Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 719

பாலியல் வன்முறை – திருவாரூர் பொதுக்கூட்ட உரை – ஆடியோ!

0

பேரணிபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்கக் கலாச்சாரத்தைத் துடைத்தெறிவோம்!

என்ற முழக்கங்களோடு பேரணியும், பொதுக்கூட்டமும், ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுவினர் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மார்ச் மாதம் 2ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்றது. பேரணி திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது.

தோழர் கு.ம.பொன்னுசாமி (வி.வி.மு. திருவாரூர்) தலைமையேற்றார்.

பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன்:

ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டமும், நீதித் துறையும், போலீசும், அதிகாரவர்க்கமும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகள் இழைப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.

ஆனால் கணநேரப் பாலியல் தூண்டுதல்களால் வெறி கொண்டு வல்லுறவை ஏவும் சமுதாயத்தில் உள்ள உதிரிக் கிரிமினல்களால்தான் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனப் பலரும் நம்புகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது.

வங்கிப் பணத்துக்குப் பொறுப்பான காசளரே கொள்ளையில் ஈடுபடுவதைப் போலத்தான், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்கத்தினரே, ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்டுள்ள காவலர்களை அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் மீதான இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பாதுகாப்பதாகவே அரசின் உறுப்புகள் உள்ளன.

இவர்களால் பெண்களுக்கு வரும் ஆபத்துகளை மிக மிக கொடியது. வரம்பற்ற அதிகாரம் பெற்றுள்ள சீருடை அணிந்த கிரிமினல்களைக் கொண்டுள்ள இத்தகைய அதிகார அமைப்புகளே முதன்மைக் குற்றவாளிகள்.

டெல்லி பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட கிரிமினல்களுக்குக் கூட உள்ளூர பயம் இருந்திருக்கும். எந்தவிதமான தடயங்களும் இன்றி தப்பிக்க வேண்டுமே என்கிற தவிப்பு இருந்திருக்கும். ஆனால், போலீசுக்கும், இராணுவத்திற்கும் இவ்விதப் பயமோ, பதற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் இவர்கள் சீருடை அணிந்த கிரிமினல்கள், எவ்வித அச்சமும் இன்றி அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று ஆணவத்தோடு கொட்டம் அடிக்கிறார்கள்.

விபச்சாரக் குற்றக்கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்த போதிலும், இவை எல்லாவற்றிலுமே அரசு உயர் அதிகாரிகள் போலீசு – இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள், நீதித்துறையினர் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் இவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை.

இன்றைய தந்தை வழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்தி விட்டு, புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.

மாறாக போலீசுக்கு இன்னும் அதிக அதிகாரங்களைத் தருவதம் தண்டனைகளைக் கடுமையாக்குவதும், பாம்புக்குப் பால் வார்த்த கதையாகவே முடியும்.

மாலை 6.00 மணிக்குப் பனகல் சாலையில் பொதுக்கூட்டம் பு.மா.இ.மு. மாவட்ட அழைப்பாளர் தோழர் ஆசாத் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டார அமைப்பாளர் தோழர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

பதின்மூன்று வயது பள்ளி மாணவி தமிழ்த்தரணி உரையாற்றினார்:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை எதிர்த்து ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்தாலும் ஒட்டுமொத்த சமூகமோ, ஆணாதிக்க மனோபாவத்தில் ஊறிப் போய் இருக்கிறது. பாதிக்கப்படும் பெண்ணையே குற்றவாளியாக்கி அவளது நடத்தையைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கும் ஆணாதிக்கத் திமிரை என்னவென்று சொல்வது?

ஆணாதிக்கவாதி என்றவுடன் பின்னால் திரும்பி பார்க்கவேண்டாம். இந்தக் கேள்விகள் அனைத்தையும் உங்களை நோக்கித்தான் கேட்கிறேன். நேர்மையிருந்தால் எனக்குப் பதில் கூறுங்கள்.

இளம்பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கூட பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக அன்றாடம் செய்தித்தாளில் படித்து எத்தனை பேர் மன உளைச்சலுக்கு ஆளானீர்கள்? உங்கள் வீட்டிலிருக்கும் ஒருவருக்கு அவ்வாறு நடந்திருந்தால் வெறுமனை உச்சுக் கொட்டி பரிதாபப்பட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்களா? இல்லை என்றால் இது போன்ற சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் உங்களுக்கு ஏன் கோபம் பீறிட்டு வரவில்லை? இது போலித்தனம் இல்லையா? ஆணாதிக்கப் புத்தி இல்லையா?.

கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை சண்முகம் ஆற்றிய சிறப்புரையின் ஒலிப்பதிவை,  பேரணி, பொதுக்கூட்ட படங்களோடு வீடியோவில் கேட்கலாம்.

நிறைவாக விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்ய வட்டாரச் செயலாளர் தோழர் தனியரசு நன்றி நவின்றார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருவாரூர்

பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்

10

“உங்கள் குண்டு துளைக்காத பதுங்கு தளத்தில் அட்டாச்ட் டாய்லெட் உள்ளதா?” – அருந்ததி ராய்

2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு ரகசியமாக, திடீரென தூக்கிலிடப்பட்டதன் அரசியல் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

மத்திய சிறை எண் 3-இன் கண்காணிப்பாளரால், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற மொழியில், ஒவ்வொரு பெயரிலும் புண்படுத்தும் பிழைகளுடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் ”திருமதி. தபசும் க/பெ சிறீ அப்ஜல் குரு” வுக்கு எழுதப்பட்டுள்ளது.

அப்சல் குரு குடும்பம்
அப்சல் குருவின் குடும்பம் (படம் : அவுட்லுக் இந்தியா)

“சிறீ முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் கருணை மனு கனம் பொருந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் தூக்கு தண்டனை 09/02/2013-ல் நிறைவேற்றப்படவுள்ளது. இது உங்கள் தகவலுக்கும், தேவையான மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.”

இக்கடிதம் தபசுமிற்கு தாமதமாக சென்று சேரும்படி கவனமான காலக்கணிப்புடன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், கருணை மனு நிராகரிப்பை எதிர்க்கும் இறுதி சட்ட வாய்ப்பு தபசுமிற்கு மறுக்கப்பட்டுள்ளது. அப்சலுக்கும், அவர் குடும்பத்துக்கும் தனித்தனியே இந்த உரிமை உள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்டது. அது போல, சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தும் கருணை மனு நிராகரிப்பிற்கான காரணமும் தரப்படவில்லை. எந்த காரணமும் தரப்படவில்லை என்றால், எதன் அடிப்படையில் மேல் முறையீடு செய்ய முடியும்? மரண தண்டனை வரிசையில் நிற்கும் இதர இந்திய சிறைவாசிகளுக்கு இந்த கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் தபசுமின் தன் கணவனை பார்க்க அனுமதிக்கப்படவில்லை; அவர் குழந்தை, தந்தையிடமிருந்து சில அன்பான அறிவுரைகள் பெற அனுமதிக்கப்படவில்லை; தபசுமிற்கு, தன கணவனின் உடலை புதைக்கும் உரிமையில்லை; மரண சடங்குகள் எதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிறகு என்ன ‘தேவையான மேல் நடவடிக்கை’ பற்றி அந்த கடிதம் பேசுகிறது? கோபம்? ஆற்றமுடியாத வருத்தம்? கேள்விக்கிடமற்ற பணிவு? முழு சரணாகதி?

தூக்கு நிறைவேற்றப்பட்ட பிறகு நியாயமற்ற கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாராளுமன்ற தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார்கள். ‘அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி’யின் தலைவர் எம்.எஸ். பிட்டாவின் அச்சுறுத்தும் மீசை அப்பெண்கள் சோகத்திற்கு சற்று துணையாக காட்டப்படுகிறது. ‘அவர்கள் கணவன்மார்களை கொன்ற நபர்கள் அதே இடத்தில் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்ற உண்மையை யாரேனும் போய் சொல்வீர்களா? அந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள், நீதிக்கு முன்னால் எப்போதும் கொண்டுவரப்படமாட்டார்கள், ஏனெனில் இப்போது வரை அவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது.

அதே நேரம், காஷ்மீரில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு நிலை. அதன் மக்கள் மீண்டும் ஒருமுறை கொட்டகையில் அடைக்கப்பட்ட மாடுகள் போல ஆக்கப்பட்டுள்ளார்கள். மக்கள், மீண்டும் ஒருமுறை ஊரடங்கு உத்தரவை எதிர்த்துப் போராடுகிறார்கள். மூன்று பேர் மூன்று நாட்களில் கொல்லப்பட்டுள்ளதோடு, பதினைந்து பேர் கொடூரமாக காயப்படுத்தப்பட்டுள்ளனர். பத்திரிகைகள் தமது அலுவலகத்தை மூடியுள்ளன. இணையத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். காஷ்மீர் இளைஞர்கள் இப்போது வெளிப்படுத்தும் கோபம் சற்று வித்தியாசமானது.

இதற்கு முன்னால் 2008, 2009 மற்றும் 2010-ல் 180 பேரை பலி வாங்கிய மக்கள் எழுச்சியின் எதிர்ப்பு நிலையையும், உணர்ச்சி வேகத்தையும் போன்ற ஒன்றல்ல. இந்த முறை அந்த கோபம் கிளர்ச்சியற்றதும், கரைத்து சிதைப்பதும் ஆகும். அது ஆழப்பதிந்த ஓன்று. அது என்ன, நியாயமற்ற கோபமா?

இருபது வருடத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்கள் ஒரு ராணுவ ஆக்கிரமிப்பை பொறுத்து வந்துள்ளார்கள். சிறையிலும், அடக்குமுறை கொட்டடியிலும், போலி மற்றும் நிஜ என்கவுண்டர்களிலும் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்சல் தூக்கு எந்த வகையில் மற்ற கொலைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது என்றால், (இதற்கு முன் ஜனநாயகத்தின் பரிச்சயமற்ற) காஷ்மீரின் இளைய தலைமுறைக்கு  மாட்சிமை தாங்கிய இந்திய ஜனநாயகம் செயல்படும் விதத்தை மிக அணுக்கமாக கண்டுணர வாய்ப்பளித்துள்ளது. அதன் சக்கரங்கள் சுழல்வதையும், அதன் நரைத்து வெளுத்த நிறுவனங்கள், அரசு, போலீஸ், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் யாவும் ஒரு மனிதனின் — ஒரு காஷ்மீரியின் கொலைக்கு உடந்தையாக இருந்ததை அவர்கள் கண்ணுற்றார்கள். ஆம், ஊடகங்களையும் அவர்கள் கண்டார்கள், நன்றாக கவனித்தார்கள்.அப்சல் குரு

விசாரணையின் முக்கிய பகுதி முழுக்க கீழ்நீதிமன்றத்தில் ஏறக்குறைய அவருக்காக வாதிட யாருமில்லாமல் போனது. நீதிமன்றம் நியமித்த வக்கீல் அவரை சிறையில் சென்று ஒருமுறை கூட சந்திக்கவில்லை. தனது கட்சிக்காரருக்கு எதிராக முக்கியமான ஆதாரம் இருப்பதை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டார். (இதனை ஆய்வுக்கு உட்படுத்திய உச்சநீதிமன்றம் அதை பரவாயில்லை என்று முடிவு செய்தது). சுருங்கக் கூறினால், அவர் குற்றம் முரணில்லாமல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அவர் முறை வரும் முன்னரே மரண தண்டனை வரிசையிலிருந்து இழுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவர்கள் பார்த்தார்கள். எத்திசையில், எந்த வடிவத்தில் அவர்களின் இந்த புதிய கிளர்ச்சியற்ற, கரைத்து சிதைக்கும் கோபம் பயணப்படும்? ஒரு முழு தலைமுறையையே தியாகம் செய்து காத்திருக்கும், அருளப்பெற்ற மகிழ்ச்சியான விடுதலையை அது பிரசவிக்குமா? அல்லது, இன்னொரு சுற்று பிரளய வன்முறை நிகழ்த்தப்பட்டு அவர்கள் நசுக்கப்படுவரா? பிறகு ‘இயல்பு நிலைமை’ ராணுவத்தின் பூட்ஸ் காலின் கீழ் கொண்டு வரப்படுமா?

2014, ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்க ஆண்டு என்று இந்த பகுதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் தெரியும். பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜம்மு — காஷ்மீரில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்கா, அதன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெறும் போது ஏற்கனவே உறுதி குலைந்திருக்கும் பாகிஸ்தானின் குழப்பங்கள் காஷ்மீரையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இது நடந்துள்ளது. அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய முறையினூடாக இந்திய அரசு அந்த உறுதிக் குலைப்பை ஊக்குவித்திருப்பதோடு, காஷ்மீருக்கும் அது பரவ தூண்டுதல் அளித்துள்ளது. (1987-ல் காஷ்மீர் தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஏற்பட்ட விளைவை போல).

இதற்கு முன், அடுத்தடுத்த மக்கள் போராட்டங்களிலான மூன்று வருட காலம்  2010-ல் முடிவுக்கு வந்தது. இந்த அரசு, பெரும் அளவுக்கு முதலீடு செய்து, ‘இயல்பு நிலையை’ மீட்டது. (அதாவது, மகிழ்ச்சியான சுற்றுலாவாசிகள், ஓட்டுப்போடும் காஷ்மீரிகள் என்ற வகையிலானது) இங்கு தொக்கி நிற்கும் கேள்வி என்னவென்றால், தன்னுடைய சொந்த பிரயத்தனங்களுக்கு மாறாகவே இந்த அரசு நடந்து கொள்ள விரும்புவது ஏன்? சட்டமுறைமை, நீதிமுறைமை, தகுதிக்கேடான ஒரு நடவடிக்கை போன்ற பிரச்சினைகளுக்கு அப்பால், இந்த கொலை நிறைவேற்றிய செயற்பாங்கில் ஒரு அறிவீனம் தெரிகிறது. அரசியல் ரீதியாகவும், செயல்திறம் சார்ந்தும் இந்த மரண தண்டனை ஆபத்தானதும், பொறுப்பற்றதும் ஆகும். ஆனால், அது நிகழ்த்தப்பட்டு விட்டது; ஐயத்துக்கிடமில்லாமல், மனப்பூர்வமாக செய்யப்பட்டது; ஏன்?

நான் ‘பொறுப்பற்ற தன்மை’ என்ற பதத்தை திட்டமிட்ட ரீதியிலே உபயோகிக்கிறேன். கடந்தமுறை என்ன நடந்தது என்று பார்ப்போம்.

2001–ல், பாராளுமன்றம் தாக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் (அப்சல் குரு கைது செய்யப்பட்ட சில நாட்களில்) அரசு பாகிஸ்தானுக்கான தூதரை திரும்ப அழைத்ததோடு, 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பியது. எதன் அடிப்படையில் அது செய்யப்பட்டது? அப்சல் குரு, தில்லி சிறப்பு காவல் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ‘ஜெயஷ்-இ-முகமது’ எனும் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததை ஒத்துக்கொண்டார் என்றொரு தகவல் மக்களுக்கு சொல்லப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த ‘ஒப்புதல் வாக்குமூலத்தை’ சட்டத்திற்கு புறம்பான ஓன்று என பிற்பாடு நிராகரித்தது. சட்டத்திற்கு புறம்பான ஒன்று, யுத்தத்திற்கு பொருந்தக்கூடியது ஆகுமா?

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில், ‘கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துதல்’ தொடர்பாக எழுதப்பட்ட புகழ்வாய்ந்த வாக்கியங்கள் மற்றும் குற்றத்திற்கு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்று சொன்னவற்றோடு உச்சநீதிமன்றம் சொன்ன இன்னொரு முக்கிய கூற்று ”முகமது அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாதக் குழு அல்லது அமைப்புடனும் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை” என்பதாகும். எனில், அன்றைய போர்வெறியையும், இராணுவத்தினரின் உயிரிழப்பையும், பெரிய அளவிற்கு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதையும், அணுஆயுதப் போர் ஆயத்தத்தையும் நியாயப்படுத்துவது என்ன? (வெளிநாட்டு  தூதரகங்கள் பயண எச்சரிக்கை விடுத்ததோடு, ஊழியர்களை வெளியேற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). பாராளுமன்ற தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக, அப்சல் குரு கைது செய்யப்படுவதற்கு முன்பாக, நமக்கு சொல்லப்படாத உளவுத் தகவல்கள் ஏதும் கிடைத்தனவா? அப்படியெனில் இந்த தாக்குதல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? இந்த உளவுத் தகவல் சரியானதாகவும், ராணுவ பலத்தைக் குவிக்குமளவுக்குப் பிசகின்றியும் இருப்பதாகக் கொள்ளும் பட்சத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்கள் அறிய வேண்டாமா? அந்த ஆதாரம், ஏன் நீதிமன்றத்தில் அப்சல் குருவின் குற்றத்தை நிரூபிக்கும் பொருட்டு சமர்க்கப்படவில்லை?

பாராளுமன்ற தாக்குதல் வழக்கை சுற்றிய முடிவற்ற விவாதங்களில், முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிற இதில் மட்டும் அனைத்து தரப்புகளிலிருந்தும் — இடதுசாரிகள், வலதுசாரிகள், இந்துத்துவவாதிகள், மதச்சார்பற்றவாதிகள், தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், அவநம்பிக்கைவாதிகள், விமர்சகர்கள் மத்தியில் ஓர் பேரமைதி நிலவுகிறது. ஏன்?

இந்த தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமது வால் நடத்தப்பட்டு இருக்கலாம். இந்திய போலீஸ் மற்றும் உளவுத் துறைகள் குறித்து பொறாமை கொள்ளத்தக்க வகையில் சிறப்பறிவு படைத்தவரும், ‘பயங்கரவாதம்’ பற்றி நன்கறிந்த அறிவாளியாகவும் இந்திய ஊடகங்கள் ஏற்றி போற்றும் ஓர் அறிஞர் பிரவீன் சுவாமி. இவர், சமீபத்தில் முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ஜாவேத் அஸ்ரப் காஸி 2003–ல் வழங்கிய சாட்சியத்தையும், பாகிஸ்தான் அறிஞர் முகமது அமீர் ராணா 2004–ல் எழுதிய ஒரு புத்தகத்தையும், பாராளுமன்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பங்கிற்கு ஆதாரமாக வழங்குகிறார். (தனது நோக்கம் இந்தியாவை சிதைப்பது என்ற நோக்கத்துடன் இயங்கும் ஒரு அமைப்பின் தலைவரின் சாட்சி மேல் வைத்துள்ள இந்த நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது). எனினும், 2001–ல் பெருமளவு ராணுவ குவிப்புக்கு காரணமான ஆதாரம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பெரும் புதிராகவே உள்ளது.

