Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 608

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

5
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.

ந்த செய்தி பின்னணியை அறிய இதன் முதல் பாகமான “பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்” படித்து விட்டு வாருங்கள்.

 “nut rage” – பருப்பு வன்முறை என்று ஊடகங்களில் பிரலமான கொரிய சீமாட்டி சோ ஹைனுக்கு நீதிமன்றம் 12.02.15 அன்று ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளான சோ சென்ற வருடம் டிசம்பர் 5-ம் தேதி விமான நிறுவன ஊழியரை இழிவுபடுத்தியதிலிருந்து உலகம் முழுக்க இழி புகழ் பெற்றுவிட்டார்.

மேகடாமியா பருப்பை பாக்கெட்டோடு தட்டில் வைத்து விட்டார் என்று உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை இழிவுபடுத்தி, விமானத்தில் இருந்து இறக்கி விட்டு, பரிமாறிய தொழிலாளியை மண்டியிட வைத்து, தள்ளி விட்டு எல்லாம் ஆடினார் இந்த கொரிய மேட்டுக்குடி சீமாட்டி.

இந்தக் குற்றங்களோடு விமான பைலட்டின் பணிகளை இடையூறு செய்ததற்கும் சேர்த்து சியோல் மாவட்ட நீதிமன்றம் 40 வயது சோ-வை தண்டித்திருக்கிறது. எனினும் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக சோ தரப்பு போக்குவரத்து அமைச்சகத்தோடு தொடர்பு கொண்டதில் அம்மையாருக்கு மட்டும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இப்படி நடந்ததற்கு முகாந்திரம் உள்ளதை பின்னர் பார்ப்போம்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சோ-வுக்கு மூன்றாண்டு தண்டனையும், சோ- தரப்பு தாங்கள் குற்றமே செய்யவில்லை என்றும் கோரினார்கள். பின்னர் இந்த அம்மா முன்னர் எதற்காக மன்னிப்பு கோரினார்? டிசம்பரிலிருந்து சிறையிலிருக்கும் சோ இன்னும் எட்டு மாதங்கள் சிறையிலிருக்க வேண்டும்.

கொரியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான சோ, நீதிபதிக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் சிறையில் அடிப்படை வசதிகள் இல்லையென்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். தன்னுடைய தவறுகளை அறிவதாகவும், அதனால் மன்னிக்குமாறும் கூறியிருக்கிறார். அதாவது சட்டப்படி குற்றம் செய்யவில்லை என்று வழக்கறிஞர் மூலம் டெக்னிக்லாக வாதிட்டுவிட்டு பின்னர் தண்டனை உறுதி என்றதும் சென்டிமெண்டை போட்டு தண்டனையை குறைப்பது பொதுவாக பரப்பன அக்ரஹாரம் முதல் தென் கொரியை வரை நிலவும் குற்றவாளிகளின் உத்தி.

இந்த விவகாரம் கொரியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்று மக்களிடையே ஒரு பொதுக்கருத்து உருவானதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பாரம்பரிய பணக்கார குடும்பகளுக்கு சொந்தமானவை.  “Chaebol” என்று கொரிய மொழியில் அழைக்கப்படும் இவர்கள் பல்வேறு தொழில்களை தமது குடும்ப வலைப்பின்னலால் ஆக்கிரமித்திருக்கின்றனர். தாய் நிறுவனத்தில் தலைவராக இக்குடும்பத்தின் தலைவர் இருப்பார். அவருக்கே அனைத்து வானளாவிய அதிகாரங்கள் இருக்கும். ஏனைய குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் குடும்ப இடத்தின் வலிமைக்கேற்ப நிறுவனங்களின் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்
கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்

அப்பட்டமான மன்னராட்சி முறையில் செயல்படும் இக்கொரிய மேட்டுக்குடி குடும்பத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ எந்த தகுதியும், அடிப்படையும் இன்றி உயர்பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இதனாலேயே தொழிலாளிகளையும், ஊழியர்களையும் பிச்சைக்காரர்களைப் போல இழிவாக நடத்துவார்கள். அடிமைகளைப் போல தண்டிப்பார்கள். இத்தகைய குடும்ப தலைவர்கள் ஏதாவது ஊழல் வழக்கில் பிடிபட்டால் மேல் முறையீட்டில் நீதிமன்றம் விடுவித்துவிடும். கொரியாவை முன்னேற்றிய தியாகிகள் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டு இக்குற்றவாளிகள் புன்னகையுடன் விடுதலையாகி வருவார்கள்.

இப்பேற்பட்ட் பின்னணியில் சோ எனும் சீமாட்டி தண்டிக்கப்பட்டார் என்றால் எந்த அளவு கொரிய மக்கள், தொழிலாளிகள் இவர்கள் மேல் வெறுப்போடு இருப்பார்கள் என்பதை அறியலாம். இக்குடும்பங்களின் 2 அல்லது 3-ம் தலைமுறை வாரிசுகள் தம்மை ராயல் கோமகன்களாகவும், சிறப்பு சலுகை கொண்ட ஆளும் வர்க்கமாகவும் கருதிக் கொள்வார்கள் என்று யோன்சி பல்கலை உளவியல் பேராசிரியர் வாங் சங் மின் குறிப்பிடுகிறார்.

1999-ம் ஆண்டில் தாத்தா ஆரம்பித்த கொரியன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்த பேத்தி சோ, 2006-ல் 32 வயதில் துணை தலைவராகிறார். அவரது இரு இளைய உடன் பிறப்புகளும் இப்படித்தான் நிர்வாகிகளாக திணிக்கப்பட்டனர்.

டாய்லட் பேப்பர், சோப், உள்ளாடை மட்டுமே வழங்கப்பட்டாலும் சக சிறைவாசிகள் இதர குளியல் மற்றும் அலங்கார பொருட்களை வழங்கியதாக நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் சோ குறிப்பிடுகிறார். இந்த உதவி செய்த எவரும் இந்த வழக்கு குறித்து தன்னிடம் ஏதும் பேசவில்லை என்கிறார் சோ. இறுதியில் நாகரிகம் என்பது சிறையில் இருக்கும் சாதாரண மக்களிடம்தான் இருக்கும் என்பதை ‘நாகரிக’ உலகம் நமக்கே சொந்தமென்று கருதும் அம்மணி புரிந்து கொண்டிருப்பார்.

இந்த சிறை அனுபவம் மற்றவர்களை புரிந்து கொள்ள தனக்கு உதவியதாகவும் குறிப்பிடுகிறார். கம்யூனிச நாடுகளில் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள் குறித்து கண்ணீர் விடும் கோமகன்கள் இந்த வரிகளை தினசரி சொல்லி பார்க்கட்டும். இறுதியில் ஒரு முதலாளித்துவ நாட்டின் மேட்டுக்குடி குற்றவாளியைக் கூட கம்யூனிச ‘பாணி’யில் சிறையில் இருக்கும் ‘கிரிமினல்கள்’தான் திருத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை பற்றி யோசித்திருந்தால், வேலை செய்யும் தொழிலாளிகளை அடிமைகள் போல நடத்தாதிருந்தால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த வழக்கு நடந்திருக்காது என்று நீதிபதி குறிப்பிடுகிறார். விமானத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது, ஊழியர்கள் வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டது, இன்னும் அவர்கள் வேலை திரும்ப முடியாத சூழல், உலகெங்கும் தென் கொரியாவின் மானம் கப்பலேறியது என்று இந்த வழக்கின் மூலத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

கூடவே சொ வருத்தம் தெரிவித்ததையும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கொரியன் ஏர் உதவ முயற்சித்ததையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒருவேளை மேல்முறையீட்டில் இவ்வார்த்தைகளை வைத்து அம்மணி விடுதலையும் செய்யப்படலாம்.

“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர். கூடவே சோ அறிவுப்பூர்வமான முதிர்ச்சி பெற கட்டாய சமூக சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Chaebolஎனினும் சோ தரப்பு இந்த வழக்கை நீர்த்துப் போக கடைசி வரை தனது ராயல் குடும்ப உரிமைகளை வைத்து முயன்றது. அதில் ஒன்று கொரியன் ஏரைச் சேர்ந்த யூ வூன் ஜின் எனும் நிர்வாக அதிகாரி, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பொய் சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்தித்தது. இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டு இந்த சீமானுக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரியான கிம் வூன் என்பவர் அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணை தகவல்களை கொரியன் ஏர் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார். இவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனையும், ஒரு வருட பணி நிறுத்தமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்னமும் கொரிய கோமான்கள் ரைட் ராயல் பாசிஸ்டுகளாகத்தான் உலா வருகிறார்கள். சியோலிலே இதுதான் நிலைமை என்றால் ஸ்ரீபெரும்புதூரில் இவர்கள் நமது தொழிலாளிகளை எப்படி நடத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள். இது ஏதோ கொரியாவுக்கு மட்டுமல்ல நம்மூர் அம்பானி, அதானிகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தும்.

கொரிய தொழிலாளி வர்க்கம் இத்தகைய ராயல் குடும்பங்களிடமிருந்து அனைத்தையும் மீட்டால்தான் தமது சுயமரியாதையையும் மீட்க முடியும். அதற்கு ஒரு துவக்கமாக இந்த பருப்பு வன்முறை இருக்கிறது. இல்லையென்றால் ஒரு இளவரசி இரண்டு மாதம் சிறையில் இருப்பதெல்லாம் நடக்குமா என்ன?

–    வேல்ராசன்.

படங்கள், செய்திகள் பல்வேறு உலக செய்தி இணையத்தளங்களில் இருப்பவை.

இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

4

ங்களுக்கு மாதச் செலவுக்கு மேல் அதிகமாக பணம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை கையிருப்பில் இருக்கிறது அது மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எச்.எஸ்.பி.சி தனியார் வங்கி
இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

வங்கியிலிருந்து உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள்.

“சார், நீங்க பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடலாமே, அதுக்கு இத்தனை சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.” என்பார்கள். “ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டால் இத்தனை ஆண்டில் இத்தனை மடங்கு அதிகமாகி விடும்” என்பார்கள். “காப்பீடு” என்பார்கள், “முதலீட்டு வாய்ப்புகள்” என்பார்கள், “வரிச் சலுகை” என்பார்கள். “சேமிப்பு” என்பார்கள்.

இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

இதற்கெல்லாம் மேல் அதிஉயர் நிகரமதிப்பு கொண்ட நபர்களில் சிலரைப் பற்றிய ஒரு பட்டியல் சென்ற வாரம் (ஞாயிற்றுக் கிழமை – பிப்ரவரி 8, 2015 அன்று) வெளியாகியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் எச்.எஸ்.பி.சி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் கணக்கு வைத்திருந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களில் 1,195 பேர் இந்தியர்கள்.

எச்.எஸ்.பி.சி வங்கி
தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி

அந்த வங்கி சாதாரண லோக்கல் பொதுத்துறை ஸ்டேட் வங்கி இல்லை. இன்னும் ‘திறமை’யாக செயல்படும் தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கூட இல்லை. தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி அது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, இந்நபர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு, பணச் சலவை  (கருப்பை வெள்ளையாக்குதல்) மையமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள்தான் இப்போது வெளியாகியிருக்கின்றன.

அந்த ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரகசிய எண் அடிப்படையிலான கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று உங்கள் நாட்டில் கருப்புப் பணம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்படும் பணம் பற்றிய விவாதங்கள் கிளம்பி அரசியல்வாதிகளும், அண்ணா ஹசாரேக்களும் சவடால் அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால், எதுவும் நடந்து விடப் போவதில்லை என்றாலும் எதுக்கு ரிஸ்க் என்று உங்களுக்கு தோன்றுகிறது.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளை
எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

அதை உணர்ந்து, சிறந்த ஒரு தனியார் நிறுவனமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

“சார், நீங்க பேசாம ஸ்விஸ் குடியுரிமை வாங்கிடுங்க, அப்புறம் யாரும் உங்கள தொட முடியாது. உங்க பணத்தை ஸ்விஸ்ல வச்சிகிட்டு மொரீஷியஸ் மூலமா இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்யலாம். நினைச்சபடி வெளிநாட்டில செலவழிக்கலாம்.” என்று அதற்கான நடைமுறைகளை விளக்குவார் வங்கி பிரதிநிதி. அதை ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஸ்விஸ் குடிமகன், ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டும் அந்த நாட்டில் தங்கி இருந்தால் போதும், இந்தியாவில் உங்கள் (கொள்ளை) தொழிலை வழக்கம் போல தொடரலாம்.

நாட்டுப் பற்றோ அல்லது தொழிலின் கட்டாயங்களோ உங்களை குடியுரிமை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் செய்தால், அடுத்த வழியை வங்கி பிரதிநிதி முன் வைப்பார்.

ஸ்விஸ் கணக்கு பட்டியல்
உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்பு வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த நபர்களை தொடர்பு கொண்டு, முகவரிகளை சரிபார்த்து முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“சரி சார், இந்திய குடிமகனாகவே இருந்துக்கோங்க. ஆனா, வருசத்துக்கு 6 மாசத்துக்கு மேல் வெளிநாட்டில இருக்கிறதா திட்டம் போட்டுக்கோங்க. அப்போ நம்ம கணக்கில நீங்க போடற பணம் எதுக்கும் இந்தியால வரி கட்ட வேண்டாம்” இது உங்களுக்கு ஒப்புதலாக இருந்தால், வங்கியே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து, கட்டணத்தை வாங்கிக் கொள்ளும்.

கருப்புப் பணம்
சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை

“நம்ம தொழிலுக்கு 6 மாசம் வெளிநாட்டில் இருப்பதெல்லாம் சரிப்படாது” என்றோ, “வயசான காலத்தில இப்படி அல்லாட முடியாது” என்றோ நீங்கள் கருதினால், அதற்கும் ஒரு வழி வைத்திருந்தார்கள்.

“சரி உங்கள பணத்தை எல்லாம் இன்னொரு கணக்குக்கு மாற்றி விடுவோம். அந்தக் கணக்கு ஒரு கம்பெனி பெயரில் இருக்கும், அந்த கம்பெனி ஒரு டிரஸ்டுக்கு சொந்தமா இருக்கும், அந்த டிரஸ்டு உங்களுக்கு நிதி உதவி செய்றதா இருக்கும். இப்போ உங்களை யாரும் தொட முடியாது. எப்ப வேணுமோ அப்ப, அந்த கம்பெனி கணக்கில இருந்து உங்க இந்திய கம்பெனிக்கு பணத்தை கடனாகவோ, முதலீட்டாகவோ கொடுத்துக்கலாம். எந்தத் தலைவலியும் கிடையாது. கம்பெனி எந்த நாட்டில எப்படி பதிவு செய்றது, அறக்கட்டளையை எப்படி உருவாக்குவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அதையும் செய்து தருவார்கள்.

இதற்கெல்லாம் மேலும் நீங்கள் விடாப்பிடியாக, சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை, “இது இல்லீகல் சார், கவனமா கொண்டு போங்க, பிடிபட்டா சிக்கல்” என்ற எச்சரிக்கையுடன். இதைத் தவிர மேலே சொன்ன மற்ற நடவடிக்கைகள் எல்லாமே “லீகல்” என்று அழைக்கப்படும் சட்டத்துக்குட்பட்டவைதான்.

அம்பானி சகோதரர்கள்
அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

உதாரணமாக, பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் கேரிங் வங்கிக் கிளையிலிருந்து $50 லட்சம் (சுமார் ரூ 33 கோடி) ஸ்விஸ் பிராங்கு மதிப்பிலான கரன்சி நோட்டுகளை வாங்கி சென்றிருக்கிறார். அவர் தனது கணக்கிலிருந்து அமெரிக்க அதிபர் பில், ஹில்லாரி மற்றும் அவர்களது மகள் செல்சீ கிளின்டன் பெயரிலான அறக்கட்டளைக்கு $10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். எச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்திய திருவிளையாடல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கார்டியன் நாளிதழின் கட்டுரைகளைப் பாருங்கள்.

இத்தகைய ‘நேர்மை’யான சேவைகளை வழங்கிய வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் பட்டியலில் இந்திய வாடிக்கையாளர்களில் முதன்மையானவர்கள் முகேஷ், அனில் அம்பானி சகோதரர்கள். 2006-ம் ஆண்டு இருவரது கணக்கிலும் ஒரே அளவில் ரூ 165 கோடி இருந்திருக்கிறது. அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

ஸ்விஸ் வங்கிக் கணக்கு பட்டியல்
“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.” “நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,” “நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

திருபாய் அம்பானியின் மகள் நீத்தா அம்பானி இப்போது கோத்தாரி குடும்ப மருமகள். அவர்களது கணக்கில் ரூ 195 கோடி இருந்திருக்கிறது. இந்தியாவில் தனியார் விமான சேவை ஆரம்பித்து, ‘திறமை’ காட்டிய ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயலின் கணக்கில் ரூ 116 கோடி இருந்திருக்கிறது.

தொழிலதிபர் மனு சாப்ரியா குடும்பத்தினர் கணக்கில் ரூ 874 கோடி ரூபாய், வீட்டு அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் மகேஷ் தரானி கணக்கில் ரூ 251 கோடியும், ரியல் எஸ்டேட் செய்யும் ஷ்ராவன் குப்தா, ஷில்பி குப்தா கணக்கில் ரூ 209 கோடியும் இருந்திருக்கின்றன. உள்ளூரில் மைனர் செயினும், ஸ்கார்பியோ காரும் என்று சுற்றும் ரியல் எஸ்டேட் கட்ட பஞ்சாயத்து ரவுடிகள் கவனிக்க.

இந்தப் பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் பிரணீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்னு தாண்டன், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் நாராயண் ரானேவின் மனைவி நீலம் ரானே, மகள் நிலேஷ் ரானே, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர், மற்றும் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே ஆகியோரும் அடங்குவார்கள்.

முழுப்பட்டியலை தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலைப் பாருங்கள்.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் விபரங்கள் வெளியானதும்

“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.”
“நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,”
“நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

என்று டிசைன் டிசைனாக விளக்கமளித்து சுவிஸ் வங்கி அளித்து சேவைகளை முழுமையாக தாம் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்கிறார்கள், இந்த யோக்கியர்கள்.

ர்வே ஃபல்சியானி
எச்.எஸ்.பி.சி பட்டியலை வெளிக் கொண்டு வந்த எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளர்

இத்தகைய நபர்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்து, இந்தியாவில் தொழில் செய்து பணத்தை குவித்தாலும் இந்தியாவில் வசிக்காத இந்தியர் என்ற அந்தஸ்தில் தமது வருமானத்தை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு பட்டை நாமம் போட்டிருக்கின்றனர். அதற்கு எச்.எஸ்.பி.சி போன்ற ‘உத்தம’ வங்கியின் சேவையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

எச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளை 2006-ம் ஆண்டு எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளருக்கு தனது தரவுத்தளத்தை சீர்செய்யும்படி பணி கொடுத்திருக்கிறது. தரவுத் தளத்தை பார்த்த பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆயுதத் தரகர்கள், வைர வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்களின் கணக்கு விபரங்களையும், அவை தொடர்பாக நடந்திருந்த திருவிளையாடல்களையும் பார்த்த அவர் அந்த விபரங்களை நகல் எடுத்திருக்கிறார். கிரிமினல் மாஃபியா கும்பலுக்கும், கார்ப்பரேட் வங்கி, தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு எங்கு தொடங்குகிறது என்று சொல்ல முடியாதுதான்.

இந்தப் பட்டியலின்படி 2006-07ம் ஆண்டில் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த உலகப் பணக்காரர்களின் வங்கிக் கையிருப்பின் மதிப்பு $13,000 கோடி (இன்றைய நாணய மதிப்பில் சுமார் ரூ 8 லட்சம் கோடி).

அம்பானி - மோடி
“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

எர்வே 2009-ம் ஆண்டு இந்த கிரிமினல் வங்கிக் கணக்கு விபரங்களை பிரெஞ்சு போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். பிரெஞ்சு அரசு அதை பல்வேறு நாட்டு அரசுகளுக்கு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் 2011-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு 600-க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் தெரிய வந்திருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலை வெளிப்படையாக வெளியிடவோ, கணக்கு வைத்திருந்த முதலாளிகள் மீதோ, அவர்களுக்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி அதிகாரிகள் மீதோ எந்த நடடிக்கையும எடுக்கவோ செய்யாமல் மூடி மறைத்தனர், இந்திய அரசும் உச்சநீதிமன்றமும். இந்தப் பணத்துக்கு முறையாக வரி கட்டியிருக்கிறார்களா என்று விசாரணை செய்யப் போவதாக சவடால் விட்டு, எதிர் முகாமைச் சேர்ந்த பணக்காரர்கள் மீது சோதனை நடத்துவதற்கு அதை பயன்படுத்திக் கொண்டனர்.

ஜனவரி 2012-ல் முகேஷ் அம்பானியை வருமான வரி விசாரணையில் மாட்டி விட்டதற்காக எச்.எஸ்.பி.சி வங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நேரத்தில் “முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

பன்னாட்டு வங்கி முறைகேடுகள்
பன்னாட்டு வங்கி முறைகேடுகள்

கிரேக்க நாடு தொடர்பான 2,000 பேர்களின் விபரங்கள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தனது நாட்டு பண முதலைகளின் பட்டியலை பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட அமெரிக்க அரசோ, எச்.எஸ்.பி.சி வங்கியின் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறு அபராதத் தொகை விதித்து வழக்கை முடித்துக் கொண்டது. அதே நேரம், எர்வே ஃபால்சியானி மீது ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காகவும் தொழில்துறை உளவு செய்ததற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நாட்டு அரசுகளும் தாம் யாருக்காக செயல்படுகின்றன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லா மோண்ட என்ற பத்திரிகையின் வசம் 1.3 லட்சம் பெயர்களைக் கொண்ட இந்த முழுப்பட்டியலும் வந்து சேர்ந்தது. அப்பத்திரிகை இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிகளை சரிபார்த்து சென்ற வாரம் முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 1,688 இந்தியர்களின் விபரங்களை முறையாக சரிபார்த்து, 1,195 பேர் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அடையாளம் கண்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பாக்வாரா, கோட்டயம், ஸ்ரீநகர், லூதியானா, சிம்லா போன்ற சிறு நகரங்களிலும் ஆய்வு செய்து இந்தப் பணியை முடித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியர்களின் கணக்கு விபரங்களை சரிபார்த்து வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளையில் கணக்கு வைத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கையிருப்பு 2006-ம் ஆண்டில் மொத்தம் ரூ 25,000 கோடி. இந்த விபரங்கள் ஒரே ஒரு ஸ்விஸ் வங்கி தொடர்பானவை மட்டுமே. ஸ்விட்சர்லாந்தின் சுமார் 300 தனியார் வங்கிகளில் மொத்தம் $2 லட்சம் கோடிக்கும் (சுமார் ரூ 120 லட்சம் கோடி) அதிகமான உலகப் பணக்காரர்களின் பணம் கையாளப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவற்றில் இந்திய முதலாளிகள் வைத்திருந்த கணக்குகளையும் சேர்த்தால்தான் வெளிநாட்டில் புழங்கும் இந்திய பணத்தின் முழு பரிமாணமும் தெரியவரும்.

மேலும், இந்தியாவின் கருப்புப் பணத்தின் அளவை ஸ்விஸ் கணக்குகளின் கையிருப்பு மட்டும் தீர்மானிக்கவில்லை.

அன்னிய நேரடி முதலீடு
மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு.

இந்திய முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் போடும் பணத்தை மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2012 வரை இந்தியாவுக்குள் வந்த அன்னிய நேரடி முதலீட்டில் 38% குட்டித் தீவான மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது. 2012-13ல் மொத்த அன்னிய நேரடி முதலீடான $1800 கோடி (சுமார் ரூ 1.1 லட்சம் கோடி)யில் $805 கோடி (சுமார் ரூ 49,000 கோடி) மொரீஷியசிலிருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணத்தில் பெரும்பகுதி இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு போயிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்கும் 2010-க்கும் இடையே ரியல் எஸ்டேட்டில் அன்னிய முதலீடு 80 மடங்கு அதிகரித்து 2010-ல் அதன் மதிப்பு $570 கோடி (ரூ 35,000 கோடி) ஆக இருந்தது. ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி 2012-ல் ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் 30% வரை கருப்புப் பணமாக இருந்தது.

மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த வெளிநாட்டுப் பண சுனாமி சராசரி இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் குமிழி
மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும்

வேலை வாய்ப்பு, வளர்ச்சியை உருவாக்குபவர்கள் என்ற பெயரில் மலிவு விலையில் நிலம், சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர், இயற்களை வளங்களை அள்ளிக் கொள்ள காடுகள், மலைகள், கடற்கரைகளுக்கு குத்தகை, வரிச் சலுகைகள் என்று குளிப்பாட்டப்படுகின்றனர் இந்த முதலாளிகள். அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து முறையான ஊதியம் வழங்காமல், ஒப்பந்த முறையில் குறைந்த கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலமாகவும் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர் இந்தப் பண முதலைகள்.

அவர்கள் தமது பணத்தை இது போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பதுக்கி வைக்கிறார்கள் என்ற உண்மை ஊடகங்கள் மத்தியிலும், முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியிலும் பெரிய அளவு சலசலப்பை ஏற்படுத்தி விடவில்லை.

இத்தகைய முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், வங்கிக் கடன்களை வழங்க முன்னுரிமை, விவசாய நிலங்களை மலிவு நிலையில் கைப்பற்றி கொடுத்தல், உற்பத்தி வரி, வருமான வரிச் சலுகை என்று அவர்களுக்கு சேவை செய்கின்றன மத்திய, மாநில அரசுகள். இவர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வரி வசூலிக்க வேண்டிய வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அரசியல் நோக்கங்களுக்காக பழி வாங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரித்துறை அப்படி நடவடிக்கை எடுத்தாலும் வோடபோன் வழக்கில் செய்தது போல உயர், உச்சநீதி மன்றங்கள் அதை ரத்து செய்து விடுகின்றன.

