Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 520

தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !

1

விவசாயிகளை வாழவிடு என்ற தலைப்பில் சீர்காழியில் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பலமுறை அனுமதி கோரியும் காவல்துறை மறுத்திருந்தது. மறுப்பிற்காக அவர்கள் கூறிய காரணம் தான் வேடிக்கையானது, அதாவது விவசாயிகளது பிரச்சினையை பேசினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம். தமிழகத்தில் என்றுமில்லாத அளவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரிப் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளுக்காக போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மோடி அரசின் விவசாயிகளை அழிக்கும் கொள்கைக்கு எதிராக போராட்டம் போர்க்குணத்தோடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு கூட தமிழகத்தில் தடை என்றால் இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் அருகதை. கடைசியில் சீர்காழி காவல்துறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதியை அளித்திருக்கிறது. இதுவும் கடைசி நேரம் வரை உண்மையாக இருக்க வேண்டும்.

தடை பல தாண்டி நாளை சீர்காழியில் பொதுக்கூட்டம் – அனைவரும் வருக!

விவசாயியை வாழவிடு… சீர்காழியில் பொதுக்கூட்டம் !

நாள் : ஜூன் 17, 2017.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : பழைய பேருந்து நிலையம்.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஷேல்கேஸ் திட்டம் எத்தனை திட்டங்கள் விவசாயிகளை கொலை செய்ய?

தேசபக்த வேடமிடும் மோடி அரசே! கையாலாகாத தமிழக அரசே! மீத்தேன் திட்டத்தால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், நியூட்ரினோ திட்டத்தால், ஷேல்கேஸ் திட்டத்தால், தண்ணியில்லாமல் காய்ந்து பிளந்து கிடக்கும் எங்கள் அன்னை பூமியை பசுமையாக திருப்பி தர முடியுமா? விவசாயம் அழிந்து கடனாளியாகி தினம் தினம் நெஞ்சு வெடித்தும், தூக்கு போட்டும் சாகும் விவசாயிகளின் உயிரை திருப்பி தரமுடியுமா ? அல்லது தடுக்கத்தான் முடியமா?

நாட்டு மக்களுக்கு உணவு கொடுத்து உயிர் கொடுக்கிறவன் விவசாயி. தேசத்தின் ரத்த நாளங்கள் விவசாயமும், விவசாய நிலமும். அதை கொன்றால் அந்த தேசத்தின் அழிவு எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? தேசத்தின் உயிரை காப்பாற்ற, விவசாயத்தை காப்பாற்ற போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறாயே! அதை அழிக்க நினைக்கும் நீ யார்?

விவசாயி பாதித்தால் கூலி விவசாயியும் பாதிக்கிறான். விவசாயி உயிரை விடுகிறான் கூலி விவசாயி நாடோடியாக, சொந்த நாட்டில் அகதியாக மாறுகிறான். விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!

கார்பரேட் முதலாளிகளுக்கு 2015 -ம் ஆண்டு – 5,OO,823 கோடி, 2016-ல் 5,51,OOO கோடி கொடுத்தாயே விவசாயிகளுக்கு எத்தனை கோடிகொடுத்தீர்கள்? இல்லை, விவசாயிகளின் கழுத்தைதானே அறுதத்தீர்கள்.  வறட்சிக்குக் காரணம்? வானம் பொய்த்ததென்று இயற்கை மேலே பழி போடுகிறீர்களே, அந்தக் காலத்தில் ஏரி, குளம், கம்மாய் வெட்டி தண்ணியை தேக்கி வைத்து மழையில்லாத காலத்திலே பயன்படுத்ததானே? அதை பராமரிக்காம விட்டவன் எவன்? அதை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் போட்டு விற்று அழித்தவன் எவன் நீதானே?

தப்பித் தவறி தண்ணிர் வரும் காலத்தில் கடலில் கலக்கும் நீரை கூட தடுத்து நிறுத்த தடுப்பணைகள் கட்டாத சதிகாரன் நீதானே! தண்ணிரை உறிஞ்சி எடுத்து, ஆற்று மணலை அதள பாதாளத்துக்கு தோண்டி கொள்ளையடித்து நிலத்தடி நீரை அழித்தவன் எவன் நீதானே?

போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் போராடுகிறவர்கள் யாரும் விவசாயிகளே இல்லையென்று நாக்கு கூசாமல் கொச்சைப்படுத்துகிறீர்களே, பிறகு அவர்கள் என்ன தொழில் அதிபர்களா? அல்லது வேற்றுகிரக வாசிகளா? அல்லது அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? சொந்த நாட்டு மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க மறுக்கும் உங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி என்ன இருக்கு? மக்களை காப்பாற்ற வக்கற்ற உங்களுக்கு அதிகாரம் எதற்கு?

இது எங்கள் நிலம்! எங்கள் ஆறு! எங்கள் உரிமை! எங்களை வாழவிடு! இதுவே மக்கள் அதிகாரம்!

மக்களே!

இது வெறும் விவசாயிகள் பிரச்சினை இல்லை!  நம் அனைவரின் பிரச்சினை நாட்டின் பிரச்சினை! மக்களை காப்பாற்றும் அதிகாரத்தை பற்றிய பிரச்சினை! மக்கள் அதிகாரத்தில் இணைவோம்! எழுச்சியை உண்டாக்குவோம்! விவசாயத்தையும் நாட்டையும் காப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, கடலூர் – விழுப்புரம் மண்டலம்.
98434 80587, 81108 15963, 99441 17320.

இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்

10

நாடு முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டி காவிமயமாக்கி வரும் இந்து மதவெறி பாசிச கும்பல் சென்னைப் பல்கலைக்கழகத்தையும் காவிக்கூடாரமாக்கும் நோக்கத்துடன் சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணனை பொறுப்பாக்கி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் என்கிற பெயரில் ஒரு இருக்கையை உருவாக்கியுள்ளது. இது தனித்துறை அல்ல ஆனால் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் பெயரில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம் என்கிற பெயரில் பாஜக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அழைத்து வந்து அவ்வப்போது கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நேற்று 15.6.17 காலை 10.45 மணிக்கு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் சார்பில் ‘விவேகானந்தரின் உயர்கல்விக்கொள்கையும் அதன் நோக்கமும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கருத்தரங்கிற்கு வரலாற்றுத்துறை பேராசிரியரும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்தியாவுக்காக தமிழகத்தை பலியிடுவதில் தவறில்லை என்று பேசிய பா.ஜ.க எம்.பி இல.கணேசன் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் இந்த காவி கூட்டத்தோடு ஐக்கியமாகியிருந்தார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தகவலே எங்களுக்கு அன்று காலை 8 மணிக்கு தான் தெரியும். தற்போது இன்டர்ன்ஷிப் நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்திற்கு வருவதில்லை எனவே குறுகிய காலத்திற்குள் இயன்ற மாணவர்களை அணிதிரட்டிக் கொண்டு கருத்தரங்கம் நடக்கவிருந்த பெரியார் அரங்கிற்குள் சென்று அமர்ந்தோம்.

நீதிபதி சந்துரு பேசும் போது இந்துக்கள் பசுவை உண்ணலாம் என்று விவேகானந்தர் கூறியதாக பலர் கூறுகின்றனர் அதற்கெல்லாம் ஆதாரமில்லை என்று கூறினார். விவேகானந்தர் கூறியது உண்மையா பொய்யா என்பது ஒருபுறமிருக்க சந்துரு காவி கும்பலோடு உட்கார்ந்துகொண்டு காவித்தனமாக பொய் பேசிக்கொண்டிருந்ததுதான் பிரச்சினை. மேலும் அவருடைய உரை முழுவதும் மாட்டுக்கறியை மாட்டுக்கறி என்றோ மாட்டிறைச்சி என்றோ கூறவில்லை பக்தாளை போல பசுக்கள்… பசுக்கள்… என்று மிகவும் மென்மையாகவே பேசிக்கொண்டிருந்தார்.

அடுத்து இல.கணேசன் பேச எழுந்ததுமே ‘வெளியேறு வெளியேறு காவி கும்பலே வெளியேறு’ என்று முழக்கமிடத் துவங்கினோம். நிகழ்ச்சி தடைபட்டது. காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து முழக்கமிட்டோம். அரங்கிற்குள் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்கள் இருப்பது அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. மாட்டுக்கறி உரிமை எல்லாம் உரிமை கிடையாது என்று ஒருவன் எங்களை மிரட்டும் விதமாக பேசினான். அதற்கடுத்து மாட்டுக்கறி எங்கள் உரிமை தடை போட மோடி யாரு என்று முழக்கமிட்டோம்.

அரங்கிற்குள் காவி கும்பலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருப்பது பல்கலைக்கழகம் முழுவதும் பரவியது. அரங்கிற்கு வெளியே வந்து முழக்கமிட்ட போது சுற்றிலும் நின்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். முன்பு மாட்டுக்கறி விருந்து நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் காவலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்துகொண்டு மாட்டிறைச்சியை கேட்டு வாங்கி உண்டார். நேற்றைய போராட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்து என்னப்பா போராட்டம் மட்டும் தானா பீஃப் இல்லையா என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வலுவான முற்போக்கு இடதுசாரி மாணவர் சங்கங்கள் எதுவும் இல்லாத நிலையில் காவி பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல் கும்பல் செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர். இது போல தி.மு.க, சி.பி.எம், வி.சி.க போன்ற கட்சிகள் வந்து இங்கே கூட்டம் போட நிர்வாகம் அனுமதிக்குமா? காவி கும்பலை வளர்த்துவிட பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டே சிலர் வேலை செய்கின்றனர். நிர்வாகமும் அதை கண்டு கொள்ளாமல் துணைபோகிறது.

பார்ப்பன பாசிச கும்பல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மதவெறியை தூண்டிவிட்டு மாணவர்களை பிளவுபடுத்த நினைத்தால் இனிமேல் இதை விட பெரிய ஆர்ப்பாட்டஙகளை பெருந்திரளான மாணவர்களோடு நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம். காவி கும்பலுக்கு துணை போவதை பல்கலைக்கழக நிர்வாகம் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். பார்ப்பன பாசிச கும்பலுக்கெதிராக மாணவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்!

இது பெரியார் பிறந்த மண் இங்கே காவி கும்பல் தலை தூக்கினாலே நசுக்கி எறிவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (செ.ப)
APSC (MU)

மாட்டுக்கறி பிரியாணியுடன் திருச்சியைக் கலக்கிய சர்வகட்சி போராட்டம் !

2

விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாடு விற்பனை மற்றும் மாட்டுக்கறிக்கு விதித்துள்ள தடை உத்தரவை திருப்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக திருச்சியில் 10.06.2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில்  பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர், தோழர் ஜீவா தலைமையுரையில் “BJP-யினர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது விவசாயத்தில்,பொருளாதாரத்தில், சிறிதும் அக்கறை காட்டாமல் இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் அத்தனையும் நிறைவேற்றுவோம் என கூறி ஓட்டு வாங்கினார்கள். ஆனால் நடந்தது என்ன 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களை துளி கூட மதிக்காமல் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்தி, மறுபிறப்பு எடுத்த இட்லர் ஆட்சி போல இயங்கும் BJP யை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே துரத்தியடிப்போம் அதற்கு அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் இது போல ஒன்றாக இணைந்து போராடுட வேண்டும்”. என அறை கூவினார்.

தோழர் சந்துரு

திராவிடர் விடுதலை கழகத்தின் மாணவர் அமைப்பின் தோழர் வழக்கறிஞர் சந்துரு பேசுகையில் “மாட்டுக்கறிக்கு தடை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று தடை விதிப்பவர்கள்தான் இதிகாச  காலகட்டத்தில் நிறைய மாமிசங்களை தின்றிருக்கிறார்கள். உடல் வலுவிற்கும்,ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவு என்றார்கள். தான் மட்டுமல்ல தன் சந்ததிகளையும் ஆற்றல் மிக்கவர்களாக்கினர். ஆனால் இன்று மலிவு விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியின் சத்துக்களை நமக்கு கிடைக்க விடாமல் செய்வதற்கும், அவர்களை போல் நாமும் வளர்ந்து விடக்கூடாதெனவும் இப்படி கோமாதா, பசு பாதுகாப்பென  கூறி மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது மோடி அரசு. பார்பனியத்தின் வெற்றி சாதிகளாக பிரித்து வைத்திருப்பதுதான். தனக்கு கீழ் உள்ள சாதிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தனக்கு மேல் உள்ள பார்பனியத்தை எதிர்ப்பதில்லை. சாதியாக பிரிந்து கிடப்பது பார்பனியத்திற்கு தேவைபடுகிறது. அதே சமயம் இந்துக்கள் எல்லாம் வாருங்கள் என்கின்றனர். இந்துக்களுக்கு என்ன வரையறை எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, முஸ்லீம் இல்லையோ, பௌத்தர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று சேர்த்துக் கொண்டனர். நான் உண்ணும் உணவு வேறு நீ உண்ணும் உணவு வேறு, நான் உடுத்தும் உடை வேறு நீ உடுத்தும் உடை வேறு, உன்னுடைய பார்ப்பன கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் பண்பாடு வேறு, இப்படி வேறுபாட்டை வைத்து கொண்டு நாமெல்லாம் இந்துகள் என்று கூறுவது மோசடி”. என BJP RSS -ஐ அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் முகிலரசன்

தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பாளர், தோழர் முகிலரசன் பேசுகையில் “மோடி அரசு மக்களிடம் நயவஞ்சகமாக பேசி ஓட்டு வாங்கி ஏமாற்றி விட்டது. மாட்டிறைச்சிக்கான தடை என்பது சிறுபான்மையினர்,தலித்துக்களை ஒடுக்குவதற்க்காக கொண்டு வந்துள்ளது இதனை புரிந்து கொண்டு தமிழகத்தில் இவர்களை கால் பதிக்க விடாமல் செய்ய இவர்களுக்கு ஓட்டுப்போடாமல் புறக்கணிப்போம்” என்றார்.

தோழர் சுரேஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்,தோழர் சுரேஷ் பேசுகையில்இன்றைய சூழலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் இம்மாதிரியான கூட்டுத்துவ போராட்டம் சிறப்பானது. மிகவும் அவசியமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மோடி அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றோம். இனி இது போன்று அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் BJP,RSS கும்பல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்” என்றார்.

