சீர்கெட்டுக் கிடக்கும் ஒன்றைத் திருத்தி நெறிப்படுத்துவதை சீர்திருத்தம் என்பார்கள் – இது பொதுவானவர்களின் அகராதியில் உள்ள அர்த்தம். மன்மோகன்-மான்டேக்சிங்-சிதம்பரம் கும்பலின் அகராதியில் இதற்கு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள். சீர்கெட்டுக் கிடப்பதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதே இவர்களின் அகராதிப்படி சீர்திருத்தம் எனப்படுகிறது.
சரிந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் பொருட்டு
- சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
- சிவில் விமானப் போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி
- ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை உயர்த்துவது
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குப் படையல் வைப்பது
என்கிற முடிவுகளை எடுத்து தேசத்தின் குரல்வளையை முறித்த ஓசை அடங்கும் முன் அடுத்த ‘சீர்திருத்த அலைக்கான’ அச்சாரத்தைப் போட்டுள்ளார் மன்மோகன்.
அடுத்த கட்டமாக
- காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிப்பது
- ஓய்வூதியத் துறையை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது
- ஊக பேர வணிகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முன்பேர சந்தைகளின் கமிஷனுக்கு (Future markets commission) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தம்
ஆகியவற்றை அறிவித்திருக்கின்றது மன்மோகன்-மான்டேக்சிங்- ப.சிதம்பரம் கும்பல்.
ஊக பேர வணிகத்தில் எதிர்காலத்தில் ஒரு பொருளை வாங்குவதாக முன்கூட்டியே ஒப்பந்தங்கள் போட்டு அதை ஊக பேரச் சந்தையில் வைத்து சூதாடும் முறையான பியூச்சர் ஒப்பந்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன். இதன்படி ‘பொருளை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம், குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட விலையில் அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும். ஒப்பந்தம் செய்து கொண்ட விற்பனையாளரும் முன்பே நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு அதை விற்றாக வேண்டும்.’
உதாரணமாக, ஒரு விவசாயி விதைத்துள்ள நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பே அதை குறிப்பிட்ட விலையில் வாங்குவதாக ஊக வணிக நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்தத்தை ஊகபேரச் சந்தையில் வைத்து மற்ற ஊக பேர நிறுவனங்களுடன் சூதாடுவார்கள். நெல்லை வாங்குவதற்கான ஒப்பந்தம் பல நிறுவனங்களின் கைகளில் சுற்றிச் சுழன்று வரும். ஒவ்வொரு முறை கைமாறும் போதும் இன்னும் விளையாத அந்த நெல்லின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும்.
இவ்வாறாக நெல்லின் விலை போலியாக உயர்த்தப்பட்ட நிலையில், அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயி ஒப்பந்த விலைக்கே விற்க வேண்டும். அதை வாங்கும் நிறுவனம் விவசாயிக்கு குறைந்த விலை கொடுத்து விட்டு செயற்கையாக உயர்ந்து நிற்கும் விலையில் நெல்லை சந்தையில் விற்கலாம். மக்களுக்கு அரிசி விலை வெகுவாக உயர்ந்திருக்கும். ஆனால், விவசாயிகளுக்கு குறைந்த வருமானம்தான் கிடைத்திருக்கும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஊக வணிகர்களின் பைக்கு போயிருக்கும்.
ஊக வணிகர்கள் நெல்லை கண்ணால் பார்க்காமலே, கையால் தொடாமலே நெல் விளைவிக்கும் விவசாயிக்கும் சோறு சாப்பிடும் மக்களுக்கும் நடுவில் பணத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
தற்போது பண்டங்கள் விற்பனைச் சட்டத்தின் 19வது பிரிவின் படி ஆப்ஷன்ஸ் ஒப்பந்தம் என்ற முறை தடை செய்யப்பட்டுள்ளது . புதிதாக அறிமுகப் படுத்தப்படவுள்ள சட்டத் திருத்தத்தின் கீழ் அது அனுமதிக்கப்பட உள்ளது.
இதன்படி ‘எதிர்காலத்தில் விருப்பப்பட்டால் குறிப்பிட்ட விலையில் நெல்லை வாங்கலாம் இல்லை என்றால் வாங்காமல் இருந்து விடலாம்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இதன் மூலம் விளையாத நெல்லுக்கான ஒப்பந்தத்தின் மீது சூதாட்டம் நடத்துவதற்கு சூதாடிகளுக்கு இன்னும் தாராளமாக்கப்பட்ட வழிமுறை ஏற்படுத்தப்படும்.
ஒரு சிறு தொகையை மட்டும் பந்தயம் கட்டி அதை விட பல மடங்கு மதிப்புள்ள நெல்லை வாங்குவதாக விளையாடலாம். சந்தை சூதாட்டத்தில் நெல் விலையை ஏற்றும் முயற்சி தோல்வி அடைந்தால் ‘நெல்லை வாங்க விருப்பமில்லை’ என்று சிறு தொகையை மட்டும் விட்டுக் கொடுத்து விடலாம்.
‘இவ்வாறு ஊகபேரச் சந்தையின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகமாக்குவதன் மூலம் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பதாக’ ப சிதம்பரம் பெருமைப்பட்டுக் கொள்வார். மன்மோகன் சிங் ‘பொருளாதாரச் சீர்திருத்தம்’, ‘8 சதவீத வளர்ச்சி’ என்று அமுங்கிய வார்த்தைகளில் முனகிச் சொல்வார்.
