(“துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்)
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.
“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.
மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.
கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?
கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.
கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?
கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.
கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’
போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.
இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.
“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.
இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.
உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.
பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.
அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?
அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.
மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”
புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.
அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece
புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.
சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.
இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:
சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?
கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.
சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?
கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.
சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?
கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.
சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?
கே.பி.: ஆம்.
சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?
கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.
சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?
கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?
சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?
கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.
கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.
ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.
அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.
இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.
இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.
களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.
தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.
கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…
ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.
மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.
“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.
இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.
மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.
ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.
நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.
எமதருமை புலத்து மக்களே,
இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!
தொடர்புடைய பதிவுகள்
- ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்
- ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !
- ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
- ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
- ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
- புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
- ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்
- ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!
- ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ
- இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !
- புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
- புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!
- ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!
- வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
- எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
- அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
- ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்
- ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!
- ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !
- ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !
- ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
- ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!
- பிற ஈழம் தொடர்பான கருத்துப்படங்கள், கட்டுரைகள், காணொளிகள், போராட்ட செய்திகள்
மிக அருமையான கட்டுரை மிக சரியான நேரத்தில் வெளி வந்திருக்கிறது. ஜெகத் கஸ்பர் இனிமேல் நடிக்க முடியாது. பிரபாகரனை இவர் வழிநடத்த துடிக்கிறார் போலும். நக்கீரனை இவர் தன இப்போது தூக்கி நிறுத்துகிறார் போலும். இனியும் எத்தனை ஈழ துரோகிகள் இருக்கிறார்களோ தெரியவில்லை. இந்தியா இன்னும் எத்தனை துரோகத்தை செயதாலும் முடிவில் மக்கள் போராட்டம் வெற்றி அடையும் என்றே நாம் நம்புகிறோம்.
ஆயிரம் தோட்டாக்கள் பாய்ந்த நெஞ்சாய் ஒரு இனம்வெளியேறாத உயிரோடு இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது- உணர்ச்சிகளோடு.
உண்மையை உரக்கத் தோழர்கள் சொல்லும்போது நெஞ்சம் பதறுகிறது.
மூளை முழுவதும் விரக்தியில் தோய்க்கப் பட்டுள்ளது.இனி கண்களில் நீர் இல்லை இரத்தம் மட்டும்தான்-பார்வையோ மங்கலாய்.இந்திய இலங்கை இராணுவ வெறி நாய்களின் ஏளன சிரிப்பு-இதயத்தை அறுக்கிறது ,கூடவே துரோக எட்டப்பன்களின் கள்ள மவுனமும்வெடித்து சிதறும் தமிழ் ரத்தத்தை, சோகத்தை சுவைக்கும் துரோகிகள் தொடர்ந்து அம்பலமாகட்டும்,,,
தோழர் வினவுமேலே அலைன்மென்ட் மாறுகிறதே கொஞ்சம் கவனியுங்கள்,
நாடு கடந்த ஈழ அரசை பற்றி கட்டுரை வெளிய்டு மாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாடுகடந்த ஈழ அரசா???? இந்து பயங்கரவாதத்தின் மறுபிறப்பு
சென்ற ஆண்டின் வேதனைகளையும் அவலங்களையும் அடிமனத்தில் ஆழப்புதைத்து விட்டு புதிய ஆண்டை நோக்கி புதிய செயல்பாடுகளோடு எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக மக்கள் மயப்படுத்தி நடத்ததான் ஈழத்தமிழர்கள் எண்ணியுள்ளார்கள் ,ஆனாலும் எத்தைனையோ விடை தெரியாத கேள்விகள் எங்கள் மனங்களில் உள்ளன . இறுதியாக களத்தில் நின்று மருத்துவ பணியாற்றி இன்று வெளிநாட்டில் தப்பி வந்திருக்கும் ஒருவரின் தகவலின் படி மே பத்தாம் திகதி மட்டும் நாலாம் கட்ட ஈழப்போரில் தொண்ணூற்றி ஏழாயிரம் மக்கள் மட்டும் இறந்ததாக செய்தி வந்திருக்கிறது ,இதன்பின்புதான் கடைசியில் இன்னும் இருபாயிரத்துக்கு மேலே கொல்லப் பட்டுள்ளார்கள், இவ்வளவு அவலம் நடப்பதற்கும் யாரெல்லாம் காரணம் என்பது எமக்கு புரிய ஆரம்பித்துவிட்டாலும் கடைசியில் நடந்த உண்மைகள், துரோகங்கள் எல்லாம் மக்களுக்கு தெளிவாக ஒருநாள் தெரிய வரும் என்றே நம்புகிறோம். தப்பி வந்த போராளிகள் ,மனசாட்சி உள்ள சிங்கள ராணுவ வீரர்கள் ,ராணுவ அதிகாரிகள், மனச்சாட்சி உள்ள இந்திய அதிகாரிகள் —அப்படி யாராவது இந்திய அதிகாரிகள் இருந்தால்- மூலமாவது மே மாதத்தின் நடுப்பகுதியில் நடந்த அந்த மாபெரும் இன அழிப்பின் ,ஒரு சிறிய தேசிய இனத்தின் சுதந்திர தாகம் கொடூரமாக அழிக்கப்பட்ட விதம் பற்றிய உண்மைகள் ,நடந்தேறிய துரோக அத்தியாயங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறோம்.ஈழப்போரின் இறுதியில் மனிதம் செத்தது ,உலக நாடுகள் ஐ நா சபை எல்லாம் கண்களை மூடின ,மனித உரிமை பற்றி முழக்கம் இடுவோர் மௌனிகள் ஆனார்கள் ,துடிக்க துடிக்க ஒரு லட்சம் மக்கள் மண்குளிக்குள் புதையுண்டு இறந்தார்கள் ,அதிர்ச்சியில் இருந்த தமிழரின் மனத்தைக் குழப்ப இந்த ஆறு மாத காலமாக யார் யாரோ ஏதோ கதைகள் எல்லாம் சொல்கிறார்கள் ,ஆனாலும் உண்மைகள் ஒருநாள் தெரிய வரும்.
fantastic
மிகத் தெளிவான ஆராய்ச்சிக் கட்டுரை !
உண்மை எது பொய் எது என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தாலும், இந்தக் கட்டுரையில் வைத்திருக்கும் வாதம் நம்மை சிந்திக்க வைக்கிறது.
இப்படி ஒண்ணுமே பண்ண முடியாம, எல்லாம் போச்சே ந்னு நம்மை நாமே திட்டிக் கொள்ள வேண்டியது தான்.
அருமை.. ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் வாழ்கை சூனியமாக உள்ளது.
நல்ல ஆதாரப்பூர்வமான கட்டுரை. வினவுக்காரவுக தொடர்ந்து பெரிய இடங்களோட தைரியமா மோதுத்தற்கு வாழ்த்துக்கள்
//“I would say their moral compass might have gone wrong,” said Bolopion, //
http://www.france24.com/en/20090529-un-accused-deliberately-downplaying-civilian-death-toll-sri-lanka-tamil-tigers
http://www.warwithoutwitness.com/index.php?option=com_content&view=article&id=281:gothabaya-rajapaksa-issued-illegal-orders-to-general-shavendra-silva-to-kill-surrendering-ltte-carders&catid=41:daily-hr-report&Itemid=65
மகிந்தருக்கு இப்போது மன அழுத்தம் வந்து மருத்துவ ஆலோசனை எடுக்கிறாராம் ,நடந்த கொடுமையில் ஏதோ ஒரு வகையில் பங்கு பற்றியோர் எல்லோருக்குமே கூடிய விரைவில் இப்படித்தான் ஆகப்போகிறது ,இப்போதே சில உண்மைகள் கசிய ஆரம்பித்துவிட்டன யுத்த தர்மத்துக்கு எதிரான அந்தப்போரில் இறந்த ஒரு லட்சம் மக்களுக்கும் பல்லாயிரம் இளம் போராளிகளுக்கும் நீதி நிச்சயம் கிடைக்கவேண்டும் .
