மத்திய பிரதேச விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்ற பி.ஜே.பி யை கண்டித்து , விவசாயிகளின் அழிவு சமூகத்தின் பேரழிவு என்பதை விளக்கியும், தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு 14.06.2017 அன்று மாலை 4:00 மணி அளவில் தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் விளைவித்த பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடிய விவசாயிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி 5 பேரை சுட்டு தள்ளி இருக்கிறது பி.ஜே.பி. மோடி ஆட்சிக்கு வந்த உடன் விவசாயத்தை வளர்ச்சியை பாதையை நோக்கி கொண்டு செல்வேன் என்று வாய்சவடால் அடித்த மோடி, இன்றைக்கு விவசாயத்தை அழித்ததோடு, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவருவது, போராட கூடிய விவசாயிகளை சுட்டுத்தள்ளுவது என்று விவசாயிகளின் எதிரியாக இருக்கிறார்கள். எனவே துருபிடித்து போன இந்த அரசு அமைப்பை தூக்கி எறிய மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.
விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், கடந்த 1 ஆம் தேதியில் இருந்து வடமாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் முன் உதாரணமிக்க போராட்டமாக அரசை ஸ்தம்பிக்க வைக்கும் வகையிலே போராடி வருகிறார்கள். இதனை சகித்துக்கொள்ளமுடியாது என்று மத்திய பிரதேசத்தில் துப்பாக்கிசூட்டை பரிசாக கொடுத்திருக்கிறது பிஜேபி. மோடி ஆட்சிக்கு வந்தததில் இருந்து விவசாயிகள் படும் அவலத்தை சொல்லிமாளாது. எனவே விவசாயத்தை அழிப்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் கொள்கைகளை வைத்திருக்கும் அரசு விவசாயிகளை சுட்டுதான்தள்ளும். தமிழகத்தில் விவசாயிகளின் போராட்ட வழிமுறையானது காலம் கடந்தது. இதிலும் என்.ஜி.ஓ -களை நுழைத்து போராட்டத்தை சீர்குலைத்து வருகிறார்கள் எனவே இதனை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் . ஜானகிராமன் பேசுகையில், பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிற மத்திய பிரதேசத்தில்தான் உரிமைக்காக போராடிய விவசாயிகளை படுகொலை செய்து இந்திய விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் விவசாயம் கட்டுபடியாகத தொழிலாக மாறிவிட்டது. இந்நிலையில் தான் தமிழகத்திலே 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் விவசாயம் அழிவு, வறட்சி, தற்கொலைக்கு திராவிட கட்சிகள்தான் காரணம் என்று பா.ஜ.க பேசுகிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சிசெய்யும் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கடுமையான தாக்குதல், துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார்கள். ஆக விவசாயத்தை பாதுகாக்க எந்த கட்சியிடம் திட்டம் இல்லை. எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்வதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது. காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது போல, இன்றைக்கு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பசுவை வைத்து மதத்தின் பேரால் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் ம.பி விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. எனவே பா.ஐ.க விவசாயிகளுக்கு மட்டும் எதிரி அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரி. இவர்களுக்கு எதிராக ம.பி விவசாயிகளின் கலகம் இந்தியா முழுவதும் வரவேண்டும் என்றார்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், நல்லகாலம் பிறக்க போகிறது என்று கூறி ஆட்சியை பிடித்த மோடி, நாட்டின் வளர்ச்சி நாயகனாக சித்தரிக்கப்பட்டார். அந்த மோடியின் பா.ஐ.க அரசுதான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளை சுட்டுத்தள்ளியிருக்கிறது. பசுவை பாதுகாக்க கோசாலைகளை அமைக்க வேண்டும் என்றுகூறி 1000-கணக்கான பசுக்களை கொலைசெய்கிற கும்பல்தான் பசுவை பாதுகாக்கிறார்களாம். தனியார்மய, தாராளமய கொள்கையால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை சார்ந்து துணை தொழிலையும் அழிக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே இவர்களை இந்தியா முழுவதும் துடைத்தெரிய வேண்டும். மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்களிடம் கெஞ்சுவதை விட்டுவிட்டு பா.ஜ.க வை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவுதான் இன்றைக்கு 5 விவசாயிகளை சுட்டு தள்ளியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பெண்களே அதிகாரத்தை கையிலெடுத்து டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி வெற்றிபெற்றார்களோ? அத்தகைய போராட்டம்தான் ஓரேதீர்வு… அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது என்று அறைகூவல்விடுத்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தருமபுரி. தொடர்புக்கு – 81485 73417.