Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 492

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

1

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 2

உள்நாட்டுக்கான பனியன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருப்பூர், எழுபதுகளின் இறுதியில் இருந்து மெல்ல மெல்ல ஏற்றுமதிக்கான உற்பத்தியைத் துவங்கியது. இந்தியச் சந்தைக்கான உள்ளாடை உற்பத்தி எனும் அளவில் இருந்த காலத்தில் சலவைப் பட்டறைகள் பின்னர் ஏற்றுமதிக்கான உற்பத்தி விறுவிறுப்படைந்த காலகட்டத்தில் சாயப்பட்டறைகளாக உருமாறின. இன்றைக்கு சுமார் 451 சாய பட்டறைகள் திருப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

சாக்கடையாக ஓடும் நொய்யலின் கிளை

பின்னலாடை உற்பத்திச் சங்கிலியில் சாயபட்டறை, பிரிண்டிங் பட்டறை மற்றும் வாசிங் ஆகிய கட்டங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப் படுகின்றது. திருப்பூரின் சூழல் சீர்கேடுகள் அனைத்துக்கும் பனியன் கம்பெனிகளை நோக்கியே விரல் நீட்டுகின்றன பல்வேறு என்.ஜி.ஓ அமைப்புகள். குறிப்பாக நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்கு முழுமுதற் காரணமாக திருப்பூரின் சாயப்பட்டறைகளை குறிப்பிடுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

இதில் உள்ள உண்மைத் தன்மையை பரிசீலிப்பதற்கு முன், திருப்பூரின் தொழிற் பட்டறைகள் தண்ணீர் பஞ்சத்தால் படும் சிரமங்களை பார்த்து விடுவோம். ஏனெனில், திருப்பூரின் தொழிற்பட்டறைகள் வரம் கொடுக்கும் தேவதை இல்லாவிடினும், பிழைக்க வழியற்றவர்களுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றும் சூனியக்காரி அல்லவா?

”கடந்த ஒரு வருசமா யாரும் புதிய சாயபட்டறைகள் திறக்கலை. இருக்கிற சாயப்பட்டறைகளும் வரிசையா மூடிட்டு வர்றாங்க… அனேகமா நான் ஒருத்தன் தான் சமீப காலத்துல புதுசா சாயபட்டறை திறக்கிறவனா இருப்பேன்னு நினைக்கிறேன்” எனச் சொல்லி சிரிக்கிறார் சந்திரசேகர். சுமார் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ’ஸ்ரீ வாரி கலர்ஸ்’ எனும் பெயரில் திறக்கப்படவுள்ள தனது சாயப்பட்டறையில் சில நாட்களுக்கு முன் நிறுவப்பட்ட புதிய இயந்திரங்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

ஸ்ரீ வாரி கலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர். பின்னிருப்பது ஒரு கோடி முதலீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாய இயந்திரம்.

“அப்படி என்ன நம்பிக்கை?”

“நம்பிக்கை எல்லாம் ஏதுமில்லை.. இருபத்தைந்து வருசமா வேற கம்பெனியில கலர் மாஸ்டராவே வேலை பார்த்திருக்கேன். இதைத் தவிற வேற தொழில் எதுவும் தெரியாது. எப்படியாவது முட்டி மோதி மேல வந்திரலாம்னு ஒரு நம்பிக்கை தான்” என்றார்.

”உங்களோட பட்டறையின் உற்பத்தித் திறன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

”எங்களோட இயந்திரம் தினசரி அதிகபட்சமா 2600 கிலோ துணிக்கு சாயம் போடும் அளவுக்கு செயல் திறன் கொண்டது. இதுவே ரொம்ப சின்ன யுனிட் தான். பெருந்துறை சிப்காட்டில் இருக்கும் ரோகினி மாதிரி பெரிய யூனிட்டுகள்னா 30 ஆயிரத்திலேர்ந்து 50 ஆயிரம் கிலோ வரைக்கும் கையாளும் திறன் கொண்ட இயந்திரங்கள் வைத்திருப்பார்கள்..”

”சாயப்பட்டறைக்கு தண்ணீர் தான் முக்கியம். இப்போ திருப்பூர்ல மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலைமைல உங்களுக்கு தொழில் செய்ய மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கும்?

”சிரமம் தான்.. எப்படியாவது மழை பெய்து இந்த வருசமாவது நிலைமை சரியாகிடும்னு நம்பறோம்”

”உங்களுடைய இந்த பட்டறையை இயக்க தேவைப்படும் தண்ணீருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்?”

”மறு சுழற்சி மையத்துக்கு மாதா மாதம் ஐந்து லட்சம் கட்டணமா செலுத்தனும். அது போக ஒவ்வொரு நாளும் எல் & டி கிட்டேர்ந்து 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கனும்.. எல் & டி தண்ணீர் லிட்டருக்கு 8.50 பைசா. எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தா எப்படியும் மாசம் ஆறு லட்சம் வரைக்கும் தண்ணீருக்காக செலவழிக்கனும்” என்றார்.

கங்கா நகரில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு பொது மையத்தின் வெளிப்புற தோற்றம். சுமார் 40-50 சாயபட்டறைகளின் கழிவு நீர் இங்கே சுத்திகரிக்கப்படுகின்றது.

“தண்ணீருக்கே ஆறு லட்சமா?”

“சார், அப்படியாவது குடுத்தா பரவாயில்லைங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் தான் தண்ணீர் தர்றான். மற்ற நாட்கள்லே மறுசுழற்சி மையத்திலேர்ந்து குறைவா தர்ற தண்ணீரை வச்சி சமாளிச்சாகனும். சனி ஞாயிறு பட்டறையை இயக்க கூடாது. அப்படிப் பார்த்தா, வாரத்துல மூனு நாளைக்குக்கூட முழு உற்பத்தித் திறனோட பட்டறையை இயக்க முடியாதுங்க”

”இந்த நிலைமையில உங்களால பட்டறையை லாபகரமா இயக்க முடியுமா?”

”ஏற்கனவே போட்ட முதலீடெல்லாம் கடன் வாங்கிப் போட்டது தான். நல்லா மழை வந்து, தண்ணீர் பிரச்சினை தீர்ந்து எல்லாம் சரியா போச்சின்னா எப்படியும் நாலு அல்லது ஐந்து வருடத்துல நிமிர்ந்துடுவேன். ஆனாலும், பெரிய லாபம் ஏதும் பார்க்க முடியாதுங்க. கைய கடிக்காம ஓட்டிக்கலாம். அவ்வளவு தான்” என்ற சந்திரசேகர், ஏற்கனவே நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்.

கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து உபரியான கழிவு நீர் குடியிருப்பு பகுதி நோக்கி திறந்து விடப்படுகின்றது.

”மறுசுழற்சி மையங்கள் பற்றிச் சொன்னீங்க. இந்த இடத்துல ஒரு கேள்வி, திருப்பூரோட நிலத்தடி நீரை நாசமாக்கினதே சாயபட்டறைகள் தான்னு சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?”

”ஒரு பத்து வருசத்துக்கு முன்னே நீங்க சொல்றது உண்மை தான்” என சங்கடமான தொனியில் சொன்னவர், மேலும் தொடர்ந்தார் “இப்போ விதிமுறைகள் கடுமையாக்கியிருக்காங்க. பத்து வருசத்துக்கு முன்னே நடந்த கோர்ட் கேசுக்கு அப்புறமா நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்காங்க. பத்து வருசமாவே நாங்க கழிவு நீரை நேரடியா சாக்கடைலையோ, நிலத்துக்கு கீழேயோ விடறதில்லே. திருப்பூரைச் சுற்றி 16 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சிருக்காங்க. இதுக்கு அரசு 200 கோடி ரூபாய் மானியம் கொடுத்தது – மிச்சத்தை சாயப்பட்டறை முதலாளிகள் சங்கம் போட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களோட நிர்வாகம் தனியார் கையில தான் இருக்கு. எங்களோட கழிவு நீரெல்லாம் இந்த மையங்களுக்குப் போகும், அதில் 70 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு எங்களுக்கே திரும்பி வந்துடும்” என்றார்.

சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வெளியேறு அமிலக் காற்றால் அக்கம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மற்றும் பெயிண்ட்டையும் மீறி உள்ளுக்குள் துருவேறிய இரும்பு கேட்

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் நஞ்சாகிப் போக சாயப்பட்டறைகள் ஒரு காரணம் என்றாலும், அவைகளே முழு காரணம் அல்ல. தொன்னூறுகளில் ஏற்றுமதிக்கான உற்பத்தி உச்சகட்டமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி எவ்வாறு நடக்கின்றது, அப்பொருட்களின் உற்பத்தி நடைமுறைகளில் சூழலியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா என்பன போன்ற கண்காணிப்புகள் இல்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு உற்பத்தி செய்வதற்குத் தேவையான சுரண்டல் பின்னிலமாகவே திருப்பூரைப் பாவித்து வந்த காலம் அது. தொன்னூறுகளின் இறுதியில் மேற்குலக நாடுகளின் மக்களிடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளில் உள்ள ஏற்றுமதிக்கான உற்பத்தி அலகுகளுக்கு பெயரளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன.

25 தொழிலாளிகள் பணிபுரியும் ஒரு சிறிய யுனிட்

தொழில் வளர்ச்சியை குறிப்பிட்ட பிராந்தியத்தில் திட்டமிட்டு ஏற்படுத்துவது இயல்பாக ஒரு பிரதேசத்தில் உருவாகி வரும் தொழில்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உத்திரவாதப்படுத்திக் கொடுப்பது, அந்தத் தொழிலின் விளைவாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடிக்கு ஏற்பாடுகள் செய்வது, தொழில்களுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களும் கச்சாப் பொருட்களும் எளிதில் கிடைக்க வகை செய்வது ஒரு அரசின் கடமை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இதே வசதிகளை காலில் விழுந்து செய்து கொடுக்கும் அரசு, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்நாட்டு முதலாளிகளின் சொந்த முயற்சியில் வளர்ந்த தொழில்களுக்கு செய்து கொடுப்பதில்லை என்பதோடு நெருக்கடி முற்றும் சமயங்களில் புதிய கட்டுப்பாடுகளை திணிக்கவும் செய்கின்றது.

மறுபுறம், தொடர்ந்து கொள்முதல் விலையைக் குறைத்துக் கொண்டே வரும் பன்னாட்டு இறக்குமதியாளர்களின் நெருக்கடியையும் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே,  பனியன் கம்பெனிகளும் அதனுடன் தொடர்புடைய சாயபட்டறைகள் உள்ளிட்ட பிற தொழிற்பட்டறைகளும் இரண்டாயிரங்களின் மத்திய பகுதி வரை பெயரளவில் இருந்த சூழலியல் சார்ந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டன. நொய்யலாற்றிலும் நல்லாற்றிலும் சாயக் கழிவுகளைக் கலந்தது போக,  பல சாயபட்டறைகள் கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளுக்குள் இறக்கி நிலத்தடி நீரை நஞ்சாக்கின. நிலைமை கைமீறிச் செல்லும் வரை அரசு நிர்வாகம் இவையெதையும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளது.

”அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம். நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு புதிய திட்டங்கள் போட்டு அதில் முதலீடு செய்யலாம். அதே போல மறுசுழற்சி மையங்களைக் கூட முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அரசாங்கமே துவங்கி அதைப் பயன்படுத்த பட்டறைகளிடம் கட்டணம் வசூலிச்சிருக்கலாம். ஆனா, திருப்பூரோட தொழில் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடலை. எல்லாத்தையும் தனியார்ட்ட ஒப்படைச்சி அவன் தான் கோடி கோடியா லாபத்தை அள்ளிட்டுப் போறான். அதுவும் நிலைமை கைமிஞ்சிப் போன பின்னாடி தான் செய்தாங்க” என்கிறார் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் குலோத்துங்கன்.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் உள்தோற்றம்.

”தனியார் கிட்டே இருந்தா தான் எல்லாம் தரமா இருக்கும்னு சொல்றாங்களே?” என்றோம்.

”கிழிச்சாங்க. எல் & டி தண்ணீரோட பி.பி.எம் அளவு 800 வரை இருக்கு. எங்களுக்கு 300க்கு உள்ளே பி.பி.எம் அளவு இருந்தா தான் பிரிண்டிங் தரமா இருக்கும். அதை ஈடுகட்ட நாங்க கலர் மையை அதிகம் பயன்படுத்துரோம். இது உற்பத்திக்கான செலவை அதிகரிக்குது. அது மட்டுமில்லாம, தண்ணிக்காக மட்டும் தினசரி 1500 ரூபா வரைக்கு செலவு செய்ய வேண்டியிருக்கு. அப்படியும் தினசரி தண்ணி கிடைக்க மாட்டேங்குது. வாரத்துல ரெண்டு நாள் கிடைச்சா அதிர்ஸ்டம். எங்களுக்கே சொந்தமா நீர் சுத்திகரிப்பு மையம் இருக்கு – ஆனால், அதில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு லிட்டருக்கு 25 பைசா ஆகும். தண்ணீர் இல்லாம ஒரு நாள் மிசினை நிறுத்தினா நாற்பதாயிரம் நட்டமாகும். இந்த நட்டத்தை தவிர்க்கவாவது மிசினை ஓட்டியாக வேண்டியிருக்கு. இது புலிவாலை பிடிச்ச கதை சார். விடவும் முடியாது, பிடிச்சிகிட்டே ஓடறதும் ஆபத்து…” என்கிறார் குலோத்துங்கன்.

குலோத்துங்கனின் நிறுவனம் தினசரி நான்கு டன் துணிகளுக்கு பிரிண்ட் அடிக்கும் உற்பத்தித் திறன் கொண்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான நாட்கள் முழு உற்பத்தித் திறனோடு இயக்குவதில்லை. கடந்த இருபதாண்டுகளில் இந்த நிறுவனத்தில் லாபம் சுமார் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தொழிலாளிகள் வேலை செய்யும்  இந்நிறுவனத்தை இழுத்து மூடி விட்டால் நூறு குடும்பங்களின் நிலை கேள்விக்குள்ளாகி விடும் என்கிற கவலை குலோத்துங்கனிடம் வெளிப்பட்டது.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்கள்

ஒருபக்கம் உற்பத்திக்கான மூலதன உள்ளீடு அதிகரித்துக் கொண்டே செல்ல, இன்னொரு புறம் துணிகளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்முதல் விலையைப் படிப்படியாக குறைத்து வருகின்றன. அரசோ தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதிகளையும் கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றது.

இதை விடச் சிறிய நிறுவனங்களின் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. நாங்கள் ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு கண்ணனைச் சந்தித்தோம். சாயமேற்றி, பிரிண்ட் செய்த பின் துணிகளைத் தைப்பதற்கு முன் துவைத்துக் கொடுக்கும் நிறுவனம். 12 தொழிலாளிகள் இரண்டு சிப்டாக பணிபுரிகின்றனர். சொந்தமாக நீர் சுழற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவன முதலாளி கண்ணன்.

”தண்ணிக்காக மட்டும் மாசம் நாற்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகுது சார். பதினெட்டு லட்சம் செலவுல ஆர்.ஓ பிளாண்ட் ஒன்னு போட்டிருக்கோம். இதை நடத்தவே மாசம் ஐம்பதாயிரம் செலவாகும்.. எல் & டி காரன் கிட்டே தண்ணீர் இணைப்பு கேட்டா மெயின் ரோட்டிலேர்ந்து பைப் இழுக்கிற செலவை நீயே பார்த்துக்கன்னு சொல்லிட்டான். அதுக்கு எப்படியும் ஏழு லட்சம் செலவாகும். அவ்வளவு செலவு செய்தாலும், முறையா தண்ணீர் தரமாட்டான்” என்கிறார் கண்ணன்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் (துணியை சலவை செய்யும் நிறுவனம்) இங்கே துணியை வெளுக்க நீராவியை உற்பத்தி செய்யும் கொதிகலன். பழைய பாணியில் விரகு வைத்து எரிக்கிறார்கள்.

தொடர்ந்து குறைந்து வரும் கொள்முதல் விலையால் குறைந்து கொண்டே செல்லும் லாபம், தண்ணீர் பற்றாக்குறை என முதலாளிகளின் கழுத்தைச் சுற்றிலும் கத்தி இருந்தாலும், நிலைமையைச் சீர்செய்வதற்கு உறுதியான கோரிக்கைகளோ போராட்டங்களோ எழவில்லை. மாறாக, மூலதன உள்ளீட்டையும் லாபத்தையும் ஈடுகட்ட தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிகின்றன. இன்றைய நிலையில் திருப்பூரில் ஒரு சிப்ட் வேலை என்பது குறைந்தபட்சம் 12 மணி நேரமாக உள்ளது. வடமாநிலத் தொழிலாளிகள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்வதால், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அடைவதற்காக நேரம் காலமின்றி வேலை செய்கின்றனர்.

நீராவி இயந்திரத்திலிருந்து செல்லும் சூடான ஆவி துணியைத் துவைத்த பின் அதிலிருந்து நிறக் கழிவுகள் மற்றும் பிசிருகளை பிரித்து கழிவாகச் செல்கிறது.

தண்ணீர் பஞ்சத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும், திருப்பூர் தொழிலாளிகளின் அசுரத்தனமான உழைப்பு ஒன்று மட்டுமே இன்றைய தேதியில் அந்நகரைக் காப்பாற்றி நிலை நிறுத்தியுள்ளது. நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட நேரமின்றி வேலையின் பின்னே மக்கள் ஓடுவதாலேயே அரசு நிர்வாகம் திருப்பூரின் தண்ணீர் பற்றாக்குறையை இடக்கரத்தால் அலட்சியமாக கையாள்கின்றது – ஏனெனில், தாகத்தில் மரணிக்கும் நிலை வரும் வரை புரட்சி வெடிக்கப் போவதில்லை என்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் அமைத்துள்ள மறுசுழற்சி மையம்.

தண்ணீர் பஞ்சமும், அரசின் துரோகத்தனமும், முதலாளிகளின் பாராமுகமும், இடம்பெயர்ந்த  தொழிலாளிகளின் கொல்லும் மௌனமும் திருப்பூரைக் விசக் கொடுக்குகளாக சுற்றி வளைத்துள்ளன. இந்தத் தேக்க நிலையை ஒரு மாபெரும் மக்கள் போராட்டமே உடைத்தெறிய முடியும். தண்ணீர் பிரச்சினை எல்லை மீறிச் சென்று விட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே சிறு அளவில் மக்கள் போராட்டங்களும் பரவலாக முணுமுணுப்புகளும் கேட்கத் துவங்கியுள்ளன – இது தீர்மானகரமான வடிவங்களை எடுப்பது ஒன்றே திருப்பூருக்கு விடிவு காலத்தைக் கொண்டு வரும்.

திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதா, உருவாக்கப்பட்டதா? மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் நிலை என்ன?

திருப்பூர் பலைவனமாக்கப்பட்ட வரலாறு…

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

0
"எங்கே போனது எங்கள் சம்பளப் பணம்?" என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகர தூய்மைப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பா.ஜ.க.வின் அரியானா முதலமைச்சர் கட்டார், மே நாளை இனி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப் போவதில்லை என்றும் விசுவகர்மா தினத்தைத்தான் இனி கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. மே தினத்தைத் தடுத்தால் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் செயலற்றுப் போய்விடாது.

வேலை நீக்கம், பொய்வழக்குகள், சிறை ஆகியவற்றை மீறி, கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு தருகிறோம்.

ஊதியத்தைத் தரமறுத்து வந்த மோதிஹரி பிர்லா சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்துத் தீக்குளித்து இறந்து போன சங்கத் தலைவர் நரேஷ் சிறீவத்ஸவாவின் (படத்தில்) மனைவி பூர்ணிமா தேவி.

பீகாரில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு!

பீகாரின் மோட்டிஹரி நகரில் உள்ள பிர்லாவுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 2002–2005 காலகட்டத்தில் அங்கு வேலை பார்த்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளமும், கரும்பு சப்ளை செய்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கரும்புக்கான பணமும் கொடுக்காமல் 2005-ஆம் ஆண்டு மூடப்பட்டது அந்த ஆலை. இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிர்லா நிறுவனம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அவர்களுக்குத் தர வேண்டிய பணத்தை பிர்லா நிறுவனம் தரவில்லை.

இது குறித்து மனு கொடுத்தும், பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11 அன்று ஆலை வாயிலில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். அரசின் அலட்சியத்தையும், பிர்லா நிறுவனத்தின் இரக்கமற்ற போக்கையும் கண்டித்து இரண்டு தொழிலாளர்கள் தீக்குளித்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்த செய்தியறிந்ததும், தொழிலாளர்களும் விவசாயிகளும் கற்களைக் கொண்டு ஆலையைத் தாக்கினர். அத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 24 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும் அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், போராட்டம் தொடரும் என விவசாயிகளும் தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்டியமைத்திருக்கும் இந்த ஒற்றுமை முன்னுதாரணமானது.

அரியான அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கை நகலை எரித்து, பதேஹாபாத் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அம்மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

அரியானா அரசைப் பணிய வைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!

அரியானா மாநிலப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரியானா அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல்-9 முதல் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதல் 3 நாட்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்திய அரியானா அரசு, பிறகு தொழிலாளர்களை மிரட்டும் விதமாக 120 பேரை இடைநீக்கம் செய்தது. தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, புதிய போக்குவரத்துக் கொள்கையைக் கைவிடுவதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் அரியானா அரசு ஒப்புக் கொள்ள நேர்ந்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துப் பத்தாயிரத்துக்கும் அதிகமான கர்நாடக மாநில சத்துணவுப் பணியாளர்கள் பெங்களூரு நகர சுதந்திர பூங்காவில் 48 மணி நேரம் நடத்திய முழக்கப் போராட்டம். பெங்களூரு நகரில் நடந்த மிகப் பெரிய, நீண்டதொரு போராட்டமாகும் இது.

அரசைப் பணிய வைத்த பெங்களூரு அங்கன்வாடித் தொழிலாளர்களின் போராட்டம்!

