Wednesday, June 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 520

மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !

0

மோடி வித்தை: மக்களின் சேமிப்பை உறிஞ்சவரும் பிளாஸ்டிக் “அட்டைகள்!”

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் துக்ளக் தர்பார் நடவடிக்கை கருப்புப் பணத்தை மட்டுமல்ல, கள்ளப் பணப் புழக்கத்தைக்கூட ஒழித்துவிடாது என்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் பாமரன் வரை பலரும் கூறிவிட்டனர். இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், முதலீடு குறையும், வேலையிழப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டதை விவசாயிகளும், சிறு வணிகர்களும், தினக்கூலித் தொழிலாளர்களும் படும்பாடு எடுத்துக் காட்டுகிறது.

cashless-paytm
பிளாஸ்டிக் பண அட்டைகளைப் பெற்று வியாபாரம் நடத்தும்படி வலிந்து தள்ளப்பட்டுள்ள சிறு வணிகம்.

இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு மோசடி என்றால், இதனின் நோக்கம்தான் என்ன? இந்த இரண்டரை வருட ஆட்சியில் பலமுனைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள மோடியும் அவரது அரசும், தமது பிம்பத்தைத் தூக்கிநிறுத்திக் கொள்ளவா? அல்லது, எதிர்வரவுள்ள உ.பி., பஞ்சாப் மாநிலத் தேர்தல்களில் வலுமிக்க எதிர்க்கட்சிகளை முடக்கிப் போடும் நோக்கத்திற்காகவா? அல்லது இந்த அரசியல் காரணங்களுக்கு அப்பால் வேறு எதுவும் மறைமுகத் திட்டம் மோடிக்கு இருக்கிறதா?

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆம் எனப் பதில் கூறலாம். பீற்றிக் கொள்ளப்படும் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னே மோடியின் சுயநல அரசியல் கணக்குகளும், மோடியைப் பெருஞ்செலவில் பிரதமராக அமர்த்தியிருக்கும் தரகு முதலாளிகளின் நலன்களும் மறைந்திருக்கின்றன.

பிரதமர் நரேந்தர மோடி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை நவம்பர் 8 அன்று இரவில் வெளியிட்டார். மறுநாள் காலை நாளிதழிலேயே, இந்த அறிவிப்பை வரவேற்று மோடியின் படத்தைப் போட்டு முழுப் பக்க விளம்பரத்தை வெளியிட்டது பேடீம் என்ற நிறுவனம் பேடீம், கைபேசி வழியாக பணப் பரிமாற்ற வர்த்தகத்தை நடத்தி வரும் நிறுவனம்.

cashless-big-bazaar
வங்கிகளில், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாதவர்கள், பிக் பஜார் என்ற தனியார் நிறுவனக் கடைகளில் கார்டைத் தேய்த்துப் பணம் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம்.

பேடீம் போன்ற தனியார் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளும்கூட பணப் பரிமாற்றத்திற்குத் தங்களின் செயலிகளைப் பயன்படுத்துமாறும், அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்ற விளக்கத்தோடும் நவம்பர் 8-க்குப் பிறகு விளம்பரங்களை வெளியிட்டன.

இதே நேரத்தில்தான் மைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ”இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இந்தியாவைப் பணமற்ற பொருளாதாரத்திற்கு உந்திக்கொண்டு போகும் முதல் அடி” எனத் தெரிவித்தார்.

பணத்திற்குப் பதிலாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற அட்டைகளையும், பணப் பரிமாற்ற செயலிகளையும் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதும் விற்பதுமான வர்த்தக நடவடிக்கைகளைத்தான் பணமற்ற பொருளாதாரம் எனக் குறிப்பிடுகிறார்கள். கறுப்புப் பணம் உருவாவதற்கும், அதனைப் பதுக்கி வைப்பதற்கும் பணப் பொருளாதாரம்தான் காரணமாக இருப்பதாகவும், பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறிச் செல்லுவதன் மூலம் கறுப்புப் பணத்தையும் இலஞ்சத்தையும் அறவே ஒழித்துக்கட்டிவிட முடியுமென்றும்; பண வீக்கத்தை, அதாவது விலைவாசியைக் கட்டுப்படுத்தி, கடனுக்கான வட்டியையும் குறைத்துவிட முடியுமென்றும் பணமற்ற பொருளாதாரம் குறித்துக் கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, பா.ஜ.க.

* * *

நாட்டிலுள்ள 1,34,000 வங்கிக் கிளைகளில் 84,000 வங்கிக் கிளைகள் பெரு நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. அதாவது, ஒவ்வொரு ஐந்து கிராமங்களுள் நான்கு கிராமங்களில் வங்கிக் கிளைகளே என்பதுதான் இதிலிருந்து கிடைக்கும் உண்மை. ஒவ்வொரு ஐயாயிரம் பேரில் ஒருவரிடம் மட்டுமே கிரெடிட் கார்டு உள்ளது. ஒவ்வொரு ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டுமே டெபிட் கார்டு உள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அட்டை வைத்திருப்பவர்களுள் பெரும்பாலோர் அதனைப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துவதில்லை. இந்த பிளாஸ்டிக் பண அட்டைகளை வைத்திருப்போரில் 90 சதவீதப் பேர், அவற்றை ஏ.டி.எம். மிஷின்களிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

cashless-posநாட்டிலுள்ள 1.4 கோடி வர்த்தக நிறுவனங்களில் வெறும் 14 இலட்சம் கடைகளில் மட்டுமே பண அட்டைகளைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. நாட்டின் மொத்த தொழிலாளர்களுள் 33 சதவீதம் பேர் – ஏறத்தாழ 15 கோடி தொழிலாளர்கள் பணக் காகிதத்தை மட்டுமே நம்பியிருக்கும் அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள். இவை அனைத்திற்கு மேலாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளுள் 87 சதவீதம் பணப் பரிமாற்றம் வழியாகத் தான் நடைபெறுகிறது.

இந்தியாவின் வர்த்தக, பொருளாதார நிலவரம் இவ்வாறிருக்க, வங்கிக் கணக்கும், ஸ்மார்ட் போனும், ஆதார் அட்டையும், பண அட்டைகளைத் தேய்க்கும் இயந்திரங்களும் இருந்துவிட்டால் பணமற்ற பொருளாதாரத்திற்குக் கைசொடுக்கும் நேரத்தில் மாறிச் சென்றுவிடலாம் என பா.ஜ.க. தலைவர்கள் கதைப்பது கதைகளுக்குக்கூட ஒத்துவராத கற்பனை. இன்னொருபுறமோ, பா.ஜ.க.வின் இந்த விபரீதக் கற்பனை சாதாரண மக்கள் மீது ஏவிவிடப்படும் பொருளாதார வன்முறையாகும்.

இரண்டாவதாக, பணமற்ற பொருளாதாரத்தின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியும் என்ற பா.ஜ.க.வின் வாதம் மாபெரும் பொய். முதலாளித்துவ பொருளாதாரத்தின் கீழ் பணத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட முடியாது என்பது ஒருபுறமிருக்க, இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் பணத்தைப் பயன்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகளில்கூட கருப்புப் பொருளாதாரம் ஒழிந்துவிடவில்லை. அமெரிக்காவில் 1,60,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும், ஜப்பானில் 48,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும் கருப்புப் பொருளாதாரம் கோலோச்சுவதாகக் குறிப்பிடுகிறது, உலக வங்கியின் அறிக்கை.

cashless-captionஉலகிலேயே பிரேசில்தான் பணப்புழக்கம் குறைவாகவும், பிளாஸ்டிக் அட்டை புழக்கம் அதிகமாகவும் உள்ள நாடு. ஆனால், பிரேசிலில்தான், பணப்புழக்கம் அதிகமாக உள்ள நாடுகளைக் காட்டிலும் இலஞ்சமும் கருப்புப் பணமும் பிசாசுத்தனமாகத் தலைவிரித்தாடுவதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் மூலம்தான் பெருமளவில் கருப்புப் பணம் திரள்கிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் சென்று வருகின்றன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு வங்கிகள் புரோக்கர்களைப் போலச் செயல்பட்டுவருவதும் அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் குற்றப் பின்னணியை எடுத்துக்காட்டும் சமீபத்திய உதாரணங்கள்.

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், பணப் பரிமாற்றம் மூலம் நடைபெறும் வர்த்தகம் அனைத்தும் கருப்பென்றும் அபாண்டமாகப் பழி போடுகின்றன. குறிப்பாக, வரி கட்டாமல் ஏய்க்கும் நோக்கில்தான் சிறு வணிகர்கள் பணமற்ற பொருளாதாரத்திற்கு மாற மறுக்கிறார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள். பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கும் பொதுமக்களை அக்குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாக அவமதிக்கிறார்கள்.

cashless-tribal-village
மேற்கு வங்கத்தின் சுந்தர வனப் பகுதியில் அமைந்துள்ள, 5,000 பேர் வசிக்கும் கோராமாராவைச் சுற்றி 12 கி.மீ. தூரத்திற்கு எங்கும் வங்கி வசதிகள் கிடையாது.

ரசீதுகளே இல்லாமல் சிறு வணிகம் நடந்துவருகிறது என்ற குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு அளவிற்கு கம்ப்யூட்டர் மூலம் ரசீதுகளைத் தயாரித்து வியாபாரம் நடத்தும் மால்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்பதும் உண்மை. வரி ஏய்ப்பைத் தடுத்து நிறுத்தி, வரி வருமானத்தை அதிகரிப்பதுதான் மோடி அரசின் உண்மையான நோக்கமென்றால், அவர்கள் வோடாஃபோன் மீதும், நோக்கியா மீதும்தான் முதலில் பாய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வாரி வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அதனைச் செய்வதற்கு விருப்பமோ, துணிச்சலோ இல்லாத மோடி கும்பல், தனது வரி வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கு சிறு வணிகர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரைக் குறி வைக்கிறது. ஏற்கெனவே 28 சதவீத அளவிற்கு மறைமுக வரிகளும், அதற்கும் மேலே செஸ் வரிகளும் சுமத்தப்பட்டுச் சுரண்டப்பட்டு வரும் இவர்களை நேரடி வரியான வருமான வரி வலைக்குள்ளும் சிக்க வைப்பதுதான் மோடியின் திட்டம். ஒருபுறம் வரி விதிப்புகள் மூலமும், இன்னொருபுறம் பொதுமக்களின் கைகளிலுள்ள ரொக்கப் பணத்தையும், சேமிப்புகளையும் வங்கிகளின் கஜானாவிற்குக் கொண்டுவருவதன் மூலமும் அரசின் பற்றாக்குறையை ஈடுகட்டிக் கொள்வதோடு, இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தேவைப்படும் மூலதனத்தையும் திரட்டிக் கொடுக்கும் திட்டத்தோடுதான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது; பணமற்ற பொருளாதாரம் குறித்து ஆரவாரம் செய்யப்படுகிறது.

2015-16 ஆம் நிதியாண்டில் நாட்டிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுள் ஆறு பொதுத்துறை வங்கிகள் மட்டும்தான் இலாபம் ஈட்டியுள்ளன. ஸ்டேட் பாங்க் குழுமம் உள்ளிட்ட அந்த ஆறு வங்கிகளின் இலாபமும் அதற்கு முந்தைய நிதியாண்டைவிடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் இப்படி நட்டத்தில் சிக்கி, திவாலாகும் நிலை நோக்கிச் செல்லத் தொடங்கியிருப்பதற்குக் காரணமே வங்கிகளின் வாராக் கடன்தான்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபொழுது, 2014-15 ஆம் நிதியாண்டில் 2.67 இலட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், 2015-16 ஆம் நிதியாண்டின் இறுதியில் 4.76 இலட்சம் கோடியாகவும், ஜூன் 2016 இறுதியில் 6.50 இலட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. வாராக் கடன் என வரையறுக்கும் நிலையில் உள்ள 3.30 இலட்சம் கோடி ரூபாய்களையும் இதோடு சேர்த்தால், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அதனின் மொத்தக் கடனில் 16 சதவீதமாகும் எனக் குறிப்பிடுகிறது கிரெடிட் சுயிஸ் நிறுவனம்.

ரிசர்வ் வங்கி மார்ச் 2015-இல் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 100 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ஏறத்தாழ 20 சதவீதமாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. அவற்றுள் ஒரு பத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகை மட்டும் 56,467 கோடி ரூபாய்.

இந்தத் தரகு முதலாளிகளிடமிருந்து கடனை வசூலித்து பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலையைச் சீராக்க அரசு தயாராக இல்லை. ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் இலாபம் 67 சதவீதம் சரிந்துவிட்ட நிலையில்கூட, அவ்வங்கிக் குழுமம் 60 முக்கிய நிறுவனங்கள், பிரமுகர்கள் செலுத்த வேண்டிய ஏழாயிரம் கோடி ரூபாய் பெறுமான கடன்களைச் சமீபத்தில் தயங்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் மோடி அரசால் இலண்டனில் வைத்துப் பாதுகாக்கப்படும் தரகு முதலாளி விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகை 1,201 கோடி ரூபாய். அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்படும் வாராக் கடன்கள் அனைத்தும் தரகு முதலாளிகளிடம் கருப்புப் பணமாகத் திரள்கிறது என்பதே உண்மை.

வாராக் கடன்களால் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுப்பதற்கும், அவை புதிய கடன்களை வழங்குவதற்கும், ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் விதித்துள்ள பாஸல் 3 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மார்ச் 2019-க்குள் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,40,000 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ஒரே மூச்சில் வங்கிகளில் திரட்டிக் கொள்ளும் மறைமுக நோக்கத்தோடுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பணமதிப்பு நீக்கப்பட்ட 14 இலட்சம் கோடி ரூபாயில் பொதுமக்கள் கியூவில் நின்று மாற்றிக் கொண்டது போக, வங்கிகளில் சேமிப்பாகச் சேரும் தொகை ஒன்பது இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது இலட்சம் கோடி ரூபாயில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயச் சேமிப்பாக செலுத்த வேண்டிய தொகை 2.25 இலட்சம் கோடி ரூபாயாகும். இந்தத் தொகை மிகக் குறைந்த வட்டியில் அரசுக்குக் கடனாக அளிக்கப்படும். மேலும், வங்கிகளில் செலுத்தப்பட்ட ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் மூலம் அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வருமான வரியாகக் கிடைக்கும். இவை போக, வங்கிகளில் செலுத்தப்படாமல் கைவிடப்படும் கருப்புப் பணம் 2.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அரசு மதிப்பிட்டிருக்கிறது. இதுவும் அரசின் நிதி அறிக்கையில் வரவாகக் காட்டப்பட்டு, இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் மட்டும் அரசிற்கு நோகாமல் கிடைக்கும் வருமானம் 5.5 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. அரசிற்குக் கிட்டும் வருமானத்திற்கு அப்பால், வங்கிகளிடம் பொதுமக்களின் சேமிப்பாக 6.75 இலட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றும், இந்தப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் இந்தச் சேமிப்பின் பெரும்பகுதி வங்கிகளின் புழக்கத்திலேயே இருத்தப்படும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான சாலை வசதி, சுகாதார வசதிகளைச் செய்து தரப் போவதாகக் கூறுகிறது, மோடி அரசு. இது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பொய். பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கல்வி போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யப் போவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறியிருக்கிறதா? கல்வி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு என்ற பெயர்களில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரிகள், அவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டதுண்டா? பொதுமக்களின் பணம் வங்கிகளில் கோடிக்கணக்கில் குவியத் தொடங்கியவுடனேயே, பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டித் தொகையைக் குறைத்துவிட்ட மோடி அரசு, பொதுமக்களின் நலனுக்காக இந்தப் பணத்தைச் செலவிடும் எனக் காதில் பூ முடிந்தவன்கூட நம்ப மாட்டான்.

மாறாக, இந்தப் பணம் முழுவதும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடனாகத் தரப்படும். அரசு-தனியார் கூட்டுத் (பி.பி.பி.) திட்டங்களில் அரசின் முதலீடாகக் கொட்டப்படும். அரசின் பற்றாக்குறையும், வாராக் கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டமும் ஈடு செய்யப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், கருப்புப் பணத்திற்கு எதிராக மோடி தொடங்கியிருக்கும் இந்தப் புனிதப் போர், பொது மக்களின் கைகளில் இருந்த சேமிப்புகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறது. சில்லறைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறும்படியான நிர்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிர்பந்தம் வாயிலாக, பேடீம் உள்ளிட்ட பணப் பரிமாற்ற நிறுவனங்கள், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொடங்கவுள்ள பேமண்ட் வங்கிகளின் வர்த்தகத்திற்கும் இலாபத்திற்கு உத்தரவாதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது இந்தியாவிற்கு நல்ல நாள் பிறக்கப் போவதாக உடுக்கை அடித்தார். பொது மக்கள் தமக்குச் சொந்தமான பணத்தை எடுக்க வங்கி வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிகள் வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் பணத்தில் மஞ்சக் குளிக்கப் போகிறார்கள். மோடியும் பா.ஜ.க.வும் பிரச்சாரம் செய்ய நல்ல நாள் இப்படித்தான் விடிந்திருக்கிறது.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !

0
கிளைதாங்கி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இரால் பண்ணை முதலாளிகள் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் கடல் தண்ணீரை உள்ளே இழுப்பதற்கு செய்து வைத்துள்ள ஏற்பாடு

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

தோழர், நானெல்லாம் கம்யூனிஸ்டுன்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா சிவப்புத் துண்டோட மதிப்பா அலையுறேன்.. நான் தற்கொலை செய்துக்க வழியில்லை. ஏதோ வேற வழியில்லாம வாழ்ந்துகிட்டு இருக்கேன்..” என்கிறார் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த அந்த உள்ளூர் தோழர். சி.பி.ஐ கட்சியின் பகுதி அமைப்பில் பொறுப்பில் இருப்பவர் அவர். அவருக்குச் சொந்தமாக இருக்கும் துண்டு நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்.

chellakon-Drain2
தூர்வாரப்படாத நிலையில் வாய்க்கால்

”பயிர் வாடிப் போனதைப் பார்த்து அதிர்ச்சியில் மரணம் விளைவதை விவசாயத்தில் இல்லாதவர்களால் நம்ப முடியாது. வெறும் செடி தானே என்று தான் அவர்கள் நினைப்பார்கள்”

“என்னது வெறும் செடியா? அந்த வெறும் செடிய நம்பி கலியாணம் வைச்சிருப்பான்.. பள்ளிக்கூட பீசு கட்டலாம்னு நெனச்சிருப்பான்.. கடனை அடைக்கலாம்னு நெனைச்சிருப்பான்.. கண்ணு முன்னாடி கருகிப் போகிறத பார்த்தா நெஞ்சு அடைக்காது? எனக்கே இந்த இறவை எந்திரத்துக்கு வாங்கின 60 ஆயிரம் கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியலை.. இருக்கிறதா சாகுறதான்னு தெரியாம தெனமும் போயி கருகிப் போன பயிரையே மணிக்கணக்கா வெறிச்சி பார்த்துட்டு வர்றேன்.. என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை” என்கிறார் முகமது கனி பாப்பா

”இவ்வளவு தண்ணீர் குடிக்கும் நெல்லைத் தான் சாகுபடி செய்யனுமா? இப்ப நிறைய என்.ஜி.ஓ அமைப்புகள் மாற்றுப் பயிர் பற்றியெல்லாம் சொல்றாங்களே?”

“மாற்றுப் பயிர் பற்றி இந்த மண்ணுக்கும் தெரியாது; எங்களுக்கும் தெரியாது” என்றார் முகமது கனி பாப்பா.

ஒரு நதி உருவாகி பல லட்சம் வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஓடி அதைப் பண்படுத்துகிறது. அந்த நதியின் ஓட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக அடித்து வரப்பட்ட வண்டல் மண் அதன் முகத்துவாரப் பகுதிகளில் படிமங்களாய்ச் சேர்கின்றது. நதிக் கரைகளை ஒட்டி வாழும் மக்கள் அந்த இயற்கையின் இயக்கப் போக்கை தங்களது பல்லாயிரம் ஆண்டுகால அனுபவ அறிவால் அறிகிறார்கள். அதிலிருந்து விவசாயம், தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். டெல்டா மாவட்டங்கள் நெல் சாகுபடிக்கு ஏற்றதென்பது மனிதனின் சொந்த விருப்பத்திலிருந்து வந்தடைந்த முடிவல்ல – அது இயற்கை அந்த மக்களுக்கு வழங்கிய வாய்ப்பு.

இயற்கையின் சமன்பாட்டைக் குலைக்காத வண்ணம் பாரம்பரிய நீர்மேலாண்மை ஏற்பாடுகளை உண்டாக்கி வைத்துள்ளனர் தஞ்சை விவசாயிகள். கிளை நதிகளின் பாதையில் மேட்டுப்பகுதியிலிருந்து தலைவாய்க்கால்களை வெட்டி அதை தாழ்நிலப் பரப்பிற்கு அழைத்து வந்து, பின் வடிவாய்க்கால்கள் வழியே மீண்டும் நதியின் போக்கில் இணைத்துள்ளனர். மேலத்தஞ்சைக்குள் நுழையும் காவிரி பல கிளை நதிகளாகப் பிரிகின்றது – இந்தக் கிளை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பை தலைவாய்க்கால்களும், வடிவாய்க்கால்களும் சிலந்தியின் வலையைப் போல் நெருக்கமாக கட்டி வைத்துள்ளன. கீழத்தஞ்சை பகுதிகள் முழுக்க ஊர்களின் அமைப்பும் குறுக்குச் சாலைகளுமே கூட இதே போல் சிலந்தி வலைப் பின்னலின் வடிவில் தான் அமைந்துள்ளன.

தஞ்சாவூர் கூலி விவசாயி
தஞ்சாவூர் கூலி விவசாயி

ஒரு கிளைநதியிலிருந்து தலைவாய்க்கால் நீரைப் பிரித்து தான் செல்லும் வழித்தடங்களில் பல குளங்களை நிரப்பிய பின் வடிவாய்க்கால்கள் மூலம் மீண்டும் வேறோர் பகுதியில் நதியோடு கலக்கிறது. நெல் சாகுபடிக்கென பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டாக்கப்பட்ட இந்த உட்கட்டமைப்பை உயிருடன் வைக்க அவற்றை ஒவ்வொரு ஆண்டும் முறையாக தூர்வாருவதைத் தவிர புதிதாக ஏதும் செய்யத் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் அத்தியாவசியமான இந்தக் கடமையைத் தான் அரசு கடந்த பத்தாண்டுகளில் முற்றாகப் புறக்கணித்து விட்டு அந்த மண்ணுக்கும், அதன் தன்மைக்கும் முற்றிலும் விரோதமான பயிர்களை ”மாற்று” என விவசாயிகளின் தலையில் கட்டியுள்ளது.

”மாற்றுப்பயிர்களை முயற்சித்துப் பார்ப்பதில் தஞ்சை விவசாயிகள் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள்?”

”அது மாற்றுப் பயிர்கள் அல்ல; ஏமாற்றுப் பயிர்கள்” என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை செயல்பாட்டாளரான நெல் ஜெயராமன்.

“அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?”

“அரசாங்கம் பாம் மரத்தை மாற்றுப் பயிரா வளர்க்கச் சொல்லுது. பாம் மரம் நட அம்பது சதவீதம் வரை மானியமும் தருது. ஒரு ஏக்கரில் பாமாயில் நடவு செய்ய 40 ஆயிரம் வரை செலவாகும். இதுவும் மற்ற மரங்களைப் போல ஆண் மரம் பெண் மரம்னு இருக்கும். ஆண் மரமா போனா அதனால பலனில்லே. அப்படியே பெண் மரமா இருந்தாலும், இந்த மண்ணோட தன்மைக்கு நல்லா கொழு கொழுன்னு வளரும் – ஆனா, ரொம்பச் சின்னதா குலை தள்ளும். இது நம்ம மண்ணுக்கு ஏத்த மரமில்லை அல்லவா? அப்படி ரொம்ப கொஞ்சமா கிடைக்கிற பாம் விதைகளை நீங்க ஒரு மணி நேரத்துக்குள்ளே பிழிஞ்சிடனும். நேரம் போகப் போக பிழி திறன் குறைந்து கொண்டே போகும். விவசாயிகள் கிட்டே பாமாயில் மரங்களை நடவு செய்ய கேன்வாஸ் செய்யிற அரசாங்கம், பாமாயில் ஆலைகளை இங்கே சுற்று வட்டாரத்திலே ஏற்படுத்தவே இல்லை.. அதனாலே பாம் மரங்களை நட்ட விவசாயிகள் இப்போ உள்ளதும் போச்சுங்கிற நிலைக்கு வந்திட்டாங்க”

”முட்டாள்தனமான திட்டமா இருக்கே?”

“இதுக்கே அசந்துட்டா எப்படி? முள்ளில்லா மூங்கிலோட கதைய கேளுங்க. முள் இல்லாத மூங்கில்னு ஒன்னை செயற்கையா உருவாக்கி அதைப் பயிரிடச் சொல்லி அதிகாரிகள் கேட்டுக்கிட்டாங்க. அதுக்கு 75 சதம் மானியம்னு அறிவிக்கவும் செஞ்சாங்க. அதை நம்பி எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னோட 12 ஏக்கர் நிலத்துல நடவு செய்தார். நட்ட கொஞ்ச நாளிலேயே குபுகுபுன்னு மூங்கில் வளர்ந்து மொத்த நிலத்தையும் போர்த்திக்கிடுச்சி. ஆள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு நல்ல அடர்த்தி. ஆனா, அப்படி வளர்ந்தது முள் இருக்கிற மூங்கிலாவும் போச்சிது. விவசாயத்துறை அதிகாரிகள்கிட்டே போயி கேட்டா, ஆய்வு செய்து கண்டு பிடிச்சதுலே ஏதோ பால்ட் ஆயிடுச்சின்னு கைய விரிச்சிட்டாங்க. இப்ப அந்த நிலத்தை திரும்ப பக்குவப்படுத்தி விவசாயம் செய்ய கிட்டத்தட்ட பதினைஞ்சி லட்சம் தேவைப்படுது. கடந்த மூணு வருசத்துக்கும் மேலயா அவருக்கு அந்த நிலத்தாலே பயனும் இல்லாம, மூங்கிலும் காலை வாரி விட்ட நிலையில, பதினைஞ்சி லட்சத்துக்கு எங்கே போவாரு சொல்லுங்க?”

methan-project-300x166
விவசாயிகளை அவர்களது பாரம்பரிய நிலம்சார்ந்த உழவுத் தொழிலில் இருந்து தூக்கியெறிவது, எதிர்காலத்தில் இயற்கை எரிவாயுக்களை முதலாளிகளுக்கு ஒப்படைப்பது

”ஏன் இந்த மண்ணோட தன்மைக்கு ஏற்ற வேறு பயிர்களை அரசாங்கம் பரிந்துரைக்கலாமே?”

”சார், இது நெல்லோட மண்ணு. வேற ஏதாவது இருக்கலாம்.. ஆனா, இது வரைக்கும் அது பத்தி நமக்குத் தெரியல்லே. அப்படி வண்டல் மண்ணில் வெற்றியடைந்த பயிர்னு ஒன்னு இருக்கிறதா எனக்குத் தனிப்பட்ட முறைல நம்பிக்கையும் இல்லே. வேற சில சந்தர்ப்பங்கள்ல பட்டுப்புழு வளர்க்கச் சொன்னாங்க. ஆனா, வளர்ச்சியடைஞ்ச கூட்டுப்புழுக்களை சேலத்துக்கு எடுத்துட்டு போக வேண்டியிருப்பதாலே அதுவும் தோல்வி தான் அடைந்தது. இப்போ பல இடங்கள்லே நன்னீர் மீன் வளர்ப்பை பரிந்துரை செய்யறாங்க.. அது ஓரளவுக்கு லாபம் கொடுக்குது”

நன்னீர் மீன்கள் என்றாலும், அவையும் மிகப் பெரியளவுக்கு இரசாயன ஊட்டச்சத்துக்களை கொட்டியே வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்த பின் மீன்கள் வளர ஊசியும் போடப்படுகின்றன. ஏறத்தாழ பிராய்லர் கோழிகளுக்கு ஒப்பான ஒரு தொழில் எனக் கொள்ளலாம். எனினும், ஒரு ஏக்கர் அளவுக்கு குட்டைகள் அமைத்து நன்னீர் மீன் பண்ணை நடத்துகிறவர்கள், வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் வரை சம்பாதிக்க முடிகின்றது. சில ஆண்டுகள் கழித்து பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களின் விளைவாக நன்னீர் குட்டைகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றன. மேலும் ஓரிரு ஆண்டுகளிலேயே நன்னீர் குட்டைகள் மெல்ல மெல்ல அதிக லாபமீட்டும் இறால் குட்டைகளாக அவதாரமெடுக்கவும் செய்கின்றன. ஒரு ஏக்கரில் அமைக்கப்படும் இறால் குட்டைகள் சராசரியாக 7-8 லட்சம் வரை வருமானமாகத் தருகின்றது. ஆனால், இறால் குட்டைகள் அந்த மண்ணை களர் நிலமாக்குவதோடு அக்கம் பக்கத்தில் எவருமே விவசாயம் செய்ய முடியாதபடிக்கு நிலத்தடி நீரை முற்றாக மாசுபடுத்தியும் விடுகின்றது.

நிலத்தடி நீர் மாசுபடுவதன் எதிவினையை வேதாரண்யம் பகுதிகளில் காண முடிந்தது. பூக்கள், புகையிலை, மா, முந்திரி, சவுக்கு போன்ற பணப்பயிர் சாகுபடியும் முற்றாக குலைந்து போயுள்ளது. வேதாரண்யம் சுற்று வட்டாரங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 130 குளங்கள் தூர்ந்து போயுள்ளன. இவை தவிர பெரும்பாலான வடிகால்களும் தூர்ந்து அடைபட்டுப் போயிருக்கின்றன. வடிநிலப்பரப்பில் உள்ள அடப்பாறு, உப்பனாறு, தென்னடாறு போன்றவற்றின் நீரோட்டப் போக்குகள் இறால் பண்ணைகளால் சீர்குலைந்து போயிருக்கின்றன. விளைவாக வேதாரண்யம் சுற்று வட்டாரத்தில் பத்தடி ஆழத்திலேயே உப்புநீர் ஊற்றெடுக்கிறது. இதன் காரணமாக பணப்பயிர்களும் பொய்த்துப் போகத் துவங்கியுள்ளன. முன்னொரு காலத்தில் பணப்பயிர்களால் செழிப்புற்று விளங்கிய இந்தப் பகுதி தற்போது வறட்சியின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றது.

கல்லணைக்கு மேற்கே உள்ள கால்வாய் பாசனப் பகுதிகளிலும், கல்லணையிலிருந்து மன்னார்குடி, திருவையாறு, திருகாட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் வரையிலான ஏரி மற்றும் கால்வாய்களின் மூலம் பாசனம் நடக்கும் பகுதிகளிலும், அதற்கும் கிழக்கே உள்ள வடிநிலப்பகுதிப் பாசனமும் மொத்தமாக சீர்குலைந்துள்ள நிலையில் அரசு வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவர கவனம் செலுத்து வருகின்றது.

ஏறத்தாழ அனைத்து ஊர்களையும் இணைக்கும் தார்ச்சாலைகள் புத்தம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சலவைக் கல்பதித்த பேருந்து நிலையங்களையும் காண முடிந்தது. இவை தவிற, மன்னார்குடியையும் நீடாமங்கலத்தையும் இணைக்கும் அகல இரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், நாகப்பட்டினத்தையும் திருத்துறைப்பூண்டியையும் இணைக்கும் அகல இரயில் பாதைக்கான வேலை ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது. நீடாகங்கலம், திருவாரூர், தஞ்சை ஆகிய வழித்தடம் நாகப்பட்டினம் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Water-Management
பாரம்பரிய நீர்மேலாண்மை

ஒருபுறம் விவசாயத்துக்கான உட்கட்டமைப்பை திட்டமிட்டு அழித்தொழிப்பது, விவசாயிகளை பாரம்பரிய விவசாயத்திலிருந்து விரட்டியடிப்பது, மாற்று விவசாயம் என்கிற பெயரில் மொத்தமாக வேறு தொழில்களை நோக்கி நெட்டித் தள்ளுவது என்பது ஒரு போக்கு. இதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையிலான விவசாய விரோத அணுகுமுறையும், சமூகத்தின் தற்சார்பை அடியறுக்கும் அரசின் நடைமுறையும் துணை புரிகின்றது.

இன்னொரு புறம் உட்கட்டமைப்பு என்கிற பெயரில் விவசாயத்துடன் தொடர்பில்லாத திட்டங்களில் பணத்தைக் கொட்டுவது, டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இரயில் தடங்களின் மூலமும் சாலை வழியாகவும் இணைப்பது என்பது இன்னொரு போக்கு. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு நேரடியான பேருந்து இணைப்பு இல்லாத ஊர்களில் இருந்து கூட தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொழிலாளிகளின் இடப்பெயர்வுக்கு இந்த ‘உட்கட்டமைப்பு’ வசதி ’உதவி’ புரிந்துள்ளது உண்மை தான் என்றாலும், புதிதாக ஏற்படுத்தப்படும் மற்றும் சீர்திருத்தபடும் பழைய போக்குவரத்து வழித்தடங்கள் அனைத்தும் நாகைத் துறைமுகத்தை அச்சாக கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேற்சொன்ன இந்த இரண்டு போக்குகளும் டெல்டா மாவட்டங்களின் பூமிக்கடியே புதைந்து கிடக்கும் இயற்கை எரிவாயுக்களான மீத்தேன், பெட்ரோல் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை தனியார் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கும் திட்டத்தை நோக்கியே செல்கின்றன.

அதாவது, விவசாயிகளை அவர்களது பாரம்பரிய நிலம்சார்ந்த உழவுத் தொழிலில் இருந்து தூக்கியெறிவது, எதிர்காலத்தில் இயற்கை எரிவாயுக்களை முதலாளிகளுக்கு ஒப்படைப்பது, அதற்குத் தோதான உட்கட்டமைப்புகளை இப்போதிருந்தே ஏற்படுத்தி வைப்பது என்பதே அரசின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இது இவ்வாறிருக்க, தன்னார்வக் குழுக்களும் நம்மாழ்வார் வகைப்பட்ட இயற்கை ஆர்வலர்களும் இன்னொரு பக்கத்திலிருந்து இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகள் குறித்து அதிகமும் பரப்புரை செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விவசாயமே கழுத்தறுபட்ட கோழியைப் போல் துடித்துக் கொண்டிருக்கும் போது பாரம்பரிய விவசாய முறைகள் மட்டும் விவசாயிகளைக் காக்குமா?

– தொடரும்

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?

0
Toilet in school

மாநகராட்சி பள்ளிக்கு பெற்றோர் ஒருவரின் கடிதம் !

 

                                                                                 நாள் : 09/12/2016

அனுப்புநர் :

இலக்கியா,
xxxx பள்ளி,
சென்னை

பெறுநர் :

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்கள்,
xxxx பள்ளி,
சென்னை

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

ணக்கம். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் சுய உறுதிமொழி படிவம் ஒன்றை தந்து, மாணவர்களும், பெற்றோர்களும் வீட்டிலும், பொது இடங்களிலும் உள்ள சமுதாய கழிவறையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கையெழுத்திட சொல்லி உறுதிமொழி கேட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நடத்திவரும் மாநகராட்சி பள்ளிகளில் சென்னையில் 10 மண்டலத்தில் 57 பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசாணை எண் : 270ன் படி , 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிப்பறை, கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் இருக்கவேண்டும்

ஆனால், 57 பள்ளிகளில் பல பள்ளிகளில் சிறுநீர் கழிப்பறைகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லாமல், மிக மிக குறைந்த அளவே உள்ளன. அதே போல தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும்  ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மேல்நிலை பள்ளியில், 1500 மாணவர்கள் படிக்கின்றனர். சிறுநீர் கழிப்பறை ஒன்று கூட இல்லை.  மலக்கழிப்பறை 8 மட்டுமே உள்ளன.  துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே.

Corporation_form 750இது தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை திரட்டி போராடியதன் விளைவாக, மாநகரட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து, பள்ளி வாரியாக அறிக்கையை தயார் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாணையின்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (எண் : W.P.11666/2014) தொடுத்தது.  நீதிமன்றமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவு போட்டது. மாநகரட்சியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் பல தவணைகளை கேட்டு, பள்ளிகளில் ஆமை வேகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் உள்ள  மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே இந்த கதி என்றால், பொது இடங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி பற்றி சொல்லவே தேவையில்லை. ஒன்றரை கோடி பேர் வாழும் சென்னையில் பல பொது இடங்களில் கழிப்பறை வசதியே இல்லை. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால், சென்னை மாநகரட்சி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துவிட்டு இப்படி கையெழுத்து கேட்பது தான் நேர்மையானது என கருதுகிறோம். இந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு சமூக சூழ்நிலை நிலவுவதால் கையெழுத்து இட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த கடிதத்தை மாநகராட்சிக்கும் அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
பெற்றோர்.

மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

1

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து! ஆர்ப்பாட்டம்!

இடம் : வள்ளுவர் கோட்டம்  
நாள் : 22.12.2016                                                                                         நேரம் : காலை 11.30 மணி

prpc-dec-22-demo-banner-fb2

ன்பார்ந்த நண்பர்களே!

நவம்பர் 23 ஆம் தேதியன்று கேரளா – கர்நாடக – தமிழக எல்லைகளின் முச்சந்திப்பில் உள்ள நிலாம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு மத்தியக் குழு உறுப்பினர் குப்பு தேவராஜ் (60), அஜிதா (45) என்ற இரண்டு மாவோயிஸ்டு தோழர்களை, “தண்டர் போல்ட்” என்ற கேரள போலீசின் கமாண்டோ படை சுட்டுக் கொலை செய்திருக்கிறது. கொல்லப்பட்ட இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் அஜிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். நோய்வாய்ப்பட்ட நிலையில், நிராயுதபாணிகளாக இருந்த அவ்விருவரும கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிக்கும் வகையிலான காயங்கள் உடல் முழுதும் உள்ளதாக உடலைப் பார்வையிட்ட மனித உரிமை அமைப்பினர் கூறுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் சுட்டதாகவும், பதிலுக்கு தாங்கள் சுட்டதில் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் போலீசு கூறும் பொய்க்கதையை மார்க்சிஸ்டு முதல்வர் பின்னாரயி விஜயன் வழிமொழிந்திருக்கிறார். இதனை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ கட்சியே நிராகரித்திருக்கிறது, மார்க்சிஸ்டு அரசு நரேந்திர மோடியின் பாதையைப் பின்பற்றுவதாக விமரிசித்திருக்கிறது.

ஒரு மாதத்துக்கு முன்னர், அக்டோபர் 24 ஆம் தேதியன்று, ஆந்திரா ஒரிசா எல்லைப்புறத்தில் மல்கான்கிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்டுகள் 32 பேரை ஆந்திர ஒரிசா போலீசு படையினர் சுட்டுக் கொன்று விட்டு மோதலில் கொல்லப்பட்டதாக கதையளந்தனர். மோதல் நடைபெற்றதாக போலீசால் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி சுமார் 300 அடி சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த எந்தவொரு தடயமும் இல்லை என்பதை மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் கூறின.

மாவோயிஸ்டுகளுக்கு உணவு எடுத்து சென்றவர்கள் மூலம், அவர்களுடைய உணவில் நஞ்சு கலந்து, நஞ்சுண்டு மயங்கியபின் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று மாவோயிஸ்டு கட்சியின் ஊடகத் தொடர்பாளர் ஷியாம் குற்றம் சாட்டியிருந்தார். மாவோயிஸ்டுகளுடன் பழங்குடியினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, பலரைக் காணவும் இல்லை. இந்தப் போலி மோதல் கொலையை கண்ணால் கண்ட சாட்சியான ஒரு பழங்குடிப் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

அக் 31 ஆம் தேதியன்று இசுலாமிய மாணவர் இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று போலீசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக் கைதிகளாக போபால் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த 8 பேர், போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.. அடுத்த சில நாட்களில் அவர்களது வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்தது என்றும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில்தான் இந்த போலி மோதல் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் அவர்களது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருக்கிறார். நிராயுதபாணிகளாக அவர்கள் நிற்பதும், பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதும் வீடியோ காட்சிகளாகவே வெளிவந்திருப்பதைக் காட்டி சர்வதேச பொதுமன்னிப்பு சபை அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது. “அவர்களைச் சுட்டுக் கொன்றது நல்லதுதான். இவர்களுக்கு சோறு போடும் செலவு அரசாங்கத்துக்கு மிச்சம்” என்று ஆணவமாக அந்தக் கொலையை நியாயப்படுத்தியிருக்கிறார் அம்மாநிலத்தின் பாஜக முதல்வர் சவுகான்.

இம்மூன்றும் போலி மோதல் கொலைகள்தான் என்பதை ஊடகங்களும் உண்மை அறியும் குழுக்களும் ஐயத்துக்கிடமின்றி நிறுவியிருக்கின்றன. “போலி மோதல் கொலை” என்ற குற்றச்சாட்டு எழுமாயின் உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவேண்டும் என்றும், முகாந்திரம் இருக்குமாயின் சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. “மாவோயிஸ்டு கட்சியில் ஒருவர் இருப்பதாலேயே அவரைக் கைது செய்யமுடியாது” என கேரள உயர்நீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. “தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே மற்றவர்களது உயிரை போலீசார் பறிக்க முடியும்” என்பதுதான் சட்டத்தின் நிலை.

இருப்பினும் சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகிய அனைத்தையும் போலீசார் மீறுகிறார்கள் என்பது மட்டுமல்ல, இவை சட்ட விரோதக் கொலைகள் என்று அப்பட்டமாகத் தெரிந்தும் அவற்றை பாஜக முதல்வர் மட்டுமின்றி மார்க்சிஸ்டு முதல்வரும் நியாயப்படுத்துகிறார். தங்களுடைய தீர்ப்புகள் மீறப்படுவது கண் முன்னே தெரிந்தபோதும், நீதிமன்றங்கள் கண்ணை மூடிக் கொள்கின்றன. தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல ஊடகங்கள் இந்த சட்டவிரோதக் கொலைகளை ஆதரிக்கின்றன. மொத்தத்தில் துப்பாக்கியின் ஆட்சி நேரடியாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது. மத்திய இந்தியாவின் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி விட்டு, அங்கு புதைந்திருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதற்காக, மாவோயிஸ்டு ஒழிப்பை ஒரு முகாந்திரமாகவும் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால்தான், துப்பாக்கி ஏந்தியிருக்கும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை மட்டுமல்ல, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும் மாவோயிஸ்டு முத்திரை குத்தி ஒடுக்குகிறது மோடி அரசு.

இத்தகைய கொலைகளை போலீசு படைகள் மட்டும் செய்யவில்லை. பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்து மதவெறி அமைப்புகளும் செய்கின்றன. அக்லக் என்ற முஸ்லிம் முதியவர் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலைக்குற்றவாளி நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன், அவனுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்து, லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்குகிறார் பாஜக வின் மத்திய அமைச்சர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய மூன்று பேரையும் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் ஒரே மாதிரியானவை என்கிற அளவுக்கு புலனாய்வு முடிவுகள் வந்த பின்னரும் இதுவரை கொலையாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

கார்ப்பரேட் கொள்ளைக்கும், இந்து மதவெறிக்கும் அடிபணிய மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் துப்பாக்கித் தோட்டாவை எதிர்கொண்டாக வேண்டும் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது நாடு. ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே நின்று நிலவுவதாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. கொல்லப்படுவதற்கு முன்னால் அல்லது சிறையில் தள்ளப்படுவதற்கு முன்னால் நாம் விழித்துக் கொள்ளவேண்டும். இங்கே ஜனநாயகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வதுதான், நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான முதல் படி. கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளுக்காகவும், இசுலாமிய இளைஞர்களுக்காகவும், கல்புர்கி முதலானோருக்காகவும் நாம் எழுப்பும் போராட்டக் குரல், அவர்களை நமக்கு உயிருடன் திருப்பித் தரப்போவதில்லை. ஆனால் நாம் எழுப்புகின்ற அந்தப் போராட்டக் குரல்தான், மக்களுக்காகப் போராடும் ஜனநாயகவாதிகளையும், மக்களின் வாழ்வுரிமைகளையும் மரணத்திலிருந்து காப்பாற்றும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்தலைமை:
திரு.சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்

கண்டன உரைகள்:

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை                      

தோழர்.தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்

பேராசிரியர் சிவக்குமார்

தோழர். சி.ராஜீ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

வழக்கறிஞர் கு.பாரதி
பொறுப்பாளர்,ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்

தோழர் வெங்கடேசன்,
மாநில பொருளாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

வழக்கறிஞர் பாவேந்தன்,
தமிழக மக்கள் முன்னணி

தோழர்.A.S.குமார்
மாநிலக் குழு உறுப்பினர்,
சி.பி.ஐ (மா.லெ) விடுதலை

தோழர்.மா.சி.சுதேஷ் குமார்,
மாநில இணைச்செயலர்,
புதியஜனநாயகத்-தொழிலாளர்முன்னணி

திரு.இரா. சங்கரசுப்பு,
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் பார்வேந்தன்,
மாநிலசெயலாளர், வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகரமாணவர்-இளைஞர் முன்னணி

அனைவரும் வருக!

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒருங்கிணைப்பு:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC),
சென்னை.
தொடர்புக்கு : 90946 66320

மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.

சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !

0

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நாட்டையே நிலைகுலையச் செய்துள்ள மோடி அரசு, இந்த சந்தடி சாக்கில், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கப் போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்கும் பார்ப்பன நரித்தனத்துடன் இந்தச் சூழலில் அமுல்படுத்த இருக்கிறது.

சேலம் உருக்காலையை விழுங்குவதற்கான பெரும் போட்டியில் இருக்கும் ஜிண்டால் (Jintal Steel) ஸ்டீல் நிறுவனம் சேலம் உருக்காலையை பெறப்போகும் நிறுவனம் என ஏறத்தாழ முடிவாகிவிட்டது. ஏற்கனவே, சேலத்தில் உள்ள கஞ்சமலையின் வடக்குப்பகுதியில் 638 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க ஜிண்டால் சவுத்வெஸ்ட் (JSW) நிறுவனத்துக்கு உரிமை அளித்துவிட்டது தமிழக அரசு. திருவண்ணாமலையிலும் 35 மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டிக்கொள்ள ஜிண்டாலுக்கு உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் வட தமிழகத்தின் முதன்மையான இரு மாவட்டங்களின் மக்களின் வாழ்வாதரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் பெருமிதம் சேலம் உருக்காலை!

salem-steel-plant
சேலம் உருக்காலை

சேலம் உருக்காலை 1970 ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய அரசின் மகா ரத்தினங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எனப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். நமது நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல், நமது ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவையான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ரூ.136 கோடி முதலீட்டில் 32,000 டன் உற்பத்தி திறனுடன் துவங்கப்பட்ட இந்த மகாரத்தினத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 8,000 கோடி ரூபாயாகும். உண்மையான இதன் மதிப்பு இந்த உத்தேச மதிப்பைவிட பல மடங்குகள் அதிகமாகும். இன்றைய இதன் உற்பத்தி திறன் 6 லட்சம் டன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில் 12 முன்னணி நிறுவனங்களில் சேலம்  உருக்காலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலையில் 2,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 5,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

உலக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் சேலம் உருக்காலையின் பங்கு:

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் இரண்டாவது அதிகமாக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது. 2007-08 ஆண்டில் உற்பத்தி 20 லட்சம் டன். இன்று சில ஆண்டுகளாக 33 லட்சம் டன். இது உலக உற்பத்தியில் 7%. உள்நாட்டு சந்தை 17 லட்சம் டன் (Steelworld Oct 2014). இந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் பல வகைகள் உள்ளன. இதில் சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது. குறிப்பாக, விண்வெளி, அணு உலை, நாணயங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு இது முக்கியத்துவமுடையதாக உள்ளது.

உலக அளவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாடு தனிநபருக்கு 5 கிகி. ஆனால் இந்தியாவில் 2 கிகி ஆக உள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகள் தற்போதைய நிலையில் இருந்து ஆண்டுக்கு 8-9% அளவுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டை உயர்த்தக் கோரிவருகின்றனர்.

Jintal-3
சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது

அதாவது, ஸ்மார்ட் சிட்டிகள், துருப்பிடிக்காத இரயில் பெட்டிகள், பேருந்து-இரயில் நிலையங்களில் கூரைகள், கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள் போன்ற பல வடிவங்களில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்துவதை உயர்த்த அரசு வகுத்துள்ள பல திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கோரிவருகின்றனர். அதனால், உலக அளவில் இந்திய சந்தை என்பது பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டதாக உள்ளது. இந்த உள்கட்டமைப்பு ‘வளர்ச்சி’த் திட்டங்கள் நாட்டில் 10% பேர் மட்டும் பயனடையும் வகையில் இருந்தாலும், இதனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SAIL-க்கு (குறிப்பாக, சேலம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுக்கு) நல்ல எதிர்காலமும் வளர்ச்சிக்கான அடிப்படையும் உள்ளது. ஆனால், அரசோ எதிர்திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த எதிர்காலத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கிறது.

சீன இரும்பை தடுக்கவும் கள்ளச் சந்தையை ஒழிக்கவும் வக்கற்ற மோடி அரசு!

அண்மை காலமாக பொத்துறை இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. சீன இரும்பு இறக்குமதியும் கள்ளச்சந்தையும் இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும் சொந்த நாட்டு தேவை, ஏற்கனவே செய்துவரும் ஏற்றுமதி போக 5 கோடி டன் இரும்பை உபரியாக வைத்துள்ளது. அதனால், மலிவான விலையில் சீன இரும்புப் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சீனாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க இறக்குமதி வரியை 7.5%லிருந்து 15%ஆக உயர்த்து போன்ற பல கோரிக்கைகளை வைத்துள்ளன இந்தியாவின் இரும்புப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள். சீன எதிர்ப்புப் பேசியே ஆட்சியைத் தக்கவைத்துவரும் மோடி அரசோ, இதனை செய்வதற்கு துப்பில்லை.

பொதுத்துறை சேர்ந்த உருக்காலைகள் நட்டத்தில் இயங்குவதற்கு மற்றொரு காரணம் கள்ளச்சந்தை வியாபாரம். இந்திய தொழில்முறை ஒழுங்கு ஆணையத்தின் (Competition Commission Of India) விதிகளின் படி ஒரு டன் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பொருட்களின் விலை ரூ.90,000க்கு குறைவாக விற்கக்கூடாது. ஆனால், கள்ளச்சந்தையில் ரூ.70,000-க்கு கூட விற்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் தரமான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஒரு டன்னுக்கு 1.35 லட்சத்திலிருந்து 1.65 லட்சம் ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனம் என்பதால் அதனால் விதிகளின்படி நேர்மையாகத்தான் விற்பனையைச் செய்ய முடியும். ஆனால், டன்னுக்கு இருபதாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து பலரும் சேலம் உருக்காலையிடம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. முக்கியமாக இதனால் ஒட்டுமொத்த இரும்பு உற்பத்தித் துறைக்கே நெருக்கடி இருந்தாலும் பொதுத்துறைகள் தான் வேகமாக நட்டமடைகின்றன. இது, தனியார்மயமாக்கத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இதனால், மோடி அரசு கள்ளச் சந்தையையும் தடுக்கவில்லை அல்லது மோடி அரசுக்கு கள்ளச் சந்தையை தடுக்க வக்கில்லை.

நட்டம்: தனியார்மயமாக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி!

Jintal-1சேலம் உருக்காலை மிக லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, 2003 முதல் 2010 வரை சராசரியாக ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் லாபமீட்டி வந்தது.

2010-ம் ஆண்டில் புதிய எஃகு உற்பத்தி கூடம் அமைக்க ரூ.2,000 கோடி கடன் வாங்கியது. அதற்கு வட்டி மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.650 கோடி ரூபாய் கட்டியுள்ளது. மல்லையா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் வட்டியைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றி வரும் இந்த காலத்தில், பொதுத்துறை நிறுவமனாக இருப்பதால்தான் இந்த வட்டித்தொகையைக் கட்டியுள்ளது.

இப்படி சிறப்பாக இலாப மீட்டிய இவ்வாலையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்ட பின்னர், பல சதிச்செயல்கள் மூலம் நட்டக் கணக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலத்தில் இயங்கி வந்த உருக்காலையின் மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. இதனால் விற்பனைத் துறை முற்றிலும் முடங்கிப்போனது. இதன் வாடிக்கையாளர் நிறுவனங்களின் எண்ணிக்கை 70-லிருந்து படிப்படியாக குறைந்து வெறும் 9 நிறுவனங்கள் என்ற அளவிற்கு சரிந்தது. ஆக, நூறு கோடி லாபமீட்டிய ஆலை ரூ.450 கோடி நட்டத்தில் இயங்குகிறது.

விற்பனை மையத்தை கொல்கத்தாவுக்கு மாற்றியதால் மார்கெட்டிங் செய்ய முடியாமல் போகும் என்பது அரசுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தலைமையகத்தை வேறு தூரமான மாநிலங்களுக்கு மாற்றி நிர்வாகத்தை முடக்கி சீர்குலைப்பதை ஆளுகின்ற பா.ஜ.க அரசு ஒரு புதிய தந்திரமாக கடைபிடிக்கிறது.

இதற்கு மற்றொரு உதாரணம், சென்னை கிண்டியில் இயங்கி வரும் சிப்பெட் (மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனத்தின் தலைமையகத்தை உப்புக்குபெறாத காரணத்தைச் சொல்லி டெல்லிக்கு மாற்ற மோடி அரசு முயற்சித்தது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்புக்குபின் அம்முடிவைக் கைவிட்டது. ஆகையால், தனியார்மயமாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காகவே நட்டமாக்கும் சதியை திட்டமிட்டு செய்துவருகிறது, மோடி அரசு.

நட்டமடையும் நிறுவனமா, சேலம் உருக்காலை?

slideநட்டமடைந்து வருவதால்தான் தனியார்மயமாக்குவதாக மோடி அரசு சொல்வது அப்பட்டமான பொய். சேலம் உருக்காலை கடந்த ஐந்து வருடங்களாகத்தான் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், 1997-ம் ஆண்டு முதலே ஆலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்து வந்துள்ளது. இந்த நட்டமும் கூட அரசு திட்டமிட்டே உருவாக்கியதுதான்.

சேலம் உருக்காலையில் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும் கூட ஐந்து வருடமாக தொடர்ந்து  நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறது. சேலம் உருக்காலையின் மொத்த நட்டம் ரூ.348 கோடிகளாகும். அது செயில் நிறுவனத்தின் மொத்தக்கடனான ரூ.4,137 கோடியில் வெறும் 8% மட்டுமே. ஆக, இந்த நட்டம் என்பது ஒரு வார்த்தை ஜாலமே தவிர தொழில்முறையில் ஈடு செய்ய இயலாத வீழ்ச்சியோ முடக்கமோ அல்ல.

நமது நாட்டின் நாணய அச்சடிப்புக்கு தேவையான ஸ்டீல் தகடுகளை சேலம் உருக்காலைதான் உற்பத்தி செய்து அளித்து வந்தது. காங்கிரசின் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நாணயத்துக்கு 10,000 டன் அளவு இங்கேயே உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கூட இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள ராயல் மிண்ட் எனும் நிறுவனத்திடம் ஸ்டீல் தகடுகளுக்கு ஆர்டர் அளித்தது. பின்னாளில் அந்த நிறுவனம் காலதாமதமாக சப்ளை செய்து அரசுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, நமது நாட்டில் உற்பத்தியாகும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலை அரசின் துறைகளுக்கு கூட பயன்படுத்தாமல் நமது நாட்டின் தேவையில் 55%ஐ சீனாவிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது அரசு.

இப்படிப்பட்ட பல கழுத்தறுப்புகளுக்கு மத்தியிலும் 2010-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் லாபத்தில் இயங்கியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“நட்டத்தில்” இயங்கும் கம்பெனியை வாங்க கார்ப்பரேட்டுகள் துடிப்பது ஏன்?

நட்டமாகும் கம்பெனியை வாங்க ஏன் ஜிண்டால் துடியாய் துடிக்கிறது? கார்ப்பரேட் முதலாளிகள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை. இதற்கான காரணம் ஒன்றும் புரிந்து கொள்ள கடினமானதல்ல. இந்த நட்டக்கணக்கு என்பதே தனியார்மயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி என்பதால், சொல்லப்படும் இந்தக் காரணங்களை நீக்கும் போது அபரிமிதமான இலாபத்தை கார்ப்பரேட் கம்பெனிகளால் குவிக்க முடியும். மேலும், ஒரு பொதுத்துறை நிறுவனம் என்கின்ற முறையில் மேற்கொண்டுவரும் குறைந்தபட்ச தொழிலாளர் பாதுகாப்பு – சமூகப் பங்களிப்பு எதையும் இந்தக் கார்ப்பரேட் கம்பெனிகள் செய்யப் போவதில்லை என்பதால் மேலும் பல கோடி இலாபமீட்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளை கவர்ந்திழுப்பது சேலம் உருக்காலையின் சொத்துக்கள். நிலம் மட்டும் சுமார் 24,000 ஏக்கர். இவையன்றி உள்கட்டமைப்பு, இயந்திரம், நிர்வாகம் போன்றவை. கஞ்சமலையின் தாதுவளம். கஞ்சமலையின் இரும்புத்தாது 30% முதல் 45% இரும்புச்செறிவு மிக்கது.

2010-ம் ஆண்டில் தான் ரூ.2,000 கோடி கடன் வாங்கப்பட்டு ஆலையில் தாதுவிலிருந்து இரும்பு பிரித்தெடுக்கும் புதிய (Steel Smelting Shop) யூனிட்டும், ஸ்டீலை கடினப்படுத்துதல் மற்றும் வேதியல்முறை தரப்படுத்தும் யூனிட்டும் (Annealing & Pikling Plant) அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு கிடைக்கும்.

சாஜன் ஜிண்டால்
சாஜன் ஜிண்டால்

இதுமட்டுமல்ல, சேலம் உருக்காலையை இந்தக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது சொந்தப் பணத்தைக் கொண்டா வாங்கப் போகிறார்கள்? பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கித்தான் வாங்கப் போகிறார்கள். கிட்டத்தட்ட பூஜ்ஜிய முதலீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மக்களின் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு போய்விடும்.

இந்தியாவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் தரமான பொருட்களுக்குப் பேர் போன சேலம் உருக்காலையை வாங்குவதன் மூலம் ஜிண்டால் இரும்பு உற்பத்தியில் தனிப்பெரும் ஆதிக்கம் புரியும் நிறுவமனாக மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்திய அரசு செய்ய இருக்கும் ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்கு தேவையான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலை சப்ளை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் நிர்மாணத்தில் ஆதிக்கம் செய்ய முடியும் என்பதுதான் முக்கியக் காரணம்.

அனைத்தும் கார்ப்பரேட்மயம்!

தனது இரத்தம், நரம்பு, மூளை என அனைத்திலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைத்தனத்தில் ஊறிப்போயுள்ள மோடியும் அவரது அரசும் நட்டத்தில் இயங்குவதால்தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கிறோம் எனக்கூறும் வாதமே மோசடியானது, அயோக்கியத்தனமானது.

