ஈழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!
என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் 15.03.2012 அன்று திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது. அப்பகுதி சாலையும் மறிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது. அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த முற்றுகை மற்றும் சாலை மறியல் பின் காவல் துறையின் கைது நடவடிக்கையுடன் முடிந்தது. தற்போது 14 பெண்கள் 5 குழந்தைகள் உள்ளிட்டு 35 பேர் கைதாகியுள்ளனர். இங்கு சாலை மறியலின் போது இந்தியக் குடிமகன் ஒருவன் ‘முற்றுகை என்றால் அஞ்சலகத்தை மட்டும் செய்ய வேண்டியதுதானே, சாலையை ஏன் மறிக்கிறீர்கள்?’ என்று சண்டைக்கு வந்துள்ளார். போலீசும் ஆமாம், ‘கேளுங்கள்’ என்று கொம்பு சீவி விட்டது. எனினும் இதில் தோழர்கள் நமது நியாயத்தை உணர்த்தி விவாதித்தனர். மேற் கொண்டு எதிர்க்க அடிப்படையில்லாத நிலையில், ‘எங்கள் வேலை பாதிக்கிறதே’ என்று தனது சுயநலத்தை முன்வைத்து சிறுமைப்பட்டுப் போனார்.
இதே நேரத்தில் ம.க.இ.க – செயலர் தோழர் சீனிவாசன் தலைமையில் 6 பெண்கள் 7 ஆண்கள் மாவட்ட காங்கிரசு அலுவலகத்தின் முன் இராஜபக்சே மற்றும் மன்மோகன் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் காவல் துறை சுற்றி வளைத்து கைது செய்தது. கைது செய்த போது தோழர்கள் ஏற்க மறுத்து போராடியதால் தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. இங்கும் சுமார் அரை மணி நேரம் சாலைகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது. எனினும் இங்கு மக்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை அங்கீகரித்து ஆதரித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் நடத்திய எழுச்சிகரமான முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் இரயில் மறியலை முன்வைத்து மாவட்ட ஆட்சியரும் காவல் துறை அதிகாரிகளும் அக்கல்லூரி முதல்வரை கண்டித்து எச்சரித்த தகவல் கிடைத்து கொதித்தெழுந்த கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ‘தங்கள் கல்லூரி முதல்வரை கண்டித்த மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளீதரன் மன்னிப்பு கேட்ட வேண்டும்’, ‘தமிழகத்தில் ஆட்சியராக இருந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வை மதிக்காத மாவட்ட ஆட்சியரை கண்டிப்பது’ என்ற வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இவ்வூர்வலத்தில் ராஜபக்சேவின் கொடும்பாவியை பாடையில் வைத்து முன்னால் பறையடித்துக் கொண்டு சவ ஊர்வலமாகவும் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் உள்ளே வராதபடி வெளி கேட்டை சாத்தி அதிகமான காவலர்கள் உள்ளே செல்ல முடியாதபடி தடுப்பரண்களாக நின்றனர்.
மாணவர்கள் ஆட்சியரை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அனுமதி பெற்று வருகிறோம் என்று சொன்ன அலுவலர்கள் வரவேயில்லை ஒருமணி நேரத்திற்க்கு மேலாக மாணவர்கள் வெயிலில் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டது. அப்போது ஒரு மாணவி 3 மாணவிகள் மயக்கமடைந்தனர் அதில் ஒரு மாணவி உடல் மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு ஆட்சியர் அலுவலகத்தினுள் அனைத்து மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் ஜெயஸ்ரீயிடம் நமது போராட்டத்தின் நிலைபாட்டை பு.மா.இ.மு தோழர்.சங்கத்தமிழன் விளக்கினார். உள்ளே மாணவர்களை தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இதற்கு பதில் அளிக்கையில் ‘தங்கள் கோரிக்கை சரியானதுதான். நானும் ஒரு தமிழச்சிதான், எனக்கும் பற்று உள்ளது’ எனவும் கூடுதலாக ‘தமிழக அரசு உங்களது போராட்டத்தை ஒடுக்காது ஆகவே யாரும் வன்முறையில் இறங்காமல் காந்தி வழியில் அகிம்சையாக போராடுங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். தங்களது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி அனைவரும் கையெழுத்து போட்டு தாருங்கள் அதை நான் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என தன் பாணியில் தந்திரமாக பேசி மாணவர்களை அனுப்பி வைத்தார்.
வெளியே வந்த மாணவர்களை, ‘நம் போராட்டங்களை இனி நாம் தொடர்ந்து நடத்தலாம். நம்மை அரசு தடுக்கக்கூடாது என்பதற்குத்தான் இம்முற்றுகை. போராட்டத் தீ பரவட்டும்! அடுத்த வேலையை நாம் நாளை கல்லூரியில் பேசுவோம்’ என உற்சாகத்துடன் கலைந்தனர். இதற்கிடையில் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கை இராணுவத்துக்கு துணைநின்று துரோகம் செய்யும் இந்திய இராணுவத்தின் 117-வது பட்டாலியன் தலைமையகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கெதிரான தீர்மானத்தையே சகிக்காமல் தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
தகவல் – ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., திருச்சி.
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறியிருக்கிறது. “தலைவா, எங்க தன்மானத்தை காப்பாற்றிவிட்டாய்” என்று தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள். ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்கிறார்கள். மகிழ்ச்சி மேலிட எழுதித் தீர்க்கிறார்கள். ஈழத்துக்காக மகுடத்தை துறந்த கழகத்தின் முடிவை தியாகமாக சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடுவதைப் போல “தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இன்னமும் அவகாசம் இருக்கிறது. காங்கிரஸ் அரசு அதை செய்தால் நாங்கள் எங்கள் முடிவை பரிசீலிப்போம்” என்று குழிபறித்த குதிரையிடம் மனு போடுகிறார் கருணாநிதி. “இவரை நம்பி எதையும் சொல்ல முடியாது போலருக்கே” என ஜெர்க் ஆகும் தி.மு.க. தொண்டன், “நீங்க மொத்தமா நாடகத்தை முடிங்க, அப்புறம் பார்த்துக்குவோம்” என வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டான்.
இன்னொரு பக்கம் “கருணாநிதியின் விலகல் முடிவு மாணவர் போராட்டத்துக்குக்குக் கிடைத்த வெற்றி” என்று தமிழின அமைப்புகளும், ஆதரவாளர்களும் இதை திசை திருப்பப் பார்க்கிறார்கள். மாணவர்களின் கோரிக்கை, “மத்தியக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்” என்பதல்ல. இந்த போராட்டத்தின் பலனை பயன்படுத்திக் கொள்வதற்கு, மத்திய அரசில் அங்கம் வகிப்பது தடையாக இருக்கிறது என்பதால் தி.மு.க. வெளியே வந்திருக்கிறது. இதனுடன் சேர்த்து அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட இதை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக கருதியும் கருணாநிதி இந்த முடிவை எடுத்திருக்கலாம். நிலைமை இப்படி இருக்க… இதை மாணவர் போராட்டத்தின் வெற்றி என சித்தரித்து, இவர்களே கருணாநிதிக்கு வெற்றிமாலை சூட்டுகிறார்கள். மறுபுறம் மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதுடன், “போராடியதால் ஏதோ பலன் கிடைத்துவிட்டது” என்பது போன்ற பிரமையை மாணவர்களிடம் உருவாக்குகின்றனர். தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தை நேரடியாக அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு கொள்கை சாயம் அடிக்க வேண்டிய அவசியம் என்ன?
இதே தி.மு.க.தான், முத்துக்குமார் மரணத்தை ஒட்டி எழுந்த மாணவர் எழுச்சியை சூழ்ச்சியாக முடக்கியது. இதே கருணாநிதிதான் ஈழப்போரின் இறுதி நாட்களில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். இதே கருணாநிதிதான், மக்கள் செத்தொழிந்தபோது காங்கிரஸை கட்டித் தழுவிக்கொண்டார். ஆகவே இப்போதைய மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவும், தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் இன்னொரு நாடகமே.
இதை சொன்னால், “கருணாநிதியை இந்த முடிவை நோக்கித் தள்ளியது மாணவர் போராட்டங்களின் வீச்சுதானே? அந்த வகையில் இது வெற்றிதான்” என இண்டு, இடுக்குகளை தேடிப்பிடித்து ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதேபோன்ற ஒரு மொக்கை வாதத்தை முன்வைத்துதான் தமிழினவாதிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தனர். “கருணாநிதியை விட ஜெயலலிதா மேல். அவர் துரோகி. இந்தம்மா எதிரி. துரோகியை விட எதிரி மேல்” என பஞ்ச் டயலாக் பேசி, வீரமாக ஓடிச்சென்று ஜெயா காலில் விழுந்தார்கள். “தனி ஈழம் ஒன்றே தீர்வு” என்று ஜெயலலிதா பேசிய சவடால் இவர்களுக்குத் தேனாக இனித்தது. “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று அடித்துவிட்ட சீமான் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று வர்ணித்த ஆபாசத்தை கண்டிக்கக்கூட தமிழினவாதிகளுக்கு துணிவில்லை. ஆனால் அந்தம்மாவோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது “ஆதரவு வாபஸ்” என ஐந்தாம் முறையாக தி.மு.க. நாடகம் நடத்தியபோது, “தி.மு.க. ஆதரவை வாபஸ் வாங்கினால், அ.தி.மு.க. ஆதரவு தரும்” என்று தானே வலியசென்று காங்கிரஸுக்கு வால் பிடித்தார். ஈழத்தாயின் “யு&டர்ன்” குறித்து அப்போதும் தமிழினவாதிகள் வாய் திறக்கவில்லை.
அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார்; முதல்வரானார். “என் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போதும் தமிழினவாதிகள் வார்த்தைகளை மௌனித்துக்கொண்டார்கள். மூச்சு விடவில்லை.
“ஜெயலலிதா வந்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று பேசியவர்கள் தங்களின் கூற்றுக்குப் பொறுப்பேற்று இப்போது பதில் சொல்ல வேண்டும். அந்தந்த நேரத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாக எதையாவது பேசுவது, பிறகு முற்றிலும் முரணாக நடந்து கொள்வது, முந்தைய கூற்றுகள் காற்றில் கரைந்துபோவது… என்ற இந்த நிலைதான் தமிழக அரசியலில் தொடர்ந்து நடக்கிறது. “அப்போது இப்படி சொன்னீர்களே” என்று இவர்களிடம் யார் போய் கேட்பது? அந்தந்த கட்சிகளின், இயக்கங்களின் தொண்டர்கள் கேட்க வேண்டும்; அவர்கள் கேட்கப்போவதில்லை. அம்மாவுக்கு முட்டுக் கொடுத்தவர்களாவது கேட்பார்களா?
‘‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற திமிர்ப்பேச்சு பேசிய ஜெயலலிதாதான் போர்க்குற்றத்துக்கு விசாரணை கேட்கிறார். “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று பேசியவர், இப்போது “தமிழர்கள் இலங்கையில் சம உரிமையுடன் வாழ வழி செய்யவேண்டும்” என்று ஜெனிவா தீர்மானத்துக்கு திருத்தம் சொல்கிறார். தனியாய் சிக்கிய புத்த பிக்குவை புரட்டி எடுக்கின்ற மறத்தமிழர் படையின் தளபதி செந்தமிழன் சீமான் ஈழத்தாயிடம் இதைப்பற்றிக் கேட்பாரா? “கருணாநிதி நடிக்கிறார், ஜெயலலிதா உண்மையாகப் போராடுகிறார்” என்று சான்றிதழ் கொடுத்த வைகோ கேட்பாரா?
கருணாநிதியை கிடைத்த சந்துகளில் எல்லாம் போட்டுத் தாக்குபவர்கள், அம்மா கழற்றி அடித்தாலும், இளிக்கிறார்கள். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும் தேதியே முடிவடைந்துவிட்ட பிறகு “அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என பூட்டிய வீட்டுன் முன்பு சவுண்ட் விடுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் கூட்டமாக நின்று கைதட்டுகிறார்களேயன்றி, “வீடு பூட்டியாச்சும்மா” என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் தைரியம் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் உள்ளிட்ட எந்த தமிழினத் தலைவருக்கும் இல்லை. சும்மா சொல்லக்கூடாது. எப்பிடித்தா…ன் அம்மா எல்லாரையும் ஓ.பி யா மாத்துறாங்களோ தெரியல! கருணாநிதிக்கு வயித்தெரிச்சலாத்தான் இருக்கும்.
இப்போதைய மாணவர் போராட்டங்களையே எடுத்துக்கொள்வோம்.‘தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தன்னை போராட்ட சக்திகளுடன் இருப்பதைப் போல காட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, மறுபுறம் மாணவர் போராட்டங்களை நசுக்க பல வகைகளிலும் முயற்சிக்கிறார். லயோலோ மாணவர் போராட்டத்தை பெருந்தொகையிலான போலீஸை அனுப்பி அடக்கியது மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதும் ஜெ.அரசின் உளவுத்துறை மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. “பாஸ் போர்ட் கிடைக்காது. அரசு வேலை கிடைக்காது. வேலைக்குப் போக முடியாது” என அச்சுறுத்துகிறது.
ஜெயலலிதா ஈழம் குறித்தோ இல்லை தமிழுணர்வு குறித்தோ எகத்தாளமான எதிர் கருத்தும், பகை அணுகுமுறையும் உள்ளவர். இதை அவரது முதலாவது ஆட்சிக்காலத்திலிருந்தே பார்க்கலாம். அந்த வகையில் தற்போதைய போராட்டங்கள் குறித்து மிகுந்த எரிச்சலே கொண்டிருப்பார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொண்டால் அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்பதாலும் மேற்படி ஓ.பி க்கள் தன்னைப் பற்றி உருவாக்கியிருக்கும் “முற்போக்கு” இமேஜை தக்க வைத்துக்கொள்ள ஜெயா விரும்புகிறார். அதனால்தான் இதுவரை மாணவர் போராட்டங்கள் அரசின் முழுவீச்சான அடக்குமுறை இன்றி தொடர்கின்றன. எனினும் இந்த நிலைமை கை மீறி போகிறது எனும் பட்சத்தில் தனது போலீஸ் படையை அனுப்பி ஒடுக்குமுறையே ஏவிவிடவும் தயங்கமாட்டார். கூடங்குளத்தில் அதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமில்லை… விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்… என தமிழகத்தின் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் மாணவர் போராட்டத்தின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்வதில் போட்டிப் போடுகின்றன. ஓர் அரசியல் எழுச்சி உருவாகும்போது ஏற்கெனவே இயங்கும் கட்சிகளும், அமைப்புகளும் அதில் தலையிட்டு போராடுவது சரியானதுதான். களத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிகரமாகவும், போதுமான கொள்கைப் பிடிமானங்களும் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு அத்தகைய பிடிப்பை தந்து மைய நோக்கத்தின் மீதான பற்றுறுதியை அதிகப்படுத்துவதும், போராடும் சக்திகளை நெறிப்படுத்தி போராட்டத்தை கூர்மைப்படுத்துவதும்தான் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கே ஒரு தீர்மானகரமான கொள்கை இல்லாமல் அம்மாவுக்கும், அய்யாவுக்கும் இடையில் காவடி தூக்கும்போது, இவர்கள் எங்கிருந்து மாணவர் போராட்டங்களை சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு அணுகுவது? ஆகவே இயல்பாகவே அது சந்தர்ப்பவாதமாகவும், நாடகமாகவும் உருவெடுக்கிறது. இந்த சண்டை முற்றி, ஆங்காங்கே வெளியே வரவும் செய்கிறது. சமீபத்தில் மதுரையில் தீக்குளித்தவர் “எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான்” என ம.தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் சொந்தம் கொண்டாடி அடித்துக் கொண்டதை கண்டோம். இவர்களை கெவின் கார்ட்டர் எடுத்த புகழ்பெற்ற கழுகு+குழந்தை புகைப்படத்துடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
தி.மு.க.வின் விலகல் முடிவை எடுத்துக் கொண்டால் இதைப்பற்றி விவாதிக்கும் பலரும் இதனால் ஐ.நா. தீர்மானத்திற்கோ, ஈழத் தமிழர் நலனிற்கோ ஏதேனும் நன்மை விளையுமா என்று விவாதிக்கவில்லை. மாறாக, இதனால் தமிழக, மத்தியக் கூட்டணிகளில் உருவாகப்போகும் மாற்றங்களை பற்றியே பேசுகிறார்கள். இதைப்பற்றி புதிய எஸ்.டி.எஸ் ஆக நியமனம் பெற்றிருக்கும் தா.பாண்டியனிடம் நிருபர்கள் கருத்துக் கேட்டதற்கு, “நல்ல விஷயம்தான்” என்று முதலில் சொன்னார். “அப்படின்னா நீங்க தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறதா எடுத்துக்கலாமா?” என்று நிருபர்கள் கேட்டதும் பதற்றத்துடன், “அப்படி சொல்ல முடியாது. என் கருத்தை நாளை சொல்கிறேன்” என்று ஜகா வாங்கிவிட்டார். தோட்டத்து எஜமானியை மீறி தோட்டக்காரர் தன்னிச்சையாக கருத்து சொல்வது முறையாகாது என்பது அவரது மூளைக்கு சற்றே தாமதமாகத்தான் உறைத்திருக்கும் போல!
இவர் மட்டுமில்லை… பலரும் தி.மு.க.வின் முடிவை கொள்கைப் பூர்வமாக விமர்சிப்பதற்குப் பதில் இதனால் உருவாக்கப்போகும் கூட்டணி மாற்றங்களையே மையமாகப் பேசுகின்றனர். வேறு சிலரோ, “இப்போதேனும் தி.மு.க. விழித்தெழ வேண்டும்” என அந்தக் குட்டிச்சுவருக்கு பெயிண்ட் அடிக்கப் பார்க்கிறார்கள்.
கருணாநிதி மட்டுமில்லை… ஜெயலலிதா, வைகோ, சீமான், பழ.நெடுமாறன், தா.பாண்டியன் என அனைவருமே தற்போதைய மாணவர் போராட்டங்கள் தங்களது அரசியலின் வரம்புக்கு அப்பாற்பட்ட வகையில் செல்வதை விரும்பவில்லை. ராஜபக்சேவில் தொடங்கிய கொடும்பாவி, சல்மான் குர்ஷித், மன்மோகன், சோனியா என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. “இன்று நீ ..நாளை நான்” என்று எல்லோரும் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
“இந்த பஸ் நம்ம ஊருக்குப் போகாது போலிருக்கே” என லேசாக அவர்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்துவிட்டதால் “பஸ் பஞ்சர் ஆக வேண்டும், இறைவா!” என கனவு காண்கிறார்கள். தானாக பஞ்சராகாவிட்டால் இவர்களே லாடம் வைத்து பஞ்சர் ஆக்குவார்கள். லாடத்தை வெளிப்படையாக வைப்பதா, தெரிஞ்சும் தெரியாமலும் வைப்பதா என்பதில்தான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு இருக்கிறது.
மாபெரும் மாணவர் திரள் தமிழகத்தின் வீதிகளில் திரண்டு நிற்கிறது. அவர்கள் நடுத்தர வர்க்கத்து, உழைக்கும் வர்க்கத்து வீடுகளை சேர்ந்த பிள்ளைகள். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் சரிபாதியானோர் இந்தப் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை பகுதி அளவிலேனும் உணரத் துவங்கியுள்ளனர். அதை வளர்த்தெடுப்பதும், போராடும் சக்திகளை ஓரணியில் திரட்டி கூர்மைப்படுத்துவதும் மட்டுமல்ல… ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கும் இதுதான் பொருத்தமான தருணம்!
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திமுக விலகி விட்டது” என்று கூறுவதைக் காட்டிலும், “விலகுவதைத் தவிர கருணாநிதிக்கு வேறு வழி இல்லை” என்றே கூறவேண்டும். இனிமேலும், வெளியேறவில்லையென்றால் தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராகத் திரும்பிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக கருணாநிதி இந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்பது எல்லோரும் புரியக்கூடிய ஒரு விடயம்.
ராஜபக்சே அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலரும் கோரிக்கொண்டிருக்க, இதற்கு நேர் எதிரான வேலையை ஜெனிவாவில் டில்லி செய்திருக்கிறது.
“அமெரிக்க தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை இன்னும் கண்ணால் பார்க்கவில்லை” என்று நேற்று வரை கூசாமல் புளுகிக்கொண்டிருந்தார் ப.சிதம்பரம். ஆனால், அமெரிக்க தீர்மானத்தில், சர்வதேச விசாரணைக்கும் சோதனைக்கும் வாய்ப்பளிக்கின்ற எல்லா சொற்களையும் நீக்குவதில் இந்திய அரசுதான் ஜெனிவாவில் முனைந்து வேலை செய்திருக்கிறது.
இது ஊகமல்ல. அம்னஸ்டி இன்டர்நேசனல், இந்தியாவின், தலைமை எக்சிகியூடிவ், ஜி. அனந்த பத்மநாபன் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார். (first post.com, 19.3.2013)
“இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச சமூகத்தின் கவலைகள் பெரிதும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. இது மிகப்பெரிய பின்னடைவு. தற்போதைய நகல் தீர்மானம், நம்பகத்தன்மை வாய்ந்த, சுயேச்சையான விசாரணையை நடத்துவதற்கான அமைப்பை உருவாக்கும் பொறுப்பை இலங்கையிடமே விட்டிருக்கிறது’. திங்களன்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட நகல் பெரிதும் மென்மையாக்கப்பட்டு விட்டது. இந்த திருத்தங்களில் இந்தியத் தலையீட்டிற்கான தடயங்கள் ஏராளமாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.
