Thursday, June 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 494

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு

0

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதை கண்டித்து, கடந்த 2017 மே 4 -ஆம் தேதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு பல்கலைக் கழக வாயிலில் போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டத்தில் விளைவாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் சங்கம் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு நீதிமன்றம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் எப்படியாவது பட்டமளிப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என முடிவு செய்து வரும் மே 19-ம் தேதி திட்டமிட்டுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும். இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் எனற நோக்கத்தில், 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புமாஇமு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் வியோகிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ளேயும், வெளியேயும், சென்னை பல்கழைக்கழகத்திலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நேற்று 17.5.2017 காலை பல்கலைக்கழகத்தில் அனைத்து வாயிலிலும், பேருத்து நிறுத்தத்திலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு பு.மா.இ.மு-வின் மாணவர்கள், பெண்கள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்டோர் அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்திலேயே தடுத்து நிறுத்தியது போலீசு.

போராட்டத்தின் தலைவர் ராஜா (பு.மா.இ.மு சென்னைக்கிளை செயலர்) ஊடகங்களுக்கு அளித்த உரையில் “ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.

இது நாங்கள் கற்பனையாக கூறவில்லை, ஏற்கனவே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் தரப்பட்ட சான்றிதழ்கள் வெளிமாநிலங்களில் செல்லாமல் போனது. அது போலி சான்றிதழ் தயாரித்தக் குற்றத்திற்கு சமமானது. இதே வேலையை ஒரு தனியார் கல்வி நிறுவனம் செய்தால், அது கடும் தண்டணைக்குறிய குற்றம். ஆனால், இந்த குற்றத்தைதான் தற்போது தமிழக அரசும், தமிழகக் கல்வித்துறையும் செய்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் கடினமாக உழைத்து, பெற்றோர்கள் லட்ச லட்சமாக செலவழித்து வாங்கப் போகும் பட்டத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது.

ஏன் இந்த அரசால் துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை? ஏனெனில் ஒருவர் துணைவேந்தர் ஆகவேண்டும் என்றால் அதற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என வெளிப்படையாகவே பேரம் நடக்கிறது. இதுமட்டுமல்லாமல், பேராசிரியர் பதவிக்கு 50 லட்சம், துணை பேராசிரியர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் என பேரம் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே நடக்கிறது.

இப்படி பணம் லஞ்சம் கொடுத்துவரும் துணைவேந்தர் நல்ல கல்வியை தரவேண்டும் என கனவில் கூட நினைக்க மாட்டார். மாறாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் நினைப்பார். எனவே தனியார் கல்லூரிகளிடம் பணம் வாங்கி கொண்டு கல்லூரி திறக்க அனுமதிப்பார். கட்டணக் கொள்ளையை நடத்துவார். இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கல்வித்துறையில் எப்படி நம்மைப் போன்ற ஏழை மாணவர்கள் படித்து பொறியாளராகவோ, மருத்துவராகவோ வரமுடியும், கண்டிப்பாக முடியாது. தற்போது பேரங்கள் படியவில்லை என்பதாலும், பேரங்களுக்கு பலமுனைப் போட்டி இருப்பதாலும் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருக்கிறது எடப்பாடி அரசு.

எனவே அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஊழல் முறைகேடுகள் இன்றி உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டுவோம்.” என கூறினார்.

அதன் பின் போராடிய மாணவர்களை தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றி, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போலீசு. ஊழல் செய்து மாணவர்களின் எதிர்கலத்தை சீரழிக்கும் இந்த அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்கிறது. மாணவர்களின் நலனுக்கான போராடுபவர்களை காட்டுமிராண்டிதனமாகத் தாக்குகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்

0

பத்திரிக்கை செய்தி

நாள்:17.05.2017

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் !
தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !!

கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி
இடம்:தஞ்சை இரயிலடி.

ஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட  போலீசைக் குவித்தும், பயிற்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை–திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தினர் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்காமல் அதற்கு 400-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது

தந்தை பெரியார் கட்டி வளர்த்த பகுத்தறிவு சுயமரியாதை உணர்வுகளை குழிதோண்டி புதைக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.   ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு  இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக கருத முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை தமிழக மக்கள் புறக்கணிப்பததோடு இழுதது மூடப் போராட வேண்டும்.

குஜராத்திலும் வடமாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டி சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.  ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.

உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது.  பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகிறது. தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரம் ஏற்படாமல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வறட்சி, வறுமை கடன் சுமை ஆகியவற்றிற்கு ஆளான விவசாயிகளின்  தற்கொலை,  தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழக அரசின் ஆர்.எஸ்.எஸ். சார்பு நிலையை கண்டித்தும்,  சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்  18.05.2017 வியாழன் காலை 10.30 மணி  தஞ்சை இரயிலடியில் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..

இவண்,
இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக்கழகம், தஞ்சை.
____

இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்

12

மிழகம் முழுவதும் கடந்த 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும் ஊதிய ஒப்பந்தம் இதுவரை போடப்படாததை கண்டித்தும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்த செய்தி வெளியானதும் பல இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். மே 15, மே 16 ஆகிய இருதேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அடிமைகளின் கூடாரமான அதிமுக தொழிற்சங்கம் மட்டும் பேருந்துகளை இயக்க விருப்பதாகக் கூறியது. அந்த சங்கத்திலும் கணிசமான தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஓய்வு பெற்ற ஊழியர்களையும், பள்ளி – கல்லூரி பேருந்து ஓட்டுநர்களையும் வைத்து வாகனங்களை இயக்கப்போவதாகவும், கூடுதலாக சிறப்பு இரயில்களை இயக்குவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கப் போவதாகவும் அறிவித்தது எடப்பாடி அரசு.

ஆனால் உண்மையில் இரத்த நாளங்கள் போல இரண்டு கோடி மக்களை அன்றாடம் தமிழகம் முழுக்கத் தாங்கிச் செல்லும் அரசுப் போக்குவரத்துத் துறையின் சேவையை வேறு எதனைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டம்பர் மாதத்தில் மீதித் தொகையை ஒதுக்குவதாக தமிழக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

தமிழக அரசு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 1,700 கோடியில் வெறும் 750 கோடியை மட்டுமே தற்போது ஒதுக்குவதாக பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் ஈ.எஸ்.ஐ., பி.எஃப், க்ராஜுவிட்டி நிலுவைத் தொகையான சுமார் 4730 கோடி நிதியைப் பற்றி வாயே திறக்கவில்லை.  போக்குவரத்துத் துறை அமைச்சரோ தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரினார்.

இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்னர் கடந்த 13.05.2017 அன்று தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் போது அங்கு சென்றிருந்தோம்.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி அவர்கள், முதல்வரைச் சென்று பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவை மாலை 4:00 மணிக்கு சொல்வதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துவிட்டு சென்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன்

அவரைத் தொடர்ந்து தி.மு.க –வின் தொ.மு.ச வின் செயலாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் வேலைநிறுத்தப் போராட்டமானது கட்டாயம் நடைபெறும். முதல்வரையும் அமைச்சரையும் சந்திப்பதாக கூறினார். அவர்கள் 4:00 மணிக்கு சொல்லும் முடிவில் இருந்து போராட்டத்தைப் பற்றி பரிசீலிப்போம் என ஊடகங்கள் மத்தியில் அறிவித்தார்.

அப்போது ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன் அவர்களிடம் போக்குவரத்துத் துறை, வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி கேட்டறிந்தோம்.

************

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?

தமிழகத்தில் சுமார் 23,000 அரசுப் போருந்துகள் உள்ளன. அவை சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், கோயம்பத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவத்துக் கழகங்கம் என நிர்வாக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் சேர்த்து சுமார் 1,30,000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். மேலும் 50,000 பேர் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளனர்.

அதே போல நாள் ஒன்றுக்கு 2.2 கோடி பயணிகள் தமிழக அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மலைப் பிரதேசங்களில் அசாம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் தான் சிறந்த சேவைகளை வழங்கிவருகின்றது. இந்தியாவின் மொத்த இரயில் சேவையைப் பயன்படுத்துபவர்களை விட, தமிழக பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அதே போல இந்தியா முழுவதும் உள்ள 55 போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடும் போது தமிழகம் தான் மக்களுக்கு அதிக அளவில் சேவை செய்யக்கூடிய பெரிய போக்குவரத்துக் கழகமாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

 தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலைமை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளிகள் தமிழகம் முழுக்க உள்ளவர்கள் 1,70,000 அதில் சுமார் 40,000 பேர் அதிகாரிகளாக உள்ளனர். மீதமுள்ள தொழிலாளிகளில் 40% பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளாக உள்ளனர். தற்போது ஒப்பந்தத் தொழிலாளிகளிலும் கணிசமான பேரை ரிசர்வ் தொழிலாளிகள் என மாற்றியுள்ளது அரசாங்கம். நிரந்தரப் பணிகளில் இது போன்ற ரிசர்வ் பணியாளர்களை வைத்திருக்கக் கூடாது என சட்டம் உள்ளது. பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் பேருந்துகளை இயக்கவே இவர்களை வைத்துள்ளதாகக் கூறுகிறது போக்குவரத்துத் துறை. ஆனால் இவர்களைக் கொண்டுதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

குறிப்பாக ஆளும் கட்சி ஊழியர்கள் பலரும் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேலையையும் ஒப்பந்த மற்றும் ரிசர்வ் தொழிலாளிகளை வைத்துச் செய்கிறார்கள். அதிலும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவு இருந்தாலும் இவர்களுக்கு குறைவான சம்பளமே தரப்படுகிறது. 610 ரூபாய் சம்பளம் தரவேண்டிய தொழிலாளிகளுக்கு 310 ரூபாய் தான் சம்பளமாகத் தரப்படுகிறது. மற்ற அரசுத் துறை ஊழியர்கள் போல் உத்திரவாதமான 8 மணி நேர வேலை இங்கு கிடையாது.

ஒரு தொழிலாளி வேலைக்கு வருகின்றார், எனில் அவருடைய இடைவேளை நேரம் போக 6 மணி நேரம் தான் வேலை நேரம் (Wheel Hour) என விதி சொல்கிறது ஆனால் அப்படியான நடைமுறை இங்கு கிடையாது. 130-வது மேதினம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இன்னமும் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை எங்களுக்கு நிறைவேறவில்லை.

அதுமட்டுமல்லாது பணியில் உள்ள நெருக்கடி ஒரு பக்கம் என்றால் நிர்வாகம் மேலும் தொழிலாளிக்கு சுமையை ஏற்படுத்துகிறது. டீசல் லிட்டருக்கு 5 கி.மீ தர வேண்டும் என நெருக்கடி தருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனமே 4 ½ கி.மீ கிடத்தாலே பெரிய சாதனைதான் என்கிறது. அதே போல வழித்தடங்களில் வசூல் குறைந்தால் நடத்துநர் பொறுப்புடன் செயல்படுவது இல்லை என விசாரணை வைக்கிறது. அவர்களிடம் எதையும் பேசாமல் மெமோ அளிக்கிறது. பரிசோதகர்களுக்கும் இலக்கு வைத்து தொழிலாளிகள் மீது மெமோ தரவேண்டும் எனச் சொல்கிறது. இவ்வாறு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நெருக்கடிகள் தரப்படுகிறது. தொழிலாளிகளின் சோர்வைப் போக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். அதையெல்லாம் செய்வதே கிடையாது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் பல சலுகைகள் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு உள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே ?

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் பணத்தின் விவரங்கள்

இங்கு உரிமைகளே இல்லை, சலுகைகள் எங்கிருந்து கிடைக்கப் போகிறது? எல்லாம் காகிதத்தில் தான் உள்ளது. ஒரு தொழிலாளிக்கு வருடத்திற்கு 5 சீருடை வழங்க வேண்டும். முறையான காலணிகள் வழங்க வேண்டும். போதிய விடுப்பு வழங்க வேண்டும். குடு்ம்ப உறுப்பினர்களைச் சேர்த்து 5,000 மணி நேர பயணம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். விபத்தில் உயிர் பிரிந்தால் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றதும் வருங்கால வைப்பு நிதியை உடனே வழங்க வேண்டும். கிராஜுவிட்டி தொகையை ஓய்வு பெற்ற ஐந்தாண்டுகளில் வழங்க வேண்டும் என பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என உத்திரவு உள்ளது. ஆனால் இவை எதுவும் தற்போது வழங்கப்படுவது இல்லை. இறந்தவர்களின் வாரிசுகளுக்கான வேலைக்குக் கூட லஞ்சம் தரவேண்டிய நிலை தான் உள்ளது.

