Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 672

அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு

3

20-ம் நூற்றாண்டில் இந்திய ஆளும் வர்க்கங்களால் முன்னிறுத்தப்பட்ட காந்தியம், 21-ம் நூற்றாண்டிலும் மராட்டியத்தைச் சேர்ந்த அண்ணா ஹசாரேவிற்காக அதே ஆளும் வர்க்கங்களால் இழுத்து வரப்பட்டது. ஆனாலும் காந்திக்கு இருந்த நீண்ட கால ‘ஸ்பான்சர்’ யோகம் கூட ஹசாரேவுக்கு இல்லை. இதிலிருந்தே காந்தியத்தின் ‘பவரை’ அறியலாம்.

 அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி
வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.

இதன் சமீபத்திய காமடிதான் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.

காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு முதலாளிகள் பங்கு பெற்ற பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்கள்அம்பலமாகி நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் உட்பட ஆளும் அமைப்புகள் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக பலவீனமடைந்து கொண்டிருந்த நிலையில்தான் அண்ணா ஹசாரே வருகையை ‘நாடே’ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. அதன்படி 2011-ல் ஊழலை ஒழிப்பதற்கு ஜன்-லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் சீசன் – I, உண்ணாவிரதம்- சீசன் – II, உண்ணா விரதம் – சீசன் – III நடத்தி இந்திய, சர்வதேச ஊடகப் புகழ் பெற்ற அண்ணா ஹசாரே விரைவிலேயே தான்  தானமாகப் பெற்ற அந்த புகழுக்கு கூட லாயக்கில்லை என்று அதே ஆளும் வர்க்கங்களால் தூக்கி எறியப்பட்டார்.

இருப்பினும் “ஓசியில் பிரபலமடைந்தவன் ஓய்ந்து கிடக்க மாட்டான்” என்ற விதிக்கேற்ப தனது காந்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஆள்பவர்களுக்கான 17 அம்ச கொள்கைகள் குறித்து அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சியினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருக்கிறார் அண்ணா.

அண்ணா ஹசாரேவின் காந்திய போராட்டத்துக்கு புளூபிரின்ட் போட்டு நடத்திக் கொடுத்து, பின்னர் ஆம் ஆத்மி கட்சியாகி பிரிந்து போய் விட்ட கார்ப்பரேட் என்ஜிஓ தயாரிப்பான அரவிந்த் கேஜ்ரிவாலே கூட அந்தக் கடிதத்தை கடாசி விட்டார். வளர்த்த கடாவே பாராமுகமாக இருக்கும் போது மற்ற கட்சிகள் அவருக்கு பதில் போடாதது அதிர்ச்சியான விசயமல்ல. ஆனால், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் ராயும், ராஜ்ய சபை உறுப்பினர் கே.டி.சிங்கும் ராலேகான் சித்திக்கு நேரில் போய் அண்ணாவை சந்தித்திருக்கின்றனர். தீதி இந்த மாதிரி செல்லாத பொருட்கள் மீதேல்லாம் அரசியல் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. அதனால்தான் அவர் தீதி.

அண்ணா ஹசாரே
யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.

தன் கடிதத்தை யாரும் கண்டு கொள்ளாததால் அறச்சீற்றம் அடைந்து அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கி விடலாமா, போராடினாலும் ஒரு பயல் சீந்த மாட்டான் என்று மோட்டு வளையைப் பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த அண்ணா, திரிணாமூல் கட்சி தனது அறிவுரையை கேட்க வந்து மனம் குளிர்ந்ததில், மராட்டியத்தில் மழையே வந்து விட்டதாம். பிறகென்ன, யாருமே சீண்டாத தனது ஆதரவை அண்ணா ஹசாரே மம்தாவுக்கு தூக்கிக் கொடுத்து விட்டார்.

அவரை டெல்லிக்குப் அழைத்துப் போன திரிணாமூல் கட்சியினர் கொல்கத்தாவிலிருந்து வந்து இறங்கிய மம்தா பானர்ஜியை, முகுல் ராயின் வீட்டில் சந்திக்க வைத்திருக்கின்றனர்.

1970-களில் காந்திய வழியில் ‘ஊழல் ஒழிப்பு’ போராட்டம் நடத்திய ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய கல்கத்தாவிற்கு வந்திருந்தார். ஜெபி கார் பானெட்டின் மீது நடனம் ஆடி தனது அரசியலை ஆரம்பித்தவர், அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி. இப்படி ஊழலுக்கு ஆதரவாகவும், பாசிச இந்திராவுக்கு ஆதரவாகவும்தான் மம்தாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. இந்த வீரதீர காரியத்திற்கு பிறகு அவரை கட்சிக்காரர்கள் “தீதி” (அக்கா) என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர். இதெல்லாம் அண்ணா ஹசாரேவுக்கு வயசாகிவிட்டதால் மறந்திருக்கலாம் என்று அவரது பக்தர்கள் மனசாந்தி அடைந்து கொள்ளலாம்.

1990-களில் நரசிம்மராவ் அமைச்சரவையில் மனித வளத்துறை அமைச்சர், வாஜ்பாயியின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், 2009 ஐ.மு.கூ-II அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சர் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசில் பங்கேற்று, இமேஜை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும் கடைசி காலங்களில் பதவிகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தியவர் மம்தா பானர்ஜி. பொதுக் கூட்ட மேடையில் தனது தலைக்கு தானே சுருக்குப் போட்டுக் கொள்ளப் போவதாக மிரட்டுவது, நாடாளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் முகத்தில் விசிறி அடிப்பது, மாற்றுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டைக் காலரைப் பிடித்து கதறக் கதற வெளியில் இழுத்துக் கொண்டு தள்ளுவது போன்றவையெல்லாம் தீதியின் அதிரடி அரசியல் காட்சிகள்.

மம்தா பானர்ஜி
ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.

ஆனால் இந்த அதிரடி காட்சிகளே வங்கத்து மக்களை திரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது. அந்த அளவுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளின் மீது அவர்களுக்கு வெறுப்பு. இத்தகைய வரலாற்று விபத்துதான் தீதியை உருவாக்கிய அரசியல் களம் மற்றும் காலம். அத்தகைய “தீதிய” போராட்டங்களின் ஒரு பகுதியாக 1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய திரிணாமூல் காங்கிரசை ஆரம்பித்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் 1977 முதல் ஆட்சியில் இருந்த ஜோதிபாசு-புத்ததேப் பட்டச்சார்யா அரசுகள் மக்களுக்கு எதிரான குற்றங்களின் சுமையில் மண்ணைக் கவ்விய போது 2011-ல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் ஏறி அம்மாநிலத்தில் ‘ஜனநாய’கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அந்த ஊட்டலில் கதற ஆரம்பித்த ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை.

கம்யூனிஸ்ட் என்று எழுதிய பேப்பரை ஒருவர் கிழித்துப் போட்டாலே, விருது வழங்கி கௌரவிக்க காத்திருக்கும் தேசிய, சர்வதேசிய ஊடகங்களில் போலிகளாக இருந்தாலும் இந்தியாவின் ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளை வீழ்த்திய வீராங்கனையாக மம்தா பானர்ஜி கொண்டாடப்பட்டார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை அவரை 2002-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. 200 ஆண்டுகள் கழித்து ஜெயமோகனது எழுத்துலக வாரிசுகள் “கம்யூனிசத்தை வீழ்த்திய தீதி” எனும் நாவல் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். ஆனால் அப்போது கொண்டாடுவதற்கு முதலாளித்துவம் இருக்காது என்பது வேறு விசயம்.

எளிமையான உடை, சிறிய வீட்டில் வசிப்பது, கார் கூட வைத்திருக்காதது போன்ற ‘காந்திய’ கொள்கைகளையும் பின்பற்றும் அவர், மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனது தீதிய பாணி ஜனநாயக ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னைப் பற்றிய கார்ட்டூன் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அம்பிகேஷ் மகாபத்ரா என்ற பேராசிரியரை அவரது கட்சிக்காரர்கள் அடித்து உதைத்து, பின்னர் போலீசால் கைது செய்ய வைத்து ஒரு நாள்  லாக்-அப்பில் அடைத்ததை நியாயப்படுத்தியது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் பெற்றுத் தருவதற்காக பொய் சொல்வதாக குற்றம் சாட்டியது, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்தது, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு சப்பைக்கட்டு கட்டியது, சாரதா சிட் நிதி நிறுவன மோசடியில் திரிணாமூல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் பிரமுகர்கள் அடித்த கொள்ளை என்று மூன்றாண்டுகளாக சாதனைகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து வருகிறார் மம்தா பானர்ஜி.

mamta_walkout
கேள்வி கேட்ட மாணவர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டி வெளி நடப்பு செய்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிர்க் கட்சிகளான “இடது” காரத் கட்சி மற்றும் “வலது” தா.பா கட்சியினர் வெறும் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப் போகும் தமிழ்நாட்டு ஜெயலலிதாவின் பிரதமர் பதவி கனவுகளுக்கு அகில இந்திய அளவில் ஃபிளெக்ஸ் கட்டத் தயாராகி ஒப்புக் கொடுத்திருக்கும் நிலை தீதிக்கு கோபத்தை வரவழைத்திருக்கும் போல.

போலிகளின் போரை முறியடிக்க உறுதி கொண்ட மம்தா, 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திலும், அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் சில தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் ‘பெரிய’ கட்சியின் தலைவரான தான் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தேடி சமஷ்டி முன்னணியை அதிரடியாக அறிவித்திருக்கிறார். அந்த அணியில் சேருவதற்கு கொங்கு தேசிய முன்னேற்றக் கழகம், கார்த்திக் கட்சி போன்ற ஆளே இல்லாத குறுநில மன்னர்களது கட்சிகள் கூட ஆர்வம் காட்டாத நிலையில் அண்ணா ஹசாரேவின் ஆதரவுக்கு எத்தகைய மதிப்பு இருக்கும் என்பதை புரிந்து கொள்க. இதையும் சீசனுக்கு பிந்தைய கழிவு விலையில்தான் வாங்கியிருக்கிறார். அண்ணாவின் சந்தை நிலவரம் அதுதான் எனும்போது தீதி என்ன செய்ய முடியும்?

“மமதா பானர்ஜி முதலமைச்சர் ஆன பிறகும் சிறிய வீட்டிலேயே வாழ்கிறார், எளிய உணவுதான் சாப்பிடுகிறார், அவருக்கு சொந்தமாக வீடும் இல்லை காரும் இல்லை. நம் மத்தியில் இது போன்ற தலைவர்கள் தோன்றி நீண்ட காலம் ஆகிறது. இப்போது நாம் மமதா பானர்ஜியை கண்டு கொண்டிருக்கிறோம்” என்று மமதாவை பாராட்டி விட்டு, “தீதியும் என்னைப் போலவே கிராமங்களை ஆதரிக்கிறார். அவரது கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்றுதான்” என்று “தீதி”யவாதத்தில் ஒளிந்திருக்கும் காந்தியவாதத்தை கண்டு பிடித்து அறிவித்திருக்கிறார் அண்ணா ஹசாரே. இப்படியாக பிரபலத்திற்கு ஆசைப்படும் இரண்டு சந்தர்ப்பவாதங்கள் சங்கமித்திருக்கின்றன.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் வேலைகள் எவ்வளவு அவசியம்’ என்று ஆதிக்க சாதி மக்களுக்கு புரிய வைத்து, ‘மாட்டிறைச்சி சாப்பிடறதாலதான் தீண்டாமையை கடைப்பிடிக்கிறாங்க’ என்று தாழ்த்தப்பட்ட மக்களை சைவ உணவர்களாக்கி, சாதி பேதங்கள் நிரம்பிய ஆனால் பகைமை இல்லாத மாதிரி கிராமமாக ராலேகான் சித்தியை  உருவாக்கியவர் அண்ணா. அதன் அடிநாதமான இந்துத்துவ உணர்வை தீதியிடம் கண்டிருக்கிறார். தான் போடும் உத்தரவுகளை பின்பற்றாதவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைப்பது போன்ற ராணுவ கறாருடனான ஜனநாய உணர்வையும் அவர் தீதியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

“தீதியை ஒரு தனிநபராகத்தான் ஆதரிக்கிறேன், அவரது கட்சியை ஆதரிக்கவில்லை. வரும் தேர்தலில் அவர் நிறுத்தும் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நான் நாடு முழுவதும் பயணிப்பேன்” என்கிறார் அண்ணா ஹசாரே.

மமதா பானர்ஜி
அண்ணா ஹசாரேவின் 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.

அரவிந்த் கேஜ்ரிவால் தனது கடிதத்துக்கு பதில் போடாததால் அவரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அண்ணா ஹசாரே கூறியிருக்கிறார். ஒருவேளை பதில் போட்டாலும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவும் கிடையாது, கேசரியும் கிடையாது என்பதுதான் நிஜம். “தனது 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்துக்கு வேறு எந்தக் கட்சியும் பதில் போடாத நிலையில், அது குறித்து தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்திய மமதா பானர்ஜி நாட்டின் பிரதமர் ஆனால், அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தனது உண்ணாவிரத போராட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ள, “நாலு ஊடகங்களில் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களில் கவர் ஆக  வேண்டும்” என்ற தனது வாழ்நாள் இலட்சியத்தை சாதித்து விட்ட அண்ணா, அடுத்த கட்டமாக தன்னை ஒரு பொருட்டாக மதித்து பதில் போட்ட திரிணாமூல் காங்கிரசின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். மராட்டிய ஆன்மீகமும், வங்கத்து குழாயடிச் சண்டையும் இணைந்து செய்யப் போகும் இந்த மகத்தான அரசியலை காவியமாக்க கம்பனில்லையே என்றொரு ஏக்கம் வரத்தான் செய்கிறது.

ஆனாலும், அண்ணா ஹசாரேதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் தாங்கள் அவரை நாடவில்லை என்றும் மம்தா பானர்ஜியும் அவரது கட்சியினரும் தெளிவாக சொல்லுகின்றனர். “அண்ணாவின் 17 அம்சக் கொள்கைகளில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்தையும் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம். நிலம் கைப்பற்றல் போன்ற அம்சங்களைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்று கூறி அந்த கிராமத்து பெருசின் மனதில் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டார் மம்தா. அந்த 17 அம்ச கொள்கைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், மம்தா பானர்ஜி அரசின் கொள்கைகளை ஆய்வு செய்யலாம்.

இதனால் பெருசினால் மம்தாவுக்கு பயனில்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்யாதீர்கள். காங்கிரஸ், பாஜக இரண்டுமே பெரும்பான்மைக்கு அருகில் வராது என்றும், மூன்றாம் அணி உள்ளிட்ட மற்ற கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்றெல்லாம் கொளுத்திப் போடும் போது அதற்கு ஜெயா, முலாயம் என்று போட்டியெல்லாம் இருக்கும் போது தீதிக்கும் தூக்கம் வராது என்ற நிலையில்தான் அண்ணா அவருக்கு தேவைப்படுகிறார்.

வடகிழக்கு இந்தியாவில் தம் சொந்த செல்வாக்கிலும் நாட்டின் மத்திய, தெற்கு பகுதிகளில் அண்ணா ஹசாரேவின் ஆலோசனையின்படியும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். எப்படியும் பிரதமர் போட்டியில் தானும் ஒரு குதிரையாகவாவது நிறுத்தப்படுவது அவசியம் என்று அவர் நினைக்க, அவரது தேரோட்டியாக அண்ணா அவதிரித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணியிலோ திரிணாமூல் கட்சி சேருமா என்று கேட்கப்பட்ட போது, “இப்போதெல்லாம் பிரீ-போல் (தேர்தலுக்கு முந்தைய) கூட்டணி கிடையாது, போஸ்ட் போல் (தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி) கூட்டணிதான்” என்று பதிலளித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. தனியாக நின்று சில 10 இடங்களை பிடித்து விட்டால், தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேரங்களில் தேவகவுடாவைப் போலவோ, குஜ்ராலைப் போலவோ பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட மாட்டோமா என்று தமிழ்நாட்டின் அம்மாவிலிருந்து வங்கத்து தீதி வரை ஆசை பிடித்தாட்டுகிறது.

இவ்வாறாக, அண்ணாவின் காந்திய போராட்டமும், மம்தாவின் தீதிய போராட்டமும் தத்தமது அடுத்த வளர்ச்சி கட்டத்தில் ஒன்றோடொன்று கை கோர்த்திருக்கின்றன. ஆனால்,  2019 தேர்தலில் தானே 100 சுயேச்சை வேட்பாளர்களை நாடு முழுவதும் நிறுத்தப் போவதாக அண்ணா ஹசாரே கூறியிருப்பதிலிருந்து இந்த தேர்தல் கூட்டணி அதற்கான அவரது ஒத்திகை என்று அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பரஸ்பரம் இரண்டு தரப்பிலும் உடனடி மற்றும் தொலை நோக்குத் திட்டங்களெல்லாம் உண்டு. படித்து இரசிப்பதற்குத்தான் நமக்கு நேரமில்லை.

ஜெயமோகன்
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.

இந்நிலையில் அண்ணா ஹசாரேவை ஆதரித்து தேசியக் கொடி ஆட்டியவர்கள், பானி பூரி விற்றவர்கள், நான் அண்ணா என்று தொப்பி போட்டவர்கள் இவர்கள் எல்லோரையும் விட அந்த போராட்டத்துக்குள் ஒரு சித்தாந்த அடிப்படையை கண்டு பிடித்துச் சொன்ன ஜெயமோகனுக்குத்தான் ஒரு வரலாற்றுப் பொறுப்பு இருக்கிறது.

அண்ணா ஹசாரேவை 1990-களிலேயே ராலேகான் சித்தியில் தான் போய் பார்த்திருப்பதாகவும், ஊழலுக்கு எதிரான அவரது காந்திய போராட்டம் என்பது “மெல்ல மெல்ல சமூகப் பிரக்ஞையில் வேரூன்றி கருத்தியல் மாற்றத்தை உருவாக்கி அதன்மூலம் வெற்றியை நோக்கிச் செல்வது” என்றும் “காந்தியப்போராட்டத்தில் பெரும் சோர்வுக்காலங்கள் உண்டு”, “காந்தியப்போராட்டம் என்பது எப்போதும் ஒரு சமரசத்திலேயே முடியும்”, “காந்தியத் தரப்பு அடைந்தவற்றை உறுதிப்படுத்திக்கொண்டு உடனடியாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும், அடைந்தவற்றை மேம்படுத்திக் கொள்ளும்.” என்றும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் அவருக்கே தெரியாமல் அடங்கியிருந்த உள்ளார்ந்த அர்த்தங்களை தனது அக ஒளியால் கண்டறிந்து பதிவுகள் எழுதிக் குவித்தவர் ஜெயமோகன்.

அந்த வழியில் அண்ணாவின் காந்திய போராட்டம் மம்தாவின் திரிணமூல் காங்கிரசை நோக்கி அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கும் இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கொள்கைதான் தன் கொள்கை என்று அண்ணா ஹசாரே அறிவித்திருக்கும் நிலையில் அண்ணா ஹசாரே-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு ஆதரவாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருடன் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதுதான் அறமாக இருக்கும். இல்லை என்றால் ‘ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து சுக்கு காபி குடித்தவாறு மகாபாரதம் எழுதிக்கொண்டிருப்பதுதான் ஒரு எழுத்தாளனின் அறமா’ என்ற கேளவிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

அண்ணா ஹசாரே பற்றிய ஜெமோவின் பதிவுகளை தொகுத்து புத்தகம் போட்டு, அதற்கு பாட்காஸ்ட், விவாத விளம்பரம் எல்லாம் செய்த கிழக்கு பதிப்பக பத்ரியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறப்பணிக்கு தோள் கொடுப்பார் என்று நம்பலாம். அண்ணா ஹசரே புத்தகத்தை அவர் மலிவுப் பதிப்பில் பத்து ரூபாய் போட்ட மாதிரி, தீதி – தாத்தா கூட்டணி புத்தகத்தை ரெண்டு ரூபாய்க்கு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த புத்தக கண்காட்சியில் இதுதான் பெஸ்ட் செல்லராக இருக்கும்.

மராட்டிய அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு, வங்கத்து தீதியின் போராட்ட குணம், பார்வதிபுரத்து ஜெயமோகனது அறம், மந்தைவெளி பத்ரியின் புத்தகக் கடை எல்லாம் சேர்ந்து எழுப்பும் அந்த மகோன்னதக் காட்சியை நினைக்கும் போது……………………..!

அப்துல்

கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்

2

குழந்தைக்காக காத்திருந்த ஒரு பொண்ணு தான் உண்டான விசயத்த சந்தோசமா மாமியார்கிட்ட சொன்னா. மாமியாருக்கு அளவில்லாத மகிழ்ச்சிதான், டாக்டர் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கற வரைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள்
மருத்துவ பரிசோதனைக்கு காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

“குழந்தை ஆரோக்கியமா இருக்கு. ஸ்கேன் ரிப்போட்ல எந்த பிரச்சனையும் இல்ல. ஜூலை மாசம் குழந்தை பிறக்கும். மருமகள நல்லா பாத்துக்கங்க பழம், பச்சை காய்கறின்னு சத்தானதா பாத்து கொடுங்க. அப்பதான், உங்க பேரப்பிள்ள ஆரோக்கியமா வளரும். எந்த பிரச்சனையும் இல்ல. தாயும் பிள்ளையும் நல்லாருக்காங்க, சந்தோசமா போய்ட்டு வாங்க” என்றார் டாக்டர்.

“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க. கண்ணடி பட்டு படுத்துப் போன ஏங்குடும்பம் இப்பதான் தலையெடுக்குது. இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்.” என்றார். என்னமோ சொசைட்டி பேங்குல அடமானம் வைச்ச நகையை எடுக்கணும்ங்கிற மாதிரி அவங்க சொன்னதெல்லாம் டாக்டரம்மாவுக்கு அதிர்ச்சியா இருக்காது. இப்படித்தானே பலரையும் பாக்குறாங்க.

வெலவெலத்துப் போன அந்த மருமகப் பெண் கலங்கிய கண்களுடன் தன்னையும் அறியாமல் குழந்தையை தடவுவது போல் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.

மருமகளுக்கு முன்னாடி அந்த அம்மாவோட பொண்ணுதான் முழுகாம இருந்தது. மகளுக்கு சித்திரை மாசம் குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. மகள், மருமகள்ங்கற பேதம் இல்லாம மகளுக்கும் முன்கூட்டியே ஆப்ரேசன் செஞ்சு குழதைய எடுத்துறனுங்கற அதே மூடத்தனமான நீதியதான் முன்வச்சாங்க. மேலும் “மாசமாக இருக்கும் நீங்க ரெண்டு பேரும் (மகளும் மருமகளும்) ஒரே வீட்டில் இருக்க கூடாது ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கக் கூடாது. பெரியவங்க சாஸ்திரபடிதான் சொல்லி வச்சுருங்காங்க. மீறினா ஊனமா கொழந்தப் பொறக்கும்”ன்னு சொல்லி பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது தெரிந்தும் மருமகளை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நிலைமை தெரிஞ்சாலும்  சம்பிரதாயங்களை மீற அவருக்கு மனசில்லை.

அம்மா வீட்டில் இருந்தாலும் ஈருயிருக்காரியான அவளை இந்த சம்பிரதாயங்கள் விட்டுவைக்கவில்லை. மசக்கயால சோர்ந்து சோர்ந்து படுக்கணும் போல இருந்தாலும் அம்மா வீட்டுல இருக்க நம்பள, புருஷன் வீட்ட சேந்தவங்க அன்பா பார்க்க வாராங்கங்கற சந்தோசத்துல சோர்வையும் மீறி, அவங்கள உபசரிக்க காரக்குழம்பு வச்சு காய், ரசம்னு சமையல் செஞ்சுருந்தா அந்த பொண்ணு. வந்தவங்களோ “மொதமொதன்னு உங்க வீட்டுக்கு வந்து காரக்கொழம்பு சாப்புடக் கூடாது, உறவுக்குள்ள பகை வந்துரும், சாம்பார்தான் சாப்பிடனும் சாம்பார் செய்யி”ன்னு சொல்லிட்டாங்க. மூச்சு வாங்கறதையும் பொருட்படுத்தாம ஆசாசையா சமைச்சவளுக்கு எதுத்துக் கேக்குற துணிவில்லாமல் சாஸ்த்திரத்து மேலயும் சாம்பார் மேலயும் பயங்கரமா கோபப்பட்டாள்.

மசக்கக்காரிக்கு நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் சமைச்சுப் போடலேன்னா கூட பரவாயில்லை. ஆனா அவள இப்படி கஷ்டப்படுத்தி சாம்பாரை தின்னணும்ணு சாதிச்ச அந்த சனங்களை என்ன செய்யறது?

ஒருநாள் நான் அந்த பொண்ண பாத்துட்டு வரலான்னு போயிருந்தேன். எல்லோரும் சாப்பிட்டு முடிச்சு சந்தோசமா சிரிச்சுப் பேசிட்டிருந்த ஒரு வேளையில “உனக்கு பொம்பளப் புள்ள வேணுமா ஆம்பளப்புள்ள வேணுமா, பொம்பளப் புள்ளயே பெத்துக்க அதுதான் நாளைக்கி நமக்கு முடியாதப்ப நம்ம கைவேலய வாங்கி செய்யும், நமக்கு உதவியா இருக்கும். பசங்க ஒரடி எட்டிதான் இருப்பாங்க”ன்னு விளையாட்டா சொன்னேன்.

அப்ப அந்தப் பெண்ணோட மாமியாரும் அங்க இருந்தாங்க. “எங்குடும்பத்துல யாரும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல, நல்லதுதான் செஞ்சுருக்கோம். காச காசுன்னு பாக்காம வாரம் ஐநூறுன்னும் ஆயிரம்னும் செலவுபண்ணி எத்தன கோயிலுக்கு பூஜபண்றேன்னு தெரியுமா? என்ன காக்குற மாரியாத்தா அந்த செரமத்தெல்லாம் தரமாட்டா. எம்மருமகளுக்கு ஆம்பளப்புள்ளதான் பொறக்குன்னு” சொன்னாங்க அந்த மாமியாரம்மா. பெண் குழந்தை பொறந்தா ‘பாவச்செயல்’ன்னு சொல்றளவுக்கு அறிவை மழுங்கடிக்கும் ஆணாதிக்கமும் அதன் சமுக அமைப்பையும் கண்டு ஒரு நிமிசம் என் உச்சி மயிர் வழியாய் உயிரை பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்துச்சு. பெண் இனத்தையே கேவலப் படுத்திக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாம சாதாரணமா சொன்னாங்க.

ஆம்பளப் புள்ளையை பெத்துக்குறது புண்ணியம், பொம்பளப் பிள்ளையை பெத்தால் பாவம்னு நினைக்கிறவங்க மத்தியில மருமகளோ, அக்காவோ, பாட்டியோ இன்னும் அத்தனை பொம்பளங்களும் எப்படி நிம்மதியா வாழ முடியும் சொல்லுங்க?

வயித்துல புள்ளைய சுமக்கறப் பொண்ணுக்கு வாயிக்கி ருசியா சமைச்சுப்போட்டு மனசுக்கு இதமா பேசி பழகி அனுசரணையா நடந்துக்கணும். அப்பதான் அவளும், அவ வயித்துல வளர்ற பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கும். வயித்துல புள்ளய சொமக்குற சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் பயங்கரமான மனக் கொழப்பம், குழந்தை பிறக்கற வரைக்கும் வந்துகிட்டே இருக்கும். கர்ப்பமுன்னு முடிவான பிறகு எந்த நேரத்துலயும் கலஞ்சுருமோன்ற பயத்தால பாத்ரூம் வந்தாக்கூட போகப் பயம்மாருக்கும். எந்த கொறையும் இல்லாம நல்ல கைகாலோட பொறக்கணுமேங்கற எண்ணமும் எப்பவும் கூட இருக்கும். வயிறு பெருசாக பெருசாக பிரசவ பயம் ஆள தொலச்செடுத்துரும். எந்த வேலையையும் மனசு ஒட்டி செய்ய முடியாது.

இது உடலோட அதுவும் தாய்மையோட பிரச்சனைங்கன்னு புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணலாம். ஆனா சமூகத்தோட சம்ரதாயப் பிரச்சினைங்க ஒரு புள்ளத்தாச்சிய இப்புடிப் போட்டு வாட்டு வைதைக்கும்ணு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிஜம்.

அஞ்சாவது மாசம் அழைப்பு, ஏழாவது மாசம் பூ முடிப்பு, ஒம்பதாம் மாசம் வளைகாப்புன்னும், விதவிதமா சாப்பாடு தேடித் தேடி செய்றாங்க. தேனாமிர்தமே கொடுத்தாலும் அதவிட வயுத்து புள்ளக்காரிக்கி முக்கியமான தேவை, சுத்தியிருக்கும் குடும்பத்த சேந்தவங்களோட அன்பான பேச்சும், நாங்க இருக்குறோம் கவலப்படாத தைரியமா இரு என்ற நம்பிக்கையும் தான். அவளுக்கு ஆரோக்கியமான முறையில குழந்தைப் பெத்துக்குற தைரியத்தக் கொடுக்குங்கறத மறந்துர்ராங்க.

குழந்தையை சுமக்கும் பெண்ணின் மனநிலையை புரிஞ்சுக்காம ஏதோ இந்த ஒரு குடும்பத்துல மட்டும்தான் இப்படி பேசுறதில்ல. மதமும், சம்பிரதாயமும் தூணுலயும் இருக்கும், துரும்புலயும் இருக்கும். ‘தொப்புள் கொடி சுத்தி பொறந்தா மாமனுக்கு ஆகாது, வெள்ளிக் கிழம பொண்ணு பொறந்தா லட்சுமி கடாட்சம். வியாழக் கிழமை ஆம்பளப் பிள்ள பொறந்தா தங்காது தவறிடும், அதனால தவுடு வாங்கிக்கிட்டு தத்து கொடுத்துட்டு ஒரு நாள் இரவு முடிஞ்சதும் தூக்கிக்கனும். செவ்வாக் கிழம பொறந்த செவ்வாதோசம் இருக்கும்’ன்னும் கிராமத்துல பெரும்பாலான வீடுகள்ள இதுபோல பல காரணங்கள் சொல்லி சொல்லி கடுப்பேத்துவாங்க.

புள்ளத்தாச்சி பொண்ணுகள இப்படி நிம்மதி இல்லாம செய்றதால வயித்துல உள்ள குழந்தைக்கு பாதிப்பையும் உண்டு பண்ணிருவாங்க, பிரசவத்துக்கும் செரமத்த ஏற்படுத்திருவாங்க. இந்த சடங்கும் சம்பிரதாயமும் வயித்துல வளர்ற கருவைக் கூட விட்டு வைக்கிறதில்லை. கொழந்த பிறக்கும் போது யாராவது தற்செயலா இறந்து போனா முழு ஊரும் உறவும் பேசிப் பேசியே கொல்லும்.

இவங்களப் போல உக்கார்ரதுக்கும் படுக்குறக்கும்ன்னு தொட்டதுக்கும் சாங்கியம் பாக்கும் மனிதர்களின் வாழ்க்கை என்னைக்குமே முன்னோக்கி செல்லாது. ‘ஆண்டவன நெனைக்காத நாளே கெடையாது, உப்பு புளி வாங்கணுன்னா கூட நல்ல நாள், நல்ல நேரம் பாத்துதான் வாங்குவேன் ஆனா என் விசயத்துல கண்ணு தொறந்து பாக்கமாட்டேங்குறான் அந்த கடவுள்’ என்பார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் என்னனென்ன பிரச்சனை வரும் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்திருந்தாலும் பிற்போக்குத் தனமான மூட பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மூளையை சிந்திக்க விடாம சுருக்கிக் கொள்கிறார்கள்.

பிள்ளைப்பேறு காலம்றது மறுஜென்மம் என்பதும் கருவுற்றவளை கவனிப்பதின் அவசியத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் அடங்கியுள்ளது என்பதும் அந்த அம்மாவுக்கு மட்டுமில்ல பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்சுருக்கும். தெரிஞ்சாலும் மனுசனோட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காம சாஸ்த்திரம் சம்பரதாயம்னு இல்லாத ஒண்ணுக்கு மல்லு கட்டிகிட்டு மூடத்தனத்த கொள்கையா கடைபிடிக்குறாங்க. சாமின்னும், மந்திர தந்திரம்னும் காலம் காலமா மூழ்கி கெடக்கறதால திட்டமிட்டுத்தான் இதுபோல மத்தவங்க மனசு புண்படும்படி பேச வேண்டிய அவசியமில்லை. அவங்கள அறியாமலே பேசுற பேச்சுல செய்ற செயல்லன்னு மூடநம்பிக்கையும் ஒரு அங்கமா அனிச்சை செயலா கலந்துருக்கு.

பிரவசம் இப்ப ரொம்பவே முன்னேறியிருக்கு. தாயையும், சேயையும் காப்பாத்துறதுல மருத்துவம் எவ்வளவோ வளர்ந்துருச்சு. அவரசம்னா அறுவை சிகிச்சை செஞ்சு கூட இரண்டு பேரையும் காப்பாத்தலாம். ஆனா மக்கள்கிட்ட இருக்கும் இந்த சம்பிரதாய நோயையை அழிக்கிறதுக்கு மருத்துவம் உதவாது. பகுத்தறிவை வளர்க்க கொஞ்சம் முரட்டு வைத்தியம்தான் பண்ணனும் போல.

