Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 607

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2

4

மெட்ரிக்குலேசன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள் – 2

(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு ஜூலை புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. (மே இதழில் வெளியான முதல் பகுதி)

மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொண்டு வரும் கலாச்சார சீரழிவு, கல்வித் தரம் சீர் குலைவு, மாணவர்களின் அறிவுத் திறன் வீழ்ச்சி இவற்றை அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரை, இப்பள்ளிகளை நடத்துவது ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்களும் அவர்களைச் சார்ந்த பணக்காரர்களும்தான் என்பதை விளக்குகிறது.)

ல மெட்ரிகுலேசன் பள்ளிகள் சீரழிந்த திரைப்பட ஆபாச பாடல்களுக்கான கூத்துகளையே ஆண்டு விழா – கலை விழா என்ற பெயரில் நடத்துகின்றன; மிக மோசமான ஏகாதிபத்திய ஆபாச கலாச்சார நாயகர்களான மைக்கேல் சாக்சன், தமிழக மைக்கேல் சாக்சனின் காட்டு கூச்சல், அரைகுறை ஆடை நடனம் இல்லாமல் இருக்காது.

ஆங்கில வழிக்கல்வி
மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

இவர்கள் தான் தாய்மொழி, சொந்த பண்பாடு, உடை போன்றவற்றை அநாகரிகமாக பார்க்கக் கூடிய பார்வையை ஊட்டி வளர்க்கிறார்கள். ஒரு மெட்ரிகுலேசன் மாணவி தன் தந்தையிடம் “அப்பா இனி எங்க ஸ்கூலுக்கு வரும் போது வேட்டியில் வராதீங்கப்பா, புள்ளைங்களும், ஆசிரியர்களும், ஏன் தலைமை ஆசிரியருமே ஒரு மாதிரியா பாப்பாங்கப்பா.” என்கிற அளவிற்கு நமது பாரம்பரிய உடை பற்றிய சீரழிந்த பார்வை விதைக்கப்பட்டிருக்கிறது.

மம்மி,டாடி பண்பாட்டால் மடியும் தமிழ்ப் பண்பாடு

தமிழில் பேசினால் தண்டனை, அபராதம், ஒரு நாள் முழுவதும் முட்டி போடவைப்பது போன்ற கண்மூடித்தனமான போக்கு சர்வசாதாரணமாகி விட்டது. இல்லையேல் இடம் கிடையாது. லண்டனிலா பள்ளி இருக்குன்னு கேட்காதீங்க; அங்கு கூட இத்தகைய போக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சில தமிங்கிலனத்தின் அருவருக்கத் தக்க மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தான் இந்த நிலை.

மொழியில் மட்டுமல்ல, ஆங்கிலேயனைப் போன்ற நடை- உடை-பாவனை தான் அறிவுத்தனமானது; நாகரிகம் என்ற பார்வை பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நிலவுகிறது. உதாரணமாக, தமிழகத்திலேயே மிக வறட்சியான பகுதிகளிலுள்ள பள்ளிகளில் கூட கோடை வெயிலிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் டைகட்டி, ஷீ,போட்டு இன் பண்ணி வரவேண்டுமென்று கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் மார்ச் மாதம் அவசரமாக டைகட்டி வரத் தவறிவிட்டார், அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார் “டை” பிரியரான முதல்வர்.

இதைவிட கொடுமை, ஒரு பள்ளியில் பெரும்பாலோர் ஒரே நகரத்தை சார்ந்த மாணவர்கள், ஏறத்தாழ ஒரே சமூகத்தையும் சார்ந்தவர்கள். அப்பள்ளியிலும், வீட்டிலும், தெருவில் விளையாடும் போதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்று உத்தரவு இருக்கிறது.

எத்தனை பெற்றோர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள்? வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள், வெவ்வேறு தாய்மொழியாக உள்ள மைய விடுதி பள்ளிகளில்தான் மாணவர்கள் எல்லா நேரங்களிலும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரே ஊர், ஒரே தாய்மொழி எனில் அதற்கான அவசியம் இல்லை. அவர்களிடமும் ஆங்கிலத்திலேயே அவசியம் பேச வேண்டும் என்பது கண்மூடித்தனமான ஒன்று.

காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி
இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

பெற்றோர்களிடத்திலும், சக மாணவர்களிடமும் தன்னெழுச்சியான உணர்வுகளை ஒருவர் அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்துவார். அதை ஆங்கிலத்தில் செய் என்பது, அவர்களை செயற்கையாக சிந்திக்கச் செய்து, செயற்கையாக பேசி, விளையாட வைப்பதே. இதன் மூலம் மாணவன் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவன் என்பதே அறிவியலாளரின் கருத்து.

ஒரே தாய்மொழி, ஒரே ஊர்க்கார மாணவர்கள் அதிகம் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அவசியமே இல்லாதபோது பள்ளி வளாகத்திற்குள் தப்பித் தவறி தமிழில் பேசி விட்டால் மறுநாள் காலை மாணவர் பேரவையில் (அசெம்பிளியில்) பலர் முன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வைப்பது:

“இனிநான் தமிழில் பேச மாட்டேன், மன்னிக்கவும்; எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என்று உறுதி கூறுகிறேன்.”

என்று தமிழில் பேசிய மாணவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களிடையே மாணவ ஒற்றர்களை அமர்த்தி தமிழில் பேசுபவர்களை கண்டறிந்து அதற்கான தனி பதிவேடில் பதிவு செய்து ஒரு முறைக்கு மேல் எனில் ரூபாய் ஒன்று முதல் ஐந்து வரை அபராதம் வசூல் செய்கிற பள்ளிகளெல்லாம் தமிழகத்தில் இருக்கிறது.

இரண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக சென்ற ஆசிரியரிடம் “Sir, I toId him many time, but he is not asking sir” “அப்படி செய்யாதடான்னு பல முறை சொன்னேன்; ஆனா அவன் கேட்க மாட்டேன்ங்கிறான் சார்’’ என்பதைத்தான் அப்படியே மொழி மாற்றம் செய்து அவனின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடு சிதைக்கப்படுகிறது. இதுபோன்று எத்தனையோ கொடுமைகள் பட்டியல் கூறமுடியாத அளவிற்கு உள்ளது.

தின்றதை வாந்தியெடுக்க வைக்கும் தேர்வுமுறை

ம.உ.பா.மை போராட்டம்
சிதம்பரம் காமராஜ் பள்ளி தாளாளர் லெட்சுமி காந்தனை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

தேர்வு நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாண்டு மாதிரி வினாத்தாளைக் கொண்டு படித்து எழுதி எழுதி பார்க்க பயிற்சித் தரப்படுகிறது. கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி என்று மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பலரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். அதையே பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சிந்திப்பது, சுயமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, புரிந்து கொள்வது, ஒப்பிடுவது, காரண காரியங்களை ஆராய்வது என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. கண்ணை மூடிக்கிட்டு திங்கிறது. தின்னதை தேர்வு என்ற பெயரில் வாந்தி எடுப்பது. அதற்குத்தான் சிறந்த பயிற்சி தருகிறார்கள்.

கல்வி அழிப்பு
“கற்றுத் தருவதை விட (coaching) பயிற்சிதான் பிரதானம் என்பதுதான் இன்றைய நவீன கல்வி”

மெட்ரிக்குலேசன் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு எப்படி நடைபெறுகிறது? பெளதிகம், வேதியியல், உயிரியல், தாவரவியல் இந்த நான்கிலும் எவ்வளவு மோசமானவனும் நூற்றுக்கு நூறு எடுத்துவிட்டால் அவன் தேர்ச்சி பெற்றவனாகி விடுவான். முன்னூறுக்கு தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 105, செய்முறையில் நூறு எடுத்திடுறான், இதுக்கு பேரு “மேற்கத்திய பாணி, ஆங்கில வழி தரமான கல்வி” என்கிறார்கள். தேர்வுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே மாணவனுக்குத் தெரிந்துவிடும்; கட்டாயம் அறிவியலில் அனைவரும் தேறிவிடுவோம் என்று . பிறகு எப்படி அவன் பொறுப்போடு படிப்பான், பணிந்து கடினமாக உழைப்பான் என்று எதிர்பார்க்க முடியும்?

செய்முறை, எழுத்துத் தேர்வு நடத்தும் தேர்வாளராகப் போகும் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்? மூன்று மணி நேர தேர்வாளராகப் போகும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ 25 முதல் ரூ 50 சம்பளம்; அது தவிர பயணப்படி வேறு. ஆனால் மெட்ரிக்குலேசன் தேர்வாளர்களுக்குச் சம்பளம் ரூ 6 நிர்ணயிக்கப்படாத பயணப்படி; அதுவும் ஆறு மாதம் ஓராண்டு கழித்துத்தான் கிடைக்கும். பெரும்பாலும் ஆசிரியர்கள் இப்பணிக்குப் போக விரும்புவதில்லை. ஆனால் பள்ளி நிர்வாகமோ ‘அரசு நடத்தும் தேர்வு; பள்ளிகளுக்கு அரசின் தயவு தேவையுள்ளது. இதைப் புறக்கணிக்கக் கூடாது’ என்று மிரட்டி ஆசிரியர்களைத் தேர்வுப் பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கிறது. இதே நிலைமை தான் விடைத்தாள் மதிப்பிடுவதற்கும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் 30,000 ஆசிரியர்களுக்கு, சங்கமோ, தலைவரோ எவரும் கிடையாது. இந்தப் படித்த பட்டதாரிக் கொத்தடிமைகள் நிர்வாகம் பணித்த எந்த பணிகளையும் செய்தே ஆக வேண்டும். மறுத்தால் வேலை அவ்வளவுதான்.

விபரீதமான விடைத்தாள் மதிப்பீடு

மெட்ரிக்குலேசன் விடைத்தாள் மதிப்பீடு எப்படி நடைபெறுகிறது? மெட்ரிக்குலேசன் ஆசிரியர் யார் வேண்டுமானாலும், எந்த விடைத்தாளையும் மதிப்பிடலாம். இரசாயன பட்டதாரி கணிதம் கற்பித்தால், அவர் கணித விடைத்தாள் திருத்தலாம்; போதிய ஆசிரியர்கள் இல்லையெனில் அறிவியல் பட்டதாரி எவரும் திருத்தலாம். புவியியலை, புவியியல் எடுத்துவரும் ஆசிரியர் மட்டுமின்றி கணிதம், இரசாயனம், பெளதிகம், வரலாறு, ஆங்கில இலக்கியம் படித்த எவரும் திருத்தலாம்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 2013-ம் ஆண்டு கடலூரில் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாடு (கோப்புப் படம்)

+2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு ரூ 2.50 –எனில், மெட்ரிக்குலேசன் விடைத்தாளுக்கு ரூ 1.25 அதுவும் தமிழகம் முழுவதும் இரண்டே மையங்களில். வடக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று. தோராயமான பயணப்படி தரப்படும். உள்ளூர் ஆசிரியரைத் தவிர வெளியூர் ஆசிரியர்களுக்கு இது செலவானதாகவும் சிரமம் மிகுந்ததாகவும் இருக்கும். சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்கள் மறுக்க இயலாது. காரணம் தனியார் பள்ளி, சுயநிதி என்ற நிர்ப்பந்தம்.

ஒரு விடைத்தாள் திருத்த சாதாரணமாக அரைமணி எடுத்துக் கொள்ளக் கூடியதற்குப் பதிலாக, இங்கே காலை பத்து முதல் மாலை 3.30 க்குள் நாற்பது முதல் ஜம்பதைத் திருத்தி விட்டு வெளியூர்காரர்கள் பேருந்தை பிடிக்க அவசர அவசரமாக ஒடி ஊர் போய்ச் சேர வேண்டும்.

மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பணம் கட்டிப் படிக்கும் பெரும் புள்ளிகளின் பிள்ளைகள்; ஆசிரியர்களோ சுயநிதி நிறுவனத்தின் அடிமைகள். எனவே தேர்ச்சி விழுக்காடு அதிகம் காட்ட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பெரும்பாலும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிகப்படியான விடைத்தாளை திருத்திவிட்டு ஊருக்கு பேருந்து பிடிக்க வேண்டிய அவசரம் வேறு. விளைவு என்னவாகும்? சராசரி மாணவனும், திறன் மிகுந்த மாணவனும் ஏறத்தாழ சம மதிப்பெண் எடுப்பார்கள். எதுவுமே எழுதாதவனும் மதிப்பெண் போடவே இடமில்லா வெற்று விடைத்தாளைச் சமர்ப்பித்தவனுமே தோல்வியுற நேரிடும். இது தான் “ஆங்கிலமொழி தரமான மேற்கத்திய பாணி கல்வி முறை” காசு கட்டிப் படிக்கும் பெரிய இடத்துக் கல்வி.

மெட்ரிக்குலேசன் முறை உள்ள மேனிலைப் பள்ளிகளிலும், இதர மேனிலைப் பள்ளிகளிலும், +2 வில் இரண்டு மொழிப்பாடங்களில், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், அதிக மதிப்பெண் கிடைக்கிறது என்பதால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் பாடங்களை எடுத்து கொண்டு தமிழைப் புறக்கணிக்கிற போக்கு அதிகரித்து வருகிறது.

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு (கோப்புப் படம்)

+2 அளவில் உள்ள பிரெஞ்சு எட்டாம் வகுப்பிற்குரிய தரத்தில் இருப்பதாலும், தாராளமாகத் திருத்துவதால் தமிழைவிட அதிகமாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாலும் மொத்த மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பது ஒரு காரணம். +2 தரத்திற்குத் திருத்தும் முறைகளில் நன்றாகப் படிப்பவனும் பத்து முதல் பதினைந்து மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ளது போன்ற காரணங்களினால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளை என்ன அந்நியனா, வெள்ளைக்காரனா வச்சு நடத்துகிறான், அல்லது வைத்து நடத்த வேண்டுமென்று இலண்டனிலிருந்து உத்தரவு போடுகிறானா?

தமிழகத்தில், தமிழனாய்ப் பிறந்தவர்கள்தான், சமூக, அரசியல் பொருளாதாரம் காரணங்களால் தமிங்கிலனாய் மாறி தமிழினத்தின் மொழி, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் எதிராய் நிற்கிறான்.

1947- க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும், எதிர்கட்சிப் பிரமுகர்களும் அவர்களின் நெருங்கிய ஜமீன்கள், தொழில், வணிக கூட்டாளிகள்தான் இந்த ஆங்கில வழி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குப் பின்னால் நின்று இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை

தேசிய இன, மொழி, அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே, இந்த இழிநிலையை அடியோடு நம் மண்ணிலிருந்து துடைத்தெறிய முடியும்.

புதிய ஜனநாயகம், ஜூலை 1997

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

1

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!

மெரிக்க சிலிக்கான் வேலி”யின் ஐ.டி. ஊழியர்களை “சிலிகான் பள்ளத்தாக்கின் தோட்டத் தொழிலாளிகள்” என்று கூறுவதுண்டு. தோட்டத்தொழிலாளிகள் கூட சங்கம் வைக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஐ.டி. துறையில் இல்லை. காரணம், புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் முதலாளி வர்க்கம் பராமரிக்க விரும்பும் தொழிலுறவுக் கொள்கைக்கு இந்தத் துறை ஒரு முன்மாதிரி. ஊழியர்களின் சிந்தனை முறையை ஊழல்படுத்துவது, அச்சுறுத்தல் ஆகிய இரண்டு வழிமுறைகளின் மூலமும் ஐ.டி. நிர்வாகங்கள் இதனைச் சாதித்திருக்கின்றன.

அடிமைத்தனத்துக்கு அப்ரைசல்! அச்சுறுத்த நாஸ்காம்!குறிப்பிட்ட தகுதியிலான ஊழியர்களின் ஊதியத்திலேயே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை நிராகரிப்பது, ஊதியத்தில் கணிசமான பகுதியை பணித்திறன் அடிப்படையில் (performance based) மாதந்தோறும் தீர்மானிப்பது, ஊதியம் மற்றும் பதவி உயர்வை பணி மூப்பின் அடிப்படையில் அல்லாமல் அப்ரைசல் மூலம் தீர்மானிப்பது. இதன் மூலம் அடிமைச் சிந்தனைக்கு அனைவரையும் பயிற்றுவிப்பது – என்பன போன்ற வழிமுறைகளின் மூலம் “நாம்” என்ற உணர்வே எழவொட்டாமல் தடுத்து “நான்” என்ற சிந்தனையும், கழுத்தறுப்புப் போட்டியும் ஊழியர்களுக்கிடையே திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகிறது.

“உன்னுடைய அப்ரைசல் ரேட்டிங்கை சக ஊழியனிடம் சொல்லாதே, எல்லா இடங்களிலும் உன்னை முன்நிலைப்படுத்தக் கற்றுக்கொள், குழு உறுப்பினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளாதே, கருத்து வேறுபாடு குறித்து வாதம் செய்து சூழலை மாசுபடுத்தாதே” – என்பன போன்ற நடத்தை விதிகள் மூலம் ஊழியர்கள் கோழைகளாகவும், சுயநலமிகளாகவும் வனைந்து உருவாக்கப்படுகின்றனர். அதனால்தான் அநியாயமாக வெளியேற்றப்படும் ஊழியர்கூட எச்.ஆரிடம் குரலை உயர்த்திப் பேசுவதில்லை.

“நான் நல்ல ரேட்டிங் வாங்கியிருக்கிறேனே, வாடிக்கையாளரின் பாராட்டைப் பெற்றிருக்கிறேனே, என்னை ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று ஈனச்சுரத்தில் முறையிட மட்டுமே செய்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பது திறமைசாலிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சிந்திக்கும்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆட்குறைப்பினால் வேலை இழப்பவர்களுக்கு இணையப் பத்திரிகைகளும், உளவியல் ஆலோசகர்கள் எனப்படுவோரும் கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்குகின்றனர்:

“லே-ஆஃப் என்பது வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. அதுவே வாழ்க்கையல்ல. நம்பிக்கை இழக்காதீர்கள். எந்தக் கம்பெனியும் வாழ்நாள் பூராவும் வேலை தர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒரு புரபஷனல் போல சிந்திக்கப் பழகுங்கள். இந்த வேலை போனால் என்ன ஆகும் என்று வேலையில் இருக்கும்போதே சிந்தித்துப் பழகுங்கள். இடையறாமல் புதுப்புது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.”
முதலாளித்துவ அடிமைத்தனத்தை இயற்கை நியதியாகக் கருதிச் சரணடைவதற்கு ஊழியர்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பு, நிர்வாகத்தை எதிர்ப்பது போலக் கனவு கூடக் காணமுடியாமல் ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தி வைப்பதற்கு ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கிறது. ஐ.டி. துறையில் வேலை தேடுபவர் தேசிய திறனாளிகள் களஞ்சியத்தில் (National Skills Repository) பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். நிறுவனங்கள் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்கும், திறமையாளர்கள் தங்களை எளிதில் சந்தைப்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுதான் என்று கூறப்பட்டாலும், இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறு.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குத் தமது பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு, தங்களது தரவுகளைக் கையாளும் இந்திய ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், ஊழியர்களின் ரேகை முதல் கருவிழி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் திரட்டப்படவேண்டும் என்று கோரியதன் அடிப்படையில்தான் ஜனவரி, 2006-ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு ஊழியர் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், அவரைப் பற்றிய எல்லாத் தரவுகளும் இதில் தொகுக்கப்படும் என்பதால், ஒரு ஊழியர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்தை எதிர்க்கும் பட்சத்தில் அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் ஏற்றப்பட்டு, அவர் வேறு எங்குமே வேலை தேட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர் ஐ.டி. முதலாளிகள். தொழிற்சங்கம் இல்லாத காரணத்தினால், சட்டவிரோதமான இந்தக் கிரிமினல் நடவடிக்கையை அம்பலமாக்கவோ, தடுக்கவோ ஊழியர்களால் இயலவில்லை.

ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் பொருந்துமா?

டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட ஒரு பெண் ஊழியர், தான் கருவுற்றிருக்கும் நிலையில் வேலைநீக்கம் செய்யப்படுவதாகவும், தன்னை வேலைநீக்கம் செய்வது தொழிற்தகராறு சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த டி.சி.எஸ். நிர்வாகம், தான் கருவுற்றிருக்கும் தகவலை அந்தப் பெண் ஊழியர் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவில்லை என்றும், கருவுற்றிருக்கும் பெண்களைப் பணி நீக்கம் செய்வது தங்களது விதிமுறைகளுக்கே எதிரானது என்பதால் அந்தப் பெண்ணை மீண்டும் பணியமர்த்துவதாகவும், மற்றபடி தொழிற்தகராறு சட்டமெல்லாம் தங்கள் நிறுவனத்துக்குப் பொருந்தாது என்றும் கூறியது. அதாவது “எங்கள் சட்டத்துக்குத்தான் நாங்கள் கட்டுப்படுவோமேயன்றி, உங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்பதுதான் டி.சி.எஸ். நிறுவனத்தின் வாதம்.

கர்நாடகாவில் தொழில் நிறுவனங்கள் நிலையாணைச் சட்டம், 1946-ன்படி, ஐம்பது பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒவ்வொரு நிறுவனமும், தொழிற்தகராறு சட்டத்தின் அடிப்படையிலான ஒரு நிலையாணையை வகுத்து அமல்படுத்த வேண்டும். ஐ.டி. முதலாளிகளை மகிழ்விக்கும் பொருட்டு அப்படியொரு நிலையாணையைக் காகிதத்தில்கூட வகுத்து வைத்துக் கொள்ளத்தேவையில்லை என்று கடந்த 18 ஆண்டுகளாக ஐ.டி. நிறுவனங்களுக்கு விலக்களித்திருக்கிறது கர்நாடக அரசு. தமிழகத்திலோ தாங்கள் “ஷாப்ஸ் அண்டு எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் ஆக்ட்” – இன் கீழ் வருவதாகப் பித்தலாட்டம் செய்து வருகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

எல்லா ஐ.டி. நிறுவனங்களும் தொழில் தகராறு சட்டத்தின் கீழ்தான் வரும் என்பதை நிலைநாட்டுவதன் வாயிலாகத்தான் பணிப்பாதுகாப்பை உத்திரவாதம் செய்து கொள்ள முடியும். இதனை நிலைநாட்டுவதற்கே கூட ஊழியர்கள் தொழிற்சங்கமாகத் திரள்வது அவசியம்.

உதயமானது ஐ.டி.துறை ஊழியர் சங்கம்!

டி.சி.எஸ். ஆட்குறைப்பு குறித்த செய்தியை வினவு  இணைய தளம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆட்குறைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் ஈடுபட்டனர். சங்கம் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதுதான் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் படி என்ற அடிப்படையில் பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டது. படூரில் ஜனவரி 10-ம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் – பெரும்பான்மையினர் பல மாநிலங்களையும் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள்; மற்றவர்கள் மாணவர்கள் மற்றும்  தொழிலாளர்கள்.

பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஒருங்கிணைத்து நடத்திய இக்கூட்டத்தில், உரையாற்றிய ஐ.டி. பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம், தனது 17 ஆண்டு கால  ஐ.டி. பணி அனுபவத்திலிருந்து சங்கம் அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார். ஊழியர்களுடைய வாழ்க்கைப் பின்புலமும், ஐ.டி. துறை பணிச்சூழலும் ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதை விளக்கிய மனநல மருத்துவர் ருத்ரன், சங்கமாகச் சேர்வது அவர்களை இப்பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க எங்ஙனம் உதவும் என்பதை விளக்கினார்.

ஐ.டி. ஊழியர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை சட்டப்படியே இல்லையா, சங்கத்தில் சேர்ந்தால் வேலை போகுமா, இந்த ஆட்குறைப்பை முறியடிக்க முடியுமா – என்பன போன்ற ஊழியர்களின் கேள்விகளுக்குத் தனது உரையில் விடையளித்தார் வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ். நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கின்ற அதேநேரத்தில், ஊழியர்கள் சங்கமாகத் திரண்டு போராடுவதுதான் அவர்களது வேலையையும் உரிமைகளையும் பாதுகாக்கப் பயன்படும் என்று விளக்கிப் பேசினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள்.

தாங்கள் சங்கத்தில் சேருவதாக அங்கேயே இரண்டு ஊழியர்கள் அறிவித்திருப்பதும், ஐ.டி. துறை ஆட்குறைப்புக்கு எதிராக வினவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ பதிவுகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்திருப்பதும், கட்டுரைகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படித்திருப்பதும் ஐ.டி. ஊழியர்களிடையே போராட்டச் சிந்தனை அரும்பத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன.
_________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
_________________________________

பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு

0

ன்றைய போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் யாருக்கும் கொள்கைகள் இல்லை. எப்படி அதிகாரத்துக்கு வருவது, என்ன தரகு வேலை பார்ப்பது, எவ்வளவு சம்பாதிப்பது என்ற கணக்குகள் மட்டுமே கூட்டணிகளை தீர்மானிக்கின்றன. இப்போது,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு காஷ்மீரின் சுயாட்சிக்கு போராடுவதாக சொல்லிக் கொள்ளும் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீர் மக்களின் போராட்டத்தையே அங்கீகரிக்க மறுக்கும் பா.ஜ.கவுடன் பேரம் பேசி வருகிறது.

