Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 799

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற திமிர் பிடித்த காங்கிரசுக்காரர்களால் அவ்வப்போது தான் விமரிசிக்கப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளின் வாரிசுரிமைத் தகராறில் முச்சந்தியில் வைத்து அவரது வேட்டி இழுபடுவதைக்கூட அவர் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்கிறார். அவற்றுக்கெல்லாம் ஒரு நியாயம் இருக்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் சத்துணவு ஊழியர்கள் போன்ற சாமானியர்கள் அவரது கவுரவத்தில் குறுக்கிடும்போது, அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நெற்றிக் கண்ணைத் திறந்து பாசிச ஜெயலலிதாவின் வழியில் அடக்குமுறையை ஏவத் தொடங்கிவிட்டார்.

கனவைக் கலைத்த சாமானியர்களின் போராட்டம் !!

தமிழகத்தின் 12 இலட்சம் அரசு ஊழியர்களில் 5 லட்சம் பேர் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் மாதம் ரூ.300 முதல் ரூ.4500 வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்களில் 1.23 இலட்சம் பேர் சத்துணவு ஊழியர்கள்.  இவர்களுக்கு மைய அரசின் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்ததைவிடக் குறைவாக, ஒரு புதிய சிறப்புக் காலமுறை ஊதியத்தைக் (ரூ.3780 முதல் ரூ.4694 வரை) கண்டுபிடித்து வழங்கி வருகிறது,கருணாநிதி அரசு. அற்ப ஊதியத்துடன் பணியாற்றிவிட்டு, பணிமூப்படைந்து ஓய்வுபெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.400 முதல் ரூ.600 வரைதான் ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. ஆனால், தமிழகப் போலீசுத் துறையில் 6,7 ஆண்டுகளில் ஓய்வு கொடுக்கப்படும் மோப்ப நாய்களைப் பராமரிக்க, அதன் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது

கடந்த 25 ஆண்டுகளாக, அற்ப ஊதியத்துடன் அடுப்படியில்  பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் சி.பி.எம். கட்சியின் தலைமையிலான சங்கத்தில் கணிசமாக அணிதிரண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வேண்டும், கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பலமுறை போராடியும் அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் 30 அன்று தலைமைச் செயலகத்தை (கோட்டையை) முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். உடனே கருணாநிதிக்கு ஆத்திரம் பொங்கியது. சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஆட்சிக்கு எதிரான போராட்டமாகவும் அதனைக் கம்யூனிஸ்டுகள் தூண்டிவிடுவதாகவும் பாயத் தொடங்கினார்.

கோட்டை முற்றுகைப் போராட்டத்தையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் வேன்களிலும் சென்னைக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் 3,500க்கும் மேற்பட்டோர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு இரவோடிரவாகக்  கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைக் கெடுபிடிகளைத் தாண்டி தலைமைச் செயலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தமிழகம் முழுவதும் முன்னணியாளர்கள் ஏறத்தாழ 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை வாழ்த்தச் சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27 மாநில நிர்வாகிகள் வேலைநீக்கம் செய்யப்பட்டு, 42 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்துக்குச் சற்று முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் போராட்டமும் இதே முறையில் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு சாராயக் கடைகளில் (டாஸ்மாக்) பணியாற்றும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2100 முதல் 2800 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. பலமுறை அரசிடம் முறையிட்டும் அசைந்து கொடுக்காததால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சட்டமுறைப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. முன்னணியாளர்களைப் போராட்டத்தில் பங்கேற்கவோ அணிதிரட்டவோ விடாமல் பிடித்து வைத்துக் கொண்டும், இதர பணியாளர்களை மிரட்டி கட்டாயமாகக் கடையைத் திறக்க வைத்தும், போலீசு பாதுகாப்புடன் சரக்கு விற்பனை செய்யப்பட்டு அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.

கோட்டையை முற்றுகையிடுவது குற்றமா?

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம். அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் போர்முனைக்கு வாருங்கள் என்று தி.மு.க.வோ தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்தினாலும், அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்கிறார் கருணாநிதி.

‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி மதுரையில் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் அறவழிதானா? தி.மு.க. மூத்த தலைவரான தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டாரே, அது அமைதி வழியா? மதுரையில் தினகரன் நாளேட்டின் அலுவலகத்தில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி தாக்குதல் நடத்தி 3 ஊழியர்களைக் கொன்றொழித்ததும்கூட அறவழியா? அதனால்தான் நீதிமன்றம் அந்த ‘மகாத்மா’வை விடுதலை செய்துவிட்டதா?

பதவிப் பட்டியலைக் கையிலே வைத்துக் கொண்டு குடும்பத்தோடு டெல்லிக்குப் படையெடுத்து முற்றுகையிட்டாரே, கருணாநிதி? பணி நிரந்தரம் கேட்டுக் கோட்டையைச் சத்துணவுப் பணியாளர்கள் முற்றுகையிடுவதுதான் குற்றமா? சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் தொலைக்காட்சி, திரையரங்குகள், சினிமா தயாரிப்புக் கம்பெனிகள், சிமெண்டு – சாராயக் கம்பெனிகள், வீட்டுமனைத் தொழில், இத்தனையும் போதாதென அமைச்சர் பதவிகள் – எனத் தமிழகத்தையே கருணாநிதியின் வம்சம் முற்றுகையிட்டிருக்கிறது. சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடுவதுதான் குற்றமாம்!

நாடாளுமன்றத்தில் வாய்திறந்து பேசாத அழகிரிக்கு முழுச் சம்பளம். ஏனென்றால், அவர் முழுநேரப் பணியாளர்! நாள் முழுக்க புகை மூட்டத்தின் நடுவே அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால், இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்!

போராடினாலும் குற்றம் வாய்திறந்தாலும் குற்றம்

இத்தகைய சாமானிய மக்கள், தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் சென்னை நகரிலிருந்து விரட்டப்படுகிறார்கள்.  சிங்காரச் சென்னையை மேலும் அழகுபடுத்துவது என்ற பெயரில், கூவம் – அடையாறு கரையோரக் குடிசைகள் இடித்துத் தள்ளப்படுகின்றன.  இதை எதிர்த்து வாய் திறக்கக்கூடாதாம். ஏனென்றால், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாம்.

சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்யுமாறு மிரட்டுதல், ஆட்களைக் கடத்திப் பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து முதலான பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் – போலீசுத்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஆணையிடுகிறார், கருணாநிதி.

ஆனால், மலைகளையே மொட்டையடிக்கும் கிரானைட் குத்தகைதாரர்கள் அடிக்கும் கொள்ளையைத் தனது விரலசைவில் வைத்துப் பாகம் பிரித்துக் கொள்கிற ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரியை மதுரையிலேயே அம்பலப்படுத்திய “தினபூமி” நாளேட்டின் ஆசிரியரையும் அவரது மகனையும் கைது செய்து பொவழக்குப் போட்டு மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.

குடியாத்தம் நகரில் மேல் ஆலத்தூர் ரோடு, பாட்டை புறம்போக்கில் நூறாண்டு காலமாகக் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் என 36 குடும்பங்களின் வீடுகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆளும் கட்சி ரியல் எஸ்டேட் கும்பல் சமூக விரோதிகளுடன் வந்து சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி,  குடியிருப்பவர்களைக் கடுமையாகத் தாக்கி, அந்த இடத்தை வளைத்து வேலி போட்டுக் கொண்டுள்ளது.

இந்த அநியாயத்தை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சி.பி.எம். கட்சி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தியபோது, இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் முன்னணியாளர்களையும் தாக்கி, கைது செய்து சிறையிலடைத்துள்ளது, கருணாநிதி அரசு. சி.பி.எம். கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரான லதா, மொசைக் செல்வம் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 20 இலட்ச ரூபாய் கேட்டதாகப் பொப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கருணாநிதியின் ஆட்சியில் அநியாயத்துக்கு எதிராகப் போராடினாலும் வாய்திறந்தாலும்கூடக் குற்றம். கருணாநிதி அரசை விமர்சித்த தா.பாண்டியன், பழ.கருப்பையா வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியத்தைக் கண்டித்துப் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான இயக்குநர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வெளிவர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம்-ஒழுங்கு தன் கடமையைச் செய்யும் என்று தி.மு.க. அமைச்சர் எச்சரிக்கிறார்.

அருகதையற்ற மார்க்சிஸ்டுகளின் ஆகாத வழி

“மே.வங்கத்தில் சத்துணவுப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் இங்கே மட்டும் நிரந்தரம் செய்யக் கோருவது ஏன்? அங்கே சத்துணவு, ரேஷன் கடைகளைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, இங்கு போராட்டத்தைத் தூண்டுவது ஏன்?” என்று மார்க்சிஸ்டுகளை மடக்குகிறார் கருணாநிதி. “ஜெயலலிதாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது வாய்மூடி கிடப்பது ஏன்? சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த அருகதையில்லை என்று சாடுகிறார்.

ஓட்டுக்கும் சீட்டுக்கும் பாசிச ஜெயலலிதாவின் காலடியில் கிடப்பதாலும், தாங்கள் ஆளும் மே.வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தனியார்மய-தாராளமயமாக்கலை விசுவாசமாகச் செயல்படுத்தி வருவதாலும் கருணாநிதியின் இந்தக் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளால்  வாய்திறக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தாங்கள் போராடி வருவதாகவும், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் சி.பி.எம். கட்சி அறிக்கை விட்டு அடங்கி விட்டது. இதுதான் கருணாநிதியின் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளின் பதிலடி. கருணாநிதி உபதேசிக்கும் அறவழிக்கு மாற்றாக சி.பி.எம். வைக்கும் ஆகாத வழி இதுதான். மார்க்சிஸ்டுகளை நம்பி போராட்டத்தில் இறங்கிய சத்துணவு ஊழியர்களோ அடக்குமுறைக்கும் பழிவாங்கலுக்கும் ஆளாகி அவமானத்தால் துடிக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அடக்குமுறைகள் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், பிழைப்புவாதத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கிக் கிடப்பதால் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நடத்த முடியவில்லை. கண்டன அறிக்கைகள், அடையாள எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மேல் அவை முன்னேறுவதுமில்லை. எதிர்க்கட்சிகளின் செயலற்ற தன்மையால், ஒருபுறம் இலவசத் திட்டங்கள் மறுபுறம் அடக்குமுறை என கருணாநிதியின் குடும்ப ஆட்சி கேள்விமுறையற்று ஆதிக்கத்தை நிறுவிக் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

‘‘அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக” அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது.  இந்த நடவடிக்கைகள் மூலம், “இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத் தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்” உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது, இராக் போர் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொள்ளும் தந்திரத்தோடு, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தார்.  இப்பொழுது இந்தப் படை விலக்கத்தைக் காட்டி, அமெரிக்க மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகத்  தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், அவர்.  ஆனால், இந்தப் படைவிலக்கம் குறித்த செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, இதுவொரு மோசடி நாடகம் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்து கொள்ளலாம்.

இராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்கப் படை அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்படவில்லை.  இராக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறது.  1990-இல் அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தபொழுது, அமெரிக்கப் படைகள் குவைத் வழியாகத்தான் இராக்கிற்குள் நுழைந்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வெளியேற்றத்திற்குப் பிறகும் இராக்கில் 50,000 முதல் 70,000 துருப்புகள் வரை அடுத்த ஆண்டு வரை தங்கியிருப்பார்கள் என்றும், இத்துருப்புகள் ‘தீவிரவாதிகளை’ எதிர்த்துப் போராடுவதற்கு இராக் இராணுவத்திற்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்திருக்கிறது, அமெரிக்க அரசு.

அமெரிக்க அதிபர் வாக்களித்துள்ளபடி இத்துருப்புகள்கூட இராக் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டே விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அதனால் இராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துவிட்ட தாகக் கருதிவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க அரசால் இராக்கில் நுழைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தனியார் கூலிப் படைகள் வெளியேறுவது பற்றி ஒபாமா வாயே திறக்க மறுக்கிறார்.

இதற்கும் மேலாக, இராக் நாட்டை தனது நிரந்தர இராணுவத் தளமாக மாற்றும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  இதன்படி, இராக்கிலுள்ள பாலாத் என்ற ஊருக்கு அருகே 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும், அல்-அஸாத் என்ற ஊருக்கு அருகே 17,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும் அமைத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  இந்த இரண்டு தளங்களையும் சேர்த்து, இராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 94 இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இதுவொருபுறமிருக்க, அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகனின் திட்டப்படி, இராக்கிலிருந்து வெளியேறியுள்ள படைக்கு ஈடாக மற்றொரு படையை இராக்கில் இறக்கிவிட்டுள்ளது, அமெரிக்கா.  அரசு தந்திர நிபுணர்கள், பொருளாதார ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் என்ற போர்வையில் நுழைந்துள்ள இந்த அரசியல் படையின் கண்ணசைவிற்குத் தகுந்தபடிதான் இராக் பொம்மையாட்சி நடக்கும்.  இதற்குத் தகுந்தபடி இராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் 800-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.  இன்னும் சொல்லப்போனால், இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம்தான் அந்நாட்டில் ஆட்சி அதிகார மையமாக இருக்கும்.

அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த பிறகு, தனது மேலாதிக்க நலன்களுக்குத் தகுந்தவாறு படைபல ஒப்பந்தமொன்றை உருவாக்கியது.  இந்த ஒப்பந்தம்தான் இன்று இராக்கின் எழுதப்படாத சட்டத் தொகுப்பாக விளங்குகிறது.  இந்தச் சட்டத்தின்படி, இராக்கின் வான்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராக்கிற்கு கிடையாது.  அந்த அதிகாரம் இந்த ஒப்பந்தத்தின் வழியாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராக்கை நேரடியாக ஆக்கிரமித்த பின், அதன் எண்ணெய் வளத்தில் 60 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.  சதாம் உசேன் ஆட்சியின்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டிருந்த இராக்கின் எண்ணெய் வயல்களைத் தனியார்மயமாக்கி, அவற்றை அமெரிக்க எண்ணெய்க் கழகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது என்ற உண்மை இந்தக் கைப்பற்றல் மூலம் மீண்டும் பளிச்சென அம்பலப்பட்டிருக்கிறது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்கு அமெரிக்க முதலாளிகளுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம்தான், இராக்கின் சுதந்திரமாகவும் விடுதலையாகவும் புரட்டிக் கூறப்படுகிறது.  இராக்கில் நுழைந்துள்ள இந்த அமெரிக்க ஏகபோக எண்ணெய் கழகங்களின் சொத்துரிமையை, சுரண்டலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே, இராக்கின் அரசியல் சாசனச் சட்டமாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, இராக்கின் எண்ணெய் வயல்களுள் பெரும்பாலானவை அமைந்துள்ள குர்து இன மக்கள் வசித்து வரும் பகுதி, அதிக அதிகாரங்கள் கொண்ட மாகாணமாக உருவாக்கப்பட்டுள்ளது. சதாமை எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வந்த குர்து இன மக்களுக்கு அரசியல் உரிமைகள்     அளிப்பது இதன் நோக்கமல்ல.  மாறாக, அங்குள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் வர்த்தகச் சுதந்திரத்தில் இராக்கின் மைய அரசு தலையீடு செய்வதைத் தடுப்பதுதான் இம்மாகாண சுயாட்சியின் நோக்கம்.

இராக் மக்களுக்கு இந்த ‘சுதந்திரத்தையும் விடுதலையையும்’ வழங்குவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை ஏறத்தாழ 10 இலட்சம் இராக்கியர்களின் உயிரைப் பறித்திருக்கிறது; ஏறத்தாழ 50 இலட்சம் இராக்கியர்களை அகதிகளாக சொந்த நாட்டிலிருந்து துரத்தியடித்திருக்கிறது; ஏறத்தாழ 27 இலட்சம் இராக்கியர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியிருக்கிறது; 1,000 டன்னுக்கும் அதிகமான செறிவுகுறைந்த யுரேனியம் அணுகுண்டுகளை அந்நாட்டின் மீது வீசி, அந்நாட்டையே நஞ்சாக்கியிருக்கிறது; தனது காலனியாதிக்க நலன்களுக்காக ஷியா – சன்னி – குர்து ஆகியோருக்கிடையே பிளவைத் தூண்டிவிட்டு மோதவிடுவதன் மூலம், சமூக அமைதியையே சீர்குலைத்துவிட்டது.

சதான் உசேன் சர்வாதிகார ஆட்சி நடத்தினார் என்றால், அவரைத் தூக்கிலிட்டுவிட்டு அமெரிக்கா இராக் மீது திணித்துள்ள ‘ஜனநாயக’ ஆட்சியோ பேராசை பிடித்த ஊழல் பேர்வழிகளின், சொந்த நாட்டையே கொள்ளையடிக்கும் மோசடிப் பேர்வழிகளின் கூடாரமாக இருப்பதை முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தி வருகின்றன.

2,500 ஆண்டு கால பழமை வாய்ந்த மெசபடோமியா நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களுள் பெரும்பகுதி, அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த மறுநிமிடமே களவு போய்விட்டன.  மீதி அமெரிக்கா மற்றும் நேடோ நாட்டுப் படைகளின் தாக்குதல்களால் குப்பை மேடாகிவிட்டன.  பாபிலோனில் உள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடமொன்றை அழித்துவிட்டு, அங்கே தனது இராணுவ தளத்தைக் கட்டியமைத்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.  சிதைவடைந்து வரலாற்றுச் சின்னமாக இருக்கும் இடம்  அழிக்கப்பட்டு, அங்கே அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.  வரலாற்றுப் புகழ்வாய்ந்த வழிபாட்டுத் தலத்தை அழித்து, அதனிடத்தில் பதுங்கு குழிகளை அமைத்திருக்கிறது, போலந்து நாட்டுப் படை.  பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறியைவிடக் கேடானது, குரூரமானது, காலனியாதிக்கவாதிகளின் இந்த வெள்ளையின வெறி.

***

அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ள தேசியப் பாதுகாப்பு போர்த் தந்திரத் திட்டத்தின்படிதான் இராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி இன்று குவைத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறதேயொழிய,  அதற்கு அப்பால் இதில் இராக் மக்களின் நலனோ, அமெரிக்க மக்களின் நலனோ அடங்கியிருக்கவில்லை.

மேற்காசியாவில் இராக்கிற்கு அடுத்து இரானிலும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற திட்டத்தோடு அலையும் அமெரிக்கா, உலக மக்களிடம் தனது நோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரான் மீது அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறது.

சமீபத்தில், இரானுக்கு எந்த நாடும் பெட்ரோல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்கக் கூடாதென்றும், இரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களை எந்தவொரு நாடும் கடலில் வழிமறித்துச் சோதனை செய்யலாம் என்றும் ஐ.நா. மூலம் கட்டளையிட்டுள்ளது, அமெரிக்கா. இரான் இதற்குப் பதிலடியாக, தனது கப்பல்கள் வழிமறித்துச் சோதனை செய்யப்பட்டால், ஹெர்மோஸ் ஜலசந்தி வழியாக மேற்குலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் தனது போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி இரானை அச்சமூட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது, அமெரிக்கா.

ஆப்கானில் நடந்துவரும் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றி பெறமுடியாது என்ற உண்மையை ஆப்கானில் அமெரிக்கப் படைத் தளபதியாக இருந்த ஸ்டான்லி ஏ.மெக்கிறிஸ்டல் சமீபத்தில் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார்.  இதனால் அவரை ஆப்கானில் இருந்து தூக்கியடித்து இவ்வுண்மையை மூடிமறைக்க முயன்றார், ஒபாமா.  எனினும், இவ்வுண்மை இப்பொழுது வேறொரு வழியில் அம்பலமாகிவிட்டது.

அமெரிக்கா இராணுவத்தால் ஆப்கான் போர் பற்றி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 76,000 ஆவணங்களை  விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் சமீபத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியது.  அந்த ஆவணங்களில் ஆப்கானில் அமெரிக்காவும் அதனின் கூட்டாளியான நேட்டோவும் நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் மட்டுமின்றி, ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்துவரும் போர் அந்நாட்டு மக்களின் ஆதரவோடு நடந்துவரும் உண்மையும் பதிவாகியிருக்கிறது.

இரான் மற்றும் சீனாவைக் கண்காணிப்பதற்கும், மத்திய ஆசியப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அந்நாடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைச் சுரண்டுவதற்கும் ஆப்கானில் ஒரு அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உள்ளது.  இதனால் ஆப்கான் போரில் எப்படியாவது  வெற்றி பெற்றுவிட வேண்டும் என வெறியோடு அலையும் ஒபாமா, இப்பொழுது அங்கு புதிய செயல் உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளார்.  இதன்படி, ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நேடோ துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது; தேசிய சமரசத் திட்டம் என்ற பெயரில் தாலிபானின் ஒரு பிரிவோடு சமரசம் செய்துகொண்டு ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அமெரிக்கா.

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி குவைத்திற்கு இடம் பெயர்ந்திருப்பதை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும்.  ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் இராணுவ உத்திதானே தவிர, இது படை விலக்கல் அல்ல.

எனினும், ஒபாமா தன்னைச் சமாதானத் தூதுவனாகக் காட்டிக் கொள்ளும் சாக்கில், இராக் போர் தவறானது என்றும் கூறி வருகிறார்.  இப்போர் தவறானது என்றால், இப்போருக்குக் காரணமான ஜார்ஜ் புஷ், டோனி பிளேர், ரம்ஸ்ஃபீல்டு உள்ளிட்ட அனைவரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.  நாஜிக் குற்றவாளிகளைத் தண்டிக்க நூரம்பர்க் விசாரணை மன்றம் நிறுவப்பட்டதைப் போல இராக் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச விசாரணை மன்றம் ஏற்படுத்த ஒபாமா முன் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒபாமாவோ இதற்கு மாறாக, இராக்கை தனது மறுகாலனியாகத் தொடருவதற்கான – எந்த நோக்கத்திற்காக இராக் ஆக்கிரமிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்கான கட்டுமானத்தை உருவாக்குவதில்தான் அக்கறை காட்டுகிறார்.  இது அக்கருப்பின அதிபரின் கபடதனத்தைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

52
ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!
அம்பானியின் ஆன்டிலியா

“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று வாய்ப்பாடு படித்து கூட்டலையும், கழித்தலையும், அதன் சுருக்கங்களான பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு. சொத்துடைமையின் நதி மூலத்தை பின் தொடர்ந்தால் கண்ணுக்கு தெரியும் அந்த மாய மாட்ரிக்ஸ் உலகத்தை எந்த கணித வல்லுனனும் கட்டவிழ்க்க முடியாது. அது கணிதத்தின் தோல்வியா, கணிதத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்காத ‘கலையா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும்தான் மக்கள் வருவார்கள். மற்ற கணக்கெடுப்புகளெல்லாம் பங்குகளின் முதல்வோரைகளைத்தான் சுற்றி வரும். கணிதத்தில் கூட வர்க்க வேறுபாடு துல்லியமாக நிலவுகிறது என்பது கணிதத்தின் குற்றமா, கணக்கு பார்க்க தெரியாத இந்த தேசத்தின் குற்றமா?

எங்கும் இறைந்து கிடக்கின்றன புள்ளிவிவரங்கள். நோய், சாவு, பசி, பஞ்சம், பட்டினி முதலான விவரங்களால் சலித்திருக்கும் உங்கள் கண்களை கனவோடு மின்ன வைக்கும் புள்ளிவிவரங்களும் இந்த உலகில் உண்டு. கனவிலும் எட்ட முடியாத அந்த கனவுகளின் கணக்குகளை வெளியிடுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கேள்விப் பட்டிருப்பீர்களே, உலகின் பணக்காரர்களது பட்டியல்களை….

ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்திருக்கும் மதிப்பீட்டின்படி 2014ஆம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா? அவர் முகேஷ் அம்பானி என்ற இந்தியன்தான் என்றால் உங்களுக்கு பெருமை இல்லையா? 70,000 கோடி ஊழல் பணமென்றாலும் காமன்வெல்த்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தபோது நீங்கள் பெருமைப்படவில்லையா என்ன? தகுதி, தராதரம் பார்த்தெல்லாம் நாம் பெருமைப்படுவதில்லை எனும் போது உலக பணக்கார வரிசையில் முதலிடம் ஒரு இந்தியனால் நிரப்பப்படப் போகிறது என்றால் சாதரணமா என்ன?

அந்த வரலாற்று சிறப்பைப் பெறப் போகும் முகேஷ் அம்பானி தன் தகுதியை முன் ஊகித்திருப்பாரோ தெரியவில்லை. இல்லையென்றால் அவரது தகுதிக்கேற்ப இத்தகைய பிரம்மாண்டமான மாளிகையை ஏழு ஆண்டுகளாக கட்டியிருக்க மாட்டார். 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அந்த மாளிகை விற்பனைக்கு இல்லை என்பதால் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீடு என்று அதை புகழ முடியவில்லை என்று வருத்தப்படுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால் மதிப்பெல்லாம் விற்பனையின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்காது என்பது அந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல அம்பானிக்கும் தெரியும்.

சில ஆயிரங்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் மராட்டிய விவசாயிகள் வாழும் விதர்பாவின் தலைநகரான மும்பையில் ஒரு பில்லியன் டாலர் செலவில் அம்பானி கட்டிமுடித்து புதுமனைப் போகும் அந்த மாளிகையின் அருமை பெருமையெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

27 மாடிகள், 9 உயருந்துகள், மாளிகையை பராமரிக்க 600 ஊழியர்கள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள், நீச்சல் குளங்கள், கண்ணாடிகளால் செதுக்கப்பட்ட உணவகம், அதி நுட்பமான திரையரங்கம், உடற்பயிற்சியகம், 160 கார்கள் நிறுத்துமிடம், கார்களை பழுதுபார்க்குமிடம், சிறு மருத்துவமனை, விருந்தினர் அறைகள், கருத்தரங்க அறைகள் கிட்டத்தட்ட அங்கு ஒரு மேட்டுக்குடி ஹைடெக் நகரமே இருக்கிறது. இந்த மாளிகையில் மூன்று குழந்தைகளோடு அம்பானி தம்பதியினர் தங்கப்போகும் இடத்தின் பரப்பளவு 5,00,000 சதுர அடிகள்….

தாராவி
மும்பையின் சேரி - தாராவி

பத்துக்குப் பத்து இடத்தில் பத்து ஏணிக் கட்டில்களை வைத்து பொந்துகளைப் போல பதுங்கி வழியும் சேரிகளின் நகரத்தில் அரபிக் கடலைப் பார்த்தவாறு எக்காளத்துடன் எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. உலகின் முதல் பணக்காரர் தங்கப் போகும் அந்த மாளிகையை பல்லாயிரம் தொழிலாளிகள் ஏழு ஆண்டுகளாக கட்டி இல்லை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு ஆஸ்திரேலியா நிறுவனமும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்த பெருமை மிகு இந்தியனது மாளிகையை கட்டி முடித்திருக்கின்றன.

அக்டோபர் 28 இல் திறக்கபட உள்ள இந்த மாளிகையின் பால் காய்ச்சும் நிகழ்விற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருகிறாராம். மத்திய அரசின் பட்ஜெட்டே ரிலையன்சின் அலுவலகத்தில் திருத்தப்பட்டு வெளிவரும் காலத்தில் பிரதமர் ரிலையன்சின் உரிமையாளர் வீட்டு திருவிழாவிற்கு வருவது பொருத்தமானதுதான். மத்திய அரசு கிராமத்து மக்களுக்கு வீடு கட்டிக்க கொடுக்கும் திட்டத்தின்படி வீடு ஒன்றுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அறுபதாயிரம் மட்டும்தான். இதேதொகை அம்பானி வீட்டில் எச்சில் துப்பும் ஒரு கிண்ணத்தின் விலையருகே கூட வராது. விருந்தினர்களில் பிரதமரே இருப்பதால் மற்றவர்களை இங்கே நாம் பட்டியலிட வேண்டியதில்லை.