  1. மத்திய அரசு நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் விற்பனை செய்வதில்லை. லாபகரமாக இயங்கும் நிறுவனங்களின் பங்குகளையும்தான் விற்கிறது அல்லது விற்க தயாராய் இருக்கிறது. லாபத்தில் இயங்கும் நெய்வேலி என்.எல்.சி.-யின் பத்து சதவீத பங்குகளை மத்திய அரசு விற்றது அதனடிப்படையில்தான். மிக லாபகரமாக இயங்கும் எல்.ஐ.சி.-யின் பங்குகளைக்கூட விற்பனை செய்யப்போவதாக மோடி அரசு பேசி வருகிறது.
  2. அரசு தொழில்களை நடத்தக்கூடாது / எந்தவித சேவையையும் (கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்கல் போன்றவை) வழங்கக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணையும் அதுவே.
  3. அரசால் நடத்த முடியாத அல்லது நட்டமடையும் நிறுவனங்களை தனியாருக்கு விற்ற பின்பு மட்டும் லாபகரமாக இயங்குகின்றன. இது எப்படி சாத்தியமாகியது? திறன் மிகுந்த ஆட்சியாளர்களாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு தொழில் நிறுவனத்தைக்கூட நடத்தக் கூட திறமையற்றவர்கள், வக்கற்றவர்கள் என்பது அவர்கள் செயலின் மூலம் அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை.
  4. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது தனியார்மயமாக்குவதன் வாயிலாக திரட்டப்படுவதாக கூறப்படும் நிதியின் அளவு சொற்பமே.
  5. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்று திரட்டப்படும் சில நூறு கோடிகள் நிதியின் மூலம் அப்படி என்ன வசதிகளை நாட்டில் மேம்படுத்திவிட்டதாக அரசு கூறுகிறது? எடுத்துக்காட்டாக என்.எல்.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து தமிழக அரசே அந்த பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்றதன் மூலமாக கிடைத்த 500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு என்ன செய்தது?
  6. “அரசுக்கு கடுமையான நிதிச்சுமை, நிதிப்பற்றாக்குறை. எனவே, பொதுத்துறைகளை விற்று நிதி திரட்டுகிறோம்” என சொல்கின்றது அரசு. ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் வசூலிக்காமல் விட்டுவைத்துள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பல துறைகளில் வரிச்சலுகை அளித்துள்ளது; விதித்த வரிப் பணத்தையும் தள்ளுபடி செய்தும் வந்துள்ளது. இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 35 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளின் கடனை வாராக்கடனாக விட்டுவைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் போது, எப்படி கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் இவ்வாறு செய்ய முடிகிறது? ஆகையால், நிதிச்சுமையால் பொதுத்துறைகளை விற்பதாக சொல்வது அப்பட்டமான பொய்.
  7. சில எம்.எல்.ஏ., எம்.பி.களின் ஊழல் கணக்கே பல ஆயிரம் கோடிகள் என்று அம்பலமாகி வருகின்றன. கருப்புப் பணம் என்ற வகையில் குவிந்துள்ள தொகை பல லட்சம் கோடிகளாக உள்ளன. அவற்றுடன் சேலம் உருக்காலையின் நட்டத் தொகை என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் அது ஒரு பொருட்டே அல்ல. அதனால், பொதுத்துறை நட்டத்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நெருக்கடி என்பது மோசடி.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து நட்டமாகி நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, அதனை ஈடுகட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, அந்த வருவாயைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து… இதுதான் அரசின் கொள்கையும் செயல்பாடும். இதற்காக சொல்லப்படும் காரணங்கள் தான் நட்டம், நிதி தட்டுப்பாடு போன்றவை.

அழிக்கப்பட இருக்கும் கஞ்சமலை ! சூறையாடப்பட இருக்கும் இயற்கைவளம் ! நாசமாகப் போகிறது சேலம் மக்களின் வாழ்க்கை !

சேலம் கஞ்சமலை
சேலம் கஞ்சமலை

விலைமதிக்க முடியாத இரும்புத்தாது இருக்கும் கஞ்சமலை என்பது இன்று நேற்றல்ல, வரலாற்றில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களால் புகழ்பெற்றது. பல சித்தர்களால் பாடப்பெற்றது. இயற்கை மூலிகைகளில் பிறப்பிடமாகத் திகழ்வது. திருவண்ணாமலையில் கவுத்தி வேடியப்பன் மலையைப் போல அது சிறப்பு மிக்கது. அம்மலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரமானது. ஆனால், இந்த மலையடிவாரத்தைத்தான் ஜிண்டால் ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து ஒரு லட்சம் டன் இரும்புத்தாதை வெட்டியெடுக்கப் போகிறது. சுமார் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த மலை முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் சேலம்-வீரபாண்டி-தாரமங்களம்-இளம்பிள்ளை ஆகிய சிறு நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள், மக்களின் சுற்றுச்சூழல் அழிக்கப்படும். பருவ காற்றின் பலன்கள் குறைந்துவிடும். இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட்டு அதன் கழிவுகள் பல லட்சம் டன் அளவில் சுற்றியுள்ள கிராமங்களில் கொட்டப்படும். சுற்றுச்சூழல் நாசமாக்கப்பட்டு மக்கள் வாழ வகையற்றதாக்கப்படும். பாலைவனமாக்கப்படும்.

இது நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவின் ஒரு பகுதி. நாட்டின் 10% பேர் மட்டுமே உள்ள மேட்டுக்குடி பணக்காரர்கள் வாழ்வதற்காக ஒட்டுமொத்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இது கொடுமை! இது அநீதி! தாதுமணல் கொள்ளையால் கடலோர மாவட்ட மக்கள் தங்களது வாழ்வை இழந்துள்ளனர்; ஆற்று மணல் கொள்ளையால் பல ஆறுகள் வறண்டுபோய் குடிநீருக்காக தமிழகமே தவிக்கிறது; கிரானைட் கொள்ளையால் மதுரை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் இயற்கை சூழலே அழிக்கப்பட்டு காட்டு யானைகள் நகரங்களைத் தாக்கி வருகின்றன. ஆகையால், இயற்கையை அழிக்கும் இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களை நாம் விரட்டியடிக்காமல் நமது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.

அடிமைத்தனமா, சுதந்திரமா?

ஒரு பொதுத்துறை நிறுவனம்; ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தில் நிற்கும் நிறுவனம்; மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் உயர்ந்த நிறுவனம்; தமிழகத்தின் பெருமிதத்தின் அடையாளம் போன்ற காரணங்களுக்காக சேலம் உருக்காலை தனியார்மயமாவதை எதிர்ப்பதைத் தாண்டி மற்றொரு காரணமும் இருக்கிறது.

பொதுத்துறை தனியாரமயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்த்தல், ஸ்மார்ட் சிட்டி என்ற பல்வேறு பெயர்களில் இந்த நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாடுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ‘விலை’ கொடுத்து வாங்கியவன் என்ற வகையில் கார்ப்பரேட் முதலாளிகள், இந்தச் சொத்துகள் மீது ஆளும் உரிமையைப் பெற்றுவிடுகிறார்கள். அதனால், பஸ்தர் காடுகளின் பழங்குடிகளும், சென்னையில் வாழும் சேரி வாழ் மக்களும், கவுத்தி வேடியப்பன் மலையைச் சார்ந்து வாழும் மக்களும், தாதுவளம் மிக்க சேலத்து மக்களும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்களில் உள்ள மக்களும், மீத்தேன் திட்டம் கொண்டுவரப்படும் தஞ்சை டெல்டாவைச் சேர்ந்த மக்களும் மண்ணின் மக்கள் என்ற உரிமையை இழந்துவிடுகிறார்கள்.

வெள்ளையர்களிடம் வாங்கிய கடனுக்காக சில பாளையங்களில் வரிவசூலித்துக் கொள்ளும் உரிமையை வெள்ளையருக்கு விற்றான், ஆர்க்காடு நவாப். அதன் மூலம் கலெக்டர்களை வைத்து ஆளும் உரிமையாகவே அதனை வரித்துக் கொண்டானர் வெள்ளையர்கள். மண்ணின் மைந்தர்களாக கோடான கோடி உழைக்கும் மக்களை அடிமைகள் என்றனர். அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையே அடிமையாக்கினர். அது கடந்த கால  வரலாறு மட்டுமல்ல. தனியார்மயம் என்ற போர்வையில் நடப்பதும் அதுதான்.

அன்று வெள்ளையர்கள் இருந்த இடத்தில் இன்று கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகள்; அன்று, நவாப் இருந்த இடத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ்.-மோடி கும்பல்; அன்றும் இன்றும் உழைக்கும் மக்கள் அதே இடத்தில் தான் இருக்கிறோம். நமது பிரச்சனை நமது வாழ்வாதாரம் நிலைக்குமா நிலைக்காதா என்பது மட்டுமல்ல, நமது உரிமை நிலைக்குமா நிலைக்காதா என்பதும்தான்.

மீண்டும் வெள்ளையர்கள் ஆட்சியைப் போன்ற ஒரு அடிமை நிலைக்கு நாம் தள்ளப்படாமல் தடுக்க வேண்டுமெனில், விடுதலை உணர்வுடன் போராட வேண்டும். அதன் மூலம்தான் சேலம் உருக்காலை தனியார்மயமாவதைத் தடுக்க முடியும்; கஞ்ச மலையை மீட்கமுடியும். அதன் மூலம்தான் நமது உரிமைகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பையும் அதனை தலைமைதாங்கி வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்.-மோடி கும்பலையும் இந்த சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியும். களமிறங்க ஒன்றிணைவோம்!

சேலம் உருக்காலையை விழுங்க வருகிற ஜிண்டாலை விரட்டியடிப்போம் !
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு – போராடு !

8
PHOTOS ARPATTAM

புதுச்சேரியின் பரபரப்பான சாலை அது. இந்திராகாந்தி சிக்னல். நான்கு திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சிக்னல் விழும் வரை காத்திருந்து தான் செல்ல வேண்டும்.

அந்த பரபரப்பான இடத்தில் 16.12.2016 வெள்ளியன்று சிகப்பு சட்டை அணிந்து கொண்டு துண்டு நோட்டிசை கொடுத்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர். சிக்னல் விழுந்ததும் பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடியவர்கள் அனைவரும் அனேகமாக, வங்கி வாசலில் கால்கடுக்க நிற்க செல்ல வேண்டும். இல்லையெனில் எடுத்த பணத்தை செலவிட அவசரமாக செல்ல வேண்டும்.

தற்பொழுது முக்கியமான வேலை என்று வேறு எதுவும் இருக்காது. எதிர்பாரா விதமாக நிகழும் மரணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் வீட்டில் வைக்கப் போவதில்லை. மோடியின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நின்று போயுள்ளன. அன்றாட தேவைகளுக்கே பணம் எடுக்க முடியாத சூழ்நிலையில் இதில் திருமணத்தை எப்படி நடத்துவதென்று புலம்பித் தவிக்கிறார்கள் மக்கள்.

தரைக்கடை முதல் சிறுவணிகம் வரை, விவசாயம் முதல் கட்டுமானத்தொழில்கள் வரை முடங்கிப் போயுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து பட்டினியால் பரிதவித்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையே இழந்துள்ளனர். ஆனாலும் ஒரு அமைதி நிலவுகிறது. இந்த அமைதி மோடி நடவடிக்கையின் மீது வைத்திருக்கும் மூட நம்பிக்கையா? இல்லை, காரியவாதமா?

புதுச்சேரி பிரச்சாரம் (8)சமீபத்தில் நெய்வேலி சென்றிருந்த நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. எதேச்சையாக மோடியின் இந்த நடவடிக்கையை பற்றி பேசும் போது கூறினார், நேற்று நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க சென்றேன். என்னோடு சுமார் முன்னூறு பேராவது வரிசையில் நின்றிருப்பார்கள். நாங்கள் நின்றிருக்கும் பொழுது வங்கியின் மேலாளர் வெளியில் வந்தார். மாணிக்கம் என்ற காண்ட்ராக்டரை அழைத்து சென்று உள்ளே பேசிக்கொண்டிருந்தார்.

சிறுது நேரம் கழித்து ட்ரங்க் பெட்டியுடன் இருவர் வந்தனர். அவர் நேராக பணப்பெட்டக அறைக்குள் சென்று விட்டனர். அவர்களை தொடர்ந்து பாண்டுரங்கன் என்ற காண்ட்ராக்டருடைய (மெடிக்கல் ஷாப் உரிமையாளர்) மகன் நேராக உள்ளே சென்றார். எங்கள் கண்ணெதிரே பணத்தை மாற்றுகிறார்கள். ஆனால், வரிசையில் நிற்கும் எங்களுக்கோ நாலாயிரம் மட்டும் தருகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். நான் மக்களிடம் வாருங்கள் இந்த அநியாயத்தை கேட்கலாம் என்று கூறினேன். ஆனால் எந்த ரியாக்சனும் இல்லாமல் “எருமை மாட்டின் மேல் மழைபெய்தது போல்” இருக்கிறார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

தஞ்சையில் ஒரு வங்கியில் பணம் எடுக்க சென்ற வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய அருகில் அவர் மனைவி மட்டும் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தார். அதனை வேடிக்கை பார்த்தவாறே மக்கள் அனைவரும் வரிசையில் நின்று பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவிற்கு இரக்கமற்ற ஒரு கொடிய சமூகத்தில் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எழாமலில்லை.

1

2மோடியின் நடவடிக்கை இந்தியாவையே வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. ஒரு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவு சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய அழிவை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மோடியை போற்றிய வாய்கள் அனைத்தும் இன்று தூற்றும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பணத்தேவையை அரசால் சமாளிக்க முடியாது. 2017 ஏப்ரல் இறுதி வரை ஆகும் என்று வங்கி ஊழியர் சம்மேளன சங்கம் கூறுகிறது.

இந்த உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்கென்றே பல்வேறு அடுக்கடுக்கான பொய்யான திட்டங்களை புதிது புதிதாக அறிவிக்கிறார் மோடி. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தை விற்பனை செய்ய பல்வேறு மோசடியான குலுக்கல் திட்டங்களை அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்துகிறார் மோடி.

கத்தரிக்காய் விளைந்தால் கடைத்தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும். அதுபோல கத்தை கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவை அன்றாடம் செய்தி தாள்களில் வந்து சந்தி சிரிக்கிறது. இதனை மாற்றி தருவதற்கு பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். தமிழகத்தில் 40%, வட மாநிலங்களில் 20 முதல் 70% கமிசன் என்றும் மாநிலத்திற்கு மாநிலம் கமிசனில் மட்டும் வேறுபாடு உள்ளது. இதில் பல தனியார் வங்கிகள் கருப்பு பண முதலைகளின் புரோக்கர்களாகவே மாறியுள்ளது.

நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 14,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 56 % பொதுத்துறை வாங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 9,000 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ள நிலையில் சராசரியாக ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் 86 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வெறும் 900 வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ள தனியார் வங்கிகளுக்கு 6,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு கிளைக்கும் 6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை விட எட்டு மடங்கு அதிகம் என பாமக ராமதாசு குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும் தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு தான் பெருமளவில் உள்ளது. தனியார் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் சுமார் 4,000 கோடி கருப்பு பண முதலைகளுக்கு வழங்கபாட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதுச்சேரியிலும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வங்கிகளில் நடைபெற்ற அதன் அன்றாட பணப்பரிவர்த்தனையில் தற்போது 25% கூட நடைபெறவில்லை. அனைத்து வங்கிகளும் முடங்கியுள்ளது.

இந்த பின்னணியில் இருந்து, அந்த செஞ்சட்டை அணிந்த தோழர்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் பழனிசாமிக்கு மதியம் ஒரு மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவரிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் செய்யும் பிரச்சாரத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதற்கு, நாங்கள் பிரசுரம் போட்டு விட்டோம். அதனை விநியோகிக்காமல் பாதியில் நிறுத்துவது முறையல்ல என்று கூறியுள்ளார். இந்த அதிர்ச்சியான பதிலை கேட்டு பணிவாக பேசிய காவல்துறை அதிகாரி, வடமாநிலங்களில் பெரும் கலவரமாக உள்ளது. தற்பொழுது நிலைமை இங்கு மட்டும் தான் சீராக உள்ளது. வங்கி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கோரி எங்களிடம் வங்கி மேலாளர்கள் மனுக்கள் அளிக்கிறார்கள். இந்த சூழலில் உங்களுடையை பிரச்சாரம் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது எனவே தயவு செய்து நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதனை மறுத்து, நாங்கள் அச்சடித்துள்ள பிரசுரத்தை கொடுத்தே தீருவோம் என்று உறுதியாக கூறியதும், உங்களை கைது செய்வேன் என்று மிரட்டியுள்ளார் போலிசு. முடிந்தால் கைது செய்யுங்கள் என்று தோழர்கள் பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.

