பஜ்ரங் தள் குண்டர்களால் கொலைவெறியோடு கொடூரமாகத் தாக்கப்படும் பால் வியாபாரி பெஹ்லு கான்.
பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்.
பஜ்ரங் தள் குண்டர்களால் கொலைவெறியோடு கொடூரமாகத் தாக்கப்படும் பால் வியாபாரி பெஹ்லு கான்.
அக்லக் கொலை, ஊனாவில் தலித் மக்கள் மீதான தாக்குதல் போன்ற ஒரு சில நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பேசப்படுகின்றன. அவ்வாறு பேசப்படாமல், கணக்கில் வராத தாக்குதல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. எப்படி அன்றாட நிகழ்வாக நிறுவனப் படுத்தப்பட்டிருக்கும் தலித் மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளில் ஒரு சில மட்டும்தான் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனவோ, அப்படி மாறி வருகின்றன இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள்.
மாட்டைக் கொன்றார்கள் என்பதில் தொடங்கி “மாட்டைக் கொண்டு சென்றார்கள், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், வைத்திருப்பதாக சந்தேகிக்கப் பட்டார்கள்” என்று கொலைகளுக்கும் தாக்குதல்களுக்குமான காரணங்கள் மென்மேலும் அற்பமானவையாக மாறி வருவதை சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்துள்ள சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
பெஹ்லு கான் அரியானா மாநிலம் ஜெய்சிங்பூரைச் சேர்ந்தவர். ராஜ்புத் சாதியிலிருந்து இஸ்லாமியர்களாக மாறிய மியோ முஸ்லீம்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர். அந்த ஊரின் மியோ முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் நிலமற்ற விவசாயிகள். கான், அவ்வப்போது காய்கறி விற்பார். குத்தகை விவசாயமும் செய்வார். வயதான தாய், மனைவி, இரண்டு மகன்கள், திருமணமாகாத இரண்டு பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இப்படிப் பல தொழில்கள் செய்து அவர் ஈட்டும் வருமானம் மாதம் 8,000 முதல் 12,000 ரூபாய்.
பஜ்ரங் தள் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் பிழைத்த பெஹ்லு கானின் மகன் ஆரிஃப்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று புதிதாகப் பசுமாடு வாங்க ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தைக்கு தன் இரண்டு மகன்களுடன் சென்றிருக்கிறார் கான். எருமை மாட்டைவிடப் பசுமாடு விலை குறைவு என்பதால், கன்றுகளுடன் இரண்டு பசுமாடுகளை வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, டில்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் என்ற இடத்துக்கு அருகே பஜ்ரங் தள் கும்பலைச் சேர்ந்த பத்து பேர் அவரை வழி மறித்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த போதே, அவருடன் சந்தைக்கு வந்த ஊர்க்காரரின் இன்னொரு வண்டியும் வந்திருக்கிறது. அதையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
பெஹ்லு கானும் மற்றவர்களும் சந்தையில் நகராட்சி அதிகாரிகள் கொடுத்த ரசீதைக் காட்டியவுடன் அதை வாங்கி கிழித்தெறிந்திருக்கின்றனர். வண்டியின் ஓட்டுனர் தன்னுடைய சாதியைச் சொல்லி, தான் ஒரு இந்து என்று நிரூபித்ததால், அவரை ஒரு அறைவிட்டுத் துரத்தி விட்டனர்.
பிறகு பெஹ்லு கானையும் அவரது இரு மகன்களையும் ஹாக்கி மட்டைகளால் தாக்கியிருக்கின்றனர். பிறகு, “பாவம்பா, பாத்தா சாதுவா தெரியுது. விட்டுவிடுவோம். சரி ஓடிப் போயிடுங்கடா” என்று கருணை காட்டுவது போல நடித்திருக்கின்றனர். ஓடத் தொடங்கியவுடன் நாயை அடிப்பது போல விரட்டி விரட்டி அடித்திருக்கின்றனர். வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டமும் சேர்ந்து அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இறுதியில் அவர்களை உயிரோடு கொளுத்துவதற்காக அவர்கள் மீது பெட்ரோலைத் தெளித்திருக்கின்றனர். நடந்த இடம் டில்லி -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோந்து போலீசு வந்து விட்டது. ஆனால், தாக்கியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
சுமார் ஒன்றேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடுகள் ஐந்து கன்றுகளையும், பெஹ்லு கானின் கையிலிருந்த 75,000 ரூபாயையும் பஜ்ரங் தள் கும்பல் பிடுங்கிக் கொண்டுவிட்டது. மாடுகள் கோசாலைக்குப் போய்விட்டதாகச் சொல்கின்றனர். இரண்டு வண்டிகளும் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.
இராஜஸ்தான் மாநிலம்-ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலையில் உணவின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.
அடிபட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கே அவர்களது குடும்பத்தினரிடம் 5,000 ரூபாயைக் கறந்திருக்கிறது போலீசு. அது மட்டுமல்ல, மருத்துவமனையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டுமானால், ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறான் போலீசு இன்ஸ்பெக்டர்.
அந்த பரிதாபத்துக்குரிய ஏழைகள், அரும்பாடுபட்டு 75,000 ரூபாய் பணத்தைப் புரட்டி எடுத்துக் கொண்டு வந்து, பெஹ்லு கானைக் கண்ணில் காட்டுமாறு கெஞ்சியிருக்கின்றனர். ஆனால், ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அவர் இறந்து விட்டார். ஹாக்கி மட்டையால் அடித்த அடியில், மார்பெலும்பு நொறுங்கி, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளில் இரத்தம் உறைந்து, அவர் இறந்து விட்டார்.
மரண வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியவர்கள் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பெஹ்லு கான் கூறியிருக்கிறார். அதேபோல காயம்பட்ட மற்றவர்களும் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக, பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 16 பேர் மீது பசுவதை தடை சட்டத்தின் கீழ் (Rajasthan Bovine Animals (Prohibition of Slaughter and Regulation of Temporary Migration or Export) Act, 1995) போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கான் இறந்து விட்டதால், வேறு வழியின்றி இந்துத்துவ காலிகள் 6 பேர் மீது கொலை வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.
மேற்கூறிய சட்டத்தின்படி பெஹ்லு கானும் மற்றவர்களும் செய்திருக்கும் குற்றம் என்ன? ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தையில் மாடுகளை வாங்கினார் என்பதற்கான ரசீது அவரிடம் இருந்தது. மாடுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக போலீசு வழக்கு போட்டிருக்கிறது. அவ்வாறு கொண்டுசெல்ல வேண்டுமானால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிச் சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது அந்த சட்டம். அப்படி ஒரு அனுமதிச்சீட்டு பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்று ஜெய்ப்பூர் ஆர்.டி.ஓ. பல்தேவ்ராம் போஜக் கூறியதாகப் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Anand kochukudy, thewire.in, 14.4.2017)
இல்லாத ஒரு அனுமதிச் சீட்டை வாங்காத குற்றத்துக்காக அந்த இஸ்லாமியர்கள் மீது வழக்கு போடுகிறது போலீசு. எந்த சீட்டைக் காட்டினாலும், அதை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டு தாக்குதல் தொடுக்கின்றனர் இந்துத்துவ காலிகள். அப்படியானால் இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?
பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதவெறிக் கும்பல் ஊனாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரைத் தாக்கியதைக் கண்டித்து ஊனாவில் தாழ்த்தப்பட்ட அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்த சட்டத்தின் நோக்கம் பசுக்களைப் பாதுகாப்பதல்ல, இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் அச்சுறுத்தி ஓடுக்குவதுதான். “பசுக்களை எங்கள் குழந்தைகளைப் போலப் பார்ப்பவர்கள் நாங்கள். மாட்டின் வாலைக்கூடக் கழுவத் தெரியாத ஆட்கள் எங்களுக்கு பசுப் பாதுகாப்பு பற்றி சொல்லிக்கொடுக்கிறார்களா? பிடுங்கிக் கொண்டு போன எங்கள் பசுக்களையும் கன்றுகளையும் இவர்களுடைய கோசாலையில் பட்டினி போட்டே கொன்றுவிடுவார்கள். அதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது” என்று குமுறுகிறார்கள் பெஹ்லு கானின் குடும்பத்தினர்.
அவர்கள் கூறுவது மிகையல்ல. நாட்டிலேயே மிகச்சிறந்த கோசாலை என்று பீற்றிக் கொள்ளப்படும் ஜெய்ப்பூரில் உள்ள ஹிங்கோனியா கோசாலையில் மாதந்தோறும் சுமார் 1050 மாடுகள் சாகின்றன. அவற்றில் ஆகப் பெரும்பான்மையானவை இயற்கையான மரணங்கள் அல்ல. தீவனமின்றி, சேற்றிலும் சாணத்திலும் சிக்கி நோய்வாய்ப்பட்டு மெல்ல அழுகித் துடித்துச் சாகின்ற பரிதாபத்துக்குரிய மரணங்கள். கோமாதா பெயரில் வசூலிக்கப்படும் பணத்தை கோமாதாவின் காவலர்கள் தின்றுவிடுவதால் நடக்கும் மரணங்கள்.
ஆகஸ்டு 2016-இல் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம், “அது கோசாலையல்ல, கசாப்புக்கடை” என்று சாடியது. பத்திரப் பதிவுக்கான ஸ்டாம்ப் கட்டணத்தில் 10% ‘கோமாதா வரி’யாக (சர்சார்ஜ்) மக்களிடம் வசூலிக்கிறது ராஜஸ்தான் அரசு என்பதை இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.
குஜராத் அரசோ, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆல்வாரில் நடந்த ரவுடித்தனத்தையே சட்டமாக்கி விட்டது. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையெல்லாம் அவையிலிருந்து வெளியேற்றி விட்டு, பார்வையாளர் மாடம் முழுவதும் சாமியார்களை உட்கார வைத்துக் கொண்டு, பசுவைக் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.
விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின்படியே, மஹாராஷ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே.
இத்தகைய சட்டங்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை பெஹ்லு கானின் கொலை காட்டுகிறது. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக துலினாவில் 5 தலித்துக்களை அடித்தே கொன்றார்கள். ஊனாவில் தலித்துகளுக்கு கசையடி. வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக்கைக் கொன்றார்கள். பையில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாகக் கூறி போபால் ரயில் நிலையத்தில் வைத்தே இஸ்லாமியப் பெண்களை அடித்துத் துவைத்தார்கள். ஆட்டுக்கறி கடைகளை மாட்டுக்கறி கடைகள் என்று வதந்தி பரப்பி, உ.பி.யில் கறிக்கடைகளை மூடினார்கள். இப்போது பால் வியாபாரம் செய்த குற்றத்துக்காக பெஹ்லு கானைக் கொலை செய்திருக்கிறார்கள். இறைச்சிக்கடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலட்சக்கணக்கான குரேஷி பிரிவு இஸ்லாமியர்களை அந்தத் தொழிலிலிருந்து விரட்டுவதற்கு பா.ஜ.க.வினர் பசுவதை தடைச் சட்டத்தைப் பயன்படுத்தினர். இப்போது பால் வியாபாரம் செய்யும் மியோ முஸ்லிம்களையும் குறி வைத்திருக்கின்றனர்.
கண் தெரியாத தாய், தன் கணவன் கொலை செய்யப்படும் காட்சியைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் ஆற்றாமையால் துடிக்கும் மனைவி, நிர்க்கதியாக நிற்கும் இளம் மகள்கள், எலும்புகள் நொறுக்கப்பட்ட மகன்கள், தீவனத்துக்கு வழியின்றி கோசாலையில் வாடும் பெஹ்லு கானின் மாடுகள், கன்றுகள்!
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
போலீசின் உண்மையான முகத்தைப் புரிய வைக்கும் ஆற்றல் கிரிமினல்களுக்குத்தான் உண்டு. தாங்கள் அரும்பாடுபட்டுத் திருடிக் கொண்டுவந்த நகையை, போலீசார் தங்களிடமிருந்து திருடிவிடாமல் காப்பாற்றுவதற்குத் திருடர்கள் படும்பாடு கொஞ்சமல்ல. இருந்தாலும், நூறு பவுன் திருடியிருந்தால், அதில் 50 பவுனை போலீசு பிடுங்கிக் கொள்ளும். 25 பவுனைத் திருடனுக்கு ஊதியமாகக் கொடுத்துவிட்டு, மீதி 25 பவுனை மேசையின் மீது பரப்பி வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு மக்களிடம் நற்பெயர் ஈட்டுவார் புலனாய்வு அதிகாரி. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அரங்கேறி வரும் வருமானவரித்துறை சோதனைகள் – கைதுகள், “திருடன் – போலீசு கதை”யைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.
எடப்பாடி, நத்தம், பன்னீரின் பினாமிகள், சைதை துரைசாமி, பிறகு சட்டமன்றத் தேர்தலின்போது அன்புநாதன், கன்டெயினர்கள், ஜெயா மரணத்துக்குப் பின் ராம மோகனராவ், சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர், கீதாலட்சுமி, தினகரன் என்று வரிசையாக நடந்து வரும் ரெய்டுகள், போலீசின் மாமூல் வேட்டை நடவடிக்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்த வேட்டையில் பா.ஜ.க.வினரும் அதிகார வர்க்கமும் மிரட்டிப் பிடுங்கியது எவ்வளவு என்பது திருடர்களுக்குத்தான் வெளிச்சம்.
எவ்வளவு பிடுங்கப்பட்டதோ திருடர்களுக்கு தான் வெளிச்சம்
“சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை சிபாரிசு செய்திருக்கிறதாம். இது, திருடனிடமிருந்து பிடுங்க வேண்டியதைப் பிடுங்கிக் கொண்டு, அதன் பிறகு விடுதலையாவதற்குத் தோதாக ஒரு கேசைப் போட்டு உள்ளே தள்ளும் போலீசின் நடவடிக்கையன்றி வேறென்ன?
அ.தி.மு.க. என்பது ஒரு பாளையக்காரர் கூட்டம். பாளையக்காரர்களின் உட்பகையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைப் பிடித்த கும்பினிக்காரனின் இடத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா. தங்கள் பதவியையும் சொத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டின் பகுதிகளைக் கூறு போட்டு வெள்ளையனுக்கு எழுதிக் கொடுத்த மன்னர்களைப் போல, “காவிரி, நீட் தேர்வு, உதய் திட்டம், ஜி.எஸ்.டி.” உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான்.
“வாரிசு இல்லாத மன்னர்களின் சமஸ்தானங்களை கும்பினி கைப்பற்றிக் கொள்ளலாம்” என அன்றைய கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி ஒரு சட்டம் இயற்றினான். அப்படி ஒரு சட்டத்தை இயற்றித் தமிழகத்தை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொள்ள முடியுமானால், மோடி அரசு பெரிதும் மகிழ்ந்திருக்கும். அவ்வாறு அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தடையாக அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது, தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுதான்.
அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. பாரதிய ஜனதாவோ பார்ப்பன பாசிசக் கட்சி. அந்தக் கழிசடை அரசியல் நாயகியை தாங்கிப் பிடித்து, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்ததில் முக்கியமான பங்கு பாரதிய ஜனதாவுக்குரியது. அ.தி.மு.க. என்பது ஒரு உதிரியான கிரிமினல்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு மாபியா கும்பல். பாரதிய ஜனதாவோ முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கிரிமினல் கும்பல்.
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான். அ.தி.மு.க. என்ற திருடர் கூட்டத்தை இணைத்துக் கட்டியிருந்த பார்ப்பன பாசிஸ்டு மறைந்த பிறகு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பன பாசிசக் கட்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. போலீசின் ஆசியுடன்தான் திருடர்கள் ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது. திருடர்களை மக்கள் அறிவார்கள். இது திருட்டு போலீசு என்பதை அறியச் செய்யவேண்டும்.
திருப்பூர் ராதா நகர் 21-வது வார்டு ( டாஸ்மாக் கடை எண் : 1937 ) டாஸ்மாக் கடையை கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்களும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் முற்றுகையிட்டு மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அதையொட்டி சுமார் நான்கு மணி நேரம் சாலை மறியல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த காவல் துறை துணைக் கண்கானிப்பாளர் அண்ணாதுரை மற்றும் திருப்பூர் வடக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடிவதாக உத்திரவாதமளித்து சீல் வைத்தனர். அதன் பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இரண்டு நாள் கழித்து டாஸ்மாக் பார் உரிமையாளர் கடையைத் திறக்க வேண்டும் என கூலிக்கு மாரடிக்கும் குடிகாரர்களை வைத்து கடை முன் ‘போராடினார்’. இத்தகவல் அறிந்து அங்கு அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். உடனே சாராயக் கடைக்கு காவலாக போலீசு வந்தது. அங்கு கூடியிருந்த பெண்களிடம் நைச்சியமாக பேசி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுங்கள் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறி அப்பகுதி மக்களை போராடவிடாமல் கலைத்தனர்.
எதை செய்தாலும் சட்டப்படித் தான் செய்ய வேண்டும் என சட்டவாதம் பேசியுள்ளனர். அதன் பின்னர் மனு கொடுக்கச் சென்ற மக்களில் இருந்து 5-பெண்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்களிடம் காவல்துறை அக்கறையாக பேசுவது போல இனி குடிப்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் தனது இன்னொரு முகத்தைக் காட்டியது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் தீவிரவாதிகள். அவர்களுடன் இணைந்து போராடக் கூடாது. மீறி போராட்டம் செய்தால் உங்கள் அனைவரையும் 3-மாதம் வெளியில் வரமுடியாதபடி கேஸ் போடுவோம்.. எனவும் மிரட்டியுள்ளது போலீசு.