தோழர். சுந்தரராஜூ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தரராஜு பேசுகையில் “மத்திய அரசு இந்தியா முழுவதும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் தற்போது விவசாயத்திற்க்கும் மாடு வளர்ப்பிற்கும் அழிவை  ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தொழிற்சாலைகளில் வேலை இழப்பு , விவசாயம் பாதிப்பு என மக்கள் துன்பத்தில் இருக்கும் போது பணமதிப்பிழப்பு என்ற கொள்கையை நாடு முழுவதும்  அமுல்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி அரசு தற்போது மீண்டும் பசு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மக்களை மேலும் வஞ்சிக்கிறது. BJP க்கு எதிராக போராடும் மக்களுடன் தொழிற்சங்கங்கள் என்றும் துணைநிற்கும்” என பேசினார்.

தோழர் ஆதி நாரயண மூர்த்தி

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி பேசுகையில் “மத்திய அரசு இந்திய அரசியல் சட்டத்தை துளி கூட மதிப்பதில்லை அதை குழி தோண்டி புதைக்கிறது. தான் வைத்ததுதான் சட்டம் என பாசிச தன்மையோடு ஜனநாயகத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறது. தனக்கேற்ப சட்டங்களை வலைத்து கொள்வதும், உழைக்கும் மக்கள் மீது கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது என செயல்படுகிறது. BJP அரசை சட்டப்பூர்வமான முறையில் நின்று முறியடிக்க முடியாது. இதுபோன்று களத்தில் இறங்கி போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.

தோழர் சீனி விடுதலை அரசு

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு இனைச்செயலாளர், தோழர் சீனி விடுதலை அரசு பேசுகையில் “மாடு விற்பனை மற்றும் மாட்டுகறிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு மக்களிடம் எதாவது ஒரு விசயத்தை பேசி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. தமிழிசை கூறுகிறார். மாட்டுக்கறி தின்னக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை, மாடு வெட்ட கூடாது என்று தான் கூறுகிறது என்கிறார். இவர் எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள் மாட்டை வெட்டாமல் கறி எப்படி சாப்பிடுவது. H.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஸ்ணன் இவர்கள் அவைவரும் மாட்டுக்காக அக்கறைப் படுகிறார்கள். மக்களைப் பற்றி, விவசாயிகள் பற்றி கவலை பட்டது கிடையாது. பசுவை பாதுகாக்க வேண்டுமாம் அதற்கு ஏசி வைக்கனுமாம்,லாரியில் ஏற்றி வரும்போது அடிப்படுகிறதாம் அடிமாட்டுக்கு கொடுக்கிறார்களாம் இப்படியே சென்றால் மாட்டு இனமே அழிந்து விடுமாம். எங்க அம்மா அப்பாவிற்கு எனது குடும்பத்திற்கு ஒழுங்கான வீடு இல்ல, மாடுகளை லாரியில் அடைத்து கொடுமை படுத்துகிறார்களாம். பள்ளிக்கூட புள்ளைங்கள பஸ்ஸில் அடைத்து மாட்டை விட கேவலமாக கொண்டு செல்லும் போது இவர்களுக்கு பாவமாக தெரியவில்லை. விவசாயிகள் 400 -க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர் அது பற்றி கவலை இல்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கின்ற கோசாலையில் உள்ள மாடுகளை இரண்டு வேளை குளிக்க வைப்பது, சாம்பிராணி புகை போடுவது, ஏசி ரூமில் படுக்க வைப்பது என செய்கிறோம் என  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய் கூறுகிறார்கள். இவர்களை மீடியாவில் வேறு பேச அனுமதிக்கிறார்கள் குறிப்பாக தந்தி டிவியில் சாமானியன் என்று இணைத்துக் கொண்டு பேச வைக்கிறார்கள். இப்படி இவர்கள் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகிறார்கள் என்றார். நான் மாட்டை வளர்ப்பேன், உண்ணுவேன் அதன் தோலை பயன்படுத்தி பறை செய்வேன் அதை கிளர்ச்சிக்கான ஆயுதமாகவும் மாற்றுவேன் என்றார். இனி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இது தந்தை பெரியார் பிறந்த மண் என்பதை எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும்”. என்று பேசினார்.

திருச்சி வேலுச்சாமி

காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி பேசுகையில் “நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை, எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. ஆனால் என் வீட்டில் மகள், மனைவி என அனைவரும் அசைவம் சாப்பிடுவார்கள். நான் சாப்பிட மாட்டேன் என்பதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என தடுத்தால் எப்படி? எந்த உணவை உண்பது என்பது அவர் அவர் விருப்பம் சார்ந்தது அதில் எவரும் தலையிட முடியாது என்றார். மேலும் பசுவை பாதுகாப்போம் என்று சொல்லிக் கொண்டு டன் கணக்கில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது இந்த அரசு. ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாம். இதற்கு யாரை தூக்கில் போடலாம் கூறுங்கள், நான் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்தவேண்டும், எந்த இடத்தில் வசிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் ஜனநாயகம் இருக்குமா? ஜெர்மனியில் இட்லர் செய்ததை இங்கு மோடி அரசு நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார்கள். இதை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் வெற்றி பெருவோம்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப்பொதுச் செயலர், தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றும் போது “ஜெர்மனியில் இட்லர் கொண்டு வந்ததை போல் இந்தியாவில் RSS-BJP இந்துத்துவத்தை கொண்டு வர வேண்டும் என துடிக்கிறது. இட்லர் மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இடை விடாமல் கொள்கைகளை பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறினான். இந்த இரண்டையும் மோடி தற்போது செய்து கொண்டிருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார். ஆனால் நடப்பது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

தோழர்.காளியப்பன்

மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழகம் என போராட்டம் நீண்டு செல்கிறது. ம.பியில் சிவராஜ் சிங் சவுகான் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துள்ளனர். அதை மறைக்க உண்ணாவிரதம் இருக்கிறார். BJP எப்போதும் இரட்டை வேடம் போடுகிறது. மாட்டுகறி தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதும் மாட்டு சந்தையை ஒழுங்குபடுத்ததான் சட்டம் கொண்டுவந்தோம் என்கின்றனர். மாட்டை வாங்குவோருக்கும் விற்ப்போருக்கும் நிலம் இருக்க வேண்டும் என்கிறது சட்டம். இது சாத்தியமா? மாட்டை விற்க தடை போட்டுவிட்டு மாட்டுகறிக்கு தடை போடவில்லை என்று கூறுகிறார்கள். மோடி என்றால் மோசடி, RSS என்றால் அயோக்கியதனம் என்று பொருள். இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பசுவை கொன்று சாப்பிடுகிறார்கள், இவர்களை ஒழிக்க வேண்டும் என்கின்றனர். ஆதிசங்கரர் மாட்டுகறி சாப்பிடுங்கள் என்கிறார். ரிக் வேதத்தில் மாட்டுகறி சாப்பிடுபவர்களை பற்றி உள்ளது. உன்னுடைய மகன் சிறந்த பாடகராக, உடல் கட்டுமானவனாக வளர வேண்டுமா? மாட்டுகறி சாப்பிட வேண்டும் என்று வேதத்தில் உள்ளது. ஓம் ஓம் என்று கூறுகிறார்களே அது ஓம் இல்லை அது சோம், சோம் என்றால் கஞ்சா, கஞ்சா குடித்துவிட்டு ஆடு, மாடு, குதிரைகளை கொன்று சாப்பிடுவார்கள் பார்ப்பனர்கள். ஆனால் இன்று பசுவை பாதுகாப்பதாக துடிக்கிறார்கள்.

இந்து… இந்து… என்று இல்லாத பண்பாட்டை தினிக்கிறார்கள். தமிழர் பண்பாடு வேறு, அது சிறந்த பண்பாடு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிறது தமிழர் பண்பாடு. ஆனால் பார்பனியத்தின் பண்பாடு இவர்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறது. இந்தியை திணிப்பது, சமஸ்கிருதம் திணிப்பது பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைப் பண்பாடாக மாற்ற முயற்சிக்கிறது. இதற்கு கலவரத்தை தூண்டுவது, மக்களை திசை திருப்பிவிடுகிறது. மூன்றாண்டு சாதனை என்று எதையும் கூற முடியாது. மக்கள் BJP-RSS மோடி கும்பலை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதை திசைதிருப்ப புது புது பிரச்சனைகளை உருவாக்குவது, அதை நோக்கி மக்களை கொண்டு செல்வது என்பதை திட்டமிட்டே செய்கிறார்கள். தமிழகம் இதை புரிந்து கொண்டதால் தான் BJP எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் புறக்கணிக்கிறார்கள், மறுக்கிறார்கள். BJP-RSS காரர்கள் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அந்த முகத்தை கிழித்து நொறுக்கிவிடுவோம். பார்பனியத்திற்கு கல்லறை கட்டுவோம்” என்று கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

தோழர்.விஜய்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர், தோழர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் அதற்கு மாணவர் அமைப்பு என்றும் துணை நிற்கும் என்று நன்றியுரையுடன் கூட்டத்தை முடித்து வைத்தார்.

இடையிடையே BJP-RSS ஐ கண்டிக்கும் விதத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினார்கள் அதில் உலகம் சுற்றும் வாலிபனாம் நரேந்திர மோடி அவர் கருப்பு பணத்தை ஒழிக்க போராராம் ஜேம்சுபாண்டா மாறி என மோடியை கிண்டலடித்தும் சத்தான மாட்டுக்கறி சுவையான மாட்டுக்கறி என்ற பாடலையும் பாடினர். புதிய பாடலான மாடு எங்க மாடு வளப்பது எங்க பாடு என்ற பாடலை தோழர்.கோவன் பாடினார். இப்பாடல்கள் பார்ப்போரை உற்சாக மூட்டியது.

இவ்வார்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

மாணவர்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் !

0
கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி இன்று (16.6.2017) திறக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமான மெரினா எழுச்சி, விவசாயிகளுக்கு   ஆதரவான போர்க்குணமிக்க போராட்டம்  என தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழந்த மாணவ – மாணவிகளை உற்சாகமாக வரவேற்கும் வகையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வரவேற்பு சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களை வாழ்த்தி வரவேற்பதில் பு.மா.இ.மு. அளவில்லா மகிழ்ச்சியடைகிறது.
இவண் :
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், 
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94451 12675.

விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே !

4

டன் தள்ளுபடி கோரித் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் ம.பி. மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆட்சியாளர்களிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்ற வழமையான போராட்டங்களுக்குப் பதிலாக, விவசாய விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்புவதை நிறுத்தி, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய போராட்டதைக் கையிலெடுத்துள்ளனர், மகாராஷ்டிர மாநில விவசாயிகள். துப்பாக்கிச் சூட்டில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்ட பிறகும்கூட, ம.பி. மாநில விவசாயிகள் போராட்டம் தணிந்துவிடவில்லை. சாலைத் தடையரண்களை ஏற்படுத்திப் போக்குவரத்தை முடக்குவது, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது என அம்மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. ஓரிரு மாநிலங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் வெடித்துவிடுமோ என மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கதிகலங்கிப்போய் நிற்கின்றனர்.

சாலையில் தடுப்புக்களை ஏற்படுத்திப் போராடும் ம.பி விவசாயிகள்

கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி ஏப்பம் விட்ட கடன்களையெல்லாம் வாராக் கடனாக எழுதித் தள்ளுபடி செய்வதற்குக் கிஞ்சித்தும் தயங்காத இந்து மதவெறிக் கும்பல், கடன் தள்ளுபடிக் கோரிக்கைக்காகப் போராடும் விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் நாட்டில் பணவீக்கம் – அதாவது விலைவாசி உயர்ந்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டி, விவசாயிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, அவமதிக்கிறது. மோடிக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆட்சி நடத்திவரும் அ.தி.மு.க. கும்பலோ, விவசாயிகள் அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும், சொசைட்டிகளிலும் மார்ச் 31, 2016 முடிய வாங்கியிருக்கும் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது, தமிழக அரசு. இந்த ஆணை குளறுபடிகள் நிறைந்திருப்பதாகவும் விவசாயிகளிடையே பாகுபாடு காட்டுகிறதென்றும் கூறித் தொடரப்பட்ட வழக்கில், ”வறட்சியும், விவசாயிகளின் துர்மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

விளைபொருள்களை சாலையில் கொட்டி மகாராஷ்டிர விவசாயிகளின் போராட்டம்

”உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசின் கொள்கை முடிவில் தலையிடுகிறது” என வாதிட்டு, உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது, தமிழக அரசு. தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வைத் திணித்த நீதிமன்ற உத்தரவை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் கொள்கையைக் கைவிட முடியாது எனக் கூறி, மல்லுக்கட்டுகிறது.

அ.தி.மு.க. அரசு தமிழக விவசாயிகளுக்கு இழைத்துவரும் துரோகம் இதோடு நின்றுவிடவில்லை. ”தமிழகத்தில் வெறும் 80 விவசாயிகள்தான் அகால மரணமடைந்திருப்பதாகவும், அவர்களும்கூட வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் இறந்து போனதாக” உச்ச நீதிமன்றத்தில் பச்சையாகப் புளுகியிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதியில் நடந்துவரும் போராட்டத்தை உதாசீனப்படுத்திவிட்டு, விவசாய நிலங்களைத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகை அளிக்கும் நடைமுறைகளை மிக இரகசியமாகச் செய்துவருகிறது.

தஞ்சை-திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது எரிவாயுக் குழாய்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிப்பதற்காக, நூற்றுக்கணக்கான போலீசை இறக்கி அக்கிராமத்தை முற்றுகையிட்டு, அக்கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுச் சிறையில் அடைத்து, ஐந்தாம் படையாகச் செயல்பட்டிருக்கிறது.

”காவேரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” எனத் தமிழக விவசாயிகளும் மக்களும் கோரி வரும் வேளையில், அந்நெற்களஞ்சியத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றுவதற்கு மோடி அரசும் அ.தி.மு.க. அரசும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றன.

உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான். எனினும், போர்க்குணமிக்க போராட்டங்களும், கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளும் மட்டுமே தீர்வாக அமைந்துவிடாது.

