Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 811

ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்பாட்டம்

ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

_____________________________________________________

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி இலண்டன் சூர்யோதயம் வானொலிக்காக தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு பேசிய ஒலிப்பதிவு

Maruthaiyan Audio

_____________________________________________________

முழக்கங்கள்:

சிங்கள் இனவெறி அரசே,
ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து
இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு!
முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று!
அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்!
______________________________________________________________________________

இந்திய மேலாதிக்க அரசே,
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்காதே!
வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் ஈழத்தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்காதே!
_________________________________________________________________________

தமிழக மக்களே,
50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!
இலங்கை இனவெறிப் பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்தையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டுவோம்!
ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

_________________________________________________________________

இதே நாளில் இலண்டனில் “புதிய திசைகள்” எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பாக பல பிரிவினரும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முழக்கங்கள்:

இலங்கை அரசே
இன அழிப்பை  நிறுத்து!

தமிழர் பிரதேசங்கள்  மீதான
ஆக்கிரமிப்பை  நிறுத்து!

தமிழ் மக்களை விடுதலை  செய்
தடுப்பு முகாம்களை மூடு!

பிரதேச ஆக்கிரமிப்பை நிறுத்து
தமிழ் மக்களை மீள குடியமர்த்து!

சுயநிர்ணய உரிமை
தமிழர் பிறப்புரிமை.

அரசியல்  கைதிகள் மீதான
சித்திரவதையை நிறுத்து!

கடத்தப்பட்ட ஊடகவியலாரர்கள்  எங்கே?

இலங்கை சிறுபான்மையினரே!
ஓன்று படுவோம் எமது உரிமைக்காக
போராடுவோம்!

சிங்கள மக்களே!
சிறுபான்மையினர் மீதான
ஒடுக்குமுறைக்கெதிராக
குரல் கொடுங்கள்!

உலகில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினரின்
போராட்டங்களின் ஓர் அங்கமாக எமது உரிமைப்போர்
மாறட்டும்.

சிங்கள மக்களே!
தமிழ் பேசும் மக்களின் விடுதலை
என்பதே உங்களுக்கான ஜனநாயகம்.

இந்திய அரசே!
இன அழிப்பு பயிற்சி களம்  இலங்கை தமிழர்,
செயற்பாட்டு களம் இந்திய பழங்குடிகளா?

கடந்தகால தவறுகளில் இருந்து
கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.

இந்திய அரசே!
பிராந்திய வல்லாதிக்கதிற்காக
இலங்கை தமிழர் உரிமையை
விலை பேசாதே!

_____________________________________________________

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி இலண்டன் சூர்யோதயம் வானொலிக்காக தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு பேசிய ஒலிப்பதிவு

Maruthaiyan Audio

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

58

யாரங்கே?
டௌ கெமிக்கல்சை எதிர்த்து சவுண்டு கொடுப்பவன் எவன்?

முதலில் இந்த வீடியோவை பாருங்கள்

வெறி கொண்ட வலதுசாரி சானலான டைம்ஸ் நௌவுக்கே பொறுக்க முடியவில்லையா? அல்லது தனது கோர முகத்தை மறைத்துக் கொள்ள அந்த தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சவடால் தேவைப்பட்டதா, தெரியவில்லை. அடேங்கப்பா, அமெரிக்க அரசை அம்பலப்படுத்தி விட்டது டைம்ஸ் நௌ.

விசயத்துக்கு வருவோம். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பறவைப்பார்வையில் சில விவரங்கள்.

போபால் நீதிமன்றம் கேசவ் மகிந்திராவை ஜாமீனில் விட்டதைத் தொடர்ந்து மறுபிறவி எடுத்த போபால் பிரச்சினையைக் கேள்விப்பட்டு, துணுக்குற்றுப்போன நமது பிரதமர் “யாரங்கே, போபால் வழக்கில் என்ன நடந்தது என்ற ரிப்போர்ட் பத்து நாளில் என் டேபிளுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டு அமைச்சர் குழுவின் தலைவராக ப.சிதம்பரத்தையும் நியமித்தார். எட்டே நாளில் அறிக்கையை பிரதமரின் டேபிளுக்கு கொண்டுவந்தார் சிதம்பரம்.

இப்பேர்ப்பட்ட சுறுசுறுப்புக்கு காரணம் என்ன? இந்தோ அமெரிக்கன் சி.இ.ஓ ஃபோரம் அமெரிக்காவில் கூட இருந்தது. போபால் பிரச்சினை குறித்த இந்திய அரசின் அதிகாரபூர்வமான முடிவை, அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்காவிட்டால் அமெரிக்க முதலாளிகள் அப்பிரச்சினையை அந்தக் கூட்டத்தில் கிளப்புவார்கள் என்பது இந்திய முதலாளிகளின் அச்சம்.

2001 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் வாங்கியது. 1984 இல் நடைபெற்ற விபத்து மற்றும் அதற்கான நிவாரணம் போன்றவையெல்லாம் யூனியன் கார்பைடுடன் முடிந்த்து. அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது டௌ கெமிக்கல்சின் முதல் வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. அது யூனியன் கார்பைடுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை யூனியன் கார்பைடு ம.பி அரசிடம் ஒப்படைத்து விட்டதால், அங்கே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான டன் இரசாயனக் கழிவுகளைச் சுத்தம் செய்வதும் (இதற்கான உத்தேச செலவு 150 கோடி ரூபாய்) அந்தக் கழிவுகளை வேறு எங்காவது கொண்டு சென்று அப்புறப்படுத்துவதும் தன்னுடைய பொறுப்பல்ல, ம.பி அரசின் பொறுப்புதான் என்பது டௌவின் இரண்டாவது வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை நடத்தும் செலவுக்கும் தான் பொறுப்பேற்க இயலாது. அதையும் அரசாங்கம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது டௌ கெமிக்கல்சின் மூன்றாவது வாதம்.

“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” இவை மூன்றும் மேற்கூறிய பிரச்சினைகளில் சிதம்பரம் தலைமையிலான குழு அறிவித்த முடிவுகள்.

இந்திய அரசின் தரப்பிலிருந்து டௌ கெமிக்கல்சுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டௌ கெமிக்கல்சுக்கு எதிராக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல தனிநபர்கள் தொடுத்திருக்கும் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் மன்மோகன் அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இப்படியெல்லாம் வழக்கு போட்டு தொந்திரவு செய்தால் அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் போடமாட்டார்கள் என்றும், அத்தகைய எல்லா வழக்குகளையும் மூட்டை கட்டிவிட வேண்டும் என்றும் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் பிரதமருக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.

ஆக, டௌ வுக்கு எதிராக இந்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. தனக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப்படாதபோது, டௌ வுக்கு ஏன் கோபம் வருகிறது? நடவடிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக இந்தியாவில் பேசுகிறார்களே அவர்கள் வாயையும் அடைக்கவேண்டும். அதுதான் டௌ எழுப்பும் பிரச்சினை.

போபால் பிரச்சினையை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று, போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் 50 பேரை அழைத்து வந்து, சென்ற ஆண்டு சென்னையில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் அலுவலக வாயிலில் ஒரு போராட்டம் நடத்தியது. தனக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு மனு தாக்கல் செய்ததுடன், போராடியவர்கள் 20 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கும் தொடுத்த்து. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியக் குடிமகனின் கருத்துரிமையைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு. மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கும் ஒரு தடையாணை வாங்கி வைத்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ். இது போன வருசத்துக் கதை.

தற்போது நாடாளுமன்றத்தில் போபால் பற்றி நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜும், மார்க்சிஸ்டுகளும் கொஞ்சம் சவுண்டு கிளப்பினர். பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்டுகளின் சவுண்டு பற்றி அமெரிக்கா கவலைப்படுவதுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை.

வேறு யார் “குரல்” எழுப்புவதைப் பற்றி அமெரிக்க அரசு மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கவலை தெரிவிக்கிறது? டௌ கெமிக்கல்சுக்கு எதிராக குரல் எழுப்புவதைக் கூட அமெரிக்க முதலீட்டாளர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர்.

அலுவாலியா பேசிய விசயம் உலகவங்கியிடம் கடன் வாங்குவது குறித்த பிரச்சினை. பேசியதோ பாதுகாப்புத் துறை துணைச்செயலரிடம். அவர் அளித்த பதிலோ அமெரிக்க கார்ப்பரேட் நிறவனங்களின் நலனை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்க கோருகிறது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு, இராணுவம் வேறு என்று கூறும் அறிஞர்களின் பார்வைக்கு இதனை சமர்ப்பிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறலை, இந்திய மக்களின் குரலை சித்தரிக்க அமெரிக்க அதிகாரி பயன்படுத்தும் வார்த்தையைக் கவனித்தீர்களா? NOISE!

போலி சுதந்திரம், மறுகாலனியாதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் (yuppies) இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude…என்பார்களோ? அதை அர்னாப் கோஸ்வாமியிடம் சொல்லட்டும்.

ஆனானப்பட்ட அர்னாபுக்கே ஆத்திரம் வருகிறது என்றால் என்ன சொல்வது?

“டைம்ஸ்…. தே ஆர் சேஞ்சிங்..” என்ற பாப் டைலனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

_____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்க கனவு : வீடியோ

9

ஜார்ஜ் கார்லின் – 5 கிராமி விருதுகள் பெற்ற அமெரிக்காவின் நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமரிசகர் . ‘அமெரிக்க கனவு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சிறு பகுதியே இந்த காணொளி. அமெரிக்கா பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் மாயையை அமெரிகர்களுக்கு புரியும் மொழியில் அம்பலப்படுத்துகிறார்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !

34

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையைத் தோற்கடித்திருக்கிறது. இது பத்தோடு ஒன்றாய் சாதரண கிரிக்கெட் செய்தியாக வந்திருக்க வேண்டியது பெரும் விவாதமாய் எழுந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஒரு ரன்னை சேவக் எடுத்து விட்டால் இந்திய அணி வெற்றி பெறுவதோடு, சேவக் தனது 13வது சதத்தையும் அடித்திருக்கலாம். இறுதி ஓவரை வீசிய இலங்கை அணி சுழற்பந்து வீரர் ரந்திவ் வேண்டுமென்றே “நோ பால்” வீசினார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றாலும், சேவக் சதமடிக்கவில்லை. இதுதான் இப்போது இந்தியாவின் அதி முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நன்னடத்தைக்காக ஐ.சி.சியிடம் மூன்று முறை விருது வாங்கிய தங்கள் அணியா இப்படி நடந்திருக்கிறது என்று அவர் அங்கலாய்த்துள்ளார். இலங்கை அணித் தலைவர் சங்ககராவும் இந்த செயலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர்களும் இந்த விவாகரத்தை முடித்துக் கொள்ளலாமென்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் இதை முடிப்பதாக இல்லை. இது இந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை போல மாற்றி வருகின்றனர். எல்லா செய்தி சானல்களிலும் இது பெரும் விவதாகமாக காட்டப்படுகிறது. தினசரிகளின் விளையாட்டு செய்திகளில் இதுவே கருப்பொருளாக பேசப்படுகிறது.

கேப்டன் சங்ககராவை வில்லன் என்று பேசுகிறது தினமலர். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது பதிவாகியிருக்கிறதாம். அது என்ன என்று பார்த்தால் “ஹாய் ரந்திவ், பந்தை சேவக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்” என்று மட்டும் இருக்கிறது. இதில் என்ன சதி இருக்கிறது? சேவக் அடிக்காமல் இருக்கும் வகையில் பந்து வீசச் சொல்வதில் என்ன குற்றம்?