கடந்த மார்ச் மாதம் அங்கன்வாடியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், அங்கன்வாடி உதவியாளர்களும் ஊதிய உயர்வு வேண்டி பெங்களூருவின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 22-இல் தொடங்கி 20 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தின் உறுதியால் கர்நாடக காங்கிரசு அரசு பணிந்து போனது. இப்போராட்டத்தின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.6,000-லிருந்து  ரூ.8,000-மாகவும், உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.3,500-லிருந்து ரூ.4,500-ஆகவும் உயர்த்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களின் இடைவிடாத போர்க்குணமிக்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

ராஜஸ்தான்: ஒப்பந்தத் தொழிலாளிகளுக்காகப் போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் தாருஹெராவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலை, ஹீரோ, ஹோண்டா, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது.  கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 388 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது ஓமாக்ஸ் நிறுவனம். பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அந்நிறுவனத்தில் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை பார்த்தவர்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஜய் பாண்டே என்ற 35 வயது இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அவர் மனநோயாளி என்றும் அவதூறு செய்தது நிர்வாகம். வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பாண்டேயின் குடும்பத்தாருக்கு நட்டஈடு தர வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஓமாக்ஸ் நிறுவனத்தின் வாயிலில் அஜய் பாண்டேயின் சடலத்தைக் கிடத்தி போராடத் தொடங்கினர். ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். ரிக்கோ ஆட்டோ பிட், டாய்கின் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொள்ளவே நிர்வாகம் பணிய வேண்டியதாயிற்று.

அஜய் பாண்டே குடும்பத்தினருக்கு 5.5 லட்சம் ரூபாய் நட்டஈடு கொடுப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வது குறித்து தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னர் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட 34 நிரந்தரத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து பழி வாங்கியிருக்கிறது, ஓமேக்ஸ் நிர்வாகம்.

“எங்கே போனது எங்கள் சம்பளப் பணம்?” என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகர தூய்மைப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

டில்லி அரசின் மெத்தனத்தைக் கலைத்த துப்புரவுத் தொழிலாளர்கள்!

டில்லி மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 17,000 தொழிலாளர்கள் உட்பட சுமார் 25,000 மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்த டில்லி மாநகராட்சியைக் கண்டித்து, கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், துப்புரவுத் தொழிலாளர்கள். வேலை நிறுத்தம் தொடங்கிய ஐந்தே நாட்களில் டில்லி நகரமே குப்பைக் காடானது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டு டில்லி அரசையும், மத்திய அரசையும் இப்பிரச்சினைக்கு உடனடியாக எப்படியேனும் தீர்வு காணும்படி வலியுறுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த டில்லி அரசு,  தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியதோடு, இனி சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என உறுதியளித்தது. சுமார் 11 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின் தாக்கம் துப்புரவுப் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் ,அவர்களது வாழ்வின் அவலத்தையும் டில்லி நகரவாசிகளுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

ஜார்க்கண்ட் : பா.ஜ.க. அரசில் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாகச் சம்பளமில்லை!

சுரங்கப் பகுதி வளர்ச்சிக் குழுமம் என்ற அமைப்பு சுரங்கப் பகுதிகளின் குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளைப் பராமரிக்கின்ற சுமார் 1,150 ஊழியர்களைக் கொண்ட அரசுத்துறை. இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக முறையாக மாதச் சம்பளமே தரப்படவில்லை. இதன் காரணமாக, இரண்டு ஊழியர்கள் பட்டினியால் இறந்திருக்கின்றனர். கனிம வளம் நிறைந்த அந்த மாநிலத்தில் காசுக்கு என்ன பஞ்சம்? மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கும் பழங்குடி மக்களைக் காட்டை விட்டு விரட்டுவதற்கும் பணத்தைக் கொட்டுகின்ற பா.ஜ.க. அரசாங்கத்திடம் துப்புரவுத் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையாம். இதுதான் மோடியின் சுவச் பாரத்.

குஜராத்தில் தொழிலாளிகள் நடந்து போனால், முதலாளிக்கு பயமாம்!

குஜராத்தில் சனந்த் நகரில் உள்ள டாடாவின் நானோ கார் தொழிற்சாலையில் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருகிறது டாடா நிர்வாகம். அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கும் நிர்வாகம், தொழிலாளிகளுடைய ஊதிய உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளாக மறுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கம்பெனி பஸ்ஸில் ஏறமாட்டோம், நடந்தே வீடு செல்கிறோம் என்று அறிவித்தார்கள் தொழிலாளர்கள். பேருந்து செலவு மிச்சம் என்று மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையடைந்திருக்கிறது டாடா நிர்வாகம். கூட்டமாக நடந்து போகக்கூடாது என்று தொழிலாளிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசின் மாவட்ட நிர்வாகம். தொழிலாளிகள் கூட்டமாகச் சேர்வது பற்றி அவ்வளவு பயம், முதலாளி வர்க்கத்துக்கு! தொழிலாளிகளுக்கும் ஐ.டி. ஊழியர்களுக்கும் “பிக் அப் – டிராப்” வசதிகளை நிர்வாகம் செய்து கொடுப்பதற்கான காரணம் என்னவென்பது, 144 போடும் போதல்லவா புரிகிறது!

தொழிற்தகராறு சட்டத்தையே ஒழிக்க பா.ஜ.க. வின் சதித்திட்டம்!

தொழிற்தகராறு சட்டம் என்று அழைக்கப்படும் சட்டத்தின்கீழ், தொழிற்சாலை, தொழிலாளி என்ற சொற்களுக்கான விளக்கத்தைக் கடந்த 1978-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது.  அந்த அடிப்படையில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் வரையிலான சேவைத்துறைகள்  சார்ந்தவர்களும் தொழிற்தகராறு சட்டத்தின்கீழ் வருவதால், குறைந்தபட்ச ஊதியம், பணி உத்திரவாதம் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுகின்றனர். சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய ஆட்குறைப்பின்போது, ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது என்று அந்நிறுவனங்கள் கூறியதை எதிர்த்து வழக்கு தொடுத்து, ஐ.டி. நிறுவனங்களும் தொழிற்தகராறு சட்டத்தின் கீழ்தான் வருகின்றன என்றும் அந்த ஊழியர்களுக்கும் தொழிற்சங்க உரிமை உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“தொழில்” என்பதற்கான பொருளை மறு வரையறை செய்வதன் மூலம், 1978 தீர்ப்பு தொழிலாளிகளுக்கு அளிக்கும் உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால், தொழிலாளி வர்க்கம் தன்னை எதிரி என்று அடையாளம் கண்டுவிடும் என்ற காரணத்தினால், அந்த வேலையை நீதிமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்வதற்குச் சதித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை தவிர, மற்ற அனைத்தையும் இச்சட்டத்தின் வரையறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அதன் பொருட்டு 1978 தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான அரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளன. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் தவிர, மற்ற எல்லாத் தொழில்களையும் அமைப்பு சார்ந்த தொழில்கள் என்ற வரையறையிலிருந்தே நீக்குவதுதான் இவர்களது நோக்கம்.

-கதிர்
புதிய ஜனநாயகம், மே 2017

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

3
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடை இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைக் காட்டி சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நாயைக் கொல்வதென்றாலும் சட்டப்படிதான் கொல்வாம் என ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் தமது நேர்மைக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டது போல, நீட் தேர்வை நியாயப்படுத்த தரம், தகுதி, தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என வாதங்கள் அடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மோடி அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் ஆகியவை எல்லாம் தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அப்பழுக்கற்றவர்கள் போலவும், நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தரம், தகுதிக்கு எதிரான ஊழல் பேர்வழிகள் போன்றும் ஒரு சித்திரத்தைக் கட்டமைக்கின்றன.

ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் (இடது)ஆட்சியில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. தரமற்ற, மோசடியான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, கோடிக்கணக்கில் ஊழல் பணத்தோடு சி.பி.ஐ.யால் பிடிக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய். (கோப்புப் படம்)

இந்தியாவிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய முறைகேடு வியாபம் ஊழல்தான். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த ஊழலின் சூத்திரதாரிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். யோக்கியசிகாமணிகள். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி என இந்த ஊழலில் கைநனைத்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் பட்டியல் நீளமானது. இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர்கள், முக்கிய சாட்சிகள் எனப் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, இந்த ஊழலின் தடயங்களை மறைக்க நடந்த முயற்சிகள் தனியொரு கிரிமினல் வரலாறாக நீள்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் யோக்கியதை என்ன? தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைத்து, அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டும்தான் அந்த இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிறது, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி. இந்த விதியை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசும் பின்பற்றவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளவில்லை. இந்த முறைகேட்டுக்காக சென்னை உயர்நீதி மன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவும், இந்த இழிநிலைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் காரணம் என்றே குற்றம் சாட்டியிருக்கிறது. போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பல நூறு கோடி லஞ்சம் வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், 2010-இல் சி.பி.ஐ.யால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். டாக்டர் தொழில் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நியமித்தது குஜராத் பல்கலைக்கழகம்.

ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது ஊழலுக்கு நிகரான முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.

வியாபம் ஊழல் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, மர்மமான முறையில் இறந்துபோன ஜபல்பூர்-நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண் ஷர்மா (இடது), வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்திவந்த ஆஜ் தக் தொலைக்காட்சி நிருபர் அக்சய் சிங் (நடுவில்) மற்றும் மருத்துவ மாணவி நர்மதா. (கோப்புப் படங்கள்)

புரியும்படி சொல்வதென்றால் இப்படியும் கூறலாம். தற்போது சசிகலா போட்டுள்ள சீராய்வு மனு விவகாரத்தில் சசிகலாவை விடுதலை செய்து விட்டு, அதன் பிறகு, அவரை விடுவித்தது சரியா, தவறா என்று பொறுமையாக விசாரித்துத் தீர்ப்பு கூறினால், அது எத்தகைய கேலிக்கூத்தாக இருக்குமோ அதைவிடப் பெரிய கேலிக்கூத்து இது.

தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்தாக வேண்டும் என்ற தார்மீக ஆவேசம் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் அவ்வளவு அவசரப்பட்டது என்பதை அறிவோம். கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்தபின், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் தலையிட மைய அரசு மறுத்துவிட்டது. இதனால் வழக்கம் போல கொள்ளை நடந்தது. இதன் மீது உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அடுத்த ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என உத்தரவு போட்டு நழுவிக் கொண்டது. இன்னொருபுறம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்த அனுமதிக்குமாறு அரசிடம் மனு போட்டுவிட்டன.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு 40,000, 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை, மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்குப் புதிய வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழகப் பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.

மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடை இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைக் காட்டி சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த இட ஒதுக்கீடை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.

மேலும், வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கக் கூடும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.

நீட் தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் எதிரானதாக அமைகிறது.

நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.

மருத்துவக் கல்வியின் தரத்தையும் மருத்துவ சேவையின் தரத்தையும் மருத்துவர் தொழிலின் மாண்பையும் காப்பாற்றுவதற்குத்தான் அரும்பாடுபடுவதாக மோடி அரசும் உச்ச நீதிமன்றமும் கூறிக் கொள்கின்றன. அந்தக் கனவு நிறைவேறுமா?

2016 –17ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-இல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.

தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!

-அழகு
புதிய ஜனநாயகம், மே 2017

தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

1

“சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்” – என்றார் 75 வயது மதிக்கத்தக்க பெரியவர்.

சென்னை – சைதாப்பேட்டை ஐந்துவிளக்குப் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள எளிய மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதி நெருப்புமேடு. மாலை 5 மணி இருக்கும். பத்து பதினைந்து குழந்தைகள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அரைத் துணியோடும் அம்மனக்குண்டியோடும் ஓடித்திரியும் அந்த அழகைப் பார்க்கும்போது பலருக்கும் சொந்த கிராமத்தை நினைவூட்டுவது உறுதி.

வயதான ஒரு பெரியம்மா வாசலில் உட்கார்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர். அதுவும் கண்ணங்கரேலென நிறத்தில். சுற்றிலும் அழுக்கு துணி மூட்டை சிதறிக் கிடக்கிறது. அவரது எண்ணமும் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த்து போலும்! “என்னம்மா இது… தண்ணியே இல்லாம துணி தொவைச்சிகிட்டிருக்கீங்க?” – என்றதும் திடுக்கிட்டு திரும்பினார்.

நிதானத்துடன் “என்னப்பா செய்யிறது? வீட்டுக்கார்ரு செத்து நாளாச்சு. ஒரே ஒரு பொண்ணு. அத கட்டிக் கொடுத்தாச்சு. காசி தியேட்டருக்கு பக்கத்துல திடீர் நகருலதான் குடியிருக்காங்க. எப்பவாவது வந்தா உதவியா இருக்கும். இப்ப நான் தனியாத்தான் இருக்கேன். ஓட்டல்ல பாத்திரம் தேச்சி வயித்த கழுவிக்கிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்ததும் தண்ணிப்பாடு பெரும்பாடா இருக்கு. வயசான காலத்துல க்யூவுல நின்னு தண்ணி புடிக்க முடியல. ஏதோ என்னால முடிஞ்சளவுக்கு நாலு கொடம் தண்ணி புடிச்சி அதுலதான் நாள கடத்திகிட்டிருக்கேன்” – என்றார் சோகத்துடன்.

  • “சார், எங்க வீட்டுல 6 பேர் இருக்கோம். கொறஞ்சது எங்க வீட்டுக்கு 20 கொடம் தண்ணி தேவைப்படுது. மெட்ரோ வாட்டர் தண்ணி ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரில கொண்டுவந்து விடுறாங்க. ஒரு குடும்பத்துக்கு 6 கொடம்தான். அதையும் குடிக்க முடியாது. இங்கே பாருங்க சார் – என்று டிரம்மிலுள்ள சேறு போன்ற தண்ணீரை காட்டுகிறார்.

எங்களால என்ன செய்ய முடியும் சொல்லுங்க? குடிக்க கேன் தண்ணிதான் வாங்கிக்கிறோம். பொழங்குறதுக்கு இந்த 6 கொடமும் போதாது, அதனால் சைக்கிள்ல கொடத்த எடுத்துகிட்டு கிண்டிக்கு போயிடுவோம். ஏன்னா கெவர்னர் மாளிகைக்கு தண்ணி போர ரூட்டு. அந்த லைன்ல பெரிய பெரிய அதிகாரிங்க இருக்குறதுனால அங்கே எப்போதுமே தண்ணி வரும். எங்களுக்கும் வீட்டுக்கு வீடு பம்ப் இருக்கு. தண்ணி வரி கட்டுறோம். ஆனா தண்ணி மட்டும் வராது என வெதும்புகிறார், தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் விஜயகுமார்.

  • கருகிய ஆட்டுக்கால்கள் குவிந்து கிடந்தன. பெரியவர், மனைவி, மகள், பேரக்குழந்தைகளுடன் – குடும்பமே ஆட்டுக்கால்களை பொசுக்கி, அவற்றை தண்ணீரில் அமிழ்த்தி தோலை நீக்கிக்கொண்டிருந்தனர்.

“அய்யா… நீங்க சூப் கடை வச்சிருக்கீங்களா?” – என்றதும், இல்ல சார். வெளி ஊருங்கலேர்ந்து கால்களை வாங்கி வந்து காண்ட்ராக்ட்காரங்க கொடுப்பாங்க. அத பொசுக்கி, தோலை எடுத்துட்டு திரும்ப அவங்களுக்கே கொடுப்போம். கூலி தருவாங்க. அதுதான் சார் எங்க வேலை. எங்கள மாதிரி பல குடும்பங்கள் இத செய்யிறாங்க – என்றார்.

“இத வச்சி குடும்பத்த ஓட்ட முடியுதா?”

“நான் கசாயி (கசாப்பு கடை) வேலை செய்யிறேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், ஆட்டுக்கால் பொசுக்கும் வேலையை செய்வோம். எங்கே சார் இப்ப அதுக்கும் நேரமே கெடக்கலே. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் பொண்ணும் கொடத்து எடுத்துகிட்டு கௌம்பிடுவாங்க. தண்ணிக்கா அலையவேண்டியதாயிருக்கு. சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார். ஒரு குடும்பத்துக்கு 6 கொடம் விடுறாங்க. அத வெச்சிகிட்டு என்ன செய்ய முடியும்?  இன்னும் சொச்ச நாளைக்கு என்ன செய்யப்போறோமுன்னே தெரியல.” – என்றார்.

  • மாலை மங்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் – பெண்கள் என அனைவரும் பரபரப்பாகக் காணப்பட்டார்கள். வீட்டிற்குள் செல்வதும், வெளியில் வருவதும், பொருள்களை ஒழுங்குபடுத்துவதுமாய் இருந்தார்கள். துவைத்த துணிமணிகளை அலசி சுவற்றில் குவிக்கிறார்கள். ஆட்டுக்காலை பொசுக்கிக் அதன் தோலை நீவிக்கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களது வேலைகளை வேகமாக முடித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்குச் சென்ற பெண்கள், இளைஞர்கள் வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“டேய் முத்து… ஏ… ராமய்யா….” – என்று வெளியில் திரியும் தங்களது பிள்ளைகளை அழைக்கிறார்கள். பதினைந்து இருபது நிமிடத்திற்குள் எல்லோர் வீட்டு முன்பும், அண்டா குண்டாவிலிருந்து சிறிய பாத்திரங்கள் வரை வாசலில் குவிந்துவிட்டன. ஒரு போருக்கான சூழல் அங்கு நிலவியது. ஆம், தண்ணீர் லாரி வரப்போகிறது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் வரலாம்; இரண்டு நாட்கள்கூட ஆகலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • வினவு செய்தியாளர்கள்

மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி

4
எதிர்ப்பு தெரிவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்.

‘வளர்ச்சியின்’ நாயகன் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட தமது முதல் பயணத்தின்போது, இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவரும், தன்னைப் பிரதமராக்கியவருமான கவுதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார். சரியாகச் சொல்வதென்றால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கலீலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களில் ஒன்றான சார்மிக்கேல் சுரங்கத்தைப் பேரம் பேசி முடித்துக் கொடுப்பதுதான் அப்பயணத்தின் பிரதான நோக்கம்.

அந்தச் சுரங்கத்தின் நிலக்கரி தரம் குறைந்தது என்றும், அதனை எரிப்பதால் கடுமையான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சர்வதேசத் தரத்திற்கு உகந்ததல்ல என்பதனால் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறி, அதானியின் இத்திட்டதிற்கு கடன் கொடுக்க எந்தத் தனியார் வங்கியும் முன்வரவில்லை. அதைவிட முக்கிய காரணம், அதானி குழுமம்  ஏற்கெனவே பல்வேறு வங்கிகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது. ஆகையால், ஆஸ்திரேலிய பயணத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவையும் கையோடு அழைத்துச் சென்று, அதானிக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கும் ஏற்பாடு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார் மோடி.

பிரதமரா, புரோக்கரா? – அதானிக்கு ஆஸ்திரேலிய சுரங்கத்தை முடித்துக் கொடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரிச் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த  மக்கள் இச்சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலக்கரிச் சுரங்கத்தால் அருகில் உள்ள பவளப்பாறைகளுக்கும், நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும், அருகில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பைக் கணக்கில் கொண்டு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்ப்புகளையெல்லாம் மீறி இச்சுரங்கத்தைத் தொடங்கிவிடத் துடிக்கிறார் அதானி.

ஆஸ்திரேலிய அரசின் மீது அதானி செலுத்துகின்ற செல்வாக்கைப் பார்த்து அதிர்ச்சியுற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுரங்கம் வரவிருக்கும் பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயியுமான ப்ரூஸ் க்யூரி என்பவர், நாம் எதிர்கொண்டிருப்பது என்ன மாதிரியான கம்பெனி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், அதானிக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்று தெரிந்து கொள்வதற்காகவும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இங்கு குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள முந்த்ரா, ஹசீரா ஆகிய கிராமங்களைப் பார்வையிட்டு அங்குள்ள உள்ளூர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துமிருக்கிறார்.

நான் கண்ட காட்சிகள், என் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தன. முந்த்ராவிலும் ஹசீராவிலும் உள்ள சிறு கிராமங்களுக்குச் சென்றேன். விவசாயிகளையும் மீனவர்களையும் சந்தித்தேன். எல்லாம் எங்கள் கதையைப் போலவே இருந்தது. வேலை தருகிறோம், உள்ளூர்ப் பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பெரிய நிறுவனங்கள் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்ற வழக்கமான கதைதான். கடைசியில் உள்ளூர் மக்களின் அழிவுதான் மிச்சமாக இருக்கும்.

  • நிலத்தடி நீரை மாசுபடுத்தியது, சட்டவிரோதமாக நிலத்தைப் பறித்துக் கொண்டது, சதுப்புநிலக் காடுகளை அழித்தது என அதானியின் அட்டூழியங்களால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதானி குழுமம் துறைமுகம் கட்டத்தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் கிடைக்கும் மீன்களின் அளவு 90% வரைக் குறைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கிடைக்கும் மீன்களும் துர்நாற்றம் அடிப்பவையாகவும், மோசமான சுவை கொண்டவையாக இருப்பதாகவும் மீனவர்கள் கூறிகின்றனர்.
  • முந்த்ரா பகுதியில் அதானியின் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வரும் கரித்துகள்களால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழக்கமாகப் பயிரிடும் ஆமணக்கு, பருத்தி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தங்களது வாழ்வாதாரமான நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதையும், நீர்நிலைகள் தடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • அதானியின் நிலக்கரி திட்டப் பகுதியின் அருகாமையில் வசித்தவர்கள் அத்திட்டத்தால் இழந்ததே அதிகம். பலரும் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். சிலர் நான் ஆஸ்திரேலியாவில் செய்து கொண்டிருப்பதைப் போல, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று அதானிக்கு எதிராக சட்டரீதியாகப் போராடியிருக்கிறார்கள். எனினும், சிறிய அளவு நட்டஈடே கிடைத்திருக்கிறது, இன்னும் சிலரோ அப்பகுதிகளில் இருந்து வலிந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

அதானியின் இந்திய ஆக்கிரமிப்பையும், அதன் மூலமான சீரழிவையும் பார்க்கும் போது அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஏற்படவிருக்கும் விதிமீறல்களையும், நிலத்தடி நீர் அழிவையும் எதிர்பார்த்து தாம் அஞ்சுவதாகக் குறிப்பிடுகிறார் ப்ரூஸ் க்யூரி.