ஊடகங்களோ, இத்தகைய பணப் பாய்ச்சலும் அது உருவாக்கும் வளர்ச்சி என்ற குமிழிகளும்தான் நாட்டை முன்னேற்றும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

இந்த சூழலில் எச்.எஸ்.பி.சி ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உலகு தழுவிய நிதிக் கும்பலின் கொள்ளையையும், சட்ட விரோத செயல்களையும் தடுத்து நிறுத்த முடியாதபடி இந்த அரசு அமைப்புகள் சீரழிந்து போய் விட்டன என்பதை மறுக்க முடியுமா?

தொடர்புடைய சுட்டிகள்

கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

9

ழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய கூட்டாளிகள் விசிறியால் ஒருபுறம் விசிறி அமைதிப்படுத்தி கொண்டிருந்த போது பிரம்மஸ்ரீ ஜெயாவுக்கு இழைக்கப்பட்ட ‘அநீதி’ கண்டு ஆர்த்தெழுந்த நீதியரசர்கள் ஜாமீன் வழங்கி மயில் இறகால் மருந்து தடவினர். சட்டத்தையும் நீதியையும் தாங்கள் விரும்பியபோதெல்லாம் வளைத்து பார்ப்பானுக்கு தனி நீதி என்பதையே இவர்கள் நிலைநிறுத்தி வந்திருக்கிறார்கள். முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனைக்குள்ளாகி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதவி இழக்கும் முதல் முதல்வர் என்ற சிறப்பு தகுதியை ஜெயலலிதா அடைந்ததன் விளைவாக நடைபெற்றதே திருச்சி – திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா
ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதா பதவி இழந்ததால் நடக்கும் இடைத்தேர்தல்

“ஸ்ரீரங்கம் என் தாய் மண், என் சொந்த வீடு, தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான் என் இதயத்துடிப்போடு கலந்துவிட்ட உறவு திருவரங்கத்துக்கு உண்டு” என்றெல்லாம் பிதற்றும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு பித்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே அரசு எந்திரத்தின் ஆதரவுடன் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்பது ஊரறிந்த ஒன்று. எனினும், தமது ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிரதான கட்சியான தி.மு.க தனது வேட்பாளரை அறிவித்த கையோடு பணப்பட்டுவாடா செய்ததிலும் முந்திக்கொண்டது.

பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாலும் பணபலமும், சாதிபலமும் அதிகார வர்க்கத்தின் ஆசியும் இல்லாவிட்டால் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும் என்பது ஓட்டுக் கட்சிகள் அனைவருக்கும் பொதுவானது. தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும் என சாதிவெறியாட்டம் போடும் முத்தரையர் சாதியின் ஆதிக்கம் நிறைந்த கிராமங்கள் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகம் என்பதால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களையே தமது வேட்பாளர்களாக அறிவித்தன.

மக்களின் அடிப்படை பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நிற்கும் போது அ.தி.மு.க வின் 27 எம்.எல்.ஏ க்கள் திருவரங்கத்தில் முகாமிட்டுக் கொண்டு தங்களின் ஜனநாயக கடமையாற்றினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது துவங்கி, பிரச்சாரத்தின் இறுதிநாள் வரை சகலவிதமான முறைகேடுகளிலும் அ.தி.மு.க ஈடுபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு 500 ரூ, அ.தி.மு.க தரப்பில் முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு ரூ 5,000, பிறருக்கு ரூ 2,000 என கட்டுக்கட்டாய் கரன்சிகளை அள்ளிவிட்டனர். ஆட்சியில் இருக்கும் வரை கோடிகோடியாய் கொள்ளையடித்து சொத்து சேர்த்து கொள்வது, தங்களது தொழில் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்திக் கொள்வது, பின் தேர்தல் நேரத்தில் கரன்சிகளை அள்ளிவீசி ஓட்டுக்களை பொறுக்குவது என்பது எல்லா இடைத்தேர்தல்களைப் போலவும் திருவரங்கத்திலும் நடைபெற்றது.

மக்களிடம் தங்கள் கட்சியின் கொள்கைகளை பேசி ஓட்டுவாங்குவது என்கிற அடிப்படை ஏற்கனவே தகர்த்தெறியப்பட்டுவிட்டது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய பொருளாதார கொள்கைகளை சர்வகட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகவங்கியின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் வரை ஊடுறுவி விட்ட நிலையில் அவர்களின் உத்தரவுகளுக்கு நாய் ஆடினால் என்ன? நரி ஆடினால் என்ன?

எனவே, “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!” என்ற அடிப்படையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி நீட்டி முழக்கும் ஆளும் வர்க்கங்கள் மாற்று அரசியலை முன்வைக்கும் இயக்கங்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதத்தில் ‘நடுநிலை’யாளரான தேர்தல் கமிசன் மூலம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தினர். கடந்த காலங்களில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க இழுத்தடித்து காலம் கடத்துவதும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் அனுமதி கிடைத்தாலும் கூட அதற்குள் கணிசமான காலம் விரையமாவதும் நடந்தது.  இம்முறை பிரச்சார இயக்கம் குறித்த நடவடிக்கைகள் எதற்கும் அனுமதி பெற கூடாது என முடிவெடுத்து பிரச்சாரங்களை துவங்கினோம். திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை விட அங்கு வந்து இறங்கியிருந்த அ.தி.மு.க காரர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. திருவரங்கம் நகரம் முழுவதிலும் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்புகளால் திணறியதை தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் அம்பலப்படுத்தியும், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் அ.தி.மு.க போட்ட ஆட்டம் அடங்கவில்லை. அ.தி.மு.க சார்பாக கிராமம், நகரம் வாரியாக 30 வாக்காளர்களுக்கு 20 பேர் என ஒதுக்கி ஓட்டுக்கள் விழுவதை உத்திரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்.

தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து என அ.தி.மு.க வுக்கு போட்டியாக தி.மு.க வும் ஈடுகொடுத்தது. செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதலில் துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், ‘நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க’ என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர். அந்த பிரசுரத்தில் இருந்த வாசகங்கள் இவையே…

திருச்சி – திருவரங்கம் இடைத்தேர்தல்!
உங்கள் சூடு, சொரணை என்ன விலை?
கட்டுக்கட்டாய் கரன்சிமழை!
கரைபுரண்டு ஓடுது டாஸ்மாக்!
தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து!
காற்றில் பறக்குது தேர்தல் விதிகள்!
ஓட்டுப்பொறுக்கிகளின் காட்டுதர்பார்!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
உலக வங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை தலைவிரித்து ஆடும் போது வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

அத்தியாவசியப் பொருட்கள் முதல்
அத்தனையும் விலை உயர்வு!
மக்களின் ஆத்திரத்தை மடைமாற்ற
இலவசங்களால் வாய் அடைப்பு!
எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும்
மண்டை உடைப்பு!

உலக வங்கியின் அதிகாரம்
ஊராட்சி மன்றம் வரை
தலைவிரித்து ஆடும் போது
வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

பெட்ரோல், தொலைபேசி, மின்கட்டணம்
என சர்வத்தையும் தீர்மானிப்பது
ஓழுங்குமுறை ஆணையங்கள் எனும்போது
பாராளுமன்றமும் சட்டமன்றமும் எதற்கு
பன்னி மேய்ப்பதற்கா?

சின்னத்தை மாற்றி பயனில்லை…
சிந்திக்கும் முறையை மாற்று!
போலி ஜனநாயகத் தேர்தலைப்
புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான
கமிட்டிகளை கட்டி எழுப்பு!

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்” என தயங்கிய மக்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினர் தோழர்கள்.

தோழர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து பேசினர்.

“நாங்களெல்லாம் இப்போது தான் முதல் முறையாக ஓட்டுப் போட போகிறோம். யாருக்கு போடுவது என்று குழப்பமாக இருந்தது. நீங்களோ ஓட்டே போட வேண்டாம் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் வேறு என்ன செய்ய வேண்டும்” என விவாதிக்கத் துவங்கினர். மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

இப்பிரச்சார நடவடிக்கைகளின் போது குழுமணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தோழர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அங்கே வந்த அ.தி.மு.க வினர் “என்ன தோழர் எங்களுக்கெல்லாம் நோட்டீசு இல்லையா” என்று கேட்டு வாங்கிச் சென்று படித்தனர். “நீங்க நடப்பதைத் தான் சொல்றீங்க” என்று சொல்லி சென்றனர்.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க சில இடங்களில் தி.மு.க வோடு அ.தி.மு.க வுக்கு ஏற்பட்ட சலசலப்பு, அடிதடி – மோதல்கள் என வீரியம் பெற்றது. அதற்கேற்ப போலீசு, துணை ராணுவப் படையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

இந்நிலையில் பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தாலும் எதிரில் இருப்பவர்கள் எண்ணிக்கையோ காற்று வாங்கியது. தி.மு.க வே அடிதடியில் இறங்கினால் தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற நிலை இருந்ததை கணக்கில் கொள்ளாமல், சுப்ரமணியன் உள்ளிட்ட இந்து உணர்வாளர்கள் ஓட்டு கேட்கப் போன இடங்களில் அ.தி.மு.க காலிகள் ஓட ஓட அடித்து விரட்டினர். அடிவாங்கியது கூட பரவாயில்லை மண்டை உடைபட்ட தனது அடிப்பொடிகளுடன் சேர்த்து தன்மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை சுப்ரமணியனே கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

திருவரங்கத்தில் நான்குமுனைப் போட்டி என சொல்லிக் கொண்டாலும் இடது சாரிகளின் நிலையோ அந்தோ பரிதாபம். “முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம், இது எங்கள் ஜனநாயக உரிமை” என்றெல்லாம் சி.பி.எம் கத்திக் கூப்பாடு போட்டாலும் காதில் வாங்கிக் கொள்ளதான் ஆள் இல்லை. ஆங்காங்கே விழுந்த அடிகளின் ரணம் தாங்காமல், காந்திவழி கம்யூனிஸ்டு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயம் குறித்தும் அதன் மாண்புகள் குறித்தும் வாய்கிழிய வகுப்புகள் எடுக்கும் இடதுசாரிகள் தான் அவர்கள் வாங்கிய அடிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் மோடி மண்ணைக் கவ்வியதும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றதும், “மோடி அலை, சுனாமி என்பதெல்லாம் பம்மாத்து” “இந்து மதவெறியர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மக்களின் எதிர்வினை” என்கிற முறையில் பி.ஜே.பி க்கு கிடைத்த செருப்படியாக அமைந்தது. இதனை அம்பலப்படுத்தியும் சுவரொட்டி இயக்கம் மேற்கொள்ளபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கூடுதலாக பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வேட்பாளர், செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் கணக்கப்பிள்ளை, கல்வி (கொள்ளையன்) தந்தை என பல்வேறு முகங்களுடைய கரட்டாம்பட்டியான் சுப்ரமணியணின் யோக்கியதையை வினவு இணையதளம் தக்க ஆதாரங்களுடன் தோலுரித்ததை விரிவாக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு பிரசுரங்கள் அச்சிட்டோம்.

குறிப்பாக, சுப்ரமணியனுக்கு சொந்தமான ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரி, துறையூர் ஜெயராமன் கல்லூரி, அங்காளம்மன் கல்லூரியிலும் கூடுதலாக திருவரங்கம் ஆண்டவர் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, இந்திரா காந்தி கலைக்கல்லூரி, எஸ்.ஆர்.சி கல்லூரி ஆகியவற்றிலும் பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வாய்சவடாலை அம்பலப்படுத்தி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். கல்லூரி மாணவர்களில் கணிசமானோர் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தனக்கென ஒரு வாக்கு வங்கி உருவாவதற்கு முன்பே அது தகர்க்கப்படுவதும், அதுவும் தனது கல்லூரியின் வாசலிலேயே நிகழ்வதையும் காண சகிக்காமல் தனது அடியாட்களை விட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம் தகராறு செய்தார் சுப்ரமணியன். அன்று மாலையே புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வந்த செய்தி என்னவெனில்… ‘ திருவரங்கம் – மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மீது வழக்கு பதிவு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக சுவரொட்டி ஒட்டியதாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு‘.

இந்து முன்னணியின் கிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் 153(ய), 41 சிறப்பு சட்டம் (பிணையில் வெளிவர முடியாத) பிரிவுகளில் போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பாக மாரியப்பன் என்பவரும், இந்து மகா சபையினரும் புகார் அளித்துள்ளனராம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை கட்டி எழுப்பு!

இப்படி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக வானத்துக்கும், பூமிக்கும் இவர்கள் குதித்துக் கொண்டிருக்க சுப்ரமணியனுக்கு சொந்தமான கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் பலர்… “எங்களுடைய காலேஜ் சேர்மன் பற்றி காலையில நோட்டீசு கொடுத்தப்பவே வாங்கி படிச்சோம். உங்க வெப்சைட்ல சொல்லியிருக்க விசயம்லா சரியானது தான். இந்த ஆதாரம் எல்லாம் எங்க இருந்து எடுத்தீங்க” என்று ஆச்சர்யமாக கேட்டனர். சில மாணவர்கள் சூப்பர் என்று கூறுவதும், கல்லூரியில் தாங்கள் அனுபவிக்கும் அடக்கு முறைகளை கொட்டித் தீர்ப்பது எனவும் ஆதங்கப்பட்டனர். இன்னொரு மாணவர், “இக்கல்லூரியில் நடக்கிற பிரச்சனைகள் பற்றி எங்கு பேச கூப்பிட்டாலும் நாங்கள் வருகிறோம்” என கல்விக் கொள்ளையன் கரட்டாம்பட்டி சுப்ரமணியனுக்கு எதிராக துணிச்சலோடு பேசினர்.

இவர்களில் யாரும் தங்களது இந்து உணர்வை புண்படுத்தியதாக எங்களிடம் கூறவில்லை. வாங்கிய அனைவரும் சிரித்துக் கொண்டு தான் சென்றனர். அன்று திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருந்த ரங்கநாதனை கோவில் கருவறைக்குள்ளேயே நுழைந்து தீண்டியபோது பதறிய இதே இந்து முன்னணி கும்பல் ஆர்.எஸ்.எஸ் ன் புரவலரும், பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளரான சுப்ரமணியனை அவரது கல்லூரி வாயிலிலேயே சென்று தீண்டும் போது, அதே பரபரப்போடு அலறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாக பார்த்தால், ஓட்டுப் பொறுக்கிகளின் அடாவடித்தனம் அதிகார வர்க்கத்தின் துணையோடு கொட்டமடிப்பதை திருவரங்கத்தின் எந்தவொரு தெருவிற்குள் நுழைந்தாலும் காணமுடியும். ஆனால், மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

புழுத்து நாறும் போலி ஜனநாயக அரசியலக்கு வெளியேதான் உண்மையான ஜனநாயகத்தை தேடமுடியும். தேர்தல் ஜனநாயகத்தின் மேண்மைகள், மாண்புகள் குறித்து சண்டமாருதம் செய்வோருக்கு முகத்தில் அறைந்தாற் போல் உண்மைகள் உடைத்திருக்கிறது திருவரங்கம் இடைத்தேர்தல்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி.
தொடர்புக்கு :- 9943176246

அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல

28
north carolina shooting (1)
கொல்லப்பட்ட Shaddy Barakat, 23, his wife, Yusor Mohammad Abu-Salha, 21, and her sister, Razan Mohammad Abu-Salha, 19.

மெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், சிரியாவை பூர்வகுடியாக கொண்ட மூன்று அமெரிக்க முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 23 வயது தே ஷாடி பராகத், அவரது மனைவி யூசர் மொகமத் அபு சல்ஹா, யூசரின் சகோதரி ராசான் மொகமத் அபு சல்ஹா மூவரும், தலையை துளைத்த இரக்கமற்ற தோட்டாக்களால் மரித்தனர். கொலையாளியின் பெயர் கிரெய் ஸ்டீபன் ஹிக்ஸ், வயது 46, வெள்ளையின அமெரிக்கர்.

கொலை செய்த Craig Stephen Hicks
கொலை செய்த Craig Stephen Hicks

வடக்கு கரோலினா பல்கலைக் கழக நகரமான சாப்பல் ஹில்லில், 10.02.2014 செவ்வாய் மாலையன்று இந்த பயங்கரம் நடந்திருக்கிறது. கொலையாளியும், கொல்லப்பட்டவர்களும் அண்டை வீட்டுக்காரர்கள். ஆகவே “இது ஏற்கனவே இருந்த கார் நிறுத்த ‘பார்க்கிங்’ பிரச்சினை” என்று போலிசு முதல் தகவலாக தெரிவித்து விட்டது.

கார்ப்பரேட் ஊடகங்களும் இதை வழிமொழிந்து மற்றுமொரு குற்றச் செய்தியாக மூலையில் போட்டு கடந்து போக நினைத்தன. ஆனால் சமூக வலைத்தள நண்பர்கள் அதை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கின்றனர். #MuslimLivesMatter #ChapelHillShooting எனும் ஹேஷ் டேக் மூலம் இந்த அநீதி குறித்த பல்வேறு செய்திகள் வெளியே வந்திருக்கின்றன.

அதன் பிறகே இந்த சம்பவத்தில் மத வெறுப்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிப்பதாக போலீசு தெரிவித்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் “யூதர்களைக் கொல்வோம், பாலஸ்தீனர்களைக் கொல்வோம் என்று சொல்வது எதையும் தீர்க்காது” என மத நல்லிணக்கம் வேண்டி தே பாரகத் டிவிட்டரில் கடைசியாக எழுதியிருந்தார். இந்தக் கருத்து முற்றிலும் நிறைவேறும் வரை அவரைப் போன்றவர்கள் உயிரை பறிகொடுக்கத்தான் வேண்டும் போலும்?

இஸ்லாம் மீதான வெறுப்பிற்கும் மற்ற மதங்களின் மீதான வெறுப்பிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. மற்ற மதங்களை பொதுவான நாத்திக பார்வையில் பார்க்கும் ‘முற்போக்கு’கள் கூட இசுலாம் என்றால் அந்த வெறுப்பில் அறிவியல் பார்வையைக் கழித்து விட்டு துவேசத்தை இட்டு நிரப்பிக் கொள்வர். காரணம் உலகமெங்கும் மேற்குலக ஊடகங்களால் அப்படித்தான் பொதுப்புத்தி இங்கே கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஒரு முசுலீமை தாடி, லுங்கி, புர்கா, தீவிரமான மதவாதி என்று ஆரம்பித்து இயல்பிலேயே வெறியர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் என்று அந்த கற்பிதம் ஆழமான வெறுப்பின் வேரை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

north carolina shooting 10பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியாவில் போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.

ஒரு விசயத்தில் என்ன நடந்தது என்பதை இணையத்தில் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்க ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டு விதண்டாவாதம் செய்பவர்களுக்கு அதிலும் முசுலீம்களை வெறுப்பவர்களுக்கு ‘ஆதாரம்’ கிடைக்காமலா போய்விடும்?

இது வெறுமனே ‘கார் பாரக்கிங்’ பிரச்சினை, இதற்கு மத முலாம் பூசக்கூடாது என்று அந்த ஆதாரக்காரர்கள் வாதிடலாம். கூடுதலாக கொலை செய்த ஹிக்ஸ் ஒரு நாத்திகர் என்பதை நாமே முதலில் சொல்லிவிடுவோம். மதங்களை விமரிசித்து அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை போட்டு வந்தார் என்றும் அதை எளிமைப்படுத்தி வாதிடலாம். இங்கே நாத்திகர் என்பதற்கு என்ன பொருள்?

north carolina shooting (8)“இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம் என்பது அதிகாரத்தில் உள்ள மதத்தை அம்பலப்படுத்துவதையும், சிறுபான்மையாக உள்ள மதத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் செய்ய வேண்டும். அனைவரையும் ஒரு சேர விமரிசிப்பது என்பது சரி என்றாலும் அதற்கும் இடம் காலம் பொருள் உண்டு.

ஹிக்ஸ் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை செய்தார் என்றால் அது இன்னும் மோசம். கார் கண்டுபிடித்த ஆண்டுகளை விட அல்லாவை கண்டுபிடித்த காலம் அதிகமல்லவா, அதற்கு அதிகம் உணர்ச்சி உண்டு என்று வாதிடலாமா? காரின் உணர்ச்சியை விட கடவுளின் உணர்ச்சி பலம் வாய்ந்தது என்று ஒரு மதவாதி சொன்னால் நுகர்வு கலாச்சார மதவாதிகள் என்ன சொல்வார்கள்?

இதுதான் பிரச்சினை என்றால் அதிலும் இனவாதமும், முசுலீம் வெறுப்பும் இணைந்தே இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் நாகரீக கனவான்கள் ஏழை நாடுகளின் மக்களை வெறுமனே மதம் சார்ந்து மட்டும் வெறுப்பதில்லை. நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்றே அடிப்படையில் கருதுகிறார்கள். இதே கார் பார்க்கிங் பிரச்சினையில் வேறு ஒரு அமெரிக்க வெள்ளையர் முசுலீம் வீட்டுக்காரர் இடத்தில் இருந்தால் இப்படி துப்பாக்கி வெடிக்காது. ஒரு வேளை வெடித்த துப்பாக்கிகளும் அமெரிக்காவின் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் போட்டி போறாமை நிறைந்த தனிநபர்வாதம் காரணமாகவே சக அமெரிக்கர்களை கொன்றிருக்கின்றன.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் மூன்றாம் உலக நாட்டு மக்களில் படிப்பு, மாத சம்பள வேலை என்று கொஞ்சம் வசதியாக வாழும் பலர் உண்மையில் வெள்ளையின கனவான்களிடம் பெயர் வாங்கும் விருப்பமும் நடைமுறையும் கொண்டவர்கள்தான். இருப்பினும் இவர்களை சீமான்களின் உலகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு சராசரியான அமெரிக்கர்கள் தயக்குவார்கள். அப்துல் கலாமே ஆனாலும், ஷாருக்கானே வந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் முழுவதும் அவிழ்த்துப்பார்த்து சோதித்தே அனுப்புகிறார்கள். இதற்கு அரசியல், வர்க்க பார்வையைத் தாண்டி கலாச்சாரம், பழக்க வழக்கம் என்ற காரணங்களும் இருக்கின்றன.

ஆகவே புர்கா போட்ட சிரிய அமெரிக்கர்கள் வெள்ளையின அமெரிக்கர்களின் உள்ளத்தில் நுழைவது கடினம். நாத்திகரான ஹிக்ஸ் இவர்களை வெறுப்பது மேற்கண்ட கலாச்சார காரணங்களையும் உள்ளடக்கித்தான். ஆகவே “இவர்களுக்கு நாகரீக உலகில் வாழத்தெரியாது, பல்கலையில் கூட புர்கா போட்டு தமது தனித்துவத்தை நிலைநாட்டுவார்கள், ஒரு காரை கூட அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யாமல் நிறுத்த தெரியாது” என்றெல்லாம் ஹிக்ஸ் மனதில் இயல்பாகவே தலையெடுத்திருக்கும்.

north carolina shooting (2)இது ஏதோ ஒரு சில வெள்ளையின வெறியர்களின் நிலை மட்டுமா? கனவான்களின் ஊடகங்களான சிஎன்என் மற்றும் ஃபாக்ஸ் நியூஸுக்கு, பாரிஸ் தாக்குதல் மட்டும் பயங்கரவாதம். வடக்கு கரோலினா தாக்குதலோ ஒரு பெட்டி கிரைம். இந்த மனநிலையின் கொதிப்புதான் ஹிக்ஸ் போன்றோரின் பயங்கரங்கம். ஒரு முசுலீம் மூன்று நாத்திகர்களை கொல்வதும், ஒரு கிறித்தவ நாத்திகர் மூன்று முசுலீம்களை கொல்வதும் இதே ஊடகங்களுக்கு வேறாகத் தெரிகின்றன.

கொன்றவன் முசுலீம் என்றால் அவனை பயங்கரவாதி என்று அழைக்கும் உதடுகள் அதே பயங்கரத்தை ஒரு வெள்ளை கிறித்தவன் செய்தால் அவனை வெறும் மனிதன் என்று உச்சரிக்கின்றன. இது உதடுகளின் பிரச்சினையா இல்லை வெறுப்பில் விளைந்த உள்ளத்தின் காழ்ப்புணர்வா?

போலீசும், ஊடகங்களும் இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக முன்வைத்தாலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். கொல்லப்பட்ட பெண்களின் தந்தையான டாக்டர் முகமது அபு சல்ஹா, “இது கார் பார்க்கிங் பிரச்சியினை அல்ல. இதற்கு முன்னரே அந்த மனிதன் எனது மகள்கள், மருமகனை துப்பாக்கியால் பலமுறை மிரட்டியிருக்கிறான். அவனோடு இணக்கமாக வாழமுடியாது என்றாலும் இந்த அளவுக்கு அவன் போவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார். மகள்களில் ஒருவர் அவனை வெறுப்போடு அலையும் அண்டை வீட்டுக்காரன் என்று ஒரு வாரம் முன்னர் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அந்த வெறுப்பு அவர்கள் முசுலீம் என்பதாலும், புர்கா தோற்றத்தினாலும் உருவாகிய ஒன்று என்றும் அதெ மகள் கூறியிருக்கிறார்.

கொல்லப்பட்ட தே பராகத்தின் மூத்த சகோதரி சுசானி பராகத் இந்த கொலையை வெறுப்பினால் செய்யப்பட்ட ஒன்றா என்று புலனாய்வு செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஹிக்சின் மனைவி கரேன், இந்த கொலை இஸ்லாம்ஃபோபியாவால் நடக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக ஒரு துப்பாக்கியை எடுத்து மூன்று தலைகளை துளைத்து கொல்லுமளவு வன்மம் ஒரு மனிதனிடம் உருவானது ஏன் என்று அவர் விளக்குவாரா?

north carolina shooting 11இல்லை கடந்த காலங்களில் அம்மையாரின் கணவர் துப்பாக்கி பெல்ட்டை காண்பித்து அந்த பெண்களை மிரட்டியதெல்லாம் சாதாரணமான ஒன்று என்று கருதுவாரா? கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் இவர், கொலையாளி குறித்தும் அதே அனுதாபத்தை கொண்டிருப்பது சரியா?

கரேனும், அரசு வழக்கறிஞரும் ஹிக்சின் மன நல நோய் ஒரு காரணம் என்று கூறியிருக்கின்றனர். எனில் அதே மனநலக் குன்றல் சொந்த குடும்பத்தினரையோ இல்லை வேறு எவரையோ குறி வைக்காமல் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அண்டை வீட்டுக்காரர்களை கொன்றொழித்தது ஏன்?

பராகத்தும் அவரது மனைவியும் வடக்கு கரோலினா பல்கலையில் பல் மருத்துவத்தில் பயின்று வரும் மாணவர்கள். சென்ற டிசம்பரில்தான் மணமுடித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தே பராகத் அங்கே சிரியா மக்களுக்கும், வீடற்ற அமெரிக்கர்களுக்கும் உதவி செய்யும் தன்னார்வல வேலைகளை செய்து வந்தார்.

வீடற்றவர்களின் புன்னகை என்ற அந்த ஹேஷ் டேக்கை போட்டு எழுதியவரின் புன்னகையை மேற்கத்திய சமூகம் உருவாக்கிய பயங்கரம் அழித்துவிட்டது.

“நாங்களும் சார்லிதான்” என்று இசுரேல் உள்ளிட்ட மேற்கத்திய ‘காந்திகள்’ ஊர்வலம் நடத்தியது போல வடக்கு கரோலினாவுக்காக “நாங்களும் முசுலீம்தான், நாங்களும் புர்கா அணிவோம்” என்று தலைவர்களை விடுங்கள் யாரேனும் வார்டு கவுன்சிலர்களாவது அணி திரள்வார்களா?

சார்லி ஹெப்டோ குறித்த வினவின் கட்டுரையை மறுக்கும் நண்பர்கள், அந்த பிரெஞ்சு பத்திரிகையை ஒரு முற்போக்கு பத்திரிகை என்று மல்லுக்கட்டி வாதாடினார்கள். அதே போல இங்கும் ஹியூஸ் ஒரு நாத்திகவாதி, இது வெறும் கார் பார்க்கிங் பிரச்சினை என்று வாதிடுவார்களா?

கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.
கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.

மேற்கத்திய நாட்டில் வாழும் முற்போக்கு என்பது அங்குள்ள சிறுபான்மை மக்களின் நலன்களோடு இணைந்தது. அனைத்தையும் ஒரே தட்டில் பார்க்கும் முற்போக்கு உண்மையில் பிற்போக்கான ஒன்றே. ஏனெனில் அங்கே வாழும் வெள்ளை நிறவெறிக்கு அரசியல், பொருளாதார, வரலாற்று அடிப்படை உண்டு. அதாவது இந்த இனவெறிக்கு அதிகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் அதே பாரிசில் அல்லாவின் ராஜ்ஜியத்திற்காக ஒரு முல்லா பேசினால் அது ஒரு லூசின் உளறலாக மட்டுமே பார்க்க வேண்டும். அந்தப் பிதற்றலுக்கு சமூக நடப்பில் மதிப்பில்லை. மேலாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இதெ முல்லாக்களை ஆதரித்து ஷேக்குகளை ஆள வைத்து வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்தை கொன்றொழித்தவர்கள்.

ஆகவே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் இசுலாமிய பயங்கரவாதமும், வல்லரசு நாடுகளின் பயங்கரவாதமும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை அல்ல. முன்னது பின்னது உருவாக்கிய விளைவு மட்டுமே. இந்தியாவில் இந்துமதவெறியர்களை தட்டிக் கேட்க முடியாது எனும் நிலைமை அதிகரிப்பதற்கேற்ப இங்கே இசுலாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் போவதை அதிகப்படுத்தும். ஆதலால் நோயை தீர்க்காமல் வலியை மட்டும் நிறுத்த முடியாது.

வடக்கு கரோலினாவில் இதுவரை முசுலீம் மக்களை எதிர்த்து எந்த மத துவேசமும் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இது காமராசர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை எனும் கூற்றுக்கு ஒப்பானது. காமராசர் காலத்தில் ஆதிக்க சாதியினர் வைத்த சட்டங்களை மீறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். பிறகு 90களில் இந்த சார்பு நிலை கொஞ்சம் மாறியதும் அடிமைத்தனத்தை எதிர்த்து அதே மக்கள் போராடுகிறார்கள். விளைவு ‘கலவரங்கள்’. ஆகவே அமைதி என்பதன் பொருள் ஆதிக்கமோ இல்லை வெறுப்புணர்வோ இல்லை என்றாகிவிடாது. அதை எதிர்த்துக் கேட்கும் குரல் இல்லை என்பதால் இந்த அமைதி ஆள்வோர் போட்ட அடக்குமுறையின் அமைதி.

டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்
டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்

அதே அமைதிதான் வடக்கு கரோலினா பயங்கரவாதத்தை வெறும் குற்ற நடவடிக்கையாக கடந்து போக வைக்கிறது. எல்லா வெள்ளையர்களும் இனவெறியர்கள் அல்ல. ஆனால் எல்லா வெள்ளையர்களும் ஒரு இனவெறி, மதவெறி நடவடிக்கையை கண்டிக்காமல் அமைதி காத்தால் அதை அமைதி முலாம் பூசிய பயங்கரவாதம் என்று அழைக்கலாமா?

எல்லா முசுலீம்களும் பயங்கரவாதிகளல்ல, ஆனால் எல்லா பயங்கரவாதிளும் முசுலீம்கள்தான் என்று பழமொழி உருவாக்கி விளம்பரம் செய்த நெஞ்சங்கள் மேற்கண்ட் புதுமொழியையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வடக்கு கரோலினா படுகொலையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விசாரிக்காமல் நீதி கூறமுடியாது என்று இறுதியாக ஒரு சப்பைக் கட்டு கட்டப்படலாம். நல்லது. எனில் சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் தலைமை தாங்கும் மேலாதிக்க கனவான்கள் ஆரம்பத்திலேயே இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக அறுதியிட்டு கூற காரணம் என்ன?

ஒருவேளை இருமதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த பயங்கரத்தை வெறுமனே பெட்டி கிரைமாக மாற்றிவிட்டார்களோ?

அப்படியும் சில கருத்துக் கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் வாதிடலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு சிரமப் படவேண்டும். எல்லா பயங்கரவாதிகளும் முசுலீம்கள் என்பதால் எல்லா முசுலீம்களையும் அழித்து விட்டால் பயங்கரவாதமே இருக்காதே?

பாசிசத்தின் மொழி அழித்தொழிப்புதான், அமைதியல்ல!

தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று
தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று

– வேல்ராசன்.

செய்தி, படங்கள் நன்றி: rt.com

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

9

லங்கை அதிபர் தேர்தலில், சிங்கள இனவெறிப் போர்க் குற்றவாளிகளான இராஜபக்சேக்களின் வீழ்ச்சி மோடி, சோனியா போன்ற பாசிசக் கூட்டாளிகளுக்கும், இந்து ராம், சோ, சு.சாமி முதலிய கைக்கூலிகளுக்கும் அதிர்ச்சிகரமாகவும்; எஞ்சியுள்ள புலிகள், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கும் இங்குள்ள தமிழினவாதிகளுக்கும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இலங்கை அரசியலில் இவ்வாறானதொரு மாற்றம் நிகழும் என்பது அவர்கள் அனைவரும் கனவிலும் எண்ணிப்பாராதது.

மைத்ரிபாலா சிறீசேனா
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா

பிரபாகரனின் தற்கொலைப் போர்ப் பாதையைச் சாதகமாகக் கொண்ட சிங்கள இனவெறி பாசிச இராணுவம் விடுதலைப்புலிகளோடு இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை புரிந்து ஈழப்போரில் அடைந்த வெற்றியின் கவர்ச்சி மங்கிப்போவதற்கு முன்பு, பலனை மேலும் அறுவடை செய்ய்துகொள்வது மற்றும் சோதிடர்களின் ஆரூடங்களையும் வைத்து அரசியல் கணக்குப்போட்டார், இராஜபக்சே.

அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருந்தபோதும், அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாது என்றாலும், சட்டத்தைத் திருத்தி தேர்தலை எதிர்கொண்டார். சிங்கள இனவெறி புத்தச் சாமியார்களின் உருமயக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட போலி கம்யூனிஸ்ட் குழுக்கள், தமிழின – இசுலாமியத் துரோகிகளின் குழுக்களுக்கு அதிகார, பதவி எச்சிலையை வீசி, வளைத்துப்போட்டு சிறுபான்மையாக இருந்த அவரது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைப் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்ட இந்த சிங்கள இனவெறி பாசிச இராஜபக்சே கும்பல், இலங்கையில் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னைக் கருதிக் கொண்டது.

ஆனால், இராஜபக்சே கும்பல் மூன்றாவது முறை அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள்-இசுலாமியர் ஆகிய சிறுபான்மையினருக்கும் சிங்கள சமூகத்துக்கும் பேரழிவை விளைவித்திருக்கும். அக்கும்பல்  நடத்தி வந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத, மக்கள் விரோத வெள்ளைவேன் ஆள்கடத்தல் – பாசிசக் கொலைவெறியும் இலஞ்ச-ஊழலும் அதிகார முறைகேடுகளும் நிரம்பி வழியும் இராஜபக்சேக்களின் குடும்ப அதிகாரத்தைக் கண்டு, இனங்களைக் கடந்து இலங்கை மக்களில் பெரும்பான்மையினர் அதற்கெதிராகக் குமுறிக் கொண்டிருந்தனர். இதனால்தான் முற்றிலும் எதிர்பாராத வகையில், மக்கள் ஆதரவு பெற்ற  எதிர்த்தரப்பை அக்கும்பல் திடீரென்று தேர்தல் அரசியல் களத்தில் கண்டது.

இராஜபக்சே கும்பலின் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபாலா சிறீசேனா வெளியேறினார். அவரோடு  வெளியேறிய போட்டி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரும் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்து புதிய ஜனநாயக முன்னணியை அமைத்தனர். அதன் பொது வேட்பாளரான மைத்திரிபாலா சிறீசேனா, ஜாதிகா ஹெல உருமயா, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவெறி அமைப்புகள், தமிழ் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவைப் பெற்று அதிபராகியுள்ளார். கொடுங்கோலன், போர்குற்றவாளி இராஜபக்சே கும்பல் வீழ்ந்தது. இலங்கையில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டப்போவதாக வாக்குறுதியளித்த கட்சிகளின் கூட்டணி அரசு ஏற்பட்டுவிட்டது.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இதனால், இலங்கையின், ஈழத் தமிழர்களின் இனச் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று மிகை நம்பிக்கை கொள்ள முடியாது. என்றாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றங்கள் சிங்களவருக்கும் இசுலாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழ்வுரிமைகளை அங்கீகரிக்கும்படி சிங்கள சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் ஆதரவில்லாமல், சிங்கள இனவெறி பாசிச சக்திகளின் கோரப்பிடியிலிருந்து விடுபடவும் தமது ஜனநாயக உரிமைகளைப் பெறவும் முடியாது. அதேசமயம், இலங்கையில் ஒரு ஜனநாயக ஆட்சியில்லாமல், சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெறாமல் ஈழத் தமிழர்களும் இசுலாமியர்களும் தமது வாழ்வுரிமைகளைப் பெறவும் முடியாது.

ஈழத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடு எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாதது; அவர்கள் எந்தவொரு புள்ளியிலும் ஒரு பொதுநோக்கில் ஒரே அணிவரிசையில் நிற்க முடியாது; சிங்கள மக்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பாடுகளின்றி, வெவ்வேறு பிரிவுகளின்றி, எவ்வித மாறுதலுமின்றி முக்காலத்திலும் ஒரே வார்ப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு பகை இனம்; அவர்களிடையே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நட்புப் பாராட்டக்கூடிய சக்திகள் எவரும் கிடையாது – இவ்வாறான பார்வையையே மார்க்சியம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தியாகு, மணியரசன் போன்ற தமிழினவாதிகளும் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், புலிகளின் போர் வெற்றி மட்டுமே ஈழச் சிக்கலுக்கான ஒரே தீர்வு என்று நம்பச் சொன்னார்கள். புலிகளின் அழிவுகளுக்குப் பிறகு ஏகாதிபத்தியமும் மற்றும் சர்வதேச சமூகமும்தான் ஈழத் தமிழர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் கதியென்று வழி சொன்னார்கள். இராஜபக்சேக்களின் அரசியல் வீழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் சில கோரிக்கைகளையேனும் ஏற்கும் சிறீசேனா-ரணில் அரசு அமைந்திருப்பதும், ஈழச் சிக்கலுக்கான தீர்வுகளை மாறாநிலையியல் பார்வையில் அணுகக்கூடாது என்பதை அவர்களுக்கு இடித்துரைக்கிறது. இந்த உண்மையை  புதிய ஜனநாயகம் சொன்னபோதெல்லாம், தமிழினவாதிகள் எல்லோரும் நாம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று அவதூறு செய்ய்தார்கள்.

இராஜபக்சே
கனவு நொறுங்கிப் போன அதிர்ச்சியில் சிங்கள இனவெறி பாசிச போர்க்குற்றவாளி இராஜபக்சே.

2013 டிசம்பர் புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதினோம் : தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் தமிழீழத் தனியரசு மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின்துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப் பிடிக்கலாம் என்கிறார்கள்.

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும் கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதேபோல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது, ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ஒற்றுமையல்ல. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந்தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க. வினர்  ஏற்கின்றனர்.

இவ்வாறு தெளிவாகச் சொன்ன பிறகும் ம.க.இ.க. வினர்  ஈழத்துக்கு எதிரானவர்கள் என்று தமது அவதூறுகளைத் தமிழினவாதிகள் தொடர்ந்தனர். ஆனால், இப்போதைய இலங்கையின் அரசியல் மாற்றங்களைச் சாக்குவைத்து, தேசிய சுயநிர்ணய உரிமையைக்கூட கைவிட்டு அதிகாரப் பகிர்வு, 13-வது சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள். இனியாவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத தீர்வுகளையும் குறுகிய இனவாதங்களையும் கைவிட்டு, எதார்த்த அரசியல் நிலைமைகளையும் எதிரிகளையும் நட்பு சக்திகளையும் சரியாக மதிப்பிட்டு, ஈழத்மிழினத்துக்கான தன்னுரிமையுடன் கூடிய புதிய ஜனநாயகத்துக்கான இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்.

– ஆர்.கே.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

Appraisal in IT sector – a critique

2

Dear IT friends,

"performance review is so one-sided, giving all power to the boss"
“performance review is so one-sided, giving all power to the boss”

Appraisal process for this year is underway in many IT companies. Every year we look forward to this phase with expectations, dreams, excitement and a lot of apprehension. Have we ever enjoyed the outcome of this appraisal cycle? Obviously, No.

That’s because performance review is so one-sided, giving all power to the boss. The boss thinks himself or herself as evaluator, and doesn’t engage with subordinates to measure team performance. It isn’t, “How did we work together as a team?” It’s, “How are you performing for me?” Our joint team performance is not considered, rather individual employee’s performance is evaluated.

The main reason is rating (or) band or whatever is given, is always based on expectations of the company in terms of profit for coming years and how employees can be made to work towards it.

So these evaluations are not actually for analyzing past performance of a team. Reviews and ratings are also used to avoid lawsuits when a particular employee has to be fired. This was made evident in the recent TCS layoff saga.

DilbertPerformanceReview
Performance reviews hardly impact pay raises, bonuses, or promotions, because management always places wage negotiation in the context of overall company performance

Performance reviews hardly impact pay raises, bonuses, or promotions, because management always places wage negotiation in the context of overall company performance. So you could be a great employee blowing the doors off your goals, but if the company overall is not doing well, your bonus/raise/promotion may suffer or get delayed. That is, we perform together as teams, but are rated as individuals, which is meaningless.

Peformance Review
Performance review is simply a place where boss comes up with a story to justify the pre-decided pay.

People and politics of individualism are not the only forces which negate the positive potential of performance appraisal system. Pay is primarily determined by market forces, and individual hikes are decided by the boss, and boss’s boss, largely influenced by corporate budget. Performance review is simply a place where boss comes up with a story to justify the pre-decided pay. If raise is lower than what subordinate expects, boss will say, “We can work to get it higher in future, and here are things you need to do to get to that level.”

Then they use this as a ruse to brand employees as non-performers and fire them. We’re sick and tired of hearing about subordinates who fail and get fired, while bosses, whose job was to ensure subordinates’ effectiveness, get promoted and receive raises.

Performance Review
Distribution of higher and lower ratings is set according to a pre-set formula.

Distribution of higher and lower ratings is set according to a pre-set formula. In a performance appraisal system that measures on a five-point scale, not everyone can receive a five. This is a restraint to manager, a “can’t do.” At the same time, number of employees assigned to lower rating should also fit with the formula. This is a constraint, a “must do.” Rating numbers must be adjusted to meet various restraints and constraints: language and tone of appraisals must in turn be adjusted to be consistent with numbers. From this follows an inescapable conclusion: honest, fair, valid, and objective assessment of all employees in the current appraisal system is literally impossible.

If hike serves as a compensation for cost-of-living increase, a hedge against inflation, this can be done on a flat-rate basis without the need for a performance appraisal system. If pay increases are warranted for other reasons, it is unlikely that they require a performance appraisal system to administer. Bonuses or other special increases can and should be tied to very specific, very visible, very measurable results, and this should be applicable to the whole team, as only teams achieve results.

Performance Review
“If we didn’t have a performance appraisal system, how would people find out what is expected of them?”

The structure, restraints, and constraints of the system do not permit such methods. It is clear that, appraisal system is unscientific and illogical. Performance appraisal systems could be eliminated with no harm done and with great economic and emotional benefit to the employees and organization.

Some may ask, “If we didn’t have a performance appraisal system, how would people find out what is expected of them?”

Job requirements related discussions between bosses and subordinates do not require a formal, full-blown, annual performance appraisal system. Real coaching and counseling sessions that shape and improve employee performance occur informally, daily, outside performance appraisal systems.

  • Scrap unscientific, illogical performance appraisal system
  • Ban illegal NASCOM blacklist.
  • To achieve these goals, let us unite as a Union under NDLF IT Employees Wing.

For contact, please ring  90031 98576 or email combatlayoff@gmail.com

Visit: https://www.facebook.com/NDLFITEmployeesWing

Karpaga Vinayagam,
New Democratic Labour Front – IT Employees Wing

Performance Review
Performance appraisal systems could be eliminated with no harm done and with great economic and emotional benefit to the employees and organization.

Cartoons taken from the web

அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்

3

ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்த புகார்களை எங்களிடத்தில் தெரிவிக்கவும் – வி.வி.மு அறிவிப்பு

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்

ழல் செய்வது, லஞ்சம் பெறுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. கிராம அலுவலர் தொடங்கி, மாவட்ட ஆட்சியர்கள் வரையில் தகுதிக்கு தகுந்தவாறு லஞ்சமும், ஊழல் செய்வதும் நடந்தேறுகிறது. அரசு துறைகள் அனைத்திலும் இதே நிலைதான் நீடித்து நிற்கிறது.

அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளுக்கும், சான்றிதழ் பெறுவதற்கும் இருக்கின்ற தாலுகா அலுவலகம்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச, ஊழல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.  வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு காசில்லாமல் மனுக்கள் நகருவதில்லை. ஆதரவற்றவர்களும், முதியோரும் உதவித் தொகையை நிறுத்தி விட்டதாக தினம் தோறும் அலுவலகம் முன்பு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவித் தொகைக்கு கூட காசு இல்லாமல் செய்வதில்லை. லஞ்சமே அறிவிக்கப்படாத சட்டமாகி விட்டது.

மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன. எந்த புது சட்டம் வந்தாலும் இதனை தடுக்க முடியவில்லை. லஞ்சம் பெறுவது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர லஞ்சம் வாங்குபவர்களுக்கு கூட்டாளியாகவும் முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு சோதனை செய்யும் கீழ்த்தரமான வேலை செய்பவர்களாகவும் உள்ளனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டிடம் கட்டி விட்டதாகவும், சாலைகள் போடப்பட்டதாகவும், தெருவிளக்கு சரி செய்யப்பட்டதாகவும், குடிநீர் வழங்கப்பட்டதாகவும் பொய்யைக் கூறி பெரும் ஊழலில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகளும், கரை வேட்டிகளும் கூட்டாக நடத்தும் ஊழல்கள் திறமையாக மறைக்கப்படுகின்றன.

“இந்தப் பிரச்சனைக்கு போலீசு, நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் என்ன தீர்வு இருக்கிறது? ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகளை நாம்தான் எதிர்கொண்டு சரி செய்ய வேண்டும். அவர்களைப் பற்றிய புகார்களை எங்களிடத்தில் தெரிவியுங்கள். லஞ்சம், ஊழலை முறியடிக்க களத்தில் இறங்கி போராடுவோம்.”

என்று பென்னாகரத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

10-2-2015 செவ்வாய்கிழமை அன்று மூன்று தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

சிறிது நேரத்தில் போலீசு படை பரிவாரங்களோடு வந்தது. போலீசை பார்த்ததும் மக்கள் திரளாக சூழ்ந்து கொண்டனர். உடனே தட்டியை அகற்ற வேண்டும் என்றும் அனுமதி இல்லை என்றும் சட்டம் பேசியது போலீசு.

உடனே சுற்றியிருந்த மக்கள் மத்தியில் நின்றிருந்து தோழர்கள், “என்ன தவறாக தட்டி வைத்துள்ளனர். லஞ்சம் வாங்குவது தவறு என்றுதானே சொல்றாங்க. இதற்கு எதற்கு அனுமதி” என்று வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களில் ஒருவர், “நானே,இரண்டு நாளா வந்து போறேங்க” என்று ஆதங்கப்பட்டார்.

போலீசோ, “லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்” என்றனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்”

“ஒரு தனிநபர் தட்டியை வைத்துக் கொள்வது சட்டத்தை மீறிய செயலா? பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 52 புரோக்கர்கள் உள்ளனர். லஞ்சம் பெறுவதற்கே அவர்களை அதிகாரிகள் வைத்துள்ளனர்.” என்று பேசிய உடனே போலீசு கீழே இறங்கி மன்றாட தொடங்கியது. “கலைந்து செல்லுங்கள்” என்று பணிவாக பேசினார்கள்.

“மோடி ஊழல் ஒழிப்பு என்று சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் கலைந்து போக வேண்டுமா. இல்லை, எங்களை கைது செய்யுங்கள்” என்று தோழர்கள் பேச,

“இல்லை, கைது செய்ய முடியாதுப்பா” என்று குழைந்தது போலீசு.

“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க” என்று வாதத்தில் இறங்கினோம்.

கைதும் செய்ய முடியாமல், மிரட்டவும் முடியாமல் திகைத்து நின்றது போலீசு.

“லஞ்சம் வாங்குவது தவறு என்று போராடினால் உளவுத் துறை படம் பிடிக்கிறது. அலுவலகத்துக்குள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போய் படம் பிடியுங்கள்” என்று தோழர்கள் பேச படம் பிடிப்பதை நிறுத்திக் கொண்டது உளவுத் துறை போலீசு.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க”

பல பெண்கள் உட்பட மக்கள் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு, “எங்கள் பிரச்சனையை தீர்க்க இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாமா” என்று கேட்டுச் சென்றனர். “நீங்கள் செய்வது சரியானது, தொடர்ந்து செய்யுங்கள்” என்றனர்.

ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அங்கிருந்து சென்று பேருந்து நிலையம், மக்கள் கூடம் இடங்களில் பிரச்சாரம் செய்தோம். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மக்கள் மனக் குமுறலோடு இருப்பதை காண முடிந்தது.

லஞ்சத்தையும், ஊழலையும் போலீசு, அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் ஒழிக்க முடியாது. இதனை அடியோடு ஒழித்துக் கட்ட அரசையும், அதிகாரிகளையும் நாமே தட்டிக் கேட்கும் வகையில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும்.

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம்
9943312467

ஐ.டி அப்ரைசல் ஒரு ஊழியரின் பார்வையிலிருந்து – வீடியோ

1

வ்வொரு ஆண்டும் ஊழியர்களின் பணித்திறனை கணக்கிட்டு சம்பள உயர்வு/குறைவு அளிப்பதாக கூறி ஐ.டி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருவது தான் அப்ரைசல் என்ற மோசடி.

அப்ரைசல்
கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்களில் பணித்திறன் அளவீட்டை (appraisal) இம்மாதம் ஆரம்பித்திருப்பார்கள். அதன்படி, ஊழியர்கள் கடந்த ஆண்டு செய்த வேலைகளையும் அதற்கான மதிப்பீட்டு புள்ளிகளையும் பரிசீலிக்கும் சடங்கு ஒன்று நடைபெறும். இதற்கு அப்ரைசல் மீட்டிங் என்று பெயர். கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

அப்ரைசல் மீட்டிங் வைபவத்தின் முடிவு யாவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஆரம்ப நிலை ஊழியர்கள் ஒரு சில வருடங்கள் கழித்தே இதை புரிந்து கொள்கிறார்கள். அப்படி என்ன தான் அப்ரைசல் மீட்டிங்கில் நடக்கும் என்பதைப்பற்றிய தெலுங்கு குறும்படம் ஒன்று யூடியூபில் காணக்கிடைக்கிறது.