தங்கள் வாழ்நாளில் குடும்பத்துக்காக ஒரு நல்லது கெட்டதில் பங்கெடுக்கமுடியாத தொழிலாளி தன்னுடைய ஓய்வுக் காலத்திலாவது நிம்மதியாக வாழமுடிகிறதா என்றால் கிடையாது.

சரி தற்போது நடைபெறும் (13/05/2017) பேச்சுவார்த்தையின் நிலை என்ன ?

ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஆனால் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் போட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இதுவரை போடப்படவில்லை. அதே போல கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியும் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாம தொழிலாளிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு பணம் என சுமார் 7000 கோடி ரூபாய் முறையாக செலுத்தப்படாமல் உள்ளது. இப்போது வரை இந்த நிலுவைப் பணம் பற்றித் தான் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

நாங்கள் மற்றவர்களின் பணத்தை கேட்கவில்லை. தொழிலாளர்களுடைய பணத்தை தான் கேட்கிறோம். நேற்று அமைச்சர் நிலுவைப் பணமான 750 கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளார். ஆனால் தொழிலாளிகளுக்கு வரவேண்டிய 7,000 கோடியைப் பற்றி பதில் ஏதும் இல்லை. தற்போது பேச்சுவார்த்தையில் 1,200 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளனர். ஆனால் அவை எப்படி எந்த வகையில், எத்தனை தவணையில் வழங்கப்படும் என இதுவரை சொல்லவில்லை.

இப்படி 7000 கோடிவரை நிலுவை வரக் காரணம் என்ன?

தமிழக அரசின் போக்குவரத்து துறையானது 1972-ல், 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமாக இருந்தது. அதன் பின்னர் அவை வெவ்வேறு கால கட்டங்களில் போக்குவரத்து கழகங்களாக மாற்றப்பட்டது. அதன் வரவு செலவு விவகாரங்கள் அந்தந்த கழகங்களுக்கு உட்பட்டதாகும். இதை காரணமாக வைத்து தமிழக அரசானது போதிய நிதியை ஒதுக்குவது கிடையாது.

மேலும் தமிழக அரசு வழங்கக்கூடிய சலுகைகள் மாணவர்களுக்கான இலவச பாஸ், முதியோர்களுக்கான இலவச பயணச்சீட்டு, கல்லூரிகளுக்கான சலுகை பயண அட்டை போன்று மக்களுக்கு சேவையாக வழங்கக் கூடிய சலுகைகளுக்கு அரசு போதிய நிதியை போக்குவரத்து கழகங்களுக்கு அளிப்பதில்லை. அதே போல மலைபகுதிகள் போன்ற இடங்களில் இலாப நோக்கில்லாமல் மக்களுக்கு சேவையாக போக்குவரத்து வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் சுங்கச்சாவடி கட்டணங்கள், வாகன உதிரி பாகங்களுக்கான செலவு இவற்றால் தான் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய தொழிலாளர்களின் பணத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்கள் முறைகேடாக செலவு செய்கின்றன. இது கடந்த பல ஆண்டுகளாக நிலவுவதால் சிறுகச் சிறுக இந்தத் தொகை சேர்ந்து தற்போது 7000 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

அப்படி என்றால் அரசாங்கம் மக்களுக்கு சேவையாக சலுகைகள் எதையும் வழங்கக் கூடாதா ?

மக்களுக்கு சலுகைகளை வழங்கக் கூடாது எனச் சொல்லவில்லை. மாறாக அதனால் ஏற்படும் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதைக் கூட மக்களுக்கான சேவை எனும் அடிப்படையில் அரசுப் பேருந்துகளுக்கு எரிபொருளில் மானியம் வழங்குவது. மற்றும் சுங்கச் சாவடிகளில் கட்டனம் இரத்து செய்வது போன்றவற்றிம் மூலம் ஈடு கட்டலாம். விமானங்களின் எரிபொருளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது எனும் போது சாதாரண மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துக்கு இது போன்ற சலுகைகள் அறிவிக்கலாம் அல்லவா?

அதைவிடவும் போக்குவரத்து துறையில் அதிகாரிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. இதில் அதிகாரிகளைக் குறைத்து நிர்வாகத்தை சீர்படுத்தினாலே இந்த இடைவெளியை குறைக்க முடியும். மேலும் அரசானது துறையை தனியார்மயப்படுத்தும் வேலைகளச் செய்து வருகிறது.

அரசாங்கப் பேருந்துகள் நட்டத்தில் இயங்குவதால் தானே தனியார்மயப் படுத்தப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என்பது தானே  பலரின் கருத்து?

திட்டமிட்டே பல பணிமனைகளில் ஊழல் அதிகாரிகள் பல இடங்களில் பேருந்து எடுக்கும் நேரத்தை தனியார் பேருந்துகளுக்காக விட்டுக் கொடுக்கின்றனர். அதனால், அந்த வழித்தடங்களில் தேவை இல்லாத நேரங்களில் பேருந்துகளை இயக்குவதால் நட்டம் ஏற்படுகிறது. உதிரி பாகங்கள் வாங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்த அ.தி.மு.க அரசின் முயற்சி

சேவைகளில் குறைபாடு ஏற்படவும் இந்த அரசுதான் முக்கிய காரணமாக உள்ளது. வேண்டுமென்றே உதிரிபாகங்களை வழங்காமல் இருப்பது. புதிய பேருந்துகளை வாங்காமல் காலவதியான பேருந்துகளை இயக்கச் செய்வதன் மூலம் சேவை குறைபாடும் நட்டமும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சுமார் 17,000 காலாவதியான பேருந்துகளை இன்னமும் இயக்கி வருகின்றனர். அதுமட்டுமல்ல தமிழகத்தில் இயங்கும் எந்த அரசுப் பேருந்துக்கும் காப்பீடு கிடையாது.

ஆனால் அதற்காக போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்துவது என்பது தீர்வாகாது.  ஏனெனில் தற்போது வரை வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் போக்குவரத்துக்கான கட்டனம் குறைவாகத் தான் உள்ளது. தனியாரிடம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு பண்டிகை கால கட்டணங்களைப் பார்க்கலாம். பல மடங்கு கட்டணம் அதிகரிக்கும். இன்று வரை தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பேருந்து வசதி உள்ளது. தனியார்வசம் சென்றால் லாபம் அதிகம் இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்து சேவை கிடைக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களும் மக்கள் தான். அதே போல தொழிலாளிகளுக்கு தற்போது இருக்கும் பெயரளவிளான உரிமைகள் கூட கிடைக்காது.

நீங்கள் தற்போது வேலை நிறுத்தம் நடத்தினால் மக்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படுவார்களே?

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு  அரசு தான் காரணம். இந்த நிர்பந்தத்திற்கு எங்களை ஆளாக்கியது அரசுதான். அதனால் தான் எங்கள் கோரிக்கைகளை மக்களுக்கு புரிய வைக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கேட்பது எங்களுடைய உரிமையைத்தான். அதற்காகத் தான் பேச்சுவார்த்தைக்கும் வந்துள்ளோம். ஆனால் இந்த அரசு அதற்கு செவிசாய்காமல் உள்ளது. இது தொழிலாளர்கள் மீதும் மக்கள் மீதும் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுவிட்டதாக சொல்கிறாரே அமைச்சர். அது பற்றி?

தமிழகப் போக்குவரத்துத் துறையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன அவற்றில் பல பெயர் பலகைச் சங்கங்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக தொழிற்சங்கங்கள் வைத்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.க, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, வி.சி.க., பா.ம.க. என ஒரு பத்து தொழிற்சங்கங்களில் தான் பெரும்பாலான தொழிலாளிகள் உள்ளனர்.

தற்போது பேச்சுவார்த்தையில் 47 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. விதிப்படி பேச்சுவார்த்தையில் 50 சதவிகித சங்கங்கள் முடிவை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை வெற்றி என உள்ளது. அதனால் தான் பெயர்பலகை சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கிறது. இது தொழிலாளிகளை அவர்களின் உரிமைக்காகப் போராடவிடாமல் பிளவுபடுத்தும் முயற்சியே ஆகும். ஆனாலும் இதைத்தாண்டி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கட்டாயம் வேலை நிறுத்தம் கட்டாயம் நடைபெறும்.


இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டெம்பர் மாதத்தில் மீதத் தொகையை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு பணிக்குத் திரும்பியிருக்கின்றனர், தொழிலாளர்கள். எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை. ஆளும் அதிமுக அரசோ, தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய தனது தொழிற்சங்கம் மூலமாக உள்ளடி வேலை பார்த்தும், மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து வண்டி எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான அமைப்பாகவே இந்த அரசுஇயந்திரம் மாறி இருப்பதையே இச்சூழல் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

– வினவு செய்தியாளர்

***

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தமிழக அரசே முழுப்பொறுப்பு !
பத்திரிகைச் செய்தி

நாள்: 15.05.2017

மிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முதல் நாளிலேயே பொது மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசே முழுக்காரணம். ஊதியம், ஓய்வுகாலப் பயன்கள் எனப் பல்வேறு இனங்களில் சுமார் 7000 கோடியை அபகரித்துக் கொண்டு தொழிலாளர்களை வஞ்சிப்பதோடு பாதிக்கப் பட்டவர்கள் மீதே பழியையும் போடுகிறது.தொழிலாளர்களின் பணத்தைத் திருப்பித்தருவதற்கு போக்குவரத்துத் துறையின் நட்டத்தைக் காரணம் காட்டுவது மிகப்பெரிய மோசடி. நாளொன்றிற்கு ஒன்றரை கோடிபேர் பயணிக்கும் நிலையில், விரைவுப் பேருந்து என்ற பெயரில் மக்களிடம் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொண்டு, நட்டம் என்பது அரசு செய்யும் மிகப் பெரிய மோசடி.

ஊழலில் புழுத்து நாறும் துறைகளில் போக்குவரத்துத்துறை முதன்மையானவற்றுள் ஒன்று. கடந்த 15, 20 ஆண்டுகளில் வருமானத்தில் ஆகப்பெரும்பகுதி அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் பங்கு போடப்பட்டுவிட்டது.உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடங்கி அற்றுக் கூலிக்கு வேலைக்கமர்த்துவது வரை அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவது ஊரறிந்த ஒன்று.எனவே போக்குவரத்துத்துறையை சீரழித்த அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

தகுதியற்ற பேருந்துகள்,மனவுளைச்சலை உண்டாக்குமளவுக்குக் கடும் பணிச்சுமை இவற்றைத் தாங்கிகொண்டு உழைக்கும் போக்குவரத்துத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.இந்தப் போராட்டம் போக்குவரத்து ஊழியர்களின் தனிப்பட்ட போராட்டமல்ல; மக்கள் வாழ்வைச்சூறையடும் அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.எனவே அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதோடு தற்காலிக இடயூருகளைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். தமிழக அரசு காலங்கடத்தாமல் கோரிக்கைகளை நிறைவேற்றி இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தங்கள் அன்புள்ள,
காளியப்பன்.
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !

0

திருவள்ளூர் மாவட்டம்: பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்சின் 200 – வது பிறந்த நாளில்
ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள்!

முதலாளி முதல் போடுகிறான், அவன் பக்கம் அரசாங்கம் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் தலையெழுத்து என்று வாழ்ந்து கொண்டிருந்த உழைப்பாளி மக்களை ஏமாற்றிச் சுரண்டுபவர்களின் தலையில் இடிவிழுந்ததைப் போல உருவானது கம்யூனிசத் தத்துவம். அனுதினமும் உழைப்பதும் அணுஅணுவாய்ச் சாவதும் உழைப்பாளிகளின் தலைவிதி அல்ல, அது முதலாளிகளின் சதி என்று உண்மையை உடைத்துக் காட்டியவர் காரல் மார்க்ஸ். உழைப்பின் மீதான மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட முடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதன் மூலம் வர்க்கங்கள் இல்லாத கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் ஆணித்தரமாக நிறுவி உழைக்கும் வர்க்கத்துக்கு வழிகாட்டியவர் ஆசான் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டில் பிறந்த மார்க்சின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடுவது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற வகையில் ஆலைவாயில் கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் நடத்தப்பட்டன.

ஆலைவாயில் கூட்டங்கள்:

நெமிலிச்சேரியில் உள்ள டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் நடந்த கூட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர்.ப.விஜயகுமாரும், ஆவடி டி.பி.ஐ – ஐ.பி.பீ ஆலைவாயிலில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுர் (மேற்கு) மாவட்டத் தலைவர் தோழர்.மா.சரவணனும் கலந்து கொண்டு, ஆசான் மார்க்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினர்.

உழைப்பதைத் தவிர வேறொன்றும் அறியாமல் இருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டிய மார்க்சின் தத்துவம் குறித்தும், அத்தத்துவத்தைப் படைப்பதிலும் செயல்படுத்துவதிலும் மார்க்ஸ் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டதைக் குறித்தும் உணர்வூட்டும் வகையில் விரிவாகப் பேசினர். இக்கூட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

தெருமுனைப் பிரச்சாரங்கள்:

பு.ஜ.தொ.மு  – பட்டாபிராம் பகுதிக்குழு சார்பில் மாலையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. சோழன் நகர், காந்தி நகர் பாரதமாதா தெரு 1&2, உழைப்பாளர் நகர், பாபு நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் ஆசான் மார்க்சின் படங்களையும், செங்கொடியையும் ஏந்தி, மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டப் பொருளாளர் தோழர் மேரிக்குமார் மற்றும் இணைச்செயலாளர் தோழர் லட்சுமணன், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தோழர் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்.

உழைப்பைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ சதியை அம்பலப்படுத்தியதோடு, அதை உடைத்தெறிந்து விடுதலை பெறும் வழியையும் படைத்துத் தந்தவர் மார்க்ஸ், அவர் வழி நின்று ரஷ்யாவிலும், சீனாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் பூலோக சொர்க்கமான சோசலிசத்தைப் படைத்தனர் என்பதையும் விளக்கிப் பேசினர். இன்றைய சூழலில் மார்க்சின் தத்துவம் மட்டுமே நமக்கான ஒரே வழிகாட்டி, முதலாளிகளுக்கான இந்த அரசமைப்பு இனியும் நமக்கு சேவை செய்யும் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்காமல் உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் அணிதிரள வாருங்கள் என அறைகூவல் விடுத்தனர்.

மாலை நேரத்தில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள், கடைகளுக்கு வருவோர் என திரளான மக்கள் கூடி நின்று கவனித்தனர். 200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்றும் முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பகுதியில் உள்ள வி.சி.கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அவர் பகுதியில் நமது பிரச்சாரத்தைக் கவனித்துக் கேட்ட பிறகு அனைத்துப் பகுதிகளுக்கும் உடன் வந்து தனது ஆதரவை வழங்கினார். தலைவர் பிறந்த நாள் என்றால் சிலைக்கு மாலை போட்டுவிட்டு சென்றுவிடும் சூழலில், இதுவரை இல்லாத வகையில் அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்த நாளில் தெருத்தெருவாக நின்று மக்களுக்கு அவர் ஆற்றிய பணி குறித்து விளக்கிப் பேசுவதை மக்கள் வியப்போடு பார்த்தனர். பிரச்சாரக் கூட்டங்களின் முடிவில் மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. தெருமுனைப் பிரச்சாரத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

தொடர்புக்கு: 94453 68009.

விவசாயியை வாழவிடு ! சீர்காழியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

0

விவசாயியை வாழவிடு… சீர்காழியில் பொதுக்கூட்டம் !

நாள் : மே 22, 2017.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : பழைய பேருந்து நிலையம்.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஷேல்கேஸ் திட்டம் எத்தனை திட்டங்கள் விவசாயிகளை கொலை செய்ய?

தேசபக்த வேடமிடும் மோடி அரசே! கையாலாகாத தமிழக அரசே! மீத்தேன் திட்டத்தால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், நியூட்ரினோ திட்டத்தால், ஷேல்கேஸ் திட்டத்தால், தண்ணியில்லாமல் காய்ந்து பிளந்து கிடக்கும் எங்கள் அன்னை பூமியை பசுமையாக திருப்பி தர முடியுமா? விவசாயம் அழிந்து கடனாளியாகி தினம் தினம் நெஞ்சு வெடித்தும், தூக்கு போட்டும் சாகும் விவசாயிகளின் உயிரை திருப்பி தரமுடியுமா ? அல்லது தடுக்கத்தான் முடியமா?

நாட்டு மக்களுக்கு உணவு கொடுத்து உயிர் கொடுக்கிறவன் விவசாயி. தேசத்தின் ரத்த நாளங்கள் விவசாயமும், விவசாய நிலமும். அதை கொன்றால் அந்த தேசத்தின் அழிவு எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? தேசத்தின் உயிரை காப்பாற்ற, விவசாயத்தை காப்பாற்ற போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறாயே! அதை அழிக்க நினைக்கும் நீ யார்?

விவசாயி பாதித்தால் கூலி விவசாயியும் பாதிக்கிறான். விவசாயி உயிரை விடுகிறான் கூலி விவசாயி நாடோடியாக, சொந்த நாட்டில் அகதியாக மாறுகிறான். விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!

கார்பரேட் முதலாளிகளுக்கு 2015 -ம் ஆண்டு – 5,OO,823 கோடி, 2016-ல் 5,51,OOO கோடி கொடுத்தாயே விவசாயிகளுக்கு எத்தனை கோடிகொடுத்தீர்கள்? இல்லை, விவசாயிகளின் கழுத்தைதானே அறுதத்தீர்கள்.  வறட்சிக்குக் காரணம்? வானம் பொய்த்ததென்று இயற்கை மேலே பழி போடுகிறீர்களே, அந்தக் காலத்தில் ஏரி, குளம், கம்மாய் வெட்டி தண்ணியை தேக்கி வைத்து மழையில்லாத காலத்திலே பயன்படுத்ததானே? அதை பராமரிக்காம விட்டவன் எவன்? அதை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் போட்டு விற்று அழித்தவன் எவன் நீதானே?

தப்பித் தவறி தண்ணிர் வரும் காலத்தில் கடலில் கலக்கும் நீரை கூட தடுத்து நிறுத்த தடுப்பணைகள் கட்டாத சதிகாரன் நீதானே! தண்ணிரை உறிஞ்சி எடுத்து, ஆற்று மணலை அதள பாதாளத்துக்கு தோண்டி கொள்ளையடித்து நிலத்தடி நீரை அழித்தவன் எவன் நீதானே?

போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் போராடுகிறவர்கள் யாரும் விவசாயிகளே இல்லையென்று நாக்கு கூசாமல் கொச்சைப்படுத்துகிறீர்களே, பிறகு அவர்கள் என்ன தொழில் அதிபர்களா? அல்லது வேற்றுகிரக வாசிகளா? அல்லது அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? சொந்த நாட்டு மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க மறுக்கும் உங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி என்ன இருக்கு? மக்களை காப்பாற்ற வக்கற்ற உங்களுக்கு அதிகாரம் எதற்கு?

இது எங்கள் நிலம்! எங்கள் ஆறு! எங்கள் உரிமை! எங்களை வாழவிடு! இதுவே மக்கள் அதிகாரம்!

மக்களே!

இது வெறும் விவசாயிகள் பிரச்சினை இல்லை!  நம் அனைவரின் பிரச்சினை நாட்டின் பிரச்சினை! மக்களை காப்பாற்றும் அதிகாரத்தை பற்றிய பிரச்சினை! மக்கள் அதிகாரத்தில் இணைவோம்! எழுச்சியை உண்டாக்குவோம்! விவசாயத்தையும் நாட்டையும் காப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, கடலூர் – விழுப்புரம் மண்டலம்.
98434 80587, 81108 15963, 99441 17320.

சாஸ்த்ரா – கல்விக் கூடமா ? ஆர்.எஸ்.எஸ்-ன் கொலைகார பயிற்சிக் கூடமா?

5

ஞ்சை மாவட்டம், வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, தமிழகம் முழுவதிலுமிருந்து பொறுக்கியெடுத்த 145 இளைய குண்டர்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட  போலீசைக் குவித்தும், பயிற்ச்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்திலும் பிற வட மாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டியும் சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியாததால் தமிழிசை தலைவிரி கோலாமாக திரிய, பொன்னாரும் எச்.ராஜாவும் புலம்பியும் வருகின்ற சூழலில் ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வரும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தினர். சில நட்களுக்கு முன்பு கோவையில் அமிர்தா கல்லுரியிலும் கடந்த  திருச்சி சாஸ்த்ரா போன்ற பல கல்லூரிகளிளும் சித்தாந்த மற்றும்  ஆயுத பயிற்சியை அளித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவன் மோகன் பகவத்

உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே நமக்கு அவமானகரமானது. இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரத்தைப் பற்றி சிந்திப்பதே அதிர்ச்சியளிக்கிறது.

ஆனால், பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகின்றனர். தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இந்த பயிற்சியும் இதில் அதன் தேசிய தலைவர் மேகன்பகவத் பங்கேற்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

தஞ்சை – திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், இசுலாமியர்கள் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தகைய கொலைபாதக செயலை தடுக்காமல் அதற்கு 300-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது.

ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டித்தும்,இதற்கு இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக பார்க்க முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் என்று கோரியும். மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பயிற்சியளிக்க வந்துள்ள மோகன் பகவத்தை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் 15.05.2017 அன்று காலை 11மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையின் முன்பாக ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கூட்டத் தலைவர் மோகன் பகவத்தின் உருவ பொம்மையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட துணை செயலர் தோழர் விஜய் தலைமையில் எரிக்க முயன்றனர்.

ஆனால் பா.ஜ.க.வின் அடிமை விசுவாசி ஈ.பி.எஸ்-ன் காவல் துறையோ எரிக்க விடாமல் தடுக்க முயன்று இறுதியில் மோகன் பகவத்தை(உருவ பொம்மையை) தலை தனி முண்டம் தனியாக பிய்த்து எடுத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர் விஜய், தோழர் துடிமாறனை காவல் துறை வெறி கொண்டு தாக்கி ரத்த காயத்தை ஏற்ப்படுத்தியது. தோழர் லதாவின் உடையை கிழித்து வெறித்தனமாக “பெண்” காவலர்கள் நடந்து கொண்டனர். அருகில் உள்ள டீ கடை, ஜூஸ் கடைகளில் இருந்தவர்கள், பேருந்து பயணிகள்  காவல் துறையின் இந்த அராஜகத்தை கண்டு எள்ளி நகையாடினர்.

மக்கள் கூட்டத்தை கலைந்து போகுமாறு காவல் துறை கூற அவர்கள் எங்களுக்காகத்தானே போறாடுராங்க நாங்க இங்கதான் நிப்போம் என்று கூறி செல்போனில் படம் எடுக்க ஆரம்பித்தனர்.  எதுவும் செய்யமுடியாமல் காவல் துறை பின்வாங்கியது. இப்போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அருகில் இருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் அபிமானி மோகன் பகவத் என்ன சமூக விரோதியா இவங்க யாரு அவர வரக்கூடாதுனு சொல்ல” என்றார். அருகில் இருந்த மற்றொருவர் “இவங்களுக்கெல்லாம் என்னங்க குஜராத்துக்கு போயி பாத்தாதாங்க தெரியும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜெ.பி காரன் எப்படி மக்கள கொல்றானு. இவங்க பன்றதுதான் தம்பி சரி ” என்றார்.

கைதாகி மண்டபத்தில் காவல்துறை நடந்து கொண்ட அராஜகத்தை கண்டித்து தோழர்கள் வழக்குப் போடுவதாக கூறியதும் காவல்துறை பணிந்து போய் இனி இது போன்று நடக்காது  அவர்களுக்காக நாங்கள் மனிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என் கெஞ்சியதன் அடிப்படையில் இந்த விசயம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஒருங்கினணக்கப்பட்டு பாடல், பேச்சு என நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்மண்டபத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் கைதாகி இருந்தனர். அவர்கள் பு.மா.இ.மு வின் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர் . மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் போஜகுமார் மற்றும் ஆதியும் வாழ்த்திப் பேசினர்.

வறட்சியும், வறுமையும் கடன் சுமையும் ஆளான விவசாயிகளின்  தற்கொலை,  தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டியது அவசர அவசியம் என்று பு.மா.இ.மு தோழர்கள் போரட்டத்தை பார்த்து கொண்டிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

0

ரு மாத காலமாக மீஞ்சூர் பக்கத்தில் திருவெள்ளைவாயில் சுற்றியுள்ள கிராமங்களில்  டாஸ்மாக் எதிர்ப்பு குழு கட்டி  மக்கள் அதிகாரம் தோழர்கள் வேலைகளை செய்து வந்தனர். இளைஞர்கள் உடனே போராட்டம் நடத்த வேண்டும் என்று  முன் வைத்தனர். நாம் மட்டும் சென்று போராடுவது தீர்வில்லை. அனைத்து ஊர் மக்களையும் அணிதிரட்டி போராட்டம் செய்தால் தான் கடையை மூட முடியும் என நாம் முன் வைத்தோம். அனைவரும் அதை ஏற்று கொண்டனர். முதலில் மனு கொடுக்கலாம் என டாஸ்மாக் குழுவில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதனடிப்படையில் ஒவ்வொருவரும் வேலை பிரிவினை செய்து கொண்டு மக்கள் மத்தியில் அனைவரும் ஒரு வாரம் காலம் சென்று கையெழுத்து வாங்கினர்.

