1. போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்!
2. தலையங்கம் : பார்ப்பான் வைத்ததுதான் சட்டம்!
3. டி.சி.எஸ் நிறுவன ஆட்குறைப்பு : சுதந்திர சந்தையின் தேர்க்காலில் பலியான கனவுகள்!
ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன?
4. ஐ.டி. நிறுவனங்கள் : இந்திய ‘வல்லரசின்’ வியர்வைக் கூடங்கள்!
தனது ஊழியர்களை வக்கிரமாகச் சுரண்டுவதிலும், மனதளவில் சாகடித்து நடைப்பிணங்களாக மாற்றுவதிலும் ஐ.டி நிறுவனங்களை விஞ்ச வேறு எவரும் கிடையாது.
5. உதயமானது ஐ.டி துறை ஊழியர் சங்கம்!
6. மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்!
தனியார் முதலீட்டை ஈர்ப்படு என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.
7. ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாகத் தமிழ்நாட்டைக் கட்டியமைப்போம்!
– தமிழகமெங்கும் புரட்சிக அமைப்புகளின் பிரச்சார இயக்கம்
8. – பத்திரிகை செய்தி : திவாலாகிப் போன அரசியல் – சமூகக் கட்டமைவைத் தகர்த்தெறிவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
9. இலங்கைத் தேர்தல் : இனவாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!
இலங்கை அதிபர் தேர்தலில், போர்க்குற்றவாளி இராஜபக்சேக்களின் வீழ்ச்சியோடு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இஸ்லாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன.
10. திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது? மாதொருபாகம் கூறும் மரபா? ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா?
மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ் துணையுடன் திருச்சங்கோடு இந்துக்களின் ‘மான’ப் பிரச்சினையாக மாற்றப்பட்டது.
11. பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணியின் அருவருப்பான அதிகார போதை!
பஞ்சாபைக் கவ்வியிருக்கும் போதை மருந்து பிரச்சினையை பா.ஜ.கவும், அகாலிதளமும் தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த எடுத்த முயற்சிகள், அவர்களின் முகங்களில் சேற்றைப் பூசி விட்டன.
12. கிரானைட் கொள்ளை : கிராம்பபுறங்களின் மீது நடத்தப்படும் போர்!
கிரானைட் கொள்ளையால் கிராமப்புற மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும்; இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, போன்; 9445112675
தேதி : 06.02.2015
சென்னை சட்டக்கல்லூரியைக் காக்க போராடிய மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசாரைக் கைது செய்ய வேண்டும்.
பு.மா.இ.மு வின் கண்டன அறிக்கை.
150 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.
போராடும் மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டிப்பதோடு இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரி, தாக்குதல் நடத்திய போலீசார் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் அதை எதிர்த்து முதலில் குரல்கொடுப்பவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக சென்னையின் மையமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஒரு தாக்கத்தை உருவாக்குவதாகவும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருந்துள்ளது. 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பல அரசியல் தலைவர்களும், போராளிகளும் உருவாகும் களமாகவும் இக்கல்லூரி இருந்து வருகிறது.
இந்த மாணவர்களின் போர்க்குணத்தை மழுங்கடிக்கவும், சமூகப்பற்றை, நாட்டுப்பற்றை அறுத்தெரியவும், மிக முக்கியமாக ’மாணவர்களுக்கு அரசியல் கூடாது’ என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கவும் தான் அரசு திட்டமிட்டே உரிமைக்காக போராடும் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிக்கிறது.
மாணவர்களிடையே சாதி வெறியைத் தூண்டிவிட்டு மோதல்கள் உருவாக காரணமாக இருப்பதிலும் அரசின் பங்குண்டு. உதாரணம் 2008-ல் சென்னை சட்டக்கல்லூரியில் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு வழிவகுத்துக் கொடுத்ததோடு. போலீசார் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, மோதல் உச்சத்திற்கு சென்ற பின்பு அதைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என மாணவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்கியது. இன்று மாணவர்களிடையே வெளிப்படும் சில ஒழுங்கீனங்களை( அதற்கும் காரணம் அரசுதான் ) காரணம் காட்டி போலீசை ஏவி தாக்குவது, பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைப்பது; கல்லூரிக்குள் கண்காணிப்பு கேமராவை வைத்து மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறிப்பது என மாணவர்களை குற்றப்பரம்பரையினராகவே கருதி கல்லூரிகளை சிறைச்சாலைகளாக்கி வருகிறது அரசு.
அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கக் கூடிய சில முக்கிய கல்லூரிகளை சென்னை மாநகரத்தில் இருந்தே அகற்றி சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற அவ்வப்போது முயற்சித்தும் வருகிறது. ஏற்கனவே தலைமைச் செயலகம் கட்டுவதற்காக என்று கூறி மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள். அது அக்கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் தடுக்கப்பட்டது. அடுத்து மெட்ரோ ரயில்பாதைக்காக என்று சொல்லி பச்சையப்பன் கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள் அதை எதிர்த்து மாணவர்கள் – பேராசிரியர்கள் போராடியதால் அந்த முயற்சி தகர்க்கப்பட்டது. இன்று சட்டக் கல்லூரியை குறி வைக்கிறது அரசு.
2008-ல் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த சாதி மோதலையும் (ஆதிக்க சாதி வெறியாட்டம் என்றே சொல்ல வேண்டும்), இன்று அவ்வழியே போடப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தையும் காரணமாக சொல்லி சட்டக்கல்லூரியை மாற்ற திட்டமிடுவதன் உண்மையான நோக்கம் முதலாளிகளும், மேட்டுக்குடிகளும், உயர் அதிகாரிகளும் சுகபோகமாக வாழ கல்லூரி மாணவர்களின் போராட்டம் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்றுவதுதான். அதாவது உரிமைக்கான போராட்டக் குரல்கள் எழும்பும் அரசு கலை, அறிவியல், சட்டக்கல்லூரிகளை மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான்.
இது அபாயகரமானது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்பு பாழாகும் என்பதுடன், தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ( ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் ) தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கொத்தடிமைகளைப் போல் இருக்கும் நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும். அதாவது இந்த அரசு கல்லூரிகள் எதிர்காலத்தில் தனியார்மயமாக்கப்படும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதோடு ஆரம்பத்திலேயே சொன்னது போல் சமூகப்பற்று, நாட்டுப்பற்று அறுத்தெரியப்பட்டு இவர்கள் முடமாக்கப்படுவார்கள்.
எனவே, பல்வேறு அபாயங்களுக்கு வழிவகுக்கும் சட்டக்கல்லூரியை மாற்றும் அரசின் திட்டத்தை முறியடிக்க போராடும் மாணவர்களுக்கு அனைவரும் தோள்கொடுக்க வேண்டும். இதை அக்கல்லூரி மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒதுங்கக் கூடாது. அப்படி ஒதுங்குவதால்தான் போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார்கள். இந்த கொடூரத்தை இனியும் அனுமதிக்காமல் இருக்க சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும், உழைக்கும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். நேரில் சென்று அந்த மாணவர்களை சந்தித்து ஆதரவை தெரிவிப்பதுடன் போராட்டத்தை வளர்த்தெடுக்க அவர்களுக்கு உதவுவதுதான் நம் அனைவரின் கடமை என பு.மா.இ.மு கருதுகிறது.
இவண் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் கொலை வெறித்தாக்குதல்
மெட்ரோ இரயிலுக்காக கல்லூரியை இடிப்பதா?
எதிர்த்து கேட்ட மாணவர்களை மாட்டைப் போல் அடிப்பதா?
உரிமைக்காக போராடும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!
என்ற தலைப்பில் தூத்துக்குடி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் மணிகண்டன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் 6.2.2015 அன்று காலை 9 மணியளவில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுவரை கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கோவில்பட்டியை சுற்றிலுமுள்ள பத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து பேசி சட்டக்கல்லூரி மாணவர்களின் போரட்டத்தின் நியாயத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையின் ரவுடி ராஜ்யத்தை எதிர்த்து முழக்கங்கள் போடப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய பு.மா.இமு. தூத்துக்குடி மாநகர குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் பேசியதாவது :
“சடடக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஏதோ ஒரு தனிப்பட்ட கல்லூரியின் போராட்டமல்ல.
மெட்ரோ ரயிலுக்காகவும், பறக்கும் பாலத்துக்காகவும் இந்த அரசால் அடித்து துரத்தப்படும் சென்னை கூவம் கரையோரம் வாழும் மக்கள் இந்த அரசை எதிர்த்த போராட்டத்தோடு இணைந்தது.
ஏழை – எளிய மக்களின் மீதான இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிரானது.
அது மட்டுமில்லாமல் போராடும் மாணவர்களுக்கு இதுதான் கதி என நடந்து கொள்ளும் போலீசின் ரவுடி ராஜ்யத்திற்கு எதிரானது.”
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தூத்துக்குடி.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
போராட்டம் இது போதாது…போராடு இது பேயாட்சி…!
சென்னை சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மறுகாலனியத் தாக்குதலும் இந்துவெறியர்களின் கொட்டங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
‘வளர்ச்சி’,’ முன்னேற்றம்’ என்று கூறிக் கொண்டு நாட்டின் மூலவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, கூடுதலாக 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, காப்பீடு துறையில் அந்நிய முதலீடு, நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களைக் கொல்லைப்புறமாக அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றியிருப்பது – என நாட்டின் மீதும் மக்களின் மீதும் பொருளாதார ரீதியாகப் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடும் அதேவேளையில், இந்துத்துவ செயல்திட்டத்தைத் தீவிரமாக்கி, பார்ப்பனப் பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது மோடி அரசு.
ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் ஏழை முஸ்லிம்களை கட்டாய மதமாற்றம் செய்யும் இந்துவெறி குண்டர்களின் கொட்டம்.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, பகவத் கீதையைத் தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது, சவப்பெட்டி ஊழல் புகழ் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் என்பதால், கிறிஸ்துமஸ் தினத்தை ‘நல்லாட்சி’த் தினமாகக் கொண்டாட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது, கிறிஸ்துமஸ் தினத்தன்று நவோதயா மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் விடுமுறையின்றி இயக்கப்பட்டு, அன்று மாணவர்களுக்கு வாஜ்பாய் குறித்த கட்டுரை போட்டிகளை நடத்த வேண்டும் என்று மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருப்பது என்பதோடு, தாய் மதத்துக்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மத மாற்றத்தையும் ஆளும் இந்துவெறி பாசிச கும்பல் அரங்கேற்றி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்குவதோடு, தொடர்ந்து தாக்குதல்களையும் நடத்திவருகிறது.
இந்து மதத்துக்குச் சிறுபான்மை மக்களைச் சேர்க்கும் “கர் வாபஸி” எனும் நிகழ்ச்சிகளை நடத்தி ஆக்ராவில் ஏறத்தாழ 200 ஏழை முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ். இன் அடியாள் படையான பஜ்ரங்தளம் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. ரேசன் கார்டு, ஆதார் அட்டை, உதவித் தொகை, போலீசுத் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தைவிட்டுக் காலி செய்து விடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட கட்டாய மதமாற்றம் இது. இது போல குஜராத்தின் வல்சாத் பகுதியிலும், கேரளத்தின் ஆலப்புழையிலும் கட்டாய மதமாற்ற நிகழ்ச்சிகளை விசுவ இந்து பரிசத் நடத்தியுள்ளது. அலிகாரிலுள்ள கிறித்துவர்களை கிறிஸ்துமஸ் தினத்தில் மதமாற்றம் செய்யப் போவதாக தர்ம ஜக்ரான் மன்ஞ் எனும் இந்து வெறி அமைப்பும், அதேநாளில் ஏறத்தாழ 5000 கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் மதமாற்றம் செவோம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுள் ஒருவரான ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் இறுதியில் பிரதமர் மோடி நாகாலாந்துக்குப் பயணம் செய்தபோது, நாடெங்கும் தொடரும் கிறித்துவர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு கிறித்துவ சபைகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அடுத்த நாளே டெல்லியிலுள்ள செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, சட்டிஸ்கர், உ.பி., தமிழ்நாடு, ம.பி., பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. சட்டிஸ்கரில் கிறித்துவ குடும்பங்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படாமல் இரு மாதங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிப் பிரச்சாரம் செய்வதற்குப் பல கிராமங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கிறித்துவர்கள் இக்கிராமங்களில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 100 கிறித்துவர்களை விசுவ இந்து பரிசத் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது.
பார்ப்பன கும்பலின் நிகழ்ச்சி நிரலின்படி, இந்துவெறி குண்டர்களால் தாக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ள டெல்லி செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவரான இந்துவெறி வாஜ்பாயிக்கும், இந்து மகாசபை நிறுவனர் மாளவியாவுக்கும் மோடி அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது. தமிழகத்தில் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” நாவலை இந்துவெறிக் கும்பல் எரித்து கண்டனம் தெரிவித்துக் கொட்டமடிக்கிறது. அமீர்கானின் “பீகே” படத்தைத் தடைசெய்ய வேண்டுமென இன்னுமொரு இந்துத்துவ கும்பல் புறப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்டவே காந்தியைச் சுட்டுக் கொன்ற இந்துவெறியன் கோட்சேவுக்கு தேசபக்தர் என்று முலாம் பூசி, உ.பி.யின் மீரட் நகரில் கோட்சேவுக்குச் சிலை அமைக்க இந்துவெறி கும்பலால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்சே சிலைகளைத் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப் போவதாக தமிழக இந்து மகாசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கோட்சேவுக்குச் சிலை வைத்தால் என்ன தவறு என்று திமிராகக் கேட்கிறார், இந்துவெறி அர்ஜுன் சம்பத். பெரியாரைச் செருப்பால் அடிப்போம் என்று சொன்ன இந்துவெறி ஹெச்.ராஜா பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு என்று மீண்டும் திமிருடன் கொக்கரிக்கிறார். பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான இந்துவெறி சாத்வி நிரஞ்சன் ஜோதி, ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று திமிராகப் பேசியுள்ளார். அண்மையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பேசிய சு.சாமி, பள்ளி-கல்லூரி வரலாற்றுப் பாடங்களில் அக்பர், பாபர் போன்ற மொகலாய மன்னர்களின் பாடங்களை நீக்கிவிட்டு இந்து மன்னர்கள் பற்றி அதிகம் கூறப்பட வேண்டும், மசூதிகளை இடித்துவிட்டு அங்கு இந்து கோயில்களைக் கட்ட வேண்டும். பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்க வேண்டும், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்று நஞ்சைக் கக்கியுள்ளார்.
இப்படி அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளையும், திமிர்ப் பேச்சுக்களையும் இந்துத்துவப் பரிவாரங்கள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்வதாகக் கருத முடியாது. இவைதான் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் நிகழ்ச்சிநிரலாக உள்ள செயல்திட்டங்கள். மேலும், இது மறுகாலனியத் தாக்குதலைத் திசைதிருப்புவதற்கான கருவியாகவும் பயன்படுகிறது. ஆனால், இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை களத்தில் நின்று முறியடிக்கும் நோக்கம் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.
“ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள்” என்று திமிராகப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினரான இந்துவெறி ஆ.
இந்துவெறி சாத்வி நிரஞ்சன் ஜோதியின் திமிர்ப் பேச்சையும், மதமாற்ற நடவடிக்கைகளையும் எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சாத்வியைப் பதவி நீக்கக் கோரி முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கின. பிரதமர் பதிலளிக்க வேண்டுமென்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடியோ நாடாளுமன்றத்துக்கு வருவதேயில்லை; வந்தாலும் வாயைத் திறப்பதுமில்லை. மதமாற்ற நிகழ்ச்சிகளில் மைய அரசுக்கோ பா.ஜ.க.வுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்று ஒருபுறம் மறுத்துவிட்டு, மறுபுறம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரத் தயார், எதிர்க்கட்சிகள் ஆதரிக்கத் தயாரா என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மடக்கவும், எதிர்க்கட்சிகள் அடங்கிப்போவிட்டன.
இப்படித்தான், இதற்கு முன்பு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் கொள்கை மீது விவாதங்கள் கிளப்பப்பட்டன. இத்தகைய இந்துத்துவ செயல்திட்டங்களை ஆளும் இந்துவெறி பாசிஸ்டுகள் அடுத்தடுத்து கொளுத்திப் போடுவதும், அதை வைத்து விவாதங்களைத் தூண்டி நடத்துவதும், நாட்டின் கவனத்தை இதை நோக்கி இழுப்பதும், பிரதமர் கருத்து கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதும், தமது கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கும் தந்திரத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை முடக்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவதும் நடக்கிறது. பிறகு புதியதொரு இந்துவெறி நடவடிக்கையை ஆளுங்கும்பல் முன்தள்ளுவதும், அதன் பிறகு அதன் மீது விவாதம், பிரதமர் கருத்து கூறவேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதும் எனத் திருகுசுழல் போல இவை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் மோடி யோக்கியவானைப் போலவும், ‘வளர்ச்சி’யைச் சாதிக்க உழைத்து வருவதாகவும், சாத்வி போன்றவர்கள்தான் இந்துவெறியோடு அலைவதாகவும் ஒரு கருத்துப் படிமம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. இப்படித்தான் இந்துவெறி வாஜ்பாயி மிதவாதி போலவும், அத்வானியைத் தீவிரவாதி போலவும், பின்னர் அத்வானி மிதவாதி போலவும் மோடியைத் தீவிரவாதி போலவும் ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. இப்போது இந்துவெறி பயங்கரவாதி மோடியை மிதவாதியாக்கி அமித்ஷாவை அரசியல் சாணக்கியராக்கி, பிற இந்துவெறியர்கள்தான் தீவிரவாதிகள் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
“பெரியாரைச் செருப்பால் அடிப்போம்! பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு!” என்று திமிருடன் கொக்கரிக்கும் இந்துவெறியன் ஹெச்.ராஜா.
“பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் துணைப் பரிவாரங்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, தார்க்குச்சி போடும் வேளை வந்துவிட்டது. உடனே இதைச் செய்யாவிட்டால், கட்சிக்கும் ஆட்சிக்கும் அயல் எதிரிகளே தேவையில்லை. இந்த அனுகூல சத்ருக்களே போதும்” என்று இதையே “துக்ளக்” சோ தந்திரமாகக் கூறுகிறார். (துக்ளக் 10.12,2014) “இதுவா நீங்கள் கூறிய வளர்ச்சி?” என்று புலம்புகிறது ஆனந்த விகடன். கருணாநிதியோ, “மதச்சார்பற்ற அரசாகத் தொடர்ந்து நடைபெற இனியாவது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துவதாக” மொன்னையாக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதச் சார்பின்மை பேசும் தி இந்து, எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி முதலானவை கூட, “பிரதமர் தனது கட்சிக்குக் கட்டுப்பட்டவராக இருக்கலாம்; ஆனால், அவர் நாட்டின் அரசுக்குத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்பதால், அவர் முன்வந்து இந்துத்துவ நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்” என்று திருடனிடமே வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்து கிடக்கின்றன. மோடியைப் பிரித்து ‘வளர்ச்சி’யை முன்னெடுத்துச் செல்லுமாறு கோருவதன் மூலம் இரட்டை மோசடிகளை – மறுகாலனியத் தாக்குதலை ‘வளர்ச்சி’ என்று நியாயப்படுத்தும் மோசடியையும், இந்துவெறியர்களை மோடி அடக்கி வைப்பார் என்று நம்பவைக்கும் மோசடியையும் இவர்கள் திட்டமிட்டே செய்து வருகின்றனர்.
இதைச் சாதகமாக்கிக் கொண்டு, மறுகாலனியத் தாக்குதல்களால் ஆத்திரம் கொள்ளும் மக்களின் வெறுப்பை இந்துத்துவ திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எதிரான கருத்து மோதலாக மடைமாற்றிவிடுவதில் மோடி கும்பல் குறியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களையும் மோடி கும்பல் நிறைவேற்றிக் கொள்கிறது. காவிப் பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் மோடியின் இரண்டு கண்களாக உள்ளன. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல கார்ப்பரேட் பாசிசமும் காவிப் பாசிசமும் இணைந்துள்ளன. மறுகாலனியாதிக்க கொள்ளையைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் அதேவேளையில், இந்துவெறியர்களின் நடவடிக்கைகளை மட்டும் விவாதப் பொருளாக்கி, இந்த விவகாரத்தைத் திட்டமிட்டே திசைதிருப்பும் மோடி கும்பலின் சூழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தெரிந்தே துணை போகின்றன. இதைச் சாதகமாக்கிக் கொண்டு, நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று காவிக்கூட்டம் திமிருடன் செயல்படுகிறது. இந்துத்துவப் பரிவாரங்கள் மதவெறியைக் கைவிடப்போவதுமில்லை, முதலாளித்துவ ஊடகங்கள் வேண்டுகோள் விடுப்பதைப் போல ‘வளர்ச்சி’யைச் சாதிக்கும் பொருட்டு அவர்களை மோடி அரசு தடுக்கப் போவதுமில்லை என்பதேயே தீவிரமாகிவரும் மறுகாலனியத் தாக்குதலும் காவிக்கூட்டத்தின் கொட்டங்களும் நிரூபிக்கின்றன.
– குமார்
________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 6 (இறுதிப் பகுதி)
சீர்திருத்தவாதிகளின் இத்தகைய குளறுபடிகள் ஒருபுறமிருக்க, மதச் சார்பற்ற சிவில் சட்டத்திற்கெதிராக அதிபுரட்சிகமான சவடால்கள் சிலவற்றை பின் நவீனத்துவ நோயால் பீடிக்கப்பட்ட அறிஞர்கள் சிலர் முன் வைக்கின்றனர்.
பின் நவீனத்துவ நோய்
“எந்தச் சமூகத்தினர் மீதும் எந்தவொரு சட்டத்தையும் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது; தனது மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் உரிமை ஒவ்வொரு சமூகத்துக்கும் உண்டு; அவ்வாறு திணிப்பது பன்முகத் தன்மைக்கு எதிரானது: மதச் சட்டமும் இருக்கட்டும், மதச்சார்பற்ற சட்டமும் இருக்கட்டும் – தனக்கு எது வேண்டுமென்பதை சம்பந்தப்பட்ட பெண் தீர்மானிக்கட்டும்” இவ்வாறான பல ரகங்களில் இவர்களது வாதம் முன்வைக்கப்படுகிறது.
உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் முதல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வரை அனைத்துச் சட்டங்ளையும் எதிர்க்கும் பிற்போக்குவாதிகளுக்கு மிகவும் உவப்பான கண்ணோட்டம் இதுதான். இது ஒருபுறமிருக்க இக்கண்ணோட்டத்தின் அடிப்படையை ஆராய்வோம்.
“சட்டத்தைத் திணிக்கக் கூடாது” என்ற வாதமே தவறானதாகும். ஒரு வர்க்கம் அல்லது குழு பிறிதொரு பிரிவினர் மீது அவர்களது விருப்பத்திற்கு விரோதமாகவும் திணிப்பதற்குப் பெயர்தான் சட்டம். சட்டம் என்பதே கட்டாயம் அல்லது நிர்ப்பந்தம்தான். தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளிவர்க்கம் இவ்வாறுதான் தன் சட்டங்களைத் திணிக்கிறது. அவ்வாறே முதலாளித்துவ வர்க்கத்தின் மீது திணிக்கப்படு்ம் சர்வாதிகாம்தான் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்.
ஒரு மதத்தின் மரபை மீறி, அவர்கள் மீது அரசு தனது சட்டத்தை திணிக்கக் கூடாது என்று இந்த ‘ஜனநாயகவாதிகள்’ உளறும்போது மதத்தின் யோக்கியதையை இவர்கள் மறந்து விடுகின்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பெண்கள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் மதம் விதிக்கின்ற கட்டுப்பாடுகளும் திணிக்கப் பட்டவைதானே!அரசின் அதிகாரம் பற்றிக் கவலைப்படுபவர்கள் மதத்தின் அதிகாரம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
மேலும் தற்போது நிலவும் மதத் தனிநபர் சட்டம் என்பதன் உண்மையான பொருள் மதம் மற்றும் அரசின் கூட்டு அதிகாரம் என்பதன்றி வேறு என்ன? மதத்தின் ஒழுக்கம் என்று மதவாதிகளாலும், ஆதிக்க சக்திகளாலும் வியாக்கியானம் செய்யப் படுபவற்றை, அந்த மதத்தைச் சேர்ந்த மக்கள் (குறிப்பாகப் பெண்கள்) மீது தனது அதிகார, ஆயுத வலிமை கொண்டு அரசு நிலைநாட்டுகிறது. இதுதான் மதத் தனிநபர் சட்டம்.
அரசுக்கும் மதத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டணியை உடைப்பதுதான் மதச்சார்பற்ற அரசுக்கான கோரிக்கையின் சாரம்.
ஒழுக்கத்தின் காவலன் என்ற அதிகாரத்தை மதத்திடமிருந்து பிடுங்கி அரசிடம் ஒப்படைக்கிறது மதச்சார்பின்மை. அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் எது நல்லொழுக்கம், தீயொழுக்கம் அல்லது தண்டனைக்குரிய தீயொழுக்கம் என்பதை அரசு தீர்மானிக்கிறது. இந்தத் தர நிர்ணய அளவுகோல் ஒரு குறிப்பிட்ட அரசின் வர்க்கத் தன்மைக்கேற்ப வேறுபடும். சட்டம் என்ற பெயரில் உடைமை வர்க்கங்களால் திணிக்கப்படும் இத்தகைய ஒழுக்கங்களை ஒடுக்கப்பட்ட வர்க்கம் எதிர்த்துப் போராடும்.
ஆனால் ஒழுக்கத்தின் காவலன் என்ற பொறுப்பு மதத்திற்கு அளிக்கப்படும்போது அது தனது தார்மீக நெறிகள் குறித்து அறிவு பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவதில்லை. மாறாக, அந்தத் தார்மீக நெறிகள் ‘கடவுளின் ஆணை’ என்றும் அது விவாதத்திற்கப்பாற்பட்டது என்றும் மிரட்டுகிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணுரிமைப் போராட்டம், சொத்துடைமை ஆதிக்கத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் தனக்கெதிரான கலகமென்று முத்திரை குத்தி நசுக்குகிறது மதம்.
எனவே அனைத்து அதிகாரத்தையும் எதிர்ப்பதாகக் கூறும் இந்தச் சவடால் அறிஞர்கள் நடைமுறையில் மதத்தின் அதிகாரத்திற்கு மண்டியிடச் சொல்கிறார்கள்.
“தனிநபர் உரிமை என்ற பெயரில் ஒரு குழு அல்லது சமூகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது” என இன்று பின் நவீனத்துவ அறிஞர்கள் வைக்கும்வாதம்தான் முன் நவீனத்துவ காலத்தில், அதாவது 19- ஆம் நூற்றாண்டில், பார்ப்பனப் புரோகிதர்களால் முன் வைக்கப்பட்டது.
கணவனை இழந்த பெண்ணின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர முயன்ற போது அது இந்துச் சமூகத்தின் உரிமையில் தலையிடுவதாகக் கூறிப் புரோகிதர்கள் எதிர்த்தனர்.
கணவனை இழந்த பெண்ணின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர முயன்ற போது அது இந்துச் சமூகத்தின் உரிமையில் தலையிடுவதாகக் கூறிப் புரோகிதர்கள் எதிர்த்தனர். இன்று கருவறை நுழைவையும் இந்த அடிப்படையில்தான் எதிர்க்கின்றனர். ஷாபானுவுக்கு எதிராக முசுலீம் பழமைவாதிகள் திரண்டதும் இதே அடிப்படையில்தான் .
ஒரு மதக்குழுவின் பண்பாடு, சாதியின் பண்பாடு, சிறுபான்மையினரின் பண்பாடு என்ற பெயர்களில் பின்நவீனத்துவம் புரோகிதர்கள் இதற்குத் தான் வக்காலத்து வாங்குகின்றனர்.
தனிநபர் மீது மதம் செலுத்தும் ஆதிக்கத்திற்கு இவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்? ஷா பானுவுக்கு என்ன வழி சொல்கிறார்கள்?
“மதச்சார்பற்ற சட்டமும் இருக்கட்டும்; மதச்சட்டமும் இருக்கட்டும், தனக்கு விருப்பமானதைப் பெண் தெரிவு செய்து கொள்ளட்டும்” என்கிறார்கள். இதையேதான் ராஜமாதா விஜயராஜே சிந்தியாவும் கூறுகிறார். “கட்டாயமாக உடன்கட்டை ஏற்றக் கூடாது; தானாக விரும்பி உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கவும் கூடாது” என்கிறார்.
இந்த அடிப்படையில் தானாக விரும்பி ஒரு பெண் இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாக வாழ்க்கைப் படுவதையோ, அல்லது கணவன் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதையோ, தானாக விரும்பி வரதட்சிணை கொடுப்பதையோ கூட தடுக்கக் கூடாது. தீணடாமை ஒழிப்புச சட்டத்துக்கும் இதைப் பொருத்தினால் மனமுவந்து தீண்டாமைக்கு உட்படுவதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு என்றுதான் கொள்ளவேண்டும்.
ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் கோலோச்சும் இச்சமூகத்தில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் ‘சுதந்திரத் தேர்வு’ எவ்வளவு சுதந்திரமானதாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அடிமையாக வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுத் தருவதற்குத்தான் பின் நவீனத்துவ அறிஞர்கள் எப்படிப் போராடுகிறார்கள்!
இந்த வெட்கங்கெட்ட கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த பன்முகத்தன்மை, பன்முகமான மதிப்பீடுகள், அடையாளங்கள் என்ற பல வண்ணச் சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொள்கிறார்கள். அந்த மதிப்பீடுகளின் தன்மை என்ன, அடையாளங்களின் உட்கிடை என்ன என்பது குறித்து ஆராயக்கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு பூடகமான தத்துவ ஞானச் சேட்டைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதி, மதம் மற்றும் இனச் குழுவுக்கான தனித்தனி சிவில், கிரிமினல் சட்டங்களை உருவாகும் முயற்சியில் இவர்கள் நேரடியாக ஈடுபடுவார்களேயானால், தாங்கள் கோமாளிகள் என்ற உண்மையை நடைமுறையில் புரிந்து கொள்வார்கள்.
பலவிதமாக முன் வைக்கப்படும் இவ்வாதங்கள் அனைத்தும் தற்போது நிலவுகின்ற போலி மதச்சார்பின்மையை நியாயப்படுத்துவதற்கோ, அல்லது இதைவிடப் பிற்போக்கான நிலைமைக்குச் சமூகத்தைத் தள்ளுவதற்கோதான் துணை நிற்கின்றன.
மேலிருந்து சட்டத்தைத் திணிக்கக் கூடாதா?
இன்னொரு பிரிவினர் “சிவில் சட்டம் குறித்த விவாதமே வெட்டிப் பேச்சென்றும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கிராமப் பஞ்சாயத்துகள் தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
பெரும்பான்மை கிராமப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகின்றன.
இது ஒரளவு உண்மையே. கிராமப் பஞ்சாயத்துகளின் சில தீர்ப்புகள் மற்றும் மரபுகள், நீதிமன்றம் மற்றும் சட்டங்களைக் காட்டிலும் முற்போக்கானவையாக இருப்பதும் உண்மைதான். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும், பழங்குடி மக்கள் மத்தியிலுமே விதிவிலக்காக இத்தகைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஆனால் பெரும்பான்மை கிராமப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகின்றன. இத்தகைய தீர்ப்புகளுக்கெதிராகவும், ஜனநாயக வழிப்பட்ட மக்கள் நீதிமன்றம் அமைப்பதற்காகவும் கீழிருந்து போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
ஆனால் இதற்காக மேலிருந்து சட்டத்திருத்தம் கொண்டு வரும் முயற்சியைக் கைவிட முடியாது. நிலப்பிரபுத்துவக் கொடுங்கோனமையின் கீழ் வழங்கப்படும் பாரபட்சமான, கொடூரமான பல தீர்ப்புகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் நகரத்தையும், நீதிமன்றத்தையும் நாடி வருவதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.
ஜமாத் போன்ற மதப் பஞ்சாத்துக்களும், பழங்குடி, சாதிப் பஞ்சாயத்துக்களும் தம் விருப்பப்படி தண்டனை வழங்குகின்றன. கசையடி, சமூகப் புறக்கணிப்பு, அநியாய அபராதம் போன்ற இந்தத் தீர்ப்புகளெல்லாம் அரசியல் சட்டப்படி ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானவை; கிரிமினல் சட்டப்படி இந்தப் பஞ்சாயத்துக்காரர்கள் குற்றவாளிகள்.
மத ஆதிக்கச் சக்திகளும், இனக்குழுக்களின் நாட்டாமைகளும் வழங்கும் பல கொடுமையான தீர்ப்புகள் தனிநபர் சட்டங்களால் காப்பாற்றப்படுகின்றன. எனவே மத உரிமை, குழு உரிமை, மரபு, பண்பாடு என்ற பெயர்களில் இழைக்கப்படும் இத்தகைய அநீதிகளை அனுமதிக்கவியலாது.
இன்றில்லையேல் என்று!
மதச்சார்பற்ற ஜனநாயக ரீதியான சிவில் சட்டம் தேவை என்பதைக் கருத்தளவில் ஏற்றுக் கொள்ளும் சிலர் ” இச்சட்டத்தை 1950-இலேயே கொண்டு வந்திருக்க வேண்டும்; இன்று இந்து மதவெறி மேலோங்கியிருக்கும் தருணத்தில் இது சாத்தியமில்லை” என்கின்றனர். மார்க்சிஸ்டு கட்சி -சார்ந்த ” அறிவு ஜீவிகளோ இசுலாமியப் பெண்களே இன்று இதற்கு ஆதரவாக வரமாட்டார்கள்” என்று வாதிடுகிறார்கள்.
இவையனைத்துமே தவறான வாதங்கள். மதச்சார்பற்ற சட்டம் ஒன்றைக் கொண்டுவர அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் முயன்றபோது அதை முறியடிக்க இந்து, முசுலீம் மதவாதிகள் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.
நாம் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை முன் வைக்கிறோம். இது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத ஒரு கோரிக்கையாகும்.
இன்று ஒருபடித்தான சிவில் சட்டம் வேண்டும் என பாரதீய ஜனதா கூச்சவிடும்போது பிற கட்சிகள் அஞ்சி நடுங்கி, ஒடி ஒளிவதுதான் மையமான பிரச்சினை. மாறாக, அரசு விவகாரங்களிலிருந்தும், அரசியலிலிருந்தும், மதத்தை அறுத்தெறிகின்ற இலக்கணச்சுத்தமான மதச்சார்பின்மையையும், அதன் அடிப்படையிலான சிவில் சட்டத்தையும் கொண்டு வருவதற்குப் போராடத்துவங்கினால், பாரதீய ஜனதாவின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும்; அத்தகைய சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் பாரதீய ஜனதாவே முன்னணியில் நிற்கும்; அம்பலப்பட்டும் போகும்.
மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து இந்து மதவெறியர்களை ஒழித்துக் கட்டுவதோ, இந்து மதவெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மத ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதா என்று இசுலாமியப் பழமைவாதிகளும், மதவெறியர்களும் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, இந்து மதவெறிக் கும்பல் வளர்ந்து அம்பலப்பட்டு நிற்கும் இன்றைய தருணத்தைக் காட்டிலும் இப்போராட்டத்தை நடத்துவதற்கு வேறு பொருத்தமான தருணம் கிடைக்காது என்பதே உண்மை.
இசுலாமியப் பெண்களே இதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற கூற்றில் இந்துச் சட்டத்தால் இந்துப் பெண்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்ற கருத்து தொக்கி நிற்கிறது.
இசுலாமிய மக்கள் மீதான தாக்குதலும், மதக்கலவரங்களும் மிகுந்துள்ள சூழலில் தமது சமூகம் என்ற அடிப்படையில் இசுலாமியச் சமூகத்துடன் அப்பெண்கள் தம்மை நெருக்கமாக இணைத்துக் கொள்வதும், மதத்தின் பெயரால் நடக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடத் தயங்குவதும் வியப்பான விசயங்கள் அல்ல; அதே போல இந்த மவுனம் நிரந்தரமானதும் அல்ல.
ஷரியத்தில் நிவாரணம் கிடைக்காது என்பதை உணர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நிவாரணம் கோரி ஆயிரக்கணக்கான விவாகரத்து செய்யப்பட்ட முசுலீம் பெண்கள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மனுவும் ஷரியத்தின் ஆணாதிக்கத்திற்கும் அநீதிக்கும் எதிரான பிரகடனங்கள். அந்தப் பெண்களை எந்த இமாம்புகாரியிலும், சகாபுதீனாலும் தடுக்க முடியவில்லை; முடியாது.
மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் ஜனநாயக சக்திகள் எவ்வளவு நாணயமாகப் போராடுகிறார்களோ அந்த அளவிற்குத்தான் இசுலாமியப் பெண்களை மதவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.
இன்றைய கடமையைக் கைவிட்டால்தான் நாளைய புரட்சி நடக்குமா?
ஆனால் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்கான போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் சில முற்போக்காளர்கள் ” சாதி ஒழிப்பு, மதச் சார்பின்மை ஆகிய எதையும் தனியே உருவாக்க முடியாது; அது ஒட்டு மொத்தச் சமூக எதார்த்தங்களைக் கணக்கில் கொள்ளாமல் விவாதிக்க முடியாது” என்றும் கூறுகிறார்கள்
அதெல்லாம் சரிதான். பார்ப்பன இந்துமதவெறி தாக்குதல் நிலையில் உள்ளது என்ற இன்றைய சமூக எதார்த்தத்தை அங்கீகரிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதை எப்படி எதிர் கொள்வது என்பதில்தான் வேறுபாடு.
இந்து மதவெறியைச் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் எதிர்க்கும் துணிவற்ற சிலர் இன்றைய போலி மதச்சார்பின்மைக் கோட்பாட்டையே அதற்கு மாற்றாக முன் வைக்கின்றனர்; அல்லது ஒட்டு மொத்தச் சமூக மாற்றம், புரட்சி என்று கூறி நழுவுகின்றனர்.
பொருளாதார அடித்தளத்தில், உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழாமல் மேற்கட்டுமானத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் நிலைக்காது என்பது உண்மைதான். ஆனால் சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், ஆணாதிக்கம், இன, மொழி ஆதிக்கம் ஆகியவை புரட்சியில்தான் ஒழியும் என்று கூறி கைகட்டி நிற்பது புரட்சி குறித்த எந்திரவியல் பார்வையாகும். மாறாக இவற்றுக்கெதிராக புதிய ஜனநாயகக் கோட்பாடுகளை முன்வைத்து நடத்தப் படும் போராட்டங்களினூடாகத்தான் புரட்சி முன் செல்கிறது
பொருளாதார விடுதலை பெறவில்லையென்றால், பெண்ணிடத்திற்கு மணவிலக்கு உரிமையால் பயனில்லை என்பது சரிதான். ஆனால் மணவிலக்குப் பெறுகின்ற சட்டரீதியான உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் பெண்களனைவரும் பொருளாதார விடுதலை அடைவதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
‘உழுபவனுக்கே நிலம்’ என்ற கோரிக்கையை முன் வைக்காமல் பேசப்படும் தீண்டாமை ஒழிப்புச சவடால் மோசடியானது. உழுபவனுக்கு நிலம் உரிமையாகும்வரை தீண்டாமை ஒழியாது எனக் கைகட்டிக் காத்திருப்பது அபத்தமானது.
அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகியற்றுக்கிடையிலான இயங்கியல் உறவை மறுத்து, ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதும், நிலைப்பாடின்றி மவுனம் சாதிப்பதும் நடைமுறையில் தற்போது நிலவும் மதத்தனிநபர் சட்டங்களை ஆதரிப்பதாகவே முடியும்.
“ஒரு நாடு- ஒரு மக்கள்-ஒரு சட்டம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்து தேசியத்தை உருவாக்கும் கருவியாக பொது சிவில் சட்டத்தை பாரதீய ஜனதா பயனபடுத்துகிறது.
பொது சிவில் சட்டத்தைத் திணிக்கக்கூடாது என்று எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும், இந்திய தேசிய அரசு ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.
இவ்விரண்டுக்கும் எதிராக நாம் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை முன் வைக்கிறோம். இது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத ஒரு கோரிக்கையாகும். தந்தை வழி ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம், இன ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கும், அவற்றைப் புனிதப் படுத்தும் மதச்சட்டங்களுக்கும் எதிரான கோரிக்கையாகும். பார்ப்பன இந்துமதவெறியின் குடுமியைப் பிடித்து உலுக்கும் கோரிக்கையாகும்.
பின்னிணைப்பு – இந்துச் சட்டம் இசுலாமியச் சட்டம் ஒரு ஒப்பீடு
பொது சிவில் சட்டம் குறித்துப் பேசுபவர்கள் இந்துச் முற்போக்கானதென்றும் இசுலாமியச் சட்டம்தான் பிற்போக்கு என்றும் கருதுகின்றனர். நீதிபதி குல்தீப்சிங் தெரிவித்துள்ள கருத்தும் அத்தகையதுதான். ஆனால் மையமான பிரச்சினைகளில் இவையிரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டுக்கும் பெரிய வேறுபாடில்லையென்பது புலனாகிறது.
இசுலாமியச் சட்டம் பெரும்பாலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. சீர்திருத்தப்பட்ட இந்துச் சட்டமோ மேற்பார்வைக்கு முற்போக்கு போலத் தோற்றமளித்து ஏமாற்றுகிறது.
பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் இசுலாமிய, இந்துச் சட்டங்களின் சாராம்சமான நிலை கீழே சுருக்கமாகத் தரப்படுகிறது.
குழந்தைத் திருமணம்
இசுலாமியச் சட்டம்; ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு அவர்களது காப்பாளர் திருமணம் செய்து வைக்கலாம். அச்சிறுமி பருவத்திற்கு வந்தபின் (15 முதல்த 18 வயதிற்குள்) அவள் விரும்பாத பட்சத்தில் அத்திருமணத்தை ரத்து செய்யலாம். ஆனால் அவர்களிடையே பாலுறவு ஏற்பட்டிருக்கக் கூடாது என்பது நிபந்தனை.
இந்துச் சட்டம்; குழந்தைத் திருமணம் செல்லத்தக்கது. திருமண வயது ஆணுக்கு 21,பெண்ணுக்கு 18 என்பது ஆலோசனைதானே தவிர சட்டம் அல்ல; வயதுக்கு வந்தபின் மனைவி இத்திருமணத்தை ரத்து செய்ய விரும்பினால், (வழக்கமான விவாகரத்து சட்ட விதிகள்படி) கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாகவோ, கைவிட்டுவிட்டதாகவோ, அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகவோ நிரூபிக்க வேண்டும். இத்துடன் இசுலாமியச் சட்டத்தில் உள்ள பருவம் வந்தபின் மணவிலக்கு செய்யும் உரிமையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பலதார மணம்
இசுலாமியச் சட்டம்; ஒரே நேரத்தில் 4 மனைவியரை மணந்து கொள்ள அனுமதிக்கிறது. ஐந்தாவதாக ஒரு பெண்ணை மணந்தாலும் அது செல்லத்தகாதது அல்ல; முறைகேடானது அவ்வளவே. ஐந்தாவது திருமணத்திற்குப் பின் ஏற்கனவே இருக்கின்ற நான்கு மனைவியரில் ஒருவரை விவாகரத்து செய்து விட்டால் ஐந்தாவதாகச் செய்து கொண்ட முறைகேடான திருமணம் முறையானதாகிவிடும்.
இந்துச் சட்டம்; முதல் மனைவி ஒப்புதலுடன் மணக்கலாம். இருதார மணம் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் முதல் மனைவி ஒப்புதலுடன் மணக்கலாம். இருதார மணம் தடை செய்யப்பட்டிருப்பதாகக் முதல் மனைவி வழக்கு தொடுக்கவில்லையெனில் இது சட்டவிரோதமாகாது. மேலும் இரண்டாவது மனைவியுடன் தனது கணவன் செய்து கொண்ட திருமணத்தில் சப்தபதி என்ற சடங்கு நடத்தப்பட்டதை முதல் மனைவி நிரூபித்தால்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும்.
ஒரு மனைவிக்கு மேற்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் அனைவரின் ஒப்புதலும் பெற்றுத்தான் தத்து எடுக்க வேண்டும் என்று ‘இந்து தத்தெடுத்தல் சட்டம்’ கூறுகிறது. பலதார மணத்தை இந்துச் சட்டம் அங்கீகரிப்பதை இது மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிறது.
மணமக்களின் சம்மதம்
இசுலாமியச் சட்டம்; வயது வந்த ஆண் பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் வயது வந்த என்ற சொல்லுக்கு பருவம் வந்த என்று பொருளாதலால் 10 வயது சிறுமியைக்கூட பருவம் வந்த பெண் எனக் கூறி அவளது சம்மதத்தைப் பெற்றதாகக் கூறிவிட முடியும். அமீனா என்ற ஐதராபாத் சிறுமியை கிழட்டு அராபிய ஷேக்கிற்கு திருமணம் செய்து வைத்தது இப்படித்தான்.
இந்துச் சட்டம்; குழந்தை மணமாக இருக்கும் பட்சத்தில் அவர்களது காப்பாளர்களின் ஒப்புதலையும், அல்லது வயது வந்த மணமக்களாக இருப்பின் அவர்களது ஒப்புதலையும் ஏமாற்றியோ மிரட்டியோ பெற்றிருந்தால்கூட சடங்கு முடிந்துவிட்டால் திருமணம் செல்லும். மணமக்களின் ‘ஒப்புதல்’ என்ற அம்சத்திற்கே இந்துச் சட்டத்தில் இடம் கிடையாது. “கட்டாயத் திருமணம் என்ற காரணத்தைக் காட்டி திருமணத்தை ரத்து செய்யவோ மணவிலக்குப் பெறவோ முடியாது; ஏனென்றால் இந்துச சட்டப்படி திருமணம் என்பது புனிதமானது”என பல உயர்நீதி மன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மணவிலக்கு
இசுலாமியச் சட்டம்; கணவன் இதற்குக் காரணம் எதுவும் தெரிவிக்க அவசியமில்லை. மூன்றுமுறை தலாக் என்று கூறினால் போதுமானது. மனைவி, தன் கணவனை விவாகரத்து செய்ய விரும்பினால் வழக்கு தொடுத்து கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும்.
1.கணவனை நான்கு ஆண்டுகளாகக் காணவில்லை
2.தன்னை பராமரிப்பதில்லை.
3.ஆண்மையின்மை.
4.மனநிலை பிறழ்வு.
5.கொடுமைப்படுத்துதல்.
இந்துச் சட்டம்; இருவருமே மணவிலக்குச் செய்துவிட விரும்பினால் செய்து கொள்ளலாம். யாரேனும் ஒருவர் மட்டுமே மணவிலக்கு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும். இரண்டாண்டுகள் தொடர்பின்றி விட்டுச் செல்லுதல், கொடுமைப்படுத்துதல், மதம் மாறியிருத்தல், பால்வினை நோய், தொழுநோய், 7 ஆண்டுகளாகக் காணமல் போயிவிடுதல், வேறு நபருடன் பாலுறவு வைத்திருத்தல்
ஜீவனாம்சம்
இசுலாமியச் சட்டம்; விவாகரத்து செய்யப்பட்ட பெண் வேறொருவரை மணக்காமலும்.,கற்புநெறி பறழாமலும் இருந்தால் மட்டுமே உண்டு. இது தொடர்பாக ஷாபானு தீர்ப்புக்கெதிரான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் உள்ளன.
இந்துச் சட்டம்; கற்பிழந்தவள் என்று நிரூபிக்கப்படாமல் இருந்தால் உண்டு.
மணவாழ்க்கைக்கு வெளியே பாலுறவு
இசுலாமியச் சட்டம்; ஆணுக்கு நான்கு மனைவியர் வரை உண்டு. பெண் தன் கணவனைத் தவிர வேறு நபருடன் உறவு கொண்டிருந்தால் இ.பி.கோ. 494-வது பிரிவின்படி குற்றம்.
இந்துச் சட்டம்; திருமணமாகாத பெண்களுடன் கணவன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் மனைவியைப் பொருத்தவரை இது இ.பி.கோ.494-வது பிரிவின்படி குற்றம்.
குழந்தைகள் மீதான காப்பாளர் உரிமை
இசுலாமியச் சட்டம்; தந்தைதான் இயற்கையான காப்பாளர். தந்தை இறந்துவிட்டால் தந்தைவழிப் பாட்டன்.
இந்துச் சட்டம்; தந்தைதான் காப்பாளர். தந்தை இறந்தால் தாய். விவாகரத்து ஆகி பராமரிப்புக்காகக் குழந்தைகள் தாயிடம் விடப்பட்டாலும், காப்பாளர் தந்தைதான்.
கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!
வெள்ளாற்றில் விருத்தாசலம் அருகில் உள்ள கார்மாங்குடி மணல் குவாரி, மக்கள் போராட்டத்தின் வலிமை கொண்டு மூடப்பட்டிருக்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட இப்போராட்டம், மணற்கொள்ளை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்.
கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்
மணற்கொள்ளைக்கு எதிராகப் பலர் போராடியிருக்கின்றனர். பலரும் மணற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். பணத்தால் வாயை மூடு அல்லது பிணமாக்கி வாயை மூடு என்பதே மணற்கொள்ளையர்கள் அமல்படுத்தி வரும் விதி.
கார்மாங்குடி குவாரிக்கு எதிராகப் பல வடிவங்களில் போராடி மக்கள் நம்பிக்கை இழந்திருந்த சூழலில்தான் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இப்பிரச்சினையில் தலையிட்டது. கரையோர கிராமங்களில் ம.உ.பா.மையத்துடன் இணைந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களும் பிரச்சாரம் செய்தனர். மணல் கொள்ளையர்களின் இலஞ்சப்பணம் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பை விட மிகவும் கொடியதாக இருந்தது. குவாரியை எதிர்த்து யார் பேசினாலும், பணத்துக்காகத்தான் பேசுகிறான் என்று சந்தேகிக்கும் அளவுக்கு மக்களிடையே அவநம்பிக்கை பரவியிருந்தது. இந்த சூழலைக்கணக்கில் கொண்டு, “மணல் கொள்ளையர்களிடம் காசு வாங்குபவர்களை எதிர்த்து” தனது முதல் பிரச்சார சுவரொட்டியை வெளியிட்டது ம.உ.பா.மையம்.