அரண் அமைத்து டாஸ்மாக்கை பாதுகாக்கும் போலீசு
மறுநாளே 20 போலீசு புடைசூழ பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டுவிட்டது. மேலும் போராட்டத்தில் முன்னணியாக இருந்த தோழர் காஞ்சனா உட்பட 6-பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக PPDACT-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது ( வழக்கு எண் CR:552 ).
தற்போது மீண்டும் பழையபடி டாஸ்மாக் குடிமகன்களின் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது. இதனால் எப்படியேனும் அக்கடையை மூட வேண்டும் என மீண்டும் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டனர் அப்பகுதி பெண்கள். அதைத் தொடர்ந்து இந்த அரசும் போலீசும் நடத்திய நாடகத்தை அம்பலப்படுத்தி ஊர் முழுவதும் 19.05.2017 அன்று ராதா நகர், கஞ்சம்பாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தோழர்கள் சுவரொட்டிகள் ஒட்டிவிட்டு நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வரும் போதும் கூட அந்த டாஸ்மாக் கடையில் சரக்கு கேட்டு நான்கைந்து பேர் காத்திருக்கின்றனர்.
இதனால் பதறியடித்துக் கொண்டு போலீசு 20.05.2017 அன்று காலையே 30-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு சுவரொட்டிகளை கிழித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணுக்கு உளவுப்பிரிவு போலீசார் பத்திரிக்கையாளர் என்ற பேரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எப்ப சார் கடைய ஒடைப்பீங்க என கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி பெண்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும் என பதிலளித்தார் மக்கள் அதிகார தோழர்.
பெண்களும், பொதுமக்களும் தங்களைப் பிடித்த சனியனாக உள்ள டாஸ்மாக் ஒழிந்தால் சரி என உள்ளனர். காவல் துறையும், அரசும் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.
போலீசாரால் கிழிக்கப்பட்ட சுவரொட்டி
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
உடுமலை – 97885 58526.
தஞ்சை ஆர்.எஸ்.எஸ் காவி(லி) களுக்கு எதிராகப் போர்க்குரல்
வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை அக்கினி வெயில் மேலும் கருக்கிக் கொண்டிருந்தது. மக்கள் வாழவழியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், பிள்ளையார் கும்பாபிஷேகத்திலிருந்து கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்தநாள் வரை கோலாகோலமாகக் கொண்டாடப்படுகிறது.
புதிது புதிதாகப் பிழைப்புவாத தர்மகர்த்தாக்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோயில் குளத்தைத் தூர்வாருகிறேன், களிமண்ணை (வண்டல் மண்) விற்கிறேன், கோயில் கட்டுகிறேன் லக்ஷார்சனை செய்கிறேன், பள்ளி திறக்கும் நேரத்தில் ஹயக்ரீவர் ஹோமம் செய்கிறேன், என்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் புனித கொள்ளை கிரானைட், மணல், PWD கான்ட்ராக்ட் கொள்ளைகளை விஞ்சிவிடும் போல் உள்ளது.
இதனை சுத்தசுயம் பிரகாசமான ஆர்.எஸ்.எஸ் பின்னிருந்து ஊக்குவித்து வளர்க்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. நுண்அரசியல் ஆய்வாளர்களின் மைக்ரோஸ்கோப் சிந்தனைகளுக்கு இவைகள் எட்டுவதில்லை. பெரியார் பிறந்த மண் என்ற இறுமாப்பு எவ்வளவு காலம் கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸி-ன் இரண்டாம் ஆண்டு தக்க்ஷின மண்டல சங்க சிக்ஷா (தென்மண்டல பயிற்சி முகாம்) முகாம் 28-04-2017 அன்று தொடங்கி 18-05-2017 அன்று முடிவுற்றது. 140 பேர் பயிற்சியில் சேர்ந்து சிக்ஷை(கல்வி) பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முகாமில் 431பேர் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
தஞ்சை திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காஞ்சிமடம் மற்றும் ஜெயேந்திரனின் இரகசிய உலகமாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஆண்டு RSS பயிற்சிமுகாம் எடப்பாடி அரசின் போலீசு காவலுடன் நடைபெற்றுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக முதல்வர் வைத்தியா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்துள்ளார்.
தஞ்சை வீரராகவா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும், ராஜராஜசோழன் பண்பாட்டு மையத்தலைவருமான மணிமொழியான், வாண்டையார் பொறியியல் கல்லூரி தாளாளரும், ஜெயா அமைச்சரவையின் ஒருநாள் அமைச்சர் என்று புகழப்பட்ட அய்யாறு வாண்டையாரின் மகளுமான கே.ஏ.வி.பொன்னம்மாளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் மூன்றுநாள் முகாமில் தங்கி பயிற்சியாளர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். பயிற்சிமுகாமில் என்ன வெறுப்பு அரசியல் போதிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தத்துவஞானிகள் யாரும் கூறப்போவது இல்லை. ஊர் தேர்த்திருவிழா, சாதி மோதல், வினாயகர் ஊர்வல கலவரம் இவைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
பயிற்சி முகாமிற்கு 300 போலீசு காவல் காத்தது என்பதை விட 18-05-2017 அன்று சாகா பேரணி நிகழ்வு முக்கியமானது. 20 நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாம் குறித்த செய்தி ஒருசில பத்திரிகைகளில் மட்டுமே வெளிவந்தது என்றாலும் அனைத்து முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்களும் அறிந்த ஒன்றாகத்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே 18 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.நடராசன் “காங்கிரஸ் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டிருக்கும் மோடி அரசு, ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்” என்று அடக்கி வாசித்து தூது விட்டார்.
ஊடகங்களின் இருட்டடிப்பு இருந்தாலும் எதிர்ப்பும் வலுவாக இல்லை என்பதுதான் உண்மை. இந்திய மாணவர் சங்கம் ஒட்டியிருந்த கண்டன சுவரொட்டி மீது திட்டமிட்டே விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டது.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒட்டியிருந்த சுவரொட்டிகளைக் காவல்துறை ஆள் வைத்து கிழித்தது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒட்டிய சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்களுக்கும், போலீசுக்கும் சுவரொட்டி யுத்தம் நடைபெற்றது.
தஞ்சை கோர்ட்ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கான்ஸ்டபிள் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்க முயற்சிப்பதைப் பார்த்தவுடன் வடிவேலு பாணியில் உதார்விட்டுப் பின்வாங்கி சென்றுவிட்டார்.
சாகா ஊர்வலம் நடந்த அன்று தஞ்சை நகர விடுதிகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டு சாகா ஊர்வலம் நான்கு வீதிகளையும் சுற்றிவந்தது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தைத் தடை செய்! சாஸ்த்ரா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் 18-04-2017 அன்று காலை 10.30 மணிக்கு அணிதிரண்டனர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்து காவல்காத்த எடப்பாடி அரசின் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தோழர்களைக் கைது செய்தது.
ம.க.இ.க மாநில இணைச் செயலர் காளியப்பன், ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன், பு.மா.இ.மு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சங்கத்தமிழன், பத்துப் பெண்கள் உள்ளிட்ண் தோழர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டு புறநகரில் உள்ள திருமணம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். திருமண மண்டபம் பின்புறமாக யாரும் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காகக் கக்கூசு ஓரம் அமர்ந்து ஒரு காவலர் காவல் காத்தார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் முடிந்து பயிற்சி முகாம் நடந்த இடத்திற்கு அனைவரும் சென்றபின் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
எதிர்ப்பின்றி இருந்த நிலையில் தோழர்களின் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வாணரங்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.எஸின் வசவு மொழிகளில் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் வெளிநாட்டு அம்பிகளின் போன்கால்களும் அடங்கும்.
சட்ட விரோதமாக கூடியதற்காகவும்,பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும்,சுவரொட்டி ஒட்டியதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற வழக்குகள் தோழர்களின் உணர்வுகளுக்கு உரம்போட்டு வளர்க்கும் என்பதில் அய்யமில்லை. திருவரங்கம் கருவறை நுழைவுப்போராட்டம், தியாகய்யர் கல்லறையில் தமிழில் பாடும் போராட்டம், சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடும் போராட்டம் என பார்ப்பனியத்திற்கெதிராக ம.க.இ.க,பு.மா.இ.மு தோழர்களின் போராட்டங்கள் தமிழ்மண்ணின் பார்ப்பன எதிர்ப்பு மரபை மீட்டெடுத்துள்ளது. மக்கள் அதிகாரத்தின் மூடு டாஸ்மாக்கை போராட்டங்கள் பெண்கள் கையில் கடப்பாரையை எடுக்க வைத்ததைப்போல ஆர்.எஸ்.எஸ்,சங்பரிவார் கருநாகப்புற்றுகளை அடித்து நொறுக்கி அகற்றும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
-வினவு செய்தியாளர்.
அறிவிப்பு !
நேற்று 22.05.2017 அன்று சீர்காழியில் நடப்பதாக இருந்த விவசாயிகளை வாழவிடு பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 23.05.2012 காலையில் சீர்காழியில் திரண்ட மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தோழர் ராஜு தலைமையில் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை கைது செய்து கொண்டு சென்றது போலீசு. பொதுக்கூட்டம் அனுமதி மறுப்புக்கு காரணம் கேட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குங்கள் என்று போலீசு தட்டிக் கழிக்கப் பார்த்தது. அதை ஏற்காமல் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலீசு கைது செய்து வைத்திருக்கும் மண்டபத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து பொதுக்கூட்டம் அனுமதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று போராடி வருகின்றனர்.
சமஸ் தமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்க பொறுப்பாளர் என்ற முறையில் வாரம் ஒரு புரட்சியை அல்லது அதிர்ச்சியை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் இருப்பவர். அது அவர் சம்பளத்துக்கு செய்ய வேண்டிய வேலை. அதுவன்றி, நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பொறுப்பையும் தன்னந்தனியாக அவர் தன் தோள் மேல் சுமக்கிறார். இதற்கும் சேர்த்துத்தான் இந்து நிர்வாகம் அவருக்கு சம்பளம் வழங்குகிறதா, அல்லது கொழுந்து விட்டெரியும் தேசபக்தியின் காரணமாக இந்தப் பெருஞ்சுமையை அவர் தானாக முன்வந்து ஏற்றிருக்கிறாரா தெரியவில்லை.
பிரபல தேர்தல் ஈவென்ட் மானேஜர் பிரசாந்த் கிஷோர் கூட மோடி, நிதீஷ், ராகுல் போன்ற பலருக்கும் வழிகாட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அவரால் வழிகாட்ட முடிந்திருக்கிறது. திருவாளர் சமஸோ நேரெதிர் துருவங்களுக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றவர்.
அவர் அ.தி.மு.க வில் ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு வழி சொல்கிறார். அடுத்த வாரத்தில் திமுக வின் பிரகாசமான எதிர்காலத்துக்கு திராவிட அரசியலைக் கைவிடுவது அவசியம் என்று ஸ்டாலினை எச்சரிக்கிறார். “இந்து மதத்தைக் காப்பாற்றும் பொருட்டு சாதியை ஒழிக்குமாறு” சங்க பரிவாரத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறார். “காங்கிரசைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்” என ராகுல் காந்திக்கு கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறார். அது மட்டுமல்ல, உலகமயமாக்கலின் வெற்றிக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளின் வெற்றிக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டுகிறார். நம்மைப்போல ஒரே ஒரு மூளையுடன் பிறந்த சராசரி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற பிரமிப்புதான் எற்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரின்றி வீதியில் விடப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதர்களில் சிலர் முச்சந்தியில் நின்றபடி, டிராபிக் கான்ஸ்டபிள் வேலை செய்வதை பார்த்திருப்பீர்கள். கார், டூ வீலர், சைக்கிள் முதல் லாரிகள், பேருந்துகள், பாதசாரிகள் வரையிலான அனைவரையும் “நீ அப்படிப்போ, நீ இப்படிப்போ” என்று கடும் கண்டிப்புடன் இவர்கள் நெறிப்படுத்தும் தோரணை இருக்கிறதே, அதைக் கூர்ந்து கவனியுங்கள். மொத்த நகரத்தின் போக்குவரத்தையும் தன்னந்தனியாகச் சமாளிக்க வேண்டிய பொறுப்பை சுமந்து தவிக்கும் ஒரு மனிதனின் மன அவஸ்தை அவர்களது முகத்தில் வெளிப்படுவதை நீங்கள் காண முடியும்.
பரிதாபத்துக்குரிய இத்தகைய மனிதர்களின் அகவுலகமும், “தி நேஷன் வான்ட்ஸ் டு நோ” என்று ராத்திரி 9 மணிக்கு கத்துவாரே, அந்த அர்னாப் கோஸ்வாமியின் அகவுலகமும் ஏதோவொரு விகிதத்தில் கலந்திருப்பதன் விளைவாகக் கிடைக்கும் ஆபாசம்தான், “நான் நினைக்கிறேன், நான் கவனித்து வருகிறேன்” என்ற சமஸின் தோரணை.
மூன்று மந்திரச் சொற்கள்!
“மோடியின் காலத்தை உணர்தல்” என்ற தொடரில் “வெறுப்பரசியலில் நக்சல்பாரிகளின் பங்கு” என்ற தலைப்பில் வன்முறை, சகிப்பின்மை, தூய்மைவாதம் என்ற மூன்று சொற்களை நம் மீது கடாசியிருக்கிறார் சமஸ். பொருள் புரிவதற்கு அவசியமில்லாமல், சில ஒலித்துணுக்குகள் நம் மனதைக் கொள்ளை கொண்டு, மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்குமல்லவா? அப்படி இந்த சொற்கள் அவரிடம் எப்போது இறங்கின, யாரிடத்திலிருந்து இறங்கின என்று அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூளைக்குள் பல்பு எரிகின்ற படைப்பின் உன்மத்த நிலையில், அப்படி யோசித்துப் பார்க்கின்ற மனநிலை ஞானியர்க்கு இருப்பதில்லை.
அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன் ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ். இந்த இட்டிலி ஒரு நடுப்பக்க பிளேகியரிசம்!
அத்வானியின் ரத யாத்திரை காலத்தில் தொடங்கி, தற்போதைய மோடியின் காலம் வரையில் சங்க பரிவாரத்தினை எதிர்த்து வருபவர்கள் ம.க.இ.க-வினர் என்பது எச்.ராஜாவும் கூட ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. “அது உண்மையல்ல, இடதுசாரி ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதன் மூலம், ம.க.இ.கவும் நாடு முழுவதும் உள்ள நக்சல்பாரி அமைப்புகளும் மறைமுகமாக வலதுசாரிகளுக்கு (சங்க பரிவாருக்கு) உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டின் அருகதையைப் பரிசீலிப்போம்.
அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன் ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ்.
மோடியின் காலம் எப்படி இருக்கிறது? மூன்றாண்டு காலத்தில் வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. “அச்சே தின்” சந்தி சிரிக்கிறது. பஞ்ச் டயலாக்குகளும் காகித திட்டங்களும்தான் அறிவிக்கப்படுகின்றனவே தவிர காரியத்தில் எதுவும் இல்லை. பொருளாதாரம் எழுந்து நிற்க மறுக்கிறது. வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. பண மதிப்புநீக்கம், ஆதார் திணிப்பு முதலான பல நடவடிக்கைகள் மக்களுக்கு கடும் துன்பத்தையே கொடுத்திருக்கின்றன. இருப்பினும் சமீபத்திய தேர்தல்களில் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காரணம் என்ன என்பது ஆய்வாளர்கள் பலர் விவாதித்து வருகின்ற கேள்வி.
எதிர்க்கட்சிகளின் ஊழல், பிழைப்புவாதம், குடும்ப அரசியல், பாஜக வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கப்படாமல் இருப்பது, மாற்றுத் தலைமையில்லாமலிருப்பது – என்பன போன்ற காரணங்களையும் இவையன்றி ஒவ்வொரு மாநிலத்தின் விசேடமான காரணங்களையும் எதிர்க்கட்சிகளின் தவறுகளாகவும் பலவீனங்களாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மதவெறியைத் திட்டமிட்டே தூண்டுவது, சாதிப் பிளவுகளைப் பயன்படுத்திக் கொள்வது, எதிர்க்கட்சி அதிருப்தியாளர்களை வலை வீசிப்பிடிப்பது, மையப்படுத்தப்பட்ட பொய்ப்பிரச்சார நடவடிக்கைகள், ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவு, ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட தேர்தல் வேலை போன்றவற்றின் மூலம்தான் மோடியின் இமேஜ் முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயக உணர்வற்ற நாயக வழிபாட்டு மனோபாவம், சாதி – மதவெறிக்கு ஆட்படுவது, மோடியை சூப்பர்மேனாக காட்டும் விளம்பர மோசடிக்கு இரையாவது, எதிர்க்கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்கள், மோடியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாக்காளர்களின் பலவீனங்களாக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன.