4.5.2017  அன்று பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்திலும், கலெக்டரிடமும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும்  மனு கொடுக்க சென்றனர். நெடுஞ்சாலையில் உள்ள கடையாக இருந்தும் ஏன் அகற்றவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், அலுவலகத்தில் இருந்து கொண்டே இல்லை என பொய் சொல்லியுள்ளார். சார் ஆட்சியர் என் மீது நம்பிக்கை இல்லையா? கண்டிப்பாக மூடி விடுவேன் என்று கூறினார். ஆனால் யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.

டாஸ்மாக்கை முற்றுகையிட்ட மக்கள்

அதற்கு பிறகு மக்களின் கோபம் அதிகமாகிறது. பத்து ஊரை சேர்ந்த கிராம மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஒருத்தர் பொறுப்பெடுத்து கொண்டனர். மொத்த 600 பேர்கள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என சமமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தான் அதிக அளவில் கலந்து கொண்டு போராடுவார்கள். ஆனால் ஆண்களும் பெண்களின் எண்ணிக்கைக்கு சமமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.  மக்கள் திரண்டு போராட்டத்திற்கு வந்த போது போலீஸ் தடுத்தது. தடுப்பையும் மீறி மக்கள் போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். உணர்வு பூர்வமாக முழக்கங்களை மக்கள் எழுப்ப தொடங்கினர்.

டி.எஸ்.பி வந்து மக்கள் மத்தியில் பேசினார். நீங்கள் ஏன் வருகிறீர்கள், கடையை மூடும் அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் பதிலளித்தனர். உடனே தொலைபேசியில் பேசி வருவாய்துறை அதிகாரிகளை வரவழைத்தனர். கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர். மக்களுக்கு போலீஸ் மீதோ, அதிகாரிகள் மீதோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. இவர்கள் சொல்வதை செய்வார்கள் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.

சுற்றியுள்ள கடைக்காரர்கள் போராடும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தனர். எந்த கட்சிக்காரர்களும் வர கூடாது என தெரிவித்தனர். சில கட்சிக்காரர்கள் வந்து பணம் கொடுத்த போது மக்கள் வாங்க மறுத்து விட்டனர். மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என கூறினர்.

தொடர்ந்து போராடி கொண்டிருந்த போது மண்டல துணை தாசில்தார் வந்தார். அவரும் கடிதத்தில் கையெழுத்து போட்டு கடையை நிரந்தரமாக மூடி விடுகிறோம் என்று அறிவித்தார். சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிராமத்திலும் கடை வரக் கூடாது என மக்கள் முழக்கமிட்டனர். வேறு வழியின்றி நாளை இதைப்பற்றி கோட்டாச்சியர் அலுவலகத்தில் பேசி சுமுகமாக ஒரு முடிவிற்கு வரலாம் என கூறினார். அங்கெல்லாம் வர முடியாது, இங்க வர சொல்லுங்க, நாங்க எங்கும் வர முடியாது என மக்கள் தெரிவித்தனர். உடனே கடைக்கு சீல் வைத்தார்கள். சீல் வைத்து கடிதத்தை மக்களிடம் கொடுத்தனர். மக்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து வெற்றியைக் கொண்டாடினர்.

இனி மனு கொடுத்து பயனில்லை, மக்கள் சக்தி மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து வீடு திரும்பினர். இனி எந்த பிரச்சனைக்கும் இவர்களை நம்ப கூடாது நாம் தான் களத்தில் இறங்கனும் என சிலர் பேசுவதை கேட்க முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !

0

பேராசான் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் முன்னெடுப்பில் கோவை கணுவாய் பகுதியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் கோபி எளிமையாக தனது தலைமையுரையை நிகழ்த்தினார். தோழர் சரவணன் உரை வீச்சினாலும் பாடல்களாலும் கூட்டத்தை சிறப்பித்தார். மாவட்ட பொருளாளர் தோழர் நித்தியானந்தன் தனது உரை வீச்சில் தொழிலாளியின் கோணத்தில் மார்க்ஸை நினைவு கூர்ந்தார். ம.க.இ.க. தோழர் சித்தார்த்தன் அவர்கள் மார்க்ஸின் சமூகப் பங்களிப்பை கோட்டு சித்திரமாக சொன்னார்.

பு.மா.இ.மு. தோழர் சக்தி, சம காலத்தில் கல்வியின் நிலையும் அது புதிய கல்விக் கொள்கை நீட் போன்ற தேர்வுகளாலும் எப்படியான நிலையை சென்றடையும் என்பதை தனது உரையில் குறிப்பிட்டார். காவிரி நீரில் மத்திய அரசின் வஞ்சகத்தையும் அதன் பின்னுள்ள ஆளும் வர்க்க நலன்களையும் தோலுரித்தார். கர்ணன் விவகாரத்தை கொண்டு நீதித்துறையையும் இன்ன பிற அரசு உறுப்புகளின் நெருக்கடி மற்றும் எதிர்நிலை தன்மையையும் அது எப்படி மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது என்பதையும் இதற்கான மாற்று மக்கள் அதிகாரம் தான் என்பதாக கூறி தனது உரையை முடித்தார்.

பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில், “1818 இல் துவங்கி 1883 -ல் தனது மண்ணுலக வாழ்வை தோழர் மார்க்ஸ் நிறைவு செய்தார். ஏங்கெல்ஸ் வார்த்தைகளில் கூறினால் “சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.”  தனது 65 ஆண்டு கால வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மனித குலம் மறக்க முடியாத அளவுக்கு மகத்தான பங்களிப்பை செய்து முடித்தார். இன்று அவரது 200 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்றாலே அதை தோழர் மார்க்ஸ் விரும்ப மாட்டார். உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்; அந்த நிலை வர போராடுங்கள் அதன் பிறகு எனது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி யோசிக்கலாம் என்பார்.

காரல் மார்க்ஸ் காலத்தில் டெலிவிஷன் இல்லை. செல்போன் இல்லை. வாட்ஸ் அப் இல்லை. முகநூல் இல்லை. நமக்கு இருந்த வசதிகள் எதுவும் அவருக்கு இல்லை. ஆனால் லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது. கணுவாய் பகுதியில் மக்கள் மத்தியில் மார்க்ஸ் பிறந்த நாளை நடத்திக் கொண்டிருக்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குருடி மலை உயர்ந்து நின்று நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குருடி மலை உச்சியிலே இயற்கையான ஊற்று உண்டு. நம் முன்னோர்கள் அதற்கு பொன்னூத்து என பெயர் வைத்தார்கள். பொன்னூத்து தண்ணீரைக் குடித்தால் தேன் தான். அடிவாரத்தில் வரப்பாளையத்தில் நின்று கொண்டு இருந்தால் அதனை சுவைக்க முடியாது. கஷ்டப்பட்டு கால் கடுக்க நடந்து மலை ஏற வேண்டும். உச்சியை அடைய வேண்டும். அதன் பின்பு தான் தண்ணீரின் ருசி நமக்கு கிடைக்கும். அது போல மார்க்சியத்தின் மகத்துவத்தை அறிய அந்த முக்கனி சாற்றை மொத்தமாக பருக போராட்டம் எனும் மலை ஏறுவது போன்ற கடும் பயிற்சி வேண்டும். செங்கொடி நம் தலைக்கு மேலே சுடர் விட வேண்டும். அதற்காகத் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது.

“கருத்து என்பது காகிதத்தில் இருக்கும் வரைதான் கருத்து அது மக்கள் மனங்களை பற்றிக் கொண்டால் பௌதீக சக்தி” என்றார் மார்க்ஸ். ரசிய தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சியம் எனும் கருத்தை தோழர் லெனின் கொண்டு சென்றார். பனிப்பிரதேசம் பற்றி எரிந்தது. முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது. உலகின் முதல் சோசலிச அரசு உதித்தது.

சீனா மக்கள் மத்தியில் மார்க்சியம் கொண்டு செல்லப்பட்டது. அபினி மயக்கத்தில் இருந்த சீனா விவசாயிகள் செஞ்சேனையாய் சிலிர்த்து எழுந்தார்கள். மாவோ எனும் மகத்தான ஆளுமை உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு கிடைத்தது. நாமும் தடாகம் ரோட்டில் செங்கொடியை உயர்த்தினோம் டுகெதர் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். என்பெஸ்ட், ரோடோரோ, கௌரி மெட்டல், நமது தோழர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாய் முடிவு காட்டுவோம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முட்டி போட வைப்போம். இன்றும் பல்லடம் ஜி‌.டி‌.என் போராட்டப் பந்தல் கடந்த மார்ச் 24 முதல் 50 நாட்களாக பற்றி எரிகிறது. நாம் பணிவதாகவும் இல்லை. அடங்குவதாகவும் இல்லை. மார்க்சினுடைய பிறந்த நாளுக்காக கூட்டம் நடத்துவதோ துண்டுப் பிரசுரம் அடிப்பதோ சுவரொட்டி போடுவதோ போதாது. மார்க்சியம் என்பது ஒரு ஜீவனுள்ள தத்துவம். போராட்ட நடைமுறையில் தான் அதன் ஆற்றல் வெளிப்படும். அந்த அடிப்படையில் ஜி‌டி‌என் போராட்டம் என்பது மார்க்ஸுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செய்யும் மகத்தான பிறந்தநாள் மரியாதை.” எனக் கூறி நிறைவு செய்தார்.

நன்றியுரை கூறிய மாவட்ட செயலர் தோழர் வரதராஜன் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற உதவிய  கூட்டத்தினருக்கும் தோழர்களுக்கும் நன்றி கூறி முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

அழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !

3

நியூயார்க்கைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்சன் ரோபாடிக்ஸ் (construction robotics) என்ற நிறுவனம் சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனாரை உருவாக்கியுள்ளது. தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் பாதி வேலை வாய்ப்புகளை குறிப்பாக கட்டுமானத் துறையில் காலி செய்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

எந்திரக் கொத்தனார் (Robot Bricklayer) மனிதனை விட ஆறு மடங்கு விரைவாக செங்கலுடன் சிமிட்டிக் கலவையைச் சேர்த்து சுவரை எழுப்பும் திறனைக் கொண்டது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 500 செங்கற்களை தொழிலாளியால் அடுக்க முடிந்தால் இயந்திர மனிதனால் 3000 செங்கற்களை அலுக்காமல் சலிக்காமல் அடுக்க முடியும். இந்த இயந்திரத்திற்கு செங்கற்களையும் சிமிட்டிக் கலவையையும் உள்ளீடு செய்து கட்டளையிடவும் பராமரிக்கவும் ஒருவர் மட்டுமே போதும்.

சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனார் இயந்திரம்

இந்நிறுவனத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாஸ்ட்பிரிக் ரோபாடிக்ஸ் (Fastbrick Robotics) என்ற நிறுவனம் ஹட்ரியன் எக்ஸ் என்ற சோதனை முயற்சி எந்திரக் கொத்தனாரை 2016 ஆம் ஆண்டு உருவாக்கியது. வணிக மதிப்பிலான வடிவமாக இது முழுமையடையும் போது எந்திரம் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்கள்) என அந்நிறுவனம் விலை மதிப்பீடு செய்துள்ளது.

மனமகிழ் வீட்டினைக் கட்டுவதற்குத் தேவையான தகவல்களை ஹட்ரியன் எக்ஸிற்கு உள்ளீடு செய்தால் மட்டுமே போதும் வெறும் இரண்டு நாட்களிலேயே உங்கள் விருப்பமுள்ள வீட்டை உருவாக்க முடியும். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 1000 செங்கற்களை அடுக்கக் கூடிய திறன் படைத்தது ஹட்ரியன் எக்ஸ். அதையே நாளொன்றிற்கு 24 ஆயிரம் செங்கற்கள் எனக் கொண்டால் சுமார் 48 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது போன்ற வேலையிழப்புகளைத் தொழில்நுட்ப வேலையின்மை(Technological Unemployment) என்று முதலாளித்துவம் வகைப்படுத்திக் கொண்டு தனது பாவத்தை மறைக்கிறது.

ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்வதில்லை. விபத்துக்கள் நேரிடினும் நட்டஈடுக் கொடுக்க தேவையில்லை. வைப்பு நிதியும், காப்பீடும், ஓய்வூதியமும் இன்னப்பிற இத்தியாதிகள் எதுவும் எந்திர மனிதனுக்குத் தேவையில்லை. ஆனால் இவையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியதாய் இருப்பது முதலாளித்துவத்திற்கு வேப்பங்காயாய் கசக்கிறது.