“நிலக்கிரச் சுரங்கம் தேவையில்லை, பவளப் பாறைகள் வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியத் தரகு முதலாளி அதானி ஆஸ்திரேலியாவில் திறக்க முயலும் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பிரிஸ்பேனில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ப்ரூஸ் க்யூரியைப் போன்றே, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான கிரெக் சாப்பல், ஐயன் சேப்பல் சகோதரர்களும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக அதானிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ’லான்செட்’ எனப்படும் முன்னணி மருத்துவ இதழ் தனது அறிக்கையில் அதானியின் சார்மிக்கேல் சுரங்கத்தால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் என எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய மக்களின் விருப்பத்தை மீறி அரசின் துணையோடு அங்கு நிலக்கரிச் சுரங்கத்தை நிர்மாணித்தால், அது ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குலைப்பதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்ச்சிக்கு கிரிக்கெட் ஒரு காரணமாக இருப்பதால், இந்த முதலீட்டைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தாங்கள் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள் சாப்பல் சகோதரர்கள்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் முதலீடு செய்யுமாறும் அதானிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் சாப்பல் சகோதரர்கள். இராமநாதபுரம் சூரியஒளி மின் திட்டத்தில் அதானி முதலீடு செய்திருப்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதானி அத்தகையதொரு முதலீடு செய்ய வேண்டுமானால், ஜெயலலிதாவைப் போல ஒன்றுக்கு இரண்டு விலை தரக்கூடிய ஒரு முதல்வரோ, அல்லக்கை வேலை பார்க்கின்ற ஒரு பிரதமரோ அங்கே இருப்பது அவசியம்.

-அழகு

புதிய ஜனநாயகம், மே 2017

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

0

மார்க்ஸ் பிறந்தார் – 4

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:

இந்த அத்தியாயம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் செய்திகளை வரலாறாய் முன்வைக்கின்றது. கார்ல் மார்க்சின் பள்ளிப் பருவத்தை விரிவாக சித்தரிக்கிறார் நூல் ஆசிரியர். உருப்போட்டு படிக்கும் இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் அதே மாதிரிதான் மார்க்சின் அந்தக் கால பிரஷ்யாவிலும் (ஜெர்மனி) இருந்துள்ளது. அந்தக் கல்வியில் சுமாரான மதிப்பெண்களையே வாங்குகிறார் மார்க்ஸ். பள்ளியாண்டின் இறுதியில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று அனைத்து மாணவர்களும் கட்டுரை எழுதுகின்றனர். மார்க்ஸ் அதில் எதை தெரிவு செய்கிறார்? படித்துப் பாருங்கள்!

மார்க்சின் தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் அரசியல் ரீதியான வழக்குகள், கருத்துக்கள் மார்க்சுக்கு அறிமுகமாகின்றன. குடும்ப நண்பர் ஒருவர் ஷேக்ஸ்பியர், ஹோமர் போன்றோரின் இலக்கியங்களை மார்க்சுக்கு படித்துக் காட்டுகிறார். சுதந்திரத்தை நேசிக்க கற்றுக் கொடுக்கும் கலைத்துறை அவருக்கு இளம் வயதிலேயே அறிமுகமாகிறது.  அதனால்தான் அவர் சுயநலம் பெற்றெடுத்த அற்பவாதத்தை அடியோடு வெறுக்கிறார். மார்க்சுடன் படித்த மாணவர்களிடமிருந்து கத்தோலிக்க மதகுருமார்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் உருவாகும் போது மார்க்ஸ் மட்டும் மனித குலத்திற்கு தொண்டாற்றும் தத்துவப் பணியை மேற்கொள்ளுகிறார். அந்த தெரிவின் சுவடுகளை இளம் மார்க்சின் பள்ளி நாட்களில் பார்க்கிறோம்.

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”- என்று பள்ளி இறுதி ஆண்டு கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிடுமளவு அவரது இளம் பருவ வரலாற்றுச் சூழல் எப்படி பங்காற்றியது? படித்துப் பாருங்கள். கார்ல் மார்க்சின் வரலாற்றைப் பின் தொடர்ந்தும் நீங்கள் மார்க்சியத்தை கற்க முயலலாம். தொடர்ந்து படியுங்கள்!

2. வாழ்க்கைத் தொழிலைத் தேடல்

மகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து?
போராட்டம்

-கார்ல் மார்க்ஸ்

சந்தகாலத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு பகற்பொழுதில் வாட்டசாட்டமான உடல், கறுப்புத் தலைமுடி சகிதம் ஒரு நபர் முகத்தில் புன்சிரிப்புடன் கைகளில் அணையாடைகள் சுற்றப்பட்டிருந்த குழந்தையைத் தாங்கி டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் அதிகாரிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த அதிகாரி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் தான் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டார். பிறகு தன்னுடைய இறகுப் பேனாவை எடுத்துக் காகிதத்தில் எழுதினார்

“டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் ஜனன, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818-ம் வருடம் மே மாதம் 7-ம்  தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண் குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்குரைஞராகத் தொழில் செய்கின்ற டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்சுக்கும் அவருடைய மனைவி ஹென் ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5ந் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்”.(1)

அதிகாரி பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டு அதைத் தகப்பனாரிடம் கொடுத்தார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய ஆவணம், பெரியவரானதும் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கின்ற ஒருவர் மற்ற எவரையும் காட்டிலும் அந்த நாட்டுக்கு அதிகமான புகழைக் கொண்டு வரப் போகின்றவர் பிறந்திருப்பதை அறிவிக்கின்ற சான்றிதழ் என்பது அந்த அதிகாரிக்குத் தெரியாது. மகிழ்ச்சியில் திளைத்த தகப்பனாரும் அப்படி நினைக்கவில்லை.

மார்க்ஸ் பிறந்த வீடு இருந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது

அவர் தன் குடும்பத்தை நோக்கி, புரூக்கென் ஹாஸேயில் 664ம் எண்ணுடைய சிறிய, இரண்டு மாடி வீட்டை நோக்கி நடந்தார்; எதிரில் வந்தவர்கள் அவருக்குப் பணிவோடு வணக்கமும் வாழ்த்தும் கூறினார்கள்; அவரோ ஆனந்தத்தில் தன்னை மறந்திருந்தபடியால் எப்படியோ ஒரு வழியாக அவர்களுக்குப் பதில் வணக்கம் கூறினார்.

அந்த நகரத்தில் ஹென்ரிஹ் மார்க்சை எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அவருடைய உயர்ந்த கல்வித் தகுதிகளை, குறை காண முடியாத ஒழுக்கத்தை, பரோபகார உணர்ச்சியை – குற்றமற்ற நபர் ஆபத்தில் சிக்கிவிட்டால் தன்னுடைய சட்டத் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி அவருக்கு உதவியளிக்க அவர் எப்பொழுதுமே தயாராக உள்ளவர் – அவர்கள் மிகவும் மதித்தார்கள்.

யூத மத குருக்களின் குடும்பத்தில் பிறந்த ஹென்ரிஹ் மார்க்ஸ் யூத சமயத்தைக் கைவிட்டு லூதரன் சமயத்தை ஏற்றுக் கொண்டார்.

மார்க்ஸ் தம்பதிகளின் இல்லத்தில் கிறிஸ்துவப் புனிதர்கள் வணங்கப்பட்ட போதிலும் வொல்தேர், ஷில்லர், ராளபீன், ரூஸோ, லேஸ்ஸிங், ஸ்பினோஸா, கான்ட் ஆகியோர் இன்னும் அதிகமாகவே மதிக்கப்பட்டார்கள். ஹென்ரிஹ் மார்க்ஸ் ஐரோப்பியப் பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டதுடன் தன் அன்புக்குரிய மகன் கார்லிடம் அதை ஒப்படைக்கவும் செய்தார். ஆகவே கார்லின் “தொட்டிலில் கலைத் தேவதைகள் வைத்த” (மேரிங்) பலவிதமான திறமைகளும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைவதற்கு முழு வாய்ப்புக் கிடைத்தது.

மார்க்சின் குடும்பம் பிரிவி கவுன்சிலர் பேரன் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது இளைஞரான மார்க்சின் நற்பேறு என்றே குறிப்பிட வேண்டும். வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கப் போகிறார்கள்; முதலாவதாக, அக்குடும்பத்தின் தலைவர் – அவர் மார்க்சுக்கு இரண்டாவது தகப்பனாரானார். இரண்டாவதாக, அவருடைய கடைசி மகன் ஏட்கர்- மார்க்சின் குழந்தைப் பருவ நண்பர், பள்ளி நாட்களில் அவருடைய விளையாட்டுத் தோழர் (1840-களின் இறுதியில் அவர் ஒரு சமயத்தில் கம்யூனிஸ்டு சங்கத்துக்கு நெருக்கமாக வந்தார்); கடைசியாக, ஏட்கரின் சகோதரி ஜென்னி. மார்க்சின் எதிர்கால மனைவி வாழ்க்கை முழுவதும் அவருடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி.(2)

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன்

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் ஒரு கவர்ச்சிகரமான பிரமுகர். அவர் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மானிய உயர்குடியில் பிறந்தவர். அவர் அக்காலத்தில் மிகவும் அதிகமாகப் படித்தவர்களில் ஒருவர், கவிதைப் பிரியர். கார்லின் தகப்பனார் வொல்தேரையும் ராளனேயும் அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் தான் மனப்பாடமாக அறிந்திருந்த ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கார்லிடம் (ஜென்னியும் ஏட்கரும் உடனிருக்க) படித்துக் காட்டினார். முதியவரான வெஸ்ட் ஃபாலன் மார்க்சிடம் கவிதை ரசனையைத் தூண்டி அவருடைய அழகியல் ஈடுபாடுகளை வளர்த்தார். சான்-சிமோனைப் பற்றி மார்க்சிடம் முதலில் எடுத்துக் கூறியவர் அவரே.

மார்க்சினுடைய அறிவைச் சமூக விஷயங்களில் திருப்பி அன்றைய சமூக அமைப்பைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையை முதலில் தூண்டியவர் ஒருவேளை வெஸ்ட்ஃபாலனாக இருக்கலாம். மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் தன்னுடைய முதல் ஆராய்ச்சியை – டாக்டர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை – என்னுடைய அன்புமிக்க, தந்தையைப் போன்ற நண்பருக்குச் சமர்ப்பித்தது தற்செயலானதல்ல. அவர் தன்னுடைய சமர்ப்பணத்தில் வெஸ்ட்ஃபாலனை “காலம் முன்னோக்கி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியையும் உண்மையின் உற்சாகத்துடனும் கவனத்துடனும் வாழ்த்துபவர்” என்றும் “பின்னோக்கி இழுக்கும் ஆவிகளுடைய இருண்ட நிழல்களுக்கு முன்னால் ஒருபோதும் பின்வாங்காதவர்”(3) என்றும் வர்ணித்தார். இளம் மார்க்சுக்குத் தன்னுடைய சொந்தக் குடும்பத்தில் அல்லது பள்ளிக்கூடத்தில் கிடைத்ததைப் போன்ற வளமான ஆன்மிக உணவு வெஸ்ட்ஃபாலனுடைய பழைய இல்லத்தில் கிடைத்தது என்பதில் ஐயமில்லை.

அந்த உயர்நிலைப் பள்ளியில் மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு அதிகமான உணவு கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடக் கல்வி முறை உருப்போடுதல், ஒப்பித்தல் என்ற ‘பழைய மரபுகளுக்கு’ ஏற்பவே நடத்தப்பட்டது. மதப் பாடங்கள், வரலாற்று விவரங்கள், கணிதப் பாடத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதிலே மனப்பாடம் செய்வது, அதைத் துல்லியமாக ஒப்பிப்பது-மாணவர்களிடம் இந்தத் திறமையையே ஆசிரியர்கள் மிகவும் மதித்தார்கள். கற்பிக்கப்பட்டவற்றைத் தடங்கல் இல்லாமல் ஒப்பிக்கக் கூடிய, “புனித நூலில்’ அடங்கியிருக்கும் அழிவில்லாத உண்மைகளைத் திருத்தமான கையெழுத்தில் எழுதக் கூடியவனே அவர்களுடைய கருத்தின்படி சிறந்த மாணவன். சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனைப் பாய்ச்சல், பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறை இவை அனைத்தும் சிறப்புத்தகுதிச் சின்னங்களல்ல, குறைகள் என்றே அதிகமாகக் கருதப்பட்டன.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறை மாணவனின் ஆளுமையை வளர்ப்பதைக் காட்டிலும் அதை ஒடுக்கவே செய்தது. அது விஞ்ஞானங்களைப் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை, அலுப்பூட்டுகின்ற கோட்பாடுகளின் தொகுதி என்ற முறையில் வெறுப்பையே அதிகமாக ஏற்படுத்தியது. கற்பிக்கப்பட்ட பாடங்களை மறுக்க முடியாது, அவை முடிவானவை, கண்டிப்பான தன்மையைக் கொண்டவை. இவை மாணவர்களுடைய மனங்களைக் கெடுத்தன. முயற்சியற்ற, அடுத்தவரை நம்பி வாழ்கின்ற சிந்தனையை, அடுத்தவர்களுடைய கருத்துக்களைத் திருப்பிக் கூறுகின்ற, “அங்கீகரிக்கப்பட்டவற்றுக்கு” வணக்கம் செலுத்துகின்ற பழக்கத்தை வளர்த்தன. ஆகவே பள்ளிக்கூடம் மாணவர்களுடைய கருத்தில் விஞ்ஞானத்தின் வன்மையை அரித்தழித்தது, ஏனென்றால் அது எதேச்சாதிகார சிந்தனை முறையை, விதிகளைக் கொண்டு சிந்திக்கின்ற முறையை வளர்த்தது. உண்மையைப் போற்றுவதற்குப் பதிலாக அது மெய்மைகள் அழியாதவை என்ற நம்பிக்கையை வளர்த்தது; சுதந்திரமான முடிவுகளைத் தேடுகின்ற ‘சிந்தனை விசாரத்துக்குப்’ பதிலாக அது அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உருப்போடுகின்ற சித்திரவதையை ஏற்படுத்தியது.

மார்க்ஸ் கல்வி பயின்ற டிரியர் பள்ளி அத்தகைய கல்வி நிலையங்களில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்று எனலாம்; ஏனென்றால் அங்கே அநேகமாக ஒரு மிதவாத உணர்ச்சி நிலவியது. மார்க்சின் ஆசிரியர்களில் சிலர் தங்கள் துறையில் பிரபலமானவர்களாக இருந்தார்கள்: உதாரணமாக, யோஹன் ஹீகோ விட்டென்பாஹ் (தலைமை ஆசிரியர்) பிரெஞ்சு அறிவியக்கத்தின் கருத்துக்களை ஆதரித்தார், டிரியர் நகரத்தின் வரலாற்றாசிரியரான அவர் கேதேயுடன் தனிப்பட்ட பழக்கம் உடையவராக இருந்தார். முன்னேற்றத்திலும் மனிதனுடைய மேம்பாட்டிலும் தன்னுடைய மாணவர்கள் புனிதமான நம்பிக்கை வைக்கும்படி அவர் அரும்பாடுபட்டார். கணிதம் மற்றும் பெளதிகவியல் ஆசிரியரான யோஹன் ஷ்தேய்னின்கர் போலீசுத் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தார்.

ஆனால் இந்த ஆசிரியர்கள் கல்வி போதனையின் தன்மை, நோக்கங்கள் மற்றும் முறைகளில் கணிசமான எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. ஆசிரியர்கள், மாணவர்களுடைய சிந்தனை சரியான வழியில் செல்வதை உறுதிப்படுத்துவதற்கென்று பிரஷ்ய அரசாங்கம் அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அந்த நோக்கத்துடன் அரசாங்கம் விஸ்டுஸ் லியோர்ஸ் என்பவரைப் பள்ளிக்கூடத்தின் இனண இயக்குநராக நியமித்திருந்தது. அவருடைய பிற்போக்குக் கருத்துக்கள் பிரசித்தமானவை. அரசருக்கும் நாட்டுக்கும் அரணாகவிருந்த படித்த அற்பவாதிகளே அந்த உயர்நிலைப் பள்ளி தயாரிக்க வேண்டும். அதைத்தான் அது செய்தது.

மார்க்ஸ் அந்தப் பள்ளியிலிருந்து விலகிய சமயத்தில் அவருடைய வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தார்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வயது பத்தொன்பதிலிருந்து இருபத்தேழு வரை இருந்தது. அதாவது அவர்கள் பள்ளியில் படிக்கின்ற வயதைக் காட்டிலும் அதிக வயதானவர்கள். அந்த மாணவர்கள் சுறுசுறுப்பில்லாதவர்கள், அநேகமாக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவர்கள். இவர்களில் பதின்மூன்று மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார்கள்.

மார்க்சுடன் படித்த மாணவர்களில் பலர் குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களேச் சேர்ந்தவர்கள். அவர்கள் குருட்டுத்தனமான மதப்பற்றில் மூழ்கியிருந்தார்கள். மதகுருவின் வேலையே எதிர்காலத்தைப் பற்றி அவர்களுடைய கனவுகளின் சிகரம். அந்த வகுப்பைச் சேர்ந்த 25 கத்தோலிக்க மாணவர்கள் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரைகளை ஆராயும் பொழுது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

அவர்களுடைய கனவுகள் நனவாயின. 1835-ம் வருடத்தில் டிரியர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதித் தேர்வை முடித்து வெளியேறிய மாணவர்களில் பிரஷ்யாவுக்கு 13 கத்தோலிக்க மத குருக்களும் 7 வழக்குரைஞர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளும் 2 டாக்டர்களும் கிடைத்தனர். அந்த வருடப் பள்ளியிறுதி வகுப்பு கோஷ்டி உலகத்துக்கு ஒரு கார்ல் மார்க்சைக் கொடுக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்புடைய மாணவர் என்று யாரும் கருதவில்லை. அவர் எல்லாப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றார்; எதிர்காலத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் படைக்கப் போகின்ற மாணவர் வரலாற்றுத் தேர்வு எழுதிய பொழுது மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களைத் தான் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

இதைப் பற்றி ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆசிரியர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்கள் – மார்க்சுக்கு அவை பொருந்தவில்லை. அவருடைய சிந்தனைகளின் தற்சிந்தனை அவர்களைப் பயமுறுத்தியது. ஒரு பிரச்சினையின் மூலவேர்களை அறிவதற்கு ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக அறிந்து கொள்வதற்கு, தன்னுடைய சிந்தனைகளை – சிறுதரமாக, இன்றி – தத்ரூபமாக வர்ணிப்பதற்கு அவர் செய்த முயற்சியை அவர்கள் கண்டித்தார்கள். அவை ‘மிகையான அலங்கார நடை’, “அதிகமான பளுவை அவசியமில்லாமற் சுமத்துதல்”, “சலிப்பூட்டும் சொற்குவியல்” என்று அவர்கள் கூறினார்கள். மார்க்சின் கையெழுத்து அழகாக இல்லாததும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. “வெறும் கிறுக்கல்” என்று இலத்தீன மொழி ஆசிரியர் புகார் செய்தார். அதை மற்ற ஆசிரியர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

இளைஞர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஏட்டுப்புலமை மார்க்சுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அது பிந்திய வருடங்களிலும் அவரிடம் நிலைத்திருந்தது. அவர் 1862இல் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஏட்டுப் படிப்பாளிகளில் ஒருவரை வர்ணித்தார். இந்த ஆசிரியர் வெளித்தோற்றத்தில் கெளரவமான மனிதர், தன் புலமையைப் பற்றி அகந்தைமிக்கவர், ஆனால் படிப்பது மற்றும் கற்பிப்பதில் உருப்போடுகின்ற முறைக்கு அப்பால் அவர் ஒருக்காலும் போவதில்லை. அவருடைய புலமை ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களைத் தேடி எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் கணிதப்பாடங்கள் எல்லாவற்றையும் படித்தவர், ஆனால் கணிதவியலை அறியார். இந்த ஏட்டுப்படிப்பாளி நேர்மையானவராக இருந்தால் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும். அவர் போலித் தந்திரங்களில் ஈடுபடாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்: இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்குச் சொந்த அபிப்பிராயம் இல்லை, நீங்களே சிந்தியுங்கள், இப்பிரச்சினையின் அடிமட்டத்துக்குப் போக முடியுமா என்று பாருங்கள்! “இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஒரு பக்கத்தில் மாணவர்களுக்குச் சில விவரங்கள் கிடைக்கும், மறு பக்கத்தில் அவர்களைத் தாமே உழைக்கும்படி உற்சாகப்படுத்தியதாகவும் இருக்கும்.”(4) ஆனால் ஏட்டுப்படிப்பாளியின் இயல்புக்கு மாறான ஒரு நிபந்தனையை நான் குறிப்பிடுகிறேன் என்று மார்க்ஸ் உடனடியாகக் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் படித்த உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்தச் சித்திரத்தை ஒத்திருந்தார்கள் என்று சொல்வது கடினம். தனிப்பட்ட முறையில் அவர்கள் ஏட்டுப்படிப்பாளிகளாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு நபரின் தனிப்பட்ட உளவியல் அமைப்பு இங்கே முக்கியமல்ல, அந்த அமைப்பே முக்கியம். அது உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் ஏட்டுப்படிப்பையும் கடுவேதனையான சலிப்பையும் தவிர்க்க முடியாத முறையில் வளர்த்தது. கார்ல் மார்க்சின் ஆன்மிக உலகம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறையினால் உருவாக்கப் பட்டதல்ல; அதற்கு மாறாக, சுதந்திரமான, மிகவும் தீவிரமான அறிவு உழைப்பில் அது உருவாயிற்று, நல்ல கவிதையையும் நகைச்சுவையையும் ரசிக்கின்ற சில நண்பர்களடங்கிய சிறு குழுவில், வெஸ்ட்ஃபாலன் குடும்பம் மற்றும் அவருடைய தகப்பனாரைக் கொண்ட குழுவில் அது உருவாயிற்று.

டிரியர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் பதவி காரணமாக அரசியல் தன்மையைக் கொண்ட வழக்குகளில் பங்கெடுப்பது அவசியமாக இருந்தது. எனவே சமூக அநீதிகளைப் பற்றிய பயங்கரமான உண்மைகள் அவருக்குத் தெரியும். அவர் தன் மகனிடம் அவற்றைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் 1843இல் Rhenische Zeitung-இல் (ரைன் பத்திரிகை) எழுதிய கட்டுரையிலிருந்து இந்த உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் மோஸெல் பிரதேசத்தில் வசித்த மக்கள் தம்முடைய அபிப்பிராயத்தை ஒளிவு மறைவில்லாமலும் பகிரங்கமாகவும் தெரிவிக்க முடியவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். 1830க்களில், அதாவது அவருடைய இளமைப் பருவத்தில் நடைபெற்ற சில நீதிமன்ற வழக்குகளை வர்ணிக்கிறார், “நல்ல குணத்தின் காரணமாக எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு குடிமகன் மாவட்டத் தலைவருடைய வேலைக்காரியிடம் பேசும் பொழுது” உன் எசமானர் நேற்று போதையில் இருந்தார் என்று கூறினார் (அந்த மாவட்டத் தலைவர் முந்திய நாள் மாலையில் அரசருடைய பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுது மகிழ்ச்சி நிரம்பிய நண்பர்கள் மத்தியில் அதிகமாகக் குடித்தார்). இந்தச் சாதாரண வார்த்தைக்காக அவர் டிரியர் போலீஸ் நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரணை செய்யப்பட்டார். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல அவர் விடுதலை செய்யப்பட்டார்.”(5)

இந்த வழக்கில் மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராகப் பங்கெடுத்தபடியால் அது மார்க்சின் நினைவில் பசுமையாக இருந்திருக்கலாம். அவருடைய “குறை சொல்ல முடியாத நேர்மை” மற்றும் “சட்டத் திறமைகளின்” விளைவாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை அடைந்தார்.

டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்கள் சட்டமன்றப் பிரதிநிதியின் மூலம் இளவரசருக்கு ஒரு மனுவைக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். அந்தப் பிரதிநிதியின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. “சில வருடங்களுக்கு முன்பு அரசு நிர்வாகம் மற்றும் பொருளியல் (cameralistics) பேராசியரான திரு. கெளஃப்மன்” ஒரு ரைன் பத்திரிகையில் “மோஸெல் பிரதேசத்தில் திராட்சைக் கொடி பயிரிடுபவர்களுடைய பரிதாபகரமான நிலையைப் பற்றி என்ற ஒரு கட்டுரையை எழுதினார். அரசாங்கம் அதைத் தடை செய்தது”.(6)

” இளம் மார்க்சைச் சூழ்ந்திருந்த அரசியல் நிலைமையை இந்த விவரங்கள் விளக்குகின்றன. 1830-களில் டிரியர் நகரத்தின் அறிவுஜீவிகளிடத்தில் பிரஷ்ய அரசாங்கத்துக்கு மிதவாத எதிர்ப்புத் தோன்றியது; அதில் கார்ல் மார்க்சின் தகப்பனார் சுறுசுறுப்பாகப் பங்கெடுத்தார். 1834ம் வருடத்தின் ஆரம்பத்தில் மிதவாதிகளின் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன, மர்ஸேல் கீதம் (பிரெஞ்சுப் புரட்சியின் கீதம்) பாடப்பட்டது. அங்கே செய்யப்பட்ட சொற்பொழிவுகளில் பிரெஞ்சுப் புரட்சியின் எதிரொலியைப் போலீஸ்காரர்களின் கூர்மையான காதுகள் கண்டுபிடித்தன. ஹென்ரிஹ் மார்க்சும் “ஆபத்தான” பாடல்களைப் பாடினார், சொற்பொழிவாற்றினார், அவை அதிகமாக மிதவாதத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

கார்ல் மார்க்ஸ் தன் தகப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். அவரைப் பற்றி இனிய நினைவுகள் மகனின் முதிர்ச்சிக் காலத்திலும் நிலைத்திருந்தன. அவர் எப்பொழுதும் தன் தகப்பனாருடைய புகைப்படத்தைத் தன்னோடு வைத்திருந்தார். மரணப் படுக்கையிலும் அந்தப் புகைப்படம் அவரிடமிருந்தது. ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் மத அரசியல் துறைகளில் மிதவாதியாக இருந்தாலும் கடைசி வரையிலும் பிரஷ்ய தேசபக்தராகவும் மதப்பற்றுடைய கிறிஸ்துவராகவுமே இருந்தார். அவர் ஷீல்லரை மிகவும் போற்றினார். அவர் ஷீல்லரின் கதாநாயகர்களில் ஒருவரான நல்லவரும் உணர்ச்சிக் கனிவுடையவருமான மோரை ஒத்திருந்தார். அந்த மோர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் சுகத்தில் முழு மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய அன்புக்குரிய மகனின் மேதாவிலாசமான திறமையை அவரால் இனங்காண முடிந்தது; ஆனால் கார்ல் தன்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார், அடக்கமான, ஆனால் ”மேன்மையான” தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார், அதன் மூலம் கௌரவமான மனிதர்களுக்கு மத்தியில் “தகுதிமிக்க இடத்தைப் பெறுவார், முன்னுதாரணமான குடும்பத் தலைவராக விளங்குவார் என்று அவர் எதிர் பார்த்தார்.

இந்த விஷயத்தில் இளம் மார்க்ஸ் தன்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் குறைவான உற்சாகத்தையே கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தை- அதன் அறிவுமிக்க நயமான வடிவத்தில் கூட- தீவிரமாக வெறுப்பதற்குத் தொடங்கியிருந்தார்.

இதன் முதல் நிரூபணத்தை மார்க்ஸ் தன்னுடைய 17-ம் வயதில் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரையில் நாம் பார்க்கின்றோம். வேலையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள் என்ற தலைப்பில் மார்க்ஸ் அக்கட்டுரையை எழுதினார்.

“எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறேன்” என்ற சொந்த விருப்பங்களை விவாதிப்பதற்கு இந்தத் தலைப்பு வாய்ப்புத் தருவதாகவே மார்க்சின் வகுப்பிலிருந்த சக மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதினார்கள். ஆனால் மார்க்ஸ் அப்படி நினைக்கவில்லை என்பது சுவாரசியமானதாகும். ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள புறநிலையான மற்றும் அகநிலையான நிபந்தனைகளைப் பற்றியும் வேலைக்கும் தனிப்பட்ட திறமைகளுக்கும் இடையிலுள்ள பொருத்தத்தைப் பற்றியும் விரிவான சமூக விவாதத்துக்கு இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதினார், மார்க்ஸ் தன்னுடைய முதிர்ச்சிக் காலத்தில் முழுமையாகவும் சிறப்பான முறையிலும் வளர்த்த கருத்துக்கள் ஏற்கெனவே இளம் மார்க்சிடம் “கோடைக்காலத்தின் மின்னல் வீச்சைப் போலப் பளிச்சென்று ஒளி வீசின” (மேரிங்) என்பதை இங்கே பார்க்கிறோம்.

“நாம் செய்ய வேண்டியவை என்று நாம் நம்புகின்ற நிலைமையை நாம் எப்பொழுதுமே அடைய முடியாது; சமூகத்துடன் நம்முடைய உறவுகளே நாம் நிர்ணயிக்கக் கூடிய நிலைமையை அடைவதற்கு முன்னரே அவை ஏற்கெனவே நிறுவப்பட்டு விடுகின்றன.”(7)

அவருடைய வகுப்பு மாணவர்கள் வர்த்தகத்தைக் காட்டிலும் இராணுவ வேலையின் சாதகங்களை அல்லது இறைப்பணி மற்றும் மதகுரு வேலையில் ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாக விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் மார்க்ஸ் ஆணவத்தைத் தூண்டி பதவி ஆசை என்ற பேயை எழுப்புகின்ற வேலைகளின் போலியான பளபளப்பைப் பற்றியும் எதிர்கால வேலையைக் கற்பனையில் பிரகாசிக்கச் செய்கின்ற “பிரமைகளைப்’ பற்றியும் எழுதினார். நம்முடைய திறமைகளைப் பற்றிய சுய ஏமாற்றுதல்களுக்கு இதுவே காரணம் என்பது அவருடைய கருத்தாகும். “இத்தவறு நம்மை நாமே பழிவாங்கிக் கொள்ளச் செய்கிறது”, “அது வெளியுலகத்தின் கண்டனத்தைச் சந்திக்காவிட்டாலும் அத்தகைய கண்டனத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக பயங்கரமான வேதனையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது, அத்தவறில் ஏற்படுகின்ற தன்னிகழ்ச்சி ஒருவருடைய இதயத்தை எப்பொழுதுமே அரிக்கிறது. இதயத்திலிருந்து ஜீவரத்தத்தை உறிஞ்சி மனித இன வெறுப்பு மற்றும் மன முறிவு என்ற நஞ்சுடன் கலக்கிறது”. (8)

” ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அந்தத் தேர்வு போலிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் “சுய ஏமாற்றுதலுக்கு’’ இரையாவது சுலபமே. உறுதியான கோட்பாடுகளே, வன்மையான, அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்ளாமலிருக்கும் இளைஞனைப் பொறுத்தமட்டில் மிகவும் ஆபத்தான வேலைகள். “வாழ்க்கையில் அதிகமான சம்பந்தமில்லாமல் சூக்குமமான உண்மைகளோடு சம்பந்தப்பட்டிருப்பவையே’’.(9)

இந்தச் சுவாரசியமான அறிவிப்பு இந்தக் கட்டத்தில் மார்க்சின் ஆன்மிக உலகத்தை நமக்கு விளக்குகிறது. ஏட்டுப்படிப்பு விஞ்ஞானத்தைப் பற்றி அவரிடம் ஏற்பட்டிருந்த அதிருப்திக்கும் ‘சூக்குமமான உண்மைகளை’ “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைப்பதற்கு அவர் மேன்மேலும் விரும்பியதற்கும் இது ஒரு வேளை சான்றாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட மனநிறைவு என்ற அற்பவாத இலட்சியத்தை மார்க்ஸ் பின்வரும் சொற்களில் மறுக்கிறார்: “ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”(10)

ஆம். மனிதன் சுய பரிபூரணமடைவது நோக்கம், அதற்கு ஒவ்வொரு வேலையும் ஒரு சாதனம் என்பது உண்மையே. ஆனால் மனிதன் தன்னுடைய சக மனிதர்களின் பரிபூரணத்துவத்துக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமாக மட்டுமே தன்னுடைய சுய பரிபூரண நிலையை அடைய முடியும். நாம் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் மனிதகுலத்தின் நன்மை (ஆகவே நம்முடைய பரிபூரணத்துவமும்) நமக்கு “முக்கியமான வழிகாட்டியாக” இருக்க வேண்டும்.

வரலாற்றில் பொது நலத்துக்காகப் பாடுபட்டுப் புகழீட்டிய மாபெரும் மனிதர்களுடைய உதாரணத்தை மார்க்ஸ் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார், “மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவதே மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார் என்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.”(11)

தன்னுடைய சுயேச்சையான பாதையின் தொடக்கத்தில் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பின்பற்றப் போகின்ற குறிக்கோளை வகுத்தளிக்கிறார்; “மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு!’’ இது மலர்கள் தூவிய பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதை என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார்; ஆனால் அது அவருக்குக் கவலையளிக்கவில்லை. தான் தேர்ந்தெடுத்திருக்கின்ற வேலையின் “பெரும் பொறுப்பின்” முழுச் சுமையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

ஆனால் அவர் தன்னுடைய எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.” இங்கே மார்க்ஸ் மறுபடியும் அற்பவாத வாழ்க்கையின் “அற்பமான, வரையறைக்குட்பட்ட சுயநல மகிழ்ச்சியை” “பல கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமான ஒன்றின்”(12) மகிழ்ச்சியுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

இந்தக் கட்டுரை பெரிய அளவுக்கு இன்னும் ஒரு பள்ளி மாணவனுடைய கட்டுரைதான் என்பது உண்மையே. இங்கே மார்க்சினுடைய முந்திய ஆன்மிக வளர்ச்சி முழுவதையும் ஒன்று திரட்டப்பட்ட வடிவத்தில் நாம் பார்க்கிறோம், கான்ட் மற்றும் பிரெஞ்சு அறிவியக்கத்தின் தாக்கத்தை உணர முடியும்; அதில் இன்னும் உணர்ச்சிக் கனிவான, புனைந்துரையான குறிகள் இருக்கின்றன, “ஒரு பொதுவான நோக்கத்தைத்” தருகின்ற ‘பரம்பொருளைப்” பற்றிய குறிப்புகளும் “பரம்பொருளின் அறைகூவல்களும்” அதில் இருக்கின்றன. ஆனால் அந்தக் கட்டுரை முழுவதிலும் ஆசிரியரின் முத்திரை ஏற்கெனவே விழுந்திருக்கிறது, மார்க்சின் குணாம்சத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அம்சங்களான தற்சிந்தனையான வலிமையும் உணர்ச்சிக் குறியும் நடையிலும் உள்ளடக்கத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த இளைஞனுடைய கட்டுரை வாழ்க்கை முழுவதற்கும் வேலைத்திட்டத்தைக் (பொதுவான வடிவத்தில் என்ற போதிலும்) கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய இதயத் “துடிப்புக்குத்” தக்கவாறு தன்னுடைய எதிர்காலத்தைக் கணிக்கிறார்.

மார்க்சிடம் அரசியல் ஆர்வங்கள் கிளர்ந்தெழுந்திருப்பதாக இக்கட்டுரையில் இன்னும் எந்த அறிகுறியும் இல்லை. ஆனல் அவர் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்ததை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெறுப்பை மார்க்ஸ் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார்.

மிக முந்திய காலமான 1833-இல் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், அரசியல் கவிதைகள் ஆகியவை டிரியர் உயர்நிலைப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டன, மாணவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார் என்று அறிகிறோம். இது மாணவர்கள் மத்தியில் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வாழ்க்கையைப் பற்றி மார்க்சினுடைய அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மார்க்ஸ் பள்ளியிறுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு பான் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகச் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட பொழுது பள்ளிக்கூடத்தின் இணை இயக்குநரான விஸ்டுஸ் லியோர்சைச் சந்தித்து விடை பெறுவதற்கு உறுதியாக மறுத்தார். பள்ளி மாணவர்களை அரசியல் ரீதியான கண்காணிப்பில் வைக்கும் விசேஷக் கடமையை அவர் நிறைவேற்றியது தெரிந்ததே. மார்க்ஸ் அவரைச் சந்திக்க மறுத்தது அவருடைய மன உறுதியைக் காட்டுகிறது. அதனால் அவருக்கும் தகப்பனாருக்கும் மோதல் கூட ஏற்பட்டிருக்கலாம்.

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய ஆரம்ப காலக் கடிதங்களில் ஒன்றில் இந்தச் செயலுக்காக மகனைக் கண்டிக்கிறார், கார்லுடன் உயர்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவனான ஹென்ரிஹ் கிலெமென்சும் லியோர்சிடம் நேரில் விடைபெற்றுக் கொள்ள மறுத்ததை இக்கடிதத்திலிருந்து அறிகிறோம். கார்லின் “குற்றத்தைப்” பற்றி ஆத்திரமடைந்த லியோர்சை சமாதானப்படுத்துவதற்காக ஹென்ரிஹ் மார்க்ஸ் ஒரு ‘பச்சைப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. “அவன் அப்பொழுது வீட்டில் இல்லை”(13) என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் வாழ்க்கையுடனும் அறிவுலகத்துடனும் மார்க்சின் உண்மையான மோதல் வருவதற்கு இன்னும் சற்றுக் காலமாயிற்று.

குறிப்புகள் :

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 635.
(2)ஜென்னியின் மூத்த சகோதரரான ஃபெர்டிகுண்டு 1850க்களில் பிற்போக்கான பிரஷ்ய அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சர் பதவி வகித்த பொழுது மார்க்சின் தீவிரமான அரசியல் எதிரியாக இருந்தார்.
(3)Marx, Engels, Collected Works, Vol. 1, P. 28
(4) Marx, Engels, Werke, Bd. 30, Berlin, 1964, S. 628.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, P. 355.
(6) Ibid., p. 357.
(7)Ibid., p. 4.
(8)Ibid., p. 7.
(9Ibid., p. 8.
(10)Ibid.
(11)Ibid.
(12) Ibid.
(13) Ibid., p. 647.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

சகரான்பூர் எரிகிறது – ஆதித்யநாத்துக்கு ஆப்பு !

0

கரான்பூர் எரிகிறது. மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கு புகழ் பெற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “வெறியூட்டும் பேச்சுக்கு பலியாகாதீர்கள்”  என்று தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடவேண்டிய நிலமைக்கு ஆளாகியிருக்கிறார்.

144 தடை உத்தரவு, இணைய சேவைகள் முடக்கம், எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கம், மாவட்ட ஆட்சியர் மாற்றம், சீனியர் போலீசு சூப்பிரெண்டு மாற்றம், டி.ஐ.ஜி மாற்றம் – இவையெல்லாம் வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்த உ.பி மாநிலத்திலிருந்து வரும் செய்திகள்.

சகரான்பூர் மேற்கு உ.பியில் உள்ள மாவட்டம். இந்த மேற்கு உ.பி-யில் முசாபர்நகரில்தான் இசுலாமியர்களுக்கு எதிராக மத வன்முறையைத் தூண்டி நாடாளுன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது மோடி – அமித் ஷா கூட்டணி.

இந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி தலித் – முஸ்லிம் மோதலை உருவாக்க இதே மாவட்டத்தை சேர்ந்த “சதாக் துத்லி” என்ற ஊரில் பாஜக முயன்றது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் நடந்தது. இதனையொட்டி ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாஜக வின் பேரணிக்கு அனுமதி மறுத்தார் போலீசு சூப்பிரெண்டு லவ் குமார். உடனே அவரது வீட்டை பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா தலைமையிலான கும்பல் தாக்கியது. அனுமதி மறுத்த போலீசு அதிகாரியை வேறு ஊருக்கு தூக்கி அடித்தார் யோகி ஆதித்ய நாத்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காதல்லவா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த இந்துத்துவ கும்பலின் ஆதிக்க சாதி புத்தி, அடுத்தபடியாக தலித் மக்களுக்கு எதிராகத் திரும்பியது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஷபிர்பூர் கிராமத்தில் தலித் மக்கள் வழிபடுகின்ற ரவிதாஸ் கோயிலில், அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு அம்பேத்கர் ஜெயந்தியன்று அவர்கள் திட்டமிட்ட போது தாகூர் சாதி வெறியர்கள் அதனைத் தடுத்தனர். தலித் மக்கள் மீது தாக்குதலும் தொடுத்தனர். யோகி ஆதித்யநாத் தாகூர் சாதி என்பது இவர்களுடைய சாதித்திமிருக்கு இன்னொரு காரணம்.

டெல்லியில் நடைபெற்ற பீம் ஆர்மீ கூட்டத்தில் உரையாற்றும் சந்திர சேகர் ஆசாத்

டில்லியிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் உள்ள சகரான்பூர், கிழக்கு உ.பியைப் போன்ற பின்தங்கிய பகுதியல்ல. நகரமயமாக்கம் உள்ளிட்ட பல காரணங்களினால், தலித் மக்களின் எதிர்ப்புக்கு முக்கியமான மையம் இந்த மாவட்டம்.

மாயாவதியின் அரசியல் செல்வாக்கிற்கு அடித்தளமாக இருந்த மாவட்டமும் இதுதான். ஆனால், 2012 தேர்தலில் இம்மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கை கைப்பற்றிய மாயாவதியால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியவில்லை. பிழைப்புவாத, ஊழல், ஆடம்பர அரசியல் காரணமாக மாயாவதி, தலித் மக்கள் மத்தியிலேயே மாயாவதியின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது.

இதன் விளைவாக சந்திரசேகர் ஆசாத் என்ற இளம் வழக்கறிஞரின் தலைமையில் பீம் ஆர்மி என்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. சகரான்பூர் தாக்குதலுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் இவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்றனர். உ.பியில் தலைமறைவாக இருந்த சந்திரசேகர் ஆசாத்தும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

இதற்கிடையில் மே 5 ஆம் தேதியன்று ஷபிர்பூர் என்ற கிராமத்தில் மன்னன் ராணா பிரதாப் சிங்கின் பிறந்த நாள் ஊர்வலத்தை தலித் குடியிருப்பு வழியாக நடத்துவதற்கு தாகூர் சாதியினர் திட்டமிட்டிருக்கின்றனர். ராணா பிரதாப் சிங்கை இசுலாமியர்களுக்கு எதிரான இந்து வீரனாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகிறது. தாகூர் சாதியினரோ, தமது சாதிப் பெருமிதத்தின் அடையாளமாக ராணாவை முன்னிறுத்துகின்றனர்.

மேற்கூறிய நிகழ்ச்சியில் ராணா பிரதாப் சிங் சிலைக்கு மாலையிடுவதற்கு பூலன் தேவியை சுட்டுக்கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தாகூர் சாதிவெறியன் ஷேர் சிங் ராணா என்பவனை தாகூர் சாதியினர் அழைத்திருக்கின்றனர். தலித் மக்களை அச்சுறுத்திப் பணிய வைப்பதுதான் இதன் நோக்கம் என்பதை சொல்லத் தேவையில்லை. தலித் மக்கள் பணியவில்லை என்பது மட்டுமல்ல, எதிர்த்து மோதியிருக்கின்றனர்.

மே 23 ஆம் தேதியன்றி இங்கு மாயாவதி நடத்திய கண்டனப் பேரணிக்கு வந்து விட்டு திரும்பியவர்கள் மீது தாகூர் சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதலில் தலித் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலடியாக தாகூர் சாதி இளைஞர் ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.

பீம் ஆர்மீ டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டதின் போது

“பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி ஆதிக்க சாதியினரின் திமிர் அதிகரித்திருப்பதாகவும், வெளிப்படையாகவே தங்களை சாதி ரீதியாக இழிவு படுத்துவதாகவும் இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள இயலாது என்றும் சீறுகின்றனர். அரிஜன் என்று தங்களை அழைப்பதை சாதாரண கிராமத்துப் பெண்கள் கூட கடுமையாக எதிர்த்துப் பேசுகிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இசுலாமிய மக்களுக்கு எதிராக மதவெறியைத் தூண்டி விட்டு உ.பி யின் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியது அமித் ஷா – மோடி கிரிமினல் கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் அது செல்லுபடியாகாது என்று தெரிந்து விட்டதால், யாதவ் சாதியினருக்கும், மாயாவதியின் ஜாதவ் (தலித்) சாதியினருக்கும் எதிராக பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் சாதி உணர்வைத் தூண்டி விட்டும், பார்ப்பன, தாகூர் சாதியினரின் ஆதரவுடனும்தான் பாஜக வெற்றி பெற்றது.

அந்த வெற்றி இப்போது பல்லிளிக்கத் தொடங்கிவிட்டது. இசுலாமிய மக்களை எதிரிகளாக காட்டி, ஏதோ ஒரு வகையில் இந்து சாதி ஆதிக்க கட்டமைப்பை காலத்துக்கேற்ப பேணிக்கொள்ளலாம் என்று சங்க பரிவாரத்தின் சதி மூளை சிந்திக்கிறது. தேர்தல் நேரத்தில் தற்காலிகமாக அத்தகைய சதிக்கு மக்கள் பலியாகவும் செய்கின்றனர்.