ஒரு வாதத்துக்காக, இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது நடத்தியதாக ஒப்புக்கொள்வோம். ஐ.எஸ்.ஐ.யின் பங்கு இருப்பதாகவும் கருதுவோம். காஷ்மீரை முன்னிட்டு இதுபோன்ற ரகசிய சதி நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு செய்ய நினைக்காத ஒன்று என்று நாம் பாவனை செய்து கொள்ளத் தேவையில்லை. (இந்திய அரசு பலுசிஸ்தானிலும், பாகிஸ்தானின் இதர பகுதிகளிலும் செய்வதைப் போல. இந்திய ராணுவம் 1970களில், கிழக்கு பாகிஸ்தானில் முக்தி பாகினி அமைப்புக்கு பயிற்சி அளித்ததையும் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு வெவ்வேறு இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு 1980–களில் பயிற்சி அளித்ததையும் நினைவில் கொள்க.)

ஓர் அருவருக்கத்தக்க சூழல் நம்மைச் சுற்றி சூழ்கிறது. பாகிஸ்தானுடனான போர் ஒன்று அப்போது என்ன சாதித்திருக்கும்; இப்போது என்ன சாதிக்கும்? (பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழப்பை சந்தித்திருப்பார். ஆயுத வியாபாரிகள் சிலரின் வங்கிக் கணக்கு பெருத்திருக்கும்.) இந்திய போர்விரும்பி பருந்துகள் ஓயாமல் பரிந்து முழங்கும் ‘தீர்வு’, ‘தீவிரமான தேடுதல் வேட்டை’ ஒன்றின் மூலம் பாகிஸ்தானின் ‘பயங்கரவாத முகாம்’களை ‘அழித்தொழிக்க’ வேண்டும் என்பது. நிஜமாகவா?

நமது தொலைக்கட்சிகளில், போர்த்திறம் சார்ந்த சிறப்பறிவுடன் ஆக்ரோஷமாக விவாதிக்கும் அறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களில் எத்தனை பேருக்கு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுத உற்பத்தி ஆலைகளோடு ஆதாயத் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுக்கு போர் கூட தேவையில்லை. ராணுவத்துக்கு அரசாங்கம் கோடிகோடியாக செலவு செய்வதற்கு ஒரு போர் மேகம் போதும். இந்த ‘தீவிர தேடுதல் வேட்டை’ கருத்து அது அர்த்தப்படுவதை விடவும் மோசமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். யார் மீது குண்டு பொழிவர்? சில தனிப்பட்ட நபர்கள்? அவர்கள் வசிப்பிடங்கள் மற்றும் உணவுப் பொருள்கள்? அமெரிக்காவின் ‘தீவிர தேடுதல் வேட்டை’ ஆப்கானிஸ்தானில் எப்படி முடிவுற்றது என்பதை பாருங்கள். 5 லட்சம் இந்திய படைவீரர்களைக் கொண்ட பாதுகாப்பு அடுக்குகள் நிராயுதபாணிகளான காஷ்மீரின் மக்களை அடக்கிவிட முடியவில்லை என்பதையும் கவனியுங்கள். சிறிது சிறிதாக சிதறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை, இந்தியா சர்வதேச எல்லைகளைக் கடந்து அணுஆயுதப் போர் ஒன்றை நடத்தப் போகிறதா? இந்தியாவின் தொழில்முறை போர்–விரும்பிகள் பாகிஸ்தானின் குழப்பம் என்று தாங்கள் கருதுபவற்றை பார்த்து கேலிநகை புரிந்து உள்அமைதி பெறுகிறார்கள். வரலாறு மற்றும் புவியியல் குறித்து ஒரு தொடக்கநிலை அறிவு கொண்ட ஒருவருக்கு கூட, ஒரு மட, சூனியவாத, மதவெறி கும்பலின் தேசமாக பாகிஸ்தானின் சிதைவு நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல என்பது தெரியும் .

ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளின் நிலை கொள்ளலும், அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தானின் இளம்பங்காளர் அணுகுமுறையும் அந்த நிலப்பரப்பை குற்றநடவடிக்கைகளின் பகுதியாக மாற்றியிருக்கிறது. உலகின் பிற நாடுகள் ஆபத்து நிறைந்த பகுதியாக அது இருப்பதை குறைந்தபட்சம் உணர்ந்து இருக்கின்றன. ஆனால், உலகம் நன்கறிந்த புதிய வல்லரசில் வேகமெடுக்கும் துன்பநெருக்கடி அறிந்துகொள்ள இயலாததாகவும், புரிந்துகொள்ள கடினமானதாகவும் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. பொருளாதார தாராளமயமாக்கம், புதிதாக உருவான மத்தியதர வர்க்கத்திடம் வெறிபிடித்த, அனைத்தையும் அடையும் வேகத்தை ஏற்படுத்தியது. இந்த புதிய நிலைமை , வெகுவேகமாக சமஅளவில் வெறிபிடிக்கும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உட்கார்ந்திருந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தள்ளாட ஆரம்பித்திருக்கிறது. கிளர்ச்சியடைந்த மனம் பீதியில் உறைந்து கிடக்கிறது.

பொதுத் தேர்தல் 2014–ல் நடைபெற இருக்கிறது. ஒரு கருத்து கணிப்பு இல்லாமலே அதன் முடிவுகளை என்னால் சொல்ல இயலும். இது மேம்போக்கான கண்களுக்கு தெரியாத ஓன்று. திரும்ப ஒருமுறை காங்கிரஸ்–பா.ஜ.க கூட்டணியின் ஆட்சி அமையப்பெறும். (தமது பெரும்பேறாக, ஆயிரக்ககணக்கான சிறுபான்மையின மக்களை கொன்றழித்தவை இருகட்சிகளும்.) யாரும் ஆதரவை கோரும் தேவை இல்லாமலே சி.பி.எம் அதன் ஆதரவை வெளியிலிருந்து அளிக்கும். நிச்சயமாக, அது வலுவான அரசாக இருக்கும். (தூக்கு வரிசை முறையில், கையுறைகள் ஏற்கனவே உருவப்பட்டுவிட்டன.) அடுத்து யார்? பஞ்சாபின் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலைவழக்கில், தூக்கு உறுதி செய்யப்பட்ட பல்வந்த்சிங் ரஜவோனவா? அவரின் தூக்கு தண்டனை, காலிஸ்தானி உணர்ச்சிகளை உசுப்பிவிட்டு அகாலிதளத்தை தாக்குதலுக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸின் பழமையான அரசியல் பாணி இது.

எனினும் அந்த பழமையான அரசியல் பணி சற்று சிக்கலில் உள்ளது. கொந்தளிப்பான கடந்த சில மாதங்கள் தொடங்கி முக்கிய அரசியல் கட்சிகளின் பிம்பம் மட்டுமல்ல; அரசியலே கூட, மக்களுக்கு பழக்கமான அரசியல் எனும் கருத்துநிலை கடுமையான தாக்குதலுக்குள்ளகியிருக்கிறது. ஊழல் முறைகேடு என்றாலும் சரி, விலை உயர்வு பிரச்சினை என்றாலும் சரி, பாலியல் வன்புணர்ச்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை என்றாலும் சரி — இந்த புதிய மத்தியதர வர்க்கம் திரும்பத்திரும்ப தெருக்களுக்கு வருகிறது. இவர்கள் மீது தண்ணீர்–பீய்ச்சி அடிக்கலாம்; தடியடி நடத்தலாம்; ஆனால்,  ஏழைகளை, தலித் மக்களை, ஆதிவாசிகளை, முஸ்லிம்களை, காஷ்மீரிகளை, நாகாக்களை, மணிப்பூரிகளை செய்ய முடிவதைப் போல ஆயிரக்கணக்கில் அவர்களை கைது செய்யவோ, சுட்டுத்தள்ளவோ முடியாது. இந்த ஆவேசத்தை உறைந்து போக செய்யாவிட்டால் அது மேலெழுந்து தம்மை திருப்பித் தாக்கும் என்று இந்த கிழட்டு கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும். எனவே தமக்கு பழக்கப்பட்ட அரசியலை மீண்டும் கொண்டுவர தமக்குள் ஓர் ஒத்திசைவு அவசியம் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதற்கு வகுப்புவாதத் தீயை மூட்டுவதை விட கை மேல் பலன் கொடுக்கக் கூடியது எது? ( அதெப்படி மதச்சார்பற்ற கட்சிகள் மதச்சார்பின்மையையும், வகுப்புவாதிகள் மட்டுமே வகுப்புவாதத்தையும் பேசிக்கொண்டிருக்க முடியும்.) ஒரு சிறு போரின் உதவி கூட தேவைப்படலாம். எனவே போர்வெறி வல்லூறு மற்றும் அமைதிப்புறா விளையாட்டை கொஞ்சம் ஆடுவது பொருத்தமாக இருக்கும்.

பலமுறை பரீட்சித்துப் பார்த்த, நம்பகமான காஷ்மீர்–கால்பந்தை குறி பார்த்து உதைப்பதை விட வேறென்ன சிறந்த தீர்வு இருக்க முடியும்? அப்சல் குரு தூக்கிலேற்றப்பட்டதன் காலநிலை மிகவும் கவனத்திற்குரியது. அது, அரசியலையும், கோபத்தையும் மீண்டும் காஷ்மீரின் வீதிகளுக்கு  இழுத்து வந்திருக்கிறது.

இந்தியா விஷமத்தனமும், கொடூர அடக்குமுறையும் இணைந்த மாக்கியவில்லிய சாமர்த்தியத்துடன், ஒரு பிரிவு மக்களை இன்னொரு பிரிவுடன் மோதவிட்டு இப்பிரச்சினையை கடந்து செல்ல நினைக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் போர் ஓர் அனைத்தும் தழுவிய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும் தீவிர இசுலாமியவாதிகளுக்கும் இடையேயான யுத்தம் என உலகிற்கு காட்டப்படுகிறது. இங்கு கவனிக்கத்தக்க ஒரு சம்பவம் இருக்கிறது. வெறுக்கத்தக்க பல வெறுப்பு உரைகளை நிகழ்த்தியவரும், பத்வாக்கள் பல மொழிந்தவரும், காஷ்மீரை பேய் உருவான, மாறாநிலை வகாபி சமூகமாக அமைக்க எண்ணம் கொண்டவர், முப்தி பஷிருதீன். இவர், படோடபமான இமாம் ( இது முழுக்க முழுக்க பொய்த்தோற்றம் கொண்ட பதவி ) பொறுப்புக்கு அரசாங்கத்தால் நியமன ஆசி பெற்றதை எப்படி புரிந்து கொள்வது? முகநூலில் கணக்கு வைத்திருக்கும் சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்த நபர் கைது செய்யப்படவில்லை. காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது? இத்தகைய மோசமான செயல்பாடுகள் அல்லவா ஒசாமா பின்லேடனையும், அல்கொய்தாவையும், தாலிபானையும் உருவாக்கின. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தரைமட்டமானதற்கும் காரணம் இந்த அரசியல் அல்லவா? என்னவகையான தீய ஆவியை இப்போது இது கட்டவிழ்த்து விடப்போகிறது?

பிரச்சினை என்னவெனில், அந்த பழமையான அரசியல் கால்பந்தை இனிமேலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எளிதாகத் தோன்றவில்லை. அது ஒரு கதிர்வீச்சின் வடிவம் பெற்றிருக்கிறது. “மேலெழும் புதிய நிலைமைகளின்” ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பாகிஸ்தான் சில தினங்களுக்கு முன்பு நிகழ்த்திய அணு ஏவுகணை சோதனையை தற்செயலான ஒன்றாக நினைக்க முடியவில்லை. இருவாரங்களுக்கு முன்னர் அணு ஆயுதப் போரிலிருந்து ‘தப்பிக்கும் குறிப்புகளை’ காஷ்மீர் போலீஸ் வெளியிட்டது. மக்கள் வெடிகுண்டால் பாதிப்புக்கு உள்ளாகாத மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் பொருத்தப்பட்ட தரைத்தளங்களை கட்டும்படி கேடகப்பட்டுள்ளனர். அதில், மொத்த குடும்ப உறுப்பினர்களும் இரு வாரங்கள் வரை தங்கும் வசதி செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், “அணு ஆயுத தாக்குதலின் போது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களிலிருந்து வெடிப்பின் திசையில் குதித்து வெளியேறுவதன் மூலம் சீக்கிரமே கவிழ்ந்து நசுக்கி விடப் போகும் கார்களிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்”  என்கிறது அது. கூடுதலாக, “வெடி அலை பல முக்கியமான, பழக்கமான சூழல்களை தகர்த்து வாரிச் சென்று விடுவதால் ஆரம்பத்தில் சிறிதளவு மயக்க உணர்வை எதிர்பாருங்கள்.”

முக்கியமான பழக்கமான சூழல்கள் ஏற்கனவே வெடித்து தகர்க்கப்பட்டிருக்கலாம். சீக்கிரமே கவிழ இருக்கும் நமது வண்டிகளில் இருந்து நாம் அனைவருமே குதித்து தப்பித்து விட வேண்டியதுதான் போலிருக்கிறது.

— அருந்ததி ராய்

நன்றி : அவுட்லுக் இந்தியா
—-தமிழில், சம்புகன்

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! அனிமேஷன் வீடியோ!!

3

முதலாளித்துவ பொருளாதாரம் (காபிடலிசம்) எப்படி வீழ்ச்சியடைகிறது? வீழ்ந்த பொருளாதாரத்தை மறு சீரமைக்கிறோம் என்று சொல்லி ஒரு நாட்டின் சுமை மற்ற நாடுகள் மீது எப்படி ஏற்றப்படுகிறது? உண்மையாக காபிடலிசத்தின் விளைவுகள் என்ன? இவற்றை எளிமையாக விளக்குகிறார் டேவிட் ஹார்வி எனும் இங்கிலாந்து பேராசிரியர்.

டேவிட் ஹார்வி2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட ஹார்வியின் உரையை எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் RSA எனும் நிறுவனம் அதை அனிமேஷன் யுத்தியுடன் அழகான படக் காட்சிகளில் விவரிக்கிறது. நீங்கள் இங்கே காண்பது அந்த உரையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல, மாறாக உரையின் எளிமையான குறிப்புகள் தான்.

அந்த வீடியோவை பாருங்கள். வீடியோவை  புரிந்து கொள்வதற்கு ஹார்வியின் உரையைக் குறிப்புகளாக தருகிறோம்.

“எல்லாம் சரி நாம் எப்படியோ இந்த முதலாளித்துவ பொருளாதார அழிவில் சிக்கியிருக்கிறோம். இதற்கு உலகளாவிய அறிஞர்கள் பல காரணங்களை சொல்லுகிறார்கள்,  குறிப்பாக சிலவற்றை பார்ப்போம்:

  1. மனித இயல்பு
    ஆலன் கிரீன் ஸ்பேன் கருத்துப்படி ‘இதற்கெல்லாம் காரணம் மனித இயல்பு தான், அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார். அதாவது வியாபாரம் செய்கிறவர்களின் பேராசை, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் கற்பனைகள், அவர்களின் லாபவெறி இவைதான் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணம், நாம் ஒன்றும் செய்ய முடியாது’.
  2. ஒழுங்கு முறை நிறுவனங்களின் தோல்வி:
    ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்க அவர்களை கட்டுபடுத்த வேண்டிய அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததின் விளைவு. அதனால் உலக அளவில் ஜி-20 போன்ற அமைப்புகள், நிதி நிறுவன செயல்பாடுகளை கண்காணிப்பது தான் சரி என்ற ஒரு தீர்வும் முன்வைக்கப்படுகிறது.
  3. பொய்யான கோட்பாடுகள்
    எல்லாருமே அதிகமாக கற்பனை செய்துக்கொண்டார்கள். ஹயக் போன்றவர்களின் கோட்பாடுகளில் அதிகம் நம்பிக்கை வைத்து விட்டோம். கீன்ஸ், மீன்ஸ்கி போன்ற அறிஞர்களின் கோட்பாடுகளுக்கு திரும்ப வேண்டும்.
  4. கலாச்சார நிகழ்வுகள்
    இந்த மாதிரியான பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் கலாச்சாரக் காரணங்கள் இருப்பதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் இது ’ஆங்கிலோ சாக்ஸன் பிரச்சனை’ என்கிறார்கள். மாறாக தென் அமெரிக்கர்களோ ஒரு வழியாக அமெரிக்கா பாடம் கற்றுகொண்டதாக உற்சாகமடைகிறார்கள். இன்னொரு பக்கம் ‘கிரீஸ் நாட்டின் வீழ்ச்சி, அந்நாட்டின் ஒழுக்கமில்லாத நடத்தையால் வந்தது’ என ஜெர்மானியர்கள் நினைக்கிறார்கள்.
  5. கொள்கைகளின் தோல்விகள்
    பாக்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த க்ளேன் பெக் எளிமையாக் கூறுகிறார், இவை அளவுக்கு அதிகமான ஒழுங்கு முறை சட்டங்கள்தான் காரணம்.

இந்தக் காரணங்களை எல்லாம் வைத்துக்கொண்டு நான் என் பார்வையில் அதாவது மார்க்சிய பார்வையில் இதற்கான காரணம் சொல்ல முனைகிறேன்.

ஒன்றரை  வருடத்துக்கு முன்  இங்கிலாந்து அரசியார், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சின் பொருளாதார அறிஞர்களிடம், “நீங்கள் யாரும் எப்படி இந்த நெருக்கடியை முன் கூட்டியே அறிவிக்கவில்லை?” என்று கேட்டார். ஒருவரும் சரியான பதில் சொல்லாத நிலையில் பேங்க் ஆப் இங்கிலாந்திடம் அதே கேள்வியை கேட்டார். அதற்கு பதிலாக அரசியாருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது, அதன்  சுருக்கம், “இங்கு பல அறிஞர்கள், மேதைகள் எல்லாம் இந்த துறையில் வேலை செய்கிறார்கள், கண்காணிக்கிறார்கள் ஆனால் எல்லருமே தவறவிட்ட ஒரு விஷயம் ‘அமைப்பு ரீதியான அபாயம்’”.