நேர்மறையில் எதையும் சாதிக்க இயலாத மோடியின் கையில் இருக்கும் ஆயுதங்கள் இரண்டு. ஒன்று மதவெறியைத் தூண்டுவது, இரண்டாவது – தனது எதிர் தரப்பினரை ஒடுக்குவது, மதிப்பிழக்கச் செய்வது, தோல்வி மனப்பான்மையில் ஆழ்த்துவது.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அரசு மோடியின் அடிமையாக நடந்து கொண்டபோதிலும், தமிழ்ச் சமூகம் மோடியையும் பாரதிய ஜனதாவையும் வெறுக்கிறது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பாஜகவை தமிழக மக்களின் தலையில் கட்டுவதற்கு பெருமுயற்சி செய்துதான் பார்க்கிறார்கள். இருப்பினும் சமூக ஊடகங்களும் சமூகத்தின் பொதுக்கருத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை கூர்மையாகத் தாக்கித் தனிமைப் படுத்துகின்றன. இந்தப் பின்புலத்தில் சமஸின் புளித்த இட்லி உப்புமாவைக் கிளறிப் பார்ப்போம்.
ஒடுக்கச்சொல்லும் எச்.ராஜா, ஒதுக்கச் சொல்லும் சமஸ்!
ஹெச்.ராஜாவும், பொன்னாரும் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.
“நக்சல் ஆதரவு இயக்கங்கள், (தமிழகத்தில் ம.க.இ.க, புதிய ஜனநாயகம் போன்றவை) இடதுசாரி ஜனநாயக சக்திகளை கண்ணியப் படுகொலை செய்ததன் மூலம் அவர்களை மதிப்பிழக்க வைத்து, மோடியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் ஆய்வு முடிவு.
மோடி அரசை முறியடிக்க விரும்புகிறவர்கள் ம.க.இ.க வினரை ஒதுக்கவேண்டும் என்பதுதான் சமஸ் கூறவரும் செய்தி. சமஸின் இந்த “மொழி” நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட போலீசின் “மொழி”தான்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நடக்கும் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட கிராமங்களை மொய்க்கும் உளவுத்துறையினர் அந்த மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை, “மக்கள் அதிகாரம் அமைப்பினரை உள்ளே விடாதீர்கள்” என்பதுதான். டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினால், அதில் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் உரையாற்றக் கூடாது” என்பதை நிபந்தனையாகவே விதிக்கிறது போலீசு. தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு போலீசு வழங்கும் அறிவுரையும் இதுவேதான்.
எச்.ராஜாவின் கூற்றுப்படி நெடுவாசல் போராட்டம் ஒரு நக்சலைட் சதி, தமிழிசையின் கூற்றுப்படி மருத்துவர்கள் போராட்டமும் நக்சலைட்டு சதி, பொன்னாரின் கருத்துப்படி (சமஸ் கருத்தின்படியும்) மெரினா போராட்டம் வன்முறையில் முடிந்தது நக்சலைட் சதி! மோடி வறட்சி நிவாரணம் வழங்காததை நிருபர்கள் கேள்விக்குள்ளாக்கினால், ஏச். ராஜா கூற்றுப்படி அது பிரதமருக்கு எதிரான கண்ணியப் படுகொலை (belittling the prime minister).
போலீசின் மொழியையும் சங்க பரிவாரத்தின் மொழியையும் மோடி எதிர்ப்பு போர்க்குரல் போல மார்க்கெட்டிங் செய்கிறாரே சமஸ், இதன் பொருள் என்ன?
தாக்குதல் இலக்கு – “தாராளர்கள்”!
வளர்ச்சி என்ற பொய்மானைக் காட்டி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடியின் ஆட்சியின் கீழ், நிர்வாகம், கல்வி போன்றவற்றில் தொடங்கி இராணுவம், நீதித்துறை வரையிலான எல்லா நிறுவனங்களையும் சங்க பரிவாரம் கைப்பற்றி வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் பலர் அறிவுத்துறையினர் என்பதும் எதார்த்தம்.
மோடி அரசின் தாக்குதல் லிபரல் அறிவுத்துறையினர் முதல் இடதுசாரி அறிவுத்துறையினர் வரையிலானோர் மத்தியில் தெளிவையும் தடுமாற்றத்தையும் ஒரே நேரத்தில் தோற்றுவித்திருக்கிறது.
சான்றாக கோமாதாவின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகள் குறித்து, “அரசியல் சட்டம் – மத நல்லிணக்கம்” என்ற வரம்புகளுக்குள் நின்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த பலரும் பார்ப்பன மதம் என்ற கோணத்தில் இந்து மதவெறியை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதே போல தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் குறித்து உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்கள் நொறுங்கி, மனித முகம் கொண்ட உலகமயம் என்ற கருத்தாக்கமே “கவைக்குதவாத கற்பனை” என்பது மக்களிடையே அம்பலமாகி வருகிறது. அதற்குச் சான்றுதான் கெயில் எதிர்ப்பு, மீதேன் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்.
மனித முகம் கொண்ட பார்ப்பனியமும் இல்லை, மனித முகம் கொண்ட உலகமயமும் இல்லை என்கின்ற தெளிவு பரவி வருவதைத்தான் “நெகிழ்வுத் தன்மைக்கு எதிரான போக்கு” வளர்ந்து வருவதாகவும் வெறுப்புச் சொல்லாடல் வளர்ந்து வருவதாகவும் சொல்கிறார் சமஸ்.
இனி, அறிவுத் துறையினரின் தடுமாற்றம் குறித்த பிரச்சினைக்கு வருவோம்.
லிபரல் அறிவுத் துறையினருக்கு மோடியைத் தோற்கடிப்பது முயற்கொம்பாகவே தெரிகிறது. எதிர்க் கட்சிகளின் இயலாமை மட்டுமல்ல, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு, பார்ப்பன பாசிசத்துக்கு ஒத்துப் போவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் நம்பிக்கொண்டிருந்த இந்த நிறுவனங்கள் அனைத்தும், சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியிருப்பதையும் காண்கிறார்கள். இந்த எதார்த்த நிலைமைகள், அரசமைப்பின் வரம்பைத் தாண்டி சிந்திக்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. எனினும், அவ்வாறு சிந்திக்க இயலாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
இந்த தடுமாற்றத்தை ஆள் வைத்து மோப்பம் பிடித்துவிட்ட சமஸ், அவர்களுக்குத் தூண்டில் வீசுகிறார். கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களைத் தூய்மைவாதிகள் என்று தூற்றுகிறார். தூய்மைவாதம் காரணமாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் வளர முடியவில்லை என்று குற்றவுணர்வுக்கும் ஆளாக்குகிறார்.
சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள்தான் பாசிச எதிர்ப்பின் கூர்முனையாக இருக்க முடியும். இட்லர் காலம் தொடங்கி இன்று வரை இதுதான் உண்மை. அத்தகையவர்கள் யார் என்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதனால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.
மக்களை சகிப்பின்மைக்குத் தூண்டியது யார்?
தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.
“நக்சல் ஆதரவு இயக்கங்கள் தோல்வி அடைந்து விட்டன” என்ற திருப்தியான பிரகடனத்துடன் தனது கட்டுரையைத் தொடங்குகிறார் சமஸ். அடுத்தடுத்த பத்திகள் “யு டர்ன்” எடுக்கின்றன. தமிழக ஊடகவியலாளர்களின் மொழி நடையில் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி, முன்னணி வார இதழ் ஒன்றின் அட்டையில் புதிய ஜனநாயகம் அட்டையின் சாயல், இடது சாரி இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கையாளும் மொழியும் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி என்று பட்டியலிடுகிறார் சமஸ்.
தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது. சகிப்பின்மை ஊடகங்களில் மட்டும் அதிகரிக்கவில்லை. சமூகம் முழுதும் அதிகரித்து வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பெண்கள் கடப்பாரை ஏந்தி டாஸ்மாக் கடைகளை இடிக்கிறார்களே, அது ஊடகங்களின் மொழியைக் காட்டிலும் “வலிமையான சகிப்பின்மை”யில்லையா? காந்திய வழியிலிருந்து இவர்களை வன்முறைக்கும் சகிப்பின்மைக்கும் திருப்பியவர்கள் யார்?
“இந்த அரசமைப்பிடம் முறையிட்டுப் பயனில்லை. அதிகாரத்தை மக்கள் தம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது அடிச்சு தூக்கு” என்று இரண்டாண்டுகளுக்கு முன்னரே மக்கள் அதிகாரம் அறைகூவல் விடுத்தது உண்மை. அடித்து தூக்கியதும் உண்மைதான். இருப்பினும், மக்களை கடப்பாரை ஏந்த வைத்த பெருமை இந்த அரசையும், போலீசையும், நீதிமன்றத்தையுமே சாரும். தமது நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரத்தின் அறைகூவல் சரியானது என்று மக்களுக்குப் புரியவைத்தவர்கள் அவர்களல்லவா?
சமஸின் சகிப்பு – ஊடகங்களின் சகிப்பின்மை!
ஊடகங்களின் மொழி மாறி வருகிறது என்று சமஸ் தன்னை மறந்து கூறுவதும் உண்மைதான். அதற்கு புதிய ஜனநாயகம் எள்ளளவேனும் காரணமாக இருந்தால் அது குறித்து பெருமை கொள்கிறோம். லஞ்ச ஊழல்களை, சமூக ஒடுக்குமுறைகளைப் பற்றி எழுதிவிட்டு, “முதல்வர் கவனிப்பாரா, ஆட்சியர் கவனிப்பாரா, அரசு பரிசீலிக்குமா” என்றெல்லாம் கட்டுரையை முடித்த காலம் ஒன்றிருந்தது. “அவர்கள்தான் திருடர்கள்” என்று தெரிந்த பின்னால், “எந்தக் கொடுமையை அம்பலப்படுத்தினாலும் நீதி கிடைக்காது” என்று தெளிந்த பின்னால் சொரணையும் நேர்மையும் உள்ள பத்திரிகையாளனாக இருப்பின், அவனை கோபமும் கையறு நிலையும் பற்றிக் கொள்கின்றன. அவனுடைய மொழியில் சகிப்பின்மை வெளிப்படத்தான் செய்யும்.
“தமிழ்ச் சமூகத்தை சீரழித்த சதிகாரி” என்று ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது புதிய ஜனநாயகம். “அடிமைகளே உங்கள் ஊழல் ராணியின் கல்லறையை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துங்கள், இல்லையேல் மக்கள் அதை அகற்றுவார்கள்” என்று வீடியோ வெளியிட்டது விகடன். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நக்சல்பாரிகள் தகர்ப்பது குறித்து சமஸ் ரொம்பவும்தான் பதறுகிறார். குன்ஹா தீர்ப்புக்கெதிராக வெறியாட்டம் நடத்தி ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிமுகவினர் தகர்த்தார்களே, அப்போது அவர் என்ன செய்தார்?
அன்றைய கடையடைப்பை பயன்படுத்தி பால் பாக்கெட்டுக்கு விலையேற்றிய வியாபாரிகளை, ஜெயலலிதாவுடன் இணை வைத்து, “குன்ஹா அவர்களே எங்களுக்கு என்ன தண்டனை?” என்று தலைப்பு போட்டு கட்டுரை எழுதினார். ஜெ வின் ஊழல் குறித்து குற்றம் சாட்டினால், “எவன் யோக்கியன்” என்று நாஞ்சில் சம்பத் எழுப்பக்கூடிய கேள்வியையே தத்துவ விசாரம் போன்ற பாவனையில் ஒளித்து எழுதிய கயமையல்லவா அந்த எழுத்து?
“ஊத்திக்கொடுத்த உத்தமி”யும் “கண்ணியக் கொலை”யும்!
வெள்ளை மாளிகை முன் படுத்திருக்கும் நாயாக மன்மோகன் சிங்கை சித்தரித்து புதிய ஜனநாயகம் வெளியிட்ட புகைப்படம் சமஸின் நினைவிலேயே இருக்கிறதாம்! ஏன், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கள்ளத்தனமாக அவர் கையெழுத்திட்டதும், அதே முறையில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்தியா பெற்ற பேறு என்று ஆக்ஸ்போர்டுக்குச் சென்று போற்றிப் பேசியதும் சமஸின் நினைவில் நிற்கவில்லை போலும்! புதிய ஜனநாயகம் வரைந்தது வெறும் படம் மட்டும்தான். மேற்சொன்ன நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களை நாயினும் கீழாக நடத்தியவர் மன்மோகன் சிங் அல்லவா?
காங்கிரசு முதல் கம்யூனிஸ்டு கட்சி வரையிலான எல்லாக் கட்சிகளையும் விமரிசித்திருக்கிறோம். புலிகள், மண்டல் அரசியல், தமிழினவாதம் போன்ற, மற்ற கட்சியினர் தவறென்று தெரிந்தாலும் பேசத்தயங்குகின்ற விசயங்களைப் பேசியிருக்கிறோம். பதிலுக்கு விமரிசிக்கப்பட்டிருக்கிறோம். அனைத்தும் பொதுவெளியில் நடந்தவைதான். இவற்றிலெல்லாம் புதிய ஜனநாயகத்தின் கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதை சகித்துக் கொள்ள முடியாததன் விளைவே இந்த புளித்த உப்புமா.
கோவன் கைது செய்யப்பட்டதை காங்கிரசு கட்சியினரும் திமுகவினரும் கண்டித்தபோது, “ம.க.இ.க காரர்கள் உங்கள் தலைவரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டு தரம் தாழ்ந்த விதத்தில் கோஷ்டி சேர்க்க முயன்றார் சி.கே சரஸ்வதி. தனது கட்டுரையில் சமஸ் செய்திருப்பதும் அதே வேலைதான்.
சில நாட்களுக்கு முன், “வலது கம்யூனிஸ்டு கட்சி அலுவலகமும் ரிலையன்ஸ் அலுவலகமும் ஒரே மாதிரி இருப்பதாக” எழுதியிருந்தார் சமஸ். பதிலுக்கு அவரை “சகுனி” என்று சாடியிருந்தது ஜனசக்தி. அடுத்த கட்டுரையில் “அவர்களை போலி கம்யூனிஸ்டு என்று எப்படி சொல்லப்போச்சு?’ என்று நம்மிடம் சாமியாடுகிறார். இரண்டு நாட்களுக்குப் பின் “சீக்கிரம் ஐக்கியப்படுமாறு” வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கு அறிவுரை கூறுகிறார். சமஸின் எழுத்தை ஆபாசம் என்று நிரூபிக்கும் சான்றுகள் இவை.
முதலாளித்துவ அரசியலில் மூழ்கி முத்தெடுக்கும் கட்சிகள் என்ற காரணத்தினால்தான் போலி கம்யூனிஸ்டு என்று இரு கட்சிகளையும் விமரிசிக்கிறோம். “இன்னும் போதுமான அளவுக்கு உலகமயமாக்கத்தை ஆதரிக்கவில்லை” என்று அந்தப்பக்கம் திரும்பி அவர்களை விமரிசிக்கிறார் சமஸ், இந்தப்பக்கம் திரும்பி, “அவர்களை போலிகள் என்று எப்படி நீங்கள் கண்ணியப் படுகொலை செய்யலாம்?” என்று நம்மிடம் எகிறுகிறார்.
போலி கம்யூனிஸ்டு என்ற எங்களது விமரிசனத்தில் அக்கட்சி அணிகளுக்கு உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அது கம்யூனிசத்தின் பால் நாங்கள் கொண்ட அக்கறையிலிருந்து பிறந்த விமரிசனம் என்பதை அவர்களும் அறிவார்கள். சமஸ் வெளிப்படுத்தும் “மிகை நடிப்பு அக்கறை” சந்தேகத்துக்குரியது என்பதையும் விளங்கிக் கொள்வார்கள்.
“நல்லகண்ணுவே போலி கம்யூனிஸ்டா?” என்று கொதிக்கிறார் சமஸ். “அப்படியானால், அவரைத்தவிர மற்றவர்களெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளா?” என்றுதான் பதில் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கும். தளி ராமச்சந்திரனின் ஊரறிந்த குற்றங்கள், தா.பா போயசுடன் பேணும் நெருக்கம், விஜயகாந்தை முதல்வராக்கும் முடிவு – போன்றவை குறித்த நல்லகண்ணுவின் கருத்து என்ன? அநீதியைக் கண்டுங்காணாமல் ஒதுங்குபவர்களும், மவுனம் சாதிப்பவர்களும் நல்லவர்களா? தா.பாண்டியனை நல்லகண்ணுவிடமிருந்து பிரித்துக் காட்டுவதும், கம்யூனிஸ்டு கட்சியை மற்ற முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதும் “நல்லகண்ணுவின் எளிமை”தான் என்றால், அந்த எளிமை தவறுகளை மறைக்கின்ற முகமூடி அல்லவா?
நல்லெண்ணத் தூதர் – சமஸ்
“நக்சல்பாரிகள் உரையாட மறுப்பவர்கள். ஏனென்றால் அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்தரப்பை அழித்தொழிப்பதே அவர்களது வழிமுறை. காரணம் அவர்களுடைய வெறுப்பரசியல், அதற்குப் பின்னால் இருப்பது சகிப்பின்மை, அதற்குப் பின்னால் இருப்பது தூய்மைவாதம். தூய்மைவாதிகள் என்ற முறையில் வகையில் இந்துத்துவ பாசிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் ஒன்றே” – என்றவாறு போகிறது அவரது ஆய்வு.
சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்று பகைமையான வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் சமூகத்தில், ஒடுக்கும் சாதி – ஒடுக்கப்படும் சாதி என்று பிளவு பட்டிருக்கும் சமூகத்தில், “நல்லெண்ணம், சகிப்புத்தன்மை, வெறுப்பு, தூய்மை” ஆகியவற்றை அனைவருக்கும் பொதுவானவை போலப் பேச முடியுமா?
தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் “நல்லெண்ணத்தின்” மீது தாழ்த்தப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பன்னாட்டு முதலாளி வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் மீது தொழிலாளி வர்க்கம் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பசுப்பாதுகாவலர்களின் நல்லெண்ணத்தின் மீது முசுலீம்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? “சப் கா சாத் சப் கா விகாஸ்” (எல்லோருடனும் – எல்லோருக்கும் முன்னேற்றம்) என்ற மோடியின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் விளைவு நரகம்தான் என்பதை மக்களின் அனுபவம் காட்டவில்லையா?
“புறவயமான உண்மைகளிலிருந்து தொடங்கு” என்பது மார்க்சியம். “நல்லெண்ணத்திலிருந்து தொடங்கு” என்பது காந்தியப் பித்தலாட்டம். தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார் காந்தி. மறுத்தார் அம்பேத்கர். இன்று அந்த நல்லெண்ணத்தின் கோரைப்பற்களில் ரத்தம் வழிகிறது. அதுதான் இந்துத்துவம்.
வர்க்க ரீதியாகவும், சாதி, மத, இன ரீதியாகவும் ஆதிக்கம் செய்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அடக்கப்படுபவர்களின் பால் சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமா, அல்லது அடக்கப்படுபவர்கள் ஆண்டைகளின் பால் “சகிப்புத்தன்மை” காட்ட வேண்டுமா? “நீ தீண்டத்தகாதவன்” என்று ஆதிக்க சாதிக்காரன் சொல்வதும், “தொழிலாளர் நல சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும்” என்று மோடி அரசு கூறுவதும், சகிப்புத்தன்மையுடன் காது கொடுக்க வேண்டிய “மாற்றுக் கருத்து”களா?
“எதிரிகளிடம் மட்டுமல்ல, நண்பர்களிடமும் சகிப்புத்தன்மை காட்டாதவர்களே நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ். நண்பர்கள் என்று அறியப்படுவோரே ஆயினும், அவர்களது சொல்லும் செயலும் சகித்துக் கொள்ள இயலாதவையாக, மக்கள் விரோதமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் பால் எப்படி சகிப்புத்தன்மை காட்ட இயலும்?
“மாவோயிஸ்டுகள் இவர்கள் எந்த தரப்புக்காக பரிந்து பேசுவதாக சொல்கிறார்களோ, அந்த்த் தரப்பினரைத்தான் அதிகம் கொல்கிறார்கள். தண்டகாரண்யத்தில் கான்ஸ்டபிள் உடையில் நிற்பவர்கள் பழங்குடிகள்தானே” என்கிறார் சமஸ். அடேயப்பா, இந்த அறிவுக்காகத்தான் இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தை இவரிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்களா? அம்பானியும் அதானியும் யூனிபார்ம் போட்டு சி.ஆர்.பி.எப் இல் துப்பாக்கியை ஏந்தி நின்ற பின்னால் ஆயுதப் போராட்டம் நடத்துமாறு மாவோயிஸ்டுகளுக்கு அறிவுருத்த வேண்டுமோ!
“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ்.
இந்து மதவெறி என்று சொல்லத் தயங்குவோரால் புழக்கத்தில் விடப்பட்ட “வெறுப்பு அரசியல்” என்ற சொற்றொடரை நக்சல்பாரிகளுக்கு எதிராக ஏவுகிறார் சமஸ். சுரண்டலையும் ஆதிக்கத்தையும் வெறுக்கச் சொல்லும் நக்சல்பாரி அரசியல், ஒடுக்கப்படும் சமூகத்தினரை வெறுக்கச் சொல்லும் இந்துத்துவ அரசியல் ஆகிய இரண்டுமே வெறுப்பு அரசியலாம்! உழைக்கும் வர்க்கத்தின் மீது பணக்கார வர்க்கம் காட்டும் வெறுப்பும், தன்னைச் சுரண்டும் பணக்கார வர்க்கத்தின் மீது உழைக்கும் வர்க்கம் காட்டும் வெறுப்பும் ஒன்றா? பார்ப்பன, ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்படும் சாதிகள் மீது காட்டும் வெறுப்பும், ஒடுக்கப்படும் சாதிகள் ஆதிக்கசாதியினர் மீது கொண்டுள்ள வெறுப்பும் ஒன்றா?
உழைக்கும் மக்களுக்கு எதிரான வெறுப்பரசியல் நடத்துவது அரசும் ஆளும் வர்க்கங்களும்தான். அவர்களுக்கு சொம்படிக்கும் ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். “விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை” என்று கூறுகின்ற, “சாராயக்கடைகளை நடத்தியே தீருவேன்” என்று வெறி பிடித்து அலைகின்ற, “தொழிலாளிகளின் ஓய்வூதியத்தை திருடிக்கொண்டு, அதைத் தட்டிக்கேட்டால் வேலைநீக்கம்” என்று மிரட்டுகின்ற – இந்த அரசின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் காட்ட வேண்டிய உணர்ச்சி – வெறுப்பைத் தவிர வேறு என்ன?
“தொட்டால் தீட்டு” என்று தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பனியத் தூய்மைவாதமும், சாதி ஆதிக்கவாதிகளை ஒதுக்கி வைக்கும் கம்யூனிஸ்டுகளின் தூய்மைவாதமும் ஒன்றா? கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட விரும்பும் மெக்கார்த்தியிச தூய்மை வாதமும், முதலாளித்துவக் கருத்தியலின் கறை படியாமல் தன் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் கம்யூனிஸ்டு கட்சியின் தூய்மைவாதமும் ஒன்றா? “லஞ்சம் வாங்காதே, பொதுச் சொத்தை திருடாதே” என்று கூறுபவர்களைக்கூட தூய்மைவாதி என்று தூற்றும் நபர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு தூற்றுவோர் பிழைப்புவாதிகள் என்றல்லவா அறியப்படுகிறார்கள்!
இந்துத்துவ மண் வாசனை!
“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ். எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், தற்காலிக சமரசம் மேற்கொள்வதும் இல்லாத போராட்டங்கள் உலகத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். சமஸ் பேசச் சொல்வதன் பொருள் வேறு. அவர் பாசிஸ்டுகளுடன் பேசி கருத்தொற்றுமைக்கு வரச்சொல்கிறார். பேச மறுப்பவர்களும் பாசிஸ்டுகளே என்று முத்திரை குத்துகிறார்.
ஏனென்றால், “இந்த மண்ணில் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் ஒருநாளும் எடுபடாது” என்று நக்சல்பாரிகளுக்கு அறிவுரை சொல்கிறார் சமஸ். ஆயுதமும் வன்முறையும் இல்லாமலும், அந்த வன்முறைக்கு இந்து பொது உளவியலின் ஒப்புதல் இல்லாமலும்தான் இந்த மண்ணில் இந்துத்துவம் அரியணை ஏறியிருக்கிறதா? தீண்டாமைக் கொலைகளும் ஆணவக் கொலைகளும் வேறு ஏதோவொரு மண்ணில் நடக்கும் வன்முறைகளா?
அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ். அதனால்தான் போலீசு காவலில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தோழர் சாரு மஜும்தாரை, “இறந்தார்” என்று எழுதுவதற்கு அவர் கூசவில்லை. கார்ப்பரேட் ஆதரவு நரவேட்டைக்காக, மாவோயிஸ்டுகளை “நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று கூறிய மன்மோகன் சிங்கின் வருணனையை அப்படியே வழிமொழிவதிலும் அவருக்கு உறுத்தல் இல்லை.
நக்சல்பாரி இயக்கத்தை இந்துத்துவ பாசிச எதிர்ப்பின் ஈட்டி முனை என்று நாம் கருதுகிறோம். பாஜக வினரும் அவ்வாறே கருதுகிறார்கள். ஆனால் “எதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தி சங்க பரிவாரத்துக்கு உதவியிருப்பவர்கள் நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ்.
“தோற்றுப்போய் பல்லிளித்து மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட இந்த அரசமைப்புக்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைக்க வேண்டும்” என்று நாம் கூறுகிறோம். “ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைத்தவர்களே நக்சல்பாரிகள்தான்” என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறார் சமஸ்.
இந்த அரசமைப்பின் துணை கொண்டு இந்துத்துவத்தை வீழ்த்த சண்டமாருதம் செய்யும் சமஸ், “இப்போது கூட இல்லையென்றால் எப்போது இணையப்போகிறீர்கள்” என்று கம்யூனிஸ்டுகளை கடிந்து கொள்கிறார். இணைந்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதில் அடுத்த நாள் வருகிறது. “தமிழிசையிடமே பேச முடியாவிட்டால், மோடியிடம் எப்படி பேசப்போகிறோம்?”
எட்டப்பன் கூட தனியாகத்தான் கும்பினிக்காரனின் காலில் விழுந்திருக்கிறான். “கும்பினிக்கு எதிரான பாளையக்காரர்களை அணிதிரட்டி, போர் போர் என்று சங்க நாதம் செய்து, பிறகு கூட்டமாகப் போய் காலில் விழுந்தால், சன்மானம் வெயிட்டாக கிடைக்கும்” என்ற சாமர்த்தியம் எட்டப்பனுக்கு இல்லை. என்ன செய்வது கொஞ்சம் பிந்திப் பிறந்து விட்டார் சமஸ்!
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
1. “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையின்”விலங்குகளில்
அ) அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.
-கார்ல் மார்க்ஸ்*
ஆம், அற்பவாதியின் உலகத்துடன் நடத்திய போராட்டமே மார்க்சின் திறமையையும் போராட்டக்காரர், சிந்தனையாளர், புரட்சிக்காரர் என்ற முறையில் அவருடைய ஆளுமையையும் கூர்மையாக்கி வளர்த்தது என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமாவது அற்பவாதியின் உலகத்தைக் கண நேரம் பார்ப்பது பயன் தரும். மார்க்சின் மேதாவிலாசம் பூத்துச் செழித்த பின்னணியை அதிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்குக் குறைந்த பட்சமாக அந்த உலகத்தைப் பற்றிய நுண்சித்திரத்தையாகிலும் தருவது பயனுள்ளது.
ஜெர்மன் அற்பவாதம் பிரபலமானது; ஏனென்றால் ஹேய்னெயின் புண்படுத்துகின்ற கிண்டலும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் தப்ப முடியாத ஏளனமும் அதன் தோலை உரித்துக் காட்டியிருக்கின்றன. சுய திருப்தியடைகின்ற அற்பவாதத்தை, அது எந்தத் துறையில்-தனிப்பட்ட உறவுகளில், அன்றாட வாழ்க்கையில், விஞ்ஞானத்தில், கவிதையில், அரசியலில் அல்லது புரட்சிகரப் போராட்ட நடைமுறையில்-எந்த வடிவத்தில் தோன்றினாலும் மார்க்ஸ் அதைக் கண்டு மிகவும் அருவருப்படைந்தார்.
ஆனால் அற்பவாதம் எவ்விதத்திலும் ஒரு தேசியக் கண்டுபிடிப்பு அல்ல. அது குட்டிமுதலாளி வர்க்க சுய திருப்தி, போலியான மத ஆசாரம், இதயத்தில் கைக்கூலித்தனத்தை வைத்திருக்கின்ற முன்னாளைய கைக்கூலியின் அடிமைப் புத்தி ஆகியவற்றின் இயற்கையான விளைவு. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற “மனிதாபிமான” கோஷத்தை உபயோகித்து மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மக்களைப் பணத்துக்கு அடிமைகளாக்கி விட்டு அதை மனிதகுலத்தின் மாபெரும் “சாதனை’ என்று கூறுகின்ற சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவு. அற்பவாதம் பல்வேறு நாடுகளில் அவற்றின் வரலாற்று நிலைமைகளுக்கும் தேசிய குணாம்சத்துக்கும் ஏற்றவாறு வளர்ச்சியடைந்தது. ஜெர்மன் அற்பவாதம் அதற்கே உரிய மணத்தைக் கொண்டிருந்தது. அதற்கு விசேஷமான காரணங்கள் இருந்தன.
அக்காலத்தில் படாடோபமாகச் சொல்லப்பட்ட “ஜெர்மன் தேசிய இனத்தின் புனித ரோமானியப் பேரரசு’’ 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு “தன்னுரிமை” கொண்ட அரசுகளைக் கொண்டிருந்தது. இவற்றில் பெரிய அரசுகள் (பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியா), மிகச் சிறிய இராஜ்யங்கள், சிற்றரசுகள், எலேக்டரேட்கள், மற்றும் சுதந்திரமான பேரரசு நகரங்கள் இருந்தன. அவை அனைத்தும் கணிசமான அளவுக்கு அரசியல் சுதந்திரத்தைக் கொண்டிருந்தன; சக்கரவர்த்தி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு மட்டுமே கீழ்ப்படிந்தன; சில சமயங்களில் அந்த அதிகாரம் வெறும் கற்பனையாக மட்டுமே இருந்தது. இதன் விளைவாக எங்கும் உள்நாட்டுச் சண்டைகளும் குழப்பமும் கலவரமும் நிலவின.
ஆஸ்திரியப் பேரரசு
ஒவ்வொரு குட்டி அரசரும் தன்னுடைய குடிமக்களிடம் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அரசவை அதிகாரம் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தது. பிரெடெரிக் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியதைப் போல அவர்கள் எசமானருடைய கஜானாவை நிரப்ப வேண்டும், அவருடைய ‘அந்தப்புரத்துக்குப்’ போதுமான அழகிகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு முழு நடவடிக்கைச் சுதந்திரமும் எல்லா ஆபத்துக்களிலுமிருந்து முழுக் காப்பும் வழங்கப்பட்டிருந்தது.
பணம் திரட்டுகின்ற அற்பவாதிகள், முதலாளி வர்க்கத்தினர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம் என்ற நம்பிக்கையில் தாங்கள் ஒடுக்கப்பட்டு அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டார்கள்; தொடர்ச்சியான சமூகக் குழப்பத்தில் செல்வத்தின் வற்றாத ஊற்றுக்களைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மக்களோடு ஒன்று சேர்ந்திருந்தால் ஆங்கில முதலாளி வர்க்கம் 1640-1888ம் வருடங்களுக்கு இடையில் ஓரளவுக்குச் செய்ததைப் போல, அந்த சமயத்தில் பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருந்ததைப் போல பழைய ஆட்சியதிகாரத்தைத் தூக்கியெறிந்து பேரரசை மாற்றியமைத்திருக்கக் கூடும்.
ஆனால் ஜெர்மன் முதலாளி வர்க்கத்தினருக்கு அந்தச் சக்தி இல்லை, அதற்குரிய துணிச்சல் இருப்பதாக அவர்கள் ஒருபோதும் பாசாங்கு செய்யவுமில்லை. “விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு தயாரிப்பாளர்கள் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அரசாங்கம் மற்றும் மோசமான வர்த்தகத்தின் இரட்டைத் தாக்குதலை உணர்ந்தார்கள். பிரபுக்களும் சிற்றரசர்களும் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை எவ்வளவு கசக்கிப் பிழிந்தாலும் தங்களுடைய செலவுகள் அதிகரிப்பதற்குத் தகுந்தாற் போல வருமானங்களைப் பெருக்க முடியாது என்பதைக் கண்டார்கள். எல்லாமே மோசமாக இருந்தது.
கேதே
நாடு முழுவதும் பொதுவான அதிருப்தி நிலவியது. கல்வியறிவு இல்லை, பெருந்திரளான மக்களின் அறிவைத் தூண்டக் கூடிய சாதனங்கள் இல்லை, சுதந்திரமான பத்திரிகைகள் இல்லை, பொது மக்களின் கருத்து இல்லை, மற்ற நாடுகளுடன் விரிவான வர்த்தகம் கூடக் கிடையாது. ஒரு அற்பமான, கோழைத்தனமான, பரிதாபகரமான பெட்டிக்கடை நடத்தும் உணர்ச்சி மக்கள் அனைவரிடமும் நிலவியது.”(1)
கேதே எழுதிய ஃபாவுஸ்டு நாடகத்தில் “நாட்டின் நலிந்த நிலைமையைப்” பற்றி சக்கரவர்த்தியிடம் சான்சலர் தருகின்ற படப் பிடிப்புடன் இது மிகவும் பொருந்துகிறது. எங்கும் வேதனை, துன்பம், ஒரு தீமை மற்றொன்றை உருவாக்குகிறது என்று அவர் புகார் செய்கிறார்:
இந்தச் சிகரத்திலிருந்து நாடு முற்றும் எவர் பார்த்தாலும் அது சிதைந்த கனவே. ஒரு குறை அடுத்ததைப் படைக்கிறது; சட்ட விரோதச் செயல்களைச் சட்டமே தூண்டுகின்ற தவறுகளின் சகாப்தம்!…..