ஆனால் அடுத்த கணமே, சாதி ஆதிக்கம் என்கிற சமூக எதார்த்தம் வேலை செய்யத் தொடங்குகிறது. சாதிக்கு அப்பாற்பட்ட இந்து சாமியார் என்ற யோகி ஆதித்யநாத்தின் பிம்பத்தைக் காட்டி பாஜக ஏமாற்றியிருந்தாலும், மக்களுக்கு தெளிவு எற்படுத்தும் வேலையை சாதி வெறியர்களே செய்கிறார்கள்.

தீண்டாமைக் கொடுமைக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக மக்கள் தாங்களே களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். சென்ற மாதம் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம் நடத்திய பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா, “சகாரன்பூரை காஷ்மீராக்க விடமாட்டோம்” என்று முழக்கம் எழுப்பியிருக்கிறார்.

“சகாரன்பூரை காஷ்மீர் ஆக்காமல் விடமாட்டோம்” என்று முழங்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சகரான்பூரில் தலித் மக்கள் தாகூர் சாதி வெறியர்களுக்கு எதிராக நேருக்கு நேர் நின்று கல்லெறிவதைப் பார்க்கிறோம். காஷ்மீரைப் போலவே இணையம், செல்பேசி உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். காஷ்மீரை பாரதிய ஜனதா உ.பி க்கும் அழைத்து வந்திருக்கிறது.

தனது நடவடிக்கைகளின் மூலம் சங்க பரிவாரம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் காஷ்மீராக மாற்றும் பணியை விரைவிலேயே செய்து முடிக்கும்.

  • பேகன்

டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

1

டப்பாரை ஏந்திய பெண்கள் டாஸ்மாக் கடைகளை இடித்துத் தள்ளுகிறார்கள். பெட்டிபெட்டியாகச் சாராய புட்டிகளை வீதியில் போட்டு உடைக்கிறார்கள். அதிகாரிகள் ஒரு பொட்டல்காட்டுப் புறம்போக்கில் இடம் பிடித்துக் கடை கட்டினாலும், மறுநாளே மக்களால் அது முற்றுகையிடப்படுகிறது. இரவு பகலாக கடை அகற்றப்படும் வரை முற்றுகை தொடர்கிறது. சாராய பாட்டில் லாரிகள் மறித்து விரட்டப்படுகின்றன. கடைக்கு இடத்தை வாடகைக்கு விட முனையும் நபர்களை ஊரே கூடி நின்று எதிர்க்கிறது.

இந்த எழுச்சி இன்று தோன்றியதல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்ற உத்தரவின்படி கடையை அகற்று என்று நடத்திய போராட்டத்தில்தான் சசி பெருமாள் மரணமடைந்தார். ஜெயா அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாது என்பதையும், நீதிமன்றமே தனது உத்தரவு மீறப்படுவதைத் தட்டிக் கேட்காது என்பதையும் மக்கள் புரிந்து கொண்ட தருணம் அது. அடுத்த சில நாட்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கிய போது, போலீசின் தாக்குதலுக்கு அஞ்சாத அவர்களது உறுதி புதியதோர் பாதையைக் காட்டியது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் பற்றிப் பரவத் தொடங்கின. ம.க.இ.க. பாடகர் தோழர் கோவனைத் தேசத்துரோக வழக்கில் கைது செய்தபோது, அரசுக்கு ஆதரவாக வாதாட அ.தி.மு.க. அடிமைகளும் ஆர்.எஸ்.எஸ். பங்காளிகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் நின்றனர். 2015-இல் சசிபெருமாள் மரணத்தைக் கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, “படிப்படியாகக் குறைத்து, மொத்தமாக மூடுவேன்” என்று 2016-இல் ஒரு  “போங்காட்டம்” ஆடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவையனைத்தும் மெரினா எழுச்சிக்கு முந்தைய நிகழ்வுகள். அதன் பின்புலங்களில் ஒன்று எனவும் கூறலாம். தற்போது நடந்து வரும் மக்கள் எழுச்சி, நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வேறொரு வடிவிலான தொடர்ச்சி. நடந்து வரும் போராட்டங்களைக் கவனியுங்கள். போலீசுடன் இழைவதற்கும் வேனில் ஏறியபடி போஸ் கொடுப்பதற்கும் கட்சித்தலைவர்கள் யாரும் இல்லை. அதிகார வர்க்கத்துடன் மக்கள் நேருக்குநேர் பொருதுகிறார்கள். கன்னத்தில் அறைந்தாலும், தடிக்கம்பால் தாக்கினாலும் அடங்காமல் சீறிச் சினந்து வருகிறார்கள். இது அடிக்கு அஞ்சாத போர்க்குணம் மட்டுமல்ல. இந்த போர்க்குணத்தை உள்ளிருந்து கிளர்த்துவது இந்த அரசமைப்பின் மீதான வெறுப்பு. போராட்டக் களங்களில் வெற்றி பெறும் பெண்கள், மக்களின் அதிகாரத்தை நாம் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இருக்கக்கூடும். ஆனால், தமது அதிகாரம் செல்லாக்காசாகிப் வருவதை அதிகாரவர்க்கம் ஒவ்வொரு கணமும் உணர்ந்து புழுங்கிக் கொண்டிருக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை-பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

இன்று 3000 கடைகளுக்கு மேல் மூடப்படுவதற்குக் காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது உண்மைதான். எனினும், இதுவே முழு  உண்மையல்ல. “கோயில், பள்ளி, மருத்துவமனைக்கு அருகில் மதுக்கடை கூடாது” என்ற விதி மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அத்தகைய கடைகளை மூடச்சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் ஒன்றா, இரண்டா? ஒரு கடையைக்கூட அரசு மூடியதில்லை. நெடுஞ்சாலைக் கடைகளை மூடுமாறு நீதிமன்றம் கூறியபோது, பின்வாசலை முன்வாசலாக்கி, “இது வேறு கடை” என்று நீதிமன்றத்துக்குச் சொன்ன அரசு இது. அதையும் வேடிக்கை பார்த்த நீதிமன்றம்தான் இது.

தற்போது மட்டுமென்ன? தீர்ப்பை மீறிக் கடை திறப்பதற்கு தன்னாலான முயற்சிகளையெல்லாம் அரசு செய்துதான் பார்த்தது. அரசை முடக்கியிருப்பது, நீதிமன்றத்தின் அதிகாரம் அல்ல, மக்களின் அதிகாரம்! கடப்பாரையும் துடைப்பமும் ஏந்திய பெண்கள்! “மக்கள் எதிர்ப்பு காட்டும் இடங்களில் நாங்கள் கடை திறக்க முயற்சிக்க மாட்டோம்” என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கிறார் அரசு வழக்கறிஞர். இது மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத நிலையில் போடப்படும் யோக்கிய வேடமல்லவா?

வேடம் போடுவது அரசு மட்டுமா? “மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை சற்றுக் குறைப்பதற்காவது உத்தரவிடுங்கள்” என்று பா.ம.க. வழக்கறிஞர் பாலு 2015-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டபோது, “அதெல்லாம் அரசின் கொள்கைப் பிரச்சினை, நாங்கள் தலையிட முடியாது” என்று கூறியது உயர் நீதிமன்றம். இன்றோ “குடியிருப்புப் பகுதிகளில் கடை வைக்காதீர்கள்” என்று கொள்கைப் பிரச்சினையில் “தலையீடு” செய்கிறது.

பச்சையப்பன் கல்லூரி வாயிலில் வைத்திருந்த மதுக்கடையை “சட்டவிரோதமானது” என உயர் நீதிமன்றம் அன்று கண்டிக்கவில்லை. மாறாக, “சட்டத்தை மாணவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது” என்று கூறி, அவர்களைச் சட்டவிரோதிகள் ஆக்கியது. கடையை உடைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மாணவனைப் பிணையில் விட வேண்டுமானால், “50,000 ரூபாய் டாஸ்மாக்கிற்கு இழப்பீடு கட்ட வேண்டும்” என அன்று உத்தரவிட்டது. இன்றோ சிறை, போலீசு அதிகாரிகளைக் கண்டிக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு திருச்சியில் நடத்திய சிறப்பு மாநாட்டில் திரண்ட மக்கள் திரளின் ஒரு பகுதி. (கோப்புப் படம்)

இந்த மாற்றங்களுக்கு என்னதான் காரணம்? நிச்சயமாக “சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும்” என்ற அக்கறையோ, “மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்ற ஜனநாயகப் பண்போ காரணமல்ல. தங்கள் அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்பதனால் இவர்கள் பின் வாங்குகிறார்கள். இப்போதைக்கு பின்வாங்குவதன் மூலம்தான் தங்கள் அதிகாரத்தின் கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பதுங்குகிறார்கள். மக்களின் குரலுக்கு மேலே தங்கள் குரலை ஓங்கி ஒலித்துத் தலைப்புச் செய்தியாக்குவதன் மூலம், “நிலைநாட்டப்படுவது நீதிமன்றத்தின் அதிகாரம்தான்” என்ற மயக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம். “கள்ளச்சாராயம் விற்பவனிடம் மனுக் கொடுப்பதும், கலெக்டரிடம் கொடுப்பதும் ஒன்றுதான்” என்று மக்கள் தெளிந்து விட்டார்கள். இந்த அரசதிகாரத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கோபுரத்தில் ஏறிக் கூவினாலும் பயனில்லை என்று உணர்ந்து விட்டதனால்தான், அத்தகைய போராட்ட வடிவங்கள் உதிர்ந்து விட்டன.

தமிழகத்தின் தற்போதைய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை டில்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் கையாண்ட “போராட்ட வடிவங்கள்” விவசாயிகளின் சுயமரியாதையைக் குலைக்கின்ற வகையிலானவை என்பது மட்டுமல்ல, அவையெல்லாம் மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் என்று அவர்கள் கூறிக் கொண்டார்கள்.

விவசாயத்தைப் புறக்கணிப்பதையும் விவசாயியை வாழ விடாமல் அழிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசின் “கவனத்தை ஈர்த்து” கருணையைப் பெற முயற்சித்த அந்த அணுகுமுறை ஒருபுறம். “எங்கள் குடியைக் கெடுப்பதுதான் உன் கொள்கை எனும்போது, நாங்கள் ஏன் உன்னிடம் மனுக் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டு, மதுக்கடைகளை உடைத்தெறிகின்ற தமிழகம் ஒருபுறம்.

இது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினையல்ல. அரசிடம் பணிந்து மன்றாடப் போகிறோமா – அரசைப் பணிய வைக்கப்போகிறோமா என்பது குறித்த பிரச்சினை. கல்விக்கொள்ளையோ, மணற்கொள்ளையோ, தண்ணீர்க்கொள்ளையோ எதுவும் இந்த அரசின் உறுப்புகளை மீறி நடப்பதல்ல. அனைத்தும் அவற்றால் நடத்தப்படுபவை. முறைகேடுகளே முறையாகிப்போயிருக்கும் சூழல் இது. எனவேதான், முறையீடுகளும் மன்றாட்டங்களும் முட்டுச்சந்துக்கு வந்துவிட்டன.

ஆம். இது முட்டுச்சந்து. கையில் கடப்பாரை ஏந்தியிருக்கும் பெண்கள் மதுக்கடையை மட்டும் தகர்க்கவில்லை. “இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்குட்பட்டுத்தான் தீர்வு காண முடியும்” என்று மக்களின் மூளைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் முட்டுச்சந்தையும் சேர்த்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தை மாற்றியமைக்கும் மக்கள், தம் நடவடிக்கையின் ஊடாக தங்கள் சிந்தனையையும் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அதை அவர்கள் அந்தத் தருணத்திலேயே உணர்ந்து விடுவதில்லை. பின்னர் உணராமல் இருப்பதுமில்லை.

-மருதையன்

புதிய ஜனநாயகம், மே 2017

பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !

2

ருமபுரி மாவட்டத்தில் உள்ள 9 அணைகளில் ஒன்று பாலக்கோடு கெசர்குளி அணைக்கட்டு . 25.20 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 134 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். 2014-க்குப் பிறகு மழை பொய்த்துப் போனதால் இந்த அணையில் சொற்ப நீரே இருந்தது. இந்த வருடம் இந்த அணைக்கட்டு முற்றிலும் வறண்டு போய் ஒன்றிரண்டு அடிகள் அளவுள்ள தண்ணீரே தேங்கியுள்ளது.

பல கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த அணையில் நீர் நிரம்பினால் ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன உதவியளிக்கிறது. இதையன்றி கோட்டூர் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கும் ஆதாரமாக இருக்கிறது.

செல்லமுத்து – பெல்ராம்பட்டி

டேம் பகுதிய ஒட்டி இருக்குறதுனால இங்க கொஞ்சம் நிலத்தடி நீர் இருக்குங்க! தக்காளி தான் அறுவடை பண்ணிட்டிருக்கோம். பெட்டி ஒன்னு(23 கிலோ கொள்ளளவு) 1000 ரூவா வித்த காலம் போயி இப்ப வெறும் 120 ரூபாய்க்கு தான் விக்கிறோம். இலாபமேயில்ல, வர்ற காசெல்லாம் கூலிக்குத்தான் சரியா இருக்கும்.

கிருஷ்ணப்பா(75) – சீரியம்பட்டி

நமக்கு பொறந்ததுல இருந்தே இந்தூர்தா கண்ணு. நெல்லு,எள்ளு, சோளம், வாழை வேர்கடலைன்னு என் நிலத்துல வெளையாத பயிரே இல்லப்பா. இப்ப பூரா காஞ்சு போயி கிடக்கு குடிக்கவே தண்ணியில்ல இதுல எங்குட்டு போயி நா விவசாயம் பாக்க. எனக்கு விவரம் தெருஞ்ச நாள்ல இருந்து இப்புடி ஒரு வறட்சிய பாத்ததேயில்ல. நமக்கு 3 மாடு ஒரு கண்ணு நிக்குதுப்பா. மாட்டுக்கு தீவனம் போடனும், தண்ணி வைக்கனும் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த கஷ்டத்துல மாட்டுக்கு எப்புடி தனியா பயிர் பண்ண முடியும். அந்தா தெரியுதுல புல்கட்டு  அத வச்சுதா இப்போதைக்கு ஒப்பேத்திட்டு இருக்கோம். கறக்குர பாலு வீட்டுக்கே சரியாப் போயிடும் சோத்துக்கு ரொம்ப சிரமமாயிருச்சுப்பா.

இந்த புல்லுகட்டு ஒரு மாசங்கூட தாங்காது. அடுத்த மாசத்துக்கு என்ன பண்ணப் போறேனோ, ஆண்டவனுக்குத்தான் வெளுச்சம். மாட்ட சந்தைல விக்கவும் முடியலை, அதுக்கேத்த வெலை கெடைக்க மாட்டேங்கிது. ஏதோ ரேசன் இருக்கறதுனால கிடைக்கறத தின்னுபுட்டு இருக்கோம். ஊர்ல யாரு கேணிலையும் தண்ணியில்லப்பா, ஒரே ஒருத்தர் கிணத்துலதான் கிடக்கு ஊரே அங்க வந்துதான் புடிக்குது. 3 கி.மீ தொலவுல இருந்தெல்லாம் ஆள் வருது. அந்த கிணறு வத்திருச்சுன்னா போய்சேர வேன்டியதுதான்.

நூறு நாள் வேலைல 6 மாசம் மண் வெட்டுனோம், செடி புடுங்குனோம் அல்லா வேலையும் பாத்தோம். ஆனா ஒரு மாசத்துக்குக் கூட சம்பளமே வரலைப்பா. 6 மாசமா விவசாயிக்கு பணத்த குடுக்காம ஒளிச்சு வச்சுருக்கானுவலே, இதுவே ஒரு விவசாயி, அரசாங்க பணத்தை 3 நாள் வச்சுருந்தா சும்மா உடுவியா நீ.  நம்ம வூடு பக்கத்து வூட்டுக்காரங்க கரும்பு போட்ட கதய சொல்லிமாளாது. விளைஞ்சவனுக்கு வெலையில்லைன்னு பொலம்புரான், எங்க கரும்போ கருகிப்போயி கிடக்கு. இனி எத்தனை மழை பேஞ்சாலும் மீளாது. நம்ம கோட்டூர் ஏரி  நெரஞ்சிருந்த காலத்தை நினைச்சா ம்ம்ம், ஏரி நொம்புணாலே வீட்டுல தங்கம் வெள்ளி வந்ததா நெனச்சுக்குவோம்.

நமக்கு களிதான் புடிச்ச சாப்பாடு. அந்த களிய கண்ணுல பாத்து நாள் கணக்காயிடுச்சு இப்ப ஏதோ இருக்க உயிரை கட்டிவைக்க கிடைக்கிறத தின்னுக்குட்டு இருக்கோம். நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா. அவருக்கு விவசாயிங்கன்னா ஏனோ கசக்குது.

எவ எவனோ மண்ண அள்ளி ஆட்டையப் போட்டு பணம் பாக்குறான், நாங்க அந்த ஏரி மண்ணை தொட்டா அடிக்க வர்றானுவ. அதனாலயே ஏரி ஆழமான பாடில்ல. கொத்தனார் வேலை, கூலி வேலைக்குன்னு ஒவ்வொருத்தரா போயிக்கிட்டிருக்காங்கப்பா.

யானை தொல்லை அதிகம்தாம்பா, அந்தாண்ட ஈச்சம்பள்ளத்துல கூட ஒரு பொண்ணை அடிச்சு புடுச்சு. நாம மனுச பயலுக, ஒரு 5000 லிட்டர் பிடிக்குற டிரம்ம,  700 ரூபா குடுத்து வாங்கி குடுச்சுக்குவோம். நிலமை மோசமானா, அதுங்க என்னா பன்னும் பாவம், மாட்டுக்கு வாய தொறந்து கேட்கவா தெரியும். சொக்கங்கொட்டாய், கருவூர்க்கு மேலலா ரொம்ப பஞ்சம்பா, பாவம் என்னா பண்ணுதோ அந்த ஊர் சனங்க. முன்னைலா வாரம் ரெண்டு நாள் தலைக்கு ஊத்திக் குளிப்போம். இப்ப குளிக்கவே மனசு வரமாட்டிங்கிதுப்பா. 10 வருஷமா சரியான மழையேயில்லை. ஏதோ புயல் கியல்னு வந்து மழை கொட்டுனாதான் உண்டு.

E.V.ரெங்கசாமி – கோட்டூர்

நாங்க வெளிகை வேளாளக் கவுண்டருப்பா..எனக்கு 3 மகனுவ, ஒரு பொம்பளப்புள்ள. எல்லாருக்கும் திருமணமாகி பேரப்புள்ளைகள் வரைக்கும் திருமணம் முடிஞ்சிகிட்டிருக்கு. 87 வயசுக்கும் மேல ஆயிடுச்சு. தண்ணிக்கி தாம்பா ரொம்ப செரமப்படுறோம்.  நான் அந்தக்காலத்து எம்.ஜி.ஆர் ரசிகன். புள்ளங்க எல்லாம் ஒரு திக்குப் போயிடுச்சுங்க.

தென்னை எல்லாம் பட்டுப்போச்சு, எல்லாத்தயும் அறுத்துர வேண்டியதுதான், வீட்டு வேலைக்கும் ஒதவாது. 3 சீம மாடு, 30 பட்டி மாடுங்க இருக்கு. சீம மாடு மட்டும் வீட்ல இருக்குது, பட்டி மாடுங்கள்லாம் அதோ பாரு அந்த காட்டுக்குள்ள போச்சு, தை மாசத்துல தான் திரும்பி வரும்; இப்ப இருக்குற வறட்சியில எத்தன செத்துச்சோ தெரியல.

ஒரு காலத்துல 80 மாடுகள வெச்சு மேச்சுகிட்டிருந்தேன், இப்ப பாரு செருப்புக்குக் கூட வழியில்ல. 2 ஏக்கரா நிலமிருக்குது ரெண்டு மூனு வருசமா ஒரு வெளச்சலுமில்ல.

நமக்குச் சொந்தமான கெணத்துல தண்ணி வத்திப்போச்சு. குடிக்கிற தண்ணிக்கி பொது கெணறு ஒன்னு இருக்கு அதுல இருந்து எடுத்துக்குறோம்; செல நேரத்துல ரோட்டுக்கு அந்தாண்ட போர் போட்ருக்காங்க; அதுல இருந்தும் எடுத்துக்குவோம். என்ன பண்ணுறது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

தாதம்மாள் – கரகூர்

50 வயதைக் கடந்த தாதம்மாளுக்கு 2 மகன்கள் 4 பேரப்பிள்ளைகள். கணவர் உடல்நலக்குறைவால் இறந்து 4 வருடங்கள் ஆகின்றன. குரும்பக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர் காட்டுவேலைக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் வெயிலில் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் தன்னுடைய முதல் மகன் மற்றும் இரு மருமகள்களுடன் இணைந்து டாஸ்மாக் பாட்டில்களைக் கழுவும் வேலை செய்து வருகிறார். அத்தனை பொறுமையாகவும், தான் பட்ட இன்னல்களை நினைவு கூறுகையில் கண்கலங்காமல் உயிரிருக்கும் வரை உழைத்து தன் பிள்ளைகளுக்குத் தொந்தரவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“4 வருசத்துக்கு முன்னாடி என் வூட்டுக்காரர் செத்துப்போயிட்டாரு, 2 மவங்கள்ல சின்னவன் பெங்களூருல வாட்ச்-க்கு பாலிஷ் போடுற வேலை செய்யுறான். மூத்தவன் இங்கேயே இருந்து இந்த பாட்டில் கழுவுற வேலைய பாக்குறான். ரெண்டு மருமவளும் எங்கூடத்தான் இங்கயே வேல பாக்குறாங்க. ரெண்டு பேத்துக்கும் ரெண்டு மவனுங்க இருக்காங்க. இந்த வேல  கஷ்டந்தான். வவுறு இருக்குல்ல, அது இருக்குற வரைக்கும் வேல செஞ்சுத்தான ஆகனும். 5, 10 சம்பாதிக்கனும்னா சும்மா யாராவது கொடுப்பாங்களா?

ஈரத்துலயே நிக்கிறதுனால கை காலெல்லாம் வலியாத் துடிக்கும். சின்ன அடிபட்டாக்கூட இப்பல்லாம் தாங்கிக்க முடியல. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. புள்ளங்கல்லாம் ஏதாச்சும் சமைச்சு சாப்பிட்டுட்டு கொண்டாருங்க, நான் சும்மா தானே இருக்கேன்னு வேலைக்கு வந்துட்டேன்.

தண்ணீர் பற்றாக்குறையால உங்க தொழிலுக்கு பாதிப்பு இருக்கா?