அமைப்பு ரீதியான அபாயம் என்பதை மார்க்சிய பார்வையில் “மூலதன குவிப்பின் உள் முரண்பாடு” என வைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் முதலாளித்துவ பொருளாதார வரலாற்றில் இத்தகைய நெருக்கடிகளை பற்றி பார்போம்.

1970களில் ஏற்பட்ட நெருக்கடி, தொழிலாளர் யூனியன்களின் அளவுக்கதிகமான அதிகாரத்தால் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவில் அடக்கு முறை மூலம் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன, இந்தியாவிற்கும் சீனாவிற்க்கும் வேலைகள் ’அவுட்சோர்ஸ்’ செய்யப்பட்டன. தொழிலாளர்களின் பேரம் பேசும் திறன் குறைந்தது, சம்பள செலவும் வீழ்ந்தது.

1980 களில் தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. ஆனால், நெருக்கடி வேறு வடிவில் வெளிப்பட்டது.  தொடர்ந்து வீழ்ந்து வந்த ஊதிய வீதங்கள், மக்களின் வாங்கும் சக்தியை பாதித்தன. அதனால் சந்தையில் பொருட்களுக்கான தேவை குறைந்தது. அதற்கு தீர்வாக மக்களுக்கு அதிகமாக கடன் அட்டைகள் கொடுப்பதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க முயற்சித்தார்கள்.

கடன் சார்ந்த பொருளாதாரம் வளரத் தொடங்கியது. அமெரிக்காவிலும், இங்கிலாங்திலும் தனிநபர்கள் கடன் சுமை அதிகரித்தது. இப்பொழுது கவனமாக ஒரு விஷயத்தை பாருங்கள் – காபிடலிசம் எந்த ஒரு பிரச்சினைக்குமே நிரந்தர தீர்வு சொல்லாமல் பிரச்சினையை புவியியல் ரீதியாக சுற்றுக்கு விடுகிறது. அதாவது ஒரு நாட்டின் சுமையை இன்னொரு நாட்டின் மீது ஏற்றி விடுவது.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் சுமையை உண்மையாக சுமந்து கொண்டிருந்த கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைகின்றன. இப்பொழுது நெருக்கடி நாடுகள் கடன் கட்டத் தவறி திவாலாவதாக வெளிப்படுகிறது.

முதலாளித்துவ பொருளாதாரத்தையும், மூலதனம் என்பதையும் மார்க்சிய பார்வையில் பரிசீலிப்போம்.

நாம் கொஞ்சம் பணம் கொண்டு சந்தையில் உழைப்பையும், கச்சா பொருட்களையும் வாங்குகிறோம். அதனை ஒரு தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறோம். உற்பத்தியான பொருளை சந்தையில் விற்று முதலில் போட்ட பணத்தையும் கூடுதல் லாபத்தையும் சம்பாதிக்கிறோம். இப்படியாக லாபம் என்பது உபரியாக சேர்ந்து, சேர்ந்து இன்னும் கொஞ்சம் முதலாகிறது. அந்த முதலை மீண்டும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு போடுகிறோம். இப்படி வளர்ந்த நிறுவனம் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய அதிக லாபம் கொண்டு விற்கப்படுகிறது.

இந்த நடைமுறையில் மிக முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன. ‘உற்பத்தியை நிகழ்த்துவதற்கு சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான அளவில் பணத்தை எப்படி கொண்டு சேர்ப்பது?’. அதற்கு நிதி நிர்வாக திறமை தேவைப்படுகிறது. நிதி நிர்வாக திறமை தேவைப்படுவதால் நிதி நிறுவனங்கள் பெருக்கின்றன.

அமெரிக்காவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி, நிதி நிறுவனங்கள் இப்படியாக ஒரு பக்கம் கொழுக்க இன்னொரு பக்கம் உற்பத்தியோ வீழ்ச்சியடைந்தது. இதை சரியாக கவனிக்கும் யாருமே காபிடலிசத்தை எதிர்க்கத்தான் செய்வார்கள். காரணம், காபிடலிசம் இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகள் சுழற்சியாக தொடர்ந்தபடி தான் இருக்குமே தவிர தீராது.

இந்தியாவைப் பாருங்கள் கடந்த ஒரு வருடத்தில் பில்லியனர்களின் எண்ணிக்கை (அதாவது ரூ 5,000 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) மூன்று மடங்காகியுள்ளது. முன்னணி வேலியிட்ட நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சம்பாதிக்கும் பணம் $250 மில்லியனிலிருந்து (ரூ 1,250 கோடி), $ 3 பில்லியனாக  (ரூ 15,000 கோடி) உயர்ந்துள்ளது.

நிச்சயமாக ஒரு சிலர் மட்டும் கொழுப்பதாக இந்த உலகம் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் வாழ வேண்டிய உலகம். இதை யாரும் விவாதிப்பதில்லை.

அரசியல்வாதிகள் ‘அடுத்த தேர்தலில் எனக்கு ஓட்டு போடுங்கள், அனைத்து பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைத்து விடுவேன்’ என்று சொல்லுவார்கள். ஆனால், உண்மையான பிரச்சினை என்னவென்று நமக்கு தெரியும், ஆனால் அதற்கான  தீர்வை பற்றி பேசாத அரசியல்வாதிகளை நம்புவது முட்டாள்தனம்.

அறிவுத் துறையில் இருக்கும் நமக்கு இதைப் பற்றி பேசுவதற்கான கடமை இருக்கிறது.”

‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?

33

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஐ.டி. துறை 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவன் காதலிப்பதாகக் கூறி கைவிட்டிருக்கிறான். இருவரும் சிறு வயது முதலே அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால், அவனை எளிதில் நம்பி மோசம் போயிருக்கிறாள் அந்த பெண்.

தன் காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அவள் கெஞ்சிய போது, ‘இப்போது நீ கெட்டுப் போனவ, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வர வேண்டும்’ என்று எகத்தாளமாக பேசியுள்ளான். அதோடு மட்டுமின்றி தெருவில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் பிற இளைஞர்களிடம் இந்த சம்பவத்தை கிளுகிளுப்பூட்டும் விஷயமாக பேசி பகிர்ந்து கொண்டுள்ளான்.

இது பற்றி அவனது தந்தையிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறாள் அந்த பெண். ஆனால், அவரோ, ‘நீ என்ன பெரிய யோக்கியமா? என் புள்ளைய பத்தி எங்கிட்டயே வந்து பேசுறியா? உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ!” என்று கூறி அவமானப்படுத்தி விரட்டியிருக்கிறார். இவர் திருச்சி அ.தி.மு.க ஏர்போர்ட் பகுதி கழகத்தில் பொறுப்பில் இருக்கும் வெல்ல மண்டி சண்முகம் என்பவரின் கையாள் என்று கூறி அந்த திமிரில் பேசியிருக்கிறான். அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் சென்று அடாவடியாக நடந்து கொண்டு அவர்களை ஆபாசமாக பேசி இழிவுபடுத்தியுள்ளனர். அவமானம், குற்றவுணர்ச்சி, வெறுப்பு என கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர் அந்த பெண்ணை வீட்டை விட்டே விரட்டி விட்டனர்.

செய்வதறியாது திகைத்த அந்த பெண், மனதை தைரியப்படுத்திக் கொண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் முறையிட்டிருக்கிறாள். விஷயத்தை கேட்டு விட்டு, ‘இது எங்க ஸ்டேஷன் லிமிட்ல வராது’ என்று கூறி வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷனை கை காட்ட, அங்கே சென்றால், ‘இது நாங்க டீல் பண்ற மேட்டரு கிடையாது, பெண்கள் காவல் நிலையத்திற்கு போங்க’ என்று நாள் முழுக்க இழுத்தடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பெண்ணைத்தான் குற்றவாளியாகப் பார்த்தார்களே தவிர இவர் தரப்பிலிருக்கும் நியாயத்திற்கு யாரும் காது கொடுக்கவில்லை.

நிர்க்கதியாக நின்ற அவருக்கு அவரது தோழியான சட்டக் கல்லூரி மாணவி உதவி செய்துள்ளார். ‘நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாதே. சட்டக் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு. தோழர்களிடம் இதைப் பற்றி கூறலாம்.’ என்று கூறி அழைத்து வந்தார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் ஆணாதிக்கத் திமிர் குறித்த அரசியல் பார்வையும் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையூட்டின. மடை திறந்த வெள்ளம் போல அவருக்கு நடந்தவை அனைத்தையும் கூறி கதறினார்.

சமூகத்தில் நிலவும் மறுகாலனியாதிக்க சீரழிவு கலாச்சாரம், ஆணாதிக்க பொறுக்கித் தனம் எப்படி பார்க்கப்பட வேண்டியவை என்று விளக்கியதுடன் அவற்றுக்கெதிராக பெண்கள் தாமாக முன் வந்து போராட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர் தோழர்கள். அனைத்தையும் கேட்ட பின்பு, “இது வரை ஏதோ தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டும் நேர்ந்த பாதிப்பாக இதை நினைத்திருந்தேன். இப்போதுதான் இப்பிரச்சினையைப் பற்றிய புதிய பார்வை தனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார் அந்த பெண்.

‘ஆண்மையை நிலைநாட்டி விட்டதாக’ ஆண்டைத் தனத்தில் திரிந்து கொண்டிருந்த பொறுக்கியை சில மணி நேரங்களில் சுற்றி வளைத்து விசாரணைக்கு இழுத்து வந்தனர் பு.மா.இ.மு. தோழர்கள். விசாரணை துவங்கிய சில மணி நேரத்தில் அவனது உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர்.

தோழர்கள் முன்னிலையில் அப்பெண்ணே நீதிபதியாய் அமர்ந்து நியாயம் கேட்டார்.

“உனக்கு உடன்பாடில்லாமல்தான் இது நடந்ததா?” என்று முதல் கேள்வியிலேயே அப்பெண்ணை அவமானப்படுத்தி குற்றவாளியாக்க முயற்சித்தனர் அவனது உறவினர்கள்.

‘தனக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருப்பதாகவும், அது சரியாக வேண்டுமானால் தாம்பத்திய உறவு மட்டுமே மருந்து என்று மருத்துவர்கள் கூறியதாகவும்’ சொல்லி, அதற்கு தனது நண்பனான மருத்துவ பிரதிநிதி ஒருவனையும் பேச வைத்து அந்த பெண்ணை நம்ப வைத்த சதி வலையை அப்பெண் விளக்கினார். “இரு வீட்டார் சம்மதம் பெற்றி திருமணம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல மாதங்கள் ஆகும், எனவே உடனடியாக நோய் தீர நீ எனக்கு ‘ஒத்துழைக்க வேண்டும்’ எதிர்காலத்தில் என் மனைவி ஆகப் போகிறவள்தானே நீ, எனக்காக இதைக்கூடச் செய்ய மாட்டாயா?” என்று அவன் அழுது நாடகமாடியதை தோலுரித்து சீறினார் அப்பெண்.

‘லேப்டாப் வாங்கித் தருவதாக ரூ 20,000 பணம் வாங்கிக் கொண்டு இன்று வரை தராமல் ஏமாற்றியதும் இவன்தான்’ என்று அடுக்கடுக்காக அவன் அயோக்கியத் தனங்களைப் பற்றிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் கள்ள மௌனம் சாதித்தனர்.

இதுவே ஆளும் வர்க்கங்களின் நீதிமன்றமாக இருந்தால் அந்த பொறுக்கியின் சார்பில் வாதாடியிருக்கும் வழக்கறிஞர் இந்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்கிறேன் என்கிற பெயரில் நீதிபதியின் முன்பு ஒரு பாலியல் வன்முறையை நிகழ்த்தியிருப்பார். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருந்தது.

‘அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்’ என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டதாக எம் தோழர்கள் மீது வழக்கு பாயலாம், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! இவனைப் போன்ற ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுங்கள்!

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

வெனிசுவேலா – சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?

13

2007ம் ஆண்டு புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை

“அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!” இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ். நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார்.

எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

வெனிசுவேலா - சாவேஸ்

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது; இந்நிறுவனங்களில் பன்னாட்டு முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும், தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவ முயற்சிப்பது; நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.

சாவேசின் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுநிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்றபோதிலும், அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்கள் நலத் திட்டங்களையும் வைத்து அவரை “சோசலிஸ்டு” என்று மதிப்பீடு செய்கிறது ஆஸ்திரேலிய போலி சோசலிஸ்டுகளின் “கிரீன் லெஃப்ட்” பத்திரிகை. நம்நாட்டு போலி கம்யூனிஸ்டுகளோ, அவரை “இடதுசாரி” போக்குடையவர் என்றும், வெனிசுலாவில் புரட்சிகர மாற்றங்கள் நடந்து வருவதாகவும், தென்னமெரிக்க கண்டத்தில் “இடதுசாரி அலை” வீசுவதாகவும் சித்தரிக்கின்றனர்.

இப்படி “சோசலிஸ்டு”, “இடதுசாரி” என்றெல்லாம் வெனிசுலா அதிபர் சாவேசை மதிப்பீடு செய்வதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவரது நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவைத் தகர்த்து, நாட்டு விடுதலையையும் சுயசார்பையும் நிறுவும் புரட்சிகர நடவடிக்கைகள்தானா? வெனிசுலாவின் பொருளாதாரமும் அதிபர் சாவேசின் நடவடிக்கைகளும் எந்த திசையில் செல்கிறது?

****

ண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக சாவேஸ் செலவிடுகிறார். விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கப் போவதாகக் கூறுகிறார்; புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். எண்ணெய் விலையை உயர்த்துவது, எண்ணெய் உற்பத்தியை விரிவாக்குவது, புதிய சந்தைகளைத் தேடுவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களைச் சாதிக்க விழைகிறார்.

இதன்படி, வெனிசுலாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனம், தற்போதைய உற்பத்தியான நாளொன்றுக்கு 33 லட்சம் பீப்பாயிலிருந்து 2012ஆம் ஆண்டில் 58 லட்சம் பீப்பாயாக உற்பத்தியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஏறத்தாழ 7,500 கோடி டாலர் தேவை என்று கடந்த ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களைப் பராமரித்து மேம்படுத்துதல், புதிய எண்ணெய் துரப்பண நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு இன்னும் பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவை. மேலும், வெனிசுலாவின் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் பழமையானவை; ஆண்டுக்கு 23% அளவுக்கு இக்கிணறுகள் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. எனவே, புதிய கிணறுகள் தோண்டப்பட்டால் மட்டுமே எண்ணெய் உற்பத்தியில் முன்னேற முடியும்; உலகளாவிய போட்டியில் ஈடுபடவும் முடியும்.

இதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது, வெனிசுலாவிலுள்ள அந்நிய எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ணெய்க்கு ஈடாக முன்பணம் பெறுவது, அந்நிய எண்ணெய் கம்பெனிகள் மீது புதிய வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டத் தீர்மானித்துள்ளார், அதிபர் சாவேஸ். எண்ணெய் மூலாதாரங்களும் உற்பத்தியும் அரசின் கையில் இருப்பதால், அன்னிய எண்ணெய் கம்பெனிகளும் நிதி நிறுவனங்களும் முந்தைய காலத்தைப் போல கொள்ளையடிக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முடியாது என்று கருதுகிறார்.

ஆனால், வெனிசுலா மட்டுமல்ல; உலகின் முக்கால் பங்கு எண்ணெய் எரிவாயு மூலாதாரங்களையும் உற்பத்தியில் பாதிக்கு மேலாகவும் சௌதி அரேபியாவின் ஆரம்கோ, குவைத் பெட்ரோலியம், அல்ஜீரிய எண்ணெய் கழகம் முதலான அரசுத்துறை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த அரசுத்துறை நிறுவனங்கள் சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்திருப்பதாலும், எக்சான் மொபில் முதலான பூதகரமான மேற்கத்திய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாலும், தமது வர்த்தகத்துக்கும் சந்தைக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாலும் உண்மையில் ஏகாதிபத்தியங்களே பல்வேறு வழிகளில் ஆதாயமடைகின்றன.

இப்படி பல்வேறு வழிகளில் ஆதாயமடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்கள் அனைத்திலும் அரசுத்துறையின் பங்கு 60%க்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிவித்த அதிபர் சாவேஸ், கடந்த மே முதல் நாளன்று இம்முடிவை ஏற்காவிடில், அன்னிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். தொடக்கத்தில், இதை ஏற்க மறுத்த அன்னிய எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் இதற்கு உடன்பட்டன. இதன்படி உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனங்களான ஷெல், செவ்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம் முதலானவற்றுடன் வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து இயங்கும்; இக்கூட்டுத்துறை நிறுவனங்களில் அரசுத்துறையின் பங்கு 60% ஆக இருக்கும். இதன் மூலம் முந்தைய காலத்தை விட வெனிசுலா அரசுக்கு எண்ணெய் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மறுபுறம், எண்ணெய் விலையை வெனிசுலா அரசு உயர்த்தியுள்ளதால், முந்தைய காலத்தைவிட, அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கூடுதல் ஆதாயமடைந்துள்ளன.

மேலும், சந்தைக்காகவும், முதலீட்டு ஆதாரங்களுக்காகவும், தொழில்நுட்பத்துக்காகவும் அமெரிக்காவையே வெனிசுலா பெரிதும் சார்ந்துள்ளது. இச்சார்பு நிலையிலிருந்து வெனிசுலா மீள்வதென்பது மிகவும் கடினம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், வெனிசுலாவின் பங்கு 12% தான். வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் தர மறுத்துவிட்டால், அதனால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. அதேசமயம், வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யாமல் போனால், அதன் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். ஏனெனில், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், 60%க்கு மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்க ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்திராமல் எண்ணெய்க்குப் புதிய சந்தைகளைத் தேட முயற்சித்தார், அதிபர் சாவேஸ். அமெரிக்காவுக்கு அடுத்து பெருமளவு எண்ணெயைக் கொள்முதல் செய்யும் நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால் சீனாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு பூதாகரமானதாக இருப்பதோடு, உடனடி சாத்தியமின்றியும் உள்ளது. ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பசிபிக் பெருங்கடலில் வெனிசுலாவுக்குத் துறைமுகம் இல்லை. வெனிசுலாவிலிருந்து பனாமா கால்வாய் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய முடியும் என்றாலும், பல்லாயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் செல்லுமளவுக்கு பனாமா கால்வாய் ஆழமானதல்ல. எனவே கொலம்பியாவின் ஊடாக பெரும் எண்ணெய்க் குழாய்களைப் பதித்து, அந்நாட்டு உதவியுடன் பசிபிக் பெருங்கடலிலுள்ள துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்குப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்க வேண்டும்.