நாங்கள் அப்படியெல்லாம் திருத்தம் கொண்டு வரவே இல்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சாதித்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம். தாங்கள் கொண்டு வர விரும்பிய திருத்தத்தை “தடயம்” தெரியாத வகையில் வேறு நாட்டை வைத்து செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இப்போதும் திருத்தம் கொண்டுவர முயற்சிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பேசிக் கொண்டிருப்பதாகவும் சிதம்பரம் சொல்கிறார்.
இது எல்லாம் காக்கா நரி கதை. ஜெனிவாவில் எதுவும் நடக்காது. நாடாளுமன்றத்திலும் எதுவும் நடக்காது. இனப்படுகொலை, போர்க்குற்றம் என்று எழுதி ஒரு தீர்மானத்தை சுற்றுக்கு விட்டால், பாரதிய ஜனதா முதல் ஆளாக ஆட்சேபிக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் பெயர் சொல்லி எந்த தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டார் முரளி மனோகர் ஜோஷி. மேலும் நாளை ஒரு நாளுக்குள் நடக்கிற விவகாரம் அல்ல இது. நடந்தாலும் அந்த தீர்மானக் காகிதம் பீ துடைக்க கூட உதவாது.
நாம் கவனிக்க வேண்டிய விசயம் வேறு இருக்கிறது. முலாயம், மாயாவதி ஆதரவு தந்துவிட்ட பின்னரும் திமுகவை காங்கிரசு தாஜா செய்ய முயற்சிப்பது ஏன் என்பதுதான் அந்த விசயம். தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராக திரும்பிவிடும் என்ற அஞ்சி காங்கிரசு இதை செய்யவில்லை. கருணாநிதியை கைக்குள் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு இருக்கிறது. அதேபோல தப்பித்துவெளியேற வேண்டிய தேவை கருணாநிதிக்கும் இருக்கிறது.
காரணம் 2 ஜிவிவகாரம்.
மன்மோகன் சிங், சோனியா, ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட கூட்டுக் களவாணித்தனமே 2 ஜி அலைக்கற்றை கொள்ளை. இந்த விவகாரத்தில் பரம்பரைக் கிரிமினல்களான காங்கிரசுக்காரர்கள், தாங்கள் தப்பித்துக் கொண்டு ஆ.ராசாவையும் திமுகவையும் மட்டும் காவு கொடுத்து விட்டார்கள். இதுநாள் வரை கசியாத இது தொடர்பான உண்மைகள் இப்போது இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர்.
“திராவிட வெறுப்பு, தமிழின வெறுப்பு, தமிழகத்திலிருந்து பார்ப்பன எதிர்ப்பை துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி” ஆகிய “கொள்கைகளில்” உடன்பாடு கொண்ட இவர்கள், சு.சாமியை முன்நிறுத்தி தங்கள் காரியத்தை நடத்தி முடித்து, ஜெயலலிதாவையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விட்டனர்.
அலைக்கற்றை ஊழல் வெளிவந்த காலத்தில், மன்மோகன் சிங் கறை படாத சொக்கத்தங்கம் போலவும், அவர் மீது கடவுள் கூட குற்றம் சாட்ட முடியாது என்பது போலவும், அந்த அப்பிராணி மனிதருக்குத் தெரியாமல் ராசா கொள்ளையடித்து விட்டதைப் போலவும், அனைத்திந்திய ஊடகங்களும், உச்சநீதிமன்றமும் ஒரு பில்டப் கொடுத்து தூக்கி விட்டன. கல்லுளி மங்கன் மன்மோகன்சிங்கும், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு தெரியவே தெரியாது என்று கூசாமல் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்.
“மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் இது நடக்கவில்லை. நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று ஊடகங்கள் சு.சாமியைக் கேட்டபோது, “என்னுடைய இலக்கு திமுக மட்டும்தான்” என்று பச்சையாக பதிலளித்தார் சு.சாமி.
இந்த ஊழலை விசாரிக்க “கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) அமைக்க வேண்டும்” என்று கோரி பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டபோது, யோக்கிய சிகாமணி மன்மோகன், “ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாக அறிக்கை விட்டார். உடனே காங்கிரசு களவாணிகள், “நாட்டாமை நீங்களா.. அந்த நதியே காஞ்சு போனா” என்ற ரேஞ்சுக்கு சீனைப் போட்டு கண்ணீர் வடித்தனர்.
இன்று நடப்பது என்ன?
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராசா, “நான் கூட்டு பாராளுமன்றக் குழுவில் ஆஜராகி பேச வேண்டும்” என்று மன்றாடுகிறார். நான் கூப்பிட மாட்டேன் என்கிறார் குழவின் தலைவர் சாக்கோ. இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை யாராவது எங்காவது பார்த்திருக்க முடியுமா? எவன் எவனோ சாட்சியம் அளிக்கிறான். முதல் குற்றவாளியும் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரும் பேசக்கூடாதாம்.
“ஆ.ராசாவை ஏன் அழைக்க மறுக்கிறீர்கள்?” என்று புரட்சித்தலைவியோ, சுப்பிரமணியசாமியோ கேட்கவில்லை என்பதுதான் இந்த மர்மக் கதையின் சிறப்பு.
கடந்த சில நாட்களாக இந்து நாளேட்டில் ஷாலினி சிங் எழுதி வரும் கட்டுரைகள், மன்மோகன் சிங்கிற்கு இந்த கொள்ளையில் நேரடியாக தொடர்பிருப்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற கொள்கை விவகாரத்தில் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் தேதியை மாற்றியது என்ற முக்கியமான ஊழல் குற்றச்சாட்டிலும் மன்மோகன் நேரடியாகவே சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பது அம்பலமாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த ஊழல் விவகாரம் வெளிக்கிளம்பிய பின்னர் “இந்த விவகாரத்திலிருந்து என்னை பத்திரமாக கொஞ்சம் எட்டத்தில் வைப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்” (keep me away at arms length) என்று மன்மோகன் சிங் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததும் வெளியில் வந்து விட்டது.
மன்மோகன் சிங்கை காப்பாற்றும் வகையில் துறை அதிகாரிகள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு கூட்டு பாராளுமன்றக் குழுவில் பொய் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகிவிட்டது
இவ்வளவு விசயங்கள் இருந்தபோதிலும், பாஜக, அதிமுக ஆகிய யாரும் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடவில்லை. மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்கவில்லை.
“ஈரத்துணியைப் போட்டு ராசாவின் கழுத்தை மட்டும் சத்தமில்லாமல் அறுத்துவிடலாம்” என்பதே இவர்களின் திட்டம். இப்போது கத்தவில்லை என்றால் திமுக எப்போதுமே கத்த முடியாது. அமைச்சரவைக்கு உள்ளே திமுகவை வைத்திருந்தால், எதையாவது சொல்லி, வாயை அடைத்து விடலாம் என்ற காரணத்தினால்தான், “ எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். உள்ள வாங்க” என்று நைச்சியமாக கருணாநிதியைக் கூப்பிடுகிறது காங்கிரசு.
இந்த விசயத்தில் திமுக காங்கிரசுடன் எந்த அளவுக்கு மோதப்போகிறது என்று நமக்கு தெரியாது. வேறு பல பிரச்சினைகள் சமன்பாடுகள் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கும் வரையில் பேசவே முடியாது. வெளியே வருவதற்கு அலைக்கற்றை ஊழலைக் காரணமாக காட்டுவதை விட, ஈழத்தமிழர் பிரச்சினையை காரணமாக காட்டுவது மதிப்பான விசயம் இல்லையா? அந்த வகையில் ஜெனிவா திமுகவுக்கு கை கொடுத்திருக்கிறது.
மன்மோகன் சிங் என்ற திருடனை (அதாவது சோனியாவை) திமுக சந்திக்கு இழுக்குமா? ஒரு வகையில் பார்த்தால் இழுத்துத்தான் ஆக வேண்டும். இலங்கைப் பிரச்சினையைப் போலவே இதிலும் திமுகவிற்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இழுக்கும் பட்சத்தில் என்போர்ஸ்மென்ட் டைரக்டரேட் மூலம் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துகளை முடக்குவது, கனிமொழியை மீண்டும் கைது செய்வது என்ற திட்டத்துடன் காங்கிரசு தயாராக இருப்பதாக சில பத்திரிகைகள் கூறுகின்றன.
திமுகவோ, காங்கிரசோ, ஜெயல்லிதாவோ அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று ஊகிப்பது நமக்கு தேவையில்லாத வேலை. அவர்கள் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அதன் பின்னால் இப்படியொரு பின்புலம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்திருப்பதுதான் அவசியம்.
தமிழ், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு போன்ற அனைத்தின் மீதும் மாளா வெறுப்பு கொண்ட, காங்கிரசு, பாஜக, சு.சாமி, சோ, இந்து ராம், ஜெயலலிதா உள்ளிட்ட மெகா பார்ப்பனக் கூட்டணி ஒரு புறம்.
திராவிடம், தமிழ் என்று பேசிப் பிழைத்து, ஊழல், சந்தர்ப்பவாதத்தில் புழுத்து பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையின் கவுரவத்தையே குழி தோண்டிப் புதைத்த திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு புறம்.
திராவிட இயக்கத்தின் மீதான துவேசத்தையும், பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் மீதான தங்களது அபிமானத்தையும் மறைத்துக் கொண்டு, ஈழப்பிரச்சினையில் திமுகவின் துரோகத்தைக் காட்டி, அதன் மூலம் தங்களது ஆழ்வார் வேலையை நியாயப்படுத்தும் தமிழினவாதிகள் ஒருபுறம்.
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.
விருத்தாசலம் திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள் 24 பேர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் இருந்து வந்தனர். நேற்று மாலை முதல் அரசு அதிகாரிகள் முடித்துக் கொள்ள கெஞ்சினர் பிறகு மிரட்டினர். மாணவர்கள் அசராமல் உறுதியாக இருந்தனர். ஆரம்பம் முதல் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் களத்தில் ஆதரவாக உதவி செய்து வந்தனர்.
ஆய்வாளர் ,முதல்வர், கோட்டாட்சியர் ஆகியோர், “மாணவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு இருக்கக் கூடாது. வெளியே போங்கள்” என்று விரட்டினர். நாமோ, “உங்களுக்கு அதிகாரம் இல்லை, ஜனநாயக முறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது கடமை. இவர்களை தனியே இரவில் விட்டு செல்ல முடியாது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் நாங்கள் இங்கேதான் இருப்போம்” என அறிவித்தோம். “மாணவர்கள் எங்களை போக சொல்லட்டும்.போகிறோம்” என்றோம்.
மாணவர்கள் “வழக்கறிஞர்கள் இங்கேயே இருக்கட்டும்” என ஒரே குரலில் அறிவித்தனர். ஆதரவு கொடுக்க வந்தவர்களை வெளியே போக சொல்லும் காவல் ஆய்வாளர், கோட்டாட்சியரின் இந்த அணுகுமுறை பாசிசத்தன்மை வாய்ந்த்து என வாக்கு வாதம் நடந்த்து. அதிகாரிகள் பின்வாங்கினர்.
அடுத்து கல்லூரி முதல்வர் ஆர்.ஜே.டி. சொல்கிறார் “மாணவர்களை உடனே அப்புறப்படுத்துங்கள் இல்லை என்றால் அனைத்து பேராசிரியருக்கும் சஸ்பெண்ட் உத்திரவு வரும். எனவே உண்ணாவிரத்த்தை முடியுங்கள்” என அவர் பேசினார். இரவு 9-00 மணிக்கு வீட்டில் இருந்த அனைத்து பேராசிரியர்களையும் போன் போட்டு அழைத்தார். பேராசிரியர்கள், பேராசிரியைகள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றாக மாணவர்களை கெஞ்சியும், மிரட்டியும் ஒரே கூப்பாடு போட்டனர். மாணவர்கள் 21-ம்தேதி வரை உண்ணாவிரத்த்தை கைவிட மாட்டோம் என உறுதியாக இருந்ததை பேராசிரியர்கள் நெருக்குதல் கொடுத்து இன்று காலை 9-00 மணிக்குள் முடிக்க வைக்க மாணவர்களை சம்மதிக்க வைத்தனர்.
நாமும் மாணவர்களுக்கு ஆதரவாக மூன்று நாட்களும் இரவு பகலாக அவர்களுடன் தங்கினோம்.பொதுமக்கள் மத்தியில் “நமது அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் இருக்கிறார்கள் கல்லூரிக்கு நேரில் சென்று வாழ்த்தி ஆதரவு தெரிவியுங்கள்” என விருத்தாசலம் நகரம் முழுவதும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பிரசுரம் விநியோகித்தோம். அதன் விளைவாக பலர் வந்து மாணவர்களை பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்று காலை 8-00 மணிக்கெல்லாம் கல்லூரிக்கு சுமார் 70 க்கும் முற்பட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் அமர்ந்திருக்கும் பந்தலுக்கு எதிராக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். “நமது பேச்சுக்கு மரியாதை தராமல் இருக்கிறார்கள் நன்றி கெட்டவர்கள்” என ஒரு பேராசிரியை கொதித்து எழுந்தார். மாணவர்கள் “உயிரை பணயம் வைத்து இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடுகிறார்கள் அதைவிட உங்கள் சுய கௌரவம் பெரிதா?” என்று நமது தோழர்கள் பதில் சொன்னார்கள்.
துணை ஆட்சியர், தாசில்தார், காவல் ஆய்வாளர் அனைவரும் வந்திருந்தனர். சில மாணவர்களுக்கு மயக்கம் ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பேராசிரியர்கள் பொறுக்க முடியாமல், “மணி 10 ஆகிவிட்டது. வாக்கு காப்பாத்த வேண்டாமா? எங்களை ஆர்.ஜே.டி கேட்டு கொண்டே இருக்கிறார்.நாங்கள் என்ன பதில் சொல்வது. கடலூர் மாவட்டத்தில் கடலுரில், சிதம்பரத்தில் நேற்றே மாணவர்கள் போராட்டத்தை முடித்து விட்டார்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மட்டும் போராட்டம் நடக்கிறது. அதோடு போன் போட்டு எவ எவனோ கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் எனக்கு இது தேவையா?” என முதல்வர் கொதித்தெழுந்தார். மாணவர்கள், “மருத்துவ மனைக்கு சென்ற மாணவர்கள் வந்நதும் முறைப்படி முடித்து கொள்கிறோம்” என பதில் கூறினர். மற்ற பேராசிரியர்களும் “எழுந்திரு எழுந்திரு நாங்கள் இவ்வளவு சொல்கிறோம் கேட்க மாட்டேன்கீறிர்கள்” என சளைக்காமல் மாணவர்களின் மீது உளவியல் தாக்குதலை தொடர்ந்து கருணையில்லாமல் தொடுத்து கொண்டே இருந்தனர்.
ஒரு மாணவரின் தாயாரை அழைத்து கண்ணீர் மூலம் போராட்டத்தை கலைக்க முயற்சித்தனர். மாணவர்கள் அனைத்திற்கும் சளைக்காமல் பதில் சொல்லியதுடன் உறுதியாக இருந்தனர். ‘இங்கு மாணவர்களை பேராசிரியர்கள் துன்புறுத்துகிறார்கள் பந்தல் காலை பிடுங்குகிறார்கள்’ என கேள்விப்பட்ட மருத்துவமனையில் இருந்த மாணவர்கள் குளுக்கோஸ் டியுபை பிடுங்கி எரிந்து விட்டு ஒரே ஆட்டோவில் 9 பேர் கல்லூரிக்கு வந்தனர். ஆசிரியர்களை எதிரத்து பேசினர். “நாங்கள் முடித்து கொள்கிறோம் என சொன்ன பிறகு பேராசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொந்தரவு கொடுப்பது சரியல்ல. போராட்டத்தை முடிக்க முடியாது” என அறிவித்தனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் பேராசிரியர்களை அமரச் சொல்லி விட்டு மாணவர்களை சமாதனப்படுத்தி காலை 12-00 மணியளவில் போராட்டத்தை மாணவர்கள் முடித்து கொண்டனர். அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி செய்யலாம் என தற்போது ஆலோசித்து வருகின்றனர்.
பின் தங்கிய ஊரான விருத்தாசலத்தில் அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் உறுதியாக அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது. தொடர்ந்த நமது தோழர்களின் அரவணைப்பு , அதிகாரிகளை அஞ்சாமல் எதிர் கொண்டது, பேராசிரியர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தது ஆகியவற்றை பார்த்த மாணவர்களுக்கு தார்மீக பலத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. போரட்ட உணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
மார்ச் 17, 2013
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மக்களிடம் எழுந்த எதிர்ப்பு அனுதாப அலையாக இருந்த வரை அதில் “காகிதக் கப்பல்’ விட்டு தானும் காலம் தள்ளிய தினமணி மாணவர்களிடம் போராட்ட அலையாகப் புறப்பட்டு இருக்கும் தருணத்தில் வழக்கம் போல தர்ப்பையைக் கொண்டு வந்து குறுக்கே விடுகிறது. ஜெயலலிதாவின் சீலைப்பேனாகி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் பழிதீர்க்க பழ.நெடுமாறனை களமாடவிடும் தினமணி, இந்த முறை இரா.சோமசுந்தரம் மூலமாக (திங்கள் கிழமை, 18-3-2013) “நிமிர்ந்த நன்னடையோடு தனது வெறிகொண்ட பார்வையை” நடுப்பக்கத்தில் பற்றவைத்திருக்கிறது. தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டத்தை தி.மு.கவும், நல்லகண்ணு போன்றோரும் அரசியல் லாபத்திற்க்காக பயன்படுத்துவதை கண்டிப்பது போல ஆரம்பிக்கும் கட்டுரை கடைசியில் போராட்டத்தின் தீவிரத்தால் கல்லூரி மூடல் – தேர்வு பாதிப்பு – பெற்றோர்கள் மனது என்ன நிலையில் இருக்கும் – ஈழப்போராட்டத்திற்கே எதிராகப் போகும் என்று எங்கப்பன் ஜெயலலிதா வீட்ல இல்ல என தன் அரசியல் பிழைப்புவாதத்தால் தானும் அம்பலப்பட்டிருக்கிறது சோமா அண்ட் தினமணி கம்பெனி.
தான்தான் சோத்துக்கு தெண்டமாய், பூமிக்கு பாரமாய் தினமணி நடுப்பக்கத்தில் வைத்தி மாமாவோடு வரவு செலவு பண்ணுமளவுக்கு படித்துபாழாய் போய்விட்டோமே என்பதை உணர வேண்டிய வயதில், தன்னலம் மறுத்து சமூக உணர்வோடு போராடும் மாணவர்களைப் பார்த்து போராட்ட உணர்வுக்கு லீவு விட்டுவிட்டு இவரைப் போல தன் வயிற்றை மட்டும் பார்த்துக் கொண்டு “உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும்” மாணவர்கள் போராட வேண்டுமாம்! அநீதிகளுக்கெதிராக தமக்குத் தெரிந்தவரை முன்னின்று போராடும் மாணவர்களை ஒடுக்கி போராட்ட அரங்கை விட்டே வெளியேற்ற கல்லூரியை இழுத்து மூடும் ஜெயா அரசின் அரசியல் எந்த இடத்திலும் சோமாவுக்கு இடறவில்லை. இதில் ஆச்சரியமும் இல்லை. அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்ற அர்ச்சனை அவாளிடமிருந்தும் ஆளும் வர்க்கத்திடமிருந்தும் பின் தொடர்ந்து வருவது திட்டமிட்ட நோக்கில் தான். பிழைப்புவாத அரசியலுக்கு மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போல தோற்றமளித்து கருத்து சொல்லும் இவர்களின் உள்நோக்கமே மாணவர்களுக்கு உண்மையிலேயே அரசியல் அறிவு வந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை தான்.
கட்சிகளற்ற காரியவாத அரசியலுக்கு மாணவர்களை மடைமாற்றவும், ஆளும் வர்க்க அரசியலுக்கு எதிராக குவியும் மாணவர்களின் கோபத்தை குறிமாற்றவும் “தம்பி நமக்கு அரசியல் வேண்டாம்: ஆனா புத்திசாலித்தனமா போராடுங்க” என்று நைச்சியங்கள் மாணவர்களை சுற்றி வளைப்பது புதிதல்ல. போராட்டமே வேண்டாம் என்றால் இன்றைய இளைஞர்கள் சோமசுந்தரத்தின் முகத்தில் காறி துப்பி விடுவார்கள். அதனால் தான் தினமணியும் சோமசுந்தரங்களும் அரசியல் தான் போராட்டத்தை தீர்மானிக்கிறது என்ற விவரம் தெரிந்திருந்தும் மாணவர்களிடம் போய் அரசியல் வேறு போராட்டம் வேறு என்பது போல புத்திசொல்லி மயங்க வைக்கப் பார்க்கிறார்கள். போராட்டம் சமூகத்தை மட்டும் அல்ல மாணவர்களையும் அரசியல் மறுவார்ப்பு செய்யும் தேவைக்கு உட்படுத்தும் என்பது தெரிந்ததனால் பதறிப்போகும் இந்த ஆளும் வர்க்க அடிப்பொடிகள் கேவலத்தின் சுவை குன்றாமல் போராடாத மாணவப் பிரிவுகளை உச்சி மோர்ந்து உதாரணம் காட்டுகிறார்கள். “ஏன்? பொறியியல் கல்லூரி – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தன்னிச்சையாக போராடவில்லை?” என்று போராடுபவர்களிடம் வந்து, போராடாதவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை புத்திசாலி போல கேட்டு அசத்துகிறார். சுருங்கச் சொன்னால் சமூக நலனின் பேருணர்ச்சியை சுயநலத்தின் சவக்கலையில் சரிக்கப் பார்க்கிறார்கள். எதார்த்தத்திலோ, தினமணி சோமசுந்தரங்களின் ஞானசூன்யங்கள் உடைபட, பாளையங்கோட்டை தொடங்கி சித்த மருத்துவ மாணவர்களும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் முழங்குகிறார்கள்.
