கடந்த 2012, ஜூலை 18 அன்று குர்கானிலுள்ள மாருதி கார் நிறுவனத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய 546 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டனர். நிர்வாகமே சதிசெய்து மனிதவள அதிகாரியைக் கொன்றுவிட்டு, தொழிலாளர் மீது கொலைவழக்கைச் சோடித்து 148 தொழிலாளர்களைச் சிறையிலடைத்தது. ஒன்றரை ஆண்டுகளான பின்னரும் இத்தொழிலாளர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது. மாருதியின் அடியாளாக அரசும் போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மாருதி தொழிலாளர்கள், தமது சோந்த அனுபவத்தின் மூலமாக இன்றைய அரசியலமைப்பு முறையானது தொழிலாளர்களுக்கு எதிரானது என்ற உண்மையைப் பிரகடனப்படுத்துகின்றனர்.
மாருதி தொழிலாளர்கள் மீதான கொலைக் குற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் வழக்குரைஞர் ராஜேந்திர பதக் தனது பேட்டியில், “நாம் முதலாளித்துவ உலகில் வாழ்கிறோம். முதலாளிகள் ஓரணியில் இருக்கிறார்கள். அவர்கள் போராடும் தொழிலாளர்களைச் சிறையிலிட்டு வதைக்கிறார்கள். அவர்கள் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது உள்ளிட்டு எல்லா வகையான பஞ்சமாபாதங்களையும் செய்யத் தயங்காதவர்கள். இதனால்தான், சிறையிலுள்ள தொழிலாளர்களின் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டிப் பிணை கேட்டபோதிலும்கூட, அது நீதித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்நிய முதலீட்டாளர்களின் தரகர்களாகவே உள்ளனர். இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளுக்கானதாக உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் பிரச்சினை வராது என்று உத்திரவாதம் அளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஆட்சியாளர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் முதலாளிகளது நிகழ்ச்சி நிரலின்படியே செயல்படுகிறார்கள். மாருதி தொழிலாளர் குடும்பங்கள் பட்டியினியில் பரிதவிக்கின்றன. அவர்களது குழந்தைகள் பள்ளிக்குக்கூடச் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது.
கடந்த ஜனவரி 15 முதல் 31 வரை கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகக் குடும்பத்தோடு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்ட மாருதி தொழிலாளர்கள்.
சி.பி.எம். கட்சியில் உறுப்பினராக இருந்த நான், அதன் செயல்பாடுகளைக் கண்டு வெறுப்படைந்து அக்கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். சி.பி.எம். என்பது காங்கிரசு ஆதரவு கட்சியாகிவிட்டது. 2004 லிருந்து 2009 வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தில் 62 எம்.பி.க்களை இடதுசாரி முன்னணி பெற்றிருந்த போதிலும், தொழிலாளர் சட்டங்களில் எந்த சாதகமான மாற்றத்தையும் அக்கட்சி செய்யவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தொழிலாளர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
நமது நாட்டுக்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது. அது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளை அணிதிரட்டி நடத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறியுள்ள அவர், இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலையும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் கோரத்தையும் இப்பேட்டியின் வழியாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
நடைப்பயணப் பிரச்சாரத்தின் நிறைவாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி 31 அன்று மாருதி தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளின் நலனுக்கானது என்பதைத் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்து கொண்டுள்ள மாருதி தொழிலாளர்கள், கடந்த ஜனவரி 15 முதலாக கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை (ஏறத்தாழ 300 கி.மீ.) நீதிகேட்டு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வேலைநீக்கம் செயப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் அணிதிரண்டு வழியெங்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் பிரச்சாரம், கலைநிகழ்ச்சியுடன் இந்த நெடும் பயணத்தை நடத்தியுள்ளனர். வழிநெடுகிலுமுள்ள உழைக்கும் மக்கள் அவர்களுக்கு உணவும், இரவில் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, நிதியுதவியும் செய்து ஆதரித்துள்ளனர். எழுச்சியுடன் நடந்த இந்தப் பிரச்சார நடைப்பயணம், 16 நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 31 அன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. பின்னர் அரசுத் தலைவரிடம் நீதிகேட்டுப் போராடும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
தீவிரமாகிவரும் முதலாளித்துவ பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு, இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்த வேண்டிய அவசியத்தையே மாருதி தொழிலாளர்களின் இப்புதிய போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.
அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஐன்ஸ்டீன்
மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.
மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.
உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும் முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.
இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.
இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.
இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!
பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!
– வினவு
நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.
ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.
இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது
தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.
பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும் வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.
மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.
அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்ற நிகழ்வு இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.
இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?
அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.
அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை நோக்கி நம் பார்வை தொடர்கிறது. டைட்டனில் நமது புவியிலுள்ள பருவநிலை போலவே மழை, மின்னல் ஏற்படுவதுடன் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.
அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்
பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?
இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.
அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.
நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.
இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.
நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.
வால் நட்சத்திர மோதல்
மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், இங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.
1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.
இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.
இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.
சூரியனைப் போலுள்ள நட்சத்திரங்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும். அப்போது வியாழனின் நிலவு அல்லது சனிக்கோளின் நிலவு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை வந்தடையக் கூடும்.
கருந்துளை
நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம் எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் வெள்ளைக் குள்ளன் நிலையை வந்தடையும். அப்போது சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தையும் சூரியன் விழுங்கியிருக்கும்.
சூரியனை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.
இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.
வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.
லட்சக் கணக்கான விண்மீன்கள்
விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் சூரியனை விட ஐந்து மடங்கிற்கு அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.
இவ்வாறு விண்மீன்களில் அளவில் இருக்கும் வேறுபாடும், அவற்றின் அடுத்த நிலைப் பண்பையும் நிகழ்ச்சிப் போக்கையும் தீர்மானிக்கிறது.
இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் வெளியிடாமல் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.
நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் – 100 கோடி சூரியன்களின் நிறையுடையது
இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.
நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு
இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.
பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.
“பா.ஜ.க உடனான கூட்டணி, வை.கோ வின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் நம்பிக்கையாகக் கூறியுள்ளார். மார்ச் 1-ம் தேதி மத்தியபிரதேச மாநில பா.ஜ அரசின் ஆதரவுடன் சாஞ்சியில் நடந்த இரண்டாவது தர்மா-தம்மா ( இந்து- பொளத்தம்) கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடந்த முதல் கருத்தரங்கம் மற்றும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு இராஜபக்சே அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாத் கரியவாசம்
கரியவாசம் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் (இலங்கையின்) ‘ஒற்றுமை’க்காகப் பாடுபடுவதாகவும், பா.ஜ.க வும் அது போல (இந்தியாவின்) ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக விளங்குவதாகவும்” கூறியுள்ளதன் மூலம் இரு பாசிஸ்டுகளும் ஒரே கொள்கையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை விவரித்துள்ளார். இங்கு ‘ஒற்றுமை’ என்று இவர் கூற விளைவது சிங்கள பேரினவாதமும், பார்ப்பன இந்துமதவெறியும் தத்தமது நாடுகளில் போராடும் தேசிய இன மக்களின் உரிமைகளை மறுத்து துப்பாக்கி முனையில் பிணைத்து வைத்திருக்கும் ‘ஒற்றுமை’யைத் தான்.
இந்தியாவில் தேசிய இனங்களின் இருப்பையே ஏற்க மறுக்கிறது பா.ஜ.க. காஷ்மீரத்தில் உங்கள் நிலைப்பாடு எதுவோ, அதுவே ஈழத்தில் எங்கள் நிலைப்பாடு என்பதாக கரியவாசம் கூறுவதாகவும் இந்த ஒற்றுமை புராணத்தை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு என்ற புள்ளியில் இணைந்து கொள்ளும் இந்த பாசிஸ்டுகள் தான் உண்மையிலேயே இயற்கையான கூட்டாளிகள். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளை நிகழ்த்திவிட்டு இன்று வளர்ச்சி என்று வேஷம் போடும் மோடியின் செயலிலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு தற்போது அபிவிருத்தி என்று பசப்பி திரியும் ராஜபக்சேவிடமும் என்ன வேறுபாடு இருக்கிறது? அதைத் தான் கரியவாசம் ‘இங்கித’மாக கூறியிருக்கிறார்.
இப்படி ‘ஒற்றுமைக்கான’ சக்தியாக திகழும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பதால், அந்த சக்தி “வை.கோ வின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வரும்” என்று கருதுகிறார் கரியவாசம். வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை அரசுக்கெதிரான தனது நிலைப்பாட்டை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் பா.ஜ.கவின் யஷ்வந்த் சின்ஹா எனும் மதவெறி பாசிசக் கட்சியின் தலைவர் ஒருவரை வைத்து ‘மனித உரிமை’ கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருக்கிறார் வை.கோ. பாஜகவிற்கும் மனித உரிமைக்கும் என்ன தொடர்பு என்ற மிகப்பொதுவான உண்மையைக் கூட வைகோவின் சந்தர்ப்பவாதம் நியாயப்படுத்துகிறது. வழக்கமாக ஈழ இனப்படுகொலை என்று வீராவேசமாக பேசும் வை.கோ, ‘மனிதஉரிமை’ கருத்தரங்கம் என்று நடத்தியதன் பின்னணியில் பா.ஜ வுடனான கூட்டணி கணக்குகளும் இருக்கவே செய்கின்றன. அதன்படி கூட்டணி பேரம்தான் மனித உரிமையை பலிகடாக்கியிருக்கிறது.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்த பட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை. ஆனால் தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்குவதற்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பா.ஜ.க வினர் இனப்படுகொலை என்று கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக ஏமாற்றி பேசி திரிகிறார்கள். ஆக பா.ஜ.க வின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு தன்னால் பங்கம் வரகூடாது அதே சமயத்தில் மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற வை.கோ வின் பரிதவிப்புதான் ‘மனிதஉரிமை’ என்ற தலைப்பு. கூடவே சின்ஹாவுக்கு விருந்து போட்டு கூட்டணியில் நாலைந்து சீட்டு தேறுமா என்று கெஞ்சுவதும் வைகோவின் அஜெண்டாவில் இருந்தது.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்தபட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை.
கடந்த ஆண்டு ஜெனிவா நகரில், ஐநாவின் மனித உரிமைகள் மாநாட்டின் போது “ராஜபக்சே போர்க் குற்றாவளி அல்ல” என்றும் “இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க முடியாது” என்றும், ”அதே சமயம் இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றும் பா.ஜ.க கூறியதை இதனுடன் பொருத்தி பார்த்தால் இந்த தலைப்புக்கான காரணம் விளங்கும். வை.கோவை மதித்து நாலு சீட்டு கூட கொடுக்கத் தயாரில்லாத பா.ஜ.காரர்கள், மதிமுக கூட்டணிக்காக இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு எதிராக செயல்படுவார்கள் என்று எந்த கூமுட்டையும் நம்ப மாட்டான். மதிமுக தொண்டனும் நம்ப மாட்டான் என்றாலும் கட்சி உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தகைய நரிகளை பரியாக்கும் மோசடிகளை ஏற்றுத்தானே ஆகவேண்டும்?
தன் சந்தர்ப்பவாதத்தை மறைக்க, தான் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு இப்படி தமிழின மேக்கப் போட்டு விடுவது வை.கோவின் வாடிக்கைதான் என்றாலும், முன்பு ஜெயாவுக்கு புலிவேசம் கட்டிவிட்டபோது அவர் வாக்கு பெறும் நோக்கத்துடன் நடிப்புக்காக கூறியதைப் போன்று “ஈழம் வாங்கித் தருவேன்” “படை அனுப்புவேன்” என்று கூட சொல்லத் தயாராக இல்லை அவரது இப்போதைய கூட்டாளி பா.ஜ.க. காங்கிரசுக்கு ஓட்டு போடக்கூடாது என்பதைத் தவிர ராஜபக்சேவை குறித்தும், ஈழம் பற்றியும் அவர்களிடத்தில் இருக்கும் கருத்தும் காங்கிரசின் கருத்தும் வேறு வேறு இல்லை. ஆயினும் பா.ஜ.கவை ஈழத்தமிழர்களின் மீட்பராக சித்தரித்து மக்களை ஏமாற்ற முனைகிறார் வை.கோ.
கரியவாசத்தின் அந்த பேட்டி மேலும் சில முக்கியமான விசயங்களையும் சொல்லி செல்கிறது. பா.ஜ.க வின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான், சீதை தீக்குளித்த இடமாக சொல்லப்படும் இலங்கை நுவாரலியாவில் கோவில் கட்டி வருவதாகவும், அதன் மூலம் இந்தியாவிலிருந்து ஆன்மீக பயணிகளை ஈர்த்து இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் தொலைநோக்கோடு அதை அவர் கட்டி வருவதாகவும் பாராட்டியுள்ளார் கரியவாசம்.
இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இலங்கை அமைதியாகவும் இயல்பு நிலையிலும் தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள இலங்கை அரசு பகீரத முயற்சி செய்கிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பது, திரைப்பட விழாக்கள், காமென்வெல்த் மாநாடுகள் என்று தன் இரத்த கறையை மறைக்க முயல்கிறது. இந்த சூழலில் அங்கு சீதைக்கு கோவிலை கட்டி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலாவாசிகளை கவர்வது இனப்படுகொலை குற்றத்தை மறைக்க உதவும் என்று தெரிந்தே தான் ம.பி பா.ஜ முதல்வர் அந்த கோவிலை கட்டுகிறார். மேலும் இந்த கோவிலின் பின்னணியில் சங்க வானரங்களின் அகண்ட பாரத கனவும் இருப்பதை மறுக்க முடியாது.
கருணாஸ் போன்ற காமெடி பீஸ்களும் இதர சினிமா நட்சத்திரங்களும் இலங்கைக்கு செல்வதாக தகவல் கிடைத்ததும் அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழினவாதிகள் இன்று வரை சீதை கோவிலை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ, பாஜகவிற்கு பல்லக்கு தூக்கும் வைகோ குறித்தோ ஒரு அறிக்கை கூட விடவில்லை. இதனால் சினிமா நட்சத்திரங்களை எதிர்ப்பது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதிகாரமும், அரசு பலமும் உள்ள பாஜகவையும் அதன் அடிவருடிகளையும் கண்டிப்பதில் மவுனம் ஏன்?
நுவரலியாவில் சீதை கோயில் கட்டுகிறது வைகோவின் கூட்டணி கட்சி பாஜக.
விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பாடகர்கள் இலங்கை போவதாய் தகவல் வந்ததும் வை.கோ வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறினார்:
“ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தது போல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.”
நியாயமான கோபம் தான். மரண ஓலத்தை சம்ஸ்கிருத மந்திர ஒலியால் மறைக்கப் பார்க்கும் பாஜகவுக்கு எதிராக இதே கோபம் வைகோவுக்கு வரவில்லையே ஏன்? ரோம் தீப்பிடித்த போது நீரோ பிடில்தான் வாசித்தான். ஆனால் பாஜகவோ தீ வைத்த இலங்கை அரசை கருத்திலும், அரச உறவுகளிலும் ஆதரித்து உதவி செய்கிறது. அத்தகைய தீவட்டி நீரோக்களுக்கு நல்லெண்ணத் தூதராக பணியாற்றும் வைகோவிற்கு என்ன தண்டனை?
அந்த கோயிலை இடிப்பதற்கு கரசேவை செய்ய தமிழார்வலர்கள் தயாராக இல்லையே ஏன்? வை.கோ, நெடுமாறன் உள்ளிட்ட தமிழினவாதிகள் தம்மளவிலேயே ஒரு தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்பதால் சீதை கோவிலை எதிர்த்தால் இந்து அல்லது தமிழ் சென்டிமெண்ட் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். கூடவே ஜெயா விரட்டிவிட்ட பிறகு தற்போது வேறு வழியில்லாமல் பாஜகவை அண்டி பிழைப்பை நடத்துவதாலும் அது குறித்து அவர்கள் வாய் திறப்பதில்லை. அருவெருப்பான இந்த பிழைப்புவாதிகளை புரிந்து கொண்டு நிராகரிக்காத வரை ஈழத்தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை.
கரியவாசத்தின் பேட்டி, இந்திய ஆளும் வர்க்க நலனை பிரதிபலிக்கும் பா.ஜ.க இலங்கைக்கு எதிராக சிந்திக்காது என்பதையும், தன் பிழைப்புவாதத்திற்காக அவர்களை நம்பச் சொல்லும் வை.கோவின் துரோகத்தையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும் கரியவாசம் நம்பிக்கை வைப்பது போல வைகோவையெல்லாம் பாரதிய ஜனதா திருத்த வேண்டியதில்லை. ஏனெனில் அவர் இயல்பிலேயே ஒரு பாரதிய ஜனதாவின் தமிழ் பிராண்ட் போர்வாள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.
இவற்றை எல்லாம் காண மறுத்து, ‘வை.கோ கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை மாறமாட்டார்’; ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று வை.கோ ஆதரவாளர்கள் தங்களுக்கு தாங்களே அனுதாபம் சொல்லிக் கொள்கிறார்கள். பிழைப்புவாதிகளுக்கும், அடிமைகளுக்கும் கொள்கை என்று ஒன்று இருக்க முடியுமா? இருந்தால் அதன் பெயர் கொள்கையா?
தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை நியூயார்க் மாவட்ட நீதிபதி ஷீரா ஷெய்ன்ட்லின் தள்ளுபடி செய்திருக்கிறார். ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தேவயானியையும் அவருக்கு ஆதரவாக பொங்கி எழுந்த இந்திய அரசையும் பார்த்து புலியாக உறுமிய அமெரிக்க நீதித்துறை இப்போது நரியாக வாபஸ் வாங்கியது ஏன்?
தவறான தகவல்களையும், மோசடி ஆவணங்களையும் கொடுத்து சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணுக்கு விசா பெற்று தன் வீட்டு வேலைகளை செய்வதற்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு நியூயார்க் இந்திய தூதரகத்தில் பணி புரிந்த தேவயானி கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். ‘இந்தியாவின் பிரதிநிதியான அவர் கைது செய்யப்பட்டது இந்திய தேசமே அவமதிக்கப்பட்டதற்கு இணையானது’ என்று சீன் போட்ட இந்திய அரசு சும்மா ஒரு பேருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது.
தேவயானியின் விடுதலைக்காக போராடும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே
மறுபுறம், ‘கும்தலக்கடி கும்மாவா, அமெரிக்கான்னா சும்மாவா. எங்க ஊருக்கு வந்தா தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் புடிச்சி உள்ள போட்டுருவாங்க, சட்டம் தனது கடமையை உண்மையாகவே செய்யும். உங்க இந்தியாவப் போல இல்ல’ என்று கூறி அமெரிக்காவின் ‘சட்டப்படியான ஆட்சி’யைக் கொண்டாடினார்கள் அமெரிக்கவாழ் இந்திய அம்பிகள். இப்படி அமெரிக்க என்ஆர்ஐ-களும், இந்திய மேட்டுக்குடியும் தேசபக்தி, ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு போங்காட்டம் ஆடினார்கள்.
இதே அமெரிக்காவில் சென்ற ஆண்டு போலியான வருமான சான்றிதழ் கொடுத்து அமெரிக்க அரசின் இலவச மருத்துவ வசதியை மோசடியாக பெற்று 12 லட்சம் டாலர் வரை கையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது கை வைக்க அமெரிக்க நீதித் துறை துணியவில்லை.
ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளும், ஐநா-வில் வீட்டோ அதிகாரமும் இருப்பதால், அந்நாட்டுடன் இந்த விஷயத்தில் மோதி விளையாட அமெரிக்காவுக்கு நேரமில்லை. இந்தியா போன்ற அமெரிக்க எஜமானர்களை விழுந்து தொழும் அடிமை நாடுகளிடம்தான் இது போன்று சில்லறை விவகாரங்களில் தனது சட்டங்களை பாய்ச்சி, சீண்டி, ரசிப்பது முடியும்.
மேலும், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மிட் ரோம்னி என்பவர் தேவயானியைப் போலவே தனது வீட்டில் வேலை செய்பவருக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசியல் கட்சி எதிராளியின் வண்டவாளங்களை தெருவில் இறக்கி விடும் அமெரிக்க ‘ஜனநாயக’த்தின் தேர்தல் மேலாண்மை உத்தியின் ஒரு பகுதியாக அந்த தகவல் கசிய விடப்பட்டது. ஆனால் மிட் ரோம்னி மீது அமெரிக்க நீதித்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கைது செய்யப்பட்ட தேவயானியும் சில மணி நேரங்களுக்குள் இந்திய அரசால் இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டப்பட்ட 2.5 லட்சம் டாலர் பிணையில் வெளியில் வந்து விட்டார்.
‘தேவயானிக்கு தூதரக அதிகாரிகளுக்கான சட்ட பாதுகாப்பு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர்ந்தது செல்லாது’ என்று அவரது தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடேவும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும், 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளும் ஓலமிட்டனர். “தூதரக துணை அலுவலராக இருந்த தேவயானிக்கு தூதரக பணி தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் சட்ட பாதுகாப்பு இருக்கிறதே தவிர, தூதர்களுக்கு இருப்பது போன்று அனைத்து குற்றவியல் சட்டங்களிலிருந்தும் விலக்கு அளிக்கும் முழுமையான பாதுகாப்பு இல்லை” என்று அமெரிக்க அரசுத் தரப்பு வாதிட்டது. இதே அமெரிக்க அரசு, 2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புகாரெஸ்ட் நகரில் குடித்து விட்டு கார் ஓட்டி அந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவரை கொன்ற அமெரிக்க தூதரக ஊழியர் வான் கோதம் என்ற கடற்படை வீரருக்கு தூதரக சட்ட விலக்கு செல்லுபடியாகும் என்று சாதித்து தானே ராணுவ விசாரணை நடத்தி தண்டனை கொடுத்தது.
தேவயானியைப் போலவே வீட்டுப் பணியாளருக்கு சட்டப்படி ஊதியம் கொடுக்காத மிட் ரோம்னி.
வெளிநாடு செல்லும் போது வீட்டு வேலை செய்ய ஆள் அழைத்துச் செல்ல தேவயானி பயன்படுத்திய இந்த ஏற்பாடு, (அதாவது, விசா பெறுவதற்காக ‘கூடுதல் சம்பளம், முறையான வேலை நேரம்’ என்று வரையறுத்த ஒப்பந்தத்தை சமர்ப்பிப்பது, நடைமுறையில் வாய்மொழி ஒப்பந்தப்படி குறைந்த சம்பளம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்குவது), கடந்த 20 ஆண்டுகளாக இந்திய தூதரக அதிகாரிகளால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்க அரசு இது வரை எந்த பிரச்சனையும் கிளப்பவில்லை.
இவ்வாறு, தனது வல்லாதிக்க நலன்களுக்கு ஏற்ப பிற நாடுகளுடன் பேரம் பேசுவதற்காக, மிரட்டவும், விட்டுக் கொடுக்கவும், சீண்டி விளையாடவும் அமெரிக்க மற்றும் பன்னாட்டு சட்டங்கள் அமெரிக்க அரசுக்கு பயன்படுகின்றன.
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளைப் பொறுத்த வரை உலகில் எங்கு போனாலும் தமது வீட்டு வேலைகளை செய்ய இந்தியாவிலிருந்து ஒரு ‘அடிமை’யை அழைத்துப் போகும் தமது ‘அடிப்படை’ உரிமை பாதிக்கப்பட்டதாக பொருமிய அவர்கள், தேவயானிக்கு இன்று இந்த கதி என்றால், நாளைக்கே வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதரையே வீடு புகுந்து கைது செய்து விடுவார்கள் என்று கவலைப்பட்டனர். “வேலைக்காரிக்குக் குறைவான சம்பளம் கொடுத்தது பெருங்குற்றமா?” என திமிர்த்தனமாக கேள்வி எழுப்பினார்கள். தமது நலன்களுக்கு எதிரான இத்தகைய அமெரிக்க நடத்தையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சூளுரைத்தனர்.
இந்த மானஸ்தர்கள் இந்திய பிரதமர் முதல் கடைசி குடிமகன் வரை செல்போன், இணைய தொடர்புகளுக்குள் புகுந்து அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்பது குறித்து வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது போபால் கொலைகாரன் ஆண்டர்சனையோ, யூனியன் கார்பைடையோ காப்பாற்றத்தான் துடித்தார்களே அன்றி தண்டிக்க அல்ல. இதுதான் இவர்களது தேசபக்தி காட்டும் அடிமைத்தனம்.
‘இந்திய-அமெரிக்க உறவுகளில் நெருக்கடி, இந்தியாவின் தன்மானப் பிரச்சனை’ என்று இந்திய ஆளும் வர்க்கம் துள்ளுவதை ரசித்துக் கொண்டிருந்தது அமெரிக்க அரசு. ‘வல்லரசு இந்தியாவின் காயம்பட்ட இதயத்தை’ ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் தத்தமது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பிப் போய் விட்டார்கள்.
தம் வசம் வேறு என்ன வழி இருக்கிறது என்று மூளையைக் கசக்கிக் கொண்ட இந்திய அதிகார வர்க்கம் தமது ஒட்டுமொத்த எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு தேவயானிக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அவரை நியூயார்க்கில் உள்ள ஐநா சபையின் இந்திய பிரதிநிதி அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டது.
ஆனால், “புதிதாக வழங்கப்படும் ஐநா ஊழியருக்கான முழுமையான சட்ட பாதுகாப்பு முன் தேதியிட்டு செல்லுபடியாகாது, எனவே ஏற்கனவே செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடர்வதை தடுக்க முடியாது” என்ற அடிப்படையில், ஜனவரி 9-ம் தேதி விசா மோசடி முதலான குற்றங்களை தேவயானி மீது சுமத்தியது நியூயார்க் நீதித் துறை. இருப்பினும் குற்றவாளியின் மீது தன் பிடியை மேலும் இறுக்காமல் தேவயானியின் மனுவின் அடிப்படையில் அவரை அமெரிக்காவை விட்டு போக அனுமதித்தது அமெரிக்க நீதிமன்றம். அந்த மனு மீதான இறுதித் தீர்ப்புதான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.
குற்றம் நடந்த நேரத்திலும், கைது செய்யப்பட்ட போதும் தேவயானிக்கு தூதரக பணிகள் தொடர்பான சட்டப் பாதுகாப்பு மட்டுமே இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு அதைத் தள்ளுபடி செய்யக் கோரிய ஜனவரி 9-ம் தேதி ஐநா ஊழியராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு உள்ளது என்று நீதிபதி இப்போது தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறாக, இந்த விஷயத்தில் நோண்டியது போதும் என்று தான் கிளப்பிய புழுதியை அடங்க விட்டு அமைதியாகியிருக்கிறது அமெரிக்கா.
தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.
தேவயானியின் பிணை நிபந்தனைகளை ரத்து செய்து இந்திய அரசு கட்டியிருந்த பிணைத் தொகையையும் விடுவித்தது நீதிமன்றம். “தேவயானி மீது சாட்டப்படும் குற்றம் அவரது தூதரக பணி தொடர்பாக செய்யப்படவில்லை என்று நீதித்துறை கருதினால் புதிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யலாம்” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. குற்றவாளி பாதுகாப்பாக நாட்டை விட்டு பறந்து விட்ட நிலையில், இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்டை பார்த்து விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அமெரிக்கா அப்படியே புதைத்து மூடி விடும் என்று எதிர்பார்க்கலாம். அல்லது தேவைப்படும் போது நீதிபதியின் இந்த ‘செய்யலாமை’ வைத்து வழக்கை உயிர்ப்பிக்கவும் செய்யலாம்.
ஜனவரி 9-ம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிய தேவயானி இந்திய வெளியுறவுத் துறையின் “வளர்ச்சி கூட்டிணைப்பு நிர்வாகத்தின் (Development Partnership Administraion)“ இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க் தூதரகத்தில் பதவி, அங்கு பிரச்சனை ஏற்பட்டதும் ஐநா ஊழியராக நியமனம், அதிலிருந்து திரும்பி வந்ததும் நிர்வாக பதவி என்று தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.
அமெரிக்க நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவயானியின் குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே தன் மகள் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய உதவிய இந்திய அரசு மற்றும் இந்தியர்களின் ஒத்துழைப்புக்கும், உதவிக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சங்கீதா ரிச்சர்ட் குடும்பத்தினரை பொய்யர்கள் என்று திட்டியிருக்கிறார்.
இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சட்டங்கள் தற்செயலாக சாமானியர்களின் சார்பில் சில சமயம் இயங்குவது போல காண்பித்தாலும், ஆளும் வர்க்கங்கள் அவற்றை சீக்கிரமே மேன்மக்களுக்கு சாதகமாக சரி செய்து விடுவார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை. அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு சாமானிய இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு ஆதரவாகத்தான் அமெரிக்க, இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக, தேசப்பற்று என்ற பெயரில் ஆண்டைகளுக்காக கூக்குரலிட்டார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
சங்கீதா ரிச்சர்டை கொடுமைப்படுத்திய தேவயானியையும், அவரைப் போன்ற அதிகார வர்க்கத்தை விட்டுக்கொடுக்காத இந்திய அரசையும், இந்திய மக்களை ஒடுக்கியும், ஒடுக்குதலில் உதவும் இந்திய தரகர்களை உச்சி முகர்ந்தும் வரும் அமெரிக்க அரசையும் நாம்தான் தண்டிக்க வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். இதன்றி சங்கீதா ரிச்சர்டுக்கோ இல்லை இந்திய மக்களுக்கோ நீதி கிடைத்து விடாது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7-ம் தேதி) “அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்கிற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு செய்ய உச்சநீதி மன்றத்திற்கு செல்லும்படி தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம். தனியார்மயத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பு வெளியான உடனே நீதி மன்றத்தில் கூடி நின்ற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் நீதிபதிகளையும், அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5-வது மாடியிலிருந்து குதிப்பதாக போராட்டம் நடத்திய செவிலியர் மாணவர்கள்.
2010-ம் ஆண்டு செவிலியர் பயிற்சியை முடித்த இம்மாணவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களை வீதிகளிலும், நீதிமன்றத்திலும் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 25 செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. செவிலியர் பயிற்சி படிப்பிற்கான காலம் மூன்றரை ஆண்டுகள். 2007-ம் ஆண்டில் சேர்ந்து பயிற்சியை முடித்த மொத்தம் 1861 மாணவர்கள், 25 பயிற்சி மையங்களிலிருந்தும் 2010-ம் ஆண்டு வெளியே வந்தனர். 2011-ம் ஆண்டு இந்த மாணவர்களை இரு பகுதிகளாக பிரித்து (969 பேர் ஒரு பகுதியாகவும் 893 பேர் மற்றொரு பகுதியாகவும்) தேர்வுக்குரிய சரிபார்ப்பு செய்யப்பட்டது.
இவர்களில் 969 பேருக்கு முதல் கட்டமாக வேலை வழங்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்ததால் பணி அமர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்ததாக அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்று மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே அரசுக்கு நினைவூட்டினர், ஆனால் அது அசைந்து கொடுப்பதாக இல்லை.
2012-ம் ஆண்டு தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள், “தங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் வேலை வேண்டும். தனியார் பயிற்சி பள்ளிகளும் அரசு அனுமதியுடன், அரசு வழங்கிய சான்றிதழ்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. இரண்டு மாணவர்களுக்கும் ஒரே பாடங்கள், ஒரே தேர்வு முறைகள் தான் என்றிருக்கும் போது எங்களுக்கு மட்டும் அரசு வேலை தர மறுப்பது தவறு, இதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தனர். வழக்கை பரிசீலித்த நீதிபதிகள் தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் எதிர்காலத்தில் வேலை வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதற்கெதிராக தனியார் பள்ளி மாணவர்கள் மறு ஆய்வு மனு தக்கல் செய்தனர். மாணவர்கள் இவ்வாறு மாறி மாறி நீதி மன்றத்தை அணுகிக் கொண்டிருந்த நிலையில். “இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலும் பிரச்சினை நடக்கிறது. அரசுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான், எனவே இதற்கு தேர்வு தான் ஒரே தீர்வு” என்று கூறி அரசு தந்திரமாக ஒரு வேலையை செய்தது.
MRP (Medical Requretment Board) மருத்துவ பணி தேர்வாணையம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையம் நடத்தும் தேர்வின் மூலம் தான் இனி செவிலியர் வேலைக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு அரசு, தனியார் என்று இரு தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானது என்று கூறி தனியார் பயிற்சி பள்ளிகளுக்கு ஆதரவாக தேர்வாணையம் ஒன்றை உருவாக்க அரசாணை பிறப்பித்தது. இப்படி மெரிட் என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளுக்கு கல்லாவை கூட்டும் வேலையை தமிழக அரசு செய்தது.
சென்னை உயர்நீதி மன்றம்
அரசின் இந்த தனியார் மய ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக அரசு பள்ளி மாணவர்கள் உடனடியாக நீதி மன்றத்தில் தடை கோரி மனு போட்டனர். மாணவர்களின் மனுவை பரிசீலித்த ராமசுப்பிரமணியம் தலைமையிலான ஒருநபர் அமர்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கோரிக்கை சரியானது என்றும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அரசாணைக்கும் தடை விதித்தது.
இதற்கு அரசு தரப்பிலிருந்து ஆறு மாதங்களாக எந்த பதிலும் இல்லை. மேல் முறையீடும் செய்யவில்லை, வேலையும் வழங்கவில்லை. மொத்தத்தில் தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. எனவே மாணவர்கள் வீதியில் இறங்கினர். நீதிமன்ற உத்தரவுப்படி வேலை வழங்கக்கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 2013-ம் ஆண்டு செவிலியர் மாணவர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
பேச்சுவார்த்தைக்கு பயிற்சி பெற்ற செவிலியர் மாணவர்களை நேரடியாக அழைக்காமல், அரசு செவிலியர் சங்கத்தலைவி லீலாவதி மூலம் அழைத்தது. மாணவர்களும் அதை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் சார்பில் லீலாவதி கலந்து கொண்டார். ஆனால் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்பந்தமே இல்லாத வகையில் தனியார் தரப்பையும் அரசு அழைத்திருந்தது. பேச்சு வார்த்தையில் தனியார் பயிற்சிப் பள்ளிகளின் பிரதிநிதி நேரடியாக கலந்து கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், சுகாதாரத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு மாணவர்கள் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் அனைவருக்கும் உறுதியாக வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே செவிலியர் சங்கத் தலைவி லீலாவதி, “வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்” என்று மாணவர்களிடம் உறுதியளித்தார். அவர் நம்பிக்கையுடன் கூறியதால் மாணவர்களும் வழக்கைத் திரும்ப பெற்றுக் கொண்டனர்.
ஆனால், அதன் பிறகு ஆறு மாதங்கள் ஆகியும் வேலை வழங்கப்படவில்லை. மாறாக மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையை துவங்கியது அரசு. எனவே மாணவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். “அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து வேலை தருவதாக கூறியதால் தான் வழக்கை திரும்ப பெற்றோம், ஆனால் கூறியபடி வேலை வழங்காமல் மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையில் இறங்கியிருப்பதால் மீண்டும் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டு தடை பெற்றனர்.
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவர்கள்.
அரசோ எதுவுமே நடக்காதது போல இன்னொரு ஆறு மாதங்களுக்கு ஆமையை போல நகர்ந்து கொண்டிருந்தது. பிறகு சொல்லி வைத்தாற்போல அரசு தரப்பும், தனியார் தரப்பும் ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தனியார் தரப்பு வழக்குரைஞர் என்ன என்ன வாதங்களை எல்லாம் வைத்தாரோ அதே வாதங்களை அரசு தரப்பு வழக்குரைஞரும் வைத்தார். ஏனென்றால் எல்லாவற்றையும் அவருக்கு தனியார் வழக்குரைஞர் தான் எழுதிக்கொடுத்தார் என்கின்றனர் செவிலியர் மாணவர்கள்.
“இந்தியாவில் உள்ள அனைவருமே இந்திய குடிமகன்கள் தான், எனவே அரசு தனியார் என்றெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்” என்று தனியார் தரப்பு வாதிட்டது. “வேலை இல்லாமல் இருப்பது இரு தரப்பு மாணவர்களுக்குமே பிரச்சினை தான். எங்களுக்கு இரண்டு மாணவர்களும் சமம் தான். இந்த பிரச்சினையால் உரிய இடங்களுக்கு போதிய செவிலியர்களை வேலையில் அமர்த்த முடியவில்லை, துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தேர்வின் மூலம் இருவரையும் வேலைக்கு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. எனவே இருவருக்கும் வேலை வழங்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்” என்று அரசு தரப்பு வாதிட்டது.
ஒரு பக்கம் மாணவர்களுடன் சட்டப் போராட்டம் நடத்துவது போல நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் அரசு தனது சதி வேலைகளை செய்துகொண்டிருந்தது. மூன்றாண்டுகளாக வழக்கு, போராட்டம் என்று செவிலியர் மாணவர்கள் அரசோடு போராடிக் கொண்டிருந்த போது, அரசு சதித்தனமாக இன்னொரு பக்கம் இந்த மூன்றாண்டுகளில் பயிற்சி முடித்து வெளியில் வந்திருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களிடமிருந்து செவிலியர் வேலைகளுக்கான ஆட்களை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வேலையை நேரடியாக செய்யாமல் என்.ஜி.ஓ- தொண்டு நிறுவனங்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.
2013-ம் ஆண்டில் மட்டும் இவ்வாறு 10,000 செவிலியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இரண்டு என்.ஜி.ஓ-களிடம் ஒப்படைத்திருந்தது. ஆண்டு இறுதியில் அனைவரும் வேலையிலும் அமர்த்தப்பட்டு விட்டனர். என்.ஜி.ஓ-க்கள் மூலம் வேலைக்கு எடுக்கப்படுபவர்கள் அனைவருமே தற்காலிக ஊழியர்கள் ஆவர். வேலைக்கு எடுக்கும் போதே என்.ஜி.ஓ அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. ஒப்பந்த பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே அவர்களை வேலையில் அமர்த்துகிறது. இவ்வாறு வேலைக்கு எடுக்கப்படும் செவிலியர்கள் எப்போது போகச் சொன்னாலும் வேலையை விட்டு போய் விட வேண்டும்.
இந்த வேலையில் ஈடுபட்டுள்ள இரண்டு என்.ஜி.ஓ-க்களில் ஒன்று அரசு பயிற்சிப் பள்ளி மாணவர்களில் ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்கவில்லை. எனவே, “ஆள்பற்றாக்குறை நிலவுகிறது, மாணவர்களை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனே நீக்க வேண்டும்” என்றெல்லாம் அரசு தரப்பு நீதி மன்றத்தில் கூறியதெல்லாம் பச்சைப் பொய்கள் என்பதையும் அரசுப் பயிற்சி பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலானவை என்பதையும் இந்த நடவடிக்கைகள் அம்பலமாக்குகின்றன.
அந்த பொய்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, “அனைத்து தரப்பு மாணவர்களும் சமமானவர்களாக இருக்கும் போது அரசு மாணவர்களுக்கு மட்டும் தனிச்சலுகை அளிக்கத் தேவையில்லை” என்று அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் என்கிற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு அரசாணை மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.
தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர்கள்.
எங்களுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என்று அரசும். மாணவர்களுக்குள் அரசு மாணவர்கள், தனியார் மாணவர்கள் என்று ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நீதி மன்றமும், சமத்துவ விரும்பிகளைப் போல பேசுவதை கேட்பவர்கள், அப்பாவிகளாக இருந்தால் ‘அரசாங்கமும், நீதிமன்றமும் சொல்றது சரிதானே’ என்று நினைக்கலாம். ஆனால் இது மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையின்பாற்பட்டு வெளியான கருத்து அல்ல.
மருத்துவத்துறையை மொத்தமாக தனியார்மயமாக்க வேண்டுமானால் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று கூறிக்கொண்டு வேலையில் உரிமை கோருவதை எல்லாம் முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டுமானால் சலுகைகள், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை கோர முடியாதபடி, தனியார் நிறுவனங்களை இழுத்து வரவேண்டும். அரசும் நீதிமன்றமும் கூறுவது போல இரு தரப்பு மாணவர்களும் ஒன்றா? இல்லை. நாம் ஏன் அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களை ஆதரிக்க வேண்டும்?
அரசு பயிற்சிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையிலும், பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியாரில் அப்படி அல்ல, தனியாருக்கே உரிய அனைத்து முறைகேடுகளுடனும் தனியார் பயிற்சி பள்ளிகள் இயங்குவதால் யார் வேண்டுமானாலும் 500, 600 மார்க் எடுத்திருந்தாலே நன்கொடை கொடுத்துவிட்டு சேர்ந்து கொள்ளலாம். அதாவது, பணம்தான் இடம் பெறுவதற்கான தகுதி. இதனால் இவர்கள் மேட்டுக்குடி என்று பொருள் அல்ல. அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமலும், வேறு படிப்புகளில் வேலை வாய்ப்பு குறைவு என்பதாலும், பொதுவில் செவிலியர் படிப்பை பெற்றோர்கள் விரும்புகின்றனர். இப்படி வேறு வழியின்றிதான் தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
அரசு பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசே உதவித் தொகை வழங்கி அதற்கு ஈடாக மாணவர்கள் படிப்பு காலத்தில் மூன்றரை ஆண்டுகள் பயிற்சி என்கிற பெயரில் அருகாமை மருத்துவமனைகளில் தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும், இரவு நேரங்களிலும் கூட கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். தனியாரில் பயில்பவர்களுக்கு இந்த பயிற்சியே இல்லை. மருத்துவமனையை சுற்றிப் பார்க்க வருபவர்களைப் போல அவ்வப்போது சில நாட்கள் அவர்களை அழைத்து செல்வதோடு அவர்களின் பயிற்சியை முடித்துக் கொள்கின்றன தனியார் பயிற்சிப் பள்ளிகள்.
அடுத்து, அரசு பயிற்சி பள்ளிகளில் இணைய வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும். தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்பதையும், வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும் போக மாட்டேன் என்பதையும் நிபந்தனையாக ஏற்றுக் கொண்டவர்களை தான் அரசு பயிற்சி பள்ளிகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நிபந்தனைகள் எதுவும் பணம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இல்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு என்ற பெயரில்தான் மாணவர்களை தனியார் பயிற்சிப் பள்ளிகள் இழுக்கின்றன.
வெளிநாடுகளில் இப்போது வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட இங்கு இருக்கும் சொற்ப வேலைகளில் அவர்களுக்கு பங்கு அளிக்க முயற்சிக்கிறது அரசு. இல்லையென்றால் தனியார் செவிலியர் பள்ளி முதலாளிகளின் தொழில் படுத்து விடும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தீர்வு என்ற கேள்வியும் இங்கே எழலாம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பலவும் இத்தகைய செவிலியர் பள்ளிகளை அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு நடத்துகின்றன. இதனால் அவர்களது மருத்துவமனைகளில் இலவசமாக உழைப்பை சுரண்டிக் கொள்ளலாம். மேலும் பிராண்ட் மதிப்பு என்பதற்காக மாணவர்கள் இவற்றை சகித்துக் கொண்டே ஆகவேண்டும். அடுத்து இந்த தனியார் மருத்துவமனைகள் எதுவும் அரசு போல ஊதியம் கொடுப்பதில்லை. அதனால்தான் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை விரும்புகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவதில்தான் இந்தப் பிரச்சினை தீரும். மாறாக அரசு வேலை வேண்டும் என்று அரசு பள்ளிகளை ஒழிக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் பலியாவது சரியல்ல. அல்லது தனியார் பயிற்சி பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்கவேண்டும் என்றாவது போராட வேண்டும்.இப்படி பள்ளி, மருத்துவமனை என இரண்டு விதத்திலும் தனியார் மயம் மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக இருக்கிறது.
அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட அரசு மாணவர்கள் “சரிபார்ப்பு முடிக்கப்பட்ட 893 அரசுப் பள்ளி மாணவர்களுக்காவது வேலை வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். முறைப்படி நாங்கள் இப்போது வேலையில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். எனவே வேலைக்கு தேர்வாகிவிட்ட நாங்களும், தனியார் மாணவர்களும் ஒன்றாக போட்டியிடுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்” என்று ஒரு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.
தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் மாணவர்களை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸ்.
இந்த மனுவை நீதிபதிகள் பாலசுந்தரம், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததுடன் ‘நீதி’க்காக உச்சிக்குடுமி மன்றத்திற்கு செல்லும்படி அறிவுரையும் வழங்கியது. இந்த அற்புதமான தீர்ப்பு வெளியான அன்று தான் (கடந்த வெள்ளிக்கிழமை) செவிலியர்கள் தீர்ப்பை கண்டித்து உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களில் ஐந்து பெண்கள் ஆறு மாத கர்ப்பிணிகளாக இருந்தனர். செவிலியர்களின் பெரும்பாலான போராட்டங்கள் சென்னை நகரில் தான் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்காக தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற பெண்கள் ஒவ்வொரு முறையும் பல்வேறு இன்னல்களை கடந்து தான் வந்து செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பலான பெண்கள் திருமணமானவர்கள். அரசு வேலை கிடைக்கும் என்று கூறி தான் பெற்றோர்கள் இவர்களை மணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், குடும்பத்தில் தினம் தினம் சண்டையாக இருக்கிறது. கணவர் பிரச்சினை செய்யாவிட்டாலும் மாமனார், மாமியார் திட்டுகின்றனர் என்கிறார்கள் பல செவிலியர்கள். திருமணமாகாத செவிலியர்கள் திருமணமானவர்களின் நிலையை எண்ணி திருமணம் செய்துகொள்ளவே தயங்குகின்றனர்.
