Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 811

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

29

vote-012அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.

ஆனால், என் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.

ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருத்தி.

ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் “கெட்டிக்காரி” என்ற பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.

இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.  இந்த பதிவை எழுதும் பொது ஏனோ என்னால் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Oceanic Viking என்ற ஓர் உடையும் தருவாயிலுள்ள கப்பலில் ஈழத்தமிழர்கள் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.

இந்த கப்பலில் வந்தவர்களில் இருவர் உரிய மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததால் இறந்தார்கள் என்பது செய்தி. இறந்தவர்களில் ஒருவர் 29 வயது உடையவர். இரண்டுநாட்களாக இரத்தவாந்தி எடுத்தே உயிரை விட்டார். மீதமுள்ளவர்கள் கடல் என்ற தண்ணீர் தேசத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யவில்லை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.

போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?

வீட்டில் எல்லோருக்கும் எப்படி தப்பிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.

நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எங்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? வேறெப்படி, படகில் தான் (ஈழத்தில் வள்ளம் என்ற சொல் தான் வழக்கம்). படகு பயணம் ஒன்றும் ஆபத்து இல்லாதது அல்ல. எனக்கு மருந்துக்கும் நீச்சல் தெரியாது. படகு நடுக்கடலில் கவிழ்ந்தால் பரலோகம்தான்.

அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, படகு நடுக்கடலில் கவிழ்திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர் யாராவது நீந்தி வந்தால்தான் உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ்நாடு இல்லையென்றால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து சுவாசப்பையின் காற்றை கடல் நீருக்கு கொடுத்து, காற்றுக்குப் பதில் கடல் நீரை சுவாசப்பை முழுக்க நிரப்பி மூச்சுக்காற்றுக்கு திணறி, மூச்சடைத்து கைகால்களை உதறி, உதறி செத்துப்போவோம். பிறகு, எங்கள்  உடல் மீனுக்கு இரையாகும். இதெல்லாம், தெரிந்தே சமுத்திரத்தை தாண்டிக் கடக்கும் முயற்சியில் இறங்கினோம். சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரமும் வாய்க்கால் என்பது இதைத்தானோ?

கடற்படையின் கண்களில் இருந்து தப்பிப்பது என்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதனால், படகில் ஏறி தப்பிக்க மாதக்கணக்கில் கரையோரத்தில் ஒவ்வொரு ஊராக அலைந்தோம். அப்படி அலைந்தபோதுதான் எங்கள் மீது வீசப்பட்ட ஓர் விமானக்குண்டில் என் மைத்துனரின் கால் பறிபோனது. குண்டு போட விமானம் செங்குத்தாய் விரைந்து வர எங்கள் மீது தான் குண்டு விழப்போகிறது என்று சுதாகரித்து ஓட, எங்களின் பிடரிக்குப் பின்னால் குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. கொதிக்கும் இரும்புத்துண்டுகள் எங்களை சுற்றி நெருப்பு மழைபோல் சிதறிக்கொண்டிருந்தது.

அப்படி சிதறிய ஓர் துண்டுதான் எனக்கு முன்னால் தன் சின்னக்கால்களால் ஓடிக்கொண்டிருந்த என் மைத்துனரின் பின் முழங்காலுக்கு கீழே கிழித்து உள்ளே சென்றது. காலிலிருந்து இரத்தம் வழிகிறது என்று நான் நிலைமையை உணருமுன்பே அந்த குழந்தை கால்கள் குத்தி நிலத்தில் விழுந்தது. அருகிலுள்ள சீமெந்து கூரையுள்ள ஓர் மலசல கூடத்தின் உள்ளே காயம் பட்டவரை கிடத்தி கிடைத்த ஏதோ ஒரு அழுக்கு துணியால் காயத்தை இறுக்கி கட்டிவிட்டு, மீண்டும் அவரை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தோம்.

அதன் பிறகு இந்தியா, தமிழ்நாடு செல்லும் முயற்சியை கைவிட்டு செத்தாலும் ஈழத்திலேயே சாகலாம் என முடிவெடுத்து ஊரில் தங்கிவிட்டோம். ஆனால், நிலைமைகள் மிக மோசமான பின் இனிமேல் ஒன்று வாழவேண்டும் அல்லது செத்தே ஆக வேண்டும் என்பது விதியானது. எங்களுக்கு தெரிந்த ஒருவரின் படகில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம். படகு கிளம்பிவிட்டது. படகு புறப்படத் தொடங்கியதிலிருந்து கடற்கரையும் அங்கேயிருந்த மீதமுள்ள என் இனம், சனம் எல்லோரையும் மிக விரைவில் திரும்பி வந்து பார்ப்பேன் என்று ஏதோ ஓர் நம்பிக்கையுடனும், அவர்கள் நிச்சயமாய் உயிரோடிருப்பார்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் அலைமேல் படகில் கிடந்தது. என் மண்ணின் எல்லை தாண்டி, கடல் கடந்து  தமிழ்நாட்டு கடற்கரையில் கால்வைத்தவுடன் அந்த மண்ணோடு சேர்ந்து அகதி என்ற பெயர் என்மீது ஒட்டவில்லை. அது முத்திரையாய் குத்தப்பட்டது. இந்த அகதிகளை சிலர் தரம் தாழ்த்தி அற்ப சந்தோசப்பட நினைத்தால் “கள்ளத்தோணிகள்” என்றும் அழைப்பதுண்டு.

பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர், “சிலோன் அகதிகள்”. நாங்கள் தமிழ்நாட்டில் கால் வைத்த போது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல்தான் வரவேற்கப்பட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாதவைகளில் அதுவும் ஒன்றாய்ப்போனது. எங்களை விழிகள் விரியுமளவிற்கு பார்க்கும்படி வேடிக்கைப்பொருள் ஆனோம். எங்களின் பசி, தாகம் பற்றி அக்கறையாய் விசாரிக்கப்படாதது ஏனோ மனதை காயப்படுத்தியது.

அனிச்சை செயலாய் அப்போது தமிழ்நாட்டில் இருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் கண்களில் இடறினோம். “வள்ளம் வந்திருக்கு எண்டு சொன்னாங்கள். அதான் ஆராவது எங்கட ஊராக்கள் இருக்கினமோ எண்டு பாக்க வந்தனான்” என்றார். ஏதோ திக்கு தெரியாத காட்டில் திசைகாட்டி போல் இருந்தது அவரின் ஊர்ப்பாசம். படகில் வந்ததில் ஏறக்குறைய அவரவர் வாந்தியில் அவரவரே நனைந்து, ராட்சத அலைகளில் குளித்து, அதையே குடலை பிடுங்குமளவிற்கு விழுங்கி குற்றுயிராய் தமிழகத்தில் நாங்கள் கரை ஒதுங்கியத்தின் அவலத்தை அவரின் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருப்பார் போலும்.

அவர் முதலில் கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னை அந்த சந்தர்ப்பத்தில் கண் கலங்க வைத்தது. “களைச்சுப்போய் இருக்கிறியள். ஏதாவது சாப்பிட்டீங்களோ?”. ஓர் அகதியின் வலி இன்னோர் அகதிக்குத்தான் புரியுமோ? பசி வயிற்றை பிடுங்கினாலும், அதை வெளியே சொல்லமுடியாதவாறு தன்மான உணர்வு தடுக்க, இல்லை பசிக்கவில்லை என்று சொல்லிவைத்தோம். அவசரமாய், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னோம். தன் வீட்டுக்கு வாருங்கள் என்று எங்களை அனுமதி கேட்காமலேயே கூட்டிச்சென்றார்.

அவரது வீட்டைப் பார்த்தபோது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ஊரில் எவ்வளவு வசதியாய் வாழ்ந்த மனிதர் இப்போது எலிவளையில் ஒண்டிக் கொண்டிருந்தார். ஒருவாறு, சிரம பரிகாரம் செய்து, உடைமாற்றி மீண்டும் வந்த இடத்திற்கே போகிறோம் என்றவர்களை வற்புறுத்தி ஓர் ரெஸ்டாரண்டில் சாப்பிடவைத்து சந்தோசப்பட்டார். பிறகு, இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் அனுபவத்தை கொண்டு விளக்கினார்.

மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி, அதிகாரிகளின் வருகைக்காய் காத்திருந்தோம். நீண்ட நேரத்திற்குப்பின், அதிகாரிகள், காவல்துறை இன்னும் யார் யாரோ வந்தார்கள். அவர்களின் சம்பிரதாய அகதி விசாரணையை செய்து முடித்தார்கள். பிறகு, எங்களையும் எங்களோடு வந்த சிலரையும் ஓர் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இரவிரவாய் எங்கெங்கோ அடித்துப் பெய்யும் மழையில் கொண்டு திரிந்தார்கள். இடையிடையே நிறுத்தி காவல் துறையினர் குளிரைப் போக்க தாங்கள் மட்டும் தேநீரும் குடித்து, சிகரெட்டும் பற்றவைத்துக் கொண்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது. ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் இறங்கி ஏறும்போதும் எங்கள் தலைகளை பொறுப்புணர்வுடன் எண்ணி, எண்ணிப்பார்த்து தங்கள் கடமையுணர்வால் வேறு எங்களை கண் கலங்க வைத்தார்கள். ஒருவாறு, விடிந்தபின் ஓர் அகதிமுகாமில் வண்டி நின்றது. எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

வண்டியிலிருந்து இறங்கி நின்று என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும் என்று வெடிமருந்தின் மணமில்லாத அந்த காற்றை சுகமாய் என் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டேன். ஆனாலும், அடுத்த கணமே என் அவலநிலை என்னை யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. அந்த அற்ப கணநேர சந்தோசமும் எனக்குள் உறைந்து போனது. மறுபடியும் உணர்வுகள் மரத்துப்போக, பார்வையை சுழல விட்டபோது ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழுமாய் கண்களையும், காதுகளையும் வலியாகவும், மகிழ்ச்சியாகவும் இனம்புரியாத ஓர் உணர்வு தீண்டியது.

பொட்டல் வெளியில் என் பார்வை தீண்டிய தூரம் வரையில் நிறைய ஓலைக்குடிசைகள் (கிடுகுகளால் வேயப்பட்டது), அவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் நிறையவே மனித தலைகள். இனிமேல் இழப்பதற்கு ஏதுமில்லாத மனிதர்கள். அந்த ஒற்றை குடிசையை தவிர ஒதுங்க கூட இடமில்லாதவர்கள். சொந்தமண்ணில் எது, எதுக்கெல்லாமோ சொந்தக்காரர்கள், கெளரவ மனிதர்கள். தஞ்சமடைந்த பூமியில் ஏதுமற்ற ஏதிலிகள். இவர்களின் பெயர் அகதிகள். இவர்கள் ஒதுங்கிய இடத்தின் பெயர் தான் அகதி முகாம்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

24

சாதி

பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும்.

பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத்தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை.

ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது.

இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.

தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேன்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லிதான்.

இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள். அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்டும் உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.

குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வறுமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.

இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசத்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.

வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில்தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில்தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால்தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ  எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும்தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நண்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நண்பன் சரவணரகுபதியும் அவனது நண்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயணத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயணிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயணிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.

திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நண்பன் சரவணனும் அவன் நண்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இணைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம்.

அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவேதான் மதியத்துக்கும் இதுவேதான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும்தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.

இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம்தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளன. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.

பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை.  உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல்தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.

நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நண்பன் சொன்னான் –  தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும்  நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.

இது போன்ற சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகளோடு இணைந்துதான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோம்.

இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயணத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.

தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.

தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயண தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள்தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.

உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமாணம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில்தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியேதான் தொடர்கிறது.

ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயணம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோமென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.

இப்போது இதன் பின்னணியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோதான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.

அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.

கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள் வருவதும் என்று ஓட்டுப் பொருக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில்தான் சாதி அரசியலே நடக்கிறது.

அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.

இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான்.  அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நண்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோம்.
_______________________________

இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன். சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள் சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.

அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?

சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!

313

ஜெயராம்

நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?

நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை. பத்திரிகைகள், தமிழ் சானல்கள் எல்லாம் இதை உலக மகா பாதகம் போல கட்டியமைத்தன. ஈழத்தமிழன் சாவதை வேடிக்கை பார்த்த தமிழர் தளபதிகள் எல்லாம் அறிக்கைகளின் மூலம் களத்திலறங்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.

பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு புறநானூற்றுத் தமிழனின் பெருமையை மீட்டு வந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் இந்தப்பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. இதையே பெரியதிரையில் கோடம்பாக்கம் செய்து வருகிறது. கோடம்பாக்கத்து கவிராயர்கள் எல்லாம் அர்த்தமில்லாத லாலாக்கு டோல்டப்பிமா பாடல்களையும், அப்பட்டமான ஆங்கில வரிகளுக்கிடையில் சில தமிழ்வார்த்தைகளைச் சேர்த்தும் பாடுகிறார்கள். ரிலையன்ஷ் பிரஷ் பெயர்ப்பலகை ஆங்கிலத்திற்கு 90 சதவீதத்தையும், தமிழுக்கு போனால் போகிறதென்று பத்தையும் ஒதுக்கியிருக்கிறது.

தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் வீரத்தம்பிகள் தாக்கியிருக்க வேண்டுமென்றால் இவர்களைத்தானே பின்னியிருக்கவேண்டும்? அத்தகைய வீரமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பதைவிட அப்படி சிந்திப்பதற்கு மூளைகூட அனுமதி தராது. அப்படி சுயதணிக்கை செய்து கொண்டு தமிழைக் கொல்லும் தளபதிகளின் தயவில் வெற்றுக்கூச்சல் போடுவதுதான் அண்ணன் சீமானின் அரசியல் போலும். ஆனால் அந்த வெற்றுக்கூச்சலைக்கூட தெற்காசிய முதலாளியாகிவிட்ட கருணாநிதி அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விசயம்.

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?

மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக்  உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? விவேக்கின் இந்த நகைச்சுவைக்கு ஒரு சமூக அடிப்படையும் இருக்கத்தான் செய்கிறது. “மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது.

தமிழனைக் காட்டானாக சித்தரிப்பதைவிட இது கேவலமில்லையா?  இதையெல்லாம் ஒரு புகாராக மலையாளிகள் என்றும் சொன்னதில்லையே? மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் தமிழர்கள் மலையாளிகளின் ஆளுமையையும், பண்பையும் கேலி செய்வதற்கு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது நகைச்சுவையாகவும் பின்னது காழ்ப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.

வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்.

ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள். பலான மலையாளப்படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள். அதுவும் மாமனாரின் இன்ப வெறி, காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன். தமிழ், மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம் இப்படித்தானே இருக்கிறது?

இன்னும் கேராளவின் கிரன் தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் ஓடுகின்றன. பாடல் போட்டிகளுக்கு வரும் மலையாளப்பாடகர்கள் பிரபலமான தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். 80,90களின் சாதாரண மலையாளிகளது விதம்விதமான வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் நல்ல மலையாளப்படங்களின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்தை தமிழ் மசாலா ஃபார்முலாவிற்குள் கொண்டு வந்ததுதான் தமிழ் படங்கள் கேரளத்திற்கு செய்திருக்கும் தொண்டு. தமிழில் கிளாமர் போட்டியில் தோல்வியடைந்த நடிகைகளை மலையாளத் திரையுலகம் குடும்பப் பாங்கானா பாத்திரங்களுக்கு பயன்படுத்துமென்றால், மலையாளத்தில் குடும்பப் பாங்கான பாத்திரங்களை நடிக்கும் இளம் நடிகைகளை கவர்ச்சி கன்னிகளாய் பிரபலமாக்குவதுதான் தமிழ்த் திரையுலம் செய்யும் எதிர்வினை.

சித்ரா, சுஜாதா உள்ளிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான பின்னணிப் பாடகர்கள் தமிழ்ப்படங்களுக்காக பாடியிருக்கிறார்கள். அது போல தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவும் கேரளத்தில் பிரபலம். தமிழக அரசியல் செய்திகள் கூட மலையாளப் பத்திரிகைகளில் முதன்மையாய் இடம்பெறும். கேரளச்செய்திகள் அப்படி இங்கு இடம்பெறாது. ஜெயா, கருணாநிதி பற்றி சராசரியான மலையாளி அறிவானென்றால் இங்குள்ளோருக்கு நம்பூதிரிபாடும், நாயனாரும், கருணாகரனும், அச்சுதானந்தனும் அதிகம் தெரியாது என்பது உண்மையுங்கூட.

மொத்தத்தில் கேரளம் பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு வகைகளுக்கும் தமிழகம் என்ற பெரிய அண்ணனைத் தொடரும் சிறிய தம்பியாகத்தான் வாழ்கிறது. அதனால்தான் தமிழகத்தைப்பற்றி ஒரு சராசரியான மலையாளி அறிந்து வைத்திருக்கிறான். கொச்சி துவங்கி திருவனந்தபுரம் வரை நீங்கள் தமிழில் பேசியபடி எங்கும் செல்லலாம். வரலாற்றிலும், மொழியிலும், தேசிய இனத்திலும் தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்த இனம்தானே அது? அப்போது தமிழும் கூட ஒரு தேசிய இனமாக தலையெடுத்திருக்கவில்லை. அத்தகைய தொல்குடி உறவு இன்றும் தொடர்கிறது என்பதை வெத்துவேட்டு தமிழ் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நல்லது, கெட்டதுகள் எல்லாம் எல்லா தேசிய இனங்களுக்கும் சொந்தம்தான். ஒன்று முன்னேறியது, மற்றது பிற்போக்கானது என்றெல்லாம் இல்லை. தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை. கேரளத்தில் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கே கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதும், சங்கராச்சாரியை கைது செய்வதும் நடக்க முடிந்தது என்றால் கேரளத்தில் நடக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்க உரிமை கேரளத்தில் பலம் வாய்ந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை.

அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். கேரளத்தில் கல்வியறிவும், பெண்ணுரிமையும் அதிகம் என்றால் தமிழகம் பெண் சிசுக்கொலைகளோடுதான் இன்னும் இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி இரண்டு மாநிலங்களும் மற்றதின் நல்ல விசயங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கின்றன.

முல்லைப்பெரியாறு பிரச்சினை முற்றிலும் கேரள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. அதற்கு கணிசமான மக்கள் பலியாகியிருந்தாலும் அதை வைத்து மட்டும் மலையாளிகளை எதிரிகளென்று சித்தரிப்பது அயோக்கியத்தனம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமல்படுத்தினால் அணையின் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறிய சில ஆயிரம் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதற்காகவே கேரள அரசியல்வாதிகள் அதை அயோக்கியத்தனமாக எதிர்க்கிறார்கள். இதை வைத்து தமிழகத்தின் மீதான வெறுப்பை கேரள மக்களிடம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். அனால் கேரளத்தின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தை புறக்கணித்து விட்டு ஒரு நாள் கூட வாழ முடியாது.

எல்லா உயிராதாரப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளத்திற்கு செல்கின்றன. அதை வைத்து கேரளத்தின் எல்லையில் இருக்கும் தமிழக விவசாயிகள் பயனடைகிறார்கள். நாமக்கல்லின் கோழிக்கும் முட்டைக்கும் கேரளாவும் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இதை வைத்து கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டுமென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத்தினால் முதலில் பாதிக்கப்படுவது இங்குள்ள விவசாயிகள்தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்களிடம் தமிழகத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது. அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் கேரள போலிக் கம்யூனிஸ்டுகளை முல்லைப்பெரியாறு விசயத்தில் அம்பலப்படுத்துவதும் அவசியம்தான்.

நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசிபட்சமாக நடத்தலாம் என்றாலும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழனவாதிகளும் – வெறியர்களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறியடிக்க வேண்டும்.

எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.

விடுதலை இராசேந்திரனும், மணியரசனும் ஒரு பெரும் மலையாள அதிகாரிகளின் பட்டியலை வைத்து அப்போது இதை மாபெரும் கண்டுபிடிப்பாகவும் ஈழத்தின் துயருக்கு முக்கிய காரணமென்றும் சித்தரித்து வந்தார்கள். ஒரு அதிகார வர்க்கத்தின் இயங்குதன்மையைக் கூட புரிந்து கொள்ளாத இவர்களது முட்டாள்தனம் ஆச்சரியமளிக்கக் கூடியது. பாசிச ஜெயாவை வைத்து புலிகளுக்கு தப்பான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பின்பு தங்களது தவறுகளை மறைக்க இப்படி மலையாள துவேசத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை துரத்த வேண்டுமென்று பெ.மணியரசன் தலைவராக இருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யார்? சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இங்கிருக்கும் மலையாளிகளில் ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர்க்கடையில் வேலை செய்பவர்களாகவும், பெண்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களையா துரத்த வேண்டும்?

குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர். முன்னர் போல வளைகுடா நாடுகளுக்கு சென்று பிழைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் இத்தகைய இடப்பெயர்ச்சி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா மாநில மக்களுக்கும் ஏன் தமிழர்களுக்கும் கூட உண்டு.

சென்னையில் தேநீர்க்கடை வைத்திருக்கும் மலையாளிகளும் அங்கே வேலை செய்யும் மலையாளிகளும் அல்லும் பகலும் கடின உழைப்புடனே நாட்களைத் தள்ளுகிறார்கள். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு வரை ஒயாது. குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்கு எந்திரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு சென்னை மாநகரம் முழுமைக்கும் எல்லா நேரமும் இனிய தேநீர் வழங்கும் இந்த மக்களைப் பார்த்து வெளியேற்றுவோம் என்று சொன்னால் அந்த முண்டங்களை எதைக் கொண்டு அடிப்பது?

கையேந்தி பவனில் சம்சாவும், ஜிலேபியும் விற்கும் இந்தி பேசும் சிறுவனும் அம்பானியும் ஒரே தேசிய இனமா என்ன? இப்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையில் பல இன மக்களும் கலந்து விட்டார்கள். இரவுக் காவலுக்கு நேபாளத்துக் கூர்காக்கள், குழிதோண்ட கன்னட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பீகார் இளைஞர்கள், காங்கீரீட் கலவைக்கு தெலுங்கு தொழிலாளர்கள், பாலீஷ் வேலைக்கு ராஜஸ்தான் தொழிலாளிகள், ஒட்டல் வேலைக்கு வடகிழக்கு இளைஞர்கள் என்று பார்த்தால் இங்கே மட்டுமல்ல முழு தமிழக நகரங்களிலும் இந்தக் கலப்பு நடந்தேறி வருகிறது. இதேபோல தமிழக தொழிலாளிகளும் கேரளா, பெங்களூர், மும்பை என்று செல்கிறார்கள்.

இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத் திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின் விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

இந்தியாவில் மொழிகளும், தேசிய இனங்களும் விதவிதமாக பிரிந்திருந்தாலும் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாக ஒன்றாக இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தேசிய இன அடையாளங்களைக் கடந்து ஒன்றானால்தான் அதே அடையாளமின்றி வர்க்க ரீதியாக சுரண்டும் முதலாளிகளை எதிர்க்க முடியும். சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.

அலைந்து திரிந்து ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி சூடாக, ஸ்டாராங்காக ஒரு தேநீர் குடிக்கும் போது அது நமது சேட்டன் போட்ட தேநீர் என்ற உழைப்பின் சுவையை நீங்கள் உணர்ந்திருந்தால் இந்த மலையாள துவேசத்தை வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டும். மலையாளிகளைத் துரத்தவேண்டும் என்று எக்காளமிடும் சிறு கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இது தேநீருக்கு செய்யப்படும் நன்றிக்கடன் அல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டிய வர்க்க ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் இந்தியாவின் எல்லாச்சாபக்கேடுகளையும் வீழ்த்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.

ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

12

“காக்கிச்சட்டை கிரிமினல்கள்”என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, அது பற்றி முகம் சுளிப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் (மறைந்து போன) ருச்சிகா கிர்ஹோத்ரா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.

ருச்சிகா கிர்ஹோத்ரா 1990-இல் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகர் அருகிலுள்ள பஞ்சகுலா பகுதியில் வசித்து வந்தார்.  அச்சிறுமிக்கு, எதிர்காலத்தில் தானொரு மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவு இருந்ததோடு, அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அச்சமயத்தில்,எஸ்.பி.எஸ்.ரத்தோர் அரியானா மாநிலக் கூடுதல் போலீசு தலைமை இயக்குநராகவும், அரியானா மாநில டென்னிஸ் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தான்.  “ருச்சிகாவைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கிக் காட்டுவதாக” அச்சிறுமியின் பெற்றோர்களிடம் கூறிவந்த ரத்தோர், இது தொடர்பாகத் தன்னை வந்து சந்திக்க ருச்சிகாவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

இதன்படி, ருச்சிகா தனது தோழி ஆராதனாவை அழைத்துக்கொண்டு, ஆகஸ்டு 12, 1990 அன்று ரத்தோரைச் சந்திப்பதற்காக, அவனது அலுவலகத்திற்குச் சென்றார். ஆராதனாவை ஏதோவொரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிய ரத்தோர், அதன்பின் சிறுமி ருச்சிகாவிடம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்கினான்.  ஆராதனா போன வேகத்திலேயே திரும்பிவிட்டதால், ரத்தோர் தனது வக்கிர விளையாட்டை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.  ரத்தோரின் வக்கிரப் புத்தியைப் புரிந்து கொண்ட ருச்சிகா, தனது தோழியோடு தப்பித்து வெளியே ஓடிவிட்டார்.

ருச்சிகா, சம்பவம் நடந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ரத்தோரின் பாலியல் தாக்குதலைத் தனது பெற்றோரிடமும், தனது தோழி ஆராதனாவின் பெற்றோரிடம் கூறினார்.  அவர்கள் இது குறித்து மாநில அரசிற்கும், போலீசு உயர்அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர்.  அப்பொழுது அரியானா மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக இருந்த ஆர்.ஆர்.சிங் இப்புகார் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த மாதமே அது குறித்த அறிக்கையை மாநில அரசிடம் அளித்தார்.

அவ்வறிக்கை ருச்சிகாவின் புகாரை உண்மையென உறுதிப்படுத்தியிருந்த போதும், அரியானா மாநில அரசு அவ்வறிக்கையின்படி ரத்தோரின் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அறிக்கையினை வெளியிடவும் மறுத்துவிட்டது.  அதேசமயம், ரத்தோர் தனது வரம்பற்ற போலீசு அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ருச்சிகாவின் குடும்பத்தை வேட்டையாடத் தொடங்கினான்.

ருச்சிகா ‘ஒழுங்கீனம்’ காரணமாகப் பள்ளியில் இருந்து வெறியேற்றப்பட்டார்.  அவரது சகோதரன் ஆஷு கிர்ஹோத்ரா மீது 11 திருட்டு வழக்குகள் போடப்பட்டன.  ரத்தோர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுமாறு ருச்சிகா, ஆராதனாவின் பெற்றோர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராலும், ரத்தோர் ஏவிவிட்ட குண்டர்களாலும் மிரட்டப்பட்டனர்.  ஆஷு கிர்ஹோத்ரா சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டார்.  இந்தத் துன்புறுத்தல்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும் பொறுத்துக் கொள்ள முடியாத பதி னான்கே வயதான சிறுமி ருச்சிகா 1993, டிசம்பரில்  பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  ருச்சிகாவின் பெற்றோர் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, சண்டிகரை விட்டுவெளியேறி தலைமறைவாக வாழத் தொடங்கினர்.

அதேபொழுதில் காக்கிச்சட்டை கிரிமினல் ரத்தோருக்கு மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  ஆராதனாவின் பெற்றோர் ஆனந்த் பிரகாஷும் மாது பிரகாஷும் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரித் தொடர்ந்து போராடினர்.  அரியானா மாநில உயர்நீதி மன்றமும், அதன்பின் உச்சநீதி மன்றமும் இப்புகாரில் தலையிட்ட பிறகுதான், 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் ரத்தோர் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, வழக்கு விசாரணையும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.  அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 21, 2009 அன்றுதான் ரத்தோருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இதற்குள் ரத்தோர் பணியிலிருந்து கௌரவமாக ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

சட்டப்படி பார்த்தால், ரத்தோரின் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டிற்கு இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை   அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ரத்தோரின் வயோதிகத்தைக் காரணமாகக் காட்டி, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாமல் கருணை காட்டப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, ரத்தோர் மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள் – ருச்சிகாவின் பெற்றோரை மிரட்டியது, ஆஷு கிர்ஹோத்ரா மீது பொய் வழக்கு போட்டது, ருச்சிகாவைத் தற்கொலை செய்யுமாறு தூண்டியது – அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  நீதிமன்றம் தனது சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பேருக்கு தண்டனை அளித்திருக்கிறது.  ரத்தோர் பத்தொன்பது ஆண்டுகளாக தண்டிக்கப்படாமல் அரசின் பாதுகாப்போடு சுற்றிவந்தது மட்டுமல்ல, இந்தப் பஞ்சு மிட்டாய்த் தீர்ப்பும் அருவெறுக்கத்தக்கதுதான்!

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?


vote-012தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.  சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

அரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில்  தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.

–          மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164


vote-012

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

– அனைவரும் வருக –

தொடர்புக்கு – (91) 97100 82506

அழைப்பிதழின் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

மின்னிதழ் அச்சுத்தரமுள்ளது – கோப்பின் அளவு 1MB, கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

அவசியம் அழைப்பிதழை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். நன்றி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!

43


vote-0122006 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆதிதிராவிட நலத்துறை தலித்துக்களின் விமோச்சனத்திற்காக ஒரு திட்டத்தை பெரும் விளம்பரத்துடன் அமல்படுத்தியது. வருடத்திற்கு நூறு தலித் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி கொடுத்து வேலை வாங்கி கொடுப்பதுதான் அந்த விமோச்சனத் திட்டம். இந்தத் திட்டத்தின் பலனை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் அஜிதா கார்த்திகேயன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (5.2.10).

இதற்கென்று சென்னையில் இருக்கும் பிரபலமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒரு கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது. ஒரு மாணவிக்கு ஒரு இலட்சமென்று இதுவரை நான்கு வருடங்களில் நானூறு பெண்கள் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராம, நகரப் பகுதிகளிலிருந்து வந்த தலித் பெண்களுக்கு நடை, உடை, பாவனை, அலங்காரம், உள்ளிட்டு எல்லா எழவுகளும் தீவிரமாகப் பயிற்சி கொடுக்கப்பட்டன. நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பத்திரிகையான இந்தியா டுடே போன்றவை தலித் பெண்கள் விமானத்தில் பறக்கப் போவதை வைத்து இந்தியா முன்னேறிவிட்டதென்று செய்தி போடவும் தவறவில்லை.

ஆனால் என்ன பலன்? இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தலித் பெண் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவ்வளவிற்கும் அந்தப் பயிற்சிக் கல்லூரி 60% மாணவிகளுக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென்பது அரசு செய்துள்ள உடன்பாடாம். இது குறித்து கேட்டதற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி அந்தக் கல்லூரிக்கு தரவேண்டிய தொகையை நிறுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார். எவ்வளவு நாள் நிறுத்துவார்கள்? கமிஷன் வாங்கிய கைகள் குற்ற உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன?

வருடத்திற்கு ஒரு கோடியை ஸ்வாகா போட்ட அந்தக் கல்லூரி என்ன சொல்கிறது? மாணவிகள் எவரும் விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியில் இல்லையாம். அந்த எதிர்பார்ப்பு தகுதிகள் என்ன?

தமிழ் சினிமா இயக்குநர்கள் கதாநாயகிகளுக்காக உசிலம்பட்டி போகிறார்களா, இல்லை மும்பைக்கு பறக்கிறார்களா? வெள்ளையும், சொள்ளையும், வாட்ட சாட்டமாக இருக்கும் அழகிகள்தான் அவர்களது தேவை. இது ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண்ணிடம் இருக்காதில்லையா?

தமிழ்நாட்டு தலித் பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்ப் பெண்களும் சற்றே குள்ளமாகவும், கருப்பு, மாநிறமாகவும்தான் இருக்கிறார்கள். இந்தத் ‘தகுதிகளோடு’ ஆங்கில மொழி தேர்ச்சியின்மையும் ஒரு யதார்த்தமான பிரச்சினைதானே? விமானத்தில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கு சேவை செய்யும் பெண்கள் என்றால் சும்மாவா? இது குறித்து கேட்டதற்கு விமான நிறுவனப் பிரதிநிதிகள் தாங்கள் கலரெல்லாம் பார்ப்பதில்லை, பிளீசிங் பெர்சனால்ட்டியைத்தான் பார்க்கிறோம் என்றார்களாம்.

அப்படி ஒரு பெர்சனால்ட்டி வரவேண்டுமென்றால் அது சுண்டி இழுக்கும் வெள்ளையழகில் இருந்துதானே வரும்? பார்ப்பனியம் மட்டுமல்ல முதலாளித்துவம் கூட தலித்துகளை ஓரமாகத்தான் வைத்திருக்க விரும்புகிறது. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் இத்தகைய அழகு விதிகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு? அப்படி என்ன விமானத்தில் சேவை செய்து கிழிக்கிறார்கள்? சரக்கு ஊத்தி கொடுப்பது என்ன உலகில் யாரும் செய்ய முடியாத வேலையா என்ன?

“இதுதான் தகுதியென்றால் எங்களுக்கு அப்படி ஒரு பொய்யான நம்பிக்கையை ஊட்டி ஏமாற்றியிருக்க வேண்டியதில்லையே” என அங்கலாய்த்துக் கொள்ளும் அந்த தலித் மாணவிகளில் பெரும்பாலோர் வீட்டிலிருக்க சிலர் மட்டும் ஹவுஸ் கீப்பிங்க முதலான வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த அரசு செலவிட்ட நான்கு கோடி ரூபாயை ஆதி திராவிட மாணவர் விடுதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கியிருந்தால் கூட பலனுண்டு. மாட்டுத்தொழுவங்கள் போல பராமரிக்கப்படும் அந்த விடுதிகளிலிருந்துதான் நமது தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலித் மக்களை முன்னேற்ற வேண்டுமானால் இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தலித் மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு நிலத்தை வழங்கினால் அது அவர்களது வாழ்க்கைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல ஆதிக்க சாதிகளிடம் சிக்கியிருக்கும் சுயமரியாதையையும் மீட்டு வரும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஜீவாதாரமான பிரச்சினையை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தலித்தை ஜனதிபதியாக்கிவிட்டோம், அமைச்சராக்கி விட்டோம், சில தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம் என்று ஏமாற்றி வருகின்றன.

தலித்துக்களில் படித்து முன்னேறியிருக்கும் மிகச் சிறுபான்மையினரான நடுத்தர வர்க்கத்தினை சாட்சியாக வைத்து மற்ற தலித்துகளும் முன்னேறலாம் என்ற மாயையை ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இந்த செயல்திட்டத்தினை ஏற்றுத்தான் தலித் மக்களின் உரிமை பற்றி பேசும் தலித் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்த விமானப் பணிப்பெண் வேலைத்திட்டம். ஆனாலும் இந்த அற்ப மாயையைக்கூட அமல்படுத்த முடியவில்லை என்பதுதான் இதன் அவலம்.

இத்தகைய கவர்ச்சி தூண்டிலுக்கு இரையாகாமால் தலித் மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடும் போதுதான் அவர்களுடைய சமத்துவமும், பொருளாதாரமும் மீட்கப்படும். அதுவரை விமானங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கூட இடம் கிடைக்காமல் போகலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

vote-012அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், “ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு” எனக் கூறப்படுவது மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

ஒசாமா பின்லேடனைப் பிடிப்பது, அல்-காய்தாவை நிர்மூலமாக்குவது, தாலிபானைத் தோற்கடிப்பது, ஆப்கானில் ஜனநாயக அரசைக் கட்டியமைப்பது – இவை அனைத்தையும் போரைத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடிப்பது எனத் தம்பட்டம் அடித்து, இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் “நேடோ” கூட்டாளி நாடுகளும், தமது சபதங்களை நிறைவேற்றவும் வழியின்றி, அதே சமயம், ஆப்கானில் இருந்து கௌரவமாக வெளியேறவும் விருப்பமின்றி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன.

இப்படிபட்ட தருணத்தில், ஆப்கானுக்கு மேலும் 30,000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அதனுடன், “இன்றிலிருந்து 18 மாதங்கள் கழித்து, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப் போவதாகவும்” ஒபாமா அறிவித்திருக்கிறார். இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போரை முன்னைவிடத் தீவிரமாக நடத்துவதற்கான முயற்சி என்பது பாமரனுக்கும் புரியும். ஆனால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அல்லவா; அதனால், “ஆப்கான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக”த் தேன் தடவிப் பேசியிருக்கிறார், அவர். இந்த விளக்கத்தைக் கேட்கும் பொழுது கேப்பையில் நெய் வழிகிறது என்ற நம்மூர் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கான் ஆக்கிரப்புப் போருக்காக 2006-ஆம் ஆண்டு செலவழித்த தொகை ஏறத்தாழ 1,900 கோடி டாலர்கள் (95,000 கோடி ரூபாய்). இந்தப் போர்ச் செலவு 2009-இல் மூன்று இலட்சம் கோடி ரூபாயாக (6,020 கோடி அமெரிக்க டாலர்கள்) அதிகரித்திருக்கிறது. தற்பொழுது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போர்ச் செலவு 10,000 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிடும் என மதிப்பிடப்படுகிறது.

வேலையையும் வீட்டையும் இழந்து, பொருளாதார நெருக்கடியால் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அமெரிக்கர்களின் மத்தியில் இந்த ஊதாரித்தனமான போர்ச் செலவு ஆப்கான் போருக்கு எதிரான மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புப் போரையும் போர்ச் செலவையும் நியாயப்படுத்த தேசிய வெறியைத் தூண்டிவிடும் அயோக்கியத்தனத்தில் இறங்கியிருக்கிறார், ஒபாமா. அமெரிக்காவை மீண்டும் தாக்கும் திட்டங்கள் போடப்படுவதாகக் கூறி, அமெரிக்கர்களின் மத்தியில் பீதியூட்டி வருகிறார், அவர். கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்ப எடுத்த முடிவை இராணுவத்தினர் மத்தியில் அறிவித்து, ஒபாமா உரையாற்றியதைக் கேட்டால், போர் வெறியன் ஜார்ஜ் புஷ் ஆவி ஒபாமாவுக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் தோன்றும்.

ஒபாமா அதிபரான பிறகு, துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே ஆப்கான் போரில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற போர்த் தந்திரத்தைக் கையாண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி நிலவும் சமயத்தில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், போர்ச் செலவு அதிகரித்து, ஏழை அமெரிக்கர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்; அது, தனது எதிர்கால அரசியல் நலனுக்கு நல்லதல்ல என்பதாலேயே இந்தப் போர்த் தந்திரத்தைக் கையாள எண்ணி வந்தாரேயன்றி, வேறெந்த நல்லெண்ணமும் காரணம் அல்ல.

இதற்கு மாறாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடேன், துருப்புகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரிப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலை ஆப்கான் மீது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீதும் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கூறி வந்தார். அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளபதிகள் ஆகியோர் ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அமெரிக்காவின் பத்திரிகைகளும், குடியரசுக் கட்சியும், வலதுசாரி அறிவு ஜீவிகளும் ஆதரவு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக இந்த மூன்று அணிகளுக்கு இடையே ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரை எப்படி நடத்திச் செல்வது என்பது குறித்து நடந்து வந்த நாய்ச் சண்டையில், அதிபர் ஒபாமா தீவிர வலதுசாரி கும்பலிடம் சரணடைந்துவிட்டார்.

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்ற போர்வையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, குறிப்பாக ஆப்கான் மக்கள் மத்தியில் மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அமெரிக்கா, ஆப்கான் மீது படையெடுத்த ஐந்து வாரங்களுக்குள்ளாகவே தாலிபானின் அதிகாரம் காபூல் பகுதியில் வீழ்த்தப்பட்டாலும், அப்பொழுதே ஆப்கானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தும் அளவிற்கு, அப்பகுதியில் தாலிபான் செல்வாக்கு செலுத்தி வந்தது. இப்பொழுதோ, தாலிபானின் செல்வாக்கு ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வளர்ந்து வருவதாக முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ஒப்புக் கொள்கின்றன.