முதலில் இந்த துரோகியையும் சாத்தான் வேதத்தையும் காவி வருகின்ற இணையத் தளங்கள் ,வலைப்பூக்கள் நிறுத்த வேண்டும்
//இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!//
இவர் ஒரு இந்திய உளவாளி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இவரை இன்னும் நம்மில் பலர் நம்புகின்றார்கள்
இதை சீமானின் வாயால் கேளுங்கள்
http://tamilthesiyam.blogspot.com/2009/12/blog-post_27.html
ஏன் என்றால்
இவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாம் அவர் பொய் சொல்லமாட்டார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுவாராம். இவர்களுக்கு இனமானத்திலும் மதவெறி முத்தியதைத் தான் இது காட்டுகின்றது
அதிர்வுக்கு எதிரான இவரது குமுதத்தின் பேட்டியையும் ,கட்டுரையைப்பார்த்தால் தெரியும் ஒரு தெருப்பொறுக்கி போல் உரையாடுவதும் இவரை அடையாளம் காட்டுகின்றது
—————————–
தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.————
இது ஒரு வலைப்பூவில் தீர்க்க தரிசனமாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஆய்வு
http://suthumaathukal.blogspot.com/2009/11/blog-post_2666.html
//முதலில் இந்த துரோகியையும் சாத்தான் வேதத்தையும் காவி வருகின்ற இணையத் தளங்கள் ,வலைப்பூக்கள் நிறுத்த வேண்டும்
////
அப்படியா. எப்படி நிறுத்துவது ? இது ஃபாசிசமில்லையா ? வினவு மற்றும் தோழமை தளங்களை கூட இதே போல் பலரும் கருதலாம். அவர்கள் அதிகாரத்தின் மூலம் (சீனாவில் நடப்பதை போல) வினவு தளத்தை மூட முயன்றால் ?
//முதலில் இந்த துரோகியையும் சாத்தான் வேதத்தையும் காவி வருகின்ற இணையத் தளங்கள் ,வலைப்பூக்கள் நிறுத்த வேண்டும்//
மன்னிக்கவும்
இங்கே நிறுத்தச் சொன்னது இணையத்தை அல்ல
அதை காவி வருபவர்கள் ,மறுபிரசுரம் செய்பவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே
உண்மை
ஜெகத்கஸ்பார் போன்ற கயவர்களை சரியாக இனம் கொள்ள வேண்டும். சொல்லும் கருத்துக்களில் தான் எத்தனை வேறுபாட்டுகள்… மிகவும் ஒரு நல்ல இருகை. படித்தாவது உண்மையை உணர்வார்களா பார்ப்போம்.
தமிழினத்திற்குள்ளே தமிழன்போல் ஒளிந்திருக்கும் கயவர்களை, கோடாரிக்காம்புகளை வெளிக்காட்டத்தான் தமிழீழ ஆயுதப்போராட்ட தோல்வியை தமிழன்னை அணைத்துக்கொண்டாள். தமிழீழம் உருவாகியிருந்தாலும் இந்தக் கயவர்களால் அது அழிக்கப்பட்டிருக்கும் என்பது அந்த அன்னைக்கு தெரிந்திருக்க வேண்டும்.
மாவீரர் விதைகளிலிருந்து வீரத்தமிழர்கள் உருவாகிவருவார்கள். அவர்களால் தமிழினத்திற்கான ஒரு அரசு இந்த உலகில் நிச்சயம் உருவாகும். அந்த நாள் வெகுதூரமில்லை என நம்புவோம்.
இந்த வேசிமகன்களிடமிருந்து தமிழனைக் காப்பாறுவதே இன்று எம்முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.
இப்பவாவது தெரிஞ்சிக்கோங்கப்பா! தமிழன் செத்ததுக்கு பாதிரியார் தான் காரணம். பாப்பான் காரணமில்லன்னு. சும்மா பாப்ப்பான திட்ரத விட்டிட்டு பாதிரியார திட்டப்பாருங்க. தைரியமிருந்தா. அது சரி கஸ்பர மட்டும் துரோகின்னு சொல்லிட்டு கனிமொழிய பத்தி வாயே தொரக்காம மூடிக்கிட்டு இருக்கீங்க. ஏன் க்னிமொழிய பத்தி எழுதிட்டா பெரிய குடும்பட்த்திலருந்து பெரிய ஆப்ப கொண்டாந்து சொருகிடுவாங்கன்னு பயமா? அட பயந்தாங்கோலிகளா! நீங்களே ஆளுக்குத்தகுந்த மாதிரி தானே வீரம் மாட்டரீங்க. கஸ்பர மட்டும் துரோகின்னு சொன்னா உங்கள விட்ர முடியுமா? கனிமொழி துரோகத்த பத்தி ஒரு பதிவு போடுங்க பாப்போம். உங்களுக்கு தைரியம் இருக்கான்னு தெரியும்.
பார்ப்பார ராமா,இவ்ளோ தைரியசாலி, புஜ பல பராக்கிரமசாலியான நீ ஏன் இதுவரைக்கும் பாப்பானை மட்டும் மோந்து பாக்குற பதிவா எழுதற? பயமா இல்ல சரக்கில்லையா?
ஃபாதரின் கட்டுரைகளில் முரண்பாடு தென்படலாம். ஆனால் அவரின் அடிப்படை நோக்கத்தை சந்தேகித்து, துரோகி என்று கருதுவது சரியல்ல.
அவரை சில முறை சந்தித்திருக்கிறேன். அவரை பற்றி கொஞ்சம் தெரியும். பல ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸின், ஒரு அமெரிக்க வானொளியில் பணியாற்றியதாலேயே, அவர் ஒரு அமெரிக்க ஏஜண்ட் என்று கருதுவது jumping to pre-mature conclusions and over simplification.
ஃபாதிரன் கருத்துகள் ஏற்புடையதாக இருக்கலாம். கவிதை நூல் வெளியிட்டு விசியத்திலும், நேர்மையில்லாமல் அல்லது மறைத்து செயல்பட்டிருக்கலாம். ஆனால் ஒரேடியாக அவரை துரோகி என்று கருத போதிய ஆதாரமில்லை. பல ஆண்டுகளாக அவர் விடுதலை புலிகளின் முகவர் போல் தான் செயல் பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இன்னும் சொல்லப்போனால், புலிகளின் பிணாமி, அவர்களின் கருப்பு பணத்தை இவர் கையாள்கிறார். இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மீடியாவை புலிகளுக்கு ஆதாரவாக மாற்ற முயன்ற ஒரு முகவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
சிங்கள ராணுவம் கடைசி வாரத்தில் புலித்தலைமையை ஒரு பெரும் வளையத்தின் நடுவே, தப்ப இயலாதபடி சிக்க வைத்துவிட்டது. யார் சொன்னாலும் கேட்கும் மனோனிலையில் அவர்கள் இல்லை என்று ஒரு அவதானிப்பு. Desparate situations give rise to deparate actions. அவர்கள் பலருடனும் சாட்டிலைட் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டிருந்தனர்.
பலரும் அவர்களை எப்படியாவது காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களை உயிரோடு விட்டுவைத்தால், பெரிச்சாளி போல மீண்டும் மீண்டும் போரை எதிர்காலத்தில் எப்படியாவது மீண்டும் துவங்க முயல்வார்கள் என்று சிங்களவர்கள் கருதியிருக்கலாம். அதனால், அவர்களை பூண்டோடு அழிப்பது தான் ஒரே வழி என்று சிங்களர் கோண்ம். உயிரோடு பிடித்து, பிறகு வழக்கு, விசாரணை, இந்தியாவிற்க்கு நாடு கடத்தும் வேலை.. பொது மன்னிப்பு, பிறகு அரசியல் rehabilitation அல்லது அவர்கள் தப்பி சென்று, புலம் பெயர்ந்து, போரை சில ஆண்டுகள் கழித்து மீண்டும் துவக்கலாம்.. இப்படி பல அனுமானங்கள் / ‘சிக்கல்கள்’ ; இவை எல்லாம் நிலைமையை பல ஆண்டுகளாக அவதானிப்பர்களின் அனுமானங்கள்.
ஃபாதரின் நோக்கங்கள் உண்மையில் புலி தலைமையை எப்படியாவது காப்பாற்றுவது தான். இங்கு நீங்கள் எப்படி வேண்டுமானுலும் இன்று interpret செய்து கொள்ளாம்.
மருத்துவர் எழிலனும், ஃபாதரும் போர நிறுத்தம் வேண்டி நிகழ்த்திய பேரணிகள் எல்லாம் sincere ஆன நோக்கங்கள் அடிப்படையில் தான். தமிழ்நாட்டில், இந்திய / தமிழக அரசுகளின் நிலைபாட்டை எதிர்த்து பெரிய பேரலை ஏற்பட்டு, அதை மழுங்கடித்து, அரசுக்கு ஆபத்து வராமல் அப்பேரணிகள் திசை திருப்பின என்பது உங்கள் ‘அறிவியல்’ பூர்வமான கருத்து. எல்லோரும் அப்படி நினைக்கவில்லை. you all have been fed with old stories of CIA plots and cold war conspircacy theories. and you see conspiracy in each and every thing and issue. over imagination and paronia..
