Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 523

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !

4
PTI3_31_2012_000062B
ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார். ஏ-3 யான இளவரசிக்கும் “சின்ன சின்னம்மா” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டன. ஏ-4 ஆன அம்மாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஏற்கனவே சின்ன எம்ஜியார் என்பதால் அவரைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், 1996 ஜுலையில், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளான வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொமு ஆகிய அமைப்புகள் நடத்திய “விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்” இப்போது நினைவுக்கு வருகிறது. 1996 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஊழல் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகக் கூறியது. ஜெயா சசி கும்பலை தண்டிப்பதோ அவர்களுடைய திருட்டுச் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ, சட்டபூர்வமான வழியில் சாத்தியமில்லை என்ற அரசியல் உண்மையை எடுத்துக் காட்டியது அந்தப் போராட்டம்.

அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும்  ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம். கள்ளச் சாராயப் பேர்வழிகள், ஒயின்ஷாப் ஓனர்கள், கந்து வட்டிக்காரர்கள், லாட்டரி சீட்டு வியாபாரிகள், கட்டைப் பஞ்சாயத்து ரவுடிகள் உள்ளிட்ட ஒரு கூட்டம் திபுதிபுவென்று அரசியலில் நுழையத் தொடங்கியிருந்த காலம் அது. ஒவ்வொரு ஊரிலும் ஓட்டுக்கட்சிகளில் இருந்த இத்தகைய நபர்களை பெயர் சொல்லி அடையாளப்படுத்தி, அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக அமைந்ததே அந்தப் போராட்டம்.

இன்று “சிங்கப்பூருக்கு அருகில் தீவு வாங்கியிருக்கிறார், இந்தோனேசியாவில சுரங்கம் வாங்கியிருக்கிறார், துபாயில் வணிக வளாகம் வாங்கியிருக்கிறார்” என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களே, அந்த நத்தம் விசுவநாதன் முதல் புதுக்கோட்டை ராமச்சந்திரன் வரையிலானோர் அன்றைய ஒயின் ஷாப் ஓனர்கள் அல்லது கள்ளச் சாராய வியாபாரிகளே. இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டத்தையே ஒரு கட்சி என்ற பெயரில் நடத்திக் காட்டிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

admk-1212-600-15-1481775039
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம்.

இதன் விளைவாகத்தான், 1991 முதல் 1996 வரையிலான முதல் தவணை ஆட்சியில் ஜெயா – சசி கும்பலும், அமைச்சர்களும் ஆடிய ஆட்டத்தைக் கண்டு ஆத்திரமுற்ற மக்கள், ஜெயலலிதாவை பர்கூர் தொகுதியில் தோற்கடித்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அவரது அமைச்சர்களை ஊருக்குள்ளேயே நுழைய விடாமல் அடித்து விரட்டினர். வேறு வழியின்றி, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, வளர்ப்பு மகனை தகுதி நீக்கம் செய்து தன்னை உத்தமியாக காட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இது இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.

இன்று, சேகர் ரெட்டியிடம் தங்க கட்டிகளும் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளும் கைப்பற்றப்படுகின்றன. தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடக்கிறது. முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது. இருபது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான்.

000

நாடாளுமன்ற அரசியல் சீரழிவின் வரைவிலக்கணமாக இருபது ஆண்டுகளுக்கு முன் இனங்காணப்பட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்கள்  ஆகிவிட்டார்கள். அதாவது இந்த அரசமைப்பின் “கற்பை” அழிப்பவர்களாக அன்று அடையாளம் காணப்பட்டவர்கள்தான் இன்று அதன் சட்டபூர்வமான கணவன்மார்கள்.

“ராம மோகன ராவ் ஊழல் தடுப்புத்துறையின் கண்காணிப்பு ஆணையராக என்ன தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்?” என்று பத்திரிகைகள் இன்று அதிசயித்துக் கொள்கின்றன. “81 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்” என்று, 2010 ஆம் ஆண்டிலேயே, அன்றைய ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநரான உமாசங்கரால் குற்றம் சாட்டப்பட்டவர் ராம மோகன ராவ். ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.

Slider
ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.

இது ஜெயலலிதா என்ற வக்கிரமான ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல; இந்த அரசின் கட்டுமான உறுப்புகளே எப்படி வக்கரித்துப்போய் தமது எதிர்நிலை சக்திகளாக மாறி நிற்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொள்வதற்கான எளிய சான்றும் கூட. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கானவை என்று கூறப்படும் எல்லா விதமான அதிகார அமைப்புகளிலும் குற்றவாளிகள்தான் கோலோச்சுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் சான்று இது.

ராம் மோகன் ராவின் கீழ் துறைச்செயலாளர்களாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும் பணியாற்றிய கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளும், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம், ஹவாலா, சிட்பண்டு மோசடி உள்ளிட்ட எல்லா வகை கிரிமினல் நடவடிக்கைகளையம் ஒருங்கிணைத்து நடத்திய போலீசு துறையும், குமாரசாமி, தத்து, சதாசிவம் போன்றோரடங்கிய  நீதித்துறையும், ஆற்று மணற்கொள்ளையை ஒருங்கிணைத்த பொதுப்பணித்துறையும், துணை வேந்தர் பதவிகளை ஏலம் விட்ட கல்வித்துறையும் அடங்கியதுதான் இந்த அரசமைப்பு. இதனை நிரூபிக்கின்ற உண்மைகள் அன்றாடம் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த அரசமைப்பை சீர்திருத்திவிட முடியும் என்ற சட்டவாத மாயையில் படுத்து சுகம் காண்பவர்களை எந்த உண்மையாலும் எழுப்ப முடிவதில்லை.

“சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூன்று குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா?” என்று கேள்வியை ஊடகங்கள் கிளப்புகின்றன. “முதல் குற்றவாளி இறந்து விட்டாலும், கூட்டுக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பை ஆதாரமாக காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். சசிகலா தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு சட்ட வல்லுநர்கள் எதை ஆதாரமாக காட்டுகிறார்களோ, அதே ஆதாரத்தின் அடிப்படையில் சசிகலாவை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்கிறார்கள் அதிமுக அடிமைகள்.

“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.

Vituthalai
“தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள்.

ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக. உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக பொதுக்குழு சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது. போதாக்குறைக்கு பொன்னையன் சசிகலாவின் வாரிசுரிமையை வேறு கோணத்திலிருந்து விளக்குகிறார். தனது ஸ்ரீராம் சிட் பண்டு பணத்திற்கு வாரிசாக சசியைத்தான் அம்மா குறிப்பிட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி, தனக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் சசிகலாதான் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார். முதல்வர் பதவியை சிட் பண்டு பணத்தோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறாரே, இதைவிடக் கூர்மையாக இந்த அரசியலை யாரேனும் விளக்க இயலுமா?

“பெரியண்ணி ஜானகிக்கு ராமாவரம் தோட்டம், சின்னண்ணிக்கு தமிழகமே போயசு தோட்டம்” என்று 1992 இல் ஒலித்தது ம.க.இ.க வின் இருண்டகாலம் ஒலிப்பேழைப் பாடல். “என்னுடைய அத்தை வளர்த்த கட்சி” என்று உரிமை கொண்டாடுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அத்தை தி.மு.க என்றாலும் அ.தி.மு.க தானே!  “கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நியாயமான வாரிசு சசியா தீபாவா?” என்ற பட்டிமன்ற ஆராய்ச்சியைக் கிளப்புகின்றன ஊடகங்கள். “தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள். வடிவேலுவின் தராசுத் திருட்டு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிக்க முடிந்தது. அதைவிடக் கேடுகெட்ட நிலைக்குத் தாழ்ந்து விட்டது தமிழ்ச் சமூகம். சிரிக்கவா முடியும்?

000

ம்மாவின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது. சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுவிட்டார். தூய வெள்ளை ஆடை தரித்த அட்டைகளின் சட்டைப்பையில் அம்மாவுடன் சின்னம்மாவின் படம். வெள்ளை என்பதும் திருடர்களின் உடையாகிவிட்டது. எவ்வளவு கருப்போ அவ்வளவு வெள்ளை.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நால்வர் குழுவை ஜெ அமைத்திருந்தாலும், பேச்சுவார்த்தையை சசிகலாதான் நடத்துவாராம். ஒரு மூத்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் கூறியதாக ஆங்கில இந்து நாளேடு எழுதியிருக்கிறது. அந்த மூத்த தலைவர் தா.பா வா, டி.கே.ரங்கராசனா தெரியவில்லை. ஏன் முக்காடு போட்டுக் கொள்ளவேண்டும்? அடுத்த கூட்டணிக்கு சின்னம்மாவுடன்தானே பேச்சுவார்த்தை! இனி வெட்கப்பட என்ன இருக்கிறது?

jaya1
முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.

சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.

வழக்கமாக, ஒரு கிரிமினல் மஃபியா கும்பல் என்பது, கொலை, கொள்ளை, போதை மருந்து வியாபாரம், கட்டைப் பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களை செய்வதற்கான சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் ஒரு வலைப்பின்னலாக உருவாக்கிப் பராமரிக்கிறது. ஜெ – சசி கும்பலோ, அரசு எந்திரத்தையே அத்தகைய மஃபியாவாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு ராம மோகன் ராவும் பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் போலீசு அதிகாரிகளும் துணைவேந்தர்களும் காட்டும் விசுவாசம் என்பது கொள்ளையில் அவர்கள் பெறுகின்ற பங்குடன் நேரடித் தொடர்புள்ளது.

ஷீலா பாலகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரியை ஆலோசகர் என்ற சட்டவிரோதப் பதவியில் ஜெ வைத்துக் கொண்டிருந்ததற்கும், ராம மோகன ராவுக்கு முறைகேடாகப் பதவி உயர்வளித்து தலைமைச் செயலர் ஆக்கியதற்கும், இன்று சசிகலா முதல்வராக வேண்டுமென்று வெளிப்படையாகவே துணைவேந்தர்கள் காவடி எடுப்பதற்கும் இதுதான் காரணம்.

000

jaya2
பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள்.

ற்று மணல் கொள்ளை பற்றி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறும் விவரங்களைப் பாருங்கள். 2003-04 ஆம் ஆண்டில் 3639 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய் 2013-14 இல் 23,401 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் 2003-04 இல் 150 கோடியாக இருந்த மணல் வருவாய் 2013-14 இல் 133.37 கோடியாக குறைந்துள்ளது என்றும் எடுத்துக்காட்டுகிறார் ராமதாஸ். நாளொன்றுக்கு 8300 லாரி மணல்தான் விற்கப்படுவதாக அரசு கணக்கு. உண்மையில் ஒரு லட்சம்  லாரி மணல் அள்ளப்படுகிறது என்றும், கடந்த 13 ஆண்டுகளில் 4.75 லட்சம் கோடி ரூபாய் இதில் வருமானம் கிடைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார் ராமதாஸ். ஆற்று மணலை அரசாங்கமே விற்கலாம் என்று ஆலோசனையைச் சொன்னவர் ராம மோகனராவ். அமல் படுத்தியவர்கள் ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன், பன்னீரின் பினாமி பாஸ்கர் என்ற பெரியதொரு கூட்டம்.

தமிழகத்திலுள்ள சாராய ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் பெட்டிகள் சாராயமும்,  ஒரு கோடி பீர் பாட்டில்களும் கொள்முதல் செய்யப்படுவதாகவும், சாராயப் பெட்டிக்கு 60 ரூபாயும்,  பீர் பெட்டிக்கு 35 ரூபாயும் பிரிமியர்  சாராயத்துக்கு பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் கமிசன் என்றும் கணக்கு சொல்கிறது நக்கீரன். இதில், போயசுக்கு 60 % பல்வேறு அதிகாரிகளுக்கு 35% மந்திரிக்கு 5 % பங்கு வைக்கப்படுவதாக கூறுகிறது.

10,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதில் 2500 கோடி போயசுக்குத் தரப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது ஜுவி. அரசுப் பயன்பாட்டுக்கான மென்பொருட்கள், இலவச லேப்டாப், மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களின் கான்டிராக்ட் ஊழியர் பணிகள் அனைத்தும் ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு தரப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள்.  இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது. கோவை கன்டெயினர் உள்ளிட்ட கள்ளப்பணங்களைத் தற்காலிகமாகப் பதுக்கி வைப்பதற்கான இடமாக ஆந்திரமும் தெலுங்கானாவும்தான் ஜெ வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. செல்லாத நோட்டை மாற்றுவதற்கு திருப்பதி உண்டியலை சேகர் ரெட்டி பயன்படுத்தியிருப்பதால், இவர்களுக்கு ஏழுமலையானின் ஆசியும் உண்டு என்று தெரியவருகிறது.

இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள். இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது.

பரஸ்மால் லோதா என்ற கல்கத்தா மார்வாடியின் மூலம் துபாயில் ஒரு வணிக வளாகம், இந்தோனேசியாவில் சுரங்கம், தாய்லாந்தில் தனித்தீவு உள்ளிட்ட சுமார் 30,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை நத்தம் விசுவநாதன் மட்டுமே வாங்க முடிந்திருக்கிறது என்றால் மன்னார்குடி மஃபியா அடித்திருக்கக்கூடிய கொள்ளையின் அளவை கற்பனையும் செய்து பார்க்க இயலவில்லை.

“ஜெயா ஆட்சியில் ஊழல் நடந்தது” என்று கூறுவது தவறு. பொதுச்சொத்தையும் கருவூலத்தையும் கொள்ளையிடுவதற்காகத்தான் ஆட்சியே நடந்தது. லேப் டாப் முதடல் சத்துணவு வரையிலான அனைத்தும் இந்தக் கும்பலின் கொள்ளையை மையப்படுத்தியே திட்டமிடப்பட்டன.

சேகர் ரெட்டி மூலம் ஒரு வேட்பாளருக்கு 4 கோடி ரூபாய் வீதம் 197 வேட்பாளர்களுக்கு கடந்த தேர்தலில் பணம் விநியோகிக்கப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ராமதாஸ். இது மிகவும் குறைவான மதிப்பீடு என்பதுதான் சென்ற சட்டமன்றத்தேர்தல் காட்டும் உண்மை. இருந்த போதிலும், கரூர் அன்புநாதன் சுதந்திரமாகத் திரிகிறான். கோவை கன்டெயினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. சேகர் ரெட்டிக்கும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வருமான வரித்துறை சோதனைகள் எனப்படுபவை என்றைக்குமே வசூலுக்காக நடத்தப்படும் நாடகங்கள்தான்.

இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதாக காட்டுவதற்கு மோடி நடத்தி வரும் நாடகத்தில் இது இன்னுமொரு காட்சி.  திருடனிடம் பிடுங்கித் தின்னும் கிரைம் பிராஞ்சு போலீசைப் போல, இவர்களிடமிருந்து முடிந்த வரை கறப்பதற்கு நடத்தப்படும் வேட்டை. இது மோடிக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது கன்டெயினர்.

anna-square
தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

மற்றபடி பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள். வாஜ்பாயி காலத்தில் தம்பிதுரையை மத்திய சட்ட அமைச்சராக நியமித்தது முதல் மோடி ஆட்சியில் வருமானவரித்துறை வழக்கிலிருந்து ஜெயாவை விடுவித்தது வரை இதற்கு சான்றுகள் பல. நாலும் மூணும் எட்டு என்று குமாரசாமி அளித்த தீர்ப்பை பாஜக வினர் கொண்டாடியதையும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக ஜெயா இருந்தபோதே போயசு தோட்டத்துக்கு நிதியமைச்சர் விஜயம் செய்ததையும் நாடறியும். திராவிட இயக்கத்தை உள்ளிருந்து அழித்த தன்னுடைய இயற்கையான கூட்டாளியான ஜெயலலிதாவின் செயற்கரிய சாதனையை பார்ப்பன பாசிசக் கும்பல் ஒருபோதும் மறந்து விடாது.

“சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சொன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது”

என்று நவம்பர் 2014 இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது மஃபியாவின் தலைமைப் பதவியை உடன்பிறவா சகோதரி கைப்பற்றியிருக்கிறார். கொள்ளைக் கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அதிமுக கும்பல் தமக்குள் மோதிக் கொண்டு அழியவும் கூடும். அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

  • சூரியன்,
    புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !

3

sasi admk“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது. முதலமைச்சரும் இன்னபிற அதிமுக தலைவர்களும் பொதுக்குழுவின் வேண்டுகோள் கடிதத்தை சின்னம்மாவிடம் வைத்து கெஞ்சியதையும், வேறு வழியில்லாமல் தலைமைப் பதவியை சுமக்க சின்னம்மா ஒப்புக்கொண்டதையும் தொலைக்காட்சிகள் வாயிலாக சின்னம்மாவே ஒளிபரப்பக் கண்டோம். இதை விஞ்சுகின்ற ஒரு  ஆபாசக் காட்சியை கூகிளில் உலகம் முழுக்க வலைவீசித் தேடினாலும் யாராலும் கண்டு பிடிக்கவியலாது.

தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.

அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை. அந்த உண்மையைத் தமிழக மக்களுக்குப் புரிய வைக்கும் பொருட்டுத்தான், மேற்படி ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை சின்னம்மாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

“தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிப்பதற்கும்” சின்னம்மாவே முதல்வர் பதவியிலும் உடனே அமர வேண்டுமென்று கோரினார் தம்பிதுரை.

sasi-revised-postஇதைவிடக் கேவலமான சொற்களால் தமிழ் மக்களை யாரும் அவமதிக்க முடியாது. இருந்த போதிலும், “துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்படி சொற்களை தம்பிதுரை உதிர்த்திருப்பாராயின் அரசமைப்புச் சட்டம் அவமானத்திலிருந்து தப்பியிருக்குமே” என்று அரசமைப்பு சட்டத்தின் மாண்பு பற்றிக் கவலை வெளியிட்டார் ஸ்டாலின். “வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது அரசியல் சட்டமாக இருக்கட்டும்” என்ற உணர்வு போலும்!

000

“அம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!

இந்த ஒற்றுமை ஒருபுறமிருக்க, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவிலேயே வெளிவரக்கூடும் என்பதால், முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் அமைச்சர்களிடையே தீவிரமடைந்திருக்கிறது. மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராகப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால், சின்னம்மாவின் நம்பிக்கையைப் பெறுவதற்கான போட்டி நடக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் பன்னீரை அகற்றி சசிகலாவை முதல்வராக அமர வைத்தால்தானே, உச்சநீதிமன்றம் சசிகலாவை அகற்றும்போது அந்த இடத்தில் அமர முடியும்! அதனால்தான் சின்னம்மாவை முதல்வராக்குவதற்கு எல்லை மீறி உணர்ச்சிவசப் படுகிறார் தம்பிதுரை.

“ஜெயலலிதா சிறை சென்றால் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது” என்று ரகசியமாகச் சதி செய்த காரணத்தினால் சின்னம்மாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் அம்மா. இது 2011 இல் நடந்த கதை. இன்று அதே போயஸ் தோட்டத்தில் அதே சின்னம்மாவுக்கு எதிராக பகிரங்கமாகச் சதி நடக்கிறது.

“நீங்கள்தான் பொதுச்செயலராகி எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கைகூப்பிக் கெஞ்சுகிறார்கள் சதிகாரர்கள். “கூப்பிய கரங்களுக்குள் குத்துவாள் இருக்கிறது” என்று தெரிந்த போதிலும் புன்னகை மாறாத முகத்துடன் தரிசனம் தருகிறார் சின்னம்மா. அம்மாவின் படத்துக்கு முன்னால் நின்று கண்ணீரும் விடுகிறார். “இந்த நாடகத்தைக் காண்பதற்கு அம்மா இல்லையே” என்ற நமது ஏக்கத்தை நிவர்த்தி செய்வதற்காகவாவது, “அம்மாவின் ஆன்மா பார்த்துக் கொண்டிருக்கிறது” என்ற சசிகலாவின் கூற்று உண்மையாகிவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.

admk-volunteer (1)
அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி சசிகலா என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.

இன்னொரு புறம், கொலைப்பழியும் சசிகலாவைத் துரத்துகிறது. அரசு அலுவல்கள் அனைத்தையும் மர்மமான அந்தப்புர நடவடிக்கையாக மாற்றி, அதற்கே பழகிவிட்ட ஜெ-சசி கும்பல், அப்போலோவிலும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அப்போலோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக்கொண்டு யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு, “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறோம்” என்று  அப்போது உறைத்திருக்க நியாயமில்லை.

அன்று எம்ஜியார் சாவுக்கு ஜானகி மீதும், ராஜீவ் சாவுக்கு கருணாநிதி மீதும் பொய்ப்பழி சுமத்தி முதல்வர் நாற்காலியைப் பிடித்தார் ஜெயலலிதா. அவரது சாவுக்கான பழி, உடன்பிறவாத் தோழி மீது விழுந்திருப்பது ஒரு விதத்தில் கவித்துவ நீதி. சீரியல்களின் கலர் கலரான சதிகளால் தமிழ்நாட்டுத் தாய்க்குலத்தின் மூளை கூர்மைப்படுத்தப் பட்டிருப்பதால், சசிகலாவின் ஒவ்வொரு அசைவு பற்றியும் தாய்க்குலத்தின் வாயிலிருந்து ஒரு “எபிசோட்” அநாயாசமாக வந்து விழுந்து, அப்போலோ மர்மத்தை மெகா சீரியலாக மாற்றுகிறது.

இதுதான் சசிகலாவின் நிலை. இன்று சின்னம்மாவின் காலில் விழும் கூட்டம் நாளை எந்தக் காலில் வேண்டுமானாலும் விழும். உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.

000

ருப்பினும், அதிமுக என்பது ஒரு “கட்சி” என்பதாகவும், அதன் தலைவியாக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது “அந்தக் கட்சியின் உள் விவகாரம்” என்பதாகவும் மிகவும் நாகரிகமாகப் பேசுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். “சசிகலா தேர்தலில் நின்று மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்” என்று ஆலோசனை வேறு கூறுகின்றனர்.

“மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி” என்று சசிகலாவுக்குத் தெரியாதா? மன்னார்குடி மாஃபியா மட்டுமல்ல, சேகர் ரெட்டி, அன்புநாதன், ராம மோகன ராவ் போன்றோரும் கூட தேர்தலில் நின்று மக்களின் அங்கீகாரத்தை “வாங்க”வேண்டுமென்றால், “வாங்கி” விடுவார்களே. சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை தொகுதிகளை “வாங்கிக்  கொடுத்தவர்கள்” அல்லவா இவர்கள்! தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதையெல்லாம் சொல்லிப் புலம்பிய எதிர்க்கட்சிகள் இப்போது நடந்ததையெல்லாம் மறந்து விட்டதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

people-anna-square (4)
உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.

சும்மா சொல்லக்கூடாது. ஜெயலலிதா அப்போலோவுக்கு மாறியதிலிருந்தே தமிழகத்தில் அரசியல் நாகரிகம் தலைவிரித்தாடுகிறது. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?

ஜெ ஆட்சியின் எந்த செயல்பாடுகளுக்காக “அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் பேசினார்களோ, அந்தச் செயல்பாடுகளுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லையா? முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறதே!

“இருப்பினும் பார்ப்பன மதவெறிக் கும்பல் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் சசிகலா தடுத்து விடுவார்” என்பது திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தையே குடிகாரர்களாக்கி, தமிழ் மக்களை மத மூட நம்பிக்கைகளிலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி, அதானிக்கும் அம்பானிக்கும் தமிழகத்தைப் பிரித்து விற்ற கும்பல், பாரதிய ஜனதாவிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றும் என்று நம்புகிறது திராவிடர் கழகம். மலையாள மாந்திரீகம் மற்றும் பில்லிசூனியம் முதலானவற்றில் சசிகலா கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கிறது திராவிடர் கழகத்தின் இந்த நம்பிக்கை.

திமுக வின் கதை வேறு. கடந்த காலத்தில் கருணாநிதி அனுபவித்த ராஜீவ் கொலைப்பழி முதல் ரூ. 1,70,000,00,00,000 அலைக்கற்றை ஊழல் என்ற பத்து தலை ராவணன் கதை வரை, பார்ப்பனக் கும்பலால் பலவிதமாகப் பாதிக்கப்பட்டவர் கருணாநிதி. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் வழங்கியிருக்கிறது.

“ஜெயலலிதா  மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்த கற்றறிந்த நீதிபதியின் உணர்ச்சிவயப்பட்ட நாக்கு, “நாம் கருணாநிதியின் மகனுக்கு ஒரு பம்பர் பரிசை வழங்குகிறோம்” என்பதை உணராமலேயே சுழன்றிருக்க வேண்டும்! “இயற்கை நீதி” எனப்படுவது இதுதான் போலும்!

MGR-Jayalalitha-movie
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

“நான் கூறவில்லை, உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என்ற ஒற்றை வரியின் மூலம், அதிமுகவின் இழிபுகழ் பெற்ற ஓட்டு வங்கியான தாய்க்குலத்தின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கான வாய்ப்பை தளபதிக்கு வழங்கி விட்டார் நீதிபதி. அதுமட்டுமல்ல, இறந்தவர்களை விமரிசிக்கின்ற, “அநாகரிக அரசியலை” தவிர்த்து தப்பிச் செல்வதற்கான சந்தும் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.

“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார். மூன்றாவது அணியில் மிச்சமிருக்கும் மூன்று பேரில் முக்கியமானவரான திருமாவளவன், “வருவாய்த்துறை ரெய்டிலிருந்தும், மதவெறி அபாயத்திலிருந்தும் இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு” சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்.

இடதுசாரிகளின் மூத்த தலைவரான தா.பா, முன்னம் ஒரு நாளில் சசிகலாவை விமரிசித்துப் பேசியிருப்பதை நிருபர்கள் எடுத்துக் காட்டியபோது, “அது நானாக இருக்காது, என் அசரீரியாக இருக்கும்” என்று பதிலளித்தாராம். “மன்னார்குடி மாஃபியாவை ரெய்டு அபாயம் அச்சுறுத்திய சூழலில், கோவையில் வைத்து சுப்பிரமணியசாமியை நீங்கள் ஏன் சந்தித்தீர்கள்” என்று பின்னர் ஒரு நாளில் யாரேனும் ஒரு நிருபர் அவரைக் கேட்க நேர்ந்தால், “அது நான் அல்ல, மங்கி சங்கி” என்றும் அவர் பதிலளிக்கக் கூடும். “டீக்கடைக்காரர் பிரதமராகும்போது, வீடியோக் கடைக்காரி முதல்வராகக் கூடாதா?” என்று வர்க்கப்பார்வையில் வக்கணையானதொரு எதிர்க் கேள்வியையும் எழுப்பக் கூடும்.

Nattu
“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார்.

உண்மைதான். “முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

ஆகையினால், ஆராய்ச்சியை நிறுத்திக் கொள்வோம். எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால் நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.

சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். புதியதொரு அரசியல் நாகரிகம் தமிழகத்தில் தழைத்தோங்குவதற்கான துவக்கமாகவும் அது அமையும்.

  • தொரட்டி
    புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !

1
திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”

2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 1

  • ஊனா : “நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்

திவ்யேஷ் சோலன்கி : 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய தலித் இளைஞன். மாட்டுத் தோலை உரித்தத ‘குற்றத்திற்காக’ தாக்கப்பட்ட ஏழு தலித் இளைஞர்களின் ஊரான ஊனாவைச் சேர்ந்தவர் திவ்யேஷ். போலீசாக வேண்டுமென்பது இவரது ஆசை.

திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”
திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”. படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

“இன்றைக்கும் காசு இல்லை” என்கிறார் திவ்யேஷ் சோலன்கி. நாள் முழுக்க வெங்காயப் பயிர்களை அறுவடை செய்து விட்டு தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் திவ்யேஷ். 160 ரூபாய் தினக் கூலிக்கு அவர்கள் மூன்று நாட்களாக வேலை செய்கிறார்கள். இந்த நாட்களுக்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை.

மறுநாளும் வருமாறு நில உரிமையாளரான விவசாயி தெரிவித்ததாகச் சொல்லும் திவ்யேஷ், பிழைப்பதற்கு வேறு வழியெதுவும் தெரியவில்லை என்கிறார். ஆனால் “என்ன செய்யக் கூடாதென” தனக்குத் தெரியும் என்கிறார். “சில மாதங்கள் முன்பு வரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும் பிழைப்புக்காக மாட்டுத் தோலை உரிக்கும் வேலை செய்து வந்தனர். நான் அந்த வேலையைக் கற்றுக் கொள்ளவில்லை. அப்படியே கற்றுக் கொண்டிருந்தாலும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்குப் பின் அதைக் கற்பனையில் கூட செய்ய மாட்டேன்” என்கிறார் திவ்யேஷ்.

கடந்த ஜூலை 11-ம் தேதி “பசுப் பாதுகாவலர்கள்” செத்த மாட்டின் தோலை உரித்த ஏழு தலித் இளைஞர்களை கம்புகளால் அடித்து விளாசினர். அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் எழுந்த தலித் எழுச்சியின் குவிமையமாக விளங்கிய மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யேஷ். ”பசுப் பாதுகாவலர்கள்” தாக்கிய ஏழு தலித் இளைஞர்களில் வாஷ்ராம் மற்றும் ரமேஷ் சர்வைய்யா ஆகியோர் தனக்கு தூரத்து சொந்தக்காரர்கள் என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷின் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். அந்த ஐவரில் திவ்யேஷ் மூன்றாவதாகப் பிறந்தவர். தனது பெற்றோருக்கு உதவும் பொருட்டு 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டதாகச் சொல்கிறார். வயல் வேலையைத் தவிர மேல்சாதி விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இரவுக் காவலராக பணிபுரிவதாகவும், ஒரிரவுக்கு 300 ரூபாய் சம்பளம் என்றும் திவ்யேஷ் தெரித்தார்.

உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்!
உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

திவ்யேஷின் தந்தை அரசு ஒதுக்கீடு செய்த கால் ஏக்கர் நிலத்தில் கால்நடைத் தீவனங்களை வளர்க்கிறார். அதே கிராமத்தில் உள்ள தலித் காலனியில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் ஒரே அறை கொண்ட வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் பதினெட்டு வயதை எட்டும் திவ்யேஷ், ஜூலை 11-ம் தேதியன்று நடந்த சம்பவம் தனக்கும் மாறாத கசப்புணர்வைத் தோற்றுவித்ததாகச் சொல்கிறார். ”மற்றவர்களைப் போலவே நாங்களும் மாடுகளை மதிக்கிறோம். நாங்கள் எப்போதும் அவற்றைக் கொல்வதில்லை; இறந்த மாடுகளின் தோலை மட்டுமே உரித்தோம். ஆனாலும், எம்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. இதெல்லாம் மாறுமா எனத் தெரியவில்லை” என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷ் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிகர். சாதி ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்வது குறித்த பேச்சு எழுந்த போது, ”நாங்கள் மற்றவர்களின் வயல்களில் வேலை செய்யும் போது கூட சாப்பிடவும், தேனீர் குடிக்கவும் எங்கள் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.

என்றைக்காவது போலீசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது திவ்யேஷின் ஆசை. ”அது எனக்கு மரியாதையையும் சம்பளத்தையும் பெற்றுத் தரும். ஆனால் அதற்கு நான் பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். நான் பள்ளிக்குப் போகவில்லை என்றாலும், வெளியிலிருந்தே தேர்வெழுத விண்ணப்பித்துள்ளேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வெழுதப் போகிறேன்” என்கிறார் திவ்யேஷ்.

ஜம்மு காஷ்மீர் : படிப்பது ஒன்று தான் வழி; ஆனால் என்னால் முடியுமா?

ஜூலை 8ம் தேதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் கிளர்ந்தெழுந்தது. அதைத் தொடர்ந்து சுமார் 10,000 மக்கள் பெல்லெட் குண்டுகளால் துளைக்கப்பட்டனர் என்கிறது மருத்துவமனைப் புள்ளிவிவரங்கள். ஆயிரத்துக்கும் அதிகமானோரின் கண்களில் பெல்லெட் குண்டுகள் பாய்ந்தன. அதில் குறைந்தது ஏழு பேருக்கு இரண்டு கண்ணிலும் பார்வை பறிபோனது.

tabish
தபீஷ் ரபீக் பட்: ”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (MBA) படிக்க வேண்டுமென்று தனக்கு எப்போதுமே ஆசை என்கிறார் தபீஷ் ரபீக் பட். ஆனால், அவரது இடது கண்ணைத் துளைத்துச் சென்ற பெல்லட் குண்டுகள் அவரது கண்ணின் கருவிழியையும் கனவுகளையும் சிதைத்து விட்டன. இப்போதெல்லாம் கண்ணில் நீர் வழியாமல் எழுத்துக்களை வாசிக்கவே முடியவில்லை என்கிறார் தபீஷ்.