ஆமாம்பா! பக்கத்து வூட்டாண்ட இருக்க கெணத்துலேருந்து தான் தண்ணி மொண்டு எடுத்துக்குவோம், எல்லாம் நம்ம ஆளுங்கதான். இப்போ அவுங்க கெணத்துலயும் தண்ணி வத்திப்போச்சு, வாரத்துக்கு ஒரு வாட்டி 700 ரூபா கொடுத்து தண்ணிய வாங்கி தொட்டில ஊத்திக்கிறோம்.

நாலஞ்சு நாளைக்கு மேல தொட்டித்தண்ணிய பயன்படுத்தமுடியல, சோப்புத்தண்ணியும் சாராயத் தண்ணியும் கலக்குறதுனால ஒரே நாத்தமா இருக்கு, வேணுன்னா போயிப்பாரேன்…

இப்ப இதுல என்னான்னா மிடாசு காரன் வேற பாட்டிலெல்லாம் ஒடனேயே எடுக்க மாட்டேங்குறான், கம்பெனில ஏற்கனவே சரக்கு பூரா தேங்கிக் கெடக்காம். ரெண்டு லோடு அனுப்பியும் இன்னும் காசு வரல…இதுல பாட்டிலுக்கு 10 காசுன்னு கொடுத்துட்டிருந்தத மாத்தி 5 காச்சுன்னு கொறக்கப் போறானாம். எல்லா கஷ்டந்தாப்பா!

ஒரு லாரிக்கு 500 மூட்டை வரைக்கும் ஏத்துவோம், இதுல ஒடஞ்சது போக மீதியுள்ள எல்லாத்தயும் ஸ்டிக்கர கிழிச்சி, பாட்டில்ல இருக்குற வளயத்த கோணியால ஒடச்சு, கழுவி காயவெச்சு புது பாட்டில் மாதிரி பேக் பண்ணி அனுப்பி வெக்கனும்.

இந்த வேலயும் போச்சுன்னா என்ன பண்ணுவீங்க?

ஈரத்துல நின்னு நின்னு வேல பாக்குறதுனால, கையெல்லாம் ரொம்ப இலகுவாயிருச்சு, அழுத்தமான பொருளெல்லாம் புடிச்சா வலி தாங்கமுடியல; ஆனா என்ன பண்ணுறது, காட்டு வேல தான் வழின்னா அதயும் செஞ்சு தான ஆகனும்.

சரோஜா – பூமரத்துப்பள்ளம்

வறட்சினால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கோம்பா! டிவி-ல எதும் போட்டு கொஞ்ச ஒதவி பண்ணா ஒனக்கு புண்ணியமா போவும்பா? பாத்தியா இந்த மாமரத்தயும், தென்ன மரத்தயும். அத வுடு அங்க இருக்குற பன மரமே பட்டுப்போச்சு பாத்தியா? எங்க கஷ்டமெல்லாம் ஒங்களுக்கு எப்புடி புரியும்?

மனுசனுக்கும் குடிக்கத் தண்ணியில்ல, அதுகளுக்கும் குடிக்கத் தண்ணியில்ல….வீட்ல அஞ்சாறு ஆடுங்களும், 3 சீமப் பசுவும் இருக்குதுப்பா. சோளமெல்லாம் காஞ்சு போச்சு! கெணறு வத்திப் போச்சு! பட்டி மாடெல்லாம் வெச்சுருந்தோம், போன வருசமே எல்லாத்தயும் வித்துப்புட்டோம், 3 வேளையும் வயிறார தண்ணி குடுச்சுட்டு இருந்த ஆடு மாடுகளுக்கெல்லாம் ரெண்டு வேளக்கி தான் தண்ணி தர முடியுது.

ஆறு, ஏரி, குட்டை, கெணறு எல்லாமே வத்திப்போச்சு, அந்த ஆண்டவனா பாத்து மழய கொடுத்தா தான் நாங்க இங்க இருக்க முடியும், இல்லாட்டி ஊரக் காலிபண்ணிட்டு கெளம்பவேண்டியது தான். ரேசன் அரிசிய வெச்சுத்தான் பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கோம்; கேவூர், சோளம்-னு வீட்டுல வெளயறத வெச்சே சாப்புட்டுக்குவோம்; இப்பல்லாம் வெறும் ரேசன் அரிசி மட்டுந்தான் திங்கிறோம்.

செங்கோடப்பட்டி ஏரி – பாலக்கோடு

ஒரு காலத்தில் கடல் போலக் காட்சியளித்த இந்த ஏரி இன்று நீரின்றி பாலம் பாலமாகப் பிளந்து வறண்டு விட்டது. அருகில் உள்ள கிணறுகளும் நீரின்றி வறண்டு விட்டன. பாலக்கோடு இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ஏரி குறித்து ஒரு தோழர் கூறுகையில்…

நான் வீட்ல ஏழாவது பையனாப் பொறந்தேனாம். ஏழாவதும் பையனாகிப் போச்சேன்னு எங்கப்பா கடுப்பாயி இவன அந்த ஏரிக்குள்ள தூக்கிப்போடு என்று அம்மாகிட்ட சொல்ல அவுங்க அத கடுமையா எதுத்திருக்காங்க..இத ஏன் சொல்றேன்னா இப்ப பாத்தா அந்த ஏரியில ஒரு சொட்டு தண்ணி கூட இல்ல..சின்னப்புள்ளயா இருக்கும் போது தண்ணியில குளிச்சி வெளையாடிட்டே இருப்போம்..

மகேஸ்வரி அக்கா – ஆடு மேய்ப்பவர்,

கூலிக்கு ஆடு மேக்கிறேங்க. காட்டு வேல எதுவுமில்ல அதனால இந்த வேல செஞ்சுட்டிருக்கேன். ஆடுங்கள வீட்டிலேருந்து ஓட்டிட்டு வர்றப்பவே தண்ணி காட்டி தான் ஓட்டிட்டு வருவோம். இங்க வந்து கொஞ்ச மேவு கெடைக்கும், சாயந்தரமா  ஓட்டிட்டு போயி பட்டில அடச்சுருவோம். மறுபடியும் வீடு போய்ச் சேர வரைக்கும் அதுகளுக்குத் தண்ணி கெடைக்காது.

4 மணி நேரம் வரைக்கும் ஆடு மேய்க்கவேண்டும்; ஆனால் அரை லிட்டர் தண்ணீரை மட்டும் இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார்.

நேர்காணல்,படங்கள் : வினவு செய்தியாளர்கள்

இஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்

0

ஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எல் (Islamic State of Iraq and the Levant) குழுவிடமிருந்து ஈராக்கில் 2016, ஆகஸ்டு மாதம் மீட்கப்பட்ட கொயாரா நகரில் தான் அந்தப் பிரதேசத்தின் முக்கியமான மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவினரால் காயமுற்ற தமது போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனைக்கு தற்போது அந்தப் பகுதி முழுவதும் இருந்து சிசேரியன் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இராக்கியர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் 10 குழந்தைகள் இங்கே பிறப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் இமான் நோரி: “பத்தில் இரண்டு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றது. உள்ளடங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து வரும் பெண்களுக்கே சிசேரியன் தேவைப்படுகின்றது. ஏனெனில், பொதுவாக அந்தப் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு கிடைப்பது இல்லை என்பதோடு நீண்ட தொலைவு நடந்தே வருவதாலும் உளவியல் ரீதியான அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கின்றனர்” என்கிறார் மருத்துவர் இமான்.

சுமார் 450 இராக்கியர்களுடன் செயல்பட்டு வரும் “பெண்கள் மற்றும் சுகாதாரத்துக்கான சர்வதேச கூட்டுத்தாபனம்” (The Women and Health Alliance International) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான் வடக்கு ஈராக்கில் பிரசவ கால சுகாதார சேவை அளித்து வரும் ஒரே அமைப்பு.

முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் மொசூல் நகரில் நடத்தப்பட்ட மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர் மரியம் நாசர், இங்கே மருத்துவ வசதிகளும் போதுமான உபகரணங்களும் இல்லை என்று குறிப்பிடுகிறார். கொயாரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதில் அவருக்கு மிகவும் பெருமை; “பெரும்பாலும் மனிதாபிமானப் பணியாளரைப் போல் உணர்கிறேன்.. ஏனெனில் இங்கே பெண்கள் தான் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பால் பாதிக்கப்பட்டனர்” என்கிறார்.

கொயாரா மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக செயல்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கைப்பற்றப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கொயாரா நகரம் விடுவிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆன பின்னும், ஒவ்வொருவரின் மனதிலும் போர் உறைந்துள்ளது. இராணுவ வாகனங்கள் வரையப்பட்ட சுவர் ஒன்றை கடந்து செல்லும் இளையோர்.

ஐம்பத்தைந்து வயதான செவிலியர் மரியல் அலி ஹுசைன் கொயாரா நகரைப் பூர்வீகமாக கொண்டவர். “இப்போதும் பொதுமக்களிடையே கலந்துள்ள முன்னாள் ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் மக்களைப் போல் நடித்துக் கொண்டு சிகிச்சைக்கு வருகின்றனர்” என்கிறார் மரியம்.

இந்தப் பிராந்தியத்தில் கொயாரா மருத்துவமனை ஒன்றில் தான் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இந்நகரம் இருந்த போது நோயாளிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து மருத்துவ பணியாளர் ஒருவர் விளக்கினார் : மருத்துவமனையில் நுழைய 2,000 ஈராக்கிய தினார் (110 ரூபாய்), ஒரு நாளுக்கான படுக்கை கட்டணம் 5,000 தினார் (273 ரூபாய்), சிசேரியன் சிகிச்சைக்கு 75,000 தினார் (4,160 ரூபாய்).

ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 10 பத்துக் குழந்தைகளின் பிறப்பு பதியப்படுகின்றது.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் 24 மணி நேரத்திற்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் ஓரிரண்டு மணி நேரங்களுக்குப் பின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இருபத்தைந்து வயதான மருத்துவர் மரியம் நாசர் (நடுவில் நிற்பவர்) உள்ளிட்டு பெரும்பாலான மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எல் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் மருத்துவர் மரியம்.

ஐ.எஸ்.ஐ.எல் பெண்களுக்கு கடுமையான உடைக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. உடல் முழுவதும் மறைக்கும் பர்த்தாவும், கண்களை மட்டும் வெளிக்காட்டும்படியான அபயாவும், கைகளுக்கும் கால்களுக்கும் கருப்பு நிற உறைகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது ஒரு நாள் சிவப்பு நிற காலணியோடு நகருக்குச் சென்ற கொயாரா மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியரான ஷாஹாத் முதானாவுக்கு 50,000 (2,750 ரூபாய்) தினார்கள் அபராதமாக விதிக்கப்பட்டது

பத்தொன்பது வயதான சாரா இப்ராஹிம் தனது மூன்றாவது குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கிறார். அவரது முதல் இரண்டு குழந்தைகள் பிறந்து சில மாதங்களிலேயெ இறந்து விட்டன.

2016 ஆகஸ்டு மாதம் கொயாரா நகரம் ஈராக்கிய படைகளால் விடுவிக்கப்பட்ட போது இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியை வெடிவைத்துத் தகர்த்தனர் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர். “இன்னும் சில மாதங்களில் மருத்துவமனையின் மேல் தளங்கள் இரண்டையும் புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவர், மாஜித் ரமதான்.

“கொயாராவின் நிலைமை சீரடையாமலே உள்ளது” எனக் குறிப்பிடும் ஹுசென், “எந்த நேரமும் கருவுற்ற பெண்ணைப் போல் நடித்து வயிற்றில் குண்டுகளைக் கட்டி வந்து தகர்த்து விடும் வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

கொயாராவில் இருந்து தப்பிச் செல்லும் வழியில் இருந்த எண்ணை வயல்களை தீயிட்டுக் கொளுத்தி விட்டுச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள். இதன் காரணமாக நகர மக்கள் எந்நேரமும் ஆபத்தான புகையைச் சுவாசித்துக் கொண்டும் கருமேகங்களாய்த் திரண்டுள்ள புகையின் கீழுமே வாழ்ந்து வருகின்றனர்.

கொயாராவின் சுவர்கள் இன்னமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி உள்ளிட்டு ஆக்கிரமிப்பின் அசிங்கமான கதைகளைச் சுமந்து கொண்டுள்ளன. அவற்றில் சில அடையாளங்களின் மேல் தற்போது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அல்ஜசீரா
– தமிழாக்கம்: முகில்

காரியாபட்டி பொதுக்கூட்டம் : கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு !

0

மருத்துவக் கழிவுகளை எரித்து நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்ற சட்டவிரோத ராம்கி நிறுவனத்தை மூடு !
திருப்பூர் சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளையும் புதைக்கும் புதிய நிறுவன அனுமதியை இரத்து செய்!

பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

நாள் : 25.05.2017
இடம் : காரியாபட்டி

தலைமை :

  • தோழர் சே.வாஞ்சிநாதன், சட்ட ஆலோசகர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு. மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம.

கண்டன உரை :

  • திரு.சொ.ராஜா,  மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
  • திரு.ஜெயராஜ்,முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க(அம்மா) கட்சி
  • திரு. சண்முக சுந்தரம், மாவட்ட செயலாளர்,ம.தி.மு.க
  • திரு. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு. ராமசாமி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு.பவுன்ராஜ்,மாவட்ட செயலாளர்,புதிய தமிழகம்
  • திரு. முருகன், மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • திரு.கலைவேந்தன்,கொள்கை பரப்பு செயலாளர்,தமிழ் புலிகள் கட்சி
  • திரு. பாலகங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க(புரட்சித் தலைவி)அம்மா கட்சி

சிறப்புரை :

  • திரு. தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்,திருச்சுழி விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க

நன்றியுரை :

  • திரு.தங்கப்பண்டியன்,ஒருங்கிணைப்பாளர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு

 

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு,
தொடர்புக்கு – 98434 87989, 86750 86377, 98653 48163.

 

கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்

0

டலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியான புதுப்பேட்டைக்கு அருகில் உள்ள, திருத்துறையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். எப்போது விடியும் விதைக்கலாம் அறுக்கலாம் என்று இருந்த, இந்த உழைக்கும் மக்களின் சிந்தனையை, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் எப்போது விடியும் பணமுடிச்சை அவிழ்க்கலாம் குடிக்கலாம் என்று சிந்திக்க வைத்து தன்னுடைய நிர்வாகத் திறனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தது.

கோப்புப்படம்

விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று அரசால் உருவாக்கப்பட்ட குடிமகன்களுக்கு வாட்டர்பாக்கெட் விற்பது, வேர்க்கடலை விற்பது, கருவாடு வறுப்பது, மீன்வருவல், ஆட்டுக்கறி மற்றும் குடல் வறுவல், மாட்டுக்கறி வருவல் மற்றும் சூப், பன்றிக்கறி வறுவல், பானிபூரி, சிலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்து இரவு பத்துமணிக்குமேல் மன்டைகாய்ந்து ஓடி வருபவர்களுக்கு அதிக விலைவைத்து விற்பது, காலிபாட்டில்களை பொறுக்குவது,  பாட்டில்களில் உள்ள மூடிகளை பொறுக்குவது என மக்களின் தொழில்முறையாக மாற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அமைந்துள்ள தெருக்காரர்கள் மட்டுமே மேற்கண்ட தொழிலை நடத்த இடம் பிடித்துக் கொண்டனர், மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற ஏக்கமும் அப்பகுதி மக்களிடம் வெளிப்படுகின்றன.

சுமார் இரண்டான்டிற்கு முன் இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து அலுத்துபோய், அனைத்து மக்களையும் திரட்டி மதுக்கடை எதிராக முற்றுகையிடப்பட்டது. அப்போது புதுப்பேட்டைக் காவல் துறையினர் மூர்க்கமான முறையில் தாக்கி, போராடிய மக்களை கலைத்தனர், அஞ்சி ஓடிய மக்களை வீடு வீடாக நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடுமையாக தாக்கி கைது செய்தனர். இப்பகுதியில் டாஸ்மாக்கிற்கு இடமளித்து அப்பாவிகளான கூலி விவசாயிகளையும் மாணவர்களையும் சீரழித்தவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள இராதாகிருஷ்ணன், இவர் அதிமுக-வை சார்ந்தவர். டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய திமுக-வை சார்ந்த ஒருவரின்  கரும்பை வெட்டி வெளியே எடுத்துவர வழிவிடாமல் தடுத்துள்ளார் இந்த வழக்கறிஞர். இந்த நடவடிக்கைகளினால் மிரண்டுபோன மக்கள் பிளவுபட்டு தங்களுக்குள்ளே மோதிக்கொண்டது டாஸ்மாக்கிற்கு ரானாட்டா முறுக்குக் கம்பியால் அடித்தளம் போட்டதாய் அமைந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது  தாய்மார்களே டாஸ்மாக் கடையை விளக்குமாற்றால் அடித்துவிரட்டுங்கள் என்ற சுவரொட்டியை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சத்தியக்குமார், தோழர் செந்தமிழ் மூலமாக இப்பகுதியில் ஒட்டப்பட்டது. அப்போது மிகுந்த வரவேற்பு இருந்தது, பெண்களே இவர்களை அழைத்து அங்கு ஒட்டுபா இங்கு ஒட்டுபா என உரிமையோடு கேட்டுக்கொண்டனர். CPI கட்சியை சார்ந்த ஆதவன் எங்களால் முடிய வில்லை நீங்கள் செய்தால் சந்தோஷம் தான் என்றார்

இரண்டு வாரம் கடந்த பின்னர் இதே பகுதிக்கு சென்று பார்த்ததில் நாம் ஒட்டிய சுவரொட்டிகள் எதுவும் கிழிக்கப்படவில்லை. இந்த ஊரில் இவ்வளவு நாட்களாக ஒரு போஸ்ட்டர் கிழிக்காமல் இருக்கிறது என்றால் அது உங்கள் போஸ்டர்தான் என மகிழ்ச்சியோடு கூறினர். தொடர்பு எண் கொடுத்த அப்பகுதி இளைஞர்களை சந்தித்து நாங்கள் ஒட்டிய சுவரொட்டி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, வாசகம் எதுவும் சரியில்லை, படித்தால் வீரம் பீய்ச்சி அடிக்கவேண்டாமா, மொக்கையாக இருக்கிறது என்றும், நாங்கள் கொடுக்கும் வாசகத்தைப் போட்டுப் பாருங்கள் என அவர்கள் பேசியது தோழர்களையே சற்று திணர வைப்பதாக இருந்தது.

அரசு இந்த கிராமத்தை சுமார் 70 கிராமங்களுக்கு ஊத்திக்கொடுக்கும் மதுக்குடமாக வைத்துள்ளது. ஆதலால் மொத்த மக்களையும் திரட்டி டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் முன்வந்தால் மொத்த மக்களையும் ஒன்று திரட்டி உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதுமட்டும் அல்லாமல் இந்த மதுக்கடையை மூடிய பின்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டுப் போகிறோம் என்று தோழர் சத்தியகுமார் தலைமையில் சென்ற தோழர்கள் பேசியதைக் கேட்டதும், அவர்கள் நாங்கள் பாமக-வில் உள்ளோம், மனுகொடுத்தும் மூடவில்லை, வழக்குபோட்டும் மூட முடிய வில்லை, நாங்கள் படித்துள்ளோம் எங்களுக்கு சென்னையில் வேலை உள்ளது, எங்கள் மீது வழக்கு வந்தால் என்ன செய்வது என்று கூறி வீர முழக்கம் தருகிறோம் என்றவர்கள் ஒவ்வொருவராக அம்மா கூப்பிடுறாங்க அப்பா கூப்பிடுறாங்க என்று கூறி இடத்தைக் காலிசெய்து கொண்டனர்.

மாதிரி படம் : மக்கள் அதிகாரம்

பிறகு அடுத்த கட்டமாக சத்தியகுமார் தலைமையில் அன்குசெட்டிப்பாளையம் மாணவர்கள் தோழர் ஆகாஷ், தோழர் செந்தமிழ், தோழர் கலைமணி, தோழர் ஹரி, தோழர் தரணி, தோழர் விஜயராஜ் இவர்கள் குழுவாக சென்று

மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே
மூடுகடையை எவன் வருவான் பார்ப்போம்
நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது, அடிச்சி தூக்கு!! – என்ற முழக்கத்தின் அடிப்படையில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அப்போது மாணவர்களாகிய நாங்கள் எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக்கை அடித்து விரட்டிவிட்டோம், நீங்களும் வாருங்கள் மாணவர்கள் நாங்கள் இருக்கிறோம் எங்களின் தலைமையில் திரளுங்கள் யாராலும் மூடமுடியாத கடையை நாங்கள் மூடுகிறோம். எங்களைப்போன்ற மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் என வீச்சாக கடுமையான வெய்யலிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ஏராளமானவர்கள் மாணவர்களாகிய நீங்கள்  வந்துவிட்டீர்கள் கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று மக்கள் உற்சாகமாக கூறினர். சிலர் போராட்டத் தேதியே இல்லாமல் உள்ளது, என்று போராட்டம் என்று ஆர்வமாக கேட்டனர். ஒருபெண் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து உங்களைப் பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது என பெருமிதமாக கூறினார்.

கடந்த 21 05 2017 அன்று மாலை சுமார் 500 பேர், மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர். அப்போது அங்குவந்த தாசில்தார் 15 நாட்களுக்குள் மூடிவிடுவதாக கூறினார், அதற்கு மக்கள் மூடுவது என முடிவு செய்த பிறகு அதை இப்போதே மூடுங்கள் என உறுதியாக நின்றனர். மக்களின் உறுதியையும் தமிழகத்தின் நிலையையும் கண்டுகொண்டிருக்கும் அரசு அப்போதே டாஸ்மாக் கடையை மூடுவதாய் மனமில்லாமல் அறிவித்து மூடியது.

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர்

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

0

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 1

“இங்கே தண்ணீ கிடைக்காத நிலைமை இல்லீங்க.. ஆனா, கிடைக்கிற தண்ணீர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர்ல வருதுங்க.. குடிக்கிற நல்ல தண்ணி தான் அப்படி வருது..”

என அங்கலாய்த்தார் திருப்பூர் ராதா நகரைச் சேர்ந்த லட்சுமி. ஊடகங்களாலும், ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களின் வாயில் புரள்வதாலும் “வரலாறு காணாத வறட்சி” என்கிற வார்த்தைகள் தேய்வழக்காகிப் போன நிலையில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் படும் பாடுகளை நேரில் கண்டுணர்ந்து மக்களுக்கு அறியத்தரும் நோக்கில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் கள ஆய்வுகள் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக வினவின் செய்தியாளர் குழு திருப்பூரில் களமிறங்கியது.