நடுத்தர வர்க்கத்தின் கனவில் முதலிடம் பிடிப்பது வீடுதான். அந்தக் கனவிற்காக படும் ‘துன்பங்களை, தியாகங்களை’ பாலுமகேந்திராவின் “வீடு” திரைப்படத்தில் கண்டு உருகாதவர் எவருண்டு? இல்லை “காணி நிலம் வேண்டும், பராசக்தி” என்று பாரதியின் படிமங்களில் மூழ்காதவர் யார்? குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஒரு வீட்டைக்கட்டி முடித்துவிடுவதிலேயே வாழ்க்கை கழிந்துவிடுமென்றாலும் அந்த இன்பமான துன்பத்தை நடுத்தர வர்க்கம் விரும்பித்தான் செய்கிறது.

அந்த நடுத்தர வர்க்கம் பிறந்த நாளுக்கு விழா வைத்து கொண்டாடும் இந்த நாட்டில்தான், இதே நாட்டில்தான் பிறந்த தேதி கூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?

ஆனாலும் அம்பானியின் மாளிகை சாதாரண நடுத்தரவர்க்க கனவின் வெளிப்பாடு அல்ல. அது பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை பறைசாற்றும் ஒரு பிரகடனம். எனினும் அந்த மாளிகைக்கு அம்பானி வைத்த பெயர் ஆன்டிலியா. பொருள் என்ன? அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு மர்மமான தீவின் பெயராம் அது. பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. அதாவது அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.

இந்திய முதலாளிகளிலேயே ஏமாற்று, மோசடி, அதிகார பலம், அரசியல் துஷ்பிரயோகம் அனைத்திலும் சாதனை படைத்து தனது பேரரசைக் கட்டியவர் செத்துப் போன அம்பானி. அவர் சேர்த்த சொத்து அனைத்தும் மொள்ளமாரி, முடிச்சவிக்கி வழியில் வந்ததுதான். அம்பானி வளர்ந்த கதையில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க முடியாது. ஆக அந்த வரலாற்றுக்கு உகந்த விதத்தில்தான் இந்த மர்ம மாளிகைக்கு ஆன்டிலியா பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.

விரைவில் ஆன்டிலியா மாளிகையின் அருமை பெருமைகள் குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியடலாம். ஊடகங்கள் அதன் சிறப்புகளை வியந்தோதி வரும் நாட்களில் பொழிப்புரை செய்திகளை தரலாம்.

ஆன்டிலியா உருவான விதம் குறித்த புள்ளி விவரங்கள் தினசரிகளை நிரப்பலாம். ஆனாலும் ஆன்டிலியாவின் பின்னே தூக்கில் தொங்கிய விவசாயிகளின் புள்ளிவிவரங்களும் இருக்கத்தான் செய்கின்றது. மதிப்பு பெறும் புள்ளிவிவரம் எதுவென்று சொரணை வரும்போது ஆன்டிலியாவின் மதிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.  அதுவரை புள்ளிவிவரங்கள் ஆபாசமாக ஆட்டம் போடும். இரசிப்பீர்களா, காறி உமிழ்வீர்களா?

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?

திருப்பூர் உண்ணாவிரதம்
பருத்தி நூலிழை விலையேற்றத்தை எதிர்த்து உண்ணாவிரதம். படம் thehindu.com

இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின்  (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

பருத்தி விலை உயர்வின் விளைவாக நூல் விலையும் உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வைக் காரணம் காட்டி நூற்பாலை முதலாளிகள், நூலின் விலையை மேலும் கூட்டி விற்பதால் ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த வரைமுறையற்ற விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கைத்தறி நெசவாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும்  உண்ணாவிரதப் போராட்டங்களையும், தொழில்நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், தென்னிந்திய ஜவுளி ஆலைச் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முதலான பெரும் ஆலை அதிபர்களின் சங்கங்கள், பஞ்சு விலையைக் குறைக்கும் பொருட்டு பஞ்சு ஏற்றுமதிக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கை மனுவை அப்படியே நகல் எடுத்து அதன் கீழே கையொப்பமிட்டு, செப்.23 அன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கருணாநிதி.

பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.

இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பருத்தி (பஞ்சு) உற்பத்தி 295 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 170 கிலோ). இதில் இந்திய மில்களின் தேவை 270 இலட்சம் பேல்கள். இதில் தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் தேவை மட்டும் 100 இலட்சம் பேல்கள். உள்நாட்டு மில்களின் தேவைக்கு அதிகமாகப் பஞ்சு உற்பத்தியாகியிருக்கிறது என்ற போதிலும் பஞ்சின் விலை உயர்ந்து விட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறும், ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் மீது ஒரு கேன்டிக்கு 10,000 ரூபாய் சுங்கத்தீர்வை விதிக்குமாறும் கோருகிறார்கள், இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள்.

சந்தைதான் விலையை முடிவு செய்யும் என்றும், பருத்தி விலை குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள், இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும் சூதாடிகள்.

“பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் விவசாயிகளைச் சென்றடையவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் இப்போதே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கம் முதல் பருத்தி ஏற்றுமதியின் மீது இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்  என்று சூதாடிகளைச் சாடுகிறார், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தலைவர், ஏ.சக்திவேல்.

எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான்.  ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.

இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.

சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் ஜவுளிக்கான உள்நாட்டுச் சந்தை விரிவடைந்திருப்பது,  டாலருக்கு எதிராக சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற பல காரணிகளால் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இந்திய ஜவுளித்துறை தற்போதைய மதிப்பான 3.27 லட்சம் கோடியிலிருந்து 2020-இல் 10.32 லட்சம் கோடிகளாக உயரும் என்றும் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இந்தக் கொள்ளை இலாபத்தை அறுவடை செய்வதற்குப் போதுமான பருத்தி குறைந்த விலையில் தங்களுக்குத் தேவைப்படுவதைத்தான், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ‘உள்நாட்டுத் தேவை’ என்று சித்தரிக்கின்றன.

நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.

தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள்.  பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

குமரன்-பத்மநாபன்-ஜெகத்-கஸ்பர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும் உதவியதாகவும், அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இது குறித்துப் பேசி ஒரு திட்டம் தயாரித்ததாகவும், இதை ஏற்கக் கூடாது என்று புலிகளிடம் வலியுறுத்தி வைகோவும் நெடுமாறனும் இதற்குத் தடையாக இருந்ததால்தான் போர் நிறுத்தம் வராமல் போனது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு நல்ல பெயராகி தேர்தலில் சாதகமான நிலையைத் தோற்றுவித்துவிடும் என்று கருதி புலிகளின் முடிவை வைகோ மாற்றியதாகவும், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க முடியும் என்று வைகோ புலிகளிடம் கூறியதாகவும் கே.பி. குறிப்பிடுகிறார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரும் 2009 ஜனவரி இறுதியில் இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான் என்கிறார். இந்திய அரசின் சார்பில், புலிகளின் தலைவரான பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய – பிரபாகரனின் சார்பில் பேசும் தகுதியுடைய நடேசனோடு தொடர்பு கோரப்பட்டதாகவும், ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் (Intention to Lay Down Arms) மட்டுமே அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனை என்றும் அவர் கூறுகிறார். இதை புலித் தலைமையிடம் தெரிவித்த கஸ்பாரிடமே, நீங்களே ஒரு மாதிரி வரைவு (draft) தயாரித்து டில்லிக்காரர்களுக்குச் சம்மதமா என்று கேட்டுச் சொல்லுமாறு புலித் தலைமை கூறியதாம். அதன்படி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்படி கஸ்பார் ஒரு வரைவு தயாரித்தாராம். இந்த வரைவினை இருதரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, புது டில்லி உயர் அதிகாரி ஒருவரோடு நடேசன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாராம். பின்னர் அது முறிந்துவிட்டதாம். போர் நிறுத்தத்திற்கான அந்த வாய்ப்பு ஏன் தவறவிடப்பட்டது என்ற காரணத்தை நடேசன் சொல்லவில்லை என்கிறார் கஸ்பார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுற்ற பிறகு, களத்தில் நின்ற பலருடன் விவாதித்த போது கஸ்பாருக்குப் பல உண்மைகள் தெரிய வந்ததாம். ” காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் தங்கள் கூட்டணிதான் வெல்லப் போகிறது, கொந்தளிக்கும் தமிழக மக்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றெல்லாம் புலிகளை எச்சரித்து, “ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியிருக்க வேண்டிய ஒரு வாழ்வா-சாவா கட்டத்தில் தங்கள் அரசியல் கணக்கு வட்டத்திற்குள் போராட்டத்தை வளைத்து, போராட்டத்தின் கட்டளைக் கட்டமைப்பு (Command Structure) அழிக்கப்பட காரணமாக இருந்துள்ளார்கள்” என்று வைகோவையும் நெடுமாறனையும் குற்றம் சாட்டுகிறார், கஸ்பார்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்குப் பல்வேறு உதவிகளும் செய்து போரை வழிநடத்திய இந்தியா, போர் நிறுத்த முயற்சி செய்ததாகக் கூறுவதை நம்பத்தான் முடியுமா? இது பற்றி இந்திய அரசோ, ராஜபக்சே அரசோ வாய்திறக்காத நிலையில், இந்திய உளவுத்துறைக்கு அப்பாற்பட்டு கே.பி.யும் கஸ்பாரும் போர்நிறுத்தத் திட்டத்தைத் தயாரித்ததாகக் கூறும் கோமாளித்தனத்தை ஏற்கத்தான் முடியுமா?

மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தியபோதிலும், தமிழகத்தில் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதிலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது, போர் நிறுத்தத்தைக் கோரவும் முடியாது என்றுதான் இந்திய ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அதேசமயம், இந்திய இராணுவ மற்றும் இந்திய உளவுப்படையான “ரா” வின் அதிகாரிகள் முள்ளிவாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி தனது உண்ணாவிரத நாடகத்தின் விளைவாக போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று கருணாநிதி ஆரவாரம் செய்தார். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், இது போர் நிறுத்தம் அல்ல என்று இலங்கை அரசு அழுத்தம் திருத்தமாக அறிவித்தது.  அதுவும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும்வரைதான் நீடித்தது. அதன் பிறகு, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி முழுவீச்சில் இறுதித் தாக்குதலை சிங்கள பாசிச அரசு கட்டவிழ்த்துவிட்டு உலகின் மிகக் கொடியதொரு இனப்படுகொலையை அரங்கேற்றியது.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியோ பிரதமர் மன்மோகன் சிங்கோ போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேச மறுத்துவிட்ட நிலையில், இவற்றுக்குத் தொடர்பே இல்லாத நிதியமைச்சரான ப.சிதம்பரம் வழிகாட்டுதலில் போர் நிறுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக கஸ்பார் கூறுவது அண்டப்புளுகு அன்றி வேறன்ன? கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப இந்தப் பொயைச் சொல்வதன் மூலம் காங்கிரசு மற்றும் கருணாநிதி மீது ஈழ மற்றும் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் வெறுப்பையும் திசைதிருப்புவதே இந்த கீழ்த்தரமான முயற்சியின் நோக்கம். இந்திய அரசு போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுவதன் மூலம், கருணாநிதியைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு தயாராக இருந்ததைப் போலவும், புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துச் சரணடைந்திருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தவிர்த்திருக்க இயலும் என்பதைப் போலவும் ஒரு புதுக்கதையைக் கிளப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்த்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

வைகோ, நெடுமாறன், சீமான் முதலானோர் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டியவர்கள்தான். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, சீனாவின் கூட்டாளியான ராஜபக்சே கும்பலை நம்பி ஏமாறக் கூடாது என்று உபதேசித்து இந்திய அரசை இன்னமும் தாஜா செய்பவர்கள்தான். இருப்பினும், இனப் படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட கொலைகார ராஜபக்சே கும்பலைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும், ஈழப் படுகொலைக்கு இந்தியாவும் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போர் நிறுத்தக் கதை அவிழ்த்து விடப்படுகிறது. இந்தக் கதையை இன்று இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் பட்சத்தில் அதை நம்புவதற்கு ஆளிருக்காது. அதன் பொருட்டுத்தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யை ஊடகங்களின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இப்படி ஒரு பொய்யை உலகுக்குச் சொல்ல வைத்திருக்கிறது, இலங்கை அரசு.

ஈழப்போரின் போதே சிங்கள பாசிச அரசுக்கு ஆதரவாகத் தமிழக ஊடகவியலாளர்களை விலைபேசி இலங்கை அரசின் மீது நல்லெண்ணத்தைப் பரப்பும் வேலையை அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றிய அம்சா மூலமாக ராஜபக்சே கும்பல் நடத்தி வந்தது. போருக்குப் பின்னர் “இந்து” நாளேட்டின் ஆசிரியரான ராம் மற்றும் பிறரைக் கொண்டு நிவாரணப் பணிகள் சிறப்பாக நடப்பதாகக் காட்டி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சிகள் நடந்தன. பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும், சினிமா நடிகர்களின் சுற்றுப்பயணமும் அரங்கேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரியில் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்ததுவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இது, இந்திய-இலங்கை அரசுகள் இணைந்து தொடுக்கத் தொடங்கியிருக்கும் உளவியல் யுத்தம். இந்திய மேலாதிக்கத்தால் கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம், இத்தகைய வதந்திகளைப் பரப்புவதற்குத் தோதான பலவகையான சக்திகளை ஈழத் தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்திருக்கிறது. இவர்களின் மூலம் துயரத்தில் வீழ்ந்திருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பி, அவர்களை அரசியல் ரீதியாகவும் சரணடைய வைப்பதே ராஜபக்சே அரசின் நோக்கம்.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!