இதனால், தாலிபானைத் தோற்கடிப்பதைவிட, அவ்வமைப்பின் செல்வாக்கு தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் வளர்ந்துவிடாமல் தடுப்பதுதான் அமெரிக்காவிற்கும் அவர்களது கூட்டாளி நாடுகளுக்கும் தலைபோகிற விசயமாகிவிட்டது. இதற்காகவே துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, தாலிபானுக்கு எதிரான யுத்தப் பிரபுக்களோடு ஒரு புனிதக் கூட்டணியையும் அமெரிக்கா-நேடோ துருப்புகள் அமைத்துள்ளன. மேலும், தாலிபானை உடைத்து அமெரிக்காவிற்கு உதவக் கூடிய ‘நல்ல’தாலிபான்களை – கருங்காலிகளை- உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டில் 130 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

+++

அமெரிக்காவின் தயவிலும், பாதுகாப்பிலும் ஆப்கானை ‘ஆண்டு’ வரும் ஹமித் கர்சாய் அரசோ, ஊழல்பேர்வழிகள், போதை மருந்து கடத்தும் அரசியல் தாதாக்கள், தாலிபானை எதிர்க்கும் யுத்தப்பிரபுக்களால் நிரம்பி வழிகிறது. ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் சொந்த சகோதரரான அகமது வாலி கர்சாய் ஆப்கானைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் பேர்வழிகளுள் முக்கியமானவர் எனும்பொழுது, ஆப்கானில் அமெரிக்கா திணித்துள்ள ஆட்சியின் யோக்கியதைப் பற்றி மேலும் விரிவாக விளக்கத் தேவையில்லை. “அகமது வாலி கர்சாயின் போதை மருந்து கடத்தல் தொழிலை மேற்குலக பத்திரிகைகள் அம்பலப்படுத்தத் துணிந்தால், நேடோ-அமெரிக்கத் துருப்புகளுக்கும் அதில் பங்கு இருப்பதை அம்பலப்படுத்துவேன்” என அந்நாட்டின் போதை மருந்து கடத்தல் தடுப்பு அமைச்சரே எச்சரிக்கும் அளவிற்கு ஆப்கானில் போதை மருந்து கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆப்கான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான யுத்தப் பிரபுவாகக் கருதப்படும் முகம்மது ஃபஹிம்தான் அந்நாட்டின் துணை அதிபர். உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த மற்றொரு யுத்தப் பிரபுவான ரஷித் தோஸ்தம் அதிபர் கர்சாயின் நெருங்கிய அரசியல் கூட்டாளி. பஷ்டுன் இன மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்க-நேடோ துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யுத்தப் பிரபுக்கள்தான் செய்து கொடுத்து, சன்மானம் பெற்றுக் கொள்கிறார்கள். போதை மருந்து கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் யுத்தப் பிரபுவான நஸ்ரி முகமது, ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதை அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக கூட்டுறவு மையம் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆப்கானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நடந்த அதிபர் தேர்தலில் ஹமித் கர்சாய்க்கு விழுந்த வாக்குகளில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குகள் கள்ள வாக்குகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் கர்சாய் அடைந்த “வெற்றி”, பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கர்சாய் இரண்டாம் சுற்றுத் தேர்தலைச் சந்திக்காமலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவால் மீண்டும் நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். பாலஸ்தீனத்தில் அமெரிக்காவை எதிர்க்கும் ஹமாஸ் இயக்கம் நியாயமான முறையில் தேர்தலைச் சந்தித்து, காசா முனையில் வெற்றி பெற்றதை இதுவரை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானில் நடந்த மோசடித் தேர்தலையும், ‘சட்டவிரோதமான’ முறையில் கர்சாய் மீண்டும் அதிபராகியிருப்பதையும் எவ்வித முணுமுணுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளன.

அந்நிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் நேடோ படைகள் நடத்திவரும் படுகொலைகள் – கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 31,000 ஆப்கானியர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் – கர்சாயின் ஊழல் ஆட்சி, ஐ.நா. மன்றம் போடும் சோத்துப் பொட்டலத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அளவிற்கு உள்நாட்டுப் பொருளாதாரம் நாசமாகிக் கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்கான் மக்கள் மத்தியில் தாலிபானின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா இப்பொழுது இதனையே காரணமாகக் காட்டி துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதோடு, ஆளில்லா விமானத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும்; அல்-காய்தாவை ஒழிக்க பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீதும் தீவிரவாதத்துக்கு எதிரான போரைத் தொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது.

ஆப்கானில் அமெரிக்க-நேடோ படைகள் சந்தித்துவரும் தோல்வியையும், அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரில் ரசிய ஏகாதிபத்தியமும், சீனாவும் அந்நாட்டினுள் நுழைய முயன்று வருகின்றன. இந்தியா, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை ஓரங்கட்ட வேண்டும் என்ற திட்டத்தோடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மட்டுமின்றி, கர்சாய் கும்பலுக்கும், தாலிபானை எதிர்க்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், ஆப்கானைப் புனரமைப்பது என்ற போர்வையில் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவைப்படும் கள உதவிகளைச் செய்து கொடுத்தும் வருகிறது, இந்தியா. பாகிஸ்தானோ ஒருபுறம் அமெரிக்காவிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இன்னொருபுறம் தாலிபானுக்குக் கொம்பு சீவிவிடுகிறது. இப்படியாக ஆப்கான், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுள்ளது.

இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும், மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லுவதற்கான தரைமார்க்கமாகவும் இருப்பதாலும், ஆப்கான் நாட்டைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா பதினெட்டு மாதங்கள் கழித்து ஆப்கானில் இருந்து படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புவதற்கு இடமே கிடையாது. 19 -ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஏகாதிபத்தியமும், 20-ஆம் நூற்றாண்டில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் ஆப்கான் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதைப் போல், அமெரிக்க மேலாதிக்க வல்லரசும் தோற்கடிக்கப்பட்டதால்தான், அதற்குப் படைகளைத் திரும்பப் பெறும் “நல்ல புத்தி” வரும்!

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?

107

vote-012“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.

கல்கி காலத்திலிருந்து இப்படித்தான் ஆ.விகடன் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை நையாண்டியின் பெயரில் நீர்த்துப் போகச்செய்யும் வேலையை செய்து வருகிறது. இதில் ஊழல், மோசடி, செய்யும் ஆளும் வர்க்க பிரதிநிகள் மட்டும் எப்போதும் இடம்பெறமாட்டார்கள். அதாவது அம்பானி, ஜெயேந்திரன் போன்ற ஒழுக்க சீலர்களை கேடி, கிரிமினல் காமடியன்களாக நீங்கள் சிரித்திருக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நகைச்சுவை இரசனையை தீர்மானிக்கும் இதன் மற்றொரு வெளிப்பாடுதான் எஸ்.வி.சேகரின் காமடி நாடகங்கள். இன்றைக்கு ஆ.விகடனில் இத்தகைய நகைச்சுவைகள் அதிகம் வருவதில்லை. சேகரின் நாடகங்களும் முன்பு மாதிரி பரபரப்பாக நடைபெறுவதில்லை. ஏன்?

விகடனோ, சேகரோ திருந்திவிட்டதனால் இது நடைபெறவில்லை. இவர்களின் பங்கை தொலைக்காட்சியின் விதவிதமான நையாண்டி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அதனால் முழு சமூகமும் அப்படி பேசி, சிரிக்க, சிந்திக்க பழகிவிட்டது. இந்த நகைச்சுவை உணர்வு ஆரோக்கியமானதா?

அதற்கு முன் மக்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தெருவில் கிடக்கும் வாழைப்பழத்தோலில் மிதித்து வழுக்கி மண்டை அடிப்பட்டு இரத்தம் ஒழுக கிடக்கும் போது முழு தமிழகமும் அவன் விழுந்ததை நினைத்து சிரிக்கிறது. சூழ்நிலையின் இயல்பில் நடக்கும் இந்த சிறு மாற்றமே சிரிப்பதற்கு போதுமானது என்பதால் சுருங்கச் சொன்னால் மக்கள் தங்களைப் பார்த்தே சிரிக்கிறார்கள்.

அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை.

பிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும், வெளிநாட்டில் பீட்டர் வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ராகுல் வாரிசு என்ற ஒரே தகுதியில் வலம் வருவதும், மதுரை ரவுடிகளின் ரவுடி அழகிரி வள்ளலாகவும், தேர்தல் நிபுணராகவும் வரும் போது, ஈழம் பற்றி முனகினாலே போடாவில் போடும் ஜெயா ஈழத்தாயாக போற்றப்பட்ட போதும், ஜெயேந்திரனது கொலை, கூத்துக்களை மறந்து அவரது உலாச் செய்திகள் ஊடகங்களில் மரியாதையுடன் குறிப்பிடப்படும் நாட்டில் காமடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்?

உண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன?

வாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாத போது மெலிதான சிணுங்கல் கூட தமிழனை சிரிக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. இந்த சிணுங்கலுக்கு தனது மூளையக் கழட்டி ஆணியில் மாட்டி விட்டு டி.வியின் முன்னால் அமரும் மனிதர்கள் சீக்கிரமே பழக்கப் படுகிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களது மொழி, அறிவு, இரசனை எல்லாம் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சமூக அறிவினால் தீர்மானிக்கப்படும் நகைச்சுவை உணர்வு நேரெதிராய் நகைச்சுவை உணர்வால் அறியப்படும் சமூக அறிவாக ஆபாசமாக மாறிவிடுகிறது.

தமிழ்ப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்து கொல்லும் வழக்கம் உள்ளதாக காட்டப்படுகிறது. அதற்கான பிளாஷ் பேக் பஞ்சாயத்து காட்சியின் கிண்டலில் சிரிக்க ஆரம்பிக்கும் ரசனையின் மூலம் தமிழ் நெஞ்சங்கள் பெற்றதென்ன?

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது இன்னும் வழக்கில் உள்ளது. இவ்வளவு முன்னேற்றங்களும், வாழ்க்கை கருவிகளும் பெருகி விட்ட நாட்டில் இன்னும் ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்ற அவலம் மாறவில்லை. சமூகத்தின் பாதி எண்ணிக்கையிலிருக்கும் அந்த பாவப்பட்ட பாலினத்தின் தலையெழுத்துக்காக ஒவ்வொரு மனிதனுக் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாட்டில் அதே விசயம் ஒரு திரைப்படத்தின் அறிமுக நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவது போல. இனி கள்ளிப்பால் கொடுமைகள் ஏதும் செய்தியாக வந்தால் படிப்பவர்கள் தமிழ்ப்படத்தை நினைத்து சிரித்து விட்டு போய்விடுவார்கள். அல்லது அந்தக் கொடுமையை செய்வதற்கு சமூகக் காரணங்களால் தள்ளப்பட்டவர்கள் அடைய வேண்டிய குறைந்த பட்ச குற்ற உணர்வை கூட இந்தப்படம் இல்லாமல் செய்து விடுகிறது.

பதிவுலகில் இப்படத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிய எந்தப் பதிவரின் அறிவுக்கும் இது தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிரிப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே.

கோவா, தமிழ்ப்படம் இரண்டிலும் ஆரம்பக் காட்சிகளாக கிராமப் பஞ்சாயத்து காட்டப்படுகிறது. தலைவர், மீசை, உறுமல், செம்பு, துண்டு, வேட்டி, வெற்றிலை எச்சில் எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா காட்டிய வகையிலும், காட்டாத வகையிலும் உள்ள நிஜ பஞ்சாயத்துக்களின் அருகதை என்ன? இந்த பஞ்சாயத்துக்களின் மூலம்தான் தீண்டாமை மறுப்பு மணம் செய்த காதலர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், தலித் பெண்களை வல்லுறவு செய்த ஆதிக்க சாதி ஆண் பொறுக்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக கட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்கள், இரண்டாவது மணம் செய்வதற்காக முதல் மனைவிகள் எந்த நிவராணமுமின்றி வெட்டி விடப்பட்டிருக்கிறார்கள், தீண்டாமை குற்றத்தை மீறி செருப்பு போட்டதற்காகவோ, இல்லை சைக்கிள் மிதித்ததற்காகவோ பல தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஊரை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சாதி ஆதிக்கத்தையும், பணம் படைத்தோரின் சட்டங்களையும் இன்றும் நிலைநாட்டி வரும் இந்தப் பஞ்சாயத்துக்கள் இந்த இரண்டு படங்களிலும் எப்படி செம்பு, வெத்தலையாக மாற்றப்பட்டிருக்கிறது பாருங்கள்? இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? பொய்மையின் இருட்டில் உண்மையின் வெளிச்சம் அழிக்கப்படுகிறது.

தமிழ்ப்படத்தில் மாஸ் ஹீரோ, ஓப்பனிங் சாங், விரலைசைவு, கட்டவுட், வில்லன்களை வீழ்த்துவது எல்லாம் மேலோட்டமாக கிண்டலடிக்கப்படும் போது இரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகள் எந்தப்படத்தை நினைவு படுத்துகிறது என்று பேசியவாறு சிரிக்கிறார்கள். உடன் கண்டுபிடிப்பவர்கள் பொது அறிவில் விற்பன்னராக ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் நினைவு படுத்தப்பட வேண்டிய விசயங்கள் என்ன?

சூப்பர் ஸ்டார்களை யார் உருவாக்குகிறார்கள்? சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார்? ரஜினி அமெரிக்காவில் மொட்டை அடித்த கதையும், இமயத்தில் ஒன்னுக்கு போன கதையும், கனடா மாப்பிள்ளைக்காக வெட்கப்படும் ரம்பாவின் முகமும், நவ்யா நாயரின் திருமணத்தை விலாவாரியாக விவரிப்பதும் யார் செய்கிறார்கள்?

மணிரத்தினத்தின் வீட்டில் சிறு குண்டு வீசப்பட்டு அதை ரஜினி கண்டித்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்ட நேரத்தில் அதற்கு அஞ்சிய தளபதிகள், தமிழினத் தலைவர்கள், புரட்சிப்புயல்கள் எத்தனை பேர்?

இப்படி தமிழனின் அன்றாட கவலையாக மாறிவிட்ட நட்சத்திரங்களை கிண்டல் செய்யவேண்டுமென்றால் இவர்கள் எல்லோரையும் திரையில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அடிமுட்டாளான ரஜினியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து படியளக்கும் கோமாளி விஜயகாந்தும், தமிழ் தெரியாததை உயர்வாக நினைக்கும் தமிழ்ப்பெண் த்ரிஷாவும், தமிழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்டதை போட்டு உடைக்க முடியும்.

தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் வரும் ரேப் சீன்களைக் கிண்டல் செய்வதற்காக சொர்ணா அக்கா எனும் ரவுடிப்பெண் ஒரு கல்லூரி இளைஞனை வல்லுறவு செய்ய முயல்வதாக காட்டுகிறார்கள். இதற்கு முன் கற்பழிப்புக் காட்சிகளில் ஜாக்கெட் எப்போது கிழியும் என்று எதிர்பார்க்கும் ஆண் இரசிகர்கள் இதையும் பார்த்து சிரிக்கிறார்கள். காமத்தின் இடத்தில் காமடி. ஆனால் இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. கல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு சொல்லக்கூசும் அருவெறுப்புகள் நிகழ்த்தப்படும் காலத்தில் ஆண் கற்பழிப்பு எனும் கற்பனையே யாருக்கும் விகாரமாகத் தெரியவில்லையே?

ஜாக்கெட் தேவைப்படாமல் முக்கால் உடம்பைக் காட்டுவதே நாயகிகளின் தகுதி என்ற இந்தக்கால நிலையில் ஜாக்கெட் கிழிபடும் எம்.ஜி.ஆர் கால கற்பழிப்புக் காட்சிகள் மறைந்து விட்டன. இதில் கிண்டலடிக்க வேண்டுமென்றால் கற்பழிப்பை தடுத்து நிறுத்த வரும் ஹீரோவை மட்டுமல்ல, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு தவிக்கும் ஆண் இரசிகனையும் குறி வைக்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாக கணவன்மார்கள் மனைவிகளின் புடவையைத் துவைப்பதாக வரும் பத்திரிகை ஜோக்குகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ்ப்படத்தில் பிளாட்பார வியாபாரியாகவும், பேப்பர் போடுபவனாகவும் வேலை செய்யும் ஹீரோ பணக்காரனாகி விடுகிறான். சைக்கிள் கேப்பில் ஹீரோக்கள் வாழ்வில் உயர்ந்துவிடுவதைக் கிண்டலடிக்கும் பார்வையில் அந்த உழைக்கும் மக்கள்தான் உண்மையில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை. ஆனால குறுக்கு வழியில் பங்குச் சந்தை மூலம் லாட்டரி அடிக்கலாம் எனும் நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பு பணத்தை போட்டு எமாறுவது அதனுடைய தவறா இல்லை எல்லா பத்திரிகைளும் அப்படி பணக்காரராகிவிடலாம் என தன்னம்பிக்கை தொடர் வெளியிடுகிறதே அவர்களுடைய தவறா?

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும நாட்டில் இந்தியா 2020இல் வல்லராசாகி விடுமென்று கூவுகிறாரே தன்னம்பிக்கைகளின் பிதாமகன் அப்துல் கலாம், அவரை கிண்டல் செய்திருந்தால் நாமும் அதை வரவேற்றிருக்கலாம்.

கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிபணிந்து மாமூல் பெற்று சுவிஸ் வங்கியில் பில்லியன் கணக்கில் சேர்க்கும் போது தமிழ்த்திரைப்படம் மார்க்கெட் மாமூலை கிண்டல் செய்கிறது. முன்னாள் ரவுடிகள், சாராயம் காய்ச்சியோரெல்லாம் கல்வி வள்ளலாக கல்லா கட்டும் நேரத்தில் இந்த மாமூலெல்லாம் எவனுக்கு வேண்டும்?

கோவா படத்தில் வெள்ளைக்கார பெண்களை மணம் செய்து ஃபாரினில் செட்டிலாகிவிடலாமென மூன்று இளைஞர்கள் கோவா செல்கிறார்கள். எப்போதும் பிகினி பெண்களை இரசித்துக் கொண்டு பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள். எந்தக் கதையும், பிரச்சினையும் இல்லாமல் குடி கும்மாளமென்று வாழும் இந்தப்படத்தை எடுப்பதற்கென்று இயக்குநருக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?

கிராமங்களலிருந்து வாழவைக்க முடியாத வாழ்க்கையால் சென்னைக்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும் விரட்டியடிக்கப்படும் இளைஞர்களின் காலத்தில் கோவா அவர்களைக் கேலி செய்கிறது.

வெள்ளையினப் பெண்ணை ஒரு இந்தியன் காதலித்து மணக்கிறான் என்றால் அதில் கேலிக்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன. இருவேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இருவரின் வாழ்க்கையும் மோதும்போது ஏற்படும் விளைவுகளில் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நிறைய உள்ளன. ஆனால் கோவா படத்தில் அந்த வெள்ளையினப்பெண் காலால் கோலமிட்டு வெட்கப்படும் தமிழ்ப்பெண்ணாக மாற்றப்படுகிறாள்.

கருப்பை தேசிய நிறமாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆண் வெள்ளை நிறத்தின் மீது கொண்டிருக்கும் காம ஈர்ப்பை கேலி செய்வதற்குப் பதில்படம் ஆராதிக்கிறது. அது நிறைவேறவும் கூடுமென ஆசையும் காட்டுகிறது. நிறம், அழகு குறித்து இளையோரிடம் நிலவும் மூடநம்பிக்கைகளை கேலிசெய்து உண்மையை புரியவைத்து அவர்களது தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு பதில் கோவா படம் பொய்மையை ஊதிப்பெருக்கி அதில் திளைக்க வைக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நகைச்சுவையான சித்தரிப்பைப் பார்த்து சிலர் பாராட்டலாம். ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா? இந்தியாவின் எல்லா தேசிய இனப்பெண்களும் விபச்சாரத்திற்கென்றே அனுப்பப்படும் கோவாவை, தெற்காசியாவின் முக்கியமான குழந்தை விபச்சார மையமாக திகழும் இந்த நகரத்தை கோவா படம் இளையோர் செல்ல வேண்டிய அற்புத உல்லாச நகராக சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து பிகினியில் இருக்கும் வெள்ளைக்கார பெண்களை சுலபாமாக மடக்கிவிடலாமென சிலருக்காவது தோன்றாமல் போய்விடுமா என்ன?

கோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா? யார் யாரைக் கேலி செய்கிறார்கள்?

சென்னையின் புறநகர் ஒன்றின் சுமாரான திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு காட்சியில் தமிழ்த்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது அந்த அறிவிப்பு பலகை தென்பட்டது. வரும் வெள்ளியன்று அஜித் நடித்த அசல் ரிலீசாம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாளும் காலை ஏழுமணிக்கு சிறப்புக்காட்சிகளாம். தமிழ்படம் ஓடிய அதே திரையரங்கு. இன்று கைதட்டிய இரசிகர்கள் நாளைக்கு அதே திரையரங்கில் அஜித்தின் ஓபனிங் சீனுக்கும் பாட்டுக்கும், மாஸ் ஹீரோ சீன்களுக்கும் கைதட்டுவார்கள். பதிவுலகிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

எப்போதும் போல தமிழ் வாழ்க்கை தன்னைத்தானே கேலி செய்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்தில் பெரும்பாலானோர் தவறி விழுந்தாலும் சிரிப்பதெற்கென்று சிலர் இல்லாமலா போய்விடுவார்கள்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “தில்லை நடராசர் கோயிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிவோம்!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பிரச்சாரம், பொதுக்கூட்டம்!
  2. விலையேற்றம்: மக்கள் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்!
  3. காட்டு வேட்டை: மக்கள் மீது போர் நடத்தும் கொலைகார ப.சி.
  4. அவலத்தில் அரசு மருத்துவமனை போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்
  5. கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு: டாட்டா – பிர்லாவின் கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!
  6. பி.டி கத்திரிக்காய்: மறுகாலனியாக்கத்தின் அடுத்த குண்டு!
  7. ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத் தன்மை’!
  8. வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை
  9. கிரிமினல் போலீசுக்கு வரம்பற்ற அதிகாரம்: இது எந்த வகையில் நியாயம்?
  10. “நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு!” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்
  11. “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணிவகுப்போம்!” –தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்
  12. ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!
  13. பாக்ராம்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் புதிய கொலைகார முகம்
  14. பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்
  15. காட்டுவேட்டை: நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலுக்காக சென்ற ஆண்டில் மட்டும் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தாக்கப்படும் பலர் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதால், தாக்குதலின் எண்ணிக்கை உண்மையில் இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் கூறுகின்றனர்.