”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” என்கிறார் 17 வயதான தபீஷ். சென்ற நவம்பரில் தான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய தபீஷ், தேர்வெழுத உதவியாளர் ஒருவரைக் கோரியதை போது பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாகத் தெரிவிக்கிறார். ”தேர்வு எழுதும் போது எனது இடது கண் பயங்கரமாக வலித்தது” என்றார் தபீஷ். அந்த வீடு ஒரு சிறிய அறை. அதன் மத்தியில் தடுப்பு வைத்துப் பிரித்துள்ளனர். அதில் ஒன்று சமயலறை; மற்றொன்று படுக்கையறை. தபீஷ் தனது படுக்கையில் இருந்தார்.

அந்தக் குடும்பம் தபீஷின் கண்ணில் செய்யப்படவுள்ள நான்காவது அறுவை சிகிச்சைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. “இன்னும் இரண்டு பெல்லெட் குண்டுகள் உள்ளேயே இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெல்லெட்டுகளை மட்டுமே தங்களால் எடுக்க முடியுமென்றும், அதற்குப் பின் இடது கண்ணின் பார்வை போய்விடுமென்றும் அவர்கள் சொல்கிறார்கள்” என்கிறார் தபீஷ்.

பாம்போரில் உள்ள எண்ணைக் கிட்டங்கியில் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் தபீஷின் தந்தை ரபீக் அகமது பட். அவரது தாயார் ஷெஸாதா வீட்டு வேலைகளை மட்டும் கவனித்துக் கொள்கிறார். பாம்போரில் உள்ள “தில்லி பொதுப் பள்ளியில்” படிக்கும் மாணவரான தபீஷ், தனது மாலை நேர டியூஷனுக்குப் பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெல்லெட் துப்பாக்கிகளால் சுடப்பட்டுள்ளார்.

அது 2016 ஜூலை 9-ம் தேதி. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு மறுநாள். அன்றைக்கு காஷ்மீர் முழுவதும் போராட்டங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

”நானும் எனது நண்பன் ஜிப்ரானும் வந்து கொண்டிருந்தோம். கற்களை எறிந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள் எங்கள் வழியில் தான் கூட்டமாக இருந்தனர். திடீரென்று துணை ராணுவப் படையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி விரட்டி வந்தனர். சட்டென்று எனது உடலில் நெருப்பு பிடித்தாற் போல் உணர்ந்தேன். பின்னர் தான் நான் பெல்லெட் குண்டுகளால் தக்கப்பட்டதையே அறிந்து கொண்டேன். இடது கண்ணில் மட்டும் ஆறு குண்டுகள். ஜிப்ரான் அதிர்ஷ்டக்காரன் – அவனுக்கு இரண்டு குண்டுகள் தான் கிடைத்தன” என்கிறார் தபீஷ்.

அந்த சம்பவத்திற்குப் பின் சுமார் இரண்டரை மாதங்கள் சிறீநகரில் உள்ள ’சிறீநகர் மகாராஜா ஹரிசிங் அரசு’ மருத்துவமனையில் கழித்திருக்கிறார் தபீஷ். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு சீர்படுத்தவே முடியாதென மருத்துவர்கள் சொன்ன போதும் அந்த குடும்பம் நம்பிக்கையிழக்கவில்லை. தபீஷை அம்ரிஸ்தரில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவரது தந்தை. என்றாலும், அந்த அலைச்சல்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

”நாங்கள் நொறுங்கிப் போனோம்” என்கிறார் தபீஷின் தாயார் ஷெஸாதா. தனது கையில் தபீஷின் மருத்துவ அறிக்கைகளையும், நாளிதழ்களில் அவர் தாக்கப்பட்டதைப் பற்றி வந்த செய்தித் தாள்களையும் புரட்டிக் கொண்டிருந்தார் அவர்.

புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்!
புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொடர்ந்து தான் தாக்கப்பட்டதற்கு முந்தைய நாள் நண்பர்களோடு சிறீநகர் சென்று வந்ததை தபீஷ் விவரித்துக் கொண்டிருந்த போது கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி அங்கிருந்து அகன்றார் அவரது தாயார். ”அன்றைக்கு ஜூலை 8ம் தேதி… நானும் எனது நண்பர்களுமாக எட்டுப் பேர் சேர்ந்து சிறீநகருக்குப் போனோம். அங்கே உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். அன்றைக்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்று தபீஷ் சொல்லும் போதே அவரது முகத்தில் புன்னகை விரிந்தது. அந்தச் சிரிப்பு அவரது இடது கண்ணை ஒரு மெல்லிய கோடாகச் சுருக்கியது.

கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். தாக்குதலுக்குப் பின் கடந்த நவம்பர் 14-ம் தேதி தேர்வெழுதச் சென்ற போது தான் தனது நண்பர்களை மீண்டும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

”தேர்வுகளை எழுதிவிடலாம் என்ற உறுதி இல்லை. சரியாக படிக்கவும் இல்லை. ஆனால், படிப்பு ஒன்று தான் முன்னேறுவதற்கு இருக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்டேன்” எனத் தெரிவித்த தபீஷ், பத்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் சொல்கிறார்.

தபீஷுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இளைய தம்பி தலீபுக்கு 11 வயது; இன்னொருவனான தபீனுக்கு 12 வயது; தங்கை சௌலியாவுக்கு இரண்டரை வயது.

தன்னுடன் பிறந்தவர்களை நினைத்தால் கவலையாக இருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். ”இவர்கள் மீதும் பெல்லெட் குண்டுகள் பாயாது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? மிருகங்களை வேட்டையாடத் தானே பெல்லெட் குண்டுகளைப் பயன்படுத்துவார்கள், எங்களுக்கு எதிராக ஏன் அதைப் பயன்படுத்தினர்?”

ஆம். ஒடுக்கப்பட்ட மக்களின் புத்தாண்டு விடியல் இப்படித்தான் இருளடைந்து கிடக்கிறது. புத்தாண்டை வாழ்த்துடனும், வேட்டுடனும் கொண்டாடிய உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

தமிழாக்கம்: முகில்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்

0

PTI3_31_2012_000062Bல்லணை முதல் செம்போடை வரை தியாகச்செல்வி.. சின்னம்மாவைத் தலைமை ஏற்க வருந்தி அழைக்கும் கட்அவுட்-சுவரொட்டிகளில் பச்சை வண்ணம் தூக்கலாய் இருந்தது. சின்னம்மா அ.தி.மு.க பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற வைபவத்தை ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்வேட்டு முழங்க கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அதே நல்ல நாளில் சின்னம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் பதினோரு பேர் இறந்தனர் என்ற செய்தி கொண்டாடியவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. திருத்துறைப்பூண்டி சின்னம்மா திருமண மண்டபம் அருகில் அ.தி.மு.க-விலிருந்து விலகி  பாஜக-வில் அண்மையில் இணைந்துள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. செல்லா நோட்டு மோடி குறித்துச் சிறிது நேரம் பேசிவிட்டு விவசாயிகள் இறப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார் உடன் இருந்த நண்பர்.

“சீக்கு வந்து அம்மாவாசை, பவுர்ணமிக்குச் செத்தவனையெல்லாம் விவசாயி சாவுன்னு பத்திரிகைக்காரன் எழுதுறான்” என்றார் அந்த பாஜக நபர். அந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தது தகரவெளி மல்லிகாவின் கருத்து.

ஆதிச்சபுரத்ல பட்டினியில் ஒருபையன் செத்தான். அவன் வயத்துல நாலு பருக்கைச் சோறு இருந்ததுன்னு மெடிக்கல் ரிப்போட் சொல்லுதுன்னு பேசினவங்கதான் அதிமுக-காரங்க. அவங்க கிடக்குறாங்க. வயலப் பார்த்தா வயிறு எரியுது. நா வயப்பக்கமே போறதில்ல. எம்பொண்ணு வயப்பக்கம் போகாதே பிரஷர் எகிறிடும்ங்கிறா” என்று உண்மை நிலையை வாய்வார்த்தைகளில் படம்பிடித்துக் காட்டினார் இரண்டரை ஏக்கர நிலத்தில் நெல் விதைத்திருக்கும் மல்லிகா.

“குஞ்சங்கட்டி அழகாயிருக்குப் பயிறு, மேலேருந்து வாடிக்கிட்டே வருது, நாலுநாள் முன்னாடி வரை திடமாத்தான் போயிட்டு வந்தேன். இனிமேல் போய்ப்பார்க்க மனசுவல்ல. ஆறுபேரையும் (குடும்ப உறுப்பினர்கள்) அனாதையாகக்கிடாதேன்னு பசங்க சொல்லுதுங்க” என்கிறார் மூன்று ஏக்கரில் நெல் விதைத்துப் பிள்ளைகளை வளர்ப்பது போல் பயிரைப் பேணிக் காத்த தோளாச்சேரி புவனா.

farmer“பேருதான் பார்வேர்டு, நெலம பேக்வேடுதான்” என்று தொடங்கிய ஐயர் வீட்டுப்பெண்மணி இரண்டு ஏக்கரில் நெல் விதைத்திருக்கிறார். வயல்லேயே கிடப்பாங்க என்று மற்றவர்கள் அவரைப்பற்றிக் கூறினார்கள். “போன வருசமாவது ஆறு மூட்டைநெல் கிடைச்சுது. நிவாரணபணம் வந்தது. அதுவே நட்டம்தான். அந்த வருஷம் தம்பிடி நெல் கிடைக்காது. புதுர் சமைக்கக் கூட வழியில்ல. நிவாரணப் பணம் கிடைச்சாலும் யாரும் சமாளிக்க முடியாது போன வருஷ இன்ஷியூரன்ஸ் பணமே இன்னும் வரல” என்றார் ஐயர் வீட்டு அம்மா. இதைச் சந்தித்த விவசாயிகள் அனைவரும் வழிமொழிந்தார்கள்.

இதைப் பதிவு செய்யும் நேரத்தில் விவசாயிகள் இறப்பின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது. அதில் சரிபாதி பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2,500 என்கிறது புள்ளிவிவரங்கள்.

02-01-2016 அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார் திருக்குவளை நாட்டிருப்பு பன்னீர் செல்வம். பன்னீர்செல்வம், கணேசன், ஜோதிபாசு சகோதரர்கள் திருக்குவளை தியாகராஜசுவாமி கோயில் நிலம் மூன்றரை ஏக்கரில் பயிர் செய்திருக்கிறார்கள். குடும்பம் தனித்தனியாக இருந்தாலும் வருடத்திற்கு ஒருவர் என்று முறைபிரித்து சாகுபடி செய்கிறார்கள். இந்த வருடம் பன்னீரின் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகளுக்குத் திருமணம் செய்த கடனையும் சேர்த்து நான்கரை லட்சம் கடன் உள்ளது. இரண்டரை லட்சம் வங்கியில் நகைக்கடன் மீதம், கந்து வட்டிக் கடன் பிரச்சனை, வாடும் பயிர் துக்கம் தாளாமல் தூக்கு மாட்டிக் கொண்டு உயிர்விட்டார்.

இரண்டரை லட்சம் கடனில் உள்ள பன்னீரின் சகோதரர் கணேசன் “பேச்சலரா வெளியூர் போய் சம்பாதிக்க? மண்ண விட்டுப் போக முடியாது” என்று உறுதியாகக் கூறுகிறார். “குடிக்கத் தண்ணி இல்ல, குழாயில் தண்ணி வரலைன்னா ஆறுகிலோமீட்டர் போய் குடிதண்ணி கொண்டுவரணும். எதச் சொல்லிப் பொலம்ப?” என்றார் பன்னீரின் மற்றொரு சகோதரர் ஜோதிபாசு.

800-03தெருவே கூடி தெருமுனைவரை வந்து, “பார்த்துப் போங்க. ரோடு ரொம்ப மோசமா இருக்கு” என்று நம்மை வழி அனுப்பி வைத்த காட்சி கடைமடை விவசாயிகளின் உயர்ந்த பண்பை எடுத்துக் கூறுகிறது. கிராமப்புற இணைப்புச் சாலைகள் பளபளப்பாக இருந்தாலும் சேரிக்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன. பிரதான சாலையிலேயே இருசக்கர வாகனத்தை வைத்துவிட்டு வெண்மணி, நினைவிடத்தைப் பார்க்க நடந்தே செல்ல வேண்டியிருந்தது.

“கிராமப்புற கூட்டுறவு சொசைட்டி பேங்குகளிலும், தபால் நிலையத்திலும் வரவு செலவு முடக்கப் பட்டதால் கிராமப்புற மக்கள் தவியாய்த் தவிக்கிறார்கள். கூலி விவசாயிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது” என்றார் தபால்துறை ஊழியர் ஒருவர். செல்லா நோட்டுப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கூலி விவசாயிகள். வேலை இருந்தாலும் கூலிகொடுக்கக் காசு இல்லை என்ற நிலை கிராமப்புற கூலி விவசாயிகளை நடை பிணமாக்கியுள்ளது.

“64 வேலி கொளப்பாடு கிராமபுத்தில் 100குழி கூட அறுத்துக் கரை சேர்க்க முடியாது” என்று கூறிய படியே அறிமுகப்படுத்திக் கொண்ட கொளப்பாடு சண்முகம். “இப்படியே போனா ஒருத்தன ஒருத்தன் அடிச்சிப் புடுங்குற நிலை வந்துரும்” என்று எச்சரித்தார்.

“15 பவுன் நகை அடமானம் இருக்கு. ஐந்து லட்சம் வெளிகடன் இருக்கு. ஆடு மாடு இருக்கு, சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு, எந்தக் குறைச்சலும் இல்ல. வயப்பக்கம் போக மட்டும் பிடிக்கல” என்றார் இரண்டு வேலி சாகுபடி செய்யும் மாங்குடி சண்முக வேல்.

“சோம்பிக்கிடக்க மாட்டான் சோலி (வேலை) கண்டா” என்று கீழத்தஞ்சை விவசாயிகளை வர்ணிப்பார் மக்கள் கலைஞர் திருமூர்த்தியார்.

அறுபது அடியில் இருந்த நீர்மட்டம். 200 அடிக்குச் சென்றுவிட்டது. தரைக்கு மேல் உள்ள இறவை இயந்திரத்தை வைத்து நீர் இறைக்க முடியவில்லை. இருந்தாலும் மக்களின் முன்முயற்சி குறைந்து விடவில்லை. மூன்று நான்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆழ்குழாய் அமைத்து முறைவைத்துத் தண்ணீர் பாய்ச்சும் கூட்டுப் பாசன முறையைச் சிலர் முயற்சித்துள்ளனர். 240 அடிக்குக் கீழே நீர் மட்டம் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. 200 அடிகுழாய் போட்டு உப்பு நீராகித் தோற்றவர்களும் உள்ளனர். 250அடிக்குக் கீழ் சென்றால் 1000 அடி ஆழத்தில்தான் நீர் கிடைக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

“கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே சாவான் விவசாயி” என்ற புதுமொழியே கீழத்தஞ்சையில் உருவாகியுள்ளது. பெரிய அம்மாவைப் பராமரித்த களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த சின்னம்மா-பன்னீர் அரசு தற்போதுதான் விழித்தெழுவது போல பம்மாத்து காட்டுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்கள் அதிமுக-வை பெரிய அளவுக்கு அசைக்கவில்லை. இப்போதுதான் வறட்சி பாதிப்பைக் கணக்கிட ஆய்வுக்குழுவை அரசு அறிவித்துள்ளது.

சென்ற ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரவேண்டிய தொகையே இன்னும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்போது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஃபார்ட்டி பர்சண்ட் (40%) கமிஷன் கவர்மென்ட் என்று பெயரெடுத்துள்ள அ.தி.மு.க அரசு எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.

“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது
வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது
என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல
இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”

என்ற ம.க.இ.க பாடலை நினைவு கூர்ந்த கூலி விவசாயி தோழர் அய்யாவு பத்தாயிரம் பேர் மக்கள் ஒன்று கூடி ஒரே நாளில் பாமனி ஆற்றின் கரையை உயர்த்தி 35 கி.மீட்டருக்கு மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை மக்கள் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார். “S.G.முருகையன் தலைமையில் நடந்த சிரமதான இயக்கம் போல மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்ற அவரது கூற்று மெய்ப்பட வேண்டும்.

  • வினவு செய்தியாளர்

modi-farmerகேலிச்சித்திரம்: முகிலன்
மக்கள் கலை இ லக்கியக் கழகம், சென்னை.

வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !

0

கோவை விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்நூற்றாண்டு கண்ட தறித் தொழில் தமிழகத்தின் மரபார்ந்த தொழில்களில் ஒன்று. கொங்கு மண்டலத்தின் அடையாள முகங்களில் பஞ்சு மில்களுக்கு இணையாய் சுதந்திரமான கைத்தறி அதைத் தொடர்ந்து விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும் முக்கிய இடமுண்டு. ஆள் மாற்றி ஆள் என 24 நான்கு மணி நேரமும் இடைவிடாமல் தறி இயங்கும். இத்தகைய கிராமங்களில் தறிச் சத்தம் கேட்டால் தான் தூக்கம் வருவோரும் “கரண்ட் இல்லையா., தறி ஓடுது..பாரு கரண்ட் இருக்கு.” என்பது போன்ற பேச்சுக்களும் சாதாரணம். இப்படி மக்கள் வாழ்வோடு ஊடும் பாவுமாய் பிணைந்த தறியும் அதன் தொழிலும் கொங்கு மண்டலத்தின் சிறப்புக்களில் ஒன்று. இத்தகைய தொழிலிலிருந்து ஒவ்வொரு கிராமமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. அறுபடும் ஒவ்வொரு இழையும் விசைத்தறி கூலி நெசவாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் துயரத்தை கூறுபவை.

உளுத்துக் கொண்டிருக்கிறது விசைத்தறி தொழில் இங்கே. பஞ்சு செயற்கை விலையேற்றம். பதுக்கல். ஆன்லைன் வர்த்தகம். வெள்ளைத் தங்கமான பஞ்சை பார்த்து கூட இராதவன் பஞ்சில் நிதி மூலதனத்தை கொட்டி அதை வியாபாரம் செய்து விட்டுப் போவான். விளைவிக்கும் விவசாயிக்கு விலைவைக்க உரிமையில்லை. வாங்கும் நெசவாளிக்கும் உரிமையில்லை. பெட்டி பெட்டியாக பணத்தை கொண்டு வந்து பணத்தை இன்னும் சில பெட்டிகள் சேர்த்து எடுத்து போகின்றவர்களுக்காகவே பெட்டி வாங்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசு எந்திரம். வொயிட் காலர் கிரிமினல்களை கண்டு கொள்ளாமல் ஏ‌டி‌எம் வாசலில் போராடுபவர்களின் மண்டையை பிளக்க ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பலாய் காவல் துறை இருக்க பின்னர் கேட்கவா வேண்டும்.

ஆம் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டுமல்ல இந்த அதிகாரிகளை கேள்வி கேட்க வேண்டும். இவர்கள் தப்பிக்க வழி வைத்திருக்கும் இந்த அரசு அமைப்பை கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் விடிவு காலம் பிறக்கும். நெசவாளிக்கும் விவசாயிக்கும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு தோழர்களின் பாடல் கோவை மண்ணின் தொழிலாளர்களை பற்றி ஒன்றிருக்கிறது. உலகுக்கே ஆடை தந்த கோவையப் பாரு ! அதன் உயிர் மூச்சு அடங்குதே காரணம் யாரு ? என துவங்கும் அப்பாடலின் ஒரு சரணம் இப்படி இருக்கும்.,

தறியாலே நெய்ததடா உன்னோட வாழ்க்க….
அதில் இழையாக ஓடுதடா உன்னோட வேர்வ….!
பறிபோகுது பல்லாயிரம் கனவு நம்பிக்க…..
அந்த பன்னாட்டு கழுகை விரட்ட எடுடா துவக்க… துவக்க…!

இது போல நாம் துவக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நாளன்றே நமக்கு விடிவு காலம்.

கொங்கு மண்டல விசைத்தறி தொழிலாளர்கள் ஜவுளி முதலாளிகள் இடையே அரசு நடுநிலை நாடகம் போட்ட பேச்சு வார்த்தை நாடக சமயத்திலும் விவசாயிகள் நெசவாளிகளுக்காகவே எனக் கூறிக் கொண்டு கருத்துக் கேட்பு நாடகத்தை மின் வாரியம் அரங்கேற்றிய போதும் முதல் ஆளாய் அம்பலப்படுத்திக் குரல் எழுப்பியது கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. அதன் தொடர்ச்சியாய் இப்போது நலிந்து வரும் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க தற்போது மிச்சமிருக்கும் தறித் தொழிலாளர்கள் பருண்மையாக வாழும் சோமனூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் சரவணன்
தோழர் சரவணன்

சோமனூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டின் முன்னால் மாலை சுமார் 4:30 வாக்கில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் சரவணன் தனது தலைமையுரையில், மோடி அரசு இரண்டு வருடங்களாக பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி எசமான் ஒபாமாவுக்கு படையல் வைத்தது முதல் மோடியின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். இறுதியில் பெங்களூர் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் அதே போல ஒரு போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் நடத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தர முடியும் என கூறி முடித்தார்.

தோழர் வினோத்
தோழர் வினோத்

அடுத்ததாக உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் வினோத், கேஷ்லெஸ் எக்கானமி எனக் கூறிவிட்டு உண்மையிலேயே பேங்க், ஏ‌டி‌எம் என எந்த இடத்திலுமே கேஷே இல்லாமல் மக்கள் கையில் பணமே இல்லாமல் பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாடியவர் அதன் தொடர்ச்சியாய் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டவிரோதத் தன்மையை அம்பலப்படுத்திப் பேசினார். 12 மணி நேரம் குடோனில் வேலை கூலியை வாங்கிக் கொண்டு வந்து குடும்பம் நடத்துவது என இருந்த தொழிலாளர்களை, பேங்கின் நடைமுறை பற்றிய அடிப்படை அறிவில்லாமல் இருக்கும் மக்களிடம் பேங்க் ஏ‌டி‌எம் போன்றவற்றை கொண்டு போய் சேர்க்காமல் இப்படி ஒரு நடவடிக்கையை அறிவித்து அறியாமையில் இருக்கும் மக்களை துன்பத்தில் உழல விட்டுள்ளார் மோடி என்பதை விளக்கினார்.

அடுத்து உரை நிகழ்த்திய காங்கேயம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் வசந்தன், அனைவருக்கும் பொதுவான சட்டத்தை அரசு மதிக்காத போது நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்..? என கேள்வி எழுப்பினார். வெனிசுலாவில் மக்கள் திருப்பி அடித்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறியடித்தனர். அதே போல் விசைத்தறி தொழிலாளர்களும் திருப்பி அடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் ஒரு மாற்றத்தை காண முடியும் என வலியுறுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கரூர் தோழர் ராமசாமி, புதிய தாராளமய கொள்கையின் விளைவாய் சிறு தொழில் அனைத்தும் அழிக்கபடுவதை அதன் தொடர்ச்சியாய் பாதிப்புக்குள்ளாகும் தறித் தொழிலை காக்க வேண்டியதன் அவசியத்தையும் பேசினார்.

அடுத்து பேசிய ஈரோட்டை சேர்ந்த தோழர் புஷ்பராஜ், விவசாயத்திற்கு அடுத்த படியாய் ஆதாரமான தொழிலாக விளங்கும் தறித் தொழிலலையும் அது எப்படி நசிந்து வருகிறது என்பதையும் கூறியவர்., ஈரோட்டில் நடைபெற்ற மின்சார வாரியத்தின் நுகர்கோர் கருத்துக் கேட்பு கூட்டம் எனும் நாடகத்தையும் அதில் கலந்து கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினரும் இணைந்து மின் வாரிய அதிகாரிகளை அவர்தம் பொய்களை தோலுரித்ததை நினைவுபடுத்திப் பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் சம்புகன் மோடியின் நடவடிக்கையை திரை கிழித்துப் பேசினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் வெகுண்டெழுந்த உ.பி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு சென்ற சம்பவத்தை கூறி மக்கள் போராட்டமே அனைத்துக்கும் தீர்வு என முன்வைத்தார்.

அடுத்தாக உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொருளாளர் தோழர் நித்தி, வெளி நாட்டு துணி இறக்குமதி பஞ்சு விலையேற்றம் போன்றவற்றின் விளைவாக நலிந்து வரும் விசைத்தறி தொழிலை தமது பிரச்சார அனுபவத்தில் கண்ட மக்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டார்.

  • படங்களைப் பெரிதாக பார்க்க அழுத்தவும்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி,

Coolie Photographer
தொழிலாளிகளை படமெடுக்கும் போலீசு!

“நாங்கள் அனைவரும் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு மனைவி குழந்தை என குடும்பத்துடன் இருப்பதை மறுத்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க, அதற்கான போராட்டங்களை கட்டியமைக்க இங்கு வந்துள்ளோம்.இங்கோ காவல் துறை அனைவரையும் புகைப்படம் எடுக்க ஆள் வைத்து மிரட்ட முயற்சிக்கிறது. நாங்கள் என்ன கிரிமினல்களா..? இந்த மண்ணின் மைந்தர்கள். கட்டபொம்மன் பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் வாரிசுகள் நாங்கள்.

கோவை சோமனூர் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விளைந்த மண் இது. பருத்தியை வெள்ளைத் தங்கம் என நம் முன்னோர்கள் மரியாதை கொடுத்தார்கள். பருத்தி காய்ந்து வெடித்தால் செடி சிரிக்கிறது என்பார்கள். மழை இல்லாமல் பஞ்சுக்கு விலை இல்லாமல் எல்லோரும் விசைத்தறிக்கு மாறினோம். விவசாயத்தை நினைவில் மட்டும் வைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 50 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தது. இ‌எஸ்‌ஐ வசதி உண்டா ? பி‌எஃப், பணிக்கொடை எதுவும் கிடையாது. தொழிலாளர்களுக்கான சட்டப்படியான சலுகைகள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் எல்லா கட்சிகளும் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தவர்கள் திட்டமிட்டு இந்த உரிமைகள் நமக்கு கிடைக்காமல் செய்தார்கள். முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்கள்.

புஜதொமு 2014இல் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் இதே பிரச்சினைகளுக்காக நடத்தினோம். விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். நடந்திருப்பது சட்டப்படியான ஒப்பந்தம் அல்ல கட்டப்பஞ்சாயத்து என்றோம். 12/3 ஒப்பந்தம் போட சொன்னோம். அதனை விசைத்தறி சங்கத் தலைவர்கள் மறுத்தார்கள். விளைவு மீண்டும் நெருக்கடி இந்த முறை நெருக்கடி முற்றிப் போயி உள்ளது. இதனை போராடித்தான் தீர்வுக்கு கொண்டு வர முடியும். சாதுரியமாக நடந்து கொண்டால் டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் நிலைதான் தறி மாவட்டங்களிலும் ஏற்படும்.

தஞ்சையில் கடந்த டிசம்பர் முதல் இன்று வரை ஒரே மாதத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்ந்த பயிரைக் கண்டு கண்ணீர் வடித்து நெஞ்சு வெடித்து வயலில் விழுந்து சாகிறார்கள்.

இதே போல் சோமனூர் பகுதி அறிவாளிகள் அது போல நடக்காது என நினைக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லை. வெளி மாவட்ட தொழிலாளிகள் இப்போது வெளியேறி உள்ளார்கள். இதுவே அபாயமணி என எடுத்துக் கொள்ளுங்கள் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாமல் தான் விசைத்தறிக்கு மாறினோம். விசைத்தறியும் இல்லையெனில் அடுத்து எங்கு மாறுவது ? போராட்டம் தான் தீர்வு.

Vilavai Ramasamy (2)
தோழர் விளவை ராமசாமி

2007 இல் காங்கிரஸ் கவர்ன்மெண்ட் நம் தொழிலுக்கு அடிப்படையான பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது. பஞ்சு இந்தியாவுக்கு அவசியம் இல்லையா…? ஏன் பி‌ஜெ‌பி சர்க்கார் காங்கிரஸ் முடிவை மாற்றி பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் இடத்தில் மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வில்லை. பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் நமது தொழில் நலிவடையாது. அதே நூலின் விலையையும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பதுக்கி வைத்து விலையேற்றுகிறான். பஞ்சில் விலை ஏறுது ஆனால் நாம் உற்பத்தி செய்யும் ஜவுளி விலை குறையுது. பின்னர் குறைந்த விலையில் வாங்கியபிறகு விளம்பரம் செய்து துணியின் விலையை ஏற்றிக் கொள்கிறான்.

நாம் உற்பத்தி செய்த துணியின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நமக்கே வேண்டும். பஞ்சைப் பதுக்கும் முதலாளிகளை கைது செய்ய வேண்டும்.

இதற்காக நாம் விசைத்தறியில் ஓடும் நாடாவை கையில் எடுக்க வேண்டும். நாட்டை கைப்பற்ற வேண்டும் சோமனூர் வீதியில் இறங்கவேணும். கோவை ஜெயிலை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அங்கு அதிகபட்சம் 2500 பேரை அடைக்கலாம். அதன் கொள்திறனே அவ்வளவு தான். இரண்டாயிரம் பேர் முன்னரே உள்ளே இருக்கிறான். நாம் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறோம். நாம் ரோட்டுக்கு வந்தால் அனைத்தும் நிறைவேறும் என வீதியில் இறங்கி போராடுவோம்”, எனக் கூறி முடித்தார்.

பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட செயலர் தோழர் திலீப் அவர்களின் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

  • தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
    கோவை

உழவருக்காக பொங்காவிட்டால் இது உயிருள்ள நாடா ?

0
பச்சைப் படுகொலை

யிர் கருகுது
காணச் சகியாமல்
கண்கள் இமையாமல்
இதயம் துடிக்காமல்
உயிர் உறையுது.

Thanjai vilaage (2)
பயிர் கருகுது காணச் சகியாமல் கண்கள் இமையாமல் இதயம் துடிக்காமல் உயிர் உறையுது…

விவசாயி
நெஞ்சு வெடிக்குது
விளைநிலம்
துடித்து அடங்குது.

கடன் சுமை
காத்திருக்கும் நம்பிக்கை
மானம் மரியாதை
கடைசிப் பிடிமானம்…
எல்லாம் சேர்ந்த
நெற்பயிர் அழிவு
தற்கொலை ஆகுமா?

மேலாண்மை வாரியம் நிறுத்தி
காவிரி ரத்தம் மறித்து
கைக்காசையும்
செல்லாதாக்கிப் பறித்து
நாத்தாங்கால் மூச்சை
அணு அணுவாக நெறித்து
பச்சை படுகொலை செய்யுது
பா.ஜ.க.
பாடை கட்டுது அ.தி.மு.க.
ஊரையே அறுவடை செய்ய
அம்மா, சின்னம்மா
உழவன் பிணம் விளையும்
ஒரு மா, ரெண்டு மா!

Thanjai vilaage (4)
ஊரையே அறுவடை செய்ய பாடை கட்டுது அ.தி.மு.க!

தேசத்துரோகிகள்
சேகர்ரெட்டிகளை
தோண்டத் தோண்ட பல கோடி
மோசம் போன விவசாயி
வெடித்த நெஞ்சிலும்
விலகாத சேத்து நெடி!

நெல்லோடு
உயிர் அலைந்து
நீராகாரத்தில்
பசி அலைந்து
பொய்த்துப் போன கனவில்
நெஞ்சாங்குலை குலைந்து
சரிந்த விவசாயி
காய்ந்த தாளின் உடலாக.

manal
ஊற்றுக் கண்ணையும் தோண்டி எடுத்து ஆற்று மணலையும் தின்றவர்கள்..

புல்லோடு பூவழித்து
நீராதாரத்திலும்
பணம் அளந்து
ஊற்றுக் கண்ணையும்
தோண்டி எடுத்து
ஆற்று மணலையும்
தின்றவர்கள்
குற்ற உணர்ச்சி
கூச்சமின்றி
கட்சிகளாக நம்மைச் சுற்றி.

பசுமை புரட்சி
வெண்மைப் புரட்சி
பாக்டம்பாஸ்
பல வகை உரங்கள்…
விவசாயிகளை
முன்னெற்றுவதாய் சொல்லி
மகசூல் பார்த்த முதலாளிகள்.

கடைசியில்
பச்சைத் தண்ணீருக்கு வழியில்லாமல்
மாடு  சாகுது,
கடையில்
பால்டாயில் வாங்கவும் காசில்லாமல்
விவசாயி
பார்த்து சாகிறான்!

அரசியல் களை
எடுக்காமல் – இனி
அருகம் புல்லும்
முளைக்காது
ஆள அருகதையற்ற
அரசமைப்பை ஒழிக்காமல்
இனி யாருக்கும்
உயிர் நிலைக்காது!

