சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது – தா.பாண்டியன்
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588
இணையுங்கள்:
சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது – தா.பாண்டியன்
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588
இணையுங்கள்:
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பதில்லை - மோடி
அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!
___________________
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588
இணையுங்கள்:
கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு – இதன் மூலம் தீவிரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்பது போன்ற தம்பட்டங்களோடு துவங்கிய பண மதிப்பழிப்பு அறிவிப்பு தற்போது அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளது. உண்மையில் கருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் சிந்தனையிலே இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் பேசுவதிலிருந்தே வாக்குமூலங்களாக வெளிவரத் துவங்கி விட்டன.
எனில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்? அறிவிப்புக்கு முன்னதாகவே நிலங்களாக வாங்கிக் குவித்து தமது கருப்புப் பணத்தை பா.ஜ.க கும்பல் பதுக்கிக் கொண்டனர் என செய்திகள் வெளியாகின. பெரும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள பொருளாதார அறிவு கூடத் தேவையில்லை – வங்கிகளின் முன் நிற்கும் வரிசைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கருப்புப் பண முதலைகள் இந்த அறிவிப்பினால் பலனடைந்துள்ளனர் என்பது ஒரு பரிமாணம் – அதையும் தாண்டிய வேறு ஒரு உண்மையும் உள்ளது.
அது என்னவென்பதைப் பார்ப்பதற்கு முன், பணமதிப்பழிப்பு பற்றி துவக்கத்தில் சொல்லப்பட்டது என்ன, நடந்தது என்ன?
சுழற்சியில் இருக்கும் மொத்த ரொக்கத்தில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் வரை கருப்புப் பணம் என்றது நவம்பர் 8-ம் தேதி வெளியான மோடியின் அறிவிப்பிற்கு முந்தைய ரிசர்வ் வங்கியின் கணக்கீடு ஒன்று. கடந்த நவம்பர் 2-ம் தேதி ராஜ்யசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வா, மோடியின் அறிவிப்பு வெளியான சமயத்தில் புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி என்றார்.
நவம்பர் 28-ம் தேதி வரை (பதினெட்டு வங்கி வேலை நாட்களில்) மொத்தம் சுமார் 8.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் மக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் சுழற்சிக்கான நிதியாக (500, 1000, 100, 50, 20 மற்றும் 10 ரூபாய்த் தாள்கள் உள்ளிட்டு) சுமார் 4.06 லட்சம் கோடி ரூபாயை இருப்பில் வைத்திருக்கும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் 15.44 லட்சம் கோடியில் நவம்பர் 27-ம் தேதி வரை சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இதோடு அன்றாடப் புழக்கத்துக்கான நிதிக் கையிருப்பான 50 ஆயிரம் கோடி ரூபாய்களையும் சேர்த்தால் மொத்தம் 13 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் சேர்ந்துள்ளது – வெறும் 18 நாட்களில்!
பணம் செலுத்தப்பட்டு வரும் வீதத்தை கணக்கில் கொண்டால் டிசம்பர் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டு விடும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட 3 – 5 லட்சம் கோடி ரூபாய் எங்கே தான் போயிருக்கும்?
ரிசர்வ் வங்கி வழக்கமாக வெளியிடும் இருவார அறிக்கைகள் இதற்கான பதிலைச் சொல்கின்றன. மோடியின் அறிவிப்பு வெளியானது நவம்பர் 8-ம் தேதி. செப்டெம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் (13 வங்கி வேலை நாட்கள்) சுமார் 3.03 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலுள்ள இரண்டு படங்களை கவனியுங்கள். இதே காலப்பகுதியில் முந்தைய ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிக ரொக்கம் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பரஸ்பர நிதியத்தில் (mutual fund) செய்யப்படும் முதலீடும் வழக்கத்தை விட அதிகமாக (19,630 கோடி) இருந்துள்ளது.
இதிலிருந்து நாம் இரண்டு முடிவுகளுக்கு தான் வந்தாக வேண்டியுள்ளது :
முதலாவதாக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பணம் என்பது மிகக் குறைவானதாக ஒன்றாகவே இருக்க வேண்டும். கருப்புப் பணம் சட்டப்பூர்வமான ரியல் எஸ்டேட் முதலீடுகளாகவோ, பங்குகளாகவோ, அந்நிய நேரடி முதலீடாகவோ இருக்க வேண்டும். மக்களின் கையில் புழங்கும் ரொக்கப் பணத்தில் கருப்புப் பணம் பெரியளவில் இல்லை.
இரண்டாவதாக, அரசு முன்னரே மதிப்பிட்ட 3-5 லட்சம் கோடி கருப்புப் பணம் புழக்கத்தில் இருந்தால், அது மோடியின் அறிவிப்பிற்கு முன்பாகவே வங்கிகளில் செலுத்தப்பட்டு வெளுப்பாகியுள்ளது. மோடியின் அறிவிப்பு அவரது அமைச்சரவை சகாக்களுக்குக் கூட தெரிவிக்காமல் இரகசியம் காக்கப்பட்டது என அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை எனில், கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மோடியே நேரடியாக தகவல் சொல்லி அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்றாகிறது.
ஒருகட்டத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக டுபாக்கூர் என்பது அம்பலமாகத் துவங்கியவுடன், இந்தியா நெடுக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நபர்களிடம் சில பல கோடிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நடவடிக்கைகளை பத்திரிகைகளில் படாடோபமாக அறிவித்து ”கருப்புப் பணம் குவியலாக இருக்கிறது” என்கிற கருத்தாக்கத்தை நிலைநாட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது அரசு. ஒருவேளை அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் அளவு, உள்நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பொருளாதாரத்தின் அளவு ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கடந்த ஒருசில வாரங்களில் பிடிபட்டிருக்கும் தொகை வெறும் கொசுறு தான்.
அடுத்து, பண மதிப்பழிப்பு அறிவிப்பின் போது சொல்லப்பட்ட மற்றொரு காரணம் கள்ளப்பணம். அதாவது புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடியில் 400 கோடி மதிப்பிலான கள்ளப்பணம் கலந்துள்ளதாகவும் மக்களால் எது போலி எது உண்மை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து கள்ளப்பணம் ஒழிந்து விடும் என்றும் சொல்லப்பட்டது. இந்த 400 கோடியையும் பாகிஸ்தானும், சீனாவும் அவர்களது சொந்தச் செலவில் அச்சிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதாகச் சொன்ன காவி கும்பல், மோடியின் அறிவிப்பை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் எனவும் பிரகடனம் செய்தனர்.
ஆனால், நவம்பர் 27-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்பட்ட 8.45 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 9.6 கோடி மதிப்பிலான கள்ளப்பணமே பிடிபட்டுள்ளது என அறிவித்துள்ளது அரசு. அதாவது வெறும் 0.001 சதவீதம். ஆக, கள்ளப்பணத்தை ஒழிக்கிறோம் என பீற்றிக் கொண்டதும் பச்சைப் பொய் என்பது தெளிவாகி விட்டது. எனில், தனது கோமாளித்தனமான அறிவிப்பின் மூலமும் அது தோற்றுவித்துள்ள சொல்லொணாத துயரத்தின் மூலமும், அந்த அறிவிப்பு விளைவித்துள்ள நூற்றுக்கணக்கான மரணங்களின் மூலமும் எதைச் சாதிக்க நினைக்கிறார் மோடி?
அதற்கான பதிலை மோடியும் அவரது சகாக்களுமே தற்போது தெளிவாக சொல்லத் துவங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சொன்ன கருப்புப் பண ஒழிப்புக் கதைகள் தற்போது வற்றியுள்ள நிலையில் தற்போது ரொக்கமில்லா மின்பரிவர்த்தனை குறித்தும் வருமான வரித் தளத்தை அகலப்படுத்துவது குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். வருமான வரித் தளம் அதிகரிப்பு என்பது அரசின் எந்த உதவியும் இன்றி சுயேச்சையாக இயங்கி வரும் தற்சார்பு பொருளாதாரத்தை அழித்து அதில் ஈடுபடும் எளிய மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி பிடுங்கும் அதே நேரம் பெருமுதலைகளுக்கு வரி விலக்கு அளிக்கும் நடவடிக்கை என்பது வினவின் முந்தைய கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது.
அச்சடித்த நோட்டுகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதற்கு பதில், மின்செலாவணியை பயன்படுத்துவது. அதாவது, நாம் வாங்கும் கடையில் பொருட்களுக்கு ஈடான தொகையை அச்சடித்த நாணயங்களாக கொடுப்பதற்கு பதில் மின்பரிவர்த்தனையாக கொடுப்பது இவையே ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது.
இந்த விதமான பரிவர்த்தனைக்கு முதலில் வர்த்தகர்கள் மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திடம் கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அது அவர்களது வங்கிக் கணக்குடனும், கைபேசியுடனும் இணைக்கப் பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களுக்கு டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, வங்கியின் இணைய சேவை அல்லது ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் ரொக்கமில்லா மின் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வர்த்தகர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் மின் பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அதில் தங்களது பணத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் கூட இல்லாமல் பணத்தை செலுத்த முடியும்.
இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவையை யார் வேண்டுமானாலும் அளித்து விடமுடியாது. இதற்கென ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றாக வேண்டும். மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு மிகச் சரியாக 73 நாட்களுக்கு முன் (ஆகஸ்டு 19-ம் தேதி) மத்திய ரிசர்வ் வங்கி பதினோரு நிறுவனங்களுக்கு இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் உரிமத்தை கொள்கை அடிப்படையில் வழங்குகின்றது.
கொள்கையடிப்படையிலான அனுமதி பெற்ற நிறுவனம், ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு 18 மாதங்களுக்குள் பரிவர்த்தனை சேவையைத் துவங்கலாம். ரிசர்வ் வங்கி ஆகஸ்டு 19-ம் தேதி அனுமதி வழங்கிய 11 நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒன்று. மோடியின் அறிவிப்பு வெளியானதற்கு இரண்டே நாட்களுக்குள் பாரத ஸ்டேட் வங்கியும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்கும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகின்றது.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பு வெளியாகி 23 நாட்கள் கழித்து கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று முகேஷ் அம்பானி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ரிலையன்ஸ் சார்பாக ஜியோ மணி (JIO Money) என்கிற மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்குவது தொடர்பானது.
அடுத்த சில வாரங்களில் நாடெங்கும் உள்ள சுமார் ஒரு கோடி சிறு வணிகர்களை ஜியோ மணி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவித்த அம்பானி, ஜியோ மணி செயலியில் மக்கள் தங்களது பணத்தைச் சேர்த்துக் கொள்ள நாடெங்கும் மிக விரைவில் மைக்ரோ ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், சில்லரறை வர்த்தகத்துக்கான செயற்சூழல் (Digital retail ecosystem) ஒன்றை உருவாக்குவதே தங்களது லட்சியம் என அறிவித்தார் அம்பானி. அதாவது பொருள் – பண பரிவர்த்தனை நடக்க வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மின்வெளி (Digital Space).
நுகர்வோருக்குத் தேவைப்படும் பொருள் அவர் வசிக்கும் இடத்தைச் சுற்றி எங்கே கிடைக்கும், என்னென்ன விலைகளில் கிடைக்கும் என்பதில் துவங்கி அந்தப் பொருள் மட்டுமின்றி அதனோடு தொடர்புடைய பிற பொருட்களை வாங்குவது குறித்துமான சகல விவரங்களும் அவரது செல்பேசியில் செயல்படும் ரிலையன்சின் செயலியே (App) வழிகாட்டுவதோடு – அந்தப் பொருள் வாங்குவதற்காக நிகழும் பணப்பரிவர்த்தனையும் ரிலையன்சின் மற்றொரு செயலியின் (Relinace Jio Money App) மூலம் நடக்கும்.
ஏற்கனவே இதே சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உண்டெனினும், அவை தனித்தனியான நிறுவனங்களின் சேவைகளாக உள்ளன. ரிலையன்சின் திட்டம் பரிவர்த்தனைச் சங்கிலியை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பதுடன் அதற்கு மேல் வேறு நோக்கங்களையும் கொண்டது.
சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு. மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பிற்குப் பின்னான சூழல் அந்த நோக்கத்திற்கு தோதானதாக உள்ளது. மின் பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்து சில்லறை மற்றும் சிறு கடை வியாபாரிகள் இயங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி அதற்கென செய்ய வேண்டிய செலவுகள் மற்றும் ஒவ்வொரு சிறிய பரிவர்த்தனைக்கும் வழங்க வேண்டிய சேவைக் கட்டணங்கள், வரிகள் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களும் உள்ளன.
மற்றொரு புறம், சில்லறை வர்த்தகம் இயங்கும் முறை மற்றும் மக்களின் வாங்கும் போக்கு (Buying Pattern) குறித்த விவரங்கள் அனைத்தும் ரிலையன்ஸ் வசம் இருக்கும். ஏற்கனவே ஜியோ செல்பேசி சேவையின் வழியே அதன் வாடிக்கையாளர்களுடைய இணையச் செயல்பாடுகளை மட்டுமின்றி வோல்ட் (VoLTE – Voice On LTE) முறையில் இயங்கும் தொலைபேசி அழைப்புகளையும் கண்காணிக்கும் தொழில் நுட்பம் ரிலையன்சிடம் உள்ளது. இதோடு சேர்த்து மக்கள் தங்களது பணத்தை செலவழிக்கும் முறை குறித்த விவரங்களும் சென்று சேர்கின்றது.
தொகுப்பாக பார்க்கும் போது, மக்களுடைய அரசியல் கருத்துக்கள் மட்டுமின்றி அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலத்தையும் அம்பானியின் கையில் வாரிக் கொடுத்துள்ளார் மோடி.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கார்ப்பரேட்டுகளே நேரடியாக மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் மீது அதிகாரத்தைச் செலுத்த முற்படும் டிஜிட்டல் பாசிசம் நம் வாயிலில் நிற்கின்றது. இதற்கு மேலும் மோடியின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்போடு மட்டும் தொடர்புபடுத்தி அதன் சாத்திய அசாத்தியங்களுக்குள் புகுந்து மயிர் பிளக்கும் விவாதங்களைச் செய்து கொண்டிருப்பது அறிவுடைமையா?
– முகில்
செய்தி ஆதாரங்கள் :
வர்தா புயலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மீனவர்கள். புயலின் பாதிப்புகளை அறிந்து வர வினவு செய்தியாளர் குழுவினர் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தை அடைந்திருந்தோம். கடந்த 2015 டிசம்பர் மாதம் சென்னை மழை வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்ற ஓடோடி வந்த மீனவர்களும், அவர்களின் சேதமான படகுகளும் இன்று கேட்பாரற்று கிடக்கின்றார்கள்.
காசிமேடு பகுதியில் தினசரி கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் ஃபைபர் எனப்படும் நாட்டுப் படகுகளும், கடலில் பல நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் லாஞ்ச் எனப்படும் விசைப்படகுகளும் மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. புயல் சின்னம் அறிவிக்கப்பட்ட பிறகு தினசரி மீன்பிடிப்பவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. ஆனால் விசைப்படகில் நாட்கணக்கில் தங்கி மீன்பிடிப்பவர்கள் உடனடியாக திரும்ப வாய்ப்பில்லை. வயர்லெஸ் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது. ஆயினும் பல மைல் தொலைவில் இருப்பபவர்கள் திரும்ப வருவதற்குள் புயல் அவர்களை அடைந்துவிட்டது. கடலுக்கு சென்ற பல விசைப்படகுகளில் நிலை என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் எத்தனை விசைப்படகுகள் இன்னும் திரும்பவில்லை என்ற சரியான எண்ணிக்கை கூட அவர்களிடம் இல்லை.
படகுகளில் சேதம் குறித்து மீனவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு விசைப்படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அதின் முனைப்பகுதியில் ஒருவர் கையை வானைத்தை நோக்கி குவித்தும், கைகளை விரித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அருகில் இருந்த மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து இங்கிருந்து ஆரவாரத்துடன் எதிர் கொண்டார்கள்.
“புயல்ல சிக்கி இப்பதான் கரைக்கு வராங்க” புரியாமல் பார்த்த நம்மிடம் அருகில் இருந்த மீனவர் விளக்கமளித்தார். அப்பபடகு கரைக்கு வந்ததும் படகில் ஏறிக்கொண்டோம்.
படகில் ஓட்டுநர் உள்ளிட்டு மொத்தம் 11 தொழிலாளிகள் இருந்தார்கள். ஓட்டுநர் தவிர மற்ற கூலித்தொழிலாளிகள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். அனைவரின் முகத்திலும் தளர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருங்கே குடிகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
படகின் முன் கைகளை குவித்து கத்தியவாறே வந்த தொழிலாளியின் பெயர் ரமேஷ். அவரிடம் பேசினோம்.
“நீங்க தான் முன்னாடி கத்திட்டே வந்தீங்க”
“ ஆமா சார். நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை. அவ்வளவுதான் செத்துருவொம் என்று முடிவு செய்துவிட்டோம். படகில் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டோம். கரையில் எல்லாரையும் பார்த்த பிறகு தான் உயிரே வந்தது. நீங்க யாரு என்னனு எனக்கு தெரியாது ஆனா கரையில் உங்களையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. நாங்க தப்பிச்சி உயிரோடு வந்ததற்கு காரணம் கடவுளும் எங்க டிரைவரும் தான் காரணம். டிரைவர் எங்களுக்கு தெய்வம் சார்” என்று வானத்தை நோக்கி கைகளை குவித்து நன்றி தெரிவிக்கிறார்.
படகில் டிரைவர் லோகிதாஸிடம் பேசினோம்.
“நாங்க ஒரு 20 படகுகங்க ஒன்னா தான் தொழில் பண்ணிட்டு இருந்தோம். வலை எல்லாம் கட்டிவிட்டோம். . புயல் வருதுனு எல்லாத்தையும் கெளப்பினு வந்தோம். ”
“தகவல் கிடைத்த உடனே கிளம்பிவிட்டீர்களா?”
“வலை ஒரு முறை போட்டா அதை எடுக்க 6 மணி நேரம் ஆகும். அங்கிருந்து வர 15 மணி நேரம் ஆகும். நாங்க வலையை எடுத்துட்டு கெளம்பிட்டோம். வயர்லெஸ்சில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தோம். புயல்காற்று அதிகமாக அதிகமாக ஒவ்வொரு படகா பிரிய ஆரம்பித்தோம். சென்னை ஹார்பர் அருகில் ஒரு 8 போட்டுகள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். நாங்க ஒரு 3 படகுகளால் உள்ளே நுழைய முடியவில்லை. 6 பாயிண்ட் வரை வந்துவிட்டோம். உள்ள பூர முடியல. அப்படியே ரிவர்ஸ்ல போகுது. கண்ட்ரோல் கிடைக்கவில்லை. அவ்வளவு காத்து. நாங்க செத்துட்டோம்னு தான் நினைச்சோம். கரையிலிருந்து இந்த பக்கம் வராதீங்க பாண்டிச்சேரி மரக்காணம் பக்கம் போயிருங்க என்று தகவல் தருகிறார்கள். எங்களிடம் இருந்த ஜி.பி.எஸ் புயல் காற்றில் அடிச்சி வேலை செய்யல. அதனால் எங்களுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை” படகில் சேதமான ஜி.பி.எஸ் கருவியை காட்டுகிறார்கள்.
“எந்த பக்கம் போனாலும் தண்ணி மொண்டுக்குது. ரெண்டு பக்கமும் தண்ணி மொண்டுக்குது. ஹாங்கர் (நங்கூரம்) போட்டோம். அதுவும் தண்ணியோட ஆடுது. அதனால அதை எடுத்துட்டு படகை அப்படியே அலைய விட்டுடோம். அலையவிட்ட ஆபத்து கம்மியா இருக்குது. அலை எந்த பக்கமிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. ஓட்டவும் முடியவில்லை.ஆண்டவன் தான் எங்களை காப்பாற்றினான். “ என்கிறார் லோகிதாஸ்.