நிதின் கார்க் கொலையைத் தொடர்ந்து, இது நிறவெறித்தாக்குதலாக இருக்க வாப்பு இருக்கிறது என்று முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தின் தலைமை போலீசு கமிசனரே ஒப்புக் கொண்டிருக்கிறார். எனினும் இவையனைத்தும் வழிப்பறி, ரவுடித்தனம் போன்ற வழமையான குற்றங்களேயன்றி நிறவெறித் தாக்குதல்கள் அல்ல என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலியாவுக்குப் பிழைக்கப்போன டாக்சி டிரைவர்கள் போன்ற அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த இந்தியர்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போதும், வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் இதைவிடக் கொடூரமாக இந்தியத் தொழிலாளிகள் நடத்தப்படும்போதும் அவற்றைக் கண்டு கொள்வதற்குக் கூட மறுக்கும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் சமீபகாலமாகக் குமுறிக் கொந்தளிப்பதற்குக் காரணம், அடி வாங்குபவர்களின் வர்க்கமும் சாதியும்தான். தற்போது தாக்கப்படுபவர்கள், இலட்சக்கணக்கில் பணம் கட்டி அங்கே படித்து விட்டு, பின்னர் ஆஸ்திரேலியக் குடியுரிமை வாங்கி அங்கேயே “செட்டில்” ஆக விரும்பும், உயர் நடுத்தர வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன. பாலிவுட் திரைப்பட இயக்குநர் மொகித் சூரி, இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்துப் படமெடுப்பதற்குத் திரைக்கதையே தயாரித்து விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் “கடுமையான” கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது இந்திய அரசு. சில மாதங்களுக்கு முன் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சாதாரணக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்க மறுத்த இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, “இது அப்பாவி இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் மட்டுமல்ல, மனித குலத்தின் மீது இழைக்கப்பட்டுள்ள கொடுங்குற்றமும் ஆகும்” என்று வருணித்தார். பார்ப்பதற்குக் கடும் கண்டனம் போலத் தெரிந்தாலும், நிறவெறித் தாக்குதல் என்று குற்றம் சாட்டுவதற்குக் கூடப் பயப்படுகின்ற இந்திய அரசு, கண்டனம் என்ற பெயரில் உதிர்த்துள்ள நகைச்சுவைத் துணுக்குதான் இது .

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலே இதனை நிரூபிக்கிறது; “தீவிரமான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஆகப்பெரும்பான்மையான இந்தியர்களுடைய அனுபவம் நேர்மறையானதே என்றபோதிலும், கீழ்க்கண்ட தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியர்கள் மேற்கொள்வது நல்லது. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளுக்குத் தனியாக செல்லாதீர்கள். எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை யாரிடமாவது சோல்லாமல் வெளியே போகாதீர்கள். மடிக்கணினி போன்ற விலை உயர்ந்த பொருட்களை மற்றவர்களுக்குத் தெரிவது போல எடுத்துச் செல்லாதீர்கள். ஆபத்து என்றால் யாருக்குத் தகவல் சொல்லவேண்டும் என்பதை எழுதி சட்டைப் பையில் வைத்திருங்கள்” என்று நீள்கின்றன, இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய அரசிடம் இந்திய அரசு அடக்கி வாசிப்பதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா அமைத்துள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இராணுவக் கூட்டணியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது என்பதுடன், அணு ஆயுதப் பரவல் தடையில் கையெழுத்திடாமலேயே, யுரேனியத்தைப் பெறுவதற்கும் இந்திய அரசு, ஆஸ்திரேலியாவைத் தாஜா செய்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் வாய்ப்பு இந்தியக் கல்வி வியாபாரிகளுக்கு இப்போது கிடைத்துள்ள சூழலில், சவடாலுக்காகக் கூட நிறவெறி எதிர்ப்பு பேசி வருமானத்தைக் கெடுத்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்பவில்லை.

இந்திய ஊடகங்கள் சாமியாடுவதை ஆஸ்திரேலிய அரசு சகித்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது. அந்நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் சரக்குகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது கல்வி. ஆண்டொன்றுக்கு 15.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருமானத்தை கல்வி வியாபாரத்தின் மூலம் ஈட்டுகிறது ஆஸ்திரேலியா. இதில் இந்திய மாணவர்களின் பங்கு 2 பில்லியன் டாலர்கள். தற்போது இந்தியாவிலும் தனது கல்வி வியாபாரத்தைத் தொடங்கவிருக்கிறது. வெள்ளைக் கனவான்கள் கண்ணியம் காப்பதற்குக் காரணம் இதுதான். மற்றபடி, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் வெள்ளை நிறவெறியை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியப் பழங்குடிகளைத் துப்புரவாக வேட்டையாடி ஒழித்து அந்த கண்டத்தையே கைப்பற்றிக் கொண்டது மட்டுமின்றி, பழங்குடி மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தடை செய்தது அரசு. அம்மக்களின் குழந்தைகள் மூலம் அந்தப் பண்பாட்டின் எச்சங்கள் கூட மிஞ்சி இருக்கக் கூடாது என்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட பழங்குடியின குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பறித்தது. இந்த நடவடிக்கைகளில் நேரடியாகப் போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பிள்ளை பிடிக்கும் கொடுமை 1970-ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது என்பது ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதைக்குச் சான்று.

இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தீண்டாமைப் படுகொலைகள் கூட சாதாரணக் கொலைக்குற்ற வழக்குகளாகவே இங்கு பதியப்படுகின்றன. தீண்டாமையோ இந்துக் கலாச்சாரத்தின் அங்கமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை நிறவெறியைப் பற்றி வரம்பு மீறிப் பேசினால், தீண்டாமையும் சர்வதேசப் பிரச்சினையாகச் சந்திக்கு வந்துவிடும் என்ற அச்சமும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை. மக்கள் தொகை அதிகரிக்காத ஆஸ்திரேலியாவுக்கோ, ஆசிய நாடுகளிலிருந்து மலிவான கூலிக்கு ஆட்கள் தேவை. இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சாதி எப்படிப் பயன்படுகிறதோ, அப்படித்தான் நிறவெறியும் அங்கே பயன்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்து வரும் வெள்ளை இளைஞர்களின் கோபம் தனக்கெதிராகத் திரும்பாமல், ஆசிய நாட்டினருக்கும், கருப்பினத்தவருக்கும் எதிராகத் திரும்பும் அளவில், வெள்ளை நிறவெறி ஆஸ்திரேலிய முதலாளி வர்க்கத்துக்கும் பயன்படுகிறது. சாதிவெறியாகட்டும், நிறவெறியாகட்டும் எல்லாமே தமது தேவைக்கு உகந்த அளவில் தொடரவேண்டும் என்பதே முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது பற்றிக் கேட்டபோது, “கடந்த மூன்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரவிரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 30,000 இலிருந்து 1,00,000 ஆக உயர்ந்திருக்கிறதே” என்று பதிலளித்தார் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை கமிசனர் பீட்டர் வர்கீஸ். நிதின் கார்க்கிற்கு விழுந்த கத்திக்குத்தை விடவும் வலிமையானது இந்தக் குத்து. இருப்பினும் இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.

___________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010
___________________________________________

ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு !!

91

காதல் கொண்டேன் படத்தின் இறுதிக் காட்சியில் அந்த சேட்டுப் பையனை கீழே கிடத்தி தனுஷ் கொரில்லா போல சுற்றி வருவாரே நினைவிருக்கிறதா? அந்தத் திரைப்படத்தில் செல்வராகவனின் ஏனைய பாத்திரங்களையெல்லாம் ஒப்பிடும்போது தனுஷ்ஷின் பாத்திரம் மட்டுமே இயக்குநரின் முழு சக்தியையும் உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்டிருந்தது. மற்ற பாத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்பதை விட அவர் விரும்பிய பாத்திரம் தனுஷின் சைக்கோ பாத்திரம்தான். அதற்கு ஏழ்மை, அனாதை போன்ற பிளாஷ் ஃபேக் இருந்தாலும் பிற்பகுதி சைக்கோதான் முதன்மை.

அதனால்தான் பின்பாதியில் ஆவேசமடையும் தனுஷின் ஆணாதிக்க உரையாடல்களுக்கும், உடல்மொழிக்கும் ரசிகர்கள் கைதட்டினார்கள். பெண்ணுடலை நுகர்ந்தெறியும் பண்டமாக கருதும் ஆணுள்ளங்களை அந்தப்படம் புண்படுத்தவில்லை. செய்ததெல்லாம் அதை ஆடவிட்டு இரசிகனின் அலைவரிசையில் ஒன்று கலந்து பெண் சதையை தின்பதற்கு முழுபடமும் ஆரவாரம் எழுப்பியதே. அப்போதே செல்வராகவனிடம் ஏதோ கோளாறு இருப்பதாக ஊகித்தோம். இப்பொது சரியென்று தோன்றுகிறது.

7ஜி ரெயின்போ காலனியில் கூட திண்ணை அரட்டையின் நட்பில் வாழும் வேலை வெட்டியற்ற நடுத்தர வர்க்க இளைஞன் தன்னை ஒரு பெண் காதலித்தே ஆகவேண்டும் என்பதற்கு ஆணவமாய் எல்லா தமிழ் ஹீரோக்களையும் போல விரட்டுகிறான். கூடவே விடலைப்பருவத்தின் சேட்டைகளை, குடும்பத்தோடு இயல்பாய் முரண்படும் அவர்களது உணர்ச்சியை சேர்த்துக் குழைத்ததால் இங்கும் ஆண் ரசிகன் ஒன்று கலந்தான். காதலிக்க வைக்கப்பட்ட பெண்ணை குறைந்த பட்சம் உடலுறுவு கொண்டுவிட்டாவது மறந்து விடலாம் என்ற அரிய சேதியை அதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் காதலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புதுப்பேட்டை சிட்டி ஆப் காஃட் எனும் பிரேசில்படத்தை பார்த்து புலியென்று நினைத்து வரையப்பட்ட பூனை. அரிவாளால் கழுத்தை அறுப்பதையெல்லாம் பயிற்சியில் கற்கும் ரவுடிகளை சித்தரிக்கும் திரைப்படத்தில் அரிவாளைத் தாண்டி அரிவாளுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு வளையத்தை வழங்கும் ஆளும் வர்க்கத்தின் பாத்திரம் தவிர்க்கப்பட்டது. ஜெயேந்திரன் போன்ற காவிக்கயவர்கள் கூட அப்பு முதலான ரவுடிகளை வைத்து கொலை செய்யும் காலத்தில் ரவுடிகளை வெறும் விளைபொருளாக மட்டும் சிலாகித்த படமது.

என்றாலும் தனுஷ் கொரில்லா போல சுற்றி வரும் காட்சியை த்தரூபமாக சித்தரித்திருக்கும் செல்வராகவன் அத்தகைய மனநிலையில் யோசித்து வெளியிட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த மனநிலைதான் அவருடைய ஆளுமையின் சாரமாகவும் இருக்கலாம்.

இரண்டு, மூன்று படங்கள் வெற்றியடைந்து விட்டால் எல்லா இயக்குநர்களும் அவர்களுடைய உலகில் கடவுளாகி விடுவார்கள். அதன் பிறகு விரிந்த மெத்தையின் கருவறைப் பகுதியில் அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருக்க, பலியாடுகளாக உதவி இயக்குநர்கள் ஆமாம் போட இந்த உலகு தங்களிடமிருந்தே துவங்குவதாக அந்த கடவுள் இயக்குநர்கள் துணிகிறார்கள். அந்த வகையில் நிஜ வாழ்க்கையிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறார்கள். கற்பதையும், தேடுவதையும், புற உலகை உற்று நோக்குவதும் கொள்ள வேண்டிய படைப்பாளிப் பண்புகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. படைப்பின் உள்ளடக்கத்தை விழுங்கும் வடிவமும், இதுதான் ரசிக்கப்படும் என்ற ஃபார்முலாவும், அவர்களின் அரதப்பழசான தத்துவக் கண்ணாட்டமும் மூன்றாவது படத்திற்கான தகுதிகளாக இயல்பாக அமைந்து விடுகின்றன.அதுவே ஐந்தாவது படமென்றால் ஆண்டவனும் கையேந்த வேண்டும். இது செல்வராகவனின் ஐந்தாவது படம்!

பதிவுலகில் ஆயிரத்தில் ஒருவன் விமரிசனங்களை வகைக்கொன்றாக படித்ததிலிருந்து புரிந்த விசயங்கள்: “முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி போர்-புரியவில்லை” இது இரசிகர்களின் அளவை வைத்து படத்தை நிராகரித்த விமரிசனம். “வித்தியாசமான முயற்சி, கோலிவுட்டையும் – ஹாலிவுட்டையும் இணைக்கும் படம், தமிழின் முதல் ஃபேண்டசி – திரில்லர் படம்” இது படத்தை இரசித்தவர்களின் விமரிசனம். அப்புறம் நமது பின்நவீனத்துவ நண்பர்கள் வியந்தோதும் காட்சிகளையும், மொழிகளையும் கொண்டிருக்கும் படம், அதாவது ” பாலியல் விழைவுகளை ஒளிக்காத நபர்கள், விளிம்பு நிலை மக்களின் சிக்கல்கள், மனிதனின் ஆதிகால போர் வெறியை தொன்மங்களின் வழியாக பிரதி காட்டும் நிகழ் உலகம்…இத்யாதிகள்.

சத்தியமாய் இத்தனை நுட்பங்களும் நாம் படம் பார்க்கும் போது துளியேனும் உணரவில்லை. இது வினவின் பாமரப் பார்வையா, கலை விசயங்களில் இருக்கும் ஔரங்கசிப்தனமா?

ஃபேண்டசி எனப்படும் இல்லாததை விரும்பும் கனவுகளும், விரும்பியே ஆகவேண்டியவற்றை நினைக்கும் பகல் கனவுகளும், மாந்தீரிகத்தையும், சாகசத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு புனையும் கனவுகளும் உண்மையில் சமூக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகியதா? இல்லை. அவை குறிப்பிட்ட சமூக யதார்த்தத்தின் தேவைகளிலிருந்தே அந்த தேவையை அடைய முடியாத சிக்கல்களிலிருந்தே இயல்பாக தோன்றுகின்றன.

குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கும், அவை இந்த உலகுடன் பெரும் உரையாடல் நிகழ்த்தி புரிந்து கொள்வதற்கும் பேசும் குருவிகளும், சினேகமாய் இருக்கும் யானைகளும், சேட்டைகள் செய்யும் மிக்கி மௌவுசும் ஓரளவுக்கு தேவையாக இருக்கின்றன. இந்த தேவையை பகாசுரமாக்கி மழலையின் உணர்ச்சியை வெறியுடன் சுரண்டும்போது அவை வன்முறை மிகுந்த வீடியோ கேம்களாக படையெடுக்கின்றன. என்றாலும் இது கூட ஃபேண்டசிதான்.

ஆதிகாலத்தில் புராதானமாய் இயற்கையின் நீட்சியாய் மனிதக்கூட்டம் இருந்த காலத்தில் இயற்கையின் பேரழிவுகள் புரியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கு மனிதன் புனைந்த முதல் புனைவு மாந்தீரிகம் கலந்த இறைச்சக்தி. அதுவே பின்னர் மதமாகி இறுகியது. உழைப்பின் வலி தெரியாமல் அவர்கள் உடல்தாளத்திற்கேற்ப இசைத்த பொருளற்ற வார்த்தைகள் பின்னர் சிம்பனி வரைக்கும் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாள் வேட்டைக்கு அவர்கள் தமது மனதை புத்துணர்வாக்கிய புனைவுகளின் வழியேதான் கலையும் அதன் எண்ணிறந்த வடிவங்களும் பிறந்தன. தெரிந்தவனவற்றின் சாத்தியங்களிலிருந்து தெரியாதவற்றை கண்டுபிடிக்கும் புனைவுகள்தான் அறிவியலாக இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.

இப்படி 21ஆம் நூற்றாண்டின் முன்னேறிய வாழ்க்கையை மனித குலம் கண்டறிந்தது ஃபேண்டசி எனப்படும் கற்பனையின் மூலம்தான். ஆனால் அது மட்டுமே தனியாக ஒரு சில மூளைகளில் தோன்றி வளரவில்லை. மனிதனின் உழைப்பு, அதுவும் கூட்டிழைப்பு செயற்காடுகளிலிருந்தே நாம் வியந்தோதும் இந்தக் கற்பனை, புனைவெளியின் எல்லையை உடைத்துக் கொண்டு அதையே தொட்டறியக்கூடிய வாழ்க்கையின் உண்மையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.

அவதார் படம் கூட ஃபேண்டசிதான். என்றாலும் அதன் வேர் அனைவருக்குள்ளும் இருக்கக்கூடிய அடிமைத்தனத்திற்கு எதிராக போராடக்கூடிய மனித வரலாற்றின் மிகச்சாதாரண ஒன்றில் இருக்கிறது. இங்கே சாதாரணம் என்பது அதன் பரந்து தழுவிய ஒன்றைக் காட்டுகிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் ஆதிவாசிகளும் அவர்களது இயற்கையை பணமாக சுரண்ட நினைக்கும் முதலாளிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள். எல்லா முதலாளித்துவ நாகரீகங்களும் அநேகமாய் இந்த ஆதிவாசிகளை நரபலி கொடுத்தே சாத்தியமாகியிருக்கின்றன. அதுவே இன்று ஆப்பரேஷன் கீரீன் ஹண்ட்டாய் மத்திய இந்தியாவில் ஆட்டம் போடுகிறது.

அதனால்தான் அவதாரில் உளவாளியாக செல்லும் மனிதன் அந்த வேற்றுக்கிரக ஜீவன்களோடு ஒன்றி காதல், விளையாட்டு, போர், துக்கம் என எல்லாவற்றிலும் இணையும் போது நம் கண்கள் கிராபிக்சின் மாய உலகைக் கண்டு வியந்தாலும், இதயமோ நல்லது வென்று கெட்டது அழியவேண்டுமென்ற ஆதி உணர்ச்சியை அடைகிறது. இந்த உணர்ச்சியை கைவிட்டு விட்டால் அவதார் படம் கூட வெறும் வீடியோ விளையாட்டாக மாறிவிடும்.

எனில் ஆயிரத்தில் ஒருவன் எந்த உணர்ச்சியைக் கொண்டு கற்பனை செய்ய முயல்கிறது? ஒரு வெங்காயத்திலும் இல்லை என்பதுதான் முதல் பதில். சற்று யோசித்துப் பார்த்தால் வெள்ளையன் ஆட்சிக்காலத்து ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், மாளிகைக்கு வெளியே ஏழைகள் உழைத்து ஓடாக தேய்ந்திருக்கும் போது வெளிநாடு சென்று அங்கு ஒரு கழிப்பறை வெள்ளியில் செய்யப்பட்டிருந்தால், அதையே உள்நாடு திரும்பி தங்கத்தில் செய்து அழகு பார்ப்பார்கள். கூடவே விருந்து வைத்து ஏனைய நாட்டாமைகளுக்கு தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.

ஏழுகோடியில் போடப்பட்ட பட்ஜெட் 32 கோடிக்கு சென்றது வெறும் புள்ளிவிவரச் செய்தியல்ல. அங்குதான் தங்கக் கழிப்பறை மறைந்திருக்கிறது.