நான் கறுப்புச் சித்திரம் தீட்டினாலும்
அங்கே நடப்பவைக்கு இது மேல். (2)
நச்சாவியில் நிறைந்த உலகத்தை வானத்திலிருந்து விழுந்த இடியைப் போலத் தாக்கியது ஃபிரஞ்சுப் புரட்சி
திடீரென்று பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது: அழுத்தமான தூக்கத்திலும் தேக்க நிலைமை பின் நச்சாவியிலும் நிறைந்த உலகத்தை வானத்திலிருந்து விழுந்த இடியைப் போலத் தாக்கியது. நிராசையும் நம்பிக்கையற்ற நிலைமையும் மறைந்து எங்கும் உத்வேகம் பீறிட்டது. ஜெர்மனியின் மிதவாத முதலாளி வர்க்கத்தினர் “கட்டுமீறிய கலக’’ நடவடிக்கைகளைச் செய்யவும் துணிந்தார்கள். அவர்கள் மதுபான விருந்துகளில் Marseillaise ஐ (மர்சேல் கீதம்) உணர்ச்சியோடு பாடினர்கள்; பிரெஞ்சு தேசிய சபைக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்கள். ஜெர்மன் கவிஞர்கள் பிரெஞ்சு மக்களைப் போற்றிப் பாடினார்கள். புரட்சியைக் கோருகின்ற ஜாக்கொபின் ஆதரவாளர்கள் ஜெர்மனியிலும் தோன்றினார்கள்.
ஆனால் மேற்குத் திசையிலிருந்து வந்த இடி முழக்கத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த காதல் மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தது. ஜாக்கொபின்வாதிகளின் பயங்கர நடவடிக்கைகளைக் கண்டு ஜெர்மன் முதலாளி வர்க்கம் பீதியடைந்தது. தனியார் முயற்சிக்குச் சுதந்திரத்தைப் பற்றியும் கோமகன்களுடனும் பிரபுக்களுடனும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றியும் கனவு காணத் தொடங்கிய கெளரவமான அற்பவாதிகள் இப்பொழுது பிரான்சிலிருந்து வந்த செய்திகளைப் பேடித்தனமான நடுக்கத்துடனும் சீற்றத்துடனும் கேட்டனர். சமீப காலம் வரை பிரெஞ்சுப் புரட்சியைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் அதன் எரிச்சலான, வெறிபிடித்த எதிரிகளானார்கள்.
பின்னால் நெப்போலியன் தன்னுடைய இராணுவத்துடன் ஜெர்மானியப் பிரதேசங்கள் மீது படையெடுத்தார். புறநிலையாகப் பார்க்கும் பொழுது ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் அவர் புரட்சியின் பிரதிநிதி; ஏனென்றால் அவர் அதன் கோட்பாடுகளைப் பரப்பினார், அவர் பழைய நிலப்பிரபுத்துவ மரபுகளை ஒழித்து விட்டுத் தன்னுடைய – சந்தேகத்துக்கிடமில்லாமல் அதிக முற்போக்கான-சட்டங்களை நிறுவினார், உளுத்துப் போன பேரரசை ஒழித்தார், பெரிய அரசுகளை ஏற்படுத்தி சிறிய அரசுகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்.
ஆனால் ஜெர்மானியர்கள் நெப்போலியனிடம் குறிப்பிடத்தக்க முறையில் நன்றி பாராட்டவில்லை. அது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. இராணுவத் தோல்விகளில் அவர்களுடைய தேசிய கெளரவம் புண்படுத்தப்பட்டிருந்தது. “தகாத வழியில் அதிகாரத்தைப் பெற்ற நபர் நிலப்பிரபுத்துவத்தின் அழுகிப்போன (அற்பவாதியின் இதயத்துக்கு மிகவும் இனிமையான) சேர்ப்புகளை ஒரே காலுதையில் ஒழித்துவிட்டதும் மற்றொரு காரணமாகும். ஜெர்மன் அற்பவாதி தன் எசமானருக்கு விசுவாசம் காட்டுவதை நிறுத்துவதைக் காட்டிலும் மரணத்தையே மேலென்று கருதுவார்.
ஜெர்மனி “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையிலிருந்து மிகவும் முரட்டுத்தனமான முறையில் விழிக்கும்படி செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அந்த நிலைமைக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பை அது நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நெப்போலியன் தோல்வியடைந்த பிறகு அந்த வாய்ப்பு ஏற்பட்டது. எங்குமே பிற்போக்குவாதம் ஆட்சி செலுத்தியது. ஜெர்மன் சிற்றரசர்களில் ஒருவர் பிரெஞ்சுக்காரர்களின் புனிதமற்ற கரங்களால் வெட்டிவிடப்பட்ட இராணுவவீரர்களின் சடைகளை மறுபடியும் ஏற்படுத்துகின்ற அளவுக்குக் கூடச் சென்றார்.
அரசர்கள் மத்தியில் கூட முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கின்ற சிலர் இருந்தார்கள். வுர்டம்பர்க் அரசர் தன் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தார். நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சட்டம் வழி வகுத்தது. அந்த நோக்கத்துடன் அவர் சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகளை ஒன்றாகக் கூட்டினார், ஆனால் அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஜெர்மனியில் மட்டுமே நடைபெற முடியும். சமூகப் பிரிவுகளின் பிரதிநிதிகள் அரசரின் மிதவாத முற்போக்கை நிராகரித்தார்கள், “பழங்காலத்திய நல்ல சட்டங்களை’ மறுபடியும் ஏற்படுத்துமாறு கோரினார்கள்.
ஹேய்னெ எழுதிய சீனச் சக்கரவர்த்தியைப் போல புரட்சியிலிருந்து விடுதலையடைந்த மஞ்சூ பிரபுக்கள் “அரசியல் சட்டம் எமக்கு வேண்டாம், பிரம்படியே எமக்கு வேண்டும்” என்று முழங்கினார்கள்!’'(3)
இத்தகைய நிலைமைகளில் சற்றுத் தொலைவான தீவிரவாத அரசியல் இயக்கம் கூட எப்படித் தோன்ற முடியும்? மக்கள் தங்களுடைய நாட்டின் விதியில் தலையிடுவார்கள், தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவார்கள் என்று எந்த நம்பிக்கையாவது ஏற்பட முடியுமா?
ஹேய்னெ
ஜெர்மன் முதலாளி வர்க்கம் பிரஷ்ய முடியாட்சியிடம் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் ஒப்படைத்திருந்தது. நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் மத்தியப்படுத்தலே ஏற்படுத்தக் கூடிய ஒரே சக்தி அது மட்டுமே என்று கருதியது. அப்பொழுது நிலவிய உள்நாட்டுச் சண்டைகளுக்கும் மோதல்களுக்கும் இடையில் ஒற்றுமையான முதலாளித்துவ அரசு என்ற இலட்சியம் ஜெர்மன் அற்பவாதியின் தேசிய விருப்பார்வங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தெய்வமாக மாறியது. “அரசின் இந்த நிலைமை அரசாங்க எழுத்தரின் கடமையுணர்ச்சி-அதைப் போல வேறு எங்குமே பார்க்க முடியாது-ஜெர்மனியில் அரசைப் பற்றி நிலவுகின்ற எல்லா பிரமைகள் ஆகிய இரண்டையுமே விளக்குகின்றது.”(4)
ஜெர்மன் அற்பவாதி ஆட்சியில் இருப்பவர்களிடம் அடிமையாக இருந்ததோடு திருப்தியடையவில்லை; அவர் ‘தன்னுடைய இதயத்தில் வைத்திருந்த” கடவுளுக்கும் அடிமையாக இருந்தார். சமய சீர்திருத்தவாதம் மற்றும் புரோட்டஸ்டென்ட் இயக்கத்தின் பிறப்பிடம் ஜெர்மனி, அங்கே மதபக்தி மிகவும் பலமாக இருந்தது. அது “அறநெறித் தூய்மையையும்’’, கடவுள் பக்தியையும் கோரியது.
அடிமைத்தனம் (அதன் எல்லா வடிவங்களிலும்) மற்றும் போலி ஆசாரத்தைக் கொண்ட மதத்தின் முறைப்படியான வழித்தோன்றலாகிய அற்பவாதி தன்னுடைய குறுகிய நெற்றியில் இரண்டு பெற்றோர்களின் முத்திரையையும் தாங்கியிருக்கிறார், அவர் பல பாத்திரங்களையும் தாங்கி நிற்பவர்; எசமானராக அல்லது ஊழியனாக, சாதாரணக் கந்தலாடைக்காரனாக அல்லது மலினமான கருத்துக்களை விற்பனை செய்பவனாக அவர் இருக்க முடியும். எல்லா உதாரணங்களிலுமே தன்னுடைய மேலதிகாரியிடம் தன்னை வேலைக்கு வைத்திருப்பவர், அரசர் அல்லது கடவுளிடம்- மண்டியிடுவதும் அடிமையாவதும் அவரிடமுள்ள குறிப்பிடத்தக்கப் பண்பாகும். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வறட்டுக் கோட்பாடுகள் என்ற திரைகள் மறைக்கின்றன; அவர் தன்னுடைய இதயத்திலும் தலையிலும் விலங்குகளைச் சுமந்து செல்கிறார், ஆகவே அவற்றை மதிக்கிறார், சில சூத்திரங்கள் இல்லாமல், மேலே இருந்து வருகின்ற சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் இல்லாமல் அவரால் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை செய்யக் கூட முடியாது. சுதந்திரமாகச் செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவர் சங்கடமடைகிறார். அவருக்குத் தேர்வுச் சுதந்திரம் கொடுத்தால் அவர் சுதந்திரத்தை ஒருபோதும் தேர்ந்தெடுக்கமாட்டார்.
குறிப்புகள் :
(*) Marx, Engels, Collected Works, Vol. 3, Moscow, 1975, p. 134.
(1) மார்க்ஸ் எங்கெல்ஸ் தொகுதி நூல்கள் -ஆங்கிலத்தில் 6-வது தொகுதி – பக்கம் 17
(2) J. W. Goethe, Faust, Vol 2, the Second Part, Boston. and New York, 1871, pp. 10-11.
(3) The Poems of Heine, London, 1878, p. 175.
(4) Marx, Engels, Collected Works, Vol. 5, Moscow, 1976, p. 195.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், அ.முக்குளத்தில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்று, பொது அமைதியை சீர்குலைக்கும் ராம்கி நிறுவனத்தை மூடு!
திருப்பூர்,ஈரோடு மாவட்ட சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளைப் புதைக்கும் புதிய நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்!
பேரணி-பொதுக்கூட்டம்
நாள் : 25.05.2017 வியாழன்
நேரம் : மாலை 04.30 மணி
பேரணி துவங்குமிடம்:சந்தைகடை பஜார்,காரியாபட்டி
பொதுக்கூட்டம்: திருச்சுழி முக்கு ரோடு,காரியாபட்டி
தலைமை :
தோழர் சே.வாஞ்சிநாதன், சட்ட ஆலோசகர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு. மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம.
கண்டன உரை :
திரு.சொ.ராஜா, மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
திரு.ஜெயராஜ்,முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க(அம்மா) கட்சி
திரு. சண்முக சுந்தரம், மாவட்ட செயலாளர்,ம.தி.மு.க
திரு. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு. ராமசாமி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திரு.பவுன்ராஜ்,மாவட்ட செயலாளர்,புதிய தமிழகம்
திரு. முருகன், மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி
திரு.கலைவேந்தன்,கொள்கை பரப்பு செயலாளர்,தமிழ் புலிகள் கட்சி
திரு. பாலகங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க(புரட்சித் தலைவி)அம்மா கட்சி
சிறப்புரை :
திரு. தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்,திருச்சுழி விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க
நன்றியுரை :
திரு.தங்கப்பண்டியன்,ஒருங்கிணைப்பாளர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு
அன்பார்ந்த பொதுமக்களே!
விருதுநகர் மாவட்டம்,திருச்சுழி வட்டம்,அ.முக்குளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ராம்கி நிறுவனம்.அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நச்சுப் புகையை வெளியிடும் ராம்கி நிறுவனத்தால்,இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதில், நூறுக்கும் மேலானோர் இறந்துவிட்டனர்.இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைக்கு அலைந்து கொஞ்சம்,கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். டி.வேப்பங்குளத்தில் மட்டும் ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்திருக்கிறார்கள்.5,10 வயது குழந்தைகள் கூட டயாலிசிஸ் செய்து வருகிறார்கள்.கர்பப்பை பாதிப்பு,மலட்டுத்தன்மை,கேன்சர் எனப் புதுப்புது நோய்கள் அ.முக்குளத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சீரழித்து வருகின்றன.விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க,எடுக்க மறுக்கிறார்கள்.நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் ஊரைக் காலி செய்து விட்டன.
ராம்கி நிறுவனத்தின் பின்னணி என்ன?
ராம்கி குரூப் என்ற பெயரில் பல தொழில்கள் நடத்திவரும் ஆந்திராவைச் சேர்ந்த அயோத்ய ராமிரெட்டி என்ற நபருக்குச் சொந்தமானது ராம்கி நிறுவனம்.தற்போது ஆந்திராவில் நடந்து வரும் 143 கோடி நில மோசடி ஊழல் வழக்கில், சி.பி.ஐ. ராமிரெட்டியை பிரதான குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.இந்த ஊழல்பேர்வழி கோடி,கோடியாகச் சம்பாதிக்க மக்களைப் பலி கொடுக்கிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகமும்.
அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ற துறையே ராம்கியின் கீழ்தான் செயல்படுகிறது. ராம்கி-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சேர்ந்து நிகழ்த்தும் இந்த அநீதிக்கு வருவாய், பொதுப்பணி, சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் துணை நிற்கின்றன.
அரசு தரப்பின் செயல்பாடுகள் என்ன?
கடந்த 2013-ஆம் ஆண்டு கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை ஆய்வு செய்து, பாதிப்புகள் இருப்பதை உறுதிசெய்து கம்பெனியை மூடி சீல் வைத்தனர்.அதன்பின் கலெக்டர் உத்தரவின்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கம்பெனியை சேலத்துக்கு மாற்றப் பரிந்துரைத்தது.கடந்த 2015 ஏப்ரல் 7-ஆம் தேதி திருச்சுழியில் நடந்த சமாதானக் கூட்டத்தில் கம்பெனியை கு.வி.ச பிரிவு 133-ன் கீழ் மூட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.பின்பு ஏப்.9,2015-ல் அருப்புக்கோட்டையில் டி.ஆர்.ஓ முன்பு நடந்த கூட்டத்தில்,புதிய கம்பெனி திறக்கப்படாது, பழைய கம்பெனியை மூடுகிறோம் என்றனர்.
ஆனால் சமீபத்தில்(12.05.2017) அருப்புக்கோட்டையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் புதிய கம்பெனிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி வழங்கியுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சொல்கிறார். மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்ட பனியன் கம்பெனி, சாயப்பட்டறைக் கழிவுகளைச் சுத்திகரித்து வரும் அழிக்க முடியாத கழிவுகளைக் கொண்டுவந்து, அ.முக்குளம் அருகே 200 ஏக்கர் நிலத்தில் புதைக்கப்போவதாகச் சொல்கின்றனர்.
நான்கு ஆண்டுகளாய் பழைய கம்பெனியை அகற்றச் சொல்லி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல புதுக் கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளனர் அதிகாரிகள்.இந்த அதிகாரிகளை நம்ப முடியுமா? மக்களை, கிள்ளுக் கீரையை விடக் கேவலமாக மதித்து, புதிய கம்பெனியை அனுமதிக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் வாழ்வுரிமை உண்டு.அந்த வாழ்வுரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை.தங்களது அரசியல்சட்டக் கடமையை மீறும் அதிகாரிகள், விதிகளை மீறி மக்களைக் கொன்று, மலடாக்கும் கம்பெனிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்
ராம்கி ஓர் சட்டவிரோத நிறுவனம்
ராம்கி நிறுவனம் அடிப்படையில் ஓர் சட்டவிரோத நிறுவனம். பஞ்சாயத்தில் உரிய அனுமதி பெறாமல், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மக்கள் குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சுற்றுச் சூழல் சட்டம் என ஒன்று இருப்பதையே மதிப்பதில்லை. பணம், செல்வாக்கை வைத்து எதையும் சாதிக்கலாம் எனக் கருதுகிறார்கள். தன்னிடம் வேலை செய்து நச்சுப் புகையால் இறந்தவர்களுக்குக்கூட இழப்பீடு கொடுப்பதில்லை. 14 பஞ்சாயத்துகள் ராம்கியை மூடக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதை யாரும் மதிக்கவில்லை.
என்ன செய்யப் போகிறோம்?
அரசு அதிகாரிகள் கம்பெனிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். போலீசு,அதிகார பலம் கம்பெனிக்கு உள்ளது. நமக்கோ மக்கள்தான் பலம். 20 கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு போராட வந்தால் ஒரே வாரத்தில் கம்பெனியை மூடலாம். தமிழகம் முழுக்க போராடியவர்கள் ஜெயிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் எல்லா ஊரிலும் பெண்களால் நொறுக்கப்படுகிறது. பெண்கள் முன்னே வரும்போது அரசு பணிகிறது. நாம், நம் குடும்பம், நமது தலைமுறை வாழ வேண்டுமானால் போராடியே தீர வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு மக்கள் ஆதரவைப் பெற்றது. இரண்டு நாட்களிலும் போராட்டம் பெரும் வெற்றியை பெற்றது. போராட்டத்தை முடக்க அரசு மேற்கொண்ட சதி வேலைகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிலாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், நிர்வாகத்தால் கையாடல் செய்யப்பட்ட தொழிலாளர் சேமிப்புத் தொகையை திரும்ப ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. மற்றொரு புறம், போராடிய தொழிலாளர்களிடம் அரசும் – நீதிமன்றமும் எஸ்மா சட்டத்தைக் காட்டி மிரட்டியுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் முன்பை விடக் கூடியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டும் தொழிலாளர்களின் இணையற்ற உழைப்பால் வளர்ந்துள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் முக்கியமாக பேசப்பட்ட விசயம் போக்குவரத்துத் துறையின் கடன் -நஷ்டம் தான். இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதும் அதற்கான தீர்வை முன்வைப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை.