“யாரும் சரியில்லை என்ற விரக்தியாகப் பேசிப் பயனில்லை. வாங்கின காசுக்காக குவாரிக்கு ஆதரவாக அயோக்கியன் வேலை செகிறான். யோக்கியன் ஏன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கிறான்?” என்று கிராமப் பிரச்சாரங்களின்போது ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு எழுப்பிய கேள்வி விவசாயிகள் பலரைச் சிந்திக்கத் தூண்டியது.
ஆர்ப்பாட்டம், வட்டாட்சியர் அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்கள் பரவலாக மக்கள் ஆதரவைப் பெருக்கின. ஆனால், அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்கவில்லை.
வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்
“வீட்டுக்கு ஒருவர் ஆற்றில் இறங்குவோம்! மணல் குவாரியை இழுத்து மூடுவோம்!!” என்ற முழக்கத்துடன் டிசம்பர் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் இறங்குவார்கள் என்பதை அதிகார வர்க்கமோ போலீசோ எதிர்பார்க்கவில்லை. நிலைமை புரிந்தவுடன் அவசரம் அவசரமாக ஆற்றில் நின்றிருந்த மணல் லாரிகளை அப்புறப்படுத்தினர். அங்கிருந்து சில கி.மீ. தூரத்தில் இருந்த மணல் யார்டுக்கு பலத்த போலீசு பாதுகாப்பு போட்டனர். ஆற்றில் இறங்கிய மக்களோ நேராகச் சென்று பொக்லைன் எந்திரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த எந்திரத்தையே மேடையாக்கிக் கொண்டு மக்களிடம் உரையாற்றினார் தோழர் ராஜு.
“மணல் கொள்ளையன் என்று தனியாக யாரும் இல்லை. அரசுதான் இந்த கொள்ளையை நடத்துகின்றது. இந்த ஆற்றின் உரிமையாளர்கள் மக்கள். அதிகார வர்க்கத்துக்கு இதன் மீது எந்த உரிமையும் இல்லை. குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என்பது நமது கோரிக்கை. அதே நேரத்தில், 3 அடி அளவுக்குத்தான் மணல் அள்ள வேண்டும் என்று அனுமதி வாங்கிக் கொண்டு 30 அடி ஆழம் அள்ளியிருக்கிறார்களே, அந்த குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும். சட்ட விரோத குவாரியை உடனே மூடவேண்டும்” என்று பேசினார்.
ஆற்று மணலைக் காக்க நூற்றுக்கணக்கி்ல திரண்ட மக்கள்
மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், களைத்துப்போய் தாமே கலைந்து விடுவார்கள் என்று கணக்குப்போட்டது போலீசு. “குவாரியை மூடாமல் இந்த இடத்தை விட்டு நாம் போகப்போவதில்லை” என்ற ராஜுவின் அறிவிப்பை மக்கள் அப்படியே எதிரொலித்தனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்.டி.ஓ. அழைத்தார். “தனியாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை, மக்கள் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை” என்று ராஜு கூறியதைப் பலத்த கையொலி எழுப்பி வரவேற்றார்கள் மக்கள்.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை அடங்கிய ஒரு குழு அமைப்பதாகவும் முறைகேடு நடந்திருக்கிறதா என்று ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அவர்கள் அறிக்கை தருவார்கள் என்றும் கூறினார் ஆர்.டி.ஓ. “எந்தக் குழுவின் ஆவறிக்கையைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. குவாரி வேண்டாம் என்பது மக்கள் கருத்து. எனவே, குவாரியை இந்தக் கணமே மூடவேண்டும். பொக்லைனை வெளியேற்ற வேண்டும்” தனது கருத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க, நூற்றுக்கணக்கான மக்களும் அதனை ஆமோதித்துக் குரல் எழுப்பினர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஆர்.டி.ஓ. உடனே மேலிடத்துடன் பேசி, குவாரியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார். “ஹிட்டாச்சியைக் கிளப்பு, கூடாரத்தைக் கலை” என்று முழக்கமிட்டனர் மக்கள்.
ஆற்று மணலைக் காக்க நூற்றுக் கணக்கில் திரண்ட மக்கள்
மணற்கொள்ளையர்களின் கொட்டகைக்குத் தீ வைத்தனர் சிறுவர்கள். “இது இறுதி வெற்றி என்று எண்ணாதீர்கள். நீங்கள் பல கோடி ரூபாய் பணத்தின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். உங்களை அப்புறப்படுத்தி விட்டு இதனை அள்ளுவதுதான் அந்த கொள்ளையர்களின் நோக்கம். அவர்கள் அவ்வளவு எளிதில் போய்விட மாட்டார்கள்” என்று எச்சரித்து, டிசம்பர் 15-ம் தேதி பொதுக்கூட்டம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் ராஜு.
போராட்டத்தில் முன்னணியில் இருந்த இளைஞர் அறிவரசன் மீது கரும்பு சக்கையைக் கொளுத்தியதாக வழக்கு, கீற்றுக் கொட்டகையைக் கொளுத்தியதாக பள்ளிச் சிறுவர்கள் மீது வழக்கு – என அச்சுறுத்தலைத் தொடங்கியதுடன், சாதிப்பூசலையும் உருவாக்க முனைந்தது போலீசு. “நாங்கள்தான் கொளுத்தினோம் என்று கிராமத்து மக்கள் அனைவரும் கைதாவோம்” என்று பதிலடி கொடுத்தவுடன் போலீசு பின்வாங்கியது. பயமுறுத்தல் பலிக்காதென்று தெரிந்தவுடன் பணத்தால் அடித்துவிடலாம் என்ற துணிச்சலில், பொதுக்கூட்டத்துக்கு சில தினங்களுக்கு முன் மீண்டும் குவாரியை இயக்கத் தொடங்கினர்.
இரவிலும் தொடர்ந்த களைத்துப் போகாத மக்கள் போராட்டம்
இவற்றையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து, கரையோரக் கிராமங்களில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளராக மருங்கூர் திரு.பஞ்சமூர்த்தி மக்களால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து பொதுக்கூட்டத்துக்குப் பதிலாக, 15-ம் தேதி குவாரியை மூடுவதற்கான போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முந்தின நாட்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும் ம.க.இ.க. வின் மையக் கலைக்குழுவும் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செதனர். குவாரியை மூட முடியும் என்பதில் முன்னர் இருந்திராத நம்பிக்கை இப்போது மக்களிடம் தோன்றியிருந்தது.
ஒரு பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் அழகை, அதன் வீரியத்தை, வேகத்தை, மக்களின் முன்முயற்சியை டிசம்பர் 15-ம் தேதி காலையில் வெள்ளாற்றில் காண முடிந்தது.
இந்த முறை எந்திரங்கள் ஆற்றில் இருந்தால் அவை மக்களால் உருட்டித்தள்ளப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் அனைத்தையும் முன்கூட்டிய அகற்றியிருந்தனர். சென்ற முறை ஆர்.டி.ஓ. வும் போலீசும் கொதிக்கும் வெயிலில் 3 கி.மீ. தூரம் ஆற்றுக்குள் நடந்து வரவேண்டியிருந்தது. இந்தமுறை ஆற்றுக்குள் சாலை அமைத்து போலீசு வாகனங்களைக் குவித்திருந்தனர்.
தனியறையில் பேச்சுவார்த்தை கிடையாது, மக்கள் முன்பே பேச்சுவார்த்தை என்ற மக்கள்திரள் வழியில் நடந்தது போராட்டம்.
கொதிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணமிருந்தது. தாகத்தால் தவித்தால் கூட்டம் கலைந்து விடும் என்று கணக்கு போட்டு, தண்ணீர் லாரியை தடுத்து நிறுத்தியிருந்தது. அருகாமை கரும்பு வயல்களிலிருந்து கரும்பை ஒடித்து மக்களுக்கு விநியோகித்தனர் இளைஞர்கள். தாகத்தில் தவித்த பெண் போலீசாரும் கூச்சத்துடன் கரும்புத் துண்டுகளை வாங்கி கடித்துக் கொண்டனர்.
இடைப்பட்ட நாட்களில் ஆற்றினை அளந்து ஆய்வு செய்து முறைகேடு குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டியிருந்த ராஜு, அவற்றை மக்களுக்கு விளக்கி, இந்தக் கொள்ளையை நடத்துவதே அரசுதான் என்பதால், மக்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டுதான் ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று விளக்கினார். மணல் கொள்ளை காரணமாக கரையோர கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கியதுடன், ம.உ.பா. மையத்துடன் இணைந்து குவாரியை நாம் நிரந்தரமாக மூட முடியும் என்று நம்பிக்கையூட்டினார் மருங்கூர் பஞ்சமூர்த்தி.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் போராட்ட அனுபவங்களை விரித்துக் கூறிய வழக்குரைஞர் வாஞ்சிநாதன், நீதிமன்றத்தால் ஒருக்காலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பதையும் விளக்கினார். ம.க.இ.க. கலைக்குழுவினர் சளைக்காமல் நாள் முழுவதும் பாடிய வண்ணமிருந்தனர். “வெள்ளாற்று மணலைக் காக்க வெள்ளமாக ஆற்றிலிறங்கு” என்ற பாடல் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து இசைக்கும் அவர்களது சோந்தப் பாடலாகவே மாறியது. ஆற்றிலேயே சோறு பொங்கி சாதி பேதமின்றி அனைவரும் அமர்ந்து உண்டனர். தேநீர், வேர்க்கடலை வியாபாரிகளும் வந்து சேர போராட்டம் ஒரு திருவிழாவின் தோற்றத்தைப் பெற்றுக் கொண்டது.
மக்களின் போராட்டத்தால் கார்மாங்குடி மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளு வெற்றிச் செய்தியை ஊடகங்களிடம் தெரிவிக்கும் வழக்குரைஞர் ராஜூ. அருகில் (இடது) வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருங்கூர் பஞ்சமூர்த்தி.
போராட்ட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான காரணத்தினால் பீதியுற்ற மாவட்ட நிர்வாகம், கரையோர கிராமங்கள் அனைத்திலும் கேபிள் டிவியை துண்டித்து, மக்கள் திரள்வதைத் தடுக்க முனைந்தது. போலீசு படையை இறக்கி மிரட்டியது. அரசு தரப்பில் யாரும் பேச வரமாட்டார்கள் என்று அச்சுறுத்தியது. “குவாரியை மூடாமல் நாம் போவதில்லை. இரவு ஆற்றிலேயே தங்குபவர்கள் எல்லாம் கை உயர்த்துங்கள்” என்று ராஜு கூறியவுடன் எல்லோர் கைகளும் உயர்ந்தன.
இரவு ஜெனரேட்டர் மின்சாரத்தில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தமது போராட்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் மக்கள். அதிகாலையில் காலைக்கடன் முடிப்பதற்காக மக்கள் கலைந்திருந்த தருணத்தில், ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களில் போலீசைக் குவித்து ஆற்றுக்குள் செல்லவிடாமல் மக்களைத் தடுத்தது போலீசு. யாரும் அஞ்சிப் பின்வாங்குவதாக இல்லை.
வேறு வழியில்லாமல் ஆர்.டி.ஓ.வும் டி.எஸ்.பி.க்களும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். “இது பற்றி நான் பேச முடியாது. டெக்னிகல் மேட்டர்” என்ற ஆர்.டி.ஓ.விடம், “இந்தப் பள்ளம் 3 அடியா, 30 அடியா என்று கண்டுபிடிப்பது டெக்னிகல் மேட்டரா?” என்று பதில் கேள்வி எழுப்பினார், வழக்குரைஞர் ராஜு. அன்றைய நாள் முழுவதும் அதிகாரிகளுடன் மக்களின் முன்னிலையில் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள், அதிகாரத் வர்க்க மழுப்பல்களையும், அதிகார தோரணையையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்தன.
பிற்பகலில் வானம் இருண்டு மழை கொட்டத் தொடங்கியது. எனினும் கூட்டம் கலையவில்லை. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோரியிருக்கும் ஆவணங்களையும், எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கான பதிலையும் பொதுப்பணித்துறையிடமிருந்து பெற்றுத் தருவதாகவும், அதன் அடிப்படையில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை முடிவு செய்யலாம் என்றும், அதுவரை குவாரியை மூடுவதாகவும் ஆர்.டி.ஓ. அறிவித்தார்.
“இந்த முடிவை ஏற்கலாமா, போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாமா” என்ற கேள்வியை ஒலிபெருக்கியில் எழுப்பி மக்களின் கருத்தைக் கூறுமாறு ராஜு கேட்டுக் கொண்டார். ஒத்தி வைக்கலாம் – கூடாது என்ற இருவிதமான கருத்துகளும் வெளிப்படையான விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டன.
“அதிகாரிகளை நம்பி நாம் போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை. அவர்களது நோக்கம், மணல் கொள்ளையை நடத்துவதுதான்; அதைத் தடுப்பதே நமது பணி. இந்த இடைக்காலத் தடையைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தை மேலும் பலப்படுத்துவோம். பொக்லைன்கள் ஆற்றில் இறங்கினால் அடுத்த கணமே நாமும் இறங்குவோம். இது ஒருநாள் இரண்டு நாளில் முடியப்போகிற போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக அரசு தொடுத்திருக்கின்ற போர் என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்” என்று ராஜு தனது இறுதி உரையை நிகழ்த்தினார். ஒரு மனதாக முடிவெடுத்த மக்கள் திரள் வெள்ளாற்றின் குறுக்கே கார்மாங்குடியை நோக்கி பேரணியாக நடக்கத்தொடங்கியது.
வெள்ளாற்றின் கரையோர கிராமத்து மக்களுக்கு அவர்களது ஆற்றல் என்ன என்பதை இப்போராட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. ஜனநாயக பூர்வமான வழிமுறைகளுக்கு மக்களைப் பயிற்றுவித்திருக்கிறது. தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டியிருக்கிறது. மணல் குவாரியையும் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
ராணிப்பேட்டை சிப்காட் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரசாயனக் கழிவு சேற்றை தேக்கி வைக்கும் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியான அதே நாள் (ஜனவரி 31, 2015) மாலையில் சென்ற ஆண்டு தோல் ஏற்றுமதியில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்த மையத்தில் நடைபெற்றது. அதில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களைப் பற்றி ஊடகங்களும் முற்றிலும் மறந்து விட்ட சூழலில், ராணிப்பேட்டையில் இரசாயனக் கழிவு சகதியை நீக்கும் பணியில் தீயணைப்புப் படையினரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களும் ஈடுபட்டிருந்த அடுத்த 3 நாட்களில் (பிப்ரவரி 1, 2, 3 தேதிகள்) சென்னை வர்த்தக மையத்தில் ஐரோப்பிய, அமெரிக்க தோல் வர்த்தகர்களுடன் இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தக பேரங்களும், ஒப்பந்தங்களும் குளிரூட்டப்பட்ட சர்வதேச தரத்திலான சூழலில் நடந்து கொண்டிருந்தன.
இந்தியா சர்வதேச தோல் கண்காட்சியின் நேர்த்தியான முகப்பு
ராணிப்பேட்டை சிப்காட்டில் குவிந்திருந்த இரசாயனக் கழிவு
பல கோடி ரூபாய் செலவில் சர்வதேச தோல் கண்காட்சி கோலாகலம்
அழிவுக்கு பொறுப்பேற்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய தோல் ஆராய்ச்சி கழகமுமே ஆய்வு செய்யும் அவலம்.
கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முன்னேறிய தொழில்நுட்பத்தை அமல்படுத்தியுள்ள தமிழ்நாட்டிலேயே தொழிலாளர்களின் உயிருக்கும், சுற்றுப் புற பகுதிகளின் நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்தியாவின் பிற பகுதிகளான கொல்கத்தா, கான்பூர், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமையை கற்பனை செய்து கொள்ளலாம்.
சென்னை சர்வதேச தோல் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், உலகெங்கும் தோல் தொழிற்சாலைகளின் வேலைச் சூழலை காட்டும் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தமது லாப வேட்டைக்காக மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டி, சுற்றுச் சூழலை ஈவு இரக்கமின்றி சீரழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கோர முகத்தை தெரிந்து கொள்ளலாம்.
தோல் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட, கம்பளம் விரிக்கப்பட்ட, மெருகூட்டப்பட்ட அரங்குகளில்…
அழுகும் பச்சைத் தோலின் நாற்றம் சூழ, இரசாயன கழிவு நீரில் கால் புதைந்து நிற்கும் இந்தியாவின் எதிர்காலம்…
தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் நலனை உறுதி செய்வதற்கான அரசு உறுப்புகளோ சீர்குலைந்து போயுள்ளன. ராணிப்பேட்டை சிப்காட் கொலைகளுக்கு முதன்மை பொறுப்பாளர்களான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோரை தேடிப் பிடிப்பதற்கு 7 பேர் கொண்ட ஒரு சிறப்புப் போலீஸ் படை அமைக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது. பல கோடி ரூபாய் சொத்துக்கள் உடைய, தொழிற்சாலை முதலாளிகளான இவர்களை பிடிப்பதற்கு சிறப்புப் படை அமைப்பதிலேயே போலீஸ் யார் கையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படி தொங்கும் தோல்கள்…
இப்படித்தான் தயாராகின்றன…
இவர்களின் கோடி ரூபாய் பேரங்களுக்கு…
இவர்களின் வாழ்க்கை தேய்க்கப்படுகிறது…
இத்தகைய பேரழிவுகளை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள தோல் ஆராய்ச்சிக் கழகமும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் கண்காணிப்பை அமல்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், இந்த விபத்து தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று பசுமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம், தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பின் யோக்கியதை இதுதான்.
வெளிநாட்டு தொழில்நுட்பம் விஷத்தையும் பளபளப்பாக்கிக் காட்டும்.
தோல் தொழிலாளர்களுக்கு வேலையே விஷமாகும்…
ஐரோப்பிய கனவான்களின் சூட்டு, கோட்டுக்கு….
கான்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கை கரைகிறது…
கடைசியாக மத்திய அரசு, “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் தோல் துறையை “கவனம் குவிக்க வேண்டிய துறை” என்று அறிவித்து இந்தத் துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளில் $2700 கோடி (சுமார் ரூ 1..6 லட்சம் கோடி) ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்கான “மேக் இன் இந்தியா” தொழிலாளர்களுக்கு கொண்டு வரும் வேலை வாய்ப்புகளின் இலட்சணத்தையும், முதலாளிகளுக்கு கொண்டு வரும் சுகவாழ்வையும் புரிந்து கொள்ள தோல் கண்காட்சி காட்சிகளையும் ராணிப்பேட்டை விபத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
சி.எல்.ஆர்.ஐ (மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்), சி.எல்.ஈ (தோல் ஏற்றுமதி குழுமம்), ஐ.டி.பி.ஓ (இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம்) காட்டும் “எதிர்கால கனவுகள்”
இந்திய தோல் தொழிலாளர்களின் இருள்சூழ்ந்த வாழ்க்கை
சொகுசான வர்த்தக பேரங்களுக்கு பின்னே….
தொழிலாளர்களின் குனிந்த முதுகுகள்…
தோல் செருப்பணிந்த கால்களை நெற்றியில் தாங்கலாம்.
அந்தத் தோல் செய்யும் தொழிற்சாலையில் குடியிருக்க முடியுமா?
தோல் கண்காட்சி படங்கள் : வினவு செய்தியாளர்கள்
தோல் தொழிற்சாலை படங்கள் : இணையத்திலிருந்து
கீழே ராணிப்பேட்டையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் (படங்கள் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்)
இரசாயன மூட்டைகள்
தோல் பதனிடும் உருளைகள்
ஆலை பணிச்சூழல்
நூற்றுக்கணக்கான ரசாயனங்கள்
தோல் ஆலை கழிவு நீர்
செருப்பு கூட இல்லாமல் இரசாயனங்களுக்கு மத்தியில்
செருப்பு கூட இல்லாமல் இரசாயனங்களுக்கு மத்தியில்
கொட்டப்பட்டிருக்கும் கழிவு தோல்கள்
கொட்டப்பட்டிருக்கும் கழிவு தோல் துண்டுகள்
சாயக்கழிவு நீர்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
ஆற்று மணற்கொள்ளை தமிழகத்தின் நதிகள் அனைத்தையும் அடியோடு நாசப்படுத்தி வருகிறது. இக்கொள்ளையின் பண மதிப்பு ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் வேறு பாதிப்புகள் – நிலத்தடி நீர் மட்டம் சரிவது, குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாய நிலங்கள் தரிசாவது போன்றவை ஒரு பேரழிவை நோக்கித் தமிழகத்தைத் தள்ளிவருகின்றன. இம்மணற்கொள்ளையைத் தடுத்து, தமிழக நதிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மணற்கொள்ளை மாஃபியா கும்பல்கள் இலஞ்சத்தின் மூலம் சீரழித்து வேரறுத்துவிடுகின்றன. அல்லது, அச்சுறுத்தல், கொலை, வழக்கு, சிறை எனக் கொடூரமாக ஒடுக்கித் தோற்கடித்துவிடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் கார்மாங்குடி மணல் குவாரியை எதிர்த்து, ஆசைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பணியாத மக்கள் திரள் போராட்டம் வெடித்திருக்கிறது.
தாமிரபரணியில் நடந்த மணற்கொள்ளையால் நேர்ந்த பாரதூரமான விளைவுகளை நீதிமன்றத்திடம் அறிக்கையாக அளித்த பேராசிரியர் எம்.அருணாசலம்.
விருத்தாசலம் நகருக்கு அருகேயுள்ள கார்மாங்குடி கிராமத்தையொட்டி ஓடும் வெள்ளாறில் அமைந்துள்ள மணல் குவாரியை மூடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு நடத்திவரும் தொடர் போராட்டங்களின் விளைவாக அம்மணல் குவாரியைத் தற்காலிகமாக மூடியிருக்கிறது, தமிழக அரசு. இப்போராட்டம் தொடர்பாக அக்கிராம மக்களையும் அப்போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களையும் சந்தித்த நாம், இது தொடர்பாகவும் தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளை தொடர்பாகவும் மேலும் விவரங்களைச் சேகரிக்க முடிவு செய்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் புலத்தின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் அருணாசலம் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடைசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட கமிட்டியில் பேராசிரியர் அருணாசலமும் ஒருவர். தாமிரபரணியில் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும், அதனால் ஏற்பட்டிருந்த பாதிப்புகளையும் அறிக்கையாக அளித்த பேராசிரியர் அருணாசலம், தாமிரபரணியில் மணல் அள்ளுவதைத் தடைசெய்யும்படி நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தார். இக்கமிட்டி அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தாமிரபரணியில் ஐந்தாண்டுகள் மணல் அள்ளுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது, உயர் நீதிமன்றம்.
கார்மாங்குடி மணல் குவாரியில் நாம் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, “ஒரு ஆறு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இதுவொரு உதாரணம்” எனக் கூறினார், அவர். சத்தியமான வார்த்தைகள் இவை.
கார்மாங்குடி மணல் குவாரியில் கால் வைத்தவுடனேயே ஏதோவொரு வேற்று கிரகத்தில் இறங்கிவிட்ட உணர்வுதான் எமக்கும் மேலிட்டது. ஒருபுறம் 30 அடி ஆழமுள்ள கிடுகிடு பள்ளம்; இன்னொருபுறம் இரண்டு ஆள் மட்டத்திற்கு அரைவட்ட வடிவில் முக்கால் கி.மீ. தொலைவுக்குச் செல்லும் கணவாய் போன்ற பள்ளம். கட்டாந்தரையைத் தொடும் அளவிற்கு மணலை வாரி எடுத்துச் சென்றதால் விட்டுவிட்டு உருவாகியிருக்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள்; கழிவு மணலைக் கொட்டியதால் உருவாகியிருக்கும் திட்டுகள்; மணலை அள்ளிச் செல்வதற்காக ஆற்றினுள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டிருந்த சாலைகள் என அந்த ஆறு சிதைந்து சின்னாபின்னாமாகியிருந்தது. பேராசிரியர் அருணாசலம் சொன்ன வார்த்தைகள் வெள்ளாறுக்கு மட்டுமல்ல, மணல் கொள்ளை நடைபெறும் தமிழகத்தின் ஆற்றுப் படுகைகள் அனைத்திற்கும் பொருந்திப் போகும்.
வெள்ளாறில் இந்த ஆண்டின் (2014) தொடக்கத்தில்தான் மணல் அள்ளுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதை நாம் சுட்டிக்காட்டியவுடனேயே, ஓராண்டுக்குள்ளாகவே அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட பத்துமடங்கு மணல் கொள்ளை நடந்திருப்பதை இப்புகைப்படங்கள் காட்டுவதாகச் சொன்ன பேராசிரியர் அருணாசலம், இம்மணற்கொள்ளையால் வெள்ளாறில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இயற்கை தானாகவே சீர்செய்து கொள்வதற்கு, அதாவது கொள்ளையடிக்கப்பட்ட மணலை இயற்கை உற்பத்தி செய்வதற்கு வெள்ளாறில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு வெள்ளம் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இயற்கையின் ஐம்பது ஆண்டு கால உற்பத்திப் பொருளை எவ்வித அறநெறிகளுக்கும் கட்டுப்படாமல் ஒரே ஆண்டில் கொள்ளையடித்திருப்பதுதான் உண்மையிலேயே பயங்கரவாதம்.
ஆற்றின் உயிரோட்டம் குறித்து . . .
“ஆற்றில் ஓடிவரும் நீரை மணல்தான் பிடித்து வைக்கிறது. கட்டாந்தரை தெரியும் அளவிற்கு, களிமண் வரும் வரையிலும் மணல் சுரண்டப்பட்டுவிட்டால், அந்த ஆற்றலை ஆறு இழந்துவிடுகிறது. அதன் பிறகு, ஆறும் நமது வீட்டு குழாயும் ஏறத்தாழ ஒன்றுதான். வீட்டுக் குழாய்கள் திறந்தவுடன் தண்ணீரைச் சடசடவெனக் கொட்டித் தீர்ப்பது போல, ஓடிவரும் நீரை விரைவாகக் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிடும் உயிரற்ற கடத்தியாக ஆறு மாறிவிடும். இப்படி கடலை நோக்கி வேகமாக ஓடிவிடும் நீரை, கோபமான தண்ணீர் (angry water) எனக் குறிப்பிடுவோம்” என்கிறார் பேராசிரியர் அருணாசலம்.
கார்மாங்குடி மணல் குவாரியில் நடந்துள்ள மணற்கொள்ளையின் விளைவாக கட்டாந்தரையாகி, குட்டையைப் போல மாறிப் போன வெள்ளாற்றுப் படுகை மற்றும் வெட்டி்க கூறு போடப்பட்டுள்ள ஆற்றங்கரை.
“நீரோட்டம் இருப்பது மட்டுமே ஆற்றின் அளவுகோல் இல்லை. நீரோட்டத்தோடு, ஆற்றின் கரைகள், அக்கரைகளையொட்டி வளர்ந்திருக்கும் தாவர வகைகள், ஆற்றினுள் வளர்ந்து நிற்கும் புல் வகைகள், ஆற்று நீரில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்துவரும் மைக்ரோப்ஸ் (microbes) எனப்படும் நுண்ணுயிரிகள், அவற்றை உண்டு வாழும் மீன்கள் என இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு நதியை உயிரோட்டமிக்கதாக” வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆற்று மணலை அடியோடு அள்ளுவதால் மட்டும்தான் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றில்லை. மணலை அள்ளும்பொழுது ஆற்றின் கரைகளுக்குச் சேதம் ஏற்பட்டு, அவை பலவீனப்படும்பொழுது, ஆற்றின் கொள்ளளவு குறைந்து அதன் காரணமாகவும் மணல் அள்ளும் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும்” என எச்சரிக்கிறார்.
“ஆறு உற்பத்தியாகும் இடம் தொடங்கி, அது சமவெளிப் பகுதியில் பாய்ந்து கடலில் கலக்கும் வரையிலும் அதன் இரு கரைகளிலும் வளர்ந்து நிற்கும் தாவர வகைகள் ஆற்றின் நீரோட்டத்திற்கு அவசியமானவை. அத்தாவரங்கள் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தமது தேவைக்கும் அதிகமான நீரை உறிஞ்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அரணாக விளங்குகின்றன. கோடைக் காலங்களில் தம்மிடமிருந்து நீரை வெளியேற்றுவதன் மூலம் ஆறு வறண்டு போய்விடாமல் காப்பாற்றுகின்றன.
ஆற்றுப் படுகையையொட்டியுள்ள மண்ணின் தன்மைக்கேற்ப இயற்கையாக வளரும் தாவர இனங்களுக்கு மட்டும்தான் ஆற்றின் நீரோட்டத்திற்கு உதவும் இந்த ஆற்றல் உண்டு. இந்த இயற்கை தாவரங்கள் அழிக்கப்பட்டால் அல்லது நதிக்கு அந்நியமான தாவர இனங்கள் அதன் கரைகளில் வளர்க்கப்பட்டால் இந்த தொடர்சங்கிலி விளைவுகள் அற்றுப் போய்விடும். மணிமுத்தாறு பாய்ந்துவரும் பகுதியில் அதற்கு அந்நியமான தேயிலை எஸ்டேட்டுகள் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதனின் நீரோட்டமே பாதிக்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மேலே : மணல் வாரப்பட்டதால் அடிப்பகுதி பலவீனமடைந்து காணப்படும் கரை. கீழே : இயற்கையான முறையில் அமைந்த ஆற்றங்கரை.
இந்த மண்ணுக்கே உரிய தேக்கு மரங்களை எடுத்துக் கொண்டால், அவை தமது தேவைக்கும் அதிகமான நீரை இலைகளின் வழியாக ஆவியாக வெளியேற்றுவதன் மூலம், காடுகளின் தட்பவெப்பத்தை சமநிலைப்படுத்துவதோடு, மழைப் பொழிவுக்கும் உதவுகின்றன. கோடைக் காலங்களில் தமது நீர்த் தேவையைக் குறைத்துக் கொள்ள இலைகளை உதிர்த்து விடுகின்றன. அதேசமயம், இந்த மண்ணுக்கு அந்நியமான யூகலிப்டஸ் மரங்கள் தாம் உறிஞ்சும் நீரை ஆவியாக வெளியேற்றுவதேயில்லை. அதனால்தான் யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீர்க் கொள்ளையனாக மக்களால் அடையாளம் காட்டப்படுகின்றன” என இந்த உயிர்ச் சங்கிலியை அடுக்கடுக்காக அவர் விளக்கியபொழுது, ஆற்றையும் தாவரங்களையும் குறித்த நமது அறியாமையை எண்ணி வெட்கம் கொள்ள வேண்டியிருந்தது.
வெள்ளாற்றின் உயிர் அறுக்கப்பட்டால். . .
ஆற்றின் இந்த உயிரோட்டத்தையும் உயிர்ச் சங்கிலித் தொடரையும் பாதுகாக்கும் நோக்கில்தான்,
“ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம் வரை மட்டுமே தோண்டி மணலை அள்ள வேண்டும்;
மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர, இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், கொடிக்கம்பங்களும் நட்டுப் பிரித்துக் காட்ட வேண்டும்.
மணலை அள்ளும்பொழுது ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.
ஆற்றின் இரு கரைகளிலும், கரைகளையொட்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் தாவரங்களைச் சேதப்படுத்தக் கூடாது. கழிவு மணலை ஆற்றில் கொட்டக்கூடாது.
ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.
மணலை அள்ளும்பொழுது நீர் ஊறினால், அந்தப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.
மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது;
மணல் அள்ளும் போக்கில் ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை ஏற்படுத்தக் கூடாது”
என்றவாறு பல்வேறு சட்டங்களும், உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்களும் இருப்பதை எடுத்துக்கூறிய பேராசிரியர் அருணாசலம், இவை ஒவ்வொன்றும் கார்மாங்குடி மணல் குவாரியில் மீறப்பட்டிருப்பதைப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டினார்.
வெள்ளாறு பள்ளமும் மேடுமாகக் கூறு போடப்பட்டிருப்பது, அந்த ஆற்றின் போக்கையே – மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறு, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், கார்மாங்குடி மணல் குவாரியிலிருந்து கிட்டதட்ட 60 கி.மீ. தொலைவில் கடல் அமைந்துள்ளதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்பொழுது கடல் நீர் உள்ளே புகுந்துவிடும் அபாயமுள்ளது. ஆற்றுப் படுகையின் கட்டாந்தரை தெரியும் அளவிற்கு மணல் கொள்ளையிடப்பட்டு, கரைகள் பலவீனப்படுத்தப்பட்டு, கரைகளையொட்டியுள்ள தாவர இனங்கள் அழிக்கப்பட்டு ஆற்றின் நீர்ப் பிடிப்பு நிரந்தரமாகப் பாதிக்கப்படும்பொழுது, மணல் குவாரி அமைந்துள்ள ஆற்றுப்படுகையின் 30 கி.மீ. சுற்றளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிடும்.
கார்மாங்குடியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நெல்லும் கரும்பும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கடல் நீர் உள்ளே புகுந்தால் இந்தச் சாகுபடி படிப்படியாக அழிவைச் சந்திக்க நேரிடும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பூமிக்கடியில் வெற்றிடம் ஏற்படும்பொழுது, இக்கிராமப்புறங்களில் உள்ள கான்கிரீட் கட்டிடங்கள் பூமிக்குள் சிறுகச்சிறுக இறங்கும் அபாயமுண்டு என்றெல்லாம் மணல் கொள்ளையின் பாதிப்புகளைப் பட்டியலிட்ட பேராசிரியர் அருணாசலம், “இந்தப் பாதிப்புகள் உடனடியாக நேர்ந்துவிடாது; ஆனால், காலப்போக்கில் இப்பகுதியைச் சேர்ந்த எதிர்கால சந்ததியினர் இத்தகைய அபாயங்களைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.
தமிழக நதிகளின் சிறப்பு, மணல் கொள்ளைக்கா?
ஆற்றின் போக்கையும், மண் குவியும் இடத்தையும் காட்டும் வரைபடம்.
“குன்று நீரோட்டம், சமவெளி நீரோட்டம், கழிமுகப் பகுதி நீரோட்டம் என ஆறுகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். தமிழக ஆறுகள் அனைத்தும் இந்த மூன்று அம்சங்களையும் கச்சிதமாகக் கொண்டிருப்பதுதான் அவற்றின் தனிச்சிறப்பு. குறிப்பாக, தமிழகத்தின் ஆறுகள் சமவெளிப் பகுதியில் அதிக தொலைவுக்கு ஓடிவருவதன் காரணமாகவே, இங்கு மணல் வளமும், மண் வளமும் செழித்துக் காணப்படுகின்றன” என விளக்கிய அவர், கேரளாவில் 40-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடினாலும், அவை தமிழக ஆறுகளைப் போல சமவெளிப் பகுதியில் நெடுந்தொலைவு ஓடுவதில்லை. இதன் காரணமாகவே கேரள ஆறுகளில் பாயும் தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதோடு, அவற்றிலிருந்து மண் எடுப்பதும் எளிதானதாகவும், மலிவானதாகவும் இருக்க சாத்தியமற்றுப் போவிட்டது” என்பதைத் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்திற்கு இயற்கை தந்திருக்கும் இந்தக் கொடை வரைமுறையின்றிச் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவது நமது காலத்தின் கொடுந்துயரம். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இத்தகையதொரு மணல் கொள்ளை நடப்பதைக் காண முடியாது. “அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அகலம் கிட்டதட்ட 9 கி.மீ. இருக்கும். ஒரு கரையிலிருந்து மறுகரையைப் பார்க்கக்கூட முடியாது. அப்படிபட்ட வற்றாத, பிரம்மாண்டமான நதியில்கூட இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்காமல், மனித உழைப்பைப் பயன்படுத்திதான் மண் அள்ளப்படுவதை நான் நேரடையாகவே பார்த்தேன்” எனக் குறிப்பிட்ட பேராசிரியர் அருணாசலம், “ஆற்று மணலை அள்ளாமல் போனால் வளர்ச்சி முடமாகிப் போய்விடும்” என இந்தக் கொள்ளைக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதத்தின் மோசடித்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.
தமிழக மணல் எங்கே போகிறது?
கேரளாவில் ஆற்று மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அம்மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுப் போய்விட்டது எனச் சொல்ல முடியுமா? என்ற நியாயமான வாதத்தை முன்வைத்த பேராசிரியர், “தமிழகத்தில் இதுவரை அள்ளப்பட்டுள்ள மணலை வைத்துக் கணக்கிட்டால், தமிழகத்தில் சிங்கப்பூர் அளவிற்கு கட்டுமானங்கள் உருவாகியிருக்க வேண்டும். அப்படிபட்ட வளர்ச்சி இல்லையெனும்பொழுது எடுக்கப்பட்ட மணலில் பெரும்பகுதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். “தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் எவ்வளவு மணல் எடுக்கப்படுகிறது, தமிழகத்தின் மணல் தேவை என்ன என்பதையெல்லாம் வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் கடத்தப்படுவதற்காகவே மணல் கொள்ளையடிக்கப்படுவதை நாம் புரிந்துகொள்ள முடியும்” எனத் தர்க்கரீதியாகத் தெளிவுபடுத்தினார்.
“வளர்ச்சி குறித்து இந்தியாவிற்கு பாடம் எடுத்துவரும் மேற்கத்திய நாடுகளில்கூட இந்த அளவிற்கு மணல் கொள்ளை நடப்பதில்லை” எனக் கூறிய அவர், “ஒரு ஆற்றில் ஆண்டுதோறும் எவ்வளவு மணல் சேருகிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்பவே அந்த நதியிலிருந்து மணலை அள்ளும் அளவை நிர்ணயிக்கும் மணல் பட்ஜெட் முறையை அந்நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. இந்த மணல் பட்ஜெட் முறை அந்நாடுகளில் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இல்லை என்பதோடு, ஆறுகளையும் சாகடிப்பதில்லை” என்றார். மேலும், மணலுக்கு மாற்றாக அந்நாடுகளில் எம்.சாண்ட், டால்கம் ஆகியவைப் பயன்படுத்தப்படுவதையும், கேரளாவில்கூட மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார், அவர்.
“மனிதனால் உற்பத்தி செய்யப்படும் சிமெண்டிற்கு ரேஷன் முறை இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவை என்பதும் கணக்கிடப்படுகிறது. ஆனால், மனிதனால் உற்பத்தி செய்ய முடியாத மணலுக்கு இந்தக் கட்டுபாடுகள் தமிழகத்தில் விதிக்கப்படவில்லை. கட்டுப்பாடற்ற இந்த மணற்கொள்ளைத் தமிழகத்தைப் பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது” என்றார் அவர்.
அரசு, அதிகார வர்க்கம் – மணற்கொள்ளையர்களின் பாதுகாவலன்!
“இயற்கையின் கொடையான மணலைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, போலீசு துறை அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, நீதிமான்களும்கூட கட்டுப்பாடற்ற மணற்கொள்ளையால் தமிழக ஆறுகளுக்கு நேர்ந்துவரும் பேரழிவைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மணற் கொள்ளையால் விவசாயமும் சுற்றுப்புறச் சூழலும் பல்லுயிர்ப் பெருக்கமும் அழிவதை எடுத்து வைத்து வாதாடினால், நீதிமன்றங்கள் அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதற்கு எதிராக வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற மோசடியான வாதத்தை முன்வைத்து இக்கொள்ளையைச் சட்டபூர்வமாக்கிட முயலுகிறார்கள். இனி வேலைவாய்ப்பு என்பதைக் காட்டி கள்ளச் சாராயம் காய்ச்சுவதையும் விபச்சாரத்தையும் அனுமதித்துவிடத் துணிந்துவிடுவார்கள் போல!” என வேதனையோடு தெரிவித்த அவர், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பசுமைத் தீர்ப்பாயங்கள் மிகவும் வெளிப்படையாகவே இயற்கை வளங்களைச் சூறையாடிவரும், அதனை மாசுபடுத்தி வரும் கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொள்வது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு பெருந்தடையாக உள்ளது” என அம்பலப்படுத்தினார்.
“ஆறுகளும் மணலும் தமிழக மக்களின் பொதுச் சொத்து. அரசு, இதனை மக்களின் சார்பில் பாதுகாக்க வேண்டிய பாதுகாவலன்தானே தவிர, இதனை விற்பனை செய்வதற்கான எஜமானமோ, ஏஜெண்டோ கிடையாது. ஆனால், இதனைப் பாதுகாக்க வேண்டிய அரசே இன்று இதனை அழிக்கும் வில்லனாக உருவெடுத்திருக்கிறது. எனவே, இனி அரசை நம்பாமல் ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கடமையையும் பொதுமக்களே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது” என மாற்றுவழியை முன்வைத்த பேராசிரியர் அருணாசலம், “வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தையும் தமிழகத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் மணல் கொள்ளைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களையும் இதன் தொடக்கப்புள்ளியாக”க் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இளங்கதிர் உதவியுடன் – ஆர்.ஆர். __________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________
ஊழல் ராணியின் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஊழல் சக்கரவர்த்தி!
ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பாசிச ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? மக்களை ஏமாற்றி நாமம் போட்டு அதே நாமத்தை இன்று அடையாளமாக்கி பாஜகவின் பல்லக்கில் பவனி வருகிறார் இவர். திருச்சி சென்று வினவு செய்தியாளர்கள் திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை. படியுங்கள். பாஜகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துங்கள்!
– வினவு
சுப்ரமணிய வைரஸ் நிகழ்த்திய முதல் தாக்குதல்!
“தோழரே, சரியா சொல்லணுமுனா அது 1993-ம் வருசம். எங்க ஊரு திருச்சி துறையூருக்கு பக்கத்தில இருக்கும் கரட்டாம்பட்டி. ரொம்ப சின்ன கிராமம். மக்கள் யாருக்கும் பெரிசா படிப்பறிவு கிடையாது. ஊர்ல படிச்ச முதல் தலைமுறையே என்னோடது தான்.
93-ம் வருசத்தில ஒரு நாள் ஊரெல்லாம் பரபரப்பா இருந்திச்சி. யாரோ எங்க வயல்லே அஸ்திவாரம் பறிக்கிறாங்கன்னு பேசிகிட்டாங்க. எல்லாரும் அவங்கவங்க வயலைப் பார்க்க ஓடிப் போனோம். எங்களுக்கு ஒரு ஏக்கர் 41 செண்டு நிலம் இருந்திச்சி. அந்த சமயத்துல எங்க நிலத்தில சோள விதை தூவி இருந்தோம்”
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
“நாங்க போய் பார்க்கும் போது ஏதேதோ மிஷின்லாம் எறக்கியிருந்தாங்க. எங்க நிலத்துல கோடு கிழிச்சி பள்ளம் பறிச்சிட்டு இருந்தாங்க. என்னோட நிலத்துல தூவி இருந்த சோளத்தையெல்லாம் வாரிக் கொட்டிட்டாங்க. துரைசாமி தம்பு ரெட்டியாரு எல்லாத்தையும் மேப்பார்வை பார்த்துகிட்டு நின்னாரு”.
“ ’என்னா துரைசாமி இது.. கேக்காம கொள்ளாம அஸ்திவாரம் பறிக்க வந்திருக்கியே இது என்னா நாயம்னு’ அவரைப் பார்த்து கேட்டோம். அதுக்கு அவரு, ‘எல்லாம் ஊர் நன்மைக்குத் தான்.. இங்க ஒரு காலேஜு வரும் நம்ம பிள்ளைங்க எல்லாம் படிக்கலாம். ஒரு நல்ல காரியத்த தடுக்காதீங்க’ அப்படின்னு சொன்னாரு”
”துரைசாமி ரெட்டியாரு தி.மு.க கட்சிக்காரரு. அப்ப அவரு தான் பிரெசிரெண்டு. சரி நம்ம தலைவரே சொல்லிட்டாரே அப்ப நல்லதுக்கா தான் இருக்கும்னு கேட்டுகிட்டோம். ஆனா நிலத்துக்கு வெலை பேசலையேன்னு கேட்டோம். அதுக்கு அவரு, ‘முதல்ல காரியம் நடக்கட்டும், அப்பால அரசாங்கத்து கிட்டே சொல்லி எதுனா பாக்கலாம்’ அப்படின்னு சொல்லி முன்பணமா வச்சிக்கங்கன்னு ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் மூணாயிரம்னு நிலத்தோட அளவுக்கு தக்க கொடுத்தாரு. வாங்கிட்டு வந்துட்டோம். ஆரம்பத்துல மொத்தம் 62 ஏக்கரா நெலத்த பிடிச்சிக்கிட்டாங்க”
”காலேஜு கட்டிடம்னு சொன்னா மொதல்ல ரெண்டு பெரிய ஷெட்டு தான் போட்டாங்க. தோ இந்த மாதிரி ஆஸ்பெஸ்டாசு கூரை போட்ட செட்டு தான். கட்டிடம் எழும்பி ஒரே மாசத்துல காலேஜு தொறந்தாங்க. அப்ப தான் எங்களுக்கு சேர்மன் சுப்பிரமணியத்தை தெரியும். அவருக்கும் துறையூர் பக்கத்துல தான் அப்படின்னு சொல்லிகிட்டாங்க. ரெட்டியாரு எங்க கிட்டே சொன்னா மாதிரி அது கெவருமெண்டு காலேஜு இல்லைன்னு தெரிஞ்சு கிட்டோம்”
“நிலத்தை பறிகொடுத்தவங்க எல்லாருமா சேர்ந்து போயி காலேஜு சேர்மனை பாத்தோம். அவரு தேனா பேசுனாரு. அவரு கூட துரைசாமி தம்பு ரெட்டியாரும் இருந்தாப்பல. ’காலேஜு கட்டவே காசு பத்தலை, பேங்குல லோனு கேட்டிருக்கோம்.. அதுக்கு நெலப் பத்தரம் வேணும்’ அப்படின்னு சேர்மன் சொன்னாரு. வெலை பேசாம கொள்ளாம எப்படி எழுதிக் குடுக்க முடியும் அப்படின்னு நாங்க கேட்டோம். அதுக்கு நெலத்தை தம் பேர்ல மாத்தி பேங்குக்கு அனுப்பினா தான் அதுக்கு என்னா மதிப்புன்னு அரசாங்கம் சொல்லும், மதிப்பு தெரிஞ்சா தான் லோனு கெடைக்கும்.. லோனு வந்தா தான் காசு தர முடியும்னு சேர்மன் சொன்னாரு”
“சேர்மன் சொன்னதை நம்புங்கன்னு துரைசாமி ரெட்டி கேட்டுகிட்டாரு. வேணும்னா முன் பணமா கொஞ்சம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு. அப்படியே ஆளுக்கு ரெண்டாயிரம் மூவாயிரம்னு அதே எடத்துல வச்சி வாங்கியும் குடுத்தாரு. ’ஒரு நல்ல காரியத்த தடுக்க வாணாம்.. எனக்கு தான் புள்ள குட்டி இல்லே.. இந்தக் காலேஜுல நாளைக்கு உங்க பிள்ளைங்க தானே படிக்க போகுது’ அப்படின்னு தலைவர் துரைசாமி ரெட்டி கேட்டாரு. சரி தலைவரு நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவாருன்னு நீட்டின பேப்பர்ல எல்லாம் கைநாட்டு வச்சிட்டு குட்டுத்த காசை வாங்கிட்டு வந்தோம்”
“நெலமில்லாதவன் பொணத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க. எங்க நிலம் போச்சு தோழரே.. எங்களை ஏமாத்திட்டாங்க. பொறவு 2000-மாவது வருசத்துல விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைப் பத்தி கேள்விப் பட்டோம். படிப்பறிவில்லாத எங்களை ஏறி மிதிச்சவங்க நக்சல்பாரி அமைப்புன்னா பயந்து போவாங்கன்னு கேள்விப்பட்டோம். ஏமாந்த விவசாயிகள்ல விலை போகாம நியாயத்துக்காக நின்ன 14 பேரு ஒன்னு சேர்ந்து பொம்மன் தோழருக்கு பெட்டிசன் அனுப்புனோம். அதுக்கு பின்னே நடந்த எல்லா விசயமும் இந்த பைல்ல வச்சிருக்கேன் நீங்களே பாருங்க”
கரட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தாங்கள் ஏமாற்றப்பட்ட கதையை எங்களிடம் விவரித்தார். கடந்த இருபதாண்டுகளில் இந்தக் கதையை தான் கண்ட ஆயிரக்கணக்கானோரிடம் ஆயிரக்கணக்கான முறை சொல்லி இருப்பார். என்றாலும், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளிலும் அடிபட்ட வலி ஆழமாய் பதிந்திருந்தது. அது ஆறாத வடுவாக அந்த மக்களிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் நம்ப வைத்துக் கழுத்தறுக்கப்பட்டவர்கள். தாங்கள் கவுரவமாக உழைத்துப் பிழைத்த நிலத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் துரோகம் என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டதை அறிந்தும் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமை அவரது வார்த்தைகளில் எதிரொலித்தது. விவசாயிகளின் வயிற்றிலடித்துக் கட்டப்பட்ட பொறியியல் கல்லூரியின் பெயர் ”ஜெயராம் என்ஜினியரிங் காலேஜ்” திருச்சியின் மிக முக்கியமான கல்விக் கொள்ளையன் ஒருவனுக்குச் சொந்தமானது இது.
உலகில் எங்கும் கேள்விப்பட முடியாத இந்த எத்து வேலையின் சூத்திரதாரியைப் புரிந்து கொள்வோம்.
சுப்பிரமணிய வைரஸ் உருவான வரலாறு!
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது. நான்கு கல்லூரிகளை வைத்திருக்கும் இந்த நபர் எப்படியும் ஒரு மோசடிக்காரராகவே இருக்குமென்று விசாரித்து பார்த்தோம். அதற்கு எமது திருச்சி பகுதி தோழர்கள் முக்கிய தகவலொன்றை அனுப்பினர். ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியம் என்று தற்போது அறியப்படும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியமாகிய பா.ஜ.க வேட்பாளர் ஒரு ஊரறிந்த அயோக்கியப் பயல் என்பதே அத்தகவல். உடன் வினவுவின் செய்தியாளர் குழு திருச்சிக்குப் பயணமானது.
