privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4

நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4

-

மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்!

ஆதினம் அருணகிரியே நித்தியின் நீண்ட முடிதான் அவரது டிரேட் மார்க் என்று அங்கீகரித்து விட்ட புடியால் முடி பிரச்சினையை ஏன் எழுப்புகிறீர்கள் என்று கேட்கிறார் நித்தியானந்தா. இந்து மதத்திற்கு எத்தனையோ சோதனைகள் இருக்கும் போது மயிரெல்லாம் ஒரு பிரச்சினையா என்று அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. இவைதான் சைவ ஆதீன மகா சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல். எனில் எது மரபு? எவை மரபு மீறல்?

பெருசு உயிரோடு இருக்கும்போது தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரன் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. அதை விட்ட உடனேயே அவரது சங்கர மட பதவி ரத்தாகிவிட்டது என்பதெல்லாம் பார்ப்பனியத்தின் கீர்த்தி கருதி மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும் மட பட்டத்தை பெற்றார். இப்படி ஆயிரத்தெட்டு விதி மீறல்களெல்லாம் அவரவர் தேவை கருதி எல்லா ஆதினங்களிலும் நடந்திருக்கின்ற உண்மைகள்.

கோவில் கருவறைகளை எடுத்துக் கொள்வோம். மற்ற சாதியினர் புரோகிதராக வரலாமெனும் போது மட்டுமே இது ஆகம விதிக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் ஊளையிடுவது வழக்கம். ஆனால் கோவில் கருவறைக்குள், மின்சாரம், டியூப்லைட்டு, சோடியம் விளக்கு, ஏர் கூலர்கள், டைல்ஸுகள் எல்லாம் இன்று நுழைந்திருக்கின்றன. இவையெல்லாம் உள்ளே வரலாம் என்று எந்த ஆகமத்தில் கூறப்பட்டிருக்கின்றன? இல்லை ‘1500’ ஆண்டு மரபு உள்ள மதுரை ஆதினம் கல்மடமாக இருந்து இன்று ஏ.சி மடமாக மாறியிருக்கிறதே இதற்கென்ன பொருள்? ஆகவே ஆகம விதி, மரபு என்பதெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு மாறிக்கொள்ளும், வேறு விளக்கங்களும் தரப்படும். எனில் அந்த சலுகை நித்தியானந்தாவிற்கு மட்டும் கிடையாதா?

சங்கராச்சாரியும், ஆதீனங்களும் காரிலும், விமானங்களிலும், இரயிலிலும் செல்வதெல்லாம் எந்த மரபில் வருகின்றன? இவையெல்லாம் காலத்துகேற்ற மாற்றங்கள் எனில் பக்தர்களின் மனம் கவர்ந்த நித்தியின் முடி மட்டும் வெட்டப்பட்டு மொட்டையடிக்க வேண்டுமா? ஆகவே நித்தியானந்தாவை மரபு கருதி ஏற்கக் கூடாது என்பதில் அவர்களே சீரியசாக கருதும் எவையுமில்லை. ஏனென்றால் இந்த மரபு விதிமுறைகளின் மையமாக இருப்பது ஒரு ஆதினத்தின் வாரிசை நியமிக்கும் உரிமை உயிரோடு இருக்கும் ஆதினத்திற்குத்தான் உண்டு என்பதே. இதை மறுக்க முடியாது. மறுத்தால் இதுதான் ஆகப்பெரிய மரபு மீறல்.

நித்தியானந்தா-மொட்டை
பழயை ஆதினம்: தம்பி நித்தி மொட்டை போடறீயா? நித்தி : ஏண்ணே அதான் இவ்ளோ கொட்டை போட்டிருக்கேனே?

 

மரபின் மையம் சொத்துடைமையில்தான்! தீர்வு அரசுடமையில்தான்!