சோறு திங்கும் அனைவருக்கும்
சொந்தமான  துக்கம் இது.
உழவு
இழவான நாட்டில்
பொங்கல் ஒரு கேடா?
உழவருக்காக
பொங்காவிட்டால்
இது உயிருள்ள நாடா?

துரை. சண்முகம்

மோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017

0

puka19_jan_17_wrap

ண மதிப்பிழப்பு குறித்து நவம்பர் 8, 2016 முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வந்து விட்டன. தான்தோன்றித்தனமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கு இந்த அறிவிப்புகளே போதுமானவை. இருப்பினும் கருப்புப் பண முதலைகளைத் திணறடிக்கும் நடவடிக்கை என்று இவற்றை கொண்டாடுகின்றனர், பா.ஜ.க.வின் ஊடக கூஜாக்கள்.

வேலைவாய்ப்பைக் குறைப்பதும், சிறு தொழில்களை அழிப்பதும், பண முதலைகளின் கையில் மென்மேலும் செல்வம் குவியுமாறு செய்வதும், ஏழைகளைப் பரம ஏழைகளாக்குவதும் எந்தக் கொள்கையோ – அதுதான் கருப்புப் பணத்தையும் உருவாக்குகிறது.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ் உள்ளிட்டு பலரிடம் நடத்தப்படும் வருமான வரி சோதனை குறித்த செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. இதை வைத்து கருப்புப் பண ஒழிப்பு சூடு பிடித்திருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. திருப்பூர் கன்டெயினர், அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணம் ஆகியவற்றின் கதி என்ன? நத்தம், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் போடப்பட்ட சோதனைகள் இன்று என்ன ஆயின? இவை வெறும் கந்துடைப்பேயன்றி வேறென்ன ?

போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2,500 கோடி ரூபாயைக் கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்ற உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு ?

சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது.

4-ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும்  உட்படுத்துவது;

இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.

ஏமாந்தது போதும்,கேள்வி எழுப்புங்கள். நம்மை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி ! வீதியில் இறங்கி வீறு கொண்டு போராடுவதற்கு இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உதவும்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்
  2. மோடியின் பலிபீடம்: 7 நாளில் 33 பேர் பலி !
  3. பா.ஜ.க தலைவர்கள்:
    120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?
  4. உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது
  5. மோடியின் நண்பர்கள்
    முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா
  6. மோடியின் தாக்குதலால்
    பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை
  7. கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
  8. கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !
  9. கருப்புப் பணம் என்றால் என்ன ? – பிரபாத் பட்நாயக்
  10. வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
  11. ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் − ஜெயரஞ்சன்
  12. மோடியின் முடிவை காறி உமிழும்
    வெளிநாட்டு பத்திரிக்கைகள் !
  13. சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !
  14. கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ?
  15. வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்

0

தொடரும் விவசாயிகளின் மரணங்கள்…

Farmer Suicides 750x400

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுப்பு !

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

farmers suiside

இணையுங்கள்:

DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !

1

NDLF Letter head

கண்டன அறிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலிசின் கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!

31.12.2016 அன்று மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராடிய ஒரு பெண்ணை பள்ளிக்கரணை காவல் நிலைய எஸ்.ஐ வக்கிரத்துடன் நடத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கடத்திக் கொண்டு போய் போலீசு வண்டியிலேயே வைத்து துப்பாக்கியால் கடுமையாக போலீசு தாக்கியது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைத்தது, 14 பேரை சிறையில் அடைத்துவிட்டனர். மக்களை பாதுகாப்பதாகச் சொல்லும் போலீசே பொறுக்கித்தனமானமாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் அதை எதிர்த்துக் கேட்டால் தாக்குவதும் சிறையில் அடைப்பதும் எந்த சட்டத்தில் இருக்கிறது?

மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் மக்கள் ” 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் இல்லையேல் என்னை தூக்கிலிடுங்கள் ” என்று மோடி சவடால் அடித்தார் .

மக்கள் கையிலிருந்த பணத்தை வங்கியில் போட்டார்கள். போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை . ஆலைகளும், நிறுவனங்களும் ஊழியர்கட்கு சம்பளத்தை பணமாக வழங்கவில்லை.

வியாபாரிகளுக்கும் பணம் கையில் இல்லை. விசைத்தறிகள் நூல் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி தரவும் பணம் இல்லாததால் முடங்கிவிட்டது. மக்கள் மணிக்கணக்காக ATM முன்பு நின்றும் பயனில்லை , வங்கி கணக்கு உள்ளவர்கட்கே இந்த நிலைமை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் நிலை மேலும் வேதனைக்குரியது கல்யாணம், கருமாதி எதற்கும் செலவு செய்ய பணம் இல்லை.

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை – சுமார் 15 லட்சம் கோடியை வங்கியில் போட்டுவிட்டனர். திவாலாகிப்போன வங்கிகளுக்கு இந்த பணம் வந்துவிட்டது. இந்த பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தரவே , மோடி இந்த திட்டத்தை அறிவித்தார் . கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகளுக்கு வாராக்கடன் என முத்திரை குத்தி தள்ளுபடி செய்தது மோடி அரசு. அவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கவே இந்த திட்டம். உள்நாட்டு/அயல்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகட்கும், தரகு முதலாளிகட்கும் தேவையான பணத்தை வழங்கவே , மக்கள் கையிலும், சுருக்குப்பையிலும் உள்ளதை பிடுங்கிக்கொண்டது மோடி அரசின் இந்த திட்டம். உணவு, உடை, தேனிர் என எந்த பொருள் வாங்கவும் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் . ATM வரிசையில் நின்று 200 பேர் செத்துப்போனார்கள். எனவே மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.

சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

நன்றி , வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள,
சுப.தங்கராசு
பொது செயலாளர்,
பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

___________________________________________________________________________________________

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 9445112675

 

தேதி : 3.1.2016

வங்கியில்போட்ட பணத்தை எடுக்காதே என்று
மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு!
எதிர்த்துப் போராடுபவர்களின் மண்டையைப் பிளக்கிறது தமிழக அரசு!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலீசின் கொலைவெறித்தாக்குதலை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது!

ரூ.500, 1000 செல்லாது என்ற மோடியின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த டிசம்பர் 31 ந்தேதி சென்னை மேடவாக்கம், மாம்பாக்கம் சாலை சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் வங்கி ஏடிஎம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அங்கு வந்த பள்ளிக்கரனை உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனைக் கண்டித்த மற்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்துகொண்டு செல்லும்போது போதும் போலீசு வாகனத்தில் வைத்து லத்தியாலும், துப்பாக்கியின் அடிப்பக்கத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

DYFI Protestஇவர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்தின் அருகில் கூடி பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.பி.எம் கட்சியினர் மீது பள்ளிக்கரனை ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சிலரின் மண்டை உடைந்துள்ளது, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 14 பேரை சிறையிலும் அடைத்துள்ளது போலீசு. மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீதான போலீசின் இந்த கொலைவெறித் தாக்குதலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளிக்கரனை போலீசு உதவி ஆய்வாளர் ரவி, தாக்குதலில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்து – கைது செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம். ரூ.500, 1000 செல்லாது என அறிவித்து 50 நாட்கள் கடந்துவிட்டது. கருப்புப்பண ஒழிப்பு நாடமாடிய மோடியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

“50 நாட்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் இல்லையென்றால் என்னை நடுத்தெருவில் வைத்து தூக்கில் போடுங்கள்’’ என்று வாய்ச்சவடால் அடித்த மோடி, இப்போது அறிவிப்புகளை மட்டும் மாற்றி பித்தலாட்டம் செய்கிறார். தங்கள் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அமைப்புச்சாரா தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துவிட்டது. சிறுதொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

பலகோடித் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பல லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த 50 நாளில் பெருவாரியான உழைக்கும் மக்கள் வாழ்வை நாசமாக்கி தனியார் வங்கிகளையும், பணமற்ற பரிவர்த்தனை செய்யும் பே.டி.எம் வாலட்டுகள் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளையும் மேலும் மேலும் கொழுக்க வைப்பதைத்தான் செய்துள்ளது மோடி அரசு. மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நாடகமும் முடிவுக்கு வந்துவிட்டது. 2000 ரூபாய்க்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் காத்துக்கிடந்து செத்ததுதான் மிச்சம் என்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள் மோடியை காறி உமிழ்கிறார்கள்.

உழைத்து சேமித்த மக்கள் பணத்தை கொள்ளையிடுவதுதான் மோடியின் நோக்கம் என்பதை உணர்ந்து நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். தமிழகத்தில், எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சேர்ந்து 51 வது நாள் ’’50 நாள் அவகாசம் முடிந்தது, வங்கிகளை முற்றுகையிடுவோம், போட்ட பணத்தை எடுப்போம்’’ என்று அண்ணாசாலையில் அரசு கருவூல வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதுபோல் அமைப்புகளும், எதிர்க் கட்சிகளும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இப்பிரச்சனையை தீர்க்க முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ள மோடி அரசும், மாநில அரசுகளும் போலீசு குண்டாந்தடிகளை ஏவி போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. அந்த வழியில்தான் தமிழக அரசின் போலீசும் போராடுபவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது என அடக்குமுறையை ஏவிவருகிறது. போலீசின் இத்தகைய அடக்குமுறைகளால், ரூ.500, 1000 என்ற மோடியின் பாசிச நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.

த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

0
Percy_Bysshe_Shelley_by_Alfred
கவிஞர் ஷெல்லி

ங்கிலாந்தின் மக்களே!

இங்கிலாந்து தேசத்தின்
தொழிலாளர் தோழர்களே!
உங்களை அடிமை நுகத்தடியில்
பிணைத்து வைத்துள்ள பிரபுக்களுக்காக
நீங்கள் ஏன்
உழுது களைக்கிறீர்கள்?

உங்களை உறிஞ்சிக் கொழுக்கும்
கொடுங்கோலர்களின்
ஆடம்பர ஆடைகளை
நீங்கள் ஏன் நெய்து நோகிறீர்கள்?

உங்கள் வியர்வையை அவித்து
இல்லை, இல்லை –
உங்கள் குருதிகுடிக்கும்
சுயநலச் சோம்பேறிகளுக்கு

உண்டி, உடை, உறைவிடம் அளிக்க
பிறப்பு முதல் இறப்பு வரை
நீங்கள் ஏன்
ஓயாது உழைக்கிறீர்கள்?
இங்கிலாந்தின் இதயத் துடிப்பே,
இடையறா உழைப்பின் தேனீக்களே –
நீங்கள் வடித்தெடுத்த
எந்திரங்களும் ஆயுதங்களும்
உங்கள் உழைப்பின் விளைச்சல்தானே?

உங்கள் உழைப்பின் விடியல்களைக்
கொடும்பார்வைக் கோட்டான்கள்
நாசப்படுத்திக் கொண்டாடுவர் என்பதை
ஏன் இன்னும் நீங்கள் அறியவில்லை?

அதிரடி அதிகார மேய்ச்சலில்
வலியோடும் அச்சத்தோடும்
நீங்கள் கண்டதென்ன, கொண்டதென்ன?
ஓய்வு, சுகம், அமைதி
உங்களுக்குக் கிட்டியதா?
உண்டி – உடை – உறைவிடம்
நோய்க்கு இதமாக அன்பின்
வருடல் தான் எட்டியதா?

உங்கள் விதைப்பு முதலாளி அறுவடை;
செல்வம் நீ கண்டெடுக்க மற்றொருவன் பறிக்கிறான்;
தறியடித்து நீ உழைத்து இன்னொருவன் அணிகிறான்;
நீங்கள் உருவாக்கும் படைக்கலன்கள்
மற்றொருவன் உயிர்காக்கும் அரணாகிறது.

தோழர்களே, விழித்தெழுங்கள்!
விதையுங்கள், கொள்ளையன்
அறுவடை செய்ய அனுமதிக்காதீர்!
செல்வம் கண்டெடுங்கள்,
எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்!
ஆடைகளை நெய்யுங்கள்,
சோம்பேறி அணியவிடாதீர்!
ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!

நீங்கள் மாளிகை எழுப்ப – அவர்களுக்குக் கேளிக்கை!
நீங்களோ – சந்து பொந்துகளில் ஓட்டைக் குடிசைகளில்
கூட்டுக் குருவிகளாய் குமைந்து வேகிறீர்கள்!

நீங்கள் வனைந்த கைவிலங்குகளின்
உடும்புப்பிடியில் நீங்கள் இன்னமும் ஏன்
வளைந்து நெளிகிறீர்கள்?
நீங்கள் காய்ச்சி அடித்த இரும்புச் சங்கிலிகளின்
எக்காளம் பார்த்தீர்களா, ஏகடியம் கேட்டீர்களா?

தோழர்களே,
எரிமலைக் குழம்பாய் நீங்கள் எழவில்லை என்றால்
ஏர்கலப்பை மண்வெட்டி களைக்கொட்டு
தறிக்கட்டை கையில் எடுத்து
உங்கள் சவக்குழியை நீங்கள் தோண்டி
கல்லறை சமைக்க நேரும்;
உங்களுக்கான பிணப்போர்வையை
நீங்களே நெய்யும் நிலை வரும்;

இறுதியில் –
உங்கள் புகழ்மிக்க தேசம்
உங்களுக்கே கல்லறை ஆகவும் கூடும்!

– ஷெல்லி

(மூலம் : ஆங்கிலம்)

தமிழில் – பேரா. திருமாவளவன், பாலு

இங்கிலாந்தின் புரட்சிக்கவி ஷெல்லி பற்றி மார்க்சின் கருத்தை அவரது மகள் எலீனார் மார்க்ஸ் பதிவு செய்துள்ளதை கலை இலக்கியம் பற்றி – மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ; முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ, 1976 (ஆங்கிலத் தொகுப்பு) இங்கே மொழிபெயர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

“தத்துவாசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை எவ்வாறு அறிந்து புரிந்து கொண்டிருந்தாரோ அது போலவே கவிஞர்களையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார் மார்க்ஸ். அவர் சொல்வார் “பைரனுக்கும் ஷெல்லிக்கும் உண்மை வேறுபாடு எதில் என்றால் அவர்களைப் புரிந்துகொள்பவர்கள், விரும்பியவர்கள் 36ம் வயதில் பைரன் இறந்த பொழுது ஒருவகையில் நல்லதே என்பார்கள்; ஏனென்றால், இன்னமும் நீண்டநாள் வாழ்ந்திருப்பாரானால் அவர் மிகமோசமான பிற்போக்கு முதலாளித்துவவாதியாக மாறியிருப்பார் என்றார்கள் இதற்கு நேர்மாறாக, 29ம் வயதிலேயே ஷெல்லி இறந்து போனதற்குப் பெரிதும் வேதனைப்பட்டார்கள். ஏனென்றால், இறுதிவரை முழுக்க முழுக்க இடையறாது தொடர்ச்சியாக சோசலிச முன்னோடியாக ஊன்றி நின்று புரட்சியாளனாக வாழ்ந்தார் ஷெல்லி (என்பதே அவர்கள் கருத்து)”.

சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

3
  • ஒரு ஏக்கருக்கு  3,40,000 ரூபாய்! பழுதில்லாமல் லாபம்தரும்   பப்பாளி!!
  • உழவில்லை! உரமில்லை! பராமரிப்பு இல்லை! 100  தென்னை மரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்!!
  • 60 சென்ட், 70நாள், 90,000ரூபாய்!
    சின்ன வெங்காயம்…பெரிய லாபம்!!
  • அரை ஏக்கர்.. 160 நாள்.. 1,20,000 ரூபாய்! நல்ல வருமானம் தரும் நாட்டு வெண்டை!!
  • ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்! வேர்கடலை!!
  • தினமும் 20 லிட்டர் பால்! மாதம் 60,000 ரூபாய் வருமானம்!!
  • 5 ஏக்கர்நிலம்! ஆண்டுக்கு  6 லட்சம் வருமானம்!

இவையெல்லாம் “வை ராஜா வை…5 வச்சா 10, 10 வச்சா 20” என்ற மூணு சீட்டுகாரன் பேச்சு என நினைத்துவிடக் கூடாது! ‘பாரம்பரியமிக்க’ விகடன் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் ‘பசுமை விகடன்’ பத்திரிக்கையின் அட்டைப்பட வாசகங்கள். நல்லவேளையாக அம்பானி அதானிகளின் சேவகரான மோடியின் கண்களில் பசுமை விகடன் சிக்காமல் போனதால் தமிழக விவசாயிகள் தப்பித்தார்கள்! இல்லாவிட்டால் இந்நேரம் வருமானவரி நோட்டீசாவது அனுப்பியிருப்பார்கள்.

