privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து HRPC !

பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து HRPC !

-

பாலியல் வன்முறையை எதிர்த்து மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், சென்னை கிளை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:

பாலியல் வன்முறையாளருக்கு மரண தண்டனை! பாலியல் வெறியை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?

அன்பார்ந்த நண்பர்களே!

டெல்லி மாணவியை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவு செய்த கொடூரமாக சம்பவம், பின்னர் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் நாடு முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு பிரச்சினை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் 7ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வல்லுறவுக் கொலை, புதுச்சேரியில் பேருந்தில் மாணவி கடத்தப்பட்டு கும்பலாக கொடூரமான வன்முறை பாலியல் வல்லுறவு என தினந்தோறும் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்முறை தொடர்கின்றன.

பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை, ஆயுள்தண்டனை – தனிமைச் சிறை – வேதியியல்ரீதியான ஆண்மை நீக்கம் – குண்டர் தடுப்புச் சட்டம் – விரைவான நீதி விசாரணை – தனிநீதிமன்றங்கள் என அரசியல் தலைவர்கள், ‘சமூக பிரபலங்கள்’, தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், தன்னார்வக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் என ஆளுக்கொரு தீர்வு சொன்னாலும் அனைத்து தரப்பினரும் விசாரணையை விரைவுபடுத்துவதையும், தண்டனையை அதிகரிப்பதையுமே தீர்வுகளாக முன் வைக்கிறார்கள்.

இவை அனைத்தும் குற்றம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளை தண்டிக்கும் முறை பற்றியே பேசுகின்றன. தண்டனை உண்டு என்ற அச்சம் இருந்தால் வல்லுறவுக் குற்றங்கள் நிகழாது என்ற மாயையை உருவாக்குகின்றன. பாலியல் வல்லுறவில் ஈடுபடும் தனிமனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் பாலியல் உணர்வு, பாலியல் நுகர்வு வக்கிரமாகவும், வெறியாகவும் மாற்றப்படுவது எப்படி? மாற்றத் தூண்டுவது யார்?; இந்தக் கயவர்களுக்கு என்ன தண்டனை என்று எவரும் பேசுவதில்லை.

மனிதர்களின் இயல்பான உயிரியல் தன்மையான பாலியல் உணர்வினை வெறியாக உருமாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது இன்றைய சமூகப் பண்பாட்டு அம்சங்கள் தான். இணையத்தில் கொட்டி கிடக்கும் ஆபாச வக்கிரங்கள், செல்பேசியில் தடையின்றி இவற்றினை அணுகும் வாய்ப்புகள், ஆபாச சீரழிவு வாழ்வினைப் போற்றுகின்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கதைகள் கீழ்த்தரமான நாவல்கள் சொல்லி மாளாத அளவில் வளர்ந்தோங்கியுள்ளன.

பொழுதுபோக்கு என பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் தங்களது இலாபவெறிக்காக மக்களின் உணர்வுகளுடன் நடத்துகின்ற இந்த வியாபார விளையாட்டின் பலியாடுகள் பெண்கள். உலகமயத்தின் வரவிற்கு பின் சமூகத்தின் பண்பாடும் தாராளவாதமாக மாறி வருகின்றது. ‘பொருட்களை வாங்கி நுகர்வது மட்டுமே இன்பம்’ என்று போதிக்கும் புதிய தாராளவாதக் கொள்கை பெண்ணையும் போகப் பொருளாக பார்க்க வைக்கின்றது. அதனால் தான் தங்களிடம் சிக்குகின்ற ஒரு பெண்ணை பாலியல் வெறிப்பிடித்த ஆண்கள் மிருகத்தை விடவும் கேவலமாக கும்பல் வல்லுறவு செய்து பெண் உறுப்பையும் உடலையும் சிதைத்து வீசியெறிய முடிகிறது.

‘எப்படியும் வாழ்வது என் உரிமை’ என்ற சமூகப் பொறுப்பற்ற தனிநபர் சிந்தனை ஊட்டி வளர்க்கப்படுகின்றது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து விடப்பட்டு குடிவெறிப்பிடித்த சமூகமாக மாற்றப்படுகின்றது. தனது காமஇச்சையை தீர்க்கும் ஒரு பொருளாக பெண்ணை பார்க்கும் ஆணாதிக்க சமூகப் பார்வையில் ஏற்கனவே வளர்க்கப்பட்ட ஆண் பாலியல் வெறியும், குடிவெறியும் ஏறினால் என்ன செய்வான். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கமும், ஊடகங்களும், எப்படியும் வாழலாம் என்ற தாராளவாத சிந்தனை பிரச்சாரர்களும் பெண்கள் மீதான பாலியியல் வல்லுறவுக்கு கண்ணீர் வடிப்பது போல் நடிக்கிறார்கள். கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்கப் போவதாக கதைக்கிறார்கள்.