திருச்சி – ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஓரளவுக்குப் பெரும்பான்மையானவர்கள் முத்து ராசா சாதியினர். ஓட்டுக்கட்சி தேர்தல் அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு காய்நகர்த்தும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதே சாதியைச் சேர்ந்தவர்களை களமிறக்க, பாரதிய ஜனதா கல்வி வியாபாரியான கரட்டாம்பட்டி சுப்பிரமணியனை களமிறக்கியது. அரசியல் கிசுகிசு பத்திரிகைகளின் வட்டத்தில் மெல்லிய சலசலப்பு ஒன்று எழுந்து அடங்கியது.
யார் இந்தக் கரட்டாம்பட்டியான்?
ஆறு நாட்டு வேளாளர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைமார் சாதியின் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர் இந்தச் சுப்பிரமணியன். திருச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் இவர்கள் சிறுபான்மையினர் என்றாலும் திருச்சியின் பெரும்பாலான வர்த்தகத்தை இவர்களே கட்டுப்படுத்துகின்றனர். மங்கள் & மங்கள், சாரதாஸ் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்கள் இவர்களிடம் உண்டு. ஓரளவுக்குப் பணக்காரர்கள்.
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான்.
ஆனால், கரட்டாம்பட்டி சுப்பிரமணியனின் ஆரம்ப காலங்கள் அத்தனை வளமானதல்ல. கீழ்நடுத்தர குடும்ப பின்னணி கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த பின் எண்பதுகளில், தனது ஒன்றுவிட்ட சகோதரர் நடத்தி வந்த சிறிய நகைக்கடை ஒன்றில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார் என்றும், பிறகு சிறிய அளவில் பாத்திரக்கடை ஒன்றை சில காலத்திற்கு நடத்தியதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான். திருச்சி பிரேமானந்தா ஆசிரமம் அப்போது இலங்கைத் தமிழர்களின் (சரியாகச் சொன்னால் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின்) மையமாக இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.
இலங்கையில், குறிப்பாக கொழும்பு நகரின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் பலருக்கு திருச்சியுடன் ஒரு தொடர்பிருந்தது – காரணம், அவர்களின் பெரும்பான்மையினர் திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட ஆறுநாட்டு வேளாளர்கள் (பிள்ளைமார்). அந்த வர்த்தகர்களுக்கு இந்தியாவிலிருந்து சரக்குகள் சென்றது, அவர்கள் அங்கிருந்து சரக்குகளை அனுப்பினர்.
இந்த சரக்குப் பரிவர்த்தனைக்கான பணப்பரிமாற்ற மையமாக பிரேமானந்தா ஆசிரமம் விளங்கியது மிக இயல்பானதே – ஏனெனில், அவரே இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதோடு ஆசிரமம் அமைந்த பகுதியும் அதற்குத் தோதாகவே இருந்தது. இது தவிர பல அரசியல்வாதிகளின் கருப்புப் பண சுழற்சியின் மையமாகவும் அந்த ஆசிரமம் இருந்ததென்பது தனிக்கதை. பொறுக்கித்தனமும் கள்ளப் பணமும் பிரிக்க முடியாத கூட்டாளிகள் அல்லவா!
பிரேமனந்தாவுக்கு கிரிமினல் புத்தி இருந்த அளவுக்கு நிர்வாகத் திறன் இல்லை. வேலு நாயக்கருக்கே ஒரு ஐயர் வேண்டியிருந்தாரல்லவா! குறிப்பாக ஆசிரமத்திற்கு வந்து குவியும் கணக்கு வழக்கற்ற கருப்புப் பண மூட்டைகளை பராமரிப்பது, அதை முறையாக பதுக்குவது, வேறு தொழில்களில் முதலீடு செய்து கருப்பை வெளையாக்குவது போன்ற வேலைகளைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட நிலையில் பிரேமானந்தாவுக்கு முதலில் சுப்பிரமணியத்தின் மனைவி நெருக்கமாகிறார் – அவர் மூலம் சுப்பிரமணியம் அறிமுகமாகிறார்.
பிரேமானந்தா ஆசிரமம்
இடைக்குறிப்பு : எம்மிடம் சுப்பிரமணியத்தின் பழைய வரலாற்றை சொன்னவர்கள் பலரும் இந்த இடத்தில் வடிவேலுவின் “கணேச அய்யர் பேக்கரி” கதை ஒன்றைச் சொன்னார்கள். இருப்பினும் அதை மட்டுறுத்தியுள்ளோம். நமது நோக்கம் அரசியலின் பாற்பட்டதேயன்றி தனிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் அந்தப்புர அசிங்கங்களும் இரண்டாம்பட்சமானதே.
எப்படியோ பிரேமானந்தா ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ளும் முக்கியப் பொறுப்பில் சுப்பிரமணியம் அமர்கிறார். 1993-ம் ஆண்டு பிரேமானந்தாவின் புகழ் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் கரட்டாம்பட்டி கிராமத்தில் கல்லூரிக்கான வேலைகளைத் துவக்குகிறார் சுப்பிரமணியன். திருடனுக்கே தெரியாமல் அவனிடம் செய்யப்பட்ட திருட்டா, அல்லது பிரேமானந்தாவே கருப்பை வெளுக்கும் இந்த வேலையை சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தாரா என்பது தேவ ரகசியம்.
1994-ம் ஆண்டு ஆசிரமக் கொலை மற்றும் வன்புணர்ச்சி வழக்கில் பிரேமானந்தா மாட்டிக் கொள்கிறார். பிரேமானந்தா ஆசிரமம் நக்கீரன் புண்ணியத்தில் உலகப் ‘புகழ்’ பெற்றுவிடுகிறது. அதே 1994-ம் ஆண்டு ஜெயராம் கல்லூரி துவங்கப்ப்பட்டது. இதில் இருக்கும் அவசரத்தை கவனித்தீர்களா? 1993-ம் ஆண்டின் பிற்பகுதியில் கட்டிட வேலைகளைத் துவங்கி 1994-ம் ஆண்டே – அதாவது, கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமலும் – கல்லூரியைத் துவங்கி விடுகிறார். ஆசிரமக் கணக்கப்பிள்ளை என்ற பல்லி வாலை கத்தரித்துக் கொண்டு சேர்மன் சுப்பிரமணியனாக அவதரிக்கிறார்.
1997-ம் ஆண்டு பிரேமானந்தா இரட்டை ஆயுள் தண்டனை பெறுகிறார் – அதே ஆண்டு சுப்பிரமணியம் ’ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் காலேஜ்’ என்ற இரண்டாவது கல்லூரிக்கான வேலையைத் துவங்குகிறார். ஆக்ஸ்போர்டு கல்லூரி 1998-ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்குகிறது. ஆயுள் தண்டனையில் ஒரு முடிவும் ஆக்ஸ்போர்டில் ஒரு துவக்கமும் இருப்பதை கவனியுங்கள்.
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள்
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள். தவிர்த்தார்கள்.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மேஜர் சீனிவாசன் என்பவர் தலைமையில் நடந்து வந்த அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகத்தில் ஒரு பங்குதாரராக நுழைகிறார் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன்.
சுப்பிரமணியன் நுழைந்த சில வருடங்களிலேயே அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறார். தொடர்ந்து மேஜர் சீனிவாசனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார். நாங்கள் விசாரித்த சிலர் சுப்பிரமணியன் மேஜரின் மகனைக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகச் செய்தார் என்றனர் – அத்தகவலை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எப்படியாயினும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் அங்காளம்மன் கல்லூரி சுப்பிரமணியனின் பகுதியளவிலான கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
2006-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மேஜர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். விளைவாக, மொத்த கல்லூரியின் ஏகபோக கட்டுப்பாடு சுப்பிரமணியனின் கையில் வந்து விழுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் தெருவும் திண்ணையுமாக திருச்சியைச் சுற்றி வந்த கரட்டாம்ப்பட்டியான் இன்றைய தேதியில் மூன்று கல்லூரிகளும், வேறு சில வியாபார நிறுவன்ங்களுமாக கோடிகளில் புரளும் அளவிற்கு வளர்ந்த சுருக்கமான வரலாறு இது.
சுப்பிரமணிய வைரஸ் வளர தேர்ந்தெடுத்த கம்பெனி
தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மேல் சுப்பிரமனியனின் கண் அழுத்தமாக பதிகிறது. மேஜர் சீனிவாசனின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஜெயராம் கல்லூரிக்காக மோசடி செய்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநிலைக்குச் சென்று கொண்டிருந்தது. சூட்டோடு சூடாக 1998-ல் ஆக்ஸ்போர்ட் கல்லூரியையும் துவங்கி தனது சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவடையச் செய்திருந்தார்.
திடீர் பணக்கார ரவுடிகளின் வளர்ச்சி இரண்டு உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று, அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் சம்பாதித்துக் கொடுக்கும் மக்கள் எதிர்ப்பு; இரண்டு – ஏற்கனவே தொழில் போட்டியில் இருக்கும் சக ரவுடிகளின் கண்களுக்கு உறுத்தலாக மாறுவது. எனவே அவர்கள் திடீர் பணக்க்கார ரவுடியில் இருந்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக பதவியேற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு தி.மு.க / அ.தி.மு.க நல்ல தேர்வாக இருந்திருக்கும் என்றாலும் பாரதிய ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுத்தார் சுப்பிரமணியன்.
ஏனெனில், அரசியல் ரவுடித்தனத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இருக்கும் மாநில வரம்பு ஒருபக்கம் இருக்க, இவர்கள் கடந்த சில ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட கத்துக்குட்டிகள். பாரதிய ஜனதாவுக்கு ஒரு தேசிய முகம் உள்ளது, அந்த முகத்திற்கு ஒரு நீண்ட வரலாறும் உள்ளது. பாரதிய ஜனதாவின் தேசிய முகத்தின் அங்கங்களாக சுஷ்மா சுவராஜும் இருப்பார், அமித்ஷாவும் இருப்பார்; ஒருபக்கம் குருமூர்த்தி இன்னொரு பக்கம் ரெட்டி சகோதரர்கள்;
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல
நாணயத்தின் இரண்டு முகங்களுமாக மோடியே இருக்கிறார். அவரே வளர்ச்சி, அவரே நரோதா பாட்டியா.
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல. இந்துத்துவ பாசிஸ்டுகள் தங்கள் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக திட்டமிட்டுக் கொள்ளும் போது மிக கவனமாக இரண்டு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஒன்று, புரவலர்கள்; இரண்டு அடியாட் படை.
உதாரணமாக, கோவை கலவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இந்து முன்னணியால் கீழ்மட்டத்தில் அணிதிரட்டப்பட்டவர்கள் – இதற்காக கரும்புக்கடை, குனியமுத்தூர், கெம்பட்டி காலனி, செல்வபுரம் போன்ற உதிரிபாட்டாளிகள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் பல ஆண்டுகள் இந்து முன்னணி செயல்பட்டுள்ளது. கோவை கலவரங்களுக்கான புரவலர்களாக மார்வாடி சேட்டுகள், செங்குந்த முதலியார்கள், கவுண்டர்கள், நாயுடுகள் என்று மேல்மட்டத்தினரை ஆர்.எஸ்.எஸ் நேரடியாகவும் விஜில் என்ற போர்வையின் கீழும் தயாரித்து வந்தது.
திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்
தனது கல்வி வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள பொருத்தமான கூட்டாளியைத் தேடிய கரட்டாம்பட்டி சுப்பிரமணியனுக்கு பாரதிய ஜனதா மிக இயல்பான தேர்வாக அமைந்தது. அதே நேரம் திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்.
திருச்சியின் மேல் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் உண்டு. பல ஆண்டுகளாக திருச்சியை மையமாக வைத்து தலையால் தண்ணி குடித்தும் கோவை மற்றும் கன்யாகுமரி மாவட்டம் போல் திருச்சி அமையவில்லை. அதை நிறைவேற்றுவதற்கு இந்த இடைத் தேர்தலை பாரதிய ஜனதா ஒரு அதிருஷ்டமாக கருதுகிறது.
எப்போதும் இல்லாத வகையில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காக்கி டவுசரோடு பாரதிய ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்க களம் இறக்கப்பட்டுள்ளனர். திருச்சிக்கென ஆர்.எஸ்.எஸ் வகுத்துள்ள எதிர்கால திட்டங்களில் வணிக சாதியினராக உள்ள ஆறு நாட்டு வேளாளர்களுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. அந்த வகையில் தான் சுப்பிரமணியனை வேட்பாளராக களமிறக்கியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுப்பிரமணிய வைரசின் விளைவுகள்
“அண்ணே, இந்த ஹாஸ்டல்லே நாங்க ஒரு முன்னூறு பாய்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தங்கியிருக்கோம்ணே.. கேர்ல் ஸ்டூடண்ட்ஸ் எங்களை விட அதிக எண்ணிக்கையில் தங்கியிருக்காங்க. எனக்கு திருவண்ணாமலை பக்கம் சொந்த ஊரு. வருசத்துக்கு 45 ஆயிரம் ஹாஸ்டல் பீஸ்னு புடுங்கறாங்க. சாப்பாடெல்லாம் வாய்லயே வைக்க முடியாதுண்ணே” – ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அந்த முதலாம் ஆண்டு மாணவர் சுரத்தின்றி பேசினார்.
ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன
அந்த உறைவிடக் கட்டிடத்தின் ஒரு தளத்தில் சுமார் இருபது அறைகள் இருந்தன. ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையினுள்ளும் ஆறு மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் நூறு மாணவர்களுக்கு மூன்றே மூன்று கழிவறைகள் ஒரே ஒரு வாஷ்பேசின் மற்றும் ஐந்து குளியலறைகள். கழிவறைகளின் தரம் மூக்கே இல்லாதவர்கள்தான் அங்கு சீவிக்க முடியும் என்றது.
நூறு மாணவர்களுக்கு மூன்று கழிவறைகள்!
“காலைல நாங்க லேட்டா போனா பைன் போடறாங்கண்ணா. ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு மாணவரும் சுமார் எட்டாயிரம் பத்தாயிரம் நோ டியூ (No due) பைனா கட்டறாங்க. ஆனா, ஹாஸ்டல்ல தங்கற மாணவர்களால சீக்கிரம் கிளம்பவே முடியாது. காலைல பார்த்தீங்கன்னா பெரிய க்யூவே நிக்கும். நானெல்லாம் காலைல நாலு மணிக்கு எழுந்துக்குவேன். ஆனாலும், லேட்டாயிடும்”
வினவு செய்தியாளர் குழு ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருந்தது. திருச்சி நகருக்கு வெளியே தீரனூர் என்ற பகுதியை அடுத்து அமைந்திருக்கும் அந்தக் கல்லூரி வளாகத்திற்கு முறையான சுற்றுச்சுவர் கூட கிடையாது. யார் வேண்டுமானாலும், போகலாம் வரலாம்.
விவசாயிகளை அடித்து பிடுங்கி சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட ஆக்ஸ்போர்டு கல்லூரி எனும் காயலான் கடை!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் முறையின் கீழ் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பேசினோம்.
“அண்ணா, யூனிவர்சிட்டி எங்களுக்கு நிர்ணயம் செய்த பீஸ் 32,500 ரூபா தான். இவனுங்க அந்த அமவுண்டுக்கு மட்டும் தான் கம்ப்யூட்டர் பிரிண்ட் பில் குடுப்பானுங்க. மத்தபடி ஒரு வருசத்துக்கு 60,000 – 65,000 வரைக்கும் பிடுங்கிடறாங்க. அது தவிர வெளியூர் மாணவர்களுக்கு ஹாஸ்டல் பீஸ்னு தனியா 45 ஆயிரம் வாங்கறாங்க.
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகையில் 4,000 ரூபாய் புத்தகங்களுக்கென்று வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் பரீட்சைக்கு சற்று முன்பு தான் புத்தகங்களே கையில் கிடைக்கும். அந்த புத்தகங்களும் அதே கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளரகள் எழுதியதாக இருக்கும். சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த புத்தகங்களின் மதிப்பை கணக்கிட்டால் ஆயிரம் கூட தேறாது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் தலா 500 மாணவர்களும், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் தலா 350 மாணவர்களும் படிக்கிறார்கள். கவுன்சிலிங் மாணவர்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களும் சம அளவில் உள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது. அது தவிர ஆண்டுக் கட்டணங்கள் கவுன்சிலிங் மாணவர்களை விட நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிகம் – எண்பதாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
அதிகப்படியாக வசூலிக்கப்படும் பணத்திற்கு துண்டுச் சிட்டையில் கிறுக்கித் தருவதைத் தவிர வேறு முறையான ஆவணங்கள் ஏதும் கிடையாது. கவுன்சிலிங் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகைக்கு ஒரு சராசரியை நிர்ணயிப்பதாக இருந்தால் சுமாராக கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டும் வருடத்திற்கு எட்டரை கோடி ரூபாயும், உறைவிடக் கட்டணமாக சுமார் மூன்று கோடிகளும் சேர்கிறது – அவ்வளவும் துண்டுச் சிட்டையில் எழுதிக் கணக்கு வைக்கப்பட்டும் கருப்புப் பணம்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது.
ஆக்ஸ்போர்ட் கல்லூரி என்பது சுப்பிரமணியன் நடத்தி வரும் மூன்று கல்லூரிகளில் தரம் குறைந்த ஒன்று என்றாலும், இதே கணக்கை மற்ற இரு கல்லூரிகளுக்கும் போட்டுப் பார்த்தால், மூன்று கல்லூரியிலும் சேர்த்து கல்விக் கொள்ளையில் ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்து கோடி கொள்ளையிடப்படுகிறது. நோ ட்யூ என்று ஒவ்வொரு பருவத்தேர்வின் போதும் சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து நான்காயிரம் வசூலிக்கப்படுகிறது. இதை மூன்று கல்லூரிகளுக்குமாக தோராயமாக கணக்கிட்டால் இரண்டு கோடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் சுருட்டும் கருப்புப் பணத்தின் குறைந்தபட்ச அளவு 37 கோடிகள்! இது குறைந்தபட்ச கணக்கு தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில், அவர் நடத்தும் மற்ற இரு கல்லூரிகளும் ஓரளவிற்கு பிரபலமானவை என்பதாலும் அந்தக் கல்லூரிகளில் படிப்புப் பிரிவுகள் அதிகம் என்பதாலும் அங்கே வசூலாகும் தொகை நிச்சயம் அதிகமாகத் தான் இருக்கும்.
ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம்
இது ஒருபக்கம் இருக்க, கல்லூரியில் சுமார் 120 விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் – சம்பளம் வெறும் 12,000 ரூபாய்கள் தான். ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு சுமார் 20,000 ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைவர்களுக்கு அறுபதாயிரம் வரை சம்பளம். பரிசோதனைக்கூட உதவியாளர்களுக்கு பத்தாயிரத்திற்கும் கீழ் தான் சம்பளம்.
இந்தச் சம்பளமெல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டவை மட்டும் தான். வழங்கப்படுபவை அல்ல. கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றார் ஒரு ஊழியர். முதலாமாண்டு விரிவுரையாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் அலுவலக அறையில் வைத்தே சம்பளம் கேட்டு தகராறு செய்ததோடு, சம்பளம் தராமல் பண நெருக்கடியின் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்குக் காரணம் சேர்மன் தான் என்று எழுதி வைத்து விட்டுத் தான் சாவேன் என்று அழுதவாறே ஏசியுள்ளார்.
சுப்பிரமணிய வைரசோடு ஒரு நேர்முகம்
“இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி வச்சிருக்கீங்க?”
சுப்பிரமணியன் நடத்தும் கல்லூரிகளுக்கும் கல்விக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அவை மூன்றும் பணம் கறக்கும் தொழிற்சாலைகள் தானென்பதையும் உறுதி செய்து கொண்ட வினவு செய்தியாளர் குழு, இக்கல்லூரிகளின் சார்பாக திருச்சி தில்லை நகர் பத்தாவது தெருவில் செயல்பட்டு வரும் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றது.
நுழைவிலேயே பாரதிய ஜனதாவின் கொடி ஒட்டப்பட்டு அதில் “vote for BJP” என்று அச்சிடப்பட்டிருந்தது. நாங்கள் அலுவலக நிர்வாகி மகேந்திரன் என்பவரை ஓரம் கட்டினோம்.
மாணவர்கள் மத்தியில் பேசும் சேர்மன் சுப்பிரமணியன்
”சார் எங்க அண்ணன் மகன் வேற கல்லூரில படிக்கிறான். ஆறாவது செமஸ்டர். டீபார் ஆகிட்டான். அவனை உங்கள் கல்லூரிக்கு மாற்றணும். அதுக்கு என்ன விதிமுறைகள் இருக்குன்னு சொல்லுங்களேன்” – தயாரித்து வைத்திருந்த கதை ஒன்றை எடுத்து விட்டோம்.
“ஆறாவது செமஸ்டரா? முடியாதுங்க. ஆட் நெம்பர் செமஸ்டர்ல தான் டிரான்ஸ்பர் செய்ய முடியும்; அது தான் யூனிவர்சிட்டி நார்ம். உங்க பையன் ஈவன் செமஸ்டர்ல இருக்கானே. நிச்சயமா முடியாதுங்க”
(ஆட் செம் (ODD Semester) என்பது கல்வியாண்டின் துவக்கத்தில் வரும் ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது பருவங்கள். ஈவன் செம் (Even semester) என்பது கல்வியாண்டின் மத்தியில் வரும் இரண்டு, நான்கு, ஆறு மற்றும் எட்டாவது பருவங்கள்)
“சார் எப்படியாவது ட்ரை பண்ணுங்க சார். எவ்வளவு செலவு ஆனாலும் பார்த்துக்கலாம்” அடுத்த தூண்டிலை வீசினோம்.
“அது வந்துங்க.. கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப கூட பாருங்க நாலாவது செமஸ்டர்ல ஒரு பொண்ணை மாத்தி கொண்டாந்தோம். ஈவன் செமஸ்டர் தான். உங்க கேசாவது பரவாயில்ல டீபார் தான்.. அந்தப் பொண்ணு டிஸ்கண்டினியூவே பண்ணின கேசு. அதுக்கு மினிஸ்டர் பி.ஏவை பிடிச்சி மினிஸ்டர் லெவல்ல மூவ் பண்ணி தான் செய்ய முடிஞ்சது” மீன் மாட்டியது.
“பரவாயில்ல சார். நாங்களும் மினிஸ்டர் வரைக்கும் பார்க்க தயார் தான். செலவு என்னான்னு சொல்லுங்க, எப்படி பார்க்கிறதுன்னு சொல்லிட்டிங்கன்னா செய்துடலாம்”
“நீங்க ஒன்னு செய்யுங்க. அக்டோபர் மாசம் பையன் கடைசியா வாங்கின ஹால் டிக்கட்டோட வாங்க விஷயத்தை முடிச்சிடலாம்”
“சார் அக்டோபர்னா செமஸ்டர் எக்சாம் நடக்கும் நேரமாச்சே சார்… பரவாயில்லையா?”
”அதெல்லாம் பரவாயில்ல பார்த்துக்கலாம், வேணா கொஞ்சம் முன்னாடி கூட வாங்க ஒன்னும் பிரச்சினையில்லை”
இவர்கள் கல்லூரிக்கு வேறு ஒரு கல்லூரியில் இருந்து ஒரு மாணவரை மாற்றி அக்டோபரில் ஆறாவது செமஸ்டர் பரீட்சைக்கு உட்கார வைப்பது என்பதன் பொருள் – அந்த மாணவர் ஆறாவது செமஸ்டர் பாடங்களை கேட்கவோ வகுப்புகளுக்கு வரவேண்டிய தேவையோ இல்லை என்பது தான். செய்வதும் பிராடு, செய்யும் விதமும் பிராடு. நாங்கள் ’நன்றி’ தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.
“ஆமா சார்… இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி அவங்க கொடி வச்சிருக்கீங்க?”
“ஹிஹி.. ரெண்டும் ஒன்னு தான் சார்”
நியாயமாக இந்தக் கட்டுரையின் இறுதி பன்ச் லைன் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல இன்னும் கொஞ்சம் இருப்பதால் தொடர்கிறோம்.
சுயநிதிக் கொள்ளையர் பச்சமுத்துவின் விருதை வாங்கி எழுத்தாளர் ஜெயமோகன்!
தேர்தல் வாக்குமூலத்தில் தனது கல்லூரி சொத்துக்களை மறைத்துவிட்டு வெறும் 33 கோடி ரூபாயை மட்டும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார் இந்த மோசடிச் சக்கரவர்த்தி. ஆனால் கல்லூரி அலுவலகமும், கட்சி ஆபிசும் ஒரே அலுவலகத்த்திலிருந்து செயல்படுகிறது. கல்லூரிகளெல்லாம் ட்ரெஸ்ட்டுகளாக வைத்து கல்லா கட்டுவது என்ன இந்தியாவிற்கு புதிதா? பச்சமுத்து கூட தனது கல்லூரிகளை அப்படித்தான் நடத்துகிறார். அவரது சொத்து பத்திரத்திலும் நாம் எஸ்.ஆர்.எம்மை கண்டுபிடிக்க முடியாது.