–    சரசம்மா

இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

329

ஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து  வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை  அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சவுதி மாணவியர்
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)

இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்து தாங்கள் உடனடியாக மருத்துவர்களை உள்ளே அனுமதித்து விட்டதாக கூறுகிறது. அதாவது, 12.35 மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும், தாங்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக 12.45 -மணிக்கு உள்ளே அனுமதித்துவிட்டதாக மழுப்புகிறது. ஆனால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள தகவல்கள்,  நிர்வாகத்தின் மேற்கண்ட தகவல் பொய் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை அசீசா யூசூஃப் மருத்துவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிர்வாகத்தை கண்டித்து  “கலாச்சாரம் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிராமல் வேகமாக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகம் நமக்கு  தேவையாக இருக்கிறது” என்கிறார். ஆண்களை உள்ளே அனுமதித்து சட்டத்தை மீறினால் தங்களுக்கு பிரச்சனை நேரிடலாம் என்று கல்லூரி முதல்வர் பயந்திருக்கிறார். இதனாலேயே அவர்கள் ஆம்புலன்சை அனுமதிப்பதற்கு காலம் தாழ்த்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆபத்து நேரத்திலும் மருத்துவர்களை அனுமதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில்  நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. மதத்தின் பெயரால் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்திருக்கும் சவுதி அரசும், அதன் இசுலாமிய அடிப்படைவாத சட்டங்களும் தான் இங்கு முதன்மையான குற்றவாளி. சவுதியின் ஷரியத் சட்டங்களுக்கு பயந்துதான் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. ஒருக்கால் ஆண் மருத்துவர்களை அனுமதித்திருந்தால் நிர்வாக தரப்பில் உள்ளவர்களுக்கே தலை வெட்டப்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் போது யார் பொறுப்பேற்பார்கள்?

இஸ்லாமிய வகாபிய அடிப்படைவாத நாடான சவுதியில் ஆண்களும் பெண்களும் பொதுவில் கலந்து பழகுவது கறாராக தடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கும் இடங்களும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக உணவு விடுதிகளில் இவை மிகக் கறாராக பின்பற்றப்படுகின்றன. ஏனெனில் உணவு உட்கொள்ளும் போது புர்காவால் முகத்தை மறைக்கமுடியாததே அதற்கு காரணம். மேலும், ஆண் துணையில்லாமல் பெண்கள் உணவுவிடுதியினுள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.  இதற்கு அங்கே இருக்கும் மேற்கத்திய நிறுவனங்கள் கூட விதிவிலக்கல்ல. அவர்களும் ஜனநாயகம், சமத்துவத்தை விட வியாபாரமே மேல் என்பதால் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.  இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய பெண்ணியவாதிகளால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த பிரித்து வைக்கும் சட்டம்தான் அமீனா பவஷீரின் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபவர்கள் கூட எச்சரிக்கையாக ஒரு அச்சத்துடன் பேசுவதை காண முடிகிறது. பெண்கள் மட்டும் பங்குபெறும் ஆம்புலன்ஸ் சேவை, பல்கலைகழகத்தினுள்ளேயே போதிய மருத்துவ வசதிகளை வைத்திருப்பது என்றுதான் அவர்கள் முன் வைக்கும் தீர்வுகள்  நீளுகின்றன. இசுலாமிய அடைப்பைவாதமான வகாபியிச சட்டங்களை எதிர்த்து எதுவும் பேசப்படுவதில்லை. காட்டுமிராண்டி நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு அதற்கு பழுதில்லாமல் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும்?

முகத்தை மூடிக் கொண்ட பெண்
மெக்காவில் புர்கா அணிந்த பெண் (கோப்புப் படம்)

சவுதியில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டு மெக்காவில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது  சிறுமிகள் இஸ்லாமிய முறைப்படி புர்கா அணிந்து உடல் முழுவதையும் மறைக்காமல் இருந்ததாகக் கூறி மதக்காவலர்கள்  எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்து அவர்கள் வெளியே தப்பிச் செல்வதை தடுத்தனர். மீட்புப் பணி ஊழியர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண் மீட்பு ஊழியர்கள் பெண்களை தொட்டு காப்பாற்றுவது தவறு என்று அவர்களையும் தடுத்திருக்கின்றனர்.

“முக்கிய வாசல் வழியாக  தப்பி ஓடி வந்த பெண்களை, மதக் காவலர்கள் இன்னொரு வாசல் வழியாக திருப்பி உள்ளே செல்ல கட்டாயப்படுத்தினர். மீட்புப்  பணியில் எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எங்களை தாக்கி விலக்கிக் கொண்டிருந்தனர்” என்று மீட்புப் பணி ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் 15 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, கண்துடைப்பாக மதகுருமார்கள் மற்றும் மதவழிகாட்டுதல் துறையின் கீழ் இருந்த பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால், நாடெங்கிலும் பெண்களுக்கெதிரான இத்தகைய பிற்போக்கு மதவாத சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. ஆகவே வளைகுடா நாடுகளில் இத்தகைய இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் மலராத வரை அங்கே சவுதி அரச குடும்பம், பணக்கார ஷேக்குகள், அமெரிக்க இராணுவம் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை.

அடிப்படைவாதத்திற்கு மதவேறுபாடு கிடையாது. கத்தோலிக்க கிறித்துவ மத அடிப்படைவாத சட்டங்கள் பின்பற்றப்படும் அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க சட்டப்படி மருத்துவர்கள் சவிதா என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய மறுத்ததால் அவர் உயிரிழந்த பரிதாபம் குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இன்றும் கடுங்கோட்பாட்டு பெந்தகோஸ்தே கிறித்தவர்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைகள் செல்வதில்லை. இந்து மதத்திலோ அம்மை வந்தால் மாரியாத்தா கோபம் என்பது முதல் நரபலி வரை பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன.  ஆகவே அனைத்து மதங்களும் அன்பை போதிப்பதாக சொல்லி மனித உயிர்களை எடுக்கும் காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்டுள்ளன. வரலாற்றில் இவற்றை எதிர்த்து நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கேற்ப இவை கணிசமாக குறைந்துள்ளன. எனினும் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத வளைகுடா நாடுகளில்  இவை இன்றும் பெருமளவு தொடர்கின்றன.

பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் வகாபியிசத்தின் தமிழக பங்காளிகளும் சவுதி எஜமானர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை தோழர் பாத்திமா விவகாரத்தில் பார்த்தோம். தோழர் பாத்திமா போன்றவர்கள் இந்த இஸ்லாமிய மதவெறி கும்பலை முறியடிக்க முடிவதற்கு காரணம் புரட்சிகர அமைப்புகளில் பெற்ற ஜனநாயக உணர்வாகும். அப்படி புரட்சிகர ஜனநாயக கருத்துக்கள் சவுதியில் நுழைந்தால் தான் இந்த வகாபிய காட்டுமிராண்டி சட்டங்களை மாற்ற முடியும்.

மேலும் படிக்க

மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை

8

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 3

சபரிதாம் ஆசிரமத்தில் அசீமானந்தா
சபரிதாம் ஆசிரமத்தில் அசீமானந்தா

டாங் மாவட்டம் குஜராத்தின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாவட்டம். மாநிலத்தின் தென்கோடியில் அமைந்த அந்த மாவட்டம் கிழக்கிலும், மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்; 93 சதவீதம் பேர் பழங்குடி மக்கள். இந்தியாவின் மற்ற பழங்குடி பகுதிகளைப் போலவே இயற்கை வளங்களுக்காகவும், சித்தாந்தந்தங்களுக்காகவும் தனது அளவுக்கு மிஞ்சிய போர்களையும், போராட்டங்களையும் டாங்ஸ் என்று அழைக்கப்படும் டாங் மாவட்டம் சந்தித்துள்ளது.

1842-ல் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் அந்தப் பகுதியின் பழங்குடி மன்னர்களை தோற்கடித்து டாங்ஸின் தேக்கு மர காட்டு வளங்களை கொள்ளை அடிக்கும் உரிமைகளை பெற்றனர். இன்றும் அம்மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு காடுகளால் மூடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்தப் பகுதியில் கிறித்துவ மதபோதகர்களைத் தவிர எல்லா சமூக சேவகர்களையும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தனர். அத்தகைய மத, சமூக நடவடிக்கைகள் பழங்குடி மக்களுக்கு நிலத்தின் மீதான உரிமை உணர்வை வளர்த்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். 1905-ம் ஆண்டு மாவட்டத் தலைநகரான ஆஹ்வாவில் முதல் மிஷன் பள்ளி உருவாக்கப்பட்டது. அப்போது முதலே பல பிரிவுகளைச் சேர்ந்த கிறித்துவ மத போதகர்கள் இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தனர். கிறித்துவர்கள் டாங்ஸை “பஸ்சிம் கா நாகாலாந்து” – மேற்கின் நாகாலாந்து என்று அழைத்து வந்தனர். “வடகிழக்கைப் போன்ற பெரிய அச்சுறுத்தல் இங்கும் இருந்தது” என்கிறார் அசீமானந்தா.

அசீமானந்தா வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சார்பாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது 1996-ம் ஆண்டு முதன் முறையாக டாங்ஸ் போனார். இந்துத்துவா அமைப்பின் தலைவர்கள், அவரது வெற்றிகரமான மத மாற்ற செயல்பாடுகளை நாடு முழுவதிலும் உள்ள பழங்குடி பிரதேசங்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஷ்ரத்தா ஜாக்ரன் விபாக் (மத நம்பிக்கையை எழுப்பும் பிரிவு) ஒன்றை ஏற்படுத்தி அவரை அதற்கு தலைவராக நியமித்தார்கள். ஆனால், தான் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்தால் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அசீமானந்தா கருதினார். அந்த வகையில் டாங்ஸ் அவரை பெரிதும் ஈர்த்தது. “டாங்சுக்கு எனது தனிச்சிறப்பான பணி தேவைப்பட்டது. பழங்குடி மக்களிடையே தங்கி வேலை செய்வதுதான் எனக்கு விருப்பமானது. ஒருவர் தனக்கு மனத் திருப்தி கொடுக்கும் வேலையைத்தான் எப்போதும் செய்ய வேண்டும். வடகிழக்கை போல் இல்லாமல், டாங்சை கிறித்துவர்களிடமிருந்து மீட்பதற்கு இன்னும் வாய்ப்பு இருந்தது” என்கிறார் அவர்.

இருந்தாலும் முதன்மையாகவும், முக்கியமாகவும், அசீமானந்தா சங்க பரிவாரத்துக்கு விசுவாசமானவர். குஜராத்தின் காடுகளில் தங்கிக் கொண்டு தேசிய பொறுப்புகளை  அவரால் கவனித்துக் கொள்ள முடியுமா என்று சங்க பரிவார தலைவர்கள்  கவலைப்பட்டனர். எனவே, அசீமானந்தாவால் தான் டாங்சில் தங்கி செயல்படுவதற்கான அனுமதியை 1998 வரை பெற முடியவில்லை. ஆனால், அதற்கான அனுமதி பெற்று காட்டினுள் குடியேறிய ஒரு ஆண்டுக்குள், தலைவர்களின் கவலையை பொய்ப்பிக்கும் விதமாக தனது மதபோதக அணுகுமுறையையும், வன்முறை பிரச்சாரத்தையும் இணைத்து நாடு முழுவதும் உள்ள சங்க பரிவார தொண்டர்களை அணி திரட்டுவதை சாதித்துக் காட்டினார். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் அமைப்புச் செயலாளரும் கேரளா ஆர்.எஸ்.எஸ் தலைவருமான ராவ், அசீமானந்தாவின் பணி “மொத்த தேசத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு” என்று பாரட்டியதை அசீமானந்தா நினைவு கூர்கிறார்.

கிறித்தவர்களுக்கு எதிரான டாங்ஸ் கலவரங்கள்
கிறித்தவர்களுக்கு எதிரான டாங்ஸ் கலவரங்கள்

1998-ல் அசீமானந்தா வாகாய் என்ற இடத்தில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை ஏற்படுத்தி தங்க ஆரம்பித்த போது, டாங்சில் உள்ள பழங்குடி சமூகங்களை ஏற்கனவே மத வேறுபாடுகள் பிளவுபடுத்த ஆரம்பித்திருந்தன. 1970-களுக்கு முன்பு வரை அந்தப் பகுதியில் கிறித்துவ மத போதகர்களின் நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களின்படி அந்தப் பகுதியின் கிறித்துவ மக்கள் தொகை 1991 முதல் ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்து வந்தது. பெற்றோர்கள் இறந்த பிறகு எந்த மதத்தின் அடிப்படையில் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அம்மாவட்டத்தில் கிறித்துவர்கள் மீது 20 தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. 1998 முழுவதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு டஜன் பழங்குடி சிறுவர்களை தங்க வைத்து இலவச உணவும், தங்குமிடமும் வழங்கி உள்ளூர் அரசுப் பள்ளியில் படிக்க வனவாசி கல்யாண் ஆசிரமம் உதவி செய்து வந்தது. அசீமானந்தா தலைமையில் பையன்கள் ஏகதா மந்திரத்தை உச்சரிப்பதிலிருந்து ஆசிரமத்தில் ஒரு நாளைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. ஏகதா மந்திரம் என்பது பாரத மாதா மற்றும் காந்தி முதல் கோல்வால்கர் வரையிலான முக்கியமான இந்தியர்களின் புகழ் பாடும் பாடல்; ஷாகாக்களின் ஒவ்வொரு அமர்வையும் ஆரம்பிப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகர்கள் அதை பாடுவது வழக்கம். அந்த ஆசிரமத்தில் அசீமானந்தா சந்தித்த மாணவர்களில் ஒருவர் பூல்சந்த் பப்லூ. அசீமானந்தாவின் வழிகாட்டியாகவும், வலது கையாகவும் ஆகி விட்ட பப்லூதான் டாங்ஸ் பகுதியில் தனது வெற்றிகளுக்கு பெருமளவு காரணம் என்கிறார் அசீமானந்தா.

சென்ற ஆண்டு நான் வாகாய் ஆசிரமத்திற்கு போன போது பப்லூ தனது கிராமத்திலிருந்து வந்து என்னை சந்தித்தார். கொஞ்சம் குண்டான உடல்வாகு, உருண்டை முகம், முன்பின் தெரியாத ஒரு ஊரில் நம்பிக்கையாக வழி கேட்கலாம் என்பது போன்ற முகத் தோற்றம். அவர் நம் மனதை கலக்கும் நிகழ்வுகளை சொல்லும் போது கூட நட்புணர்வு குன்றாமலே அவற்றை கேட்க முடிகிறது.

அசீமானந்தா, அந்தமான் தீவுகளில் பின்பற்றிய அதே உத்திகளை இங்கும் கடைப்பிடித்தார். தன்னை வரவேற்கக் கூடிய கிராமங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் பப்லூவை நம்பியிருந்தார். அதன் மூலம் புதிய தொண்டர்களை சேர்த்துக் கொண்டு அந்த வனப்பகுதியில் தனது செல்வாக்கை பரப்பத் திட்டமிட்டார். அவரும் அவரது தொண்டர்களும் எளிதில் போக முடியாத பழங்குடி கிராமங்களுக்கு மலையேறி சென்று, அங்கு ஒரு வாரம் வரை தங்கினார்கள். பழங்குடி மக்களுடன் உணவு உண்டு அவர்களது குடிசைகளில் தூங்கினார்கள். அசீமானந்தா இந்து மதப் பிரச்சாரம் செய்தார்; சாக்லேட்டுகளையும், அனுமான் லாக்கெட்டுகளையும், அனுமான் சாலீசாவையும் குழந்தைகளிடம் வினியோகித்தார். இந்து மத பஜனைகள் நடத்தி, கிறித்துவத்திற்கு ஏன் மாறக் கூடாது என்று கிராம மக்களிடம் எடுத்துரைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும், இந்துக்களாக மதமாற்றம் செய்ய தகுதி படைத்தவர்களின் பட்டியலை அசீமானந்தாவும் அவரது உதவியாளர்களும் தயாரிப்பார்கள். அந்த பட்டியல்களை அசீமானந்தா கவனமாக கண்காணித்து வந்தார். அவர்கள் அடுத்த குடியிருப்புக்கு புறப்படும் போது, பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பழங்குடி மக்களின் குடிசைகளின் உச்சியில் சங்க பரிவாரத்தின் கொடி பறப்பதை அவரது உதவியாளர்கள் உறுதி செய்திருப்பார்கள்.

சபரிதாம் கோயில்
சபரிதாம் கோயில்

அசீமானந்தா இத்தகைய ஒப்பீட்டளவில் மென்மையான அணுகுமுறையுடன், பயமுறுத்தல்களையும் சேர்த்து பயன்படுத்தினார். “வங்காள எல்லைப்புற கிராமங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அவர் விவரிப்பார். எல்லைக்கு அப்பாலிருந்து வந்து குவியும் முஸ்லீம்களால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் அந்த இடத்தை விட்டு ஓட வேண்டி வந்தது” என்று அவர் கூறியதை பப்லூ நினைவு கூர்கிறார். அசீமானந்தா கிறித்துவர்களுக்கு எதிரான கடும் கண்டனங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகிக்க ஏற்பாடு செய்தார். ஜூன் 1998-ல் நடக்கவிருந்த ஒரு பேரணிக்கான துண்டறிக்கையின் தலைப்பில், “இந்துக்களே வாருங்கள், திருடர்கள் ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் கீழ், “டாங் மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சனை கிறித்துவ போதகர்களால் நடத்தப்படும் அமைப்புகள்தான். சேவை என்ற முகமூடியை அணிந்து கொண்டு அந்த சாத்தான்கள் பழங்குடி மக்களை சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றல்களும்தான் அவர்களது மதம்” என்று எழுதப்பட்டிருந்தது. இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை விரைவில் வன்முறை செயல்களாக மாற்றினார் அசீமானந்தா.

1998-ம் ஆண்டு கிருஸ்துமஸ் அன்று மாலை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும்  வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆஹ்வாவில் உள்ள தீப் தர்ஷன் பள்ளியை தாக்கினார்கள். 100-க்கும் அதிகமானவர்கள் அந்த சூறையாடலில் பங்கேற்றதாக அந்த பள்ளியை நடத்தும் கார்மலைட் பெண் துறவிகளில் ஒருவரான சிஸ்டர் லில்லி சொல்கிறார். அவர்கள் கல்லெறிந்து ஜன்னல்களை உடைத்து, பழங்குடி சிறுவர்களுக்கான தங்கும் விடுதியின் கூரைகளையும் நொறுக்கினர். “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் கண் முன்னால் நிற்கிறது. அன்று நான் மிகவும் நடுங்கிப் போயிருந்தேன்” என்கிறார் சிஸ்டர் லில்லி.

30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் இன்னொரு பள்ளி தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் களஞ்சியம் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. காத்வி கிராமத்தில் சுமார் 200 பேரைக் கொண்ட கும்பல் அந்த ஊர் கிறித்துவ தேவாலயத்தை தாக்கி நொறுக்கி, தீ வைத்தது. பின்னர் அவர்கள் பக்கத்து கிராமத்துக்குப் போய் அங்கிருந்த சர்ச்சுக்கும் தீ வைத்தனர். அதற்கடுத்த நாள் வாகி கிராமத்தின் தேவாலயம் தீயிடப்பட்டது; அந்தத் தாக்குதலில் ஒரு வனத்துறை ஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டாங்ஸ் மாவட்ட கிராமங்களில் ஆறு தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ பழங்குடி மக்களின் வீடுகள் கல் எறிந்து தாக்கப்பட்டன, கிறித்துவ மற்றும் முஸ்லீம் கடைகள் தாக்கி அழிக்கப்பட்டன, கிறித்துவ பழங்குடி மக்கள் தாக்கப்பட்டார்கள்.

10 நாட்களுக்கு இந்த நாசவேலை தொடர்ந்து நடந்தது. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை “40,000 கிறித்துவர்கள் இந்து மதத்துக்கு மாறினார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறார் அசீமானந்தா. “நாங்கள் 30 தேவாலயங்களை இடித்து கோயில்கள் கட்டினோம். ஒரே கலவரமாக இருந்தது” என்கிறார் அவர்.

இந்த வன்முறை கிருஸ்துமஸ் தினத்தன்று காலையில் நடத்தப்பட்ட மூன்று ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் ஊர்வலங்களிலிருந்து தொடங்கியது. அசீமானந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலங்களில் ஒன்று ஆஹ்வாவிலும், மற்ற இரண்டும் பக்கத்து மாவட்டத்திலும் நடைபெற்றன. ஆஹ்வாவில் நடந்த ஊர்வலத்தில் 3,500 சங்க உறுப்பினர்கள் திரிசூலங்களும் கம்புகளும் ஏந்தி பங்கேற்றதாக டாங்ஸ் பா.ஜ.க கிளையின் அப்போதைய செயலாளர் தசரத் பவார் தெரிவிக்கிறார். அசீமானந்தாவின் கிறித்துவ எதிர்ப்பு உரைகளிலிருந்து உருவாக்கப்பட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நகரத்தின் பிரதான சாலை காவி பேனர்களால் நிரப்பப்பட்டிருந்தது. உள்ளூர் கிறித்துவ பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியாளர் பரத் ஜோஷியிடம் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்துமாறு மனு கொடுத்திருந்தார்கள். அவரோ, பதற்றத்தை தணிப்பதற்கு பதிலாக ஆஹ்வாவில் நடந்த ஊர்வல மேடையில் தோன்றி இந்துத்துவா கும்பலுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்.

அசீமானந்தா - மோடி
அசீமானந்தாவின் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்யும் மோடி

ஊர்வலங்களை தொடர்ந்து நடந்த கலவரங்கள் விரிவாக  பரவுவதில் அசீமானந்தாவின் ஒருங்கிணைக்கும் திறன் பெரும் பங்கு வகித்தது. அசீமானந்தா வருவதற்கு முன் அந்த மாவட்டத்தில் ஒரு சில சங்கத் தொண்டர்கள் மட்டுமே இருந்தார்கள். அசீமானந்தா இந்துத்துவா நடவடிக்கைகளுக்கு புத்துயிர் ஊட்டி அதை ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட சக்தியாக மாற்றினார். “அவரது வார்த்தைகள் உங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவாவை தட்டி எழுப்பும் சக்தி படைத்தவை.” என்கிறார் பவார்.

“மதமாற்றங்களை நிறுத்துவது எளிதான வேலை. அதற்கு மதத்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். இந்துக்களை மத வெறியர்களாக மாற்ற வேண்டும். அதன்பிறகு, மற்றதையெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் அசீமானந்தா.

ஹிந்து ஜாக்ரன் மஞ்சை உருவாக்கியதை தனது சாதனையாக அசீமானந்தா சொல்கிறார். முழுக்க முழுக்க பழங்குடியினருக்கான அமைப்பாக தெரியும்படி  அது உருவாக்கப்பட்டது. வன்முறை தொடர்புடைய “சங்கத்தின் எல்லா வேலைகளையும் வனவாசி கல்யாண் ஆசிரமம் மூலமாக நாங்கள் செய்ய முடியாது. எனவே அதற்காக பழங்குடிகளை வைத்து ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உருவாக்க வேண்டியிருந்தது. இந்த ஜானுபாய்க்கு (ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் பெயரளவு தலைவர்) எதுவும் தெரியாது. என்ன செயல்திட்டத்தை மேற்கொள்வது, துண்டறிக்கைகளில் என்ன அச்சிடுவது இது போன்ற அனைத்து முடிவுகளையும் நாங்கள்தான் எடுக்க வேண்டியிருந்தது. அவரை அமைப்பின் பழங்குடி இன முகமாக வைத்திருந்தோம். பழங்குடி மக்கள் சங்கத்தின் பணிகளை செய்து வந்தார்கள்.”

தூண்டுதல்களினாலோ, மிரட்டல்களினாலோ அசீமானந்தாவின் “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுகள் மேலும் மேலும் பிரபலமாகி வந்தன. மதமாற்றுவதற்கான தகுதி படைத்தவர்களாக அவர்கள் கருதுபவர்களின் 50 முதல் 100 வரையிலானவர்களின் பட்டியல் தயாரானதும், அசீமானந்தாவும் உதவியாளர்களும் அவர்களை திரட்டி லாரிகளிலும் ஜீப்புகளிலும் சூரத்தில் உள்ள உனாய் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். கோயிலுக்கு அருகில் உள்ள வற்றாத வெந்நீர் ஊற்றில் மூழ்கிக் குளித்து, ஒரு திலக பூஜை  நடத்தி அந்த பழங்குடியினர் இந்துக்கள் என்று அறிவிக்கப்பட்டனர். அனுமானின் புகைப்படத்தையும், அனுமான் சாலீசாவையும் கைகளில் பிடித்தபடி அவர்கள் வண்டிகளில் திணிக்கப்படுவார்கள். திரும்பும் வழியில் ஒலிபெருக்கிகளில் பஜனைகள் முழங்கப்பட்டு மொத்த நிகழ்வும் ஒரு காட்சியாக நடத்தப்பட்டது. வாகாய் ஆசிரமம் வரை தொடரும் கொண்டாட்டங்களின் நிறைவில் அசீமானந்தா அனைவருக்கும் விருந்து அளித்து ஆளுக்கு ஒரு ஹனுமான் லாக்கெட்டை கொடுப்பார்.

சபரி கும்பமேளா
சபரி கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள்

அசீமானந்தாவின் அக்கறை பழங்குடி மக்கள் இயேசு கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா அல்லது ராமனை கும்பிடுகிறார்களா என்பதைத் தாண்டி போனதில்லை. 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் த வீக் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், “ஏழ்மையை ஒழிப்பதிலோ வளர்ச்சிப் பணிகளிலோ எங்களுக்கு ஆர்வம் இல்லை. பழங்குடி மக்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்துவதற்குத்தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார் அசீமானந்தா. இந்த அணுகுமுறையுடன் அசீமானந்தாவின் மக்களோடு கலந்து பழகும் திறமையும் சேர்ந்து அவரது இயக்கத்துக்கு ஒரு வலுவான ஈர்ப்பை தோற்றுவித்திருந்தது. “சுவாமிஜியை விட அதிக கஷ்டமான வாழ்க்கையை வாழும் யாரையும் நான் பார்த்ததில்லை. அவர் ஆழமான அர்ப்பணிப்புடன் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் போய் தங்குவார். அங்கு தங்கி, அவர்களுடன் சாப்பிட்டு, அவர்களுடன் கலந்து பழகி அந்த மக்களை தனது சொந்த மக்களாக மாற்றிக் கொள்வார். இப்போது நமக்காக போராடவும் ஒருவர் இருக்கிறார் என்று மக்களுக்கு நம்பிக்கை வந்து விடும்” என்கிறார் பப்லூ.

டாங்ஸ் உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என்று அசீமானந்தா விவரிக்கிறார்.  1990-களின் இறுதியில் அங்கு பணிபுரிந்த பல பத்திரிகையாளர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஜூன் 2013-ல் நான் அங்கு சென்ற போது காடு பழுப்பு நிறமாகவும் காய்ந்து போயும் காணப்பட்டது. அந்த பகுதியில் மலைச் சரிவுகளில் உருவாக்கப்பட்டிருந்த மைல் கணக்கிலான உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் என் கவனத்தை ஈர்த்தன. அவை அசீமானந்தாவின் மிக முக்கியமான அரசியல் புரவலர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டவை.

1998-ன் தொடக்கத்தில் அசீமானந்தா டாங்சுக்கு குடியேறிய சமயத்தில் பா.ஜ.கவின் கேசுபாய் பட்டேல் குஜராத் முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு பெரும்பாலான காலத்துக்கு அம்மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. 1998 மார்ச் மாதம் மத்தியில் வாஜ்பாயி பிரதமர் ஆனதும் இந்தியா குறித்த அவர்களது தொலைநோக்கு பார்வை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. ஆட்சி பொறுப்புக்காக அத்தகைய சித்தாந்தத்தில் சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

டாங்சில் நடந்த கிறிஸ்துமஸ் கலவரங்கள் அவர்கள் விரும்பிய மாற்றத்தின் ஒரு சிறு பகுதியாக தோன்றியது. சோனியா காந்தி ஆஹ்வாவுக்கு பயணம் செய்து, “மனதை உருக்கும்” வன்முறையை கண்டனம் செய்தது அசீமானந்தாவின் வெற்றியின் ஆரம்ப அறிகுறியாக இருந்தது. மற்ற அரசியல்வாதிகளும், பிரபலங்களும் அதில் இணைந்து கொண்டனர். இது தொடர்பான ஊடக செய்திகள் ஆர்.எஸ்.எஸ்சில் அசீமானந்தாவின் மதிப்பை உயர்த்தின. வெகு விரைவில் கோல்வால்கரின் பெயரில் வழங்கப்படும் வருடாந்திர ஸ்ரீ குருஜி விருது வழங்கி ஆர்.எஸ்.எஸ் அவரை சிறப்பித்தது.

அசீமானந்தாவின் கலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கூச்சல் குழப்பங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அதில் தலையிட வேண்டி வந்தது. “என்னுடைய மதமாற்ற நடவடிக்கைகள் தேசிய ஊடகங்களில் வெளியாகி, சோனியாகாந்தி எனக்கு எதிராக பேசிய பிறகு, ஊடகங்களில் பல விவாதங்கள் நடைபெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி என்னை கட்டுப்படுத்தி வைக்கும்படி கேசுபாய் பட்டேலிடம் சொல்லியிருக்கிறார். அவர் எங்கள் பணிகளை நிறுத்தி வைத்ததோடு, என் ஆட்களை கைது செய்யவும் ஆரம்பித்தார்” என்கிறார் அசீமானந்தா. ஆனால், அப்போதே மோடி முதல்வர் பதவியை நோக்கி தனது கத்திகளை தீட்டிக் கொண்டிருந்தார். அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மோடி அசீமானந்தாவிடம் “கேசுபாய் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் செய்து வரும் பணிக்கு ஈடு இணையே இல்லை ஸ்வாமிஜி. நீங்கள்தான் உண்மையான சேவை செய்து வருகிறீர்கள். நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார். (இது தொடர்பாக மோடியின் விளக்கத்தை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன).

2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோடி குஜராத் முதலமைச்சர் ஆனார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் குஜராத்தில் 1,200 குஜராத்திகளைக் கொன்ற மதக் கலவரங்கள் தொடங்கின.  டாங்சுக்கு வடக்கே பஞ்ச்மால் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களை தான் நடத்தியதாக அசீமானந்தா கூறுகிறார். “இந்தப் பகுதியில் முஸ்லீம்களை அழித்து ஒழிக்கும் வேலையை நான்தான் செய்தேன்” என்கிறார் அவர்.

அந்த ஆண்டு இறுதியில் டாங்சுக்கு வந்த மோடி அசீமானந்தாவின் செல்வாக்கை உறுதிப்படுத்தினார். 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமனின் 14 ஆண்டு வனவாசத்தின் போது உதவியதாக நம்பப்படும் பழங்குடி பெண்ணை வழிபடுவதற்காக சபரிதாம் என்ற புனித வளாகத்தை அசீமானந்தா கட்ட ஆரம்பித்தார். அந்த வளாகத்தில் கட்டப்படவிருந்த ஆசிரமத்திற்கும் ராமர் கோயிலுக்கும் நிதி திரட்டுவதற்காக புகழ் பெற்ற கதாகாலட்சேபகர் மொராரி பாபுவின் 8-நாட்கள் ராமாயண காலட்சேபத்துக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வு 10,000 பேரை கவர்ந்தது. முதலமைச்சர் பதவியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மோடி (கலவரங்களைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஜூலையில் அவரது அரசு ராஜினாமா செய்திருந்தது), அந்த கதாகாலட்சேபத்தை தொடங்கி வைப்பதற்காக மேடையில் தோன்றினார்.

அந்த தேர்தலில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து மத மாற்றங்களுக்கு மாவட்ட நீதிபதியின் ஒப்புதல் கோரும் குஜராத் மத சுதந்திர மசோதா சேர்க்கப்பட்டிருந்தது. மோடியின் நம்பகமான கூட்டாளி அமித் ஷா, மாநில சட்டசபையில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் 2003-ல் சட்டமாக்கப்பட்டது. விரைவில், மொராரி, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் உதவியோடு டாங்சில் ஒரு பெரிய “தாய் மதம் திரும்பும்” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார், அசீமானந்தா.

மொராரி தனது ராமகதா காலட்சேபத்தின் இறுதியில் சபரி தாமில் ஒரு புதிய கும்பமேளா நடத்த ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்தார். தயாரிப்புகளுக்காக நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட அந்தத் திருவிழா மதமாற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவும், இந்துத்துவாவின் கொண்டாட்டமாகவும் விளங்கியது. ஆர்.எஸ்.எஸ்சுடன் சேர்ந்து இந்த மேளாவை ஏற்பாடு செய்யும் பொறுப்பை அசீமானந்தா ஏற்றுக் கொண்டார்.

2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரம் பல பத்தாயிரக் கணக்கான இந்தியர்கள் வன கிராமமான சுபீரில் குவிந்தார்கள். சபரி தாமில் இருந்த அசீமானந்தாவின் ஆசிரமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுபீரில் சபரி கும்பமேளா தொடங்கி வைக்கப்பட்டது. மற்ற நான்கு பாரம்பரிய கும்பமேளாக்களைப் போல சபரி கும்ப மேளாவும் பாவங்களை கழுவும் சடங்குகளை மையமாகக் கொண்டிருந்தது. அந்த ஊர் ஆற்றில் சம்பிரதாய கொண்டாட்டங்களுடன் முழுக்கு போடுவதன் மூலம் பழங்குடி மக்கள் இந்து மதத்தின் பிடிக்குள் தாம் திரும்பி வருவதை அறிவித்தார்கள். மத்திய இந்தியாவின் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டார்கள். கூட்டத்திற்கு போதுமான அளவு ஆற்றுக்குள் தண்ணீரை திருப்பி விடுவதற்கு குஜராத் அரசு 53 லட்சம் ரூபாய் செலவழித்தது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு ஒன்றின் மூலம் தெரிய வந்தது.

