privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !

-

ஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் அளித்த தீர்ப்பு 20-03-2017 அன்று காவல் ஆய்வாளரும் பொறுக்கியுமான சேதுமணி மாதவனை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தது.

ஆய்வாளர் சேதுமணி சிறப்பு குற்றத்தடுப்பு (என்கவுண்டர்) பிரிவில் முதன்மை இடத்தில் இருந்தவர். நேர்மையான அதிகாரி என்றும், ரௌடிகளுக்குச் சிம்மசொப்பனமானவர் என்றும் ஒளிவட்டம் உருவாக்கப்பட்டு தஞ்சையில் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார், துணை கண்காணிப்பாளர் மூர்த்தி, துணை ஆய்வாளராக சேதுமணி மாதவன் அடங்கிய இக்கூட்டணி தஞ்சையில் கொடிகட்டி ஆண்டனர். எந்தப் பகுதிப் புகாராக இருந்தாலும், பணமோசடி வழக்குகளைத் தான் பணியாற்றும் காவல் நிலைய புகாராகப் பெற்று விசாரித்துக் கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதில் இழிபுகழ் பெற்றவர் இந்த சேதுமணி மாதவன்.

பொறுக்கி போலீசு சேதுமணி மாதவன்

தஞ்சை ஆட்டோ ஓட்டுனர் முத்துசாமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கட்டைப் பஞ்சாயத்து பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்று ஒரு கும்பல் எப்போதும் இவர் பின்னால் நின்று செயல்படும். ‘நான் தேவன்டா’ என்று சாதியை அடிக்கடி சொல்லி வீரத்தை வெளிக்காட்டியவர். ஆனால் ஏழைபாழைகள் என்று வரும் போது அவர்கள் “தேவர்” சாதியாக இருந்தாலும் துன்புறுத்துவார்.

தரைக்கடை தேங்காய் வியாபாரி காசிநாத தேவரை ஊரை விட்டு மதுரைக்கு ஓடிவிடு என்று மிரட்டியவர். தரைக்கடை உருளைக்கிழங்கு வியாபாரி கணேசனின் கைகளை உடைத்து கட்டுப்போட்டு வழக்குப்பதிவு செய்தவர். இவரால் வியாபாரி சேட்டு காவல்துறை கொட்டடியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்ட போது தரைக்கடை வியாபாரிகள் திரண்டு சென்று மீட்டு வந்தனர்.

இவை அனைத்தும் MVK மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பாரதிமோகன் மற்றும் மருத்துவர்களுக்காக மாலைநேர தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த சேதுமணி மாதவன் செய்த திருப்பணிகள். சங்க உணர்வின்றி இருந்த எங்களைச் சங்கமாக அணிதிரள வைத்தவர் சேதுமணி என்று வலிகளோடு நன்றியையும் பதிவு செய்கிறார்கள் தரைக்கடை வியாபாரிகள்.

பணமோசடி வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கென்று அழைத்து வரப்பட்ட கோவையைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற பெண் கணினிப் பொறியாளர், தஞ்சை டெம்பிள் டவர் விடுதியில் 19.11.2007 அன்று கொலையுண்ட செய்தியையும், அப்பெண்ணைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி மரணத்தை விளைவித்த தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்துறை ஆய்வாளர் சேதுமணி மாதவன் மற்றும் தஞ்சை பூக்கார 1-ஆம் தெரு பாலு என்ற கட்டைப்பஞ்சாயத்து போலீஸ் புரோக்கரையும் கைது செய்ய பல்வேறு அமைப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானவுடன் மக்கள் கலை இலக்கியக்கழகம், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை சிறுத்தைகள், மனித உரிமை கழகம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இது தற்கொலையல்ல பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு நடந்த கொலை என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிய பின்னர்தான் பொறுக்கி ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது பெயருக்கு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது காவல்துறை.

கோவை அகிலாண்டேஸ்வரி காவல் கொலைக்கு நீதிகோரும் கூட்டமைப்பு தஞ்சையில் உருவாக்கப்பட்டு தஞ்சை புகைவண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், பனகல் கட்டிடம் அருகில் ஆர்ப்பாட்டம், மருத்துவக்கல்லூரி எதிரில் ஆர்ப்பாட்டம், சேதுமணி மாதவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது ஆர்ப்பாட்டம் என்று தொடர் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் இப்பொறுக்கி போலீசை சிபிசிஐடி விசாரிக்குமாறு வற்பறுத்தி விரிவான இயக்கத்தை நடத்தினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஊழியர்கள் சிலர் சேதுமணியின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்த போதும் கூட்டியக்கத்திற்கு வரமறுத்தது. அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தின் முன்னணியாளர் தோழர் தையல்நாயகி, அகிலா தற்கொலை வழக்கை வெளியில் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தாலும்   CPI கட்டுப்பாட்டில் இருந்த அவ்வமைப்பு போராட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் சேதுமணி மாதவனைத் தப்பிக்க வைக்க தொடக்கம் முதலே தஞ்சை மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் முயற்சி செய்தனர். சேதுமணி மாதவன் காவலர் கணேசன் கட்டப்பஞ்சாயத்து பாலு இவர்கள் மீது ஆள்கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கற்பழித்து மரணம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய் என்று கூட்டமைப்பு போராடியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுமணி மாதவன் சிறையில் அடைக்காமல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் துணைபுரிந்தது. போராட்டக்குழுவின் எதிர்ப்பால் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேதுமணி மாதவன் பற்றி சிலர் தெரிந்தும், பலர் தெரியாமலும் அவர் நேர்மையான அதிகாரி எனப் பிரச்சாரம் செய்தார்கள். சேதுமணி மாதவன் ரௌடிகளை ஒழிக்கிறேன் என்று மார்தட்டிக் கொண்டு ஒரு பகுதி ரௌடிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு எதிர்கோஷ்டி ரௌடிகளை மிரட்டிப் பணம் பறிப்பது பணம் தராதவர்களை அடித்து, உதைத்துச் சுட்டு விடுவேன் என்று மிரட்டிப் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது, மேலும் சிறுகுற்றம் புரிந்த அப்பாவிகளின் கைகளை முறிப்பது, கால்களை உடைப்பது, சாலையோரங்களில் வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழைகளை எட்டி உதைப்பது பொருள்களை நாசம் செய்வது, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது போன்ற கொடிய செயல்களையும் செய்துள்ளர்.

நிலம் மோசடி செய்யும் ரியல் எஸ்டேட் பேர்வழிகளுக்கு அடியாளாய் இருந்து பணம் வாங்குவதும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டிப் பணம் பறிப்பது என சட்டவிரோதமாக செயல்பட்டு லட்சக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் யோக்கிய சிகாமணி தான் சேதுமணி மாதவன். இது தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை கழகத்தின் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் பெற்றுள்ளவர் சேதுமணி.

தீர்ப்பின் நகல்

வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கூட்டமைப்பு போராடியது. சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர். தஞ்சை பார்கவுன்சில் முற்போக்கு வழக்குரைஞர்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சேதுமணிக்குப் பிணை கேட்டு அணிதிரண்டனர்.

இந்த நிலையில் அகிலா, மரணத்திற்கு முன் அவரது அன்னைக்கு எழுதிய கடிதம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்குக் கிடைத்தது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அக்கடிதத்ததை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அகிலாவின் கடித நகலை சுவரொட்டியாக்கி இயக்கமெடுத்தது. இது வழக்கில் ஒரு திருப்பத்தைத் தந்து முக்கியமான ஆதாரமாகி சேதுமணியை சிறைக்கு அனுப்பியுள்ளது.

கிரிமினல் குற்றவாளி ஆணைக்கிணங்க இயங்கும் அரசு, ஊழல் பேர்வழிகள், கிரிமினல்களின் உற்ற நண்பனாக விளங்கும் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் இருக்கும் நம்பிக்கையில் முகமலர்ச்சியோடு சேதுமணிமாதவன் தியாகியைப் போல சிறை சென்றிருக்கலாம். எனினும் தொடர் மக்கள் போராட்டங்களே இத்தகைய பொறுக்கி போலீசை தண்டிப்பதற்கு உதவி செய்யும். ஏனெனில் போலீசுத் துறையே இத்தகைய பொறுக்கிகளை உருவாக்குவதற்கு காரணமாக அமைவதால் மக்கள் தமது அதிகாரத்தை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் இவர்களை தண்டிக்கும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க