“வேண்டாத கடவுளே இல்லை சார். ஆனா எந்த கடவுளை வேண்டியும் பிரயோசனம் இல்லையே. எல்லாம் எங்களுக்கு எதிராத்தானே அமையுது. ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா” என்று குமுறுகிறார் ஒரு செவிலியர்.
“நீதிபதிங்க மட்டுமா சார் இப்படி இருக்காங்க. நாங்க வாழ்றதா சாகுறதான்னே தெரியாம போராடிட்டு இருக்கோம். இப்படி ஒரு தீர்ப்பு வந்த கோபத்துல தான் அஞ்சாவது மாடியில ஏறி தற்கொலை பண்ணிக்குவோம்னு அரசை மிரட்டி போராடினோம். ஆனா கீழே நின்ன வக்கீலுங்க எல்லாம் எங்களைப் பார்த்து சிரிச்சி கிண்டல் பண்ணதோட, போலீஸ்காரங்களை விட மோசமா நடந்துக்கிட்டாங்க, பொம்பளைன்னு கூட பார்க்காம அடி அடின்னு அடிச்சாங்க. கீழே குதிங்கடி, சீக்கிரம் குதிங்கடின்னு கத்துறாங்க சார். சீக்கிரம் குதிச்சா சாப்பிடவாவது போலாம் டைம் ஆச்சின்னு ஒருத்தன் சொல்றான். இவனுங்க எல்லாம் வக்கீலுங்களா சார்” என்று கோபத்துடன் வழக்குரைஞர்களை திட்டுகிறார் ஒரு செவிலியர்.
செவிலியர் போராட்டங்கள் அனைத்திலும் முதல் ஆளாக நிற்கும் கருப்பசாமி என்கிற செவிலியரை கூட்டமாக சேர்ந்து கொண்டு மிக மோசமான முறையில் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியே தாக்கியுள்ளனர். வழக்குரைஞர்கள் இவ்வாறு செவிலியர்களை தாக்கிக்கொண்டிருக்கும் போது வழக்குரைஞர் சங்கத்தலைவர் பால்.கனகராஜ் அதை தடுக்காததோடு, அவரும் சேர்ந்து கொண்டு திட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் என்கிறார் கருப்பசாமி.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தாக்கியதோடு நிற்காமல், காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையிலும் தள்ள வேண்டும் என்று இந்த வழக்குரைஞர்கள் அடம் பிடித்துள்ளனர். அதற்கு இவர்கள் கூறுகின்ற காரணம் நீதிமன்றம் புனிதமான இடமாம், அதை செவிலியர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்களாம்.
அந்த நீதிமன்றத்தின் புனிதத்தை கடந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சுபாஷ் ரெட்டி போன்ற பல நீதிபதிகளும் சரி, அதிமுக மகளிர் அணியினரும் சரி, இல்லையென்றால் சுப்ரமணிய சாமி போன்ற புரோகர்களும் நாறடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வருகிறது என்றால் இதை போலீசுக்காரனை விட மோசமான ஆளும் வர்க்க விசுவாசம் என்று தான் கூற வேண்டும்.
போராட்டக்காரர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்திய வழக்குரைஞர்கள் மட்டுமல்ல அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த வழக்குரைஞர்களும் நம் கண்டனத்துக்குரியவர்கள் தான்.
பயிற்சி பெற்ற அரசு செவிலியர்களுக்கு சங்கம் எதுவும் இல்லை. இப்போது தான் ஒரு சங்கத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். “இனி உச்சநீதி மன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறிவிட்டதே, என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கேட்டதற்கு. “25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வழக்குரைஞர் கூறியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு பணத்தை எங்களால் திரட்ட முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் போராடித்தானே ஆக வேண்டும், என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் கருப்பசாமி.
அரசின் மறுகாலனியாக்க கொள்கைகளையும், பார்ப்பன பாசிச நடவடிக்கைகளையும் மேலும் செழுமைப்படுத்தி தீர்ப்பாக வழங்கி வரும் உச்சிக்குடுமி மன்றம், செவிலியர்களுக்கு என்ன மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பதை ஒரு அடி முட்டாள் கூட அப்படியே வரிக்கு வரி கூறிவிடுவான்.
செவிலியர்கள் நீதி மன்றங்களை மட்டும் நம்பாமல் தமது போராட்டங்களை மக்கள் மன்றத்தில்தான் முக்கியமாக நடத்த வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களோடு தமது போராட்டங்களையும் இணைக்க வேண்டும். அதற்காக தமக்கான ஒரு வலுமிக்க சங்கத்தையும் கட்டியமைத்துக் கொள்ள வேண்டும்.
ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் டி.வி.எஸ் (ஹரிதா) சுந்தரம் ஆட்டோ காம்பொனன்ட்ஸ் ரப்பர் ஆலையில் 64 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மேற்படி ஆலையை கடந்த ஆண்டு 2013 மார்ச் 31-ல் மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் ஆலைக்கு விற்று விட்டனர். இதில் வேலை செய்த தொழிலாளர்கள் சர்வீஸ் தொடர்ச்சியுடன் வேலை வழங்கக் கோரியதின் பேரில் 12 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்தனர். மற்ற தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். இதுவரை அந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை. இந்த இரண்டு நிர்வாகத்தையும் எதிர்த்து வழக்கு நடந்து வருகிறது.
எனவே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக 11.03.2014 அன்று மாலை 5 மணிக்கு பேளகொண்டப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் பாஸ்கர் தலைமை தாங்கினார். திருமதி அனிதா, பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிசந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக தோழர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார். நிர்வாகிகள் இரா சங்கர், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மார்ச் 8 உலகப் பெண்கள் தினம். சென்னை – குரோம்பேட்டை வீதிகளெங்கும் சுவர்களில், பெண்கள் விடுதலை முன்னணியின் (பெவிமு)சிவப்பு சுவரொட்டிகள். அவற்றில் காட்சியளித்த, ”சமைப்பதும், பிள்ளைப்பெறுவதும் மட்டும் பெண்களின் வேலையல்ல! பெண் விடுதலையையும் நமது வேலையாக்குவோம்!” என்ற முழக்கங்கள் பொதுமக்களை அரங்கக் கூட்டத்திற்கு அழைத்தன!
அரங்கத்தில் நுழைந்ததும், ஓவியர் முகிலனின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களை வரவேற்றது. கிளாரா ஜெட்கின் படமும், பெண்கள் இன்றைய காலகட்டத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும் குறிப்பாக, குடும்ப சிலுவையில், முதலாளித்துவ ஆணிகளால் பெண் அறையப்பட்டிருந்த ஓவியம் பெண்களின் இன்றைய நிலையை பளிச்சென காட்டியது. வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது.
ஓவியக் கண்காட்சி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
பெண்கள், தொழிலாளர்கள், தோழர்கள்,குழந்தைகள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொள்ள துவங்கியது கூட்டம். தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். தன் உரையில், பெண்கள் இதுநாள்வரை பெற்ற உரிமைகள் அனைத்தும் போராட்டத்தின் மூலம் தான் கிடைத்தது என்றும், பெண்கள் தினத்தை கோல போட்டி, அழகி போட்டி என கொண்டாட்ட நாள் போல மலின படுத்தியுள்ளனர். மே தினத்தைப் போலவே இது உரிமைகளை மீட்பதற்கான நாள்! இது கொண்டாட்ட நாள் அல்ல என்பதை விளக்கி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த, எழுத்தாளர் பிரியா தம்பி, ”ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும், பெண்விடுதலைக்கு தடை!” என்ற தலைப்பில் பேசினார். அன்றாட வேலைகளிலும், தன் சொந்த அனுபவத்திலிருந்தும் ஆணாதிக்கத்தை விளக்கினார். பெண்கள் தனியாக அலுவலக வேலைக்காக கூட பயணம் செய்ய முடியவில்லை என்பதை தனக்கு பேருந்தில் நடந்த சம்பவத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். வெளிவட்டத்தில், நல்ல நண்பராக பழகுபவர்கள், கணவராக மாறும்போது ”நான் ஆம்பிளை” என்ற ஒற்றை குறியீடுடன் தனது ஆணாதிக்கத்தை நிறுவுவதை அம்பலப்படுத்தினார். வேலைக்கு செல்லும் பெண்கள், பணரீதியில் வளர்ந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் என்ற முறையிலோ வாழ்நாள் அடிமைகளாகவே சுழல்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டினார். பெண் எல்லா வலிமையும் பெற்றவளாக இருக்கிறாள் ஆனால் அவர்களின் வலிமையை அவர்களே உணர்வதில்லை என்று பெண்ணடிமைத்தனத்தையும் இடித்துரைத்தார் மேலும் கிராம பெண்களுக்கு இருக்கும் துணிச்சல், படித்த பெண்களுக்கு இல்லை என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எளிமையாக விளக்கி பேசினார்.
பெவிமு சென்னை மாவட்ட செயலர் தோழர். உஷா ”போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாக….” என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் போராட வரமுடியாத நிலைக்கு தள்ளி வைத்திருக்கும் முதலாளித்துவ சூட்சமங்களை வெட்ட வெளிச்சமாக்கினார். அதிலிருந்து, மீள விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் மாணவர்கள் பிரச்சனைகளோடு உழைக்கும் பெண்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே பெண்கள் தங்களை விடுதலையை சாதிக்கமுடியும் என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும், பெண்களை தொலைகாட்சி மூலம் சிறைப்பிடித்திருக்கும் சீரியல்களின் லட்சணங்களை, மக்கள் மொழியில் பேசி கூட்டத்தினை ஈர்த்தார். சீரியல்களில் மனைவியே தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணை கூட்டிக் கொடுக்கும் அசிங்கத்தை காறித் துப்பினார்.
உரையாற்றியவர்களுக்கு இணையாக மேடையேறிய, பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,புரட்சிகர பாடல்கள் பாடினர். குறிப்பாக, ”….கிணத்துல தொங்கிறது வாளி! பெண்கள் கழுத்துல தொங்குறது தாலி….! ” என்ற பாடல் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.
சிறப்புரை ஆற்றிய தோழர் துரை சண்முகம் தனது உரையில் , பெண்கள் வீட்டில் சும்மா தான் இருக்காங்க என்று சில ஆண்கள் கூறுவதை இடித்துரைத்தார். பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் அங்கீகரிக்கபடுவதில்லை, வீட்டில் வேலை செய்தால் இழிவாக கருதும் ஆண்கள் முதலாளிக்கு போய் அடிமை வேலை செய்வது மட்டும் பெருமையா? என்றும் உழைக்கும் பெண்கள் வேலை செய்து கைகள் காப்பு காய்த்து போய் அவள் கைப்பட்டால் அவளின் கைக்குழந்தை அழுகிறது, அவள் தலைப்பாகை எடுத்து தன் கை மேல் வைத்து பால் கொடுக்கிறாள் என்று பெண்களின் உழைப்பின் மகிமையை விளக்கினார். ஆணாதிக்கம் மக்கள் கும்பிடும் கடவுள் வரையிலும் பிரதிபலிப்பதை பளிச்சென கூறினார். பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்களை பற்றியும் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பதை விளக்கி பெண் அடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மறுபுறம், பெவிமு வின் தொண்டர் தோழர்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டும், வயதானவர்களுக்கு உதவியும், தண்ணீர், டீ, பிஸ்கட்கொடுத்தும் கூட்டத்தினை முறையாக ஒழுங்குப்படுத்தியது, கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த பல புதிய பெண்களிடம் கூட்டம் பற்றி கருத்து கேட்கும் பொழுது, தாங்கள் பெண் விடுதலை பற்றிய குழப்பத்தில் இருந்ததாகவும், இந்த கூட்டம் பல விசயங்களை தெளிவுப்படுத்தியதாகவும், போராட்டமில்லாமல் எதையும் பெறமுடியாது என்பதை உணர வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதத்தில் இல்லாமல் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூட்டநிகழ்ச்சியின் மூலம் பெண்களின் போராட்ட மரபுகளை நெஞ்சில் ஏந்தி சென்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
அம்பாலா மத்திய சிறையில் வாழ்ந்து வந்த அசீமானந்தாவிடம் ஜனவரி 10, 2012, ஜூன் 22, 2013, ஜனவரி 9, 2014, ஜனவரி 17, 2014 என அடுத்த 2 ஆண்டுகளில் நான்கு முறை பேட்டி எடுத்திருக்கிறார். இந்த உரையாடல்களின் பதிவு செய்யப்பட்ட கால அளவு 9 மணி, 26 நிமிடங்கள்.
அசீமானந்தா நேரில் கூறிய விபரங்களுடன் அசீமானந்தாவின் சொந்த ஊரான கமர்புக்கூர், அசீமானந்தா தனது குற்றச் செயல்களை நடத்தி வந்த குஜராத்தின் டாங் மாவட்டம், பிரக்யாசிங் சிகிச்சை பெற்று வரும் போபால், தேசிய புலனாய்வு ஆணையத்தின் டெல்லி அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அலுவலகம் என்று இந்த வழக்குடன் தொடர்புள்ள நபர்களை சந்தித்து தகவல்கள் திரட்டியிருக்கிறார், கட்டுரையாளர். மேலும் சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கு, அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகள், மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு இவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகைகள், பத்திரிகை செய்திகள் இவற்றையும் இணைத்து, ஒரு விரிவான குற்றப் புலனாய்வு செய்திருக்கிறார் கட்டுரையாளர் லீனா கீதா ரெகுநாத்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளான பா.ஜ.க, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்வற்றின் வன்முறை வெறிச்செயல்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இந்தக் கட்டுரை இந்திய ஊடகவியல் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனை.
கேரவன் மேகசின்
கட்டுரையின் இறுதிப் பகுதியின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்
புது டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு ஆணையத்தின் கண்ணைப் பறிக்கும் தலைமை அலுவலகத்தில் ஒரு அடக்கமான தடுப்பறைதான் போலீஸ் கண்காணிப்பாளர் விஷால் கர்கின் அலுவலகம். அலுவலகத்தின் கண்ணாடி சுவரை ஒட்டியிருக்கும் கோப்பு அலமாரியில் “அஜ்மீர் குண்டுவெடிப்பு”, “சம்ஜவுதா குண்டு வெடிப்பு”, “சுனில் ஜோஷி கொலை” “எழுதுபொருட்கள்” என்று பெயரிடப்பட்ட நான்கு இழுப்பறைகள் தெரிகின்றன. கர்கின் மேசைக்கு பின்னால் உள்ள வெள்ளைப் பலகையில் அவர் புலன்விசாரணை அதிகாரியாக உள்ள சம்ஜவுதா மற்றும் அஜ்மீர் வழக்குகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை தேதிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு சுவரில், சம்ஜவுதா வழக்கில் இன்னும் தலைமறைவாக இருக்கும் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, மற்றும் அசோக் என்பவரின் படங்கள் அச்சிடப்பட்ட “தேடப்படுபவர்கள்” போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. டாங்கே, மற்றும் கல்சங்கராவின் கைதுக்கு வழி வகுக்கும் துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய புலனாய்வு ஆணையம்
விமான ஓட்டி குளிர் கண்ணாடி அணிந்த கர்க் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு பயங்கரவாத தடுப்பு ஐ.பி.எஸ் அதிகாரியாகவே காட்சியளிக்கிறார். நான் அவரை சென்ற ஆண்டு சந்தித்த போது, “இங்கு நாங்கள் ஆருஷி வழக்கைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். அந்த வழக்கில் குற்றம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவர்கள் குற்றம் நடந்த இடத்துக்கு போனார்கள். அதற்குள் முக்கியமான தடயங்கள் எல்லாம் தொலைந்து போனதால் புலன் விசாரணையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்பது பரவலாக பேசப்பட்டது. ஆனால், சம்ஜவுதா வழக்கை விசாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்த போது மூன்று ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த வழக்கு விசாரணை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.”
“இந்த குண்டு வெடிப்புகளுக்காக கொடுக்கப்பட்ட பணத் தடத்தை இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. நடைபெற்ற பண பரிமாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்ட வங்கி பரிமாற்றங்கள் இல்லையே! இந்த விசாரணையின் வரம்பாக இதை எடுத்துக் கொண்டு மற்ற ஆதாரங்களை திரட்டுகிறோம். அசீமானந்தா சுனில் ஜோஷிக்கு பணம் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தார் என்று எந்த தகவலும் இல்லை.” குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன என்பதும் இன்னமும் விசாரணையில்தான் உள்ளது. “தேடப்படுபவர்கள்” போஸ்டரை சுட்டிக் காட்டிய கர்க், “ரூ 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இவர்கள்தான் இந்த குற்றத்தின் முக்கிய மூளைகளும், முக்கிய செயல்வீரர்களும். இவர்களை பிடித்தால்தான் இன்னும் தெளிவான பிம்பத்தை பெற முடியும்.” என்றார்.
வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது. ‘தேசிய புலனாய்வு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது’ என்ற சட்ட நுணுக்கத்தை காரணமாகக் காட்டி சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக பிரக்யா சிங்கை அவர்கள் விசாரிப்பதை, 2012 ஜூலை மாதம் நீதிமன்றங்கள் தடை செய்தன.
லெப் கர்னல் சிறீகாந்த் புரோகித்தையும் இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரையும் விசாரிப்பதையும் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. தேசிய புலனாய்வு ஆணையத்தின் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான அகமது கான், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே நீதிமன்றத்தில் நடத்துமாறு பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் இந்த திசையில் மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இன்னும் பிற சதிகாரர்களின் பெயர்களை சேர்த்து கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய புலனாய்வு ஆணையம் கூறுகிறது. தான் கடினமாக உழைப்பதாக கர்க் சொல்கிறார். “சென்ற வாரம் லிஃப்டில் என்னை பார்த்த என் அலுவலக சகாக்களில் ஒருவர், ‘சாப் நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க’ என்றார். ‘தூக்கத்தை துறந்து விட்டால் நீங்களும் ஸ்மார்ட்டாகி விடலாம்’ என்று நான் பதில் சொன்னேன். “நீ தூங்கும் போது, உன்னால் தேடிப்பிடிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்பது கனவில் வர வேண்டும்” என்று தன்னுடைய மேலதிகாரி கூறியதாக கர்க் நினைவு கூர்கிறார்.
தேசிய புலனாய்வு ஆணையம் இந்திரேஷ் குமாரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்று கேட்ட போது, அது துறையின் உள்விவகாரம் என்றும் அதைக் குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறி விட்டார்.
“தமக்கு தேவைப்படும்போது பிரக்யா சிங்கை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” – மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி.
2008-ல் பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு ப.சிதம்பரம், திக்விஜய சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் “காவி பயங்கரவாதம்” என்று அழைத்ததை வன்மையாக கண்டனம் செய்தார்கள் இந்துத்துவா அமைப்பினர். தமது அமைப்புகள் மீது குற்றக் கறை படிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் பதறினர். ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டனம் செய்த அந்த அமைப்பினர், பின்னர் ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டப்படவர்களுக்கு ஆதரவாக வாதாடி தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து “பா.ஜ.க மற்றும் அவர் சார்ந்திருந்த பிற சங்க அமைப்புகள் அவரை கை விட்டது கேவலமான செயல். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். தமக்கு தேவைப்படும்போது அவரை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” என்று மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி குற்றம் சாட்டினார். “பிரக்யா சிங்கின் செயல்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் 1995-96லேயே ஏ.பி.வி.பியை விட்டு விலகி விட்டார்.” என்றார் பா.ஜ.க பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத். ஆனால், சமீபத்தில் பா.ஜக. தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருடன் பிரக்யா சிங் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கட்சியை சங்கடத்துக்குள்ளாக்கின. குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியுடன் பிரக்யா சிங் மேடையில் தோன்றிய இன்னொரு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.
பிரக்யா சிங் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும் பா.ஜ.க தன் தாளத்தை மாற்றிக் கொண்டது. அவர், “காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை” எல்.கே. அத்வானி கண்டனம் செய்தார். விசாரணை அமைப்பு “அரசியல் நோக்கங்களுடன் நேர்மையற்று நடப்பது தெளிவாகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார். (“சென்ற தேர்தலுக்கு முன்பு பிரக்யா சிங்குக்கு ஆதரவாக அவர் நடத்திய மொக்கையான, உணர்ச்சிபூர்வமான, ஆதாரமற்ற வாதங்களைப் போல வேறு எதுவும் அத்வானியை சிறுமைப்படுத்தவில்லை” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா.)
பெங்களூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம்
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அசீமானந்தா கைதாவதற்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்பு அதன் வரலாற்றில் அதுவரை இல்லாத மிகவும் தீவிரமான, பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இந்திரேஷ் குமார் விசாரிக்கப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருந்தன. சங்கத்தின் தலைவர்கள் இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக நாடுதழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நவம்பர் 2010-ல் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை ஆர்கனைசரில் வெளியான தகவலின்படி நாடு முழுவதிலும் நடந்த 700 ஆர்ப்பாடங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பியின் தலைமை பொறுப்பில் இருந்த கிட்டத்தட்ட அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட மேடைகளில் தோன்றினார்கள். லக்னோவில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத், தானே இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். “அமைப்பின் வரலாற்றிலேயே முதன் முறையாக சர்சங்சாலக் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதோடு மட்டுமில்லாமல், கூட்டத்தில் பேசவும் செய்கிறேன். ஏனென்றால் இப்போது ஆர்.எஸ்.எஸ்சுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் சதி நடந்து வருகிறது” என்று அவர் பேசினார். மோகன்தாஸ் காந்தியின் படம் போடப்பட்ட ஒரு போஸ்டரால் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. “ஹிந்து சமாஜ், காவி நிறம், ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கம் இந்த பதங்கள் அனைத்தும் பயங்கரம் என்பதற்கு நேர் எதிர் அர்த்தம் கொண்டவை” என்று அவர் தொடர்ந்தார்.