//மருத்துவர் எழிலனும், ஃபாதரும் போர நிறுத்தம் வேண்டி நிகழ்த்திய பேரணிகள் எல்லாம் sincere ஆன நோக்கங்கள் அடிப்படையில் தான். // தமிழை சரிவரக் கூடப் பேசவராத மருத்துவர் எழிலன் எனும் அதிகார மையம் (இவரின் தந்தை திட்டக்கமைஷனின் நாகநாதன்), ஏன் உளவுத்துறையின் கையாட்களான திருச்சி வேலுசாமி, பெதிகவிலிருந்து விரட்டப்பட்ட மு.பாலகுரு, ராவின் கையாளான நகைமுகனோடு இணைந்து இந்தப் பேரணிகளை நடத்தியது என்பதை விளக்க முடியுமா? ஒரே காலகட்டத்தில் பெதிக மேடையிலும், உளவுப்படையின் கையாட்களின் மேடையிலும் தமிங்கிலத்தில் முழங்கும் எழிலனின் சார்பு என்ன? ஆளும்வர்க்கக் கையாளா? தமிழ்த்தேசியத்தின் செல்லப்பிள்ளையா?
//ஏன் உளவுத்துறையின் கையாட்களான திருச்சி வேலுசாமி, பெதிகவிலிருந்து விரட்டப்பட்ட மு.பாலகுரு, ராவின் கையாளான நகைமுகனோடு இணைந்து இந்தப் பேரணிகளை நடத்தியது என்பதை விளக்க முடியுமா?//
திருச்சி வேலுச்சாமி நேர்மையானவர் என்றுதான் நான் கேள்விபட்டிருக்கிறேன், அவரை எந்த அடிப்படையில் உளவுத்துறையின் கையாள் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? மேலும் இந்த மு. பாலகுரு என்பவர் யார்?
யாரை வேண்டுமானாலும், மிக சுலபமான இப்படி ரா ஏஜண்ட். அமெரிக்க உளவாளி என்று முத்திரை குத்துவது மிக சுலபம். பதிலுக்கு, வினவு மற்றும் தோழர்கள் சீனாவின் ஏஜண்டுகள், இந்திய மாவோயிஸ்டுகளோடு ரகசிய தொடர்பில் இருப்பவர்கள், என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
இது கூட பரவாயில்லை. 60களில், இந்திய பாணி சோசியலிச பொருளாதார கொள்கைகளை நிராகரித்து, சந்தை பொருளாதாரத்தை முன் மொழிந்தவர்களை, சி.அய்.ஏ ஏஜண்டுகள் என்று துற்றினார்கள் தோழர்கள். இது மிக மிக அதிகமாக போய், தாங்க முடியாமல், பிலு மோடி என்னும் எம்.பி ஒரு முறை பாராளுமன்றத்திற்க்கு, ‘ I am a CIA agent’ என்ற badgeஅய் அணிந்து கொண்டு வந்தார் !!!! :)))))
///புலிகளின் பிணாமி, அவர்களின் கருப்பு பணத்தை இவர் கையாள்கிறார். இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மீடியாவை புலிகளுக்கு ஆதாரவாக மாற்ற முயன்ற ஒரு முகவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.///
சரி அப்படியானல் இவரை ஏன் ஒருவரும் தீண்ட முற்படவில்லை இதுவரை இவர் இந்திய அரசால் குறிவைக்கப்படவில்லை வெறுமனவே பேசினாலே தூக்கி போடும் இந்தியா இவரை விட்டு விட்டதா ? பினாமி மாதிரி நடித்த ஒரு இந்திய உளவாளி என்பதால் விட்டு விடப்பட்டாரா ?
//ஃபாதரின் நோக்கங்கள் உண்மையில் புலி தலைமையை எப்படியாவது காப்பாற்றுவது தான். ///
எந்த ஆதாரத்தை வைத்து அடித்துச் சொல்லுகின்றீர்கள் ? நீங்கள் பாதிரியாரின் பினாமியா ? பாதிரியின் செயலாளரா ?
அல்லது அநுமான் மாதிரி நெஞ்சைப் பிழந்து காட்டினாரா ? உங்களுக்கு ?
சரி இவரை ஏன் புலிகள் ஒதுக்கிவைத்திருந்தார்கள் என்று தெரியுமா ?
புலிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் உலகின் பல பாகங்களிலிருந்து, சிங்கள ராணுவ தலைமை அல்லது அரசியல் தலைவர்களுடன், யார் எங்கிருந்து. பேசி என்ன ‘உறுதிமொழி’ அல்லது உடன்படிக்கை பெற்றாலும், இதே முடிவுதான் நிகழ்ந்திருக்கும். வாக்கை காப்பாற்றும் அறம் சிங்களர்களிடமும் இல்லை. புலிகளிடமும் இல்லை. Both were into extreme cyncial measures to the end. 20,000 அப்பாவி தமிழர்களை பலி கொடுத்தாலும், புலிகளை பூண்டோடு அழிக்க சிங்கள தலைமை முனைந்துவிட்டது. 20,000 மக்கள் செத்தாலும், சரண்டைய கடைசி வரை புலித்தலைமை முயலாமல், எப்படியாவது இக்கட்டான சூழ்னிலையில் இருந்து தப்பிக்கவே முயன்றது. இந்திய தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, காந்கிரஸ் தோற்றால், மாற்று அரசு தம்மை காப்பாற்றும் என்றும் (மிக தவறாக) நம்பியது. அமெரிகா போன்ற நாடுகள் கடைசி நிமிசத்தில் போர் நிறுத்தம் அமைய வழி வகுக்கும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு. சிங்கள தலைமை யார் சொன்னாலும் கேட்க்கும் மனோனிலையில் இல்லை என்பதே அடிப்படை. முப்பது ஆண்டுகளாக அழிக்க துடித்து புலித்தலைமையை கடைசி நிமிசத்தில் விட்டுவைக்க அவர்கள் தயாராக இல்லை.
எனவே all this arguments about conspiracy and throkikal are academic and irrelevant. No one could have prevented Sinhala regime from exterminating LTTE high command completely to the end. Neither India, nor US or even God or Buddha himself.
புலிகளை ஒழித்ததில் மிக்க் மகிழ்ச்சி.காரணம், இராஜிவ்காந்தி படுகொலை.
எத்தனையோ ஈழப்போராட்டக் குழுக்களையும்,மற்றும் பல தலைவர்களை சமாதனம் பேச அழைத்து படுகொலை செய்தவர்கள் புலிகள்.இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர்களை யாழ்,ம்ற்றும் கொழும்பிலிருந்தும்
சிங்களர் துணை கொண்டு முன்பு விரட்டியடித்தவர்கள் யாழ் தமிழர்கள்.
உண்மை ஈழம் அடைவதற்கு பேச்சுவார்த்தை மூலம் ஈழ மாநிலசுயாட்சி பெற்றிருக்கலாம்.புலிகளை ஆதரித்தற்கு சிறிது காலம் தமிழகமே துப்பாக்கி
கலாச்சாரத்தில் சிக்கவிருந்தது.நல்லவேலை தப்பியது.
அதுசரி……..கர்நாடகாவுல இருந்தும், மகாராஸ்டிராவுல இருந்தும் தமிழர்களை விரட்டியடிச்சப்போ அனைத்து “இந்தியர்களும்” மயிறு புடிங்கிக்கிட்டு இருந்தாங்களோ?
அய்யா அதியமான் நீங்க நல்லா தீர்ப்பு சொல்றிங்க. ஆனால் உங்களை யாரும் சீண்டவில்லை என்னைவிட்டால், அந்த அளவுக்கு உலகத்தைப்பற்றி புரிதல் உங்களுக்கு இருக்கிறது. விடாமுயற்சிதான் வெற்றிதரும்.தொடந்து பின்னோட்டம் எழுதுங்க யாராவது சிக்காமலா போயிடுவாங்க.