இருப்பினும் சங்ககரா இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிறகு ஐ.பி.எல்லில் விளையாடும் வாய்ப்பும், வருமானமும் முக்கியம் என்ற விதத்தில் அவரது கவலை இருந்திருக்கும். இந்திய ரசிகர்களுக்கோ சேவக் சதமடிப்பது ஒரு ரன்னில் போய்விட்டதே என்று கவலை. தினமலரின் வாசகர்கள் பலர் இதை வைத்து சிங்களவன் என்றால் இப்படித்தான் அழுகுணி ஆட்டம் ஆடுவான் என்று குறிப்பிடுகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா? ஈழத் தமிழ் மக்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பதலிருந்து புரியாத சிங்கள இனவெறி இந்த ஒரு ரன் பிரச்சினையில் புரிந்து கொள்வதாகச் சொல்வது அயோக்கியத்தனமில்லையா?

புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றிய ராஜபக்சேவுக்கு இந்தியா எல்லா விதங்களிலும் உதவி செய்திருக்கிறது. அதில் போகாத இந்திய மானமா இந்த ஒரு ரன்னில் போய்விடப்போகிறது?

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவின் கிரிக்கெட் இரசிகனை விட ஈழத்தமிழர்களின் உயிர் மிகவும் மலிவான ஒன்றா?

ஈழத்தை அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு ஆதரவளித்ததற்கும், இந்த ஒரு ரன் பிரச்சினைக்கும் பின்னணியாக இருப்பது இந்திய முதலாளிகளின் நலன்தான். ஒன்றுபட்ட இலங்கை என்பதே இந்திய தரகுமுதலாளிகளின் தேவை என்றால், கிரிக்கெட்டை வைத்து நுகர்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இந்திய முதாளிகளுக்கு சேவக் ஒரு ரன்னை இழந்ததும் அதனால் இரசிகன் அடையும் எரிச்சலை தணிப்பதும் அவசியமாக இருக்கிறது.

அதே போல இந்திய கிரிக்கெட் சந்தையின் தயவில்தான் வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கேட்டு முடிக்க நினைக்கிறது. ஐ.பி.எல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அரசியலும் விளாயட்டும் அதன் பொருளாதார நலன்களிலிருந்தே தீர்மானக்கப்படும் என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு ஏது?

அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே?

ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்? – பி.சாய்நாத்

14

உணவு உத்தரவாதம் – வறுமைக் கோட்டுக்கு மேல் [APL], வறுமைக் கோட்டுக்குக் கீழ் [BPL] மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் [IPL] பித்தலாட்டங்கள் – பி.சாய்நாத்

படம் - http://www.thehindu.com

பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிய ஆணை வெளியிடப்பட்ட நேரத்தில் அது முரண்நகையான ஒன்றாக இருந்தது.  டீசல் மற்றும் மண்ணெண்ணையின் கடுமையான விலை உயர்வை உள்ளடக்கிய, கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும்படியான முடிவு இது.  ”அனைவரையும் தழுவிய வளர்ச்சி”யின் [inclusive growth] அவசியம் பற்றி டொரொண்டோவில் உலகத் தலைவர்களுக்கு மன்மோகன் சிங்கே உபதேசித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதுதான் அதிலுள்ள முரண்நகை.  மேலும், அந்த வேளையில்தான் நாமும் “உணவு உத்தரவாதம்” பற்றியும், எந்த அளவுக்கு சிறப்பான முறையில் அதை சட்டபூர்வமானதாக்க முடியும் என்றும் முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தோம்.  உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17 சதவீதத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோதும், பொதுப் பணவீக்கம் இரண்டிலக்கத்தில்  தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த போதும்தான் இந்த முடிவு வெளியிடப்பட்டது.  எனில், இந்த வளர்ச்சியில் நாம் யாரைத் ”தழுவிக்கொள்ள” முயல்கிறோம்?

இந்த பெட்ரோலிய விலைக் கட்டுப்பாடு நீக்கம் பற்றிய செய்தி-ஊடகங்களின் எதிர்வினையோ அந்த நடவடிக்கைக்குச் சற்றும் குறைவிலாக் கொடுமையாகவே இருந்தது. கேபினெட் அமைச்சர்களே இந்த முடிவிலிருந்து விலகி நிற்பதாகக் காட்ட முயன்ற வேளையில், பெரும்பாலான பத்திரிகைகளின் தலையங்கங்களோ இதை மாபெரும் வெற்றி விழாக் கொண்டாட்டம் போலக் காட்டி முடைநாற்றத்தைக் கிளப்பின.  ”இறுதியில் வெற்றியடா” என எக்காளமிட்டது ஒரு தலைப்புச் செய்தி;   ”வரவேற்கத்தக்க துணிகரச் செயல்”  என எட்டுக் கட்டையில் செவிப்பறை கிழித்தது மற்றொன்று.   அரிதாய் சில விதிவிலக்குகள் தவிர்த்து – திங்களன்று நடத்தப்பட்ட பந்த் பெற்ற பல பத்து லட்சம் மக்களின் ஆதரவுக்கு நேர்மறாக- இந்த வெகுஜன ஊடகங்கள் விரிந்த எதார்த்த உண்மையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக் கொண்டன.

மறைந்த முர்ரே கெம்ப்டன் கூறி வந்தது போல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தலையங்க ஆசிரியர்கள் செய்கின்ற வேலை என்னவென்றால், “போர் ஓய்ந்ததும் குன்று மறைவுகளில் இருந்து வெளிப்பட்டு, இறங்கி வந்து காயம்பட்டுக் கிடப்போரைச் சுட்டுக் கொல்வதே.”  செய்தி ஊடகங்கள் இன்று இந்த வரையறுப்பைப் பெருமிதத்துடன் நிறுவி இருக்கின்றன.  இந்த மாதத்திலேயே போபால் தொடர்பாக இப்படியும் ஒரு தலையங்கம் வந்தது. போர் ஓயும் வரை கூட இம்முறை அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.  “குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மனித உரிமை அமைப்பினர்” என்று துயர்மிகு போபாலின் வில்லன்களாக அவர்களைச் சித்தரித்தது அந்த தலையங்கம். “போபாலில் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்குவது பற்றி தனது பங்குதாரர்களிடையே பெருமையுடன் அறிவிக்கும் முன்னர் உலகின் எந்த ஒரு தொழிற்கழகமும் ஒருமுறைக்கு இருமுறை தயக்கத்துடன் யோசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது” என்று தனது உண்மையான துயரத்தை வெளிப்படுத்தி துக்கம் கொண்டாடியது. ”யூனியன் கார்பைட்” என்ற சொல்லே அத் தலையங்கத்தில் ஒரு முறை கூட இடம் பெறவில்லை.  சுடுகிறார்கள் .. தப்பிச் செல்லுங்கள் கெம்ப்டன். [Roll over Kempton. The shooting’s on]

பத்திரிகைகளில் அன்றாட முக்கிய செய்திகளுக்கு ஊடாக விலையேற்றத்துக்கு எதிரான தொடக்க நிலை எதிர்ப்புகளும் சற்றே இடம்பிடித்தன. நமது மிகப் பெரிய  ஆங்கில தினசரியில் மூன்று, நான்கு பத்திகளும் சில விரற்கடை அகலமும் கொண்ட தாராளமான இடத்தை அச்செய்தி ஆக்கிரமித்தது.  மும்பையில் ஒரு மாடல் அழகியின் தற்கொலைச் சாவு செய்திக்கு, ஒரு விளம்பரம் கூட இடம்பெறாத முழுப் பக்கத்தை அதே தினசரி அடுத்தடுத்த இரு நாட்களில் அற்பணித்திருந்தது.  சர்வதேச கிரிகெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு நமது உணவு மற்றும் வேளாண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய செய்தி சென்ற வாரம் பெரிதாய்க் கருத்தேதும் கூறப்படாமல் கடந்து சென்றது.  தேசத்தின் கவனம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் மற்றும் உணவு உத்தரவாதம் பற்றிய விசயத்தில் குவிந்திருந்த அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது.

திரு சரத் பவார் பிரதமரிடம் தனது அமைச்சக வேலைப் பளுவைக் குறைக்கக் கோருவார் என்று அவரை மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. (AFP, New Delhi, July 2)  “அமைச்சுப் பணியில் எனக்கு உதவுவதற்குக் கூடுதல் நபர்களை நியமிக்க நான் பரிந்துரைப்பேன்.  நான் மூன்று அமைச்சர்களைக் கேட்டிருந்தேன்.  ஆனால் அவர்கள் எனக்கு ஒரே ஒருவரை மட்டுமே அளித்திருக்கிறார்கள்… நான் எனது வேலைகளில் சிலவற்றைக் குறைக்கக் கோருவதன் மூலமாக நாம் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்” என செய்தியாளர்களிடையே பவார் கூறினார். எனினும், “அரசாங்கத்தில் எனக்குள்ள பணிகள் பாதிப்படைவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார்.  அப்..பா, நிம்மதியாக இருக்கிறது.  உணவு மற்றும் வேளாண் அமைச்சரை உணவு மற்றும் வேளாண் துறையுடன் இணைப்பதையும் தழுவியதாக தனது ’அனைத்தும் தழுவிய வளர்ச்சி’யை விரிவுபடுத்திக்கொள்ள பிரதமருக்கு இதுவே தக்க தருணமாக இருக்கலாம். (அல்லது நாம் அத்துறையுடன் கிரிக்கெட்டையும் இணைத்துவிடலாம்.) ஒரே துறைக்கு நான்கு அமைச்சர்கள் …. இது உண்மையிலேயே அனைவரையும் தழுவிய வளர்ச்சிதான்.

இருப்பினும் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிய செயல் ஒன்று விடாமல் எல்லாப் பொருட்களின் மீதும் தனது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.  ஏற்கனவே உணவுப் பொருள் விலையேற்றம் சுருள்கத்தி போல வீசியடிக்கும் அதே நேரத்தில் இதுவும் சேர்ந்துகொள்கிறது. அதை இடைமறித்துப் பேசும் அமைச்சர்கள் மற்றும் ஐ.மு.கூ. வெட்டிப் பேச்சாளர்களின், “ஒருசில மாதங்களின் விலையேற்றம் படிந்தே தீரும்” என்ற தொடர்ந்த வெற்று சவடால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

உணவுப் பொருள் உத்தரவாத மசோதா ஒட்டுமொத்தப் புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இப்போது வருகின்றன.  அவ்வாறாயின் அது வரவேற்கத் தக்கது என்றே நினைக்கிறேன் – அது எப்படியும் முந்தைய தயாரிப்பு முயற்சிகளின் அளவுக்குப் படுமோசமாக இருக்க வாய்ப்பில்லை.  உதாரணமாக ஒன்றைப் பாருங்கள்.  அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  [Empowered Group of Ministers] ஃபிப்ரவரி மாதம் கூடியது.  ”முன்வைக்கப்பட்ட தேசிய உணவு உத்தரவாத மசோதாவை சட்டமாக்குவது தொடர்பாக விவாதிக்க” அவர்கள் கூடியிருந்தனர். இந்த அமைச்சர்கள் குழு முடிவு செய்த முத்தான முதல் விசயம் இதுதான்: 2.1(a) “உணவு உத்தரவாதம் என்பதன் வரையறுப்பு குறிப்பாக உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) பற்றியது என்ற அளவுக்கு வரம்பிடப்பட வேண்டும்; அது ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் (nutritional security) என்ற விரிந்த பொருளில் இருந்து துண்டிக்கப்பட வேண்டும்.”

ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பதில் இருந்து துண்டிக்கப்பட்ட உணவு உத்தரவாதமா? ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பது “விரிவானதொரு விஷயம்”  என்பதை அதே சொற்றொடர்களே ஏற்கின்றன என்பதைக் கவனியுங்கள்.  அவ்வாறு இருக்க அவை இரண்டையும் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

கிலோ மூன்று ரூபாய் விலையில் 35 கிலோ அரிசி, அதுவும் மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும், என்பதுதான் உணவு உத்தரவாதமா? சுகாதாரம், ஆரோக்கியம், சத்துணவு, வாழ்வாதாரம், வேலை, உணவுப் பொருட்களின் விலை இப்படி உணவு உத்தரவாதத்தைத் தீர்மானிக்கும் வேறெந்தக் காரணிகளுமே இல்லையா? இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து எரிபொருள் விலையேற்றத்தையும் கூட நாம் துண்டித்து விடலாமா? அல்லது வேண்டுமென்றே ஒழித்துக்கட்டப்படும் பொது வினியோக முறையையும்;  கோதுமை, பருப்பு வகைகள், எண்ணை வகைகள் என எல்லா உணவுப் பொருட்களிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் முன்பேர வர்த்தகம் தோற்றுவிக்கும் பேரழிவுகளையும் கூட இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து துண்டித்துவிடலாமா?

தானே முன்வைக்கும் உணவு உத்தரவாதம் தொடர்பாக எவ்வளவுக்கு எவ்வளவு செலவைக் குறைக்க முடியும் என்பதற்கான வழியைத் தேடி அலைகிறது அரசு என்பதே உண்மை. பட்டினியை வரையறுப்பது பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை அல்ல; மாறாக, அரசு அதற்காகச் செலவிட விரும்பும் தொகைதான் அதைத் தீர்மானிக்கிறது. அதன் விளைவுதான் வ.கோ.கீ.யின் ஆகக் குறைந்த எண்ணிக்கையைப் பெருவதற்கான இந்த முடிவிலாத் தேடல். அரசைப் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட மூன்று கமிட்டிகளுமே வறுமை பற்றி செய்திருந்த மதிப்பீடுகள் அரசின் மதிப்பீட்டை விடப் பாரதூரமான அளவு அதிகமாய் இருந்தன. ஆளும் மேட்டுக்குடிகளின் உலகக் கண்ணோட்டத்துடன் பெரிதும் ஒத்துப்போன டெண்டுல்கர் கமிட்டி கூட கிரமாப்புற வறுமை 42% அளவுக்கு உயர்ந்திருப்பதாக்க் காட்டியது. (பலவீனமானதும், எளிதில் தகர்ந்துவிடக் கூடியதுமான அடிப்படையில் அமைந்த உண்மை இது.  இருப்பினும், இது அரசின் மதிப்பீட்டைவிட அதிகம்)

என்.சி. சக்சேனா தலைமையிலான வ.கோ.கீ வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இது 50%. அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதை ஒத்துக்கொள்ளுவது என்பதன் பொருள் பட்டினிக் கொடுமையைப் போக்க மேலும் சில ஆயிரம் கோடிகளைச் செலவிடுவது என்பதாகும்.  ஆனால் இந்த அரசின் வரையறுப்போ மிக எளிமையானது. பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே,  நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் என்பதே அது.

”காசு இல்லை” என்று கைவிரிக்கும் போக்குதான் அனைத்திலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  புதியதொரு விமான நிலையம் அமைக்க இந்த நாடு ரூ.10,000 கோடி செலவு செய்கிறது.  காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.40,000 கோடியோ அதற்கும் மேலோ கூட செலவு செய்யப்படுகிறது.  ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.60,000 கோடிகளை மகிழ்ச்சியாய் இழக்க முடிகிறது.  மத்திய பட்ஜெட்டில் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கும் பெரும் தொழிற்துறைக்கும் மூன்றே மூன்று செலவினங்களின் கீழ் ரூ.5 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடிகிறது.  ஆனால், பட்டினி கிடப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு மட்டும் பணம் கஜானாவை விட்டுக் கிளம்ப மறுக்கிறது.  பொது வினியோக முறையை அனைவருக்குமானதாக்க அப்படி என்ன செலவாகிவிடும்? எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் கிலோ ரூ.3 விலையில் அரிசி/கோதுமை கிடைக்கச் செய்ய வேண்டுமானால் வரும் பட்ஜெட்டில் உணவு மானியத் தொகையாக ரூ.84,399 கோடியை ஒதுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடுகிறார்கள் பர்வீன் ஜா மற்றும் நிலச்சல் ஆச்சார்யா.  இந்த ஆண்டு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்குச் செய்த வரித் தள்ளுபடிகளில் ஆறில் ஒரு பங்குதான் இந்தத் தொகை.  (இதற்கு ஆகும் கூடுதல் செலவு ஆண்டுக்கு ரூ.45,000 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லை என்கின்றன பிற மதிப்பீடுகள்.)

உலகப் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66ம் இடத்தைப் பிடித்துள்ள ஒரு நாட்டில்; குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில்; ஜ.நா-வின் மனிதவள முன்னேற்றப் பட்டியலில் பூட்டான், லாவோசுக்கும் கீழாக 134வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் பட்டினிக் கொடுமையைப் போக்கப் பணம் ஒதுக்க முடியாதென்றால் அதன் விலை – அல்லது விளைவு – என்னவாக இருக்கும்?

உலகப் பெரும் பணக்காரர்களாக, ஃபோப்ஸ் பட்டியலில் 49 பேர் இடம் பிடித்திருப்பதும் இதே நாட்டில் இருந்துதான். (அந்த பெரும் பணக்காரர்களில் பெரும்பாலோர் பல வடிவங்களில் இந்த அரசாங்கத்திடம் இனாம் வாங்குகிறார்கள்.  இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்பான இனாம்களைப் பெற்றவர்கள் சிலர்) தனது குடிமகன் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய ஒரு முயற்சி கூட எடுக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவும் வேண்டுமா? இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுக்கான உத்தரவாதம் என்பது எங்களது குறிக்கோளுமல்ல, விருப்பமும் அல்ல என்பதையாவது குறைந்தபட்சம் நேர்மையாக வெளிப்படுத்துமா இந்த அரசாங்கம்? தனது பெயருக்கு நேர் எதிரானதைச் சட்டபூர்வமானதாக்கும் ஒரு மசோதாவுக்கு “உணவு உத்தரவாத மசோதா” என்ற போலிப் பெயர் எதற்கு?  அனைவரும் பெற முடியாத ஒன்றை ‘உரிமை’  என்ற பெயரால் எவ்வாறு அழைக்க முடியும்?

ஒரு தெரிவிப்பு: வ.கோ.கீ. வல்லுனர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராய் இருந்தேன். அக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட குறிப்பு ஒன்றில், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணியமான வேலை ஆகிய நான்கு துறைகளில் வாய்ப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என விவாதித்து இருக்கிறேன்.  அரசின் கொள்கையை வழிநடத்தும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அவ் விவாதம் அமைந்திருக்கிறது.  நமது மக்களின் உரிமைகள் அவர்கள் இந்த நாட்டின்   குடிமக்கள் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறதே அன்றி அவர்களின் வாங்கும் சக்தியால் அல்ல.  வ.கோ.கீழ் (BPL) ஆகவோ வ.கோ.மேல் (APL) ஆகவோ இருப்பதனால் அல்ல. ( IPL ஆசாமியாக இருப்பதனாலும் அல்ல.) உரிமைகள் அதன் வரையறைப்படி பொதுவானவை, பிரிக்க முடியாதவை.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உணவு உத்தரவாத மசோதாவில் காணப்படும் அம்சங்கள் நமது வழிகாட்டு நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றனவா? அல்லது பலவீனப்படுத்துகின்றனவா?  அரசியல் சட்டப்படியான உரிமைகளைக் கரைத்துக் காணாமல் போகச் செய்து தயாரிக்கப்பட்ட இந்த நீர்த்துப்போன சரக்கை ஒரு முற்போக்கான சட்டம் போல் முன்வைப்பது ஒரு மோசடி வேலை. செயல்படக் கூடிய ஒரே பொது வினியோக முறை என்பது அனைவருக்குமானதாக இருக்கும் ஒன்றே.  அனைவருக்கும் பொதுவான முறைமைக்கு சற்றே நெருக்கமாய் செயல்பாட்டு உள்ள – கேரளா, தமிழ்நாடு – மாநிலங்களில் மட்டுமே இந்த பொது வினியோக முறை சிறப்பாய் செயல்பட்டிருக்கிறது.

150 மாவட்டங்களில்  “பரீட்சார்த்தமாக”  பொது வினியோக முறையின் மூலம் உணவு தானியங்களைப் (அதாவது, பிரதானமாக கோதுமை, அரிசி) பெறும் வாய்ப்பை “அனைவருக்குமானதாக” [universal]  செய்து பார்ப்பது என்ற பேச்சு தற்போது அடிபடுகிறது.  கருத்தளவில் இது ஒரு படி முன்னேற்றமாகத் தோன்றினாலும் நடைமுறையில் இது தவறு என்பது நிரூபிக்கப்படும்.  இது மாறுவேடத்தில் வரும் ”இலக்கைச் சென்றடையும்” [targeting] வரம்பிடப்பட்ட செயல்பாடே தவிர வேறல்ல.  “யுனிவர்சல்” மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு உணவு தானியங்கள் வெகுவாய்க் கடத்தப்படும்போது இந்த வகை ஏற்பாடு ஆட்டங்காணும்.  பரீட்சார்த்த நடவடிக்கைகளைத் தவிர்த்து இறுதி இலக்குக்கே நேரடியாய்ச் செல்வது நல்லது.  உணவு உத்தரவாதத்தை அனைவருக்குமானதாக ஆக்குங்கள்.
________________________________________________________

–    பி. சாய்நாத், நன்றி தி ஹிந்து –  07 Jul 2010
–    தமிழாக்கம்: அனாமதேயன்

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

85

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை  தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.  மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா  பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக்  குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள்.  மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம்,  இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.

சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது.  அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.  குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை.  இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.

__________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பிரேசில் : வர்க்கங்களின் கால்பந்து மைதானம் !!

9

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 3

பிரேசில், பகுதி 1 : வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வண்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் “சமூக அக்கறை கொண்டவர்கள்” என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்… உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து “ஷாப்பிங்” செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை “உலகத்தரம் வாய்ந்த சேரிகள்.” புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை “பவேலா” (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் – மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். “திருடுவது பாவம்” என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். “நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை “கொய்யாவா” (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான “மண்டியோக்” போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் “மைஞோக்கா” என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

“சரித்திரம் எமக்கு அவசியமில்லை”, என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

______________________

– கலையரசன்
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

போபால்:தடையை மீறி டௌ கெமிக்கல்ஸ் முற்றுகைப் போராட்டம்!

சரியாக சன் செய்திகள் முடிந்து, ‘சுதந்திர வம்சம்’ தொடங்கிய நேரம் –

எல்லா மக்களையும் போல சாதாரணமாக இருந்த ஒரு குடும்பத்தின் ‘வம்சம்’, அரசியல் வியாபாரத்தில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்து ‘குறுகிய காலத்தில்’ முன்னேறி, ஆசிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறியதுடன் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அடகு வைக்கும் தரகு வேலையை கச்சிதமாக செய்தும் வருகிறது. அந்த ‘வம்சத்தின்’ ஆணிவேரான  மாண்புமிகு தமிழக முதல்வரின் பேரன் அருள்நிதி, சன் டிவி நேயர்களுக்கு ‘சுதந்திரதின நல்வாழ்த்துகளை’ புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தபோது –

சென்னை ஈகாட்டுத்தாங்கல் கூவம் நதி மேம்பாலத்தில் ஆரம்பித்து டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை சாலையின் இருபுறமும் காவல்துறையினர் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பதினைந்தடி இடைவெளியில் நிற்க ஆரம்பித்த காவல்துறை வாகனங்களையும் கருத்தில் கொண்டால் –

‘அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.

அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.