முதலாளித்துவ ஊடகங்கள் இதை வித விதமான கோணங்களில் விளக்கி ‘இன்னும் கொண்டு வா இது போன்ற சீர்திருத்தங்களை’ என்று மக்களின் இரத்தத்தை நக்கத் தயாராக நிற்கும் முதலாளிகளை மகிழ்விப்பார்கள். அவ்வாறு மகிழ்ச்சியடைந்த முதலாளிகள் பங்குச் சந்தையில் சூதாட்டத்தை முடுக்கி விட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்ணை உயர்த்துவார்கள்.
நாட்டு மக்களின் முதுகின் மேல் முதலாளிகளின் ‘வளர்ச்சி’ விரைவாக நடக்கும்.
மன்மோகன் சிங் டர்பன் கட்டியிருப்பதை பாருங்கள் ! இரண்டு காதையும் சேர்த்து மூடி கட்டி இருப்பான் !அவன் காதில் ஏதும் விழாது.
பொருளாதாரத்தில் ஊக பேர வணிகத்தின் அவசியம் என்ன? அது ஏன் ஆட்சியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது?
வணக்கம் ரிஷி,
முதலாளித்துவத்தின் அடிப்படை வாதம், சந்தையில் எல்லாம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது. ஆனால் சந்தையில் சில செயற்கையான விலை ஏற்ற இறக்கங்கள் நடக்கலாம்.
உதாரணமாக நெல்லை எடுத்துக் கொள்வோம். ஆண்டு முழுவதும் அதன் தேவை (demand) மாதத்துக்கு மாதம் பெரிதளவு மாறாது. ஆனால் அதன் வழங்கல் (supply) அறுவடை காலத்தில் பெருமளவு அதிகமாக இருக்கும் மற்ற மாதங்களில் கிட்டத்தட்ட 0க்கு வந்து விடும்.
நெல் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அறுவடை ஆகி சந்தைக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அறுவடை காலத்தில் எல்லா விவசாயிகளும் நெல்லை சந்தைக்கு கொண்டு வர கிடைக்கும் நெல்லின் அளவு தேவையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் விலை வெகுவாக வீழ்ச்சியடையும். மற்ற மாதங்களில் வழங்கல் 0 ஆகி தேவை அதிகமாக இருக்க விலை கன்னா பின்னாவென்று ஏறி விடும்.
இதை தவிர்க்க அரசாங்கம் அறுவடை காலத்தில் நெல்லை வாங்கி சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் சந்தையில் விட வேண்டும். இந்தியாவில் விவசாய விளைபொருள்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை என்று அறிவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த விலையில் அறுவடை காலத்தில் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்கலாம். அரசு மாதம் தோறும் குறிப்பிட்ட விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாகவும், வெளிச் சந்தையில் விற்பது மூலமாகவும் நெல் விலையை கட்டுப்படுத்தலாம்.
இங்கு அரசாங்கத்தின் திட்டமிடல் உள்ளே வருகிறது. இதை முதலாளித்துவத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் இந்த நெல் விலையை ‘கண்டு பிடிக்க’ (to discover) ஊக வணிகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். ஊக வணிகத்தில் ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் ஈடுபடும் போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஒவ்வொரு மாதத்துக்கும் (நாளுக்கும்) ஆன சரியா விலையை கண்டு பிடிப்பார்கள் என்பது ஏட்டு பொருளாதாரம்.
அரசாங்க திட்டமிடலையும், கட்டுப்பாடுகளையும் ஒழித்து முழுக்க முழுக்க தனியார் கையில் பொருளாதாரத்தை ஒப்படைப்பதற்காகத்தான் இந்த ஊக வணிக முறையை அகில உலகின் இன்றைய ஆட்சியாளர்களான அமெரிக்க நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதை மன்மோகன் சிங்-மான்டேக் அலுவாலியா போன்ற அவர்களின் ஊழியர்கள் நிறைவேற்றி வைக்கிறார்கள்.
அன்புள்ள செழியன்,
உங்கள் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
லாட்டரிச் சீட்டைக் கூட சூதாட்டம் என்று சொல்லி தடை செய்திருக்கிறார்கள். இந்த சூதாட்டத்தினை அதுவும் வாழ்க்கையின் அடிப்படை நுகர்வுப்பொருட்கள் மீதான சூதாட்டத்தினை இப்படி அங்கீகரிக்கிறார்களே என்று வேதனையாய் உள்ளது.
Vinavu,
Good article. Blood is boiling to see the present situation. I think this is going to lead some where very very dangerous . At the same time ,the new reforms will lead to a very perfect situation for the revolution.
In history of Indian political arena , this is the first time there is a huge disparity of growth . huge conflict of differences .
How to harvest this to revolution is the need of the day.
முன்னதாக இது போன்ற சிறு சிறு முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் தேசிய தொழிற்சங்க மேடை (இதன் தலைவர்கள் எல்லாரும் சுமோவில் வருவார்கள், போராட்ட தேதி குறிக்கவே 3- 4 கூட்டங்கள் நடத்துவார்கள்) கூடி விவாதித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த தேதியை அறிவிப்பார்கள். தொழிலாளர் வர்க்கமும் ஒரு நாள் சம்பளத்தை இழப்பதுடன், பொதுத் துறை நிறுவனங்களில் இதற்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு அடுத்து வரும் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு போன்ற சில பலன்களை இழந்து நிற்போம்.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-விற்பனையை மேற்சொன்னது போன்ற போராட்டங்களால் தடுக்க இயலாது. தொழிலாளர் வர்க்கம் ஓட்டுக் கட்சி அரசியல் தொழிற்சங்க (போலி) தலைமைகளை மீறி தொடர் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும், அந்த நாள் எந்த நாளோ?