இத்தகைய அப்பட்டமான, பிழைப்புவாத கூட்டணிகளின் முன்னோடிகளில் ஒன்று பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி. 1997-ம் ஆண்டு ‘கொள்கை’ ரீதியில் எதிரெதிரான பா.ஜ.கவும் பஞ்சாபின் அகாலி தளமும் அமைத்த கூட்டணி அந்த ஆண்டு நடந்த மாநில சட்ட மன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. அது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.

இப்போதும் இந்த இரு கட்சிகளும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை முன் வைத்து  அம்மாநில மக்களின் நலன்களை பலி கொடுப்பதை இந்த மாதம் (பிப்ரவரி 2015) புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஞ்சாபில் மதவெறி பயங்கரவாதத்தைக் கிளறிவிட்டதில் காங்கிரசின் பங்கு முதன்மையானது. இதை வசதியாக மறைத்துவிட்டு, அமைதியின் காவலர்களாக, சமாதானத் தூதர்களாக ஓட்டுப் பொறுக்கப் பார்த்தது காங்கிரசு. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.

மோடி - பாதல்
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அகாலி தள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல்

எதிர்முகாமான அகாலித்ளம் – பா.ஜ.க கூட்டணி 5-ல் 4 பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி, மிருக மெஜாரிட்டியுடன் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்து சீக்கிய ஒற்றுமையை முதன்மையாக்கிப் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டனர்.

ஆனால் இக்கூட்டணி முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானது என்பதற்கு இவர்களின் பத்திரிகைப் பேட்டிகளே சாட்சி. கொள்கை அடிப்படையில் எதிர் எதிர் துருவங்களான இரு கட்சி கூட்டணி பற்றி அகாலிதளம் தலைவர் பாதலிடம் பத்திரிகையாளர் கேட்டபோது “மத்தியில் 13 கட்சி கூட்டணி உள்ளது. இனிமேல் கூட்டணி ஆட்சிக்குதான் எதிர்காலம்” என்றார். பா.ஜ.க.வோ “மத்தியில் எதிர் எதிர் கொள்கைகள் கொண்ட கூட்டணி ஆட்சி நீடிக்காது” என்கிறது. பின்னர் பஞ்சாபில் மட்டும் நீடிக்கும் என்பது அக்கட்சிக்கே வெளிச்சம்.

இந்தக் கூட்டணியிலுள்ள இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர். அகாலிகளின் அடிப்படையான ‘அனந்தபூர்’ சாகிப் தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. பா.ஜ.க.வின் இந்தி –இந்து- இந்துஸ்தானை அகாலிதளம் நிராகரிக்கிறது.

1984 சீக்கியர் படுகொலையை வாஜ்பாய் கண்டித்தார். ஆனால் அதற்குக் காரணமான ‘நீல நட்சத்திர நடவடிக்கை’யை முழுமையாக ஆதரித்தவர்தான் வாஜ்பாய்.

1987 -ல் மதவாத அடிப்படையில் சீக்கியர்கள் ஒன்று கூடும் ‘சர்பட்கல்சா’ நிகழ்ச்சியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவர் பிரகாஷ்சிங் பாதல். அதற்கு சற்று முன்புதான் இந்திய அரசியல் சட்டத்தின் சில பக்கங்களைக் கிழித்தெறிந்தார்.

இவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க. இன்று பாதலின் அகாலி கட்சியின் கூட்டாளி.

இக்கூட்டணி போலிசாரின் நரவேட்டையாடல் மீது விசாரணைக் கமிசன் வைக்கும் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ. லட்சுமிகாந்த சாவ்லா கொலை வெறியன் கே.பி.எஸ்.கில்லுக்குப் புகழாரம் சூட்டிகிறார்.

தவிர நதிநீர்ப் பங்கீடு, சண்டிகர் உட்பட பஞ்சாபி பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

இதற்கு முந்தைய 1969 அகாலி ஜனசங்கம் பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

கட்காரி - பாதல்
சுக்பீர் சிங் பாதலுடன் பேரம் பேச வந்திருக்கும் மகாராஷ்டிர புரோக்கர் பா.ஜ.க.வின் நிதின் கட்காரி

இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி நீடிப்பதென்பது பஞ்சாப் மக்களின் உரிமைகள் குழி தோண்டிப் புதைக்கப்படுவதன் மீது தான் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், எஸ்.எஸ்.மானின் அகாலி கட்சியும் இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தன. இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கின்றிப் புறக்கணிக்கப்பட்டு, மொத்தமே 2 இடங்களைக் கைப்பற்றினர்.

இந்த பஞ்சாப் தேர்தலில், சி.பி.ஜ, சி.பி.எம். கட்சிகளின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. பஞ்சாபில் பல தொண்டர்களைப் பலி கொடுத்து, ‘தேச’ ஒற்றுமைக்குப் போராடியதாக மார்தட்டிய இந்த இருபோலி கம்யூனிஸ்டுகளிடையே ஒத்த கருத்தின்றிப் படுதோல்வியடைந்துள்ளனர்.

கன்ஷிராமுடன் கூட்டணி முறிந்ததும் இந்த இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்கு முயன்றது காங்கிரசு. சி.பி.ஐ. யின் மாநிலத் தலைமை மத அடிப்படைவாதத்தை முறியடிக்க காங்கிரசுடன் கூட்டு எனக் கொள்கை முலாமிட்டது. மத்தியத் தலைமை இதை நிராகரித்தது. ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம். என மூன்றாவது முன்னணி கண்டது. ஆனால் சி.பி.ஐ.யின் மாநிலத் தலைமையோ காங்கிரசுடன் மறைமுக உடன்படிக்கை கண்டு, காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது. தற்போது சி.பி.ஐ இரு தொகுதிகளில் வெற்றி பெற, பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

தனது முழுத் தோல்விக்கும் சி.பி.ஐயே காரணம் எனப் பழியை சி.பி.ஐ மீது சுமத்துகிறது சி.பி.எம் கட்சி.

மதவெறி பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாதத்தை வரிந்து கட்டி ஆதரித்ததாலேயே மக்கள் இப்போலி கம்யூனிஸ்டுகளைப் புறக்கணித்துள்ளனர்.

அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பி அகாலி தளம் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். தவிர காங்கிரசுக்குள்ளேயிருந்த போட்டியும், குழிபறிப்பும் அகாலி –பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணங்கள்.

புதிய ஜனநாயகம், மார்ச் 1997

டி.சி.எஸ் ஆட்குறைப்பு – புதிய ஜனநாயகம் கட்டுரை

3

டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்!

“நான் ஒரு சீனியர் மானேஜர். நான் சொல்கிறேன். ஊழியர்களை வெளியேற்ற டி.சி.எஸ். உயரதிகாரிகள் பின்பற்றும் நடைமுறை மிகவும் நியாயமற்றது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுபவரும், வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெற்றவருமான ஒரு மூத்த ஊழியரை வெளியேற்றுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது நிர்வாகம் என்னை மிரட்டுகிறது. அவர்களுடைய அடுத்த குறி நானோ என்று பயமாக இருக்கிறது. பல பேரை வேலையை விட்டுத் தூக்கும் வேலையைச் செய்து செய்து என் மன நிம்மதியே போ விட்டது.”

“உங்கள் துன்பம் எனக்கு புரிகிறது. அனுதாபப்படுகிறேன். ஆனால் சகோதரா, இதுதான் சுதந்திரச் சந்தையின் விதி. இந்த எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் இதை மாற்ற முடியாது.”

– இவை சமீபத்தில் இணைய நாளிதழ் ஒன்றில் வெளியான வாசகர் கடித விவாதங்கள். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான எதிர்வினைகள்.

“பணித்திறன் குறைந்தவர்கள்” என்று மதிப்பீடு செய்யப்படும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதும், ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதும் ஐ.டி. ஊழியர்கள் அனுபவித்திராத புதிய விடயங்கள் அல்ல. ஒரு வகையில் அது அவர்களுக்குப் பழகியிருக்கும் நியதி. ஆனால், திறமைசாலிகள் என்று பாராட்டப்பட்டவர்களும், பத்து ஆண்டுகளுக்கு மேல் விசுவாசமாக உழைத்து இடைநிலை நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் கொத்துக் கொத்தாகத்  தூக்கியெறியப்படுவது அவர்களிடையே அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.

சுமார் 3.13 இலட்சம் பேர் பணியாற்றும் டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து 25,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கையை டி.சி.எஸ். மறுத்தது. “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாட்டுக்காக ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படுவதில் அதிசயமில்லை” என்றும் கருத்து சொல்லும் அளவுக்கு இது முக்கிய விசயமில்லை” என்றும் மிகத் திமிராகவும் பதிலளித்தது.

டி.சி.எஸ் லே ஆஃப்
“வேலை நீக்கம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கமாக அணிதிரள வேண்டும்” என்ற பதாகைகளுடன் சென்னை – சோழிங்கநல்லூர் சந்திப்பில் அணிதிரண்டிருந்த பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர்கள்

சர்வதேச அளவில் 4 இலட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எம். நிறுவனம், அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆட்குறைப்பு செய்யவிருக்கிறதென்று ஜன-26 அன்று போர்ப்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. “வதந்திகளுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது” என்று மட்டுமே ஐ.பி.எம். இதற்குப் பதிலளித்திருக்கிறது.

விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ. சி.டி.குரியன் “நாங்களும் டி.சி.எஸ். செய்வதையே செய்ய விரும்புகிறோம்” என்று அறிவித்திருக்கிறார். 1.4 இலட்சம் ஊழியர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சமாக குறைக்கவிருக்கிறது விப்ரோ. யாகூ, எச்.பி., எச்.சி.எல், டெல், சிஸ்கோ, ஆல்டிசோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பை நடத்தி வருகின்றன.

கிரிசில் (CRISIL) என்ற தரநிர்ணய நிறுவனத்தின் ஆவின்படி, இந்தியாவில் ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் சுமார் 31 இலட்சம் பேர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருகிறார்கள். 2013-14 இல் பொறியாளர் உள்ளிட்டு மொத்தமாக வேலை கிடைக்கப் பெற்றவர்கள் 1.05 இலட்சம். 2017-ம் ஆண்டிற்குள் ஐ.டி. வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 55,000 – ஆக குறைந்து விடும் என்று கூறுகிறது கிரிசில். அதாவது 12 பொறியாளரில் ஒருவருக்குக்கூட வேலை கிடைப்பது அரிது என்பதே இதன் பொருள்.

சிறுசேரி டி.சி.எஸ் நுழைவாயிலில் பிரச்சாரம்
சென்னை – சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை அமைப்பினர்.

“கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு!”

நடைபெற்று வரும் இந்த ஆட்குறைப்பு, வேலையில் இருக்கும் இளைஞர்களையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது. இந்த அச்சம், அவர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கான வாய்ப்பை நிர்வாகத்துக்கு வழங்குகிறது. கல்விக் கடன் வாங்கி பொறியியல் பட்டம் பெற்று, ஐ.டி. துறை என்ற பொன்னுலகத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென்றும், அப்படியே ஆன்சைட் வாய்ப்பைப் பெற்று ஒரு முறையாவது அமெரிக்காவைத் தரிசித்துவிட வேண்டுமென்றும் கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் ஆட்குறைப்பு குறித்த செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பய்.
வேலைநீக்க நடவடிக்கைகளை இரக்கமின்றி நியாயப்படுத்திய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பய்.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் மூலம் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருகி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை, நடுத்தர வர்க்கத்தினரின் மத நம்பிக்கையாகவே உருவாக்குவதிலும், அவர்கள் வழியாக சமூகம் முழுவதற்கும் இக்கருத்தைப் பரப்புவதிலும் ஐ.டி. துறை வேலைவாய்ப்பு பெரும்பங்கு வகித்து வந்திருக்கிறது. மலையை அறுத்து கிரானைட்டாக ஏற்றுமதி செவதையும், ஆற்றைச் சூறையாடி பலமாடி கட்டிடம் கட்டுவதையும், நிலத்தடி நீரை பாட்டிலில் அடைத்து விற்பதையும் கிராமப்புற மக்கள் சோற்றுக்காக நகரம் நோக்கி ஓடுவதையும் “முன்னேற்றம்” என்று கூசாமல் பேசுகின்ற துணிச்சலை நடுத்தர வர்க்கத்துக்கு வழங்குவதில், ஐ.டி. சம்பள மயக்கமும், அமெரிக்க மோகமும் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது.

ஓய்வு பெறும் வயதில் தான் எட்டிப்பிடித்த சம்பளத்தை, தன்னுடைய மகன் 25 வயதிலேயே பெற்றுவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தவர்கள், அந்தப் பிள்ளை 35 வயதில் கட்டாய ஓய்வளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறார்கள். இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நடுத்தர வர்க்கத்தால் போற்றப்படும் நாராயணமூர்த்தி போன்றோர் இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்கள்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களில் ஒருவரான மோகன்தாஸ் பய், தற்போது நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்:

“இன்று வேலைநீக்கம் பற்றிப் புகார் செபவர்களுக்கு நவீன போட்டிப் பொருளாதாரம் பற்றித் தெரிவதில்லை; திறமைகளை இடையறாமல் மறுசீரமைப்பு செய்தால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்… தொழில் நன்றாக இருந்த நாட்களில் இவர்கள் தகுதிக்கு அதிகமாக ஊதியம் வாங்கினார்களல்லவா? கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு. அதற்குத் தயாராக இல்லையென்றால் எப்படி? ஐ.டி. துறையிலிருந்து கொஞ்சம் ரத்தத்தை வெளியேற்றுவதுதான் இந்த துறைக்கு நன்மை பயக்கும்.” (நியூஸ் மினிட், ஜன 3, 2015)

“முதலாளித்துவம்”, “சுரண்டல்” என்பன போன்ற சோற்களைப் பொதுவாக ஐ.டி. துறை சார்ந்த புதிய நடுத்தர வர்க்கத்தினர் விரும்புவதில்லை. அவை தங்களைப் போன்ற திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறியிருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சல் பேர்வழிகளின் புலம்பல் என்றே அவர்களில் பலர் கருதிக் கொள்கின்றனர். அவர்களுக்கு முதலாளித்துவத்தின் உண்மைச் சொரூபத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பய். மனிதவளம் என்று அழைக்கப்பட்ட ஐ.டி. ஊழியர்கள், இன்று வெளியேற்றப்படவேண்டிய கெட்ட ரத்தம் என்றும், குறைக்கப்பட வேண்டிய சதை (flab) என்றும் கரித்துக் கொட்டப்படுவது ஏன்?

மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு தொடங்கப்பட்டதையொட்டி, சென்னை – சோழிங்கநல்லூர் அருகிலுள்ள படூரில் சனவரி – 10 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ்.

அநீதியான இந்த ஆட்குறைப்பை எதிர்த்துப் போராட வேண்டும், சங்கம் அமைத்து உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அதே நேரத்தில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் பின்புலத்தையும், இதற்கு வழிவகுக்கும் இந்தத் தொழிலின் தன்மையையும் இப்பிரச்சினைக்கு வெளியில் நின்று பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அவசியம்.

30 வயதில் ரிட்டையர்மென்டா?

இன்று ஆட்குறைப்பு செய்யப்படுவோரில் பலர் 6 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய இடைநிலை மேலாளர்கள். முன்னொரு காலத்தில் காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்பட்டவர்கள். வெளியேற்றப்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தினாலேயே தீவிரமாக முயன்று தங்களது நிறுவனத்தின் கூம்பு வடிவ நிர்வாகக் கட்டமைவில் மேலே ஏறியவர்கள். பொறியாளர்களுக்கு வேலைகளை ஒதுக்கித் தருவது, மென்பொருளின் தரத்தைப் பரிசோதிப்பது, புதியவர்களைப் பயிற்றுவிப்பது போன்ற இவர்கள் செய்து வரும் பணிகளில் பல இப்போது தானியங்கிமயமாகி (automated) வருகின்றன. மேலும் இவர்கள் செய்து வரும் பணிகளை இவர்களை விடக் குறைவான ஊதியத்தில் செய்வதற்குத் தயாராக ஒரு பெரிய வேலையற்றோர் பட்டாளம் வெளியில் காத்திருக்கிறது. எனவே இவர்கள் வேண்டாத சதைப்பிண்டமாகிவிட்டார்கள்.

“இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 2007-08 இல் 25.5 ஆக இருந்தது, 2012-13 இல் 27.5 ஆக உயர்ந்து விட்டது. இதன் காரணமாக ஒரு சராசரியாக ஒரு ஊழியரின் ஊதியத்தின் அளவும் அதிகரித்து விட்டது” என்று தனது ஆய்வில் கவலை தெரிவித்திருந்தது பர்க்லேஸ் என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம். 1981-ல் தொடங்கப்பட்டு, 1999-ல் நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும் அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012-ல், “ஊழியரின் சராசரி வயது 27 ஆக இருப்பது அந்த நிறுவனத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று மதிப்பிடப்படுகிறதென்றால், ஐ.டி. நிறுவனங்களின் சராசரி ஓய்வு பெறும் வயது 30 என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு
பு.ஜ.தொ.மு.வின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்கள்.

நாஸ்காம் தருகின்ற ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். நூறு கோடி டாலர் வருவாய் ஈட்டுவதற்கு இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு 2012-13 ஆம் ஆண்டில் 26,500 ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். 2013-14 ஆம் ஆண்டில் வெறும் 13,000 ஊழியர்களைக் கொண்டு அதே நூறு கோடி டாலர் ஈட்டியிருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள் (NDTV, அக்-13). இது மட்டுமல்ல, இந்தியாவின் ஐ.டி. துறையில் புதிய ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் உண்மை மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் இப்போதுதான் மிகவும் குறைவாக இருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது கிரெடிட் சுயிஸ் என்ற முதலீட்டு நிறுவனம். ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதிய வெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஊழியர்கள் மீது ஏவப்படுவதை மேற்கூறிய தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இலாபவெறி, தானியங்கிமயம் என்ற கிடுக்கிப்பிடி!

“மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமை, இலாப விகிதத்தின் வீழ்ச்சி” போன்ற நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறு வழியில்லாமல்தான் ஆட்குறைப்பு செய்யப்படுவது போன்ற ஒரு சித்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அது உண்மையல்ல. டி.சி.எஸ். மிகையாக இலாபம் ஈட்டியிருக்கும் இந்தஆண்டில்தான் ஆட்குறைப்பும் கூடியிருக்கிறது. ஊழியர்களுடைய உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரித்து வருவதுதான் ஆட்குறைப்புக்கும் வழிவகுத்திருக்கிறது.

தானியங்கிமயம் (automation) மனித எந்திரமயம் (robotisation) செய்யற்கை நுண்ணறிவு (artificial
intelligence) என ஐ.டி. துறையே புதிய சட்டகத்துக்குள் நுழைந்து விட்டதாகவும் இதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் தேவையற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவியலாது என்றும் கூறுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உண்மையில் கீழிருந்து மேல் வரை பல்வேறு பணிகளுக்குமான நிரல்களை (programmes) அன்றாடம் எழுதுகின்ற பல்துறைப் பொறியாளர்கள், தம் பணியின் ஊடாக, தம்மைத்தாமே தேவையற்றவர்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சிப்போக்கு மற்ற உற்பத்தி துறைகளில் நடப்பதைக் காட்டிலும் விரைவாக ஐ.டி. துறையில் நடந்தேறுவதைத்தான் நாம் காண்கிறோம். பொதுவாக எந்த தொழிலானாலும், அதில் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவேண்டும். ஆனால், இந்த முன்னேற்றத்தின் ஆதாயத்தை முதலாளித்துவம் அறுவடை செய்து கொள்வதால், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முன்னிலும் அதிகமாக பணிச்சுமையைத்தான் கூட்டுகிறது. ஏராளமானோரை வேலையில்லாதவர்களாக்கி வெளியேற்றுகிறது.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு“அமெரிக்க மூளையைவிட இந்திய மூளை மலிவு – இந்திய மூளையைவிட எந்திர மூளை மலிவு” என்ற முதலாளித்துவ இலாப-நட்டக் கணக்குதான் “தொழில்நுட்ப முன்னேற்றம்” என்று பெயரில் மோகன்தாஸ் பய் போன்றோரால் நியாயப்படுத்தப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் பொறியியல் பட்டம் வரை சுமார் 20 ஆண்டுகாலம் “படி, படியென்று படித்து”, வேலையில் அமர்ந்த 7,8 ஆண்டுகளிலேயே “லாயக்கில்லை” என்று துரத்தப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் இந்த இலாப – நட்டக் கணக்கு பொருட்படுத்துவதில்லை.

வேலையிலிருந்து துரத்துவது மட்டுமல்ல, பத்தாண்டுகள் உழைத்தவனுக்கு எந்தவித செட்டில்மென்டும் தராமல் வெளியேற்றுவதற்காகத்தான், பணித்திறன் குறைந்தவர் என்று முத்திரை, கட்டாய ராஜினாமா போன்ற வழிமுறைகள். மறுப்பவர்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலைக் காட்டிப் பணிய வைக்கப்படுகின்றனர். இலாபத்தைத் தவிர வேறெந்த மதிப்பீடும் (value) இவர்களுக்கு கிடையாது என்பதே இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
மன்மோகன் சிங்குக்கே இதுதான் கதி!

இதனைப் புரிந்து கொள்ளாமல், ஹையர் அன்டு ஃபயர் (Hire and Fire) என்ற முதலாளித்துவத்தின் விதியை ஒப்புக்கொண்டு, “பணித்திறனற்றவர் (under performer) என்று முத்திரை குத்தாமல் வெளியேற்றினாலாவது, இன்னொரு நிறுவனத்தில் நாங்கள் வேலை தேடிக்கொள்ள முடியுமே” என்ற கோணத்தில் சிலர் அசட்டுத்தனமாக இறைஞ்சுகிறார்கள். தாங்கள் விரும்பிய வேகத்தில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தாமல் தடுமாறிய குற்றத்துக்காக, ஆனானப்பட்ட மன்மோகன் சிங்கையே “அண்டர் பெர்ஃபார்மர்” என முத்திரை குத்தித்தான் வெளியேற்றியது, “நன்றி கெட்ட” கார்ப்பரேட் முதலாளி வர்க்கம். அவ்வாறிருக்க, ஐ.டி. ஊழியர்கள் எம்மாத்திரம்?

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு

இன்னொரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைப்பதற்குக்கூட அறிவு பூர்வமாக ஒரு அடித்தளம் இருக்க வேண்டும். டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்களின் 80% வருவாய் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சார்ந்தே இருக்கிறது. தங்கள் நாட்டைக் காட்டிலும் மிகவும் குறைவான ஊதியத்தில் இந்தியாவில் ஊழியர்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான், அமெரிக்க, ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் இந்திய ஐ.டி. நிறுவனங்களிடம் பணிகளை அவுட் சோர்ஸ் செய்கின்றன.

நாராயணமூர்த்தி, டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோருக்கும் கட்டிட வேலைக்கு ஆள் சப்ளை செய்யும் காண்டிராக்டர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமது வாடிக்கையாளர்கள் அவுட்சோர்ஸ் செய்யும் வேலைகளுக்கு, “நேரம், பொருட்செலவு, ஊழியர்களுக்கான ஊதியம்” ஆகியவற்றைக் கணக்கிட்டு இன்வாய்ஸ் போட்டு அமெரிக்க-ஐரோப்பிய கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்து, அந்தப் பணத்தில் பாதிக்குப் பாதி கமிசன் அடிப்பதுதான் இவர்கள் செய்து வரும் தொழில்.

இந்த முறையிலான ஒப்பந்தத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இவர்களுடைய இலாபமடிக்கும் தொகையும் அதிகரிக்கும். இதுநாள்வரை ஏராளமாக ஊழியர்களைப் பணியமர்த்தியதற்குக் காரணம் இதுதான். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேரை வேலையேதும் இல்லாமல் “பெஞ்சில்” அமரவைத்து, அவர்கள் பெயரிலும் கணக்கெழுதி பணம் வசூலித்து வந்தார்கள் இந்த நவீன இந்தியாவின் சிற்பிகள்.

நீலக்காலராக மாற்றப்படும் வெள்ளைக்காலர்கள்!

பு.ஜ.தொ.மு. - ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம்.
பு.ஜ.தொ.மு. – ஐ.டி ஊழியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம்.

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைமையிலிருந்து மீள முடியாத காரணத்தினால், அவை தமது இலாபத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கூறிய ஒப்பந்த முறையை மாற்றுகின்றனர். “எத்தனை ஊழியர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை; குறிப்பிட்ட வேலையை முடித்து தருவதற்கு இவ்வளவு தொகை” (outcome based pricing model)  என்று ஒப்பந்தம் போடுகின்றனர். ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் தனது இலாப விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் திட்டமிடும் ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் தானியங்கிமயமாதல் நடவடிக்கையிலும் இறங்குகின்றன.