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
சி.பி.ஐ மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அமைப்புகளின் புலன் விசாரணைகளில் திரட்டப்பட்ட மதிப்பு வாய்ந்த தடயங்களும், சாட்சி வாக்குமூலங்களும் இந்திரேஷ் குமார் குண்டு வெடிப்புகளில் பங்கேற்றதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. சதித்திட்டத்தின் முக்கிய நபர்கள் பலருக்கும் (குறிப்பாக சுனில் ஜோஷிக்கு) அவர் வழிகாட்டி என்று தேசிய புலனாய்வு ஆணையம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குறிப்பிடுகிறது. சி.பி.ஐ அவரை விசாரித்திருக்கிறது. 2011 ஜூலை இறுதியில் தேசிய புலனாய்வு ஆணையமும் இந்திரேஷ் குமாரை விசாரிக்க இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால், “பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?” என்று அவர் அந்த அமைப்பை ஊடகங்களில் பரிகாசிக்க ஆரம்பித்திருந்தார். தானும், அசீமானந்தாவும், பிரக்யா சிங்கும் இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தேசிய புலனாய்வு ஆணையம் அவரை இது வரை விசாரிக்கவில்லை.
தற்போது நடந்து வரும் விசாரணைகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டுகின்றன. அது உண்மையானால், இந்த வழக்குகள் அரை மனதோடு நடத்தப்படுவதை பார்க்கும் போது, அரசாங்கம் உண்மையிலேயே இந்த அமைப்புகள் மீது எத்தகைய அதிகாரத்தை கொண்டிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது.
நான் சென்ற ஆண்டு இந்திரேஷ் குமாரை பேட்டி கண்ட போது, “பத்திரிகையாளர்கள் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் குறித்துதான் கேள்வி கேட்கிறார்கள், அமைப்பின் சமூக நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. பின்னர் அந்த கேள்விகளை மட்டும் வெளியிட்டு எங்கள் பணிகள் பற்றிய தகவல்களை கொன்று புதைத்து விடுகிறார்கள். இத்தகைய பன்முகப்பட்ட அமைப்பான சங்கத்தை புறக்கணித்து வந்தது தவறு என்று ஊடகங்கள் மெதுவாக உணர்ந்து வருகின்றன” என்றார். குண்டு வெடிப்புகளில் அவரது பங்களிப்பு பற்றி பேச்சு திரும்பியதும், “என்னைப் பற்றி எழுதும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லோரையும் நான் எச்சரிப்பது வழக்கம்” என்றார் அவர். அவர் பேசியது மிரட்டும் தொனியில் இருந்தது. பின்னர், அவருக்கு தொலைபேசி, அவரும் பாகவத்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது ஆசீர்வாதத்தை வழங்கிய சந்திப்பை பற்றி கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார். இது தொடர்பாக மோகன் பாகவத்தின் கருத்தை அறிய முயற்சித்த போது கேள்வியை மின்னஞ்சலில் அனுப்புமாறு அவருடைய அலுவலகத்தினர் கூறினார்கள். ஆனால், இந்த கட்டுரை அச்சுக்குப் போகும் வரை அவர்கள் பதில் அனுப்பவில்லை.
அரச விருந்தாளி அசீமானந்தா
ஜனவரி 24-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஹரியானாவில் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. அம்பாலா சிறையில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு, 31 மாதங்கள் சட்ட வாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணை மேலே நகர ஆரம்பித்திருக்கிறது. ஆஜ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு ஆணைய நீதிமன்றத்தில் அவர் செப்டம்பர் 2013 முதல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார். மெக்கா மசூதி வழக்கு விசாரணை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற நவம்பரில் அவர் வழக்கை விசாரிக்கும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பிரக்யா சிங், தேசிய புலனாய்வு ஆணையம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக சொல்லி, இப்போது போபாலில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிணையில் வெளிவருவதற்காக அவர் தாக்கல் செய்துள்ள பல விண்ணப்பங்களை தேசிய புலனாய்வு ஆணையம் எதிர்த்து வருகிறது.
வழக்குகள் இன்னும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும் என்று தெரிகிறது. நீதிமன்ற நடைமுறைகளை தாமதப்படுத்துவதாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு நான் போய் வந்த ஒன்றரை ஆண்டுகளாக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது வரை குறிப்பிடத்தக்க புதிய நிகழ்வுகள் எதுவும் நடந்து விடவில்லை.
அம்பாலாவில் அசீமானந்தா இப்போது ஒரு சிறப்பு பி வகுப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராம்குமார் சவுத்ரி என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். ராம்குமார் சவுத்ரி 2012 நவம்பரில் 24 வயது பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் பொதுவாக தரப்பட்டுள்ள சமையல் செய்யும் நபர் அவர்கள் விருப்பத்துக்கேற்ப சமைத்துப் போடுகிறார். இரவில் மட்டுமே அவர்கள் அறையில் பூட்டப்படுகின்றனர்.
ஜனவரி 2014-ல் நடந்த எங்கள் கடைசி சந்திப்பில், தேநீர் வேண்டுமா என்று அசீமானந்தா என்னிடம் விசாரித்தார். நான் பதில் சொல்வதற்கு முன்பே, சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ள ஒரு ஒல்லியான பதின்ம வயது சிறுவன் இனிப்பான தேநீர் நிரம்பிய ஒரு பிளாஸ்டிக் கப்பை என் கையில் திணித்தான். அசீமானந்தா அவனை தனக்கு அருகில் இழுத்து, “இவன் என் ஆள். விரைவில் இவன் வெளியில் போய் விடுவான்” என்றார். அந்த சிறுவனின் முகத்தை பார்த்து சிரித்த அவர், “இந்த டீக்கடைக்காரனும் வளர்ந்து ஒரு நரேந்திர மோடியாகலாம்” என்றார்.
எங்கள் உரையாடல்களின் போது அந்த வழியாகச் சென்ற சிறை அதிகாரிகள் நின்று அசீமானந்தா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தனர். “என்ன நடந்ததோ நன்றாகவே நடந்தது என்று அவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். நான் அவற்றை செய்தேனா இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் யார் செய்திருந்தாலும், சரியானதை செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்றார் அசீமானந்தா.
நான் மேற்கு வங்கத்தில் உள்ள அசீமானந்தாவின் கிராமமான கமர்புக்கூருக்குப் போயிருந்த போது, அவரது குடும்பத்தினர் என்னுடன் பேசுவதற்கு பெரிதும் தயங்கினார்கள். நான் புறப்படும் போது அவரது தம்பி சுஷாந்த், “சில மாதங்கள் பொறுத்திருங்கள். மோடிஜி அதிகாரத்துக்கு வந்த பிறகு, கிராமத்தின் நடுவில் ஒரு மேடை போட்டு அசீமானந்தா செய்தவற்றை எல்லாம் ஒரு லவுட் ஸ்பீக்கரில் அலற விடுவேன்” என்றார்.
எங்களது ஒரு சந்திப்பில் அசீமானந்தா, நாதுராம் கோட்சேவின் இறுதி வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி சொன்னார் : “சிந்து நதி இந்தியாவில் பாய்வது வரை என்னுடைய எலும்புகளை கடலில் கலக்காதீர்கள்.” வழக்கு விசாரணை முடிவதற்கு நீண்ட காலம் பிடித்தாலும் தான் நிச்சயமாக விடுதலை செய்யப்படப் போவதாக அவர் பூல்சந்த் பாப்லூவிடம் உறுதியாக கூறியிருக்கிறார். தனது மற்றும் பிரக்யாசிங், சுனில் ஜோஷி போன்றவர்களுடைய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். “அது நடக்கும். சரியான நேரத்தில் நடந்தே தீரும்”.
– முற்றும்
நன்றி : லீனா கீதா ரகுநாத்,கேரவான் (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு
பாலியல் பொறுக்கிகள் இருக்கவேண்டிய இடம் தமிழ்த்துறை அல்ல! புழல் சிறை!
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் ஜோஸ்பின் ஜெயசாந்தி. 2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் எஸ்.ஏ. ராஜராஜன். இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறார்.
இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார் ராஜராஜன். விடுமுறை ஒப்புதல் கேட்டு போகும்போது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு முகத்தில் லெட்டரை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இந்த தொல்லைகளை பொறுக்க முடியாமல் பதவி விலகல் கடிதம் கொடுத்த ஜெயசாந்தியை அப்போதைய கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறார். ஆனால் ஜெயசாந்திக்கு அநீதி இழைத்த ராஜராஜன் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ராஜராஜனோ, ஜெயசாந்தியின் பதவி உறுதி செய்யப்படுவதை அற்ப காரணங்கள் சொல்லி தள்ளிப் போடுவது, அவரை தன் கீழ் ஆய்வு மாணவராக சேரும்படி வலியுறுத்துவது, வெளியூர் பயணங்களில் தன்னுடன் வரும்படி வற்புறுத்துவது என்று பாலியல் வக்கிர நோக்கத்துடன் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார். ஜெயசாந்தியின் இருக்கையை தனது அறைக்கு மாற்றி அங்கு வந்து உட்காரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களின் எதிரிலேயே, ஜெயசாந்தியை பாலியல் ரீதியாக திட்டுவதையும், ஆபாசமாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
தமிழ் துறையின் உதவி பேராசிரியராக இருந்த பிரின்ஸ் என்பவரும் ராஜராஜனுடன் சேர்ந்து இருவருமாக ஜெயசாந்தியை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து வரும் இந்த கொடுமைகளை தாங்க முடியாத ஜெயசாந்தி 13.12.2012 அன்று கல்லூரியின் பாலியல் வன்முறைக்கு எதிரான குழுவில் புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதில் கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டாத நிலையில், ஜெயசாந்தி பல முறை நினைவுபடுத்திய பிறகு ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
புகாரை விசாரித்த குழு தனது விசாரணை அறிக்கையை 23.4.2013 அன்று கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் ராஜராஜனுக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு மேற்சொன்ன ஆவண நகலை ஒப்படைக்கவில்லை. மேலும் தொடர்ந்து ஆவண நகல் ஒப்படைக்க பேராசிரியர் ஜெயசாந்தி நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானமாக போகச் சொல்லி வலியுறுத்தியது.
ஆனால் பாலியல் வன்முறை செய்த ராஜராஜனோ தொடர்ந்து கீழ்தரமான வகையில் வசை பாடுவது, பிரின்ஸ் உடன் இணைந்து புகாரை திரும்பப்பெறுமாறு கொலை மிரட்டல் விடுவது, பாலியல் புகார் விசாரணையில் சாட்சி சொன்னவர்களை அச்சுறுத்துவது என்று தனது கொடுமைகளை தொடர்ந்திருக்கிறார்.
அதனால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து கிரிமினல் புகார் வழங்கப்பட்டது. 2 மாதம் புகார் பதிவு செய்யப்படாததால் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நீதிமன்றத்தை அணுகி (Crl.O.P.No.4427|14) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டது. (6.3.2014)
மேலும் பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் (W.P.34958|13) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்த 2 வழக்குகள் மூலம் வெளிவந்த ஊடக செய்திகள் கல்லூரி நிர்வாகத்தை நெருக்கடியில் தள்ளவே, நியாயமான முடிவை எடுக்காமல் அயோக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து கடந்த 28.2.2014 அன்று பேரா.ஜெயசாந்தியை கல்லூரியை விட்டு நீக்கியது.
வேலையிடங்களில் பாலியல் தொல்லைத் தடை சட்டம் 2013-ன்படி பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் விசாகா வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டல்களும் கல்லூரி நிர்வாகத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
மேற்கூறிய சட்டத்தின்படி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிரிமினல் புகார் வழங்க உதவ வேண்டும், அனுசரணையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக கிரிமினல் பேர்வழிகளான பேராசிரியர் ராஜராஜன் மற்றும் பிரின்ஸ்-ன் கைக்கூலிகளாக லயோலா கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
லயோலா நிர்வாகமே!
பாலியல் வன்முறை செய்த பேராசிரியர் ராஜராஜன் மற்றும் கொலை மிரட்டல் கொடுத்த பேராசிரியர் பிரின்ஸை உடனே பணிநீக்கம் செய
பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் ஜோஸ்பின் ஜெயசாந்தியை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட பணி நீக்கத்தை உடனே ரத்து செய்.
தமிழக அரசே! காவல்துறையே!
கிரிமினல் பேராசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்! கைது செய்து சிறையில் அடை
என்ற கோரிக்கையை முன்வைத்துபாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், ‘மாமா’ பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மார்ச் 10, 2014 அன்றுமாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
____________________
பின் குறிப்பு: சென்னையின் மேட்டுக்குடியினர் அதிகம் படிக்கும் லயோலா கல்லூரியில்தான் அதிகார வர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரது வாரிசுகளும் படிக்கின்றனர். ஒப்புக்கு இரண்டு ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு அதை ஒரு பெரிய சேவை போல காட்டி விட்டு ஆளும் வர்க்க இளவரசர்களை உருவாக்கி வருகிறது இந்தக் கல்லூரி. ஏசு சபை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் இந்தக் கல்லூரியின் ஒழுக்கம் எப்பேற்ப்பட்டது என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஒருபுறம் மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், அப்துல் கலாம் போன்றவர்கள் அடிக்கடி வந்து பேசும் கல்லூரியாக லயோலா திகழ்கிறது. மறுபுறம் தன்னார்வக் குழுக்கள், தலித் அமைப்புகள், தமிழினவாதிகள் அனைவருக்கும் இடமோ இல்லை பேசவோ வாய்ப்பு கொடுத்து கொஞ்சம் முற்போக்கு சாயலையும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் இப்பேற்ப்பட்ட ஒளிவட்டத்துடன் இருக்கும் இந்தக் கல்லூரியும் அதன் நிர்வாகமும் எப்படி ஒரு பெண்ணை அயோக்கியத்தனமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். லயோலா கல்லூரியின் கூட்டங்களில் கலந்து கொண்டோரும், பேசுபவர்களும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு குரல் கொடுப்பார்களா, இல்லை லயோலாவை பகைக்க முடியாது என அமைதி காப்பார்களா?
– வினவு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை
தொடர்புக்கு : 98428 12062
கும்மிடிப்பூண்டி பகுதியில் கடந்த 08.03.2014 அன்று, “தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 13 தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் SRF மற்றும் போலீசின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (புஜதொமு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை தெரிந்துக்கொள்ள நாம் அந்நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளார் சங்கம் புஜதொமு அமைப்பின் இணைப்பு சங்கமாக கடந்த 2005-லிருந்து செயல்பட்டு வருகிறது. சங்கம் துவக்குவதற்கு முக்கிய காரணங்கள் : என்.டி.டி.எஃப் என்கிற கொத்தடிமைக்கூடாரத்தில் மெக்காலே கல்வி அளித்து SRF-ன் லாபத்திற்காக இளம் தொழிலாளர்களை அடிமைகளாக உருவாக்கி, “ஓய்வில்லா வேலை நேரம்” (தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட் ஏன், மூன்று ஷிப்ட் கூட பார்க்க வைத்தது), ஈ.எஸ்.ஐ வசதி இல்லை, முதுகு எலும்பு ஒடிய வேலை செய்தாலும் சமமான ஊதிய உயர்வு இல்லை, அவனுடைய தாரக மந்திரமான அப்ரைசல் சிஸ்டத்தின்படி (APPRAISAL SYSTEM) யார் சிறந்த அடிமையாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்ற அடிமைகளுக்கு குறைவான சம்பள உயர்வு! என்கிற திமிரோடு நிர்வாகம் தொழிலாளர்களை ஒடுக்கிவந்தது.
இந்த அடக்குமுறையை எதிர்த்து செயல்பட சங்கம் அவசியமானது என உணர்ந்து, புஜதொமு-வை நாடினர். மற்ற சங்கங்கள் இருக்கும்போது, ஏன் புஜதொமு சங்கத்தினை நாட வேண்டும் என கேள்வி எழலாம், காரணம் இருக்கிறது. 2004-ல் ரெட் ஹில்ஸ் பகுதியில் நடைப்பெற்ற புஜதொமு தெருமுனைக் கூட்டத்தினை சில SRF தொழிலாளிகள் பார்த்தனர். “அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் தொடங்கி முதலாளிகள் வரை செய்கிற கொடுமைகளை தைரியமாக பேசுகின்றனர்! இவர்கள் கூறுகின்ற தீர்வு சரியானதாக உள்ளதே! இவர்களிடம் சென்றால் நமது பிரச்சினைக்கு வழி கிடைக்கும்!” என உணர்ந்தனர்.
தொழிலாளர்கள் 2005-ல் சங்கம் தொடங்கினர். நிர்வாகம் வெற்றிலைப்பாக்கு வைத்து சங்கத்தை ஆராதிக்கவில்லை. சங்கத்தினை உடைக்க, முன்னணியாளர்களை வெளிமாநிலங்களுக்கு பயிற்சிக்கு அனுப்புவது, தொழிலாளர்கள் மனதை சங்கம் கெடுத்து விட்டது என்று அவர்களை மறுபடியும் NTTF கொத்தடிமை கூடாரத்திற்கு அனுப்புவது, புதிதாக திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும் சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.
இறுதியாக தனது பிரம்மாஸ்திரத்தினை பயன்படுத்தியது நிர்வாகம். ஆம்! சங்க நிர்வாக குழு உறுப்பினர்களை ஆலை வாயிலிலேயே வைத்து சஸ்பெண்ட் ஆர்டரை கொடுத்து, ஒழிந்தது சங்கம் என கொக்கரித்தது. நிர்வாகத்தின் செயல்பாட்டினை கண்ட தொழிலாளர்கள் 2008-ல் சங்கமாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தினை நடத்தினர். ‘விசுவாசி’ போலீசு கலவர (தடுப்புப்) படை ஆலையினுள் நுழைந்தது. தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது.
‘தங்களை தொழிலாளர்கள் சிலர் தாக்கினார்கள், கம்பெனியின் ’பொது’ சொத்தை சேதப்படுத்தினார்கள்’ என பொய்ப் புகார் கொடுத்தது நிர்வாகம். இந்த புகாரினை வைத்துக் கொண்டு நிர்வாகம் அடையாளம் காட்டிய தோழர்களை, தொழிலாளிகள் முன்பே அடித்து துன்புறுத்தியது போலிசு. ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீரகள்! என கேள்விகேட்ட தொழிலாளர்களையும் அடித்து துன்புறுத்தியது. 13 தொழிலாளர்களை இரவு 12 மணியளவில் நீதிபதியின் வீட்டிற்கு சென்று ஆர்டர் வாங்கி, கிரிமினல்களாக சித்தரித்து, இரவு 1 மணிக்கு புழல் சிறையில் அடைத்தது போலிசு. முதலாளிக்கு ஆதரவாக என்னவொரு வேகம் ? (ஆனால் இந்த வேகம் ஏன் மணற்கொள்ளையன் வைகுண்டராஜன், மலைத் திருடன் பி.ஆர்.பி யிடமும் காட்டமுடியவில்லை?)
இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஜாமீன் கொடுப்பதில் நீதிபதி கூறியது தான் ஹைலைட்! “ஏண்டா, கம்பெனியில பத்தாயிரம் சம்பளம் வாங்குறீங்களாமே! என்ன திமிரு இருந்தா அதிகாரிகள போட்டு அடிப்பீங்க!” என தன் வர்க்கப் பாசத்தைக் காட்டி ஜாமீன் தரமறுத்துவிட்டார். இந்த அதிகார வர்க்கத்திடம் 40 நாட்கள் போராடி அந்த தொழிலாளர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. (இதே சம்பவம், மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் நடந்திருக்குமானால், முதலாளிகள் மீதான ஆளும் வர்க்கத்தின் விசுவாசத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டு வதைபடும் மாருதி தொழிலாளிகள் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!)
ஆலையில் தொழிற்சங்கம் ஓரளவு பலமானது. தனது வழக்குகளை சட்டரீதியாக நடத்தி வந்தது. 2011-ல் சம்பள பிரச்சினை (COD) தொடர்பான வழக்கில் வெற்றியடையும் தருவாயில் இருந்தது. ஆனால் நிர்வாகம் “சங்கத்தினை அங்கீகரிக்கிறோம், எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என தொழிற்சங்கத்திடம் கூறியது. நிபந்தனையாக நிர்வாகத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகளை சங்கம் வாபஸ் வாங்க வேண்டும் என்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. சம்பள பிரச்சினை சில சரிசெய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் விவகாரம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்த்தின் செயல்பாடுகளை நடைமுறையில் வளர விடாமல் தடுத்தது நிர்வாகம். அதேவேளையில், தொழிற்சங்கம் வழக்குகளை எதிர்கொண்டும் வந்தது.
தற்போது நடைபெற்று வரும் கிரிமினல் பொய் வழக்கு கடந்த 2009-லிருந்து நடைப்பெற்று வருகிறது. தற்போது வழக்கு நடத்துவது (போலீசு தரப்பில்) அரசு வழக்குரைஞர். 5 ஆண்டுகளாக வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்தது. 13 தொழிலாளிகளும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை தவறாமல் வழக்கிற்கு வந்தனர். போலீசு தரப்பு சாட்சி 3 ஆண்டிற்கு பிறகு தற்போது தான் ஆஜர் செய்துள்ளனர். அதில் 24 பொய் சாட்சியங்களை ஜோடனை செய்துள்ளது.
“நிர்வாகத்திற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை! போலிசு தான் இந்த வழக்கு நடத்துகிறது!” என ஒவ்வொருமுறையும் நிர்வாக அதிகாரிகள் சங்கத்திடம் கூறிவந்தனர். இந்த வழக்கு நடத்துவது அரசு தரப்பு மட்டுமல்ல நிர்வாகமும் தான் என்ற உண்மை தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. ஆம்! இந்த வழக்கில் 13 பேர் தண்டனைபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு ஆதரவாக மூன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்துள்ளது நிர்வாகம். ஒரு பக்கம் சங்கத்தை அங்கீகரித்து பேசிக்கொண்டு பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, மறுபக்கம் 13 பேரையும் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் புகைச்சல் தற்போது எரியத் தொடங்கியுள்ளது. வடிவேல் பாணியில் சொல்வதென்றால் “நானும் எவ்வளவு நாளுதான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது!” என்று கூறி தற்போது தனது சுயரூபத்தை காட்டியுள்ளது நிர்வாகம்.
இந்த சுயரூபத்தினை முறியடிக்க புஜதொமு சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட புஜதொமு-வின் தலைவர் தோழர். விகேந்தர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக புஜதொமு மாநில இணைச்செயலாளர் தோழர். சுதேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளிகள் கலந்துகொண்டு நிர்வாகத்திற்கும், போலீசுக்கும் தமது கண்டனத்தினை உரைக்குமாறு விண்ணதிர முழக்கமிட்டனர். மக்களிடத்தில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பரவலாக சென்றடைந்தது.
