Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 800

இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??

சர்ச்சைக்குரிய இடம்…

முதலாளித்துவச் சமூகத்தில்
மூட்டைப்பூச்சிக்கும், கொசுவுக்கும் கூட வர்க்கமுண்டு,
இயலாதவரையே ஏறிக்கடிக்கிறது!

இந்த லட்சணத்தில்…
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும்
சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
யாராவது நம்பினால்…?
அயோத்தி தீர்ப்பே
அந்த எண்ணத்திற்கு ஆப்பு!

“சர்ச்சைக்குரிய இடம்” யாருக்குச் சொந்தம்?
சட்ட, ஆதாரப்படி சொல் என்றால்,
சர்ச்சைக்குரிய பிறவிக்கே இது ‘ஜென்ம பூமி’ என்று
தீர்ப்பை சொல்கிறான் என்றால்..
இது நீதிமன்றமா… சங்கரமடமா!
இவன் நீதிபதியா… சங்கராச்சாரியா!
இந்து மதவெறியன் கடப்பாரையில்
இடித்துச் சொன்னதை…
“பார் அட்லா”  சுத்தியலால்
அடித்துச் சொல்லியிருக்கிறான்..
வேறுபாடு கருவியில்தான்
மற்றபடி இந்திய நீதித்துறை
எப்போதும் போல் பார்ப்பன படித்துறை.

உழைக்கிற உழவுமாட்டுக்கு சூடு,
திரிகிற கோயில் மாட்டுக்கு தீனி, அகத்திக்கீரை!
இதுதான் இந்து தர்மம்!

உழைக்கும் மக்கள் அர்ச்சகராகி
கருவறைக்குள் நுழைய எதிர்ப்பு!
சந்நிதானத்திலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளிய
ஜெயேந்திரனுக்கு சட்டம் ஒரு செருப்பு!
இதுதான் அரசியல் சட்டம்!
இவனிடமா நீதி கிடைக்கும்?

பிரியங்கா போட்மாங்கே என்ற
தாழ்த்தப்பட்ட பெணணை
கும்பலாக வன்புணர்ந்து
பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்காட முடியாது என
அரசியல் சட்டத்தை அவள் பிணத்தில் செருகிய
ஆதிக்கசாதி பயங்கரவாதிகள்தான்
இந்த நீதிபதிகள்.

இந்தியாவின் முகத்தின் மேல்
என் கழிவை இறக்குவேன்…
அதன் வேதிவினை பற்றி
விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
இது எங்கள் தொழில் ரகசியம் என
கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை
‘பந்த்’ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்ன
போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்கிறது!
புரிகிறது…
இளிச்சவாய் இந்தியனென்றால் விடாது இ.பி.கோ.!
பன்னாட்டுக் கம்பெனி என்றால்
நீதிமன்ற தராசையும் எடுத்துக்கோ!

முப்பதாயிரம் இந்தியர்களை
போபாலில் படுகொலை செய்த
அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
அமெரிக்க ஆண்டர்சனின்
சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்

யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்

இன்றும் கூட.. போபாலில்
உதடுகள் பிளந்து, கண்கள் பிதுங்கி,
மரபணு சிதைந்து…
பிறக்கும் குழந்தைகளின் முகத்தில்
விகாரமாய்த் தெரிகிறது நீதித்துறை!

ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
அத்தனை பேரும் நீதிபதிகள்

விழுந்து, எழுந்து போராடும்
உழைக்கும் மக்களின் உரிமை மூச்செங்கும்
அழுந்திக் கிடக்கும் நீதித்துறையின் தழும்புகள்

அதிர்ச்சியடையத் தேவையில்லை
சர்ச்சைக்குரிய இடம்… இனி
பாபர் மசூதியோ, ராமன் பொம்மை பிறந்த இடமோ அல்ல,
இந்த நீதித்துறைதான்.
தெரிந்து விட்டது உண்மை
தெருவில் இறங்கி வழக்கை முடி!

_________________________________________________
* துரை.சண்முகம்
_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

36

சி.என்.என்-ஐ.பி.என், டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்:

கரண் தபார்: மாவோயிஸ்டுகள் பற்றிய தங்களது பார்வை மற்றும் அவர்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றிய தங்களது கருத்துகளுடன் விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன், சமீபத்தில் பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டு எட்டு நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டது, அவர்களில் ஒருவரான லூக்காஸ் டிட்டி கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அருந்ததி ராய்: தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த ஒருவரைக் கொலை செய்வதில் புரட்சிகரமானது ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஆந்திரத்தில் போலி மோதலில் ஆசாத்தைக் கொலை செய்த போலீசாரின் செயலை ஒத்ததே இச்செயல் என நான் இதுபற்றி அறிவித்திருக்கிறேன்.  ஆனால், நமது தொலைக்காட்சிகளில் வரும் வன்முறை அடிப்படையிலான பகுப்பாய்வுகளில் இருந்தெல்லாம் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.  ஏனென்றால், இவ்வாறான விவாதங்கள், எதற்காக இந்தப் போர்? இந்த போரை விரும்புகிறவர்கள் யார்? இந்த போர் யாருக்குத் தேவையாக இருக்கிறது? என்ற விரிந்த பார்வையை (big picture) நீங்கள் இழந்து நிற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றன.

தபார்: அந்த விரிந்த பார்வை பற்றி விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் நான் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  மாவோயிஸ்டுகள் கடந்த ஓராண்டில் பிரான்சிஸ் இண்டுவார், சஞ்சய் கோஷ் ஆகியோரது தலையைக் கொய்திருக்கிறார்கள், லூக்காஸ் டிட்டியைக் கொன்றிருக்கிறார்கள், பிற போலீசாரைக் கடத்தியிருக்கிறார்கள்; நிலைகுலைய வைக்கும் தாக்குதல்கள் தண்டிவாடாவில் நடத்தப்பட்டிருக்கின்றன; கியானேஸவரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டு இருக்கிறது.  இவை எல்லாம் அவர்களது நியாயமான போர்த்தந்திர அல்லது செயல்தந்திர நடவடிக்கைகளா? அல்லது அவர்களது லட்சியத்தில் இருந்தான பிரழ்வுகளா? நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ.ராய்: எல்லாவற்றையும் மொத்தமாகக் கட்டிச் சுமத்தாதீர்கள்.. உதாரணத்துக்கு அந்த ரயில் விபத்து.  அதை யார் செய்தார்கள் என்று இன்று வரை யாருக்காவது தெரியுமா?

தபார்: மாவோயிஸ்டுகள்தான் என்று எல்லோருமே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்..

அ.ராய் : எல்லோருரையும் ஏற்கச் செய்திருக்க முடியும்.  ஆனால், ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது, மெய்ப்பிக்கப் புறச்சான்றுகள் வேண்டும்.  நாளும் வெளிப்படும் உண்மைகள் சிக்கவிழ்த்த வண்ணம் இருக்கின்றன.

தபார் : சரி, தண்டிவாடா, தலை கொய்தல்கள், ஆள்கடத்தல்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அ.ராய் : தற்போது நிகழ்வது என்ன.. ஒரு சண்டை, நிலவுவது ஒரு போர்ச் சூழல்.  நீங்கள் எல்லோரும் அதில் ஒரு தரப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரமான வன்செயல்களை முன்வைத்துப் பாயிரம் பாடுகிறீர்கள்.  அதே சமயம் மறுபுறம் என்ன நடக்கிறது என்ற சித்திரத்தை ஓரங்கட்டி விடுகிறீர்கள்.  அது, ஆகப் பரிதாபகரமான அந்த கிராமங்களை இரண்டு லட்சம் துணை ராணுவத் துருப்புகள் சூழ்ந்துகொண்டிருப்பதும், மக்களை இடம் பெயர்த்து எரிவதும், எரித்துக் கொல்வதும் பற்றியது.  எல்லா வன்முறைகளும் பயங்கரமானவைதான்.  ஆனால், உண்மையில் நடப்பது என்ன என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிய விரும்பினால் அதுபற்றி நாம் சற்று விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.

தபார் : ஆக, நீங்கள் சொல்ல வருவது, வன்முறை திருகுச்சுருள் போல விரிந்து செல்கிறது, அதில் ஒரு தரப்பின் செயல் மற்றதன் எதிர்வினையை நியாயப்படுத்தி விடுகிறது; ஒரு விதத்தில், நீங்கள் இதில் எந்த ஒரு தரப்பின் மீதும் குற்றம் காண விரும்பவில்லை.  இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாகக் காண்கிறீர்கள், அப்படித்தானே?

அ.ராய் : இல்லை, அவ்வாறு இல்லை. இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாக நான் பார்க்கவில்லை, இதில் எதையும் நியாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை.  ஒரு அரசு தனது ஆதிவாசி மக்கள் தொடர்பாகத் தான் வைத்திருக்கும் அரசியலமைவுச் சட்டத்தின் சரத்துகள் ஒவ்வொன்றையும் உடைத்தெறியும் போது, பல பத்து லட்சம் மக்களின் தாய்மண்ணில் ஒரு படுகொலையை நிகழ்த்தும்போது, அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கத்தான் செய்கிறது, அது இச்செயலைத் தடுக்கத்தான் செய்கிறது.  அந்த சூழ்நிலை தற்போது மூர்க்கமானதாகவும், மோசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் இருந்து நெறிசார் விளக்கம் பெற விழைவீர்களானால் விஞ்சுவது குழப்பமாகத்தான் இருக்கும்.

 

தபார் : ஆனால், இந்த அரசுதான் முதல்நிலைக் குற்றவாளி எனக் காண்கிறீர்கள் என்பது உங்கள் கூற்றில் இருந்து தெள்ளத் தெளிவாகத் துலங்குகிறது. அதாவது, பெரும் தவறு, முதல் தவறு அரசாங்கத்தினுடையது, மாவோயிஸ்டுகள் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்.

அ.ராய் : நிச்சயமாக இந்த அரசை வலுச்சண்டைக்காரனாகவே நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டுகளைப் பொருத்தவரை அவர்களது கொள்கையும் இந்திய அரசை பலாத்காரத்தால் தூக்கியெறியும் கொள்கைதான்.  இருப்பினும், இந்திய அரசு ஒரு நீதிவழுவா அரசு என நான் நினைக்கவில்லை. அது அவ்வாறு இருக்குமானால், சாமானிய மக்கள் இங்கு தாங்களும் நியாயம் பெறமுடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையேனும் பெற்றிருப்பார்களானால், மாவோயிஸ்டுகள் மக்கள் ஆதரவற்ற போர்க்குணம் கொண்ட மிகச் சிறிய குழுவாகவே இருந்திருப்பார்கள்.

தபார் : ஆக, நியாயமானது என்று நீங்கள் நம்பத் தயாரில்லாத இந்த அரசின் தன்மையின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் தங்களது பலத்தையும், ஆதரவையும் பெற்றார்கள்…

அ.ராய் : மாவோயிஸ்டுகளை விடுங்கள், ஆயுதம் தாங்கிய, தாங்காத அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும், இன்றைய மாவோயிஸ்டுகளும் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரிப் போராடுகிறார்கள். ஆனால், அரசோ அதற்குக் குழிபறிக்கிறது.

தபார் : எனவே, உண்மையான சட்டவாதிகள் மாவோயிஸ்டுகள், சட்டத்தை உடைப்பவர்கள் இந்த அரசாங்கம்.. அப்படித்தானே?

அ.ராய் : மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா எதிர்ப்பு இயக்கங்களும்தான்.

தபார் : இவ்வாரச் செய்திகள் முழுவதிலும் அடிபட்டவர்கள் என்பதால், தற்போதைக்கு மாவோயிஸ்டுகள் மீது கவனத்தை செலுத்துவோம். தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைப் பார்க்கிறார் பிரதமர்.  அவர்களைப் பற்றிய உங்களது கருத்து முற்றிலும் மாறுபட்டது எனக் கருதுகிறேன். மாவோயிஸ்டுகளைப் பற்றிய உங்களது பார்வைதான் என்ன?

 

அ.ராய் : நாடு, நகரம், காடுகளில் உள்ள எதிர்ப்பு இயக்கங்களின் அலைவரிசையில் மிகவும் போர்க்குணம் மிக்க முனையில் முதல் நிலை வக்கிக்கும் குழுவினராக அவர்களைப் பார்க்கிறேன்.

தபார் : ஆனால் அவர்கள் என்ன செய்ய விழைகிறார்கள்?  அவர்கள் தரப்பு நியாயம் என்ன?

அ. ராய்: அவர்களது இறுதி இலக்கு, அவர்களே தெளிவாகச் சொல்வது போல, இந்த இந்திய அரசைத் தூக்கியெறிந்துவிட்டு பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தைக் கொணர்வதுதான்.  அது அவர்களது இறுதி இலக்கு.  ஆனால்,…

தபார் : சொல்லுங்கள் அருந்த்திராய் அவர்களே, நீங்கள் அந்த இலக்கை ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: நான் அந்த இலக்கை ஆதரிக்கவில்லை.  என்ன அர்த்தத்தில் என்றால், உலகம் இன்று சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு கம்யூனிச அல்லது முதலாளியக் கற்பனைகளில் இருந்து பிறக்கும் என நான் நம்பவில்லை…

தபார் : அது எனக்குப் புரிகிறது.  ஆனால், இந்த அரசைத் தூக்கியெறியும் முயற்சி எதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அ. ராய்: சரிதான், ஆம், ஆதரிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது.  பிறகு இங்கிருந்தே விலங்கிட்டு அழைத்துச்செல்லப்படுவேனே.

தபார் : இந்தக் நடைமுறை சிக்கலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நீங்கள் ஆதரிப்பதாகத்தான் தெரிகிறது.

அ. ராய்: இருப்பினும், இந்திய அரசு மக்கள் மீதான தனது பொறுப்புணர்ச்சியைக் கைகழுவிவிட்டது என்று நான் நம்புகிறேன்.  இந்திய அரசியலமைப்புக்கு சட்டப்படியோ, தார்மீக ரீதியாகவோ இந்த அரசு கட்டுப்படாதபோது, ஒன்று, நாம் இந்த அரசியல் அமைப்புச்சட்ட முன்னுரையின் மேற்கோள் வாசகத்தை மாற்றி எழுதலாம். அது சொல்கிறது…

தபார் : அல்லது ?

அ.ராய் : நாம் ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்று அது சொல்கிறது.  அதை மாற்றி இது ஒரு கார்ப்பரேட் முதலாளிகள், இந்துத்துவ சக்திகளை சுற்றிச் சுழலும் துணைக்கோள் என்று அழைக்கலாம்.

தபார் : அல்லது  ?

 

அ.ராய்: அல்லது இந்த அரசியலமைப்பை மதித்து நடக்கும்படியான ஒரு அரசை நாம் பெற்றாகவேண்டும். அல்லது, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.

தபார் : உடைத்துச் சொல்கிறேன்… இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் உறுதிப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.  அதைச் சொல்வதற்கு சாதுர்யமான, பூடகமான வழிகளைக் கையாள்கிறீர்கள்.  சிறைப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள்..  பார்வையாளர்களுக்குத் தங்களது பேச்சின் பொருள் இதுபோலத்தான் ஒலிக்கிறது.

அ.ராய் : இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் விருப்பத்தை ஆதரிக்கிறேன் என்று நான் சொன்னால், நான் என்னை ஒரு மாவோயிஸ்டு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.  ஆனால் நான் ஒரு மாவோயிஸ்ட் அல்ல.

தபார் : ஆனால் நீங்கள் அவர்களது அனுதாபி… இல்லையா?

அ.ராய் : எல்லா இயக்கங்களுக்கும்தான் நான் அனுதாபி.  நான் இருப்பது கோட்டின் இந்தப்பக்கம்; உள் நாட்டில் மட்டுமல்ல, உலகலிலேயே கொடும் ஏழையான மக்களின் மீதே தனது இராணுவத்தைப் ஏவத்துடிக்கும் அரசுதான் இங்கு இருக்கும் அரசு என்று இடித்துரைக்கும் மக்களின் பக்கம் நான் இருக்கிறேன்.  இச் செயலை நான் ஆதரிக்க முடியாது.

 

தபார் : சரி, இப்படிக் கேட்கிறேன்.  நீங்கள் மாவோயிஸ்ட் இலட்சியத்தின்பால் அனுதாபம் காட்டுகிறீர்கள்.  ஆனால், அவர்கள் நடைமுறைப்படுத்தும் செயல்தந்திரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  பிரச்சினை என்னவென்றால், மாவோயிஸ்டுகள் மக்களைக் கருத்தொருமிக்கச் செய்தோ, சட்டபூர்வமான தேர்தலில் வென்றோ அல்லாமல் ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையைச் சாதித்து ஒரு புதிய ஜனநாயக சமூக ஒழுங்கமைவைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.  பலருக்கும் இச்செயல் ஒரு உள்நாட்டுப் போரை ஒத்த விசயம்.  இதில் நீங்கள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்கிறீர்களா?

அ.ராய் : ஏற்கனவே இங்கு ஒரு உள்நாட்டுப் போர்தானே நடக்கிறது. வன்முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு எதிர்ப்பு இயக்கம் புதிய ஜனநாயகத்துக்கு வழிநடத்தும் என்று நான் நம்பவில்லை.  உறுதியாக நான் நம்பவில்லை.  அதுபோலவே, நீ அகிம்சாவாதியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கோட்பாடு பேசுவீராயின் அதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  இவ்வாறு பேசுவது நடப்பில் உள்ள அநீதியை ஆதரிக்கும் புரட்டுப் பேச்சு என்றே நம்புகிறேன்.  எதிர்ப்பு இயக்க அலைவரிசையில் ஒன்றாக அதுவும் இடம்பெறுகிறது என்றே கருதுகிறேன்.  800 மத்திய சேமக்காவல் படையினரால் உங்கள் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு, வண்புணர்ச்சி, தீயிடுதல், சூரையாடுதல் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கும்போது, நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று உங்களால் சொல்லமுடியாது என்றும் நம்புகிறேன்.  அச்செயல்களை எதிர்க்கும் மக்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்.

தபார் : இருக்கட்டும், என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.   நீங்கள் அதை ஆயுதந்தாங்கிய விடுதலைப் போர் என்றோ வேறு எதுவாகவோ அழைத்துக்கொள்ளுங்கள், அதற்கான உங்கள் நியாயவாதம் எதுவாயினும் இங்கு ஒரு பொருட்டல்ல; மாவோயிஸ்டுகளின் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு உரிமையை நீங்கள் ஆதரிப்பீர்களானால்..

அ.ராய் : இப்படி மாவோயிஸ்டுகளை நோக்கியே  சுற்றியே பேச்சை கொண்டு செல்கிறீர்கள், இது நியாயம் இல்லை…

 

தபார் : நீங்கள் அதை ஆதரிப்பீர்களானால், அது எந்த அடிப்படையில் என்பது இங்கு விசயமல்ல,  அதே சமயம் அரசு ஆயுதம் எடுத்துத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை உங்களால் எப்படி மறுக்க முடியும்?

அ.ராய் : அரசுக்கு தன்னைத் பாதுகாத்துக் கொள்வதா வேலை,  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், பாதுகாப்பதுமே அதன் கடமை என கருதப்படுகிறது

தபார் : ஆனால், அரசு தாக்கப்படுமானால், அது மக்கள் தாக்கப்படுவதாகவே பொருள். மேலும்…

அ.ராய் : கரன., அரசு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அதுதான் தாக்குதலைத் தூண்டுகிறது.  அதைத்தான் நான் புரியவைக்க முயல்கிறேன்.  தனது சொந்த அரசியல் சாசனத்துக்கு முரணாகச் செயல்படுவதுடன் ஒரு தாக்குதலையும் முன் தள்ளுகிறது. சமீபத்திய பஞ்சாயத் ராஜ் அறிக்கையைப் பார்த்தீர்களானால், அதன் கண்டன அத்தியாயத்தில் அரசு தனது செயல்பாடுகளில் முற்றிலும் சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  ஒரு மாறுதலுக்கு நான் உங்களை கேட்கிறேன், ராணுவம், போலீசு, துணை ராணுவப்படை, விமானப்படை அனைத்தும் கூடி ஏழை மக்கள் மீது ஒரு போரைத் தொடுக்கத் தொடங்கும்போது அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?  இடத்தைக் காலி செய்துவிட்டு கூடாரத்தில் குடியேறவேண்டுமென்றா? தங்களது நிலத்தைப் பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சுரங்கத்துறையினர் அபகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றா?

 

தபார் : ஆக, மாவோயிஸ்டுகளும் மற்ற அனைத்து எதிர்ப்பு இயக்கத்தினரும் இதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்த வேறு வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறீர்கள், இல்லையா?

அ. ராய் : நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசு வன்முறையற்ற எதிர்ப்புக்கு மதிப்பளிக்குமேயானால் -இந்த அரசு மதிப்பளிக்காவிட்டாலும் – பல ஆண்டுகளாக, பல பிரச்சனைகளுக்காக  மக்கள் அமைதிவழியிலான போரட்டத்தைதான் கடைபிடித்துவந்திருக்கிறார்கள்.  நீங்கள் அந்த அகிம்சைப் பாதையை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன்னியல்பாக வன்முறையை பிரதானமாக வளரச் செய்கிறீர்கள். அதைத்தான் இந்த அரசு செய்கிறது.

தபார் : ஆனால், நீங்கள் கூறுகின்ற இந்த வன்முறையற்ற பாதையில்தான் மாவோயிஸ்டுகள் தங்கள் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்களா?  அது தானே பிரச்சினை.  அவர்களது லட்சியம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  கேள்வி என்னவெனில், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்களா, இல்லையா?

அ. ராய் : என் சொற்களுக்கு நீங்கள் காதுகொடுக்கவில்லை.  பலபத்து லட்சம் மக்களை அவர்தம் மண்ணிலிருந்து பிய்த்தெறியும் கண்மூடித்தனமான அநீதி இங்கு நாளும் முன்னேறிச் செல்கிறது என்று நான் கூறுகிறேன்.  ஏன் இந்த நாட்டில் 83 கோடியே 36 லட்சம் மக்கள் 20 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு ஒரு நாளைத் தள்ள வேண்டியிருக்கிறது?  உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட 6 கோடி மக்களை நாம் கொண்டிருக்கிறோமே, ஏன்?  ஏன் என்றால் இந்த அரசு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.  கடந்த 25 ஆண்டுகளாக இந்த அரசு அமைதிவழி கோரிக்கைகளைக் கேட்கவும் மறுத்திருக்கிறது.

தபார் : ஆகவே, மாவோயிஸ்டுகளை இதற்குப் அநீதியால் பாதிக்கப்பட்டவற்களாக நீங்கள் பார்க்கிறீர்களா..?

அ. ராய் : மக்கள் எதற்கோ பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டு கொள்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், எதற்கும் பலியானவர்களாகத் தங்களை அவர்கள் கருதவில்லை.   ஆனால் இந்த அரசு இழைத்துவரும் மாபெரும் அநீதியின் காரணமாக மாவோயிஸ்டுகளின்  கொள்கை ஒரு  வெகுஜனக் கருத்தாக்கமாக பெருவாரியான மக்களிடம் எடுபடுகிறது.

தபார் : சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட எல்லாத் தவறும் அரசுத் தரப்பினுடையதுதான் இல்லையா?

அ.ராய் : ஆம்.

தபார் : இதைத் துணிந்து , வெளிப்படையாக சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?

அ.ராய் : நிச்சயமாக.

தபார் : பேச்சுவார்த்தையின் நிலவரம் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன்னால், ஆசாத் பற்றிச் சொல்லுங்கள்.  மாவோயிஸ்ட் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யுமாறு சுவாமி அக்னிவேஷை உள்துறை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.  அதன்படி அக்னிவேஷ் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.  மே மாதம் தொட்டு இச்சூழல் தலைதூக்குகிறது.  ஆனால் ஜூலை மாதத்தில் விவரிக்க முடியாததொரு போலீஸ் மோதலில் ஆசாத் திடீரென்று இறந்துபோகிறார்.  ஆசாதை வெளிக்கொணர்ந்து கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டமே இது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அ. ராய் : ஆம், நம்புகிறேன்.

தபார் : உண்மையிலேயே அது அப்படித்தான் என்கிறீர்களா? ஆசாத்தைக் கொல்ல அரசு சதிவலை விரித்ததா?

அ. ராய் : வெளிவரும் உண்மைகளில் இருந்து பெறக்கூடியதாகவும், அவ்வுண்மைகள்  சுட்டிக்காட்டுவதாகவும் இம் முடிவுதான் இருக்கிறது.

தபார் : ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?  பேச்சுவார்த்தைக்கான நியாயமான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்த ஒரு மனிதரையே அவர்கள் ஏன் கொலை செய்ய வேண்டும்?

 

அ. ராய் : இந்த போர் அரசின் தேவையினால் நடக்கும் ஒன்று என்று கடந்த சில மாதங்களாகவே நான் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறேன்.  அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆதிவாசி நிலங்களைக் காலிசெய்யவும், கைமாற்றவும், கையெழுத்திடப்பட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொணரவும் இந்த போர் தேவை.  தொழில்-வர்த்தக ஏடுகளைக் கவனிப்பீர்களானால் அவர்கள் இவ்விசயத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரியும்.

தபார் : அரசுக்குப் போர்தான் தேவை என்றால் அதன் பேச்சுவார்த்தை முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே.

அ. ராய் : ஆமாம்.  அதற்குப் போர் தேவைப்படுகிறது.  அதே சமயம் கருணைமிகு புன்முறுவலுடன் கூடிய ஜனநாயக முகமூடியும் அதற்குத் தேவைப்படுகிறது.  எனவேதான் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்போதே மறு பக்கம் அதற்குக் குழிபறிக்கிறது.

 

தபார் : ஆனால், அரசு இரட்டை முகமுடையது என்ற இந்த முற்றிலும் விசித்திரமான கோட்பாட்டை ஒப்புக்கொண்டாலும்,

அ. ராய்: நான் அது இரட்டை முகமுடையது என்று சொல்லவில்லை

தபார் : ஒப்புக்கொண்டாலும்.. ஆசாத்தைக் கொல்வதன் மூலமாக அது தனது முகமூடியை ஏன் அவிழ்க்கவேண்டும், தன்னைத்தானே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?

அ. ராய்: ஏனென்றால், அப்போது நிகழ்ந்தனவற்றை நீங்கள் கவனித்தால், ஆசாத் அபாயகராமான அளவுக்கு நியாயமாக பேசத்துவங்கினார்…

தபார் : யாருக்கு?

 

அ. ராய் : நம் எல்லோருக்கும்தான்.

தபார் : ஹிந்து நாளேட்டுக்கு அளித்த ஒரு பேட்டியை வைத்தே அப்படி முடிவு கட்டிவிட்டீர்களா?

அ.ராய் : பாருங்கள் கரண், நாம் அனைவரும் ஆசாத்தை அறிவோம்.  நம்மிடையே அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமாக எழுதியிருக்கிறார்.

தபார் : உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆனால், மக்களுக்கு அதெல்லாம் தெரியாது.  அவர்களைப் பொருத்தவரை ஆசாத் ஒரு புதிர், அவ்வளவுதான்.

அ. ராய் : இல்லை. நிச்சயமாக இல்லை.  உதாரணமாக, அவர் அவுட் லுக் இதழுக்கு எழுதியதைப் பாருங்கள்.  அது அவர் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது.  ஆனால், அதற்கு முன்னாலேயே அனுப்பப்பட்டிருந்தது.

தபார் : ஆனால், அவர் பெரிதும் பேசத்தொடங்கினார், நியாயமானவராக தோன்றத் தொடங்கினார் என்பதால் அச்சமுற்ற அரசு அவரைக் கொன்றுவிட்டது என்ற உஙக்ளது கோட்பாட்டை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் கூட, அந்த அம்சங்கள் அவரை மதிக்கத்தக்க ஒரு நடுவராக அரசின் முகமூடியில் நன்கு பொருந்தக்கூடியவராக மட்டுமே செய்திருக்க முடியும்.  நிச்சயமாக, அதுவே அவரைக் கொன்றதென்பது ஒருவிதத்தில் இக்கருத்தின் நகைக்கத்தக்க முரணாகவே இருக்கிறது.

அ. ராய் : ஏன் அப்படி இருக்கவேண்டும்?  போரில் இரு தரப்புகள் இருப்பதாகக் கொள்வோம்.  இரண்டுக்கும் மேற்பட்டவை இருப்பினும், எல்லோருமே அதை இருமைப்படுத்தவே விரும்புவதால், வாதத்தின் பொருட்டு அதை ஒப்புக்கொள்வோம்.  ஒரு தரப்பு ஒரு தூதரை அனுப்ப, மறுதரப்பு அவரைக் கொலை செய்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?  அத்தரப்பு அமைதியை விரும்பவில்லை என்பதுதானே.  அதுதான் இதற்குப் பொருள். இது ஒரு  அறிவார்ந்த அனுமானம்.

 

தபார் : ஆக இது ஒரு மோசடியான அரசு.. ?

 

அ. ராய்: நிச்சயமாக.

 

தபார் : அப்படி என்றால், நான் கேட்க விரும்பும் சிக்கலான விசயத்துக்கே வருகிறேன்.  பேச்சுவார்த்தைக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?  மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிடுவார்களேயானால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பார்வம் கொண்டிருப்பதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  ஆயுதங்களைக் கீழே போடுங்கள் பேச்சு நடத்துவோம் என்று சொல்லிக் கேட்கக்கூட இல்லை.  பலரும் இதை மிகவும் நியாயமான, சொல்லப்போனால், பெருந்தன்மையான முன்வைப்பு என்று கருதுகிறார்கள்.  பேச்சுவார்த்தை பற்றிய அரசின் நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அ. ராய்: நீங்கள் அந்த காடுகளுக்குள் சென்று அங்கு நடப்பனவற்றைக் காண்பீர்களானால் தெரியும்.  இரண்டு லட்சம்  துணை ராணுவத் துருப்புகள் அந்த ஆதிவாசி கிராமங்களைச் ரோந்து வருகின்றன.  சுற்றிவளைப்பும் தேடுதல் வேட்டைகளும் நடத்தப்படுகின்றன, படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன, மொத்தப்பகுதியும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் வன்முறையைக் கைவிடுங்கள் என்று சொல்வதன் பொருள்தான் என்ன?  சண்டை நிறுத்தம், இருதரப்பு சண்டை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுவே உண்மையில் நியாயமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.  பிறகு நாம் பேசலாம்.  அதைவிடுத்து, நீ வன்முறையைக் கைவிடவேண்டும் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?

 

தபார் : ஆக, வன்முறையை ஒரு தரப்பு கைவிடக் கோருவது ஏற்கத் தக்கதல்ல, இருதரப்பு சண்டை நிறுத்தமே தேவை என்று கருதுகிறீர்கள், இல்லையா?

அ.ராய் : இருதரப்பு சண்டை நிறுத்தம்தான் அவசரத் தேவை எனக் கருதுகிறேன்.

தபார் : ஒரே நேத்ததிலா?

 

அ.ராய் : ஆம்.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என அரசாங்க அறிக்கைகள் சொல்லுகின்றன.  சிதம்பரம் அவர்களே அவற்றைக் கிடப்பில் போடுவேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.  ஏன் அவர் அவ்வாறு செய்யவில்லை?

தபார் : மாவோயிஸ்டுகளிடம் இருந்து பேச்சுவார்த்தை தொடர்பான சாதகமான சமிக்ஞை வருவதற்காக அவர் ஒருக்கால் காத்திருக்கலாம்.  தன்னிச்சையாக இதை செய்ய அவர் விரும்பாதிருக்கலாம்.

அ. ராய்: அவர்கள் இப்போது எழுத்துமூலமாக பதிலளித்திருக்கிறார்கள்.  ஆசாத் தனது எழுத்தின் மூலம் பதிலளித்தார்.

தபார் : ஆசாத் இனி இல்லை.  நான் உங்களைக் கேட்கிறேன்.  இந்த நேர்காணலின் மூலமாக, இருதரப்பும் சமகாலத்தில் என்ன செய்தால், அது ஒருக்கால் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்பது பற்றி பரிந்துரைக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்.  நீங்கள் மாவோயிஸ்டுகளை அறிந்திருப்பதால், அவர்களால் நம்பப்படுபவராக இருப்பதால், பேச்சுவார்த்தையில் ஒரு நடுவராக செயல்படத் தயாராக இருக்கிறீர்களா?

அ. ராய்: ஆந்திரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகப் படித்திருந்தீர்களானால் தெரியும். யாராவது ஒருவரைப் பொருக்கி எடுத்து அவரை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அறிவிப்பது, இப்படி இரு தரப்புமே செய்திருக்கின்றன.  சிதம்பரம் தன்னிச்சையாக சுவாமி அக்னிவேஷை தேர்ந்தெடுத்து அறிவித்தார்.  மாவோயிஸ்டுகளும் அது வேண்டும், இது வேண்டும் எனத் தங்கள் கோரிக்கைகளைத் தன்னிச்சையாக வானொலி வாயிலாக அறிவித்தனர்.  ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இப்படி நடப்பதில்லை.  ஆந்திரத்தில், தம்மைப் பேச்சுவார்த்தைக்குப் பொருப்பானவர்களாக அமர்த்திக்கொள்ள குடிமக்கள் கமிட்டிக்குக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பிடித்தது.  நடுவராகச் செயல்படுவது ஒரு நபராக இருக்க்க் கூடாது.

தபார் : தன்னிச்சையாய்ப் பொருக்கி எடுக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் சுவாமி அக்னிவேஷ்தான், ஆசாத்தை பேச்சுவார்த்தையின் விளிம்புவரை கொண்டுவருவதில் வெற்றிகரமாய் செயல்பட்டிருக்கிறார்.  நீங்கள் சொல்வது போல அவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையைத் தவிர, அக்னிவேஷ் தனது பொறுப்பைப் பெரிதும் நிறைவேற்றியிருக்கிறார்.  எனவே, நான் மீண்டும் கேட்கிறேன், நீங்கள் மாவோயிஸ்டுகளால் நம்பப்படுவதால், இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளும் வகையில், குறைந்த பட்சம் ஆங்கிலத்தில், புரியும் மொழியில் பேசுவதால், நீங்கள் ஒரு பேச்சுவார்த்தையின் நடுவராக இருக்கத் தயாரா?

அ. ராய் : பாருங்கள் கரண், அது ஒருவராகத்தான் இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை.  கூட்டுச் சிந்தனைக்கும் முடிவுக்கும் பழக்கப்பட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவினராக அது அமைய வேண்டும் என நான் கருதுகிறேன்.

 

தபார் : ஒரு கமிட்டியாக…?

அ. ராய் : நிச்சயமாக. அதுதான் ஆந்திரத்தில் நிகழ்ந்தது.  சிலர் அடங்கிய கமிட்டி அங்கு இருந்தது.

தபார் : அது ஒரு குளறுபடி இல்லையா?

 

அ. ராய் : இல்லை.  அது அத்தியாவசியமான ஒன்று.

தபார் : அதில் ஒரு உறுப்பினராக இருப்பீர்களா?

அ. ராய் : நான் அதில் பொருந்துவேன் என்று கருதவில்லை.  நான் சுதந்திர சிந்தனையுடயவள்.

தபார் : நீங்கள் அந்த கமிட்டியில் ஒருவராக இருக்கத் தாயாரா?

அ. ராய்: அப்படி இல்லை.  நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை.  ஏனென்றால் அதற்கான திறமை எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.  அதற்குப் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.

தபார் : ஜீன் மாதம் ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய நீதிபதி கிருஷ்ணய்யர், மாவோயிஸ்டுகள் நிபந்தனையற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.  நீங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவீர்களா?

அ. ராய் : மாட்டேன்.  இரண்டு லட்சம் துணைராணுவத் துருப்புகள் அந்த கிராமங்களை நெருக்கிக்கொண்டிருக்கையில் நான் அவ்வாறு செய்யமாட்டேன்.  நிபந்தனையற்ற வகையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறேன். பிறகு நீங்கள் அதன் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

தபார் : ஆனால், நடுவராக இருந்தோ, கமிட்டியில் ஒரு அங்கமாக இருந்தோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை.

அ. ராய் : நான் முயற்சிக்கிறேன்.

 

தபார் : முயற்சிக்கிறேன்! அட, உடனே உங்கள் நிலையில் தலைகீழ் மாற்றமா?