மேலும், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெயில் கந்தகம் மிகுந்துள்ளது. அதைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் ஆலைகள் சீனாவில் இல்லாததால், வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க சீனா தயங்குகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற காஸ்பியன் கடல் பிராந்திய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதிலேயே சீனா ஆர்வம் காட்டுகிறது.

இதுவொருபுறமிருக்க, வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டினா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவேஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார். மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.

ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் ஒரு ஏழை நாட்டு நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும் அதன் பின்னணியில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும் வங்கிகளும்தான் உள்ளன. அவை முதலாளித்துவ முறைப்படி சுரண்டுவதும், முதலாளித்துவ முறைப்படி இலாப விகிதங்களை வலியுறுத்துவதும்தான் நடக்குமே தவிர, அவை அமெரிக்க எதிர்ப்பு கொண்ட தென்னமெரிக்க பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்க ஒருக்காலும் உதவி செய்யாது. மேலும் பூதாகரமான இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பாரதூரமான விளைவுகளையே தோற்றுவிக்கும். தென்னமெரிக்கக் கண்டத்தில் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் முதலிடம் வகிக்கும் வெனிசுலா நாடு, இத்தகைய பெருந்திட்டங்களால் இயற்கை முறை குலைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல்வாதிகள் அறுதியிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெனிசுலாவின் எண்ணெய்த் துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. அரசுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரினோகோ எண்ணெய் வயலில் 380 கோடி டாலர்களை சாவெஸ் அரசு முதலீடு செய்தும்கூட, அத்திட்டம் நிறைவேறும்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளுக்கே வேலை கிடைக்கும். வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும். அதேசமயம் வெனிசுலாவின் வேலையில்லாதோர் விகிதம் ஏறத்தாழ 15% ஆக இருக்கிறது.

****

ண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் பொக்கிஷமோ, பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவிலிருந்து அல்ஜீரியா வரை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந்நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கிவிடவில்லை. சோசலிசம் என்பது எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதோ, எண்ணெய் வருவாயை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோ அல்ல.

வெனிசுலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

விவசாய முன்னேற்றம்சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் எண்ணெய் அல்ல; விவசாயம்! பின்தங்கிய ஏழை நாடான வெனிசுலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.

நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவேஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல். இதனாலேயே சோசலிசக் கனவுகளோடும், வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையோடும் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், முன்னேற முடியாமல் நிற்கின்றன.

சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை. ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவுடன் வெனிசுலாவின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய உலகிற்கு மாற்றாக, அதற்கு வெளியே புதிய உலகைக் கட்டியமைக்க விழையும் சாவேசின் இலட்சியக் கனவு நிறைவேற அடிப்படை இல்லை.

அதேசமயம் மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவேசின் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேநேரத்தில், வெனிசுலா அதிபர் சாவேசின் முதலாளித்துவ வழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையே “மாபெரும் புரட்சி”யாகவும், சாவேசை “இடதுசாரி” என்றும் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிசவாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கிய கடமையாகும்.

· மனோகரன்

________________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – 2007

________________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – மார்ச் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

1

புதிய-ஜனநாயகம்-மார்ச்-2013 புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சாரம்
  2. ஈழம்  தேவை : முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை
  3. மாருதி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! முதலாளித்துவ பயங்கரவாதம் வீழட்டும்!!
    நாடெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம்
  4. ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
    அப்சல் குரு உள்ளிட்டுத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலருக்கும் அத்தண்டனை அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது.
  5. பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்
    நான்கு தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தின் தான்தோன்றித்தனமான அதிகாரத் திமிரைத்தான் எடுத்துக் காட்டுகிறது
  6. பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
  7. பெண்கள் மீதான வன்கொடுமைகள் – அரசமைப்பே குற்றவாளி!
  8. எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
  9. காவிரி : சிக்கல் தீரவில்லை!
  10. நோக்கியாவின் பலே திருட்டு!
  11. மாலி ஆக்கிரமிப்பு : நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
  12. ஆணாதிக்கக் காலிகளுக்கு பாடம் புகட்டிய போராட்டம்
    பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் போலீசுக்கு எதிராக புரட்சிக அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
    “மானாட மயிலாட – ஆபாசக் கூத்தை உடனே நிறுத்து” – கலைஞர் டி.வி. முன்பாக பெ.வி.மு. ஆர்ப்பாட்டம்
    பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டிய பு.மா.இ.மு.வின் பொதுக்கூட்டம்
  13. மகாராஷ்டிரம் : காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
  14. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
  15. விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

ஹியூகோ சாவேஸ்: “அமெரிக்காதான் உலகின் பயங்கரவாதி!”

4

2005ம் ஆண்டு புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை

“பயங்கரவாதத்தை அரசு பயங்கரவாதத்தால் ஒழித்துவிட முடியாது. ஈராக்கின் ஃபலூஜா மற்றும் பிற நகரங்களின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றொழித்த அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான், உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!” இப்படி வெளிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலேயே இடியென முழங்குகிறார், வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவெஸ்.

ஹியூகோ சாவேஸ்நம் நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல் வெனிசுலா அதிபர் அமெரிக்காவுக்கு எதிராக வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்கா திணித்துவரும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேயமிக்க மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தையும் முன் வைத்து தனது நாட்டில் அவர் செயல்படுத்த விழைகிறார். அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரத் தலையீடுகளுக்கு எதிராகப் போராடுவதுதான் ஏழை நாடுகளின் தற்காப்புக்கான ஒரேவழி என்று கூறும் அவர், வெனிசுலாவின் தேசிய வருமானத்தில் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், உணவு, கல்வி முதலான சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கி ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

கடந்த டிசம்பர் 6ஆம் நாளன்று வெனிசுலா தலைநகர் காரகாசில் “மானிட இனத்தைக் காப்பதற்கான அனைத்துலக அறிவுஜீவிகள் கலைஞர்களின் மன்றம்” என்ற அமைப்பின் சார்பில் நடந்த விழாவில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்து எழுதப் படிக்கத் தேறியவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்குமான பாராட்டு விழாவும் இடம் பெற்றது. வெனிசுலாவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வயது வரம்பு கிடையாது. 50லிருந்து 70 வயதுடைய பெரியவர்களும் தாய்மார்களும் இப்பள்ளிகளில் கற்றுத் தேறி, கைகளில் புத்தகங்களை ஏந்தி, “எங்களுக்கு இப்போது எழுதப் படிக்கத் தெரியும்” என்று அந்த விழாவில் மகிழ்ச்சியோடு முழங்கினார்கள். அவர்கள் முன் எழுந்து நின்ற அதிபர் சாவெஸ், “ஏகாதிபத்தியம் இவர்களது கல்விக் கண்ணைக் குத்தி குருடாக்கித் தற்குறிகளாக்கியது; இன்று மக்களாட்சி, அவர்களது அறிவுக் கண்ணைத் திறந்துள்ளதைக் காணுங்கள்!” என்று முழங்கிய போது, பெருந்திரளாக இவ்விழாவில் பங்கேற்ற உழைக்கும் மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

சாவேஸ் - கியூபா ஆதரவுமுதியோர் கல்வித் திட்டம் மட்டுமல்ல குழந்தைகளுக்கு இருவேளை உணவுடன் கல்வி அளிக்கும் திட்டமும் அவரது ஆட்சியில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாவெஸ் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை வெனிசுலாவில் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகளே இருக்காது. தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற முடியும். அங்கு நிலவும் கட்டணக் கொள்ளையில் சிக்கிச் சாவதைவிட நோயினாலேயே செத்து விடலாம் என்று ஏழைகள் வேதனையுடன் குறிப்பிடுமளவுக்கு நிலைமை இருந்தது. இப்போது அதிபர் சாவெஸ் பதவிக்கு வந்தபின், தனது நாட்டிலிருந்து கியூபாவுக்கு பெட்ரோலிய எண்ணெயை ஏற்றுமதி செய்து, அதற்கீடாக கியூபா நாட்டு மருத்துவர்களை தனது நாட்டில் பணி செய்ய அழைத்துள்ளார். இவர்கள் வெனிசுலாவின் சேரிப் பகுதிகளில் மருத்துவ சேவை செய்கின்றனர். மருந்துகளும் சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

இது தவிர துப்புரவு, குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளை அரசாங்கம் முறையாகச் செய்து வருகிறது. சேரிப் பகுதிகளிலுள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டு உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனைத்து ஏழைகளுக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை அரசே முறையாக விநியோகித்து வருகிறது. தனியார் எஸ்டேட்டுகளின் பயிரிடப்படாத நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு சாவெஸ் அரசு பகிர்ந்தளித்து வருகிறது. இது தவிர, விவசாயக் கூட்டுறவுகளையும் உருவாக்கி உதவுகிறது. இதற்குமுன் உணவுப் பொருட்களை பெருமளவில் இறக்குமதி செய்துவந்த அந்நாடு, இப்போது சுயசார்பான விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்நடவடிக்கைகளும் மக்கள் நலத் திட்டங்களும் சாவெஸ் என்ற தனிமனிதனின் சிந்தனையில் உருவான மனிதநேயக் கொள்கைகளாக குறுக்கிச் சுருக்கிப் பார்க்க முடியாது. இவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிவரும் வெனிசுலா உழைக்கும் மக்களது உணர்வின் பிரதிபலிப்பு!

வெனிசுலா தென்னமெரிக்கக் கண்டத்தின் தலைவாசலில் உள்ள நாடு. உலகின் பெட்ரோலிய ஏற்றுமதியில் 3வது இடத்தை வகிக்கும் நாடு. நாளொன்றுக்கு 26 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் நாடு. ஆனாலும் ஏழைகளும் பஞ்சைப் பராரிகளும் நிறைந்த நாடு. மொத்த மக்கட் தொகையில் 80 சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்க, 20 சதவீத தரகு முதலாளித்துவ மேட்டுக் குடியினரும் அதிகார வர்க்கத்தினரும் மட்டுமே ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தனர்.

1980களில் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்உம் திணித்த கட்டுமான சீர்திருத்தங்கள், அந்நாட்டை திவாலாக்கியது. அதன்பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அந்நாட்டையும் மக்களையும் சூறையாடி ஓட்டாண்டிகளாக்கியது. வேலையிழந்து வாழ்விழந்த மக்கள் நாடோடிகளாக நகரங்களை நோக்கி ஓடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் தீவிரமாகியது. விலைவாசி விண்ணை முட்டியது. மானியங்கள் வெட்டப்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டன.

வாழ்விழந்த மக்கள் இத்தனியார்மய தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர். கடந்த பத்தாண்டுகளில் ஏதுமற்ற மக்கள் நகர்ப்புற சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடுவது பலமுறை நடந்தது. துறைமுகங்களில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களைப் பட்டினிப் பட்டாளம் பறித்தெடுப்பதும் தொடர்ந்தது. அன்றைய அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கார்லோசின் அரசு, நாடெங்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கி, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்து பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

இந்தச் சூழ்நிலையில், அதிபர் தேர்தல் வந்தது. அமெரிக்கக் கைக்கூலியான பாசிச அதிபர் கார்லோசை எதிர்த்து, வெனிசுலா இராணுவத்தில் படை அதிகாரியாகப் பணியாற்றிய ஹியூகோ சாவெஸ் போட்டியிட்டார். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வந்த சூழலில், சாவெஸ் இவற்றை எதிர்த்து மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒடுக்குமுறை ஆட்சிகளால் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவெசை ஆதரித்து 2000ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் அவருக்கு ஏறத்தாழ 56சதவீகிதம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

சாவெஸ், அதிபர் பதவிக்கு வந்ததும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை (OPEC) வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். ஈராக் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்ததோடு அப்போதைய ஈராக் அதிபரான சதாம் உசேனையும் சந்தித்துப் பேசினார். ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரை வெளிப்படையாக எதிர்த்தார். அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரித்த அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவினார்.

இது மட்டுமின்றி, எண்ணெய் வருவாயை விழுங்கி ஏப்பம் விட்டு வந்த ஏகாதிபத்திய தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் தமது வருவாயில் குறிப்பிட்ட ஒரு பங்கை மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று சட்டமியற்றினார். ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்குச் செலுத்த வேண்டிய “ராயல்டி” கட்டணத்தையும் தீர்வைகளையும் உயர்த்தினார். அன்னிய கூட்டுப் பங்கு நிறுவனங்களின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தார். நிலச்சீர்திருத்தத்தை உடனடியாகச் செயல்படுத்த ஆணையிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்த பன்னாட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அதிபர் சாவெசைப் பதவியிலிருந்து தூக்கியெறிய கூட்டுச் சதியில் இறங்கி கலகங்களைத் தூண்டி விட்டனர். பத்திரிகை முதலாளிகள் சாவெசுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஊழல் அதிகாரிகள் அதிபரின் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து முட்டுக் கட்டை போட்டனர். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு சாவெஸ் சிறையிடப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு, “ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி புதிய அதிபராக்கப்பட்டார்.

ஆனால், ஏகாதிபத்தியவாதிகளின் மகிழ்ச்சியும் ஆரவாரமும் இருநாட்கள் கூட நீடிக்கவில்லை. அதிபர் சாவெசை ஆதரித்து நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்கினர். சாவெசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. வெனிசுலாவில் பெருகிய அதிருப்தி கலகத்தாலும், அமெரிக்காவையும் அதன் எடுபிடி கொலம்பியாவையும் தவிர இதர தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகள் எவையும் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்காததாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போன நிலையில், இத்திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவெஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார். அமெரிக்க வல்லரசின் முகத்தில் கரிபூசப்பட்டது.

சாவெஸ் ஏற்கனவே அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டப்படி, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்க கருத்துக் கணிப்பு தேர்தல் நடத்தவும் உரிமையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஏறத்தாழ 60சதவீகிதம வாக்குகள் பெற்று அதிபர் சாவெஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மாநில ஆளுநர் தேர்லில் சாவெஸ் ஆதரவாளர்கள் ஆகப்பெரும்பான்மையான மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இது தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைத்த தேர்தல் வெற்றி மட்டுமல்ல் தாராளமயத் தாக்குதலுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் எதிராகப் போராடிவரும் வெனிசுலா உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வெற்றிகளையும் போராட்டங்களையும் ‘பொலிவாரிய புரட்சிகர இயக்கம்” என்று சாவெஸ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். (சைமன் பொலிவார் என்பவர் தென்னமெரிக்கக் கண்டத்து புரட்சியின் நாயகனாகப் போற்றப்படுகிறார். அவரது பெயராலே இப்போராட்டப் பாதையை பொலிவாரியப் புரட்சி என்று குறிப்பிடுகின்றனர்). மக்களை, தாங்களாகவே அமைப்பாக்கிக் கொண்டு போராடுமாறு சாவெஸ் அறை கூவி அழைக்கிறார். தென்னமெரிக்கக் கண்டத்தை அடிமையாக்கி மேலாதிக்கம் செய்ய முயற்சிக்கும் அமெரிக்காவின் சுதந்திர வர்த்தகப் பிராந்தியத் திட்டத்துக்கு மாற்றாக, பொலிவாரிய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து மத்திய அமெரிக்க தென்னமெரிக்க நாடுகளை ஐக்கியப்படுமாறு கோருகிறார். அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அலுவல் வலைப் பின்னல் மையத்தை வெனிசுலா தலைநகரில் நிறுவவும் தீர்மானித்துள்ளார். “எமது புரட்சியானது, அமைதி வழியிலானது, அதேசமயம் மக்கள் படையைக் கொண்டு ஆயுத ரீதியிலானது” என்று விளக்குகிறார் அதிபர் சாவெஸ்.

அதிபர் சாவெஸ், தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்டங்கள் விதிகள் கட்டுப்பாடுகளை மேலிருந்து நிறைவேற்றுவதன் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நின்று வெனிசுலாவின் சுயாதிபத்திய உரிமையைத் தற்காத்துக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறார். அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு, சுயசார்பு, மக்களின் நல்வாழ்வு, ஒடுக்கப்பட்ட நாடுகள் மக்களுடன் ஒருமைப்பாடு முதலான உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் இதைச் சாதிக்க அவர் மேற்கொண்டுள்ள பாதை சட்டவாத, தாராளவாத முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிப் பாதையேயாகும்.

வர்க்கச் சுரண்டலும் ஆதிக்கமும் நிலவும் அதேநேரத்தில், உழைக்கும் மக்களின் அதிருப்திக்கும் போராட்டங்களுக்கும் வடிகாலாக, மக்கள் நல்வாழ்வுக்கான சில திட்டங்களைப் பெயரளவுக்குச் செயல்படுத்துவதை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலங்களில் ஏகாதிபத்திய உலகம் பின்பற்றியது. இதனை “சேமநல அரசு” (welfare state) என்று ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதிகள் குறிப்பிடுகின்றனர். தனியார்மய தாராளமயத் தாக்குதலைத் தொடர்ந்து இத்தகைய பெயரளவுக்கான கவர்ச்சிவாதத் திட்டங்களும் கொள்கைகளும் கை கழுவப்பட்டு விட்டன. அதிபர் சாவெஸ், முந்தைய “சேமநல அரசுகள்” பின்பற்றிய கொள்கைகளையே தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு இப்போது செயல்படுத்தி வருகிறார். இருப்பினும், அதிபர் சாவெஸ் இதை “பொலிவாரிய புரட்சி” என்று குறிப்பிடுவதை வைத்து, வெனிசுலாவில் புரட்சி முன்னேறுவதாகவும், புரட்சிகரமான அரசு நிறுவப்பட்டுள்ளது போலவும் இங்குள்ள இடது வலது போலி கம்யூனிஸ்டுகளும் குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினரும் சிலாகித்து எழுதி வருகின்றனர். அதன் மூலம் அமைதியான சமாதான வழிகளிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றி விட முடியும்; புரட்சியைச் சாதித்துவிட முடியும் என்கிற பிரமைகளை வளர்த்து கேடுகெட்ட தமது ஓட்டுச் சீட்டுப் பாதைக்கு முட்டுக் கொடுக்க முயற்சிக்கின்றனர்.

அதிபர் சாவெஸ் மேற்கொண்டுள்ள இச்சீர்திருத்தவாதப் பாதையானது, ஏற்கெனவே தென்னமெரிக்க நாடான சிலியில் கால் நூற்றாண்டுக்கு முன்னரே படுதோல்வியடைந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பாதையாகும். சிலி நாட்டில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த போலி சோசலிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகள், தரகுப் பெருமுதலாளிகளுக்கு எதிராகச் சட்டங்களைப் போட்டு, மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த முற்பட்டதும், அமெரிக்கா அந்நாட்டில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி போலி கம்யூனிஸ்டுகளைச் சுட்டுக் கொன்று நரவேட்டையாடி தனது விசுவாச இராணுவ சர்வாதிகாரியைப் பதவியில் அமர்த்தியது. சிலி நாட்டிலாவது ஒரு போலி கம்யூனிச கட்சி இருந்தது. ஆனால் வெனிசுலாவில், அதிபர் சாவெசுக்கு அப்படியொரு கட்சி கூட இல்லை. அவரால் உருவாக்கப்பட்டுள்ள “ஐந்தாவது குடியரசு இயக்கம்” என்ற கட்சியானது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. அதுவும் சந்தர்ப்பவாத சட்டவாத சக்திகளைக் கொண்டதாகவே உள்ளது. மறுபுறம், அவர் முன்னாளில் இராணுவ அதிகாரியாக இருந்ததால், இராணுவத்தில் ஒரு பெரும்பகுதி அவருக்கு ஆதரவாக உள்ளது.

அதிபர் சாவெஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான தரகுப் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் நட்டஈடின்றி பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாசிச முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரம் தூக்கியெறியப்பட்டு புரட்சிகர வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிறுவவுமில்லை.

மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளதே தவிர, அதன் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் அரசு பெட்ரோலியத் துறையை, நிர்வகித்துக் கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்டதாகவே மேட்டுக்குடி கும்பல் இன்னும் நீடிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, மாநில அரசுகளின் நிர்வாகம் முதலானவற்றில் எதிர்த்தரப்பு பலமிக்கதாகவே உள்ளது. அண்மையில் சாவெசை ஆதரித்த நீதிபதி ஆளும் வர்க்கக் கூலிப் படையினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டுள்ளார். பத்திரிகை ஊடகத் துறையில் சாவெஸ் எதிர்ப்பு தரகு முதலாளிகளே ஏகபோகமாக உள்ளனர். வானொலி மட்டுமே சாவெஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பான்மை உயர் இராணுவ அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் சாவெஸ் எதிர்ப்பாளர்களாகவே உள்ளனர். “எனது கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது அதிகார வர்க்கம்தான்” என்று சாவெஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார். அமைப்பாக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் சாவெஸ் அரசை ஆதரிக்கும் அதேசமயம், அமைப்பு ரீதியிலான மேட்டுக்குடி தொழிலாளர்கள் அரசியல் உணர்வின்றி, ஆளும் வர்க்கங்களுக்கு விலைபோகுமளவுக்கு பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆளும் வர்க்கச் சதிகளுக்கு இரையாகி, ஈராண்டுகளுக்கு முன்பு சாவெஸ் அரசுக்கு எதிராக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் சாவெசுக்கு ஆதரவாக உள்ள போதிலும், அவர்கள் புரட்சிகர வர்க்கப் போராட்ட அமைப்புகளில் திரட்டப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில்தான் அதிபர் சாவெஸ் வரம்புக்குட்பட்ட தனது அதிகாரத்தைக் கொண்டு சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது சீர்திருத்தங்கள் வெற்றி பெறவும், அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் வெனிசுலா உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் திரண்டு கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபட வேண்டியது, உடனடி அவசியமாக உள்ளது.

மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவெசின் வரம்புக்குட்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க மேற்கொண்டு வரும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேசமயம், அதிபர் சாவெசின் மக்கள் நலக் கொள்கைகளேயே மாபெரும் புரட்சியாகச் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கியமான கடமையாகும்.

– மனோகரன்
______________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – 2005
______________________________________________________________________________________

த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!

63
குமுதம் அட்டை

ந்த உலகின் சர்வரோக பிரச்சினைகளுக்கும் ரைட் ராயலாக தீர்வு சொல்லும் ஒரே உரிமை கருத்து கந்தசாமிகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்து காயத்ரிக்களுக்கும் அப்பேர்ப்பட்ட தன்னைத்தானே தத்துவஞானியாக நியமித்துக் கொள்ளும் ரைட் நிச்சயம் உண்டு. அதிலும் அந்த காயத்ரிக்கள் விஐபிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

பாலியல் வன்முறையால் டெல்லி மருத்துவ மாணவி கொல்லப்பட்டது குறித்து உதட்டுச் சாயம் தவிர்த்து வேறு எதற்கும் வாய்திறக்காதவர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்! பரபரப்பிலும் கொஞ்சம் விஐபிகளை காக்டெய்லாக கலந்து விட்டால் செய்திக்கு செய்தி, கவர்ச்சிக்கு கவர்ச்சி. அந்த வகையில் 13.2.2013 தேதியிட்ட குமுதத்தில் த்ரிஷாவின் அதிரடி என்னும் செய்தி ஹீரோயின் வாய்ஸ் எனும் கொசுறு உட்தலைப்புடன் வெளியாகியிருக்கிறது.

அந்த செய்தியை அப்படியே படியுங்கள்:

த்ரிஷா டுவிட்டர்“டெல்லி மாணவி கற்பழிப்பு விஷயத்தில் பாதிக்கப்பட்ட த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்துகளை பரிசோதனை செய்வதற்காக விலங்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்குப் பதிலாக சிறையில் இருக்கும் கற்பழிப்புக் குற்றவாளிகளையும், குழந்தைகளிடம் செக்ஸ் வன்முறையில் ஈடுபட்டவர்களையும் இந்த சோதனைக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று அதிரடி அறிவிப்பை வெளியிட, பதிலுக்கு த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து விட்டன. த்ரிஷாவிடம் ஒரு மினிபேட்டி.

“டுவிட்டரில் என்னோட கருத்தைப் பார்த்துவிட்டு நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவுக் குரல்கள் வந்தது எனக்கே ஆச்சரியமா இருக்கு. அந்த அளவுக்கு டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் எல்லோரையும் பாதிச்சிருக்கு. வாய் பேசாத விலங்குகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பது மனிதாபிமானமல்லாத செயல். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உயிர்வதை கூடாதுங்கறதைப் பற்றி தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்திக்கிட்டே இருக்கேன். விலங்குகள் வதைக்கப்படுவதை தாங்க முடியாது. அப்படியிருக்கும் போது ஒரு பெண்ணை மிருகத்தனமா சிதைச்சது எவ்வளவு பெரிய கொடுமை. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நான் தூங்கவே இல்லை. அந்த ஆதங்கத்துலதான் மருத்துவப் பரிசோதனைக்கு கற்பழிப்புக் குற்றவாளிகளை உட்படுத்தணும்னு சொன்னேன், அவங்களால நாட்டுக்கும் நல்லது. அவங்களுக்கு தண்டனை கொடுத்த மாதிரியும் இருக்கும்”.

முதலில் இதே பிரச்சினைக்கு அம்மா சொன்ன ஆண்மை நீக்கம் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்! இது தற்செயலா இல்லை பாசிச ஜெயாவின் வாரிசாக வரும் தகுதி கொண்டவர் கலையுலகில் இருக்கிறாரா? நல்லவேளை இதுவரை த்ரிஷா அரசியலில் இல்லை. இருந்திருந்தால் ஒரு ஜெயலலிதாவையே தாங்காத தமிழகம் மற்றுமொரு ஜெயலலிதாவின் வருகையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கும்.

பாலியல் வன்முறை குறித்து பேசும் நடிகை த்ரிஷா முதலில் தனது துறை குறித்து சுயவிமரிசனம் செய்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் நேர்மை. அதிலும் தென்னிந்திய தேவதை த்ரிஷாவின் சினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் என்சைக்ளோபீடியோவாக இருக்கிறது. அதற்கு உடன்பட்டுத்தான் த்ரிஷாவும் ஏனைய நடிகைகளும் கதைகளிலும், கவர்ச்சிகளிலும் நடித்து விட்டு கோடிகளில் ஊதியம் வாங்குகின்றனர்.

பாடல் வெளியீட்டு விழாக்கள் மற்றும் படம் குறித்த சந்தை நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே கவர்ச்சி எனும் ஆபாச உடை அணிந்துதான் த்ரிஷாவும் அவரது திரையுலக தோழிகளும் காட்சியளிக்கிறார்கள். இவையனைத்திற்கும் திட்டமிட்ட ஒரு நோக்கம் உண்டு. அது பெண்ணுடலை வெறி கொண்டு பார்க்கும் ஒரு மலிவான ரசனையை ஆண்களிடம் உருவாக்கி, கதையாக்கி, ரசிக்க வைத்து காசு பார்ப்பது. வண்ணத்திரையிலோ, சினிக்கூத்திலோ, டைம்பாசிலோ இந்த நடிகைகளின் ஆபாசப்படங்கள்தான் பாடநூல்களில் ஆரம்பிக்கும் இறைவணக்கம் போல இடம்பெறுகின்றன. மேலாக ஒரு நடிகை தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கவர்ச்சிப் பட ஆல்பங்களை தொழில்முறை கலைஞர்களை வைத்து தயாரித்துத்தான் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் ஆபாசம் என்பதுதான் ஒரு நடிகைக்கு மூலதனம்.

அதே நேரம் ஒரு பெண் கவர்ச்சி உடை அணிவதுதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று மதவாதிகள் சொல்வதை நாம் ஏற்கவில்லை. இல்லையெனில் பாலியல் வன்முறைகளுக்கு உடைகள்தான் காரணம் என்று அயோக்கியர்களின் குற்றம் நியாயப்படுத்தப்படும். ஒரு பெண் நிர்வாணமாகக் கூட நடந்து செல்லட்டும். அதனால் தனக்கு ‘கற்பழிப்பு’ எண்ணம் ஏற்படுகிறது என்று யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? அல்லது முழு சாக்கு போட்ட பெண்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வன்புணர்ச்சி செய்யும் மிருகங்களிடமிருந்து தப்பிவிட்டார்களா?

இது ஒருபுறமிருக்க மதவாதிகளின் பிற்போக்கு கருத்துகளை வைத்து சினிமா உலகம் தன்னை நியாயப்படுத்த முடியாது. இங்கே ஆணின் பிடியிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும் நோக்கம் இல்லை. மாறாக ஆணின் காமவெறி உலகிற்கு மட்டும் பெண்ணுடல் பயன்பட வேண்டும் என்ற பச்சையான நோக்கம் இருக்கிறது. இது கவர்ச்சி, ஆபாசம் என்று மட்டுமல்ல, எது அழகு என்று உருவாக்கப்படுவதிலும் இருக்கிறது.

‘த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. அங்கே ‘கற்பழிப்பு’ என்றால் இங்கே வன்முறையாக காதல், கல்யாணம் என்று அளவு மட்டும் வேறுபடுகிறது. நிஜமான இளையோர் உலகிலும் இப்படித்தான் ஆண்கள் காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுகின்றனர். அமில வீச்சினால் விநோதினி கொல்லப்பட்டதற்கும் இதுவே அடிப்படை.

டெல்லி சம்பவத்திற்காக தூக்கம் வரவில்லை என்று துக்கப்படும் த்ரிஷா இத்தகைய கதைகளில் ஜாலியாக நடிப்பதற்கு என்ன காரணம்? கொள்கை வேறு, தொழில் வேறு என்பதா? இவரது கொள்கைப்படி மற்றவர்களை தண்டிக்கலாமென்றால் இவரது தொழில் நமது கொள்கைகளுக்கு எதிரானது என்று இவரை நாம் தண்டிக்க த்ரிஷா ஒத்துக் கொள்வாரா? ஆகவே நபருக்கு நபர் கொள்கை வேறுபடலாம் என்றால் என்ன பொருள்? அதிலும் பாலியல் வன்முறை குறித்து ஆளாளுக்கு ஒரு கொள்கை என்று வேறுபட்டு பார்க்க முடியுமா? அந்த வகையில் த்ரிஷாவின் தொழிலும், அந்த தொழிலை நடத்தும் சினிமாவும் டெல்லி குற்றவாளிகளின் அணிவரிசையில்தான் நிற்கின்றார்கள்.

மாடலிங், சினிமா, டி.வி போன்ற துறைகளில் பெண்களுக்கு சமத்துவம் கிடைப்பதில்லை என்று சில பெண்ணியவாதிகள் அசட்டுத்தனமாக ஆவேசப்படுவதுண்டு. அதாவது த்ரிஷா நடிக்கும் படங்களில் நாயகனுக்கு இணையாகவோ அதிகமாகவோ நாயகியின் பாத்திரம் இருப்பதில்லை. வயதான நடிகர்கள் போல வயதான நடிகைகளுக்கு மார்கெட் இருப்பதில்லை. கூடுதலாக சினிமாவின் எந்தத் துறையிலும் பெண்கள் முன்னேற முடியாமல் ஆணாதிக்கம் நிலவுகிறது என்றும் அவர்கள் கவலைப்படுவதுண்டு.

என்றாலும் அத்தகைய கவலையின் அடிப்படையில் த்ரிஷா, அசின், காஜல், முதலான நடிகைகள் பெண்ணுரிமை காவலர்களாக பதவி உயர்வு பெறும் காட்சியினை சகிக்க முடியவில்லை. சினிமாவே ஒரு குப்பை என்றும், ரசிகர்களின் அதுவும் ஆண்ரசிகர்களின் வக்கிரத்தை விசிறி விடுவதினூடாக வர்த்தகம் செய்யும் தொழில் என்று தெரிந்த பிறகும் மலத்தில் யாராவது அரிசியை தேடுவார்களா என்ன? அதன்படி தமிழ் சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பில்லை என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களுக்கு எதிரானவர்கள் என்கிறோம்.

அது போல ஒரு நடிகை சில படங்களில் நடித்து நட்சத்திரமாவது என்பது வெறும் திறமையின் அடிப்படையில் மட்டுமல்ல. மேலதிகமாக கவர்ச்சி காட்டுவது என்பதைத் தாண்டி அங்கே திறமைக்கு வேலையில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர்கள் ஒத்துக் கொண்டால்தான் ஒரு பெண் நடிகையாக இடம்பெற முடியும். வளர முடியும். ஒரு சில விதிவிலக்குகளைத் தாண்டி இந்த ஒத்துக் கொள்ளலில் பல துணை நடிகைகள் உள்ளிட்டு பெரும் நட்சத்திரங்கள் வரை ஆணாதிக்கத்தால் வேட்டையாடப்படுகின்றனர். உண்மையில் இதை எதிர்த்து எந்த நடிகையும் வாய் திறப்பதில்லை. இவையும் அதிகபட்சம் ஊடகங்களின் கிசுகிசுவாக, அதையும் ரசிப்பது என்ற அளவிலேதான் வெளிவருகின்றன.

ஆகவே த்ரிஷா முதலான நடிகைகள் டெல்லி கயவர்களை தண்டிப்பது இருக்கட்டும், தங்கள் துறையில் அத்தகைய நபர்களை தண்டிக்க வேண்டாம், அடையாளமாவது காட்டுவார்களா? நிச்சயம் காட்டமாட்டார்கள். ஏனெனில் கோடிகளில் கொழிக்கும் அவர்களது நட்சத்திர வாழ்வின் அஸ்திவாரத்தை இழப்பதற்கு அவர்கள் கனவிலும் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியின் துன்பறுத்தப்படுவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்.

இதை த்ரிஷாவின் ஆரம்பகால வாழ்க்கையில் இருந்தே சொல்ல முடியும். அப்போது மிஸ் சென்னையோ இல்லை மிஸ் திருவல்லிக்கேணியோ என்று பட்டம் பெற்ற த்ரிஷாவை ஆனந்த விகடன் முதலான பத்திரிகைகள் அட்டைப்படத்தில் போட்டு உதவின. மாடலிங் உலகில் இருந்த அவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆளாகி வருகிறார். அப்போது விளம்பர நடிகையாக இருந்த ஒரு பெண் மாடலிங் உலகில் சக்தி வாய்ந்த ஒரு நபர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டுகிறார். வழக்கம் போல பத்திரிகைகள் சென்சேஷனாக போட்டு காசு பார்க்கின்றன.

த்ரிஷாவும் மாடலிங் துறை என்பதால் அவரிடமும் கருத்து கேட்கிறார்கள். அப்போது அவர் என்ன சொன்னார்? ‘குற்றம் சாட்டிய பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட ஆணும் தனக்கு தெரியும் என்பதோடு இருவரும் தொழில் நிமித்தம் வேண்டியவர்கள் என்பதால் இருவருக்கு எதிராகவும் கருத்து சொல்ல மாட்டேன்’ என்றார் த்ரிஷா.

நல்லது, ‘கற்பழிப்பு’ குற்றவாளிகளை சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தலாம் என்ற த்ரிஷாவின் யோசனைப்படி த்ரிஷாவுக்கும், அவரது சினிமா துறையினருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள்!

கட்டிட அழகிற்காக உடம்பை அழிக்கும் கொத்தடிமைகள்!