“இப்போவெல்லாம் குடி தண்ணீர் காசு கொடுத்து வாங்கறாங்களே?” என்றோம்.

“காசு குடுத்து வாங்கலாம்… அதுக்கு முதல்லே காசு வேணுமே சார்? வாங்குற 200 ரூவா கூலிக்கு தண்ணீருக்கு செலவழிக்க முடியுமா? வீட்ல நாங்க நாலு பேரு இருக்கோம்.. வாரத்துக்கு ஆறு கேன் தண்ணீ ஆவும்.. ஒரு கேன் இப்ப 40 ரூபா வரைக்கும் விக்கிறாங்க. மாசத்துக்கு ஆயிரம் ரூபா குடி தண்ணிக்கு மட்டும் செலவழிச்சிட்டா சாப்பாட்டுக்கும் மத்ததற்கும் எங்கே போவோம்?” என்கிறார் லட்சுமி.

கணவருடன் லட்சுமியும் வேலைக்குச் செல்கிறார். கணவருக்கு நானூறு ரூபாயும், லட்சுமிக்கு இருநூறு ரூபாயும் கூலி. இரண்டு பிள்ளைகள். கணவரின் சம்பளத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம் அரசுக்கே சென்றடைந்து விடுவதால், லட்சுமியின் சம்பளத்தை நம்பியே குடும்பம் நடக்கிறது.

“தண்ணீர் பஞ்சம்” எனச் சொல்லப்பட்டாலும், அது வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த மக்களை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது. தொழிலாளர்களிலேயே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், குடும்பத்தோடு தங்கியிருப்பவர்கள், திருமணமாகாமல் நண்பர்களோடு சேர்ந்து தங்குகிறவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் சில குறிப்பான மற்றும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன.

கூலித் தொழிலாளிகள் காசு கொடுத்து நல்ல தண்ணீரை வாங்கும் சக்தியற்ற நிலையில் குழாயில் விசமே வழிந்தாலும், அதைத் தண்ணீராய் பாவித்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சுகாதாரமற்ற நீரால் ஏற்படும் நோய்களை சந்திக்கும் நிலையிலும் அதைத் தங்களது தலைவிதியாய் நினைத்துக் கடந்து செல்கின்றனர்.

“பாருங்க சார், எல் & டி தண்ணீல துணி தோய்ச்சி கையெல்லாம் செரங்கு” என்றார் லட்சுமி. லட்சுமிக்கு அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர்,  “அந்த கெரகம் புடிச்ச தண்ணீல குளிச்சி உடம்பு முழுக்க ஒரே அரிப்புங்க” என்கிறார்.

சிதிலமடைந்து போயுள்ள கங்கா நகர் நீரேற்று நிலையம்

ராதா நகரைச் சேர்ந்த அக்கம்மாளுக்குச் சொந்த வீடு உள்ளது. ஐந்து செண்ட் இடத்தில் ஒரு படுக்கையறையுடன் கட்டப்பட்ட மூன்று வீடுகள் உள்ளன – அதில் ஒன்றில் அவரது குடும்பம் தங்கியிருக்க, மற்ற இரண்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

“நாங்க ரெண்டு பைப் கனெக்சன் வாங்கியிருக்கோம்.. பத்து நாளுக்கு ஒரு வாட்டி குடி தண்ணியும் தினசரி உப்புத் தண்ணியும் விடறாங்க. ஆனா, நாங்க புழங்குறதுக்கும், குடிக்கிறதுக்கும் காசு குடுத்து தான் தண்ணி வாங்கிக்கறோம்” என்றார்.

“புழங்குவதற்கு” என்றால், பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சமையல் செய்ய என்று பொருள். இதற்கு லாரித் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றனர். ஒரு லோடு தண்ணீர் 850 ரூபாய். தவிர குடிப்பதற்கு கேன் தண்ணீர் – அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தனியே செலவாகும். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் எனப்படும் பவானி-கூடுதுறை குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு பெற்றுள்ளார் ராதாம்மாள். இத்திட்டத்தின் குடிநீர் வழங்கல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், இதற்கென வருடம் 3000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வருடம் சுமார் முப்பதாயிரம் வரை தண்ணீருக்கே செலவழித்தாக வேண்டும். இந்த வாய்ப்புகள் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பதில்லை.

“சாணிப் பவுடரு கலந்த மாதிரி தண்ணீர் வரும். அதுல தான் சமைச்சாகனும். வேற வழி? நல்ல தண்ணியை காசு குடுத்து வாங்கனும்னு ஆசை தான்.. ஆனா முடியனுமே? என்கிறார் லட்சுமி.

மூன்றாம் கூட்டுக் குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், அந்த திட்டத்திற்கான வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செயல்படுத்தியது எல் & டி என்பதால் மக்கள் பொதுவாக எல் & டி தண்ணீர் என்றே அழைக்கின்றனர். பொதுவாக குடிநீரில் உள்ள பி.பி.எம் (Parts per million) அளவு 50ல் இருந்து 100 வரை இருக்கலாம். பி.பி.எம்மின் அளவு 500க்கும் அதிகமாக இருந்தால் பயன்படுத்தக்கூடாது என்கிறது அமெரிக்க சூழல் பாதுகாப்பு மையம். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூரில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் பி.பி.எம் அளவு 700ல் இருந்து 800 வரை இருக்கின்றது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வரும் மருத்துவர் இளங்கோவைச் சந்தித்தோம். தோல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவரான இளங்கோவிடம் தண்ணீர் தொடர்பாக வரும் நோய்கள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

தோல் நோய் நிபுணர் மருத்துவர் இளங்கோ

“திருப்பூரில் உள்ள தண்ணீரின் காரணமாக சொரியாசிஸ் நோய் அதிகமாக உள்ளது எனச் சொல்லப்படுகிறதே?” என்றோம்.

“அது தவறான தகவல் சார். சொரியாசிஸ் நோய்க்கு மரபணு சார்ந்த மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுக் தான் காரணம். ஆனால், கெட்ட நீரால் ஏற்படும் பிற நோய்கள் அதிகமாக இருப்பது உண்மை தான்”

“அப்படியென்றால், திருப்பூரில் சொரியாசிஸ் நோயாளிகள் அதிகம் என்று சொல்லப்படுவது பொய்யா?” என்றோம்.

“சொரியாசிஸ் இங்கே அதிகம் தான். ஏன்னா இங்கே மக்கள் அடர்த்தி அதிகம். அதே மாதிரி வேலை தொடர்பான அழுத்தங்களும் அதிகம். மற்றபடி தண்ணீரால் சொரியாசிஸ் அதிகரிப்பது என்பது மருத்துவ ரீதியாக சரியான தகவல் அல்ல” என்றார்.

“மக்களிடம் பேசியபோது தண்ணீரால் அரிப்பு சிரங்கு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?”

“அது கடின நீரைப் பயன்படுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமை. இர்ரிட்டண்ட் டெர்மடிடஸ் என்பார்கள். இந்நோய் சாய பட்டரைகளில் வேலை செய்கிறவர்களுக்கும் ஏற்படும்.  சொரியாசிஸைப் போல் இது நிரந்தரமானதல்ல. இந்த சூழலில் இருந்து நல்ல தண்ணீர் கிடைக்கும் பகுதிகளுக்கு மாறிச் சென்றால் பிரச்சினை தீர்ந்து விடும்”

“நல்ல சூழலுக்குச் செல்வதென்றால், திருப்பூரை விட்டே வெளியேறியாக வேண்டுமே. அவர்களது ஊரில் பிழைக்க வழியின்றி தானே இங்கே வந்துள்ளனர்?”

“நோயில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அப்படித் தான் செய்ய வேண்டும். ஆனால், வெளியே பிழைக்க வழியில்லை என்றால் நோயோடு திருப்பூரில் காலம் தள்ளுவதைத் தவிற வேறு வழியில்லை”

“தண்ணீர் பயன்பாடு, அல்லது திருப்பூருக்கென்றே பிரத்யேகமாக உள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது உள்ளதா?”

“ஸ்கேபிஸ் (Scabies) நோயை அப்படிச் சொல்லலாம். இது பெரும்பாலும் அடைந்து வாழ்வதாலும், சுகாதாரமற்று இருப்பதாலும் வரும் நோய். இது திரூப்பூரில் அதிக அளவில் உள்ளது”

“சுகாதாரமற்று என்றால்?”

“தினசரி குளிக்காமல், துவைக்காத ஆடைகள் அணிவதாலும் இந்த நோய் வரும்”

விரல் இடுக்குகளிலும், புறங்கையிலும் சிரங்காக பரவும் இந்நோயின் தாக்கம் திருப்பூரில் மிக அதிகமாக இருப்பதற்கான காரணத்தை மருத்துவர் விளக்கினார். வெளியூர்களில் இருந்து – குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து – திருமணமாகாத இளைஞர்கள் பலர் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கீழ்மட்ட கூலி வேலைகளுக்கு வருகின்றனர். பத்துக்குப் பத்து அளவுள்ள அறைகளில் ஐந்தாறு பேர்களாக அடைந்து வசிக்கின்றனர். வாரத்துக்கு ஒருமுறை குளியல், துவைக்காத துணிகளைகளே நாள் கணக்கில் போட்டுக் கொள்வது என்பதாக இவர்களது சூழல் உள்ளது.

நாங்கள் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து திருப்பூரில் தொழிலாளியாக உள்ள ஜெகத்திடம் பேசினோம்.

ஜெகத்

“கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதை விட வேறு வழியில்லை. இந்த அறையில் நாங்கள் இரண்டு பேர் வசிக்கிறோம்.. மாதம் 1600 ரூபாய் வாடகை. வசதியாக இருக்க வேண்டுமென்றால் ஐயாயிரத்துக்கு மேல் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும்.. அப்படியென்றால் ஊருக்கு பணம் அனுப்ப முடியாதே?” என்றார்.

“சேர்ந்து வாழ்வதைத் தவிற வேறு வழியில்லை என்றால், குளிப்பதற்கும் துவைத்த துணிகளை அணிவதற்கும் என்ன பிரச்சினை” என்றோம். அவர் எங்களை தாங்கள் தங்கியிருக்கும் அறையினுள் அனுமதித்தார்.

எங்கள் கேள்விக்கான பதிலை அவர் சொல்லாமலே நாங்கள் புரிந்து கொண்டோம். திருப்பூரில் நல்ல தண்ணீரைச் சேகரித்து வைப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டும். அஸ்பெஸ்டாஸ் கூரை இடப்பட்ட அந்த பத்துக்குப் பத்து அறையில் ஐந்தாறு குடங்கள் வைப்பதற்கே போதுமான இடம் இருந்தது. மேலும், உள்ளூர் தொழிலாளிகளே ஒரு சிப்டுக்கு 12 மணி நேரங்கள் வேலை செய்யும் நிலையில், வடமாநில தொழிலாளர்களுக்கோ நேர வரையறை ஏதும் இருப்பதில்லை – இவர்கள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். எவ்வளது நேரம் வேலை செய்கிறார்களோ அவ்வளவு கூலி – இவர்களது உழைப்புக்கு வழங்கப்படும் குறைந்த கூலியை அதிக நேரம் வேலை செய்வதன் மூலம் ஈடுகட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். எனவே, நல்ல தண்ணீரைத் தேடியலைந்து சேகரிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை.

அருணாச்சல பிரதேசத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்வது எப்படி இருக்கிறது என்று ஜெகத்திடம் கேட்டோம்.

“அங்க காசு கிடையாது. ஆனா அது சொர்க்கம். இங்க காசு கிடைக்கிறது. ஆனா இது நரகம்” என்றார். திருப்பூர் குறித்த சித்திரத்திற்கு இக்கவிதையே போதுமானது.

ஜெகத் குடியிருக்கும் வீட்டின் உள்தோற்றம்

தண்ணீர் விடப்படும் நேரம் இன்னொரு பிரச்சினை. சில பகுதிகளில் வாரம் ஒருமுறையும், வேறு சில பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும் நல்ல தண்ணீர் விடப்படுகின்றது. அதுவும், ஒரு மணி நேரம் தான் வரும். அந்த ஒரு மணி நேரம் எப்போது என்பது யாருக்கும் தெரியாது.

“திடீர்னு தண்ணி விடுவாங்க. நாள் பொழுதெல்லாம் கிடையாதுங்க.. ராத்திரி கூட வரும். தண்ணி விட்டு ஒரு வாரம் ஆச்சின்னா வீட்டுக்கு ஒருத்தர் குழாய் மேல ஒரு கண்ணு வச்சிகிட்டே இருப்போம். காலைல மூணு மணிக்கு கூட வரும். முழிச்சிருந்தா கிடைக்கும் இல்லேன்னா இல்ல” என்கிறார் கங்கா நகரைச் சேர்ந்த சுமதி.

தொழிலாளர்களின் வரிசை வீடுகள்

தண்ணீரைச் சேமித்து வைப்பதில் வேறு சிக்கல்கள் உள்ளன. பொதுவாக திருப்பூரில் தொழிலாளிகள் லைன் வீடுகளில் வசிக்கின்றனர். ஒரு காம்பவுண்டில் சுமார் நான்கு அல்லது ஐந்து குடித்தன வீடுகள் இருக்கும் – இத்தனை வீடுகளுக்கும் சேர்த்து இரண்டு குடிநீர்க் குழாய்கள் இருக்கும். ஒரு மணிநேரமே தண்ணீர் வருவதால், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் பதினைந்திலிருந்து இருபது குடம் தண்ணீர் வரை கிடைக்கும். இந்த தண்ணீரை சிறு சிறு குடங்களில் சேமிப்பதென்றால், வீட்டில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் – எனவே பல வீடுகளில் பிளாஸ்டிக் டிரம்களை வாங்கி வைத்துள்ளனர்.

பிளாஸ்டிக் டிரம்களில் சேமிக்கப்படும் நீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புழு பிடித்துக் கொள்ளும். எனவே மூன்று நாட்களுக்குப் பின் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டும் – அல்லது, துவைக்க வேண்டிய அழுக்குத் துணிகளை அடுத்த நான்கு நாட்களுக்கு எங்காவது குவித்து வைக்க வேண்டும். நாங்கள் பேசிய பலரும், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரு பாரிய பிரச்சினையாக கருதாமலே பேசினர். சம்பாத்தியத்தில் கணிசமான பகுதியை தண்ணீர் வாங்க செலவழிப்பதை முன்னிட்டு எவருக்கும் ஆத்திரமோ கோபமோ ஏற்படவில்லை என்பது எங்களுக்கு வியப்பளித்தது. ஆனால், இதற்கான காரணத்தை விளக்கினார் முன்னாள் சி.பி.ஐ பிரமுகரும், பஞ்சாயத்து தலைவராக இருந்தவருமான தோழர் மோகன்.

“மக்களை இதுக்கு மெல்ல மெல்ல பழக்கப் படுத்தினாங்க தோழர். மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தும் வரை தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை இங்கே இல்லாமல் தான் இருந்தது. கேன் தண்ணீர் என்பதெல்லாம் மிக அபூர்வம்” எனக் குறிப்பிட்ட தோழர் மோகன் தற்போது சி.பி.ஐ கட்சியிலிருந்து விலகி மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்துள்ளார்.

தோழர் மோகன்

திருப்பூர் பிழைக்க வருகின்றவர்களின் ஊராக இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் சொந்த இடம் வைத்துள்ளனர் – அதில் வீடோ கடையோ கட்டி வாடகைக்கும் விடுகின்றனர். பார்க்கும் வேலையில் குறைந்தபட்ச சம்பளம் கிடைத்தாலும், வாடகை வருமானம் அதை ஓரளவுக்கு ஈடுகட்டி விடுவதால் மண்ணின் மைந்தர்களுக்கு தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவது பொருளாதார ரீதியில் பெரியளவுக்கு நெருக்கடி அளிப்பதில்லை. வெளியூரில் இருந்து வந்தவர்களோ – அதிலும் குறிப்பாக வாடகை வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளிகள் – பிழைக்க வந்த ஊரில் போராட்டம், வம்பு தும்பு என இறங்குவதை விட தண்ணீருக்கு செலவழிக்கும் தொகையை ஈடுகட்ட அதிக நேரம் உழைப்பது, குடும்பத்தில் எல்லோரும் உழைப்பது என்கிற ரீதியிலேயே சிந்திக்கின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாவது தண்ணீர் பிரச்சினைக்காக எப்போதாவது போராடினாலும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்களோ நிலைமையை அப்படியே சகித்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல நல்ல குடிநீர் என்றாலே காசு கொடுத்து தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிலைமையை நிலை நாட்டியுள்ளது அரசு. காசுக்கேற்ற தோசையாக குடிநீரையும் சந்தையின் பண்டமாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது அரசு.

நாங்கள் சந்தித்த மக்களில் பெரும்பாலனவர்கள் காசு கொடுக்கவும் தயார், ஆனால் நல்ல குடிநீர் கிடைத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் திருப்பூரின் குடிநீர் வழங்கலை தனியாருக்குத் தாரை வார்க்கத் தயாராகி வருகின்றது அரசு. முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பது, திருப்பூரின் அனைத்துப் பகுதிகளையும் மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மொத்தமாக தனியார் முதலாளிகளின் கையில் கொடுத்து விடுவது என்பதை நோக்கி அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்த நிலையை பின்னலாடை நிறுவனங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன? திருப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்கள் உண்மையில் மக்களுக்குப் பலனளித்ததா? திருப்பூரின் நீராதாரங்கள் திட்டமிட்டு பாழாக்கப்பட்ட வரலாறு என்ன?

( தொடரும் )

– வினவு செய்தியாளர்கள்

வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !

1

ற்ற மாவட்டங்களை விட தஞ்சையின் பசுமைக்கு தனி அழகுண்டு. அடர்ந்த மரங்கள் கிடையாது. மலை குன்றுகள் கிடையாது. பரந்த வெளியில் பயிர்களும் அதன் மேல் கடல் அலை போல வருடும் காற்றும் தனியொரு கவர்ச்சிதான். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையின் காட்சியை விவரித்தும் வர்ணித்தும் எழுத வேண்டிய அந்த் மண் இன்று வறண்ட கற்பாறை போல கண்ணை உறுத்துகிறது. தஞ்சையின் கடந்த கால  பசுமையை நினைத்துப் பார்க்கும் நேரத்தில் தமிழகத்திற்கு இனி எந்த நெற்களஞ்சியம் சோறு போடும் என்ற பயமும் வருகிறது.

மே தினத்தன்று விவசாயத் தொழிலாளர்களை சந்திக்க வெகு தூரம் அலைந்தோம். ஆழ் குழாய் பாசனம் வைத்துள்ள வெகு சிலரே விவசாயம் செய்திருந்தனர். அங்கு மட்டுமே சிலரை சந்திக்க முடிந்தது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் பாசனத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதி பயிரைத்தான் காப்பாற்றி உள்ளனர். கண்ணுக்கு எதிரே குழந்தை நோய்வாய்பட்டு இறக்கும் போது காப்பாற்ற முடியாத கையறு நிலையை போன்றதுதான் பாதியிலே பயிர் வாடும் காட்சியும். அதை ஒரு விவசாயி போல நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தட்டுப்படும் சில விவசாயத் தொழிலாளிகளிடம் அரசியல் தவிர்த்து அன்றாட வேலைகளைப் பற்றிதான் கேட்டோம். ஆனால் அவர்களோ எதை ஆரம்பித்தாலும் அரசியல் ரீதியிலேயே பேசினார்கள். பார்க்கும் வேலைக்கும் பாராளுமன்றத்துக்கும் முடிச்சுப் போட்டு பேசுவதை பார்த்து வியப்பதா? விழிப்புணர்வு என்பதா? சற்று கவனித்தால் தம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு விதியையும் கடவுளையும் கைக்காட்டும் மக்கள் இப்போது அடிப்படையானகாரணத்தை தேட தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. மெரினாவிற்கு பிறகு தமிழகத்த்தில் தோன்றியுள்ள மாற்றமிது.

எள்ளு செடி எடுக்கும் விவசாயத் தொழிலாளிகள், சேதுராயன் குடிகாடு.

“எங்கள ஆத்துதண்ணியும் ஏமாத்திட்டு மழத்தண்ணியும் ஏமாத்திட்டு. எங்குட்டு திரும்புனாலும் வேல இல்ல. ஐநூறுவா கூலி வாங்குனா அடுத்த நிமுசம் போன எடந்தெரியல. என்னத்த சொல்ல எங்கப் பொழப்பப்பத்தி.”

ஏனுங்கக்கா அம்புட்டு செலவு செஞ்சு அப்படி என்ன ஆடம்பரமான வாழ்க்கை வாழ்றீங்க?

“ஏஞ்சொல்ல மாட்டிங்க. ஒங்களுக்கு மாசம் பொறந்தா 1 தேதி சம்பளம் வந்துரும். ஆத்துல தண்ணி வந்தா ஒங்களுக்கென்ன வரலண்ணா ஒங்களுக்கென்ன. பின்ன என்னங்க! ஒரு ஆளு கூலி மிச்சமாகாதான்னு வயக்காரவங்களும் எங்கக்கூட வேல செய்ராங்க. நீங்க சொல்றாப் போல வெவசாயத்துல மட்டும் லாபம் பாத்து பெருங்குடியா ஆக முடியாது.

இந்த வருசம் ஆத்துல தண்ணி வராம வேலையே இல்ல. வெவசாய வேல இல்லாங்காட்டி நூறு நாள் வேலைக்கி போறோம். வெறும் 60 ரூவாதேன் சம்பளம் தாராக. ஏன்னு கேட்டா வேல இல்லேங்குறாக. அதையும் விட்டுபுட்டு எங்குட்டு போறது நாங்க. வாய மூடிக்கிட்டு வேல செய்றோம். அதுலயும் 240 ரூவா இன்சூரன்சு கட்ட செல்றாக. ஏதாவது அடிபட்டு கெடந்தா தருவாகளாம். வாழும்போது இல்லாத பணம் செத்தப்பொறவு எதுக்கு?

