊருக்கு பாதிப்பு என்று போராடினால் ஊரில் பிரிவினைவாதிகளை வைத்து மணல் அள்ள வேண்டும் என்று போராட வைத்து பொய் வழக்கு போடுகிறார்கள். கொள்ளைக்காரனுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள்.

“இன்னும் கொஞ்சம் மணல் தான் அள்ள வேண்டும், அள்ள விடுங்கள்” என PWD அதிகாரி கோட்கிறார். மக்களை போராட தூண்டியதாக என் மீது பொய் வழக்கு போட்டு என்னை அழைத்துச் சென்ற போலீஸ், மக்கள் ஒன்று திரண்டவுடன் என்னை இறக்கி விட்டுச் செல்கிறார்கள். நான் என்ன கொள்ளையா அடித்தேன்?

மணல் கொள்ளை அடித்தவனை விட்டுவிட்டு போராடும் மக்கள் மீதும், துணை நின்ற வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மணல் குவாரியை மூடும் வரை போராடுவோம்.

முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சட்டம் சட்டம் என்று பேசும் அரசு மூன்று அடிக்கு அனுமதி வாங்கி 35 அடி மணல் அள்ளுபவனை ஒன்றும் கேட்காமல் போராடும் மக்களை மட்டும் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். எனவே, இந்தச் சட்டத்தை நம்பி இனி பயனில்லை. மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்தான் இந்த அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும்.

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம், கூடலையாத்தூர்

அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. ஆனால் நாங்கள் போராடினால் பொய் வழக்கு போடுகிறார்கள். 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் என அதிகாரிகளே கூறிவிட்டு மணல் அள்ளச் சொல்லுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. உயிர் போனாலும் விடமாட்டோம்.

வழக்கறிஞர் ராஜு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர்

vellaru-kavalakudi-demo-1பொதுப்பணித்துறை தான் மணல் அள்ளுகிறது என்பது பொய்.

“குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட அளவை விட எல்லை தாண்டி மணல் எடுக்கிறார்கள்” என கூறினால், “அது PWD துறை அதிகாரிகளின் தொழில் நுட்பம் சார்ந்த விஷயம்” என கோட்டாட்சியர், சார் ஆட்சியர் கூறுகிறார். ஒரு வழக்கறிஞரான எனக்கு தெரிந்த விஷயம் உங்களுக்கு, அதிகாரிகளுக்கு தெரியாதா?

வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிக்க உத்தரவு போட்டுவிட்டு ஆற்று மணலை கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகள் துணையோடுதான் கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை இவை அனைத்தும் நடைபெறுகின்றன.

அரசியலமைப்பு சட்டம் தோற்றுப் போய்விட்டது. போராட அனுமதி இல்லை, பேச அனுமதி இல்லை, என்ன ஜனநாயகம்?

ஆற்றில் தண்ணீர் விட்டால் மணல் அள்ள முடியாது என்பதற்காக ஆற்றுக்கு தண்ணீர் வராமல் கடலுக்கு தண்ணீரை திருப்பும் PWD பொறியாளர் வெற்றிவேல் சோற்றில் உப்புபோட்டு தின்கின்றாரா?

பென்னிகுயிக் என்ற ஆங்கில பொறியாளன் தன் சொந்தக் காசைப் போட்டு தமிழனுக்கு அணை கட்டினார். அவர் பொறியாளர்.

வரவு கணக்கு பாராமல் மக்களுக்கு பணி செய்ய அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாரி என்றால் சகாயம் போல் இருக்க வேண்டும். ஜெயாவை, தமிழக அரசை எதிர்த்து நின்று விசாரணை நடத்துகிறார். இங்குள்ள ஆட்சியர், சார் ஆட்சியர் மேலிடம் என சொல்லி மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள்.

“எங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை, மக்களுக்கு எதிராகத் தான் செயல்பட முடியும்” என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணிக்கு வாருங்கள்.

திறமையானவர்கள், தைரியமானவர்கள், நேர்மையானவர்களாக இருக்கும் அதிகாரிகள் மட்டுமே மக்களுக்கு பயன்படுவார்கள்.

சகாயத்தால் கிரனைட் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள், கொள்ளையர்களை தண்டிக்க முடியாது. ஆனால் மக்களுக்கு ஆதாரத்துடன் அடையாளம் காட்ட முடியும்.

அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை. மணல் கொள்ளைக்கு எதிராக எங்கு மக்கள் போராட்டம் நடந்தாலும் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

***

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கண்டன ஆர்ப்பாட்டத்தை காண வந்து உரைகளை கேட்ட அதிகாரிகள் அவமானத்தால் சுவர்களுக்கு பின் பதுங்கி நின்றனர். மக்கள், கருத்துகளை ஆரவாரத்துடன் வரவேற்று கைத்தட்டினர்.

பொதுவில் இந்த ஆர்ப்பாட்டம், “அரசியல் அமைப்பின் தோல்வியையும், மக்கள் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே உரிமைகளை பெறமுடியும்” என்பதையும் உணர்த்துவதாக அமைந்தது.

பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் உரையை கவனமாக கேட்டனர்.

அருகில் இருந்த கடைக்காரர்கள், “பட்டா கொடு, அத கொடு என அனைத்து கட்சினரும் புலம்புவதைதான் இது வரை கேட்டு வந்தோம். முதல் முறையாக நல்ல பேச்சை கேட்டோம்” என கருத்து தெரிவித்தனர்.

RDO விசாரணைக்கு வந்து இருந்த 20 நபர்களுடன் காவாலக்குடி, சாந்தி நகர் கிராம மக்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர். மணல் அள்ள வேண்டும் எனச் சொன்ன வி.சி உட்பட 20 பேரும் “107 வழக்கு விசாரணைக்கு ஜாமீன் கொடுக்கப் போகிறோம்” என தயாராக வந்து இருந்தனர்.

நமது வழக்கறிஞர்கள், “காவாலக்குடி மக்கள் மூலம் அவர்களுக்கும் நாம் சேர்த்து வழக்கு நடத்தலாம். RDO விடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம் என ஜாமீன் கொடுத்தால் வரும் காலத்தில் போலீசார் உங்களுக்கு சிக்கல் கொடுப்பார்கள்” என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வி.சி பேச்சை கேட்டுக் கொண்டு மணல் குவாரியின் அரவணைப்பில் ஜாமீன் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

பின்னர், நம் தரப்பில் RDO-விடம், “நாங்கள் வழக்கை நடத்துகிறோம். எங்களுக்கு வழக்கு விபர நகல் கொடுங்கள்” எனக் கேட்டோம். இதனால் விசாரணையை வரும் 10-03-2015-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

“மணல் கொள்ளை தொடர்பாக தாங்கள் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள், நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?  எங்கள் வீட்டு ஆம்பளைகளை ஏன் அலைய வைக்கிறீர்கள். இது தொடர்ந்தால் இனிமேல் எங்கள் பிணத்தின் மீது ஏறி தான் மணல் அள்ள முடியும்” என பெண்கள் சார் ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த், “ஒன்னும் கவலைப் படாதீர்கள். இப்பதான் மனு எடுக்கலையே” என சமாதானம் சொன்னார்.

பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறையினர், பொதுப் பணித்துறை பொறியாளர் என அதிகாரிகளை கடுமையாக அம்பலபடுத்தி வருவதை  கீழ்நிலை ஊழியர்கள் வரவேற்கின்றனர். சேத்தியாத்தோப்பு காவல் துறையினர், “பொதுப்பணித் துறை பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த புகார் மனுவை நாங்கள் மேல் விசாரணையின்றி முடித்து விட்டோம். கவலை வேண்டாம்” என கூறிச் சென்றனர்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே

11

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்சாரே 82 வயதானவர். பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார் பன்சாரே. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உரிரிழந்தார். அவரது மனைவி உமா பன்சாரே காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

கோவிந்த் பன்சாரே
கோவிந்த் பன்சாரே

கோவிந்த் பன்சாரே கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு சிவாஜி பல்கலைக்கழகத்தில் கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை குறிப்பிட்டு, “கோட்சேயை புகழும் மனநிலை ஆபத்தானது” என்று பேசியிருந்தார். சிவசேனை மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் போட்டி போட்டுக் கொண்டு கோட்சேவை புகழ்வது மகாராஷ்டிரத்தில் அன்றாட செய்திகள். “சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை காவல்துறை கண்காணிக்க வேண்டும்” என்று எழுதியதற்காக பன்சாரே ஒரு முறை மிரட்டப்பட்டார்.

மராட்டியம் அறிந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பன்சாரேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “அடுத்தது நீங்கள்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது. பன்சாரேவும், தபோல்கரும் இந்து விரோதிகள் என்று ஹெச். ராஜாவின் மொழியில் மதவெறி பிரச்சாரம் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

கோவிந்த் பன்சாரே கொலைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. பெருமாள் முருகனை முடக்க இந்துத்துவ-சாதிய சக்திகளுக்கு நாமக்கல் தனியார் பள்ளி முதலைகள் கைகொடுத்ததை போன்றது அது. ‘பன்சாரே எதிர்த்து வந்த சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கரங்கள் அவரது கொலைக்கு பின்னால் இருக்கக்கூடும்’ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர். சாலைகள் தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் பன்சாரே.

நரேந்திர தபோல்கர்
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது…

சிவசேனை-பா.ஜ.க கூட்டணி 1990-ல் ஆட்சியை பிடித்த போது சாலைகள் தனியார்மயத்தை பெருமளவுக்கு ஊக்குவித்தது. ஐ.ஆர்.பி (Ideal Road Builders) என்ற நிறுவனம் மராட்டியம் முழுவதும் பல சாலைகளை போட்டு, சுங்கச் சாவடி அமைத்து பெரும் வசூல் கொள்ளையில் இறங்கியது. ஐ.ஆர்.பி.யின் நிலப்பறிப்புக்கு எதிராக தகவல் பெறும் உரிமை சட்டப்பட்டி சில விபரங்களை கோரிய சதீஷ் செட்டி என்பவர் 2010-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன் பிறகு கோவிந்த் பன்சாரே ஐ.ஆர்.பி.க்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். பன்சாரே கொல்லப்பட்ட பிப்ரவரி 16-ம் தேதி ஐ.ஆர்.பிக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ-க்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில் 2005-லிருந்து 2013 வரை பன்சாரே கொலை சம்பவம் போன்று 53 தாக்குதல் சம்பவங்கள் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக  பதிவாகியுள்ளன. 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கொடுரமாக அங்ககீனப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த கொலைகளுக்கு எதிரான வழக்குகள் நகராமல் இருக்கின்றன. 2013-ம் வருடம் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அப்போது இருந்த பிரிதிவ்ராஜ் சவான் ‘மகாத்மா காந்தியை கொலை செய்த மனஅமைப்பு தாபோல்கரின் கொலைக்கு பின்னால் இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார். குற்றவாளிகளின் பின்னணி தெரிந்திருந்தும் முதலமைச்சராக செயல்பட்ட எஞ்சியிருந்த காலத்தில் கொலையாளிகளை பிடிக்க பிரிதிவ்ராஜ் சவானால்  இயலவில்லை.

கோவிந்த் பன்சாரே
பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

“தாஜ் ஹோட்டல் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசப்பை பிடிக்க முடிந்தவர்களால் தாபோல்கர் மற்றும் பன்சாரேவின் உயிர்களை காவு வாங்கிய கயவர்களை பிடிக்க முடியாதது ஏன்” என்ற கேள்வி முக்கியமானது. இந்துத்துவம் இந்த சமூக உடலின் ஆபத்தான எச்சதசையாக வளர்ந்து இருக்கிறது. வெட்டி எறியும் அறுவை சிகிச்சைக்கு அந்த எச்சதசை காத்திருக்கிறது.

பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது, சமூக நலனுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டியது.

இது தொடர்பான செய்தி

– சம்புகன்

எங்கம்மா களவாணி … ஆனா அவதான் எங்க மகராணி …

5

திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் பூண்டிருந்தது தஞ்சை.

ஜெயலலிதா பேனர்
பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் – ஆர்.வைத்திலிங்கத்தின் ஊழல் செலவழிக்கும் காலத்தின் கோலம்

காவிரி ஆற்று நீர் சிக்கல், மீத்தேன் வாயு எடுப்புத் திட்டம், உரத்தட்டுப்பாடு, விவசாயிகளின் போராட்டங்கள், பெட்டிச் செய்தி அளவுக்குக்கூட இடம்பெறாமல் இருட்டடிப்பு செய்யப்படும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளென இருள் அப்பிக் கிடக்கும் தஞ்சையில் ‘திருவிழா’க் கோலமா?

‘மக்களின் முதல்வர்’ என்ற அருவருப்பான அடைமொழியுடன் அழைக்கப்படும் தண்டனைக் கைதி ஜெயலலிதாவின் 67-ம் பிறந்த நாள் விழாவாம். அதற்காக, தனது வட்டங்களுக்கு உத்தரவிட்டு ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது மாவட்டம்.

தஞ்சை திலகர் திடலில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் தலைமையில், 113 ஜோடிகளுக்கு மெகா திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்தன சுவரொட்டிகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சந்தைக்கு ஓட்டிவரப்படும் ஆட்டு மந்தைகளைப்போல திணித்துக்கொண்டு வந்து  மக்களையெல்லாம் திடலுக்கு வெளியே கொட்டின, ஷேர் ஆட்டோ, டாடா ஏஸ், மற்றும் டிராக்டர்கள்.

திடலுக்குள் நுழையும் வழியில் நம்மை வழிமறித்ததோ அம்மாவின் அடிமைகள் வந்திறங்கியிருந்த டாடா சுமோ, பொலிரோ, டஸ்டர் மற்றும் பல உயர்ரக வாகனங்கள். அவற்றுள் பல சைரன் விளக்குகளைத் தாங்கி நின்றன.

மேடையில், அடிமைகளின் பெயர்களையெல்லாம் விளித்து, புல்ஸ்டாப் வைப்பதையே மறந்து பத்து நிமிடத்திற்கும் மேலாக ஒரே வாக்கியத்தில் அம்மாவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஒரு ரத்தத்தின் ரத்தம்  (தமிழுக்காக அம்மா செய்த பங்களிப்பு இதுவென்று, இதற்கு ‘அம்மா இலக்கியம்’ என்றும் பெயர் சூட்டப்படலாம்! அம்மா நாமம், வாழ்க!!)

அ.தி.மு.க அடிமைகள்
பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.

பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். மேடையின் மையத்தில் வீற்றிருந்ததும், டிரேடு மார்க் வெள்ளுடையில் ஜொலித்த ரத்தத்தின் ரத்தங்களின் அணிவரிசைதான். அந்த மேடையின் காட்சியையும், அவர்களின் பேச்சுக்களின் வீச்சையும் கண்டபொழுது, ”மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னோடது” என்ற காமெடிக் காட்சியின், ரஜினி கதாபாத்திரம்தான் நினைவுக்கு வந்து தொலைத்தது.

அ.தி.மு.க அடிமைகள்
”மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னோடது”

கட்சி கரைவேட்டிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துகொண்டிருந்தனர், மேடையேறுவதற்காக! “கட்சிக்காரங்க எல்லாம் மேடைய விட்டு கீழ எறங்குங்க! நீங்கல்லாம் இங்க தேவையில்ல, போங்க, போங்க” என்று கீழ்மட்ட அ.தி.மு.க அடிமைகளை,  மைக்கில் விரட்டிக் கொண்டிருந்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அம்மாவின் முன்பு அமைச்சர்கள் அடிமைகள்,  அமைச்சர்களின் முன்பு உள்ளூர் கட்சிக்காரர்கள் அடிமைகள் என்ற படிவரிசை கச்சிதமாக தெரிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மணமக்களோ இந்த அடிமை கட்சிக்காரர்களின் தயவில் விழாவுக்கு வந்திருந்தார்கள்; ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் இரு ஓரங்களிலும், அய்யோ பாவமாய் அமர வைக்கப்பட்டிருந்தனர்; பலரின் முகத்தில் திருமணக் களையே இல்லை. மணமக்கள் அமர வைக்கப்பட்ட இருக்கைகளிலும், மணமக்கள் கையில் தாங்கியிருந்த மஞ்சள் பையிலும் கொட்டை எழுத்தில் எண்கள் அச்சிடப்படிருந்தன. அதுவே அவர்களது அடையாளமாகவும் மாறியிருந்தது. டோக்கன் நம்பர் 1, டோக்கன் நம்பர் 2 என அந்த எண்களாலேயேதான் மணமக்கள் அழைக்கப்பட்டனர்.

மேடையில் ஒரு ஜோடியின் மணமகள் கர்சீப்பால் அடிக்கடி துடைப்பதுபோல் மக்களை பார்ப்பதை தவிர்த்தார். சாதாரண மனிதர்களுக்கு மேடையில் அமர்வது கொஞ்சம் கௌரவமாகத்தான் தெரியும். ஆனால் அப்பெண்ணிடம் அங்கே அமர்ந்திருப்பது அசிங்கமாய் உணர்வதை சிலகணங்கள் காட்டிச் சென்றன.

kalyana-pandal-1மணமக்களின் உறவினர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக பந்தலில் இடம் பிடித்து உட்கார்ந்திருந்தனர். “நம்ம வீட்டில கல்யாணம் நடத்தினா என்னா காட்டுவாங்க, இங்க எல்லாம் கப்சிப்” என்றார் ஒரு மணமகனின் அண்ணன்.

விழாப்பந்தலின் கடைசியில் ஒரு ஜோடி தமது குடும்பத்தினருடன் தனியே அமர்ந்திருந்தனர். என்ன வென்று கேட்டால் பொண்ணு, மாப்ளை நிமிர்ந்து கூட பாக்கவில்லை. பக்கத்தில் இருந்த பெரியவரிடம் “ஏன்யா… இவங்க மேடையில இல்லாம இங்க ஒக்காந்து இருக்காங்களா…” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, “நீ வேற அங்க இடம் இல்லாமத்தான்” என எரிச்சல்பட்டார் அந்தப் பெரியவர். மீண்டும் ஒருமுறை மேடையை நோக்கினோம், அ.தி.மு.க. அல்லக்கைகள் நெருக்கியடிக்கும் மேடையில் இவர்களுக்கு இடம் இல்லாமல் போனது சரிதான்.

kalyanam-ashamedஇந்த அடிமைகள் நடத்தும் கல்யாணத்தில் இடம் பிடிக்க கட்சி, அரசு எல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கின்றன. “ஊரு கவுன்சிலருகிட்ட மனு கொடுக்கனும். வி.ஏ.ஓ.கிட்ட இதுதான் முத கல்யாணமுன்னு சர்டிபிகேட்டு வாங்கித் தரனும். அதெல்லாம் செக்கப் பண்ணிதான், தேர்ந்தெடுப்பாங்க” என்றார், அவர்.அம்மா ஆட்சியில், கல்யாணம் ஆகாத ஜோடிகளை மட்டும் வடிகட்டி தனது மெகா திருமணத்தை செய்யும் அமைச்சரின் நிர்வாகத் திறமையை  பாராட்டத்தான் வேண்டும்.

கல்யாண சாப்பாட்டுக்கு வரிசையில் குவிந்த உறவினர்கள்
கல்யாண சாப்பாட்டுக்கு வரிசையில் குவிந்த உறவினர்கள்

“மணமக்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்க”
“மாலை மாத்திக்கோங்க”
“மணமகன்கள் மணப்பெண்களுக்கு தாலி கட்டுங்க”

என்று டிரில் போல கல்யாணத்தை நடத்தி வைத்தார் அறிவிப்பாளர். தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் கல்யாண உணவுக்காகக் காத்து நின்றது பெருங்கூட்டம்.

முறைப்பெண்ணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்த, இளைஞர் ஒருவரை வம்படியாக ஓரங்கட்டி, “உங்க குடும்பத்துல யாருக்கு கல்யாணம்? இவ்ளோ செலவு பண்ணி, இந்த கல்யாணத்தை யாரு நடத்துறா?” என்றோம். “என் அண்ணனுக்குத்தான் கல்யாணம். அமைச்சர் நம்ம பக்கத்து ஊர்காரர்தான். வருசா வருசம் நடத்துறார். ஏழைப்பட்டவங்களுக்கு உதவி செய்ற மனுசன்” என்று, ஏதோ அமைச்சரே தனக்கு சொந்தக்காரர்தான் என்பது போன்ற உணர்விலிருந்து பதிலளித்தார் அவர்.

kalyana-bridegrood-roomவயல்களின் நடுவே போடப்படும் ஆட்டுக்கிடையை ஞாபகப்படுத்தியது, திடலுக்கு நடுவே தகர தகடுகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த அந்தத் தடுப்புகள். மணமகன்/மணமகள் அறையென்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தால், மூத்திரக்கவிச்சிகளுக்கு மத்தியில் சிதறிக்கிடந்தது புதுச்சட்டைகளைத் தாங்கியிருந்த அட்டைப் பெட்டிகள். “எல்லாமே, காஸ்ட்லி சட்டை வேட்டிதான்” என்று பெருமைபொங்க பதிலளித்தார், தனது பட்டாபட்டி டிராயரை சரிசெய்துகொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறிய முதியவர் ஒருவர்!

மேடைக்கு இடப்புறம், பசுங்கன்றுடன் பசுமாடுகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்திலும், கொட்டை எழுத்தில் எண்கள் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தன. மேடையில் ஜோடியாக மணமக்கள். மேடைக்கு அருகிலேயே ஜோடியாக பசுமாடும் கன்றும். ஆகா, என்ன பொருத்தம்! அவர்களைப் பொருத்தவரையில், ஆடு, மாடுகளைப் போல மணமக்களும் ஒரு உருப்படி அவ்வளவுதான்.

kalyana-cattle-2“கல்யாண ஜோடி 113 இருக்கு. இங்க கட்டியிருக்க மாடுகள் 25 தானே இருக்கு?” வாயைக் கிளறினோம், ஒருவரிடம். “இப்போதைக்கு இருக்கிற மாட்டை இங்க வச்சி கொடுக்கிறதாகவும், பிறவு மிச்ச பேத்துக்கு டோக்கன் கொடுத்துருவாங்களாம், மாடு இருக்கிற தாவுக்கு போயி ஓட்டியாந்திரனும்னு பேசிக்கிட்டாங்க” என்றார் அவர். மாட்டுக்கு காவல் காத்து நின்றவர்களிடம் இதே கேள்வியை கேட்டதற்கு, “மிச்ச மாடெல்லாம், பக்கத்து தெருவுல நிப்பாட்டியிருக்கோம் சார்” என்றார், படபடப்பாக. இந்தக் கதையை நம்பி, மணமக்களின் உறவினர்கள் பழைய பஸ்டாண்ட் வரையில் தெருத் தெருவாக அலைந்ததுதான் மிச்சம். எங்கும் மாடுகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எந்த ஜோசியக்காரன் சொல்லி, பசுமாடும் கன்றும் கொடுக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, பசுவை தெய்வமாக பூஜிப்பதால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் கையேடும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அம்மாவின் படத்தோடு உள்ளே பகவான் பலராமன் மற்றும் கோமாதா படங்களும் இடம்பெற்றிருந்தன. பச்சை அட்டைக்குள் காவிக் கருத்துக்களைத் தாங்கியிருந்தது அந்த கையேடு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஏழை மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து, அம்மாவின் ஆணைக்கிணங்க மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டுவேட்டி, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படுவதாக மேடையில் பீற்றிக்கொண்டிருந்தனர் உடன்பிறப்புக்கள்.