அப்ரைசல் முறை ஊழியர்களை பிளவுபடுத்தி, ஒருவரை மற்றொருவரின் போட்டியாளராக்கி அதன் மூலம் அவர்களை மேன்மேலும் சுரண்டுகிறது என்பன போன்ற அரசியல் விசயங்கள் படத்தில் பேசப்படவில்லை; ஆயினும் அப்ரைசல் முறை மோசடியானது என்பதை சாதாரண ஊழியரின் பார்வையிலிருந்து அம்பலப்படுத்துகிறது; அதிக ரேட்டிங் வாங்க வேண்டி ஊழியர்கள் எவ்வளவு அடிமைகளாக நடந்து கொள்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

புரியாத மேனேஜ்மன்ட் வார்த்தைகளை கூறி ரேட்டிங்கை குறைக்கும் மானேஜர்களின் பொதுப்புத்தியை அழகாக சித்தரிக்கிறது இந்த படம்.  ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம். இதற்கு சில மானேஜ்மென்ட் பாணி கதைகளை வேறு உதாரணமாக கூறுவார்கள். அதையும் கிண்டல் செய்கிறது இந்தபடம். “குழ்ந்தை தவழ்வது என்பது இயல்பானது தான். அதே குழந்தை எழுந்து நடப்பது தான் எதிர்பார்ப்பை தாண்டுவது” என்று குட்டிக்கதை சொல்கிறார் மானேஜர்.

ரெய்ஸ் த பார்
ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம்.

முதலாம் ஆண்டு ரேட்டிங்கின் போது, கொடுக்கப்பட்ட வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்திருந்தாலும் சக ஊழியர்களுடன் பழகுவதில் பிரச்சனை இருப்பதாக கூறி குறைவான மதிப்பீட்டை அளிக்கிறார் மேலாளர். அடுத்த ஆண்டு முழுவதும் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து செய்கிறார் ஊழியர்.

அடுத்த ஆண்டு அப்ரைசலில் வழக்கம் போல புரியாத மேனேஜ்மென்ட் வார்த்தைகளைக் கூறி “அது போன வருசம் இது இந்த வருசம்” என விளக்கி  மீண்டும்  குறைந்த புள்ளிகளையே அளிக்கிறார்.

குட் இனஃப்
ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார்.

ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார். விரக்தியில் வெளியேறும் ஊழியர் தான் அந்த வேலையை செய்ய போவதில்லை என்று சக ஊழியரிடம் கெத்தாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காக உழைக்க ஆரம்பிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டு ரேட்டிங்கின் போதும் அடுத்த சில நாட்களுக்கு ரகசியமாக மேலாளரை திட்டுவதும், “இனி கூடுதல் வேலை செய்ய மாட்டேன்” என்று சவடால் விடுவதும் அனைத்து ஐ.டி அலுவலகங்களிலும் நடக்கும் ஒன்று. சில நாட்களுக்குள் அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காகன வேலையை ஆரம்பித்திருப்பார்கள். இதைத் தாண்டி சிந்திப்பதில்லை.

படத்தில் வரும் ஐ.டி ஊழியருக்கு மேலாளரை அடித்து உதைக்கலாம் என்று தோன்றினாலும், கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தும் அடுத்த ஆண்டுக்கான ரேட்டிங்கிற்கு உழைக்க செல்கிறார். அதற்கும் பலனில்லை என்று அதற்கும் அடுத்த ஆண்டு தெரிந்த பிறகு, அதிகபட்சமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுகிறார். அப்படி ஓடுவதையே வீரமானதாக இப்படம் சித்தரிக்கிறது.

அப்ரைசல் என்ற மோசடி குறித்த அரசியல் பார்வை இந்த படத்தில் சொல்லப்படவில்லை. படத்தின் நாயகனான ஐ.டி ஊழியரும் பின்னொரு சமயத்தில் மானேஜராகி தகிடுதத்தம் செய்வது போல முடிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் இது சாத்தியமில்லை என்பதைத் தான் கூம்பு வடிவ நிறுவன அமைப்பும், ஐ.டி வேலை பறிப்புகளும் நமக்கு கூறுகின்றன. ஆனாலும் அப்ரைசல், ரேட்டிங், அப்ரைசல் மீட்டிங், மேலாளர்களின் மொழி முதலியவற்றை புரிந்துகொள்ள இப்படத்தை பார்க்கலாம்.

ndlf-it-wing-meeting-2

தொடர்பு எண்  9003198576
மின்னஞ்சல் combatlayoff@gmail.com

கற்பக விநாயகம்
அமைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு.

ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து

7

புதிதாக வெள்ளை அடித்த சுவருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்னொரு ஜென்மம் வைரமுத்து.

வைரமுத்து சிறுகதைகள்
சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம்.

சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம். பதிலுக்கு வைரமுத்து “குமுதம் கோட்டைக்குள் ஒரு ஊழியன் நுழைவதற்குப் பெருந்தகுதி வேண்டும்” என்று குமுதம் குடும்பவிழாவில் தனது தகுதியை காண்பித்தார். நடுப்பக்கத்தில் ஏதாவது ஒரு நடிகையின் தொப்புளைக்காட்டி காசு சம்பாதிக்கும் பயலுக்கு என்னடா தகுதி? என்று வாசலில் நிற்கும் வாட்ச்மேன் கேட்கவா போகிறார்! தமிழ் ‘சொரியும்’ வைரமுத்து தாராளமாய் அவிழ்த்து விடலாம்தான்!

இந்த இலக்கிய வைரஸ் இத்தோடு முடியவில்லை. “பிராமணப் பின்னணியில் பிராமண மொழியில் கவிப்பேரரசு எழுதிய முதல் சிறுகதை” என்ற அதிரடி விளம்பரம் அடுத்தடுத்து! ஏற்கனவே குமுதத்தில் “காயத்ரி மந்திரம்” என்று மடிசார் மாமிகள் மாடலிங் படங்களைப் போட்டு அலமு சொன்னாளா! சாஸ்த்திரோத்தமான குடும்பம் என்று வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தேவிபாலாவுக்கே திடுக்கிட்டிருக்கும் நம்ம மடப்பள்ளியில் இது ஏதுடா புது பெருச்சாளின்னு!

இலக்கிய உலகின் பாப்பாரத்தனம் ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே அக்கிரகாரத்து பெருங்காயத்தில் கரைந்துபோன வாயுக்கள் நிறைய உண்டு, இதில் புதுசு கண்ணா புதுசு இந்தப் பேரரசு! பார்ப்பன பின்னணியைக் கையாண்டு, பார்ப்பன மொழியைக் கையாண்டு அதன் பஞ்சமாபாதகங்களை அடையாளப்படுத்தியிருந்தால் வைரமுத்துவை நாமும் வரவேற்கலாம். “வேதங்கள் சொல்லாதது” என்று குமுதத்தில் அவர் எழுதியிருக்கும் கதையில் நடேசய்யர் என்ற கதாபாத்திரத்தின் வழி பார்ப்பன சாதி பிடிமானத்தை, சாதி ஆச்சாரத்தை இடித்துரைப்பதுபோல கதையைப் பின்னிக்கொண்டே போய் கடைசியில் சாதிவெறிக்கென்றே உருவான சங்கரமடத்தின் மகா சாதிவெறியரை மகா பெரியவா நல்லவா என்றொரு மகா பொய்யை இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுவது பார்ப்பன நரித்தனம், பச்சை பொய்யும் கூட.

கதையை நீங்களே படித்துப்பாருங்கள், கதையின் சுருக்கம் இதுதான்:

“பிறப்பு முதல் இறப்பு வரை நான் பிராமணன் என்று உள்ளும், புறமும் உறுதிபட வாழும் உடும்புப் பிராமணர் வகையைச் சேர்ந்த நடேச அய்யர் என்பவர் மூன்று தலைமுறையாய் வைத்திருந்த தென்னந்தோப்பை ஒரு சூத்திரர் வாங்குகிறார், (வண்டு முருகன் கதை சொல்வது போல இருப்பதால் அநேகமாக அதை வாங்குபவர் வைரமுத்து உருவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை) விற்கும் அய்யரின் நிபந்தனை, அந்த தோப்புக்குள் பாதயாத்திரையின் போது பரமாச்சாரியார் தங்கிப் போன ஒரு சிறு காரை வீட்டை தெய்வ சன்னிதியாக அவர் வழிபடுவதால், அதை கோயிலா பாதுகாக்கணும், பரமாச்சாரியாருக்கு விரோதமான எதுவும் பொழங்கக் கூடாது!” என்பது.

சங்கராச்சாரி
“லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! K

தோப்பை பராமரிக்க கூலிக்கு குடிவைக்கப்படும், (குடிசையில்தான்! பாப்பார நிபந்தனைக்கு கட்டுப்படும் அருவா மீச ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் வச்சதுதான் சட்டம், தான் கை காட்டுன ஓலதான் வீடு!) தாழ்த்தப்பட்ட கணவனும் மனைவியும், பூஜைக்கு வைத்த குருக்கள் ஊருக்குப் போனதால் தாமே பரமாச்சாரியார் சன்னதிக்கு விளக்குப்போட, “அபச்சாரம்” என நடேச அய்யர் கத்துகிறார், “மிலேச்சர்களை உள்ளே விட்டது தப்பு!” என்று அய்யர் கத்தி தீர்க்க, அவரது மனுதர்மம், மனுச தர்மம் பற்றி வாதாடி விளக்கம் தரும் தோப்புக்காரர், பின் வாக்கு மீறிவிட்டேனோ என்று தனக்குத்தானே சங்கராச்சாரி, அத்வைதத்தை துணைக்கு அழைத்து மனதுக்குள் சரிபார்த்துக் கொள்கிறார் (நடேச அய்யருக்கு எதிராக முற்போக்காக பேசிவிட்டு, தோப்புக்காரரை விறைப்பாக விட்டால், வைரமுத்து கதை என்னாவது? பயப்படாதிங்க நான் உங்க ஆள் தான் என்று பம்மிக்காட்டுவதற்காக அடுத்த நொடியே ஆச்சாரியார், அத்வைதம் இதெல்லாம் என் பார்வைக்கு விரோதமில்லை என்று தோப்புக்கரணம்!)

இந்தச் சூழலில் சூறைக்காற்று வந்து தோப்பில் தாழ்த்தப்பட்ட இருளாயி, காளியப்பா ஓலை வீடு பிய்த்துக் கொண்டுபோக நள்ளிரவில் நடுங்கித் தவித்து அழைக்க, சாமி சன்னிதியான காரை வீட்டில் போய் குடியிருங்க என்கிறார் தோப்புக்காரர். அட கதை புரட்சிகரமான முடிவா இருக்கே என்று, அடுத்த வரியைப் பார்த்தால், வைரமுத்து தோப்புக்காரராகி மட்டைக்கு ரெண்டாய் இப்படி கிழிக்கிறார். “என் முடிவை மகா பெரியவர் ஏற்றுக்கொள்வார்! நடேச அய்யர் போகப்போக புரிந்து கொள்வார்!” இதுதான் கதை.

பரமாச்சாரியார் படுத்து எழுந்த இடத்தில் பண்ணையாள் புழங்கியது அபச்சாரம் என்று புழுங்கியது நடேச அய்யரின் சாதி வெறி என்றால், பண்ணையாள்கள் புழங்குமிடத்தை காரை வீட்டு சன்னிதானத்திற்கு எதிராக ஒரு காற்றுக்கு பிய்த்துக்கொண்டு போகும் அளவுக்கு அவர்களை ஒரு ஓலை குடிசையில் தள்ளிய (வைரமுத்து) பண்ணையாரின் தன்மை என்ன வெறி? இப்படி பண்ணையாரின் கண்ணியமான உருவம் தென்படும் இடமெங்கும் கதைக்களன் எழுப்பும் கேள்விகள் பல உண்டு.

கதைப்படி இதையெல்லாம் கேட்ககூடாது? என்றால் சங்கராச்சாரிக்கு மட்டும் என்ன சலுகை வேண்டி கிடக்கு? பண்ணையாட்களின் அதாவது, தாழ்த்தப்பட்டவர்களின் நடத்தையை வாழ்க்கையில் இருந்து விவரிக்கும் கதை பரமாச்சாரியாரின் யோக்கியதையை மட்டும் தத்துவ வழியில் விளக்குவது என்ன இலக்கிய நியாயம்? பார்ப்பன சாதி வெறியை எதிர்ப்பது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் பரமாச்சாரியாரை எதிர்க்கவில்லை என்பதையும் காட்டவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் அடக்கப்பட்டவர்களின் உணர்ச்சியையும் அறுவடை செய்ய வேண்டும், அவர்களை அடக்கியவர்களின் ஆதரவையும் பெறவேண்டும் என்பது இலக்கியமா? அயோக்கியத்தனமா? எழுதப்பட்டதை விட மறைக்கப்பட்டதில் இருக்கிறது கதையின் கரு. இதைப் புரிந்துகொள்ள வாசகனுக்கு வெறும் வாசிப்பு அனுபவம் மட்டும் போதாது, சமூக வாழ்க்கையின் அனுபவங்களும் வேண்டும்.

 "அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!"
“அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!”

“பரமாச்சாரியார் சொல்லாதது” என்று தலைப்பு வைக்க வேண்டிய கதையை பார்ப்பனியத்திற்கு ஏற்றமாதிரி “வேதங்கள் சொல்லாதது” என்று உடும்புப் பார்ப்பனர்களை சிந்திக்க வைக்கிறாராம்! வைரமுத்து உடும்பு பிடிப்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை, கதைக் களன் படியும், பார்ப்பன சாதிவெறியை, அதன் பயங்கரத்தை விண்டு வைப்பதை விடவும், தனது ‘சூத்திர’ அடக்கத்தை, அவாள் ஆத்திரம் கொள்ளாத அளவுக்கு, அவாள் வேதம், ஆச்சார்யாள் படியே தான் பேச நேர்ந்தது என்று தன்னிலை விளக்கமாகவே கதையின் ‘ஆன்மா’ ஒலிப்பதை சகித்துக் கொண்டாலும், மத்தவாதான் சாதி பாக்குறவா, மகா பெரியவா நல்லவா, என்பது மாதிரி கதை விடுவதுதான் சகிக்கமுடியாத துர்நாற்றம்!

தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தி தன்னை விலை பேசிக்கொண்டவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி சாமிகளை கதாநாயகராக காட்டுவதன் மூலம் மோடியின் கையால் ஒரு விருது வாங்க முத்தமிழையும் ‘நூலில்’ கட்டி இழுக்க ஆழ்வார் வைரமுத்து அணியமாகிவிட்டார்.

பிராமணப் பின்னணியையும், பிராமண மொழி நடையையும் ஒரு பிராண்ட் வேல்யூவாகவே ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. சூத்திர சூரியன் எஃப்.எம் கூட கிட்டு மாமா சுசி மாமியைத்தான் ஏவி விடுகிறது. பார்ப்பனியத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், அய்க்கியப்படுத்திக் கொள்ளவும் நாலுகாசு பார்த்தவுடன் நாயாய் அலையும் கருப்பு பார்ப்பனர்களின் கேவல மனநிலை, இயல், இசை, இலக்கியம் அனைத்திலும் விசமாய் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த விசத்தில் ஒன்றுதான் வைரமுத்துவின் குமுதம் கதை.

திருவரங்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் நடத்திய மக்கள் மீது மிளகாய் பொடி தூவி கண்களை எரிய வைத்த அக்கிரகாரத்து மாமிகளை போலீசு விசாரித்ததற்காக “என்னவால்லாம் நம்மவா கஷ்ட்டப்படுறா என்று கண்ணீர் சிந்திய” (ஆதாரம்: அக்னி கோத்திரம் தாத்தாச்சாரியாரின் இந்துமதம் எங்கே போகிறது!) பெரியவா, சாதி சமத்துவத்தை ஏற்கும் மகா பெரியவராம் வைரமுத்துவுக்கு! பெரிய சங்கராச்சாரியின் சாதி, மத, ஆணாதிக்க வெறியைத் தெரிந்துகொள்ள மஞ்சை வசந்தனின் “தெய்வத்தின் குரலா? தில்லுமுல்லு பேச்சா!” நூலைப் பார்த்தால் உண்மை முகம் தெரியும். பழைய புதிய கலாச்சாரம் இதழின் “அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!” என்ற சங்கராச்சாரியாரின் கனகாபிஷேகம் பற்றிய கட்டுரையை படித்தால் மகா பெரியவாளின் மகா கேடுகள் விளங்கும்.

வைரமுத்து
பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல

அவாளாகப் பிறந்தாலும் அவாளுக்கே சவாலாக சில உண்மைகளை அக்னிகோத்திரம் போட்டு உடைக்கிறார், ஆழ்வார் வைரமுத்துவோ பெரிய சங்கராச்சாரியார் பித்தலாட்டங்களை மறைக்கிறார். அக்னிகோத்திரம் அடையாளம் காட்டும் சந்திரசேகர சாமிகளின் யோக்கியதையைப் பாருங்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை என்ற செய்தி வந்தவுடனேயே மகா பெரியவர், “லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! ஸ்திரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கப்படாதுன்னு, மனுஸ்மிருதி சொல்லிருக்கு! ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க இந்த ‘பில்லை’ எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும், இதுக்கு நிறைய ஸ்த்ரீகளை திரட்டனும்…” என்றெல்லாம் அவசர ஆணைகளை பிறப்பித்தார் மகா பெரியவர் (இந்துமதம் எங்கே போகிறது நூல் பக். 108-109).

இந்த மகா வில்லன்தான் வைரமுத்துவுக்கு மகா கதாநாயகர். ஊசிப்போன சாம்பாரை ஆகா! அமிழ்தம் என்று வைரமுத்து அருந்துவது அவரது தனிப்பட்ட அடிமை உரிமை, அதை ஊர் தலையில் கட்டுவதைத்தான் நாம் விமர்சிக்கிறோம், கண்டிக்கிறோம்.

நாட்டுக்கோட்டையைச் சேர்ந்த அருணாச்சலம் ஒருமுறை பெரியவாளைப் பார்க்க மடத்துக்கு வர, ‘மடி’ யாய் இருந்த நேரம் அதாவது ஆச்சாரமான நேரத்தில் அவரிடம் தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் என்று, பார்க்காமலேயே அவரை அனுப்பி ‘தமிழை நீச மொழி’ என்று இழிவுபடுத்திய இந்த சாதி, சமஸ்கிருத வெறியர்தான் குமுதம் செட்டியாருக்கும், தேவர் வைரமுத்துவுக்கும் குலத்தையே இழிவுபடுத்தினாலும் குல தெய்வமாம். சமத்துவம் ஏற்கும் சான்றோராம்!

இப்படி ஒன்று இரண்டல்ல, விதவைகளை இழிவுபடுத்தியது, தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவது என்ற மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் இந்து தர்மமாக இஞ்சு பிசகாமல் கடைபிடித்த மகா சாதிவெறியரை கருணையின் வடிவாக கதை விடுவதும், சமஸ்கிருத மொழி வெறி, சனாதன குல வெறியை பரப்பும் பார்ப்பன – பா.ஜ.க. தருண்விஜயை தமிழை வாழவைக்க வந்தவராக பசை தடவுவதும் வைரமுத்து வயிறு வளர்க்கும் கேவலங்கள்! இதற்காகத்தானே ஆசைப்படுகிறாய் வைரமுத்து என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலே ரத்தம் வர சொரிவது தாங்காமல் அவசரமாக மோடி கையால் ஒரு புத்தம் புது விருதை வழங்கும்படி விரிகிறது வைரமுத்துவின் கலைச்சேவை.

“ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! என்று மடத்தை கழுவிவிட்டு, அக்கிரஹாரமே தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்ளும் படி புனிதப் பசுவாய் திரிந்தார் ஜெயகாந்தன், மகா பெரியவாளையே மடக்கியதன் மூலம் மாமாங்குள திவசப் பார்ப்பனர்களையே திடுக்கிட வைத்துவிட்டார் வைரமுத்து!

பெரியார்
பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்

பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்: “நமது புலவர்கள் படித்துப்போட்டு அளப்பார்கள் தோழர்களே! சாதாரணமாகப் படிக்காதவரிடமாவது பகுத்தறிவு வாசனையினைக் காணலாம், இந்தப் புராணக் குப்பைகளைப் படித்து அதனை தமது வாழ்வுக்கு கருவியாக அமைத்துக் கொண்டவர்களிடம் மருந்துக்கும் கூட பகுத்தறிவு தோன்றாது…. மிருகங்கள் மட்டும்தான் தாம் பிழைப்பதற்காக மட்டும் வாழ்கின்றன. மனிதன் அப்படியல்ல பிறருக்காக வாழவேண்டும். நம் இனத்திற்கு மரியாதை உண்டாக்க வேண்டும்…” (திருச்சி பெரியார் பயிற்சி பள்ளி இலக்கியமன்ற திறப்புவிழா, சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் பெரியார் ஆற்றிய உரை, 23-8-1963 & 30-10-1967).

“மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!” என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார். பெரியவாளை தூக்கிக் கொண்டு பரப்புரை செய்ய வந்தால், கட்டாயம் பெரியார் எதிரே வருவார்!

பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல, இருந்தாலும் இந்த செய் நேர்த்திக்கு வைரமுத்து தென்னந்தோப்பு பக்கம் போனதுக்கு, ஜெயமோகன் பக்கம் போயிருக்கலாம். பார்ப்பனியத்திற்கான ‘ஹோம் ஒர்க்’ செலவு மிச்சமாகியிருக்கும், மதிப்பீடு தவறுதான் பார்ப்பனியமே ஹோம் ஆனவர்களுக்கு தனியே ஒர்க் என்ன வேண்டிகிடக்கு!

உலகமயத்தின் புதுப்பார்ப்பனர்கள் ‘குந்த ஒரு குச்சி வாங்கி’ அவாளை வைத்து கணபதி ஹோமம் பண்ணுவதும், வைரமுத்து குமுதத்தில் அவாளை வைத்து ஒரு கதை எழுதுவதும் வேறுவேறு அல்ல! பார்ப்பன மயமாக்கலின் பரிணாமங்கள்தான். என்னங்க, கதையப் பாத்தா மனிதாபிமானம், சாதி ஒழிப்பு, சமத்துவம், பார்ப்பன எதிர்ப்பு எல்லாம் கொட்டிக்கிடக்குற மாதிரி இருக்கு இப்படி சொல்றீங்களே என்பவரா நீங்கள்? மீண்டும் கதைக்கு வெளியே வந்து ‘மகா பெரியவாளின்’ நடத்தையை பாருங்கள்! இப்போது, வைரமுத்துவின் விசமத்தனத்திற்கு நடேச அய்யரின் விசமே மேல் என்பீர்கள்!

– துரை.சண்முகம்

தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை

0

மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்!

இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற திட்டத்தை மோடி அறிவித்தவுடனேயே, இப்படிப்பட்ட ஒன்றை எதிர்பார்த்துதான் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு தரகு முதலாளிகளும் காத்துக்கொண்டு இருந்தது போலவும், இனி அந்நிய முதலீடு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப்போவது போலவும்” கார்ப்பரேட் பத்திரிகைகள் வலிந்துவலிந்து எழுதித் தள்ளின. ஆனால், நடப்பதோ அதற்கு நேர்எதிராக உள்ளது. “முதலில் அரசாங்க காசைப் போட்டு அடிக்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள், குறைந்த வட்டியில் எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்; மற்றதை பிறகு பார்க்கலாம்” எனப் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பச்சையாகக் கூறிக் கையை விரித்துவிட்டார்கள்.

பிரதமர் மோடியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் அரசுக்கு அளித்துள்ள  2014-ம் ஆண்டிற்கான அரையாண்டு பொருளாதார அறிக்கையில், “பொது முதலீடுதான் தனியார் முதலீட்டை ஈடு செய்வதோடு, அதனைக் கவர்ந்திழுக்கும்” என நயத்தகு முறையில் குறிப்பிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்துக்கு ஒத்தூதியிருக்கிறார்.

அதானி - மோடி - ஸ்டேட் வங்கி
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கிக் கொடுக்க நடந்த பேச்சுவார்த்தையில், அதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 6,200 கோடி ரூபாய் கடனாக அளிக்க ஒப்புக் கொண்டது. (கோப்புப் படம்).

தனியார்மயத்தின் மிகத் தீவிரமான ரசிகனான இந்தியா டுடே ஏடு, “பொது முதலீட்டுக்கு மறுவாழ்வு தருவதை முற்போக்கு வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக்க வேண்டும். அதற்குப் பதில் வேறு முதலீடு இருக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு மறுவாழ்வு தந்து ஆதரவு தரப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடம் வீணாகத் தேங்கிக் கிடக்கும் ‘தூங்கும் முதலீடான’ இரண்டு இலட்சம் கோடி ரூபாயைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கப் பயன்படுத்தலாம்” என அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. கேட்பது பிச்சை என்றாலும், கார்ப்பரேட் விசுவாசிகளின் பந்தா மட்டும் குறையவில்லை.

நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிக் கொண்டிருக்கும் மைய அரசால் எப்படி முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற கேள்வியை அலசும் இந்து நாளிதழ், “அலைக்கற்றை ஏல விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தலாம். பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் உற்பத்தி வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தலாம்” என மோடிக்கு வழிகாட்டுகிறது. பொதுமக்களின் கையை வெட்டி முதலாளிகளுக்கு சூப் வையுங்கள் என்பதுதான் இந்த ஆலோசனையின் வக்கிரமான பொருள்.

கார்ப்பரேட் கும்பல் எள் என்றால் எண்ணெயாக நிற்கக் கூடியவரல்லவா நமது பிரதமர். அதனால் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, அடித்தட்டு மக்களின் அற்ப உடமைகளையும் கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் நிறுத்திவிட்டார், அவர்.  காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடை அனுமதிக்கும் சட்டத் திருத்தம், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், தொழில் பழகுநர் சட்டத் திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களையும், இரும்பு, பாக்சைடு போன்ற அரிய வகை தாதுப் பொருட்களையும் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தம் – என அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை அறிவித்து, அதன் வழியாக நமது நாட்டின் கனிம வளங்களை, விவசாய நிலங்களை, பொது மக்களின் சேமிப்பை, தொழிலாளர்களின் உழைப்பை ஏகாதிபத்திய நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்துவிட்டது மோடி அரசு.