சாண் ஏறினால் முழம் வழுக்கும் கதையாக, இடுபொருட்களின் விலை உயர்வும், விவசாய விளை பொருட்களின் விலை வீழ்ச்சியும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, விவசாயிகளைத் திரும்பத் திரும்பக் கடன் வலையில் சிக்க வைத்து, அவர்களைப் போண்டியாக்கிவருகின்றன. இவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், வர்த்தகச் சூதாடிகளின் கைகளில் இருந்துவரும்வரை, உழவர்களின் கடன் பிரச்சினை உள்ளிட்ட நெருக்கடிகள் தீர்ந்துவிடாது.

இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, உழவர்கள் அவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாற வேண்டும். உழவர்களின் போராட்டங்கள் இந்த நோக்கத்தை மையப்படுத்தி நடைபெறுவதோடு, இதற்கேற்ப நாடெங்கும் உழவர்களின் அதிகாரத்தைச் செயல்படுத்தக்கூடிய விவசாய சங்கங்களைக் கட்டியமைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இத்தகைய தலைகீழ் மாற்றம் மட்டுமே, விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக அமையும்.

ம.பி விவசாயிகளைக் கொன்ற பாஜக-வை விரட்டுவோம் ! தருமபுரி ஆர்ப்பாட்டம் !

0

த்திய பிரதேச  விவசாயிகள்  5  பேரை  சுட்டுக்கொன்ற  பி.ஜே.பி யை  கண்டித்து ,    விவசாயிகளின்  அழிவு சமூகத்தின்  பேரழிவு என்பதை  விளக்கியும், தருமபுரி  மற்றும்  அதன் சுற்றுவட்டார  பகுதிகளில்   மக்கள் அதிகாரம்  சார்பாக  வீச்சான  பிரச்சாரத்தை  மேற்கொண்டு   14.06.2017  அன்று மாலை  4:00  மணி அளவில்  தருமபுரி   தந்தி  அலுவலகம்  அருகில்   கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தினை   மக்கள் அதிகாரம்   மாவட்ட  செயலாளர்  தோழர் ராஜா  தலைமை  தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் விளைவித்த  பொருளுக்கு  உரிய விலை  வேண்டும்  என்று  போராடிய  விவசாயிகளை  காட்டுமிராண்டித்தனமாக  தாக்கி  5 பேரை  சுட்டு தள்ளி இருக்கிறது  பி.ஜே.பி.  மோடி  ஆட்சிக்கு   வந்த உடன்  விவசாயத்தை   வளர்ச்சியை பாதையை    நோக்கி  கொண்டு செல்வேன் என்று  வாய்சவடால்  அடித்த மோடி, இன்றைக்கு விவசாயத்தை  அழித்ததோடு, விவசாயிகளை  தற்கொலைக்கு  தள்ளிவருவது,  போராட  கூடிய விவசாயிகளை  சுட்டுத்தள்ளுவது  என்று  விவசாயிகளின்  எதிரியாக  இருக்கிறார்கள்.  எனவே  துருபிடித்து  போன  இந்த  அரசு அமைப்பை  தூக்கி எறிய  மக்கள்  அனைவரும்  ஒன்று சேர வேண்டும்  என்றார்.

விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், கடந்த 1 ஆம் தேதியில்  இருந்து  வடமாநிலங்களில் விவசாயிகளின்  போராட்டம் முன் உதாரணமிக்க போராட்டமாக அரசை ஸ்தம்பிக்க வைக்கும்    வகையிலே போராடி வருகிறார்கள். இதனை சகித்துக்கொள்ளமுடியாது என்று மத்திய  பிரதேசத்தில்  துப்பாக்கிசூட்டை பரிசாக கொடுத்திருக்கிறது பிஜேபி. மோடி ஆட்சிக்கு  வந்தததில் இருந்து  விவசாயிகள்  படும் அவலத்தை  சொல்லிமாளாது. எனவே  விவசாயத்தை அழிப்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் கொள்கைகளை வைத்திருக்கும் அரசு விவசாயிகளை  சுட்டுதான்தள்ளும். தமிழகத்தில் விவசாயிகளின் போராட்ட வழிமுறையானது காலம் கடந்தது. இதிலும் என்.ஜி.ஓ -களை நுழைத்து போராட்டத்தை சீர்குலைத்து வருகிறார்கள்  எனவே  இதனை விவசாயிகள்  புரிந்து  கொள்ள வேண்டும் என்றார்.

மக்கள்  உரிமை  பாதுகாப்பு  மையம்  மாவட்ட  செயலாளர்  வழக்கறிஞர் . ஜானகிராமன் பேசுகையில்,  பா.ஜ.க  ஆட்சி செய்து  கொண்டிருக்கிற   மத்திய பிரதேசத்தில்தான்   உரிமைக்காக  போராடிய  விவசாயிகளை  படுகொலை செய்து  இந்திய  விவசாயிகளுக்கு  எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும்  விவசாயம் கட்டுபடியாகத தொழிலாக மாறிவிட்டது. இந்நிலையில் தான் தமிழகத்திலே 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள். தமிழகத்தில்   விவசாயம் அழிவு, வறட்சி, தற்கொலைக்கு  திராவிட கட்சிகள்தான் காரணம் என்று பா.ஜ.க பேசுகிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சிசெய்யும் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கடுமையான தாக்குதல், துப்பாக்கி  சூட்டை  நடத்தியிருக்கிறார்கள். ஆக விவசாயத்தை பாதுகாக்க எந்த கட்சியிடம் திட்டம் இல்லை. எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்வதுதான் அவர்களின் கொள்கையாக  இருக்கிறது. காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது போல, இன்றைக்கு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பசுவை வைத்து மதத்தின் பேரால் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் ம.பி விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. எனவே பா.ஐ.க விவசாயிகளுக்கு  மட்டும் எதிரி அல்ல அனைத்து  தரப்பு மக்களுக்கும் எதிரி.   இவர்களுக்கு எதிராக ம.பி விவசாயிகளின் கலகம் இந்தியா முழுவதும் வரவேண்டும்  என்றார்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில்,  நல்லகாலம் பிறக்க போகிறது என்று கூறி ஆட்சியை பிடித்த மோடி, நாட்டின் வளர்ச்சி  நாயகனாக சித்தரிக்கப்பட்டார். அந்த மோடியின் பா.ஐ.க அரசுதான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளை சுட்டுத்தள்ளியிருக்கிறது. பசுவை பாதுகாக்க கோசாலைகளை அமைக்க வேண்டும் என்றுகூறி  1000-கணக்கான பசுக்களை கொலைசெய்கிற கும்பல்தான் பசுவை  பாதுகாக்கிறார்களாம். தனியார்மய, தாராளமய கொள்கையால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை சார்ந்து துணை தொழிலையும் அழிக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே  இவர்களை இந்தியா முழுவதும் துடைத்தெரிய வேண்டும். மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்களிடம் கெஞ்சுவதை விட்டுவிட்டு   பா.ஜ.க வை  ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவுதான்   இன்றைக்கு  5 விவசாயிகளை சுட்டு தள்ளியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பெண்களே அதிகாரத்தை  கையிலெடுத்து  டாஸ்மாக்கை  அடித்து நொறுக்கி வெற்றிபெற்றார்களோ? அத்தகைய போராட்டம்தான் ஓரேதீர்வு… அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது என்று அறைகூவல்விடுத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள்  அதிகாரம்.
தருமபுரி. தொடர்புக்கு – 81485  73417.

மாடு விற்கத்தடை : பார்ப்பனப் பாசிச சதியில் ஒரு பன்னாட்டு ஒப்பந்த விதி !

0

ந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 150 மில்லியன் டன்கள். இதன் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய். இது ஒரு ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அல்லது கோதுமையின் மதிப்பைவிட அதிகம். விற்பனை செய்யப்படும் பாலில் 70% சிறு உற்பத்தியாளர்களாலேயே விநியோகிக்கப்படுகின்றன. 30% மட்டும்தான் அமுல் மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் விற்கப்படுகின்றன. இவர்களும் ஓரிரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்தே பாலைக் கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையை 2020 க்குள் 1,44,000 கோடியாக அதிகரிப்பது தனியார் பண்ணைகளின் திட்டம். சிறு உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டித்தான் இந்த இலக்கை அவர்கள் எட்டுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் நகரில் தனது பால் விற்பனையை அமுல் நிறுவனம் தொடங்கியது. அங்கு லிட்டர் 47 ரூபாய்க்கு பால் விற்று வந்த நிலையில், லிட்டர் 38 ரூபாய்க்கு தன் பாலை இறக்கியது அமுல். இதன் விளைவாக மற்ற கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளும் விலையைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, பால் கொள்முதல் விலையைக் குறைத்தன. விளைவு பால்மாடு வளர்த்த சிறு உற்பத்தியாளர்கள் அழிந்தனர்.

அமுல் ஐதராபாத்தில் என்ன செய்ததோ அதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் செய்கின்றன. நாம் இந்திய பால்பண்ணைகள் என்று கருதிக்கொண்டிருப்பவையெல்லாம் இந்திய நிறுவனங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, திருமலா பால் நிறுவனத்தின் உரிமையாளர் லாக்டாலிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம்.

இந்தத் தனியார் பால்பண்ணைகளே, சிறு உற்பத்தியாளர்களை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, பன்னாட்டு பால்பண்ணைகள் தமது பொருட்களை இந்திய சந்தையில் இறக்க அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன. குறிப்பாக ஏசியான் (Association of South East Asian Nations) நாடுகளுடன் தற்போது மோடி அரசு நடத்தி வரும் சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தையில், தங்களது பால்பண்ணைப் பொருட்கள் மற்றும் இறைச்சியின் மீது விதிக்கப்படும் சுங்கவரியை இந்தியா முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் கோருகின்றன. ரத்து செய்யப்பட்டால், அமுல், ஆவின், நந்தினி போன்ற நிறுவனங்களின் விலையை விடக் குறைவான விலையில் ஆஸ்திரேலியாவின் பால் இந்திய சந்தையில் பெருக்கெடுத்து ஓடும்.

எனவேதான், “சுங்கவரியை ரத்து செய்யாதீர்கள். பால் மாடுகளை தமது வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் இந்தியாவின் 15 கோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார்  அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி. இருப்பினும் மோடி அரசு ஆஸ்திரேலியாவின் ஐ.டி சந்தையில் வர்த்தக சலுகைகளைப் பெறுவதற்காக, இந்தியாவின் பால் சந்தையைக் காவு கொடுத்துவிடும் என்று பொருளாதாரப் பத்திரிகைகள் ஊகிக்கின்றன. நமது பால் உற்பத்தியாளர்களின் எதிர்காலம் பேரம் பேசப்படுவது, ஐ.டி முதலாளிகளுக்காகவா, அல்லது ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்கியிருக்கும் அதானிக்காகவா என்பது இப்போதைக்கு நாம் அறிந்து கொள்ள முடியாத அரசாங்க இரகசியமாகவே இருக்கும்.

இந்தியச் சந்தை திறந்துவிடப்படும் பட்சத்தில், விவசாயிகளின் எதிர்ப்பை அரசு சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே விலை கட்டுப்படியாகாமல் பாலைத் தெருவில் கொட்டிப் போராடுகிறார்கள் விவசாயிகள். தற்போதைய விதிகள் மாட்டுச்சந்தையையே இல்லாமல் ஆக்குவதால், கணிசமான விவசாயிகள் பால்மாடு வளர்க்கும் தொழிலிலிருந்து விரட்டப்படுவார்கள். தொழிலை விட்டே துரத்திவிட்டால், அந்த அளவுக்கு விவசாயிகளின் எதிர்ப்பும் குறையும் என்பது மோடி அரசின் கணக்காக இருக்கக்கூடும்.

நெற்களஞ்சியமான தஞ்சை, விவசாயம் நடக்காத தரிசாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, பிற்காலத்தில் மீத்தேன் திட்டமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் வரப்போகிறதென்று நமக்குத் தெரிந்திருந்ததா என்ன?

கோமாதாவைக் கொல்லும் கோசாலைகள்

1

கோமாதாவைக் கொல்ல அன்று வேள்வி, இன்று கோசாலை !

“கோமாதாவைக் கொல்லக்கூடாது” என்பது உண்மையிலேயே பா.ஜ.க.-வின் கொள்கையாக இருக்குமானால், அவர்கள் தடை செய்யவேண்டியது மாட்டு விற்பனையை அல்ல, பால் விற்பனையைத்தான். கறவை வற்றிப்போன மாடுகளை வெட்டுக்கு விற்கிறார்கள் விவசாயிகள். கூடாதென்றால், மேலும் பத்து ஆண்டுகளுக்கு அந்த மாட்டைப் பராமரிப்பதற்கான பணத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டியவர்கள் பால் அருந்துபவர்கள்தான். அதற்குப் பால் விலையை இப்போது உள்ளதைப் போல நான்கு மடங்கு உயர்த்த வேண்டும்.

மாட்டிறைச்சி உண்ணும் கொடியவர்கள் இல்லையென்றால், சைவ உணவு உட்கொள்ளும் இரக்கமனம் கொண்டோருக்கு மலிவு விலையில் பால் கிடைக்காது என்பதே உண்மை. “பால் குடிப்பவன் மேல்சாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி” என்பது “குப்பை போடுபவன் மேல்சாதி, குப்பை அள்ளுபவன் கீழ்சாதி” என்பதைப் போன்ற வக்கிர நியாயம். குப்பை அள்ளுபவன் இல்லையென்றால் ஊரே நாறிப்போய், எல்லாவிதமான நுகர்வும் நின்றுவிடுமல்லவா? அதுபோல, மாட்டுக்கறி தடுக்கப்பட்டால், விரைவில் பால் உற்பத்தி தொழிலே அழியும். புனித கோமாதாவைப் புலியைப் போல வன விலங்காக உயிரியல் பூங்காவில் வைத்து வேண்டுமானால் கும்பிடலாம்.

2012 – கணக்கெடுப்பின்படி, பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் 52 லட்சம் மாடுகள் அநாதையாக அலைகின்றன. பிளாஸ்டிக் கழிவைத் தின்று சாகின்றன. இவை அனைத்தும் பராமரிக்க முடியாமல் விவசாயிகளால் கைவிடப்பட்ட மாடுகள்.