அப்படி என்னதான் 72 வகையான பொருட்களை கொடுக்கிறார்கள் என்று அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது எங்களுக்கு! ஜாடி, ஜக்கு, சோம்பு, டம்ளர், பூரி கட்டை, தேங்காய்த்துருவி, மசால் டப்பா, ‘சரோஜா தேவி யூஸ் பண்ணின’ சோப்பு டப்பானு… போகுது அந்த லிஸ்ட். நல்லவேளை, பட்டு சட்டையில் குத்தி வந்த குண்டூசிகளை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை! இவ்வாறு, பெருந்தன்மையோடு பட்டியலில் சேர்க்காத பொருளையும் கணக்கிட்டால், நூறு நூற்றம்பதைத் தாண்டும்!

சீர்வரிசை கொடுகக்கூப்பிட்ட ஜோடியில் வேறொருஜோடி வர நெரிசலில், “அறிவிருக்கா தள்ளிப்போ” என அந்த மணமகனை அ.தி.மு.க அடிபொடி கோபித்தது.

kalyana-kuthattamகச்சேரி இல்லாமல் கல்யாணமா? குத்தாட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். “எங்கம்மா களவாணி… ஆனாலும் அவதான் எங்க மகராணி..” ச்சீ.. ச்சீசீ… மன்னிக்கணும் அப்பிடியில்ல…”எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி” என்ற கொள்கை விளக்க – தத்துவப் பாடலுக்கு அயிட்டம் சாங்க் ரேஞ்சுக்கு மேடையை ரணகளப்படுத்தினர் குத்தாட்ட கலைஞர்கள்.  எனக்கு வேணும், நல்லா வேணும் என்று அ.தி.மு.க. கொடியில் அறையப்பட்டிருந்த அண்ணா, யாரையோ கையை நீட்டி கொண்டிருந்தார்.

வளர்ப்பு மகன் திருமணம் என்ற பெயரில், அடிச்ச கொள்ளை இதுதான் என்று ஊருக்கே காட்டியதோடல்லாமல், ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையே எச்சில் இலை எடுக்க வைத்து மாநில அளவில் ‘புரட்சி’ செய்தார் புரட்சித்தலைவி. அன்று அவர் ஊரை வளைத்து உலையில் போட்டு செய்த ‘புரட்சி’க்காகத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழந்து, சிறைக்கு சென்று பின்னர், பிணையில் வெளிவந்த தண்டனைக் கைதியாக போயஸ் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.

இப்போது, அம்மாவின் உள்ளூர் அடிமைகள் தமது ரேஞ்சுக்கு ஏழை தம்பதிகளை திரட்டி திருமணம் நடத்தி தமது செல்வாக்கை தம்பட்டம் அடிக்கின்றனர்.

jaya-birthday-celebrations-1இந்தக் கூத்துக்களெல்லாம், தஞ்சையில் மட்டுமல்ல; கோடிகளைக் கொட்டி மாவட்டங்கள் தோறும், கலர் கலராய் கல்யாணம், காதுகுத்து, கோயில்களில் அங்கப் பிரதட்சணம், அன்னதானம், சிறப்புப் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல், அலகு குத்துதல் என மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. அல்லக்கைகளின் அளப்பறைகள் தாளாமல் திணறுகிறது தமிழகம். அம்மாவுக்காக கையில் ஆணியடித்து சிலுவையில் அறைந்து கொள்ளும் அடிமைகளையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றும் புரியவில்லை.

jaya-birthday-celebrations-2காணச்சகிக்காத இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கடந்து செல்கிறபொழுது, நரகலுக்கு நடுவே நடந்து செல்லும் உணர்வுதான் மேலிடுகிறது. அப்பட்டமாக ஊரைக் கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்ற கும்பல் ஒன்று இப்படி பகிரங்கமாக தனது கொள்ளையை பறைசாற்றி தானதருமம் என்று ஊளையிடுகிறதே, இதுதான் ஆபாசாமானது.

– எஸ்.எஸ். உதவியுடன் இளங்கதிர்

தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !

2

தொழில் தகராறு சட்டம், ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா? சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

மது நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்னர் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்களில் தொழில் தகராறுகள் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் எவையும் பின்பற்றப்படுவதே இல்லை. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த சமயத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்கிற அச்சத்தில் தான் பணிபுரிகின்றனர். வருடாந்திர அப்ரைசல் என்கிற வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறையின் மூலம் ‘திறனற்றவர்கள்’ என்கிற முத்திரை குத்தப்படுகின்றனர். கடும் மன அழுத்தத்திலும், 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

டி.சி.எஸ் பிரச்சாரம்
கடந்த ஜனவரி 10-ம் தேதி டி.சி.எஸ் நுழைவாயில் முன்பு பு.ஜ.தொ.மு நடத்திய பிரச்சாரம் (கோப்புப் படம்)

“முந்நூறு பேருக்கும் அதிமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும்” என்ற சட்டத்தை ஐ.டி. நிறுவனங்கள் மதிப்பதேயில்லை.கொத்துக் கொத்தான வேலைநீக்கங்கள் ஐ.டி நிறுவனங்களில் சகஜமாகி விட்டன. இத்தகைய சட்டவிரோத வேலைநீக்கத்தை எதிர்ப்பவர்கள் குறித்த விபரங்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட எவருக்கும் பிற ஐ.டி நிறுவனங்களிலும் வேலை கிடைக்காது என்பதால், ஐ.டி.ஊழியர்கள் இத்தகைய சட்ட விரோத வேலைநீக்கங்களை எதிர்க்கத் துணியாமல் சகித்துக் கொள்கின்றனர்.

இந்தச் சூழலில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ( TATA CONSULTANCY SERVICES ) என்ற நிறுவனம் கடந்த 2014 டிசம்பர்  மாத இறுதியில் 25 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இலாபத்தில்தான் இயங்கி வருகின்றது. தனது லாபத்தினை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட ஊழியர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்கள் 55 ஆயிரம் பேரை மிகக்குறைந்த ஊதியத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
சோழிங்கநல்லூர் சிக்னலில் பு.ஜ.தொ.மு தொழிலாளர்களின் பிரச்சாரம் (கோப்புப் படம்)

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்ற “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி” ( NDLF ) தொழிற்சங்கம், டி.சி.எஸ். ஊழியர்களது வேலை நீக்கப் பிரச்சினையில் தலையிட்டுப் போராடத் தொடங்கியது. இதற்கென பு.ஜ.தொ.மு ஐ.டி.ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது. “சட்ட விரோதமான வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமானால் சங்ககமாகத் திரளுவதுதான் தீர்வு” என்பதை உணர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து வருகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சசிரேகா என்ற பெண்மணி இந்த அநீதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, “தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.

மென்பொருள் நிறுவனங்கள் செயல்படும் தொழிற்பூங்காவின் கட்டுமானம் அனைத்தையும் அரசு தான் செய்து கொடுத்தது. அரசு செலவில் மலிவான கட்டணத்தில் மின்சாரம், குடிநீர், சாலைவசதி ஆகியவற்றை அனுபவிப்பதுடன். பல ஆயிரம் கோடிகளுக்கு வரிச்சலுகையும் பெற்றுள்ளன டி.சி.எஸ் போலவே எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மென்பொருள் மட்டுமல்லாது ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டு வரும், எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.

தொழிற் தகராறு சட்டம்
“தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.

25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும், டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும், 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947” அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும், ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும் “புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவும், வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும் வாதாடினர். பொது நல வழக்காக இதனைக் கருத முடியாதென முடிவு செய்த தலைமை நீதிபதியின் முதன்மை அமர்வு , “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கற்பகவிநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் பிரிவு அமைப்பாளர் கற்பகவிநாயகம்

இதனை அடுத்து கீழ்க்காணும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்குமாரு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

1) தமிழ் நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்களை இந்திய தொழில் தகராறு சட்டங்கள் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2) எந்த ஐ.டி. நிறுவனமும் நினைத்த நேரத்தில் லே-ஆப் செய்வதை சட்ட விரோதம் என அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) பணி நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் உரிய நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்

தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஐ.டி நிறுவனங்களை வலியுறுத்துவதற்கும், இது குறித்து , அரசுக்கு அழுத்தம் தருவதற்கும் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாக உள்ளது.

எனவே சட்டபூர்வ உரிமைகளை வென்றிட அனைத்து ஐ.டி.ஊழியர்களும் தங்களை எமது பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இது தொடர்பான பத்திரிகை செய்திகள்

[செய்திகளை பெரிதாகப் படிக்க படத்தின் மீது சொடுக்கவும்]

சு. கற்பகவிநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்

0

அமித் ஷா தலையை காக்கும் ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் கோசாவி

பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நலன் சார்ந்த செயல்பாடுகள், மத்திய அமைச்சர்களின் வெறியூட்டும் பேச்சுக்கள் மற்றும் சங் பரிவாரங்கள் துணிகரமாக ஈடுபடுகின்ற இந்துத்துவ நடவடிக்கைகள் ஓரளவுக்கு ஊடக கவனத்தை பெற்றுள்ளன. இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.

அமித் ஷா கொலைகள்
இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.

பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை மந்திரியாக செயல்பட்ட போது புரிந்த போலி மோதல் கொலைகள் தொடர்பான முக்கியமான ஒரு வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொராபுதீன் சேக், அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005-ம் வருடம் அமித் ஷாவின் ஆணையின் பேரில் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006-ம் வருடம் கொல்லபட்டார்.

இந்த வழக்கு முதலில் குஜராத் மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. சொராபுதீன் ஒரு லஷ்கர் இயக்கத் தீவிரவாதி என்ற கருத்து அப்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஜூலியஸ் சீசரை பொய்ப்பழி சுமத்தி கொன்ற புரூட்டஸ் ‘நீதி’ கேட்டது போல, மோடி பொதுக்கூட்டங்களில் மக்களை பார்த்து, ‘சொராபுதீன் போன்ற தீவிரவாதியை என்ன செய்ய சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.  ‘கொல்லுங்கள், கொல்லுங்கள்’ என்று விடை பகர்ந்தனர் மக்கள். ‘மோடியை கொல்ல சூரத்திலிருந்து அகமதாபாத் பயணித்து கொண்டிருந்த ‘பயங்கரவாதி’ சொராபுதீன் சேக்கை சரணடைய கோரிய போது, மறுத்து துப்பாக்கியால் சுட்டதால், போலீசு எதிர்வினையாற்ற நேர்ந்ததில் கொல்லப்பட்டார்’ என்று வழக்கை முடித்தது குஜராத் போலீஸ்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் 2007-ம் வருடம் வந்தது. மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம்.  ‘பேர், புகழ் மற்றும் பதவி உயர்வுக்காக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் சிலரே சொராபுதீன் சேக்கை சுட்டுக் கொன்றனர்’ என்றும், ‘சொராபுதீன் சேக் லஷ்கர் தீவிரவாதியல்ல’ என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் புலனாய்வு கோணத்துக்கு உகந்ததாக மூன்றாவது ஒரு தகவலும் அதில் இருந்தது. சொராபுதீன் கொல்லப்பட்ட போது ஆந்திராவிலிருந்து மகாராஷ்டிராவின் சாங்க்லிக்கு ஒரு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி - அமித் ஷா - டி.ஜி. வன்சாரா
அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். (மோடி – அமித் ஷா – டி.ஜி. வன்சாரா)