வரலாறு என்பது நம்மிடையே மன்னர்களின் டைரிக்குறிப்பாக பதிந்திருக்கிறதா, மக்களின் போராட்டமாக பதிந்திருக்கிறதா என்பதை நம்முடைய வரலாற்றுப் பார்வை தீர்மானிக்கிறது. அவ்வகையில் வரலாற்றை விட வரலாற்றுப் பார்வை முக்கியம். ஒரு முசலீம் மன்னன் ஒரு இந்துக் கோவிலை இடித்து விட்டான் என்று இந்துமதவெறியர்களின் பார்வையில் ஒரு வரலாறு முன்வைக்கப்படும் போது அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அது உண்மையா? நோண்டிப் பார்த்தால் பல இந்து மன்னர்கள் அருகாமை இந்து மன்னர்களின் நாட்டை கொள்ளையடித்ததும், கோவில்களை இடித்ததும், அதே போல பல முசுலீம் மன்னர்கள் போட்டி முசுலீம் மன்னர்களின் நாட்டை ஆக்கிரமித்திருப்பதும், மசூதிகளை இடித்திருப்பதும் கூட வரலாறுதான். இங்கு மன்னர்கள் எனும் வர்க்கமும், அவர்களது ஆட்சியின் இருப்பும் எதனால் சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு வரலாற்றுப் பார்வை தேவையாக இருக்கிறது.

அதே போல வரலாற்றை நினைவு கூர்வதும், படிப்பினைகளை ஏற்பதும் கூட நிகழ்கால வாழ்வில் நீங்கள் நடத்தும் போராட்டத்தை சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் காலனி நாடாக இந்தியா மாறிவருகிறது என்று உணர்த்துவதற்கு சின்ன மருதுவின் ஜம்புதீவுப்பிரகடனம் தேவைப்படுகிறது.

நாம் செல்வராகவனின் வரலாற்று பார்வையை எங்கஙனம் புரிந்து கொள்வது? இயக்குநர் செல்வராகவன் பலரும் கருதுகிறபடி ஒருமசாலா இயக்குநர் இல்லையே? ஆனாலும் அவரின் புனைவுக்கான வரலாற்று உந்துதல் எதையும் நம்மால் காணமுடியவில்லை. தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில்தான் பவுத்த, சமண மதங்கள் முறியடிக்கப்பட்டு, பார்ப்பனியமாக்கம் வேகமாக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பார்ப்பனர்களையும், வேளாளர்களையும் மையமாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் நிலை கொண்டது. பல கிராம மக்கள் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும், அடிமைகளாக தாரைவார்க்கப்பட்டார்கள். சைவமாய் இறுகிய பார்ப்பனியத்தின் பிடியில் நந்தன்கள் எரிக்கப்பட்டார்கள்.

இத்தகைய எதுவும் இயக்குநரின் கண்களுக்கோ, அவர் வித்தியாசமான படம் எடுத்த்தாக சிலாகிக்கும் இரசிகர்களுக்கோ படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதைக்கு இரண்டு மன்னர்கள் அதுவும் தமிழ் மக்கள் அறிந்த இரண்டு ராஜாக்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவே. அதனால்தான் அமெரிக்க ஏகாதிப்த்தியத்திற்கு பெயர்பெற்ற வியட்நாம் என்ற பெயர் சோழர்களின் பெயரால் வாழும் தற்குறிகள் மற்றும் காட்டுமிராண்டிகள் இடமாக மாறியிருக்கிறது.

வரலாற்று உணர்ச்சியற்ற இந்தப்படத்தில் இயக்குநர் ஒன்றியிருப்பது தடைகளைத்தாண்டும் காட்சிகளும், படம் நெடுக எது எதற்கோ ஊளையிடும் மனிதக் குரல்களும்தான். இந்த தடைகளில் அவர் பலவற்றையும் கேவலப்படுத்தியிருப்பதை எப்படித்தான் “வித்தியாசமான” படக்கோஷ்டிகள் இரசித்தனரோ தெரியவில்லை. ஒருவேளை ஒன்றுமே புரியமால் பாராட்டினால்தான் மதிப்பார்கள் என்ற பரிதாபமா, அதுவும் தெரியவில்லை.

மீனவர்களின் தாயான கடலைக் கேவலப்படுத்தி, சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி, பாம்பையும், ஆதிவாசிகளையும் கொசுபோல கொல்லும் துப்பாக்கிகளைக் கேவலப்படுத்தி, பாலைவனத்தை வில்லனாக்கி, குகைக்குள் கருப்பு சாயம்பூசிய மக்களைக் கேவலப்படுத்தி, இறுதிக் காட்சியில் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி, இந்தக்காட்சிகளுக்கு கருப்பு, சிவப்பு வண்ணம் பூசிய நூற்றுக்கணக்கான துணைநடிகர்களை கேவலப்படுத்தி, அவர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கூடக் கொடுக்கமுடியாமல் பட்ஜெட்டை கேவலப்படுத்தி, தூயதமிழைக் கேவலப்படுத்தி, இந்த எழவுக்கு செட்போட்ட தொழிலாளிகளின் உழைப்பை கேவலப்படுத்தி,படப்பிடிப்பு முடிந்த உடன்தான் திரைக்கதையை எடிட்டிங்கில் எழுதி அகிரோ குரசேவாவைக் கேவலப்படுத்தி, படம் சோதனையென்று புறக்கணித்த இரசிகர்களுக்கு பிரஸ் மீட் வைத்து கதையைச் சொல்லி கேவலப்படுத்தி….  அப்பப்பா தாங்க முடியவில்லை.

செல்வராகவன் எனும் இயக்குநர் வித்தியாசமாக எடுப்பதற்கு இத்தனை கேவலங்களையும் 32 கோடியில் அளிக்க முடியும் என்றால் இதுதான் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்பதோ?

ரீமா சென் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்துவிட்டார் என்று சில பதிவர்கள் பாராட்டுகிறார்கள். கப்பலில் பாடும் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஜெயல்லிதாவின் அபிநயம், மேசைக்கு அடியில் துப்பாக்கி நீட்டுவது, செம கட்டையென்று பேசுவது இவையெல்லாம் ஓடிப்போலாமா புகழ் மணிரத்தினத்தின் அபிநயங்கள், பார்த்திபனுடன் போடும் விரத தாப சண்டையெல்லாம் காதல் கொண்டேனில் சோனியா அகர்வால் ஆடிய அபிநயங்கள், ஆங்கிலத்தில் சண்டை போடுவது, தூய தமிழில் வஞ்சுவது இறுதியில் சிஜடி சகுந்தலாவாக அக்மார்க் வில்லியாக மாறும்போது இரசிகர்கள் ஆறுதலடைகிறார்கள் அதாவது தங்களது ஆண்மையை கார்த்திக் வழியாக சீண்டிய பெண்ணை வென்று விட்டோமென. மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?

அடுத்து பின்நவீனத்துவத்தின் பக்கம் கொஞ்சம் பார்க்கலாம். பிரதி வெளிப்படுத்தும் உவகையான கொண்டாட்டத்தை யாரும் மனம் போனபடி அர்த்தமாக்கலாம். ஞான குரு டோண்டு ராகவனிடம் கேட்டால் குண்டலினியில் இருக்கும் மூலாதாரச் சக்தியை ஏழு தடைகளைக் கடந்து சிரசில் இருக்கும் பிரம்மத்துடன் இணைவது என்று விளக்கமளிக்கலாம். முள்ளி வாய்க்காலின் துயரத்தை உண்மையாக பார்த்து வராத சோகம் செட்டுபோட்ட சண்டையின் மூலம் வருவதை தள்ளிவைத்துப் பார்த்தால் ஈழத்தை இந்தப்படம் நினைவுபடுத்தலாம். ஜே.கே போன்ற ஞானிகளிடம் கேட்டால் மனிதனின் ஆதார ஏழு உணர்ச்சிகளின் ( அது என்னவென்று எம்மிடம் கேட்டால் தெரியாது ) ஆழமான உளவியல் ஆட்டத்தை படம் கொடுத்திருப்பதாக சொல்லலாம்.

லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம் கேட்டால் சங்க காலம் தொட்டு, ஈழக்காலம் வரை ஆணின் குறி போல ஆட்டம் போடும் போர்வெறியின் நள்ளிரவு தாக நீட்சியை, அற்புதமான உள்ளொளி புனைவு படும பராக்கிரமங்களின் வழி படம் உரசுகிறது என்று சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

படம் என்ன அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது? என்ன விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை கட்டியமைக்கிறது? என்ன விதமான பாலியல் விழைவுகளை போட்டு உடைக்கிறது? இப்படி பொருளே இல்லாத சுற்றி வளைத்து மூக்கை தொடும் மொழியில் கேட்காமல் சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே இரசிகனுக்கு ஏது ஏறியிருக்கிறது என்பதன் மூலமே பதிலைத்தேடலாமே?

வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள். குடிகாரனும், உலக கொலைகாரனும் அருகருகே நாற்காலிகளைப் போட்டு பின் நவீனத்திற்காக அமரும் காட்சி நம்மால் சகிக்க முடியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் உண்மையில் விளிம்பு நிலை மக்களை எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ அவ்வளவும் அதற்குமேலும் இழிவு படுத்தியிருக்கிறது. ரீமா சென்னின் மூலம் பெண்களை, சிவப்பு ஆதிவாசிகள் மூலம் பழங்குடிகளை, கஞ்சிக்கில்லாமல் பரிதவித்தாலும் மல்லனது சண்டையைப்பார்த்து ஆவேசக் கூச்சலாக இறையும் மக்களை, மக்களே இப்படி இருக்கும்போது எப்போதும் புணர்தலுக்கும், சண்டைக்கும் விரும்பக்கூடிய பார்த்திபன் அல்லது உண்மையான அதிகார மையம் மறைந்து கொள்ளும் தந்திரங்களை,….. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மையமும் இல்லை, விளிம்பும் இல்லை, வெங்காயமும் இல்லை.

மனித குல வரலாறு பசிவெறி, தாகவெறி, பாலுறுவுவெறி போன்ற அடிப்படை உணர்ச்சிகளுக்கிடையில் மட்டுமே நகர்ந்திருக்கிறது என்று கற்பிதம் செய்து புரிந்து கொண்டால் இந்தப்படத்தையும் சிலாகிக்கலாம். ஆனால் இந்த அடிப்படை உணர்ச்சிகள் மனிதர்களை, கூட்டமாக, சமூகமாக வாழவைத்து, வாழ்வை முன்னேற்றுவதற்கு உரிய சக்திகள், அந்த சக்திகளை கிடைக்க விடமால் செய்யும் உடமைச்சக்திகள் என்று வரலாற்றை பார்ப்பவர்கள் எவரும் இந்தப்படத்தை சகிக்க முடியாது. ஏனெனில் இந்தப்படம் வெவ்வேறு தருணங்களில் வெளிப்படும் மனிதத்தின் அடிப்படை அறத்தை எந்தப் பொருளுமில்லாமல் வன்மத்துடன் கேலிசெய்கிறது.

இறைச்சிக்காக அடித்துக் கொள்ளும் மக்கள் பின்பு மைதானத்தில் மல்லனது குண்டால் இரத்தச் சகதிகளாக சிதறும் மனிதர்களைக் கண்டு ஆரவாரமிடுகிறார்கள் என்ற காட்சி இதற்கோர் சான்று. உடன்வந்தவர்கள் பல தடைகளால் காக்கை குருவிகள் போல மடிந்து போவதை மறந்து படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூவரும் சகஜமாக பயணத்தை தொடர்வது மற்றோர் சான்று. இவையெல்லாம் ஒரு ஃபேண்டசி படத்தை லாஜிக் என்ற கத்தி கொண்டு வெட்டுவதாக சிலர் கருதலாம்.

ஆனால் இங்கே காரணகாரியங்கள் விவாதப்பொருளல்ல. ஆனால் நடக்கும் கதை இந்த காரணகாரியங்களை இழிவுபடுத்துகிறது என்பதே நம் விமரிசனம். செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.

இத்தனைக்கும் பிறகும் இந்தப்படத்தில் நல்லது எதுவும் வினவின் கண்ணுக்குப்படவில்லையா என்று கேட்பவர்களை ஆறுதல் படுத்த ஒன்று சொல்லலாம். அது பார்த்திபனின் லிங்க தரிசனம் வசனம் இந்து முன்னணி வகையறாக்களுக்கு கடுப்பேற்றியிருக்கும் என்பதே. தற்செயலாக அமைந்து விட்ட இந்த ஒன்றுக்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம்.

வேட்டைக்காரன், குத்தாட்டம், காமடி, சண்டை என வழமையான தமிழ்படத்தை பார்த்து சலித்தவர்கள் இந்த மாறுபட்ட கோணங்களையும் காட்சிகளையும் வண்ணங்களையும் ஒரு சேஞ்சுக்காக இரசிக்கலாம்.

நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை.

“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!

vote-012வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், “அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்”எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், “அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்டதாக’’ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.  குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.

ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது.  இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், “அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட” உண்மையைப் போட்டு உடைத்தனர்.  மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்து விடவில்லை.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் “இந்து’மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது.  இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, “வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்” கூறி வருகிறது.  எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன.  இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் “பாலியல் ஓநாய்கள்’என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க “ராணாராகினி’என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான “பைக்’’குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு “காதல் புனிதப் போர்'(ஃணிதிஞு  ஒடிடச்ஞீ) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன.  முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.

ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம்.  இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்-அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.

கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,”தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக’பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர்நீதி மன்றம், “லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?”என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் “லவ் ஜிகாத்’பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.

தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், “தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்”எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,”தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக” வாக்குமூலம் அளித்தார்.  எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜாராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது.  சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.

போலீசார் தமது அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை “லவ் ஜிகாத்’என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது.

உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றில், “வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை” ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை.  வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில்  மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?  இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

-புதிய ஜனநாயகம், டிசம்பர், 2009

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

38

vote-012ந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும்  தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய  தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது. மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர்.  இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன.  கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லாவாகவோ அல்லது ஏசு கிருஸ்துவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.

ஒருவேளை, அந்த கோண்டு மக்கள் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டுமோ! ஏனென்றால், அவர்களது  பிரபஞ்ச நியதியின் கடவுளாகிய நியம் ராஜாவின் உறைவிடமான நியம்கிரி மலை, வேதாந்தா (அறிவின் எல்லையை உபதேசிக்கும்  இந்துத் தத்துவயியலின் ஒரு கிளை) என்ற பெயர் தாங்கிய கம்பெனியிடம் அல்லவோ விற்கப்பட்டிருக்கிறது! வேதாந்தா- உலகத்தின் மிகப்பெரும் சுரங்கத் தொழில் நிறுவனங்களில் ஒன்று. லண்டனில், முன்னர் ஈரான் மன்னருக்குச் சொந்தமாயிருந்த மாளிகையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது அந்நிறுவனம். இன்று ஒரிசாவைச் சுற்றி வளைத்து வருகின்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேதாந்தாவும் ஒன்று.

தட்டையான உச்சிகளைக் கொண்ட இம்மலைகள் அழிக்கப்பட்டால், அவற்றைப் போர்த்தியிருக்கும் பசுமையான காடுகளும் சேர்த்து அழிக்கப்படும். அவற்றிலிருந்து ஊற்றெடுத்து வழிந்து, சமவெளிகளை வளப்படுத்தும்  சுனைகளும், ஆறுகளும் அழியும்.  டோங்ரியா கோண்டு இன மக்களும் அழிந்துபடுவார்கள். இதே வகையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும், இந்தியாவின் காடுகளடர்ந்த இதயப் பகுதியில், அதனைத் தாயகமாய் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் அழிக்கப்படுவார்கள்.

நெரிசலும், புகைநாற்றமும் மண்டிய நமது நகரங்களில் வாழும்  சிலர் இப்படிப் பேசுகிறார்கள், “அதனால் என்ன? முன்னேற்றத்துக்கான விலையை யாராவது கொடுத்துத்தானே ஆகவேண்டும்.” சிலர் இப்படிக்கூடப் பேசுகிறார்கள், “இதையெல்லாம் நாம் சந்திக்கத்தான் வேண்டும். இந்த சனங்களுடைய காலம் முடிந்து விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எந்த வளர்ந்த நாட்டை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு ‘கடந்த காலம்’ இருக்கத்தான் செய்கிறது.”  என்கிறார்கள். உண்மைதான், அவர்களுக்கெல்லாம் அப்படி ஒரு கடந்த காலம் இருக்கத்தான் செய்கிறது. “அப்படியானால், அத்தகையதொரு கடந்த காலம் ஏன் ‘நமக்கு’ மட்டும் இருக்கக் கூடாது? ” என்பது அவர்களின் கேள்வி.

இத்தகைய சிந்தனைப் போக்கின் அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் காட்டு வேட்டை (Operation Green Hunt) எனும் போர்; மத்திய இந்தியாவின் காடுகளைத் தமது தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘மாவோயிஸ்ட்‘ கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் போர். மாவோயிஸ்டுகள் மட்டும்தான் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா என்ன?  நிலமற்றவர்கள், தலித் மக்கள், வீடற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நெசவாளர்கள் என நாடு முழுவதும் ஒரு பெரும் போராட்டக் களமே விரிந்து கிடக்கிறது.

மக்களுடைய நிலங்களையும், இயற்கை வளங்களையும் மொத்தமாக முதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொள்வதற்கு வழிவகை செய்யும் கொள்கைகள் உள்ளிட்ட எல்லா அநீதிகளின் உருத்திரண்ட வடிவமாக, தங்களை நசுக்குவதற்கு உருண்டு வந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அநீதித் தேரின் சக்கரங்களைத் தடுத்து நிறுத்த  அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், மிகப்பெரிய அபாயமென்று மாவோயிஸ்டுகளை மட்டுமே குறி வைத்திருக்கிறது அரசாங்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலைமைகள் இன்றைய அளவுக்கு மோசமானதாக இல்லாதிருந்த ஒரு சூழலில், ‘தனிப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்‘ என்று மாவோயிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்  பிரதமர் மன்மோகன் சிங். அவர் பேசியவற்றிலேயே இந்தக் கருத்துதான் மிகப் பிரபலமானதாகவும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனவரி 6, 2009 அன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, மாவோயிஸ்டுகள் ஒன்றும் அத்தனை பலம் பொருந்தியவர்களல்ல என்று அவர் தெரிவித்த கருத்துக்கு, முந்தைய கூற்றிக்குக் கிடைத்த அளவிலான முரட்டுக் கவர்ச்சி என்ன காரணத்தினாலோ கிடைக்கவில்லை. ஜூன் 18, 2009 அன்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, அவர் தனது அரசின் உண்மையான கவலையை வெளியிட்டார்; “இயற்கை தாதுவளம் மிக்க பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமேயானால், நிச்சயமாக முதலீடுகளுக்கான சூழ்நிலை அதனால் பாதிக்கப்படும்”.

மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்? அவர்கள் தடைசெய்யப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இன் உறுப்பினர்கள்; 1967-இல் நக்சல்பாரி எழுச்சியை வழிநடத்தி, பின்னர் இந்திய அரசால் அழித்தொழிக்கப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் வழி வந்த பல்வேறு பிரிவினரில், ஒரு பிரிவினர். இந்திய சமூகத்தின் உள்ளார்ந்த, கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டுமானால், அது இந்திய அரசை வன்முறையாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். முன்னர் பீகார் மற்றும் ஜார்கண்டில் மாவோயிச கம்யூனிச மையமாகவும்1, ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழுவாகவும் அவர்கள் இயங்கியபோது, மாவோயிஸ்டுகள் மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றிருந்தார்கள். (2004-இல் தற்காலிகமாக அவர்கள் மீதான தடை நீக்கப்பட்ட போது, வாரங்கல்லில் நடைபெற்ற அவர்களது பேரணியில் 15 இலட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்).

எனினும் ஆந்திரத்தில் அவர்களது செயல்பாடு பின்னர் மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. தங்களது உறுதியான ஆதரவாளர்களில் சிலரையே கடுமையான விமரிசகர்களாக மாற்றும் அளவிற்கு ஒரு வன்முறைப் பாரம்பரியத்தை அவர்கள் விட்டுச்சென்றார்கள். ஆந்திர போலிசும் மாவோயிஸ்டுகளும் நடத்திய கட்டுப்படுத்த முடியாத கொலைகள் மற்றும் போட்டிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் யுத்தக் குழு நிர்மூலமாக்கப்பட்டது. உயிர்  பிழைத்தவர்கள் ஆந்திராவிலிருந்து சத்தீஸ்கருக்கு தப்பியோடினார்கள். அடர்ந்த காடுகளின் இதயப் பகுதியில், ஏற்கெனவே பல பத்தாண்டுகளாக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தங்களது தோழர்களோடு இணைந்து கொண்டார்கள்.