எதுவும் பயனளிக்காத நிலையில் படகை காற்றின் போக்கிற்கே விட்டுவிட்டார்கள். காற்றின் சுழற்சியில் படகு அடித்து செல்லப்பட்டிருக்கிறது. அப்போது எந்த பகுதில் இருக்கிறோம் என்பதைக்கூட ஒரு அனுபவத்தின் அடிப்படையில் தான் கணித்திருக்கிறார்கள்.
“எங்களை சுற்றி எதுவும் தெரியவில்லை. கண்ணாடியில் அலை அடித்தது. வேறு எதையும் பார்க்கமுடியவில்லை. எனக்கு உள்ளுக்குள் பயம். ஆனாலும் இவங்களிடம் ஒன்னும் ஆகாது. நம்ம படகு வலுவானது. அப்படி இப்படி என நம்பிக்கை சொல்லிட்டு இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள அவ்வளவு தான் முடிஞ்சது தான் நினைச்சிட்டு இருந்தேன்” என்கிறார் லோகிதாஸ்.
சேதமடைந்த வலையை பிரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த தொழிலாளிகளும் நம்முடன் சேர்ந்து கொண்டார்கள்
“சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க”
“ரெண்டு நாள் சாப்பிடல. படகில் (நடுவில் இருக்கும் கண்ணாடி அறைக்கு) வெளியில் இருந்த உணவுப் பொருட்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. யூரின் போகக்கூட வெளிய போக முடியல. வெளியேலாம் யாரும் நிக்க முடியாது. இதுக்குள்ள தான் (நடுவில் இருக்கும் கண்ணாடி அறை) 11 பேரும் இருந்தோம்” என்று கண்ணாடி கூண்டை காட்டுகிறார்கள். “அவ்வளவு காத்து. இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அதை ஒருவர் பிடித்திருக்க படகில் ஓரத்தில் தான் மலம் போனோம். மழை தண்ணியிலயே கழுவிக் கொண்டோம்.”
தாங்கள் பத்திரமாக திரும்பிவிட்டோம் என்பதை ஆந்திராவிலிருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்ககூட முடியாமல் தவிக்கிறார்கள் தொழிலாளிகள்.
“செல்போன் சிக்னல் எதுவும் கெடக்கல. வீட்டிலிருந்து கம்பெனிக்கு போன் பண்னிருப்பாங்க. தகவல் சொல்லனும்” என்று வெறுமையாக சொல்கிறார்கள்.
“உங்க ஊரிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் திரும்பிவிட்டீர்களா”?
“தெரியல. ஊருக்கு போனா தான் தெரியும்.”
“இப்படி உயிரை பணயம் வெச்சி வேலை செய்யூறீங்களா? உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”
“ அது மீன் கெடைக்குறதை பொறுத்து. சில சமயம் 5000 ரூபா வரும், 8000 ரூபா வரும். அது நிக்காது. திரும்பியும் வரனும் திரும்பியும் கஷ்டப்படனும்”. மாதத்திற்கு பத்தாயிரம் கிடைத்தால் பெரிது.
“இன்னிக்கு மீன் இல்லாம தான் திரும்பியிருக்கீங்க. அப்போ சம்பளம் கிடையாதா?”
“கிடையாது. மீன் இருந்தாதான்.” என்கிறார்கள் தொழிலாளிகள். இப்படி உயிரை பணயம் வைத்து அவர்கள் வந்த படகின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.பி சாமி என்கிறார்கள் அப்பகுதி தொழிலாளிகள்.
“உங்களுடன் வந்த மற்ற படகுகள் திரும்பி விட்டார்களா?”
“காணாமல் போன நவீனா என்ற படகை தேடி மீனவர்களின் ஒரு படகு சென்றிருக்கிறது. இன்னும் தகவல் வரவில்லை. எனக்கு தெரிந்தே 7 படகுகள் இன்னும் வரவில்லை. இன்னும் எவ்வள்வு இருக்கும் என்று தெரியவில்லை. அமைச்சர் குப்பனுக்குரிய படகிலிருந்து இன்னும் தகவல் வரவில்லை” என்கிறார்கள். இப்படகு அமைச்சர் குப்பனுடையாதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
புயலில் சிக்கியபோது ஒரு படகை ஓட்டமுடியவில்லை என்றார்கள். “அதை காப்பாற்ற சென்ற மற்றொரு படகினாலும் அதை இழுக்க முடியவில்லை. பிறகு அதை அப்படியே விட்டுவிட்டொம். அந்த படகு என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை. இன்னும் லைன் கிடைக்கவில்லை.” என்கிறார் லோகிதாஸ்.
“புயல் மீட்பு நடவடிக்கைக்காக கடற்படையிலிருந்து 4 கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்களே அவர்களை தொடர்புகொண்டீர்காளா?.”
“எங்க கம்பெனி படகிலிருந்து தொடர்பு கொண்டோம். நாங்க பெரிய கப்பல். சின்ன கடற்படை படகுகளை அனுப்புகிறோம் என்றார்கள். அதன் பிறகு எங்களுக்கு தொலை தொடர்பு அற்று போனது. யாரும் வரவில்லை.”
ஆண்டுக்கு ஒரு முறை கடலோர சாகசங்கள் என்ற பெயரில் வித்தை காட்டுவதை தவிர மீனவர்களை காப்பாற்ற ஆபத்து நேரத்தில் கடலோர பாதுகாப்பு படை வருவதில்லை. அதிகார வர்க்கத்தின் கேளிக்கை சுற்றுலாவுக்கு பயன்படுவதைத் தவிர கடலோர காவற்படைக்கு வேறு வேலையில்லை. மீனவர்களின் கடல் வாழ்க்கை, மீன்பிடி அனுபவம், கால மாற்றங்கள், என்று எதுவுமே கடலோர காவற்படைக்கு தெரியாது.
நாம் மீனவர்களிடம் பேசியதிலிருந்து அரசு தங்களை காப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவர்களுக்கு இல்லை. தங்கள் அனுபவத்திலிருந்து நமது பிரச்சனைக்கு அரசு வராது தாங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நிவாரணம் என்ற அம்சத்தை தவிர அரசிடமிருந்து வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
மீனவர் உயிரழப்பு?
புயலின் போது ஒரு படகு விபத்துகுள்ளாகி மணி(50) என்ற தொழிலாளி உயிரிழந்திருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் பகுதியில் மீன்பிடித்து திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள் மீனவர்கள் சிலர். காற்றின் வேகத்தில் கரைக்கருகே படகு விபத்துக்குள்ளாகும் சமயத்தில் தொழிலாளிகள் 5 பேரும் கடலில் குதித்திருக்கிறார்கள்.
இதில் 4 பேர் மட்டுமே கரைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் திரும்பவில்லை. 24 மணி நேரத்திற்கு பிறகும் அவர் திரும்பாதாததால் அவர் உயிரிழந்திருக்ககூடும். அவரைத்தேடி மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கிறார்கள். நாம் சென்ற போது அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் அப்பகுதியில் பரவியிருந்தது.
காணமல் போன மீனவரின் பெயர் மணி. இவர் காசிமேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர். நாம் அங்கு செல்லும் போது மணியின் வீட்டில் சோகம் குடிகொண்டிருந்தது. ஒரு சிறிய அறையில் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.அப்பகுதி மீனவர்களிடம் பேசியதிலிருந்து மணி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள்.
மணியின் மூத்த மகன் மகேஷ்குமார் நம்மிடம் பேசினார்.
“போன வாரம் ஞாயிற்றுக்கிழமை 4-ம் தேதி அப்பா கிளம்பினார். தங்கி மீன் பிடித்து திரும்பி வரும் வழியில் நேற்று (12-12-2016) எண்ணூர் அருகே காற்று அதிகமாகி விபத்துக்குள்ளகியிருக்கிறது. அப்பாவும் அவருடன் வந்தவர்களும் குதித்ததில் அப்பா மட்டும் திரும்பவில்லையாம். அப்பாவுடன் சென்றவர்கள் திரும்பிவந்து கூறிய பிறகுதான் எங்களுக்கு தெரியும். அப்பாவை தேடி மீனவர்கள் தான் போயிருக்கிறார்கள். வேறு இதுவரை யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
மகேஷ்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால அவரது தந்தை வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அப்பகுதியிலிருந்து கிளம்பும்வரை பத்திரிகை மற்றும் அரசு தரப்பில் யாரும் இப்பகுதிக்கு வரவில்லை. மீனவர்களுக்கு என்னவாயிற்று என்பது குறித்து எவ்வித அக்கறையும் அரசுக்கு இல்லை. சென்னை நகரின் மையப்பகுதியில் வீழ்ந்துகிடக்கும் மரங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு பத்திரிகைகளில் நேரடி வர்ணனை வழங்குபவர்கள் எவரும் இங்கு வரவில்லை.
கடந்த மழை வெள்ளத்தின்போது இவர்கள் தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முதன்முதலாக ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியவர்கள்.
படகுகள் சேதம்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறிய ரக ஃபைபர் படகுகள் முதல் விசைப்படகுகள் வரை பலத்த தேசத்திற்குள்ளாகியிருக்கிறன. பல படகுகள் தலைக்குப்புற மூழ்கி கிடக்கின்றது. அப்படி மூழ்கியிருக்கும் படகுகளுக்கு அடியிலும் பல படகுகள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. காற்றின் வேகத்தில் ஒன்றன் மீது மற்றொன்று மோதி பல ஃபைபர் படகுகள் சேதமாகியிருக்கின்றன.
கடலில் குதித்து மூழ்கியிருக்கும் படகின் இன்ஜின்களை கழற்றி வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள் தொழிலாளிகள். கடலில் மூழ்கி வெளியேறிய தொழிலாளி இளவரசனிடம் பேசினோம்.
“உள்ளே ரொம்ப படகுகள் இருக்கு. படகுமட்டுமில்ல வலை, கச்சானு ரொம்ப இருக்கு. உள்ளே மூழ்கும்போது வலையில கால் மாட்டுச்சினா அவ்வளவுதான். வெளியே எதாவது எஸ்கார்டு இருந்தா பயமில்லாம உள்ளே போகலாம். இப்போ இன்ஜினை மட்டும் கழட்டி வெளிய் எடுத்திருக்கிறோம். இதை சரி செய்ய 10,000 முதல் 15,000 வரை ஆகும் என்றார். சுனாமியப்ப படகை அப்படியே தூக்கிட்டு போய் வேர இடத்துல வெச்சிருச்சி. இப்போ காத்து சுத்தி அடிச்சதுல ஒன்னொன்னு மோதி உடைஞ்சிருக்குது.
மெக்கானிக் ஒருவர் கரையில் இவ்வின்ஜினை சரி செய்துகொண்டிருந்தார்.
“ சார் பாருங்க எல்லாம் உப்பா இருக்கு. இதை சரி செய்யுறது கஷ்டம். உப்பு படிஞ்சிருக்குறதால இப்போ டீசல் ஊத்திருக்கோம். பாப்போம்.”
மூழ்கியிருக்கும் படகுகளை கிரேன் வைத்து தூக்கிக்கொண்டிருந்தார்கள் சில மீனவர்கள். கடலுக்கு அடியில் ஒன்றன் மீது மற்றொன்று சிக்குண்டு கிடப்பதால் எளிதில் தூக்கவும் முடியவில்லை.
இப்படி ஒன்று இரண்டல்ல, பல படகுகள் சேசமாதியுள்ளன.
நாம் சந்தித்த விசைப்படகு உரிமையாளர் ஒருவர் தனது படகை சரி செய்ய எப்படியும் 1 லட்சத்திற்கும் மேல் ஆகும் என்று தெரிவித்தார்.
தனது படகில் ஏற்பட்டிருக்கும் விரிசலை காண்பித்தவர், கரையோரத்தில வைத்து சரி செய்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் ஆகும் என்றும் , மாறாக கரைக்கு கொண்டு செல்ல வேண்டு மென்றால் ஏற்றி இறக்க மட்டும் ரூ.30,000 மேல் செலவு ஆகும் என்று தெரிவித்தார்.
ஓரிரு விசைப்படகு மட்டும் வைத்து தொழில் நடத்தும் சிறு முதலாளிகளுக்கு இவ்விழப்பு என்பது மிக அதிகமாகும்.மேலும் நாம் சென்ற இடங்த்தில் ஐஸ் உடைக்கும் இயந்திரம் ஒன்றும் புயலினால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
இப்பகுதியில் பல மீனவ சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான சென்னை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயலாளர் விஜேஷ்-டம் பேசியதிலிருந்து “காசிமேடு பகுதியில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் சுமார் 870-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. பதிவு செய்யப்படாதவை சுமார் 150-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன.
வத்ரா புயலில் சுமார் 30 முதல் 40 படகுகள் வரை மூழ்கியிருக்கின்றன. 400 முதல் 500 படகுகள் சேதமாகியிருக்கின்றன.
இதற்கு நிவாரணம் கோரி மீன் வளத்துறையிடம் தொடர்பு கொண்டுள்ளோம்.அது வரை தொழிலுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். கடலுக்கு சென்ற 2 படகுகளுடன் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அது விபத்துள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். காற்று வாட்டத்திற்கு அடித்து செல்லப்பட்டிருக்கும். கிருஷ்ணாபட்டினத்திற்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஏதேனும் புகார் அளித்திருக்கிறீர்களா?
“இன்னும் முழுமையான விவரங்கள் எங்களுக்கே தெரியவில்லை. அநேகமாக இன்றைக்குள்(13-12-2016)க்குள் தெரிந்துவிடும். பின்னர்தான் முறைப்படி புகார் செய்ய முடியும்.”
வர்தா புயல் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் சேதம் மிக அதிகம். அப்பகுதியில் குடிதண்ணீர் மின்சாரம் இன்றி வீடுகளின் கூரைகள் உடைந்து தண்ணீர் சிந்த மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆத்திரமுற்ற மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகிறார்கள். நாம் செல்லும் போது காசிமேடு சந்திப்பில் 13.12.2016 செவ்வாய் அன்று மக்கள் சுமார் 2 மணிநேரமாக சாலை மறியல நடத்தினார்கள்.
சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய அழிவில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்கள். ஆனால் ஊடகங்களும், அரசும் மேட்டுக்குடி பகுதிகளில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி மின் விநியோகம் செய்வதையே சுற்றி சுற்றி வருகின்றன. உயிரையும், உடமையையும் இழந்து வாழும் மீனவ மக்கள் அனாதைகள் போல அவதிப்படுகிறார்கள். இவையெல்லாம் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத கணங்கள் என்றே அவர்கள் அதை சகஜமாக கடந்து செல்கிறார்கள்.
எல்லையிலே குளிரில் வாடும் வீரர்களை முன்வைத்து தேசபக்தி சாமியாடும் மத்திய அரசுக்கு இங்கே அன்றாடம் கடலிலே சாகசப் பயணம் சென்று வரும் மீனவ மக்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. காசி மேடு பகுதியில் மறியல் செய்த மக்கள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கலைப்பதிலும் விரட்டுவதிலும் குறியாக இருந்த போலீஸ் மற்றும் அதிகார வர்க்கம் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து எதையும் செய்யவில்லை.
நிவாரண முகாம், உணவு, குடி நீர் பொட்டலக் கணக்குகள் எவையும் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையவில்லை. கடலில் காணாமல் போய் விரைவில் இறந்து போனவர்களின் பட்டியலில் சேரவிருக்கும் மீனவர்களுக்காக ஆங்காங்கே அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்.
கன்னியாகுமாரி மாவட்டம், நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே செயல்பட்ட இரு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பின் கீழ் சுற்றுவட்டார கிராம பெண்கள் திரண்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. (இந்த பேராட்டம் குறித்த செய்திகள் ஏற்கனவே வினவில் வெளி வந்துள்ளது )
தொடார் போராட்டத்தின் பகுதியாக 04.10.2016-ம் தேதி நடந்த டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தின் போது பணிந்த அரசு அன்றைய தினமே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது என்று காரணம் காட்டி உடனடியாக ஒரு கடையை மூடியது. 30 நாட்கள் கால அவகாசத்தில் மற்றுமொரு கடையை மூடிவிடுவதாக கூறியது.
அரசு கூறியபடி நடந்து கொள்ளும் என்பதை பெண்களும் தோழர்களும் நம்பத் தயாராக இல்லை. அரசு தெரிவித்த கெடு 03.11.2016 அன்று முடிவடைந்தது. 4-11-16 டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அந்த கடையை முற்றுகையிட திட்டமிட்டு பெண்களும் தோழர்களும் கிராமம் கிராமமாக சென்று அணி திரட்டினர்.
மேலும் 4.11.2016-ம் தேதிக்குள் கடையை மூடுவோம் என்று அரசு அளித்த வாக்குறுதியை நினைவூட்டுவதற்காக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர். ஆட்சியரை 4 பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்று போலீசாரும், ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும் தடுக்க எடுத்த முயற்சிகளை போராடி முறியடித்து சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்தனர். நினைவூட்டல் கடிதத்தை பெற்றுக் கொண்ட ஆட்சியர்; கடையை மூட எனக்கு அதிகாரம் கிடையாது, உடனடியாக கடையை மூட முடியாது, அவகாசம் வேண்டும், மேலே எழுதியிருக்கின்றேன் என்று தான் கூறிய வாக்குறுதியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கூறினார் அப்போ ஏன் சார் ஒரு மாதத்தில் கடையை மூடுவதாக போராட்டம் நடந்த அன்று கூறினீர்கள்? உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அன்றையதினமே தெரியாதா? என்று எதிர் கேள்வியை கேட்டனர் பெண்கள். ஏற்கனவே ஒரு கடையை மூட நீங்கள் தானே உத்தரவிட்டீர்கள், அப்போ மட்டும் எங்கிருந்து அதிகாரம் வந்தது? நாங்கள் போராட்டம் நடத்தும்போது எங்களிடம் இரண்டு நாட்களிள் கடையை மூடுகின்றோம், மூன்று நாட்கள் மூடுகின்றோம் என்று கூறுகின்றார்களே அதிகாரிகள் அப்போது மட்டும் எங்கிருந்து அதிகாரம் வந்தது என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர் பெண்கள்.
மேலிடத்திலிருந்து உத்தரவு வந்த பின்பு நிரந்தரமாக மூடுங்கள் அதுவரை தற்காலிககமாக மூடி வையுங்கள் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டனர் பெண்கள். நாங்கள் ஒவ்வொரு முறை உங்களை சந்தித்து மனு கொடுக்கும் போதும், போராடும் போதும் ஏதாவது கூறி எங்களை ஏமாற்றி வந்தீர்கள். இனிமேல் ஏமாற மாட்டோம் என்று கூறிவிட்டனர். திங்கள்கிழமை மனுநீதி நாள் என்பதால் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சூழ மன்னர் போல் மேடையில் அமர்ந்திருந்த கலெக்டருக்கு கடையை மூடுமாறு பெண்கள் உத்தரவிட்டனர். இதனால் நிலை குலைந்து போனார் கலெக்டர். அதிகார தோரணையில் பேச இயலவில்லை. உட்கார்ந்திருந்த அதிகாரிகள் பலரும் பெண்களைப் பார்த்து வெளியே போங்கள், வெளியே போங்கள் ஐயாவிடம் இப்படி பேசக்கூடாது என்று கத்தி கலெக்டரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எதற்கும் அஞ்சாத பெண்கள் கடையை மூடுகிறேன் என்று கூறுங்கள் சார் நாங்கள் என்ன சொன்னாலும் கடையை மூடுறேன்னு மட்டும் சொல்ல மாட்டேங்கிறீங்களே சார் என்று கலெக்டரை கேள்வி கேட்டனர். 4-ம் தேதி கடை திறந்தால் என்னை வந்து பாருங்கள் என்று கலெக்டர் கூற, நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும் நாங்கள் கடையைத்தான் முற்றுகையிடுவோம் என்றனர் பெண்கள். நான் கடையை மூடுகிறேன் என்று நேரடியாகக் கூறினால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளை மூட வேண்டுமென மக்கள் கூறுவர் என கலெக்டர் கூறியதும் அவரை சுற்றியிருந்து அல்லக்கை அதிகாரிகள் ஐயா சொல்லிட்டாருல்ல நல்லது தான் நடக்கும் என்று ஜால்ரா அடித்தனர்.
அதே தினம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று காவல்துறை கண்காணிப்பாளரை நினைவூட்ட சென்ற போது அங்கேயும் 5 பேர் தான் சந்திக்க முடியும் என்று விதித்த கட்டுப்பாடுகள் எதுவும் எடுபடவில்லை. ஓரிருவர் மட்டும் காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு SP (காவல்துறை கண்காணிப்பாளர் அன்றைய தினம் விடுமுறையில் சென்றிருந்தார்) இரண்டாம் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்து சந்தித்தார். நான் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசிவிட்டேன். சட்டம் ஒழுங்கு பாதிக்கப் பட்டுள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை கொடுத்து விடுவார். 4.11.2016-ம் தேதி முதல் கடை திறக்காது என்று காவல்துறை கண்காணிப்பாளார் என்னிடம் கூறிவிட்டார் என்று SP கூறினார்.
04.11.2016-ம் தேதி காலை திட்டமிட்டப்படி பெரும்பான்மையாக பெண்களும், ஆண்களும் அணி திரண்டனர். காவல்துறையினர் தோழர்களை தொடர்பு கொண்டு இன்றிலிருந்து கடை திறக்காது என்று கூறினார். ஆனாலும் கடை மூடப்பட்டால் தான் நாங்கள் நம்புவோம் என்று பெண்களும், தோழர்களும் கூறிவிட்டனர். நண்பகல் 12.00 மணிக்கு கடை திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தபின்பு காரங்காடு ஆலய மைதானத்தில் பாயாசம் தயாரித்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பெண்கள்.
மூடப்பட்ட கடைகளுக்கு முன்பு பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினால் பேயன்குழி இந்துக்களுக்கு எதிராக காரங்காடு, நுள்ளிவிளை கிறிஸ்தவர்கள் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் என்று, டாஸ்மாக்கை நம்பி பிழைப்பு நடத்தும் சிலர் திரித்து கூறி ஏற்கனவே நிலவிவரும் முரண்பாட்டை பொரிதாக்கி விடுவார்கள், (பேயன்குழி – நுள்ளிவிளை எல்கை பிரச்சனை) பேராட்டத்தினால் துளிர்விட்டுள்ள ஒற்றுமையும் கெட்டுவிடும் என்று எச்சரிக்கையாக நடந்து கொண்டனர் அனைவரும். (500 கடைகள் மூடப்படுவதாக வெளி வந்த பட்டியலில் இந்த இருகடைகளின் எண்கள் இல்லாத நிலையில் சில சமூக விரோதிகள் கடைகள் முன்பு வெடி வெடித்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். பின்னர் பேயன்குழி ஊர்மக்கள் அவ்வாறு செய்ததாக பொய்யான செய்தியையும் பரப்பிவிட்டனர்).
பேயன்குழி ஊர் நிர்வாகமும், ஊர்மக்களும் இது நியாயமான போராட்டம் என்று கூறி இந்த பேராட்டத்தினை ஆதரித்ததோடு, தங்கள் ஊர் பெயரை பயன்படுத்தி யாரும் டாஸ்மாக் போராட்டத்தை சீர்குலைக்காதவாறும் கவனித்துக் கொண்டனர்.
கடைகள் மூடப்பட்டதை அறிந்ததும் காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிர்யரும், ஆசிரியர்களும் பேராட்டக்காரர்கள் குழுமியிருந்த காரங்காடு ஆலய மைதானத்திற்கு வந்து தாங்களும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் தான் இந்த பள்ளியில் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்த இரு டாஸ்மாக் கடைகளால் பள்ளி மாணவர்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப்பட்டு வந்ததாகவும், இன்று தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தான் எங்கும் கேள்விப்படாதவாறு இங்கு இருகடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும் போராட்டத்தில் பாதிரியாராக இல்லாமல் மக்களோடு மக்களாக முழுமூச்சாக பங்கு கொண்ட பங்கு தந்தை எடிசனுக்கும், மக்கள் அதிகார தோழர். சிவராஜ பூபதிக்கும், வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜிக்கும் தலைமை ஆசிரியர் சால்வை அணிவித்தார். மேலும் மக்களோடு மக்களாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பங்குத்தந்தை டென்சிங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
போராட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றியின் அனுபவத்தை மற்றவர்களுக்கு பரப்பவும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதியளிக்காமல் இழுத்தடித்தது. இதே காவல்துறைதான் முற்றுகை போராட்டம் நடத்தும் போது நீங்கள் ஏன் அனுமதியின்றி போராட்டம் நடத்துகின்றீர்கள், எங்களிடம் அனுமதி கேட்டால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருப்போம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்திருப்போம் என்றனர்.
காவல்துறை அனுமதியளிக்காததையடுத்து 26.11.2016-ம் தேதி நாகர்கோவிலில் கருத்தரங்கம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட சுமார் 220 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் போராட்ட அனுபவத்தைப் பேசிய மக்கள் அதிகாரம் நாகர்கோவில் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர். சிவராஜபூபதி,
“இந்த இரு டாஸ்மாக்கையும் மூட இந்த பகுதி மக்கள் ஏராளமான மனுக்கள் கொடுத்து காத்திருந்தனர் பலனில்லை. ஆர்ப்பாட்டமும் எழுச்சியுடன் நடத்தியுள்ளனர், பலனில்லை. டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியும் என்னும் அமைப்பை உருவாக்கினோம். சாதி, மதம், ஊர் வேற்றுமையின்றி பெண்கள் அதில் இணைந்து கொண்டனர். மக்கள் அதிகாரம் தலைமையில் சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பெண்களையும், ஆண்களையும் திரட்டினோம். வாரம் இரண்டு முறை, மூன்றுமுறை கூடி திட்டமிட்டும், திட்டமிட்டபடி கிராமம் கிராமமாக சென்றும் நாள் முழுவதும் வாரம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். பிரச்சாரம் செல்லும்போது சில இடங்களில் கிராமத்திலேயே உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும் பேயன்குழி ஊருக்கு சென்று மக்களை போராட்டத்திற்கு அழைத்தபோது அங்குள்ள இந்து கோவிலில் பிரச்சாரத்திற்கு சென்ற கிறிஸ்த மதத்தை சேர்ந்த பெண்கள் அந்த ஊர் பெண்களோடு சேர்ந்து சாமியும் கும்பிட்டனர்.
மேலும் போலீசார் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் வீட்டருகே உள்ள கடைகளில் வேண்டுமென்றே விசாரித்தனர். சகோதரர் பெயர் குற்ற வழக்கில் இருந்ததை காரணம் காட்டி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து குற்றவாளியை தேடுவது போல் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்ணை மிரட்டியது போலீசு. ஊர் முழுக்க, வழி நெடுக போலீசை போட்டு, தடுப்பரண் அமைத்து மிரட்டியும் பார்த்தது, இவற்றுக்கெல்லாம் அஞ்சாத பெண்களால் நடந்தது தான் இந்த போராட்டம். கணவனையும், மகனையும் குடிக்காமல் தடுக்கத் தெரியாத பெண்கள் ஊரை திருத்த கிளம்பிட்டாளுக, கணவனுக்கு அடங்காதவளுக, இதுமட்டுமல்ல இன்னும் பல அவதூறுகள். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பெண்கள் காதுபட போலீசும் பேசியது.
இவற்றுக்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுத்து முன்னேறினர் பெண்கள். இரவு 10.00 மணிக்கு தனியாக சென்றும், பகலில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்றும் தாங்கள் வாழும் பகுதிகளில் பெண்களே சுவரொட்டி ஒட்டினர். மேலும் குடிக்கு ஆட்பட்ட தனது கணவரிடம் கொடுத்தும் சுவரொட்டியை ஒட்டினார் ஒரு பெண். நள்ளிரவு சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டதை தெரியப்படுத்த நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் போன் பண்ணியதும் போனை எடுத்தது பேசியது மட்டுமல்ல தனது கணவனோடு நள்ளிரவே காவல் நிலையம் வந்தது, நள்ளிரவே பெண்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறி காவல் நிலையம் செல்ல அணிதிரட்டியது என்று தோழமை உணர்வோடு வேலை செய்தனர். சுவரொட்டிய ஒட்டியதில் ஒருவர் வழக்கறிஞர் என்று தெரிந்தும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உறுதியையும், தைரியத்தையும் போராட்ட களத்தில் பார்த்த போலீசு அவர்கள் காவல் நிலையம் வந்ததை பார்த்ததும் அஞ்சினர். அதிகமான பெண்கள் கூடிவிடுவதற்குள் கைது செய்யப்பட்ட தோழர்களை வீட்டிற்கு அனுப்ப முனைப்பு காட்டினர் போலீசார்.
போராட்டம் நடைபெற்ற தினத்தில் நள்ளிரவில் பெண்களை சவாரி ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் டாஸ்மாக் போராட்டத்தில் கலந்து விடுதலையாகி வரும் பெண்கள் என்பதை தெரிந்ததும் வாடகை வாங்காமல் இறக்கி விட்டுள்ளார். அது மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வாழ்த்தியும் அனுப்பியுள்ளார். போராட்டம் தொடங்கிய நேரம் முதல் நள்ளிரவு போராட்டம் முடியும் வரை ஒவ்வொரு போராட்டத்திலும் பத்திரிக்கை நண்பர்கள் சிலர் உணர்வுப்பூர்வமாக காத்திருந்து போராட்ட செய்திகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தனர்.
சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பொதுவான கோரிக்கையின் கீழ் சரியான அரசியல் கண்ணோட்டத்துடன் அமைப்பாக திரண்டு போரடியதால் கிடைத்த வெற்றி இது . மதப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை, மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு, அமெரிக்காவிடம் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டும் போராடுகிறார்கள், வீட்டுக்கு அடங்காத பெண்கள் போராடுகிறார்கள் என்று எண்ணற்ற அவதூறுகளை அமைப்பாக திரண்டதால் மட்டுமே முறியடித்து முன்னேற முடிந்தது.
இந்த வெற்றியை நாம் தக்க வைக்க வேண்டும், நம்மோடு வைத்துக் கொள்ளாமல் ஏனைய மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்று போராட்ட அனுபவத்தை பேசினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அமலநாதன் வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்து பேசினார்.
இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ மோடியின் கறுப்புப் பண மோசடி குறித்துப் பேசினார். டாஸ்மாக்கை மூடுவதற்கு மட்டுமல்ல பறிக்கப்படும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஒன்றே தீர்வு என்ற நிலமை நிலவுவதையும் அதற்கு மக்கள் அமைப்பாக திரள வேண்டும் என்ற தேவை நிலவுவதையும் இந்த பேராட்டம் பெண்களுக்கு உணர்த்தியுள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
நாகர்கோவில் பகுதி.
”அரசாங்கம் விவசாயிகளுக்குப் போதுமான நிவாரணங்களை வழங்க வேண்டும்…” விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வீடு மிகச் சாதாரணமாக இருந்தது. தலைவாசலின் முன்னே இருந்த சிறிய திண்ணையின் ஒரு மூலையில் அந்த அம்மாள் அமர்ந்திருந்தார். முதியவர் ஒருவரின் புகைப்படத்தின் முன் ஊதுவர்த்தி புகைந்து கொண்டிருந்தது. பூஜைப் பொருட்கள் பழைய தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
வீட்டின் பக்கவாட்டில் தற்காலிக பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு அதன் கீழ் சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பி.ஆர்.பாண்டியன் பேசுவதை புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்னே பச்சைத் துண்டணிந்த சங்கப் பிரதிநிதிகள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தனர்.
அது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள ஆதனூர் கிராமம். துர்மரணம் நடந்த வீடு அது. அந்த வீட்டில் துக்கம் கேட்க வந்தவர்கள் நெஞ்சு வெடிக்கும் மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் அந்த அம்மாளின் முன் அமர்ந்தோம். அவர் முத்துலட்சுமி. அவரது கணவர் ரெத்தினசாமி நவம்பர் 6-ம் தேதியன்று இறந்து போயிருந்தார். எம்மை நிமிர்ந்து பார்த்தவர், நிலைகுத்திய பார்வையோடு கேட்காமலே பேசத் துவங்கினார்.
“காலையில வயக்காட்டுக்குப் போனவரு தான். வீட்டுல பழையது இருந்திச்சிது. சீக்கிரமா வாரம்னு சொல்லிட்டுத்தேன் போனாரு… நானும் வருவாரு வருவாருன்னு காத்திருந்தேன்… கடேசில பொணமாத்தேன் வந்தாரு…” என்றவர் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் விவசாயிகள் சாவு அதிகரித்து வருகின்றது. இன்றைய நிலவரப்படி சுமார் 19 விவசாயிகள் இறந்து போயுள்ளனர். தமிழகமெங்கும் நடப்பு பருவத்தின் விளைச்சலை நம்பி கடன் வாங்கி சாகுபடி செய்திருந்தனர் விவசாயிகள். பயிர்கள் பொய்த்துப் போவதைக் காணாச் சகியாமல் பூச்சி மருந்து குடித்து சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், வேறு சிலரோ அதிர்ச்சி தாளாமல் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.
“ரெண்டு தரம் வெதச்சிப் பார்த்தும் பயிர் வரல்லே சார். மூனாந்தரம், நாத்து விட்டுப் பார்த்தாரு. இதுக்கே முப்பதாயிரம் கடன் வாங்கியிருக்காரு. விதையும் நாத்தும் கூட கடன் சொல்லித் தான் வாங்கியிருக்காரு.. ஏற்கனவே தங்கச்சி கலியாணத்துக்கு அஞ்சி லச்சம் வரைக்கும் கடன் இருக்கு.. ஏதோ அறுவடையானா கடனிலே கொஞ்சம் அடைச்சிரலாம்னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தாரு.. தண்ணீ வரல்லே.. பயிரெல்லாம் கருகத் தொடங்கிருச்சி.. கருகின பயிரையே பார்த்திட்டு நின்னவரு திடீர்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு விழுந்திட்டாரு.. வயக்காட்டுலயே செத்துப் போயிட்டாரு சார்” என்றார் அறிவொளி. ரெத்தினசாமியின் இளைய மகன்.
”நீங்க படிச்சிருக்கீங்களா”
“ஆமா சார். டிப்ளமா.. ஹானர்ஸ்ல பாஸ் பண்ணிருக்கேன்?”
“வேலைக்குப் போறீங்களா?”
“இல்ல சார். விவசாயம் தான்”
“ஏன், படிச்சிட்டு வேலைக்குப் போகலை?”
அதிசயமாய்ப் பார்த்தார்; பின் சொன்னார், “அதான் வயக்காடு இருக்கே? ரெண்டாவது அண்ணனுக்கு கொஞ்சம் புத்தி சரியில்லே.. அதான் அப்பாவோட சேர்ந்து வயக்காட்ட பார்த்துக்கலாம்னு இருந்திட்டேன்”
”வேலைக்குப் போயிருந்தா சம்பளம் கிடைச்சிருக்குமே?”
“அது என்னாத்துக்கு சார்? நம்ம நெலம் இருக்கு.. வெவசாயம் இருக்கு.. வேற என்னா?”
”எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?”
“மூணு மா… ஏக்கர்னு சொன்னா ஒரு ஏக்கருக்கு கொஞ்சம் குறைவா வரும்”
“அப்ப, வேலைக்குப் போயி சம்பாதிக்கிறதை விட விவசாயம் லாபம்னு சொல்றீங்க?”
“அப்படி சொல்ல முடியாது. ஏதோ சாப்பாட்டுக்கு.. செலவுக்கு சரியா இருக்கும்”
”விவசாயம் தான் வாழ வைக்கலையே? அப்புறமும் ஏன் நீங்கள் அதிலேயே இருக்கணும்? வேற வேலைக்குப் போயிருக்கலாமே?”
“அதுக்காக? நெலத்தை தரிசா போடச் சொல்றீங்களா? வெதைக்க வக்கில்லாமே நெலத்தை தரிசா போட்டிருக்கான்னு ஊர்ல கேவலமா பேச மாட்டாங்க?” சட்டென வந்த பதிலில் ஆத்திரம் இருந்தது.
டெல்டா மாவட்ட இளைஞர்கள் விவசாயத்தைக் கைவிட்டு விட்டதாக பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அது முழு உண்மையில்லை. மானாவரி பாசனம், ஆற்றுப் பாசனம் நடக்கும் பகுதிகள் மற்றும் மேலத் தஞ்சைப் பகுதிகளில் இளைஞர்கள் பரவலாக வெளியூர்களுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். அதே நேரம், செழிப்பான இறவைப் பாசன விவசாயம் நடந்த கடைமடைப் பகுதிகளில் கணிசமான அளவில் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்தால் எந்த லாபமும் இல்லை என்று நாங்கள் சந்தித்த அனைவரும் தவறாமல் சொன்னார்கள். நாங்களும் அவர்களிடம் ”ஏன் லாபம் தராத விவசாயத்தில் ஈடுபட வேண்டும்?” என்கிற கேள்வியைத் தவறாமல் கேட்டபோது சொல்லி வைத்தாற் போல் அனைவரிடமும் ஒரே பதில் தான் வந்தது. சிலரின் பதிலில் சீற்றம்; சிலரின் பதிலில் ஆற்றாமை; சிலரின் பதிலில் விரக்தி.. ஆனால், உணர்ச்சிகள் வேறுபட்டாலும் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது.
“கவருமெண்டு ஆபீசருங்க தான் சாகுபடி செய்யச் சொன்னாங்க.. இப்ப சாகச் சொல்லுறாங்க” என்கிறார் திருத்துறைப்பூண்டியை அடுத்த நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது கனி பாப்பா. மொத்தம் பதினெட்டு ஏக்கரில் சாகுபடி செய்கிறார். அதில் பதினாறு ஏக்கர் குத்தகை நிலம்.
”ஒரு ஏக்கருக்கு செலவு செய்தது போக எவ்வளவு மிஞ்சும்?”
”மூடை நெல்லு 800-லிருந்து ஆயிரம் வரைக்கும் போகும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் முப்பது மூடை அறுவடை ஆகும். உழவுக்கூலி, பூண்டு வெட்ட, வரப்பு வெட்ட, விதைக்க, உரத்துக்கு, மருந்தடிக்க, களையெடுக்க, அறுவடை கூலின்னு செலவு இருபதாயிரத்துக்கு கொஞ்சம் அதிகமா ஆகும். ஏக்கருக்கு அதிகபட்சம் ஏழாயிரம் நிக்கும். இதுல குத்தகை நிலம்னா, நிலத்தோட சொந்தக்காரருக்கு ஏக்கருக்கு ஆறு மூடை அளக்கனும்..”
ஏறக்குறைய வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய் விட, கையில் மிஞ்சுவது ஆள் கூலிக்கும் குறைவான தொகையாகவே இருக்கின்றது. குறுவை, தாளடி, சம்பா என மூன்று போகமோ அல்லது குறைந்தது இரண்டு போகமோ விளைந்து, நெல் பயிரிடாத மாதங்களில் துவரை, உளுந்து, கடலை போன்ற வேறு பயிர்களும் விளைந்தால் ஓரளவுக்கு லாபம் பார்க்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் ஒரு போக விளைச்சலுக்கே தஞ்சை விவசாயிகள் தடுமாறி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 சதவீதம் குத்தகை விவசாயிகளாகவும், சுமார் 20 சதவீதத்தினர் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளாகவும், சுமார் 20 சதவீதமானவர்கள் ஐந்து ஏக்கர் வரை வைத்துள்ள நடுத்தர விவசாயிகளாகவும் உள்ளனர். குத்தகை விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு ஓரிரு ஏக்கர் சொந்த நிலமும் உள்ளது.