உளுத்துப் போன ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை அடையாளம் காட்டி, போகிற போக்கில் எந்த அரசியலுமே வேண்டாம் என்று மாணவர்களை சமூக நீக்கம் செய்யவிரும்பும் ஆளும் வர்க்க அறிவு பிழைப்புவாதிகள் தான் மிகவும் அபாயகரமானவர்கள் என்பதற்கு தினமணி சோமசுந்தரம் இலக்கண சுத்தமாக இருக்கிறார். அமைப்புகள், கட்சிகளிடமிருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் என்று புத்தி சொல்வது போல புறப்படும் இந்தக் கயவரின் கடைசிப் புகலிடம் பொய்யின் அரசியல் என்பதை புலப்படுத்துவதாக உள்ளது அவரது கண்டுபிடிப்பு, அதாவது “இலங்கை இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கிய சம்பவங்களே இல்லை” எனும் அளவுக்கு துணிந்து எழுதி இராஜபக்சேவையே “நடுங்க” வைத்துவிட்டார் சோமசுந்தரம்! சில தமிழின அமைப்புகள் சிங்களப் பயணிகளைத் தாக்குவதையும், ஓட்டுக்கட்சி அரசியல் பிழைப்புவாதிகளிடம் மாணவர்கள் சிக்குவதையும் திருத்தி ஏதோ போராட்டத்திற்கு நல்வழி காட்ட வந்ததாய் எழுதிச் செல்லும் இந்தப் பிழைப்புவாதியின் யோக்கியதை மாணவர்கள் அரசியல் தலைமை ஏற்க வந்தவுடனேயே போராடுபவர்களை போராட்டக் குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தவும் துணிந்துவிட்டது. ஈழப்பிரச்சினையில் மாணவர் – இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும் என்பது போராட்டக்களத்திலேயே அவர்களோடு இணைந்திருக்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்ச்சியான விவாதப் பொருளாகும். ஆனால் அதை தினமணியும் சோமசுந்தரங்ளும் சொல்வதற்கு அருகதையும், அறிவும் கிடையாது என்பதற்கு அவர்களுடைய நயவஞ்சகக் கட்டுரையேச் சான்று! சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவும் இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் காரல் மார்க்ஸ் கூறியிருந்தார். தினமணி சோமசுந்தரத்தின் தர்க்கத்தைப் பார்க்கையில் அது இன்னும் பயங்கரமாக இருக்கிறது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழகம் அன்று குரல் கொடுத்தது. ஆனால், இந்திய அரசோ அந்த இனப் படுகொலை யுத்தத்தை வழிகாட்டி இயக்கியது. இந்திய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து தமிழக மாணவர்கள் அன்று போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றனர்.
இன்று ஈழ இன அழிப்பு யுத்தம் தொடர்பான ஆவணங்கள் நாளுக்கொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் தமிழகம் ஒரு மாணவர் எழுச்சியைக் காண தயாராகிறது என்பதை சமீப நாட்களாக நடந்து வரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. இனப் படுகொலை தொடர்பாக ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும் LLRC எனும் அய்.நா சபையின் கபட நாடகத்துக்கு , இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வரக் கோருவது ஏமாற்று வேலையே.
உலக பயங்கரவாதி அமெரிக்காவையும், அதன் எடுபிடி நாடுகளையும் “சர்வதேச சமூகம் ” என்று கொண்டாடுவதும், அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும் கேலிக்கூத்தாகும். பிரபாகரனின் மகன் மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஈழத் தமிழ் மக்களும் சிங்கள ராணுவத்தால் அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்க இந்திய அரசை ஒத்துழைக்கக் கோருவது “கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கதை”யாகவே முடியும்.
இன்று மாணவர்களே போராட்டக் களத்திற்கு வந்துள்ள நிலையில், பல்வேறு பெயர்ப்பலகை சவடால் இயக்கங்கள் களத்திலிறங்கிப் போராடாமல் மாணவர்களைச் சந்திக்கவும், புகைப்படங்கள் எடுத்து தங்களை மலிவான முறையில் பிரபலப்படுத்திக் கொள்ளவும் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வமைப்புகளின் அணிகளும் இணையத்துக்குள் சவடால் அடிப்பதோடு தங்கள் ‘கடமையை’ முடித்துக் கொள்கிறார்கள். முக்கியமாக போராட்டத்தின் போக்கில் ஊடுருவி இந்த எழுச்சியை இந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ அடகு வைப்பதையே உள்நோக்கமாக கொண்டுள்ளனர்.
ஈழத்தின் துயரத்தை விலை பேசும் காங்கிரசு, பாரதீய ஜனதா, வலது-இடது போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் டெசோ அமைப்பைத் தொடங்கி நாடகமாடும் கருணாநிதி, திடீர் ஈழத்தாயாகஅவதாரமெடுத்திருக்கும் ஜெயலலிதா வரை அனைவரும் ஈழ விடுதலையின் எதிரிகளே! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க , சிங்கள குடியேற்றம் – இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட குறுக்கு வழி தீர்வு எதுவும் இல்லை.
என்கிற அடிப்படையில் போராட்டங்களை தமிழகம் தழுவிய அளவில் வீச்சாக நடத்தி வருகிறோம்.
திருச்சியில்..
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய கண்ணியாக விளங்கியது திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி. 1983 ஈழப் படுகொலையின் போது மிகப் பெரிய மாணவர் எழுச்சியை கட்டியமைத்தது. திராவிட இயக்கங்கள் செல்வாக்கிழந்து போன பின் சமீப வருடங்களாக பு.ம.இ.மு இக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.
மைய முழக்கங்களை முன்வைத்து 14.03.2013 அன்று காலை 9 மணியளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கல்லூரிக் கிளை செயலாளர் வேலு, பொருளாளர் அன்பு மற்றும் கிளை நிர்வாகிகள் இணைந்து மாணவர்களிடம் பிரச்சினையை விளக்கிப் பேசி அணிதிரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு மாணவிகள் உட்பட சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் தோழர்களுடன் இணைந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஊர்வலம் சென்ற வழி நெடுக பறையோசையுடன் முழக்கமிட்டு, மக்களிடம் துண்டுப் பிரசுர விநியோகம் செய்து பிரச்சாரம் செய்த படி சென்று மன்னார்புரம் ரவுண்டானா அருகே அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். அங்கு கூடிய பொது மக்களிடம் பிரசுரம் கொடுத்து ஈழத் தமிழர்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் அய்.நா தீர்மானம் ஏமாற்று என அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்கள் மறியலை ஆதரித்தனர். தூரத்தில் இருந்தவர்களும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து தோழர்களிடம் பிரசுரம் வாங்கிக் கொண்டனர். “சரியான போராட்டம் ; விடாமல் நடத்துங்கள்” என்று வாழ்த்துக் கூறினர்.
முந்தைய தினம் (13.03.2012) மன்மோகன், இராஜபக்சே கொடும்பாவி கொளுத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் முடிந்து சென்ற பிறகு அக்கல்லூரியின் பு.மா.இ.மு கிளை செயலர் தோழர் சாருவாகன் உள்ளிட்ட 7 பேரை உளவுப் பிரிவு போலீசின் தூண்டுதலின் பேரில் போலீசு கைது செய்தது. விசயமறிந்து நூற்றுக் கணக்கான மாணவர்கள் தோழர்களை விடுதலை செய்யக் கோரி சாலை மறியல் செய்தும் போலீசு வாகனங்களை விரட்டியடித்தும் போர்க் குணமாகப் போராடி சில மணி நேரங்களில் தோழர்களை வழக்கின்றி விடுதலை செய்ய வைத்தனர்.இப் போராட்டத்தால் ஏற்கனவே எச்சரிக்கையடைந்து போலீசு பின்வாங்கியிருந்தது
எனவே, 15ம் தேதியன்று நடந்த போராட்டத்தில் TVS டோல்கேட்டிற்கு ஊர்வலமாக வந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்த ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் 100 பேரும் இணைந்து கொண்டதால் போராட்டம் தீவிரமடைந்தது.
ஒரு மணி நேர மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து தலைமை அஞ்சல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். அங்கிருந்த சிக்னலின் 4 வழிகளையும் மனித சங்கிலியாக கைகோர்த்து முற்றுகையிட்டதால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. அதன்பின்,“தமிழரின் உணர்வை மதிக்காத மத்தியஅரசு இங்கே செயல்படக் கூடாது” என அறிவித்து ஊர்வலம் சென்ற பகுதியில் இருந்த பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கதவை மூடிதாழிட்டனர்.
மாணவர்களின் எழுச்சியான பேரணியால் அப்பகுதியில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் அடுத்தடுத்து இழுத்து மூடப்படுவதை தடுக்க முடியாமல் போலீசார் விரட்டப்பட்டனர். ஒரு சில காவல்துறை அதிகாரிகளோ அடுத்து எங்கே செல்கிறீர்கள்? என்று கெஞ்சியபடியே போராட்டத்தின் முன்னும் பின்னும் பெரும் போலீசு பட்டாளத்துடன் பின் தொடர்ந்து வந்தனர்.
“வாங்க, பேரணிதான் போகுதுல்ல, அங்கவந்து தெரிஞ்சுக்கோங்க ” என்று ரயில்வே சந்திப்பு நோக்கி சென்றனர். இதற்கிடையே போகும் பாதையை வைத்து இரயில் நிலையத்திற்குதான் செல்கின்றனர் என்று முடிவு செய்த காவல்துறை அங்கு தடுப்புக்கட்டைகள் கொண்டு பாதையை மறித்தனர். மாணவர்களோ அதை உடைத்தெறிந்தபடி முன்னேறி இரயில் நிலையத்தை சில வினாடிகளுக்குள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தங்களது அதிகாரம் செல்லாக் காசாவதைக் கண்டு ஆத்திரமடைந்து மாணவர்களைத் தாக்க முற்பட்ட காவல்துணை ஆணையரை கண நேரத்தில் மாணவர்கள் அப்புறப்படுத்தி விட்டு முன்னேறிச் சென்றனர். புறப்படத் தயாராக இருந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை பயணிகள் இரயில் மாணவர்களால் முடக்கி வைக்கப்பட்டது. இரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உருட்டல் மிரட்டலை கடுகளவும் பொருட்படுத்தாமல் இரயிலின் மீதேறி முழக்கமிட்டனர்.
பு.மா.இ.மு வின் இந்தப் போராட்டத்திற்கு களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசிய ம.க.இ.க –வின் மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன், ஈழப் படுகொலையில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி இல்லை. இந்திய அரசும் குற்றவாளிதான். இவர்கள் சர்வதேச சமூகம் என்று அழைக்கும் நாடுகளும் குற்றவாளிகள்தான். ஒரு குற்றவாளி மற்றொரு குற்றவாளியை தண்டிப்பான் எனக் கூறுவது ஏமாற்று என்று விளக்கிப் பேசினார்.
அடுத்துப் பேசிய ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர் தோழர் தர்மராசு, “ இந்த இரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான நபர்கள் தமது சொந்த வேலைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், முகம் தெரியாத நபர்கள் பாதிக்கப்பட்டதற்காக சமூகப் பொறுப்புடன் நீங்கள் வந்த பிறகு இரயில் நிலையம் அழகாகத் தெரிகிறது” என்றார். பறையோசையும் விண்ணதிரும் முழக்கங்களும் இரயில் நிலையத்தை உலுக்கின.
மாணவர்களை வலுக் கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி இரயில் நிலைய வாசல் வரை போலீசார் கொண்டு வந்தனர். மாணவர்களை கைது செய்து ஏற்றிச் செல்ல வந்திருந்த போலீசு வாகனங்கள் மாணவர்கள் விடுத்த எச்சரிக்கையின் காரணமாக திருப்பி அனுப்பப் பட்டன. இப்போராட்டத்தின் நியாயத்தை விளக்கி பிற கல்லூரி மாணவர்களையும் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தும் அறிவிப்பை அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாக அறிவித்து விட்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்.
திருச்சி தலைமை தபால்நிலையம் முன்பாக....
மைய முழக்கத்தை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் கலந்து கொண்டனர் இதில் முன்னணியாளர்கள் 35 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் மெயின்காட்கேட் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு மன்மோகன்,இராஜபக்சே உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடசென்ற ம.க.இ.க தோழர்கள் 6பெண்கள் உட்பட 13பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில்....
15/03/2013 அன்று காலை பதினோரு மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை அமைந்திருக்கும் பகுதியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் குழுமி, தலைமைத் தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தைத் துவங்கி வைத்த தோழர் ஜெயராமன், கண்டன ஆர்பாட்டத்தின் போது ஆற்றிய உரையில், இன அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்க குறுக்குவழி ஏதும் இல்லையென்றும், தமிழகத்தின் வீதிகளில் மக்களின் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோமென்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் போது, ஈழத்தமிழர்களின் பிணங்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்கியதைப் போலவே இன்றும் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை உத்தேசித்து ஜெனிவாவுக்கு காவடி தூக்கச் சொல்லும் இந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமெரிக்காவையும், ஐ.நாவின் கபட நாடகங்களையும் இங்குள்ள தேசியளவிலான ஓட்டுக் கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் என்று சகலரும் ஈழத்தமிழருக்கு எதிரானவர்களே என்று பேசிய தோழர் ஜெயராமன், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக தமிழகத்தின் வீதிகளில் 80களில் ஏற்பட்டதைப் போன்ற எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
சுமார் முக்கால் மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் பரபரப்பான அண்ணா சாலையே ஸ்தம்பித்துப் போனது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள், மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசு கைது செய்து தயாராக இருந்த வாகனத்தில் ஏற்றியது.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில்....
சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள், மைய முழக்கங்களை எழுப்பியவாறே ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். ஈழத்தமிழர் நலன்களை டில்லியிலும் ஜெனிவாவிலும் அடகு வைக்கச் சொல்லும் ஓட்டுக் கட்சிகளை அம்பலப்படுத்தியும், போர் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளியான இந்தியாவையும் அம்பலப்படுத்தியும் தோழர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
புதுவையில்....
15.03.2013 அன்று இனவெறியன் ராஜபக்சேவுக்கும் ஈழப் படுகொலையில் அவனுக்குத் துணை நின்ற மன்மோகன், சோனியாகாந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து புதுச்சேரி பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. போலிசின் தடையை மீறி நடந்த இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் அலுவலகங்களையும், சட்டசபையையும் தோழர்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
போராட்ட்த்தைக் கண்டு பீதியுற்ற போலீசு தோழர்களை தடுக்க முயற்சித்ததில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 50 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பகுதியில் திரளாக கூடி ஆர்பாட்டத்தைக் காண வந்த மக்களோ “இப்படிப் பட்ட போராட்டங்கள் தான் சரியானது” என்று பாராட்டிச் சென்றனர்..
புதுவை பல்கலைகழகத்தில்..
14-03-2013 வியாழன் அன்று ஐ.நா மன்றம் இலங்கை இனப்படு கொலைக் குற்றவாளியான ராஜபட்சேவை தண்டிக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் புதுவைப்பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இரண்டாம் வாயிலில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலச் செயலாளர் தோழர்.கலை அவர்கள் உரையாற்றினார். தோழரின் உரையில் இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரிதான் என்பதும் அதற்குக் காரணம் இந்தியத் தரகு முதலாளிகள் இலங்கையிலும், ஈழத்திலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.
இந்திய தரகு முதலாளிகளின் நலன்காக்கும் இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும் என்றும் விளக்கினார். இலங்கை இனப்படு கொலை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் ஜெனீவா தீர்மானம் என்பது வெறும் கண்துடைப்பு என்றும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் ஈழப்பிரச்சினையை தங்களது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க நாம் மாற்றுப்பாதையில் பயணிக்கவேண்டியஅவசியத்தையும்உணர்த்திப்பேசினார்.
மேலும் தோழர் மருதையன் “ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா?” எனும் தலைப்பில் அளித்த நேர்காணலின் ஆடியோ பதிவுகள் சி.டிக்களாக மாணவர்களிடம் விநியோகிப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்…
14.03.2013 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையத்திலிருந்து வி.வி.மு மற்றும் பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்பினர் ராஜபக்சேவின் உருவப்படத்தை செருப்பாலடித்துக் கொண்டே ஊர்வலமாக எடுத்து வந்து திரளாக மக்கள் கூடும் இடத்தில் வைத்து தூக்கிலேற்றினர். முழக்க அட்டைகளுடன் ஊர்வலமாக வந்த தோழர்கள் மைய முழக்கங்களை எழுப்பினர்.
நாற்றாம்பாளையம் கிளையை சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் சரவணன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிங்கள தமிழீழ மக்களைக் கொன்று குவித்த பாசிச இனவெறியன் ராஜபக்சேவை தூக்கிலேற்ற உழைக்கும் மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.இராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா_ க்கும் காவடி தூக்கும் வகையில் போராட்டத்தை கொண்டுச் செல்ல எத்தணிக்கின்ற ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் நோக்கங்களை அம்பலப்படுத்தி தோழர்கள் வீச்சாக பிரச்சாரம் செய்தார். இந்த தெருமுனைப் பிரச்சாரம் மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றது. திரளான மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்…
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஓசூர் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் ஆலைவாயில் பிரச்சாரம் பேருந்துப் பிரச்சாரம் என விரிவான பிரச்சாரம் மேற்கொண்டு அதன் இறுதியாக 15.03.2013 மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகரில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். அடுத்ததாக அச்சங்கத்தை சார்ந்த தோழர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.
அப்போது நூரம்பர்க் விசாரணைகளை ஒத்த விசாரணையே தேவை என்பது வலியுறித்திப் பேசப்பட்டது. முசோலினியை தூக்கிலிட்டது போல் ராஜபக்சேவையும் தூக்கிலிட வேண்டும் என்பதையும் மன்மோகன் சோனியா கும்பலை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்பதையும், அதற்கு 1980 களிலே நடந்த மக்கள் எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவிக்க வேண்டும் என்றும் பேசினர்.
இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் இறுதிவரை நின்று கவனித்து தொடர்ந்துப் போராட வேண்டும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்திச் சென்றனர்.
கோவை
மைய முழக்கத்தின் அடிபடையில் ம.க.இ.க – புஜதொமு – புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று மாலை 5 மணி அளவில் கோவை மாவட்ட ஆச்சியார் ஆலுவலகம் அருகில் உள்ள தொலை தொடர்பு அலுவலகம் (BSNL) முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இனப் படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் வீதிகளில் 1980களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தோழர்கள் நீதிமன்ற வாலாகதில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தொலை தொடர்பு அலுவலகம் (BSNL) நிறுவனத்திற்கு 400 மீட்டர் தூரம் முழக்கமிட்டு சாலையை மறித்து சென்றனர். BSNL அலுவலகத்தை முற்றுகை க்கு 73 பேர் சென்றோம். தயார் நிலையல் இருந்த காவல்துறை தோழர்களை கைது செய்தனர் . பின்னர் இரவு 8.30 மணிக்கு விடுதலை செய்தனர்.
இதுபோல தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் நடத்திய போராட்டக் காட்சிகளிலிருந்து சில புகைப்படப் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
கோவை பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு
சென்னை புமாஇமு சென்டரல் நிலையம் ரயில் மறியல்
சென்னை சென்டரல் ரயில் நிலைய முற்றுகை
சென்னை சென்டரல் ரயில் மறியலில் புமா இமு
திருச்சி தபால் நிலையத்தை பூட்டி மகஇக, பெவிமு போராட்டம்
திருச்சி தபால் நிலையத்தை பூட்டி மகஇக, பெவிமு போராட்டம்
ஓசூரில் புஜதொமு ஆர்ப்பாட்டம்
தேன்கனிக் கோட்டை வட்டத்தில் ராஜபக்சேவை துக்கிலிட்டு விவிமு போராட்டம்!
மனித இருப்பை உறுதிசெய்ய வல்லதும் மனிதருக்குத் தேவையானதுமான ஒரே அடையாளம் மனித அடையாளமாகும். பிற அடையாளங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சமானவை.
இயற்கையின் அடிப்படையில் அமைந்த முக்கியமான அடையாளம் பால் அடையாளமாகும். வழமையானவை என்று கூறக் கூடிய அடையாளங்களுக்குமப்பால் மனித உடலமைப்பிலும் உள்ளத்தின் தன்மையிலும் வழமை எனக் கூறப்படுபவற்றிலிருந்து பிறழ்ந்த பண்புகளையுடைய மனிதரின் பிறப்புக்கும் இயற்கை இடமளிக்கின்றது. அவ் வேறுபாடுகளிற் சில சிறப்பான ஆற்றல்களையும், வேறு சில குறைபாடுகளையும், பிற வழமையானவற்றிலிருந்து வேறுபட்ட முனைப்புகளையும் சுட்டலாம்.