ஜப்பான் உதவியோடு காசியில் நவீன நகரம்
ஜப்பானின் கூட்டோடு, உ.பி. மாநிலத்திலுள்ள காசியை நவீன நகராக உருவாக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடியோடு கலந்து கொண்ட ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே (வலது ஓரம்).

காங்கிரசு கூட்டணி அரசு 2013-ம் ஆண்டில் நிறைவேற்றிய புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், அரசு மற்றும் தனியார் இணைந்து செய்யல்படுத்தும் திட்டங்கள் என்றால், அத்தனியார் நிறுவனங்கள் 70 சதவீத நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். தனியார் திட்டங்கள் என்றால் 80 சதவீத நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் விளைவால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்; நகர்ப்புற நிலமாக இருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பீட்டுக்கு மேல் 2 மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 மடங்கும் விலையாக நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றவாறு சில கவர்ச்சிகரமான (populist) சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.  எனினும், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், அணுசக்தி திட்டங்கள், இராணுவப் பயன்பாடு உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், நில உரிமையாளர்களின் சம்மதத்தையும் பெற வேண்டியதில்லை, சமூக தாக்கம் பற்றிய மதிப்பீடையும் செய்ய வேண்டியதில்லை என்றவாறு விதிவிலக்குகளையும் அச்சட்டத்திலேயே வைத்திருந்தது.

விவசாயிகளின் சம்மதத்தைப் பெறுவதும், சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதும்தான் காங்கிரசு அரசு கொண்டுவந்த சட்டத்தின் உயிர்நாடியாகக் கூறப்பட்டது. அந்த உயிர்நாடியைத் திருத்தங்களின் மூலம் ஒழித்துக்கட்டிவிட்டது, மோடி அரசு.  பாதுகாப்பு, பெருந்தொழிற்பேட்டைகள், வீட்டுவசதித் திட்டங்கள், கிராமப்புற அடிக்கட்டுமானத் திட்டங்கள், சமூக அடிக்கட்டுமானத் திட்டங்கள் என்ற இந்த ஐந்து பிரிவுகளின்கீழ் வரும் திட்டங்களுக்கு அது அரசுத் திட்டமாக இருந்தாலும், முழுக்க முழுக்கத் தனியார் திட்டமாக இருந்தாலும், நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை, சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைத் தயாரிக்க வேண்டிய தேவையும் இல்லை என மோடி அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம் வரையறுக்கிறது. எந்தவொரு திட்டத்தையும் இந்த ஐந்து பிரிவுக்குள் அடக்கிவிட முடியும் என்பதால், இனி நிலங்களை அபகரிப்பது ஆற்று மணல் கொள்ளை போல நடக்கக்கூடும்.

இனி தனியார்கள் கட்டும் கக்கூஸைக்கூட சமூக அடிக்கட்டுமானத் திட்டம் என வரையறைத்துவிட முடியும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக்கொள்ளையை விவசாயிகளால் சட்டப்படி தடுத்து நிறுத்த முடியாது.  பெரிய செலவு எதுவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் சிறுவிவசாயிகளை அப்புறப்படுத்தி, அவர்களது நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கும் அடியாளாக அவதாரமெடுத்திருக்கிறது, மோடி அரசு.

கோல் இந்தியா
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்களும் ஊழியர்களும் கொல்கத்தாவில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஏலம் எடுப்பதையும்; அப்படி ஏலம் எடுத்த சுரங்கங்களை மற்றொருவருக்கு கைமாற்றிவிடுவதையும் அனுமதிக்கும் விதத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில்  திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழலைவிட, மிகப்பெரும் ஊழலைப் பிரசவிக்கும் அடிப்படையைத்தான் கொண்டுள்ளன.  குறிப்பாக, 2-ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அவற்றை வேறொரு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டுக் கொள்ளை இலாபம் அடைந்ததைப் போன்ற முறைகேடுகள் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடில் இனி அடிக்கடி நிகழும்.  ஆனால், 2-ஜி விவகாரத்தைப் போல அதனை யாரும் ஊழல் என்றோ, முறைகேடு என்றோ குற்றஞ்சுமத்த முடியாது. ஏனென்றால், சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதைச் சட்டபூர்வமாக்கிவிட்டார், யோக்கியவான் மோடி.

நிலம், நிலக்கரி உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்தான இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்த அவசரச் சட்டங்களுக்கு அப்பால், “பொது முதலீட்டை அதிகரிப்பதற்குச் சில சிறப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தரகு முதலாளிகளிடம் உறுதியளித்திருக்கிறார். அச்சிறப்பான நடவடிக்கைகள் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிப்பதும், அரசு வசமுள்ள மக்களின் சேமிப்புகளை முதலாளிகளுக்குப் படையல் போடுவதும்தான்.

இதன் தொடக்கமாக, தொழிலாளர் வைப்பு நிதியில் கைவைக்கத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.  அந்நிதியிலிருந்து 7 இலட்சம் கோடி ரூபாயை எடுத்து, அதன் மூலம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக, கேழ்வரகில் நெய் வடியும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஏழைகளுக்கு வீடு கிடைக்கிறதோ இல்லையோ, ரியல் எஸ்டேட் கம்பெனிகள், இரும்பு, சிமெண்ட் நிறுவனங்கள் கொழுத்த இலாபம் அடைவது உறுதி செய்யப்படும்.

எதிர்வரும் மார்ச்சுக்குள் 43,500 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காகளை அடித்து – இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது மற்றும் அதில் கிடைக்கும் பணத்தைப் பொது முதலீட்டுக்குத் திருப்பி விடுவது – முதலாளிகளின் மடியில் விழச் செய்யும் தந்திரம் நிறைந்தது.

ஏழையின் கண்ணில் சுண்ணாம்பையும் பணக்காரனின் கண்ணில் வெண்ணெயையும் வைக்கும் பாரபட்சமான அரசுதான் இது என்பதை பெட்ரோல் விலையைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம். அதன் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி கடந்த சில மாதங்களில் நான்குமுறை அடுத்தடுத்து கூட்டப்பட்டதால், 2012-ம் ஆண்டில் ரூ 9.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி, இப்பொழுது ரூ 16.95 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வரி உயர்வின் மூலம் மட்டும் மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருமானம் 18,000 கோடி ரூபாயாகும்.

எனினும், இந்தக் கூடுதல் வரி விதிப்பால் இந்திய மேல்தட்டு வர்க்கம் பெரும் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்ற பாரபட்ச நோக்கோடு, அவர்கள் பயணிக்கும் விமானத்திற்கான பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்காமல் தவிர்த்துவிட்டது, மோடி அரசு.  இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் ரூ 58.91-க்கு விற்கப்படும்பொழுது, விமான பெட்ரோல் ரூ 52.42 என மலிவு விலையில் விற்கப்படுகிறது. மேன்மக்களுக்கு காட்டப்பட்ட இப்படிபட்ட சலுகைகள் எதையும் ரயில் பயணிகளுக்குத் தரப் போவதில்லை என்பதையும் அகங்காரத்தோடு அறிவித்துவிட்டது, மோடி அரசு.

இது மட்டுமின்றி, ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சியிலும் மண்ணை அள்ளிப் போடவும் இந்த அரசு தயங்காது என்பதை சாந்தகுமார் அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது. உணவு மானியத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய்வதற்காக  மோடி அரசால் நியமிக்கப்பட்ட அக்குழு, “இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின் 67 சதவீத மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக, 40 சதவீத பேருக்கு மட்டும் உணவுப் பொருட்களை வழங்கி உணவு மானியத்தை வெகுவாகக் குறைத்துவிடலாம்” என இரக்கமின்றி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. மானிய வெட்டுகள், பல்வேறு வரி விதிப்புகளின் மூலம் ஏழைகளைச் சுரண்டி கஜானாவை நிரப்பிக் கொள்ளும் மோடி அரசு, பொது முதலீடு, வரிச் சலுகைகள் என்ற பெயரில் அப்பொதுப் பணத்தைத் தின்று கொழுக்கும் உரிமையைப் பணக்கார வர்க்கத்திற்கு அளிக்கிறது.

தனியார் துறை முதலீடைக் கவருவது என்ற பெயரில் அரசின் கஜானாவைத் திறந்துவைப்பதொன்றும் இதற்கு முன் நடவாத புதிய விசயமல்ல. கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் வங்கிக் கடன்களாகவும், வரிச் சலுகைகளாகவும் பொது முதலீடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் என்ன?  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பெருகி, அவை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால் அரசின் பற்றாக்குறை அதிகரித்ததேயொழிய, நாட்டிற்கோ, மக்களுக்கோ அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை.  வரிச் சலுகைகளைப் பெற்ற நோக்கியா, வோடாஃபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி மோசடியிலும் ஈடுபட்டுப் பொதுப்பணத்தைச் சுருட்டிக் கொண்டதைத்தான் கண்டோம். பொது நலன் கருதிதான் அலைக்கற்றைகளையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் குறைந்த விலைக்கு ஏலம் விட்டதாக காங்கிரசு கட்சி கூறியது.  அப்பொது நலன் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குத்தான் வழியைத் திறந்துவிட்டது. இப்படிப்பட்ட ஊழலும் மோசடியும் கார்ப்பரேட் பகற்கொள்ளையும் இல்லாமல், மோடி தனியார் முதலீட்டை அள்ளி வருவார் என நம்புவதற்கு காதில் பூதான் முடிந்திருக்க வேண்டும்.

– செல்வம்
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !

8

02-brahmasri-criminalழலை ஒழித்துக்கட்டுவதுதான் எமது முதல் வேலை” – எனத் தனது 56 அங்குல மார்பைத் தட்டி, சவால்விட்டு ஆட்சிக்கு வந்துள்ள மோடி கும்பல், ஊழலோடு சமாதான சகவாழ்வு நடத்திவருவதை ஜெயா-ஜெட்லி சந்திப்பு தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

கடந்த காங்கிரசு ஆட்சியில் 2ஜி, நிலக்கரி ஊழல்-முறைகேடுகள், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் – என அடுத்தடுத்து ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானதை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், கார்ப்பரேட் ஊடகங்கள், அன்னா ஹஸாரேவின் தலைமையில் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அவ்வூழல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகள், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி நம்ம ஊர் கார்த்திக், சூர்யா, விஜய் உள்ளிட்ட சினிமா கழிசடைகள் வரையிலான இந்தக் கூட்டணி எப்படியெல்லாம் ஆட்டங் காட்டினார்கள்.

ஊழல்தான் இந்தியாவைப் பீடித்திருக்கும் தீராத நோய்; ஊழல்தான் இந்தியா வல்லரசாவதைத் தடுத்து வருகிறது என்றெல்லாம் கூப்பாடு போட்டு, இந்தக் கூச்சலையே இந்தியாவின் எழுச்சியாக, ஊழலுக்கு எதிரான இந்தியாவாகப் பரபரப்பூட்டித் தம்மை நேர்மையின், அறத்தின் காவலர்களாகக் காட்டிக்கொண்டு, தேர்தல் வெற்றியை அறுவடை செய்துகொண்ட பா.ஜ.க. பார்ப்பனக் கும்பல் தன்னை நம்பியவர்களின் நெற்றியில் பெரிதாக நாமத்தைச் சாத்திவிட்டது.

ஜெயாவின் ஆதரவோடு நடந்த வாஜ்பாயி ஆட்சி, ஜெயாவின் ஊழல்-அதிகார முறைகேடு குற்றங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்து, அவருக்கு எதிரான நாற்பத்தி சோச்சம் ஊழல் வழக்குகளையும் சாதாரண நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொடுத்தது. அப்பொழுதே தன் மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கைக் கைவிட வேண்டும் எனத் துண்டுச் சீட்டில் ஜெயா எழுதிக் கொடுத்ததை, இப்போதைய மோடி ஆட்சி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

ஜெயாவின் நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சரான பிறகு, அவரை டெல்லியில் போய்ச் சந்தித்துத் திரும்பிய ஜெயா, வருமான வரி வழக்கில் அபராதத் தொகையைக் கட்டத் தயாராக இருப்பதாக வருமான வரித் துறையிடம் சமரச மனுவொன்றை அளித்ததும், அதனை ஏற்றுக் கொண்டு அருண் ஜெட்லியின் அதிகாரத்தின் கீழ் வரும் வருமான வரித் துறை ஜெயாவிற்கு எதிரான வழக்கைக் கைவிடுவதாக அறிவித்திருப்பதும் பார்ப்பன – பாசிசக் கும்பலின் ஆட்சியில் நீதியின் கதி அதோகதிதான் என்பதை நிரூபிக்கிறது.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது, 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழியின் சி.ஐ.டி. நகர் வீட்டிற்கு அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்று கருணாநிதியைச் சந்தித்ததையும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆ.ராசாவின் தோளில் பிரதமர் மன்மோகன் சிங் கைபோட்டதையும் மாபெரும் ஒழுக்கக் கேடுகள் என்றும், அறம் கொன்ற செயல்களென்றும் குற்றம் சாட்டி வானத்துக்கும் பூமிக்கும் தாவிக்குதித்த பா.ஜ.க., அந்நிகழ்வுகளைக் காட்டி நாடாளுமன்றத்தையே முடக்கியது. இவையெல்லாம் 2ஜிவழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்குத் தவறான செய்தியைத் தராதா?” என கேள்வி எழுப்பித் தம்மை யோக்கிய சிகாமணிகளாகக் காட்டிக்கொண்ட இக்கும்பல், ஜெயா-ஜெட்லி சந்திப்பை நியாயப்படுத்த வேறொரு அளவுகோலை வைக்கிறது.

ஜெயா சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால் அவ்வழக்கு முடியும்வரை அவரை நிரபராதியாகத்தான் கருத வேண்டும்; எனவே, ஜெயாவை அருண் ஜெட்லி சந்தித்திருப்பது சட்டப்படி தவறல்ல” என சில மூத்த வழக்குரைஞர்கள் நியாயத்தை வளைத்துத் தெரிவித்திருக்கும் கருத்துக்களைக் கொட்டை எழுத்துகளில் பத்திரிகைகளில் பிரசுரித்து, பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைக் கூச்ச நாச்சமின்றி மூடிமறைத்திருப்பதோடு, தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயாவையும் விடுவித்துவிடுகிறது, பார்ப்பனக் கும்பல். ஆ.ராசாவிற்கும் கனிமொழிக்கும் அவர்கள் இந்த நியாயத்தைப் பொருத்துவதில்லை. ஏனென்றால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஜெயாவோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலும், அவர் பிரம்மஸ்ரீ கிரிமினல்.

02-jaya-jaitley2ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக பெரும் சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு மட்டும் கியூவில் முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா என்பதையே யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து குடியரசு தினவிழா அணிவகுப்பின் அலங்கார வண்டிகளில், ஜெயாவின் திருவுருவப்படங்கள் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல, கவர்னரும், தலைமைச் செயலரும், போலீசு டி.ஜி.பி.யும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு விரைப்பாக நின்று சல்யூட் அடிப்பதைக் காண்கிறோம். பிணையில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக சவுதாலாவின் பிணையை ரத்து செய்து சிறைக்கு அனுப்பியது டெல்லி உயர்நீதி மன்றம். உச்ச நீதிமன்ற, மிச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பார்வையில் இவையெல்லாம் படவில்லை போலும்! இதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சியாம்!

மன்மோகன் சிங் அரசாங்கத்தை சோனியா காந்திதான் கீ கொடுத்து இயக்கி வருகிறார் என்றும்; சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்த தேசிய ஆலோசனைக் குழுவை சமையலறை அமைச்சரவை என்றும் நக்கலடித்தும் விமர்சித்தும் பேசி வந்த தேசியப் பத்திரிகைகள் தமிழகத்தில் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி பினாமி ஆட்சி நடத்திவருவது குறித்தும், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் – என இங்கும் ஒரு சூப்பர் அமைச்சரவை இயங்கி வருவது குறித்தும் ஒரு வார்த்தையும் பேசாமல், கல்லுளிமங்கனாய் நடந்து கொள்கின்றன. பா.ஜ.க.வோ இன்னும் ஒருபடி மேலே போய், “அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நோக்கில்தான் ஜெயா-ஜெட்லி சந்திப்பு நடந்ததாக’’க் கூறியிருப்பதன் மூலம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமான ஜெயாவை, சட்டபூர்வமாகவே அங்கீகரித்து விட்டது.

பார்ப்பான் கொலை செய்தால் சிகைச்சேதம்; சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் – என சாதிக்கொரு நீதி பேசுவதுதான் மனுநீதி. இந்த ஒருதலைபட்சமான பார்ப்பன நீதியைத்தான் ஜெயா என்ற கிரிமினல் விசயத்தில் பா.ஜ.க முதல் நீதிமன்றங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். மனுநீதிதான் சட்டம் என்று அமலாகிறது. காலம் கனியும்போது வெளிப்படையாகவே அறிவிப்பார்கள்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2015

கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்

1

1998-ம் ஆண்டு நவம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கல்வி காவிமயமாகும் அபாயத்தைப் பற்றிய கட்டுரை, இன்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி அரசு மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் காலத்தில் இன்னும் பொருத்தமாகிறது. கல்வியில் காவிமயம் எப்படி நடக்கிறது, அதை தடுத்து நிறுத்துவது எப்படி, சனநாயகபூர்வமான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை சுருக்கமாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

ரசு அதிகாரத்தின் மூலம், தனது இந்துத்துவ நோக்கங்களுக்கு ஏற்ப இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு, இந்துமதவெறியர்கள் செய்துவரும் சதிகள் அனைத்தும் நாடெங்கிலும் அம்பலப்பட்டுப் போய்விட்டன. தில்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பா.ஜ.க வின் கூட்டணிக்கட்சிகளான அகாலிதளம், தெலுங்கு தேசம் உள்ளிட்டு பிற எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு; கல்வியாளர்கள், முற்போக்கு சனநாயக சக்திகள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு இவை காரணமாக, இந்து மதவெறியர்கள், கல்வியைப் பார்ப்பன- இந்து மதமயமாக்கும் தங்களது முயற்சியில் தற்காலிகமாகப் பின் வாங்கியுள்ளனர்.

ஸ்மிரிதி இரானி - கல்வி காவிமயமாதல்
அரைகுறையாகக் கிடக்கும் இந்தியக் கல்வி முறையை, முழுமையாகப் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும், முழுமையாக மக்கள் விரோத அடிப்படைகளைக் கொண்டதாகவும் மாற்றியமைப்பதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டு, இன்று வரை நடைமுறையில் இருந்துவரும் இந்தியக் கல்வி முறையும்கூட, முழுமையாக  விஞ்ஞானப் பூர்வமானதோ, முழுமையாக சனநாயகப் பூர்வமானதோ அன்று; இந்து மத மூட நம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனம் போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களும் நிறைந்தது தான்; ஆங்கில மோகம், ஏகாதிபத்திய அடிமைத்தனம் போன்ற மக்கள் விரோத, நாட்டு நலனுக்கு எதிரான சிந்தனைகளை மாணவர்களிடம் விதைக்கக் கூடியதுதான்; இப்படி அரைகுறையாகக் கிடக்கும் இந்தியக் கல்வி முறையை, முழுமையாகப் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும், முழுமையாக மக்கள் விரோத அடிப்படைகளைக் கொண்டதாகவும் மாற்றியமைப்பதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இதற்காகவே, இந்துமதவெறியர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்.எஸ்.எஸ் சார்பான கல்வியாளர்கள், இராமகிருஷ்ணா மடம், சின்மயா மடம் போன்ற மடத் தலைவர்களைக் கூட்டி, கல்வி மாநாடொன்றை நடத்தி, இந்தியக் கல்வி முறையை இந்துமதமயமாக்கும் திட்டமொன்றை தயாரித்தனர்; இந்தியக் கல்வியை, “இந்திய மயப்படுத்துவது, தேசிய மயப்படுத்துவது, ஆன்மீக மயப்படுத்துவது” என்ற பெயரில், அத்திட்டத்தை நாடெங்கும் சுற்றுக்கும் விட்டனர். தில்லியில் நடந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், இத்திட்டத்தை அதிகாரபூர்வமற்ற முறையில் விவாதிக்கவும் முயற்சி செய்தனர்.

  • நமது நாட்டின் உச்சநீதி மன்றம், “இந்துத்துவா என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை” என வரையறுத்துள்ளது. எனவே, இந்தியாவின் விலை மதிப்பற்ற மரபுச் செல்வங்களான வேதங்களையும், உபநிடதங்களையும், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும், தொழிற் சார்ந்த பயிற்சிக் கல்வியிலும் பாடமாக வைக்க வேண்டும்.
  • மூன்றாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு முடிய சமஸ்கிருதத்தை கட்டாய மொழிப் பாடமாக்க வேண்டும். ஏனென்றால், சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், தேசத்தின் கலாச்சார ஜக்கியத்திற்கும், பழமையான அறிவுச்செல்வத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
  • இந்தியாவின் நான்கு திசைகளிலும் சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.
  • பாடத் திட்டத்தில், இந்தியக் கலாச்சாரம் குறிப்பிட்ட அளவிற்கு புகுத்தப்பட வேண்டும்.
  • ஆரம்பக் கல்வி முடிந்த பிறகு, மாணவிகளுக்கு வீட்டை நிர்வகிப்பது குறித்துப் போதிக்க வேண்டும்.

இவையெல்லாம் இந்தியக் கல்வி முறையை மாற்றியமைக்க, பா.ஜ.க அரசு வகுத்துள்ள வழிமுறைகள். இந்தியாவின் செல்வ உற்பத்தி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை உருவாக்கியதில் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களின், அவர்களது மொழிகளின் வரலாற்றுப் பாத்திரத்தையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, பல்வேறு மதங்களின் பங்கையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, இந்தியாவெங்கும் வருண- சாதி ஒடுக்குமுறையை நிறுவனமாக்கிய, சூத்திர – தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பாலான உழைக்கும் மக்கள் கல்வியறிவு பெறுவதை மறுக்கும் ஆரிய பார்ப்பனர்களின் வேதங்களையும், உபநிடதங்களையும், சமஸ்கிருதத்தையும் பயிலச் சொல்வது நாட்டை மீண்டும் அந்த இருண்ட காலத்திற்குள் தள்ளிவிடும் முயற்சிதானே? இதுவா இந்திய மயமாக்கம்? இல்லை. இது பார்ப்பனமயமாக்கம்!

ஆர்.எஸ்.எஸ் - கல்வி காவிமயம்
விஞ்ஞானத்திற்குப் பக்கத்தில், பார்ப்பன புளுகு மூட்டைகளையும், மூட நம்பிக்கைகளையும் பயில்வது எத்தகைய மூடத்தனம்

விஞ்ஞானத்திற்குப் பக்கத்தில், பார்ப்பன புளுகு மூட்டைகளையும், மூட நம்பிக்கைகளையும் பயில்வது எத்தகைய மூடத்தனம் என்று சிந்தித்துப் பாருங்கள்? சமத்துவம், சம உரிமைக்காக இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, சாதிய ஒடுக்குமுறை சரியானதுதான் எனக் கூறும் பார்ப்பனர்களின் வேதங்களைப் படிப்பது அருவெறுக்கத் தக்கதாகாதா? “சமஸ்கிருதம்தான் தேவ பாஷை” என்று பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரை, இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கையைக் கட்டிக் கொண்டு படிப்பதற்கு, நாமென்ன சூடு- சொரணை அற்றவர்களா? தாய்மொழிப் பற்று இல்லாதவர்களா?

கல்வி, மாநிலங்களுக்கும் உரிமையுள்ள பொதுப்பட்டியலில் இருப்பதால் தான், இந்துமதவெறியர்கள், அவர்களின் திட்டப்படி, இந்தியாவெங்குமே கல்வி கொள்கையில், பாடத் திட்டங்களில் ஒரே மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. ஆனாலும், கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் வாய்ப்பையே பயன்படுத்திக் கொண்டு, இந்து மதவெறியர்கள் தாங்கள் ஆளும் மாநிலங்களில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அம்மாநில பாடத் திட்டங்களில் இந்துமத ஆதிக்கக் கருத்துக்களைப் புகுத்தவும் தவறுவதில்லை.

1991-ம் ஆண்டில், உ.பி. மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தை இந்துமதவெறியர்கள் முதன் முறையாகப் பிடித்தபொழுதே அம்மாநிலக் கல்விக் கூடங்களைப் பார்ப்பன மயமாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர். பாபர் மசூதியை இடிப்பதற்காக, இந்துமதவெறியர்கள் நடத்திய ராம ஜென்ம பூமி இயக்கத்தின் பொழுது, உ.பி. போலிசு நடத்திய தாக்குதலில் இறந்து போனதாக இரண்டு கரசேவகர்கள் படத்தைப்போட்டு, ‘தேசிய’ நாயகன் ராமனுக்காக உயிரைக் கொடுத்த இவர்கள்தான் தேசபக்தர்கள் எனப் பள்ளிப் பாடங்களின் மூலம், முசுலீம் எதிர்ப்பு தான் தேசபக்தி என்ற விஷத்தை மாணவர்கள் மனத்தில் விதைத்தார், கல்யாண்சிங்.