சரி, கட்டுரையில் “ஜெகத்” ஜால மோசடிப் பேர்வழி காஸ்பர் என்பவருக்கு ஈழப்போராட்டத்தை சிலுவையில் அறைந்ததில் சிறிதேனும் பங்குண்டு என்று வினவு கட்டுரை சொல்லுவதில் தவறே இல்லை என்று பின்னூட்டம் போடாமல் தான் போனேன். ஆனால், அதியமானின் பின்னூட்டத்தை பார்த்த பின் அது முடியாமல் போய்விட்டது. ஈழப்போராட்டத்தை புலிகளைத்தவிர வேறு யார் முன் எடுத்திருந்தாலும் இந்த நிலைதான் முடிவாய் இருந்திருக்கும். உலக இயங்குவிதிகளை பிய்த்துப்போடும் உங்களுக்கு காஸ்பர் புலித்தலைமையை காப்பாற்றத்தான் போராடினார் என்று சொல்வதில் ஒன்றும் சிரமமில்லை தான். நான் குமுதம் இணையத்தில் இவர் ஏகலைவனுக்கு கொடுத்த பேட்டியில் இந்த மேசையில் இருந்துதான் நடேசனுடன் பேசினேன், இந்த போனில் தான் பேசினேன், இந்தவாயால், இந்தமூக்கால் தான் அழுதேன் என்று சொன்னதையும் பார்த்தேன். இவரின் நக்கீரன் கட்டுரைகளையும் படித்தேன். சாதரணமான என்னைப்போன்றவர்களுக்கே இவரின் கூற்றுக்களில் உள்ள முரண்பாடுகளும், இவர் காங்கிரஸ் மற்றும் கருணாநிதியை எப்படி தாங்கு, தாங்கென்று தாங்குகிறார் என்பதும் புரியும். மெளனத்தின் வலி கவிதை நூல் வெளியீட்டில் இவர் நேர்மையில்லாமல் தான் நடந்தார் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதில் “கலாம்” என்பதெல்லாம் சப்பைக்கட்டு. காஸ்பர் போன்றவர்கள் புளுகவும், பல்லாங்குழி ஆடவும், கும்மியடிக்கவும் ஈழத்தமிழனின் அவலம் தானா கிடைத்தது?
///ஜெகத் கஸ்பர் (தேன் ஒழுகுவது போல் நக்கீரனில் எழுதி கருணா, சிதம்பரம், சோனியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்று மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பது).// இதுதான் உண்மை.
http://www.pulimagan.com/2009/10/blog-post_20.html
/எத்தனையோ ஈழப்போராட்டக் குழுக்களையும்,மற்றும் பல தலைவர்களை சமாதனம் பேச அழைத்து படுகொலை செய்தவர்கள் புலிகள்.இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர்களை யாழ்,ம்ற்றும் கொழும்பிலிருந்தும்
சிங்களர் துணை கொண்டு முன்பு விரட்டியடித்தவர்கள் யாழ் தமிழர்கள்./
அண்ணா என்பவரே!
உமக்கு புலிகள் அழிந்ததில் தமிழர்கள் கொல்லப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கலாம் ,அது உமது சொந்த உணர்வு .ஆனால் அதற்காக இப்படியல்லாம் பச்சைப் பொய்களை வினவு தளத்தில் வந்து அவிழ்த்து விடவேண்டாம்.
புலிகளுக்கும் மற்ற போராளிக்குழுக்களுக்கும் இடையில் மோதல்கள் படுகொலைகள் நடந்தது உண்மைதான் ,புலிகள் மட்டும் கொல்லவில்லை,மற்றக் குழுக்களும் புலிகளைக் கொன்றார்கள் அத்துடன் இந்திய ராவும் தமிழரை பலவீனமாக்க இந்த மோதல்களை ஊக்குவித்தது ,சமாதானத்துக்கு அழைத்துவிட்டு பிரபாகரனைக் கொலை செய்ய நினைத்தது இந்திய அதிகார வர்க்கம்தான் ,அதை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் கூறிவிட்டார்.
யாழ்
தமிழர்கள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்தும் இந்திய வம்சாவளித்தமிழரை சிங்களவரோடு சேர்ந்து விரட்டினார்கள் என்று பொய்க்கதை புனைவதை முதலில் நிறுத்தவும் சிலர் இப்படித்தான் உள்நோக்கத்தோடோ அல்லது வேறு ஏதாவது தமிழர் எதிர்ப்பு ஊடகங்களின் பொய்ப்பரப்புரையை உண்மை என்று நினைத்தோ அதைப் பரப்புகிறார்கள் கருத்துவேறுபாடுகள் இருப்பதிலோ அல்லது விவாதம் செய்வதிலோ தவறில்லை ஆனால் விதண்டாவாதம் புரிவதும் மறைமுக அரசியல் நோக்கத்துக்காக பொய்களை வேண்டுமென்றே பரப்புவதும் கண்டிக்கத்தக்கது.
நான் சாமன்யன்,எனக்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது.
என் முன்னோர்கள் இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள்.மேலும், இந்திய வம்சாவளி சிறு வியாபாரிகள் முதற்கொண்டு யாழ்பானத்திலிருந்து வெளியேற்றியதாக தினமலர் வாசகர் கடிதத்திலும் படித்தேன்.இந்த நிலை வரும் என்று என் தந்தை (1970ல்)சொன்னார்.இது எனது உள் நோக்கம் இல்லாத அபிப்பிராயம்.புலிகள் அழிந்ததும் தமிழர்கள் மடிந்ததும் ஒரு
துன்பியல் சம்பவமாக வைத்துக்கொள்ளலாம்.இலங்கை வானொலி ,
யாழ்பானக்கோவில்களில் ஒளிபரப்பாகும் திருப்பள்ளியெழுச்சி,
தேவாரம்,திருப்பாவை,திருவெம்பவை,மற்றும் யாழ் தமிழைக் கேட்க ஆவலாக இருக்கிறது.நடந்து முடிந்ததை ம்றந்து இனி நற்சிந்தனையுடன்
யாழை செம்மையாக் உருவாக்குங்கள்.பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுங்கள்.
நீண்டகாலத்துக்கு முன்னர் ஈழமக்களின் துயர் தீர்க்கும் வானொலியாக பிலிப்பைன்சில் இருந்து இயங்கிய “வெரித்தாஸ்” வானொலியும் ஒன்று. அந்த வானொலி ஒலித்த போதெல்லாம், காவலரணில் இருந்த போராளி முதல் தமிழ் மக்களும் தமது துயரை ஏதோ ஒரு வகையில் இறக்கி வைத்தது போல் உணர்வு. அந்த அளவிற்கு அந்த வானொலி மக்களின் இதயம் கவர்ந்ததாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த வானொலியில் தவழ்ந்த நிகழ்ச்சிகள் சில குறுந்தட்டிலும் வெளிவந்திருந்தது.
“வெரித்தஸ்” வானொலி ஈழத்தமிழ் மக்களிடம் இடம் பிடித்தமைக்கு முக்கிய பங்காற்றியவர் அடிகளார் ஜெகத் கஸ்பார் அவர்கள். இவரை தமிழ் மக்கள் மிகவும் அன்பாக போற்றியதன் ஊடாக ஒரு அழியாத இடத்தை எடுத்திருந்தார்.
அண்மையில் சமாதானகாலத்தில் வன்னிக்கு போய் வந்திருந்தமையும், தலைவர் அவர்களை சந்தித்திருந்தார் என்பதும், அந்த அனுபவங்களின் வெளிப்பாட்டையே தற்போது “நக்கீரன்” இதழில் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். மிகவும் ருசிகரமாக அவரது மொழிநடையில் எழுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவர் விடுதலைப்போராட்டத்தில் மூன்றாவது நபராக அதாவது ஒரு பார்வையாளராகவே மட்டுமே இருந்துள்ளார் என்பது நாமறிந்த உண்மை.
தமிழின உணர்வாளன் என்றவகையில் அவர் தனது உணர்வுகளை கொட்டித் தீர்க்கின்றார். ஆனால் ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் வந்த அந்த அடிகளார் பின்னர் மக்களிடையே காணாமல் போயிருந்தார். தற்போது முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தலை காட்டத் தொடங்கியுள்ளார்.
களத்தில் போராடிய தளபதிகள், போராளிகளுடன் அவர்களுக்கு துணையாக இருந்த மக்களுடன் தானும் உடன் இருந்தது போல் அவர் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்கின்றார்.
போராட்டப்பாதையி்ல் இயக்க இரகசியங்கள் தனக்கும் தெரியும் என்பது போலவும் எழுதுகின்றார். போராட்டத்தின் பின்னடைவுக்கு குறிப்பிட்ட “தளபதி” காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தளபதி காஸ்ரோவை விமர்சித்து குமுதத்தில் பேட்டி
தளபதியை விமர்சிக்கும் அளவில் இவருக்கு என்ன “யோக்கியதை” இருக்கின்றது?
அந்த தளபதியுடன் கூட இவரும் இருந்தாரா?
அவர் அனுபவித்த துன்பங்களை, துயரங்களை உடன் இருந்து பகிர்ந்து கொண்டவரா?
அல்லது அத்தளபதிக்கு இயக்கமட்டத்தில் அதாவது தலைவர் மட்டத்தில் இருந்த புரிந்துணர்வை இவர் அறிந்திருந்தாரா?
அவர்கள் போராளியாக இருந்து பட்டறிவு மூலம் தளபதியானவர்கள். இதுவே விடுதலைப்புலிகளின் சிறப்பியல்பு. ஆனால் அடிகளார் இவை எவையுமே அறியாதவராகவே இருக்கின்றார் என்பதை அவரது எழுத்தில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
தற்போதய தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களில் இடத்தைப்பிடித்து, பின்னடிக்கு பெரும் விஷக்கருத்தை விதைக்கப் போகின்றார்.