நிலத்தடி நீரையும், ஆற்றுப்பாசனத்தையும், போர்வெல்லையும் நம்பியிருந்த குறுவை மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ ஒழிந்து போன நிலையில், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் மேட்டூர் அணையையும் மழையையும் நம்பியிருக்கும் சம்பா சாகுபடி மட்டும் கடந்த சில வருடங்களாக நடந்து வந்திருக்கிறது. தற்போது காவிரியும் கைவிட்ட நிலையில் மழையும் பொய்த்திருப்பது பயிர்களையும் அதை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்க்கையையும் கருக்கி உள்ளது.
முகமது கனி பாப்பாவுக்கு 62 வயதாகிறது. முப்பதுகளில் உள்ள அவரது இரண்டு மகன்களும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 62 ஆயிரம் கடனில் வாங்கிய கிர்லோஸ்கர் இறவை இயந்திரத்தை ஒரு மாதமாக பெட்டி பிரிக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்.
“வாய்க்காலில் தண்ணீர் வரல்லே. விதைச்சதெல்லாம் கருகிப் போச்சி. இதுக்கு வாங்கின கடனை எப்படி அடைப்பேன்னும் தெரியலை. சாகிறதைத் தவிர வேற எந்த வழியும் கண்ணுக்குத் தெரியலே…” என்கிறார்.
“இயற்கையே உங்களைக் கைவிட்டாச்சின்னா விதி விட்ட வழின்னு இருந்திட வேண்டியது தானே?”
“அது எப்படி.. நெலத்தை சும்மா போட்டுட்டு கிடக்க சொல்றீங்களா? ஊர்ல நாலு பேரு கேவலமா பேசமாட்டான்?”
“இப்போ நடக்கிற தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் தவிர்க்க வேற என்ன தான் வழி?”
”அரசாங்கத்தாலே மட்டும் தான் முடியும். இருக்கிற கால்வாய தூர்வாரியிருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்திருக்கும்.. அதையும் ஒழுங்கா செய்யலை”
“ஏன் நூறு நாள் வேலைத் திட்டத்தில ஏரி குளம் கால்வாய் தூர்வார்றதா தானே சொல்றாங்க?”
”அதெல்லாம் சுத்த ஏமாத்து வேலைங்க. நூறு நாள் வேலைக்குப் போறோமின்னு கவருமெண்டு காசை தின்னுட்டு ஒருவனும் வேலை பார்க்கிறதில்ல” என்று அவர் சொல்ல, அருகில் இருந்த ரங்கசாமி குறுக்கிட்டார். அவர் அதே ஊரைச் சேர்ந்தவர். விவசாய கூலித்தொழிலாளி.
”அப்படி இல்லை சார். எங்களை கூட்டிப் போயி என்ன வேலைன்னு சொல்லாம எதுனா செய்யச் சொல்றாங்க. வெறும் கணக்கு தான். ஆபீசருங்களுக்குத் தானே எந்தக் கம்மாயை எப்படி வெட்டனும்னு தெரியும்?”
ஏரி குளங்கள் கால்வாய்கள் மற்றும் இணைப்பாறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைத் தூர்வாரும் பணிகள் கடந்த பத்தாண்டுகளாகவே சரியாக நடைபெறவில்லை என்றும், அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முற்றாகவே நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பலர் தெரிவித்தனர். டெல்டா மாவட்டப் பகுதிகளில் நாங்கள் சென்ற வழித்தடமெங்கும் கண்ணில் பட்ட எல்லா கால்வாய்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக மழிக்கப்பட்ட முகங்களைப் போல் விகாரமாக காணப்பட்டன. பல இடங்களில் பெரிய குளங்கள் தூர்ந்து போயிருந்தன; குளங்களின் கரையோரங்களில் பத்துக்குப் பத்து அளவில் அரையடி ஆழத்தில் ஆங்காங்கே தரை சுரண்டப்பட்டு காணப்பட்டது.
“இது தான் நூறு நாள் வேலைத் திட்டம் ” என்றார் உடன் வந்த தோழர். அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் விவசாயத்தை அழித்தொழிப்பதும், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணிப்பதும் தெரிந்த செய்திகள் தான். என்றாலும், டெல்டா மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.
”எனக்கு இப்போ 81 வயசாகுது. 1953-லேர்ந்து விவசாயத்தில இருக்கேன். அந்தக் காலத்திலே அரசாங்கத்துக்கு மக்கள் மேல கொஞ்சம் மரியாதை இருந்தது. அப்போ குடிமராமத்துன்ற பேர்ல வீட்டுக்கு ஒருத்தரை வரவழைச்சி தூர்வாரும் வேலை செய்வாங்க. இப்போ அரசாங்கமே கொள்ளையடிக்கத் தானே நடக்குது?” என்கிறார் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தில்லை வளாகம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத் தேவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணியத் தேவர் இத்தனை ஆண்டுகளில் விவசாயத்தின் போக்கு எந்த வகையில் மாறுதலுக்கு உட்பட்டது என்பதை விளக்கினார்.
பழைய கால கிராம அமைப்பில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் விவசாயத்தின் இருப்புடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருந்ததால், உழவுத் தொழிலை உயிரோடு விட்டு வைப்பது நிலப்பிரபுக்களுக்கு அவசியமானதாக இருந்தது. குடி மராமத்தை உள்ளூர் நிலப்பிரபுக்களே முன்னின்று ஒருங்கிணைத்தனர் – உள்ளூராட்சி அமைப்புகளிலும் அதிகாரத்தில் இருந்த பழைய நிலப்பிரபுக்கள், மராமத்துப் பணிகள் நடைபெறுவதை உத்திரவாதப்படுத்திக் கொண்டனர். இந்நிலை தொண்ணூறுகளுக்கு பின் தலைகீழாக மாறியது.
பெரும் நிலப்பிரபுக்களின் அதிகாரம் நிலத்துடன் பிணைந்திருந்த அதே சமயம், விவசாயத்துடன் பிணைந்திருக்கவில்லை. தொண்ணூறுகளுக்குப் பின் விவசாயத்தை விட லாபம் கொழிக்கும் பிற தொழில்கள் கைக்கெட்டும் தொலைவில் – நகரங்களில் – இருப்பதைக் கண்ட நிலப்பிரபுக்கள் விவசாயத்தை குத்தகைதாரர்களின் பொறுப்பில் விடுவது அதிகரித்தது. பெரு நிலப்பிரபுக்கள் விவசாயத்திலிருந்து விலகும் போக்கு பசுமைப்புரட்சியின் காலத்திலேயே துவங்கி விட்டதெனினும் தொண்ணூறுகளுக்குப் பின் வேகமெடுத்தது.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில், உள்ளூரளவில் தலையெடுக்கத் துவங்கியிருந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அரசியலைக் கைப்பற்றத் துவங்கினர். தொண்ணூறுகளுக்குப் பின் அரசின் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே விவசாயத்தையும் அதற்கான அடிக்கட்டுமானங்களையும் மேலிருந்து திட்டமிட்டு அழித்தொழிக்கும் வேலையைக் கையிலெடுத்துக் கொண்டதென்றால் – கீழிருந்து அதை துரிதப்படுத்தும் வேலையை புதிய பாணி அரசியல் ரவுடிகள் கையிலெடுத்தனர்.
அரசியலையே முழுநேரப் பிழைப்பாகவும், வருமானத்தை வாரி வழங்கும் தொழிலாகவும் ஏற்றுச் செயல்பட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளே உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். ஒருபுறம் அரசே உட்கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து வந்த நிலையில் – அவ்வாறு ஒதுக்கப்படும் தொகைகளையும் இவர்கள் முழுதாக கொள்ளையடித்தனர்.
சுப்பிரமணியத் தேவர் கிளைதாங்கி ஆற்றின் கதையை விளக்கினார். காவிரியின் கிளையாறுகளான பாமினியாறு, கோரையாறு, மறைக்கால்கோரையாறு ஆகியவற்றின் கடைமடைகளை இணைப்பது கிளைதாங்கி. அம்மூன்று ஆறுகளின் தண்ணீர் நேரடியாக கடலில் கலப்பதற்கு முன் அவற்றை இணைப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஆங்கிலேய அரசு.
தில்லைவளாகத்தின் அருகே ஓடும் கிளைதாங்கியில் இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த இறவை இயந்திரங்களையும் கால்வாய்களையும் ஏற்படுத்தி தலா சுமார் 520 ஏக்கர்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பழுதுபட்ட இறவை இயந்திரங்கள் அதன் பின் சரிசெய்யப்படவே இல்லை. நாங்கள் அந்த இறவை இயந்திர அறையைப் பார்வையிட்டோம். நூற்றுக்கணக்கான வவ்வால்கள் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த அந்த அறையினுள் இருந்த இயந்திரங்கள் துருப்பிடித்து உருக்குலைந்து கிடந்தன.
கிளைதாங்கி ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு புதிதாக இறால் பண்ணைகள் முளைத்திருந்தன. கோடை காலங்களில் தங்களது பண்ணைகளுக்குத் தேவையான உப்புநீரைக் கடலில் இருந்து கிளைதாங்கி ஆற்றின் வழியே இறைத்துக் கொள்ளும் இறால் பண்ணை முதலைகள், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் டன் கணக்கான உப்பை இறால் குட்டையில் கொட்டுகின்றனர். இறால் குட்டைகளின் உப்பு அளவு அதிகரிக்கும் போது அதைக் கிளைதாங்கியில் திறந்தும் விடுகின்றனர்.
தில்லை வளாகம் துவங்கி, ஆதனூர், வேதாரண்யம் வரையில் பலகிலோமீட்டர்கள் இறால் குட்டைகளைக் காண முடிந்தது. கீழத்தஞ்சை பகுதி மட்டுமின்றி மேலத் தஞ்சையிலும் இறால் குட்டைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
“நீதி மன்றம் விளைச்சல் நிலத்தில் இறால் குட்டைகள் அமைக்க கூடாது என்கின்றன. ஆனால், அரசாங்கம் இறால் குட்டைகள் அமைக்க ஊக்குவிக்கின்றன. விவசாயத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே விவசாயிகளை நேரில் பார்த்து இறால் குட்டைகளும் நன்னீர் மீன் குட்டைகளும் அமைக்கச் சொல்கிறார்கள்” என்கிறார் சுப்பிரமணியத் தேவர்.
ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 90-களில் நடத்திய இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தால் உந்தப்பட்டு, அதற்கு சில ஆண்டுகள் கழித்து, தில்லை வளாகம் பகுதி மக்களைச் தனிப்பட்ட முறையில் திரட்டி போர்க்குணத்துடன் இறால் பண்ணை அழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தவர் சுப்பிரமணியத் தேவர்.
“ஏன் இப்போதும், அப்படியான ஒரு போராட்டத்துக்குத் தேவை இருக்கிறது தானே?” என்றோம்.
“சார், அன்னைக்கு நடந்த போராட்டங்களால மக்கள் மேல விழுந்த கேசுகளே இன்னும் முடியலை சார்” என்று குறுக்கிடுகிறார் சுப்பிரமணியத் தேவரின் மகன்.
”பொது வாழ்க்கையின்னு வந்தாச்சின்னாக்க.. தனிப்பட்ட அசௌகரியங்களை பார்த்துகிட்டு இருக்க முடியுமா?” என்று அவருக்கு பதிலளித்த சுப்பிரமணியத் தேவர், நம்மிடம் திரும்பினார், “அன்னைக்கு இருந்த இறால் பண்ணை முதலாளிகளை விட இன்னைக்கு இருக்கிறவங்க வேறமாதிரி இருக்காங்க தம்பி. இப்பல்லாம் ஒவ்வொரு பகுதியிலயும் இறால் பண்ணை முதலாளிகள் சங்கம் ஆரம்பிச்சிருக்காங்க…. ‘இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்கம்’ அப்படின்னு… இதிலே ஒவ்வொருத்தனும் காசு கட்டறான்.. ஒவ்வொரு சங்கத்துக்கும் சில பல லட்சங்கள் பொது நிதியா இருக்கு. இதை வச்சிகிட்டு அரசாங்க அதிகாரிகளை சரிகட்டிடறான்.. பல அதிகாரிகளே இறால் பண்ணைகல்ல கூட்டு பங்குதாரர்களா இருக்காங்க” என்றார்.
மேலும் தொடர்ந்த அவரது மகன், “கடல் தண்ணீரையே உள்ளே இழுக்கிறதாலே கிளைதாங்கியிலேர்ந்து தண்ணீர் இறைச்சி சாகுபடி செய்யிற எங்க பயிரெல்லாம் கருகிப் போயிடுது சார். அதிகாரிகளை நேரில் கூப்பிட்டு வந்து காட்டினாலும் தலையாட்டிட்டு போயிடறானே தவிர நடவடிக்கை எடுக்கிறதில்லே. இறால் பண்ணைகளால இந்தப் பகுதியோட நிலத்தடி நீரே கெட்டுப் போச்சிங்க. பத்துப் பதிமூணு அடியில கூட உப்புத் தண்ணீர் தான் வருது. இந்தப் பகுதில நாங்க வறட்சின்னு ஒன்னைக் கேள்விப்பட்டதே இல்ல.. இப்ப நீங்களே போயி பாருங்க.. பயிரெல்லாம் கருகிப் போயி கிடக்கு” என்றார்.
சங்கமாகச் சேர்ந்துள்ள இறால் பண்ணை முதலாளிகள், தங்களை எதிர்த்த சாதாரண விவசாயிகள் சிலரை சத்தமின்றிக் கொன்றிருப்பதாக பகுதி மக்கள் கூறுகின்றனர். சுப்பிரமணியத் தேவர் அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரை விட்டு வைத்துள்ள அக்கும்பல், அவரது வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தி மிரட்டியுள்ளது.
“இவங்களோட பயமுறுத்தலுக்கெல்லாம் நான் அசையிறதா இல்லே தம்பி. இத்தனை வருசத்துலே எவ்வளவு பார்த்திருப்பேன்” என்கிறார் சுப்பிரமணியத்தேவர்.
இறால் பண்ணைகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதன் விளைவாக கடை மடைப்பகுதிகளில் நாங்கள் பயணித்த வழித்தடத்தில் சில இடங்களில் தெண்ணை மரங்களே கூட பட்டுப் போய்க் கிடந்தன.. “தோழர், ஒரு சில இடங்கள்லே உப்புத் தண்ணீரால பனை மரங்களே கூட பட்டுப் போயிருக்குங்க” என்றார் உடன் வந்த தோழர்.
காவிரி நீர் பிரச்சினை ஒரு பக்கமென்றால், நீராதாரங்களும் நீர்த்தடங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவது இன்னொரு பக்கத்திலிருந்து விவசாயத்தைப் படுகொலை செய்துள்ளது. அரசோ மற்றொரு புறத்திலிருந்து நெல் சாகுபடியிலிருந்தும், ஏன் விவசாயத்திலிருந்துமே, விவசாயிகளை வெளியேற்றும் வேலைகளைச் செய்து வருகின்றது.
மாற்றுப் பயிர்கள், மாற்றுத் தொழில்கள் எனும் பெயரில் அரசு நடத்தும் விவசாய அழித்தொழிப்பு பற்றி அடுத்த பகுதியில்…
– தொடரும்
நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்
மாற்றுப் பயிர் – மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!
காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004-ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை “பயோடீசல்” என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை “உயிர்ம எரிபொருட்கள்” (Bio-Fuel) என்கின்றனர்.
இத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?
ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.
இப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.
அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007-ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற “பத்துக்கு 20” என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020-க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், “சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்” என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.
புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?
மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய “டார்ட்டில்லாஸ்” தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று “டார்ட்டில்லாஸ்”இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் “முற்போக்கு’ அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006-இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.
பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.
பிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். “நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்” என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.
இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான “பத்துக்கு 20” திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்!
ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007-இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த “பத்துக்கு 20” திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, “இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது” என்று சாடினார்.
உயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.
தமிழக அரசு 2004-ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த “ஜெட்ரோபா” முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.
சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.
எரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.
மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.
மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?
பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.
– இரணியன், புதிய ஜனநாயகம், ஜூலை 2007.
சோ ராமசாமி 7.12.2016 புதன் கிழமையன்று அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சோ-வைப் போன்றே நகைச்சுவை நாடகத்தால் பிரபலமான எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்த போது “நம்முடைய ராஜகுரு எப்படி இருக்கிறார்?” என்று சோ ராமசாமியைக் கேட்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும்?
பார்ப்பனியத்தின் விதிப்படி தேவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் குபேரனுக்கு குஜராத்தில்தான் ஆலயமே உள்ளதாம். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே இந்த ஆலயம்தான் என்று ஏதோ ஒரு சாதா ஜோசியர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அந்த குபேர ஆலயத்தில் குபேரனுக்கு விக்கிரகம் இல்லையாம். பாதாளம் வரை பாயும் பணத்திற்கு தனிச்சிறப்பாக எதற்கு ஒரு அடையாளம் என்று குபேரன் பெருந்தன்மையாக தவிர்த்திருக்கலாம்.
இந்திய மன்னர்களைப் பொறுத்தவரை குபேர குரு, ராஜகுரு இருவருமே தேவைப்பட்டனர். ஆள்பவர்களின் செல்வப் பெருக்கிற்கு குபேர குருவும், ஆளப்படுபவர்களின் பக்தி விசுவாத்திற்கு ராஜ குருவும் தேவைப்பட்டனர். ராஜபக்தி, விசுவாசம், அடிமைத்தனம் அனைத்தும் மக்களிடம் வேர்விட்டு செழிக்கச் செய்வதே ராஜ குருக்களின் பணி.
அத்தகைய மக்கள் பக்திதான் பட்டாபிஷேகத்தன்று குருவின் தண்டத்திலிருந்து கிரீடம் வழியாக ராஜாவின் தலையில் அமர்ந்து கொண்டு பாதுகாப்பளிக்கிறது.
இன்றைக்கு கருப்புப் பூனை அதிரடிப்படையின் தயவிலேயே சிறு-குறு-பெரு அரசர்கள் பாதுகாப்பை உணர்ந்தாலும், ராஜ குருக்களின் இடம் அரசவையிலிருந்து, ஊடகம், அதிகார வர்க்கம், மேட்டுகுடியினர் என்று கிளைபரப்பிவிட்டது. ஜெயாவின் இறுதிச் ஊர்வலத்தை திருவில்லிபுத்தூர் கும்பாபிஷேகம் போன்று இருநாட்களும் இடைவெளியில்லாமல் மனமுருகிப் பேசிய பாண்டே அதற்கோர் சான்று.
பாண்டேக்களின் காலத்தில் சோ ராமசாமியின் குருப் பாத்திரம் கொஞ்சம் இத்துப் போயிருந்தது உண்மைதான். மேலும் சோ-வின் தமிழக அரசியல் பாத்திரமென்பது அவாள்களின் நலன்களுக்கான தரகர் பாத்திரமாகவே நசுங்கியிருந்தது. செம்பு நசுங்கினாலும் அதையே பல்வேறு தருணங்களில் பஞ்சாயத்துக்களுக்கு அழைத்து வந்தனர்.
அப்பல்லோ அறை எண்ணில் அம்மா இருந்தபோது அவரது மர்ம உலகில் முன்னணி பாத்திரமாற்றிய சோ-வும் சிகிச்சைக்காக வந்தார். அம்மா போன அடுத்த நாளில் அவரும் போய்விட்டார். இல்லையேல் இன்று மன்னார்குடி மாஃபியாவுக்கு போட்டியாக மயிலாப்பூர் மாஃபியாவின் அணித்தலைவராக அவர் மோடியின் பொருட்டு களமிறங்கியிருப்பார். பரவாயில்லை சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, ஜெயேந்திர சரஸ்வதி மட்டுமல்ல, தினமணி வைத்தி, பத்ரி சேஷாத்ரி போன்ற நவயுக ராஜ குருக்களும், சமஸ் போன்ற கருப்பு ராஜ குருக்களும் அப்பணியை ஓரளவிற்கேனும் செய்வர்.