சபரி கும்பமேளா இந்துத்துவ அமைப்புகள் தமது ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. பிரபல மதத் தலைவர்கள் (மோராரி பாபு, ஆசாராம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதம்பரா போன்றவர்கள்), ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்க பரிவார அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் (இந்திரேஷ் குமார், விஸ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத தலைவர்கள் பிரவீன் தொகாடியா,  அசோக் சிங்கால் உள்ளிட்டவர்கள்), மூத்த பா.ஜ.க அரசியல்வாதிகள் (மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்கள்) மேடையை அலங்கரித்தனர். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சபரி கும்ப மேளாவை, “சாதுக்கள், சங்கம், மற்றும் சர்க்கார் (அரசு) இவற்றின் கூட்டிணைவு” என்று இரு ஆய்வாளர்கள் வர்ணித்தது மிகவும் பொருத்தமானது.

திருவிழாவின் தொடக்க விழாவில் மறுபடியும் முதலமைச்சராக ஆகி விட்டிருந்த மோடி, பழங்குடி மக்களை ராமனிடமிருந்து பிரிக்க நடக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் என்று பேசினார். மேடையின் பின்புலமாக, பத்து தலை இராவணனின் மீது அம்பு விடும் ராமனின் பிரம்மாண்டமான சுவரோவியம் தீட்டப்பட்டிருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் கே எஸ் சுதர்சன், “நாம் அடிப்படைவாத முஸ்லீம்களாலும், கிறித்துவர்களாலும் நடத்தப்படும் ஒரு கபட யுத்தத்தை எதிர் கொள்கிறோம்” என்றும் “நம் வசம் இருக்கும் அனைத்து சக்திகளையும் திரட்டி இதை எதிர் கொள்ள வேண்டும்” என்று அங்கு கூடியிருந்த சாதுக்களின் கும்பலுக்கு அறிவுறுத்தினார். 2009-ல் சுதர்சன் இறந்த பிறகு தலைமை பதவிக்கு வந்த மோகன் பாகவத், “நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் உடைக்கப்படும்” என்று கூறினார்.

சுமார் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பேர் அந்த கும்பமேளாவில் கலந்து கொண்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மதமாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. இன்றைக்கு, சபரி தாம் கோயிலுக்கு ஒரு சில பக்தர்களே போகிறார்கள். கோயிலில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கக் கூட வக்கில்லாமல் போயிருக்கிறது. அசீமானந்தா வசித்து வந்த ஆசிரமம் இடிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலின் தலைமை பூசாரிக்கு உதவி புரியும் பிரதீப் பட்டேல், அசீமானந்தாவுடன் தொடர்புடையதால் கோயிலின் பெயர் கெட்டு விட்டது என்கிறார். பணக்கார குஜராத்திகளில் பலர் இந்த கோயிலுக்கு வருவதையும் நன்கொடைகள் கொடுப்பதையும் நிறுத்தி விட்டிருக்கின்றனர். கோயிலுக்கு வரும் ஒரு சில மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு 10 ரூபாய் நோட்டைக் கூட காணிக்கை பெட்டியில் போடுவதில்லை. டாங்ஸ் வந்து சேருவதற்கே அவர்களது பணம் முழுவதும் செலவாகி விடுகிறது. அசீமானந்தா “அதை சரியாக கட்டமைக்காமல் போனது என்னுடைய தவறு” என்று சொல்கிறார்.

இருந்த போதிலும் அந்த வட்டாரத்தில் பல சுறுசுறுப்பான செயல்பாடுகள் நிறைவேறி வருகின்றன. அந்த பிராந்தியத்திற்கு மிக முக்கியமான தேவை கோயில்கள்தான் என்று குஜராத் அரசு கருதுகிறது. டாங்ஸ் தனது வாழ்வாதார தேவைகளை மத சுற்றுலா மூலம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பது திட்டம். 2012-ம் ஆண்டு மாநில அரசு ராமர் பாதை திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. ராமாயண கதாபாத்திரங்கள் மேற்கொண்ட பயணத்தை கொண்டாடுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சபரி தாம் முக்கியமான இடம் வகிக்கிறது.

ராமன் பாதை திட்டத்தின் கீழ், சபரி தாமுக்கு ரூ 13 கோடி மானியம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிவன் கோயில், 4 ஊற்றுக்கள், ஒரு சேவைச் சாலையும் சுற்றுச்  சுவரும், பெரியதொரு வாகனம் நிறுத்தும் இடம், உட்காரும் வளாகம், மற்றும் சுகாதார வசதிகள், தரை பாவுதல், மின் இணைப்பு, நீர் வினியோகம் கொடுத்தல் போன்ற செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, டாங்ஸ் பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுக்கும் பின் தங்கிய பகுதிகள் முன்னேற்றத்துக்கான ரூ 11.6 கோடி மானியத்துக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு சமர்ப்பிக்கவில்லை. அந்த நிதி கடந்த 6 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் தூங்குகிறது.

உள்ளூர் கிறித்துவ அமைப்புகளும் மாநில அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. “1998 முதல் நாங்கள் காந்திநகரில் தொடப்படாதவர்களாக்கபட்டிருக்கிறோம்” என்கிறார் தீப் தர்ஷன் பள்ளியின் சிஸ்டர் லில்லி. “ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் புதிய நிதி தேவைகளுக்கான கோப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையும் தருவதில்லை.”

நவ்சாரியில் அசீமானந்தா தனது மத மாற்ற  நிகழ்வுகளை நடத்தி வந்த உனாய் கோயிலும் ராமன் பாதை திட்டத்தின் கீழ் ரூ 3.63 கோடி மானியம் பெற்றது. ஜூன் 2013-ல் முக்கிய கட்டிடத்தின் வேலைகள் முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய கட்டிடம் மிகப் பெரியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் உள்ளது. அசீமானந்தா பழங்குடி மக்களை மதமாற்றத்துக்காக அழைத்து வந்த எளிய பழைய கோயில் சுவர்களுக்குப் பின்னே மறைந்திருக்கிறது. கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது, ஆனால் வெந்நீர் ஊற்றுகள் முதல் முறையாக வற்றிப் போய் விட்டன என்று கோயில் பூசாரி சொல்கிறார்.

–    தொடரும்

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான்   (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு

படங்கள் நன்றி : கேரவான்

பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில் இந்தியா

33

றக்குறைய திவாலாகி விட்டிருந்த இந்த நாடு புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகத் “தேசபக்த வேடதாரிகள்” பிரமையூட்டுகிறார்கள். தம்மைத் தாமே அறிவாளிகளாகக் கருதும் நடுத்தர வர்க்க அப்பாவிகளும் அதை நம்பி அந்தக் கூட்டு ஒப்பாரியில் கலந்து கொள்கிறார்கள்.

அசீம் பிரேம்ஜி
அசீம் பிரேம்ஜி

இந்தியா 2020-இல் வல்லரசாகி விடும் என்று அரசவைக் கோமாளி அப்துல் கலாம், தான் பதவியில் இருந்தபோது ஒரு ஆரூடம் சொன்னார். ஆமாம், ஆமாம் வல்லரசாகிவிடும் என்று எல்லாரும் கூட்டுப் பாடல் இசைத்தார்கள். அதுவே தேசியப் பாடலாகியது. “வல்லரசு” என்ற சொல்லுக்கு வேறுவேறு பொருள் விளக்கம் சொன்னார்கள். அமெரிக்கா பொருளாதார வல்லரசு என்றால், இந்தியா ஆன்மீக வல்லரசு! இப்படிச் சொல்லியே நாட்டை ஏய்த்து வந்தவர்கள் இல்லையா? நாமும் அணுகுண்டு வெடிச்சுட்டோம்ல, இனி இந்தியா ஒரு இராணுவ வல்லரசுதான் என்றார்கள். அப்புறம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் இப்போதைக்கு உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு; விரைவிலேயே முதலிடத்தைப் பிடித்து விடுவோம் என்று கூவினார்கள்.

இப்படித் “தேசபக்த வேடதாரிகள்” பெருமை பாராட்டிக் கொண்டிருந்தபோதே “தேசியப் பொருளாதாரம்” தலைகுப்புற விழத் தொடங்கி விட்டது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. உற்பத்திப் பொருட்களின் தொழில் வளர்ச்சி விகிதமும் ஏற்றுமதியும் சரிந்து கொண்டே போகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் கும்பலையே “கதிகலங்கடித்து” வருகிறது. இந்த உண்மையை, ஆட்சியை விட்டு நிச்சயம் துரத்தப்படுவோம் என்ற நிலையில் ஒப்புக்கொண்டு கையைத் தூக்கி விட்டார்கள்.

லட்சுமி மிட்டல்
லட்சுமி மிட்டல்

ஆனாலும், “இந்திய தேசத்தின் பெருமை”யைத் தூக்கி நிறுத்தக் கூடிய சில விவரங்கள் தேசபக்தர்களின் கைவசம் உள்ளன. அவை : பிரேசில், ருசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ் BRICS நாடுகள்)ஆகிய உலகின் “வேகமாக வளரும்” பொருளாதாரங்களின் சங்கத்திலேயே சூப்பர் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார ரீதியில் இருள் சூழ்ந்துள்ள போதிலும், இந்தியா தனது அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) எண்ணிக்கையில் பிரிக்ஸ் நாடுகளிலேயே கடந்த ஓராண்டில் சாதனை படைக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது. அதாவது, மொத்தம் 7,850 சூப்பர் பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். (அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர் என்பவர் 3 கோடி டாலருக்கு மேல் சொத்துள்ளவர்கள் என கணக்கில் கொள்ளப்பட்டவர்கள்) இவர்களின் மொத்த நிகர செல்வ மதிப்பு 93,500 கோடி டாலர்கள்.

மேலும், அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) வரிசையில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக, 1,250 பெண்களைக்கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இவர்களின் மொத்தச் செல்வ மதிப்பு 9,500 கோடி டாலராகும்.

நூறு கோடிடாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் எண்ணிக்கையில் 103 பேரைப் பெற்று, ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ், சௌதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் ஆகியவற்றை விட அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நியூயார்க், ஹாங்காங், மாஸ்கோ, இலண்டன் ஆகிய மாநகரங்களை அடுத்து ஐந்தாவது இடத்தில் மும்பை உள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் மேலிருந்து ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல், ஒன்பதாவது இடத்தில் முகேஷ் அம்பானி, 36-வது இடத்தில் அசிம் பிரேம்ஜி, 42-வது இடத்தில் ரூயா சகோதரர்கள், 56-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால், 81-வது இடத்தில் அதானி, 97-வது இடத்தில் ஆதித்தியா பிர்லா ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவின் தேர்தல்களில் அடுத்தடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவரங்களை வைத்து “இந்திய தேச பக்தர்களின்” காதில் பூச்சுற்றலாம். மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக்சிங் கும்பல் இந்த வகை வளர்ச்சியைத்தான் தமது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டு கால சாதனையெனப் பீற்றிக்கொள்கிறது.

மோடிக்கு வாக்களிக்கக் கோரும் “குஜராத் மாடல் வளர்ச்சி” எத்தகையதாக இருக்கும் என்பதை மேற்கண்ட விவரங்களை பின்வரும் வேறொரு கோணத்தில் பகுத்துப் பார்த்தாலே விளங்கிவிடும்.

நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள 103 இந்தியர்களில் மிகமிகப் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தானைச் சேர்ந்த பனியா சாதியைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே முதலிரண்டு பெரும் சூப்பர் பணக்காரர்களான லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி ஆகியோர் பனியா. மூன்றாம் இடத்திலுள்ள அசீம் பிரேம்ஜி முசுலீமாக மாறிய பனியா. நான்காவதிலிருந்து ஒன்பதாவது வரையுள்ள பெரும் சூப்பர் பணக்காரர்கள் பனியாக்கள். பத்தாவது இடத்தில் உள்ளவர் பார்சி.

சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்

இந்தியாவின் உயர்ந்த 55 சூப்பர் பணக்காரர்களில் 29 பேர், குஜராத் (13) மற்றும் இராஜஸ்தானை(16)ச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதமானவர்களேயான இந்தப் பனியாக்கள்தாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாள்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஆறு சதவீதமான இந்த பனியா, பார்ப்பன, பார்சி முதலிய சாதி-சமூகப் பிரிவினர்கள்தாம் நாட்டின் இன்றைய பெரும் தொழிற்கழகங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார், அரசு- பொதுத்துறை மட்டுமல்ல; தேசங்கடந்த பல தொழில்,சேவை, வங்கி நிறுவனங்கள் கூட பார்ப்பன, பனியா கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. மும்பய் பங்குச் சந்தையான சென்செக்ஸின் முதல் முப்பது இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்கள் பார்ப்பன, பனியா கும்பலால் கட்டுப்படுத்தப் படுபவை.

ஏ.சி.சி.- (சுமித்பானர்ஜி), பி.எச்.இ.எல். (ரவிகுமார் கிருஷ்ணசாமி), ஐ.சி.ஐ.சி.ஐ. (கே.வி. காமத்), இந்துஸ்தான் யுனிலீவர் (நிதின் பரஞ்பே), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (யோகேஸ் கவுர்), எல்.அண்டு டி. (ஏ.எம். நாயக்), ஓ.என்.ஜி.சி. (ஆர்.எஸ்.சர்மா), எஸ்.பி.ஐ. (அருந்ததி பட்டாச்சார்யா), பஞ்சாப் நேஷனல் வங்கி (கே.சி. சக்ரவர்த்தி), பரோடா வங்கி (எம்.டி.மல்லையா) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.

பாரதி ஏர்டெல் (சுனில் மிட்டல்), கிராஸிம் மற்றும் ஹின்டால்கோ (குமாரமங்கலம் பிர்லா), எச்.டி.எப்.சி. (தீபக் பரேக்), ரிலையன்ஸ் (முகேஷ் மற்றும் அனில் அம்பானி), ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் (அனில் அகர்வால்), சன் பார்மா (திலீப் சாங்வி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

அதானி
அதானி

இன்ஃபோசிஸ் (நாராயண மூர்த்தி), டி.சி.எஸ். (சுப்ரமணியன் ராமதுரை) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.

விப்ரோவை லூகானா என்ற பனியா சாதியிலிருந்து ஷியா பரிவு இஸ்லாமியராக மதம் மாறிய அசிம் பிரேம்ஜி நிர்வகிக்கிறார்.

இந்தியாவின் பெரிய வானூர்தி நிறுவனங்களில்…

கிங்பிஷர் (விஜ மல்லையா) ஒரு பார்ப்பனருக்கும், ஜெட் ஏர்வேஸ் (நரேஷ் கோயல்) ஒரு பனியாவுக்கும் சொந்தமானது .

இந்திய செல்பேசி சேவை நிறுவனங்களில்…

ரிலையன்ஸ் (அம்பானி), ஏர்டெல் (மிட்டல்), வோடாபோன் (எஸ்ஸார் -ரூயா), ஐடியா (பிர்லா), ஸ்பைஸ் (மோடி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

பி.எஸ்.என்.எல்.-ஐ (குல்தீப் கோயல்) ஒரு பனியாவும் டாடாவின் டி.டி.எம்.எல். -ஐ (கே.ஏ.சவுக்கர்) ஒரு பார்ப்பனரும் நடத்துகிறார்கள்.

பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட்டையும் பார்ப்பன-பனியா கும்பல் கட்டுப்படுத்துகிறது.

சசி ரூயா
சசி ரூயா

தி இந்து (கஸ்தூரி ஐயங்கார் குடும்பம்), இந்துஸ்தான் டைம்ஸ் (பிர்லா), இந்தியன் எக்ஸ்பிரஸ் (கோயங்கா) ஆகியன பார்ப்பன-பனியாக்களுக்குச் சொந்தமானவை.

இந்தி நாளிதழ்களில்…

தைனிக் ஜாக்ரான் (குப்தா), தைனிக் பாஸ்கர் பனியாக்களுக்கும், திவ்ய பாஸ்கர், குஜராத் சமாச்சார் (ஷா) ஆகி யன அகர்வால்களுக்கும், (சமணருக்கு)சொந்தமானவை.

லோக்மத் (தார்தா) என்ற மிகப் பெரிய மராத்திய நாளிதழும், ராஜஸ்தான் பத்திரிக்கா (கோத்தாரி), நவபாரத் டைம்ஸ் பத்திரிகையும் சமணர்களுக்குச் சொந்தமானவை.

இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில்…

எஸ்ஸார் (ரூயா), ஆர்செலார் மிட்டல் (லட்சுமி மிட்டல்),இஸ்பட் (மிட்டல்), ஜின்டால், சன் ஸ்டீல் (சிங்கால்) ஆகியன பனியாக்களுக்குச் சொந்தமானவை .

விசா ஸ்டீல் (அகர்வால்), லாடு ஸ்டீல் (குப்தா) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

அரசுத் துறை நிறுவனமான செயிலை (எஸ்.கே.ரூங்டா) நடத்துபவர் ஒரு பனியா.

பணக்காரர்கள்இந்திய சிமெண்ட் நிறுவனங்களில்…

ஜே.கே. சிமெண்ட்ஸ் (சிங்கானியா), அம்புஜா சிமெண்ட்ஸ் (நியோடியா மற்றும் சேக்சாரியா), டால்மியா சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட்ஸ் (பிர்லா) ஆகிய நிறுவனங்கள் பனியாக்களுக்குச் சொந்தமானவை.

மோட்டார் தொழிலில்…

இந்துஸ்தான் மோட்டார்ஸ் (பிர்லா), பஜாஜ் ஆட்டோ (பஜாஜ்) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

இந்த நாட்டில் சமூக நீதி, மண்டல் கமிசன் கொள்கைகள் – இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து பலஆண்டுகளாகியும் பனியா, பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த வெகு சிலரே மேற்கண்ட நிலையை எட்ட முடிகிறது. முதன்மையாகத் தமது சாதி-சமூகத் தொடர்புகளை வைத்து அரசு மற்றும் அரசியலில் இலஞ்ச-ஊழல்களையும் அதிகார முறைகேடுளையும் கிரிமினல் குற்றங்களையும் செய்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரும் இதற்காகத் தண்டிக்கப்படவில்லை. முதலில், அரசுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றினார்கள். தொழில்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் முதலீடு உதவி, வரிவிலக்கு, அரசு ஒப்பந்தங்கள் என்று அரசு நிதியையும், இலவச நீர், நிலம், மின்சாரம் எனவும் பல இலட்சம் கோடிகளையும் பறித்தார்கள். இப்போது ஏராளமான இயற்கை வளங்களைச் சூறையாடுகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையிலும், கோடிகோடியான மக்கள் ஓட்டாண்டிகளாகும் நிலையிலும் குறிப்பிட்ட சிறு சாதியினர் உலகின் அதி சூப்பர் பணக்காரர்களாகும் இரகசியம் இதுதான்.

– கதிர்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

போராடுற கட்சி சரி வராது சார் – திமுக மாநாட்டில் வினவு

10

திருச்சி திமுக மாநாட்டிற்கு வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று வந்த அனுபவப் பதிவு

dmk-conference-04
இந்திரன், சந்திரனிலிருந்து “எந்திரனுக்கு’ போனதுதான் திமுகவின் முதுகு சொறியும் ஜால்ரா பரிணாமத்தின் வளர்ச்சி!

“நல்லதோ கெட்டதோ இத்தனை வருசமா இந்தக் கட்சிலயே இருந்துட்டோம்… இனியும் இருந்திட வேண்டியது தான்” சிறீரங்கத்தைச் சேர்ந்த கல்யாண்குமாரின் வார்த்தைகளில் ஒரு “ஜென்” துறவியின் பற்றின்மை தெரிந்தது.

“காலைலேர்ந்து பகுத்தறிவு, திராவிடம், மாநில சுயாட்சி பற்றியெல்லாம் பேசியிருக்காங்களே… இந்த மாதிரி இன்னும் அ.தி.மு.கவில் கூட பேசறதில்லை தானே?”

“அட நீங்க வேற சார், எல்லா தொண்டனும் பகுத்தறிவோட சிந்திச்சா மொதல்ல இந்தக் கட்சியே இருக்காதுங்க”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இப்ப பாருங்க, நான் ____ நிறுவனத்திலெ வேலை செய்யறேன். ரெண்டு பொண்ணுங்க. ஒருத்தி பி.இ படிக்கிறா. டிப்ளமோ முடிச்சி லேட்ரல்ல சேர்த்தேன். நல்ல மார்க் இருந்தாலும், செமஸ்டர் பீசு, பஸ் சார்ஜ், புத்தகம், துணி மணி, பாக்கெட் மணின்னு எப்படியும் ஆறு மாசத்துக்கு எண்பதாயிரத்துக்கு மேல செலவு போகுது. செலவு பொறுக்க முடியாம ரெண்டாவது மகளை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்துட்டேன். கட்சிக்காரங்க கிட்ட இல்லாத காலேஜா பள்ளிக்கூடமா? இத்தினி வருசமா கட்சில இருந்திருக்கானேன்னு பாத்து ஒரு சீட்டு தருவானுகளா?”

”அப்புறம் ஏன் சார் கட்சில இருக்கீங்க?”

dmk-conference-01
தேவர் சாதி வெறி வாழ்த்தாமல் திமுகவின் இருப்பு சாத்தியமில்லை

”அதெல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காகத் தான் சார். நான் என்ன எந்த நேரமும் அரசியலா செய்யிறேன்? எப்பனா மாநாடு எலக்சன்னா வந்து தலையக் காட்டுவோம், பூத் ஏஜெண்டா ஒக்காருவோம். ஒரு திருப்தி. அவ்வளவு தான்”

”நீங்க வேலை பார்க்கிற நிறுவனத்திலே பு.ஜ.தொ.மு சங்கத்தோட கிளை இருக்கே.. நீங்க அதில இருக்கீங்களா?”

“ஆமாமா இருக்காங்க. ஆனா, நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது சார். சும்மா போராட்டாம், கேட் கூட்டம்.. அது ஆவாது சார். நமக்கு மேனேஜ்மெண்ட் கிட்டே பேசி ரூவா வாங்கித் தர்ற சங்கம் தான் தேவை. சென்னைல ஒரு வக்கீல் இருக்காரு, ப்ராமின் தான்… ஆனா, நல்லா செய்யறாரு. அவரு சங்கத்துல தான் இருக்கோம்.. ஆமா பு.ஜ.தொ.மு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இல்ல இணையத்துல படிச்சிருக்கோம் அதான் கேட்டோம்”

”சரி நேரமாச்சுங்க வர்றேன்” அதற்கு மேல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் கத்தரித்துக் கொண்டு வேகமாக நகர்ந்தார்.

dmk-conference-09
காப்டன் எலியும், காங்கிரசு நரியும் பந்தாடுவதில் பயந்து நடுங்கும் திமுக-வை சிங்கத்தோடு ஒப்பிடுவது அசிங்கம்.

 

நாங்கள் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து தி.மு.கவின் பத்தாவது மாநில மாநாடு நடக்கும் தீரன் நகருக்கு நடந்தே செல்வதென முடிவு செய்தோம். திருச்சி நகரம் பிளெக்ஸ் பேனர்களால் போர்த்தப்பட்டிருந்தது. எல்லா பேனர்களிலும் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அதை ஏற்பாடு செய்திருந்தவர்களின் மூஞ்சிகளும், அவர்களை இந்திரர்கள், சந்திரர்கள் என்று போற்றும் வாசகங்களும் மட்டுமே நிறைந்திருந்தன. திருச்சி மட்டுமின்றி சென்னையில் இருந்து வரும் வழியெங்கும் பல்வேறு இடங்களில் இதே காட்சிதான். எப்படியும் சில கோடிகளையாவது செலவிட்டிருக்க வேண்டும்.

அந்த அதிகாலை நேரத்தில் திறந்திருந்த தேனீர் விடுதியில். ”நீங்க எல்லாம் ப்ரஸ்லேர்ந்து வர்றீங்களா?” நடுத்தர வயதைக் கடந்த அந்த நபர் வெள்ளை வேட்டியும் கருப்புச் சட்டையும் அணிந்திருந்தார். “என் பேரு பதிலடி பன்னீர் செல்வம். தஞ்சாவூர்லேர்ந்து மாநாட்டுக்கு வந்திருக்கேன். மாநாடு செம கலக்கு கலக்கிட்டு இருக்குன்னு எழுதிக்கங்க சார்”

“நீங்க எதாவது பொறுப்பில் இருக்கீங்களா?”

“பொறுப்பெல்லாம் இல்லை… ஆனா பேச்சாளரு. அந்தக்காலத்திலேர்ந்து கட்சில இருக்கேன். எங்க குடும்பமே தி.மு.க குடும்பம் தான். பாத்தீங்களா கருப்பு சட்டை… நாங்கெல்லாம் அந்தக் கால தி.மு.க சார்” அவரது முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

பிழைப்புவாதம்
ஹெச் ராஜா எனும் எச்சக்கலையை கண்டிக்க துப்பில்லாத உபிக்கள் பெரியாருக்கு பிளெக்ஸ் பூஜை செய்வதற்கு ஒன்றும் குறைவில்லை.

 

”சரிங்க, இப்ப பி.ஜே.பி ஹெச்.ராஜா பெரியாரை செருப்பால் அடிப்பேன்னு சொல்லி இருக்கானே.. தி.மு.க சார்பா அதுக்கு ஏதும் போராட்டம் நடத்தினீங்களா?”

”ஓ… அப்படியா பேசினான் அந்த நாயி… பேசிருப்பான். ஆனா, அவங்க எடத்துல வச்சி பேசியிருப்பான், இல்ல? வெளியிலன்னா நாங்க விட்றுவோமா?”

”வெளியில தான் இப்ப பாரதிய ஜனதா வளர்ந்திருக்குன்னு சொல்றாங்களா? நீங்களே அந்தக் கட்சியோட தானே கூட்டணில இருந்தீங்க? இப்ப கூட பாரதிய ஜனதா கூட்டணி வரும்னு பேசிக்கறாங்களே?”

”ஆமா.. கூட்டணில தான் இருந்தோம்… ஆனா கொள்கைய விட்டுக் குடுக்கலீங்களே” விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

”இப்ப கூட தில்லை நடராஜர் கோயிலை பாப்பானுங்க கையில தூக்கிக் கொடுத்துட்டாங்க. தி.மு.க சார்பா ஏதும் போராட்டம் நடத்தலயே.. அப்புறம் கொள்கைய சும்மா வச்சிகிட்டு என்னாங்க செய்யறது?”

பதிலடி பன்னீர்செல்வம்
“நாங்க ஆட்சியிலேயே இல்லையே என்ன செய்ய முடியும்?” என்று சமாளிக்கும் பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்து என்ன கிழித்தார்கள் என்பதற்கு என்ன பதிலளிப்பார்.

“கரெக்டு தான் சார்… ஆனா எலக்சன் முடியிற வரைக்கும் எதுவும் நடக்காது. நாங்க ஆட்சில இல்லையே. என்னா செய்ய முடியும் சொல்லுங்க? ஆட்சில இருந்தா எங்க தலைவரு சும்மா இருந்திருப்பாரா..”

”ஆட்சில இருந்தா மட்டும் தான் கொள்கை வேலை செய்யுமாண்ணா?”

“அது, அப்படி இல்லீங்க… சரி பின்னாடி பேசுவோம். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு வரட்டுங்களா?” பதிலடி பன்னீர்செல்வம் பறக்கும் பன்னீராக மாறி இடத்தை காலி செய்தார்.

பன்னீர்செல்வம் போன்ற “தீவிர” தி.மு.க தொண்டர்கள் தங்கள் கட்சியின் அரசியல் ரீதியிலான ஓட்டாண்டித்தனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். கேள்விகளைத் தவிர்த்து விட்டு சங்கடமான புன்னகையோடும் குற்றவுணர்ச்சி தொனிக்கும் பாவனையோடும் கடந்து செல்கிறார்கள். என்றாலும், பன்னீர்செல்வங்களின் எண்ணிக்கை தி.மு.கவில் மிகச் சொற்பமானதாகவே இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் ஆகப் பெரும்பாலானோர் நாற்பதுகளைக் கடந்தவர்கள். முப்பது வயதுக்குக் குறைவானவர்கள் மிகச் சொற்பமானவர்களையே காண முடிந்தது. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலரிடம் பேசியதில் அவர்கள் சிந்தனை அளவிலேயே துடிப்பற்று உறைந்து போன நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. பத்மநாபனிடம் பேசினால் உங்களுக்கே புரியும்.

பத்மநாபன்
பத்மநாபன் (இடது) – ” கொள்கை ஊருக்குத்தான் – வீட்டில் கிடையாது”.

சென்னையைச் சேர்ந்த பத்மநாபன் அறுபது வயதைக் கடந்தவர். என்.எல்.சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். படிக்கும் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களால் கவரப்பட்டு தி.மு.கவில் இணைந்தவர். இந்தி எதிர்ப்புப் போர் நடந்த அன்று அவரது பள்ளிக்கு விடுமுறை விடவில்லை என்பதால் நிர்வாகத்திற்கு எதிராக சில மாணவர்களைத் திரட்டிச் சென்று சாலையில் சென்ற வாகனம் ஒன்றின் மேல் கல்லெறிந்த ”வீர வரலாற்றுக்கு” சொந்தக்காரர். 15-ம் தேதியே மாநாட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல் சாலையில் நடைப்பயிற்சியில் இருந்தவரிடம் பேசிப் பார்த்தோம்.

”அதாவது சார், நாட்ல மொத்தம் இருக்கிற மக்கள் தொகையில ரெண்டு பர்செண்ட் இருக்கிறவன் மிச்சமிருக்கிற தொண்ணூத்தி எட்டு பர்செண்ட் பேரை அடக்கி வச்சிருக்கான். நாம மொழிய விட்டுக் கொடுத்துட்டோம். அந்தந்த ஸ்டேட் காரன் அவங்கவங்க மொழில பேசிக்கறான். தமிழன் மட்டும் இங்கிலீஷ்ல பேசிக்கிறான். எல்லா பிரச்சினைக்கும் அதுதான் அடிப்படையான காரணம். நம்ம மக்களும் விழிப்புணர்வோட இல்லை”

தி.மு.க மாநாடு
திகவின் பெரியார் நகரும் ஊர்தி – முதலில் வீரமணி கும்பலிடமிருந்து பெரியாரை விடுதலை செய்ய வேண்டும்.

 

”அது சரிதாங்க, ஆனா மொழியை காப்பாத்த தி.மு.க கடந்த ஒரு முப்பது வருசத்திலே என்ன செய்திருக்குன்னு நினைக்கிறீங்க? தி.மு.க நிர்வாகிகளோட பிள்ளைங்களே இப்ப ஆங்கில மொழி வழிக் கல்வியும் இந்தியும் தானே படிச்சிட்டு இருக்காங்க?”

”நோ, நோ… நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. இந்தி படிக்கக் கூடாதுன்னு நாங்க சொல்லிட்டதா நெறைய பேரு நினைச்சுகிட்டு இருக்கானுங்க, இந்திய திணிக்கக் கூடாதுன்னுதான் சொல்றோம். மக்கள் விருப்பப்பட்டு படிச்சாங்கன்னா என்ன பிரச்சனை?”

“அது எப்படிங்க, ஆங்கிலமும் இந்தியும் தனியார் பள்ளிக்கூடங்கள்லே இருக்கு. அப்ப விருப்பம் இருந்தாலும் வசதி இல்லாதவங்க அவ்வளவு காசு கட்டி படிக்க முடியாம போயிடுமே?”

”வசதி இருக்கிறவன் படிச்சிட்டு போகட்டுமே? இப்ப எங்க வீட்லயே பார்த்தீங்கன்னா, என் பசங்க அப்பா அம்மான்னு சொல்றாங்க. ஆனா, பேரப் பசங்க மம்மி டாடின்னு சொல்லுதுங்க. நாம சொல்லிக் கொடுத்தாலும் ஸ்கூலுக்குப் போனா மற்ற குழந்தைங்கல்லாம் மம்மி, டாடின்னு சொல்லுதுன்னு மாறிடுறாங்க. என்ன செய்ய முடியும் சொல்லுங்க. அதெல்லாம் அவங்க தனிப்பட்ட சுதந்திரம்னு விட்ற வேண்டியது தான்”

”அப்படின்னா கொள்கை ஊருக்குத் தானா? வீட்டுக்குள்ளே இல்லையா?”

”அப்படியும் சொல்ல முடியாது சார். இப்ப பாருங்க, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனா என்னோட சம்சாரத்துக்கு இருக்கு. அவங்க கோயிலுக்கு போறாங்க, வீட்ல பூஜை அறை வச்சிருக்காங்க. பூஜை செய்யறாங்க. மக்களுக்கே விழிப்புணர்ச்சி இல்லேன்னா நம்ம வீட்ல மட்டும் நேர்மையா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க? நாம மட்டும் பைத்தியக்காரன் மாதிரி தனியா இருந்துக்கிட வேண்டியது தான்”.

வாகன ஏற்பாடு
அணிவகுக்கும் வாகனங்கள், தேடிப்பார்த்தும் கிடைக்காத கொள்கைகள் !

