நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!

நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமுர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்வியிலிருந்து விரட்ட நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்ட உயர்கல்வி ஆணையம்.
உயர்கல்வியை கார்ப்பரேட், காவிமயமாக்கத் துடிக்கும் மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இறுதியில் அனிதாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி இரங்கல் செலுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விருத்தாசலம். 97888 08110

***

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்! என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டும் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரி பெரியார் மன்றத்தில் 31.08.2018 அன்று மாலை அரங்க கூட்டத்தை நடத்தினர்.

பு.மா.இ.மு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தனது தலைமை உரையில், ”UGC – யை குறித்து பெரும்பான்மை மாணவர்கருக்கு தெரியாத நிலை உள்ளது. இதனை வீச்சாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் நாடு முழுவதும் போராட்டங்களை அடக்குவது , கைது ,
சிறை என தொடர்ந்து வருகிறது. எனவே கருத்துரிமை பறிப்பதற்கு எதிராக மாணவர்கள் பெற்றோர்கள் சங்கமாக சேர வேண்டிய தருணமிது” என்றார்.

பு.மா.இ.மு கரூர் மாவட்ட அமைப்பாளர தோழர் சுரேந்தர் பேசுகையில் ”20 லட்சம் கோடி வருவாய் இலக்கை அடைய இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.” என்பதைக் குறிப்பிட்டு, கல்வி வியாபாரமயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.திராவிட கழக மாணவர் அணி தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் செல்லதுரை பேசுகையில், ”கல்வி மட்டும் தான் சுய ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் , பகுத்தறிவை தரக்கூடியது. அதனை பறிப்பதை அனுமதிக்க முடியாது. பெரியாரும், அம்பேத்கரும் இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெ ற்றிருக்க முடியாது. ஊழல்வாதிதான் உயர் கல்வி துறை அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ” என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை ஐ. ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நிறுவன உறுப்பினர், முனைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். ”இந்தியா முழுவதும் 40,000 கல்லூரிகள் 180 பல்கலை கழகங்கள் இருக்கிறது. இதனை பல்கலைக்கழக மானியக் குழு தான் கட்டுப்படுத்துகிறது. இதனை பறித்து கல்வியை சந்தை மயமாக்குவது, கார்ப்பரேட்டு மயமாக்குவதுதான் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவின் நோக்கம். தன்னாட்சியை கல்லூரிகளுக்கு வழங்குவதால் ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாத நிலை உருவாகும். ”நீட்”டினால் எப்படி அனிதா படிக்க முடியவில்லையோ?அது போல தான் பெரும்பாண்மை மாணவர்களுக்கும் ஏற்படும். எல்லா விதிமுறைகளையும் கார்ப்பரேட்களுக்காக தளர்த்தி விட்டார்கள். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டமைப்பை உருவாக்கத் தவறினால் மருத்துவக் கனவுக்கு எப்படி நீட் மூலம் சவக்குழி தோண்டினார்களோ? அதே போல் சாதாரணமாக டிகிரி படிப்பதற்கும் சவக்குழி தோண்டுவார்கள். எனவே இதை எதிர்த்துப் போராடாமல் இலவசக் கல்வி, தரமானக் கல்வியை பெற முடியாது” என்று அறைகூவல் விடுத்தார்.

பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்,படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் உயர்கல்வி படித்தவர்கள் ஓட்டலில் வேலை பார்க்கும் நிலையிருப்பதையும்; மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த மக்களத் வாழ்வாதாரமும் பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,தருமபுரி. தொடர்புக்கு: 81 480 55 539.