 

அ. ராய் : இதைப் பற்றி எப்படி யோசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

தபார் : கொஞ்சம் தள்ளிவிட்டால், இதமாக எடுத்துச் சொன்னால் ஒருக்கால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

அ. ராய் : நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுகிறீர்கள். ‘தேர்தலில் போட்டியிடுவீர்களா?’

தபார் : இல்லை.  எனது கேள்விக்குத் தெளிவான பதிலை நீங்கள் அளிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.  நான் என்ன உணர்கிறேன் என்றால், உங்களிடம் ஒரு உந்துதல் இருக்கிறது ஆனால் தெளிவான முடிவெடுக்க தயங்குறீர்கள்.

அ. ராய் : நாம் எல்லோருமே நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். ஆனால், கமிட்டி போன்றவற்றில் அங்கம் வகிக்க நான் பொருத்தமானவள் அல்ல என்று உறுதியாக உணர்கிறேன்.  நீண்ட அனுபவம் உள்ள B.D. சர்மா போன்று பேச்சுவார்த்தைகளில் அனுபவம் மிக்கவர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அவசியம் என்று நான் கருதுகிறேன்.

 

தபார் : சற்று மாறுபட்ட ஒரு விசயத்துக்கு வருவோம்.  இந்த அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சர், மாவோயிஸ்டு குறிக்கோள்களில் அனுதாபம் கொண்டவர்களை அவர்களது கூட்டாளிகள் என்று குறிப்பிடுகிறார்.  செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினர் அவர்களைத் துரோகிகள் என்றும் அழைக்கிறார்கள்.  அவ்வகையினரில் முதன்மையானவர் அருந்ததி ராயாகத்தான் இருக்கிறார். இப்படி முத்திரை குத்தப்படுவதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

 

அ. ராய் : என்ன சொல்ல, எல்லாம் அதே பழங்கதை தானே.

தபார் : ஆனால் இப்போக்கு ஒவ்வொரு முறையும் மூர்க்கமாய்த் தொடர்கிறதே.

அ.ராய் : இந்த அரசு, மற்றும் இப்பிரச்சினையில் தெளிவாய் ஒரு பக்கச் சார்பு எடுக்கும் பெரும்பாலான பத்திரிகைகள் எல்லோருமே ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.  காரணம் என்னவெனில், அடர்ந்த காடுகளில் புதைந்து ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் இருந்து, இந்தக் காட்டுவேட்டை தொடங்கியதும், ஏராளமான மனித உரிமை செயல்வீரர்களும், அறிவுஜீவிகளும் முன்வந்து இது எங்களுக்கு ஏற்புடையதல்ல என அறைந்து கூறினர்.  இச் செயல் அதுவரை இயல்பாய் நடந்துவந்த இலை மறை காயாக வைத்திருந்த விசயத்தை அம்பலப்படுத்தி ஆட்டங்காணச் செய்தது.

தபார் : ஆக, அரசின் நிலையிலான உறுதிப்பாடு மாவோயிஸ்டுகளை ஆதரித்த அறிவுஜீவிகளால் பலவீனப்படுத்தப்பட்டு  ஆட்டங்கண்டது.  அதனால்தான் அரசு அவர்களை “கூட்டாளிகள்” என்று முத்திரை குத்துகிறது.. இல்லையா?

 

அ. ராய்: மீண்டும் நீங்கள் மாவோயிஸ்டுகள் என்றே குறிப்பிடுகிறீர்கள்.

 

தபார் : ஆனால், அதனால் தானே அரசு அவர்களை கூட்டாளிகள் என்று அழைக்கிறது?

 

அ. ராய் : என்ன நடந்திருக்கிறது என்றால், இந்த அரசு தன்னுடன் ஒத்துப்போகாத எல்லோரையும் குறிப்பிடும் அளவுக்கு மாவோயிஸ்ட் என்பதன் வரையறுப்பை நீட்டித்திருக்கிறது.  என்னைப் போன்றவர்கள் நிலைமையைச் சிக்கலாக்கிவிட்டோம் என்பதுதான்.  இந்த ஏச்சுகள் எல்லாம் அவ்வளவு சல்லிசாக எடுத்துக்கொள்ளக் கூடிய விசயமல்லதான். இருப்பினும்,  நான் எனக்குத் தெளிவாய்ப் பட்டதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதால் அது என்னைப் பாதிக்கவில்லை.  எனக்கு பெயர்கள் வழங்குவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

தபார் : மேலும், இந்த அரசு உங்களைக் ’கூட்டாளி’  என்று அழைப்பது ஒரு விதத்தில், நீங்கள் உண்மையிலேயே இந்த அரசை நிம்மதி குலையச்  செய்திருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம்.

அ. ராய்: நான் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருப்பேன் என்றால், அதற்காகப் பெருமைப்படுகிறேன்.  ஏனென்றால், அது செய்யும் வேலைக்கு அது நிம்மதியற்றுத் திரியத்தான் வேண்டும்.

 

தபார் : தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

___________________________________________________

ஆங்கில மூலம்http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html
-தமிழாக்கம்: அனாமதேயன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

42

மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது.  நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.

“ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா.நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான பகிரங்க விசாரணைக்குத் தயார் என்கின்றனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை.

குற்றம் சாட்டிய இரயாகரன் அதனை நிரூபிக்கத் தயாராக இல்லை. “சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர்” என்று மிக அலட்சியமாகப் பேசுகிறார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ம.க.இ.க முன்வைத்திருக்கும் இந்த வழிமுறையை குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற வழி, என்றும் “எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பாதுகாக்கும் முயற்சி” என்றும் சாடுகிறார்.

இப்பிரச்சினையில் குற்றம் சாட்டியவரும், பிறகு குறுக்கு விசாரணை நடத்தியவரும், தீர்ப்பு வழங்கியவரும் ரயாகரன்தான். ம.க.இ.க  வழங்கியிருப்பது தீர்ப்பு அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் குற்றமிழைத்தவரைக் கண்டறிவதற்குமான ஒரு வழிமுறை – அவ்வளவே. “இருதரப்பும் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நடுநிலையாளர் இந்த விசாரணையை நடத்தட்டும்” என்று ம.க.இ.க வின் அறிக்கை தெளிவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறது.

இது இந்தப் பிரச்சினையை ஒட்டி நாங்கள் கண்டுபிடித்திருக்கும் வழிமுறையும் அல்ல. எமது அமைப்புத் தோழர் ஒருவர் தவறிழைத்திருப்பதாக ஊர்மக்கள் யாரேனும் குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வைத்து பலர் முன்னிலையில்தான் விசாரிக்கிறோம். அதே வழிமுறையைத்தான் இப்பிரச்சினையிலும் முன்மொழிந்திருக்கிறோம். இது இரயாகரனுக்காகவோ, நாவலனுக்காகவோ பிரத்தியேகமாகத் உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல.

“அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள்  (மசூதியை) இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம்” என்று கூறி ம.க.இ.க முன்வைக்கும் வழிமுறையை ரயாகரன் நக்கலடிக்கிறார். அவருடைய பாணியிலேயே பதில் சொல்கிறோம். அத்வானியின் குற்றத்தை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றனர். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்,  அத்வானிதான் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி ஓடி ஒளிகிறார். இது ரயாகரனுக்கு தெரியாது போலும்!

இரயாகரன் முன்வைக்கும் வழிமுறை என்ன? ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டி, அறிக்கை – மறுப்பறிக்கை விட்டு அரசியல் நடத்தும் ஓட்டுக்கட்சிகளைப் போல இணையத்தில் அறிக்கைப் போர், அக்கப்போர் நடத்த அவர் அழைக்கிறார். பிரச்சினையை நேரில் விசாரித்து முடிவுக்கு வருவோம் என்று சொன்னவுடனேயே, தன்னுடைய குற்றச்சாட்டை “அரசியல் ரீதியாகவும் எடுக்கலாம், ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம்” என்று விளக்கமளித்து குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கூச்சமே இல்லாமல் நழுவுகிறார்.

சென்ற மாதம் தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் குற்றவழக்கின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே நடைபெற்ற ஒரு மர்மமான மரணம் குறித்து சிதம்பரத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் வாய்மொழியாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களிடம் தெரிவித்தார். அதேபோல, சிதம்பரம் நகரத்தின் நக்கீரன் நிருபர் இரவு நேரத்தில் கோயிலுக்குள் நடைபெறும் காமக்களியாட்டங்கள் குறித்து பத்திரிகையில் அம்பலப்படுத்தியிருந்தார். ஆனால் இவை குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசு மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக ( sworn affidavit ) தாக்கல் செய்து, ஒரு சாட்சியமாக முன் நிற்குமாறு அவர்களைக் கோரினோம். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தனர். அதன் விளைவாக தற்போது தீட்சிதர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

“எதற்கு வம்பு” என்று அவர்கள் கருதியிருந்தாலோ, “வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கும் போலீசு நிலையத்துக்கும் அலைய வேண்டுமே” என்று நினைத்திருந்தாலோ இது நடந்திருக்காது. தான் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, ஒரு போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரும், ஒரு முதலாளித்துவ பரபரப்பு பத்திரிகையின் நிருபரும் கொண்டிருக்கும் தார்மீகப் பொறுப்புணர்ச்சி இரயாகரனிடம் இருக்கிறதா?

சம்பவம் குறித்து அவர் அளிக்கின்ற வியாக்கியானத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம். அவர் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம். அவர் கேட்கும் ஆவணங்களையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்புறம் அவர் கூறும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமாம். -இதுதான் ரயாகரன் முன்வைக்கும் வழிமுறை. தமிழரங்கத்தையும் ரயாகரனையும் அத்தகையதொரு சர்வதேச நீதிமன்றமாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்கி விடலாம். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷையே உலகம் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே!

குற்றம் சாட்டுபவராகவும், குறுக்கு விசாரணை செய்யும் வக்கீலாகவும், பிறகு நீதிபதியாகவும் ரயாகரனே இருக்க விரும்புகிறார். இப்பிரச்சினை குறித்து 2.9.2010 அன்று ரயாகரன் முதன்முதலாக எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பபையும், துவக்க வரிகளளையும் கீழே தருகிறோம் :

இந்தியப் போலீசுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார்.”

இதற்குப் பெயர் கிரிமினல் குற்றச்சாட்டா, அல்லது அரசியல் விமரிசனமா? இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும் நேரில் வருமாறு அழைத்தால்,  இதனை “அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்” என்று கூறி தப்பிக்கிறார் ரயாகரன். இதைவிட நாணயமற்ற பேச்சை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு மனிதன், அவன் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெங்காயவாதியாக இருக்கட்டும், அவனைத் “திருடன்” என்று கூறுவதும், ஒரு பெண்ணை “வேசி” என்று தூற்றுவதும் அரசியல் விமரிசனங்களா? மார்க்சிய லெனினியத்தில் ரயாகரன் அளவுக்கு எமக்கு ஆழ்ந்த புலமை இல்லாததால் இதனைக் கிரிமினல் குற்றச்சாட்டு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் குற்றம் சாட்டுபவர் விசாரணைக்கு வந்து தனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

நாவலன், எழிலன் குறித்த எங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தாலும், இந்த விசாரணை, நடுநிலையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதனால்தான் “பகிரங்க விசாரணை” என்ற வழிமுறையை ம.க.இ.க முன்வைத்தது. ஆனால் இதையே ஒரு குற்றமாக்கி, ம.க.இ.கவுக்கும் உள்நோக்கம் கற்பிக்கிறார் ரயாகரன்.

” புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல”

“புலிகள் பற்றிய பார்வையில் அவருக்கும் ம.க.இ.க வுக்கும் கருத்து வேறுபாடு” என்று இரயாகரன் கூறுவதற்கும், தற்போது நாவலன் உள்ளிட்டோர் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு? அரசியல் ரீதியான கருத்து வேறுபாட்டை கணக்குத் தீர்த்துக் கொள்ளத்தான் விசாரணை என்ற ஆலோசனையை (அல்லது சூழ்ச்சியை) முன்வைத்திருப்பதாக இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார் ரயாகரன். அல்லது அவருடைய கருத்தின்படி ம.க.இ.க புலி ஆதரவு என்பதால், புலி ஆதரவாளர்களைத் தப்பிக்க வைக்க ம.க.இ.க தந்திரம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதுதான் அவரது கூற்றின் பொருள்.  பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேர்மையானதொரு வழிமுறையை முன்வைத்திருக்கும் ஒரு புரட்சிகர அமைப்பை இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் இழிவு படுத்த முடியுமா?

இத்தனையும் சொல்லியதற்குப் பிறகு, இந்தியா வருவதில் தனக்கு உள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி அவர் எதற்காக விளக்கவேண்டும்? பகிரங்க விசாரணை என்பதை, “குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான ம.க.இ.க வின் சதித்திட்டம்” என்பதாகச் சித்தரித்து, “வரமுடியாது” என்று நிலை எடுத்தவர் “விசா இல்லாததால் வர இயலாத நிலை”, “கைது செய்யப்படும் அபாயம்” ஆகியவை பற்றியெல்லாம் எதற்காக விளக்கம் அளிக்க வேண்டும்? அனுதாபம் தேடுவதற்கா? “மரண தண்டனைக்குத் தயார், சிறைத்தண்டனைக்குத் தயார்” என்று நாவலனுக்கு சவால் விட்டு அவர் எழுதியவற்றை ஒருமுறை அவரே மீள வாசித்துப் பார்த்தல் நலம்.

குகநாதனையும், ஜெயபாலனையும், ரயாகரனையும் விருந்துக்கா வருந்தி அழைக்கிறோம்? அல்லது ம.க.இ.க வுக்கு வேறு வேலை இல்லையா? இணையத்தில் இக்குற்றச்சாட்டை முதன்முதலில் எழுப்பியவர் குகநாதன் அல்ல, ரயாகரன். அவருடைய வார்த்தைகளையே மேற்கோள் காட்டுகிறோம்.

“(குகநாதனை) நான்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம்”

இவ்வாறு தன்னுடைய சொந்த “முயற்சி”யில் நாவலன், செழியன், எழிலன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எழுப்பியவர் ரயாகரன். குகநாதனைத் தேடிப்பிடித்து தனது குற்றச்சாட்டுக்கு விவரம் திரட்டியவர் ரயாகரன். எனவேதான் குகநாதனை அழைத்து வருவதும் ரயாகரனின் பொறுப்பு என்று கூறுகிறோம்.

தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்போ, நேர்மையோ இரயாகரனுக்கு இல்லை. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட “புனிதத் திருஉரு” வாக அவர் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதையே அவரது வாதங்கள் காட்டுகின்றன. அவர் மீது மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்த பல தோழர்கள் மத்தியிலும்கூட அவர் மதிப்பிழந்து வருகிறார். ஒரு அமைப்பு என்பது பல்லாயிரம் தோழர்களைக் கொண்டது என்ற மதிப்போ, மக்களுக்குப் பொறுப்பாக இருப்பது என்ற கம்யூனிஸ்டுக்குரிய பணிவோ அவரிடம் இல்லை. சுயபரிசீலனை அற்ற தன்னகங்காரமும், ஆணவமுமே அவரது பதில் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்ததாகக் கூறும் குகநாதன், ஊடக தருமம் குறித்து பெரும் கவலை வெளியிட்ட “தேசம் நெற்” ஜெயபாலன் ஆகியோரிடமிருந்து எமக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

அதே நேரத்தில் “வீடியோவைக் கொடு, ஆடியோவைக் கொடு” என்று பலர் பின்னூட்டமிடுகிறார்கள். “அவை தங்கள் தரப்பு நியாயத்தை நிறுவுவதற்கான ஆதாரங்கள்” என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்து. விசாரணையின் போது அதனை அவர்கள் வெளியிடலாம். குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !

“விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம்” என்று ம.க.இ.க வெளிப்படையாக பொறுப்பேற்றுக் கொண்டபின்னரும், குற்றம் சாட்டும் இரயாகரன் நழுவுவதும், மற்றவர்கள் மவுனம் சாதிப்பதும், அவர்கள் சார்பில் சிலர் அவதூறாகப் பின்னூட்டம் போடுவதும், இந்த மொத்த விவகாரம் குறித்தும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இரயாகரனிடம் பதில்களும் அவர் பதிலளிக்கும் முறையும் அவரிடம் நேர்மை இல்லை என்பதையே காட்டுகின்றன. ம.க.இ.க வின் பத்திரிகைகளையும், ஒலி, ஒளித்தகடுகளையும் புலத்திலும் இணையத்திலும் தான் எடுத்துச் சென்றதையும், நாவலன் “திடீர் மார்க்சியவாதி” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கமென்ன? அவர் மார்க்சியவாதியாக இருக்கட்டும் அல்லது முதலாளித்துவ ஜனநாயகவாதியாக இருக்கட்டும், அதுவா பிரச்சினை?

விசாரணை என்று முன்மொழிந்தவுடனே, “குற்றவாளிகளைத் தப்பவைக்க ம.க.இ.க முயற்சிக்கிறது” என்று முத்திரை குத்துகிறார் ரயாகரன். அவர் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதற்கே வேறு மறைவான நோக்கங்கள் இருக்கின்றனவோ என்ற வலுவான சந்தேகத்தைத்தான் அவரது அணுகுமுறை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து அவர் நடத்தியிருக்கும் விசாரணை, ம.க.இ.க வுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகியவற்றிலிருந்து அவருடைய மனோபாவம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. நாவலனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு பற்றிக் கேள்விப்பட்டவுடனே, “ஆகா கிடைத்தது வாய்ப்பு” என்று அவர் மகிழ்ந்திருக்கிறார். குகநாதனின் யோக்கியதை என்ன என்பது பற்றிக் கூடக் கவலைப் படாமல் அவரைத் தேடிப்பிடித்து விவரம் கேட்டு, “கடத்தல், தரகுவேலை, மாமாவேலை, கட்டப்பஞ்சாயத்து” என்று எழுதிவிட்டார். “குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம் -வாருங்கள்” என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.

விவகாரம் இத்தனை தூரம் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்த குற்றத்துக்காக நாவலன், எழிலன், செழியன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் கோரவேயில்லை. அது அவரது நோக்கமும் அல்ல.  அவர் கேட்பது தன்னுடைய சந்நிதியில் ஒரு சுயவிமரிசனம். ஒரு மழுப்பலான சுயவிமரிசனத்தை அவர்கள் வெளியிட்டிருந்தாலும், உடனே அதனைப் “பெருந்தன்மையுடன்” ரயாகரன் அங்கீகரித்திருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள் சுயவிமரிசனம் செய்து கொள்ள மறுத்திருந்தால் புலம்பெயர் உலகத்தின் புகழ்பெற்ற குழாயடிச்சண்டை வரலாற்றில், இன்னொரு அத்தியாயமாக இது சேர்ந்திருக்கும்.

ம.க.இ.க இப்பிரச்சினையில் நுழைந்து இதனை ஒரு முடிவை நோக்கித் தள்ளும் என்று ரயாகரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் தான் பின்வாங்குவதை மறைக்கும் பொருட்டு, “ம.க.இ.க குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று அவதூறு செய்கிறார். “நாங்கள் சொல்வதில் நம்பிக்கையில்லையா? எங்களை பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறீர்களே” என்று நாவலனோ அருள் எழிலனோ, அருள் செழியனோ எங்களிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு கேட்கவில்லை.

ஆனால் அவர்களைக் காட்டிலும் நெடுநாளாக எம்முடன் தொடர்பில் இருப்பவரும், ம.க.இ.க வின் அரசியலில் உடன்பாடு இருப்பதாகக் கூறுபவருமான ரயாகரன், அவருக்கு உவப்பில்லாத ஒரு வழிமுறையை நாங்கள் முன்வைத்தவுடனே, குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் கூறி, ம.க.இ.க வின் மீது எதிர்க்குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கமும் கற்பிக்கிறார்.

கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. அந்த வகையில் ரயாகரன் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.

மேற்கொண்டு இப்பிரச்சினையில் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.  நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!

பெண்ணாடம் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்
பெண்ணாடம் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்

பெண்ணாடம் நகரத்திற்கு தெற்கில்,அரை கிலோமீட்டர் தூரத்தில்,மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வெளியில், கரும்புத்தோட்டங்களின் நடுவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக நாலாபுறத்திலும் சுற்றுச்சுவர். சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தின் ஒரு மூலையில் அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி.மொத்தத்தில் விடுதியில் வேலை செய்யும் கொள்ளைகாரர்களின் மர்ம பங்களா இது!

இங்கு 02.09.2010 அன்று பகல் 12 மணி வாக்கில் பத்தாம் வகுப்பு மாணவன் பாரத் விடுதியில் இறந்து விட்டதாக நகரில் செய்தி பரவியுள்ளது. இச்செய்தி எரப்பாவூரில் இருந்த மாணவனின் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும் கிடைத்து விடுதிக்கு ஓடி வந்துள்ளனர்.அங்கே இருந்த சமையல்காரர்கள் ராமச்சந்திரன் மற்றும் செல்வராசு ஆகிய இருவரும் சமையல் வேலை செய்து கொண்டே மேலே பிணம் கிடப்பதாக மிகவும் அலட்சியமாக கூறியுள்ளனர்.அப்போது விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் அங்கு இல்லை.அவர் 12 மணிவாக்கிலேயே போலிஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.

பின்னர் பெற்றோரும்,உறவினர்களும் 1 மணி அளவில் போலிஸ் நிலையம் சென்றபோது அங்கு விடுதிக் காப்பாளரும்,போலிஸ்காரர்களும் சிரித்து பேசி கும்மாளம் அடித்துள்ளனர்.பெற்றோர் புகாரின் மீது போலிசார் எவ்வித அக்கரையும் செலுத்தாததாலும்,குற்றவாளியுடன் போலிசின் இணக்கமான போக்கையும் கண்ட மக்கள் 2 மணிவாக்கில் பெண்ணாடம் நகரில் சாலைமறியல் செய்துள்ளனர்.இதன் பின்னர் தான் விடுதிக்காப்பாளரும்.போலிசாரும் விடுதிக்கு வந்துள்ளனர்.அப்போது போலிஸ்காரர்களுக்கு சமையல்காரர்கள் டீ கொடுத்து உபசரித்துள்ளனர்.

இதன் பின்னர்தான் வட்டாட்சியர்,கோட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.விடுதிக் காப்பாளரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.பள்ளி,விடுதி ஆகிய இடங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில் மாணவன் பாரத்தின் வருகை பதிவிடத்தில் வெள்ளை பூசி அழித்திருப்பதை கண்ட கோட்டாட்சியர் அதிச்சியடைந்து அனைவரின் கண் முன்னாலேயே விடுதிக்காப்பாளரை பார்த்து “கொலையும் செய்து விட்டு,வருகை பதிவேட்டையும் திருத்தியுள்ளீர்களே” என் சாடிவிட்டு விடுதிக் காப்பளரை அடிப்பதற்கு கையை ஓங்கியுள்ளார்!

இதன் பின்னர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் சமரசப்பேச்சு,சந்தேக மரணம் என 174/3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு,விடுதிக்காப்பாளர்,சமையல்காரர்கள் கைது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலிசின் வெளிப்படையான நடவடிக்கைகள்,சாலைமறியல் செய்தவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்போவதாக மிரட்டல்,அரசியல் கட்சிகளின் சமாதானம் ஆகியவைகளுக்கு பின்னர் மலை 5.30 மணிவாக்கில் மக்கள் சாலை மறியலை கைவிட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் தெரியாமலேயே மாணவன் பிணத்தை ஊரின் பின்புற வழியாக கடத்திச்சென்ற போலிசு,விடுதிக்காப்பாளருக்கு சேலைக்கட்டி அழைத்துச்சென்றுள்ளது.அன்று இரவு 12 மணிவாக்கில் மாணவனின் பெற்றோரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கான நகலை தந்துவிட்டு பிணம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறிச் சென்றுள்ளனர். இதை நம்பிய பெற்றோரும்,உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.மாணவனின் பிணம் அங்கு இல்லாததை கண்டதும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு மாணவனின் பிணம் இருந்துள்ளது.இப்படி வேண்டும் என்றே அவர்களை அலையவிட்டுள்ளது போலிசு.

தடியடி நடத்துவதற்கு தேவையான அளவிற்கு போலிசை குவித்துக்கொண்டுதான் மாணவனின் பிணத்தை பெற்றோரிடம் தங்துள்ளனர்.போலிசின் இந்த ஒரு நடவடிக்கையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டிவிட்டது.அதிகாரிகளும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று மூடிமறைக்க பார்க்கிறார்கள்.ஆனால் உன்மையோ நடந்தது கொலை தான் என்கிறது.நடந்த சம்பவங்களை நங்கள் தொகுத்துத் தருகிறோம்.நடந்தது கொலையா.தற்கொலையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டுக்கு சென்ற மாணவன் “விடுதியில் வார்டனும்,சமையல்காரர்களும் என்னை அடிக்கின்றனர், பள்ளியில் வார்டனின் உறவினர் தையல்நாயகி டீச்சர் அடிக்கிறார், ஆகவே நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன்” என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பையனின் பெற்றோரும் பெரியப்பாவும் சமாதானப்படுத்திதான் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். பள்ளிக்கூடம் சென்ற மாணவனை தையல்நாயகி அடித்து வெளியே துரத்தியுள்ளார்.

மாணவன் பாரத் ஆறாம் வகுப்பில் இருந்தே இந்த விடுதியில் தான் தங்கி படித்துள்ளார்.இப்போதுள்ள விடுதி காப்பாளருக்கு முன் இருந்த காப்பாளரிடம் சமையல்காரர்களின் திருட்டுத்தனத்தையும்,பெண்களை அழைத்து வந்து கும்மாளம் போடுவதையும்,சாராயம் குடிப்பதையும் பற்றி முறையிடும் போது அவரும் சமையல்காரர்களை கண்டித்து வந்துள்ளார்.அதன் பின் வந்துள்ள தற்போதைய விடுதிக்காப்பாளர் சுந்தர்ராஜன் சமையல்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவன் பாரத்தை பலமுறை அடித்தும்.,மிரட்டியும் வந்துள்ளார்.

இதனால் தனக்கு பலம் சேர்ப்பதற்காக இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு,அச்சங்கத்தை விடுதியில் கட்டுவதற்கு பாரத் முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த விடுதிக் காப்பாளர் தான் மட்டுமல்ல, தனது உறவினர் தையல்நாயகியையும் பயன்படுத்தி மாணவனுக்கு நெருக்கடி தந்துள்ளான்.சம்பவதினத்தன்று கூட மாணவனை கடைவீதியில் வைத்தே தலையில் கொட்டியுள்ளான்.

பள்ளியில் இருந்து தையல்நாயகியால் வெளியில் துரத்தப்பட்ட மாணவன் பாரத் விடுதிக்கு வந்துள்ளான்.நண்பகல் 11.15 வாக்கில் பள்ளி இடைவேளையின் போது பல மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக விடுதிக்கு வந்துள்ளனர்.இப்படி வருவது மாணவர்களின் அன்றாட நிகழ்வாகும்.ஆனால் அன்றைய தினம் மாணவர்களை உள்ளே வரவிடாமல் சமையல்காரர்கள் இருவரும் விரட்டியுள்ளனர். இதன் பின்னர் 12 மணி அளவில் தான் பெண்ணாடம் நகரம் முழுக்க மாணவன் இறந்த செய்தி பரவி பொதுமக்கள் விடுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சமையல்காரர்கள் இருவரும் சிரித்துப் பேசி சமைத்துள்ளனர்.பொது மக்கள் மாணவன் எங்கே என்று கேட்டபோது ”மேலதான் கிடக்கரான் போயி பாருங்க” என்று எவ்வித நெருடலும் இல்லாமல் கூறியுள்ளனர்.இந்த நேரத்தில் விடுதிக்காப்பாளர் போலிசு நிலையத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏன் என்றால் 11.15மணிக்கு மாணவர்களை கண்டு மிரண்ட சமையல்காரர்கள் 12 மணி வாக்கில் மிகவும் தைரியமாக பேசியுள்ளனர்.பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்த போது மாணவன் உடல் தரையில் கிடந்துள்ளது.அதன் அருகில் சமையல்காரன் ஒருவனின் துண்டும் கிடந்துள்ளது. இந்த துண்டில் தான் மாணவன் சன்னலில் துக்குமாட்டிக்கொண்டதாக கூறியதன் மூலம் கேழ்வரகில் நெய்வடிகிறது நம்புங்கள் என்று இந்த கயவாளிகள் கூறியுள்ளனர்.

பெண்ணாடம்
5 அடி உயர மாணவன் தூக்கில் தொங்கியதாக சொல்லப்படும் 4.5 அடி உயர சன்னல்

தரைக்கும் சன்னலுக்கும் இடையில் உள்ள தூரம் இரண்டரை அடி,சன்னலின் உயரம் நான்கு அடி மொத்தம் ஆறரை அடி.துண்டின் நீளம் இரண்டு அடி,துண்டில் தூக்கு போட்டிருந்தால் ஒன்றரை அடி நீளம் சுருக்கு போடவே சரியாகிவிடும்.எஞ்சிய அரைஅடியில் சன்னலில் முடிச்சுப் போட முடியுமா?.சரி குதிரைக்கு கொம்பு முளைத்ததாகவே நம்புவோம்!.மொத்த உயரம் ஆறரை அடி பையனின் உயரம் ஐந்து அடி சன்னலில் தூக்கு போட்டிருந்தால் கழுத்துச்சுருக்குக்கும் சன்னலுக்கும் போட்ட முடுச்சுக்கும் இடையில் ஒரு அடியில் இருந்து ஒன்னரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் சன்னலில் முகம் படாமல் சுருக்கை கழுத்தில் மாட்ட முடியும்,அப்படி மாட்டி இருந்தால் பையனின் கால் தரையிலேயே பதிந்திருக்கும்.தரையில் கால் பதிந்திருக்கும் போதே துக்குப்போட்டு சாக முடியுமா என்பதை,இதை தற்கொலை என்று கூறுபவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

சரி இப்போதும் நாம் நமது மூளையை கீழே கழற்றி வைத்து விடுவோம்!அந்த கத்தி போல் உள்ள சன்னலில்தான் மாணவன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்றால் பையனின் முகம்,சன்னலில் உராய்ந்து கடுமையான காயங்கள் எற்பட்டிருக்கும்.தூக்குமாட்டிக்கொண்டவனின் கால் மூட்டு கடுமையாக சுவற்றின் விளிம்பில் உரசி கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும்.ஆனால் மாணவனின் முகம் மற்றும் கால் மூட்டில் சிறு உராய்வு கூட இல்லை.ஆனால் போலிசும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று தான் சாதிக்கிறார்கள்.

இதற்கடுத்து மாணவன் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் இடத்திற்கும்,சமையல் கூடத்திற்கும் இடையே தெளிவாக பார்க்கும் வகையில் திறந்தவெளி உள்ளது.மாணவன் துக்குமாட்டிக்கொண்டு இருந்தால்,அங்கு பணியில் இருந்த சமையல்காரர்களுக்கு சத்தம் கேட்காமல் இருந்திருக்காது.அப்படி கேட்டிருந்தால் சமையல்காரர்கள் மாணவனை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை?

சரி, காப்பற்றுவது கிடக்கட்டும்.குறைந்தது ஒரு சாவு என்ற அடிப்படையில் அதிலும் தாங்கள் பணிபுரியும் விடுதியின் மாணவன் என்ற அடிப்படையிலாவது மாணவனின் சாவு அவர்களுக்கு துக்கத்தை தாரதது ஏன்?மாணவனின் சாவு காப்பாளருக்கும்,சமையல்காரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது எதனால்?இவர்களின் இப்படிப்பட்ட செயல்களே மாணவன் உடனான இவர்களின் பகையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இறந்த மாணவன் பத்தாம் வகுப்பு படிப்பவன்.சிறுவயதில் இருந்தே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவன்.தனது எதிரிகளைப் பற்றி தனது பெற்றோர்களிடமும்,உறவினர்களிடமும் கூறிய மாணவன்,தற்கொலைச் செய்வது என்று முடுவு எடுத்திருந்தால் அதைப்பற்றி நிச்சயம் ஒரு கடிதமாவது எழுதியிருப்பான் ஆனால் அப்படி ஒரு கடிதம் அவன் எழுதவே இல்லை.

ஆக மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது நடந்தது தற்கொலையில்லை,கொலைதான் என்ற முடிவுக்கு வாராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை!

ஆகவே விடுதிக் காப்பாளரும்,சமையல்காரர்களும் நன்கு திட்டமிட்டு தான் இந்தக் கொலையை செய்துள்ளனர்.ஏழையின் குரல் அம்பலம் ஏறாது. நாம் போராடாமல் நீதி கிடைக்காது!

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதியில் திருடுவது,தமது உரிமை என கருதுபவர்கள். அப்படி செய்வதற்காகவே குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து,போட்டியிட்டு இந்த பொறுப்பிற்கு வந்தவர்கள்.திருடுவதும்,திருடியதை தமது மேல் அதிகாரிகளுக்கு மாதா,மாதம் கப்பம் கட்டுவதும்தான் இவர்களின் திமிருக்கான,தைரியத்திற்கான அடிப்படைகளாகும்.இனிமேலும் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்!

ஆகவே நம்து பிள்ளைகள் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என்றால்,இந்த கழிசடைகளை எதிர்த்து போராடி இவர்களின் திமிரை நாம் அடக்க வேண்டும்.அது முடியாவிட்டால் நாம் நமது பிள்ளைகளை சூடுசொரணை அற்றவர்களாக,மானம் கெட்டவர்களாகத்தான் வளர்க்க வேண்டும்.இதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

________________________________________________________
–    தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்.
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1.    அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?
2.    அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
3.    ராகுல்: பழங்குடி அவதார்!
4.    இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்
5.    “மறுகாலனியாக்கத்தைத் தகர்ப்போம்!” -பொது வேலைநிறுத்தத்தையொட்டி பு.ஜ.தொ.மு.-வின் அறைகூவல்
6.    சந்தி சிரித்தது இந்துஸ்தான் யுனிலீவரின் அடக்குமுறை
7.    “விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக்கப்படுவதைத் தடைசெய்! ”வி.வி.மு.-வின் கண்டன ஆர்ப்பாட்டம்
8.    சாராயக் கடைக்கு மூடுவிழா! மக்களுக்குத் திருவிழா!
9.    இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!
10.    “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது?
11.    ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
12.    போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
13.    நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் (தொடர் கட்டுரையின் இரண்டாம் பகுதி)
14.    அநீதியைத் தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை! குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீசு!
15.    மன்மோகன்சிங்: ஏகாதிபத்திய எடுபிடியா, ஏழைகளின் பிரதிநிதியா?
16.    கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது விவசாயி போண்டியாகிறான்
17.    போபால்: ராஜீவ், மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?
18.    ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
19.    மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><img class=”aligncenter size-full wp-image-8337″ title=”bhopal-special-issue” src=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/07/bhopal-special-issue.jpg” alt=”” width=”500″ height=”699″ /></a>

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a>
<ol>
<li>போபால்: நீதியின் பிணம்</li>
<li>போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்</li>
<li>மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…</li>
<li>விபத்தா, படுகொலையா?</li>
<li>உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்</li>
<li>அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை</li>
<li>ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!</li>
<li>ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து</li>
<li>அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?</li>
<li>யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.</li>
<li>இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?</li>
<li>அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி</li>
<li>பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்</li>
<li>டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்</li>
<li>ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா</li>
<li>அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?</li>
<li>இதற்குப் பெயர் நிவாரணமா?</li>
</ol>
<strong> </strong><a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/10/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற இங்கே அழுத்தவும்</strong></a><strong> </strong>

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
<ul>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US’);” href=”http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US” target=”_blank”>வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…</a></strong></li>
<li><strong><a href=”http://www.facebook.com/vnavu” target=”_blank”>பேஸ்புக்கில் வினவு</a>
</strong></li>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://twitter.com/vinavu’);” href=”http://twitter.com/vinavu” target=”_blank”>வினவை டிவிட்டரில் தொடர்க</a></strong></li>
<li><strong><a href=”../support/” target=”_blank”>வினவை ஆதரியுங்கள்</a></strong></li>
</ul>
<strong>தொடர்புடைய பதிவுகள்</strong>
<ul>
<li><strong><a href=”https://www.vinavu.com/category/politics/puja/” target=”_blank”>புதிய ஜனநாயகம் கட்டுரைகள் </a></strong></li>
<li><strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>புதிய ஜனநாயகம் ஜூன் 2010</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!” href=”../2010/05/13/puja-may-2010/”>புதிய ஜனநாயகம் மே, 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!” rel=”bookmark” href=”../2010/04/02/puja-april-2010/”>புதிய ஜனநாயகம் ஏப்ரல், 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/03/04/puja-mar-2010/”>புதிய ஜனநாயகம் மார்ச் 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/02/05/puja-feb-2010/”>புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/01/12/puja-jan-10/”>புதிய ஜனநாயகம் ஜனவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/12/07/puthiya-jananayagam-december/”>புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/11/04/puthiya-jananayagam-november-2009/”>புதிய ஜனநாயகம் நவம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/10/14/puthiya-jananayagam-october-2009/”>புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/09/09/puja-sep-09/”>புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/08/11/puja-aug-2009-download/”>புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009</a></strong></li>
</ul>
<strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>
</a></strong>

<abbr title=”2010-06-04T08:03:18+0000″></abbr>

இரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் !!

54

இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி, தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன், அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற், தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் தொடர்ந்தன.

“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும், “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோ, அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.

இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும்  இரயாகரன், குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர், அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதி, தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமே, “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.

“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும், ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத, அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி, அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி, அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி, அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே, டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர், பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால், அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.

எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை. இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.

இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி, அதனைத் தொடர்ந்து இதில் வினவு, மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே, நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில், ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன், அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும், அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.

இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில், இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை, அவருடைய விசாரணை முறை, விவாத முறை, தீர்ப்பு வழங்கும் முறை, குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம். இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால், அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.

குகநாதனிடம் கேட்பதற்கும், குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

ஆகவே, இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது, பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு, முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன், எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.

நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும், குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.

எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.

குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன், செழியன், எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ, நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள், பதில்கள், குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள், மகஇக வின் மீது சேறடித்தவர்கள், தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா, தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன, எவ்வளவு பணம் கொடுத்தார், யாரிடம் வாங்கிக் கொடுத்தார், இதில் நாவலனின் பாத்திரம் என்ன, குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன, அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார், குகநாதன்-புலிகள், குகநாதன்-டக்ளஸ், குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன, 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.

இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள், உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும், சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவே, குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.

பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும், இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாவலன், அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே, தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால், எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான், தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள், பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு, இரயாகரன், ஜெயபாலன், நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !!

நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…

25
நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...

நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...அய்யா அறிவு ஜீவி அம்பிகளே, உங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சு, பொறுத்துப் பொறுத்தப் பாத்துட்டு பொறுக்கமுடியாமத்தான் இத எழுதுறேன். “அது ராமர் பிறந்த இடம்னு நீதிபதி சர்மா மட்டும்தான் சொல்லியிருக்காரு. மத்தவங்க இந்துக்களின் நம்பிக்கைன்னுதான் சொல்லியிருக்காங்க”ன்னு ஒரு பயங்கரமான மேட்டரை புடிச்சிட்ட மாதிரி ஒருத்தர் விவாதம் பண்ணிகிட்டிருக்காரு. வினவு கட்டுரை பதிவேற்றம் பண்ணின நேரம் என்னான்னு பாத்தீங்களா? நேத்து ராத்திரி தீர்ப்பு என்ன சொல்லுதுன்னு என்.டி.டி.வி யில பர்கா தத்தும், டைம்ஸ் நௌ வில அர்னாப் அம்பியும் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருந்த நேரத்துல எழுதின பதிவு அது. அதான் தீர்ப்பின் சாரம்னு போட்ருக்காங்கள்ல விடு..  பிறந்த இடம்னு சொன்னா என்ன, நம்பிக்கைன்னு சொன்னா என்ன ரிசல்டு ஒண்ணுதானே. பிறந்த இடம்னு சர்மா சொன்னதாவது பரவாயில்லை. அவரு கோசலைக்கு பிரசவம் பார்க்கும்போது கூட இருந்திருப்பாருன்னு ஒத்துக்கலாம். அங்கதான் பொறந்ததா இந்துக்கள் நம்பறாங்கன்னு சொல்லி, அந்த இடத்த பட்டா போட்டு கொடுத்திருக்கிறானே, அதுக்கு என்னாப்பா சொல்ற?

“இந்து” “நம்பிக்கை” ரெண்டு வார்த்தையுமே ஃபிராடு. இந்த லட்சணத்துல அந்த மசூதியில மினாரெட் இல்லயாம். மற்றவர்கள் வழிபாட்டுத் தலத்தை இடிச்சு கட்டினா அது இசுலாத்துக்கு விரோதமாம். அதுனால இசுலாமிய முறைப்படி மசூதி இல்லையாம்.

“இந்து” வுக்கு அந்த முறையெல்லாம் கிடையாதாம். அம்பிகளுக்கு ஆகம விதி தெரியுமா? 12 வருசம் ஒரு கோவிலுக்கு கும்பாபிசேகம் பண்ணலன்னா, அந்தக் கோயில் சிலையில கடவுள் கிடையாது. செத்துப்போயிட்டாருங்குது ஆகம விதி. அப்படின்னா ராமன் செத்துப்போன இடம்னுதான் அதை சொல்லணும். அத வுடு. இந்தியா முழுவதும் 12 வருசமா கும்பாபிசேகம் நடக்காத கோயிலையெல்லாம் இடிச்சு கக்கூசு கட்டிடலாமா? தயாரா? கடவுள் செத்துப்போன கோயில்ல பார்ப்பான் மணியடிச்சு வசூல் பண்றது நியாயமா?

இன்னொருத்தன் வழிபாட்டுத்தலத்தை இடித்து அங்கே மசூதி கட்றது இசுலாமுக்கு விரோதம்னு சட்டம் பேசுறாரு சர்மா. பரவாயில்லயே. அது யோக்கியமான மதமா இருக்கே. புத்த விகாரையையும், சமணப் பள்ளியையும் இடிச்சு கட்டினதுதானே பல தென்னாட்டு கோயில்கள்? நாகப்பட்டினம் புத்தவிகாரையிலிருந்து புத்தரின் தங்கச் சிலையை திருடி உருக்கித்தான் சீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செஞ்சேன்னு திருமங்கையாழ்வார் எழுதி வச்சிருக்காரே, அந்த திருட்டு சொத்த என்ன செய்யலாம்? ஹிந்துக்களுக்கு அது தோஷம் இல்லையா?

மசூதின்னா அதுக்கு மினாரெட் இருக்கணுமாம். ஆனா விநாயகருக்கு அதெல்லாம் தேவையில்ல. பிள்ளையார்னா அத சாக்கடை மேல வக்கலாம். இடம் பிடிக்கணும்னா கக்கூசுக்குள்ளயும் வக்கலாம். குப்பை மேட்டிலயும் வக்கலாம். நாலு பொறுக்கிப் பசங்க மரத்தடில மங்காத்தா ஆடணும்னா அங்க ஒரு கல்லை நட்டு, குங்குமத்த பூசி அதையும் பட்டா போட்டுக்கலாம். ஏன்னா, ஹிந்துக்களை பொருத்தவரை பரம்பொருள் எங்கும் இருக்கிறார்னு சொல்றார் நீதிபதி. வெக்கமாயில்ல. தூ.

சரி. சாணியக்கூட கடவுள்னு ஒத்துக்குற அளவுக்கு இலக்கணம் வகுத்த பரந்த நம்பிக்கை கொண்டது இந்து மதம். விட்டுத்தள்ளு. இந்துவுக்கு என்ன இலக்கணம். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுது அம்பிகளுக்கு தெரியுமா? யார் இசுலாமியன் இல்லையோ, கிறித்தவன் இல்லையோ, பார்சி இல்லையோ அவனெல்லாம் இந்து. இதுதான் விளக்கம்.

இந்த விளக்கத்தையே சிவில் வழக்குக்கு மொழிபெயர்த்தா எப்படி வரும்? எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.

“வெள்ளைக்காரன் மட்டும் இல்லைன்னா நாமள்ளாம் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காபாலிகம்னு ஒத்தருக்கொத்தர் அடிச்சுண்டு செத்திருப்போம். ஹிந்து மதம்னு ஒண்ணை உற்பத்தி பண்ணி நம்ம எல்லோரையும் ஒண்ணா சேத்தவன் வெள்ளைக்காரன்தான்” அப்டீன்னு காஞ்சி மகா பெரியவா எழுதி வச்சிருக்காள். அம்பிகளுக்குத் தெரியுமோ?

அயோத்தி ஒரு புனித ஸ்தலம்னு எந்த இந்துவும் எந்த காலத்திலயும் தீர்த்தயாத்திரை போனதில்லை. அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான் மக்களிடமிருந்து பதில் வரும். ராமராவைப் பார்த்து மூஞ்சியில ராமர் கலரை பூசிக்கிட்டு, கூட ஒரு அனுமாரையும் கூட்டிகிட்டு, ஆர்மோனியப் பெட்டியோட சென்னை வீதிகளில் இன்னைக்கும் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிறார்கள் தெலுங்கு தேசத்து ஏழைகள். அப்புறம் அதே வேசத்தை வச்சி ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார் என்டி ராமாராவ். 1980 களில் தூர்தர்சனில் ராமாயணம் போட்டு பிரபலமாக்கியதற்கு அப்புறமாதான், இந்த ராமனை வச்சி நாடு பூரா பிச்சை எடுக்கலாமே ங்கிற ஐடியா அத்வானிக்கு வந்தது. இதான் ராமஜன்ம்பூமியின் கதை. 1949 இல சிலைய அங்கே திருட்டுத்தனமா வச்சி கலவரத்தை உண்டுபண்ணப் பாத்தும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால முடியல. அப்புறம் பசுவதைத் தடுப்பு, உள்ளூர் கலவரம், ஏகாத்மத யாத்ரான்னு என்னென்னமோ பண்ணிப்பாத்து முடியாம கடைசியில கிளிக் ஆன ஐடியாதான் ராம ஜன்ம பூமி. மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமா வச்ச சிலைக்கு வழிபாடு நடத்த திறந்து விட்டா உ.பியில இந்து ஓட்டை கவர் பண்ணிடலாம்னு நம்பி கதவைத்திறந்தாரு ராஜீவ் காந்தி. ஆனா அவர் நம்பிக்கைய அத்வானி பிக்பாக்கெட் அடிச்சிட்டாரு. இதான் கதை.

ஒரு பக்கம் நம்பிக்கைன்னு பேசுறது. இன்னொரு பக்கம் மசூதிக்கு அடியில கோயில் இடிபாடு இருந்தது, “ஆர்க்கியலாஜிகல் சர்வேயே சொல்லியிருக்காள்”னு அவுத்து விடறது. கோயில் இடிபாடு மட்டுமா இருந்த்து, பாரதிய ஜனதா ஆட்சியில நடத்திய அந்த ஆய்வுல எலும்பெல்லாம் கூடத்தான் கெடச்சது. அப்போ கோயில்ல உக்காந்து கறி தின்னது யாரு? அயோத்தி பல நூற்றாண்டுகள் தொன்மையான நகரம். ஏற்கெனவே அது பவுத்த மையம். இசுலாமியர்கள் ரொம்ப லேட்டா வந்தவங்க. அங்க வந்து மசூதி கட்ட ஆப்கானிஸ்தானிலேர்ந்தா நெலம் கொண்டு வர முடியும்? இந்தியாவுல வெள்ளைக்காரன் கட்டியிருக்குற கட்டிடங்களை தோண்டிப்பாத்தா எங்கயுமே அடியில கோயில் இருக்காதா? இல்ல இந்துக் கோயிலையெல்லாம் தோண்டிப்பாத்தா அடியில பவுத்த சமண விகாரைகள் இருக்காதா? அவ்வளவு ஏன், நீங்க நங்கநல்லூர், மடிப்பாக்கத்துல கட்டி கணபதி ஹோம்மஃ பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தின வீடுகளெல்லாம் கை படாத கன்னி நிலத்துல கட்டினதா? “சூத்ராள் சுடுகாடு இருந்த இடம்தான், இருந்தாலும் இந்தக் காலத்துல இதெல்லாம் பார்க்க முடியுமோ, சீப்பா கிடைக்கும்போது விடமுடியுமோ? பரிகாரம் பண்ணிட்டா போச்சு”ன்னு பூமிபூஜை போட்டு கட்டின வீட்ட இப்போ தோண்டிப்பாத்தா அடியில சுடுகாடு இருக்காதா? ஒரு முனீஸ்வரன் கோயில், ஒண்டிக் கருப்பணசாமி கோயில்கூட இருக்கதா? தோண்டிப் பார்க்கலாமா, தயாரா?

மத்தவனெல்லாம் கோயிலை இடிச்சு மசூதியோ, சர்ச்சோ கட்டினான். பார்ப்பன மதம் கடவுளய திருடின மதமாச்சே. சமண தீர்த்தங்கர்ருக்கு மூஞ்சியை மறச்சி நாமத்த போட்டு, கோயிந்தா கோயிந்தான்னு கதய முடிக்கலயா? ஒரே ஒரு நாள் வெங்கடாசலபதி டிரஸ்ஸைக் கழட்டி தண்ணி ஊத்திக் கழுவி ஒரிஜினல் உருவத்த காட்டச்சொல்லுங்க. அது சிரவண பெலகொலா விலேர்ந்து சுட்டுகிட்டு வந்தமாதிரி தெரியிதா இல்லயா பார்ப்போம்.

1980 களில் மகந்த், சாமியார், ராம கோபாலன் மாதிரி வேட்டி கட்டிய பார்ப்பனர்கள் டர்ரு புர்ருன்னு விட்ட அக்கிரகாரத்துக் குசுவையெல்லாம் இந்த தேசம் ஒரு மாதிரி சமாளிச்சிடுச்சி. ஆனா அவுகளோடு புத்திர சிகாமணிகள், ஜீன்ஸை மாட்டிகிட்டு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து கிட்டு, சத்தம் வெளியே கேக்காம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே… நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா….

________________________________________

தொரட்டி.
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

134
பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி  தீர்ப்பு
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.

“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.

”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.

நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?

எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.

அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல (TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.

பின்குறிப்பு  – 1:

அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?

பின்குறிப்பு  – 2:

பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?

_________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

42

தமிழக அரச சார்பில் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதற்கு ஆயிரமாண்டு நிறைவு விழா நிகழ்த்தப் பெற்றது. மக்களாட்சிக்கு நிகரான நிர்வாகத்தையும், மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்திய ராசராசனின் ஆட்சியை போல மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நடைபெறுவதாக காங்கிரசு தலைவர் வாசன் கூறுகிறார். மக்களாட்சியை திறம்பட நடத்தியவன் ராசராசன் என்கிறார் கருணாநிதி. வரி கட்ட முடியாதவர்களின் நிலம் பறிக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார். கோவிலை கட்டுவது பெரிதல்ல தொடர்ந்து அதனை நிர்வகிப்பதுதான் சிரமம் என்கிறார் கனிமொழி.

ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை, எனவே குழு அமைத்து வரலாறு எழுத வேண்டும் என்கிறார் அமைச்சர் துரைமுருகன். தமிழ் மொழியே ஒரு வரலாறுதானே. தமிழை முடக்க நினைத்தவர்களிடமிருந்து திருமறைகளை மீட்டவன் ராசராசன், வடமொழியில் பாடுபவர்களை விட அதிக அளவில் ஓதுவார்களை பெரிய கோவிலில் நியமித்தான், ஒரு கலாச்சார மாற்றத்தை தடுத்து நிறுத்தினான் என்கிறார் அன்பழகன். பிற்காலத்தில் இன உணர்வு மங்கியதால் சமஸ்கிருத ஆதிக்கம் மிகுந்ததாகவும் அதனை 20 ஆம் நூற்றாண்டின் இன உணர்வு மீட்டெடுத்ததாகவும், அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று ஆலயங்களில் தமிழில் வழிபாடு கட்டாயமாக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் பேசுகிறார்.

திருமறைகளை கண்டெடுத்ததாக சொல்லப்படும் சிதம்பரத்திலேயே மனித உரிமை பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகசாமியும் இரத்தம் சிந்தி போராடித்தான் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றனர் என்பது சமகால வரலாறு.  வரலாறு இல்லாமல் எந்த சமூகமும் இல்லை. ஆனால் வரலாற்றை திரிக்க நினைக்கும் ஆளும் வர்க்கம் மேற்கண்டவாறு முரண்பாட்டுடன் பேசுவது இயல்பே. பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில்  பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.

சோழர் காலத்தில் நீர்ப்பாசன வசதியை தனது கைப்பிடியில் வைத்திருந்தது கோவில் நிர்வாகமே. அன்றைய ஆளும்வர்க்கமான பார்ப்பன மற்றும் வெள்ளாள சாதிக்கு போக மீந்த ஆற்று மற்றும் ஏரி நீர்தான் குத்தகை விவசாயிகளுக்கு.  அதுவும் அவர்களுக்கு தோதான நேரத்தில்தான் அளிக்கப்பட்டது. எனவே விளைச்சல் குறைவதும், வரியோ பார்ப்பன வேளாள சாதிகளின் நில விளைச்சலுக்கு நிகராக இருப்பதும் தவிர்க்க முடியாத துயரமானது.

வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் ஏற்கெனவே வளமான நெல் விளையும் பூமியாகவும், தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டது முதன்முதலாக விவசாயத்திற்காக திருத்தப்பட்ட தரிசு நிலமாகவும் இருந்ததை கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகிறது. அதிலும் நக்கன் போன்ற உயர்சாதி பெண்கள் தம்முடன் சொத்தாக பெற்று வரும் நிலத்திற்கு வரிவிலக்கு பெறுவதால் அவர்களே ஒரு கொடையாளியாகவும், வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவாதேவிக்காரராகவும் இருந்தனர். ஆனால் தாழ்த்தப்பட்ட குத்தகை விவசாயிகளின் பெண்டிருக்கோ அரசு ஒரு வேலி நிலம் தரும்.  பயிரிடும் அவர்களது தந்தையால் வரி கட்ட முடியாமல் மீண்டும் சிவதுரோகி ஆவதும் தொடர்ந்தது. இதனை அடுத்து வந்ததுதான் சதுரி மாணிக்கம் போன்ற பெண்களின் கோபுர தற்கொலைகளும் தொடர்ந்து வந்த மக்களது கலகங்களும்.

பெரிய காற்றளி கோவில், பெரிய விமானம், பெரிய நந்தி, பெரிய சிவலிங்கம், பெரிய பிரகாரம் என பெரிய கோவில் பெரிதாக மாத்திரமே திகழ்வதால் பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு இலக்கணமே ராசராசன்தான் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன். பேரரசு ஒன்று தோன்றியதும் இப்போதுதான். சுயசார்புள்ள கிராமத்தின் குறைந்த உபரியை மாத்திரமல்ல அதன் சுயசார்பையும் உறிஞ்சிதான் கோவிலும் பேரர‍சும் செழித்தது. 12 சதவீத வட்டிக்கு பணம் தரும் லேவாதேவி வேலையையும் வட்டி வசூலிக்க ஒரு படையையும் வைத்திருந்த பெரிய கோவிலைத்தான் பகைவர்களின் தாக்கதலில் இருந்து காப்பதற்காகவும் கட்டியிருப்பார்கள் என்கிறார் அன்பழகன்.

ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மாத்திரம்தான் உறுப்பினராக முடியும். கோவில் பண்டாரம் ஆக கூட குறைந்த பட்ச தகுதி நிலம்தான். மன்னார்குடி ஊர்சபையே கூட வரி கட்ட முடியாமல் தாங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக போக இருப்பதாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள் என்றால் வரியின் கொடுமையை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

நந்தா விளக்கு எரிப்பதற்காக ராசராசன் நாற்பது சாவாமூவா பேராடுகளை (எப்போதும் எண்ணிக்கை மாறாத வகையில் இறந்தவற்றுக்கு பதில் புதியதை வாங்கி விட வேண்டும்) கோவிலுக்கு தானமளிக்கிறான். தினமும் உழக்கு நெய் கொடுத்து விட்டு மீந்தவற்றை மேய்ப்பவர்கள் வைத்துக் கொள்ளலாமாம்.  பழ நைவேத்தியம் செய்வதற்காக பழ வியாபாரிகளுக்கு தரப்பட்ட கடனிலிருந்து வட்டிப்பணத்தை எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்தான் ராசராசன்.

ஒரு சமுதாய நோக்கத்தோடு கோவிலுக்கான எல்லா தரப்பு மக்களின் பங்களிப்பையும் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில் காண முடிகிறது என்கிறார் தங்கம் தென்னரசு. 1000 பேர் ஆடிய கின்னஸ் சாதனை நடனத்தை கல்வெட்டிலும் பொறிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் நடனக்கலைஞர் பத்மா சுப்ரமணியம்.

அரசன் முதல் ஆண்டி வரை சோழர்களுக்கு ஒன்றுதான் என்கிறார்கள் இவர்கள். தனது விருப்பமில்லாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்றா கோரியிருப்பாள்? தொழில் அடிப்படையில் தனது வாரிசுகளும் சேவை சாதிகளாக மாறுவ‌தற்கு உதவும் கல்வெட்டில் தனது பெயர் இல்லை என்பதற்காக குப்பனும் சுப்பனும் அழுதா இருப்பார்கள்? இழிவை உயர்வாக திரித்து விட்டு வரலாறு இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பார்கள் போலும்.

மதங்களை அரசுக்கு மேலாக வைத்திருந்த சூழலில் அவற்றை சமமாக பாவித்தவன் ராசராசன் என்கிறார் கனிமொழி. ஆனால் ஈசான சிவ பண்டிதர் என்பவரை காசுமீரத்திலிருந்து கொண்டு வந்து தனக்கு ராஜகுருவாக நியமித்து கொண்டான் ராசராசன். இவரது வழிகாட்டலின் பேரில் சூத்திர சாதியில் இருந்து சத்ரிய சாதியாக தன்னை மேனிலையாக்கம் செய்துகொள்ள விரும்பிய ராசராசன் ரண்யகர்ப்ப யாகமும் செய்து பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கினான்.

ஒரு கலாச்சார படையெடுப்பையே தடுத்து நிறுத்தினான் ராசராசன் என்கிறார் அன்பழகன்.  ஆனால் பார்ப்பன கலாச்சாரத்தை தமிழகத்தில் புகுத்தியவனே ராசராசன்தான் என்கிறது வரலாறு. அன்று எழுந்த வந்த வணிக வர்க்கத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு சுங்கம் விதித்து முட்டுகட்டை போட்டதும் இவனது ஆட்சியில்தான். இதனை இவனது பேரனான முதல் குலோத்துங்கன் வந்து விலக்கி சுங்கம் தவிர்த்த சோழனாக பெயர் பெற்றதும் வரலாறாகித்தான் உள்ளது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கிய இக்காலத்தில் மன்னனுடைய மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை கூட மனுஸ்மிருதி யின் படி நாடுகடத்த மட்டுமே செய்தான் ராசராசன். கோவில் சொத்துக்களை இன்று போலவே அன்றும் பார்ப்பனர்கள் கையாடல் செய்ததை கல்வெட்டுக்களில் காணப்படும் தண்டனைகளின் வழியே அறிய‌ முடிகிறது. கோவிலை மையமாக கொண்ட ஊரும் அதற்கு வெளியே சேரியையும் அமைத்த பெருமையும் சோழர்களுக்கே உண்டு.

குடவோலை முறையில் ஜனநாயகம் அன்று இருந்ததாக நீண்ட காலமாக வரலாற்று பாடப்புத்தகத்தில் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அந்த குடவோலையானது சொத்துள்ளவர்கள் மாத்திரமே இருக்கும் ஊர்சபையில் உள்ள பார்ப்பனர்களில் அவர்களது பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு நடத்தப்படுவதே ஆகும் என்பதை சொல்லத் தவறுகிறார்கள். இப்போது நடக்கும் போலி ஜனநாயகத்திற்கான தேர்தலோடு தன்மையில், முடிவில் எல்லாம் ஒத்துப் போவதால் கருணாநிதி இதனை மக்களாட்சி என்று விளிப்பது ஒருவகையில் சரிதான்.

_______________________________________________

– வசந்தன்

_______________________________________________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?

 

தொடர்புடைய பதிவுகள்

சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

41
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

சுந்தரராமசாமி   அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத்துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தியில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி “சிற்றிலக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்’ என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தில் அதற்கு அடுத்தபடியாக சு.ராவுக்கு அவரது ரசிகர்கள் ஒரு இலக்கிய ரசிகர் மன்றம் ஆரம்பித்து, அவரது இருப்பை அதாவது லவுகீகத்தில் திளைத்து உள்ளொளியில் தத்தளித்து சிந்தனையில் தோய்ந்து வார்த்தைகளைப் பிரசவிக்கும் மின்னொளித் தருணங்களை பல்வேறு கால, இட, வெளிகளில் உறைய வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினார்கள்.

என்னடா இது, ஏற்கெனவே சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்கள் தமிழ் அரசியல் வெளியில் தாள்வாள்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது தாள்களையே உச்சிமோந்து புளகாங்கிதம் அடையும் இலக்கியவாதிகளும்  அதுவும் ஓரிரு கதைகளும் கவிதைகளும் நாவல்களும் எழுதியவுடன்  இப்படிக் கிளம்பி விட்டால் தமிழ்மக்களின் கதியும் அரசியலின் தரமும் என்னவாகுமோ என்று தலையிலடித்துக் கொண்டு சு.ராவின் அந்தப் புகைப்படக் கண்காட்சியை இடக்கு பண்ணி புதிய கலாச்சாரத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். மற்றபடி சு.ரா இருந்தபோதும் இறந்த போதும் எங்களைப் பொறுத்தவரை முக்கியமானவர் இல்லை; என்றாலும், எந்தவொரு முக்கியமின்மையிலும் ஒரு சில முக்கியத்துவங்கள் இருக்கத்தானே செய்கின்றன!

இது நடந்து சுமார் பத்தாண்டுகள் இருக்கும். அப்போது புதிய கலாச்சாரம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை வில்லிவாக்கத்தில் இருந்தது. அங்கே ஒருநாள் அதிகாலையில் தற்செயலாக ஆந்திராவைச் சேர்ந்த தோழர் நிர்மால்யானந்தாவைச் சந்தித்தோம். அவர் ஜனசக்தி என்ற மார்க்சிய லெனினியக் கட்சியினைச் சேர்ந்தவர் என்பதோடு அக்கட்சியின் பிரஜாசாஹிதி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. அவரது தமிழக வருகையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, “தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களைச் சந்திப்பது’ என்றார். அப்படி ஒரு பட்டியலையும் வைத்திருந்தார். அதில் கோமல் சுவாமிநாதன், கோவை ஞானி, எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராசன் முதலானோர் இருந்ததாக நினைவு. “நினைவின் நதி’யில் சில விடுபடுதல்கள் இருக்கலாம்.

போகட்டும், இந்தப் பட்டியலிலுள்ளோர் அனைவரும் மார்க்சியத்தை பல்வேறு வகைகளில் கடுமையாக எதிர்ப்பவர்களாயிற்றே என்று அவர்களது எழுத்தையும், நூல்களையும், நிலைப்பாட்டினையும் விளக்கிவிட்டு “இந்தப் பட்டியலை யார் கொடுத்தது?’ என்று அந்தத் தோழரிடம் கேட்டோம். அவர் சுந்தர ராமசாமி தந்ததாகச் சொன்னார். அடேங்கப்பா, தமிழகத்து இடதுசாரி எழுத்தாளர்களின் அத்தாரிட்டி சு.ரா.தான் என்று ஆந்திர மா.லெ. குழு ஒன்றுக்கு ஒரு பொய்யான தகவல் உறுதியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்று உண்மையில் விக்கித்து நின்றோம். அப்போதுதான் சு.ரா.வின் ‘பவர்’ என்னவென்று புரிந்தது.

நடந்தது என்னவென்றால், அந்தத் தோழர் கேரளம் சென்றபோது அங்கிருந்த அவரது கட்சித் தோழர்களிடம் தமிழகத்தின் இடதுசாரிக் கலை இலக்கியப் போக்கு குறித்து விசாரித்திருக்கிறார். கேரளத்துத் தோழர்களும் சு.ரா.தான் முக்கியமான இடதுசாரி எழுத்தாளர், அவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று தோழர் நிர்மால்யானந்தாவை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். நாஞ்சில் மண்ணில் கால் பதித்த அவரும் தமிழகத்தின் இடதுசாரி இலக்கிய வரலாற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடதுசாரி எழுத்தாளரின் மூலமாக அறியப் போகும் உற்சாகத்துடன் சு.ரா.வைச் சந்தித்திருக்கிறார்.

சு.ரா.வோ தமிழகத்தில் முக்கியமான இடதுசாரி  போக்கு  இலக்கியம்  பத்திரிக்கை என்று பெரிதாக எதுவும் இல்லையென்றும், தனித்தனி எழுத்தாளர்கள்தான் உண்டெனவும் அலட்சியமாகக் கூறிவிட்டு, வேண்டுமானால் அவர்களைப் பார்க்கலாமென மேற்படிப் பட்டியலை முகவரிகளுடன் கொடுத்து அனுப்பிவிட்டார். இதில் எமது முகவரியையும் சு.ரா. கொடுத்திருப்பாரென வாசகர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அந்தத் தோழர் ஆந்திராவிலிருந்து கிளம்பும் போதே எமது முகவரியும் அவரது முகவரிப் பட்டியலில் இருந்திருக்கிறது.

அதன்பிறகு அந்தத் தோழரிடம் சு.ரா.வைப் பற்றியும் அவரது இரண்டாவது நாவலைப்பற்றியும் காலச்சுவடு குறித்தும் அவரிடம் நிலவும் கடைந்தெடுத்த மார்க்சிய வெறுப்பையும் விளக்கினோம். அப்போது கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் ஆகியவை நடந்து முடிந்த நேரம். அந்தப் போராட்டங்களின் வரலாற்றையும், அவை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த பாதிப்பையும், தமிழ் மக்கள் இசைவிழா  கலை நிகழ்ச்சிகள்  பாடல் ஒலிப்பேழைகள்  பத்திரிக்கைகள்  அவற்றின் விநியோகம் இவற்றையெல்லாம் விளக்க விளக்க அந்தத் தோழர் விக்கித்து நின்றார். “”உங்களைப் பற்றி சு.ரா. ஒன்றும் சொல்லவில்லையே” என்றார். சு.ரா ஏன் சொல்லியிருக்க முடியாது என்ற விளக்கத்துடன் அந்த உரையாடல் முடிந்தது.

நாங்களும் சு.ரா.வும் ஒருவரையொருவர் முக்கியத்துவமுடையவர்களாகக் கருதவில்லை. இவ்விசயத்தில் மட்டும் எங்களிடையே ஒத்த கருத்து இருந்தது உண்மை. ஆயினும் தமிழகத்தின் யதார்த்தம் குறித்த தவறான புரிதலை ஆந்திரத்துக்கு அளிவித்த கேரளத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டது. இது கேரளத்தின் பலவீனமா, சு.ராவின் பலமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.

சு.ராவைக் கொண்டாடும் கேரளம், சாருவை வியந்தோதும் மலையாளம் – ஏன்?

சாரு நிவேதிதா

“சு.ரா.வின் மறைவு மலையாளிகளைப் பொருத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்” என்று மாத்ருபூமி நாளிதழ் தலையங்கமே எழுதியிருக்கிறது! இதற்கு முன் சு.ரா. கோட்டயத்தில் தான் பிறந்து வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்ததைக் கூட புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது அந்த நாளிதழ். படிப்பறிவிலும் பத்திரிக்கைகள் விநியோகம்  படிக்கும் பழக்கத்திலும், பொதுவில் முற்போக்கு சாயலிலும் முன்னணி வகிக்கும் அந்த மாநிலம் சு.ரா.வின் மீது கொண்டுள்ள காதலின் காரணமென்ன? அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ள மலையாள சூழலும், மாந்தர்களும், அவரது படைப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும், அவரே சில மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததும் அந்த நேச உறவைத் தோற்றுவித்திருக்கலாம்.

ஆனாலும் போலி கம்யூனிசத்தில் முங்கி உருவான முற்போக்கு மாயையும், தமிழகத்தை விட ஆர்.எஸ்.எஸ்.ஐ அபாரமாக வளர வைத்த சனாதனப் பிடிப்பும் கொண்ட கேரளத்திற்கு சு.ரா. போன்ற ஆளுமைகள் பொருந்தி வந்திருக்கலாம். போலி கம்யூனிசத்தை மொண்ணையாக எதிர்க்கும் ஒரு போலியான எழுத்துக் கூட அங்கே சாகா வரம் பெற்றுவிடும். நகரமயமாக்கமும், பெருகிவரும் நடுத்தரவர்க்கமும் கொண்ட கேரளத்தில் சன் டிவியின் சீரியல்கள் சூர்யா டிவியின் வழியாக வெற்றி பெறுவதும், இங்கு வரும் மலையாளப்படங்களை விட அங்கு போகும் தமிழ்ச் சினிமாக்கள் அதிகநாட்கள் ஓடுவதும் சாத்தியமான கேரளத்தில், சு.ரா. மட்டும் செல்லுபடியாகாமல் போய்விடுவாரா என்ன?

சு.ரா.வை விடுங்கள், தான் முப்பது இட்டலிகள் சாப்பிட்டதையும், மனைவி தோசை சுட்டதையும் கோணல் பக்கங்களாக எழுதித் தள்ளும் சாரு நிவேதிதா எனும் காரியக் கிறுக்கு மூன்று மலையாளப் பத்திரிக்கைகளில் தொடர் எழுதுகிறது என்றால் இந்தக் கொடுமையை எவரிடம் சொல்லி அழ? சா.நி. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவருடைய நாவல் தொடர்பான வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு கேரளத்தில் ஹிந்து உட்பட ஆறு தினசரிகளில் வெளிவந்ததாம். புட்டு பயிறு பப்படம் ஆப்பம் கடலைக்கறி வாழைக்கப்பம் முதலான அன்றாட உணவு வகைகளில் சலித்திருந்த கேரளத்தில் ஃபாஸ்ட் புட் அயிட்டங்கள்  வயிற்றுக்குக் கேடுதான் என்றாலும்  வரவேற்பைப் பெறலாம் இல்லையா?

தமிழ் வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தம்மைத்தாமே சிற்றரசர்களாகப் பாவித்துக் கொள்ளும் சிறு பத்திரிக்கை இலக்கியவாதிகளின் மனோநிலையும், போலி முற்போக்குச்சாயம் வெளுத்து காலியாக இருக்கும் அரியணைகளில் கோமாளிகளை அமரவைத்து அழகு பார்க்கும் கேரளத்தின் மனோநிலையும் ஒன்றையொன்று கவர்ந்திழுக்கின்றன. இந்த இழுப்பில் அடிபணிந்த கேரளம் அந்த ஆந்திரத் தோழருக்கு தவறான வழியைக் காட்டியிருப்பதில் யார் என்ன செய்ய முடியும்? இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் கேரளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராகுமாறு சு.ரா.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அதற்குள் அவர் போய்ச்சேர்ந்து விட்டார். ஒருவேளை அவர் இருந்து உறுப்பினராகியிருந்தால் என்ன நடந்திருக்கும்? கல்வி தனியார்மயமாகும் கேரளத்தில் மாணவர்கள் அதிக இலக்கியம்  அதிலும் காலச்சுவடு வழியான இலக்கியங்கள்  படிக்க வேண்டும் என்பதை விதியாக்கியிருப்பார். ஊர் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் ஒரு கலை இலக்கியவாதியின் மனம் ஊற்றுவதற்குத் தண்ணீரையா தேடும்? மீட்டுவதற்கு ஃபிடிலைத்தானே தேட முடியும்!

சு.ராவின் இதயத்தை கவர்ந்த அமெரிக்கா! ஏகாதிபத்தியமும், இலக்கிய மனமும் கைகோர்க்கும் அழகு!!

அமெரிக்க கொடிசு.ரா.வின் இறுதிப்பயணம் அவர் மிகவும் நேசித்த அமெரிக்காவில் முடிந்தது என்பது தற்செயலான ஒன்றல்ல. அவர் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்க குடியுரிமை பெற்று, அதன்படி, வருடத்தில் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்க வேண்டிய கடமையைச் செவ்வனே செயல்படுத்த ஆரம்பித்திருந்தார். அங்கே அவரது இரண்டு மகள்கள் சான்டாக்ரூசிலும், கனெக்டிகட்டிலும் செட்டிலாகியிருந்தார்கள்.