ஆகா,…விவசாயத்துல இவ்வளவு லாபம் இருக்கா? “ஒரு ஏக்கர் நிலத்தை மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கினால்கூட, பப்பாளி பயிரிட்டால் ஒரே வருசத்துல அசலை எடுத்துவிடலாம். அடுத்தடுத்து வருவது எல்லாமே லாபம்தான்” என்று கணக்குப் போட்டு யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மேற்கண்ட தலைப்புகள்தான் விகடன் குழுமத்தின் மூலதனம்!

 விகடனுக்கு இயற்கை ஆர்வம் பிறந்தது ஏன்?

இன்றைய வேளாண்மை, நவீன வேளாண்மை, அக்ரி பிசினஸ் போன்ற பிற விவசாயப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் ரசாயன உரம் சார்ந்த நவீன விவசாயத்தை ஆதரிப்பவை. விதைப்பு முதல் அறுவடை- விற்பனை வரை விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நவீன தொழில்நுட்ப விவரங்களை எழுதுவார்கள். பசுமைக்குடில், நிழல்வலை, மண்ணில்லா விவசாயம் (hydrophonic cuture), திசுவளர்ப்பு முறை போன்ற உயர் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வார்கள். இதற்காகவே வேளாண் பட்டதாரிகளையும், ஒய்வு பெற்ற பேராசிரியர்களையும் ஆசிரியர் குழுவில் வைத்திருப்பார்கள். வீரியரக விதை, உரம், மருந்து, விவசாயக் கருவிகள் தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர வருவாய்தான் இவர்களின் வருவாய் ஆதாரம்!

ஒரு நாள் விவசாயிகள்
நடுத்தர வர்க்கமே விகடனின் சந்தை

ஏற்கனவே சந்தையிலுள்ள சரக்கையே விற்பதற்குப் பதில் புது சரக்கை சந்தையில் இறக்கினால் நாலு காசு பார்க்கலாமே என்று யோசித்த விகடன் குழுமத்தின் முதலாளித்துவ மூளையில் சிக்கிய சரக்குதான் இயற்கை விவசாயம். இதுவும் விகடனின் சொந்த சரக்கல்ல, திரு.நம்மாழ்வார் அவர்களின் தீவிர முன்முயற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு விவசாயிகளின் சுய விருப்பத்தினாலும், சில தன்னார்வக் குழுக்களாலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுதான் இயற்கைவிவசாயம். இப்படி அடுத்தவர் உழைப்பில் உருவான சரக்கையே பளபளப்பான விகடன் கவரில் அடைத்து விற்கும் திருட்டுச் சரக்குதான் பசுமை விகடன்.

ஒருவழியாக சரக்கு தயாராகிவிட்டது. இதை விற்று காசாக்க வேண்டுமானால் வாடிக்கையாளர்களை, அதாவது வாசகர்களைப் பிடித்தாக வேண்டும். விவசாயத்தை புத்தகத்தில் படித்து, மனப்பாடம் செய்து, குறிப்பு எடுத்துக் கொண்டு தொழில்செய்யும் விவசாயிகள் எந்தக் கிராமத்திலும் இல்லை. எனவே பட்டிக்காட்டு விவசாயி நமக்கு ஒத்துவரமாட்டான் என்பது விகடன் வகையறாவுக்கு நன்றாகத் தெரியும். அடுத்துள்ள ஒரே தேர்வு படித்தவர்களைப் பிடிப்பதுதான்! அதுவும் சுற்றுச்சூழல் மற்றும் ரசாயன உரம்-மருந்துகளின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால், ‘இயற்கை விவசாயத்தை’ எளிதாக விற்று விடலாம். இந்தப் பிரிவினரிடம் ஏற்கனவே நம்மாழ்வார் பிரபலமாகி இருப்பதால் விளம்பரச் செலவில்லாமலே சந்தை வாய்ப்பும் தயாராக இருக்கிறது. இப்போது சரக்கும் ரெடி. சந்தையும் ரெடி. இனி ‘படித்தவர்கள் மீது பாரத்தைப் போட்டு விட்டு’ துணிந்து களத்தில் இறங்கிவிடலாம் என்றாலும் விகடனின் ‘தொழில்வளர்ச்சிக்கு’ இன்னமும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கிறது.

 உள்ளங்கையில் விவசாயம்! விகடனின் சாதனை!

விழிப்புணர்வு பெற்ற படிப்பாளிகள் நகரத்தில் இருப்பார்கள். நகரத்திலோ விவசாய நிலம் இல்லை. இவர்களிடம் விவசாய ஆர்வத்தை உருவாக்குவது எப்படி? என்பது முதல் சவால். ஆன்ட்ராய்டு மொபைலை கையில் பிடித்திருக்கும் நடுத்தர வர்க்கத்தின் கைகள், ஆடுமாடுகளைப் பிடிக்குமா? நகரத்து வீதிகளில் கிளம்பும் தூசிக்கே முகத்தை மூடிக்கொள்ளும் இவர்கள் புழுதிக்காட்டில் கால்பதிப்பார்களா? இவர்களை நமது வலையில் வீழ்த்தி தக்கவைப்பது எப்படி? என்பது இரண்டாவது சவால். ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்துவருபவர்களிடம்  “நம்மாழ்வாரின் ஒரே அவதாரம் நமது பசுமை விகடன்தான்” என்று நம்பவைக்க வேண்டும். அப்போதுதான் சந்தையை நிரந்தரமாக தக்கவைக்கமுடியும் என்பது மூன்றாவது சவால். சவால்களை எப்படி முறியடிப்பது?மாடித் தோட்டம்

இலவசத்திற்கு ஆசைப்படுவது நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். அவள் விகடனில் டவ் ஷாம்பு பாக்கட்டை இலவசமாக கொடுக்கலாம். பசுமை விகடனில் நாட்டு மாட்டையும், ஏர் கலப்பையையும் இலவச இணைப்பாக கொடுக்க முடியுமா? முடியாது. வேறு என்ன செய்யலாம்? கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்.

என்னதான் ஐ.டி. ஊழியராக நவநாகரீக மேக்கப்புகளுடன் நகரத்து வீதிகளில் வலம் வந்தாலும் இவர்களின் ஆணிவேர் கிராமம்தான். செக்குமாட்டைப்போல ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வதால் மனம் சலிப்படைந்து வெறுமையை உணரும்போது  கிராமத்து நினைவுகள் மின்மினி பூச்சிகளாக வந்துமோதுவதை தவிர்க்கமுடியாது. கம்மாக்கரை, பச்சைப்பசேல் வயல்வெளி, ஆலமரத்து விழுது, வேப்பமரத்தின் குளுமை, ஆடு-மாடு மேயும் புல்வெளி, என்று இழந்துவிட்ட தனது கிராமத்து அடையாளங்களிடம் ஆறுதல்தேட மனம் குறுகுறுக்கும். ஆனால், நகரத்து ஆடம்பர வசதிகளை இழப்பதற்கும் மனம் இடம்தராது.

செல்பி விவசாயிகள்.
செல்பி விவசாயிகள்

சமீபகாலத்தில் கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறி புதுப்பணக்காரர்களாக வளர்ந்து வரும் நடுத்தரவர்க்கத்தின் இந்த ஊசலாட்ட உளவியலுக்கு தீர்வு என்ன? உலகத்தையே ஆன்ட்ராய்டில் அடக்கிப் பார்த்துப் பழகியவர்களுக்கு விவசாயத்தையும் அதே அளவுக்கு குறுக்கிக் காட்டமுடியுமா? இதற்கு விகடன் தேர்ந்தெடுத்த வழிதான் “வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்” இதுவும் ஏற்கனவே உள்ள விசயம்தான். அதில், நாட்டுரகவிதை, மண்புழுஉரம், பஞ்சகாவியா, அமுதக் கரைசல் என்பதைப் புகுத்தி இயற்கைவிவசாயம் என்ற ‘கெட்டப்பை’ உருவாக்கியதுதான் விகடனின் தொழில்நுட்பம். “எங்கள் வீட்டுமாடியில் முதல் கத்திரிக்காய்” “இயற்கைமுறையில் விளைந்த விஷமற்ற வெண்டிக்காய்” என்று முகநூலில் செல்பி போட்டு நடுத்தரவர்க்கமும் பெருமைப்பட்டுக் கொள்ளும்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்!

வீட்டுத்தோட்டம் என்று ஒருமுறை இறங்கிவிட்டால், மண்கூடை, நாட்டுரக விதைகள், பஞ்சகாவியா, பூச்சிவிரட்டி, மருந்து அடிக்கும் கருவி, நிழல்வலை என பலவற்றையும் தேடி வருவார்கள். பாக்கட் பாலில் நாட்டுமாட்டின் பாலை பிரித்தறிய முடியாமல் ரெடிமேட் பஞ்சகாவியா, ரெடிமேட் அமிர்தக் கரைசலையும் தேடியாக வேண்டும். இப்போது புதிய சந்தை கிடைத்துவிட்டது. இதையெல்லாம் தயாரிக்கும் இயற்கை விவசாயிகளுக்கு புதிய வாடிக்கையாளர்களை கிடைத்து விட்டார்கள்.

வேளான் கண்காட்சி
வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி

விகடனுக்கு விளம்பர வருமானமும் கிடைத்துவிட்டது. ஆனால், “இந்த கொடுக்கல்- வாங்கலில் நமக்கு புரோக்கர் கமிசன்கூட நமக்கு இல்லையே!” என்று விகடன் மூளையை சொரிந்தபோது கிடைத்த ஐடியாதான் வேளாண் கண்காட்சி. அதாவது வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி.

ஒரு 10-க்கு 10 ஸ்டாலுக்கு 50,000 ரூபாயை கட்டணமாக அள்ளலாம்! ஒரு மண்டபத்தைப் பிடித்தால் மூன்றுநாளில் பல லட்சத்தைப் பார்க்கலாம்.  இப்படி வருசத்திற்கு நான்கைந்து இடங்களில் நடத்தினால் செலவுபோக கோடியை நெருங்கலாம். “ஆடு மேய்ச்சது மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும்.” என்பதைப் போல, இதையெல்லாம் நாசூக்காக செய்வதுதான் விகடனின் ‘தொழில்’ திறமை. ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்பவர்களின் பொருளை சந்தைப்படுத்த வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

சீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, செக்கில் ஆட்டிய எண்ணைகளைக் காட்டி மாடித்தோட்ட ஆசாமிகளை அதிசயிக்க வைத்த மாதிரியும் இருக்கும். தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்த மாதிரியும் இருக்கும். ஆனால் இறுதியில், எல்லாப்புகழும் கல்லாவும் விகடனுக்கே.

பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

ரசாயண உரம் மருந்துகளுக்கு மாற்றாக, இலைதழைகளையும், பசுமாட்டு சாணம், மூத்திரம், பால் பொருள்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதையே பசுமை விகடன் வகையறாக்கள் இயற்கை விவசாயம் என்று சொல்கின்றனர். இதில் பசுமாடு கலப்பற்ற நாட்டுரகமாக இருந்தாலும் அதன் தீவனம் ரசாயனக் கலப்பற்றதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மாடுவளர்க்கும் பெரும்பாலான சிறு விவசாயிகள் அருகிலுள்ள ரசாயன உரம் பயன்படுத்தும் வயல்வெளியிலும், தோட்டக்காடுகளிலும் இருந்துதான் தீவனம் கொண்டுவருகின்றனர். இதிலிருந்து தயாரிக்கும் பஞ்சகாவியாவும், அமிர்தகரைசலும் எப்படி இயற்கையானதாக இருக்காது என்று பரிசுத்தம் பேசுகிறார்கள்!

ஆர்கானிக்
பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

500 அடிக்கு கீழுள்ள நிலத்தடி நீரில்கூட டி.என்.டி விஷம் பரவியுள்ளதாக இயற்கை ஆர்வலர்களின் ஆய்வுகளே கூறும்போது, பூச்சிவிரட்டிக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, மிளகாய், வயல்வரப்பில் இருக்கும் நொச்சி, வேம்பு எல்லாமே ரசாயன பாதிப்பில்லாமல் இருக்க முடியுமா? முழுமையான இயற்கைவிவசாயம் செய்யும் நிலத்தில்கூட, அருகிலுள்ள நிலத்தில் பயன்படுத்தும் ரசாயன உரம் மருந்துகளின் பாதிப்பு இருக்கும் என்பதுதான் உண்மை. இதைத் தடுப்பதற்கு, இன்று இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள்? நிலத்தில் மட்டுமல்ல, பாசன நீரிலுமுள்ள ரசாயன விசத்தையும் அகற்றுவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அபெடாவின்(APEDA) “ஆர்க்கானிக் சான்றிதழ்” பெற்ற இயற்கை விசாயிகளின் பட்டியலை பசுமைவிகடனிடம் கேட்டுப்பாருங்கள் சென்னை, திருச்சியின் இயற்கை அங்காடிகளில் விற்கும் சரக்குகள் எல்லாம் அந்தப்பட்டியலில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததா? அல்லது கோயம்பேடு சரக்கா? என்று பரிசீலியுங்கள். விகடனின் தொழில் தர்மம் என்னவென்று அப்போது புரியும்.

விகடன் தயாரிக்கும் விவசாய ‘சூப்பர் ஸ்டார்கள்’!

“மண்ணின் வளமே மக்களின் வளம்” என்ற முத்திரையுடன் வரும் பசுமை விகடன், இயற்கை விவசாயம்தான் விவசாயிகளின் விடிவுக்கு ஒரே வழிகாட்டி என்று கூறுகிறது. அதை நிரூபிப்பதற்காக இயற்கை விவசாயம் செய்பவர்களின் வெற்றிக்கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வாசகர்களை புல்லரிக்க வைக்கிறது.

“உழவில்லை! உரமில்லை! பராமரிப்பில்லை! 100 தென்னைமரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம்!”

இது நடப்பு இதழில்(10-01-2017 ) வெளியான ராஜபாளையம் அய்யம்பெருமாள் என்ற வெற்றியாளரின் கதை. பிஎஸ்சி கணிதம் படித்த இவர், பி.எஸ்.என்.எல். ஊழியராக இருந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் தனது பேட்டியில், “36 நாளுக்கு ஒருமுறை வீதம் வருடத்திற்கு 11 முறை தேங்காய் வெட்டுகிறேன், ஒருமரத்திற்கு இரண்டு பாளைகளில் தேங்காய் வெட்டுவதாகவும், 100 மரங்களிலிருந்து ஒரு வெட்டுக்கு 4000 காய்கள் வெட்டுகிறேன்” என்றும் “மூடாக்கு முறையில் சாகுபடி பண்றப்போ தென்னை மூன்றரை வருசத்திலேயே காய்ப்புக்கு வந்துடுது. ரசாயணஉரம் போட்டா நாலஞ்சு வருசமாகும்” என்றும் கூறுகிறார்.05

நாட்டுரக தென்னை பற்றி இவர் கூறும் விவரங்களை பாமர விவசாயிகூட நம்பமாட்டன். நாட்டுரக தென்னை காய்ப்புக்கு வந்து தேங்காய் வெட்டுவதற்கு 7 வருடமாகும். வீரியரக தென்னைகள் மட்டுமே மூன்றரை வருசத்துல காய்ப்புக்கு வரும். பொதுவாக தேங்காய் பருப்பு விளைந்து முற்றுவதற்கு குறைந்தது 45 நாட்கள் ஆகும். வருடத்திற்கு 7 அல்லது 8 முறைதான் வெட்டமுடியும். இதிலும் 5 வெட்டுக்குத்தான் முழுப்பலன் கிடைக்கும், மீதி 2 வெட்டுக்கு குறைந்தளவு காய்கள்தான் கிடைக்கும். இதுதான் தென்னையின் இயல்பான பண்பு.

விவசாயி சொல்வது உண்மையா, மிகைப்படுத்தப்பட்டதா என்று புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட பசுமை விகடனுக்கு விவசாய அறிவில்லை என்பதற்கு இதுவொரு சான்று. மிகையான புள்ளிவிவரங்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும், தேங்காய் வெட்டுவதால் மட்டும் அய்யம்பெருமாள் 4 லட்சம் சம்பாதிக்கவில்லை. அதைக் கொப்பரையாக்கி பின்பு மரச்செக்கில் ஆட்டி எண்ணையாக்கி அதனை சென்னை, பெங்களுரூ நகரங்களின் இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பி விற்றுத்தான் சம்பாதிக்கிறார் என்று கட்டுரையின் உள்விவரம் கூறுகிறது. இது சராசரி தென்னை விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா? அல்லது விவசாயிகள் எல்லோரும் விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியராக இருக்க முடியுமா? என்பது விகடனுக்கே வெளிச்சம்.