‘மாதம் மும்மாரி பொழிகிறதா..?’ என எட்டப்பன் பரம்பரையில் வந்த மாமன்னர் கருணாநிதி தன் கைத்தடிகளிடம் கேட்டிருக்கக் கூடும். அதற்கேற்ப தூறலும் ஆரம்பித்தது. எனவே குதூகலத்துடன், ‘ஆம் மன்னா… இப்போது கூட தூறிக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் அஞ்சா நெஞ்சன் அழகிரி வெளியிட்ட ‘தமிழ்ப்பட’த்தையும், ‘எந்திரன்’ படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குள் அடைந்துக் கிடக்கிறார்கள்…’ என்று நா கூசாமல் புளுகியிருக்கவும் கூடும்.

இதற்கேற்றபடி காசி தியேட்டருக்கு அருகிலிருந்த ‘உயர்தர’ சைவ உணவகத்தில் ஓசியில் டிபன் சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஒயர்லெஸ்ஸில், ‘500லேந்து ஆயிரம் போலீஸ்காரர்கள் இருக்காங்க. நம்மை மீறி எதுவும் நடக்காது. சி.எம்.மை சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க…’ என பின்பாட்டு பாடவும் செய்தார்தான்.

ஆனால், உண்டுக் கொழுத்தவர்களுக்கு தெரியாது நக்சல்பாரி அமைப்பினரின் போராட்ட வடிவம் ஒருபோதும் பிசுபிசுத்ததில்லை என்று.

இத்தனைக்கும் காசி தியேட்டரிலிருந்து கிண்டியிலுள்ள ‘டெள கெமிக்கல்ஸ்’ அலுவலகம் வரை பேரணி நடத்த அனுமதி வாங்கும் பொருட்டு காவல்துறையை அணுகியபோதே அனுமதி மறுக்கப்பட்டது. போதும் போறாததுக்கு ‘சட்டப்படி’ ஸ்டேவும் வாங்கியிருந்தார்கள். எனவே பேரணியும் நடைபெறாது, தோழர்களும் வரமாட்டார்கள் என்றுதான் காவல்துறை நம்பியது.

ஆனால், ‘தமிழ்ப்படமும்’, ‘எந்திரன்’ பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்ப்பதற்காக நாங்கள் வாழவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும். ‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.

இதை நிச்சயம் இப்போதிருக்கும் ஆளும் வர்க்கமும், காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை.

தடையை மீறி பேரணி காலை 10.30க்கு புறப்படும் என்று தோழர்கள் பிரசாரம் செய்திருந்தார்கள். எனவே 8 மணி முதலே காசி தியேட்டர் அருகில் காவல்துறையினர் குவிந்தார்கள். தாம்பரத்திலிருந்து வரும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றதுமே, சிவப்புச் சட்டை அல்லது சிவப்பு பனியன் அணிந்து யார் இறங்கினாலும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். இதே நிலைமைதான் வடபழனியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்து விஷயத்திலும் நடந்தது. காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கும் ஆண், பெண், குழந்தை உட்பட ஒவ்வொரு பயணியும் கண்காணிக்கப்பட்டனர்.

காலை 9.30 மணிக்குள் இப்படியாக 6 பேருந்து வாகனங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு விஜயா தியேட்டர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாகனத்தில் ஏறி சென்றபடியே தோழர்கள் எழுப்பிய கோஷம் அப்பகுதி முழுக்கவே எதிரொலித்தது.

9.35 மணிவாக்கில் செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது. கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான சிவப்புச் சட்டை தோழர்கள் இறங்கினார்கள். அவர்களை அப்படியே கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்தார்கள்.

அப்போதுதான் பறை ஒலிக்க ஆரம்பித்தது.

விஜயா தியேட்டர் இருக்கும் சாலைக்கு நேர் எதிரான சாலை. மேற்கு சைதாப்பேட்டையை கடந்து ஜாபர்கான் பேட்டை வழியே வடபழனி செல்லும் பேருந்துகள் வரும் சாலையும் அதுதான். அச்சாலையின் முனையிலிருந்துதான் – காசி தியேட்டர் திருப்பத்தில் – பறையொலி எழுந்தது. பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அந்த ஒலி வந்த திசையை நோக்கி விரைந்தார்கள். அவர்களை கைது செய்ய வந்த காவலர்களும் தோழர்களை பின்தொடர்ந்தார்கள்.

அங்கே மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்த காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

சாரிசாரியாக, எந்தெந்தப் பகுதியிலிருந்து எந்தெந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வருகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் சிவப்பு பேனர் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் ‘டெள் கெமிக்கல்ஸை’ எதிர்த்தும், போபால் படுகொலைக்கு நீதி கேட்டும் வர ஆரம்பித்தார்கள். பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அவர்களுடன் இரண்டற கலந்தார்கள்.

திகைத்த காவல்துறை உடனடியாக செயலில் இறங்கியது. இரு காவல்துறை வாகனங்கள் இருபதடி இடைவெளியில் மறித்து நின்றது. ஊர்வலமாக வரும் தோழர்கள் காசி தியேட்டர் மெயின் ரோட்டை அடையக் கூடாது. போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யக் கூடாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதற்கேற்ப பச்சை நைலான் கயிற்றை எடுத்து இரு வாகனங்களுக்கும் இடைப்பட்ட பகுதியை மறித்தார்கள்.

ஆனால், காவலர்களின் இந்த பயம் அர்த்தமற்றது என்பதை தோழர்களின் தொடர் கோஷங்களும், போராட்டங்களும் உணர்த்தின. உணர்ச்சிக்கு அடிமையாகி நிலைதவற தோழர்கள் என்ன ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி உறுப்பினர்களா என்ன? சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் நிரம்பிய புரட்சிகர நக்சல்பாரி அமைப்பின் அங்கத்தினர்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது; அதேநேரம் போராட்டத்தின் ஆணிவேரையும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தங்களுக்காகத்தான் கொட்டும் மழையிலும் தோழர்கள் போராடுகிறார்கள் என்பதை மக்கள்  உணர வேண்டும்… என்பதற்கு ஏற்பவே செஞ்சேனை தோழர்கள் களத்தில் நின்றார்கள். சாலை ஒருபோதும் தோழர்களால் மறிக்கப்படவில்லை. தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற காவலர்களால்தான் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பது அப்பகுதியை கடந்த ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும், வாகனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தெரியும்.

காலை 8 மணி முதலே கைது செய்யப்பட்ட தோழர்களை தவிர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் அப்பகுதியில் குவிந்ததும், குழுகுழுவாக பேட்டரியால் இயங்கும் மைக் வழியே தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். யாருக்காக போராடுகிறோம்; யாரை எதிர்த்து போராடுகிறோம்; எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என்பதை மக்களுக்கு உணர்த்தியதும், புமாஇமு அமைப்பை சேர்ந்த தோழர்கள் வீதி நாடகம் நடத்த ஆரம்பித்தார்கள்.

மழை நிற்கவில்லை. தோழர்களும் அசரவில்லை, கலைந்து செல்லவுமில்லை. காவலர்கள்தான் மழைக்கு பயந்து ஆங்காங்கே ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஆனால், பகுதி மக்கள் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் வண்ணம் மழையை பொருட்படுத்தாமல் நின்றார்கள். பத்து நிமிடங்கள் நடைபெற்ற அந்த வீதி நாடகத்தில், போபால் படுகொலை சம்பவம் அப்பட்டமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.

அமெரிக்க கொடியை தலைப்பாகையாக கட்டிய ஒரு தோழரை, உலகவங்கி தொப்பி அணிந்த மற்றொரு தோழர் அழைத்து வருகிறார். கதர் குல்லா அணிந்த தோழர் அவர்கள் இருவருக்கும் கூழை கும்பிடு போட்டு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். ஓரிடத்தை அமெரிக்க தலைப்பாகை அணிந்த தோழர் தேர்வு செய்கிறார். உலக வங்கி தொப்பி அணிந்த தோழர், கதர் குல்லா அணிந்த தோழரை அழைத்து நிபந்தனைகளை விதிக்கிறார். கதர் குல்லா தோழர் அனைத்தையும் தலையசைத்து ஏற்கிறார். யூனியன் கார்பைடு நிறுவனம் உருவாகிறது. அதை தட்டியில் எழுதப்பட்ட எழுத்துகள் வழியே தோழர்கள் உணர்த்துகிறார்கள். பிறகு சாம்பிராணி புகையின் மூலம் விஷவாயு கசிவையும், அதனால் மக்கள் பட்ட வேதனையையும், இறப்பையும் ரத்தமும் சதையுமாக தோழர்கள் நடித்து கண்முன்னால் கொண்டு வருகிறார்கள். அதுவும் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் போன்ற பொம்மையை ஏந்தியபடி ஒரு பெண் தோழர் அழுதக் காட்சி, நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரது நெஞ்சிலும் அறைந்தது.  எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முகத்திலறைந்தது போல் இந்த வீதிநாடகம் படம் பிடித்து காட்டியது.

இதனையடுத்து அமெரிக்க கொடியை தலைப்பாகையாக அணிந்த தோழரை, நான்கைந்து தோழர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, கதர் குல்லா அணிந்த தோழர் கையசைத்து அவரை அனுப்பிவைக்கும் காட்சி, நடந்த உண்மைகளை மக்களுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.

இந்த நாடகத்தை வீடியோவில் படம் பிடிக்க வந்த காவல்துறையினரை தோழர்கள் தடுத்தார்கள். குரலை மட்டுமே உயர்த்தி, ‘படம் பிடிக்கக் கூடாது’ என்றார்கள். மறுபேச்சில்லாமல் அதற்கு காவலர்கள் கட்டுப்பட்டார்கள். இத்தனைக்கும் தடுத்த தோழர்களிடம் சாதாரண தென்னங்குச்சிக் கூட இல்லை. ஆனால், இமயமலையையே பெயர்த்து எடுக்கும் சக்திப் படைத்த மக்கள் திரள் அவர்களின் பின்னால் இருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களை கட்டுப்படுத்தும் வலுவான ஆயுதம், மக்கள் திரளே என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.

அதேபோல் காவலர்களை புகைப்படம் எடுக்கவும் தோழர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், முற்றுகைப் போராட்ட பேட்ஜ் அணிந்த தோழர்கள் வளைந்து வளைந்து வீடியோவும் எடுத்தார்கள். புகைப்படமும் எடுத்தார்கள். காதில் புகை வர வர இக்காட்சியை காவல்துறை உயரதிகாரிகள் பார்த்தார்கள்.

செய்தி ஊடகங்களில் என்.டி.டி.வி சேனல் மட்டுமே வந்திருந்தது. தோழர்களிடம் அனுமதி பெற்று அனைத்து நிகழ்வையும் அவர்கள் படம் பிடித்தார்கள்.

வீதி நாடகம் முடிந்ததும் பேரணிக்கு முன்பு வந்த புஜதொமு அமைப்பின் தலைவரான தோழர் முகுந்தன், பேட்டரியால் இயங்கும் மைக்கை வாங்கி முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அதை எதிரொலித்தார்கள்.

இதன் பிறகு மகஇக-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் 20 நிமிடங்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஸ்பீக்கர் இல்லை. மின்சாரத்தால் இயங்கும் மைக் இல்லை. ஆனால், மருதையன் தோழரின்  உரையை அங்கிருந்த அனைவரும், காவலர்கள் உட்பட அமைதியாக கேட்டார்கள். கட்டுப்பாடுக்கும், ஒழுக்கத்துக்கும் எந்தளவுக்கு அமைப்புத் தோழர்கள் பெயர் போனவர்கள் என்பது மீண்டும் நிரூபனமானது.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், இரு பிரிவினர்தான் அதிகாலையிலேயே பணிக்கு செல்கிறார்கள். பள்ளி மாணவர்கள் ஒரு பிரிவினர். காவலர்கள் மறுபிரிவினர். பள்ளி மாணவர்களுக்காவது மிட்டாய் கிடைக்கும். காவலர்களுக்கு அதுக் கூட கிடைக்காது. பிரதமர் வந்தாலும் சரி, முதல்வர் சென்றாலும் சரி, ரவுடிகள் நடந்தாலும் சரி பாதுகாப்புத் தர வேண்டியது காவலர்களின் கடமையாகிறது… என்ற பொருள்பட தோழர் மருதையன் தன் உரையை ஆரம்பித்ததும் அங்கிருந்த செஞ்சேனை தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள் என்றால், பல காவல்துறையினர் முகமலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள்.

தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர், இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.

இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன.

‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை வைபவம் முழுமையாக நடந்து முடிய இரண்டு மணி நேரங்களானது. அந்தளவுக்கு தோழர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் கைதாகிக் கொண்டேயிருந்தார்கள். கைதான தோழர்களில் கணிசமானோர் பெண்கள். சில பெண் தோழர்கள் குழந்தைகளோடு கைதானார்கள்.

எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து திருமண மண்டபங்களும் தோழர்களால் நிரம்பி வழிந்தன.

அதுவரை மழையும் நிற்கவில்லை.

ஒரு பிஞ்சுக் குழந்தை. ஒண்ணரை வயதுதான் இருக்கும். சிவப்புச் சட்டை, சிவப்பு டிராயர் அணிந்திருந்தார். தன் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி குடையை விலக்கிவிட்டு மழையில் நனைந்தபடியே போராட்டத்தை கண்கொட்டாமல் பார்த்தார். மழையில் நனைந்தால் தன் மகனுக்கு ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் யோசிக்காமல் நேரடி போராட்டத்தை காணும் வாய்ப்பை தன் மகனுக்கு வழங்கிய அந்தத் தோழருக்கு சிவப்பு வணக்கங்கள்.

சவுகார்பேட்டையிலிருந்து இருவர் இப்போராட்டத்தை காண்பதற்காகவே வந்திருந்தனர். அவர்களுக்கு இப்போராட்டம் குறித்து தெரிந்தது, மின்சார ரயிலில் நடைப்பெற்ற பிரசாரம் மூலமாகத்தான். போபால் படுகொலை நிகழ்வை அம்பலப்படுத்தும் ஜூலை மாத ‘புதிய ஜனநாயக’ சிறப்பிதழையும், ஆகஸ்ட் 15 ‘டெள கெமிக்கல்ஸ்’ முற்றுகைப் போராட்டத்தை வலியுறுத்தும் 2 ரூபாய் பிரசுரத்தையும் விற்பனை செய்வதற்காகவும், நிதிவசூலுக்காகவும் தோழர்கள் வார இறுதியில் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்தடத்தில் பிரசாரம் மேற்கொண்டார்கள். அப்போது அறிமுகமானவர்கள்தான் அந்த சவுகார்பேட்டை நண்பர்கள். செஞ்சேனை தோழர்களின் போராட்டத்தை முழுமையாக பார்த்த அவர்கள், அமைப்பில் தாங்கள் சேர விரும்புவதாக சொன்னது நிச்சயம் உணர்ச்சிவசப்பட்டல்ல.

குளிர்சாதன அறையில் அமர்ந்து, ஸ்காட்ச் விஸ்கியை குடித்தபடி ‘டெள கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் இந்திய அடியாள்களும், மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தரகர்களும், ஆளும் வர்க்க எட்டன்களும் முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சியடையலாம். அதற்கேற்ப காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ‘சும்மா 10 பேர்தான் போராடினாங்க…’ என பொய்யான தகவல்களை சொல்லி அவர்களை குளிப்பாட்டலாம்.

ஆனால், தில்லி செங்கோட்டையில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் நாம் சுதந்திரம் வாங்கிவிட்டதாகச் சொல்லும் தேசியக் கொடியை ஏற்றிய அதேநேரத்தில்தான் –

செங்கொடியை ஏந்தியபடி நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவேயில்லை என்பதை முன்பே கைதானவர்கள் போக மீதமிருந்த தோழர்களில் ஒரு பகுதியினராகிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

உண்மையான சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு அச்சாரமாய் இந்த முற்றுகை போராட்டம் அமைந்தது. ஆம். போலி சுதந்திர தினத்தில்  ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம்.

_________________________

–    அறிவுச்செல்வன்
_________________________

வினவுடன் இணையுங்கள்

படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !

30

குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இளங்கோவன் கூறும் திட்டம் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என்றும், இது 1997 – 98 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் வீடில்லாத ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மற்ற பிரிவு மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென்றும், இதற்கு 75 : 25 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.

இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.

இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில்  எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு  புலம்பியிருக்கிறார்.

இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.

இலவச டி.வி என்றால் அது கலைஞர் கொடுத்தது, இலவச மருத்துவக் காப்பீடு என்றால் அது கலைஞர் கொடுத்தது, ஒரு ரூபாய் ரேசன் அரிசியும் அவர் கொடுத்தது, இப்படி தமிழகத்தின் எல்லா திட்டங்களும் கலைஞர் தான் சேர்த்து வைத்த குடும்பச் சொத்திலிருந்து கொடுப்பது போல கருதிக் கொள்கிறார். நேரு குடும்பமும் அப்படியே கருதிக் கொள்கிறது. உண்மையில் கலைஞர் குடும்பத்தின் வருமானம் என்பது ஆசியப் பணக்காரர் பட்டியலில் வரும் தகுதி கொண்டது. அந்த ஆயிரக்கணக்கான கோடிகளே தமிழக மக்களை சுரண்டிச் சேர்த்த பணம்தான். அதிலிருந்து ஒரு காசு கூட சமூகத்திற்கு செலவழிக்காதவர்கள் மக்கள் பணத்தை செலவு செய்வதைக் கூட தமது சொந்த பணத்தை செலவு செய்வது போல பேசுவதும், எண்ணுவதும் எவ்வளவு அயோக்கியத்தனம்?

மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.

இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

167

கடந்த 26/07/2010   அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது,  “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று.  வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.

  1. இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
  2. இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
    விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது.
  3. இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை

இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?

சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.

வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.

அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த  போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.

“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?

சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.

பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.

நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.

சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.

வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.

அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.

சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/07/070704_saudifeature.shtml
http://archive.arabnews.com/?page=1&section=0&article=131847&d=26&m=1&y=2010
http://archive.arabnews.com/?page=1&section=0&article=130001&d=22&m=12&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=128343&d=11&m=11&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=122151&d=3&m=5&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=117683&d=31&m=12&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113798&d=3&m=11&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113929&d=6&m=9&y=2008
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010072679168

_____________________________________________
வினவு செய்தியாளர், வளைகுடாவிலிருந்து.
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

34

அமெரிக்காவைச் சேர்ந்த 65 வயதான ரொனல்ட் லெம்மருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவைச் சிகிச்சையும், பேஸ்மேக்கரும் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் எம்.ஆர். கிரிநாத் மற்றும் டாக்டர் பால் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: “இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 100 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதில் சென்னை மற்றும் தில்லியில் 40 முதல் 45 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சாலை விபத்தில் இறந்த 36 வயதுடைய நபரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு ரொனால்ட் லெம்மருக்கு பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக உடல் தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.”

தமிழக இதயத்தை பெற்றுக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ரொனால்ட் லெம்மர் கூறுகையில், அமெரிக்காவில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று மருத்தவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சென்னையில் அப்பல்லோவை அணுகினேன். பதிவு செய்த மூன்று மாதங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு இதய தானம் கிடைத்தது என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: “50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் (சுமார் 25 இலட்சம் இந்தியரூபாய்) இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டில் இதய நோய்ப் பிரச்சினை காரணமாக நாளொன்றுக்கு 5,000 பேர் இறக்கின்றனர். அப்பல்லோ மருத்துவமனை மூலம் 5,629 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நிமிடம் ஒன்றுக்கு ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது. இதில் 50 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர். உடல் உறுப்புகளை தானம் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு அவசியமாகும்.”

கூட்டி கழித்துப் பார்த்தால் இந்த செய்தியிலிருந்து என்ன தோன்றுகிறது?

இந்தியாவில் நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து எற்படுவது குறித்து பிரதாப் ரெட்டிக்கு கவலையில்லை. அந்த விபத்துக்களில் சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. அதிலும் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் சாலை மேம்பாடு, லாரி டிரைவர்களுக்கு சுமையில்லாத வேலை முறை ஆகியன நடந்தால் சாலை விபத்துக்கள் குறையும். சாலை விபத்துக்கள் குறைந்தால் தானமாக வரும் உறுப்புக்களின் எண்ணிக்கையும் குறையும். அவை குறைந்தால் அப்பல்லோவுக்கு வருமானம் குறையும். அமெரிக்காவில் இதய மாற்று சிகிச்சைக்கு இரண்டாண்டு காத்திருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவில் மூன்றே மாதங்களில் இதயம் கிடைக்கும் வாய்ப்பு குறையும்.

என்றாலும் இந்தியாவில் சாலை விபத்துக்கள் குறையப் போவதில்லை. அப்பல்லோவின் வருமானமும் குறையப் போவதில்லை. அமெரிக்காவிடம் நமது நாடு மட்டுமல்ல நமது உடலும், உயிரும் கூட அடமானமாக உள்ளது என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு வேண்டுமா?

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று பின்னர் தேசிய அளவில் தகிடுதத்தம் செய்த மான!மிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஜவகர்லால் பல்கலைகழகத்தில் காங்கிரசு கட்சியின் உட்பிரிவான இந்திய தேசிய மாணவர் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பேசுகையில் “60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடி செல்வந்தரும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவருமான ப.சிதம்பரத்திற்கு ஏழ்மை, வறுமைக்கோடு என்றால் இப்படி தான் புரியும். ப.சிதம்ப‌ரத்தின் கூற்று முற்று முழுதான பொய் என்பதை இந்த கட்டுரை மிக தெளிவாக விளக்குகின்றது. இந்த கட்டுரை சங்கதி (sanhati) இணையதள உறுப்பினர்களால் எழுதப்பட்டது. தோழர்களின் வேண்டுகோளிற்கிணங்க இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

___________________________________________________________

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம்.2006 ஆம் ஆண்டு தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம். இந்த ஆணையம் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். தேசிய மாதிரி ஆராய்ச்சி நிறுவனம் (இதுவும் இந்திய அரசின் நிறுவனமே) வெளியிட்ட புள்ளிவிரங்களை அடிப்படையாக வைத்தே 77 விழுக்காடு மக்கள் 20 ரூபாய் வருமானம் பெறுகின்றனர் என்ற அறிக்கையை அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடியான ப.சிதம்பரத்திற்க்கு இது தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடிக்கின்றாரா?

இந்த ஆய்வறிக்கையும், அதன் புள்ளிவிவரங்களும், அதை ஒட்டி பொருளாதார, அரசியல் வார இதழ்(ச‌வகர்லால் பல்கலைகழகத்தின் அரசியல் துறையினால் வெளியிடப்படும் வார இதழ்) என்ற இதழில் வந்த அறிக்கையும் இந்திய நவகாலனிய ஆதரவாளர்களுக்கு ஒரு பேரிடியாக வந்திறங்கியது. ஏனென்றால் இந்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டிருப்பது அரசின் உதவியினால் நடத்தபடுகின்ற‌ ஆணையம், அப்படியானால் இது வரை இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் எல்லாம் படு தோல்வி மற்றும் ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.சமூக பிரிவினைகளிலும், பொருளாதார‌ ஏற்றதாழ்வுகளிலும், மிகக் கொடுமையான வறுமையிலுமே மிகப்பெரும்பான்மையான மக்கள்தொகை உழன்று வருவ‌தை இந்த அறிக்கை மிகத் துல்லியமாக காட்டியுள்ளது.

அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைகளுக்கு பக்க பலமாக இந்தியாவில் வறுமையில் வாழும்,அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் உள்ளன. வருமானம் மட்டுமல்ல அடிப்படை மருத்துவ வசதிகள், சுகாதாரமான இடங்களில் வாழ்தல் போன்றவையும் வறுமையை நிர்ணியக்கும் காரணிகள் என்று இந்திய அரசே ஒத்துக் கொள்கின்ற‌து.

இந்தியாவில் 37 கோடிக்கு பேர் அடிப்படை கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஐ.நா அறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் 3 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் 79 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதிற்கும் கீழுள்ள குழந்தைகளில் 40 விழுக்காட்டினர் சத்தான உணவு இல்லாமல் இருப்பதாக கூறுகின்றன சமீபத்தில் எடுக்கப்பட்ட பல மருத்துவ ஆய்வு புள்ளிவிவரங்கள்.  மேலும் சத்தான உணவு இல்லாமலும், பசியால் மக்கள் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65ஆவது இடத்தில் இருப்பதாக ஐ.நாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரத்தின் மக்கள் வளர்ச்சிக்கான அளவுகோலாக அலைபேசி இணைப்புகளை இந்தியாவில் எடுத்துக்கொள்ள முடியாது என உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் இந்த‌ வாதத்தை மிகவும் பெருமையோடு அந்த கூட்டத்தில் எடுத்துவைத்துள்ளார். மேலும் கேள்வி எழுப்பிய அந்த பல்கலைகழக மாணவனுக்கு சில பொருளாதாரயியலையும் போதித்துள்ளார். “நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராவதற்கு நான் உதவமுடியும்”  என மிகவும் கம்பீரமாக கூறியுள்ளார். ப.சிதம்ரத்தின் இந்த கூற்று எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை விளக்க வேண்டியுள்ள‌து. 60 கோடி அலைபேசி இணைப்புகள் வறுமை குறைந்து விட்டதற்கான ஒரு அடையாளமா என்பதை பற்றிய விரிவான ஆய்வை நாம் இங்கே காணப்போகின்றோம். நாம் இதைச் சொல்லவில்லை என்றால் எதிர்காலத்தில் இவர்கள் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை வைத்து வறுமையை கணக்கிட்டு வறுமையை ஒழித்து விடுவார்கள், இதன் மூலம் உண்மையிலேயே வறுமையில் வாடும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

“ஏழ்மை நிலையிலுள்ள குறிப்பாக நகரப்பகுதிகளில் வாழும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களில் ஒரு பகுதியினர் அலைபேசி இணைப்புகளை கொண்டுள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர் சந்தையில் தங்களது வேலையை தக்கவைத்து கொள்வதற்கான அடிப்படை தேவையாக இந்த அலைபேசிகள் உள்ளதால் அவர்கள் இந்த அலைபேசி இணைப்பை வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.அலைபேசி கட்டணங்கள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக தான் ஏழ்மையில் வாழும் மக்கள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பது அதிகரித்துள்ளது. இந்த கட்டணம் சிறிய அளவு அதிகரித்தாலும் அவர்கள் அலைபேசி இணைப்பை துண்டித்துவிடுவார்கள்”.

“இதை எல்லாம் விடுத்து அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு வறுமை நிலையை கணக்கெடுத்தால் தில்லியில் வறுமையில் யாருமே இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவ்வளவு அலைபேசி இணைப்புகள் உள்ளன. தொலைபேசி இணைப்புகள் வேண்டுமென்றால் நடுத்தர வகுப்பினரை காட்டும் ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்”.

இந்தியாவில் வறுமையில் வாடும் ஒருவருக்கு அலைபேசி ஆடம்பரமா?

இந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் சமீபத்தில் அஃகுயூரோ மற்றும் டீ சில்வாவின் கட்டுரை வெளிவந்துள்ளது (“தேர்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளில் அலைபேசி செலவுகள் தொடர்பான ஆய்வு”). இந்த கட்டுரை ப‌சிபிக் த‌க‌வ‌ல் தொட‌ர்பு குழும‌த்தின் க‌ல‌ந்தாய்வில் ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ க‌ட்டுரையில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்குக‌ளிலிருந்து நேர‌டியாக‌ பெற‌ப்ப‌ட்ட‌வை (இதே போன்ற‌ ஆய்வை ம‌ற்ற‌ வ‌ள‌ர்ச்சி அடையாத‌ நாடுக‌ளிலும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்). மாத‌ வ‌ருமான‌த்தையும், அதில் அலைபேசிக்கான‌ செல‌வுக்கும் உள்ள‌ தொட‌ர்பையும் புள்ளியிய‌ல் மூல‌ம் ஆராய்கின்ற‌து இக்க‌ட்டுரை. மேலும் அலைபேசியின் மூலமாக‌ அவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌த்தையும் இந்த‌க் க‌ட்டுரை ஆராய்கின்ற‌து.

ஒரு எடுத்துகாட்டுக்கு ஒருவ‌ரின் வ‌ருமான‌ம் ஒரு விழுக்காடு குறைந்தால் அவ‌ரின் அலைபேசி உப‌யோக‌ம் எந்த‌ அள‌வுக்கு குறையும். இது போன்ற‌ ஆய்வுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள் க‌ண்ட‌ உண்மை அலைபேசி என்ப‌து இந்தியாவில் ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, பொருளாதாராயிய‌லின் வார்த்தையில் அது ஒரு அத்தியாவ‌சிய‌ பொருளாக மாறி உள்ள‌து. அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌ம் குறையும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டை நிறுத்திவிடுவார்க‌ள். அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌ம் உய‌ரும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டு விகித‌த்தில் எந்த‌வொரு பெரிய‌ மாற்ற‌மும் இருக்காது என்கிற‌து ஆய்வு முடிவுக‌ள்.

இந்தியாவில் வ‌றுமையில் வாழும் ஒருவ‌ர் கூட‌ அலைபேசி இணைப்பு கொள்ள‌ முடியும் என்ப‌து உண்மைதானா?

இந்த‌ கேள்விக்கு பதில‌ளிக்கும் முன் இந்திய‌ அலைபேசி இணைப்புக‌ளின் அப‌ரிமித‌மான‌ வ‌ள‌ர்ச்சியை நாம் பார்த்து விடுவோம். இந்திய த‌க‌வ‌ல் தொட‌ர்பு ஒழுங்குமுறை ஆணைய‌த்தினால் (TRAI) வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ல‌ அறிக்கைக‌ளிலிருந்து மேலே உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் பெற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

2006 லிருந்து 2007ஆம் ஆண்டில் அலைபேசி இணைப்புக‌ள் க‌ணிச‌மான‌ அள‌வு உய‌ர்ந்துள்ள‌தை அட்ட‌வ‌ணையிலிருந்து நாம் காணலாம். இத‌ற்கு பின்னால் உள்ள‌ கார‌ண‌ங்க‌ளை ஆராய்ந்து ‍‍‍‍‍‍ “Vodafone” நிறுவ‌ன‌ம் ஒரு அறிக்கையை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. ‌ மிக‌ பெரிய‌ அள‌வில் இந்த‌ அலைபேசி இணைப்புக‌ள் அதிக‌மான‌த‌ற்கு “அலைபேசி க‌ட்ட‌ண‌ங்க‌ள் மிக‌ பெரிய‌ அள‌வில் குறைந்த‌தே” கார‌ண‌ம் என்கிற‌து அந்த‌ அறிக்கை.
அறிக்கையிலிருந்து:

அலைபேசியில் ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌தற்கான‌ ஒரு நிமிட‌ க‌ட்ட‌ண‌ம் ரூபாய் 15.30 (1998) லிருந்து ரூபாய் 0.68(2010) குறைந்துள்ள‌து. இந்த‌ 98 விழுக்காடு க‌ட்ட‌ண‌ குறைவு என்ப‌து உண்மையில் மிக‌ப் பெரிய‌ க‌ட்ட‌ண‌ குறைப்பாகும். மேலும் மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும்(Pre paid) வ‌ச‌திக‌ளும், அலைபேசியின் விலை ரூபாய். 1000ற்க்கும் கீழீருந்த‌தும் ஒருவ‌ர் அலைபேசி இணைப்பை எடுப்ப‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை மேலும் குறைத்து, இத‌னால் இந்த‌ ச‌ந்தை மேலும் விரிவ‌டைந்த‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் அலைபேசிக‌ளுக்கு மாத‌ த‌வ‌ணையில் ப‌ண‌ம் செலுத்தும் முறையும் அலைபேசி விற்ப‌னையாள‌ர்க‌ளால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் அவ‌ர்க‌ள் செலுத்தும் மாத‌ த‌வ‌ணை ஒரு மிக‌ப் பெரிய‌ அள‌வில் இல்லாம‌ல் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌த்திற்குள் வ‌ந்த‌து. ரூபாய் 10 என்ற மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் வ‌ச‌திக‌ளும் பெருகின‌. இந்த‌ முன் கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் திட்ட‌த்தில் “வாழ்நாள் இறுதி வ‌ரை”(Life time) அழைப்புக‌ள் என்ற‌ திட்ட‌ம், ஒரே அலைவ‌ரிசைக்குள் பேசினால் ச‌லுகை விலை போன்ற‌ திட்ட‌ங்க‌ளும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. புதிய அலைபேசி இணைப்புக‌ளில் 95 விழுக்காடு முன் கூட்டி ப‌ண‌ம் செலுத்தும் திட்டத்தில் உள்ள‌வ‌ர்க‌ள் என்ப‌து ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்ற‌ல்ல‌. இது மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் த‌ன‌து ப‌ங்கை 76 விழுக்காட்டிலிருந்து(2007) 85 விழுக்காடாக‌(2008 இறுதி வ‌ரை) அதிக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. (அறிக்கை ப‌க்க‌ எண்.9)

இந்த‌ அறிக்கையில் உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை வைத்து நமக்கு அறிய கிடைப்பது என்ன்வெனில் இந்தியாவில் சாதாரண பொதுமக்கள் வெறும் தொட‌ர்புக்கு ம‌ட்டும் ஒரு சாதார‌ண‌ அலைபேசி இணைப்பை பெறுவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு ஆகும் என்ப‌தே.

ஒரு அலைபேசியும், வாழ்நாள் இறுதி வ‌ரை அழைப்புக‌ள் உள்ள‌ இணைப்பிற்க்கு ரூபாய் 1,000ற்க்கும் கீழே தான் தேவை, இதுவும் மாத‌ த‌வ‌ணைக‌ளில் செலுத்தினால் போதும். மேலும் இணைப்பை தொட‌ருவ‌த‌ற்காக‌ மாத‌ம் ரூபாய்.10 ம‌ட்டுமே போதும்( Vodafone அறிக்கையின் ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளின் ச‌ராச‌ரி மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய். 250) இதில் வ‌ருகின்ற‌ அழைப்புக‌ள் ம‌ட்டுமே போதும் என்றால் மாத‌க‌ட்ட‌ண‌மே தேவை இல்லை. இது போன்ற‌ இணைப்புக‌ளை ஒரு குடும்ப‌த்தில் உள்ள‌ ஒருவ‌ரோ, இருவ‌ரோ வைத்து கொள்ள‌ முடியும், இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு நாளுக்கு ஆகும் செல‌வு ரூபாய்.20. இந்த‌ அறிக்கையை நாம் கிராம‌புற‌ , ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ இணைப்புக‌ள் எவ்வ‌ள‌வு, ஒவ்வொரு அலைவ‌ரிசைக்கும் எவ்வ‌ளவு இணைப்புகள் உள்ள‌து என‌ பிரித்தும் பார்க்க‌லாம்.