சான்டாக்ரூசில் அவரது மகளின் மிகப்பெரிய வீடு, நீச்சல்குளம், கண்ணாடி அறை, வெளியே நிற்கும் பசிய மரங்கள், சுத்தமான நெடிய சாலைகள், அழகான பேரங்காடிகள், கம்பீரமான கட்டிடங்கள், தாள் மணம் வீசும் புத்தகக் கடைகள், தொண்ணூறு வயதிலும் காரோட்டிக் கொண்டு வரும் சீமாட்டிகள், எண்பது வயதிலும் கட்டிளங்காளை போலத் திருமணம் செய்யும் சீமான்கள்… என்று அவர் அமெரிக்காவை அணு அணுவாக ரசித்ததை அவரது அமெரிக்க வாழ் நண்பர்கள்  எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணனும், பி.ஏ. கிருஷ்ணனும் பதிவு செய்திருக்கின்றனர். இதுபோக ஒரு கட்டுரையில் அமெரிக்க ஜனநாயகம் தனக்குப் பிடித்திருப்பதாக சு.ரா.வும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். (ஃபுளோரிடாவில் கறுப்பின மக்களைத் துப்பாக்கி முனையில் விரட்டி விட்டு புஷ்ஷை அதிபராக்கிய அதே ஜனநாயகம் தான்.)

சு.ரா.வின் அமெரிக்க மோகம் என்.ஆர்.ஐ. இந்தியர்களின் அமெரிக்கக் காதலிலிருந்து கடுகளவும் வேறுபட்டதல்ல. சு.ரா.வின் மகள்கள் படித்து ஆளாகி அமெரிக்க வாழ் மாப்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே ஒன்றிப்போனது தந்தையின் வர்க்க  வாழ்நிலைக்குப் பொருத்தமானது என்றாலும் சு.ரா. அதை தன் இலட்சிய விருப்பமாகக் கொண்டிருந்தார் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காதான் பூவுலக சொர்க்கம் எனக் கருதும் மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தின் உளப்பாங்கைத்தான், மனிதனின் அக உலகைக் கலைத்துப் பார்த்து நிம்மதியைத் தேடிய இலக்கியவாதியான சு.ரா.வும் பெற்றிருந்தார். அவர் அமெரிக்காவுடன் போக்குவரத்து துவங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில்தான், அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்களின் பச்சை இரத்தம் குடித்து வந்தது. இந்த இரத்தத்தைக் குடித்துத்தான் அமெரிக்கக் கார்கள் ஓடின. இந்த இரத்தத்தைக் கழுவித்தான் அமெரிக்கச் சாலைகள் பளிச்சென்று மின்னின. இந்த இரத்தத்திலான கலவையைக் கொண்டுதான் அமெரிக்கக் கட்டிடங்கள் நெடிதுயர்ந்து நின்றன.

இவையெல்லாம் சு.ரா.வின் மெல்லிய இலக்கிய அக உலகில் மென்மையாகக் கூட உரசவில்லை. அப்படி உரசியிருந்தால் இரத்தப் பணத்தால் வாழும் அந்த நாட்டில் வாழாமல் நாகர்கோயில் சுந்தரவிலாசத்திலேயே அந்திமக் காலத்தை முடித்திருப்பார். அப்படி உரசல் ஏதும் நடக்கவில்லை என்பதுடன் அமெரிக்க வாழ்க்கை அவரை மென்மையாக வருடிக் கொடுத்தது. ஒருவேளை தான் இதுகாறும் செய்து வந்த இலக்கியத்தவத்தினால் அகத்தில் கண்டு உவகையடைந்த அழகுணர்ச்சியின் பௌதீக வெளிப்பாட்டை அவர் அமெரிக்காவில் கண்டிருப்பாரோ!

“நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை நீங்கள் என் கண் எதிரே வாழ்ந்தீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் ஆதர்சத்திற்குமுள்ள இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் சிறிதே என்றபொழுதில் விடை பெற்றுக் கொண்டீர்கள்” என்று கோகுலக்கண்ணன்  சு.ரா.வின் இறுதி நாட்களை தரிசிக்க வாய்ப்பு பெற்றவர்  அவரது அஞ்சலிக் குறிப்பில் எழுதுகிறார். இவரும் என்.ஆர்.ஐ. தான். சு.ரா.வுடனும் இலக்கியத்துடனும் சில ஆண்டு பரிச்சயம் போலும். கூடவே காலச்சுவடின் ஆலோசனைக் குழுவில் அமெரிக்கப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். உறவு, நட்பு, தகுதி, பதவி, ரசனை எல்லாம் ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்தியிருப்பதுதான் இலக்கியவாதிகளின் இயற்கையோ? இருக்கட்டும், கோகுல் வாழ விரும்பிய சு.ரா.வின் வாழ்க்கைதான் என்ன, விடை அதே அஞ்சலிக் குறிப்பிலேயே பொதிந்திருக்கிறது.

கோகுல் சு.ரா.வை எப்படி அழைப்பது என்று கேட்க தன்னை சு.ரா. என்று அழைக்கலாமென சு.ரா. பதில் சொல்ல இறுதியில் சு.ரா.வை “சார்’ என்று அழைக்கிறாராம் கோகுல். கோகுலின் மகள் “”சு.ரா. தாத்தா உனக்கு எப்படி நண்பராக முடியும்” என்று கேட்கிறாளாம். இது அவளுக்கு கடைசி வரை விளங்காத ஒன்றாய் இருந்ததாம். கோகுல் ஒவ்வொரு முறையும் சு.ரா.வைப் பார்த்து நலம் விசாரிப்பாராம். “”ரொம்ப நல்லாயிருக்கேன் கோகுல்” என்று சு.ரா. பதிலளிப்பாராம். இருவரும் அமெரிக்காவில் இரு வாரத்திற்கொருமுறை சந்திப்பார்களாம். அதற்கு இரண்டு நாள் முன்பாகவே கோகுலின் மனம் பரபரக்கத் தொடங்கிவிடுமாம். இருவரும் சு.ரா.வின் மகள் வீட்டின் அற்புதமான கண்ணாடி அறையில் அமர்ந்திருப்பார்களாம். கோகுல் கொண்டு வந்த புதிய புத்தகங்கள் மேசையில் இருக்குமாம். அதன் அட்டையை சு.ரா.வின் விரல்கள் சொல்லமுடியாத பிரியத்துடன் நீவிக் கொண்டிருக்குமாம். அதன் பிறகு ஒரு கோப்பை மதுவுடன் கவிதைபற்றிப் பேசுவார்களாம். இதுதான் சு.ரா.வைப் பார்த்து கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை!

இந்த அக்கப்போர் அரட்டை வாழ்வை விட ரஜினி ரசிகனாக இருப்பது எவ்வளவோ மேல். அரசியல் சமூகப் பார்வையை விடுங்கள். அமெரிக்கா போன்ற பல்தேசிய இனங்கள் குவிந்து வாழும் நாட்டில் பார்ப்பதற்கும், பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது இருவரின் ரசனை மட்டம் எப்படி குண்டு சட்டியில் குடுகுடுக்கிறது பாருங்கள். இது கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை என்பதை விட அவரால் வாழ முடிந்த வாழ்க்கை என்பதே சரியாக இருக்கும். அவரைப் போன்ற முதலாம் தலைமுறை என்.ஆர்.ஐ.கள் சொத்து சேர்த்துவிட்டாலும், அமெரிக்க வாழ்க்கையுடன் ஒன்ற முடியாமல் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், பாரதப் பண்பாடு அல்லது இலக்கியம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

இதனால்தான் புதிய புத்தகத்தை மோந்து பார்க்கும் சுந்தரராமசாமி ஒரு சூப்பர் ஸ்டாராக கோகுலின் கண்களுக்குத் தெரிகிறார். சரக்கடித்துவிட்டு இலக்கியம் பேசுவதுதான் கவர்ச்சிகரமான வாழ்க்கையென்றால் தமிழ்நாட்டிலேயே லட்சம்பேர் தேறுவார்களே. அதிலும் கூடுதலாக சாருநிவேதிதா போன்றவர்கள் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாழ்க்கையின் “இனிமை’யைக் காட்டுவார்கள். ஒருவேளை சாருநிவேதிதா அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கே தங்கியிருந்தால், கிழவர் ராமசாமியைக் கடாசிவிட்டு சாரு பக்கம் தாவியிருப்பார் கோகுல்.

சு.ரா.வின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்துப் பேசிய மற்றொரு எழுத்தாளரான பி.ஏ. கிருஷ்ணனும் கோகுல் ரேஞ்சிற்கு அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இவர் சான்ஃபிரான்சிஸ்கோவில் கோதுமைத் தோசை போன்ற ஒன்றைச் சாப்பிட்ட கதையை சு.ரா. ஆர்வமுடன் கேட்டாராம். அன்று இரவு சு.ரா. மகள் வீட்டில் மெக்சிகன் டைப் உணவு விருந்தாம். அதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றார்களாம். சு.ரா.தான் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்தாராம். இரவில் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காத இரண்டு படங்களைப் பார்த்தார்களாம். இடையில் கிருஷ்ணன் ஒரு விசயத்திற்காகக் குற்றஉணர்வு அடைகிறார். அது என்னவென்றால், அவர் சு.ரா.வின் மனைவி கமலா மாமிக்கு ஸுடோகு புதிர் புத்தகம் ஒன்றை வழங்கினாராம்.

இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் சு.ரா.வின் மகள், மருமகன், பேரன் பேத்திகள் வெளியே சென்று வீடே வெறிச்சோடிவிட, அப்போது கமலா மாமி ஸுடோகு புதிரை மணிக்கணக்கில் போட்டுக் கொண்டிருக்க, சு.ரா. வேறு வழியின்றி மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு பரிதாபமாய் அமர்ந்திருப்பாராம். இப்படி வயோதிகத் தம்பதியினரைப் பேசவிடாமல் செய்துவிட்டோமே என்பதுதான் கிருஷ்ணனின் குற்ற உணர்ச்சி. ஒருவேளை இதனால்தான் பெரிசு நோய் முற்றி மண்டையைப் போட்டதோ, யார் கண்டது? அது எப்படியோ போகட்டும், மறுநாள் காலையில் கிருஷ்ணன் விடை பெறும்போது சு.ரா. நெஞ்சாரத் தழுவி விடை கொடுத்தாராம், கண்கள் கலங்கியிருந்ததாம். வீடு திரும்பும்போதுதான் சு.ரா. கமலா தம்பதிகளிடம் காலில் விழுந்து சேவிக்க  மறந்து போனது அவருக்கு ஞாபகம் வந்ததாம்!

தமிழ்நாட்டுச் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் உலகம்தான் எவ்வளவு குட்டியாக இருக்கிறது. சாதாரணமாக உண்டு, பேசி, களித்த கதைகள்தான் அவர்களது வாழ்க்கையின் கவித்துவத்தெறிப்புக்களாக இருக்கிறதென்றால் இவர்களது எழுத்தில் வரும் வாழ்க்கை என்கிற தெருவோரக் குட்டையின் ஆழம் கணுக்கால் அளவைக்கூடத் தாண்டாதே. சாதாரணங்களையே அசாதாரணங்களாக ரசித்து, உருகி, அசை போடும் வாழ்க்கை திண்ணையோர வேதாந்திகளது பல நூற்றாண்டு மரபு. அமெரிக்கா போயும் காலில் விழும் வைபவம் யாருடைய பழக்கம்?

இதே கிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு வரும் போது ஏதாவது ஒரு வயதான தலித் எழுத்தாளரின் காலில் விழுவாரா? எழுத்தாளன் என்பதால் கோதுமைத்தோசை சாப்பிட்டது, அதைக் காது கொடுத்துக் கேட்டதெல்லாம் இலக்கியமாகுமென்றால் அது என்னய்யா இலக்கியம்? அல்லது இதுதான் பின்நவீனத்துவம் விளிக்கும் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களா? உண்மையில், சு.ரா. இத்தகைய அற்ப விசயங்களைக் கொண்டாடித்தான் வாழ்ந்து முடித்தார். இடையில் சில கதைகளையும் எழுதினார். இதனால்தான் அவர் இலக்கியச் சிகரமென்றால் சாலையோரப் பள்ளங்களை இனி நாம் பள்ளத்தாக்குகள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.

சு.ராவின் அற்பவாத இரசனைகளும், அவற்றை வியந்தோதும் இலக்கிய குஞ்சுகளும்!

ஜெயமோகன் நினைவின் ந்தி
ஜெயமோகன்

சு.ரா. இறந்தவுடன் அவருடன் பேசிப் பழகிய அனைவரும், குறிப்பாக, தமிழகத்தின் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் சு.ரா. மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தங்களது இரங்கற்பாக்களை இப்படித்தான் பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் தீட்டியிருக்கின்றனர். அந்தப் பாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் வடித்திருக்கும் நினைவின் நதியில் எனும் காவியம் மகத்தானது. ஒரு வகையில் சு.ரா.வைப் பற்றியும், ஏன் ஜெயமோகனைப் பற்றியும் அதீத மனத்தாவல் ஏதுமின்றிப் புரிந்து கொள்வதற்கு அது ஒரு ஆவணம் அல்லது உபநிடதம் போன்றது.

அதில் சு.ரா. பார்த்துப் பறித்த, கேட்டுக் கலந்த, ரசித்து உருகிய, ஆசைப்பட்டுக் கோட்டைவிட்ட சமாச்சாரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செதுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் உண்மைதானென்று சு.ரா. உயிர்த்தெழுந்து வந்து சாட்சியம் சொல்ல முடியாது என்றாலும் ஏனைய எழுத்தாளர்களின் பதிவுகளும் ஏறத்தாழ ஜெயமோகனை வழிமொழியத்தான் செய்கின்றன.

இவற்றையெல்லாம் பிழிந்து பார்த்தால், சு.ரா. தனது ஆளுமையின் வளர்ச்சிற்கேற்பப் பேரழகனாய் மிளிர்ந்தார், அவரது கருத்து  தோற்றம்  எழுத்து  பேசும் முறையின் மீது மூன்றுதலைமுறை எழுத்தாளர்கள் மோகம் கொண்டனர். சு.ரா. தேள்களைத் தூக்கி நெஞ்சை நிமிர்த்தி நடப்பார், ஆரம்பத்தில் தூய கதர்ச்சட்டையும்  தும்பைப்பூ எட்டு முழ வேட்டியும் கட்டியவர் பின்னர் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டுக்கு மாறினார். சாக்கடையில் வீசப்பட்ட உபயோகமற்ற பொருட்களை விரும்பி வேடிக்கை பர்ப்பார், சினிமா சுவரொட்டிகளை உறைந்து ரசிப்பார், மலையாள நடிகை பார்வதியும் நடிகர் கோபியும் அவருக்குப் பிடித்த நடிகர்கள், கட்டிலில் படுத்தபடி பேசுவது அவருக்குப் பிடிக்கும் (இந்த முக்கியமான விசயத்தை பலரும் பதிவு செய்திருக்கின்றனர்), பாத்டப்பில் படுத்தபடி குளிப்பது மிகவும் பிடிக்கும் (ஜெயமோகன் அறிந்த இந்திய நண்பர்களிலேயே பாத்டப்பில் குளிப்பது சு.ரா. மட்டும்தானாம். நாம் அறிந்த வரை பாத்டப் இருப்பது பங்களாக்களிலும் 5 ஸ்டார் ஓட்டல்களிலும்தான். என்ன செய்வது, இலக்கிய மனம்தான் வர்க்க பேதம் அறியாததாயிற்றே!)

நினைவின் ந்தியில்வெளிநாட்டு லோஷன் பூசுவது பிடிக்கும், சில நேரங்களில் “செண்பகமே செண்பகமே’ பாடுவது பிடிக்கும், தினசரி ஷேவிங் செய்வது பிடிக்கும், அவரது வீடு  படிக்கும் அறை  வளைந்த நாற்காலி  சாப்பாட்டு மேசை  மொட்டை மாடி நிரம்பப் பிடிக்கும், அளவோடு ஆனால் ருசித்துச் சாப்பிடுவது பிடிக்கும், தோசையும் தொட்டுக்கொள்ள கீரைமசியலும் கெட்டித்தயிரும் தினசரி பிடிக்கும், தோல் சீவிய பழங்களைத் துண்டுகளாக்கிக் குத்திச் சாப்பிடுவது பிடிக்கும், புத்தம் புதிதாக வரும் புத்தகங்களின் புத்தக மணத்தை மோந்து பார்ப்பது சலிக்காமல் பிடிக்கும், கர்நாடக சங்கீதம் செவி குளிரக் கேட்பது பிடிக்கும், ஹிந்து பேப்பரை படித்து முடித்ததும் கச்சிதமாக மடித்து வைப்பது பிடிக்கும், (சு.ரா.வை எழுத்தில் விஞ்சியதாக சுயப் பிரகடனம் செய்யும் ஜெயமோகனுக்கு இந்தக் கலை மட்டும் இன்னும் கை வரவில்லையாம். இது போன்ற கலைத்தவங்களில் மட்டும்தான் இலக்கியவாதிகளுக்குத் தன்னடக்கம் வரும் போலும்  கற்றோரின் பணிவு!),

சற்றுப் பூசினால் போன்ற உடல்வாகுடன் உள்ள மலையாளப் பெண்கள் குளித்து விட்டு ஈரத்தலையைக் கோதிவிடுவது பிடிக்கும், பேசிக்கொண்டோ பேசாமலோ இருக்கும் பெண்களின் கழுத்தசைவு பிடிக்கும், எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் காலாற நடப்பது பிடிக்கும், கூடைக்காரக் கிழவிகளின் சண்டை போடும் வீரம் பிடிக்கும், ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எப்போதும் பிடிக்கும், திருவனந்தபுர இரயில்வே நிலைய உணவகத்தின் தோசை பிடிக்கும், திருவனந்தபுர மாடி ஓட்டலின் ஐந்தாவது தள உணவறையின் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பையும் கட்டிடப்பரப்பையும் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது பிடிக்கும், பெண்கள் கண்ணாடி வளையல்கள் போடுவது பிடிக்காது, வளைந்து நெளிந்த தங்க வளையல்கள் போடுவது பிடிக்கும்…

அப்புறம் நாலணா பாளையங்கோடன் பழத்திற்காகப் பெட்டிக்கடைக்காரரிடம் பேரம் பேசிய சு.ரா., கார் பார்க்கிங் பிரச்சினையில் போலீசுக்காரருடன் சாமர்த்தியமாக வாதம் செய்த சு.ரா., நண்பருக்கு முன் பதிவு செய்த இருக்கையில் வேறு யாரோ அமர சின்ன உரிமையைக் கூட விட்டுத்தர முடியாது என்று சண்டை போட்டு இடம்பிடித்த சு.ரா., ஒரு நண்பர் சு.ரா.வைப் பார்த்தவுடன் உடன் வந்த தன் மருமகளிடம் விடைபெற மறந்த போது “மறதி என்பது எவ்வளவு அருமையான விசயம்’ என்று தத்துவம் உதிர்த்த சு.ரா., சாப்பாட்டு மேசையின் அடியில் புகுந்து வெளியே ஓடிய குழந்தையைப் பார்த்து “குழந்தைகள் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எதிர் கொள்ளுகிறார்கள்” என்று அதிசயித்த சு.ரா. என்று இந்த “வரலாற்றுப் பதிவுகள்’ முடிவில்லாமல் நீளுவதால் நாம் இந்த மட்டும் நிறுத்திக் கொள்வோம்.

ஜெயமோகன் மற்றும் அவரது சக எழுத்தாளர்களால் இவை மட்டும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்ல. நண்பர்களை வரவேற்று உபசரிக்கும் சு.ரா.வின் விருந்தோம்பல், நண்பர்கள் சிலருக்கு நிதியுதவி அளித்த பெருந்தன்மை, அப்புறம் தத்துவ இலக்கிய ஆராய்ச்சி எல்லாம்தான் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மேற்கண்ட அழகியல் ரசனைகளுக்குப் பொருத்தமான ஒத்திசைவோடு சேர்ந்தேதான் வருகின்றன. சு.ரா. என்ற எழுத்தாளுமை மேற்கண்ட “பிடிக்கும்’களில் இருந்துதான் உருவாகி எழுந்து வர முடியும். அவையன்றி சு.ரா. இல்லை. இத்தகைய அற்ப விசயங்கள் ஒரு எழுத்தாளனுக்கும், அவனைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கும் ஏன் முக்கிய விசயங்களாகப் படுகின்றன?

இலக்கியவாதிகளின் தற்காதலிய கட்டவுட் வெறி!

சுயமோகிகள்பொது வாழ்வில் இருப்பவர்கள் இறந்து போனால் அவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதிலும், பதிவு செய்வதிலும் இத்தகைய அற்பமான, பொருளற்ற, நகைப்புக்கிடமான நினைவுகூறும் முறை வேறு எந்தத் துறையிலும் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். காரணம் சரியோ, தவறோ அவர்கள் பொதுவாழ்வில் இயங்குகிறார்கள். எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களது ஆளுமை குறித்த மதிப்பீடு முன்னுதாரணமாகவோ அல்லது முன்னுதாரணமற்றதாகவோ இருப்பினும் அவை அநேகமாகப் பொது வாழ்வு குறித்துத்தான் இருக்கும். பொது வாழ்வு குறித்த நீர்த்துப்போன சிந்தனை அல்லது மக்கள் விரோதச் சிந்தனை அல்லது மக்களுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு புகழ்  அதிகாரம் பெற நினைப்பவர்கள் மட்டும்தான் தமது தனிப்பட்ட நடவடிக்கைகளை உன்னதமானவையாகக் கருதிக் கொண்டு முன்வைக்கவும் முடியும்.

பாசிஸ்டுகள் தங்களது பிம்பத்தைக்கூட பொதுமக்கள் நலனுக்காக என்று பொய்யாகவேனும் கட்டி எழுப்புகிறார்கள். எந்தக் கட்சியையும் மதிக்காத அகங்காரத்தைக் கொண்டுள்ள ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுவதும், கருப்புப் பணத்தையும் காலேஜையும் காப்பாற்ற கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயகாந்த் “”வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று மேடைதோறும் முழங்குவதும் இப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் கதை வேறு.

அவர்கள் பொதுவில் கதை எழுதுகிறார்களேயொழிய பொதுவாழ்வில் அவர்கள் இல்லை. மாறத்துடிக்கும் மனித வாழ்க்கை குறித்த அக்கறையும், மனித குலத்தின் மீதான நேசமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் ஒரு சில கதைகள் எழுதியதும் புகழ், பரிசு, விருது முதலியனவற்றை எதிர்பார்ப்பதிலும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதால் வருகின்ற பிரச்சினைகள், குழுச்சண்டைகள், பொறாமைகள், சாகித்ய அகாடமி,  ஞானபீடம் மீதான மனத்தாங்கல்கள், எழுத்தாளனை மதிக்காத அரசு  சமூகத்தின் மீதான வெறுப்பிலும்தான் பொதுவாழ்வு குறித்த “அக்கறை’ அவர்களிடம் வெளிப்படுகிறது.

கடந்த ஐம்பதாண்டுச் சிறு பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர்கள் எழுதியிருப்பது இந்த அற்பமான சமாச்சாரங்கள் குறித்துத்தான். இப்படிப் பச்சையான சுயநலத்தையும், சமூக விரோதத்தையும் இயல்பிலேயே வரித்துக் கொண்டிருக்கும் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் தங்களது இறந்த காலத்தில் தற்செயலாகச் சிக்கித் தவித்த சில தருணங்களை அசை போட்டு அசை போட்டு சில கதைகளை முக்கி முக்கி எழுதி, உடனே எழுத்தாளர்களும் ஆகிவிடுகிறார்கள். செயற்கையாகக் கட்டியமைக்கப்படும் மிகச் சிறுபான்மையான வாசிப்பின் சந்தைக்கேற்பத் தங்களைப் புதுப்பிக்கவும் ஏற்கெனவே தேங்கிவிட்ட எழுத்துத் திறனைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளவும் முயலுகிறார்கள். அப்புறம் அந்த எழுத்திற்காக அதே சண்டை, சச்சரவுகள்!

மிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டு தங்களைத் தாங்களே அசாதாரணமான பிறவிகளாக சிலாகித்துக் கொள்வதாக இவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதிலிருந்து தங்கள் சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை ரசிப்பது என்ற நார்சிச நோய் வலுவாக இவர்களைத் தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இவர்கள் மண்டையைப் போட்ட பிறகு, இவர்களது எழுத்து  தவம்  மோனம்  கலை குறித்த அக்கப்போர்களையெல்லாம் ஏற்கெனவே எழுதிவிட்ட நிலையில் இவர்களது அஞ்சலிக் குறிப்பாக எதை எழுத முடியும்? வந்தார், போனார், சட்டை போட்டார், பேண்ட் போட்டார், ஜிப் போடவில்லை என்றுதானே எழுத முடியும்?

தன்னிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கும் சிற்றிலக்கியவாதிகள் குறித்த சித்திரத்தில் சு.ரா. ஒரு எம்.ஜி.ஆர். என்றால் ஜெயமோகனை ரஜினி என்று அழைக்கலாம். ஆக புரட்சித் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் என்ன அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் ஜெயமோகனும் அதிகபட்சமாகச் செய்திருக்கிறார். ரஜினிக்கும், ஜெயமோகனுக்கும் மூப்பனார் பிடிக்கும், பொள்ளாச்சி மகாலிங்கம் பிடிக்கும், பாபா  விசிறி சாமியார்  சைதன்ய நிதி போன்ற சாமியார்கள் பிடிக்கும், இமயமலைக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை போவது பிடிக்கும் போன்ற ஒப்புமைகளும் உண்மைகளும் தற்செயலாக அமைந்தவை அல்ல. இயல்பின் அவசியம் கருதி அவை அப்படித்தான் இருக்க முடியும். என்ன, அதிகபட்சம் பாபா படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியது வேண்டுமானால் ஜெயமோகனுக்கு ஒரு குமைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலென்ன, தற்போது கஸ்தூரிமான் படத்தில் கிரேசி மோகன் லெவலுக்கு வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனுக்கு விரைவிலேயே சூப்பர் ஸ்டாரிடமிருந்தோ, இளைய தளபதியிடமிருந்தோ அழைப்புகள் வரலாம். காத்திருக்கட்டும். நாம் சு.ரா.விடம் திரும்புவோம்.

சு.ரா. தன் எழுத்திற்காகத் தன்னையே மிகவும் நேசித்த ஒரு எழுத்தாளர். இந்தத் தற்காதல் ஜெயலலிதாவின் கட்அவுட் மோகத்தைவிட அதிகமானது. ஆனால் சற்று சூக்குமமானது. வண்ண ஓவியத்தை விட எழுத்தோவியத்தைப் புரிந்து கொள்வதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்பதே காரணம். சு.ரா. தன் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் அதிகம் கவலைப்பட்டு, வருத்தப்பட்டு, எழுதி, பேசி, விவாதித்த ஒரே சமூக விசயம் “சாகித்திய அகாடமி விருது’ தான். தனக்குக் கிடைக்காத அந்த விருது தீபம். நா.பார்த்தசாரதிக்கும், அகிலனுக்கும், கோவி. மணிசேகரனுக்கும், தி.க.சி.க்கும், வைரமுத்துவுக்கும், இன்னபிற அனாமதேயங்களுக்கும் கிடைத்தது குறித்து சு.ரா. சொல்லணாத் துயரடைந்தார் என்றால் அது மிகையல்ல. கிடைத்திராத இந்த விருது கூட அவரது சுவாசப்பை நலிவடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாம், தெரியவில்லை.

சு.ராவுக்கு கிடைக்காத சாகித்திய அகாதமி, சமூகத்தின் தடித்தனமாம்!

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

வருடாவருடம் சாகித்ய அகாடமி விருது அறிவித்தவுடன் பீரங்கியில் இருந்து குண்டு பாய்வதைப்போல சு.ரா.விடமிருந்து அதை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை அச்சில் பாயும். இருப்பினும் சு.ரா. தனக்கு விருது கொடுக்குமாறு எப்போதும் கேட்பதில்லை. என்னதான் ஜெயலலிதாவை விட தற்காதல் அதிகம் இருந்தாலும் சபை நாகரீகம் என்ற ஒரு விவஸ்தையற்ற வஸ்து இருக்கிறதல்லவா! அதன் பொருட்டு வேறு வழியின்றி பந்தியில் தன் கூட இருந்து சாப்பிடும் அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ஏன் ஜெயமோகனுக்கும் பாயசம் போடுமாறு எப்போதும் பல்லவி பாடுவார்; மற்றவர்களோ, சு.ரா.வுக்குப் போடுமாறு சரணம் பாடுவார்கள். ஆனாலும் பந்தி பரிமாறும் தேர்வுக் கமிட்டியினர் இவர்களை அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பின்னே, இந்தியா முழுவதும் செப்புமொழி பதினெட்டிலும் பல இலட்சம் எழுத்தாளர்களைச் சலித்துப் புடைத்து உமி நீக்கி சிலருக்கு விருது கொடுப்பது என்பது லேசுப்பட்ட விசயமா என்ன?

தமிழ்நாட்டில் ஒரே ஒரு புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்கள் பல ஆயிரம் பேர் தேறுவார்களே, இதில் தேர்வுக்குழு என்ன செய்துவிட முடியும்? விருதின் பின்புலத்தில் பலான வேலைகள் பல இருப்பது உண்மையானாலும் நம்மைப் பொறுத்தவரை விருது வாங்கியவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் இலக்கியத் தரத்தில் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் கூட அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள், இருந்த போதும் இந்த அணி சில போட்டிகளில் தோற்றாலும் சில போட்டிகளில் வெல்வதில்லையா என்ன?

ஆனாலும் சு.ரா. விடுபவரில்லை. தேர்வுக் கமிட்டியில் அரசியல் இருக்கிறது என்றார். என்ன அளவுகோலை வைத்து தேர்வுக் கமிட்டிக்கு நடுவர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்டார். விருது கிடைப்பதற்கான விதிமுறைகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார். இறுதியில் தமிழ் எழுத்தாளர்கள் டெல்லி சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கூட அறைகூவல் விடுத்துப் பார்த்தார். இப்படி எதிர்மறையாக விமரிசனம் செய்வதில் மட்டுமல்ல, நேர்மறையிலும் தேர்வுக் கமிட்டியினர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை பலபத்து ஆலோசனைகளாகவும் தெரிவித்திருக்கிறார். சரியாகச் சொல்லப்போனால் இந்த விசயத்தில் ஒரு கலை இலக்கிய மந்திரி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படியும் அதற்கு மேலும் செயல்பட்டார்.

சாகித்ய அகாதமி, ஞானபீடம் குறித்து இதுவரை அவர் எழுதியுள்ள கட்டுரைகளைக் கத்தரித்து ஒட்டினால், அது ஜெயாவின் கட்அவுட்டை விஞ்சுவது உறுதி. இருப்பினும் இறுதி வரை விருது கிடைக்காதபடியால் “”அரசு கலாச்சார நிறுவனங்களின் தடித்தனத்தை மாற்ற முடியாது” என்று ஒரு கட்டுரையில் சலித்துக் கொண்டார். இதே தடித்தனம் என்ற வார்த்தைதான் அவரது புகழ் பெற்ற கவிதையான “”என் நினைவுச் சின்னத்”தில் நம் கலாச்சாரத் தூண்களின் / தடித்தனங்களை எண்ணி / மனச்சோவில் ஆழ்ந்து கலங்காதே…” என்று வருகிறது. இந்தக் கவிதையின் அருஞ்சொற்பொருளே விருது கிடைக்காததனால் வரும் சுய பச்சாத்தாபமும் அதனால் நான் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று போலிப்பகட்டும்தான். வஞ்சப் புகழ்ச்சி அணி போல இது பச்சாத்தாபத்தின் பாவனையில் ஒளிந்து கொள்ளும் தற்புகழ்ச்சி அணி.

ஆனால் காலச்சுவடு அரவிந்தன் இதற்குத் தரும் வியாக்கியானம், “ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் ஒன்றுமில்லை  எனத் தன் மரணம் பற்றி அறிவிக்கிறது அவரது கவிதை வரி ஒன்று. சுயபடிமம் சார்ந்த உரிமைக்கோரல்களை முற்றாகத் துறந்த ஓர் ஆளுமையால்தான் இப்படிச் சொல்ல முடியும்” என்று சிலாகிக்கிறார். சுய உரிமைக் கோரல்களை முற்றாகத் துறந்த இன்னொரு ஆளுமை தமிழ்நாட்டில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறது. அதையும் சிலாகிக்க வேண்டியதுதான்.

சு.ரா.வுக்கு கேரளத்து ஆசான், அமெரிக்க விளக்கு, கனடா இயல் போன்ற குட்டிக் குட்டி விருதுகள் கிடைத்த நேரத்திலும் கூட இவ்விருதுகளைப் பாராட்டும் சாக்கில் சாகித்ய அகாடமி, ஞானபீடத்தைக் கரித்துக் கொட்ட அவர் தவறியதே இல்லை. ஜெயமோகனின் நினைவுகூறல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சு.ரா. தன் வாழ்நாளில் சக தமிழ் எழுத்தாளர்கள் எவரையும் தனக்கு நிகராகவோ, மேலாகவோ கருதியதில்லை என்றாகிறது. அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், பாராட்டுக்கள் போன்றவற்றைப் படித்தால் அது உண்மை என்றே படுகிறது. தன் எழுத்தின் மேலாண்மையை நிறுவிக் கொள்ளும் முகாந்தரத்திலேயே அவர் மற்றவர்களைப் பார்த்தார், எழுதினார். தன்னுடைய படைப்பில் தான் கண்டுபிடித்திருந்த இலக்கியத் தரிசனங்களை நினைவு கூறும் பொருட்டே மற்றவர்களை மேலோட்டமாகவேனும் பாராட்டினார். தன்னைத்தாண்டி எவரும் செல்லவில்லை என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.

சு.ரா – ஒரு கார்ப்பரேட் இலக்கியவாதி!

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

இதில், தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிச் செயல்பட்டதில்தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாடு அடங்கியிருக்கிறது. சிறு பத்திரிக்கை உலகம் குறுகியதாக இருந்தாலும் தன்னைத் தேடி வந்த வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள், புதியவர்கள் அனைவரோடும் அவர் திட்டமிட்ட உறவைப் பேணினார். அவரது ஐம்பதாண்டு கால இலக்கிய வாழ்க்கையில் வெளிவந்த அநேக சிறுபத்திரிக்கைகளுடனும் இடையறாத தொடர்பைக் கொண்டிருந்தார். அவரே எழுதியிருப்பது போல நண்பர்களுக்கு தினசரி ஐந்து கடிதங்கள் வீதம் ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறார். அவரது மாலைப் பொழுது ஏதேனும் ஒரு இலக்கிய நண்பருடன் அரட்டையடிக்காமல் கழிந்ததில்லை. பெரும்பான்மையான இலக்கியவாதிகள் அவரது வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

சுதர்சன் ஜவுளிக் கடையில் இருந்த அவரது சிறிய அறை, ரிலீசாகும் சினிமாக் கம்பெனி ஆபீசு போல விறுவிறுப்பான இலக்கிய ஆபீசாகச் செயல்பட்டது. அவருக்கு போலி கம்யூனிசத் தலைவர்கள் சிலரிடம் இருந்த நெருக்கம், மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் உருவாகியிருந்த அகில இந்திய, உலக ஈழத்தமிழ் இலக்கிய உறவுகள் மூலமாக தன் நாவல்களை சில மொழிகளில் மொழிபெயர்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியும் என்பதால் தனது நூல்களின் மலையாள மொழிபெயர்ப்பை வரிக்குவரி சரிபார்த்து மலையாள மொழிபெயர்ப்பாளர்களைத் திண்டாட வைத்திருக்கிறார். எல்லாம் தன் எழுத்து  மனிதகுலத்துக்கு மிகச்சரியாகப் போய்ச் சேரவேண்டுமே என்ற நல்லெண்ணம்தான்.

