privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்லயோலா ஆசியுடன் ராஜராஜனின் பாலியல் வக்கிரம் - HRPC ஆர்ப்பாட்டம் !

லயோலா ஆசியுடன் ராஜராஜனின் பாலியல் வக்கிரம் – HRPC ஆர்ப்பாட்டம் !

-

பாலியல் பொறுக்கிகள் இருக்கவேண்டிய இடம் தமிழ்த்துறை அல்ல! புழல் சிறை!

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் ஜோஸ்பின் ஜெயசாந்தி. 2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் எஸ்.ஏ. ராஜராஜன். இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறார்.

இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார் ராஜராஜன். விடுமுறை ஒப்புதல் கேட்டு போகும்போது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு முகத்தில் லெட்டரை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இந்த தொல்லைகளை பொறுக்க முடியாமல் பதவி விலகல் கடிதம் கொடுத்த ஜெயசாந்தியை அப்போதைய கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறார். ஆனால் ஜெயசாந்திக்கு அநீதி இழைத்த ராஜராஜன் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ராஜராஜனோ, ஜெயசாந்தியின் பதவி உறுதி செய்யப்படுவதை அற்ப காரணங்கள் சொல்லி தள்ளிப் போடுவது, அவரை தன் கீழ் ஆய்வு மாணவராக சேரும்படி வலியுறுத்துவது, வெளியூர் பயணங்களில் தன்னுடன் வரும்படி வற்புறுத்துவது என்று பாலியல் வக்கிர நோக்கத்துடன் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார். ஜெயசாந்தியின் இருக்கையை தனது அறைக்கு மாற்றி அங்கு வந்து உட்காரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களின் எதிரிலேயே, ஜெயசாந்தியை பாலியல் ரீதியாக திட்டுவதையும், ஆபாசமாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தமிழ் துறையின் உதவி பேராசிரியராக இருந்த பிரின்ஸ் என்பவரும் ராஜராஜனுடன் சேர்ந்து இருவருமாக ஜெயசாந்தியை அச்சுறுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து வரும் இந்த கொடுமைகளை தாங்க முடியாத ஜெயசாந்தி 13.12.2012 அன்று கல்லூரியின் பாலியல் வன்முறைக்கு எதிரான குழுவில் புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதில் கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டாத நிலையில், ஜெயசாந்தி பல முறை நினைவுபடுத்திய பிறகு ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

புகாரை விசாரித்த குழு தனது விசாரணை அறிக்கையை 23.4.2013 அன்று கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் ராஜராஜனுக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு மேற்சொன்ன ஆவண நகலை ஒப்படைக்கவில்லை. மேலும் தொடர்ந்து ஆவண நகல் ஒப்படைக்க பேராசிரியர் ஜெயசாந்தி நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானமாக போகச் சொல்லி வலியுறுத்தியது.

ஆனால் பாலியல் வன்முறை செய்த ராஜராஜனோ தொடர்ந்து கீழ்தரமான வகையில் வசை பாடுவது, பிரின்ஸ் உடன் இணைந்து புகாரை திரும்பப்பெறுமாறு கொலை மிரட்டல் விடுவது, பாலியல் புகார் விசாரணையில் சாட்சி சொன்னவர்களை அச்சுறுத்துவது என்று தனது கொடுமைகளை தொடர்ந்திருக்கிறார்.

அதனால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து கிரிமினல் புகார் வழங்கப்பட்டது. 2 மாதம் புகார் பதிவு செய்யப்படாததால் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நீதிமன்றத்தை அணுகி (Crl.O.P.No.4427|14) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டது. (6.3.2014)

மேலும் பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் (W.P.34958|13) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்த 2 வழக்குகள் மூலம் வெளிவந்த ஊடக செய்திகள் கல்லூரி நிர்வாகத்தை நெருக்கடியில் தள்ளவே, நியாயமான முடிவை எடுக்காமல் அயோக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து கடந்த 28.2.2014 அன்று பேரா.ஜெயசாந்தியை கல்லூரியை விட்டு நீக்கியது.

வேலையிடங்களில் பாலியல் தொல்லைத் தடை சட்டம் 2013-ன்படி பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் விசாகா வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டல்களும் கல்லூரி நிர்வாகத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

மேற்கூறிய சட்டத்தின்படி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிரிமினல் புகார் வழங்க உதவ வேண்டும், அனுசரணையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக கிரிமினல் பேர்வழிகளான பேராசிரியர் ராஜராஜன் மற்றும் பிரின்ஸ்-ன் கைக்கூலிகளாக லயோலா கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.