இராஜஸ்தான் பா.ஜ.க. அரசு, மாட்டுக்கென தனியே ஒரு மந்திரி போட்டிருக்கிறது. அவர் பெயர் கோபால மந்திரி. அங்கே 5 இலட்சம் பயனற்ற மாடுகளைப் பராமரிக்க 500 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது. இதற்காக பதிவாளர் அலுவலகத்தில் எல்லா ஸ்டாம்பு கட்டணங்கள் மீதும் 10% சர்சார்ஜ் – என்று மக்களுக்கு “மாட்டு வரி” போட்டிருக்கிறார்கள்.

இராஜஸ்தான் அரசின் கணக்குப்படி, ஒரு மாட்டைப் பராமரிக்க ஆண்டுக்கு 10,000 ரூபாய் – அதாவது நாளொன்றுக்கு 30 ரூபாய் – தேவை. கோசாலை பராமரிப்பு, பணியாளர் ஊதியம் எல்லாம் இந்த 30 ரூபாயில் அடக்கம். இந்தக் காசையும் கோசாலை வைத்திருக்கும் பா.ஜ.க. யோக்கியர்கள் தின்றுவிடுகிறார்கள். பரிதாபத்துக்குரிய மாடுகளோ, கோசாலையின் சாணியிலும் சகதியிலும் சிக்கி, உடம்பு முழுதும் புண்ணாகி, அழுகி, சித்தரவதைப்பட்டு இறக்கின்றன. இராஜஸ்தானிலுள்ள ஹிங்கோனியா அரசு கோசாலையில் மட்டும் மாதந்தோறும் ஆயிரம் மாடுகள் இறந்திருக்கின்றன. நாடு முழுவதுமுள்ள கோசாலைகளில் இதுதான் நிலை. அதனால்தான் எந்த ஊரிலும் கோசாலைக்குள்ளே நுழைவதற்கு “பசுப் பாதுகாவலர்கள்” யாரையும் அனுமதிப்பதில்லை.

இராஜஸ்தான் மாநிலம்-ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஹிங்கோனியா கோசாலையில் மாடுகள் வதைபட்டு இறந்துபோகும் அவலம். (கோப்புப் படம்)

கோசாலைகளில் மாடுகள் சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றன. இறந்தபின் எதற்கும் பயனின்றி அழிக்கப்படுகின்றன. இறைச்சிக்கூடங்களிலோ அவை சித்திரவதையின்றி கொல்லப்படுகின்றன. கொல்லப்பட்டபின் முற்றுமுழுதாக சமூகத்துக்குப் பயன்படுகின்றன. இதுதான் வேறுபாடு. கோசாலை என்பதை, மனிதர்களின் நலனிலிருந்து மட்டுல்ல, மாட்டின் நலனிலிருந்து பார்த்தாலும் அது ஒரு அபத்தம். வேதகாலத்தில் தேவர்களுக்குப் படைப்பதாகச் சொல்லிக்கொண்டு, மாடுகளை வெட்டி யாருக்கும் பயனின்றி வேள்வித்தீயில் எரித்தது பார்ப்பன மதம். இன்று வேள்வித்தீயின் இடத்தில் கோசாலைகள்.  இதுவும் அன்று போல இன்றைக்கும் மாட்டினத்தின் அழிவுக்கே வழிவகுத்திருக்கிறது.

“இந்தியாவில் 1997-2012 காலப்பகுதியில் மாடுகளின் எண்ணிக்கை, 17.8 கோடியிலிருந்து 15 கோடியாக குறைந்திருக்கிறது என்கிறது கால்நடை சென்சஸ். இந்த 15 கோடியில் 21% வெளிநாட்டு மாடுகள். அதே நேரத்தில் பிரேசிலில் 1965-இல் 5.6 கோடியாக இருந்த மாடுகள், இன்று 21.4 கோடியாக வளர்ந்துள்ளன. ஓங்கோல், கீர், காங்கிரேஜ் போன்ற இந்திய மாட்டினங்கள்தான் பிரேசில் கால்நடைகளில் பெரும்பான்மையானவை. இவற்றை 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பிரேசில் இறக்குமதி செய்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் போற்றிக் கொண்டாடப்படும் ஓங்கோல் மாட்டினம், இந்தியாவில் “அழிந்து வரும் இனமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கே மாட்டிறைச்சித் தொழில் கால்நடையைப் பெருக்கியிருக்கிறது. இங்கே பசுப்பாதுகாப்பு உள்நாட்டு இனங்களை அழித்திருக்கிறது” என்கிறார் கால்நடைத்துறை ஆய்வாளர் டாக்டர சாகரி ராம்தாஸ்.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2017

ம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்

0

விருத்தாசலம் பாலக்கரையில் 10.6.2017  அன்று காலை 10.30 மணியளவில் ம.பி விவசாயிகளைச் சுட்டு கொன்றதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரிக்கைகளில் வெளியான மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டச் செய்தி

தலைமை : தோழர் கு.முருகானந்தம், மக்கள் அதிகாரம்

கண்டன உரை :

திரு தெய்வக்கண்ணு உழவர் மன்ற தலைவர்.
திரு அன்பழகன் விவசாய சங்கம்.
தோழர் அருள்தாஸ் மக்கள் அதிகாரம் கம்மாபுரம்.
தோழர் S.மணிவாசகம் பு.மா.இ.மு.
திரு நந்தகுமார் விவசாயி சங்கம்.
தோழர் சீ.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

***

ம.பி விவசாயிகளைக் சுட்டுக் கொன்ற பா.ஜ.க – காஞ்சிபுரத்தில் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்!

பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் அமைதியான முறையில் கடந்த 01.06.2017 முதல் போராடி வந்தனர். இரவு பகல்  பராமல் உழைத்துக், கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை சாலையில் கொட்டி போராடி வந்தனர்.

போராடும் விவசாயிகள் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்த முன் வராமல் அலட்சியம் செய்தது  கார்ப்ரேட் கைக்கூலி கட்சியான  பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என்றெல்லாம் பேசிய மோடியின் பேச்சு பித்தலாட்டம் என்பதை உணர்ந்த விவசாயிகள் விடாப்பிடியாக தொடர்ந்து போராடி வந்தார்கள்.  இனி வாழ முடியாது என்ற நிலையில்தான் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் முன் வைத்தார்கள் இதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் கடந்த 06.06.2017 அன்று அமைதியாக போராடிக் கொண்டிருந்தோர் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் பா.ஜ.க. – வின் வெறிநாய் படைகளான  போலீசு  காக்கை குருவிகளைப் போல 8 விவசாயிகளை சுட்டுக் கொன்றுள்ளது.

உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம். எனவே இதற்கெதிராக போராடுவதும் மக்களை திரட்டுவதும் அவசிய அவசர  தேவையாக உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த போவதாக சொல்லி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் உண்ணாவிரதம்  இருப்பது பிரச்சனையை திசை திருப்பும் சதித்தனம் என்பதுடன் போலீசின் கொலை வெறியாட்டத்தையும் அதன் கொலை முகத்தையும் மூடி மறைக்கும்  முயற்சியாகும்.

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய பிரதேச மாநில விவசாயிகளின்  போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளிப்பது தார்மீகக் கடைமையாகும். அதேநேரம் பாசிச பா.ஜ.க அரசை உடனடியாக கண்டிக்கின்ற வகையில் 10.06.2017 அன்று பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக  மாவட்ட தலைநகரில் மக்கள் கூடும் இடங்களான வட்டாச்சியர் அலுவலகம் எதிரிலும் சுமைதூக்கும் தொழிலாளர் நிறைந்துள்ள மண்டித் தெரு முனையிலும் அடுத்து  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு  தோழர் சரவணன் தலைமை தாங்கினார்.

கார்ப்பரேட் கைக்கூலி காவி பயங்கரவாதிகளான பா.ஜ.க கும்பலை நாட்டை விரட்டியடிக்க மக்கள் போராட முன் வர வேண்டும்! மக்கள் எதிரிகளை புரட்சியின் மூலம்தான் தண்டிக்க முடியும்!! என்பதனை உணர்த்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டக் குழு – 8807532859.

குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?

0

பெட்டிக் கடைகளில் விற்காமல் தொங்கும் “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகையை பார்த்திருப்போம். வாரமிருமுறை வந்தாலும் போட்டி காரணமாகவும், ஆளும் கட்சிகள் – அரசாங்கங்களிடமிருந்து வாங்கும் காசுக்கு மேலேயே கூவி ஆதரிப்பதாலும் குமுதத்தை மக்கள் தவிர்த்து விடுவர். ஆகவேதான் ‘வாரியா’ என்ற வரிசையில் அவ்வப்போது ஆபாச தலைப்புக்களோடு ‘ஆண்களை’ குறிவைத்து வீழ்த்த நினைக்கிறது குமுதம்.

ஜெயாவின் அண்ணன் மகளான தீபாவை “சொப்பன சுந்தரி” என்று அட்டைப் படம் வெளியிட்டு “புரட்சித் தலைவியின்” பொற்பாத சேவையை இன்றும் பக்தியோடு செய்கிறது குமுதம் ரிப்போர்ட்டர் எனப்படும் புரசைவாக்கம் புரோக்கர்.

சமூகவலைத்தளங்களில் எழுந்த கடும் கண்டனம் காரணமாக குமுதம் அந்த சொப்பனசுந்தரியை யாரு வைச்சிருக்கா படம் கொண்ட ரிப்போர்ட்டரை தனது ஃபேஸ்புக்கில் வைத்திருக்கவில்லை. அதே நேரம் இந்தப் பிரச்சினை காரணமாக தனது பெயர் சந்தையில் பரபரப்பாக பேசப்படுவதால் குமதம் ரிப்போர்ட்டரின் ஓனர் வரதராஜ ஐய்யங்கார் கல்லாப்பெட்டிக்கு தனியே பூஜை செய்திருப்பது உறுதி. எந்த ஒரு விபச்சாரத் தரகனுக்கும் வெட்கம், சுரணை, பயம், ஒழுக்கம் இருப்பதில்லை என்றுதான் நாம் நினைக்கிறோம். உண்மையில் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தான் தொழில் செய்ய முடியும் என்பது தரகர்களுக்குத் தெரியும்.

தீபாவை கடுமையாக விமிரசிப்போர்தான் குமுதத்தின் இந்த தரங்கெட்ட செயலை கண்டிப்பதில் முதன்மை வகிக்கின்றனர், காரணம் இந்த நாகரீகம் பெரியார் கற்றுக் கொடுத்தவைகளில் ஒன்று என ஒரு நண்பர் எழுதியிருந்தார். உண்மைதான். ஆனால் கருணாநிதியையும், குஷ்புவையும் இணைத்து இன்னொரு மணியம்மை என்று எழுதியிருந்த ரிப்போர்ட்டருக்கு, இப்போதைய ஏகோபித்த கண்டனம் அப்போது எழவில்லை.

சொல்லப் போனால் இதுதான் இந்தப் பிரச்சினையின் மையம். அதாவது குமுதத்தின் தவறை வெறுமனே பெண்களுக்கு எதிரான ஒன்றாகவோ இல்லை ஆணாதிக்கத்தின் திமிராக மட்டும் பார்ப்பதோ போதாது.

சொப்பன சுந்தரி காமடியை கவுண்டமணி – செந்தில் கூட்டணி மூலம் இன்றும் ரசிக்கும் ரசனை இருக்கும் வரை குமுதம் ஏன் இப்படி அட்டைப்படம் போடாது என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். குமுதம் பெண்களை இழிவாகப் பார்க்கிறது என்பதற்காக இந்தப் படத்தைப் போடவில்லை. மாறாக ஜெயலலிதாவை விழுந்து கும்பிடும் அடிமைத்தனத்திற்காக இப்படிப் போடுகிறது. இல்லையேல் உடன்கட்டை ஏறத்துடித்த ஜெயலலிதா குறித்து குமுதம் ஏன் அட்டைப் படம் போடவில்லை? ஆகவே இது பெண்ணியம் – ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. அல்லது அதுவே முதன்மையானதல்ல.

கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது (இப்போது அவர் அங்கு இல்லை) லீனா மணிமேகலை குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விமரிசனம் ஏதோ எழுதினார். உடனே லீனா மணிமேகலை குமுதம் அலுவலகம் சென்று நிர்வாகத்திடம் பேசி பாலாவை மன்னிப்பு கேட்க வைத்தார். பிரச்சினை என்னவென்றால் அந்த நிகழ்வு குறித்து முதலில் லீனா குமுதம் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம்தான். அதில் பெண்களை கண்ணியமாக மதிக்கும் குமுதம் என்று ஏகப்பட்ட பதக்கங்களை திணித்திருந்தார். இதுதான் பிரச்சினை!

தண்டகாரண்யாவின் பழங்குடி மக்களை ஒடுக்கும் டாடாவின் நடத்தையை நன்னடத்தையாகக் காட்டுவதற்கு தேஜஸ்வினி படம் எடுத்த பெண்ணுரிமைப் போராளி லீனா மணிமேகலையின் கண்களுக்கு குமுதம் பத்திரிகை எப்படி பெண்களை மதிப்பதாக தெரிகிறது?

இல்லை அதே கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது கருணாநிதியை கிட்டத்தட்ட அம்மணக்குண்டியாகவெல்லாம் கார்ட்டூன் போட்டிருந்தார். அதே போன்று அவர் ஜெயலலிதாவையோ இல்லை மோடியையோ போட முடியுமா? எனவே குமுதத்தின் பிரச்சினை என்பது பெண் மீதான ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. மாறாக உழைக்கும் மக்களின் மீதான ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை சார்ந்தது.

மேலும் குமுதம் தனது தோற்றத்திலிருந்தே பெண்களை இழிவுபடுத்தவதை அட்டைப்படமாகவோ, கிசுகிசுவாகவோ, நகைச்சுவையாகவோ, ஜெயராஜின் ஓவியங்களாகவோ, கதைகளாகவோ செய்து வருகின்றது. குமுதத்தை 1943-ம் ஆண்டு துவக்கிய எஸ்.ஏ.பி. செட்டியார் தினசரி காலையில் குமுதம் ஆசிரியர் குழுவைக் கூட்டி பகவத் கீதையின் சுலோகம் ஒன்றை படித்து விளக்குவாராம். பிறகு அவர் தனது மேசைக்குச் சென்று நடிகைகளின் கவர்ச்சி படக் குவியலில் இருந்து அந்த வாரப் படத்தை தெரிவு செய்வாராம்.