0

மெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், வளைகுடா பகுதி போன்ற முன்னேறிய நாட்டு பணக்காரர்களின் வீடுகள், தோட்டங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், உணவகங்கள், மால்கள் இவற்றை அலங்கரிக்க தேவைப்படும் மணற்கற்கள் (sandstone – இதை மணற்பாறை என்றும் அழைக்கலாம்) இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மணற்கல்

தனியார் வாகனப் பாதை, சாலை மேல் பரப்பு, வீட்டு முற்றங்கள் போன்ற இடங்களில் இக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கலை நயமுடையதாக காட்சியளிக்கும் சிறப்பு இருப்பதால், மேலை நாடுகளில் இவற்றிற்கு பெருமளவு வரவேற்பு உள்ளது. உலக அளவில் மணற்கற்கள் உற்பத்தியில் 27 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் 15 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5ல் ஒருவர் குழந்தை தொழிலாளி. 20% குழந்தைகள் 6 வயது முதல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்

கடந்த 15 – 20 வருடங்களில் 5 மடங்கு வளர்ந்துள்ள இத்தொழிலில் ஆண்டுக்கு ரூ 200 கோடிக்கு அதிக மதிப்பிலான மணற்கற்கள், இராஜஸ்தான் ஹிந்தோன் நகரத்திலிருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சிறுநகரத்தில் 25 மணற்கல் குவாரிகள் உள்ளன.

இராஜஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மணற்கல் வர்த்தகம் முதலாளிகளை செல்வம் கொழிக்கச் செய்வதோடு, கற்களை வெட்டி உருவாக்கும் உழைப்பாளிகளை ஈவு இரக்கமற்ற விதத்தில் சுரண்டுகிறது.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையென்பதே கொடுமையாக இருக்கும் போது, மணற்கல் குவாரிகளில் வேலை பார்க்கும் பல தொழிலாளிகளுக்கு ஊதியமே கிடையாது. கூலியில்லாத மனித உழைப்பில்தான் இக்கற்கள் உருவாகின்றன.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல தேவைப்படும் போது வட்டிக்கு கடன் கொடுத்து,  திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சம்பளமில்லாத தொழிலாளர்களாக குவாரிகளில் குடும்பத்துடன் வேலை செய்யும் அடிமைநிலைக்கு தள்ளி விடுகின்றனர்.  குவாரி முதலாளிகளிடம் பெற்ற கடனை திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பவர்கள் வேலை செய்து கடனை  அடைக்கிறார்கள்.

இந்த கொத்தடிமை முறை குறித்து ஆய்வு செய்து வரும் அனுமேகா யாதவ் என்ற பத்திரிகையாளர் எழுதிய இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பை தந்துள்ளோம்.

பாபுலால் கைர்வாராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா நகரத்தில் உள்ள ஒரு மணற்கல் குவாரியில்,  சூரியன் மறையப் போகும் நேரம். 38 வயதான பாபுலால் கைர்வா கையில் உளி, சுத்தியலுடன் நேர் கோட்டில் 2 அடிக்கு 10 அடி அளவிலான மணற்கல் பலகையை வெட்டுகிறார். அந்த கல்லுக்கு சந்தையில் ரூ 1,600 விலை கிடைக்கும், ஆனால், அதை வெட்டி எடுத்த பாபுலாலுக்கு கூலி எதுவும் கிடைக்காது.

பாபுலால் ஐந்து வருடங்களுக்கு முன் குவாரி உரிமையாளர் பகதூர் பாபுவிடம்,  வாங்கிய ரூ 10,000 கடன், வட்டியுடன் சேர்ந்து இருமடங்கு ஆகி இருக்கிறது. கடனை திருப்பி தரும் வரை கூலி இல்லாமல்தான் பாபுலாலும் அவருடைய குடும்பத்தினரும் வேலை செய்யவேண்டும்.

“குடும்பச் செலவுக்காக முதலாளி மாதம் ரூ 500 மட்டும் கொடுப்பார். ஆண்டு இறுதியில் முந்தைய கடனுக்கு ஈடாக அதை எடுத்துக் கொள்வார்” என்கிறார் பாபுலால்.

வெட்டப்பட்ட கல் நேர் கோட்டில் பிளக்கவில்லை என்றால் அவர் ஆரம்பத்திலிருந்து மீண்டும் வேலையை தொடங்க வேண்டும். அவரது மனைவி ஹீரா பாயும் மூன்று மகள்களும் கற்களை சுமந்து சென்று உதவுகிறார்கள்.

குடும்பத்துடன் உழைத்தும் வருடா வருடம், கடன் தொகை அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. கையில் ஒரு ரூபாய் கூட மிஞ்சுவதில்லை. இந்த இடத்தை விட்டு கிராமத்துக்கு ஓடி விடலாம் என்றால் சுரங்க உரிமையாளர்கள் ஜீப்பில் அல்லது மோட்டார் பைக்கில் வந்து மீண்டும் பிடித்து வந்து விடுவார்கள்.

தெற்கு ராஜஸ்தானில் இருக்கும் கோட்டா நகரத்தின் புறநகர் பகுதிகளான ராஜ்புரா மற்றும் தாபியில்100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மணற்குவாரிகள் விரிந்துள்ளன. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்பட்ட மணற்கற்கள் இப்போது சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

“குவாரியின் அளவை பொறுத்து ஆண்டுக்கு ரூ 5 கோடி வரை இலாபம் வரும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் கோட்டாவிலிருந்து மணற்கல் வாங்க வந்துள்ள வாடிக்கையாளர் ்பத்தே சிங். “இந்தப் பகுதியில் கிடைக்கும் மணற்கல்லை கைகளால்தான் வெட்ட வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாது” என்கிறார் வடக்கு இராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்ற வாடிக்கையாளர்.

பாபுலால் பணியாற்றும் குவாரியில் அவரைப் போலவே 5 குடும்பங்கள் வேலை செய்கின்றன. கோட்டா நகரத்தில் நேவாஜி குஜ்ஜர் என்பவருக்கு சொந்தமான மிகப் பெரிய மணற்கல் குவாரியில் மட்டும் 400 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இதே போன்று கொத்தடிமை கடன் சுழலில் மாட்டியவர்கள். அவர்களுக்கு முறையான கூலி கொடுக்கப்படுவதில்லை.

மங்கள ராமா என்ற தொழிலாளி, மத்திய பிரதேசத்திலுள்ள ஜாபூவா பகுதியைச் சேர்ந்தவர். “9 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணமாக ரூ 20,000 வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் இங்கு வேலை செய்ய வந்தேன். ஒரு வருடம் கழித்து தர வேண்டிய கடன் ரூ 24,000 ஆகியிருக்கிறது என்றார் குவாரி உரிமையாளர் ஜெட்கா சாஹிப். 2 – 3 வாரங்களுக்கு ஒரு முறை ரூ. 400 – 500 கைச்செலவுக்காக தருகிறார்” என்கிறார் அவர்.

ஹீரா பாய், பாபுலால்150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாபுலால் கைர்வாவின் சொந்த கிராமம் இன்று ஆளரவமற்று இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த 500 குடும்பங்களில் பெரும்பான்மையோர் நிலமற்ற ஏழைகள், தீபாவளி முடிந்ததும் பிழைப்புக்காக கோட்டாவில் இருக்கும் குவாரிகளுக்கு போகிறார்கள். மே மாதம்தான் திரும்புவார்கள்.

இன்று நாடோடிகள் போல, அலைக்கழிக்கப்படும் இந்த மக்களின் கடந்த காலம் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. கைர் என்ற மரத்தின் பெயரில்தான் இந்த மக்கள் கைர்வா என்று அழைக்கப்படுவதாக கிராமத்துப் பெரியவர்கள் சொல்கிறார்கள். ‘கைர் மரப் பட்டையிலிருந்து சாறு எடுத்து, புளிக்க வைத்து, பதப்படுத்தி, கத்தா வியாபாரம் செய்து வந்தோம்’ என்கிறார் கணேஷ் ராம் கைர்வா.

கத்தா மருந்து தயாரிப்பிலும் பான் மசாலா, குட்காவில் கலக்கப்படும் பொருளாகவும் பயன்பட்டது. கைர்வாக்கள் இந்த தொழிலை செய்ய உதவியாக அரசு கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தியது. ஆனால், காடுகள் அழிக்கப்பட்டதும் கூட்டுறவு சங்கங்களும் சிதைந்து விட்டன.

மக்கள் நகரங்களுக்கு வேலை செய்ய துரத்தப்பட்டனர்.

“எனது ஒரே மகன் 20 ஆண்டுகள் குவாரியில் வேலை செய்தான். போன சங்கராந்தி சமயத்தில் ரூ 25,000 கடனாளியாக இறந்து போனான்” என்கிறார் கணேஷ் ராம். “கடனை அடைக்க வேலை செய்யும் நிலையில் நான் இல்லை, வயதாகி விட்டது என்று முதலாளியிடம் கெஞ்சி கேட்டு தப்பினேன்” என்கிறார் அவர்.

“என்னுடைய இரு மகன்களும் மணற்கல் குவாரியில் வேலை செய்தார்கள். இளையமகன் தேவராஜ் 18 வயதில் சென்றான். ஒரு நாள் குவாரி உரிமையாளர் அவனை ஜீப்பில் கொண்டு வந்து விட்டார். பின் சீட்டில் தேவராஜ் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். பரானில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பலனுமில்லாமல் அவன் விட்டான்” என்கிறார் ஜஷோதா பாய்.

கோட்டா அல்லது பாரனில் கட்டிட வேலைக்கு சென்றால் அதிக கூலி கிடைக்கும் என்றாலும் குவாரிகளில் ஒரு முறை வேலை செய்தவர்கள் கடனுக்காக மீண்டும் மீண்டும் போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள் கிராம மக்கள்.

“என் ஒரே மகன் மான்சிங் பல ஆண்டுகள் குவாரியில் வேலை செய்தான். ஒரு முறை கல்லை வெட்ட முயற்சிக்கும் போது இரண்டு கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. அவனுக்கு ரூ 40,000 கடன் இருந்தது. கிராமத்திற்கு திரும்பி வந்தும் குவாரி முதலாளி அவனை துரத்திக் கொண்டு வந்தார். விரல்கள் இல்லாமல் அவன் எப்படி வேலை செய்வான் என்று மன்றாடிய பிறகு அவனை விட்டு விட்டுப் போனார்கள்” என்கிறார். கோரே லால்.

தெற்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் கொத்தடிமை முறைக்கு எதிரான சட்டம் முதலில் இயற்றப்பட்டது. 1975-77 நெருக்கடி நிலையின் போது (சர்வாதிகார – மொ.பெ.) இந்திரா காந்தியின் 20 அம்ச பொருளாதாரத் திட்டத்தின் கீழ் விவசாய கூலிகளை கொத்தடிமை முறையில் வேலை வாங்குவதை ஒழிக்கும் சட்டம் போடப்பட்டது.

காந்தி அமைதி அறக்கட்டளை 1978ல் நடத்திய ஆய்வு ஒன்றில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் இருப்பதாக தெரிய வந்தது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பழங்குடி மக்கள், 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர். ஆனால் அதே ஆண்டு வெளியான தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாக கணக்கு சொன்னது.

அதன்பிறகு 34 ஆண்டுகளில் கொத்தடிமை தொழிலாளர்களின் கணக்கெடுப்பு தேசிய அளவில் செய்யப்படவில்லை. மாநில அரசுகள் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பிய தகவல்களின் படி ராஜஸ்தான் உட்பட 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்களே இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

“மக்களுக்கு அடிப்படை ஊதியமும் உணவு பாதுகாப்பும் உத்தரவாதம் செய்யப்பட்டு அவர்கள் கூட்டாக செயல்படும் போதுதான் கொத்தடிமை முறைக்கு முடிவு கட்ட முடியும்” என்கிறார் பொருளாதார வல்லுனர் ரவி ஸ்ரீவஸ்தவா. ‘அலஹபாதில், கொத்தடிமைகளாக குவாரிகளில் வேலை செய்து வந்த கோல் இன பழங்குடிகள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சுரங்கத் தொழிலுக்கான கூட்டு உரிமத்தை பெற்றார்கள்’ என்கிறார் அவர்.

“தேசிய அளவில் குறைந்த பட்ச கூலிக்கான நிர்ணயம் இல்லாத சூழலில் குறைந்த பட்ச கூலியை கணக்கிடுவது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சிரமமாக உள்ளது” என்கிறார் அவர். அனைத்து துறைகளிலும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக ரூ 115 என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் பரிந்துரை 2009லிருந்தே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கொத்தடிமை வாழ்வும், கடனும் சாகும்வரை தீராது என்பதை கோட்டாவிலுள்ள பிஞ்ச்னா கிராம மக்கள் புரிந்து வைத்துள்ளனர். “மணற்கல் குவாரியில் வேலை செய்யும் ஒருவர், கடனை அடைப்பததற்குள் இறக்க நேரிட்டால் குடும்பத்தில் இன்னொருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு வேலை செய்ய போக வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாத நிலையில்தான் கடன் முடிவுக்கு வரும்” என்கிறார் கோரே லால்.

நன்றி: தி இந்து

உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை!

8

பிரதிபா காவேரி என்ற சரக்கு கப்பல், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வீசிய நீலம் புயலில் சிக்கியது. கடுமையான புயல் காற்றில் சிக்கி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தரை தட்டியது. கப்பலில் பணியாற்றிய 35 ஊழியர்களில் 22 பேர் கப்பலில் இருந்த ஒரே உயிர்க்காப்புப் படகில் தப்பிக்க முயன்றனர். கடல் அலைகளின் கொந்தளிப்பிலும், சீற்றத்திலும் சிக்கிய படகு கவிழ்ந்து, 6 ஊழியர்கள் உயிர் இழந்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் 24 வயதான மரைன் இன்ஜினியர் நிரஞ்சன். வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு அடுத்துள்ள புளியமங்கலம், ஸ்ரீராம் நகரை சேர்ந்த விவசாயி கோதண்டபாணி, பாரதி தம்பதியரின் ஒரே மகன்.

மகனின் அகால மரணம், பொருளாதார நெருக்கடி, வறுமை, கடன் பிரச்சனை இவற்றில் சிக்கியிருந்த தம்பதியர் இருவரும் பிப்ரவரி 21 ஆம் தேதி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறுதி வாக்குமூலத்தை, 3 கடிதங்களில் எழுதி வைத்து உள்ளனர்.

நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் “உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை, நாங்கள் பெற்ற பிள்ளையை பறி கொடுத்து விட்டு துக்கத்தில், தனிமையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். தூக்கம் பறிபோய், என் மனைவி பாரதி நோய் வாய்ப்பட்டுள்ளார், அதற்கு வைத்தியம் பார்க்கக் கூட பணமில்லை. எங்களை பராமரிக்கவும் யாருமில்லை. சரியான உணவு கூட இல்லாமல் பிச்சைக்காரர்களாகி விட்டோம். பிள்ளைகளை இழந்த மற்ற 5 குடும்பங்களுக்காவது சேரவேண்டிய நிவாரணத் தொகை எங்கள் சாவின் மூலம் விரைவில் கிடைக்கவேண்டும். எங்கள் மகன் படிப்புக்கு கல்விக் கடன் கொடுக்க எந்த வங்கியும் முன்வராத நிலையில், பல லட்ச ரூபாய் கடன்பட்டுதான் அவனை படிக்கவைத்தோம், இன்று அக்கடன்கள் கட்டப்படாமல் உள்ளன. மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவாரின் உறவினர் சுனில் பவார் கப்பல் கம்பெனியின் உரிமையாளராக இருப்பதால், இன்று வரை போலீஸ் ஒருவரை கூட கைது செய்யாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது” என்று தங்கள் மனக்குமுறல்களை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ அதிகாரிக்கான இரண்டாம் கடிதத்தில், உடல் உறுப்புகளை தானமாக கொடுக்கும் விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார்கள். காலம் தாழ்ந்து தகவல் கிடைத்ததால் அவர்களது கடைசி விருப்பம் நிறைவேறாமல் போய் விட்டது.

போலீஸ் அதிகாரிக்கான மூன்றாவது கடிதத்தில், விபத்து நிகழ்ந்து கடலில் தத்தளித்தவர்களை மீட்க தீயணைப்பு படைகளையும், மாநில, மத்திய அரசு மீட்பு குழுவினர்களையும் கொண்டு மீட்பு பணிகளை உடனே துவங்காமல் இருந்ததாகவும் புயலுக்கு முன்னர் கப்பலில் ஆதரவற்று இருந்த ஊழியர்களை காப்பாற்ற, அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் போலீஸ் தங்கள் கடமையை செய்ய தவறியுள்ளது என்றும் ஆதங்கங்களை பதிவு செய்துள்ளார்கள்.

விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்கள், ‘கப்பல் உரிமையாளர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ 25 லட்சம் வழங்கவேண்டும்’ என்றும், ‘மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

‘பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர் , நஷ்ட ஈடாக ரூ 87.45 லட்சம் உயர்நீதி மன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்’ என்றும், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை நீதிமன்ற தலைமை பதிவாளர் வழங்க வேண்டும்’ என்றும் ‘பிரதிபா காவேரி கப்பல் சென்னையில் இருந்து வெளியே செல்ல தடை விதித்தும்’ டிசம்பர் மாதம் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

கப்பல் முதலாளிகளிடமிருந்து பணம் வருவது தாமதமானதால் இடைக்கால நஷ்ட ஈடு தொகையாக ரூ 30 லட்சம் தர உத்தரவு போடப்பட்டது. அதிலிருந்து முதல் தவணையாக தலா ரூ 5 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கப்பல் உரிமையாளர்கள் அத்தொகையை டிசம்பர் 3 அன்று உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

பணத்தை பெற நிரஞ்சனின் பெற்றோர், தலைமை பதிவாளரை மீண்டும் அணுகிய போது, ‘பணத்தை எந்த வீதத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரித்து தருவது என்று சந்தேகம் நீடிக்கிறது’ என்று கூறியுள்ளார். அதற்கான விளக்கம் டிசம்பர் 21ம் தேதி நீதிபதி வசந்தகுமாரால் வழங்கப்பட்டது. இருப்பினும் பணம் பெற்றோர்களுக்கு போய் சேரவில்லை.

‘நிரஞ்சனின் சட்டப்படியான வாரிசுகளாக அப்பா, அம்மா இருவரும் இருப்பதால் நஷ்டஈட்டை இருவரில் யாரிடம் கொடுப்பது’ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார், தலைமைப் பதிவாளர். நிரஞ்சனின் அம்மா பாரதி, பணத்தை அப்பா கோதண்டபாணியிடமே கொடுக்கக்கோரி ஒப்புதல் கடிதம் தந்துள்ளார்.