எனவே ஆதினங்களை ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்ய வேண்டுமென்று கூறினால்தான் இந்தப் பிரச்சினையில் மற்றவர் தர்க்க ரீதியாக தட்டிக் கேட்பதற்கு வழியுண்டு. அது சாத்தியமில்லை என்றால் வேறு எவையும் சாத்தியத்திற்குள் வந்துவிடாது. மற்ற ஆதினங்கள் இது குறித்து நீதிமன்றத்திற்கு போவதும் சிரமம். போனாலும் அப்படி சட்டென்று முடிகிற விசயமல்ல. ஏனெனில் இந்தக் குழாயடிச் சண்டைக்கு நீதிமன்றம் சென்றால் அப்படி ஒரு புதிய மரபு ஏற்படுத்தப்படுமென்றால் எந்த ஆதினங்களும் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால்தான் அவர்களில் சிலர் இது குறித்து அறநிலையத்துறைக்கும், புரட்சித் தலைவியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பேசுகின்றனர்.

இங்கு வாசகர்கள் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் இந்து கோவில்களை வைத்திருப்பது தவறு, அவற்றை மீண்டும் ‘இந்துக்கள்’ அதாவது ஆதிக்க சாதி அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது மட்டும் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். ஒரு சிலர் மதுரை ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மதச்சார்பற்ற அரசு இன்றி ‘1500’ ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆதீனம் கூட காப்பாற்றப்பட முடியாது எனில் அந்த நீதி கோவில்களுக்கு மட்டும் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடப் பேச்சு?

மசூதிகளும், சர்ச்சுகளும் அந்தந்த சிறுபான்மையினர் கையில் இருக்கும் போது கோவில்கள் மட்டும் இந்துக்கள் வசமில்லையா என்று நியாயம் பேசிய இந்து மதவெறியர்கள் இப்படி தடாலென்று சரணாகதி அடைகிறார்கள் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முரண்பாட்டின் மையம் என்ன? ஆதினங்களோ, கோவில்களோ தனியார் சொத்துக்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே என்ன முறைகேடுகள் நடந்தாலும் வெளியார் தலையிட முடியாது.  முறைகேடுகளை தட்டி கேட்க வேண்டுமென்றால் அவை மக்கள் சொத்தாகவோ இல்லை அரசு மேற்பார்வையிலோ இருக்க வேண்டும்.

ஆகவே இந்துமதவெறியர்களின் முன் இருவழிகள்தான் இருக்கின்றன. தனியாரென்றால் தில்லு முல்லுகளை சகித்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அரசுதான் அவற்றை ஏற்று நடத்த வேண்டும். என்ன பதில் தருவார்கள்? இங்கும் கூட மதுரை ஆதீனத்தின் எதிர் கோஷ்டி மடத்தின் உள்ளே  நுழைந்து கூட எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. தற்போது மதுரை ஆதீனம் நித்தியானந்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்தாக மாறிவிட்டபடியால் அவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை. மீறி நுழைந்தால் போலீசு கைது செய்யும்.

ஏற்கனவே கூறியபடி ஆதினங்கள் என்பவை தனி ஒருவருக்கு சொந்தமாக இருக்கம் பட்சத்தில் புதிய ஆதீனங்களின் நியமனம் குறித்து ஒருவர் அதிருப்தி மட்டுமே தெரிவிக்கலாமே ஒழிய தடுத்து நிறுத்த முடியாது. இதை தற்போதைய மதுரை ஆதினமான அருணகிரி பல முறை நேரடியாகவும், மறைமுகமாவும், மிரட்டலோடும் தெரிவித்திருக்கிறார். இதை எதிர் கொள்ள அவர்கள் செய்த ஏற்பாடு என்ன?

நித்தியின் வசிய மருந்து! அருணகிரியின் பிசினெஸ் உடன்பாடு!!

