Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருப்பூர் : டாலர் நகரத்தை குப்பை நகரமாக்கும் அரசு !

திருப்பூர் : டாலர் நகரத்தை குப்பை நகரமாக்கும் அரசு !

-

ங்கு பார்த்தாலும் குப்பை மேடுகள், மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.”ஸ்வச் பாரத்” (தூய்மை இந்தியா) என்ற வெற்றுக் கூச்சல்களுக்கு மத்தியில் தான் திருப்பூர் சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்க எனக் கூறி 500 , 1000 ருபாய் செல்லாது என அறிவித்ததிலும், GST வரிப்போட்டு சிறு தொழில் நிறுவனங்களையும், குறு , நடுத்தர வணிகர்களின் வியாபாரத்திலும் மோடி மண்ணைப் போட்டதால் தீபாவளிக்கு போனஸ் கிடைக்குமா? சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தால் அந்த கம்பெனிகளில் வேலை இருக்குமா? ஏன் அந்த கம்பெனியே இருக்குமா? என தொழிலாளிகள் பல யோசனையில் இருக்கும்போது மலேரியா, டெங்கு என மாநகராட்சியின் புண்ணியத்தால் அடுத்த கட்ட தொடர் தாக்குதலுக்கு  திருப்பூரும் உள்ளாகியிருக்கிறது.

BJP, இந்து முன்னணி கும்பலால் விநாயகர் சதுர்த்தி விழாவில் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்றுவதற்குள் ஆயுத பூஜை என திருப்பூரின் தெருக்கள் எல்லாம் குப்பையும், கழிவுகளும் மலை போல குவிந்து கிருமிளையும், கொசுவையும் உற்பத்தி செய்து கொண்டுள்ளதன் காரணமாக மருத்துவமனைகளில் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வருடத்திற்கு 25,000 கோடி அன்னிய செலாவணி ஈட்டும் திருப்பூர் டாலர் சிட்டி என்பதற்கு பதில் இனி குப்பைகள் நகரம் என அழைப்பதே சாலப்பொருத்தம். துப்புரவுப் பணிகள் அனைத்தும் தனியார் வசம் உள்ளது. பணியாளர்களுக்கு 4 மாதம் சம்பளம் தரவில்லை, வேலைக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம். உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை. அவர்கள் கொடுக்கும் 4,500 ரூபாயில் தான் பாதுகாப்பு உபகரணங்களும் வாங்கிக் கொள்ள வேண்டும் .

ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதுகாக்கும் துப்புரவு பணியாளர்களின் நிலை இதுவென்றால் மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுத்துத்திரியும் அதிகார வர்க்கமும், ஆளும் கும்பலும் மூக்கணாங்கயிறு இல்லாத மாடு போல திரிகின்றது.

உள்ளாட்சித் தேர்தலும் இல்லை, பகுதி பிரதிநிதிகளும் இல்லை, இந்த ஆட்சி எப்போது கவிழும் என எதிர்கட்சிகளோ நீதிமன்றத்தின் வாயிலைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அதிகார வர்க்கமோ தெருவெங்கும் டாஸ்மாக் கடையை திறந்து வசூல் வேட்டையில் திளைத்துக் கொண்டுள்ளது. பெயரளவில் டெங்கு தடுப்புப்  பிரச்சாரம் என்ற பெயரில் காசு கொடுத்து வாங்கி வைத்துள்ள குடம், வாட்டர் டேங்குகளில் உள்ள தண்ணீரையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.  முறையக தண்ணீர் விநியோகம் செய்யவும் , குப்பைகளை அப்புறப்படுத்தவும் துப்பு இல்லை இவர்களுக்கு!

தெருவெங்கும் நோய் பரப்பும் ஈ, கொசுவை உற்பத்தி செய்யும் அரசுதான் டிவி, பேப்பரில் விளம்பரம் செய்து மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடிக்கிறது.

அரசு துறைகள் அனைத்தும் கார்ப்ரேட் மயமாகிப் போன தனியார் மருத்துவமனைகளுக்கும், மருந்து கம்பெனிகளுக்கும் ஆள்பிடிக்கும் பிரதிநிதிகளாக மாறி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் வரும் நோயளிகளின் எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் கூறி டெங்குவை ஒழித்து விட்டோம் என கூசாமல் பொய் பேசுகிறது எடப்பாடி – ஓபிஎஸ் கும்பல். இந்தக் கும்பலை கொசுவை அடிப்பது போல அடித்து விரட்டாமல் நமக்கு விடிவு இல்லை என்பதை தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும்.

அதனை உணர்த்தும் பொருட்டு மக்கள் அதிகாரம் , மகஇக அமைப்புகளால் போஸ்டர்,நோட்டீஸ் என மக்கள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆள அருகதை அற்ற இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அதிகாரம் படைக்க தொழிலாளி வர்க்கம் ஓரணியில் திரண்டால் மட்டுமே முடியும்…… திரட்டுவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருப்பூர் – 99658 86810.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க