இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். – டாக்டர் அம்பேத்கர்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். – டாக்டர் அம்பேத்கர்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள T.முருங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார 5 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு 1-12-2016 காலைப் பொழுது கடும் அதிர்ச்சியாகவே விடிந்தது. இந்த ஊரில் இயங்கி வந்த வெற்றிவேல் வெடிமருந்து (VETRIVEL EXPLOSSIVE) ஆலையின் உற்பத்தி பிரிவு ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு வேலை செய்த 21 பேர் உடல் சிதறி இறந்தனர். இறந்தவர்களில் ஒருவரது உடல்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.
சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர். இதனால் போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியாமல் மரபனு சோதனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது அரசு. இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாமல் திகைத்து இறுதியில் இறந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
இறந்து போனவர்களின் எண்ணிக்கையைக்கூட கண்டறிய முடியாத நிலையில் 18, 19 என்று உறுதியின்றி அறிவிக்கப்படுகிறது. இன்னும் சிலரைக் காணவில்லையென உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உடல் கிடைக்காததால் மட்டுமல்ல வேலைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்ற பதிவேடு கூட ஆலை நிர்வாகத்திடம் இல்லை என்பதுதான் ஆலையின் இலட்சணம். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 30-40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதினர். குடும்பத் தலைவர்களை பறிகொடுத்துவிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் நிற்கிறது.
துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் பச்சமலை, கொல்லிமலை ஆகிய இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது அந்த கிராமம். உயிர்காக்கும் மருத்துவமனைகளே இல்லாத கிராமத்தில் உயிருக்கு உலை வைக்கும் தனியார் வெடிமருந்து ஆலையை நடத்த அனுமதித்துள்ளன மத்திய – மாநில அரசுகள்.
1999-ல் சேலத்தில் உள்ள பார்க் ப்ளாசா ஹோட்டல் உரிமையாளர் விஜய கண்ணன் என்பவர்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அப்போது இது வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் குடோனாக மட்டும்தான் நிறுவப்பட்டது. பிறகு படிப்படியாக அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஜெலட்டின் குச்சிகள் தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி இன்று மைனிங் வேலைகளுக்கான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக பரிணமித்துள்ளது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இங்கு 150 கிலோ வெடிப்பொருள்தான் வைத்திருக்க அனுமதி, ஆனால் 2000 கிலோவுக்கு மேல் முறைகேடாக சேமிக்கப்படுகிறது என்கிறார்கள் தொழிலாளிகள். இங்கு சுமார் 750 தொழிலாளர்கள் 3 ஷிஃப்ட்டுகளாக வேலை செய்துள்ளனர். இதில் 18 பேர்தான் நிரந்தரம். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களே. வேலையில் சேர்க்கும் போதே இராஜினாமா கடிதத்திலும் சில வெள்ளைத் தாள்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் வேலைக்கு அமர்த்துகிறது நிர்வாகம்.
ஆலையில் தொழிலாளிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட எதுவுமே கிடையாது. ஏற்கனவே மூன்று முறை ஆசிட் கசிவினால் விபத்து ஏற்பட்டபோதும் வெளியில்தான் சிகிச்சை பெற்றுள்ளனர். ESI, PF போன்ற எந்த சலுகைகளும் இங்கு கிடையாது. விபத்து தடுப்பு பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. இருந்தும் 18 வருடங்களாக இந்நிறுவனம் இயங்கி வந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் ‘அதிரடிஆய்வு’-களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லுகிறார்கள் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்.
எந்த விதிமுறையையும் மதிக்காத ஆலைநிர்வாகம் வெடி மருந்து கலந்த கழிவுநீரை சுத்திகரிக்காமலே அருகில் உள்ள ஓடையில் விட்டு வந்தனர். ஓடை நீரைக் குடித்த கால்நடைகள் சில இறந்துள்ளன. இது குறித்து போலிசில் புகார் கொடுக்க சென்றபோது “ஆட்டுக்கு 5000 காசு வாங்கிட்டு போங்க” ன்னு சொல்லி ஆலை நிர்வாகத்தின் அடியாளாக பேசியுள்ளனர் ‘சட்டத்தின் காவலர்கள்’. இந்த சம்பவத்திற்குப் பிறகு கழிவுநீரை வெளியில் தெரியாமல் ஆலைக்குள் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விட்டுள்ளார் இந்த கொலைகார முதலாளி.
நிலத்தடி நீர் முழுவதும் விசமாக மாறி புற்றுநோயும், தொழுநோயும் ஏற்பட்டதால் கேன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதாக குமுறுகின்றனர் இந்த குக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள். சுத்திகரிக்கப் படாத கழிவு நீரால் பயிர்கள் பாதிப்படைவது போதாதென்று தண்ணரில் கலந்து விட்ட ஆசிட் – ஐ பிரித்தெடுப்பதற்காக இரவு நேரத்தில் ஆவியாக்குவதால் அது பனி மூட்டம்போல் கவிழ்ந்து பயிர்களை கருக்கி விடுவதாக கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.
தொடர்ந்த பாதிப்புகள் காரணமாக 2013 முதல் ஆலையை மூடக்கோரி தாசில்தார், கலெக்டர் போன்ற அரசு அதிகாரிகளிடமும் பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அத்தனை துறை அலுவலகங்களுக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் உயரிய லட்சியத்தோடு ஆலையை பாதுகாப்பதற்காக அத்தனை துறை அதிகாரிகளும் கண்ணும் கருத்துமாக செயல் பட்டார்கள் போலும்! விவசாயம் மற்றும் குடிநீர் பதிப்பை முன்னிறுத்தி போராடி வந்த மக்கள், ஆலை வெடித்துச் சிதறிய பின்னர்தான் அதன் அழிவு வேலையை முழுமையாக உணர்ந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
உயிரைக் கொடுத்தேனும் ஆலையை விரட்டுவோம் என போர்க்கோலம் பூண்டுள்ளனர் பகுதி மக்கள். ஆலை வெடித்துச் சிதறிய பின் வந்த மாவட்ட ஆட்சியரையும் அமைச்சர் வெல்லமண்டி நடராசனையும் முற்றுகையிட்டு கார்களை கல்லால் அடித்து விரட்டியுள்ளனர். 3 நாட்களாக போக்குவரத்தை முடக்கியுள்ளனர். ஆலைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். எந்த கட்சிகளையும் நம்ப மறுக்கின்றனர். கொட்டும் மழையிலும் துளியும் பின்வாங்காமல் நின்று போராடுகிறார்கள். “இந்த கம்பெனிய மூடசொல்லி நூறு தடவைக்கு மேல புகார் கொடுத்தும் அதிகாரிங்க கண்டுக்கல.
“இன்னைக்கி இத்தன பேரு செத்ததுக்கு அப்புறமா எதுக்கு வந்தீங்க, கருமாதி பண்றதுக்கா?” என்று எஸ்.பி-யின் முகத்தில் காறி உமிழ்ந்து காக்கி மிடுக்கை தள்ளாட வைத்தனர் போராடும் பெண்கள். ஒவ்வொரு முறை இந்த ஆலைக்கெதிராக நாங்கள் மனு கொடுக்கும் போதும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனடியாக முடப்படும் என்று மக்களிடம் நாடகமாடி விட்டு கம்பெனிக்காரனிடம் ஆதாயமடைந்ததாக அம்பலப்படுத்துகிறார்கள் பொதுமக்கள்.
இடிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம், சென்னை பெருமழை – வெள்ளம், அதிகரித்து வரும் இரயில் – சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் என ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்கள் கொத்துக்கொத்தாக காவு வாங்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் உணர்த்துவது அழுகிநாறும் அரசமைப்பின் தோல்வியையே! இத்தகைய பேரிழப்புகள் இத்துடன் நிற்கப்போவதுமில்லை. தோற்றுப்போய் – மக்களுக்கெதிராக மாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெரியாமல் இனியும் சகித்துக்கொண்டு வாழப்போகிறோமா? நியாயப்படுத்த முடியாதபடி சிக்கிக்கொண்டபின் அந்த ஆலை முதலாளியை மட்டும் குற்றவாளியாக சித்தரித்து கபட நாடகம் ஆடுகிறது அதிகார வர்க்கம்.
ஆண்டுக்கணக்கில் நடக்கப்போகும் நீதி மன்ற இழுத்தடிப்பில் மக்கள் கோபம் தணிந்து மறந்தே விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கு! இதை முறியடிக்க வேண்டுமானால் ஆலை முதலாளியை மட்டுமல்ல தோற்றுப் போன இந்த அரசுக் கட்டமைப்பையும் அதிகார வர்க்கத்தையும் கூண்டிலேற்ற வேண்டும்.
மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றும் மாற்று அமைப்பு முறைக்காக போராட வேண்டும். அது மட்டுமே இன்று கோரமாக கொல்லப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மட்டுமல்ல, இனி எப்போதும் இப்படியொரு பாதிப்பு வராதவாறு மக்களைப் பாதுகாக்கவும் செய்யும். இந்த பிரச்சாரத்துடன் மக்களை அமைப்பாகத் திரட்ட முயன்று வருகிறது மக்கள் அதிகாரம்.
எச்சரிக்கை: அதிர்ச்சியூட்டும் படங்கள் – பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.
செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157
கடந்த 2016 நவம்பர் எட்டாம் தேதி எட்டரை மணிக்கு “இன்று நள்ளிரவு முதல் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனி அவையெல்லாம் வெறும் காகிதங்களே” என்று பிரதமர் மோடி முழங்கினார்.
சுனாமி கூட கடற்கரையோர மக்களைத்தான் தாக்கியது. குஜராத் பூகம்பம் கூட ஒரு பகுதி மக்களைத்தான் விழுங்கியது. மோடியின் கர்ஜனை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி பக்தர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்களை தாக்கி நடைபிணமாக்கியது. மோடி அரசின் இக் கொடூர தாக்குதலால் கருப்புபண முதலைகள் தவிர மற்ற அனைவரும் தாங்க முடியாத வேதனையில் வாடினர்.
வங்கியில் வரிசையில் நின்று களைத்துப் போய் மயங்கி விழுந்தவர்கள் ஏராளம். இறந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐ தொட்டு விட்டது. இருந்தாலும் கருப்புப் பணத்தையும்,கள்ள நோட்டையும் ஒழிக்கும் இத்திட்டம் தேவைதான், மக்களுக்கு இவ்வளவு நெருக்கடியைக் கொடுக்காமல் முன் ஏற்பாடுகளுடன் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
விலைவாசியைக் குறைப்பேன், வேலை வாய்ப்பை உருவாக்குவேன், லஞ்ச ஊழலே இருக்காது, தூய்மை இந்தியா, வளர்ச்சி ஒன்றே தாரகமந்திரம், மன் கி பாத், மேக் இன் இண்டியா, ஸ்டாண்டு அப் இண்டியா என்று கடந்த காலங்களில் அளந்துவிட்ட பஞ்ச்டயலாக்குகள் திரைப்பட நடிகர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விஞ்சி நிற்கிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னும் மோடி மக்களுக்குச் செய்த நன்மைகள் என்று கூற எதுவும் இல்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மோடி அரசின் சாதனைகள். சரிந்து கொண்டிருந்த தனது பிம்பத்தைத் தூக்கி நிறுத்தி விடலாம் என்று நம்பி மோடி எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கைதான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
கறுப்புப் பணஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு என்ற மோடி ரசிகர்களின் கூச்சல் கார்த்திகை மாத ஐய்யப்ப பக்தர்களின் சரணகோஷத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓங்கி ஒலிக்கிறது. கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடுவேன் என்ற மோடி மக்களிடம் உள்ள சேமிப்பைப் பறிமுதல் செய்கிறார். பனிரெண்டு லட்சம் கோடி வராக்கடனில் தத்தளிக்கும் வங்கிகளில் போடச்சொல்வது மூலம் அம்பானி, அதானி, டாட்டாக்கள் மீண்டும் கொள்ளையடித்து மேலும் கருப்புப் பணத்தைச் சேர்க்க வழிவகை செய்கிறார்.
செல்லா நோட்டு அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் என்றால் ஐநூறு ஆயிரம் செல்லாது என்று அறிவித்த அன்று இரவோடு இரவாக நகைக்கடைகளுக்கு வந்தவர்கள் யார்? ஏன் மோடி அரசு அவர்களை மடக்கிப் பிடிக்கவில்லை? கிராமுக்கு 1200, 1500 என்று தங்கத்தின் விலையை ஏற்றி விடிய விடிய விற்று கருப்புப் பணத்தை சம்பாதித்தார்களே அவர்கள் மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிவு நாணயத்தோடு பதில் சொல் என்று மோடி இரசிகர்களையும் தொலைகாட்சி விவாத உண்மை விளம்பிகளையும் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும்.
கருப்புப் பண விவகாரத்தைப் போன்றதுதான் கள்ளநோட்டு ஒழிப்பு. பாகிஸ்தானிலிருந்தும் சீனாவில் இருந்தும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அச்சடித்து அனுப்புகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை அது சீர்குலைக்கிறது. அதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்கிறார்கள். 2015-இல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் 2005-க்கு முன்னால் அச்சிடப்பட்ட 500ரூபாய் நோட்டுக்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பது நோக்கம் என்றால் அப்படி செய்திருக்க முடியும். அப்படியே ஒழிக்கப்பட்டாலும் காந்தி சிலை நோட்டு அச்சடித்தவர்களால் மங்கள்யான் செயற்கைகோளைச் சேர்த்து அச்சிடமுடியாதா? இதை நம்ப நாம் என்ன முட்டாள்களா?
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும்,பொருளாதார ஆய்வார்களும் கள்ள நோட்டு 400 கோடிதான் உள்ளது என்கிறார்கள். ஒருசதவீதம் கூட இல்லாத கள்ள நோட்டைப் பிடிக்க இவ்வளவு கொடுமையா? எலியைப் பிடிக்க மலைக்கு வேட்டுவைக்க வேண்டுமா?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் கம்யூட்டர்சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சிலர் நம் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கும் போதே சாயம் வெளுத்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வழக்கு ஒன்றுவந்து மோடிகளின் சாயத்தை வெளுக்கச் செய்தது. “உலகத்தில் இதுவரை இப்படி ஒரு தொழில் நுட்பத்தில் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைகாட்சிகளில் ஆர்.எஸ்.எஸ்,பி.ஜே.பி கோயபல்சுகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து தெரிந்தே பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பது மூலம் தீவரவாதத்தை ஒழிக்கலாம் என்ற நச்சுப் பிரச்சாரத்தை சிலர் நம்புகின்றனர். வாஜ்பாய் ஆட்சி செய்த 1998-2004 இடைப்பட்ட காலத்தில் தான் கருப்புப் பணம் அதிகரித்துள்ளது என்று உலக வங்கி அறிக்கை சாட்சி சொல்கிறது. ஆயுதக் கடத்தல் பேர்வழிகள், பாகிஸ்தான் அமெரிக்க உளவாளிகள் யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வழிவகை செய்தார், யோக்கியசிகாமணி வாஜ்பாய். ‘பார்ட்டிசிபேட்டரி நோட்(P-N நோட்) என்ற வழிமுறை தான் அது. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து இந்தியாவில் ஊடுறுவலாம். அதை அரசாங்கம் சோதிக்க முடியாது.
கடைசியாக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல வங்கி மூலம் வரவு செலவு, ரொக்கமில்லா பொருளாதாரம் (கேஷ்லெஸ் எக்கானமி) என்கிறார் திருவாளர் மோடி.அதன் பொருள் என்ன? குப்பம்மாளையும்,சுப்பனையும் டிஜிட்டல்மயமாக்கி இரத்தத்தை உறிஞ்சிக்குடிப்போம் என்பதுதான்.
ரொக்கமில்லா பொருளாதாரத்தால் கல்விக் கடன் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களை காப்பாற்ற முடியுமா? விவசாயம் நாசமாகி கடன் தொல்லையால் மாண்டு கொண்டிருக்கும் விவசாயிகளின் சாவை தடுத்து நிறுத்த முடியுமா? ஒருபோதும் முடியாது.