இன்னொருபுறமோ ஆணாதிக்க வல்லுறவு சிந்தனையை பெண்களுடைய உடை தான் தூண்டுகிறது எனப் ‘பெரிய மனிதர்கள்’ பேசுகிறார்கள். பெண்களுடைய உடைதான் இத்தகைய குற்றத்தை துண்டுவதாக ஊடகங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. நிலவுடைமை சமூக உணர்வில் பிற்போக்காக சிந்தித்து பழகியிருக்கும் இவர்களால் பெண் சுதந்திரமாக வாழ்வதும், ஆணுக்கு நிகராக சமமாக மதிக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள முடியாததாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ‘கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மனைவியின் கடமை’ என சந்தடி சாக்கில் கூக்குரல் எழுப்புகிறார். ‘ஆணுக்குப் பெண் கட்டுப்பட வேண்டும்’ என்ற இக்கேவலமான பாரத சிந்தனைஇ பெண்ணின் கட்டுப்பாடற்ற தன்மை தடுக்க பாலியல் வல்லுறவு என்ற பரிமாண வளர்ச்சி சிந்தனையாக மாறியுள்ளது. ‘இரவில் ஆண் நண்பருடன் சுற்றிய பெண்ணைத் தண்டிக்க விரும்பினோம், முறையாக கட்டுப்பட்டிருந்தால் தாக்கியிருக்க மாட்டோம்’; இது டெல்லி மாணவி மீதான பாலியல் வல்லுறவுக் குற்றவாளியின் வாக்குமூலம்.

சமூகப் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் என்பதை இலக்காகக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சி அமையவில்லையென்றால், பிறர் பிரச்சனைப்பற்றி அக்கறைப்படாத சுயநல வெறிப்பிடித்த கூட்டமாக மட்டுமே; நாம் வாழ முடியும். பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட டெல்லி மாணவியும், அவரது நண்பரும் அரைகுறை ஆடைகளுடன் இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த போதும் உதவாத மக்களின் மனநிலை இதற்கு சான்று.

பாலியல் வல்லுறவு குற்றங்கள் தடுக்கப்பட பெண்களை உணர்வுகளும், விருப்பங்களும் உடைய சகமனிதராக பார்க்கும் சமநிலைப் பண்பாடு வளர்க்கப்பட வேண்டும். பெண்ணின் உரிமைகளை அங்கீகரிக்கும் மனநிலை சமூகத்தின் பொது மனநிலையாக மாற்றப்பட வேண்டும். ஆபாச, வக்கிர, கழிசடை சிந்தனைகளும், காட்சிகளும் ஊடகங்கள் மற்றும் இணையங்களில் வெளிவருவது தடைசெய்யப்பட வேண்டும். தனது உரிமைகளுக்காக போராடாமல் மழுங்கடிக்கப்பட்ட போதை வெறிப்பிடித்த சமூகமாக மாறும்படி ஊக்கப்படுத்தும் அரசாங்கத்;தினை எதிர்த்துப் போராட வேண்டும். பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிரச்சனையை தீர்;க்க அதுமட்டும் போதாது. உண்மையில் நீக்கம் செய்யப்பட வேண்டியது தனிப்பட்ட ஆணின் ஆண்மை அல்ல. ஒட்டு மொத்த சமூகத்தில் இருந்து ஆணாதிக்கமும், பாலியல் ஆபாசச் சீரழிகளும் தான்.

மத்திய மாநில அரசுகளே!

சினிமா – டிவி – பத்திரிக்கை – இணையம் மூலம் பாலியல் நுகர்வு வெறியைத் தூண்டும் ஆபாச படங்கள் வெளிவருவதை தடைசெய்!

மனித உரிமை ஆர்வலர்களே! பொதுமக்களே!

உலகமயத்தால் ஏற்பட்ட நுகர்வு பண்பாட்டிற்கும் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் ஆணாதிக்கப் பண்பாட்டிற்கும் எதிராக போராடுவோம்!

ஆண் பெண் சமத்துவப் பண்பாட்டை வளர்ப்போம்!.

தகவல் :  மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, சென்னை கிளை
தொடர்புக்கு மில்டன் 98428 12062.