அவரது நாவல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான போது அவரது அடிமனதில் ஒரு பெருங்கனவு மாபெரும் புயல்மூட்டமாய் மூண்டிருக்க வேண்டும். அது என்னவென்று யூகிக்க முடிந்திருக்குமே, அதுதான்… அதேதான்…! நோபல் பரிசு! அவரது “”குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று இலக்கியவாதி சிவதாணு (ஆட்டோ ஓட்டுனர்) சு.ரா.வுக்கு கடிதம் எழுதியிருந்தாராம். “”அப்படிக் கிடைத்தால் நாமிருவர் மட்டும் பரிசு வாங்க ஸ்டாக்ஹோம் செல்லலாம்” என்று சு.ரா.வும் வேடிக்கையாகப் பதில் கடிதம் எழுதியிருந்தாராம். இருப்பினும் அந்தப் பெருங்கனவு தனது வாசகனிடமும் மூண்டிருப்பது குறித்து அவர் ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியில் தூங்காமல் புரண்டிருக்கக் கூடும்.

இரண்டு மலையாள நாவல்களையும் ஒரு சில உலகக் கவிதைகளையும் மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.ரா. அதை வைத்தே தன்னை ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பாளராக மற்றவர்களைச் சித்தரிக்க வைத்தார். இதுபோக, தமிழக, கேரள இலக்கியக் கூட்டங்களிலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அகில இந்திய அளவிலான கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கவிதை படிக்க பாரீசுக்கும், விருது வாங்க கனடாவுக்கும் சென்றார். இதன்மூலம் தன் பெயர் எப்போதும் இலக்கியச் செய்திகளில் அடிபடுமாறு பார்த்துக் கொண்டார். தனது தூய கலை இலக்கிய சிந்தனையுலகின் ஆதாரவிதிகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பல இளைஞர்களை எழுத வைத்து எழுத்தாளராக்கியிருக்கிறார். இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சு.ரா. குருகுலத்தில் பயின்றவர்கள்தான். அதில் யாரெல்லாம் சு.ராவின் “தன்னெழுத்து  தற்காதல்’ என்ற ஆளுமையைப் பெற்றார்களோ அவர்கள் அதனைப் பெற்ற மாத்திரத்தில் சு.ரா.விடமிருந்து உடன் விலகியும் இருக்கிறார்கள்.

சு.ரா, ஜெயமோகனின் சூனிய ஆமைகள்! காமடிச் சண்டை!!

“அவர் நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்; அவருடன் சண்டை போட்டவர்கள் பின்நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று இந்த பாரதப் போருக்கு கீதைப் பேருரை எழுதுகிறார்கள் ஜெயமோகனும் இன்ன பிறரும். இது ஈகோ சண்டைக்கு கொள்கை முலாம் பூசும் மேட்டிமைத்தனமேயன்றி வேறல்ல. வாழ்வின் புரியாமையை, போதாமையை, நிலையாமையை மற்றும் இன்ன பிற ஆமைகளைத் தர்க்கபூர்வமாக அடைய வேண்டும் என்று சு.ரா. கருதினாராம்; அந்த “ஆமை’களை அடைய தர்க்கம் உதவாது, அதீத மனத்தாவல் மூலம் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்று ஜெயமோகன் வகையறாக்கள் கருதுகிறார்களாம். இதில் கொள்கை வெங்காய வேறுபாடு எங்கே வருகிறது? முடிவு சூனிய “ஆமை’ என்றாகும் போது வழிகளில் நடுவழி, குறுக்கு வழி, நேர்வழி, சுற்றுவழி என்றிருப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?

சு.ரா. தன் எழுத்தையும், எழுத்தாளர் என்ற தனது பிம்பத்தையும் ஸ்தாபிக்க நாசூக்கான இலக்கியச் சாமர்த்தியங்களை, தேர்ந்த விளம்பர நிறுவனங்களை விஞ்சும் வகையிலான வேலைகளை, தனிநபராகவே நின்று செய்து முடித்தார். இவரைப் போன்று ஒரு சில புனைகதைகள் மட்டும் எழுதிய எழுத்தாளர் எவரும் இவர் அடைந்த இடத்தை கற்பனையில் கூட தரிசனம் செய்ய முடியாது. சு.ரா. என்ற நிறுவனம் மாபெரும் பள்ளம் தோண்டி நிரப்பிய அஸ்திவாரத்தின் மீதுதான் தமிழிலக்கியத்திற்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. முத்திரை தரும் காலச்சுவடு நிறுவனம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.

காலச்சுவடு மூலம் கமலஹாசன் பாணி மேக்கப்பில் ரிலீசான புளித்துப் போன சு.ரா!

காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

இன்று எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான மூடு வாய்க்கப் பெறுகிறதா இல்லையா என்பதை விட காலச்சுவடின் பெருங்கருணை வாய்க்கப் பெறுமா என்ற தவிப்பே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதனாலேயே பின்நவீனத்துவவாதிகள், தலித்தியவாதிகள், பெண்ணியவாதிகள், கதைசொல்லிகள், கவிஞர்கள், விமரிசகர்கள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை எழுத்தால் பெயர் பெற்றவர்களும் பெறவிரும்புகிறவர்களுமாகிய அனைவரும் சு.ராவின் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் எழுதுகோலை எடுத்து அஞ்சலிக் குறிப்பைத் தீட்டி பதிவு செய்ய போட்டி போட்டார்கள். அமெரிக்கா ஈராக்கிலும், இந்து மதவெறியர்கள் குஜராத்திலும் மக்களை வெட்டிச் சாய்த்தபோதெல்லாம் இலேசாகக் கூட இதயத்தை வாடவிடாதவர்கள், சு.ரா.வுக்காக தங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து அழுதார்கள். இலக்கியவாதிகளை பொதுச் சோகத்திற்காகவெல்லாம் இப்படி அழவைத்து விட முடியுமா? பொது நீரோட்டத்தில் இருந்து தங்களை வெட்டிப் பிரித்துக் கொண்ட மிக உயர்வான தனித்துவமிக்க அபூர்வப் பிறவிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்கிற இந்தக் காரியவாதிகளின் அற்பத்தனத்தைத் தனது மரணத்தின் மூலம் அம்பலமாக்கிய பெருமையை நாம் சு.ரா.விற்கு வழங்கத்தான் வேண்டும்.

போகட்டும், மறைந்துபோன ஒரு தமிழ் எழுத்தாளனுக்காக இரங்கற் கல்வெட்டில் இத்தனைப்பேர் செதுக்கியிருப்பது இதுவே முதல்முறை. இலக்கிய வெளியை இப்படி மாற்றிய அப்பாவின் ஆளுமையை மட்டும் முதலீடாக வைத்து காலச்சுவடை ஆல் போல் தழைக்கச்செய்த பெருமை மகன் கண்ணனையே சாரும். அப்பா நிலப்பிரபுத்துவ மகானைப் போல சிற்றிலக்கிய உலகத்தை ஆதிக்கம் செய்து ஆசி வழங்கினாரென்றால், மகன் முதலாளித்துவ நிர்வாகத்திறனால் சிற்றிலக்கியச் சந்தையை சற்றே உப்ப வைத்திருப்பதோடு கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறார். திரையுலகில் எம்.ஜி.ஆரின் சாதனை ஆதிக்கத்திற்கு நிகரானது, சு.ரா.வின் சிறு பத்திரிக்கை ஆதிக்கம்.

எழுபதுகளின் இறுதியில் புரட்சித்தலைவரின் ஃபார்முலா அதன் தர்க்கபூர்வமான நீட்சியில் புளித்துப்போய் கசந்த நேரத்தில் அவர் புதுப்புது இளம் நாயகிகளுடன் கலர்ஃபுல்லாகக் கட்டிப்புரண்டு காமரசத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார். ஒருவேளை அவர் அரசியலுக்கு மாறியிருக்காவிட்டால் அவரது பொற்காலச் சினிமா வாழ்க்கை காமெடியாய் முடிந்திருக்கும். இருபத்தியோராம் நூற்றாண்டில் கண்ணன் காலச்சுவடை நிலைநிறுத்தியிராவிட்டால் சு.ரா.வின் கதியும் அதோகதியாய் முடிந்திருக்கும். வெகுகாலம் முன்னரே சு.ரா.வின் படைப்புச் சிந்தனை கெட்டிதட்டித் தேங்கிப் போயிருந்தது. சிந்திப்பதற்கோ, எழுதுவதற்கோ, எழுதுவதுபோல் பாவனை செய்வதற்கோ, அவரிடம் ஏதுமில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. மகன் தந்தைக்காற்றும் உதவியாய் கண்ணன் வந்தார், காலச்சுவடைக் கட்டி எழுப்பினார்.

அப்புறமென்ன, சு.ரா.வின் பழைய படைப்புகள் புற்றீசல் போல வடிவில் புதிது புதிதாகப் படையெடுத்தன. அவரது மூன்று நாவல்களும் முப்பது விதமான அட்டைகளில் செம்பதிப்பாக வெளிவந்து குவிந்தன. அவரது சிறுகதைகளும், கவிதைகளும், தனித்தும், பிரிந்தும், கூட்டணி வைத்துக் கொண்டும் அழகழகாய்ப் பாய்ந்தன. மற்றவர்களைப் பற்றிய அவரது நினைவுக் குறிப்புகள் அகராதியின் துணை கொண்டு நினைவோடை நூல்களாகக் உப்பின. அவரது கட்டுரைகள், நேர்காணல்கள், கேள்விபதில்கள், மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள், விமரிசனங்கள், பயண அனுபவங்கள், கோட்டயத்தில் அவர் பிறந்து வளர்ந்த வீட்டைக் கண்டுபிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம், இலக்கியக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள், நேரம் போகாமல் அவர் மொழிபெயர்த்த கவிதைகள், நானும் அரசியல் சமூகப் பிரச்சினைகளைப் பார்க்காமலில்லை என்பதான அபூர்வமான எழுத்துக்கள், கவிதைகளை அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதிய படைப்பின் அவஸ்தைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகள், அப்புறம் “மனதை எப்படிக் கட்டவிழ்த்து விடுவது’ என்பது குறித்து அவர் எழுதிய தமாசான டயரிக் குறிப்புகள்… (காலச்சுவடு அறிவாளிகள் இதையெல்லாம் கவித்துவத் தெறிப்புகள் என்று அடைமொழியிட்டுப் பிரசுரித்திருக்கிறார்கள். அதற்காக இப்படியா?) அத்தனையும் அச்சிலேற்றப்பட்ட அம்புகளாய்ச் சீறிப் பாய்ந்தன.

இப்படி சு.ரா. எழுதிய, எழுத நினைத்த அனைத்தும் அவரது மூளை உட்பட எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்து, தேடி எடுத்து வழித்துத் துடைத்து ஒரு துளி மிச்சம் விடாமல் தாள்களில் அச்சிடப்பட்டு விட்டன. அதோடு விட்டார்களா, சிந்திக்கும் திறனை இழந்திருந்த சு.ரா.வை நாகர்கோவில் பகுதிகளில் பத்து நாட்கள் சுற்ற விட்டு மகத்தான ஞானியாக செட்டப் செய்து புதுவை இளவேனில் உருவாக்கிய புகைப்படங்களைக் கொண்டு நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, நாடகங்களாக மாற்றப்பட்ட சிறுகதைகள், அவரது கவிதைகள் வாசிக்கப்பட்ட கவிதா நிகழ்வுகள், இன்னும் புதிய மொழிகளில் பெயர்க்கப்பட்ட அவரது நாவல்கள், இப்படி மிகப் பழைய சு.ரா.வை, சிந்தனையில் திகட்டியிருந்த சு.ரா.வை, படத்துக்குப் படம் கெட்அப்பை மாற்றும் கமல்ஹாசனைப் போல அவர் சாகும் வரை மாற்றி மாற்றி ரிலீஸ் செய்து வந்தார்கள். மொத்தத்தில் சிவப்பு வண்ண கோல்கேட் டூத் பேஸ்ட்டைப் போல சு.ரா.வின் பிம்பமும் இலக்கிய உலகில் வம்படியாய்ப் பதிக்கப்பட்டிருக்கிறது.

சு. ராவின் வணிகப் பத்திரிகை கோபம் – ஒரு பொய்ச் சண்டை!!

காலச்சுவடு சுந்தர ராமசாமி கமல்இந்த பிம்பத்தின் வீச்சு காரணமாக சு.ரா.வின் பிற்கால ஆண்டுகளில் பெரிய அல்லது வணிகப் பத்திரிக்கைகளில் எழுதுமாறு அழைப்பு வந்தது. சு.ரா.வும் ஏனைய சகல சிறு பத்திரிக்கையாளர்களும் வணிகப் பத்திரிக்கைகளை இலக்கியக் கற்பூரத்தின் வாசனை தெரியாத தடித்த மூக்கைக் கொண்ட கழுதைகள் என்றே எப்போதும் வசை பாடி வந்தனர். ஆனால், உண்மையில், அனைத்துச் சிறுபத்திரிக்கையாளர்களும் பெரிய பத்திரிக்கைகளில் எழுத வாய்ப்பு வராதா அதன் மூலம் சினிமாவுக்கு எழுத அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை இதயத்திலும், அதற்கேற்ற தந்திரங்கள் மற்றும் காரியவாதக் கண்ணோட்டத்தை மூளையிலும் கொண்டு செயல்படுபவர்கள்தான். பெரிய பத்திரிக்கைகளுக்கோ இவர்களைப் பற்றி பெரிய மதிப்பு எதுவும் அப்போதுமில்லை, இப்போதுமில்லை.

தமிழ் மக்களின் வாசிப்பு நேரத்தை தொலைக்காட்சிகள் மொத்தமாக அள்ளிக் கொண்டுவிட, மிச்சமிருக்கும் சிறுபான்மை வாசகர்களின் வெரைட்டியான தாகத்தைத் தீர்க்கவேண்டும் என்ற அளவில் சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தேவைப்பட்டார்கள். சிறியவர்களின் குழுச்சண்டைகள், கிசுகிசுக்கள், போன்றவை சினிமாத் துணுக்குகளுக்கு இணையான நொறுக்குத் தீனியாகப் பயன்பட்டன என்பது ஒரு துணை விசயம். மற்றபடி இவர்களுடைய வரலாறு என்பது புதுமைப்பித்தன் தொடங்கி பாலகுமாரன் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன்  ஜெயமோகன் வரை பெரியவர்களிடம் சிறியவர்கள் சரணாகதியடைந்ததைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது. இதில் சு.ரா.வுக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது அவரே ஒத்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய ஏமாற்றமாகும். இருந்தாலும் காதல்கோட்டை திரைப்படத்தில் அவரது காலச்சுவடு இதழின் அட்டை ஒரே ஒரு சீனில் நடித்திருப்பது சற்றே ஆறுதலளிக்கும் விசயமாகும்.

சு.ராவின் புகழ்பெற்ற பத்து தத்துவ முத்துக்கள்! ஐம்பதாண்டு இலக்கிய தவம் பெற்றெடுத்த விட்டைகள்!!

இதைத்தவிர சு.ரா. என்ற தனிநபர் நிறுவனமும், அவரது வாரிசால் வெற்றிகரமாக நடத்தப்படும் காலச்சுவடு என்ற வணிக நிறுவனமும், சு.ரா. என்ற பிம்பத்தை விசுவரூபமாய்க் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும், சவால்களும் பகீரதப் பிரயத்தனங்களும் யாரையும் மலைக்க வைப்பவைதான், சந்தேகமில்லை. சிறுபத்திரிக்கை உலகைப் பொறுத்தவரை சு.ரா. ஒரு வரலாறு மட்டுமல்ல, ஒரே ஒரு வரலாறுங்கூட. வாழ்வின் போதாமை குறித்துச் சிந்தித்ததாகப் பாவனை செய்த ஒருவரது இலக்கிய வாழ்க்கை இப்படிச் சகல சௌபாக்கியங்களுடன் பூர்த்தியடைந்திருப்பது ஒரு முரணாகத் தோன்றலாம். ஆனால், உண்மை முரணில் இல்லை, அதன் ஒத்திசைவில்தான் மறைந்திருக்கிறது.

வாழ்வின் நிலையாமை மற்றும் போதாமை குறித்துச் சிந்தித்து எழுதுவதையே தன் வாழ்வின் மையமான நோக்கமாகக் கற்பித்துக் கொண்ட ஒருவரது சொந்த வாழ்க்கையும் இலக்கிய வாழ்க்கையும் சகலவிதமான திருப்திகளையும் வழங்க முடியும் என்றால், வாழ்வின் போதாமை குறித்து அவர் என்ன உணர்ந்திருக்க முடியும். அவருக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? எதுவும் தெரியாது என்பதோடு அப்படித் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்தான், வாழ்க்கை குறித்த பெரும் திருப்தியே அவரிடம் நிலவியிருந்திருக்கிறது. இதுதான் சு.ரா.வின் இலக்கிய வாழ்க்கையை உந்தித்தள்ளிய உணர்ச்சி. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த ஒரு எழுத்தாளர். அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சு.ரா.வின் கருத்தியல் உலகில் நுழைந்து சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை சட்டெனப் புரிந்துவிடும். சு.ரா.வின் சிந்தனை உலகம் இலக்கியவாதிகளின் மொழியில் சொன்னால் மிகவும் தட்டையானது. அவரது படைப்புகள், எழுத்துக்கள் அனைத்தையும் கசக்கிப் பிழிந்து பார்த்தால் உலகைப் பற்றியும், மனித சமூகத்தைப் பற்றியும், மனித மனத்தைப் பற்றியும் அவர் வெளியிட்டிருக்கும் முழுக் கருத்துக்களையும் மொத்தம் ஒரு பத்து எண்களுக்குள் அடக்கிவிடலாம். “”தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழல் கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது; மந்தைகளைப் போன்ற மக்களுக்கு தனது சிந்தனைத் திறத்தால் திசைகாட்டும் எழுத்தாளனுக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை; ஒரு எழுத்தாளனுக்கு இந்தச் சூழல் மூச்சுத் திணற வைக்கிறது; எல்லா இயக்கங்களும் எல்லா நம்பிக்கைகளும் தோற்று வாழ்வே நிலையாமை என்றாகி விட்டது; இந்த நிலையாமையைப் புரிந்து கொள்வதில் அல்லது புரியமுடியாததன் தவிப்பிலேயே ஒரு எழுத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது….” என்பன போன்ற சின்னச் சின்ன வேறுபாடுகள் அடங்கிய பொத்தாம் பொதுவான கருத்துக்கள்தாம் அவை.

சு.ரா. தன் எழுத்தை நிறுவும் பொருட்டுத்தான் இந்தப் பத்துக் கருத்துக்களைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தாரேயொழிய அவை மனித வாழ்வை நேசிப்பதால் ஏற்படும் சிந்தனையின் அவஸ்தையில் பிரசவிக்கப்பட்டவை அல்ல; மேலும் இந்தப் பத்துக் கருத்துக்களும் மேற்குலகின் இலக்கியங்கள் மற்றும் சில சிந்தனையாளர்களை வாசித்து அரைகுறையாக ஜீரணித்து வெளிவந்தவைதான். இவற்றை சு.ரா.வின் சொந்தச் சரக்கு என்றும் சொல்லிவிட முடியாது. இவை வாழ்வின் கேள்விகளுக்கு விடையளிப்பவையும் அல்ல, புதிய சிக்கல்களை இனம் காட்டுபவையும் அல்ல. இந்த கருத்துக்களை வைத்துத்தான் சு.ரா. தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்பேற்றியிருக்கிறார். இந்த ஒப்பேற்றலைச் சுற்றி வளைத்து மூக்கைத்தொடும் சொல்லாடல்கள் மூலமும், இலக்கிய வகை பேதங்களை வைத்தும், காலச்சுவடின் அச்சு பலத்தை வைத்தும் அவர் நெடுந்தூரம் இழுத்து வந்திருக்கிறார். எனினும், ஒரு வரலாற்றுப் பார்வையின் மதிப்பீட்டில் இவையனைத்தும் புளித்துப் புரையோடிப் போனவையே. சு.ரா. இந்தப் பத்தைத் தாண்டி பதினொன்றாவதாக எதையும் சொல்லவில்லை.

எந்த ஒரு புனைகதை எழுத்தாளனுக்கும் எழுதுவதற்கான ஊற்று வாழ்வை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதனால் வந்துவிடுவதில்லை. புலனறிவு, யதார்த்தத்தில் ஒரு பத்து சதவீதத்தை மட்டும்தான் காட்டும். மீதியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மனித வாழ்வு குறித்த மாறாத நேசமோ அதனூடாக இடையறாமல் புதுப்பிக்கப்படும் தத்துவ நோக்கோ வேண்டும். அத்தகைய நேசமும், தத்துவக் கண்ணோட்டமும் கொண்டவர்களாலேயே உலகின் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க முடிந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் கிஞ்சித்தும் இல்லாதவர்கள் குண்டுச் சட்டிக்குள் மட்டுமே ஓட்ட முடியும். தொடர்ந்து ஓட்ட நினைத்தால் கால்களோ சட்டியின் பகுதிகளோ உடைந்து விடும். அப்படி ஓட்டி உடைந்து போனவர்கள்தான் ஜெயகாந்தனும், சுந்தரராமசாமியும்.

சு.ரா. வாழ்வை வெறுமனே விதவிதமாக வேடிக்கை மட்டும் பார்த்தார். அந்த வேடிக்கையையும் தான்  தன் வாழ்வு  தன் சூழல் இவற்றை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தார்; அவற்றையே படைத்தார். அதனால் அவை வெறும் கண்காட்சிப் படைப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சிற்றிலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற சு.ரா.வின் இல்லமான சுந்தர விலாசம்தான் அவருடைய முழு உலகம். அந்த இல்லத்தின் மகிழ்ச்சி, அழுகை, துக்கம், சிரிப்பு, ஏக்கம், இரக்கம், கருணை, பச்சாத்தாபம் முதலியவைதான் அவருடைய தத்துவநோக்கைத் தீர்மானித்தன. அதைக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எடுப்பாக விளக்கும்.

அப்பாவை வைத்து ஹிட்லரின் பாசிசத்தை கண்டுபிடித்த சு.ரா!

சு.ரா.வின் அப்பா, வீடு சுத்தபத்தமாக நேர்த்தியாக இருப்பதில் கறாராக இருப்பாராம். அதனால் வீடு உண்மையில் ஒழுங்காக இருந்தாலும் அப்பாவின் பார்வையில் ஒழுங்கற்று இருப்பதாக மற்றவர்களை நம்ப வைத்து விடுவாராம். இதுதான் சு.ரா.வுடைய தந்தையின் பலமாம். இந்த பலம் அவர் வேண்டுமென்றே செய்வதிலிருந்து தோன்றுவதில்லையாம், அது ஒரு கோணல் பார்வையிலிருந்து வருகிறதாம். இந்தக் கோணல் பார்வையோடு அதிகாரம் சேர்ந்து கொண்டால் சர்வாதிகாரிகள் தோன்றி விடுவார்களாம். ஹிட்லர், இந்திராகாந்தி எல்லாம் அப்படி உருவானவர்கள்தானாம். இதை சு.ரா. ஒரு உரையாடலில் கூறியதாகவும், இப்பேற்பட்ட தத்துவ முத்துக்களை அவர் பேசும்போது, அதை உள்வாங்கிக் கொண்டு பின்தொடர்வதற்கு பெரிய பயிற்சி வேண்டும் என்றும் ஜெயமோகன் தன் நினைவின் நதியில் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார். சர்வாதிகாரிகள் குறித்த சு.ரா.வின் இந்த அரிய கண்டுபிடிப்பைப் புரிந்து கொள்ளாத ஒரே காரணத்திற்காகத்தான் பல லட்சம் உலகமக்கள் ஹிட்லரால் கொலை செய்யப்பட்டார்கள் போலும்.

சு.ரா. தன் தந்தையின் வாழ்வை வைத்தே உலக சர்வாதிகாரிகளை எடை போட்டார் என்றால் முழு உலக மக்களின் வாழ்வை எப்படிப் பார்த்திருப்பார்? அநேகமாக அந்த முழு உலகமும் ஏன் பிரபஞ்சமும் கூட அவரது சட்டைப் பையிலோ அல்லது ஜட்டியின் இடுக்கிலோதான் சிக்கியிருந்திருக்க வேண்டும். சு.ரா. ஒரு குண்டுச்சட்டி எழுத்தாளர் என்பதற்கு இந்த ஒரு சோற்றின் பதம் போதும். சு.ரா. மட்டுமல்ல சிறு பத்திரிக்கை உலகமே பொதுவில் இப்படித்தான் இருந்தது. இருந்து வருகிறது. இலக்கிய உலகின் ஆதார இயங்கியல் விதி இதுதானென்றால் சு.ரா.வின் தலைமைச் சீடரான ஜெயமோகனின் கதி என்ன?

டப்பா காலியாகும் ஜெயமோகன் சரக்கு!

இவரும் வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். ஆனால் அதீத மனத்தாவலுடன். ஆகவே சட்டியும் சற்றே பெரியதுதான். ஜெயமோகனது தத்துவ நோக்கின்படி அவர் எழுத வேண்டியவற்றில் முக்கியமானவற்றை எழுதி முடித்து விட்டார். இனி புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையில் ஏற்கெனவே எழுதியவற்றை இலக்கிய வகை பேதங்களின் உதவியால் இன்னும் கொஞ்ச காலம் இழுக்கலாம். சு.ரா.வைப் போன்று தன்னெழுத்தை வியந்தோதும் திருப்பணியை ஒரு நிறுவனம் போல உயிர்மை மற்றும் தமிழினி போன்ற காலச்சுவடின் போட்டி பதிப்பகங்களின் உதவியுடன் செய்யலாம். பாலகுமாரன், சுஜாதா போல பெரியவர்களின் பெருவெளியில் கரைந்து பெருங்காய டப்பாவாக மணம் வீசலாம். சு.ரா.விடம் பிரபஞ்ச இரகசியம் அவர் உடலில் இரண்டு இடங்களில் மட்டும் இருந்தது. அதே இரகசியம் ஜெயமோகனிடம் உடல் முழுவதும் இருக்கிறது. சீடருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு அவ்வளவுதான்.

சு.ராவின் ஆனியன் ரவா தோசை அஞ்சலிக் குறிப்புகள்!

ஜீவா
ஜீவா

சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன தரத்தில் எழுதியிருக்கிறார்களோ அதேதரத்தில்தான் அவரும் மற்றவர்களைப் பற்றிப் பேசியும் எழுதியுமிருக்கிறார். அதில் சு.ரா.வின் அந்த பத்துக் கருத்துக்களை உருவிவிட்டுப் பார்த்தால்… தீபம் நா. பார்த்தசாரதி தினமும் எட்டு வேளை குளிப்பார், குதிகாலில் என்னன்னமோ லோஷன் போட்டுப் பளபளப்பாக வைத்திருப்பார், ஈ.எம்.எஸ். வேட்டியை இறுக்கிக் கட்டினால் அவிழாது, செருப்புக்களை வாழைப்பழத் தோலால் தேய்த்து பளபளப்பாக மாற்றுவார், நாகர்கோவில் ஆனியன் ரவா தோசை க.நா.சு.வுக்குப் பிடிக்கவில்லை… இப்படித்தான் மிஞ்சுகின்றன.

ஜீவாவின் மறைவையொட்டி சு.ரா. எழுதிய “காற்றில் கலந்த பேரோசை’ என்ற கட்டுரை இதை எடுப்பாகப் புரிய வைக்கும். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் சுப்பையா பிள்ளை என்ற அப்பாவி ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். அங்கே ஒரு நொண்டிக்குதிரை நிற்கிறது. சிறுவனாக இருந்த சு.ரா. “இந்தக் குதிரை ஏன் நொண்டுகிறது’ என்று ஜீவாவிடம் கேட்கிறார். உடனே ஜீவா சுப்பையாவை அழைத்து பதில் சொல்லுமாறு கட்டளையிடுகிறார். அந்த அப்பாவியோ “”போங்க அண்ணாச்சி சும்மா ஆளுகளப் போட்டு பயித்தியக்காரனாக்குதீகளே” என்று மிக்க பணிவுடன் மறுக்கிறார். உடனே ஜீவா ஆவேசம் வந்தவராய் அந்த அப்பாவியைப் பார்த்து, “”உலக வரலாறு, அறிவியல் தெரியுமா, சூரியன் கிழக்கே உதிப்பது ஏனென்று தெரியுமா, ஸ்விட்சைப் போட்டால் லைட் எரிவது ஏன் தெரியுமா, கடைசியில் இப்படி ஒண்ணுமே தெரியாத மண்ணாந்தைகளாகப் போய்விட்டோமே” என்று சுப்பையாவை உண்டு இல்லையெனப் பிச்சு உதறுகிறார்.

ஒரு அப்பாவியின் மீதான ஜீவாவின் இந்த மேட்டிமைத்தனமான உளறலை ஏதோ மாபெரும் அறிவொளியுக நடவடிக்கை போலப் பதிவு செய்த சு.ரா. அடுத்த வரியில் “”ஜீவா நீங்கள்தான் எத்தனை அற்புதமான மனிதர்” என்று உருகுகிறார். நமக்கோ குமட்டுகிறது. இதையே அற்புதமான அஞ்சலி இலக்கியக் கட்டுரை என்று தாமரை பத்திரிக்கையில் போலி கம்யூனிஸ்டுகள் உருகுகிறார்கள். கலையிலும் சரி, கம்யூனிசத்திலும் சரி போலிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை! உண்மையில் ஜீவாவின் மறைவையொட்டி அப்போதைய தினத்தந்தியில் இதைவிட மேலான கட்டுரை நிச்சயம் வெளிவந்திருக்கும். காரணம், தினத்தந்தியின் உதவி ஆசிரியர்கள் சு.ரா.வை விட அறிவும் அனுபவமும் உள்ளவர்கள்.

சு.ரா.வின் படைப்பில் அவரது மூன்று நாவல்கள் உன்னதமாகக் கருதப்படுகின்றன. அவரது பிம்பத்திற்கு இந்த மூன்றும் முக்கியமானவை என்பதால் அவை பற்றி இங்கே ஏதோ நம்மால் முடிந்த மட்டும் பார்க்கலாம்.

“புளியமரத்தின் கதை” வேப்பமர ஜவுளி வியாபாரியின் அரட்டைக் கதை!

ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

சு.ரா.வின் முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை வெகு சாதாரண தரத்தில் அமைந்திருந்தாலும், அவரது பின்னாளைய இமேஜ் காரணமாக மறுவாசிப்பு செய்யப்பட்டு வியந்தோதப்படுகிறது. சமூக மாற்றத்தைச் சித்தரிக்கும் இலக்கியமாகப் போற்றப்படும் இந்த நாவலின் நாயகனான அந்த மரமும், கதைக்களமான வேப்பமூடு ஜங்சனும் கூட, சு.ரா.வின் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் தான் உள்ளன என்ற உண்மையை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். நாவலின் முதல் பாதியில் கதை குறைவாகவும், சு.ரா. ஏதோ அபூர்வமாகச் சொல்லப்போவதான பீடிகையும், மற்றும் அவரது நீதி உபதேசங்களும் சலிப்பூட்டும் விதத்தில் வருகின்றன. நாவலின் மறுபாதியில் இரண்டு வியாபாரிகள்  அதில் ஒருவர் இந்து, மற்றொருவர் முசுலீம்  வளர்ந்த கதையும், வளர்ந்த பின் இருவரும் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும், ஒரு மலிவான துப்பறியும் மர்ம நாவல் பாணியில் சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் விறுவிறுப்பே அடுத்து என்ன நடக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று தொடருகின்ற மேலோட்டமான ஆவலில்தான் அடங்கியிருக்கிறது. இங்கும் அந்தப் பத்து புகழ் பெற்ற கருத்துக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேடம் போடுகிறார்கள், முனிசுபாலிட்டியில் ஊழல், பத்திரிக்கையாளர்களிடம் பிழைப்புவாதம், அரசியல்வாதிகள் வெற்று முழக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள், வியாபாரிகளிடம் தருமம் இல்லை என்று நாவல் முழுக்க நம்மைத் துன்புறுத்துகிறார் சு.ரா. இலக்கியவாதிகள் கூறுவது போல இந்தக் கதை ஒரு சமூகமாற்றத்தின் குறியீடு, அடையாளம், பதிவு என்பதெல்லாம் தாங்க முடியாத கருத்துச் சித்திரவதைகளே. குமரி மாவட்ட சமூக வாழ்க்கையும் அதன் மாற்றமும், ஒரு காய்ந்த இலைச் சருகாய் பறப்பது போன்ற பாவனை கூட இந்த நாவலில் இல்லை. குறைந்தபட்சம் நாகர்கோவிலின் சுக்குக்காபி, மட்டிப்பழம், ரசவடை, தாராமுட்டை ஆம்லெட் கூடப் பதிவாகவில்லை.

இந்தக் கதை எழுதும்போது ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாய் இருந்த சு.ரா.வின் சுதர்சன் ஜவுளிக்கடை இன்று ஆண்களுக்கான ஆடையகமாய் மாறியிருக்கிறது. சு.ரா.வுக்குத் தெரிந்திருக்கக்கூடிய குமரி மாவட்டத்தின் ஒரே சமூகமாற்றம் இதுவாகத்தான் இருந்திருக்க முடியும். அதையும் அவர் ஒரு வியாபாரி என்ற அளவில்தான் புரிந்திருக்கக் கூடுமென்பதால் அந்த மாற்றம் ஒரு கதையாகக் கருத்தரிக்கவில்லை போலும். சுந்தரவிலாசம் சு.ரா.வின் அக உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது என்றால் சுதர்சன் ஜவுளிக்கடை அவரது புற உலகப் பார்வையைப் பொருத்தமான விதத்தில் இணைத்தது.

போத்தீஸ், ஆர்.எம்.கேவி முதலான ஜவுளிக்கடை வியாபாரிகளின் வணிக அனுபவத்தில் தோய்ந்த உலகக் கண்ணோட்டம்தான் மற்றொரு வணிகரான சு.ரா.விடமும் உருவாயிருந்தது. இத்தகைய பெரிய வியாபாரிகள் எல்லா வகை அதிகார நிறுவனங்களுடனும் பணிந்து இசைந்து, குழைந்து, சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். தன் கீழே வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிந்து இரக்கமின்றி நடத்துவார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்ற செலவினங்களில் கஞ்சத்தனமாக இருக்கும் அதேவேளையில் விளம்பரம் கோவில் கொடை போன்றவற்றுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். நுகர்வோரான மக்களை மந்தைகளைப் போலப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பசி, ருசி, பணப்புழக்கம், சாதிவர்க்கப் பின்னணி, இப்படி அனைத்தையும் வியாபார நிமித்தம் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். கல்லா கட்டக் கட்ட உலகமே தன் கல்லாப் பெட்டிக்குள் அடங்கி விடுவதாகக் கற்பித்துக் கொள்வார்கள்.

குமரி மாவட்டத்தின் சமூக உக்கிரங்கள் சு.ரா படைப்பில் தேடினாலும் கிடைக்காது!

சுந்தரவிலாசத்திலிருந்து சென்டிமெண்ட் எனப்படும் அகமும், சுதர்சன் கடையிலிருந்து மேட்டிமைத்தனம் கலந்த சமூகப்பார்வை என்ற புறமும் கைவரப் பெற்று இலக்கியம் படைக்க வந்த சு.ரா. ஒரு புளியமரத்தின் கதையில் திருவிதாங்கூர் மன்னர் வந்து போகும் வருணனைகளையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். எனவே அவர் குமரிமாவட்டத்தின் உக்கிரமான சமூக நிகழ்வுகளையெல்லாம் நிச்சயம் செவி வழியிலோ பாட்டி வழியிலோ கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவையும் அவர் காலத்தில் நடந்த முக்கியமான சமூக நிகழ்வுகள் எவையும் அவர் படைப்பில் இடம் பெற்றதில்லை.

அவரது வீடு இருக்கும் இராமவர்மபுரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் கோட்டாறு சவேரியார் சர்ச் உள்ளது. போர்ச்சுக்கீசியப் பாதிரியாரான சவேரியார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல லட்சம் மக்களை மதம் மாற்றியவர். இவ்வளவு பெரிய மதமாற்றம் ஏன் நடந்தது? பார்பனக் கொடுங்கோன்மை கொடிகட்டிப் பறந்த சமஸ்தானம் அது. பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே அய்யா வைகுண்டநாதர் அய்யா வழி என்ற தனி வழிபாட்டுப் பிரிவையே உருவாக்கினார். அவரும் குமரிமாவட்டம்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கெதிராக நாடார் இனப் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டமும் அப்பகுதியில்தான் நடந்தது.