எஸ்.ஏ.பி. செட்டியார்

இப்படி ஆன்மீகமும், லவுகீகமும் கலந்த காக்டெயில் பத்திரிகையான குமுதத்தின் உத்தியே சினிமா செய்திகளும், கவர்ச்சி படங்களும்தான். 90-களில் வெளிவந்த குமுதத்தின் அட்டைப் படம் ஒன்றில் வெள்ளை பனியன் அணிந்த நடிகை சிம்ரனின் இடையில் தீண்டாமைக் கிராமங்கள் எனும் ஒரு கட்டுரையின் தலைப்பை போட்டிருந்தார்கள். தீண்டாமை எனும் கொடிய சமூக ஒடுக்குமுறையை இப்படி ‘கவர்ச்சியாக’ காட்டும் ஆபாச தைரியம் எவருக்கு வரும்?

சுச்சிலீக்ஸ் விவகாரத்தின் போது மார்கெட் இழந்த நடிகையான கஸ்தூரி ஊடகங்கள் எப்படி நடிகைகளை தவறாக சித்தரிக்கின்றன, அத்தகைய ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் பொங்கினார். இன்று தீபாவை இழிவுபடுத்தும் குமுதத்திற்கு எதிராக மார்கெட் உள்ள நடிகைகள் ஒரு பத்து பேரை புறக்கணிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். சொன்னால் புறக்கணிக்கச் சொன்னவர்களை புரட்டி எடுத்து விடுவார்கள்.

ஆகவே கரகாட்டக்காரன் காமடியை மக்கள் ரசிப்பதை வைத்து குமுதத்தின் குற்றத்தை மக்களின் அதாவது ஆணாதிக்கத்தின் குற்றமாக எளிமைப்படுத்துவது சரியல்ல.

“கதவைத் திற காத்து வரட்டும்” இழி புகழ் நித்தியானந்தாவை தமிழக சந்தையில் இறக்கியதே குமுதம்தான். பிறகு நித்தியானந்தா பிடிப்பட்ட போது கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தாவை விமரிசிக்க – அதாவது அப்போதும் அதை ரஞ்சிதாவின் கவர்ச்சி கதையாக காட்ட – குமுதம் ஓடி வந்தது.

ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம். கருணாநிதியின் குடும்ப பெண்களை விதவிதமான காம்பினேஷனில் எஸ்.எஸ்.சந்திரன் ஆபாசமாக அர்ச்சிக்கும் போது ஜெயா குலுங்கி குலுங்கிச் சிரிப்பார். விளைவு சந்திரன் நாடாளுமன்றத்திற்கே தெரிவு செய்யப்பட்டார். குமுதத்திற்கு கிடைத்த பரிசு – சொத்துப் பிரச்சினையில் செட்டியார் வாரிசுகளை ஓரங்கட்டி அய்யங்கார் வகையறாக்களுக்கு உரிமை கிடைத்தது. அதன் பிறகு குமுதம் பத்திரிகை குழுமம் ஹாலிவுட்டின் தேர்ச்சி பெற்ற வரைகலை நிபுணர்களே திகைக்கும் வண்ணம் ஜெயாவுக்கு ஆதரவாக தினுசு தினுசாக திரைக்கதைகளை எழுதித் தள்ளியது.

விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம். இத்தகைய கற்பனை வளம் காமரூனுக்கோ, லூகாசுக்கோ இருக்காது என்று சவால் விடுகிறோம்.

இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991 -இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதத்தின் வரலாறு.

இருப்பினும் இப்படி ஜன்மபகையோடு குமுதம் கருணாதியை அடித்தாலும் உடன்பிறப்புக்கள் கோபம் வந்து புரசைவாக்கம் சென்று அய்யங்காரை உண்டு இல்லை என்று கேட்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க இருகட்சிகளிலும் இத்தகைய ஆபாசப் பேச்சுக்கள் அடிப்படையான பொதுக்கூட்ட பண்பு என்பதால் குமுதம் எந்த எல்லைக்கும் சென்று எழுதுகிறது.

2014 பாராளுமன்றத் தேர்தலின் போது குமுதத்தில் துக்ளக் சோவின் அனுபவத் தொடர் வந்து கொண்டிருந்தது. மோடி பிரதமராக முன்னிறுத்தப் பட்ட உடனேயே குமுதம் உரிமையாளரான வரதராஜ அய்யங்காரும், ஆசிரியரான கோசல்ராமும் குஜராத் சென்று மோடியை பேட்டி கண்டு வெளியிட்டனர். அதில் இவர்கள் குஜராத்தைப் பற்றியும், மோடியைப் பற்றியும் நாக்கூசாமல் பொய்யுரைத்தது போல தமிழிசை கூட பேசமாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

செட்டியாரின் வாரிசான ஜவஹர் பழனியப்பனிடமிருந்து குமுதத்தின் உரிமையை கைப்பற்ற நினைத்த வரதராஜனை கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் கைது செய்தது. அதனாலேயே அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவை திருப்திப் படுத்தவும் திமுகவை விதவிதமாக திட்டி எழுதியது குமுதம். ஜெயா செத்த பிறகு குமுதம் தன்னுடைய புரோக்கர் விசுவாசத்தை பாஜகவிற்கு சோலோவாக ஒப்பந்தம் போட்டிருப்பதால் கமலாலயத்தின் இயக்கத்தை ஆதரிக்கும் பொருட்டு கூட தீபாவை இப்படி ஆபாசமாக எழுதியிருக்கலாம்.

தற்போது மன்னார்குடி சசிகலா – தினகரன் கும்பலிடம் ஆட்சியும், கட்சியும் இருந்தால் ஆதாயம் என நினைக்கும் குமுதம், அதே போன்று அவர்களை அடக்க ஓபிஎஸ்-ஐ இறக்கும் பாஜகவையும் ஆதரிக்கிறது. எந்த திட்டம் வெற்றி பெற்றாலும் அதை முதலில் ஆதரிக்கும் மாமாத்தானம் தன்னுடைய தனமாக இருக்க வேண்டும் என்று துடிக்கிறது குமுதம்.

ஜெயலலிதாவுக்கு சொம்படித்த மற்றுமொரு பத்திரிகையான தி இந்துவும் கூட விதவிதமான திரைக்கதைகளை ஓரளவு எழுதியது. என்ன இவர்கள் கொஞ்சம் டீஸன்டான அடிமைகள் என்பதால் போற்றிப் புராணத்தில் கொஞ்சம் ‘கண்ணியத்தை’ கடைபிடித்தார்கள். குமுதமோ மலிவான அடிமை என்பதால் கூச்சப்படாமல் ஆபாச அர்ச்சனையை அவிழ்த்து விடுகிறார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த ஆதாயங்களுக்கு பிரதிபலனாக தீபாவை இப்படி பலிகொடுக்கிறது குமுதம். இப்படி தில்லானா வைத்தியே திகைக்கும் புரோக்கரான குமுதத்தை கண்டிக்க வேண்டுமென்றால் இந்த புரோக்கரை வைத்தும் அரசியல் செய்யும் அ.தி.மு.க மற்றும் பாஜக கும்பல்களை தண்டிக்க வேண்டும்.

– வேல்ராசன்

சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !

0

த்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடி, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடெங்கிலும் விவசாயப்போராட்டம் கிளர்ந்து எழுந்துவருகிறது. பச்சை பசேலென்று இருக்க வேண்டிய இந்திய கிராமங்கள் இன்றைக்கு களையிழந்து ரத்தக்களறியாக பிணங்களைச் சுமக்கும் மயானமாக மாறி வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் நாம், இந்திய கிராமங்களின் நிலைமையை உணர்ந்திருக்கிறோமா? விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை பேசியிருக்கிறோமா? கிராமங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எத்தகையது?

இந்தியா முழுவதும் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளை கட்டுரைகளாக எழுதிவரும் வேளாண் நிபுணர் தேவந்தர் சர்மா நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கை எங்கிருந்து வந்ததது? வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்கள் எப்படி கண்டுகொள்ளப்படாமல் ஒடிக்கப்பட்டிருக்கின்றன? கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவினாலும் பெருநகரங்களான சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மட்டும் அதிக பயன் பெறுவது ஏன்? என்பதை தன்னுடை புரிதலின் படி எழுதியிருக்கிறார். கட்டுரையாளின் பார்வைபடி நகரங்களில் நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு கிராமங்களின் நிலையை ஒப்பிடும் பொழுது ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்ற பார்வை கிடைக்கிறது. எனில் விவசாயிகள் அன்றாடம் செத்து மடிகிறார்கள் அது ஏன் நமக்கு உரைக்கவில்லை? விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும்? என்ற கோணங்களை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். படித்து பாருங்கள்.

நகரவாசிகளே ! இந்திய கிராமங்களை உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா ?

நான் அடிக்கடி பெங்களூருக்கு பயணம் செய்கிறேன். வருடத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை பெங்களூருக்கு செல்லும் பொழுது, கர்நாடக மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. பெருநகரங்களில் வாழ்க்கை வெறும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலவும் கடும்வறட்சியின் அறிகுறியைக் கூட காட்டுவதாக இல்லை. இந்த வருடம் கர்நாடக மாநிலத்தின் 176 தாலுகாக்களில், 139 -க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் மோசமாக, கடந்த பதினாறு வருடங்களில் பதினோறு வருடங்கள், கர்நாடகா வறட்சியின் பிடியில் இருந்திருக்கிறது.

வறட்சியால் மக்கள் புலம் பெயர்ந்து காலியாகக் கிடக்கும் கிராமங்கள்

பெங்களூருலிருந்து வெறும் இரண்டு மணிநேர பயண தொலைவில் இருக்கிறது ஆந்திர மாநிலத்தின் அனந்த்பூர் மாவட்டம். ஏப்ரல் 28, 2017 ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த அறிக்கை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது, 12 வயது சிறுவன் திவாகர் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு நுழையும் பொழுதே, ‘என் அப்பா திரும்பி வந்துவிட்டாரா?’ என்று கேட்கிறான். ‘இல்லை, அவர் அடுத்த மாதம் வருவார். வரும் பொழுது பெங்களூரூவிலிருந்து உனக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்’ என்கிறார் திவாகரின் உறவினர் ஈஸ்வரய்யா. வெறுப்படையும் திவாகர் தனது புத்தகப்பையை தூக்கி எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தனது மூன்று சக்கர சைக்கிளை எடுத்துக்கொண்டு காலியான தெரு ஓரமாக ஓட்டிச் செல்கிறான். அந்தத் தெரு முழுதுவமே பூட்டிய வீடுகளால் எல்லையற்று நீண்டிருக்கிறது.

ஆந்திராவின் அனந்த்பூர் மற்றும் இதர கிராமங்கள் எப்படி வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை வெளிக்கொணரும் பத்திரிக்கையாளர் ஹரிஷ் கிலாயின் கட்டுரை இந்திய கிராமங்களின் அவல நிலையை ஆழமாக படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் யாரும் இது போன்ற செய்திகளில் கவனம் செலுத்த விரும்புவதில்லை.

ஹரிஷ், அனந்தபூர் மாவட்டம் நல்லமடா மண்டலத்தில் உள்ள குட்டபல்லே கிராமத்தை ‘ஒரு பேய் நகரம்’ என்று எழுதுகிறார். பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு பூட்டியே கிடக்கின்றன. நீங்கள் இங்கு ஒன்று வயதானவர் நடந்து போவதையோ அல்லது தெருவில் குழந்தைகள் விளையாடுவதை மட்டுமே பார்க்க முடியும்.

அதிதி மாலிக் மற்றும் கீதிகா மந்திரியின் மற்றொரு அறிக்கை இதயத்தைப் பிழியும் கதைகளைச் சொல்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அற்ப வேலைகளைத் தேடி தங்களது பிள்ளைகளை யாருடைய பாதுகாப்பும் இன்றி விட்டுச் செல்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் கெரடிப்பள்ளி கிராமத்தில் உள்ள 12 வயது பழங்குடியினச் சிறுமி புக்யா சயமுலம்மா தனது இரு தம்பி தங்கைகளுடன் தன்னந்தனியாக வாழ்கிறாள். இவள் பக்கத்து கிராமத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்து 25 கிலோ அரிசியை சுமந்து வருகிறாள். சென்ற வருடம் குடியால் தன் தந்தையை இழந்த புக்யா, இப்பொழுது தன்னை மட்டுமல்லாது தன் தம்பி/தங்கைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். இது ஏதோ பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படக் காட்சி போன்று தெரியும். ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள்.

கடும் வறட்சியிலும் நீர் கேளிக்கை விளையாட்டுக்கள் ( வொண்டர்லா தீம் பூங்கா )

‘கெரேட்டிப்பள்ளியில் வாழும் மற்றுமொரு பதினைந்துவயது சிறுமி ரமாதேவி தனது பெற்றோர் வேலை தேடி கேரளாவிற்கு இடம்பெயர்ந்துவிட்டதால் தன்னந் தனியாகவே வாழ்கிறாள்’. சமயங்களில் தனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாக தெரிவிக்கிறாள் இச்சிறுமி. ஆனால் என் மனதை அரிக்கும் மிகப்பெரிய கேள்வி எதுவென்றால் வேலைக்காக தனது ஒரே மகளை விட்டுச் செல்லும் ரமாதேவியின் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் துன்பப்பட்டிருப்பார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு வழியில்லை. கண்டிப்பாக எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைகளை தன்னந்தனியாக விடமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். இது பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹோம் அலோன் (Home Alone) திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல! நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதாவது சிறுவேலை பார்த்து பிழைக்கலாம் என்று தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்திருக்கின்றனர். அனந்த்பூர் மாவட்டம் ஆறாவது வருடமாக தொடர்ச்சியாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.