கணிதப் பாடத்தில் வேதக்கணக்குகளைப் புகுத்திய கல்யாண் சிங், இந்த முறை மூன்றாம் வகுப்பு தொடங்கி சமஸ்கிருத மொழியைக் கட்டாயப் பாடமாக்கியுள்ளார். வகுப்பறையில், “உள்ளேன் ஐயா” எனக் கூறுவதற்குப் பதிலாக “வந்தே மாதரம்” எனக் கூற வேண்டும்; ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சரசுவதி வாழ்த்துப்பாட வேண்டும். மதிய உணவுக்கு முன் போஜன மந்திரங்களைக் கூற வேண்டும் என இந்தப் பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

முரளி மனோகர் ஜோஷி - கல்வி காவிமயம்
அப்போதைய மனிவளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி – வரலாற்றை மாற்றி எழுதுகிறார்.

இராசஸ்தானிலோ, இன்னும் ஒரு படிமேலே போய், வெளிப்படையாகவே இந்துமதவெறியை மாணவர்களின் மனத்தில் விதைப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ் , தலைவர்கள் எழுதிய கட்டுரைகளையும், கவிதைகளையும் பாடங்களாகப் புகுத்தியுள்ளனர்.

  • ஒன்பதாம் வகுப்பிற்கான இந்தி மொழி பாடத் திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங், “பழைமை வாய்ந்த இந்திய விஞ்ஞானம் – இந்திய விஞ்ஞானி” களைப் பற்றியும், ஆர்.எஸ்.எஸ். இன் துணைத் தலைவர் கே.சி. சுதர்சன், “மரபு சார்ந்த இந்திய அறிவு” பற்றியும் எழுதியுள்ளனர்.
  • பதினோராம் வகுப்பிற்கான”அரசியல் சிந்தனை” பாடத் திட்டத்தில் பா.ஜ.க வின் முன்னாள் அவதாரமான ஜன சங்கத்தைத் தோற்றுவித்த தீன் தயாள் உபாத்யாய் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
  • ஆர்.எஸ்.எஸ். இன் அரசியல் ஏடான பஞ்சஜன்யா ஆசிரியர் தருண் விஜய், சுதேசி ஜாக்ரான் மஞ்ச்- ஜச் சேர்ந்த ஜலம் சிங் ராலட் எழுதிய கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.ஜச் சேர்ந்த கஜேந்திர சிங் சோலங்கி எழுதிய கவிதை – இவையனைத்தும் இராசஸ்தான் மாநில பள்ளி பாடப் புத்தகங்களில் புகுத்தப்பட்டுள்ளன.
  • பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பாட நூலில், ராஜபுதன சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களை, ஜாட் சாதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்த்துப் போராடியதைக் கூறும் பாடம், பா.ஜ.க. வின் இந்து ஒற்றுமை மோசடித்தனத்தை அம்பலப்படுத்துவதால், அப்பாடத்தை நீக்கிவிட்டனர்.
  • இராசஸ்தான் மாநிலப் பள்ளிக் கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த கோமேஷ்வர் தயாள் மாதூர்; அம்மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கான பாடத் திட்டங்களை வகுக்கும் அரசு அமைப்பின் தலைவராக இருக்கும் மதுகர் ஷியாம் சதுர்வேதி ஆர்.எஸ்.எஸ் க்கு மிகவும் நெருக்கமானவர்.
  • தில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் க்கு நெருக்கமான 200 பேர் விரிவுரையாளர்களாகவும் 7 பேர் கல்லூரி முதல்வர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தில்லியிலுள்ள சிவாஜி கல்லூரி, மோதிலால் நேரு கல்லூரி, தீன்தயாள் உபாத்யாய் கல்லூரி, சத்யவதி ஆண், பெண் கல்லூரி, உள்ளிட்ட எட்டு கல்லூரிகளில் பா.ஜ.க சார்பு முதல்வர்களை நியமிக்கவும் பா.ஜ.க.அரசு முயன்று கொண்டுள்ளது.

கல்வித் துறையில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், லலித்கலா அகாடமி, நவீன ஓவிய தேசியக் கூடம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம் போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். ஐச் சேர்ந்த இந்துமதவெறியர்கள், சட்டம் –மரபுகளை மீறி, தலைவர்களாக உறுப்பினர்களாக பா.ஜ.க அரசால் நியமிக்கப்படுகின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகளின் இந்த ஊடுருவலை எதிர்த்தால், “காங்கிரசு கட்சி இதுபோல் செய்யவில்லையா? கம்யூனிஸ்டு அனுதாபிகள் அரசுப் பதவிகளில் உட்காரவில்லையா? அது போல்தான் எங்கள் கட்சிக்காரர்களை நியமிக்கிறோம்” என நியாயப்படுத்தி விடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்
அரசு பதவிகளில் உட்காரும் இந்துமதவெறியர்கள், மற்ற கட்சிக்காரர்களைப் போல, இப்பதவிகளின் மூலம் கிடைக்கும் வசதி – வாய்ப்புகளைப் பொறுக்கித் தின்று விடுவதோடு மட்டும் நின்றுவிடமாட்டார்கள்.

இவை போன்ற அரசு பதவிகளில் உட்காரும் இந்துமதவெறியர்கள், மற்ற கட்சிக்காரர்களைப் போல, இப்பதவிகளின் மூலம் கிடைக்கும் வசதி – வாய்ப்புகளைப் பொறுக்கித் தின்று விடுவதோடு மட்டும் நின்றுவிடமாட்டார்கள்.

“புகழ்மிக்க பண்டைய பாரதத்தின் நாகரீகம் பண்பாட்டின் பிதா மகன்கள் ஆரியர்கள் – பார்ப்பனர்கள்; ஓங்கி வளர்ந்திருந்த பாரதம், மதவெறி பிடித்த கொலைகாரர்களான இசுலாமியர்களின் ஆக்கிரமிப்பினால் வீழ்ச்சியைச் சந்தித்தது; இந்திய தேசத்துக்கு எதிரிகள் ஏகாதிபத்திய காலனியவாதிகள் அல்ல; முசுலீம்கள்தான்” எனக் கல்வி தொடங்கி வரலாறு முடிய அனைத்தையும், தங்களின் இந்து ராஷ்டிரக் கனவிற்காக திரித்து எழுதுவார்கள்.

இப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்ட கல்வியைக் கற்று வரும் ஒர் இந்து மாணவன், இந்த நாட்டின் முசுலீம் மக்களைப் பற்றி என்ன நினைப்பான்? அண்டை நாடான பாகிஸ்தானைப் பற்றி என்ன கருதுவான்? அவன் எந்தக் கட்சியினுடைய ஓட்டு வங்கியாக இருப்பான்?

கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்க் கட்சிகள் காட்டிய சடங்குத்தனமான எதிர்ப்பையடுத்து, பா.ஜ.க. பின் வாங்கிக் கொண்டதை நாம் முழு வெற்றியாகக் கருத முடியாது. பா.ஜ.க தனது இந்துத்துவக் கல்வித் திட்டத்தை நாடு முழுவதும் திணிப்பதற்கு மீண்டும் முயலும் என்பது ஒருபுறமிருக்க, கல்வியைத் தனியார் மயமாக்கியிருப்பதன் மூலம் புற்றீசல் போல் முளைத்திருக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கேந்திரியா வித்யாலயாக்கள் மாநிலக் கல்வி – பாடத் திட்டத்தைப் பின்பற்றுவதில்லை. மாறாக, இவையனைத்துமே மைய பாடத் திட்டத்தை (CBSE)தான் பின்பற்றுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க, தான் ஆளாத மாநிலங்களில் கூட,புறக்கடை வழியாக இந்துத்துவக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரலாம். மாநிலங்களுக்கும் உரிமையுள்ள பொதுப் பட்டியலில் இருந்து, கல்வியை மையப் பட்டியலுக்கு மாற்றிக் கொள்வதன் மூலமும் கூட, இந்துமதவெறியர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலலாம்.

மேலும், பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்,மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன. சுதந்திரமான, சனநாயகப் பூர்வமான,விஞ்ஞான பூர்வமான கல்வியை விரும்பும் எவரும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இரண்டு வகையான மக்கள் விரோத, நாட்டின் நலனுக்கு எதிரான கல்வித் திட்டம் –கொள்கைகளுக்கு மாற்றாக, இந்திய நாட்டின் மாணவர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியிலேயே ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை பெறுவதை உத்தரவாதப்படுத்தும், கல்வியுடன் வேலை வாய்ப்பை இணைக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஜனநாயகக் கல்விக்காகப் போராட முன் வருவதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வாகும்.

– புதிய ஜனநாயகம், நவம்பர் 98

வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை

2

டலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் 5-2-15 அன்று மாலை 6-00 மணிக்கு, முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி “வெள்ளாற்றை சிதைக்கும் மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

காவாலகுடி, சாந்தி நகர் மற்றும் கூடலையாத்தூர், கானூர், பெரிய நற்குணம், குமாரகுடி, வீரமுடையாநத்தம், முகந்தரியான் குப்பம், அகர ஆலம்பாடி, பேரூர், பு.ஆதனூர், அள்ளுர், மழவராய நல்லூர், சேத்தியாதோப்பு, மருங்கூர், பவழங்குடி, சி.கீரனூர், கார்மாங்குடி, நேமம், ஆத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, சன்னாசிநல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வெள்ளாற்றுப்பாகாப்பு இயக்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டமும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

stage-1

கூட்ட ஏற்பாடுகளை காவாலகுடி மற்றும் சாந்தி நகர் மக்கள் கிராமத்தில் வசூல் செய்து நடத்தினர். பல கிராமங்களில் தோழர்கள் கலைக்குழுவுடன் மக்களுடன் தங்கி, அவர்கள் கொடுத்த உணவை அருந்தி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் என புதிய ஜனநாயகம் இதழ், வெள்ளாற்று போராட்ட குறுந்தகடு ஆகியவைகளை விற்பனை செய்தும், பிரசுரம் கொடுத்தும், பாடல்கள் மூலமாகவும் அணிதிரட்டினர். “நெல், கரும்பு அறுவடை நேரமாக இருக்கிறது. கிராமமே பரபரப்பாக இருப்பதால் பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்ள முடியவில்லை” என்ற வருத்தம் மக்களுக்கு இருந்தது.

“எதையும் எதிர்பாராமல் தோழர்களும் வழக்கறிஞர்களும் நம்மிடையே நமது வெள்ளாற்றை காக்க மணல் கொள்ளைக்கு எதிராக வந்து அழைக்கிறார்களே: என்பதை ஆச்சர்யத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்றனர். அனைத்துக் கட்சி தொண்டர்களும் கிராம மக்களாக தாமும் பாதிக்கப்படும் மக்களாக உணர்ந்து நம்மிடம் பேசினர்.

சேத்தியாதோப்பு காவல் துறை தெருமுனை பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்ததால் மெகா போன் பிரச்சாரம் செய்தோம். பொதுக்கூட்டத்திற்கும் முதல் நாள்தான் அனுமதி வழங்கியது. “கலைக்குழு பாட அனுமதி கிடையாது” என நிபந்தனையும் விதித்தது. “புதிய டி.எஸ்.பி. குத்தாலலிங்கம் ரொம்ப கண்டிப்பானவர்” என காவல்துறையினர் சொல்லி நழுவிக் கொண்டனர்.

கூட்டம் நடைபெறும் போது “டி.எஸ்.பி. முடிக்கச் சொன்னார்” என புது துணை ஆய்வாளர் சொன்னார். நமது வழக்கறிஞர்கள் “முடியாது என போய் சொல்லுங்கள்” என பதில் அளித்தனர். கீழ்நிலை காவல் துறையினர் செய்வது அறியாது அவர்களும் கூட்டத்தை கேட்டனர்.

பொதுக்கூட்டத்தில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பலர் பேசினர். மக்களின் முழுமையான பங்களிப்பாக அனைத்து விதத்திலும் இருந்தது.

சிறுதொன்ட நாயனார் தே. பவழங்குடி

சிறுதொண்ட நாயனார்
சிறுதொண்ட நாயனார்

1947-க்கு முன் நாம் வெள்ளையர்களோடு போராடினோம். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி படத்தை ரூபாய் நோட்டில் போட்டுள்ளோம். அந்த பணத்திற்காக பல்வேறு இயற்கையை கொள்ளையடிக்கிறார்கள்.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் இருப்பீர்கள். இதில் எத்தனை பேர் ஆற்றை சென்று பார்த்திருப்பீர்கள். ஆறு என்றால் கடவுள் மாதிரி, சோறு போடும் தாய். இந்த மணலை சேமிக்க எத்தனை தலைமுறைகளாகும்.

தனித்தனியாக போராடினால் ஒன்றும் செய்ய முடியாது. கார்மாங்குடி குவாரியை மூட நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்திருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் செய்ய முடியவில்லை. காரணம் மக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அது போல் இங்கு நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும்.

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்
வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்

2013 முதல் மணல் குவாரியை மூடக்கோரி பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்று கூறி மணல் கொள்ளையை தடுக்கச் சொல்லி கேட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராடுவதை தவிர வேறு வழியில்லை.

குஞ்சித பாதம், போரூர்

குஞ்சித பாதம், போரூர்
குஞ்சித பாதம், போரூர்

மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் பல முறை சொல்லியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. கார்மாங்குடியில் ஆற்றில் புல் முளைத்து குடிக்க தண்ணீர் இல்லாமல் காசு கொடுத்து வாங்கும் நிலை வந்து விட்டது. விவசாயத்தை சாகடிக்கிறார்கள். 150 – 200 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. ஆட்சியாளர்கள் நல்லது செய்யவில்லையென்றாலும் மக்களுக்கு தீமை செய்யாமல் இருந்தால் அதுவே மக்களுக்கு நன்மை தரும். மணல் கொள்ளை நீடித்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

முருகானந்தம் பு.மா..மு

முருகானந்தம் பு.மா.இ.மு
முருகானந்தம் பு.மா.இ.மு

பு.மா.இ.மு அமைப்பின் சார்பில் கல்வி உரிமைக்காகவும் குறிப்பாக அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம்.

மணல் அள்ளக் கூடாது என்றால் வீடு எப்படி கட்டுவது என்று கேட்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வீடு கட்டுகிறோம். ஆற்றில் மணல் கொள்ளை வந்த பிறகுதான் பிரச்சனைகளை மக்கள் சந்திக்கிறார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்டால் மணல் மாஃபியாக்கள் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள். கார்மாங்குடியில் 3 அடிதான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் 35 அடி வரை மணல் சூறையாடிருக்கிறார்கள். மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமானால் ஆற்றிலிருக்கும் லாரி JCP முதல் அதை ஆதரிக்கும் ரவுடிகள் வரை அனைவரையும் அடித்து விரட்டினால் தான் நாம் உயிர் வாழ முடியும்.

செல்வக்குமார், ..பா.மை.

செல்வக்குமார், ம.உ.பா.மை.
செல்வக்குமார், ம.உ.பா.மை.

இந்த பொதுக் கூட்டம் நாம் தேர்தலை சந்திக்கவோ, அல்லது வேறு ஆதாயத்துக்காவோ நடத்தவில்லை. இயற்கையை அழிக்க நினைக்கும் மணல் கொள்ளையர்களை விரட்டவே நாம் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால் உடனடியாக மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். மணல் எடுத்தால் நீர்மட்டம் குறையும், விவசாயமும் பாதிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா. ஆனாலும் அரசாங்கம் மணல் கொள்ளையை தடுக்க நினைப்பவர்களை காவல்துறையை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது.

இயற்கையை அழித்து மக்களி்ன் வாழ்வாதாரத்தை அழிப்பது எந்த வகையில் சரியாகும். சாதி பிரச்சனையை உருவாக்கி மக்களை பிரிக்கிறார்கள். காவல் துறையும் அரசு அதிகாரிகளுக்கும் தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறார்கள். சாதிகளை கடந்து பெரியார் வழியில் ஒன்று பட்டு மணல் கொள்ளையர்களை விரட்டுவோம்.

ராஜ வன்னியர், சி.கீரனூர்

ராஜ வன்னியர், சி.கீரனூர்
ராஜ வன்னியர், சி.கீரனூர்

வெள்ளாறில் சுமார் 10 ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. நியாயமாக நடப்பவர்களை காவல் துறை மிரட்டி அச்சுறுத்துகிறது. ஆறு பொது மக்கள் சொத்தா அல்லது மணல் மாபியாக்களின் சொத்தா, மீண்டும் மணல் எடுத்தால் மணல் எடுக்கும் எந்திரத்தையும் மணல் எடுப்பவர்களின் வாகனங்களையும் மக்கள் தீ வைத்து கொளுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

அறிவரசன், கார்மாங்குடி

அறிவரசன், கார்மாங்குடி
அறிவரசன், கார்மாங்குடி

2014 முதல் மணல் கொள்ளைக்கெதிராக போராடினேன். முதலில் ஹீரோத்தனத்துக்கு ஆசைப்பட்டு செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அதில் இறங்கிய பிறகுதான் மணல் கொள்ளை என்பது எப்படி தேச விரோத செயல் என்று புரிய ஆரம்பித்தது.

ராஜு சார் தொடர்பு கிடைத்த பிறகு தான் எங்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. இந்த போராட்டத்தில் வெற்றி கிடைத்தது.

இன்று நான் வரும்போது பார்த்தேன் பொதுக் கூட்டத்துக்கு வரும் கிராம மக்களை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்கிறது. நியாயத்திற்கு போராடும் மக்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி வருகிறார்கள். ஆனால் தீவிரவாதி என்று சொல்கிறவர்கள் அனைவரும் நல்லவர்களே,கெட்டவர்கள் இல்லை என்பதை காவல் துறை என்னை அச்சுறுத்தியதிலிருந்து புரிந்து கெண்டேன்.

சுப்பிரமணியன், நேமம்.

சுப்பிரமணியன், நேமம்.
சுப்பிரமணியன், நேமம்.

கார்மாங்குடி மணல் குவாரியை போராடிதான் நிறுத்தினோம், நமக்கு மனித உரிமை பாது காப்பு மையத்தினர் இருக்கிறார்கள். கலைக்குழு தோழர்கள் எங்கள் ஊருக்கு வந்து பாட்டு பாடி உணர்வுட்டியதால் அதிக மக்கள் ஆற்றில் திரண்டு போராடினார்கள். மணல் கொள்ளை எங்கு நடந்தாலும் நாம் அங்கு சென்று போராட வேண்டும். அத்தகைய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.

கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.
கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.

வெள்ளாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நாங்கள் 3 மாதமாக போராடி வருகிறோம். அரசு அதிகாரிகள் அனைவருக்கும் 3 முறை மனு அளித்தோம். ஆற்றிற்கு சென்று போராடினோம்.

ஆற்றில் JCB வைத்து மணல் அள்ளக் கூடாது என்பது விதி ஆனால் ஆற்றில் இயந்திரம் மூலம் மணல் அள்ளுகிறார்கள். முன்னணியாளர்கள் 7 பேரை வரச்சொன்னார்கள். நாங்களும் மகிழ்ச்சியாக சென்றோம். DSP ”நாளை முதல் மணல் அள்ள போகிறோம், தடுத்தால் அனைவரையும் கைது செய்வோம்” என தெரிவித்தார். அதற்கு, “நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்” என்று சொன்னோம்.

ஆற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்போது மணல் அள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம்.

A.P.சிவக்குமார், மு ...தலைவர், காவாலகுடி

A.P.சிவக்குமார், மு .ஊ.ம.தலைவர், காவாலகுடி
A.P.சிவக்குமார், மு .ஊ.ம.தலைவர், காவாலகுடி

10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை பற்றி நம்மாழ்வார் சொல்லியதை நாம் காது கொடுத்து கேட்காமல் கேலி பேசினோம். இப்போது உணர்கிறோம். அது போல் இன்றும் வழக்கறிஞர் ராஜு சொன்னதை கேட்காமல் போனால் 10 ஆண்டுகள் கழித்து நாம் வருத்தப் பட நேரிடும். அதனால் இப்போதே விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ஆசை தம்பி, கூடலையாத்தூர்.
ஆசை தம்பி, கூடலையாத்தூர்.

எட்டிப் பார்த்தால் நாம் மயக்கமடைந்து விடும் அளவுக்கு ஆழமாக மணல் அள்ளுகிறார்கள். அரிசி வேண்டாம் என்று சொல்லுங்கள், நாங்கள் போராட்டத்தை விட்டு விடுகிறோம்.

இப்படிப்பட்டத் தோழர்களை நீங்கள் பார்த்ததுண்டா அவர்கள் நமக்காக வந்த போராடுகிறார்கள். வீடு வீடாக வந்து பிரச்சாரம் செய்து நமக்கு நல்லது சொல்கிறார்கள். எனக்கு 13 வயது வரை ஆர்டீசியன் ஊற்றிலிருந்து தண்ணீர் வரும். கையால் அள்ளி குடித்திருக்கிறேன். ஆனால் இன்று 350 அடி போனால் தான் தண்ணீர் வருகிறது. பக்கத்தில் NLC யால் நீர் மட்டம் குறைகிறது. காவல் துறையில் உள்ள நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து போராட முன் வர வேண்டும்.

பன்னீர் செல்வம், கார்மாங்குடி.

பன்னீர் செல்வம், கார்மாங்குடி.
பன்னீர் செல்வம், கார்மாங்குடி.

எங்கள் ஊர் செழிப்பான கிராமம், எங்கள் ஆற்றில் மணல் அள்ளிய பிறகு ஊர் பல முறை பிரச்சனைகளை சந்தித்துள்ளோம்.

எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் விவசாய சங்க தலைவராகவும் உள்ளார். 118 பேரிடம் கையொப்பம் வாங்கி ஊராட்சி மன்ற தலைவர் மணல் குவாரி செயல் பட அனுமதித்தார். முன்பெல்லாம் போலீசை கண்டால் பயம் வரும். 60 அடியிலிருந்து 130-க்கும் கீழ் நீர் மட்டம் இறங்கி விட்டது. நீர் பழுப்பு நிறமாக மாறிவிட்டது. நாங்கள் போராடுவது எங்களுக்காக மட்டுமல்ல, காவல் துறை, அரசு அதிகாரிகளுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம்.

திருப்பால், மழவராய நல்லூர்.

திருப்பால், மழவராய நல்லூர்.
திருப்பால், மழவராய நல்லூர்.

சேத்தியா தோப்பு பகுதிக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. இது போல் கட்டுப்பாடான அரசியல் கூட்டம் இது வரை நடந்ததில்லை.காவல் துறை வழக்குகளுக்கு அஞ்சாத பாரம்பரியம் மிக்க ஊர். நம்ம ஊருக்கு வந்து வீடு வீடாக நோட்டீசு கொடுத்து தோழர்கள் அழைத்த்து மிக நெகிழ்வான ஒன்று. நாம் போராடாமல், தியாகம் செய்யாமல் வெள்ளாற்றை பாதுகாக்க முடியாது.

K.P.C. ரவிந்திரன், காவால குடி.
K.P.C. ரவிந்திரன், காவால குடி.

“இன்னும் 2 மாதம் மணல் அள்ளி விட்டுதான் நாங்கள் செல்வோம்” என்று சொல்கிறார்கள். “இங்கிருந்து சென்றுவிட்டால் தமிழ் நாட்டில் நாங்கள் எங்கும் மணல் எடுக்க முடியாது. அது எங்கள் மானப்பிரச்சினை. அதனால் மணல் எடுத்து விட்டுதான் செல்வோம்” என்று சொல்கிறார். இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள், மக்கள் அனைவரும் போராடாமல் நமது விவசாயத்தை பாதுகாக்க முடியாது.

M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.

M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.
M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.

கார்மாங்குடி குவாரி மணல் கொள்ளையை நிறுத்த முடியாது என்று சொன்னார்கள், நிறுத்தி காட்டினோம்.

நாம் போராடும் போது மற்ற அரசியல் கட்சிகள் ஏன் நம்முடன் இணைந்து போராட வரவில்லை அனைவரும் அயோக்கியர்கள்.

மணல் கொள்ளையர்கள் 1 கோடி தருகிறோம் என்றார்கள், மிரட்டுகிறார்கள்.  யாரோ திருட்டுப்பய போன்ல பேசுறான்.எத பத்தியும் கவல படக்கூடாது. JCB ஆற்றில் இறங்கினால் நாமும் ஆற்றில் இறங்கி போராட வேண்டும்.

இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி

இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி
இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி

எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆற்றை இப்போது அழித்து வருகிறார்கள். ஆறு என்பது மனித குலத்திற்கு கிடைத்த கொடை. அந்த ஆற்றை இப்போது சீரழித்து வருகிறார்கள். 200 கி.மீட்டருக்கும் மேலாக இந்த வெள்ளாறு பயனளிக்கிறது. இந்த பகுதியை செழிப்பாக்கியிருக்கிறது. நாகரீகம் தோன்றியது ஆற்றங்கரையில்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இப்போது இந்த ஆற்றுக்கு சோதனை ஏற்பட்டிருக்கிறது. ஆற்றின் இரு கரையோர கிராம மக்களும் பயனடைகிறார்கள், ஆற்று உரிமையர்கள் நாம் தான். ஆற்று மணல் கொள்ளையை தடுப்பது நமது கடமை, அது நமது உரிமை. ம.உ.பா.மையம் இல்லாமல் நாம் வெற்றி பெற முடியாது, அவர்கள் ஒருங்கிணைப்பால் நாம் வெற்றி பெற முடியும்.

வழக்கறிஞர் செந்தில் குமார், மா..செ., ..பா.மையம், கடலூர்

வழக்கறிஞர் செந்தில் குமார், மா.இ.செ., ம.உ.பா.மையம், கடலூர்
வழக்கறிஞர் செந்தில் குமார், மா.இ.செ., ம.உ.பா.மையம், கடலூர்

கார்மாங்குடியிலிருந்து காவாலக்குடி வரை மணல் குவாரியை மூட அரசு உத்தரவிட வேண்டும். மக்கள் யாராவது போராட முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நாட்டை தனியாருக்கு விற்பவன் அரசியல் வாதி. தடுக்க நினைப்பவன் தீவிர வாதி. அநீதியை எதிர்த்து போராடினால் தீவிரவாதி என்கிறார்கள். ஜின்டால் கம்பெனிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி வேடியப்பன் மலையை விற்று விட்டார்கள்.