இதுமட்டுமின்றி, முதலாளித்துவ உற்பத்தியின் தன்மை காரணமாக, வங்கிச் சேவை, காப்பீடு, கடன் வசூல், பயண முன்பதிவு என்பன போன்ற சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் முறைகள் ஒவ்வொன்றும்  ஒருபடித்தானவையாக (commoditization) மாறி வருகின்றன. ரவா, மைதா போன்றவை பல பிராண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு ஒன்றுதான் என்பதைப்போலவே, கிரிண்ட்லேஸ், ஸ்டான்சார்ட் என்று வங்கிகள் வேறாக இருப்பினும் அவை வழங்கும் சேவையும் அவற்றை நிர்வகிக்கும் முறையும் அநேகமாக ஒன்றுதான் என்பதால், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். போன்ற எந்த நிறுவனம் அந்தப் பணியைக் குத்தகைக்கு எடுத்து செய்தாலும், “வேலையின் தரத்திலோ செய்யும் முறையிலோ பாரிய வேறுபாடு இல்லை. விலையில்தான் வேறுபாடு” என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, அடக்கவிலையைக் குறைப்பதொன்றுதான் (cost cutting) இலாபத்தை அதிகரிப்பதற்கான வழி என்பதால், தானியங்கிமயமாதல் தீவிரப்படுத்தப்படுகின்றது.

இனி, வழமையான ஆளெடுப்பு முறைகளைக் கைவிட்டு, “ஜஸ்ட் இன் டைம்” (Just in time) என்ற முறைக்கு, அதாவது எந்தக் கணத்தில் தேவையோ அந்தக்கணத்தில் தேவைப்படும் ஆட்களை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது என்று ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. தனித்திறன் வாய்ந்த சிலரை மட்டும் முறையாக பணியமர்த்திக் கொள்வது, எஞ்சியுள்ள ஆகப்பெரும்பான்மையான ஊழியர்களைப் பொருத்தவரை, “எக்ஸ்போர்ட் ஆர்டர் இல்லையென்றால் வேலை இல்லை” என்று கைவிரிக்கும் திருப்பூர் கம்பெனிகளின் வழிமுறைக்கு மாறத் திட்டமிடுகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

நீலக்காலருக்கும் வெள்ளைக் காலருக்கும் இடையிலான வண்ண வேறுபாட்டை முதலாளி வர்க்கம் அகற்றி வருகிறது. காலைப்பொழுதில் நகர முச்சந்திகளில் கையில் தூக்குவாளியும், கண்களில் ஏக்கமுமாக வேலை தேடிக் காத்திருக்கும் கட்டிடத் தொழிலாளிகளையும் பொறியியல், நிர்வாகவியல் பட்டதாரிகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு மங்கி வருகிறது.

பணத்தை எண்ணுவதையும், பங்குச் சந்தையில் சூதாடி இலாபமீட்டுவதையும் தவிர வேறு வேலை தெரியாத முதலாளி வர்க்கம், தன்னுடைய இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, ஆகப்பெரும்பான்மையான உழைப்பாளிகளைத் தேவையற்றவர்கள் என்றும் திறமையற்றவர்கள் என்றும் முத்திரை குத்திக் கழித்துக் கட்டுகிறது. உடலுழைப்பாளிகளோ, மூளை உழைப்பாளிகளோ அனைவருக்கும் நேர்ந்து வருவது இதுதான். உண்மையில் இந்த சமூகத்துக்கு எந்த விதத்திலும் தேவைப்படாதவர்கள், முதலீட்டாளர்கள் என்று கவுரவமாக அழைக்கப்படும் முதலாளி வர்க்கச் சூதாடிகள்தான்.

பன்னாட்டு நிறுவன வேலை, அதிக ஊதியம், அமெரிக்கச் சார்பு, தமது தகுதி-திறமை குறித்த மயக்கம், சக ஊழியனைப் போட்டியாளனாகக் கருதும் மனோபாவம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டிருக்கும் ஐ.டி. துறையினரும், காம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப்படுவதற்காகத் தவமிருக்கும் மாணவர்களும் உண்மையைக் கண் திறந்து பார்ப்பதற்கான வாய்ப்பை தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
நாராயணமூர்த்தியும் பில் கேட்சும் இலட்சிய நாயகர்களாகக் கருதப்படும் சமூகத்தில் நாம் தேவையற்றவர்களாவதைத் தவிர்க்க முடியாது. அவர்களையும் அவர்களுடைய வர்க்கத்தையும் தேவையற்றவர்களாக்கும் ஒரு சமூக அமைப்பைப் பற்றி உடனே சிந்திக்குமாறு அவர்கள் நம்மை நிர்ப்பந்திக்கிறார்கள்.

-சூரியன்

________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

16

தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும்,  நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இது குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன  என்பதையும் விளக்கும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி.

மணல் கொள்ளையும் ஏரிகளின் அழிவும்

ற்று மணல் முறையற்ற வழிகளில் தோண்டி எடுக்கப்படுவதால் தமிழ் நாட்டின் ஏரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஆற்றின் மட்டத்தை சரியாக வைத்திருப்பது மணல்

மணல் என்பது புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அது உருவாக இயற்கை ஏராளமான ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். இன்று நாம் பயன்படுத்தும் ஆற்று மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் விரைவாக்க முடியாது. எனவே, நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும், இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும். மணலை ஆழமாகத் தோண்டி எடுப்பதன் மூலம் ஆறுகளைப் பள்ளமாக்கி அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் எதிர் விளைவுகள் குளங்கள் வறண்டு போய் தமிழ் நாட்டின் நீர்வளம் குன்றி விடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் இந்த தொடர் மூலம் விளக்க இருக்கிறோம்.

குளங்கள் இல்லாத ஊர்களைத் தமிழ்நாட்டில் காண்பது அரிதினும் அரிது. இந்தக் குளங்கள் ஆங்காங்கு பெய்யும் மழை நீரை மட்டும் சேமிப்பது இல்லை. பல மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து பெரும் நீரையும் பெற்று சேமிக்கின்றன. இப்படி சிறுதும் பெரிதுமான நீர்நிலைகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான மைல்கள் நீளமுடைய கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், இந்தக் கால்வாய்கள் அனைத்தும் ஆற்றில் தொடங்கி குளங்களில் இணைந்து, பின்னர் மீண்டும் ஆற்றில் வந்து முடிகின்றன. வெகு சொற்பமான அளவு தண்ணீரே கடலுக்கு சென்று சேர்கிறது. எனவே, ஆறுகள் சீருடன் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள குளங்கள் சீருடன் இருக்கும்.

மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி
மதுரை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள், கிராமங்களைக் காட்டும் வரைபடத்தின் ஒரு பகுதி (படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது சொடுக்கவும்)

இங்கே இணைக்கப்பட்ட படத்தை பார்க்கவும். சுமார் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குட்பட்ட ஒரு சிறிய பகுதியில் 40 ஏரிகளை நீங்கள் பார்க்கலாம். வைகை ஆறு வட பகுதியில் ஓடுவதை பார்ப்பீர்கள். எண்ணற்ற சிற்றோடைகள் மலைகளில் தொடங்கி ஏரிகளில் முடிவதையும் அவை மீண்டும் இணைந்து பெரிய ஓடைகளாகி பின்னர் மீண்டும் ஆற்றில் இணைகின்றன. இவை அனைத்தும் பல நூறு ஆண்டு கால மனித உழைப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிற்றோடைகளை நம்பியே ஏரிகள் இருக்கின்றன. இந்த ஓடைகள் அனைத்திலும் அடியில் தேங்கும் மணலை அள்ளிவிட்டால் இந்தக் குளங்களின் நிலை என்னவாகும். ஓடைகளிலிருந்து வரும் தண்ணீர் குளங்களுக்கு செல்லாமல் வீணாகி எங்கோ சென்று சேரும். இது தவிர்த்து ஆற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்ட குளங்களை கீழ் வைகைப் பகுதியின் வரைபடத்தில் பார்க்கலாம்.

மனித உழைப்பின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவன் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும். அதனினும் மகத்தானது அவன் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116. இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை.

ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாகி கடலுக்குச் சென்று சேரும். பன்னெடுங்காலம் நீர் வழங்கி நம் சமூகத்தைக் காத்து வந்த இந்தக் குளங்கள் பாழ்பட்டு அழிந்து படுவதில் இந்த மணல் கொள்ளையர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏரிகளைக் காப்பது முதல் பணி

ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சேமிக்க வழியில்லாமல் போய் விடும் என்பதைப் பற்றிப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அதை விட மிக முக்கியமானது ஆறுகளை நம்பி இருக்கும் ஏரிகள், குளங்கள் நாசமாவது தான். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் சேமிக்கப் படுவதில்லை. ஆற்றின் ஓரங்களில் உள்ள ஊர்களில் மட்டும் கிணற்றைக் கொண்டுள்ள விவசாயிகள் இதுபற்றி கவலை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டின் பெரும் பகுதி கிராமங்கள் ஆற்றிலிருந்து வெகு தொலைவில்தான் உள்ளன. அவர்கள் வைகை போன்ற ஆறுகள் நாசமாவதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் குமுறி வருகின்றனர். அத்தகைய கிராம மக்கள் பெருகி வரும் மணல் கொள்ளையினால் ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள தமது குளங்களுக்கு நீர் வருவதில்லை என்பது பற்றிய கவலையில் ஆண்டு தோறும் மூழ்கி வருகிறார்கள். எனவே, ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதன் முதல் சேதம் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும்தான். அதிலும் பெரும் ஏரிகளுக்கு ஏற்படும் சேதம் மிகவும் தீவிரமானது. பல நூறு ஆண்டுகள் பணி செய்த இத்தகைய ஏரிகளை அழிக்கும் மணல் கொள்ளையை நிறுத்துவது மட்டுமே எதிர் வரும் பேரிழப்பை தடுக்கும்.

வைகை ஆறும் குளங்களும்

தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளில் வைகையும் ஒன்று. தமிழ் நாட்டில் குறைவான மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியிருந்த இந்த வைகை ஆறுதான் தமிழ்நாட்டில் முதன் முதலில் சீரழிக்கப்பட்டது. ஆற்று மணல் அள்ளப்படுவதால் அதனை அண்டியிருக்கும் குளங்கள் அடையும் சேதத்தை வைகைப் பாசனப் பகுதி முழுவதும் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மதுரை நாட்டு அரசிதழ் நூல் (Mathura Country Manual) வைகையை நம்பி சுமார் மூவாயிரத்திற்கும் மேலான ஏரிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது.

கீழ்வைகை என்று அழைக்கப்படும் மதுரைக்கு கிழக்கே உள்ள பகுதியில் மட்டும் சுமார் 96 கால்வாய்கள் நானூறு ஏரிகளுக்கு நேரடியாகவும் சுமார் ஆயிரம் ஏரிகளுக்கு அதன் நீட்சியாகவும் தண்ணீரை இட்டுச் செல்கின்றன. கீழ் வைகையின் ஒரு சிறிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பை இப்படத்தில் காண்க.

கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு
கீழைவைகையின் ஒரு சிறிய பகுதியில் ஆற்றுடன் கூடிய கால்வாய் கட்டமைப்பு

கீழ் வைகைப் பகுதிகளில், மட்டும் இவ்வாறு ஆற்று நீரை கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குப் பெற்று பயன் அடையும் மொத்தப் பாசனப் பரப்பு சுமார் இரண்டு லட்சம் ஏக்கர். இந்த நிலங்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கின்றன. இப்படி காலத்தால் பழமையான பாசன முறைகளை கொண்டது வைகை. தமிழ் நாட்டில் கடலில் கலக்காத ஆறு என்ற புகழைப் பெற்ற பெரும் ஆறு வைகை. வைகை கடைசியாக ராமநாதபுரம் பெரிய ஏரியில் சென்று கலக்கிறது. சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் பயன்படுத்தி வாழ்ந்த ஒரு சமூகம் இன்றோ சீரழிந்து சின்னாபின்னமாகி கிடக்கிறது. இங்கு குறிப்பிடும் ஏரிகளுக்கும் பெரியாறு பாசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை வேறொரு சமயம் விளக்கலாம்.

பிரடெரிக் காட்டன் என்ற பொறியாளர் ஒரு சிறப்புரையில் வைகையைப் பற்றி 1901 ம் ஆண்டு எழுதினார், “நீர்பாசனத்தை பெருக்குவதென்றால் வைகையைப் போல செய்திட வேண்டும்”. ஆண்டுக்கு இருபது நாட்களுக்கும் குறைவாக மட்டுமே நீர் ஓடும் வறண்ட வைகையில் அப்படியென்ன சிறப்பான முறையிருந்திருக்க முடியும்?

அவர் இவ்வாறு எழுதினார்,

“எனது நினைவு சரியாக இருக்குமானால், இந்திய தீபகற்பத்தின் கடைகோடியில் ஓடும் வைகை ஆற்றின் நீர் எப்போதோ ஒருமுறை மட்டுமே கடலில் சென்று சேர்கிறது; நாம் வியப்புறும் வண்ணம் அந்த ஆற்று நீரின் ஒவ்வொரு சொட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் ஓடும் பொழுது ஆற்றின் குறுக்கே அங்கும் இங்குமாக அணைகள் போடப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டு பயிர்க் காலம் முழுதுக்குமான தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் குளங்களில் ஆங்காங்கு சேமிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இதுதான், மிகப் பெரும் ஆறுகளை நாம் நடத்தும் நெறி முறையாக இருக்க வேண்டும். தற்காலத்தில் மிகப் பெரும் நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கான இடங்களைத் தேடியலைவது என்பது பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. நீர்த்தேக்கங்களின் அளவு பெரிதாக ஆக அதை நிர்மாணிக்கும் செலவுகள் குறையக் கூடும் என்பது உண்மையே. ஆனாலும், தண்ணீரின் உண்மையான மதிப்பை அறிய வேண்டுமானால், அதற்காகும் செலவுகள் முதன்மையான காரணமாக இருக்கக் கூடாது மாறாக, அது எங்கே எப்படி தேக்கப்படுகிறது என்பதே முக்கியமானதாகும்.

நீர்தேக்கங்கள் அமைக்க புதிய இடங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் தீபகற்ப இந்தியாவின் புவியியல் வரைபடங்களை முதலில் தெளிவாக ஆராயவேண்டும். அங்கே தான், ஒவ்வொரும் பள்ளமும் மேடும் ஒரு ஏரியாக உருப்பெற்றிருப்பதைக் காண முடியும். ஏரிகள் என்று அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கங்கள் பெரும் பஞ்ச காலத்தில் பேருதவியாக இல்லாவிட்டாலும் வறண்ட காலங்களில் மதிப்பிட முடியாத தண்ணீரை தேக்கி வைக்கும். கூடவே, இந்த ஏரிகளை அருகில் இருக்கும் பெரிய ஓடைகள் அல்லது வற்றாத ஆற்றுடன் இணைத்துவிட்டால் பஞ்ச காலத்திலும் கூட தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்துக் கொள்ள முடியும். நமது மாபெரும் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) இப்படி வற்றாத ஆறுகளை இணைத்து ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான ஏரிகளுக்கு நீரை வழங்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், நான் உங்களனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் பல பள்ளத்தாக்குகளைக் கொண்டிருக்கும் இந்தியா முழுவதும், வைகையில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு பாசன கட்டமைப்பை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்பதுதான்.”

என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே சொன்னார்.

கீழ் வைகை பகுதியின் குளங்கள்
கீழ் வைகை பகுதியின் குளங்கள்

நீரை மிகவும் சிக்கனமாகவும் சீரிய முறையிலும் தேக்கி வைக்கும் வழிமுறைகளுக்கு ஒரு மிகப் பெரிய சான்று உண்டென்றால் அது இங்கே தான். உயர்ந்த அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கொண்டிருக்கும் நாம் காலத்தால் பழமையான இந்த முறையை பின்பற்ற வெட்கப்பட வேண்டியதில்லை.

பிரெடெரிக் காட்டன் 1901 -ம் ஆண்டு எழுதிய “இந்தியாவின் மாபெரும் ஆறுகளை பற்றிய ஒரு கடிதமும் இரண்டு கட்டுரைகளும்: நாட்டை வளமாக்கவும் பெரும் பஞ்சங்களை தடுக்கவும் செய்யத்தகுந்தது என்ன ? எனது எழுபது ஆண்டு கால ஆய்வுப் பணிக்குப் பின் எழுதியது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

பிரெடெரிக் காட்டன், ஒரு ஆங்கிலேயர், ஏகாதிபத்திய மனப் பாங்குடையவர். இந்தக் கட்டுரையை அவர் எழுதிய போது அவர் வயது தொண்ணூற்று நான்கு. எழுபது ஆண்டுகள் பொறியியல் பணியும் ஆய்வும் செய்த அனுபவம் மிக்கவர். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளைச் சுற்றியவர். இங்கிலாந்து நாட்டின் பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முடிந்து செல்லும் இளம் பொறியாளர்களுக்கு என அவர் இதனை எழுதினார். வைகையின் பாசனத்தைப்பற்றி தலை சிறந்த பொறியாளர்கள் மட்டுமின்றி கிறித்தவப் பாதிரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆங்கிலேய அதிகாரிகள், நிலவியல் வல்லுனர்கள் என்று பலரும் வியந்து எழுதியுள்ளனர். ஆறுகளையும் குளங்களையும் வன்முறையின்றி ஒரு சேர இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை வைகையில் கண்டவர்கள் பலர்.

வைகை ஆற்றின் நீர் சுமார் ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று சேரும் வண்ணம் ஒரு வலைப் பின்னல் போன்ற கால்வாய்களும் ஏரிகளும் அடங்கிய ஒரு கட்டமைப்பை பழந்தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக செய்து வைத்திருந்தனர். ஆனால், வைகையின் இன்றைய நிலை என்ன?

இதோ, தமிழ்நாட்டு அரசின் வைகை குறித்த 2004-ம் ஆண்டு வெளியான மிக விரிவான ஒரு சுற்றுப்புற சூழல் அறிக்கை, விரகனூர் அருகில் உள்ள கீழ் வைகைக் கால்வாய்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

“இந்த இடத்தில், மிக ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் தோண்டப்பட்டதாலும், அதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கால்வாய்கள் எதுவும் செயல்படவில்லை. கட்டனூர் கால்வாய் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டது. இது தவிர்த்த இரண்டு கால்வாய்கள் அவை தொடங்கும் இடத்திலேயே காணவில்லை, சிறிது தூரம் சென்ற பின்னர் மட்டுமே தென்படுகின்றன. ஆனாலும் கூட, வைகை ஆற்றிலிருந்து இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”.

இதே அறிக்கை, வைகையாற்றின் பாசனம் பெறும் பகுதி நெடுகிலும் என்னென்ன சூழல் மாசுகள் உள்ளன, அதனால் ஆறும், பாசனக் குளங்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிவிக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பெரும் பொறியாளர்கள் வியக்கும் வண்ணம் செயல் பட்டு வந்த ஆறும் கால்வாயும் இன்று எப்படி அழிந்து ஒழிந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆறு பள்ளமானால் கால்வாய் மேடிட்டுப் போகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு எடுத்துக் காட்டாக, மதுரை நகரத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டுக் கால்வாய்களின் நிலையை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

ஆற்றுக் கால்வாய்களின் நிலைமை

அட்டவணை-1 மதுரை நகருக்கு அருகில் உள்ள கால்வாய்களின் நிலை

வரிசை எண் கால்வாயின் பெயர் கால்வாய்க்கும் ஆற்றுக்கும் இடையே தோண்டப்பட்ட மணல் பள்ளம் (அடிகளில்) கால்வாயின் நிலைமை
1 மாடக்குளம் கால்வாய் 20 பாசனப் பரப்பு 3400 ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் ஆக குறைந்து விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேறு ஒரு பகுதியில் இருந்து நீர் வழங்கப் பட்டு வருகிறது.
2 கீழமாத்தூர் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை.
3 துவரிமான் வரத்துக் கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. சுமார் 440 ஏக்கரில் பாசனம் இல்லை
4 கோச்சடை கால்வாய் 30 பயன்பாட்டில் இல்லை. சுமார் 500 ஏக்கரில் பாசனம் இல்லை.
5 அச்சம்பத்து ஊற்றுக் கால்வாய் 25 பயன்பாட்டில் இல்லை
6 அவனியாபுரம் வரத்துக் கால்வாய் 40 பயன்பாட்டில் இல்லை. 1250 ஏக்கரில் பாசனம் இல்லை. மதுரை நகரின் சாக்கடை நீர் தேக்கப் படுகிறது.
7 சிந்தாமணி கால்வாய் 15 பயன்பாட்டில் இல்லை. 482 ஏக்கரில் பாசனம் இல்லை.
8 அனுப்பானடி வரத்துக் கால்வாய் 10 பயன்பாட்டில் இல்லை. 996 ஏக்கரில் பாசனம் இல்லை

இந்தக் கால்வாய்கள் அனைத்தும் மிகவும் புராதனமானவை என்பதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. கி.பி. எட்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகள் வைகையில் வெட்டப்பட்ட கால்வாய்கள் குறித்த ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. மேலே கண்ட குளங்கள் அனைத்தும் குறைந்தது பத்து நூற்றாண்டுளுக்கும் முந்தியவை. அவற்றில் சில சங்க காலத்தில் இருந்தே இருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறி வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே பணி செய்து வந்த இந்தக் கட்டுமானங்கள் இன்று செயலில் இல்லை.

தண்ணீர் வராத இந்தக் குளங்களில் பல அழியும் நிலையில் இருக்கின்றன. மதுரை நகரைப் பற்றிய ஒரு இடைக்காலக் கல்வெட்டு “மாடக்குளக் கீழ் மதுரை” என்று அழைக்கிறது. இதன் பொருள் மாடக்குளத்தினால் பயன் பெற்ற மதுரை நகரம் என்பது. மதுரைக்கு முகவரி தந்த இந்தக் குளம் இன்று அழியும் நிலையில் இருக்கிறது. ஆண்டு தோறும் வைகையில் இருந்து தண்ணீர் பெற மிகுந்த சிரமம் அடைகிறது. பல நூறு ஆண்டுகள் செயல் பட்ட இந்தக் கால்வாய் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் செயல் படாமல் போய் தற்சமயம் வேறு ஒரு இடத்தில் ஆற்றை மடக்கி, நீரைத் தேக்கி, மடைமாற்றி சுற்றி வளைத்து தண்ணீரை கொண்டு வருகிறார்கள் பொதுப் பணித்துறையினர். வெகு விரைவில் இதுவும் சாத்தியமில்லாமல் போகும்.

ஆற்றிலே மணலைத் தோண்டி, தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் புவியியலுக்கும் மணல் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாளம் இது தான்.

வைகை ஆற்றுக்கும் ஏரிகளுக்குமான நீண்ட நெடிய தொடர்பை இன்னமும் விரிவாக இனி வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

– கிருஷ்ணராஜ்

மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்

88

மெட்ரிக்குலேஷன் – மழலையர் பள்ளிகள் மெக்காலேயின் உண்மையான வாரிசுகள்

(தமிழ்நாட்டை பீடித்திருக்கும் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 1997-ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை. கடந்த 18 ஆண்டுகளில் பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, கட்டணம் ஒவ்வொன்றும் பல மடங்கு அதிகரித்து இந்த தனியார் கல்விக் கொள்ளையர்களின் சுரண்டல் விரிவடைந்திருக்கிறது.  மறுபக்கம், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றன.

மக்களின் அடிப்படை உரிமையான கல்வித் துறையில் தனியார் சுரண்டலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கட்டுரை.)

ரு தேசிய இனத்தை முற்றாக அழிக்க வேண்டுமெனில் ‘’அவர்களின் மொழியை முதலில் அழி’’ என்பது தேசிய இன ஒடுக்குமுறையாளர்களின் பாதை.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!” என்ற வரிகளின் பொருள் என்னவாகி விட்டது? சொந்த மண்ணில் பிழைக்க வழி இல்லை, பிழைப்பு தேடி எட்டுத்திக்கும் ஓடி பிறந்த மண் பக்கம் திரும்பிக்கூட பார்க்க வேண்டாம் என்கிற நிலைதானே நிலவுகிறது!

மெக்காலே கல்வி முறை
தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மா.பொ.சி.அவர்களும், சி.சுப்பிரமணியம் அவர்களும் “தமிழால் முடியும்” “தமிழால் முடியாதது?” எது என்று தமிழின் வலிமையை உணர்த்திடும் வகையில் எடுத்துக் கூறினர். மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் மொழிப் போராட்ட தியாகிகள் சாகும்வரை தமிழை ஆட்சி மொழி, பயிற்றுமொழி, வழிபாட்டு மொழி என சகல துறைகளிலும் தமிழை அரியணை ஏற்றிட அரும்பாடுபட்டனர். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் சமஸ்கிருதமயமான பார்ப்பனத் தமிழும், ஆங்கில மோகமும் கொஞ்சம் மறைந்து தூய தமிழ் வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவ்வளர்ச்சி தேக்கமடைந்ததோடு நில்லாமல் ‘’மெல்லத் தமிழினிச் சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்!’’ என்ற நிலையை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். தமிழ்மொழியோடு தமிழ் இனமும் அழிந்து அதன் சொந்த அடையாளங்களை மெல்லமெல்ல இழந்து வருகிறது. அதற்கு இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் பிரதான பங்காற்றி வருகின்றன.

கலை, இலக்கியம், தொலைக்காட்சி, திரைப்படம், வழக்குமொழி, விளையாட்டு, பயிற்று மொழி, பொழுது போக்கு என்று எல்லாத் துறைகளிலும் தமிழ் ‘’தமிங்கிலமாக’’ (தமிழும் ஆங்கிலமும் கலந்ததாக) மாறி அழிவை நோக்கிக் சென்று கொண்டிருக்கிறது. தமிழன் பிறப்பால் மட்டும் தமிழனாக இருந்து கொண்டு, பேச்சு, நடை உடை, பண்பாடு, வாழ்க்கை முறை, சிந்தனை போன்ற ஒரு சமூகத்தின் அனைத்து அடையாளங்களையும் இழந்து வருகிறான்.

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு பேராசிரியர் தமிழ்க் குடிமகன், பேராசியர் அன்பழகன் போன்றோரின் விடாமுயற்சியால் தி.மு.க அரசு மருத்துவம், பொறியியல் கல்வியை இந்தக் கல்வி ஆண்டு 1996-97 முதல் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

நர்சரி பள்ளி
பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி, (ஷூ).

ஆனால் தமிழினத்தின் தனித்தன்மையை சகல துறைகளிலும அழிக்க, குழி தோண்டி புதைக்க தமிங்கில இனப் பிரிவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த ஐம்பதாண்டுகளில் கடின உழைப்பால் பெற்ற பலனை ஒரு சில நொடிகளில் அழித்துவிடக் கூடிய அசுர வேகத்தில் இந்த மெட்ரிக்குலேசன், மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் இந்த மழலையர் பள்ளிகளும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழினத்தின் அடையாளங்கூடத் தெரியாத அளவிற்கு, எதிர்கால தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.

புற்றீசலாகப் பெருகிவரும் மழலையர் – மெட்ரிக் பள்ளிகள்

கடந்த சில ஆண்டுகளில் மழலையர் பள்ளிகள் புற்றீசலாகப் பெருகி எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டிவிட்டது. பட்டிதொட்டி தோறும் பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு ஆடுகளுக்கு மாட்டியிருக்கிற வேலித்தடுப்பு போன்று ஒரு டை, காலணி,(ஷூ). நடை உடையில் மட்டுமல்ல, சிந்தனையை இழக்கச் செய்யும் மிகக்கொடிய, அறிவுபூர்வமற்ற, இயற்கைக்கு விரோத அமைதித் தாக்குதல் ஏறத்தாழ ஒரு கோடி சிறார்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில வழிக்கல்வி
இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.

இந்த மம்மி,டாடி கலாச்சாரம் சிறுவயதிலேயே எதிர்காலத் தலைமுறையினரை பிறந்த மண்ணிலேயே தாய் மொழி, தமிழ் பண்பாடு, சொந்த அடையாளங்களை இழக்கச் செய்து தமிழினத்திற்கு எதிராக உருவாக்கும் விசச் செயலாகும். வேறு வழி இல்லை என்று விபரம் அறியாத பெற்றோர்களும், படித்த மக்களில் ஒரு பிரிவினரும் இதை ஏற்கவேண்டிய நிலை உருவாகி விட்டது.

தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. 1980-க்கு பிறகு எண்ணிக்கை பதினைந்து மடங்காக அதிகரித்து இருக்கிறது. இந்த 1500 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில், ஏழரை லட்சம் இளம் தலைமுறையினர் தமிழே தெரியாமல் ஆங்கிலம், இந்தியில் கல்வியூட்டி வளர்க்கப்படுகிறார்கள்.

மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்பதால் பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு மொழிப் பாடப் பிரிவு ஒன்று மற்றும் இரண்டில் ஆங்கிலம் மற்றும் இந்திக்கே அதிக முக்கியத்துவம் தர்ப்படுகிறது. பெயரளவில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுக்காக தமிழ் ஒரு பாடமாக இருந்து வருகிறது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ் மட்டுமல்ல, தமிழாசிரியர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கல்வித் தகுதியும், இருபதாண்டுகள் ஆசிரியர் அனுபவமும் அதே பள்ளியில் பத்தாண்டுகள் துணை முதல்வர் என்ற அனுபவமும் இருந்த போதிலும் தமிழாசிரியரை ஆங்கில வழிப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக போடுவது எப்படி என்று புறக்கணிக்கிறார்கள்.

கேட்டால் ‘’இது என்ன அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளியா, அரசு விதிகளை ஏற்க? மெட்ரிகுலேசன் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள். அரசு ஒரு நயா பைசாகூட தருவதில்லை. இதில் அரசு தலையிட என்ன இருக்கிறது’’ என்கிறது மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிர்வாகம்.

மெட்ரிக் பள்ளிகளின் சுரண்டல் கொள்ளை

மெட்ரிக் சுரண்டல்
சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மெட்ரிக்குலேசன் வணிக நிறுவனங்கள் ஆங்கில மோகம் கொண்ட, நல்ல வருவாய்கொண்ட நடுத்தர பிரிவினரின் பிள்ளைகளுக்காகவே பள்ளியை நடத்தி வருகின்றன. சுயநிதியைக் கொண்டு கல்விக்காக செய்துவரும் சேவை என்று சொல்லிக் கொண்டு, லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்க மிகவும் லாபகரமான தொழில் வணிக நிறுவனமாக தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

நடுத்தர மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு பையனுக்கு ஆண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை கறந்து விடுகின்றன. இப்பள்ளிகளை கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மக்கள் திரும்பிக்கூடப் பார்க்க இயலாது.

வர்க்க பிரிவினை
மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள்.

திட்டமிட்டே மிக உயர் வருவாய் பிரிவினருக்கு ஊட்டி, கொடைக்கானல், டூன் போன்ற இடங்களில் சி.பி.எஸ்.சி பள்ளிகள். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள். ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் கார்ப்பரேஷன் பள்ளிகள் என்ற நிலை எழுதப்படாத விதியாகி விட்டது.

இத்தகைய மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கலை, அறிவியலைப் படித்த வேலையற்ற பட்டதாரிகள், பெண்கள் மிகக் கீழ்த்தரமான முறையில், எந்தவித விதிமுறைகளும் இன்றி மிகக் குறைந்த சம்பளத்திற்கு மூளை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏறத்தாழ தமிழகத்தில் இருபது முதல் முப்பதாயிரம் பட்டதாரிகள் இத்தகைய பள்ளிகளில் கொத்தடிமைப் பட்டதாரி ஆசிரியர்ளாக இருந்து வருகின்றனர்.

+2 முடித்துவிட்டு இரண்டாண்டுகள் பட்டய (டிப்ளமோ) ஆசிரியர் கல்வி படித்தவர்கள் அரசு பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாண்டுகளில் நாலாயிரத்து ஐநூறு ஊதியமாகப் பெறுகிறார்கள். ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில், எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.எட், எம்.எட், எம்.பில் என்று ஒரு மைல் நீளத்திற்குப் படித்தவருகளும் பத்தாண்டுகள் பணிபுரிந்தாலும் பெரும்பான்மையான பள்ளிகளில், ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்கள்.

எந்தவித படிப்புமே இல்லாமல் ஒரு ஆசாரி, ஒரு கொத்தனார், ஒரு மெக்கானிக் மாதம் மூவாயிரம் –ஐந்தாயிரம் சம்பாதிக்கும்போது, இந்த பட்டதாரிகள் கூட்டம் மட்டும் கோட், சூட், டை என்று வேடமிட்டும், சம்பளமோ ஆயிரம் இரண்டாயிரத்தை தாண்டாத நிலை நிலவுகிறது.

அரசு தொடக்கப்பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி ஒன்றின் அவலம். இதில் பயிலும் சிறுவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒரு மாணவனிடம் ஓராண்டுக்கு பத்து முதல் பதினைந்தாயிரத்தை வசூல் செய்கிறது. ஆசிரியர் மாணவர் விகிதமோ ஒன்றுக்கு நாற்பது, ஐம்பது என்ற அளவில் உள்ளது. குறைந்தது ஐநூறு மாணவர்கள் எனில் நிறுவன வருவாயோ ஐம்பது லட்சம், ஆசிரியர்களுக்கான ஊதியமோ 750 -1500 வரைதான். பத்து, பதினைந்து ஆசிரியர்கள் என்றாலும் ஊதியச் செலவு ஒன்றரை முதல் இரண்டரை லட்சம்தான். இதர செலவு பத்து லட்சம் என்றாலும் நிறுவனத்திற்கு முப்பது லட்சத்திற்குக் குறையாமல் லாபம் கொட்டுகிறது.

இந்த லாபத்தைக் கொண்டு ஆண்டுக்காண்டு புதிய கிளைகள், பேருந்துகள், கட்டிடங்கள், வேன்கள், நிலம் ரியல் எஸ்டேட் வீடு என்று சொத்து சேர்த்து பகற் கொள்ளையடிக்கிறார்கள்.

ஆனால் இந்த லாபத்திற்கான பிரதான உழைப்பாளர்களான ஆசிரியர்களுக்கு எந்தவித வேலை உத்திரவாதமோ, உரிய ஊதியமோ, அரசு ஊழியரைப் போன்ற சலுகையோ எதுவுமின்றி முப்பதாயிரம் ஆசிரியர்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வேலை உத்திரவாதம், ஊதியம், இதர சலுகைகள் என்ற பிரச்சனை வரும் என்பதால் பல மெட்ரிக்குலேசன் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஆசிரியர்களை எடுப்பார்கள். இறுதியில் போகச் சொல்லி வடுவார்கள். கோடை விடுப்புகால ஊதியம் கிடையாது. மீறிப் பேச,கேட்க அவர்களுக்கான சங்கமோ, அமைப்போ கிடையாது. அப்படி அவர்கள் யோசித்தாலே வேலை கிடையாது என்ற கொடுமை நிலவுகிறது, இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளில்.

சில மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கான புது உத்தரவும், மே மாதத்தில் வேலையிலிருந்து விடுவித்ததற்கான கடிதமும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பூர்த்தி செய்யப்படாத ஊதிய கணக்கு நோட்டில் கையெழுத்து வாங்கி விடுவர். கையிலோ குறைந்த ஊதியம் கொடுக்கப்படும். கணக்கில் வேறொன்று இருக்கும். சில ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற வேலைக்கான கடிதங்கள் பத்து, பதினைந்து வைத்திருக்கிறார்கள்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பாகப் பெண்கள், அதே ஊரைச்சார்ந்தவர்கள், அழகான, திறமையும் அனுபவமும் திறமையும் கொண்டவர்களை அதிகமாக ஆசிரியர்களாக அமர்த்தி கொள்கிறார்கள். காரணம், பெண்கள் சொன்னபடி செய்வார்கள். எதிர்த்து ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். கொடுக்கிற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வார்கள். உரிமை, போராட்டம் சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீறி யாரேனும் பேசினால் அவர்களின் நடத்தை சரியில்லை என்று எளிதில் வெளியேற்றி விடலாம். மேலும் பாலியல் அயோக்கியத்தனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருதுகிற மோசமான நிறுவனங்களும் நிறைய இருக்கின்றன.

புதிய ஜனநாயகம், மே 1997

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை

15

திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது? மாதொருபாகன் கூறும் மரபா? ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா?

மாதொருபாகன் நாவலுக்கு எதிராக கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இணைந்து அரங்கேற்றிய காலித்தனங்களும், சாதி, மத வெறியர்களுடன் கைகோர்த்து நின்று மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, பெருமாள்முருகனுக்கு எதிராக நடத்திய கட்டைப் பஞ்சாயத்தும் அப்பட்டமான பாசிச நடவடிக்கைகள் என்பதை விளக்கத் தேவையில்லை. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ். துணையுடன் திருச்செங்கோடு இந்துக்களின் உணர்வாக மாற்றப்பட்ட இந்த ‘மானப்பிரச்சினையில்’ திருச்செங்கோடு பகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பும், ‘போராட்டங்களும்’ தவிர்க்க இயலாமல் நமக்கு வடிவேலுவின் பிரபல நகைச்சுவைக் காட்சியொன்றைத்தான் நினைவூட்டுகின்றன.

எழுத்தாளர் பெருமாள்முருகன்
மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன்

“கடவுளைக் காட்டுகிறேன்” என்று வசூல் வேட்டை நடத்திய வடிவேலுவிடம் பணத்தைக் கொடுத்த மக்கள், “கடவுளைக் காட்டு” என்று கேட்க, “யாருடைய பெண்டாட்டியெல்லாம் பத்தினியோ, அவிங்க கண்ணுக்கு மட்டும்தான் கடவுள் தெரிவார்” என்று சொல்லிவிட்டு, பக்திப் பரவசத்துடன் இறைவா என்று கூவியபடியே வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார் வடிவேலு. உடனே மானத்துக்கு அஞ்சி எல்லோரும் வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்களே, அந்த நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பண்ணாரி அம்மன் என்று நினைவு! இதே கொங்கு வட்டாரத்தின் தெய்வம்தான்!

“நம்ம பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பெருமாள்முருகன் எழுதிவிட்டான், கடையை அடைக்கிறாயா, இல்லையா?” என்று சாதிச் சங்கத்துக்காரன் கேட்கும்போது, பொண்டாட்டி பத்தினியாக இருக்கும்பட்சத்தில் யாரொருவனும் கோவப்பட்டு கடையை அடைத்துத்தானே ஆகவேண்டும். இல்லையென்றால் பெண்டாட்டியின் கற்பைச் சங்கத்துக்காரன் அல்லவா சந்திக்கு இழுப்பான்! நாவலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கருத்து என்பது இப்படித்தான் உருவாகியிருக்கிறது, அல்லது உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய தொலைக்காட்சி விவாதமொன்றில் கவுண்டர் சங்கத்துக்காரர் (எழுச்சி பெற்ற இந்துவாகவும் இருக்கலாம்) ஒருவர் இப்படி பேசினார். “நாலு வருசமாக கொழந்தை இல்லாத தம்பதி. பொண்ணுக்கு திருச்செங்கோடு. திருவிழாவுக்குப் போய்ட்டு வந்ததும் கர்ப்பமாயிருக்கு. புருசன் சந்தேகப்படுறான். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்” என்று கோபாவேசமாக கேட்டார். ஒரு கதையைப் படித்துவிட்டு 4 வருசம் குடும்பம் நடத்திய மனைவியின் நடத்தையை சந்தேகப்படுகிறான் கணவன் எனும்போது, அவன் மீதுதான் கோபப்பட வேண்டும் என்று அந்த எழுச்சி பெற்ற இந்துவுக்குத் தோன்றவில்லை. கர்ப்பிணி சீதையைச் சந்தேகப்பட்டு காட்டுக்குத் துரத்திய ராமனைத் தேசிய நாயகனாகக் கொண்டாடும் கூட்டமல்லவா?

ஒருமுறை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டின் போது பெரியாரை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, “நாகம்மை தேவடியாள்” என்று ஊர் முழுவதும் சுவரில் எழுதியிருந்தார்களாம் ஆஸ்திக மெய்யன்பர்கள். இதைக் கண்டு கொதித்துப்போன தொண்டர்களை அடக்கிய பெரியார், “நாகம்மை பத்தினி என்று கூறக் கேட்டால் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தால்தானே, அவரைத் தேவடியாள் என்று சொல்வதைக் கேட்டு நான் கோபப்படுவதற்கு? போய் வேலையைப் பாருங்கள்!” என்றாராம். அப்படிப்பட்ட பெரியார் பணியாற்றிய மண்ணில்தான் இன்று இத்தகைய சாதி, மதவெறிச் சக்திகள் ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். நடைபெற்ற செய்திகள் வாசகர்களுக்குத் தெரியுமாதலால் விசயத்துக்கு வருவோம்.

கட்டப் பஞ்சாயத்து
சாதி, மதவெறியர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய கட்டப் பஞ்சாயத்து.

சாதிய சமூகத்தில் குழந்தைப் பேறின்றித் தவிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் துயரத்தைப் பேசுகிறது மாதொருபாகன் கதை. சாதிய, ஆணாதிக்க சமூக அமைப்பில் குழந்தையில்லாத பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் நாம் அறியாததல்ல. மலட்டுத்தன்மை ஆணுக்கா, பெண்ணுக்கா என்று அறிய முடியாத சவுகரியத்தால், சமீப காலம் வரையில் பெண்தான் மலடி எனத் தூற்றப்பட்டாள். கணவன் இரண்டாம் தாரம் கட்டி விடுவானோ என்று பெண் அஞ்சவேண்டியிருந்தது. ஆணோ, தான் ஆண்மை உள்ளவன் என்று நிரூபிக்கவேண்டியிருந்தது. இந்தப் பின்புலத்தில் பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் எண்ணிலடங்காதவை. கேட்கக் கூசுபவை.

மேற்கூறிய கதையிலும்கூட பொன்னாள் என்ற அந்தப் பெண் மலடி என்ற துயரத்துக்கு ஒரு தீர்வு தேடித்தான் திருவிழாவுக்குப் போகிறாளேயன்றி, காமக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டுச் செல்லவில்லை. அதுவும் அவளாகச் செல்லவில்லை. குடும்பத்தால் அனுப்பப்படுகிறாள். கதையின்படி திருவிழாவுக்கு வருகின்ற இளைஞர்கள்தான், பெண்களைக் குறி வைத்து வருகிறார்கள். பொறுக்க வருகிறார்கள் என்றும் சொல்லலாம்.

சொல்லப்போனால், “எங்க ஊர் (அல்லது சாதி) ஆண்களை பெருமாள்முருகன் பொம்பள பொறுக்கிகளாக எப்படிச் சித்தரிக்கலாம்?” என்றுதான் ஈசுவரன் கட்சிக்காரர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு ஆள் கூடக் கோபப்படவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். ஒரு ஆம்பிளை தனது ஆம்பிளைத்தனத்துக்காகப் பெருமைப்படத்தனே முடியும்? ஒருவேளை, “நாவல் கூறும் காலத்தில் நாம் வாழாமல் போனோமே” என்று ஏங்கியும் இருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த குரு கோல்வால்கர்
மறைந்த ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த குரு கோல்வால்கர்

இவர்களுடைய கவலை தங்கள் தூய்மை பற்றியதோ, தங்கள் குலப் பெண்டிரின் தூய்மை பற்றியதோ அல்ல. தங்கள் சாதியின் தூய்மை பற்றியது.

“தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது?” என்பதுதான் நாவலில் அந்தப் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை. ஈசுவரன் கட்சிக்காரர்களுடைய கவலையும் அதுதான். அதனால்தான் ஆதாரம் கேட்கிறார்கள். திருவிழாவில் அப்படி ஒரு மரபு இருந்தது என்று நிரூபிக்கச் சொல்வதன் மூலம் சாதித்தூய்மை குறித்து தாங்கள் பரப்பி வரும் பொமைகளை உண்மையெனக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

“திருச்செங்கோட்டில் அப்படி ஒரு மரபு இருந்ததற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டு கொந்தளிப்பவர்கள், தங்களது சாதியின் வரலாற்றை, சாதித் தூய்மைக்கான ஆதாரத்தை மரபணுச் சோதனை மூலம் நிரூபித்துக் காட்டுவார்களா? நிரூபிக்க முடியாது. ஆகவே, சாதியின் தூய்மையை எங்கே, எப்படித் தொலைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள இத்தனை ஆயிரம் சாதிகளில், ஒவ்வொரு சாதியும் எப்படி, எந்த தேதியில் உருவாகின? அவற்றின் வரலாறு என்ன? யாராவது சொல்ல முடியுமா? ஆரிய – திராவிட இனக்கலப்பு  ஏற்பட்டே நூற்றாண்டுகள் பல கடந்து விட்டன. வரலாறு முழுவதும் பல்வேறு போர்களில் கவர்ந்து கொண்டு செல்லப்பட்ட பெண்கள், பஞ்ச காலங்களில் இடம்பெயரும்போது ஏற்பட்ட சாதிக்கலப்புகள், சாதிய சமூகத்தின் ஜனநாயக மறுப்பின் காரணமாக இன்றைக்கும் கிராமப்புறங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கள்ள உறவுகள்…  என சாதித்தூய்மை என்ற பித்தலாட்டத்தை நிராகரிப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வளவு ஏன், வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்ட ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள்ளேயே கலப்பு ஏற்பட்டு, ஆங்கிலோ இந்தியர்கள் என்றொரு புதிய பிரிவினர் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள் எனும்போது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நடந்திருக்க கூடிய சாதிக்கலப்பு, இனக்கலப்பு பற்றிச் சொல்லவா வேண்டும்?

சாதித்தூய்மை கிடையாது என்பதும் அதை நிலைநாட்ட முடியாது என்பதும் அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் பிளேட்டைத் திருப்பிப் போட்டு தமது பெண்களின் கற்புக்காகக் குமுறிக் கொந்தளிக்கிறார்கள். கற்பின் பின்னால் ஒளிந்து கொண்டு இல்லாத சாதித்தூய்மை குறித்து தம் சாதிக்காரர்களுக்கு வெறியூட்டுகிறார்கள். வேறு எந்த வழியிலும் சொந்த சாதி உழைக்கும் மக்களின் மதிப்பையோ நம்பிக்கையையோ பெற முடியாத இந்த சாதிச் சங்கத் தலைமைகள், தமது சாதியினர் மீது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் தந்திரம் இது. இவர்களுடைய கவலை கற்போ, தூய்மையோ அல்ல. ஆதிக்கம்!

07-perumal-murugan-captionஎம்.எஸ். சுப்புலட்சுமி கதையை எடுத்துக் கொள்வோம். அவர் இசைவேளாளர் சமூகத்துப் பெண் என்பதற்காக துவக்க காலத்தில் அவரை மட்டம் தட்டிய பார்ப்பனர்கள், பிற்காலத்தில் அவர் ஒரு பார்ப்பனரை மணந்து, பார்ப்பனியத்துக்குத் துதி பாடி, மன்னனைவிடப் பெரிய ராஜவிசுவாசியாகத் தன்னை நிரூபித்துக் கொண்டதால், அவருக்கும் மடிசார் கட்டிவிட்டு, மாமி கணக்கில் சேர்த்து விட்டார்கள்.

வன்னிய சாதியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த திவ்யாவைப் போன்றவர்களுக்கு சாதி நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தெரிகிறது. ஆனால் வன்னியர், கவுண்டர், தேவர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த கல்வி வள்ளல்கள், கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், அதிகார வர்க்கத்தினர், நீதிபதிகள்,  அறிவுஜீவிகள் ஆகியோருக்கு தங்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள சாதி தேவைப்படுகிறது. அதனால்தான் மாதொருபாகன் நாவல் தமிழில் வெளிவந்த போது எழும்பாத பிரச்சினை, ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தவுடன் வந்திருக்கிறது. எங்கேயாவது சிலிக்கான் வேலியில் செட்டில் ஆகியிருக்கும் சின்னக் கவுண்டர்களின் மனம் புண்பட்டிருக்கும்.

நத்தம் காலனியைக் கொளுத்திய கையோடு, சாதிக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி திராவிட இயக்கத்தை ஒழிக்கப்போவதாக ராமதாசு அறிவித்தபோது, அதற்கு முந்திக்கொண்டு ஆதரவு கொடுத்தது கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கட்சி. அ.தி.மு.க.-வின் ஓட்டு வங்கியும், ஆர்.எஸ்.எஸ்.-ன் செல்வாக்குப் பகுதியும், தமிழகத்திலேயே அதிக கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக்குவளை வைத்திருப்பதும் கொங்கு மண்டலம்தான். அதே நேரத்தில் “வன்கொடுமைச் சட்டத்தால் தாங்கள் அநியாயமாகப் பாதிக்கப்படுவதால், அந்த சட்டத்தையே நீக்க வேண்டும்” என்று மூர்க்கமாக குரல் கொடுப்பதும் இக்குறிப்பிட்ட சாதியினர்தான். திருச்செங்கோட்டில் பெருமாள்முருகனுக்கு எதிராக அரசே முன்நின்று நடத்திய கட்டப் பஞ்சாயத்தையும், கடையடைப்பு போன்ற நடவடிக்கைகளையும் இந்தப் பின்புலத்திலும் புரிந்து கொள்ளவேண்டும்.