காடுகளில் உள்ள மாவோயிஸ்டு இயக்கத்தின் உண்மையான இயல்பு குறித்த நேரடி அனுபவம்  “வெளியாட்கள்” பலருக்கும் கிடையாது. சமீபத்தில், ‘ஓபன் மேகசின்’ எனும் பத்திரிகையில், மாவோயிஸ்டு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணபதியுடனான நேர்காணல் ஒன்று வெளிவந்தது. ‘மாவோயிஸ்டு கட்சி என்பது எவ்வகை வேறுபாட்டையும் அனுமதிக்க மறுக்கின்ற,  அதிகாரத்துவப் போக்குடைய, மன்னிக்கும் சுபாவமே இல்லாத கட்சி’ என்று கருதுபவர்களின் மனதை மாற்றும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருக்கவில்லை. ஒரு வேளை, மாவோயிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவார்களேயானால், இந்தியச் சமூக அமைப்பில் சாதிப்பிளவுகள் தோற்றுவித்திருக்கும்  கிறுக்குத்தனமான பன்முகத்தன்மையைக் கையாளும் வல்லமை அவர்களுக்கு இருக்கும்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலான எதையும் தோழர் கணபதி அப்பேட்டியில் கூறவில்லை.

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பை போகிறபோக்கில் அங்கீகரித்து அவர் பேசிய முறையானது, மாவோயிஸ்டுகள் மீது பெரிதும் அனுதாபம் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பைக் கூடச் சில்லிடச் செய்வதாக இருந்தது. தாங்கள் தொடுத்த போரில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கொடூரமான வழிமுறைகள் மட்டுமல்ல இதற்குக் காரணம்;  தான் எந்த இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் இயக்கம் கூறிக் கொண்டதோ,  எந்த மக்கள் விசயத்தில் அது கொஞ்சமாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த தமிழ் மக்கள் மீது இறங்கிய பேரழிவின் துயரமிருக்கிறதே, அதுவும்தான் தோழர் கணபதியின் பேச்சு தோற்றுவித்த நடுக்கத்துக்குக் காரணம்.

தற்போது, மத்திய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளும் பட்டினியின் கோரப் பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும். பஞ்சம் பட்டினி என்றவுடனேயே நமது மனக்கண் முன் தோன்றுகின்ற,  சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளின் பட்டினி நிலையுடன் ஒப்பிடத்தக்க நிலை அது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்கப்பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களாலும், சிறு வியாபாரிகளாலும்  தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர்.  அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப்பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்.

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

உங்கள் பகுதிகளை ‘வளர்க்க‘த்தான் நாங்கள் விரும்புகிறோம் என்று அரசாங்கம் சொல்வதை நம்புவதற்கு அவர்கள் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். தாண்டேவாடாவின்2 காடுகளுக்குக் குறுக்கே  தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்டுவருகின்ற, விமான ஓடுபாதைக்கு நிகரான மழமழப்பான அகலமான நெடுஞ்சாலைகள்,  தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு நடத்திச் செல்வதற்காகத்தான் அமைக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் நிலங்களுக்காகப் போராடத் தவறினால், தாம் முற்றாக அழித்தொழிக்கப்படுவோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதனால்தான், அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்திருக்கின்றார்கள்.

மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்தவாதிகள் இந்திய அரசைத் தூக்கி எறிவது என்ற தங்களது அறுதி இலக்குக்காகத்தான் போராடுகிறார்கள் என்றபோதிலும், தற்போதைய நிலையில் கந்தல் அணிந்த,  அரைப் பட்டினி நிலையில் உள்ள தமது படையும், ஒரு ரயிலையோ பேருந்தையோ ஒரு சிறு நகரத்தையோ கண்ணால் கூடப் பார்த்திராத அதன் கணிசமான சிப்பாய்களும், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாவோயிஸ்டுகளும் அறிந்தே இருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டில், இந்திய திட்டக்  கமிசனால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று “தீவிரவாதிகளால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள்” என்ற தலைப்பில்  ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. “நக்சல்பாரி (மாவோயிஸ்டு) இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மத்தியில், உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.  அதன் தோற்றமும் வளர்ச்சியும், அதன் அங்கமாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலை மற்றும் அனுபவங்களின் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையிலான பாரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. ‘வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது’  என்பது இவ்வியக்கத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூக நீதி, சமத்துவம், பாதுகாப்பு மற்றும் தல மட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.” என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.  ’தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்’ எனும் கூற்றிலிருந்து இந்த அறிக்கை வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!

இது மாவோயிஸ்டு கிளர்ச்சியையே கவர்ச்சிச் செய்தியாகக் எடுத்துக் கொண்டிருக்கும் ’மாவோயிஸ்டு வாரம்’! எனவே, ‘பல்லாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிகளின் திரட்சியே இப்பிரச்சினையின் ஆணிவேராக இருக்கிறது’ என்ற கருத்தை ஒப்புக்கொள்வதற்கு, கொழுத்த கோடீசுவரக் கோமான் முதல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீரும் நாளிதழின்  குரூர மனம் படைத்த ஆசிரியர் வரை, அனைவருமே தயாராக இருப்பது போலத் தோன்றுகின்றனர். ஆனால், பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக – அதுதான் அவர்களது நோக்கம் எனும் பட்சத்தில்  இந்த 21-ஆம் நூற்றாண்டின் தங்க வேட்டையை அவர்கள்  தடுத்து நிறுத்த வேண்டிவரும் – விவாதத்தை முற்றிலும் வேறு திசையை நோக்கித் திருப்பும் முயற்சிக்கிறார்கள்; புனிதமான ஆவேசம் பீறிட மாவோயிஸ்டு ‘பயங்கரவாதத்துக்கு‘ எதிராகக் குமுறி வெடிக்கிறார்கள்.  ஆனால், இவையெல்லாமே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விவகாரமாகத்தான் அமைந்திருக்கிறது.

ஆயுதமே தீர்வு என்று துணிந்து களத்தில் நிற்பவர்கள், நாள் முழுதும் செய்தித்தாள் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அமர்ந்திருக்கவில்லை; அல்லது தொலைக்காட்சி காமெராக்களுக்காக அவர்கள் ’நடிக்கவும்’ இல்லை. அல்லது “வன்முறை நல்லதா, கெட்டதா? என்ற அன்றைய அறவியல் கேள்விக்கான பதிலை எஸ்.எம்.எஸ் செய்யச்சொல்லி கருத்துக் கணிப்பும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நீதி பெறும் தகுதி படைத்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய அபாயகரமான கூட்டத்திடமிருந்து, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்ற தனது மேன்மையான குடிமக்களைக் காப்பாற்றும் பொருட்டுத்தான், அரசு அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றது.  இப்போரில் வெல்வதற்கு மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் பிடிக்கலாம் என ஆரூடமும் சொல்கின்றது.  கொஞ்சம் விசித்திரமாகத் தெரியவில்லை? 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகும்  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே இருந்தது… சீனத்துடன் பேசுவதற்கும் தயாராய் இருக்கின்றது. ஆனால், ஏழைகளுக்கு எதிரான யுத்தம் என்று வரும்போது மட்டும் அதன் அணுகுமுறை மூர்க்கத்தனமானதாக மாறி விடுகின்றது.

வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் என இன மரபுச் சின்னங்களைத் தம் பெயர்களாக சூட்டிக் கொண்ட சிறப்புக் காவல் படைகள், கொலை செய்யும் உரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏற்கெனவே அக்காடுகளைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன; அது போதாதாம். சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் படைகளும், கொடூரத்துக்குப் பெயர் போன நாகா பட்டாலியனும் தொலை தூர வனாந்தர கிராமங்களில் மனச்சாட்சியற்ற மிருகத்தனமான கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன; அதுவும் போதாதாம். தாண்டேவாடாவின் காடுகள் நெடுக கொலை, பாலியல் வன்முறை, குடியிருப்புகளைத் தீயிடுதல் எனத் தனது அட்டூழியங்களால் மூன்று இலட்சம் மக்களை வீடற்றவர்களாக்கி ஓடச் செய்திருக்கும் சல்வா ஜுடூம்3 என்ற ‘மக்கள் சேனை’க்கு ஆயுதத்தையும் ஆதரவையும் அரசாங்கமே வழங்கி வருகிறது; அதுவும் போதாதாம். தற்போது, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையையும், ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரையும் களத்திலிறக்க முடிவு செய்திருக்கிறது அரசு. பிலாஸ்பூரில் (9 கிராமங்களை அப்புறப்படுத்தி) படைத் தலைமையகத்தையும், ராஜ்நந்த்காவுனில் (7 கிராமங்களை அப்புறப்படுத்தி) விமானத் தளத்தையும் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.  இம்முடிவுகளெல்லாம் முன்னமே எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகவே தெரிகின்றது. சர்வேக்கள் நடத்தி முடிக்கப் பட்டிருக்கின்றன; குறிப்பான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் போர், இப்போதல்ல, கொஞ்ச காலமாகவே நெருங்கி, நெருங்கி வந்துகொண்டே இருந்திருக்கிறது. சுவாரசியமாக இல்லை? இப்போது இந்திய விமானப்படையின் இராணுவ ஹெலிகாப்டர்களுக்கு ’தற்காப்பின் பொருட்டு சுடுவதற்கான உரிமையை’- எந்த உரிமையைப் பரம  ஏழைகளான தனது குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசு மறுக்கிறதோ அந்த உரிமையை – அரசு வழங்கி விட்டது.

அவர்கள் யாரை நோக்கிச்  சுடப் போகிறார்கள்?  காட்டிற்குள் தலைதெறிக்கப் பயந்தோடும் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து ஒரு மாவோயிஸ்டை பாதுகாப்புப் படை எங்ஙனம் இனம் பிரித்துக் கண்டுபிடிக்கும்? பல நூற்றாண்டுகளாய் வில்லும் அம்பும் ஏந்தி வாழும் பழங்குடி மக்கள், இப்போதும் அவற்றை ஏந்தி நடப்பார்களாயின் அவர்களும் மாவோயிஸ்டுகளாகக் கணக்கில் கொள்ளப்படுவார்களா? ஆயுதம் ஏந்திப் போரிடாத மாவோயிஸ்டு அனுதாபிகளும் கூட  சுட்டுத்தள்ளப்பட வேண்டிய இலக்குகளில் அடங்குவார்களா?  நான் தாண்டேவாடா சென்றிருந்தபோது, தனது ‘பசங்களால்’ கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். “இவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என்று  நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்” என்று கேட்டேன். “பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு… இதெல்லாம் வெளியில இருந்து வந்த விசயங்களில்லையா?” என்றார்.

என்ன வகைப்பட்ட போராய் நடக்கப்போகிறது இந்தக் காட்டு வேட்டை? அது எப்பொழுதேனும் நமக்குத் தெரிய வருமா? காட்டுக்குள்ளிருந்து செய்திகளெதுவும் வெளிவருவதில்லை. மேற்கு வங்கத்தின் லால்கர் ஏற்கெனவே சுற்றிவளைத்துத் துண்டிக்கப்பட்டு விட்டது. யாரேனும் உள்ளே செல்ல முயன்றால், அடித்து உதைத்துக் கைது செய்யப்படுகின்றார்கள். அப்புறம் வழக்கம்போல மாவோயிஸ்டுகள் எனப் பட்டம் சூட்டப்படுகிறார்கள். தாண்டேவாடாவில் ஹிமான்ஷு குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.  அந்த ஆசிரமம்தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்துக்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல் வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்.

தனிடையே, இந்தியாவின் ஆளும் நிறுவனம், தனது சர்வ வல்லமை பொருந்திய ஆயுதத்தைக் களமிறக்கியிருக்கின்றது. ஆளும் நிறுவனங்களின் உடன்படுக்கை ஊடகங்கள், இதுகாறும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்த இசுலாமிய பயங்கரவாதம் குறித்த புனையப்பட்டதும், ஆதாரமற்றதும், வெறியைக் கிளப்பும் தன்மையதுமான கதைகளை ஒரே இரவில் மாற்றி, அதே ரகத்தைச் சார்ந்த ‘சிவப்பு பயங்கரவாதம்’ குறித்த கதைகளை வழங்கத் தொடங்கின. சகிக்கவொண்ணாத இந்தக் கூச்சல்களுக்கிடையே, சிறு ஓசையும்கூடத்  தப்பிக் கசிந்துவிடாத வகையில், போர்க்களப் பகுதி, அமைதியின் வலையால் சுற்றி வளைத்து இறுக்கப்படுகின்றது. ‘இலங்கை வழித் தீர்வு’ தான் அவர்களது திட்டம் போலும்! புலிகளுக்கு எதிரான போரில், “இலங்கை அரசு இழைத்திருக்கும் போர்க்குற்றங்களைப் பற்றிய ஒரு சர்வதேச விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையை ஐரோப்பிய அரசுகள்  ஐ.நாவில் முன் வைத்தபோது, அதற்கு இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டதே, அது நிச்சயமாகக் காரணமின்றி செய்யப்பட்டதல்ல.

இந்தத் திசையில் செய்யப்படும் முதல் காய்நகர்த்தலாக “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறாய்” என, ஜார்ஜ் புஷ்ஷின் எளிய இருமைக் கோட்பாட்டின் அடிப்படையிலான  தீவிரமானதொரு பிரச்சாரம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாடெங்கும் நடைபெறும் எண்ணற்ற வடிவங்களிலான எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் ‘மாவோயிஸ்டு பிரச்சினை’ என்று வேண்டுமென்றே குறுக்கப் படுகின்றன. இவ்வாறு வேண்டுமென்றே அதீதமாய்க் காட்டப்படும் மாவோயிஸ்டு அபாயம் தனது இராணுவமயமாக்கலை நியாயப்படுத்திக் கொள்ள அரசுக்கு உதவுகிறது. (இப்பிரச்சாரம் நிச்சயமாய் மாவோயிஸ்டுகளுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை. தன் மீது இத்தகைய தனிப்பட்ட கவனம் குவிக்கப்படுவது குறித்து எந்தக் கட்சிதான் அதிருப்தி கொள்ளும்?) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் இந்தப் பொய்மையைத் திரைகிழிப்பதில் நமது சக்தியனைத்தும் உறிஞ்சப்படுகையில், அரசு இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ நடவடிக்கையின் வீச்சிற்குள்  நூற்றுக்கணக்கான பிற எதிர்ப்பு இயக்கங்களையும் வளைத்து இழுத்து, அவர்கள் மீதும்  ‘மாவோயிஸ்டு அனுதாபிகள்’ என முத்திரை குத்தி துடைத்தெறியும்.

எதிர்காலம் என்று குறிப்பிட்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது.  நந்திகிராமிலும், சிங்கூரிலும் மேற்கு வங்க அரசு இதைத்தான் செய்ய முயன்றது, ஆனால் தோற்றுவிட்டது. தற்போது லால்கரில், போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி என்ற அமைப்பினர், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டிருந்த போதிலும், தனித்தவொரு மக்கள் இயக்கமாகவே செயல்படுகின்றனர். எனினும், இவ்வமைப்பு மாவோயிஸ்டு அமைப்பினரின் வெளிப்படையான பிரிவு என்றே அழைக்கப்படுகின்றது. தற்போது கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் தலைவர் சத்ரதார் மகாத்தோ, மாவோயிஸ்டு தலைவர் என்று வேண்டுமென்றே அழைக்கப்படுகிறார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியர் வேலை பார்த்தார் என அற்பமான சோடிக்கப்பட்ட காரணத்துக்காக இரண்டு ஆண்டுகளை சிறையில் கழித்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னின் கதையை நாம் அறிவோம். வெளிச்சம் முழுவதும் காட்டு வேட்டையின் மீது பாய்ச்சப்பட்டு, கவனம் இங்கே குவிக்கப்பட்டிருக்கும் சூழலில், போர் நடைபெறும் இந்தக் களத்துக்கு வெளியே, வெகு தொலைவில், நாட்டின் ஏனைய பகுதிகளில், ஏழைகள், தொழிலாளர்கள், நிலமற்றவர்கள் ஆகியோர் மீதான தாக்குதலும், யாருடைய நிலங்களையெல்லாம் ‘பொதுத் தேவைக்காக’ அபகரிக்க அரசு விரும்புகிறதோ, அவர்கள் மீதான தாக்குதலும் தீவிரமடையும். அவர்களுடைய துன்பம் அதிகரிப்பது மட்டுமல்ல, அவர்களுடைய கதறல்களும் முறையீடுகளும் எந்தச் செவியிலும் நுழைய முடியாமல் கேட்பாரின்றி அவிந்தே போகும். .

போர் தொடங்கி விட்டால், மற்றெல்லாப் போர்களையும் போலவே, தனக்குப் பொருத்தமானதொரு இயக்கத்தையும், நியாயங்களையும், தனக்கே உரித்தானதொரு பொருளியலையும் கூட அது வளர்த்துக் கொள்ளும். போகப்போக, இந்தப் போர் என்பது மீண்டு வரவே முடியாத ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறும். ஈவிரக்கமற்ற கொலைக்கருவியான ராணுவத்தைப் போலவே போலீசும் நடந்துகொள்ளவேண்டுமென இந்தப் போர் எதிர்பார்க்கும். ஊழல் மலிந்த, ஊதிப் பருத்த நிர்வாக எந்திரமான போலிசைப்போலவே துணை ராணுவப் படைகளும் மாறிவிடும் என்பதும் எதிர்பார்க்கப்படவேண்டும். நாகலாந்திலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும்  இப்படித்தான் நடந்ததென்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவின் ‘இதயப் பகுதியில்‘ போரிடவிருக்கும் பாதுகாப்புப்படையினருக்கு, தாங்கள் யாரை எதிர்த்துப் போர் நடத்துகிறார்களோ, அந்த மக்களின் பரிதாபத்திற்குரிய நிலைமையிலிருந்து தங்களது நிலைமை பெரிதும் வேறுபட்டதல்ல என்ற உண்மை வெகு விரைவிலேயே புரிந்து விடும். காலப்போக்கில் மக்களையும், அவர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டும் படையினரையும் பிரித்துக் காட்டுகின்ற தடுப்புச்சுவர் முழுவதிலும் ஓட்டைகள் விழுந்து விடும். துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும் வாங்கப்படும், விற்கப்படும். சொல்லப்போனால் இது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் போரில் கொல்லப்படுபவர்கள் யாராக இருப்பினும் – பாதுகாப்புப் படையினராயினும்,  மாவோயிஸ்டுகளாயினும், சண்டையில் ஈடுபடாத குடிமக்களாக இருப்பினும் – பணக்காரர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போரில் மடிபவர்கள் அனைவரும் ஏழைகளாகவே இருப்பர். அதே நேரத்தில், இந்தப் போர் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று யாரேனும் எண்ணிக் கொண்டிருப்பார்களாயின், அவர்கள் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.  இந்தப் போரின் கோரப்பசி விழுங்கப்போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கப் போவது நிச்சயம்.

ந்த அலையைத் தடுக்கவும், போரை நிறுத்தவும், என்ன செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க, நாடெங்கிலும் உள்ள பல்வேறு மனித உரிமைக் குழுக்கள்,  சென்ற வாரம் தில்லியில் தொடர்ச்சியான பல கூட்டங்களை நடத்தின. அனைவரும் அறிந்த ஆந்திர மாநில மனித உரிமை செயல் வீரரான முனைவர் பாலகோபால் அங்கே இல்லாமல் போனதால் ஏற்பட்ட வலியை நாம் அனைவருமே உணரமுடிந்தது. நமது சமகால அரசியல் சிந்தனையாளர்களிடையே துணிவும் அறிவுக்கூர்மையும் படைத்தவர்களில் ஒருவரான அவரது தேவை நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கும் இந்தத் தருணத்தில், அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.4. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் காலமாகிவிட்டார்.

இருந்த போதிலும், இந்தியாவின் குடிமை உரிமைச் சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை செயல் வீரர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் அங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட தொலைநோக்கையும், ஆழத்தையும், அனுபவத்தையும், சான்றாண்மையையும், அரசியல் கூர்மையையும், அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் வெளிப்பட்ட உண்மையான மனிதநேயத்தையும் கேட்டிருந்தால், நிச்சயமாக பாலகோபால் நிம்மதி கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். இவர்களெல்லோரும் தலைநகரில் கூடிய இந்த நிகழ்வு, நமது தொலைக்காட்சி நிலையங்களில் ஒளியுமிழ் விளக்குகளுக்கு அப்பால், செய்தி ஊடகங்களின் கொட்டுச்சத்தம் கிளப்பும் பரபரப்பிற்கு அப்பால், இந்தியாவின் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் ஒரு மனித இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டின. “பயங்கரவாதத்திற்கு உகந்ததான  ஒரு அறிவுத்துறைச் சூழலை உருவாக்குகிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் இவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. அக்குற்றச்சாட்டு அச்சுறுத்தும் நோக்கில் உரைக்கப்பட்டதாயிருப்பின், அதன் விளைவென்னவோ நேர் எதிரானதாகவே இருந்தது.