அருணகிரி அவர்கள் சுய நினைவில் இல்லை, நித்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார் என்று பேசியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்கள். அதாவது ஒரு முதலாளி சுய நினைவோடு உயில் எழுதவில்லை என்றால் செல்லுபடியாகாது என்று தமிழ் சினிமாவில் கேட்டிருப்போமே? ஆனாலும் தான் குத்துக் கல்லாகத்தான் இருக்கிறேன் என்று ஆதினம் போட்ட உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. இதிலும் ஒரு தத்துவப் பிரச்சினை உண்டு.

ஓஷோ போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் சரி, கங்கை மகாமத்திற்கு வரும் நாகா சாமியார்களும் சரி போதை வஸ்துகளோடுதான் பரப்பிரம்மத்தோடு ஒன்றுகின்றனர். அவை கஞ்சா, அபின் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை. ரோல்ஸ்ராய்ஸ் காராகவோ, பிரதமர் துவங்கி பாமரர் வரை காலில் விழுவதாகவோ  கூட இருக்கலாம். மதுரை ஆதீனமும் தனக்கு நீண்ட காலம் இளைப்பு பிரச்சினை இருந்ததாகவும் தற்போது நித்தி அதை குணப்படுத்தி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

நித்தியானந்தா வசிய சக்தி உள்ளவரென்று அவரது எதிர்ப்பாளர்கள் கூட கூறுகிறார்கள். பொருள்களை பயன்படுத்தத் தெரிந்த எவரும் வசிய ஆற்றலை தாராளமாகப் பெறலாம். இங்கே கூட நித்தி ஸ்டராய்டு மருந்துகளை பெரிய ஆதீனத்திற்கு கொடுத்திருக்கலாம். வயதான அருணகிரி இன்றோ நாளையோ மண்டைப்போடும் தருணத்தில் இருப்பதால் இதனால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது. குவார்ட்டரில் பெப்பர் கலந்து அடித்தால் தொண்டைக் கட்டு சரியாகிவிடும் என்று விவேக் ஒரு படத்தில் சொல்வாரில்லையா, நிஜத்திலும் இத்தகைய மருந்துகளை கார்ப்பரேட் சாமியார்கள் பயன்படுத்தினால் யார் கண்டு பிடிக்க முடியும்?

நித்தியானந்தா
எங்க்கிட்டயும் செருப்பிருக்கு நாங்களும் வீசுவோம் - எதிர் கோஷ்டி மீது செருப்பு வீசிய நித்தி ஆதரவு கோஷ்டி

ஆனாலும் மதுரை ஆதீனம் நித்தியின் கார்ப்பரேட் பாணி ஆன்மீகத்தில்தான் மனதைப் பறி கொடுத்திருக்கிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய்களையும் வாங்கியிருக்கிறார். முற்றும் துறந்த ஆதீனத்திற்கு இந்த பணம் எப்படிப் பயன்படும் என்று கேட்பது அறீவீனம். ஊருக்கு மூன்று, நான்கு குடும்பங்கள் இருக்கையில் அவருடைய மாதாந்திர பட்ஜெட் என்பது நிச்சம் பெரிய தொகைதான். ஆகவே இந்த ஆதீன வாரிசு நிகழ்வு என்பது பக்காவான பிசினெஸ்ஸாகவும் இருக்கிறது. ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கும் ஆதீனங்கள் இயற்கையாகவே பிசினெஸ் ஆட்களாக இருந்தாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நியதி. இதைப் புரிந்து கொண்டால் மதுரை ஆதீனத்திற்கும் நித்தியானந்தாவிற்கு ஏற்பட்ட வணிக நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

இறுதியாக நித்தியை எதிர்ப்பவர்கள் அவரது பாலியல் முறைகேட்டினை மட்டும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் நித்தியின் படுக்கையறையில் எட்டிப்ப பார்த்து முடிவு செய்வது அநாகரீகம் என்கிறார்கள் சில தனி மனித உரிமையாளர்கள்.  எது தனியுரிமை? எது தனியுரிமை மீறல்?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: