தென்மேற்கு பருவமழைக்காலம் முடியவிருக்கும் நேரம் தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. தர்மபுரியில் பெய்த கனமழையால் வத்தல்மலை தடுப்பணை உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மலைவாழ் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை (22.09.2019) மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்த்தைத் தொடர்ந்து, நள்ளிரவில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபக்கம் கடும்பாதிப்பும் அடைந்துள்ளனர்.

வத்தல் மலைப்பகுதியில் அடிவராத்தில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமானது, ஜாலாற்றின் வழியாக மாதேமங்கலம் சோழாராயன் ஏரியைச் சென்றடையும்… பின்னர் அங்கிருந்து அதியமான்கோட்டை ஏரி, ஒட்டப்பட்டி ஏரி, அன்னசாகரம் ஏரி என பல்வேறு ஏரிகளை நிரப்பி சனத்குமார் நதி வழியாக இருமத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். இந்த மழைநீரை சேமிக்க கட்டப்பட்ட தடுப்பணைதான் நேற்று காலை உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதையறிந்த கிராம மக்கள், கற்களை வைத்து தடுப்பணையை அடைக்க முயன்றனர். ஆனால், முடியாததால் தண்ணீர் முழுவதும் வீணாகி வருகிறது. தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதால் வத்தல்மலை பகுதிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மலைவாழ் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஏற்கனவே வனத்துறை சார்பாக கட்டப்பட்ட தடுப்பணைகளில் காட்டாற்றில் வரும் நீரைத் தேக்கிவைத்து காபி, மிளகு, ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை, ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்திப்பூ, சில்வர்ஓக் முதலானவைகளுடன் மரவள்ளிக்கிழங்கு முக்கியப் பயிராகவும் சிறுதானியங்களான சாமை, தினை, கேழ்வரகு போன்றவைகளும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.
படிக்க:
♦ பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !
♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
தற்போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் 8 மாதத்திலேயே தடுப்பணை உடைந்து உள்ளது.
தமிழகத்தில் அணைகள் உடைவது இது புதிதல்ல. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சேலத்தில் சித்தர்கோவில் அருகே கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்தது. கடந்த ஆண்டு திருச்சி முக்கொம்பு முதல் கொள்ளிடம் மதகுகள் வரை உடைந்து தண்ணீர் வீணாக போவது ஒரு தொடர் கதையாகி விட்டது.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் இங்கு கட்டிய தடுப்பணைகள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இது ஒருபுறமிருக்க காவிரி நீரை மேட்டூரிலிருந்து கடந்த மாதம்13ம் தேதியும், கல்லணையில் இருந்து 17ம் தேதியும் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரவில்லை. ஆனால் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேராக கடலுக்கு சென்று சேர்ந்துள்ளது.
எங்கெல்லாம் பாசனத்திற்கு பயன்படும் கால்வாய்கள், அணைகள், உள்ளதோ அதையெல்லாம் தூர்வாராமல் அதற்கு ஒதுக்கப்படும் நிதிகளை கொள்ளைடித்து விடுவதும், தரமில்லாத அணைகளை கட்டுவதும் பருவகால பாசனத்தை நம்பி இருக்கும் சிறு விவசாயிகளையும் ஒழித்து விடுவதாகவே உள்ளது.
– வினவு செய்தியாளர்
“வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியிருப்பதால்’ என கட்டுரை தொடங்குகிறது. தற்போது தென்மேற்குப் பருவமழைக்காலம் அதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. “வடகிழக்கு பருவமழைக்காலம் அடுத்த மாதம்தான் தொடங்கும். கட்டுரையில் திருத்தம் செய்யவும்.
நன்றி தோழர், தவறினை திருத்தி விட்டோம்.