கொடைக்கானல் மலையில் 40 ஏக்கர் காபித் தோட்டம் வைத்திருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்,(10-12-2016இதழ்),  பாகப் பிரிவினையாகவே 30 ஏக்கர் நிலம் பெற்ற நெய்யமலை(சேலம்) அப்போலோ என்ற செவ்விளநீர் விவசாயி, தமிழ்நாடு மீன்வளர்ப்புத் துறையில் 27 வருடம் ஆய்வாளராக வேலைசெய்து ஓய்வு பெற்ற விழுதியூர்(தஞ்சை) ரெங்கநாதன்(25-11-2016இதழ்), 130 கலப்பினமாடும், 20 பசுமாடும் வளர்க்கும் விளாத்திக்குளம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்(25-09-2016) போன்ற புதுப்பணக்கார மேட்டுக்குடியினரைத்தான் பசுமை விகடன் வெற்றி விவசாயிகளாகக் காட்டி பசுமை விரும்பிகளை ஏய்த்து வருகிறது.

இவர்கள் யாரும் விவசாயத்தை முக்கிய  வாழ்வாதாரமாகக் கொண்டவர்களல்ல. பிற தொழில்களில் கிடைத்த லாபத்தை முதலீடு செய்வதற்கு பயன்படும் ஒரு துணைத்தொழிலாக விவசாயத்தைப் பார்ப்பவர்கள்.

ஆனால் விவசாயத்தை மட்டுமே தங்களின் ஒரே வாழ்வாதாரமாகக் கொண்ட கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வும், கரும்பு, வாழை விவசாயத்தால் வாழ்விழந்த பல லட்சம் சிறு, நடுத்தர விவசாயிகளின் வரலாறும் பசுமைவிகடன் கண்ணிற்கு என்றுமே தெரியாது. ஏனென்றால் பசுமைவிகடனின் விற்பனைக்கு இவர்கள் பயன்படுவதில்லை. ஆனாலும் ஆக்சன் படத்தில் அழுகை சீனுக்கு மட்டும் பயன்படும் நடிகை சரண்யாவைப் போல “தஞ்சை விவசாயிகள் தற்கொலை”, “வேளாண் அதிகாரிகளின் கொள்ளை” என்று ‘மரத்தடி மாநாடு’ தலைப்பில் நாலுவரியில் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் இந்த விவசாயிகள் மீது விகடன் காட்டும் அக்கறை.

சுயசார்புக்கு பயன்படுகிறதா இயற்கை விவசாயம்?

இயற்கை விவசாயம் என்பது, பன்னாட்டுக் விதை, உரம், மருந்துக்கம்பெனிகளின் பிடியிலிருந்து விலகி விவசாயிகள் சுயசார்பாக நிற்பதற்கான அடையாளமாகவே அதன் ஆரம்பகாலங்களில் நம்மாழ்வார் போன்றவர்களால் முன்னிறுத்தப்பட்டது. ரசாயன உரம் மருந்துகளை அதிகவிலை கொடுத்து வாங்கினாலும் புழு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற சொந்த அனுபவத்திலிருந்து, சிக்கனமான   இயற்கைவிவசாய முறைக்கு விவசாயிகள் மாறினார்கள்.

08-nammalvar-2
வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார்

ஆனால், உலகம் முழுக்க பரவிவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினால் பன்னாட்டுக்கம்பெனிகளே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டதோடு, ‘உலகத்தரச் சான்று பெற்ற’ இயற்கை உரம்-மருந்துகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டன. பசுமைவிகடனிலேயே KTC பயோடெக், ஜெர்மனியின் STIHL போன்ற இத்தகைய நிறுவனங்களின் விளம்பரமும் வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகளால் சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வரும் இயற்கைவேளாண் சந்தையின் எதிரொலியாகவே, இந்திய நகரங்களிலும் பசுமை அங்காடிகள் முளைத்து வருகின்றன.

இந்திய வேளாண்மைத் துறையும் தற்போது இயற்கை விவசாயத்தை பதிவுசெய்து ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்குப் பொருத்தமாகவே இயற்கைவிவசாயம் என்பது “லாபகரமான விவசாயம்” என்ற கண்ணோட்டத்தில் பசுமைவிகடன் இங்கு செய்துவரும் பிரச்சாரமும் பயன்படுகிறது.

ஒரு பரிசோதனை முயற்சியாக இயற்கைவிவசாயம் செய்துவரும் விவசாயிகளை இந்த விசச்சுழலை நோக்கித்தான் இழுத்துச் செல்கிறது பசுமைவிகடன். இந்த உண்மை புரியாத புதுப்பணக்கார இளைஞர்கள், தாங்கள் சுற்றுலாபோகும் ஊர்களிலெல்லாம் “இங்க ஏக்கர் என்னவிலை சார்?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுமாடு, சாணி, பால்,தயிர், என்பதோடு மட்டும் இயற்கைவிவசாயம் நிற்கவில்லை. பாரம்பரிய உணவுத்திருவிழா, விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம், மரச்செக்கு எண்ணை, மூலிகைத்தேநீர், என்று பல பரிமாணங்களில் சென்று கொண்டிருக்கிறது.  பாட்டன் முப்பாட்டன் மரபுகளை மீட்கபோவதாகக் கூறும் மரபுப் போராளிகளும் இதில் தற்போது இணைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து “எல்லாருமா சேர்ந்து நம்மள கற்காலத்துக்கு கூட்டிட்டுப் போயிருவாங்களோ” என்று தனது வாடிக்கையாளர்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பம் அறிய எண் ஒன்றை அழுத்தவும்” “கால்நடை வளர்ப்பு அறிய எண் மூன்றை அழுத்தவும்” மற்றும் “பசுமைசந்தை” போன்ற மொபைல்வழி சேவைகளையையும் நடத்தி வருகிறது பசுமை விகடன்.

seeraga samba
நாட்டுமாடு, சாணி, என்று மட்டுமல்ல விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம் என நீள்கிறது விகடனின் இயற்கை விவசாயப் பட்டியல்

இதற்கும் மசியாத தனது வாடிக்கையாளர்களை, “ஒருநாள் விவசாயி” என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட்டோடு சேற்றில் இறக்கிவிட்டு விவசாயம் கற்றுக்கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் விகடன் குழுமம் இயற்கைவிவசாயக் கல்லூரி தொடங்கினால் இந்த “ஒருநாள் விவசாயப் பட்டதாரி”களுக்கு பேராசிரியர் வேலை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சென்னை சரவணா ஸ்டோரைப் போல விகடன் குழுமம் ஒரு மாபெரும் பல்பொரு அங்காடி. ஆன்மீகத்திற்கு சக்திவிகடன், பெண்களுக்கு அவள் விகடன், மருத்துவத்திற்கு டாக்டர்விகடன், பங்குச்சந்தை சூதாட்டத்திற்கு நாணயம் விகடன், ஆடம்பரத்திற்கு மோட்டார் விகடன், கிளுகிளுப்புக்கு டைம்பாஸ்…என்ற பல சரக்குகளைப் போல விவசாயமும் விகடனுக்கு ஒரு விற்பனை சரக்குதான். இயற்கை விவசாயம் என்பது அதற்கு பயன்படும் ஒரு கவர்ச்சிப்பட அட்டை. சரவணா ஸ்டோர் ஊழியர்களைப் போல விகடன் குழமத்தின் நிருபர்களும் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தனது பணியாளர்களின் உழைப்பை  மதிக்கத்தெரியாத விகடனிடம், விவசாயிகள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை…ஏமாற்றம் ஒன்றைத்தவிர.

– மாறன்
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

மோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி

4
படம் : நன்றி நக்கீரன்

க்களிடம் 500, 1000 -ஆக இருக்கும் ரொக்கப் பணம் செல்லாது என்று மோடி கும்பல் அறிவித்ததை நாம் எதன் மூலம் தெரிந்து கொண்டோம்? பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக அல்லவா? அப்படியானால் முதலில் அதன் மாட்சிமையைத் தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பு என்று காவி வானரங்கள் போக்கு காட்டி வந்த நிலையில், சகாரா குழுமத்திடம் இருந்து மோடி 13 தவணைகளில் 55 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை பத்திரிக்கைகள் எப்படி கையாண்டன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மோடியின் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சுமத்துவதாகவும் இது வழக்கமான தேர்தல் அரசியல் (தேர்தல் அரசியலுக்கு வந்து இழிபுகழைப் பார்த்தீர்களா?!) என்றும் பத்திரிக்கைகள் படம் காட்டின. ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய நீதி-பரிபாலன முறைமைகளுக்கு முன்னரே தெரியும் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது (பார்க்க: தி கேரவன் இதழ், 18-11-2016).

படம் : நன்றி நக்கீரன்
படம் : நன்றி நக்கீரன்

வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அங்கீதா பாண்டே சகார குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அங்கீதா பாண்டேவோடு, ஆவணங்களை சரிபார்த்த பிறவருமானவரித்துறை அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்கிறது.

டெல்லி தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் ஆவணங்களுக்கான துணை இயக்குநர் அனுராக் ஷர்மா 01-07-2016 அன்று கையெழுத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கிறார்.

வருமானவரித்துறையின் இந்த ரெய்டு குறித்த தகவல் மற்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரசாந்த் பூஷண் கீழ்க்கண்ட அமைப்புகளிடம் முறையிட்டிருக்கிறார்.

  • கருப்புப் பணத்தை ஒழிப்பற்காக உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி எம்.பி.ஷா மற்றும் அர்ஜூன் பயாசத் தலமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு
  • அமலாக்கத்துறை (Enforcement Deparment),
  • மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தலைவர் (Chairman-CBDT, Central Board of Direct Taxes),
  • வருமானவரித் தீர்வை ஆணையத்தின் தலைவர் (Chairperson, Income Tax Settlement Commission )
  • மத்திய ஊழல்ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner)

இருந்தும் என்ன பயன்? அரசை எதிர்த்து போராடாமல் அரசின் உறுப்புகளிடம் முறையிடுவதுதான் ஜனநாயகம் என்று மக்களுக்கு மூச்சிரைக்க வகுப்பெடுக்கும் பத்திரிக்கைகள் மோடி குறித்த முறையீட்டில் இதுவரை மவுனம் சாதிப்பதன் மர்மம் தான் என்ன?

prashant-bhushan
பிரசாந்த் பூஷண்

சகாரா குழுமத்தில் ரெய்டு நடத்தியது தொடர்பாக வருமானவரித்துறை தாக்கல் செய்த முன்வரைவு அறிக்கை (Appraisal Report) 16-11-2016 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்தது. 15-11-2016 அன்று தி இந்து ஆங்கில நாளிதழ் இதுபற்றிய செய்தியை மேம்போக்காக வெளியிட்டுவிட்டு மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை வெளியிடவில்லை! என்ன காரணமாக இருக்கும்?

உச்சநீதிமன்றம் இத்தகைய ஆவணங்களை ஓர் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கைவிரித்தது (நீதிமன்றத்தின் மாண்பு குறித்து பிறகு நாம் தனியே பார்போம்). நீதிமன்றங்கள் போன்றே தி இந்து  போன்ற பத்திரிக்கைகளும் ஒருவேளை இத்தகைய ஆவணங்களை நம்பத்தகுந்த ஆதாரமாக கணக்கில் கொண்டிருக்காதோ?

ஆனால் தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் விசயத்தில் அப்படி நடக்கவில்லை.

வருமானவரித்துறையினர் ராம்மோகன் ராவ் வீட்டில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக 24-12-2016 அன்று தி இந்து பத்திரிக்கை “சிக்கியது டைரி” எனும் உட்தலைப்பில் கீழ்க்கண்ட செய்தியை பிரசுரித்திருந்தது.

ராமமோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் பாதுகாப்பாக வைத்திருந்த ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் பல முக்கிய தகவல்களை அவர் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல பிரமுகர்களின் பெயர்கள் அந்த டைரியில் உள்ளதாக தகவல் பரவிவருகிறது.

அவர்கள் அனைவரும் ராம மோகன ராவுடன் ஒரு வலைப் பின்னல் போல செயல்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எந்த வகையில் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது? பரஸ்பரம் அவர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என்ற விவரங்களையும் ராமமோகன ராவ் விளக்கமாக அதில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களிடையே ஏற்கெனவே நடந்துள்ள தொலைபேசி உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.”

மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சகாரா குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தி இந்து பத்திரிக்கைக்கு முக்கியமான ஆதாரமாக தெரியாத பொழுது ராம மோகன ராவின் டைரி மட்டும் தி இந்துவிற்கு முக்கிய ஆதாரமாக தெரிவதற்கு என்ன காரணம்?

Samas
சமஸ்

தமிழ்நாட்டில் பா.ஜ.க கும்பல் வேரூன்றுவதற்கு பார்ப்பனியப் பத்திரிக்கைகள் மன்னார்குடி மாஃபியா கும்பலின் ஊழலை மட்டும் தொட்டு நக்கும் ஊறுகாயாக பயன்படுத்துவதற்கான முகாந்திரம் இதில் தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ராம்மோகன ராவ் ஜெயா ஆசியுடனேயே தமிழகத்தில் வலம் வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை மன்னார்குடி கும்பலின் ஊழலை மக்களிடம் இருந்து மறைத்தவர்கள் இதே பத்திரிக்கைகள் தான். அப்பொழுது பார்ப்பன ஜெ-வின் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இப்பொழுது ஜெயலலிதா செத்தபிறகு, ‘சிக்கியது டைரி’ என்று சீறுகிறார்கள்!

இதை வேறு ஒரு கோணத்தில் இருந்தும் பரிசீலிக்க முடியும். தி இந்து (தமிழ்) நடுப்பக்க கட்டுரைகளுக்கான ஆசிரியர் சமஸ் அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் சுதந்திரமாக காற்று கூட விட்டதில்லை! ஆனால் ஜெயலலிதா செத்தபிறகு ஜெயலலிதாயிசம் என்று எழுதுமளவிற்கு துணிந்திருக்கிறார்! மேலும் மன்னார்குடி கும்பலின் அட்டூழியங்களை சாடுவதிலும் முதன்மையாக இருக்கிறார்! அரசின் எந்த உறுப்பையும் சாராதவர்கள் அதிகாரத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாத எதிர்கட்சிகளை காறித்துப்பாத குறையாக கடுமையாக சாடுகிறார்.

ஆனால் மாண்புமிகு சமஸின் மானமிகு முயற்சிகளை தி இந்து பத்திரிக்கையாளர் இரா.வினோத்தின் கட்டுரை தவிடு பொடியாக்கிவிடுகிறது. 24-12-2016 அன்று “கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழகத்தின் புதிய ஆளுநர்” எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை இப்படிக் கூறுகிறது;

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த‌ தலைவரும், சட்டமேலவை உறுப்பினருமான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரை செய்தது. எனவே டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக‌ நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்தது.(அழுத்தம் எம்முடையது)

இரா. வினோத் தன் கட்டுரையில், அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் பா.ஜ.க மேலிடம் முடிவெடுத்தது என்று சனநாயகத்தின் சீரிய மாண்பை போட்டு உடைக்கிறார்.

அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ், மத்திய அரசுக்கு உத்தரவு போடுவதை அமைதியாக ஆமோதிக்கிறவர்கள், அதற்காக குறைந்தபட்சம் இம்மியளவும் முணுமுணுக்காதவர்கள் அதிகாரத்தில் இல்லாத மன்னார்குடி கும்பல், தமிழ்நாட்டு அரசை ஆட்டுவிப்பதாக முக்கி முணுகுவது ஏன்?

Sasikala - AIADMKஇது என்னவகையான அரசியல் என்பதை புரியாதவர்கள் 02-01-2017 அன்று தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த கருத்துப்படத்தைப் பாருங்கள். ஓ.பி.எஸ்ஸின் தலையில் சசிகலா அமர்ந்திருப்பது கச்சிதமாக வரையப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தலையில் ஆர்.எஸ்.எஸ் உட்கார்ந்திருப்பதை தி இந்து பத்திரிக்கை திட்டமிட்டு மறைத்து ஒற்றைக்கண் ஒட்டகமாக தமிழகத்தில் உலா வருகிறது.

இதில் தி இந்து பத்திரிக்கை புரோமோட் செய்யும் இன்னொரு செய்தியும் கவனிக்கப்படவேண்டும். தலைமைச்செயலகத்திலும் தலைமைச் செயலாளர் வீட்டிலும் வருமானவரித்துறை மத்திய காவல் படையைக் கொண்டு சோதனையை நடத்தியது அரசு நெறிமுறைகளுக்கு எதிரானது என்று குரல் எழுந்தது (தி இந்துவும் கூட குரல் எழுப்பியது!!!).

அப்பொழுது வருமானவரித்துறையே விளக்க அறிக்கை கொடுத்திருப்பது செய்தியாக்கப்பட்டது (பார்க்க: ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் விதி மீறல்கள் இல்லை: வருமான வரித்துறை விளக்கம், தி இந்து தமிழ், 28-12-2016).

ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டிருக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்ட வருமானவரித்துறை (புலனாய்வு) இணை இயக்குநர் அங்கீதா பாண்டே தற்பொழுது நீண்ட தொடர் விடுப்பில் இருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்கள் அங்கீதாவிடம் கருத்து கேட்க முயன்ற பொழுது, அரசு பணியாளர் இதுபோன்று பேட்டியளிப்பது கூடாது என்று விதியை நினைவுறுத்தியிருக்கிறார்.

இப்பொழுது மட்டும் வருமானவரித்துறைக்கு எங்கிருந்து விதி வந்தது? அல்லது தி இந்து போன்ற பத்திரிக்கைகள் இதைக் கண்டும் காணாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

தி இந்து போன்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் செயல்திட்டத்தின் பின்னணியை தோழர் லெனின் இப்படி அம்பலப்படுத்துவதோடு இதை முறியடிப்பதற்கு தீர்வொன்றையும் சொல்கிறார்;

“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லா விதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு  கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டுவருகிறது.——

இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்த சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.”

(லெனின்-மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்).

– தமிழ்வேல்

அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !

2
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

“பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து!” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.  கடந்தவாரம் சில உரைகளை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி வருமாறு..

“நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என சுட்டுக்கொல்கிறார்கள்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்

பார்வேந்தன்
வழக்கறிஞர் பார்வேந்தன்

“ஆளும் பா.ஜனதாவும், இதற்கு முன்பு ஆண்ட காங்கிரசு கட்சியும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நக்கி தின்பதையே கொள்கையாக கோட்பாடாக வைத்திருக்கிறார்கள். ஆற்று நீரையும், மணலையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். சுட்டுக்கொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்னமையாக கண்டிக்கிறது. அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் போராடக்கூடிய இயக்கமாக இருக்கிறீர்கள். உங்களோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக நிற்போம்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்,
வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

“வரலாறு நெடுகிலும் போலி மோதல் படுகொலைகள்! ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் யாரும் ஆண்டதேயில்லை”

– தோழர் தியாகு.

“1930-களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த ஒரு விவாதத்தின் பொழுது, சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை சட்டமான ரெளலட் சட்டம் போல ஒரு சட்டம் தேவையா? என்ற விவாதம் எழுந்தது. ”அப்படி ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு நாளும் பிரதமராக ஆளமாட்டேன்” என்றார் நேரு. ஆனால், ’சுதந்திர’ இந்தியாவில் ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் இருந்ததேயில்லை.

தியாகு
தோழர் தியாகு

ஆட்சி செய்த காங்கிரசு, திமுக, சிபிஐ, இப்பொழுது ஆட்சி செய்கிற பா.ஜனதா, சிபிஐ (எம்) அதிமுக என ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருமே வரலாறு முழுவதும் போலி மோதல் கொலைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். சாரு மஜூம்தார், வர்கீஸ், பாலன் என எண்ணற்ற நக்சலைட்டுகள் மட்டுமல்ல, சீவலப்பேரி பாண்டி, வீரப்பன் என பலரையும் சுட்டு கொன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

”உன்னுடைய சட்டத்தின் படி கைது செய்! சிறையில் அடை! வழக்கு நடத்து! சொத்துக்களை பறிமுதல் செய்! தூக்கு தண்டனை கூட கொடு! ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கட்டிவைத்து ஏன் கோழைத்தனமாக சுட்டுக்கொல்கிறாய்? போலீசில் யாரெல்லாம் கேடிகள், பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் என தெரிய வேண்டுமா? ஆண்டுதோறும் அண்ணா விருது வாங்குகிறவர்கள் தான் அவர்கள்.

நாம் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சனை. போலி மோதல் கொலையைப் பற்றிய மக்களிடம் உள்ள கருத்து தான்! மக்கள் மத்தியில் நாம் தொடர்ந்து எடுத்து சொல்வோம். அதில் போலி மோதல் கொலைகள், கொலைகாரர்கள் எல்லாம் பொசுங்கிபோவார்கள்”

– தோழர் தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்

“மக்கள் விரோத அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது! கேட்டால் சுடுவோம் என்பது தான் பதிலாக இருக்கிறது”

– தோழர் வெங்கடேசன்

வெங்கடேசன்
தோழர் வெங்கடேசன்

“இந்தியாவில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். போராடுகிற மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்கவேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களிலும், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டங்களிலும் மக்களை கையாண்ட விதத்தை நாடே பார்த்தது. இந்த அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது. கேட்டால் சுடுவோம் என்கிறது. போராடும் மக்களோடு அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடுவதன் மூலம் தான் அடக்குமுறையை முறியடிக்கமுடியும்! நமது உரிமைகளையும் பெறமுடியும்!”

– தோழர் வெங்கடேசன்,
மாநில பொருளாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

“எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களை இந்துத்துவ அடிப்படைவாதிகள் கொல்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை எதிர்ப்பவர்களை அரசு சுட்டுக்கொல்கிறது”

– தோழர் குமார்.

kumar
தோழர் A.S. குமார்

“இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் என பலரும் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை தடுப்பவர்களை போலி மோதல் படுகொலைகள் மூலம் மத்திய மாநில அரசுகள் சுட்டுக்கொல்கின்றன. பா.ஜனதா ஆட்சி தனது வியாபம் ஊழலை மறைக்க தான் மத்திய பிரதேச போபாலில் 8 சிமி அமைப்பைச் சேர்ந்தவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறீர்கள். இணைந்து போராடுவோம்! இறுதி வெற்றி நமதே!”

– தோழர் A.S. குமார்,
மாநில குழு உறுப்பினர்,
சிபிஐ மா.லெ. விடுதலை.

“மோதல் கொலைகளை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி IPC 302ன்படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்”

-மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

1970 காலகட்டத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்பாரி தோழர்கள் தேவாரத்தின் தலைமையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கில் “மோதல் கொலைகளின் பொழுது, போலீசு மீது IPC 302 – படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்” என உத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இதை வலியுறுத்துகிறது. அதை இன்றைக்கு வரைக்கும் தமிழக அரசு மதிக்கவேயில்லை.

sankara subbu
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

தோழர்கள் குப்புராஜூம், அஜிதாவும், உடல்நலமின்றி இருந்தவர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கூட உடல்களை தரமறுக்கிறது அரசு. எப்பொழுதுமே நீண்ட நெடிய போராட்டத்தில் தான் உடல்களை பெறவேண்டியிருக்கிறது. இப்படி தான் மனித உரிமைகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கொலை செய்தவர்கள் மீது 302 சட்ட பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய நாம் போராடவேண்டும்”

– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
சென்னை உயர்நீதிமன்றம்.

“சட்டங்களை குப்பைக்கூடையில் போட்டு, அதில் கால்வைத்துதான் ஆட்சியே செய்கிறார்கள். உரிமைகளுக்காக போராடும் மக்கள் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகி விடுகிறோம்”

– தோழர் இராஜூ

“எதற்காக இந்த மோதல் படுகொலைகள்? மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல! ஆந்திராவில், 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். போபாலில் சிமி அமைப்பைச் சார்ந்தவர் 8 பேரை சுட்டுக்கொன்றார்கள். பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும் கூட படுகொலை செய்கிறார்கள். அரசியல் காரணம் என்ன? மக்களின் வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பேன் என்று உறுதியேற்ற அரசு, அதற்கு எதிராக செயல்படும் பொழுது, வருகிற எதிர்ப்பு குரல்களை சுட்டுக்கொல்வதன் மூலம் எதிர்கொள்கிறது.

தடா, பொடா, உபா என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை சட்டங்களை உருவாக்கி, தண்டர்போல்டு, அதிரடிப்படை என பல்வேறு பெயர்களில், வானாளவிய அதிகாரத்தோடு அதிகார திமிரோடு வலம் வருகிறார்கள். ஆங்கில ஆட்சியை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள். கட்டபொம்மன், மருது வீரர்களை தூக்கில் ஏற்றித்தான் கொன்றான். இவர்களோ கட்டி வைத்து கோழைத்தனமாக சுட்டுகொல்கிறார்கள். தோழர்கள் குப்புராஜ், அஜிதா அவர்களின் கொள்கைகள் தான் அவர்களை அச்சமூட்டுகிறது. அதனால், இறந்த உடல்களை பார்த்தால் கூட பெரிய இராணுவத்தை பார்த்தது போல அலறுகிறது.

raju
தோழர் இராஜு

சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள். அப்படித்தான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரை சுட்டுக்கொன்றார்கள். சட்டங்களை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு, அதற்கு மேல் கால்வைத்துதான் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களாகிய நமக்கு தான் சட்டம், சகல வரிகளும்! இவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்து என எப்படி போராடமுடியும்?

இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொள்ளாத மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொண்டவர்கள் மீது கொலைவழக்கு போடுகிறார்கள். பலதலைமுறைகளை பாழாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது அரசின் மீது போர்தொடுத்ததாய் தேசத்துரோக வழக்கு உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டிருக்கிறார்கள். இதற்காக தூக்குத்தண்டனை கூட அரசால் வாங்கித்தர முடியும்.

லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் பாடகர் கோவன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கு. டாஸ்மாக்கை எதிர்த்து பேசிய எங்கள் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி நடப்பது நீதிமன்றத்திற்கு தெரியாதா? நீதிபதிகள் நம் தயவில் தான் இருக்கிறார்கள். மூலதனத்திற்கு பாதுகாப்பாக தான் நாம் இயங்குகிறோம். யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று முடிவு செய்துதான் சுடுகிறார்கள். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக பதவி உயர்வு பெறுகிறார்கள். கெளரவிக்கப்படுகிறார்கள்.

மக்களை ஆளத்தகுதி இழந்துவிட்டது இந்த அரசு. தான் எதற்காக இந்த ஆட்சியில் இருக்கிறோம் என அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உறுதி ஏற்றதோ அதை செய்ய தவறியது மட்டுமல்ல! அதற்கு எதிராகவும் பச்சையாக நடந்துகொள்கிறது. சட்டபுறம்பானவை அனைத்தையும் சட்டபூர்வமாக்கிவிட்டது. நியாயத்திற்காக, உரிமைகளுக்காக போராடுகிற அனைவரும் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகிவிடுகிறோம்.

கொத்து கொத்தாய் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளுக்காக மட்டும் நின்று போராடி பெற்றுவிடமுடியுமா? முடியாது. வரம்புகளை தாண்டி போராடி, அனைத்து மக்களுக்குமான கோரிக்கைகளுக்காக இணைந்து போராடும் பொழுது அந்தந்த பிரிவினர் கூட‌ தமது உரிமைகளை பெறமுடியும். இப்படி போராடினால், மாற்று அரசியலான மக்கள் அதிகாரம் வெகுதொலைவில் இல்லை!

தோழர் இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
சென்னை.

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய் !

0

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி . . .

விவசாயி Poster.

காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த
அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்!

கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு – 91768 01656.

பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து

0

ஜார்கண்ட் கோடா மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சரிந்த மண்ணுக்குள் சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.

mine-jharkhand1லால்மடியா திறந்தவெளி கனிமச் சுரங்கத்தில் கடந்த வியாழன் அன்று, ஒரு பகுதி நிலம் சரிந்து விழுந்தது 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், கனரக வாகனங்களையும் மண்ணில் புதைத்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு-பகலாக அவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

“இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே மேலும் இரண்டு அல்லது மூன்று உடல்கள் இருக்கலாம் என்று சுரங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஜார்கண்ட் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. மல்லிக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிலாளிகளில் சிலர் சரிவுக்கு முன் விபத்து பகுதியிலிருந்து தப்பிவிட்டனர். சுமார் 50 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் மல்லிக் கூறியுள்ளார்.

போலீசும் மீட்பு குழுவினரும் சிக்கியுள்ளோரைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சரிந்துள்ள பெரும் பாறைகளை, சிதைந்தும் கவிழ்ந்துமுள்ள லாரிகளை நீக்க மண் அள்ளும் இயந்திரங்களையும், வெறும் கைகளையும் பயன்படுத்துகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் மூடுபனியின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் வெள்ளி காலை வரை தாமதமாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.

இந்தச் சுரங்கம் அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமான ’கிழக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திற்கு’ (Eastern Coalfields Limited) சொந்தமானது. வியாழன் அன்று இரவு 7:30 மணியளவில் தொழிலாளர்கள் வெளியேறத் தலைப்பட்ட போது சுமார் 250 மீட்டருக்கும் அதிகமான பகுதி சரிந்து விழுந்ததாக நிறுவனத்தின் மேலதிகாரி நிலாத்ரி ராய் தெரிவிக்கிறார். டஜன் கணக்கான வாகனங்களும் இயந்திரங்களும் இடிபாடுகளின், குவியல்களின் கீழ் சிக்கி மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

mine-jharkhand2ECL நிறுவனத்தின் சார்பாக மஹாலட்சுமி பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனம் சுரங்க அகழ்வில் ஈடுபட்டு வந்தது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 4 மணியளவில் முதல் சரிவு ஏற்பட்டது. பின்னர் 6 மணியளவில் இரண்டாவது முறை சரிவு ஏற்பட்டது. இரண்டு முறையும் எச்சரிக்கை மணியை யாரும் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் முறை 7:30 மணியளவில் பெருமளவில் சரிவு ஏற்பட்ட போது யாருக்குமே வினையாற்ற கூட நேரம் கிடைக்கவில்லை என்கிறார் ஓட்டுநரான முகமது ராப். இவர் இரவு 9:00 மணி ஷிப்டுக்கு காத்திருந்ததால் விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

ஏற்கனவே தோண்டியெடுக்கப்பட்ட உறுதியற்ற மண் குவியலில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே சிறு சிறு நிலச்சரிவுகள் அங்கு நடந்து வந்ததாகவும் அதிகாரிகள் மெத்தனமாக அவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் ஓட்டுநராக வேலை செய்யும் ராஜன் குற்றம் சுமத்துகிறார். சுரங்கத்தில் அந்தப் பழைய மண் குவியலின் அடியில் நிலக்கரியை எடுத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளனர். 250 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளின் மீது மொத்த 250 மீட்டர் உயர மண் குவியலும் விழுந்துள்ளது.

ECL மற்றும் மஹாலட்சுமி நிறுவனங்களின் அதிகாரிகள் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சரிவுக்கு காரணமாக இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. முன்கண்டிராத இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களின் ஒன்றான ஜார்க்கண்டில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்தியாவின் கனிம வளமிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் ஜார்கண்ட்  உள்ளது. நாட்டின் நிலக்கரி வளத்தில் சுமார் 29 சதவீதத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் 570 இந்திய சுரங்கங்களில் 38 பேர் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை தொழிலாளிகள் கொல்லப்பட்டும் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்வதில்லை. அப்படி செய்திருக்கிறார்களா என்று தனியார் நிறுவனங்களையும் சோதிப்பதில்லை. வளர்ச்சி என்ற பெயரில் உப்பவைக்கப்படும் நகரங்களுக்கு, உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் அதிகம் வேண்டும் என்பதால் நிலக்கரி உற்பத்தி மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலோ, ஜார்க்கண்டின் நிலக்கரி சுரங்ககளிலோ கொல்லப்படும் தொழிலாளிகளுக்கு அந்த வளர்ச்சியின் வாய்ப்புக்கள் இல்லை என்பதோடு அவர்களே அதன் பலிகடாக்களாவும் இருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்:
Jharkhand mine collapse: Warning ignored, caved in 4 hrs later
At least 10 dead in Jharkhand coal mine collapse