 

ஒரு ரோலர் கோஸ்டர் போல சுற்றிச் சுழன்று தனது சொந்த வாழ்க்கையின் சந்தர்ப்பவாதத்திற்கு முட்டுக் கொடுத்தார். வீட்டிலோ, வெளியிலோ கொள்கைப்படி வாழ வேண்டிய தேவையோ, இலட்சியமோ அவருக்கு மட்டுமல்ல,திமுகவின் தலைமைக்கே இருக்கவில்லை. அதே நேரம் இந்த சந்தர்ப்பவாதம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் தவறுவதில்லை.

”கருணாநிதி ஏதோ செஞ்சாரு.. ஒன்னும் நடக்கலை. பொறவு அவரே அவர் பழைய காலத்துல சொன்னதுக்கு மாறா நடந்துக்கிட்டு இருக்காரு. அதுக்கு அவரு என்னா செய்ய முடியும்? ஊரே ஒரு பக்கமா போகும் போது நாங்க மட்டும் எதிர்பக்கமாவா போக முடியும்?”

தி.மு.க தலைமை கொள்கையளவிலேயே ஊழல்பட்டு ஓட்டாண்டிகளாக நிற்பது குறித்து நாங்கள் பேசிய தி.மு.க தொண்டர்கள் பலரின் கருத்தோட்டம் ஏறக்குறைய இதே சாரத்தை ஒட்டித் தான் இருந்தது.

மாநாட்டுத் திடல் நோக்கிச் சென்றோம். முகப்பிலே ஏராளமான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வண்டி பிடித்து தொண்டர்கள் வந்த வண்ணமிருந்தனர். நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்துகளில் சிலவற்றை அணுகி விசாரித்தோம். சொந்த முறையில் செலவு செய்து வந்திருப்பதாக சொன்னார்கள்.

“அதெல்லாம் அ.தி.மு.க தான் சார். செலவுக்கு காசும் கொடுத்து சாப்பாடும் போட்டு கலக்கிடுவானுங்க. இங்கெல்லாம் நம்ப கிட்ட இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருவிடுவானுங்க” கிருஷ்ணகிரியில் இருந்து வந்திருந்த மனோகரன் இந்த வார்த்தைகளை மந்தகாசமான புன்னகையோடு சொன்னார். கிருஷ்ணகிரியில் தனக்கிருக்கும் துக்கானி நிலத்தில் மானாவரி விவசாயம் செய்பவர், அதன் வருமானம் போதாமல் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் வேலையும் செய்து வருகிறார். கஷ்ட ஜீவனம்.

dmk-conference-22
கலைஞர் நகரும் ஊர்தி – கட்சியை குடும்பத்திற்கு பங்கிடுவதற்கே நேரமில்லாத கருணாநிதி வீட்டில்இருந்தால் என்ன, ஊரில் நகராவிட்டால் என்ன?

“ஏன் சார், அதான் மாநாட்டுக்கு நிறைய வசூல் பண்ணிருப்பாங்களே? குறைஞ்சது உங்களை மாதிரி கீழ்மட்டத் தொண்டர்களுக்காவது போக்குவரத்து செலவுகளை கட்சியே செய்திருக்கலாமே?”

“நீங்க வேறங்க. அம்பது ரூவா குடுத்தா கூட வெரட்டிப் பிடிச்சி கணக்கு கேட்டு வாங்கிருவாங்க. போக்குவரத்தாவது செலவாவது”

“பின்னே ஏன் நீங்க இங்க வந்திருக்கீங்க”

“என்னா செய்யிறது சொல்லுங்க. இத்தினி வருசமா இந்தக் கட்சில இருந்துட்டோம். தலைவர் சொன்னாருன்னு ஏதேதோ ஊருக்கெல்லாம் எத்தனையோ மாநாட்டுக்கு போயிருவேன். பழக்கமாயிடுச்சி சார். இதெல்லாம் ஒரு போதை மாதிரி சார். பழகிட்டா விடவே முடியாது. இந்த கூட்டத்தைப் பார்த்துட்டு போனா ஒரு பத்து நாளைக்கு அப்படியிருக்கும்”

”உங்களை மாதிரி அடிமட்ட தொண்டர்கள் இப்படி இருக்கீங்க. ஆனா, உங்களுக்கு கட்சியில பதவி கிடைக்கிறதில்ல. கட்சில ஒவ்வொரு மாவட்டமும் ஒரு குடும்பத்தோட கட்டுப்பாட்டுல இருக்கு. அவங்க தொழில் வருமானம்னு வேற லெவல்ல இருக்காங்களே?”

”அவங்களுக்கு அது தொழில் சார். நமக்கு அப்படியா?” கல்யாண்குமாரிடம் கேட்ட அதே பதில், அதே தொனியில் வந்து விழுந்தது.

”அதுக்காக கட்சிக்கு நேத்து வந்த குஷ்புவுக்கு கூடவா சீட்டு குடுப்பாங்க?”

”அதெல்லாம் யோசிக்கறதேயில்லீங்க. யோசிச்சா, கட்சில இருக்க முடியாது”

அக்கிரஹாரம்
ஆடம்பரக் கார்களின் அக்கிரஹாரம் – திமுக இனிமேலும் சாதாரணமானவர்களின் கட்சி அல்ல.

 

மாநாட்டுப் பந்தலின் பக்கவாட்டுப் பகுதிக்குச் சென்றோம். வி.ஐ.பி பாஸ் ஒட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த கார்களுக்குத் தனியே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. டொயோட்டா, சஃபாரி, மகிந்த்ராக்களின் அக்கிரஹாரம் போல் இருந்தது அந்த பகுதி. மாநாட்டுப் பந்தலின் உள்ளேயிருந்து உரைகள் கேட்டுக் கொண்டிருந்தன. உள்ளே சென்றோம்.

மாநில சுயாட்சி, சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள், பகுத்தறிவு என்று கூட்டாஞ்சோறு போல் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச ஐந்து நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. முதல் ஒரு நிமிடம் ”அவர்களே” “அவர்களே” என்று பத்துப் பதினைந்து பெயர்களின் நாமாவளி. அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்கு கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் துதியாராதனை. இடையில் ஒரு நிமிடத்திற்கு மாநாட்டின் ’பெருந்திரள்’ குறித்த சிலாகிப்பு மற்றும் கே.என்.நேருவிற்கு பாராட்டுதல்கள். மேலும் ஒரு நிமிடம் ஜெயலலிதாவை படைப்பூக்கத்தோடு அர்ச்சனை. அடுத்து தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே தலைப்பைக் குறித்து முப்பது வினாடிகளுக்கு உளறினர். கடைசியாக நேரமின்மை குறித்து அங்கலாய்ப்பும் கருணாநிதி வாழ்த்தும் போட்டு முடித்துக் கொண்டனர். இணையத்தில் உ.பிக்கள் விதந்தோதிக் கொண்டிருக்கும் கொள்கை முழக்கங்களின் லட்சணம் இது தான்.

இளைஞர்கள் தி.மு.கவில்
திருப்பூரிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் – பெரியார் குறித்த எதுவும் தெரியாத திமுகவின் இளம் தலைமுறை

மாநாட்டுப் பந்தலில் பெண்களை அரிதாகவே காண முடிந்தது. வெகுசில தொண்டர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். அதில் வத்தலகுண்டு அய்யம்பாளையத்தில் இருந்து வந்திருந்த கவுன்சிலர் செல்வராஜின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் சந்தோஷிடம் பேசிப் பார்த்தோம். இங்கே என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை என்றான். வரப்பிடிக்காத அவனை அப்பா வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளார். ’ஊர்ல எங்கப்பா தான் தலைவரு. நான் எங்க பிரண்ட்சுங்களுக்கு தலைவரு’ என்றான். வீட்டில் அரசியல் குறித்த பேச்சே கிடையாது என்றான். ஆனாலும் ஒரு கட்சித் தலைவரின் வாரிசுக்குரிய எல்லா அறிகுறிகளும் அவனது  பேச்சில் தென்பட்டன.

ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் மட்டுமல்ல. மாணவரணியைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்களிடம் பேசிய போது அவர்களது அரசியல் மட்டமும் அப்படித் தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவர்கள் திருப்பூரில் இருந்து வந்திருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் சாப்பாட்டுச் செலவு இவர்களுடையது அல்ல. பெரியார் கொள்கைகள், இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி கேட்டால் “நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க” என்றார்கள். 2009 ஈழப் போர் குறித்து ஏதோ சண்டை நடந்தது, யாரோ செத்தார்கள் என்கிற அளவில் தான் புரிந்து வைத்திருந்தனர். ’உங்கள் தலைவர் அந்த நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று சீமான் போன்றவர்கள் சொல்கிறார்களே உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டோம். “அவரு சும்மா அடிச்சி விடுவாருங்க” என்று வெள்ளந்தியாக சொன்னார்கள்.

ஆறுமுகம்
ஆறுமுகம் – போர் நிறுத்தத்திற்காக கருணாநிதி என்ன செய்ய முடியும்?

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கட்சியில் உள்ள இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்களின் புரிதலும் இதே அளவில் தான் உள்ளது. நீலகிரியில் இருந்து வந்திருந்த ஆறுமுகம் என்பவரிடம் பேசினோம். இவர்கள் 1983-ல் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். தற்போது நீலகிரியில் ஒரு ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிர் செய்து வருகிறார். இவரைப் போலவே இலங்கையில் இருந்து ஒன்றரை லட்சம் பேர்கள் வரை புலம் பெயர்ந்து நீலகிரியில் வசிப்பதாகச் சொன்னார். அவர்களில் பெரும்பான்மையானோர் தி.மு.க அனுதாபிகள் அல்லது தொண்டர்கள் என்றார்.

“ஈழப் போர் நிறுத்தத்திற்கு கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று அவர் மேல் குற்றச்சாட்டு உள்ளதே?” என்றோம்.

“அதுக்கு அவரு என்ன செய்யமுடியும் சார்? செண்ட்ரல் கெவுருமெண்டு தான் எதாச்சியும் செய்திருக்கனும். அவரும் தான் உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினாரே?”

மாநாட்டுப் பந்தலில் சீட்டாட்டம்
கொள்கை போனாலென்ன, ரம்மியில் டிக் அடிக்க முடியுமா பாருங்கள் – திமுக மாநாட்டு பந்தலில் உடன்பிறப்புக்களின் சீட்டாட்டம்

 

”இல்லைங்க, அந்த நேரத்தில கட்சிக்கு எத்தனை அமைச்சர் வேணும்னு கேட்கத் தானே டெல்லிக்குப் போயிட்டிருந்தாரு? போர் நிறுத்தம் பற்றி வாயளவுலே தானே பேசிகிட்டு இருந்தாரு?”

“அது வந்து… வேற என்ன செய்ய முடியும்? நீங்க என்னதான் சொல்லுங்க. நாங்கெல்லாம் தி.மு.க தான். இந்த வெரலை வெட்டிப் போடுங்க. அப்பவும் தி.மு.க தான்” அதற்கு மேல் அவரால் அங்கே நிற்க முடியவில்லை. தலைகுனிந்தவாறே அவசரமாக கிளம்பிச் சென்றார்.

மேடையில் தயாநிதி மாறன் தனது கான்வெண்ட் தமிழில் கொஞ்சிக் கொண்டிருந்தார். “டாஸ்மாக்லே யாரு சம்பாரிக்கிறா தெரியுமா….? அங்கே இருக்கிற கேப்டன் பிராண்டி, கேப்டன் ரம், ஜெட் பிராந்தி… இதெல்லாம் யாரு பிராண்ட் தெரியுமா…? எல்லாம் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யறாங்க. வருசத்துக்கு மூவாயிரம் கோடி டாஸ்மாக் வியாபாரத்திலேர்ந்து மாத்திரம் கொள்ளை அடிக்கிறாங்க”

சுற்றிலும் பார்த்தோம். மாநாட்டுப் பந்தலெங்கும் அவர் விவரித்த அதே பிராண்டு காலி சாராய போத்தல்கள் காணுமிடமெல்லாம் இறைந்து கிடந்தன. தி.மு.க ஆட்சியிலும் மிடாஸின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல் வியாபார நலன்கள் காக்கப்பட்டன. கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களோ அ.தி.மு.கவின் இரண்டாம் கட்ட தலைவர்களோடு ரியல் எஸ்டேட், காண்டிராக்டுகள் பங்கிட்டுக் கொள்வது என்று நேரடியான வியாபாரத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். கீழ்மட்டத் தொண்டர்களோ டாஸ்மாக்கின் மூலம் மறைமுக தொடர்பு வைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழ் வரை அளவுகளில் வேறுபாடு இருந்தாலும், சாராம்சத்தில் ஒரே விதமாகவும் சர்வவியாபகமாகவும் சந்தர்ப்பவாதம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

dmk-conference-33
போதையில் வீழ்ந்து கிடப்பது திமுகவின் உடன்பிறப்பு மட்டும்தானா?

மு.க ஸ்டாலினின் உரையைத் தொடர்ந்து சாரிசாரியாக தொண்டர்கள் வெளியே உணவுக்காகவும் டாஸ்மாக் நோக்கியும் படையெடுத்தனர்.

நாங்கள் வேலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் சி.பி. வேலுவைச் சந்தித்தோம். முதுமையின் காரணமாகவோ பிழைக்கத் தெரியாதவர் என்பதாலோ நான்கு வருடத்திற்கு முன்பே அவரது பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது. தளர்ந்து போயிருந்தார். மொழி உரிமை, திராவிடக் கொள்கை, ஈழப் பிரச்சினை, குறுநில மன்னர்களாகிவிட்ட மாவட்டத் தலைமைகள், குடும்ப கட்டுப்பாட்டிலிருக்கும் மாநிலத் தலைமை, குறுநில மன்னர்களின் கல்வி வியாபாரம் என்று அவரிடம் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஒரு சங்கடமான சிரிப்போடு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டே எங்கள் முன்னாள் நின்றார். பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்த முதியவரிடம் பதில்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்து போக நினைத்தோம்.

அவருடன் வந்திருந்த அவரது அடுத்த தலைமுறை இளைஞர் ஒருவர் குறுக்கிட்டார்.  “சார், காசு இருக்கிறவன் பதவில இருக்கான். காலேஜ் நடத்துறான். காசு வச்சிருக்கிறவன் அங்கே போறான். இல்லாதவனுக்குத் தான் கவுருமெண்ட் ஆஸ்பத்திரி கட்டி விட்டிருக்கில்லே….” – அந்த இளைஞரின் பேச்சை சட்டென்று உள்ளே புகுந்து தடுத்தார் சி.பி.வேலு. “ஏய் இருப்பா.. அவர் அதைப் பத்திக் கேட்கலை… நீ விட்ரு…” என்றவர் எங்கள் பக்கமாகத் திரும்பி “தம்பி தப்பா நினைக்காதீங்க. இன்னும் சாப்பிடலை. நேரமாச்சு போகணும்” என்று சொல்லி விட்டு தடுமாற்றத்தோடு கடந்து சென்றார்.

dmk-conference-06
திமுக மாநாட்டு பந்தல் அருகே சமயபுரத்திற்கு செல்லும் பக்தர்கள் – இந்தக் குறியீட்டின் பொருள் என்ன?

மாநாட்டில் நாங்கள் சந்தித்த வேறு சில தொண்டர்களும் இதே வகை மாதிரியில் தான் பதிலளித்தனர். தி.மு.க ஒரு சீரழிந்து போன பாம்புப் புற்றாக காட்சியளித்தது. கரையான் கட்டிய புற்றில் பாம்பு புகுந்தவுடன் அக்கம் பக்கத்திலிருக்கும் பக்தஜனங்கள் அதை இன்ஸ்டண்ட் கோயிலாக்கி விடுவார்கள். முட்டை வைப்பது, பால் வைப்பது, புற்றின் மேல் மஞ்சள் தெளிப்பது என்று சில நாட்களுக்கு அந்த இடமே களைகட்டும். இந்தக் களேபரத்தில் பாம்பு புற்றைக் கைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்கும். ஆனாலும் முட்டாள் பக்தர்கள் தொடர்ந்து மஞ்சள் தெளித்து மஞ்சள் தெளித்து கொஞ்சம் கொஞ்சமாக உயரமான புற்றையே கரைத்து தரைமட்டமாக்கி விடுவார்கள். சில வருடங்கள் கழித்து அங்கே தரையில் வெறும் பொந்து மட்டும் மிஞ்சும். சுற்றிலும் மஞ்சள் தெளித்து கோலம் போடப்பட்டிருக்கும். பக்தர்கள் அடுத்த நாகம்மனின் வாசஸ்தலத்தை கண்டுபிடிக்கும் வரை வந்து செல்வார்கள்.

தி.மு.க பகுத்தறிவற்ற பக்தர்களின் மடமாகி விட்டது. என்றோ கனவு போலக் கலைந்து போன நம்பிக்கைகளின் வாசனையில் மாநாடுகள் கூட்டங்கள் நடக்கும் போது பக்தர்கள் தீர்த்த யாத்திரை வந்து செல்கிறார்கள். அதுவும் கிழடு தட்டிப் போன பக்தர்கள். இனி அடுத்த மடத்தை கண்டுபிடிக்கும் வரையிலோ பெரும்பான்மையாக இருக்கும் முதிய தலைமுறையின் காலம் தீரும் வரையிலோ தி.மு.க பிழைத்துக் கிடக்கலாம். அல்லது இந்த மடமே தொழிலுக்கும் வருமானத்திற்கும் பாதுகாப்பு என்று முடிவு செய்து கூட ஓட்டலாம். இடையில் இதை விட வேறு மடங்கள் நல்ல வாய்ப்புகளை வழங்குகின்றன என்று தெரிந்தால் இருப்பிடமும் மாறலாம். எங்கு மாறினாலும் இழப்பதற்கு கொள்கை இல்லை என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இறுதிக் குறிப்பு…..

நாங்கள் மாநாட்டை நோக்கி காலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது  ஆயிரக்கணக்கான சமயபுரம் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்கள். பல தொழிலாளிகள் அந்தக் காலை நேரத்திலேயே தங்கள் பணியிடங்களுக்குச் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் மாநாட்டின் எதிர்த்திசையில் சென்றனர்.

–    வினவு செய்தியாளர்கள்.
_____________________________________________

திர்க்கட்சி அந்தஸ்தோடு எதிர்த்து தாக்கும் தைரியமும் இல்லாத திமுக, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டம் கூட்டி உற்சாகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நடத்தியதே, திருச்சி மாநாடு. தற்போதைய ஜெயா ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட தளபதிகள் என்று ஏராளம் உடன்பிறப்புகள் சொத்து, நில மோசடி ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். மடியில் கனமிருந்ததால் வழியில் பயமும் இருந்தே தீரும் என இந்த வழக்குகளைக் கூட அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாத அவலத்தில் இருந்தது திமுக.

கருணாநிதி உரை
காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணிக்கு வரலாம் என்பதற்காக இவ்வளவு செலவு செய்து மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.

சொந்த தலைவர்களையே இப்படி ஊழல் வழக்குகளுக்காக சிறைகளில் பறிகொடுத்தவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் அரசோடு மல்லுக்கட்டி போராடுவார்களா என்ன? ஆனாலும் தமிழகத்தில் வேறு மாற்று இல்லை எனும் யதார்த்தமும், திமுகவின் பிரமுகர்கள் அரசியலில் தொடர்ந்து நீடித்தால்தான் தொழிலை தொடர முடியும் என்ற நிர்ப்பந்தமுமே இக்கட்சி இப்போதும் செயல்படுவதற்கு முக்கியமான அடிப்படைகள்.

திமுக மாநாடு என்றால் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ், மாநிலசுயாட்சி, திராவிட இயக்கம் போன்ற தலைப்புகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த பத்தாவது மாநாட்டில் இதற்கு என்ன பொருளோ, வரவேற்போ இருக்க முடியும்? கருணாநிதி கூட பழைய திமுக மாநாடுகளின் மலரும் நினைவாய் மீட்டினால் இக்கொள்கைகளை இப்போது எப்படி நைத்து கிழித்து விட்டோம் என்றே பார்க்க வேண்டியிருக்கும். ஆனால் அவர் அண்ணா காலத்தில் தான் 11 இலட்சம் ரூபாயை வசூல் செய்ததை நினைவு கூர்ந்து தற்போது மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிதியாக திரட்டி செலவு போக 101 லட்சம் ரூபாயைக் கொடுத்ததைத்தான் பரிணாம வளர்ச்சியாக, சாதனையாக பார்க்கிறார். இது தவிர, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக ரூ 106 கோடியை குவித்திருக்கிறார்கள்.

dmk-conference-35
சந்தர்ப்பவாதத்தில் திமுக கொடிகட்டி பறக்கும்போது மனோகரன் அலகு குத்தி பறப்பதில் தவறு இல்லையே?

அண்ணா காலத்தில் இருந்த திமுகவின் கொள்கைகளை அதிமுக ஏற்காத கட்சி என்பதால்தான் அதை அண்ணா திமுக என்று விரிவாக அழைக்காததற்கு காரணம் என்கிறார் கருணாநிதி. இதை திமுகவிற்கும் பொருத்திப் பார்த்தால் திராவிட இயக்கத்தின் நற்கூறுகள் எதுவும் இன்றைய திமுகவில் இல்லையே? மேலதிகமாக அண்ணாவின் காலத்திலேயே மொழியின் பெயரால் தமிழ் மக்களின் உணர்ச்சியை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவது எனும் சந்தர்ப்பவாதம் துவங்கிவிட்டது. கருணாநிதி காலத்தில் அது பல்வேறு உச்சங்களைத் தொட்டிருக்கிறது. எனவே திமுக மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கேட்கலாம், கற்கலாம் என்பதை விட தலைவர் யாருடன் கூட்டணி வைப்பார், அறிவிப்பார் முதலானவையே தொண்டர்களின் ஏக்கமாக இருந்தது. ஊடகங்களும் அதையே முன்மொழிந்தன. இதை திமுக தலைவர்களும் மறைத்து வைக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் மாநிலத்திலேயே வெம்பி வாடுபவர்களை, அதே அதிமுக மத்தியில் முக்கியமான கட்சியாக உருவெடுத்தால் என்ன செய்யும்? இந்த பயம்தான் கருணாநிதியை பிடித்து வாட்டுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை வெல்லா விட்டால் மத்தியிலும், மாநிலத்திலும் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம், போஷாக்கான உடன்பிறப்புகளுக்கும் இல்லாமல் இல்லை.

dmk-conference-36
அலகு குத்தி பறக்கும் திமுக செயலாளர் மனோகரனைப் போன்றோர் கட்சியில் இருப்பது பழக்க தோசமா, ஆத்மார்த்தமான உறவா?

கூட்டணி உதவியுடன் அதை சாதிக்கலாம் என்றால் விஜயகாந்த் தண்ணி காட்டுகிறார். காங்கிரசோடு பேசுகிறார். காங்கிரசோடு உறவு வேண்டாம் என்று திமுக பொதுக்குழு பேசியிருக்கும் நேரத்தில் ‘கேப்டன்’ இப்படி புது ரூட்டு போடுகிறாரே என்ற அதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு, அது ஒன்றும் புனிதமான கொள்கைப் பிரகடனம் இல்லை. ஆனாலும் ஊழல் குற்றச்சாட்டு, திமுகவினர் 2ஜியில் கைது, ஈழ விவகாரத்தில் கெட்ட பெயர் காரணமாக காங்கிரசு வேண்டாம் என்று ஒரு திமுக கூறுகிறது. இதற்கு ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

மற்றொரு திமுகவோ தில்லியின் அதிகார பகிர்வில் நாமும் இடம்பெற காங்கிரசு கூட்டணி அவசியம், இல்லையேல் ஜெயா பந்தாடி விடுவார் என்று மிரட்டுகிறது. இதை தயாநிதி மாறன், கனிமொழி, பாலு முதலான தில்லியால் வாழ்வு பெற்றவர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஏதோ கொஞ்சமாகவாவது அழகிரி எனும் பவர் சென்டர் முடிவுக்கு வந்த நேரத்தில் புதுதில்லியில் புது பங்காளி சென்டர்கள் உருவாவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

மத்தியில் கொஞ்சம் எம்பிக்கள் போதும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கவனத்தை குவிப்போம், ஆட்சியைப் பிடிப்போம் என்று முதலமைச்சர் கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கு புது தில்லிக் கனவுகள் இல்லை. இருப்பினும் புது தில்லியின் அதிகார விநியோகத்தில் கிடைக்கும் பங்கினை அவர் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதை காங்கிரசு உதவி இல்லாமலேயே பெறலாம் என்று நம்புகிறார்.

dmk-conference-30
கூட்டத்தில் ஜோக்கரான திராவிட இயக்க கொள்கைகள், சீட்டாட்டத்தின் உடன் பிறப்புகளை மகிழ வைக்கும் ரம்மி ஜோக்கர்கள்!

அந்த நம்பிக்கையை தமிழக கூட்டணிகள், மற்றும் வாக்குகள் எனும் கணிதத்தோடு பொருத்திப் பார்த்தால் வெற்றி கைகூடும் தூரத்தில் இல்லை. இதெல்லாம் சேர்ந்து திமுகவையும், கருணாநிதியையைம் அலைக்கழிக்கிறது. மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “தலைவர் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். அதையும் பொதுக்குழுவின் முடிவு அடிப்படையில் எடுப்பார்” என்றும் கோடிட்டு பேசியிருக்கிறார். காங்கிரசுடனான கூட்டணி முயற்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்று திமுக சார்பு நக்கீரனே எழுதுகிறது.

இருப்பினும் எப்படியாவது வெற்றியையோ இல்லை கணிசமான வெற்றியையோ பிடிப்பதற்கு இத்தகைய வறட்டு கவுரவங்கள் தேவையில்லை என்பது கருணாநிதி மற்றும் பெரும்பான்மை திமுகவினரது கருத்து. அதனால் கருணாநிதி எல்லாவற்றுக்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று நச்சென்று சொல்லி விட்டார்.

அதன்படி “சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்களும், மதவாதத்தை எதிர்ப்பவர்களும் திமுக அணிக்கு வரலாம்” என்று பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இனி காங்கிரசின் சாமர்த்தியம் என்று கதர் பெருச்சாளிகள் சற்று நிம்மதி அடையலாம். ஒருக்கால் எந்தக் கூட்டணியும் இல்லை என்றால் முகவரி இல்லாமல் டெபாசிட் கிடைக்காமல் காங்கிரசு தலைகள் இங்கே காணாமல் போயிருக்கும். அந்த அவலமான எதிர்கால அதிர்ச்சியை கருணாநிதியின் சாமர்த்தியமான பேச்சு கொஞ்சம் போக்கியிருக்கிறது.

இருப்பினும் விஜயகாந்த், ஸ்டாலின் என்று சில பெரியவர்கள் இதை மனமிறங்கி ஒத்துக் கொண்டு அமல்படுத்தினால்தான் கூட்டணி வரும். இல்லையென்றால் வராமலும் போகலாம். ஆனாலும் இங்கே கொள்கைள் குறித்த சண்டை இல்லை, கட்சி-தனிப்பட்ட ஆதாயங்களின் முரண்பாடு என்பதால் எப்படியாவது தீர்வைக் கண்டுபிடிப்பார்கள்.

இடையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதை மத்தியில் உள்ள காங்கிரசு கூட்டணி அரசு எதிர்க்கிறது. இதனால் அதிமுகவை தமிழார்வலர்கள் ஆதரிப்பதும், காங்கிரசை புறக்கணிப்பதும் ஜெயாவுக்கு இலாபம். காங்கிரசோடு சேர்ந்த்தால் சென்டி மெண்ட் அலையில் அடிபடுவோம் என்று தேமுதிகவும், திமுகவும் கருதும். இருப்பினும் இதெல்லாம் தேர்தலில் பெரிய பங்களிப்பு செய்ய முடியாது என்று கருதி கூட்டணி வைத்தாலும் வெற்றி என்பது எளிதல்ல.

ஆக இவ்வளவு ரூபாய் செலவழித்து கூட்டணிக்கு காங்கிரசு கட்சி வரலாம் என்று அறிவிப்பை செய்வதற்குத்தானா திமுக மாநாடு பயன்பட்டிருக்கிறது?

என்ன செய்வது, அரசர்கள் தமது அரசியல் மேலாண்மையை நிலைநாட்ட நாட்டு மக்களுக்கு கொஞ்சம் திருவிழாக்களை கூட்டி காட்ட வேண்டியிருக்கிறது. அல்லது மார்க்கெட்டே இல்லையென்றாலும் ஒரு சினிமா நட்சத்திரம் தனது இருப்பை ஊடகங்களுக்கும், ஊருக்கும் காட்டுவதற்கு பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த சலுகை திமுகவிற்கு மட்டுமில்லையா என்ன?

பெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்

4

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து சென்ற ஆண்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் இயக்கம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கான வேன் பிரச்சாரத்திற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 4 பேர் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். தனியார் பேருந்துகளின் கொள்ளை லாபத்திற்கு துணை போகும் வகையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மக்களை ஆடு, மாடுகளை போல நடத்துவது தொடர்கதையாகி விட்டது.

உழைக்கும் பெண்தோழர்கள் சென்ற தனியார் பேருந்தில் மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டே, “உள்ளே போ, சோத்த தானே திங்கிற, என்ன அறிவில்லையா?” என மரியாதை குறைவாக நடத்துனர் பேசி கொண்டிருந்தார். அதை தோழர்கள் கண்டித்தனர். பலருக்கு முன்னிலையில் பெண்கள் தங்களை கண்டித்ததை அவமானமாக கருதிய நடத்துனரும். ஓட்டுனரும் ஆபாசமான வார்த்தைகளா, பாலியல் ரீதியில் பெண்களை இழிவுபடுத்தி பேசியும், தோழர்களை திட்டியும், செருப்பால் அடிப்பேன் என செருப்பை கழற்றினான். பொது இடங்களில் நீதி கேட்கும் பெண்களை இத்தகைய ஆண்கள் கொலைவெறியுடன் பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆணாதிக்கம் இத்தகைய எதிர்ப்புகளால் கள் குடித்த குரங்காகியும் விடுகிறது. இவ யாரு நம்மள எதிர்த்துக் கேட்க என்ற மனநிலையில் ஓட்டுநரும், நடத்துநரும் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள்.

வாக்குவாதம் அதிகரிக்கவே நிறுத்தம் வந்ததும் தோழர்கள் இறங்கி உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். ஓட்டுனர் தரப்பில் சிலர் வந்து சமாதானம் பேசினர். அதனால் காவல்துறையும் வழக்கை பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியது. இரவு 11 மணி வரை தோழர்கள் இருந்து காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி கொடுத்த பின்தான் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான செய்தி ஏற்கனவே வினவில் வெளியாகியிருந்தது. கடந்த ஒரு வருடமாக நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து கொண்டிருந்தது. தோழர்கள் அமைப்பு வேலைகளினுடே வாய்தாவிற்கும் சென்று வந்தனர்.

ஓட்டுனர், நடத்துனருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியுடன் இருந்தனர். அந்த வகையில் சென்ற 4.2.14 அன்று நீதிமன்றம் குற்றவாளிகளான ஓட்டுனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், நடத்துனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. அதை ஒட்டி திருச்சி நகர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சுவரொட்டி ஒட்டும் போதே பலர் நின்று கவனித்து, இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கருத்து தெரிவித்தனர். இவ்வழக்கில் கிடைத்த வெற்றி என்பது, பெண்கள் மீது நடக்கும் அடக்குமுறைக்கு அமைப்பாய் சேர்ந்து போராடுவதன் மூலம் வெற்றியடைய முடியும் என்பதை நிருபித்து காட்டும் விதமாக அமைந்தது.

செய்தி :
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி

சோவியத் யூனியனாகும் தமிழகம் – தினமலரின் அமெரிக்க கவலை

12

சிஷ்டன்கள், விசுவாமித்திரன்கள், சாணக்கியன்கள் அனைவருக்கும் ஷத்ரிய சக்கரவர்த்திகள்தான் போஜனம் இடுகிறார்கள். பதிலுக்கு ராஜகுருக்கள் ‘ஞானம்’ அளிக்கிறார்கள். அது என்ன ஞானம்? வருண தருமம் எனும் பார்ப்பன நெறிக்கு பங்கம் விளையும் போது, அவர்கள் வாயும், வார்த்தைகளும் அனிச்சை செயலாய் எச்சரிக்கும். ஒருக்கால் அந்த அனிச்சை செயலே அஸ்தமிக்குமானால் கிருஷ்ண பரமாத்மாக்கள் அவதரித்து கீதை சொல்லி, தருமம் காக்க ‘கலகக்காரர்களை’ வதம் செய்வார்கள்.

தினமலர் ஜெயா கீதோபதேசம்
பார்ப்பனிய மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களை ஆதரிக்கும் தினமலர், ஞான குருக்களின் மரபு வீரியத்தோடும் அம்மா எனும் பயத்தின் மரியாதையோடும் எழுதியதே இன்றைய நாளிதழின் தலைப்புச் செய்தி.

இன்று கலகக்காரர்களுக்கு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என்று பெயர்கள் மாறியிருக்கின்றன. கூடவே வருண தர்மத்தின் ஆன்மாவானா பொருளாதார ஒடுக்குமுறையின் பாதுகாவலர்களாக முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் கூட்டாளிகளாக பரிணமித்திருக்கின்றனர். வரலாற்று வழியிலும், வர்க்க அணியிலும் பார்ப்பனிய மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களை ஆதரிக்கும் தினமலர், அத்தகைய ஞான குருக்களின் கோபம் கொண்ட மரபு வீரியத்தோடும் அதே நேரம் அம்மா எனும் பயத்தின் மரியாதையோடும் எழுதியதே இன்றைய நாளிதழின் தலைப்புச் செய்தி.

சோவியத் யூனியன்! – விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு, அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்” என்ற தலைப்பில் ஆவேசத்துடனும் அதே நேரம் பணிவாகவும் எழுதியிருக்கிறது தினமலர். நாளிதழ்களில் செய்திகள்தான் முதல் பக்கத்தில் வரும், கருத்து – கண்ணோட்டமெல்லாம் உள்ளே இருக்கும் என்பதான முதலாளித்துவ போலி ஊடக அறமும் கூட ராஜரிஷியான தினமலர் போன்ற ஊடகங்களுக்கு பொருந்தாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

இப்படி முதல் பக்கத்தில் பொங்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் என்ன நடந்து விட்டது? நேற்று 19.02.2014-ல் நடந்த சென்னை மாநகராட்சி வரவு-செலவு நிதியறிக்கையில் “அம்மா திரையரங்குகள், அம்மா பயணியர் தங்கும் விடுதிகள், அம்மா 20 லிட்டர் கேன் குடிநீர்” போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, தினமலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

சென்னை மாநகராட்சி கூட்டம்
நேற்று 19.02.2014-ல் நடந்த சென்னை மாநகராட்சி வரவு-செலவு நிதியறிக்கையில் “அம்மா திரையரங்குகள், அம்மா பயணியர் தங்கும் விடுதிகள், அம்மா 20 லிட்டர் கேன் குடிநீர்” போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, தினமலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

தா.பா கட்சி, பிரகாஷ் காரத் கட்சிகளெல்லாம் கூட்டணியில் இருப்பதாலோ என்னமோ “அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா காய்கறி கடை” என புதிய தொழில்களை துவங்குவதில் ஜெயலலிதா ஒரு அதீத கம்யூனிச பாதிப்போடு முனைப்பு காட்டி வருவதாக தினமலர் பொருமுகிறது. அப்போதும கூட இதெல்லாம் தங்கத் தலைவி மூளையில் சுதந்திரமாக உதித்தவை அல்ல, போலிக்  கம்யூனிஸ்டுகளின் பழக்கத்தால் தோன்றிய தேவையற்ற எச்சங்கள் என்று விமரிசனத்தை போலிகள் மீது தள்ளுகிறது ராமசுப்பையரின் வார்ப்பில் உருவான தினமலர்.

போலிக் கம்யூனிஸ்டுகள், கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு இப்படிப்பட்ட யோசனைகளை தைரியமாக சொல்லும் அளவு நிமிர்ந்த முதுகு கொண்டவர்கள் அல்ல. கூட்டணி சேர்ந்தாலும் ஒரு சீட்டாவது கிடைக்குமா என்று, பாய் கடை மட்டன் துகளுக்காக ஏங்கும் பைரவர்களான அந்த அப்பாவிகள் குறித்துத்தான் இப்படி ஒரு அபாண்டம். இனி இதற்கு கண்டனம், சுவரொட்டி, போயஸ் தோட்டத்திற்கு தன்னிலை விளக்கம், தோப்புக்கரணம், மாப்புக் கடிதம் என்று போலிகளின் இன்றைய ஒரு வார பொழுதை போகிற போக்கில் அடிக்கும் ஒரு காமடி விமரிசனத்தால் காலி செய்து விட்டது தினமலர்.

ஜெயாவின் இந்த அதிரடித் திட்டங்களெல்லாம் “நம்மவா” இயல்புக்கு மாறானது என்பதே தினமலரின் ஆதங்கம். அதனால்தான் போலிகளை இழுத்து வந்து பிறகு சோவியத் யூனியனுக்கும் போகிறது தினமலர்.

அதாவது சோவியத் யூனியனிலும் இதே போன்று அனைத்து தொழில்களையும் அரசே ஏற்று நடத்தி பின்னர் அந்தக் கொள்கை தோல்வி அடைந்து சோவியத் நாடு சிதைந்து, உலகமும் சுதந்திர சந்தை, உலகமயமாக்கம் எனும் முதலாளித்துவக் கொள்கைகளில் நிலை பெற்றுவிட்ட பிறகு தமிழகத்தின் இந்த பாதை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறது, தினமலர். 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ‘கம்யூனிச’ ஆட்சி இருந்தாலும் அந்த அரசு கூட தமிழக அரசு போல அனைத்து தொழில்களையும் துவங்க முனையவில்லையாம்.

ஜெயா தினமலர்
ஜெயாவின் இந்த அதிரடித் திட்டங்களெல்லாம் “நம்மவா” இயல்புக்கு மாறானது என்பதே தினமலரின் நோக்கு. அதனால்தான் போலிகளை இழுத்து வந்து பிறகு சோவியத் யூனியனுக்கும் போகிறது தினமலர்.

இதனால் அல்லிராணிக்கு வரலாறு தெரியவில்லை என ராஜ குரு தலையில் குட்டுவதாக நினைக்காதீர்கள். மாறாக “இலவசம், மானியம், அரசே தொழிலில் இறங்குவது என்ற பாதையில் தமிழகம் சென்று கொண்டு இருப்பது சரிதானா என்ற ஐயம் ஏற்படுகிறது” என்று சரியாக பாயிண்டுக்கு வருகிறது தினமலர்.

முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், வரி விலக்குகளை ஆதரிக்கும் இந்த ராஜரிஷிக்கள், மக்களுக்கு நேரடியாகவோ இல்லை மறைமுகவாகவோ தரப்படும்  இத்தகைய திட்டங்களை, சேர்த்து வைத்த வெறுப்போடு பார்க்கிறார்கள்.  தமிழக அரசின் ஆண்டு வருமானம், 1.27 லட்சம் கோடி ரூபாய், இதில் இலவசம், மானியங்களுக்கும் 48,000 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடுவதாக கவலைப்படுகிறது தினமலர்.

விவசாயம், கல்வி, எரிபொருள், சுகாதாரம், மின்சாரம் முதலியவற்றுக்கு மானியங்கள் தரக்கூடாது, அவை சந்தை விலையில் காசு கொடுத்து வாங்குபவருக்கு மட்டுமே தனியார் நிறுவனங்களால் அளிக்கப்பட வேண்டும், என்று உலக வங்கி சொல்வதை விரைவாகவே நமது அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இத்தகைய மானியங்களின் குறைப்பால் அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு இன்னபிற பிரச்சினைகளை வைத்து மக்கள் போராடக் கூடாது என்பதற்கே நூறு நாள் வேலைத்திட்டம், உணவுப் பாதுகாப்பு திட்டம், மானிய விலை அரிசி மற்றும் இலவசப் பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

மறுபுறம் இந்த திட்டங்களின் மூலம் ரேசன் கடைகள், அரசு கொள்முதல், போன்றைவையும் மெல்ல மெல்ல மூடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் கல்வியை தனியார் மயமாக்கி விட்டு இலவச லேப்டாப் கொடுப்பதோ, பெப்சி-கோக் மற்றும் தண்ணீர் தனியார் மயத்திற்கு நாட்டின் நீர் வளத்தை விற்று விட்டு அம்மா குடிநீர் கொடுப்பதோ, பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் – தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிடியில் மக்களை தள்ளிவிட்டு அம்மா மருந்தகத்தை ஆரம்பிப்பதோ நிச்சயம் ஒரு ஏமாற்று வேலைதான் என்பதை ராஜரிஷிகளும் அறிவார்கள். ஆனால் அத்தகைய ஏமாற்றும் செயலில் கூட மக்களுக்கு உதவக்கூடாது என்பதுதான் இவர்களது முதலாளித்துவ வெறியின் விசேடம்.

தனியார் உற்பத்தி துறையை ஊக்குவிக்காமல் அரசே இப்படி தொழில்களை துவங்கினால் வேலை வாய்ப்பு அருகி மக்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயருவார்கள் என்று ஓதுகிறது தினமலர். அம்மா குடிநீரோ இல்லை அம்மா உணவகமோ, அம்மா காய்கறி கடையோ இங்கிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கார், கணினி, ஐ.டி, வங்கி, மின்னணுவியல் பொருட்கள், இன்னபிற தொழில்களுக்கு போட்டி என்றால் இவர்களை எதைக் கொண்டு அடிப்பது?

அம்மா உணவகத்தால் அண்ணாச்சியின் சரவண பவனுக்கு நட்டம் என்று எழுதினால் எப்படி சிரிப்பீர்களோ அது போலத்தான் இதுவும். உண்மையில் அம்மா உணவகத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் கையேந்தி பவன்களுக்கு வேண்டுமானால் நட்டமாக இருக்கலாம். ஆனால் அந்த கையேந்தி பவன்களே இருக்க கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லப் போனால் இப்படி கையேந்தி பவன்கள் நடத்தும் ஏழைகள் ஒழிக்கப்படுவதை தினமலர் மற்றும் அதன் நடுத்தர வர்க்க வாசகர்கள் எப்போதும் ஆதரிக்கவே செய்கிறார்கள். பிறகு எதற்கு இந்த ஓநாய் அழுகை?

தனியார் ஆம்னி பேருந்துகளை ஊக்குவிக்கும் முகமாக அரசு வேகப் பேருந்துகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளை நலிவடைய வைப்பதின் மூலம் தனியார் மருத்துவமனைகள் செழிக்க வைக்கப்படுகின்றன. சுயநிதிக் கல்லூரி கொள்ளையர்களை வாழ வைக்கவே அரசு பள்ளிகள், கல்லூரிகள் எந்த வசதிகளுமின்றி நலிவடைய வைக்கிறார்கள். இப்படி ஆதாரமான அனைத்திலும் தனியார் மயம் வந்த பிறகு இந்த ஒரு ரூபாய் இட்லியும், பத்து ரூபாய் குடிநீரும் உற்பத்தி துறையை அழித்து விடுமென்றால் ராஜரிஷிக்களின் அற்பத்தனத்தையும் சதித்தனத்தையும் சேர்த்தே அறியலாம்.

கல்வி, மருத்துவமனையில் இலவசமும், மற்ற தொழில்களின் தனியாரும் வேண்டுமென தினமலர் கோருகிறது. எனில் சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை எதிர்த்து இவர்கள் எப்போது எழுதினார்கள் ? மாறாக கல்வி சீசனில் எல்லா தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை வாங்கிப் போட்டுத்தானே இலாபத்தை பார்த்தார்கள்? இல்லை ராமசுப்பையரின் குடும்பம் மட்டும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்கிறதா? எதற்கு இந்த நாடகம்?

இதையெல்லாம் சேர்த்துக் கொள்வதற்கு காரணம் இத்தகைய இலவசங்கள் இருந்தால் தனியார் முதலாளிகளின் தொழிலாளி சேம நலச் செலவுகள் குறையும் என்பது தினமலரின் கணக்கு. அரசே கல்வி, மருத்துவத்தை பார்த்துக் கொண்டால் முதலாளிகள் தொழிலாளிகளை கசக்கி பிழிந்து வேலை வாங்குவதில் கவனம் செலுத்தலாமில்லையா?

விஷன் 2023
“விஷன் – 2023” என்ற தொலைக்கு ஆவணத்தை வெளியிட்டு தொழிலதிபர்களின் பாராட்டை பெற்ற ஜெயலலிதா தற்போது தவறான வழிகாட்டுதலால் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் படலத்தில் இறங்கியுள்ளார் என்ற கருத்து எழுந்துள்ளது : தினமலர்.

“விஷன் – 2023” என்ற தொலைக்கு ஆவணத்தை வெளியிட்டு தொழிலதிபர்களின் பாராட்டை பெற்ற ஜெயலலிதா தற்போது “சிலரின் தவறான வழிகாட்டுதலால், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் படலத்தில் இறங்கி உள்ளார் என்ற, கருத்து எழுந்து உள்ளது.” என பாதுகாப்பாக முடிக்கிறார்கள் தினமலரின் ராஜரிஷிக்கள். இது அவதூறு வழக்கின் மீதான பயத்தோடு நம்மவாவ நாமே விட்டுக் கொடுக்கலாமோ எனும் பாசமும் கலந்தது.

தனியார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, குறைந்த விலையில் 24 மணிநேரமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் தமிழக அரசுதான், தினமலர் கவலைப்படும் உற்பத்தி துறையில் உள்ள தமிழகத்தின் சிறு, நடுத்தர முதலாளிகளுக்கு பல மணி நேர மின்தடை போட்டு அழித்து வருகிறது. இப்படி மின்சாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தை முடுக்கிவிடும் வேலையைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

இதை மறைக்கவே இலவச, கவர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நல உதவிகளை செய்கிறார்கள். இவையெல்லாம் ஏழைகளான மக்களுக்கு கிடைக்கும் சொற்ப உதவி என்பதைத் தாண்டி அவர்களது வாழ்வில் எந்த பாரிய மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. மறுபுறம் தமது வாக்குவங்கியை கவருவதற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு இவை பயன்படுகின்றன. முதலாளித்துவ நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி செலவழித்து தமது விளம்பரங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன. அதே போல ஓட்டுக் கட்சி அரசுகள் மக்கள் பணத்தை வைத்து தமது விளம்பரங்களை இத்தகைய நலத்திட்டங்களை வைத்து கொண்டு போகின்றன.

மேலும் போராடும் மக்களின் வாயை அடைக்க இந்த திட்டங்கள் கருத்தளவிலும், உணர்ச்சி அளவிலும் பயன்படும் என்பதால் இது ஊரைக் கொள்ளையடிக்கும் தாதா, ஊர்க்கோவிலுக்கு கொடை வைத்து கூழ் ஊற்றுவதற்கு ஒப்பானது.

டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது என்று தினமலரும் கவலைப்படுகிறது. ஆனால் இந்த டாஸ்மாக்கின் வருமானத்தை வைத்துத்தான் ஜெயாவின் இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இது மக்களிடமிருந்து பிக்பாக்கட் அடித்து அதில் கொஞ்சம் அதே மக்களுக்கு தரப்படுவதுதான். ஆனால் டாஸ்மாக்கின் கணிசமான வருமானம், மிடாஸ், மல்லையா போன்ற தினமலரின் மனம் கவர்ந்த முதலாளிக்குத்தானே போகிறது? அந்தப்படிக்கு தினமலரின் ‘உற்பத்தி துறை’ சேமமாகத்தானே செயல்படுகிறது?

எல்லாவற்றையும் விட இந்த அற்பத்தனத்தை போய் சோவியத் யூனியனுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அக்ரகாரமோ, அமெரிக்காவோ, கம்யூனிசம் என்றால் இப்படித்தான் வன்மத்துடன் பார்ப்பார்கள் என்பதற்கு சான்று.

மேலும் ராஜிவ்  கொலை வழக்கில் உள்ள எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஜெயாவின் முடிவு தினமலருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயாவின் தேர்தல் ஆதாயத்திற்காக செய்யப்படும் இந்த நடவடிக்கையை அவர் தனது பார்ப்பன பாசிச மதிப்பீடுகளை மீறி செய்யலாமா என்பதே தினமலரின் கோபம். இது குறித்து பின்னர் எழுதுகிறோம். ஆனால் தினமலரின் நோக்கம் பார்ப்பன தர்மத்திலிருந்து விலகும் ராணியை மயிலிறகால் வருடி சுய நினைவுக்கு திருப்புவதே. அதற்காத்தான் சோவியத் யூனியனை இழுத்து வந்து இட்லி விற்பதை கண்டிப்பதாக கூறிவிட்டு, ராஜிவ் கொலை வழக்கு எழுவரை விடுதலை செய்யாதே என்று ஓதுகிறார்கள். இந்தச் செய்தி தலைப்புச் செய்தியின் கீழே வருகிறது.

மத்தியில் மோடியம், மாநிலத்தில் மாமியும்தான் பார்ப்பன ஊடகங்கள் விரும்பும் மனங்கவர்ந்த ஆட்சியாளர்கள். அதை ‘தருமம்’ மீறாமல் நிறைவேற்றுவது எப்படி? அதாவது இலக்கில் உள்ள தருமம் எப்போதும் மாறப்போவதில்லை. ஆனால் அதை அடையும் வழி எப்படி இருக்கலாம் என்பது இவர்களுக்கிடையே உள்ள மெலிதான வேறுபாடு. எழுவர் விடுதலை என்பது பார்ப்பன பாசிசத்தை சித்தாந்தமாக கொண்டிருக்கும் ஜெயாவுக்கு உவப்பானதல்ல. சொல்லப் போனால் ராஜிவ் கொலையை வைத்துத்தானே அவர் தனது முதல்சுற்று சாம்ராஜ்ஜியத்தை  கைப்பற்றினார்.

தற்போது எழுவர் விடுதலை என்பதன் பொறுப்பை மத்திய அரசுக்கு தள்ளிவிட்டிருக்கும் ஜெயா இதனால் இரண்டு விதங்களிலும் ஆதாயத்தை அடைவார். எழுவர் விடுதலை ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி இரண்டிலுமே அவரது பெருமை மகத்தானதாக கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்தை வாக்குகளாக மாற்றி வரும் தேர்தலில் வெற்றியை அதிகப்படுத்த வேண்டும் என்பதைத் தாண்டி ஜெயாவுக்கு வேறு நோக்கமில்லை. ஆனால் ‘தர்மத்தை’ மீறி இப்படி முடிவெடுப்பது சரியா என்பது தினமலரின் கேள்வி.

ராஜரிஷிக்களைப் பொருத்தவரை தர்மம் என்பது மக்களை அடக்கி ஒடுக்கும் தண்டனையோடுதான் அதிகம் தொடர்புடையது. பார்ப்பன இந்து தேசியத்திற்கு அடி கொடுப்பது போல எழுவர் விடுதலை அமைந்து விட்டால் என்ன செய்வது? இங்கே தண்டனைகளுக்கு என்ன பயம் இருக்கும் என்பதே தினமலரின் கேள்வி.  அவதூறு வழக்குகளுக்காக அநாமதேயங்களைக் கூட விட்டு வைக்காத ஜெயா இந்த பயத்தை முன்னிலும் வீச்சாக செயல்படுத்துவார் என்பதால் தினமலர் பீதி அடையத் தேவையில்லை.

எனினும்இதே தினமலர் நேரடியாக ஜெயாவை கண்டிக்க முன்வரவில்லை. அதனால்தான்  துதிபாடிகளின் பேச்சை கேட்டு ஜெயா செயல்படுகிறார் என்று மரியாதையுடன் எழுதுகிறது. என்ன இருந்தாலும் ஜெயா அவர்களது அப்பார்ட்மெண்டில் இருக்கும் அரச மாமிதானே? எந்த ஊரிலாவது ஒரு ‘மாமா’ ஆள்பவர்களை தைரியமாக திட்ட முடியுமா என்ன?

ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !

0

ந்நிய நாட்டு அரசுகளுடனும் அந்நிய நாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடனும் தொழில், வர்த்தகம், இராணுவம், ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான காற்றிலும் நீரிலும் நிலத்திலும் நஞ்சு கலக்கும், நேரிலேயே நச்சுக் கழிவுப் பொருட்களைக் கொட்டும், இயற்கை வளங்களைச் சூறையாடும் இரகசிய ஒப்பந்தங்கள் ஏராளமாகப் போடப்படுகின்றன. அவற்றின் மூலம் நமது மக்களின் வாழ்வுரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன. இவை அந்நிய மற்றும் முக்கியமாக பனியா- பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த உள்நாட்டு, நாடுகடந்த தரகு முதலாளிகளின் கொள்ளைக்காக, வளர்ச்சிக்காகத்தான் செய்யப்படுகின்றன. இதற்காகத்தான் பெரும் அளவிலான இலஞ்ச-ஊழல்களும், அதிகார முறைகேடுகளும், பாசிசக் கிரிமினல் குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், “தேசிய நலன்” “தேசிய வளர்ச்சி” என்ற பெயரில் இவை மூடிமறைக்கப்படுகின்றன.

ஆதலினால் தேசதுரோகம் செய்வீர்இந்த நாட்டின் அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், துணை இராணுவம், நீதிமன்ற – சிறைத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகாரங்களும் அவர்களுக்கான ஊதியங்களும் சலுகைகளும் எண்ணியும் பார்க்க முடியாத அளவுக்குப் பிரமாண்டமானவை. குறிப்பாக, அயலுறவுத்துறை, இராணுவம், துணை இராணுவம், நீதித்துறை ஆகியவற்றுக்குக் கேள்வி கேட்க முடியாதவாறு, தண்டிக்க முடியாதவாறு சிறப்புக் கவசங்களும் உரிமைகளும் தரப்பட்டிருக்கின்றன. அவை போதாதனவாக உள்ளன, இன்னும் பெருக்க வேண்டும் என்றும், எல்லாம் “தேசியப் பாதுகாப்புக்கானவை” தேசிய இறையாண்மையின் பாதுகாப்புக்கானவை” என்றும் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்த அமைப்புகள்தாம் நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பேராபத்தானவையாகவும் எதிரானவையாகவும் உள்ளன.

நாட்டின் ஆளும் வர்க்கங்களோடும் அரசியல்வாதிகளோடும் கைகோர்த்துக்கொண்டு, எல்லா இலஞ்ச-ஊழல்களுக்கும், அதிகார முறைகேடுகளுக்கும், பாசிசக் கிரிமினல் குற்றங்களுக்கும் மேற்படி அரசு உறுப்புகள்தாம் அச்சாணியாக விளங்குகின்றன. ஆனால், நாட்டில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான புதுப்புது சட்டங்களும் புதுப்புது அதிகாரங்களும் புதுப்புது நவீன ஆயுதங்கள்-வசதிகள்-பாதுகாப்புகளும் தமக்கு வேண்டுமெனக் குவித்துக் கொள்கின்றன. இந்த அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய அரசும் (மாநில அரசுகளும்தான்) ஆட்சியாளர்களும் இம்மாதிரியான மக்கள் விரோத, தேச விரோதச் செயல்கள் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இந்த நாட்டுச் சட்டங்களிலேயே அதற்கு இடமுண்டு.

எது தேச பக்தி? எது தேச விரோதம்? – இப்படிப் பிரித்துப் பார்க்க முடியாமல் நமது நாட்டு மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்; இல்லை, குழப்பப்பட்டுள்ளனர். “இந்து=இந்திய தேசியம்=மோடி” என்கிறது ஒரு மதவெறி பாசிச கும்பல். ஓட்டுக்கட்சிக் காரன்களெல்லாம் எங்கும் பிரம்மாண்ட தேசியக் கொடியை அசைக்கிறான்கள். “சாம்சங்”, “சோனி”, “எல்ஜி”, “விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்’கள் கூட இந்திய “தேசிய” அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன. இட்டுக்கட்டப்பட்ட இந்திய தேசத்துக்குச் செயற்கையாகப் பெருமை சேர்க்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகளின் பாடநூல்கள் தொடங்கி அதிகாரபூர்வமாகவும் அரசு விளம்பரங்கள் மூலமும் மக்கள்திரள் ஊடகங்கள் மூலமும் போதனைகளும் பல பொய்த் தோற்றங்களும் பொய்ப் பிரச்சாரங்களும் மட்டுமல்ல, கிரிமினல் குற்றங்களும்கூட, மோசடியான நாடகங்களும்கூட தேசபக்த வேடதாரிகளால் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்தாம் தேசபக்தர்கள்; இவற்றை நம்ப மறுப்பவர்கள் மட்டுமல்ல, சந்தேகிப்பவர்கள்கூடத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆதலினால் தேசத் துரோகம் செய்வீர்!

– தலையங்கம்
__________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்

4

16-2-2014 அன்று ஞாயிறு காலை 9.30 மணிக்கு சிதம்பரம் G.M. வாண்டையார் மண்டபம் நந்தனார் அரங்கத்தில் மாநாடு தொடங்கியது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி-கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளின் புரட்சிகர அமைப்புகள் இணைந்து இந்த எழுச்சிமிகு மாநாட்டை நடத்தின. கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே மாநாட்டுப் பந்தலின் பெரும்பகுதி புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மற்றும் சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வந்திருந்த பெருந்திரளான மக்களால் நிறைந்திருந்தது. தொடர்ந்து அலையலையாக வந்துசேர்ந்த கூட்டத்தைச் சமாளிக்க அதிக இருக்கைகள் கொண்டு வரப் பட்டன. மாநாட்டிற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வரவேற்ற அவர், நீதிமன்றங்களுக்கு வெளியில்தான் உழைக்கும் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி ஆவேசம் மிக்கதும், உடனடிச் செயல்பாட்டைக் கோருவதுமானதொரு தலைமை உரையினை நிகழ்த்தினார். அவர் பேசும்போது :

சிதம்பரம் மாநாடு
தில்லைக் கோவில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு

“இந்தத் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்க்காத ஒன்றல்ல. பெரியாரே அன்று அரசியல் அமைப்புச் சட்டம், குறிப்பாக அதன் பிரிவு 26, நமக்கு எதிரானது, அது பார்ப்பனப் பெருச்சாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு பல்வேறு பொந்துகளை வைத்திருக்கிறது என்று சொல்லி அதனை எரித்தார். மேலும் சாதி ஒழிப்பு என்பதையும் அதில் சேர்க்க வேண்டும் என்று சொன்னார். சட்டப் புத்தகங்கள், நடைமுறைகள் என்று எதையும் பார்க்காமல் இந்தத் தீர்ப்பினை கொடுத்துள்ளனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்! இதில் நாம் வெற்றி பெற்றிருந்தால் ஒருவேளை வெற்றி விழாவோடு இது முடிந்திருக்கும். இப்போது தீட்சிதப் பார்ப்பனர்களை அங்கிருந்து முற்றிலும் வெளியேற்றும் போராட்டத்தை நாம் தொடரவிருக்கிறோம்.

ஆனால் இந்துக்களிடம் எல்லாக் கோவில்களையும் ஒப்படைக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள் பா.ஜ.க. பார்ப்பனர்கள். அப்படியென்றால், “தில்லைக் கோவிலை சூத்திர பஞ்சமர்களிடம் கொடு! அவர்களும் இந்துக்கள்” என்றுதானே சொல்லுகிறாய்? தீட்சிதர்கள் கோவிலுக்குள் மணியாட்டும் வேலையைப் பார்த்தால், அதற்குக் கூலியை அவர்கள் கொடுப்பார்கள்!

தோழர் ராஜு
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தமிழ் மக்கள் இசைவிழா, பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு என்று பல்வேறு புரட்சிகர போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். தில்லைக் கோவில் பிரச்சனையில் சட்டப் போராட்டத்தையும் நடத்தி விட்டோம். இப்போது சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இதற்குத் தீர்வு காண முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்பு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இனி மக்கள் மன்றத்தில்தான் வழக்கு நடத்த வேண்டும்! முதலில் அங்கே அகற்றப்பட்ட நந்தனாரின் சிலையை வைப்போம்!” என்றார்.

மேலும், “தீட்சிதர்கள் சட்டத்தையும், தீர்ப்புகளையும் என்றைக்கும் மதித்ததில்லை. தமிழ் பாடும் அரசாணை பெற்ற பிறகும் சாமியார் தீட்சிதர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் கோவில் உள்ளே ஆறுமுகசாமி உயிர் பிரியுமானால், கோவிலுக்கு வெளியே எத்தனை தீட்சிதர்கள் உயிர்போகும் என தெரியாது என்ற நிலையை மக்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதனால்தான் ஆறுமுகசாமி இன்னும் உயிரோடு இருக்கிறார். இந்த மாநாடு தில்லைக் கோவிலை மீட்கவும், நந்தன் சிலையை மீண்டும் நிறுவவும் அடிப்படையாக அமையும்” என முடித்தார்.

V.V.சாமிநாதன்
முன்னாள் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் V.V.சாமிநாதன்

மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய 88 வயதான முன்னாள் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் V.V.சாமிநாதன் அவர்கள் பேசுகையில்:

“உச்சநீதி மன்றம் ஓர் அநீதியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் அப்படி அவசியமில்லை. ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று நக்கீரன் பாண்டியன் அவையிலேயே எழுந்து சொன்னான், அதுவும் அந்த சிவனுக்கு எதிராகவே சொன்னான்! அப்படிப்பட்ட தமிழ் மண்ணில் நீதிமன்றத் தீர்ப்புகளை அப்படியே எப்படி ஏற்க முடியும்? தேவாரம் பாடப்பட்ட பிறகுதான் தில்லைக் கோவிலைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். குமரகுருபரர் மாரிமுத்தாப் பிள்ளை என்று பலரும் தமிழில் பாடியதாலேயேதான் நடராசன் பிரசித்தி பெற்றான். சமஸ்கிருத மொழிக்கு இங்கு எப்போதுமே இடம் இல்லை. மகுடாகமப் படிதான் இங்கு பூசை செய்யப் படவேண்டும். அதற்கு முதலில் தீட்சிதர்கள் வெளியேற வேண்டும். இவர்கள் என்றுமே சட்டங்களை மதித்ததில்லை. நாங்களும் எல்லாப் போருக்கும் தயாராகத்தான் இருக்கிறோம். சொற்போர் என்றாலும் சரி மற்போர் என்றாலும் சரி! அரசு தனிச்சட்டத்தின் மூலம் இந்தக் கோவிலை தனது கட்டுப்பாட்டில் எடுக்க இந்த மாநாடு ஒரு முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

மதியழகன்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன்

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன் பேசும்போது :

“தில்லைக் கோவிலை மீட்க தமிழக அரசு தனிச் சட்டம் ஏற்றும் வகையில் போராடுவதுதான் ஒரே வழி. இல்லையென்றால் கோவிலின் நிர்வாக முறைகேடுகளைச் சீர்படுத்தி மீண்டும் தீட்சிதர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றுதான் இவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தங்களுக்குச் சாதகமாகப் பெற்றுக் கொள்ளுவார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்படித்தான் நாங்களும் போராடினோம். சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவவும் தொடர்ந்து பராமரிக்கவும் அரசுதான் பெருமளவு நிதி வழங்கியுள்ளது. அதனை ஒருசில தனிநபர்கள் அபகரித்துக்கொள்ள விட முடியாது என்று நாங்கள் போராடியதை அடுத்து அரசு தனிச்சட்டம் ஏற்றி சென்ற வருடம் பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதே நிலை தில்லைக் கோவிலுக்கும் பொருந்தும். கேதார்நாத் பத்ரிநாத் என்று எல்லா இடங்களிலும் நாமே தொட்டு பூசை செய்யலாம். இங்கு மட்டும் அப்படி என்ன புனிதம்? ஒரு சிறிய கிராமப்புறக் கோவில் என்றாலே அறநிலையத் துறை எடுத்துக்கொள்ளும். தில்லைக் கோவிலின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று போராடித்தான் இதற்குத் தீர்வு காண முடியும்.” என்றார்.

மு.சொக்கப்பன்
திருவண்ணாமலை சைவசமய அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் தலைமை ஆசிரியர் புலவர் மு.சொக்கப்பன்

அவரைத் தொடர்ந்து, திருவண்ணாமலை சைவசமய அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் தலைமை ஆசிரியர் புலவர் மு.சொக்கப்பன் கோவில்களில் பார்ப்பனர்கள் அடிக்கும் கொட்டத்தையும், மக்களின் மூடத்தனமான பக்தியை பார்ப்பனர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தான் ஒரு மீனவ சமூகத்தில் பிறந்த காரணத்தால் பல இடங்களில் அவமானப் படுத்தப்பட்டதையும் தனது மாநாட்டு வாழ்த்துரையில் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கிப் பேசினார். திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் பார்ப்பனர்களின் அதிகாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர் விவரித்ததோடு, அச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் இவர்களைவிட நன்றாக ஆகமங்களைக் கற்றவர்கள் என்பதையும் தான் தலைமை ஆசிரியராக ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும் விளக்கி சூத்திர பஞ்சமர்கள் கோவிலில் நுழைந்தாலோ தமிழில் அவர்கள் அர்ச்சனை செய்தாலோ உள்ளே இருக்கும் தெய்வம் வெளியே போய்விடும் என்ற பார்ப்பனப் புரட்டுக்குச் சவால் விடுத்தார். மேலும் கூடியிருந்த தோழர்களின் கூட்டம் தோழர் ராஜு தலைமையில் கோவிலை மீட்கும் என்பதைப் புலப்படுத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து தில்லைக் கோவில் மீர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே மாறிவிட்ட சிவனடியார் ஆறுமுகசாமி தனது வாழ்த்துரையில் தமிழ் ஆசிரியர்களையும் அமைப்புகளையும் வன்மையாகச் சாடியதோடு, தோழர் ராஜு தலைமையிலான இந்தப் படை தில்லைக் கோவில் மீட்பைச் சாதிக்கும் என்று தனது நம்பிக்கையையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

சிவனடியார் ஆறுமுகசாமி
சிவனடியார் ஆறுமுகசாமி

“தில்லைக் கோவிலுக்குள்ளே தமிழ் நுழைய முடியவில்லை, தேவார திருவாசகம் பாட முடியவில்லை என்ற சிறு வருத்தம் கூட இல்லாமல் இத்தனை தமிழ் ஆசிரியர்கள் தமிழை வைத்துத்தானே பிழைக்கிறீர்கள்? யாருக்குமே கோபம் வரவில்லையே? பெருமாள் கோவிலில் தமிழ் இருக்கு. 10 அடி தள்ளி இருக்கும் நடராசர் கோவிலில் தமிழுக்குத் தடை என்றால் அதை கேட்க வேண்டாமா?” என சிவனடியார் கேட்டது தமிழின் பெயரால் வயிறு வளர்க்கும் அமைப்புகளுக்கும், ஆசிரியர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் (சிறிதேனும் மனசாட்சி இருந்தால்) உறைத்திருக்க வேண்டும்.