11.03.2014 அன்று கிரிமினல் வழக்கில் பொய் சாட்சி சொல்ல வந்த நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் மிரண்டு போயினர். காரணம், 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர் நிர்வாக அதிகாரிகள். நீதிமன்றத்தின் வெளியில் வழக்கின் தன்மை பற்றி சங்க முன்னணியாளர்கள் தொழிலாளிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். நிர்வாக தரப்பில் சாட்சி சொல்ல வந்தவர்கள் நீதிபதியிடம் சென்று, “நாங்கள் வெளியே சென்றால் தொழிலாளிகள் எங்களை மிரட்டவும், அடிக்கவும் செய்வார்கள்! எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை!” என சென்டிமென்டாக பேசி நாடகத்தை நிறைவேற்றினர். கூடியிருந்த எங்களை நீதிபதி அழைத்து, “இங்கெல்லாம் கூட்டம் கூடக் கூடாது, எல்லாரும் கலைந்து போங்க” என்றார். அதன் பின்பு நிர்வாகம் வேனில் ஏறி பறந்து சென்றது.
தற்போது நிர்வாகம் சங்க செயல்பாட்டின் மீது அதிருப்தியாக உள்ளது என எச்.ஆர் மேனேஜர் சங்க தலைவரிடம் போனில் ஒப்பாரி வைத்தார். எங்களின் கோரிக்கை என்னவோ, அதற்காக சட்ட பூர்வமாகவும், சங்க ரீதியாகவும் போராடினோம். தீர்வு எட்டப்படவில்லை. காரணம் இந்த அரசமைப்புக்குள் எவ்வளவுதான் போராடினாலும் தற்காலிக தீர்வு மட்டுமே கிடைக்கிறது. நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடியே தீர வேண்டும் என்கிற கட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் ஏதோ 13 பேர் மீதான கிரிமினல் வழக்கு பிரச்சனைக்காக நடைபெற்றது என்று சுருக்கி பார்த்து விடமுடியாது. உரிமைக்காக போராடுகின்ற தொழிலாளார்கள் மீது இந்த ஆளும்வர்க்கங்களும், முதலாளிகளும் எப்படி நடந்து கொள்கின்றன என்பதற்கு இன்னுமொரு உதாரணம் மாருதி தொழிலாளர் போராட்டம். இவ்வாறு ஒவ்வொரு ஆலையிலும் இதே நிலைமைதான், இன்றைய மறுகாலனியாக்க சூழ்நிலையில் நடந்தேறிய வண்ணமிருக்கிறது. ஒவ்வொரு ஆலைகளிலும் முதலாளித்துவத்தின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம்! ஆனால் அதன் சா(கோ)ரம் மாறாது!
மதுரை பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்காக தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையின் அனுமதியும் பெறப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டத்தை ரத்து செய்வதாக காவல் துறை கடிதம் வழங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத்தான் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, எனவே அவரை பார்த்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று காவல்துறை தனது பெறுப்பிலிருந்து கழண்டு கொண்டது.
ஆனால் மாவட்ட ஆட்சியரை பார்த்து அனுமதி பெறச்சென்றால், ஆட்சியர் அலுவலகத்தில் உங்களுடைய பகுதி தாசில்தாரை பாருங்கள், அவர்தான் அனுமதி தருவார் என்றனர். ஆனால் தாசில்தாரோ எனக்கு அதிகாரம் இல்லை ஆட்சியர்தான் தரவேண்டும் என்று அவரும் கழண்டு கொண்டார். புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும் உடனடியாக ஒரு தனியார் இடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தோழர் இராணி தலைமை தாங்கினார். இதில் பெ.வி.மு தோழர்கள் ஷீலா, சுகுணா, ஆகியோர் கலந்து கொண்டனர். பெ.வி.மு, மாநில அமைப்பாளர் தோழர் நிர்மலா “ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பை அம்பலப்படுத்தியும் பண்பாட்டு விசயங்களில் பெண்களின் நிலையை பற்றியும்” உரையாற்றினார்.
அடுத்து பெ.வி.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அஜிதா “பெண்கள் உரிமைகளைப் பெற பாராளுமன்றத் தேர்தல் பாதை பயன்படாது என்பதையும், நாடு மறுகாலனியாகி வருகிற சூழலில் நமது குடும்பம் மட்டும் தனியாக சந்தோசமாக வாழமுடியாது என்பதையும் விளக்கி போராட்டம் மட்டுமே தீர்வு” என்று எழுச்சியுரை ஆற்றினார்.
இறுதியில் ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் “பெண் தொழிலாளர்களின் அவலநிலைமையை உணர்ச்சிபூர்வமாக” எடுத்துரைத்தார்.
உரைகளுக்கிடையில் புரட்சிகர பாடல்களும், டாஸ்மாக் சாராய கடைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. தோழர் லதா நன்றியுரை வழங்கினார்.
கூட்டம் சுற்று வட்டார மக்களிடம் நல்ல தாக்கத்தையும் உணர்வெழுச்சிகளையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]
சென்னை நகரில் இருக்கும் ஆயிரக்கணக்கான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாவது உங்களுக்கு நிச்சயம் பரிச்சயமுடையதாக இருக்கும். இப்பொழுதெல்லாம் காலை நாலரை மணிக்கும், இரவு பதினோரு மணிக்கும் கூட சென்னையின் பல்வேறு பகுதிகளின் சிக்னல்களில் பச்சை விளக்குக்காக வண்டிகள் காத்திருக்கின்றன.
காலை ஏழு மணி முதல் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், கூலித் தொழிலாளர்கள், வேலை தேடிச் செல்பவர்கள் என்று பல்வேறு வேலைகளுக்காக பயணிப்பவர்கள் சிறிது சிறிதாக நூற்றுக்கணக்கில் கூடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்து நிற்கும் பேருந்துகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போரின் போது நிரம்பி வழிந்தபடியே புகையைக் கக்கிக்கொண்டு வரும் ரயிலைப் போல, உள்ளே நுழைய வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் பிதுங்கி வழிந்தபடியே வந்து நிற்கும்.
ஏழு மணி முதல் பத்து மணி வரை இதே நிலை தான் தொடரும். இந்த நேரங்களில் வண்டிக்குள் நடத்துனர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. குளிர் காலங்களில் கூட வியர்வையால் குளித்து விடுவார். பத்து மணிக்கு பிறகு இந்த நிலை மாறும், எனினும் அதன் பொருள் கூட்டம் குறைந்துவிட்டது என்பதல்ல. மீண்டும் மாலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை அதே அளவு கூட்டம் இருக்கும்.
ஒரு கோடி மக்கள் தொகையை எட்டப்போகும் ‘வல்லரசு’ இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சென்னையில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 3,800 தான். எனவே தான் புளி மூட்டைகளைப் போல மக்களை அடைத்துக் கொண்டு வருகின்றன மாநகரப் பேருந்துகள். நான் பேருந்தில் போவதில்லை, சொந்த வண்டியில் போகிறேன் என்று நீங்கள் சொன்னால், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதிலும் முதல் இடம் பெறுபவை மாநகரப் பேருந்துகள்தான்.
இவ்வாறு நகரத்தின் நெரிசலான சாலைகளில் லட்சக்கணக்கான மக்களை தினந்தோறும் குறுக்கும் நெடுக்குமாக கொண்டு சேர்க்கும் மாநகர பேருந்துகளின் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பணி ஓய்வு பெறும் வரை மக்களுக்காகவே உழைக்கின்றனர், எனினும் அவர்களைப் பற்றிய பெரும்பான்மை மக்களின் கருத்து தவறானதாகவும், எதிர்மறையானதாகவும் இருக்கிறது. பயணிக்கும் போது அவர்களிடம் முறைப்பது, சண்டை போடுவது, கடுமையான வார்த்தைகளில் திட்டுவதோடு, சில இடங்களில் எதிரிகளைப் போல தாக்கவும் செய்கின்றனர். சென்ற மாதம் 25G பேருந்தில் நடத்துனரை ஒரு மாணவன் கல்லால் அடித்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே வாரத்தில் டெய்லர்ஸ் சாலை வழியாக செல்லும் ஒரு பேருந்திலும் நடத்துனரை ஒருவர் தாக்கியுள்ளார். தினமும் இப்படி நூற்றுக்கணக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டபடி தான் போகுவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் 26 பணிமனைகள் இருக்கின்றன. 18,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவற்றில் ஒன்று தான் அய்யப்பன் தாங்கல் பணிமனை. இங்கிருந்து 170 பேருந்துகள், இருபதுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 100 மெக்கானிக்குகள் உள்ளிட்டு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 750 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த பணிமனையில் உள்ள தொழிலாளர்களை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். (இந்த கள ஆய்விற்காக மூன்று பணிமனைகளுக்கு சென்றோம். மூன்றின் விவரங்களும் அய்யப்பன் தாங்கல் பணிமனையை மையமாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.)
அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரும்பான்மை மக்களுக்கு ஓய்வு நாள். அன்று தான் ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஒரு ட்ரிப் அடித்த பிறகு சற்று நேரமாவது ஓய்வு கிடைக்கும் நல்ல நாள். வேலை நாட்களில் இருக்கும் பரபரப்போ, கூட்டமோ, நெரிசலோ அன்று இருக்காது. எனவே ஒரு சிங்கிளை (புறப்படும் இடம் – சேருமிடம் வரை செல்லும் பயணம்) முடித்து விட்டு இறங்கும் ஓட்டுனரும், நடத்துனரும் டீ கடைகளில் தேநீரை சற்று நிதானமாக விழுங்கியபடி சொந்தப் பிரச்சினைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருங்க, 2007-ல் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த முதல் நாளே செத்துட்டேன், ஊருக்கே ஓடிப்போயிறலாமான்னு கூட தோணுச்சி, ஆனா அப்பா இந்த வேலை கிடைக்கிறதுக்காக சிரமப்பட்டு கொடுத்த ரெண்டு லட்சம் ரூபாய் தடுத்துடுச்சி, பல்லைக் கடிச்சிக்கிட்டு அப்படியே இருந்துட்டேன். முதல் மூணு மாசத்துல ரெண்டு தொடையையும் தூக்கவே முடியல, அவ்வளவு வலி, வீங்கிப்போய் கால் நாலு மடங்கு பெருசாயிட்ட மாதிரி பாரம். வண்டியை ஸ்டார்ட் பண்ணினா அந்த சிங்கிளை முடிக்கிறதுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கை மிதிக்கிறோம், எத்தனை தடவை ஆக்சிலேட்டரை மிதிக்கிறோம்னே தெரியாது. பஸ்ல இருக்கிற பார்ட்ஸ் மாதிரி தான் நாங்களும், பஸ் நிக்கிற வரைக்கும் எங்க உடல் உறுப்புகளும் இயங்கிக்கிட்டே இருக்கும். பிறகு ஓடாது.” என்கிறார் 31 வயதான ஓட்டுநர் குமரேசன்.
“காலையில் எத்தனை மணிக்கு வண்டியை எடுப்பீங்க?”
“பல ஷிப்ட் இருக்கு சார், புல் ஷிப்ட்டுன்னா 4.30 மணிக்கெல்லாம் டிப்போவிலிருந்து கிளம்பிறணும். 4.30 மணிக்கு வந்தா நைட்டு 8.30 மணி வரைக்கும் ஒரு ஷிப்ட், அடுத்த நாள் லீவ். இன்னொரு ஷிப்ட் எட்டு மணி நேரம், இந்த ஷிப்ட்ல எல்லா நாளும் வரணும். ஆனா ரெண்டு ஷிப்டிலும் வேலையை நேரத்துக்கு ஆரம்பிக்கனும், ஆனா நேரத்துக்கு முடிக்க முடியாது. எட்டரை மணின்னா ஒன்பதரை பத்துன்னு ஆகிடும், அதே மாதிரி தான் டெய்லி ஷிப்ட்லயும், கரெக்ட் டயத்துக்கு யாரும் வீட்டுக்கு போனதே இல்லை.”
“ஒரு ஷிப்ட்டுக்கு எத்தனை சிங்கிள், எத்தனை கட் (வழக்கமான ரூட்டின் பாதி அல்லது முக்கால் அளவு தூரத்தைக் கொண்ட சேருமிடம்)ன்னு சார்ட்ல இருக்கோ அதை முடிச்சே ஆகனும், இல்லைன்னா வேலை முடியாது. வேலை நேரம் முடிந்தாலும் டிரிப்பை முடிச்சா தான் வேலை முடிஞ்சதா அர்த்தம். 20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட இந்த ட்ரிப் சார்ட்டை தான் இன்னைக்கும் வச்சிருக்காங்க. அன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருந்தது இன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருக்கு. இதையெல்லாம் நிலைமைக்கு ஏத்தமாதிரி மாத்த வேண்டாமா சார்” என்று வெறுப்புடன் கேட்கிறார் குமரேசன்.
“நீங்க எந்த ரூட்ல ஓட்றீங்க, எத்தனை டிரிப் அடிக்கனும்?”
“11 H ஓட்றேன். நாலு சிங்கிள் அண்ணா சமாதி, ரெண்டு கட் கே.கே நகர். 8 மணி நேர ஷிப்ட் தான், ஆனா அதுக்குள்ள வேலை முடியாது. 17M-க்கு பார்த்தீங்கன்னா நாலு பாரிஸ், ரெண்டு வடபழனி கட், M88 அய்யப்பன் தாங்கல்-குன்றத்தூர் பஸ், அதுக்கு கட் இல்ல மொத்தம் 12 சிங்கிள், 16 J அய்யப்பன் தாங்கல் – கோயம்பேடு பஸ், அதுக்கு மொத்தம் 10 சிங்கிள். ஒரு சிங்கிள்னா இங்கிருந்து அண்ணா சமாதி வரைக்கும். ஒரு கட்னா இங்கிருந்து கே.கே நகர் வரைக்கும், கே.கே நகரிலிருந்து மறுபடியும் இங்க தான் வரணும் அப்படின்னா அது ரெண்டு கட்.”
“20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட இந்த ட்ரிப் சார்ட்டை தான் இன்னைக்கும் வச்சிருக்காங்க. அன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருந்தது இன்னைக்கு எவ்வளவு டிராபிக் இருக்கு.”
குமரேசன் மேலே கூறியவை அனைத்தும் 8 மணி நேர ஷிப்ட்டிற்கான அட்டவணை, முழு நாள் என்றால் இது அப்படியே இரண்டு மடங்காகும். 8 மணி நேரம் என்பது பெயருக்குத்தான், உண்மையில் அது 9 மணி நேரமாகவும், முழு நாள் என்பது 17, 18 மணி நேரமாகவும் நீடிக்கிறது. அய்யப்பன் தாங்கலிலிருந்து பாரிமுனை வரை, எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தபடியே ஒரு முறை சென்று வந்தாலே நாம் சோர்வடைந்து விடுகிறோம். ஆனால், 90-களில் போட்ட அட்டவணைப்படி தான் இன்றும் பாரிசுக்கு முழு ஷிப்டில் 10 சிங்கிள், 2 கட் ஓட்ட வேண்டும் என்று தொழிலாளர்களை கசக்கிப் பிழிகிறது நிர்வாகம்.
இரவுப் பேருந்துகளை இயக்க வேண்டுமானால் கூடுதல் செலவாகும் என்பதால், நிர்வாகம் வைத்துள்ள அரதப் பழசான பயண அட்டைப்படி ஓட்ட முடியாததை சாக்காக வைத்துக் கொண்டு பகல் நேரப் பேருந்துகளை இரவு வரை ஓட்ட வைக்கின்றனர். ஆனால், இதற்கு ஒரு ரூபாய் கூட அலவன்ஸ் கொடுப்பதில்லை. ஒரே நேரத்தில் இரவுப் பேருந்தும், பகல் பேருந்தும் வந்து நிற்பதால், அது இரவுப் பேருந்தா, பகல் பேருந்தா என்று தெரியாமல் பயணிகள் குழம்பி நிற்கின்றனர்.
இந்த கொடுமையுடன் ‘துறையை வளர்க்கும் உயர்ந்த நோக்கத்துடன்’ லிட்டருக்கு 5 கி.மீ இலக்கை எட்ட வேண்டும் என்கிற நிபந்தனை வேறு விதிக்கப்படுகிறது. “லிட்டருக்கு நாலு கி.மீட்டர்னா, இஞ்சின் நாலு கி.மீட்டர் தான் கொடுக்கும், அதெப்படி ஒரே இஞ்சின் ஒரு முறை நாலு கி.மீட்டர், இன்னொரு முறை அஞ்சு கி.மீட்டர் கொடுக்கும்” என்கிறார் குமரேசன்.
“சிவப்பு கலர் L போர்டு வண்டியை பார்த்திருப்பீங்களே. அந்த வண்டியே இந்த டிரைனிங்க்குக்காக தான் இருக்கு. அதுல ஏறினதும், வண்டி நேரா ஒரு டிபன் கடையில போய் நிக்கும், டிபன் டீ, காபி எல்லாம் சாப்பிட்டதும், சீனியர் டிரைவர் மைலேஜ் கிடைக்கிறதுக்கு எப்படி எப்படி எல்லாம் ஓட்டணும்னு சொல்லுவாரு, ஆனா அவர் எப்படி எப்படி எல்லாம் ஓட்டணும்னு சொல்றாரோ அப்படி அப்படி எல்லாம் டிராபிக்ல ஓட்ட முடியாதுங்கிறது தான் விசயம். இந்த டிரைனிங் கொடுக்கிற வேலையையே ஒரு பார்மால்டிக்காக தான் அதிகாரிங்க செய்றாங்க, சீனியர் டிரைவரும் ஒரு பார்மால்டிக்காக தான் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாரு, நாங்களும் ஒரு பார்மால்டிக்காக கேட்டுக்கிறோம். மற்றபடி அப்படி ஓட்டவும் முடியாது, மைலேஜும் கிடைக்காதுன்னு எங்களுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் தெரியும், சீனியர் டிரைவருக்கும் தெரியும். பயிற்சி முடிந்ததும், கடைசில வண்டி ஒரு டீ கடை ஓரமா நிற்கும், பஜ்ஜி, டீயோடு அன்னைக்கு டிரைனிங் முடிஞ்சிரும்” என்கிறார் கிண்டலாக.
“இந்த டிப்போவுக்கு தினமும் 12,000 லிட்டர் டீசல் வருது சார், அதுல ஒரு லிட்டருக்கு 30 பைசா – அதுக்கு மேலயும் கூட இருக்கலாம் சரியாத் தெரியல – கிளை மேலாளருக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனா போகுது. டீசலை மொத்தமா வாங்குனா மத்திய அரசு அதிக வரி விதிக்குது, அது இவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு, துறையை காப்பாத்துறோம்ங்கிற பேர்ல பெட்ரோல் பங்க் முதலாளிகள்கிட்ட பேசி வச்சிக்கிட்டு சந்தை விலைக்கு வாங்குறோம்கிற பேர்ல தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலை ஒரே பங்குல போட ஏற்பாடு பன்னிக்கிட்டு அதுல ஒரு கமிஷன் அடிக்கிறாங்க. மைலேஜ் மைலேஜ்னு டிரைவர்களை விரட்றதெல்லாம் இந்த கொள்ளையை மறைக்கத்தான், இவங்களை ஒழிச்சாலே லாபமும் கிடைக்கும், மைலேஜும் கிடைக்கும்” என்று ‘நமது இலக்கு 5 KMPL’ என்கிற ஏமாற்று முழகத்திற்கு பின்னால் உள்ள உண்மையை போட்டு உடைத்தார் மெக்கானிக் முத்து.
“டீசல்ல மட்டும் இல்ல சார், வண்டிகளை வாங்குறதுலயும், விக்கிறதுலயும், ஓடுற வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குறதுலயும் கூட சுருட்டுறானுங்க, வேலைக்கு சேரணும்னா ஒரு ரேட்டு, ரூட்டை மாத்தணும்னா ஒரு ரேட்டு, லீவு வேணும்னா அதுக்கு ஒரு ரேட்டுன்னு இந்த துறை முழுக்கவே அதிகாரிங்களோட கொள்ளை தான் நடக்குது.”
“முக்கால்வாசி பஸ்ல ஹாரனே இருக்காது சார், நீங்க வேணும்னா ஏறி கையை வச்சுப்பாருங்க, ஒரு சத்தமும் வராது” என்கிறார் ஓட்டுனர் குமரேசன்.
“முக்கால்வாசி பஸ்ல ஹாரனே இருக்காது சார், நீங்க வேணும்னா ஏறி கையை வச்சுப்பாருங்க, ஒரு சத்தமும் வராது”.
“எங்களுக்கு பெரும்பாலும் நைட்டு தான் சார் வேலை இருக்கும். வண்டிக்கு என்ன பிரச்சினை இருந்தாலும், காலையில ஓடணும்னு பெருசா சொல்லிட்டு போய்டுவாங்க. ஆனா வண்டிக்கு மாட்ட வேண்டிய ஸ்பேர் பார்ட்ஸை எல்லாம் அதிகாரிங்களே ‘தின்னுருவானுங்க’. அதே மாதிரி இப்ப வந்திருக்க டாடா மார்க்கபோலா இருக்கு பாருங்க, அது தான் சார் ரொம்ப மக்கர் பண்ணுது. அது லேலண்ட் மாதிரி இல்ல, அதை மொத்தமா ஒரு டைம்ல வாங்குனானுங்க, அப்படி வாங்கினதுல என்ன ஊழல், தில்லுமுல்லு பண்ணுனங்களோ தெரியலை” என்று அதிகாரிகளை வெறுப்புடன் நினைவு கூர்ந்தார் முத்து.
போக்குவரத்து துறையில் கொழுத்து திரியும் அதிகார வர்க்கத்தின் கொள்ளையை பற்றி கொட்டித் தீர்க்காத தொழிலாளிகளே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவரும் கதை கதையாக கூறுகிறார்கள். அதிகாரிகளின் அரசியல் தொடர்புகளும், ஆளும் வர்க்கச் சார்பும் ஏறக்குறைய கட்டப்பஞ்சாயத்து நடப்பது போன்ற நிலையை போக்குவரத்து துறைக்குள் உருவாக்கியிருக்கிறது.
ஏழு வருடங்களாக வெறும் 11,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஓட்டுநர் ஒருவர், வடபழனி டெப்போவில், மெமோவை தவிர்க்க 500 முதல் 1000 ரூபாயும், ஒரு நாள் விடுமுறையை பதிவேட்டில் பதிவு செய்ய 100 ரூபாயும், ஒரு வாரத்திற்கு 1000 ரூபாயும் கொள்ளையடிக்கும் கிளை மேலாளர் தர்மலிங்கத்தைப் பற்றி துணிவுடன் விவரிக்கிறார். இவர் வடபழனி டெப்போவில் பணிபுரிகிறார்.
டெப்போவுக்கு ஒரு கிளை மேலாளர் (BM) அவருக்கு ஒரு உதவி கிளை மேலாளர் (ABM) இவர்களுக்கு மேல் பகுதி மேலாளர் (AM) அதற்கு மேல் மூன்று டெப்போவுக்கு ஒரு மண்டல மேலாளர் (DM) அவருக்கு மேல் நான்கு டெப்போக்களுக்கு ஒரு பொது மேலாளார் (GM) கடைசியில் நிர்வாக இயக்குநர் (MD) என்று அதிகாரிகளின் கூட்டமே நூற்றுக்கணக்கில் இருக்கிறது. துறையை சூறையாடி கொள்ளையிடுவது தவிர இவர்களுக்கு மாதச்சம்பளமாக கிட்டத்தட்ட 40,000 முதல் 50,000 வரை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையே கோடிகளை தொடுகிறது. அதை குறைத்தாலே துறையை லாபகரமாக வளர்க்க முடியும் என்று அனைத்து தொழிலாளிகளும் ஒரே குரலில் கூறுகிறார்கள்.