தொழிலாளர்களுக்கு சொந்தமான PF, பென்சன் உள்ளிட்ட சேமிப்பு தொகை சுமார் 6700 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கு வெளிப்படையான காரணம் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல் தான் என்பது ஊரறிந்த உண்மை. மறைக்கப்படும் மற்றோர் உண்மையும் உள்ளது. தொழிலாளர்களின் பணத்தை ஏன் அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தினார்கள்? ஊழல் கடன் – நட்டத்திற்கான காரணங்களை ஏன் தடுக்கப்படவில்லை.
இந்த நிலைமை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. பல ஆண்டுகள் பல்வேறு வழிவகையில் நடந்தது. பேருந்து ஒன்று விபத்தில் சிக்கினாலோ அல்லது கண்ணாடி உடைந்தாலோ ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் லைசென்ஸ் மீதும் சம்பளத்திலும் கை வைக்கின்றனர் அதிகாரிகள். அப்படியிருக்க ‘கட்டுபாடுள்ள’ கழக நிர்வாகம் நஷ்டமடைந்து, கடன் ஏற்பட்டு, தொழிலாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு ( ஊழல்) செய்யப்படும் வரை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? இந்தக் கேள்வியில் தான் கழகத்தொழிலாளர்கள் பிரச்சனைக்கான தீர்வு அடங்கியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யக் கூடாது, அந்த நோக்கிலான தொழில்களை நடத்தக் கூடாது, மக்கள் நல அரசு என்ற கொள்கையைக் கைவிட வேண்டும், அனைத்து துறைகளையும் அரசு தனியார்மயமாக்க வேண்டும் என்பது தான் உலக வங்கியின் உத்தரவு. இதனை ஏற்று தான் காட்-டங்கல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டு நடைமுறைபடுத்தி வருகிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் போது, பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டது. மாநில அரசுகளும் அதே பாதையில் செயல்பட்டன.
பெரியமரத்தை வெட்டி சாய்க்க அதன் கிளைகளை முதலில் வெட்டி கழிப்பது போல இந்தத் துறைகளையும் பல கட்டமாக வெட்டி சுருக்கின. இதில் முக்கியமான அம்சம் நட்ட கணக்கு காட்டுதல். இந்த நட்டக் கணக்கு பார்முலா பயன்படுத்தித்தான் மார்டன் பிரட், பால்கோ, VSNL உட்பட ஏராளமான பொது மற்றும் அரசுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. சேலம் உருக்காலையை தனியாரிடம் தாரை வார்க்க சதிகள் நடக்கிறது.
நட்ட கணக்குக் காட்ட ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் காட்டப்பட்டுள்ளன; பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் பொய்யாவை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம், அவர்களது செயல்பாடு மந்தம், உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை குறைந்து விட்டது, அவற்றின் தரம் தனியாருடன் போட்டி போடும் வகையில் இல்லை போன்றவை தான் நட்டத்திற்கு காரணம் என பொய்யான குற்றச்சாட்டுகளை சதித் தனமாக தயார் செய்து காட்டின.
அதே போல போக்குவரத்து துறையும் நட்டக் கணக்கு காட்டினர். மேற்கண்ட பல்வேறு காரணங்களை போக்குவரத்துத் துறை நட்டத்திற்கு காரணமாக பல்வேறு காலங்களில் கூறப்பட்டுள்ளன என்றாலும் இவையெல்லாவற்றையும் விட அரசே முன்வைக்காத காரணம் ஒன்று உண்டென்றால் அது ஊழல் – முறைகேடுகள் தான். அமைச்சர்கள் – அதிகாரிகளால் செய்யப்பட்ட இந்த ஊழல் – முறைகேடுகளைத் தடுக்காமல், குறைந்தபட்சம் முறைபடுத்தாமல் அப்படியே கைவிட்டதற்கு இந்தத் தனியார்மயமாக்க சதிதான் முக்கியக் காரணம். ஊழலும் தனியார்மயமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
அனாமத்தாக கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர். அடுத்து, அரசு போக்குவரத்து கழக நஷ்டத்திற்கு மற்றொரு வழியை அகலத் திறந்து விட்டுள்ளது, தமிழக அரசு . அதாவது நல்ல வருமானமுள்ள வழித்தடங்களை ஆம்னி பஸ், தனியார் பஸ், மினி பஸ் உள்ளிட்ட 7500 பஸ்களை இயக்கி தனியார் இலாபம் ஈட்டிட அரசே துணை நிற்கிறது. இந்தத் ‘தனியார்’களில் அமைச்சர்கள் அவர்களது உறவினர்கள் அல்லது கூட்டாளிகளும் பங்காளிகளும் அடங்குவர். அரசு போக்குவரத்துத் துறை நட்டத்தைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட ஒவ்வொறு முறையும் பல கோடி ரூபாயை கொள்ளைக்காரர்கள் போல இந்த முதலாளிகள் தான் சுருட்டிக்கொண்டனர். அல்லது அவர்கள் சுருட்டுவதற்கு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி உயிருக்குப் போராடி வரும் போக்குவரத்துத் துறையின் உயிர் மூச்சை நிறுத்தி விட முடிவு செய்துள்ளதுதான் மோடி அரசின் சாதனை. பன்னாட்டு பஸ் கம்பெனிகளே வழி தடத்தை தீர்மானிக்கலாம், பேருந்துக் கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம், FC பார்த்துக் கொள்ளலாம், டிரைவிங் லைசன்ஸ் வழங்கலாம் என ஒட்டு மொத்தப் பொதுப் போக்குவரத்தையே கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் புதிய போக்குவரத்து சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது,
போக்குவரத்துத் தொழிலாளர் மீதான அடக்கு முறை அதிகரிப்பு, உரிமைகள் பறிப்பு, பேருந்து கட்டண உயர்வு, ஓட்டைப் பேருந்துகளால் அவதி – மரணம், விழாக்கால கொள்ளை போன்றவை இந்தப் பின்னணியில் உள்ளன. போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவையும் ஊடகங்களின் எதிர்-பொய் பிரச்சாரத்தையும் இந்த வகையில் உணர வேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான மெரினா எழுச்சிக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் இதற்கு காரணம்.
ஜல்லிக்கட்டுக்காக எழுந்து நின்ற தமிழகம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காகவும் எமுந்து விடக் கூடாது என அவர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை நிரந்தரமாக்குவோம்!
கடந்த 21.05.2017 அன்று கோவை ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் பேராசன் காரல் மார்க்சின் 200 -ஆம் ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் தெருமுனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக முன் அனுமதி கேட்டு காவல் துறையிடம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையானது, நமது தெருமுனைக் கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது.
காரல் மார்க்சைப் பற்றி பேசினால் மக்கள் கம்யூனிசத்தின் பால் அணிதிரண்டு வந்து விடுவார்கள் என்று பயமா? அப்படிப் பார்த்தால் மார்க்ஸ் குறித்த நூல்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், படங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. இவற்றையெல்லாம் தடை செய்வார்களா? உலக மனித குலத்தின் விடுதலைக்கு பாடுபட்ட ஒரு மகத்தான தலைவரைப் பற்றி பேசினாலே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் இது அடிமை நாடு இல்லாமல் வேறு என்ன? இந்தத் தடையைத் தாண்டி தெருமுனைக் கூட்டம் நடத்த உள்ளோம். அதனடிப்படையில் வருகின்ற 28.05.2017 அன்று தெருமுனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனவரும் திரண்டுவரக் கோருகிறோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம். கோவை – 94879 16569.
கீழடி அகழாய்வு முடமாக்கப்பட்டுவிட்டது ! கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர்நாகரிகம் புதைக்கப்படுகிறது என்ன செய்யப்போகிறோம்?
அரங்கக் கூட்டம்
நாள் : 28.05.17 ஞாயிறு, மாலை 5.00 மணி இடம் : செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.
தலைமை : தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
சிறப்புரை : முனைவர் சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர்
தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர்
மதுரைக்கு அருகில் கீழடியில் நடந்துள்ள அகழாய்வு மூலம், சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 110 ஏக்கரில் வெறும் 50 செண்ட் பரப்பளவில் நடந்துள்ள அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு.1000-ல் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
வரிசை வரிசையாகக் கால்வாய்கள், பெரிய தொட்டிகள், தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள், உலைகள், வட்டக்கிணறுகள், மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் என முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் தான் கிடைத்திருக்கிறது.
சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மண்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டிருந்தன. ஆனால் கீழடியில் கிடைத்த மண்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. தொழில் பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டவை நாமெல்லாம் பெருமைப்படத்தக்க மிக அரிய பொக்கிஷமாகும்.
ஆகவேதான் கடந்த டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய கீழடி அகழாய்வைப் புதைத்து சமாதி கட்டப் பார்க்கிறது மோடியின் பாஜக அரசு. ஏன்? ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கனவே நிருபிக்கப்பட்டுள்ளது. தற்போது கீழடி அதை மேலும் நிறுவும் விதமாக இருக்கிறது. சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் பாஜக காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது.
இந்து-இந்தி-இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?
அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.
இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.
தற்போது முக்கியமான அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இந்தியாவின் நான்கு இடங்களில், கீழடி தவிர மற்ற மூன்று இடங்களிலும் கண்காணிப்பாளர்கள் மாற்றப்படவில்லை. ஏனென்றால் அகழாய்வு, ஆராய்ச்சியில் அதே குழுவினர் தொடர்ந்தால்தான் சிறப்பாகவும், தொடர்ச்சி கொடுத்தும் நிறைவேற்ற முடியும். மூன்றாண்டுக்கு ஒருமுறை பணி மாறுதல் என்ற விதி இந்த ஆராய்ச்சிக்கு பொருந்தாது. அப்படியிருக்கும்போது அமர்நாத் இராமகிருஷ்ணாவை மாற்றியதன் மூலம் கீழடி அகழாய்வை முடமாக்கிவிட்டனர். ஆனால் இது வழக்கமானது தான் என பச்சையாகப் புளுகுகின்றனர். அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளிக்கின்றனர் மத்திய அமைச்சர்கள்.
சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்திற்கெதிராக வரலாறு நெடுகிலும் எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது தமிழகம். அதன் சமீபத்திய வெளிப்பாடு தான் ஜல்லிகட்டு தடையை எதிர்த்த தமிழக மக்களின் தை எழுச்சிப் போராட்டம். அதன்பிறகும் இந்தித் திணிப்பு, விவசாயிகளுக்கான நிவாரணம், நீட் தேர்வு என தமிழகம் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தை, நமது பாரம்பரியத்தை மதிப்புமிக்க பொக்கிஷத்தை புதைத்து அழித்துவிட முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ், பாஜக காவிக்கும்பல்.
கீழடியில் கண்டறியப்பட்டது நமது பெருமைமிக்க பாரம்பரியம், அரிய பொக்கிஷம் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்! கீழடி அகழாய்வை பாதுகாக்கவும், கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா குழுவே கீழடி ஆய்வில் தொடரவும், அகழாய்வில் கண்ட பொருட்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கவும் எழுச்சி மிக்க போராட்டத்தை உருவாக்குவோம்! வாரீர்!!
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை, தொடர்புக்கு – 97916 53200.
விப்ரோ, காக்னிசன்ட் (சி.டி.எஸ்) நிறுவனங்களில் நடந்து வரும் ஆட்குறைப்பை கண்டித்தும், ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு-வில் இணைய அறைகூவியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மே 18-ம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்களும், பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்களும் தவிர பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் உரையாற்றினார். “ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. எனவே, இந்தப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடும் அவசியம் இருக்கிறது.
ஐ.டி துறையில் ஊழியர்கள் பிற துறைகளைப் போல வலுவான யூனியன் இல்லாத நிலை உள்ளது. ஊழியர்கள் தனித்தனியாக பிளவுபட்டு இருக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக ஐ.டி ஊழியர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று பிற துறை பிரச்சனைகளுக்குக் கூட தெருவில் இறங்கி போராட முன்வந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரையும் யூனியனாக திரட்டுவதற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று அவர் பேசினார்.
வாகன ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வீகன் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றியும் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மூலம் போராடி வென்ற உரிமைகள் பற்றியும் பேசினார்.
பி.பி.சி வேர்ல்ட், நியூஸ் 18, ராஜ் நியூஸ், சன் நியூஸ், கலைஞர் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து செய்தி சேகரித்தனர். பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகமும், சட்ட ஆலோசகர் சக்தி சுரேஷூம் ஊடகங்களுக்கு நேர்முகம் அளித்தனர். பெங்களூருவைச் சேர்ந்த லைவ் மின்ட் பத்திரிகையாளர் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் ஒருவரிடம் பேசி நேர்காணல் பதிவு செய்து கொண்டார்.
உரைகளுக்கு நடுவே ஐ.டி துறை ஆட்குறைப்பை கண்டித்தும், அரசை தலையிட கோரியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காக போலீஸ் அமைத்திருந்த தடுப்பரண்கள் ஆர்ப்பாட்ட தட்டிகளை கட்டுவதற்கு பயன்பட்டன. 20-க்கும் மேற்பட்ட அத்தகைய தட்டிகள் கட்டப்பட்டு, ஆர்ப்பாட்டத்தை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களுக்கு தாம் ஏந்தியிருந்த செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஐ.டி ஊழியர் ஒருவர் தெரிவித்த கருத்தின் தமிழாக்கம்
“பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் பு.ஜ.தொ.மு நன்றாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. தொழிலாளர் துறைக்கு மனு கொடுக்கப் போகும் போது கூட பல்வேறு நிறுவனங்களிலிருந்து சில உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். சி.டி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர்கள் இணை ஆணையரை சந்திக்கச் சென்ற போது ஒரு ஊழியர் மட்டுமே தனது குறையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இப்போது நடப்பதெல்லாம் நமக்குத்தான் நடக்கிறது என்பதையும், அதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இதை நிலைமை தொடர்ந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்குறைப்புகளுக்கு எதிராக போராடுவது குறித்து பு.ஜ.தொ.மு செய்துள்ள பிரச்சாரம், கூடிய விரைவில் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.”
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு, தொலைபேசி : 90031 98576 இணையம் : new-democrats.com மின்னஞ்சல் combatlayoff@gmail.com
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டு ஆக முடியும்.
–வி. இ. லெனின்
உங்கள் கைகளில் தவழும் புத்தகம் கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் சரிதம் அல்ல, அல்லது மார்க்சியத் தத்துவத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூலும் அல்ல. இப்புத்தகம் மார்க்சியத்துக்கு ஒரு வகையான “அறிமுகம்” என்று கூறலாம். வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமாக மனிதகுலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கின்ற நூல் இது.
இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிக் குமுறல்கள் என்ற உலகத்துக்குள், அவருடைய நெருப்புப் போன்ற கருத்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்வதற்கு, இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார், ஏனென்றால் ஒரு மேதையுடன் ஆன்மிக ரீதியில் கலந்துறவாடுவதற்கு அவருடைய தத்துவத் தேடல்களின் பாதையைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அதிக வளமான சாதனம் வேறில்லை.
மார்க்சியம் வறட்டுக் கோட்பாடு அல்ல, அது செயலுக்கு வழிகாட்டி என்பது பிரபலமான உண்மையாகும். எனவே உருப்போட்டு ஒப்பிக்கப்பட வேண்டிய, “முன்னரே தயாரிக்கப்பட்ட” உண்மைகளின் தொகுப்பு என்றபடி இல்லாமல் மார்க்சியத்தை அதன் வளர்ச்சியில், இயக்கத்தில், நடவடிக்கையில் ஆராய வேண்டும் என்பது பெறப்படும்.
நாம் மார்க்சியத்தின் இதயத்துக்குள் நுழைவது எப்படி? உலகத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு அது வழங்கியுள்ள பங்கை நாம் மதிப்பிடுவது எப்படி? மார்க்சியத்துக்கு முந்திய தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரப் போதனைகளிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவது எது? இதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியதத்தின் மூலவர்கள் நடந்து சென்ற பாதையை நாம் சிந்தனையில் பின்பற்றிச் செல்ல வேண்டும். புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்ற படைப்பாற்றல் மிக்க சிந்தனையின் அனுபவத்தையும் கடுமுயற்சிகளையும் நாம் ‘மீண்டும் செய்வது’ இதற்கு அவசியம். எல்லாவற்றையும் காட்டிலும், மார்க்சியத்தின் பிறப்பிடமாக இருந்த மனித சமூகப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் தன்வயமாக்குவதும் விமர்சன ரீதியில் மறு பரிசீலனை செய்வதும் மிக அவசியம். இதைச் செய்வதற்கு மார்க்சியத்தைத் தத்துவ ரீதியாகவும் செய்முறையாகவும் கையாள்வதற்குரிய திறமையை நாம் பெறுவதும் அவசியம்.