இது திட்டமிட்ட ஒரு செயல். இதற்கு பின்னணிகள் இருக்கின்றன. அதாவது சர்வதேசம் எங்கும் தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும்.
தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.
எனவே, இப்படியான விஷமிகளின் கருத்தை அவதானித்து சரியான நேரத்தில் இனங்கண்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
இறுதியாக…
அண்மைக்காலத்தில் அடிகளார் ஏன் இயக்கத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் அறியார்.
அதாவது வன்னி சென்றிருந்த போது தலைமையால் சில சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேசிய விடயங்களை கவனமாகவும், திறமையாகவும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டு சென்றிருந்தார்.
பின்னர் இயக்கத்தினால் காட்டப்பட்ட அந்த வர்த்தகத் தொடர்புகளை, தனது சொந்த விடயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்ததும் அவரை இயக்கத்தினர் தூரவே வைத்திருந்தனர் என்பதை மறைக்க முடியுமா?
http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_2249.html
ஃபாதர் உண்மையில் துரோகியாக இருந்தால், சில காலம் முன்பு சென்னையில் நடந்த கவிதை நூல் வெளியிட்டு விழா என்ற fiasco நடந்திருக்காது. It was an ill conceived move and back fired very badly. Moreover it was not needed and served no purpose. Father was not that clever or smart ; He was as emotional and sincere as any LTTE supporter.
திரு.எல்லாளன், உங்களுக்கு தகவல்கள் எப்படி கிடைத்தன ? ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று எப்படி அறிந்து கொண்டீர்கள் ? அவர் புலிகளின் பிரச்சார பீரங்கியாகதான் செயல்பட்டார் என்பதே எம் புரிதல். அவரின் எழுத்துக்களில், புலிகளின் மீறல்களை, தவறுகளை எழுதுவதே இல்லை.
மிகைபடுத்தப்பட்ட பிரச்சாரம் போல் இருக்கும். மறுபக்கத்தை எழுதமாட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே அவரின் நிலைபாடு அது.
தமிழ் மக்களில் எத்தனை வகையான துரோகிகள் இருக்கிறார்கள் தலைவனை தவிர மற்ற எல்லோரும் சுய நலத்துடன் தான் வாழ்கிறார்.பேச்சு மட்டும் ஈழம் ஈழம் எல்லாம் சந்தைக்கு வரத்தானே வேண்டும்
நாசமாய் போவான் ஜெகத்கஸ்பர் !
பகுத்தறிவுவாதமாக இல்லையே மரண அடி.
ஒரு விசியம் புரிந்து கொள்ள முயல்க : சாடிலைட் ஃபோன்களே இல்லாத நிலை இருந்து, நடேசன் மற்றும் குழுவினர் ‘சரணடைய’ முயலாமல் இருந்திருந்தாலும், இதே முடிவு தான் ஏற்பட்டிருக்கும். சில மணி நேரங்கள் தாமதம் ஆகியிருக்கும். அவ்வளவுதான்.
ஹிட்லரின் கடைசி தினங்களோடு ஒப்பிடக்கூடிய நிகழ்வுகள். 1945இல் ரஸ்ஸிய படைகள் பெர்லினை சுற்றி வளைத்த பின்னும் நடந்த இறுதி போர். 1944லேயே, போரின் போக்கு பற்றி தெளிவாக் உணர்ந்து, சரணடையலாம் என்று சில ஜெர்மனிய ராணுவ தளபதிகள் முடிவு செய்ததை ஹிட்லர் ஏற்காமல், அவர்களை துரோகிகள் என்று தீர்த்துக் கட்டினார். கடைசிவரை பங்கரில் தாக்குபிடிக்கப் பார்தார்.
அண்ணா பட்னு கோவபடாதிங்நக்கீரன்ல நாசமாய் போவான் ராஜபட்சேனு கவர் ஸ்டோரி போட்ருந்தானுங்கோஅந்த ஸ்டைலுல எம்பட கருத்த சொன்னுங்க,வேறொண்னுமில்லிங்தப்பா எடுத்துக்காதீங்ணா,
ஒரு முக்கிய விசியம் பதிக்காமல் விட்டுவிட்டேன் :
உண்மையில் ஃபாதர் ஒரு துரோகி / சதிகாராக இருந்திருந்தால், மே 18க்கு பின், எதுவும் பேசாமல், எழுதாமல் அமைதியாக வேலையை பார்த்திருப்பார். ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று கேன மாதுரி தொடர்து நக்கீரனில் எழுதி, பிறகு ஒரு கவிதை நூல் வெளியிட்டு விழா என்று வெட்டி வம்பை விலைக்கு வாங்குவது, ஒரு தந்திரமான சதிகாரரின் வேலை அல்ல. நக்கீரனில் தொடர் எழுதவே அவசியம் இல்லை. பேட்டி கொடுத்து, தன்னிலை விளக்கம் அளிக்கவும் அவசியம் இல்லை. காதும், காதும் வைத்த மாதுரி, முள்ளைவாய்க்கலுக்கு, நடேசனின் சேடிலைட் தொலைபேசிக்கு பேசி, ‘காரியத்தை’ கச்சிதமாக முடித்து விட்டு, பிறகு எங்கும், எதுவும் வெளிபடுத்தாமல் மிக அமைதியாக இருப்பதே சதிகார்களின் பாணி. புத்திசாலித்தனம். அவர் விளக்கமாக எழுதியதை வைத்துதான் இந்த பதிவு மற்றும் பழைய பதிவு. திறமையான அரசு உளவாளிகள் இப்படி எல்லாம், காரியம் முடிந்த பின் எழுத மாட்டார்கள். very very low profile keep up செய்வார்கள்.
ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!
அந்தப் (கவிதை) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் போயிருக்கவே கூடாது. போனதோடு நிறுத்தியிருக்கலாம்.
அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. அதோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டிய போதே எனக்கு வந்த ஆத்திரம், அதைப் படித்தும் ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது.
போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பும், ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் இணைந்து, ‘ஈழம் மௌனத்தின் வலி‘ என்ற புத்தகத்தை அந்த நிகழ்வில் வெளியிட்டனர். தமிழ் மக்கள் ஈழத்தில் துடிதுடித்து செத்துப் போனதை படம் போட்டுக் காட்டி அந்தப் படங்களுக்குப் பொருத்தமான கவிதைகளை பிரபலங்களிடம் வாங்கித் தொகுத்திருக்கிறார்கள். கமல் முதல் ரஜினி வரை கவிதை எழுதியிருக்கிறார்கள். (இன்னும் நீங்கள் எதிர்பாராத பலரும் இதில் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்)
சனிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவக்குமார், சூர்யா, இயக்குநர்கள், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஜகிவாசுதேவ் கலந்து கொண்டார். அக்டோபரில் ஆரம்பித்து படிப்படியாக உக்கிரம் அடைந்த போரில் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. திடீரென இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த மனிதநேயம் முளைத்தது?
தமிழீழ விடுதலைப் புலிகளை சிலாகித்து நக்கீரன் பத்திரிகையில் எழுதிக் கொண்டே, ‘புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல. அவர்களுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை’ என்று பேசிவரும் ஜெகத் கஸ்பர் இந்த நிகழ்ச்சியின் நாயகன்! ஈழம் பற்றி பேசுபவர்கள் புலிகளை விமர்சிக்கக் கூடாது என்பது அல்ல என் வாதம். கஸ்பர் எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்பதே என் கேள்வி.
புலம் பெயர்ந்தவர்கள், சிறிதேனும் இயக்கத் தொடர்பு உள்ளவர்களுக்கு இந்த கஸ்பர் யாரென்று பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்ததுதான். ஆனால், தமிழ்நாட்டில் ஈழஅவலத்தை முதல் முறையாகக் கண்டு கொதித்துப் போன (என்னைப் போன்ற) இந்தத் தலைமுறையினரை இந்திய அரசுக்கு ஆதரவான ஆட்களாக ஆக்குவதுதான் கஸ்பருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி. நக்கீரன் இதழ் மூலம் அதை நன்றாகவே செய்கிறார், கஸ்பர்.
நக்கீரனில் தொடரும் பணியை அடுத்தத் தளத்துக்கு விரைவுப்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. மருத்துவர் எழிலன் தன் நன்றியுரையில், ‘கழிவு நீரும் குடிநீரும் கலந்து வரும் தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கும் மக்களுக்காக மழைநீரைப் (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது) பொருட்படுத்தாமல் வந்த உங்களுக்கு நன்றி’ என்றார். முள்வேலி முகாமில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தன் நெருங்கிய தோழி கனிமொழி சொன்னதை மறந்துவிட்டாரா? ‘இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு! வாழ்க தலைவர் கலைஞர்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்தது, பாவம் எழிலனுக்குத் தெரியாது போலும். (பிரபாகரனுக்கு முட்டாள். கலைஞரைப் பாருங்கள், வெறும் நான்கே நாட்களில் அந்த மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டார்) எழிலன் அவர்களே, குறைந்தபட்சம், மருத்துவத் தொழிலையாவது மனச்சாட்சியோடு செய்யுங்கள்.
போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில், போலீஸ் கிளைமாக்ஸில் வருவது போல, போர் முடிந்து இனஅழிப்பு முடிந்து முனங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வந்திருக்கிறார்கள் இந்த போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள். இந்த அமைப்பின் அமைப்பாளர் த.செ.ஞானவேல் இத்தனை நாள் எங்கே இருந்தார்? பிரகாஷ்ராஜின் விவகாரத்து வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்தாரா?
‘ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் சேர்ந்துதான் புத்தகம் வெளியிடுகிறது என்பதை மறைத்து என்னிடம் கவிதை வாங்கி பிரசுரித்திருக்கிறார்கள்’ என்று இயக்குநர் சீமான் சீறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு இப்போது புத்தகம் வெளியிட்டு அதற்கு நூறு ரூபாய் விலை வேறு. அதில், ‘மனித நேயர் எவரும் மறுபதிப்பு செய்யலாம்‘ என்று பெருந்தன்மையான விளக்கம் வேறு. (அடுத்தவர்களிடம் ஓசியில் எழுதி வாங்கிக் கொண்டு அதற்கு காப்பி ரைட் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள், போலும்!)
இப்படியொரு புத்தகம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? எதற்காக செய்தார்கள்? எதை மறைக்க இப்படி செய்கிறார்கள்? கலைஞரைத் திட்டக் கூடாது, இந்திய அரசை திட்டக் கூடாது, போராடக் கூடாது, ஆனால் ஈழ மக்களை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுதானே கஸ்பர் அன்கோவின் விருப்பம். இந்திய அரசு அவருக்கு இட்டிருக்கும் பணி.
ஈழ மக்களின் துயரம் குறித்து பேச முயன்ற மனித உரிமை ஆர்வலரான அமெரிக்கப் பெண் எல்லின் ஷேண்டருக்கு தமிழ்நாட்டில் நுழையவே தடை விதித்தார்கள். அந்தப் பெண்ணின் பேச்சை வீடியோவில் கூட ஒளிபரப்பக் கூடாது என்றது, கலைஞர் அரசு. ஆனால் கஸ்பர் விழாவுக்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராஜமரியாதை. இதில் இருந்தே தெரிய வேண்டாமா? யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்று.
‘நம் தொப்புள் கொடி உறவுகள் மீது இனஅழிப்பைப் போரை இந்தியாதான் முன்னின்று நடத்துகிறது’ என்று தொடக்கத்தில் இருந்து கடுமையாக பேசிவரும் கவிஞர் தாமரை போன்ற ஒரு சிலரின் பங்களிப்பும் இந்தப் புத்தகத்தில் உண்டு. அவர்கள் யாரும் என்னுடைய இந்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. (உன்னை போல் ஒருவன் படத்தில், ‘தமிழ்நாட்டு மக்கள் ராஜீவ் காந்தி படுகொலையையும், மீனம்பாக்கம் குண்டு வெடிப்பையும் மறந்து விட்டார்கள்’ என்று வாய் கிழிய பேசிய கமலின் கவிதை இந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனையான ஒன்று) கஸ்பர் அய்யா, எழிலன் அய்யா, போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களே.. மனதில் கொஞ்சமேனும் மனிதமும், ஆண்மையும், தைரியமும் இருந்தால் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசை கண்டித்து ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.. உங்களால் முடியவே முடியாது. குமுதம் இணையதளத்தில் அண்மையில் ஜெகத் கஸ்பர் சொன்னதை உங்களை எல்லாம் பார்த்துச் சொல்கிறேன்.. இந்தப் பிழைப்புப் பிழைப்பதைவிட விபசாரம் செய்யலாம்..
அடத்தூ.. http://ponnusamypalani.blogspot.com/2009/11/blog-post_14.html
ஜெகத்க்கு நான் வைக்கும் கேள்விகள் :
உங்களின் இந்த சர்ச்சையின் நோக்கம் நீங்கள் எழுதும் தொடருக்கான பரபரப்பை கூட்டுவதா ? எனென்றால் நீங்கள் உங்கள் பதிலை அல்லது உங்களுது எந்த விளக்கத்தையும் தொடரில் மட்டுமே எழுதுகிறீர்கள் .
உங்களுக்கு வியாபார புத்தி அல்லது பணம் சம்பாதிப்பது நோக்கம் இல்லையென்றால் முள்ளிவைக்காளில் என்ன நடந்தது என்பதை ஒரே நாளில் அறிக்கையாக கொடுக்க வேண்டியதுதானே ?
உங்களிடம் நேரிடையாக பேசிய தொழில் நுட்ப துறை நண்பர்களிடம் (பல பெயர்கள் உள்ளது) நீங்கள், தமிழ் உணர்வாளர்கலால்தான் ஈழம் அழிந்தது என்று பேசினீர்கள் (முள்ளிவைகால் சம்பவத்திற்கு பின்னால் ) அதில் நீங்கள் தா பாண்டியனையும் சேர்த்து பேசினீர்கள். இப்போது தா பாண்டியனை விட்டு விட்டீர்கள் ஏன் ? அவர் கருணாநிதி எதிர்ப்பு அணியில் தற்போது இல்லை என்பதாலா ?
முள்ளிவைகால் சம்பவத்திற்கும் முன்னாள் , இந்திய அரசு ஒரு தீர்வு வைத்திருப்பதாகவும் அந்த தீர்வுக்கு ஐயா நெடுமாறனும் தா பாண்டியனும் தான் முட்டுக்கட்டை போடுவதாகவும் சொன்னீர்கள் , அது என்ன தீர்வு ? அந்த தீர்வு – இந்திய அரசாங்கம் கொடுத்தாக சொன்னீர்கள் . இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் அல்லது வெளி விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாமானியரான உங்களுக்கு எப்படி தெரிந்தது? இந்த விசயத்தில் தாபாண்டியனை இழுத்து பேசிய நீங்கள் இப்போது ஏன் அவரை விட்டுவிட்டீர்கள். அவரது வீடு தாக்கப்பட்டது போதும் என்று நிம்மதி கொண்டீர்களா?
கடைசி நாளில் உங்களிடம் யார் யாரோ எதோ பேசினார்கள் என்றீர்களே. அது என்ன என்று முழுவதுமாய் இப்போது சொல்லுங்கள்.
பழைய சர்ச்சைகள் எப்படி இருந்தாலும் , இப்போது ஈழ மக்கள் கண் முன்னாலேயே திறந்த வெளி சிறையில் உள்ளார்களே அதற்கு “அரசாங்கத்திற்கு நான் நெருக்கம் ” என்று காட்டிகொள்ளும் உங்களின் தீர்வு என்ன அல்லது அதை பற்றியே பேச கூடாதா ? அல்லது உங்களுது தொடரை படித்து கொண்டே இருந்தால்தான் எழுதுவீர்களா?
நான் செவி வழி தெரிந்தது மற்றும் ஒரு சிலரின் பேட்டியின் மூலம் தெரிந்தது, ஈழத்தில் விடுதலை புலிகளின் கட்டமைப்பு என்பது, ஒருவர் பேசுவதை மற்றவர் பேசமாட்டார்கள். அதாவது ஒருவரின் நடவடிக்கை மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் உங்களக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிகிறது. புலிகள் அமைப்பின் அதிர்காரபூர்வ பணிகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருந்தீர்களா? அப்படி இருந்தால் அது என்ன மாதிரியான தொடர்பு அல்லது பதவி?
வைகோவும் நெடுமாறனும் ஈழ விசயத்தில் நாடகம் ஆடுகிறார்கள் அல்லது ஏமாற்றி பிளைகிறார்கள் என்றால் நீங்கள் ஏன் வைகோவை வைத்து, அவரை உபயோகித்து அவரின் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்னாள் இளையராஜாவை கொண்டு திருவாசகம் விழா எடுத்தீர்கள். அல்லது நேர்மையாக இருந்த வைகோ இப்போது மூன்று வருடங்களாக துரோகியாக மாறிவிட்டாரா? நெடுமாறன்தான் புலிகளை தவறாக வழி நடத்தினார் என்று சொன்னீர்களே, எப்படி என்பதை விளக்குங்கள். என்னென்ன விடயங்களில் இவர் அவர்களை தவறாக வழி நடத்தினார்? வைகோவையும் நெடுமாறனையும் மட்டுமே நம்பித்தான் விடுதலை புலிகள் இயங்கினார்களா?