இப்பேற்பட்ட கொள்ளையர் பச்சமுத்துவின் தமிழ் விருதுகளைத்தான் நமது தமிழ் எழுத்தாளர்கள் வெட்கம் கெட்டு பெற்றுக் கொள்கிறார்கள். அதில் அன்னிய நிதி குறித்து சிலிர்த்துக் கொள்ளும் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர். இங்கே சுப்பிரமணியன் போன்ற கொள்ளையர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து இந்து அறம் காக்க தேர்தல் களம் புகுகிறார்கள்.
சுப்பிரமணிய வைரஸ் – ஒரு முறி மருந்து
கரட்டாம்பட்டி சுப்பிரமணி பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இணைவது தொண்ணுறுகளின் இறுதிக் கட்டத்தில் என்றாலும், தனது அரசியல் நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தியதும், கட்சிப் பொறுப்புகளை வாங்கிக் கொண்டதும் இரண்டாயிரங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் நடந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஜெயராம் கல்லூரியைக் கட்ட தங்களது நிலத்தை அபகரித்துக் கொண்ட சுப்பிரமணியனோடு சுமார் ஆறாண்டுகள் மல்லுக்கட்டிப் பார்த்த விவசாயிகள் இரண்டாயிரமாவது ஆண்டில் விவசாயிகள் விடுதலை முன்னணியை நாடுகிறார்கள். வி.வி.மு தோழர் பொம்மன் அவர்களின் தலைமையில் வி.வி.மு தோழர்கள் விசாரணை ஒன்றை நடத்தி மோசடி நடந்திருப்பதை உறுதி செய்கிறார்கள்.
தோழர் பொம்மன் தலைமையில் உடனடியாக களமிறங்கும் வி.வி.மு விவசாயிகளின் சார்பாக பல போராட்டங்களை முன்னெடுக்கிறது. கல்லூரியைச் சுற்றிலும் மோசடிப் பேர்வழி சுப்பிரமணியனை எதிர்த்து போஸ்டர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் மற்றும் துண்டுப் பிரசுர பிரச்சாரங்கள் என்று வி.வி.மு முன்னெடுத்த போராட்டங்களின் வீரியம் ”ஏற்கனவே ஏமாற்றி பத்திரத்தில் கைநாட்டு வாங்கி விட்டோமே; நம்மை அசைக்க முடியாது” என்ற மிதப்பில் இருந்த சுப்பிரமணியனை நிதானத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் கவுன்சிலிங் நடந்த சமயத்தில் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் அவரது தொழிலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தது.
சுப்பிரமணியன் நிலப்பறிப்பு தொடர்பான ஆவணங்களின் நகல்கள்
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 1
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 2
விவிமுவுக்கு நிலமிழந்த விவசாயிகள் மனு – 3
நிலப்பறிப்பு தொடர்பாக வி.வி.மு விசாரணை அறிக்கை – 1
வி.வி.முவுக்கு விவசாயிகள் மனு
நிலப்பறிப்பு தொடர்பாக வி.வி.மு விசாரணை அறிக்கை – 2
விவசாயிகள் வாக்குமூலம் – 1
விவசாயிகள் வாக்குமூலம் – 2
விவசாயிகள் வாக்குமூலம் – 3
விவசாயிகள் வாக்குமூலம் – 4
விவசாயிகள் வாக்குமூலம் – 5
விவசாயிகள் வாக்குமூலம் – 6
விவசாயிகள் வாக்குமூலம் – 7
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 1
சுப்பிரமணியனுக்கு வி.வி.மு கடிதம்
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 2
காவல்துறை முதல் தகவல் அறிக்கை – 3
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 1
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 2
வங்கி கடன் சொத்து அறிவிக்கை – 3
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 1
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 2
வி.வி.மு போராட்ட பிரசுரம் – 3
வி.வி.மு புகாருக்கு சுப்பிரமணி தரப்பு பதில்
சுப்பிரமணியின் பொய்யை அம்பலப்படுத்தும் வி.வி.மு கடிதம்
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 1
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 2
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 3
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஆவணம் – 4
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பல வழிகளில் வி.வி.மு தோழர்களை அணுகி பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிகளின் முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அவற்றில் சுப்பிரமணியன் முன்னுக்குப் பின் முரணாக வாக்குறுதிகள் வழங்கியதாலும், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலரை காசு கொடுத்து கருங்காலிகள் ஆக்கும் முயற்சியை எடுத்ததாலும் பேச்சுவார்த்தையை வி.வி.மு முறித்துக் கொண்டது. சுப்பிரமணியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைத் தொடர்ந்தது.
இந்தப் பேச்சு வார்த்தைகளின் குறிப்பிட்ட ஒரு சுற்றின் போது சுப்பிரமணியன் தனக்கு ஆதரவாக பேச பழக்கமான அரசு உயரதிகாரி ஒருவரோடு வந்துள்ளார். அவருக்கு எதிர்தரப்பில் வந்தமரப் போவது வி.வி.மு தோழர்கள் என்பது தெரியாது. பேச்சுவார்த்தையின் போது வி.வி.மு தோழர்கள் வந்தமர்ந்ததைப் பார்த்ததும் பதறிப் போய் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
மேலும் அவரே சுப்பிரமணியனிடம் இவர்கள் தான் (வி.வி.மு) வரப்போகிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், இவர்கள் நக்சலைட்டுகள் என்றும், விவசாயிகளை ஏமாற்றினால் ஏதாவது ’ஒன்னு கிடக்க ஒன்னு’ செய்து விடக்கூடியவர்கள் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளார். ஏற்கனவே சுப்பிரமணியன் வி.வி.மு தோழர்களை விலைக்கு வாங்க முயற்சித்து மூக்குடைபட்டவர் என்பது தனிக்கதை.
இந்தப் பின்னணியில் அவர் பாரதிய ஜனதாவோடு நெருங்கியதைப் பொருத்திப் பார்த்தால் முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தனது கல்விக் கொள்ளைக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு என்ற வகையில் பாரதிய ஜனதாவை நாடியிருந்த சுப்பிரமணியம் தற்போது அக்கட்சியில் முக்கிய அந்தஸ்த்தைப் பெறுவதன் மூலம் அதை உறுதி செய்கிறார். கூடவே தனது கொள்ளையை பெருக்கவும் செய்வார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் என்பது பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. தேர்தல் முடிவு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சின்ன உதாரணம் மட்டும் – முத்தரச நல்லூர் என்ற 300 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் குக்கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி அ.தி.மு.க கறி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. 100 கிலோ மட்டன், 200 கிலோ சிக்கன் மற்றும் மீன் வருவல் என்று தடபுடல் பட்ட விருந்தைத் தொடர்ந்து பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊரில் தி.மு.க குடும்பம் என்று அறியப்பட்ட குடும்பங்களை குறிவைத்து தேர்தல் வேலைக்காக களமிறங்கியுள்ள வெளியூர் அ.தி.மு.கவினர் களமிறங்கியுள்ளனர். சில வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒழுங்காக அ.தி.முகவிற்கு ஓட்டளிக்க வேண்டுமென்றும், தவறினால் வீட்டுப் பெண்களைத் தூக்கிச் செல்வோம் என்றும் பகிரங்கமாகவும் மிரட்டியுள்ளனர்.
அதி.முக தான் வெல்லப்போகிறது என்பது தி.மு.கவுக்கே தெரிந்த சேதி தான்.
என்றாலும் டெப்பாசிட் வாங்குவதைத் தாண்டி பாரதிய ஜனதா வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அடுத்த தேர்தலில் அதற்கு பேரம் பேசும் வலிமையைச் சேர்த்துக் கொடுக்கும். அதற்காகவே செலவு செய்யும் வாய்ப்புள்ள சுப்பிரமணியனைக் களமிறக்கி விட்டுள்ளது பாரதிய ஜனதா.
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
சொல்லப் போனால் இந்தப் பிரச்சாரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக சிம்மாசனம் ஏற முயல்கிறது.
ஊரே காறித்துப்பும் ஒரு மோசடிப் பேர்வழியை செலவு செய்யும் வாய்ப்பு உள்ளவர் என்ற ஒரே காரணத்துக்காக வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது என்றால், பாரதியஜனதாவின் அரசியல் தராதரத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் வலுவாக காலூன்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை பாரதிய ஜனதா இதன் மூலம் அறிவித்துள்ளது.
மேலும் கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள். இப்போது அந்த கொள்ளையர் அணி நேரடியாகவே பாஜகவில் போட்டியிடுகிறது.
கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்ற பாரதிய ஜனதாவின் எம்.பிக்களில் பெரும்பாலானோரின் மேல் கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பதையும் கரட்டாம்பட்டியானையும் இணைத்துப் பார்த்தால் இது ஜாடிக்கேற்ற மூடி என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதை எதிர்கொள்வது எப்படி என்பதை காலம் சென்ற பொம்மன் தோழர் கோடி காட்டிச் சென்றுள்ளார். கட்டுரையின் இணைப்பில் பொம்மன் தோழர் கரட்டாம்பட்டியானுக்கு 2000-வது ஆண்டு எழுதிய கடிதத்தை அவசியம் வாசியுங்கள். நாம் அதை மெய்யாக்கும் போது தான் இந்துத்துவ பாசிச அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.
பாஜகவிற்கு தேசிய அளவிலும் உள்ளூர் வரையிலும் முதலாளிகள் தேவை. முதலாளிகளுக்கோ பாஜக எனும் கட்சின் முகவரி தேவை. எப்படியும் தோற்போமென தெரிந்தும் சுப்பிரமணியம்ஏன் போட்டியிடுகிறார்? அவரைப் பொறுத்த வரை பாஜக பெயரும், வேட்பாளர் அடையாளமும் தொழிலை அதாவது முறைகேடை தொடர்வதற்கு ஒரு பாதுகாப்பு. பாஜகவிற்கு இத்தகைய புரவலர்கள் இருந்தால்தான் உள்ளூரில் கட்சி நடத்த பணம் கிடைக்கும். அந்த புரவலர்களின் தொழில் மோடியின் தயவில் தேசிய அளவில் பரவும் போது கணிசமான கமிஷனும் கிடைக்கும்.
வேட்பாளர் கரட்டாம்பட்டி சுப்ரமணியம் மீது திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீசில் 1.13 கோடி மோசடி செய்ததாக 420 வழக்கு நிலுவையில் உள்ளது. M/s Precision Medic(P)ltd என்ற நிறுவனம் சுப்ரமணியம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்கியதற்கான தொகையை சுப்ரமணியமும் அவரது கல்லூரி முதல்வர்களும் மோசடி செய்துள்ளனர்.
சுப்ரமணியத்திற்கு பிணை வழங்கிய நீதிபதி பி.என்.பிரகாசு ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்.வழக்கமாக ஏமாற்றுதல்,மற்றும் மோசடி(420) தொடர்பான வழக்குகளில் மோசடித் தொகை செலுத்தினால் மட்டுமே பிணை வழங்கும் நீதித்துறை இவர் கோடி ரூபாய்க்கும் மேலான மோசடி வழக்கில் பணம் கட்டாமல் ஜாமின் வழங்கியது இதுவே முதல் முறை.
மேலும் தனது வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.இந்தப் பொய்யை தி.மு.க. அ.தி.மு.க.வினர் புகாராக அளித்த போதும், தேர்தல் அதிகாரி அதை விசாரணையின்றி நிராகரித்துள்ளார். மோடி ஆட்சியில் கேடிகளுக்குத்தான் சட்டமும், பாதுகாப்பும் இருக்கும். பா.ஜ.கவின் பலமே இத்தகைய அதிகார வர்க்க, நீதித்துறை அனைத்தும் காவிகளின் ரவுடித்தனத்தை பாதுக்காப்பதுதான்.
அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து நான்கு கல்லூரி கட்டி ஆண்டுக்கு சில பல கோடிகளை கொள்ளையடித்து அதை பாதுகாக்க கட்சி சேர்ந்து, இப்போது வேட்பாளராகவும் உலா வரும் இந்த நபரையும் இத்தகைய பேர்வழிகளுக்கு ஒளிவட்டம் போட்டு தூக்கி பிடிக்கும் பா.ஜ.கவையும் அப்புறப்படுத்தாமல் இந்திய மக்களுக்கு விடிவு இல்லை.
___________________________
– வினவு செய்தியாளர்கள்
_______________________________________________
இணைப்பு 1: புதிய ஜனநாயக் இதழில் வெளிவந்த தோழர் பொம்மனின் அஞ்சலிக் குறிப்பு:
பா.ஜ.க வேட்பாளர் சுப்பிரமணியனின் நில அபகரிப்பை எதிர்த்து சாகும் வரை போராடிய விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் பொம்மன் 2002 நவம்பர் 25 அன்று மறைந்தார். புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த அஞ்சலிக் குறிப்பு.
இணைப்பு 2: விவசாயிகளின் நிலத்தை அபகரித்த சுப்பிரமணியத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தோழர் பொம்மன் அனுப்பிய கடிதங்கள்:
Take a Sweatshop, Add Toxic Chemicals, And You Get This
ராணிப்பேட்டை சிப்காட் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கடந்த 30-ம் தேதி நள்ளிரவு இரசாயனச் சேறு நிரப்பி வைத்திருந்த தொட்டி உடைந்து சுனாமி போல சேறு வெளியானதில் அருகில் இருந்த ஆர்.கே தோல் தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பான விபரங்களை வினவில் வெளியிட்டிருந்தோம்.
கந்தக அமிலம், ஃபார்மிக் அமிலம், சுண்ணாம்பு போன்ற அமில, கார வேதிப் பொருட்கள், சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு), சோடியம் சல்ஃபைடு போன்ற நிலத்தை நிரந்தரமாக மலடாக்கி விடும் உப்புகள், , குரோமியம் உப்புகள், சாயப் பொருட்கள், கொழுப்பு வேதிப் பொருட்கள் என நீரை நச்சாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வேதிப் பொருட்கள் தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் இரசாயனங்களில் சுமார் 20% மட்டுமே இறுதியாக பயன்படும் தோலில் சேர்கிறது; 80% கழிவு நீரில் வெளியேற்றப்படுகிறது.
எளிதில் அழுகிவிடும் தோல்களையும், அரிக்கக் கூடிய நச்சுத் தன்மையுடைய இரசாயனங்களையும் பயன்படுத்தும் தோல் தொழிற்சாலைகளுக்குள் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அனைத்திலும் ஒரே போலத்தான் உள்ளது. அந்த வகையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கொல்கத்தா, கான்பூர், போன்ற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் நிலைமைகளுக்கு ஒரு வகைமாதிரியாக உள்ளது.
மேலும், ராணிப்பேட்டை தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி, தொழிற்சாலைகளிலேயே தங்க வைத்து வேலை வாங்குவதன் மூலம் அவர்கள் மீதான பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது.
நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச் சூழல் மாசுபடுதலைப் பொறுத்த வரை, ஹசாரி பாக் பகுதி இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை 1990-களில் இந்திய தோல் துறை சந்தித்தது. அவற்றுக்குத் தீர்வாக உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடனும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தனி அல்லது பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன; அடுத்தடுத்த கட்டங்களாக ஒரு சொட்டு நீரைக் கூட வெளி விடாத சுத்திகரிப்பு நுட்பம் (எதிர் சவ்வூடுபரவல் நுட்பம்), திடக் கழிவு மேலாண்மை, இரசாயனக் கழிவுச் சேற்றை கையாளுதல் என செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், ராணிப்பேட்டை சிப்காட் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய விபத்து அம்பலப்படுத்தியது போல, தோல் கழிவுகளை முறையாக கையாள்வது, அதன் மூலம் நிலம், நீர் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது என்பது எட்டாக்கனவாகவே உள்ளது. சுற்றுப் புற பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவுக்கு நஞ்சாகியிருப்பது, விவசாயம் செய்ய முடியாமல் நிலம் பாழாவது, காற்று மாசுபடுதல் என்று சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாகவே இந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலான அரசு உறுப்புகளோ தமது கடமையை நிறைவேற்றாமல், பெயரளவு கண்காணிப்பு அதிகாரத்தை லஞ்சம் சம்பாதிக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி, இந்த பேரழிவுக்கு உடந்தையாக இருக்கின்றன.
இத்தகைய அழுக்கான, சுற்றுச் சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் கேடான தொழில்களை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டி விட்ட ஐரோப்பிய, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோ, தமது சொந்த நாட்டு மக்களின் (நுகர்வோரின்) எதிர்ப்புகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் சமாளிப்பதற்கு பல்வேறு சீர்திருத்தங்களை முன் வைக்கின்றன. ஐ.எஸ்.ஓ 14000 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ், தொழிலாளர் நல ஆய்வு, பாதுகாப்பு முறைகளை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் பிரச்சனைக்கு திரை போட்டு மூட முயற்சிக்கின்றன.
ஆனால், குறைந்த விலைக்கு பொருட்களை செய்து வாங்கிக் கொள்ளும் அவர்களது நோக்கத்துக்கு தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு இவற்றை உறுதி செய்வது எதிராக உள்ளது.
இந்த நிலையில், இந்த வீடியோ படம் பிடித்து காட்டும் அவலத்தையும், எதிர்கால பிரச்சனைகளையும் எதிர் கொள்ள அதற்காக நியமிக்கப்பட்ட அரசு உறுப்புகள் செயலிழந்து, சீரழிந்து போயிருக்கும் நிலையில் தோல் துறை தொழிலாளர்களும், பகுதி மக்களும் அமைப்பாகத் திரண்டு இவற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை தாமே கையில் எடுப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மணற்கொள்ளையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதனை முன்நின்று நடத்துவது தமிழக அரசு என்பதுதான். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலெல்லாம், மணல் குவாரி தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் பொதுப்பணித்துறையே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது.
புற்றீசலாய் படையெடுத்துள்ள லாரிகள்… காவிரி ஆற்றுப் படுகையில் பகிரங்கமாக, எதற்கும் துணிந்து நடக்கும் மணற்கொள்ளை!
தனியார் மணற்கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், மணற்கொள்ளை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆராவதற்கு வல்லுநர் குழுவொன்றை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். பாதிப்புகளை ஆராந்த வல்லுநர் குழு, மணற்குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதன் மூலம்தான், சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியும் என்று பரிந்துரைத்தது.
உடனே மணல் குவாரிகளைப் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதாக அக்டோபர் 2003-ல் அரசாணை பிறப்பித்தது ஜெ. அரசு. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதால், ஆறுகள் நாசமாக்கப்படாமல் பாதுகாக்கப்படுமென்றும், மணல் விற்பனையின் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றும் வீடு கட்டுபவர்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும் என்றும் பிரமைகள் பரப்பப்பட்டன.
உண்மையில் நடந்தது வேறு. பல மணற்கொள்ளையர்களின் வேட்டைக்காடாக இருந்த தமிழக ஆறுகள், ஜெயா-சசி கும்பல் என்ற ஒரு கொள்ளைக் கும்பலின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அதன் பின்னர் 2007-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆளும் கட்சி என்ற முறையில் கொள்ளைக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் மணற்கொள்ளை அரசுடைமையாக்கப்பட்டது.
மன்னராட்சிக் காலத்தில், குடிமக்களைக் கொள்ளையடிக்கும் உரிமையைக் குறுநில மன்னர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் வழங்கி விட்டு, அவர்களிடமிருந்து கப்பம் வசூலித்துக் கொண்ட சக்கரவர்த்திகளைப் போல, மணற்கொள்ளையைக் குத்தகைக்கு விட்டது ஜெ-சசி கும்பல். அரசிடம் லாரிகள் இல்லாத காரணத்தினால், லாரிகள் வைத்திருப்பவருக்கு மணல் அள்ளும் குத்தகையை வழங்குவதாகக் கேலிக்கூத்தானதொரு விளக்கம் அளித்து, ஆறுமுகசாமி என்ற நபரிடம் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான லிப்டிங் அண்டு லோடிங் காண்டிராக்டை வழங்கியது ஜெ. அரசு. திருட்டை அவுட் சோர்ஸ் செயும் இந்த ஏற்பாட்டின் மூலம், கையில் கறை படாமல் திருடமுடிவதால் தி.மு.க. ஆட்சியிலும் இந்த ஏற்பாடு தொடர்ந்தது.
சட்டபூர்வமான பதுக்கலின் மறுபெயரே மணல் யார்டு
2004 முதற்கொண்டே மணற்கொள்ளை புதிய பரிமாணத்தை அடைந்தது. மண்வெட்டிகள் இருந்த இடத்தில் பொக்லைன் எந்திரங்கள் நுழைந்தன. அள்ளப்படும் மணலைக் குவித்து வைத்து, கொள்ளை லாபம் அடிக்கத் தோதாக ஸ்டாக் யார்டுகள் உருவாக்கப்பட்டன. யூனிட் (100 கன அடி) ஒன்றுக்கு ரூ 315 என்பது மணலுக்கு 2003-ல் பொதுப்பணித்துறை நிர்ணயித்த விலை. அன்று அதைப்போல சுமார் பத்து மடங்கு இருந்த மணலின் சந்தை விலை இன்று 100 மடங்குக்கும் மேலாக உயர்ந்து விட்டது.
வெளி மாநிலங்களுக்கு மணலைக் கடத்துவதற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராடுவதும், லாரிகளைச் சிறைப் பிடிப்பதும் நடக்கவே, மணல் கடத்தலுக்கு எதிராக ஒரு கண் துடைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கும் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் நாள் தவறாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மணலைக் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டப்படி ஆற்றுமணலை பிற மாநிலங்களுக்கு அனுப்ப முடியாது என்பதால், மணலுடன் சிறிதளவு சிமெண்டைக் கலந்து “மதிப்புக்கூட்டப்பட்ட மணல்” என்ற பெயரில் சட்டப்படியே மணல் கடத்தப்படுகிறது.
வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மணல் கடத்தப்படுகிறது. இது கட்டுமானத் தேவைகளுக்கானது மட்டுமல்ல, விவசாயத்தையே பெயர்த்து ஏற்றுமதி செய்வது போல; காவிரி டெல்டாவின் வளமிக்க வண்டல் மண் உள்ளிட்ட தமிழகத்தின் வளமிக்க ஆற்று மணல் துபாய், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் மணலின் அளவு என்ன, அதன் மதிப்பு என்ன, பயன்பாடு என்ன, சந்தை விலை என்ன என்பவையெல்லாம் யாரும் அறியாத மர்மங்கள்.
ஆகஸ்டு 2012-ல் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்திய ஆய்வின்படி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சம் டன் ஆற்றுமணல், பொதுப்பணித்துறையின் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாகக் கூறுகிறது. தமிழகத்தில் ஓடுகின்ற சுமார் 50,000 மணல் லாரிகளில் மூன்றில் இரண்டு பங்கு லாரிகளுக்கு பர்மிட் கிடையாது என்பதும், ஒரே பர்மிட்டில் குறைந்த பட்சம் மூன்று லாரிகள் ஓடுகின்றன என்பதும் நாடறிந்த இரகசியங்கள்.
2011-21-ம் ஆண்டில் மொத்தம் 31,33,932 லாரி லோடு மணல் (ஒரு லோடுக்கு 2 யூனிட்) விற்கப்பட்டதாகவும், அதிலிருந்து அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ 188.03 கோடி என்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது. (தி இந்து, செப் 3, 2012). இதன்படி பார்த்தால் சராசரியாக நாளொன்றுக்கு 8586 லாரி மணல் மட்டுமே அள்ளப்பட்டிருக்கிறது என்று ஆகிறது. 2012-ல் சி.என்.என். தொலைக்காட்சி நடத்தியிருக்கும் ஆய்வோ நாளொன்றுக்கு 20,000 லாரி மணல் கணக்கில் வராமல் கடத்தப்படுவதாக கூறுகிறது.
உண்மையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் மணற்கொள்ளையின் அளவு என்ன? இது பொதுப்பணித்துறை காட்டுகின்ற கணக்கைக் காட்டிலும் நிச்சயமாகப் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். கார்மாங்குடியில் உள்ள வெள்ளாறு மணல் குவாரியில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை ஒரு மாதிரியாக (model) வைத்துப் பார்க்கும்போது மேற்கண்ட மதிப்பீட்டுக்கு நாம் வர முடிகிறது.
எந்த ஒரு ஆற்றிலும் மணல் அள்ளும் அனுமதி வழங்க கீழ்க்கண்ட அளவீட்டு முறையைப் பொதுப்பணித்துறை பின்பற்றுகிறது. உலக இடங்காணல் கருவியின் (Global positioning system set) துணை கொண்டு இத்தனை டிகிரி அட்சக்கோடுக்கும் தீர்க்கக் கோட்டுக்கும் இடையில் உள்ள, இன்னின்ன கிராமங்களின் எல்லைக்குள் வருகின்ற, இன்ன சர்வே எண்ணில் உள்ள, இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறை தனது அனுமதியில் குறிப்பிடுகிறது. இதனைப் பரிசீலிப்பதுடன், சூழலியல் தொடர்பான கட்டுப்பாடுகளையும் விதித்தபின் மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State level Environment Impact assessment authority) ஒப்புதல் அளிப்பதாக சொல்லப்படுகிறது.
அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள், “ஆற்றுப்படுகையின் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும்; ஒரு மீட்டர் ஆழத்திலேயே தண்ணீர் ஊற்றெடுக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் மணல் அள்ளக்கூடாது. மணல் எடுக்கும் பகுதியை அடையாளம் காட்டும் விதத்தில் தூண்கள் நடப்பட்டு சிவப்புக் கொடி கட்டப்படவேண்டும். ஆற்றின் இருபுறமும் கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது; மனித உழைப்பைப் பயன்படுத்தித்தான் மணலை அள்ளவேண்டும்” என்பன போன்ற விதிமுறைகளைக் குறிப்பிடுவதுடன், மொத்தம் எத்தனை கன மீட்டர் மணலை அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படுகிறது.
கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட கனிமவளங்களைச் சூறையாடும் ‘தேசிய’க் கொள்ளையர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி.
மேற்சோன்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு கார்மாங்குடி கிராமத்தில் வெள்ளாற்றில், மூன்றாண்டு காலத்தில், 19.1 ஹெக்டேர் பரப்பளவில், 1,91,000 கனமீட்டர் மணலை அள்ளுவதற்கு பொதுப்பணித்துறையும், மாநில சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன. ( Lr. No.SEIAA&TN/F.No. 1669/EC/1(a)/ 953 /2013 dated: 09.01.2014 )
தமிழகத்திலுள்ள எல்லா குவாரிகளையும் போலவே, கார்மாங்குடி குவாரியிலும் எந்தவித நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை என்பதுடன், அனுமதி அளிக்கப்பட்ட 19.1 ஹெக்டேர் எல்லைக்கு வெளியே வரைமுறையின்றி ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளின் பரப்பளவை ஜி.பி.எஸ். கருவியின் மூலம் அடையாளம் கண்டு அளந்திருக்கின்றனர். பல இடங்களில் 35 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு, ஆறே ஒரு திறந்தவெளிச் சுரங்கமாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய பிரம்மாண்டமான பள்ளங்களின் நீள, அகலம் மற்றும் ஆழத்தையும் அளந்து உத்தேசமாக எத்தனை கன மீட்டர் மணல் அள்ளப்பட்டிருக்கிறது என்றும் கணக்கிட்டிருக்கின்றனர்.
குவாரி இயங்கத் தொடங்கி பத்து மாதங்களாகின்றன. மூன்றாண்டு காலத்தில் மண்வெட்டியின் துணை கொண்டு மனித உழைப்பை பயன்படுத்தி எடுக்கப்படவேண்டிய மொத்த மணலையும், அதாவது அனுமதிக்கப்பட்ட 1,91,000 கனமீட்டர் மணலையும், பொக்லைன் எந்திரங்களைப் பயன்படுத்தி முதல் மாதத்திலேயே அள்ளி முடித்து விட்டனர்.
அதன் பிறகு, அடுத்த 9 மாத காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல பத்து மடங்கு மணல் அள்ளப்பட்டிருக்கிறது. இதேநிலையில் மூன்றாண்டு காலம் முழுவதும் இந்தக் குவாரி இயங்க அனுமதிக்கப்பட்டால், அனுமதிக்கப்பட்டதைப் போல 36 மடங்கிற்கு மேல் மணல் அள்ளப்பட்டுவிடும். இருந்தபோதிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்பட்டதாகத்தான் பொதுப்பணித்துறை கணக்கு காட்டும். 2012-ம் ஆண்டு முழுவதும் 31,33,932 லாரி மணல்தான் அள்ளப்பட்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை கொடுக்கும் கணக்கு இத்தகையதுதான்.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குவாரியிலும் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல 10 மடங்கிற்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள விலையைப் போல 100 மடங்கு விலைக்கு சந்தையில் விற்கப்படுகிறது. இந்தக் கணக்கின் படி 2004 முதல் இன்றுவரை தமிழகத்தில் நடந்துள்ள மணல் கொள்ளையின் பண மதிப்பு பல இலட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும்.
இரும்பு, நிலக்கரி, பாக்சைட், கனிம மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள் எல்லாவற்றிலும் இந்த வழிமுறையைக் கையாண்டுதான் கொள்ளை நடத்தப்படுகிறது. பத்து ஏக்கருக்கு அரசாங்க உரிமத்தை வாங்கிக் கொண்டு நூறு ஏக்கரை சூறையாடுவது என்ற இந்த உத்தியைத்தான் ஆறுமுகசாமி, படிக்காசு, வைகுந்தராசன், பி.ஆர்.பி, ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட கொள்ளையர்கள் மட்டுமின்றி, டாடா, ஜின்டால், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் பின்பற்றுகிறார்கள்.
நிலக்கரி, இரும்பு, கிரானைட் கொள்ளைகளைக் காட்டிலும் மணற்கொள்ளை தோற்றுவிக்கும் இந்தப் பேரழிவு கொடியது. மணல் திருடப்படுகிறது என்று இதனைப் புரிந்து கொள்வதை விட, ஆறுகளே திருடப்படுகின்றன என்று புரிந்து கொள்வதே சரியானது. இதனைத் திருட்டு என்றோ கொள்ளை என்றோ என்று புரிந்து கொள்வதை விட, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை என்று புரிந்து கொள்வதே சரியானது. இது சமூகத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கை. ஆனால், இதுதான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் சித்தரிக்கப்படுகிறது. அரசாங்கக் கொள்கையாக அமல்படுத்தப்படுகிறது.
பயங்கரவாதிகள் தமது நடவடிக்கையை இலாபகரமான தொழிலாக நடத்துவதில்லை. பேரழிவை ஏற்படுத்தும் தமது பயங்கரவாத நடவடிக்கை மூலம் பல இலட்சம் கோடி இலாபமும் ஈட்டுகிறார்கள் மணற்கொள்ளையர்கள்.
– தொரட்டி
________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
இது ‘கருத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திர’த்திற்கான போராட்டங்களின் காலம். ஐரோப்பிய மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களோடு மகா கனம் பொருந்திய பெட்ரோ பொரெஷென்கோ அவர்களும் கைகோர்த்து பாரீஸ் வீதிகளில் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஊர்வலத்தில் நடந்து சென்ற அழகை நீங்கள் பார்த்தால் பிரமித்திருப்பீர்கள். ஆனால், உக்ரைனியர்களோ இந்த ஆபாசக் கூத்தை காறித் துப்புகிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் சுமார் 33 பத்திரிகையாளர்களை கடத்தி, 47 பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையிலடைத்த பெட்ரோ பொரெஷென்கோ உக்ரைனின் தற்போதைய அதிபர்.
சார்லியின் மேல் தாக்குதல் தொடுத்து பதினேழு உயிர்களைக் கொன்றொழித்த ஜிஹாதிகளின் செயல் காட்டுமிராண்டித்தனமானது; கண்டனத்திற்குரியது. உலகமே காறித்துப்பும் தங்களது மூடத்தனமான செய்கையால் ஆகக் கீழ்த்தரமான கடைந்தெடுத்த ஒரு தெருப் பொறுக்கியான பெட்ரோ போன்ற கனவான்களுக்கெல்லாம் கருத்துரிமை போராளிகளாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.
சார்லி ஹெப்டோ படுகொலையும், அது குறித்த போராட்டங்களும், விவாதங்களும் அனைவரையும் உணர்ச்சி வேகத்தில் சில விசயங்களை பரிசீலிக்க அல்லது பார்க்க விடுவதில்லை.
சார்லி ஹெப்டோ ஒரு பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகை. அறுபதுகளில் பிரபலமாக இருந்த ஹாரா கிரி என்ற பத்திரிகையின் வழித்தோன்றல் தான் சார்லி ஹெப்டோ. எந்தப் பொறுப்புமின்றி சகலரையும் வம்பிழுப்பது சார்லியின் சிறப்பு. அவர்களது கார்டூன்களுக்குத் தப்பியவர்கள் மிகச் சிலரே. ஓரினச் சேர்க்கையாளர்கள், கத்தோலிக்கர்கள், பெண்கள், புலம்பெயர்ந்த கருப்பின மக்கள், ஆசியர்கள் என்று நீளும் இந்தப் பட்டியலில் அரிதாக யூதர்களும் இசுரேலும் கூட இடம் பெற்றதுண்டு. சார்லி ஹெப்டோ ப்ரெஞ்சு மக்களின் நாசூக்கான ரசனைக்கு தீனி போட்ட பத்திரிகை இல்லை என்பதால் அது எப்போதும் வணிக ரீதியில் வெற்றிகரமான பத்திரிகையாக நடந்ததில்லை.
2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து (அல்லது 1990-களின் இறுதிப்பகுதியில் இருந்து) சார்லி ஹெப்டோவின் ‘பகடியின்’ தரம் ஆக கீழ்த்தரமாக செல்லச் செல்ல அதன் விற்பனை எண்ணிக்கையும் கணிசமாக சரியத் துவங்கியது. இந்நிலையில் தனது வர்த்தக இருப்புக்காக இசுலாமியர்களைக் குறிவைக்கத் துவங்கியது இப்பத்திரிகை. ஏறக்குறைய அதே சமயத்தில் இரட்டை கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து மேற்குலகில் கலாச்சார ஒதுக்குதலை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தனர் இசுலாமிய மக்கள்.
அமெரிக்கா தலைமையிலான ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில்’ அங்கம் வகித்து அமெரிக்காவின் போர் தந்திர நலன்களுக்கு கணிசமாக செலவு செய்யத் துவங்கின ஐரோப்பிய நாடுகள். அதே நேரம் இரண்டாயிரங்களின் பிற்பகுதியில் துவங்கவிருந்த பொருளாதாரப் பெருமந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை நாடத் துவங்கியிருந்தன. இந்நடவடிக்கைகளின் உடனடி பலி – மக்கள் நலத் திட்டங்கள். இது பரவலாக ஐரோப்பாவெங்கும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருந்தது.
எழுந்து வரும் மக்களின் அதிருப்திக்கு இணையாக ஐரோப்பிய வலதுசாரிகளும் நியோ நாஜிகளும் மெல்லத் தலையெடுக்கத் துவங்கியிருந்தனர். அந்த சமயத்தில் ஐரோப்பாவெங்கும் தலைவிரித்தாடிய இசுலாமிய வெறுப்பின் அறுவடையில் சார்லி ஹெப்டோ தனது பங்கையும் எதிர்பார்த்தது. விளைவாக இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து கார்ட்டூன்களை வெளியிடத் துவங்கினர்.
’இசுலாமியர்களை தனிச்சிறப்பாக குறிவைத்து’ என்ற இந்த மூன்று வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்று “ஜெசூயிஸ் சார்லி” (அதாவது ‘நான் சார்லி’) என்பது மேற்குலகில் ஒரு முழக்கமாகியுள்ளது. இந்த முழக்கம், பொதுவில் கருத்துரிமைக்கான அறைகூவலாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் மேற்குலகில் மெல்ல மெல்ல திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் இசுலாமிய வெறுப்பே இதன் அடிநாதமாக உள்ளது.
ஜனநாயகத்தின் தொட்டிலான ஐரோப்பியாவின் சிறப்பான தனிமனித சுதந்திரம், வாழும் உரிமை மற்றும் இவற்றின் வழி சொல்லப்படும் கருத்துரிமை என்பதெல்லாம் முக்காடிட்ட முல்லாக்களுக்கு புரியாத சமாச்சாரங்கள் என்ற கோணத்தில் ஒரு பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கருத்துரிமை என்ற திரையை நாம் கொஞ்சம் விலக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பிரான்ஸ் நாடு ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களின் ஒரு முன்மாதிரியாக போற்றப்பட்ட நாடு; தனிமனித சுதந்திரத்தின் உச்சங்களைத் தொட்ட தேசம் என்பதெல்லாம் பிரான்சைக் குறித்து வெளியுலகில் அறியப்படும் நைந்து போன பிரச்சாரங்கள். “சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல்” – என்று கேட்டுத் தேய்ந்து போன அதே ரிக்கார்டை மீண்டும் ஓட்டுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இதே பிரான்சில் தான் அல்ஜீரியாவிலிருந்தும் பிற ஆப்ரிக்காவின் முன்னால் பிராஞ்சு காலனிய நாடுகளில் இருந்தும் குடியேறிய கருப்பின மக்கள் இன்றும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு இணையாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல்பழுப்பு மற்றும் கருப்புத் தோல் மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வாடகைக்கு வீடு பிடிப்பதும் கூட அத்தனை சுலபமல்ல.
நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்து ஜனநாயகத்திற்கான – விடுதலைக்கான – முதல் குரலைக் கொடுத்தவர்கள் பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகளும் தான். ஆனால், உழைக்கும் மக்களின் வெற்றி வெகு சீக்கிரத்திலேயே முதலாளி வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது; முதலாளித்துவ ஜனநாயகத்தின் ’மாண்பும்’ சந்தி சிரித்தது. அதன்பின் உலகுக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்த ’உச்சநிலை மாந்தர்கள்’ தான் ஆப்ரிக்காவில் அடிமை வியாபாரம் செய்தார்கள். மூன்றாம் உலக நாடுகளைச் சூறையாடும் போட்டியில் முன்னிற்பதும் ஜெயமோகன் உச்சிமோந்த அதே ‘உச்சநிலை மாந்தர்கள்’ தாம்.
முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரையவே கூடாது, குரானை விமரிசிக்கவே கூடாது, இசுலாமிய பிற்போக்குத்தனங்களை இடித்துரைக்கவே கூடாது என்பது போன்ற தலீபானிய கடுங்கோட்பாட்டுவாதத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால், பொருளாதார ரீதியிலும், சமூக கலாச்சார தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருபிரிவு மக்கள் தேவதூதராக கருதும் ஒருவரின் நிர்வாணப் படங்களை வரைவது கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தியா? அவர்களை மேற்குல வெறுப்பிற்கான பலனை முன்னிட்டு இழிவுபடுத்தவது சரியா?
கருத்துரிமை ‘போராளிகளுக்கு’ புரியும் விதத்தில் சொல்வோம். பார்ப்பனியத்தின் அடையாளமாக உழைக்கும் மக்களை ஒடுக்கும் ராமன்-கிருஷ்ணன் போன்ற பார்ப்பன தெய்வங்களை கிண்டலாக வரையும் நாம் அதே போன்று நாட்டுப்புறத் தெய்வங்களை வரைவோமா? இசக்கியும், சுடலைமாடனும், மதுரை வீரனும், முனியாண்டியும் என்னதான் சுருட்டு, சாராயம், கறி சகிதம் வணங்கப்பட்டாலும் இந்த தெய்வங்களையும் பார்ப்பனிய தெய்வங்களையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். அதே நேரம் இப்பிரிவு மக்களிடமும் நாத்திகமும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் பிரச்சாரம் செய்வோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் அஜென்டாவாக ஆடு கோழி பலி தடை சட்டம் வந்தால் அதை எதிர்த்தும் போராடுவோம்.
இசுலாமிய மதவெறியையும், மதப்பிற்போக்குத்தனங்களையும் எதிர்ப்பவர்கள், அதற்கு மேல் அவர்களது கடவுளையோ, தூதரையோ ஆபாசமாக படம் வரைந்து பேசுவது உண்மையில் இசுலாமிய மதவெறிக்குத்தான் வலு சேர்க்கும். ஏசுவையும், மேரியையும் கூட சமூக ரீதியிலான பின்புலத்தில் பரிசீலிப்பதற்கும் தனிப்பட்ட பாலியல் ரீதியில் இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னதை நாம் செய்ய மாட்டோம். அதே போல பார்ப்பனியத்தின் மீதான நமது விமரிசனம் என்பது அதன் ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும் அதன் புராண, இதிகாச, கடவுள், சடங்குகள் மீதானே அன்றி வெறுமனே கடவுளை கிண்டல் செய்வது என்றல்ல.
வேறு ஒரு பின்புலத்தில் இதை வைத்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆதிக்க சாதி ஒன்று பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் பத்து அருந்ததியினர் குடும்பங்கள் மட்டும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரே நேரத்தில் – “_____ நாய்களே” என்று ஆதிக்க சாதியை ஏசுவதும், “______ நாய்களே” என்று அருந்ததினரை ஏசுவதும் ஒரே தரத்திலான ‘விமரிசனம்’ என்று சொல்ல முடியுமா? இல்லை இரண்டையும் நாம் ஒரே அளவில் பரிசீலிக்க முடியுமா?
ஏற்கனவே சமூக ரீதியிலான ஒதுக்குதலை சந்தித்து மனதளவில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு தரப்பு மக்களின் தவறுகளையோ பிற்போக்குத்தனங்களையோ சுட்டிக்காட்டும் போது சொற் தேர்விலும், சொல்லும் தன்மையிலும் ஒரு குறைந்தபட்ச கவனம் தேவைப்படுகிறது. இங்கோ சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபியைக் குறித்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள் விமரிசனம் என்ற வரையறைக்குள் வருவன அல்ல. அவை கண்மூடித்தனமான வசைகள். எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்களை நோக்கி எறியப்பட்ட அமிலக் குண்டுகள்.
வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன்
ஒரு உள்ளடக்கத்தோடு வரும் போது தான் விமரிசனம் அல்லது எதிர்க்கருத்து என்பவை அவற்றுக்கான பொருளைப் பெறுகின்றன. தமிழ் பத்திரிகை உலகில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளத்திற்கு இணையாக ஜெயலலிதாவை காட்டமாக விமர்சிக்கும் வேறு பத்திரிகைகள் இல்லை – ஆனால், நாங்கள் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான ஜெயலலிதாவின் ஆபாச கேலிச்சித்திரத்தை எதிர்க்கிறோம் என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வசைபாடும் உரிமையெ பண்பாட்டுக் கொடை என்றும் அதுவே ஐரோப்பிய ஜனநாயகத்தின் உச்சம் என்றும் சொல்கிறார் ஜெயமோகன். இத்தனை ‘ராவாக’ சொல்வது 21-ம் நூற்றாண்டின் நாஸ்டர் டாமஸான ஜெமோவுக்கு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். எனவே தான் ‘வசைபாடும் உரிமைக்கு’ அரசின்மைவாதம் (அராஜகவாதத்தின் ஜெயமோகனிய மொழிபெயர்ப்பு) என்ற மேக்கப்பை போட்டு விடுகிறார்.
அராஜகவாதம் என்கிற ‘ஐரோப்பிய மையவாத’ கருத்தியலை ஜெயமோகனின் வாயில் இருந்து வரவழைத்த அன்னிய சக்தி யார் என்று தெரியவில்லை.கட்டுப்பட்டிற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிரான ’உன்னத’ நிலையான அரசின்மைவாதத்திற்கு காட்டுமிராண்டி இனக்குழு மனப்பான்மை கொண்ட நாம் சென்று சேர்வதில் இருக்கும் சிக்கலை ஜெயமோகன் பீராய்ந்துள்ளார் – அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. விஷ்ணுபுரம் வட்ட உன்னதர்களின் ஊட்டி சந்திப்புகளுக்கான விதிமுறைகளே புத்தகமாக அச்சிடும் அபாக்கிய நிலையில் தானே நாம் இன்னமும் இருக்கிறோம்.
அராஜகவாதத்தைப் போற்றிப் புகழும் ஜெயமோகன், அவரது வாசகர் சந்திப்புக் கூட்டங்களில் அராஜகவாத அணுகுமுறை பின்பற்றப்படுவதற்கு அவரே விதித்துள்ள தடைகளுக்கு என்ன காரணம்? என்னதான் அராஜகவாதத்தைப் பற்றி கதாகலாட்சேபம் நடத்தினாலும் கேட்பவர்கள் சரக்கடித்து விட்டு அராஜகாவாதத்தை கடைபிடித்தால் பிறகு பிரசங்கத்தை எப்படி நடத்துவது? ஆக ஒரு வீணாப் போன இலக்கியக் கூட்டத்திற்கே இத்தகைய ஒழுங்குகள் தேவையென்றால் பெருந்திரளான மக்கள் கூட்டம் அதன் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் ஒரு வரைமுறை தேவையா இல்லையா?
சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரம் ஒன்றை கவனியுங்கள்: (இங்கே பிரசுரிக்கப்படவில்லை)
க்வென்னெல்லி வணக்க முறை!
அந்தப் படத்தில் உள்ளவர் பெயர் யூடோன்னெ ம்பாலா ம்பாலா (Dieudonne M’bala M’bala) – இவர் ஒரு ப்ரெஞ்சு நகைச்சுவையாளர். யூத வெறுப்பாளராகவும் நாஜி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். இவர் க்வென்னெல்லி என்ற சைகை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தார் – அது நாஜி வணக்கத்தின் தலைகீழ் வடிவம். படத்தில் அவரது பின்புறத்தில் சொருகியிருப்பது வாழைப்பழம் போல் தோன்றும் ஒரு உணவுப் பதார்த்தம்; அதன் பெயரும் க்வென்னெல்லி தான்.
இந்தப் படத்தை இந்தளவுக்குத் தகவலோடு அவதானிக்கும் எவரும் அதில் இருக்கும் பகடியைப் புரிந்து கொள்ள முடியும். நியோ நாஜி ஒருவரின் மேலான கூர்மையாக விமரிசனமாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்தக் கேலிச்சித்திரத்தில் அது ஒரு அடுக்கு (Layer) மட்டும் தான்.
க்வென்னெல்லி உணவுப் பதார்த்தம் வேறு வேறு வடிவங்களில் செய்யப்படும் போது, ஏன் குறிப்பாக வாழைப்பழ வடிவத்தை ஓவியர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் வாழைப்பழத்தின் பெயரை நினைவூட்டும் தலைப்பு வைக்க வேண்டும்? (போன் அனானியா – பிரித்துச் சொன்னால் நல்ல பைனாப்பிள் / சேர்த்துச் சொன்னால் போனானியா)
போனானியா என்பது வாழைப்பழம் மற்றும் கோகோ கலந்து செய்யப்படும் ஒரு பானம். அதன் டப்பா முகப்பில் முதலாம் உலகப் போர் சமயத்தில் பிரெஞ்சு இராணுவத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய நலனுக்கான போரில் பங்கேற்ற செனகலைச் சேர்ந்த வீரர் ஒருவரின் படம் இடம்பெற்றிருக்கும். இன்றளவிற்கும், அவ்வாறு செனகல் வீரரை விளம்பர முகப்பில் பயன்படுத்துவது பிரான்சின் கடந்தகால இனவெறி மேலாதிக்கத்தின் குறியீடாக உள்ளது என்ற விமரிசனம் பிரான்சின் முற்போக்காளர்கள் மத்தியில் உண்டு.
இப்போது கேலிச்சித்திரத்தின் நாயகன் யுடொன்னே, காமரூன் தந்தைக்கும் ப்ரெஞ்சு தாய்க்கும் பிறந்த கலப்பினத்தவர் என்பதை சேர்த்துப் பாருங்கள். எமது இனப் பெருமையின் அன்றைய காலாட்படை கருப்பர்கள், இன்றைக்கு எமக்குத் தேவையானதை (நியோ நாஜிசம்) பேசும் வேலையையும் அவர்களே செய்வார்கள் (அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் முட்டாள்கள்) என்ற ஒரு பொருள் வருகிறதா? இது இன்னொரு அடுக்கு.
மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு –
இது பிரான்சில் வாழும் கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம்.
கருப்பின மக்களில் இருந்து நீதி அமைச்சராக ஆன பெண்மணியைப் பற்றிய சித்திரம். (கருப்பின மக்களை குரங்குகள் என்று வெறுப்பை உமிழ்வது ஐரோப்பிய இனவாதிகளின் வழக்கம்)
இது போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட (கருவுற்ற) பெண்கள், தங்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகைக்கான காசோலையை நிறுத்தாதீர்கள் என்று சொல்வது போன்ற படம்.
இந்தச் சித்திரம் மேல் தோற்றத்தில் ப்ரான்சு அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை நிறுத்துவதாக சொல்லிவருவதற்கான விமரிசனமாக தெரியலாம். அனால், அதில் ஏன் வெளிநாட்டைச் சேர்ந்த போகோஹராம் பெண்கள்? அப்பெண்களின் கவலையெல்லாம் தீவிரவாதிகளிடம் தாம் பாலியல் அடிமைகளாக இருப்பதில் இல்லை – காசு தான் அவர்களது குறிக்கோள் என்று அவதூறு செய்வது உண்மை நோக்கம்.
Surrogacy என்ற வாடகைத் தாய் முறையைக் கேலி செய்வது போன்ற இந்த கேலிச் சித்திரத்தில், நிர்வாணமான கருப்பின பெண்ணை இழுத்து வருபவர்கள் இரண்டு ஐரோப்பிய ஓரினச் சேர்க்கையாளர்கள்.
மேல் விளக்கம் தேவையில்லை.