கேரளா கடவுளின் தேசமாக இப்பொழுது அறியப்படுவதில்லை. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு 10 முதல் 15 பக்கெட் தண்ணீரைக் கொண்டே சமாளித்து வருகின்றனர். மே எட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் சாஜு பிலிப்ஸ் ‘அட்டப்பாடி தொடர்ந்து இரண்டாவது வருட வறட்சியை எதிர்நோக்கியிருப்பதை நமக்கு அறியத் தருகிறார். கேரளா கடந்த 15 வருடங்களில் மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. இருந்தபோதிலும் நீங்கள் திருவனந்தபுரம், கொச்சி அல்லது கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள எந்த பெரிய நகரங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தால் கேரளா வறட்சியில் பாதித்திருப்பதாகவே உங்களுக்குத் தெரியாது.

ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகேந்திர யாதவ் “மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மாநில அரச இயந்திரத்தை முடக்கியிருக்கிறது. இதனால் இம்மாநிலத்தின் விவசாயிகளின் வாழ்க்கை பேரழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது” என்று சாடுகிறார். இவர் மேலும் கூறும் பொழுது ‘கால்நடைகளின் அழிவு தமிழ்நாட்டில் பஞ்சம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறி’ என்கிறார்.

40,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் நடத்திய பரவலான போராட்டம் ஊடகங்களில் நல்ல கவனத்தைப் பெற்றாலும் தேசம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதில் தோற்றுவிட்டது. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், வேளான் வானியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். பன்னீர்செல்வம் IndiaSpend இணையத்திற்கு அளித்த பேட்டியில் ‘இது எதிர்பாராத சூழ்நிலை’ என்கிறார். இவர் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வறட்சி பாதித்திருப்பதாகக் கூறுகிறார். தற்பொழுது தமிழ்நாடு கடந்த 140 வருடங்களில் சந்தித்திராத வறட்சியை சந்தித்து வருகிறது. இருப்பினும் நீங்கள் சென்னை அல்லது கோவை மாவட்டம் அல்லது ஏதாவது தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கு சென்றால் நகரத்தை விட்டு வெறும் இரண்டு கிலோ மீட்டர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதை உணர முடியாது.

எனக்கு இது மிகவும் புதிரான ஒன்றாக படுகிறது. வறட்சி ஒட்டுமொத்த பகுதிகளையும் பாதிக்கிற பொழுது ஏன் கிராமங்கள் மட்டும் வறட்சியின் கொடூரத்தை அனுபவிக்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா? ஏன் வறட்சி பெருநகரங்களையும் நகர்புறங்களையும் அரிதாகவே பாதிக்கிறது? கடவுள் கண்டிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் வறட்சி தாக்கும்படி ஓரவஞ்சனை செய்துவிடமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மேலும் தாங்கள் செய்யாத தப்புக்காக கடவுள் கிராமவாசிகளை மட்டும் தண்டிப்பார் என்றும் நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். அப்படியானால் வறட்சியின் பாதிப்புகள் பாரதூரமாக கிராமப்புற மக்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?

லட்டூர் நகரம் (குஜராத்-கட்ச் பகுதி) விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் கடும் வறட்சி வந்தாலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை இருக்காது. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்ல, வறட்சி பல பிரச்சனைகளை கொண்டுவருகிறது. ஆனால் இவை யாவுமே நகரங்களில் உணரப்படுவதில்லை. இதற்கு காரணம் ‘வளர்ச்சியின்’ போக்கில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு தான். என்னுடைய புரிதலின் படி ‘வளர்ச்சி’ பெருநகரங்களை மட்டும் வறட்சியை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரத்திற்கும் கிராமத்திற்குமான பாரபட்சம் அப்பட்டமாக தெரிகிறது. அனைத்து முயற்சிகளும் நகர்புற குடிகள் வறட்சியின் தீவிரத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே எடுக்கப்படுகின்றன.

கிராமங்களில் ஓடும் ஆறுகளும் ஓடைகளும் வறண்டு போகலாம், ஆனால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நகரங்களில் காலை மாலை சில மணி நேரமாவது குழாய்த் தண்ணீர் வந்துவிடுகிறது. டில்லிக்கு தேவைப்படும் தண்ணீர் ஹிமாச்சல பிரதேசம் ரேணுகா அணைக்கட்டிலிருந்து எடுக்கப்பட்டாலும் மும்பையின் குடிநீர் வழங்கல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டாலும் தங்களது பெரு நகர வாழ்க்கைக்கான விலையை பெருவாரியான கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்து தான் தருகின்றனர் என்பது அறியப்படாமல் இருக்கிறது.

இது தான் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்திய கிராமப்புறங்களின் யதார்த்த நிலையோடு ஏன் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு முதன்மையான காரணம். இவர்கள் தங்களது உலகங்களில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரத்தைவிட்டு சில மைல் தொலைவில் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.

நல்லது! ‘குடிமைச் சமூகம்’ நம்மை இந்தப் பாதையில் தான் வழிநடத்துகிறது. செல்ஃபி எடுக்கும் உலகத்தில் சுயநலமாக இருப்பது அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

-தேவந்தர் சர்மா,

பின் குறிப்பு : கடும் வறட்சி நிலவும் மகராஷ்ட்ரா மாநிலத்தில் ரியஸ் எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு நாளொன்றுக்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர். நீதிமன்றங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது, கோக்கோலாவிற்கு நாங்கள் உபரி நீரைதான் தருகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூசாமல் பொய்யுரைப்பது, சிப்காட் போன்ற தொழிற்கூடங்களில் அனைத்து நிறுவனங்களும் தண்ணீர் தரும் பொழுது பெப்சிக்கு மட்டும் ஏன் தரக்கூடாது என்று இந்தியாவின் தாராளமயக் கொள்கையின் கொடூரத்தை நீதிபதியே தன் வாயால் போட்டுடைப்பது என்று அனைத்து விசயங்களையும் இதனுடன் கோர்த்து பாருங்கள். வளர்ச்சியின் கபடவேடம் புரியும்! நகரங்கள் மட்டுமல்ல இந்த அரசு ஒரு சிலருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும்!

தமிழாக்கம் : தமிழ்வேல்
மூலக்கட்டுரை : How come mega cities like Bangalore never give an inkling of a severe drought in its own backyard?

புதிய ஜனநாயகம் – ஜூன் 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் ஜூன் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே!
உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான்.

2. ஐ.ஐ.டி. யில் மாட்டிறைச்சி விழா!
அக்லக் கொலைக்கும் சூரஜ் தாக்குதலுக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை. இது தமிழகம் என்ற ஒரு வேறுபாட்டைத் தவிர.

3. ஐ.டி. ஆட்குறைப்பு: கனவு கலைகிறது நிஜம் சுடுகிறது!
வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைக்கிறது, ஐ.டி. துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.

4. கொம்பில் சிக்கிய கோமாளி
கால்நடைச் சந்தைகளை முறைப்படுத்துவது என்ற பெயரில் மோடி அரசு அறிவித்திருக்கும் விதிகள், கோமாதாவை ” இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கும்.

5. அ.தி.மு.க. அம்மா அரசு: ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம்!
அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை

6. சமஸ் வழங்கும் இட்டிலி உப்புமா!
சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள் யாரென்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

7. நீட் தேர்வு: வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம்!
தமிழக மாணவர்களின் உரிமைகளைப் பறித்ததைத் தாண்டி, தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையையோ, முறைகேடுகளையோ நீட் தேர்வு தடுத்துவிடவில்லை.

8. தோற்றுப்போன நீதித்துறை!
வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை

9. சகரான்பூர்: பல்லிளிக்கிறது ஆதித்யநாத்தின் தாக்கூர் சாதிவெறி!
யோகி ஆதித்யநாத் நல்லவர், வல்லவர், திறமைசாலி என்று பில்டப் கொடுக்கிறது நம்மூர் ஆதித்தனார் பத்திரிகையான தினத்தந்தி. அங்கே, ஆதித்யநாத்தின் முகமூடியைக் கிழிக்கிறது தலித் மக்களின் போராட்டம்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்

0

இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.

இப்போது வரை கல்வியின்மை மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றால் அவர்களது திறமை உணரப்படாமலேயே போய்விடுகிறது.

அல்ஜஜீராவின் இந்த ஆவணப்படத்தில் 101 கிழக்கு (101 East) குழு ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள பிரகாசமான குழந்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் வழிகாட்டி மற்றும் கொடையாளர்களை பின்தொடர்கிறது.

அவர்கள் சரியான வாய்ப்பும், பள்ளிக் கல்வியும், ஆதரவும் கிடைக்கும் போது இந்த “தீட்டப்படாத வைரங்கள்” இறுதியாக தாங்கள் பிரகாசிக்கும் வாய்ப்பை எப்படி பெறுகிறார்கள் என நமக்கு காட்டுகின்றனர்.

நன்றி : அல்ஜசீரா

சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !

6

கோமாதாவைப் பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வந்த பார்ப்பன பாசிஸ்டுகள் இப்போது கிறுக்கு முற்றிக் கூரைக்குக் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.

கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” விதிகள் என்ற பெயரிலான விதிகளை, மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.  “விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. “பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது” என்று மோடி அரசு கூறியது எப்படி முழுப்பொய்யோ, அதேபோல இதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறிய, நடுத்தர விவசாயிகள், சிறிய பால் வியாபாரிகள், சிறிய மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்கள், பால் விற்பனை, தோல் தொழில், இறைச்சித் தொழில், மாட்டு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் – ஆகிய அனைவரும் தமது வாழ்வாதாரங்களை இழப்பர். இந்த விதிகள்  இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சியை உள்நாட்டுச் சந்தையிலிருந்து முற்று முழுதாக ஒழித்துக்கட்டிவிடும். பால் மற்றும் இறைச்சித் தொழில் முழுவதையும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பால் மற்றும் இறைச்சித் தொழில் நிறுவனங்களின் பிடிக்குக் கொண்டு சென்று விடும்.

இது ஒரு பல நோக்குத் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இணையான இந்தப் பேரழிவு நடவடிக்கை தனது ஆட்சியின் மூன்றாண்டுத் தோல்வி குறித்த விவாதத்திலிருந்து நாட்டைத் திசைதிருப்பப் பயன்படும் என்று மோடி கணக்குப் போட்டிருக்கக்கூடும். இருப்பினும், இந்த அறிவிக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் ஆத்திரம், அந்தக் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விட்டது. தென் மாநிலங்களிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் வெடிக்கும் எதிர்ப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்புகள், பா.ஜ.க.வுக்கு உள்ளேயே தோன்றியிருக்கும் எதிர்ப்புகள், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் மாடுகளை விற்க முடியாததால் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோபம் ஆகியவற்றையெல்லாம் கண்ட மோடி அரசு பம்முகிறது. “பார்ப்பனியம்” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசத் தயங்கியவர்களையும் “பார்ப்பனிய எதிர்ப்பு” பேசுமாறு தூண்டியிருக்கிறது மோடி அரசு.

பார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே!

பார்ப்பனியம் என்பது எல்லாக் காலங்களிலும் ஒரு அழிவு சக்திதான். அதற்கும் உற்பத்தி நடவடிக்கைக்கும் என்றைக்கும் தொடர்பு இருந்ததில்லை. அதன் காரணமாகவே ஆதிக்கத் திமிரும் அடிமுட்டாள்தனமும் அதனிடம் சரி விகிதத்தில் கலந்தே இருப்பதை நாம் காண்கிறோம். அன்று வேள்வி என்ற பெயரில் கால்நடைகளை வகைதொகையின்றி அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது பார்ப்பன மதம். அதன் மீது வெறுப்புற்ற மக்களிடையே பவுத்தம் செல்வாக்கு பெறவே, தனது சமூக மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு, மாட்டுக்கறியைத் துறந்த பார்ப்பனர்கள், மாட்டை மாதாவாக்கி, மாடு தின்போரைத் தீண்டத்தகாதவர் ஆக்கினர்.

விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டிற்குப் பதிலாக மாட்டை முன்தள்ளி, இந்து – முஸ்லிம் பிளவை விதைத்து பிரிட்டிஷாருக்கு உதவினர் இந்து வெறியர்கள். தற்போது, இந்த விதிகள் மூலம் மாடு வளர்ப்போர், வெட்டுவோர், தின்போரை மட்டுமின்றி, கோமாதாவையும் “இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கி வருகிறது சங்கப் பரிவாரம்.

கோமாளிகளா, கொடூரர்களா?

சங்கப் பரிவாரம் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரம் என்பது உலக முதலாளித்துவம் வரையறுத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் பயபக்தியுடன் நின்றபடி, பார்ப்பனியம் ஆடுகின்ற கோரத் தாண்டவம். எனவே, சூழ்ச்சியும் அபத்தமும் அதில் கலந்திருப்பதும், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சுவை அதில் மேலோங்குவதும் தவிர்க்கவியலாது.

உங்களால் நம்ப முடிகிறதா? ஆண் மயிலின் கண்ணீர்த்துளியை விழுங்கிப் பெண் மயில் கருத்தரிப்பதாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சாதிக்கிறார். மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்துகிறது குஜராத் அரசு. ரூ.500, 1000-த்தைச் செல்லாமலாக்கிவிட்டால் பொருளாதாரம் புயல் வேகத்தில் வளரும் என்று பில்லிசூனியத்தைப் போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் மீது ஏவுகிறார் ஒரு பிரதமர். மொத்தத்தில் சங்கப் பரிவாரத்தினர் எனப்படுவோர், முட்டாள்தனமும் வக்கிரமும் ஆதிக்கத் திமிரும் கலந்த தெலுங்கு சினிமா வில்லனைப் போன்ற விசித்திரமான பிராணிகள்.

அதனால்தான், கோமாதா சென்டிமென்டை வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சங்கப் பரிவாரம், பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து விட்டது. “முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் ஆசையில், பித்தம் தலைக்கேறிய இந்தக் கும்பல், அக்லக்கைக் கொன்ற கத்தியை உருவி, “இந்து” விவசாயிகளின் வயிற்றில் செருகி விட்டது.

விதிகளின் முதல் பலி விவசாயி!