கருப்பு பண ஒழிப்பு ஒரு மோசடி என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வரும் சூழலில் மக்கள் அமைதி காப்பது அவசியமற்றது. தற்பொழுது அமைதியாக இருப்பதென்பது நாளை நம் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்படும் என்பதற்காக உதாரணம் தான் காவல்துறையின் மிரட்டல்.

நாம் ஒவ்வொருவரும் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. பாசிஸ்டுகளுக்கு எதிரான, சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய தருணம் இது.

ஒரு கவிஞர் கூறுகிறார். அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை கொன்றார்கள் .நான் போராடவில்லை. ஏனென்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை. சோஷலிஸ்ட்களை கொன்றார்கள். அப்பொழுதும் நான் போராடவில்லை. ஏனென்றால் நான் சோஷலிஸ்ட் இல்லை. பிறகு எனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்றார்கள். அப்பொழுதும் போராடவில்லை. இப்பொழுது என்னை கொள்ள துடிக்கிறார்கள். ஆனால், எனக்காக போராட எவரும் இல்லை.

எனவே போராடுங்கள்! போராட்டத்தை தவிர வேறு குறுக்கு வழி இல்லை.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உங்களை அறைகூவி அழைக்கின்றது! அணி திரளுவோம்!!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்கள்.

கோத்தகிரி : கருப்புப் பண ஒழிப்பு மோடியின் மோசடி! மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.

டந்த மாதம் 08-11-2016 அன்று 8.00மணிக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று மோடியரசு அறிவித்தது. அதனால் சாமளிய மக்கள் வேலையில்லாமல் தொழில் செய்யாமல் கையிலிருந்த சிறிய தொகையை கூட வங்கியில் போட்டு திரும்ப பெறவதற்கு ஏ.டி.எம்-வாசலிலும், வங்கி வாசலிலும் பிச்சைக்காரர்களைப் போல் நிற்க வைத்தது. இந்த நிலை மேலும் மேலும் சமவெளி மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். அதன் பாதிப்பை மக்களிடம் பிரசுரமாக கொண்டு செல்ல கோத்தகிரி தாலுக்கா பகுதியில் 7-இடங்களில் தெருமுனை பிரச்சாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் கோத்தகிரி பகுதியில் மக்கள் அதிகாரம் போஸ்டர் ஒட்டினாலே, உடனே இரவு வேலை (போஸ்டர்களை கிழிப்பது) செய்யும் போலீசு, அனுமதி மறுத்தது.

நீங்கள் அனுமதி மறுத்தால் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்ற போது ஒரு இடத்தில் மட்டும் அனுமதியளித்தனர். இதையொட்டி 11-12-2016 ஞாயிறு காலை 11.30 மணியளவில் மார்க்கெட் பகுதியில் மக்களிடம் பிரசுரம் வினியோகித்தும், பறையடித்தும் பிரச்சாரத்தை தொடங்கினோம். பிரச்சாரத்தை தொடங்கி வைத்து தோழர்.முரளி அவர்கள் தோழர் ரவியை அழைத்தார்.

PHOTOS  ARPATTAMஅதன் பிறகு “ நாடு முன்னேறுது மோடி முழங்குறாரு” என்ற பாடல் ஒலி பரப்பப்பட்டது. காவல் ஆய்வாளர் பாட்டு போட வேண்டாம் நீங்கள் தான் நன்றாக பேசுகிறீர்களே பேசுங்கள் என்றார். அதை பொருட்படுத்தாமல் பாடலும் தோழர் மருதையன் பேசிய கருப்பு பணம் பற்றிய உரையை ஒலி பரப்பப்பட்டது. பின்னர் தோழர் ரவி அவர்கள் தலைமை தாங்கி மக்கள் அதிகாரத்தின் தோற்றம் எடுத்துக் கொண்ட வேலைகள் என்று மக்கள் அதிகாரத்தை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் ஒருங்கிணைப்பாளர் தோழர்.ஆனந்த்ராஜ் மோடி அரசின் டிஜிட்டெல் பாசிசத்தை விளக்கி பேசினார். ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழகத்தில் 3 இலட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர். ரூபாய் 500 மற்றும் 1000 கூலிக்கு வேலை செய்தாலும் கூட காசோலையாக கொடுக்கப்படுகிறது.

அதை வாங்க ஒரு நாள் வங்கியில் செலுத்துவதற்கு ஒரு நாள் பணமாக பெற ஒருநாள் என்று வேலைக்கு செல்லமுடிவது இல்லை. இதுவரை அப்பாவி ஏழை மக்கள் நூற்றுக்கு மேல் இறந்துள்ளார்கள். கருப்பு பண ஒழிப்பு என்பது எல்லாம் சாமானிய மக்கள் பணத்தை கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்குவதற்காகவே, வங்கி பரிவர்த்தனைக்கு மாற சொல்கிறார்கள். மோடி அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது ஏழை மக்கள் பணத்தை வழிப்பறி செய்யும் திட்டம் தான். எனவே ஏழை எளிய மக்களை கார்ப்பரேட்டுக்கு காவல் கொடுக்க துடிக்கும் மோடி அரசை தூக்கி எரிந்து மக்கள் அதிகாரத்தை நிறுத்துவதே நமது எதிர்கால கடமையாக உள்ளது என்று உரையாற்றினார். மக்கள் பல பேர் 30 நிமிடத்திற்கு மேல் பிரச்சாரத்தை கவனித்துச் சென்றார்கள். இறுதியாக தோழர் வெங்கடேஷ் நன்றியுரையாற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம். கோத்தகிரி.

தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் : மறக்க முடியுமா ?

0

தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் !

தோழிகள்

___________

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ‘மக்கள் முதல்வர்’ ஆதரவு !

Vituthalai

நேற்று : மன்மோகன் ஜி ! விவசாயிகள பாதிக்கிற இந்த திட்டத்த நான் எதிர்க்கிறேன்.!

இன்று : அது வேற வாயி !

___________

மூன்றாம் சுதந்திரப் போராட்டம் !

கொள்ளைக்காரி

3வது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகிறார் ஜெயலலிதா -நாஞ்சில் சம்பத்.

___________

ஜெ…ஜெ…

நீதிக்கு மரியாதை

66-கோடி சொத்துக் குவிப்பு வழக்கு ‘நீதி’ வென்றது !

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!

2
பத்து இலட்ச ரூபாய் கமிசனாகக் கொடுத்தால், ஐம்பது இலட்ச ரூபாயை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர் கூடமாக மாறிய உ.பி.- மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவில்.

பெண்கள் ஐயப்பன் கோயிலில் நுழைவதை பகவான் அனுமதிக்க மாட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழைவதையும் அவர் அனுமதிக்க மாட்டார். இருப்பினும் பணத்தைப் பொருத்தவரை பகவான் பேதம் பார்ப்பதில்லை. கருப்போ வெள்ளையோ எந்தப் பணமானாலும் அது தனது உண்டியலுக்குள் நுழைவதை அவர் தடுப்பதில்லை.

up-madura-krishnan-temple-2
பத்து இலட்ச ரூபாய் கமிசனாகக் கொடுத்தால், ஐம்பது இலட்ச ரூபாயை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர் கூடமாக மாறிய உ.பி.- மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவில்.

தீண்டாமையை மிகவும் கடுமையாக கடைப்பிடித்த கேரளத்து நம்பூதிரிகள் கூட, பெண்கள் விஷயத்தில் தீண்டாமையைக் பார்த்ததில்லை என்பார்கள். அது போலத்தான் இதுவும்.

ஐநூறும் ஆயிரமும் செல்லாது என்று மோடி அறிவித்த மறுகணமே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது நமக்குத் தெரியும். கூட்டம் அலை மோதிய வேறு இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று கூகுள். இன்னொன்று கோயில்.

கருப்பை வெள்ளையாக்குவது எப்படி என்று கூகுளில் தேடிய தேசபக்தர்கள் குறித்த புள்ளி விவரம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்தவர்கள் குஜராத்திகள். மோடி மூன்று முறை முதல்வராக இருந்து வளர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்டியதாக சொல்கிறார்களே, அதே குஜராத் மாநிலம்தான்.

பத்து இலட்ச ரூபாய் கமிசனாகக் கொடுத்தால், ஐம்பது இலட்ச ரூபாயை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர் கூடமாக மாறிய உ.பி.- மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவில்.
மதுராவில் கிருஷ்ணன் கோவிலில் கருப்புப் பண பரிமாற்றம்

இரண்டாவது இடம், மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோயில். பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால், ஐம்பது லட்சத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக அந்தக் கோயிலுடைய பார்ப்பனப் பூசாரி பேரம் பேசுவதை, ஏ.பி.பி. தொலைக்காட்சி ரகசியக் காமெராவில் படம் பிடித்து ஒளிபரப்பியது. இந்த கிருஷ்ண பரமாத்மா வேலை இந்தியா முழுவதும் நடந்திருக்கும். படம் பிடிக்கத்தான் ஆளில்லை.

கர்நாடகாவிலுள்ள எண்ணற்ற மடங்களில் “இன்று ஒரு கோடி கொடுத்தால் கொஞ்சநாள் கழித்து அது 50 லட்ச ரூபாயாகத் திருப்பித் தரப்படும்” என்று கூவி அழைக்காத குறையாக வியாபாரம் நடக்கிறதாம். கேரளாவில் சோட்டாணிக்கரை பகவதி கோயிலில், ஐநூறு – ஆயிரம் நோட்டுகளை வாங்கிக்கொண்டு அம்மனின் “திரு” உருவம் பொறித்த தங்க டாலர்கள் 8-ஆம் தேதி இரவு ஜரூராக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. விசயம் ஊர் சிரித்து விட்டதால், கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறதாம் வருமான வரித்துறை.

இது மட்டுமல்ல, ஐநூறு, ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பிரபல கோயில்களின் உண்டியல்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன.

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு அம்மனின் “திரு” உருவம் பதித்த தங்க டாலர்களை விற்று கருப்புப் பண பேர்வழிகளை இரட்சித்த சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்.

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் உண்டியிலில் வழக்கமாக மாதம் 80 இலட்ச ரூபாய் வசூலாகுமாம். நவ. 8-க்குப் பின் பதினைந்தே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய்வசூலாகியிருக்கிறது. ஒரிஜினல் திருப்பதி கோயிலில் வழக்கமாக அன்றாடம் 3 கோடி ரூபாய்வசூலாகும் இடத்தில் 6 கோடி ரூபாய் வசூலாகிறதாம். ஷிர்டி சாயிபாபா கோயில், மும்பை சித்தி விநாயகர் கோயில், குஜராத் சோம்நாத் கோயில் உள்ளிட்ட எல்லா பிரபல கோயில்களிலும் பண மழை பொழிகிறது.

”பக்தர்கள் செல்லாத ஐநூறு, ஆயிரத்தை உண்டியலில் போடுவதை கண்காணிக்குமாறு அரசு கூறவில்லை. மேலும் உண்டியலில் பணம் போடுவது என்பது ஒருவருடைய தனிப்பட்ட மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் அது ரகசியமானது. அதை நாம் தடுக்க முடியாது’’ என்று கூறியிருக்கிறார் ஒரு வருமானவரித்துறை அதிகாரி.

”உண்டியலில் போடப்பட்ட பணம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அதனை வருமான வரித்துறை கண்காணிக்காது. அவற்றுக்கு சட்டரீதியாகவே விலக்களிக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா.

1946 மற்றும் 1978-இல் 500, 1000, 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், திருப்பதி உண்டியலுக்கு விலக்களிக்கப்பட்டது என்பது இன்னொரு தகவல்.

”கோயிலுக்கு பணமாக மட்டுமல்ல, காசோலையாக கொடுத்தாலும் சரி, தங்கமாக கொடுத்தாலும் சரி, அவை எதுவுமே வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் வராது’’ என்று சட்டத்தின் நிலையைத் தெளிவு படுத்துகிறார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு.

மொத்தத்தில் பகவானின் உண்டியலில் விழுந்த மறுகணமே கருப்பு வெள்ளையாகி விடுகிறது. 500, 1000 நோட்டுகள், அவை எத்தனை கோடியாக இருந்தாலும், ”கோயில் உண்டியலில் விழுந்தவை’’ என்று சொல்லி விட்டால், மறு பேச்சு பேசாமல் வங்கிகள் அவற்றை மாற்றித் தந்து விட வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலை.

சென்னை-தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவில்
நவம்பர் 8-க்குப் பின் பதினைந்தே நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கு உண்டியல் வசூல் அள்ளிய சென்னை-தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவில்.

“பணம் கடவுளுக்குத்தானே போகிறது” என்று பக்தர்கள் எண்ணலாம். பாவக் காசை கடவுள் வாங்கலாமா? சாராயக்கடையில் கூட ”செல்லாத’’ ரூபாய் நோட்டு கோயில் உண்டியலுக்குள் ”செல்லும்’’ என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா? செல்லாத நோட்டை குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக கோயில் உண்டியலில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே, இது கடவுளுக்கே அசிங்கமில்லையா?

”பில் போட்டுத்தான் வியாபாரம் செய்ய வேண்டும்’’ என்று வணிகர்களுக்கு சொல்கிறது அரசு. அர்ச்சகருடைய தட்டில் காசு போடக்கூடாது, வேண்டுமானால் கார்டு ஸ்வைப் செய்யலாம் என்று விதி செய்தால் என்ன நட்டம்? உண்டியலில் பணம் போடுபவன் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்றோ, வாங்கின பணத்துக்கு கோயில் நிர்வாகம் ரசீது கொடுக்க வேண்டும் என்றோ சட்டமியற்றினால் யாருக்கு நட்டம்?

8-ஆம் தேதியன்று இரவு ஒரு சாராயக்கடையிலோ, நட்சத்திர விடுதியிலோ, விபச்சார விடுதியிலோ செலவழித்திருக்கக் கூடிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, பரலோகத்தில் இடம்பிடிக்க முயற்சிக்கிறான் ஒரு பணக்காரன். கடவுளுக்கு கொடுக்கப்படும் இந்த லஞ்சத்தை மதமும் அரசும் ஏன் அனுமதிக்க வேண்டும்? அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத ஏழை, செல்லாத நோட்டை மாற்றுவதற்கு வரிசையில் நிற்கும்போது, எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு செல்லாத நோட்டு?

இந்தக் கேள்விகள் எதற்கும் பக்தர்கள் பதில் சொல்ல முடியாது. பாரதிய ஜனதாக்காரர்கள் பதில் சொல்வார்கள். “கோயிலையும் மடத்தையும் மட்டும் ஏன் சொல்கிறாய்? சர்ச்சையும் மசூதியையும் ஏன் சொல்லவில்லை?” என்ற கேள்விதான், நாம் எழுப்பும் பிரச்சினைக்கு அவர்களுடைய பதிலாக இருக்கும். நாம் திருப்பதி உண்டியலை மட்டும் சொல்லவில்லை, வேளாங்கன்னி உண்டியலையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். கிறித்தவ, இசுலாமிய மத நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறோம்.