முதலாளித்துவத்தின் முடிவிலா இலாபவெறிக்கு சிலப் பொருளாதார அறிஞர்கள் கடிவாளம் போட்டு முட்டுக் கொடுத்து பாதுகாக்க நினைக்கிறார்கள். ஒருவேளை தானியங்கி தொழில்நுட்பத்தால் 20 விழுக்காடு அளவிற்கு வேலையிழப்பு ஏற்படுவதாக எடுத்துக்கொண்டால் 20 விழுக்காட்டு வேலை நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் அதாவது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என்று நியூயார்க்கைச் சேர்ந்த ரூஸ்வேல்ட் பல்கலைகழகத்தின் பொருளாதார அறிஞர் மைக் கொன்செல் அறிவுறுத்துகிறார். மேலும் உலகளாவிய அடிப்படை வருமானம் ஒன்றை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.  ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏனெனில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு குறைந்தது எட்டு மணி நேரம் வேலை செய்வதாக கொண்டால் 48 தொழிலாளர்களின் எதிர்காலத்தை ஒரே நாளில் ஹட்ரியன் எக்ஸ் கபளீகரம் செய்துவிடும். எனவே இது வெறும் விழுக்காடு பிரச்சினை அல்ல என்பது வெள்ளிடைமலை.

இன்றே உலகமயத்தால் ஊதிப்பெருக்கப்பட்ட செயற்கையான பொருளாதார அமைப்பில் மாதத்தின் எல்லா நாட்களிலும் கட்டிடத் தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைக்கும் நாட்களில் வரும் ஊதியத்தை வைத்து ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள். இதனிடையில் தானியங்கி வந்து வேலை நேரத்தை குறைத்தாலும் சரி, வேலையே பறிபோனாலும் சரி அவர்களது குடும்பம் வறுமையில் உழல்வது உறுதி.

ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்ளப்போவது இல்லை

தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை தான் முதலில் பதம் பாக்கிறது. இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. கூடிய விரைவில் இங்கிலாந்திலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எந்திரங்களின் வளர்ச்சி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு உலகமயமாதலை விட பெரிய ஒரு அச்சுறுத்தல் என்று 2015 ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஆங்குஸ் டீட்டோன் எச்சரிக்கிறார்.

எந்திரங்கள் ஏற்கனவே பாரம்பரிய உற்பத்தித்துறையின் வேலைகளை கபளீகரம் செய்து விட்டது. தானியங்கு எந்திரங்களின் வளர்ச்சியானது குறிப்பாக நடுத்தர வகுப்பு மக்களின் வேலை வாய்ப்புகளை அழிப்பதில் தீவிரமாக ஈடுபடும். எனவே ஆக்கப்பூர்வமான அல்லது மேற்பார்வையிடும் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்கும் என்று எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாகிங்ஸ்.

இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் சலுகைகள் பணக்கார நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் சமூக பொருளாதார மதிப்பென்பதே கிடையாது. எனவே இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்குமான போட்டி என்பது உடலுழைப்பு சார்ந்த துறைகளில் இன்றுவரை அரிதாகவே இருக்கிறது.

இந்தியக் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளிகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 30 இலட்சம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியக் கட்டுமானத்துறையின் சாமுத்திரிகா லட்சணத்திற்கு நாடு முழுதும் நடந்து வரும் எண்ணிலடங்கா விபத்துக்களும் உயிரிழப்புகளும் சாட்சியாக இருகிறது. எனினும் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டுமானத் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசாகிவிடும் என்று முதலாளித்துவ ஆய்வுகள் ஆருடம் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு கோடியே 15 இலட்சம் அடுக்குமாடி வீடுகளுக்கான சந்தை மதிப்பு 128 இலட்சம் கோடி சொச்சம் (ஒரு டிரில்லியன் டாலர்) ஆக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் (Oxford Economics) மற்றும் உலகளாவிய கட்டுமானக் கண்ணோட்டங்கள் (Global construction perspectives) என்ற அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் கட்டியங் கூறியிருக்கின்றன.

கட்டுமானப் பணிகளில் இனி மனித எந்திரத்துக்கு பதிலாக எந்திர மனிதன்.

புதியத் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் அதற்கேற்றாற்போல வலியது தப்பும் என்ற இயற்கை விதிக்கு ஒப்ப தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் முதலாளித்துவவாதிகள் ஓயாமல் முணுமுணுக்கப்படும் காயத்ரி மந்திரம். கட்டுமானம், தானியங்கி மகிழுந்து(Self-Driving car), இணைய கண்ணாடிகள்(Internet Glasses), ட்ரோன் பட்டுவாடா பணிவிடை(Drone delivery service) என மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தானியங்கி இயந்திரங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உழைப்பு நேரத்தைப் பாரிய அளவு குறைப்பதற்காகத்தான் என்றும் ஓயாமல் விதந்தோதப்படுகின்றது.

நிலவுடைமை சமூகத்தின் அடிமைத்தளைகளை மாபெரும் பிரெஞ்சு புரட்சியினால் உடைத்தெறிந்து மனிதகுலத்தை விடுதலை செய்ததற்காக மார்தட்டிய முதலாளித்துவம் பின்னர் மனிதர்களை தங்களது உழைப்பை விற்று வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளிவிட்டது. மேலும் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சமூகத் தேவைகளுக்காக என்று அல்லாமல் தம்முடைய சொந்த இலாப நோக்கிற்காக மட்டுமே கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.

தொழிற்சாலைகளில் மனிதன் இயந்திரமாக வேலை செய்ததில் இருந்து இயந்திரங்கள் மனிதனின் உழைப்பை காலி செய்யும் வரை ஒன்றும் மட்டும் உறுதி. தன்னுடைய இலாப நோக்கிற்காக  பலநூறு பேரை வேலையை விட்டு துரத்திவிட்டு அந்த இடத்திற்காக சில பேரை மல்லுக்கட்ட வைக்கும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியாமல் தீர்வேதுமில்லை.

இறுதியில் அனைத்தும் தானியங்கி முறையில் உற்பத்தி செய்யப்படும் போது இவர்கள் உற்பத்தி செய்தவற்றை வாங்குவதற்கு பல சதித்திட்டங்கள் போடுகிறார்கள். பிறகு அந்த சதித்திட்டங்களும் தோல்வியடைந்த பிறகு வாங்குவோர் இல்லாமல் பொருளாதாரம் சரிகிறது. இதுதான் 2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் நடைபெற்றது.

ஆகவே தானியங்கி முன்னேற்றத்தை வெறுமனே தொழில் நுட்ப புரட்சி, மனிதர்களின் வேலை நேரக்குறைப்பு என்று இனியும் ஏமாற்ற முடியாது. அது உலக மக்களை உயிரோடு கொல்லும் முதலாளித்துவத்தின் இலாப வைரஸ்!

– சுந்தரம்

மேலும் தகவலுக்கு :

யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !

0

ருமபுரி   பாலக்கோடு அருகே  அண்ணாமலைஅள்ளி  பகுதி பொதுமக்கள், பெண்கள்  மக்கள் அதிகாரம் அமைப்புடன்  இணைந்து  அப்பகுதியில்   உள்ள  டாஸ்மாக்கை  அடித்துநொறுக்கி  போராட்டம் நடத்தினர். தமிழகம்   முழுவதும்  தேசிய நெடுஞ்சாலைகளில்  இருக்கும்  டாஸ்மாக்கை  மூடவேண்டும் என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவு போட்டதை  அடுத்து   ஊருக்குள்  டாஸ்மாக்  திறந்து  ஊரை கொள்ளையடிக்கும்  கொள்ளைக்காரனைப் போல    ஆட்டம்   போடுகிறது  தமிழக அரசு.

இதற்கு  எதிராக   எங்கள் ஊரில்  டாஸ்மாக்கை  அனுமதிக்க மாட்டோம்   என்று  அன்றாடம்  டாஸ்மாக்கை  அடித்து நொறுக்குகின்றனர் மக்கள். இந்நிலையில்  உயர்நீதி மன்றம்  டாஸ்மாக்கை எதிர்த்து  போராடக் கூடிய மக்களை  கைது செய்ய கூடாது என்று  உத்தரவு  இருந்தும்  அதனை  மாவட்ட  நிர்வாகம்  கால்தூசுக்கும்  மதிப்பதில்லை. அதைத்தான்  தருமபுரியிலும்  அரங்கேற்றியிருக்கிறது .

தருமபுரி  மாவட்டம்  பாலக்கோடு அருகே  அண்ணாமலைஅள்ளி பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை  மீறி  டாஸ்மாக் கடை  செயல்படுவதை    அறிந்த  மக்கள்   உடனே    மக்கள்  அதிகாரம்  அமைப்பை  அழைத்தனர். கடந்த  ஒரு வாரமாக  அப்பகுதியில்   பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் மக்கள் அணிதிரண்டு   13.05.2017 அன்று   காலை 10 மணியளவில்   கடையின்  பூட்டை உடைத்து  மது பாட்டில்களை   எடுத்து  வெளியே வீசி, உடைத்து நொறுக்கி  சுமார்  1  மணிநேரத்திற்கும்  மேலாக  போராட்டம் நடத்தினர்.  அதுவரை அமைதியாக  வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்த  காவல்துறை   திடீரென்று  போராடியவர்களை  தரதரவென்று  இழுத்து  80 பெண்கள், 30  ஆண்கள்  என அனைவரையும்  கைது செய்து  மண்டபத்தில்  அடைத்தது.

பிறகு  மக்கள் அதிகாரம்  அமைப்பை   சார்ந்த   தோழர்கள் சிவா,கோபிநாத்  இருவரையும்  மண்டபத்தில்  இருந்து தனியாக  கடத்த  முயற்சித்தனர்.  அப்போது  அந்த பெண்கள்  தோழர்களின்  கையை  பிடித்துக்கொண்டு  நாங்கள் அவர்களை  தனியாக  விடமாட்டோம் . அவர்களை  விடவில்லை என்றால்  நாங்களும்  அவர்களோடு வருவோம். என்று  விடாப்பிடியாக  போராடினர்.  இருந்தும்  அவர்களை   தனியாக   கடத்தி  சென்றது போலீசு. இதனை  அறிந்து   வெளியில்  நின்று  கொண்டிருந்த அப்பகுதி    பெண்கள்   40-க்கும்  மேற்பட்டோர்  மறியல்  செய்வதற்கு   தயாராகும்  போது  இடைமறித்த  காவல்துறை,   மக்கள் அதிகாரம்  அமைப்பு  தோழர்களை  குறிப்பிட்டு   அவர்கள்  நக்ஸலட்டுக்கள், தீவிரவாதிகள்   அவர்களோடு  போராட வந்துட்டீங்க  என்று  அப்பெண்களை   அச்சுறுத்தியது.

அதற்கு  அந்த  பெண்கள்  யாரை  பார்த்து   தீவிரவாதி  என்கிறீர்கள் ,நக்ஸலட்டுகள்  என்கிறீர்கள்   அவர்கள்   எங்களுக்காக    போராட  வந்துருக்கிறார்கள்.  நீங்கதான்  தீவிரவாதி  என்று   காவல்துறையின் அச்சுறுத்துலுக்கு  அஞ்சாமல் பெண்கள்    பதிலடிகொடுத்தது    காவல்துறையை  அச்சம் கொள்ள வைத்தது.

கடத்தி  சென்ற  தோழர்களை  விடவில்லை  என்றால்   நாங்கள்   இரவு ஆனாலும்  போகமாட்டம்  என்று  தொடர்ந்து  போராடினர். ஆனால்  இந்த  இரண்டு தோழர்களையும்  கடத்தி சென்று   கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.   இந்நிலையில் மண்டபத்திற்கு   வெளியில்  இருக்கும்   அப்பகுதி  பெண்கள்,  ஆண்களை  மக்கள்  அதிகாரம்   மண்டல  ஒருங்கினைப்பாளர்   முத்துக்குமார் மீண்டும்  போராடுவதற்கு  ஒருங்கிணைக்கும் போது, தருமபுரி  எஸ்பி    முத்துக்குமாரை   அவர் யார்? என்று அப்பகுதி மக்களிடம்  கேட்டு  அவரை   கைது செய்ய   காவல் துறை  முயற்சித்தது.

அப்பகுதி  மக்கள்    அவரும்  எங்க  ஊருக்காரர்தான்  என்று  அவர்களிடம்  வாக்குவாதத்தில்  ஈடுபட்டு  அவர்களோடு   அழைத்து  சென்றனர். காவல்துறை ஆதரவோடு  மீண்டும் இந்த கடையை  திறந்தால்  நாங்கள்  மீண்டும் அடித்து நொறுக்குவோம், என்று  போராட தயாராகி  வருகின்றனர்.  இனியும்  தீவிரவாத  பீதியூட்டி  மக்கள்  போராட்டங்களை  ஒடிக்கிவிடலாம்  என்று  நினைக்கும்  ஆளும் வர்க்க  கனவை  அண்ணாமலைஅள்ளி    மக்கள்  தவிடு பொடியாக்கி விட்டனர். இதுபோன்ற  துணிச்சலான மக்கள்  போராட்டங்கள் தான்   அனைத்து  பிரச்சனையையும்  தீர்க்க முடியும் என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசும் போலீசும் உணர்த்திவிட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள்  அதிகாரம், தருமபுரி
தொடர்புக்கு: 80152 69381.

சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !

4

ங்களது குறிக்கோள் என்னவென்றால், உத்தமமான சந்ததியினரை உற்பத்தி செய்வதும் அவர்கள் மூலம் வலிமையான பாரதத்தைப் படைப்பதும் தான்” என்கிறார் மருத்துவர் கரிஷ்மா மோகன் தாஸ் நார்வானி.

”பெற்றோர் அறிவற்றவர்களாக இருந்தாலும், படிப்பறிவற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது குழந்தை அதீத புத்திசாலியாக பிறக்கும். சரியான முறைகளைப் பின்பற்றினால், கருப்பான நிறம் கொண்ட, குள்ளமான பெற்றோர்களுக்கும் கூட நல்ல வெளுப்பு நிறத்திலும் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை உயரமாகவும் வளரும்” என்கிறார் மருத்துவர் ஹித்தேஷ் ஜனி.

இவர்கள் கர்ப விஞ்ஞான கலாச்சாரத் திட்டத்தின் (Garbh Vigyan Sanskar Project) தேசிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள்.

நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான வித்யா பாரதியின் துணை அமைப்பான ஆரோக்கிய பாரதியினுடையது. மேற்படி திட்டத்தின் நோக்கம் ’உத்தம சந்ததி’ ஒன்றை உருவாக்குவது. உத்தம சந்ததி என்பதை முன்வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் (Designer Babies) என்று சரியாக புரிந்து கொள்ளலாம். இவ்வாறான ’உத்தம சந்ததியை’ உற்பத்தி செய்ய இவர்கள் பின்பற்றச் சொல்லும் வழிமுறைகள் என்ன?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்து ஆலமரத்தடிக்கு எப்போதாவது ஒரு ‘மருத்துவர்’ ஒருவர் வருவார். சுற்றிலும் மூலிகைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு “ஒருமண்டலம் சுயமைதுனம் செய்யாமல் விரதமிருந்து பின் மனைவியின் மாதவிலக்காகிய 12-ம் நாள் அவரோடு கூடினால் பிறக்கும் குழந்தை பெரும் அறிவோடு பிறக்கும்” என்று நீட்டி முழக்குவார். ஒருவேளை உங்களால் ‘சுத்தபத்தமாக’ இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர் முன் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் மூலிகையில் ஒன்றை ஐந்தாயிரம் கொடுத்து வாங்கித் தின்றால் (தேனில் கலந்து; அந்த தேனையும் அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்) அதே அளவுக்கு பலன் கிடைக்கும் என்று அடித்து விடுவார். கூட்டம் அதிரும். அதிலும் ஒற்றைப்படை நாட்களில் கூடினால் பெண் குழந்தைகளும், இரட்டைப்படை நாட்களில் கூடினால் ஆண் குழந்தைகளும் பிறக்குமென கொளுத்திப் போடுவார் (பெண் குழந்தைகளால் அறிவாளி ஆகவே முடியாதோ).

அந்த ஆலமரத்தடி வில்லேஜ் விஞ்ஞானியின் இன்றைய வடிவம் தான் ஆரோக்கிய பாரதி.

சரி,அது என்ன உத்தமமான சந்ததி? அதை எப்படி உருவாக்கப் போகிறார்கள்?

உத்தம சந்ததி என்பது இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) குழந்தைகள் என்கிறார் மருத்துவர் ஜனி. இவ்வாறு ’வடிவமைப்பதற்கு’ தேவையான விவரங்கள் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடும் மருத்துவ நார்வானி, குழந்தைகள் கருவுற்றுள்ள சமயத்தில் தாய் எதைத் தின்ன வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் விரிவான விதிமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றினால் நாம் விரும்பும் விதமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமின்றி பழைய இந்து சாஸ்திரங்களில் தங்களுடைய ராசி, நட்சத்திரங்களின் அடிப்படையிலும், கோள்கள் எந்தக் கட்டத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்பதன் அடிப்படையிலும் பெற்றோர் எந்த சமயத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் இருப்பதாக நார்வானி குறிப்பிடுகிறார். எந்த நேரத்தில் தம்பதியினர் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதைக் குறித்துக் கொடுத்துடன், சம்பவம் நடப்பதற்கு 90 நாட்களுக்கு முன்னிருந்து பின்பற்றப்பட வேண்டிய ‘தேக சுத்தி’ மற்றும் ‘நாடி சுத்தி’ பயிற்சிகளையும் வழங்குகின்றனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த’வில்லேஜ் விஞ்ஞானிகள்’

இவை மட்டுமின்றி கர்ப காலத்தில் குறிப்பிட்ட சில சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்தால் குழந்தையின் அறிவு வளருமாம். இதன் மூலம் பிரசவ வலி இருக்காதென்றும், பிறக்கும் குழந்தை மற்ற குழந்தைகளை விட 300 கிராம் வரை அதிக எடையுடன் பிறக்குமென்றும் சொல்கிறார் அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொரு வில்லேஜ் விஞ்ஞானினும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குமான அசோக் குமார் வார்ஷினி.

இந்தளவுக்கு கேடுகெட்ட லூசுத்தனங்கள் முதன் முதலில் எங்கே துவங்கியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறெங்கே, குஜராத்தில் தான்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் முயற்சித்துப் பார்க்கப்பட்ட மேற்படி திட்டம், 2015-ம் ஆண்டுக்குப் பின் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டதாக ஆரோக்கிய பாரதியின் தேசிய தலைவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர். தற்போது குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் சுமார் பத்து கிளைகளில் செயல்பட்டு வரும் இத்திட்டம், விரைவில் உத்திரபிரதேசத்திற்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேற்படி திட்டத்தின் அடிப்படையில் கொல்கத்தாவில் கர்ப சன்ஸ்கார் என்கிற பெயரில் மூன்று நாள் ’பயிற்சிப் பட்டறை’ ஒன்றுக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளது ஆரோக்கிய பாரதி. நிகழ்ச்சிக்கு பரவலாக செய்யப்பட்ட விளம்பரங்கள் மேற்கு வங்க குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் (WBCPCR) கவனத்தை ஈர்க்கவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி தடை கோரியுள்ளனர். மத்தியில் நடப்பது மோடி அரசு என்பதால், பெயருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து முகாமை நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்.

முகாம் நடந்த நாட்களில் அதைப் பார்வையிடச் சென்ற குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் அநன்யா சக்ரபர்த்தி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் டிங்கு கன்னா, ருச்சிரா குப்தா போன்றோர், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் மற்றும் நோட்டீசுகளின் வாசகங்களில் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதைப் போன்றும், அதற்கான பயிற்சிகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் ஆரோக்கிய பாரதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் வர்சினி, மேற்படி திட்டத்திற்கான ஜெர்மனியிடமிருந்து கடன் வாங்கியது என்கிறார். இதே போன்ற திட்டம் ஒன்றின் மூலம் குழந்தைகளைப் பெற்றதன் மூலமாகவே இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இருபதே ஆண்டுகளில் ஜெர்மன் மீண்டும் வல்லரசானதாக ஆரோக்கிய பாரதியின் பிற நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தைகள் கருத்தரிக்கும் நேரமும், கருவில் இருக்கும் காலமும் அது பிறந்த பின் அதன் ஆளுமையில் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே உண்மை. குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் வளரும் சூழலே அக்குழந்தைகளின் அறிவாற்றலையும் இன்னபிற திறமைகளையும் தீர்மானிக்கின்றன. எனினும், அபூர்வமாக சில குழந்தைகள் தாங்கள் வளரும் சூழலையும் எதிர்த்துப் போராடி புதிய திறமைகளை வளர்த்துக் கொள்கின்றன. ஆனாலும், அவ்வாறான குழந்தைகள் விதிவிலக்குகளே.

ஒரு சமூகத்தில் பிறக்கும் குழந்தையை, அது வளரும் போது என்ன வகையான சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது – அல்லது ஈடுபடுத்தப்படுகின்றது – என்பதன் அடிப்படையிலேயே அதன் ஆளுமையும் அறிவுத்திறனும் உருவாகின்றன. ஆனால், தங்கள் பிள்ளைகளை ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் விற்பன்னராக்குவது எப்படி என்பதைச் சுற்றியே இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கண்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் கும்பலின் டிசைனர் குழந்தைகள் திட்டம் நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ப காலத்துக்கு முன்னும் பின்னும் பின்பற்றப்பட வேண்டியவைகள் என ஆர்.எஸ்.எஸ் வகுத்துக் கொடுக்கும் நடைமுறைகளின் விளைவாக பிறக்கும் குழந்தை ’உத்தம சந்ததியாக’ பிறக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் இந்துத்துவ கும்பல் எதிர்பார்க்கும் ‘உத்தமர்களாகி’ விடுவர். சமஸ்கிருத மந்திரங்கள், பார்ப்பன வாழ்க்கைமுறை, பார்ப்பன உணவுப்பழக்கங்கள் என ’உத்தம’ குழந்தைக்கு கனவு காணும் பெற்றோர்களுக்கு அவர்கள் அறியாமலேயே காக்கி டவுசரை மாட்டி விடுவதே ஆர்.எஸ்.எஸ் திட்டம்.

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை வளர்க்கவும், அவர்களுக்கு சமூக எதார்த்தத்தை உணர்த்தும் நடைமுறைகளின் ஊடே தங்கள் பிள்ளைகளை நடத்திச் சென்று வழிகாட்டவும் நேரம் வாய்க்கப்பெறாத  நடுத்தர வர்க்க மக்கள், ஏதாவது குறுக்குவழியில் தங்கள் பிள்ளைகளை சூப்பர் மேன்களாகவும் ஸ்பைடர் மேன்களாகவும் ஆக்கி விடமுடியுமா என ஆலாய்ப் பறக்கின்றனர். இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்குவதில்லை. கோடை விடுமுறைக் காலங்களில் இது போன்ற பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளை மையப்படுத்தி நடக்கும் (ஆயகலை அறுபத்து நான்குக்கான) பயிற்சி வகுப்புகளும், அதைச் சுற்றிய பொருளாதாரமும் தனி கணக்கு.

தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் குழந்தைகளை மையப்படுத்தி வரும் விளம்பரங்களை கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். அதிக உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து பானங்களில் இருந்து அபாகஸ் வரை “கட்டணமாக செலுத்தும் பணத்தின் அளவைப் பொறுத்து’ உங்களுக்கு ஸ்பைடர்மேனையோ சூப்பர்மேனையோ உருவாக்கித் தருவதாக மேற்படி விளம்பரங்கள் உத்தரவாதம் தருகின்றன.

குழந்தைகள் பெறுவது மட்டுமின்றி அவர்களை வளர்ப்பதே பெரும் வணிகச் சந்தையாக உள்ளது – இந்த வணிகச் சந்தைக்கு அடித்தளமாக இருப்பது பெரும்பாலும் உயர் மற்றும் நடுத்தரவர்க்க பெற்றோர்களே. இவர்களின் சபலத்தையும் பலகீனத்தையும் மூலதனமாக கொண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் களமிறங்கியுள்ளது. பார்ப்பன கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் கூட அதை எதார்த்தத்தில் ஒரு வாழ்க்கை முறையாக அமல்படுத்துவதில் இருக்கும் மனத்தடைகளை “குழந்தைக்காக” என்கிற ஒரே காரணம் தகர்த்து விடும்.

அந்த வகையில் தான் பிறக்கப் போகும் குழந்தைகளை முன்வைத்து பெற்றோரை முழுவதுமாக காவிமயமாக்குவது, பின்னர் எதிர்காலத்தில் அதே சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பரிவார அமைப்பு என்கிற கணக்கில் நூற்றுக்கணக்கான அமைப்புகளைக் களமிறக்கி சமூகத்தின் சகல பிரிவுகளிலும் இந்துத்துவ வெறுப்பரசியலை முன்னெடுத்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு காக்கி டவுசர் மாட்டிவிடும் திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை விமர்சிக்கும் ஜனநாயக சிந்தனை கொண்டவர்கள் அவற்றை ஆக்டோபசுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் – அது காரணமின்றிச் செய்யப்பட்ட ஒப்பீடல்ல.

– சாக்கியன்

மேலும் படிக்க:

வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !

2
போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

ணவு உற்பத்திக்கு விவசாயி என்றால், துணி மணி உற்பத்திக்கு நெசவாளர்கள், குடியிருப்புகளை உருவாக்குவது கட்டிடத் தொழிலாளி போல அரசுப் போக்குவரத்து என்றால் அதன் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள். இவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உழைப்பும் தியாகமும் சொல்லிமாளாது. தங்களது உயிரையே கொடுத்து, பயணம் செய்யும் மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்கள் மட்டுமல்ல, ஓட்டைப் பேருந்துகளின் ஸ்பேர்பார்ட்ஸை தமது சொந்த உழைப்பில் வாங்கிப் போட்டு போக்குவரத்தை மக்களுக்கு அன்றாடம்  வழங்கும் தொழிலாளர்களும் உள்ளனர்.

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உயர்ந்து வளர்ந்த, ஆலமரமாக தழைத்து நிற்கும் போக்குவரத்துக் கழகம், மக்கள் வரிப்பணத்தில் முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் பல நூறு கிளைகள், 24,000 பேருந்துகள், ஒன்றரை லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு பரந்து விரிந்துள்ளது. இவையனைத்தும் பொருத்துக் கொள்ள முடியாத தனியார்மய-தாராளமயவாதிகள் இச்சொத்துக்களைத் தின்று ஏப்பம் விடுவதற்கென நாக்கில் எச்சியூற ஓநாயாக அலைகின்றனர்.

போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள், பென்சன் போன்றவற்றை தடுத்து நிறுத்தியுள்ளது தமிழக அரசு. அற்பக் கூலிக்கு தொழிலாளர்களின் வாழ்வை நசுக்கி வருகின்றது. பல நூறு முறை போராடிப் பெற்ற இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்து வருகின்றது. இவ்வாறு தொழிலாளர்களை வஞ்சிப்பதற்கு காரணம், போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றது.

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்று உண்மையா? இல்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தான் போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு முக்கியக் காரணம். அண்மையில் பண மதிப்பிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதுகூட போக்குவரத்து துறையில் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்காமல் கருப்புப் பணத்தை வெள்ளையாக் கியதை நாடே அறியும். இந்த ஊழல் குற்றவாளிகள் தான் போக்குவரத்துத் துறை நட்டமடைவதற்கு காரணமாக இருக்கின்றனர். மேலும், இந்தக் குற்றவாளிகள் தொழிலாளர்களது சேமிப்புப் பணம் ரூ.7,000 கோடியை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கபளீகரம் செய்யத் துடிக்கின்றனர்.

மற்றொருபுறம், ஆம்னி பேருந்து, தனியார் பேருந்துகளை 7,500-க்கும் அதிகமாக பெருக்கி போலியான பர்மீட்களை அவற்றிற்கு அளித்து, பொதுப்போக்குவரத்தை நாசப்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தின் மீது டோல்கேட் வரி, டீசல் மீதான வரி என அனைத்து வழிமுறைகளிலும் சூறையாடி அரசு போக்குவரத்துத் துறையை சுக்குநூறாக்கியுள்ளனர். இந்த நிலையிலும் அரசுப் பேருந்து சாலையில் செல்கிறது என்றால் அதற்கு காரணம், தொழிலாளர்களின் கடுமையான உழைப்புதான். தொழிலாளர்களின் நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, பென்சன், ஓய்வுகாலப் பலன்களை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வஞ்சிக்க அரசு சதித்தனமாக நடந்து கொண்டு வருகிறது.

தனியார் பேருந்துகளுக்கு உரிமம் கொடுத்து அரசுப் போக்குவரத்தை நாசமாக்குகிறது போக்குவரத்துத் துறை

விவசாயிகளுக்குச் சேரவேண்டிய உரிமைகளைப் பறித்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளுவது , நீட் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்களை மருத்துவத்துறையில் இருந்து விரட்டியடிப்பது போல, மீனவர்களை கடலில் மீன்பிடிக்கவிடாமல் சுட்டுத் தள்ளுவது போல இந்தப் போக்குவரத்துத் துறையையும் நாசப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.

ஆகையால், தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு என்பது தனியார்மயமாக்க சதித்திட்டத்தின் ஒரு பகுதியே. தமிழக அரசு இவ்வாறு தனியார்மயத்திற்கு சதித்திட்டம் தீட்டிவரும் போது, மத்தியில் ஆளும் மோடி அரசோ, ஒட்டுமொத்த பொதுப்போக்குவரத்தையே பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொண்டு செல்லும் வகையில் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

எனவே, தனியார்மயம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வைப் பெற முடியும், பொது மக்களும் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும். தனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போலவே, தனியார்மயம் தாராளமயத்தாலும் இந்த அரசு ஆளத் தகுதியிழந்ததாலும் பாதிக்கப்படும் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து இந்த அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களே தீர்வாக இருக்க முடியும். அந்த வகையில், ஒன்றிணைந்து போராடுவோம்!

  • ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், பணி ஓய்வுப் பலன்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை வஞ்சிப்பது – தமிழக அரசின் தனியார்மயமாக்க சதித்திட்டமே!
  • போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு காரணமான அமைச்சர்கள் – அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்! கடனில் தத்தளிக்கும் கழகத்தை மீட்டெடுப்போம்!
  • தனியார்மயத்தால் பாதிகப்படும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784
email: ndlfhosur2004@gmail.com


மே 15 : போக்குவரத்துத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 81485 73417, 80152 69381.

சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

0
சத்தீஸ்கரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய முகநூல் பதிவு (அருகில் – வர்ஷா டோங்ரே)

த்தீஷ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் அரசுப் படைகளால் அன்றாடம் அரங்கேற்றப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வாரம் ஒரு செய்தியாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வக்கீல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு இது குறித்து அம்பலப்படுத்தி வந்தனர். இவ்வாறு அம்பலப்படுத்தியவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்களை மிரட்டி அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறச் செய்தது அரசு.

அதோடு அவர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாகக் காட்டி அவர்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தது சத்தீஸ்கர் அரசு. ஆனால் தற்போது அரசுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே அதுவும் சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே, அரசின் அத்துமீறல்கள் குறித்து சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

ராய்ப்பூர், மத்திய சிறையில் இணை எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார், வர்ஷா டோங்ரே. கடந்த ஏப்ரல்-24 அன்று மாவோயிஸ்ட்டுகளால் தொடுக்கப்பட்ட சுக்மா தாக்குதல் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் தனது முகநூலில் பஸ்தார் பகுதியில் நீடித்து வரும் நிலைமைகளைப் பற்றி நீண்டதொரு பதிவை எழுதி வெளியிட்டுள்ளார். அப்பதிவை வெளியிட்டு சில நாட்களிலேயே அது சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக அதிகமாகப் பகிரப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்தப் பதிவை நீக்கி விட்டார். ஒரு வேளை அரசால் மிரட்டப்பட்டிருக்கலாம். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

“எந்த ஒரு சம்பவத்திலும் இருபக்கத்தில் யார் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமது நாட்டு மக்களே. அவர்கள் அனைவரும் இந்தியர்கள், அதனால் தான் யார் கொல்லப்பட்டாலும் அது நம் அனைவரையும் பாதிக்கிறது. இது குறித்து நாம் அனைவரும் இணைந்து விசாரிக்க வேண்டும் அப்படி செய்தால் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்.

ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதிகளில் முதலாளித்துவ அமைப்பு திணிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் எரிக்கப்பட்டு, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ஆதிவாசிகளை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றி மொத்த வனப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள். ஆதிவாசிப் பெண்கள் மீது நக்சல்கள் என்ற சந்தேகம் வந்தால் அதனை தீர்த்துக் கொள்ள, அப்பெண்களின் மார்பகங்களை அழுத்தி பால் வருகிறதா எனப் (போலீசும், துணை இராணுவப் படைகளும்) பார்க்கிறார்கள்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஆதிவாசிகளின் நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை மறுக்கிறது. இருப்பினும் புலிப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதிவாசிகளை அவர்களது நிலத்திலிருந்தும், வனத்திலிருந்தும் வெளியேற நிர்பந்திக்கிறார்கள். நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டு வரவா இவை அரங்கேற்றப்படுகின்றன? உண்மை அதுவல்ல.

உண்மைக்காரணம் என்னவென்றால், இவ்வனங்களில் அபரிதமாக உள்ள இயற்கைத் தாதுவளங்களை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க, இந்த காடுகளில் வசிப்பவர்களை விரட்ட வேண்டும். ஆனால் அங்கு வசித்து வரும் பழங்குடியினர் வெளியேறமாட்டார்கள், ஏனெனில் அந்த வனம் அவர்களது வீடு.

அவர்களும் நக்சலிசம் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் இந்த நாட்டைக் காப்பவர்களே ஆதிவாசிகளின் வீட்டுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அவர்களது வீடுகளை எரித்து, அவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டால் அவர்கள் யாரிடம் நீதி கேட்டு செல்வார்கள் ?.

சி.பி.., மற்றும் உச்சநீதிமன்றமும் இதையே கூறுகின்றன. அது தான் யதார்த்தமாகவும் இருக்கிறது. யாரேனும் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது பத்திரிக்கையாளர்கள் இதற்குத் தீர்வு காண எத்தனித்தால், அவர்கள் மீதும் பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.

ஆதிவாசிகள் பகுதிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும்?. அங்கு சென்று உண்மை அறிய அவர்கள் ஏன் யாரையும் அனுமதிப்பதில்லை ?

பதினான்கிலிருந்து பதினாறு வயதுக்குட்பட்ட பழங்குடி இனப் பெண் குழந்தைகள், ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வானமாக்கப்பட்டு போலீசு நிலையங்களில் சித்திரவதை செய்யப்படுவதை என் கண்களால் கண்டிருக்கிறேன். அவர்களது மணிக்கட்டிலும், மார்பகங்களிலும் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. நான் அந்தத் தழும்புகளைப் பார்த்திருக்கிறேன். அது என் அடி வயிற்றைக் கலங்கச் செய்திருக்கிறது. அந்தச் சிறுமிகளிடம் கூட அவர்கள் ஏன் மூன்றாம் தர சித்திரவதையை மேற்கொள்ளுகிறார்கள்? அச்சிறுமிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் தரவும், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கவும் நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

நமது அரசியல் சாசனம், யாரும் யாரையும் சித்திரவதை செய்யவோ, துன்புறுத்தவோ அனுமதிக்கவில்லை. அதன் ஐந்தாம் பிரிவு இம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட வகையான வளர்ச்சி, ஆதிவாசி மக்களின் மீது திணிக்கப்படக் கூடாது.

ஆதிவாசிகள் , இயற்கையைக் காப்பவர்கள். நாமும் இயற்கையை அழிப்பவர்களாக இல்லாமல், அதனைக் காப்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் முதலாளித்துவ தரகர்களின் இரு முகம் கொண்ட கொள்கைகளைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளும், படைவீரர்களும் சகோதரர்களே.. ஒருவர் மற்றொருவரைக் கொல்வது என்பது அமைதியையோ வளர்ச்சியையோ தராது. அரசியல் சாசனம் அனைவருக்குமானது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இந்த அமைப்பு முறையால் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஆனால் அநீதிக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். அவர்கள் தங்களது சதிகளால் என்னை தகர்க்க முயற்சித்தனர். எனக்கு பணம் கொடுப்பதாகக் கூறினர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சத்தீஷ்கர், பிலாஸ்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவின் 69வது பத்தியை எவரொருவரும் பார்க்கலாம். ஆனால் அவர்களது திட்டங்கள் அனைத்தும் வீணாகின. உண்மை வென்றது. அது எப்போதும் வெல்லும்.

நமக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. ஆனால் நாம் உண்மைக்காக நிற்கத் தவறினால் முதலாளித்துவவாதிகள் நம்மை சிப்பாய்களாக உபயோகித்து இந்த நாட்டில் இருந்து அனைத்து மனிதத் தன்மையையும் துடைத்தெறிந்து விடுவார்கள். அநீதிக்குத் துணை செல்ல மாட்டோம் என்றும் அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம். அரசியல் சாசனம் வாழ்க, இந்தியா வாழ்க!! “

வர்ஷா டோங்ரே, கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது சேவைக் கமிசனுக்கான போட்டித் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 2006-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதி மன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று அதனடிப்படையிலேயே சிறைத்துறை துணை எஸ்.பி.யாக பதவி ஏற்றிருக்கிறார்.