அங்கு உரையாற்றியோர் தாராளவாத ஜனநாயகச் சிந்தனை முதல் தீவிர இடதுசாரி சிந்தனை வரையிலான பல்வேறு பட்ட கருத்துக்களையும் பிரதிபலித்தனர். அங்கே பேசியவர்களில் யாரும் தம்மை மாவோயிஸ்டு என்று அழைத்துக் கொள்ளவில்லையெனினும், “அரசு வன்முறைக்கு எதிராகத் தம்மைக் தற்காத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு” என்பதைக் கொள்கையளவில் யாரும் எதிர்க்கவில்லை. மாவோயிஸ்டு வன்முறை,  அவர்களது ’மக்கள் நீதிமன்றங்கள்’ வழங்கும் அதிரடித் தீர்ப்புகள், ஆயுதப் போராட்டத்தில் தவிர்க்கவியலாமல் ஊடுருவும் அதிகாரத்துவத்தால் ஆயுதமற்றோர் ஒடுக்கப்படுதல் என்பனவற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தமது உடன்பாடின்மையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், சாமானிய மக்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் எட்டாக்கனியாக இருக்கின்ற காரணத்தினால்தான் மக்கள் நீதிமன்றங்கள் நீடிக்க முடிகின்றன என்பதையும், இன்று இந்தியாவின் இதயத்தில் வெடித்திருக்கும் இந்த ஆயுதப் போராட்டம் என்பது அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு, பற்றிக்கொள்ள ஏதுமின்றித் தவிக்கும் மக்களின் இறுதித் தெரிவே அன்றி, முதல் தெரிவு அல்ல என்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.

எனவே நிலவுகின்ற சூழ்நிலைகள் ஒரு போருக்கு நிகரானவையாக ஏற்கெனவே காட்சியளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில தனித்த மோசமான வன்முறை நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு நியாய விசாரம் செய்து, அவற்றிலிருந்து எளிய அறம் சார்ந்த முடிவுகளுக்கு வருவதில் உள்ள அபாயங்களைப் பேச்சாளர்கள் அனைவரும் உணர்ந்தே இருந்தனர். அரசமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையையும், அதை எதிர்த்த ஆயுத வன்முறையையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து நீண்ட காலம் முன்பே எல்லோரும் விடுபட்டு விட்டனர். சொல்லப்போனால், ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், இந்தச் சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் அநீதியின் பால் கவனம் செலுத்துமாறு இந்த நாட்டின் ஆளும் நிறுவனங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கு நன்றி சொல்லும் அளவுக்குச் சென்றார்.

ஆந்திர மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் குறுகிய செயல்பாட்டு காலகட்டத்தில், ஒரு மனித உரிமைச் செயல்வீரராக தான் பணியாற்றிய அனுபவங்களை ஹரகோபால் பகிர்ந்து கொண்டார். ஆந்திரத்தின் இரத்தக்களறியான காலங்களில்  மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும், குஜராத்தில் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத் தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல் 2002-ஆம் ஆண்டின் ஒரு சில நாட்களில்  கொன்றொழித்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்ற உண்மையை, அவர் தமது பேச்சினூடாகக் கூறிச் சென்றார்.

லால்கர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற போர்ப் பகுதிகளிலிருந்து வந்திருந்தோர், போலிசு அடக்குமுறைகள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் ஊழல்கள் பற்றி விவரித்ததுடன், சில சமயங்களில் போலிசார், நேரடியாக சுரங்க நிறுவன அதிகாரிகளிடமிருந்தே ஆணைகளைப் பெற்று செயல்படுத்துவதாகவும் கூறினர். நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து (Aid agencies)  காசுவாங்கிக் கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள சில அரசு சாரா நிறுவனங்கள் ஆற்றுகின்ற சந்தேகத்திற்கிடமான, கேடான பாத்திரத்தை சிலர் விவரித்தனர்.

செயல் வீரர்களோ சாமானிய மக்களோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றித்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். வேறு எதனை விடவும் இதுதான் மக்களை ஆயுதம் ஏந்துமாறும், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து கொள்ளுமாறும் பிடித்துத் தள்ளிவிடுகிறது என்று கூறினார்கள்.. ‘வளர்ச்சித் திட்டங்கள்‘ என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்ட ஐந்து கோடி மக்களில், ஒரு சிறு பகுதியளவு மக்களை வேறு இடங்களில் மீள் குடியமர்த்துவதற்குக் கூடத் தன்னால் முடியவில்லை என்று கைவிரித்த இந்த அரசாங்கத்தால், 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக (பணக்காரர்களின் உள்நாட்டு வரியில்லா சொர்க்கங்கள்) மட்டும், 1,40,000 ஹெக்டேர்கள் வளமான நிலத்தை எப்படி திடீரென்று இனங்கண்டு தொழிலதிபர்களுக்கு வழங்க முடிந்ததென அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகத்தான், ‘பொதுத் தேவைக்கு’ என்ற பெயரில், அரசாங்கம் மக்களிடமிருந்து பலவந்தமாக நிலங்களை அபகரிக்கின்றது என்பது நன்கு தெரிந்திருந்தும்,  ‘நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘பொதுத் தேவை‘ என்ற சொல்லை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், என்ன வகை நீதியைக் கடைப்பிடிக்கிறது?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். ‘அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும்‘ 5  என்று அரசாங்கம் கூறும்போது, அதன் பொருள் காவல் நிலையங்கள் முறையாகக் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே ஏன் இருக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.

பள்ளிகளல்ல, மருத்துவமனைகளல்ல, வீட்டு வசதியல்ல, சுத்தமான குடிநீர் அல்ல, வனம்சார் விளை பொருளுக்கு நியாய விலை அல்ல,  குறைந்தபட்சம் போலிசு பயமின்றி நிம்மதியாய் வாழ விடுவதும் அல்ல, மக்களுடைய சிரமங்களைக் குறைத்து வாழ்க்கையைச் சற்றே எளிதாக்க உதவும் எதுவும் அல்ல… ‘அரசின் அதிகாரம்‘ என்பதற்கு ‘நீதி’ என்று ஒருபோதும் பொருள் கொள்ள முடிவதில்லையே அது ஏன், என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு காலம் இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று சொல்லலாம்.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த ‘வளர்ச்சி‘யின் மாதிரி (model) குறித்து இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வோர் அப்போதெல்லாம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்றோ அந்த வளர்ச்சி ‘மாதிரி’ முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. காந்தியவாதிகள் முதல் மாவோயிஸ்டுகள் வரை அனைவருமே இதில் உடன்படுகின்றார்கள். இதனைத் தகர்த்தெறியும் திறன் வாய்ந்த வழி எது என்பது மட்டுமே தற்போதைய கேள்வி.

எனது நண்பருடைய பழைய கல்லூரி நண்பரொருவர், கார்ப்பரேட் உலகத்தின் ஒரு பெரும்புள்ளி,  தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு உலகத்தை அறிந்துகொள்ளும் தேவையில்லாத ஆர்வத்தில், இத்தகையதொரு கூட்டத்திற்கு வந்திருந்தார். ஃபேப் இந்தியா 6 குர்தாவுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாலும், அவர் விலைமதிப்பு மிக்கவர் என்பதை அவரது தோற்றமும் வாசமும் காட்டிக் கொடுக்கவே செய்தன. சற்று நேரத்தில் அவர் இருப்புக் கொள்ளாமல் என் பக்கம் சாய்ந்து கிசுகிசுத்தார்: “கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று யாராவது இவர்களிடம் சொல்ல வேண்டும். இவர்களால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்கவே முடியாது. எதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இவர்களுக்குப் புரியவில்லை. எவ்வளவு பணம் இதில் இறக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? இதில் பணம் போட்டிருக்கும் கம்பெனிகளால் அமைச்சர்கள், ஊடக முதலாளிகள், கொள்கை வகுப்பாளர்கள்.. என்று யாரையும் விலைக்கு வாங்க முடியும். தங்களுக்கான சொந்த அரசு சாரா நிறுவனங்களையும், கூலிப் படைகளையும் பராமரிக்க முடியும். அவர்களால் மொத்த அரசாங்கங்களையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு ஏன், அவர்கள் மாவோயிஸ்டுகளையே கூட  விலை பேசக்கூடியவர்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் நல்ல மனிதர்களாகத் தெரிகிறார்கள். இப்படி ஆகாத காரியத்துக்கு மூச்சைக் கொடுப்பதற்கு பதிலாக, இவர்கள் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைக் கவனிக்கலாம் ” என்றார்.

மக்கள் காட்டுமிராண்டித்தனமாக  ஒடுக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வேறு என்ன ‘உருப்படியான‘ வேலையை அவர்கள் தெரிவு செய்ய முடியும்? அவ்வாறு தெரிவு செய்வதற்குத்தான் மக்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர?  கடன் சுழலில் சிக்கிய பல விவசாயிகள் அதைத்தானே தெரிவு செய்தார்கள்?

(நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் ஏழை மக்கள், எதிர்த்துப் போராடவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, தற்கொலை செய்து மடிந்து விடுவார்களேயானால் அதுதான், இந்தியாவின் ஆளும் நிறுவனங்களுக்கும், ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் பிடித்தமானதாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா அப்படித் தோன்றுகிறது?)

த்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மக்கள் – அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகள், பலர் மாவோயிஸ்டுகள் அல்ல – அரும்பாடுபட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பைக் கடந்த சில ஆண்டுகளாய் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ’காட்டு வேட்டை’ நடவடிக்கை அவர்களது போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. எதிர்த்துப் போராடும் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் சக்தி எது என்பதுதான் கேள்வி.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால், உள்ளூர் மக்களுடனான மோதல்கள் பலவற்றிலும் சுரங்கத்தொழில் நிறுவனங்களே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது ஒரு உண்மை. போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுத்தள்ளுங்கள், அநேகமாக எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடந்தகாலமும்  ஈவிரக்கமற்றதுதான். கார்ப்பரேட் முதலாளிகள் குரூரமானவர்கள், களம் பல கண்டு இறுகி உரமேறியவர்கள்.  “உயிரைக் கூடத் தருவோம், ஒருபோதும் எமது நிலத்தைத் தர மாட்டோம்”  என்று மக்கள் எழுப்பும் முழக்கம், குண்டு வீச்சைத் தாங்கும் கூடாரத்தின் மீது விழும் மழைத் தூறல் போல, அவர்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. இந்த முழக்கங்களையெல்லாம் பல காலமாக அவர்கள் கேட்டிருக்கிறார்கள் – ஆயிரக்கணக்கான மொழிகளில், நூற்றுக்கணக்கான நாடுகளில்.

தற்போது இந்தியாவில் வந்திறங்கிய நாள் முதல் விமான நிலையங்களின் முதல் வகுப்பு ஓய்வறைகளில்தான் அவர்களில் பல பேர் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதுவகைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். சோம்பல் மிகுந்த மிருகங்களைப் போல மெதுவாகக் கண்களை இமைக்கிறார்கள். தாங்கள் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)- அவற்றில் சில 2005 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டவை – உண்மையான பணமாக உருமாறும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். விமான நிலைய ஓய்வறையிலேயே நான்காண்டுகளைத் தள்ளுவது என்பது, மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மனிதனைக்கூட சோதிக்கின்ற அளவுக்கான தாமதம் அல்லவா?  ஜனநாயக நடைமுறை கோருகின்ற விரிவான ஆனால் பொருளற்ற சடங்குகள்: மக்கள் கருத்தறிதல்(சில நேரங்களில் இது மோசடியாக நடத்தப்படுவது), சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகள் (சில நேரங்களில் இவை போலியானவை), பல்வேறு அமைச்சகங்களிடம் பெற வேண்டிய ஒப்புதல்கள் (பெரும்பாலும் இவை விலைக்கு வாங்கப்படுபவை), நீண்ட காலமாய் இழுத்துக் கொண்டு கிடக்கும் நீதிமன்ற வழக்குகள். போலி ஜனநாயகம்தான், இருந்தாலும் கூட காலத்தைத் தின்று விடுகிறதே. காலம் என்றால் வெறும் காலமல்ல, அதுதானே பணம்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் பணத்தின் அளவு என்ன தெரியுமா? விரைவில் வெளிவர இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தங்களது நூலில்(Out of This Earth: East India Adivasis and the Aluminium Cartel) சமரேந்திர தாஸ் மற்றும் பெலிக்ஸ் பெடல் ஆகியோர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட் இருப்பின் மதிப்பு 2.27 டிரில்லியன் டாலர்கள் (இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் போல இது இரண்டு மடங்குக்கும் அதிகம்) எனக் குறிப்பிட்டுள்ளனர். அது 2004 ஆண்டின் விலை நிலவரம். பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இதிலிருந்து அதிகாரப்பூர்வமாக, 7% க்கும் குறைவான தொகையைத்தான் ராயல்டியாக அரசாங்கம் பெறவிருக்கிறது.  ஒரு சுரங்கத் தொழில் நிறுவனம் நன்கு அறிமுகமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில், தாதுப் பொருள் வெட்டியெடுக்கப்படாமல் மலைக்குள் இருக்கும்போதே, அநேகமாக அது முன்பேரச் சந்தையில் விலைபேசப் பட்டிருக்கும். அதாவது, பழங்குடி மக்களைப் பொருத்தவரை வாழும் தெய்வமாகவும், அவர்களது வாழ்க்கைக்கும் நம்பிக்கைக்குமான ஊற்றுமூலமாகவும், இந்தப் பிராந்தியத்தினுடைய சூழலின் ஆரோக்கியத்துக்கு ஆணிவேராகவும் திகழும் இம்மலைகள், கார்ப்பரேட் முதலாளிகளைப் பொருத்தவரை மிகவும் மலிவான தாதுப்பொருள் கிடங்குகள் – அவ்வளவுதான். கிடங்கு என்றால் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விரும்பியவுடன் எளிதாக எடுக்கத் தக்கதாய் இருக்க வேண்டும், அல்லவா? கார்ப்பரேட் முதலாளிகளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், மலைக்குள்ளிருந்து பாக்சைட் வெளியில் வந்தே தீரவேண்டும்.  சுதந்திரச் சந்தையின் அவசரத் தேவைகளும், நிர்ப்பந்தங்களும்  அப்படிப்பட்டவை ஆயிற்றே!

இது ஒரிசாவிலுள்ள பாக்சைட் கனிமத்தின் கதை மட்டும்தான்.  இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம், சுண்ணாம்புக்கல்,  டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு, கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) அங்கமாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு எஃகு மற்றும் சிமெண்டுத் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் மற்றும் பிற உள் கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இவ்வேட்டையின் பிரம்மாண்டத்தையும், முதல் போட்டிருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்.

ஒருகாலத்தில் தண்ட காரண்யா என அழைக்கப்பட்ட இக்காடு, மேற்கு வங்கத்தில் தொடங்கி ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், மற்றும் ஆந்திர – மகாராட்டிர மாநிலங்களின் சில பகுதிகள் எனப் படர்ந்து விரிகின்றது. இது காலங்காலமாய் இந்தியாவின் கோடிக்கணக்கான பழங்குடி மக்களுக்குத் தாயகம். இப்போதெல்லாம் இந்தப் பகுதியை ’சிவப்புத் தாழ்வாரம்’ அல்லது ’மாவோயிஸ்டுத் தாழ்வாரம்’ (Maoist corridor)என செய்தி ஊடகங்கள் அழைக்கத் துவங்கியுள்ளன. இதனை ‘எம்.ஒ.யு.-யிஸ்ட் தாழ்வாரம்’ (MoUist corridor -புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதேசம்) என்று அழைப்பதே சாலப் பொருந்தும். ஏனென்றால் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 5-வது பிரிவு பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்போ, நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது என்ற வாக்குறுதியோ ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அரசியல் சட்டம் பார்க்க அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு திரைச்சீலையாக, ஒரு அவசர முகப்பூச்சாகத்தான்  அப்பிரிவு இடம் பெற்றிருக்கின்றது எனத் தோன்றுகிறது.

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா வரை  அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக் கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற்திட்டுகள் மீதும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது. கற்பனைக்கு எட்டாத அளவிலான ஒரு சமூக மற்றும் சூழலியல் மாறாட்டத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆயினும், இவற்றில் பெரும்பாலானவை இரகசியங்கள். இவை குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாது.

உலகின் ஆகப் பரிசுத்தமானதொரு காட்டையும், அதனைச் சார்ந்த சூழலமைப்பையும், அதில் வாழும் மக்களையும் சேர்த்து அழிப்பதற்குத் தீட்டப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் குறித்து, கோபன் ஹேகனில் நடைபெறவிருக்கும் தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாட்டில் விவாதிக்கக் கூடும் என்று நான்  ஒருக்காலும் நினைக்கவில்லை. நமது 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள், மாவோயிஸ்டு வன்முறை குறித்த மயிர்க்கூச்செரியும் கதைகளுக்காக அலைந்து திரிகின்றனர். உண்மையான கதை கிடைக்காவிடில் ஒரு கட்டுக்கதையைத் தயாரிக்கின்றனர். ஆனால், கதையின் இந்தப் பக்கம் குறித்து அவர்களுக்கு சிறிதும் நாட்டம் இருப்பதாய் தெரியவில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அவர்களை பக்திப் பரவசத்துக்கு ஆளாக்கியிருக்கும் ‘வளர்ச்சியாளர் குழுவினர்’ (development lobby), சுரங்கத் தொழிலின் வளர்ச்சியானது,  மொத்த உள்நாட்டு உற்பத்தியை கற்பனைக்கெட்டாத வேகத்தில் முடுக்கி விடுமென்றும், வெளியேற்றப்படும் மக்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை வாரி வழங்குமென்றும் கூறி வருகிறார்களே, அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் நாசம் தோற்றுவிக்க இருக்கும் படுபயங்கரமான பேரழிவின் ‘விலை மதிப்பை’ இவர்கள் தங்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. அவர்கள் முன்வைக்கும் குறுகிய வரம்புகளுக்கு உட்பட்டே பார்த்தாலும் கூட இந்தக் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி சுரங்கக் கம்பெனிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய் விடும். அரசாங்க கஜானாவுக்கு வருவதோ 10% க்கும் குறைவான தொகை தான். வெள்ளமென வெளியேற்றப்படும் மக்கள் கூட்டத்தில், ஒரு சிறு துளிக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.  அவர்களும் அடிமைக் கூலியை ஈட்டுவதற்காக, கவுரவமற்ற முதுகெலும்பை முறிக்கும் வேலைகளையே செய்ய வேண்டியிருக்கும். வெறி கொண்டு பொங்கும் இந்தப் பேராசைக்கு வளைந்து கொடுத்ததன் மூலம், நமது சுற்றுச்சூழலை பலி கொடுத்து, பிற நாடுகளின் பொருளாதாரங்களுக்குத்தான் நாம் வலிமை சேர்க்கின்றோம்.

புரளும் பணத்தின் அளவு இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது, இதில் ஆதாயம் பெறும் பங்குதாரர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதல்லவே. சொந்த ஜெட் விமானத்தில் மிதக்கும் சுரங்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரியில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக்கொண்டு, தம் சொந்த மக்களையே வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற, மக்கள் படையின் (சல்வா ஜுடும்) பழங்குடி இன சிறப்பு காவல் அதிகாரிகள் வரை – முதல் நிலை, இடை நிலை, கடை நிலை எனப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப் பங்குதாரர்களின் உலகம்.

இவர்கள் ஒவ்வொருவரும் தமது நலனையும், தாம் பெறும் ஆதாயங்களையும் பிரகடனம் செய்யத்தேவையில்லை. பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றார்கள். எந்த அரசியல் கட்சி, எந்தெந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல்வாதிகள், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள், எந்தெந்த சிறப்பு ஆலோசகர்கள், எந்தெந்த போலிசு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தக் கொள்ளையில் நேரடிப் பங்கு இருக்கிறது, அல்லது  மறைமுகப் பங்கு இருக்கிறது என்பதை நாம் எப்படி, எந்தக் காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்? மாவோயிஸ்டுகளின் சமீபத்திய ‘அட்டூழியம்‘ குறித்த சூடான செய்தியை வெளியிடும் எந்தெந்த பத்திரிகைகள், ‘களத்திலிருந்து நேரடியாகச் செய்தி வழங்குகின்ற‘ – அல்லது தெளிவாகச் சொன்னால், களத்திலிருந்து  செய்தி வழங்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற, இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், களத்திலிருந்து அப்பட்டமாகப் புளுகுகின்ற – எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கொள்ளையின் பங்குதாரர்கள் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் பன்மடங்கு அதிகமான தொகையை, பல்லாயிரம் கோடி டாலர்களை இரகசியமாக ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கின்றார்களே இந்தியக் குடிமகன்கள்… அந்தப் பணத்தின் ரிஷிமூலம் எது?  எங்கிருந்து வந்தது? சென்ற பொதுத்தேர்தலில் செலவிடப்பட்ட 2 பில்லியன் டாலர் பணம் எங்கிருந்து வந்தது? அல்லது  தேர்தலுக்கு முந்தைய ’கவரேஜுக்கான பேக்கேஜ்களை’ ’மேல் நிலை’, ’கீழ் நிலை’ மற்றும் ’நேரலை’ என்று வகை பிரித்து, ஊடகங்களுக்கு அரசியல்வாதிகளும், கட்சிகளும்  அள்ளிக்கொடுத்ததைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதியிருந்தாரே7, அந்த கோடிக்கணக்கான ரூபாய்கள்தான் எங்கிருந்து வந்தன? (குத்துக்கல்லைப் போல அமர்ந்திருக்கும் ஒரு விளங்காத ‘ஸ்டுடியோ விருந்தினரை’க் குடைந்தெடுக்கும் தொலைக்காட்சி செய்தியாளர், ‘மாவோயிஸ்டுகள் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது? ஏன் மைய நீரோட்டத்துக்கு வர மறுக்கிறார்கள்?‘ என்று காட்டுக் கூச்சலாகக் கேள்வி எழுப்புவதை அடுத்தமுறை தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும்போது, தவறாமல் அந்தத் தொலைக்காட்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள், ‘ஏனெனில் உங்களுடைய ரேட்டுகள் அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை‘ என்று.)