இவ்வாறே கூர்ப்படைந்த மனித இனத்தின் வாழிடம் உட்பட்ட புறச் சூழல்களும் மரபணு மாற்றங்களும் மனிதரது தோற்றத்திலும் ஆற்றல்களிலும் வேறுபாடுகட்கு வழி செய்துள்ளன. இவ்வாறான அடையாள வேறுபாடுகள் இன அடையாளங்களாகக் கொள்ளப்பட்ட போதிலும், அவை ஒரே உயிரினத்துக்கு உட்பட்டனவாயும் தம்மிடையே கலப்பிற்கு இடமளிப்பனவாயும் அமைந்திருந்தன. அதன் பயனாக மனித இனம் தோற்றத்தில் வேறுபாடுடைய பல்வேறு இனப்பிரிவுகளைக் கொண்டதாக விருத்தி பெற்றது, இவற்றில் எதுவுமே மனிதர் சேர்ந்து வாழ்வதற்கு தடையாய் இருந்ததாகக் கொள்ளமுடியாது.
மனிதரிடையே தனிப்பட்ட முறையிலும் குழுக்களாகவும் மோதல்கள் இருந்து வந்துள்ளன. மனிதர் எப்போதுமே போரை விரும்புவோர் என்பதால் அவை நிகழவில்லை. தமது இருப்பு மிரட்டலுக்குட்படும் போது தனிமனிதரும் மனிதக் குழுக்களும் பிறருடன் மோத நேருகிறது. அவ்விதமான ஆதிநிலைக் குழுக்களிடமிருந்து நாம் இன்று வெகுதூரம் வந்து விட்டோம். இன்று எந்த மனிதரதும் மனிதக் குழுவினரதும் இருப்பிற்குப் பிற மனிதரை அழிக்கும் தேவை உள்ளதாகக் கூற இயலாது. ஆயினும், மனித இனம், கடந்த நூற்றாண்டினுள், கொடிய போர்களை அதிகரிக்கும் அளவிற் கண்டுள்ளது. மனிதரை மனிதர் அழித்தற்கான பேரழிவு ஆயுதங்கள், கொடுமையிலும் ஆற்றலிலும் தொகையிலும் பெருகி வந்துள்ளன. மனித உற்பத்தியின் கணிசமான பகுதி வேண்டுமென்றே மனித இனத்தை அழிப்பதற்குப் பயன்படுகிறது.
பொருளாதார விருத்தியின் பேரிலும் மனிதரது தேவைகள் எனப்படுகின்றவற்றின் பேரிலும் மனிதர் தமது சுற்றாடலுக்கும் அதில் வாழும் பிற உயிரிகட்கும் ஈற்றில் மனித இனத்திற்கும் செய்கின்ற கேடுகளைத் தவிர்த்து, மனிதரை மனிதர் அழிப்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கவனத்திற் கொண்டால், அடையாளம் என்பது மனிதரைப் பிரித்து வைப்பதுடன் மனிதருடன் மனிதர் மோதி அழிவதற்கான முதன்மைக் காரணமாக அமைவதைக் காணலாம்.
பெரும் அடையாளங்கள்
இயற்கையின் பாற்பட்ட அடையாளங்களுள் மனிதரிடையே தோற்றத்திலும் உடலமைப்பிலும் வேறுபட்ட மனிதக் குழுக்களின் அடையாளம் முக்கியமானது. எனினும் எந்த மனிதக் குழுவும் தூய தனி இனம் என்று சொல்ல இயலாதவாறு இன்று இனப் பிரிவுகளிடையே கலப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிறத்தின் அடிப்படையிலான வேறுபாடு, அடிமை வியாபார மூலமும் கொத்தடிமை முறையிலும் மனிதர் புலம்பெயர்க்கப்பட்ட காலத்தில் இருந்து தொடருகிறது. ஏற்றத்தாழ்வான ஒரு சமூக அமைப்பும் அதைப் பேணும் உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் மட்டுமன்றிச் சமுதாயத்தில் ஊறிப்போயிருந்த ஆதிக்கச் சிந்தனைகட்கு உரிய சமூக அமைப்பும் நீங்கிய பின்னும், மனித சிந்தனையில் நிற வேறுபாடு நிலைத்துள்ளது. இன்றைய அடையாளஞ் சார்ந்த முரண்பாடுகளில் நிறமும் நிறஞ்சார்ந்த இன அடையாளமும் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனலாம். ஆயினும் அவை தொடர்வதற்கான பிரதான சமூக அடிப்படை நிறமல்ல என்பதையும் இன்று உலகளாவியதாக விரிந்துள்ள ஏகாதிபத்திய முதலாளிய அரசியல் பொருளாதார முறையே என்பதையும் நாம் உணரவேண்டும்.
ஹோண்டூராஸ் தொழிலாளர் பேரணி – 2009
மனித சமுதாயம் என்பது, சிறு சிறு சமுதாயப் பிரிவுகளாகவே தனது அன்றாட இருப்பைக் கொண்டு இருந்து வந்துள்ளது. எனினும் மனிதத் தேவைகளும் அவை சார்ந்த உற்பத்தியும் நுகர்வும் விரிந்து வந்தமையையொட்டிச் சமூகப் பிரிவுகளிடையே உறவாடல்கட்கான தேவை வளர்ந்தது. அதே வேளை, ஒரே சமூகப் பிரிவு வளர்ந்து பெரும் நிலப்பரப்பொன்றிற் பரவி வாழ்ந்த நிலைமைகளில் அச் சமூகத்தில் மேலும் கிளைகள் உருவாகவும் சில கிளைகளிடையே உறவே இல்லாமற் போகவும் வாய்ப்புண்டு. மொழிகளின் விருத்தியை நோக்குவோமானால் சமூகங்களிடையிலான உறவின் தன்மையும் நெருக்கமும் பொது மொழியொன்றின் உருவாக்கத்திற்கு வழி செய்துள்ளமையையும், அதே வேளை, பொது மொழி ஒன்றிற்கான தேவையின்றி ஒவ்வொரு கிளை மொழியும் தனித்துவமான ஒரு விருத்தியையும் இருப்பையும் பேணுவதனையுங் காணுவோம்.
மொழி என்பது முக்கியமான ஒரு சமூக அடையாளமாக இருந்து வந்துள்ளது. அதன் காரணம் விளங்கக் கடினமானதல்ல. எந்தவொரு சமுதாயத்தினதும் அக உறவாடல்களில் மொழியின் பங்கு முதன்மையானது. சமுதாய விருத்திப் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் பயன்பாடு வெவ்வேறு துறைகள் சார்ந்தேனும் இருந்துவரக் கண்டிருக்கிறோம். எவர்க்கும் எந்த மொழி முதன்மையானதாக உள்ளதென்பதைச் சமூகத்தில் அவரது நிலையும் பங்களிப்பும் தீர்மானிக்கக் கூடும். எவ்வாறாயினும் ஒரு தேசம் அல்லது ஒரு தேசிய இனம் என்பதை அடையாளப்படுத்துவதில் ஒரு மொழிக்கு பிற மொழிகளினுங் கூடிய முக்கியம் இருப்பதைப் பொதுவாகக் காணலாம். அதே வேளை, பல மொழிகளோ மொழிப்பிரிவுகளோ சமமான முக்கியத்துடன் ஒரு சமூகத்திற் பகிரப்படுவதும் உண்டு. இதனை, நகர் சார்ந்த சில சமூகங்களில் மட்டுமன்றிப் பழங்குடிச் சமூகப்பிரிவுகள் ஒரு பொதுமையை நோக்கி நகரும் போதும் காண இயலும்.
மதம் எப்போதுமே சமூகங்களின் ஆதிக்கச் சிந்தனையாய் இருந்ததாகக் கூற முடியாது. மனிதரின் அன்றாட வாழ்விலும் பண்பாட்டிலும் மத நம்பிக்கைகளும் மதஞ்சார்ந்த சடங்குகளும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டுள்ளன. முதலாளியத்தின் எழுச்சியை ஒட்டி மதங்களின் முக்கியம் குறையுஞ் சாத்தியப்பாடுகள் இருந்த போதும், மதத்தை ஒரு அடையாளமாக வலியுறுத்தச் சமூக வாழ்வில் மதம் எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகிறது என்பது முக்கியமல்ல. ஒரு மதத் தீவிரக் கொள்கையை வலியுறுத்துகிறவர் அம் மதத்தை முறையாகப் பின்பற்றுபவராக இருக்கத் தேவையில்லை என்பதை நாம் காண இயலும். எனினும், ஒருவரின் அன்றாட வாழ்வுடன் குறிப்பிடத்தக்க உறவே இன்றி மதம் என்பது அவரது சமூக அடையாளமாக அமையலாம். சில சூழ்நிலைகளிற் பண்பாடு உட்பட பிற அடையாளங்களின் கூறுகளின் துணையுடன் மதம் ஒரு தேசிய இன அடையாளமாகவும் அமையலாம்.
சாதி என்பது குறிப்பாகத் தென்னாசியாவின் நிலவுடமைச் சமூகத்தின் வர்க்க அடையாளத்தின் நீட்சியாகவுள்ளது. நிலவுடையச் சமுதாய உற்பத்தியுறவுகள் தொடர்ந்த சூழல்களில் அது வலுவான ஒரு வர்க்க அடையாளமாக இருந்தது. நிலவுடமை உற்பத்தி உறவுகள் பெருமளவும் தளர்ந்தோ அழிந்தோ போன பிறகும் நிலவுடமைச் சிந்தனையின் நீட்சியாகச் சாதியச் சிந்தனைகள் நிலைக்கின்றன. அகமண முறையின் மூலம் நிலைபெற்று வந்த சாதி அடையாளங்கள் இன்னமும் நகரச் சூழல்களில் அகமண முறையின் தொடர்ச்சி மூலம் பேணப்படுவதை நாம் காணுகிறோம்.
பண்பாடு என்பது முற்குறிப்பிட்ட அடையாளங்கள் அனைத்தையும் விட வேகமாக மாறுவதாகும். எனினும் பண்பாட்டை முன்னிறுத்திச் சமூகங்களின் தனித்துவத்தையும் அடையாளச் சிறப்பையும் வலியுறுத்துவோர் தமது பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்க விரும்புவதில்லை. மனிதரின் சமூக இருப்பிற்கும் நடைமுறைக்கும் முக்கியமற்ற பண்பாட்டுக் கூறுகளை எவரும் மிகையாக வலியுறுத்தல் பண்பாட்டைப் பேணும் நோக்கின்றி அடையாளத்தை வலியுறுத்தும் நோக்கிலேயே என்பதை நாம் அவதானிக்கலாம்.
சமூக உற்பத்தி முறையும் உற்பத்தி உறவுகளும் மாறுகையிற் பண்பாடு எவ்வளவு மாறுகிறது என்பதைப், பண்பாட்டை மேலைத்தேய-கீழைத்தேய என்று பிரித்துப் பேசுவோர் தவறவிடுகின்றனர். இன்று நாம் மேலைத்தேயப் பண்பாடு என்பது முதலாளியத்தின் விளைபொருளாகும். நகர் சார்ந்த பழைய கிரேக்கச் சிந்தனையின் தொடர்ச்சியான பண்பாடாக அதைக் கொள்ள இயலாது என்பதுடன் ஐரோப்பிய நிலவுடமைச் சமூகத்தினின்று உருப்பெற்ற முதலாளியப் பண்பாடு, பின்னைய முதலாளிய விருத்தியையொட்டி மேலும் பாரிய மாற்றங்கட்குள்ளாகி வந்துள்ளது.
இந்தியப் பண்பாட்டுக்குரியன என மெச்சப்படும் பல பண்பாட்டுக் கூறுகளின் வேர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவையே. எனவே சீனப் பண்பாடென்பதும் பிற ஆசியப் பண்பாடுகளெனக் கூறப்படுவனவும் ஒவ்வொன்றும் தனித்துவமான ஒரு பண்பாட்டிலிருந்து உருவானவை என்பதை விடப் பல்வேறு பண்பாடுகளின் தாக்கத்தால் உருவானவை என்பது கூடப் பொருந்தும்.
எனவே மனிதர் தம்முடைய தனித்துவமான அடையாளங்கள் என்று கூறித் தம்முட் பிளவுபட்டுப் போரிடுமளவிற்குத் தூண்டும் அடையாளங்களில் எதுவும் தூயதுமல்ல, முற்றிலும் தனித்துவமானதும் அல்ல. அடையாளங்களின் பல்வேறு கூறுகளின் சேர்க்கையில் தனித்துவம் இருக்கலாமே ஒழிய, ஒவ்வொரு அடையாளக் கூறும் பிற அடையாளங்கட்குரிய பலருடன் பகிரப்படுவது என நாம் காணலாம்.
மனிதரை இன்று அதிகம் பிளவுபடுத்தியுள்ள அடையாளங்களில் மதமும் தேசியமும் முக்கியமானவை. மதங்களின் பேரால் மக்கள் மோதும் வேளையில், எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என மதத் தலைவர்கள் எனப்படுவோர் சொல்லத் தவறுவதில்லை. அதைவிடப் பொய்யான கூற்றுக்கள் அதிகம் இருக்கமுடியாது. ஏனெனில் மாதங்கடகுப் பொதுவானவை என்று கூறக்கூடிய எதுவும் இருப்பின், அது, மனித நேயத்திற்குள் அல்லது மனிதரின் சமுதாய இருப்பிற்குத் தேவையான அற ஒழுக்க விதிகட்குள் அடங்கும். எனவே அவ்வாறான பொதுப் பண்புகளைப் பேண மதங்கள் தேவையில்லை. மனிதர் மதங்களை நாடுவது அவ்வாறானதொரு தேவை கருதியும் அல்ல. அல்லல் மிக்க வாழ்வில் அல்லல்களின் காரணங்களைக் கண்டறிந்து தீர்க்க வழிகாட்டுதற்கு மாறாக மனிதர்க்கு ஆறுதல் கூறுவதுடன் தற்காலிகமான மனநிம்மதியை மதம் வழங்குகிறது. எனவே வாழ்க்கை அல்லல்மிக்கதாக உள்ளவும் தனிப்பட்ட முறையிற் பலருக்கு மதம் எனும் பற்றுக்கோடு தேவைப்படுகிறது.
ஆனால் தனிமனித நம்பிக்கை என்ற எல்லையைத் தாண்டி மனிதரை வேறுபடுத்திப் பிரிக்கும் அடையாளமாக அது வலியுறுத்தப்படும் போது, அது ஆபத்தான சக்தியாகிறது. இவ்விடத்து அரசியற்படுத்தப்பட்ட மதங்களும் அவற்றின் தீவிர வடிவங்களும் சமூகக்கேடானவையாகின்றன. எந்தவொரு மதத்தையும் அவ்வாறான நிலைக்குத் தள்ள இயலும் என்பதை நாம் அண்மையிற் கண்டுள்ளோம்.
தேசியம் என்பது மனிதரின் இயல்பான இருப்புக்குரிய ஒரு அடையாளமல்ல. தேசம் என்ற கருத்தாக்கம் வரலாற்றில் மிக அண்மையானது. அரசு என்பதையும் நாடு என்பதையும் தேசம் என அடையாளப்படுத்தல் முதலாளியத்திற்குத் தேவைப்பட்டது. அதன் பயனாகப் பல தேசிய இன அடையாளங்கள் அழிக்கப்பட்டன. முக்கியமாகப், பல மொழிகள் வழக்கொழிந்தன அல்லது வழக்கொழிக்கப்பட்டன. இவ்வாறான வழக்கொழிப்புப் பண்பாட்டையும் பாதித்துள்ளது. மனிதக் குழுக்களின் அடையாளங்களின் சிதைவு முதலாளியத்தின் தேச எல்லைக்குள் நில்லாது அதற்கு வெளியிலும் நடந்துள்ளதை நாம் அறிவோம்.
எனவே தேசியம் என்பது வெறுமனே குறிப்பிட்ட ஒரு சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பைப் பேணுவதற்கும் அப்பால் பிற தேசங்களை ஆதிக்கத்துக்குட்படுத்தவும் அழிக்கவும் முற்படுவதை நாம் காணுகின்றோம். தேசத்தினதும் தேசத்தின் நலன்களினதும் பாதுகாப்பினதும் பெயராற் கொடிய போர்கள் நடத்தப்படுகின்றன. உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் தேசியத்தின் பேராற் தம்முட் போரிடும் விதமாக இன்று தேசியம் என்பது பின்தங்கிய முதலாளிய உற்பத்தியுடைய நாடுகளைப் பிளவுபடுத்தவும் பயன்படுகிறது. எனினும் இத் தேசங்களினதும் தேசிய இனங்களதும் மோதல்கள் பெரு முதலாளியத்திற்கு மட்டுமே நன்மை பயக்கின்றன. உண்மையில் இப் போர்களுக்குப் பின்னல் உள்ள ஊக்குவிப்பாளர்கள் பன்னாட்டுக் கம்பனிகளாக இருப்பதும் அவர்களுக்கும் அவர்களுடைய மூலதனத்திற்கும் இப் போர்களால் ஒரு தேசம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கன. அவர்கள் வலிய தேச அரசுககளுடன் தம்மை அடையாளப்படுத்தி வலிமை குறைந்த தேச அரசுகளையும் தேசங்களையும் தேசிய இனங்களையும் பிரித்தும் பிளவுபடுத்தியும் போரில் ஆழ்த்தியும் தேவையானபோது அவற்றின் மீது போர் தொடுத்தும் அடக்கியாள முற்படுகின்றனர்.
சிறு அடையாளங்கள்
இவை மனித சமூகம் ஒன்றின் முழுமைக்கோ அதன் ஒரு தனித்துவமான சமூக-பொருளாதார-பண்பாட்டுக் கூறாக இயங்கக் கூடிய ஒரு பகுதிக்கோ உரிய அடையாளங்களுக்குட் காணப்படும் இயற்கையின் பிறழ்வுகள் எனப்படுவற்றையும் தனிமனிதத் தெரிவுகளையும் சார்ந்த சிறுபான்மை அடையாளங்களை இவ்வாறு கூறலாம். இவ்வாறான அடையாளமுடையோரைச் சிலர் விளிம்பு நிலை மாந்தர் என்பர். எனினும் இங்கு கருதப்படும் அடையாளங்கள் ஒவ்வொன்றும் மனிதரை விளிம்பு நிலையில் வைத்திருப்பதாகக் கூறுவது கடினம். எவ்வாறாயினும் இவ்வாறான அடையாளங்களால் மனிதர் பாரபட்சங்களுக்கு உட்பட இடமுண்டு என்பது உண்மை.
சுயபாற்காமம் என்பதைக் குற்றமாகக் கருதித் தண்டித்த பல நாடுகளில் இன்று அது ஏற்கப்பட்டுள்ள போதும், சமூகத்தில் உள்ள மனத்தடைகள் காரணமான பாரபட்சம் தொடர்வதை நாம் காணுகிறோம்.
உடலமைப்பிலும் உளவியலிலும் வேறுபாடு உடையோருடன் சமூகம் பொதுவாகப் பகைமையுடனேயே நடக்கின்றது. வலது குறைந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் உறவையோ நட்பையோ கருதி மனிதர் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தாலும் அவர்கட்குச் சமவாய்ப்பளிக்க எல்லாச் சமூகங்களும் முன்வருவதில்லை. அவர்கட்கான சலுகைகள் உள்ள இடங்களிலும் சமத்துவம் உள்ளதா என்ற கேள்வியுள்ளது. முடவர், செவிடர், குருடர், பைத்தியகாரர் போன்ற சொற்களைத் தவிர்ப்பது நல்ல நோக்கமுடையதாயினும் உடல், உளக் குறைபாடுகள் பற்றிய மனத்தடைகளை நீக்கப் பேர் மாற்றம் போதாது.
இடதுகைப் பழக்கமுடையோரும் எல்லாச் சமூகங்களிலும் சமமாக நடத்தப்படுவதில்லை. பொதுப் பாவனைக்கான கருவிகள் முதல், கதவுகள் வரையிலான பலவும் வலது கைப் பழக்கக்காரருக்கானவை என்பதை நாம் பொதுவாகக் கவனிப்பதில்லை. மேற்குறிப்பிட்ட உடல் உள நிலை தொடர்பான சிறுபான்மை அடையாளங்கள் போகச், சமூக நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் விதவை, பரத்தை, சில்லறைத் திருடர் போன்றோர், குறிப்பாகப் பின்தங்கிய சமூகங்களில், மிகவுங் கேவலமாகக் கருதவும் நடத்தவும் படுவதை நாம் அறிவோம். இன்று பெருந்தொகையான முதியோரும் இவ் வகைக்குள்ளடங்குவர். பெரும் அடையாளங்களின் பேரிற் சமூகப் பிரிவினராக ஒன்றுபட்டுப் போராடக் கூடிய அளவிற்கு சிறு அடையாளங்களின் அடிப்படையில் போராடல் இயலாவிடினும் சமூக விழிப்புணர்வு கூடுதலாக உளள சூழல்களில் அவர்களாற் தமது உரிமைகட்காகப் போராட முடிகிறது. எனினும், அடிப்படையான சமூக மாற்றம் என வரும் போதும் பிற நியாயமான போராட்டங்களின் போதும் அவர்களுடைய தேவைகளைக் கணிப்பில் எடுப்பதன் மூலம் உரிமைப் போராட்டங்கள் வலிமை பெறுகின்றன என்பது கவனத்திற்குரியது.