மோடி அரசு தற்போது உருவாக்கியிருக்கும் விதிகள் முதலில் விவசாயிகளைத்தான் குறி வைத்துத் தாக்குகின்றன. “மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி தனது மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது. வாங்குபவரும் வெட்டுக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அடிமாட்டுக்கு விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம்” என்கிறது மோடி அரசு. மேலும் மாட்டை வாங்குபவர், “அந்த மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரிடமும் விற்க மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். மீறினால், அதுவும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

வேலையிழந்த மாட்டு வியாபாரிகள்

இந்தப் புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கூறியிருக்கும் காரணங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரகத்தைச் சேர்ந்தவை. மாட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாடுகள் அடி மாடுகளாக விற்பனை செய்யப்படுவதால், விவசாயத்துக்கு மாடு இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, ஆரோக்கியமற்ற மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதால், அந்த இறைச்சியைச் சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதனால்தான் மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டுக்கு விற்பதையும் வாங்குவதையும் தடை செய்திருப்பதாகக் கூறுகிறது மோடி அரசு.

மாடு இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது அண்டப்புளுகு. விவசாயம் சார்ந்த பணிகளில் மாடுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே உண்மை. மாட்டின் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதால், அது பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகாததாகிவிட்டது. ஏரில் பூட்டுவது, நீர் இறைப்பது, வண்டி இழுப்பது போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45% அளவுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று அது வெறும் 5% ஆகக் குறைந்து விட்டது.

விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்த அரசு. பாசனப் பராமரிப்பை அரசு புறக்கணிப்பது, வங்கிக் கடன் வழங்க மறுப்பது, உள்ளீடு பொருட்களின் கொள்ளை விலை, விளைபொருளுக்கு நியாயவிலை மறுப்பு போன்ற பல காரணங்களால்தான் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன.

விவசாயத்தின் அழிவையும் மீறிக் கிராமப்புற மக்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருப்பவை கால்நடைகள்தான். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் 1000 பேரிடம் 1586 மாடுகளும், ஏழை விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 1518 மாடுகளும், நடுத்தர விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 2575 மாடுகளும் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால், நாட்டில் இருக்கும் 70% கால்நடைகள், 67% ஏழை விவசாயிகளிடம் உள்ளன.

பயன்படாத மாட்டைப் பராமரிக்க முடியுமா?

ஒரு மாட்டின் ஆயுட்காலம் 15 முதல் அதிக பட்சம் 25 ஆண்டுகள். நாட்டுப் பசுமாடுகளானால் சராசரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வெளிநாட்டுப் பசுக்களானால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவை பால் தருவதில்லை. எனவே பால் வற்றிப்போன மாடுகளை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டுமென்றால், விவசாயி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டும். ஆண்டுக்கு சுமார் 40,000 ரூபாய்.

விற்க முடியாமல் கைவிடப்பட்ட மாடுகள் தெருவோரக் கழிவுகளைத் தின்னும் அவலம். (கோப்புப் படம்)

இவையே காளைக்கன்றுகளாக இருந்தால், அவற்றை உழவுக்கும் பயன்படுத்த முடியாத இந்தக் காலத்தில், அந்தக் காளைகளை கடைசி காலம் வரை விவசாயி பராமரிக்க வேண்டும். ஒரு பசுமாடு ஈன்று தரும் சுமார் 8 கன்றுகளில் 4 காளைக்கன்றுகளாக இருக்குமாகையால், அவற்றை எந்த விவசாயியாவது பராமரிக்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். ஆரோக்கியமான மாடுகளை விற்கக் கூடாது என்ற தடையின் மூலம் பயன்படாத இந்தக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை விவசாயிகளின் மீது சுமத்தியிருக்கிறது மோடி அரசு.

உழைத்து ஓய்ந்து போன முதியவர்களையும் உழைப்பதற்குத் தயாராக இருந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களையுமே பராமரிக்க முடியாத நாட்டில், பால் தராத பசுவை பத்து ஆண்டுகளுக்கும், காளை மாட்டை இருபது ஆண்டுகளுக்கும் பராமரிக்க வேண்டும் என்று கூறுவது விவசாயிகளின் குடும்பத்துக்கே விதிக்கப்படும் ஆயுள் தண்டனையல்லவா?

“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாபாரி விற்பனைக்கான ஆதாரத்தை வருவாய்த்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர், மாட்டுச்சந்தையைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்திருக்கும் கமிட்டி போன்ற 5 இடங்களில் தரவேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயி ஒரு மாட்டை விற்பதற்கு இத்தனை இடங்களிலும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுத் தடை அமலில் இருந்தபோது போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் காட்டிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகள் பன்மடங்கு கொடியவை. இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்பதும் விற்பதும் வாங்குவதும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதைப் போன்ற ஒரு கிரிமினல் நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுவிடும்.

அதிகாரிகள் என்ற அட்டைகள் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இரத்தக் காட்டேறிகள் “பசுப் பாதுகாவலர்கள்” என்ற பெயரில் எல்லா ஊர்களிலும் முளைப்பார்கள். தங்களுக்கு மாமூல் தரவில்லை என்றால், போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டி, விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிப்பார்கள். தற்போது முஸ்லிம்களுக்கு நடந்து வருவது, நாளை இந்து விவசாயிகளுக்கும் நடக்கும். அந்த விதத்தில், இந்த அறிவிக்கையை மோடி அரசின் மிக முக்கியமான “மதச்சார்பற்ற நடவடிக்கை”யாக நாம் கருதலாம்.

முஸ்லிம்கள், தலித்துகளை அழிவுக்குத் தள்ளுவதே நோக்கம்!

இந்த புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறும் இரண்டாவது காரணம், “மக்களுக்குத் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவது” என்பதாகும். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக் என்ற முதியவரை வெட்டிக் கொன்ற கட்சி, “அக்லக்கைப் போன்றவர்கள் கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டுவிடக் கூடாதே” என்று கவலைப்படுகிறதாம்! நம்புகிறீர்களா?

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலையிழந்து நிற்கும் உ.பி. மாநில இறைச்சிக்கூடத் தொழிலாளர்கள்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது யாரும் அறியாத இரகசியமல்ல. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டுக்கறி தடை வந்த பிறகு, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குரேஷி என்ற சாதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் தலித் மக்களுமாக பல இலட்சம் பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு நாடு முழவதும் அம்மக்களை ஆளாக்கி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற வக்கிரமான நோக்கம் மோடி அரசின் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது.

இப்போது, எதிர்ப்பு அதிகரித்தவுடன்,  “இறைச்சித் தொழிலைக் குற்றப்படுத்துவது எமது நோக்கமல்ல, மாட்டுச் சந்தையில்தான் அடிமாடுகளை விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறோம். அதை இறைச்சிக்கூடத்தினர் விவசாயிகளிடம் அல்லது பண்ணைகளிடம் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்” என்று சமாளிக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்.

சந்தைகள் எனப்படுபவை, கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளையும் விளை பொருட்களையும் விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக உருவாக்கப்பட்டவை. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும், ஓரளவேனும் நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பையும் சந்தைகள்தான் வழங்குகின்றன. இந்த வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் விவசாயிகள், மாடு வாங்குபவர்கள், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக்கூடத்தினர் உள்ளிட்ட அனைவருடைய தொழில் செய்யும் உரிமையையும் பறிக்கிறது மோடி அரசு.

மாட்டுக்கறி தடைக்கெதிராகப் போராடும் புமாஇமு அமைப்புத் தோழர்கள்

ஒருவேளை, இறைச்சிக் கூடத்தினர் விவசாயியிடம் நேரில் சென்று கால்நடையை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தாலும், அவர்களை மறித்துத் தாக்கவும் மாமூல் வசூலிக்கவும் அதிகார வர்க்கமும் இந்து அமைப்புகளின் காலிகளும் கூட்டணி அமைத்துத் தயாராக இருப்பர். அந்த வகையில் இந்துத்துவ கிரமினல்களின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

அதேபோல, “சந்தையில் மாடு வாங்குபவர், அந்த மாட்டை வேறு மாநிலத்துக்கு விற்க முடியாது என்றும், அப்படி விற்க வேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் புதிய விதி கூறுகிறது. மாட்டுக்கறிக்கு தடை இல்லாத கேரளம், வடகிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்குத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் வணிகம் செய்வதற்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 301, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் உரிமையை நேரடியாகவே பறிக்கிறது.

சந்தை – சுத்தம் – தரம் – புனிதம்!

“சந்தை” என்ற சொல்லுக்கு ஒரு கிரிமினல்தனமான விளக்கத்தை இந்த அறிவிக்கை தருகிறது. இதன்படி சந்தை என்பது வழக்கமான மாட்டுச் சந்தை மட்டுமல்ல, “இறைச்சிக் கூடத்தின் வாயிலில் கால்நடைகள் நிறுத்தப்படும் இடம் (lairage), இறைச்சிக்கூடங்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் (vehicle stand), கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் (animal pounds)” உள்ளிட்ட அனைத்தையும் “சந்தை” என்ற சொல்லுக்கான விளக்கமாகக் கூறுகிறது இந்த விதி. இந்த விளக்கத்தின்படி மாட்டிறைச்சிக் கூடமே சந்தை என்ற சொல்லுக்குள் அடக்கப்படுவதால், எல்லா மாட்டிறைச்சிக் கூடங்களையும் எந்த நேரத்திலும் சட்ட விரோதமானவையாக்க முடியும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.

அதேபோல, “தரமான இறைச்சி” என்பதும் மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. “தரப்படுத்துதல்” என்ற பெயரில் உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சிறு உணவகங்கள், தெருவோர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு FSSAI  (Food Safety and Standards Authority of India – உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) என்ற மைய அதிகாரத்தின் மூலம் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளும் அடக்கம்.

தெருவோரக் கடைகளுக்கு உணவுத்தரம் பற்றி “சொல்லிக்கொடுக்கும்” பொறுப்பை கோகோ கோலா நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் மோடி. உணவுச்சந்தையை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மோடியும் சந்திக்கும் புள்ளி இது. தரமற்ற மாட்டிறைச்சிக் கூடங்களைப் “போட்டுக்கொடுக்கும்” பொறுப்பை ஜல்லிக்கட்டு புகழ் பீட்டா (PETA) ஏற்றிருக்கிறது. 30,000 சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்கள் FSSAI இன் உரிமம் இல்லாமல் நாட்டில் இயங்குவதாக பீட்டா அறிவித்திருக்கிறது. இறைச்சிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்கபரிவாரமும் பீட்டாவும் இணைகின்ற புள்ளி இது.

“புனிதமற்றது” என்று பார்ப்பனியம் கருதுகின்ற மாட்டிறைச்சி, மதச்சார்பற்ற மொழியில் “தரமற்றது” என்று முதலில் முத்திரை குத்தப்படுகிறது. பிறகு மோடி அதனைச் “சட்டவிரோதமானது” ஆக்குகிறார். தரத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கான அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதன் மூலம், “பார்ப்பனியச் சுத்தம் – பன்னாட்டுத் தரம்” என்ற இரண்டையும் சமூகத்தின் மீது திணிக்கிறது மோடியின் அரசு.

சுத்தம், தரம் என்ற பெயரிலான தாக்குதலை எல்லா இறைச்சிக்கடைகள் மீதும் நடத்த முடியும். “ராமேசுவரம் போன்ற புனித நகரங்களில் இறைச்சிக் கடைகளே இருக்கக் கூடாது”, “கோயில்களுக்கு அருகே இறைச்சிக்கடை கூடாது” என்பன இந்து முன்னணியின் கோரிக்கைகள். “இந்துப் பண்டிகை, ஜெயின் பண்டிகை நாட்களில் இறைச்சிக் கடைகளை மூடவேண்டும்” என்பது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் நகரங்கள் இந்துப் பகுதி – முஸ்லிம் பகுதி என்று பிரிக்கப்பட்டு விட்டன. இந்துப் பகுதியில் அசைவ உணவுக்கடைகளே கிடையாது. அசைவ உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் முஸ்லிம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அங்கே அங்கீகரிக்கப்பட்ட பொது ஒழுங்காக நிலைநாட்டப்பட்டு விட்டது.

இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும், மத நம்பிக்கைக்காகப் பலியிடுவதும் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பிராணிகளைத் துன்புறுத்தும் குற்றங்கள் ஆகாது. தற்போது மிருகவதை சட்டத்தின் கீழ் சந்தையில் மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்திருப்பதன் மூலம், இறைச்சித்தொழிலையே “விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றமாக” காட்டுகிறது மோடி அரசு. இது சட்டப்படி செல்லத்தக்கதே என்ற நிலைமை ஏற்படுமானால், இதே அடிப்படையில் நாளை ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஒதுக்குவதும், அவற்றின் மீது கண்காணிப்பை ஏவுவதும், தேவைப்படும்போதெல்லாம் குற்றப்படுத்துவதும் சாத்தியமாகிவிடும்.

மாநில அதிகாரத்தைப் பறிக்கும் குறுக்குவழி!

அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனைத் தடுக்கவோ, முறைப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல கால்நடைச் சந்தைகளையோ, காய்கனிச் சந்தைகளையோ முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுடையது. இதில் மைய அரசு தலையிட இயலாது.

எனினும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலத்தின் உரிமைகளையும் கள்ளத்தனமான முறையில் பறிப்பதையே தனது வழிமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தூசுக்குச் சமமாகக் கருதித் திணிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு, மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக நிதிமசோதாவாக திணிக்கப்படும் ஆதார் சட்டம் ஆகியவற்றைப் போன்றே, குறுக்கு வழியில் “விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தின்” கீழ்தான் (Prevention of cruelty to animals act, 1960) “மாட்டுச்சந்தைகளை நெறிப்படுத்தும்” இந்த விதிகளையும் அறிவித்திருக்கிறது மோடி அரசு. மிருகவதையைத் தடுப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் வழங்குவதால், இந்த சந்து வழியாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள்ளே நுழைந்திருக்கிறது மோடி அரசு.

“கொம்பு சீவக்கூடாது, சாயம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது” – என்று பல நிபந்தனைகளைப் போடுகின்றன மோடியின் புதிய விதிகள்.

“இந்த விதிகளை மீறியதாக அதிகாரிகள் கருதினால், மாட்டைப் பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்புவார்கள். வழக்கு முடியும் வரை மாட்டின் பராமரிப்புக்கான செலவுக்கு மாட்டின் உடைமையாளர்கள்தான் பொறுப்பு. மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டாலும், மாட்டின் உரிமையாளர் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது”.