மீண்டும் மாதொருபாகன் கதைக்கு வருவோம். கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டின் மீது திணிக்கப்பட்டு வரும் “தொழில் வளர்ச்சியும்” அது தோற்றுவித்திருக்கும் வாழ்க்கையும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே குழந்தைப் பேறின்மையை அதிகரித்திருக்கிறது. கருத்தரிப்பதற்காக மாதொருபாகன் நாயகியைக் காட்டிலும் கொடிய துன்பங்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். கருத்தரிப்பதற்காக திருவிழாவுக்குப் போன பொன்னாள் அனுபவிக்கும் பதற்றத்தை விடவும் அதிகமான பதற்றத்தை, தங்கள் சொந்தப் படுக்கையறையிலேயே அனுபவிக்கிறார்கள் பெண்கள்.

குழந்தைப் பேறின்மைக்கு ஆண் மலட்டுத்தன்மையும் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது? அறிவியல் முன்னேறிவிட்டதால் திருச்செங்கோடு திருவிழாவுக்குப் பதிலாக விந்து வங்கிகள் வந்து விட்டன. இந்த வங்கிகளில் தமது விந்துவை காசுக்கு விற்பவர்கள் பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள். விந்துவை வாங்க வருபவர்கள் (அதாவது பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர்) விந்துவுக்குரிய இளைஞனின் நிறம், உயரம், ஆரோக்கியம், கல்வித் தகுதி ஆகியவற்றை மட்டுமல்ல சாதியையும் கேட்கிறார்கள். தன்னுடைய சாதிக்காரனின் விந்துவாக இருக்கவேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொள்கிறார்கள் என்கிறார், பாட்னா நகரில் ஃபுரோசன் செல் (Frozen cell) என்ற விந்து வங்கியை நடத்தும் டாக்டர் சவுரவ் குமார். “இனிமேல் பிராமின், பூமிகார், யாதவ், ராஜ்புத் என்று சோதனைக் குழாகளில் எழுதி ஒட்ட வேண்டியதுதான் பாக்கி. அந்த அளவுக்கு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்” என்கிறார் இன்னொரு மகப்பேறு மருத்துவர். (செய்தி-பிறப்பதற்கு முன்னரே தொடங்குகின்றன சாதிப்பிரிவுகள், நியூயார்க் டைம்ஸ், ஜுலை 12, 2012)

இந்தக் கேவலத்தைக் காட்டிலும், மாதொருபாகன் கூறும் அந்தத் திருவிழா மரபு மிகவும் நாகரிகமான வழிமுறையாகத் தெரியவில்லையா? “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?” என்று நவீன அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கேட்டார் சிவவாக்கிய சித்தர். அறிவியலின் துணை கொண்டு சாதியை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் வெறியர்கள், “இலக்கமிடு” என்று சமூகத்தை மிரட்டுகிறார்கள். சாதி வாரியாக கல்லூரி தொடங்கியிருக்கும் இந்த வர்க்கம், விந்து வங்கிகளையும் சாதிவாரியாகத் தொடங்க வாய்ப்பிருக்கிறது.

இப்பிரச்சினையில் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்துடன் இராம. கோபாலனும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதால், மேற்படி பிரச்சினை குறித்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத் தலைவரான கோல்வால்கர் முன்வைத்திருக்கும் அரிய கருத்தினைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வோம். குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை மாணவர்கள் மத்தியில், தனது ஆரிய இனவெறிக் கோட்பாட்டை முன்வைத்து டிசம்பர் 17, 1960 அன்று கோல்வால்கர் ஆற்றிய உரையின் பகுதி இது.

“இன்று கலப்பினங்களை உருவாக்கும் சோதனைகள் விலங்குகளின் மீதுதான் செய்யப்படுகின்றன. அத்தகைய சோதனைகளை மனிதர்கள் மீது செய்து பார்க்கும் தைரியம், நவீன விஞ்ஞானிகள் என்கிறார்களே, அவர்களுக்குக்கூட இல்லை. இன்று மனிதர்களிடையே கலப்பினத்தை நாம் காண்கிறோம் என்றால், அது அறிவியல் சோதனையின் விளைவல்ல, கீழ்த்தரமான காமத்தின் விளைவு. இந்த விசயத்தில் நமது முன்னோர்கள் செய்திருக்கும் சோதனைகளை நாம் பார்ப்போம். கலப்பினச் சேர்க்கை மூலம் மனித இனத்தை மேம்படுத்தும் பொருட்டு, வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”

(2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை)

கோல்வால்கர் குறிப்பிடும் இழி மரபை ஒழிக்கத்தான் பெரியார் போராடினார். பெரியாரையும் திராவிட இயக்க மரபுகளையும் ஒழிக்கவேண்டும் என்பதைத் தமது கொள்கையாக கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும் பிற சாதி சங்கத்தினரும், பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். வெறும் கூட்டணி போதுமா? கோல்வால்கர் கூறும் நமது பெருமைமிகு ஹிந்து பாரம்பரியத்தையும், மோடியால் விதந்தோதப்படும் ஹிந்து ஞானமரபையும் பின்பற்ற வேண்டாமா?

மற்றெல்லா வகையிலும் பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள், கோல்வால்கர் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடிப்பதற்கு மட்டும் கூச்சப்படத் தேவையில்லை. கோல்வால்கரின் மேற்கண்ட உரையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, திருச்செங்கோடு மக்களிடையே வழங்கட்டும். எந்த மரபு தங்களை இழிவு செய்கிறது என்பதை அம்மக்கள் அதற்குப் பின்னர் தீர்மானிக்கட்டும்.

– மருதையன்

கருத்துரிமையும் கருத்து கூறாமலிருக்கும் உரிமையும்

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்த பல இலக்கியவாதிகள், சாதிய, இந்துவெறி அமைப்புகளின் வன்முறை குறித்து மிகவும் மேலோட்டமான கண்டனத்தையே தெரிவித்திருந்தனர். சாதித் தூய்மை என்ற கருத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சாதிவெறியையும், இந்து மதவெறியையும் நேருக்கு நேர் தாக்கி அம்பலப்படுத்தாமல் ஒளிந்து கொள்ள விரும்பியவர்களுக்கு கருத்துரிமை என்பது பாதுகாப்பான கவசமாகப் பயன்பட்டது. அதாவது, பெருமாள்முருகனின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த அதே நேரத்தில், தங்களுடைய கருத்து கூறாமல் இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக் கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

இலக்கியத்தளத்துக்கு வெளியே அரசியல்ரீதியில் சாதி ஒழிப்பு, பொதுவுடைமைக் கருத்தியலில் இயங்குபவர்கள்தான், மாதொருபாகன் என்ற இலக்கியம் தோற்றுவித்த சமூக எதிர்விளைவுக்கு முகம் கொடுத்தார்கள். தங்களுக்கு எதிரான எந்த உண்மையையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சாதி, மதவெறியர்கள் ஆர்ப்பரிக்கும் சூழலிலும், இலக்கியவாதிகளுக்கு அரசியல் கூடாது எனப் பேசுவது, அவர்களுக்கு வழங்கும் மறைமுக ஆதரவு என்பதைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !

9

டந்த மே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடியின் பா.ஜ.க ‘வரலாறு காணாத’ ‘மகத்தான’ வெற்றியை சாதித்ததாக ஊடகங்கள் வியந்தன. இப்போது நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்களின் வியப்பு ஆம் ஆத்மிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. கூடவே பா.ஜ.க மற்றும் மோடியை கழுவி ஊற்றாதவர்கள் பாக்கி இல்லை.

ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
மும்பையில் ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்

“ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றிபெறும்” என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், தேர்தலன்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் மொத்தமுள்ள 70 இடங்களில் 67-ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், பதிவான வாக்குகளில் 54.3% அக்கட்சிக்கு விழுந்ததையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வெறுத்தனர். முதலாளிகளோ சிங்கின் வேகம் பத்தாது என்பதோடு அவர் மக்களிடம் பெயரிழந்துவிட்டார் என்று மோடியை அழைத்து வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆகக் குறைந்திருக்கிறது. 2014 தேர்தலுக்காக கட்டியமைக்கப்பட்ட மோடி அலை என்ற பிம்பம் புஸ்வாணமானதை இந்த டெல்லி தேர்தல் முடிவுகள் இன்னும் தெளிவாக காட்டுகின்றன.

மோடி அலை என்ற பிம்பம்
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆக குறைந்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் நாட்டை ஆளும் வர்க்கங்களின் அதிகாரக் கூத்துகளை அணுக்கமாக பார்ப்பவர்கள் என்ற முறையிலும், பெருநகர வாழ்க்கையில், கவனத்தை திசை திருப்பும் சாதி, மத அரசியலுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்ற முறையிலும் மன்மோகன் சிங்கின் அடியொற்றி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடியின் பொருளாதார கொள்கைகளுக்கான முதல் அடி டெல்லியில் விழுந்திருப்பதில் வியப்பில்லை.

ஏழை உழைக்கும் மக்களுக்கான அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து, நொறுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு அருகிலேயே கண்ணாடியாலும், உலோகத்தாலும் பளபளக்கும் தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் பணம் படைத்த வர்க்கத்தினருக்கு சேவை செய்து கொண்டிருந்தன.

மேட்டுக்குடி அதிகாரவர்க்கத்தினர் வசிக்கும் புது டெல்லியின் தெருக்கள் மாசு மருவற்று ஜொலிக்கும் போது, பழைய டெல்லியின் குடியிருப்புப் பகுதிகள் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்பட்டு வந்தன. மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்பதற்கு ரூ 10 லட்சம் விலையில் தனது பெயர் பொறித்த சூட்டை தைத்து போட்டுக் கொண்ட மோடியின் அற்பத்தனம் டெல்லி மக்களின் பொறுமையை முறித்த கடைசி ஊசி என்று வைத்துக் கொள்ளலாம். ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

மோடி
ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய சிந்தனை குழாம்கள் வகுத்துக் கொடுத்த கையேட்டின்படி வேலை செய்து அவர்களது எதிர்ப்பை திரட்டியது ஆம் ஆத்மி கட்சி.

இந்தத் தேர்தல் முடிவு தொடர்பான அலசல்களில் ஆம் ஆத்மியின் வெற்றியின் அடிப்படை டெல்லியின் ஏழை உழைக்கும் மக்கள் என்பதும் பா.ஜ.க மேட்டுக்குடி, ஆதிக்கசாதியினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகின்றன. அடுத்தடுத்து 3 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று, டெல்லியை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் 8%-க்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது; நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்த காங்கிரஸ் டெல்லியிலிருந்தும் துடைத்து எறியப்படுவது உறுதியாகியிருக்கிறது.

மேலும், மோடி பரிவாரத்தின் இந்துமதவெறி அமைப்புகள் சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பா.ஜ.கவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிறுபான்மை மக்களை தள்ளின. வெற்றி பெறும் குதிரையாக உருவாகி வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த வாக்குகள் இயல்பாகவே திரும்பியிருந்தன.

காப் பஞ்சாயத்துகள், லவ் ஜிகாத் மூலம் சாதி, மதவெறி தாக்குதல்கள், கர் வாபசி என்ற பெயரில் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம் செய்யும் நாடகங்கள், சமஸ்கிருதத் திணிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், ராமனை நம்பாதவர்கள் விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் என்று மத்திய அமைச்சரின் திருவாக்கு, இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அமைச்சர்கள் அறிவிப்பது என்று அடுத்தடுத்த இந்துத்துவ அரசியல் சவடால்கள் கணிசமான நடுத்தர வர்க்க மக்களை பா.ஜ.கவிடமிருந்து தனிமைப்படுத்தின.

மோடியின் ஆடை அணிகலன்கள் குறித்து நக்கல் அடித்த கையோடு, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்துத்துவ திருவிளையாடல்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே எச்சரித்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “மோடியின் அபாயகரமான மௌனம்” என்று தலையங்கம் எழுதி மோடி மீதான அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்ட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது நிறைவேறிவிட்டது. ஆனால் உலகமயமாக்கத்தின் நடைமுறை வேகத்திற்கு இந்துத்துவத் தாக்குதல்கள் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற வகையிலும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மோடியை செல்லமாகக் கண்டிக்கிறது. அதன் பின்னணியில்தான் ஆம் ஆத்மியின் இருப்பு முன்வைக்கப்படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி பதவி ஏற்பு விழாவில் ரூ 15-க்கு மலிவு விலை AAP கோலா.

ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர்.

மின்சார, குடிநீர் கட்டண கட்டண உயர்வுகள் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்து, ஒரு குடும்பத்துக்கு மாதம் 20,000 லிட்டர் வரை தண்ணீருக்குக் கட்டணம் இல்லை, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற அன்று 20,000 பாட்டில்கள் AAP கோலா இலவசமாக வினியோகிக்கப்பட்டன. “குடிசையில் வசிக்கும் ஒரு டெல்லி குடிமகன் ரூ 35 கொடுத்து கோலா குடிக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே சாதாரண மக்களுக்கு சேவை செய்ய ரூ 15-க்கு 400 மிலி கோலா என்ற விலையில் AAP கோலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் AAP கோலா நிறுவன முதலாளி ஜிதேந்தர் கேஸ்வானி.

AAP Cola
ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்” என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதாரத் தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் மாதம் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் வரை இலவசம் என்ற AAP தண்ணீர், குழாய் இணைப்பு இல்லாத சுமார் டெல்லியின் 3-ல் 1 பங்கு ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்காது. AAP தண்ணீர் திட்டத்திற்கு தகுதி உடைய குடும்பங்களும் 20,000 லிட்டருக்கு ஒரு சொட்டு அதிகமாக பயன்படுத்தினாலும் முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். தண்ணீருக்கு விலை வைத்து விற்று தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை கேள்விக்குள்ளாக்காமல், அதற்குள் இலவசத் திட்டம் அறிவிப்பது என்ற “அம்மா” பாணி அரசியலை பார்க்கும் தமிழகத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் புதுசில்லைதான்.

மின்கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் உத்தரவை டெல்லியின் மின்வினியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகியவை எதிர்த்திருக்கின்றன. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் அதை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தாங்கள் கோருவதாக கூறியிருக்கின்றனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் சித்தாந்தம்
ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகளை எதிர்க்கவில்லை.

கேஜ்ரிவால் அரசு அளிக்கவிருக்கும் மின் கட்டண சலுகைக்கான செலவை அரசே தங்களிடம் கொடுத்து விடும்படி கோருகின்றனர். அதாவது, கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். டெல்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்தே வசூலித்துக் கொள்ளும். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மக்கள் பணத்தை பிடுங்கி, அதிலிருந்து இலவசப் பொருட்களை வாரி வழங்குவதைப் போல மக்கள் விரலை வெட்டி மக்களுக்கு சூப்பு வைத்துக் கொடுக்கும் வித்தையைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் செய்யவிருக்கிறார்.

உதாரணமாக, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி செலவு 2 ரூபாய்க்கும் குறைவு என்றால் தனியார் அனல் மின் நிலையங்கள் யூனிட்டுக்கு ரூ 6.50 முதல் ரூ 18 வரை விலை வைத்து விற்கின்றன. கேஜ்ரிவால் கூறும் தீர்வு தனியார் மின்சாரம் ரூ 12-க்கு விற்கப்படுவதை பேச்சுவார்த்தை நடத்தி யூனிட்டுக்கு ரூ 10 ஆக குறைப்போம் என்றும் யூனிட்டுக்கு ரூ 10-ஐ அரசே தனியார் நிறுவனத்திடம் கொடுத்து விடும் என்பதும்தான்.

திறன் குறைந்த, கொள்ளை விலை வைத்து வசூலிக்கும் தனியார் மயத்தை ஒழித்துக் கட்டி பொதுத்துறை மின் உற்பத்தியை தொடங்கினால்தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். அதைச் செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் தயாராக இல்லை என்பதோடு அப்படி செய்யவும் முடியாது.

கேஜ்ரிவாலின் சித்தாந்தம்
“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை.”

“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்ததை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார் அரவிந்த கேஜ்ரிவால்.

எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

இதைத்தான் “மின் உற்பத்தியே செய்யாத டெல்லி எப்படி மின் கட்டணத்தை குறைக்க முடியும்” என்று நரேந்திர மோடி, கேஜ்ரிவாலை குத்திக் காட்டியிருகிறார்.

“பாரத் மாதா கீ ஜெய்” என்று முழங்குவதிலும், வாரணாசி தேர்தலின் போது கங்கையில் முழுக்கு போட்டு இந்துக்களின் மனம் கவர் கள்வனாக மாற முயற்சித்ததும், காங்கிரஸ் பாணியிலான மிதவாத இந்துத்துவம்தான் அரவிந்த் கேஜ்ரிவாலின் மதச்சார்பின்மை என்பதைக் காட்டுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டியதோடு மேலே இருப்பவனுக்கு நன்றியும் சொன்னது, அப்படி கடவுளை நம்பும் பெரும்பான்மை மக்களுக்கு தன்னை ஏற்புடையதாகக செய்யும் முயற்சிதான் என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரான ஆதித்ய நிகம்.

கடவுளை நம்பும் கோடிக்கணக்கான மக்களை மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படி சொல்ல வேண்டுமானால், தான் கடவுளை நம்புவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். அதே அடிப்படையில்தான் டெல்லி திரிலோக்புரியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ கும்பல் நடத்திய வன்முறையின் போது அந்தப் பகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினரோ, கட்சித் தொண்டர்களோ சிறுபான்மை மக்களின் பக்கம் நிற்பதாக காட்டிக் கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படிக் காட்டிக் கொண்டால் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற பயம்தான் ஆம் ஆத்மியின் இந்துத்துவ எதிர்ப்பின் நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவாலின் கொள்கையற்ற அரசியலின் ஒரு பகுதியாக சாதி அடிப்படையிலான காப் பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை அங்கீகரிக்கிறார்.

காஷ்மீர் மக்களின் போராட்ட உரிமையை அங்கீகரிக்காமல் இந்திய அரசை ஆதரித்து, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகவே ஆதரித்தவர் கேஜ்ரிவால். தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிப்பது அல்லது நெருக்கிக் கேட்டால் இந்துத்துவத்தின் செல்வாக்கை கணக்கில் கொண்டு பேசுவதுதான் ஆம் ஆத்மியின் உத்தி.

ak.cartoonஆம் ஆத்மியின் அரசியல் வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல் என்கிறார் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ்.

டெல்லி சோட்டா நகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்குவதற்காக குடிசைகளை இடித்து தரைமட்டமாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் போலீசார் தாக்கினர். ஆம் ஆத்மி கட்சியினரும், போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர். அரசுக்கு சொந்தமான நிலம், வேறு ஒரு பணிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சிலர் குடிசைகளை அமைக்க முயற்சித்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமானவர்கள் அவற்றை அகற்றினர். பாதுகாப்பு பணிக்காக மட்டுமே போலீசார் சென்றனர்.” என்று கூறியிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. தனியார் நிறுவனத்துக்காக தமது குடிசைகள் இடிக்கப்பட்டால், போராடக் கூடாது என்பதுதான் யோகேந்திர யாதவின் வர்க்கப் போராட்டம் அற்ற வர்க்க அரசியல். டெல்லியில் வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ள கேஜ்ரிவால் அரசு, நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படப் போகும் வீடுகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆம் ஆத்மி பிரச்சாரம்
“ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிய இலவச குடிநீர் பிரச்சாரம் செல்லாது” என்று தீர்ப்பு எழுதுகின்றனர் முன்னாள் உலக வங்கி இயக்குனர்கள்.

உண்மையில் அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நவ் அல்லது முகேஷ் அம்பானியின் சி.என்.என் ஐ.பி.என் போன்ற ஊடகங்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. “நீங்கள் தேசத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்று அர்னாப் தினசரி எட்டுகட்டையில் முழங்குவதுதான் ஆம் ஆத்மியின் முழக்கமும் கூட. இதில் லஞ்ச எதிர்ப்பு மட்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஜெயலலிதா போன்று அரசு திட்டங்களை தனியார் மயமாக்கிக் கொண்டே ஒரு பக்கம் ஏழைகளுக்கு பிச்சையாக இலவசங்களை அறிவிக்கும் வேலையையோ அல்லது அதை விட புதுமையான திட்டங்களையோ ஆம் ஆத்மி செயல்படுத்தலாம். ஆனால், அதைக் கூட செய்வதற்கு அவர்களின் மேற்கத்திய நிதி உதவியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலக வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் ஜே சிவகுமார் மற்றும் இந்தர் சூத் ஆகியோர் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், “தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை எல்லாம் மறந்து விட்டு ‘நடைமுறை’ அரசியலை உணர்ந்து ஆம் ஆத்மி கட்சி செயல்பட வேண்டும்” என்றும் “டெல்லியில் ஏழைகளுக்கு இலவச குடிநீர் தேவையில்லை, கட்டுப்படியாகும் விலையிலான குடிநீர்தான் தேவை” என்று டெல்லியில் வாக்களித்த மக்களின் சார்பாக சிந்தித்து அவர்களது தேவையை கணித்து கூறியிருக்கின்றனர்.

மொத்தத்தில், “இந்தியாவை ஒளிர”ச் செய்த 7 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு வாஜ்பாயி குப்பைக் கூடைக்கு அனுப்பபட்டார். அடுத்த 10 ஆண்டுகள் அன்னிய முதலீட்டின் உதவியால் இந்தியாவை வல்லரசாக்க முயற்சித்த மன்மோகன் சிங் வெறுக்கத்தக்க கோமாளியாக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். “வளர்ச்சி நாயகனாக” முன் நிறுத்தப்பட்ட மோடி இப்போது மக்களின் கோபமான கிண்டலுக்கும் பரிகாசத்துக்கும் நாயகனாகியிருக்கிறார்.

அவர்களின் இடத்தில் இப்போது நிறுத்தப்பட்டிருப்பவர் அரவிந்த் கேஜ்ரிவால். அதனால்தான் மேற்கத்திய ஊடகங்கள் ஆம் ஆத்மியின் வெற்றியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் மோடியின் வெற்றிக்கு சியர்ஸ் சொன்ன கைகள் இன்று ஆம்ஆத்மிக்கு ஜே சொல்கின்றன.

அன்றாடம் பெருகிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, கல்வி வணிகமயம், மருத்துவம் மக்களுக்கு கிடைக்காமல் போவது என்று மறுகாலனியாக்கத்தின் நெரிப்பில் மூச்சுத் திணறும் மக்களின் கோபம்தான் மோடிக்கு கிடைத்த செருப்படி. அதனால் வெற்றிபெற்ற கேஜ்ரிவால் தனியார் மயம் எனும் ஊழலை ஆதரித்துக் கொண்டே கலெக்டர் ஆபிஸ் சிப்பந்தியின் லஞ்சத்தை முறியடிக்க முழங்குகிறார்.

மாறி மாறி ஓட்டுப் போட்டு, இருக்கும் சனியன்களில் ஏதோ ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் எனும் மூடநம்பிக்கையின் படிதான் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கிறது. மாறி வரும் காலத்தில் இந்த மூடநம்பிக்கை நிரந்தரம் இல்லை.

–    பண்பரசு

தொடர்புடைய சுட்டிகள்

ஆம் ஆத்மி தொடர்பான முந்தைய வினவு பதிவுகள்

ஆம் ஆத்மி பிறப்பு ரகசியம் – தொடர்

  1. ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
  2. சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
  3. அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்
  4.  நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணி: அருவருப்பான அதிகார போதை!

0

ஞ்சாபின் அகாலி தள அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா-வுக்கும் போதை மருந்து குற்றக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக அண்மையில் மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, பஞ்சாபில் போதை மருந்து பெருக்கத்துக்கும், அதில் ஆட்சியாளர்களின் பங்கு குறித்தும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, ஓட்டுக்கட்சிகள் நடத்திய போராட்டங்களும் பேரணிகளும் இன்னுமொரு கேலிக்கூத்தாகவே முடிந்துள்ளன.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி

பஞ்சாபில் ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள் மட்டுமின்றி, அதிகார வர்க்கம், போலீசு, எல்லைப் பாதுகாப்புப்படை  அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரமே போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளியாக உள்ளது. பிரபல பாடகர் மக்கான், குத்துச் சண்டைவீரர் விஜேந்தர் சிங், முன்னாள் டி.எஸ்.பி. ஜெக்திஷ்சிங் போலா முதலானோரும் போதை மருந்து கடத்தில் ஈடுபட்ட கனடாவைச் சேர்ந்த சில சீக்கியர்களும் ஏற்கெனவே கைதாகியிருப்பதும், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் போலீசு அதிகாரிகளும் அவர்களின் கள்ளக் கூட்டாளிகளாக இருப்பதும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

பஞ்சாபைச் சீரழிக்கும் மிகப் பெரிய சமூக பிரச்சினையாக வளர்ந்துள்ள போதை மருந்து பழக்கத்துக்கு எதிராக நிற்பதாக நாடகமாடும் காங்கிரசு, அகாலி தளம், பா.ஜ.க. ஆகிய கட்சிகளோ போதை மருந்து இரகசிய உலகப் பேர்வழிகளின் திரைமறைவுக் கூட்டாளிகளாகவே உள்ளனர். போதை மருந்தால் வரும் கள்ளப் பணத்தைத் தேர்தலில் வாரியிறைக்கின்றனர். தேசியம், தேசிய ஒருமைப்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, பஞ்சாப் இளைஞர்களின் வாழ்வையே சீரழித்துள்ளனர்.

இப்போது மீண்டும் போதை மருந்து விவகாரத்தில் அகாலிதள அமைச்சரின் தொடர்பு அம்பலமானதும்,  அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்டங்களை நடத்தின. அதேசமயம், போதை மருந்துகளற்ற பஞ்சாபை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் அமைச்சர் பிக்ரம் சிங் பதவி விலக வேண்டுமென்று  கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி, தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தது.

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான ம.பி. மற்றும் ராஜஸ்தானில் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைத் தடுத்தால்தான், பஞ்சாபிலும் தடுக்க முடியும் என்று அகாலிதளக் கட்சி எதிர்ப்போராட்டத்தில் இறங்கி பா.ஜ.க.வைச் சாடியது. சீக்கிய இனப் பெருமைக்கு இழிவுதரும் வகையில் சீக்கியர்களைத் தீவிரவாதிகளாகவும் போதைமருந்து கடத்தல்காரர்களாகவும் இழிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிலிருந்து கடத்திவரப்படும் போதை மருந்துகளைத்  தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை தவறிவிட்டது என்று கூறி எல்லைப் பகுதிகளில் அகாலிதளக் கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதை எதிர்க்கக் கிளம்பிய பா.ஜ.க.வோ, எல்லைப் பாதுகாப்புப்படை மீது வீண்பழி போடுவதாகவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல் என்றும் எதிர்க்குற்றம் சாட்டி தேசபக்த வேடம் போட்டு பேரணிகளை நடத்தியது. போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளிகளான போலீசாரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் போதை மருந்துகளைக் கைப்பற்றி எரிப்பதாக புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுத் தம்மை யோக்கிய சிகாமணிகளாகக் காட்டிக் கொள்ளும் கேலிக்கூத்தும் அரங்கேறியது.

பஞ்சாப் போதை மருந்துபஞ்சாப் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் போதைப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்றும், பாகிஸ்தான், ஆப்கானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்புப் படை தடுக்கத் தவறிவிட்டது என்றும் அகாலிதளம் கட்சி கூறுவது உண்மைதான். அதேபோல, போதை மருந்து குற்றக் கும்பலுடன் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா தொடர்பு கொண்டிருப்பதும் உண்மைதான். போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் கள்ள உறவு அம்பலமாகியிருப்பது இப்போது முதன்முறையல்ல என்பதும் உண்மைதான். ஆனாலும், போதைமருந்து விவகாரத்தில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களின் தொடர்பு அம்பலமாகும்போது ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேடும் நாச்சண்டை மட்டும்தான்  தொடர்கிறதேயன்றி, பஞ்சாபைக் கவ்வியுள்ள போதை மருந்துப் பழக்கத்தைத் தடுக்க எந்த ஓட்டுக்கட்சியிடமும் உருப்படியான திட்டமோ, நடவடிக்கையோ இல்லை.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகவும் அகாலி தளக் கட்சியின் தலைவருமாகக் கோலோச்சுகிறார். சுக்பீர் சிங் பாதலின் மனைவியான ஹர்சிம்ரத் கவுல் மத்திய அமைச்சராக உள்ளார். அவரது தம்பியும், சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரும்தான் பிக்ரம் சிங் மஜிதியா. ஏற்கெனவே பஞ்சாபில் பாதல் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தாலும் ஊழல் – அதிகார முறைகேடுகளாலும் அக்கட்சியும் ஆட்சியும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், போதை மருந்து  விவகாரத்தை வைத்து அகாலி தளத்தைத் தனிமைப்படுத்தி தங்களைத் தூய்மையான, ஊழல் கறை படியாத மாற்றுத் தலைமையாகக் காட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சித்தது. இதற்காகவே பா.ஜ.க. தலைவரான அமித்ஷா, பஞ்சாபில் போதை மருந்து எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக அகாலி தளத்துக்கு எதிரான போக்கைக் கடைபிடித்த பா.ஜ.க. இப்போது திடீர் பல்டி அடித்துக் கூட்டணி உறவைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு மோடி அரசு “பத்ம விபூஷண்” பட்டம் அளிக்கிறது. பஞ்சாபில் போதை மருந்துக்கு எதிரான அமித் ஷாவின் பிரச்சாரப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வுக்குமிடையிலான கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று மைய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரி பஞ்சாபுக்குப் பறந்து சென்று  அறிவிக்கிறார். பஞ்சாபின் அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சிக்கென்று ரூ. 18,000 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்து, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங்குடன் கைகோர்த்துக் கொண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார். பா.ஜ.க.வின் இந்தத் திடீர் பல்டிக்குக் காரணம் டெல்லி சட்டமன்றத் தேர்தல்தான்.

பஞ்சாபில் போதை மருந்து குற்றக் கும்பலுடன் தொடர்புடைய அகாலி தள அமைச்சர் பதவி விலக வேண்டுமென பிரச்சாரம் செய்யும் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரசும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இதை வைத்து தங்களைத் தனிமைப்படுத்திவிடும் என்ற அச்சத்தாலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்துக்குக் கிடைத்துவரும் ஆதரவைக் கண்டும் பா.ஜ.க. அரண்டு போயுள்ளது. இதனாலேயே அகாலிதளத்துக்கு எதிராக முறுக்கிக் கொண்டிருந்த பா.ஜ.க. இப்போது வெட்கமின்றி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசும் ஆம் ஆத்மியும் டெல்லியிலோ அல்லது பஞ்சாபிலோ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே அகாலி தளமும் பா.ஜ.க.வும் செயல்படுகின்றனவே தவிர, மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து பஞ்சாபைப் பீடித்துள்ள போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் அக்கட்சிகளிடம் இல்லை.

அகாலிதளம் பேசும் சீக்கிய இனப் பெருமையும், பா.ஜ.க. பேசும் தேசபக்தியும் சீக்கிய இன நலனுக்கானதல்ல; தேசிய நலன்களுக்கானதும் அல்ல. இருப்பினும் சீக்கிய இனப்பெருமையையும், தேசியம் – தேசபக்தியையும் காட்டி போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் பங்கை மூடிமறைத்து, ஓட்டுக்கட்சிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாக மாற்றி சீக்கியர்களை ஏய்ப்பதென்பது அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வும் வசதியாக உள்ளது. ஆனால், பஞ்சாப் மாநிலமோ போதை மருந்தாலும், மறுகாலனியத் தாக்குதலாலும் மூர்க்கமாகச் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

– குமார்.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

8
  • செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !

பூரண மதுவிலக்கு என்பது இப்போது பேஷனான வார்த்தையாகி விட்டது. அதைப் பேசாத கட்சிகள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் போட்டி போட்டுக்கொண்டு கலர் கலராக இயக்கம் எடுக்கிறார்கள்.

  • காந்தியவாதி சசிபெருமாள் காலில் விழுகிறார், கண்ணீர் விட்டு கதறுகிறார்.
  • சட்டக்கல்லூரி மாணவி உண்ணாவிரதம் இருக்கிறார்.
  • வைகோ கல்லூரி மாணவர்களை வைத்துக்கொண்டு மரத்தான் போட்டி வைக்கிறார், கண்ணீர் வடிக்கிறார்.
  • திமுக, மதிமுக, காங்கிரசு, பாஜக, பாமக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே “பூரண மதுவிலக்கா, ஆமாம் சாமி” என்கின்றன.

ஆனால் இந்தக் கட்சிக்காரர்கள்தான் பார்களை வைத்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் விட பெரிய கூத்து என்ன வென்றால் சரக்கை எப்படியெல்லாம் விதம் விதமாக கலந்து குடிக்கலாம் என்ற வேதங்களை சட்டமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, பார்ப்பன கும்பல் கூட பூரண மதுவிலக்கு என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட எந்த ஒரு கட்சியாலும் இதை நடைமுறைப்படுத்த முடிகிறதா என்ன? முடியாது என்பது தான் தான் பதில்.

போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அதிகாரத்தை கையில் எடுக்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அரசாங்க கஜானா காலியானால் அதை நிரப்ப எந்த வேலையையும் செய்யலாம் என்று சொன்ன சாணக்கியனின் வாரிசான பார்ப்பன ஜெயாவின் ஆட்சியில் இப்படிப்பட்ட மொக்கைத்தனமான போராட்டங்கள் ஜெயிக்குமா என்ன?

எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின்- புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்புப் போராட்டம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரி.

செய்யாறு வட்டத்தில் உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடையை திறந்தது முதல் வெங்களத்தூர், குத்தனூர், அழிவிடைதாங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்களுக்கும் பிரச்சினைதான்.

பெண் பிள்ளைகள் யாரும் அச்சமில்லாமல் பள்ளிக்கு செல்லமுடியவில்லை, தினமும் குடிகாரர்கள் தங்கள் பிள்ளைகளை கேலி செய்வதை கண்டு பொறுக்க முடியாமல் இருந்தனர், அம்மக்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

தங்கள் வீட்டுப் பிள்ளைகளே குடிகாரர்களாக சீரழிந்து வருவதைக் கண்டு குமுறிக்கொண்டு இருந்தார்கள்.

டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று இரண்டு வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 3 முறை டாஸ்மாக் கடையை முற்றுகைப் போராட்டமும் நடத்தியாயிற்று, இனி அடுத்து என்ன?

வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

அப்பகுதியில் உள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாக அந்த டாஸ்மாக் சாராயக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தங்களின் உணர்வுகளுக்கு சாணை பிடிக்க வந்த புமாஇமுவின் இளந்தோழர்களை வாரி அணைத்துக்கொண்டார்கள் கிராம மக்கள்.

குறித்த நாளான பிப்ரவர் 15-ம் வந்தது, ஏழு கிராம மக்களும் திரண்டனர். பறைமுழங்க, முழக்கங்கள் வெடிக்க வெடிகுண்டுகளாய் டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர், உழைக்கும் மக்கள்.

பாதுகாப்பிற்கு வந்து இருந்த பிரம்ம தேசம் காவல் நிலையத்தின் ஒரு எஸ்.ஐ உள்ளிட்ட மூன்று போலீசும் “எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டாஸ்மாக் அதிகாரிகளோ, இல்லை அரசின் அதிகார வர்க்கமோ யாரும் வரவில்லை,

முக்கால் மணி நேரமாக நடந்த முற்றுகையை சூரியன் மேலும் சூடேற்ற, இனி அடுத்து என்ன செய்வது?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை.

புமாஇமுவின் மாநகர செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் ராஜாவும் சாரதியும் மக்களைப் பார்த்து “இப்போது என்ன செய்வது? வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..” என்று கேட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..”

பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் உள்ளே போய் சாராய பாட்டில்கள் கொண்ட ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அவ்வளவுதான் மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர். எல்லாம் முடிந்து விட்டது, சற்று நேரத்தில்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

ஒரே வெற்றிமுழக்கம், எப்போது இது நடக்கும் என்று மக்கள் நினைத்துக்கொண்டு இருந்த விசயம் இன்று நடந்தே விட்டது.

பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும் என்று யோசித்து தங்கள் படையை வரவழைத்தது, போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும்.

வெற்றிப்பறை முழங்க பேரணி தொடங்கியது ஊரில், ஆரவாரமாக.

இடைமறித்த போலீசு தோழர்களை கைது செய்ய முயல, அதை பொதுமக்கள் தடுக்க அந்த இடமே களேபரமானது.

“அந்தப் பசங்களை மட்டும் கைது பண்ணாதீங்க, கைதுன்னா எங்க எல்லாத்தையும் பண்ணுங்க” என்று போலீசை முற்றுகையிட்டது மக்கள் கூட்டம்.

‘கொஞ்சம் கூட மதிக்கவே மாட்டேங்குறாங்களே’ என்று என்ன செய்வதென்று முழித்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்ஒரு கட்டத்தில் தோழர்கள் ராஜா, சாரதி இருவரையும் போலீசு வேனில் ஏற்ற போலீசை முற்றுகையிட்டனர் மக்கள். அதட்டல் , மிரட்டல், கெஞ்சல் என எப்படி சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை. “அவங்களை இறக்கிவிடாம போக மாட்டோம்” ஒருமித்த குரல் இடியாய் இறங்க, வேனில் ஏற்றிய தோழர்களை விடுவித்து

“இதெல்லாம் சரியில்ல, உங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிக்குறோம், இப்போ கிளம்புறோம்” என்று கிளம்புவது போல நடித்து கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தது போலீசு.

தோழர்களை விடுவித்த மக்கள் தங்கள் வீடுகளில் அழைத்து உணவு ஏற்பாடு செய்ய கலைந்து சென்றனர்.

நேரம் பார்த்த போலீசு பெண்தோழர்கள் 4 பேர்கள் மற்றும் ஆண்தோழர்கள் 5 பேர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதைக்கண்ட கிராமமக்கள் எதிர்த்து நிற்க அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது. தங்கள் மீது அடிவிழுந்த போதும் “நமக்காக வந்த புள்ளைகளை விடக்கூடாது” என்று தாய்மார்கள் சண்டையிட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்அவர்களை மிருகத்தனமாகத் தாக்கி சந்திரா என்ற தாயை கைது செய்தது, போலீசு.

பிரம்ம தேசம் காவல் நிலையத்திற்கு சென்றால் ஊர்மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்பதால் 14 கிமீ தொலைவில் உள்ள சாராயப் புகழ் தூசி காவல் நிலையத்திற்கு கைது செய்யப்பட்டவர்களை கொண்டு சென்றது.

இரண்டு மணி நேரம் கழித்து போலீசு பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டது, மீண்டும். கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

என்னடா இது அநியாயம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிறான், அவனே சாராயக்கடையையும் திறந்து வைக்கிறான் , மக்கள் போராடினால் அவர்களை அடித்துவிட்டு போலீசைப் போட்டு டாஸ்மாக்கை திறக்கிறான் எனில் அரசு எப்படிப்பட்ட எதிர் சக்தியாக மாறிவிட்டது?

காவல் நிலையத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள், வழக்கறிஞர்கள் உட்பட யாரையுமே தோழர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கிர புத்தியுடன் தோழர்களை போட்டோ எடுப்பது, செல்போன்களை பறித்துக் கொள்வது போன்ற தங்களுக்கே உரிய இழி செயல்களை செம்மையாகச் செய்தது போலீசு.

“டாஸ்மாக் பிரான்ச் மேனேஜர் வரட்டும்”, “எஸ்.பி வரட்டும்” என்று மதியம் முதல் இரவு வரை இழுத்தடித்து ரிமாண்ட் என்றது. தெரிந்த விசயம் தான் எனினும் போட்ட பிரிவுகள்தான் விசித்திரமானவை. “பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொடும் காயம் விளைவித்தது, அவதூறு…. ” இப்படி ஏராளம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

எது பொதுச் சொத்து ? சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

வந்தவாசியில் உள்ள நடுவரின் இல்லத்தில் தோழர்கள் 9 பேரும், அந்த வீரத்தாயும் நடுவர் முன் நிறுத்தப்பட்டனர், இரவு 11.30 மணிக்கு.

போலீசு தண்ணீரோ உணவோ தராமல் கொடுமைப்படுத்துவதையும் தங்களை தாக்கியதையும் நள்ளிரவிலும் நடுவரிடம் வெளிப்படுத்தினார்கள் தோழர்கள்.

அடிமைகளையே பார்த்து பழக்கப்பட்ட நீதிபதியால் நமது தோழர் சிவரஞ்சனி கேட்ட “டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?” என்ற கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை.  “சாராயம் பொதுச் சொத்தா” என்று போலீசிடம் கேள்வி கேட்கவும் முடியவில்லை.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?”

இரவு ஒரு மணிக்கு தோழர்களை வேலூர் சிறைக்குச் செல்ல பணித்தார்கள். உறங்கும் நேரம் கடந்தாலும் களைப்பு கண்களை மறைத்தாலும் “டாஸ்மாக் கடைகளை உறங்க வைக்காமல் நமக்கு உறக்கமேது” என்ற வகையில் முழக்கமிட்டுக் கொண்டே சென்றார்கள்.

இந்த நாட்டில் நீதி நேர்மை நியாயத்தை யார் பேசினாலும் தண்டனைதான் இதுதான் அரசின் நீதி.  “வாழ்வை அழிக்கும் சாரயத்தைப் பற்றி பேசக்கூடாது” என்கிறது போலீசு அது தேசத்துரோகமாம்.

பிரசுரத்தை மாங்கு மாங்கென்று அனைத்து அதிகாரிகளும் படித்து அதில் அவதூறு இருப்பதாக வழக்கும் போடுகின்றனர்.

பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

நேற்று முதலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் இன்று காலை முதல் அனைத்து நாளிதழ்களிலும் முக்கியச்செய்தியாக “பொது மக்கள் டாஸ்மாக் கடை சூறை” என்று இச்செய்தி வந்திருந்தது.

டாஸ்மாக்கை அழிக்க அவதாரம் எடுத்த அழிவிடைதாங்கியில் போலீசு குவிக்கப்பட்டு இருக்கிறது. போராடிய மக்களும் தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள். டாஸ்மாக் போலீசு பாதுகாப்புடன் திறக்கப்பட்டு இருக்கின்றது.

முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

இது ஒரு தேசவிடுதலைப் போராட்டம். ஆம், இளைஞர்களை மாணவர்களை உழைக்கும் மக்களை சிந்திக்க விடாமல் நாட்டின் மீது அக்கறையற்றவர்களாக மாற்றும் போதைக்கு எதிரான போராட்டம்.

சீனாவின் தேசவிடுதலைக்கு மாணவர்கள், இளைஞர்கள் திரளக்கூடாது என்பதற்காக பிரிட்டிஷ் அரசு கப்பலில் டன் டன் ஆக அபினைக் கொண்டு வந்து கொட்டியது. அதற்கு எதிராக தொடங்கியதுதான் அபினி யுத்தம் . அந்த யுத்தத்தில் வெற்றியும் பெற்றார்கள் சீன மக்கள்.

இதோ இந்த தேச விடுதலைப் போருக்கு மாணவர்கள், இளைஞர்களே உங்களை அறைகூவி அழைக்கின்றோம். எம்மோடு புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

உழைக்கும் மக்களே, ஜனநாய சக்திகளே!

அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் – புமாஇமுவின் முன்னுதாரணமிக்க போராட்டத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது.

பள்ளிகள் கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடையை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தும் மீறி வைக்கும் இந்த அரசாங்கத்தை, மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கை அடித்து உடைக்காமல் தீர்வு இல்லை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றிடுவோம், அழிவிடைதாங்கி உழைக்கும் மக்கள் மீதான போலீசு அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்!

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள்

தொடர்புக்கு : 9445112675

கிரானைட் கொள்ளை : கிராமப்புறங்களின் மீது நடத்தப்படும் போர்!

1

மிழகத்தில் நடந்துள்ள/நடந்துவரும் கிரானைட் கொள்ளை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கெனவே பத்திரிகைகள் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.  குறிப்பாக, தமிழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டப் பகுதிகளில் அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்துள்ள கிரானைட் கொள்ளை, முறைகேடு பற்றி ஒரு முழுமையான வீடியோ படமொன்றை வெளியிட்டிருக்கிறது.

கிரானைட் மெகா கூட்டணிகிரானைட் கற்களை வெட்டியெடுத்து, பாலிஷ் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘தொழில்’ தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நடந்துவருகிறது. இதில் மதுரை மாவட்டத்திலுள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய நான்கு பகுதிகளில் மட்டும் 83 கிரானைட் குவாரிகள் முறைகேடாக நடந்து வந்ததையும் அக்குவாரிகளில் இருந்து 39,30,431 கன மீட்டர் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதால், தமிழக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதையும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கையாக அளித்தார்.  அந்த அறிக்கையிலேயே, “அறிவியல்பூர்வமான நவீனகாலத் தொழில்நுட்ப உதவியோடு ஆய்வு செய்தால் இந்த நிதியிழப்பு இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார், அவர்.

இதோடு மற்ற மாவட்டங்களில் நடந்துள்ள கிரானைட் கொள்ளையை, அக்கற்களின் சந்தை மதிப்பின்படி கணக்கிட்டுப் பார்த்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமாக பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடக்கூடும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.  பண வடிவிலான இந்த இழப்பு ஒருபுறமிருக்க, கிரானைட் கொள்ளையால் சாதாரண மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும், இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன. இந்தக் கொள்ளையும், நாசமும், பேரழிவும் அரசுக்குத் தெரியாமல், தலையாரி தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரையிலான அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்துவிடவில்லை என்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களும், கூறு போடப்பட்ட மலைகளும், சிதைக்கப்பட்ட புராதனச் சின்னங்களும், நாசமாக்கப்பட்ட கண்மாய்களும், ஓடைகளும், வயல்வெளிகளும், தரைமட்டமாக்கப்பட்டு அழிக்கப்பட்ட  கிராமங்களும் சாட்சியங்களாக உள்ளன.

கிராமங்களின் அழிவு

பொக்கிஷ மலை
கிரானைட் கொள்ளையின் வீச்சையும் கொடூரத்தையும் எடுத்துக் காட்டும் கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை.

கிரானைட் கொள்ளையைக் கிராமப்புறங்களின் மீது நடத்தப்பட்ட போர் என்றே குறிப்பிடலாம்.  சாகுபடி நிலங்களையும் மேய்ச்சல் பூமியையும் விழுங்கி, கண்மாய்களையும் ஓடைகளையும் குளங்களையும் பாசன வாய்க்கால்களையும் ஆக்கிரமித்துக் கிராமப்புற பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததோடு, பல கிராமங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் மாஃபியா கும்பல்.  புது தாமரைபட்டி, ரெங்கசாமிபுரம், டி.குண்டங்கால், சிவலிங்கம் என்ற ஊர்களெல்லாம் ஆள் அரவமற்று கிரானைட் கழிவுகள் கொட்டப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாறிக்கிடப்பதை அக்கிராம மக்கள் சகாயத்திடம் சாட்சியமாகப் பதிவு செய்துள்ளனர்.

புது தாமரைபட்டி கிராமத்தை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்த கதை வேதனையும் வக்கிரமும் நிறைந்தது.  “கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்டுவதற்கு பி.ஆர்.பி. கம்பெனி வைத்த வெடிகளால், வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன. இது பற்றி புகார் சொன்னதால், அங்கு வேலைபார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடிபம்பில் வந்து ஜட்டியுடன் குளித்தார்கள். சிலசமயம் ஜட்டியுங்கூட இருக்காது. இதனால பொம்பளைங்க பயந்துகிட்டு தண்ணீர் எடுக்கப் போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்தாங்க. அந்தக் காலியைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தோம். பி.ஆர்.பி. மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தந்தாங்க. ஐந்து தலைமுறைகளாக புது தாமரைபட்டியில் வாழ்ந்து வந்த நாங்கள், அதன் பிறகு மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போவிட்டோம்” என சகாயத்திடம் கதறி அழுதபடியே சாட்சியம் அளித்திருக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த முருகன்.

கீழையூர் அருகேயுள்ள ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்துகொண்டும், மிரட்டலுக்குப் பயப்படாத விவசாயிகளின் நிலங்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்டியும், வாய்க்கால் மற்றும் பாசனக் கிணறுகளை மண்ணைப் போட்டு மூடியும் அக்கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.

மேலூர் அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சூரியனேந்தல் கண்மாய் ஏறத்தாழ 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 83 ஏக்கரில் கிரானைட் கழிவுகளைக் கொட்டி, இந்தக் கண்மாயை வெறும் 2 ஏக்கராகக் குறுக்கிச் சீரழித்துவிட்டது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.  இக்கண்மாய்யில் 80 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் அளித்த புகாரை ஆதாரமாகக் கொண்டு இக்கண்மாயை சகாயம் ஆய்வு செய்தபொழுது, இக்கண்மாய் வெறும் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டதென்றும், 1.27 ஹெக்டேர் நிலத்திற்கு மட்டுமே பாசன வசதி அளிப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூசாமல் புளுகினர்.

சூரியனேந்தல் கண்மாய்
85 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த சூரியனேந்தல் கண்மாய், வெறும் இரண்டு ஏக்கராக குறுகிப்போன அவலத்தை ஆய்வு செய்யும் சகாயம்.

கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 47 ஏக்கர் பரப்பு கொண்ட சிறுமாணிக்கம் கண்மாயை பல்லவா கிரானைட் என்ற நிறுவனம் ஆக்கிரமித்து, கிரானைட் கழிவுகளைக் கொட்டி அழித்துள்ளது. இதே பகுதியில் அமைந்துள்ள 1.44 ஏக்கர் பரப்புள்ள பழுதூர் ஊரணி, 9 ஹெக்டேர் பரப்புள்ள வேப்பங்குளம் கண்மாய் ஆகியவற்றைக் கழிவுகளைக் கொட்டி மேடாக்கி, அதன் மீது தனது ஷெட்டுகளை அமைத்திருக்கிறது, பி.ஆர்.பி. நிறுவனம். செட்டிகுளம் கண்மாயில் 76 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதால், அக்கண்மாயின் தோற்றமே மாறிப்போவிட்டது.