பிப்ரவரி 12ம் தேதி, நஷ்டஈட்டை கால தாமதம் செய்யாமல் விரைவில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘நிரஞ்சன் ஒரு வேளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்திருந்தால், அந்தப் பெண் எதிர்காலத்தில் வந்து தானும் நிரஞ்சனின் சட்டப்படியான வாரிசு என்று நஷ்டஈடு பணத்தில் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது’ என்ற திமிர்த்தனமான கேள்வியை அடுத்து எழுப்பியுள்ளார் தலைமைப் பதிவாளர் சொக்கலிங்கம்.

பிப்ரவரி 22 ஆம் தேதி, உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவமதிப்பு செய்தது குறித்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

‘நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் முதலிலிருந்து நடக்கும்’ என்று வழக்கறிஞர்களை கேட்டு தெரிந்துக் கொண்ட நிரஞ்சனின் பெற்றோர் விரக்தியின் உச்சத்தில் பிப்ரவரி 21ம் தேதி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு அவர்களது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

விபத்தில் 6 ஊழியர்கள் உயிரிழப்புக்கும் நிரஞ்சனின் பெற்றோர் தற்கொலைக்கும் காரணமான கொலைகாரர்கள் “பிரதிபா காவேரியின்” கப்பல் கம்பெனி முதலாளிகளான பவார் குடும்பத்தினர்தான்.

செப்டம்பர் 28 2012, அன்று கொல்கத்தாவிலிருந்து, கச்சா எண்ணெய் ஏற்றி சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்த பிரதிபா காவேரி, இரண்டு நாட்களுக்குப் பிறகு மும்பைக்கு பயணமாகியது.  அக்டோபர் 8 ஆம் தேதி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, சென்னை துறைமுகத்துக்கு வெளியில் நங்கூரமிட்டிருந்தது.

பிரதிபா காவேரி32 வருடங்கள் பழமையான இந்த கப்பலில் விபத்தின்போது 37 ஊழியர்கள் இருந்துள்ளனர். போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல், மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் நிலையில் இருந்துள்ளனர். கப்பலுக்கு தேவையான எரிபொருளும் தீர்ந்து விட்ட நிலைமையில், கப்பல் கம்பெனியிடமிருந்து தேவையான பொருட்கள் வந்து சேர்வதற்கு அக்டோபர் 31 வரை காத்துக் கொண்டிருந்தனர்.

கப்பலை புதுப்பிக்காமல், கடற் பயணத் தகுதிச்சான்றிதழ் கூட இல்லாத நிலையில் தான் இக்கப்பல் இயக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து நடந்துள்ளது. கப்பல் ஊழியர்களுக்கு பல மாதங்கள் சம்பளமும் கொடுக்கப்படவில்லை.

கேப்டன் கார்ல் பெர்னாண்டஸ் கப்பல் உரிமையாளர்களை தொடர்ந்து மின்னஞ்சல் மூலமும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமும் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை அனுப்புமாறு வலியுறுத்தி வந்திருக்கிறார்.

‘போதிய எரிபொருள் இல்லாமல் கப்பலை சென்னையிலிருந்து கிளப்ப முடியாத நிலை; ஆபத்து காலத்தில் பயன்படுத்த கைவசம் ஒரே ஒரு உயிர்க்காப்பு படகு; அதுவும் பழுதடைந்துள்ளது என்பதால் அனைவரின் உயிரும் ஆபத்தில் உள்ளது’ என்பதை மும்பாய், சென்னயிலுள்ள கிளை மேலாளர்களுக்கும், சென்னை துறைமுகத்திற்கும் தெரிவித்துள்ளார். ஆனால், இறுதிவரை உதவி வரவேயில்லை.

சரத்பவாரின் கட்சி அமைச்சர் வீட்டுத் திருமணத்திற்கு 22 ஹெலிபேடுகள் அமைத்து தின்று கொழுத்த பன்றிகளை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்தனை ஹெலிகாப்டர்களில் ஒன்று கூட நிராதரவாக விடப்பட்டிருந்த கப்பல் ஊழியர்களை மீட்க பயன்படவில்லை.

கப்பல் முதலாளிகளின் பாராமுகமும், அலட்சியமும்த்தான் இவர்கள் உயிர்களை காவு கொண்டது. இதை விபத்து என்பதை விட, திட்டமிட்ட கொலை என்றுதான் சொல்லவேண்டும்.

குற்றவாளிகளான கப்பல் முதலாளிகளை விட்டுவிட்டு, கப்பலையும் அதன் ஊழியர்களையும் சென்னை துறைமுகத்தில் நான்கு மாதமாக காவலில் வைத்துள்ளது நீதிமன்றம். கப்பல் கம்பெனியின் சென்னைக் கிளை மேலாளரும் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 304 (II)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர் தப்பித்த ஊழியர்களை சென்னை ஹோட்டலில் தங்கவைத்து, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் வைத்து விசாரித்து துன்புறுத்தியுள்ளனர். கப்பலில் காவலில் வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகள், மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல், உணவு, குடிநீர் பற்றகுறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கப்பல் முதலாளிகளின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படாமல் தலைமை பதிவாளர் மூலம் முட்டுக் கட்டை போடவும் உதவியிருக்கிறது.

ஊழியர்களை வதைத்து, அவர்கள் சாவிற்கு காரணமான பவார் குடும்பத்தினரின் கப்பல் கம்பெனிக்கு 9 கப்பல்கள் உள்ளன, இப்போது அவை சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் பல்வேறு இடங்களில் ஊழியர்களுடன் சிறைவைக்கப்பட்டுள்ளன.

கப்பல் பெயர் காவலில் வைக்கப்படிருக்கம் இடம்
பிரதிபா கொய்னா பஹரைன்
பிரதிபா சந்திரபாகா சீனா கப்பல் பட்டறை
பிரதிபா நர்மதா சீனா கப்பல் பட்டறை
பிரதிபா காவேரி சென்னை துறைமுகம்
பிரதிபா தப்பி மும்பை கடற்கரை
பிரதிபா இந்திரயாணி மும்பை கடற்கரை
பிரதிபா பீமா கோவா துறைமுகம்
பிரதிபா வர்ணா சென்னை துறைமுகம்
பிரதிபா மீரா வைஷாக் துறைமுகம்

151 ஊழியர்கள் பராமரிப்பு இல்லாமல் கப்பல்களில் கஷ்டப்படுகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக, குடும்பத்துடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் பிரதிபா ஷிப்பிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் பவார். இன்று வரை அவரை சட்டத்தாலும் போலீஸாலும் எதுவும் செய்ய முடிவில்லை.

நாட்டில் அரசியல் அதிகாரத்தையும், வியாபாரத்தையும் இணைத்து தரகு வேலை செய்யும் பெரிய மனிதர்கள், தமது லாபம் ஒன்றே குறியாக மனித உயிர்களை பலி கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடுதான் பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்களின் நிலை.

கோதண்டபாணி, பாரதி என்ற இரண்டு பெற்றோரின் தற்கொலை இந்த சமூக அமைப்பை பார்த்து காறி உமிழ்கிறது. பச்சையான ஒரு படுகொலைக்கு நியாயம் கேட்டும், நீதிமன்றத்தில் போராடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை எனும் அவலமே அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது. அந்த வகையில் கப்பல் முதலாளிகளை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் கூட தண்டிக்கவேண்டும். அப்படி தண்டிக்க முடியாது என்பதால்தான் அந்த முதியவர்கள் தங்கள் உயிரை விலையாக கொடுத்திருக்கிறார்கள். அப்படியாவது மற்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்கட்டுமே என்று அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். உயிரை விட்டவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்த நாட்டு அதிகார அமைப்புகளுக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று.

மேலும் படிக்க
Pratibha Cauvery suicide note
Madras HC orders arrest of MV Prathibha Cauvery
Pratibha Shipping
Ship owners deceased sailors vessel
Pratibha Cauvery – 2 of shipping agency arrested
Sailors stuck on two ships to be evacuated on Monday

அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

204

விசுவ ஹிந்து பரிசத் மற்றும் அதனுடைய கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் இணைந்து திருச்சியில் ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு ஒன்றை  ஞாயிற்றுக் கிழமை (03/03/2013) நடத்தியுள்ளன. இம்மாநாட்டில் இதுவரை ‘காமெராவில் சிக்காத’ சாமியார்களும், ‘லெட்டர் பேடு’ கட்சி ஒன்றின் ஏகபோக உரிமையாளரும் அரசியல் ரியல் எஸ்டேட் புரோக்கரும் அக்கட்சியின் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா, எனவே “ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தீயாய் வேலை பாக்கணும் கொமாரு” என்பதே மாநாட்டின் நோக்கம் போல.

மேற்படி ‘தத்துவ’த்தின் அடிப்படையில் உரையாற்றிய வி.எச்.பியின் அகில உலக ஆலோசகர் வேதாந்தம், ‘சாதி அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்’ என்று பேசியுள்ளார். மேலும், “அரசியல்வாதிகள் மக்களுக்கு கடமையைச் சொல்லித் தருவதில்லை. மாறாக போராட சொல்லித் தந்திருக்கிறார்கள். என்றைக்கு கடமையைச் சொல்லித் தருகிறார்களோ அப்போது தான் நாடு சிறப்பாக இருக்கும்” என்றும் உரையாற்றியுள்ளார்.

தண்ணீரில் பூசாரிகள்

பிரம்மாவின் தலையிலிருந்து பார்ப்பானும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றினர் என்றும் சாதிவாரியான தண்டனைச் சட்ட தொகுப்பான மனுஸ்மிருதியை எழுதிய மனுவும், ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்றும் ‘வர்ணக் கலப்பு ஏற்படுவது அதர்மம் தலையெடுப்பதாகும்’ என்றும் கீதோபதேசம் சொன்ன கிருஷ்ணனும், சூத்திரன் தவம் செய்யலாகாது என்று சம்பூகனின் தலையைக் கொய்த ராமனும் கேடு கெட்ட அரசியல்வாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை; வேதாந்தமே சொல்கிறார். இந்த ‘அரசியல்வாதிகள்’ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்? இந்த ‘அரசியல் தலைவர்கள்’ எந்தக் கட்சியினரால் வழிபடப்படுகிறார்கள்?

அக்கிரகாரத்தில் அய்யரும் ஊருக்கு வெளியே சேரியில் பறையரும் வாழ வேண்டும் என்று நாடெங்கும் குறுக்கும் நெடுக்குமாக எல்லைக் கோடுகள் போட்டது அரசியல்வாதிகளென்றால் அவர்கள் தி.மு.கவா அ.தி.மு.கவா அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களென்று வேதாந்தம் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காற்றின் திசையைக் கூட துல்லியமாக கணக்கிட்டு தலித்துகளைத் தீண்டிய காற்று தம்மைத் தீண்டலாகாது எனும் சாதி அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்த ‘கருணாநிதி’ யார் என்று வேதாந்தம் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களில் சைவப் பிள்ளைகளே ஆதீனமாய் இருக்க வேண்டுமென்றும், காஞ்சி (‘கும்மோண’) மடத்துக்கு ஸமர்த்தப் பார்பனர்களே தலைமையேற்க வேண்டுமென்றும் மரபுகளை ஏற்படுத்திய அரசியல்வாதியின் பெயர் என்ன ஜான் பாண்டியனா? ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோர் கருவறைக்குள் நுழையக் கூடாதென்றும், கருவறைக்குள் நுழையும் ‘புனிதமும் சுத்தபத்தமும்’ காஞ்சீபுரம் தேவநாதன் போன்ற தூய பார்ப்பனர்களுக்கே உரித்தானதென்றும் விதிகளை உருவாக்கிய அரசியல்வாதியின் பெயர் என்ன திருமாவளவனா? வேதாந்தம் கொஞ்சம் விரிவாய்ப் பேசியிருக்கலாம்.

ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாய்ச் செயல்பட வேண்டுமென்று வேதாந்தம் விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் சங்க மாணவர்கள் ஆகமவிதிப்படி அமைந்த கோயில்களில் பணியற்றி ஒற்றுமையாகச் செயல்பட விடாமல் அழகிரியா தடுக்கிறார்? தமிழை நீச பாஷை என்று சொல்லி கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் பெயர் தீட்சிதர்களா இல்லை தீப்பொறி ஆறுமுகமா? வேதாந்தம் குழப்புகிறது. ஆனால், வேதாந்தத்தின் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் தெளிவாகவே இருக்கிறார்கள். ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துகளைக் கொன்று போட்டு தலித்துகளை இந்த ஹிந்து ஜோதியில் எரித்து பொசுக்கும் அரசியல்வாதிகள் விசுவ இந்து பரிஷத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவர்கள்.

வேதாந்தம் சொன்னபடி ஹிந்துக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும்  இழிந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவர்கள் பாரதம் கண்ட மாபெரும் ரிஷிகளும், பார்ப்பன கடவுளர்களும், அவர்களின் இன்றைய அவதாரங்களான இந்துத்துவ இயக்கத்தினரும் தான். அதனால் தான் இந்த நிலைமைகளுக்குக் காரணமானவர்களின் ரிஷிமூலத்தை வேதாந்தம் கிண்டவுமில்லை,  அந்தப் பழம் பெரும் ‘அரசியல் கட்சியான’ பார்ப்பன இந்து மதத்தின் பெயரைக் கிளரவுமில்லை. உண்மையில் பார்ப்பனிய இலக்கியங்கள் கூறும் ரிஷிமூலத்தின் கதைகள் ஷகிலா படங்களோடு போட்டி போடும் அருகதை கொண்டவை! அதனால்தான் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று பழமொழியே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஹிந்துக்கள் கடமையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; பலன்களை நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா அறுவடை செய்து கொள்ளும் என்கிறார் வேதாந்தம். எது அந்தக் கடமை?

மலமள்ளுவதும், சாவுக்குச் சேதி சொல்வதும், மாட்டுத் தோல் உரிப்பதும், செருப்பு தைப்பதும், முடிவெட்டுவதும்,  சங்கராச்சாரியாவதும் வேதாந்தத்தின் பார்வையில் சரி நிகரான ‘கடமைகள்’. எனவே, ஜனநாயகம், உரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல் பஞ்சமன் மலமள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்; பார்ப்பனன் சங்கராச்சாரியாகவோ, கலெக்டராகவோ இல்லை என்.ஆர்.ஐயாகவோ வேண்டும்.  அதாவது அவாள் பல்லக்கில் உலா வருவதும், நாம் அந்தப் பல்லக்கை தூக்கி சுமப்பதும்- இதற்குப் பெயர் தான் ‘கடமையாம்’. இதை மறந்து பல்லாக்கில் ஏறும் உரிமையை பிறர் கேட்க ஆரம்பித்தது தான் நாடு சீரழிந்து போனதற்குக் காரணம் என்கிறார் வேதாந்தம்.

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளில் இருக்கும் சொரணை கெட்டவர்கள் அவ்வமைப்புகளில் சேர்ந்து ‘கடமையை’ ஆற்றிக் கொண்டிருப்பது போல் மற்றவர்களும் செய்ய மறுப்பதால் தான், தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்து விட்டது  என்கிறார் வேதாந்தம்.

கூட்டத்தில் பேசிய அக்கீஸ்டு ஜெயேந்திரன், ‘இந்துக்கள் ஒன்றிணைந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விடலாம்’ என்று பேசியுள்ளார். ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம்தான் பொறுப்புள்ள அரசு ஏற்படும்’ என்றும் பேசியுள்ளார். அவரவர்க்கு அவரவர் கவலை; சங்கர ராமன் கொலை வழக்கு வேறு மார்ச் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருக்கும் அரசோ, நீதிபதியோ பொறுப்பற்றவர்களாக இருந்து தொலைத்தால்?

சரி இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது ஓட்டுப் போடுவதும் ராமர் கோவில் கட்டுவதும்தானா? அக்கிரகாரத்து ஐயர் பெண்ணை சேரியைச் சேர்ந்த கட்டிங்காளையான ஒரு அருந்ததியர் இளைஞனுக்கும், திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட ‘இந்துக்கள்’ ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது? இந்த தடுப்பை தண்டனைகள் மூலம் கட்டிக்காக்கும் அரசியல்வாதிகள் யார்?

போகட்டும், வேதாந்தம் சொல்லியிருப்பதில் முக்கியமானது என்னவென்றால் ‘அரசியல்வாதிகள் கடமையை சொல்லித் தரவில்லை, போராட மட்டும் சொல்லி தந்திருக்கிறார்கள்’ என்பதுதான். இதைப் புரிந்து கொள்வதில் மறைபொருள் ஏதுமில்லை. அதாவது நாட்டில் உள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு பல்வேறு பிரிவு மக்களும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம்தான் வேதாந்தத்திற்கு எரிச்சலைத் தருகிறது. மக்கள் தமது உரிமைகளுக்கு போராடாமல் பார்ப்பனியம் வகுத்தளித்திருக்கும் கடமையை மட்டும் செய்து வந்தால் நாட்டில் தர்மம் தழைத்தோங்கும் என்பது பார்ப்பனிய வேதாந்தம் தொட்டு இந்துத்துவ வேதாந்தம் வரை குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள். எனில் இந்த தருமத்தை குழி தோண்டி புதைப்பதில் நாமும் கொலவெறியோடு இருக்கிறோம் என்பதை சங்கபரிவார வானரங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!

1

1. பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளூர் ரவுடியை எதிர்த்து நடத்தும் போராட்டம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டத்தில் உள்ள மணல் பகுதி கிராமம் காவாக்காடு. இக்காவாக்காடு கிராம மக்கள், காவாக்காடு பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேடி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக காடுகளுக்கு சென்றுவரவும், மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று வரவும், விறகு பொறுக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பொதுவழிப்பாதையை தடுத்து போலீஸ் துணையுடன் அராஜகம் செய்து வரும் முன்னாள் சாராயவியாபாரியும், இன்னாள் நில மோசடித் திருடனுமான செயண்ணன் மகன் குமாரசாமியை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 11ம் தேதி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களுடன் செஞ்சட்டையுடன், செங்கொடிகள் விண்ணில் பறக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தவுடன் ”நாம் வருவோம் என்று காத்துக் கொண்டிருந்த போலிசு தோழர்களையும், மக்களையும் கைது என்று அறிவித்து, ‘அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை’ என்று கூறி பேனரை பிடுங்க முயற்சித்தனர்.