மாறாக இது அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கும். தரகு முதலாளிகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும்,வங்கி வருமானத்தை பெருக்கி முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யும்.சில்லரை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ்,வால்மார்ட்,பிக்பஜார் போன்ற கார்பரேட்டுகளின் பகல் கொள்ளைக்கு உறுதுணையாகும். உணவு மானியத்தை வங்கி கணக்குக்கு அனுப்பி உணவு பாதுகாப்பை (பொது வினியோக முறையை) தகர்க்கும்,அழிவுகள் தொடரும்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கையால் பாராளுமன்றம் முடங்கியும்,கல்லுளிமங்கன் மன்மோகன்சிங்கின் கதறலையும் கூட நரேந்திர மோடி கண்டு கொள்ள தயாராக இல்லை.
விதியே என்று வாழ்பவர்களை வீதிக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் மோடி. சேமநல நிதியை (PF-ஐ) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களுரு நகரமே முடங்கியது. படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி மோடியை அடுத்த கணமே பின்வாங்கச் செய்தது. பணத்திற்காக நம்மை வீதிகளில் அலையவிட்ட மோடி அரசுக்கு வீதியில்தான் பாடம் கற்பிக்க முடியும். வீதிக்கு வாருங்கள் என்று மோடி அழைக்கிறார். வாருங்கள் விடை காண்போம் !
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை மாவட்டம்.
__________________________________
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நவம்பர் -8 அன்று அறிவித்த கணத்தில் இருந்து இன்றுவரை மக்கள் கூட்டம் தங்கள் சேமிப்பையும், சம்பளத்தையும் மாற்றவும், வங்கியில் பணம் செலுத்தி எடுக்கவும் தினந்தோறும் ATM வங்கி வாசலில் அல்லாடுகின்றனர். இருந்தாலும் கருப்பு பணத்திலேயே உருவான, கருப்பு பண முதலைகளின் விளம்பரங்களினால் வாழ்கின்ற அச்சு, காட்சி ஊடகங்கள் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மோடியின் நோக்கத்தை அம்பலப்படுத்தாமல் இந்த நடவடிக்கை எடுத்த விதம் தவறு என்று கூறி போராடி வருகிறார்கள். மக்கள் சிரமப்படும்போதும் இந்நடவடிக்கை கருப்பு பணத்தை குறைந்தபட்சமாவது ஒழிக்கும் என்று தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது வேறு வழி இல்லை என சகித்துக்கொள்கிறார்கள்.
இவ்விதமான கருத்துக்களை உடைக்கும் வகையில் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக மோடியின் நோக்கம் கடுகு டப்பா சேமிப்பையும் கொள்ளையடித்து கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதே என்பதை அம்பலப்படுத்தியும். “நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கு ஏன் தடை? வங்கிப் பணம் எடுப்போம், வங்கி கணக்கு முடிப்போம்!” என்பதை முழக்கமாக வைத்து கடந்த 2.12.2016 அன்று மக்களிடம் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதேபோல் விருதை பாலக்கரை, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தெருமுனை பிரச்சாரங்களும் நடத்தப்பட்டது. இவற்றில் மக்கள் அதிகாரம் விருதை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பு.மா.இ.மு விருதை செயலாளர் தோழர் மணிவாசகம், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜு மற்றும் பகுதியில் உள்ள ஆதரவாளர்கள் மோடி அரசை அம்பலப்படுத்தியும், மேலும் இந்த பாசிச நடவடிக்கையை எதிர்கொள்ள போராடியாக வேண்டும் என வலியுறுத்தியும் பேசினர். இக்கூட்டங்களில் ஆங்காங்கே நின்றிருந்த திரளான மக்கள் தோழர்களின் பேச்சை கேட்டு அருகில் வந்து நின்று முழுமையாக கவனித்தனர், கைதட்டி வரவேற்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்- 9791286994
__________________________________
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பற்றி பேசாதே ! கோவை போலீசின் ஜனநாயக மறுப்பு !
கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.12.2016 கோவை ஒண்டிப்புதூரில் உள்ள சுங்கம் மைதானத்தில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சரியா? தவறா? என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் கூட்டத்தின் தலைப்பு மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது எனக் கூறி அனுமதி மறுத்துள்ளது காவல் துறை.
ஒரு புறம் மக்களின் மனநிலையை அறிய செல்பேசி ‘ஆப்-பில்’ கருத்து கேட்பதாக நாடகமாடுகிறது மோடி அரசு. கேள்விகளே கேட்காத மன்கீபாத் நிகழ்ச்சியிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமும், பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே வாய் கிழிய சவடால் அடிக்கிறார் மோடி. மவுன மோகன் சிங் என மோடியும், பா.ஜ.க-வினரும் கேலி செய்த மன்மோகன் சிங்கின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்காமல் பாராளுமன்ற அவையை விட்டு ஓடுகிறார் பிரதமர். எல்லையில் வீரர்கள் கஷ்ட்டப்படும் போது ஏ.டி.எம் வரிசையில் நிற்க உனக்கு என்ன கேடு எனக் கேட்கிறது காவி வானரப்படை.
ஆனால் மக்களிடம் நேரடி கருத்தை கேட்கவோ அல்லது விவாத்திக்கவோ அனுமதி கேட்டால் மறுக்கிறது காவிமயமான காவல் துறை. ஆனால் இதே காவல் துறை தான் இந்துமுன்னணி சசிகுமார் என்ற சமூக விரோதியின் எழவு ஊர்வலத்தின் போது கடைகளை சூறையாடியவர்களுக்கு பாதுகாப்புக்கு நின்றது. ஆனால் இவற்றியெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களிடம் பல்வேறு வகைகளில் போராட்டங்களை எடுத்துச் செல்வோம்.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை மாவட்டம்.
600 – கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே விடுதலை சுப்ரதே ராயிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா சிறப்புத் தொடர் பாகம் 1
_____________________________________________________
காலம் நவம்பர் 20, 2016. இடம் மும்பை புறநகரில் இருக்கும் யாஷ் ராஜ் ஸ்டூடியோ. அலைஅலையான விசில்கள், விளிப்புகளுடன் ரசிகர்கள். தமிழகத்திலிருந்தும், தாரவியிலிருந்தும் தர்ம சேவையாக அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம். அலைக்கு அணை போட்டுக் கொண்டிருந்தார்கள் பவுன்சர்கள்.
மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் தேசமே அலைந்து திரிந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு பெரும் கூட்டம் எப்போது சொர்க்க வாசல் திறக்குமென்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் கிடைத்தற்கரிய அந்த தருணத்தை தவறவிடாமல் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். ஆம். அது 2.0 எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வு.
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.
எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.
முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.
இந்தி எந்திரனான ரோபோவின் முன்னோட்ட விழாவும் இதே மும்பையில்தான் நடந்தது. இரண்டு பாகங்களும் இந்தியாவின் வணிக தலைநகரமான மும்பையில் மட்டுமே அறிமுகப்படுத்தும் அருகதை கொண்டவை.
விழா விருந்தினர்களை பாதுகாத்து அழைத்துச் செல்வதை விஸ்கிராப்ட் விழா மேலாண்மை நிறுவன ஊழியர்களும், பவுன்சர்களும் ஒய்யாரமான மிடுக்குடன் செய்கின்றனர். அரங்கினுள்ளே மூன்று பெரிய திரைகளில் கணினியின் பைனரி மொழி மினுமினுக்கிறது. 2.0 விழா ஏற்பாடுகளுக்கான செலவிலேயே ஒரு டஜன் படங்களை தயாரித்து விடலாம் என்கின்றார்கள், ஆங்கில ஊடக சினிமா பத்திரிகையாளர்கள்.
பாலிவுட்டின் இயக்குநர் – தயாரிப்பாளர் கரண் ஜோகர் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாள் என்கிறார். இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ரஹ்மான், கலை இயக்குநர் முத்துராஜ், இந்தி உரையாடலை எழுதிய அப்பாஸ் டயர்வாலா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, புகைப்படக் கலைஞர் நீரவ் ஷா, கண்கட்டும் சிறப்புக் காட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர்கள் ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் அனைவரும் மேடை ஏறுகின்றனர். ஒருவர் மட்டும் கொஞ்சம் வெட்கத்துடன் இடது வரிசையில் நிற்கிறார். அவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர்தான் 2.0-வின் தமிழ் வசனகர்த்தா. இன்னொருவரும் படக்குழுவின் ஓரத்தில் பணிவுடன் நிற்கிறார். குறுந்தாடியுடன் புன்னகை தவிர வேறு பாவனை அறியாத முகத்துக்குச் சொந்தக்காரரான அவர் லைக்கா மொபைல் அதிபர் சுபாஷ் கரண்.
அரங்கின் வெளியே ஆஜானுபாக மும்பை மாடல் ரூபாலி சூரி படக்குழுவினரை அறிமுகம் செய்து பேசுகிறார். அவரை அண்ணாந்து பார்த்து பேசும் தமிழக படக்குழுவினரில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆளுமையை தெரிவிப்பதற்கு சிரமப்படுகிறார். ஒய்யாரமான சூழலில் அவரது உடைந்த ஆங்கிலம் எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்று தடுமாறுகிறது. பெருந்தொகையே ஊதியமாக வழங்கப்பட்டிருந்தாலும் படைப்புக் களத்தின் வழி தனது ஆகிருதியை காட்டும் பூரண நிறைவு இங்கில்லை. அதே நேரம் உலகை விட்டும் போக இயலாது. ஜெயமோகன் முகத்தில் அந்த முரண்பாடு தத்தளிக்கிறது.
மும்பை பெண்ணிடம் சொதப்பினாலும் மும்பை இயக்குநரிடம் வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தில் பங்கேற்பதை பெருமை அடைகிறேன் என்று தொண்டைக்குள் இருந்து வெளியேற்றிவிட்டார். கூடவே தான் எழுத்தாளர்தான், சிறந்த பேச்சாளர் இல்லை என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் பெருந்தொகையை இந்த படத்தில் கொட்டியிருந்தாலும் எப்படி அவரால் சிரிக்க முடிகிறது என்று கரண் ஜோகர் கேட்கிறார். கதை பிடித்திருந்தது, இயக்குநருக்கு ஓகே சொல்லிவிட்டேன், வெறொன்றுமில்லை என்கிறார் சுபாஷ்கரண். இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியக்கிறார் கரண் ஜோஹர்.
முதல் பாகமான எந்திரனின் அறிமுக விழா 2010-ம் ஆண்டில் நடந்த போது இருந்த நகைச்சுவையும், ஊடகங்களை அருகில் அனுமதித்த பாங்கும் இப்போது இல்லை என்று வருத்தப்படுகிறது scroll ஸ்க்ரால் எனும் ஆங்கில ஊடகம். படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் நிதியுலக மாந்தர்கள்தான் அருகில் அமர வைக்கப்பட்டனர் என்றும் அந்த ஊடகம் கூறுகிறது. என்ன இருந்தாதலும் பட்ஜெட் இரண்டு மடங்காகும் போது வர்த்தக பிதாமகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை தவறென்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் ஊடகங்களின் வர்த்தகமே சினிமாக் கடவுளை நம்பித்தானே?
எந்திரனில் வில்லனாக வந்த ரோபோ சிட்டி அரங்கின் முன்னிருக்கையில் ஹோலோ கிராம் வடிவில் அமர்ந்து கொண்டு கரண் ஜோகருக்கு பதிலளிக்கிறது. அதிலொரு கேள்வி “பணமதிப்பிழக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” உடனே சிட்டிக்கு குரல் கொடுத்த ரஜினி “சிவாஜி”யிலேயே கருப்புப் பணத்தை சூறையாடிவிட்டேன் என்கிறார்.
ஆம். கருப்புப் பணம். நஞ்சை முறியடிக்க நஞ்சிலிருந்துதான் மருந்து தயாரிக்க முடியும் என்றால் கருப்புப் பணத்தை விளக்கி படமெடுக்க கருப்புப் பணமும் தேவைப்படாதா?
“ஆமாம், பணம் ஒரு போதும் மகிழ்ச்சியை சம்பாதிக்காதுதான். ஆனால் ஒரு மிதி வண்டியில் இருந்து கொண்டு அழுவதை விட ஒரு பி.எம்.டபிள்யூ காரில் அழுவது வசதியானது அல்லவா?” – புது மொழி
அதே நவம்பர் 20-ம் தேதி. மும்பையில் ஏதோ ஒரு நட்சத்திர விடுதியில் தங்கயிருக்கும் போது எழுத்தாளர் ஜெயமோகன் “மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்” என்ற கட்டுரையை அவரது தளத்தில் வெளியிடுகிறார்.
இந்தக் கட்டுரையில் அவர் கருப்புப் பணம் குறித்து பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் பல கருத்துக்களை தெரிவிக்கிறார். கருப்புப் பணம் பெருகாமல் நிலம், தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும். அதற்கும் வழியற்ற போது பதுங்கி விடும். கள்ளப்பணத்தை பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவில் இறக்கிவிடுவது குறித்தும் அவர் எச்சரிக்கிறார்.
சிறு வணிகர்களும், சிறு தொழிலதிபர்களும் வரி கட்டாமல் ஏய்ப்பது குறித்து கண்டிக்கும் ஜெயமோகன், இவர்களே இந்தியாவின் வரி வருமானத்தை சூறையாடும் கொள்ளையர்கள் என்கிறார். இவர்களே மோடியின் அறிவிப்பை எதிர்த்து பெருங்கூச்சிலிடுவதாகவும், இவர்களுக்காகவே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் பேசுவதோடு நீலிக் கண்ணீரும் விடுகிறார்கள், இது ஆகப்பெரும் கேவலமில்லையா என்று அறம் பாடுகிறார்.
உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று அதுதான் ஹவாலாவாக இங்கு திரும்புகிறதாம். வெளிநாட்டு கருப்பு மீட்கும் வரை உள்நாட்டில் கருப்பை மீட்க கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? ஆவேசத்துடன் கேட்கிறார் ஜெயமோகன்.
வங்கி, ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க முடியவில்லை என்று ஊடகங்கள்தான் குழப்புகின்றன என்பவர் ஆதாரமாக மும்பையில் இரண்டு நாட்களில் அவரும், சென்னையில் அவர் மகனும் எந்த பிரச்சினையுமின்றி பணம் எடுத்த கதையை சொல்கிறார்.
ஸ்க்ரோல் எனும் இணைய மஞ்சள் பத்திரிகை மக்கள் கூட்டம் கூட்டமாய் சாவதாக எழுதுவதை சபிக்கிறார். வங்கி வரிசையில் மாரடைப்பால் இறந்து போனால் அது அரசின் படுகொலையாகுமா என்று கேட்கிறார். ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்தால் அந்த ஆஸ்பத்திரி மேல் நடவடிக்கை எடுக்காமல் மோடி கொலைகாரர் என்று பழிசுமத்துவது ஏன் என்கிறார்.
இன்னும் பல அவர் எழுதியிருக்கிறார். நுண்ணுணர்வு இல்லாதவர்களும் ஜெயமோகனது அகக்கிடக்கையை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானது. இவையெல்லாம் அவர் போகிற போக்கில் எழுதிவிடவில்லை.
இது குறித்து பல்வேறு தொழிலதிபர்களிடம் பேசிவிட்டே எழுதுகிறேன் என்கிறார். யார் அந்த தொழிலதிபர்கள்? விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வீற்றிருக்கும் கோவை திருத்தலத்தில் ஆட்சி செய்யும் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் குழுமம் முதலான அதிபர்களா? கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யிக்கு அலைய வேண்டிய அவசியம் அவருக்கு ஒருபோதுமில்லை. அந்த அதிபர் சாட்சாத் லைக்கா மொபைலின் சுபாஷ்கரண் அல்லிராஜாவாகவே இருக்கலாம்.
