பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை கிளை சார்பில், “பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்: போராடாமல் விடிவில்லை!” என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பாலியல் குற்றங்களை யார் செய்வது? யார் தூண்டுவது? எப்படி குறைப்பது? என்கிற பல்வேறு கேள்விகளோடு, சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு அதனைப் பதிவு செய்து வருகிறது, பெ.வி.மு. இப்பதிவில், சமூக செயற்பாட்டாளர் தோழர் வே.மதிமாறன் உரை இடம்பெறுகிறது.

படிக்க:
பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

சமூகம் சொத்துடைமை சமூகமாக மாறிய சமயத்திலிருந்துதான் பெண் முதலில் அடிமையாக்கப்படுகிறாள். ஆணுக்கு குழந்தைப் பெற்றுத்தரும் கருவியாகவே பெண் பாவிக்கப்படுகிறாள்.

குழந்தைப் பருவத்திலேயே, பெண் குழந்தைகளை ஒடுக்கி வளர்க்கிறார்கள். கிருஷ்ணனை பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே ஆணாதிக்கத்தை பெண்களை ஏற்க வைக்கிறார்கள். இன்று பெண்கள் படித்த பின்னர், பலரும் தங்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதற்கு அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தான் காரணம்.

இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, பெண்களுக்கு பல்வேறு விதத்தில் பாதுகாப்பை கொடுத்தாலும், பெண்களை இழிவாக சித்தரிக்கும் வேலைகளும் வாட்சப், சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதை விட்டுவிட்டு ஆண்களுக்கு குழந்தைகளிலிருந்தே பெண்களை மதிக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது. மதம் அதை சட்டரீதியாக பாதுகாக்கிறது.

பெண்களுக்கான ஜனநாயகமிக்க நாடாக சொல்லப்படும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான மனநிலை நிலைத்திருக்கிறது. பெண்களை போகப் பொருளாகவே இருத்தி வைக்கின்றனர்.

படிக்க:
போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

பெண்களுக்கு உண்மையான சுதந்திரத்தோடு இருந்தது ஒரே ஒரு நாட்டுலதான்., அது சோசலிச ரசியாவில்தான். தோழர் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தலைமையிலான சோவியத் ரசியாவில் பெண்களை சரிசமமாக நடத்தினர்.

சிறுவயதில் இருந்து ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு அளிப்பது என்பதை நடைமுறைப்படுத்துவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.