“மேற்கூறிய விதிகளுக்கு முரணாக, வாகனங்களில் மாடுகளை அனுப்பினால், அந்த வண்டியில் உள்ள மாடுகளை விற்றவர்கள், வாங்குபவர்கள், வாடகை வண்டியின் உரிமையாளர், இவற்றில் சம்மந்தப்பட்ட தரகர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கு முடியும் வரை மேற்படி மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும். வண்டியும் மாடுகளும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும். மேற்படி விதிகளில் எது ஒன்றை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைகள் அல்லது விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

“நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும்” என்ற தனது நோக்கத்தை பல மாநிலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனால்தான் இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. “இந்த விதிகள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு முரணானவை” என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள். “இந்த விதிகளுக்கு கட்டுப்படமாட்டோம்” என்று கேரள, புதுச்சேரி, கர்நாடக, மே.வங்க முதல்வர்கள் அறிவித்திருக்கிறார்கள். மோடி அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டம்தான் அடிக்கொள்ளி!

ஆனால், அரசியல் சட்டத்தின் துணை கொண்டே இந்த விதிகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணுவதும், அதற்கு நீதிமன்றத்தை நம்புவதும் அறிவுக்குகந்த நடவடிக்கைகள் அல்ல. இந்திய அரசியல் சட்டமென்பது இந்துத்துவ பாசிசத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். “கால்நடை பராமரிப்பு அறிவியல் வழியில் அமைய வேண்டும்” என்றும், “பசு மற்றும் அதன் கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்படவேண்டும்” என்றும் இரு முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் கூறுகின்ற அரசமைப்பின் உறுப்பு 48 தான், நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டங்களுக்கான அடிக்கொள்ளி.

பார்ப்பன மத நம்பிக்கையான “பசுவதைத் தடை”யை, “கால்நடை செல்வத்தைப் பேணுதல்” என்ற மதச்சார்பற்ற மொழியில் திணித்திருக்கின்ற இந்தக் கயமையை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே பல உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழிகாட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் பசுவதை தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (குரேஷி) வழக்கில், “பயன்படாத மாடுகளை வெட்டத் தடைவிதிக்கவியலாது” என்று 1958-இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 2005-இல் இன்னொரு (மிர்சாபூர்) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. “பயன்தராத மாடு என ஒன்று கிடையாது” என்றும், “சாணி, மூத்திரத்தை விற்றே விவசாயி கணிசமாகச் சம்பாதிக்கலாம்” என்றும் அரியதொரு கண்டுபிடிப்பை அந்த தீர்ப்பு வெளியிட்டது.  இந்த அரசியல் சாசன அமர்வின் அறிவுக்கும், ராஜஸ்தானின் மயில் நீதிபதியுடைய அறிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அந்தத் தீர்ப்பைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். இது குறித்த கட்டுரைகளை முந்தைய புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமைகள் அடிப்படையற்றவை. சட்டவிரோதமாகவும் மரபுகளை மீறியும் பண மதிப்பழிப்பை மக்கள் மீது ஏவினார் மோடி. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமையும் பறிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை. “ஆதார் கட்டாயமில்லை” என்று சொல்லிக்கொண்டே அதனை எல்லா முனைகளிலிருந்தும் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தெரிந்தும் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையையும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் உரிமையையும் துச்சமாக மதித்து அடாவடியாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் “சிங்கத்தோடு விளையாடுகிறீர்களா” என்று தனது மேட்டிமைத்தனத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியது.

தமிழக மக்களின் எழுச்சிதான் அந்த ஆணவத்தை வீழ்த்தியது. பார்ப்பன பாசிசம் என்பது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்ற வெறும் பண்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது, நாட்டு நலனுக்கு எதிரானது, மக்களின் ஒற்றுமக்கு எதிரானது. இதை மக்கள் சொந்த முறையில் புரிந்து கொள்ளத்தக்க வாய்ப்பை இந்த அறிவிக்கையின் வாயிலாக வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இது ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று.

-மருதையன்

புதிய ஜனநாயகம், ஜூன் 2017

**********

பெட்டிச் செய்தி : கௌரி மௌலேகி – யார்?

“நாங்களாக இந்த அறிவிக்கையை வெளியிடவில்லை. கௌரி மௌலேகி என்ற பெண்மணி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையின்படிதான் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறது மோடி அரசு. இந்த நாடகம் எப்படி அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

கௌரி மௌலேகி

2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் கௌரி மௌலேகி ஒரு மனு தாக்கல் செய்தார். “நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கதிமாயி திருவிழாவில் பலியிடப்படுவதற்கு இலட்சக்கணக்கான எருமைகள் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்படுவதால், அதனைத் தடுக்க உத்தரவிடவேண்டும்” என்பது மனு.

இதனை எப்படித் தடுப்பது என்று ஆலோசனை கூறுமாறு “சஷஸ்திர சீமா பால்” என்கிற பெயரிலான நேபாள் எல்லையில் பணியாற்றுகின்ற ஆயுத போலீசு படைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன் இயக்குநரான பன்ஷிதர் ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, “நேபாளத்துக்கு எருமை கடத்துவதைத் தடுப்பது எப்படி” என்பதோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், “இந்திய மாட்டுச் சந்தைகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவது, இறைச்சிக்காக விற்கப்படுவது ஆகியவற்றைத் தடுப்பதற்கும்” தனது பரிந்துரைகளை அளித்தது. அந்தப் பரிந்துரையைத்தான் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை என திரிக்கிறது மோடி அரசு. மேற்படி பரிந்துரையை வழங்கியதற்காக, மேனகா காந்தியின் “பீப்பிள் பார் அனிமல்ஸ்” என்ற என்.ஜி.ஓ., சர்மாவுக்கு விருது அளித்து கவுரவித்தது.

இதற்கிடையில் கதிமாயி கோயிலில் பலியிடுதலைத் தடை செய்து விட்டதாக அந்தக் கோயில் நிர்வாகமே 2015-இல் அறிவித்துவிட்டதால், எருமை கடத்தல் பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டு கடத்தலுக்குச் சட்டமில்லை. ஆனால், நேபாளத்தைக் காட்டி உள்நாட்டு மாட்டுச்சந்தை முடக்கப்பட்டுவிட்டது.

கௌரி மௌலேகி, தனது இணையப் பக்கத்தில் “கோரட்சக்”குகளைப் புகழ்கிறார். “மாட்டுக்கறி பணம் பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுவதாக” ஒரு புதுப்புரளியைக் கிளப்பி, மோடி அரசின் அறிவிக்கையை எதிர்ப்பவர்களை மிரட்டுகிறார். “பயனற்ற மாட்டுக்கு அதை வளர்ப்பவன்தான் பொறுப்பேற்க வேண்டும். முடியாவிட்டால் தொழிலை மாற்றிக்கொண்டு போகட்டும்” என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார்.

கௌரி மௌலேகி யார் தெரியுமா? இவர் மேனகா காந்தி நடத்திவரும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற என்.ஜி.ஓ.-வின் டிரஸ்டி. அதே நேரத்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கு ஆலோசகர் என்ற அரசு பதவியிலும் இருப்பவர்.

இதைத்தான் “யாரோ ஒரு பெண் போட்ட வழக்கு” என்கிறார்கள் பாரதிய ஜனதா யோக்கியர்கள். பார்ப்பன பாசிசத்தின் “வலைப்பின்னல்” இந்த அரசமைப்பு முழுவதும் ஊடும் பாவுமாக எப்படிப் பரவியிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அரியலூர் : மீனாட்சி இராமசாமி கல்லூரியா ? RSS-ன் பயிற்சி கூடாரமா ?

2

  • ஜூன் 10 , 11 – அரியலூர் மண்ணை கலக பூமியாக்க RSS இந்து முன்னணி கொலைகார கும்பலின் இரண்டு நாள் பயிற்சி முகாம் !
  • விவசாயிகளை நிர்வாணமாக்கியவர்கள் NEET Exam , மீத்தேன், கெயில், மீனவர் படுகொலை, காவிரி பிரச்சினை என அனைத்திற்கும் காரணம் RSS
  • MRC கல்வி நிறுவனமா ?
    RSS கூடாரமா ?
    MRC கல்லூரியை புறக்கணிப்பீர் !

ரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் கிராமத்தில் செயங்கொண்டம் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மீனாட்சி இராமசாமி கல்லூரி. இயல்பாகவே தனியார் கல்லூரிகள் என்பது உழைக்கும் மக்களை சுரண்டி தின்னும் கழுகு கூட்டமாகும். இதில் உச்ச நிலையில் உள்ளது மீனாட்சி இராமசாமி(MRC) கல்லூரி.

கட்டண கொள்ளை, தலித் மாணவர்களுக்கு கட்டணமில்லா படிப்பு என்று சொல்லி கல்லூரியில் சேர்த்த பிறகு அதிகப்படியான கட்டணம் நிர்ணயித்து கொள்ளையடிப்பது, கல்லூரியில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் பணம் கேட்டு மிரட்டுவது என அனைத்து ரெளடி வேலையையும் செய்து வரும் நிறுவனம் தான் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.

ஏழை, எளிய மாணவர்களிடம் ஏமாற்றி வாங்கிய கட்டணங்களில் கட்டப்பட்டுள்ள வானுயர்ந்த கட்டிடங்களுக்கு எந்த அனுமதியும் உள்ளாட்சி துறையில் பெறவில்லை, மேலும் மக்களின் வரிப்பணத்தில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட தார்சாலையை, தனது கல்லூரிக்கு வழிச்சாலையாகவும் சுற்றுசாலையாகவும் போட்டுள்ளார்கள்.

இவை போன்று ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் குவிந்த குப்பை தொட்டிதான் MRC எனும் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.

இந்நிலையில்தான் கடந்த ஓராண்டிற்கு முன்னர் ABVP எனும் RSS ன் மாணவர் அமைப்பை தங்கள் கல்லூரியில் அறிமுகம் செய்து, அதற்கான முழுநேர பொறுப்பாளர்களையும் நியமித்து, ABVP யை அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தது மீனாட்சி இராமசாமி கல்லூரியே ஆகும்.

இதன் அடுத்தபகுதியாக அரியலூர் மாவட்டத்தின் நந்தினி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் RSS-ன் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் என்பது ஒருபுறம் இருக்க, தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம் என தென்னிந்திய அளவில் நடைபெறும் RSS-ன் பயிற்சி முகாம் ஜூன் 10, 11 இரண்டு நாட்கள் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் நடைபெற இதில் குறைந்தபட்சம் 300 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற போவதாகவும், பெரும்பான்மையோர் முழுநேர ஊழியர் என்பதும் சில பத்திரிக்கையாளர்களின் ஆணித்தரமான தகவல் ஆகும்.

இப்படுபாதக பயிற்சியை இந்திய ஒருங்கிணைப்பாளர்(Organizer) செந்தில் ஒருங்கிணைத்துள்ளார். RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்தானுமலையன்(STHANUMALAIYAN) மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் (State Organizer) வன்னியராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, அரியலூர் மண்ணை காவி வெறியூட்டி கலவர பூமியாக்க திட்டமிட்டுள்ளனர்.

மேற்கண்ட செயல்பாடுகளை கவனித்த சில முற்போக்கு தோழர்கள் 08-06-2017 அன்று MRC கல்லூரியின் தாளாளர் இரகுநாதன் அவர்களை சந்திக்க சென்றனர். ஆனால் தோழர்களை காத்திருக்க வைத்து சந்திக்க முடியாது என திருப்பி அனுப்பி உள்ளார். இருப்பினும் RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கடிதம் ஒன்றை கல்லூரி நிறுவனத்திடம் வழங்கி எச்சரித்து வந்துள்ளனர்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு RSS-ன் தலைவன் மோகன் பகவத் பயிற்சி அளித்து ஒரு மாதம் நிறைவுறாத நிலையில், அடுத்து அதே பகுதியில் அரியலூரில் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியளிப்பது கவனிக்கதக்கதாகும்.

இதற்கு பாதுக்காப்பளிக்க எடப்பாடி அரசின் போலீசு குவிக்கப்படுவதும், எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை ஒடுக்குவதும், தமிழகத்தில் நடப்பது BJP-யின் பினாமி அரசு என்பதை வெளிச்சமாக்குகிறது.

தகவல்
மதவாத எதிர்ப்பு கூட்டிமைப்பு
அரியலூர் மாவட்டம்
84288 12913

RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பப்பட்ட கண்டன கடிதம்

03-06-2017
தத்தனார்

மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் மாவட்டம்
செல் 84288 12913

தாளாளர்
MRC கல்வி நிறுவனம்
தத்தனூர்
அரியலூர் மாவட்டம்

ஐயா

வணக்கம்

தங்கள் கல்லூரி மிகச்சிறந்த சேவையை இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது, அனைத்து மதம், மற்றும் சாதியினரும் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கல்லூரியில் வரும் 10-06-2017 மற்றும் 11-06-2017 ஆகிய தேதிகளில் இந்து பார்ப்பன மதவாத சக்தியான RSS மதவெறியியூட்டும் பயிற்சியை மேற்கொள்வதாக அறிந்து வேதனையுற்றோம், தங்கள் கல்லூரியில் பயிலும் மற்ற மதத்தினருக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் அச்சமூட்டும் செயலாகவே இந்த பயிற்சி அமையும், கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்க வேண்டிய மாணவர்கள், மதவெறியையும் சேர்த்து கற்க போவதை கண்டு நாங்கள் பயப்படுகிறோம், ஆகவே ஐயா அவர்கள் அதற்கு இடம் கொடுக்காது பயிற்சியை இரத்து செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் (மா)
84288 12913

கடைசிச் செய்தி: திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் 10, 11 தேதிகளில் நடந்தது. கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மூடிய வளாகத்தில் சங்க பரிவாரங்களின் வன்முறை பயிற்சி முகாம் திட்டமிட்டவாறு முடிந்து விட்டது. மீனாட்சி ராமசாமி கல்லூரி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக நிற்கிறது. தமிழக மக்கள் திரளும் போது அந்த உறுதி உளுத்துப் போவது உறுதி!