நவம்பர் 8-ஆம் தேதிக்குப் பின்னர்தான் கருப்புப் பணம் இங்கே பாய்கிறது என்று நினைக்க வேண்டாம். ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிலவறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் – இதற்கொரு ஆதாரம்.

ரவிசங்கர், அமிருதானந்தமாயி, ஜக்கி, ராம்தேவ், பங்காரு அடிகள், நித்தியானந்தா போன்ற கார்ப்பரேட் சாமியார்கள், கர்நாடக மாநிலம் மற்றும் வட இந்தியாவின் சாதி வாரி மடங்கள், காஞ்சி-சிருங்கேரி-பூரி போன்ற பார்ப்பன மடங்கள், மற்றும் தனியார் அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் போன்றோரின் சொத்து மதிப்பு பல இலட்சம் கோடி ரூபாய்கள்.

எந்த தொழிலதிபர், வணிகர், அரசியல்வாதி, அல்லது அதிகாரியின் கருப்புப் பணம் இங்கே புழங்குகிறது என்பதை வருமானவரித்துறை ஆராயாது. அரசியல் சட்டப்பிரிவு 25, 26 -இன் படி கடவுள் மட்டுமல்ல, உண்டியலும், அதில் செலுத்தப்படும் காணிக்கையும் கூட மத நம்பிக்கையின் ஒரு பகுதிதான்.

ஹிந்து நம்பிக்கை குறித்த விவகாரங்களில் மோடி அரசு தலையிடுமா என்ன?

– தொரட்டி
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !

0

ரு மோடி வித்தைக்காரனைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தின் மனநிலை என்ன? “”பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவான்” என்ற நம்பிக்கை கொஞ்சம், ”விடமாட்டான்” என்ற அவநம்பிக்கை கொஞ்சம், ”கலைந்து போனால் ரத்தம் கக்கி செத்துவிடுவாய்” என்ற மிரட்டல் காரணமாக அச்சம் கொஞ்சம், அறிவு பூர்வமான சிந்தனை என்பது மட்டும் பூச்சியம் – இதுதான் அந்தக் கூட்டத்தின் மனநிலை. செல்லாத நோட்டு அறிவிப்பு விசயத்தில் நாட்டுமக்கள் ஏறத்தாழ இந்த மனநிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

black money surgical operation_cartoon
கோப்புப் படம்

நவம்பர் 8 முதல் இதுவரை 50 க்கும் மேற்பட்ட திடீர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எந்தவித முன்யோசனையும் இல்லாமலும், தான்தோன்றித்தனமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிவிப்புகளே போதுமானவை. இருப்பினும் ஒரு முட்டாளின் உளறலுக்குப் பொழிப்புரை எழுதி, அவனைக் கவிஞன் ஆக்கிய புலவர் பெருமக்களைப் போல, கிரிமினல்தனமும் முட்டாள்தனமும் சரிவிகிதத்தில் கலந்த மோடி அரசின் இந்த நடவடிக்கையைத் “திட்டமிட்ட காய்நகர்த்தல்” என்றும், கருப்புப் பண முதலைகளைத் திணறடிக்கும் நடவடிக்கை என்றும் கொண்டாடுகின்றனர் பா.ஜ.க.வின் ஊடக கூஜாக்கள்.

மோடியின் சார்பாகப் பேசுபவர்களின் வாத முறையைக் கவனித்துப் பாருங்கள். “மோடியின் 8-ஆம் தேதி அறிவிப்பு பற்றி எங்களுக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதும் உங்களுக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. ஆனால், அவர் ஒரு திட்டத்தோடு செயல்படுகிறார். நம்புங்கள். நல்ல காலம் வருகிறது” என்கிறார்கள் மோடியின் ஆதரவாளர்கள். மோடியின் திட்டம்தான் என்ன?

2.5 இலட்சத்துக்கு மேல் கணக்கில் காட்டாத பணம் இருந்தால், அதற்கு 200% அபராதம் விதிக்கப்படும் – இது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு வந்ததற்கு மறுநாள் வந்த அறிவிப்பு. “கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் வழக்கமாக கட்டவேண்டிய 30% க்கு மேல் 20% கட்டிவிட்டால் போதும், எப்படி சம்பாதித்த பணம் என்ற கேள்வியே கேட்க மாட்டோம்” என்பது தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம். அதாவது, “கருப்பு பணத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்று தேசவிரோத சக்திகளோடு டீல் பேசியிருக்கிறார் மோடி. அடுத்த சில நாட்களிலேயே, “ஜன் தன் திட்டத்தில் ஏழைகளின் பெயரில் பணம் போட்டால் உள்ளே தள்ளிவிடுவேன்” என்று உதார் விடுகிறார்.

puthiya-jananayagam-december-2016-bமோடியின் இந்த கேலிக்குரிய நாடகத்தை, மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. வாக்களித்தபடி வேலைவாய்ப்பையோ, தொழில் வளர்ச்சியையோ உருவாக்க முடியாமல் தோற்றுப்போன மோடி, கருப்புப் பணம் என்ற மாயமானின் பின்னால் மக்களை ஓடவிட்டிருக்கிறார். வேலைவாய்ப்பைக் குறைப்பதும், சிறு தொழில்களை அழிப்பதும், பண முதலைகளின் கையில் மென்மேலும் செல்வம் குவியுமாறு செய்வதும், ஏழைகளைப் பரம ஏழைகளாக்குவதும் எந்தக் கொள்கையோ – அதுதான் கருப்புப் பணத்தையும் உருவாக்குகிறது. அந்தக் கொள்கைதான் மோடியின் கொள்கை. சாதாரண மக்களைக் கழுத்தைப் பிடித்து வங்கிக்கும், பிளாஸ்டிக் அட்டைக்கும், கைபேசி வழியான பரிவர்த்தனைக்கும் தள்ளுவதன் மூலம், அவர்களுடைய பணத்தையும், தொழிலையும், எதிர்காலத்தையும் அம்பானி, அதானி முதலிய தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறார் மோடி.

இந்த உண்மை புரியாத காரணத்தினால், ஊமைக் குமுறலுடன் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் மக்கள். கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு

0

nmb-pk-msb-nagar-relife-work-219 (9)ப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி செயலாற்ற அரசு வருவதில்லை. மக்களே தங்கள் பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள். வர்தா புயல் நிவாரணப் பணிகளை முழுவீச்சில்செய்யாமல் செயலற்றுக் கிடக்கிறது அரசு. உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன. மதுரவாயல், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் குடிசை வீடுகள் மீது மரங்கள் சாய்ந்ததால் வீடுகள் நாசமானது. வீடுகளின் மீது கூரைகளும், சிமெண்ட் ஓடுகளும் பறந்து சென்றன. மரங்கள் சாய்ந்ததால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்து கிடக்கின்றது. கூவம் ஆற்றின் மறுகரையில் இருக்கும் நொளம்பூர் பகுதிக்கு செல்லும் தரைபாலத்தின் ஒரு பக்கத்தில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நிவாரணப்பணிக்கு அரசு வரவில்லை. காத்திருக்காமல் களத்தில் இறங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.  தோழர்கள் மேற்கண்ட பகுதிகளில் 13-ம் தேதி காலை முதல் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சில அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் புதுச்சேரியைச் சார்ந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் சாப்பாத்தி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், பிரட் போன்ற உணவுப் பொருட்களை எடுத்து வந்திருந்தனர். அவைகளும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

தொடர்புக்கு 94451 12675

சுரங்கத் தொழில் சூறையாடலை முறியடிப்போம் – வடலூர் கருத்தரங்கம்

0

சுரங்க தொழிலாளர்களின் இரண்டாவது  சர்வதேச மாநாடு – 2017

கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கு பலியிடப்படும்
நிலக்கரி  
உள்ளிட்ட சுரங்கத் தொழில்கள்
அணிதிரண்டு
போராடுவோம்! தடுத்து நிறுத்துவோம் !
வடலூர் கருத்தரங்கம்.

ந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கப் பணிகளில் அயலாக்கம் மற்றும் ஆட்குறைப்பு மட்டுமின்றி அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இத்துறையில் நிலக்கரி வர்த்தகம் மற்றும் முன்னுரிமை சார்ந்த பயன்பாட்டு நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பெருமளவில் சுரங்கத் தொழிலை கைப்பற்றி வருகின்றது.

கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் சுரங்கத் தொழிலில் பெருமளவில் நுழைந்திருப்பதோடு மாபெரும் கனிம வளமிக்க நிலப்பரப்புகள் அவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதன் விளைவாக நாட்டின் கனிம வளங்கள் முற்றிலுமாக சுரண்டப்படுவதோடு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். முதலாளிகளின் லாப வெறிக்காக தொழிலாளர்களின் உழைப்பு கடுமையாக சுரண்டப்படுகிறது.

conferenceசுரண்டலுக்கு  எதிராக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பு சார்பாக 11 .12 .2016   ஞாயிறு அன்று மாலை 4 .௦௦ மணிக்கு வடலூரில் பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் தோழர் பழனிசாமி அவர்கள்  தலைமை தாங்கி பேசுகையில், NLC  தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் துயர சம்பவங்களை விளக்கியும், முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டிய தொழிலாளிகள் அமைதியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் தொழிலாளிகளின் ஒற்றுமையின்மையே.  இந்த நிலையை முதலாளிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை எதிர்த்து முறியடிக்க பாட்டாளி வர்க்கமாக ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என கூறி நிறைவு செய்தார்.

அடுத்ததாக பேசிய SME ஆப்பரேட்டர் அசோசியேசன் NLC,  தோழர் சிவசண்முகநாதன் அவர்கள் பேசுகையில், சுரங்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஐந்தாயிரம் டன் வெட்டினோம். பிறகு 1990-களில் 23000 நிரந்தர தொழிலாளிகள் வேலை செய்த காலத்தில் 65  லட்சம் டன் உற்பத்தி செய்தோம். தற்போது மூன்று  சுரங்கம் உள்ளது. வெறும் 12000  தொழிலாளிகள் தான் வேலை செய்கிறோம். ஆனால் 300  லட்சம் டன் உற்பத்தி செய்கிறோம். அந்தளவிற்கு தொழிலாளிகள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

vadalur_conference1அவரை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் அவர்கள் பேசுகையில்,  1990   உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு தான் தனியார் முதலாளிகள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் சட்டப்பூர்வமாகவே நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஜனார்த்தனன் ரெட்டி என்றால் தமிழகத்தில் சேகர் ரெட்டி, வைகுண்டராஜன் போன்றவர்கள் கனிம வளங்களை சூறையாடுகிறார்கள். அதிகாரி முதல் நீதிபதி வரை இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.  இந்த தொழிலில் ஏகபோக லாபம் வருகிறது. அதனால் தான் கேள்விக்கிடமற்ற முறையில் கொள்ளையடிக்கின்றனர். இந்த அரசும் இதனை அனுமதிக்கிறது. இந்த கூட்டுக்கொள்ளைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் திரண்டெழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்ததாக தெலுங்கானாவில் , காண்டிராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் , சிங்கர் நிலக்கரி சுரங்கம் தோழர் வெங்கண்ணா அவர்கள் பேசுகையில், தெலுங்கானாவில் உள்ள சுரங்கங்களில் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  முதலாளிகள் சுகபோகமாக வாழ்கிறார்கள். காரணம், அங்கு சுரங்கங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது  என்பதை அம்பலப்படுத்தினார்.

அவரை தொடர்ந்து மஸ்தூர்சிங் சமிதியின் பொதுச் செயலர், தோழர் பச்சாஸ் சிங் அவர்கள் பேசுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மலைகள் அனைத்தும் தனியார் முதலாளிகளால் சூறையாடப்படுகிறது. முதலாளிகளின் இந்த வெறிக்கு அப்பாவி தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப்போல் நடத்தப்படுகின்றனர். அதிக நேரம் வேலை, சம்பளம் குறைவு. குடும்பமோ தெருவில் நிற்கக்கூடிய அவலநிலை தான் உள்ளது.  கடுமையாக உழைப்பது நாம். ஆனால், அதன் பலனை அனுபவிப்பது மாஃபியா கும்பல்.  இந்த கொள்ளை கும்பலுக்கு எதிராக  நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். மொழி வேறாக இருப்பினும் “தொழிலாளி” என்ற  பாட்டாளி வர்க்க உணர்வூட்டினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய IFTU  பொதுச் செயலாளர் தோழர் பிரதீப் அவர்கள், 2013 ல் நடந்த பெரு மாநாட்டில் இந்தியாவில் இருந்து IFTU தொழிற்சங்கம் மட்டும் தான் கலந்து கொண்டது. இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், கலந்து கொள்ள வேண்டும்.

vadalur_conference2உலகம் முழுவதும் 22  பில்லியன் தொழிலாளர்கள் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில பன்னாட்டு முதலாளிகளே இந்த சுரங்கங்களை நடத்துகின்றனர். இவர்களுடைய லாபவெறிக்கு பலியிடப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஏராளம். தொழிலாளர்கள் கொடும்சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் தான் எடுக்கிறார்கள்.

கடந்த இருப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுரங்க தொழிலாளர்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டங்கள் தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கம் எழுச்சியுற வேண்டும்.   அப்பொழுது தான் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற முடியும். அந்த வகையில்  சுரங்க தொழிலாளர்களின் இரண்டாவது  சர்வதேச மாநாடு -2017 பிப்ரவரி 2 முதல் 5 ம் தேதி வரை தெலுங்கானாவில் உள்ள  கோதாவரி காணியில் நடைபெற உள்ளது.  தொழிலாளர்கள்  பாட்டாளி வர்க்க உணர்வுடன் அணிதிரள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(தோழர். பிரதீப் ஆங்கில உரையை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர். விஜயகுமார்  மொழி பெயர்ப்புரையாற்றினார்.)

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் NLC உறுப்பினர் தோழர்.சங்கர் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது.

 – வினவு செய்தியாளர்.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2016 மின்னிதழ்

0

puthiya-jananayagam-december-2016

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1. ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!
    சுவிஸ் வங்கி ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.

  2. நாளை, ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும்!

  3. மோடி வித்தை: உங்கள் பணம் அம்பானி கையில்!
    கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காகப் பொதுமக்களின் கையிருப்பை, சேமிப்பை வங்கிகள் வழியே களவாடவும், அவர்களின் நுகர்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் செய்யப்பட்ட ஏற்பாடுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை

  4. தோற்றுப் போன மோடி அரசு மக்களைப் பழி தீர்க்கிறது!
    நான் பிரதமரானால் கள்ளப் பணம், கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என வாய்ச்சவடால் அடித்த மோடி ஆட்சியைப் பிடித்த பிறகு மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செல்லாக் காசாக்கி விட்டார்.

  5. மோடி வித்தை : மக்களின் சேமிப்பை உறிஞ்சவரும் பிளாஸ்டிக் “அட்டைகள்”
    பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.

  6. மோடி வித்தை: விவசாயிகளின் தலையில் இறங்கிய இரட்டை இடி!
    ஆடிப் பட்டத்தில் விளைந்த தானியங்களை விற்கவும் முடியாமல், தை பட்ட விதைப்பத் தொடங்குவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாமல் செயற்கையான நெருக்கடிக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

  7. மோடி வித்தை : சிலந்தி வலையில் சிக்கப் போகும் சிறு வணிகம் – சிறு தொழில்!
    சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.

  8. தோழர் சீ.கோட்டைக்கு சிவப்பஞ்சலி!