“பதினைந்து ஆயிரம் பென்சன் வாங்கும் தமிழ் ஆசிரியர்கள் பத்தாயிரம் செலவு பண்ணி இரண்டு தீட்சிதர்களை அடிக்கக் கூடாதா? நான் மட்டும்தான் தினமும் பாடுகிறேன். தமிழ் என சொல்பவர்கள் பாட வரமாட்டங்கறாங்க….” என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்தார். இனி நேரடியாக மோதுவதன் மூலமாகத்தான் பார்ப்பனியத்தை வீழ்த்த முடியும் என்பதைப் பறைசாற்றுவதாகவே அவர் பேச்சு இருந்தது.

மாநாட்டு உரைகளில் முதலாவதாக மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் ‘போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமையை பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா?’ என்ற பொருளில் உரையாற்றினார். பெரியாரும் திராவிட இயக்கமும் கோவில் நுழைவு உரிமையைப் பெற நடத்திய பல்வேறு போராட்டங்களை பல்வேறு புத்தகங்களை ஆதாரமாகக் காட்டி விளக்கிய அவர், தில்லைக் கோவிலின் வரலாற்றையும் அங்கு தீட்சிதர்கள் வெறும் மணியாட்டும் பூசாரிகள்தான் என்பதையும் ஆதாரங்களை அடுக்கி விளக்கினார்.

தோழர் வாலாசா வல்லவன்
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன்

“தில்லைக் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் பார்ப்பனர்களா என்று சந்தேகம் ஏற்படுவதாக இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அந்தச் சந்தேகம் சரிதான், அவர்கள் பார்ப்பனர்கள் அல்ல! 1930-ம் ஆண்டு திராவிடன் பத்திரிக்கையில் இந்தத் தில்லைத் தீட்சிதர்கள் ஒரு ஆட்டைக் கிடுக்குப் பிடிபோட்டு அதன் விரைகளை நசுக்கிக் கொன்று யாகத்தில் போடும் படம் உள்ளது. இவர்களை பல்லவ மன்னன் இரணியவர்மன்தான் தனக்கு ஊழியம் புரிய அழைத்து வந்தான். அப்போது இவர்கள் கேட்டதன் பேரில் தில்லைக் கோவிலில் பூசை செய்யும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தான். மன்னர்களுக்கு முடிசூட்டி இவர்கள் பூசை மட்டுமே செய்தனர்.

இதேபோல பழனி முருகன் கோவிலில் கூட சமீப காலம்வரை பண்டாரம் எனப்படும் பார்ப்பனர் அல்லாதோர்தான் பூசை செய்து வந்தனர். இந்தத் தீட்சிதர்களும் அப்படித்தான். தில்லைக் கோவிலைப் பற்றி மொத்தம் 260 கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் எதிலும் தீட்சிதர்கள் கோவிலின் உரிமையாளர்கள் என்று இல்லை. சோழர்களின் வம்சமான பிச்சாவரம் ஜமீனுக்கு கடைசியாக முடிசூட்டியுள்ளார்கள். அந்த ஜமீன் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் போக அரசு ஜமீன் நிலத்தின் பெரும்பகுதியை ஏலத்தில் விட்டது. பொதுவாக வருமானம் வரவில்லை என்றால் பார்ப்பான் மதிக்க மாட்டான்! அதுபோலவே அதிலிருந்து பிச்சாவரம் ஜமீனுக்கு முடிசூட்டுவதை நிறுத்தி விட்டார்கள். ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்று தமிழில் பழமொழி ஒன்று உண்டு. இவர்களும் தில்லைக் கோவிலுக்குச் சொந்தமான நிலம், நகை, சொத்து என்று எல்லாவற்றையும் விற்றுத் தின்று விட்டு பெரும்பாலான சொத்துக்களை அழித்துவிட்டார்கள்!” என்று பேசிய அவர்,  “தீட்சிதர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்று லண்டன் ப்ரிவீ கோர்ட்டே 1933-ல் கூறியுள்ளது. தீட்சிதர்கள் பனாரசில் இருந்து வந்தவர்கள் என்ற செய்தி அரசு கெசட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்பதை ஆதாரத்துடன் படித்துக்காண்பித்தார்.

“இன்று திராவிடக் கட்சிகளும் பெரியாரிய அமைப்புகளும் பெயரில் மட்டுமே பெரியாரை வைத்திருக்கும் நிலையில், ம.க.இ.க. பெரியாரின் தொடர்ச்சியாக அவரது போராட்டங்களை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த மாநாட்டில் நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன, எங்கள் கட்சியும் தில்லைக் கோவிலை மீட்க இணைந்து போராட ஆவன செய்வேன். நம்மை இழிவு படுத்திவரும் அந்தத் தீட்சிதர்களை தில்லைக் கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் தோழர் சகாதேவன்
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் சகாதேவன்

அவரை அடுத்து, தில்லைக் கோவிலில் தமிழ் பாடுவதற்கான நீதிமன்றப் போராட்டங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் சகாதேவன் ‘உச்சிக்குடுமி மன்றத் தீர்ப்பும், தில்லைக் கோவில் மீட்பும்’ என்ற தலைப்பில் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் உரையாற்றினார். உரையாற்றினார் என்பதைவிட ஒவ்வொருவரின் அருகிலும் பல ஆண்டுகள் நன்கு பழகிய நண்பர் அமர்ந்து பேசுவதைப் போல் உரையாடினார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நீதிமன்றங்கள் பார்ப்பனப் பெருச்சாளிகளின் சட்டபூர்வப் பொந்துகளாக இருப்பதை தனது உச்சநீதி மன்ற வழக்கு அனுபவத்தின் மூலம் விளக்கிய அவர் சிவப்புப் படைதான் நீதிமன்றத்திற்கு வெளியில் போராடி தில்லைக் கோவிலை மீட்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்:

“உச்சநீதி மன்றத்தில் எல்லோருமே பார்ப்பனர்கள், நீதிபதியும் பார்ப்பான், தீட்சிதர் வக்கீல்களும் பார்ப்பனர்கள், சு.சாமி… அரசு வக்கீல் கூட பார்ப்பான் தான்! மற்றவர்கள் குத்தியதுகூட பரவாயில்லை, ஆனால் தமிழக அரசு வக்கீல் முதுகில் குத்திவிட்டான் என்பதுதான்… ‘அங்கெல்லாம் குத்துவான் என்று தெரியாதா தம்பி, ஏன் போனாய்?’ என்று வழக்கு முடிந்த பிறகு மற்ற வக்கீல்கள் கேட்டார்கள். ‘நான் சட்டை கிழியும் என்று தெரிந்துதான் சண்டைக்குப் போனேன்!’ என்று பதில் சொன்னேன். 2004-ல் நான் வக்கீல் கோட்டைப் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த போது ஆறுமுகசாமி என்னைச் சந்தித்து, ‘என்னுடைய காலத்திலேயே தில்லைக் கோவிலுக்குள் பாட வழிபண்ணிக் கொடுங்கள்’ என்று சொன்னார். ராஜு அண்ணன் சொன்னதன் பேரில் நானும் இது என்ன சிறிய விஷயம்தானே என்று வழக்குத் தொடர்ந்து விட்டேன். பிறகுதான் தெரிகிறது அவன் எவ்வளவு பெரிய ஆள் என்று! பார்ப்பான் ஏதோ சாதாரணமாக இருப்பான் என்று பார்த்தால், நன்றாகத் தின்று கொழுத்திருக்கிறான், அதுவும் நீங்களெல்லாம் கொடுத்த நெய்யிலும் பருப்பிலும்தான்”

“உள்ளே தமிழ் நுழையக் கூடாது என்கிறானே தமிழன் நுழையக் கூடாது என்கிறானே என்று உயர்நீதி மன்றத்தில் ஒரு தலித் நீதிபதியிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அவரும் உள்ளே பாட ஆவண செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் கீழ் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தீட்சிதன் கொடுத்த மனுவை அப்படியே ஏற்று ஆறுமுக சாமி பாடுவதற்குத் தடை விதித்தார், அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்தான். நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தமிழ் பாடினோம். அதற்கு பிறகு கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை கொண்டு வந்தோம். அதில்தான் பானுமதி என்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருமையானதொரு தீர்ப்பினை வழங்கினார்.”

“உச்சநீதி மன்றத்தில் கூட நாம் இருந்ததால்தான் இவ்வளவுநாள் வழக்கு நடந்தது. இல்லையென்றால் முதல்நாளே முடித்திருப்பார்கள்! அங்கு ஒரு பெரிய குறை, இந்தச் சிவப்புப் படை டெல்லியில் இல்லை!” என்றார். மேலும், 1878-ம் ஆண்டு தீட்சிதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் தில்லைக் கோவிலில் தீட்சிதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று 1890-ல் ஆவணமாக வெளியிடப்பட்ட முத்துசாமி அய்யர் ஷெப்பர்ட் வழங்கிய தீர்ப்பு, 1939-ல் மீண்டும் தீட்சிதர்களின் வாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிராகரிக்கப் பட்டது என்று தில்லைக் கோவில் மீது மக்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டிய தீர்ப்புகள் எதிர் வழக்குகள் ஆகியவற்றின் வரலாற்றை அவர் விளக்கிப் பேசினார்.

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்

உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்குத் தொடங்கிய மாலை அமர்வில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் ‘கோவில்கள் மடங்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தில்லைக் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பெருமளவு சொத்துக்களையும், நகைகளையும் விலைமதிப்பு மிக்க செல்வங்களையும் இலட்சக் கணக்கான கோடி மதிப்பில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விளக்கிய அவர், அவை அனைத்தும் மக்களது உழைப்பினைச் சுரண்டிச் சேர்க்கப்பட்ட சொத்துக்களே என்றும் அவற்றை மீண்டும் மக்கள் நலனுக்குப் பயன்படும் வகையில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்:

“எல்லாவற்றிற்கும் உச்சநீதி மன்றம்தான் முடிவா? மக்கள் நீதிமன்றம் தான் முடிவு என்பதன் சாட்சி இந்தக் கூட்டம்! அம்பேத்கர் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பற்றிக் கூறும்போது ‘I am bound by the judgment, but not bound to respect the same’ என்றார். அதாவது நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்பதல்ல. தேர்தல் மாநாடுகள் ஓட்டுப் பொறுக்க. ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிரான நமது மாநாடு ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்காக.”

“மத எல்லைக்குள்ளும் தேசிய எல்லைக்குள்ளும் அம்பேத்கரும் பெரியாரும் நடத்திய இந்தப் போராட்டம் இப்பொழுது மார்க்சிய எல்லைக்குள் வந்துள்ளது. கோவில்கள் அரசர்களின் காலத்தில் அவர்களுக்குக் கீழான அதிகார மையங்களாகச் செயல்பட்டன. ராஜராஜன் காலத்தில் நடைபெற்றது முழுக்க முழுக்க பார்ப்பனியத்தின் ஆட்சி. நிலங்கள் செல்வம் என்று வைத்திருந்த கோவில்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து மக்களைச் சுரண்டிக் கொழுத்தன. பனிரெண்டு சதவீத வட்டி கட்ட முடியாமல் பலர் தங்கள் குடும்பப் பெண்களை விற்ற கதை ஏராளம் உண்டு. ராஜராஜனின் ஆட்சியில் தான் முதன்முதலில் ‘ராஜகுரு’ என்ற பதவியளித்து பார்ப்பனர்களை அவன் வாழ வைத்தான்.”

மாநாட்டில் பங்கேற்றவர்கள்
மாநாட்டில் பங்கேற்றவர்கள்

“இந்தக் கோவில்கள் எல்லாம் மன்னர்கள் கட்டிய கோவில்கள் அல்ல. அவை சாதாரண உழைக்கும் மக்களும் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட அப்பாவிகளும் கட்டியவை. பல்வேறு மன்னர்கள் தங்களது செல்வங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் மக்களின் உழைப்பில் வந்த மக்கள் சொத்துக்கள் தான். விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது பற்றிக் கேட்டதற்கு மன்மோகன் சிங் அதனைக் குறைக்க தன் கையில் மந்திரக் கோல் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் மத நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை மீட்டாலே போதும், இந்த நாட்டின் பெரும் பணக்காரர்களின் செல்வத்திற்கு இணையான செல்வம் கிடைக்கும்! சமீபத்தில் திறக்கப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் மட்டும் இதுவரை கண்டறியப் பட்ட பொருட்களின் மதிப்பு பத்து லட்சம் கோடிக்கு மேல். இது அம்பானியின் சொத்து மதிப்பைவிட அதிகம். அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து மதிப்பு மட்டும் இலட்சம் கோடிக்கு மேல், இது மிட்டலின் சொத்து மதிப்பைவிட அதிகம். இதுபோலவே பல கோவில்களில் இந்த நாட்டின் பெரும் முதலாளிகள் வைத்திருக்கும் பணத்திற்கும் கூடுதலான சொத்து உள்ளது.

இந்துக் கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கச் சொன்னால் கிறித்துவர்களும் முசுலீம் அமைப்புகளும் சொத்து வைத்துள்ளனரே என்கிறார்கள். நாங்கள் மக்கள் உடமையாக்க வேண்டுமென்று சொல்லுவது எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் சேர்த்துதான். வக்பு வாரியம் உள்ளிட்ட முசுலீம் அமைப்புகளும் பல இலட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களை தங்கள் வசம் வைத்துள்ளன. அவற்றையும் சேர்த்துதான் மீட்க வேண்டியுள்ளது. அம்பேத்கரும் பெரியாரும் நடத்திய போராட்டங்கள் சீர்திருத்தங்களைக் கோருபவையாகவே இருந்தன. ஆனால் நாம் நடத்துவது ஒட்டுமொத்த அமைப்பையே மாற்றுவதற்கான போராட்டம். இதில் சமய நிறுவனங்களின் சொத்துக்களை மக்கள் உடமையாக்கப் போராடுவோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மதச் சார்பற்றதும் அல்ல, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடும் அல்ல. இங்கு கோவில்களின் கருவறையிலேயே தீண்டாமை உள்ளது. அதைத் தடுக்கப் போனால் தனிநபர் உரிமையைக் கெடுப்பதாகக் கூறுகிறது நீதிமன்றம். தொடர்ந்து போராடி நமது வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்” என்றார்.

தோழர் மருதையன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன்

‘முதல் ஆலய நுழைவுப் போராளி நந்தனாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும்’ என்ற பொருளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். அவர் தனது உரையில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தக் காலத்திலும் மாறாமல் தொடர்ந்து வருவதை ஆதாரங்களோடு விளக்கி, முதல் ஆலய நுழைவுப் போராளியான நந்தனாரின் அகற்றப்பட்ட சிலையை தில்லைக் கோவிலில் நிறுவி நடராசன் கோவிலை ‘நந்தனார் கோவில்’ என்று மாற்றுவதுதான் நமது உடனடியான முதல் இலக்காக இருக்கும் என்று புரட்சிகர அமைப்புகளின் போராட்டப் பாதைக்கு அறைகூவல் விடுத்தார். அவர் தனது உரையில் எல்லா மத நிறுவனங்களுமே பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவிகளாக இருந்து அவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் வைத்து ஏகபோகமாக வாழ்ந்து வருவதை அம்பலப் படுத்தினார்:

“இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆலய நுழைவுப் போரினை இந்தச் சிதம்பரம் மண்ணில் தன்னந்தனியாக நடத்தியது நந்தனார் தான். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில், பார்ப்பனியக் கொடுங்கோன்மை உச்சத்தில் இருந்த நேரத்தில் நந்தனார் தில்லைக் கோவிலுக்குள் நுழைந்தார். அதனால்தான் தனது “தீண்டப்படாதோர் யார்”என்னும் புத்தகத்தை மூன்று பேருக்கு அர்ப்பணித்த அம்பேத்கர் அவர்களுள் முதலாவதாக நந்தனாரைக் குறிப்பிட்டார். நந்தனார் தில்லைக் கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்று போராடியபோது அவருடன் இருந்தவர்கள் எப்படியெல்லாம் ஏளனம் செய்திருப்பார்கள்? முட்டாள் என்றும் பைத்தியக்காரன் என்றும் ஏசியிருப்பார்கள்! அவற்றையெல்லாம் பொறுத்துத்தான் தனியொருவனாக அந்தப் போரை அன்று நந்தனார் நிகழ்த்தினார். அப்படிப்பட்ட நந்தனார் தொடங்கி, சித்தர்கள், வள்ளலார், பெரியார் என்று மிகப் பெரிய பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகள் வாழ்ந்த இந்த மண்ணில் பிறந்தோம் என்பதற்காக சற்றே கர்வம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அதே சமயத்தில், இன்று இருக்கும் நிலையைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அன்று தில்லைக் கோவிலுக்குள் நுழைந்த நந்தனாரை எரித்துக் கொன்றனர் தீட்சிதர்கள். இன்று ஆறுமுக சாமியின் கையை உடைத்து வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகளில் என்ன மாறியிருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றும் மாறிவிடவில்லை, இன்று ஆறுமுக சாமி உயிரோடு வெளியில் வந்தார் என்பதைத் தவிர.

நந்தனார் அரங்கம்
நந்தனார் அரங்கம்

இப்போது வந்திருக்கும் இந்தத் தீர்ப்பினை எப்படிப் பார்ப்பது? இதில் போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையமோ அல்லது ம.க.இ.க.வோ வருத்தப்படத் தேவையில்லை. எந்த ஒரு போராட்டத்திற்கும் வெற்றியை முன் நிபந்தனையாக வைத்துக் கொண்டு போராட முடியாது. ஆனால் ‘என்ன தோழர் விட்டுட்டிங்க போல?’ என்று வேடிக்கை பார்க்கும் மனநிலையில் கேட்பவர்கள்தான் உண்மையில் வெட்கப்பட வேண்டும். இங்கு பல தமிழின வாத அமைப்புகள் கச்சத் தீவை மீட்பேன், தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று வாய்ச் சவடால் அடித்து வருகின்றன. தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் சிதம்பரம் நடராசன் கோவிலை மீட்கத் துப்பில்லாத இவர்கள் எங்கே தனி ஈழம் வாங்குவது? அங்கே உச்சநீதி மன்றத்தில் சுப்பிரமணிய சாமி தமிழ்நாட்டில் ஏதோ ஒரு காட்டாட்சி நடந்து, அதில் தமிழ் அசுரர்களின் பிடியில் பார்ப்பன தேவர்களெல்லாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக ஒரு சித்திரத்தை உருவாக்குகிறான். பா.ஜ.க.வின் எச்.ராஜா ராமரைச் செருப்பால் அடித்தான் பெரியார், அவனை அப்போதே திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறான். திருமா வளவனையும் கூட அவன் இவன் என்று பேசி இருக்கிறான். ஆனால் யாருக்கும் கோபம் வரவில்லை.

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா கேட்ட நீதிபதியே வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்ட யோக்கியர்கள். தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு இவர்களெல்லாம் கூட்டுச் சேர்ந்து சவால் விடுத்திருக்கிறார்கள். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பேசிய சுப்பிரமணிய சாமி தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து மீட்பதுதான் தனது அடுத்த பணி என்று சொன்னான். அது நடக்காது என்றா நினைக்கிறீர்கள்? இப்படியே இருந்தால் அது நிச்சயம் நடக்கும்! இது வெறும் தில்லைக் கோவிலுக்கு மட்டும் எதிரான தீர்ப்பல்ல. இது இனி வரவிருக்கும் பார்ப்பன பயங்கரவாத அபாயத்தின் அறிகுறிதான்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

இந்துக் கோவில்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கப் போராடி பார்ப்பனியக் கொடுங்கோன்மை மூலம் அபகரித்துச் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வேண்டும். பல இந்துக் கோவில்கள் பௌத்தக் கோவில்களாகவும் சமண ஆலயங்களாகவும் இருந்திருக்கின்றன. திருமங்கை ஆழ்வார் திருடிக் கொண்டுபோன தங்கத்தில்தான் திருவரங்கம் கோவிலுக்குத் திருப்பணிகள் செய்தார். மேலும் இச்செய்திகளை தல புராணங்களில் அவர்களே பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இதில் முசுலீம் மதச் சொத்துக்களும் கிறித்துவ நிறுவனங்களின் சொத்துக்களும் சேர்த்துத்தான் பறிமுதல் செய்யப்பட வேண்டும். சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலோ, அதற்காகப் போராட வேண்டும் என்பதிலோ, கல்வி வேலைவாய்ப்பு முதலானவற்றில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிறுபான்மை மக்களின் பெயரைச் சொல்லி தங்களின் சொந்த நலன்களைப் பெருக்கிக் கொள்ளும் மேட்டுக்குடி முசுலீம் மற்றும் கிருத்துவர்களை எப்படி அனுமதிக்க முடியும்? ஆயிரக் கணக்கான அப்பாவி முசுலீம் மக்களைக் கொன்ற மோடியுடன் சேர்ந்து நின்று குல்லாப் போட்டுக் கொள்கிறார்கள் மேல்தட்டு முசுலீம் வணிகர்கள். இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் இங்கிருக்கும் இசுலாமிய கட்சிகள். இவர்களை சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று எப்படி அங்கீகரிக்க முடியும்? தலித் கிறித்துவர்கள் ஒடுக்கப் படுவதற்கு எதிராக எதுவும் செய்யாத, கல்வி நிறுவனங்கள் வைத்துக் கொள்ளையடிக்கும் கிறித்துவ மத நிறுவனங்களை எப்படி கிறித்துவ சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியும்? எனவே எல்லா மத நிறுவனங்களின் சொத்துக்களையும் மீட்கப் போராடுவோம்.

மாநாடு முடிந்த பின்இவை எல்லாவற்றிக்கும் முதலாவதாக நந்தனாரின் சிலையை தில்லைக் கோவிலுக்குள் வைப்போம். நடராசன் கோவில் நந்தனார் கோவிலாக மாற பார்ப்பனியத்திற்கு எதிராகத் தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்” என்று உழைக்கும் மக்கள் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் ஓரணியில் நின்று பார்ப்பனச் சமர் வெல்ல அறைகூவல் விடுத்தார்.

அவரது உரையுடன் மாநாடு பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக நந்தனார் வள்ளலார் பெரியாரின் வாரிசுகளாக நக்சல்பரிப் புரட்சியாளர்கள் நடத்தவிருக்கும் சமரசமற்ற போருக்குக் கட்டியம் கூறி நிறைவுபெற்றது.

மாநாட்டு உரைகளுக்கு இடையில் ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுவினர் முழங்கிய ‘பாடினாரு தமிழிலே ஆறுமுக சாமி, அவர் பாதத்திலே வீழ்ந்தது தீட்சிதன் குடுமி’, ‘உனக்கா எனக்கா, தில்லை உனக்கா எனக்கா’ என்ற இரு பாடல்கள் மற்றும் தஞ்சைக் குழுவினரின் தப்பாட்டம் ஆகிய நிகழ்வுகள் கோவிலை தீட்சிதர்களிடம் இழந்த சோர்வில் இருந்து தட்டி எழுப்பி வீறுகொண்டு போராடும் எழுச்சியைப் பெருக்குவனவாக அமைந்திருந்தன.

காலை அமர்வு நிறைவு பெற்றபோது கூடியிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் கர ஒலி ஆதரவோடு மாநாட்டுத் தீர்மானங்கள் தோழர் ராஜு அவர்களால் வாசிக்கப் பட்டன.

மாநாட்டு தீர்மானங்கள்

மாநாடு பங்கேற்றவர்கள்1.   சிதம்பரம் நடராசர் கோவிலை  அறநிலையத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டுவர நூறாண்டுகளாக நடக்கும் வழக்கில், தீட்சிதர்களுடனும் சுப்பிரமணியசாமியுடனும் கள்ளக்கூட்டு சேர்ந்து, கோயிலை தீட்சிதர்களின் உடைமையாக்குவதற்கு தமிழக அரசு வழி செய்துள்ளது. பொதுக்கோயில் என்று சந்தேகத்திற்கிடமின்றி பல்வேறு தீர்ப்புகளில் நிலைநாட்டப்பட்ட தில்லைக் கோயிலையும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களையும், கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில் அநீதியான முறையில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பார்ப்பனச் சூதுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தீர்ப்பையும், இதனை சாத்தியமாக்கிய தமிழக அரசையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டமொன்று இயற்றுவதன் மூலம் நடராசர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசைக் கோருவதுடன், இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராட எல்லாக் கட்சிகளையும், இயக்கங்களையும் தமிழ் மக்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

2.   சிதம்பரம் நடராசர் கோவிலில் தீண்டாமை வெறியின் காரணமாக தீட்சிதப் பார்ப்பனர்களால் சதித்தனமாக அகற்றப்பட்ட  ஆளுயர நந்தனார் சிலையை அதே இடத்தில் நிறுவவும்,  தீட்சிதர்களால் அடைக்கபட்ட நந்தனார் நுழைந்த தெற்கு வாயில் தீண்டாமைச்சுவரை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

மாநாடு பங்கேற்றவர்கள்3.   சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமாக 2571 ஏக்கர் நிலம் உள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்திலேயே குறிப்பிட்டுள்ளது. இது நாள் வரை அந்த நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்தோ, அவற்றின்  வருவாய் குறித்தோ தீட்சிதர்கள் முறையாக கணக்கு கொடுத்த தில்லை என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான மனைகளைத் தங்களது உடைமை போல மோசடி செய்து ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தீட்சிதர்கள் விற்றுள்ளது தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் உறங்குகின்றன. இத்தகைய தீட்சிதர்களை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், எல்லா தீட்சிதர்களின் சொத்து விபரங்கள் குறித்தும் நேர்மையான நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் எனவும் சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4.   சிதம்பரம் நடராசர் கோவிலில்  1282 கிராம் தங்கம் மற்றும் 2780 கிராம்  வெள்ளி நகைகளைக் காணவில்லை என  நகைமதிப்பீடு செய்த போது கண்டறிந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் தீட்சிதர்கள் மீது இதுவரை கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நகை திருட்டு குற்றத்துக்காக தீட்சிதர்களைக் கைது செய்வதுடன், அவர்களால் களவாடப்பட்ட நகைகளை மீட்கவும் வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5.   சிதம்பரம் கோவிலில் சாதாரண மக்கள் நடராசரை தரிசிக்க வரும்போது தீட்சிதர்கள் கட்டாய கட்டணம் வசூலிக்கின்றனர்.  பணம் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். மக்களின் வழிபாட்டு உரிமையைத் தங்களது வழிப்பறி உரிமையாக மாற்றிக் கொண்டுள்ள இத்தீட்சிதர்களை உரிய கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தோழர் ராஜு
தோழர் ராஜு

6.   சிதம்பரம் நடராசர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருதம் முற்றிலும் தடை செய்யப்பட்டு தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் வழிபாடு தெரியாத அல்லது செய்ய மறுக்கின்ற அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7.   கருவறைத்தீண்டாமை ஒழிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்த தமிழக அரசு திறமையான மூத்த வழக்கறிஞரை நியமித்து தமிழக மக்களின் குரலாக போராடி வெற்றிபெற  வேண்டும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

8.   தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் வருமானங்களையும் கோவில் பராமரிப்பு பணிக்கு போக மீதி தொகையை அந்தந்த ஊர்களில் உள்ள நகராட்சி பள்ளிகள், நகராட்சி மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

9.   கோவில்கள்,மடங்கள் உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்களின் சொத்துக்களையும் மக்கள் சொத்தாக மாற்றும் வகையிலும்,  மதநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எல்லா விதமான சலுகைகளையும் ரத்து செய்யும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அனைத்து மக்களும் போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. மக்களை மூடர்களாக்கும், புதுச்சாமியார்கள், திடீர் கோவில்கள், அருள்வாக்கு பேர்வழிகள் போன்ற ஆன்மீக வியாபாரிகளை மக்கள் புறக்கணிப்பதுடன், மத நம்பிக்கையின் பெயரால் தொழில் நடத்தும் இத்தகைய காவிக் கிரிமினல்களை சிறையில் தள்ள மக்கள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. சிதம்பரம் கோயிலை தமிழ் மக்களிடமிருந்து பறித்து தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு உடைமையாக்குவதிலும், தமிழ் வழிபாட்டுரிமையைத் தடுப்பதிலும் முன் நின்று, வெறியோடு செயல்படும், இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பார்ப்பன பாசிசக் கும்பல் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் விழிப்புடனிருந்து முறியடிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் துணை போகும் தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு அறவே புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12.நகை களவு, கோவில் சொத்து மோசடி, கிரிமினல் குற்றங்கள், கோவில் உள்ளே மது, மங்கை, மாமிசம்,என்று உல்லாசமாக திரியும் தீட்சிதர்கள் புனிதர்கள் அல்ல, தீட்சிதர்களில் ஒருவர் தில்லை நடராசன் என்ற மூட நம்பிக்கையில் பாவம், புனிதம், என்ற அறியாமையின் அடிமைத்தனத்திற்கு பலியாகாமல் தீட்சிதர்களின் ஆதிக்க வெறிக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் தயக்கமின்றி சுயமரியாதை உணர்வுடன் சமரசமின்றி போராட வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

13.தில்லை நடராசர்கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கூச்சலிடும் பி.ஜே.பி.சங்பரிவார அமைப்புகளின் பார்ப்பன பாசிச அபாயத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஒருங்கிணைப்பு
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்பு 98423 41583

பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கடலூர் – விழுப்புரம் – புதுச்சேரி

மாநாடு – பொதுக்கூட்டம் முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி

1

2014-15 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 17-ம் தேதி ப. சிதம்பரம் தாக்கல் செய்திருக்கிறார்.

ப சிதம்பரம்
சிதம்பரம் வழங்கிய பட்ஜெட் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் “சாவதற்கு முந்தைய கீதம்” (ஸ்வான் சாங்).

ஏப்ரல் 1, 2014 முதல் மார்ச் 31, 2015 வரையிலான திட்டம் சாராத செலவினங்கள் ரூ 12.08 லட்சம் கோடி, திட்டச் செலவினம் ரூ 5.55 லட்சம் கோடி என்று மொத்தம் ரூ 17.63 லட்சம் கோடி செலவுகளை முன் வைத்திருந்தாலும் இப்போதைய 15-வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிந்து அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல் மே மாதம் நடைபெறவிருப்பதால், ஜூன் 30 வரையிலான 3 மாதங்களுக்கான செலவுகளுக்கு மட்டுமே நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையப் போகும் அரசு புதிய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து முழு ஆண்டுக்கான செலவு ஒப்புதலை பெற்றுக் கொள்ளும்.

இந்த நிதிநிலை அறிக்கை, 2004 முதல் 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் “சாவதற்கு முந்தைய கீதம்” (ஸ்வான் சாங்) என்று இந்து நாளிதழ் சித்தரித்துள்ளது. ஆனால் காங்கிரசு மட்டும் செத்ததா, இல்லை நாட்டு மக்களா என்பதை நாம்தான் சொல்ல வேண்டும்.

’10 ஆண்டுகள் உங்களுக்காக கடுமையாக உழைத்தோம்; நேர்மையாக வேலை செய்தோம். அடுத்த ஆட்சி எங்களுடையதாக இல்லாமல் போகலாம். ஆனால், உங்களுக்கு உண்மையாக இருந்தோம் என்பதை தொகுத்து இந்த அறிக்கையினை அளிக்கிறோம்’ என்பதாக ப.சிதம்பரம் பா வரிசைப் பட சென்டிமெண்டை வைத்து ஜோடித்தாலும் சரக்கின் நாற்றம் மறையக் கூடிய ஒன்றல்ல.

அதை, சிதம்பரமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் 10 ஆண்டுகளாக யாருக்காக வேலை செய்தார்கள் என்றும் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வரிச்சலுகைகளும், பொருளாதார இலக்குகளும் யாருக்கு சாதகமானவை என்பதிலிருந்தும் பார்க்கலாம்.

புதிய கொள்கை அறிவிப்புகள், புதிய வரிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்ற ‘நல்மரபி’ன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கும் அடுத்த ஆண்டுக்கும் நிதி நிலைமை மதிப்பீடுகளுக்கான புள்ளிவிபரங்களை முன் வைப்பதோடு, முடங்கி போயிருக்கும் தொழில் துறையை வளர்ப்பதற்காக சில வரிச்சலுகைகளை அறிவித்து, கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டிருக்கிறார் சிதம்பரம்.

மாருதி தொழிற்சாலை
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் மாருதி மானேசர் தொழிற்சாலையில் அணி வகுத்து நிற்கும் கார்கள்.

கார்கள், மோட்டர் பைக்குகள் மீதான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், எஸ்யுவி எனப்படும் பெரிய ஆடம்பர கார்களின் மீதான வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும், நீண்டகால வீட்டுப் பயன்பாட்டு சாதனங்கள் (தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி முதலியவை) மீதான கலால் வரி 2 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆடி நிறுவனம் தனது ஆடம்பர காரின் விலையை ரூ 82.11 லட்சத்திலிருந்து ரூ 78.28 லட்சமாக குறைத்திருக்கிறது; மெர்சிடஸ் பென்ஸ் அதன் ஆடம்பர காரின் விலையை ரூ 72 லட்சமாக குறைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்கார்ட்ஸ், டி.வி.எஸ், மகிந்திரா, ஹீரோ, மாருதி போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன.