இது மிகவும் கடினம் என்பது உண்மையே. இதற்குச் சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். ஆனால் “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.”( 1)
சுலபமான பாதைகளும் உண்டு; ஆனால் அவை பொதுவாக மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்துவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முடிகின்றன. அவை ஒரு பக்கத்தில் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளைத் தயாரிக்கின்றன, மறு பக்கத்தில் ‘ஏமாற்றத்தைத்’ தோற்றுவிக்கின்றன. இதை மனத்தில் கொண்டு தான் லெனின் கம்யூனிஸ்டு இளைஞர் சங்கத்தின் மூன்றாவது காங்கிரசில் உரையாற்றிய பொழுது பாடபுத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்காக எழுதப்பட்டிருக்கும் பிரசுரங்களில் உள்ள முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் கோஷங்களின் உதவியுடன் மார்க்சியத்தை (கம்யூனிசத்தை) அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.
மார்க்ஸ் “மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினார், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டோரால் அல்லது முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் வரையறுத்துக் கொடுத்தார்.” (2)
காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்
மார்க்ஸ் மார்க்சியத்துக்கு வந்த பாதை எது, மனித மேதாவிலாசத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்பினால், மார்க்சியத்தை அதன் கரு நிலையில், அதன் தயாரிப்பு நிகழ்வுப் போக்கில் புரிந்து கொள்வதற்கு இதை அறிய விரும்பினால் நாம் இயற்கை யாகவே மார்க்சின் ஆரம்ப கால நூல்களுக்கு அவருடைய வாழ்க்கை மற்றும் பணியின் துவக்கக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். மனிதகுலத்துக்குப் புதிய கண்களே” வழங்கிய, அதற்கு முன்னால் புதிய வானங்களைத் திறந்து காட்டிய தத்துவஞானப் புரட்சியை மார்க்ஸ் எப்படி நிறைவேற்றினார்? இதற்கு எத்தகைய தனிப்பட்ட, மனித குணாம்சங்கள் அவசியமாக இருந்தன? மார்க்சின் தத்துவஞானத்தையும் வாழ்க்கையையும் பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு இக்கேள்விகள் மிக முக்கியமானவை என்பது தெளிவு.
ஒரு மனிதனுடைய நடவடிக்கை அவனை விளக்கிக் காட்டும் என்பது உண்மையானால் இது மார்க்சுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால் அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரே குறியும் நோக்கமும் கொண்ட மனிதராக இருந்தார்.
மார்க்சின் புரட்சிகரத் தத்துவஞானம் வளர்ச்சியடைந்த பொழுது அவருடைய ஆளுமையும் உருவாயிற்று. அவருடைய ஆன்மிக சோதனைச் சாலையின் மிக ஆழமான இடங்களை அறிந்து கொள்வதற்கு, அறிஞர், புரட்சிவாதி, குடிமகன் என்ற முறையில் அவருடைய தார்மிகப் பண்பை வெளிக்காட்டுவதற்குரிய திறவுகோல் அவருடைய நூல்களை ஆராய்ச்சி செய்வதே. ஆகவே இப்புத்தகத்தில் மார்க்சின் ஆளுமையின் வளர்ச்சியும் மார்க்சியத்தின் வளர்ச்சியும் ஒரே நிகழ்வுப் போக்காக ஆராயப்படுகிறது.
விஞ்ஞான கம்யூனிசத்தின் மூலவருடைய வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் ஒரு சிறு காலப் பகுதியில், 1835க்கும் 1844க்கும் இடையிலுள்ள காலப் பகுதியில், அதாவது அவர் பள்ளிக் கல்வியை முடித்ததிலிருந்து முதல் நூல்கள்-அவர் பொருள்முதல்வாதத்துக்கும் விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் மாறிவிட்டது இவற்றில் நிரூபணமாகின்றன – எழுதிய வரையிலுள்ள காலப் பகுதியில் இப்புத்தகம் அதிகமான கவனம் செலுத்துகிறது.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பத்து வருடங்கள் அவ்வளவு முக்கியமாகத் தோன்றுவதில்லை. ஆனால் இக்காலப் பகுதியில் ஒரு குட்டிமுதலாளி வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவன் தன்னுடைய பல்துறைப் புலமை கொண்ட ஆளுமையின் வளர்ச்சியில் புதிய சிகரங்களை எட்டியபடியால் அவர் தன்னுடைய காலத்தையும் தன் காலத்தைச் சேர்ந்தவர்களையும் வெகுதூரத்துக்குப் பின்னால் விட்டுவிட்டு முன்னே போய்விட்டார்.
இளைஞரான மார்க்சின் ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிய நுணுக்கமான அல்லது முழுமையான சித்திரத்தை வரைவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. அவருடைய ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் வளர்ச்சியடைந்த முக்கியமான திசைவழிகளைக் குறிப்பிடுவது இந்தச் சிறு நூலுக்குப் போதுமானதாகும். மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி வாசகரை ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம்.
செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்
இளம் வாசகர் தனக்கு அறிமுகமில்லாத பெயர்கள், கருத்தினங்கள், பிரச்சினைகளை இந்நூலில் சந்திக்கக் கூடும்; அவர் எல்லாவற்றையும் உடனடியாகப் புரிந்து கொள்வதும் இயலாதிருக்கலாம். ஆனால் அவரை சிந்தனை செய்யத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம்; பிரச்சினைகளை எழுப்பி அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம். இங்கே மூல நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இவை மேலும் சிந்திப்பதற்குப் பேருதவியாக இருக்கும். இங்கே எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளை சுயேச்சையாக ஆராய்வதற்கு வழிகாட்டியாக உதவும்.
இந்நூலைப் படித்த பிறகு மார்க்சின் கருத்துக்களின் உலகத்தில் இன்னும் ஆழமாகப் பயில்வதற்கு வாசகர் விரும்பினால், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில், கான்ட் மற்றும் ஃபிஹ்டே, ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ் ஆகியோருடைய தத்துவஞானத்துக்கும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ரிக்கார்டோவின் நூல்களுக்கும் ஷேக்ஸ்பியர் மற்றும் பல்ஸாக், கேதே மற்றும் ஹேய்னெயின் இலக்கியங்களுக்கும் வாசகர் திரும்பினால் மார்க்சியம் எப்படித் தோன்றியது, அதில் என்ன இருக்கிறது என்பனவற்றைப் புரிந்து கொள்கின்ற பாதையில் அவர் முன்னேறிக் கொண்டிருப்பார் .
இங்கே நாம் கலை, இலக்கியத்தை ஏன் குறிப்பிடுகிறோம்? மார்க்சியத்தின் வளர்ச்சியில் தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரக் கருத்துக்கள் மட்டுமின்றி கலை-அழகியல் கருத்துக்களும் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பது மெய்யாகும். சுதந்திரத்தை நேசிக்கின்ற கலை உலகமே இளைஞரான மார்க்சின் கருத்துக்கள் மலர்ந்த முதல் கல்விக்கூடமாகும். கலை அவரை யதார்த்தத்தின் பால் விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு செய்தது, தன்னிறைவுடைய அற்பவாதத்தைக்(2) கண்டனம் செய்யுமாறு பணித்தது. மார்க்சின் கலையுணர்வின் வளர்ச்சி அவருடைய அரசியல் உணர்வின் வளர்ச்சியுடன் இணைந்தது. அற்பவாதத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அதைப் பேணி வளர்த்த சமூகத்தின் அடிப்படைகளைப் பற்றிய விமர்சனமாயிற்று.
கலையில் மார்க்சுக்கு ஏற்பட்டிருந்த தீவிரமான ஈடுபாடு, தொடக்க காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டிருந்த கலா ரசனை, கவிதையிலும் உரைநடையிலும் அவர் செய்த சோதனைகள் இவை அனைத்தும் பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களின் மீது மிகச் சிறப்பான தாக்கத்தைக் கொண்டிருந்தன. அவருடைய எழுத்துக்கள் ஆழமான விஞ்ஞானச் சிந்தனையை மேதா விலாசம் நிறைந்த கலா வடிவத்துடன் இணைத்தன.
குறிப்பு :
(1) Karl Marx, Capital, Vol. 1, Moscow, 1977, p. 30. (2) வி. இ. லெனின், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 11, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம், 1982, பக்கம் 87
(2) அரசியல் மற்றும் சமூகத் துறையில் குறுகிய மலட்டுத் தனமான மனோபாவத்தைக் கொண்டவர்கள் அற்பவாதிகள் (Philistines), அவர்களுடைய சித்தாந்தம் அற்பவாதம் எனப்படும். – மொ-ர்.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
ஒகேனக்கல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஊட்டமலை எனும் சிற்றூர். கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இந்த ஊரில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பரிசல் ஓட்டுவது, மீன்பிடிப்பது, ஆடு, மாடுகள் மேய்ப்பது/வளர்ப்பது போன்றவைகள்தான் இவர்களில் பெரும்பாலானோரின் முதன்மையான தொழிலாகும். போலீசின் அடக்குமுறை கடுமையாக உள்ளதால், மக்கள் நம்மிடம் பேசவே பெரிதும் தயங்கினர்.
மதிய வேளை சுமார் 2:30 மணியளவில் ரேசன் பொருட்களை வாங்குவதற்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசிய போது….
“வாங்கப்பா எங்க துக்கத்தை கேட்க நீங்களாச்சு வந்தீங்களே. இங்க மொத்தமா 700 குடும்பமிருக்குப்பா, எங்க பொழப்பே இங்க வர்ற டூரிஸ்ட்ங்கள நம்பிதாம்பா. நாங்க இங்க வந்து 70 வருஷமிருக்கும்பா, மேட்டூர் டாம் கட்டுனப்போ அங்கருந்து இந்த ஊருக்கு தொரத்தி விட்டாங்க. ஆறுதான் எங்க தொழிலே. அதான் இந்த இடம் எங்களுக்கு செட்டாச்சு. எட்டு மாசத்துக்கு முன்னாடி பரிசல்காரங்க மேல போலீசுகாரங்க பொய் கேஸ் போட்டாங்க அதுக்காக நாங்க போராடுனோம். அப்பருந்தே எங்க வாழ்வாதாரத்த திட்டமிட்டு அழிக்கிறாங்கப்பா. சுற்றுலாக்காரங்கள அப்பப்போ விடமாட்றாங்க, பரிசல் ஓட்ட விட மாட்றாங்க கேட்டா நாங்கதா தண்ணியை அழுக்கு பண்ணீருவோம்ன்றாங்க.
அப்ப நடந்த போராட்டத்துல கடுமையான அடக்குமுறைப்பா, பொம்பளங்களெல்லாம் அசிங்கசிங்கமா கேட்டாங்க, எங்க மேல பொய் கேசா போட்டு தள்ளுனாங்க. அதுலருந்தே எங்களை துரத்தனும்னு குறியா இருக்கானுங்க. ரெண்டு வருஷமா இந்த நெலமதாம்பா. முதல்ல தண்ணீல சாக்கடை கலந்து வந்துச்சு, வேற வழியில்லாம அதயும் குடுச்சோம் இப்பத்திக்கு அந்த பிரச்சனை தீந்துடுச்சு. ஆனா நாங்க எத நம்பி இங்க வந்தோமோ அந்த வாழ்க்கையே இப்போ எங்களுக்கு இல்லன்னு ஆயிட்டிருக்கு…குடிக்க தண்ணி கெடச்சுருச்சு ஆனா ஊட்டுல பொங்க வெக்க வழியில்லாம போயிடுச்சுப்பா… இந்த ரேசன் அரிசிய நம்பித்தான் எங்க எல்லாரோட வாழ்க்கையுமே ஓடிக்கிட்டிருக்குப்பா…
இங்கருந்து எங்களுக்கு தேவையான பொருள் ஏதாவது வாங்கனும்னா பென்னாகரம் போவேண்டியிருக்குப்பா. தண்ணியில்லாதனால டூரிஸ்ட்ங்க இல்லை, மீனில்லை பரிசல் இல்லை போட்ட கடைகளும் ஓடலை. எங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம் ஊரை விட்டு கல் ஒடைக்க போறாங்கப்பா. இப்புடியே போனா நாங்க பூரா ஊரை காலி பண்ணீட்டு போக வேண்டியதுதான். தண்ணி ஓடுனப்ப எத்தனை பேர் வந்து எங்களை அத தொடாத, இங்க போகாதன்னு ஆர்டர் போட்டானுங்க. இப்ப ஒன்னுத்துக்கு வழியில்லாம நிக்கிறோம் எந்த நாயும் எட்டி பாக்கல. 70 வருஷத்துல இப்புடி ஒரு வறட்சிய பாக்கலப்பா நாங்க….இந்த ஊருல நூறு நாள் வேலையுமில்லை ஒன்னுமில்லை.
நமக்கு ஏதோ தண்ணி ரெடி பண்ணிட்டாங்க சார்…முன்னெல்லாம் நாங்களும் இந்த ஆத்துத் தண்ணிய தான் குடிச்சிட்டுருந்தோம்; இப்போ கூட்டுக்குடிநீர் திட்டம் வந்ததுனால குடிக்க தண்ணி கெடைக்குது; ஆனா எங்க வாழ்க்கையே போச்சு; நாங்க பொழைக்கிறதுக்கான ஆதாரமான தண்ணியே இல்ல ரெண்டு வருசமா…இருக்குற தண்ணியில ஏதோ போட்டிங் விட்டு பொழச்சுக்குலாம்னு பாத்தா இந்த கலெக்டரும் போலீசும் விடமாட்றாங்க….
தண்ணி இருக்கப்ப போட்டிங் விட்டா அவுங்களுக்கு என்ன பிரச்சினை?
2015-ல நடந்த ஆக்சிடெண்டு-க்கு அப்புறமா எங்களுக்கு ஏக கெடுபிடி சார்….ஒரு படக ஆறு மாசம் வரைக்கும் தான் ஓட்டனும்; அப்புறம் ஏதேதோ வாங்கி போட்டுக்கனும்; இப்புடியா ஒரே கெடுபிடியா போயிட்டிருந்துச்சு…இவுங்க கெடுபிடிகள சமாளிக்க முடியாம நாங்கெல்லாம் ஒன்னு சேந்து கெடுபிடிகள தளர்த்தனும்னு 2016-ல பென்னாகரத்துல ஒரு போராட்டம் நடத்துனோம். அதுலேருந்து தர்மபுரி கலெக்டருக்கும், போலிசுக்கும் எங்களக் கண்டாலே ஆகமாட்டேங்குது… கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு சின்ன விபத்து ஒன்னு நடந்துச்சு அதுல எங்க மேல பொய் கேசு போட்டு உள்ள தள்ளிட்டாங்க! இதனால எங்க மக்கள் எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணாங்க! இதுல போலீசுக்கு எங்க மேல இருந்த கோவம் இன்னும் கூடிப்போச்சு….மீடியாக்காரங்கள வெச்சு ஒகேனக்கல்-ல தண்ணியே இல்லன்னு சொல்லி டூரிஸ்ட் காரங்கள வரவுடாம பண்ணுறாங்க!
ஊட்டமலையில் தண்ணீர் இருந்தும் பரிசல் செலுத்த அனுமதிக்காமல் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசு.
முன்னெல்லாம் 30 பஸ்ஸுக்கு மேல ஓடிக்கிட்டிருந்துச்சு ஆனா இப்ப அத பாதிக்கும் மேல கொறச்சுட்டாங்க! ஒருநாளு நாங்கெல்லாம் சேந்து போயி ஒகேனக்கல்ல தானே தண்ணியில்ல, ஊட்டமலையில இருக்க தண்ணியில பரிசல் ஓட்டி பொழப்ப நடத்துறோம்-னு கேட்டோம்…ஆனா நாங்கல்லாம் இங்க போட்டிங் விட்டா தண்ணி கலீஜ் ஆயிருதாம்! அதனால கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்னு சொல்லி அனுமதி தரவேயில்ல! ஒகேனக்கல் அருவிக்கு ஊட்டமலை வழியாத் தான் தண்ணி போகுது; இங்கேயிருந்து போற தண்ணியெல்லாத்தையும் அருவிக்குப் போக விடாம, குடிநீர் திட்டத்துக்குத் திருப்பி விடுறாங்க; அதனால அருவியில சுத்தமா தண்ணியில்ல. கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவங்க தான் இங்க வர்றாங்க; ஆனா அவுங்களயும் வரவிடாம பண்ணிடுறாங்க.
அந்தப் பக்கமா நாங்க வண்டியில போனாலே எஸ்.ஐ-யும் ஏட்டும் மடக்குறாங்க, அன்னக்கி கூட வண்டியில போயிக்கிட்டு இருந்த என்ன மொடக்கி, கால்ல சைலன்சர் சுட்டு காயமாயிடுச்சு. மொடக்குனா கேசெல்லாம் போடுறதுல்ல…அன்னக்கி புல்லா அடிமை மாதிரி தான்..எடுபிடி வேல அப்புறம் வேற எதாவது வேல இருந்துச்சுன்னா அதையெல்லாம் செய்ய வெச்சுட்டு சாயங்காலம் தான் வெளியில விடுவாங்க! மொடக்கிருவாங்கன்னு பயந்துகிட்டே போட்டிங்கே போறதுல்ல.