உதார‌ண‌த்திற்க்கு ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தியுட‌ன் ஒப்பிட்டால் கிராம‌ப் ப‌குதியிலுள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தி 6 ம‌ட‌ங்கு குறைவு.மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் ந‌க‌ர்புற‌த்தின் ப‌ங்க‌ளிப்பு தோராய‌மாக‌ 80 விழுக்காடு. மேலும் ஒரு நாளைக்கு ரூபாய்.20ற்கும் குறைவாக‌வே பெரும்பான்மையான‌ அலைபேசி உரிமையாள‌ர்க‌ள் செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ அறிக்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்வ‌து இந்தியாவில் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு இங்கு வாழும் ம‌க்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை தீர்மானிப்ப‌து த‌வ‌றாக‌வே முடியும். இதை இவ்வாறு கூற‌லாம் அதாவ‌து ந‌ம‌து ச‌மூக‌த்தில் இந்த‌ அலைபேசி நிறுவ‌ன‌ங்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ எல்லா நிலையில் உள்ள‌ ம‌க்க‌ளிட‌மும் சென்று விட்ட‌ன‌. அலைபேசி க‌ட்ட‌ண‌ விகித‌ம் 10 விழுக்காடு அதிக‌ரித்தால் 23 விழுக்காடு வாடிக்கையாள‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை புற‌க்க‌ணித்து விடுவார்க‌ள்( Vodafone அறிக்கை ப‌க்க‌ எண்.14). தேவையின் அடிப்ப‌டையில் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பினும் ஒரு சிறிய‌ க‌ட்ட‌ண‌ மாற்ற‌ம் கூட‌ அவ‌ர்க‌ளின் அலைபேசி ப‌ய‌ன்பாட்டை வெகுவாக‌ குறைத்து விடும்.

இறுதியாக‌ நாம் இவ்வாறு கூற‌லாம். த‌ன்னுடைய‌  பிற‌ அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளில் ஒன்றை த‌விர்ப்ப‌த‌ன் மூல‌ம் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெற‌ முடியும், ஆனால் அத‌ன் க‌ட்ட‌ண‌ விகித‌த்தில் ஏற்ப‌டும் சிறு அதிக‌ரிப்பு கூட‌ அவ‌ர்க‌ளை அத‌ன் ப‌ய‌ன்பாட்டிலிருந்து முற்றிலுமாக‌ வெளியேற்றி விடும்.

வருடம் அலைபேசி (கோடி பேர்) தொலைபேசி (கோடி பேர்)
2003 1.3 4.148
2004 3.360 4.258
2005 5.221 4.591
2006 9.000 4.975
2007 16.253 4.039
2008 26.109 3.942
2009 39.176 3.796
2010 58.432 3.696

அலைபேசி/தொலைபேசி பயனாளர்கள் 2003 முதல்

ஏன் அலைபேசி இணைப்பு இந்தியாவில் மிக‌ வ‌றுமையில் வாடும் ம‌க்க‌ளுக்கு மிக அத்தியாவ‌ச‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து ?

மேலே கூறிய‌வ‌ற்றிலிருந்து ந‌ம‌க்கு தெளிவாக‌ தெரிவ‌து என்ன‌வென்றால் அலைபேசி இணைப்பு வ‌ள‌ர்ச்சிக்கான‌ ஒரு காரணி இல்லை, த‌ன‌து வேலைக்காக‌வும் ம‌ற்ற‌ தேவைக‌ளுக்காகவும் தேவைப்ப‌டும் ஒரு அடிப்ப‌டை பொருள். இங்கு நாம் முக்கிய‌மாக‌ பார்க்க‌வேண்டிய‌து என்ன‌வெனில் இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளே மிகப் பெரும்பான்மையாக‌ (93%) உள்ள‌ன‌ர். இதிலும் பெரும்பான்மையின‌ர் த‌ங்க‌ள‌து வ‌ருமான‌த்தை எவ்வாறு ச‌ரியாக‌ செல‌வு செய்வ‌து என்ப‌தில் மிக‌வும் க‌வ‌ன‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். இதில் ஒரு ப‌குதியின‌ர் அலைபேசி இணைப்புக‌ளுக்கான‌ க‌ட்ட‌ண‌ம் மிக‌வும் குறைவாக‌ ஆன‌ பொழுது அதை உப‌யோக‌ப‌டுத்த‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌ர் அதுவும் கூட‌ த‌னது வேலை சார்ந்த‌ தொட‌ர்புக‌ளுக்கு ம‌ட்டும். இவை பெரும்பான்மையான‌ ஆய்வாளர்க‌ளால் உறுதி செய்ய‌ப்ப‌ட்டும் உள்ள‌து. குர்கானில் உள்ள‌ அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளின் நிலை ப‌ற்றி‌ ச‌மீப‌த்தில் வெளிவ‌ந்த ஆய்வுக் குறிப்பிலும் இது குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. (http://sanhati.com/excerpted/2320/)

அமைப்புசாரா தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து நிர‌ந்த‌ர‌மில்லா வேலைத் த‌ன்மையின் காரண‌மாக‌வும், தனக்கு கிடைத்துள்ள‌ வேலையை தக்கவைத்து கொள்வதற்கும் அலைபேசியை உப‌யோகிக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இதை ஏதோ அவ‌ர்க‌ளுக்கு அலைபேசியில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு பேச‌ நிறைய‌ நேர‌ம் உள்ள‌தைப் போல‌ எண்ணிக் கொண்டு இதை வ‌ள‌ர்ச்சியின் ஒரு கார‌ணியாக‌ க‌ருதுவ‌து த‌வ‌று. வ‌ள‌ர்ந்து வ‌ரும் அமைப்புசாரா தொழிற் ச‌ந்தையில் த‌ன‌து வேலையை த‌க்க‌வைத்துக் கொள்ள‌வும், புதிய‌தாக‌ வேலைக்கு சேர‌வும் அலைபேசி செல‌வுக‌ள் த‌விர்க்க‌முடியாத‌ ஒன்றாக‌ மாறிவிட்ட‌ன‌.

இத‌ற்கு நிக‌ரான‌ ஒரு உதார‌ண‌த்தை நாம் வ‌ட‌ அமெரிக்காவில் பார்க்க‌ முடியும், தானிருக்கும் இட‌த்தில் இருந்து வேலைக்கு செல்லும் இட‌த்திற்க்கு அர‌சு போக்குவ‌ர‌த்துக‌ளோ, த‌னியார் போக்குவ‌ர‌த்துக‌ளோ இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் அங்கு ம‌கிழுந்து வாங்குவ‌தற்கு ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இங்கே ம‌கிழுந்து என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, அத்தியாவ‌சிய‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து. இதை போல‌ தான் இந்தியாவில் அலைபேசி இணைப்பு என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் கூறுவ‌து போல‌ ஆட‌ம்ப‌ரத்திற்காக‌ அல்ல‌, அத்தியாவ‌சிய‌த்திற்காக‌வே. அமைப்புசாரா தொழில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெறுகின்ற‌ன‌ர். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ருத்துவ‌ம், க‌ல்வி போன்ற‌ அடிப்ப‌டை தேவைக‌ள் த‌னியார் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுவிட்ட‌தால் அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌த்தில் பெரும்பான‌மையை இவை பிடுங்கி விடுகின்ற‌ன‌‌. இவை எல்லாம் இந்திய‌ பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌ங்க‌ளால் சமீபத்தில் ந‌டைபெற‌ ஆர‌ம்பித்துள்ள‌வைகள் மட்டுமே. (இது தொடர்ந்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோச‌மாக இருக்கும்)

உதார‌ண‌த்திற்கு ந‌க‌ர‌ப்ப‌குதியில் வாழுகின்ற‌ ஐந்து பேர் கொண்ட‌ ஒரு குடும்ப‌த்தை எடுத்துக்கொள்வோம் (ஒரு ஆண், ஒரு பெண், இர‌ண்டு குழ‌ந்தைக‌ள், ஒரு முதிய‌வ‌ர்). இங்கே அந்த‌ குடும்ப‌த்தின் மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய்.2000. அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தில் இர‌ண்டு அலைப்பேசி இணைப்புக‌ள்(ஒன்று கண‌வ‌ரிட‌ம், இன்னொன்று ம‌னைவியிட‌ம்). க‌ண‌வ‌ன் அன்றைய தேதியில் காலியாக‌‌ உள்ள‌ வேலைக‌ளைப் ப‌ற்றி தெரிந்துகொள்வ‌த‌ற்கும், ம‌னைவி த‌ன‌க்கு கிடைக்கும் வேலைக‌ள் (ஏதாவ‌தோரு வீட்டில் துணி துவைப்ப‌து, வீட்டை தூய்மைப்ப‌டுத்துவ‌து) ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்கும் உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் ரூபாய் 200 செலவாகின்ற‌து, இதை அவ‌ர்க‌ள் ஏதாவ‌தொரு வேளை உண‌வை குறைப்ப‌த‌ன் மூல‌ம் ச‌ம‌ப்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர்.

இந்த‌ ஆய்வுக்க‌ட்டுரை மூல‌ம் நாம் அறிய‌ வ‌ருவ‌து இந்தியாவில் அலைபேசி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல, ஒரு நாளைக்கு ரூபாய்.20 அல்லது அதற்கு கீழ் வருமானம் கொண்ட‌ ஏழை கூட இங்கே அலைபேசி இணைப்பை பெற முடிகின்ற அளவிற்க்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றது. அமைப்பு சாரா தொழில் வேலைவாய்ப்பில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒரு அத்தியாவ‌ச‌ பொருள் அலைபேசி இணைப்பு.

தொலைபேசி (land lines) இணைப்புக‌ள் ந‌டுத்த‌ர‌ வ‌குப்பை காட்டும் ஒரு கார‌ணி.

த‌க‌வ‌ல் தொட‌ர்புக‌ளின் மூல‌மாக‌ ந‌டுத்த‌ர‌ வகுப்பை ஒருவ‌ர் க‌ண‌க்கிட‌iவேண்டுமானால் தொலைபேசி இணைப்பு ஒரு ச‌ரியான‌ கார‌ணியாக‌ இருக்கும். ஒரே வீட்டிற்க்கு இர‌ண்டு தொலைபேசி இணைப்புக‌ள் இருப்ப‌து அரிதான‌ ஒன்று. இத‌னால் ஒருவ‌ரே அல்ல‌து ஒரு குடும்ப‌மே ப‌ல‌ இணைப்புக‌ள் கொண்டிருப்ப‌து இங்கே அரிது. ந‌ம‌க்கு என்ன‌ எண்ணிக்கை கிடைக்கின்றது?

நாம் தொலைபேசி இணைப்புக‌ள் ப‌க்க‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துபோது ந‌ம் கவனத்தில் படுவது. 50 விழுக்காடு இணைப்புக‌ள் அர‌சு நிறுவ‌ன‌ங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன‌‌. வெறும் 2 கோடி ம‌க்க‌ள் ம‌ட்டுமே தொலைபேசி இணைப்பை கொண்டுள்ள‌ன‌ர். ச‌ராச‌ரியாக‌ ஒரு குடும்ப‌த்திற்கு 5 பேர் வைத்து கொண்டால், 10 கோடி மக்க‌ள் தொலைபேசி இணைப்பு கொண்டுள்ள‌ன‌ர்.

இதே போல‌ மாத‌க் க‌ட்ட‌ண‌ம் செலுத்தும் அலைபேசி இணைப்புக‌ளை (Post paid) க‌ண‌க்கிட்டு பார்த்தால் மொத்த‌ இணைப்பில் 15 விழுக்காடு மட்டுமே த‌னி ந‌ப‌ர்க‌ளிட‌ம்(பொது ம‌க்க‌ளிட‌ம்) இருக்கும்.  இந்த‌ தோராய‌ க‌ணிப்பும் கூட‌ நாட்டில் உள்ள‌ ப‌ண‌க்கார, ந‌டுத்த‌ர‌ வ‌குப்பில் உள்ள‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் ஒன்றாக‌ உள்ள‌து. ( 2006ல் சென் குப்தா அறிக்கையை பார்க்க‌வும்).

வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ள்.
இந்த‌ நேர‌த்தில் நாம் வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ளைப் ப‌ற்றியும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு 2007ன் இறுதியில் பாகிசுதானில் 100பேருக்கு 50பேர் அலைபேசி இணைப்புக‌ளை கொண்டிருந்த‌ன‌ர். இந்தியாவில் அன்று இருந்த‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கையுட‌ன் ஒப்பிட்டால் இது இரும‌ட‌ங்கு. ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி பாகிசுதான் இந்தியாவை விட‌ வ‌ள‌ர்ந்து விட்ட‌து என்றும், இந்தியா இப்போது தான் வ‌ள‌ர்ந்து கொண்டு வ‌ருகின்ற‌து என்ற‌ முடிவிற்கு தான் வ‌ர‌வேண்டும், ஆப்ரிக்காவைச் சுற்றி உள்ள‌ நாடுகளில் மட்டும் 60 கோடி அலைபேசி இணைப்புக‌ள் உள்ள‌ன‌. ம‌னித வள வ‌ள‌ர்ச்சியில் 134 வ‌து இட‌த்தில் உள்ள‌ இந்தியாவையும், 141வ‌து இட‌த்தில் உள்ள‌ பாகிசுதானை அந்த‌ ம‌ட்டிய‌லில் க‌டைசியில் உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து எப்ப‌டி ச‌ரியாகும்?

தில்லியில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கை தில்லியில் உள்ள‌ ம‌க்க‌ள் தொகையை விட‌ அதிக‌ம். ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி தில்லியில் வ‌றுமை முற்றிலுமாக‌ ஒழிந்திருக்க‌ வேண்டும். அவ்வாறா உள்ள‌து தில்லி?
(இதில் ஒரு நிறுவ‌னமோ, தனி நபரோ ப‌ல‌ இணைப்புக‌ளை கொண்டிருப்ப‌தெல்லாம் எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. எங்க‌ளை பொருத்த‌வ‌ரையில் மிக‌ முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌ கார‌ணிக‌ளை ம‌ட்டுமே இங்கே ஆராய்ந்துள்ளோம்.)
_______________________________________________________
ந‌ன்றி… ச‌ங்க‌தி (sanhati) இணைய‌த‌ள‌ம். மூலப்பதிவு ‍ …. http://sanhati.com/excerpted/2388/
________________________________________________________

அப்ப‌டின்னா அதெல்லாத்தையும் க‌ண‌க்கில‌ எடுத்தா!!!!!.  மான‌! மிகு ப‌.சித‌ம்ப‌ர‌ம் 1984 தில்லி கலவரம் குறித்து தவறாக கூறியதை கண்டித்து அவரை ஒரு சீக்கிய பத்திரிகையாளர் செருப்பாலடித்து போல‌ இங்கு  பொதும‌க்க‌ள் சிதம்பரம் கூறியுள்ள‌‌ இந்த‌ பொய்யிற்கு அவ‌ரை செருப்பால் அடித்தால் அது தப்பா???

தமிழாக்கம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.
___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

40

வரும் செப்டம்பர் 25, 26 தேதிகளில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், வாரிசுகள் அனைவருமாய் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன்படி தஞ்சை நகர் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் தெருவோர நிகழ்ச்சிகள், பெரிய கோவிலில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி, நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம், பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலையில் திலகர் திடலில் கருணாநிதி தலைமையில் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுதல், பெரிய கோவிலின் வரலாற்றை நினைவு கூரும் கண்காட்சி, இந்த விழாவுக்காக தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இனி செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழு அடிக்கடி கலந்து பேசி நடத்தும். தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் இனி இரண்டு மாதங்களாய் பெரிய கோவில் விழாவுக்கான வேலையை கவனிப்பார்கள். ஊடகங்களும் இது குறித்து சிறப்பு மலர் வெளியிட்டு கருணாநிதி சோழனது புகழ் பாடும். தொலைக்காட்சிகளில் இசையும், காட்சியும் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு ஓடும்.

இந்தக் குத்தாட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு இன்னும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களது பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. மக்களும் தமது வாழ்வியல் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு இனி இரண்டு மாதங்களாக இந்த கிளாடியேடட்ர் ஷோவை இரசிப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ராஜராஜ சோழன் காலத்து மக்கள் வாழ்க்கை நிலையிலிருந்து இன்றும் நமது மக்களின் நிலைமை பெரிதும் மாறவிடவில்லை. ஒரு ரூபாய் அரிசிக்கும், குடிசை வீட்டின் பத்து ரூபாய் மின்கட்டணத்திற்கும், வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணத்திற்கும்தான் நமது மக்கள் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த ஆயிரம் வருட நிறைவின் பொருள் என்ன?

அன்று ராஜராஜ சோழன் தனது சாம்ராஜ்ஜியத்தின் வலிமையினை பறைசாற்றும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டினான். இன்று அதே கோவிலின் ஆயிரமாண்டு நிறைவை கருணாநிதி சோழன் தனது கட்சி, குடும்ப சாம்ராஜ்ஜியத்திற்காக கொண்டாடுகிறார். ஆக சோழர்களின் சர்வாதிகார ஆட்சி இன்னும் நீடிக்கிறது. அன்று பட்டினியுடன் கோவிலுக்கான கற்களைச் சுமந்த மக்கள் இன்று பசியுடன் அந்த கோவில் கொண்டாட்டத்தினை கண்டு களிக்கிறார்கள். ஆக அன்றைக்கு மேட்டுக்குடிக்கு மட்டும் இருந்த பொழுது போக்கு இன்று எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான் இந்த ஆயிரமாண்டு இடைவெளியின் முன்னேற்றமா?

சரி, கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்ட திருவிழா எதுவோ, நினைத்தாலே கிலியாக இருக்கிறது!

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

7

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க :  94446 48879
பு.ம.இ.மு :  94451 12675
பு.ஜ.தொ.மு :  94448 34519
பெ.வி.மு :  98849 50952
வினவு :  97100 82506

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

15

சமீபத்தில் மதுரை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்  பா.ம.கவின் தற்போதைய நிலை குறித்து பேசியிருக்கிறார். அதில்,

“1967–ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் தி.மு.க அல்லது அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.”

“1991 தேர்தலிலும், 1996 தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பா.ம.க அமைத்தது. அதில் 91ஆம் ஆண்டில் பா.ம.க ஒரு இடத்திலும், 96ஆம் ஆண்டில் நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றது. வரும் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அது போன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.”

“முன்பு அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க தானாக வெளியேறியது. தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.கவை தி.மு.க வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாக இது நடந்தது. பின்னர் தி.மு.க பொதுக்குழு கூடி பா.ம.கவை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. நாங்களும் பேசினோம். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. கருணாநிதியின் சட்ட மேலவை கனவு நிறைவேறுவதற்கு நாங்கள் வாக்களித்ததே காரணம். பதிலுக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவியை அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை.”

“ தே.மு.தி.க இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுமா என்றும் தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பா.ம.க எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

காங்கிரசு கட்சி தமிழகத்தில் தனியாக தேர்தலில் நிற்க முடியவில்லை என்றால் அந்தக் கவலை ராமதாஸூக்கு எதற்கு? உண்மையில் பா.ம.கவை இரண்டு கழகங்களும் கழட்டி விட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னெச்செரிக்கையாக இப்படி ஒரு பனிக்கட்டியை காங்கிரசு தலையில் வைக்கிறார். ஒரு வேளை அப்படி பலித்து விட்டால் தேர்தல் செலவுக்கு கவலையில்லை. கொஞ்சம் வெற்றி பெற்று தொங்குநிலை சட்டமன்றம் உருவாகும் பட்சத்தில் நல்ல பேரம் பேசலாம். பிறகு பாராளுமன்ற மேலவை தேர்தல் வந்தால் அன்புமணியை அமைச்சராக்கலாம்.

காங்கிரசு, பா.ஜ.க இரண்டு ஆட்சிகளிலும் பங்குபெறுவதற்கு ராமதாஸ் கூச்சப்படுவதில்லை. அடுத்து காங்கிரசு தனியாக போட்டியிடவில்லை என்று கவலைப்படும் ராமதாஸ், பா.ம.கவும் இரண்டு கழகங்களோடு மாறி மாறி சேர்ந்து போட்டியிட்டதைப் பற்றியல்லவா முதலில் கவலைப்படவேண்டும்? தனது இலையில் பாயாசம் விழாது என்ற நிலையில் பக்கத்து இலைக்கு மட்டும் எதற்கு பாயாசம் என்பதே அவரது கவலை.

திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்று சலித்துக் கொள்ளும் ராமதாஸ் தனது கட்சியை என்னவென்று மதிப்பிடுகிறார்? பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மேல்தட்டு வர்க்கத்தை பிரதிபலித்த திராவிட கட்சிகளின் தொடர்ச்சியில்தான் பா.ம.கவும் வருகிறது. ‘சமூக நீதிக்கட்சி’ என்ற பட்டத்தைக்கூட அவர் இழப்பதற்கு தயார் என்பதே இந்த காங்கிரசு பாசத்தில் வெளிப்படுகிறது. இரண்டு கழகங்களும், காங்கிரசும் கைவிட்டுவிட்டால் அவரது இறுதி அடைக்கலம் சமூக நீதிக் கூட்டணியாம். தமிழகத்தில் இத்தகைய கொள்கை பேசும் லெட்டர் பேடுக் கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்க பா.ம.க முயன்றாலும் அந்த லெட்டர்பேடுக் கட்சிகள் கூட இப்போது பா.ம.கவுடன் வருவது சிரமம். பா.ம.கவுடன் இணைவதால் கிடைக்கும் ஆதாயத்தை விட தி.மு.கவால் வரும் ஆதாயம் அதிகம் எனும் போது அவைகள் ஏன் ராமதாஸூடன் சேர்ந்து தற்கொலை செய்யவேண்டும்?

இப்போது வன்னியர்கள் கூட ராமதாஸை நம்புவதற்கு தயாராக இல்லை. என்னதான் இட ஒதுக்கீடு,போராட்டம் என்று அறிவித்தாலும் அவரது பிழைப்பு வாதத்தை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள். அதனால்தான் வன்னியர்களும் மற்ற சாதி மக்களைப் போல பல அரசியல் கட்சிகளிலும் பிரிந்துதான் இருக்கிறார்கள். 80களில் இருந்த சாதி ஆதரவில் கால்பங்கு கூட இப்போது பா.ம.கவிற்கு இல்லை.

இத்தனைக்கு மேலும் ராமதாஸ் இரண்டு கழகங்களோடு சேர்வதையே விரும்புகிறார். அதில் அவரது முதல் தெரிவு தி.மு.கதான். சட்டமேலவைக்கு ஆதரவு அளித்ததற்கு பதிலாக ராஜ்ஜிய சபா உறுப்பினர் எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால் தி.மு.கவை விரோதிக்க தயாரில்லை. தி.மு.கவின் பணபலம், அதிகார பலத்தினை அ.தி.மு.கவால் மட்டுமல்ல, தன்னாலும் எதிர்கொள்வது சிரமம் என்பது ராமதாஸூக்கு  நன்கு தெரியும். எனவே தி.மு.கவே வலிய வெளியே தள்ளினால்தான் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேரும்.அ துவும் இப்போது வாக்கு  வங்கி இல்லாத நிலையில் அம்மா போடும் கண்டிஷன்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அபயாமும் இருக்கிறது.

அதனால்தான் முன்னெச்சரிக்கையாக அரசயிலில் நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை என்பதை பெருமையாகவும், தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தியும் அவரால் சொல்ல முடிகிறது. எனினும் இன்றைய ஒட்டுக் கட்சிகளின் சந்தையில் பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும். இதற்கு மேல் பரிணமிக்க என்ன இருக்கிறது என்கிறீர்களா? சரி, அப்படியென்றால் அதான் இது!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்