32

கம்ப்யூட்டரில் அச்சடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தையே மைக் பார்க் (Mike Park) என்னும் கொரிய நாட்டைச் சேர்ந்த அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் காகிதத்தையே பார்த்தான். அதிலுள்ள வாசகங்களையே திரும்பத் திரும்ப படித்தான். ஆச்சர்யமும், வெறுமையும், அவமானமும் கலந்த உணர்ச்சி அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் ஆயுளில் ஒருமுறை, ஒரேயொரு முறை கூட இதுபோன்ற காகிதத்தில் அவன் கையெழுத்து போட்டதில்லை. வேலைநீக்க உத்தரவு, சம்பள வெட்டு ஆகிய ஆணைகளில் மட்டுமே இதுவரை கையெழுத்திட்டவன், முதல்முறையாக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து கையெழுத்து போட்டிருக்கிறான்.

அடுத்து வரும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில் தான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நினைக்கும்போதே மைக் பார்க்குக்கு  ஜுரம் கண்டது.

‘ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்’ என்று இதுவரை அவன் கேள்விப்பட்டதுமில்லை. நிர்வாகவியல் தொடர்பாக அவன் படித்த பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற ஒரு பாடம் எப்போதேனும் நடத்தப்பட்டதா? மூளையை கசக்கிப் பார்த்தான். விடை கிடைக்கவேயில்லை.

அதுமட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இதுபோன்ற எழுச்சிமிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் நடந்ததாகவோ அவை வெற்றி பெற்றதாகவோ அவன் அறிந்ததேயில்லை. அதுபோன்ற எந்த சம்பவமும் அவன் பார்வைக்குக் கூட வந்ததில்லை. மறுகாலனியாதிக்கத்துக்காக நெகிழ்த்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை இப்படி ஒன்றிணைந்து தொழிலாளர்கள் அனைவரும் முறியடித்து விட்டார்களே என உள்ளுக்குள் குமுறினான்.

அலுப்பும், சோர்வும் ஒருசேர அவனை ஆட்கொண்டது.

தான் கையெழுத்திட்ட காகிதத்தை பார்த்துவிட்டு தொழிற்சாலையின் வெளியே தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்வார்கள் என்று கற்பனை செய்துப் பார்க்க முயன்றான். நிரந்தர தொழிலாளர்களை கட்டிப் பிடித்தபடி ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்குவார்களா? வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு ஆராவாரத்துடன் திரும்புவார்களா?

இருக்கும். இப்படியான காட்சிகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெருமூச்சு விட்டான்.

இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விதான் அவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு நெருக்கியது. முழி பிதுங்கியபோதும் விடையேதும் அவனுக்கு கிடைக்கவில்லை.

____________________________________

1969ம் ஆண்டு கொரியாவில் தொடங்கப்பட்ட ‘அனில் டியூப்’ (Hanil Tube) நிறுவனத்தை ஒருவகையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலையின் சகோதர நிறுவனம் என்று சொல்லலாம். ஹுண்டாய் மோட்டார் வாகனத்துக்கு பயன்படும் பெட்ரோல் – டீசல் டியூப், டிஸ்க் பிரேக் லைனில் வரும் மிகச் சிறிய துளை கொண்ட பைப்கள் ஆகிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதுதான் இந்த நிறுவனத்தின் பணி.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘பண்டி பைப் இந்தியா’ என்ற பெயரில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்கார்ட் தொழிற்பேட்டை வளாகத்தில், 2007ம் ஆண்டு முதல் ‘அனில் டியூப்’ என்ற புதிய பெயருடன் ஹுண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்க ஆரம்பித்தது.

இந்த தொழிற்சாலையின் டைரக்டராக பதவியேற்று கொரியாவிலிருந்து விமானம் மூலம் வந்து இறங்கியவன்தான் மைக் பார்க்.

‘பண்டி பைப் இந்தியா’ நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாளர்கள் என அனைத்து பிரிவு தொழிலாளர்களும் அப்படியே ‘அனில் டியூப்’ நிறுவனத்தின் தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். அவர்களது முந்தைய அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டதன் மூலம், ‘புதிய தொழிற்சாலையில்’ பணிபுரிவதை தொழிலாளர்கள் ஏற்கும்படி ‘அனில் டியூப்’  பார்த்துக் கொண்டது. டைரக்டர், மேனேஜிங் டைரக்டர், ஜெனரல் மேனேஜர் என குறிப்பிட்ட சில பதவிகளை மட்டும் கொரிய நாட்டவர்கள் ஆக்கிரமிக்க, எஞ்சிய மேலாளர் பதவிகள் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையில் 25 நிரந்தர பணியாளர்களும், 40 பயிற்சியாளர்களும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் மாதம் ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம். மற்றவர்களுக்கு குறைவுதான். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் சம்பளம் வெறும் ரூபாய் 4 ஆயிரம்தான்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், லோடிங், அன்லோடிங், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசாங்கத்திடம் சொல்லிவிட்டு அவர்களை நேரடியாக உற்பத்தியில் ‘அனில் டியூப்’ ஈடுபடுத்தி வருவதுதான். அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

அதுபோலவே முதல் ஷிப்டில் பணிக்கு வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி உண்டு. பயிற்சியாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகை கிடையாது. மதிய உணவிலும் தொழிலாளர்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிலாளர்களால் குரல் கொடுக்க முடியாது. காரணம், சங்கம் வைக்க நிர்வாகம் தடை செய்திருக்கிறது. ஆறு பேர் கொண்ட ‘ஒர்க்கிங் கமிட்டி’யிலும் இருப்பவர்கள், கருங்காலிகள்; நிர்வாகத்தின் கைக் கூலிகள்.

200க்கும் அதிகமான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், மூன்று ஒப்பந்ததாரரின் கீழ் வருகிறார்கள். ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழும், கீவனூர், காட்ராம்பாக்கம், பென்னாலூர் தண்டலம் ஆகிய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கிஷோர் என்ற ஒப்பந்ததாரரின் கீழும் வருகிறார்கள். இவர்களில் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்ட பெண் தொழிலாளர்கள். எஞ்சியிருக்கும் விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வட மாநிலத்தை, குறிப்பாக ஓரிசா, பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் மட்டுமல்ல, அவர்கள் நேரடியாக தொழிற்சாலை நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இல்லை என்பதற்கும், தொழிற்சங்கம் கட்டாமல் இருப்பதற்கும் இந்த ஒப்பந்ததாரர் முறை உதவுகிறது. இன்று இந்தியாவின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இதுதான் நடைமுறை.

____________________________________________________

இந்நிலையில்தான் 2009ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை அம்பத்தூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே தோழர்கள் ஆவடி – அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு தொழிலாளரின் வீட்டுக்கும் சென்று தோழர்கள் பேசினார்கள். மாநாட்டின் அவசியம் குறித்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்கள்.

இந்த வகையில் ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ‘அனில் டியூப்’ நிறுவனத்தில் பணிபுரிந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாள தொழிலாளர்களின் இல்லங்களுக்கும் பிரச்சாரம் சென்றது. குறித்த நாளில் மாநாடு நடந்து முடிந்தது. ஆனால், ‘அனில் டியூப்’ நிறுவன தொழிலாளர்கள் மாநாட்டுக்கு வரவில்லை.

இடையில் தொழிற்சங்கம் அமைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டு பிரபலமான ஓட்டுக் கட்சிகளது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் அணுகினார்கள். சொல்லி வைத்தது போல் அனைத்து சங்கங்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் கட்ட முடியாது. 25 நிரந்தர தொழிலாளர்களுக்காக சங்கம் உருவாக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.

நிரந்தர தொழிலாளிகளிடம் சங்கம் கட்டினால் சட்டபூர்வ பாதுகாப்பு உண்டு என்பதால் அவர்களிடம் தொழிற்சங்கம் கட்டி, தரகர் வேலை பார்த்து, சந்தாக்கள் வசூலித்து மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா தொழிற்சாலைகளிலும் நிரந்தரத் தொழிலாளிகள் சிறுபான்மையினராகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையினராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை காயடிப்பதற்காக இந்த அணுகுமுறை எல்லா நாடுகளிலும் முதலாளிகளால் பின்பற்றப்படுகின்றது.

இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கும் பலர், தங்கள் ஒப்பந்ததாரரை அணுகி பணி நிரந்தரம் செய்யும்படி கோரினார்கள். ஒப்பந்ததாரர்கள் அவர்களை கடுமையாக திட்டி, ‘இருக்கற வேலையை காப்பாத்திக்கப் பாருங்கடா’ என விரட்டியடித்திருக்கிறார்கள். சரி, நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம் என்று சென்றார்கள். அங்கு அவர்களுக்கு ‘எதுக்குடா பணி நிரந்தரம்? அதுதான் ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றாங்கல… கலைஞர் காப்பீடு திட்டம் மூலமா மருத்துவம் பார்த்துக்கறீங்கல… இலவச கலர் டிவி கிடைக்குதுல… இதுக்கு மேல என்னடா வேணும்…’ என்று பதில்தான் கிடைத்தது.

அனைத்து கதவுகளும் இப்படி மூடப்பட்ட நிலையில்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நினைவுக்கு வந்தது.

அன்றைய தினம் பணி முடித்து வீடு திரும்பியவர்கள், ஒன்பது மாதங்களாக தாங்கள் பாதுகாத்து வந்த பிரசுரத்தை எடுத்தார்கள். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார்கள். குறிப்பிட்ட இடத்தில் அவர்களை தோழர்கள் சந்தித்தார்கள். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்கள். உடனடியாக சங்கம் ஆரம்பித்தால் பெரிய அளவில் பணி இழப்பு ஏற்படும். அதை தொழிலாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், தோழர்களை தொடர்பு கொண்ட நிரந்தர தொழிலாளர்கள், தங்களுக்காக மட்டும் பேசவில்லை. பயிற்சியாளர் – ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோருக்காகவும் பேசினார்கள் என்பதுதான்.

சட்டரீதியான தோழர்களின் ஆலோசனைகள், நிர்வாகத்துடன் மோதும் போக்கில் பெரிய அளவு வெற்றி பெற்றது. இதனையடுத்து பு.ஜ.தொ.மு மீது அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறந்தது.

_______________________________________________

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயிற்சியாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருந்து நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி Tamilnadu Industrial Establishments (Conferment & Permanent Status to workmen) Act, 1981ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தொடர்ந்து அவர்கள் 45 நாட்கள் உற்பத்தியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ரகசியமாக, நிர்வாகம் கவனிக்காதபடி திரட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

இந்த ஆதாரங்களை காஞ்சிபுர மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் சமர்பித்ததுடன் வழக்கும் தொடரப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நிர்வாகம், முன்னணியாக இந்த விஷயத்தில் செயல்பட்ட 5 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. இவர்கள் அனைவருமே 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இப்படி வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று நிர்வாகத்துக்கும், தொழிலாளர் ஆய்வாளருக்கும் கடிதம் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. அத்துடன் ‘வழக்கு தொடர்ந்தவர்கள் யாருமே கையெழுத்திடவில்லை… அவர்கள் சார்பாக யாரோ போலியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள்’ என வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஆலோசனைகளை தொழிற்சாலை ஆய்வாளர் நிர்வாகத்திடம் வழங்கினார்.

இதையெல்லாம் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ந்துப் போனார்கள். நிர்வாகமும், ஒப்பந்ததாரமும், அரசு அதிகாரிகளும் இப்படி கைக் கோர்த்து கள்ளக் கூட்டணியில் ஈடுபடுவார்கள் என தோழர்கள் சொன்னதை நேரடியாக பார்த்த அவர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றார்கள்.

இந்நிலையில் பணி நிரந்தர வழக்கு செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் நேரடியாக விசாரணையில் கலந்துக் கொண்டு பேசினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகமும், தொழிலாளர் ஆணையரும் திகைத்தார்கள். வழக்கை தள்ளி வைத்தார்கள்.

இப்போது நிர்வாகம் நிச்சயம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பது தெளிவாயிற்று. அதற்கு தகுந்தாற்போல இரண்டு பயிற்சியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போதே, பாதி ஷிப்டில், பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட சில ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் இதேபோல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை தொழிலாளர்களும் புரிந்துக் கொண்டார்கள்.

அக்டோபர் மாதம் பிறந்தது. ‘இதோ இன்று… இல்லை இல்லை நாளை…’ என ஒவ்வொரு நாளும் நெருப்பின் மீது அமர்வது போல் தொழிலாளர்களுக்கு அமைந்தது. இப்படியான உளவியல் போராட்டங்களுடனேயே ஆறு நாட்கள் கழிந்தது. அக்டோபர் 7ம் தேதி அதிகாலை –

ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவடி – அம்பத்தூர் பிக்கப் பாயிண்டிலிருந்து முதல் ஷிப்டுக்காக பேருந்தில் ஏறினார்கள். பூந்தமல்லியை தாண்டியதும் அப்பேருந்தை காரில் வந்த ஓய்.சின்னையா, வழிமறித்து நிறுத்தினான். பேருந்தில் ஏறியவன், குறிப்பிட்ட 7 ஒப்பந்தத் தொழிலாளர்களை இறங்குமாறு கட்டளையிட்டான். ‘பணி நிரந்தரமாடா கேட்குது? இன்னிலேந்து உங்களுக்கு வேலையே கிடையாதுடா…’ என கொக்கரித்தான். இத்தகைய கைக்கூலி வேலைக்குத்தான் ஒப்பந்ததாரர்கள் முதலாளிகளிடம் சன்மானம் பெறுகிறார்கள்.

இந்தச் செய்கையால் அதிர்ந்துப் போன நிரந்தர தொழிலாளர்கள், உடனே கைப்பேசி வழியே தோழர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அன்றைய தினம் காலை 11 மணிக்கு தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. சரியான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இரண்டாவது ஷிப்டுக்கு வரும் சில ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் கிடைத்தது. இதை தடுக்க ஒரே வழி உள்ளிருப்பு போராட்டம்தான் என முடிவு செய்து, தொழிலாளர்களுக்கு தகவல் அனுப்பிய கையோடு இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்துக்கு தோழர்கள் வந்தார்கள். ‘அனில் டியூப்’ தொழிற்சாலையின் வாசலில், கேட்டுக்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும் நின்று கொண்டார்கள்.

முதல் ஷிப்ட் முடிந்து, இரண்டாவது ஷிப்ட் தொடங்கும்நேரத்தில் 18 தொழிலாளர்களை எதனால் நீக்கினார்கள் என அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து நிர்வாகத்திடம் கேட்பது. உரிய பதில் கிடைக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தொழிலாளர்கள், தோழர்களது வழிகாட்டுதலுடன் முடிவு செய்தார்கள்.

அதன்படியே அக்டோபர் 7 அன்று மதியம் 3 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் நிர்வாகத்தை அணுகி கேட்டார்கள். எதிர்பார்த்தது போலவே சரியாக பதில் சொல்லாமல் நிர்வாகம் அவர்களை அலட்சியப்படுத்தியது.

உடனே மதியம் 3.30 மணிக்கு நிரந்தர தொழிலாளர்களும், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மொத்தம் 100 தொழிலாளர்கள். முதல் ஷிப்ட் முடிந்து வெளியேறுபவர்களை தடுத்தும், இரண்டாவது ஷிப்டுக்கு வரும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதிக்காமலும் வழிமறித்து அமர்ந்து போராட ஆரம்பித்தார்கள்.

hanil tube - அனில்-டியூப்-முதலாளிகளை-வீழ்த்திய-தொழிலாளர்கள்

இவர்களால் என்ன செய்ய முடியும் என நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்த கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளார்களை அடுத்து சந்தித்தார்கள். ‘இந்தப் போராட்டத்தை நாங்கள் எங்களுக்காக நடத்தவில்லை. உங்களுக்காகத்தான் நடத்துகிறோம். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க வேண்டுமென்றுத்தான் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்கள்.

ஆண் ஒப்பந்தத் தொழிலாளார்கள் கூடிப் பேசி முடிவு எடுப்பதற்குள் –

கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் யோசிக்காமல் வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.இதைப் பார்த்த ஆண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தைரியம் பிறந்தது. அவர்களும் வந்து கலந்துக் கொண்டார்கள்.

‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறப்படும் பெண்ணினத்தை சேர்ந்த அந்த தொழிலாளிகள் கேட்ட மாத்திரத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வேலை நிறுத்தத்தில் உடன் கலந்து கொண்டார்கள். பெண் தொழிலாளர்களின் அந்த உறுதி சற்றே ஊசலாட்டத்தில் இருந்த சில ஆண் தொழிலாளிகளை திருத்தியிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரிந்தவர்கள், விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேசினார்கள். நிலமையை புரிய வைத்தார்கள். இதனையடுத்து அவர்களும் வந்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.

இப்போது நிர்வாகத்தினரையும், 6 கருங்காலிகளையும் தவிர வேறு யாருமே தொழிற்சாலைக்குள் இல்லை. இப்படியொரு மாற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத நிர்வாகம், உள்ளூர் காவலர்களையும், ஊராட்சி மன்றத் தலைவரையும் அழைத்தது.

இப்படி அழைப்பார்கள் என முன்பே  தோழர்கள் தொழிலாளார்களிடம் சொல்லியிருந்தார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தொழிலாளர்கள் – அவர்களில்  சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் – தங்கள் கைப்பேசி வழியே தலைவரை தொடர்பு கொண்டு, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆரம்பத்தில் கைப்பேசியில் நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவர், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களின் உறுதியை புரிந்துக் கொண்டு, இதற்கு மேல், தான் ஏதாவது பேசினால் அவர்களிடமிருந்து அம்பலப்பட்டு விடுவோம் என்பதை புரிந்துக் கொண்டார். எனவே தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்.

இந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களை நிர்வாகம் அழைத்தது. காவல்துறை வாகனத்தில் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பார்வையில், முதலில் தொழிற்சாலைக்கு வெளியே, சிப்காட் வளாகத்தில், நின்றிருந்த பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் தெரிந்தார்கள். காவல்துறையினரின் துணையுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.

ஆனால், ‘தொழிற்சாலைக்கு வெளியில்தான் நாங்கள் நிற்கிறோம். எந்தவிதமான அசம்பாவிதத்திலும் ஈடுபடவில்லை. போராட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. ஒரு முடிவு தெரியும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்’  என அழுத்தம்திருத்தமாக தோழர்கள் சொன்னதையடுத்து போராடும் நிரந்தர தொழிலாளார்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்.

முதலில் அவர்களை தனியாக அழைத்தார். ஆனால், ‘அப்படிச் சென்றால் நீங்களும் விலைபோய்விடுவீர்கள்; போராட்டமும் பிசுபிசுத்துவிடும்’ என அனைத்துத் தொழிலாளார்கள் முன்பும் பேச வேண்டியதை பேசும்படி நிரந்தர தொழிலாளர்கள் கோரினார்கள்.

‘கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். வேண்டிய சலுகைகள் கிடைக்கின்றன. எதற்காக மற்றவர்களுக்காக போராடுகிறீர்கள்’ என சப் இன்ஸ்பெக்டர் நைச்சியமாக பேசியதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பயிற்சியாளர்களோ, ஒப்பந்தத் தொழிலாளர்களோ அவர்களும் எங்களைப் போன்று உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறவர்கள்தான். எனவே அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். எங்களைப் போலவே அவர்களுக்கும் சம்பள உயர்வும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என உறுதியாக நின்றார்கள்.

வேறு வழியின்றி தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டு சப் இன்ஸ்பெக்டரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சென்றார்கள்.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. நிர்வாகம் நேரடியாக பேச்சு வார்த்தைக்கு வரவேயில்லை. அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவும் இல்லை.

இரவு மணி 8. மதிய உணவுக்குப் பின், தொழிலாளர்கள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களுக்கு எந்த சாப்பாட்டையும், ஒரு கோப்பை தேநீரையும் நிர்வாகம் வழங்கவில்லை.

செய்தி கேள்விப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களின் நண்பர்கள் தொழிற்சாலைக்கு வந்தார்கள். அவர்களிடம் தோழர்கள், அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும், அவர்கள் நீண்ட நேரமாக எதுவும் சாப்பிடாமல் இருப்பது குறித்தும் சொல்லிவிட்டு, இரவு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள்.

மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டவர்கள், அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். உள்ளூர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அடுப்பை பற்ற வைத்தார்கள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான இரவு உணவு, அடுத்த ஒரு மணிநேரத்தில் வந்து இறங்கியது.

ஆனால், அந்த சாப்பாட்டை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செக்யூரிட்டிகளைக் கொண்டு தடுத்ததுடன், கோபம் தலைக்கேற காஞ்சிபுர மாவட்ட டிஎஸ்பியை தொடர்புக் கொண்டது.

நள்ளிரவு 11 மணிக்கு தனது பரிவாரங்களுடன் வந்திறங்கிய டிஎஸ்பி, வழக்கம் போல்  அடித்து விரட்டுவதில் ஆர்வம் காட்டினார். ‘பசியுடன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்த உணவுப் பொட்டலங்கள் இதோ இருக்கின்றன. நிர்வாகம், இதை அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. எந்தத் தொழிலாளியாவது மயக்கம் போட்டு விழுந்தால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு’ என்று  தோழர்கள் அழுத்தமாக சொன்னார்கள்.

விபரீதத்தை புரிந்துக் கொண்ட டிஎஸ்பி, நிர்வாகத்துடன் பேசுவதற்காக உள்ளே சென்றார். அதற்குள் உணவுப் பொட்டலங்கள் தொழிலாளார்கள் மூலம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

நிர்வாகத்துடன் பேசிவிட்டு வந்த டிஎஸ்பி, முன்னணியில் இருக்கும் 6 தொழிலாளர்களை கைது செய்யப் போவதாக அறிவித்தார். என்ன செய்வதென்று தொழிலாளர்கள் கேட்க ‘இது சட்ட ஒழுங்கு பிரச்னையில்லை. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நடக்கும் பிரச்னை. எனவே கைது செய்ய காவல்துறைக்கு உரிமையில்லை. அப்படியே கைது செய்வதாக இருந்தால், அனைத்து தொழிலாளர்களும் கைதாகும்படி’ வழிகாட்டப்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத டிஎஸ்பி, பின்வாங்கினார். அத்துடன் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் தொழிலாளர்களையாவது கட்டாயம் வீட்டுக்கு செல்லும்படி கெஞ்சினார். ஆனால், பெண் தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்தனர். போராட்டத்தின் முடிவு தெரியும் வரை, நகர மாட்டோம் என உறுதியுடன் நின்றார்கள்.

இருப்பினும் பெண் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்வதுதான் சரி என்றும், மறுநாள் காலையில் வந்து அவர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்று பெண் தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

அடுத்ததாக தோழர்களிடம் வந்த டிஎஸ்பி, ‘இரவு முழுக்க நீங்கள் இங்கே இருந்தால் எனக்குத்தான் பிரச்னை. தயவுசெய்து கலைந்துச் செல்லுங்கள். இந்த சிப்காட் வளாகம் தனியாருக்கு சொந்தமானது. அவர்களுக்கெல்லாம் நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்’ என மன்றாடினார். ‘போராட்டத்தின் முடிவு தெரியாமல் நகர மாட்டோம். போராடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. அவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை’ என தெளிவாக சொல்லிவிட்டு தோழர்கள் நகர மறுத்தார்கள். வேறு வழியின்றி டிஎஸ்பி தன் பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார்.

இதன் பிறகும் நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அத்துடன் இரவு முழுக்க கருங்காலிகளும், உள்ளூர் மேலாளர்களும் வெளியே வந்து அடிக்கடி பார்த்துவிட்டும், தொழிலாளர்களை நோக்கி ‘சவுண்டு’ விட்டுவிட்டும் சென்றனர். கொரிய நாட்டைச் சேர்ந்த  மைக் பார்க் உட்பட எந்த டைரக்டரும் வெளியே வரவில்லை. தங்கள் இருப்பிடத்துக்கும் அவர்கள் செல்லவில்லை.

அக்டோபர் 7ம் தேதி இரவு முழுக்க அனைத்துத் தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் உறுதியுடன் நின்றார்கள். மறுநாள் பொழுதுவிடிந்தது. முதல் ஷிப்டுக்கான வேலை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அமர்ந்திருந்த இடத்தை விட்டு எந்தத் தொழிலாளியும் எழுந்திருக்கவில்லை.

வேனில் வந்த ஆண் – பெண் தொழிலாளார்களும் வாகனத்தை விட்டு இறங்கவில்லை.

உடனே, ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரியும் யூடிஎஸ் என்ற உள்ளூர் ஒப்பந்தத்தாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ‘அனில் டியூப்’ நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்களை வைத்து உற்பத்தியை தொடங்க ‘அனில் டியூப்’ நிறுவனம் திட்டமிட்டது. தொழிலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளை நிறுத்தும் வழக்கமான தந்திரம்தான்.

ஆனால், இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. வந்தவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்காததுடன், யூடிஎஸ் ஒப்பந்ததாரரை சந்தித்து, ‘நாளையே உங்களுக்கு கீழ் இயங்கும் தொழிலாளர்கள் போராடும்போது அவர்களுக்கு பதிலாக எங்களை ஹுண்டாயில் வேலை செய்ய இறக்கினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?’ என்று தொழிலாளிகள் கேட்டார்கள். போராட்டத்தின் நியாயத்தை யூடிஎஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணர்ந்தார்கள். அவர்களும் வேலை செய்ய மறுத்தார்கள். மீண்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.

இதற்குப் பிறகுதான் மைக் பார்க், தனது அறையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு பின்னால் வந்த உள்ளூர் மேலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம். காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘லத்தி சார்ஜ்’ நடத்தலாம் என ஆலோசனை வழங்கினார்கள்.

ஆனால், இதற்கு மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தனது பதவிக்கு ஆபத்து என்பதை புரிந்துக் கொண்ட மைக் பார்க், தொழிலாளர்களிடம் வந்து, ‘உங்களுக்கு என்ன பிரச்னை? உங்கள் கோரிக்கை என்ன?’ என்று கேட்டான்.

முந்தைய நாள் மதியம் முதல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்போது வந்து ‘என்ன கோரிக்கை?’ என்று கேட்கிறான்!

அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளை உரத்து சொன்னார்கள். ‘எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். போய் வேலையைப் பாருங்கள்’ என்றான். வாய்மொழி உத்தரவு வேண்டாம். முறைப்படி எழுதிக் கொடுங்கள் என தொழிலாளிகள் ஆணையிட்டார்கள்.

உள்ளே சென்று தன் ஆட்களுடன் பேசினான். பிறகு வெளியே வந்து தொழிலாளர்களிடம் பேசினான். இப்படியாக இந்த ‘உள்ளே வெளியே’ விளையாட்டு ஐந்தாறு முறை தொடர்ந்த பிறகு எழுத்துப் பூர்வமாக தர சம்மதித்தான்.

இப்போது கூட தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய அவனது ஈகோ தடுத்தது. எனவே கையெழுத்திட்ட அறிக்கையை நோட்டீஸ் போர்டில் ஓட்ட சம்மதித்தான்.

போராடிய தொழிலாளர்கள் 3 கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

1. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான ஊழிய உயர்வும், சலுகைகளும் நிரந்தர தொழிலாளர்களுக்கு தருவது போலவே வழங்க வேண்டும்.

2. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஓய்.சின்னையா என்ற ஒப்பந்தத்தாரரின் கீழ் வரும் 18 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும்.

3. உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது.

இந்த கோரிக்கைகளில் 2 மற்றும் 3 ஐ ஏற்க நிர்வாகம் சம்மதித்தது. முதல் கோரிக்கையை மட்டும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்கள்.