  9. மண்டியிட்டது யார்? கருப்புப் பணக் கும்பலா, சூரப்புலி மோடியா?
    வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்து விட்டதைக் காட்டுகிறது.

  10. ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்தி எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி!
    காஸ்ட்ரோவின் பங்களிப்புகள் என்ன, குறைகள் என்ன? கியூபாவை சோசலிச நாடு என்றோ, காஸ்ட்ரோவை கம்யூனிசப் புரட்சியாளர் என்றோ கூறவியலுமா? காஸ்ட்ரோ – சே குவேராவின் பாதையில் மற்ற நாடுகள் புரட்சி செய்ய இயலுமா? அரூபமான சோசலிச அறக்கோட்பாடு, பாட்டாளி வர்க்கத்தின் அரசியலுக்கு மாற்றாகுமா?

  11. கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கொள்ளை போகுது, நமது பணம்! – மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

தா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்

2

சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது – தா.பாண்டியன்

sasi-revised-post

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்

0
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பதில்லை - மோடி

MODI - Mugilan Cartoon

அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!

___________________

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !

1

ருப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு – இதன் மூலம் தீவிரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்பது போன்ற தம்பட்டங்களோடு துவங்கிய பண மதிப்பழிப்பு அறிவிப்பு தற்போது அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளது. உண்மையில் கருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் சிந்தனையிலே இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் பேசுவதிலிருந்தே வாக்குமூலங்களாக வெளிவரத் துவங்கி விட்டன.

bjp_tweet-400x223
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

எனில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்? அறிவிப்புக்கு முன்னதாகவே நிலங்களாக வாங்கிக் குவித்து தமது கருப்புப் பணத்தை பா.ஜ.க கும்பல் பதுக்கிக் கொண்டனர் என செய்திகள் வெளியாகின. பெரும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள பொருளாதார அறிவு கூடத் தேவையில்லை – வங்கிகளின் முன் நிற்கும் வரிசைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கருப்புப் பண முதலைகள் இந்த அறிவிப்பினால் பலனடைந்துள்ளனர் என்பது ஒரு பரிமாணம் – அதையும் தாண்டிய வேறு ஒரு உண்மையும் உள்ளது.

அது என்னவென்பதைப் பார்ப்பதற்கு முன், பணமதிப்பழிப்பு பற்றி துவக்கத்தில் சொல்லப்பட்டது என்ன, நடந்தது என்ன?

சுழற்சியில் இருக்கும் மொத்த ரொக்கத்தில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் வரை கருப்புப் பணம் என்றது நவம்பர் 8-ம் தேதி வெளியான மோடியின் அறிவிப்பிற்கு முந்தைய ரிசர்வ் வங்கியின் கணக்கீடு ஒன்று. கடந்த நவம்பர் 2-ம் தேதி ராஜ்யசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வா, மோடியின் அறிவிப்பு வெளியான சமயத்தில் புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி என்றார்.

நவம்பர் 28-ம் தேதி வரை (பதினெட்டு வங்கி வேலை நாட்களில்) மொத்தம் சுமார் 8.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் மக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் சுழற்சிக்கான நிதியாக (500, 1000, 100, 50, 20 மற்றும் 10 ரூபாய்த் தாள்கள் உள்ளிட்டு) சுமார் 4.06 லட்சம் கோடி ரூபாயை இருப்பில் வைத்திருக்கும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் 15.44 லட்சம் கோடியில் நவம்பர் 27-ம் தேதி வரை சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இதோடு அன்றாடப் புழக்கத்துக்கான நிதிக் கையிருப்பான 50 ஆயிரம் கோடி ரூபாய்களையும் சேர்த்தால் மொத்தம் 13 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் சேர்ந்துள்ளது – வெறும் 18 நாட்களில்!

பணம் செலுத்தப்பட்டு வரும் வீதத்தை கணக்கில் கொண்டால் டிசம்பர் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டு விடும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட 3 – 5 லட்சம் கோடி ரூபாய் எங்கே தான் போயிருக்கும்?

ரிசர்வ் வங்கி வழக்கமாக வெளியிடும் இருவார அறிக்கைகள் இதற்கான பதிலைச் சொல்கின்றன. மோடியின் அறிவிப்பு வெளியானது நவம்பர் 8-ம் தேதி. செப்டெம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் (13 வங்கி வேலை நாட்கள்) சுமார் 3.03 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.

Spike in Time Deposits In Banks

Time Deposits In Banks

மேலுள்ள இரண்டு படங்களை கவனியுங்கள். இதே காலப்பகுதியில் முந்தைய ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிக ரொக்கம் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பரஸ்பர நிதியத்தில் (mutual fund) செய்யப்படும் முதலீடும் வழக்கத்தை விட அதிகமாக (19,630 கோடி) இருந்துள்ளது.

இதிலிருந்து நாம் இரண்டு முடிவுகளுக்கு தான் வந்தாக வேண்டியுள்ளது :

முதலாவதாக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பணம் என்பது மிகக் குறைவானதாக ஒன்றாகவே இருக்க வேண்டும். கருப்புப் பணம் சட்டப்பூர்வமான ரியல் எஸ்டேட் முதலீடுகளாகவோ, பங்குகளாகவோ,  அந்நிய நேரடி முதலீடாகவோ இருக்க வேண்டும். மக்களின் கையில் புழங்கும் ரொக்கப் பணத்தில் கருப்புப் பணம் பெரியளவில் இல்லை.

இரண்டாவதாக, அரசு முன்னரே மதிப்பிட்ட 3-5 லட்சம் கோடி கருப்புப் பணம் புழக்கத்தில் இருந்தால், அது மோடியின் அறிவிப்பிற்கு முன்பாகவே வங்கிகளில் செலுத்தப்பட்டு வெளுப்பாகியுள்ளது. மோடியின் அறிவிப்பு அவரது அமைச்சரவை சகாக்களுக்குக் கூட தெரிவிக்காமல் இரகசியம் காக்கப்பட்டது என அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை எனில், கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மோடியே நேரடியாக தகவல் சொல்லி அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்றாகிறது.

ஒருகட்டத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக டுபாக்கூர் என்பது அம்பலமாகத் துவங்கியவுடன், இந்தியா நெடுக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நபர்களிடம் சில பல கோடிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நடவடிக்கைகளை பத்திரிகைகளில் படாடோபமாக அறிவித்து ”கருப்புப் பணம் குவியலாக இருக்கிறது” என்கிற கருத்தாக்கத்தை நிலைநாட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது அரசு. ஒருவேளை அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் அளவு, உள்நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பொருளாதாரத்தின் அளவு ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கடந்த ஒருசில வாரங்களில் பிடிபட்டிருக்கும் தொகை வெறும் கொசுறு தான்.

அடுத்து, பண மதிப்பழிப்பு அறிவிப்பின் போது சொல்லப்பட்ட மற்றொரு காரணம் கள்ளப்பணம். அதாவது புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடியில் 400 கோடி மதிப்பிலான கள்ளப்பணம் கலந்துள்ளதாகவும் மக்களால் எது போலி எது உண்மை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து கள்ளப்பணம் ஒழிந்து விடும் என்றும் சொல்லப்பட்டது. இந்த 400 கோடியையும் பாகிஸ்தானும், சீனாவும் அவர்களது சொந்தச் செலவில் அச்சிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதாகச் சொன்ன காவி கும்பல், மோடியின் அறிவிப்பை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் எனவும் பிரகடனம் செய்தனர்.

ஆனால், நவம்பர் 27-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்பட்ட 8.45 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 9.6 கோடி மதிப்பிலான கள்ளப்பணமே பிடிபட்டுள்ளது என அறிவித்துள்ளது அரசு. அதாவது வெறும் 0.001 சதவீதம். ஆக, கள்ளப்பணத்தை ஒழிக்கிறோம் என பீற்றிக் கொண்டதும் பச்சைப் பொய் என்பது தெளிவாகி விட்டது. எனில், தனது கோமாளித்தனமான அறிவிப்பின் மூலமும் அது தோற்றுவித்துள்ள சொல்லொணாத துயரத்தின் மூலமும், அந்த அறிவிப்பு விளைவித்துள்ள நூற்றுக்கணக்கான மரணங்களின் மூலமும் எதைச் சாதிக்க நினைக்கிறார் மோடி?

அதற்கான பதிலை மோடியும் அவரது சகாக்களுமே தற்போது தெளிவாக சொல்லத் துவங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சொன்ன கருப்புப் பண ஒழிப்புக் கதைகள் தற்போது வற்றியுள்ள நிலையில் தற்போது ரொக்கமில்லா மின்பரிவர்த்தனை குறித்தும் வருமான வரித் தளத்தை அகலப்படுத்துவது குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். வருமான வரித் தளம் அதிகரிப்பு என்பது அரசின் எந்த உதவியும் இன்றி சுயேச்சையாக இயங்கி வரும் தற்சார்பு பொருளாதாரத்தை அழித்து அதில் ஈடுபடும் எளிய மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி பிடுங்கும் அதே நேரம் பெருமுதலைகளுக்கு வரி விலக்கு அளிக்கும் நடவடிக்கை என்பது வினவின் முந்தைய கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது.

அச்சடித்த நோட்டுகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதற்கு பதில், மின்செலாவணியை பயன்படுத்துவது. அதாவது, நாம் வாங்கும் கடையில் பொருட்களுக்கு ஈடான தொகையை அச்சடித்த நாணயங்களாக கொடுப்பதற்கு பதில் மின்பரிவர்த்தனையாக கொடுப்பது இவையே ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது.

JIO Moneyஇந்த விதமான பரிவர்த்தனைக்கு முதலில் வர்த்தகர்கள் மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திடம் கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அது அவர்களது வங்கிக் கணக்குடனும், கைபேசியுடனும் இணைக்கப் பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களுக்கு டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, வங்கியின் இணைய சேவை அல்லது ஆண்ட்ராய்டு கைபேசி மூலம்  ரொக்கமில்லா மின் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வர்த்தகர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் மின் பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அதில் தங்களது பணத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் கூட இல்லாமல் பணத்தை செலுத்த முடியும்.

இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவையை யார் வேண்டுமானாலும் அளித்து விடமுடியாது. இதற்கென ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றாக வேண்டும். மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு மிகச் சரியாக 73 நாட்களுக்கு முன் (ஆகஸ்டு 19-ம் தேதி) மத்திய ரிசர்வ் வங்கி பதினோரு நிறுவனங்களுக்கு இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் உரிமத்தை கொள்கை அடிப்படையில் வழங்குகின்றது.

கொள்கையடிப்படையிலான அனுமதி பெற்ற நிறுவனம், ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு 18 மாதங்களுக்குள் பரிவர்த்தனை சேவையைத் துவங்கலாம். ரிசர்வ் வங்கி ஆகஸ்டு 19-ம் தேதி அனுமதி வழங்கிய 11 நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒன்று. மோடியின் அறிவிப்பு வெளியானதற்கு இரண்டே நாட்களுக்குள் பாரத ஸ்டேட் வங்கியும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்கும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகின்றது.

இந்நிலையில் மோடியின் அறிவிப்பு வெளியாகி 23 நாட்கள் கழித்து கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று முகேஷ் அம்பானி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ரிலையன்ஸ் சார்பாக ஜியோ மணி  (JIO Money) என்கிற மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்குவது தொடர்பானது.

அடுத்த சில வாரங்களில் நாடெங்கும் உள்ள சுமார் ஒரு கோடி சிறு வணிகர்களை ஜியோ மணி  வலைப் பின்னலுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவித்த அம்பானி, ஜியோ மணி  செயலியில் மக்கள் தங்களது பணத்தைச் சேர்த்துக் கொள்ள நாடெங்கும் மிக விரைவில் மைக்ரோ ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், சில்லரறை வர்த்தகத்துக்கான செயற்சூழல் (Digital retail ecosystem) ஒன்றை உருவாக்குவதே தங்களது லட்சியம் என அறிவித்தார் அம்பானி. அதாவது பொருள் – பண பரிவர்த்தனை நடக்க வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மின்வெளி (Digital Space).

நுகர்வோருக்குத் தேவைப்படும் பொருள் அவர் வசிக்கும் இடத்தைச் சுற்றி எங்கே கிடைக்கும், என்னென்ன விலைகளில் கிடைக்கும் என்பதில் துவங்கி அந்தப் பொருள் மட்டுமின்றி அதனோடு தொடர்புடைய பிற பொருட்களை வாங்குவது குறித்துமான சகல விவரங்களும் அவரது செல்பேசியில் செயல்படும் ரிலையன்சின் செயலியே (App) வழிகாட்டுவதோடு – அந்தப் பொருள் வாங்குவதற்காக நிகழும் பணப்பரிவர்த்தனையும் ரிலையன்சின் மற்றொரு செயலியின் (Relinace Jio Money App) மூலம் நடக்கும்.

imagesஏற்கனவே இதே சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உண்டெனினும், அவை தனித்தனியான நிறுவனங்களின் சேவைகளாக உள்ளன. ரிலையன்சின் திட்டம் பரிவர்த்தனைச் சங்கிலியை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பதுடன் அதற்கு மேல் வேறு நோக்கங்களையும் கொண்டது.

சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு. மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பிற்குப் பின்னான சூழல் அந்த நோக்கத்திற்கு தோதானதாக உள்ளது. மின் பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்து சில்லறை மற்றும் சிறு கடை வியாபாரிகள் இயங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி அதற்கென செய்ய வேண்டிய செலவுகள் மற்றும் ஒவ்வொரு சிறிய பரிவர்த்தனைக்கும் வழங்க வேண்டிய சேவைக் கட்டணங்கள், வரிகள் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களும் உள்ளன.

மற்றொரு புறம், சில்லறை வர்த்தகம் இயங்கும் முறை மற்றும் மக்களின் வாங்கும் போக்கு (Buying Pattern) குறித்த விவரங்கள் அனைத்தும் ரிலையன்ஸ் வசம் இருக்கும். ஏற்கனவே ஜியோ செல்பேசி சேவையின் வழியே அதன் வாடிக்கையாளர்களுடைய இணையச் செயல்பாடுகளை மட்டுமின்றி வோல்ட் (VoLTE – Voice On LTE) முறையில் இயங்கும் தொலைபேசி அழைப்புகளையும் கண்காணிக்கும் தொழில் நுட்பம் ரிலையன்சிடம் உள்ளது. இதோடு சேர்த்து மக்கள் தங்களது பணத்தை செலவழிக்கும் முறை குறித்த விவரங்களும் சென்று சேர்கின்றது.

தொகுப்பாக பார்க்கும் போது, மக்களுடைய அரசியல் கருத்துக்கள் மட்டுமின்றி அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலத்தையும் அம்பானியின் கையில் வாரிக் கொடுத்துள்ளார் மோடி.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கார்ப்பரேட்டுகளே நேரடியாக மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் மீது அதிகாரத்தைச் செலுத்த முற்படும் டிஜிட்டல் பாசிசம் நம் வாயிலில் நிற்கின்றது. இதற்கு மேலும் மோடியின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்போடு மட்டும் தொடர்புபடுத்தி அதன் சாத்திய அசாத்தியங்களுக்குள் புகுந்து மயிர் பிளக்கும் விவாதங்களைச் செய்து கொண்டிருப்பது அறிவுடைமையா?

– முகில்

செய்தி ஆதாரங்கள் :