நெய் வாசல் மணல் குவாரியை மூட சொல்லி போராடிய மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி அச்சுறுத்த நினைக்கிறது. தமிழ்நாட்டில் எங்கு மணல் குவாரியை திறந்தாலும் மக்கள் போராட முன் வர வேண்டும். போராட்டமே தீர்வு.

செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி

செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி
செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி

முடிகண்ட நல்லுார் மணல் குவாரியை மூடி விட்டால் போராட்டம் தேவையில்லை. கடந்த 10 மாதங்களில் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி விட்டனர். ஹிட்டாட்சி வைத்து மணல் எடுக்கிறார்கள். எந்திரம் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனால் எந்த விதிமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றாமல், போராடும் எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்க திருடினோமா? கொள்ளையடித்தோமா? எதற்காக நாங்கள் அஞ்சவேண்டும்?.

தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி

தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி
தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி

காவல் துறை நீண்ட நேரம் நம்மை படம் எடுக்கிறார். இந்த பொறுப்புணர்வை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதை படம் எடுத்தால் நல்லாயிருக்கும்.

மணல் கொள்ளையர்கள் ஆற்றை சிதைக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 2000, 3000 லோடு வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எங்கும் எந்திரம் வைத்து மணல் அள்ள தடை உள்ளது.

பொன் விளையும் பூமி பொட்டல் காடாக காராணம் அரசு அதிகாரிகள். VAO முதல் கலெக்டர் வரை அனைவரும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக உள்ளார்கள். 15 ஹிடாச்சிகளை பயன்படுத்தி பென்னையாற்றில் மணல் அள்ள அனுமதித்த கலெக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய் என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டினோம். என் மீது வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

தனியார் மயக்கொள்கை வந்த துவக்கத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி இறால் பண்ணைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது.பின்னாளில் மக்களே இறால் குட்டைகளை அழித்தார்கள். கல்வி முதல் நிதி, போக்குவரத்து வரை அனைத்து துறைகளிலும் அரசாங்கம் செயலிழந்துவிட்டது. மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ..பா.மையம்.

வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ம.உ.பா.மையம்.
வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ம.உ.பா.மையம்.

“இதே சேத்தியாதோப்பில் சில வருடங்களுக்கு முன்பு தில்லை நடராசர் ஆலயத்தின் தெற்கு வாயில் தீண்டாமைச்சுவரை அகற்ற கோரி பொதுக் கூட்டம் நடத்தினோம்” என்பதை நினைவு கூர்ந்து, “காவல் துறை அதிகாரிகள் மக்களை மிரட்டு வதை கைவிட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். போராடும் மக்கள் எங்களை அழைக்கிறார்கள்” என்பதை வலியுறுத்தி பேசி இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வாசித்தார்.

  1. கடலூர் மாவட்டம், வெள்ளாற்றில் நெய்வாசல், கார்மாங்குடி, முடிகண்ட நல்லூர் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் கொள்ளைக்கு துணைபோன பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
  2. மேற்படி குவாரிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவிசாய பம்ப்செட்டுகளும், குடிநீர் பம்ப்செட்டுகளும் நீர் இறைக்க முடியாமல் பழுதடைந்துள்ளது. புதிதாக போர் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பழுதடைந்த போர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட உத்திரவிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
  3. சட்டவிரோத மணல் கொள்ளையை தடுப்பதற்காக அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான பல துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு, கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறியதற்கு இக்கூட்டத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்கிறோம். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நிலத்தடி நீரை காக்க அனைத்து விதிமுறைகளும் பின்பற்றபடுவதை உத்திரவாதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
  4. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் நெய்வாசல் மணல் குவாரியில், அளவுக்கு அதிகமாகவும், 6 ஜே.சி.பி.எந்திரங்களை வைத்து மணல் அள்ளப்படுகிறது. இது சட்ட விரோதம். இத்தகையச் செயலுக்கு வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். மணல் குவாரியை மூடக்கோரி போராடிய சன்னியாசி நல்லூர், மற்றும் பல கிராம மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. போராடும் மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஜனநாயக முறையில் நேர்மையாக பேசி தீர்க்காமல் அவர்களை எதிரி போல் கருதி காவல் துறையை வைத்து அச்சுறுத்துவது நிரந்தர தீர்வாக அமையாது என்பதை தமிழக அரசுக்கு இக்கூட்டம் சுட்டிகாட்ட விரும்புகிறது.
  5. ஆயிரக்கணக்கான மணல் லாரிகளால் குண்டு குழியுமாக படு மோசமாக சேதமடைந்த அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
  6. தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடினால் தான் மணல் கொள்ளையை நிரந்தரமாக தடுக்க முடியும். எனவே பல இடங்களில் போராடும் மக்களை சந்தித்து அவர்களை கூட்டமைப்பாக இணைக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பும்,ஆதரவும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
  7. தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக பாதிக்கப்படும் விவசாயிகளோடு நீர் ஆதாரம் காக்க அனைத்து மக்களும் இணைந்து போராட வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் நாட்டு விடுதலைக்கான போராட்டம் என்பதை மனதில் நிறுத்தி எத்தகைய தியாகத்திற்கும் அஞ்சாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

வழக்கறிஞர்.சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.

com-rajuமுடிகண்ட நல்லுார் குவாரியில் அனைத்தும் சட்டப்படிதான் நடக்கிறது என சேத்தியாதோப்பு DSP சொல்கிறார். பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றிச்செல்வன் புகாரின் பேரில் போராடும் முன்னணியாளர்கள் 31 பேர் மற்றும் அடையாளம் தெரிந்த 100 ஆண்கள் 70 பெண்கள் ஆகியோருடன் சேர்த்து என்னையும் இணைத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

மாநில சுற்று சூழல் ஆணைய உத்திரவுப் படி உங்களுக்கான எல்லையை மீறி பல மடங்கு தூரம் மணல் அள்ளி வருகிறீர்கள். ஜி.பி.எஸ் அளவு படி 11 25’51 N to 11 26’01 வரைதான் அள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை அள்ளுகிறார்கள். மாட்டு வண்டியை மடக்கும் காவல்துறை மணல் லாரியை விடுகிறார்கள். இந்த குவாரியில் மட்டும் ஒரு நாளைக்கு 500 லோடு செல்கிறது. 37,593 யூனிட் தான் அள்ள வேண்டும். 1,25,000 யூனி்ட்டுக்கு மேல் அள்ளியுள்ளார்கள். எந்த முதலீடும் இல்லாமல் ஆற்றில் மணலை அள்ளி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். காவல் காக்க வேண்டிய காவல் துறை சாதி மோதலை துாண்டி விடுகிறது. இவர்தான் ராஜு வக்கீல் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

ஆற்றில் நீர் இல்லை என்றால் ஆறு செத்துவிடும். விவசாயம் நாசமாக போயிடும்.

அரசு அதிகாரிகளின் பணி என்ன?

  • மணல் அள்ளும் இடத்தை சிமெண்ட் கட்டை கட்டி சிகப்பு துணியால் அடையாளப்படுத்த வேண்டும்.
  • கரையிலிருந்து 50 மீட்டர் துாரம் மணல் அள்ள தடை உள்ளது. கரையையும் சேர்த்து அள்ளுகிறார்கள். கரை பலமாக இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
  • JCP பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் JCP வைத்து மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
  • 10 ஆண்டுகளாக மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால் எடுக்க கூடிய மணலுக்கு கணக்கு இ்ல்லை.
  • தாசில்தார் முதல் RDO வரை மணல் கொள்ளையைபறக்கும் படை போல் கண்காணிக்க வேண்டும் என அரசாணை உள்ளது.

com-raju-2

  • புகார் பதிவேடு ஆற்றங்கரையில் இருக்க வேண்டும். மாதம் இரு முறை கண்காணித்து அறிக்கை தர வேண்டும்.அதை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு பரீசிலித்து ஆற்று மணல் கொள்ளை போக வில்லை என்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும். இது அரசு பணி இல்லையா?

இதை நீங்கள் செய்ய தவறி மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். இதில் குற்றவாளி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான்.

200 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் பயணிக்கிறது வெள்ளாறு. வழி நெடிகிலும் பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும், கால்வாய்களுக்கும் வெள்ளாற்று நீர் பாசன வசதி தருகிறது. அதிகாரிகளாக இந்த ஆற்றை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று நம்பினோம். ஆனால் மணல் கொள்ளைக்காக ஆற்றையும் மக்களையும் அழிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் நாங்கள் செய்கிறோம். முடிந்தால் மக்களுக்கு நல்லது செய்யுங்கள், முடியவில்லை என்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

கார்மாங்குடியில் 8,247 லோடு இதுவரை அள்ளப்பட்டுள்ளது. இன்னும் 25,499 லோடு மணல் எடுக்க வேண்டியுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் 48,500 லோடுகள் அள்ளியதற்கான ஆதாரம் இருக்கிறது. பணம் எங்கே போனது?

மணல் கொள்ளையை தடுக்காமல் கோர்டுக்கு போக சொல்கிறார்கள். 9 மாதம் மணல் அள்ளிவிட்டு 10 வது மாதம் கலக்டர் எந்திரம் வைத்து மணல் அள்ளுங்கள் என உத்திரவு போடுகிறார்.

திட்டக்குடி சன்னியாசி நல்லுாரில் 2 க்குமேல் 6 ஹிட்டாச்சி வரை வைத்து மணல் எடுப்பதை தடுக்க போன மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. அரியலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் உட்பட நூற்றுக்கணக்கானவர் மீது வழக்கு போட்டுள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் மீது தடியடி நடத்தி மணல் கொள்ளையர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறது. அரசும் அதிகார வர்க்கமும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆளுகின்ற தகுதியை இந்த அரசு இழந்து விட்டது. இந்த அரசு நமக்கு அன்னியமாக போய்விட்டது.

ஆங்கிலேயன் நமக்கு வெளிப்படையாக தெரிந்தான். அதிகார வர்க்கம், அரசியல் வாதிகள் நம்முடன் இருக்கிறார்கள். அதற்கு நாம் ஏன் அடிப்பணிய வேண்டும். தாது மணல் கொள்ளையில் ரூ 1,00,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்பதை நாங்கள் உண்மை அறியும் குழுவாக சென்று தகவல் வெளியிட்டோம். தூத்துக்குடியில் வைகுண்ட ராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என பொதுக் கூட்டம் நடத்தினோம். இன்றுதான் தி.மு.க. இதை பற்றி பேசுகிறது.

ஆற்றில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடக்கிறது. முப்போகம் விளைந்த நிலம் இப்போது இரு போகம் மட்டும் விளைகிறது. தண்ணீர் இருந்தால் மணல் எடுக்க முடியாது என்பதால் தண்ணீரை தடுத்து கடலுக்கு திருப்பிவிடுகிறார்கள். இதுதான் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வேலையா? விவசாயிகள் தண்ணீருக்கு ஏங்கும் வேலையில் தண்ணீரை கடலுக்கு அனுப்பும் பொதுபணித்துறை அதிகாரிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

நாங்கள் மக்கள் அனைவருக்காகவும் போராடுகிறோம். அவர்களை உங்களுக்கு எதிராக வாதிடும் வக்கீலாக மாற்றி இருக்கிறோம். மணல் கொள்ளையை நிரந்தமாக தடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

போலீசு மிரட்டும் – போராடுவோம்!
பொய் வழக்கு போடும் – போராடுவோம்!
கைது செய்யும் – போராடுவோம்!
சிறையில் தள்ளும் – போராடுவோம் !
தடியடி நடத்தும் – போராடுவோம்!
துப்பாக்கி சூடு நடத்தும் – போராடுவோம்!
துப்பாக்கி நம் கைக்கு வரும் போது போராட்டம் முடியும்!….

நன்றி வணக்கம்.

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு தோழர்கள் பேச்சின் இடையே அவ்வப்போது பாடல் பாடி மக்களை உணர்வுட்டி உற்சாக படுத்தினர். இறுதியாக நேரம் குறைவாக இருந்த்தால் தொகுப்பான கலை நிகழ்ச்சி நடத்தாமல் சில பாடல்களை மட்டும் பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நன்றியுரை கூறிய சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன், “இப்போது யாருக்கம் நான் நன்றி சொல்ல மாட்டேன். மணல் குவாரியை நிரந்தரமாக மூடுவோம். பிறகு வீடு வீடாக நான் கண்டிப்பாக நன்றி சொல்கிறேன்” என முடித்தார்.

 சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன்
சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன்

சேத்தியா தோப்பில் இது போன்ற கூட்டத்தை எந்த அரசியல் கட்சியினரும் நடத்தியதில்லை. இவ்வளவு கட்டுக் கோப்பாக கடைசிவரை அனைத்து மக்களும் ஒரே இடத்தில் நின்று கூட்டத்தை கவனித்தது காவல் துறையின் கெடுபிடிகளை செல்லாக்காசாக்கியது.

தகவல்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

மணலி SRF சங்க தேர்தலில் 5 – வது முறையாக பு.ஜ.தொ.மு வெற்றி

2

மணலி SRF – ல் நடந்த சங்க தேர்தலில் தொடர்ந்து 5 – வது முறையாக பு..தொ.மு அபார வெற்றி

சென்னையில் மணலி பகுதியில் உள்ளது SRF தொழிற்சாலை. இங்கு 566 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இங்கு NYLON TYRE CORD FABRIC உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் போராட்டத்தால் பொது தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. விபி. சிந்தன், குசேலர் முதல் சௌந்திரபாண்டியன் வரை பல தொழிற்சங்க தலைவர்களை கண்டுள்ளது இந்த சங்கம். இந்த ஆலையில் முதலில் 32 இளந்தொழிலாளர்களை கொண்டு தனது கிளையை தொடங்கியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

கூட்டு பேரம்
அன்று முதல் இன்று வரை தொழிலாளர்களுக்கு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து தொழிலாளர்களை தங்களுடைய எஜமானர்களாக கொண்டு சங்கம் நடத்தி 2012–ல் சிறப்பானதொரு ஊதிய உயர்வு ஒப்பந்தமும் போட்டுள்ளது பு.ஜ.தொ.மு.

அந்த 32 பேரையும் நிர்வாகம் STAFF என்ற நிலையில் வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இந்த 32 தொழிலாளர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு குசேலர் தலைமையிலான சங்க நிர்வாகிகளுடன் பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் அந்தத் தொழிலாளர்களைப் பற்றி குசேலர் தலைமையிலான சங்க நிர்வாகிகள் கண்டு கொள்ளவே இல்லை.

அதன் பின்பு தொழிலாளர்களின் அனுமதியின்றி 10,000 அகவிலைப் படி புள்ளிகளை நிர்வாகத்திடம் விட்டுக்கொடுத்து குசேலர் போட்ட துரோக ஒப்பந்தத்தின் காரணமாக அடுத்த நடந்த தேர்தலில் குசேலரைத் தோற்கடித்து விட்டு வாய்தா வக்கீல் பிரகாஷின் தலைமையை (ULF) தேர்ந்தெடுத்தனர் தொழிலாளர்கள். அதன் பின்பு பு.ஜ.தொ.மு-வின் விடா முயற்சியின் காரணமாக அந்த 32 தொழிலாளர்களும் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

அதிலிருந்து 2009 வரை ULF உடன் கூட்டணி வைத்து செயல்பட்டது பு.ஜ.தொ.மு. அவர்களுடன் கூட்டணியாக செயல்பட்ட காலங்களில் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், தொழிற்சங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு (ULF) கற்றுக் கொடுத்தது பு.ஜ.தொ.மு. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ULF + NDLF கூட்டணி ஜெயித்து பிரகாஷ் தலைவராக வந்து கொண்டிருந்தார்.

பின்பு 2009–ல் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளிகளுடைய கருத்து எதையும் கேட்காமல், தொழிலாளிகளுடைய ஒப்புதல் பெறாமல் CTC முறையில் ஒப்பந்தம் போட்டார் வக்கீல் பிரகாஷ். அது மட்டுமல்லாமல் இளந்தொழிலாளிகளுடைய இன்சூரன்ஸ் பணமாக இருந்த 7.5 லட்சம் ரூபாயை வெறும் 3 லட்சமாக மாற்றினார். தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை குறைத்து விட்டு அந்த பணத்தையே ஊதிய உயர்வு என்று சொல்லி ஏமாற்றினார்.

அனைத்து விசயங்களையும் தொழிலாளிகளை கேட்காமலேயே பேசி முடித்து விட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் முன்பு சடங்குத்தனமாக பொதுக்குழு கூட்டினார்கள். அந்த பொதுக்குழுவில் ஏன் CTC முறையில் ஒப்பந்தம் போட்டீர்கள் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பிய போது எனக்குத் தெரியாது எனவும், வேறு தலைவரை வைத்து சரி செய்து கொள்ளுங்கள் என்றும் திமிர்த்தனமாக பதிலளித்தார் பிரகாஷ். இறுதியாக தொழிலாளிகளுக்கு விரோதமாக 2009 ஊதிய உயர்வு ஒப்பந்தம் பிரகாஷ் தலைமையில் கையெழுத்தானது.

2009 ஒப்பந்தத்தை அடுத்து 2011-ல் நடந்த தேர்தலில், இனிமேலும் இந்த பிழைப்புவாத சங்கத்தை அனுமதிக்க முடியாது, தொழிலாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்து 2011 தேர்தலில் ULF மற்றும் குசேலர் தலைமையிலான நலமன்றம் ஆகிய அணிகளை எதிர்த்து பு.ஜ.தொ.மு தனி அணியாக களம் கண்டது. அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையாக பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை தொழிலாளர்களுக்கு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து தொழிலாளர்களை தங்களுடைய எஜமானர்களாக கொண்டு சங்கம் நடத்தி 2012–ல் சிறப்பானதொரு ஊதிய உயர்வு ஒப்பந்தமும் போட்டுள்ளது பு.ஜ.தொ.மு.

கடந்த நான்கு ஆண்டுகளில் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாடுகள்

  • SRF ஆர்ப்பாட்டம்
    “தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 13 தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் SRF மற்றும் போலீசின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்” 2014 மார்ச் மாதம் SRF கும்மிடிப்பூண்டி ஆலை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டம்

    சங்க செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றிய விசயங்களை அனைத்து தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் சங்க அறிவிப்பு பலகையில் எழுதி ஒட்டுவது.

  • எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நடைமுறையை மாற்றி வருடந்தோறும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த வேண்டும் என்று தொழிலாளிகளுக்கு ஜனநாயக முறையை கற்றுக்கொடுத்தது
  • எந்த பிரச்சனையாக இருந்தாலும் தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்டு முடிவெடுப்பது.
  • தொழிலாளிகளை  கேள்வி கேட்க விடாமல் வெறும் 5 நிமிடம் மட்டுமே நடந்து வந்த பொதுக்குழுவை மாற்றி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பொதுக்குழுவை நடத்தி மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது.
  • வருடந்தோறும் போனஸாக சென்ற வருடம் வாங்கிய தொகையை விட ரூ 500 மட்டுமே உயர்வாக வாங்கிக் கொண்டிருந்ததை மாற்றி தற்போது ரூ 800 ஆக உயர்த்தியது.
  • இளந்தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடத்திலேயே குறைந்த பட்சம் ரூ6000 போனஸ் வாங்கிக் கொடுத்தது.

மேற்கண்ட இந்த வெளிப்படையான சங்க செயல்பாட்டின் காரணமாக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட மூத்த தொழிலாளர்கள் புஜதொமு தான் சரியான அமைப்பு என்று உணர்ந்து, அவர்களின் அமைப்பை கலைத்து விட்டு பு.ஜ.தொ.மு வில் இணைந்தனர்.

தன் பிரச்சனை, தன்னுடைய ஆலை பிரச்சனை என்று சிந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை சமூகத்தைப் பற்றி சிந்திக்க தூண்டியது பு..தொ.மு.

தன்னுடைய ஆலையில் நமக்கு நடக்கும் பிரச்சனைகளைப் போலவே இந்த சமூகத்தில் இருக்கிற அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது, இதற்கு தொழிலாளிகள் வர்க்கமாக திரள வேண்டும் என்ற அடிப்படையில் மாதந்தோறும் ஷிப்ட் கூட்டங்கள் மற்றும் பொதுக்குழு நடத்தி வர்க்க உணர்வூட்டுவது.

இதன் விளைவாக தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மணலியைச் சுற்றி இருக்கக்கூடிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக போராடுவது, அவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்வது என்று மாறியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக,

  • விம்கோ நகரில் உள்ள ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் தொழிலாளர்கள் பணி நிரந்தரத்திற்காக போராடிய போது தினந்தோறும் சென்று அந்த தொழிலாளிகளின் போராட்டத்தில் தோளோடு தோள் நின்றது.
  • காட்டுப்பள்ளியில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து எல்&டி நிறுவனத்துக்கு எதிராக போராடிய போது அவர்களோடு அந்த ஊரிலேயே தங்கி அவர்களோடு போராடியது.
  • மணலிக்கு அருகிலுள்ள சாத்தாங்காடு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழந்து வீதியில் நின்ற போது அவர்களுக்காக போராடியது.
  • ஸ்ரீபெரும்புதுர் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள GSH என்ற பன்னாட்டுக் கம்பெனி தொழிலாளர்கள் தங்களுடைய உரிமை பறிப்புக்கு எதிராக போராடிய போது அவர்களுடைய போராட்டத்தில் SRF- ல் இருந்து 11 தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறை சென்றது.
  • அதுமட்டுமல்லாமல் அன்றாடம் சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீக்கு எதிராக பு.ஜ.தொ.மு சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் SRF தொழிலாளிகள் கலந்து கொண்டது.
  • தற்போது MRF தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பது.

இப்படி பொருளாதார பிரச்சனை, தன்னுடைய பிரச்சனை என்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்துக்காகவும் போராட வேண்டும் என்றும், தொழிலாளிகளே ஆலைகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்தையும் SRF தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது பு.ஜ.தொ.மு. இதன் காரணமாகவே கடந்த நான்கு வருடங்களாக பு.ஜ.தொ.மு தலைமையை தொழிலாளிகள் தேர்ந்தெடுத்தனர்.

2015 ம் ஆண்டு நடந்த தேர்தல்

இந்த நிலையில் தான் இந்த ஆண்டு தேர்தல் 31.01.15 அன்று நடைபெற்றது. இதில் பு.ஜ.தொ.மு வை எதிர்த்து ULF தலைமையில் ஓர் அணியும், ஏற்கனவே குசேலர் தலைமையில் நலமன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தவர்கள் தற்போது குசேலரை நீக்கிவிட்டு, திமுகவின் அமைப்பு செயலாளார் RS பாரதியை தலைவராக ஏற்றுக்கொண்டு ஜனநாயக முற்போக்கு மன்றம் என்ற பெயரில் ஓர் அணியும் போட்டியிட்டனர். தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சங்க ஜனநாயகத்தை வீழ்த்தி விட்டு தனிநபர் துதிபாடலை கொண்டு வருவதற்காகவும், பதவி வெறிக்காகவும் தொழிலாளிகளை சாதி ரீதியாக அணிதிரட்டுவது, தொழிலாளிகளுக்கு டோக்கன் கொடுத்து சாராயம் விநியோகிப்பது போன்ற வேலைகளை செய்தனர் இரு அணிகளும்.

வர்க்க உணர்வு ஊட்டப்பட்டு வரும் தொழிலாளிகளுக்கு சாராயம் ஊற்றி ஜெயித்து விட நினைத்து ஏமாந்தனர் எதிரணியினர். தொழிலாளி வர்க்க உரிமைக்காக போராடும் ஒரே அமைப்பு புஜதொமு தான் என்பதை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தொழிலாளிகளிடம் புஜதொமு பதிய வந்ததன் விளைவாக, சங்கப் பொதுச்செயலாளர் தவிர்த்த அனைவரையும் ஒரே அணியாக தேர்ந்தெடுத்தனர் தொழிலாளர்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடித்த பின்னர் அதே தலைமையை SRF தொழிலாளிகள் தேர்வு செய்ததில்லை. SRF தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடித்து வெற்றி பெற்றுள்ளது புஜதொமு.

ஊதியம் அதிகம் வாங்கிக் கொடுக்கும் தலைவரை தேர்ந்தெடுப்பது என்ற காரியவாத கண்ணோட்டத்தை தொழிலாளர்களிடம் மாற்றுவதற்கு புஜதொமு நான்காண்டுகளாக போராடியதைப் போலவே தொடர்ந்து போராடுவதற்கு உந்துதலாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

05.02.15 பொதுக்குழுவில் வெற்றி பெற்ற சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. “பொதுக்குழுவில்  கலந்து கொண்டால் உற்பத்தி பாதிக்கும். அதனால் பொதுக்குழுவுக்கு போகக்கூடாது” என்று பதவியேற்கும் நாளன்றே அறிவிப்பை வெளியிட்டு நிர்வாகம் கலகம் செய்ய எத்தனித்தது. ஆனால் திட்டமிட்டபடி பெரும்பான்மையான தொழிலாளர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற சங்க நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மாவட்டம் – 9444213318

பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்

9
சூரியூர் பெப்சி ஆலை
“எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டியளாடா பாவிகளா”

“எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டியளாடா பாவிகளா” என்று மனம் நொந்து சாபமிடுகிறார் அந்த பாட்டி.

“பெப்சி குடிக்கிறவிங்கள பாத்தா வெறுப்பா இருக்கு சார்”

“விவசாயிகளா சேந்து பெப்சி கம்பெனிய சீல்வைக்கணும்; இல்லைனா நாங்க சாகணும்; இரண்டுல ஒன்னுதான்” கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் இளைஞர்கள்.