வரிக் குறைப்பும், அதைத் தொடர்ந்த விலைக் குறைப்பும் கார்கள், தொலைக்காட்சி முதலான வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் விலை சரிவடைய வாய்ப்பு ஏற்படுத்தி, அவற்றின் விற்பனை அதிகரிப்புக்கு இட்டுச் சென்று, அதனால் லாப ஆசை தூண்டப்படும் முதலாளிகள் உற்பத்தியை முடுக்கி விட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று ஆருடம் கூறுகிறார்கள் நாக்கில் எச்சிலை ஊறவிடும் முதலாளித்துவ வல்லுனர்கள். ஆனால், ரூ 3.5 லட்சம் முதல் ரூ 80 லட்சம் வரையிலான கார் வாங்குபவர்களுக்கு விலைக் குறைப்பு, அதனால் முதலாளிகளுக்கு கூடுதல் விற்பனை, கூடுதல் லாபம் இன்னபிற பட்டியல்களால் இவற்றால் இந்திய பொருளாதாரத்திற்கு என்ன ஆதாயம்? இந்திய மக்களுக்குத்தான் என்ன நன்மை? மாருதி அல்லது பஜாஜ் போன்ற தொழிற்சாலைகளில் கொத்தடிமைகள் போல வேலை செய்து வரும் தொழிலாளிகள், கார்களின் விற்பனைக் குறைவினால் வேலை இழக்க இருந்தவர்கள் இப்போது இழக்க மாட்டார்கள் என்பதா இந்த கருணையின் பின்னணி?

ஆனால், இந்த வரிச்சலுகை ஜூன் 30 வரைதான் உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஏற்கனவே உற்பத்தி சங்கிலியில் இருக்கும் கார்களை மட்டும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்புவதில்தான் முதலாளிகள் அக்கறை காட்டுவார்களே தவிர இதனால் வேறு வேலை வாய்ப்புகளோ இல்லை பொருளாதார நன்மையோ நாட்டுக்கு இல்லை. ஆனால் நுகர்வுக் கலாச்சார மோகத்தை விலை குறைப்பு எனும் மகுடி நாதத்தை கொண்டு வீசி விட்டு நடுத்தர வர்க்கத்தின் எதிர்கால சேமிப்பை கொஞ்சம் திருடுவதுதான் இதன் அடிப்படை நோக்கம். அல்லது ஆசை காட்டி அபகரிக்கும் பிக்பாக்கெட் எனவும் சொல்லலாம்.

ப சிதம்பரம்
ப சிதம்பரம் அறிவித்துள்ள முதலாளிகளுக்கான வரிக் குறைப்புகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ 800 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

மேலும், சோப்பு செய்ய உதவும் கொழுப்பு அமிலங்களின் மீதான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் தினசரி வீட்டு நுகர்வு பொருட்கள் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர், பிராக்டர் & கேம்பிள் போன்ற சோப்பு செய்யும் நிறுவனங்களுக்கு ஆதாயம் என்று முதலீட்டாளர்கள் அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கி தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இங்கும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு முதலாளித்துவ நிறுவனங்களின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பயன்படும். பங்கு சந்தையின் குறியீட்டெண் வளர்ந்தால் நாட்டின் வளர்ச்சி என்பார்களாம்.

புதிய முதலீடுகளை தூண்டும் விதமாக மூலதன பொருட்கள் மீதான கலால் வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது புதிய தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கான முதலீடு போன்றவற்றுக்கான செலவு குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரிக் குறைப்புகள் மூலம் சுமார் ரூ 800 கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும். இருப்பினும், இந்த விலைக் குறைப்புகளின் அடிப்படையில் பொருளாதாரம் முன்னேறி விடப் போவதில்லை என்றும் வங்கிக் கடன்களுக்கு வரிக் குறைப்பு, வாங்கும் திறன் அதிகரிப்பு போன்ற பொதுவான பொருளாதார காரணிகள் மேம்பட்டால்தான் தொழில் உற்பத்தி பெருகும் என்று முதலாளிகளின் கூட்டமைப்புத் தலைவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். அதாவது அவர்களுக்கு இந்த சலுகைகள் போதாதாம். அரசு வரிச் சலுகை, மக்கள் வாங்குவதின் மூலம் தரும் இலாபம் இரண்டும் மட்டும் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி என்று முதலாளிகள் கூறுகிறார்கள். அதை முடிந்த அளவு செய்கிறேன் என்கிறார் சிதம்பரம்.

இரண்டாவதாக, 2009-ம் ஆண்டு மார்ச் 31-க்கு முன்பு கல்விக் கடன் வாங்கிய மாணவர்களுக்கும் டிசம்பர் 31, 2013 வரையிலான வட்டித் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அரசுக்கு ரூ 2,600 கோடி செலவு பிடிக்கும் இதன் மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

உண்மையில் இந்தப் பணம் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொள்ளை அடித்து வரும் கல்வி முதலாளிகளுக்கு வங்கிகளால் ஏற்கனவே தாரை வார்க்கப்பட்டு கடன் சுமை மட்டும் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இப்போது அந்த சுமையில் ஒரு சிறு பகுதியை மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கி குறைத்திருக்கிறார் சிதம்பரம். மாறாக, நாடு முழுவதும் உள்ள கல்வி அறக்கட்டளைகளின் ஆண்டு வருமானத்தை தணிக்கை செய்து உபரி பணத்தை கைப்பற்றினால் அனைத்து மாணவர்களின் கடன்களின் வட்டி மட்டுமல்ல, அசலையும் கூட தள்ளுபடி செய்து விடலாம்.

ஆனால், கல்வி வள்ளல்கள் மத்திய, மாநில கட்சிகளுக்கு நிதி வள்ளல்களாக விளங்கும் போது, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கல்வி வள்ளல்களாக உலாவரும் காலத்தில், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாக உருவெடுத்து பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் அரசாயிருந்தாலும் சரி, பா.ஜ.க அரசாயிருந்தாலும் சரி பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் தனியார் மயத்தை ஒழித்து அனைவருக்கும், இலவச, சமச்சீர் கல்வி வழங்குவதற்கான மாற்றங்கள் எதையும் செய்யப் போவதில்லை. மாறாக, அவர்களது தனியார் மய, தாராள மய கொள்கைகளின் தொடர்ச்சியாக பழைய கடன்களை ரத்து செய்து, புதிதாக கடன் கொடுக்க நிதி ஒதுக்குவதன் மூலம் தனியார் கல்வி வள்ளல்களின் தொழில் செழிப்பதற்கும் மாணவர்கள் மீது கடன் சுமையை ஏற்றுவதற்கும் வங்கிகளின் நிதியை அர்ப்பணிப்பதற்கு கூட அடுத்தடுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

நிதி அமைச்சகம்
நாட்டையும் மக்களையும் கொள்ளை அடிப்பதற்கான புளூபிரிண்டாக இடைக்கால அறிக்கையை தயாரித்த நிதி அமைச்சர் ப சிதம்பரம், நிதித்துறை துணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ஜே டி சலீம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள்.

அதன்படி சுயநிதிக் கல்லூரி கொள்ளையர்கள் சேமமாக தொழில் நடத்துவதுதான் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்கிறார் சிதம்பரம்.

அறிவியல் ஆராய்ச்சியிலும் தனியார் மயத்தை புகுத்தும் ஒரு முக்கியமான அறிவிப்பையும் சிதம்பரம் வெளியிட்டுள்ளார். இப்போது, இந்தியாவில் பெயரளவில் நடக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் அரசு நிதி உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களான ஐ.ஐ.டிக்கள், மற்றும் பல்கலைக் கழகங்களிலும், துறைசார்ந்த ஆய்வுகளுக்கான மத்திய அறிவியல் கழகங்களிலும் நடைபெறுகின்றன. தனியார்மய, தாராளமய கொள்கைகளின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிதியை குறைத்து அவற்றை வணிக ரீதியாக நிதி திரட்டும்படி மாற்றி வரும் அரசு, ஆராய்ச்சித் துறையையும் தனியார் மூலதனம், சந்தை போட்டி சார்ந்ததாக மாற்றுவதற்கான அச்சாரம் போட்டிருக்கிறது. இந்த நோக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சந்தை போட்டியின் மூலம் நிதி வழங்கும் நிறுவனத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு வருமான வரிச் சலுகையும் வழங்கப்படும். இதன்படி, இனிமேல் சந்தையின் தேவைகளுக்கேற்ப குளியல் சோப்பில் இளநீர் மணம், பற்பசையில் சீரக மணம் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் முன்னுரிமை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தவிர முதலாளிகளுக்கு தேவைப்படும் திறனுடைய தொழிலாளர்களை உருவாக்குவதற்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ 1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் தேர்ச்சியை இனி அரசு மக்கள் பணத்திலேயே செலவழித்து வழங்கும். அதன் மூலம் ஒரு தொழிலாளியை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கும் செலவு இனி முதலாளிகளுக்கு இருக்காது. இதையெல்லாம் வெண்பா பாடி சிதம்பரத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு முதலாளிகளுக்கு நல்ல கவிராயர் இல்லை போலும்.

பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதத் தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான பேரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்புத் துறைக்கு ரூ 2.24 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டாலர் மதிப்பில் சென்ற ஆண்டு ஒதுக்கீடான $37.5 பில்லியனிலிருந்து $36.2 பில்லியனாக குறைந்திருக்கிறது. இதுவும் இந்தியாவின் மக்களுக்கு எந்த வளர்ச்சியையும் தரவில்லை என்பதோடு பன்னாட்டு ஆயுத தளவாட முதலாளிகள் இந்திய மக்கள் பணத்தை முழுதாக சுருட்டிக் கொள்வதற்கு பயன்படும்.

விவசாயக் கடன் வழங்கும் இலக்கை ரூ 8 லட்சம் கோடியாக அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம். விவசாயக் கடன்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் முதலைகளும், இந்திய தரகு முதலாளிகளும் வங்கிப் பணத்தை கொள்ளையிடுவதை குறித்து இந்து நாளிதழின் ஊரகத் துறை ஆசிரியர் சாய்நாத் எழுதிய கட்டுரைகளை  வினவில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு வேதனை ஆன ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள்.

இந்த குறிப்பான அறிவிப்புகளைத் தவிர கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய சாதனைகளாக சிதம்பரம் குறிப்பிடுபவை,

  1. பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்றும் அதற்கு அன்னிய முதலீட்டை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று இந்தியாவையும் இந்தியர்களையும் ஏற்றுக் கொள்ள வைத்தது.
  2. சர்க்கரை உற்பத்தி, விற்பனை மீதான ஒழுங்குமுறைகளை அகற்றி, சர்க்கரை விலையை உயர்வுக்கு வழி வகுத்தது.
  3. டீசல் விலையை விருப்பப்படி ஏற்றிக் கொள்ளும் விதத்தில் அரசு கொள்கையை மாற்றியது.
  4. ரயில் கட்டணங்களை உயர்த்தியது.
  5. கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தனியார் வங்கிகளை திறக்க அனுமதி அளிப்பது
  6. மாநில மின்வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளை தொடங்கி வைத்தது
  7. தொலைத் தொடர்பு, மருந்து உற்பத்தி, விமான போக்குவரத்து, சில்லறை வணிகம், மற்றும் மின்சார வர்த்தக சந்தைகளில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது.

இந்த சாதனைகளின் விளைவாக சர்க்கரை முதல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள், ரயில் கட்டணங்கள், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் மீது பெருஞ்சுமை ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கல்வி, மருத்துவம் தனியார் மயம் மூலம் மக்கள் சராசரி உழைக்கும் மக்கள் மீது கூடுதல் சுமை சுமத்தப்பட்டுள்ளது. விவசாய விளைநிலங்கள் கைப்பற்றப்படுதல், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்க மறுப்பு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு போன்ற கொள்கைகளின் மூலம் விவசாயத்தையும், சில்லறை வணிகத்தையும் சார்ந்துள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மேலும் நிதிநிலைத் திட்டத்தில் தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் சாதாரண வட்டிக் கடை சேட்டு செய்யும் மோசடிகளை விட கேவலமானவை. அடுத்த அரசு தனது நிதியாதாரத்தை பெருக்கிக் கொள்வது, மக்களுக்கு பெரிய அளவு வரி விதிப்புகளை அதிகரித்தல், அல்லது பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றல் அல்லது உணவு, எரிபொருள், உரம் போன்றவற்றுக்கு மானியங்களை வெட்டி விலைவாசியை கணிசமாக உயர்த்துவது இவற்றின் மூலம்தான் சாத்தியமாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அரசும்  நாட்டையும், நாட்டு மக்களையும் கொள்ளை அடித்தாவது பன்னாட்டு முதலாளிகள் கோரும் நிதி இலக்குகளை சாதித்து தீர வேண்டும் என்பதற்கான புளூபிரிண்டைத்தான் சிதம்பரம் வழங்கியிருக்கிறார்.

மேலும், உலக வங்கியின் செல்லத் திட்டமான ஆதார் அட்டை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும் அதிலுள்ள சிக்கல்களை களைந்த பின்பு முழுமையாக செயல்படுத்தி விட முடியும் என்று முதலாளிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார் சிதம்பரம். விவசாயத்துக்கும் உணவுப் பொருட்களுக்கும் வழங்கும் மானியத்தை குறைத்துக் கொள்வதாக பாலி உலக வர்த்தக கழக மாநாட்டில் வாக்குறுதி கொடுத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் யூனிட் உற்பத்தியை ஆரம்பித்து விட்டதை குறிப்பிட்டு, நாடு முழுவதும் புதிதாக 7 அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு 12-வது திட்டத்தின் இறுதியில் அணு மின் உற்பத்தி 10,500 மெகாவாட் ஆக உயரும் என்று அணு உலை விற்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் நாட்டையும் மக்களையும் பெரும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் தனியார்மய, தாராள மய, உலக மய பொருளாதார கொள்கைகளில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

நரேந்திர மோடியின் குஜராத் பாணி வளர்ச்சி மாதிரியும், 1999 முதல் 2004 வரை ஆட்சி புரிந்த ‘இந்தியா ஒளிர்கிறது’ புகழ் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் காங்கிரசின் இதே அன்னிய முதலீடு, தனியார் கொள்ளை பாதையில் நாட்டை செலுத்தி பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்கு உள்ளாக்கின.

இந்தக் கொள்கைகளையே ஊழல்கள் இன்றி தீவிரமாக செயல்படுத்துவது என்பதுதான் புதிதாக முளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை.

இந்நிலையில் மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

–    செழியன்

மேலும் படிக்க

அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு

2

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 2

ந்து ராஷ்டிரத்தின் மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையும், அதை அடைவதற்கு அவர் வன்முறை வழியை பின்பற்றியதும் இந்திய சிந்தமனை மரபின், ஒன்றோடொன்று தொடர்புடைய ஆனால் பெரிதும் வேறுபட்ட இரண்டு சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. ராமகிருஷ்ண மிஷனின் பல்வேறு மதங்களை இணைக்கும் கர்மயோகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் இந்துத்துவம் ஆகிய இரண்டு சிந்தனை போக்குகளாலும் கட்டியமைக்கப்பட்டவர் அசீமானந்தா. முந்தையதின் துறவு வாழ்க்கையையும், பிந்தையதின் தீவிரவாத அரசியலையும் ஏதோ ஒரு விதத்தில் இணைப்பதை அவர் சாதித்திருந்தார். இதன் ஒரு பகுதி உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஒன்றில் அவர் சிறுவயதிலிருந்தே பங்கேற்றதுடன் தொடர்புடையது. அது அவரது அப்பாவின் கொள்கைகளை நிராகரிப்பதாகவும் இருந்தது. அசீமானந்தாவே கூறியது போல அது இந்து மதத்தை அரசியல் சக்தியாக கருதும் ஒரு வகை எழுச்சி.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்சின் தீவிரவாத இந்துத்துவ அரசியல்.

1951-ம் ஆண்டு இறுதியில் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த அசீமானந்தாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் நபகுமார் சர்க்கார். சுதந்திர போராட்ட தியாகி பிபூதிபூஷன் சர்க்காரின் ஏழு மகன்களில் அவர் இரண்டாமவர். காந்தியவாதியான பிபூதிபூஷன் சர்க்கார் தன் குழந்தைகளிடம் காந்தி தனது கடவுள் என்று கூறுவது வழக்கம். அவர்கள் வாழ்ந்து வந்த கிராமமான கமர்புக்கூர் “யதோ மத், ததோ பத்” (பல மதங்கள், கடவுளுக்கான பல வழிகள்) என்று போதித்த 19-ம் நூற்றாண்டின் ஞானி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த ஊர். ராமகிருஷ்ணரின் மிகப்பிரபலமான சீடர் விவேகானந்தா “சுயநலமில்லாத பணிகளால் சேவை” என கர்மயோகத்திற்கான ராமகிருஷ்ண மிஷனை 1897-ம் ஆண்டு தோற்றுவித்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்களின் புனித யாத்திரைத் தலமான மிஷனின் உள்ளூர் கிளைக்கு அருகில்தான் நபகுமார் வளர்ந்து வந்தார். அவர் பல மாலை நேரங்களை மிஷன் துறவிகள் பக்திப் பாடல்கள் பாடுவதை கேட்பதில் செலவழித்தார்.

பிபூதிபூஷனும் அவரது மனைவி பிரமீளாவும், அவர்களது மகன் மிஷனின் புனித சேவையில் சேருவதை விரும்பினார்கள். அவ்வாறு சேருவது பல பக்தி வாய்ந்த வங்காள குடும்பங்களுக்கு பெருமைக்குரியதாக இருந்தது. ஆனால், நபகுமாரும் அவரது சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ்சாலும் ஈர்க்கப்பட்டிருந்தனர். எம்.எஸ். கோல்வால்கரின் தலைமையின் கீழ் அதன் பாணியிலான சமூக சேவையும் வளர்ந்து தளைத்துக் கொண்டிருந்தது.

“என்னுடைய இளமையில் நானும் சித்தாந்தங்களை தேடிக் கற்று அவற்றை பின்பற்றி வாழ்ந்திருக்கிறேன். எனவே, நீங்கள் ஒரு சித்தாந்தத்தால் கவரப்பட்டு அதை பின்பற்ற நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காந்தியைக் கொன்ற அமைப்பு. எனவே அது குறித்து உங்களை எச்சரிப்பது என்னுடைய கடமை” என்று தன்னுடைய தந்தை சொன்னதை அசீமானந்தா நினைவு கூர்கிறார். இருப்பினும், சர்க்கார் வீட்டுப் பையன்கள் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சர்க்கார் வீட்டில் அண்ணன் தம்பிகளுடன் சாப்பிடுவதும், சகோதரர்கள் ஷாகாவில் பங்கேற்பதும் அடிக்கடி நடந்தது. அசீமானந்தாவின் அண்ணன் ஆர்.எஸ்.எஸ்சில் முழு நேர ஊழியராக சேர்ந்தார். ஆனால், தனக்கு சங்கத்தின் எந்த உறுப்பினரையும் அறிமுகம் செய்து வைக்கக் கூடாது என்று அவர்களது தந்தை கடும் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அசீமானந்தாவும், நான் கமர்புக்கூரில் சந்தித்த அவரது தம்பி சுஷாந்த் சர்க்காரும் கூறினார்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஷாகா
சர்க்கார் சகோதரர்கள் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் பங்கேற்பதும் அடிக்கடி நடந்தது.

நபகுமாரின் நம்பிக்கைகளின் சமநிலை அவரது இருபது வயதுகளில் இரண்டு சங்க உறுப்பினர்களின் வழிகாட்டலின் கீழ் தீர்மானகரமாக திரும்பியது. அவர்களில் முதலாமவர் அவரை தீவிரவாத இந்து அரசியலை நோக்கி செலுத்திய பிஜோய் ஆத்யா என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர். தற்போது அவர் ஆசிரியராக பணியாற்றும் வங்காள ஆர்.எஸ்.எஸ் செய்தி வார இதழ் ஸ்வஸ்திகா அலுவலத்தில் அவரை நான் சந்தித்த போது 1971-ம் ஆண்டு தான் நபகுமாரை சந்தித்ததாக ஆத்யா கூறினார். நபகுமார் அந்த நேரத்தில் உள்ளூர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருந்தார். (அவர் பிற்காலத்தில் முதுகலை பட்டமும் படித்து முடித்தார்). இருப்பினும், “தங்களது மற்ற மகன்களிலிருந்து நபகுமார் மாறுபட்டவர் என்பதை அவரது பெற்றோர்கள் எப்போதுமே புரிந்து வைத்திருந்தனர். அவரது மற்ற சகோதரர்களைப் போல ஒரு இயல்பான வாழ்க்கையை அவரால் நடத்த முடியாது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது” என்று ஆத்யா கூறினார். அப்போது கூட நபகுமார் ராமகிருஷ்ணா மிஷனுக்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தார். “அவரது வீட்டில்தான் விவேகானந்தர் பற்றிய முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்தேன்” என்று ஆத்யா சொல்கிறார்.

சர்க்காரின் புத்தக சேமிப்பில் ஏக்நாத் ரானடேவால் தொகுக்கப்பட்ட விவேகானந்தரின் எழுத்துக்களும், உரைகளும் அடங்கிய “ஒரு இந்து தேசத்துக்கான எழுச்சி அழைப்பு” என்ற புத்தகம் இருந்தது. அரசு நிதி உதவி பெறும் நோக்கத்தோடு விவேகானந்தரை மதச் சார்பற்ற நபராக ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கி வைத்திருந்தது என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. அந்த பிம்பத்தை மாற்றி நேர் செய்தது ரானடேவால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம். “எழுமின்! விழிமின்! இலக்கை அடையும் வரை நிற்காதீர்கள்!” என்று விவேகானந்தர் இந்துக்களுக்கு விடுத்த அழைப்புக்கு அழுத்தம் கொடுத்து பேசியது.

காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்சிற்கு ஏகநாத் ரானடே வழங்கிய தலைமறைவு தலைமையின் அடிப்படையில சக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களால் “தலைமறைவு சர்சங்சாலக்” என்று அவர் அழைக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் வேண்டுகோளின்படி ரூ 1.35 கோடி செலவில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவகத்தை கட்டுவதையும் ரானடே ஒருங்கிணைத்தார். அது 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ரானடேவின் விவேகானந்தர் பற்றிய புத்தகத்தை படிக்கும்படி ஆத்யா அசீமானந்தாவை ஊக்குவித்தார்.

“ராமகிருஷ்ண மிஷன் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்கிறது. எனவே அவர்கள் ஈத் பண்டிகையையும், கிறிஸ்துமசையும் கூட கொண்டாடுவது வழக்கம். எனவே, நானும் அதே போல கொண்டாடி வந்தேன். விவேகானந்தா பிரச்சாரம் செய்தது இது அல்ல என்று ஆத்யா என்னிடம் சொன்ன போது அதை நான் நம்பவில்லை.” என்கிறார் அசீமானந்தா. அதன் பிறகு அவர் ரானடேவின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். “இந்து மத வட்டத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் ஒரு நபர் குறைவு என்று மட்டுமில்லை, ஒரு எதிரி அதிகம் என்றும் பொருள்படும்” என்று விவேகானந்தர் சொன்னதாக அதில் இருந்த வாக்கியம் அவரது மனதை ஆக்கிரமித்தது.

ராமகிருஷ்ண மிஷன்
“ராமகிருஷ்ண மிஷன் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்கிறது. எனவே அவர்கள் ஈத் பண்டிகையையும், கிறிஸ்துமசையும் கூட கொண்டாடுவது வழக்கம்.”

“இதை வாசித்ததும் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்ப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் நான் இதைப் பற்றி ஆழமாக சிந்தித்தேன். ஒரு கட்டத்தில் விவேகானந்தரின் போதனைகளை முழுவதுமாக புரிந்து கொள்வதோ, ஆய்வு செய்வதோ என் வரம்புக்குட்பட்ட திறனுக்கு அப்பாற்பட்டது என்று நான் உணர்ந்தேன். ஆனால், அவர் இப்படி சொல்லியிருப்பதால், அதை நான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவேன்” என்று முடிவு செய்ததாக அசீமானந்தா கூறுகிறார். அதன் பிறகு அவர் ராமகிருஷ்ண மிஷனுக்கு போவதை நிறுத்தி விட்டார்.

ரானடேவால் வழங்கப்பட்ட விவேகானந்தாவின் கருத்துக்கள் அசீமானந்தாவின் அரசியல் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருந்தது என்றால் 1956-ம் ஆண்டு ரானடேவின் கீழ் பணி புரிவதற்கு நாக்பூரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டரும் துறவியுமான பசந்த் ராவ் பட் என்பவரால் அதற்கு வடிவம் தரப்பட்டது. பட் ஆர்.எஸ்.எஸ்சின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தாலும் மென்மையான நம்பிக்கையூட்டும் ஆளுமையை கொண்டிருந்தார். “பட் போன்ற தொண்டர்கள் வேலை செய்யும் ஒரு அமைப்பு மோசமாக இருக்க முடியும் என்று நம்புவது சிரமமாக இருக்கிறது” என்று அசீமானந்தாவின் தந்தை ஒரு முறை கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தத்தையும், ராமகிருஷ்ண மிஷனின் துறவிகள் பின்பற்றிய பிரச்சார சேவையையும் எப்படி ஒன்றிணைப்பது என்பதற்கான உதாரணத்தை பிற்காலத்தில் மேற்கு வங்காளத்தின் ஆர்.எஸ்.எஸ் செயல் தலைவராக உயர்ந்த பட் இடம் அசீமானந்தா கற்றுக் கொண்டார்.

1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்து ஆர்.எஸ்.எஸ்சை தடை செய்து அதன் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். நபகுமார் (அசீமானந்தா) உட்பட ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பட் தனது குரு ரானடேவின் உதாரணத்தை பின்பற்றி தலைமறைவாக செயல்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வந்தார். அவசரநிலையின் இறுதியில் தடை நீக்கப்பட்ட பிறகு பட் வங்காளத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் செயல்படுவதற்காக வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் புதிய கிளை ஒன்றை ஆரம்பித்தார். வெகு விரைவில் அசீமானந்தா அவருடன் இணைந்து அமைப்பில் முழு நேரமாக வேலை செய்ய ஆரம்பித்தார். 1978-ல் அவர்கள் மேற்கு வங்காளத்தின் புருலியா அருகில் உள்ள பாக்முந்தி காடுகளில் நாட்டின் வடகிழக்கு பகுதியின் முதல் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை உருவாக்கினார்கள்.

வனவாசி கல்யாண் ஆசிரமம்
2012-ம் ஆண்டு வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் விளையாட்டு நிகழ்வை துவக்கி வைக்கும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத்.

வடகிழக்கை நோக்கிய விரிவாக்கம் வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் நாடு தழுவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலசாஹேப் தேஷ்பாண்டேவால் இப்போதைய சத்தீஸ்கரில் உள்ள ஜஷ்பூரில் ஓரவோன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குழந்தைகளுடன் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் தொடங்கப்பட்டது. கிருத்துவ மத போதகர்களின் தாக்கத்தை எதிர்க்கவும் பழங்குடி மக்கள் கிருத்துவர்களாக மாறுவதை தடுக்கவும் அது முயற்சித்து வந்தது. கிருத்துவ மதம் வடகிழக்கில் பல காலமாக செயல்பட்டு வரும் பிரிவினை இயக்கங்களை தோற்றுவித்து தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் செயல்முறைகள் கிருத்துவ மதபோதகர்களின் வெற்றிகரமான மாதிரியிலிருந்து உருவாக்கப்பட்டவை. மத மாற்ற மையங்களாக பயன்படும் நாடகக் குழுக்கள், ஆரம்ப நடுநிலைப் பள்ளிகள், தங்கும் விடுதிகள், மருத்துவ சேவைகள் ஆகியவற்றை நடத்துகிறது. இந்துத்துவத்தை வளர்ப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்சின் கலாச்சார மற்றும் அரசியல் அடித்தளத்தை அதிகரிப்பது அதன் நோக்கம்.

அடுத்த பத்து ஆண்டுகள் பெரும்பாலும் இந்த நோக்கங்களை பரப்புவதற்காக அசீமானந்தா புருலியாவில் பணி புரிந்து வந்தார்.  ஆனால், அவரது பெற்றோர் அவருக்காக திட்டமிட்டிருந்த துறவற வாழ்க்கையின் வடிவத்தையும் பின்பற்ற முடிவு செய்து 31-வது வயதில் துறவு ஏற்க உறுதி பூண்டார். “பழங்குடி மக்களுடன் வேலை செய்வதும் சங்கத்தின் நன்மைக்காக உழைப்பதும்தான் அவரது நோக்கம் என்றால் அவர் எந்த ஒரு துறவற பள்ளியையும் பின்பற்றத் தேவையில்லை” என்று பட் அவரிடம் கூறினார். ஆனால் நபகுமார் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி, புருலியாவிலிருந்து வங்காள குரு சுவாமி பரமானந்தாவின் ஆசிரமத்திற்கு போனார். “அவர் ராமகிருஷ்ணரின் போதனைகளை பின்பற்றியதால் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் பெரும்பாலும் தலித் மக்கள் மத்தியில் பணி புரிந்து வந்தார். ஆனால் இந்து மதத்தை பரப்புவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்” என்கிறார் அசீமானந்தா. நபகுமார் சர்க்காருக்கு துறவு வாழ்க்கைக்கான உறுதிமொழிகளை செய்வித்து அசீமானந்தா அல்லது “எல்லையற்ற ஆனந்தம்” என்ற பெயரையும் சூட்டினார் பரமானந்தா.

வனவாசி கல்யாண் ஆஷ்ரம்
பழங்குடி மக்களை இந்துத்துவா பிடிக்குள் இழுக்க ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் (புவனேஸ்வரில் ஒரு நிகழ்ச்சி)

சன்யாசம் வாங்கிய பிறகு அசீமானந்தா புருலியாவுக்கு திரும்பி வந்து பழங்குடி மக்களிடையே அவரது பணியை தொடர்ந்தார். ஆசிரமத்தில் அவர் செய்து வந்த பணி அவருக்கு வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் மூத்த தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தந்தது. இப்போது எந்த பிற மாநிலத்தையும் விட அதிகமாக, 4,000 ஷாகாக்கள் இயங்கி வரும் கேரளாவின் ஆர்.எஸ்.எஸ் தலைமைப் பொறுப்பு வகித்தவரான பாஸ்கர் ராவ் அப்போது வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் அனைத்திந்திய அமைப்பு செயலாளராக இருந்தார். அசீமானந்தாவின் பணியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த ராவும், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவர் ஜக்தேவ் ராம் ஓரேவோனும் வனவாசி கல்யாண் ஆஷ்ரமின் ஆன்மீக விழிப்புணர்வுக்கான பணியை அந்தமான் தீவுகளுக்கும் விரிவுபடுத்தும்படி அசீமானந்தாவை கேட்டுக் கொண்டனர்.

காலனிய ஆட்சிக் காலத்திலிருந்தே இந்திய மாநிலங்களிலிருந்து மக்கள் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களின் 500-க்கும் மேற்பட்ட தீவுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடியேறிகளுக்கு நகரீயங்களை உருவாக்குவதற்கு இப்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி பகுதிகளிலிருந்து இருந்து பழங்குடி மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தமானுக்கு குடிபெயர்ந்த பழங்குடி மக்கள் கிருத்துவ மத போதகர்களால் மேலும் மேலும் கவரப்பட்டு, தீவுக்கூட்டத்தை இந்துக்களுக்கும், இந்துத்துவத்துக்கும் விரோதமாக மாற்றி வருவதாக 1970-களில் ஆர்.எஸ்.எஸ் அச்சப்பட ஆரம்பித்தது என்கிறார் அசீமானந்தா. அந்தமான் நாடாளுமன்றத் தொகுதியை பத்து ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசைச் சேர்ந்த மனோரஞ்சன் பக்தா என்பவர் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அசீமானந்தா அங்கு போய் ஆர்எஸ்எஸ்சுக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.

“நான் அந்தமானில் முதல் முதலில் போய் இறங்கிய போது தங்கி வேலை செய்வதற்கான இடமோ, சேர்ந்து வேலை செய்வதற்கான ஆட்களோ இல்லை” என்கிறார் அசீமானந்தா. எளிய கிராமப்புற நட்பு முறை, அப்பட்டமான மத நோக்கங்கள் இவற்றை இணைத்து அவர் அங்கு குடியேறியிருந்த பழங்குடி மக்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். அவர் முழு விபரங்களை சொல்லா விட்டாலும், அந்தமானிலும் வன்முறை அச்சுறுத்தல்கள் பற்றி பேசியே அவர் பழங்குடி மக்களை இந்து மதத்தை தழுவத் தூண்டியிருக்கிறார். இந்த மதமாற்றங்களை அவர் “வீடு திரும்புதல்” என்று அழைக்கிறார். (பழங்குடி மக்கள் அடிப்படையில் இந்துக்கள் என்றும், இயற்கையை வழிபடுபவர்கள் அல்ல என்றும் சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ் “மறுமாற்றம்” என்று பேசுகிறது).

பிஷ்ணு பாத ரே
அசீமானந்தா ஏற்படுத்திய அடித்தளத்தில் அந்தமான் நிக்கோபார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பா.ஜ.கவின் பிஷ்ணு பாத ரே

அசீமானந்தா மேலும் முன்னேறிய பிரச்சார முறைகளையும் கையாண்டார். பழங்குடி குடியேறிகள் மத்தியில் வசித்த அவர் புதிய மதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தின் வயதான உறுப்பினர்களை தேடிப் பிடித்தார். “கிருத்துவ மதத்துக்கு மாறி விட்டாலும், அவர்கள் தமது பாரம்பரியங்களான நடனங்கள், திருவிழாக்கள் போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருக்க விரும்பினார்கள். அதை சாதித்துக் காட்டுவதுதான் எனது பணி என்று நான் அவர்களிடம் சொன்னேன்” என்கிறார் அசீமானந்தா.