லன்களின் முரண்  (conflict of interest) குறித்தும், நெருக்கமானவர்கள்  அடையும் ஆதாயங்கள் (cronyism) குறித்தும் ஏராளமான கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே  கிடக்கின்றன. இன்றைய ‘காட்டு வேட்டை’ நடவடிக்கையின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், கார்ப்பரேட் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியபோது, பல்வேறு சுரங்க நிறுவனங்களுக்காக வாதாடியவர் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? வேதாந்தா நிறுவனத்தில் நிர்வாகம் சாரா இயக்குனர் என்ற பதவியில் இருந்த சிதம்பரம்,  2004-ஆம் ஆண்டில் அவர் நிதியமைச்சராகப் பதவி ஏற்ற நாளில்தான் அந்த இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடனே வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அவர் அளித்த அனுமதிகளில் முதன்மையானது ‘டிவின்ஸ்டார் ஹோல்டிங்ஸ்’ என்ற மொரிசியஸ் கம்பெனிக்கு வழங்கிய அனுமதிதான் என்பதிலிருந்தும், அந்தக் கம்பெனி வாங்கிய பங்குகள் வேதாந்தா குழுமத்தின் அங்கமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பங்குகளே என்ற உண்மையிலிருந்தும் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக ஒரிசாவைச் சேர்ந்த மனித உரிமை செயல் வீரர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, “அந்நிறுவனம் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழலை நாசப்படுத்தியதாகவும், மனித உரிமைகளை மீறியதாகவும் வேதாந்தாவின் மீது குற்றம் சாட்டி, நார்வே நாட்டின் ஓய்வூதிய நிதியம் கூட,  அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதையும் சான்றாக எடுத்துக் காட்டினார்கள். உடனே, “வேதாந்தாவுக்கு பதில், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட்டின் பெயருக்கு உரிமத்தை மாற்றிவிடலாம்” என்று நீதிபதி கபாடியா  பரிந்துரைத்தாரே,  இந்த உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அது மட்டுமல்ல, “நானும்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கிறேன்” என்று சர்வ அலட்சியமாக நீதிபதி நாற்காலியில் அமர்ந்தவாறே அவர் அறிவிக்கவும் செய்தார். உச்சநீதி மன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவே “சுரங்கம் தோண்டுவது, காடுகளையும், நீர் வளங்களையும், சுற்றுச்சூழலையும் ஆயிரக்கணக்கான பழங்குடியினரின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அழிக்கும். எனவே அதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும்” எனத் தெளிவாக அறிக்கை கொடுத்திருந்தும், அந்த அறிக்கையின் கூற்றுகளை மறுப்புக் கூறாமலேயே, காடுகளை அழித்து சுரங்கம் தோண்டிக் கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு பெருந்தன்மையாக அவர் அனுமதி அளித்தார்.

டாடாக்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில  நாட்களிலேயே, 2005 ஆம் ஆண்டில், தாண்டேவாடாவில் ‘தன்னெழுச்சியான’ மக்கள் படை என்ற பெயரில், மூர்க்கத்தனமாக மக்களை விரட்டியடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றித் தரும் ‘சல்வா ஜூடும்’ படை முறையாக துவக்கி வைக்கப்பட்டதே, பஸ்தாரில் கானகப் போருக்கான பயிற்சிப் பள்ளியும் அதே நாட்களில்  தொடங்கி வைக்கப்பட்டதே, இந்த உண்மைகளிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

இரு வாரங்களுக்கு முன்பு, அக்டோபர் 12 அன்று, தாண்டேவாடாவின்  லோஹந்தி குடாவில் அமையவிருக்கும் டாடா இரும்பு உருக்காலை நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டபூர்வ நடைமுறையான ’மக்கள் கருத்தறிதல்’ என்ற நிகழ்ச்சிக்கு, பஸ்தாரை  சேர்ந்த இரண்டு கிராமங்களிலிருந்து 50 பழங்குடி மக்கள் அரசாங்க ஜீப்புகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டு, யாரும் நுழைந்துவிட முடியாமல் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே, சிறியதொரு அறையில் அந்தப் பழங்குடி மக்களைப் பார்வையாளர்களாக வைத்தே கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதே (மக்கள் கருத்தறிதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அறிவிக்கப் பட்டது. பஸ்தார் மக்கள் அளித்த ஒத்துழைப்புக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்) இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

மாவோயிஸ்டுகளை ‘தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்‘ என்று பிரதமர் கூறத் தொடங்கிய தருணம் முதற்கொண்டே (அவர்களை ஒழித்துக் கட்ட அரசு தயாராகி விட்டது என்ற சமிக்ஞை கிடைத்ததுமே) இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல சுரங்கத் தொழில் நிறுவனங்களின் பங்கு விலைகள் வானளாவ ஏறினவே, இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

சுரங்க நிறுவனங்களுக்கு  இந்தப் போர், அவசரமாக, அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. தங்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளனைத்தையும் இதுகாறும் எதிர்த்து நின்று எப்படியோ தாக்குப்பிடித்து வந்த பழங்குடி மக்களை, இந்தப் போரின் விளைவாக வெடிக்கவிருக்கும் வன்முறையின் தாக்கம், அவர்களது வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்குமானால், சுரங்க நிறுவனங்கள்தான் அதனால் ஆதாயமடைபவர்களாக இருப்பர். விளைவு இப்படித்தான் இருக்குமா, அல்லது இது மாவோயிஸ்டு அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மாய எதிரி’ என்ற தனது கட்டுரையில் இதே வாதத்தை திருப்பிப் போடும்மேற்கு வங்க முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர்  அசோக் மித்ரா, மாவோயிஸ்டுகள் நிகழ்த்தும் ’பயங்கரமான தொடர் கொலைகள்’, கொரில்லாப் போர்முறை பாடப் புத்தகங்களிலிருந்து அவர்கள் கற்றிருக்கும் இலக்கண வகைப்பட்ட தந்திரங்களே என்று வாதிடுகின்றார். “அவர்கள் ஒரு கொரில்லா ராணுவத்தைக் கட்டிப் பயிற்சியளித்திருக்கிறார்கள் என்றும், அது தற்போது இந்திய அரசை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், மாவோயிஸ்டுகளின் ‘வெறியாட்டம்’, என்பது, இந்திய அரசை ஆத்திரமூட்டுவதற்காகத் தெரிந்தே செய்யப்படும் முயற்சிதான் என்றும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் நிரம்பிய இந்திய அரசு, பல கொடூரங்களை நிகழ்த்துமென்றும், அச்செயல்கள் பழங்குடியினரின் கோபத்தைக் கிளறுமென்று மாவோயிஸ்டுகள் நம்புவதாகவும், அந்தக் கோபத்தை அறுவடை செய்து அதனை ஒரு ஆயுத எழுச்சியாக உருமாற்றலாம் என்று மாவேயிஸ்டுகள் நம்புவதாகவும் கூறுகிறார்.

மாவோயிஸ்டுகள் குறித்து பல்வேறு இடதுசாரிப் பிரிவினரும், தொடர்ந்து கூறிவரும் ‘சாகச வாதம்’ எனும் குற்றச்சாட்டுத்தான் இது. ‘தம்மை அதிகாரத்தில் அமர்த்தும் ஒரு புரட்சியைக் கொண்டு வருவதற்காக, தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மக்களின் மீதே ஒரு அழிவைத் தருவிக்க மாவோயிஸ்டு கொள்கையாளர்கள் தயங்குவதில்லை’ என்று கூறுகிறது இக்குற்றச்சாட்டு. அசோக் மித்ரா, ஒரு பழைய கம்யூனிஸ்டு. மேற்கு வங்கத்தில்  ’60 – ’70 களில் நக்சல்பாரி எழுச்சியின்போது, அதனை வெளியிலிருந்து நெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த அவரது கருத்துக்களை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. அதே வேளையில், அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் பழங்குடி மக்கள் தமக்கென ஒரு நீண்ட, நெடிய வீரஞ்செறிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாரம்பரியம் மாவோயிசம் பிறப்பதற்கும் முந்தையது  என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சில நடுத்தர வர்க்க மாவோயிஸ்டு கொள்கையாளர்களால் ஆட்டுவிக்கப்படக் கூடிய மூளையில்லாத தலையாட்டி பொம்மைகளாக பழங்குடி மக்களை மதிப்பிடுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கும்.

ஒருவேளை டாக்டர் மிஸ்ரா லால்கர் நிலைமையிலிருந்து பேசுகிறார் போலும். அங்கே இதுவரையில் கனிம வள இருப்பு  குறித்த பேச்சு ஏதும் அடிபடவில்லை. (ஒன்றை நாம் மறந்து விடலாகாது – தற்போது லால்கரில் தோன்றிய எழுச்சி ஜிண்டால் இரும்பு ஆலையைத் துவக்கி வைக்க முதல்வர் வருகை தந்ததையொட்டித்தான் பற்றிக் கொண்டது; இரும்பு உருக்காலை ஒரு இடத்தில் இருக்கும்போது, இரும்புக் கனிவளம் வெகுதொலைவிலா இருக்கக் கூடும்?)  மக்களை வாட்டி வதைக்கும் வறுமையும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.எம். கட்சி ஆண்டு வரும் மேற்கு வங்கத்தில், பல பத்தாண்டுகளாய் போலிசிடமும், மார்க்சிஸ்டு கட்சியின் ஆயுதந்தாங்கிய கும்பலான ஹர்மத்களிடம்8 அவர்கள் பட்ட துயரங்களும்தான் மக்களின் கோபத்துக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

“ஆயிரக்கணக்கான  போலிசுக்காரர்களும், துணை ராணுவத் துருப்புகளும்  லால்கரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”என்ற கேள்வியையே எழுப்பாமலிருப்பதென்றும், மாவோயிஸ்டு ‘சாகச வாதம்‘ குறித்தசூத்திரத்தை ஏற்றுக்கொள்வதென்றும் ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கூட, இது முழுச் சித்திரத்தின் ஒரு மிகச்சிறிய பகுதியாகவே இருக்கும்.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் அதிசயிக்கத்தக்க ‘வளர்ச்சிக்’கதையின் பதாகையைத் தாங்கி வந்த கப்பல் தரை தட்டி விட்டது. பாரிய சமூக, சுற்றுச்சூழல் சீர்குலைவை அது விலையாகக் கொடுத்துள்ளது. இப்போது ஆறுகள் வற்றுகின்றன, காடுகள் மறைகின்றன, நிலத்தடி நீர்மட்டம் இறங்குகிறது, தமக்கு இழைக்கப்பட்டிருப்பது என்ன என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால், விதைத்த வினைகளுக்கான அறுவடைக் காலம் துவங்கி விட்டது. நாடெங்கிலும் கலகங்கள் வெடிக்கின்றன. மக்கள் தமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் விட்டுக் கொடுக்க மறுத்து ஆவேசமாகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இனியும் அவர்கள் பொய் வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. பத்து சதவீத வளர்ச்சி விகிதமும், ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று ஒத்து வராதவையாக தீடீரென்று தோன்றத் தொடங்குகிறது.

அந்த தட்டை உச்சி மலைகளுக்கு உள்ளிருந்து பாக்சைட்டை வெளியே எடுக்க வேண்டுமென்றால், காடுகளின் மடியறுத்து இரும்புக் கனிகளை வெட்டியெடுக்க வேண்டுமென்றால், இந்தியாவின் 85 சதவீத மக்களை அவர் தம் மண்ணிலிருந்து பிய்த்து நகரத்துக்குள் பிடித்துத் தள்ளவேண்டுமென்றால் (அந்தக் காட்சியைத்தான் காண விரும்புவதாய்ச் சொல்கிறார், சிதம்பரம்)9, இந்தியா ஒரு போலிசு ராஜ்யமாக வேண்டும். அரசு தன்னை ராணுவமயமாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய இராணுவமயமாக்கத்தை அரசு நியாயப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரு எதிரியைக் காட்டவேண்டும்.  அந்த எதிரிதான் மாவோயிஸ்டுகள். இந்து அடிப்படைவாதிகளுக்கு முசுலிம்கள் எப்படியோ, அப்படித்தான் கார்ப்பரேட் அடிப்படைவாதிகளுக்கு மாவோயிஸ்டுகளும்… (அடிப்படைவாதிகளிடையேயான சகோதரத்துவம் என்று ஏதேனும் நிலவுகிறதோ? அதனால்தான் சிதம்பரத்தை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக உச்சி மோந்து பாராட்டியிருக்கின்றதோ?)

அரை இராணுவப் படைகள், ராஜ்நந்காவுனில் விமான தளம், பிலாஸ்பூரில் படைத் தலைமையகம், துணை ராணுவப் படைகள்,  சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், சத்தீஸ்கரின் பொதுப் பாதுகாப்பு சிறப்புச் சட்டம், ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை .. என்பன போன்ற இந்த எல்லா ஏற்பாடுகளும், சில ஆயிரம் மாவோயிஸ்டுகளை காட்டிலிருந்து துடைத்தெறிவதற்காக மட்டும்தான் என்று எண்ணுவது மாபெரும் பிழையாகும். பல விதமான விளக்கப்படும் இந்தக் ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை எனும் நிகழ்ச்சிப்போக்கில், சிதம்பரம் இதன் அடுத்த படியை நோக்கி முன் நகர்ந்து ‘பொத்தானை‘ அழுத்தி போரை வெளிப்படையாக அறிவித்தாலும் சரி,  அறிவிக்காவிட்டாலும் சரி, இந்தச் சூழலில் முளை விடக் காத்திருக்கும் ஒரு  ‘அவசர நிலைக் காலத்தை‘ நான் அவதானிக்கிறேன். (ஒரு சிறிய கணிதக் கேள்வி: ஒரு சின்னஞ்சிறு காஷ்மீர் பள்ளத்தாக்கைக் கட்டுக்குள் வைக்க ஆறு லட்சம் சிப்பாய்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், அடுக்கடுக்காய் அதிகரித்துச் செல்லும் பல நூறு இலட்சம் மக்களின் கோபத்தை எதிர்கொண்டு கட்டுப்படுத்த எத்தனை சிப்பாய்கள் தேவைப்படுவார்கள்?)

சமீபத்தில்  கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் கோபட் காந்தியை நார்கோ அனாலிசிஸ்10 செய்வதை விடுத்து, அவருடன் பேச முற்படுவது நல்ல யோசனையாக இருக்கும்.

இதனிடையே, இவ்வாண்டின் இறுதியில் கோபன் ஹேகனில் நடக்கவுள்ள தட்பவெப்ப மாற்றம் குறித்த மாநாட்டிற்குச் செல்லவிருக்கும் யாரேனும் ஒருவர்,  கேட்கத்தகுதியான இந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பீர்களா: பாக்சைட் அந்த மலையிலேயே கிடந்துவிட்டுப்போகட்டுமே, அதை விட்டு வைக்க இயலாதா?

(31 அக்டோபர், 2009  கார்டியன்  இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம்)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

1. மாவோயிச கம்யூனிச மையம், மக்கள் யுத்தக் குழு என இரு வேறு அமைப்புகளாக இயங்கி வந்த இவ்வமைப்புகள், 2004-இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) என ஒரு கட்சியாக இணைந்தனர்.

2. தாண்டேவாடா – சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, பழங்குடியினர் அதிகம் வாழும் பின் தங்கிய மாவட்டம்.

3. சல்வா ஜுடூம் – 2005-இல் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக, பழங்குடியினரைக் கொண்டே சத்தீஸ்கர் அரசு உருவாக்கிய கூலிப்படை.

4. முனைவர் பாலகோபால் 08.10.2009 அன்று மரணமடைந்தார்.

5. லால்கர் முதலான பகுதிகளில் அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் மக்கள் விரட்டியடித்தபோது, அரசு இந்த வாதத்தை முன் வைத்தது.

6. ஃபேப் இந்தியா – மேட்டுக் குடியினர் அணியும் ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

7. 2009- ம் ஆண்டு, மகாராட்டிர மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகள் குறித்து செய்திகள் வெளியிடுவதற்கு, பல்வேறு பெயர்களில் கட்டணங்கள் வசூலித்ததை பத்திரிகையாளர் சாய்நாத் அம்பலப்படுத்தினார்.

8. ஹர்மத் வாஹினி – மேற்கு வங்கத்தில் உள்ள சி.பி.எம் கட்சியின் குண்டர் படை.

9. “இந்தியாவின் 85 சதவிகிதம் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ வேண்டும் என்பதே தமது கனவு” என தெஹல்கா ஏட்டிற்கான ஒரு பேட்டியில் ப. சிதம்பரம் தெரிவித்தார். (தெஹல்கா மே 31, 2008)

10. நார்கோ அனாலிசிஸ் – கைதிகளை விசாரிப்பதற்கு, போதை மருந்தை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி, அவர்களைப் பேச வைக்க போலிசு பயன்படுத்தும் முறை. இவ்வழிமுறை பல உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!

77

vote-012கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக; பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அநாயசமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி. அவளே எனக்கு அழகி.

இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெறிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!

“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.

“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.

பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேநீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.

தேநீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.

“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.

“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.

“பாண்டிச்சேரிங்க”

“என்ன விசயமா?”

“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”

“தங்கறதெல்லாம்?”

“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.

சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள்தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நண்பர்கள்தான் இருந்தனர். அதில் கோபால் மிக  நெருங்கிய நண்பன்.

அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் களைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்

“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்

“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை

“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வெண்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.

“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.

“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்

“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.

“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீய வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரதுக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..”  வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…

“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்..

கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.

பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.

“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெறிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு  மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.

அங்கே விவசாயம்தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணிதான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தேதான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீண் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.

“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்”  தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.

ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும்தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள்தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தாதான். அதற்குப் பின் ஒரு இரண்டு  வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.

என் பெரியப்பாவின் மகள்தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்காதான் எனக்கு அம்மா.

“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கையால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பாதான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.

ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.

பன்னிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவுதற்கு எவரும்  வருவதில்லை.

போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வருடம் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நண்பர்களே கவனித்துக் கொண்டனர். அவரின் காரியங்களும் கூட நண்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.

எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரது சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னையறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.

வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தறியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.

பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.

அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.

மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.

முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?

ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின் அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.

“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள்தான் அவை.

“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”

“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது.  அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.

“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.

“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்ப எங்க இருக்காங்க?”

“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியேபடலியா?”மௌனமாக இருந்தேன்.

“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”

“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”

“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டுதான் வருவேன்”

“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”

“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸுல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”

“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.

நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.

“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”

டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயணிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.

இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.

“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”

“வெவசாயமெல்லாம்?”

“அதெல்லாம் ஓய்ஞ்சி போயி பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”

“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”

“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரணும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹூம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”

இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுண்ணாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காரை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது மாறி விட்டது.

“சரி போலாம் கோபாலு”

“ஏண்டா உள்ளெ போகலியா”

“போயி?”

அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில்தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பறை நோக்கி நடந்தோம்.

சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..

“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.

“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”

“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோணி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.

“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”

“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”

அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம்தான்.

அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.

“சரி போலாம்” என்றவாறே வெளியில் வந்தேன்.

பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,

“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன  பொடியனெல்லாம் போடா வாடான்னுதான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்கவே கெடைக்காது.”

பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.

கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கேதான் தங்கியிருந்தேன்.

இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரைதான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள்தான் புழுத்து நாறுகிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்