privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2

-

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்?

மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று பலவீனமான அதுவும் காறி உமிழத்தக்க பார்ப்பனிய சடங்குகளில்தான் அவர்களது விமரிசனம் மையம் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார், என்று இறுதியில்தான் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.

எதற்கு இப்படி வெட்டியாக அற்ப விசயங்களை மரபு என்ற பெயரில் பட்டியிலிட வேண்டும்? நித்தியானந்தா ஒரு பொறுக்கி என்று மட்டும் சொல்லி ஏன் எதிர்க்க முடியவில்லை? சைவ ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயமாக முடி ஏன் இருக்கிறது? இதற்கு மாட்சிமை தாங்கிய ஆதினங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நித்தியானந்தாவே அதற்கு பதிலளித்திருக்கிறார். அதாவது தனது படுக்கையறையை 24 மணிநேர கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியுமென்றும் மற்ற ஆதீனங்கள் தயாரா என்று அவர் சவால் விட்டிருக்கிறார். ஒருவேளை தனது படுக்கையறை ஊரறிந்து விட்டபடியால் அதில் புதிதான மர்மங்கள் இல்லை என்றும் அவர் நினைத்திருக்கக் கூடும்.

இதற்கு ஏதோ வயதான ஒரு ஆதீனம் மட்டும் சவாலை ஏற்றிருக்கிறார். மற்றவர்கள் கமுக்கமாக அமைதி காக்கிறார்கள். இப்படி நித்தியானந்தா ஏதோ ஏட்டிக்குப் போட்டியாக மட்டும் கேட்டிருக்கிறார் என்பதல்ல. அவர் அனைத்து ஆதீனங்களுக்கும் மிகப் பணிவாகவே தனது விளக்கத்தை கேட்குமாறு கோரியிருந்தார். அவர்களோ அருணகிரியை மட்டும் சந்திப்பதாகவும், நித்தியானந்தாவை சந்திக்க முடியாதெனவும் மறுத்து விட்டார்கள். தான் யோக்கியனில்லை என்று அவர்கள் கூக்குரலிட்டபடியால் இவரும் “நீங்கள் மட்டும் யோக்கியர்களா?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். இந்த பூமாரங் சண்டையின் வேர் என்னவென்று புரிகிறதா?

“ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள்” என்பதே நித்தியின் விமரிசனம். ஒரு வேளை நித்தியானந்தா இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்?

தற்போது ஆதினமாக இருக்கும் அருணகிரியையே எடுத்துக் கொள்ளுங்களேன். முரசொலியில் நிருபராக பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு விபத்து போல ஆதீனமாகிறார். இவர் ஆடாத மன்மத ஆட்டமா, திருவிளையாடல்களா? மதுரை ஆதீனத்தில் சமையலறை முதல் பொக்கிஷ அறை முதல் வளைய வந்த செல்வி, சுதா, வைஷ்ணவி போன்றோர் நித்தியானந்தாவோடு ஏற்பட்ட அதிகாரச் சண்டை காரணமாக மாறி மாறி இந்த உண்மைகளை புட்டு வைக்கிறார்கள். அதுவும் வைஷ்ணவி வாழும் கச்சனம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஆதீனத்திடம், ” ஊருக்கு மூணு வைப்பாட்டிகளை வைச்சிருக்கியா?” என்று அதே கிராமத்திலேயே சண்டை போட்டிருக்கிறார். சுதா என்ற அந்த இளம்பெண் ‘மகா சன்னிதானத்தை’ மாமா என்றுதான் கூப்பிடுவாராம்.

தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு, என்று அரசியல் ஆதரவோடும், இமேஜோடும் தனது அந்தப்புரத்து நாயகிகளை அனுபவித்தபடிதான் அருணகிரி ஆட்டம் போட்டிருக்கிறார். இப்போது வயதாகிவிட்டாலும் தனது திருப்பணியை கட்டிளங்காளையான நித்தி இளமை முறுக்குடன் தொடருவார் என்று அவர் விரும்புகிறார். அந்த வகையில் அருணகிரி தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதிலும், நித்தி மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் காலத்தில் யார் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இல்லை” என்று தீர்ப்போடு விடுதலையையும் வழங்கியிருக்கிறார். யார்தான் ஊழல் செய்யவில்லை, யார்தான் யோக்கியன், யார்தான் ஆசைப்படவில்லை என்று நாடு முழுக்கவே இத்தகைய பொன்மொழிகள் வலுவான யதார்த்தத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால் அருணகிரியின் பேச்சு பொறுக்கித்தனத்தை ஒத்துக் கொள்ளும் நேர்மையான பேச்சு.

ஆர்.எஸ்.எஸ் கும்பலும், அர்ஜூன் சம்பத் கும்பலும் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நித்தியானந்தாவை அவர்கள் எதிர்ப்பது போல மலர்ச்சண்டை போடுவதற்கு காரணம் அவர் ஆதாரத்தோடு பிடிபட்டுவிட்டார். அருணகிரி அப்படி பிடிபடவில்லை. பிடிபடாதாவரை இந்து தர்மம் யோக்கியமானது. ஆகவே இதை பெரிதாக்க பெரிதாக்க அவர்களுக்குத்தான் சிக்கல். மற்ற ஆதீனங்களின் ஜல்சா ஆட்டங்களை நித்தியானந்தா வெளிப்படுத்த ஆரம்பித்தால் இந்துமதவெறியர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அப்படி செய்யுமளவுக்கு அவர்கள் ஒன்றும் மான, ரோசம் கொண்டவர்கள் அல்ல என்பது வேறு விசயம். இவை புதிய பிரச்சினையும் அல்ல. வரலாறு நெடுகிலும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

கும்பலோடு கும்பலாக நித்தியை கும்மும் ஜெயேந்திரனது பார்ப்பன சூழ்ச்சி!

அதே நேரம் முடியோடும், ரஞ்சிதாவோடும் சுற்றும் நித்தியானந்தா மதுரை ஆதீனமாவதற்கு தகுதியற்றவர் என்று சங்கர் சாரி ஜெயேந்திரனும் வெட்கமின்றி புகார் படித்திருக்கிறார்.

சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன் உலகறியச் செய்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்வோம். சங்கர் சாரியின் ஆசை அயோக்கியத்தனத்திறத்கு மறுத்தவர் இவரென்றால் ஒத்துப்போனவர்களின் பட்டியலோ மிகப்பெரியது. அவற்றில் நடிகைகள் முதல் நாட்டியத் தாரகைகள் முதல் பலருண்டு. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பது அப்போதும் கூட மேல் கீழ் தராசை விடாத ஜெயேந்திரனின் ஆச்சார ஒழுக்கத்தை காட்டுகிறது. எனினும் ஒரு களவாணி மற்றொரு களவாணியை களவாணி என்று நல்லவன் போல் திட்டுவதை திட்டப்படும் களவாணிகள் சகித்துக் கொள்வதில்லை. தற்போது ரஞ்சிதா அதற்க்காக ஜெயேந்திரன் மீது வழக்கு போட்டிருக்கிறார். ரத்து செய்ய சங்கர மட மேனேஜர் தூது போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

நித்தியானந்தாவை முழு வில்லனாக மாற்றுவதன் மூலம் தனது வில்லத்தனம் மறக்கப்படலாம் என்ற மலிவான உத்தியே ஜெயேந்திரனது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. ஆனாலும் இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமளவு நித்தியானந்தா ஒன்றும் விரல் சூப்பும் குழந்தையல்ல. சொல்லப் போனால் நித்தியை மறுக்கும் சாமியார்களை ஒண்டிக்கு ஒண்டி வருவாயா என்று அவர் விடும் சவால்களை ஆதீன உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை.

சங்கரசாச்சாரியின் மீது வழக்கு, தருமபுரம் ஆதீனம் முன்னால் ஆர்ப்பாட்டம், மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு, ஊடகங்களுக்கு சுடச்சுடப் பதில் என்று அவரது வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியாததன் காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதல்ல, எதிர்ப்பதற்கு போதுமான ஒழுக்க சரக்கில்லை என்பதே.

திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் பாலுறவு கொள்ள முடியாத சூழ்நிலை என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை சர்வசாதாரணம். ஆனால் இதையே பிரமச்சரியம் என்றும் உலகிலேயே கடினமான தவமென்றும், தியாகமென்றும் பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் வரலாறு நெடுகிலும் அச்சுறுத்தியே வந்திருக்கின்றனர். அப்போது தொழில்நுட்பம் வளரவில்லை, எதிர்த்துக் கேட்கும் ஜனநாயமில்லை என்பதால் அந்த ஆச்சார வேடம் பல காலம் ஓடியது. இப்போது சூழ்நிலை திரைச்சீலைகளை தூக்கி விடுகிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் புதிய முழக்கம்: செக்ஸ் மாதா கி ஜெய்!

ஜெயேந்திர-சரஸ்வதி-ஸ்வாமிகள்
சங்கரராமன் கொலைவழக்கில் கைதானவர்தான் காஞ்சி பெரியவாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் தியாகத்தில் மைய இடம் வகிக்கும் பிரமச்சரியம் அறிவியில் ரீதியாக சாத்தியமற்றது என்பதைத் தாண்டி, அதிகாரத்தை ருசிக்கும் மேட்டுக்குடியினர் எவரும் சைவப்புலிகளாக இருக்க முடியாது என்பதால் அந்தப்புரக் கிசுகிசுக்கள் ஆதாரத்துடன் வெளிவருகின்றன. வாஜ்பாயி, இல.கணேசன்களது ஆண்மைகள் குமுதத்தின் கிசுகிசு கதைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. சி.டியுடன் பிடிபட்ட சஞ்சய் ஜோஷி எனும் பிரச்சாரக் மற்றும் பா.ஜ.கவின் தலைவர் தற்போது மீண்டும் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் சட்டசபையிலேயே பிட்டுப்படம் பார்த்த பெருமையும் பா.ஜ.க உறுப்பினர்களுடையதுதான்.

கூடுதல் போனசாக மத்தியப் பிரதேசத்தில் துருவ் நாராயண் சிங் எனும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு செக்ஸ் மாதாகி ஜெய் என்று புனிதப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஷெக்சா மசூத் எனும் பெண் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தவர் சஹிதா பர்வேஸ் எனும் மேட்டுக்குடி இசுலாமியப் பெண். இந்த இரண்டு பெண்களும் துருவின் காதலிகள். இது போக சட்டப்பூர்வமாக துருவுக்கு ஒரு மனைவியும், சாட்சியமாக குழந்தைகளும் உண்டு. இவரும் ஆர்.எஸ்.எஸ் ஆல் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்துதான்.

கிழட்டு என்.டி.திவாரி, ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர்கள், அபிஷேக் மனு சிங்வி போன்ற காங்கிரசுகாரர்கள்தான் பா.ஜ.கவின் செக்ஸ் திருப்பணிக்கு தோள்கொடுத்து ஆறுதல் தருகிறார்கள். ஆனால் இந்து மதவெறியர்களுக்கு இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மாட்டியதும்தான் ஆடிப் போனார்கள். அன்றைக்கு பார்ப்பன இந்துத்வ உலகமே ஜெயேந்திரனை காப்பாற்றத் துடித்தது. டெல்லியில் வாஜ்பாயி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜெயேந்திரனது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன்  கொல்லப்பட்டார். சங்கர் சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவு படுத்தினார். ஜெயேந்திரனோ பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்க்காக கொலையே செய்தார். இன்றைக்கு நித்தியானந்தை “கையப் பிடிச்சு இழுத்தியா” என்று சவுண்டு விடும் அர்ஜூன் சம்பத் கும்பல் கூட அன்று பார்ப்பன பீடத்தின் முன் வீழ்ந்து கிடந்தது.

ஜெயேந்திரனைக் காப்பாற்ற தினமணி நேரடியாகவும், ஜெயமோகன் மறைமுகமாகவும் பாடுபடுகின்றனர். அந்தக் கதை அடுத்த பதிவில்…..

– தொடரும்
_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: