இந்தியாவைச் சேர்ந்த சுமார் 31 கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டதாக கடந்த 14 -ம் தேதி (மார்ச் 2018) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது அறிவித்துள்ளார், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அக்பர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி விட்டு பட்டை நாமம் சாற்றியவர்கள். சுமார் 400 தனியார் நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் (Wilful Defaulters) டிமிக்கி கொடுத்து வருவதாக அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும், சுமார் 91 கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய கார்ப்பரேட் முதலைகள் சுமார் 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதில் பெரும்பங்கு பொதுத்துறை வங்கிகளின் கடன்களாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படியே சுமார் 7,265 கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில், தற்போது வெறும் 91 பேரின் மேல் மட்டும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
“தும்பை விட்டு வாலைப் பிடித்த” கதையாக 31 கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு எஞ்சியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பிற்கு இன்னொரு பெயர் பித்தலாட்டம். இவர்கள் தவிற வங்கிக் கடன்களின் மூலமே பிரம்மாண்ட வளர்ச்சியை விரல்விட்டு எண்ணக் கூடிய சில முதலாளிகள் மட்டும் அடைந்துள்ளனர். அதானி குழுமம், லான்கோ, ஜி.வி.கே, சுஸ்லான், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.4 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை பாக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடன் சீரமைப்பு என்கிற பெயரில் அதானி குழுமம் செலுத்த வேண்டிய 72 ஆயிரம் கோடி கடனைக் கடந்த ஆண்டே கைகழுவி விட்டதாக சி.பி.எம் கட்சியின் பிருந்தா காரத் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத (Wilful Defaulters) கார்ப்பரேட் முதலைகளின் 1.88 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து விட்டதாக காங்கிரசு குற்றம் சாட்டியிருந்தது. எதிர்கட்சிகள் பல்வேறு சந்தர்பங்களில் அடையாளப்பூர்வமாக மத்திய அரசின் கார்ப்பரேட் விசுவாசத்தையும், வங்கிக் கொள்ளைகளுக்கு கூட்டுக் களவாணியாக செயல்படுவதை சுட்டிக்காட்டியதையும் மீறி 31 கார்ப்பரேட் பகாசுரர்களை தப்பவிட்டுள்ளது மோடி அரசு.
பல லட்சம் கோடிகளைத் திருடி விட்டுத் தப்பிச் செல்லும் வங்கிக் கொள்ளையர்களை தண்டிக்கும் யோக்கியதை மத்திய அரசு இழந்துள்ள நிலையில், இவர்களை யாரால் தண்டிக்க முடியும் என்பதை மகாராஷ்டிர மாநில விவசாயிகள் உணர்த்தியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி உத்திரவாதப் பத்திரங்களின் மூலம் 12,600 கோடி கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் கண்டாலாகாவ் என்ற இடத்தில் 250 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயர்ஸ்டோன் கம்பெனி என்ற மின்சார தொழிற்சாலையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 17 -ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக திரண்டு வந்து நீரவ் மோடிக்கு சொந்தமான இந்த நிலத்தை கைப்பற்றினர். இந்த நிலம் இனி தங்களுக்குத்தான் சொந்தம் என்று அறிவித்த விவசாயிகள், நிலத்தில் தாங்கள் விவசாயம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர். உள்ளூர் மக்களின் ஆதரவோடு விவசாயிகள் இந்த நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
உள்ளூர் விவசாயிகள் இந்த நிலத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வார்கள் என்றும் விரைவிலேயே இங்கு விவசாயம் செய்யப் போவதாகவும் விவசாய சங்க பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். நிலத்தை கைப்பற்றியுள்ள விவசாயிகள் அங்கேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். சிலர் அந்த நிலத்தில் விவசாயம் செய்யவும் தொடங்கி விட்டனர்.
இந்த அரசும் அரசு கட்டமைப்பும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக சீரழிந்து விட்ட நிலையில் நமக்கான நீதியை நாமே தான் நிலைநாட்டியாக வேண்டும் என்கிற கட்டத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். மகாராஷ்டிர விவசாயிகள் அதற்கு வழிகாட்டியுள்ளனர். இந்த நெருப்பு நாடெங்கும் பற்றிப் படரும் போது தான் அதிகாரத்தில் அமர்ந்துள்ள மக்கள் விரோதிகளை நாம் முறியடிக்க முடியும்.
மேலும் :
- After 31 top defaulters flee, India seeks to shut the gates amid PNB fraud probe
- Maharashtra Farmers ‘Reclaim’ Nirav Modi’s Land Attached by ED
- Rs 72,000 crore of Adani loans waived: CPM
- Finance Minister fooling people on loan waiver for defaulters, alleges Congress