“அதிகாரிங்க மட்டும் இல்லைங்க, ஒவ்வொரு டெப்போவுக்கும் 20 பேர், 30 பேர்னு ஆளுங்கட்சிக்காரன் தொழிற் சங்க பேருல, வேலையே செய்யாம சுத்திக்கிட்ருக்கான். ஹெட் ஆபீஸ்ல மட்டும் இந்த மாதிரி நூறு பேராவது இருப்பானுங்க. வேலைக்கு லஞ்சம், ரூட்டுக்கு லஞ்சம் எல்லாம் இவங்க வழியா தான் அதிகாரிங்களுக்கு போகுது. இப்படி நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்யாம சுத்துறதால, அவங்க ஓட்ட வேண்டிய வண்டிங்களையும் சேர்த்து நாங்க ஓட்ட வேண்டியிருக்கு” என்கிறார் ஒரு ஓட்டுநர். அப்போது தான் டெப்போவைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்த சில வெள்ளை உடை ‘அண்ணன்கள்’ நம் கண்ணில் தென்பட்டார்கள். அவர்களின் கழுத்தில், ஊர் தாலியை அறுத்த பணத்தில் வாங்கிய தாம்பு கயிறு அளவுள்ள செயின்களும், நான்கு விரல்களில் மோதிரங்களும் மின்னின. அடிமைகளுக்கு முத்திரை குத்தப்படுவது போல அனைவரின் மோதிரங்களிலும் அம்மா சிரித்துக்கொண்டிருக்கிறார். ஆட்சி மாறும் போது இந்த கும்பலும் மாறிக்கொள்ளும். உழைப்பாளிகளுக்கு மத்தியில் இத்தகைய தொழிற்சங்க கருங்காலிகளை பார்த்தபோது குமட்டிக் கொண்டு வந்தது.
“வேலையில் சேரணும்னா லஞ்சம் கொடுக்கனும்னு சொல்றாங்க, ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் போக்குவரத்து துறையில் நிறைய வேலை வாய்ப்பிருக்கு, யாரும் வரமாட்டேங்கிறாங்கன்னு செய்தி வந்திருக்கே” என்றதற்கு, “ரெண்டு லட்சம் கேட்டா எப்படி சார் எல்லோரும் வருவாங்க, லஞ்சம் இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க அடுத்த நாளே வந்து குவியிறாங்களா இல்லையான்னு பாப்போம்” என்கிறார் நடத்துனர் செல்வராஜ். “ஆனா காச கொடுத்து வேலைக்கு சேர்ந்தாலும், வேலைக்கு வந்த பிறகு இந்த கொடுமை தாங்க முடியாம, காசே போனாலும் பரவாயில்லைன்னு வெறுத்து ஓடிப்போனவங்க நிறைய பேர் இருக்காங்க” என்கிறார் ஓட்டுனர் மாரிமுத்து.
போக்குவரத்து துறையில் மொத்தமுள்ள 18,000 தொழிலாளர்களில் 40% பேர் தான் நிரந்தரத்தொழிலாளிகள், மீதமுள்ள 60% பேர் தினக்கூலிகளாக (CL) பணிபுரிகிறார்கள். அதாவது புதிதாக பணியில் சேர்கிற ஒருவர் (CL) தினக்கூலி தான். அவருக்கு தினசரி வெறும் 266 ரூபாய் தான் சம்பளம். இது தவிர ஒருநாள் ஓட்டத்தில் வசூலாகும் தொகையில் நூற்றுக்கு தொண்ணூறு பைசா வழங்கப்படுகிறது. அதாவது ஓட்டுனர் நடத்துனர் இருவருக்கும் சேர்த்து நூறு ரூபாய்க்கு 1.80 பைசா கழிவு. பத்தாயிரம் ரூபாய் வசூலானால் 180 ரூபாய் கழிவு. ஆளுக்கு 90 ரூபாய். இந்த கழிவு ஜூனியர், சீனியர், நிரந்தரத் தொழிலாளி அனைவருக்கும் பொதுவானது.
“எல்லா வண்டியிலும் பத்தாயிரம் ரூபாய் வசூலாகாது, பத்தாயிரம் ரூபாய் என்பது ஒரு சில வழித்தடங்களில் மட்டும் தான் சாத்தியம். உதாரணத்திற்கு 17M, 37G, 88, M88, 88C, M25, 16J (வெள்ளை மற்றும் பச்சை பலகை வண்டிகள்) போன்ற பெரும்பான்மையான வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அதிகபட்சம் ஷிப்டிற்கு ஐயாயிரத்தை தாண்டினாலே பெரிய விஷயம், தாழ்தள சொகுசு பேருந்தில் இதைவிட இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் கூடுதல் வசூலாகும் அதற்கு மேல் ஆகாது” என்கிறார் கணேசன் என்கிற ஓட்டுனர்.
“இந்த டிப்போல குடிக்கத் தண்ணி கூட இல்லைங்க, இங்க மட்டுமில்ல எனக்குத் தெரிஞ்சு எந்த டெப்போவிலும் இல்ல. வெயில் காலத்துல ஒரு டிரிப்ப முடிச்சிட்டு இறங்கினா, அவ்வளவு தாகம் எடுக்கும், தாகத்தோட வந்தா டெப்போவில் தண்ணியோ, யூரின் போகவோ எந்த வசதியும் இல்லை, இருக்கிற டாய்லெட்டை சுத்தம் பண்ணாம அப்படியே வச்சிருக்காங்க. அந்த பக்கமே போக முடியாதபடி, மலஜலம் வெளியேறி நாற்றம் புடுங்குது. ஆனா ஆபீஸ்ல அதிகாரியா வேலை செய்றவங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளும் இருக்கு.”
“யாரும் கேண்டின்ல சாப்பிடுறது இல்ல, அவ்வளவு கேவலமா இருக்கும். நாங்க வீட்ல இருந்து கட்டிட்டு வந்துருவோம், இல்லைன்னா பக்கத்துல இருக்கிற கையேந்தி பவன்ல சாப்பிட்ருவோம்”
“காஞ்சிபுரம், செய்யாறு பக்கமிருந்து வர்ற டிரைவருங்க தினமும் வீட்டுக்கு போக முடியாது, அதனால ஒருநாள் விட்டு ஒரு நாளோ, வாரத்துக்கு ஒரு நாளோ தான் போவாங்க. அப்படி வெளியூரிலிருந்து வர்றவங்க ஒவ்வொரு நாளும் முன்னூறு பேராவது இந்த டிப்போல தங்குறாங்க.”
“பர்ஸ்ட் ஷிப்ட்னா காலையில 4.10 கெல்லாம் கத்தி எழுப்ப ஆரம்பிச்சுடுவாங்க, எழுந்தா குளிக்கக் கூட வேணாங்க, முகத்தை கழுகவோ, டாய்லெட் போகவோ கூட தண்ணி இருக்காது. டெப்போவுக்கு வெளியில் இருக்கிற டீ கடைக்கு போய் தான் முகத்தை கழுவிகிட்டு, வண்டியை எடுப்பாங்க. எந்த ரூட்ல போறாங்களோ அந்த ரூட்ல உள்ள, (வடபழனியிலோ, பூந்தமல்லியிலோ) கார்ப்பரேஷன் டாய்லெட்ல தான் தினமும் வெளியே போறாங்க, நாங்களும் வேலைக்கு வந்த பிறகு அவசரத்துக்கு போகணும்னா கார்ப்பரேஷன் டாய்லெட் தான். இந்த பிரச்சினைக்கு உங்களால முடிஞ்ச உதவியை பண்ணுங்க சார்” என்று நம்மிடம் கோரிக்கை வைத்தார் நடத்துனர் கிருஷ்ணன்.
“இது மட்டுமா சார் பிரச்சினை, சாப்பாட்டை பத்தி கேக்கவே வேணாம். பேருக்கு கேண்டீன்னு ஒன்னு இருக்கு. எல்லாம் புழுத்த அரிசில தான் பன்றானுங்க. CL தொழிலாளியை தவிர வேற யாரும் அங்க சாப்பிடுறது இல்ல, அவ்வளவு கேவலமா இருக்கும். நாங்க வீட்ல இருந்து கட்டிட்டு வந்துருவோம், இல்லைன்னா பக்கத்துல இருக்கிற கையேந்தி பவன்ல சாப்பிட்ருவோம், ஆனா புது தொழிலாளிக்கு வேற வழி இல்ல, தினமும் வாங்குற 266 ரூபாயை வச்சிக்கிட்டு எந்த கடையில போய் சாப்பிடறது. அதனால மாசத்துல சில நாள் மட்டும் கடையில் சாப்பிடுவாங்க. மத்த நாளெல்லாம் இங்க தான். ஆரம்பத்தில் நானும் பல வருஷம் இங்க தான் சாப்பிட்டுட்டு இருந்தேன், இப்ப ஓரளவு சமாளிக்க முடியறதனால சாப்பிடுறது இல்லை” என்றார் ஒரு ஓட்டுனர்.
“பிள்ளைகளோட வருமானத்துல தான் சார் குடும்பத்தையே ஓட்றோம், பல வருஷ சர்வீஸ் இருக்கிறதனால தான் இந்த வேலையில இன்னும் இருக்கோம்” என்கிறார்கள் 88E பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும். “எங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கு சார், சரியா ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் நைட்டு 11 மணி இருக்கும், குன்றத்தூர் பக்கம் இருந்து டெப்போவுக்கு திரும்பிக்கிட்டிருந்தோம். வண்டியில ஒரு ஜனம் இல்ல, நானும் கண்டெக்டரும் மட்டும் தான் இருக்கோம்.”
“அந்த வழியில பல இடங்கள் காடாத்தான் இருக்கும். நடுவில் உள்ள ஒரு ஸ்டாப்பிங்ல ஒருத்தன் மட்டும் நின்னு கையை காட்டினான், நிறுத்தி ஏத்திக்கிட்டோம். ஏறினதுமே, கையில வச்சிருந்த ரத்தக்கறை படிஞ்ச அருவாளைக் காட்டி மிரட்டி வண்டியை எங்கேயும் நிறுத்தாம ஓட்டச் சொன்னான். 5 கி.மீ தாண்டினதும் நிறுத்தச் சொல்லி இறங்கி ஓடிட்டான். அந்த கொலைகாரனை தேடிவந்த போலீசுக்காரங்க, சாட்சி சொல்ல வாங்கன்னு எங்க ரெண்டு பேரையும் ஆறு மாசமா கோர்ட்டுக்கு இழுக்கடிச்சாங்க” என்கிறார்.
ஓட்டுனராவதற்கு முன்பு கொத்தனாராக பணி புரிந்த சங்கர், அப்போது தினமும் 700 ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் பின்னர் அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு 1.5 லட்சம் கொடுத்து ஓட்டுனரானதாகவும், இந்த வேலையை விட கொத்தனார் வேலையே பரவாயில்லை என்றாலும், “பணத்தை கொடுத்து விட்டதால் வேலையை விட்டும் போகமுடியாது, நிரந்தரமாக்க இன்னும் எத்தனை வருசம் காத்திருக்கனும்னு தெரியல” என்று வருத்தத்தோடு கூறுகிறார்.
ஒரு வருடத்திற்குள் 500 ட்ரிப் அடிப்பவர்கள் மட்டுமே, சில வருடங்கள் கழித்து நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், முதல் 240 சிங்கிளை முடித்ததும் அவர்களுக்கான எண் வழங்கப்படும், அடுத்த 240 சிங்கிளை முடித்த பிறகு நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நடப்பு நிலவரம் என்னவென்றால் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நிரந்தரமாக்கப்படாமல் காத்திருப்பவர்கள் பலர். இவ்வாறு நிரந்தரமாக்கப்படாதவர்கள் வண்டியில் ஏறினால் தான் சம்பளம். வண்டி கிடைக்கா விட்டால் அன்று வேலை நாளாக கணக்கில் வராது. இவர்கள் மட்டுமின்றி, நிரந்தரமாக்கப்பட்ட சிலரும் கூட வண்டி கிடைக்காமல் காத்திருப்பதுண்டு.
“இந்த பிரச்சினைகள் ஒருபக்கம்னா காலேஜ் பசங்களும், ஸ்கூல் பசங்களும் பண்ற அட்டகாசம் இன்னொரு பக்கம் சார். பசங்க மட்டுமா அப்படி இருக்காங்க, பொறுப்பான அம்மா, அப்பாக்களும் அப்படி தான் இருக்காங்க, கொஞ்சமும் புரிஞ்சிக்கிறதே இல்லை. வண்டில ஏறினதுமே முறைக்கிறதும், சிடுசிடுக்குறதும், அதட்டுறதும், கையை முறுக்குறதும் சில்லறை கேட்டா ஏன் உங்கிட்ட இல்லையா, பேகை காட்டுன்னு சட்டம் பேசுறதும், இது என்னா ஓன் வீட்டு வண்டியாங்கிறதும், இப்படி வாய் வார்த்தையோடு நிக்காம சட்டையை பிடிச்சி சண்டைக்கும் இழுப்பாங்க. இதையெல்லாம் நினைச்சா ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு ரொம்ப கஷ்ட்டமா இருக்கும் சார்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் நடத்துனர் தங்கவேல்.
“ஒரு தடவை குன்றத்தூர் ரூட்ல ஒரு பையன் ஏறி உக்காந்துகிட்டு பாஸ் இருக்குன்னு சொன்னான்.
எங்க காட்டுன்னேன்.
என்னாத்துக்கு காட்டனும் எங்கிட்ட இருக்குன்னான்.
சரிப்பா, இருந்தா காட்டுன்னேன்.
காட்ட முடியாது என்னா பன்னுவேன்னான்.
வண்டிய நிறுத்தி இறக்கி விட்டுட்டேன்.
ஆனா அதே ரூட்ல தான் திரும்பி வரணும், திரும்பி வரும் போது ஏரியா கவுன்சிலரை கூட்டிக்கிட்டு ஒரு கூட்டமே ரோட்டை மறிச்சிக்கிட்டு நிக்கிது. இன்னா ம.. டா ஒனக்கு பாசை காட்டனும்.., தே.. நான் காட்டட்டுமா, அப்படின்னு கெட்ட கெட்ட வார்த்தையில பேச ஆரம்பிச்சுட்டானுங்க. இந்த மாதிரி அந்த ரூட்ல பல வண்டிகளுக்கும் பிரச்சினையாகியிருக்கு, எதாவது பிரச்சினைன்னா உடனே, கவுன்சிலர், தலைவருன்னு ஒரு கூட்டமே வந்து வண்டியை மறிச்சிக்குவானுங்க. அதனால யாரும் அந்த ரூட்ல பாசை காட்டுன்னே கேட்கிறது இல்ல” என்கிறார் நடத்துனர் தருமன்.
போக்குவரத்து சட்டப்படி, மொழி தெரியாத ஒருவர் பயணச்சீட்டு வாங்கவில்லை என்றால், பரிசோதகர் அவரை வாங்கும்படி தான் வலியுறுத்த வேண்டும். அதே போல உடல் ஊனமுற்றவர்கள் எடுத்து வரும் பொருட்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. அதே போல, பேருந்துக்குள் 75 பேருக்குள் இருந்து, அவர்களில் யாரேனும் பயணச்சீட்டு வாங்கவில்லை என்றால் தான் நடத்துனரை கேட்க வேண்டும், 75 பேருக்கு மேல் இருந்தால் அதற்கு நடத்துனர் பொறுப்பு அல்ல.
“ஆனா எல்லா டிக்கெட் செக்கரும், மொழி தெரியாதவங்க டிக்கெட் எடுக்காட்டி பெனால்டி போடுறதுலயும், காசு புடுங்குறதுலயும் தான் சார் குறியா இருக்காங்க. இப்பல்லாம் எடுத்த உடனே போனை புடுங்கிக்கிறாங்க. இந்த விசயங்கள்ல நாங்க சட்டப்படி தான் நடந்துக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் கொண்டு வரும் லக்கேஜ்க்கு டிக்கெட் போடாம இருந்தா, செக்கர் ஏன் போடலைன்னு கேப்பாரு, போக்குவரத்து சட்டத்தை பற்றி சொன்னா எனக்கே சட்டம் சொல்லித் தர்றியான்னு மிரட்டுவாங்க. அதனால பல கண்டெக்ட்டருங்க விருப்பம் இல்லாமலே கூட இதை செய்ய வேண்டியிருக்கு.”
பல்லவன் ஹவுஸ் – மாநகரப் பேருந்து பணிமனைகளின் தலைமை அலுவலகம். அதிகார வர்க்கத்தின் பிடியில் இருக்கும் இந்த அலுவலகம் தொழிலாளர்களின் கையில் வரும் போது அரசு போக்குவரத்தில் இலாபம் வரும்.
“இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் எங்க வாழ்க்கையில பிரச்சினை தான் சார். படியில நிக்காதன்னா கேக்கவே மாட்டானுங்க, படியில நிக்கிறது கூட பரவாயில்லைங்கிற அளவுக்கு சில குரங்குங்க, வண்டியோட சைடு கம்பியை பிடிச்சுக்கிட்டு, பேக் வீல்ல ஒரசுறா மாதிரி தொங்குங்க. என் வண்டில அப்படி தொங்குன ஒரு பையன் வீல்ல மாட்டிட்டான். அவன் ஏறுனதிலிருந்தே தொங்காத, தொங்காதன்னு கத்திக்கிட்டே தான் இருந்தேன், ஆனா அவன் கேக்கல. கடைசில கோர்ட்ல நீதிபதி நீ ஏன் மேல வரச்சொல்லலன்னு என்னையும், அவன் தொங்குறப்ப நீ ஏன் வண்டியை எடுத்தன்னு டிரைவரையும் கேட்கிறாரு.”
“இறங்குடான்னு கொஞ்சம் அதட்டிப் பேசினாலே 25G கண்டெக்ட்டருக்கு நடந்த மாதிரி தான் நடக்கும். நீதிபதி கோர்ட்ல உட்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசலாம், ஆனா பிரச்சினையை எதிர்கொள்றது நாங்க தான். நீதிபதி மட்டும் இல்ல, நிர்வாகமே எங்களுக்கு ஆதரவா இல்ல சார். 25G கண்டெக்ட்டர் விசயத்துல GM என்ன சொல்லியிருக்காரு தெரியுமா, டிரைவருக்கும் அந்த பையனுக்கு முன் விரோதமாம், இது டிபார்ட்மெண்ட் பிரச்சினை இல்லையாம். எப்படி இருக்கு பாருங்க” என்று இயலாமையுடன் கேட்கிறார் நடத்துனர் பெருமாள்.
“இறங்குடான்னு கொஞ்சம் அதட்டிப் பேசினாலே 25G கண்டெக்ட்டருக்கு நடந்த மாதிரி தான் நடக்கும்.”
“டிக்கெட் விலையை ஏத்தினா அதுக்கு நாங்க என்னா சார் பண்ண முடியும், மக்கள் தான் போராடணும். டிக்கெட் விலையை ஏத்தும் போதெல்லாம் அது எங்களுக்கு பெரிய தலைவலியா இருக்கும். ஏறுரவன் எல்லாம் ஏதோ நாங்க விலையை ஏத்தின மாதிரி எங்ககிட்ட முறைப்பானுங்க, கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினா கம்ப்ளெய்ண்ட் கொடுக்கிறோம்னு மிரட்டுவாங்க. ஒரு பக்கம் அதிகாரிங்களோட அராஜகம், இன்னொரு பக்கம் மக்கள் பன்ற பிரச்சினை இப்படித்தான் பிரச்சினைகளோட போகுது வாழ்க்கை” என்கிறார் ஒரு நடத்துனர்.
சில ரூல்ஸ் ராமானுஜங்கள், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் பேசும் ஓட்டுனர் – நடத்துனர்களை பழிவாங்குவதற்காகவே பேருந்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து நடக்காததை எல்லாம் புகாராக தெரிவிக்கின்றனர். அது தொழிலாளிகளை விசாரணை, பணியிடை நீக்கம் வரை அழைத்துச் செல்கிறது. இதனால் தொழிலாளிகளின் குடும்பமே பாதிக்கப்படுகிறது.
“அப்படி ஒருத்தன் என் மேல அடிக்க வந்தேன்னு பொய் புகார் கொடுத்திட்டான் சார், நான் அப்ப ஒப்பந்தத் தொழிலாளி, தினமும் வேலைக்கு போனா தான் சம்பளம். என்கொயரிக்கு கூப்பிடுற வரைக்கும் வேலை இல்லை. அப்ப தான் எனக்கு குழந்தை பிறந்து எட்டு மாசம் ஆகியிருக்கு, அந்த நிலைமையில குழந்தையோட செலவுக்கு கூட கையில காசு இல்லாம ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டேன். அதுக்கு பிறகு எவன் என்ன பேசினாலும் சொரணையே இல்லாத மாதிரி நகர்ந்து போக பழகிக்கிட்டேன்” என்று வேதனையோடு கூறுகிறார் ஓட்டுநர் சுந்தர்.
நிர்வாகத்தை முறையாக நடத்தத் தெரியாத அதிகார வர்க்க ஒட்டுண்ணிகள், பணிபுரியும் துறையையே கொள்ளையிடும் கொள்ளையர்கள்தான் தொழிலாளர்களை பழிவாங்குவதற்காகதான் இந்த புகார் எண்ணை அனைத்து பேருந்துகளிலும் அச்சிட்டிருக்கிறார்கள் என்று குமுறுகிறார் ஒரு தொழிலாளி.
“இவ்வளவு பிரச்சினைகளோடு நாங்க வேலை பார்த்தாலும் எங்களுக்கு முறையான விடுமுறை கிடைப்பதில்லை. வருஷத்துக்கு 58 நாட்கள் விடுமுறை இருக்கு, ஆனால் அத்தனை நாட்களையும் எடுக்க முடியாது. ஒரு அவசர தேவைன்னா எடுக்க முடியாது, தொடர்ந்து ஒரு வாரம் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் 11C என்கிற போக்குவரத்து சட்டப்பிரிவின்படி தற்காலிகமாக வேலைநீக்கம் செய்யப்பட்டு, சம்பளத்தை பிடிப்பார்கள், பிறகு தலைமை அலுவலகத்தில் நடக்கும் விசாரணைக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு தான் வேலை. அதுவரை வேலை இல்லை சம்பளமும் இல்லை. அது ஊதிய உயர்வையும், போனசையும் பாதிக்கும்.”