தொழிலாளர்கள் இதற்கு சம்மதித்தார்கள். முதலில் மைக் பார்க் எழுதிய நகலில் உரிய திருத்தங்களை செய்து தொழிலாளர்கள் கொடுத்தார்கள். அதை நிர்வாகம் ஏற்றது.

தோழர்கள் செய்த திருத்தங்களை, வார்த்தைகளை மைக் பார்க் அப்படியே ஏற்றான். கூடவே இரண்டு ஷிப்டுகளில் நடக்காத உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.

இதனையடுத்து தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெற்றி பெற்றது.

மைக் பார்க் கையெழுத்திட்ட காகிதம் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு அதன் நகல் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

__________________________________________________

அட்டைப் பூச்சியைப் போல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறியும் மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால், வர்க்க உணர்வுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் சாம்ராஜ்ஜியங்களில் தொழிற்சங்கம் கட்டுவது என்பது எளிதான விஷயமல்ல. விரல்விட்டு எண்ணக் கூடிய தொழிலாளர்களை மட்டும் நிரந்தரமாக்கிவிட்டு மற்றவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்தால் தொழிலாளர்கள் பிளவுபடுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளார்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.

‘அனில் டியூப்’ தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், இது தப்புக் கணக்கு என காட்டியிருக்கிறார்கள். நிரந்தரமோ, பயிற்சியாளனோ, ஒப்பந்தமோ அனைவருமே தொழிலாளர்கள்தான் என்பதை தங்கள் வர்க்க ஒற்றுமை மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களது போராட்டம் வெற்றி பெற்றிருப்பது ஒர் ஆரம்பம்தான். ஸ்ரீபெரும்புத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதிக்கு இடையிலுள்ள எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இத்தகைய அடக்குமுறை சூழலில்தான் பணிபுரிகிறார்கள். ஃபாக்ஸ்கான் ஆலையில் சி.ஐ.டி.யு உதவியுடன் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இனி அப்படி நடக்காது என்பதை இருங்காட்டுக் கோட்டையில் முளைத்த இந்தச் செடி உணர்த்தியிருக்கிறது.

புஜதொமு வழிகாட்டுதலில் போராடிய ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த வெற்றி, வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் வெற்றிக்கான ஆரம்பம் இது.

வெள்ளேந்தியாக எல்லா அடிமைத்தனங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த அந்த தொழிலாளிகள் இந்த போராட்ட அனுபவத்தோடு தங்களது வர்க்க ஆயுதங்களை கண்டுபடித்திருக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் முன் கொரியா முதலாளி என்ன, அமெரிக்க முதலாளியும் கூட பெரியவிசயமில்லைதான்.

தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!

________________________________

–    வினவு செய்தியாளர், சென்னை
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

பிரான்ஸ் போராட்டம்

ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும்  220-க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்களை  நடத்தியுள்ளனர்.

” அடிப்படை ஊதியத்தை அதிகப்படுத்து! தொழிலாளிகளை அதிரடியாக வேலையிலிருந்து தூக்கியெறியாதே! இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடு! முதியோர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை முழுமையாகக் கொடு!” என்பதுதான் போராடும் மக்களின் கோரிக்கை. அரசின் விசுவாச போலீசு -இராணுவ – அதிகாரிகளைத் தவிர, நாட்டில் எவரும் அதிபர் சர்கோசியின் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஏறத்தாழ 80 சதவீத மக்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசின் ‘சீர்திருத்த’ சதித் திட்டங்களை எதிர்க்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை எடுத்து நிதியாதிக்கச் சூதாட்டக் கும்பல்களுக்கு  வாரியிறைத்து விட்டதால், ஓய்வூதிய நிறுவனங்கள் அனைத்தும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளன. பிரெஞ்சு அரசோ ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி செலவாகிறது என்று கூறி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 60-லிருந்து 62-ஆக நீட்டிக்கும் கொள்கையை அறிவித்து ஓய்வூதியத்தையே செல்லாக் காசாக்கத் துடிக்கிறது. பிரான்ஸ் மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதேபோல ஓய்வூதியம் பெறும் வரம்பை 65 முதல் 67 வயதுவரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

போராடும் தொழிலாளர்களோ இந்தச் சதிகளையும் பசப்பல்களையும் ஏற்கத் தயாராக இல்லை. ஓய்வூதியத் தொகையைச் சுருட்டும் நிதியாதிக்கக் கும்பல்களிடமிருந்து அதனைப் பறித்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல இடங்களில் தொழிலாளிகள் பேரணி நடத்தியுள்ளனர். ஓய்வூதியப் பிரச்சினைதான் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், இது மொத்தப் பிரச்சினையின் ஒரு அம்சம்தான். சமூக அநீதிக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக, அதாவது மூலதனத்தின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகவே இந்தப் போர் வெடித்துள்ளது.

நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள முதலாளிகளைக் காப்பாற்ற, நாட்டின் உழைக்கும் மக்களைக் காவு கொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக செப்டம்பர் 23-ஆம் தேதியன்று மீண்டுமொரு நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. செப்.21 முதல் செக் நாட்டிலும், செப்.29 முதல் ஸ்பெயின் நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தால் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தொடரும் இப்போராட்டங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

கறிக்கோழி-பிராய்லர்-சிக்கன்-கோழிப்-பண்ணை

Suguna-poultry-chicken

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

1980-களின் நடுவில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுப்படுத்தின. அரசின் கோழிக் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக்  குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை கொண்ட சிறிய பண்ணைகளை உருவாக்கி, தமிழகத்தில் பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் முதலான பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமிருந்து கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கிக்கொண்டனர். இதே காலத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டாப்கோ-TAPCO) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது.

ஆனால் 1990-களில் தனியார்மய-தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்ட பிறகு, அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை என உலகவங்கி உருட்டி மிரட்டத் தொடங்கியதும், உலக வங்கியின் கட்டளைப்படி, நிதி ஒதுக்கீட்டை அரசு நிறுத்தியதால் விவசாயிகளுக்குத் தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. அரசு திட்டமிட்டே, அரசு நிறுவனங்களை ஒழித்தது. இலட்சக்கணக்கில் எந்திர சாதனங்களுக்குச் செலவாகும் என்பதால், கறிக்கோழி குஞ்சுகளை விவசாயிகளால் உற்பத்தி செய்யவும் முடியாது. இதன் விளைவாக, தனியார் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி வியாபாரத்தில் ஈடுபட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கோழிக்குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை விவசாயிகள் முற்றாகச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. மேலும், விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட இயலாத நிலைமையையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.

கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில், ஒப்பந்த விவசாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக் குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோசனைகளையும் கொடுக்கும். கோழிக் குஞ்சு வளர்ப்பிற்கான கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியைக் (உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 முதல் அதிகபட்சமாக 2.50 வரை) கொடுத்துவிட்டு கோழிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தொடக்க காலத்தில் 500, 1000 கோழிகளை வளர்க்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அடுத்ததாக, குறைந்த பட்சமாக 5000 கறிக்கோழிகள் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டும், நிறுவனத்தினர் சொல்லும் விதத்தில் கொட்டகை அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டும் பல லட்சங்கள் முதலீடு செய்ய வாய்ப்பில்லாத சிறு விவசாயிகளை வெளியேற்றின. இன்னொருபக்கம் கறிக் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் வியாபாரிகளுக்குப் பல சலுகைகள் கொடுத்து தன் பிடியில் கொண்டு வந்து ஏகபோகத்தை நிறுவியுள்ளன.

கறிக்கோழி-பிராய்லர்-சிக்கன்-கோழிப்-பண்ணை

மேலும் இந்நிறுவனங்கள், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி (Broiler Co-ordination Committee -BCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழியின் விலையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிவிக்கும் கறிக்கோழிக்கான பண்ணை விலை என்பது விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலை அல்ல; விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கமிட்டி அறிவிக்கும் பண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டுதான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் நுகர்வோருக்கான கறிக்கோழி விலையைத் தீர்மானிக்கின்றனர்.

இப்படிச் செயல்படும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்றுதான், சுகுணா. இது, கோயம்புத்துரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று இந்நிறுவனம் 11 மாநிலங்களில் 8,000 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகளிடம் கறிகோழி ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நேரடியான சில்லறை விற்பனை இறைச்சிக் கடைகளை (சுகுணா டெய்லி ஃபிரஷ்) திறந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் வாரம் ஒன்றுக்கு 80 லட்சம் கறிக்கோழிகளைச் சந்தைக்குக் கொண்டு வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 3200 கோடி ரூபாய்களாகும். ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.,

கோழி உட்கொள்ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40-45 நாட்களுக்குள் 2 கிலோ ஏறினால் அதிகபட்சமாக ரூ 5.00 (கிலோவுக்கு 2.50 ரூ என்ற வீதத்தில் ) கூலியா கொடுக்கப்படுகிறது. ஆனால், கறிக்கோழியின் எடை அதிகரிக்க ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6.00 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.

பொதுவாக கறிக்கோழி உற்பத்தியில் குஞ்சுகளின் தரம், தீவனத்தின் தன்மை மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவைகளே கோழியின் வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கின்றன. இவையனைத்தும் சுகுணா போன்ற ஒப்பந்த விவசாய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயிகளின் கட்டுப்பாட்டில் வெறும் கோழிக் கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களது உழைப்பு மட்டுமே இருக்கிறது. கறிக்கோழி உற்பத்தியில் ஒரு நாள் வயது உள்ள தரமான கோழிக்குஞ்சு 50 கிராம் இருந்தால்தான் சீக்கிரம் எடை கூடும். ஆனால் 38 கிராம் எடை கொண்ட சுகுணா நிறுவனத்தின் குஞ்சுகள் தரமற்றவை. சுகுணா நிறுவனத்தின் தீவனத்தின் தரத்தைப் பொருத்த வரையில், இடுபொருட்களின் விலைக்கு ஏற்பவும், கறியின் விலைக்கு ஏற்பவும் தரம் மாறுபடுகிறது. உதாரணமாக, பறவைக் காச்சல் நோய் பரவி கோழிக்கறி விலை சரிந்தபோது, கோழிகளுக்கு தரம் தாழ்ந்த தீவனத்தை கொடுத்து தன் நட்டத்தை சுகுணா நிறுவனம் குறைத்துக் கொண்டது. கோழிகள் தீவனத்தை தின்றும்கூட எடை ஏறவில்லை. இதன் ஊடாக ஒட்டு மொத்த நட்டத்தையும் விவசாயிகளின் தலையில் அந்நிறுவனம் சுமத்தியது. வேறு காரணங்களால் சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களில், கோழிகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்வதன் மூலமாக இந்நிறுவனம் நட்டத்தை விவசாயிகளின் பக்கம் தள்ளுகிறது.

இன்னொரு பக்கம், சந்தை ஏறுமுகமா இருக்கும் காலகட்டத்தைக் கணக்கில் கொண்டுதான் அதற்கேற்ப இந்நிறுவனம் விவசாயிகளுக்குக் கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறது. குறிப்பாக, கறிக்கோழி வியாபாரம் இறங்குமுகமாக உள்ள புரட்டாசி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் இந்நிறுவனத்தால் கோழி உற்பத்தி திட்டமிட்டு நிறுத்தப்படுகிறது. 5000 கோழிகளுக்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொட்டகையைக் கடன் வாங்கி உருவாக்கிய விவசாயிகள், இப்படி பல மாதங்கள் கோழிகள் இல்லாமலே வெறுமனே கொட்டகை கிடப்பதால் பெருத்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். நட்டம் முழுவதும் விவசாயிக்கு; இலாபம் முழுவதும் சுகுணாவுக்கு. இந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்காமல் இருக்க வெற்று பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி விவசாயிகளை இந்நிறுவனம் அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது. இப்படி விவசாயிகள் நட்டப்பட்டு கறிக்கோழிகளை வளர்த்து சந்தைக்கு வருவதுதான் “சுகுணா சிக்கன்’’! விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி உருவானதுதான் சுகுணாவின் “இளசான, மிருதுவான, தரமான சிக்கன்’’!

நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்த விவசாயிகள், வளர்ப்பு கூலியா உயிருள்ள கறிக்கோழியின் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு குறைந்த பட்சமாக 3.50 ரூபாயும், 50 கிராம் எடை கொண்ட குஞ்சு, தரமான தீவனம், மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் முழுமையாக கொட்டகையைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகக் கறிக்கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கவேண்டும் எனவும்; வெற்றுப் பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி மிரட்டுவதை நிறுத்தக் கோரியும் சுகுணா நிறுவனத்துக்கு எதிராகப் போராடினர். சுகுணா நிறுவனமோ பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது, கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாது என்று திமிராக அலட்சியப்படுத்தியது. அரசோ கண்டும் காணாமலும் இருந்தது. விவசாயிகள் கோழிகளை பட்டினி போட்டு, இறந்த கோழிகளை சுகுணா அலுவலகத்தின் முன் கொட்டிய பிறகுதான், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. சுகுணாவின் அடாவடித்தனத்தை எதிர்க்க வக்கற்ற அரசோ பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடகமாடியது. இறுதியில் சுகுணா நிறுவனம், உயிருள்ள கோழிக்கு எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.3.50 தருவதாக ஒப்பு கொண்டதால் தற்காலிகமாகப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று வரை சுகுணா, பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. போராடுகிற பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குக் கறிக்கோழிக் குஞ்சுகள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளை ஓரணியில் திரள விடாமல் பிரித்தாளும் சதிவேலைகளைச் செய்து வருகிறது.

தனியார்மய-தாராளமயக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழக அரசோ, கால்நடை பராமரிப்புத் துறையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமோ கறிக்கோழி ஒப்பந்த விவசாய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறையும் இல்லை. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை!