சோ-வின் பாத்திரத்தை எப்படி வரையறுப்பது? அவரது நாடகம், பத்திரிகை, தரகர் வேலை அனைத்திலும் பார்ப்பனியத்தின் நலனே பிரதானமாயிருந்தது. அதற்காக அவர் பொய்யுரைப்பதைக் கூட குற்ற உணர்வின்றி செய்தார்.
பத்திரிகையாளர் ஞாநியும், காலஞ்சென்ற சின்னக்குத்தூசியும் சங்கர மட ஜெயந்திரனை நேர்காணல் செய்தபோது சங்கர்சாரி ஒரு விசயத்தை கூறியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு முந்தைய துக்ளக் இதழில் சோ – தி.க வீரமணி நேர்காணல் வந்திருந்தது. அதில் சோ ஆவேசமாக பல பார்ப்பனியக் கேள்விகளைக் கேட்கிறார். “ராமசாமிக்கு இன்னின்ன கேள்வி கேக்கணும்னு” தான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்று ஞாநியிடம் பொய்யுரைக்கிறார் ஜெயேந்திரர். இதைப் பதிவு செய்து ஞாநி உடனே சோவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். இருவரும் குடும்ப நண்பர் என்பதால் ஞாநி சொல்வது உண்மை என்பதை சோ அங்கீகரிக்கிறார். எனினும் அடுத்து வந்த துக்ளக்கில் ஜெயேந்திரர் அப்படி கூறியிருக்கமாட்டார், ஞாநி பொய் சொல்வதாக எழுதிவிட்டார். காரணம் என்ன?
இந்தச் செய்தியை கேட்டபோது சங்கராச்சாரி அப்படி பொய் சொன்னதை மறுக்காத சோ என்ன இருந்தாலும் சங்கரமடத்தின் கௌரவம்தான் முக்கியமானது, அது ஜெயேந்திரனது பொய்யை விட முக்கியமானது என்றிருக்கிறார். அதன்படி சங்கராச்சாரியின் பொய்யை ஞாநி-சின்னக்குத்தூசியின் பொய்யாக மாற்றிவிட்டார்.
இந்த நேரத்தில் ஏன் அவர் குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லை? அதுதான் பார்ப்பனிய நலன். ஒரு பார்ப்பன ராஜகுருவின் தலையாயத் தகுதியே இதுதான். சாவதற்கு முந்தைய துக்ளக்கில் கூட அவர் அப்படித்தான் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்கிறார்.
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் ஒன்றை அவர் நடத்துகிறார். அதில் தி.க.வின் அருள்மொழி கலந்து கொண்டு எடுத்த எடுப்பிலேயே “உங்கள் பத்திரிக்கையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எழுதிவிட்ட பிறகு எதற்கு விவாதம்” என்று கேட்கிறார். கிரிக்கெட்டின் ரசிகரான சோ இந்த கிளீன் போல்டை ஒத்துக் கொண்டாலும் நாம் விவாதிப்பதற்காக ஒரு எபிசோடை கொடுத்திருக்கிறார்கள், அந்த 20 நிமிடங்களில் ஏதாவது பேசியாக வேண்டும், பேசுங்கள்” என்று சமாளித்திருக்கிறார். இதுதான் சோ.
எனினும் இப்படி பார்ப்பனியத்தின் பிதாமகராக நெஞ்சார பொய்யுரைத்தாலும் அவரது ‘துணிவு, நேர்மை, நகைச்சுவை’ காரணமாக அனேகமானோர் பாராட்டி நினைவு கூர்கின்றனர். செத்தோரை சிறுமைப்படுத்தக் கூடாது என்று வாழ்பவர்களை வதைக்கும் ஒரு பிரபலமான ‘தத்துவப்படி’ இந்தக் கருத்து “ஆல் பர்ப்பஸ் அங்கிள் மற்றும் ஆண்டிக்களின்’ வாய்களால் அடிக்கடி பிதுக்கப்படுகிறது. மற்றபடி இந்த தத்துவத்திற்க்கென்று குறிப்பான விளக்கமோ, பொருளோ, வாதமோ இல்லை. இந்த முன்வைப்பே இப்போது பேசாதே, அப்போது பேசியிருந்தாலும் செத்த பிறகு பேசாதே என்று கண்காணிப்பதுதான்.
இறுதியில் சோ-விடம் மிச்சமிருப்பது நகைச்சுவை மட்டுமே. உண்மையில் அது நகைச்சுவைதானா? அதற்கு சோ-வின் வரலாற்றுக் காலத்தோடு பயணிப்போம்.
சென்னை மயிலாப்பூர், தமிழக ராஜகுருக்களின் தலைநகரம். பாரதியோ இல்லை ஆழ்வார்பேட்டை ஆண்டவனோ, போயஸ் தோட்டத்து பெருந்தலைகளோ, ஊடக குழுமங்களின் அதிபர்களோ அனைவரும் சங்கமித்திருக்கும் புண்ணிய பூமி. இங்கே 1934-ம் ஆண்டில் பிறக்கும் சோ அறிவியல் பட்டதாரி ஆகி, கிரிக்கெட் ஆடி பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பெற்றார். பல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக பணியாற்றியிருக்கிறார்.
இன்றைக்கும் நமது மக்களுக்கு நீதிமன்றம் என்றால் அது அன்னிய பாஷையில், வெள்ளைத் தோல் மனிதர்கள், காக்கிச் சட்டை காவலர்களுடன் அதிகாரம் செலுத்தும் ஒரு தூரப்பிரதேசம். அந்தப் பிரதேசத்தின் விதிகள், முறைகள், வழிகள், ஆட்டங்கள் எதுவும் நமக்கும் தெரியாது. காலனியாதிக்கத்தின் காலத்தில் உருவாகியிருந்த சமூக மாற்றத்தின் மேல் மட்ட இடங்களில் பணியாற்றுவதற்காக அல்லது ‘வளர்ச்சிக்காக’ நிலங்களைத் துறந்து சென்னைக்கு படையெடுத்தனர் அக்கிரகார கிராமங்களிலிருந்த பாரம்பரிய பார்ப்பனர்கள்.
அரசு அதிகார வர்க்கம், போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பத்திரிகை – நாடகம் – சினிமா போன்ற துறைகளில் அன்றைக்கு இவர்களே பிள்ளையார் சுழி போட்டு ஆக்கிரமித்தனர். அக்கிரகாரத்தின் சோம்பிப் போயிருந்த திரேதாயுக அறிவு நவயுக கலிகாலத்தின் வாய்ப்புக்களால் உப்பத் துவங்கியிருந்தது.
கிராமங்களில் பார்ப்பன புராண புரட்டுக்களால் உழைக்கும் மக்களை விட அறிவிலும், சாமர்த்தியத்திலும் மேலானவர்களாக நம்பியவர்களை பாரிமுனை நீதிமன்ற வளாகம் இன்னும் ஒரு மடங்கு தூக்கி விட்டது. மக்களோடு இணைந்து பணியாற்றி உருவாகும் சமூக அறிவிற்கும், மக்களை அரசியல் அமைப்பால் ஆளும் அதிகாரத்திலிருந்து உருவாகும் அறிவிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. முன்னது அவர்களின் சிரமங்களை உணர்ந்து மாற்றுவதை நோக்கி பயணிக்கும். பின்னது அவர்களின் கட்டுப்படுதலை ஆராய்ந்து இன்னும் என்ன அதிகம் கட்டுப்பாடு கொண்டு வரலாம் என்று யோசிக்கும்.
இந்த பார்வைதான் காங்கிரசு, மவுண்டு ரோடு மகா விஷ்ணு போன்ற ஊடக முதலாளிகள், காஞ்சி மடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் செயல்பாட்டை அன்றைக்கும் தீர்மானித்தது. இத்தகைய மயிலாப்பூர் அழகியலில் உருவான இளம் வயது சோ எப்படி இருந்திருப்பார் என்பதை முதிய வயது சோ மூலம் கண்டுபிடிக்கலாம். இந்தப் பின்னணியில் சோ நாடகம், திரைப்படத்துறையில் நுழைகிறார். இவை அந்தப் பார்வையை இன்னும் மலிவான முறை அவதாரமாக்குகிறது.
தருமபுரியில் 2000-ம் ஆண்டுகளின் மே நாள் ஒன்றில் கலந்து கொண்டு ஓசூருக்குச் சென்றோம். அங்கே விவசாயிகள் விடுதலை முன்னணியின் தொடர்பில் இருந்த சில பரிசல் தொழிலாளிகளைச் சந்தித்தோம். அவர்களில் ஒருவர், தான் அமைப்பின் தொடர்பில் வருவதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தனது சூழலில் பேசியதாகவும், இப்போதுதான் கேட்கப்படும் ஒரு சில கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலளிப்பதாகவும் சுருங்கச் சொன்னால் சகஜமாக பேசுவதையே இப்போதுதான் கற்றுக் கொண்டேன் என்றார்.
காலச்சுவடு நடத்திய தமிழ் இனி 2000-ம் கருத்தரங்கில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சனும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நமது தமிழ் மக்கள் பேசிய வார்த்தைகளே சில பத்து எண்ணிக்கைக்குள் முடிந்து விடும் என்றார். பார்ப்பனியத்தால் கல்வி பறிக்கப்பட்ட நமது சமூகத்தின் நிலை இப்போதே இப்படித்தான் எனும் போது மயிலாப்பூர் மாட வீதிகளில் சோ வலம் வந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதை விரிக்கத் தேவையில்லை.
அவ்வாறாக பேசா மந்தைகளாக நம் மக்கள் இருக்கும் போது இவர்கள் பேசுவதெல்லாம் வியப்புரியதாகவும், அறிவுக்குரியதாகவும் கருதப்படுவதில் வியப்பென்ன?
பகீரதனின் “தேன்மொழி” நாடகத்தில் சோ எனும் பாத்திரத்தில் நடித்த ராமசாமிக்கு அதுவும் இயற்பெயருடன் சேருகிறது. பிறகு அவரே நாடகம் எழுதி இயக்குகிறார். “முகமது பின் துக்ளக்” நாடகம் பிரபலமாகிறது. விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்” எனும் நாடக கம்பெனியை 1954-ம் ஆண்டில் துவங்குகிறார். பிறகு திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார்.
அவரது நாடங்களில் அரசியல் நகைச்சுவை இருப்பதாக பாராட்டப்படுகிறார். சபா நாடகங்களில் சென்டிமெண்டும், நகைச்சுவையும் இருக்கும் போது சோவின் அரசியல் நகைச்சுவை ஒரு புதிய அடையாளமாக தோன்றுகிறது. அப்போது அதற்கு போட்டியாக இருந்த எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை மக்களின் ஆதரவோடு இருந்தது என்றால் சோ போன்றவர்களின் காமடி ஆளும் வர்க்கங்களின் தயவில் பிறந்தது.
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காமடி எனும் வார்த்தை வெறுமனே தோற்றப்பிழைகளையோ இல்லை வார்த்தை சேர்க்கைகளையோ வைத்து உருவாக்கப்படும் நகைச்சுவையை குறிக்கிறது. அத்துடன் அதிகாரத்தின் பீடத்தில் இருந்து கொண்டு அப்பாவிகளாக வாழும் மக்களுக்கு உபதேசிக்கும் பார்வை சேரும் போது பழைய கள்ளே என்றாலும் புதிய மொந்தை என்று ரசிக்கப்படுகிறது.
கோவில்களிலும், மண்டபங்களிலும் கதாகலாட்சேபம், மற்றும் புராண உரைகள் என்று மக்களின் ஓய்வு பொழுதுபோக்கை தீர்மானித்தவர்கள், பின்னர் தொழில்நுட்பம் – முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக நாடகம், சினிமாவை பயன்படுத்துகிறார்கள். சோ-வின் காலத்தில் எளிய மக்களின் குரலை பொது அரங்கிற்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். காலனியாதிக்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே வேத கால பண்பாட்டின் பெருமைகளை பேசித்தீர்த்த பார்ப்பன ஆதிக்க சாதியினர், திராவிட இயக்கம் வளர்ந்த போது கலிகாலத்தின் வருகை குறித்த துக்கத்தை பேச்சிலும், மூச்சிலும், இடைவிடாது வெளிப்படுத்தினர்.
அழிந்து வரும் நிலவுடமைச் சமூகத்தின் மேல் தட்டில்தான் பார்ப்பனர்களும் மற்ற பிற “உயர்” சாதியினர் வருகின்றனர். திராவிட இயக்கம், பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்ணுரிமை, நாத்திகம், அறிவியல் பார்வை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, தமிழ் மொழி உரிமை அனைத்தும் பொது அரங்கிற்கு வரும் போது அரசியல் அரங்கில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோர் அதை எதிர்கொண்டனர். கலைத்துறையில் சோ உள்ளிட்ட பலர் அதை எதிர் கொண்டனர்.
நிலவுடைமை சமூகத்தின் பணக்கார மாந்தரின் சோகத்திற்காக சிவாஜி கணேசனது படங்கள் கண்ணீர் விடுத்தன. அதையே மாற்றிப் போட்டு ஏழை மக்களின் அறியாமையென காமடியாக்கினார் சோ முதலானோர். அதாவது இந்த அப்பாவிகளின் நலன் பேசிய திராவிட இயக்க அரசியலுக்கு அவர் வில்லனாகினார். சோவின் திராவிட இயக்க வெறுப்பு, ஆணாதிக்கம், ஆர்.எஸ்.எஸ் அபிமானம், பார்ப்பனிய பக்தி அனைத்துமே அவரது நேர்மை, துணவின் இலக்கணமாக மடைமாற்றப்படுகிறது. சாகும் வரை ஹிட்லரோ இல்லை முசோலினியோ கூட தத்தமது கொள்கைகளில் உறுதியாகத்தான் இருந்தனர். ஆனால் அதற்காக மேற்குலகில் அவர்கள் பாராட்டப்படுவதில்லை.
இந்த நகைச்சுவையில் அரசியலை எடுத்து விட்டால் அது எஸ்.வி.சேகர் – விசு வகையறாக்களின் பிளேடு வகைப்பட்ட சபா நாடக காமடி மட்டுமே. எஸ்.வி.சேகரது நாடகத்திற்கு வரும் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். நாடகத்தில் “மாப்பிள்ளை எப்படி இருப்பார்?” என்று ஒரு வசனம் வந்தால் சேகர் டைமிங்காக “என்னை என்ன தமிழ்நாடு போலீஸ் மாதிரி தொந்தி கணபதின்னு நினைச்சீங்களா, நான் சிக்ஸ்பேக் ஆர்னால்டு” என்பார். முதல் வரிசை அதிகாரிகளும் கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். இதையே சோவாக இருந்தால் “மாப்பிள்ளைக்கு என்ன, காலையில மந்திரி வீடு, மாலையில கலெக்டர் வீடுன்னு” பிசியா இருக்கார் என்பார்.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எஸ்.வி.சேகர், சென்ற 2015 ஆண்டின் மழை வெள்ள நாட்களில் மளிகைக் கடை அண்ணாச்சிகள் நெருக்கடியை பயன்படுத்தி பொருட்களை பதுக்கினர், அவர்கள்தான் இன்று மோடியின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்று இரக்கமே இல்லாமல் கொடூரமாக எழுதினார். இதில் அண்ணாச்சிகள் யாரும் பதுக்கவில்லை என்பதோடு இன்று பழைய நோட்டுக்களை வாங்கியோ இல்லை கடன் சொல்லியோ மக்களுக்கு சேவை செய்கின்றனர். இதுதான் எஸ்.வி.சேகர் எனும் மயிலாப்பூர் மாஃபியாவின் நகைச்சுவைத் தரம். அதுதான் சோவின் அரசியல் தரம்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
ஜெயாவின் முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் முழு தமிழகத்தையும் கொள்ளையடித்த போது பின்னாளில் மூப்பானரை பிரிந்து வரச் செய்து த.மா.கா ஆரம்பித்து, தி.மு.கவோடு கூட்டணி வைக்க சோ-வே காரணம் என்கிறார்கள். அன்றைக்கு சோ-வோ இல்லை சூப்பர் ஸ்டாரோ இல்லையென்றாலும் ஜெயாவிற்கு செருப்படி கிடைத்தே இருக்கும். பின்னாளில் இரண்டு மூன்று முறைகள் ஜெயா தனது உடன்பிறவாச் சகோதரியை விரட்டிய போதுதான் முந்தைய முரண்பாடுக்கு காரணம் மன்னார்குடி என்ற உண்மை தெரியவந்தது.
பின்னாட்களில் அவர் தனது ‘நடுநிலை’ முக்காட்டை தூற எறிந்துவிட்டு அம்மணமாக அ.தி.மு.கவை ஆதரித்தார். அதன்பொருட்டே பா.ஜ.கவையோ காங்கிரசையோ ஆதரித்தார். பிறகு சசிகலா திரும்பிய பிறகு அவரது மயிலாப்பூர் மாஃபியா பழைய இடத்தை பெறவில்லை என்றாலும் ஜெயாவை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குன்ஹாவை விமரிசித்ததாக இருக்கட்டும், நேர்மையான ஆச்சார்யாவை திட்டியதாக இருக்கட்டும், அனைத்தும் ஒளிவு மறைவின்றி நடந்தன.
மோடியின் மூலம் இந்தியாவிலும், தமிழகத்திலும் பார்ப்பனியம் மீண்டு வரும் என்ற கனவோடுதான் 2014 தேர்தலில் முன்கூட்டியே மோடியை ஆதரித்தார். துக்ளக் ஆண்டு விழா கூட்டத்திலும் பேச வைத்தார். வைகோ, ரஜினி, விஜயகாந்த, இறந்து போன மூப்பனார், அனைவரும் இந்த செயல்தந்திர நோக்கிலேயே சோவோடு பேசினர், உறவாடினர், இன்று மரியாதையும் செய்கின்றனர். தற்போது இவரால் அர்ச்சிக்கப்பட்ட தி.மு.கவும் சரி, இவரது இந்துத்துவப் பார்வை குறிவைக்கும் தலித் மக்களின் கட்சி என்றழைக்கப்படும் வி.சி.கவும் சோ புகழ் புராணம் பாடுகின்றன. ராஜ குருவின் பவர் அத்தகையதாம்.
சசிகலா கும்பலை மீண்டும் தலையெடுக்க கூடாது என்பதற்காக அவர் மிடாசின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். மிடாஸ் என்பது தமிழக மக்களை மொட்டையடித்து சுருட்டப்பட்ட ஒரு சொத்து. அதன் சீமைச்சாராயம் தமிழக மக்களை குடிகாரர்களாகக் கொல்கிறது என்றால் அதன் உரிமையாளர் தமிழக மக்களுக்கு குடியுரிமையே இல்லையென்பதாக ஒடுக்கியபவர். இப்படித் திருட்டுச் சொத்தின் பாதுகாவலராக அறியப்பட்ட சோவின் அடையாளம் என்ன?
மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.
கடந்த 2015-ம் ஆண்டின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தேர்வு முடிவுகள் வந்த போதே வட இந்திய பார்ப்பன அறிஞர் பெருமக்களுக்கு இஞ்சியைக் கரைத்துக் குடித்தது போலத் தான் இருந்தது. காரணம் டினா டாபி என்கிற 22 வயதே ஆன இளம் பெண் தேர்வாணையத்தின் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வென்றதோடல்லாமல், முதலாவதாகவும் தேறியிருந்தார்.
டினா டாபி ஒரு பெண் என்பதே அம்பிகளின் தொண்டை அடைத்துக் கொள்ள போதுமான காரணம் தான். அதற்கு மேலும், அவர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் வடநாட்டு அவாளெல்லாம் ஆங்கில செய்தித்தளங்களின் பின்னூட்ட பெட்டிகளில் ஒன்று திரண்டு கண்ணில் ஜலம் வச்சுண்டு அழத் துவங்கினர். இதற்கிடையே டினா டாபியின் குடும்ப பின்னணியையும் அவர் தேர்வில் வெல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நூல்பார்ட்டி கம்பெனியில் குறைந்தபட்ச அறிவுள்ள சிலர் கூகுளின் மூலம் பீறாய்ந்து வரவே ஒப்பாரி ஓலங்கள் உச்சஸ்தாயியை அடைந்தன.