“எனக்கு கல்யாணம் ஆன பிற்பாடும் நான் இங்கே தனியா தான் சார் இருந்தேன், அப்ப தான் வேலைக்கும் சேர்ந்திருந்தேன், தினமும் கிடைக்கிற 266 ரூபாயை வைத்து குடும்ப நடத்த முடியாதுங்கிறதனால, கன்பார்ம் ஆன பின்னாடி மனைவியை கூட்டிட்டு வரலாம்னு ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன். அவங்க மாசமா இருந்த போது வளைகாப்புக்காக ரெண்டு நாள் போய்ட்டு வரலாம்னு லீவ் கேட்டா கிளை மேலாளர் தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு. இத்தனைக்கும் அன்னைக்கு தீபாவளியோ, பொங்கலோ இல்லை சாதாரண நாள் தான். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன் கிடைக்கவே இல்லை, அப்புறம் போகல” என்று அந்த கொடிய நாளை எண்ணி அமைதியானார் மோகன்.
மற்றொரு நடத்துனர் “நானெல்லாம் குறைந்தது 80 மெமோவாவது வாங்கியிருப்பேன் சார்” என்கிறார். 80 முறை இடைநீக்கம் என்றால் அது அவருடைய பொருளாதரத்தை எவ்வளவு கடுமையாக பாதித்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரம் 25 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கிறார். அதாவது சீனியர். “போன பொங்கலுக்கு குடும்பத்தோட ஊருக்கு போறதுக்காக, தொண்ணூறு நாட்களுக்கு முன்னாடியே டிரைய்ன்ல ரிசர்வ் பண்ணியிருந்தேன் சார், கிளம்புற அன்னைக்கு வீட்ல எல்லோரையும் தயாரா இருக்கச் சொல்லியிருந்தேன். ஆனா BM கிளை மேலாளர் லீவ் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டாரு. நான் எப்படியும் வந்துருவேன்னு பிள்ளைங்க ஆசையா இருந்தாங்க, கடைசில லீவ் கிடைக்காததனால மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் தான் அனுப்பி வச்சேன்.”
வண்டியை எடுத்து விட்டால் அதன் பிறகு பணிமனையில் கொண்டு வந்து விடும் வரை, வேலை நேரத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு ஓட்டுநரையும் நடத்துனரையுமே பொறுப்பாக்குகிறது நிர்வாகம்
“அடுத்து இருபது நாள்ள என்னோட பெரிய அண்ணனும், ஒரு பெரியம்மாவும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. பொங்கலுக்கு போயிருந்தா அவங்களை பார்த்திருப்பேன். அப்ப ரெண்டு சாவுக்கும் போக வேண்டியிருந்தது. இனி இவன்கிட்ட போய் லீவுக்காக நிக்கக்கூடாதுன்னு எனக்குள்ளேயே ஒரு வைராக்கியம், லீவே கேட்கல. அன்னைக்கு புல் டே பார்த்துட்டு, நைட்டு கிளம்பி சாவுக்கு போய்ட்டு அடுத்த நாளே இங்க வந்துட்டேன், இப்படித்தான் ரெண்டு சாவுக்கும் போய்ட்டு வந்தேன்” என்கிறார் சுந்தரம்.
வண்டியை எடுத்து விட்டால் அதன் பிறகு பணிமனையில் கொண்டு வந்து விடும் வரை, வேலை நேரத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு ஓட்டுநரையும் நடத்துனரையுமே பொறுப்பாக்குகிறது நிர்வாகம். ஆண்டு முழுவதும் பிரச்சினைகள் இல்லாமல் ஓட்டினால் தான் ஊதிய உயர்வு கிடைக்கும். விபத்து என்றால் 6 மாதம் பணிநீக்கம் செய்துவிட்டு, நிர்வாகம் அப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும். ஓட்டுநர் தான் வழக்குரைஞரை நியமித்துக்கொண்டு வழக்காட வேண்டும். CL என்றால் வேலையை விட்டே கூட தூக்கி விடுவார்கள்.
நாள் முழுவதும் மக்களுக்காக உழைக்கும், மாநகரத்தின் நீள அகல எல்லைகளுக்கு மக்களை அழைத்து சென்று ஓய்ந்து வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளிகளில் பலருக்கு சொந்த வாகனங்கள் இல்லை. பொருளாதார பிரச்சினைகளோடு உடல் ரீதியிலான பிரச்சினைகளையும் அதிகமாக எதிர்கொள்கின்றனர். வருடம் முழுவதும் வண்டியிலேயே இருப்பதால் மூலம், முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் மனப்பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். முறையான உணவோ, உறக்கமோ, தேவையான மனநிம்மதியோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் ஏறக்குறைய வாழ் நாள் முழுவதுமே இழக்கின்றனர்.. அரசு வேலை, போனஸ், பென்ஷன் என்றெண்ணி வேலைக்கு வரும் இவர்கள் மீது இந்த வேலை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களை அரசு ஊழியர்களாக கருதுவதில்லை. அதே போல் அரசும் இவர்களை ஊழியர்களாக நடத்துவதில்லை, போக்குவரத்துக் கழகச் சட்டத்தின்படி இவர்கள் கம்பெனி ஆக்ட் விதிப்படி நடத்தப்படுகின்றனர்.
“நாங்க நிம்மதியா வாழ்றது தான் இல்லைன்னா, கடைசி காலத்துல நிம்மதியா சாகிறதும் இல்லை சார். 58 வயசுல ஓய்வு பெறும் போது, அதற்கு மேல் காயலான் கடைக்கு போக வேண்டிய பேருந்தை போல பல உடல் பிரச்சினைகளோடும் இருக்கின்ற தொழிலாளிகள் ரெண்டு, மூனு வருஷம் கூட வாழ்றது இல்லைங்க, இந்த வேலைக்கு வர்றவன் எல்லாம் முன் ஜென்மத்துல ரொம்ப பாவம் பன்னவனா தான் இருப்பான்” என்கிறார் M49 ஓட்டுனர்.
“இந்த வேலைக்கு வர்றவன் எல்லாம் முன் ஜென்மத்துல ரொம்ப பாவம் பன்னவனா தான் இருப்பான்”
அரசு, மக்களுக்காகவே உழைக்கும் இந்த தொழிலாளிகளுக்கு சலுகைகளை அல்ல, இருக்கும் உரிமைகளையே கூட வழங்க மறுக்கிறது. நாம் கேட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் நூற்றுக்கணக்கான கதைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. நாம் இதுவரை இவர்களை இவ்வாறு அணுகவில்லையே என்கிற குற்ற உணர்வு இதை கேட்கும் எவரது மனதையும் கனக்க வைக்கும். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு உடல் வலி இருந்தாலும், அதற்காக குடிப்பதோ, பிற கெட்ட பழக்கங்களையோ நாடுவதில்லை, சில விதி விலக்குகளைத் தவிர. ஏனெனில் இந்த வேலை முறையே அதை அனுமதிப்பதில்லை.
ஒரு பேருந்தை முழு நாளும் இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. உதாரணத்திற்கு 17M ஐ எடுத்துக்கொள்வோம். காலை 4.30 மணிக்கு டெப்போவிலிருந்து கிளம்பும் பேருந்து இரவு ஒன்பதரை, பல நேரங்களில் பத்தரை மணிக்குத் தான் தனது இயக்கத்தை நிறுத்துகிறது, பேருந்து மட்டுமல்ல தொழிலாளிகளும் தான்.
இந்த நீண்ட ஒரு முழு நாளில் ஓட்டுனரும், நடத்துனரும் சந்திக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. நடத்துனருக்கு வெறுமனே டிக்கெட் கொடுப்பது மட்டுமல்ல வேலை. வண்டியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் அவர் ஏற்கிறார். மேல ஏறு, மேல ஏறு என்கிற வார்த்தையையும், உள்ள போ, உள்ள போ என்கிற வார்த்தையயும் ஒரு நடத்துனர் ஒரு நாளில் எத்தனை ஆயிரம் முறை உச்சரிக்கிறார் என்பதை எண்ண முடியாது. படியில் தொங்கும் மாணவர்கள், பெண்களை இடிக்கும் பொறுக்கிகள், பிக்பாக்கெட், பிளேடு போடும் திருடர்கள், சண்டை போட்டுக்கொள்ளும் பயணிகள், பயணச்சீட்டு எடுக்காதவர்கள், குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்கள், ரவுடிகள் என்று அனைவரையும் சமாளிக்க வெண்டியிருக்கிறது.
வண்டி ஓடும் போதே இறங்கி ஓடுபவர்கள், நிற்பதற்குள் இறங்க முயற்சிக்கும் வயதானவர்கள், வண்டி கிளம்பிய பிறகும் ஓடி வந்து தொற்றுபவர்கள், கையை வெளியில் தொங்கப் போட்டுக் கொண்டு தூங்குபவர்கள், குழந்தையை படிக்கட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு நிற்பவர்கள் என்று அனைவருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பொறுப்பாக கவனித்து அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. தனக்கு இன்று மூடு இல்லை என ஒரு நடத்துநர் இவை எதனையும் மறந்து விட முடியாது.
இந்த பிரச்சினைகளோடு ஓட்டுநர் சந்திக்கும் பிரச்சினைகளும் உள்ளன. குறுகிய சாலைகளில் வழி விடமுடியாத போது சில ஹீரோக்கள், பேருந்தை ஓவர்டாக் செய்து பைக்கை குறுக்கே கொண்டு வந்து போட்டுவிட்டு சண்டை போடுவார்கள். காரில் வரும் திமிரெடுத்த மேட்டுக்குடி லும்பன்கள் காரை குறுக்கே நிறுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் சண்டை போடுவார்கள். வேறு பலர் டிரைவர் சீட்டில் ஏறி சட்டையை கோர்த்து பிடித்து கீழே இழுத்து அடிப்பது என்று தமது ‘வீரத்’தை இந்த தொழிலாளிகளிடம் தான் காண்பிக்கிறார்கள்.
‘எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான். எங்க பிரச்சினைக்காக கேக்கனும்னு சொல்லல, ஒரு பொண்ணுக்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டா கூட எவனும் கேக்கமாட்டான் என்கிறார் ஒரு நடத்துனர்..
உடல் களைப்பாலும், இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் உளக்களைப்பாலும் இவர்கள் சோர்ந்து போகின்றனர். டி.வி பார்ப்பதோ, சினிமா பார்ப்பதோ, அல்லது பிறர் மகிழ்ச்சியை நாடும் வழிகளிலோ அவர்கள் மகிழ்ச்சியை கண்டடைவதில்லை. மகிழ்ச்சியை குலைக்கும் வேலையையே மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுவது தான் மகிழ்ச்சிக்கான வழி என்பதை அனுபவத்தில் அறிந்து கொண்டு தமது அணுகுமுறைளையே மாற்றிக் கொள்கின்றனர்.
பிரச்சினைகளை அதிகமாக்கும் தனது பண்புகளை வேலைக்காக மாற்றிக் கொண்டு பயணிகளுடன் முரண்படாத, கலகலப்பான நடத்துனராகவும், சாலையில் பயணிக்கும் சக வாகன ஓட்டிகளோடு முரண்படாத ஓட்டுநராகவும் இந்த தொழிலாளர்கள் தம்மை அனுபவத்தினூடாக மாறிக் கொள்கின்றனர். ஆனால் பேருந்தில் பயணிக்கும் நாம், நமக்காக சேவை செய்யும் இவர்களுக்காக நம்முடைய எந்த பண்பை மாற்றிக்கொண்டிருக்கிறோம் ?
அரசுப் பேருந்துகள் நட்டத்தில் ஓடுகின்றன, அரசு மானியம் வழங்குகிறது என்று அடிக்கடி வரும் செய்திகளின் பின்னே இத்தகைய கடும் சுரண்டலும் ஊழலும் மறைந்திருக்கிறது. போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகளும், பேருந்துகள் – பாகங்கள் தயாரிக்கும் முதலாளிகள், மற்ற சேவைகளை தரும் நிறுவனங்கள் சேர்ந்துதான் அரசு பேருந்துகளின் நட்டத்திற்கு காரணமாக இருக்கின்றனர். அதிகார வர்க்கம், தனியார் முதலாளிகள் மட்டும் வருடந்தோறும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஊழல், வர்த்தகம், சம்பளம் என்ற பெயரில் சுருட்டுகின்றனர்.
இவர்களுக்கு அடியாளாக ஆளும் கட்சி தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. தொழிலாளிகள் மீது நிர்வாகம் எடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கமிஷன் வாங்கிக் கொண்டு நாட்டாமையாக வலம் வருகின்றனர், இந்த தொழிற்சங்க சுல்தான்கள். இவர்களிடையே சிக்கி கொண்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாக தொழிலாளிகள் இருக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 266 ரூபாய் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும்? கொத்த்தனார், பிளம்பர், எலக்ட்ரிசியன் போன்ற தொழிலாளிகளுக்கு இருக்கும் சம்பளம் கூட இவர்களுக்கு இல்லை. கூடவே பணிமனையில் எந்த வசதியும், ஏற்பாடுகளும் இல்லை. எந்த பணிமனையிலும் மருத்தவமனையோ, மருத்துவரோ கூட கிடையாது.
இந்த அதிகார வர்க்கம் மற்றும் தனியார் முதலாளிகளின் கூட்டை ஒழித்து விட்டு தொழிலாளிகளே நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் போதுதான் அரசு போக்குவரத்து கழகம் இலாபகரமாகவும் செயல்படும், தொழிலாளிகளுக்கும் அடிப்படை ஊதியம் மற்றும் உரிமைகள் கிடைக்கும். இவ்வளவு இடர்பாடுகளுக்கிடையிலும் நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும், கட்டுப்பாடுடனும் வாழும் இந்த தொழிலாளிகள் தமது வர்க்கத்திற்குரிய அரசியல் மற்றும் போர்க்குணத்தை பெறும் போது இது நிறைவேற முடியாத கனவல்ல. அந்த கனவும் இந்தியாவில் புரட்சி வரவேண்டும் என்பதும் வேறு வேறு அல்ல.
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது. ஆயினும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள பார்சிலோனா தான் முன் தயாரிப்பாக இந்தத் தொகையை கட்டியிருப்பதாக கூறுகிறது.
நிய்மார்
2013-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் சான்டோஸ் என்ற அணியிலிருந்து நிய்மார் என்ற வீரரை தனது அணிக்கு வாங்கியதற்கான ஒப்பந்தத் தொகையை 5.7 கோடி யூரோ (ரூ 484 கோடி) என்று அறிவித்திருந்தது பார்சிலோனா. இதில் 1.7 கோடி யூரோ சாண்டோஸ் அணிக்கும், 4 கோடி யூரோ நிய்மாரின் தந்தைக்கு சொந்தமான என்&என் நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் செலவழிக்கப்பட்ட விதத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பார்சிலோனாவின் நிர்வாகத்திற்கு எதிராக அதிருப்தியுற்ற கிளப் உறுப்பினர்களில் ஒருவரான ஜோர்டி கேசஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில்தான் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து பலியாடாக பார்சிலோனா நிர்வாகத்தின் தலைவர் ரொசெல் நீக்கப்பட்டுள்ளார். தாங்கள் முன்னர் கூறிய 5.7 கோடி யூரோ என்பது நிய்மாரை அணிமாற்றுவதற்கான தொகை மட்டும்தான் என்றும் அது போக நிய்மாரின் சேருவதற்கான ஊதியம் (signing on fee), அவரின் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்தது, ஏஜென்ட் கமிஷன் என பல பெயர்களில் மொத்தம் 8.6 கோடி யூரோ கைமாறியுள்ளதாக தற்போது ஒத்துக் கொண்டிருக்கிறது பார்சிலோனா நிர்வாகம். ஆயினும் இதில் எந்த முறைகேடும் இல்லை என சாதிக்கிறது.
ஸ்பான்சர்ஷிப்களால் இயக்கப்படும் கிளப்புகள்.
ஐரோப்பிய கால்பந்து விளையாட்டில், ஆண்டுக்கு பலகோடி டாலர் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒத்த இது போன்ற கால்பந்து கழகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கிளப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை விட இந்த கிளப்களுக்கு இடையிலான போட்டிகளுக்கு தான் அங்கு முக்கியத்துவம் அதிகம். தரகு முதலாளிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படும் நம் நாட்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கு முன்னோடி இந்த ஐரோப்பிய கால்பந்து கழகங்களின் போட்டிகள்தான்.
இந்த அணிகளின் வருமானம் பிரம்மாண்டமானவை. ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் என்ற அணியின் வருவாய் அதிகபட்சமாக 52.09 கோடி யூரோவாகவும், அடுத்தபடியாக அதே நாட்டை சேர்ந்த பார்சிலோனா வரவு 48.3 கோடி யூரோவாகவும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யூனைடட் வருமானம் 39.5 கோடி யூரோவாகவும் உள்ளன. இந்த வருமானம் பெரும்பான்மையாக ஸ்பான்சர்ஷிப்கள், (ஆர்சினல் அணி தனது ஸ்டேடியத்திற்குகூட ‘எமிரேட்ஸ்’ என ஸ்பான்சரின் பெயரை வைத்திருக்கிறது), தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை இவைகள் மூலம் பெறப்படுகின்றன. ஒரே நாட்டின் கிளப்களுக்கு இடையிலான ஸ்பானிஷ் லாலீகா (Spanish Laliga), இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளுக்கும், ஒட்டுமொத்த ஐரோப்பிய கிளப்களுக்கு இடையிலான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கும் உலகம் முழுவதும் பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்த கிளப்களுக்கு ஸ்பான்சர் செய்து தனது பிராண்டின் பெயரை இரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்க பெருநிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
ஸ்பெயின் – வேலையிழந்தவர்களின் வரிசை
இவ்வாறான விளம்பர வருவாய்க்கும், வெற்றிகளை குவித்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் புகழ்பெற்ற, திறமையான வீரர்களை தங்கள் வசம் வைத்து இருப்பது அவசியம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்குகின்றன இந்த கிளப்கள். மாட்டுச் சந்தையில் பல்லை தட்டிப் பார்த்து, துண்டை மறைத்து பேரம் பேசும் அதே முறை தான், ஆனால் இங்கு பேரம் போவதும், வாங்குவதும் மேட்டுக்குடிகள் என்பதால் வார்த்தைகளை நாகரிகமாக ‘டிரான்ஸ்பர் விண்டோ’ என்று மாற்றி நாகரிகமாக அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி துண்டை மறைத்து பேரம் பேசிய தொகையை அரசுக்கு குறைத்து கூறி வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக தான் தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறது பார்சிலோனா என்ற அணி.
இந்த பிரச்சனையில் வரிஏய்ப்பு முறைகேடு என்பதையும் தாண்டி ஒரு கேள்வி நமக்கு எழுகிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு இவ்வளவு செலவழிக்கப்படுகிறதே அப்படியானால் அந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஓடவில்லை. மக்கள் தான் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள்.
நிதிமூலதன சூதாடிகளால் சூறையாடப்பட்டு, உலக முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி திவால் நிலையில் உள்ளது ஸ்பெயின். இந்த நெருக்கடியின் விளைவாக பெருவாரியான மக்களின் வேலை பறிக்கப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில். இன்றைய தேதியில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. 2013 ஆண்டில் மட்டும் 2.6 லட்சம் மக்கள் ஸ்பெயினில் இருந்து வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் 2002 முதல் 2012 வரை வேலையில்லாதவர்களின் வீதம்.
இந்நிலையில் நிதி நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் வங்கிகளுக்கும் தனியார் தொழிற்கழகங்களுக்கும் பல கோடி டாலர்களை கொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஸ்பெயின் அரசு. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்க வேண்டுமானால் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் எனற ஐரோப்பிய வங்கியின் ஆணைக்கிணங்க செயல்படும் ஸ்பெயின் அரசை கண்டித்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஸ்பெயின் அரசின் போராட்ட தடை சட்டத்தையும் மீறி, மாட்ரிட் நகரின் மத்திய சதுக்கத்தில் மட்டும் 2012-ல் 396 போராட்டங்களும், 2013-ல் 391 போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய சதுக்கத்தில் போராட தடை விதிக்க வேண்டும் என்று மாட்ரிட் மேயர் புலம்பும் அளவுக்கு மக்கள் வீரியமாக போராடுகிறார்கள்.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் கல்வி, பொது சுகாதாரம், ஓய்வூதியம் முதலியவற்றுக்கான நிதி வெட்டி சுருக்கப்படுகின்றன. பொதுச் சேவைகளை தொடர்ந்து குறைப்பதன் மூலம் 2014-க்குள் 10,200 கோடி யூரோ மிச்சம் பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது அரசு. இதே அரசு தான் ரியல்மாட்ரிட், பார்சிலோனா, அத்தலடிக் பில்போ, ஒசாசுனா ஆகிய அணிகளுக்கு 1990 ஆண்டின் “அனைத்து ஸ்பெயின் கால்பந்து கிளப்களையும் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாக்கும்” சட்டத்திலிருந்து விலக்கு அளித்து கார்ப்பரேட் வரி மற்றும் சொத்து வரியிலிருந்து விலக்களிக்கிறது. லாபநோக்கில்லாத நிறுவனம் என்ற தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது. வெலன்சியா அணியின் கடனுக்கு அந்த மாகாண அரசு உத்திரவாதம் அளித்து பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இப்படி வரலாறு காணாத வேலையின்மையும், பசியும், போராட்டமும் நடக்கும் இந்த நாட்டில் தான் மேற்கூறிய பணக்கார கால்பந்து கழகங்களும், அதன் பல மில்லியன் மதிப்புள்ள வீரர்களும் உள்ளனர். போராடும் மக்களை திசை திருப்பவும், வெறுமனே அணி வெறியை தூண்டி விட்டு அவர்களின் உழைப்பை பணமாக அபகரிப்பதையும் தாண்டி இந்த கிளப் போட்டிகள் எதையும் சாதிக்கவில்லை. கால்பந்துக்கு பதில் கிரிக்கெட், பிரீமியர் லீக், லா லீகா வுக்கு பதில் ஐ.பி.எல் என்று மாற்றி போட்டால் இது இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும்.
2012-ல் நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது மாட்ரிடில்ஆர்ப்பாட்டம்.