நூறு நாள் வேலைக்கான கூலியெ பேங்குல போயித்தேன் எடுக்கனும். அதுலயும் மோடி ஒரு ஆப்பு வச்சுட்டாரு. அக்கவுண்டுல 500 கொறையாம இருக்கனுமாம். ஒரு நாளைக்கி 60 ரூபா கூலி வாங்கி பேங்குல எப்படிங்க இருப்புப்பணம் வைக்க முடியும். எல்லாரும் பேங்குல அக்கவுண்டு பன்னுங்க லட்ச கணக்குல பணம் போடப்போறேன்னாரு மோடி. இன்னைக்கி கணக்குல இருக்குற ஐநூறையும் எடுக்க முடியல. நாங்க பாக்குற வேலைக்கி பேங்கு எதுக்குங்க?

நாங்க என்ன படிச்சுட்டா உத்தியோத்துக்கு வர்ரோம். யாருக்கு என்ன திட்டம் போட்றதுன்னு தெரிய வேணாம். இப்ப பாருங்க ரேசன் அட்ட, ஆதாரு அட்ட, பேங்கு அட்ட, குழு லோனுக்காக பேனு அட்ட (பேன் கார்டு) எந்த அட்ட எதுக்கு உண்டானதுன்னு ஒரு மண்ணும் தெரியமாட்டேங்குது. வாழ வழி காட்டுய்யான்னா பேல வழி காட்டுறாரு மோடி.

களையெடுக்கும் விவசாயத் தொழிலாளிகள்,  தென்னமநாடு.

ன்னைக்கி தொழிலாளர் தினம் அதுக்காக உக்கள்ள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம், யாராவது பேசுங்கக்கா.

“தொழிலாளர் தெனமா எனக்கு தெரியும்” என்றார் ஒருவர்.

“ஏன்டி நெதமும் எங்க கூடதான் வயக்காட்டுக்கு வர்ரவ நீ எப்படி காலேசல்லாம் போயி படிச்ச?” என்றார் மற்றவர். “டிவியில புதுப் படம் போட்றாக தொழிலாளி தெனமுன்னு சொன்னத வச்சுத்தேன் சொன்னே”
“தொழிலாளர் தெனமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எங்கள படம் புடிச்சு மோடிக்கி அனுப்பி வையிங்க. எத்தன செரமப்பட்டு விவசாயம் செய்றமுன்னு தெரிஞ்சுக்கட்டும்.

“இவ ஒருத்தி. மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கண்ணு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பண்ணிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப் போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காராரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.” மற்றவர்களும் சிரித்தபடி ஆமோதித்தனர்.

கதிரு வந்த வயல்ல என்ன வேலை செய்றீங்க?

நெல்லு வயலுல புல்லு அருக்குறோம். நெல்லுக்கு சமமா புல்லும் வெளஞ்சுருக்கு. நெல்லுக்கு மேல தெரியுது பாருங்க இந்த குதுரவாலி புல்லு இத அப்புடியே வச்சு கருதறுத்தா எந்த யாவாரியும் வாங்கவே மாட்டாங்க. சோத்துக்கே ஒதவாத நெல்லு நாத்துக்கு ஒதவுமா.? ஒரு நெல்லு போட்டா பத்து புல்லு மொளைக்கும். இது அத்தனையும் அரசாங்கத்து ஆபீஸ்சுல வாங்குன வெதைங்க. எங்க அனுபவத்துல இதுபோல வேல பாத்த்தே கெடையாது. வயக்காரவுக கணக்குப் பாத்தா நட்டந்தே. அதுக்காக வெளஞ்சத விட்டுற முடியுமா?

உங்க வேலையில லீவெலாம் உண்டாக்கா?

“நீங்க எந்த ஊருலேருந்து வர்ரீங்க. வெவசாயிக்கு ஏதுங்க லீவு. நாங்க லீவு போட்டா நீங்கள்ளாம் எப்புடி சாப்புடுவிங்க. நாங்க வருசம் பூறா வேல செஞ்சாத்தான் உங்களப்போல பேனா தூக்குற ஆளுகளுக்கு சோறு. வேலை இல்லாத நாளு எங்களுக்கு லீவு. லீவுன்னா ஊர சுத்த கெளம்பிருவோன்னு நெனச்சுராதீக. வீட்டு மராமத்து வேலையே சரியாருக்கும்.

வயசான பாட்டி வேல செய்றாங்களே புல்லு எது நெல்லு எதுன்னு கண்ணுக்கு தெரியுமா?

“எங்க வேலைக்கெல்லாம் ரிட்டேர்மெண்டு கெடையாது கண்ணு. எங்கள போட்டா புடிக்க நீங்க வயல்ல எறங்க சொல்ல எத்தன மொற தடுமாறினிங்க. நீங்க சொன்ன பாட்டி இத்தன வயசாகுதே சேத்துல கால விட்டுவிட்டு புடுங்குதே எங்காச்சும் விழுந்துச்சா பாத்திங்களா. அந்தாத்தா பூச்சி மருந்து கலக்காத அந்த காலத்து கேப்ப களி தின்னு வளந்த வைரம் பாஞ்ச ஒடம்பு.

சோமு, உளுந்து செடி காயவைக்கும் விவசாயி, ஊர் பருத்திக்கோட்டை.

“எந்த விவசாயும் நிம்மதியா இல்லன்னு இந்த நாளுல பதிவு பண்ணிக்கங்க. மூனு ஏக்கரு நடவு நட்டேன், ஒரு புடி நெல்லு அறுக்கல. அத்தனையும் காஞ்சுப் போச்சு. சரி போனது போச்சுன்னு மனச தேத்திக்கிட்டு உழுது உளுந்து வெதச்சேன். 1 யூனிட்டு ஒழவு ஓட்ட டிராக்டருக்கு 100 ரூபா. 12 யூனிட்டு ஓடுச்சு. ஒரம் போட்டது பூச்சி மருந்து அடிச்சது 4000 ரூபா. அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்த உளுந்து பயிர புடுங்க 15 ஆளு. ஒரு ஆளுக்கு 75 ரூபா கூலி.

கணக்குப் போட்டு பாருங்க 6500 ரூபா ஆச்சா. ஈரம் இல்லாததால களையெடுக்கல இல்லாங்காட்டி அது ஒரு செலவு வந்துருக்கும். வெத உளுந்து வீட்டுலேயே இருந்தது. எனக்கு கூலின்னு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சா இந்த கணக்க நோட்டிசு அடிச்சு தெரிஞ்சவங்களுக்கு வினியோகம் பன்னுங்க. விவசாயிங்க நெலமைய ஊரெல்லாம் தெரிஞ்சுக்கட்டும்.

விவசாயி அருவண்டு, ஒரத்தநாடு

“உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கு. ஊரே வறண்டு கெடக்கு எந்த தைரியத்துல தொழிலாளர் தினத்துக்கு விவசாயிகள வயல்லையே சந்திக்க வந்திங்கன்னு தெரியல.

அக்கம் பக்கம் எல்லா நெலமும் காஞ்சு கெடக்கு உங்க நெலம் மட்டும் பசுமையா இருக்கே எப்படி?

உயிர குடுத்து பாடுபடுறேன். எனக்கு எட்டு ஏக்கர் நெலம் இருக்கு. ஆனா நாலு ஏக்கர் நெத்துல மட்டுந்தான் வெவசாயம் பன்னிருக்கேன். அதுக்கும் தண்ணி பத்தல. மனுசனுக்கு தொண்ட காயாம உயிர் தண்ணி விடுவாங்க அதுபோல பயிரு காஞ்சு சுருண்டு வரும் போது தண்ணி விட்டு உயிரு உண்டாக்குறேன். நடுராத்திரி ஒரு மணிக்கி திரிஃபேஸ் கரண்டு வந்தாலும் அலுத்துக்காம வந்து தண்ணி பாச்சுவேன். இத விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது.

லீவு பொழுது போக்கல்லாம் உங்க வாழ்க்கையில உண்டா? எங்கெல்லாம் போவீங்க.?

நேரம் கெடச்சா சம்சாரத்த கூட்டிட்டு மாமியாரு வீட்டுக்கு போவேன் அவ்வளவுதான். சொந்தமா உழவு டிராக்டர் வச்சுருக்கேன். என்னோட நெலத்துக்கு ஓட்டுன நேரம் போக கூலிக்கி ஓட்ட போவேன். இளையராஜாவோட பழய பாட்ட போட்டுட்டு ஆனந்தமா ஏறு ஓட்டுவேன். அதுதான் எனக்கு புடிச்ச பொழுது போக்கு.

விவசாய தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த கூலி தொகை எவ்வளவுன்னு தெரியுமா?

அதெல்லாம் நமக்கு தெரியாதுங்க. நம்ம பக்கம் குடுக்குற கூலி நாள் பூறா வேல செஞ்சா ஆம்பளைக்கு 500 பெம்பளைக்கு 300. அரசு இதுபோல சட்ட நடவடிக்கையை நமக்காகவா போடுது நிர்வாக நடைமுறையை சட்டப்பூர்வமா காட்டுரதுக்குத்தானே போடுது. அது நமக்கு ஒதவாதுங்க.

முரளி, டிராக்டர் டிரைவர், ஊர் கண்ணந்தங்குடி.

“தொழிலாளர் தினம் தெரியும் அன்னைக்கிதான் தல அஜித்துக்கு பொறந்த நாள். அம்புட்டுதான் தெரியும்.

“எனக்கு ஒரு நாள் கூலி 500 ரூபா. வேலைக்கி வந்தா பேட்டா காசு 100 தருவாங்க. பொதுவா எல்லா நாளும் வேல இருக்கும். இந்த வருசம் சொல்ல முடியாத அளவு வெவசாயம் நெடிச்சுப் போச்சு. இந்த நெலம இப்படியே போச்சுன்னா விவசாயி மட்டும் தற்கொலை பண்ணிக்க மாட்டான். குடும்பத்தோட வெசத்த குடிச்சுட்டு போக வேண்டியதுதான்.

வீராயி, குத்தகை விவசாயி, ஊர் ஒரத்தநாடு.

“இன்னைக்கி தொழிலாளர் தினம் பாட்டி அதுக்கு உங்கள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம்.”

“அம்புட்டு வெவரமெல்லாம் எனக்கு தெரியாதுங்களே. எம்மொவ(ன்) இதுவரைக்கும் எள்ளுக்காய் அறுத்துப்புட்டு இப்பதானுங்க வீட்டுக்கு போனான். நானு இந்த மாட்ட மேயவிட்டு ஓட்டிட்டு போகலான்னு நிக்கே. செத்த முன்னாடி வந்துருந்தா அவன பாத்துருக்காம்.”

எங்களுக்கு சொந்த நெலமெல்லாம் இல்லைங்க. நாங்க தோப்பு ஆளுக. குத்தகைக்குத்தே வெவசாயம் பாக்குறோம். ஒரு ஏக்கர் நெலத்துக்கு 12 மூட்ட நெல்லு தரனும். இந்த வருசம் நட்ட பயிரெல்லாம் தண்ணி இல்லாமெ பட்டுப்போச்சு. ஆனாலும் குத்தக குடுத்துத்தேன் ஆகனுனுட்டாக. நாமெ அப்புடி இப்புடி பேசுனா நெலத்த புடுங்கிபுடுவாக. எம்பையனும் அடுத்த வெள்ளாமையில பாத்துக்கலாமின்னு நெனச்சு கடன ஒடன வாங்கி குத்தகய குடுத்தான். அடுத்து எள்ளு வெதச்சோம் அதுவும் சரியில்ல. ஒவ்வொரு காய வச்சுகிட்டு ஈக்குமாறு போல நின்னுச்சு. இன்னைக்கிதான் ஒத்த ஒத்தையா அறுத்து சேத்தோம். வெதச்ச கூலிக்கு கண்டாலே சந்தோசந்தேன்.

– நேர்காணல், புகைப்படங்கள்: வினவு செய்தியாளர்கள்

இந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !

1

மைய அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருந்துவரும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாகக் கொண்டுவருவது; தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய ஆதாரமான துறைகளில் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பது எனும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அவற்றை நாடாளுமன்றம் உள்ளிட்டு மைய அரசின் துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருக்கிறது, மோடி அரசு.

1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம், அடுத்த பதினைந்து ஆண்டுகளில் (1965-இல்) ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதை அகற்றிவிட்டு, இந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கப் பரிந்துரைத்தது. இந்த அடிப்படையில் அன்றிருந்த நேரு அரசாங்கம் இந்தியை மைய அரசின் ஒரே அலுவல் மொழியாக அறிவிக்க முயன்றதையடுத்துதான், தமிழகத்தில் மொழிப் போராட்டம் வெடித்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் நேரு அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தன. மொழிப் போரில் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் செய்த தியாகத்தின் விளைவாகத்தான், “இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றும்வரை, இந்தியோடு, ஆங்கிலமும் மைய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும்” என்ற திருத்தம் இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாள் தொடங்கியே அதனைச் சிறுகச்சிறுகக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை மைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே, மைய அரசின் அலுவல் மொழி தொடர்பான சட்டத்தின்கீழ் இந்தியை ஊக்குவிப்பதற்கான நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு, அக்குழு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அளித்து வருகிறது. இப்பொழுது அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் பரிந்துரைகள், அக்கமிட்டி அளித்திருக்கும் ஒன்பதாவது அறிக்கையாகும்.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தித் திணிப்பு.

இந்தியைத் திணிப்பதில் காங்கிரசு எட்டடி பாய்ந்தால், பா.ஜ.க. பதினாறு அடி பாயும். மேலும், இந்து மதவெறிக் கும்பலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்தியைத் திணிக்கும் கயமைத்தனங்களைப் பதவியேற்றவுடனே தொடங்கிவிட்டது மோடி அரசு. மைய அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மைய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் தயாரிக்கப்பட வேண்டும் என அடுத்தடுத்து உத்தரவுகளை இட்ட பா.ஜ.க. அரசு, மைய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இந்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கமிட்டிகளை அமைத்தது. தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைத் திணித்த மோடி அரசு, அதற்கு எதிரான எதிர்வினைகள் அடங்கும் முன்பே, நாடு தழுவிய அளவில் இந்தியை மென்மேலும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது தொடர்பான 110 பரிந்துரைகளை வெளியிட்டிருக்கிறது.

  • இந்தி மொழியைப் பாடத் திட்டங்களில் கட்டாயமாக்குவது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் முதல்கட்டமாக, மைய அரசு பாட வாரியத்தின்கீழ் இயங்கும் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகள் மற்றும் மைய அரசு நேரடியாக நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் பத்தாம் வகுப்பு முடிய இந்தி மொழி பயிலுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

  • அனைத்திந்திய அளவில் இந்தியைக் கட்டாய மொழிப்பாடம் ஆக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திட்டங்கள் வைக்கப்பட வேண்டும்.

  • மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடமாக்குவது தொடர்பாக மாநில அரசுகளோடு மைய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான செயல் திட்டத்தை வகுப்பதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • இந்தி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

  • மைய அரசு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில் ஐம்பது சதவீதம் இந்தி மொழியிலும் மீதமுள்ள 50 சதவீதம் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழிகளிலும் இருக்க வேண்டும்.

  • இந்தி மொழி விளம்பரங்களை செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும், ஆங்கில மொழி விளம்பரங்களை உட்பக்கங்களில் வெளியிட வேண்டும்.

  • குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் இந்தி மொழியைப் படிக்கவும், பேசவும் அறிந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் இந்தி மொழியில் மட்டுமே பேசவும், இந்தி மொழியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிடவும் வேண்டும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய மொழிப் போர். (கோப்புப் படம்)

இவை தவிர, மைய அரசின் ரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றில் இந்திப் பயன்படுத்தப்படுவதை அதிகரிப்பதற்குப் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த 117 பரிந்துரைகளுள் 110 பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார். மீதமுள்ள ஏழு பரிந்துரைகள் அவராலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவை எத்துணை கொடூர இந்தி ஆதிக்கச் சிந்தனையைக் கொண்டிருக்கும்?

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளுள் ஒன்று, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்தைச் சதித்தனமான முறையில் முன்வைக்கிறது. மற்றொன்று, நாடெங்கும் இந்தி வழி கல்விக்கூடங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பிராந்திய மொழிகளுக்கோ, இந்திக்கோ முன்னுரிமை அளிக்காத ஆங்கில வழி பள்ளிக்கூடங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்கிறது. வேறொன்று, இந்தி மொழியைப் பயன்படுத்தாக மைய அரசு ஊழியர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறது.

தமிழைப் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாகக் கொண்டுவர வேண்டும், அதற்கான அங்கீகாரம் தமிழுக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழகத்தில் கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் நடந்துவரும் நிலையில், அதனையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், தமிழை இரண்டாம், மூன்றாம் நிலைக்குத் தள்ளக்கூடிய இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது திணித்துவிட முயற்சிக்கிறது, மோடி அரசு. தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் தமிழ் மொழி ஏற்கெனவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கூடப் படிக்காமல் உயர் கல்வியை முடித்துவிடக் கூடிய அவலமான நிலை தமிழகத்தில் நிலவிவரும் நிலையில், மோடி அரசு அளித்துள்ள பரிந்துரைகள் எதிர்காலத்தில் தமிழுக்குப் பெருங்கேட்டினையே ஏற்படுத்தும்.

தமிழை, சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வு, முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு ரத்து, ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனை வரியை விதிக்கவும், வசூலிக்கவும் இதுகாறும் தமிழக அரசிற்கு இருந்துவந்த உரிமை பறிப்பு, ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வழங்குவதற்குக்கூட மைய அரசின் அனுமதி தேவை என்ற இழிநிலை – இப்படித் தமிழக அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுவரும் வேளையில், தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக, தமிழை இந்தி ஆதிக்கத்திற்கு அடிபணிந்து கிடக்கும் குற்றேவல் மொழியாக மாற்றும் தீய நோக்கத்தோடு இந்தி-இந்துவெறி பிடித்த மோடி அரசு இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

தமிழ், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தி பேசாத மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை, பெரும்பான்மையான மக்களை, அம்மக்களின் தாய்மொழிகளை இரண்டாம்தர நிலைக்குத் தள்ளும் அபாயகரமான சதித் திட்டம்தான் இப்பரிந்துரைகள். ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை என்ற இந்து மதவெறிக் கும்பலின் பேராசையின் நீட்சியாகத்தான் இந்தியை முதன்மைப்படுத்தும் இப்பரிந்துரைகள் கொண்டுவரப்படுகின்றன.

நாடு தழுவிய அளவில் இந்தியைத் திணிக்கும் இப்பரிந்துரைகள், தி.மு.க.வும் பங்கு பெற்றிருந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன. அதனைக் காரணமாகக் காட்டி, வேறு வழியில்லாமல்தான் இப்பரிந்துரைகளை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதாகக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது, இந்து மதவெறிக் கும்பல். இந்த வாதம் மிகப்பெரிய மோசடி, பார்ப்பனக் களவாணித்தனத்தின் வெளிப்பாடு.

காங்கிரசு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனத் தேர்தலுக்குத் தேர்தல் முழக்கமிடும் மோடி, முந்தைய காங்கிரசு அரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளைக் கைவிட மறுப்பதேன்? திட்டக் கமிசன் உள்ளிட்டு காங்கிரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, திட்டங்களைக் கைகழுவிவரும் மோடி அரசு, காங்கிரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளை, மன்மோகன் சிங் அரசுகூட நடைமுறைப்படுத்த்த் துணியாத இப்பரிந்துரைகளை நிறைவேற்றத் துடிப்பதேன்?

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் மக்களை கலை இலக்கியக் கழகமும் இணைந்து சென்னையில் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

காரணம், அனைவரும் அறிந்ததுதான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி போகாது என்பார்களே, அதுபோலத்தான் பா.ஜ.க.வும். மாநில உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் மோடி என அதன் சுயதம்பட்டமெல்லாம் மோசடியானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்து-இந்தி, ஆரிய பார்ப்பன மேலாதிக்கம், சமஸ்கிருத வெறி கொண்டதுதான் அக்கட்சி. ஆட்சியைப் பிடித்தவுடன், ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸ்வ்’’ என சமஸ்கிருத மொழியில் மாற்றியது ஒன்றே அக்கட்சியின் ஆரிய பார்ப்பன வெறியை அம்பலப்படுத்திவிட்டது.

பல்வேறு தேசிய இனங்கள், மதச் சிறுபான்மையினர், பல்வேறு மொழிகள், பண்பாடு எனப் பன்முகம் கொண்டிருக்கும் இந்திய நாட்டை, இந்து-இந்தி-இந்தியா என்ற அடிப்படையில் ஒற்றைத் தேசமாக வலுக்கட்டாயமாக மாற்றியமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் இலட்சியம். அந்த அடிப்படையில்தான், பசுவதைச் சட்டத்தை நாடெங்கும் கொண்டுவர வேண்டுமெனத் துடிக்கிறார்கள். சமஸ்கிருதமயமான இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, தேசிய மொழியாகவும் அறிவித்துவிட முயலுகிறார்கள். நாடெங்கும் ஒரே சமயத்தில் ஒரே தேர்தல் என்ற மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். அரசியல் சாசனச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் காஷ்மீருக்கு  அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உரிமையை மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு கல்வி, சுகாதாரம், பொது விநியோகம், வரி வசூலிப்பு உள்ளிட்ட துறைகளில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் பறித்து, இந்திய யூனியன் என்பதைச் சட்டபூர்வமாகவே அழித்து, இந்தியாவில் ஒற்றையாட்சி முறையை ஏற்படுத்திவிடவும் திட்டமிடுகிறார்கள்.

இப்பார்ப்பன பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே உள்ள வேறுபாடு, விஷத்தைப் பாலில் கலந்து நைச்சியமாகக் கொடுப்பதா, அல்லது நேரடியாக வாயில் ஊற்றுவதா என்பதுதான். மேலும், இந்தியாவை ஆரிய பார்ப்பன தேசமாக உருவாக்குவது இந்த தேசியக் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனச் சட்டமே இந்து-இந்தி-இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. பசுவதைச் சட்டத்தைக் கொண்டுவருவது, இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பறிப்பது, கோயில் கருவறையில் சூத்திரச் சாதியினர் நுழைவதைத் தடை செய்வது – என பார்ப்பன பாசிஸ்டுகளின் நோக்கத்தை, மேலாதிக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுதான் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை”யாக இருந்துவரும் இந்தியாவை உடைக்க “பிரிவினைவாதிகள்”, “பாக். கைக்கூலி”களெல்லாம் தேவையில்லை. அந்த வேலையை மோடி அண்ட் கம்பெனியே சுறுசுறுப்பாகச் செய்து வருகிறது. தமது இந்து-இந்தி-இந்தியா திட்டத்தின் மூலம், அரசியல் சாசனத்தின் துணையோடு!

-குப்பன் 

புதிய ஜனநாயகம், மே 2017