மெதுவாக செயல்படும் குறைபாடுள்ள ஒரு பெண் வங்கி ஊழியரைப் பார்த்து கொதிக்கச் செய்த அவரது நுண்ணுணர்வு உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கார்ப்பரேட் அதிபரின் புன்னகையையும் அந்நகையை சம்பாதிப்பதற்கு அவர் கடந்து வந்த வலிகளையும் பார்த்த மாத்திரத்திலேயே தரிசித்திருக்கலாம். உலகமெங்கும் ஆட்சி செய்யும் மூலதனத்தின் மேன்மைகளை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு புரியும் விதத்தில் விளக்குவது சுபாஷ்கரணுக்கு கடினமான ஒன்றல்ல. மேற்குலகில் அகதியாகச் சென்று குடியுரிமை பெற்று இங்கிலாந்தின் பணக்கார வரிசையில் இடம் பிடிப்பதும் எளிதான ஒன்றல்ல.
தொலைத்தொடர்புத் துறையிலே பெரும் ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேற்குலகில் ஒரு ஈழத்தமிழன் சாதித்திருக்கிறான். அந்த சாதனையின் வரலாறு என்ன?
சுபாஷ்கரன் அல்லிராஜா 1972-ம் ஆண்டில் பிறந்தார். பிரிட்டனின் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபராக அறியப்படும் இவர் 2006-ம் ஆண்டில் ஆரம்பித்த லைக்கா மொபைல் நிறுவனம் இன்று 21 நாடுகளில் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களுடன் செயல்படுகிறது. வடக்கு இலங்கை முல்லைத்தீவில்தான் சுபாஷ்கரன் வளர்ந்தார்.
சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இவரது “லைக்கா தயாரிப்பு நிறுவனம்” திரைப்படங்களை தயாரிக்கிறது. கத்தி திரைப்படத்தை 2014-ல் வெளியிட்டவர்கள் தற்போது 2.0 படத்தை அதாவது இந்தியாவிலேயே அதிக செலவு பிடிக்கும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.
லைக்கா நிறுவனத்தின் திரைப்பட சாதனையை வியந்து கூறும் தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை அவரது சொத்து மதிப்பை ஒரு பில்லியன் யூரோ, கிட்டத்தட்ட 7,20,000 கோடி ரூபாய் என்று கூறுகிறது (ஐரோப்பிய ஊடகங்கள் 1.5 பில்லியன் யூரோ என்கின்றன). இது அவரது நிறுவனத்தின் மதிப்பு என்றால் அவரது தனிப்பட்ட “பாக்கெட் மணி” சொத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். ஒரு மாத வாழ்க்கைச் செலவுகளுக்காக இரண்டு வேலைகள் செய்யும் ஈழ அகதிகள் வாழும் இங்கிலாந்து மண்ணில் தனது துணைவியோடு சிக்வெல், எஸ்ஸெக்சில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான மாளிகையில் வசிக்கிறார். 2011 அக்டோபருக்குள் லைக்கா நிறுவனம் 250 இடைத்தர சந்தை நிறுவனங்களில் 35-ஆவது இடத்தை பிடித்திருப்பதாக தி சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது.
இன்று 44 வயதாகும் அவர் லைக்கா மொபைல் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டனில் அவர் 640-ஆவது பணக்காரராக பட்டியலிடப்பட்டு வாழ்கிறார். பிரிட்டனில் இருக்கும் ஆசிய தொழில் முனைவோர் சாதனையாளராக அவர் 2010-ல் கௌரவிக்கப்பட்டு தங்க விருதை பெற்றார். இதே போன்று வேறு சில விருதுகளையும் தொழில் கூறும் ஐக்கிய ராஜ்ஜியம் (united kingdom) எனப்படும் இங்கிலாந்தின் நல்லுலகம் அவருக்கு அளித்திருக்கின்றது.
இலங்கை நாட்களில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி பட ரசிகராக வளர்ந்ததை தி இந்துவின் நேர்காணலில் கூறுகிறார். தொலைத்தொடர்பு எமது தொழில், திரைப்படம் தயாரிப்பது எமது ஆசை என்கிறார். இலங்கை தமிழர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் என்கிறார். இது என்னமோ உண்மைதான். விடுதலைப் புலிகள் முதல் பாமர மக்கள் வரை ஈழம் முழவதும் தமிழ் சினிமாவைக் கொண்டாடுகிறது. புலிகள் செயல்பட்ட காலத்தில் அவர்களது ஆதரவாக ஐரோப்பாவில் இருந்து வெளிவந்த ஈழ முரசு பத்திரிகையில் தமிழ்ப்படங்கள் வெளியாகும் விளம்பரங்களை சாதராணமாகக் காணலாம். இந்த படங்களை புலிகளே விநியோகஸ்தராக வெளியிட்டிருக்கின்றனர். சீமானைப் போன்றவர்கள் கூட திரைப்படத்துறையில் இல்லாதிருந்தால் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.
தி இந்துவின் நேர்காணல் நடக்கும் போது அவர் எந்திரன் 2.0-வில் ரஜினி நடிப்பதால் அவரை சந்திக்க சென்னை வந்திருந்தார். ஒரு கார்ப்பரேட் முதலாளி என்பதைத் தாண்டி அவருக்கு ரஜினி சந்திப்பு நிச்சயம் ஒரு பக்தன் கடவுளைப் பார்த்த பரவசத்தை கொடுத்திருக்கும். ரஜினியோ இயக்குநர் ஷங்கர் போட்டிருக்கும் மீப்பெரும் பட்ஜெட்டின் தயாரிப்பாளரை காலைப்பிடித்து வணங்கும் மனநிலையில் இருந்திருப்பார். அவ்வகையில் இது இரு பெரும் கடவுளர்களின் சந்திப்பாக இருந்திருக்கும். பரபஸ்பர ஆதாயம்.
“இந்திய அரசாங்கம் தொலைத்தொடர்பில் தாராளமயாக்கத்தை முற்றிலும் கொண்டு வருவதற்காக காத்திருப்பதாகவும், செல்பேசி மெய்நிகர் வலைப்பின்னல் Mobile phone Virtual Network இன்னமும் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் நாங்கள் இந்திய சந்தையில் கண்டிப்பாக நுழைவோம்” என்கிறார் அவர். இந்தியச் சந்தை யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெரியது என்பதால் போட்டியெல்லாம் பிரச்சினையில்லை என்கிறார்.
எந்திரன் 2.0-வில் அவர் 350 கோடி ரூபாயை எப்படி துணிந்து முதலீடு செய்கிறார்? இயக்குநரால் வழிநடத்தப்படும் படங்களையே எடுக்க விரும்புவதாக கூறும் சுபாஷ்கரன், ஒருசரியான திட்டத்தை கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு தங்களது ஆண்டு ஒதுக்கீடான 1000 கோடி ரூபாயையும் தேவைப்பட்டால் ஒதுக்குவொம் என்று சாதாரணமாகக் கூறுகிறார். இந்த முதலீடு தமிழ் – இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லுமாம். எனில் அடுத்த படம் கமலா? தமிழத் திரைப்படத்துறையில் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது என்றால் இந்நேரம் நமது சினிமா மாந்தர்களின் ஃபேஸ்புக் – டவிட்டர் வலைப்பக்கத்தில் நாளுக்கொரு லைக்கா சுபாஷ்கரண் செய்தி வருவது உறுதி. அவ்விதம் லைக்காக்காவிற்கு இலட்சக்கணக்கான ரசிகர் லைக்கும் நிச்சயம்.
கத்தி திரைப்படத்திறகு வந்த எதிர்ப்புகள் பிழையான தகவல்களால் உருவானவையாம். அதனால்தான் லைக்கா வெளியிட்ட “நானும் ரவுடிதான்” “விசாரணை” படங்களுக்கு எதிர்ப்பில்லை என்று அவர் பதிவு செய்கிறார். பாரம்பரிய ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் உண்டா என்று கேட்டதற்கு தான் அடிப்படையில் ஒரு தொழிலதிபர், மீடியாவில் நுழைவது அரசியல் ரீதியாக தவறு, அரசியலில் தான் எப்போதும் நடுநிலை வகிக்கவே விரும்புவதாகவும் கூறுகிறார். என்ன ஒரு ஜனநாயக உணர்வு பாருங்கள்!
ஒரு வேளை சாதாரண மசாலா படங்களுக்கே இப்படி காசைக் கொட்டுபவர் பல்வேறு முதலாளிகளே நேரடியாக ஊடகங்களை கையிலெடுத்திருக்கும் காலத்தில் தனது நிறுவன நலனிற்காக ஏன் ஒரு ஊடகத்தை ஆரம்பிக்க கூடாது? அப்படிப்பட்ட பின்னணித் தகவல்கள் ஏதுமின்றி இந்து பத்திரிகையின் செய்தியாளர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார். எதிர்பாருங்கள்..விரைவில் லைக்கா தமிழ் தொலைக்காட்சியை பார்ப்பதற்கு…
இருப்பினும் லைக்கா மொபைல் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் ஒரு கார்ப்பரேட் கிரைம் தில்லருக்கு உரியவை. இங்கிலாந்து உள்ளிட்டு இந்த ஊடகங்கள் அனைத்தும் சுபாஷ்கரண் நிறுவனத்தை சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் என்றே அழைக்கின்றன.
சர்ச்சையின்றி ஏது ஒரு முதலாளி? என்று மட்டும் எளிமைப்படுத்தி விடாதீர்கள். பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.
நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார்.
கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார். அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது.
காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?
2011-ம் ஆண்டில் டோரிக் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) லைக்கா மொபைலிடமிருந்து பெற்ற தொகை 1,76,000 பவுண்ட் – கிட்டத்தட்ட ஒன்றரை கோடி இந்திய ரூபாய். இதே நன்கொடை 2012-ம் ஆண்டில் இரண்டு கோடியே 13 லட்சம் இந்திய ரூபாயாகவும் உயர்ந்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்திருக்கும் தொகை 47 கோடி இந்திய ரூபாயாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் உதவி 87 கோடி இந்திய ரூபாயை தொட்டது. இதே உதவி ஈராக்கைப் பொருத்த வரை மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈராக்கின் அதிபர்கள் யாரும் இலண்டனில் தொழில் செய்து டோரிக் கட்சிக்கு நன்கொடை கொடுக்குமளவு இல்லை.
நவம்பர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த காமரூன், 1948 இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு வடக்கு இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக பேசப்பட்டார். அப்போது இலங்கை அரசு சுயேச்சையான நீதி விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றார். அப்போதே கண்ணிவெடி நீக்கத்திற்காக முல்லைத் தீவு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்களைப் பார்த்து ராஜபக்சே பயந்து நடுங்குவதாகவும், ஐ.நா சபை அவரைப் பிடித்து கூண்டிலேற்றி தண்டிக்கப் போவதாகவம் ஈழ ஆர்வலர்கள் இங்கேயும், புலத்திலும் பேசினர்.
மார்ச் 2014-ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூகோ ஸ்வைர், இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு 13 நாட்கள் கழித்து காமரூன் இலங்கைக்கு 56 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவிக்கிறார். இதே காலத்தில்தான் டோரிக் கட்சியினர் லைக்கா மொபைல் நிறுவனத்திடமிருந்து எட்டரை கோடி ரூபாயையும், சுபாஷ்கரனிடமிருந்து தனிப்பட்ட முறையில் 85 இலட்சம் ரூபாயையும் பெறுகின்றனர். கம்பெனி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் இரு நன்கொடைகள்!
இதற்கு பிறகு 2015 இலங்கை பொதுத் தேர்தலுக்கு முந்தை இரண்டு மாதத்தில் காமரூன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால் சிரிசேனாவை சந்தித்து தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய நிலம் குறித்து வாக்குறுதியைப் பெறுகிறார். இதற்கு ஆறு நாட்கள் கழித்து டோரிகள் லைக்கா மொபைலிடமிருந்து 3 கோடியே 17 இலட்சம் ரூபாயை பெறுகின்றனர்.
மார்ச் 2015-ல் சுபாஷ்கரன் டோரிகளின் கட்சி நிதி சேகரிப்பு “பிளாக் அண்ட் ஒயிட்” நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் டோரிக் கட்சி தலைவர்களோடு இரவு விருந்தில் சிக்கன் சாப்பிடுவது, காலையில் ஓடுவது, என்று தலைக்கேற்ற முறையில் நன்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் 1990-களில் நாடாண்ட மார்க்கரெட் தாட்சரின் வெண்கலச் சிலையை ஒரு கோடியே என்பது இலட்ச ரூபாய் கொடுத்து வாங்குவோருக்கு அனைவரும் கைதட்டி ஆரவரிப்பார்கள். சுபாஷ்கரனும் அந்த ஆரவாரத்தைப் பெறுகிறார்.
சரி, இலங்கைக்கு உதவி அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்ததே அதில் இதுவரை எவ்வளவு பணம் இலங்கையில் எங்கே என்னவாக சென்றடைந்திருக்கிறது என்று மெயில் பத்திரிக்கை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஏன் பதிலளிக்கவில்லை? மனிதாபிமானத்திற்கு கணக்கு கேட்காதீர்கள் என்றா? இல்லை அந்த அறிவிப்பில்லாம் வந்த நன்கொடைகளுக்கான வெறும் மொய்யா?
லைக்கா மொபைல் நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாயை டோரி கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு நன்கொடைப் பணம் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்திரனின் 2.0 பாகத்தின் முதல் பார்வை நடந்த காலத்தில்.
போரிஸ் ஜான்சன் என்பவர் 2012-ம் ஆண்டில் இலண்டன் மேயராக போட்டியிட்ட போது லைக்கா மொபைல் தனது கால் சென்டரை அவருக்கு இலவசமாக பயன்படுத்த அளித்தது. இப்படி உள்ளூர் கவுன்சிலர், மேயர் முதல் நாடாளும் பிரதமர் வரை லைக்காவின் ‘விருந்தோம்பல்’ கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
இதே காலத்தில்தான் லைக்கா மொபைலின் மூன்று ஊழியர்கள் பை நிறைய பணத்தை வைத்துக் கொண்டு இலண்டன் தபால் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது போலீஸ் விசாரணைக்கு வந்தது.
BuzzFeed எனும் செய்தி ஊடகத்தின் வீடியோ பதிவு விசாரணைப்படி லைக்கா மொபைல் நிறுவனம் மூன்று ரொக்க கூரியர்களின் மூலம் பை நிறைய பல்லாயிரம் மதிப்பிலான பணத்தை அன்றாடம் கடத்தியிருக்கிறது.
இதே காலத்தில் அதாவது ஜூன், 19, 2016 இல் லைக்கா மொபைலின் 19 ஊழியர்கள் பிரான்சில் ஒரு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணம் சேர்ப்பிற்காக இந்த கைது நடந்தது. பாரிசில் கைது செய்யப்பட்ட 19 பேர்களில் லைக்கா மொபைல் இயக்குநர் அலைன் ஜோகிமெக், அங்கே உள்ள யூத சமூகத்தின் முன்னணியான தலைவரும் கூட. அங்கே இஸ்ரேலுக்கு ஆதவாக ஒரு சேவை நிறுவனத்தை B’nai B’rith நடத்தி வருகிறார். இந்த புகாரில் லைக்காவின் மோசடி 13 மில்லியன் பவுண்ட் அதாவது 111 கோடி ரூபாயாகும். இந்தியாவில் சங்க பரிவாரங்களுக்கு பிரியத்திற்குரிய இஸ்ரேல் ஈழத்தமிழ் தொழிலதிபரான சுபாஷ்கரணின் கிச்சன் கேபினெட்டிலும் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து லைக்கா மொபைலின் பாரிஸ் தலைமையகத்தில் நடந்த சோதனையில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே நகரின் பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிக முகவரிகளில் சோதனை நடத்தப்பட்டு பண மூட்டைகள் பிடிபட்டன. லைக்கா மொபைலின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த பணமூட்டைகளெல்லாம் வழக்கமான வங்கி இருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்று லைக்கா மொபைல் கூறியது. ஆனால் Buzzfeed செய்தி தளத்தின் விசாரணை உதவிப்படி பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் சட்டவிரோத பணம் பல்வேறு நிழலான நிறுவனங்களிடமிருந்து பிரான்சின் லைக்கா கம்பெனி கணக்கிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை குற்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட பணமாகும். Buzzfeed புலனாய்வின் படி 19-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல பத்து மில்லியன் யூரோக்களை லைக்கா வங்கிக் கணக்கில் கொட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் சுபாஷ்கரணது முன்னால் அம்பானி கூட போட்டி போட முடியாது.
லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.
Buzzfeed புலனாய்வின் படி லைக்கா மொபைல் பிரிபெய்டு அட்டைகளை கள்ள சந்தையில் விற்று அந்த பணத்தை பினாமி நிறுவனங்களின் ரசீதுகளாக மாற்றி பல சட்ட விரோத ரொக்க பரிவர்த்தனைகளை செய்துள்ளது. Buzzfeed தகவல்களின் படி லைக்கா மொபைல் நிறுவனத்தின் சொந்த ஆடிட்டர்களே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 646 மில்லியன் பவுண்ட் அதாவது 55 ஆயிரம் கோடி ரூபாய் லைக்கா மொபைல் கணக்கில் வராமல் பத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். லைக்காவினுடைய வர்த்தக வலைப்பின்னல் சிக்கலானதும், குழப்பமானதும் கூட என்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக்கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்கிறது. அதனுடைய வருடாந்திர வர்த்தகம் உலக அளவில் 1.5 பில்லியன் பவுண்டாகும் – ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் கோடி ரூபாய். ஐக்கிய அரசனா பிரிட்டனில் சட்டபூர்வமான கார்ப்பரேட் வரியை தவிர்ப்பதற்காக அதனுடைய பணத்தை வரியில்லா சொர்க்கமான போர்ச்சுகீஸ் அருகில் இருக்கும் மதீரா தீவுகளுக்கு கொண்டு செல்கிறது.
Buzzfeed Labour MP Tom Blenkinsop told the Huffington Post UK: “The Prime Minister knows his party has received over £420k from a company closely associated with the Sri Lankan regime. He was obviously so concerned that his own MPs were recently prevented from visiting there.
The MP, who has written directly to the Prime Minister, added: “So in the interests of transparency I want to know if the Prime Minister is going to investigate why his party has received over £420k from this company so closely associated with the Sri Lankan government.”
விசாரணையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் லேபர் கட்சி எம்.பியான டாம் பிளென்கின்சாப் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லைக்கா மொபைலிடம் வாங்கிய நன்கொடைகளை முடக்க வேண்டும், அந்த நிறுவனத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரினாலும் கன்சர்வேடிவ் கட்சி அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இடையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 9 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிதல் எட்டு பேருக்கு பிணை கிடைத்து, ஒருவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார். லைக்கா மொபைல் சோதனையில் 1,30,000 யூரோ ரொக்கமாகவும், 8,50,000 யூரோ வங்கிக் கணக்கிலும் கைப்பற்றப்பட்டது. இது போக வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணம் பல மில்லியன் யூரோ இருக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.
சரி, இத்தனை ஆதாரங்கள் இருந்தென்ன? லைக்கா எனும் திருட்டுக் கம்பெனியின் கருப்புப் பணத்தையே தனது ஊதியமாக பெற்றோமென அறம் ஸ்பெஷலிஸ்ட்டான ஜெயமோகன் ஒத்துக் கொள்வாரா? மனப்பால் குடிக்காதீர்கள்!
மோடியை ஆதரித்து அவர் எழுதிய கருப்புப் பணக் கட்டுரையிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் – ஜெயமோகன் கட்டுரை இணைப்பு
மல்லையாவின் கிங்பிஷர் நஷ்டம் அடைவதற்கு காரணம் அவர் பெங்களூரு பெரிதும் வளரும் என்று நம்பி ஏமாந்தார், அதற்கு காரணம் அரசியல்வாதிகளே அவரல்ல என்கிறார். வங்கிப் பணம் கொடுத்து நடந்த பிழைக்கு அனைவரும் கூட்டுப் பொறுப்பு என்பதால் மல்லையாவை தப்பி ஓடிய அயோக்கியன் என்று சொல்வது மூடத்தனம் என்கிறார். அதாவது இது திருட்டு அல்ல தோல்வியடைந்த தொழில் என்கிறார். ஆகவே சுபாஷ்கரனது சபையிலே ஆஸ்தான புலவராக இருந்து அவர் லைக்காவின் குற்றச் செயல்களுக்கு அறம் போட்ட சட்டை போட்டு அழகு பார்ப்பார், எழுதுவார்.
ஆனால் உண்மை அவரது கணினி விசைப்பலகையில் இல்லை. லைக்காவின் குற்றங்கள் கார்ப்பரேட் ஊடகங்களாலும், பல அரசுகளாலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம் வழங்கியிருக்கும் “அபராதம் கட்டி விட்டால் எந்த திருட்டுப் பணமும் முறையான பணமாகிவிடும்” என்ற ஒழுக்கப்படி லைக்கா இன்னும் பீடு நிடை போடுகிறது. ஆனால் அது பீடை நடை என்பதையே மேற்கண்ட விவரங்கள் காட்டுகின்றன.
இதன்படி பார்த்தால் லைக்காவின் தொழிலில் பல்வேறு குற்றச் செயல்கள் இருக்குமென்று தெரிகிறது. அது ஹவாலாவா, மற்ற நிறுவனங்களின் வரி ஏய்ப்பிற்கான உதவியா, போதை பொருள் விற்பனையா, ஆயுத விற்பனையா, புலிகள் உள்ளிட்ட கைவிடப்பட்ட பெருந்தலைகளின் சொத்தா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் செய்யும் அரசியல் நன்கொடைகளும், தைரியமாக பிடிபடும் மோசடிகளும் நிச்சயம் இவர்களது பின்னே பெரும் நிழலான நடவடிக்கைகள் இருப்பதை காட்டுகின்றது.
சரி, இந்த நிழல் உலகைத் தவிர்த்து இவர்களது மொபைல் கம்பெனி எப்படி நடத்தப்படுகிறது?
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்….
– இளநம்பி
(வினவு புலனாய்வு குழு உதவியுடன்)
ஆதாரங்கள்:
அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் சுமார் $3.8 பில்லியன் டாலர் திட்ட மதிப்பிலான வேலைகளை டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள். உள்ளூரில் தொடங்கிய போராட்டம், தேசிய அளவில் விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாகிவிட்டது. அந்த அளவுக்குத் தன் சொந்த மக்களையே அடக்கி ஒடுக்குகிறது அமெரிக்க அரசு.
ஏற்கனவே கடந்த அக்டோபரில்(28.10.2016) நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் தானியங்கி துப்பாக்கிகள் பொருத்திய வாகனங்களில் சென்றிருக்கின்றனர். கண்ணீர் புகை குண்டு, மிளகு கலவை, ரப்பர் குண்டுகள், குதிரைப்படை என அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் போலீசால் கையாளப்பட்டன.
இரவு, பகல் என்று கூட பாராமல் மக்கள் மேல் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் அமெரிக்க அரசின் சட்ட அமலாக்கப் பிரிவு போலீசு அதிகாரிகள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் அங்கே போராடி வருகின்றனர்.
நன்றி: அல் ஜசீரா
கடந்த 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500 – 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள உழைக்கும் சாமானிய மக்களை பெரும் துயரத்தில் தள்ளியது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். இந்த அறிவிப்பு திண்ணும் சோற்றில் மண் விழுந்தது போல் இருந்தது. அன்று இரவு முதல் இருட்டில் கண்ணை கட்டி விட்ட நிலையில் மக்கள் தடுமாறினார்கள். நடுத்தர வர்க்க மக்களுக்கும், அன்றாடம் உழைப்பில் ஈடுபட்டு 500 – 600 – 1000 ரூபாய் கூலி வாங்கி வந்து அரிசி கடையில் நிற்கும் போது இந்த அறிவிப்பு மிகவும் கொடூரமானதாய் இருந்தது. பால் வாங்க வழியின்றியும், அன்று உணவுக்கு வழியின்றியும் உழைத்த பணம் கையில் இருந்தும் வக்கற்றவர்களாக திக்கு முக்காடினார்கள்.
அந்த அறிவிப்பு இதனுடன் நிற்கவில்லை பசியில், நோயில் மடிந்த குழந்தைகள் முதல் பணத்தை மாற்ற கீயூவில் நின்ற முதியவர்கள் வரை 60 பேருக்கு மேல் இறந்துள்ளனர். இந்த சூழலில் புதுவையில் இயங்கி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடியை, பாசிச நடவடிக்கையை மாநில முழுவதும் வங்கியின் வாசலில் கால் கடுக்க நிற்கும் உழைக்கும் மக்களுக்கு அம்பலப்படுத்தி கருப்பு பணத்தின் ஊற்றுக் கண் மோடி தான் எனவே இந்த அரசு கட்டமைப்பை ஒழிக்காமல் கருப்பு பணம் ஒழியாது என பிரச்சாரம் செய்தனர்.
அதன் அடிப்படையில் நவம்பர் 17-ம் தேதி காலை 11 மணிக்கு புதுவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கிக்கு சென்றோம். வங்கியில் நூற்றுக்கணக்கான மக்கள் கால் கடுக்க வேதனையில் கீயூவில் நின்றிருந்தனர். அங்கே மக்கள் அதிகாரம் தோழர்கள் மோடியின் கருப்பு பண நடவடிக்கையை அம்பலப்படுத்தியதும் வங்கியில் உள்ளே இருந்து இரண்டு போலீஸ் ஓடிவந்து பிரச்சாரம் செய்த தோழரை வாயில் கை வைத்து பேசவிடாமல் தடுத்தனர். இங்கே இப்படி பேசக்கூடாது. அனுமதி வாங்கினிங்களா என்றார்கள். அதற்கு அந்த தோழர் மக்கள் துன்பத்தை மக்களிடம் பேசுவதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும், அதுவும் மைக்கு இல்லாமல் தானே பேசுகின்றோம் என்றதும் அதெல்லாம் முடியாது இங்கிருந்து இடத்தை காலி பண்ணுங்க என்று மிரட்டினார்கள்.
போக முடியாது. இது எனது ஊர், எனது மக்கள். இவர்களின் உழைப்பை கொள்ளையடிக்க வந்த திட்டத்தை பற்றி பேசித்தான் ஆகவேண்டும் என்றும் ஜனநாயக உரிமையை தடுத்து அராஜகம் செய்த போலிசை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பேசியதும் இரண்டு போலிசும் உள்ளே ஓடி ஒளிந்து கொண்டார்கள். மீண்டும் தோழர்கள் பிரச்சாரம் தொடங்கி முழுவதும் பேசி முடித்ததும் மக்கள் மத்தியில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த வங்கியில் நிற்கும் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர், போலிசின் அடக்கு முறைக்கு எதிராக துவண்டு விடாமல் துணிவுடன் எதிர்த்து போலிசை ஓட வைத்துவிட்டு மீண்டும் உங்கள் பிரச்சாரத்தை முழுமையாக பேசியது எனக்கு உணர்வை தூண்டியதாக இருக்கின்றது என்றார்.
பேசிய தோழருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து பாராட்டினார். அங்கே நின்றிருந்த அரசு ஊழியர் ஒருவர் அவர் சி.பி.எம் தோழர் என்று அறிமுகம் செய்து கொண்டு ”நீஙகள் பேசியதை கேட்டேன், இது நமது நாடு முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த திட்டம், கீயூவில் நிற்பது தவறு இல்லை என்று நினைத்திருந்தேன். நீங்கள் விளக்கும் போதுதான் புரிந்தது. கருப்பு பணம் மோடியிடம் தான் குவிந்து இருக்கின்றது என்றும், நமது சேமிப்பை கொள்ளையடிக்கதான் இந்த திட்டம் என்று இப்போது விளங்கிவிட்டது” என்று கூறி அவரை வந்து பார்க்க சொன்னார். பாராட்டி சென்றார். மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்று சொன்னார். இந்த பாராட்டு தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து வேறோரு வங்கியின் வாசலை நோக்கி சென்றார்கள்.
நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 11:30 மணிக்கு புதுவை முத்தியால் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்னால் கூடி நின்றிருந்த மக்களிடம் இரண்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரசுரம் கொடுத்து பேசும் போது அங்கிருந்த மக்கள் வங்கியின் முன்னாடி பிளாட்பாரத்தின் சுவற்றுக்கு அருகே வெயிலில் சுருண்டு தயங்கி நின்றிருந்தார்கள் அவர்களிடம் மோடியின் கருப்பு பண பாசிசத்தை பேசும் போது புரிந்து கொண்ட மக்கள் கேள்வி கேட்க வலுவிழந்து இருந்தார்கள்.
அந்த வங்கியில் இரண்டு இரும்பு கேட் இருந்தது வெளி கேட்டில் இரண்டு போலீசு, உள்ளே உள்ள கேட்டில் வங்கி ஊழியர் ஒருவர். யார் போனாலும் விடுவதில்லை ஆனால் பணம் போடபோறேன் என்றால் உள்ளே விடுகின்றனர். பணம் எடுக்க விடுவதில்லை. இந்த முறையை கேட்டறிந்த தோழர்கள் அந்த மக்களை பார்த்து நீங்கள் கேள்வி கேட்காமல் எதுவும் கிடைக்காது, எனவே பணம் வேண்டும் என்று கேளுங்கள் என்றனர். அதற்கு மக்களில் ஒருவர் கேட்டுவிட்டோம் சார், எந்த பதிலும் இல்லை, பணமும் இல்லை என்று சொல்றாங்க சார், போய் போய் வர்றோம் பணமில்லை என்ற பதில் தான் வருகின்றது என்றதும் தோழர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த மக்களுக்கு ஒரு வழிகாட்டாமல் அடுத்த வங்கிக்கு போவது இல்லை என்று.
அதனடிப்படையில் மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்தனர் தோழர்கள். அது கேள்வி கேட்டால் பதில் வரும், போராடினால் பணம் வரும் என்ன செய்யலாம் என்றதும் முதலில் ஒரு பெரியவர் நேத்திலிருந்து வந்து வந்து போறேன் எந்த பதிலும் இல்லை தம்பி உங்களுடன் நான் நிற்கின்றேன் என்று தோழர்களுடன் சேர்ந்தார். அங்கிருந்த பெண்களிடம் பேசியதில் நாங்களும் வருகின்றோம் என்று அங்கிருந்த மக்கள் அனைவரையும் கிட்டதட்ட 55 பேர் இருப்பார்கள் ஒன்று திரட்டி போலிசின் கேட்டை உடைத்து கொண்டு எங்கள் பணம் எங்கே? எங்கள் பணத்தை திருப்பி கொடு என முழக்கமிட்டனர். உடனே போலீசு அவர்களை தடுத்து வெளியில் போங்க இங்க இந்த மாதிரி கத்தக்கூடாது என்று தள்ளினார். மேலும் சத்தம் கேட்டு ஒரு வங்கி பெண் அதிகாரி ஓடி வந்து இங்கு ஏன் சத்தம் போடுரிங்க பணம் இருந்தால் தான் கொடுக்க முடியும் இப்போதைக்கு பணம் இல்லை போய்ட்டு நாளைக்கு வாங்க என்றார்.
தோழர்கள் இப்போ எங்களுக்கு பசிக்குது சோத்துக்கும் குழந்தைக்கு பாலு வாங்கவும் பணமில்லை, எங்க பணத்தை பேங்க்ல போட்டுட்டு நாங்க ஏன் நடுத்தெருவுல நிக்கனும் என்று கேள்வி கேட்டதும் அந்த பெண் அதிகாரி கோவப்பட்டு இப்படி சொன்னா உங்களுக்கு புரியாது எஸ்.ஐ.யை கூப்பிடு என்றதும் மக்களிடம் இருந்து ஒரு குரல் ’அந்த அதிகாரி பொம்பளையை பிடித்து வெளியில் இழு’ என்றதும் “எஸ்.ஐ வந்தா மயிரைப் புடுங்குவாரா? எங்க பணத்தை கேட்டா உங்களுக்கு என்ன நோவுது, நாயே” என்று கூடி இருந்த பெண்கள் திட்டினார்கள். உடனே அந்த பெண் அதிகாரி உள்ளே போய் விட்டார். தோழர்கள் மக்களை மேனேஜர் வரும் வரை பணம் வேண்டும் என முழக்கம் போடுங்கள் என்றதும் அதே போல் மக்கள் போட்ட முழக்கத்தில் உள்ளே வேலை செய்ய முடியாமல் வங்கியின் தலைமை அதிகாரி ஓடி வந்தார்.
என்ன இங்க சத்தம் பணம் இருந்தா உங்களுக்கு தருவோம். இல்லை. மேலும் ஏதாவது பேசனுமா மேல பேசுங்க என்றார். எங்களுக்கு மேல நீங்கதான் இருக்கிறிங்க எங்க பணமும் இங்கதான் இருக்கு எங்களுக்கு எங்க பணம் வேண்டும் இல்லை என்றால் வங்கியை பூட்டு போட்டு எங்களுடன் நடு ரோட்டுக்கு வாங்க என்றார்கள் தோழர்கள். உடனே கொஞ்சம் இருங்க என்று உள்ளே போய் திரும்பி வந்து ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொடுங்க உங்களுக்கு பணத்தை தருகின்றோம் என்றார் அந்த அதிகாரி. மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ’நேற்று முதல் இன்று வரை போய் போய் வருகின்றோம் எந்த பதிலும் இல்லை இந்த வாக்குறுதியை எப்படி நம்புவது’ என்று மக்கள் கேட்க ’உங்கள் எல்லோருக்கும் டோக்கன் ஏற்பாடு செய்கின்றேன். அதன் பிறகு இங்கிருக்கும் எல்லோருக்கும் பணத்தை தருகின்றேன் கொஞ்சம் அமைதியாக இருங்க என்றார்’.
பத்து நிமிடத்தில் டோக்கன் கொடுக்கபட்டது. மக்களிடம் கேட்டார்கள் தோழர்கள் ’மக்களே வங்கி அதிகாரி இருபது லட்சம் ரூபாய் வருவதாய் கூறி நமக்கு டோக்கன் கொடுத்துள்ளார் .நம்பலாமா’ என்றதும் நம்பலாம் என்று அனைவரும் சொன்னார்கள். உடனே தோழர்கள் வேறு வங்கிக்கு போக வெளியே வந்தனர். தோழர்களுக்கு பின்னாடி நான்கு இளைஞர்கள் அண்ணே எங்களுக்கு ஒரு பத்து பேருக்கு டோக்கன் வரவில்லை என்றார்கள். தோழர்கள் சொன்னார்கள் என்னப்பா பணமோ டோக்கனோ எப்படி வாங்க வேண்டும் என்று இப்போதானே சொல்லி கொடுத்தொம். அந்த பத்து பேரையும் சேர்த்து நீங்க கேளுங்க என்றதும் தயங்கினார்கள் .உடனே தோழர்களே போய் அந்த மேனேஜரை பார்த்து என்னங்சார் பத்து பேருக்கு டோக்கன் தராம ஏமாத்தி இருக்கிங்க என்றதும் பதறிப் போய் ஏமாத்தலை சார் டோக்கன் தீர்ந்திடுச்சு எடுக்க போனேன் அதற்குள் ஒரு கம்ப்ளைண்டா இந்தாங்க இத நீங்களே கொடுங்க சார் என்று தோழர்களிடம் கொடுத்தார். இல்லைங்க சார் நீங்களே கொடுங்கள் என்று அதிகாரியை வேலை வாங்கியது மக்கள் அதிகாரம் தோழர்கள், ”டோக்கன் வாங்கிய யாரும் வெளியில் காத்திருக்க தேவையில்லை. அனைவரும் உள்ளே போய் பணம் கொடுத்தால் தான் வெளியே வரவேண்டும். இல்லை என்றால் வரவே கூடாது.
மேலும் போராடாமல் நமக்கு எதுவும் கிடைக்காது. நமது உழைப்பில் உருவான சேமிப்பு கூட கிடைக்காது எனவே போராடுங்கள் மக்கள் அதிகாரமாய்” என தோழர்கள் மக்களுக்கு போராட்டத்தை கற்றுக் கொடுத்துவிட்டு வந்துவிட்டனர். சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டு பேசிய போது ”பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ரொம்ப நன்றிங்க தோழர்களே” என்று அடைய முடியாத சந்தோஷத்தை அடைந்த மாதிரி தோழர்களிடம் நன்றியுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் ஒருவர் மனித உரிமை இயக்கத்தில் இருப்பதாகவும் நீங்கள் செயத முறைதான் சரியானது, நீங்கள் இல்லை என்றால் பணம் இன்று கிடைத்து இருக்காது என்று கூறி பாராட்டி அவரின் தொடர்பு எண் கொடுத்துள்ளார்.
மக்கள் அதிகாரம்
புதுவை
வால்மீகி ராமாயணம்
கம்ப ராமாயணம்
வரிசையில்…
கார்ப்பரேட் ராமாயணம்,
‘அண்ணலும் நோக்கினான்
அதானியும் நோக்கினான்’
வில்லை வளைப்பான்
என
வேடிக்கைப் பார்த்தவர்களின்
விலா எலும்பு
முறிக்கப்பட்டது.
காட்டுக்கு போக வேண்டியவர்கள்
பங்குச் சந்தையில் ஜாலியாக
வீட்டுக்கு போக வேண்டியவர்கள்
வங்கி வரிசையில் மூளியாக!
வோடா போனின் செருப்பு
நாடாளும் நிலையில்
ஓடாத ஆயிரம், அய்நூறால்
மக்கள்
சந்தேக மையில்.
அன்னிய மூலதனத்துக்கு
யாகம்
அண்ணாச்சி முதலுக்கு
சாபம்!
விசுவாமித்திர கட்டளைக்கு
வில் பிடித்து
அய்ம்பத்தாறு அங்குல மார்பொடு
அடியாள் ராமன்.
டிஜிட்டல் வர்ணாஸ்ரமம்
துல்லியமாக
வேலை செய்கிறது,…
வாதமே தேவையில்லை
வங்கி கல்விக் கடனுக்காக
மாணவ அசுரர்களை
சாகடி!
வங்கியே முன்வந்து
வாராக் கடனாக
மல்லையா தேவர்களுக்கு
தள்ளுபடி!
ஆயிரம் தான்
தவமிருந்தாலும்
சம்புகனுக்கு செல்லாது,
ஒரே ஒரு செல்லில்
அம்பானிக்கு செல்லும்!
மறைந்திருந்து
அம்பு விட்டதால்
பாவப்பட்ட
வாலி மட்டும் காலி.
முன்னரே
அருளப்பட்டதால்
பா.ஜ.க. சுக்ரீவர்களுக்கு
ஜாலி!
காவி ஜடாயுக்கள் கையில்
கட்டுக் கட்டாக
புது இரண்டாயிரம்
ஆவியிழந்து துடிக்கும்
சிறுதொழில்களை
கொத்துக் கொத்தாக
பறிக்கும் பயங்கரம்.
சீதை
சுவிஸ் வங்கியில்
அனுமன் கையில்
பார்ட்டிசிபேட்டரி
கணையாழி
ராமன்
அம்பை விடுவதோ
பாரத வங்கியில்
என்னடா இது
இராமாயணம் என்றால்
“கார்ப்பரேட் யுகத்தில்
இதுதான் கதை
காவலுக்கு நானிருப்பேன்
இனத்தையே வதை”- என
முன்னிற்கும் வைகோ.வைப் பார்த்து
மூர்ச்சையாகிறான் வீடணன்.
சீதையை மீட்க
சிறிது காலம்
சிரமப்படத்தான் வேண்டும் – என
சிரமமே இல்லாமல்
நிதி மூலதன ரிஷிகள்
பட்டாபிஷேக கொண்டாட்டத்தில்…
சீதையை மீட்க
ஊரையே கொளுத்துகிறான் அனுமன்…
அவர்களுக்கு
அள்ள அள்ளக் குறையாத அயோத்தி
அகப்பட்டவர்களுக்கு
‘அய்யோ… தீ’!
– துரை. சண்முகம்
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
ரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக. ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு செட்டாகாது, சீரியஸா எழுதற விசயமுன்னு சொன்னீகளே, இதுவும் அப்படிப்பட்டதுல்லான்னு கேட்டேன். “இல்லை அண்ணாச்சி இது சிரிச்சுக்கிட்டே எழுதுற விசயம், சிரிங்கன்னு” டக்குனு போன வைச்சுட்டாங்க.
எக்குத்தப்பா ஏதாவது எழுதி நம்மள மாட்டுறாங்களோன்னு ஒரு சம்சயம் (சந்தேகம்) மனசிலுண்டு. சரி, வுடுங்க பாத்துக் கிடலாம். காந்தியே செத்துட்டாரு, சிவாஜக்கே சில வெச்சுட்டாங்க!
நோட்டுக்கு வேட்டு வெச்சுட்டாரு மோடி அவரு தாடிக்கேத்த கேடின்னுட்டு தேசமே கானாவுல அறம் பாடிக்கிணு கீறப்போ உச்சநீதிமன்றம் இப்புடி ஒரு தீர்ப்ப அவுத்து வுட்டுறுக்கு!
நவம்பருல நோட்டெல்லாம் செல்லாதுன்னு பத்து இலட்ச ரூபா கோட்டு கனவான் சொன்னப்பவே நம்ம சேட்டன் கவுதம் வாசுதேவ மேனன் (பெயரை சின்னதா வைக்க கூடாதா ராசா?) உசாரா விரல்லயே வித்தை காட்டுற தம்பி சிம்பு படத்தை ரிலீஸ் பண்ணாம பூட்டி வைச்சிருக்கணும். ஆசை யார வுட்டுதுங்குற கணக்கா படத்த வுட்டாக. மல்டி பிளக்ஸ்ல ஆரம்பிச்சு மகாலெட்சுமி தியேட்டர் வரைக்கும் ஆளில்லாம வாச்சுமென்னெல்லாம் அன்னைக்கு ஒரு கட்டு கணேஷ் பீடியை அதிகம் பிடிச்சாகளாம்.
கபாலியில 1000-ம் 500-ன்னு ஏமாந்தப்பவே நம்ம பயலகளெல்லாம் இனி தமிழ் ராக்கர்ஸ்தான் நம்மோட தியேட்டர்னு சுடுகாட்டுல சத்தியம் எடுத்துட்டு அன்னாடம் 12 மணி ராவுல டவுண்லோட போட்டு விட்டுட்டானுவ. இதுல தியேட்டர்ல தேசிய கீதம் பாடு இல்லேன்னா ஓடுன்னு சொன்னா எவம்டே சினிமா பாக்க வருவான்?
ஏம்பா நீதிபதிகள்ள, இந்த மிஸ்ரா, ராய் இவுகளெல்லாம் எடுக்க மாட்டமோன்னு ஒரு ஃபத்வா போட்டா என்னப்பா? ஒருத்தரு கோவில்ல வேட்டிய கட்டு, தாவணிய போடு இல்லேன்னா உள்ள உடமாட்டோம்குறாரு. இன்னொருத்தரு அய்யமாரத் தவிர மத்தவனெல்லாம் கருவறைக்குள்ள வராதங்குறாரு. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேலு அண்ணாச்சி சொன்னா அதுல சிரிக்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கு. ஆனா உயந்த சாதிக்காரவுக கொலை செய்ய மாட்டாங்கன்னு வெண்மணியிலேந்து, பன்வாரி தேவியோட ராஜஸ்தான் வரை சொல்ற நீதிபதிய பாத்தா அதுல விசமும் வில்லங்கமுமுல்லா நெம்பி வழியிது!
தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய்ன்னு உச்சியில நீதிய பதுக்கி வச்சுருக்கிற இரண்டு பேருதான் இப்ப தியேட்டர்ல ஜனகனமண வேணுமுன்னு ஒத்தக்கால்ல உத்தரவு போட்டுருக்காக. தீர்ப்பு சொல்ற அன்னைக்கு அவங்க வீட்டு குழந்தைங்க ஏதும் மோடி அமித்ஷாவ பாத்து மிரண்டு கத்தி ஐயாமாரு மூட அவுட்டாக்கிட்டாங்களோ தெரியல.
அந்த உத்தரவுல இன்னா சொல்லக்கீறாங்கன்னா:
இதை தியேட்டரு ஓனருங்க செய்யலேன்னா நீதிமன்ற வழக்கு போடுவோமுன்னு மிஸ்ராவும், ராயும் மாட்ரிக்ஸ் படத்துல வாற ஏஜெண்ட் ஸ்மித் கணக்கா கண்டிசனாக சொல்லிட்டாங்க.
ஏற்கனவே மகாராஷ்டிர சட்டசபையில பாரதமாதா ஜெய் சொல்லலேன்னு ஒரு பாய வெளியேத்தி அலப்பறை பண்ணுன பா.ஜ.க-மாரு இதுதான் சாக்குண்ணு உடனே நடைமுறைபடுத்துரோம்னு துள்ளிட்டாய்ங்க! ஏ.டி.எம்லேயும், பேங்குலயும் ஜனமான ஜனம் மோடி வரட்டும் பாத்துக்குறோம்னு குதிச்சப்போ, எல்லையில வீரனுங்க சாவுற போது ஏ.டி.எம்ல செத்தா என்னடான்னு கல்யாணராமன்லேர்ந்து, சுமன் சி ராமன் வரைக்கும் சாபம் மேல சாபம் போட்டு மெய்யாலுமே அது பலிச்சும் போச்சு!
இப்ப தியேட்டர்ல ஜயஹே பாடனும்முனு ஒரு விவாதத்தை ஏத்தி விட்டா ஃபேஸ்புக்குக்கும் வாட்ஸ்அப்க்கும் வாக்கப்பட்ட பயலுவ அதையே பேசிப் பேசி நோட்டு விவகாரத்தை மறந்துருவாணுகள்ளா? ஐடியான்னா அது அமித்ஷாம்தாடே!
போதாக்குறைக்கு கலிங்கப்பட்டி ஜமீனுகிட்ட மைக்க கொடுத்துட்டா நாடு பூறா பதினெட்டு பட்டிக்கும் தேசிய கீதத்த வகுப்பெடுத்து வாய்க்கால் வெட்டி அதுல கப்பலே உடுவாருல்லா! அப்பாலிக்கா அந்த கப்பல்ல ஈழம் வேழம்ணு முழங்குனாருன்னா பெறவு எதுக்குடே தியேட்டருக்கு போவணும்! ஆதித்யா சானலுக்கே நம்ம வைகோ அண்ணாச்சிதாம்டே போட்டி!
மோடிக்கு வெற்றி, செல்லாத நோட்டுக்கு மக்களோட ஆதரவுன்னு ஜூ.வி-லேர்ந்து தந்தி டி.வி வரைக்கும் சளைக்காம பேசுற பயலுவ இனி ஜனகனமணவ வைச்சு கம்பெனி ஆர்ட்டிஸ்ட்ட கத்த வைச்சு ஒரு மாசம் ஓட்டுவாணுகள்ளா!
என்ன இருந்தாலும் தேசம்னாலும், தேசபக்தின்னாலும், தேசிய கீதம்னாலும் சும்மாவாடே! இவுணக பேலுறதும் மோளுறதும் அடைச்சுப் போச்சுன்னா பாரத மண்ணே வணக்கமுன்னு ஆர்.எஸ்.எஸ் காரனுவுகளோ இல்லை சமூக ஆர்வலருண்ணு காவி ஜட்டிய மறைச்சுக்கிணு வாரவனையும் சாக்கடையில கைய வெக்கச் சொல்லு பாப்போம்!
பாதாளச் சாக்காடையில இறங்கி ஒரு தபாவாச்சும் முங்கி எந்திரிக்கிறவன்தான் தேசபக்தன்னு ஒரு சட்டம் போட்டா என்னடே நடக்கும்? தந்தி டி.வி பாண்டே பய சிட்னிக்கு ஓடிருவான். புதிய தலைமுறை பச்சமுத்து பாங்காக் பறந்துருவான். பா.ஜ.க எச்ச ராஜா பெல்ஜியத்துக்கு கிளம்பிருவான். மோடி, அமித்ஷாவெல்லாம் என்னத்துக்கு தூரமான்னு லாகூருலயே குதிச்சிருவான்.
ஏலே கத கேக்குற தம்பிகளா நாஞ் சொல்லுறது கத இல்லடே. பர்மாவுல அந்தக் காலத்துல துப்புறவு தொழிலாளிங்க ஸ்டிரைக் பண்ணுனுப்ப, அரசாங்கமே விரட்டியும் கிளம்பாத செட்டியாருங்கல்லாம் இனிமே அவங்க அவங்க ஆயை பாக்கெட்டுல கட்டி ரங்கூன வுட்டு தூரமா போட்டுட்டு வரணும்னு அரசாங்கம் சொன்னப்போ ஆள வடுங்கன்னு சென்னைக்கு கப்பலு ஏறிட்டாங்கடே.
சரி அத வுடு, இப்ப என்ன தேசிய கீதம் பாடணும்.
பாரத மாதான்னா யாரு, வேளாங்கண்ணி மாதிரி வடக்கத்திய மாதாவான்னு கேக்குற பயலுக கூட இன்ன தேதிக்கு சன்னி லியோன, டெஸ்க்டாப்ல கோயில் கட்டி கும்புடுதாணுக! அதான் நம்ம மிஸ்ராவும், ராயும் ரோசனை பண்ணி தேசத்துக்கு ஏதாச்சும் செஞ்சு கீதத்தை செஞ்சுரணும்னு முடிவு பண்ணிட்டாக.
சரிங்க ஆபிசர். எதுக்கு அத தியேட்டரோட பூட்டணும். பூரா இடங்கள்ளயும் திறந்து வுட்டா பெறவு தேசபக்தி பூத்துக் குலுங்கும்லா? அதுக்குத்தான் நொம்ப ரோசனை பண்ணி சில ஐட்டத்தை சொல்லிட்டு போறேன், பாத்து செய்யுங்க!
பாயிண்ட் நம்பர் 1: அப்பல்லோ தொட்டு அரசாங்க ஆஸ்பத்திரி வரை அல்லா ஆபரேசன் தியேட்டர்லயும் (இதுவும்தான் தியேட்டர்தாம்டே) கத்திய தொடுறதுக்கு முன்னாடி ஜனகனமண பாடணும்னு ஆக்கணும். சரி எப்படியும் நாம பொழைக்க மாட்டோம்னு நினைக்கிற நோயாளியெல்லாம் இதுதான் கிளைமாக்ஸ்னு புரிஞ்சுகிட்டு புண்ணியமா போய்ச் சேந்துருவான்.
பாயிண்ட் நம்பர் 2: ராவுல 9 மணிக்கு தம்பி பாண்டேவும், அண்ணே ஆர்னாப்பும் டி.வியில கத்துற விவாதத்த தேசிய கீதத்த போட்டு ஆரம்பிச்சா ரெண்டு பயபுள்ளைகளுக்கும் வேலை ஈசியா முடிஞ்சிரும். பேச வராவங்கள்ள யாரு பாடுறா, யாரு வாயசைக்கிறா, யாரு ஒப்பேத்துறான்னு கண்டுபிடிச்சா கிளைமேக்சுல தேசிய கீதம் தெரியாத நீதான தேசத்துரோகின்னு அதுக்கு ஆதராம புட்டேஜ்ஜ போட்டா போச்சு!
பாயிண்ட் நம்பர் 3: ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரிசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
பாயிண்ட் நம்பர் 4: டாஸ்மாக் பாருல ஒரு மணிநேரத்துக்கு ஒரு வாட்டி தேசிய கீதம் போடணும். அத போடும் போது ஸ்டெடியா நின்னா ஒரு குவார்ட்டர் இனாம்னு ஒரு அறிவிப்பு போட்டா, மொத்த தமிழ்நாடே ஒரு ராத்திரியிலேயே தேசிய கீதத்த கரைச்சு குடிச்சு இந்தியாவுக்கே முன்மாதிரியா ஆயிருமுல்லா! பெறவு குடிச்சுட்டு சீனு போடுறவனெல்லாம் ஒரு குவார்ட்டர் இனாம்ங்கிறத மனசுல வெச்சுகிட்டு பவிசா நடப்பாம்லா!
பாயிண்ட் நம்பர் 5: இந்தியா ஃபுல்லா அல்லா வூட்டுங்கள்ளேயும் தினமும் ஒரு வாட்டி அய்யருமாறு காயத்ரி மந்திரம் மாதிரி தேசிய கீதம் பாடணும். யாரு இத போடாம டபாய்க்கிறாங்கண்ணு ஒரு சேட்டிலைட் கோட 2000 ரூபாய் நோட்டுல போட்ட மாதிரி ஓட்டுக்குள்ளயோ கூரைக்குள்ளயோ போட்டா டேட்டா பேசுல டிமிக்கி குடுக்குறவனுங்க தெரிஞ்சுருவாணுங்க. அப்பால மாசத்துக்கு ஒரு தபா இப்புடி தேசிய கீதம் பாடாத வீடுங்கள்ள திருடங்க புகுந்து திருடலாம், போலீசு வராது, கேஸ்ஃ ஆகாதுன்னு ஒரு அறிவிப்பு கொடுத்துப் பாரு! பெறவு 30 நாட்கள்ள தேசிய கீதத்த பாராயணம் செய்வது எப்படின்னு புக்லேர்ந்து, டிரைனிங் சென்டர் வரை பிசினஸ் பிச்சுகிடுமுல்லா!
பாயிண்ட் நம்பர் 6: ஒரு குடும்பத்துல அத்தனை பேரும் தேசிய கீதத்த சரியா பாடிக் காம்பிச்சா அவுங்க ஆதார் கார்டுல ஒரு ஸ்டார ஏத்தி, இந்த ஸ்டார் இருந்தா சரவணா ஸ்டோர்லேந்து, நல்லி குப்புசாமி வரை அல்லாக் கடைங்கள்ளயும் ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா இனாமுன்னு சொன்னா இன்னா நடக்கும்? பெறவு டப்பா பத்தலேன்னு சீனாவுலேந்துதான் இறக்கணும்.
பாயிண்ட் நம்பர் 7: ஆன்சைட் போக விரும்புற நம்ப ஐ.டி தம்பிமாரு பத்து கிராமத்துல நூறு பேருக்கு தேசிய கீதத்த கத்துக் கொடுக்கணும். கொடுத்தா அமெரிக்கா நிச்சியமுன்னு ஒரு அறிவிப்பு போடு! பயபுள்ளைக ஃபேஸ்புக்க காலி பண்ணிட்டு கிராமம் கிராமமா சுத்துவாணுகல்லா!
பாயிண்ட் நம்பர் 8: மாட்டுக்கறி துன்னுறவணுங்க ஒரு நாளைக்கு ஐஞ்சு வாட்டி தேசிய கீதத்த பாடணும், துன்னாதவனுக்கு கிடையாதுன்னு சொல்லிப் பாரு! வேற வழியில்லாம நாட்டுக்காக மாட்ட தியாகம் பண்ணுவாங்க. நாமளும் நாடயும், மாடயும் காப்பாத்துனமாறி ஆச்சுல்லா?
ஃபைனல் பாயிண்ட் நம்பர் 9: அல்லாரு வூட்டுலயும் படுக்கும் போது கண்டிசனா தேசிய கீதம் பாடணும்னு அதுக்கும் சாட்டிலைட் கோடு போட்டு பாடலேன்னா டி.வி கட் பண்ணிருவோம்னு சொல்லு! பயபுள்ளைக கந்தசஷ்டிக் கவசம் மாறி பிச்சு மேஞ்சுருவாங்கல்லா? சீரியலு பாக்காம நம்ம மாதர் குலங்க வாழ முடியாதுல்லா?
– காளமேகம் அண்ணாச்சி
எங்கே புதிய 500 ரூபாய் நோட்டு? பணத்தை இழந்த பிறகு அனைவரும் கேட்கும் கேள்வியிது. நாம் அனைவரும் வாட்ஸப்பிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் அதைத் தொட்டுப் பார்த்ததில்லை. காரணம் இன்றியமையாத அந்தப் பண மதிப்பை அச்சிடுவதில் இருக்கும் மொத்த நிர்வாகக் குளறுபடிகள்.
தாமதத்திற்கான காரணத்தை ஆராயும் முன் 500 ரூபாய் பணத்தாளின் இன்றியமையாமையைப் பார்த்து விடுவோம். செல்லாக்காசுத் திட்டத்தை நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிக்கும் முன்னர் 500 ரூபாய் மதிப்பிலான 1,660 கோடி பணத்தாள்கள் இருந்தன. ஒட்டுமொத்த நாணய மதிப்பில் பாதிக்கும் அதிகமாகப் புழக்கத்திலிருந்த அதன் மதிப்பு 8.3 இலட்சம் கோடி ரூபாயாகும். எனவே அது புழக்கத்தில் இருந்த இன்றியமையாத ஒரே நாணய மதிப்பாகும்.
அதிர்ச்சியூட்டும் விதமாக மோடியின் அறிவிப்பிற்குச் சற்று ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் புதிய 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் பணித் தொடங்கியது. இரண்டு அச்சகங்களால் கடந்த மூன்று வாரங்களில் 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அச்சடிக்க முடிந்தது. இயல்பு நிலைமைக்குத் திரும்பக் கூடுதலாக ஒரு 1,659 கோடி பணத்தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் பணத்தாள்களில் வெறும் 0.06% மட்டுமே ரிசர்வ் வங்கியால் மாற்ற முடிந்தது. இவ்வளவு பணத்தாள்களையும் அச்சடிக்க எத்தனை காலமாகும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
இந்தக் கேள்விக்கு விடை தேடும் பொருட்டு நாசிக்கில் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் நாணய நோட்டு அச்சகத்திற்கு(CNP) சென்றோம். CNP ஐ தவிர மத்தியப்பிரதேசத்தின் தேவாஸில் உள்ள நாணய நோட்டு அச்சகத்திலும் 500 ரூபாய் பணத்தாள் அச்சிடப்படுகிறது. இரண்டு அச்சகங்களும் நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தை (Security Printing and Minting Corporation of India) சேர்ந்தவை.
மேலும் 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களையும் ரிசர்வ் வங்கி இயக்குகின்றது. நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பணத்தாள்களை அச்சிடும் பணித் தொடங்கியது. நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் இந்த அச்சகங்கள் வேகமாக அச்சிடும் திறன் படைத்தவை. 2000 ரூபாய் பணத்தாளை அச்சிட நல்ல இயந்திரங்களைக் கொண்ட இந்த அச்சகங்கள் முன்கூட்டியே பணிக்கப்பட்டதால் மோடி அறிவிப்பிற்குப் பிந்தைய 48 மணி நேரத்திற்குள் வங்கிகளுக்கு அந்தப் பணத்தாள்கள் கிடைத்தன.
பிறகு அதே போல 500 ரூபாய் பணத்தாளை அச்சிட ரிசர்வ் வங்கியையும் நிதியமைச்சகத்தையும் தடுத்தது எது? 7 வாரங்களுக்குப் பிறகே 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடத் தொடங்கப்பட்டது ஏன்? மிக இன்றியமையாத நாணயப் பணத்தாள்களை அச்சிடும் பணி பழைய தொழில்நுட்பங்களைக் கொண்ட இரண்டு அச்சகங்களுக்குக் கொடுக்கப்பட்டது ஏன்? யார் அந்த முடிவை எடுத்தது?
CNP அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும் 500 ரூபாய் அச்சடிப்பில் ஈடுபடும் சில ஊழியர்கள் பேரை வெளியிடாத பட்சத்தில் பேச ஒத்துக் கொண்டனர். ரிசர்வ் வங்கியின் உத்தரவை வெறுமனே தாங்கள் நிறைவேற்றியதாக வேலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கூறினர். காலதாமதத்திற்கும் அதைத் தொடர்ந்தக் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
வடிவமைப்பு, தாள் மற்றும் அனுமதி எங்களுக்குக் கிடைத்த பின்னர் புதிய நோட்டிற்கான வேலையைத் தொடங்கினோம். கள நிலவரங்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்குத் தெரியாது. ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. பணத்தாள்களை வடிவமைத்தல் மற்றும் அச்சடிக்கும் தொழிலில் 1925-லிருந்து நாங்கள் இருக்கிறோம்.. ஆனால் வடிவமைப்பு முதல் அச்சிடுதல் வரை அனைத்தையும் ரிசர்வ் வங்கியே செய்ய இப்போது விரும்புகிறது. ஆனால் அது கட்டுப்படுத்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.
பல்வேறு ஊழியர்களைச் சந்தித்த பிறகு SPMCIL ற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே முரண்பாடு இருந்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீண்டக்காலமாகவே சண்டை நடந்து வந்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரரான கே.சி.சக்ரபர்த்தி தி குயன்ட் ஊடகத்திடம் (The Quint) உறுதிபடக் கூறினார். 500 ருபாய் பணத்தாள்களை அச்சடிப்பதில் உள்ள காலதாமதத்திற்கு நிதியமைச்சரை அவர் குற்றம் சாட்டினார்.
SPMCIL ன் அச்சகங்கள் திறமைக்குப் பெயர் பெற்றவை அல்ல. அவை சற்று மந்தமான அச்சகங்கள். ஆனால் SPMCIL நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை என்பதுதான் முக்கியமான விடயம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தலைவர் இல்லாமல் எப்படி அவர்கள் இருக்க முடியும்? விரைவான முடிவுகளை எடுக்க யார் இருக்கிறார்கள்?
– கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
2016, ஜூலையில் எம்.எஸ்.ராணா அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்படும் வரையில் அந்நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக நிதியமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள பிரவீன் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் மற்றும் ஒட்டுமொத்தக் குழப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது பெயர்களைச் சொல்ல மறுத்துவிட்டார் சக்ரபர்த்தி. ஆனால் நிதியமைச்சரை குற்றம் சாட்டினார்.
யார் காரணம் என்று நமக்குத் தெரியவில்லை. அஃது ஆய்வுக்குரியது. நியமனம் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும். ஒட்டுமொத்த நடவடிக்கையையும் சரியான வழியில் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.
– கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
அதே கேள்வியை நிதியமைச்சகத்திடம் தி குயன்ட் கேட்ட போது அவர்கள் பதிலைத் திருப்பிப் போட்டார்கள்.
பணி நியமன நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிலைமைகளைச் சமாளிக்கும் திறமை இருக்கிறது. அறிவிப்பு திடீரென்று வந்தது. சூழ்நிலைகள் படிப்படியாகச் சீராகி வருகின்றன. சில பகுதிகளில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவிற்குப் பிரச்சினைகளைச் சமாளித்து விட்டோம்.
– டி.எஸ்.மாலிக், செய்தித் தொடர்பாளர், நிதியமைச்சகம்.
ரிசர்வ் வங்கிக்கும் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் அச்சகத்திற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு இருக்கிறது. பணத்தாள்களை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை. இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. தகவல் தொடர்பு இடைவெளிப் பிரச்சினை இருந்ததா? இந்தப் பணத்தாள்களை அச்சடிக்க மந்தமான அச்சகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? இந்த முடிவுகளுக்குப் பொறுப்பானவர் யார்?