மனித இருப்பிற்கான போராட்டம்
மனித குலத்தின் நலமானதும் நிலையானதுமான இருப்பு, மனித சமுதாயம் நீதியானதாயும் சமத்துவமானதாயும் அமையும் போதே இயலும். அடையாள வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வாயும் அடக்கலையும் நசுக்கலையும், சுரண்டலையும் உள்ளடக்கியும் உள்ளளவும் அடையாள அடிப்படையிலான பகைமை தவிர்க்க இயலாதது.
தென் கொரிய வேலை நிறுத்தம் – 1987
எனவே, ஒரு அதிகார வர்க்கத்தின் நிலைப்பிற்காகப் பல மனிதரைச் சில மனிதர்; சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட வர்க்க சமூகத்தின் உற்பத்தி உறவுகள் பகையானவை. வர்க்க முரண்பாடு, மனித இருப்பின் அடிப்படை முரண்பாடாகவும் பகை முரண்பாடாகவும் இருந்து வருகிறது. அவ்வாறான சுரண்டல் அமைப்பின் நீடிப்பிற்காக முதலாளியம் பிற சமூக முரண்பாடுகளைத் தனக்கேற்பப் பயன்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக, முதலாளியம், நவீன ஏகாதிபத்தியமாகி உலக மயமாக்கல் என்ற பேரில் உலகு முழுவதையும் சில பெரு முதலாளியக் குழுக்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்காக தேசிய, மத, இன அடையாளங்கள் ஆகிய யாவற்றையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவுபடுத்துகிறது.
அத்துடன், ஏகாதிபத்தியம், பின்நவீனத்துவத்தின் மூலமும் அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வரும் புதிய கோட்பாடுகள் மூலமும் சிறு அடையாளங்கள் எனப்படுபவனவற்றை மிகைப்பட வலியுறுத்திப் பெரிய பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திருப்பவும் முனைகிறது. இன்று நவகொலனிய முறை மூலம் ஏகாதிபத்தியம் பின்தங்கிய முதலாளிய நாடுகளின் அரசுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் மக்களின் எழுச்சிகளைக் கட்டுப்படுத்துவது போக, என்.ஜி.ஒக்கள் எனப்படும் ‘தன்னார்வக்’ குழுக்கள் மூலமும் மக்களின் ஐக்கியப்பட்ட எழுச்சிக்குக் குழி பறிக்கிறது.
இந் நிலையில் மக்களின் நலன் மீதும் மானிட நிலைப்பின் மீதும் நலமான இருப்பின் மீதும் அக்கறையுடையோர்; செய்யக்கூடியது என்ன?
அடிப்படையான முரண்பாட்டை விட மற்றவற்றை மாயை என்று புறக்கணிக்க இயலுமா?
அடிப்படையான முரண்பாடான வர்க்க முரண்பாடு தீர்ந்தாற் பிற யாவும் தாமாகத் தீருமென ஆறுதல் கூற இயலுமா?
மேற்கண்டவாறான அக்கறையின்மை மனிதரிடையே அடையாளஞ் சார்ந்த பகையும் அதன் விளைவான மோதல்களும் வலுப்பதற்கே உதவும். எனவே ஆண்-பெண் வேறுபாடு தவிர்ந்த சகல அடையாள வேறுபாடுகளும் மனித இனத்திற்குத் தேவையற்றவை என்பதை உணர்வதுடன், ஆண்-பெண் வேறுபாடு பாகுபாட்டுக்கும் ஆண்களின் மேலாதிக்கத்திற்கும் வழி செய்தல் மானுட நலனுக்குக் கேடானது என்பதை ஏற்பதும் முக்கியமானது.
எனவே, எந்த அடையாள அடிப்படையிலான முரண்பாட்டையுஞ் சுமுகமாகத் தீர்க்கக் கூடியவாறு அதை நீதி நியாயத்தின் அடிப்படையிற் கையாளுந் தேவை நமக்கு உண்டு. நீதி நியாயங்கள் மறுக்கப்படும் போது நிகழும் போராட்டங்கள் சரியானவை என்பதுடன் நீதிக்கான பிற போராட்டங்களுடன் ஒவ்வொன்றும் உறவு படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படுவதும் மனித இனத்தின் இருப்பிற்கு அவசியமானது.
மனித அடையாள வேறுபாடுகள் தம்மளவிற் கேடானவையல்ல. அவை நட்பான முரண்பாடுகளாக அமையுமாறு கவனித்துக் கொள்வது எவ்வாறு என்பது தான் மனித இனத்தை எதிர்நோக்கும் பெரிய சவாலாகும்.
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 3
முன்னுரை:
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்தவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம். 2002ஆம் ஆண்டு புதிய கலச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!
– வினவு
__________________________________________ “சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்” என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற “மதச்சார்பற்ற” கூட்டாளிகளின் பிழைப்பு வாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான “மதச்சார்பற்ற” எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார். சங்க பரிவாரத்திற்கும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் இடையிலிருக்கின்ற நடுநிலையாளராகவும் நல்லவராகவும் வாஜ்பாயியைச் சித்தரிக்கும் மோசடி வேலையை மேற்சொன்ன கட்சிகளுடன் தகவல் ஊடகங்களும் இடைவிடாது செய்து வருகின்றன. தன் உண்மையான முகத்தின் மீது வலுக்கட்டாயமாகப் பசை தடவி ஒட்டப்படும் இந்த ‘மதச்சார்பற்ற’ முகமூடியைப் பிரதமர் என்ற முறையிலேயே பலதடவை அவர் பிய்த்தெறிந்திருக்கிறார்.
இரண்டாண்டுகளுக்கு முன் கும்பமேளாவில் விசுவ இந்து பரிசத் சாமியார்கள் ராமன் கோயில் கட்டும் திட்டத்தைப் பிரகடனம் செய்தவுடன் “அயோத்தி கோயில் என்பது நிறைவேறாமலிருக்கின்ற தேசியக் கனவு” என்றார். கிறித்தவ தேவாலயங்களும் பாதிரியார்களும் தாக்கப்பட்டபோது “மதமாற்றம் குறித்த தேசிய விவாதம் தேவை” என்றார். பாடத்திட்டங்களில் பார்ப்பனப் புரட்டு நடந்தபோது “வரலாற்றில் தவறு இருந்தால் திருத்த வேண்டியதுதானே” என்றார். பிரதமர் என்ற முறையில் அமெரிக்கா சென்று அங்கே விசுவ இந்து பரிசத்தின் கூட்டத்தில் “நான் ஒரு சுயம் சேவக் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றார். பாரதீய ஜனதாவின் தோல்விக்கான சகுனங்கள் தெரியத் தொடங்கவே, “நீங்கள் ஓட்டுப் போடாவிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி” என்று முசுலீம் மக்களை உ.பி.தேர்தல் பிரச்சாரத்திலேயே மிரட்டினார். இவை கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நல்லவர் வாஜ்பாயியின் சில நடவடிக்கைகள்.
விஸ்வ இந்து பரிஷத் சாமியார்களின் ஆணைப்படி உச்ச நீதிமன்றம் கையகப்படுத்திய மசூதியைச் சுற்றியுள்ள நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். இந்த ‘ஆராய்ச்சி’ நடக்கும்போதே கரசேவகர்கள் அயோத்தியில் குவிய அனுமதித்தார். “தாவாவுக்குரிய இடத்தில் நீதிமன்ற உத்திரவு பேணப்படும்” என்ற ஜனாதிபதிக்கு உரை எழுதிக் கொடுத்துவிட்டு, உத்திரவை மீறுவதற்கான கட்டைப் பஞ்சாயத்துக்கு சங்கராச்சாரியை வரவழைத்தார். “மசூதி இருந்த நிலப்பகுதியைச் சுற்றிக் கோயில் கட்டிக்கொள்வது, இறுதித் தீர்ப்பு முசுலீம்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் தீர்ப்புக்கு விசுவ இந்து பரிசத் கட்டுப்படுவது” என்ற சூழ்ச்சித் திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக சங்கராச்சாரியை அறிவிக்கச் செய்தார். ‘முரண்டு பிடிப்பவர்கள் முசுலீம்கள்தான்’ என்ற பொய்த் தோற்றத்தை சங்கராச்சாரியின் மூலம் உருவாக்கினார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது “மசூதி இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தூண் தானம் செய்யலாம்” என்று சோலி சோரப்ஜியைப் பேசவைத்து விட்டு, அது பற்றிக் கேள்வி எழுந்தபோது “அது அட்டார்னி ஜெனரலின் சொந்தக் கருத்து” என நாடகமாடினார். இறுதியில் பிரதமர் அலுவலகத்திலிருந்தே ஒரு அதிகாரியை அனுப்பி தூணைத் தானம் வாங்கி அரசாங்கக் கருவூலத்தில் பூட்டி வைத்து இராமன் கோயில் கட்டுமானப் பணியில் மத்திய அரசையும் சிக்க வைத்திருக்கிறார். இவை அயோத்தி பிரச்சினையில் யோக்கியர் வாஜ்பாயியின் தகிடுதத்தங்கள்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஐ.எஸ்.ஐ. சதி என்று நரேந்திர மோடி சொன்னதையும், அதை அத்வானி வழிமொழிந்ததையும், குஜராத் முசுலீம் படுகொலையை நியூட்டன் விதியைக் காட்டி மோடி நியாயப்படுத்தியதையும், 72 மணிநேரத்தில் ‘சகஜ நிலை’ திரும்பிவிட்டது என அத்வானியும் மோடியும் ஒத்துப் பாடியதையும் வாஜ்பாயி மறுக்கவில்லை; விளக்கம் கேட்கவில்லை. “கோத்ரா சம்பவம்தான் பயங்கரவாதம், அதன்பின் நடைபெற்ற முசுலீம் எரிப்பெல்லாம் பயங்கரவாதமல்ல” என்று அத்வானி சொன்னதையும், கோத்ராவுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் பொடா சட்டம் பாய்ந்ததையும் பின்னர் தந்திரமாக வாபஸ் பெறப்பட்டதையும் பற்றி வாஜ்பாயி அவர்களிடம் எந்த விளக்கமும் கோரவில்லை. பொடா சட்டம் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருந்தார்.
பின்னர் மோடியை டெல்லிக்கு வரவழைத்தார். மோடிக்கு கசையடியும் கல்தாவும் உறுதி என்பதைப் போல பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன. ஆனால் மரபுக்கு விரோதமாக அதிகாரிகளைக் கூட வெளியே அனுப்பிவிட்டு மோடி, அத்வானி ஆகிய சுயம்சேவகர்களுடன் இரகசிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் குஜராத் பயணம். படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற தேசிய மனித உரிமைக் கமிசனின் முடிவு, குஜராத் அரசும் விசுவ இந்து பரிசத்தும் இணைந்து நடத்திய இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்கள், மோடியை நீக்கக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகிய அனைத்தும் வாஜ்பாயியின் சட்டைப் பையில் இருந்தன. கண்முன்னே பாதிக்கப்பட்ட முசுலீம் மக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். ஆனால் பிரதமரோ முன்னரே தயாரிக்கப் பட்ட வசனத்தை ஒரு நடிகனுக்குரிய தேர்ச்சியுடன் பேசினார். “சொந்த நாட்டின் அகதிகளாகிவிட்டீர்களே” என்று முசுலீம்களைப் பார்த்து கண்கலங்கினார் – ஆனால் அவர்களைப் ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்று கூச்சலிடும் விசுவ இந்து பரிசத்தின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. “எந்த முகத்துடன் முசுலீம் நாடுகளுக்குச் செல்வேன்” என்று பக்கத்திலிருந்த கொலைகாரன் மோடியிடம் கோபமாகக் கேட்க வேண்டிய கேள்வியை முசுலீம்களிடம் கேட்டார். நடந்த படுகொலையையே தனக்கு நேர்ந்த அவலமாகச் சித்தரித்து அதையே முசுலீம் மக்களிடம் சொல்லி அனுதாபம் தேடினார்.
வாஜ்பாயி என்ற இந்த முகமூடிக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இரண்டிலொன்றைத் தெளிவாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் உணர்ச்சிப் பசப்பலின் மூலம் பிரச்சினையையே திசை திருப்புகின்ற ஆற்றல் வாஜ்பாயி என்ற இந்த முகமூடிக்கு இருக்கிறது. “நீங்கள் அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவரா, சங்க பரிவாரத்துக்குக் கட்டுப்பட்டவரா என முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது” என்று பாராளுமன்றத்தில் சோனியா எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்த்து அதைத் தன்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதலென்று திசை திருப்பினார் வாஜ்பாயி. “மரணத்தைக் கூடச் சந்திப்பேன் – களங்கத்தைச் சுமக்கமாட்டேன்” என்று சீறினார்; கற்பின் பெருமை குறித்து தமிழ் சினிமாக் கதாயாயகி பேசும் கிளைமாக்ஸ் வசனத்தைப் போன்ற சரக்கை அவிழ்த்து விட்டு கேள்வியையே வெற்றிகரமாகத் திசைதிருப்பினார். இதே பசப்பல்தான் குஜராத்திலும் நடந்திருக்கிறது. நான் மோடியல்ல என்று முசுலீம்களிடம் தெரிவித்திருக்கிறது இந்த முகமூடி.
தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற கூட்டாளிகளின் நிர்ப்பந்தம் காரணமாக வாஜ்பாயி சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்றும், தங்கள் இந்துத்துவக் கொள்கைகள் எதையும் அமல்படுத்த முடியவில்லையென்றும் போலியாக அங்கலாய்த்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இந்தப் போலியான அங்கலாய்ப்பையே தங்களது கொள்கை உறுதிக்குச் சான்றாகக் காட்டி ஏய்க்கிறார்கள் கூட்டணிப் பிழைப்புவாதிகள். முகமூடி கழன்று விழும் தருணங்களில் இவர்களே முந்திக் கொண்டு முட்டுக் கொடுக்கிறார்கள். “சங்கராச்சாரி பஞ்சாயத்தில் தவறில்லை” என்கிறார் கருணாநிதி; “தூண் தானம் தவறில்லை” என்கிறார் பஸ்வான்; “குஜராத்தில் கலவரமில்லை” என்கிறார் பெர்னாண்டஸ். முகமூடி பேசவேண்டிய வசனங்களைத் தாங்களே பேசி முகமூடியின் கற்பை இவர்கள் காப்பாற்றுகிறார்கள்.
ஆர்.எஸ்.ஆஸ்.ஸின் நிர்ப்பந்தம் காரணமாக வாஜ்பாயி சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்று அனுதாபப்படுகிறார்கள் எதிர்க் கட்சிகள். “மார்ச் மாதத்திற்குள் அயோத்தி பிரச்சினை தீர்ந்து விடும் என்று வாஜ்பாயி நம்பிக் கொண்டிருந்தார்… நாம் வேறு அவருக்கு இன்னும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று எண்ணி எதிர்க்கட்சிகளாகிய நாங்களும் அவருக்கு நிர்பந்தம் கொடுக்கவில்லை” என்கிறார் மார்க்சிஸ்டு தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி (டைம்ஸ் ஆப் இந்தியா, 5.3.2002)
நிர்ப்பந்தம் கொடுத்தால் முகமூடி கிழியும். சங்க பரிவாரத்தின் ஆட்சி என்ற உண்மை வெளிப்பட்டால் அதைச் சந்திக்கத் தெருவில் இறங்க வேண்டியிருக்கும். பாராளுமன்ற அரட்டை மண்டபத்தில் அமர்ந்து “மோடியை நீக்குங்கள்” “ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கட்டுப்படுத்துங்கள்” என்று நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமில்லாத நபரிடம் வைத்து எதிர்க்கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகம் முடிந்து அவர்களது கோழைத்தனம் அம்பலத்திற்கு வரும். கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கோ அவர்களது மந்திரிப் பதவியும் பிழைப்புவாதமும் வாஜ்பாயி என்ற முகமூடி கழன்ற மறுகணமே முடிவுக்கு வந்துவிடும். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட மதவெறியின் முகமூடி இப்போது ‘மதச்சார்பின்மையின்’ முகமூடியாகிவிட்டது.
________________________________________ புதியகலாச்சாரம், ஏப்ரல் 2002.
________________________________________
ஆதிக்க சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக, ஜனவரி 1-ஆம் தேதியன்று, மகாராஷ்டிர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் இவருடன் கொல்லப்பட்டுள்ளனர். அஹமத் நகர் மாவட்டத்தின் நவேசா பட்டாவிலிருக்கும் திரிமூர்த்தி பவன் பிரதிஸ்தான் எனும் கல்லூரியின் துப்புரவுப் பணியாளர்களான சச்சின் காரு (வயது 24) , சந்தீப் (25), ராகுல் (20) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இவர்களில் சச்சினும் இதே கல்லூரியில் படித்து வந்த ராதாவும் காதலித்திருக்கின்றனர். ராதா, ஆதிக்க சாதியை சேர்ந்த போபட் தரன்டாலே என்பவரின் மகளாவார்.
தரன்டாலே குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செயும் முடிவில் இருவரும் இருந்ததால், சச்சினைக் கொல்வதற்குச் சதித்திட்டம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் அறிமுகமான அசோக் என்ற நண்பர், தரன்டாலேவின் பண்ணை வீட்டில் இருக்கும் “செப்டிக் டேங்கை” கழுவ வருமாறு சச்சினையும் மற்ற இருவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அன்று மாலையில் போலீசைத் தொடர்பு கொண்ட தரன்டாலே தரப்பினர், சச்சினும் ராகுலும் சேர்ந்து சந்தீப்பைக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டதாகவும், செப்டிக் டேங்கின் உள்ளே சந்தீப் இறந்துகிடப்பதாகவும் தகவல் கொடுத்தனர். சந்தீப்பின் முகத்தில் காயங்கள் இருந்தன. தேடுதலுக்குப் பின் அருகில் இருந்த வறண்ட கிணறு ஒன்றில் ராகுலின் உடலைக் கண்டுபிடித்தது போலீசு. சச்சினுடைய தலை, கை,கால்கள் அனைத்தும் வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தன.
சாதிவெறிக் கொலை என்று தெளிவாகத் தெரிந்தும் இதனை மூடிமறைக்கவே போலீசு முயன்றது. கொல்லப்பட்ட சந்தீப்பின் அண்ணன் பங்கஜ் ஒரு இராணுவ சிப்பாய். செய்தி அறிந்து அவர் காஷ்மீரிலிருந்து நேரில் வந்து விடாப்பிடியாகப் போராடியதனால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தரன்டாலே குடும்பத்தினர் 5 பேர்களை போலீசு கைது செய்திருக்கிறது. இருப்பினும் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அனைவரும் உயிருக்குப் பயந்து ஊரை விட்டே சென்று விட்டனர்.
இந்து மதவெறி – அரச பயங்கரவாதத்தின் அட்டூழியம் : கொள்ளயடிக்கப்பட்டு தீவைத்து நாசமாக்கப்பட்ட இசுலாமியர்களின் வீடு மற்றும் உடைமைகள்.
இந்த ஆதிக்க சாதி வெறிக் கொலை சம்பவம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் கழித்து, ஜனவரி 6-ஆம் தேதியன்று மகாராஷ்டிராவின் துலே நகரில் உணவு விடுதி ஒன்றில் கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு இந்து-முஸ்லிம் மோதலாக வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் குவிக்கப்பட்ட போலீசுப் படை நேரடியாகவே முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 34 முஸ்லிம்களின் உடலில் குண்டு பாய்ந்திருக்கிறது. முழங்காலுக்கு கீழே சுடவேண்டும் என்று விதி இருந்தும், அனைவருக்குமே தலையிலும், கழுத்திலும், விலாவிலும், முதுகிலும்தான் குண்டு பாந்திருக்கிறது. தங்கள் மீது ஆசிட் வீசப்பட்டதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசு ஊடகங்களிடம் புளுகிய போதிலும், போலீசே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட ஆசிட் வீச்சு பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தரப்பாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் கல் வீசிக் கொண்டிருந்தபோது, இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை மட்டுமே தாக்கியிருக்கிறது போலீசு. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு, முசுலிம் குடியிருப்புகளைக் கொள்ளையடித்திருக்கிறது. மறுநாள் விடிவதற்குள் தடயங்கள் ஏதுமில்லாமல் கலவரம் நடைபெற்ற பகுதி முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் புகார் கொடுக்க வந்தபோது, “புகார் கொடுத்தால் உங்கள் மீதே வழக்கு போட்டு உள்ளே வைத்து விடுவோம்” என்று அச்சுறுத்தி விரட்டியிருக்கிறது போலீசு. முஸ்லிம் பகுதிகளில் வீடுவீடாகச் சோதனை நடத்திக் கைது செய்ய இருப்பதாக ஒரு வதந்தியை போலீசே திட்டமிட்டு கிளப்பி விட்டதனால் பீதியடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த முஸ்லிம்களெல்லாம் அவசர அவசரமாக வெளியேறியிருக்கின்றனர்.