கூலி உழைப்பாளிகளை மட்டுமின்றி சிறு உடமையாளர்களையும் சுரண்டிக் கொழுத்து ஏகபோகத்தை நிறுவுவதுதான் முதலாளித்துவம். விவசாயம் நசிந்து போனதால், வேறுவழியின்றி கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட சிறு விவசாயிகளின் நிலம், நீர், உழைப்பைச் சுரண்டி போண்டியாக்கிவிட்டு, அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதான் ஒப்பந்த விவசாயத்தின் நோக்கம் என்பதை சுகுணா நிறுவனத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இந்நிலையில், ஒப்பந்த விவசாயத்துக்கு அரசின் பாதுகாப்பைக் கோரும் போராட்டங்களோடு, தனியார்மய-தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான், ஏகபோக கோழிப்பண்ணை நிறுவனங்களின் இரும்புப் பிடியிலிருந்து கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் விடுபட முடியும்.

___________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
___________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….

திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
கல்லூரியில் நுழைய முயன்ற தோழர்களை போலீசார் கைது செய்கிறார்கள்

திருச்சபையின் காம ஊழல்கள் சமீப காலமாக உலகமெங்கும் நாறி வருவதை அறிவோம். இதில் அமெரிக்கா தொடங்கி வாட்டிகன் இருக்கும் ரோம் வரையில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளில் பாதிரியர்களின் பாலியல் முறைகேடுகளுக்கெதிராக  பல வழக்குகள் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுவெளியில் ஒரு பாதிரியாரின் குற்றம் தெரிந்த பின்தான் திருச்சபைகள் ஏதோ பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுக்கின்றன. கூடுமானவரை குற்றம் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுவதற்கு திருச்சபையில் அதிகார வர்க்கம் எப்போதும் முயன்று வருகிறது.

திருச்சியில் பிரபலமான ஜோசப் கல்லூரியில் அப்படி ஒரு மோசடி சமீபத்தில் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில்  முதல்வராகவும், பாதிரியாராகவும் இருக்கும் ராஜரத்தினம் என்பவர் உடன் பணியாற்றும் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதை அந்த கன்னியாஸ்திரி முன்பே ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்பதற்கு திருச்சபையின் அடக்குமுறையான சூழலே காரணம்.

இப்போது வேறுவழியின்றி இந்த பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. இதை அறிந்த திருச்சி நகர ம.க.இ.க தோழர்கள் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு 13.10.2010 அன்று காலை கல்லூரி அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். இது திருச்சி நகரெங்கும் மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பத்து தோழர்கள் மட்டும் கல்லூரியில் நுழைவதற்கு முயன்றனர். அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க செயலர் தோழர் ராஜா தலைமை வகித்தார்.

இந்த உடனடி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது. இந்த குறைந்த பட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றால் திருச்சபையின் ஊழல் இன்னும் பல வடிவங்களில் வெளிவரும் என்பதாலேயே இந்த நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தால் அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்களில் அனைத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தியாக பெரும் வரவேற்பைப் பெற்றது பெருவாரியான மக்களிடம் ஆதரவை உருவாக்கியிருக்கிறது.

_____________________________________________________________

ம.க.இ.க, திருச்சி .
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !!

14

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 6 (மெக்சிகோ, பகுதி: ஒன்று)

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்

மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். “இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் வருகை தர இருக்கிறார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகளும் இப்போது பறிமுதல் செய்யப்படும். வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்.” சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன்.

மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர்தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும்போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே அங்கு சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன. பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி, மெக்சிகோ. ஆனால், அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை மேட்டுக்குடியினரால் மட்டுமே அனுபவிக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ), சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்கிறது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)

“கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்டதான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்.” மெக்சிக்கர்களின் நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகிறது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள், 19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம், 20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம்… இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாமை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். இதனால் உலகில் வேறெந்த நாட்டிலும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால், சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள். ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில்தான் சாக்லெட்டை சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில் அதன் பெயர் Xocoatl. (‘சோகோ’ என்றால் சூடு, ‘ஆடில்’ என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது). அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.

ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக  சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால், அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200  – 500) இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200  – 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கிறது. மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப்படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன.

அஸ்தேக்
பண்டைய அஸ்தேக் நாகரீகம்

மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில்தான், Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது. அந்த தேச மக்கள் ‘மெக்சிக்கர்கள்’ என அழைக்கப்பட்டனர். மெக்சிக்கர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான, Aztlan னிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது). இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கிறது.

கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes)  தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519ல், சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி, கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma )வை மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்தும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?

Bartolome de las  Casas  என்ற பாதிரியா,ர் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின்போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, ‘பாவாத்மாக்களான’ பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில்தான் அங்கே சென்றார். ஆனால், மெக்சிகோ சென்ற பின்னர்தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால், ‘கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப்படுவதை ஏற்க முடியாது’, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப்படுகிறார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San  Cristobal  de  las  Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால், அவரது தாயகமான ஸ்பெயினில், காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்ததுதான். ‘அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு’ என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)

பாஞ்சோ-விய்யா-Pancho-Villa
பாஞ்சோ விய்யா

இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் எண்பது சதவீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள். இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத்தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910ல் வெடித்த சமூக – கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில்தான் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho  Villa) வையும் சந்தித்துள்ளார்.

மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். நாடு முழுவதும் பல தேவாலயங்கள் பூஜை செய்ய பாதிரியார் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் “காலை வணக்கம், கடவுள் இல்லை!” என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக ‘ஞானஸ்நானம்’ பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப்படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள். காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். இருபதாம் நூற்றாண்டில், மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

–    தொடரும்

_______________________________

கலையரசன்
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

206

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற  சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அதனை வினவு தளத்தில் பிரசுரித்திருந்தோம். அச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கும் தெரிவித்து விட்டோம்.

அப்பகுதியின் ஜமாத்தை சேர்ந்தவர்களும், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அப்பகுதி முஸ்லிம் மக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “கிடையவே கிடையாது” என்று இதற்கும் சில பேர் மூச்சைக் கொடுத்து வாதாடினார்கள்.

கடைசியாக, தன்னுடைய திருமணம் மிகப்பெரிய விவாதப் பொருளாக  மாறியிருப்பதைக் கேள்விப்பட்ட மணமகன் அலாவுதீன், வினவு தளத்தில் தனது விளக்கத்தை அளித்தார். அது அவரது விளக்கமல்ல, வினவு செட்டப் செய்து போட்டது என்று அவதூறு புலனாய்வு செய்து கண்டுபிடித்து சில இசுலாமிய தளங்களில் கட்டுரைகள் எழுதினார்கள்.

விவகாரம் அதோடும் முடியவில்லை என்று தெரிகிறது. நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்குமாறு மணமேல்குடி ஜமாத்திலிருந்து தனக்கு தாக்கீது வந்திருப்பதாக அலாவுதீன் எங்களிடம் தெரிவித்தார். வளைகுடாவில் இருக்கும் ஷபனா ஆஸ்மியின் தந்தை அப்பாஸ் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர். நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி அவரையும் நிர்ப்பந்திக்கிறார்களாம். இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவை குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில நாட்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியத்தான் போகிறது.

இவர்களுடைய அணுகுமுறையைக் கண்டு ஒருபுறம் கோபம் வருகிறது. இன்னொரு புறம் இசுலாமிய மக்களின் நிலைமையை நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள். அவர்களோடு ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள். அதிலெல்லாம் இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நேரடி இந்துமதவெறிக் கட்சியான பாஜகவுடனும், மறைமுக இந்துமதவாதக் கட்சியான காங்கிரசுடனும் கூட்டு சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அவ்வளவு ஏன், தற்போதைய அலகாபாத் தீர்ப்பை கண்டித்து எந்தக் கட்சியும் பேசவில்லையே அதுபற்றி கேட்பதற்கும்  இவர்களுக்குத் துப்பில்லை. யாராவது ஒரு அலாவுதீன் கம்யூனிச அடையாளத்தோடு திருமணம் செய்து கொண்டால் அதுதான் இவர்களுக்கு பிரச்சினை. உடனே விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் தூள் பறக்கிறது.

வரதட்சிணை வாங்கிய இசுலாமியர்கள், வட்டிக்கு விடும் இசுலாமியர்கள், லாட்டரி சீட்டு விற்றே ஜனாப் ஆன ஹாருண்கள், ஏழை முஸ்லிம்களை வளைகுடாவுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தும் முஸ்லீம் பெருமக்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கலீல்ஜி போன்ற தலைவர்கள்… இவர்களையெல்லாம் தவ்ஹீத் ஜமாத் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். “நான் ஒரு கம்யூனிஸ்டு” என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் அலாவுதீன்தான் இவர்களுக்குப் பிரச்சினை.

இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.

இன்று, அலகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதனை எதிர்த்துக் கண்டிப்பதற்கு, இப்தார் விருந்து வைத்த எந்த ஓட்டுக் கட்சிக்கும் துப்பில்லை. அந்தக் கட்சிகளில் இருக்கும் இசுலாமியர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவிக்குமா? அவர்களையெல்லாம் எந்த ஜமாத்தாவது விசாரிக்குமா? அலாவுதீன் மீது விசாரணை நடத்தப்போகிறார்களாம். இந்தக் கேலிக்கூத்தை என்னவென்பது?

இந்து மதவெறிக்கு எதிராக சமரசமின்றி குரல் கொடுக்கும் ம.க.இ.க வும் வினவு தளமும்தான் இவர்களுக்கு எதிரிகள். கேட்டால் “இந்து மதவெறியையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இசுலாமிய மக்கள் உங்களை நம்பி இல்லை” என்று ஜம்பமாக பதில் சொல்வார்கள். தங்களுடைய உரிமையைப் பாதுகாப்பது இசுலாமிய அமைப்புகளா, மதச்சார்பற்ற அமைப்புகளா என்று குஜராத் முஸ்லிம் மக்களிடம் அல்லவா கேட்கவேண்டும்? பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட குஜராத் படுகொலை வழக்குளை உலகறியச் செய்த தீஸ்தா சேதல்வாத், ஒரு இறை நம்பிக்கையற்ற காஃபிர். மோடியை எதிர்த்து நிற்கும் பல மனித உரிமை ஆர்வலர்களும் கூட இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள்தான்.

இசுலாத்தை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் இசுலாமிய மக்களின் மீது பரிவும், அக்கறையும் கொண்ட எங்களைப் போன்ற காஃபிர்களுடன் ஒரு முஸ்லிம் என்ன விதமான உறவைப் பேண வேண்டும்? “இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் போன்றோரின் கருத்து.

ஆனால் அது அப்படி இருப்பதில்லை. பேய் என்றும் பிசாசென்றும் சாத்தானென்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய சித்திரத்தை தவ்ஹீத் ஜமாத்தார் உருவாக்கினாலும், எங்களுடன் நேரடியாகப் பழகும் சாதாரண முஸ்லிம் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார்கள். கல்வி வள்ளல்களின் நன்கொடைக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி நாங்கள் போராடும்போது அதில் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள்; தொழிற்சங்கத்தில் முஸ்லிம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்; இவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தவ்ஹீத் ஜமாத்திடம் விடை இல்லை.

இவற்றுக்கு நியாயமான, அறிவுக்கு உகந்த தீர்வுகளைச் சொல்லும் கம்யூனிசக் கொள்கைகளின் பால் ஒரு இசுலாமியர் ஈர்க்கப்படுவதில் என்ன தவறு? அப்படி ஈர்க்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் தான் அலாவுதீன். நேற்று இந்துவாக, கிறித்தவனாக, ஆதிக்க சாதியாக, திமுக காரனாக, அதிமுக காரனாக, ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தவர்களெல்லாம்தான் கம்யூனிஸ்டுகளாக மாறியிருக்கிறார்கள். யாரும் காஃபிராகவே வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. பிறப்பால் இந்து உண்டு, முஸ்லிம் உண்டு, கிறித்தவன் உண்டு. ஆனால் பிறப்பால் யாரும் கம்யூனிஸ்டு இல்லை. கம்யூனிஸ்டுக்கு மகனாகப் பிறந்தாலும், அவனுக்கு கம்யூனிசத்தின் மீது பற்று இருந்தால் மட்டும்தான் கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சிக்கிறான்.

அலாவுதீனையே எடுத்துக் கொள்வோமே. அவர் குடிகாரரோ, பெண் பித்தரோ, சூதாடியோ, வட்டிக்கு விடுபவரோ இல்லை. வரதட்சிணையும் வாங்கவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான். “இசுலாமுக்கு எதிராக எதையாவது செய்தே தீருவது” என்று முடிவு செய்து அதற்காக தனது திருமணத்தை அவர் இப்படி நடத்தவில்லை. இதுதான் அறிவுக்கு உகந்தது, நாகரிகமானது என்று கருதுவதனால் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார்.

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக பகத்சிங், மார்க்ஸ், லெனின் போன்றோரின் படத்தை அவர் மேடையில் வைக்கவில்லை. அவர்கள் மனித குலத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதனால் மேடையில் வைத்தார். இன்னும் திப்பு சுல்தான், ஹசரத் மகல், இஷ்பகுல்லா கான் போன்றோரின் படங்களைக் கூட வைப்போம். அவர்கள் இசுலாமியர்கள் என்பதற்காக அல்ல, விடுதலைப்போரின் முன்னோடிகள் என்பதனால். பிறப்பால் இந்துக்களான எங்களது தோழர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஹசரத் என்றும் திப்பு என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட இசுலாமியப் பெயர்களை வைப்பதற்கு நாங்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமோ?

அவ்வளவு ஏன், 1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது!

புத்தனோ, கிறிஸ்துவோ, நபிகள் நாயகமோ அவரவர் காலத்தில் மனிதகுலம் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர்கள் சிந்தித்து விடையளித்தார்கள். அதற்குப் பின்னர் உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் ஏராளம். இந்த மரபுகளின் நேர்மறையான அம்சங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்டு இன்றைய உலகத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் கம்யூனிசம். ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர் ஆனோ கிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும். கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்.