லயோலா நிர்வாகமே!

  • பாலியல் வன்முறை செய்த பேராசிரியர் ராஜராஜன் மற்றும் கொலை மிரட்டல் கொடுத்த பேராசிரியர் பிரின்ஸை உடனே பணிநீக்கம் செய
  • பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் ஜோஸ்பின் ஜெயசாந்தியை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட பணி நீக்கத்தை உடனே ரத்து செய்.

தமிழக அரசே! காவல்துறையே!

  • கிரிமினல் பேராசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்! கைது செய்து சிறையில் அடை

என்ற கோரிக்கையை முன்வைத்து பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், ‘மாமா’ பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மார்ச் 10, 2014 அன்று மாலை 4 மணிக்கு  லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

____________________

பின் குறிப்பு: சென்னையின் மேட்டுக்குடியினர் அதிகம் படிக்கும் லயோலா கல்லூரியில்தான் அதிகார வர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரது வாரிசுகளும் படிக்கின்றனர். ஒப்புக்கு இரண்டு ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு அதை ஒரு பெரிய சேவை போல காட்டி விட்டு ஆளும் வர்க்க இளவரசர்களை உருவாக்கி வருகிறது இந்தக் கல்லூரி. ஏசு சபை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் இந்தக் கல்லூரியின் ஒழுக்கம் எப்பேற்ப்பட்டது என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஒருபுறம் மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், அப்துல் கலாம் போன்றவர்கள் அடிக்கடி வந்து பேசும் கல்லூரியாக லயோலா திகழ்கிறது. மறுபுறம் தன்னார்வக் குழுக்கள், தலித் அமைப்புகள், தமிழினவாதிகள் அனைவருக்கும் இடமோ இல்லை பேசவோ வாய்ப்பு கொடுத்து கொஞ்சம் முற்போக்கு சாயலையும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் இப்பேற்ப்பட்ட ஒளிவட்டத்துடன் இருக்கும் இந்தக் கல்லூரியும் அதன் நிர்வாகமும் எப்படி ஒரு பெண்ணை அயோக்கியத்தனமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். லயோலா கல்லூரியின் கூட்டங்களில் கலந்து கொண்டோரும், பேசுபவர்களும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு குரல் கொடுப்பார்களா, இல்லை லயோலாவை பகைக்க முடியாது என அமைதி காப்பார்களா?

– வினவு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

லயோலா கல்லூரி ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம்
சென்னை கிளை
தொடர்புக்கு : 98428 12062

  1. 28 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்முறை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதை சொல்கின்றன குற்றவியல் பதிவியல் தகவல்!

    சென்னை போன்ற பெருநகரத்தில் நூற்றாண்டு பழமைமிக்க, பெருமைமிக்க கல்லூரியில் ஒரு உதவி பேராசிரியரை சில வருடங்களாக பாலியல் சீண்டலுக்கு ஒரு தமிழ்த்துறை தலைவர் உள்ளாக்கியிருக்கிறார். அதற்கு புகார் கொடுத்தால், பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    ஒரு கிராமத்தில் என்ன நிலைமை இருக்கும் என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை!

    குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும்.

  2. இவரது சொந்த பந்தங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது?சட்டம் தூங்கும் போது அதை நம் கையில் எடுத்தால் என்ன தப்பு? தனி மனிதனின் துன்பம் தனக்கு வந்ததல்ல என நினைக்கும் பலரில் ஒருவனல்ல நான்.இது தொடர்பான போராட்டங்களுக்கு எனக்கும் அழைப்பு விடுங்கள்.அறிவைப் போதித்து நாட்டை நல்வழிப்படுத்த வேண்டியவர்களே தவறுக்கு துணையாகவும்,தவறு செய்பவர்களாகவும் இருந்தால் அவர்களை சட்டம் தூக்கிலிடட்டும்.வழி காட்ட வேண்டியவர்கள் தவறு செய்தால் வழிநடப்பவர்கள் எங்கே சரியான பாதையில் செல்ல?….

  3. யாரென்றே தெரியாத ஒருவருக்காக தனது நேரத்தை ஒதுக்கி ,நியாயத்திற்காக போராடும் அன்பர்களுக்கு நன்றி

    rat race இல் ஓடும் எனது நிலையை எண்ணி பெருமூச்சுடன் …

    • யாரென்றே தெரியாதவர் அல்ல அவர் .சிறு வயதில் நாங்கள் படித்த’ இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்’ என்று படித்ததன் விளைவு அது,’யாதும் ஊரே யாவரு கேளீர்’ என்பதன் பாதிப்பு அது.

  4. கற்பொழுக்கம்,களவொழுக்கம் என கற்பிப்பவர்கள் அல்லவா இந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள்.களவொழுக்கத்தைக் கைக்கொள்ளப் பணித்திருக்கிறார்கள்.கற்றுத் தருவதை கடைபிடிக்கக் கூடாதா என்ன?கழிசடைகள்.கத்தோலிக்க கிறிஸ்தவப் பாதிரிகள் இப்போதெல்லாம் இந்த விஷயத்தில் ரொம்ப முன்னேறிவிட்டார்கள்.ராஜராஜனை கேள்விகேட்கும் யோக்யதை அவர்களில் யாருக்கும் இல்லை என்பதே உண்மையாக இருக்கும்.இவர்கள்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தவர்கள்.இப்படிப்பட்டப் பேராசிரியர்களுக்கு மக்கள் பிய்ந்த செருப்பால் பாடம் கற்பிக்கவேண்டும் வீதியில்.

  5. பாலியல் வக்கிரத்துக்கு ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. வக்கிரம் பிடித்தவர்கள் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் இருக்கிறார்கள்.இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் கிடையாது.

    ” மேற்சொன்ன சம்பவங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததவை ! வெளியே தெரியாமல், அல்லது ஊடங்கங்களுக்கு தெரிந்துவிடகூடாது என மறைக்கப்படும் பாலியல் வன்முறைகள் எத்தனையோ ! காரை சம்பவத்துக்கு பிறகு நாம் அறிந்து கொள்ள வேண்டிய பயங்கரம்… இந்தியாவின் உச்சி முதல் பாதம்வரை, தலைநகரம், மாநகரம், சிற்றூர், கிராமம் என காஸ்மோபாலிடன் கலாச்சாரம் முதல் கிராம வாழ்க்கை வரை மொழி வேற்றுமைகள் கடந்து, மாநில கலாச்சார பிரிவுகள் தாண்டி சமூகமெங்கும் புரையோட தொடங்கிவிட்ட பாலியல் வக்கிரம் ! …

    …செக்ஸ் என்ற சொல்லை தேடலாக இணையத்தில் அதிகம் உபயோகித்த நாடுகளில் நமக்கு இரண்டாம் இடம் ! முதலிடம் நம் அண்டைதேசமான இலங்கை ! இன்னொரு பெருமையான செய்தி… இணையத்தில் ஏற்றப்படும் செல்போன் மூலம் எடுக்கபட்ட ஆபாச காட்சிகளில் பெரும்பகுதி நம் தாய்த்திருநாட்டில் எடுக்கப்பட்டவை ! விட்டுக்குள்ளும், பள்ளி கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவது ஒன்றும் வெளியே பார்ப்பது வேறொன்றுமாய் பிரிந்த தெளிவற்ற சமூகத்தால் பாராளுமன்றத்தில் செல்போன் ஆபாசப்படம் பார்க்கும் எம்.பிக்களைதான் உருவாக்க முடியும் !… ”
    – பாலியல் புரிதலற்று புழுத்துப்போகும் சமூகம் கட்டிரையிலிருந்து.
    http://saamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html

    நண்பர் செங்கதிர்வேலனின் கருத்தில் பாலியல் குற்றத்தின் மீதான கோபத்தைவிட பாதிரியார்களின் மீதான வெறுப்புதான் வெளிப்படுகிறது. கழிசடைகள் நமது சாமியார்களிலும் இருக்கிறார்கள் என்பதை நண்பர் மறந்தது ஏனோ ?!!!

  6. இந்த மாதிரி பாலியல் கொடுமை பண்றவனுங்களுக்கு மயக்க மருந்து கொடுக்காம குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணி உட்ரனுங்க.அப்பாலிகா பாருங்க ஒரு பயல் பொண்ணுங்களாண்ட வாலாட்ட மாட்டான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க