டினா டாபி தில்லியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜஸ்வந்த் டாபி; தாயார் ஹிமானி டாபி. இவர்கள் இருவருமே அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பதோடு அந்தக் காலத்திலேயே மத்திய தேர்வாணையத்தின் நடத்திய இந்திய பொறியாளர் பணிக்கான (Indian Engineering Services – IES) தேர்வை வென்றவர்கள். தற்போது டினா டாபியின் பெற்றோர் இருவருமே மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். டினா டாபியின் தாத்தாவும் மத்திய அரசுப் பதவியில் இருந்திருக்கிறார்.
கடந்தாண்டு தேர்வாணையம் நடத்திய நுழைவுத் தேர்வின் முதல் தாளில் பொதுப் பிரிவுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச மதிப்பெண்ணான 107.34 சதவீதத்தை விட குறைவான மதிப்பெண்களுடன் (96.66%) டினா டாபி தேர்வாகியுள்ளார் என்பதே அம்பிகளின் மூக்கில் ஒழுகிய கண்ணீருக்கான காரணம். என்றாலும் பட்டியல் சாதிகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 94 சதவீதத்திற்கும் அதிகமாக அவர் மதிப்பெண் பெற்றே நுழைவுத் தேர்வில் தேறியுள்ளார். அதன் பின் இரண்டாம் கட்டமாக ஐந்து தாள்களுக்கு நடக்கும் முக்கியத் தேர்வில் கலந்து கொண்டு முதலாவதாகத் தேறியுள்ளார் டினா டாபி.
டினா டாபியின் குடும்பம் வசதியானது என்பதை மட்டும் பிடித்துக் கொண்ட அம்பிகள், பொருளாதார வசதியற்ற தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை டினா தட்டிப் பறித்துக் கொண்டார் என கூப்பாடு போடத் துவங்கினர். ’ஆஹா.. பார்ப்பன குலக்கொழுந்துகளுக்குத் தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய தலித்துகளின் மேல் எத்தனை பாசம்’ என ஊரார் மூக்கின் மேல் விரல் வைப்பதற்குள் இந்த விவாதங்கள் மெல்ல மெல்ல இட ஒதுக்கீட்டுக்கே எதிரானதாக மாறி முழு சாணக்கிய சந்திரமுகியாகி நின்றனர்.
நிலவுரிமை, வளங்களின் மேலான சம உரிமை என சொத்துடைமையில் நிலவும் தீண்டாமை நீங்காமல் ஒரு சில அரசு பதவிகளின் மூலம் மட்டுமே சாதியை ஒழித்து விடமுடியாது என்றாலும், இட ஒதுக்கீடு என்பது ஒரு இடைக்கால நிவாரணமாக உள்ளது. அவ்வாறான இடைக்கால நிவாரணம் அமல்படுத்தப்படும் முறை குறித்து அதன் மேல் குறைந்தபட்சமாகவாவது நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால், பார்ப்பன அம்பிகளின் கவலையே வேறு. காலம் காலமாகத் தம்மிடம் அடிமைச் சேவகம் புரிந்த கூட்டம் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் பொதுவெளிகளில் செயல்படுவதன் மேலிருக்கும் எரிச்சலே இட ஒதுக்கீட்டின் மேலான எரிச்சலாக வெளிப்படுகின்றது.
இட ஒதுக்கீட்டில் வருகிறவர்களிடம் ’திறமை’ இருக்காது, அவர்கள் நேர்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே காஞ்சி ஜெகத்து குரு ஜெயேந்திரனின் புத்திரர்கள் வழக்கமாக முன்வைக்கும் வாதம். ஆனால், டினா டாபியோ தேர்வில் பார்ப்பன குஞ்சுகளையும் தாண்டிச் சென்று விட்டார். அவரது இளம் வயதைக் கணக்கில் கொண்டால், ஓய்வு பெறுவதற்குள் மத்திய அரசின் தலைமைச் செயலாளர் பதவியையே கூட அடையும் வாய்ப்பும் உள்ளது. இதோடு சேர்ந்து கடந்தாண்டின் தேர்வு முடிவுகளில் இரண்டாம் இடத்தை காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் இளைஞரும் மூன்றாமிடத்தைப் சீக்கிய இளைஞர் ஒருவரும் பிடித்துக் கொண்டது வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவதாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு அமைந்து விட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் டினா டாபி தனது முகநூலில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சென்ற வருடம் பார்ப்பன இதயங்களில் விழுந்த கீறலின் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவுவதாக அமைந்து விட்டது. தேர்வாணையத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த ஆமிர் உல் ஷபி கானைத் தான் விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் டினா டாபி தனது முகநூலில் தெரிவித்தார். இது வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி நாளிதழ்களில் பெட்டிச் செய்தியாகவும் வெளியானது.
வெகுண்டெழுந்து விட்டது இணைய வானரப்படை. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை தொடர்பான இணையக் கட்டுரைகளின் பின்னூட்டங்களில் தவறாமல் ஆஜராகி மோடிக்காக ராப்பகலாக முட்டுக் கொடுத்து முகம் வீங்கிப் போன வானரங்களின் கையில் டினா டாபியின் அறிவிப்பு சிக்கியதையடுத்து சதிராடி வருகின்றனர். இதற்கிடையே வானரப்படைகளில் ஒன்றான ஹிந்து மகாசபை, டினா டாபியின் பெற்றோருக்கு ஃபத்வா ஒன்றை விதித்துள்ளது.
ஆமிர் – டினாவின் காதல் லவ் ஜிஹாத் என்பதை ”புலனாய்வு” செய்து கண்டுபிடித்துள்ள ஹிந்து மகாசபை அதற்கு பரிகாரத்தையும் முன்வைத்துள்ளது. அதாவது கர்வாப்சி (Gharwapsi) சடங்கு ஒன்றைச் செய்து ஆமீரின் தலையில் தண்ணீர் தெளித்து அவரை இந்துவாக மாற்றி விட்டால் திருமணத்தில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அப்படி ஒரு சடங்கைச் செய்ய டினாவின் பெற்றோருக்கு உதவி செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், டினாவின் பெற்றோருக்கு அவரின் காதலில் சம்மதம் என்பதோடு, மதமாற்றச் சடங்கின் தேவை குறித்தே அவர்கள் யோசிக்கவில்லை. அடுத்து, வழக்கமாக “லவ் ஜிஹாத்” திரைக்கதையில் இடம் பெறும் “அப்பாவி இந்துப் பெண்ணை, கூலிங் கிளாஸ் போட்டு மயக்கி, திட்டமிட்டு ஏமாற்றி, இத்யாதி இத்யாதி” போன்ற திடுக்கிடும் திருப்பங்களுக்கு டினா டாபியிடம் வழியில்லை – ஏனென்றால், ஐ.ஏ.ஸ் தேர்வில் நாட்டிலேயே முதலாவதாக வருமளவிற்கு விவரமானவர் அவர்.
கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அடுத்தவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்குள்ளும், வாழ்க்கைத் தேர்வுகளுக்குள்ளும் தலையிடுவதால் நம்மூர் டாஸ்மாக் முன்புகூட காணக்கிடைக்காத மூன்றாந்தர கழிசடைகளாக காவி வானரப்படையை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஆட்சியதிகாரம் என்கிற வீரியம் கூடிய நாட்டுச் சாராயாம் உள்ளே இறங்கியிருப்பதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதிகார வர்க்க மேட்டுக்குடி குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளம் பெண்ணையே மிரட்டுமளவுக்கு இவர்களிடம் துணிச்சல் இருக்கிறதென்றால், லவ் ஜிஹாத் என்ற பெயரில் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை இவர்கள் எப்படியெல்லாம் சீரழித்திருப்பார்கள் என்பதை நினைத்து உங்களுக்கு குலை நடுங்கவில்லையா?
– முகில்
செய்தி ஆதாரம்:
Hindu Mahasabha calls Tina Dabi’s decision to marry Kashmiri youth ‘love jihad’, suggests ‘ghar-wapsi’
கண்டோபா,
எல்லம்மா,
சாந்த துர்கா.1
கேட்கின்ற கடவுளரின்
பலிபீடத்தில்,
எங்கள் குழந்தைகளை
மறுக்காமல் படைக்கின்றோம்.
கேட்கின்ற
ஆண்களுக்கு
கசங்குகின்ற பாயாக,
விரிக்கின்றோம்
எங்கள் பெண்களை
அம்மாவைப் புணருகின்ற,
சதைப்பிண்டங்கள் நாங்கள்.
ஊமை விலங்குகள்.
நினைத்துப் பார்க்க
வாழ்க்கை
என்று ஏதுமில்லை.
என்ன இருந்தாலும்
தவறுதான்
என்பீர்கள்
எங்களுக்கும் புரிந்ததுதான்.
முன்னோர்கள்
செய்தார்கள்
இன்று நாங்கள் –
நாளை
எங்கள் குழந்தைகள்
வாழையடி வாழையாக,
அன்று
கூர்முனை வாளால்
சம்புகனை
வெட்டிக் கொன்றான்
ராமன்.
ராமராஜ்யம்
கண்களை
மூடிக் கொண்டோம்
இன்று வரை
திறக்கவில்லை.
மன்றாடுகிறோம்
கெஞ்சுகிறோம்
உங்களை
கையெடுத்துக் கும்பிடுகிறோம்
கண்ணீர் விட வேண்டாம்
கருணை
காட்டவும் வேண்டாம்.
வாழ்க்கை அழுக்கின்
வீச்சம் குமட்டும்
எங்கள் கந்தைகளை
நீங்களொன்றும்
அலசிப் பிழிய வேண்டாம்
ஆண்டுக்கொருமுறை.
ஆம்.
பல நூற்றாண்டுகளாய்
இந்த உலகம்
பார்த்துப் பழகியதுதான்
எங்கள் அம்மணம்.
வேண்டாம்
மீண்டும் ஒரு முறை
உருவாதீர்கள்
எங்கள் ஆடைகளை –
இந்த உலகின் முன்.
– அனுராதா குரவ்
குறிப்பு 1: கர்நாடக மாநிலத்தின் தாசி குலத்தினரின் குல தெய்வங்கள் இந்தக் கடவுள்களின் கோயிலில்தான் பொட்டுக்கட்டும் சடங்கு நடக்கும்.
பெண் கவிஞர்களின் புதிய குரல் என்ற கவிதை நூலில் உள்ள கவிதையை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து வெளியிடுகிறோம்.
ஆங்கிலக் கவிதை அனுப்பியவர் – வாசகர் பாரி செழியன், குட்டி மேக்கிபட்டி.
புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995.
காஸ்ட்ரோ மறைந்து விட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற தேச விடுதலைப் போராளி என்ற முறையில் அவரை நாம் நினைவு கூர்கிறோம். உலக மக்களின் இன்றைய முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடியோடு வெறுக்கின்ற உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாட்டு மக்கள் காஸ்ட்ரோவின்பால் விசேடமான ஈர்ப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்கின்ற அதே நேரத்தில், காஸ்ட்ரோவின் பாத்திரத்தை அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வது அவசியம்.
1959−இல் பாடிஸ்டா என்ற அமெரிக்க கைக்கூலி சர்வாதிகாரியின் ஆட்சியைத் தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய காஸ்ட்ரோவின் தலைமையிலான ‘‘ஜூலை−26 இயக்கம்’’ என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட ஒரு ஆயுதக்குழு. இது ஒரு விவசாயிகள் இயக்கமோ, தொழிலாளர் இயக்கமோ அல்ல. காஸ்ட்ரோவின் கூற்றுப்படியே ‘‘சிறுமுதலாளித்துவ வர்க்கத்துக்குரிய தவறான கருத்துகளும் குறைபாடுகளும் கொண்ட, பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவது என்பதற்கு மேல் தெளிவான கொள்கைகள் எதையும் கொண்டிருக்காத’’ ஒரு இயக்கமாகவே அது இருந்தது.
[இத்தாலிய கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகைக்கு (லா யூனிடா) காஸ்ட்ரோ அளித்த பேட்டி, பிப். 1, 1961,]
இருப்பினும், பாடிஸ்டாவின் ஆட்சிக்கும் அதற்கு துணை நின்ற நிலப்பிரபுக்கள் மற்றும் அமெரிக்க முதலாளிகளுக்கும் எதிராக குமுறிக் கொண்டிருந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் புரட்சியை ஆதரித்தனர். கியூபா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க முதலாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்கியதால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அரசு, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அமெரிக்காவில் குடியேறிய கியூபாவைச் சேர்ந்த பிற்போக்குவாதிகளைக் கொண்டு படை திரட்டி, ஏப்ரல் 1961−இல் சி.ஐ.ஏ. தொடுத்த இந்தப் போரில் (Bay of Pigs War) கியூபா வென்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கியூபா மக்களின் தேசிய உணர்வை இது தீவிரப்படுத்தியது.
காலனியாதிக்கத்துக்கும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசுகளுக்கும் எதிராக உலகம் முழுவதும் தேச விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த இந்த காலத்தில், பிற்போக்கு அரசுகளையும் இராணுவ சர்வாதிகாரங்களையும் ஆதரித்து வந்த அமெரிக்கா, சீனாவுக்கும் ரசியாவுக்கும் எதிரான அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் தொடங்கியிருந்தது. ரசியாவைக் குறிவைத்து துருக்கியிலும், இத்தாலியிலும் அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா நிறுவியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவை குறிவைத்து, 1962−இல் கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளை நிறுவியது, முதலாளித்துவம் மீட்கப்பட்ட நாடான ரசியா.
சமூக ஏகாதிபத்தியமாக உருவெடுத்திருந்த சோவியத் யூனியனுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான பனிப்போரின் துவக்கமாக அமைந்த இந்த காலகட்டத்தில், அமெரிக்கத் தாக்குதல் அபாயத்தை நிரந்தரமாக எதிர்நோக்கியிருந்த காஸ்ட்ரோ, ரசிய ஏவுகணைத் தளத்தை, கியூபாவுக்குக் கிடைத்த பெரும் தற்காப்பாகக் கருதினார். கென்னடி – குருசேவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பதின்மூன்றே நாட்களில் இருதரப்பும் அணு ஆயுதத்தை அகற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தன. அணு ஆயுத தளத்தை அகற்ற வேண்டாமென்ற காஸ்ட்ரோவின் கோரிக்கையை குருசேவ் பொருட்படுத்தவும் இல்லை; இந்த முடிவு குறித்து காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்கவும் இல்லை. அமெரிக்காவுடனான குருசேவின் இந்த சமரசத்தை மாவோ வெளிப்படையாக விமரிசித்தார். கியூபாவைச் சதுரங்கக் காயாக குருசேவ் பயன்படுத்திக் கொண்டதை சீரணிக்க இயலவில்லையென்ற போதிலும், காஸ்ட்ரோ இது குறித்து வெளிப்படையாக விமரிசிக்கவில்லை.
000
1960−களின் தொடக்கமான இந்த ஆண்டுகளில்தான், குருசேவ் கும்பல் ரசியாவில் முதலாளித்துவ மீட்சியை அமல்படுத்தத் தொடங்கியிருந்தது. சோசலிச முகாமுக்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையில் சமாதான சகவாழ்வு, ஆயுதப் புரட்சிக்கு பதிலாக அமைதி வழி மாற்றம் என குருசேவ் முன்வைத்த திருத்தல்வாதக் கொள்கைகளை எதிர்த்து, மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி, ரசிய கம்யூனிஸ்டு கட்சியுடன் தீவிரமான கருத்துப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. கட்சிகளுக்கு இடையில் நடந்து வந்த இந்த விவாதம், அடுத்து வந்த ஆண்டுகளில் வெளிப்படையான கருத்துப் போராட்டமாக மாறியது. சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவும் ஏற்பட்டது.
உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த வியத்நாம், கொரிய கம்யூனிஸ்டு கட்சிகள், சீன – ரசிய பிளவைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து, நடுநிலை வகித்தன. ஆனால், கியூபா அப்படி நடுநிலைகூட வகிக்கவில்லை. மாறாக, ரசிய ஆதரவு நிலையையே எடுத்தது.
நவம்பர் 1960−இல் சே குவேரா தலைமையிலான கியூபா தூதுக் குழுவினர் மாவோ மற்றும் சூ என் லாயுடன் நடத்திய உரையாடல், லத்தீன் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் மீது அக்கறை காட்டுவதாகவே அமைந்திருந்தது. இதற்கு மாறாக, அமைதி வழி மாற்றம் என்ற குருசேவின் நிலையை ஆதரித்து காஸ்ட்ரோ எடுத்த முடிவு, சர்வதேச பாட்டாளி வர்க்க நலனைக் கருத்தில் கொண்டோ, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கான பாதை குறித்த அக்கறையிலிருந்தோ எடுக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் அச்சுறுத்தலிலிருந்து கியூபாவைத் தற்காத்துக் கொள்வதற்கும், அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக தாக்குப்பிடித்து நிற்பதற்கும் ரசிய சார்பு நிலையே உகந்தது என்ற கோணத்தில் காஸ்ட்ரோ சந்தர்ப்பவாதமாகவே முடிவெடுத்தார். சீனத்துக்கு தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் திடீரென்று நிறுத்திய குருசேவ் கும்பல், அந்நாட்டை திடீரென்று நெருக்கடியில் தள்ளிய சூழலிலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலனை முன்னிறுத்தி, திருத்தல்வாதத்துக்கு எதிராக மாவோ உறுதியான நிலை எடுத்ததை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ரசிய ஆதரவு நிலையின் தொடர்ச்சியாக, ரசியாவின் செக்கோஸ்லோவாக்கிய ஆக்கிரமிப்பு, எத்தியோப்பிய தலையீடு முதல் ஆப்கன் ஆக்கிரமிப்பு வரையிலான சமூக ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் காஸ்ட்ரோ ஆதரித்தார். அமெரிக்காவும் ரசியாவும் மேல்நிலை வல்லரசுகள் என்றும், உலகப் போரின் ஊற்றுக் கண்ணாக ரசிய சமூக ஏகாதிபத்தியம் இருக்கிறது என்றும் வரையறுத்த மாவோவின் மூன்றுலக கோட்பாட்டை (1974) நிராகரித்தது மட்டுமின்றி, கூட்டுச்சேரா இயக்கத்தில் சில மூன்றாம் உலக நாடுகள், ‘‘அமெரிக்காவைப் போலவே ரசியாவும் ஏகாதிபத்தியமே’’ என்று குறிப்பிட்டு விமரிசித்தபோது, அதனை காஸ்ட்ரோ கடுமையாக எதிர்த்தார். ‘‘கோமேகான்’’ (COMECON) என்ற ரசிய சார்பு நாடுகளின் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகித்தது மட்டுமின்றி, பனிப்போர் காலத்தில் ரசியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலும் கியூபாவை ஈடுபடுத்தினார்.