1981-82இல் சு.ரா. தனது இரண்டாவது நாவலை வெளியிட்ட போதுதான் மண்டைக்காடு கலவரம் மூலம் இந்துமதவெறியர்கள் குமரிமாவட்டத்தில் வேர்விட ஆரம்பித்தார்கள். அதன்மூலம் தமிழகத்திற்கு இந்துமதவெறியை அறிமுகப்படுத்தினார்கள். சாதியால் ஒன்றுபட்டிருந்த நாடார்கள்கூட மதத்தால் பிரிக்கப்பட்டார்கள். வணிகவர்க்கமாக மாறியிருந்த நாடார்களில் சிலர் சங்கபரிவாரங்களின் தளபதிகளாகத் தலையெடுத்தனர். அப்புறம் தாராளமயத்தால் நலிவடைந்த வடசேரி, கிருஷ்ணன் கோவிலின் கைத்தறி, பாமாயில் இறக்குமதியால் பாதிப்படைந்த குமரிமாவட்ட தென்னை விவசாயிகள், ரப்பர் இறக்குமதியால் வாழ்விழந்த பால் வெட்டும் தொழிலாளிகள், கடைசியாக சுனாமி… இவ்வளவு உக்கிரமான சமூக இயக்கங்கள் எவையுமே சு.ரா.வின் படைப்பிலோ, கட்டுரையிலோ இலை மறைவு காய் மறைவாகக் கூட இறங்கவில்லையே, ஏன்? இந்தப் பிரச்சினைகள் சு.ரா. என்ற இலக்கிய பீடத்தின் முன் மண்டியிட்டுத் தங்களைத் தாங்களே போதுமான அளவு விளக்கிக் கொள்ளவில்லை என்பதாலா?

கேட்டால் “படைப்புச் சுதந்திரம், எந்த ஒரு படைப்பாளியையும் இன்னதுதான் எழுத வேண்டும் என்று கட்டளையிட முடியாது’ என்பார்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால் சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி வாழ்ந்து கொண்டே, வாழ்வை ரசனையுடன் அனுபவித்துக் கொண்டே, தன்னைச் சுற்றிய வாழ்வின் இயக்கத்தையும், வலியையும், போராட்டத்தையும், கண் கொண்டு பார்க்காமல், வேதனையுடன் உணராமல், இதயத்தைத் தடிப்பாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை என்னவென்று அழைப்பது? இதை உணராத ஒரு படைப்பு மனம் எப்படித் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு உக்கிரமாக வெளிவர முடியும்?

இதே சு.ரா. அமெரிக்காவிலிருந்து கவிஞர் பௌத்த அய்யனாருக்கு எழுதிய கடிதமொன்றில், “ஹிந்து சர்வதேசப் பதிப்பு இங்கே வருகிறது. அதன் மூலம் இந்தியச் செய்திகளின் சாராம்சம் கிடைக்கிறது. சிலுக்கு காலமான செய்தி மனதைப் பாதித்தது. 15 வருடங்களில் 600 படங்கள். எவ்வளவு கடுமையான உழைப்பு” என்று துக்கம் விசாரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியச் செய்திகளின் சாராம்சம் சு.ரா.வினுள் இந்த அளவுதான் இறங்கியிருந்தது. திருவிதாங்கோடு முசுலீம் மக்கள், பழமைவாதத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக அனுபவித்த வலி நிறைந்த வாழ்வை உணர்த்தும் தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையை வேண்டுமானால், ஒரு சமூக மாற்றத்தைப் புரியவைத்த நாவல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு புளிய மரத்தின் கதையை அப்படி எவரும் கூற முடியாது.

ஜே.ஜே. சில குறிப்புகள்: போலி கம்யூனிசத்தின் போலி அவஸ்தைகளைப் பேசும் போலியான நாவல்!

 

சுந்தர ராமசாமி ஜே.ஜே. சில குறிப்புகள்

ஜே.ஜே. சில குறிப்புகள்எனும் சு.ரா.வின் இரண்டாவது நாவல் அவரது எழுத்து வாழ்வில் மிகவும் ஹிட்டான ஒரு படைப்பு. சு.ரா. எனும் இலக்கிய விக்கிரகத்தை சிற்றிலக்கியக் கோவிலில் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் குடமுழுக்கு நடத்துமளவுக்கு மிகவும் பேசப்பட்ட படைப்பு இந்த நாவல். கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுப்பதே ஒரு இலக்கியவாதியின் முதலும் முக்கியமுமான தகுதி என்பதைச் சிறுபத்திரிக்கையுலகில் அழுத்தமாக நிலைநாட்டிய நாவலும் கூட. தான் ஒரு மாபெரும் உலக எழுத்தாளர் என்பதையும், மானுடப் பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொறுப்பினை காலம் தன்மீதுதான் சுமத்தியிருக்கிறது என்ற மாயையும் சு.ரா.வுக்கே கூட இந்த நாவல் கற்பித்திருக்கக்கூடும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கெதிரான உலக மக்கள் மனநிலையில் இந்த நாவலை வாசிக்கும் போது மிகச் சாதாரணத் தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் சிற்றிலக்கியவாதிகளின் இதயத்தைக் கவ்விக் கவர்ந்திழுத்தது என்கிறார்கள்.

இந்த நாவலை ஒரு வாக்கியத்தில் சுருக்குவதென்றால் — போலி கம்யூனிஸ்டுகளை, அதிலும் குறிப்பாக போலி கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியவாதிகளை வெறுக்கும் ஒரு போலியான இலக்கியவாதியின் போலியான ஆன்மீகப் பிரச்சினைகளை, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட வார்த்தைகளின் உதவி கொண்டு பேசக்கூடிய ஒரு போலியான நாவல் என்று சொல்லலாம். ஒரு நாவலுக்குள் இத்தனைப் போலிகள் இருப்பதால் அதை இலேசாக எடுத்துக் கொண்டுவிடலாம் என்பதல்ல. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது போலிகள் அசலைப் போலத் தோற்றம் கொண்டு விடுகின்றன. உண்மைகள் சமாதியாக்கப்பட்ட மயானத்தில் பொய்கள் மட்டும் ஆனந்தக்கூத்தாடுவதால், நிழல் நிஜமாகிவிடுகிறது.

நாவலின் நாயகன் ஜே.ஜே., சு.ரா.வின் இலட்சிய நாயகன். சு.ரா. என்ற உன்னதத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே சலித்துப் புடைத்துப் பிழிந்து உருவாக்கப்பட்ட கதாநாயகன். அவன், உலகின் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தன் மூலமே அறியப்படவேண்டும் என்பதால், தன்னைத்தானே அறிவாளியாகவும், உலகின் அசிங்கங்கள் அருவெறுப்புக்கள் தன் கண்ணில் தென்படக்கூடாது என்பதால், தன்னை ஒரு தூய்மையான அழகியல்வாதியாகவும், சிறுநீர் கழிக்கும் நேரத்தில்கூட அவன் வாய் இலக்கியத்தின் உன்னதத்தைப் பேசும் என்பதால் தன்னை ஒரு இலக்கியவாதியாகவும், அச்சிலேற்றப்படும் தாள்கள் அவனது எழுத்தைத் தரிசனம் செய்வதற்காகவே காலந்தோறும் காத்திருந்து ஏங்கித் தவித்துத் தவம் செய்து வருகின்றன என்பதால், தன்னை ஒரு எழுத்தாளனாகவும், எழுதவரும் இளைஞர்கள் அவனது உரையாடலை மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், தான்மட்டுமே ஒரு ஆசிரியனாகவும் மனிதவாழ்வு குறித்த பெரும் புதிரை அவன் மட்டுமே தீர்க்கவேண்டும் என்று தத்துவ உலகம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருப்பதால், தன்னை ஒரு தத்துவவாதியாகவும், பன்றிகளின் மந்தைகளாய் வாழும் மக்கள் மத்தியில் அவன் உடல் மட்டும் எப்போதும் அணையாத விளக்காய் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு மாமனிதனாகவும் கருதிக் கொள்கிறான், வெளிப்படுத்துகிறான், அறைகூவுகிறான். இதை சு.ரா.வின் உதவியுடன் நவரசங்களிலும் பதிவு செய்கிறான்.

இதுவரை யாரும் கண்டு கேட்டிராத ஒரு மகத்தான மனிதனைப் படைத்ததாக சு.ரா.வும் அவரது அபிமானிகளும் புல்லரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வரலாறு அவர்களைப் பார்த்துச் சிரித்தவாறு, “”இவன்தானா இவனை நான் நீண்டகாலமாக பார்த்து வருகிறேனே” என்று ஒரு வரியில் முடித்துக் கொள்கிறது. ஆம். இந்தப் பண்புகளைக் கொண்டவர்கள் கேரள வரலாற்றில் நம்பூதிரிகள் என்றும் இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தின் தலைமைச் சித்தாந்தவாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே ஜே.ஜே. சில குறிப்புகளை கம்யூனிச வெறுப்பு நாவல் என்பதைவிட காலந்தோறும் அவதரிக்கும் பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தனம் கொண்ட நாவல் என்று சொல்லலாம்.

சு.ரா.வின் மொழியில் சொன்னால், ஜே.ஜே என்பவன் யார்? அவன், “உலகமே குரங்குகளின் வாத்திய இசை போல் இருக்கிறது. அவை எழுப்பும் கர்ண கடூரமான அபசுரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.” பார்ப்பனியத்தின் மேலாண்மையை நெஞ்சிலேந்தி முனகிக் கொண்டிருந்தவர்கள், உபநிடதக் காலம் தொட்டு “உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி கணேசன் வரையிலும் இப்படித்தான் கத்திக் கொண்டிருந்தார்கள். குரங்குகளின் கர்ண கடூர அபஸ்வரத்தில் உழைக்கும் மக்கள் வாழ்வின் அவலக்குரலும், அந்த அவலத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கும்போது போராட்டத்திற்கான உயிர்ப்புக் குரலும், பல சமயங்களில் அந்த உயிர்ப்பு நசுக்கப்படும் போது கேட்கக் கிடைக்கும் மயானக்குரலும், இத்தகைய குரல்கள் கேட்காத தூரத்தில் அரியாசனங்களில் வசதியாக அமர்ந்து கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்பவர்களின் அதிகாரக்குரலும், அதிகார நேரம் போக அவர்கள் சுருதி சுத்தமாகப் பாடும் கேளிக்கைக் குரலும் கலந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இவை குரல்களின் பிரச்சினையல்ல, வாழ்வை உள்ளது உள்ளபடி உணரமறுத்து, கீழே வாழ்ந்து கொண்டு மேலே பளிச்சிடும் வாழ்வை இதயத்தில் பொதிந்து கனவு காணும் நடுத்தர வர்க்கக் காதுகளின் பிரச்சினை.

ஜோசப் ஜேம்ஸ் எனப்படும் ஜே.ஜே. தனது நாவலில் வெற்று இலக்கிய நயத்துடன் கூறும் இந்தப் படிமத்தின் அன்றாட மொழிபெயர்ப்பினை ஹிந்து பேப்பரில் வரும் வாசகர் கடிதங்களில் — தொழிலாளர்களின் ஊர்வலம் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது, கூவம் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மழை நிவாரணத்திற்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று — விதவிதமாகப் பார்க்கலாம். அவ்வகையில் இந்த நாவல் ஹிந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் இதயங்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

நாவலின் கதைதான் என்ன? சு.ரா. தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். தமிழ் இலக்கியச் சூழலை வெறுக்கும் பாலு என்ற தமிழ் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது மற்றொரு பாதியான ஜே.ஜே. எனும் இலட்சிய கேரள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளாவிற்குப் பயணம் செய்து அவனுடன் பழகியவர்களைச் சந்தித்து ஜே.ஜே.வைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரிக்கிறார். பாலு சந்தித்தவர்களில் சூப்பர்மென் குவாலிட்டி கொண்டவர்களும் சு.ரா.வின் மறு பிறவிகள்தான். அவ்வகையில் சிவாஜி கணேசனின் நவராத்திரியைப் போன்று சு.ரா. பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நாவலென்றும் சொல்லலாம்.

நாவலில் சு.ரா.வின் புகழ் பெற்ற கருத்துக்கள் சுற்றிச் சுற்றி வரும் சொற்றொடர்களின் மூலமும், உப்ப வைக்கப்பட்ட படிமங்களின் வழியாகவும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை வழக்கம் போல வருகின்றன. தனது உலகை வடிவாக உருவாக்க விரும்பும் ஜே.ஜே.வின் அழகுணர்ச்சிக்கு அளவே இல்லை. அவன்வசிக்கும் நகரில் இருக்கும் மைதானம் ஒன்றை தான் அரசனானால் எப்படி மாபெரும் பூங்காவாக, வெட்டுவதற்கு மனம் வராத மரங்களையும், குழந்தைகள் சுற்றுச்சூழலை அறியும் வண்ணமும் அமைக்கப் போவதாக வரைபட விளக்கத்துடன் தன் டயரியில் குறித்து வைத்திருக்கிறான். (இந்த வேலைகளைச் செய்ய கவுன்சிலர் ஆனால் போதும் என்ற விசயம் அந்த மாபெரும் அறிவாளிக்குத் தெரியவில்லை.) அவன் நகரில் ஏழைகளும், குடிசைகளும் நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ மழை ஒழுகாத கூரையாவது மாற்றித் தரலாம் என்பதற்கெல்லாம் அவன் அழகுணர்ச்சியில் இடம் இல்லை போலும். ஒருவேளை இவன் இந்தியாவின் அரசனாகியிருந்தால் நகர்ப்புறச்சேரிகள் அனைத்தும் அழகின்மை காரணமாக ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டிருக்கக் கூடும்.

அவன் காதலி ஓமனக்குட்டி எழுதிய வாரமலர் தரத்திலான கவிதைகளை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இலக்கியத்தில் அவனால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் அந்தக் கவிதை நோட்டுக்களை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிகிறான். அத்துடன் காதலியை விட்டுப் பிரியவும் செய்கிறான். இது ஜே.ஜேயின் திமிரான இலக்கிய மேட்டிமைத்தனம்.

கதையும், கவிதையும் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் எழுத முடியும். ஏன் சு.ரா.வும், ஜே.ஜேயும் அப்படித்தானே ஆரம்பித்திருக்க முடியும். ஒருவேளை அவன் ஆசிரியராகியிருந்தால் தப்பும் தவறுமாக எழுதும் முதல் தலைமுறை ஏழைக் குழந்தைகளின் கைகளை ஒடித்திருப்பானோ? சிற்றிலக்கியவாதிகள் பொழுதுபோக்காய் இலக்கியம் பக்கம் திரும்பியது ஒருவகையில் நல்லதுதான். இவர்கள் சற்றே அரசியல் பக்கம் வந்திருந்தால் மக்களின் கதி என்ன? நம்மைப் பொறுத்தவரை ஓமனக்குட்டியின் கவிதைகள் சு.ரா.வின் கவிதைகளை விடப் பரவாயில்லை என்றே கருதுகிறோம். அவரது நினைவுச்சின்ன கவிதையின் சின்னத்தனத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அவரது மற்ற கவிதைகள் என்ன சொல்கின்றன?

சு.ரா. தனது அசட்டுத்தனத்தையே ஆழமான சமாதிநிலையாக உணர்வது, அவர் சிந்திக்கும் போது லாரியின் இரைச்சல் வந்து கெடுத்த பிரச்சினைகள், அப்புறம் ஜன்னல் எப்போதும் வானத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றதாகவும், மின் விசிறிக்கு அந்தப் பேறு இல்லை என்பதான துயரமான தருணங்கள்… இந்த பினாத்தல்களை செம்பதிப்பாக வெளியிட்டதற்காக காலச்சுவடு ஆபீசை குண்டு வைத்தா தகர்க்க முடியும்? இதுதான் அவருடைய கவிதை உலகம். இது அவருடைய உலகம் மட்டுமல்ல, இன்றைய சிறு பத்திரிக்கைகளின் அனைத்துக் கவிஞர்களின் உலகமும் கூட. நீர்த்துப்போன தங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கி நோக்கி புதிதாக எதையும் காண இயலாத நிலையில், “வாட் இஸ் நியூ?’ (புதிதாய் என்ன) என்ற கேள்விக்கு விடையாக சொற்களிலும், மோஸ்தர்களிலும் சரணடைபவைதான் அவர்களது கவிதைகள்.

நாவலின் ஓர் இடத்தில் மாட்டின் முதுகில் ஒருவன் வெற்றிலை எச்சிலைக் குறி பார்த்துத் துப்புவதை ஜே.ஜே. பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. இதை ஸ்கேன் செய்த ஜே.ஜேயின் அழகுணர்ச்சி உடனே மனிதனின் கீழ்மை அல்லது விலங்குணர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறது. அவன் காலத்தில் பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது குறித்தோ, தலித்துக்கள் எரிக்கப்படுவது குறித்தோ, வரதட்சணைக்காகப் பெண்கள் எரிக்கப்படுவது குறித்தோ அவன் கேள்விப்பட்டதே இல்லை போலும்! அவனுடைய அழகுணர்ச்சிதான் கொடூரமான எதையும் பார்க்காதே. மனிதனின் விலங்குணர்ச்சியை ஆய்வு செய்யுமாறு அவனை எது தூண்டுகிறது பாருங்கள்!

இந்த எச்சில் பிரச்சினையை வைத்து மனிதன் விலங்காக வாழ்வதற்கே பணிக்கப்பட்டவன், மரபும் பண்பாடும் அவனைத் தடை செய்கின்றன என்று அவன் ஆய்வு பயங்கரமாக எங்கோ போகிறது. இறுதியில் மனிதன் விலங்குணர்ச்சிக்கும், மனித உணர்ச்சிக்கும் இடையில் தத்தளிப்பதாக ஒரு புதிய விசயத்தை ஜே.ஜே. கண்டுபிக்கிறானாம். உண்மையில் இந்த எச்சில் பிரச்சினையில் தத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு வெங்காயமும் இல்லை. மனிதனின் விலங்குணர்ச்சி எனப்படுவது, ஏற்றத்தாழ்வாய்ப் பிரிந்திருக்கும் இந்தச் சமூகத்தின் வர்க்க முரண்பாட்டின் வழியாக வெளிப்படுகிறதேயன்றி மாட்டின் முதுகில் எச்சில் துப்பும் அற்ப விசயத்தில் அல்ல. இதே எச்சிலை பன்றியின் மீது துப்புவதாக சு.ரா. எழுதவில்லை. எச்சில் துப்பும் எல்லாவகைகளையும் அவர் பார்த்திருந்தாலும், மாடு புனிதம் என்ற கருத்து, மரபில் இருப்பதால் வாசகருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்து தன் தத்துவப் பாடத்தை விளக்க அவர் நினைத்திருக்கலாம். இந்த நாவலின் போலியான ஆன்மீக அவஸ்தைக்கு வேறு சான்று தேவையில்லை.

மற்றொரு இடத்தில் ஒரு தொழுநோயாளியைப் பார்த்த ஜே.ஜே., அவனுக்கு காசு போடலாமா வேண்டாமா என்று ஒரு ஓட்டலில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் யோசிக்கிறான். இதுவரையிலான மனிதகுல வரலாற்றின் வள்ளல் குணம், தானம், அறம், மனிதாபிமானம் மற்றும் இன்னபிற “ம்…’களைக் குறித்து ஆய்வு செய்கிறான். இறுதியில் ஒரு ஐம்பது காசைப் போடலாம் என்று முடிவெடுத்து வெளியே வருகிறான். தொழுநோயாளியைக் காணவில்லை. சில மணிநேரம் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்துக் காசைக் கீழே வீசுகிறான். காசைப் போடும் போதுதான் கை மழுங்கிய தொழுநோயாளி அதை எப்படி எடுக்க முடியும் என்பது அவனுக்கு உறைக்கிறது. உடனே அவனது மனிதாபிமான அழகுணர்ச்சி ஒரு புதிய விசயத்தைக் கண்டுபிடிக்கிறது. அதன்படி மனிதன் இதுவரை உருவாக்கிய தானம் தர்மம் தத்துவம் அனைத்தும் தன்னை மட்டும் மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டதே ஒழிய, எதிரிலிருக்கும் மனிதனது பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு அறியப்பட்டவையல்லவாம். அப்படிக் கணக்கில் கொண்டிருந்தால் ஜே.ஜே. அந்தக் காசை தொழுநோயாளியின் கையில் கொடுத்திருப்பானாம்.

இப்படி தன் மனிதாபிமானத்தைத் தள்ளாட வைத்த மனித குலத்தின் மீது கோபம் கொண்டு ஜே,ஜே. தனக்குள்ளேயே துன்புறுகிறான். வரலாற்றையும், தத்துவத்தையும் அடிமுதல் நுனி வரை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்து விட்டு நம்மையும் அதற்கு விளக்கம் எழுதுமாறு துன்புறுத்துகிறார் சு.ரா. விசயம் மிகவும் எளிமையானது. சு.ரா. எங்கேயோ ஒரு தொழுநோயாளிக்கு காசை விட்டெறிந்திருக்கிறார். காசைக் கையில் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் மழுங்கிய கைகளைத் தொட்டால் வரும் அருவெறுப்புதான். அதற்கு ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பார் போலும். அதனால் தான் பெற்ற குற்றவுணர்வைப் பெறுக இவ்வயைகம் என்று முழு உலகத்தையும் தன் நாவலில் தண்டித்துவிட்டார். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கும் போது இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது சு.ரா. நமக்கு அளித்திருக்கும் தண்டனை போலும்!

நாவலில் ஜே.ஜேவை சினிமாக் கதாநாயகன் போலச் சித்தரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நம்பியார் போன்ற வில்லன் பாத்திரம் முல்லைக்கல் மாதவன் நாயர். இந்த முல்லைக்கல்லை ஜெயகாந்தன் என்றும் சொல்லுகிறார்கள். இருக்கலாம். நாவலில் சித்தரிப்பு அப்படித்தான் வருகிறது. முல்லைக்கல் நம்மூர் த.மு.எ.ச. போன்ற கேரளத்தில் இருக்கும் போலி கம்யூனிச கலை இலக்கிய அமைப்பில் இருப்பவன். இந்த வில்லன் பசி, பட்டினி, வேலையின்மை, வறுமை இன்னபிற சமூகப் பிரச்சினைகளை அந்த மக்கள் வாழ்க்கை மற்றும் மொழியில் எழுதிப் பெயரெடுத்து, புகழ், பணம் சம்பாதித்து செட்டிலாகிறான். இதற்குத் தோதாக கம்யூனிசக் கட்சியும் முதலாளிகளைப் போல வாழ்ந்து கொண்டே தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுவதாக நடிக்கும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிடுகிறது.

ஆனால் ஜே.ஜே.யின் விமர்சனம் கட்சியின் அரசியல், திட்டம், நடைமுறையின் மீதெல்லாம் இல்லை. கட்சியின் கலைஞர்கள் மீதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபமும் உலகில் சோசலிசமும், சமதர்மமும் வரவேண்டும் என்ற குறைந்தபட்ச அற உணர்விலிருந்து வரவில்லை. “தன்னைப்போன்ற அறிவாளிகளுக்கு இந்த உலகில் மதிப்பு இல்லையே’ என்ற பச்சையான சுயநலத்திலிருந்தே ஆவேசமாக வருகிறது.

போலிகளின் சாயம் வெளுத்துவிட்ட சாதகமான நிலையில் “”நான்தான் உன்னதமானவன்” என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்திற்காகவே அவனுக்கு கம்யூனிசத்தின் மீதான விமரிசனம் தேவைப்படுகிறது. அந்த உன்னதமும் பொதுவில் சமூகத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும் கேலி செய்யும் திண்ணைப்பேச்சு வேதாந்திகளின் தனிமனித அரட்டைதான். நாவலில் நோயால் இளம் வயதில் இறந்து போன ஜே.ஜேவின் நினைவுகளைத் தேடித்தான் எழுத்தாளர் பாலு கேரளம் செல்கிறான். நாயகன் ஜே.ஜே., எம்.ஜி.ஆரைப் போன்று சித்தரிக்கப்பட்டாலும் முடிவில் சிவாஜி படங்களைப் போல செத்துப்போவதற்கு வாசகர்களின் சென்டிமெண்டைப் போட்டுத்தாக்கும் நோக்கம்தான் காரணம். மற்றபடி நாவலை வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி விளக்குவதற்கு அல்வா போல ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தாலும் இத்துடன் முடித்துக் கொள்வோம். சு.ரா.விற்கும் கம்யூனிசத்திற்கும் பொதுவில் உள்ள உறவு என்ன? இதனைப் புரிந்து கொள்ள ஜெயமோகனது ஆவணத்தில் உள்ள தகவல்கள் உதவுகின்றன.

சு.ரா எனும் போலி கம்யூனிச இலக்கியவாதியின் உண்மையான கம்யூனிச வெறுப்பின் பின்னணி!

ஜெயகாந்தன் 60,70களின் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி மூலமும் பின்னர் தனது சொந்தத் திறமை மூலமும் எழுதிப் பிரபலமாகியது சு.ரா.வுக்குப் பெரிய மனக்குறையைத் தந்திருக்கலாம். தன்னைத் தவிர எந்த எழுத்தாளரையும் ஏற்காத அவரது சொந்த மனநிலையை இது சீண்டி விட்டிருக்கலாம். சு.ரா.வுக்கு ஜெயகாந்தன் அளவுக்கு நேரடி வாழ்க்கை அனுபவம் இல்லை என்பதால் போட்டி போட முடியவில்லை. ஒருவேளை ஜெயகாந்தனைப் போன்ற பின்னணி சு.ரா.வுக்கு இருந்திருந்தால் அவரும் கட்சிக்கு ஜே போட்டுவிட்டு அப்போதே பிரபலமான எழுத்தாளராக செட்டிலாகியிருப்பார். அது முடியவில்லை என்பதால்தான் 80களில் ஜெயகாந்தன் வீழ்ந்த நேரத்தில் அவரை முல்லைக் கல்லாக்கி பழிதீர்த்துக் கொண்டார். சு.ரா.வின் கம்யூனிச எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியதில் இந்தப் பார்வைக்கு முக்கியப் பங்குண்டு.

ரஸ்ஸல்
இங்கிலாந்து உளவுத்துறையிடம் சன்மானம் பெற்ற ‘அறிஞர்’ ரஸ்ஸல்

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குருசேவ் முதன்முதலாக ஸ்டாலின் கால மனிதப் படுகொலைகளை வெளிப்படையாக அறிவித்ததும் உலகமே அதிர்ச்சியடைந்தது போல சு.ரா.வும் பேரதிர்ச்சியடைந்தாராம். அப்புறம் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் எழுதிய தோல்வியுற்ற கடவுள், நடுப்பகலில் இருள் எனும் நூல்களைப் படித்ததும் சோவியத் கால பயங்கரங்களை மேலும் தெரிந்து கொண்டு மேலும் அதிர்ச்சியடைந்து கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து முற்றிலும் விலகிக் கொண்டாராம். அக்கால இரவுத்தூக்கங்களில் ஸ்டாலின் கனவில் வந்து பூட்சுக்காலால் சு.ரா.வைக் குத்துவாராம். ஏற்கெனவே சுந்தர விலாசத்தில் தந்தையின் கோணல் பார்வையின் மூலம் சர்வாதிகாரத்தின் இலக்கணத்தைத் தெரிந்தும் அனுபவித்தும் வந்த சு.ரா.வுக்கு ஸ்டாலினது சர்வாதிகாரம் அதிகம் விளக்கமின்றியே சட்டென்று புரிந்து விட்டதாம். இதிலிருந்து சு.ரா. கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுத்தார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் புரியாத உண்மை ஒன்று உள்ளது. அது சு.ரா. போலி கம்யூனிசத்தை ஆதரித்தார் என்பதே. இதையே ஜெயமோகன் “”சு.ரா. தனது கட்சித் தோழர்களிடமிருந்து ஆழமான மார்க்சிய மன அமைப்பைப் பெற்றார்” என்று கூறுகிறார். இதை ஒரு சின்னத்திருத்தத்துடன் ஏற்றுக் கொள்வோம். அதாவது சு.ரா. தனதுக் கட்சித் தோழர்களிடமிருந்து போலி மார்க்சிய மனஅமைப்பைப் பெற்றார். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.

முதல்விசயம் குருசேவுக்கு முன்பேயே, ஸ்டாலின் காலத்திலேயே அவரைப் பற்றிய அவதூறுகள் ஏகாதிபத்திய அறிவாளிகளால் திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. இயற்கைச் சீற்றம், தொற்று நோய் மற்றும் சோவியத் யூனியனின் சராசரி இறப்பு விகிதத்தையே பல ஆண்டுகளில் கூட்டி மாபெரும் படுகொலை போன்று புள்ளிவிவர மோசடி செய்தார்கள். இதை அமெரிக்காவின் அப்போதைய ஏகபோக பேப்பர் முதலாளி ஹெர்ஸ்ட் என்பவன் பெரும் முதலீட்டுடன் உற்பத்தி செய்து விநியோகம் செய்தான். இதையே இலக்கியமாக மாற்றி எழுத்தாளர்கள் வெளியிட்டனர். இத்தகைய நாவல்களுக்கு பெரும் பணமும், நோபல் பரிசு முதலான விருதுகளும் கிடைத்து வந்த படியால் கம்யூனிச எதிர்ப்பு இலக்கியம் எழுதுவது அப்போது இலாபம் தரும் தொழிலாக நடைமுறையில் இருந்து வந்தது.

ஜெயமோகனும், சு.ரா.வும் வியந்தோதும் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் மட்டுமல்ல, அறிஞர் ரஸ்ஸல் போன்றவர்களும் தமது கம்யூனிச எதிர்ப்பு எழுத்துக்காக பிரிட்டிஷ் உளவுத்துறையான எம்.15இலிருந்து பெருந்தொகையை ஊதியமாக அல்லது கைக்கூலியாகப் பெற்று வந்தனர். இவையெல்லாம் 90களில் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்து நாறிய செய்திகள். அடுத்து, சோவியத் யூனியனிலேயே இத்தகைய கைக்கூலிகள் உருவாகிச் செயல்பட்டு வந்தனர். புகாரின் போன்றவர்கள் கட்சித் தலைமையிலேயே அந்தச் சதியை செய்து வந்தனர் என்பதை நிரூபித்த மாஸ்கோ சதி வழக்கு உலகப் பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாகத்தான் நடந்தது. இறுதியில் போலி கம்யூனிசத்தின் முகமூடியை முழுவதும் கலைத்துப் போடவந்த கோர்பச்சேவின் காலத்தில் சோவியத் யூனியனின் ஆவணக்கருவூலம் திறக்கப்பட்டபோது, “ஸ்டாலின் காலப் படுகொலைகளுக்கான இறுதி ஆதாரம் அதில் கிடைக்கும்’ என்று ஏகாதிபத்தியவாதிகள் ஆரூடம் கூறினர். ஆனால் அத்தகைய சான்று ஒன்று கூட அதில் இல்லை. இதனால் ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத நிலையில் ஏகாதிபத்தியவாதிகள் வேறுவழியின்றி இலக்கியவாதிகளின் புனைகதைகளை மட்டும் வைத்து அந்தப் பிரச்சாரத்தைத் தொடருகின்றனர்.

‘பனித்துளியில் இருக்குதடா உலகம்’ என்ற வரிக்குள் முடங்கிக் கொண்டு உண்மையான உலகைப் புரிந்து கொள்ள மறுக்கும் மூடுண்ட அகத்தை வரித்திருக்கும் ஜெயமோகன் போன்றோர் மேற்கண்ட கைக்கூலிகளின் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தைத்தான் தமது உடலில் ஓடும் ரத்தமாகக் கொண்டிருக்கின்றனர். இவை குறித்த விரிவான கட்டுரைகளை ஆதாரத்துடன் புதிய கலாச்சாரத்தில் பலமுறை வெளியிட்டிருக்கிறோம். இந்நூலில் உள்ள அந்தக் கட்டுரைகள்  ஜெயமோகன், சு.ரா. போன்றோரின் கம்யூனிச எதிர்ப்புத் தத்துவத்தின் ஊற்று மூலத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

இப்படி ஸ்டாலின் மீதான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏற்கெனவே கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில்தான் குருசேவ் என்ற மார்க்சியத் திரிபுவாதிகளின் தலைவர் தலைமைக்கு வந்து அவற்றை வழிமொழிந்தார். வெறுமனே ஸ்டாலினைச் சிறுமைப்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்வது மட்டும் குருச்சேவின் நோக்கமல்ல. மார்க்சியத்தின் ஆதாரமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் மொத்தத்தில் சோவியத் யூனியனை அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடாக மாற்றுவதுதான் குருசேவின் நோக்கமாக இருந்தது. அதன்படி “”சமாதான சகவாழ்வு  ஏகாதிபத்தியங்களுடன் சமாதானமாக வாழலாம், அமைதி வழியில் சோசலிச மாற்றம்  ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் புரட்சியின் மூலம் சோசலிசம் அடையத் தேவையில்லை; பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் சோசலிசத்தை அடையலாம்; அனைத்து மக்களுக்கான அரசு  இதன்படி சோவியத் யூனியனில் இனி பாட்டாளி வர்க்க அரசு தேவையில்லை” என்ற குருசேவின் இந்த திரிபுவாதக் கருத்துக்களின் அடிப்படையில் உலகக் கம்யூனிசக் கட்சிகள் இரண்டாகப் பிரிந்தன.

இவை மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி என்றவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள் எனவும், ஆதரித்தவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் வலது கம்யூனிசக் கட்சியும், ஆரம்பத்தில் குருசேவை மேலோட்டமாக எதிர்ப்பது போல பாவனை செய்த இடது கம்யூனிசக் கட்சியும் குருசேவின் திரிபுவாதத்தை ஆதரித்து பாராளுமன்ற கட்சிகளாகச் சீரழிந்து போயின. அப்போதைய சீனக்கம்யூனிசக் கட்சி, அல்பேனியக் கட்சி, இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சி போன்றவர்கள் குருசேவை கடுமையாக எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்தினர். இந்த வரலாற்றுக்கும் சு.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்?

ஸ்டாலின் மீது குருசேவ் பொழிந்த அவதூறுகள் குறித்து மட்டும்தான் சு.ரா. அதிர்ச்சியடைந்தார். மார்க்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்த திரிபுவாதம் குறித்து எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. குருசேவின் திரிபுவாதத்தினால் கம்யூனிசக் கட்சிகள் எப்படி இரண்டு முகாம்களாகப் பிரிந்ததோ அதைப்போல மார்க்சியத்தை ஆதரித்த கலைஞர்களும் இரண்டு பிரிவுகளாய்ப் பிரிந்தனர். இந்த இரண்டாவது திரிபுவாத முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவாளிகள் அனைவரும் அல்லது பெரும்பான்மையினர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை ஏற்றுக் கொண்ட அதேசமயம் திரிபுவாதம் குறித்து வாய் திறக்காமல், அந்தத் திரிபுவாதத்தை எதிர்த்த உண்மையான கம்யூனிஸ்டுகளை மட்டும் தீவிரமாக எதிர்த்தனர். “”முன்னாள் கம்யூனிஸ்டுகள் சோசலிசத்தை ஆதரிப்பவர்கள், முற்போக்கான இடதுசாரிகள்” என்ற பட்டங்களுடன்தான் இவர்கள் உண்மையான கம்யூனிசத்தை எதிர்த்தனர் என்பது முக்கியமானது. அவ்வகையில் இவர்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத போதும் இவர்களின் சேவையை ஏகாதிபத்தியவாதிகளும், போலி கம்யூனிஸ்டுகளும் ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படித்தான் சு.ரா. போலி மார்க்சிய மன அமைப்பைப் பெற்றுக் கொண்டார்.

சு.ரா.வுடன் 1952 முதல் நட்பு கொண்டவரும், வலது கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டவருமான மி.ராஜூ என்பவரின் பதிவின்படி சு.ரா.வுக்குக் கட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும் அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணியவில்லையாம். அப்புறம் அவரது சிறுகதைத் தொகுப்பு செக் மொழியில் வந்தபோது அதில் அவரைப்பற்றிய அறிமுகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று எழுதி அவரிடம் ஒப்புதலைக் கேட்டபோது அந்த வரியை அடித்து விட்டாராம். அதேசமயம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் ஓரளவு நம்பிக்கை தருவதாக உள்ளவை (போலி) கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்று சு.ரா. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜூவிடம் சொன்னாராம்.