ரிசர்வ் வங்கி பேசினால் இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவைக்கு விடை கிடைத்து விடக் கூடும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு தி குயன்ட் அனுப்பிய கேள்விப்பட்டியலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
(புதிய பணத்தாள் அச்சடிக்கும் பணியில் இருக்கும் கூத்துக்குளைப் பார்த்தால் இதில் ஏதோ சதித்திட்டம் இருக்க வேண்டும். அல்லது இவர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். செலவழிக்கவே முடியாத 2000 ரூபாய் நோட்டு கிடைத்து, செலவழிப்பிற்கு அத்தியாவசியமான 500 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை. ஒரு சதவீதம் கூட புதிய பணத்தை அளிக்காமல் மோடி அரசு நாட்டு மக்களை எப்படி சித்திரவதை செய்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று
– வினவு)
தமிழ்நாடு தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான ஏழு மில்களிலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நூலும் துணியும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இனிமேல் உற்பத்தி ஆகும் நூலும் துணியும் இதனுடன் சேர்ந்து நெருக்கடியை கூடுதலாக்கப் போகிறது.
இதனால் வாரத்தில் ஒருநாள் (ஞாயிறு) விடுமுறை விடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை லே ஆப் விடப்பட்டு இரண்டு நாட்கள் விடலாம் எனும் கருத்தில் நிர்வாகம் உள்ளது.
ஏறத்தாழ நூற்றுக் கணக்கான தினக்கூலிகள், கேசுவல் அப்ரண்டீஸ் என பல்வேறு பெயர்களில் உள்ள, பல பத்தாண்டுகள் வேலை செய்த ஆண் – பெண் தொழிளாளர்கள் வேலை இல்லாமல் அனாதைகள் போல தெருவில் நிற்கின்றனர். திரும்பப் பெற முடியாத தங்களது இளமையை உழைப்பை என் டி சி-க்கு அர்ப்பணித்தவர்கள். இருண்ட எதிர்காலத்தில் உள்ளனர். மண்டல சங்கம் இவர்களுக்காக போராடத் தயாராக உள்ளது.
மோடி அரசின் 500 / 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததின் மூலம் நூல் விற்பனை மேலும் சரிந்துள்ளது. அடுத்து வரவிருக்கின்ற GST வரிவிதிப்பின் மூலம் என் டி சி – யின் நூல் விற்பனை அதல பாதாளத்துக்கு போக உள்ளதை அனைவரும் அறிவோம். இதனால் என் டி சி-யில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஆபத்து வந்து விட்டது. மொத்தமாக மூன்று மாதத்திற்கு மூடப்படலாம். நூல் மேலும் தேக்கமடைந்தால் ஆறு மாதத்திற்கும் மூடப்படலாம். இதன் அடுத்த கட்டமாக ஆலை மூடலும் வர வாய்ப்பு உள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களும் கேசுவல் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும் இணைந்து புரட்சிகர சங்கமாக அணி திரண்டால் இதனை மாற்றி அமைக்க முடியும்.
ஆலைகள் மூடினால் நல்லபடியாக VRS வாங்கி நைசாக வெளியே செல்லலாம் என சில பேர் நினைக்கலாம். சங்கம் பலமாக இருந்து போராட்டம் தீவிரமாக நடந்தால் தான் மேற்படி மதியூகிகளும் பலன் பெற முடியும் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
28.10.2016 அன்று மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.
ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை மூடல் , சேலம் உருக்காலையின் கழுத்தில் கத்தி தொங்குவது, LIC-யை விற்பது, வங்கிகளை மூடுவது போன்ற அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் என் டி சி-க்கு வரவிருக்கும் ஆபத்தை உறுதிப்படுத்துகிறது. ஆலை மூடல் எல்லாம் வராது என்று திண்ணை தூங்கிகள் ஜல்லி தட்டுவதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஆலை மூடல் ஆபத்தை ஒட்டுக் கட்சிகளால் தடுத்து நிறுத்தவே முடியாது. தொழிலாளர்களுக்கு ஏற்படும் எந்த வித ஆபத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் நமது கோவையில் அத்துனை ஆலைகளும் மூடப்படுவதற்கு இவர்களே காரணம்.
என் டி சி-யில் உறுப்பினர் சேர்க்கைக்காகவும் அங்கீகாரத் தேர்தலில் ஒட்டுக்காகவும் பிரியாணி, பிராந்தி, பால்குக்கர், வேட்டி, சேலை கொடுத்தது யார்? தொழிற் சங்கத்தை கேவலப்படுத்தியது யார்? டாஸ்மாக் பார்களில் உறுப்பினர் சேர்க்கையும் ஒட்டு வேட்டையும் நடத்தியவர்களுக்கு உரிமைகள் பறிப்பு குறித்து போராட முடியுமா? முடியாது.
உறுப்பினர் சேர்க்கைக்கும் , ஓட்டு வாங்குவதற்கும் பணம் கொடுக்காத ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும் தான். புரட்சிகரமான தத்துவத்தால் ஒளியூட்டப்பட்டு வர்க்கப் போராட்டத்தை செயல் துடிப்புடன் நடத்தும் சங்கம் நமது சங்கம் மட்டும் தான்.
தமிழ் நாட்டிலேயே இந்த ஆண்டும் கூடுதலான சதவீத போனசை கோவையில் பெற்றுத் தந்தது நமது சங்கம் தான். நான்கு ஆண்டுகளாக நமது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. என் டி சி-யில் போனஸ் அரியர்ஸ் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஒரே சங்கம் மண்டல சங்கம்தான்.
தென் இந்தியாவிலேயே நமது சங்கம் மட்டும் தான் அரியர்ஸ் கேட்டு வழக்கு போட்டுள்ளோம் . வழக்கு எண் W.P. NO.1 7395/2016 – Date : 07-04-2016. தொழிற்சங்கப் பாரம்பரியம் எனப் பேசுகின்ற கேரளாவும் வழக்கு போடவில்லை.
இதில் நாம் அடையப் போகும் வெற்றி தென் இந்தியாவில் உள்ள எல்லா என் டி சி தொழிலாளர்களுக்கும் கூடுதலாக ரூ.3500/- கிடைக்கும். தினக்கூலித் தொழிலாளர்களுக்கு மீண்டும் என் டிசி-யில் வேலை வாய்ப்பு பெற முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம். தேங்கி நிற்கும் நூலையும் துணியையும் விற்க முடியுமா எனக் கேட்டால் விற்க முடியும் என்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமையும் என் டி சி மில்களை மூடுவிழா நடத்தாமல் ஒட்ட முடியுமா என்றால் முடியும் என்கிறோம். என் டி சி ஆலை மூடல் சதியை முறியடிக்க முடியுமா எனக் கேட்டால் நிச்சயம் முடியும் என்கிறோம். மத்திய அரசை எதிர்த்து வெற்றி கொள்ள முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம்.
இது எப்படி சாத்தியமாகும் என்று நல்ல உள்ளம் படைத்த போராட்டக் குணம் கொண்ட தோழர்கள் கேட்கலாம். அவர்கட்கு எமது பணிவான பதில் இதுதான். டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களை பாலைவனமாக்க வந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தை விவசாயிகள், அமைப்புகள், தமிழக மக்கள் ஆகியோர் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசை பின் வாங்க வைத்தனர். இதன் விளைவாக 10-11-2016 அன்று தமிழகத்தில் மீத்தேன் திட் டம்
ரத்து என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
18.04.2016 அன்று இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடி வென்றார்கள். தொழிலாளர்களது பி.எப். சேமிப்பை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க சட்ட விதிமுறைகளை திருத்தம் செய்தது மோடி கும்பல். இதற்கெதிராக போர்க் கோலம் பூண்டனர் பெங்களூர் தொழிலாளர்கள். துப்பாக்கி சூடு , தடியடி, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர். மோடி + கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுச் சதியை முறியடித்தனர்.
போராடினால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை என் டி சி தொழிலாளர்களாகிய நாமும் உணர்வோம்.
ஆகவே என் டிசி-யில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், கேசுவல் தினக்கூலித் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் இணைந்து போராட்டக் களம் காண்போம் என அறைகூவல் விடுக்கிறோம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நிகழ்ச்சி நிரல்:
உரைகள்:
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு 96297 30399
ஏ.டி.எம். வரிசையில் எனக்குப்பின் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கையில் ஒரு 100 ரூபாய்த் தாளும் ஒரு ஏ.டி.எம். அட்டையும் இருந்தது. முகத்தில் கலக்கம். விழிகள் அலைபாய்ந்தபடி இருந்தன. நான் அவரைப் பார்த்ததும், ‘இந்த ஒரு நோட்டுதான் தம்பி இருக்கு. பொண்ணுக்கு வைரல் ஃபீவர். இருந்த காசை வெச்சு டாக்டர்கிட்ட காட்டிட்டேன். மருந்து வாங்கணும்னா 200, 300 ஆகும். அதான் எடுக்க நிக்கிறேன்’ என்றார். பரிதாபமாக இருந்தது.
வரிசை அசைந்து நகர்ந்தது. ஏ.டி.எம். காவலாளி, ஒருவர் ஓர் அட்டையை மட்டும் பயன்படுத்தி பணம் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். அவர், இதை உறுதியான குரலில் அழுத்திச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை முந்தைய நாள் வேறொரு ஏ.டி.எம்-மில் கண்டேன். அந்தக் காவலாளியை ஆங்கில மற்றும் தமிழ் கெட்டவார்த்தைகளால் திட்டினார் ஒரு நடுத்தர வர்க்க ஆசாமி. அதைப்போன்ற அனுபவம் இவருக்கும் இருக்கக்கூடும். அதனால், இவரது குரலில் பணிவு கூடுதலாக இருந்தது.
எந்த நிமிடமும் பணம் தீர்ந்துவிடக்கூடும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. எனக்குப்பின்னே நின்ற பெண் கையில் இருந்த 100 ரூபாயை இறுக்கி கசக்கிப் பிடித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான போரில் தானும் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. இருப்பினும் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் அவரைப் பார்த்தேன். பேரிடர் நேரங்களில் புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு மனிதர்களுக்கு காரணங்கள் தேவைப்படுவது இல்லை.
‘புள்ளைய மாமியார்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்ப்பா. அது பாவம், மாவு கடை வெச்சிருக்கு. கடையைப் பாக்குமா? உடம்பு சரியில்லாத புள்ளையப் பாக்குமா? நானும் பணம் எடுக்க இந்த ஏரியா பூரா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏ.டி.எம்-முலயும் துட்டு இல்ல. துட்டு இருந்தா இவ்வளவு கூட்டம்’ என்றார்.
பிறகு வரிசை நகர்ந்து, எனக்குமுன்னே நான்கு பேர்களாக இருந்தபோது பணம் முடிந்துபோய் அனைவரும் வேறுவேறு ஏ.டி.எம்.களைத் தேடி வெவ்வேறு திசைகளுக்கு ஓடினோம். அந்தப் பெண் கேவலமான கெட்டவார்த்தைகளால் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை திட்டியபடி நகர்ந்தார்.
செல்லும் இடம் எல்லாம் செல்லாக்காசு விவகாரத்தில் ஏதேனும் பாதிப்பா என்பதை விசாரிக்கிறேன். என் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டுக்கறி கடைக்காரரிடம், நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் விசாரித்தபோது, பாதிக்குப் பாதி விற்பனை குறைந்துவிட்டதாகச் சொன்னார். வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்கு ஆடுகள் விற்பனைசெய்யும் நிலையிலிருந்து, வெறும் ஒரு ஆடு என்ற நிலைக்கு வந்தார். ‘இந்த யாவாரமும் ஆயிரம், ஐநூறு வாங்குறதுனால… இல்லேன்னா இதுவும் இருக்காது’ என்றவர், கடந்த நான்கு நாட்களுக்குமுன்பு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற வார நாட்களில் முழுமையாக கடையை மூடிவிட்டார்.
காலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும் சூளைமேடு பெரியார் பாதை மீன் சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைவிட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களும் ‘500, 1000 வாங்குறோம். இல்லேன்னா இதுவும் இல்ல’ என்கிறார்கள். இது நீண்டகாலம் நீடிக்க முடியாது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான இறுதித் தேதி டிசம்பர் 30 என்பதால், டிசம்பர் 15 தேதிக்குப்பிறகு பழைய 500, 1000 வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள். இந்த குறைந்த வியாபாரமும் முடங்கிப்போகும்.
சட்ட நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பொருந்தாத இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் உழல்கின்றனர். நான் உழைத்துச் சேர்த்த செல்வத்தை செலவு செய்யக்கூடாது என்று சொல்ல நீ யார்? இந்த அரசாங்கம் உண்மையில், இந்திய மக்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்திருக்கிறது.
மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. சின்னஞ்சிறிய தொழிலகங்கள் தற்காலிமாக உற்பத்தியை நிறுத்திக்கொண்டுவிட்டன. இவற்றில் பணிபுரிந்து வேலையிழந்திருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் சொந்த கிராமங்களுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். எந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் கிளம்பினார்களோ அந்தப் புள்ளிக்கே திரும்பியிருக்கிறார்கள். பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வெறுங்கையுடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது உருவாக்கப்போகும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். உதிரித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கீழ்நிலை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, டிமாண்டைவிட சப்ளை அதிகரித்து, அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படுவதைக் காட்டிலும் கூலி குறைத்து வழங்கப்படும். இந்தப் போக்கு, கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கப்போகிறது.
இப்போதே, ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என பல கை மாறித்தான் இந்த 10 ரூபாய். அப்படியானால், இதில் விவசாயிக்குக் கிடைப்பது எவ்வளவு? மற்ற காய்கறிகளுக்கும் இது பொருந்தும். பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கப்படும் மற்ற காய்கறிகளும்கூட, செல்லாக்காசு காரணமாக அல்லது அதைக் காரணம்காட்டி கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மிகக் குறைந்த விலைக்கே எடுக்கப்படுகின்றன. போட்ட முதல்கூட எடுக்க முடியாது.
இப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மிக நேரடியாக பாதிக்கக்கூடிய இவ்வளவு மோசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ள இந்த பாஜக அரசை விமர்சிக்கும்போது நாம், அதன் முழுமையில் இருந்து மதிப்பிட வேண்டும். ‘மோடி அரசு, மோடி அரசு’ என்று விமர்சிப்பதை சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மோடி என்ற நபரும் பெயரும் ஒரு முகமூடி. பின்னுள்ள காவி கும்பல்தான் உண்மையான சூத்திரதாரி. நாளை இந்தப் பிரச்னை கைமீறிப் போகும்போது, தங்கள்மீது பழிவராமல் இருக்கவும் மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தவும் மோடி என்ற பிம்பத்தை பலி கொடுக்கத் தயங்க மாட்டார்கள். மொத்தப் பிரச்னைக்கும் காரணம், தனி ஒரு நபர்தான் என்பதைப்போல சிக்கலை சுருக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். எனவே, இதை மோடி அரசு என்ற வரம்பைக் கடந்து உற்று நோக்கவேண்டியிருக்கிறது.
– பாரதி தம்பி
கட்டுரையாளர் குறிப்பு: பாரதி தம்பி, பத்திரிகையாளர். நியூஸ் 18 தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பிரிவின் பொறுப்பாளராக இருக்கும் இவர் ‘தவிக்குதே தவிக்குதே ’- ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’- ‘குடி குடியை கெடுக்கும்’ எனும் நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’ மாற்றுக் கல்வி ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாகும்.
நன்றி: மின்னம்பலம்
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை
பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூவாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த 11 நாட்களுக்குப் பிறகு, கட்டுமானத் துறையில் வேலையிழப்புக்களைச் சந்திக்கும் தமிழகத்தில் வேலை செய்யும் 5 இலட்சம் புலம் பெயர்ந்த மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர்களில் இருவருடைய குரல் மட்டுமே இவை.