இந்த மதவெறி – அரசு பயங்கரவாதப் படுகொலைகள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னரே துலேவுக்கு மாநில முதல்வரும் உள்துறை அமைச்சரும் வந்தனர். போலீசே முன்நின்று கலவரக்காரர்களைத் தூண்டி விடுவதும், கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பதும் செல்பேசி காமெராக்களில் பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் வெளிவந்துவிட்டதால், போலீசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டு விட்டது. சொத்துகளைச் சூறையாடிய 6 போலீசார் மட்டும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாநில முதல்வர் இந்த சம்பவத்தை போலீசுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல் எனச் சித்தரித்ததன் மூலம், இந்து வெறியர்களைப் பாதுகாத்திருப்பதுடன், இந்துவெறியர்களின் அறிவிக்கப்படாத அடியாள் படையே போலீசு என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததற்காகவே படுகொலை செய்யப்பட்ட சச்சின் காரு (இடது) மற்றும் அவரது நண்பர்கள்
அதே ஜனவரி மாதத்தில் துலே கலவரத்தை அடுத்த ஒரு வாரத்தில், அந்நகரிலுள்ள அம்பேத்கர் சமூக சேவைக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பிரமோத் சுக்தேவ் பூம்பே இந்து மதவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர், இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்து வகுப்பில் விளக்கும்போது, இராமாயணத்தில் சில சம்பவங்கள் சாதி ஒடுக்குமுறையை ஆதரிப்பதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதனை இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது செல்போன் காமெராவில் பதிவு செய்து, பஜ்ரங் தள், வி.எச்.பி. யினரிடையே சுற்றுக்கு விட்டிருக்கிறான்.
பூம்பே இந்து மதத்தை இழிவு படுத்துவதாகவும், இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும், பிரமோத் பூம்பேவை வேலையை விட்டு நீக்குமாறும் இந்து மதவெறியினர் பிரச்சினையைத் தொடங்கினர். கல்லூரி முதல்வரும் இதற்கு விளக்கம் கேட்டு பேராசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று விளக்கமளித்த பூம்பே மன்னிப்பும் கேட்டிருந்தார். கல்லூரி சார்பில் துலேவிலுள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தப்பட்டு சமாதான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிக்குள் நுழைந்த பஜ்ரங் தள், விஷ்வஇந்து பரிஷத் குண்டர்கள், பூம்பேவை அடித்து உதைத்து மாடிப்படிகளில் உருட்டிவிட்டுக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இத்தாக்குதலில் வட மராட்டிய பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பங்கேற்றதாகக் கூறியிருக்கிறார் கல்லூரி முதல்வர்.
****
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள இம்மூன்று சம்பவங்களும் தொடர்பற்றவையோ தற்செயலாக ஒரே மாதத்தில் நடந்து விட்டவையோ அல்ல. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதிவெறிப் படுகொலையை நடத்தியவர்களும், பேராசிரியர் மீதான தாக்குதல் தொடுத்தவர்களும் ஒரே விதமான சாதி ஆதிக்க சக்திகள்தான். முஸ்லிம்கள் தாக்கப்பட்ட அதே துலே நகரில்தான், பேராசிரியரும் தாக்கப்பட்டிருக்கிறார். இது இந்துமதவெறி சக்திகளின் வளர்ந்து வரும் வலிமையைக் காட்டுகின்றன.
தமிழகத்தைப் போலவே தொழில்மயமான மாநிலம் மகாராட்டிரம். தமிழகத்தைப் போலவே சீர்திருத்தங்களின் மூலம் சலுகை பெற்ற இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் மாநிலம். இந்தப் பிரிவினர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள். இதே பிரிவினர்தான், தன்னை மதச்சார்பற்ற கட்சியாக சித்தரித்தக் கொள்ளும் காங்கிரசு, பவார் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் மட்டுமின்றி, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்க நிறுவனங்களிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
மும்பை, குஜராத், கயர்லாஞ்சி – எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இத்தகைய சம்பவங்கள், போலீசையோ இவ்வரசமைப்பையோ சீர்திருத்தவே முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.
– கதிர்.
____________________________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 2
முன்னுரை:
குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம் . 2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.
குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.
_____________________________________________________________________________ பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.
அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப் பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.
ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..
இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?
19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.
மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. ”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.
பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.
வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.
இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….
அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்… இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.
கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….
இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?
இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.
“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…
குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:
சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா
இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.
____________________________________________ புதியகலாச்சாரம், ஏப்ரல் 2002.
____________________________________________
மைய அரசு கொண்டு வந்துள்ள பாலியல் வல்லுறவுக்கு எதிரான அவசரச் சட்டத்தின் மோசடித்தனங்களை அம்பலப்படுத்தி பல்வேறு மகளிர் அமைப்புகள் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
டெல்லி வல்லுறவுக் கொலையைத் தொடர்ந்து எழுந்த போராட்டத்தையும் அரசுக்கு எதிரான பொதுக்கருத்தையும் சமாளிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட வர்மா கமிசன், ஒரு மாதத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து விடும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கவில்லை போலும். பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கேற்ற வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்குவதே இந்தக் கமிசனுக்குத் தரப்பட்ட பணி. இதற்குத் தேவையான தரவுகளையும் ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டியவர்கள் போலீசு மற்றும் சமூக நலத்துறையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்.
ஆனால் மத்திய அரசின் சார்பிலோ, எந்தவொரு மாநில அரசின் சார்பிலோ ஒருவர்கூட வர்மா கமிசன் முன் ஆஜராகவுமில்லை, கருத்தை அனுப்பவுமில்லை. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சந்தி சிரித்துவிட்ட இப்பிரச்சினையின் மீது அரசாங்கமும் அதிகார வர்க்கமும் காட்டியிருக்கும் அலட்சியத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இருப்பினும் இப்பிரச்சினையில் அக்கறை கொண்ட பெண்கள் அமைப்புகள், சட்டவல்லுநர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களின் உதவியுடன் தனது அறிக்கையை இக்கமிசன் விரைந்து சமர்ப்பித்துவிட்டது.
மைய அரசு கொண்டு வந்துள்ள பாலியல் வல்லுறவுக்கு எதிரான அவசரச் சட்டத்தின் மோசடித்தனங்களை அம்பலப்படுத்தி பல்வேறு மகளிர் அமைப்புகள் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
அதன் பரிந்துரைகள் பல போலீசு, இராணுவம், அதிகாரவர்க்கம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், “காப்” பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் இக்கட்டில் ஆழ்த்துவதாக இருந்ததால், அத்தகைய பரிந்துரைகளை வடிகட்டிவிட்டு, ஒரு அவசரச் சட்டத்தையும் அரசு பிறப்பித்திருக்கிறது. தனது ‘அவசரத்துக்கு’ அரசு அளித்த விளக்கம் நகைப்புக்குரியது. கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதித்துச் சட்டமாக்கி அதற்கு அரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் பல குற்றவாளிகள் பழைய சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து தப்பித்து விடுவார்கள் என்றும், அதனை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் இதற்கு விளக்கமளித்தார், ப.சிதம்பரம்.
அவர் கூறியதற்கு மாறாக, எந்தெந்த வல்லுறவுக் குற்றவாளிகளெல்லாம் ‘சிக்கிக் கொள்ளக் கூடாது’ என்று அரசு கருதுகிறதோ, அவர்களையெல்லாம் தப்பிக்க வைப்பதற்காகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வர்மா கமிசன் அறிக்கையையும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இழைப்பதில் முதலிடத்தில் இருக்கும் இராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் போலீசாரைத் தப்பிக்க வைப்பது எப்படி என்பது அரசின் கவலை. 1958-இல் மத்திய அரசு இயற்றிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் – அதாவது 7 வடகிழக்கிந்திய மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் – சந்தேகப்படுகின்ற யாரையும் சுட்டுக் கொல்லும் அதிகாரம், எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து சோதனை போடும் அதிகாரம், யாரையும் கடத்திச் செல்லும் அதிகாரம் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கொலை, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, திருட்டு போன்ற எத்தகைய குற்றங்களை இராணுவத்தினரோ, துணை இராணுவப் படையினரோ இழைத்தாலும் அவர்கள் மீது அரசோ, நீதிமன்றமோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் இராணுவத்தினருக்கு மட்டுமே உண்டு என்பதுதான் இச்சட்டம். இச்சட்டத்தின் பாதுகாப்புடன் இராணுவப்படைகள் நடத்தி வரும் கொலைகள், வல்லுறவுகளுக்கு கணக்கே இல்லை.
காஷ்மீரிலுள்ள ஷோபியான் என்ற ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்த இராணுவத்தினரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
2004-ஆம் ஆண்டில் மக்கள் விடுதலைப் படையின் தீவிரவாதி என்று பொய்க்குற்றம் சாட்டி மணிப்பூரில் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைக் கைது செய்து, கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கி, பெண் உறுப்பிலேயே சுட்டுத் தெருவில் வீசினர் அசாம் துப்பாக்கிப் படையினர். இதனையொட்டி, இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவுகொள்” என்று எழுதிய பதாகையைப் பிடித்தபடி மணிப்பூர் தாமார்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தின் யோக்கியதையை உலகுக்கே அம்பலப்படுத்தியது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய வேண்டும்” என்று 2004-ஆம் ஆண்டு முதல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார், ஐரோம் சர்மிளா என்ற பெண்.
1991-இல் காஷ்மீரில் குனான் போஷ்பாரா கிராமத்தில் 18 வயது முதல் 80 வயது வரையிலான பெண்கள் அனைவரையும் வல்லுறவுக்கு ஆளாக்கியது ராஜஸ்தான் ரைபிள்ஸ் படை. 2009-இல் ஷோபியான் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி க் கொலையும் செதது இந்திய இராணுவம். தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாக இராணுவக் கிரிமினல்களைப் பாதுகாக்கும் இக்கொடிய சட்டத்தை அகற்ற வேண்டுமென்று காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களின் அரசுகள் பலமுறை குரல் கொடுத்திருக்கின்றன.
2004-இல் அரசு நியமித்த நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன் முதல் முன்னாள் உளவுத்துறைத் தலைவர், மத்திய உள்துறைச் செயலர் உள்ளிட்ட பலரும் இராணுவத்தின் அத்துமீறல்களைப் பாதுகாக்கும் இச்சட்டத்தை எதிர்த்திருக்கின்றனர். எனினும், இச்சட்டம் அகற்றப்படவில்லை. “இச்சட்டத்தின் பாதுகாப்பை வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது; வல்லுறவுக் குற்றமிழைக்கும் இராணுவத்தினரை, மற்றெல்லா குற்றவாளிகளையும் போல நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும்” என்று கூறுகிறது வர்மா கமிசன் அறிக்கை.
இவ்வறிக்கை வெளியான மறுநாளே, “இராணுவத்தையெல்லாம் விசாரணைக்குட்படுத்த முடியாது” என்று அறிவித்தார் சட்ட அமைச்சர் அசுவினி குமார். “இராணுவத்துக்கு உடன்பாடு இல்லை என்பதால், வர்மா கமிசனின் இந்தச் சிபாரிசை அவசரச் சட்டத்தில் சேர்க்கவில்லை” என்று வெட்கமே இல்லாமல் கூறியிருக்கிறார், ப.சிதம்பரம்.
“சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் உள்ள இராணுவம், போலீசு உள்ளிட்டோர் மற்றும் காப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்கள், பெண்கள் இல்லங்களின் நிர்வாகிகள் போன்றவர்கள் வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபடும்போது, அவர்கள் மற்றவர்களை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இத்தகையோர் இழைக்கும் குற்றங்களுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மேலதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும். வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகாரைப் பதிவு செயத் தவறும் போலீசு அதிகாரிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கவேண்டும்” என்று வர்மா அளித்துள்ள எல்லா சிபாரிசுகளையும் அரசு நிராகரித்து விட்டது. மொத்தத்தில், இராணுவம் முதல் போலீசு வரையிலான சீருடைக் கிரிமினல்களும் அதிகார வர்க்கத்தினரும் தனிவகைச் சாதியாக, மக்களை ஒடுக்கும் உரிமை பெற்றவர்களாக வழக்கம் போல நீடிப்பார்கள் என்பதையே அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம் மறுஉறுதி செகிறது.
மாவோயிஸ்ட் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு சத்தீஸ்கர் போலீசாரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சோனி சோரி
கிரிமினல் அரசியல்வாதிகளையும் அவசரச் சட்டம் விட்டுக் கொடுக்கவில்லை. வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்ற வர்மாவின் சிபாரிசும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நாட்டிலுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களில் 260 பேர் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சமீபத்தில் குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொலை, ஆட்கடத்தல் அல்லது வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவரும் காங்கிரசு எம்.பி.யுமான குரியன், சூரியநெல்லி வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவ்வழக்கு முழுவதையுமே மறுவிசாரணை செய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதும், பாதிக்கப்பட்ட பெண்ணே குரியனுக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ள போதும், குரியனை மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதற்குக்கூட காங்கிரசு கட்சி மறுத்துவிட்டது. இலஞ்ச-ஊழல் குற்றவாளிகளைப் போலவே வல்லுறவுக் குற்றவாளிகளும் எல்லாக் கட்சிகளிலும் நிறைந்திருப்பதனால், தங்கள் இனத்தைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டு, இந்தப் பரிந்துரையையும் நிராகரித்து விட்டது அரசு.
“வல்லுறவு என்பது ஒரு பெண்ணின் மீது ஆண் நிகழ்த்தும் கொடிய வன்முறை. எனவே வல்லுறவு (Rape) என்பதைக் கற்பு அழித்தல் அல்லது மானபங்கம் செய்தல் (outraging the modesty) எனக் கூறக்கூடாது” என்கிறது வர்மா கமிசன். இந்தப் பரிந்துரையையும் அரசின் அவசரச் சட்டம் நிராகரித்துவிட்டது.
தன் மீது நிகழ்த்தப்பட்டது வல்லுறவு (கற்பழிப்பு) என்று ஒரு பெண் கூறவேண்டுமானால், தான் ஏற்கெனவே கற்புள்ளவள் என்று நிரூபிக்க வேண்டியிருக்கும் என்ற நிலைமையை இந்த அவசரச் சட்டம் வழிமொழிகிறது. இதன் மூலம் ஒரு பெண், தன் உடல் மீது கொண்டிருக்கும் தன்னாட்சி உரிமையும், அவளுடைய கண்ணியமும் நிராகரிக்கப்படுகிறது. கற்பு, கன்னித்தன்மை போன்ற நிலப்பிரபுத்துவக் கருத்துக்கள் பெண்ணின் மீது மட்டும் திணிக்கப்படுவதனால், சட்டப்படியே ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்றாகிறது.
1974-இல் மதுரா என்ற 16 வயது பழங்குடிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கிய இரு போலீசார் விடுவிக்கப்பட்டது முதல் சமீபத்தில் சூரியநெல்லி வழக்கில் ஒரு 17 வயதுப் பெண்ணைக் குதறிய 34 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையில் பல வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்தோ, அல்லது அந்தப் பெண் தான் எதிர்த்துப் போராடியதை நிரூபிக்க முடியாவிட்டால் , அதனை பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவாகவோ காட்டியோதான் குற்றவாளிகள் தப்பியிருக்கின்றனர்.
“பெண்ணின் தெளிவான சம்மதம் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே” என்றும், “மனைவியின் சம்மதமில்லாமல் கணவன் அவள் மீது பாலுறவைத் திணிப்பதும் வல்லுறவுக் குற்றமே” என்றும் வர்மா கமிசன் கூறுகிறது.
மத்திய அரசின் அவசரச் சட்டம் இதையும் நிராகரித்து, “திருமணம் என்பதே உடலுறவுக்கான சம்மதத்தைக் குறிப்பதுதான்” என்று சொல்லி, வல்லுறவுக்கான உரிமத்தை கணவனுக்கு வழங்குகிறது. திருமணம் என்ற ஏற்பாட்டை, சுதந்திரமான சம உரிமை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவாக அல்லாமல், ஆணின் உடைமையாகவும், போகப்பொருளாகவும் மாறுவதற்கு பெண் சம்மதிப்பது என்ற பொருளிலேயே மண உறவினை விளக்குகிறது இந்த அவசரச்சட்டம்.
“தொழிலாளி வேலைநிறுத்த உரிமை கேட்டாலே, கம்பெனியை மூடநேரிடும்” என்று அச்சுறுத்தும் முதலாளியைப் போல, “கணவனை வல்லுறவுக் குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்பிவிட்டால், மண உறவு அறுந்துவிடும்” என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் ஆணாதிக்கவாதிகள். “மண உறவைப் பாதுகாக்க விரும்பும் ஆண் வல்லுறவில் ஈடுபடலாமா?” என்ற எளிய கேள்வி கூட அவர்கள் மண்டையில் எழுவதில்லை. தற்போதுள்ள சட்டங்களின்படி, “மனைவியைக் கணவன் அடிப்பது குற்றம்; ஆனால் வல்லுறவு கொள்வது அவன் உரிமை”.
இவையனைத்தையும் தொகுத்துப் பார்ப்போமானால், ‘குலமாதர்கள்’ எனப்படுவோர், ஆணுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கும் கற்புநெறி பிறழாதவர்கள் என்ற காரணத்தினால், உடலுறவுக்கு அவளுடைய சம்மதத்தை ஒரு ஆண் (கணவன்) பெறத் தேவையில்லை. எனவே, ஒரு மனைவி எனப்படுபவள், கணவன் தன்னை வல்லுறவு கொண்டதாகக் குற்றம் சாட்டவே முடியாது.
‘விலை மாதர்கள்’ எனப்படுவோர், ‘இயல்பிலேயே’ நடத்தை கெட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய சம்மதத்தையும் ஒரு ஆண் பெறவேண்டியதில்லை. தனது சம்மதமின்மையையும் எதிர்ப்பையும் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே, ஒரு ஆண் மீது அவள் குற்றம் சாட்டமுடியும். ஆகவே, மனைவியும் விலைமாதுவும் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட முடியாதவர்கள் என்று ஆகிறது.
ஆசிட் வீசிய குற்றவாளியைத் தண்டிக்க வேண்டுமானால், தான் ஆசிட் வீச்சை எதிர்த்துப் போராடியதாக ஒரு பெண் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால், வல்லுறவுக் குற்றவாளியை தண்டிக்க வேண்டுமானால், தான் வல்லுறவை எதிர்த்துப் போராடியதை அவள் நிரூபிக்க வேண்டும் – இதுதான் தற்போதைய சட்டம் கூறும் நிலை.
“திருடனை எதிர்த்து நீங்கள் போராடியதை நிரூபித்தால் மட்டும்தான், திருட்டு நடந்திருப்பதாக ஒப்புக்கொள்ள முடியும். இல்லையேல், நீங்கள் மனம் விரும்பி உங்கள் பொருளை அவருக்கு வழங்கியதாகவே கருத முடியும்” என்று திருட்டுக்குச் சட்டவிளக்கம் கூறினால், அது அயோக்கியத்தனம் என்று நிராகரிக்கப்படும். ஆனால், சூரியநெல்லி வழக்கில், ஒரு 17 வயதுப் பெண்ணை 40-க்கும் மேற்பட்ட கயவர்கள் மாறிமாறிக் குதறி, அவளுடைய பெண்ணுறுப்பே சிதைந்துவிட்டதாக மருத்துவர்கள் சான்றளித்த பின்னரும், “அவள் எதிர்த்துப் போராடியதை நிரூபிக்கவில்லை என்பதால், அது சம்மதத்துடன் நிகழ்ந்த உடலுறவுதான்” என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட 35 பேரில் 34 பேரை விடுவித்தது கேரள உயர் நீதிமன்றம்.
வல்லுறவுக்கெதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கப் போவதாக்க் கூறிக்கொண்டு கொண்டு வரப்பட்டிருக்கும் தற்போதைய அவசரச் சட்டம், வல்லுறவைப் பெண்ணின் கற்பின் மீதான தாக்குதலாக சித்தரிப்பதன் மூலம் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பையே வழங்கியிருக்கிறது.
இவை மட்டுமின்றி, “காப்” பஞ்சாயத்துகள் எனப்படும் சாதிய கட்டப் பஞ்சாயத்துகள், சாதி மறுப்பு – காதல் திருமணங்களில் தலையிடுவதற்கு எதிராகவும், கவுரவக் கொலைகள் எனப்படும் சாதிவெறிக் கொலைகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற வர்மா கமிசனின் பரிந்துரையையும் இந்த அவசரச் சட்டம் புறக்கணித்துவிட்டது.
“வல்லுறவு (Rape) என்ற குற்றத்தை இழைப்பவன் ஒரு ஆணாக மட்டுமே இருக்க முடியும். அதற்குப் பலியாவது ஒரு பெண்ணாகவோ, சிறுவனாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம்” என்று கூறும் வர்மா கமிசன், இன்னொருவரின் ஒப்புதலின்றி ஒரு ஆணினால் திணிக்கப்படும் எந்த வடிவத்திலான உறவு முயற்சியும் (Any form of non-consensual penetration) வல்லுறவுதான் (rape) என்று கூறுகிறது.
ஆனால் மத்திய அரசின் அவசர சட்டமோ, வல்லுறவு என்ற சொல்லையே நீக்கிவிட்டு, அதனைப் ‘பாலியல் தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் வல்லுறவுக் குற்றம் என்பது ஒரு ஆண் மட்டுமே இழைக்கக் கூடிய ஆணாதிக்க குற்றம் என்ற உண்மையை மறுத்து, ஆண்களுக்கு எதிராகப் பெண்களும் வல்லுறவுக் குற்றம் இழைத்து வருவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறது. இச்சட்டத்தின் மிகவும் நயவஞ்சகமான இதயம் இதுதான். இவ்வகையில் இந்த அவசரச் சட்டம் முன்னிலும் பாதகமான நிலைமைக்கே பெண்களைத் தள்ளியிருக்கிறது.