கருத்துச்சுதந்திரம் என்கிற வஸ்து அந்தரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கும் மந்திர மாங்காய் இல்லை. அது வாழும் உரிமையோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்தது. சார்லி ஹெப்டோவின் கருத்துரிமை என்பது ப்ரான்சில் வாழும் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழும் உரிமையை கருத்தியல் ரீதியில் பாதிக்கக் கூடியது. அல்லது சிறுபான்மை மக்களை வெறுக்கும் வெள்ளை நிறவெறியின் அதிகாரத்திற்கு மயிலிறகு ஆட்டுவது போன்றது. இந்துக்கள் அல்லாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று சொல்வதும் கூட ஒரு ‘கருத்து’ தான். இதை வெளிப்படுத்துவதற்கு இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு இருக்கும் உரிமையை அறிவுள்ளவர்களால் ஆதரிக்க முடியுமா? இலக்கியத் தவளைகளை விடுங்கள், கிணற்றுக்கு வெளியே வாழும் மனிதர்களாக சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மால் சார்லியாக இருக்க முடியுமா? பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். அபூகிரைபின் சொந்தக்காரர்கள் தம்மைச் சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். நரோதா பாட்டியாவின் கசாப்புக்காரர்கள் தம்மை சார்லி என்றழைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொந்த நாட்டு மக்களை ஷரியா சட்டங்கள் என்கிற மத்தியகால இருட்டுப் பெட்டிக்குள் பூட்டி வைத்துள்ள அரபு நாட்டுத் தலைவர்கள் தங்களைச் சார்லி என்கிறார்கள்.
ஒட்டுமொத்த மனிதகுல விரோதிகள் எல்லோரும் சார்லிகளாக இருக்கும் உலகில், நீங்களும் சார்லியாக இருக்க முடியுமா?
சிப்காட்டின் சிற்றிலையும்
கண் அயர்ந்த தருணம்.
மரணத்தின் சகதி
சுனாமியாய் பாய்ந்து வர
கண் விழிக்காமலே
இன்னதென்று தெரியாமலே
பத்து உயிர்கள்
துடித்து அடங்கிய கொடூரம்!
ரசாயனக் கழிவால் புரட்டி எடுக்கப்பட்ட அந்த பிணங்களை மனிதர்கள் என்று! இப்பொழுதாவது அடையாளம் காண முடிகிறது அல்லவா?
உயிரோடு
கசக்கிப் பிழியப்பட்ட
பணிக் காலங்களில்
அவர்களை
கண்டு கொள்ளாமல் இருந்த
கண்களால்,
ரசாயனக் கழிவால்
புரட்டி எடுக்கப்பட்ட
அந்த பிணங்களை
மனிதர்கள் என்று
இப்பொழுதாவது
அடையாளம் காண
முடிகிறது அல்லவா?
நெஞ்சை அறுக்கும்
சோகம் இது…
நினைத்தே பார்க்க முடியாத
விதங்களில்
முதலாளித்துவம்
நம்மைக் கொல்லும்
காலம் இது.
இப்படியா
சாவு வரவேண்டும்?
மூலதனத்தால்
மெல்லமெல்ல
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பதை
வாழும் போது
அவர்கள் அறிந்தார்களா?
தெரியவில்லை!
சாகடிக்கப்பட்ட நேரத்திலும்
அவர்கள்
உணர்வதற்கு வாய்ப்பில்லை!
எதற்காக வாழ்கிறோம்
என்பதை தெரிந்து கொள்ளவும்
அவர்களுக்கு நேரம் வாய்க்கவில்லை.
எதற்காகச் சாகிறோம்
என்பதை
அறிந்து கொள்ளவும்
அவர்களுக்கு வாழ்க்கை இல்லை!
இரவில் வந்த
சாவின் இரைச்சல்
அசைக்க முடியாதபடிக்கு
பகலின் வேலைகள்
ஏற்கனவே அவர்களை
பாதி கொன்றிருந்தது.
வாழ முடியாத
வாழ்க்கையின் கனவுகளை
மீளமுடியாத மரணம்
அவர்கள் கண்களிலேயே
புதைந்து விட்டது
நம்மைப்போலவே…
ஒரு தாயால்
பத்து மாதம் பார்த்து பார்த்து
சுமந்து பெத்தவர்களை
நிமிடத்தில்
மூலதனத்தின் லாபவெறி
சிதைத்துவிட்டது.
“திட்டமிட்டே…தெரிந்தே தேக்கி வைக்கப்பட்ட மூலதனத்தின் நஞ்சு,ரத்தமும், சதையும் நம்மைப்போலவே சுவாசமும், கற்பனையும் கொண்ட தொழிலாளர்களை மூழ்கடித்தது”
விதிமுறைகளை மீறி
வரையறைகளைத் தாண்டி
திட்டமிட்டே…தெரிந்தே
தேக்கி வைக்கப்பட்ட
மூலதனத்தின் நஞ்சு,
ரத்தமும், சதையும்
நம்மைப்போலவே
சுவாசமும், கற்பனையும் கொண்ட
தொழிலாளர்களை மூழ்கடித்தது
விபத்தா?
இல்லை… இது
திட்டமிட்ட படுகொலை!
இனி என்ன?
ஏழைகளுக்கு
மானியம் தருவதுதான்
அரசின்
வளர்ச்சிக்கு தடை
ஆதலால்
பிணங்களுக்கு
விலை பேசும்
தொழில் வளர்ச்சி தொடரும்…
கொலையாளிகளே
தடயங்கள் சேகரிக்கும்
நாடகம் நடக்கிறது,
மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு
இப்போதுதான்
அங்கே சட்டவிரோத
கழிவுநீர் தொட்டிகளே
கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது!
தொழிலார் நல ஆணையத்துக்கோ
தொழிலாளிகளாக சில மனிதர்கள்
அங்கு இருந்திருப்பதே
இப்போதுதான்
தோலுக்கு உரைத்திருக்கிறது!
கால்கட்டு, கைகட்டு
வாய்கட்டை
வாழும்போதே
சட்டத்தால் சரிக்கட்டிய
சட்டம்-ஒழுங்கு
மீண்டும் ஒரு முறை
பிணங்களை பரிசோதிக்கிறது!
உண்மைகள்
மீண்டு விடக் கூடாதென்று!
உரிமைகளை பிணமாக்கிய
ஒவ்வொரு அரசுத் துறையும்
பிணங்களின் உரிமைகளை
பாதுகாக்க வந்துவிட்டன.
போயசு கழிவிற்கு
கோயில் கோயிலாக
பூசை செய்யும் அமைச்சர்களுக்கு
இப்பொழுதுதான்
ராணிப்பேட்டை சிப்காட்டில்
ரசாயன கழிவிருப்பதே
தெரிந்திருக்கிறது!
எல்லாமே
இப்பொழுதுதான் தெரிந்ததுபோல
அரசும், ஆளும் வர்க்கமும்
நடிக்கிற நடிப்பில்
வெளிப்படும் கழிவு
அமிலத்தை விட கொடியது!
ராணிப்பேட்டை மட்டுமா?
நாடெங்கும்
மூலதன லாபவெறியின்
ரசாயனத் தொட்டிகள்
நம்மைச் சுற்றி
எழுப்பப்பட்டுள்ளன…
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்… இங்கெல்லாம் கொத்தடிமைகளாக பிணைக் கைதிகளாக நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது மூலதனத்தின் ரசாயனம்.
ஆந்திரா அரிசி ஆலைகள்…
பெங்களூர் கல் குவாரிகள்
மகாராஷ்ட்டிரா மிட்டாய் கம்பெனிகள்…
குஜராத் உப்பளங்கள்..
கூர்கான் தொழிற்சாலைகள்…
திருப்பூர் சாயப்பட்டறைகள்…
கோவை பஞ்சாலைகள்…
திருப்பெரும்புதூர் பன்னாட்டுக் கம்பெனிகள்..
தகவல் தொழில்நுட்ப (I.T.) நிறுவனங்கள்…
இங்கெல்லாம்
கொத்தடிமைகளாக
பிணைக் கைதிகளாக
நம்மைப் பிடித்து வைத்திருக்கிறது
மூலதனத்தின் ரசாயனம்.
வேறு வேறு விதமாய்
அது வெடித்துக் கொல்வதை
உணர
வெறும் மனித உணர்வு
மட்டும் போதாது
வர்க்க உணர்வு வேண்டும்!
அதிரும் எந்திரங்களின் ஒலியில் மெட்ரோ ரயில் பணிகளில் சத்தமில்லாமல் கொல்லப்படுபவர்கள் எத்தனை?
அதிரும் எந்திரங்களின் ஒலியில்
மெட்ரோ ரயில் பணிகளில்
சத்தமில்லாமல்
கொல்லப்படுபவர்கள் எத்தனை?
விண்ணை முட்டும்
நகரத்து
கட்டிட கவர்ச்சிக்காக
பளபளக்கும்
வண்ணக் கலவையில்
கலந்த
இளரத்தம் எவ்வளவு?
எண்ணூர் பவுண்டரிகளின்
இரும்புக் குழம்பில்
அடையாளம் தெரியாமல்
கரைந்துபோன முகங்கள் எத்தனை?
கண்ணுக்கு நேரே
வாழ்வின் அதிர்ச்சிகளை,
பிறரின் துன்பங்களை
கண்டும் காணாத மனம்
சாவின் அதிர்ச்சியில்
உறையும் என்று!
நம்பாமல் செத்தவர்களின்
பார்வை,
நம்மையும் குற்றம் சாட்டுகிறது!
ஒன்று தற்கொலை
இல்லையேல் கொலை
என்று நெருக்கும்
இந்தக் கட்டமைப்பை
நொறுக்கும் சக்தியை
தேடித் தவித்து
உணர்ச்சிகளை எழுப்புகின்றன
அந்தப் பிணங்கள்.
யாருக்கு வேண்டும்
உங்கள் அனுதாபம்?
ஒட்டுமொத்த குடும்பமே
ஊருக்கு பிணமாகத் திரும்பும்
கொடுமையின் காரணங்களை
தட்டிகேட்க முடிந்தவர்கள்
கிட்ட வாருங்கள்!
யார் பெற்ற பிள்ளைகளோ அவர்கள்? இல்லை… நம் வர்க்கத்து கருவறையில் வந்த உடன் பிறப்புகள்!
இறந்தவர்களுக்கும்
நமக்கும் என்ன உறவு?
“அங்கே இருப்பவர்களும்
நம்மைப்போல
உழைத்து வாழும் மனிதர்கள்தானே”
என்ற நம்பிக்கையில்தானே
அவர்கள்
வந்திருப்பார்கள்.
யார் பெற்ற
பிள்ளைகளோ அவர்கள்?
இல்லை…
நம் வர்க்கத்து கருவறையில்
வந்த உடன் பிறப்புகள்!
உழைக்கும் இனமாய்
தேநீர் கடையிலும்..
கையேந்தி உணவகத்திலும்
கடைத்தெருவிலும் …
ஒன்று கலந்தவர்கள்
தனது மகன் 46 வயதான அன்வர் கானையும், 22 வயதான அலி அக்பர் கான், 19 வயதான அலி அஸ்கர் கான் இரண்டு பேரன்களையும் அன்வர் கான் மேற்கு வங்க கிராமத்தில்…
பிணமாய்
மேற்கு வங்கம் திரும்புவது
ஏற்க கூடியதா?
அபிப்கான்
அவரது மகன்கள்
அலிஅக்பர், அலி ஆஸ்கார்
சகோதரர்கள் ஷாஜகான், குதூம்
சுக்குர், ஏசியாம்,பியார்
அக்ரம்- கண்களோடு
கண்ணமங்கலம் சம்பத்
விழி குளறி
மூச்சு துடித்த அந்த நேரம்,
என்ன நினைத்திருப்பார்கள்?
யாரை அழைத்திருப்பார்கள்?
என்ன சொல்லி துடித்திருப்பார்கள்?
மூழ்கடிக்கப்பட்டவர்களால்
சொல்ல முடியவில்லை…
தேக்கி வைக்கப்பட்டிருக்கும்
மூலதனத்தின் சாவுத் தொட்டிகளுக்கிடையே
மீதமிருப்பவர்களே
நீங்கள் சொல்லுங்கள்!
கழிவாய்த் தேங்கி
உடையக் காத்திருக்கும்
இந்தக் கட்டமைப்பை
விழிப்போடு நாமே
உடைத்து எறிவதை விட
வேறு என்ன
வாழ வழி?!
பச்சையப்பன் சொத்துக்களை பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் தின்று கொழுத்ததை எள் முனையளவாவது தடுத்து ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகள் கல்வி பெற உருவாக்கபட்ட பச்சையப்பன் அறக்கட்டளையிலும் அதன் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களிலும் கொள்ளை கொடிகட்டி பறக்கின்றது.
கடலூரில் உள்ள கந்தசாமி மகளிர் கல்லூரியில் ( KNC) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. கேமராக்களை வைத்து மாணவிகளை வேவு பார்ப்பது, கட்டிட நிதி பெற்று கழிவறைகள் கூட கட்டாமல் இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி தலைவர்களை அழைத்து அரசியல் நிகழ்ச்சி நடத்துவது, முற்பகல் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கையின் போது பொது பட்டியல் மட்டும் வெளியிட்டுவிட்டு, வெய்டிங் லிஸ்டு வெளியிடாமல், காசுக்கு விற்பனை செய்வது என்று முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன.
“மாலை நேர சுயநிதி கல்லூரியின் மூலம் மாணவிகள் சேர்க்கையை அதிகரித்து கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் KNC கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் மீது நடவடிக்கை எடு” என்று போர்க்கொடி தூக்கிய கணிதத்துறை பேராசிரியை சாந்தியை பணியிடை மாற்றம் செய்துள்ளது பச்சையப்பன் அறக்கட்டளை கும்பல்.
பேராசிரியை சாந்தியின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டியும், ஊழலால் நாற்றமெடுத்து நாறுகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரியும் இங்கே மாணவிகள் இரண்டு மாதங்களாக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 27.01.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில் 300 மாணவிகள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மணி நேரம் முழக்கமிட்டு ஒரு மணி நேரம் வகுப்பு புறக்கணிப்பு செய்து பிறகு வகுப்புக்கு சென்றனர்.
பின்னர் தலா பத்து ரூபாய் என்று நிதி வசூல் செய்து இந்திய மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் 24 மணி நேர உள்ளிருப்புப் போராட்டம் என்று நுழைவு வாயிலில் பேனர் கட்டி விட்டு மாலை 2 மணிக்கு மேல் மாணவிகள் தாங்களாகவே உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.
இரவு போராட்டம் தொடங்கியதும் கடலூர் NT போலீசார் வந்து, “இரவு நேரங்களில் போராட்டம் நடத்துற உங்களையல்லாம் எவன் கல்யாணம் செஞ்சுக்குவான்? ஊர்ல எவனாவது உங்களை குடும்பப் பெண் என்று மதிப்பார்களா? ஒழுங்கா எல்லோரும் வீட்டுக்கு ஓடி விடுங்க” என வக்கிர புத்தியுடன் மிரட்டியது.
“அதெல்லாம் எங்களோட பிரச்சனை அதை நாங்க பார்துக் கொள்கிறோம். முதலில் நீங்க எங்க கல்லூரியை விட்டு வெளியே போங்க” என மாணவிகள் எச்சரித்து வெளியேற்றினார்கள்.
மாணவிகளோடு இணைந்து போராட வந்த பெற்றோர்களிடம், “எஃப்.ஐ.ஆர் போடப் போறோம். உன் பிள்ளைப் படிப்பு பாழாய் போக போகுது” என மிரட்டி விரட்டி அடித்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை மாணவிகளுக்கு கொடுக்க விடாமல் பிடுங்கி சாக்கடையில் வீசினார்கள்.
“வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன், அதனால் வீட்டுக்கு போகிறேன்” எனக் கூறிய ஒரு மாணவியிடம் ஒரு பெண் எஸ் ஐ, “என்னடி உன்னோட பாய்பிரண்ட பார்க்க போறியா. உன்னுடைய செல்போனை கொடு, பாய்பிரண்ட் நம்பர் எடு” என்று பலபேர் முன்னிலையில் அந்த மாணவியை அசிங்கப்படுத்தினார். அந்த மாணவி அழுது கொண்டே போராடும் மாணவிகளோடு இணைந்து கொண்டார்.
பின்னர் RDO ஷர்மிளா வந்து போராடும் மாணவிகளை பார்த்து, “உங்களுக்கு எங்களால பாதுகாப்பு வழங்க முடியாது ஆதலால் எல்லோரும் கலைந்து செல்லுங்கள்” என்றார்.
இதற்கு மாணவிகள், “கல்லூரியை பாதுகாக்க போராடும் நாங்கள் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள மாட்டோமா? எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தால் போதும்” என்று முகத்தில் அறைந்தாற்போல் பதில் அளித்தனர்.
இச்சம்பவத்தை கேள்விப்பட கடலூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர் கடலூர் மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவிகளை சந்திக்க சென்றனர்.
போராடிக் கொண்டு இருந்த மாணவிகளை வக்கிரமாக திட்டிக்கொண்டு இருந்த போலீசும், நிர்வாகத்திற்கு ஆதரவான ரவுடிகளும் தோழர்களைக் கண்டதும், “நீங்க எதற்கு இங்கு வந்திங்க” என்று தோழர்களை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார்கள்.
தோழர்கள் போலீசிடம், “நாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பு. இப்படி போராடுகிற மாணவிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் நிறைய போலீசை குவிப்பதும், உணவு கொண்டுவந்த உறவினர்களை தடுப்பதும் தவறு” என்றும் அவர்கள் கொண்டு வந்த ஆட்டோவை விடுவிக்க கோரியும் டி.எஸ்.பி-யிடம் பேசினர்.
அப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்குரைஞர் முழு குடிபோதையில், “எங்க அண்ணன் பொண்ணு உள்ள இருக்கிறாள், அவள வெளிய அனுப்புங்க” என்று கூறிக்கொண்டு மாணவிகளை கேவலமாக திட்டிக்கொண்டு இருந்தார்.
இதை பார்த்த தோழர்கள், “அவர்கள் அவர்களுடைய கல்லூரிக்காகதானே போராடுகிறார்கள். போராடும் மாணவிகளை இப்படி அசிங்கமாக பேசலாமா” என்று கேட்டவுடன்,
“உங்க வீட்டு பொண்ணாயிருந்தா இப்படி விடுவீங்களா” என்று கேட்டு விட்டு, அந்த நேரத்தில் வெளியேறிக் கொண்டிருந்த சில மாணவிகளின் ஒரு மாணவியை பார்த்து “இப்பவே இப்படியெல்லாம் போராட்டம் நடத்துறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா” என்று கேட்டு அங்கு சலசலப்பை ஏற்படுத்தினார்.
அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்கள் நடக்கின்ற எந்த சம்பவத்தையும் புகைப்படமோ, வீடியோ பதிவோ செய்யாமல் போலீசோடு சேர்ந்து நின்று கொண்டு இருந்தனர். “போராடும் மாணவிகளை போலீசு கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதையும் அவர்களை தரக்குறைவாக பேசுவதையும் பதிவு செய்யாமல் நிற்கிறீர்களே” என்று தோழர்கள் கேட்டதற்கு ஒரு நிருபர் போலிசுக்கு ஆதரவாக பேசினார். மற்றவர்கள் செயலற்று நின்று கொண்டிருந்தனர்.
போலீசுகாரர்கள் ஒரு மாணவியின் தந்தையிடம் , “உங்க பெண்ணை போராட்டத்துக்கு அனுப்பியிருககீங்களே, நாளைக்கு அந்த பெண்ணை எவராவது மதிப்பார்களா” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது அந்த மாணவி போலீசிடம், “எதுவாக இருந்தாலும் எங்கிட்ட பேசுங்க. எங்க அப்பாவ மிரட்டுற வேல வேணாம். FIR போடணும்னா போட்டுக்கோங்க” என்று கூறி, “நைனா நீ தைரியமா வீட்டுக்குப் போ. நான் மாணவிகளோடுதான் இருக்க்கிறேன்” என்று சொல்ல, “அந்த மாணவி திமிரா பேசுகிறது” என ஆணாதிக்க திமிரோடு கூறினார், போலீஸ் அதிகாரி.
அதற்கு நம் தோழர்கள், “இதில் எந்த திமிர்த்தனமும் இல்லையே, அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இரவு நேரத்தில் பெண் காவலர்கள் வீட்டுக்கு போகாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களையும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்வீர்களா” என்று கேட்டவுடன் பிறகு அமைதியானார்.
பிறகு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவிகளை பு மா இ மு தோழர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “உங்களுடைய போராட்டம் மிகச் சரியானது. காவல் துறையின் அடக்குமுறைகளைக் கண்டு பயந்து விடவேண்டாம். ‘பெண்கள் இரவு நேரங்களில் போராடினால் இவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள், இவர்களை யார் மதிப்பார்கள், இவர்களெல்லாம் வீட்டிற்கு அடங்காதவர்கள்’ என்றெல்லாம் போலீசு பேசுவதைக் கேட்டு துவண்டு விடவேண்டாம். ஆர்.டி.ஓ. ஒரு பெண், அவர் இரவு நேரத்தில் பணிபுரிகிறார், பெண்கள் இரவுக் காவலர்களாக வேலை செய்கிறார்கள், இவர்களையும் தவறானவர்கள் என்று போலீசு பேசுவார்களா ? எதைப் பேசினால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடுவீர்கள் என்று புரிந்து பேசுகிறார்கள்.
இந்தப் பிரச்சனை போன்று எல்லா கல்லூரியிலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான். அரசுடைமையாக்கினால்தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நீங்கள் கல்லூரியில் உறுதியாக நின்று உள்ளிருப்பு போராட்டத்தை தொடருங்கள்,வெளியில் மக்களிடம் இந்த போராட்டத்தை நாங்கள் எடுத்து செல்கிறோம்.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும், பேராசிரியர் சாந்தியின் பணியிடை மாற்றத்தை இரத்து செய்யவும் தொடர்ந்துப் போராட பு மா இ மு உங்களோடு இணைந்து நிற்கும்” என்று மாணவிகளை உற்சாகப் படுத்திப் புரட்சிகர வாழ்த்து கூறினார்கள். இதை லவ்டு ஸ்பீக்கரில் ஒலிபரப்பி அனைத்து மாணவிகளும் ஆர்வமாகக் கேட்டனர்.
அன்று இரவு 2 மணி அளவில் பெண் போலீசு கல்லூரிக்ககுள்ளே சென்று தூங்கிய மாணவிகளை எழுப்பி உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுங்க என்று கேட்டதுக்கு மாணவிகள் கொடுக்கவில்லை என்றதும் அவர்கள் புத்தகப் பையை எடுத்து அதை கீழே கொட்டி அதில் இருந்த மாணவிகளின் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை எடுத்துக் கொண்டனர்.
இச்சம்பவத்துக்கு பிறகு மாணவிகள் பு.மா.இ.மு ஆதரவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து போலீசுக்கு எதிராக வரண்டாவில் வந்து முழக்கமிட்டனர். இதனால் போலீசு பின்வாங்கியது.
போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இரவே சுவரொட்டி தயாரித்து நகர பேருந்துகளில் போலீசையும், ரவுடிகளையும் அம்பலப்படித்து பரவலாக ஒட்டப்பட்டது.
28/01/15 காலை 10 மணிக்கு சி.பி.ஐ(எம்)-ஐச் சேர்ந்த ரமேஸ் பாபு வந்து, “நாம் அறிவித்தது போல 24 மணிநேரம் முடிந்துவிட்டது. நாம் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று மாணவிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை முடித்து வைக்க முயற்சித்தார்.
மாணவிகள், “நமது போராட்டத்தின் விளைவு என்னவென்றே தெரியாமல் எப்படி போராட்டத்தை முடித்துக் கொள்வது” என்று கேட்டதற்கு “போராட்டத்தை முடித்தால் தான் என்னவென்று தெரியும்” என்று மாணவிகள் போலீசையும் கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்கொண்டு நடத்திய போராட்டத்தை முடித்து வைத்து நிர்வாகத்துக்கு உதவி செய்தார்.
மாணவிகள் அடுத்த கட்டமாக எனனசெய்வது என்று புரியாமல் இருந்த போது போலிசும், ஓட்டுக் கட்சி SFI யும் இணைந்து மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது.
அப்போது கடலூர் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த 2 தோழர்களை காவல் துறை கைது செய்து, “பேருந்தில் போஸ்டர் ஓட்ட அனுமதி வாங்கினீர்களா” என்று கேட்டனர். அதற்குத் தோழர்கள் “மூலம், பவ்த்ரம் ஆண்மைக் குறைவு, ஆபாசப் போஸ்டர்கள் இவற்றை எல்லாம் உங்களிடம் அனுமதி வாங்கித்தான் ஓட்டுகிறார்களா” என்று கேட்டதற்கு “தேவை இல்லாமல் பேசாதே” என முறைத்தது போலீசு. பேருந்து நடத்துனர் இருவரிடம் புகார் வாங்கி தோழர்கள் மீது போலீசு வழக்கு போட்டு KNC ,பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சாதகமாக நடந்து கொண்டு பின்னர் தோழர்களை ஜாமீனில் விடுவித்தது திருப்பாப் புலியூர் போலீசு.
மீண்டும் KNC மாணவிகளை தொடர்பு கொண்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்றிணைத்து பேராசிரியர் சாந்தியின் பணிநீக்கத்திற்கு எதிராகவும், கொள்ளைக் கூடாரமாக உள்ள பச்சையப்பன் அறக்கட்டளையை அரசுடமையாக்கவும் தொடர்ந்து போராடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு:9791776709