சரி இறுதி நேரத்தில்தான் வைகோவும் நெடுமாறனும் குழப்பினார்கள் என்றால், இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழ் செல்வனை இலங்கை அரசு ஏன் கொன்றது ?
செஞ்சோலை மாணவிகளை இலங்கை என் கொன்றது ?
இலங்கை தன்னிச்சையாக போரை ஆரம்பித்து தமிழர்களை கொள்ள ஆரம்பித்தது என்பதை ஏன் உணர மறுக்கிர்றீர்கள் அல்லது சொல்ல மறுக்குன்றீர்கள் .
போர் நடந்த கடைசி மாதத்தில் விடுதலை புலிகள் பத்து முறையாவது நடேசன் மூலம் போர் நிறுத்த அறிவிப்பில் விருப்பம் காண்பித்தார்கள், புலிகளுக்கு அறிவுரை கூறிய வைகோவும் நெடுமாறனும் தவறு செய்தவர்கள் என்றால் இந்திய அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் உங்கள் போன்ற மேதாவிகள்ஏன் அப்போதாவது இலங்கை போரை நிறுத்த வற்புறுத்தவில்லை?
அதற்கும் மேலாக, பிரணாப் முகர்ஜி இந்திய பாராளுமன்றத்தில், புலிகளோடு இருப்பவர்கள் வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் பேர் என்று எந்த அடிப்படையில் ஒரு மிகபெரிய பொய்யை சொன்னார் ? மீதி இருந்த மூன்று லக்ஷம் பேரையும் கொல்லும் இலங்கையின் நோக்கதிர்க்கு எதுவாய் தானே அப்படி சொன்னார் ? அப்படி இருக்கும் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு நல்லதை நினைத்தது? அதுவும் சிதம்பரம் மூலம்?
உங்கள் கூற்றுபடியே பார்த்தாலும், நீங்கள் எடுத்த முயற்சியின் படி, கடைசி நாளில், நடேசனை மற்றும் புலித்தேவனை கொன்ற இலங்கை படையினர் எந்த நம்பிக்கையில் மீதம் சரண் அடையும் எல்லா தமிழர்களையும் கொள்ளாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியும்?
நடேசன் உங்களிடம் என்ன பேசினார்? வைகோவும் நெடுமாறனும்தான் சரணடைய சொன்னார்கள் என்று சொன்னாரா?
எல்லாம் முடிந்து விட்டது. தமிழர்களை புல் டோசர்களை ஏற்றி கொன்றார்கள். முக்கல் முனகலோடு இருந்த அனைத்து உயிர்களையும் அழித்தார்கள். செத்தது பொது மக்கள்தானே இதையாவது நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம் காத்ததா?
மீதி இருந்த தமிழர்களை சிறையில் அடைத்தார்கள், ஐக்கியநாடுகள் சபையில் இலங்கையை எதிர்த்து வந்த “மனித உரிமை மீறல் நடவடிக்கை” காண வாதத்தில் வாகெடுப்பில், எதிரியாய் இருந்தாலும் பாகிஸ்தானையும் சீனாவையும் அனுசரித்து என் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது? நீங்கள் சொல்லும் இந்திய தமிழர் நல அரசாங்கம் ஏன் அப்படி செய்தது ?
எனென்றால் இலங்கையில் போரை நடத்தியதே இந்தியாதான்.
அதை நிரூபித்தது சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அல்லது தமிழக நாடாளுமன்ற குழுதான்.
ஏனென்றால்?
* ஐக்கிய நாடுகள் சபையை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை ,
* மனித உரிமைகள் குழுவை முகாமுக்குள் அனுமதிக்காத இலங்கை,
* தன சொந்த நாட்டின் எந்த பாராளுமன்ற உறுபினறையும் அனுமதிக்காத இலங்கை,
* தன சொந்த நாட்டின் எந்த அமைப்புகளையும் அனுமதிக்காத இலங்கை .
* அமெரிக்காவை அனுமதிக்காத இலங்கை,
* கனடா உறுபினரை விமான நிலையத்திலேயே மடக்கி திருப்பி அனுப்பிய இலங்கை,
… எப்படி இந்திய அரசாங்கத்தின் சார்பில்லாத ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பாராளு மன்ற உறுபினர்களை அனுமதித்தது?
ஏன் இந்தியாவிற்கு இவ்வளவு மரியாதை? ஏனென்றால் இந்தியாதான் போரை கூலிபடையை போல் நடத்தியது. கூலிப்படைக்கு விசுவாசமாக இல்லை என்றால், குற்றவாளியும் கூலிபடையும் சேர்ந்தே மக்கள் மன்றத்தில் தண்டனை பெற வேண்டியிருக்கும்.
இந்த கூலி படைக்கு சார்பாய் பேசும் ஆட்களை நாம் எப்படி அழைத்தால் நன்றாய் இருக்கும் . வாசகர்களின் விமர்சனத்திற்கு விடுகிறேன்.
-நடேசன், சென்னையில் இருந்து.
ஜெகத் கஸ்பார், கருணாநிதி/கனிமொழி யால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி
தலைவரிடம் 4 நிமிடம் பேசியவர் என்பதை தவிர எந்த புண்ணாக்கும் கிடையாது, இன்று அனைத்து தமிழின தலைவர்களையும், உணர்வாளர்களைரயும், விடுதலை புலிகளையும் பற்றி தவறாக பேசி வருகிறார். எங்கிருந்து வருகிறது இந்த புத்தி இவர்களுக்கு. மீண்டும் தன் கையாலே கண்ணை குத்தி கொல்ல ஒரு துரோகி கிளம்புகிறான்.
ஒரு வேடதாரியை அம்பலப்படுத்த உதவிய குமுதம் இணயதளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
அருட்தந்தை என்ற தவிர்க்கவியலாத அடை மொழியுடன் அழைக்கப்படும் ஜெகத் கஸ்பர் குமுதம் இணையதளத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் உதிர்த்த முத்துகளில் சில:
விடுதலைப் புலிகளும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களும்…தவறே செய்யாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை.
கடைசிக் கட்டப் பேரிழப்புகளைத் தடுக்கும் விதமான போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்தது. ஆனால்…விடுதலைப் புலிகள்தான் அதை நிராகரித்தனர். அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே ஆகும்.
இவர்களுக்கு புவி அரசியல் பற்றிய அறிவு இல்லை; ஆளுமை இல்லை; ஆண்மை இல்லை. ஆனால், எனக்கு இவை அனைத்தும் உள்ளன.
சீமான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டும் என்பதற்கான களமாக நாம் தமிழர் இயக்கத்தை, ஈழ அரசியலைப் பயன்படுத்துகிறார். இதற்குப் பதிலாக அவர் திமுக அல்லது அதிமுக வில் சேரலாம்.
தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட விபசாரம் செய்யலாம்.
-இன்னும் நிறைய பேசியுள்ளார்.
ஆனால்…நான் இவற்றில் எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சில இயக்கங்களின், தலைவர்களின் மீதான அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள்.
இவற்றிற்கு அவரவரே பதில் கூறுவது பொருத்தம்.
மேலும், கஸ்பருக்கான பதில்களும் வரத் தொடங்கியுள்ளன. சிபிஐ கட்சியின் தமிழக துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குமுதம் இணையத்தில் இது தொடர்பான பதிலடிகளைக் கொடுத்துள்ளார். இன்னும் பலரும் (இயக்குனர் சீமான் உட்பட) பதிலடிகள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
கஸ்பர் பேசியவற்றிலேயே அதி முக்கியமான சேதியாக நான் கருதுவது இதைத் தான்:
உலக புவி அரசியல் சூழலைப் புலிகள் கருத்தில் கொள்ளவில்லை.
பிராந்திய புவி அரசியலையும் அவர்கள் அவதானிக்கவில்லை.
இந்தியா ஈழத்திற்கு எதிராகப் போவதன் காரணம் மேற்கண்ட இரு காரணிகளோடும் தொடர்புடையது.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது…இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழைத்ததன் வழி…அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா அழித்துவிட்டது.
தமிழ்த் தேசியனான எனக்கு, கஸ்பர் அளவுக்கு ‘உலக புவி அரசியல், ஆளுமை, ஆண்மை’ இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்…
மார்க்சிய மேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் உள்ளிட்டோர் தந்த சர்வதேசிய சமூக மாற்றங்கள் குறித்த தத்துவக் கல்வியும்….
’நும் ஊர் யாதெனக் கேட்டால்
தமிழ்நாடெனச் சொல்க’
-என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்திய தமிழின ஆசான் தொல்காப்பியன் தந்த சமூக, இயற்கை, மொழி அறிவும்…
’எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.’