நிரம்பிய கிணறு
தரை மட்டம் வரை நிரம்பியிருக்கும் கிணறு (படம் விளக்கத்துக்காக மட்டும்… தனியார் நீர்க்கொள்ளையால் தமிழக கிராமங்களில் இத்தகைய கிணறுகள் அருகிப் போய்க் கொண்டிருக்கின்றன)

யார் இவர்கள்? எதற்காக பெப்சியை எதிர்க்கிறார்கள்? பெப்சி குடிப்பது பாவச்செயலா? பாவச்செயல் தான். நீங்கள் சூரியூரை பார்த்தால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.

சூரியூர், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். நிலத்தடி நீர்வளம் மிக்க பகுதி. ஆற்று கால்வாய்கள் ஏதும் இல்லாத நிலையில், கிணற்று பாசனத்தை மட்டுமே கொண்டு முப்போகம் விளையும் பூமி.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை சூரியூரின் கிணறுகளில், முதலிரண்டு படிகளை தாண்டினால் தண்ணீரை தொட்டுவிடலாம். அவர்களின் பார்வையில் கிணறுகள் என்றால் குனிந்து தண்ணீர் மொள்ள முடியும் இடங்கள்தான். ஆற்று பாசனமோ, கால்வாயோ இல்லாத நிலையில் கிணறுகள் தான் இவர்களுக்கு சோறு போடும் தெய்வங்கள் என்பதால் கிணற்றின் மீது நெருக்கம் அதிகம்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பெப்சி நிறுவனம் இந்த ஊரை குறிவைக்கும் வரை.

“2009 லாஸ்டுல வந்தாங்க சார். ஏதோ பாட்டில் கம்பெனி ஆரம்பிக்க போறதா ஆரம்பத்துல சொன்னாங்க. பாட்டில் கம்பெனிதானேனு நாங்களும் பெருசா எடுத்துக்கல. நாங்கதான் முள்ள கிள்ள வெட்டி சரிபண்ணி சர்வே எடுக்க கூட நின்னோம். ஒருநாள் ஓரமா ஒரு குடிசைய கட்டிட்டு போர் போட்டாங்க. அந்தத் தண்ணிய எடுத்து டெஸ்டுக்கு அனுப்புவாங்கனு எங்களுக்கு சத்தியமா தெரியாது சார். அடுத்து சுத்தி காம்பவுண்டு போட்டுட்டாங்க. அடுத்தடுத்து மூணு போர் போட்டாங்க. பெரிய பெரிய மிஷின், கட்டிடம் எல்லாம் வந்தது. கம்பெனிய ரன் பண்ண ஆரம்பிச்சப்புறம் தான் சார் உண்மையே தெரிய வந்துச்சி” ஒட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை நுழைத்த கதையை சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
பெரிய பெரிய மிஷின், கட்டிடம் எல்லாம் வந்தது. கம்பெனிய ரன் பண்ண ஆரம்பிச்சப்புறம் தான் சார் உண்மையே தெரிய வந்துச்சி

பெப்சி நிறுவனம் தனது டீலராக இருக்கும் எல்.ஏ பாட்டிலர்ஸ் (LA Bottlers Pvt Ltd ) மூலம் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜிற்கு சொந்தமானது இந்நிறுவனம். நாளொன்றுக்கு சுமார் 90 லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இதற்காக சூரியூர் கிராமத்தில் மட்டும் ஒவ்வொன்றும் பல ஆயிரம் அடிகள் ஆழமுள்ள 6 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. பக்கத்து ஊராட்சியில் ஐந்து ஆழ்துளை கிணறுகள் இறக்கியிருக்கிறது நிறுவனம். இந்த ஆலையிலிருந்துதான் பெப்சி பாட்டில்கள் வெளியூருக்கு அனுப்பப்படுகின்றன. இது தான் சூரியூர் தண்ணீர் களவாடப்பட்டு கோலாவாக மாற்றப்பட்ட கதை.

சூரியூர் பெப்சி ஆலை
சூரியூர் தண்ணீர் களவாடப்பட்டு கோலாவாக மாற்றப்பட்ட கதை

பெப்சி நிறுவனம் மற்ற ஆலைகளைப்போல இதிலும் லாபம் சம்பாதித்தது. அடைக்கலராஜின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனத்திற்கு தரகு பணம் குவிந்தது. பெப்சிக்கு மாமா வேலை செய்து கூவி விற்ற சச்சின், டோனி போன்ற தேசபக்தர்கள் கொழுத்தார்கள். பெப்சியை பருகியவாறே தேசபக்தி ஊளைச்சத்தமிடுகிறது, மேட்டுக்குடிவர்க்கமும் பெருகியது. வளர்ச்சி கோசமும் விண்ணை முட்டியது. இந்தக் கூச்சல்களின் நடுவே சூரியூருக்கு நடந்தது குறித்து யாரும் கவலைகொள்ளவில்லை. அவர்கள் கவலை கொள்ளும் அளவிற்கு சூரியூர் தலால் வீதியிலும் அமைந்திருக்கவில்லை.

சூரியூர் பெப்சி ஆலை
கூச்சல்களின் நடுவே சூரியூருக்கு நடந்தது குறித்து யாரும் கவலைகொள்ளவில்லை

பெப்சி நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு அந்தப் பகுதியின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. 30 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 300 அடியை தாண்டி சென்றுவிட்டது. ரத்தம் உறிஞ்சப்பட்டு சாவின் விளிம்பில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன விவசாய கிணறுகள். மக்களின் வாழ்க்கையும் தான். இதை வளர்ச்சி என்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். பகற் கொள்ளை என்கிறார்கள் சூரியூர் மக்கள்.

சூரியூரின் பல விவசாய கிணறுகளுக்கு சென்று வந்தோம். எல்லாமே பேய் கிணறுகளாக காட்சியளிக்கின்றன. பல கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. 2009 வரை அந்தக் கிணறுகளில் தண்ணீர் நிறைந்திருந்தது என்று கூறினால் எவரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு கொடூரமாக இயற்கையை வல்லுறவுக்கு உள்ளாக்கியிருக்கிறது பெப்சி நிறுவனம்.

சூரியூர் பெப்சி ஆலை
எல்லாமே பேய் கிணறுகளாக காட்சியளிக்கின்றன. பல கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை

“இந்த கிணத்துல தான் சார் மூணு வருசத்துக்கு முந்தி குதிச்சி விளையாடுவோம். சின்ன குழந்தைகள கூட பயமில்லாம கிணத்துல போட்டுட்டு குதிச்சி தூக்கியாருவோம். இப்போ எட்டி பாக்க எனக்கே பயமா இருக்கு” சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டிருக்கும் கிணற்றை காட்டி பேசுகிறார் இளைஞர் சிவகுமார்.

இது வெறுமனே கிணற்றைவிட்டு பிரியமுடியாத மக்களின் பாச பிரச்சனையல்ல. அன்றாட வாழ்க்கை பிரச்சனை.

சூரியூர் பெப்சி ஆலை
கிணற்றைவிட்டு பிரியமுடியாத மக்களின் பாச பிரச்சனையல்ல. அன்றாட வாழ்க்கை பிரச்சனை.

பெப்சியின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்த பிறகு தங்கள் கிணறுகளில் நீர்மட்டம் குறைகிறது என்பதை கண்கூடாகக் கண்டார்கள் விவசாயிகள். ஆனால் கையைபிசைவதை தவிர வேறுவழி அப்போது தெரியவில்லை. ஓரிருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று போராட்டங்கள் ஆரம்பித்தனர். ஆயினும் எந்த பலனும் இல்லை.

கிணற்றின் முக்கால்வாசி வரை இருந்த தண்ணீர் படிப்படியாக கீழே சென்றது. ஒரு கட்டத்தில் தண்ணீர் முற்றாக காலியாகிவிட்டது. தண்ணீர் ஊறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக போர் போட்டால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
ஒரு கட்டத்தில் தண்ணீர் முற்றாக காலியாகிவிட்டது. தண்ணீர் ஊறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

“அந்த கம்பெனி வந்தபிறகு தான் சார் இப்படி இருக்கு. மொதல்ல கெணதத 30 கெசம் வெட்டினேன். அப்புறம் 3 போர் போட்டேன். எல்லாம் பெயிலிரு. மொதல்ல அங்கன 350 அடி, அப்புறம் இதுல 150 அடி. எல்லாம் பெயிலிரு சார்.“ என்று வேதனையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் விவசாயி சேகர். 45 வயதான சேகரின் குடும்பம் இவரது விவசாய வருமானத்தைதான் நம்பி உள்ளது. “இதுக்கு மேல வேற வேலைக்கு போக முடியாது. வேற எதுவும் தெரியாது. விவசாயம் தான் தெரியும்”.

பெப்சியின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கிணறுகளை மென்மேலும் ஆழப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் விவசாயிகள். மீண்டும் மீண்டும் போர்வெல் நிறுவனத்தை அணுகினார்கள்.

முதல் சுற்றில் கையில் இருந்த சேமிப்பு பணத்தை செலவழித்தவர்கள், அடுத்த சுற்றிற்கு நகைகளை அடகுவைக்க ஆரம்பித்தார்கள். அடுத்த தவணைக்க்கு கடன் வாங்குவதை தவிர வழியில்லை. இன்று ஊரில் பெரும்பாலானவர்கள் கடனாளிகள்.

சூரியூர் பெப்சி ஆலை
இன்று ஊரில் பெரும்பாலானவர்கள் கடனாளிகள்.

“3 லட்சம் செலவு பண்ணியிருக்கேன் சார். பொண்டாட்டி நகைய அடகுவெச்செதுல 1 லட்சம் கெடச்சிது. 1.5 லட்சம் கடன் வாங்கியிருக்கேன். இத நம்பி தான் கடன் வாங்கியிருக்கேன்”, நெற்கதிர்களை காட்டியபடி பேசுகிறார் சேகர்.

ஊரில் பெரும்பாலன் பெண்களின் நகைகள் அடகுக்கடைகளில் தான் உள்ளது. நம்மிடம் பேசிக்கொண்டிருக்குபோதே சீத்தா என்ற வயதான் அம்மா உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

சூரியூர் பெப்சி ஆலை
“நகைய மட்டுமாப்பா அடகு வைச்சோம். கறக்குற மாட்டையும் வித்துட்டோமே. பாவிப்பய நல்லா இருப்பானா”

“நகைய மட்டுமாப்பா அடகு வைச்சோம். கறக்குற மாட்டையும் வித்துட்டோமே. பாவிப்பய நல்லா இருப்பானா. இதோ (செயினை பிடிச்சி காண்பிக்கிறார்) இது கூட கவரிங் தான்.” என்று கண்கலங்கினார்.

இவரது மகன்கள் விவசாயத்துடன் சேர்த்து கம்பி கட்டும் வேலைக்கும் செல்கிறாரகள். “இப்படி வேற வேலைக்கு போனாதான் வாங்குன கடன அடைக்க முடியும்”.

எவ்வளவு செலவு செய்து போர் போட்டாலும் பெப்சியுடன் போட்டியிட முடியுமா? எவ்வளவு தோண்டியும் தண்ணீர் இல்லை. போர் போட வசதியில்லாதவர்களின் நிலைமையோ இன்னும் மோசம்.

“செலவழிக்க பணமுமில்ல. நட்ட நாத்தை மாட்டைவுட்டு மேயவுட்டேன். வேறவழி ? “ நம்மை கேட்கிறார் சின்ன சூரியூரை சேர்ந்த துரைராஜ். இந்த வருடம் மழையை நம்பி நெல் நடவு செய்திருக்கிறார். .

சூரியூர் பெப்சி ஆலை
“செலவழிக்க பணமுமில்ல. நட்ட நாத்தை மாட்டைவுட்டு மேயவுட்டேன். வேறவழி ? “

“சுத்தி 3000 ஏக்கர்ல விவசாயம் நடக்குது தம்பி. 3 வருசமா மழை பெய்யாதப்ப கூட மூணு போகம் விளைஞ்ச இடம். எல்லாம் கெணத்து பாசனம் தான். இப்போ ஒரு போகம் கூட இல்லை. பெப்சி கம்பெனியால 5 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்க பாதிக்கப்பட்டிருக்கோம். எல்லோருக்குமே விவசாயம். நான் 10 ஏக்கர் வெச்சிருக்கேன். முன்னாடி வருசத்திற்கு கொறஞ்சது 5 லட்சம் கெடைக்கும். இப்போ 10,000, 20,000 கெடைக்குறதே கஷ்டமாக இருக்குது. சாப்பாட்டுக்கு கிடைப்பதே கஷ்டமா இருக்கு. சாவியாக அறுத்து வைக்கிறோம்.” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் பெப்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அந்த பெரியவர்.

“ஒரு சீசன் அறுத்து என்ன செய்வீங்க. குடும்பத்தை பாப்பீங்களா? பிள்ளைகள படிக்க வைப்பீங்களா? உழுதகூலி கொடுப்பீங்களா? உரம் வாங்கி போடுவிங்களா? யூரியா இப்போ 750 ரூவா. அதுவும் கெடைக்காம அதிக காசு கொடுக்குறோம். பெப்சி கம்பெனிய உடனே மூடணும். மூடலைனா வெவசாயம் பண்ண முடியாது. போராடுவோம். ” தீர்க்கமாக சொல்கிறார் சேகர்.

சூரியூர் பெப்சி ஆலை
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் மெல்ல மெல்ல போராட்டங்களை ஆரம்பித்தார்கள் விவசாயிகள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் மெல்ல மெல்ல போராட்டங்களை ஆரம்பித்தார்கள் விவசாயிகள். அதிகார வர்க்கங்கள் பெப்சிக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். அந்த அனுபவத்தை நம்மிடம் பகிந்துகொண்டார் போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவரான ராஜேந்திரன்.

“நாங்க எல்லாம் கிராம மக்கள், பாமர மக்கள். சட்டதிட்டம் தெரியாது. அதிகாரிங்ககிட்ட போய் சொன்னோம்னா யாருமே செவிக்கு எடுத்துக்கிறது கெடையாது. கலெக்டரை எத்தனையோ தடவை நேருல பாத்து பேசிட்டோம். உங்களுக்குக்கு நல்ல தீர்வு கிடைக்கும்னு சொல்லுவாங்க. நாங்களும் அதை அப்படியே நம்புறது. அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி எல்லாமே பொய். அவங்க யாருக்குமே இந்த கம்பெனிய நிப்பாட்டனும்னு எண்ணம் இல்லை.

எந்த கோர்ட்டுக்கு போறது. எந்த கோர்டுக்கு போனாலும் ஜட்ஜையும் வெலைக்கு வாங்கிருதான், வக்கீலையும் விலைக்கு வாங்கிருதான். ஒரு வாரம் போயி நேருல பாப்போம். அவ்வளவு அருமையா பேசுவாங்க. மறுவாரம் போனா கம்பெனிக்கு சார்பா பேசுவாங்க. கம்பெனியோட பணம் இந்த அளவுக்கு வேலை செய்யுது.

சூரியூர் பெப்சி ஆலை
சட்டத்தை மயிரளவுக்கு கூட மதிக்காத எல்.ஏ பாட்டிலர்ஸ் மற்றும் பெப்சி நிறுவனம் இரவோடிரவாக மேற்கூரையை உடைத்து மீண்டும் போர்வெல்களை இயக்கியிருக்கிறார்கள்.

சென்னைக்கு போனாலும் சரி, மதுரைக்கு போனாலும் சரி நம்பிக்கையோட போவோம். அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரியாம இருக்கு, நாம சொன்னோம்னா சரியான் தீர்வு கொடுத்திருவாங்கனு போவோம். உள்ள போய் கேட்ட உடன எங்கள ஒரு மாதிரி பாப்பாங்க. எங்கள கணிச்சிட்டு, எப்படி சமாதானப்படுத்தி அனுப்புறதுனுதான் பாப்பாங்க. அந்த வழிமுறைதான் நடக்குதே ஒழிய நியாயமான பதிலே வல்ல. எங்கள் ஏமாத்துறதுதான் நடந்திட்டிருந்தது. எந்த அதிகாரியுமே முன்வந்து மக்கள் பாதிக்கப்படுறாங்க, தண்ணியில்லை கம்பெனிய நிப்பாட்டனும்னு நினைக்கவே இல்லை.

பல முறை போராடிட்டோம். போலீசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற மாதிரி கொடுத்திட்டு இருப்பாங்க. கூட்டம் கொறய கொறைய, சமைக்க லேடிசுங்க போயிருவாங்கல்ல, உடனே போலீசு நம்மள ரவுண்டி கட்டிருவாங்க. அவ்வளவு பேரயும் அரெஸ்ட் பன்னிருவாங்க,.

பத்திரிகை காமிராகாரங்க இத சுத்தி சுத்தி எடுப்பாங்க. நிறைய பேரு காமிரால எடுத்துட்டாங்க, செய்தி வெளியே போயிரும்னு நாங்க நினைப்போம். மாவட்ட லெவல்ல கூட செய்தி வாராது.

தொடர்ந்து ஒரு நாலு ஐந்து தடவை போராடியிருக்கோம். உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் நடத்தியிருக்கோம். சித்திரை வெயில்ல பொழுதுக்கும் சோறு தண்ணி இல்லாம 2000 மக்களுக்கு மேல தெரண்டு போனாம். அதிகாரிகளும் தெரண்டு வந்தாங்க. இன்னைக்கு கலைஞ்சி போங்க உங்களுக்கு தீர்வு கிடைக்கும்னு சொன்னாங்க. எந்த தீர்வும் கிடைக்கல. நாங்க சோர்ந்து போயிட்டோம். போராட்டத்தை விட்டுட்டாலும் பொழைக்க வேறு வழியில்லை. “

மக்கள் போராட்டத்தின் விளைவாக சில மாதங்களுக்கு முன்னர் மூன்று போர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் சட்டத்தை மயிரளவுக்கு கூட மதிக்காத எல்.ஏ பாட்டிலர்ஸ் மற்றும் பெப்சி நிறுவனம் இரவோடிரவாக மேற்கூரையை உடைத்து மீண்டும் போர்வெல்களை இயக்கியிருக்கிறார்கள். கதவு சீலை உடைக்காமல் சட்டத்தை காப்பாற்றுகிறார்களாம்.

இந்த ஊரின் எல்லையில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் 5 போர்களை போட்டிருக்கிறார்கள் எல்.ஏ பாட்டில்ஸ் நிறுவனத்தினர்.

“கலெக்டர் உள்ளிட்ட எல்லா அதிகாரிகளுக்கும் இது தெரியும். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எல்லோரும் அவங்களுக்குதான் சப்போர்ட். பணத்தை வெச்சி எல்லாரையும் வெலைக்கு வாங்குறான்.”

“ரோட்டை மறிப்போம், போலிஸ் எங்கள விரட்டுவாங்க. ஓடி வந்துருவோம். இதுவே தொடர்கதையாக் இருந்தது. கலெக்டர பாத்து மனு கொடுத்தோம். பாக்குறேனு சொன்னாங்க. அந்த கலெக்டரும் மாறிட்டாங்க. புது கலெக்டர்கிட்டேயும் மனுகொடுத்திருக்கோம் இவங்களும் பாக்குறேன்னு சொன்னாங்க. எல்லா வழிலயும் போராடி பாத்தோம்“.என்கிறார்கள் ஊர்மக்கள்.

சூரியூர் பெப்சி ஆலை
“3 வருசமா மழை பெய்யாதப்ப கூட மூணு போகம் விளைஞ்ச இடம். எல்லாம் கெணத்து பாசனம் தான். இப்போ ஒரு போகம் கூட இல்லை.”

“அதிகாரிகள் என்ன சொன்னாங்க”

“போராடும் போது வருவாங்க. எங்ககிட்ட மூடிருவோம்னு சொல்லிட்டு கம்பெனிக்குள்ள போறதுதான் தெரியும். திரும்பி வரும்போது அடுத்த மாசம் பாக்கலாம், அடுத்த வாரம் பாக்கலாம்னு எதையாவது சொல்லிட்டு கிளம்பிருவாங்க. இது முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டருக்கு மட்டும் 30 லட்ச ரூபாயும், ஒரு காரும் லஞ்சமா கொடுத்திருக்காங்க.”

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்நிறுவனத்தைல் பற்றி விசாரித்த போது முறையான அனுமதியில்லாமல் இந்நிறுவனம் செயல்படுவது தெரிய வந்திருக்கிறது. பாட்டில் தயாரிப்பதற்கான நிறுவனம் என்ற பெயரில் தான் அனுமதி பெற்றிருக்கிறார்கள் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமமும் காலாவதியாகிவிட்டது. இந்த நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்து அப்பகுதி ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை போராடும் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறது. மக்களை பிளக்கும் வேலையில் ஈடுபட தொடங்கியது பெப்சியின் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம். பணத்தால் அடிக்க வேண்டியவர்களை பணத்தால் அடித்தது. பெரும்பான்மையானவர்கள் அதற்கு மசியவில்லை.

“என் மேல கேஸ் இருக்கு சார். வாய்தாவுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்.

பணம் இருக்குறவன் தான் சார் பணத்துக்கு ஆசைப்படுறான். என் மேல இருக்குற கேச வாபஸ் வாங்கிக்குறோம். ஒன்ரை லடசம் பணமும் தரோம்னு பேரம் பேசுனாங்க. என் தம்பிக்கு போன் போட்டு கம்பெனிக்கு வரச்சொன்னாங்க. வாங்குறவன் நிறைய பேரு இருக்கான், அவன்கிட்ட கொடுனு சொல்லிட்டேன். காசு பணம் எப்பனாலும் சம்பாரிச்சிறலாம் சார். ஊர் அழிஞ்சி நான் மட்டும் எப்படி சார் நல்லா இருக்க முடியும்? அதனால வேணாமுனுட்டேன். கேஸ் போட்டுக்கோனுட்டேன்” என்று கூறும் சிவகுமார் இன்று வரை வாய்தாவுக்கு அலைந்து வருகிறார்.

“லாரில லோடு போகும் போது பெட்டிகளை கீழ தள்ளிவிட்டுட்டு எஸ்.சி மக்கள் திருடிட்டாங்கனு சொல்லி சாதி பிரச்சனை பண்ண பாத்தாங்க. எங்க ஊருகாரங்க யாரும் நம்பல. அவங்கள எங்களுக்கு தெரியும் சார். இப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க”, சிவகுமார்.

சூரியூர் பெப்சி ஆலை
காசு பணம் எப்பனாலும் சம்பாரிச்சிறலாம் சார். ஊர் அழிஞ்சி நான் மட்டும் எப்படி சார் நல்லா இருக்க முடியும்?

மக்களின் போராட்டம் மேலும் தீவிரமாகியது. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் வழிகாட்டுதலில் நடந்த கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை போராட்ட விடியோக்கள் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. கார்மாங்குடி மக்களே நேரடியாக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அரசு அதிகாரிகளை துணிச்சலாக எதிர்கொள்வது போன்றவை சூரியூர் மக்களை ஈர்த்தது.

சூரியூர் பெப்சி ஆலை
இது ஒரு தற்காலிகமான வெற்றி என்றாலும் சூரியூர் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும், பிற ஜனநாயக சகதிகளும் மக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி பேசினார்கள். குடியரசு தினத்தன்று ரேசன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்களோடு பு.மா.இ.மு தோழர்களும் கலந்துகொண்டு கைதானார்கள்.

முறையான அனுமதி பெறவில்லை என்ற காரணத்திற்காக நிறுவனத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்துளளது அரசு. இது ஒரு தற்காலிகமான வெற்றி என்றாலும் சூரியூர் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நாளையே தனது பணபலத்தின் மூலம் மேற்படி அனுமதிகளை அந்நிறுவனம் பெறக்கூடும். ஆக முறையான அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சனை. சட்டவாதத்திற்குள் நின்று சூரியூர் மக்களின் நியாயத்தை பேசமுடியாது.

இயற்கைவளங்கள் மக்களுக்கே சொந்தம். அதை கொள்ளையிட துடிக்கும் ஏகாதிபத்தியங்களையும், தரகு முதலாளிகளையும் வீழ்த்த மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதே இதற்கான தீர்வு. கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில் சூரியூர் மக்கள் அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டும். இது வரை நடந்த போராட்டங்கள் அரசு, அதிகாரவர்க்கம், போலீசு, நீதிபதிகள் குறித்த நல்ல படிப்பினையை மக்களுக்கு வழங்கியுள்ளது. இவர்களை அவர்களை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்துள்ளார்கள். மக்கள் தாங்களாக பெப்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நாளை எதிர்நோக்கியுள்ளாரகள்.

நாம் சந்தித்த இளைஞர்களின் வார்தைகள் இதற்கு கட்டியம் கூறுகின்றன.

“விவசாயிகளா சேந்து கம்பெனிய சீல்வைக்கனும் இல்லைனா நாங்க சாகணும் இரண்டுல ஒண்ணுதான்”

“நாம ஏண்டா சாகணும். அவனுங்கள் இழுத்து மூடுவோம்.”

அங்கிருந்து கிளம்பும்போது நமக்கு வழிக்காட்டியா வந்த இளைஞரிடம் கேட்டோம்.

“பெப்சி குடிக்கிறவங்கள பாத்தா உங்களுக்கு என்னனே தோனுது?”

“எங்க ஊர்ல இப்போ யாரும் குடிக்குறதில்ல” என்று கூறிவிட்டு அமைதியானவர்… “எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா” வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.

இனி பெப்சியை எங்கு பார்த்தாலும் இந்தக் குரல் தான் கேட்கும்.

சூரியூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் பெப்சி கோக் குடித்து தேசத்துரோகி ஆகப்போகிறோமா? இல்லை சூரியூர் மக்களுடன் கரம் கோர்க்க போகிறோமா?

சூரியூர் பெப்சி ஆலை
சூரியூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் பெப்சி கோக் குடித்து தேசத்துரோகி ஆகப்போகிறோமா? இல்லை சூரியூர் மக்களுடன் கரம் கோர்க்க போகிறோமா?

– வினவு செய்தியாளர்கள்