இப்படியே தொடர்ந்து நடந்துகிட்டிருந்துச்சு…ஒரு நாள் சாயந்திரம் நான் ஏட்டையாகிட்ட போயி, நீங்க எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என்னய மொடக்குறீங்கன்னு கேட்டப்ப! அதுக்கு அந்த ஏட்டய்யா “ நீங்கெல்லாம் போட்டிங் ஓட்டுறீங்க, அதனால தான் மொடக்குறோம்” னாரு. போட்டிங் போறப்ப புடிச்சு மொடக்குங்க சார்! ஆனா சும்மா வந்தாலே மொடக்குறீங்க! புடிச்சிகிட்டு நாளு முழுசா வேல வாங்குறீங்க! இனிமே வேலயெல்லாம் பாக்க முடியாது. வேணும்னா சம்பளம் கொடுங்க வேல செஞ்சு தர்றோம்னு சொன்னேன் பாருங்க, உடனே அவருக்கு கோபம் வந்துருச்ச…உள்ளே தள்ளிடுவேன், கேசு போட்ருவேன்னு மெரட்டுனாரு…ஒடனே நான் ‘சார்! நீங்க வேல நேரத்துல யூனிபார்மோட ஒக்காந்து தண்ணியடிச்சது, அப்பறமா எங்கள வேல வாங்குனதுன்னு ஒன்னு வுடாம போட்டோ வீடியோ எடுத்து வெச்சுருக்கேன்! எஸ்.பி ஆபிஸ்-கு போனுச்சுன்னா அவ்ளோதான்னு மெரட்டுனப்புறம்தான் இப்ப மொடக்குறதுல்ல…
சரி, எப்படி வாழ்க்கைய ஓட்டுறீங்க?
மொத்தமா பரிசல் ஓட்டுறவங்க 400 பேரு கிட்ட இருக்கோம்…ஒன்னு ரெண்டு பேரத்தவிர யாரும் போட்டிங் போறதுல்ல! அதனால எங்கள்ல நெறையா பேரு கல்லு ஒடக்க போறோம். பெங்களூரு பக்கம் வாரம் முழுசா போயிட்டு வாரக்கடைசியில வருவோம். வேல எதாவது கெடைக்குமான்னு அலையுறதுக்கே 50, 100 செலவாகுது! வேல கெடச்சா தான் உறுதி
பரிசல் தொழிலும் இல்லாமல் போனதால் ஆண்கள் பெரும்பாலும் கல் உடைக்கும் வேலைக்குப் போகின்றனர்.
இந்த மாதிரி வறட்சிய பாத்துருக்கீங்களா?
எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி வறட்சிய பாத்ததில்லங்குறாங்க… ஆறும், தண்ணியுந்தான் எங்க வாழ்க்கையே….மீனெல்லாம் புடிச்சோமுன்னா ஒரு மீனு மட்டும் ஒன்னரை கிலோ, ரெண்டு கிலோ தேறும்…வீட்டாளுகிட்ட கொடுத்தா, அத வறுத்து டூரிஸ்ட் வர்றவுங்க கிட்ட வித்து கொஞ்சம் செலவுக்குக் காசு கெடைக்கும். இப்ப ஒகேனக்கல்ல பாத்தீங்கன்னா, வளர்ப்பு கெண்ட மீன வெச்சு விக்க வேண்டிய நெலமயாயிடுச்சு.
வறண்டு போன ஒக்கேனக்கல் மெயின் அருவி
நிவாரணமெல்லாம் கொடுத்தாங்களா?
சார்! நம்மகிட்டேருந்து காசு புடுங்காமயிருந்தா போதும்…நம்மல்லாம் இருந்தாலும் நிவாரணம் கெடையாது, செத்தாலும் நிவாரணம் கெடையாது…போட்டிங் போறதுக்கு லைசென்ஸ் வாங்கி வெச்சுருக்கோம்; ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி சொந்த செலவுல போட்டு செஞ்சுக்குறோம்.. நம்மள போட்டிங் ஓட்ட விட்டா பொழச்சுக்குவோம், ஆனா அதுக்குத்தான் அனுமதி தர மாட்டேங்குறாங்க…ரேசன்-ல பகுதிக்குப் பகுதியாத் தான் தர்றாங்க, கொடுக்குற பொருளும் தரமாயில்ல. கோதுமையே இருப்பு இல்லங்குறாங்க! களி தின்னாலும்னு பாத்தா வெல ரொம்ப ஏறிப்போச்சு.
திருவிழா நடத்தி முடிச்சிட்டீங்களா?
இந்த மாச கடைசியில தான் இருக்குது…கையில யாருகிட்டயும் காசு இல்ல…அதான் என்ன பண்ணலாம்னு முழிச்சிகிட்டிருக்கோம்.
புள்ளங்க படிப்புக்கெல்லாம் என்ன பண்ணுறீங்க?
பத்தாம் கிளாஸ் வரைக்கும் இங்க இருக்குது. 12-ம் வகுப்புக்குன்னா பென்னாகரம் போகணும். காலேஜின்னா தர்மபுரிக்குத் தான் போகணும்.
ஒரு கிலோ மீட்டருக்கு தண்ணீர் இருக்கும் ஊட்டமலைமேய பச்சையின்றி தரையை மேயும் மாடுஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்ஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்காட்டில் பட்டி மாடுசின்னாற்றங்கரையில் பட்டுபோயுள்ள மரங்கள்நீர் இல்லாததால் கவிழ்க்கப்பட்டுள்ள பரிசல்கள்
அண்ணா பல்கலைக் கழகத்தில் மோசடியாக பட்டம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி!
மாணவர்கள் நலனுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி – கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் – கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா – பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – உயர்நீதிமன்றம் கூட்டு சதி!
இதை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
பல்கலைக் கழகங்களின் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் இந்த நீதிமன்ற தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிகள் சொன்ன காரணம் அதன் யோக்கியதை என்ன என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது. அதாவது, ‘துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்திடக் கூடாது என்று பல்கலைக் கழக விதியில் இல்லையாம்’ அதனால் துணைவேந்தர் இல்லை என்பதால் பட்டமளிப்பு விழாவை நிறுத்த முடியாதாம்.
மாணவ சமுதாயத்தின் நலனில் அக்கறையுள்ள நீதிபதியாக இருந்திருந்தால் என்ன கேட்டிருக்க வேண்டும், துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திடலாம் என்று இருக்கிறதா? என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றம் மாணவர்களுக்கு எதிரானது. அரசின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை நிற்பது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அதே போல், பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். அந்த வகையில் பட்டமளிப்பு விழாவில் நடைபெறும் இந்த மோசடியை தடுத்த நிறுத்தும் பொறுப்பு ஆளுநருக்கும் உண்டு. ஆனால், துணைவேந்தர் இல்லாமல் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்தான் சிறப்பு விருந்தினர். இப்படிப்பட்ட கேடுகெட்ட கிரிமினல் கூட்டத்திடம், கல்வித்துறையும், மாணவ சமூகமும் சிக்கி இருக்கிறது. இதைக் கண்டித்து எமது பு.மா.இ.மு சார்பில் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தொடர் போராட்டத்தால் பீதியானது போலீசு. எனவே சைதை நீதிமன்ற வாயிலில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
சரியாக மாலை 5:00 மணியளவில் பு.மா.இ.மு தோழர்கள், மாணவர்கள் காம்பீரமாக முழக்கமிட்டபடி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் சைதாப்பேட்டை நீதிமன்ற வாயிலேயே சுற்றி வளைத்து கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
மே 14-ஆம் தேதி மதியம் தொடங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மே 16-ஆம் தேதி இரவில் முடிவுக்கு வந்தது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
இந்த அறிவிப்பு வெளிவருவதற்குச் சற்று முன்பாக, எஸ்மா சட்டத்தின் கீழ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்த மதுரை உயர்நீதி மன்றக் கிளை, “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
தொழிலாளர் விரோத தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம்
நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான, அத்து மீறிய இந்த உத்தரவு, தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சுறுத்த திட்டமிட்டே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவையில், முதல் கட்டமாக 2,000 கோடி ரூபாயைத் தர வேண்டும்; மீதமுள்ள நிலுவையை தருவதற்கான கால அட்டவணையை நிர்ணயித்து, அதனை ஒரு ஒப்பந்தமாக அரசு கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கை.
தொழிலாளர்களின் கோரிக்கைகளுள் ஊதிய உயர்வும் ஒன்று. போராட்டத்தின் முக்கிய கோரிக்கை அதுவல்ல. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி. பிரீமியம் தொகை, கூட்டுறவுக் கடன் தொகை ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்க வேண்டும்/செலுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதாவது தொழிலாளிகளுக்கு சொந்தமான பணத்தை அதிமுக அரசு திருடித் தின்றுவிட்டது. அதைத் திருப்பிக்கொடு என்பதுதான் கோரிக்கை.
போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
இப்படித் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்குத் திருப்பித் தராமல் இருக்கும் தொகை 7,000 கோடி ரூபாய் என்கிறார்கள், தொழிலாளர்கள். குறிப்பாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மட்டும் 1,700 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக மாதாமாதம் ஓய்வூதியம் தருவதைக்கூட மறுத்துவருகிறது, அ.தி.மு.க. அரசு. நாங்கள் வாழ்வதா, சாவதா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறார்கள் தொழிலாளிகள்.
தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து பெறப்பட்ட இந்தப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஊழல், முறைகேடுகள் மூலம் திருடித் தின்றுவிட்ட அ.தி.மு.க. அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் நிதி நெருக்கடி என்று நாடகமாடுகிறார்கள். நீதிமன்றமோ இந்தத் திருட்டைக் கண்டுகொள்ளாமல், “அதுதான் அரசாங்கம் 50 சதவீதப் பணத்தைத் தருவதாகக் கூறிவிட்டதே, அதற்குப் பிறகு ஏன் போராடுகிறீர்கள்?” எனக் கேட்டுத் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக்குகிறது.
தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தால்தான் 1,250 கோடி தருவதாக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வெறும் வாக்குறுதிதான். இந்த 1,250 கோடியில் முதல் தவணையாக 800 கோடி ரூபாய்தான் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. இதைத்தான் பாதி என்கிறது நீதிமன்றம். எது பாதி? 7000 கோடியில் 800 கோடி பாதியா? இதென்ன குமாரசாமி கணக்கா?
அமைச்சர் எனும் பெயரில் சுற்றிவரும் செல்லூர் ராஜூ
தொழிலாளிகளுக்கு உரிமையான அவர்களுடைய பணத்தை போக்குவரத்து துறை நிர்வாகமும், இந்த அரசும் அவர்களுடைய அனுமதி இல்லாமல் களவாடி விட்டன. கரும்பு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் கொடுக்காமல் சுமார் 2000 கோடி ரூபாயை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் எப்படி திருடியிருக்கிறார்களோ அப்படி தொழிலாளிகளின் பணம் திருடப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு குறித்து குற்றவிசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
பேருந்துகள் வாங்குவது முதல் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவது வரையிலான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும், அரசுப் பேருந்துகளை காயலாங்கடை சரக்குகளாக மாற்றுவதன் மூலம் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு கள்ளத்தனமாக உதவுவது, வருமானம் வரும் ரூட்டுகளை அவர்களுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுப்போக்குவரத்து கழகம் திவாலாக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுதும் உழைத்து தேய்ந்த தொழிலாளிகளின் குடும்பங்களோ தமக்கு சேரவேண்டிய ஓய்வூதியமும் கிடைக்காமல் பட்டினியிலும், நோயிலும் துடிக்கிறார்கள்.
கந்து வட்டிக்காரனும் வங்கியும் கொடுக்கின்ற நெருக்கடியில் கடன் வாங்கிய விவசாயிகளும் சிறு தொழில் செய்வோரும் உழைப்பாளிகளும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் இங்கே கடன் கொடுத்தவர்களான தொழிலாளர்கள் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தொழிலாளிகளின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடிய நிர்வாகத்திடம், தொழிலாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறது நீதிமன்றம். திருடிய பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டால், கேட்டவனை சிறைக்கு அனுப்புவார்களாம், இதற்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.
அமைச்சர் என்ற பெயரில் உலாவரும் அ.தி.மு.க ரவுடி செல்லூர் ராஜுவின் மிரட்டல்களுக்கு தொழிலாளிகள் அஞ்சவில்லை என்பதால், எஸ்மா என்ற உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டும் வேலையை நீதிபதிகள் செய்கிறார்கள்.
“போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொழில்தாவா சட்டத்தின் கீழ் வருகின்றனர். இச்சட்டப் பிரிவு 22-இன் கீழ் 14 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கி போராட்டத்தில் ஈடுபடலாம். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாங்கும் டீசல், ஆயில், உதிரி பாகங்களுக்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரூபாய் வரியாகச் செலுத்துகின்றன. அத்தியாவசியத் தேவை சட்டத்திலும், எஸ்மாவின் கீழும் வந்தால், சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு எப்படி வரி வசூலிக்கலாம். இதனால் எஸ்மா சட்டம் போக்குவரத்து ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது” என்கிறார், போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளன செயல் தலைவர் திரு மலைச்சாமி.
வேலைநிறுத்த உரிமை என்பது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமை. அந்த உரிமையை எஸ்மா சட்டம் மிகவும் வெளிப்படையாக மறுக்கிறது. 2003-இல் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தடை செய்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை நாடே கண்டது. “தமது குறைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பணியாளர்கள் வேலைகளை மேலும் நேர்மையாக, திருத்தமாக, திறமையாகச் செய்வார்களேயானால், அம்மாதிரியான நடத்தையை அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அங்கீகரித்து வரவேற்பார்கள்” என உச்சநீதி மன்றம் அத்தீர்ப்பில் எழுதியது.
ஆண்டைகளின் மனம் குளிரும்படி அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம். இது போராடும் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பொதுமக்களுள் மற்றொரு பிரிவினரை நிறுத்தும் ஆண்டைகளின் நரித்தனம். தற்போது மதுரை உயர்நீதி மன்றமும் பொதுமக்களின் நலனில் இருந்தே தீர்ப்பளிப்பதாக கூறியிருக்கிறது.
ஓ.பி.எஸ். தொடங்கி இ.பி.எஸ் வரை, சேகர் ரெட்டி தொடங்கி ராம மோகன ராவ் வரை என நம் கண் முன்னே தமிழகத்தைக் கொள்ளையடித்த ஒரு பெருங்கூட்டம் உலவிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய திருட்டுச் சொத்திலிருந்து ஒரே ஒரு ரூபாயை பறிமுதல் செய்வதற்கு கூட சட்டத்தில் இடமில்லை. அப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்வதற்கு கூட நீதிபதிகளுக்கு நாக்கு வருவதில்லை. ஏனென்றால் அது வர்க்கபாசம்.
ஆனால் பட்டினியில் தவிக்கும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கொடு என்று கேட்டால், அவர்களை அடுத்த கணமே சிறைக்கு அனுப்புவதற்கு சட்டம் இருக்கிறது. மாண்புமிகு நீதியரசர்களும் தயாராக இருக்கிறார்கள்.
குடிமக்களின் உரிமைகளை ரத்து செய்வதில் போலீசை விட நீதிமன்றமே முன் நிற்கிறது
மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வேலை நிறுத்த உரிமையை உடனே தடை செய்வதாக அறிவித்த நீதிபதிகளுக்கு, கொள்ளையடிக்கும் உரிமையைத் தடை செய்ய விருப்பமில்லை.
இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள், நேற்று அரசு மருத்துவர்கள், அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் எஸ்மாவால் தடை செய்யப்பட்டன. ஏன் நோக்கியா தொழிலாளர்களின் போராட்டத்தையும் இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுதான் அடக்க முயன்றது அரசு.
தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.
நீதிபதிகளின் அதிகார அத்துமீறல்களையும், முறைகேடான தீர்ப்புகளையும் அம்பலப்படுத்தத் துணிந்த வழக்குரைஞர்களின் தொழில் உரிமையை இந்திய பார் கவுன்சில் மூலம் ரத்து செய்ய வைத்தது, சென்னை உயர்நீதி மன்றம். இவையனைத்தும் நீதிமன்றங்கள் நீதிக்கு எதிரான மன்றங்களாக நடந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தின் எல்லா தூண்களும் உளுத்துப்போய்விட்ட நிலையில் நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக அறிவுத்துறையினர் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கங்களுக்கு, அத்தகைய காரியங்களை சத்தமில்லாமல் முடித்து தரும் முதல் புகலிடமாக நீதிமன்றங்கள் மாறி வருகின்றன என்பதையே அனுபவம் காட்டுகிறது.
மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து மே 26-ல், 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. இதை 2019-ல் மக்களவை தேர்தலை மனதில் வைத்து நாடு முழுவதிலும் ‘மோடி விழா’ என்ற பெயரில் கொண்டாட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்த மோடி விழாவிற்கு நமது பங்களிப்பாக இந்தக் கருத்துக் கணிப்பு! ஆம். மோடி என்றால் நீங்கள் அதிகம் வெறுப்பதை கீழே தெரிவு செய்யுங்கள். எந்த வெறுப்பு முதலிடம் என்று பார்ப்போம்.