தோழர்களும், மக்களும் ”அரெஸ்ட்ன்னு சொல்லிட்டிங்கள்ளே வர்றோம் போங்க, பயந்து ஓடிட மாட்டோம் பேனரை விட்டு கைய எடுங்க” என்று போராடி அதனை முறியடித்தனர். பெரும்பாலையில் 200-க்கும் மேற்பட்ட மக்களை இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அனைவரும் ஆதரித்து உற்சாகமூட்டினர்.

தோழர்கள் போலிஸ் நிலையம் செல்லும்வரை விண்ணதிர முழக்கமிட்டு சாராய ரவுடி, நில மோசடித் திருடனையும், அதற்கு துணையாக இருக்கும் மாமூல் போலிசையும் மக்கள் மத்தியில் காறி உமிழும்படி அம்பலப்படுத்தி முழக்கமிட்டனர். இது அப்பகுதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முழக்கமிட்டுக் கொண்டு செல்லும்போது மீண்டும் வந்து பேனரை பிடுங்கி மடிக்க முயற்சித்தது போலிசு. தோழர்கள் மீண்டும் அதனை முறியடிக்க வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவை நோக்கிப் போராட்டம் போனதைப் பார்த்த பொதுமக்களுக்கு உற்சாகமாகவும், போராட்ட உணர்வூட்டுவதாகவும் அமைந்தது. போலிசுக்கோ மூக்கறுபட்டு போனது. தோழர்களுக்கு இப்போராட்டம் புதுரத்தம் பாய்ச்சியது போல் உற்சாகமாக இருந்தது.

பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலிசு 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்து தனிநபர் ஜாமீனில் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்த வழித்தட உரிமை சம்பந்தமாக மனித உரிமை பாதுகாப்பு மையம் உதவியுடன் வி.வி.மு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதில் மாவட்ட ஆட்சியரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். 14.2.13 அன்று காவாக்காடு இட்டேரி வழித்தடத்தை பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் என அரசு அதிகாரிகளின் பட்டாளமே வந்திறங்கியது.

வழித்தடத்தை பார்வையிட்ட அரசு படை ”வழித்தடம் பயன்பாட்டிலும், பட்டாவிலும் இருக்கிறது, அதனால் பட்டாவில் 13 அடி வழித்தடம் உள்ளது. நாங்கள் தேவைப்பட்டால் 15 அடிகூட கேட்போம்” என்றும் இரண்டு நாட்களுக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பொதுவழித்தடத்தை மறைக்க ஜேசிபி இயத்திரம் மூலம் அரசு நிலத்தில் மண் அள்ளியதிற்காக ரூ 1 லட்சம் அபராதத்தை குமாரசாமி அரசுக்கு கட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். அரசுப்படையை அடிப்படை வசதிகளற்ற கிராமத்திற்கு வரவழைத்தது வி.வி.மு-வின் போர்க்குண மிக்க போராட்டம்தான் என்றால் அது மிகையல்ல.

அரசு அதிகாரிகளின் உத்திரவை அமல்படுத்தச் சென்ற சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரிகளை குமாரசாமி ரவுடி கும்பல் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளது. போலிசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிப் பேர்வழி குமாரசாமியை கைது செய்து சிறையிலடைக்காமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி மக்களுக்கு சேவை செய்வதை விட மாமுல் லஞ்சப் பணத்திற்கு விசுவாசமாக தங்களது சேவையை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றது. இதில் வெற்றியை ஈட்டுவதற்கு, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

தகவல்: செய்தியாளர், புதிய ஜனநாயகம், தரும்புரி.

2. சிவகங்கை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சப் பெருச்சாளிகள்!  ரைட்டர் ராஜகோபாலின் ‘ராங்’கான வேலைகள்!

  • தமிழக அரசே! போலீஸ் துறையே!
  • கவனிச்சிட்டுப் போங்க! செலவுக்குக் கொடுங்க! என்ற பிச்சையெடுப்பது போல வருகின்ற அனைவரிடமும் கூச்சப்படாமல் கைநீட்டி லஞ்சம் வாங்குகிற கேவலமான வேலையை ‘டூட்டி’யாகப் பார்க்கும் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ராஜகோபால், மற்றும் போலீஸ் புரோக்கர் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடு!
  • உழைக்கும் மக்களே!
  • அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் பொறுக்கித் தின்னும் மானங்கெட்ட லஞ்சப் பெருச்சாளிகளைக் கண்ட இடத்தில் அடிக்க அணி திரள்வோம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 94431 75256, 99522 02916

130221-sivagangai

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

99

டந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.

“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.

2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.

அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருக்கிறது.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.

2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.

சித்திக்கி
படம் : தி இந்து நாளிதழ்

இதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர் குறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.

2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.

‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.

“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.

சித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.

சித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.

“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.

போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

  1. அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல்  குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
  2. மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.
    இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
  3. அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  4. செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.
    2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
  5. பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
  6. ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
  7. இந்து பயங்கரவாதம்ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.
    இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
  8. 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!

மேலும்  படிக்க
Hyderabad blasts activists question presumptive probe
I hope nobody goes through what I did
Media, police should be more sensitive towards dalits and muslims – Siddiqui
Hindu terror – the mirror explodes

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

32

ஆணாதிக்கம்“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று

பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!

பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.

என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.

அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!

“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?

குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!

பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்
குத்துப் பாடல்கள்…

சின்னத் திரைகளில்
எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…

இலவச லேப்-டாப்பில்
விரியும் பாலியல் வலைகள்…

என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!

இத்தனைக்கும் காவலிருக்கும்
இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ
பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்
ஆணுறுப்புகளால் ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!

புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்
மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

– துரை. சண்முகம்

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
அங்கு அப்போது பிடித்துக் கொள்ள வேண்டும்.

மனிதர் உருவாக்கிய வறட்சி – புகைப்படங்கள் : பி சாய்நாத்

ண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

“கனவை நனவாக்கும் அபார்ட்மென்டுகள்! சுத்தமான ராஜ ரத்தம் ஓடுபவர்களின் சுகமான வாழ்க்கைக்கு மகுடம் வைப்பதற்கான அபார்ட்மென்டுகள்!” இது ஒரு விளம்பரம். உண்மைதான்! ராஜ பரம்பரையினருக்கு எதுவுமே பிரமாண்டமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அபார்ட்மென்டிலும் தனித்தனி நீச்சல் குளம் உண்டு. “உயர் ஆடம்பர, மிகப்பெரிய, சிறப்பு வடிவமைப்பிலான” அபார்ட்மென்டுகள் அல்லவா அவை! “ராஜ வாழ்வுக்கு” தகுதியானவை அவை.

அந்த கட்டிட நிறுவனம் தனது “முதல் பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு” என்று விளம்பரப்படுத்திய தனி வீடுகளையும் விற்பனைக்கு வைத்திருந்தது. 9,000 முதல் 22,000 சதுர அடி அளவில் கட்டப்பட்ட அந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தனி நீச்சல் குளம் உண்டு.

இரண்டு மாடி வீடுகளுக்கான திட்டங்களிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் மொட்டை மாடியில் நீச்சல் குளங்கள் உண்டு.

இவ்வளவும் பூனா நகரில் மட்டும். இவை அனைத்திலும் இன்னும் நிறைய தண்ணீர் தேவைப்படும் மற்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி சிறு அளவிலானதுதான். ஆனால் பெருமைப்பட வேண்டிய அளவில். இந்தப் போக்கு இன்னும் தொடரும் என்று அறிகுறிகள் தென்படுகின்றன.

இதெல்லாம் நடப்பது கடந்த 40 ஆண்டுகளில் மோசமான பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள மாநிலத்தில்; முதலமைச்சர் பிருத்விராஜ் சவுகானின் கருத்துப்படி இது வரை ஏற்பட்ட பஞ்சங்களிலேயே மிக மோசமான பஞ்சம் இது; ஆயிரக்கணக்கான கிராமங்கள் லாரிகளில் வரும் தண்ணீரை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; அதிர்ஷ்டமிருந்தால் தண்ணீர் லாரி தினசரி வரும், இல்லையென்றால் வாரத்துக்கு ஓரிரு முறை வந்து சேரும்.

ஆனால், நீர் நிரம்பி வழியும் நீச்சல் குளங்களுக்கும் வற்றிக் கொண்டிருக்கும் ஏரிகளுக்கும் தொடர்பே இல்லாதது போல தோன்றுகிறது. இதைப் பற்றி யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை. டஜன் கணக்கிலான நீர் விளையாட்டு பூங்காக்கள் கட்டி மாநிலமே கொண்டாடிக் கொண்டிருந்த போது அதைப் பற்றி யாரும் பேசாதது போல. கிரேட்டர் மும்பை பகுதியில் மட்டும் அத்தகைய 20 நீர் விளையாட்டு பூங்காக்கள் இருந்தன.

பெரும் அளவு மடை மாற்றம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரக்தி பரவி வருகிறது. 7,000க்கும் அதிகமான கிராமங்கள் வறட்சியால் அல்லது தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த எண்ணிக்கை இது. மோசமான நிலையில் இருக்கும் இன்னும் பல ஆயிரக்கணக்கான கிராமங்கள் வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படவில்லை. வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்ட கிராமங்களில் சிலவற்றுக்கு சிறிதளவு உதவி கிடைக்கிறது. அரசு தண்ணீர் லாரிகளை அந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆயிரக்கணக்கான மற்ற கிராமங்கள் தனியார் லாரிகளிடம் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றன.

சுமார் 5 லட்சம் ஆடு, மாடுகள் கால்நடை முகாம்களை நம்பி உள்ளன. ஆடு, மாடுகளை கிடைத்த விலைக்கு விற்று விடுவது மும்முரமாக நடக்கிறது. பல அணைகளில் தண்ணீர் மட்டம் 15 சதவீதத்தை விட குறைந்துள்ளது. சிலவற்றில் அடிமட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறது. 1972ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை விட இப்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்திற்கு செயற்கை காரணங்கள் அதிகம்.

கடந்த 15 ஆண்டுகளில் தொழில் துறை பயன்பாடுகளுக்கும் உயர்தட்டு வாழ்க்கை முறை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெருமளவிலான தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அத்தகைய திட்டங்களுக்கு எதிராக இரத்தம் சிந்திய போராட்டங்கள் நடந்தன. 2011ம் ஆண்டு மாவல் கிராமத்தில் ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர். பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாடுக்கு தண்ணீர் கொண்டு போகும் குழாய் பதிப்பதற்காக அவர்களது நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். அதனால் ஏற்படப் போகும் தண்ணீர் இழப்பின் பரிமாணம் தெரிந்தவுடன் இன்னும் ஆயிரக்கணக்கான பேர் போராட்டத்தில் குதித்தனர். அரசு 1,200 பேர் மீது “கொலை முயற்சி” வழக்கு பதிவு செய்ததது; கலவரம் செய்தததாக குற்றச்சாட்டை சுமத்தியது.

துணை முதலமைச்சர் அஜித் பவார் நீர்ப்பாசன திட்டங்களின் மீது தொழில் துறையின் ஆதிக்கத்தை அதிகரிக்க எல்லா முயற்சிகளையும் செய்தார். ஏற்கனவே பிற்போக்கான கூறுகளை கொண்டிருந்த மகாராஷ்டிரா நீர் வள ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை இன்னும் மோசமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தார். அவரது திட்டத்தில் இருந்த ஒரு புதிய விதிப்படி தண்ணீர் வினியோக கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பும் தடை செய்யப்படும்.

மேல் தட்டு ஆடம்பர வாழ்க்கை முறைக்கும் கேளிக்கைகளுக்கும் தண்ணீர் மடை மாற்றப்படுவது புதிதில்லை. 2005ம் ஆண்டு நாக்பூர் (ஊரக) மாவட்டத்தில் மிகப்பெரிய “விளையாட்டு & உணவு கிராமம் தண்ணீர்&கேளிக்கை பூங்கா” ஒன்று முளைத்தது. மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் அது கட்டப்பட்டது. அந்த கேளிக்கை “கிராமத்தில்” 18 வகையான நீர் சறுக்கு விளையாட்டுகள் இருந்தன; பனிக்கட்டி வளையத்தால் சூழப்பட்ட “இந்தியாவின் முதல் பனி நிலையம்” இருந்தது. 47 டிகிரி வெப்பத்தில் பனியையும் பனிக்கட்டியையும் பராமரிப்பது எளிதான வேலை அல்ல. 15 மணி நேர மின் வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த பகுதியில் அது பெருமளவிலான மின்சாரத்தை விழுங்கியது; கூடவே பெருமளவிலான தண்ணீரையும் கபளீகரம் செய்தது.

இந்த மாநிலத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளில் பல புதிய கோல்ப் மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது 22 கோல்ப் மைதானங்கள் உள்ளன. இன்னும் புதிதாக பல  கட்டப்பட்டு வருகின்றன. கோல்ப் மைதானங்கள் பெரும் அளவிலான நீரை பயன்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இது விவசாயிகளுடன் மோதல்களை உருவாக்கியிருக்கிறது. கோல்ப் மைதானங்கள் பெருமளவு பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் அவை தண்ணீரில் கசிந்து போய் நீர் வளங்களை நச்சுப்படுத்துகின்றன.

லவாசாவும் விவசாயமும்

“சுதந்திர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்று அழைக்கப்பட்ட லவாசா திட்டம் போன்றவற்றுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை பார்த்த மாநிலம் இது. வறட்சிக் காலத்தில் திருமண விழாவுக்காக ஆடம்பரமாக செலவழித்ததற்காக அவரது கட்சியின் அமைச்சரையே கடுமையாக சாடியதற்காக கைத்தட்டல் வாங்கியவர் சரத் பவார். ஆனால் மத்திய விவசாய அமைச்சராக இருக்கும் அவர் லவாசா திட்டத்தை எப்போதும் உறுதியாக ஆதரித்து வருகிறார். 0.87 டி.எம்.சி. (அதாவது 2,460 கோடி லிட்டர் தண்ணீர்) நீரை தேக்குதவற்கு அனுமதி வைத்திருப்பதாக அந்தத் திட்டத்தின் இணைய தளத்தில், சிறிது காலத்துக்கு முன்பு  குறிப்பிட்டிருந்தது.

  • இவ்வளவு அதிக பணம் செலவழித்து இவ்வளவு குறைவான பாசனை வசதிகளை எந்த ஒரு மாநிலமும் உருவாக்கியதில்லை. 2011-12க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பாசன வசதி செய்யப்பட்ட நிலத்தின் அளவு 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. மாநிலத்தின் விவசாய நிலங்களில் 18 சதவீதத்துக்கும் குறைவானவற்றுக்குத்தான் பாசன வசதி உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து பல கோடீஸ்வரர்களையும் மிகக் குறைவான பாசன வசதியையும் உருவாக்கிய பிறகுதான் இந்த நிலை. விவசாயம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்தான் தொழில்துறைக்கு பெருமளவு தண்ணீர் திருப்பி விடப்படுவது நடந்தது. (பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2011-12ல் உணவு தானியங்களின் உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது)
  • உணவுப் பயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மகாராஷ்டிராவின் கரும்பு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய அல்லது தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் நடைபெறுகிறது. இப்போதைய வறட்சியை காரணம் காட்டி மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு பிழிவதை நிறுத்தும்படி ஒரு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அங்கு உள்ள சர்க்கரை ஆலைகள் ஒரு நாளைக்கு மொத்தம் 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றன. சர்க்கரை முதலாளிகளின் செல்வாக்கை வைத்து பார்க்கும் போது  கரும்பு பிழிவது நிறுத்தப்படுவதை விட அந்த ஆட்சியர் வேலை நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் தெரிகின்றன.ஒரு ஏக்கர் கரும்பு விளைவிக்க தேவைப்படும் தண்ணீரை வைத்து 10-12 ஏக்கர்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவிக்கலாம். 6 சதவீதம் விவசாய நிலங்களில் மட்டும் பயிராகும் கரும்பு விவசாயத்துக்கு மகாராஷ்டிராவின் பாதிக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கரும்புக்கு, “180 ஏக்கர் இஞ்ச் தண்ணீர்” தேவைப்படுகிறது. அதாவது ஒரு ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர். 1.8 கோடி லிட்டர் தண்ணீரை வைத்து 3,000 கிராமத்து குடும்பங்களின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவு செய்யலாம். (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் என்ற மிதமான கணக்கீட்டின்படி).
  • கரும்பு விவசாயம் நடக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டு தோறும் தாழ்ந்து கொண்டே போகிறது. இந்த அனுபவத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு ரோஜாப் பூ உற்பத்தியை ஊக்குவிக்காமல் இருக்கவில்லை. இப்போது மிகச் சிறிய அளவில் அது நடந்தாலும் போகப் போக அதிகமாவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ரோஜாப் பூவுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் “212 ஏக்கர் இஞ்சு தண்ணீர்”, அதாவது ஒரு ஏக்கருக்கு 2.12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை.பார்க்கப் போனால், சிறிய அளவில் நடக்கும் ரோஜாப் பூ உற்பத்தி மாநிலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஏற்றுமதி இந்த ஆண்டு 15-25 சதவீதம் அதிகரித்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நீளமான குளிர் காலம், வேலன்டைன்ஸ் டே எல்லாம் சேர்ந்து ரோஜா வளர்ப்பவர்களை வளப்படுத்தியிருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் அரசு கொண்டு வந்துள்ள ஒரே ஒழுங்குமுறை சட்டம் தண்ணீரை இன்னும் அதிகமாக தனியார் மயமாக்க வழி வகுத்திருக்கிறது. இந்த இயற்கை வளத்தின் மீது சமூகத்தின் அதிகாரத்தை விரைவில் ஒழித்து விட வழி வகுத்திருக்கிறது. இந்த வளம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது சந்திக்கும் நெருக்கடியை உருவாக்குவதற்கு மகாராஷ்டிரா கடுமையாக உழைத்திருக்கிறது.

வறண்ட விரக்திப் பெருங்கடல்களுக்கு மத்தியில் தனியார் நீச்சல் குளங்கள் மிதக்கின்றன. பணக்காரர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையான மற்றவர்களின் நம்பிக்கைகள் நாளுக்கு நாள் காற்றில் பறக்கின்றன.

நன்றி: தி இந்து

கட்டுரை ஆங்கிலத்தில்
How the other half dries