குருச்சேவ்
குருச்சேவ்

சு.ரா. ஒரு தீவிர கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்து, பயங்கரமாகக் களப்பணியாற்றி, ஸ்டாலின் குறித்த பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிவிட்டது போல இலக்கிய உலகில் ஒரு வதந்தி உலவி வருகிறது. முதலில் இது உண்மையல்ல. கட்சி அவரது கதையை செக் மொழியில் வெளியிட முன்வந்த போதும் அவர் தன்னை ஒரு உறுப்பினராகக் கூட காட்டிக் கொள்ள முன்வரவில்லை. மேலும் ஒரு கம்யூனிசக் கட்சியைப் பொறுத்தவரை உறுப்பினராவது என்பது பயிற்சிக் காலத்தை முடித்த பின்னரே நடக்க முடியும். இங்கே அந்த உரிமை சு.ரா.வின் பேனா மையில் இருக்கிறது. அவர் நினைத்தால் ஆமாம் என்றோ அல்லது இல்லையென்றோ உறுப்பினர் தகுதியை “டிக்’ செய்ய முடியும். இன்றைக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தமக்கு ஆதரவான இலக்கியவாதிகளிடம் இப்படித்தான் உறவு கொண்டுள்ளன. இது போலி மார்க்சிய இலக்கியவாதிகளின் முதல் மனநிலை.

அடுத்து அநேக இலக்கியவாதிகள் மேலோட்டமாக மார்க்சியத்தை ஒரு பாவனை போல் ஆதரித்தாலும் கட்சி என்று வரும் போது தம்மை ஒப்படைத்துக் கொள்ள மறுத்து விடுவார்கள். அதாவது கட்சியின் கடமைகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வேப்பங்காயைப் போன்று கசப்பிற்குரியது. இலக்கியவாதிகளின் கம்யூனிச வெறுப்பே இந்த அடிப்படையிலிருந்துதான் கிளம்புகிறது. நிலவும் எல்லாவகையான அதிகார நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொண்டோ, கட்டுப்பட்டோ வாழப்பழகியிருக்கும் இலக்கியமனம் கம்யூனிஸ்டு கட்சி கோரும் சுயக் கட்டுப்பாட்டையும், சுய அர்ப்பணிப்பையும் மட்டும் ஏற்றுக் கொள்ளாது. இது இரண்டாம் மனநிலை.

அடுத்து மார்க்சிய சித்தாந்தம் குறித்து அ,ஆ கூடத் தெரியாத போதே கம்யூனிசத்தைக் கற்றுத் தேர்ந்து, கரைத்துக்குடித்த பண்டிதராகக் காட்டிக் கொள்வது மூன்றாம் மனநிலை. நான்காவது, ஒருபுறம் கம்யூனிசம், கட்சியெல்லாம் டூபாக்கூர் என்று கேலி செய்து விட்டு இன்னொருபுறம் போலி கம்யூனிசக் கட்சித் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வை மாபெரும் தியாகமாகச் சித்தரிப்பதும், அந்தத் தலைவர்களும் இத்தகைய இலக்கியவாதிகளை “என்ன இருந்தாலும் இவன் நம்மாளுயா’ என்று பரஸ்பரம் முதுகு சொறிவதுமாகும்.

இறுதியாக, கம்யூனிசம், புரட்சி என்பதையெல்லாம் ஃபேன்டசி, ரொமான்டிக் விசயங்களாக, ஒரு நேர்த்தியான மாலை நேர விருந்து போல எந்தப் பிரச்சினையோ, துன்பமோ, ரத்தமோ, போரோ இல்லாமல் வந்துவிடுவதாகக் கருதுவது ஐந்தாம் மனநிலை. இதன்படி “கம்யூனிசம் என்ற அமுதப்பழம் தானாகவே வந்தால் புசித்து இன்புறுவோம், இல்லையா, புறங்கையால் ஒதுக்கிவிட்டு இருக்கின்ற வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்’ என்பதாகும். சு.ரா. மேற்படி ‘பஞ்சபூதங்களால்’ ஆன மனநிலையைக் கொண்டவர். இதன் பொருள் அவர் ஒரு தீவிர மார்க்சிய எதிர்ப்பாளர் என்பதே.

எனவே சித்தாந்தத்தைத் தவிர்த்து விட்டு போலிகளின் சில்லறை நடைமுறைப் பிரச்சினைகளை விமரிசனம் செய்துவிட்டு ஈ.எம்.எஸ். போன்ற முக்கியமான இடது மற்றும் வலது தலைவர்களிடம் சு.ரா. நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். நல்லக்கண்ணு போன்ற தமிழகத் தலைவர்களும் நாகர்கோவில் வந்தால் சுந்தர விலாசத்திற்குத் தவறாமல் வந்து தங்கிப் போவார்களாம். திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வலது கம்யூனிசத் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர் ஒரு தேர்தலில் நீலலோகிததாஸ நாடாரிடம் தோல்வியுற்றது குறித்து “”இது சாதியின் வெற்றி, இந்திய அரசியலில் ஐடியலிசம் சாகுதுன்னு அர்த்தம்” என்று சு.ரா. துக்கப்பட்டு சில நாட்கள் தூங்காமல் அவதிப்பட்டாராம். ஐடியலிசம் குறித்த அறிவும் வருத்தமும் எவ்வளவு அற்பமாக இருக்கிறது பாருங்கள்!

வலது கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றச் சகதியில் மூழ்கி நேருவின் போலி சோசலிசத்திற்குப் பக்கமேளம் வாசித்து, இந்திராவின் எமர்ஜென்சிக்கு பஜனை பாடி, தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மற்றும் தலைவிக்கும், கலைஞருக்கும் காவடி தூக்கி, இப்போது முதலாளிகளுக்கும், காங்கிரசுக்கும் பல்லவி பாடி கட்டெறும்பாகத் தேய்ந்து விட்டது. இவையெதுவும் சு.ரா.வுக்கு கோபத்தையோ துக்கத்தையோ தரவில்லை. அக்கட்சியின் ஒரு தலைவர் தோற்றுப் போனது மட்டும் சு.ரா.வுக்கு துக்கத்தை தருகிறது என்றால் அவரது “ஐடியலிச’த்தை மட்டுமல்ல, ‘ஐடியாலஜி’யையும் அதன் முத்திரை பதிந்த “லிட்ரேச்சரி’ன் ஆழத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சு.ரா. அவரது இளமைப்பருவத்தில் தன்னை இந்தியாவில் புரட்சி நடத்தப்போகும் ஸ்டாலினைப் போன்ற தலைவராகக் கற்பனை செய்து கனவு கண்டாராம். இதை ஜெயமோகன் ஒருமுறை சு.ரா.விடம் அந்தரங்கமாகக் கேட்டபோது அவர் ஒத்துக் கொண்டாராம். இருக்கலாம். தன்னெழுத்தை மட்டும் வியந்தோதக்கூடிய ஒரு நபர் புரட்சி என்பது கூட தன்னால் வழங்கப்பட இருக்கின்ற கோவில் சுண்டல் என்று ஏன் நினைக்க முடியாது? இப்படி ஒரு தனிநபர், புரட்சியை பிச்சை போன்று மக்களிடம் தூக்கி எறிவதாக எத்தனை தெலுங்குப் படங்களும் ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் ஒரே ஃபார்முலா அதுதானே. ஆனால், புரட்சி என்பது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் நடத்தும் போர். இதைச் சாதிக்கும் தலைமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகத்தான் முகிழ்த்து வரும்.

கம்யூனிஸ்டு கட்சியில் சேரும் எவரும் தலைமை குறித்துக் கனவுகாண மாட்டார்கள். தலைமை என்பது என்ன, அது எவற்றைக் கோருகிறது, அது என்னவிதமான பொறுப்புக்களையும், பிரச்சினைகளையும் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். மறுபுறம் கம்யூனிஸ்டு கட்சியின் எல்லா உறுப்பினர்களும் தலைமைப் பண்பைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். புரட்சிகர நடைமுறையில் இல்லாத நடுத்தரவர்க்கத்தினருக்கு மட்டும்தான் கம்யூனிசம் என்ற பெருஞ்சொர்க்கத்தில் தான் முடிசூடவிருக்கும் மகுடம் குறித்த அற்பக் கனவு இருக்க முடியும்.  அவ்வகையில் போலி மார்க்சியக் கலைஞரும், சிற்றிலக்கியத்தின் எம்.ஜி.ஆருமான சு.ரா., இந்தியாவின் புரட்சித்தலைவராக மட்டுமல்ல, சிறு பத்திரிக்கைகளின் பிதாமகராவும் தன்னைக் கனவு கண்டார். பின்னதில் மட்டும் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் அந்தப் பதவியும் பல்வேறு இலக்கிய கோஷ்டிகளுடன் நடத்திய சண்டையால் ஆட்டங்கண்ட போதுதான் சு.ரா. சொல்லொண்ணாத்துயரம் அடைந்து தன்னைப் புகைப்படங்களாகவும், குறிப்புக்களாயிருந்த நினைவுகளை வார்த்தைகளின் உதவியால் புத்தகங்களாகவும் பதிவு செய்து சமாதானம் அடைய முயன்றார்.

எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை

கோர்பச்சேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நோஸ்தும் சு.ரா.வை பெரும் உற்சாகத்தில் தள்ளியதாம். இதே உற்சாகத்தைத்தான் அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தனது ரஷ்யப்புரட்சி ஒரு இலக்கிய சாட்சியம்என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் விஜய் பட ரீலிசுக்கு இணையாகக் கொண்டாடியிருப்பார். இவர்களது மார்க்சிய அறிவை நாம் விளங்கிக் கொள்ள இந்தக் கொண்டாட்டமே போதும். குருசேவ் காலத்தில் தொடங்கிய திரிபுவாதம் சமூக ஏகாதிபத்தியமாய்  அதாவது சொல்லில் சோசலிசமும் செயலில் ஏகாதிபத்தியமுமாய்  சீரழிந்த காலத்தில்தான் அதன் நீட்சியாய் கோர்பச்சேவ் பதவிக்கு வந்தார்.

ஏற்கெனவே சோவியத் யூனியனின் பொருளாதாரம் ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு முக்கால் நிர்வாணமாகியிருந்த நிலையில், “ஒரு கட்சி ஆட்சிமுறை’ என்ற கோவணம் மட்டும் எதற்கு என்று ஏகாதிபத்திய நாடுகள், அதைத் தூக்கியெறியுமாறு நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதன் பொருட்டு கோர்பச்சேவ் கோவணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறியலாம் என்று கொண்டு வந்தவைதான் மேற்கண்ட சீர்திருத்த நடவடிக்கைகள். இதை அப்போதைய உண்மையான மார்க்சிய லெனினிய வாதிகள் தெளிவாக அம்பலப்படுத்திய போது அதை எதிர்த்த போலிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கோர்பச்சேவின் அரை நிர்வாண சீர்திருத்தங்களை மாபெரும் புரட்சி நடவடிக்கைகள் என்று வரவேற்றனர்.

இக்காலகட்டத்திற்குச் சற்று முன்பாக காலச்சுவடை ஆரம்பித்திருந்த சு.ரா., எம்.என்.ராய், எரிக் ஃபிராம், எம்.கே. கோவிந்தன் முதலான விதவிதமான கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளுமைகளை வெளியிட்டார். எல்லாம் கோர்பச்சேவின் கோவணக் கிழிசலுக்கு உதவியாய் இருக்கும் என அவர் நினைத்திருக்கக் கூடும். மேலும் கம்யூனிசத்தை திருத்துவதற்கு குமரிமுனையில் ஒருவன் இருக்கிறான் என்பதை உலகத்திற்கு அடையாளம் காட்டவும் அவர் நினைத்திருக்கலாம். கடைசியில் என்ன நடந்தது? சோசலிச மாயைக்காகப் பராமரிக்கப்பட்ட “ஒரு கட்சி ஆட்சி’ என்ற கோவணம் பறந்த உடன் மாலெ கட்சிகள் மதிப்பிட்டது போல ரசியா வெளிப்படையான முதலாளித்துவ  ஏகாதிபத்திய நாடாக மாறியது. இதை எதிர்பார்க்காத போலிகள், சோவியத் யூனியனை வைத்து அணிகளுக்கு பிலிம் காட்டியவர்கள் கதிகலங்கிக் கதறினார்கள். அதன் பிறகு ரசியாவில் செங்கொடி கீழிறக்கப்பட்டு கம்யூனிச ஆசான்களின் சிலைகளும் இடிக்கப்பட்டன. இதைக்கண்டு பதறிய சு.ரா. பல நாட்கள் தூங்கமல் கண்ணீர் விட்டாராம். “ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் மனுஷாளை நம்பியிருக்கலாம்” என்று அப்போது ஜெயமோகனிடம் சொன்னாராம். அப்பக்கூட மனுஷன் கம்யூனிஸ்டுகளை அதுவும் ஸ்டாலினைத் திருத்துவதற்கான தன் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. சு.ரா. ஏன் கண்ணீர் விட்டார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.

செங்கொடிகளும், சிலைகளும் சரிந்து சோவியத் யூனியனின் முகமூடி கிழிந்ததை வைத்து கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது என ஏகாதிபத்திய முகாம் காத்திருந்து ஆர்த்தெழுந்த காலமது. அதன் எதிரொலிகள் தமிழ்நாட்டின் சிற்றிலக்கிய உலகிலும் அலற ஆரம்பித்தன. “வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது, வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது, எல்லா தத்துவங்களும் இயக்கங்களும் தோற்றுப் போய் விட்டன, அவையெல்லாம் பெருங்கதையாடல்கள், விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் என்ற சின்னக் கதையாடல்கள்தான் சரியானது, தலித்தியம்  பெண்ணியம்  சுற்றுச் சூழலியம் போன்ற மறைக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இனி பேசப்படவேண்டும்…” போன்ற கொள்கை முழக்கங்களை நிறப்பிரிகை முன்வைத்தது.

ஜெயமோகனது கம்யூனிச வெறுப்பு! சங்க பரிவாரத்தால் தயாரிக்கப்பட்ட விருப்பு!

ஜெயமோகன்
ஜெயமோகன்

கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலமில்லை என்பதாகப் புரிந்து கொண்ட சு.ரா. தன்னை எதிர் மார்க்சியவாதியாக நிரூபிக்க மேற்கண்ட விசயங்களில் அந்த அளவுக்கு அறிவில்லையென்றாலும் பேசி, எழுத முயன்றார். கம்யூனிச எதிர்ப்புக்கு புது மவுசு இருப்பதைப் புரிந்து கொண்ட சு.ரா.வின் தலைமைச் சீடர் ஜெயமோகன் முந்திக் கொண்டார். உடனே ஜெயமோகனுடைய கனவில் ஸ்டாலின் வந்திறங்கி பூட்ஸ் காலால் உதைக்கத் தொடங்க, ராணுவ பூட்ஸை விடக் கனமான பின் தொடரும் நிழலின் குரலை ஜெயமோகன் பிரசவித்தார்.

தனது குருநாதரின் ஜே.ஜே. நாவல் போன்று இந்த நாவலும் பெரும் வரவேற்பைப் பெறும், ஒருவேளை நாவலில் புகாரின் கதையெல்லாம் விரிவாக வருவதால் நோபல் பரிசு கூடக் கிடைக்கலாம் என்று ஜெயமோகன் மனப்பால் குடித்திருக்கலாம். நாவல் கடைசியில் கழுதைப்பாலாக வீணாகிவிட்டது. ஜே.ஜேயில் கம்யூனிச எதிர்ப்பு சற்றே இலைமறைவு காய் மறைவாக வந்ததென்றால், பின்தொடரும் குரலில் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி, படிமத்திற்கு படிமம் அப்பட்டமாய் எழுந்து அம்மணமாக ஆட்டம் போட்டதனாலோ என்னவோ வாசகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. எந்தக்கதை 50 நாட்களாவது ஓடும் என்ற சூட்சுமம் தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களுக்கே தெரியவில்லை. எந்த நாவல் காலத்தை விஞ்சி நிற்கும் என்ற சூட்சுமம் அதீத மனத்தாவல் கொண்டு யோசித்தாலும் ஜெயமோகனுக்குப் பிடிபடவில்லை போலும்! ஆனால் இந்த நாவல் குருவுக்குப் பிடித்திருந்ததாம். ஒருவேளை நாவல் தோல்வியடையலாம் என்ற கணிப்பு காரணமாகக்கூட சு.ரா. அதைப் பாராட்டியிருக்கலாம். ஏனெனில் குருநாதர் சிஷ்யனின் கிளாசிக் நாவலான விஷ்ணுபுரத்தை படிக்கவே இல்லை என்று புளுகிவிட்டாராம்.

துணிக்கடை முதலாளி படிக்காவிட்டாலென்ன, சாய ஆலை முதலாளியும், சர்க்கரை, லாரி, நிதி இன்னபிற தொழில்களின் அதிபரும் கொக்கோ கோலா முகவருமான அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் விஷ்ணுபுரத்தை இரண்டு தடவை படித்து தன் ரசிகராகி விட்டதை ஜெயமோகன் தன் வாசகர் ஒருவருக்கு போகிற போக்கில் பெருமை பொங்க அவிழ்த்து விட்டிருக்கிறார். அருட்செல்வர் முதலாளி மட்டுமல்ல, அறிவாளியும் கூட. “மின்சாரத்தில் நேர்எதிர் மின்சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டவுடனே மார்க்சியம் காலாவதியாகி விட்டதாக’ சுபமங்களாவுக்கு பேட்டி கொடுத்தவர். அவர் பின் தொடரும் நிழலின் குரலை நான்கு முறையாவது படித்திருக்க வேண்டும்.

ஜெயமோகனது தத்துவக் கண்ணாட்டம்: சமரசங்களை தியாகமாக்கும் அற்பத்தனம்!

ஜெயமோகன் தனது வாழ்க்கை மற்றும் எழுத்துக்கு அடிப்படையான புரிதல் என்று சு.ரா. பற்றிய நினைவின் நதியில்  நூலில் குறிப்பிடுகிறார்: “மனித வாழ்க்கையும் சரி, வரலாறும் சரி, அப்படிப்பட்ட உக்கிர  கணங்களால் ஆனவை அல்ல. அவை மிக மெல்ல மாறுவது தெரியாமல் மாறியபடி விரிந்து கிடக்கின்றன. சலிப்பூட்டும்படி மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தத் தளத்தில் மனித மனத்தை இயக்கும் விசைகள் பெரும்பாலும் மிக மிகச் சாதாரணமானவை. பல தீவிரச் செயல்பாடுகளுக்கு உள்ளே இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை.”

உண்மையில், ஜெயமோகனது அடிப்படையான ஆன்மீகம் இதுதான். இதன்படி ஜெயமோகன் வேலை செய்யும் தொலைபேசித் துறையில் தனியார்மயத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யும் நடவடிக்கைக்குள்ளேயும், எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் இறந்துபோன படுகொலைச் சம்பவத்திற்கு உள்ளேயும், அமெரிக்கா ஈராக்கின் மீது குண்டுவீசித் தாக்கி நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு உள்ளேயும், அதை எதிர்த்துத் தன்னுடலையே வெடிகுண்டாக்கி தற்கொலையின் மூலம் தியாகம் செய்யும் போராளியின் சிந்தனைக்கு உள்ளேயும் இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை என்றாகிறது. இவற்றுக்கு அடிப்படையாக அமையும் பொருளியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்வதோ இலக்கியத்திற்கெதிரான அபச்சாரம்!

ஜெயமோகனது தத்துவ விசாரங்களைக் கண்டு அஞ்சிச் சரணடைந்த வாசகர்களுக்குப் புரியும்படி சொல்கிறோம். ‘உயிரே’ திரைப்படத்தில் வடகிழக்கிந்திய மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தை மனிஷா கொய்ராலாவின் முலைகள் வழியாக மணிரத்தினம் நிறுவுகிறாரல்லவா, அது துல்லியமான ஆன்மீகச் சித்தரிப்பு; ஒரு மனித வெடிகுண்டின் நியாயம் எந்த அளவுக்கு அபத்தமானது என்கிறார் ஜெயமோகன். எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் நிகழ்ச்சியையும் என்ன காரணம் என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுப் பரிசோதித்தால் அதன் விடை அபத்தமாக வரும் என்பதுதான் அவரது ஆன்மீகத்தின் உட்கிடை. தன்னை டன் கணக்கில் எழுதிக் குவிக்கத் தூண்டும் ஆன்மீக உந்துதல் சாகித்ய அகாதமி, ஞானபீடம் போன்ற சாதாரணமான விசயங்களில்தான் உறைந்திருக்கிறது என்ற உண்மையை அவர் பார்க்கிறார். சு.ரா. இறந்தவுடன் 3 நாட்கள் சிறுநீர் பிரிந்தது கூடத் தெரியாமல் தீவிரமாகத் தன்னைச் செயல்பட வைத்த ஆன்மீக விசை எது? புகழ்வது போலக் கேவலப்படுத்தவும், வியப்பது போலக் காறித்துப்பவும், வருத்தப்படுவது போல நடிக்கவும் தன்னுடைய மனத்தை இயக்கிய அந்த உளவியல் காரணம் அற்பமானதே என்பதை அவர் உணர்ந்திருப்பதால் ‘உலகமே அற்பத்தனமானது’ என்று பிரகடனம் செய்கிறார்.

ஆனால், ஜெயமோகன் தன் நாவலை அப்படி எழுதவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் நாயகன் ஒரு போலி கம்யூனிசத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து படிப்படியாகத் தலைவராகிறான். பின்பு கட்சியின் காரியவாத பிழைப்புவாதங்களைக் கண்டு, மனஞ்சோர்ந்து, விலகி மனைவியின் முலைகளில் தஞ்சமடைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறுகிறான். இந்த நாவலை ஜெயமோகன் தனது எழுத்தின் தத்துவ அடிப்படையை வைத்து எழுதவில்லை என்பதோடு அதற்கெதிராகவும் எழுதியிருக்கிறார். நாவலில் அதீத நாடகத்தன்மையும், வாழ்க்கையை செயற்கையாக உக்கிரப்படுத்துவதும், விரிவான எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பும், வாழ்வின் அநீதியை எதிர்த்து வரலாறு முழுவதும் போராடும் மனித சமூகத்தை எதிர்த்து ஆபாசமாக வசைபாடும் ஜெயமோகனது நீண்ட பிரசங்கங்களும் முடிவில், எல்லாம் சேர்ந்து நாவலை மிகச் செயற்கையாகத் தூக்கி நிறுத்துகின்றன. அதனாலேயே வாசிப்பில் சரிந்து விழுகின்றன. சு.ரா.வின் ஜே.ஜேவைக் கிணற்றுத் தவளை என்று மதிப்பிட்டால், ஜெயமோகனை சற்றே எம்பிக் குதிக்கும் கிணற்றுத் தவளை என்று சொல்லலாம். குருவை விஞ்சிய சீடன்தான்! எவ்வளவு துள்ளினாலும் இந்தத் தவளையும் மீண்டும் கிணற்றுக்குத்தான் போகிறது என்பதே முக்கியம்.

ஜே.ஜே. எழுதிய சு.ரா. போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது நன்மதிப்பு கொண்டிருந்ததை சீடரும் “கவனத்தில்’ கொண்டிருக்கிறார். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குமரி மாவட்ட தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் கிளை கிளையாக வந்தனராம். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அருகதை உள்ள கட்சிகள் இவைகள் மட்டும்தான் என்று தனது “நினைவின் நதியில்’ ஜெயமோகன் எழுதுகிறார். போலிகளும் இவருடனான தமது பழைய கசப்பை மறந்துவிட்டுக் கைகோர்க்கக் கூடும். நல்லகண்ணுவைப் பாராட்ட இல.கணேசன் போகவில்லையா? அரசியலைப் போல “இலக்கியத்திலும் இதெல்லாம் சகஜமப்பா’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

மனுஷ்ய புத்திரன்: சு.ராவிற்கு தப்பாமல் உருவான சீடப்பிள்ளை!

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

ஜே.ஜே. சில குறிப்புகளையும் மார்க்சியத்திற்கும் சு.ரா மற்றும் அவர் சீடப் பிள்ளைக்குமுள்ள உறவுகளைப் பார்த்துவிட்டோம். இங்கே ஜே.ஜே. நாவலால் பாதிக்கப்பட்ட ஒரு ஆளுமையைப் பார்ப்போம். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பொருத்தமானவர். “சு.ரா.வை ஜே.ஜே. சில குறிப்புகள் வழியாகத் தேடிச் சென்றவர்களில் நானும் ஒருவன். எனது இடதுசாரி நம்பிக்கைகள் பெரும் மனமுறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். ரஷ்யப் புரட்சி: ஒரு இலக்கிய சாட்சியம் எனது நம்பிக்கைகளைக் குரூரமாகச் சிதைத்தது. அந்த காலகட்டத்தில்தான் ஜே.ஜேயையும் படித்தேன். அனைத்தின் மீதும் ஜே.ஜே. வெளிப்படுத்திய எதிர்நிலையும் விழிப்புணர்வும் சட்டென ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. ஜே.ஜேயில் வெளிப்பட்ட மொழியும் புத்துணர்ச்சியும் மூர்க்கமும் பித்தேற்றுவதாக இருந்தன….” என்கிறார் கவிஞர்.

முதலில், கவிஞரின் இடதுசாரி நம்பிக்கை என்னவாக இருந்தது? புதிய கலாச்சாரத்தில் ஓரிரு கவிதைகள் எழுதியிருக்கிறார். ஷாபானு குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு. அப்புறம் மன ஓசையில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். இதைத் தவிர கவிஞர் அவர்கள் இடதுசாரி இயக்கத்திற்காகக் கருத்துப் பணியோ, களப்பணியோ ஆற்றவில்லை. பெரிய அளவில் காரியம் ஆற்றாமலேயே நம்பிக்கை மட்டும் பெரிய அளவில் மனமுறிவைச் சந்தித்தது எப்படி என்று தெரியவில்லை. தொலையட்டும். அப்படி மனமுறிவைப் பெற்றதாகவே வைத்துக் கொள்வோம். அதன் பிறகு கவிஞர் என்ன செய்தார்?

இடதுசாரி நம்பிக்கை என்ற சிறிய குன்றை விட்டுக் கீழிறங்கி அதைவிட உன்னதமான சிகரத்தை நோக்கிப் போனாரா? இல்லை. கவிதைத் தொகுப்புக்களைக் கொண்டு வந்தார். பிறகு காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனுடன் ஏதோ தகராறு. அந்தத் தகராறில் “சு.ரா. மகனை ஆதரித்தார்’ என்று குற்றம் சாட்டிவிட்டு வெளியேறினார். அப்புறம் எழுத்து வியாபாரி சுஜாதாவின் நல்லாசியுடன் அவரது புத்தகங்களை வெளியிடும் உயிர்மைப் பதிப்பகத்தை நடத்துகிறார். சுஜாதாவைப் பற்றி எவரும் விமரிசனம் செய்யக்கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையுடன் உயிர்மை பத்திரிக்கையை நடத்தி வருகின்றார். இப்படியொரு பெரும் பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழுந்த போதிலும் அவருக்கு மனமுறிவோ எலும்பு முறிவோ கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமானது. பிழைப்புவாதமும் காரியவாதமும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என இன்று அவர் தெளிந்திருக்கலாம். இந்தக் குறிக்கோளுக்கிடையில் அவரால் கவிதை எழுதுவதையும் நிறுத்த முடியவில்லை.

கவிதை என்றவுடன் அவர் காலச்சுவடில் எழுதிய “அரசி’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதாவைப் பற்றி பூடகமாக “அரசி வந்தாள், சிலிர்த்தாள், நகரம் பணிந்தது’ என்று உப்புச்சப்பற்ற நீர்த்துப்போன படிமங்களால் தயாரிக்கப்பட்ட இந்தக் கவிதையை “தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் கவிதை’ என்று தங்களைத் தாங்களே இலக்கிய உன்னதங்களாக அழைத்துக் கொள்ளும் ஜெயமோகன் மற்றும் பிரேம்  ரமேஷ் போன்றோர் பாராட்டியதும் நினைவுக்கு வருகிறது. அரசியல் வெளி இருண்டு போன இலக்கியப் பாலைவனத்தில் இதுபோன்ற அசட்டுக் கவிதைகள் மகத்தான அரசியல் கவிதைகளாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் பற்றி “அண்ணன் வர்றாரு’ என்ற பாடல் ஒலிப்பேழையை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அரசி கவிதையைப் படித்துவிட்டு எமது பாடல் ஒலிப்பேழையைக் கேட்டுப் பாருங்கள். எதில் கவித்துவமும், கூர்மையும், எள்ளலும், உற்சாகமும் இருக்கிறது என்பது தெரியவரும். அதனால்தான் எமது பாடலை சாதாரண தி.மு.க. தொண்டர்கள் பாராட்டி தங்களுடைய வெளிப்படுத்த முடியாத குரலாகப் பயன்படுத்தியும் வந்தனர். அரசி கவிதை யாருக்குப் பயன்படும்? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்தால் எழுதிய மனுஷ்யபுத்திரனுக்கும் வெளியிட்ட கண்ணனுக்கும் பலவகையில் பயன்படும்.

எனில், சு.ராவின் ஜே.ஜே. நாவல், கவிஞரைப் போன்ற இலக்கியவாதிகளிடம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு இதுதான். அந்த நாவல் தெரிந்தே ஓம்பப்படும் அறியாமையை எல்லாம் தெரிந்த ஞானமாக காட்டிக் கொள்பவர்களுக்கும், சமூகத்திற்கு விரோதமான தன்னிலையை சமூகத்திற்கு மேலான உயர்நிலையாகக் கற்பித்துக் கொள்பவர்களுக்கும், சோம்பிக் கிடக்கும் சொந்த வாழ்வில் விறுவிறுப்பைக் கற்பிதம் செய்து கொள்பவர்களுக்கும் அக உலகில் கட்டியமைக்கப்படும் கற்பனையான வாழ்வின் இல்லாத புதிரை நிஜ உலகில் தேடுவதைப் போன்று பாவனை செய்பவர்களுக்கும் எல்லா தத்துவங்களும் தோற்று விட்டதென்னும் புனைவு தரும், பொய்க்களைப்பை வாழ்வின் அற்ப விசயங்களில் ஊறித்திளைப்பதற்கான நியாயமாக முன்வைப்பவர்களுக்கும் சு.ரா.வின் ஜே.ஜே. ஒரு ஆதர்ச நாயகன்.

உலகின் மிகவும் மொக்கையான நாவல் எது? அது சு.ராவின் மூன்றாவது நாவல்!

 

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் சுந்தர ராமசாமி

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்சு.ரா.வின் மூன்றாவது நாவல். அவர் இறந்துவிட்டதால் இறுதி நாவலுங்கூட. முதலாவது, ஜவுளிக் கடையில் அமர்ந்து கொண்டு வேப்பமரத்தையும் அதைச் சுற்றியிருக்கும் வியாபாரிகளையும் வேடிக்கை பார்த்து எழுதப்பட்ட நாவல். இரண்டாவது, போலி மார்க்சியர்கள், சிற்றிலக்கியவாதிகளிடம் உரையாடிக் கேட்டும், ஐரோப்பாவின் மார்க்சிய எதிர்ப்புக் குப்பைகளைக் கிளறியெடுத்தும் எழுதப்பட்ட நாவல். மூன்றாவது, சு.ரா. தனது சொந்த வாழ்க்கையைப் பல ஆண்டுகளாக அசை போட்டுப் பதப்படுத்தி எழுதிய நாவல். எல்லா இயக்கங்களும், சித்தாந்தங்களும் தோற்று விட்டதான பாவனையில், எழுதுவதற்கான விசயங்கள் இல்லாத நிலையில் எல்லா இலக்கியவாதிகளும் தஞ்சமடைவது அவர்களது இளமைப்பருவம் பற்றிய இனிய நினைவுகளில். சு.ரா.வும் அப்படித்தான் தனது நாவலுக்கான கருவை தனது இளமைப் பருவத்தில் கண்டெடுத்தார்.

இது அவரது பிரச்சினை. நமது பிரச்சினை வேறுமாதிரி. வாழ்நாளிலேயே படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு நொந்து நூலான நாவல் உறுதியாக இதுதான். இந்தக் கட்டுரைக்காக சு.ரா.வின் படைப்புகளைப் படிக்கவேண்டியிருந்தது ஒரு தண்டனை என்றால், அதில் கொடிய தண்டனை இந்த நாவல்தான். இது சு.ரா.வின் குடும்ப நாவல். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே “இது நம்ம மாமி, இது நம்ம அத்திம்பேர், இது நம்ம தோப்பனார், இவதான் நம்ம மன்னி, இவாதான் நம்ம ஓரகத்தி” என்று அடையாளம் காட்டி, கலந்துரையாடி மகிழ்ச்சியடைய வேண்டிய நாவல். மற்றவர்கள் எவருக்கும் தனது பிரதியாகப் படிப்பதற்கோ, படித்ததை அனுபவமாக உணர்வதற்கோ, உணர்ந்ததை மற்றவரிடம் பகிர்வதற்கோ இதில் துளியும் இடமில்லை.

சு.ரா. கோட்டயத்தில் சிறுவன் பாலுவாகக் கழித்த ஐந்து வருடங்களைப் பற்றிய விரிவான, விலாவாரியான தினசரி டயரிக் குறிப்புதான் இந்த நாவல். கோட்டயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது வீடு, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்ட வாழைத்தோட்டம், வீட்டுக்குள் இருக்கும் தேக்குமரத்தினாலான ஓவல் வடிவமேசை, சக்கை உப்பேரி தின்ன ஆசைப்படும் சித்தப்பா, ஜே.ஜேயைப் போல வாழ்வின் நிலையாமை குறித்து குடும்ப அளவில் பதட்டமடையும் சு.ரா.வின் அப்பா, சு.ரா.வைவிட சாமர்த்தியமாக வளரும் அக்கா ரமணி… இப்படி உயர்திணைகளும் அஃறிணைகளும் மாறி மாறிக் கலந்து கசிந்துருகி அற்ப உணர்வின் பிரவாகமாய் சுமார் 640 பக்கங்கள் எவரும் தடுக்கமுடியாதபடி பெருக்கெடுதது ஓடுகிறது. இதை ஒரு நாவலென்று சு.ரா. ஏன் எழுதினார், இதை எதற்காக அச்சிட்டு வெளியிட்டார்கள், இதை பல அப்பாவிகள் பணம் கொடுத்து ஏன் வாங்குகிறார்கள்… ஒன்றும் புரியவில்லை. இந்த விசயத்தில் மட்டும்தான் வாழ்வின் புரியாமை பற்றிய பிரச்சினை நம்மை அச்சுறுத்துகிறது.

ஒரு பார்ப்பன மேட்டுக்குடியின் ஐந்தாண்டு வாழ்க்கையை, உண்டு களித்து அசைபோட்டுச் செத்த கதைகளை சு.ரா.வின் புகழ் பெற்ற அந்த பத்துக்கருத்துக்களின் நமத்துப்போன வகைபேதங்களோடு நுணுக்கி, மினுக்கி எழுதப்பட்ட இந்தக் “காப்பியம்’ சு.ரா. யார் என்பதை நிச்சயம் அடையாளம் காட்டும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் இந்த நாவலை கலையமைதி கொண்ட நாவல் என்றும் சு.ரா.வின் படைப்பிலேயே இதுதான் சிறந்தது என்றும் பாராட்டுகிறார்கள். செஞ்சோற்றுக்கடனா, பாம்பின்கால் பாம்பறியுமா, இனம் இனத்தோடு சேருமா  இதற்கு எந்தப் பழமொழி பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவில்லை. நான்கு சுவர்கள் மற்றும் ஒரு பெரிய இரும்புக்கதவால் திறக்க முடியாதபடி மூடப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை, உரையாடலை, மனவோட்டத்தை, நெகிழ்ச்சியை, தத்தளிப்பை யார் ரசிக்க முடியும்? யாரெல்லாம் தெருவையும், ஊரையும் மறந்து, மறுத்து குடும்பத்திற்குள் மட்டும் வளைய வருகிறார்களோ, அவர்கள் மட்டும்தான் கதைப்பதற்கு வேறு விசயங்கள் இன்றி, குடும்பத்தின் அற்ப விசயங்களை மெய்மறந்து பேசவோ, நினைக்கவோ, ரசிக்கவோ முடியும்.