வர்ஷா டோங்ரேயின் முகநூல் பதிவு, பகிர்வுகளின் மூலமாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவுவதை அறிந்த்தும், சத்தீஸ்கர் அரசு உடனடியாக வர்ஷா டோங்ரே மீது நடவடிக்கை எடுக்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. சிறை நிர்வாகம், ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்து அதனடிப்படையில் 32 பக்கக் கடிதத்தைக் கொடுத்து 2 நாட்களுக்குள் பதிலளிக்கக் கூறியது. அதற்கு சுமார் 376 பக்கத்திற்கு தனது முகநூல் பதிவிற்கான நியாயங்களை, ஆதாரங்களோடு சேர்த்து பதிலாக அளித்தார் வர்ஷா டோங்ரே.

பணி இடைநீக்க உத்தரவை எதிர்த்துப் போராடுவேன் – வர்ஷா டோங்ரே

அவரது பதில் குறித்து எவ்வித விசாரணையும் இல்லாமல் கடந்த மே, 5-ம் தேதி அன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு ஊழியர்களுக்கு சத்தீஸ்கர் அரசு விதித்துள்ள சேவை விதிகளையும் மற்ற விதிகளையும் மீறியதற்காகவும், பணியில் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்காகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல் தாம் கூறியது சரி தான் என உறுதியாக நிற்கிறார் வர்ஷா டோங்ரே. தமது முகநூல் பதிவில் தாம் கூறிய அனைத்தும் புதியதாகக் கூறப்பட்ட விசயங்கள் இல்லை எனவும், அவை அனைத்தும் ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலும், மத்திய புலனாய்வுத்துறை அறிக்கைகளிலும், தேசிய மனித உரிமைக் கமிஷனின் அறிக்கைகளிலும், மத்திய அரசின் அலுவலக கெசட்டுகளிலும், திட்டக்கமிஷனின் வல்லுனர்கள் குழுவின் அறிக்கையிலும் இருப்பவை தாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மீதான இந்த பணி இடைநீக்கத்தை எதிர்த்து அரசியல் சாசன வழியில் நின்று எதிர்த்துப் போராடப் போவதாகவும், அரசியல் சாசன சட்டத்தின் ஐந்தாவது பிரிவை ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நடைமுறைப்படுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

வர்ஷா டோங்ரேயின் மீதான துறைரீதியான நடவடிக்கைக்கு அரசு கூறியிருக்கும் காரணங்கள் சட்டரீதியாக வேண்டுமானால் சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால் தனக்கு வேண்டப்பட்ட அரசு ஊழியர்களின் விதிமீறல்களுக்கும் சத்தீஸ்கர் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதற்கு முன்னர், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியின் ஐ,ஜி. –யாக இருந்த கல்லுரி என்னும் போலீசு அதிகாரி, அப்பகுதியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் விருந்துகளில் கலந்து கொண்டு அந்த புகைப்படத்தைத் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். இதுவும் சத்தீஸ்கர் அரசின், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளுக்கு முரணானது. ஆனால் கல்லுரியை பணி இடைநீக்கமோ, விசாரணையோ செய்யவில்லை. மாறாக கல்லுரிக்கு மருத்துவ விடுப்பு கொடுத்து அனுப்பியது, அரசு.

சுக்மா எஸ்பி இந்திர கல்யாண் எலிசலா (இடது) ஜக்தல்பூர் எஸ்.பி ஆர்.என்.தாஸ் (நடு) ஐ.ஜி. கல்லுரி(வலது)

அதே போல சுக்மா பகுதியின் எஸ்.பி. இந்திர கல்யான் எலெசெலா, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூட்டத்தில் பேசும் போது, இஷா கந்தெல்வால், ஷாலினி கெரா போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை, வாகனங்களைக் கொண்டு சாலையில் நசுக்கிக் கொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்காக இன்றுவரை அவரிடம் ஒரு விசாரணையோ, அல்லது பணி இடைநீக்கமோ செய்யப்படவில்லை.

இவ்விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் சட்டம் ஒரு மாதிரியாகவும், வர்ஷா டோங்ரேக்கு சட்டம் வேறு மாதிரியாகவும் செயல்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் இருவரும் கார்ப்பரேட்டின் நலனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், வர்ஷா டோங்ரே மக்களின் நலனைப் பற்றிப் பேசியுள்ளார்.

அநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் ஒவ்வொரு செல்லும் இற்றுப் போய் நீடிக்கத் தகுதியில்லாத்தாகி விட்டது என்பதை விரைவில் வர்ஷா டோங்ரேவிற்கு அவர் நம்பும் இந்தக் கட்டமைப்பே உணர்த்தும்.

– நந்தன்

மேலும் படிக்க :

தஞ்சை – திருவாரூரில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் !

0

வென்றது பெண்களின் உறுதிமிக்க போராட்டம் ! பணிந்தது ‘டாஸ்மாக் அரசு’ !!

டந்த ஏப்ரல் 18 ம் தேதி தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தலைமையில் அப்பகுதி பெண்கள் அணிதிரண்டு முற்றுகை போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூட மே 5 தேதிவரை திமிர் பிடித்த அதிகார கும்பலுக்கு கெடு விதித்தனர். மே 5 -க்குள் மூடவில்லை எனில் கடை இருந்த சுவடு இருக்காது என அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினர் அப்பகுதி பெண்கள்.

மே 5 ம் தேதி கடை காலி செய்யவில்லை எனில் சாணி, குப்பை விளக்கமாற்றோடு “எப்படி கடைய திறப்பானு பார்ப்போம்?” என்று கடையை மூட பெண்களும், இளைஞர்களும் தயாராக இருந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பெண்களின் உறுதியை கண்டு அஞ்சி 4 -ம் தேதி மாலையிலே பாட்டிலையாவது காப்பாற்றினால் போது என இரவோடு இராவாக கடையை ஏறக்கட்டினர்.

மே 5 தேதி, பல நூறு ‘குடி’மகன்களுடன் திருவிழா கோலமாக காட்சியளித்த அந்த கடை பெண்களின் உறுதிமிக்க போராட்டத்தால் டாஸ்மாக் கடை ஒன்று இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போனது. பெண்கள், மாணவர்களிடத்தில் சாதித்த வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மூட முடியாத கடையை மக்களே அதிகாரத்தை கையிலெடுத்ததால் மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“டாஸ்மாக் கடை 5.5.2017 அன்று இயற்கை எய்தியதை மகிழ்ச்சியோடு தொரிவித்து கொள்கிறோம்! இப்படிக்கு மானோஜிப்பட்டி கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம்” என ‘கண்ணீர்’ அஞ்சலி பதாகை வைத்து அதற்கு மாலை மரியாதை செய்து ‘சிறப்பித்தனர்’ பகுதி மக்கள்.

“ குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!    மூடு டாஸ்மாக்கை!” என முழங்கி மக்கள் அதிகாரம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இப்போது மக்கள், மக்கள் அதிகாரத்தின் துணையுடன் போலீசைக் கண்டு அஞ்சாமல் டாஸ்மாக் கடைகளுக்கு பாடை கட்டுகிறார்கள். அரசு பல அடக்குமுறைகள் செய்து மக்கள் அதிகாரத் தோழர்களை மக்களிடமிருந்து பிரிக்க நினைத்தாலும் மக்கள் அதிகாரமும் மக்களும் ஒன்றுதான் என நிரூபிக்கின்றன மக்களது போராட்டங்கள்.

அரசு நம்மை ஆளும் தகுதி இழந்ததையும் நம் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என நடைமுறையில் மக்கள் உணர்ந்ததன் வெளிபாடே மக்களது இன்றைய தொடர் போராட்டங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.


மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 16.04.2017 அன்று மக்கள் அதிகரம் பெரும்பன்னையூர், காப்பனமங்கலம் மக்களை திரட்டி சாலை மறியல் 10.00 மணி அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

மீண்டும் அந்த பகுதியில், மூடு டாஸ்மாக்கை  என்ற முழக்கத்தின் கீழ் 10.05.2017 அன்று மக்கள் அதிகரம் அமைப்பினர் மற்றும் ஊர் டாஸ்மாக் எதிர்ப்பு போரட்ட குழு கிராம மக்கள் இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட திட்டமிட்டிருந்தனர்.

இதனை அறிந்த அப்பகுதி போலீசு டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக குண்டர் படையைப் போல் மக்களைத் தடுத்தது. இதைக் கண்டு அஞ்சாத மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை இணைத்து கொண்டு பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுக்கையிட்டனர்.

அங்கு வந்த தாசில்தார் பேச்சுவர்தை நடத்தினார். மக்கள் கடையை மூடுறதை பத்தி பேசுங்க என்றனர். 90 நாள் அவகாசம் வேண்டும் என்றார் தாசில்தார். நாங்களே கடைய மூடிக்கிறோம், நீங்க போங்க என்று மக்கள் முழக்கம் போட்டனர்.  அதன் பிறகு 30 நாள் அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு உத்திரவாதமாக கடிதம் எழுதி கையொப்பம் போட்டுக் கொடுத்தார் தாசில்தார். சொன்ன தேதியில் மூடுலேன்னா எவன் வந்தலும் கடையை அடித்து நொறுக்குவோம் என்று மக்கள் எச்சரித்துவிட்டு வந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகரம்,
திருவரூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 94454 75157.

துணைவேந்தரை நியமனம் செய் ! அண்ணா பல்கலை முற்றுகைப் போராட்டம்

0

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்தாதே!
மே.17,18,19 – 2017 அண்ணா பல்கலைக் கழகம் தொடர் முற்றுகை!

ண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக் கழகம் போன்றவை துணைவேந்தரே இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறவில்லை. இப்பல்கலைக் கழகத்தில் மட்டும் 2 லட்சம் இளநிலை, முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 1500 பி.எச்டி மாணவர்களும் பட்டம் பெற முடியவில்லை. இதனால், மேற்படிப்புகளுக்கும், உரிய வேலைகளுக்கும் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மே.19 ந்தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது வெட்கக் கேடான செயல். இதனை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

துணைவேந்தரை நியமனம் செய்வதில் என்ன பிரச்சனை? துணைவேந்தரை நியமிக்காமலேயே பல்கலைக் கழகங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதற்கெல்லாம் இந்த அரசிடம் எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி, பேராசிரியர் வேலைக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் வேலைக்கு 30 லட்சம். தகுதி, திறமை, பணி அனுபவம் எதுவும் தேவையில்லை, பணம் இருந்தால் பதவி. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்றவைகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள் நடந்தது நாள் தோறும் அம்பலமாகி வருகின்றன. முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் என அனவரும் கூட்டு சேர்ந்து கல்வித்துறையை கல்லா கட்டும் துறையாக மாற்றியிருக்கிறார்கள்.

பல்கலைக்கழகங்கள் லஞ்சம் ஊழலில் ஊறித்திளைக்கிறது என்பது மட்டுமல்ல, கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதன் விளைவாக, இப்போது ஒட்டுமொத்த கல்வித்துறையுமே மாணவர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது. சரியாக சொல்வதென்றால் கல்வித்துறையை நிர்வகிக்கும் ஆற்றலை, தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது. கல்வித்துறை மாணவர்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில்லை, ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல்போல் செயல்படுகிறது.

துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் வேறொருவர் கையெழுத்திட்டு பட்டங்களை வழங்குவது மோசடி ஆகும். அந்த மோசடியை இப்போது அரசே செய்கிறது. ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் கொடுத்த பட்டங்கள் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் செல்லாமல், வெறும் குப்பைக் காகிதங்களாகின. இதே அநீதியை மீண்டும் அண்ணா பல்கலைக் கழகம் அரங்கேற்ற இருப்பதை எதிர்த்து எமது பு.மா.இ.மு போராட்டம் நடத்தியது. கல்வியாளர்களும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களும் எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், உயர் கல்வித்துறை செயலர் கையெழுத்திட்டு பட்டமளிக்க திட்டமிட்டுள்ளது எடப்பாடி அரசு.

இப்படித்தான் செய்வேன், என்ன முடியும்? என்று மாணவர்கள், பேராசியர்கள், பெற்றோர்களுக்கு சவால் விடுகிறது இந்த அரசு. இந்த அநீதியை வேடிக்கை பார்க்கக் கூடாது. இது பட்டம் வாங்க காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, கல்வியையே நாசப்படுத்துகின்ற நடவடிக்கை. இவர்களிடம் கெஞ்சுவதில் பயனில்லை. மெரினா எழுச்சியைப் போல், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி மூடி வரும் பெண்கள் போராட்டத்தைப்போல், விடாப்பிடியாக போராடித்தான் தீர்க்க முடியும்.

எனவேதான், “துணைவேந்தரை போடாமல் பட்டமளிப்பு விழாவை நடத்தாதே!” என்று பு.மா.இமு வரும் மே 17 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் வாழ்வைக் காக்க போராடிய மாணவர்களோடு கரம் கோர்க்க மே.17 -ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள். கல்வியின் மீதும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம். மாணவர் நலனை காப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.