-என்ற எமது தமிழீழ தேசியத் தலைவர் (மாவீரர் நாள் உரை 2007)
கற்றுக் கொடுத்துள்ள இனப் போராட்டக் கோட்பாடுகளும்…
ஏதோ கொஞ்சம் தெரியும் என்பதால்…கஸ்பரின் ’அரசியல்’ என்ன என்பதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
தெற்காசியாவின் பேட்டைப் பொறுக்கியாக இந்தியா நீடிக்க விரும்புகிறது என்பது பாதி உண்மை மட்டுமே. இந்தியா என்றால் இந்தியா அல்ல. மாறாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் உள்ளிட்ட காலனிய சுகங்கண்ட நாடுகளின் எடுபிடியாக இந்தியா இருக்கிறது.
இந்நாடுகள் தெற்காசியாவில் ஆட்டம் போடவும் சுரண்டிக் கொழுக்கவும் வசதியான அடிமை தேவை. அந்த அடிமையே இந்தியா.
இந்தியா என்பது ஒரு தேசமே அல்ல என்பதாலும், இந்தியா என்பதே பல தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதாலும், காலனி ஆதிக்க நாடுகளின் வேலைத் திட்டத்திற்கு இந்தியா மிக வசதியாக ஒத்துழைக்கிறது.
ஆகவே…ஈழப் போரில் சிங்களனுக்கு இந்தியா உதவியது என்றால்…அது இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்கா தலைமையிலான சுரண்டல் நாடுகளும்தான் உதவின என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாடுகளுக்கு இருக்கும் எதிர் சக்தி, சீனா.
இந்தியாவைக் கொண்டு சீனாவை எதிர்ப்பதும், தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்குவதும் அமெரிக்கத் தலைமை நாடுகளின் புவி அரசியல் கோட்பாடு.
இதே காரணங்களின் மறுபக்கம் சீனாவுக்கும் இருக்கிறது. அதாவது அமெரிக்கத் தலைமை நாடுகளை தெற்காசியாவில் ஒடுக்க…இந்தியாவைத் தொல்லைக்குள்ளாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியம்.
ஆனால்…இந்தியாவின் ஈழ எதிர்ப்பு நிலைக்கு இவை மட்டுமா காரணங்கள்?
இந்தியாவிற்கு இயல்பாகவே உள்ள ’தமிழின விரோத’ கொள்கைதான் அதி முக்கியமான அடிப்படையான காரணம்.
இக் கொள்கை இல்லையென்றால்….
புலிகள் நீட்டிய நட்புக் கரத்தைப் பற்றிக் கொண்டு இந்தியா சிங்களனுக்கு எதிரான நிலையை எடுத்து…அதன் வழி சீனாவை இந்தியப் பெருங்கடலுக்குள் ஆப்பு அடித்தது போல் நிறுத்தியிருக்க முடியும்.
இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால்…அமெரிக்கத் தலைமை நாடுகள் எந்தச் சங்கடமும் இன்றி இந்தியாவை ஆதரித்திருக்கும். ஏனெனில் அவற்றின் எதிரி சீனாவே தவிர, புலிகள் அல்ல; தமிழீழ மக்கள் அல்ல!
ஆனால்…இந்தியா தனது புவி அரசியல் நலனையும் இன விரோதக் கொள்கையையும் தந்திரமாக ஒருங்கிணைத்தது!
சீனாவையும் எதிர்ப்பது அமெரிக்கத் தலைமைக்கும் கட்டுப்படுவது தமிழீழத்தையும் அழிப்பது ஆகிய மூன்று நலன்களையும் ‘சிங்கள ஆதரவு’ என்ற ஒரே காய் நகர்த்தலில் அடைந்தது இந்தியா!
நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்தியா தமிழீழத்தை அழிக்கத் துடிப்பதன் காரணம்…புவி அரசியல் மட்டும் அல்ல. அதன் தமிழின விரோத கொள்கைதான் அம்முடிவிற்கான அடிப்படை!
இப்போது கஸ்பர் மொழியும் ’அரசியலை’ப் பார்போம்.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது…இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழைத்ததன் வழி…அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா அழித்துவிட்டது. என்கிறார் கஸ்பர்.
இந்தக் கூற்றை கஸ்பர் வெளிப்படையாகச் சொன்னதற்காக அவருக்கு நன்றிகள் உரித்தாகுக!
இந்தியாவின் கொலைவெறி பிடித்த அறிவு ஜீவிக் கூட்டத்தில் தானும் ஒருவன் தான் என்பதை மறைமுகமாக ஒப்புகொண்டிருக்கிறார் கஸ்பர்.
இந்தியப் பெருங்கடலில் சீனா கால் மூக்கு கை உடம்பு என அனைத்தையும் நுழைத்துவிட்டது. சமீபத்தில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்,
‘சிங்களக் கப்பற் படையுடன் சீன ராணுவத்தினரையும் பார்த்ததாக’ ஊடகங்களில் தெரிவித்தனர்.
புலிகளின் கடற்படை செயல்பாட்டில் இருந்தவரை சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக செய்தி உண்டா…? இல்லை!
சீன ராணுவத்தின் எந்தச் செயல்பாட்டையும் புலிகள் இந்தியப் பெருங்கடல் பரப்பில் கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர்.
இன்று நிலைமை மாறிவிட்டது. புலிகளை ஒடுக்கியதன் வழி, இந்தியா தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டுவிட்டது. இதுமட்டுமில்லாமல், அருணாசலப் பிரதேசம் கிட்டத்தட்ட சீனாவின் ஒரு அங்கமாகிவிட்டது.
’எங்கள் சீனத்தின் அங்கமான அருணாசலப் பிரதேசத்திற்குள் இந்தியத் தலைவர்கள் இக்ஷ்டம் போல வந்து போகிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது’ என்றது சீனா சமீபத்தில்.
இந்த எச்சரிக்கை யாருக்குத் தெரியுமா?
இந்தியப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங் அருணாசலப் பிரதேசம் சென்றபோது விடப்பட்ட எச்சரிக்கை இது!
சீன ராஜதந்திரி ஒருவர் சமீபத்தில் எழுதிய கட்டுரையில்,
’இந்தியாவில் காக்ஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களையும் எளிதில் தனித் தனி நாடுகளாக்கிவிட முடியும். சீனா இதைச் செய்ய வேண்டும்’
என்று கூறியுள்ளார்.
ஆக…
இந்தியாவின் தலை, வால், உடம்பு கை, கால் அனைத்தும் கழண்டு போகும் அபாயத்திலிருக்கிறது. கழட்டிவிடும் வேலையில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டது.
தமிழீழத்தை ஒழிப்பதற்காக சிங்களனுக்கு உதவிய இந்தியா…அதே சிங்களனுடன் சேர்ந்துகொண்டு தன்னை உடைக்கத் தொடங்கியுள்ள சீனாவை எதிர்கொள்ள இயலாமல் தள்ளாடுகிறது.
இதுதான் இன்றைய இந்தியாவின் புவி அரசியல் நிலை!
ஆகவே…இந்தியக் கொலைகார அறிவு ஜீவிகள் இந்த நிலையைச் சமாளிக்க அல்லது ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள… கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் கஸ்பர் கையில் தவழ்கிறது.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலான தமிழீழம்!
என்பதுதான் அந்த ஆயுதம்.
இந்தியப் பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்
ஒரே நேரத்தில் சீனாவையும் சிங்களனையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட படை தமிழீழத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழீழ தேசிய இனத்திற்கு முழுமையான தன்னாட்சி உரிமையும் கிடைத்து விடக் கூடாது
-இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை முன் வைத்து இந்தியா இப்போது காய் நகர்த்துகிறது.
’தமிழீழம் எவருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்காது’ என்ற தலைவர் பிரபாகரனின் கொள்கைகளும் இலட்சிய வெறியுமே இந்திய தந்திரத் தலைமைக்கு பல்லாண்டுகளாக எரிச்சலூட்டி வந்தன.
ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் மேலே கண்டவற்றிற்கான கூறுகள் இருந்ததையும், இக் காரணங்களால்தான் தலைவர் பிரபாகரன் அவ்வொப்பந்தத்தை நிராகரித்தார் என்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்த்தால்…இந்திய தந்திரம் எளிதில் விளங்கும்.
இப்போது…
புலிகள் படை செயல்பாட்டில் இல்லாத நிலையில்…மேற்கண்ட மூன்று அம்சத் தேவைகளை நிறைவேற்றுவது இந்தியாவுக்கு ஓரளவு எளிது. இதைச் சாதிப்பதற்காக அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பரப்புரையே…
கஸ்பர் போன்றோர் தொடர்ந்து பேசிவரும்,
’பு