இந்த வக்கிரத்தின் உச்சகட்டமாக, 54.1கோடி யூரோ கடன் வைத்திருக்கும் ரியல்மாட்ரிட் அணி, 10 கோடி யூரோ விலை கொடுத்து கரேத் பேல் என்னும் டாட்டன்ஹாம் (இங்கிலாந்து) வீரரை ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த தொகையை பேங்கியா என்ற ஸ்பெயின் தேசிய வங்கியின் துணைநிறுவனமான கஜா மாட்ரிட் வங்கி கடனாக கொடுத்துள்ளது என்றும், பேங்கியா வங்கி ஐரோப்பியன் யூனியனால் 1,800 கோடி யூரோ கொடுத்து பெயில் அவுட் செய்யப்பட்டது என்பதால் ஐரோப்பிய யூனியன் இதை விசாரிக்க்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எப்னிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே ஸ்பெயின் வங்கிகள் தான், வேலைபறிக்கப்பட்ட எளிய மக்களின் கடனுக்காக அவர்களின் உடமைகளை மட்டுமல்ல உயிர்களையும் கூட பறித்து வருகின்றன. வெலன்சியா நகரில் மாதத்திற்கு 360 யூரோ சம்பளத்தில் வாழ்ந்து வந்த 47 வயதான் இனோசென்சியா லூகா என்ற பெண்ணை, அவர் வாங்கிய கடனுக்காக வீட்டை பிடுங்கி அவரை நடுத்தெருவில் நிறுத்தியதையடுத்து அந்த வங்கி கிளைக்கே சென்று தன்னை எரித்து தற்கொலை செய்துகொண்டார். சாகும் முன் அவர் கூறிய வார்த்தை “நீங்கள் என்னிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டீர்கள்” என்பது. லூகா போன்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதும், இந்த கார்பரேட்களுக்கு கொடுக்கப்படுவதும் வேறு வேறு அல்ல. ஒரே நிகழ்ச்சி போக்கின் இரு வடிவங்கள்.
வெளிச்சத்திற்காக அடிமைகளை கம்பங்களில் கட்டி எரித்து நீரோ மன்னன் அளித்த விருந்தில் விருந்தினர்கள் திளைத்திருந்தது போல, உழைக்கும் மக்களின் வாழ்க்கையை தீப்பந்தமாக்கி நவீன நீரோக்கள் அளிக்கும் கால்பந்தாட்ட விருந்தில் ஐரோப்பிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமல்ல இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் திளைத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் நேரத்திற்கிணங்க இரவு விழித்திருந்து இந்த போட்டிகளை இரசித்துவிட்டு மறுநாள் மெஸ்ஸியா? ரொனால்டோவா? யார் சிறந்தவர் என்று பேஸ்புக்கில் ‘சண்டை’யிட்டுக்கொள்ளும் கால்பந்து இரசிகர்களே சொல்லுங்கள் நவீன நீரோ மன்னர்களின் விருந்தில் இனிமேலும் பங்கேற்கப் போகிறீர்களா?
ஆணாதிக்கம் இருட்டடிப்பு செய்த வாழ்க்கையை மீட்டெடுக்கவும், ஆண்களையும் சேர்ந்து வதைக்கும் மறுகாலனியாக்கத்தை வீழ்த்தவும் உலக மகளிர் தினம் அழைக்கிறது.
திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 08.03.2014 அன்று மாலை காந்திமார்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.
பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர்
10,000 பிரசுரம், 400 சுவரொட்டி தயாரித்து கடைவீதி, பேருந்து நிலையம், குடியிருப்பு, இன்ஸ்பெக்டர், ஏசி, டிசி, ஆணையர், பத்திரிக்கைகள் என அனைவருக்கும் செய்தி கொண்டு செல்லும் வரை உறக்கத்தில் இருந்த காந்தி மார்க்கெட் காவல்துறை இறுதி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுப்பதாகவும் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளவும் நிபந்தனைக்கு உட்பட்டு (நிபந்தனை என்பது உண்மையை தவிர மற்றவை பேசலாம் என்பதே ஆகும்) நடத்த அனுமதிப்பதாக கடிதம் கொடுத்தது. பேரணிக்கு அனுமதி மறுப்பின் காரணம் : போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது என வரிசையாக அடுக்கியது. தோழர்கள் மீண்டும் ஒரு சுற்று போராடிவிட்டு பொதுக்கூட்டம் நடத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பேரணி – பொதுக்கூட்டம் சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. தடையை மீறி பேரணி நடக்கும் என பீதியடைந்த காவல்துறை பெண் தோழர்களிடம் நல்லவர்கள் போல பேசி சமாதானம் செய்தது.
“உங்களைபற்றி தெரியும், நீங்க நல்லது தான் செய்றிங்க. நம்ம ஆய்வாளர் தங்கமான மனுசன். உங்களுக்கு உதவ முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்” என இவர்கள் பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
“என்ன சார் மேடை போட தடை , மைக்செட் போட தடை என ரொம்ப உங்க ஆளுங்க தொல்லை பண்றாங்க. இதே ஆளும் கட்சினா இப்படி பண்ணுவீங்களா?” என நமது தோழர்கள் கொஞ்சம் எகிறினர்.
“அய்யோ விவரம் தெரியாம கான்ஸ்டபில்கள் பேசி இருப்பானுக. நீங்க பாட்டு போடுங்க, யாராவது கேட்டா என்னிடம் பேச சொல்லுங்க” என்றார்.
நாம் தடையை மீறி பேரணி நடத்த மாட்டோம் என தெளிவாக புரியவைத்ததும் தான் தமது பழைய போலீஸ் மிடுக்குக்கு மாறினர்.
பொதுக்கூட்ட நிகழ்வுகள்
மாலை 6.45 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டம் இரவு 9.55 மணிக்கு முடிந்தது. இப்பொதுக்கூட்டத்தை பெ.வி.மு பொருளாளர் தோழர்.பவானி தலைமை ஏற்று நடத்தினார்.
துவாக்குடி கிளை தோழர். லெட்சுமி கந்துவட்டி கொள்ளையர்கள் பற்றியும், குடிபோதைக்கு சீரழிந்த ஆண்களால் பெண்கள், குழந்தைகள் படும் துயரத்தையும், அதிலிருந்து மீண்டெழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.
தமிழக தாலிபான்களை எதிர்த்து போராடிய தோழர். அனிஸ் பாத்திமா தமது அனுபவங்களை பேசி மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்.
மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜூ சிறப்புரையாற்றினார். தோழர். மலர்கொடி நன்றியுரை நிகழ்த்தினார். ம.க.இ.க மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி இறுதியாக நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பெருவாரியான தோழர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்ட செலவினங்களுக்காக பொதுக்கூட்டத்தில் வசூல் செய்யப்பட்டது. ஜெயாவின் பாசிச ஒடுக்குமுறையும், டாஸ்மாக் கொள்ளை பற்றியும் பேசியதை கேட்ட அ.தி.மு.க பிரமுகர் நன்கொடை அளித்தது கூட்டத்தின் முத்தாய்ப்பாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு அழைக்க : 9750374810.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள, முன்னாள் சோவியத் சோசலிச குடியரசாக இருந்து இப்போது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் உக்ரைன் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? பக்கத்து நாடான ரசியாவின் பொருளாதார மற்றும் ராணுவ செல்வாக்கின் கீழ் இருக்க வேண்டுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமா? என்பதுதான் இன்றைய உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சண்டை போடும் அரசியலின் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கேள்வி.
ஐரோப்பாவில் உக்ரைன்
கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் உக்ரைனில் பதவி இழந்த ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச்சிடமிருந்து ‘மக்கள் எழுச்சி’ மூலம் பதவி பறிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட யனுகோவிச் தெருப்போராட்டங்கள் மூலம் பதவி இறக்கப்பட்டு மறு வாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் 48% வாக்குகளை அளித்து அதே விக்டர் யனுகோவிச்சை அதிபராக தேர்ந்தெடுத்தனர் உக்ரைனிய வாக்காளர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக் காலம் 2015 வரை இருந்தாலும், அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக கலவரங்களை நடத்திய “தந்தையர் நாடு கட்சி”யின் தலைமையிலான வலது சாரி மற்றும் நியோ நாஜிக் கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றி விட அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு தெற்கு ரசியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான தயாரிப்புகள் சென்ற ஆண்டு (2013) நவம்பர் மாதம் தொடங்கின. உக்ரைனை ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துடன் சேர்க்கும் முயற்சியில் குறிப்பாக ஜெர்மனியும் மற்றொரு பக்கம் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தன.
ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி 2011-ம் ஆண்டு பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தால் உக்ரைனுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1.69 லட்சம் கோடி) இழப்பு ஏற்படும் நிலை இருந்தது. உலகின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் உக்ரைன் ஆண்டுக்கு 1 முதல் 1.5 கோடி டன் தானிய ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தின்படி 20,000 டன் தானியம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி என்று வரம்பு விதிக்கப்பட்டது, பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது 20 லட்சம் டன் என்று அதிகரிக்கப்பட்டாலும், அதன்படி உக்ரைன் தனது தானிய ஏற்றுமதிகளை 80 சதவீதம் குறைத்துக் கொண்டு மற்ற மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
பதவி நீக்கப்பட்ட விக்டர் யனுகோவிச்
மேலும், உக்ரைனின் ஏற்றுமதிகளில் 80% ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் ரசியா உள்ளிட்ட முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளுடன் நடந்து வருகிறது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால், ரஷ்ய தலைமையிலான சுங்க ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும். இரண்டு கூட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமற்றது.
இந்த சூழலில் ரசியாவுடனான உறவை ஆதரிக்கும் அதிபர் விக்டர் யனுகோவிச் கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மீண்டும் மறுத்தார். அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தமது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய, உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்களை ஆரம்பித்தன.
ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் யூதர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள். இந்த அமைப்புகளின் தொண்டர்கள் தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.
‘ஊழல் நிறைந்த, மக்கள் விரோத யனுகோவிச் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் அராஜகவாதிகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் போன்றவர்களை அனுமதிக்க முடியாது’ என்று அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்தனர். காரணம் அவர்கள் ஊழல் அரசை மட்டும் எதிர்ப்பதோடு ஐரோப்பிய, அமெரிக்க ஆதரவையும் நிராகரிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன்
மேற்கத்திய ஊடகங்கள் இவற்றுக்கு யூரோ மைதான் போராட்டங்கள் என்று பெயர் சூட்டி “ஊழல் நிறைந்த சர்வாதிகார யனுகோவிச் ஆட்சிக்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டம்” என்று தூக்கிப் பிடித்தன.
டிசம்பர் மாதம் உக்ரைன் பொருளாதாரத்துக்கு ரசியா $25 பில்லியன் நிதி உதவி அறிவித்தது. மேலும் $5 பில்லியன் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சலுகை விலையில் வழங்கவும் முன் வந்தது. ஆனால், அதிபர் யனுகோவிச்சுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக்கப்பட்டன.
போராட்டக் காரர்களுக்கு மேற்கத்திய பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். “இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது. மேலும், அந்த உரையாடல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கத்திய நாடுகளால் திட்டமிட்டு இயக்கப்படுபவை என்பதையும் உறுதி செய்தது.
பிப்ரவரி 21-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில் யனுகோவிச் அரசுக்கும் எதிர்க்கட்சி போராட்டக் காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆண்டு பிற்பகுதியில் செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அது வரை இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறும் என்றும் 2004-ல் செய்யப்பட்ட சட்ட திருத்தங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், தேர்தலை சீக்கிரமாக நடத்தவும் முன் வந்திருக்கிறார்.
ஆனால், மேற்குலக ஆதரவு கலகக்காரர்களோ பிப்ரவரி 22-ம் தேதியே ஒப்பந்தத்தை கிழித்து எறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றி விட்டனர். 1990-களில் உக்ரைனின் யுனைட்டட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலராக இருந்து பின்னர் உக்ரைனிய பெருமுதலாளியாக உருவெடுத்து, நாட்டின் பிரதமராக பதவி ஏற்று, தற்போது ஊழல் குற்றங்களுக்காக சிறையிடப்பட்டிருந்த யூலியா டைமஷென்கோவின் “தந்தை நாடு கட்சி” சார்பில் 10 அமைச்சர்களும், புதிய நாஜி, ரஷ்ய வெறுப்பு ஸ்வோபோடா கட்சி சார்பில் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு, வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறை அமைச்சர்களும் இந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.
உக்ரைன் இடைக்கால அரசுப் படைகள்
வலது தீவிர வாத அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊர்பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வெள்ளை இனவாத குழுக்கள் ஸ்வஸ்திகாவுக்கு பதிலாக பயன்படுத்தும் செல்டிக் சிலுவை, நாஜி ரகசிய போலீஸ் சின்னம் மற்றும் பிற ஹிட்லர் காலத்திய அடையாளங்களை அவர்கள் அணிந்து ரஷ்யர்களையும், யூதர்களையும் அழிப்பதற்கும், நாட்டை விட்டு துரத்துவதற்கும் பயங்கரவாத அடக்குமுறை பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உக்ரைனின் தேசிய பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாடு இந்த பயங்கரவாத அமைப்புகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப்படுகொலை செய்த, உக்ரைனிய இனவாத தலைவர் ஸ்டெபன் பணடேராவின் உருவப் படம் கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லெனின் சிலை, சோவியத் காலச் சின்னங்கள் உடைத்து எறியப்பட்டு அவை இருந்த இடத்தில் நாஜி, பாசிச சின்னங்கள் வரையப்பட்டுள்ளன.
டெட்யானா சோர்னோவோல் என்ற வலது சாரி உக்ரைனிய இனவாத கூட்டமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரசின் ஊழல் ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் மே மாதம் நடைபெறும் என்று அறிவித்திருக்கும் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசு அடுத்தடுத்து நாட்டின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. ஐ.எம்.எஃப்பிடம் $35 பில்லியன் கடன் கோரியிருக்கிறது; அமெரிக்க அரசிடமிருந்து $1 பில்லியன் உதவித் தொகையை பெறவிருக்கிறது; மேற்கத்திய நாடுகளின் இலக்குகளில் ஒன்றான உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ப்பதற்கான இணைப்பு ஒப்பந்தத்தை மார்ச் 17 அல்லது மார்ச் 21-ம் தேதி கையெழுத்திடப் போவதாக அறிவித்துள்ளது.
மேலும், 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்.
கிரீமியாவில் ஆர்ப்பாட்டம்
தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தென் கிழக்கில் உள்ள 15 லட்சம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82 சதவீதம் ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி வழங்கியதோடு ஆண்டு தோறும் பயன்பாட்டு கட்டணமும் ரசியா கட்டி வருகிறது.
சுய ஆட்சிப் பிரதேசமான கிரீமியா, உக்ரைனின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை தூக்கி எறிந்து விட்டு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை மார்ச் 30-ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தது. கிரீமியா மக்கள் படையினர் தெருக்களில் இறங்கி பலத்தை காட்டினர். ரசியா தனது வல்லரசு நலன்களையும் கிரீமியாவில் வாழும் ரஷ்ய மக்களையும் பாதுகாக்க கிரீமியாவுக்குள் ராணுவத்தை அனுப்ப முடிவு செய்தது.
ரசியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்தன. கிரீமியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவது உக்ரைனிய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்க அதிபர் விளக்கம் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கலகம் செய்வது, நாஜி இனவாத கட்சிகள் அதிகாரத்தைப் பிடிப்பது எல்லாம் ஜனநாயகமாகக் கருதும் ஒபாமா, பிரிந்து போகும் உரிமையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஜனநாயக விரோதமாக கருதுகிறார்.
ரஷ்ய அதிபர் புடினின் சமாதானமான பேச்சுக்களை ஒதுக்கித் தள்ளிய அதிபர் ஒபாமா மார்ச் 6-ம் தேதி ரசியாவுக்கு எதிராக முதல் சுற்று பொருளாதார தடைகளை விதித்தார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. அமெரிக்க ஆயுதங்கள் பால்டிக் பகுதிக்கு அனுப்பப்பட்டு, போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதியினுள் நுழைந்திருக்கின்றன. ஜூன் 3-ம் தேதி நடைபெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியம்-ரசியா உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள்தான் பாதிக்கப்படும் என்று ரசியா பதிலடி கொடுத்திருக்கிறது.
கிரீமியாவின் செவஸ்டபோலில் ரசிய கப்பல்கள்
உலகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே உடையது (சுமார் 4 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது.
7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் உலகளாவிய அளவில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர் தேக்கு திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது.
ரசியாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உக்ரைன் சோசலிச குடியரசாக உருவாகி 1920-களில் உக்ரைனில் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அனைவருக்கும் அடிப்படை சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் வேலை செய்யும் உரிமை, குடியிருக்கும் வீடு பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டன. நூற்றாண்டுகள் பழமையான ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக் கட்டப்பட்டு பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. 1930-களில் தொழில்துறை உற்பத்தி 4 மடங்காக அதிகரித்தது. விவசாய கூட்டுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது போலந்துடன் இருந்த உக்ரைனிய பகுதிகள் இணைக்கப்பட்டு வரலாற்றில் முதன்முறையாக உக்ரைன் தேசிய குடியரசு சோசலிச முறையில் உழைக்கும் மக்களுடையதாக உருவானது. பிற்போக்கு கலாச்சாரங்களை தூக்கிப் பிடிக்கும், மக்களை சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.
கீவ் நகரில் ஐரோப்பிய மற்றும் யூராசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் விக்டோரியா நியூலேண்ட்
உதாரணமாக, தற்போது இந்தியாவின் நடுத்தர ரக ராணுவ போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் உக்ரைனில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரசியாவிலிருந்து பெறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்களுக்கான எஞ்சின்களை உக்ரைன்தான் வழங்குகிறது. இங்கே தயாராகும் கப்பல்களுக்கான எஞ்சின்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இந்தியாவால் போடப்பட்டிருக்கிறது.
சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகு உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை.
அரசியலில் நிலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்களின் ஊழல் இவற்றுக்கெல்லாம் தீர்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதுதான் என்ற பிரச்சாரம் நடுத்தர வர்க்க மக்களிடையே ஓரளவு எடுபட்டது. ஆனால், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து ‘சொர்க்கத்தில்’ திளைத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின், கிரீஸ் மக்களை கேட்டால் அது எத்தகைய தீர்வு என்பதை உக்ரைன் மக்கள் புரிந்து கொள்ளலாம்.
1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் உள்ள இயற்கை மற்றும் மனித வளங்களின் மீது அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளின் லாப வேட்டை மறுக்கப்பட்டது, கம்யூனிச எதிர்ப்பு அரசியலாக உருவெடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக பனிப்போர் நடத்தப்பட்டு வந்தது. உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் கம்யூனிசம்தான் காரணம் என்று பிரச்சாரம் செய்து கொரியா முதல் தாய்வான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் வரை ஜனநாயகத்தை நசுக்கி சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளர்களை அமர்த்தி ஆதரித்துக் கொண்டிருந்தது அமெரிக்கா.
அமெரிக்க அதிபர் ஒபாமா
1990-ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு “இதுதான் வரலாற்றின் முடிவு” என்று முதலாளித்துவ அறிஞர்கள் கொக்கரித்தனர். அமைதி ஈவுத் தொகை (peace dividend) என்று மிச்சமாகப் போகும் பணத்தை என்ன செய்வது என்று கணக்கு போட்டனர்.
ஆனால், அமெரிக்கா முதலான மேற்கத்திய ஏகாதிபத்திய பொருளாதாரங்களுக்கு முழு உலகையும், முழு மக்களது உழைப்பையும் அபகரிப்பது, உயிர் வாழும் தேவையாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை மேற்கத்திய பொருளாதார, ராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
ராணுவ ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேரடி ஆக்கிரமிப்புகளையும் எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்களையும் நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
எனவே, ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடான உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேவைப்படுவதை விட நிதிமூலதன முதலாளிகளின் இலாப வேட்டைக்கும், மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் இடையிலான கடும் முரண்பாட்டில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உக்ரைன் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.
மார்ச் 9-ம் தேதி செவஸ்டபோலில் நடந்த பேரணி ஒன்றில் ரசிய ஆதரவு உக்ரைனிய ஆதரவு குழுக்களிடையே வாக்குவாதம்.
உக்ரைன் விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமான நில கைப்பற்றல்கள் நடந்து வருகின்றன. உக்ரைனின் விவசாயத் துறையில் 1,600-க்கும் மேற்பட்ட மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் கால் பதித்திருக்கின்றன.
மறுபக்கத்தில் 2000-ம் ஆண்டு ரசியாவின் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடின், ரசியாவின் வல்லரசு தகுதியை மீண்டும் அடைய முயற்சிக்கிறார். மேலும் ரசிய ஆளும் வர்க்கமும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது. அதனால்தான் புடின் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார்.
ரசிய தேசிய பெருமிதத்தை முன் வைத்து ரசியாவின் இயற்கை வளங்களை குறிப்பாக எண்ணெய் வளங்களை பயன்படுத்தி, ரஷ்ய பொருளாதாரத்தை ஓரளவு வலுப்படுத்தியிருக்கிறார் புடின். ரசிய முதலாளிகளின் சார்பில், ரசியாவின் அரசியல் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்துவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கிறது ரசிய அரசு. சிரியாவில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஆசாத் அரசுக்கு ஆதரவு அளித்தது, அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடனுக்கு புகலிடம் அளித்தது போன்ற ரசியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.
ரசியாவின் ஆளும் முதலாளிகள் தமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் செல்வாக்கு செலுத்த அமெரிக்காவுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.
இவ்வாறு மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், ரஷ்ய முதலாளிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது உக்ரைன். இருப்பினும் இதன் முதன்மைக் குற்றவாளிகள் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம்தான்.
‘கம்யூனிசம்தான் சைத்தான், சோவியத் யூனியனை வீழ்த்தி முதலாளித்துவ ஜனநாயகத்தை உலகெங்கிலும் நிலைநாட்டி விட்டோம், இனிமேல் ஒரே அமைதி அமைதி’ என்று பாட்டு பாடிய முதலாளித்துவ அறிஞர்கள், இப்போது அமெரிக்கா உலகெங்கிலும் நடத்தி வரும் பொருளாதார, ராணுவ, அரசியல் ரீதியான ஜனநாயகப் படுகொலைகளுக்கு புதுப்புது விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். போரையும், பசியையும், படுகொலைகளையும் நடத்தி வருவது முதலாளித்துவம்தான் என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.
‘கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகு, உலகில் இனி போரே இல்லை’ என்று சிலர் மனப்பால் குடித்திருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை முதலாளித்துவம் எப்போதும் வழங்கவில்லை. போர்கள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை, அவற்றின் பொருளாதார மேலாதிக்கம் இல்லை என்பதை சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகும் பார்த்து வருகிறோம். இதில் ஒற்றை ரவுடியாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வல்லரசு நலனை எதிர்த்து இப்போது ரசிய வல்லரசு களத்திற்கு வருகிறது. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களுக்கிடையே உள்ள முரண்பாடு போர்களை நிச்சயம் எழுப்பும். இனி உலகில் பனிப்போர், இல்லை, வல்லரசுகளின் பகிரங்கப் போர்தான் நடக்கும். போரைக் கொண்டு வரும் முதலாளித்துவத்தை நாம் அழிக்கும் வரை இந்த உலகை காக்க முடியாது.