வர்மா கமிசன் சிபாரிசுகளை ஒட்டி, அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டத்தில் எஞ்சியிருப்பவை – வல்லுறவுக் குற்றத்தை இரண்டாவது முறை செய்பவனுக்கு மரண தண்டனை. பெண்களைப் பின்தொடர்வது, தீண்டுவது என்பன போன்ற நடவடிக்கைகளைத் தண்டிக்கும் புதிய குற்றப்பிரிவுகள் போன்ற பம்மாத்து வேலைகள் மட்டுமே. பெண்கள் மீதான வன்கொடுமைகள் தீவிரப்படுவதற்குக் காரணமான தனியார்மய-தாராளமயக் கொள்கையையும், விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வியத்தையும் முன்னேற்றம் என்ற பெயரில் பரப்பிக் கொண்டே, சில சட்டங்களின் மூலம் பெண்களைப் பாதுகாத்து விடலாம் என்று கருதுவது மாயை என்பதை, அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன.
புதிய சட்டத்திருத்தங்களைப் பயன்படுத்தி பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, பெண்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பதில் முன்னிலை வகிக்கும் போலீசிடமும்; ஆணாதிக்க, சாதி ஆதிக்கத் தடித்தனத்தில் ஊறிப்போன நீதித்துறையிடமும்தான் தரப்பட்டிருக்கிறது.
வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளான ஒரு பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னால், மனமொடிந்து குறுகிப் போயிருக்கும் அத்தகைய பெண்களுக்கு ஆறுதல் கூறி, உளவியல் சிகிச்சை அளித்து அதன் பின்னர் விசாரணை செயும்போதுதான் அப்பெண்ணால் பேசவே இயலும். ஆனால், பாதிக்கப்படும் பெண்களின் மீது அத்தகைய அனுதாபத்தை போலீசோ நீதித்துறையோ காட்டியதே கிடையாது என்பதே நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எத்தகைய நுட்பமான இதயமுள்ள சட்டத்தை உருவாக்கினாலும், அவை இந்த இதயமற்ற நிறுவனங்களில் கையில்தான் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனங்களைத் தீண்டுகின்ற வகையில் வர்மா கமிசன் பரிந்துரைத்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் போலீசு பெறவிருக்கும் அதிகாரம் மட்டும்தான்.
சட்டங்களின் மூலமும், சட்டத்திருத்தங்களின் மூலமும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒருக்காலும் தடுக்கவியலாது என்ற உண்மையை வர்மா கமிசனின் உறுப்பினர்களான முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா, முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் அதிர்ச்சியூட்டத்தக்க தமது சோந்த அனுபவத்திலிருந்தே நிரூபிக்கிறார்கள்.
வர்மா கமிசனின் அறிக்கையுடன் கொடுக்கப்பட்ட இணைப்புகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடற்ற சிறார்கள் சிலரின் வாக்குமூலத்தையும் அவர்கள் இணைத்திருக்கிறார்கள்.
டில்லி போலீசின் இரவுக் காவல் படை போலீசார், ஒரு கோயிலுக்கு அருகாமையில் நின்றிருந்த இளம்பெண்ணைக் கதறக் கதறத் தூக்கிச் சென்றதாகவும், மரங்களடர்ந்த ஒரு பகுதியில் வைத்து அந்தப் பெண்ணை கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கி வீசிவிட்டுச் சென்றதைத் தம் கண்ணால் கண்டதாகவும் அந்தச் சிறார்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். “வெளியில் சொன்னால் போலீசார் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, இதனை யாரிடமும் சோல்லவில்லை” என்றும் அவர்கள் தம் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
வர்மா அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த வாக்குமூலத்தைப் படித்த “இந்து” நாளேட்டின் நிருபர், உடனே கோபால் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு “இந்தப் போலீசார் குறித்துப் புகார் செய்தீர்களா, அது உங்கள் கடமையல்லவா?” என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.
இதற்கு கோபால் சுப்பிரமணியம் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. “அந்தச் சிறார்கள் அளித்த வாக்குமூலம் அனைத்தும் கலப்படமற்ற உண்மை. டெல்லி போலீசின் கொடூர முகம் முதல் சிறுவர் இல்லங்களில் நடக்கும் முறைகேடுகள் வரை பலவற்றைப் பற்றியும் அவர்கள் கூறினார்கள். கமிசன் உறுப்பினர்கள் மூவருமே இதுபற்றி விவாதித்தோம். இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே பலவிதமான வன்முறைகளை அனுபவித்திருக்கிறார்கள். இவர்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் நாங்கள் புகாரைப் பதிவு செது போலீசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினால், இந்தக் குழந்தைகளை போலீசு பழிவாங்கிவிடும் என்று நாங்கள் அஞ்சினோம். அவர்களுடைய வாழ்க்கையை மேலும் துன்பமானதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த அமைப்பிடமிருந்து அந்தச் சிறார்களைப் பாதுகாக்க நாங்கள் விரும்பினோம். எனவேதான் புகார் கொடுக்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செதோம்”
“எங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அறிக்கையில் கண்டுள்ள போலீசின் கும்பல் வல்லுறவைப் பற்றியோ, வேறு பல குற்றங்களைப் பற்றியோ இதுவரை போலீசுத்துறை கண்டுகொள்ளவில்லை. உள்துறை அமைச்சகமும் கண்டுகொள்ளவில்லை” என்று பேட்டியளித்திருக்கிறார் வர்மா கமிசன் உறுப்பினர் கோபால் சுப்பிரமணியம். (தி இந்து, பிப். 20, 2013)
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.
இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.
ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.
ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.
தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1
முன்னுரை:
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம். 2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!
– வினவு
__________________________________________
அந்தக் குழந்தை தலையைக் கவிழ்த்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது. திடீர் திடீரென விசும்பியது. அதற்கு 5 வயது இருக்கும். கிழிந்து போன மஞ்சள் சட்டையில் திட்டுத் திட்டாகக் கறை. சட்டையை விலக்கி அவளுடைய முதுகைக் காட்டினார் அவளுடைய தந்தை.
முதுகு முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். அவளைக் கொடூரமாக அடித்திருக்கிறார்கள். பாலியல் பலாத்தகாரமும் செய்யப்பட்டிருக்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. தேவதையைப் போன்ற அந்தப் பிஞ்சு முகத்தில் பிரமை பிடித்திருந்தது. “இவளைப் பேச வைக்க முடியவில்லையே. இனிமேல் பேசவே மாட்டாளோ” தந்தையின் குரல் உடைந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீனா என்ற 30 வயதுப் பெண் என்னிடம் பேசத் தொடங்கினாள்:
“நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு 20 வயதில் ஒரு அழகான மகள். ‘என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள். அந்தப் பெண்ணும் இப்படித்தான். பிரமை பிடித்துப் போய் பேசுவதே இல்லை. அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை.”
-டாம் மோரேஸ், எழுத்தாளர், குஜராத் அகதி முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து எழுதிய கட்டுரையிலிருந்து. தி இந்து, 24.3.2002
“அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை”
இந்தத் துயரம் தோய்ந்த சொற்கள் யாரோ ஒரு அப்பாவி முசுலீம் பெண்ணின் முடிவை மட்டும் சொல்லவில்லை. முசுலீம் மக்களுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய எல்லாக் கலவரங்களின் முடிவையும் தெரிவிக்கின்றன அந்த சொற்கள்.
அத்வானி நடத்திய ரத்த யாத்திரை, செங்கல் ஊர்வலம், பாபரி மசூதி இடிப்பு… என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நர வேட்டையாடப்பட்ட முசுலீம் மக்களுக்கு அப்புறம் என்ன நடந்தது?
வீடிழந்தவர்கள், தொழிலிழந்தவர்கள், கை காலிழந்தவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள, கணவனை இழந்த பெண்கள், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு புத்தி பேதலித்த பெண்கள்… அப்புறம் என்ன நடந்தது இவர்களுக்கெல்லாம்?
இந்தக் கொலை கொள்ளை கற்பழிப்புகளில், ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், அவர்கள் மீது அரையும் குறையுமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணைக் கமிசன்களுக்கெல்லாம் அப்புறம் நடந்ததென்ன?
யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. பகல்பூர், லக்னெள, மீரட், கான்பூர், பிவாண்டி, சூரத், பம்பாய்… ஒரு குற்றவாளி கூடத் தண்டிக்கப்படவில்லை. மாறாக, குற்றவாளிகள் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அனுதாபம்வேண்டாம்அரசியல்உணர்வுவேண்டும்!
இந்நிலையில் குஜராத்தில் நடை பெற்ற கொடூரங்களை விவரிப்பதனால் மட்டும் என்ன பயன்? கொடூரங்களின் விவரணை அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடும். ஆனால் அதுவே இந்துமத வெறியர்களுக்கெதிரான அரசியல் உணர்வைத் தோற்றுவித்து விடுவதில்லை.
இன்று குஜராத்தில் முசுலீம் பெண்களை அவர்களது குடும்பத்தினரின் கண் முன்னே இந்து மதவெறியர்கள் கற்பழித்தனர் என்றால் அன்று சூரத்தில் அத்தகைய கற்பழிப்புகளை வீடியோவிலேயே பதிவு செய்தனர்.
முஸ்லீம் குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று விட்டு எரித்தனர்.
உயிருடன் எரிப்பது, குழந்தைகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்வது, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு முசுலீம்களை வீடு வீடாகத் தேடிக் கொல்வது, முசுலீம் வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவது, இந்து நடுத்தர வர்க்கத்தினரும் கொள்ளையில் பங்கேற்பது, இந்து மதவெறியர்களுடன் போலீசும் கூட்டுச் சேர்ந்து முசுலீம்களைக் கொலை செய்வது, மசூதிகளை இடிப்பது…. என 1993 பம்பாய்ப் படுகொலையில் சிவசேனா பா.ஜ.க. கும்பல் எதையெல்லாம் செய்ததோ அவையனைத்தும் முன்பைவிட விரைவாக, குரூரமாக, திட்டமிட்ட முறையில் குஜராத்தில் அரங்கேறியுள்ளன.
டாம் மொரேஸ் கூறுகின்ற சம்பவம் நம் அன்றாட வாழ்க்கையில் நடந்திருந்தால் பழிக்குப் பழி வாங்குவதற்காக அந்தப் பத்துப் பேரையும் கொலை செய்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே திரைக்கதையாக இருந்தால் எதிரிகள் 100 பேரைக் கதாநாயகன் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொல்லும் வன்முறைக் காட்சியைத் தணிக்கைக் குழுவும் ஏற்றுக் கொள்ளும்.
பழிவாங்குவதைத்தடுக்கபொடாசட்டம்
ஆனால் பாரதீய ஜனதாக் கட்சியோ அத்தகைய ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளை முன் கூட்டியே தடுப்பதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.
அத்வானி யாரையெல்லாம் சொல்லி பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டுகிறாரோ அவர்கள் யாரும் எந்த அமைப்பும் மூன்றே நாளில் 2000 பேரை எரித்துக் கொன்றதில்லை; ஆயிரம் ஓட்டல்களையும், ஆயிரம் லாரிகளையும், நூற்றுக்கணக்கான கார்களையும், ஆயிரக்கணக்கான வீடுகளையும், 17 தொழிற்சாலைகளையும, 500 மசூதிகளையும் மூன்றே நாட்களில் எந்தப் பயங்கரவாதியும எரித்துச் சாம்பலாக்கியதில்லை. மூன்றே நாளில் சுமார் இரண்டு லட்சம் மக்களைத் தம் சொந்த ஊரிலேயே யாரும் அகதிகளாக்கியதில்லை.
பல்வேறு பத்திரிகையளர்களும், ஹர்ஷ் மந்தேரும் அதிர்ச்சியுடன் குறிப்பிடுகின்ற வக்கிரமான முறைகளில் யாரும் இனப் படுகொலை நடத்தியதில்லை.
இருப்பினும், “கோத்ரா ரயில் பெட்டி எரிப்புதான் பயங்கரவாதமென்றும், அதற்குப் பின் குஜராத் முழுவதும் நடை பெற்றவை பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல” என்றும் கூறியிருக்கிறார் அத்வானி.
பார்ப்பான் சூத்திரனைக் கொன்றால் அது நீதி. ஆனால் பதிலுக்குச் சூத்திரன் பார்ப்பானைத் தாக்க நினைத்தாலே அது மரண தண்டனைக்குரிய குற்றம்! அதாவது மனுநீதியின் திருத்தி பாலிஷ் செய்யப்பட்ட 21-ம் நூற்றாண்டுப் பதிப்புத்தான் பொடா.
பொடா சட்டத்தை இந்தக் கோணத்தில் சித்தரிப்பது தவறென்றோ, மிகையென்றோ கருதும் வாசகர்கள் கீழ்கண்ட செய்தியைக் கேளுங்கள்.
முசுலீம்அகதிகளால்இந்துக்களுக்குஆபத்தாம்!
இந்து மதவெறியர்கள் நடத்திய கொலைவெறியாட்டத்தில் வீடு, வாசல் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த முசுலீம் மக்களில் 6,000 பேர் அகமதாபாத்தின் தாரியாபூர் அகதி முகாமில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் 6,000 பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது அருகாமையில் வாழும் இந்துக்களுக்கு ஆபத்தென்றும், அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் குஜராத்தின் சிவில் சப்ளைஸ் அமைச்சர் பாரத் பரோட்.
தின்னச் சோறில்லாமல், உடுத்த உடையில்லாமல், மேலே கூரையில்லாமல் ஒண்டிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரிய முசுலீம் மக்களைக் கண்டால் அருகில் வாழும் இந்துக்களுக்குப் பயமாயிருக்கிறதாம். இப்படிப் ‘பயமுறுத்துவதைத்தான்’ பயங்கரவாதமென்றும் அதைத்தடுக்க வேண்டுமென்றும் சொல்கிறது மத்திய அரசு. இந்த வரைவிலக்கணப்படி அகதி முகாம்களனைத்தும் பயங்கரவாத முகாம்கள்! இன்றைய அகதிகள் நாளைய பயங்கரவாதிகள்!
ஏற்கனவே அகதி முகாம்கள் சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். காலிகளுடன் சேர்ந்து கொண்டு எந்தப் போலீசார் முசுலீம் மக்களைச் சூறையாடினார்களோ, அவர்கள்தான் அங்கே ‘காவல்’ இருக்கிறார்கள். அகதி முகாம்களும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் தாக்கப்படுகின்றன.
ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான தானியத்தைக் கொடுத்து “ஒரு வாரத்திற்கான உணவு” என்று கணக்கு சொல்கிறது குஜராத் அரசு, இசுலாமிய அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும்தான் உண்மையில் முகாம்களைப் பராமரிக்கின்றன. முகாம்களில் கழிப்பிடமில்லை. மருத்துவ வசதி இல்லை. கொள்ளை நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
கை, கால்கள் வெட்டப்பட்டும், தீயில் பாதி வெந்து போன உடலுடனும் முகாம்களில் தவிப்பவர்கள் பலர். அவர்களை உடனே மருத்துவனைக்குப் போகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள. முகாமை விட்டு வெளியே சென்றால் இந்து வெறியர்களால் கொல்லப்படுவோமென்று அஞ்சி உள்ளேயே இருந்து அவர்கள் சித்திரவதையை அனுபவிக்கிறார்கள்.
வெட்டு, கொல்லுஜெய்ஸ்ரீராம்!
எரிந்து போன வீட்டில் ஏதாவது மிச்சமிருக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தங்கள் வீட்டுக்குச் சென்ற சிலர் முகாமுக்குத் திரும்பவில்லை அவர்கள் அங்கேயே கொல்லப்பட்டு விட்டார்கள்.
இரவு நேரத்தில் யாரும் அறியாமல் தங்கள் வீட்டை ஒருமுறை பார்க்க விரும்பிச் சென்றவர்கள் ”வெட்டு, கொல்லு, ஜெய் ஸ்ரீராம்” (காட்டோ, மாரோ, ஜெய் ஸ்ரீராம்) என்ற கூச்சலைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு முகாமிற்கு ஓடிவந்திருக்கிறார்கள்.
என்னென்ன வெறிக் கூச்சல்களுடன் இந்து மதவெறிக் குண்டர்கள் கொலை வெறியாட்டம் நடத்தினார்களோ அந்தக் கூச்சல்களையே ஒலிநாடாவில் பதிவு செய்து முசுலீம் குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவில் திடீர் திடீரென ஒலிபரப்பி திகிலூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
அகதிகள் யாரும் இனி தம் வீட்டுக்குத் திரும்ப இயலாது. கிராமப்புறங்களில் அவர்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அகமதாபாத்திலோ முசுலீம்கள் குடியிருந்த வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு சபர்மதி ஆற்றின் மறுகரைக்குக் குடியேறுகிறார்கள் முசுலீம்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இனி முசுலீம்கள் குடியிருக்க இயலாது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
முசுலீம்கள் பாதுகாப்பாக உணர்வதுதான் முக்கியம் என்பதால் நகரத்துக்கு வெளியே அகதிகளுக்கு ஒரு துண்டு நிலம் ஒதுக்கித் தந்து விடுங்களென்று தேசிய சிறுபான்மைக் கமிசனின் தலைவரே குஜராத் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மார்ச் -27). பஞ்சமர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைச் சேரிக்கு ஒதுக்கிய பார்ப்பன மதவெறிக் கும்பல் முசுலீம்களை ஆறாவது பிரிவாக்கி அவர்களுக்கான சேரியையும் உருவாக்கிவிட்டது.
ஒரு சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் இழிவு படுத்துவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் ‘இதுதான் எல்லை’ என்று நீங்கள் கருதினால் இதற்கும் ஒரு படி மேலே போகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
சந்தைக்குக் காய்கறி வாங்கச் சென்ற முசுலீம் பெண்களைக் கல்லெறிந்து விரட்டிவிட்டு ‘முசுலீம்களுக்கு விற்காதே’ என வியாபாரிகளை மிரட்டுகின்றனர் ஆர்.எஸ்.எஸ்.காலிகள். “முசுலீம்களுடன் சேர்ந்து தொழில் நடத்தாதே, முசுலீம்களிடம் வேலை செய்யாதே, முசுலீம்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாதே –இங்ஙனம் தேசபக்தன்” என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் எங்கும் விநியோகிக்கப்படுகின்றன.
இதுதான்இந்து ராஷ்டிரம்.
இத்தகைய சூழ்நிலையில் முசுலீம் மக்கள் எப்படி இந்த நாட்டில் வாழ முடியும்?
“சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழலாம். இந்து தேசத்திற்குக் கீழ்படிந்தவர்களாக, எதையும் கோராதவர்களாக, எந்தவிதச் சலுகைக்கும் தகுதியற்றவர்களாக இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையற்றவர்களாக வாழலாம்.”
– கோல்வால்கர்
(ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘நாம் அல்லது நமது தேசியம்’ எனும் நூலில்)
“பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதான் சிறுபான்மையினருக்கு உண்மையான பாதுகாப்பு” என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெங்களூர் தீர்மானம் இதே விசயத்தைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறது.
‘பாதுகாப்பாக’ வாழவேண்டுமானால் ‘சட்டம் – உரிமை – சுயமரியாதை’ என்று பேசாமல் அடிமைகளாக வாழ ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன உயர்சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூறுவதைத்தான் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முசுலீம்களுக்கும் கூறுகிறது. இந்த அடிமைத்தனத்தை முசுலீம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எதிர்த்துப் போராடுவார்கள் என்பதும் பார்ப்பன இந்து வெறியர்கள் அறியாததல்ல.
தங்களுக்கு எதிரான முசுலீம்களின் கோபத்தை ‘சாதாரண இந்துக்கள்’ மீதான தாக்குதலாக மடைமாற்றி விடுவதுதான் ஆர்.எஸ்.எஸ். –இன் நோக்கம். தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் முசுலீம் மக்களை இசுலாமியத் தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுவதுதான் அவர்களது திட்டம்.
இசுலாமியதீவிரவீதத்தைத்தூண்டஆர்.எஸ்.எஸ். சதி!
எதிர்த்துப் போராடுவதற்கு “இசுலாமியத் தீவிரவாதம்” என ஒன்று இல்லையென்றால் தன்னுடைய இருப்பே கேள்விக்குள்ளாகி விடும் என்பதுதான் அரசியலரங்கில் பா.ஜ. கும்பலின் இன்றைய நிலைமை.
சாதி, தீண்டாமை, இன – மொழி ஒடுக்குமுறை ஆகியவற்றைத் தன் இதயமாகக் கொண்ட இந்துத்துவக் கொள்கைகளைச் சொல்லி பார்ப்பன மேல்சாதியினரிலேயே ஒரு சிறு பிரிவைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஆல் திரட்ட முடிந்திருக்கிறது.
உள்ளூர் அளவில் எழும் பிரச்சினைகளுக்கு இந்து – முசுலீம் சாயம் பூசி கலவரத்தைத் தூண்டினாலும் அது உள்ளூர் எல்லையைத் தாண்டுவதில்லை; நீடித்து நிற்பதுமில்லை.
‘வரலாற்றுப் பழி தீர்ப்பது’ என்ற பெயரில் தொடங்கிய அயோத்தி பிரச்சினையோ உத்தரப் பிரதேசத்திலேயே இன்று போணியாகவில்லை. இத்தனை அமர்க்களங்களுக்குப் பின்னரும் அயோத்தி நகரத்தில் ஒரு சொறிநாய் கூட ராமன் கோவில் பிரச்சினையைத் திரும்பிப் பார்க்கவில்லை.
“அணுகுண்டு – கார்கில் – காஷ்மீர் – பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறி” என்பதற்கெல்லாம் சிட்டுக்குருவி லேகியம் போல சிறிது நேரத்திற்கு மேல் வீரியம் இருப்பதில்லை.