இந்த மூன்றாவது தகவல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை கண்காணித்து வந்த நீதிபதியை ஆச்சரியப்படுத்தியது. பதவிக்கும், புகழுக்கும் ஆசைபட்டு ஒருவரை கொல்ல போலீஸ் அதிகாரிகள் ஆந்திரா வரை புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் துணுக்குற செய்தது. இரண்டு புள்ளிகளும் இணைய மறுப்பதை கண்டனர். வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு 2010-ம் வருடம் மாற்றப்பட்டது. சொராபுதீன் மற்றும் அவரது மனைவி பயணித்த பேருந்தில் சென்ற துளசிராம் பிரஜாபதி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். அவர் 2006-ம் வருடம் கொல்லப்பட்ட தகவலையும் வெளிக்கொணர்ந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து பல்வேறு தடைகளை குஜராத் அரசாங்கம் ஏற்படுத்தியது. விசாரணை காலம் முடியும் வரை அமித் ஷா குஜராத்தில் நுழைய தடை விதித்தது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ-ன் கோரிக்கையை ஏற்று வழக்கை 2012-ம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கை தனியாக விசாரணை நடத்தி முடிவை பெற மகாராஷ்டிராவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்றையும் ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம். அப்போது முக்கியமான ஒரு நிபந்தனையை விதித்தது. வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி நடுவில் மாற்றப்படக்கூடாது என்று கூறியது. விசாரணை நீதிபதியாக உத்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது நேரில் ஆஜராகாத அமித் ஷா மீது கண்டிப்புடன் நடந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். பல்வேறு மாநில ஆளுநர்கள் அவமானப்பட்டு வெளியேறியது போல, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி உத்பத் ‘தானாகவே’ வெளியேறி வழி விட்டார். 2014 மே மாதம் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஜூன் மாதத்தில் உத்பத் ராஜிநாமா செய்தார். அமித் ஷாவை காப்பாற்ற மோடி எவ்வளவு துரிதகதியில் செயல்பட்டுள்ளார் என்பது இதில் தெரிகிறது.

ஹர் கர் மோடி
ஹர கர மோடி, வீட்டுக்கு வீடு மோடி (மோடிக்காக அமித் ஷா நடத்திய ஒட்டுக் கேட்பு குறித்து)

உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார். மாரடைப்பு என்று சொல்லப்பட்டாலும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது. அமித் ஷாவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதை போல முதலில் தோன்றினார், பிரிஜ்மோகன் லோயா. உத்பத் மாதிரி இல்லாமல், நேரில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளித்து வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்தச் சலுகை ‘அமித் ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை பதிவாகும் வரை மட்டுமே’ என்றார்.

அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என்பதே அமித் ஷா தரப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிபதியின் அறிவிப்பு அமித் ஷாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிகாரத்தின் உச்சியில் ராஜாளி பறவையின் இறுமாப்புடன் தான் வீற்றிருக்க, கூட்டுக் களவாணியான பழைய நண்பனின் துயரைக் காண சகிக்காதிருந்தார் மோடி. மேலும் ஜெயலலிதா சசிகலாவின் துணையை நாடுவது போல அமித் ஷாவின் அருகாமையை மிகவும் விரும்பினார். 52 வயதான நீதிபதி லோயா மோடியின் நன்னூலில் இடம்பெற மறுத்ததால் அதற்குரிய வெகுமானத்தை பெற்றார். லோயா அகற்றப்பட்டு அவருக்குப் பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியாக கோசாவி 2014-ம் வருடம் டிசம்பர் 4-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி - மோடி, அமித் ஷா
குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி – மோடி, அமித் ஷா

அமித் ஷாவின் எதிர்பார்ப்பில் எந்த குறையையும் வைக்கவில்லை, கோசாவி. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் எடுத்துக் கொண்டார், கோசாவி. டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாதங்களை கேட்டறிந்து, டிசம்பர் மாதம் 30-ம் தேதி தீர்ப்பை வழங்கினார். அமித் ஷாவுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளிருந்தும் அவரை விடுவித்து தனது ‘கடமையை’ செவ்வனே நிறைவேற்றினார். ‘அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு’ என்று பா.ஜ.க.வின் ஊடகப் புளுகர்கள் கூறி வந்ததையே தனது தீர்ப்பாக எழுதினார் கோசாவி. வேகமான பந்துவீச்சுக்கு சோயப் அக்தரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைப்பது போல, அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை அதிவேகமாக முடித்து வைத்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி கோசாவியை நாம் ‘நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். எக்ஸ்பிரஸ்’ என்று தான் அழைக்க வேண்டும்.

‘இந்த வழக்கு சிக்கலான முடிச்சுகளை கொண்டது; ஆழமான சதிவலை பின்னப்பட்டது; அதிகார பலமுள்ளவர்கள் சம்பந்தப்பட்டது’ என்பதால் தான் வழக்கை தீர விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை குஜராத்துக்கு வெளியே அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல், பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையையும் புறந்தள்ளி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் பரிசீலனைக்கு எடுத்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதி தேவன் கோசாவி ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் என்பதில் சந்தேகம் உண்டா?

உள்துறை மந்திரியாக இருப்பவர் டி.ஜி.பி., உள்துறை செயலர் ஆகியோருடன் முறையான தொடர்பில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். குஜராத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, எஸ்.பி. மற்றும் உதவி எஸ்.பி நிலையில் இருந்த டி.ஜி. வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். சொராபுதீன் கொல்லப்பட்ட நாளில் இவர்களுடன் மிக அதிகமாக பேசிய தொலைபேசி நேரக் கணக்கு மற்றும் தடயவியல் சோதனை அறிக்கை என்று எந்த ஆதாரத்தையும் கோசாவி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இது மட்டுமல்லாமல் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் ஆகிய இரு சகோதரர்களின் வாக்குமூலங்கள் முக்கியமானவை. கட்டிட ஒப்பந்ததாரர்களான இவர்களின் வாக்குமூலங்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா ஒரு பெரும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதை தெரிவிக்கிறது. தனது வசூல் வேட்டைக்கு சொராபுதீனின் அடியாட்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். 2004-ம் வருடம் ‘பாப்புலர் பில்டர்ஸ்’ என்ற தங்கள் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தனது அடியாள் படையுடன் வந்த சொராபுதீன் அங்கு சிறு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காற்றில் சுட்டுள்ளார். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சொராபுதீனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் குஜராத் போலீஸ் எடுக்கவில்லை. காரணம், சொராபுதீன் முஸ்லிமாக இருந்தாலும், அமித் ஷாவின் பங்காளி.

பங்காளிகள் பகையாளிகளானது தான் அமித் ஷா – சொராபுதீன் கதையின் மையக்கரு எனலாம். கொள்ளையடிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்வதில் தோன்றிய முரண்பாடே சொராபுதீன் கொலைக்கான மூலக் காரணம். சொராபுதீன் அதிகமாக பணத்தை நிர்ப்பந்தித்து இருக்க வேண்டும் அல்லது உரிய பங்கை தரவில்லை என்றால் பங்காளிகளை அம்பலப்படுத்துவதாக மிரட்டியிருக்க வேண்டும். சில வழக்கறிஞர்கள் சந்தேகப்படுவது போல 2002-ம் வருடம் நடந்த முஸ்லிம் மக்கள் படுகொலையில் மோடிக்கு எதிராக ‘நீதிக்கான குடிமக்கள்’ ஆணையத்தில் சாட்சியமளித்த ஹரேன் பாண்டியா கொலையில் சம்பந்தபட்டவராகவும் கூட இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த கவித்துவ நீதியின் மீது தணியாத தாகம் கொண்டவர்கள் பொறுப்புகளில் இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். துளசிராம் பிரஜாபதியை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் மாநில டிஜிபி பி.சி.பாண்டேவை பிப்ரவரி 4-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கோசாவி. பிப்ரவரி 5-ம் தேதி கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் கொலை வழக்கிலிருந்து டி.ஜி. வன்சாரா மற்றும் இணை டி.ஜி.பி யாக இருந்த பி.பி. பாண்டே ஆகியோருக்கு பிணை கிடைத்தது. பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சொராபுதீன் கொலை வழக்கிலும் பிணை கிடைத்ததை அடுத்து டி.ஜி. வன்சாரா சிறை வாசத்தை முடித்து வெளி வந்துள்ளார்.

இவை ஒருபுறம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையோடு தொடர்புடைய கொலை பாதகர்கள் தண்டிக்கப்பட காரணமாக இருந்த மனித உரிமை போராளி டீஸ்தா சேதல்வாத்தை கைது செய்ய முயன்று வருகிறது குஜராத் அரசாங்கம். உச்சநீதிமன்றம் டீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படுவற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவகம் அமைக்க வசூலிக்கபட்ட பணத்தை டீஸ்தா கையாடல் செய்தார் என்பது வழக்கு. இது பொய் குற்றச்சாட்டு என்பதை விளக்கும் விரிவான கட்டுரை ஏற்கனவே வினவில் வெளியானது.

சொராபுதீன் வழக்கை 2005-லிருந்து தொடர்ந்து நடத்தி வருபவர் சொராபுதீனின் தம்பி ரூபாபுதீன். தனது அண்ணனும், அண்ணியும் ஒருசேர கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டி நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தனது அண்ணி கவுசர் பீ களங்கமற்றவர் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. ருபாபுதீனுக்கு பல்வேறு போக்குகளை காட்டி விட்டு தற்போது குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை செய்யப்படுவதை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார். அப்பாவி மக்களின் உயிரை குடித்த கொலையாளிகள் விடுதலையாவதும், நீதிக்கு போராடியவர்கள் சிறைக்கு செல்லவிருக்கும் நிலையையும் சற்று கற்பனை செய்யுங்கள். இந்துத்துவம் என்ற கொடுங்கனவில் வந்து போகும் மாய மோகினி தான் இந்திய நீதித்துறை என்பது விளங்கும்.

– சம்புகன்.

இது தொடர்பான செய்திகள்

டாஸ்மாக்குக்கு எதிரான பு.மா.இ.மு போராட்டம் தொடர்கிறது !

1

அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பு.மா.இ.மு தொடர்ந்து பிரச்சாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுற்றுவட்டார மக்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டத்தால் நொறுங்கியது டாஸ்மாக். அதனைத் தொடர்ந்து பிரம்மதேசம் போலீசார் பு.மா.இ.மு தோழர்கள் 9 பேர், குத்தனூர் பகுதி பொதுமக்களில் ஒரு பெண்மணி என மொத்தம் 10 பேரை கைது செய்து பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்தது; இதைக்காட்டி அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராம மக்களை பீதியூட்ட முயன்றது.

டாஸ்மாக் உடைப்பு
அடித்து நொறுக்கப்பட்ட அழிவிடைதாங்கி டாஸ்மாக் கடை (கோப்புப் படம்)

இதனை அம்பலப்படுத்தியும், அக்கிராம மக்களை திரட்டி அழிவிடைதாங்கியிலுள்ள சாராயக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் பு.மா.இ.மு தொடர்ந்து கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.

  • மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!
  • சாராயக் கடைகளை ஒழித்துக்கட்டுவோம்!

சாராயம் விற்பது சமூக விரோத செயல். அதாவது கிரிமினல் குற்றம். இதைச் செய்வதோ தமிழக அரசு. இந்த சமூகவிரோத செயலால் பாதிக்கப்பட்ட மக்களோ, உள்ளுக்குள் குமுறும் எரிமலையை போலக் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வெடித்த ஒரு தீப்பொறிதான் அழிவிடைதாங்கி சுற்றுவட்டார கிராமத்து மக்கள் நடத்திய டாஸ்மாக் சாராயக் கடை இழுத்து மூடும் போராட்டம்.