இருந்த போதிலும், கியூபாவுக்கும் ரசியாவுக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றாமல் இல்லை. அமெரிக்க கைப்பாவை சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களை ஆதரித்து காஸ்ட்ரோவும் சே குவேராவும் தெரிவித்த கருத்துகள், ‘‘அமைதி வழி மாற்றம்’’ என்ற குருசேவின் திருத்தல்வாதக் கொள்கைக்கும், அந்த நாடுகளைச் சேர்ந்த போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயல்பாட்டுக்கும் எதிரானதாக இருந்தது. 1975−இல் அங்கோலாவின் சோவியத் ஆதரவு எம்.பி.எல்.ஏ. படைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போர் தொடுத்தபோது, ரசியாவின் ஆட்சேபத்தையும் மீறி, ஆயிரக்கணக்கான கியூபா துருப்புகளை அங்கோலாவுக்கு அனுப்பினார் காஸ்ட்ரோ. இதன் விளைவாக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போரில் முறியடிக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் ஆதரவை மட்டுமின்றி, கியூபாவிலும் பல்வேறு நாடுகளிலும் நிறவெறி அரசுக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த கருப்பின மக்களுடைய பேராதரவையும் காஸ்ட்ரோவுக்குப் பெற்றுத் தந்தது. கியூபாவுடனான ரசிய உறவில் இத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதிலும், பூகோள ரீதியில், அமெரிக்காவுக்கு அருகில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கியூபா இருந்த காரணத்தினாலும், காஸ்ட்ரோ பெற்றிருந்த சர்வதேச செல்வாக்கின் காரணமாகவும், ரசிய சமூக ஏகாதிபத்தியம் இவற்றையெல்லம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
பனிப்போர் காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் கியூபா மேற்கொண்ட பல நடவடிக்கைகளில், அது ஒரே நேரத்தில் சமூக ஏகாதிபத்தியத்தின் தொங்குசதையாகவும், உணர்வு பூர்வமான அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அன்றைய சர்வதேச சூழலில், வியத்நாம், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரங்கள் அனைத்துக்கும் அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அந்த வகையில் அமெரிக்கா பல நாட்டு மக்களுக்கு எதிரியாக இருந்தது. இத்தகைய சூழலில், அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களை ஆதரிப்பது, சாத்தியமான இடங்களில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்துவது என்ற நடவடிக்கைகள் மூலம் ரசிய சமூக ஏகாதிபத்தியம், மூர்க்கமான முறையில் உலக மேலாதிக்கத்துக்கு முயன்று கொண்டிருந்தது.
கியூபாவைப் பொருத்தவரை, வாயிற்படியில் ஒவ்வொரு கணமும் சி.ஐ.ஏ.வின் சதிவேலைகளை எதிர்கொண்டிருந்த காஸ்ட்ரோவுக்கு, அமெரிக்காவை சாத்தியமான இடங்களிலெல்லாம் பலவீனப்படுத்தவதென்பது, சர்வதேசக் கடமையாக மட்டுமின்றி, கியூபாவின் உடனடி தேசிய நலனுக்கு அவசியமான தேவையாகவும் இருந்தது.
000
1980−களின் இறுதி மற்றும் 1990−களின் துவக்கத்தில் நேர்ந்த ரசிய, கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிசங்களின் வீழ்ச்சி, தனியாக அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை காஸ்ட்ரோவுக்கு உண்டாக்கியது. அதுநாள் வரை மாவோவின் சோசலிச சீனத்துக்கு செல்லாத காஸ்ட்ரோ, 1995−இல் முதலாளித்துவம் மீட்கப்பட்ட சீனத்துக்கு சென்றார். சர்வதேச உறவுகளில் வன்முறையைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காக கன்பியூசியஸ் சமாதானப் பரிசை சீன அரசு காஸ்ட்ரோவுக்கு வழங்கியது. முன்னர் ரசியாவை முதன்மையான வணிகக் கூட்டாளியாக கொண்டிருந்த கியூபாவுக்கு, இப்போது சீனா முதன்மையான வணிகக் கூட்டாளி ஆகிவிட்டது.
போலி சோசலிச வீழ்ச்சிக்குப் பின்னர், காஸ்ட்ரோ, எல்லா லத்தீன் அமெரிக்க பிற்போக்கு அரசுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணினார். அந்த அரசுகளுக்கு எதிரான இடதுசாரி கொரில்லாக்களின் போராட்டங்களை எதிர்த்தார். ‘‘கொரில்லாப் போராட்டங்களின் சகாப்தம் முடிவடைந்து விட்டது’’ என்றும், ‘‘மைய நீரோட்ட அரசியல்தான் ஒரே தீர்வு’’ என்றும் பிரகடனம் செய்தார்.
கொலம்பியாவில் அமெரிக்க கைக்கூலியான அதிபர் யூரிப்−இன் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிவந்த, எஃப்.ஏ.ஆர்.சி.(FARC) புரட்சியாளர்களையும், சுமார் 20,000 பேரைக்கொண்ட அவர்களது விவசாயிகள் படையையும் விமரிசித்தது மட்டுமின்றி, அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதைக்கு வரவேண்டும் என்றும் கூறினார். ஏற்கெனவே ஒருமுறை தேர்தல் பாதையை தெரிவு செய்தபோது, நூற்றுக்கணக்கான போராளிகள், சி.ஐ.ஏ. வால் பயிற்றுவிக்கப்பட்ட கொலம்பிய கொலைப்படையினால் கொன்று குவிக்கப்பட்ட அனுபவம் இருந்த போதிலும், இப்படியொரு தற்கொலைப் பாதையை கொலம்பிய புரட்சியாளர்கள்மீது காஸ்ட்ரோ திணிப்பதற்கு காரணம் இருந்தது.
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது. இயற்கைப் பேரழிவுகள், கொள்ளை நோய்கள் போன்றவற்றிலிருந்து ஏழை நாடுகளின் மக்களைக் காப்பாற்றுவதற்கு கியூபாவின் மருத்துவர் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பியது போன்ற நடவடிக்கைகளை நாம் இந்தக் கண்ணோட்டத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 1990−க்குப் பிந்தைய காலத்தில், லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியலில் தொடங்கி, 21−ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம் என்ற பெயரிலான தன்னார்வக்குழு அரசியலையும், அமெரிக்க சார்பு மையவாத அரசியலையும் அவர் ஆதரித்தார்.
000
காஸ்ட்ரோவின் இந்த நிலைப்பாடுகள் பிறழ்வுகள் அல்ல. இவற்றின் வேர்கள் கியூபா புரட்சியின் வரலாற்றிலேயே உள்ளன. கியூபாவின் புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில், ரசிய – அமெரிக்க பனிப்போரின் பின்புலத்தில் வெற்றி பெற்றது. காங்கோ, சிலி, கவுதமாலா, நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ரசியாவின் ஆதரவுக்கிடையிலும் இத்தகைய வெற்றி கிட்டவில்லை. அமெரிக்காவின் இடையறாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளையும் எண்ணற்ற கொலை முயற்சிகளையும் மீறி கியூபா தாக்குப்பிடித்து நிற்க முடிந்ததற்கு காஸ்ட்ரோவின் ஆளுமையும், அவருடைய மக்கள் செல்வாக்கும் தனிச்சிறப்பான காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இதன் காரணமாகவே கியூபாவை சோசலிச நாடென்று அங்கீகரித்துக் கொள்ளவியலாது.
வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை, ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைத்தாமே முதலாளித்துவ நாடுகள் என்று பிரகடனம் செய்யும் வரையில், அவற்றை சோசலிச நாடுகள் என்றே கூறிவந்தனர். அவ்வண்ணமே சீனத்தையும், வியத்நாமையும்கூட இன்னமும் சோசலிச நாடுகள் என்று கூறிவருகின்றனர். இன்னொருபுறம், சோசலிசத்துக்கான மார்க்சிய−லெனினிய வரையறைகளை எதிர்ப்பவர்களான புதிய இடதுகளும் மற்றும் இடதுசாரி அறிவுத்துறையினர் என்று அறியப்படுவோரும், ரசிய − சீனத் தோல்விகளுக்குப் பின்னர், ‘‘எதார்த்தத்தில் நிலவும் சோசலிசம்’’ (actually existing socialism) என்றொரு புதிய வரையறையை − அதாவது இலக்கணமே கிடையாது என்றொரு இலக்கணத்தை − உருவாக்கியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, ‘‘இன்னொரு உலகம் சாத்தியமே’’ என்ற உலக சமூக மன்றத்தின் (WSF) முழக்கத்தை முன்வைக்கும் தன்னார்வக் குழுக்களும், பிரேசில், ஈக்வடார், சிலி, வெனிசூலா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளையும், ‘‘சோசலிசம்’’ என்று சித்தரிக்க வசதியாக, ‘‘21−ஆம் நூற்றாண்டு சோசலிசம்’’ என்றொரு புதிய சிவப்பு வண்ணத்தைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.
மொத்தத்தில், இவையனைத்தும் உலக முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொள்ளவியலாத, அல்லது எதிர்கொள்ள விரும்பாத செயலின்மையின் விளைவுகளே ஆகும். முதலாளித்துவ சீர்திருத்தத்தையே சோசலிசம் என்று கொண்டாடும் அரசியல் கண்ணோட்டமும், சே குவேரா – காஸ்ட்ரோ போன்றோரை நாயகர்களாகக் கொண்டாடி ஆறுதலடையும் வழிபாட்டு மனோபாவமும் இத்தகைய செயலின்மையிலிருந்தே பிறக்கின்றன.
இத்தகையோரைப் பொருத்தவரை மார்க்சியம் என்பது செயலுக்கான வழிகாட்டியாக இல்லை. எனவேதான் காஸ்ட்ரோவைக் கம்யூனிசத் தலைவராக கொண்டாடுபவர்கள் யாரும், அவர் வகுத்துத் தந்த ‘‘புரட்சிக்கான பாதை என்ன’’ என்பது குறித்துப் பேசுவதில்லை. காஸ்ட்ரோவால் அமல்படுத்தப்பட்டு, ‘‘புரட்சிக்கான புதிய பாதை’’ என்று ரெஜிஸ் டெப்ரே (Regis Debray)யால் கொண்டாடப்பட்ட ‘‘ஃபோக்கோ’’ (FOCO) என்ற கொரில்லா குழு நடவடிக்கை, எல்லா நாடுகளிலும் தோல்வியையே தழுவியிருக்கிறது. பாட்டாளி வர்க்க அரசியலையும் மக்கள் திரள் பாதையையும் நிராகரிக்கின்ற அந்த சாகசவாத வழி, புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, புரட்சியின் தோல்வியை உத்திரவாதப்படுத்தும் என்கிற காரணத்தினால்தான், தீவிர அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான சே குவேராவை அமெரிக்க ஏகாதிபத்தியமே தயங்காமல் பிரபலப்படுத்துகிறது.
கியூபாவின் புரட்சி வெகுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, ‘‘மார்க்சிய−லெனினியம்தான் தனது வழிகாட்டும் சித்தாந்தம்’’ என்று காஸ்ட்ரோ அறிவித்துக் கொண்ட போதிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அரசியல் உள்ளடக்கமாக கொண்ட, சோவியத்துகளைப் போன்ற அதிகார உறுப்புகள் அங்கே உருவாக்கப்படவில்லை. போலி சோசலிச ரசியாவைப் போன்ற அரசு முதலாளித்துவ, அதிகார வர்க்க ஆட்சியை ஒத்த இன்னொரு வடிவமாகவே அது இருந்தது. சே குவேரா, காஸ்ட்ரோ ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதும், காந்திய அறத்துடன் ஒப்பிடத்தக்கதுமான, அரூபமான ‘சோசலிச அறம்’, தனது பாதுகாப்புக் கவசத்தின் கருணையில் வாழவேண்டிய நிலையில்தான் கியூபாவின் பாட்டாளி வர்க்கத்தை வைத்திருந்தது. வர்க்கப் போராட்ட நடைமுறையில் பாட்டாளி வர்க்கத்தை ஈடுபடுத்தவோ, அதிகாரம் என்ற ஆயுதத்தை ஏந்தவோ பாட்டாளி வர்க்கத்தை அது பயிற்றுவிக்கவில்லை.
ஆகவே, போலி கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ தாராளவாதிகளும் முன்வைப்பது போல, காஸ்ட்ரோவை ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் என்றோ, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க தலைவரென்றோ வரையறுக்கவியலாது. கியூபாவில் அவர் நிகழ்த்திய புரட்சியை பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிசப் புரட்சி என்று கருதவும் முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளியாகவே அவரைக் கருத முடியும். தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்குரிய ஊசலாட்டமும் சமரசமும்தான் காஸ்ட்ரோவின் பிற்கால வாழ்க்கையில் அவரிடம் வெளிப்பட்டன.
‘‘கம்யூனிஸ்டு கட்சியிலும் சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடக்கும்’’ என்ற மாவோவின் கருத்தையும் கலாச்சாரப் புரட்சியின் அவசியத்தையும் காஸ்ட்ரோ ஏற்கவில்லை. ‘‘மாவோ தனது தலையால் சாதித்ததை காலால் அழித்துவிட்டார்’’ என்று 1977−இல் அமெரிக்க நிருபர் பார்பரா வால்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார் காஸ்ட்ரோ. கலாச்சாரப் புரட்சி குறித்த காஸ்ட்ரோவின் இந்த விமரிசனம், அவர் ஃபோக்கோ கோட்பாட்டின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து விடுபடாததையும், திருத்தல்வாத அரசியலில் ஊன்றி நின்றதையுமே காட்டுகின்றன. அதிகார வர்க்க அரசாக இருந்த போதிலும், கியூப அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அதற்கு ஒரு நற்பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன.
தொழில்மயமாக்கத்தையோ, வளர்ந்த பொருளாதாரத்தையோ கொண்டிராத நிலையிலும், அமெரிக்காவின் தலையீடுகள், தடைகள் போன்றவற்றால் நிரந்தரமாகத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், முன்னேறிய நாடுகளால்கூட சாதிக்கவியலாத மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை கியூபா அமல்படுத்தியிருக்கிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் தரமான இலவசக் கல்வி, மக்களின் ஆரோக்கியத்தை பேணும் விதத்திலான தரமான மருத்துவம், மருத்துவத்துறை அறிவியல் முன்னேற்றம், கருப்பினத்தவர், கலப்பினத்தவர் உள்ளிட்ட பல்வேறு இன மக்கள் வாழுகின்ற சமூகத்தில் பேணப்படும் சமத்துவப் பண்பாடு – என முதலாளித்துவ நாடுகளே அங்கீகரிக்கும் வகையிலான சாதனைகள் பலவற்றை காஸ்ட்ரோவின் தலைமை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி நிற்பதற்குத் தேவையான தற்சார்பு பொருளாதாரத்தை கியூபா பெற்றிருக்கவில்லை. கரும்பு உற்பத்தி – சர்க்கரை ஏற்றுமதி என்பதையே தனது முதுகெலும்பாக கொண்டிருந்த கியூபா, புரட்சிக்குப்பின் அமெரிக்காவுக்குப் பதிலாக ரசியாவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்தது. சந்தை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு சர்க்கரையை வாங்கிக் கொண்டதுடன், எண்ணற்ற உதவிகளையும் ரசியா செய்தது. ரசியாவின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, காஸ்ட்ரோவின் அரசு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. சுற்றுலாத் தொழில் அதற்கேயுரிய பண்பாட்டுச் சீரழிவுகளான இரவு விடுதிகள், போதை மருந்து, விபச்சாரம், ஊழல் ஆகிய அனைத்தையும் கொண்டு வந்ததுடன் சமூக ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கச் செய்தது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் அதிபரான சாவேஸ் கணிசமான அளவுக்கு உதவிய போதிலும் பொருளாதார தற்சார்பை கியூபாவால் எட்ட இயலவில்லை.
தற்போதைய கியூபா அதிபரும் பிடலின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ, தனிச்சொத்துடைமையை அங்கீகரிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், தாராளமயக் கொள்கைகளையும் அமல்படுத்த தொடங்கியிருக்கிறார். அமெரிக்காவுடனான உறவைப் புதுப்பித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் கியூபாவுக்கு ஒபாமா வருகை தந்திருப்பது முக்கியமானதொரு திருப்புமுனையாகும். மூன்று நாட்கள் கியூபாவில் தங்கியிருந்த ஒபாமா, காஸ்ட்ரோவைச் சந்திப்பதையோ, தனது உரைகளில் காஸ்ட்ரோவின் பெயரைக் குறிப்பிடுவதையோ கவனமாகத் தவிர்த்தார். கடந்த அக்டோபர் மாதம் கியூபாவுக்கு எதிரான வணிகத் தடைகளையும் ஒபாமா நீக்கியிருக்கிறார். அமெரிக்கப் பொருட்களும், பண்பாடும் இனி தடையின்றி கியூபாவுக்குள் நுழையும்.
1961−இல் பன்றிகள் வளைகுடாவில் (Bay of Pigs) வீரஞ்செறிந்த கியூப மக்களால் தடுத்து விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், இன்று அதிகார பூர்வமாக கியூபாவுக்குள் நுழைகிறார்கள். காஸ்ட்ரோ விடை பெறுகிறார். ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.
துயரம் தோய்ந்த அந்தச் சொற்கள், காயம்பட்ட அவருடைய தன்மான உணர்வையும், தள்ளாத முதுமையிலும் அடங்க மறுக்கும் சுயமரியாதை உணர்வையும், தன்னுடைய உணர்வுடன் ஒன்றாத கியூபாவின் சமுகத்திலிருந்து தனித்து விடப்பட்ட அவரது கையறு நிலையையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன. இந்தத் துயரம் தனிநபரின் துயரமன்று. கியூபா கடந்து வந்த பாதையை, தயக்கமற்ற விமரிசனப் பார்வையில் பரிசீலிப்பதன் வாயிலாக மட்டுமே இந்தத் துயரிலிருந்து விடுபடமுடியும்.
-சூரியன்,
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2016
பணப் பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்குவா, என்று மக்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்று தானே ஆக வேண்டும்? அதைத் தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறுவணிகம்அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத்திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.
இது நிர்வாகத்திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடிமுட்டாள் கூடப்புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நிற்கிறீர்கள்? டெபிட்- கிரெடிட் கார்டுகளுக்கு மாறுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறது ரிசர்வ்வங்கி. ஏ.டி.எம் இல்லையா, பேடிஎம் (paytm)-முக்கு மாறுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனி விளம்பரம்.
மக்களை வங்கிக்கணக்கு என்றவலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்புபணத்தை அபகரித்து தரகுமுதலாளிகளுக்கு வாரி வழங்குவது,பெருமுதலாளிகளுக்கு வரிவிலக்கு, சிறுவணிகர்கள் முதல் சுயதொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரிவிதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கவைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக்கணக்கையும் இணைத்து மானியவெட்டு.
4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார்அட்டை, கடன்அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின்கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், அவர்களுக்கு தொண்டூழியம் செய்யும் இந்திய அரசு இவர்களின் கருப்பு உலகத்தை விரிவாகவும், ஆழமாகவும் அறிமுகம் செய்கிறது இந்தத் தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
_____________
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். – டாக்டர் அம்பேத்கர்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள T.முருங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார 5 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு 1-12-2016 காலைப் பொழுது கடும் அதிர்ச்சியாகவே விடிந்தது. இந்த ஊரில் இயங்கி வந்த வெற்றிவேல் வெடிமருந்து (VETRIVEL EXPLOSSIVE) ஆலையின் உற்பத்தி பிரிவு ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு வேலை செய்த 21 பேர் உடல் சிதறி இறந்தனர். இறந்தவர்களில் ஒருவரது உடல்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.
சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர். இதனால் போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியாமல் மரபனு சோதனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது அரசு. இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாமல் திகைத்து இறுதியில் இறந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
இறந்து போனவர்களின் எண்ணிக்கையைக்கூட கண்டறிய முடியாத நிலையில் 18, 19 என்று உறுதியின்றி அறிவிக்கப்படுகிறது. இன்னும் சிலரைக் காணவில்லையென உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உடல் கிடைக்காததால் மட்டுமல்ல வேலைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்ற பதிவேடு கூட ஆலை நிர்வாகத்திடம் இல்லை என்பதுதான் ஆலையின் இலட்சணம். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 30-40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதினர். குடும்பத் தலைவர்களை பறிகொடுத்துவிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் நிற்கிறது.
துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் பச்சமலை, கொல்லிமலை ஆகிய இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது அந்த கிராமம். உயிர்காக்கும் மருத்துவமனைகளே இல்லாத கிராமத்தில் உயிருக்கு உலை வைக்கும் தனியார் வெடிமருந்து ஆலையை நடத்த அனுமதித்துள்ளன மத்திய – மாநில அரசுகள்.