இவை தவிர, பாறைக்குளம் கண்மாய், மேலப்பட்டி குளம், மேடங்குளம், கொல்லங்குண்டு கண்மாய், கீழையூர் சிசி கண்மாய், எரிச்சியூர் மணியன் கண்மாய், பிள்ளையார் கண்மாய், கொணப்பகோன் கண்மாய், இடையன் கண்மாய் – என கீழவளவு பகுதியில் மட்டும் காணாமல் போவிட்ட 42 கண்மாய்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார், சகாயம். “கிணற்றைக் காணோம்” என்ற வடிவேலுவின் காமெடி சீன், மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நிஜமாகவும் குரூரமாகவும் அரங்கேறியிருக்கிறது. இக்கண்மாய்களின் அழிவு என்பது அவற்றைப் பாசனத்திற்கு நம்பியிருந்த கிராமங்களின் அழிவு என விளங்கிக் கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.

கண்மாய்கள் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் கிரானைட் வெட்டியெடுக்கப்பட்ட 80 சதவீத இடங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானவைதான்.  மதுரை மாவட்டத்தில் கிரானைட் ‘தொழில்’ செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்றிடம் மட்டும் 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட சாகுபடி நிலங்கள் சட்டவிரோதமாகக் குவிந்திருப்பதாகவும், அதனை மீட்கக் கோரியும்  மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

கிரானைட் கொள்ளையர்கள் எந்தளவிற்குச் சட்டவிரோதமாகவும் கொடூரமாகவும் கிராமப்புற விவசாயிகளைச் சூறையாடி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை திருதாவூரும் புதுத் தாமரைப்பட்டியும் எடுத்துக்காட்டுகின்றன. திருவாதவூரில் 1,245 ஏக்கர் விளைநிலங்களை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டதாக அவ்வூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி சகாயத்திடம் புகார் அளித்திருக்கிறார்.  அவ்வூரிலுள்ள மொத்த சாகுபடி பரப்பே 1,300 ஏக்கர்தான் என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுதுதான் இந்த ஆக்கிரமிப்பின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.  மேலும், அவ்வூரிலுள்ள 1,500 ஏக்கர் அரசு நிலங்களையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

கிரானைட் மாஃபியா
மதுரை அருகேயுள்ள குண்டங்கால் பகுதியில் வாழ்ந்துவந்த 83 குடும்பங்கள் கிரானைட் மாஃபியா கும்பலால் துரத்தியடிக்கப்பட்டதை சாட்சியமாக அளிக்கும் விவசாயி.

புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த பாசுவதம் என்ற 62 வயது மூதாட்டி, “10 வருடங்களுக்கு முன்பு ஐ.ஆர்.8 என்ற நெல், ஏக்கருக்கு 110 மூட்டைகள் வீதம் விளைந்து விருது வாங்கின பூமி இது. கிரானைட் இருக்குனு தெரிந்ததும் எங்களை மிரட்டியும், தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள். இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டிட வேலைக்கும் போறோம்.  நெல், தானியம்னு பொன்விளைந்த பூமி இப்போ சுடுகாடா கிடக்கு” என சகாயத்திடம் கண்கலங்கி சாட்சியம் அளித்திருக்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த பூமா என்ற இன்னொரு மூதாட்டி, “என் நான்கு ஏக்கர் நிலத்தை மிரட்டிக் கேட்டும் தரலை.  அதனால என் நிலத்துக்குப் போகவிடாமல் வேலி போட்டு அடைத்துவிட்டனர். அறுவடை செய்யக்கூட முடியல. ஒத்த பொம்மனாட்டியா இவங்ககூட மோதிக்கிட்டு இருக்கேன்” என சகாயத்திடம் கூறி, தனது வயலைக் காண்பித்திருக்கிறார்.

பாசனக் கண்மாய்களையும், இரு போகம் விளையக்கூடிய நிலங்களையும் ஆக்கிரமித்து, அவற்றைக் குப்பைத் தொட்டிகளாகச் சீரழித்த பிறகு, எந்த கிராமமாவது உயிர்த்துடிப்போடு இருக்குமா?

மலை விழுங்கி மகாதேவன்கள்

திருவாதவூர் அருகேயுள்ள ஓவா மலை, கீழவளவு பகுதியிலுள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை, அரிட்டாபட்டியில் உள்ள பெருமாள் மலை உள்ளிட்ட ஏழு மலைகள், கீழையூர், கீழவளவு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பஞ்சபாண்டவர் மலை, இ.மலம்பட்டியிலுள்ள புறாக்கூண்டு மலை மற்றும் இம்மலைகளில் இருந்த சுனைகள், புராதனச் சின்னங்கள், மலைகளைச் சுற்றியிருந்த கண்மாய்கள் அனைத்தையும் பி.ஆர்.பி., ஒலிம்பஸ், பி.கே.எஸ்., சிந்து உள்ளிட்ட நிறுவனங்கள் தமக்குள் கூறுபோட்டுக் கொண்டு சிதைத்துள்ளன.

வாச்சாம்பட்டி அய்யங்காளை
கிரானைட் கொள்ளை பற்றி சாட்சியம் அளித்ததால், போலீசார் தன்னைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டியதை சகாயத்தின் காலில் விழுந்து சொல்லும் வாச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யங்காளை.

“பொக்கிஷ மலையை, நடுப்பகுதி எனக்கு, வால் பகுதி உனக்கு, சைடு பகுதி அவருக்கு – என துண்டுதுண்டாக அறுத்து பங்குபோட்டுக் கொண்டன பி.ஆர்.பி., பி.கே.எஸ்., ஒலிம்பஸ் நிறுவனங்கள். இந்த மலையைக் காப்பாற்ற நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டும் மலையைக் காப்பாற்ற முடியவில்லை” என சகாயத்திடம் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொக்கிஷ மலை களவாடப்பட்டதை விளக்கியிருக்கிறார், அப்பகுதி ஜமாஅத் தலைவர் முகமது காசிம்.

இந்து, முசுலீம் மதங்களைச் சேர்ந்தவர்கள் யார் திருமணம் செய்தாலும் பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலைக்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என மக்களிடம் வழிவழியாக நம்பிக்கை இருந்துவரும் அளவிற்கு இம்மலை அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது.  அப்படிபட்ட புராதன மலை இன்று அலோங்கோலமாகிக் கிடக்கிறது.

92 அடி உயரம், 200 அடி நீளத்தில் 21 ஏக்கரில் அமைந்திருந்த புறாக்கூண்டு மலை இன்று அரசு ஆவணங்களில் மட்டுமே உள்ளது. 2006-ல் இம்மலையை டாமின் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், அம்மலையில் புதைந்திருந்த காஷ்மீர் ஒயிட் என்ற விலையுயர்ந்த கிரானைட் கற்களை வெட்டியெடுப்பதற்காக மூன்றே மாதத்தில் பரந்து விரிந்திருந்த இம்மலையை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டது.

திருதாவூரில் அமைந்துள்ள ஓவா மலை 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதன மலையாகும் என்பதோடு, தமிழ் மக்களின் கலாச்சார, வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்துள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதிப் படிக்கும் பண்பாட்டைப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக இம்மலையில் கல்வெட்டுகள் இருந்துள்ளன.  இம்மலை குகையில் 10 சமணர் படுகைகள் இருந்துள்ளன. இம்மலைக்கு மேலுள்ள சிவன் கோவிலுக்கு மாணிக்கவாசகர் வந்து சென்றிருக்கிறார்.  இவை அனைத்தும் பி.ஆர்.பி. மற்றும் சிந்து கிரானைட் கொள்ளைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டுவிட்டன. புராதனச் சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டு, அவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஓவா மலையில் அமைந்திருப்பதைப் போலவே அரிட்டாபட்டியில் உள்ள மலைகளிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும், சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன.  தேசிய புராதனச் சின்னங்களாக இவை அறிவிக்கப்பட்டிருப்பினும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இம்மலையில் சமணர் பள்ளியைக் குடைந்து கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன.  இம்மலையில் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமுத்திரம் நீர்த் தேக்கமும் கிரானைட் கொள்ளையால் அழிந்து போனது.

நரபலி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்கள்

கிரானைட் குவாரிகளில் புதிய பொக்லைன், புதிய கிரேன் இயந்திரங்களை இயக்குவதற்கு முன்பு நரபலி கொடுப்பது வாடிக்கையாக நடந்துள்ளது.  குறிப்பாக, பி.ஆர்.பி. நிறுவனத்தில் நரபலி கொடுப்பது கோழியை அறுத்துப் பலி கொடுப்பது போல சர்வசாதாரணமாக நடந்திருப்பதை அந்நிறுவனத்தில் வேலைபார்த்து, பின்னர் வெளியேறிவிட்ட சேவற்கொடியான், பழனிவேல் ஆகிய இருவரும் சகாயத்திடம் மனுவாகவே எழுதிக் கொடுத்துள்ளனர்.

இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் தனது கை வெட்டப்பட்டதை சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

சேவற்கொடியோன் பி.ஆர்.பி. நிறுவனத்தில் 1998 முதல் 2003 வரை ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். அந்தச் சமயத்தில் ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த பல ஏழைத் தொழிலாளர்களை நரபலி கொடுத்துவிட்டு, அவர்கள் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி இப்படுகொலைகளை மூடிமறைத்துவிடுவார்கள் என்றும்; மதுரை, கரூர், புதுக்கோட்டை பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்து வந்து நரபலி கொடுத்திருப்பதையும் சேவற்கொடியோன் தனது மனுவில் தகுந்த விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக, மதுரை நகரில் சுற்றித்திரிந்த இரண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுப்பதற்காக மனோகரன் என்பவர் கூட்டிவந்தபோது, நான்தான் காரை ஓட்டி வந்தேன் என்று தனது மனுவில் சேவற்கொடியோன் கூறியிருக்கிறார்.

முன்னாள் இராணுவச் சிப்பாயான பழனிவேல் 1998 முதல் 2008 வரை பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியிருக்கிறார்.  கள்ளுதின்னி சேகர், ஜோதிபாசு, பழனி, சுப்பிரமணி ஆகிய நால்வரும் ஒரு மந்திரவாதியோடு சேர்ந்துகொண்டு 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைப் பொக்கிஷ மலைக்கு அருகேயுள்ள பல்லவா கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்ததை நான் நேரடியாகவே பார்த்தேன் என்று மனு கொடுத்திருக்கிறார், அவர்.

புதுத்தாமரைப்பட்டி உஷா
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ் குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.

தாமரைப்பட்டி கிராமத்திலுள்ள பி.கே.எஸ். குவாரியில் கோபிகா என்ற மூன்று வயது சிறுமி 2008-ம் ஆண்டில் நரபலி கொடுக்கப்பட்டார்.  இப்படுகொலை தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராடியதையடுத்து லாரி டிரைவர் ரவியை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, லாரி டிரைவர் ரவி, “போலீஸ் தன் மீது பொய்வழக்கு போட்டிருப்பதாக”  சகாயத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.

இக்கிரிமினல் குற்றங்கள் தவிர, ஆட்களைக் கடத்திக் காணாமல் போகச் செய்வது, கொலைவெறியோடு தாக்கி முடமாக்குவது என்பதெல்லாம் வரைமுறையின்றி நடந்துள்ளன. இ.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜா தனது நிலத்தைத் தர மறுத்ததற்காகத் தாக்கப்பட்டதில், அவர் தனது இடது கையை இழந்து முடமாகிப் போனார்.  திருமங்கலத்தைச் சேர்ந்த ஹேமத்தா என்ற பெண், கிரானைட் பிரச்சினை தொடர்பாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் சுரேஷ்குமார் அதன்பின் வீடு திரும்பவில்லை என சகாயத்திடம் மனு அளித்திருக்கிறார். பஞ்சபாண்டவர் மலையில் கிரானைட் வெட்டியெடுப்பதைத் தடுக்கும் தீர்மானம் போட்டதற்காகத் தன்னை வெட்ட முயன்றார்கள், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள் என அம்பலப்படுத்தியிருக்கிறார், கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மலிங்கம்.

தீர்வு, எந்தப் பாதையில்?

பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் சொத்துக்களான கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  இதற்கும் மேலாக, பல கிராமங்கள் அழிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நாசமாக்கப்பட்டு, அவர்கள் அகதிகளாக, கையேந்திகளாகத் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். கண்மாய்கள், ஓடைகள், கால்வாய்கள், பழமை வாய்ந்த மலைகள் உள்ளிட்ட இயற்கையும், தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரங்களான புராதனச் சின்னங்களும் மீள் உருவாக்கம் செய்ய முடியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்
பி.ஆர்.பி கும்பலால் பல்லவா குவாரியில் 25 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நரபலி கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்

இவையெல்லாம் அரசுக்குத் தெரியாமல் நடந்து விட வில்லை.  புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள மலைகளை “தீர்வையற்ற தரிசு, பயனற்ற குளம்” என வருவாய்த் துறையினரே போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்து கிரானைட் கொள்ளைக்குத் துணை போயுள்ளனர். பஞ்சபாண்டவர் மலையை, குளம் என அரசு ஆவணங்களில் பதிவு செய்து, கிரானைட் மாஃபியாக்களிடம் ஒப்படைத்திருக்கிறது, அதிகார வர்க்கம். தலையாரிக்கு ரூ.1,000, வி.ஏ.ஓ.வுக்கு ரூ.5,000, வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு ரூ.50,000 என இலஞ்சப் பணம் மேலிருந்து கீழ்வரை பாய்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் கிரானைட் மாஃபியாக்களிடமே வேலைக்குச் சேர்ந்து பொதுச் சொத்துக்களை சுலபமாகவும் மொத்தமாகவும் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் போட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

அதேசமயம், இக்கொள்ளையைத் தடுப்பதற்கும், புராதனச் சின்னங்களைக் காப்பதற்கும் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்கள் கிரானைட் மாஃபியா கும்பலாலும், போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தாலும் கொடூரமாக நசுக்கப்பட்டிருக்கிறது. கிரானைட் கொள்ளை மற்றும் அட்டூழியங்கள் குறித்து சகாயத்திடம் புகார் மனு அளிக்கும் பொதுமக்கள் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனம் மீது புகார் மனு அளித்த ஒரே காரணத்திற்காக வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை என்பவரை போலீசார் கடத்திச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, அவர் குடும்பத்தினர் மீது பொய்வழக்கும் போட்டுள்ளனர்.

இப்படிபட்ட நிலையில் என்ன செய்வது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. சென்னை உயர்நீதி மன்றமும் சகாயம் கமிசனும் கிரானைட் மாஃபியா கும்பலைக் கவனித்துக் கொள்ளும் என ஏமாளித்தனமாக நம்பி கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோமா? அல்லது தமிழகத்தின் செல்வ வளங்களைக் காப்பதை, அதனைச் சுரண்டிக் கொழுத்த மாஃபியா கும்பலைத் தண்டிப்பதை நம் கரங்களில் எடுத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்தப் போகிறோமா என்பதைத் தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டிய தருணமிது.

– குப்பன்
_____________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

1

த்துணை முறை கையும்களவுமாக மாட்டிக் கொண்டாலும், அம்பலப்பட்டு அவமானப்பட்டாலும் அதையெல்லாம் துடைத்துப்போட்டு விட்டு, திரும்பத் திரும்ப நானாவிதமான குற்றங்களைச் செய்ய போலீசு துணிவது ஏன்? பொதுமக்களை அடக்கி ஒடுக்கிடும் அதிகாரம் அதனிடம் குவிந்திருப்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அக்குற்றங்களை மூடிமறைத்து, நியாயப்படுத்தி, குற்றமிழைத்த கிரிமினல் போலீசைச் சட்டப்படியே தப்பவைக்கும் அயோக்கியத்தனம், போலீசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி நீதிமன்றங்கள் வரையிலான இந்த அமைப்பு முறையிலேயே பொதிந்திருப்பதுதான் இதற்கு அடிப்படையாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டு வக்கிரமான மனித உரிமை மீறல்கள் சமீபத்தில் தமிழகத்தில் நடந்துள்ளன.

போலீஸ் பாலியல் குற்றம்
போலீசாரால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடிப் பெண்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமது குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்து, அப்பகுதியில் அலங்காரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சாமான்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுள் இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் தமது பொருட்களைப் பயணிகளிடம் விற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு சுற்றிக் கொண்டிருந்த போலீசு ஏட்டு வடிவேல், அப்பெண்களையும் சிறுமியையும் மிரட்டிப் பேருந்து நிலையத்திலிருந்த போலீசு கட்டுப்பாட்டு அறைக்கு இழுத்துக் கொண்டு போய், அவர்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தித் துரத்தியடித்து விட்டான்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு ஆதரவாகத் தலையிட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இப்பாலியல் வன்கொடுமை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக் கோரியும் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறது.

இச்சம்பவம் போலீசு கட்டுப்பாட்டு அறையிலேயே நடந்திருப்பதும், இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் பாதிக்கப்பட்டிருப்பதும் நிரூபணமான பின்னும் இக்குற்றத்தில் போலீசு ஏட்டு வடிவேலு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டிருப்பது மோசடியானது. குறிப்பாக, அப்போலீசு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் என்பவருக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கிறது. எனினும், இக்குற்றத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனக் கூறப்பட்டு, நடந்த சம்பவத்தை தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதுதான் அவர் செய்த தவறு என விசாரணை முடிக்கப்பட்டு, அவருக்குப் பணியிட மாறுதல் என்ற ‘தண்டனை’ வழங்கப்பட்டு, குற்ற வழக்கிலிருந்து தப்ப வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஓசூர் சம்பவத்திற்கு இணையான பாலியல் வக்கிரம் சென்னை- மாம்பலம் போலீசு நிலையத்தில் கடந்த மாதம் நடந்திருக்கிறது. இரவு சினிமா காட்சி பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார், பசுபதி, கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் வழிமறித்த போலீசார், அவர்களைச் சட்டவிரோதமாக மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றதோடு, அங்கு அந்த மூன்று அப்பாவிகளையும் – இந்த மூன்று பேரில் சதீஷ்குமார் தவிர மற்ற இருவரும் சிறுவர்கள் – செல்போன் திருடியதாக ஒத்துக்கொண்டு கையெழுத்துப் போடும்படி அடித்துச் சித்திரவதை செய்தனர். மேலும், அந்த மூவருக்கும் யுவராஜ் என்றொரு நெருங்கிய நண்பன் இருப்பதையும் சித்திரவதையினூடாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அன்றிரவே யுவராஜின் வீடு புகுந்து, தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன் பிறகும் அவர்கள் நால்வரும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கவே, அவர்களை நிர்வாணமாக்கி, கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுச் செய்து, அதனை அப்போலீசு நிலையத்தின் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் சீனிவாசன், சேது என்ற இரண்டு போலீசார் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு ரசித்துப் பார்த்தனர். சதீஷ்குமாரின் ஆணுறுப்பிலிருந்து இரத்தம் கொட்டி, அவர் மயங்கிச் சரியும் வரை இந்த வக்கிரமான சித்திரவதை நடந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் மீது செல்போன் திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகளைப் பதிவு செய்து சதீஷ்குமாரை புழல் சிறையிலும், மற்ற மூன்று சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துள்ளனர்.

போலீஸ் வன்முறை

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து, சிறை மருத்துவர் அவரைப் பரிசோதித்தபோதுதான் மாம்பலம் போலீசு நிலையத்தில் அவரும் அவரது நண்பர்களும் கீழ்த்தரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வக்கிரம் அம்பலமானது. சிறை மருத்துவர் இந்த வக்கிரச் சித்திரவதை குறித்து போலீசு கமிசனருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதம் மூலம் புகாராகத் தெரிவித்த பின், இந்தச் சம்பவத்தை இனியும் மூடி மறைத்துவிட முடியாது என்ற நிலையில்தான், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அச்சிறை மருத்துவர் மனிதாபிமான எண்ணத்தோடு கடிதம் எழுதவில்லையென்றால், இப்பாலியல் வக்கிரமும் பொய் வழக்கும் அம்பலத்திற்கே வந்திருக்காது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீசு பிரிவு, இரண்டு போலீசார் மீது மட்டும்தான் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை எனக் கேள்விகள் எழுந்தவுடன், இது குறித்து அவரைத் தனியாக விசாரித்து வருவதாக மழுப்பலான பதிலை அளித்தது. இது உதவி ஆய்வாளரைக் காப்பாற்றி, வழக்கிலிருந்து தப்பவைக்கும் மோசடி தவிர வேறில்லை. மேலும், இச்சம்பவங்கள் இரண்டிலும் பாலியல் வன்முறை குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, போலீசாரின் பிற குற்றங்கள் – சாலையில் நடந்துசென்றவர்களைச் சட்டவிரோதமாக இழுத்துப் போனது, வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனைக் கடத்தி வந்தது, பொய்வழக்கு போட்டது உள்ளிட்டவை கண்டுகொள்ளப்படவில்லை என்பது கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

இவ்விரண்டு சம்பவங்களில் மட்டுமின்றி, தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்து விசாரணைக்கு வந்துள்ள பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளிலும், குற்றங்களைத் தடுப்பதற்காகவே கடமையாற்றி வருவதாகக் கூறப்படும் போலீசே கொடிய குற்றங்களை இழைத்திருப்பதும்; அத்துறைக்கு வெளியே இருப்பவர்களால் இந்தச் சம்பவங்கள் அம்பலமாக்கப்பட்ட பிறகுதான் வழக்கு, விசாரணை தொடங்கியிருப்பதும்; அதிலும்கூட, குற்றமிழைத்த போலீசாரில் ஒன்றிரண்டு பேரின் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, மற்றவர்களைத் தப்பவைப்பது திட்டமிட்ட முறையில் நடந்தேறியிருப்பதும்; நீதிமன்றங்களும் போலீசால் பாதிக்கப்படுவோருக்கு நட்ட ஈடு வழங்க உத்திரவிடுவதைத் தாண்டி, அவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும் போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க மறுப்பதும் ஒரு பொதுப்போக்காக இருப்பதை நாம் காணலாம்.

இவையனைத்துமே போலீசிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற கேள்வியைத்தான் மையமாக எழுப்புகின்றன. போலீசின் ஒவ்வொரு அத்துமீறல்களும் அக்கிரமங்களும், அவ்வமைப்பு பொதுமக்களுக்கு எதிரானது என்பதைத்தான் நிரூபித்து வருவதால், குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிக்கக் கோருவதையும் தாண்டி, அதற்கு வழங்கப்பட்டுள்ள தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்யக் கோருவதும் அவசியமாகிறது. ஆனால், முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இந்த அறிவுபூர்வமான தீர்வுக்கு மாறாக, போலீசு நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தி, போலீசாரின் அத்துமீறல்களைக் குறைத்துவிட முடியும் என்ற நகைக்கத்தக்க தீர்வை முன்வைக்கிறார்கள்.

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
___________________________________

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

5
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.

ந்த செய்தி பின்னணியை அறிய இதன் முதல் பாகமான “பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்” படித்து விட்டு வாருங்கள்.

 “nut rage” – பருப்பு வன்முறை என்று ஊடகங்களில் பிரலமான கொரிய சீமாட்டி சோ ஹைனுக்கு நீதிமன்றம் 12.02.15 அன்று ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளான சோ சென்ற வருடம் டிசம்பர் 5-ம் தேதி விமான நிறுவன ஊழியரை இழிவுபடுத்தியதிலிருந்து உலகம் முழுக்க இழி புகழ் பெற்றுவிட்டார்.

மேகடாமியா பருப்பை பாக்கெட்டோடு தட்டில் வைத்து விட்டார் என்று உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை இழிவுபடுத்தி, விமானத்தில் இருந்து இறக்கி விட்டு, பரிமாறிய தொழிலாளியை மண்டியிட வைத்து, தள்ளி விட்டு எல்லாம் ஆடினார் இந்த கொரிய மேட்டுக்குடி சீமாட்டி.

இந்தக் குற்றங்களோடு விமான பைலட்டின் பணிகளை இடையூறு செய்ததற்கும் சேர்த்து சியோல் மாவட்ட நீதிமன்றம் 40 வயது சோ-வை தண்டித்திருக்கிறது. எனினும் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக சோ தரப்பு போக்குவரத்து அமைச்சகத்தோடு தொடர்பு கொண்டதில் அம்மையாருக்கு மட்டும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இப்படி நடந்ததற்கு முகாந்திரம் உள்ளதை பின்னர் பார்ப்போம்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சோ-வுக்கு மூன்றாண்டு தண்டனையும், சோ- தரப்பு தாங்கள் குற்றமே செய்யவில்லை என்றும் கோரினார்கள். பின்னர் இந்த அம்மா முன்னர் எதற்காக மன்னிப்பு கோரினார்? டிசம்பரிலிருந்து சிறையிலிருக்கும் சோ இன்னும் எட்டு மாதங்கள் சிறையிலிருக்க வேண்டும்.

கொரியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான சோ, நீதிபதிக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் சிறையில் அடிப்படை வசதிகள் இல்லையென்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். தன்னுடைய தவறுகளை அறிவதாகவும், அதனால் மன்னிக்குமாறும் கூறியிருக்கிறார். அதாவது சட்டப்படி குற்றம் செய்யவில்லை என்று வழக்கறிஞர் மூலம் டெக்னிக்லாக வாதிட்டுவிட்டு பின்னர் தண்டனை உறுதி என்றதும் சென்டிமெண்டை போட்டு தண்டனையை குறைப்பது பொதுவாக பரப்பன அக்ரஹாரம் முதல் தென் கொரியை வரை நிலவும் குற்றவாளிகளின் உத்தி.

இந்த விவகாரம் கொரியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்று மக்களிடையே ஒரு பொதுக்கருத்து உருவானதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பாரம்பரிய பணக்கார குடும்பகளுக்கு சொந்தமானவை.  “Chaebol” என்று கொரிய மொழியில் அழைக்கப்படும் இவர்கள் பல்வேறு தொழில்களை தமது குடும்ப வலைப்பின்னலால் ஆக்கிரமித்திருக்கின்றனர். தாய் நிறுவனத்தில் தலைவராக இக்குடும்பத்தின் தலைவர் இருப்பார். அவருக்கே அனைத்து வானளாவிய அதிகாரங்கள் இருக்கும். ஏனைய குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் குடும்ப இடத்தின் வலிமைக்கேற்ப நிறுவனங்களின் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்
கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்

அப்பட்டமான மன்னராட்சி முறையில் செயல்படும் இக்கொரிய மேட்டுக்குடி குடும்பத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ எந்த தகுதியும், அடிப்படையும் இன்றி உயர்பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இதனாலேயே தொழிலாளிகளையும், ஊழியர்களையும் பிச்சைக்காரர்களைப் போல இழிவாக நடத்துவார்கள். அடிமைகளைப் போல தண்டிப்பார்கள். இத்தகைய குடும்ப தலைவர்கள் ஏதாவது ஊழல் வழக்கில் பிடிபட்டால் மேல் முறையீட்டில் நீதிமன்றம் விடுவித்துவிடும். கொரியாவை முன்னேற்றிய தியாகிகள் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டு இக்குற்றவாளிகள் புன்னகையுடன் விடுதலையாகி வருவார்கள்.

இப்பேற்பட்ட் பின்னணியில் சோ எனும் சீமாட்டி தண்டிக்கப்பட்டார் என்றால் எந்த அளவு கொரிய மக்கள், தொழிலாளிகள் இவர்கள் மேல் வெறுப்போடு இருப்பார்கள் என்பதை அறியலாம். இக்குடும்பங்களின் 2 அல்லது 3-ம் தலைமுறை வாரிசுகள் தம்மை ராயல் கோமகன்களாகவும், சிறப்பு சலுகை கொண்ட ஆளும் வர்க்கமாகவும் கருதிக் கொள்வார்கள் என்று யோன்சி பல்கலை உளவியல் பேராசிரியர் வாங் சங் மின் குறிப்பிடுகிறார்.

1999-ம் ஆண்டில் தாத்தா ஆரம்பித்த கொரியன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்த பேத்தி சோ, 2006-ல் 32 வயதில் துணை தலைவராகிறார். அவரது இரு இளைய உடன் பிறப்புகளும் இப்படித்தான் நிர்வாகிகளாக திணிக்கப்பட்டனர்.

டாய்லட் பேப்பர், சோப், உள்ளாடை மட்டுமே வழங்கப்பட்டாலும் சக சிறைவாசிகள் இதர குளியல் மற்றும் அலங்கார பொருட்களை வழங்கியதாக நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் சோ குறிப்பிடுகிறார். இந்த உதவி செய்த எவரும் இந்த வழக்கு குறித்து தன்னிடம் ஏதும் பேசவில்லை என்கிறார் சோ. இறுதியில் நாகரிகம் என்பது சிறையில் இருக்கும் சாதாரண மக்களிடம்தான் இருக்கும் என்பதை ‘நாகரிக’ உலகம் நமக்கே சொந்தமென்று கருதும் அம்மணி புரிந்து கொண்டிருப்பார்.

இந்த சிறை அனுபவம் மற்றவர்களை புரிந்து கொள்ள தனக்கு உதவியதாகவும் குறிப்பிடுகிறார். கம்யூனிச நாடுகளில் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள் குறித்து கண்ணீர் விடும் கோமகன்கள் இந்த வரிகளை தினசரி சொல்லி பார்க்கட்டும். இறுதியில் ஒரு முதலாளித்துவ நாட்டின் மேட்டுக்குடி குற்றவாளியைக் கூட கம்யூனிச ‘பாணி’யில் சிறையில் இருக்கும் ‘கிரிமினல்கள்’தான் திருத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை பற்றி யோசித்திருந்தால், வேலை செய்யும் தொழிலாளிகளை அடிமைகள் போல நடத்தாதிருந்தால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த வழக்கு நடந்திருக்காது என்று நீதிபதி குறிப்பிடுகிறார். விமானத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது, ஊழியர்கள் வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டது, இன்னும் அவர்கள் வேலை திரும்ப முடியாத சூழல், உலகெங்கும் தென் கொரியாவின் மானம் கப்பலேறியது என்று இந்த வழக்கின் மூலத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

கூடவே சொ வருத்தம் தெரிவித்ததையும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கொரியன் ஏர் உதவ முயற்சித்ததையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒருவேளை மேல்முறையீட்டில் இவ்வார்த்தைகளை வைத்து அம்மணி விடுதலையும் செய்யப்படலாம்.

“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர். கூடவே சோ அறிவுப்பூர்வமான முதிர்ச்சி பெற கட்டாய சமூக சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Chaebolஎனினும் சோ தரப்பு இந்த வழக்கை நீர்த்துப் போக கடைசி வரை தனது ராயல் குடும்ப உரிமைகளை வைத்து முயன்றது. அதில் ஒன்று கொரியன் ஏரைச் சேர்ந்த யூ வூன் ஜின் எனும் நிர்வாக அதிகாரி, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பொய் சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்தித்தது. இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டு இந்த சீமானுக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரியான கிம் வூன் என்பவர் அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணை தகவல்களை கொரியன் ஏர் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார். இவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனையும், ஒரு வருட பணி நிறுத்தமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்னமும் கொரிய கோமான்கள் ரைட் ராயல் பாசிஸ்டுகளாகத்தான் உலா வருகிறார்கள். சியோலிலே இதுதான் நிலைமை என்றால் ஸ்ரீபெரும்புதூரில் இவர்கள் நமது தொழிலாளிகளை எப்படி நடத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள். இது ஏதோ கொரியாவுக்கு மட்டுமல்ல நம்மூர் அம்பானி, அதானிகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தும்.

கொரிய தொழிலாளி வர்க்கம் இத்தகைய ராயல் குடும்பங்களிடமிருந்து அனைத்தையும் மீட்டால்தான் தமது சுயமரியாதையையும் மீட்க முடியும். அதற்கு ஒரு துவக்கமாக இந்த பருப்பு வன்முறை இருக்கிறது. இல்லையென்றால் ஒரு இளவரசி இரண்டு மாதம் சிறையில் இருப்பதெல்லாம் நடக்குமா என்ன?

–    வேல்ராசன்.

படங்கள், செய்திகள் பல்வேறு உலக செய்தி இணையத்தளங்களில் இருப்பவை.

இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

4

ங்களுக்கு மாதச் செலவுக்கு மேல் அதிகமாக பணம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை கையிருப்பில் இருக்கிறது அது மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எச்.எஸ்.பி.சி தனியார் வங்கி
இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

வங்கியிலிருந்து உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள்.

“சார், நீங்க பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடலாமே, அதுக்கு இத்தனை சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.” என்பார்கள். “ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டால் இத்தனை ஆண்டில் இத்தனை மடங்கு அதிகமாகி விடும்” என்பார்கள். “காப்பீடு” என்பார்கள், “முதலீட்டு வாய்ப்புகள்” என்பார்கள், “வரிச் சலுகை” என்பார்கள். “சேமிப்பு” என்பார்கள்.

இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

இதற்கெல்லாம் மேல் அதிஉயர் நிகரமதிப்பு கொண்ட நபர்களில் சிலரைப் பற்றிய ஒரு பட்டியல் சென்ற வாரம் (ஞாயிற்றுக் கிழமை – பிப்ரவரி 8, 2015 அன்று) வெளியாகியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் எச்.எஸ்.பி.சி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் கணக்கு வைத்திருந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களில் 1,195 பேர் இந்தியர்கள்.

எச்.எஸ்.பி.சி வங்கி
தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி

அந்த வங்கி சாதாரண லோக்கல் பொதுத்துறை ஸ்டேட் வங்கி இல்லை. இன்னும் ‘திறமை’யாக செயல்படும் தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கூட இல்லை. தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி அது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, இந்நபர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு, பணச் சலவை  (கருப்பை வெள்ளையாக்குதல்) மையமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள்தான் இப்போது வெளியாகியிருக்கின்றன.

அந்த ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரகசிய எண் அடிப்படையிலான கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று உங்கள் நாட்டில் கருப்புப் பணம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்படும் பணம் பற்றிய விவாதங்கள் கிளம்பி அரசியல்வாதிகளும், அண்ணா ஹசாரேக்களும் சவடால் அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால், எதுவும் நடந்து விடப் போவதில்லை என்றாலும் எதுக்கு ரிஸ்க் என்று உங்களுக்கு தோன்றுகிறது.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளை
எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

அதை உணர்ந்து, சிறந்த ஒரு தனியார் நிறுவனமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

“சார், நீங்க பேசாம ஸ்விஸ் குடியுரிமை வாங்கிடுங்க, அப்புறம் யாரும் உங்கள தொட முடியாது. உங்க பணத்தை ஸ்விஸ்ல வச்சிகிட்டு மொரீஷியஸ் மூலமா இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்யலாம். நினைச்சபடி வெளிநாட்டில செலவழிக்கலாம்.” என்று அதற்கான நடைமுறைகளை விளக்குவார் வங்கி பிரதிநிதி. அதை ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஸ்விஸ் குடிமகன், ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டும் அந்த நாட்டில் தங்கி இருந்தால் போதும், இந்தியாவில் உங்கள் (கொள்ளை) தொழிலை வழக்கம் போல தொடரலாம்.

நாட்டுப் பற்றோ அல்லது தொழிலின் கட்டாயங்களோ உங்களை குடியுரிமை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் செய்தால், அடுத்த வழியை வங்கி பிரதிநிதி முன் வைப்பார்.

ஸ்விஸ் கணக்கு பட்டியல்
உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்பு வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த நபர்களை தொடர்பு கொண்டு, முகவரிகளை சரிபார்த்து முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“சரி சார், இந்திய குடிமகனாகவே இருந்துக்கோங்க. ஆனா, வருசத்துக்கு 6 மாசத்துக்கு மேல் வெளிநாட்டில இருக்கிறதா திட்டம் போட்டுக்கோங்க. அப்போ நம்ம கணக்கில நீங்க போடற பணம் எதுக்கும் இந்தியால வரி கட்ட வேண்டாம்” இது உங்களுக்கு ஒப்புதலாக இருந்தால், வங்கியே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து, கட்டணத்தை வாங்கிக் கொள்ளும்.

கருப்புப் பணம்
சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை

“நம்ம தொழிலுக்கு 6 மாசம் வெளிநாட்டில் இருப்பதெல்லாம் சரிப்படாது” என்றோ, “வயசான காலத்தில இப்படி அல்லாட முடியாது” என்றோ நீங்கள் கருதினால், அதற்கும் ஒரு வழி வைத்திருந்தார்கள்.

“சரி உங்கள பணத்தை எல்லாம் இன்னொரு கணக்குக்கு மாற்றி விடுவோம். அந்தக் கணக்கு ஒரு கம்பெனி பெயரில் இருக்கும், அந்த கம்பெனி ஒரு டிரஸ்டுக்கு சொந்தமா இருக்கும், அந்த டிரஸ்டு உங்களுக்கு நிதி உதவி செய்றதா இருக்கும். இப்போ உங்களை யாரும் தொட முடியாது. எப்ப வேணுமோ அப்ப, அந்த கம்பெனி கணக்கில இருந்து உங்க இந்திய கம்பெனிக்கு பணத்தை கடனாகவோ, முதலீட்டாகவோ கொடுத்துக்கலாம். எந்தத் தலைவலியும் கிடையாது. கம்பெனி எந்த நாட்டில எப்படி பதிவு செய்றது, அறக்கட்டளையை எப்படி உருவாக்குவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அதையும் செய்து தருவார்கள்.

இதற்கெல்லாம் மேலும் நீங்கள் விடாப்பிடியாக, சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை, “இது இல்லீகல் சார், கவனமா கொண்டு போங்க, பிடிபட்டா சிக்கல்” என்ற எச்சரிக்கையுடன். இதைத் தவிர மேலே சொன்ன மற்ற நடவடிக்கைகள் எல்லாமே “லீகல்” என்று அழைக்கப்படும் சட்டத்துக்குட்பட்டவைதான்.

அம்பானி சகோதரர்கள்
அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

உதாரணமாக, பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் கேரிங் வங்கிக் கிளையிலிருந்து $50 லட்சம் (சுமார் ரூ 33 கோடி) ஸ்விஸ் பிராங்கு மதிப்பிலான கரன்சி நோட்டுகளை வாங்கி சென்றிருக்கிறார். அவர் தனது கணக்கிலிருந்து அமெரிக்க அதிபர் பில், ஹில்லாரி மற்றும் அவர்களது மகள் செல்சீ கிளின்டன் பெயரிலான அறக்கட்டளைக்கு $10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். எச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்திய திருவிளையாடல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கார்டியன் நாளிதழின் கட்டுரைகளைப் பாருங்கள்.

இத்தகைய ‘நேர்மை’யான சேவைகளை வழங்கிய வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் பட்டியலில் இந்திய வாடிக்கையாளர்களில் முதன்மையானவர்கள் முகேஷ், அனில் அம்பானி சகோதரர்கள். 2006-ம் ஆண்டு இருவரது கணக்கிலும் ஒரே அளவில் ரூ 165 கோடி இருந்திருக்கிறது. அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

ஸ்விஸ் வங்கிக் கணக்கு பட்டியல்
“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.” “நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,” “நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

திருபாய் அம்பானியின் மகள் நீத்தா அம்பானி இப்போது கோத்தாரி குடும்ப மருமகள். அவர்களது கணக்கில் ரூ 195 கோடி இருந்திருக்கிறது. இந்தியாவில் தனியார் விமான சேவை ஆரம்பித்து, ‘திறமை’ காட்டிய ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயலின் கணக்கில் ரூ 116 கோடி இருந்திருக்கிறது.

தொழிலதிபர் மனு சாப்ரியா குடும்பத்தினர் கணக்கில் ரூ 874 கோடி ரூபாய், வீட்டு அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் மகேஷ் தரானி கணக்கில் ரூ 251 கோடியும், ரியல் எஸ்டேட் செய்யும் ஷ்ராவன் குப்தா, ஷில்பி குப்தா கணக்கில் ரூ 209 கோடியும் இருந்திருக்கின்றன. உள்ளூரில் மைனர் செயினும், ஸ்கார்பியோ காரும் என்று சுற்றும் ரியல் எஸ்டேட் கட்ட பஞ்சாயத்து ரவுடிகள் கவனிக்க.

இந்தப் பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் பிரணீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்னு தாண்டன், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் நாராயண் ரானேவின் மனைவி நீலம் ரானே, மகள் நிலேஷ் ரானே, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர், மற்றும் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே ஆகியோரும் அடங்குவார்கள்.

முழுப்பட்டியலை தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலைப் பாருங்கள்.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் விபரங்கள் வெளியானதும்

“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.”
“நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,”
“நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

என்று டிசைன் டிசைனாக விளக்கமளித்து சுவிஸ் வங்கி அளித்து சேவைகளை முழுமையாக தாம் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்கிறார்கள், இந்த யோக்கியர்கள்.

ர்வே ஃபல்சியானி
எச்.எஸ்.பி.சி பட்டியலை வெளிக் கொண்டு வந்த எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளர்

இத்தகைய நபர்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்து, இந்தியாவில் தொழில் செய்து பணத்தை குவித்தாலும் இந்தியாவில் வசிக்காத இந்தியர் என்ற அந்தஸ்தில் தமது வருமானத்தை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு பட்டை நாமம் போட்டிருக்கின்றனர். அதற்கு எச்.எஸ்.பி.சி போன்ற ‘உத்தம’ வங்கியின் சேவையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

எச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளை 2006-ம் ஆண்டு எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளருக்கு தனது தரவுத்தளத்தை சீர்செய்யும்படி பணி கொடுத்திருக்கிறது. தரவுத் தளத்தை பார்த்த பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆயுதத் தரகர்கள், வைர வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்களின் கணக்கு விபரங்களையும், அவை தொடர்பாக நடந்திருந்த திருவிளையாடல்களையும் பார்த்த அவர் அந்த விபரங்களை நகல் எடுத்திருக்கிறார். கிரிமினல் மாஃபியா கும்பலுக்கும், கார்ப்பரேட் வங்கி, தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு எங்கு தொடங்குகிறது என்று சொல்ல முடியாதுதான்.

இந்தப் பட்டியலின்படி 2006-07ம் ஆண்டில் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த உலகப் பணக்காரர்களின் வங்கிக் கையிருப்பின் மதிப்பு $13,000 கோடி (இன்றைய நாணய மதிப்பில் சுமார் ரூ 8 லட்சம் கோடி).

அம்பானி - மோடி
“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

எர்வே 2009-ம் ஆண்டு இந்த கிரிமினல் வங்கிக் கணக்கு விபரங்களை பிரெஞ்சு போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். பிரெஞ்சு அரசு அதை பல்வேறு நாட்டு அரசுகளுக்கு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் 2011-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு 600-க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் தெரிய வந்திருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலை வெளிப்படையாக வெளியிடவோ, கணக்கு வைத்திருந்த முதலாளிகள் மீதோ, அவர்களுக்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி அதிகாரிகள் மீதோ எந்த நடடிக்கையும எடுக்கவோ செய்யாமல் மூடி மறைத்தனர், இந்திய அரசும் உச்சநீதிமன்றமும். இந்தப் பணத்துக்கு முறையாக வரி கட்டியிருக்கிறார்களா என்று விசாரணை செய்யப் போவதாக சவடால் விட்டு, எதிர் முகாமைச் சேர்ந்த பணக்காரர்கள் மீது சோதனை நடத்துவதற்கு அதை பயன்படுத்திக் கொண்டனர்.

ஜனவரி 2012-ல் முகேஷ் அம்பானியை வருமான வரி விசாரணையில் மாட்டி விட்டதற்காக எச்.எஸ்.பி.சி வங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நேரத்தில் “முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

பன்னாட்டு வங்கி முறைகேடுகள்
பன்னாட்டு வங்கி முறைகேடுகள்

கிரேக்க நாடு தொடர்பான 2,000 பேர்களின் விபரங்கள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தனது நாட்டு பண முதலைகளின் பட்டியலை பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட அமெரிக்க அரசோ, எச்.எஸ்.பி.சி வங்கியின் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறு அபராதத் தொகை விதித்து வழக்கை முடித்துக் கொண்டது. அதே நேரம், எர்வே ஃபால்சியானி மீது ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காகவும் தொழில்துறை உளவு செய்ததற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நாட்டு அரசுகளும் தாம் யாருக்காக செயல்படுகின்றன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லா மோண்ட என்ற பத்திரிகையின் வசம் 1.3 லட்சம் பெயர்களைக் கொண்ட இந்த முழுப்பட்டியலும் வந்து சேர்ந்தது. அப்பத்திரிகை இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிகளை சரிபார்த்து சென்ற வாரம் முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 1,688 இந்தியர்களின் விபரங்களை முறையாக சரிபார்த்து, 1,195 பேர் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அடையாளம் கண்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பாக்வாரா, கோட்டயம், ஸ்ரீநகர், லூதியானா, சிம்லா போன்ற சிறு நகரங்களிலும் ஆய்வு செய்து இந்தப் பணியை முடித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியர்களின் கணக்கு விபரங்களை சரிபார்த்து வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளையில் கணக்கு வைத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கையிருப்பு 2006-ம் ஆண்டில் மொத்தம் ரூ 25,000 கோடி. இந்த விபரங்கள் ஒரே ஒரு ஸ்விஸ் வங்கி தொடர்பானவை மட்டுமே. ஸ்விட்சர்லாந்தின் சுமார் 300 தனியார் வங்கிகளில் மொத்தம் $2 லட்சம் கோடிக்கும் (சுமார் ரூ 120 லட்சம் கோடி) அதிகமான உலகப் பணக்காரர்களின் பணம் கையாளப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவற்றில் இந்திய முதலாளிகள் வைத்திருந்த கணக்குகளையும் சேர்த்தால்தான் வெளிநாட்டில் புழங்கும் இந்திய பணத்தின் முழு பரிமாணமும் தெரியவரும்.

மேலும், இந்தியாவின் கருப்புப் பணத்தின் அளவை ஸ்விஸ் கணக்குகளின் கையிருப்பு மட்டும் தீர்மானிக்கவில்லை.

அன்னிய நேரடி முதலீடு
மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு.

இந்திய முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் போடும் பணத்தை மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2012 வரை இந்தியாவுக்குள் வந்த அன்னிய நேரடி முதலீட்டில் 38% குட்டித் தீவான மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது. 2012-13ல் மொத்த அன்னிய நேரடி முதலீடான $1800 கோடி (சுமார் ரூ 1.1 லட்சம் கோடி)யில் $805 கோடி (சுமார் ரூ 49,000 கோடி) மொரீஷியசிலிருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணத்தில் பெரும்பகுதி இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு போயிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்கும் 2010-க்கும் இடையே ரியல் எஸ்டேட்டில் அன்னிய முதலீடு 80 மடங்கு அதிகரித்து 2010-ல் அதன் மதிப்பு $570 கோடி (ரூ 35,000 கோடி) ஆக இருந்தது. ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி 2012-ல் ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் 30% வரை கருப்புப் பணமாக இருந்தது.

மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த வெளிநாட்டுப் பண சுனாமி சராசரி இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் குமிழி
மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும்

வேலை வாய்ப்பு, வளர்ச்சியை உருவாக்குபவர்கள் என்ற பெயரில் மலிவு விலையில் நிலம், சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர், இயற்களை வளங்களை அள்ளிக் கொள்ள காடுகள், மலைகள், கடற்கரைகளுக்கு குத்தகை, வரிச் சலுகைகள் என்று குளிப்பாட்டப்படுகின்றனர் இந்த முதலாளிகள். அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து முறையான ஊதியம் வழங்காமல், ஒப்பந்த முறையில் குறைந்த கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலமாகவும் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர் இந்தப் பண முதலைகள்.

அவர்கள் தமது பணத்தை இது போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பதுக்கி வைக்கிறார்கள் என்ற உண்மை ஊடகங்கள் மத்தியிலும், முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியிலும் பெரிய அளவு சலசலப்பை ஏற்படுத்தி விடவில்லை.

இத்தகைய முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், வங்கிக் கடன்களை வழங்க முன்னுரிமை, விவசாய நிலங்களை மலிவு நிலையில் கைப்பற்றி கொடுத்தல், உற்பத்தி வரி, வருமான வரிச் சலுகை என்று அவர்களுக்கு சேவை செய்கின்றன மத்திய, மாநில அரசுகள். இவர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வரி வசூலிக்க வேண்டிய வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அரசியல் நோக்கங்களுக்காக பழி வாங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரித்துறை அப்படி நடவடிக்கை எடுத்தாலும் வோடபோன் வழக்கில் செய்தது போல உயர், உச்சநீதி மன்றங்கள் அதை ரத்து செய்து விடுகின்றன.

ஊடகங்களோ, இத்தகைய பணப் பாய்ச்சலும் அது உருவாக்கும் வளர்ச்சி என்ற குமிழிகளும்தான் நாட்டை முன்னேற்றும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

இந்த சூழலில் எச்.எஸ்.பி.சி ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உலகு தழுவிய நிதிக் கும்பலின் கொள்ளையையும், சட்ட விரோத செயல்களையும் தடுத்து நிறுத்த முடியாதபடி இந்த அரசு அமைப்புகள் சீரழிந்து போய் விட்டன என்பதை மறுக்க முடியுமா?

தொடர்புடைய சுட்டிகள்