சாரயம் விற்பது சமூக விரோத செயலா? அரசின் சட்டபூர்வத் தொழிலா?

முன்பெல்லாம், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாரயம் காய்ச்சி, விற்பவனை சமூக விரோதியென, குடிகெடுப்பவன் என ஊரே காறித்துப்பும். சட்டவிரோதமென்று போலீசும் ஓடி, ஓடிப் பிடிப்பதாக சீன்போடும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? சாராயம் காய்ச்சுவதை மந்திரிகளின் பினாமிகளும், கடைபோட்டு விற்பதை அரசாங்கமும் செய்கின்றனர். போலீசோ பந்தோபஸ்து கொடுக்கிறது. மக்களுக்கு ஊத்திக்கொடுத்து உயிரைக்குடித்து பணம் பறிப்பது வழிப்பறி இல்லையா? சமூக விரோதச் செயல் இல்லையா? இதுதான் அரசின் தொழிலா?

தாலியறுக்கும் தமிழக அரசு

முள்ளுத்தோப்பில் சாராயம் விற்கப்பட்ட போது கூட, ஊருக்கு நாலுபேர் தான் குடித்தார்கள். இப்போதோ, பள்ளிக்கூடம் செல்லும் மாணவன் முதல், வயதான கிழவன் வரை வயது, சாதி வித்தியாசம் இல்லாமல் குடித்துச் சீரழிகிறார்கள். போதை தலைக்கேறி, அம்மணமாக நடுத்தெருவில் தாறுமாறாகக் கிடக்கிறார்கள். இவர்கள் யார்? நம்முடைய கணவராக, சகோதரனாக, மகனாகத்தான் இருப்பார்கள்.

முன்பு சாராயம் விற்றவனைக் காறித்துப்பியவர்கள், இன்று நம் அண்ணன் – தம்பிகளையே காறித்துப்பும் கேவலமான நிலைமைக்கு தள்ளியது யார்? அரசு சாராயம்.

குடித்துக் குடித்தே குடல் வெந்து செத்தவர்கள், அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இப்படி சிறுவயது பிள்ளைகள் சீரழிவதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் கொதித்துக் கொண்டிருந்தார்கள், அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள்.

போராடிக் களைத்த மக்களுடன் பு.மா.இ.மு

மனு கொடுப்பது தொடங்கி எல்லா சட்டப்பூர்வ வழிகளிலும் போராடி ஓய்ந்து நின்றனர் மக்கள். தேங்கிய குட்டையில் படுத்துப் புரளும் எருமையைப் போன்ற சொரணையற்ற அரசோ எதற்கும் அசையவில்லை. மனம் வெறுத்துப்போய் நிர்க்கதியாய் நின்ற மக்களுக்குத் தோள்கொடுத்தனர் பகத்சிங்கின் வாரிசுகளான பு.மா.இ.மு. தோழர்கள்.

“மனு கொடுப்பதாலோ, மனதுக்குள் புலம்புவதாலோ சாரயக்கடையை மூட முடியாது; அரசும் இதைச் செய்யாது. நம்வீட்டு ஆண்கள் குடல் வெந்து சாவதைத் தடுக்கவும் முடியாது” என்பதையும் உணர்த்தினர். இத்தனை நாட்களாக, குடும்பம் குடும்பமாக காவுவாங்கிய கடையைக் கண்ட மக்களின் கோபம் எல்லைமீறியது. சமூகவிரோத கிரிமினல் அரசின் சாரயக்கடையோ உடைந்து நொறுங்கியது. கடையைப் பாதுகாத்து நின்ற போலீசோ, சட்ட ஒழுங்கை மீறியதாகப் போராடியவர்களைக் கைது செய்தது.

டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்

சட்டத்தை மீறுவது அரசா? மக்களா?

“மது நாட்டுக்கு,வீட்டுக்கு, உயிருக்குக் கேடு” என சாரய பாட்டிலிலேயே அச்சடித்து வைத்து விற்பது யார்?

கள்ளச்சாராயம் விற்பது தவறு, சட்ட விரோதம் என்றால், அந்த வேலையை சட்டப்பூர்வமாகவே செய்வது யார்? தமிழக அரசுதானே!

தான் சொல்லும் சட்டத்தைத் தானே காலில் போட்டு மிதிப்பதும், “சட்டப்படி நட, சாரயக்கடையை மூடு” என்று மனுகொடுத்த மக்களை மிதிப்பதும் யார்? தமிழக அரசுதானே!

இந்தக் கேடுகெட்ட அரசுதான், போராடிய மக்கள் மீதும், தோழர்கள் மீதும் 11 பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

அரசாங்கச் சொத்தை நாசம் செய்து விட்டார்கள் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. சாராயக்கடையை அரசாங்கச் சொத்து என்று சொல்லும் கேவலத்தை இதுவரை எங்காவது கண்டிருக்கிறோமா?

இபோது சொல்லுங்கள், சட்டவிரோதமாக நடப்பது யார்? சாராயம் விற்பது சட்டவிரோதம் என்று சொல்லிக்கொண்டே சாராயம் விற்கும் அரசாங்கமா? சாராயம் விற்காதே எனறு போராடும் மக்களா?

நம்மைத் தண்டிக்கும் தகுதி அரசுக்கு உண்டா?

தோழர்கள் மீதும், மக்கள் மீதும் போடப்பட்ட பொய்வழக்குகளைக் கண்டு நாம் பயப்படவும் இல்லை, சிறைக்கும், சித்திரவதைக்கும், கைதுக்கும் அஞ்சவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை.

நாம் என்ன ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்தோமா? இல்லை. ஊழல் செய்தோமா?

மக்களைக் காப்பற்ற, சாராயக்கடையை மூடு என்று போராடினோம். நல்ல விசயம் செய்தோம் என்று மகிழ்ச்சியாக இருப்போம்.

ஆனால், நம்மீது பொய்வழக்கு போடவும், தண்டனை கொடுக்கவும் போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் அருகதை உண்டா? என்பதுதான் நமது கேள்வி?

இவர்கள் செய்ய மறுத்த வேலையைத்தான், மக்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்கள், சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார்கள் இது தவறா? இவர்கள் சொல்லும் சட்டப்படியே கூட இவர்களால் நடக்க முடியாதபோது, இவர்கள் சொன்ன சட்டப்படி நடந்த நமக்கு தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டப்படி தண்டனை கொடுத்தார் நீதிபதி குன்ஹா. ஆனால், அதே உச்சநீதிமன்றம், தான்கொடுத்த தீர்ப்புகளுக்கு எதிராக, ஜெயாவுக்கு ஜாமீன் கொடுத்ததோடு, “சீக்கிரம் கேசை முடி” என உத்தரவும் போடுகிறது. இப்போது சொல்லுங்கள், இந்த நீதிமன்றங்களுக்கு போராடும் மக்களைத் தண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?

அழிவிடைதாங்கி சுற்றுவட்டார மக்கள் நடத்திய சாராயக்கடை மூடும் போராட்டத்தை வாழ்த்துவோம்! பின்பற்றுவோம்!

திருடன் கையில் சாவியைக் கொடுப்பது எந்தளவுக்கு முட்டாள்தனமோ, அதைப் போன்றதுதான் சாராயம் விற்கும் அரசிடமே, “கடையை மூடு” என மனுகொடுப்பதும், மன்றாடுவதும். இனியும் இதனால் தீர்வில்லை என்பதை உணர்ந்தனர் அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்கள். அவர்களுடன் இணைந்தனர் பு.மா.இ.மு தோழர்கள். இழுத்து மூடினர் டாஸ்மாக் சாராயக் கடையை. தமிழ் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்து சாதித்து வழிகாட்டிய அழிவிடைதாங்கி சுற்று வட்டார மக்களையும் – பு.மா.இ.மு தோழர்களையும் வாழ்த்தி வரவேற்போம். அவர்கள் வழிநடப்போம்.

உழைக்கும் மக்களே, உங்களை மரணக்குழியில் தள்ளும் சாராயக்கடைகளை அகற்ற முன்வாருங்கள். அதற்கு உங்களோடு சேர்ந்து போராடவும், தோள்கொடுக்கவும் நாங்கள் தயார். இணைந்து போராடுவோம். மக்களின் உயிரைக்குடிக்கும் டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுவோம்.

அழிவிடை தாங்கி டாஸ்மாக் கடையை மூடு

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை – காஞ்சிபுரம்

வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்

2
  • வைகுண்டராஜனை திட்டமிட்டுக் காப்பாற்றும் தமிழக அரசு!
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை உடனே வெளியிடு!
  • தோரியம் கடத்தல் வழக்கில் வைகுண்டராஜனை உடனே கைது செய்!

19.02.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாதுமணல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை வெளியிடப்படாதது குறித்து தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியபோது

தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவ்வழக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஆய்வை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால்தான் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க இயலாதது போலவும்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இக்கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.

வைகுண்டராஜன் போஸ்டர்
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை கைது செய்யக் கோரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டி . (கோப்புப் படம்)

தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக கடற்கரைப் பகுதியில் அரிய வகைக் கனிமங்களை கடந்த 20 ஆண்டுகளாக வரைமுறையின்றி கொள்ளை அடித்து கடற்கரையையே சிதைத்தவர்களில் பிரதானமானவர் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன்.

கடந்த ஆகஸ்ட், 2013-ல் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆசிஷ் குமார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு- வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து வி.வி.மினரல்ஸ் நிறுவனம் அனுமதியின்றி 3 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை மணலையும் 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களையும் சட்டவிரோதமாக அள்ளி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இச்செய்தி வெளியான 24 மணி நேரத்தில் அவர் மாற்றப்பட்டார்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்தது. அதன்பின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தச் சொல்லியது. அந்த ஆய்வும் கடந்த செப்டம்பர், 2013-ல் முடிக்கப்பட்டு செப்டம்பர் 17, 2013 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, பெங்களூரு நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரை அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை.

அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் சிறப்புக்குழு ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த நவம்பர், 2013-லிலேயே ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பும் தமிழக அரசு பேடி குழுவை அழைத்து ஆய்வறிக்கையை கோரிப் பெறவில்லை.

 HRPC ஆர்ப்பாட்டம்
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தாது மணல் கொள்ளைக்கு சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் கடந்த 12-12-2013 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச் சந்திரன் மற்றும் வேணுகோபால் அடங்கிய சிறப்பு அமர்வு “15 நாட்களுக்குள் தாதுமணல் கொள்ளை தொடபாக புகார் செய்பவர்கள் அனைவரும் பேடி குழுவிடம் மனுக்கள் அளிக்கலாம், அதன் பின் அவற்றை ஆராய்ந்து மிக விரைவில் அரசிடம் அறிக்கையை பேடி குழு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

அதன்பின் 29-05-2014 அன்று “ஒரு மாதத்தில் பேடி குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருப்பையா அவர்கள் உத்தரவிட்டார். அதன்பின்பும் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இவ்வறிக்கையை வெளியிடக் கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 11-04-2014 அன்றே பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை நிலுவையில் உள்ள இவ்வழக்கில் தமிழக அரசு இன்று வரை பதில் மனுத் தாக்கல் செய்யாமல் வாய்தா வாங்கியே அலைக்கழித்து வருகிறது. மக்களும், ஏராளமான அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரியும் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து விட்டது.

HRPC ஆர்ப்பாட்டம்
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இதற்கிடையில் வைகுண்டராஜன் தாக்கல் செய்த வழக்குகளில் கடந்த 23-07-2014-அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் “ககன்தீப் சிங் பேடி குழு ஆய்வில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இதைத்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்ற உத்தரவெனக் குறிப்பிடுகிறார். இவ்வுத்தரவு திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை மாவட்ட ஆய்வுக்குத்தான் பொருந்தும். மேற்படி வழக்கு தாக்கல் செய்யும் முன் கடந்த செப்டம்பர், 2013-ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்குப் பொருந்தாது. தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட இன்றுவரை நீதிமன்றத்தடை ஏதும் இல்லை. ஒரு வேளை மக்களின் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டதால் அதைக் கோரிப் பெறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்குத் தடை இருக்கலாம்.

மேலும் கடந்த 12-12-2013-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பேடி குழு அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், அதன்பின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அதற்க்கெதிராகத் தீர்ப்பளிக்க முடியாது என்பதே சட்டநிலை. தமிழக அரசும் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பின்படி செயல்படுவதே சட்டப்படி சரி.

வாஞ்சிநாதன்
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (கோப்புப் படம்)

வைகுண்டராஜனின் தாதுமணல் நிறுவனங்கள் தென்மாவட்டங்களில் செயல்படும் நிலையில் மேற்கண்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை வளைப்பதில் வித்தகரான வைகுண்டராஜன் குறுக்கு வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளார். இவ்வுத்தரவு பெறுவதை கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வைகுண்டராஜன் உத்தரவு பெற ஆதரவாகவே இருந்துள்ளது. இதே பேடி குழு அறிக்கை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை வேண்டுமென்றே நீதிமன்றத்தில் மறைத்துள்ளது. இவ்வாறு வைகுண்டராஜனின் சட்டவிரோதச் செயல்கள் முழுக்க தமிழக அரசின் ஆசியோடுதான் நடந்து வருகிறது.

வி.வி.மினரல்ஸ் நிறுவன வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆகவே அ.தி.மு.க. அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்காவும் உறுதி செய்துள்ளார்.

இதற்கு கூடுதல் உதாரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்த பிறகு நடந்தவற்றை குறிப்பிடலாம். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 7 லட்சம் டன் தாது மணல் தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக வைகுண்டராஜன் உள்ளிட்ட தாது மணல் கொள்ளையர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மணல் லாரிகளை தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மக்கள் மடக்கிப் பிடித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. தடை இருந்தாலும் வைகுண்டராஜனின் தாது மணல் நிறுவனங்கள் செயல்பட்டே வருகின்றன. ‘இரண்டு முதல்வர்கள், இரண்டு தலைமைச் செயலர்கள், இரண்டு டி.ஜி.பி.க்கள் உள்ள தமிழக அரசு இதை அறியாதா?’ என்பதே மக்களின் கேள்வி. தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

தாதுமணல் கொள்ளை
தாது மணல் கொள்ளைக்கு எதிராக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி (கோப்புப் படம்)

இதோடு மாத்திரமல்லாமல் அணு உலை மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் வைகுண்டராஜன் உள்ளிட்ட தாதுமணல் கொள்ளையர்களால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் பல லட்சம் கோடியாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும். இது குறித்து கேரள காவல்துறை கூட வைகுண்டராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு போடும் தமிழக அரசு வைகுண்டராஜன் மீது இன்றுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமிழக அரசின் துணை இருக்கின்ற தைரியத்திலேதான் வைகுண்டராஜனின் இயற்கை வளச் சூறையாடல் கேட்பாரின்றி தொடர்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தாது மணல் கொள்ளையில் அரசியல்வாதிகள், மாநில அரசின் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முதல் அணு சக்தித் துறை, கனிமங்கள் மற்றும் சுங்கத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். ஆகவே விசாரணை முறையாக நடந்தால் இக்கொள்ளையில் ஆட்சியாளர்களின் பங்கு வெளிவரும் என்பதாலே முழுப்பூசணிக்காயை சோத்தில் மறைத்து வைகுண்டராஜனை காப்பாற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாதுமணல் கொள்ளையர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது என்பதை உணர்ந்து தாங்களே போராடி இயற்கை வளங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர்-உயர்நீதிமன்றம் – மதுரை.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2

4

மெட்ரிக்குலேசன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள் – 2

(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு ஜூலை புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. (மே இதழில் வெளியான முதல் பகுதி)

மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொண்டு வரும் கலாச்சார சீரழிவு, கல்வித் தரம் சீர் குலைவு, மாணவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சி இவற்றை அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரை, இப்பள்ளிகளை நடத்துவது ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்களும் அவர்களைச் சார்ந்த பணக்காரர்களும்தான் என்பதை விளக்குகிறது.)

ல மெட்ரிகுலேசன் பள்ளிகள் சீரழிந்த திரைப்பட ஆபாச பாடல்களுக்கான கூத்துகளையே ஆண்டு விழா – கலை விழா என்ற பெயரில் நடத்துகின்றன; மிக மோசமான ஏகாதிபத்திய ஆபாச கலாச்சார நாயகர்களான மைக்கேல் சாக்சன், தமிழக மைக்கேல் சாக்சனின் காட்டு கூச்சல், அரைகுறை ஆடை நடனம் இல்லாமல் இருக்காது.

ஆங்கில வழிக்கல்வி
மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

இவர்கள் தான் தாய்மொழி, சொந்த பண்பாடு, உடை போன்றவற்றை அநாகரிகமாக பார்க்கக் கூடிய பார்வையை ஊட்டி வளர்க்கிறார்கள். ஒரு மெட்ரிகுலேசன் மாணவி தன் தந்தையிடம் “அப்பா இனி எங்க ஸ்கூலுக்கு வரும் போது வேட்டியில் வராதீங்கப்பா, புள்ளைங்களும், ஆசிரியர்களும், ஏன் தலைமை ஆசிரியருமே ஒரு மாதிரியா பாப்பாங்கப்பா.” என்கிற அளவிற்கு நமது பாரம்பரிய உடை பற்றிய சீரழிந்த பார்வை விதைக்கப்பட்டிருக்கிறது.

மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

தமிழில் பேசினால் தண்டனை, அபராதம், ஒரு நாள் முழுவதும் முட்டி போடவைப்பது போன்ற கண்மூடித்தனமான போக்கு சர்வசாதாரணமாகி விட்டது. இல்லையேல் இடம் கிடையாது. லண்டனிலா பள்ளி இருக்குன்னு கேட்காதீங்க; அங்கு கூட இத்தகைய போக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சில தமிங்கிலனத்தின் அருவருக்கத் தக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தான் இந்த நிலை.

மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலேயனைப் போன்ற நடை- உடை-பாவனை தான் அறிவுத்தனமானது; நாகரிகம் என்ற பார்வை பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நிலவுகிறது. உதாரணமாக, தமிழகத்திலேயே மிக வறட்சியான பகுதிகளிலுள்ள பள்ளிகளில் கூட கோடை வெயிலிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் டைகட்டி, ஷீ,போட்டு இன் பண்ணி வரவேண்டுமென்று கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மார்ச் மாதம் அவசரமாக டைகட்டி வரத் தவறிவிட்டார், அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார் “டை” பிரியரான முதல்வர்.

இதைவிட கொடுமை, ஒரு பள்ளியில் பெரும்பாலோர் ஒரே நகரத்தை சார்ந்த மாணவர்கள், ஏறத்தாழ ஒரே சமூகத்தையும் சார்ந்தவர்கள். அப்பள்ளியிலும், வீட்டிலும், தெருவில் விளையாடும் போதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்று உத்தரவு இருக்கிறது.

எத்தனை பெற்றோர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள்? வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள், வெவ்வேறு தாய்மொழியாக உள்ள மைய விடுதி பள்ளிகளில்தான் மாணவர்கள் எல்லா நேரங்களிலும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரே ஊர், ஒரே தாய்மொழி எனில் அதற்கான அவசியம் இல்லை. அவர்களிடமும் ஆங்கிலத்திலேயே அவசியம் பேச வேண்டும் என்பது கண்மூடித்தனமான ஒன்று.

காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி
இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

பெற்றோர்களிடத்திலும், சக மாணவர்களிடமும் தன்னெழுச்சியான உணர்வுகளை ஒருவர் அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்துவார். அதை ஆங்கிலத்தில் செய் என்பது, அவர்களை செயற்கையாக சிந்திக்கச் செய்து, செயற்கையாக பேசி, விளையாட வைப்பதே. இதன் மூலம் மாணவன் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவன் என்பதே அறிவியலாளரின் கருத்து.

ஒரே தாய்மொழி, ஒரே ஊர்க்கார மாணவர்கள் அதிகம் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அவசியமே இல்லாதபோது பள்ளி வளாகத்திற்குள் தப்பித் தவறி தமிழில் பேசி விட்டால் மறுநாள் காலை மாணவர் பேரவையில் (அசெம்பிளியில்) பலர் முன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வைப்பது:

“இனிநான் தமிழில் பேச மாட்டேன், மன்னிக்கவும்; எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என்று உறுதி கூறுகிறேன்.”

என்று தமிழில் பேசிய மாணவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களிடையே மாணவ ஒற்றர்களை அமர்த்தி தமிழில் பேசுபவர்களை கண்டறிந்து அதற்கான தனி பதிவேடில் பதிவு செய்து ஒரு முறைக்கு மேல் எனில் ரூபாய் ஒன்று முதல் ஐந்து வரை அபராதம் வசூல் செய்கிற பள்ளிகளெல்லாம் தமிழகத்தில் இருக்கிறது.

இரண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக சென்ற ஆசிரியரிடம் “Sir, I toId him many time, but he is not asking sir” “அப்படி செய்யாதடான்னு பல முறை சொன்னேன்; ஆனா அவன் கேட்க மாட்டேன்ங்கிறான் சார்’’ என்பதைத்தான் அப்படியே மொழி மாற்றம் செய்து அவனின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடு சிதைக்கப்படுகிறது. இதுபோன்று எத்தனையோ கொடுமைகள் பட்டியல் கூறமுடியாத அளவிற்கு உள்ளது.

தின்றதை வாந்தியெடுக்க வைக்கும் தேர்வுமுறை

ம.உ.பா.மை போராட்டம்
சிதம்பரம் காமராஜ் பள்ளி தாளாளர் லெட்சுமி காந்தனை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

தேர்வு நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாண்டு மாதிரி வினாத்தாளைக் கொண்டு படித்து எழுதி எழுதி பார்க்க பயிற்சித் தரப்படுகிறது. கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி என்று மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பலரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். அதையே பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சிந்திப்பது, சுயமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, புரிந்து கொள்வது, ஒப்பிடுவது, காரண காரியங்களை ஆராய்வது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. கண்ணை மூடிக்கிட்டு திங்கிறது. தின்னதை தேர்வு என்ற பெயரில் வாந்தி எடுப்பது. அதற்குத்தான் சிறந்த பயிற்சி தருகிறார்கள்.

கல்வி அழிப்பு
“கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி”

மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு எப்படி நடைபெறுகிறது? பெளதிகம், வேதியியல், உயிரியல், தாவரவியல் இந்த நான்கிலும் எவ்வளவு மோசமானவனும் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டால் அவன் தேர்ச்சி பெற்றவனாகி விடுவான். முன்னூறுக்கு தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 105, செய்முறையில் நூறு எடுத்திடுறான், இதுக்கு பேரு “மேற்கத்திய பாணி, ஆங்கில வழி தரமான கல்வி” என்கிறார்கள். தேர்வுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே மாணவனுக்குத் தெரிந்துவிடும்; கட்டாயம் அறிவியலில் அனைவரும் தேறிவிடுவோம் என்று . பிறகு எப்படி அவன் பொறுப்போடு படிப்பான், பணிந்து கடினமாக உழைப்பான் என்று எதிர்பார்க்க முடியும்?

செய்முறை, எழுத்துத் தேர்வு நடத்தும் தேர்வாளராகப் போகும் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? மூன்று மணி நேர தேர்வாளராகப் போகும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ 25 முதல் ரூ 50 சம்பளம்; அது தவிர பயணப்படி வேறு. ஆனால் மெட்ரிக்குலேசன் தேர்வாளர்களுக்குச் சம்பளம் ரூ 6 நிர்ணயிக்கப்படாத பயணப்படி; அதுவும் ஆறு மாதம் ஓராண்டு கழித்துத்தான் கிடைக்கும். பெரும்பாலும் ஆசிரியர்கள் இப்பணிக்குப் போக விரும்புவதில்லை. ஆனால் பள்ளி நிர்வாகமோ ‘அரசு நடத்தும் தேர்வு; பள்ளிகளுக்கு அரசின் தயவு தேவையுள்ளது. இதைப் புறக்கணிக்கக் கூடாது’ என்று மிரட்டி ஆசிரியர்களைத் தேர்வுப் பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கிறது. இதே நிலைமை தான் விடைத்தாள் மதிப்பிடுவதற்கும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் 30,000 ஆசிரியர்களுக்கு, சங்கமோ, தலைவரோ எவரும் கிடையாது. இந்தப் படித்த பட்டதாரிக் கொத்தடிமைகள் நிர்வாகம் பணித்த எந்த பணிகளையும் செய்தே ஆக வேண்டும். மறுத்தால் வேலை அவ்வளவுதான்.

விபரீதமான விடைத்தாள் மதிப்பீடு

மெட்ரிக்குலேசன் விடைத்தாள் மதிப்பீடு எப்படி நடைபெறுகிறது? மெட்ரிக்குலேசன் ஆசிரியர் யார் வேண்டுமானாலும், எந்த விடைத்தாளையும் மதிப்பிடலாம். இரசாயன பட்டதாரி கணிதம் கற்பித்தால், அவர் கணித விடைத்தாள் திருத்தலாம்; போதிய ஆசிரியர்கள் இல்லையெனில் அறிவியல் பட்டதாரி எவரும் திருத்தலாம். புவியியலை, புவியியல் எடுத்துவரும் ஆசிரியர் மட்டுமின்றி கணிதம், இரசாயனம், பெளதிகம், வரலாறு, ஆங்கில இலக்கியம் படித்த எவரும் திருத்தலாம்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 2013-ம் ஆண்டு கடலூரில் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாடு (கோப்புப் படம்)

+2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு ரூ 2.50 –எனில், மெட்ரிக்குலேசன் விடைத்தாளுக்கு ரூ 1.25 அதுவும் தமிழகம் முழுவதும் இரண்டே மையங்களில். வடக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று. தோராயமான பயணப்படி தரப்படும். உள்ளூர் ஆசிரியரைத் தவிர வெளியூர் ஆசிரியர்களுக்கு இது செலவானதாகவும் சிரமம் மிகுந்ததாகவும் இருக்கும். சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்கள் மறுக்க இயலாது. காரணம் தனியார் பள்ளி, சுயநிதி என்ற நிர்ப்பந்தம்.

ஒரு விடைத்தாள் திருத்த சாதாரணமாக அரைமணி எடுத்துக் கொள்ளக் கூடியதற்குப் பதிலாக, இங்கே காலை பத்து முதல் மாலை 3.30 க்குள் நாற்பது முதல் ஜம்பதைத் திருத்தி விட்டு வெளியூர்காரர்கள் பேருந்தை பிடிக்க அவசர அவசரமாக ஒடி ஊர் போய்ச் சேர வேண்டும்.

மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பணம் கட்டிப் படிக்கும் பெரும் புள்ளிகளின் பிள்ளைகள்; ஆசிரியர்களோ சுயநிதி நிறுவனத்தின் அடிமைகள். எனவே தேர்ச்சி விழுக்காடு அதிகம் காட்ட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பெரும்பாலும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிகப்படியான விடைத்தாளை திருத்திவிட்டு ஊருக்கு பேருந்து பிடிக்க வேண்டிய அவசரம் வேறு. விளைவு என்னவாகும்? சராசரி மாணவனும், திறன் மிகுந்த மாணவனும் ஏறத்தாழ சம மதிப்பெண் எடுப்பார்கள். எதுவுமே எழுதாதவனும் மதிப்பெண் போடவே இடமில்லா வெற்று விடைத்தாளைச் சமர்ப்பித்தவனுமே தோல்வியுற நேரிடும். இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

மெட்ரிக்குலேசன் முறை உள்ள மேனிலைப் பள்ளிகளிலும், இதர மேனிலைப் பள்ளிகளிலும், +2 வில் இரண்டு மொழிப்பாடங்களில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், அதிக மதிப்பெண் கிடைக்கிறது என்பதால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் பாடங்களை எடுத்து கொண்டு தமிழைப் புறக்கணிக்கிற போக்கு அதிகரித்து வருகிறது.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு (கோப்புப் படம்)

+2 அளவில் உள்ள பிரெஞ்சு எட்டாம் வகுப்பிற்குரிய தரத்தில் இருப்பதாலும், தாராளமாகத் திருத்துவதால் தமிழைவிட அதிகமாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாலும் மொத்த மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பது ஒரு காரணம். +2 தரத்திற்குத் திருத்தும் முறைகளில் நன்றாகப் படிப்பவனும் பத்து முதல் பதினைந்து மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ளது போன்ற காரணங்களினால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளை என்ன அந்நியனா, வெள்ளைக்காரனா வச்சு நடத்துகிறான், அல்லது வைத்து நடத்த வேண்டுமென்று இலண்டனிலிருந்து உத்தரவு போடுகிறானா?

தமிழகத்தில், தமிழனாய்ப் பிறந்தவர்கள்தான், சமூக, அரசியல் பொருளாதாரம் காரணங்களால் தமிங்கிலனாய் மாறி தமிழினத்தின் மொழி, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் எதிராய் நிற்கிறான்.

1947- க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும், எதிர்கட்சிப் பிரமுகர்களும் அவர்களின் நெருங்கிய ஜமீன்கள், தொழில், வணிக கூட்டாளிகள்தான் இந்த ஆங்கில வழி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை

தேசிய இன, மொழி, அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே, இந்த இழிநிலையை அடியோடு நம் மண்ணிலிருந்து துடைத்தெறிய முடியும்.

புதிய ஜனநாயகம், ஜூலை 1997

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

1

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

மெரிக்க சிலிக்கான் வேலி”யின் ஐ.டி. ஊழியர்களை “சிலிகான் பள்ளத்தாக்கின் தோட்டத் தொழிலாளிகள்” என்று கூறுவதுண்டு. தோட்டத்தொழிலாளிகள் கூட சங்கம் வைக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஐ.டி. துறையில் இல்லை. காரணம், புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் முதலாளி வர்க்கம் பராமரிக்க விரும்பும் தொழிலுறவுக் கொள்கைக்கு இந்தத் துறை ஒரு முன்மாதிரி. ஊழியர்களின் சிந்தனை முறையை ஊழல்படுத்துவது, அச்சுறுத்தல் ஆகிய இரண்டு வழிமுறைகளின் மூலமும் ஐ.டி. நிர்வாகங்கள் இதனைச் சாதித்திருக்கின்றன.

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!குறிப்பிட்ட தகுதியிலான ஊழியர்களின் ஊதியத்திலேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிராகரிப்பது, ஊதியத்தில் கணிசமான பகுதியை பணித்திறன் அடிப்படையில் (performance based) மாதந்தோறும் தீர்மானிப்பது, ஊதியம் மற்றும் பதவி உயர்வை பணி மூப்பின் அடிப்படையில் அல்லாமல் அப்ரைசல் மூலம் தீர்மானிப்பது. இதன் மூலம் அடிமைச் சிந்தனைக்கு அனைவரையும் பயிற்றுவிப்பது – என்பன போன்ற வழிமுறைகளின் மூலம் “நாம்” என்ற உணர்வே எழவொட்டாமல் தடுத்து “நான்” என்ற சிந்தனையும், கழுத்தறுப்புப் போட்டியும் ஊழியர்களுக்கிடையே திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகிறது.

“உன்னுடைய அப்ரைசல் ரேட்டிங்கை சக ஊழியனிடம் சொல்லாதே, எல்லா இடங்களிலும் உன்னை முன்நிலைப்படுத்தக் கற்றுக்கொள், குழு உறுப்பினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளாதே, கருத்து வேறுபாடு குறித்து வாதம் செய்து சூழலை மாசுபடுத்தாதே” – என்பன போன்ற நடத்தை விதிகள் மூலம் ஊழியர்கள் கோழைகளாகவும், சுயநலமிகளாகவும் வனைந்து உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் அநியாயமாக வெளியேற்றப்படும் ஊழியர்கூட எச்.ஆரிடம் குரலை உயர்த்திப் பேசுவதில்லை.

“நான் நல்ல ரேட்டிங் வாங்கியிருக்கிறேனே, வாடிக்கையாளரின் பாராட்டைப் பெற்றிருக்கிறேனே, என்னை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று ஈனச்சுரத்தில் முறையிட மட்டுமே செய்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பது திறமைசாலிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சிந்திக்கும்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆட்குறைப்பினால் வேலை இழப்பவர்களுக்கு இணையப் பத்திரிகைகளும், உளவியல் ஆலோசகர்கள் எனப்படுவோரும் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்குகின்றனர்:

“லே-ஆஃப் என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. அதுவே வாழ்க்கையல்ல. நம்பிக்கை இழக்காதீர்கள். எந்தக் கம்பெனியும் வாழ்நாள் பூராவும் வேலை தர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒரு புரபஷனல் போல சிந்திக்கப் பழகுங்கள். இந்த வேலை போனால் என்ன ஆகும் என்று வேலையில் இருக்கும்போதே சிந்தித்துப் பழகுங்கள். இடையறாமல் புதுப்புது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.”
முதலாளித்துவ அடிமைத்தனத்தை இயற்கை நியதியாகக் கருதிச் சரணடைவதற்கு ஊழியர்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பு, நிர்வாகத்தை எதிர்ப்பது போலக் கனவு கூடக் காணமுடியாமல் ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தி வைப்பதற்கு ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கிறது. ஐ.டி. துறையில் வேலை தேடுபவர் தேசிய திறனாளிகள் களஞ்சியத்தில் (National Skills Repository) பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். நிறுவனங்கள் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்கும், திறமையாளர்கள் தங்களை எளிதில் சந்தைப்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுதான் என்று கூறப்பட்டாலும், இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறு.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குத் தமது பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு, தங்களது தரவுகளைக் கையாளும் இந்திய ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், ஊழியர்களின் ரேகை முதல் கருவிழி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் திரட்டப்படவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில்தான் ஜனவரி, 2006-ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு ஊழியர் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், அவரைப் பற்றிய எல்லாத் தரவுகளும் இதில் தொகுக்கப்படும் என்பதால், ஒரு ஊழியர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்தை எதிர்க்கும் பட்சத்தில் அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் ஏற்றப்பட்டு, அவர் வேறு எங்குமே வேலை தேட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர் ஐ.டி. முதலாளிகள். தொழிற்சங்கம் இல்லாத காரணத்தினால், சட்டவிரோதமான இந்தக் கிரிமினல் நடவடிக்கையை அம்பலமாக்கவோ, தடுக்கவோ ஊழியர்களால் இயலவில்லை.

ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பொருந்துமா?

டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட ஒரு பெண் ஊழியர், தான் கருவுற்றிருக்கும் நிலையில் வேலைநீக்கம் செய்யப்படுவதாகவும், தன்னை வேலைநீக்கம் செய்வது தொழிற்தகராறு சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த டி.சி.எஸ். நிர்வாகம், தான் கருவுற்றிருக்கும் தகவலை அந்தப் பெண் ஊழியர் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவில்லை என்றும், கருவுற்றிருக்கும் பெண்களைப் பணி நீக்கம் செய்வது தங்களது விதிமுறைகளுக்கே எதிரானது என்பதால் அந்தப் பெண்ணை மீண்டும் பணியமர்த்துவதாகவும், மற்றபடி தொழிற்தகராறு சட்டமெல்லாம் தங்கள் நிறுவனத்துக்குப் பொருந்தாது என்றும் கூறியது. அதாவது “எங்கள் சட்டத்துக்குத்தான் நாங்கள் கட்டுப்படுவோமேயன்றி, உங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்பதுதான் டி.சி.எஸ். நிறுவனத்தின் வாதம்.

கர்நாடகாவில் தொழில் நிறுவனங்கள் நிலையாணைச் சட்டம், 1946-ன்படி, ஐம்பது பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒவ்வொரு நிறுவனமும், தொழிற்தகராறு சட்டத்தின் அடிப்படையிலான ஒரு நிலையாணையை வகுத்து அமல்படுத்த வேண்டும். ஐ.டி. முதலாளிகளை மகிழ்விக்கும் பொருட்டு அப்படியொரு நிலையாணையைக் காகிதத்தில்கூட வகுத்து வைத்துக் கொள்ளத்தேவையில்லை என்று கடந்த 18 ஆண்டுகளாக ஐ.டி. நிறுவனங்களுக்கு விலக்களித்திருக்கிறது கர்நாடக அரசு. தமிழகத்திலோ தாங்கள் “ஷாப்ஸ் அண்டு எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் ஆக்ட்” – இன் கீழ் வருவதாகப் பித்தலாட்டம் செய்து வருகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

எல்லா ஐ.டி. நிறுவனங்களும் தொழில் தகராறு சட்டத்தின் கீழ்தான் வரும் என்பதை நிலைநாட்டுவதன் வாயிலாகத்தான் பணிப்பாதுகாப்பை உத்திரவாதம் செய்து கொள்ள முடியும். இதனை நிலைநாட்டுவதற்கே கூட ஊழியர்கள் தொழிற்சங்கமாகத் திரள்வது அவசியம்.

உதயமானது ஐ.டி.துறை ஊழியர் சங்கம்!

டி.சி.எஸ். ஆட்குறைப்பு குறித்த செய்தியை வினவு  இணைய தளம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆட்குறைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் ஈடுபட்டனர். சங்கம் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதுதான் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் படி என்ற அடிப்படையில் பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டது. படூரில் ஜனவரி 10-ம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் – பெரும்பான்மையினர் பல மாநிலங்களையும் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள்; மற்றவர்கள் மாணவர்கள் மற்றும்  தொழிலாளர்கள்.

பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நடத்திய இக்கூட்டத்தில், உரையாற்றிய ஐ.டி. பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம், தனது 17 ஆண்டு கால  ஐ.டி. பணி அனுபவத்திலிருந்து சங்கம் அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார். ஊழியர்களுடைய வாழ்க்கைப் பின்புலமும், ஐ.டி. துறை பணிச்சூழலும் ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதை விளக்கிய மனநல மருத்துவர் ருத்ரன், சங்கமாகச் சேர்வது அவர்களை இப்பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க எங்ஙனம் உதவும் என்பதை விளக்கினார்.

ஐ.டி. ஊழியர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை சட்டப்படியே இல்லையா, சங்கத்தில் சேர்ந்தால் வேலை போகுமா, இந்த ஆட்குறைப்பை முறியடிக்க முடியுமா – என்பன போன்ற ஊழியர்களின் கேள்விகளுக்குத் தனது உரையில் விடையளித்தார் வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ். நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கின்ற அதேநேரத்தில், ஊழியர்கள் சங்கமாகத் திரண்டு போராடுவதுதான் அவர்களது வேலையையும் உரிமைகளையும் பாதுகாக்கப் பயன்படும் என்று விளக்கிப் பேசினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்.

தாங்கள் சங்கத்தில் சேருவதாக அங்கேயே இரண்டு ஊழியர்கள் அறிவித்திருப்பதும், ஐ.டி. துறை ஆட்குறைப்புக்கு எதிராக வினவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்திருப்பதும், கட்டுரைகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படித்திருப்பதும் ஐ.டி. ஊழியர்களிடையே போராட்டச் சிந்தனை அரும்பத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன.
_________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
_________________________________

பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு

0

ன்றைய போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் யாருக்கும் கொள்கைகள் இல்லை. எப்படி அதிகாரத்துக்கு வருவது, என்ன தரகு வேலை பார்ப்பது, எவ்வளவு சம்பாதிப்பது என்ற கணக்குகள் மட்டுமே கூட்டணிகளை தீர்மானிக்கின்றன. இப்போது,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு காஷ்மீரின் சுயாட்சிக்கு போராடுவதாக சொல்லிக் கொள்ளும் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீர் மக்களின் போராட்டத்தையே அங்கீகரிக்க மறுக்கும் பா.ஜ.கவுடன் பேரம் பேசி வருகிறது.

இத்தகைய அப்பட்டமான, பிழைப்புவாத கூட்டணிகளின் முன்னோடிகளில் ஒன்று பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி. 1997-ம் ஆண்டு ‘கொள்கை’ ரீதியில் எதிரெதிரான பா.ஜ.கவும் பஞ்சாபின் அகாலி தளமும் அமைத்த கூட்டணி அந்த ஆண்டு நடந்த மாநில சட்ட மன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. அது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.

இப்போதும் இந்த இரு கட்சிகளும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை முன் வைத்து  அம்மாநில மக்களின் நலன்களை பலி கொடுப்பதை இந்த மாதம் (பிப்ரவரி 2015) புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஞ்சாபில் மதவெறி பயங்கரவாதத்தைக் கிளறிவிட்டதில் காங்கிரசின் பங்கு முதன்மையானது. இதை வசதியாக மறைத்துவிட்டு, அமைதியின் காவலர்களாக, சமாதானத் தூதர்களாக ஓட்டுப் பொறுக்கப் பார்த்தது காங்கிரசு. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.

மோடி - பாதல்
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அகாலி தள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல்

எதிர்முகாமான அகாலித்ளம் – பா.ஜ.க கூட்டணி 5-ல் 4 பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி, மிருக மெஜாரிட்டியுடன் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்து சீக்கிய ஒற்றுமையை முதன்மையாக்கிப் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டனர்.

ஆனால் இக்கூட்டணி முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானது என்பதற்கு இவர்களின் பத்திரிகைப் பேட்டிகளே சாட்சி. கொள்கை அடிப்படையில் எதிர் எதிர் துருவங்களான இரு கட்சி கூட்டணி பற்றி அகாலிதளம் தலைவர் பாதலிடம் பத்திரிகையாளர் கேட்டபோது “மத்தியில் 13 கட்சி கூட்டணி உள்ளது. இனிமேல் கூட்டணி ஆட்சிக்குதான் எதிர்காலம்” என்றார். பா.ஜ.க.வோ “மத்தியில் எதிர் எதிர் கொள்கைகள் கொண்ட கூட்டணி ஆட்சி நீடிக்காது” என்கிறது. பின்னர் பஞ்சாபில் மட்டும் நீடிக்கும் என்பது அக்கட்சிக்கே வெளிச்சம்.

இந்தக் கூட்டணியிலுள்ள இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர். அகாலிகளின் அடிப்படையான ‘அனந்தபூர்’ சாகிப் தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. பா.ஜ.க.வின் இந்தி –இந்து- இந்துஸ்தானை அகாலிதளம் நிராகரிக்கிறது.

1984 சீக்கியர் படுகொலையை வாஜ்பாய் கண்டித்தார். ஆனால் அதற்குக் காரணமான ‘நீல நட்சத்திர நடவடிக்கை’யை முழுமையாக ஆதரித்தவர்தான் வாஜ்பாய்.

1987 -ல் மதவாத அடிப்படையில் சீக்கியர்கள் ஒன்று கூடும் ‘சர்பட்கல்சா’ நிகழ்ச்சியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவர் பிரகாஷ்சிங் பாதல். அதற்கு சற்று முன்புதான் இந்திய அரசியல் சட்டத்தின் சில பக்கங்களைக் கிழித்தெறிந்தார்.

இவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க. இன்று பாதலின் அகாலி கட்சியின் கூட்டாளி.

இக்கூட்டணி போலிசாரின் நரவேட்டையாடல் மீது விசாரணைக் கமிசன் வைக்கும் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ. லட்சுமிகாந்த சாவ்லா கொலை வெறியன் கே.பி.எஸ்.கில்லுக்குப் புகழாரம் சூட்டிகிறார்.

தவிர நதிநீர்ப் பங்கீடு, சண்டிகர் உட்பட பஞ்சாபி பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

இதற்கு முந்தைய 1969 அகாலி ஜனசங்கம் பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

கட்காரி - பாதல்
சுக்பீர் சிங் பாதலுடன் பேரம் பேச வந்திருக்கும் மகாராஷ்டிர புரோக்கர் பா.ஜ.க.வின் நிதின் கட்காரி

இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி நீடிப்பதென்பது பஞ்சாப் மக்களின் உரிமைகள் குழி தோண்டிப் புதைக்கப்படுவதன் மீது தான் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், எஸ்.எஸ்.மானின் அகாலி கட்சியும் இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தன. இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கின்றிப் புறக்கணிக்கப்பட்டு, மொத்தமே 2 இடங்களைக் கைப்பற்றினர்.

இந்த பஞ்சாப் தேர்தலில், சி.பி.ஜ, சி.பி.எம். கட்சிகளின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. பஞ்சாபில் பல தொண்டர்களைப் பலி கொடுத்து, ‘தேச’ ஒற்றுமைக்குப் போராடியதாக மார்தட்டிய இந்த இருபோலி கம்யூனிஸ்டுகளிடையே ஒத்த கருத்தின்றிப் படுதோல்வியடைந்துள்ளனர்.

கன்ஷிராமுடன் கூட்டணி முறிந்ததும் இந்த இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்கு முயன்றது காங்கிரசு. சி.பி.ஐ. யின் மாநிலத் தலைமை மத அடிப்படைவாதத்தை முறியடிக்க காங்கிரசுடன் கூட்டு எனக் கொள்கை முலாமிட்டது. மத்தியத் தலைமை இதை நிராகரித்தது. ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம். என மூன்றாவது முன்னணி கண்டது. ஆனால் சி.பி.ஐ.யின் மாநிலத் தலைமையோ காங்கிரசுடன் மறைமுக உடன்படிக்கை கண்டு, காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது. தற்போது சி.பி.ஐ இரு தொகுதிகளில் வெற்றி பெற, பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

தனது முழுத் தோல்விக்கும் சி.பி.ஐயே காரணம் எனப் பழியை சி.பி.ஐ மீது சுமத்துகிறது சி.பி.எம் கட்சி.

மதவெறி பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாதத்தை வரிந்து கட்டி ஆதரித்ததாலேயே மக்கள் இப்போலி கம்யூனிஸ்டுகளைப் புறக்கணித்துள்ளனர்.

அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பி அகாலி தளம் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். தவிர காங்கிரசுக்குள்ளேயிருந்த போட்டியும், குழிபறிப்பும் அகாலி –பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணங்கள்.

புதிய ஜனநாயகம், மார்ச் 1997