“எக்கேடு கெட்டும் போ. கண்ணுக்கு மறைவாக, ஊரை விட்டு ஓடிப்போய் எங்கேயாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத்தாரின் கோரிக்கை. அலாவுதீன் அப்படி ஓடி, ஒளிந்து செய்யவில்லை. தனது சொந்த ஊரில் முஸ்லிம் மக்கள் மத்தியில், அவர்கள் அங்கீகாரத்துடன் செய்திருக்கிறார். “இசுலாத்துக்கு விரோதமான காஃபிர்கள் ஒன்றுகூடி சிவப்புக் கொடி ஏற்றி ஒரு திருமணத்தை நடத்த, நம்மாளுக அதை தட்டிக் கேட்க துப்பில்லைன்னாலும், கலந்து கொண்டு, வாழ்த்தி, பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்களே, இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.

தங்களுடைய கொள்கையின் மீது தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், “சுயமரியாதை திருமணம் ஏன் தவறு, இசுலாமிய திருமணம் எப்படி சரியானது” என்று மணமேல்குடியில் கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். “ஐந்து வேளை தொழுது, ரம்ஜானுக்கு நோன்பிருக்கும் உண்மையான முஸ்லிம்களாகிய நீங்கள் காஃபிர்கள் நடத்திய இந்த திருமணத்திற்கு எப்படி போனீர்கள்?” என்று அந்த மக்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். தனது கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள், “ஊர்விலக்கம், ஜமாத் விசாரணை” என்று கோழைத்தனமாக எதற்கு குண்டாந்தடி எடுக்க வேண்டும்?

இசுலாமியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இசுலாத்தின் எதிர்காலத்தைப் பற்றி தவ்ஹீத்துக்கு கவலை. சுயமரியாதை உள்ளவனை சும்மா விட்டால், தங்களுடைய கோட்டையில் விரிசல் விழுந்து விடும் என்பது அவர்கள் பிரச்சினை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் முஸ்லிம் மக்களின் சுயமரியாதையை பேரம் பேசலாம். அதில் தவ்ஹீத்துக்கு ஆட்சேபம் இல்லை. யாருடன் கூட்டணி வைக்கலாம், வைக்கக் கூடாது என்று குர் ஆனிலோ, ஹதீஸிலோ எதுவும் சொல்லப்படவில்லையே. எப்படி திருமணம் செய்யவேண்டும் என்பது பற்றித்தானே இசுலாமில் வழிகாட்டுதல் இருக்கிறது!

வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் ஒரு பாசிசத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. “இதனை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பில் அலாவுதீன் என்ற நம் பையன் இருக்கிறானே” என்பது பற்றி ஒரு முஸ்லிம் மகிழ்ச்சி கொள்ளவேண்டுமா, அல்லது அவனை ஜமாத்தில் நிறுத்தி ஊர்விலக்கம் செய்யவேண்டுமா?

சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம் மக்கள்தான். இசுலாம் என்றாலே தலிபான்தான் என்ற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு, தங்களது நடவடிக்கை மூலம் வலு சேர்க்கிறது தவ்ஹீத் ஜமாத்.

இந்துக்கள் எல்லோருக்கும் நான்தான் அத்தாரிட்டி என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதற்கும், முஸ்லிம்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று தவ்கீத் ஜமாத் கூறுவதற்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு. ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தை இசுலாமிய மக்களுக்கு அடையாளம் காட்டிய அலாவுதீன் – ஒரு அற்புத விளக்குதான்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

26

வெளிநாடு வாழ் இந்தியப் பிரஜைகளுக்கு வாக்குரிமையும் ,அவர்களின் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்லும் உரிமைக்காகவும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் வயலார் ரவி. தேர்தல் வாக்குச் சீட்டு என்கிற பம்மாத்தெல்லாம் எதற்கு பேசாமல் இந்திய தொழில் கூட்டமைப்பிடம் பாராளுமன்றத்த்தை குத்தகைக்கு விட்டால் அவர்களாக பார்த்து பதவிகளை விற்று விட்டு ஒரு தொகையை ராயல்டியாக அரசுக்கு கட்டி விட்டுப் போவார்கள் என்கிற அளவுக்கு நாடு நாறிக் கிடக்கது. தொழிலதிபர்கள், வாரிசுகள், உயரதிகார்கள் எல்லாம் எம்பியாகி நூற்றி பத்து கோடி இந்தியர்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் பாராளுமன்றம் சாதா நேரமும் தொழில் முதலைகளுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்ககவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டே தாய்நாட்டின் மீதான பற்றில் துடிக்கும் மேட்டுக்குடி வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாய்நாட்டுப் பாசத்திற்காக சலுகை காட்டுகிறது இந்திய அரசு. ஆனால் இவர்கள் தேச பக்தி என்பதே தேர்தலில் ஓட்டுப் போடுவதும், கொழுத்த பணத்தோடு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம்பியாவதும்தான். இந்த பணக்கார வெளிநாட்டு வெள்ளைத் தோல் மனிதர்களும், தன் குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள கடன் வாங்கி வெளிநாடு சென்று கடின உழைப்பில் கால நேரமில்லாமல் ஈடும் தொழிலாளர்களும் ஒன்றல்ல, எண்ணெய் கிடங்கில், கட்டிடத் தொழிலில், சாலைப்பணியில், வீட்டுத் தொழிலில், மருத்துவப் பணிகளில், மீன் பிடித்தொழிலில் என பல்லாயிரம் ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பீபீ லுமாடா.

ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.

________________________________

தொம்பன்
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!

23
கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!நல்லொழுக்க சீலர்களும், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாதவர்களும், நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் “காக்கி டவுசர்” கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.

குமாரசாமியின் தலைமையில் “ரத யாத்திரை” கிளம்பிய 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை உறுப்பினர்கள், தேசமெல்லாம் சுற்றியபின் கடைசியில், “இராவணன் ஆட்சிதான் (இது கருணாநிதி பற்றிய வேதாந்தியின் வர்ணனை) எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு” என்று சென்னையில் சரணடைந்தது குறித்த வரலாறு வாசகர்கள் அறிந்ததே. ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் எல்லாம் நடந்து யுத்த காண்டமும் நேற்று முடிந்து விட்டது. பட்டாபிஷேகம்தான் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என்.ஆர்.ஐ அம்பிகள் இந்த காண்டத்தை, condom என்று புரிந்து கொண்டு, எங்களை ஹிந்து விரோதிகளாக சித்தரிக்கும் அபாயம் இருப்பதால் இது சமஸ்கிருத “காண்டம்” என்று தெளிவு படுத்திவிட்டு விசயத்துக்கு வருகிறோம்.

நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு எம்.எல்.ஏக்கள் நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய ஆங்கில சானல்கள். கான்ஸ்டிடியூசனல் கிரைசஸ் (constitutional crisis) என்று அதனை வர்ணித்தன. சட்டை கிழிந்ததனால் அரசியல் சட்டமே கிழிந்து விடுவதில்லை. “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கவுண்டமணி சொல்வது நம் காதில் விழுகிறது. இருப்பினும், மேற்படி சட்டை கிழிந்த எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை.

000

முன்னொரு காலத்தில் அயோத்தி மாநகரத்தில் பாப்ரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இருந்தது. டிசம்பர், 6, 1992 அன்று அதனை சங்கபரிவாரம் இடித்துத் தள்ளியவுடன், அந்த இடத்துக்கு “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் (அதாவது பாரதிய ஜனதா) நம்புவதால், அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

டிசம்பர் 6 போலவே, அக்டோபர் 11 ம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நேற்று அதிகாலை 6 மணிக்கு 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களையும், எடியூரப்பா அரசை முன்னர் ஆதரித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதிகாலை 6 மணிக்கு சட்டமன்றம் கூடிவிட்டதோ என்று வாசகர்கள் எண்ண வேண்டாம். அவாளுக்கு தேவைப்படும்போது சட்டசபை அதிகாலையில் கூடும். உயர்நீதிமன்றம் நடுராத்திரியிலும் பெயில் கொடுக்கும். “தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

இப்போது இந்த 11+6 பேருடைய “ஸ்திதி” என்ன என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்புலியும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜியை இறக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. நேற்று இரண்டரை மணிநேரம் விவாதம் நடந்ததாம். இன்று காலை 10.30 முதல் நீதிமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

“அந்த 11+6 பேரும் தலா 25 கோடி வாங்கிவிட்டார்கள். அவர்கள் என் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதனால் அவர்களை இடித்து விட்டேன்” என்கிறார் எடியூரப்பா. “பணம் வாங்கினோமா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. கட்சிக் கொறடாவை மீறி வாக்களிக்காத போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை இடித்தீர்கள்?” என்பது 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களின் கேள்வி.

சுயேச்சை எம்.எல்.ஏக்களின் வாதம் இன்னும் சுவையானது. “நாங்கள் கோவிலும் அல்ல மசூதியும் அல்ல. எந்தக் கட்சி வேண்டுமானாலும் கட்டிடம் கட்டக் கூடிய காலி மனையே நாங்கள். காலி மனையை சபாநாயகர் எப்படி “இடிக்க” முடியும்?” என்பது அவர்களுடைய கேள்வி.

இந்த 11+6 பேரையும் ஓட்டுப் போட அனுமதித்து தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடியூரப்பா தயாராக இல்லை. டிசம்பர் 6, 1992 அன்று கடப்பாரை சேவை நடத்தி, பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக மாற்றியதைப் போலவே, குரல் வாக்கெடுப்பு நடத்தி, இடிபாடுகளின் மேல் ராம் லல்லாவை நிற்க வைத்து டென்டு அடித்து இதுதான் “கோயில்” என்று இரண்டு விரலைக் காட்டி விட்டார் எடியூரப்பா.

இப்போது நீதிமன்றம் என்ன செய்யும்? ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதியான எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ராமஜென்ம பூமியை அவருக்கு எழுதிக் கொடுக்குமா? அல்லது 11+6 வழங்கும் சான்றாதாரங்களைப் பரிசீலிக்குமா? இதுதான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் சட்ட நெருக்கடி.

இன்றைக்கு இப்பிரச்சினை குறித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி. “தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும், பாஜக உறுப்பினர்கள் 11 பேரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும், முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்? துணிந்து சட்டப்பேரவையை சந்தித்து, வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ, தோல்வியோ, துணிவுடன் எதிர்கொண்டிருந்தால் அவரது மதிப்பும் மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே..” என்று தினமணி அங்கலாய்த்திருக்கிறது.

என்ன செய்வது, பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்பதை விவாதம் நடத்தி ஆதாரபூர்வமாக நீரூபித்திருந்தால் அத்வானியின் மதிப்பும்தான் இமயமாக உயர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? அதற்காகவல்லவோ கடப்பாரையைக் கையில் எடுத்தார் அத்வானி!

எடியூரப்பாவின் “மதிப்பு இமயம் போல உயர்ந்திருக்குமாம். போன வருசம் நவம்பர் மாதம் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி, தொலைக்காட்சி காமெராக்களின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதாரே எடியூரப்பா, அன்றே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவருடைய மதிப்பு கிரானைட் மலையை விட இரண்டு அங்குலம் அதிகமாகவே உயர்ந்திருக்கும். அது எடியூரப்பாவுக்கு தெரியாதா என்ன?

இருப்பினும் மதிப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பொருள் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவையல்லவோ எடியூரப்பாவும் ஹிந்து சமூஹமும் எதிர்கொள்ளும் தத்துவஞானக் கேள்விகள். இந்த பிரம்ம விசாரங்களுக்கான விடைகள் “ரெட்டியோபநிஷத்”தில் அல்லவோ கொட்டிக் கிடக்கின்றன!

“இராம பிரானே தேசிய நாயகன், ஹிந்து கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம், ஹிந்து தர்மம்தான் ஜனநாயக பூர்வமானது” என்பவையெல்லாம் சங்கபரிவாரத்தின் நம்பிக்கைகள். “நேற்றைய குரல் வாக்கெடுப்பில் தனது ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது” என்பதும்கூட எடியூரப்பாவின் நம்பிக்கைதான்.

11+6 பேருடைய ஸ்திதி சர்ச்சைக்குரியது என்றும், நேற்றைய குரல் வாக்கெடுப்பில் பாரதிய  ஜனதா வெற்றி பெற்றுவிட்டது என்பதும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அசோக் சிங்கால், இல.கணேசன், பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அடங்கிய பெரும்பான்மை ஹிந்து சமூஹம் மற்றும், ஹிந்து சமூஹத்தை வழிநடத்துகின்ற “ஹிந்து தர்ம சன்ஸாத்” தின் வசிஷ்டர்கள் ஆகியோர் அனைவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்கீழ் வருகிறது. (25 ஆவது பிரிவு என்பது மத நம்பிக்கை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு)

ஹிந்துக்களின் நம்பிக்கை குறித்தெல்லாம் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ன? பாபர் மசூதி தொடர்பான டைட்டில் சூட்டில், பட்டா-பாத்தியதையையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியதே அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதான் இனி ஹிந்துக்கள் தொடர்பான எல்லா வழக்குகளுக்கும் வழிகாட்டி.

விசாரிப்பதென்றால் அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தட்டும். அப்போதுதான் இந்த அரசியல் சட்ட நெருக்கடியிலிருந்து இந்தியா மீள முடியும். இந்திய அரசியல், ஹிந்து தர்மத்தினால் வழிநடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும்.

ரெட்டி பிரதர்ஸ் வாழ்க! நல்லொழுக்கம் வாழ்க! குரல் ஓட்டு வாழ்க!

ஜெய் ஸ்ரீராம்!

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!

66

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

அயோத்தியா-தீர்ப்பு-மோசடி-பார்ப்பனியம்-கார்டூன்ஸ்

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.

நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கனமாய் விரிகிறது…
இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு: துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சி திறப்பு: ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

–   மக்கள் கலை இலக்கியக்  கழகம், சென்னை

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்