“பொடோ சட்டத்தை எதிர்ப்பவன் தேசவிரோதி” என்று உ.பி.சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தால், மக்கள் ‘தேசவிரோதிகளுக்கே’ வாக்களித்து பா.ஜ.க.வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி விட்டார்கள்.
தனியார் மயம், ஆட்குறைப்பு, மானிய வெட்டு, சிறுதொழில்கள் அழிப்பு போன்ற மறுகாலனியாக்க நடவடிக்கைகளும், லஞ்ச – ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் காங்கிரசை விஞ்சிய கட்சிதான் பாரதீய ஜனதா என்று மக்கள் பெற்ற அனுபவமும், அடுக்கடுக்கான தோல்விகளை பாரதீய ஜனதாவிற்குத் தந்திருக்கின்றன.
டில்லி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் மாநிலங்களில் பா.ஜ.க.ஏறத்தாழத் துடைத்தெறியப்பட்டு விட்டது. எஞ்சியிருப்பவை குஜராத், கோவா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை மட்டுமே. குஜராத்தில் சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி; தற்போது அயோத்தி விவகாரம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே டெல்லி மாநகராட்சித் தேர்தலில் படுதோல்வி….
எனவே இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் நீடிப்பதற்கே இசுலாமியத் தீவிரவாதத்தின் ‘தயவு’ அதற்குத் தேவைப்படுகிறது. “இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக இல்லாத காரணத்தினால்தான் நாம் அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்திக்கிறோம்” என்று சங்க பரிவாரத்தினர் கூறுவதற்கு பொருள், “முசுலீம் மக்களுக்கு ஆத்திரமூட்டுமளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவில்லை” என்பதுதான்.
குஜராத் படுகொலை – இசுலாமியத் தீவிரவாதத்திற்கு இந்துமத வெறியர்கள் விடுக்கும் அழைப்பு. இந்த அழைப்பை இசுலாமியத் தீவிரவாதிகள் நிராகரித்து விட்டால்… வேறு வழியில்லை. இசுலாமியத் தீவிரவாதியின் பாத்திரத்தையும் இந்து வெறியர்களே ஏற்று நடிப்பார்கள்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியன்று நடந்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்தில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இயங்கும் மத்திய அரசின் இந்திய தேசியப் பஞ்சாலைக் கழகத்தைச் சேர்ந்த காளீஸ்வரா மில் ‘பி’ யூனிட் ஆலையின் நிரந்தர மற்றும் தற்காலிகப் பணி செய்யும் தொழிலாளர்களும் கலந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தத்திற்காக ஆலையின் வாயிலில் திரளாகக் கூடி நின்று கொண்டிருந்தனர்.
ஆலையின் பொது மேலாளர் (ஜி.எம்) ஒரு அல்லக்கை. ஏதோ தான் திறமையான அதிகாரி என்பதாக மனதில் நினைத்துக் கொண்டு ஆலையின் உற்பத்தியைக் கூட்டிக் காட்டவேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை கசக்குவதில் தனியார் முதலாளியையும் தாண்டி யோசிப்பார். தொழிலாளிகளின் வேலையிலுள்ள சிரமங்களைக் காது கொடுத்தும் கேட்கத் தயாராக இல்லாதவர். இதுபோன்ற வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய வைத்து விட்டால் அதுதானே இவர்களுக்குப் பொன்வசந்தம். ஆனால், இம்முறை அனைத்து ஓட்டுக்கட்சிகளும் (பாழாய்ப்போன காங்கிரசின் சங்கம் உட்பட) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சி.எல்.ஆர் என்று சொல்லப்படுகிற தற்காலிகப் பணியாளர்களையாவது வைத்து ஆலையை இயக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். ஆனால், சி.எல்.ஆராகப் பணி செய்கின்ற தொழிலாளர்களில் சில தொழிலாளிகள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டலப் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே, சி.எல்.ஆர் தொழிலாளர்களை எந்த ஓட்டுக்கட்சிச் சங்கமும் தங்களது சங்கங்களில் சேர்த்துக்கொள்வது இல்லை. ஆனால், கோவை மண்டலம் தொழிலாளர்களிடயே அப்படி ஒரு பிரிவினையை வைத்திருக்கவில்லை. தற்காலிகமோ, அல்லது நிரந்தரமோ, அனைவரும் தொழிலாளர்களே! சங்கத்தில் உறுப்பினாராகத் தகுதி உள்ளவர்களே! அப்படி கோவை மண்டலச் சங்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் சில தொழிலாளர்களும் ஆலைவாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்போதுதான் கதாநாயகன் வருகிறார். அவர் வேறு யாருமல்ல. காளையார்கோவில் போலீஸ் இன்ஸ் சதீஷ்தான். அதாவது இன்ஸ்பெக்டர். எஸ்.பி., டிஎஸ்பி என்று சொல்லும்போது இன்ஸு., சப்பின்ஸு., எனச் சொல்லக்கூடாதா? கீழ் அதிகாரிகள் என்றால் மட்டமா என்ன? இன்ஸ் ஏற்கனவே அரசல் புரசலாக புஜதொமுவோடு உரசிக்கொண்டிருப்பவர். இருந்தாலும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது ஆலையின் முன்பாக வந்தவர் கூடியிருந்த தொழிலாளர்கள் மேல் வள்வள்ளென்று விழுகிறார். “ஏன் அங்கே இங்கேன்னு நாய் மாதிரித் திரிகிறீர்கள்” என்று குரைத்திருக்கிறார். உடனே தொழிலாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கண்டிக்க, அவர் எஸ்கேப் ஆகி ஜீப்பில் போய் விடுகிறார். அப்போது அங்கு நின்ற காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் மூத்த நிர்வாகியைத் தொழிலாளர்கள் கூப்பிட்டதற்கு அவர் வேகமாக இடத்தைக் காலி செய்து ரோட்டைத் தாண்டி ஓடி விடுகிறார். தன்மானத்தின் சின்னமாக விளங்கிய சின்னமருதுவின் ஊரிலா இப்படி? தொழிலாளர்கள் ஆதங்கத்தோடு கலைந்து செல்கின்றனர்.
மறுநாள் காலையில் ஆலையின் வாயிலிலும் நகரத்திலும் ஆங்காங்கே கைகளினால் எழுதப்பட்ட சில சுவரொட்டிகள் தென்பட்டன. அதைப் படித்துப் பார்த்த, நகரப் பொதுமக்களுக்கும் ஒரே ஆச்சர்யம் ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆச்சர்யமும் திருப்தியும்; அதோடு தாங்கள் அங்கம் வகிக்கின்ற; தங்களைப் பெரிய சங்கங்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எவருக்கும் இப்படி ஒரு தைரியமும் உணர்வும் வரவில்லையே என அதிருப்தியும் கொண்டனர்.
சுவரொட்டியைக் கையால் ஒட்டி எழுதியிருந்த அந்தத் தொழிலாளி மறுநாள் வேலைக்குப் போகிறார். ஆனால், ஆலை மேஸ்திரி “நீ வேலைக்கு வரவேண்டாம். போய் ஜி.எம்-மைப் பார்த்துவிட்டு, பிறகு வா”! என்று சொல்கிறார். “என்ன காரணம்” எனத் தொழிலாளி கேட்கிறார். “போஸ்டர் ஒட்டியதுதான்” என்றும் சொல்கிறார். ஆனால், நேற்றே ஜி.எம் வெளியூருக்குப் போய்விட்டார். அதனால், அன்றைய வேலையை இழந்தார் அந்தத் தொழிலாளி. மறுநாள் காலையில் ஜி.எம் வந்துவிட்டதை அறிந்து அவரைப் போய்ப் பார்க்கிறார். அவரைக் கண்டதுமே, “நீ தானா, தம்பி! நா வேறு யாரோன்னு நெனச்சேன். போலீசோட நமக்கு எதுக்கு தம்பி வம்பு!, இதுனால பல பின் விளைவுகள் வரலாம்ல!” என்று வழக்கமாக, இது போன்று வருகின்ற எல்லாக் காட்சிகளிலும் உலகம் முழுவதிலும் எல்லா அதிகாரிகளும் பேசுகின்ற, யாருமே எழுதிக் கொடுக்காத அதே வசனத்தை இவரும் சுதி சுத்தமாக, ஆனால், சத்தமில்லாமல் பேசுகிறார்.
அதற்கு, “சங்கம் சொன்ன வேலையைச் செய்கிறேன் சார். எது வந்தாலும் அதை சங்கம் எதிர்கொள்ளும்,” எனச் சொல்லிவிட்டு, வேலைக்கு வந்து விடுகிறார் அந்தத் தொழிலாளி. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு மூத்த தொழிலாளி இவரிடம் வந்து “ஜி.எம் என்ன சொன்னான்?” எனக் கேட்டிருக்கிறார். இவரும் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்.
அந்த மூத்த தொழிலாளரின் மகன் போலீஸில் ஓட்டுனராகப் பணிசெய்கிறாராம்.
“‘நேற்று உங்க மில்லிலே என்ன போஸ்டர் ஒட்டியிருந்தீர்கள்’ என்று என்னிடம் என் மகன் கேட்டார். நானும் நடந்த விவரங்களைச் சொன்னேன். அதற்கு மகன் ‘அதுதான், நேத்து எதோ மில்லு சம்பந்தமா போஸ்டர் ஒட்டியிருந்தார்களாம். எஸ்.பிக்குத் தகவல் போயிருக்கு. உடனே இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்ஃபர் செஞ்சுட்டார். அவர் இப்ப வேற இடத்துக்குப் போறாரு’ என்று சொன்னதாக” மூத்த தொழிலாளி சொல்கிறார்.
இந்தச் செய்தி தொழிலாளர்களிடம் பரவுகிறது. அவர்களுக்கு “நம்மளோட பெரிய சங்கமெல்லாம் பயந்தாங்கோளியா இருக்கானுங்களேப்பா! கொஞ்சப்பேர் மட்டுமே இருக்கிற இந்தச் சங்கத்துக்காரங்க வீரமா கையினால போஸ்டர எழுதி இன்ஸையே டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்களேப்பா!” என்று ஒரே மகிழ்ச்சி.
தொழிலாளத் தோழர்களே! நீங்களெல்லோரும் வாருங்கள். நமது வர்க்கத்தின் வீரம் எதையெதையெல்லாம் டிரான்ஸ்பர் செய்யும் என்பதை இன்ஸுக்கும் ஜி.எம்முக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கே காட்டலாம்!
கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும் வழக்கை எதிர் கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வர மாட்டார்கள் என்று இத்தாலி அரசு தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி 24, 25 தேதிகளில் இத்தாலியில் நடந்த பொதுத்தேர்தலில் ‘ஜனநாயக கடைமையை’ அதாவது வாக்களிப்பதற்காக 4 வார பரோலில் ஊருக்குப் போன குற்றவாளிகள் திரும்ப மாட்டார்களாம். கொலைகாரர்களுக்கு எதுக்கு ஜனநாயக கடமை என்று தெரியவில்லை.
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேரை இத்தாலிய எண்ணெய்க் கப்பல் என்ரிகா லெக்சியைச் சேர்ந்த கடற்படை காவலர்கள் கொல்லம் மாவட்டத்தின் நீண்டகரை பகுதி கடலில் சுட்டுக் கொன்றனர். அந்த மீனவர்கள் கடல் கொள்ளையர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் சுட்டதாக அவர்கள் சொன்னார்கள்.
‘மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எண்ணெய் கப்பல் கடந்து போவதற்காக காத்திருந்த போது, எந்த காரணமும் இன்றி கப்பலிலிருந்து துப்பாக்கிச் சூடு நடந்தது’ என்றும் மீன்பிடிக் கப்பல் செயின்ட் ஆன்டனியின் தலைவர் பிரெடி லூயிஸ் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதலில் படகு ஓட்டுனர் ஜெலஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அஜேஷ் பிங்கி என்ற மீனவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு என்ரிகா லெக்சி கப்பல் சம்பவத்தைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எகிப்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது. கேரள மாநில கடலோர காவல்படையின் நீண்டகரை காவல் நிலையத்திற்கு தகவல் வர இந்திய கடற்படை கப்பல்களும் விமானங்களும் இத்தாலிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன. இந்திய கடலோர காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகுதான் கப்பல் உரிமையாளருக்கு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றனர். கடற் கொள்ளையரை சுட்டதாக சொல்லும் கப்பல் ஊழியர்கள், அது வரை கப்பல் நிறுவனத்திற்கோ, கடற்கொள்ளை தடுப்பு மையத்துக்கோ எந்தத் தகவலும் அனுப்பியிருக்கவில்லை.
கேரள கடல் எல்லையிலிருந்து 20.5 கடல் மைல் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ் மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரோனே என்ற இரண்டு இத்தாலிய கடற்படை வீரர்களை கப்பலிலிருந்து கைது செய்தனர். கப்பலின் கேப்டன் விட்டெல்லிக்கு இதில் நேரடி பொறுப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
‘முதல் தகவல் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்று குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய படை வீரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்ட மரைன்கள் மீனவர்களை சுட்டுக் கொல்வதற்கு முன்பு கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கப்பலின் கேப்டனுக்கு தகவல் சொன்னதாகவோ, கேப்டன் அதை பதிவு செய்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. கப்பலின் தலைவர் கப்பல் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியதற்கோ, கடற்பயண மீட்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான மையத்துக்கும் வேறு எந்த கடற்படைக்கும் தகவல் அனுப்பியதற்கோ எந்த தடயங்களும் இல்லை” என்று சொன்னது.
2012 மே மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் மாதம் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வீரர்களும் ரூ 1 கோடி பிணையத் தொகை கட்ட வேண்டும், கொச்சி காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு 10 கிலோமீட்டர் தூரத்துக்குள் தங்கியிருக்க வேண்டும், தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஆணையர் அலுவலகத்தில் வர வேண்டும் என்ற சுதந்திரமான நிபந்தனைகளின் கீழ் பெயிலில் விடப்பட்டனர். இந்தியாவில் வேறு எந்த கொலைகாரர்களுக்கும் இத்தனை தனிச்சிறப்பான சலுகைகள் கிடையாது. என்ன இருந்தாலும் மேற்குலகின் மனிதர்கள் என்றால் நீதியும் பணிந்து கொடுக்கும் போல.
‘கேரள மீனவர்கள் கொல்லப்பட்டனர்’ என்பதை கேரளாவின் பிரச்சனையாக முன் வைத்து கேரள ஆளும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இந்த வழக்கை விவாதித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய படை வீரர்களை விடுவித்து இத்தாலிக்கு அழைத்து போக இத்தாலிய அரசும் மத்திய அரசும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வழக்கை கேரளாவிலிருந்து மாற்றி கொண்டு போய் விட வேண்டும் என்ற முயற்சிகள் ஆரம்பித்தன.
டிசம்பர் மாதம் தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு இத்தாலி போய் வர அனுமதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட படை வீரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
‘இத்தாலிய மரைன்கள் கொச்சிக்கு திரும்பி வருவதற்கான பொறுப்பை இத்தாலிய தூதரக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’, ‘ரூ 6 கோடிக்கான பிணைத் தொகையை கோர்ட்டில் கட்ட வேண்டும்’, ‘இத்தாலிய அதிகாரிகள் இரண்டு குற்றவாளிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கேரள போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்’, ‘இந்த நிபந்தனைகள் அனைத்தையும் இத்தாலிய அரசு கடைப்பிடிக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்தால் அவர்கள் போய் வரலாம்’ என்ற கடும் கட்டுப்பாடுகளோடு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ‘ஜனவரி 10-ம் தேதிக்கு முன் கொச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது
இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், மத்திய அரசு என்று பலர் மீதும் பொறுப்பு சுமத்தப்பட்டிருந்ததால் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு ஜனவரி முதல் வாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கப்பல் படை வீரர்கள் கேரளா திரும்பினார்கள்.
“இந்தியக் கடல் எல்லைக்கு வெளியில் நடந்த சம்பவத்தை விசாரிக்க கேரள போலீசுக்கு அதிகாரம் இல்லை” என்றும், “இந்திய நீதிமன்றங்களின் விசாரணை வரம்புக்குள் அது வராது” என்றும் இத்தாலிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஜனவரி 18-ம் தேதி உச்சநீதி மன்றம், இத்தாலிய அரசின் மனு மீதான தீர்ப்பில் “சம்பவம் 12 கடல் மைல்களுக்கு வெளியில் நடந்ததால் அதைப் பற்றி விசாரித்து வழக்கு போட கேரள அரசுக்கு உரிமை இல்லை” என்று தீர்ப்பளித்து வழக்கை கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றியது. வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, இத்தாலிய மரைன் வீரர்களின் பிணை நிபந்தனைகளையும் மாற்றியது. அவர்கள் ‘டெல்லியிலுள்ள இத்தாலிய தூதரகத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் தங்க வேண்டும்’ என்றும், ‘வாரம் ஒரு முறை டெல்லியில் சாணக்கியபுரி காவல் நிலையத்துக்கு வர வேண்டும்’ என்றும், ‘கொச்சி போலீஸ் கைவசம் இருந்த பாஸ்போர்ட்டுகளை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இத்தாலிய அரசின் கட்டுப்பாட்டிலும், அவர்களை இந்தியாவை விட்டு வெளியில் அனுமதிக்கும் ஆவணங்களும் வழக்கை நடத்தும் பொறுப்பும் மத்திய அரசின் கைக்கும் வந்து விட்டது. ஒரு மாதமாகியும் மத்திய அரசு தனி நீதிமன்றம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தச் சூழலில் உச்சநீதி மன்றம், பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் இத்தாலியில் நடந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக நான்கு வாரங்களுக்கு இத்தாலி போய் வர அவர்களுக்கு அனுமதி வழங்கியது. ‘இத்தாலிய சட்டப்படி தபால் மூலம் வாக்களிக்க இந்த படைவீரர்களுக்கு உரிமை இல்லை என்பதால் நேரில் போய் வாக்களிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் ஊருக்குப் போய் வர அனுமதி வழங்கப்படுகிறது’ என்று ஒரு தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். 2 நாட்கள் நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 4 வாரங்கள் விடுமுறையும் வழங்கியது. அப்படி இந்த கொலைகாரர்களது இரண்டு ஓட்டுக்கள் விழவில்லை என்பதால் இத்தாலியின் ஜனநாயகக் கப்பல் ஒன்றும் கவிழ்ந்து விடாது. எனினும் ஒரு சதித்திட்டம் போல இந்த அனுமதி கொடுக்கப்படுகிறது.
இப்போது இத்தாலி அரசு ‘இரண்டு மரைன் வீரர்களும் இந்தியாவுக்குத் திரும்பி வரப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டது. ‘நாங்க என்ன செய்ய முடியும்’ என்று அலுத்துக் கொண்டு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை இழுத்து மூடி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நம்மால் ஒண்ணுமே முடியா விட்டாலும், வாயால் வடை சுட்டு கேரளாவில் ஓட்டுகளை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் ‘இத்தாலியின் இந்த முடிவை ஏற்க முடியாது’ என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சொல்லியிருக்கிறார். “கேரள நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நாங்க எவ்வளவு தீவிரமா இந்த வழக்கை நடத்தினோம் என்று எல்லோரும் பார்த்தீங்க. இப்போதும் இந்திய சட்டப்படி இந்தியாவில் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
போபால் படுகொலை
ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த நிலை ஒரு மர்மக் கதை போல திட்டமிட்டு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கேரள மக்களையும் பகைத்துக் கொள்ளக்கூடாது, இத்தாலிய அரசையும் மிரட்டமுடியாது என்று இந்திய அரசு சாணக்கிய தந்திரத்துடன் இத்தாலி வீரர்கள் வெளியேற வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதன்படி வழக்கை கேரளாவிலிருந்து டெல்லிக்கு மாற்றி வீரர்களையும் இத்தாலி தூதரகத்தில் வாழ வைத்து பின்னர் ஓட்டுப் போட நான்குவார விடுமுறை என்று வெளியேற்றி இப்போது திரும்ப மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள்.
இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று இந்திய அரசு பிலாக்கணம் வைக்கலாம். அல்லது இத்தாலி அரசின் முடிவை ஏற்கவில்லை என்று சொல்லலாம். அல்லது இத்தாலி வீரர்கள் வெளியேறுவது என்பது முற்றிலும் நீதிமன்றம் செய்த முடிவு, நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லலாம். ஆனால் இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை. இப்போது கேரள மக்களும் மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்களை குற்றம் சொல்ல முடியாதில்லையா?
இந்த நேரத்தில் வரலாற்றையும் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம். தமது செல்வாக்கை பயன்படுத்தி போபர்ஸ் பீரங்கி ஊழல் திருடன் குவாட்டரோச்சி, போபால் விஷவாயு கொலையாளி ஆண்டர்சன் போன்ற குற்றவாளிகளை திட்டமிட்டு தப்பவைத்தவர்கள் யார்? அப்படி அவர்களை தப்பவிட்ட 21ம் நூற்றாண்டின் வல்லரசான இந்தியாவின் இறையாண்மை ‘புனிதமானது’ என்பதில் யாருக்காவது ஐயம் இருக்கிறதா? அப்பேற்பட்ட புனிதம்தான் நமது இரண்டு மீனவர்களை அநியாயமாக கொன்ற இரண்டு இத்தாலி கொலைகாரர்களை காப்பாற்றியிருக்கிறது என்பதில் யாருக்கு ஐயம் இருக்க முடியும்?