1999-ல் சேலத்தில் உள்ள பார்க் ப்ளாசா ஹோட்டல் உரிமையாளர் விஜய கண்ணன் என்பவர்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அப்போது இது வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் குடோனாக மட்டும்தான் நிறுவப்பட்டது. பிறகு படிப்படியாக அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஜெலட்டின் குச்சிகள் தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி இன்று மைனிங் வேலைகளுக்கான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக பரிணமித்துள்ளது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இங்கு 150 கிலோ வெடிப்பொருள்தான் வைத்திருக்க அனுமதி, ஆனால் 2000 கிலோவுக்கு மேல் முறைகேடாக சேமிக்கப்படுகிறது என்கிறார்கள் தொழிலாளிகள். இங்கு சுமார் 750 தொழிலாளர்கள் 3 ஷிஃப்ட்டுகளாக வேலை செய்துள்ளனர். இதில் 18 பேர்தான் நிரந்தரம். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களே. வேலையில் சேர்க்கும் போதே இராஜினாமா கடிதத்திலும் சில வெள்ளைத் தாள்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் வேலைக்கு அமர்த்துகிறது நிர்வாகம்.
ஆலையில் தொழிலாளிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட எதுவுமே கிடையாது. ஏற்கனவே மூன்று முறை ஆசிட் கசிவினால் விபத்து ஏற்பட்டபோதும் வெளியில்தான் சிகிச்சை பெற்றுள்ளனர். ESI, PF போன்ற எந்த சலுகைகளும் இங்கு கிடையாது. விபத்து தடுப்பு பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. இருந்தும் 18 வருடங்களாக இந்நிறுவனம் இயங்கி வந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் ‘அதிரடிஆய்வு’-களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லுகிறார்கள் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்.
எந்த விதிமுறையையும் மதிக்காத ஆலைநிர்வாகம் வெடி மருந்து கலந்த கழிவுநீரை சுத்திகரிக்காமலே அருகில் உள்ள ஓடையில் விட்டு வந்தனர். ஓடை நீரைக் குடித்த கால்நடைகள் சில இறந்துள்ளன. இது குறித்து போலிசில் புகார் கொடுக்க சென்றபோது “ஆட்டுக்கு 5000 காசு வாங்கிட்டு போங்க” ன்னு சொல்லி ஆலை நிர்வாகத்தின் அடியாளாக பேசியுள்ளனர் ‘சட்டத்தின் காவலர்கள்’. இந்த சம்பவத்திற்குப் பிறகு கழிவுநீரை வெளியில் தெரியாமல் ஆலைக்குள் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விட்டுள்ளார் இந்த கொலைகார முதலாளி.
நிலத்தடி நீர் முழுவதும் விசமாக மாறி புற்றுநோயும், தொழுநோயும் ஏற்பட்டதால் கேன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதாக குமுறுகின்றனர் இந்த குக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள். சுத்திகரிக்கப் படாத கழிவு நீரால் பயிர்கள் பாதிப்படைவது போதாதென்று தண்ணரில் கலந்து விட்ட ஆசிட் – ஐ பிரித்தெடுப்பதற்காக இரவு நேரத்தில் ஆவியாக்குவதால் அது பனி மூட்டம்போல் கவிழ்ந்து பயிர்களை கருக்கி விடுவதாக கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.
தொடர்ந்த பாதிப்புகள் காரணமாக 2013 முதல் ஆலையை மூடக்கோரி தாசில்தார், கலெக்டர் போன்ற அரசு அதிகாரிகளிடமும் பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அத்தனை துறை அலுவலகங்களுக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் உயரிய லட்சியத்தோடு ஆலையை பாதுகாப்பதற்காக அத்தனை துறை அதிகாரிகளும் கண்ணும் கருத்துமாக செயல் பட்டார்கள் போலும்! விவசாயம் மற்றும் குடிநீர் பதிப்பை முன்னிறுத்தி போராடி வந்த மக்கள், ஆலை வெடித்துச் சிதறிய பின்னர்தான் அதன் அழிவு வேலையை முழுமையாக உணர்ந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
உயிரைக் கொடுத்தேனும் ஆலையை விரட்டுவோம் என போர்க்கோலம் பூண்டுள்ளனர் பகுதி மக்கள். ஆலை வெடித்துச் சிதறிய பின் வந்த மாவட்ட ஆட்சியரையும் அமைச்சர் வெல்லமண்டி நடராசனையும் முற்றுகையிட்டு கார்களை கல்லால் அடித்து விரட்டியுள்ளனர். 3 நாட்களாக போக்குவரத்தை முடக்கியுள்ளனர். ஆலைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். எந்த கட்சிகளையும் நம்ப மறுக்கின்றனர். கொட்டும் மழையிலும் துளியும் பின்வாங்காமல் நின்று போராடுகிறார்கள். “இந்த கம்பெனிய மூடசொல்லி நூறு தடவைக்கு மேல புகார் கொடுத்தும் அதிகாரிங்க கண்டுக்கல.
“இன்னைக்கி இத்தன பேரு செத்ததுக்கு அப்புறமா எதுக்கு வந்தீங்க, கருமாதி பண்றதுக்கா?” என்று எஸ்.பி-யின் முகத்தில் காறி உமிழ்ந்து காக்கி மிடுக்கை தள்ளாட வைத்தனர் போராடும் பெண்கள். ஒவ்வொரு முறை இந்த ஆலைக்கெதிராக நாங்கள் மனு கொடுக்கும் போதும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனடியாக முடப்படும் என்று மக்களிடம் நாடகமாடி விட்டு கம்பெனிக்காரனிடம் ஆதாயமடைந்ததாக அம்பலப்படுத்துகிறார்கள் பொதுமக்கள்.
இடிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம், சென்னை பெருமழை – வெள்ளம், அதிகரித்து வரும் இரயில் – சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் என ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்கள் கொத்துக்கொத்தாக காவு வாங்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் உணர்த்துவது அழுகிநாறும் அரசமைப்பின் தோல்வியையே! இத்தகைய பேரிழப்புகள் இத்துடன் நிற்கப்போவதுமில்லை. தோற்றுப்போய் – மக்களுக்கெதிராக மாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெரியாமல் இனியும் சகித்துக்கொண்டு வாழப்போகிறோமா? நியாயப்படுத்த முடியாதபடி சிக்கிக்கொண்டபின் அந்த ஆலை முதலாளியை மட்டும் குற்றவாளியாக சித்தரித்து கபட நாடகம் ஆடுகிறது அதிகார வர்க்கம்.
ஆண்டுக்கணக்கில் நடக்கப்போகும் நீதி மன்ற இழுத்தடிப்பில் மக்கள் கோபம் தணிந்து மறந்தே விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கு! இதை முறியடிக்க வேண்டுமானால் ஆலை முதலாளியை மட்டுமல்ல தோற்றுப் போன இந்த அரசுக் கட்டமைப்பையும் அதிகார வர்க்கத்தையும் கூண்டிலேற்ற வேண்டும்.
மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றும் மாற்று அமைப்பு முறைக்காக போராட வேண்டும். அது மட்டுமே இன்று கோரமாக கொல்லப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மட்டுமல்ல, இனி எப்போதும் இப்படியொரு பாதிப்பு வராதவாறு மக்களைப் பாதுகாக்கவும் செய்யும். இந்த பிரச்சாரத்துடன் மக்களை அமைப்பாகத் திரட்ட முயன்று வருகிறது மக்கள் அதிகாரம்.
எச்சரிக்கை: அதிர்ச்சியூட்டும் படங்கள் – பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.
செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157
கடந்த 2016 நவம்பர் எட்டாம் தேதி எட்டரை மணிக்கு “இன்று நள்ளிரவு முதல் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனி அவையெல்லாம் வெறும் காகிதங்களே” என்று பிரதமர் மோடி முழங்கினார்.
சுனாமி கூட கடற்கரையோர மக்களைத்தான் தாக்கியது. குஜராத் பூகம்பம் கூட ஒரு பகுதி மக்களைத்தான் விழுங்கியது. மோடியின் கர்ஜனை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி பக்தர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்களை தாக்கி நடைபிணமாக்கியது. மோடி அரசின் இக் கொடூர தாக்குதலால் கருப்புபண முதலைகள் தவிர மற்ற அனைவரும் தாங்க முடியாத வேதனையில் வாடினர்.
வங்கியில் வரிசையில் நின்று களைத்துப் போய் மயங்கி விழுந்தவர்கள் ஏராளம். இறந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐ தொட்டு விட்டது. இருந்தாலும் கருப்புப் பணத்தையும்,கள்ள நோட்டையும் ஒழிக்கும் இத்திட்டம் தேவைதான், மக்களுக்கு இவ்வளவு நெருக்கடியைக் கொடுக்காமல் முன் ஏற்பாடுகளுடன் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
விலைவாசியைக் குறைப்பேன், வேலை வாய்ப்பை உருவாக்குவேன், லஞ்ச ஊழலே இருக்காது, தூய்மை இந்தியா, வளர்ச்சி ஒன்றே தாரகமந்திரம், மன் கி பாத், மேக் இன் இண்டியா, ஸ்டாண்டு அப் இண்டியா என்று கடந்த காலங்களில் அளந்துவிட்ட பஞ்ச்டயலாக்குகள் திரைப்பட நடிகர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விஞ்சி நிற்கிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னும் மோடி மக்களுக்குச் செய்த நன்மைகள் என்று கூற எதுவும் இல்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மோடி அரசின் சாதனைகள். சரிந்து கொண்டிருந்த தனது பிம்பத்தைத் தூக்கி நிறுத்தி விடலாம் என்று நம்பி மோடி எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கைதான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
கறுப்புப் பணஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு என்ற மோடி ரசிகர்களின் கூச்சல் கார்த்திகை மாத ஐய்யப்ப பக்தர்களின் சரணகோஷத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓங்கி ஒலிக்கிறது. கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடுவேன் என்ற மோடி மக்களிடம் உள்ள சேமிப்பைப் பறிமுதல் செய்கிறார். பனிரெண்டு லட்சம் கோடி வராக்கடனில் தத்தளிக்கும் வங்கிகளில் போடச்சொல்வது மூலம் அம்பானி, அதானி, டாட்டாக்கள் மீண்டும் கொள்ளையடித்து மேலும் கருப்புப் பணத்தைச் சேர்க்க வழிவகை செய்கிறார்.
செல்லா நோட்டு அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் என்றால் ஐநூறு ஆயிரம் செல்லாது என்று அறிவித்த அன்று இரவோடு இரவாக நகைக்கடைகளுக்கு வந்தவர்கள் யார்? ஏன் மோடி அரசு அவர்களை மடக்கிப் பிடிக்கவில்லை? கிராமுக்கு 1200, 1500 என்று தங்கத்தின் விலையை ஏற்றி விடிய விடிய விற்று கருப்புப் பணத்தை சம்பாதித்தார்களே அவர்கள் மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிவு நாணயத்தோடு பதில் சொல் என்று மோடி இரசிகர்களையும் தொலைகாட்சி விவாத உண்மை விளம்பிகளையும் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும்.
கருப்புப் பண விவகாரத்தைப் போன்றதுதான் கள்ளநோட்டு ஒழிப்பு. பாகிஸ்தானிலிருந்தும் சீனாவில் இருந்தும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அச்சடித்து அனுப்புகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை அது சீர்குலைக்கிறது. அதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்கிறார்கள். 2015-இல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் 2005-க்கு முன்னால் அச்சிடப்பட்ட 500ரூபாய் நோட்டுக்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பது நோக்கம் என்றால் அப்படி செய்திருக்க முடியும். அப்படியே ஒழிக்கப்பட்டாலும் காந்தி சிலை நோட்டு அச்சடித்தவர்களால் மங்கள்யான் செயற்கைகோளைச் சேர்த்து அச்சிடமுடியாதா? இதை நம்ப நாம் என்ன முட்டாள்களா?
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும்,பொருளாதார ஆய்வார்களும் கள்ள நோட்டு 400 கோடிதான் உள்ளது என்கிறார்கள். ஒருசதவீதம் கூட இல்லாத கள்ள நோட்டைப் பிடிக்க இவ்வளவு கொடுமையா? எலியைப் பிடிக்க மலைக்கு வேட்டுவைக்க வேண்டுமா?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் கம்யூட்டர்சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சிலர் நம் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கும் போதே சாயம் வெளுத்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வழக்கு ஒன்றுவந்து மோடிகளின் சாயத்தை வெளுக்கச் செய்தது. “உலகத்தில் இதுவரை இப்படி ஒரு தொழில் நுட்பத்தில் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைகாட்சிகளில் ஆர்.எஸ்.எஸ்,பி.ஜே.பி கோயபல்சுகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து தெரிந்தே பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பது மூலம் தீவரவாதத்தை ஒழிக்கலாம் என்ற நச்சுப் பிரச்சாரத்தை சிலர் நம்புகின்றனர். வாஜ்பாய் ஆட்சி செய்த 1998-2004 இடைப்பட்ட காலத்தில் தான் கருப்புப் பணம் அதிகரித்துள்ளது என்று உலக வங்கி அறிக்கை சாட்சி சொல்கிறது. ஆயுதக் கடத்தல் பேர்வழிகள், பாகிஸ்தான் அமெரிக்க உளவாளிகள் யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வழிவகை செய்தார், யோக்கியசிகாமணி வாஜ்பாய். ‘பார்ட்டிசிபேட்டரி நோட்(P-N நோட்) என்ற வழிமுறை தான் அது. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து இந்தியாவில் ஊடுறுவலாம். அதை அரசாங்கம் சோதிக்க முடியாது.
கடைசியாக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல வங்கி மூலம் வரவு செலவு, ரொக்கமில்லா பொருளாதாரம் (கேஷ்லெஸ் எக்கானமி) என்கிறார் திருவாளர் மோடி.அதன் பொருள் என்ன? குப்பம்மாளையும்,சுப்பனையும் டிஜிட்டல்மயமாக்கி இரத்தத்தை உறிஞ்சிக்குடிப்போம் என்பதுதான்.
ரொக்கமில்லா பொருளாதாரத்தால் கல்விக் கடன் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களை காப்பாற்ற முடியுமா? விவசாயம் நாசமாகி கடன் தொல்லையால் மாண்டு கொண்டிருக்கும் விவசாயிகளின் சாவை தடுத்து நிறுத்த முடியுமா? ஒருபோதும் முடியாது.
மாறாக இது அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கும். தரகு முதலாளிகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும்,வங்கி வருமானத்தை பெருக்கி முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யும்.சில்லரை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ்,வால்மார்ட்,பிக்பஜார் போன்ற கார்பரேட்டுகளின் பகல் கொள்ளைக்கு உறுதுணையாகும். உணவு மானியத்தை வங்கி கணக்குக்கு அனுப்பி உணவு பாதுகாப்பை (பொது வினியோக முறையை) தகர்க்கும்,அழிவுகள் தொடரும்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கையால் பாராளுமன்றம் முடங்கியும்,கல்லுளிமங்கன் மன்மோகன்சிங்கின் கதறலையும் கூட நரேந்திர மோடி கண்டு கொள்ள தயாராக இல்லை.
விதியே என்று வாழ்பவர்களை வீதிக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் மோடி. சேமநல நிதியை (PF-ஐ) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களுரு நகரமே முடங்கியது. படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி மோடியை அடுத்த கணமே பின்வாங்கச் செய்தது. பணத்திற்காக நம்மை வீதிகளில் அலையவிட்ட மோடி அரசுக்கு வீதியில்தான் பாடம் கற்பிக்க முடியும். வீதிக்கு வாருங்கள் என்று மோடி அழைக்கிறார். வாருங்கள் விடை காண்போம் !
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை மாவட்டம்.
__________________________________
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நவம்பர் -8 அன்று அறிவித்த கணத்தில் இருந்து இன்றுவரை மக்கள் கூட்டம் தங்கள் சேமிப்பையும், சம்பளத்தையும் மாற்றவும், வங்கியில் பணம் செலுத்தி எடுக்கவும் தினந்தோறும் ATM வங்கி வாசலில் அல்லாடுகின்றனர். இருந்தாலும் கருப்பு பணத்திலேயே உருவான, கருப்பு பண முதலைகளின் விளம்பரங்களினால் வாழ்கின்ற அச்சு, காட்சி ஊடகங்கள் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மோடியின் நோக்கத்தை அம்பலப்படுத்தாமல் இந்த நடவடிக்கை எடுத்த விதம் தவறு என்று கூறி போராடி வருகிறார்கள். மக்கள் சிரமப்படும்போதும் இந்நடவடிக்கை கருப்பு பணத்தை குறைந்தபட்சமாவது ஒழிக்கும் என்று தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது வேறு வழி இல்லை என சகித்துக்கொள்கிறார்கள்.
இவ்விதமான கருத்துக்களை உடைக்கும் வகையில் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக மோடியின் நோக்கம் கடுகு டப்பா சேமிப்பையும் கொள்ளையடித்து கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதே என்பதை அம்பலப்படுத்தியும். “நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கு ஏன் தடை? வங்கிப் பணம் எடுப்போம், வங்கி கணக்கு முடிப்போம்!” என்பதை முழக்கமாக வைத்து கடந்த 2.12.2016 அன்று மக்களிடம் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதேபோல் விருதை பாலக்கரை, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தெருமுனை பிரச்சாரங்களும் நடத்தப்பட்டது. இவற்றில் மக்கள் அதிகாரம் விருதை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பு.மா.இ.மு விருதை செயலாளர் தோழர் மணிவாசகம், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜு மற்றும் பகுதியில் உள்ள ஆதரவாளர்கள் மோடி அரசை அம்பலப்படுத்தியும், மேலும் இந்த பாசிச நடவடிக்கையை எதிர்கொள்ள போராடியாக வேண்டும் என வலியுறுத்தியும் பேசினர். இக்கூட்டங்களில் ஆங்காங்கே நின்றிருந்த திரளான மக்கள் தோழர்களின் பேச்சை கேட்டு அருகில் வந்து நின்று முழுமையாக கவனித்தனர், கைதட்டி வரவேற்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்- 9791286994
__________________________________
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பற்றி பேசாதே ! கோவை போலீசின் ஜனநாயக மறுப்பு !
கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.12.2016 கோவை ஒண்டிப்புதூரில் உள்ள சுங்கம் மைதானத்தில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சரியா? தவறா? என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் கூட்டத்தின் தலைப்பு மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது எனக் கூறி அனுமதி மறுத்துள்ளது காவல் துறை.
ஒரு புறம் மக்களின் மனநிலையை அறிய செல்பேசி ‘ஆப்-பில்’ கருத்து கேட்பதாக நாடகமாடுகிறது மோடி அரசு. கேள்விகளே கேட்காத மன்கீபாத் நிகழ்ச்சியிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமும், பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே வாய் கிழிய சவடால் அடிக்கிறார் மோடி. மவுன மோகன் சிங் என மோடியும், பா.ஜ.க-வினரும் கேலி செய்த மன்மோகன் சிங்கின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்காமல் பாராளுமன்ற அவையை விட்டு ஓடுகிறார் பிரதமர். எல்லையில் வீரர்கள் கஷ்ட்டப்படும் போது ஏ.டி.எம் வரிசையில் நிற்க உனக்கு என்ன கேடு எனக் கேட்கிறது காவி வானரப்படை.
ஆனால் மக்களிடம் நேரடி கருத்தை கேட்கவோ அல்லது விவாத்திக்கவோ அனுமதி கேட்டால் மறுக்கிறது காவிமயமான காவல் துறை. ஆனால் இதே காவல் துறை தான் இந்துமுன்னணி சசிகுமார் என்ற சமூக விரோதியின் எழவு ஊர்வலத்தின் போது கடைகளை சூறையாடியவர்களுக்கு பாதுகாப்புக்கு நின்றது. ஆனால் இவற்றியெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களிடம் பல்வேறு வகைகளில் போராட்டங்களை எடுத்துச் செல்வோம்.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை மாவட்டம்.