வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.

“லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என்று எழுதினார் லெனின். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லீப்னெஹ்ட் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இவர்களது நண்பராய், சக தோழராய் இருந்தார். தலைசிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலும் முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராக இருந்த அவர் ஆற்றல் மிகுந்த பிரசாரகராயும் விளங்கினார்.

சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்


சிலந்தியும் ஈயும்

நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.

அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.

படிக்க :
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.

ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட்

ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.

ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!

பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.

படிக்க :
‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்
♦ வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.

முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.

வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….

***

நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!

எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.

எஜமானன், பணமூட்டை, சுரண்டலாளன், ஊகவாணிபன், முதலாளி, ஆசை காட்டி மோசம் செய்கிறவன், சமயச்சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன், நம்மை அடிமைப்படுத்தும் மூர்க்கன் ஆகிய இவர்கள் தான் சிலந்தி. மக்கள் செலவில் உண்டு வாழும் ஒவ்வொருவனும், நம்மைக் காலால் மிதித்துத் துவைக்கும், நமது துன்ப துயரங்களையும் பயனற்றுப் போகும் நமது முயற்சிகளையும் எள்ளி நகையாடும் ஒவ்வொருவனும்தான் இந்தச் சிலந்தி.

ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.

தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.

சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.

படிக்க :
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.

சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.

மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.

தளுக்கு இளைஞன், “உயர் குடும்பத்தில்” பிறந்த வீணன், கூத்தடித்துத் திரிந்து அறியாப் பெண்களைச் சீரழித்துச் சாக்கடையிலே தள்ளுகிறானே, இப்படித் தன்னால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் மதிப்பும் உயர்வதாய்க் கருதுகிறானே அவன் தான் சிலந்தி.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.

ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.

கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.

சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.

ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.

அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.

பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.

சிலந்திக்கும் ஈக்கும் இடையே நடைபெறும் இன்றைய போராட்டத்தை நெருங்கிச் சென்று உற்று நோக்குவோம். நிலைமையை உள்ளது உள்ளபடி நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். ஈக்களாகிய நாம் நமது பகைவர்கள் நமக்காக மீண்டும் எப்படிப்பட்ட கண்ணிகளை வைத்தமைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கண்டு கொண்டாக வேண்டும். யாவற்றுக்கும் மேலாய் நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!

நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!

ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

 அடிக்குறிப்புகள்:

  1. மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
  2. வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
  3. ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.

-வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க