சமூகத்தின் முதியவர்களின் நல்லெண்ணத்தை ஆயுதமாகத் தரித்துக் கொண்ட அவர் அரை டஜன் இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி பஜனை பாடல்களை கற்பிக்கவும், ஹனுமான் மீது நம்பிக்கை ஊட்டவும் ஏற்பாடு செய்தார். அதன் பிறகு அவர்களை ஜஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் ஆஷ்ரமத்துக்கு அவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் இந்து கலாச்சாரம் குறித்து மூன்று மாதங்களுக்கு கற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு அசீமானந்தாவும் அந்த பெண்களும் அந்தமான் கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பஜனைகளை தலைமை வகித்து நடத்துவதையும் புதிதாக குழந்தைகளை சேர்த்துக் கொள்வதையும் தொடர்ந்து செய்தார்கள். திருமணமாகாத இளம் பெண்களுடன் பயணம் செய்வது சரியில்லை என்று அசீமானந்தா கருதியதால், அந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி விட்டு, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 8 வயதிலான சிறுமிகளை அடுத்த குழுவாக அமைத்துக் கொண்டார்.

இந்து சமூகத்தை முறைப்படுத்தும் விதமாக நிரந்தர வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தி அவற்றை நிர்வகிப்பதற்கான அதிகாரபூர்வ அமைப்புகளை உருவாக்குவதில் அசீமானந்தா இறங்கினார். போர்ட் பிளேரில் ஆர் தாமோதரன் என்பவர் உள்ளூர் கோயில் கமிட்டியின் தலைவராகவும், பிஷ்ணு பாத ரே என்ற வங்காளி அதன் செயலராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

அந்தமான் சுனாமி
சுனாமி பேரழிவுக்குப் பிறகு தம்மை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்பவர்களுக்கு மட்டும்தான் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கறாராக செயல்பட்டார் அசீமானந்தா.

1990-களின் தொடக்கம் வரை அசீமானந்தா அந்தமானில் முழுநேரமும் வசித்து வந்தார். 1999-ல் ரே அந்த பிரதேசத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கான அடித்தளத்தை அவரது பணிகள் உருவாக்கின என்று அசீமானந்தா சொல்கிறார். “அவர் அரசியலில் நுழைவது நல்லது என்று நான் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் டெல்லிக்குப் போய் வாஜ்பாயியை சந்தித்தார். அரசியலும் நமது பணியின் ஒரு பகுதி” என்கிறார் அசீமானந்தா. 2007-ம் ஆண்டு தாமோதரன் போர்ட் பிளேர் நகராட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தமானை விட்டு வந்த பிறகும், இயற்கை சீற்றங்களுக்குப் பிறகு மருந்துகளையும் உணவையும் வினியோகிப்பதற்காக அசீமானந்தா அவ்வப்போது அங்கு போய் வந்தார். ஆனால், அவர் கல் நெஞ்சத்தோடு தம்மை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்பவர்களுக்கு மட்டும்தான் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கறாராக செயல்பட்டார். 2004 சுனாமிக்குப் பிறகான ஒரு நிகழ்வு குறித்து அவர் என்னிடம் சொன்னார். “ஒரு கிருத்துவ பெண் தனது குழந்தைக்கு பால் வேண்டி வந்தார். அவருக்கு பால் தருவதற்கு என்னுடைய ஆட்கள் மறுத்து விட்டார்கள். அந்த குழந்தை 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்றும் நாங்கள் பால் கொடுக்கவில்லை என்றால் செத்துப் போகும் என்றும் அவள் மன்றாடினாள். தயவு செய்து கொஞ்சமாவது கொடுங்கள் என்று கேட்டிருக்கிறாள். ஸ்வாமிஜியிடம் போய்க் கேளு என்று அவளை என்னிடம் அனுப்பினார்கள். அவர்கள் செய்வதுதான் சரி என்று நான் சொல்லி விட்டேன். உனக்கு இங்கு பால் கிடைக்கப் போவதில்லை”. இந்த நிகழ்வை திரும்பத் திரும்ப சொல்லி அவர் மகிழ்ச்சியடைகிறார்.

–    தொடரும்

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான்   (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)

தமிழாக்கம் – பண்பரசு

ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?

15

பிப்ரவரி 12-ம் தேதி, புதன் கிழமை காலை. பெங்களுரு ஐ.பி.எம் நிறுவனம் கிட்டத்தட்ட துக்க மாளிகையாகவே மாறி விட்டது. அந்நிறுவனத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவில்  பணிபுரிந்து வந்த சுமார் 40  ஊழியர்கள் இரண்டே மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பட்டார்கள். மனிதவள நடவடிக்கை (Resource Action) எனப்படும் இந்த பெரும் வேலை நீக்க நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து, ஐ.பி.எம் இந்தியாவின் பல்வேறு கிளைகளிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
ஐ.பி.எம் ஆட்குறைப்பு

காலையில் பல கனவுகளுடனும், அடுத்த மாத கடன் தவணைகளை பற்றிய கவலைகளுடனும், அன்றைய வேலைக்கான திட்டங்களுடனும், நிறுவனத்தினுள் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இரண்டு மணி நேரத்துக்குள், அவர்கள் வைத்திருக்கும் அலுவலகம் சார்ந்த மடிக்கணிணி, அடையாள அட்டை இன்ன பிறவற்றை பிடுங்கி கொண்டு மூன்று மாத அடிப்படை மாத ஊதியத்தை (6 வார முழு சம்பளம்) வங்கி காசோலையாக கொடுத்து அவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தனை நாள் நிறுவனத்திற்காக தூக்கம் துறந்து, உணவை மறந்து, குடும்ப பொறுப்புகளை மறுத்து அல்லும் பகலும் செய்த பணிகள் மதிப்பின்றி குப்பை தொட்டியில் வீசப்பட்டு விட்டன.

நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையை, மனிதத் தன்மையற்ற செயலை கண்டு பலர் அதிர்ந்து போனார்கள். தங்கள் கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த இலவச காபி சேவை நிறுத்தம், இணையம் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள், இலவச போக்குவரத்து வசதிகள் மறுப்பு, ஊக்கத் தொகை இல்லை, சம்பள உயர்வு இல்லை, வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் குறைப்பு, பயணப்படி ரத்து, வெளி நாடு தினப்படி குறைப்பு என வரிசையாக ஊழியர்களை பதம் பார்த்து வந்த ஐ.பி.எம்மின் லாபவெறியின் உச்சமாக “மனிதவள சீரமைப்பு நடவடிக்கை” மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இவர்கள் உழைப்பு தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்ட பலர் வேலை இழக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்பும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் செயலபட்டு வரும் ஐ.பி.எம் சத்தமே இல்லாமல் ஒவ்வொருவராக பலரை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் இப்படி இரண்டே மணிநேரத்தில் மந்தை மந்தையாக வீட்டுக்கு அனுப்புவது இது தான் முதன் முறை. இனி மற்ற ஐடி நிறுவனங்களாலும் இந்த முறை தொடரப்படலாம். தொழில்துறையில் உழைக்கும் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் நிலைமையை இப்போது தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களும் சந்திக்கின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களை எந்த நேரத்திலும் எவ்வித காரணமும் இன்றி வீட்டுக்கு அனுப்பலாம் என்பது நடை முறை. முன்னறிவிப்பு கிடையாது, நஷ்ட ஈடு கிடையாது. இந்நிறுவனங்கள் எவ்வித தொழிலாளர் நலச் சட்டத்தையும் மதிப்பதில்லை. அவர்கள் கொடுக்கும் சில வசதிகளை காரணம் காட்டி ஊழியர்களே அவற்றுக்காக போராடுவதும் இல்லை. தொழிற்சங்கம் இல்லை என்பதை மிகவும் பெருமையாக வேறு கருதுகிறார்கள். தொழிலாளர் நல சட்டம் இல்லை, தொழிற்சங்கம் இல்லை என்பதன் தொடர்ச்சியாக இன்று வசதிகளும் இல்லை, சலுகைகள் இல்லை, ஏன் இனிமேல் வேலையே இல்லை எனும் அவல நிலை வந்திருக்கிறது.

தொழிலாளர் நலன் எனும் அடிப்படையில் அமெரிக்காவில் ஐ.பி.எம் நிறுவன ஊழியர்களுக்காக சங்கம் கட்ட முனைந்துக் கொண்டிருக்கும் லீ கோனார்ட் இந்த பெரும் வேலை நீக்க நடவடிககைகள் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவையும் தாக்கும் என எச்சரித்திருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள ஐ.பி.எம் நிறுவனங்களில் இருந்து சுமார் 13,000 பேர் வரை வீட்டுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பளபளப்பான ஐ.பி.எம்
பளபளப்பான ஐ.பி.எம்

நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் வேலை நீக்கங்கள் செய்யப்படுகின்றன என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. போதுமான லாபம் வரவில்லை என்பதால், வரவை விட செலவு அதிகமாக உள்ள பிரிவிலிருந்து ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஒரு பிரிவில் உபரியான ஊழியர்களுக்கு மறு பயிற்சி அளித்து இன்னொரு பிரிவில் வேலைக்கு அமர்த்தும் பொறுப்பைக் கூட முதலாளித்துவ நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  இந்த வேலை நீக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால், உலகமயமாக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகின் மிகவும் பழமையான மிகப் பெரிய கணிணி நிறுவனமான ஐ.பி.எம்மின் இந்தியக் கிளை பெங்களூரை, மன்னிக்கவும், இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’யை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தேவை லாபம். பெரும் லாபம் ஈட்ட உலகமயமாக்கம் கற்று தரும் விதி “குறைவான கூலிக்கு பொருட்களை செய்து அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் அதை விற்பது”. ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தியையும் சேவையையும் செய்து வந்த ஊழியர்கள் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டு  கணிசமான அளவு சம்பளம் பெற்றனர், அங்கு தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்ற கணிசமான பணத்தை நிறுவனம் செலவழிக்க வேண்டி இருந்தது. ஆனால் 1990-களின் உலகமயமாக்கல் இந்தியா, சீனாவை நோக்கி ஐ.பி.எம்மை நகர்த்தியது. இந்தியா – சீனாவில், மலிவான ஊதியத்திற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள், தொழிலாளர் நல சட்டம், ஊக்கத் தொகை, தொழிற்சங்க பிரச்சனை இல்லை. ஐபிஎம் வேலைகள் இந்நாடுகளில் குவியத் தொடங்கின.

எண்ணற்ற அமெரிக்க ஐ.பி.எம் ஊழியர்கள் கதற கதற வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அந்த வேலைகள் பெங்களூரு ஐ.பி.எம்ல் பல நூறு இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டன. தற்போது ஐ.பி.எம் இந்தியாவில் சுமார் 1 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார சரிவு, ஐ.பி.எம்மின் லாபத்தை பதம் பார்த்து வருகிறது. 2013 டிசம்பர் 31 வரையிலான நான்காவது காலாண்டில் ஐ.பி.எம்மின் மொத்த வருமானம் 5% வீழ்ச்சியடைந்து $2770 கோடியாக குறைந்தது. கணினி தொழில்நுட்பப் பிரிவின் வருமானம் 26.1% குறைந்து $426 கோடியை தொட்டது.

எனவே லாப வீதத்தை மீட்டு ஒரு பங்குக்கு $20 ஈவுத் தொகை அளிக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்காக சுமார் 100 கோடி டாலர் (சுமார் ரூ 6,000 கோடி) செலவில் மனிதவள மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளப் போகிறது என ஐபிஎம் முதன்மை நிதி மேலாளர் மார்ட்டின் ஷ்ரோடர் கடந்த மாதம் அறிவித்தார். உலகம் முழுவதும் சுமார் 13,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதுதான் அதன் பொருள். அதாவது, முதலாளிகளின் பையில் வந்து விழும் லாபத்தின் அளவு குறைந்து விடாமல் இருக்க, ஊழியர்களின் வாழ்க்கையை முடித்து வைக்கத் தயாரானது ஐ.பி.எம்.

ஐ.பி.எம்
ஐ.பி.எம்மின் மனிதவள நடவடிக்கை என்பது நிறுவனத்தின் தேவையற்ற வளத்தை வெட்டி – குப்பைத் தொட்டிக்குள் எறிவது

அதன் முக்கியப் பகுதி தான் பெங்களூருவில் நிகழ்த்தப்பட்ட மனிதவள நடவடிக்கை, அதாவது நிறுவனத்தின் தேவையற்ற வளத்தை வெட்டி – குப்பைத் தொட்டிக்குள் எறிவது. அதன்படி பெங்களூரு கணினி தொழில்நுட்பப் பிரிவின் 40% ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

ஐ.பி.எம் நிறுவனத்தில் இந்த வேலை நீக்கம் மையம் கொண்டிருப்பது கணினி தொழில்நுட்பப் பிரிவில். 1990-களில் இந்தத் துறையில் லாப வீதம் வீழ்ச்சியடைந்து வந்ததைத் தொடர்ந்து மடிக்கணினி மற்றும் மேஜைக் கணினி பிரிவை லெனோவா என்ற சீன நிறுவனத்திற்கு ஐ.பி.எம் விற்றது. எஞ்சியிருந்த, இன்டெல் கட்டமைப்பிலான சர்வர் வகை கணினிகளை ஐ.பி.எம். விற்றுக் கொண்டிருந்தது. இந்த பிரிவில் சேவை மற்றும் விற்பனை வேலைகளை புரிய ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். இப்போது, சர்வர் வகை கணினி பிரிவையும் $2.3 பில்லியன் விலைக்கு லெனோவோவிடம் விற்க முடிவு செய்ததைத் தொடர்ந்து லெனோவோவுக்கு அனுப்பப்படவிருக்கும் 7,500 ஊழியர்கள் போக எஞ்சிய சேவை, விற்பனை ஊழியர்களும், இந்த பிரிவுக்கான மென்பொருள் உருவாக்கப் பிரிவை சார்ந்தவர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில், அர்ஜென்டினாவில் 2,100 வேலை இழப்புகளும்,  பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் 1,290 வேலை இழப்புகளும் நடந்திருப்பதாக அந்த நாட்டு ஐ.பி.எம் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் பிப்ரவரி 19 அல்லது பிப்ரவரி 26 முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கான்ராட் தெரிவிக்கிறார்.

ஐ.பி.எம் நிறுவனத்தில் இன்று வேலை இழந்தவர்களில் பலர் கடந்த ஆண்டுக்கான பணி செயல்திறனில் முதன்மையாக வந்தவர்கள். முதலோ கடைசியோ ஐ.பி.எம் எனும் கசாப்பு கடையில் என்ன மதிப்பீடு வேண்டி இருக்கிறது, ஆடு என்றால் வெட்டப்பட வேண்டியது தான். இந்தியாவில் இட ஒடுக்கீடு கோரிக்கை வரும்போதெல்லாம் அம்பிகள் “திறமைக்குத் தான் முன்னுரிமை” வேண்டும் என இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடுவார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் திறமையை கழிப்பறை காகிதம் அளவுக்குக் கூட மதிக்கவில்லை, பாருங்கள் அம்பிகள் அமுக்கி வாசிக்கிறார்கள். பொங்குவதில்லை.

வேலை இழந்தவர்களில் சிலர் தங்கள் அனுபவம், தொழில்நுட்ப அறிவை வைத்து இன்னொரு வேலை பெற்று விடலாம் என நம்பிக்கையாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்களது நம்பிக்கையை அங்கீகரிப்பது போல தவிடுபொடியாக்கும் அதிகாரம் முதலாளிகளின் கையில்தான் இருக்கிறது.

சிறு வயதில் நாம் எல்லாம் படித்த எருது சிங்கம் கதையில் நான்கு எருதுகள் ஒன்றாக இருந்தவரை நெருங்க முடியாத சிங்கம், அவற்றை பிரித்ததின் மூலம் தான் எருதுகளை கொன்று புசித்தது. இந்த எளிமையான கதையின் நீதி கூட மெத்த படித்த, தொழில்நுட்ப சிக்கல்களை களையும் மூளைகளுக்கு ஏன் உறைப்பதில்லை?

வசதிகளுக்காகவும் ஐந்திலக்க சம்பளத்திற்காகவும் உரிமைகளை கோர மறுக்கும் கோழைத்தனத்தையும், உரிமைகளை கோருவதை கேலிக்குரியது என்ற நினைப்பதையும், சங்கமாக ஒன்றிணைவதை தீட்டாக கருதுவதையும் என்ன மாதிரியான அறிவு என்று சொல்வது?

முதலாளிகள் தங்களுக்குள் சங்கமாக திரண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் சின்டிகேட் இருக்கிறது. உற்பத்தியாகும் பொருளை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் குறைந்த விலையில் விற்கக்கூடாது என்பதில் அவர்கள் ஒன்றாகவே செயல்படுகிறார்கள்.

இந்நேரத்திற்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்ய பட்டவர்களின் ப்ரொஃபைல்கள் (விபரங்கள்) மற்ற நிறுவன மனித வள மேலாளர்களுக்கான பொது தகவல் தளத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். சங்கத்தை மறுக்கும் இந்த அறிவுஜீவிகள் இனி வேலை தேடும் ஒவ்வொரு நிறுவன நேர்முக தேர்விலும் ஏன் தான் பழைய நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு, தாமே குற்றவாளி என்ற நிலையில் அட்சர சுத்த விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே இவ்வளவு நடைபெற்ற பிறகாவது தகவல் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் ஊழியர்கள் தாம் எத்தகைய அபாயத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு தமது சுயமரியாதை, பணிப்பாதுகாப்பிற்காக அணிதிரளவும், போராடவும் முன் வர வேண்டும்.

–    ஆதவன்

மேலும் படிக்க

பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?

3

காஷ்மீரில் கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடந்த இழிபுகழ் பெற்ற பத்ரிபால் போலி மோதல் கொலைவழக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘விசாரித்து’ வந்த இந்திய இராணுவ நீதிமன்றம், “அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லை” எனக் குறிப்பிட்டு, இவ்வழக்கை ஊத்தி மூடிவிட்டது. காஷ்மீர் பிரச்சினையை இந்து மதவெறி, இந்து தேசியவெறி என்ற குருட்டுத்தனமான கண்ணோட்டத்தில் அணுகுவதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்தான், இந்தத் தீர்ப்பின் மோசடியைப் புரிந்துகொள்ள முடியும்.

பத்ரிபால்
இந்திய இராணுவத்தால் பத்ரிபாலில் போலிமோதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை நடத்துவதற்காகத் தோண்டியெடுக்கப்படுகின்றன. (கோப்புப் படம்)

பத்ரிபால் போலிமோதல் கொலையின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சட்டிசிங்புரா படுகொலைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இவ்விரண்டு படுகொலைகளும் அடுத்தடுத்து, ஓரிரு நாட்கள் இடைவெளியில் இந்திய அரசாலும் இராணுவத்தாலும் நடத்தப்பட்டவை. இவையிரண்டும் கிரிமினல் கொலை வழக்குகள் என்பதையும் தாண்டி, இந்திய அரசும் அதன் இராணுவமும் “தீவிரவாதிகளை ஒடுக்கி, தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது” என்ற பெயரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்திவரும் அத்துணை அட்டூழியங்களையும் குறுக்குவெட்டாக எடுத்துக்காட்டும் ஒரு சித்திரமாகும்.

மார்ச் 20, 2000 அன்று சட்டிசிங்புரா கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்த இந்திய இராணுவ உடையணிந்திருந்த கைக்கூலிகள் அக்கிராமத்தைச் சேர்ந்த 35 சீக்கியர்களைத் துப்பாக்கி முனையில் குருத்வாராவிற்கு இழுத்து வந்து படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். அப்பொழுது ஆட்சியிலிருந்த பா.ஜ.க. கூட்டணி அரசு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இப்படுகொலையை நடத்தியதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, இப்படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் பழி போட்டது. மேலும், அடுத்த ஓரிரு நாட்களிலேயே இப்படுகொலையை நடத்திய ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உளவறிந்து, அவர்களை பத்ரிபால் என்ற கிராமத்தில் சுற்றி வளைத்து, அப்பொழுது நடந்த மோதலில் கொன்றுவிட்டதாக அறிவித்தது, இந்திய இராணுவம்.

பத்ரிபால் படுகொலை நடப்பதற்குச் சற்று முன்பாகத்தான் பத்ரிபால் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊர்களைச் சேர்ந்த ஐந்து பேரைச் சுமை தூக்கும் வேலைக்கு வருமாறு கூறி இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது. இதனால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் அந்த அப்பாவிகளாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்த அப்பகுதி மக்கள், இராணுவம் கொன்று புதைத்த ஐந்து பேரின் சடலங்களையும் தோண்டியெடுத்து விசாரணை நடத்தக் கோரி போர்க்குணமிக்க போராட்டங்களில் இறங்கினர். ஆனந்த்நாக் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதையடுத்து, போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.

கொடிய அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் காஷ்மீர் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்ட ஐந்து பேரின் சடலங்களையும் தோண்டியெடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பியது, அம்மாநில அரசு. இராணுவத்தால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கிடையாது; இராணுவம் அழைத்துச் சென்ற உள்ளூரைச் சேர்ந்த அப்பாவிகள் என்பதும், இதுவொரு போலிமோதல் கொலை என்பதும் சவக்குழியிலிருந்து பிணங்கள் வெளியே எடுக்கப்பட்டவுடனேயே நிரூபணமானது. ஆனால், இராணுவ அதிகாரிகளோ குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததோடு, கொல்லப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறு மாதிரிகளை மாற்றித் தடயங்களை அழித்துவிட முயற்சித்தனர். இராணுவத்தின் இந்த மோசடி அம்பலமானதையடுத்து, மீண்டும் காஷ்மீரில் இராணுவத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதன்பின், இப்போலிமோதல் படுகொலை குறித்த விசாரணையை காஷ்மீர் மாநில அரசு 2002-இல் மையப் புலனாவுத் துறையிடம் ஒப்படைத்தது.

சி.பி.ஐ. விசாரணைக்கு இராணுவம் பல்வேறு விதங்களில் முட்டுக்கட்டை போட்டு வந்ததால், படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் கழித்துதான் கீழமை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செயப்பட்டது. இதுவொரு போலிமோதல் படுகொலை என்பதையும் கொல்லப்பட்டவர்கள் உள்ளூரைச் சேர்ந்த அப்பாவிகள் என்பதையும் உறுதி செய்த சி.பி.ஐ., 5 இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ஏழு சிப்பாய்கள் மீது ஆள் கடத்தல், படுகொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இராணுவம் தனது கொலைகார அதிகாரிகளைப் பாதுகாக்கவும், வழக்கை குழிதோண்டிப் புதைக்கவும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கவசத்துக்குள் புகுந்து கொண்டது. இச்சட்டப்படி, இராணுவ அதிகாரிகளை விசாரிக்க மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்; அப்படி அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை நடத்தியிருப்பதால், இப்புலனாய்வே சட்டத்திற்குப் புறம்பானது என வாதாடியது, இராணுவம். “இப்படுகொலை இராணுவத்தினர் தமது கடமையைச் செய்யும் போக்கில் தவறுதலாகவோ தவிர்க்கவியலாமலோ நேர்ந்துவிட்ட மரணம் அல்ல; சதி செய்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை வராது” என ஆதாரங்களை முன்வைத்து இராணுவத்தின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியது, சி.பி.ஐ. ஆனால், வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்றம், “இவ்வழக்கைக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதா, இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா” என முடிவெடுக்கும் அதிகாரத்தைக் குற்றமிழைத்த இராணுவத்திடமே ஒப்படைத்துத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அந்நீதிமன்றம் இந்த வழக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் வராது என 2007-இல் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இராணுவம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கு விசாரணையை வேண்டுமென்றே ஐந்தாண்டுகள் இழுத்தடித்த உச்ச நீதிமன்றம் 2012-இல், “இவ்வழக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் வருமென்று” இராணுவத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததோடு, இராணுவத்தின் விருப்பப்படி வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவது கட்டப்பஞ்சாயத்தைவிடக் கேவலமானது. பத்ரிபால் வழக்கில் சாட்சிகளாக நிறுத்தப்பட்டிருந்த கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே, விசாரணையை 300 மைல் தொலைவு தள்ளி, ஜம்மு பகுதியில் நக்ரோடா எனும் ஊரில் அமைந்துள்ள பாசறையில் நடத்த முயற்சித்தது, இராணுவம். இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த பிறகு விசாரணை அவந்திபோரா பாசறைக்கு மாற்றப்பட்டது. 50 சாட்சிகளை விசாரணைக்கு அழைத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது, இராணுவம். இப்படுகொலை நடப்பதற்கு முன்பு இறந்து போனவர்கள்கூடச் சாட்சியமாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதிலிருந்தே இராணுவத்தின் விசாரணை எந்தளவிற்கு மோசடித்தனமாக நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எந்த அடிப்படையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படாமல், அவை இரகசியம் என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பத்ரிபால் படுகொலையை நேரடியாக நடத்திய இராணுவம், 35 சீக்கியர்களைக் கொன்ற சட்டிசிங்புரா படுகொலையைத் தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி வந்து, பணத்திற்காக இராணுவத்தின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் கூலிப்படைக் கும்பலைத் தூண்டிவிட்டு நடத்தியது. காஷ்மீரில் பாக். தலையீடு இருப்பதை இந்தியாவுக்கு வரவிருந்த கிளிண்டனுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தக்க ஆதாரத்துடன் நிரூபிப்பதற்காக, பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து நடத்தியதுதான் சட்டிசிங்புரா படுகொலை; அதனைத் தொடர்ந்து நடந்த பத்ரிபால் படுகொலை பா.ஜ.க. அரசின் குட்டு உடைந்து போகாமல் காப்பதற்காக அரங்கேற்றப்பட்ட போலிமோதலாகும்.

கண்டன ஆர்ப்பாட்டம்
பத்ரிபால்போலிமோதல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை விடுவித்த தீர்ப்பைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பத்ரிபால் வழக்கில் பல்வேறு சாட்சியங்களோடு நிறுத்தப்பட்டிருந்த அதிகார வர்க்கக் குற்றவாளிகள் – ஒரு பிரிகேடியர், ஒரு லெப்டினென்ட் கர்னல், இரண்டு தளபதிகள், ஒரு சுபேதார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் என்றால், சட்டிசிங்புரா படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் காப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முகம்மது சுஹைல் மாலிக், வாசிம் அகமது என்ற இருவரை லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி சிறைக்குள் தள்ளியது இராணுவம். ஆனாலும், இவ்வழக்கை விசாரித்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம், அவர்களுக்கும் இப்படுகொலைகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்தது.

பத்ரிபாலும், சட்டிசிங்புராவும் காஷ்மீரில் விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவங்கள் அல்ல. பணப்பொதி பரிசுகளைப் பெறுவதற்காகவும், பதவி உயர்வுக்காகவும் அங்கு இராணுவம் நடத்தியிருக்கும் படுகொலைகள் ஏராளம். காஷ்மீர் இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட பின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்துமே போலிமோதல் படுகொலைகள்தான். இந்தப் பிணங்களின் எண்ணிக்கைக்கு அப்பால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செயப்பட்டுக் கொல்லப்பட்டோர், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்கள், அரசியல் ஆர்ப்பாட்டங்களின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள் என அரசுப் படைகளின் பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு இலட்சத்தைத் தொட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இத்துணை பச்சைப் படுகொலைகளை, பஞ்சமா பாதகங்களை காஷ்மீரில் ஏன் கட்டவிழ்த்துவிட வேண்டும் எனக் கேள்வி கேட்டால், “தேசிய ஒருமைப்பாடு’ எனப் பதில் அளிக்கிறார்கள், பார்ப்பன பாசிஸ்டுகள். அதாவது “தேசிய’ ஒருமைப்பாடு என்பது படுகொலைகளை நடத்தவும், காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கவும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடவும் அரசுப் படையினருக்குக் கொடுக்கப்பட்ட லைசென்சாகிவிட்டது. இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடும் அரசுப் படையினரைப் பாதுகாக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம் உள்ளிட்ட பல கருப்புச் சட்டங்கள் காஷ்மீரில் அமலில் உள்ளன. இச்சட்டங்களை நீக்கக் கோரினால், “அது தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு வரும் இராணுவத்தினரின் உத்வேகத்தைக் குலைத்துவிடும்; தேசிய ஒருமைப்பாட் டுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்” எனப் பார்ப்பன-பாசிச கும்பல் ஊளையிடுகிறது. அது மட்டுமின்றி, அதற்காகக் குரல் கொடுப்பவர்களைத் தேச விரோதிகளாக, தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக முத்திரை குத்துகிறது.

பீற்றிக் கொள்ளப்படும் இத்தேசிய ஒருமைப்பாடு காஷ்மீரில் துப்பாக்கி முனையில்தான் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அம்மாநில மக்கள் சுயநிர்ணய உரிமை கோரி நடத்திவரும் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன. 2007-இல் வெளிவந்த ஒரு புள்ளிவிவரம் காஷ்மீரில் 3,37,000 இராணுவத் துருப்புகளும், 60,000-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீசு படையினரும் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இவை தவிர, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவு, எல்லைப் பாதுகாப்புப் படை என ஏராளமான அரசு துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. கையளவேயான தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இத்துணை இலட்சம் துருப்புகளைக் குவிக்க வேண்டிய அவசியமென்ன? இந்திய அரசும், இராணுவமும், பார்ப்பன பாசிச கும்பலும் தீவிரவாதிகளைவிட, சுயநிர்ணய உரிமை கோரும் அம்மக்களைக் கண்டுதான் அஞ்சுகிறது; அரசு பயங்கரவாதக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் அவர்களின் நியாயமான, போர்க்குணமிக்க போராட்ட உணர்ச்சியைக் கண்டுதான் பயப்படுகிறது. அதனால்தான் இந்திய இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் மறுக்கிறது; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறது.

– குப்பன்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !

15

மிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரத்திற்கு அருகே அமைந்துள்ள அகரம் சேஷசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் புத்த மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்துள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைத்து வரும் தீண்டாமைக் கொடுமைகளுள் முக்கியமானது அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும். “பொதுக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடுவதற்கு உரிமை கிடையாது. அக்கோவிலின் தேர் சேரிக்குள் நுழையாது” என அக்கிராமத்தில் இன்று வரையிலும் தீண்டாமை பச்சையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மதம் மாறும் முடிவு
மதம் மாறும் முடிவை பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கும் சேஷசமுத்திரம் தாழ்த்தப்பட்டோர்

இத்தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட சாதியினர், காலனியில் தமக்கென ஒரு கோயிலைப் பத்தாண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொண்டனர்; அக்கோயிலுக்கென ஒரு தேரையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். இந்தத் தேர் கோயிலிலிருந்து புறப்பட்டு தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பைச் சுற்றிவிட்டு மீண்டும் நிலைக்கு வர வேண்டுமென்றால், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிக்கும் காலனிக்கும் பொதுவாக உள்ள தார்ச்சாலை வழியாகச் சென்றுவர வேண்டும். இந்த நிலையில் ஆதிக்க சாதிவெறியர்கள், “தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்” எனக் கட்டுப்பாடு விதித்து, தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமியையும் தீண்டத்தகாததாக ஆக்கினர்.

2012-இல் இத்தேரோட்டம் குறித்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆதிக்க சாதிவெறி பிடித்த கும்பலின் எதிர்ப்பை ஒடுக்காத தமிழக அரசு, கிராமத்தில் நிலைமை பதற்றமாக இருப்பதைக் காட்டி, தேரோட்டத்திற்குத் தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தாழ்த்தப்பட்டோர் வெற்றி பெற்றபோதும், ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாகவே அரசு நடந்துகொண்டதால் தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

அம்மன் கோவில் தேர் தீண்டாமை
தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட அம்மன் கோவில் தேர்.

இந்த நிலையில் தமது வழிபாட்டு உரிமையை அங்கீகரிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட மறுக்கும் தமிழக அரசோ, உண்ணாவிரதமிருந்த 25 பெண்கள் உள்ளிட்டு 42 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ தமது உரிமைக்காக அமைதியான முறையில் போராடிய அவர்களுக்கு உடனடியாகப் பிணை வழங்க மறுத்தது. இப்படிப் போராடிப் போராடி தோற்கடிக்கப்பட்ட நிலையில்தான், அத்தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி புத்த மதத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். “எங்கள் காலத்தில் தீண்டாமையை ஒழிக்க முடியாது; மதம் மாறினால் எங்கள் சந்ததியினராவது நிம்மதியாக இருப்பார்கள்” என விரக்தியோடு கூறுகிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன்.

சேஷசமுத்திரம் தமிழகத்தின் விதிவிலக்கல்ல. தமிழகமெங்கும் இன்றும் பல்வேறு வடிங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதை; தீண்டாமை பிரச்சினையில் அரசு தாழ்த்தப்பட்டோரின் முதுகில் குத்துவதை; தமிழகத்தில் சமூக நீதி கோலோச்சுவதாகக் கூறப்படும் மோசடித்தனத்தைப் பளிச்சென அம்பலப்படுத்திக் காட்டும் இன்னுமொரு உதாரணம். ஆனால், இந்த உண்மை மூடிமறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் நாடகக் காதல் நடத்துவதாகவும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆதிக்க சாதியினர் கூப்பாடு போட்டு வருவது எத்தகையதொரு மோசடி!
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________