நிபுணர்கள் மற்றும் பல்வேறு முகவர்களைப் பொறுத்தவரையில் கட்டுமானத்துறை இப்பகுதியில் நிலைகுலைந்த நிலைக்கு வந்திருக்கிறது. கட்டுமானத்துறையில் மாநிலத்திலேயே பெரும்பங்கு வகிக்கும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் ஏனையப் பகுதிகளில் நிலவும் பணத்தாள் தட்டுப்பாடு விரைவில் சரியாகாவிடின் வரும் ஒரு ஆபத்தான சூழ்நிலை வருமென்று சென்னையில் இருந்து வரும் பல்வேறு அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
கூலி மற்றும் உணவில்லாமல் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்ததாக வரும் அறிக்கைகளை ஆமோதிக்கிறார் இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பின்(CREDAI) தமிழகப் பிரிவைச் சேர்ந்த என்.நந்தகுமார். தொழிலாளர்கள் அன்றாட உணவிற்கு அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே ஏற்பாடு செய்யுமாறு CREDAI அமைப்பைச் சேர்ந்த முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
“சற்றேறக்குறைய எந்த ஒருக் கட்டுமானத் திட்டத்திலும் 100 லிருந்து 200 தொழிலாளர்கள் இருப்பார்கள். சென்னை CREDAI மட்டுமே 130 (முன்னணிக் கட்டுமான மேம்பாட்டாளர்கள்) உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைச் மிகவும் சரியில்லாததினால் உடனடியாக உணவை வழங்க எங்களில் பெரும்பாலோனோர் திட்டமிட்டு உள்ளோம். பட்டினியைத் தவிர்க்கத் தனியார் உணவு வழங்கும் சேவையையும் சிலர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
இருந்த போதிலும், சென்னையில் உள்ள ஒட்டுமொத்த கட்டுமான மேம்பாட்டாளர்கள் மற்றும் திட்டங்கள் CREDAI அமைப்பின் கீழில்லை. CREDAI அல்லது வேறு எந்த அமைப்பிலும் சார்ந்திராத 500-600 அமைப்புச்சாராக் கட்டுமான மேம்பாட்டாளர்கள் சென்னையில் இருப்பதாகத் தொழிலாளர் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். “நூற்றுக்கணக்கான திட்டங்களும் அவற்றில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான மேம்பாட்டாளர்களாலோ அல்லது மாநில அரசினாலோ இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
கடைசி 4 நாட்களில் மட்டும் சென்னை மாநகரம், பழைய மகாபலிபுரம் சாலை, GST சாலைப் பகுதியில் 200-க்கும் அதிகமான கட்டுமானத் திட்டங்கள் ஒன்று நின்று விட்டன அல்லது பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார் தொழிலாளர்த் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். ஆயினும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1000 கட்டுமானத் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக CREDAI மற்றும் ஏனைய ஆதாரங்கள் கூறின.
கட்டுமானத் துறையில் 30% லிருந்து 40% வரைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டாளரும் BSCPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பி.சீனைய்யா கூறினார். இவரது BSCPL நிறுவனம் பெரிய நெடுஞ்சாலை மற்றும் நீர்பாசனத் திட்டங்களைத் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றது.
“இன்னும் 10 நாட்களில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். கட்டிடத்தை வாங்கியவரிடம் இருந்து பணம் வருவது நின்று விட்டதால் தொழிலாளர்களுக்குக் கூலியைக் கொடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடம் பணம் இல்லை. அரிதாக, ஏதேனும் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதில் அவர்களது பாக்கி செலுத்தப்படும். இந்த நெருக்கடித் தொடர்ந்தால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்பட இருப்பதாக” அவர் கூறினார்.
இனி அடுத்தச் சில நாட்களில் மிகவும் மோசமான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று கட்டுமானத் துறையை ஆட்டுவிப்பவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளப் போதிலும் தொழிலாளர்கள் அவர்களது உடனடி பிரச்சினையை சமாளிக்கவே போராடுகிறார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது முகாம்களில் பட்டினியாய் இருக்கிறார்கள் என்று கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு முன்னணி கட்டிட மேம்பாட்டாளரிடம் கொத்தனாராக வேலை செய்த 42 வயதான ஆர்.அய்யனார் கூறுகிறார்.
ஒரு ஆண்டு காலமாக நான் வேலை செய்த வில்லா மற்றும் அடுக்குமாடி கட்டுமானப் பணி ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (நவம்பர் 13) நிறுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர் எங்கிருக்கிறார் என்று எந்த ஒரு விவரமும் எங்களிடம் இல்லை. கூலியைப் பெறுவதற்காக 300 தொழிலாளர்களுக்கு மேல் காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார். பொதுத்துறை வங்கிக்கிளையொன்றில் வரிசையில் காத்திருக்கும் போது, மூன்றுப் பைகள் நிறையப் பணத்துடன் ஒரு வாடிக்கையாளரை நேரடியாக உள்ளேச் செல்ல வங்கி அதிகாரிகள் இசைவளித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
“பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பைகளில் இருந்து எடுத்து எண்ணத் தொடங்கினார்கள். பணக்காரர்களை தண்டிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். யார் இப்பொழுது தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்? பணக்காரர்கள் ஒரு செல்பேசி அழைப்புக் கொடுத்தால் போதும். வங்கி மேலாளர் பணத்துடன் பணியாளர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி விடுவார்” என்று கூறுகிறார் அய்யனார்.
செல்பேசிக்கு ரீசார்ஜ் செய்யக் கூடப் பணம் இல்லாததால் கடந்த மூன்று நாட்களாக தனது குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கட்டுமானத் தொழிலாராகவும் சாயம் பூசுபவராகவும் வேலை பார்க்கும் 32 வயதான நிசாமுதின் கூறினார். அவர் கொல்கத்தா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். “நான் மூன்று நாட்களாக ஒழுங்காக சாப்பிடவில்லை” என்கிறார்.
திங்கள் கிழமைக்கு முன்னதாகவே உணவு அளிப்பதாக ஒப்பந்ததாரரின் நண்பர் ஒருவர் வாக்குறுதி கொடுத்தார் என்றாலும் “ஒப்பந்தக்காரரின் செல்பேசி துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவரது நண்பரும் செல்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துவிட்டார். நாங்கள் காத்திருப்போம்” என்று அவர் கூறினார்.
ஒரு பெரிய எண்ணிக்கையில் இந்த தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கிறார்கள். பணத்தாள் பற்றாக்குறையால் வாரக் கூலிக் கொடுக்கவியலாமல் ஒப்பந்தக்கரர்களும் கையறு நிலையில் இருப்பதாக மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பயிற்றுவிக்கும் பொருளாதார வல்லுனரான எஸ்.ஜானகிராமன் கூறினார்.
“நமது நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையான 64 கோடியில் 90% முறைசாராத் துறைகளை சார்ந்தவர்கள். ஒட்டுமொத்த GDP யில் அவர்களது பங்கு 50%ஆகும். அவர்களில் விவசாயத் துறையில் இருப்பவர்கள் 50% ஆக இருக்கும் அதே நேரத்தில் கட்டுமானத்துறையில் 30% இருக்கின்றனர். அரசாங்கம் இந்த அடிப்படை உண்மையை நிராகரிக்குமானால் பஞ்சம் உள்ளிட்ட நாசகரமான விளைவை நாங்கள் சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தைப் பாராட்டியதாக கட்டுமானத்துறையின் முன்னணியாளரும், CREDAI ன் நிர்வாகக் குழு உறுப்பினரும் மற்றும் SSPDL குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான பிரகாஷ் சால்லா கூறினார். ஆனால் செயல்படுத்தும் முறைகளைச் “சிறப்பாக திட்டமிட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். “அரசாங்கம் உடனடியாக செயல்படவில்லையெனில் விளைவு தீவிரமானதாக இருக்கும்” என்று மேலும் எச்சரித்தார்.
ஆக கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும், வீடு கட்டும் உடமையாளர்களுக்கம் கட்டிடம் நின்று போனதைத் தாண்டி வேறு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் இங்கே வேலை செய்யும் தொழிலாளிகளோ மோடியின் அறிவிப்பு பட்டினியில் தள்ளி விட்டது.
– நன்றி: Indian Express.
சென்னை மாநாகராட்சியின் 188-வது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகரில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இப்பகுதியில் வாழும் மக்கள் தினசரி வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் வேளச்சேரி-பள்ளிக்கரணை பிரதான சாலையையே பயன்படுத்துகின்றனர். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில் போதுமான சிக்னல்கள் இல்லை. வேகத்தடைகளோ ஒன்றுகூட இல்லை. எனவே இச்சாலையில் அடிக்கடி கோரமான விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.
உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் இயங்கி வரும் ‘பெண்கள் விடுதலை முன்னணி இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மனுக்கொடுத்தால் மதிக்கமாட்டார்கள், வீதிக்கு வருவது தான் ஒரே தீர்வு என்று தோழர்கள் வீடுவீடாக பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்து விட்டது. குடியிருப்பு பகுதியிலிருந்து சாலையை கடப்பதற்கு ஒரு பெண் வந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தால் தூக்கி வீசப்பட்டார். விபத்துக்கு காரணமான பைக்கில் வந்த மூன்று இளைஞர்களில், பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த இளைஞர் சாலையில் தூக்கியெறியப்பட்டு இறந்து விட்டார். பைக்கில் வந்த மற்ற இரண்டு இளைஞர்களும், அந்த பெண்ணும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியறிந்து உடனடியாக களத்தில் இறங்கிய பெ.வி.மு தோழர்கள் பகுதி மக்களை அணிதிரட்டி செயல்படாத அரசை செயல்பட வைக்க நாம் சாலையில் அமர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர். முதலில் பத்து பெண்களே வந்தனர். அவர்களை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று பெண்களை அழைத்தனர். ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப் போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல். நாம அமைதியாக இருப்பதால் தான் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன என்று பேசியபோது பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரள துவங்கினர்.
நமக்கு எதுக்கு வம்பு என்கிற சுயநலத்தின் மீது, மவுனத்தின் மீது, அச்சத்தின் மீது பெண் தோழர்கள் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பி, சண்டையிட்டு தான் மக்களை வீதிக்கு அழைத்து வந்தனர். கூட்டம் கூட கூட வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த பெண்கள் கூட வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அணிதிரண்டனர். பெண்கள் திரள்வதை பார்த்த ஆண்களும் இளைஞர்களும் அழைக்காமலே வந்தனர்.
திரண்டிருந்த மக்களை அழைத்துக் கொண்டு பெண்கள் விடுதலை முன்னணி செயலர் தோழர் செல்வி தலைமையில் வேளச்சேரி பள்ளிக்கரணை பிரதான சாலையை மறித்து போராட்டம் துவங்கியது.
500 க்கு மேற்பட்ட மக்கள் சாலையை மறித்துக்கொண்டு அமர்ந்தனர். காவல் துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பகுதி பெண்களோ கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினர். அவற்றை எதிர்கொள்ள முடியாத போலீசு சுற்றி இருந்தவர்களை அடித்து விரட்டத் துவங்கியது. அதுவரை தயங்கிக்கொண்டிருந்த பெண்கள் களத்திற்கு வந்ததும். தயக்கமின்றி கேள்வி கேட்டனர். சில நிமிடங்களில் அதிகாரிகள் வந்து குவிந்தனர்.
மக்கள் தன்னெழுச்சியாக தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள், நாலு சாத்து சாத்தினால் கலைந்துவிடுவார்கள் என்று எண்ணிய போலீசு, அரட்டவும் மிரட்டவும் அடிக்கவும் துவங்கியது. மக்கள் அச்சமின்றி அசராமல் நிற்பதை பார்த்து இது அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட கூட்டம் என்பதை தெரிந்து கொண்டு நைச்சியமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இந்த மாதிரி பிரச்சினைக்கெல்லாம் எந்த அதிகாரிகிட்ட போய் சொல்லனும்னு தெரியாதா உங்களுக்கு? உங்களால எவ்வளவு ட்ராபிக்க பாருங்க. எது எதுக்கு என்னென்ன பண்ணனும்னு கூட தெரியல. ஜனங்கள மட்டும் நல்லா தூண்டிவிடுறீங்க. இதை வைச்சிக்கிட்டு அரசியல் பண்ணாதீங்க என்றார் இன்ஸ்பெக்டர்.
ரோட்டுக்கு வர்றவங்க உயிரோட வீட்டுக்கு போகணும் அதுக்கு ஒரு சிக்னலோ, வேகத்தடையோ போட்டுக்கொடுங்கன்னு தான் கேக்குறோம். அதை செஞ்சு குடுத்தா நாங்க ஏன் ரோட்டுக்கு வரப்போறோம் என்றதும் உடனடியாக ட்ராபிக் போலீசாரை அழைத்து சிக்னல் அமைத்து தருவதாக கூறினர். தாசில்தாரும், வி.ஏ.ஒ வும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பிரதான சாலையே ஸ்தம்பித்து விட்டது. அதிகாரிகள் உறுதியளித்ததன் அடிப்படையில் தற்போது கலைந்து செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, மக்களிடம் விளக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்தவாறு பிரச்சினையை தீர்க்க கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டால் மீண்டும் ரோட்டுக்கு வருவோம் என்பதையும் கூறிவிட்டு கலைந்தோம்.
தோழர்களும் பகுதி பெண்களோடு பகுதிக்கு சென்றுள்ளனர். அரை மணி நேரத்தில் அய்யா கூப்பிடுறாங்க வாங்க என்று தொலைபேசியில் பேசினார் ஒருவர். மூன்று தோழர்கள் கிளம்பி மறியல் செய்த இடத்திற்க்கு வரும் வழியிலே பகுதிப் பெண்கள் எல்லாம் எங்க போறீங்க என்று கேட்டார்கள். காவல் துறை கூப்பிட்டுள்ளார்கள் என்று கூறிய உடன் நான் வருகிறேன் நான் வருகிறேன் என்று மறுபடியும் பெண்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். இவ்வளவு பேர் வேண்டாம் என்று கூறி பத்து பேர் கிளம்பி சென்றோம். 5, 6 வண்டிகளில் 50 மேற்ப்பட்ட காவல் துறையினர் நின்று இருந்தனர். எங்ககிட்ட சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே எங்கிட்ட சொல்லியிருந்தா நான் ஏற்பாடு பண்ணியிருப்பேனே என்றார் அப்பகுதி இன்ஸ்பெக்டர். உங்களுக்கு தெரியாதா சார் டெய்லி விபத்து நடக்குதுன்னு நேத்து கூட ஒரு பையன் இறந்து இருக்கான் என்றோம். தெரியுமா நானே எங்காரில் ரத்தத்தோட தூக்கிட்டு போயிருக்கேன். இங்க வேகத்தடை போடமுடியாதும்மா ரூல்ஸ்ச மீறி செய்ய முடியாதும்மா என்றார். உடனே ஒரு தோழர் மக்களுக்கு பயன்படாத ரூல்ஸ் எதுக்கு சார் ரூல்ஸ்சையே மாத்துங்க சார் என்று சொன்ன உடன் ஏற இறங்க பார்த்து விட்டு ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இப்ப நான் யாரையாவது அரஸ்டு பண்ணனுமே என்றார். அரஸ்டு பண்ணுவதாக இருந்தால் தலைவர் என்ன யாரை வேண்டுமானாலும் பண்ணுங்க சார் என்று தாமதிக்காமல் சொன்ன உடன். ஒன்றுமே பேசாமல் சரி சரி போங்க என்றார்.
போலீசையும், அதிகாரிகளையும் பணிய வைத்த இந்த போராட்ட அனுபவம் பெண்களுக்கு புதிய உற்சாகத்தையும், போராடினால் தான் உரிமைகளை பெற முடியும் என்கிற நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. போராட்டத்தை முடித்துவிட்டு கலைந்து செல்லும் போது, அடுத்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராகவும் இது போல ஒரு போராட்டத்தை நடத்தினா தான் சரிபடும் என்று பகுதி பெண்கள் பேசிக்கொண்டு சென்றனர். ஆம் அவர்கள் குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் சனியனுக்கு எதிராகவும் பெ.வி.மு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. பகுதி பெண்களின் துணையோடு விரைவில் பாலாஜி நகரிலிருந்து அந்த டாஸ்மாக் கடை ஒழித்துக்கட்டப்படும்.
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு- 98416 58457