“இந்த நாவலில் நகரும் காலமில்லை; வரலாற்றுப் பின்புலம் இல்லை” என்பது சீடர் ஜெயமோகனின் “விமர்சனம்.’ சக்கை உப்பேரிக்கும் அடைப்பிரதமனுக்கும் இடையில் காலம் நகர்ந்தாலென்ன, நகராவிட்டாலென்ன? சு.ரா.வின் சித்தப்பா பலாப்பழம் பறித்த கதை வைக்கம் போராட்டம் நடந்த காலத்தில் தான் நடக்கிறது. இந்த வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதன் மூலம் சு.ரா. வீட்டுப் பலாப்பழம் பற்றியோ, சு.ரா. பற்றியோ என்ன புதிய ‘தரிசனம்’ கிடைத்துவிடும்? சமூக உணர்வற்ற அற்பவாதக் குட்டைதான் உலகம் என்றான பிறகு அதில் கிழக்கென்ன, மேற்கென்ன? இப்படிப்பட்ட நாவல் எழுதியவருக்கு என்ன தரத்தில் அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளும் எடுத்தியம்புகின்றன.

நிகழ்கால சு.ரா. இளமைப்பருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு இந்த நாவலும், இந்த நாவலில் வரும் சிறுவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு நிகழ்கால சு.ராவும் உதவி செய்வதால் இந்த நாவல் தன் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆதலால் இந்த நாவல் குறித்த நமது விமரிசனத்தை இதற்கு மேல் இழுப்பது என்பது அந்த வரலாற்றுக்குச் செய்யப்படும் அநீதி என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

பார்ப்பன சனாதனவாதி, சுயமரியாதை சிங்கமாக வலம் வரும் கொடுமை!

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

சு.ரா.வின் படைப்பிலக்கியங்கள் இத்துடன் முடிவதால் படைப்புக்கு வெளியே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பார்க்கலாம். தமிழகப் படைப்பாளிகளில் பலர் சாதி, மத, மூடநம்பிக்கையுடன் வாழ்ந்தாலும் அவர்கள் விமரிசிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடையாளங்களைத் தவிர்த்தும், துறந்தும் வாழ்ந்த சு.ரா.வை மட்டும் சனாதனி, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர் என்று பல விமரிசகர்கள் சு.ரா.வின் வாழ்நாள் முழுவதும் அவதூறு செய்து வந்ததாக அவரது அபிமானிகள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் கூறுகின்றனர். இதன்படி பார்த்தால் சு.ரா. சாதி மத மூடநம்பிக்கைகளை முற்றிலும் துறந்த ஒரு புரட்சிக்காரர் என்றாகிறது. இது உண்மைதானா?

சு.ரா. சாதி மறுப்புத் திருமணம் செய்தாரா? இல்லை, சரி தொலையட்டும், திருமணமாவது சீர்திருத்த முறையில் சடங்கின்றி நடந்ததா? இல்லை, அதை விடுங்கள். சு.ரா. தனது குழந்தைகளுக்காவது சாதி மறுப்பு சுய மரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தாரா? அதுவும் இல்லை என்பதோடு தினமலர் என்ற பார்ப்பன பிரச்சார பீரங்கிக் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டார். சு.ரா.வின் இல்லமான சுந்தரவிலாசத்தில் பூஜை அறை உண்டா? நிச்சயமாக உண்டு, சுந்தரவிலாசத்தில் தீபாவளி, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவார்களா? அதெப்படிக் கொண்டாடாமல் இருக்க முடியும்? சு.ரா.வின் சொந்த ஊரில் இருக்கும் “தழுவிய மாகாதேவர் கோவிலுக்கு’ அவர் நன்கொடை ஏதும் கொடுப்பாரா? இவரே மறந்து போனாலும் அந்த ஊர் பார்ப்பனர்கள் விடாமல் ஆண்டுதோறும் வாங்கிக் கொண்டு போவார்கள். இருக்கட்டும், சு.ரா. பேசுகின்ற தமிழ் எந்த வகை? அதுவும் சுத்தமான அக்கிரகாரத்துத் தமிழ்தான்.

இப்படி சாதிமத மூடநம்பிக்கைகளின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து கொண்டே தன்னைப் பொருத்தவரை சு.ரா. அவற்றைத் துறந்துவிட்டு வாழ்ந்தார் என்றால் என்ன பொருள்? தாமரை இலைத் தண்ணீர் போல இந்த அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டே மனதளவில் மட்டும் துண்டித்துக் கொண்டு வாழ்ந்தார் என்பதா? அவரை அவரது பௌதீக இருப்பில் வைத்து அல்ல, சிந்தனையின் இருப்பில் வைத்து மட்டும்தான் பார்க்க வேண்டுமா? “”வரதட்சிணை வாங்கக் கூடாது என்பது என் கொள்கை, ஆனால் என் பெற்றோர் வாங்கினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று மாப்பிள்ளை இளைஞர்கள் கூறுவார்களே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான எமது புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் சாதிதீண்டாமை மறுப்புத் திருமணங்களை தாலி முதலான சடங்குகள் எதுவுமின்றி எளிமையாகச் செய்து கொள்கிறார்கள். திருமணத்தில் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் முதலியவற்றைத் துறந்தும் குடும்பப் பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படி தீர்த்துக் கொள்வதாகவும், தமது குடும்ப வாழ்வை பொது நலனுக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாலைகளை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி மாதம் ஒரு திருமணமாவது நடக்கத்தான் செய்கிறது. அதேசமயம் இந்தத் திருமணங்கள் ஒரு புனைகதை எழுதுவது போலச் சுலபமாக நடைபெறுவதில்லை. பலசுற்றுப் போராட்டங்களைத் தாண்டி நடக்கும் இந்தத் திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர் பலர் வருவதில்லை. திருமணம் முடிந்தாலும் உற்றார் உறவினர், மேல்சாதி ஆதிக்கம் முதலானவற்றை எதிர்கொண்டு போராடியபடிதான் வாழவேண்டியிருக்கிறது.

மேலும் எமது தோழர்கள் பார்ப்பனப் பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் முதலான உலகமக்கள் இதயத்தில் நிறுத்த வேண்டிய நாட்களைத்தான் திருவிழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். இப்படி சொல்லிலும் செயலிலும் அரசியலிலும் வாழ்விலும் சாதி மத அடையாளங்களையும் மூடநம்பிக்கைகளையும் துறந்து வாழும் எமது தோழர்கள் உன்னதமான உலக உள்ளூர் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை. எங்களுக்கும் இத்தகைய போராட்ட வாழ்வை இலக்கியமாக்குவதற்கான நேரம் இருப்பதில்லை. கவிதையும், கவித்துவமும், இலக்கியத்தின் உன்னதமும் எங்கள் தோழர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது. அவற்றை வெறும் தாள்களில் மட்டும் பார்க்கும் இலக்கியவாதிகளின் வாழ்வோ சராசரிக்கும் கீழே சாதாரணமாகச் சோம்பிக் கிடக்கிறது. அதையே முற்போக்கு என்றும் அசாதாரணம் என்றும் காட்டிக் கொள்வதுதான் அற்பத்தனம் என்கிறோம்.

ஜெயமோகனது ஆன்மீகத்தின் படி எமது தோழர்களின் புதிய பண்பாட்டிற்கான இந்த போராட்டத்தின் காரணங்கள் எளிமையானவை. அபத்தமானவை. அதே ஆன்மீகம், மேட்டுக்குடிப் பார்ப்பனராக வாழ்ந்து மரித்த சு.ராவை மட்டும் பார்ப்பன வாழ்க்கையைத் துறந்தவராக செயற்கையாக, உக்கிரப்படுத்திச் சித்தரிக்கிறது. சாரமாகக் கூறுவதென்றால், பிழைப்புவாதத்தையும், காரியவாதத்தையும் உன்னதப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் ஜெயமோகனது ஆன்மீகம்.

நம்மைப் பொருத்தவரை சு.ரா. மட்டுமல்ல அநேகச் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் சாதிமத வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்தான். அதனால்தான் சாதி மத அடையாளங்களைத் துறப்பது குறித்து “உண்மையில் அது ஓர் எழுத்தாளன் என்ற அளவில் உகந்ததுதானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது” என்று முன்னெச்சரிக்கையாகத் தப்பித்துக் கொள்கிறார் ஜெயமோகன்.

அடித்தட்டுச் சாதிப்பெண் ஒருத்தி சுதர்சன் ஜவுளிக்கடையில் வளைகாப்பிற்காக 7000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவை எடுத்ததை பெரும் தலித் எழுச்சிபோல சு.ரா. கொண்டாடியதை ஜெயமோகன் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சு.ரா. கல்லாப்பெட்டியிலிருந்துதான் உலகத்தை பார்த்தார் அளவெடுத்தார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த விசயம் மகிழ்வுக்குரியதல்ல; வருத்தத்திற்குரியது. வளைகாப்பை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுவதெல்லாம் உழைக்கும் சாதிகளிடம் பொதுவில் இல்லை. இப்போது அப்படிக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது பார்ப்பனமயமாக்கம் மற்றும் நுகர்வியத்தின் மோசமான வெளிப்பாடு.

அரசு வேலையில் இருக்கும் வசதியான தலித் நடுத்தரவர்க்கத்தினர் பிறந்தநாள், சஷ்டியப்த பூர்த்தி, நவமி, அஷ்டமி முதலானவற்றைக் கொண்டாடுகின்றார்கள் என்பது சு.ரா.வுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அதன் பொருள் என்ன? யார் பார்ப்பனியத்தைச் சிக்கென இதயத்தில் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இப்படிப் பார்ப்பனமயமாக்கத்தைப் பாராட்ட முடியும். தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் இப்படித்தான் மாற வேண்டும் என்று இந்து முன்னணியும் கூறுகிறது. எனில் சு.ரா.வுக்கும் இராம கோபாலனுக்கும் என்ன வேறுபாடு?

சமூக நிகழ்வுகளைப் பேசினால் அவை மிகை! சொந்த சோகங்களை எழுதினால் அவை இலக்கியம்!!

வாச்சாத்தி சம்பவத்திற்குப் பிறகு சு.ரா.வின் மனதைப் பாதித்த தமிழக அளவிலான சம்பவம் கொடியங்குளம் கலவரமாம். “”அதை பேச்சிலும் எழுத்திலும் பதிவு செய்து நானும் இது பற்றிக் கருத்துக் கூறியிருக்கிறேன்” என்று மிகையாகக் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லையாம். அப்படியெனில், சு.ரா.வின் மனதை அது பாதித்தது என்பதன் நிரூபணம் என்ன? அவரது அன்றாடப் பணிகளான ஜவுளி வியாபாரம், படைப்பு எழுதுவது, மாலை உலா, இரவில் இலக்கிய அரட்டை, எல்லாம் செவ்வனே நடக்கும், ஆனால் மனது மட்டும் தென்மாவட்டச் சாதிக் கலவரங்களுக்காக வருத்தப்படுமாம். மொத்தத்தில் தினசரி செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்து விட்டு பாவம் என்று “உச்’ கொட்டிவிட்டுத் தனது வேலைகளைப் பார்க்கப் போகும் நடுத்தரவர்க்கத்தின் உதட்டளவிலான மனிதாபிமானம்தான் இது.

சு.ரா. தனது மூத்த மகள் சௌந்தரா நோயுற்று இறந்ததைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் தன் மகளுக்கு வந்த அபூர்வமான நோய் குறித்தும், அதற்கான மருத்துவத்தின் போதாமைகள் குறித்தும், மகளைப் பிழைக்க வைக்க பிரார்த்தனை மூலம் முயற்சி செய்யும் தனது நண்பர் குறித்தும், அந்தப் பிரார்த்தனையில் அறியணாவாதியான தான் பங்குபெற இயலாததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி குறித்தும் விளக்கி எழுதியிருக்கிறார். துள்ளலும், உற்சாகமுமாய் இருந்த சு.ரா. தனது மகள் இறந்த பிறகு அடிக்கடி தனிமையிலும், துயரத்திலும் மூழ்கி விடுவதாக ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்.

இங்கும் ஜெயமோகனது ஆன்மீகம் சமூகத்துயரத்தை அற்பமானதாகவும், சொந்த வாழ்க்கைத் துயரத்தை மகத்தானதாகவும் எப்படிச் சித்தரிக்கிறது பாருங்கள்! அவ்வகையில் இந்த ஆன்மீகத்தை அற்பவாதத்தின் தத்துவம் என்றும் அழைக்கலாம். கொடியங்குளம் என்ற சமூகத் துயரத்தை பேசினாலும் எழுதினாலும் “மிகை’ என்று ஒதுக்கி விட்ட சு.ரா.வின் இதயம், தனது சொந்த வாழ்க்கைத் துயரத்தை மட்டும் இந்திய அளவிலான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்றால் அதன் இதயத்துடிப்பின் இலக்கணம் என்ன? ஒரு குடிமகனுக்கு இருக்கவேண்டிய கடமையுணர்வும், பொறுப்புணர்வும் கூட சு.ரா. என்ற இலக்கியவாதியிடம் இல்லாமல் போனதன் மர்மம் என்ன? இலக்கிய உன்னதங்களுடைய சமூகப் பொறுப்புணர்ச்சியின் இலக்கணம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்!

சு.ரா புலவர் மட்டுமல்ல புரவலரும் கூட!

பிறகு ஏன் சு.ரா.வை சாதி மதங்களைத் துறந்தவரென்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள்? ஒரே விடை சு.ரா. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இலக்கியவாதிகளை காரில் வரவேற்று, மேசையில் உணவிட்டு, வீட்டில் தங்கவைத்து, உபசரித்து விருந்தோம்பியிருக்கிறார் என்பதே. சு.ரா.வின் சாப்பாட்டு மேசையில் சங்கோசத்துடன் சாப்பிட்டதையும், சு.ரா. அதற்கு நேரெதிராக இயல்பாக உபசரித்துப் பழகியதையெல்லாம் அறிஞர் ராஜ் கௌதமன் போன்றோர் தமது அஞ்சலிக் குறிப்பில் பதிவு செய்திருக்கின்றனர்.

தமிழக வரலாற்றில் புலவர்களுக்கும் புரவலர்களுக்குமான உறவு வாசகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. புரவலர்களைத் தேடி வரும் புலவர்கள், புரவலர்களின் இல்லாத நல்லதுகளை இட்டுக்கட்டிப் பாடிப் புகழ்ந்து பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். பரிசுகள் தர மறுக்கும் புரவலர்களை புலவர்கள் மறைமுகமாக வசைபாடுவார்கள். மற்ற புலவர்களை “நீயெல்லாம் புலவனா” என்று எகத்தாளமாக கேலி செய்வார்கள். சிறு பத்திரிகைகளின் உலகமும் குழுச் சண்டைகளும் இந்த மரபின் தொடர்ச்சிதான்.

பாடிப் பரிசு பெறுவதும், தூற்றிக் கேலி செய்வதுமான தமிழ் மரபை வரித்திருக்கும் சிறு பத்திரிக்கை உலகில் சு.ரா. யார்? அவர் புலவராக மட்டுமல்ல, புரவலராகவும் இருந்திருக்கிறார் என்பதே சரியான விடை. எழுதியதால் அவர் புலவர். தன் எழுத்தை நிலைநாட்டுவதற்காகப் பலரை வரவேற்று உபசரித்திருப்பதால் அவர் புரவலர். எழுத்தின் உணர்ச்சியை அவருக்களித்த அதே சுந்தரவிலாசம்தான், அவரது எழுத்தை மற்றவர்கள் சிலாகிப்பதற்கான விருந்தோம்பலையும் ஒரு சத்திரம் போலச் செய்திருக்கிறது. இதை சலிக்காமல் செய்து வந்ததற்கு சு.ரா.வின் மனைவி கமலா மாமி போக, கார், பங்களா, சமையல்காரர் முதலான சகல வசதிகளும் அவருக்கு கைகூடி இருந்தன. ஒரு நிறுவனம் போல தன் எழுத்தை மற்றவர்கள் வியந்தோதுவதற்கு இத்தகைய மக்கள் தொடர்புத்துறை வேலைகள் சு.ரா.வுக்குத் தேவைப்பட்டாலும், அதை சலிக்காமல் செய்வதற்கான உபசரிப்பு மனநிலையை அவர் கொண்டிருந்தார். இந்த மனநிலையை அவர் போலி கம்யூனிசக் கட்சியுடனான ஆரம்ப காலத் தொடர்பில் பெற்றிருக்கலாம். விருந்தோம்பும் “அதிதி தேவோ பவ’ உணர்வில் அவர் மற்றவர்களை விட முன்னணியில் இருந்திருக்கலாம்.

சு.ராவின் ஆர்.எஸ்.எஸ் கனக்ஷனை மறைத்த ஜெயமோகன் எனும் ஸ்வயம்சேவக்!

ஜெயமோகன்
ஜெயமோகன் – படம் 10hot.wordpress.com

சு.ரா. தனது வீட்டிற்கு இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், போலி கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சண்முகநாதன் போன்றோரையும் வரவேற்று உபசரித்திருக்கிறார். மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் இந்து மதவெறியர்கள் குமரி மாவட்டத்தில் வேர்விட்ட காலத்தில்தான் சண்முகநாதன் அங்கே அடிக்கடி விஜயம் செய்வார். வரும்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போது சுந்தரவிலாசத்திற்கும் செல்வார். சு.ரா.வின் மகன் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பில் இருந்ததாகக் கூறுகிறார்கள். காலச்சுவடின் அரவிந்தனும் முன்னாளில் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர்தான்.

குஜராத் கலவரத்தின்போது, காலச்சுவடு பத்திரிக்கை, இந்துமதவெறி என்று குறிப்பிடாமலே அதைக் கண்டித்தும், காசு வசூலித்தும் தனது மதச்சார்பற்ற கடமையை ஆற்றியது. இன்னும் ஜெயேந்திரன் பிரச்சினையில் கூட சங்கரமடம் எப்படி நல்ல மடமாக மாறவேண்டும் என்றுதான் காலச்சுவடு அருள் வாக்கு அளித்தது. மேலும், பார்ப்பனியத்தின் அடியாளான ‘தினமலர்’தானே காலச்சுவடின் நிரந்தர விளம்பரப் புரவலர்!

சிறுவனாக இருக்கும்போது கடற்கரைக்குச் சென்ற சம்பவம், அப்போது என்ன சட்டை போட்டிருந்தார், பார்த்த சிப்பி ஓட்டின் டிசைன் முதலியனவற்றையெல்லாம் சு.ரா. நினைவு கூர்ந்தார் என்பதைக் கூரிய அவதானிப்புடன் பதிவு செய்திருக்கும் ஜெயமோகன் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். கனைக்சனை மட்டும் விட்டுவிட்டார். இது செலக்டிவ் அம்னீஷியாவா, இல்லை தெரிந்தே அழிக்கப்பட்ட வரலாறா? முக்கியமாக, இந்த வரலாற்றில் சு.ரா.வைவிட ஜெயமோகனுக்குத்தான் முதன்மைப்பங்கு உள்ளது. ஜெயமோகனது இலக்கிய வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ்.உடனும், சு.ரா.வுடனும் சேர்ந்தேதான் ஆரம்பித்தது. சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் தனது மனைவி, மகன், வீட்டுநாய் ஹீரோ போன்றவர்களையெல்லாம் இடம் பெறச் செய்த ஜெயமோகன் தனது ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை மட்டும் திட்டமிட்டு மறைத்திருக்கிறார். அப்புறம் சு.ரா.வின் வழிகாட்டலில் அவர் நவீன இலக்கியம் கற்று எழுத ஆரம்பித்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்திலும் சில ஆண்டுகள் எழுதியிருக்கிறார். அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்தும் அதன் பத்திரிக்கையில் எழுதுவது குறித்தும் சு.ரா. என்ன கருத்து தெரிவித்தார் என்பதையெல்லாம் அவர் தந்திரமாக சுய தணிக்கை செய்து விட்டார். சு.ரா. இல்லத்திற்கு நல்லகண்ணு வந்தபோது சு.ரா. ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்தாராம். அதேபோல சண்முகநாதன் வந்தபோது அழைத்தாரா, சண்முகநாதனுடன் பேசியதை ஜெயமோகனிடம் சு.ரா. பகிர்ந்து கொண்டாரா என்பதெல்லாம் “நினைவின் நதி’யில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.

ஜெயமோகனின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும் கடைந்தெடுத்த கம்யூனிச வெறுப்பும், சநாதனச் சார்பும் அவரது சங்கபரிவார் தொடர்பில்தான் உருவாகியிருக்க வேண்டும். காசர்கோடில் போலி கம்யூனிச தொழிற்சங்கத்தின் கம்யூனில் தங்கியதை வைத்து, (நாலு பேர் சேர்ந்து ரூம் எடுத்துத் தங்குவதெல்லாம் கம்யூன் என்றால் திருவல்லிக்கேணி முருகேசநாயக்கர் மான்சனில் தங்கியவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளே) கம்யூனிசம், கட்சி நடைமுறை, தோழர்களின் உளப்பாங்கு ஆகியவற்றைக் கரைத்துக் குடித்ததாக மனப்பாங்கு கொண்டு அதையே கற்பனையில் ஊதிப் பெருக்கி பின்தொடரும் நிழலின் குரல் என்று ஒரு கம்யூனிச வெறுப்பு நாவலையே எழுதிவிட்டார். இதற்கு அதிகமாகவோ நிகராகவோ ஆர்.எஸ்.எஸ். அனுபவமும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். மேலும் விஜயபாரதத்திற்கு அவர் எழுதியதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சங்கபரிவாரின் தமிழகத் தலைமையுடனும் நெருக்கம் இருந்திருக்க வேண்டும்.

இந்த அனுபவத்தை வைத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையை இணைத்து, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு நாவல் மேலோட்டமாகவேனும் எழுதியிருக்கலாம் அல்லவா? பல ஆண்டுகளுக்கு முந்தைய புகாரின் கதையையெல்லாம் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ரசியாவிலிருந்து பொய்யுடனும், புனைவுடனும் இழுத்து வந்து எழுதியவருக்கு, அருகிலிருக்கும் குஜராத்தில் இந்தியாவே வெட்கித் தலைகுனியும் வண்ணம் நடந்த ஒரு படுகொலையை அறிந்து கொண்டு எழுத மனம் வரவில்லையே, ஏன்? ஒருவேளை விஷ்ணுபுரம் நாவலை வெளியிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் உதவிய ஸ்வயம் சேவகர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற நன்றியுணர்வு காரணமாக இருக்கலாம். அல்லது ஆர்.எஸ்.எஸ்.இன் தமிழ்நாட்டுப் புரவலர்களில் ஒருவராக இருக்கும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தரமான ரசிகர்களை இழக்க நேரிடும் என்ற பயம் கூடக் காரணமாக இருக்கலாம். அத்துடன் உலக முதலாளித்துவச் சந்தையில் தண்டியான கம்யூனிச எதிர்ப்பு நாவல்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்ற காரியவாதக் காரணமும் சேர்ந்திருக்கலாம்.

இன்றைக்கு இந்து மதவெறியர்கள் மிகவும் அம்பலப்பட்டுள்ள நிலையில் ஜெயமோகன் தனது இமேஜை தோற்றத்தில் மாற்றியிருக்கலாம். “இந்திய அரசியலில் கம்யூனிசக் கட்சிகள்தான் சற்றே நம்பிக்கை தரும் வகையில் செயல்படுகின்றன” என்ற சு.ரா.வின் வாக்குமூலத்தை வழிமொழியலாம்; அல்லது “நான் சி.பி.எம்.முக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன்” என்றும் ஜெயமோகன் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இலக்கியமல்லவே. ஒரு இலக்கியவாதியை அவரது படைப்பை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பதுதானே இலக்கியவாதிகளின் கொள்கை. எங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு இலக்கியவாதி எதைப்படைத்தான் என்பதை வைத்து மட்டுமல்ல, எதைப் படைக்கவில்லை என்பதை வைத்தும் மதிப்பிட முடியும் என்கிறோம்.

தனது இளமைப்பருவத்தையும், ஆதர்சநாயகன் மற்றும் போலி இலக்கியவாதி ஜே.ஜேவையும் தேடி கேரளாவுக்குப் போன சு.ரா தான் வாழ்ந்த குமரிமாவட்டத்தின் இந்து மதவெறியர்களை எதிர்த்து தனது படைப்பில் ஒரு சொல்லைக்கூடச் சேர்க்கவில்லை எனும் போது சீடப்பிள்ளை மட்டும் என்ன செய்யமுடியும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் சு.ராவும் சரி, அவரது தலைமைச் சீடரும் சரி போலி மார்க்சிய ஆதரவு என்ற பெயரில் கம்யூனிச வெறுப்பும், இன்னொருபுறம் தீவிரமான பார்ப்பனிய ஆதரவும் கொண்ட மேட்டிமைத்தனமான இலக்கியவாதிகள் என்றுதான் அறுதியிட முடியும். எழுதியவற்றுக்கும், எழுதாதவற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியிலிருந்தும் ஒரு படைப்பாளி யாரென்பதை நாம் கண்டுபிடிக்க முடியும்.

துக்ளக் சோவின் இலக்கிய பிரதிநிதி சு.ரா!

சோ ராமசாமி சுந்தர ராமசாமி
சோ ராமசாமி  – சுந்தர ராமசாமி

மதுரை இறையியல் கல்லூரியில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சு.ரா. பின்வருமாறு சொன்னாராம். “காலம்பற கதவைத் திறக்கிறேன், கொழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓ…ன்னு கத்தி பாடறதுகள். “எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயே’ன்னு… கண்ணீர் வந்துடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு, எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உட்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்தி மேல மட்டுமில்ல, காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு… அதனால் யாருக்கு என்ன இலாபம்? அன்னியப்பட்டுப் போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை…”

இதை பிளான் போட்டுச் செய்தது வேறு யாருமல்ல, நாங்கள்தான். இந்தப் பாடல் நாங்கள் வெளியிட்டிருக்கும் அசுரகானம்என்ற பாடல் ஒலிப்பேழையில் உள்ள பாடலின் சரியான வரி… “”ஆயிரங்காலம் அடிமை என்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே..” என்று வரும். இந்தப் பாடல் ஒலிப்பேழை பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய மாதங்களில் இந்து மதவெறியை எதிர்த்து வெளியிடப்பட்டது. இந்தப் பேழை உழைக்கும் மக்களையெல்லாம் இந்துக்கள் என்று சித்தாந்த ரீதியாக அணிதிரட்டிய ஆர்.எஸ்.எஸ்இன் வருணதர்ம மோசடியைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது. அக்கிரகாரம், சேரி என்று பிரித்து வைத்து இழிவாக நடத்தியது, அப்துல்காதரா, அனந்தராமய்யரா என்று உண்மையை எள்ளலுடன் கேள்வி கேட்டது. நந்தன், ஏகலைவன், சம்பூகன் போன்ற பார்ப்பனியத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று மாந்தர்களின் கதைகளை உழைக்கும் மக்களுக்கு நினைவுபடுத்தியது. முசுலீம்களைத் தோற்றத்திலும், சாரத்திலும் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் சதியை எடுத்துக் காட்டியது.

சு.ரா. குறிப்பிட்டதாக ஜெயமோகன் பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல் பல நூற்றாண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமரென்று இழிவுபடுத்தி விட்டு இப்போது அரிஜன் என்று அழைக்கும் காந்தி, காங்கிரஸ், பா.ஜ.க.வின் பார்ப்பனமயமாக்கத்தை நூறாண்டுக் கோபத்துடன் கேள்வி கேட்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தப் பாடல். எல்லா தலித் இயக்கங்களும் இந்தப் பாடலையே தமது தேசிய கீதம் போல அங்கீகரித்து மேடைகள் தோறும் பாடினர். தங்கள் வரலாற்றுத் துயரத்தை போர்க்குணத்துடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடலை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றினர். இந்தப் பாடல் ஒலிப்பேழைகளின் விற்பனை பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கும்.

இதன் தொடர்ச்சியாக திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ்மக்கள் இசைவிழா போன்ற நிகழ்வுகள் இந்து மதவெறியர்களை உழைக்கும் மக்களிடமிருந்து கருத்து ரீதியாகத் தனிமைப்படுத்தின. பார்ப்பன இந்து மதவெறியர்களை எதிர்த்த எமது போராட்ட வரலாறு அவர்களை எப்படி வெல்ல முடியும் என்ற பாடத்தை, புரிதலை இந்திய அரசியல் அரங்கில் முதன்முதலாகச் செய்து காண்பித்தது. பார்ப்பனியத்தை நெஞ்சில் ஏற்றிப் போற்றி வைத்திருக்கும் சு.ரா. ஜெயமோகன் போன்றோருக்குத்தான் இந்தப் பாடல் கடுங்கசப்பை ஏற்படுத்த முடியும். இந்த உண்மையை ஆய்வுகள் ஏதுமின்றியே எமது பாடல் ஒன்று போகிற போக்கில் நிரூபித்திருப்பது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சு.ரா.வின் அரசியல் சமூகப் பார்வை என்பது துக்ளக் சோ ராமஸ்வாமியிடம் கற்றுக் கொண்டதுதான். சோவை அவர் முக்கியமான அரசியல் விமர்சகராகக் கருதியதைப் பதிவு செய்திருக்கிறார். காந்தி நல்லவர், காமராஜ் ஆட்சி பொற்காலம், தமிழகத்தை திராவிட இயக்கம்தான் சீரழித்தது… போன்ற சோவின் கருத்துக்களை சு.ராவும் பல இடங்களில் பிரயோகித்திருக்கிறார். எனினும், சோவை ஒரு பாசிஸ்ட் என்று அழைப்பது போல சு.ராவை நாம் அழைக்க முடியாது. ஏனென்றால் சு.ரா.வின் அரசியல் சிந்தனையில் கோமாளித்தனமும் பாசிசமும் பிரியுமிடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. “”திராவிட இயக்கத்துக்கும் இலக்கித்துக்கும் சம்பந்தமே கிடையாது, கம்யூனிஸ்டுகள் இலக்கிய விரோதிகள்” என்பவை சு.ராவின் புகழ் பெற்ற பத்து கருத்துகளில் முக்கியமானவை. அரசியல்வாதிகள் இலக்கியத்தில் நுழைந்தால் பூசையறையில் நுழைந்த பன்றிகளாக அவர்களைக் கருதி உறுமுவது, சு.ரா. குருகுலத்தின் மரபு.

ஆனால் அரசியல் சமூக விவகாரங்களில் தெக்கு வடக்கு தெரியாத இந்தக் கோமாளிகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிப்பார்கள். ‘பெரியார் எதிர்மறை அரசியல், காந்தியிசம் நேர்மறை அரசியல்’ என்று உளறுவார்கள். இப்படி உலக விவகாரங்கள் அனைத்திற்கும் தம்மைத்தாமே அத்தாரிட்டிகளாக நியமித்துக் கொள்வது பற்றி இவர்கள் எள்ளளவும் கூச்சப்பட்டதுமில்லை.

சு.ரா.விடம் நட்பு கொண்டிருந்த அனைவரும் அவரது பெரியமனிதத் தோரணை காரணமாக, தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி மனச்சமாதானம் அடைந்திருக்கின்றனர். சொந்தப் பிரச்சினைகள் பற்றி யாரிடமாவது வாய் திறந்தால், அதையும் அச்சிலேற்றி அசிங்கப்படுத்தி விடுவார்களோ என இலக்கியவாதிகள் ஒருவரையொருவர் ஐயுறும் ஆவிகள் நிறைந்த சிற்றிலக்கியச் சூழலில், சு.ரா. மட்டும் பாவ மன்னிப்புக் கூண்டில் காதை வைத்திருக்கும் பாதிரியாரைப் போல பலருக்கும் ஆறுதலளித்து வந்தார். அவருடைய இலக்கிய அந்தஸ்தைத் தீர்மானித்த காரணிகளில் புரவலர் பாத்திரத்துக்கு இணையானது இந்தப் பாத்திரம்.

கவிஞர் சல்மா, சு.ராவுக்கான தனது அஞ்சலிக் குறிப்பில், “”ஒருமுறை என் கணவர் என்னை அடித்து விட்டதாக நான் எழுதிய கடிதத்தைக் கண்டு தொலைபேசியில் அழைத்து, “”ஏம்மா, உங்கள அடிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது” என்று கேட்டவரின் குரலில் உணர்ந்த துயரம் எனக்கு வாழ்நாள் முழுக்கத் தேவையான குற்றவுணர்வை இன்றும் தந்து கொண்டிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார். இதையே சல்மா ஒரு இலக்கிய அறிவற்ற பெரியவர் யாரிடமாவது கூறியிருந்தால், அவர் சல்மாவின் புருசனைக் கூப்பிட்டு எச்சரித்திருப்பார். விவகாரம் பஞ்சாயத்து செய்யப்பட்டிருக்கும். அல்லது போலீசுக்காவது போயிருக்கும். சு.ரா.விடம் சொன்னதில் பயனென்ன? வாங்கிய அடி போதாதென்று போனசாக குற்றவுணர்வு! உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம் விடை சொல்லும் சு.ரா.விடம் சல்மாவின் பிரச்சினைக்கு ஏன் தீர்வில்லை? ஏனென்றால் சு.ரா.வின் அந்த புகழ் பெற்ற பத்து கருத்துக்களில் இந்த சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வில்லை.

ஒரு மென்மையுள்ளம் கொண்ட முதியவரை, இப்படி ஏளனம் செய்வதா என அவரது அபிமானிகள் வருந்தலாம். இந்த குரு சிஷ்ய கோழைகள், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேலி செய்து சிரித்ததை ஜெயமோகன் தனது நூலில் குறிப்பிடுகிறார். அச்சுத மேனனும் இ.எம்.எஸ்ஸும் கையில் துப்பாக்கியுடன் தடுப்பரணின் பின்னே அமர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனை செய்து இவர்கள் கண்ணீர் வருமளவு சிரிப்பார்களாம். கொத்தி எடுக்கவேண்டிய அளவுக்கு உடல் முழுவதும் பார்ப்பனக் கொழுப்பு நிறைந்த இந்த அற்பர்கள் விசயத்தில் இரக்கம் காட்டுவது அபாயகரமானது.

சு.ராவுக்கான அஞ்சலி முகாந்திரத்தில் எழும் ஜெயமோகனது சுயசொறிதல்கள்!

ஜெயமோகன்
ஜெயமோகன்

கட்டுரையின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டபடியால் ஜெயமோகனது “நினைவின் நதி’ என்று பெயரிடப்பட்ட அற்பவாதக் குட்டையை கடைசியாக ஒருமுறை மூக்கைப் பொத்திக் கொண்டு பார்த்து விடலாம். இந்த நூலில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று இரண்டு பார்வைகள் உள்ளன. கிட்டப்பார்வையில் சு.ராவின் அற்பமான வாழ்க்கை ரசனை விசயங்களும், தூரப்பார்வையில் சு.ராவைவிட ஜெயமோகன் எப்படி ஒரு பெரிய எழுத்தாளர் ஆனார் என்பதும் பதிவாகியிருக்கின்றன. இடையில் குட்டையின் நாற்றத்தை அடக்குவதற்கு சு.ராவின் சாதாரண மனிதாபிமான நடவடிக்கைகள், பதிவுகள் அசாதாரணமாக்கப்பட்டு ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.

“சிற்றிலக்கியவாதிகளின் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்” என்று பறைசாற்றுவதற்காகவே சு.ராவின் இறப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அவரது தன்னெழுத்துத் தற்காதலியத்தை இலக்கிய வாசிப்பு மனங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கென்றே இந்த நூல் வெகு அவசரமாக எழுதப்பட்டிருக்கிறது. இருவருக்கும் நடந்த உறவு, பிரிவு, போராட்டம் அனைத்தும் தங்கப்பதக்கம், கௌரவம் ரேஞ்சுக்குச் செதுக்கப்பட்டுள்ளது. சென்டிமென்டுக்கு வீழப் பழகியிருக்கும் வாசிப்பு மனம் இதை மாபெரும் பாசப் போராட்டமாய்க் கற்பிதம் செய்து கொள்ளும். உண்மையில் இருவருக்கும் நடந்த பிரச்சினை என்ன? சு.ரா.வைத் தேடி ஜெயமோகன் வந்தார். அவர் உதவியால் இவர் எழுத்தாளரானார். நாவல்கள் எழுதினார். சீடன் தன்னை விஞ்சுவதாக எண்ணியபோதெல்லாம் குரு அஞ்சினார். அவர் அஞ்சும் தருணங்களுக்காகவே காத்திருந்து இவர் குரூரமாக ரசித்தார். “தான் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்பதை குருவின் வாயிலிருந்தே வரவழைக்க ஜெயமோகன் அவரது தொண்டை வரை விரலை விட்டு நோண்டினார். ரத்தம் கக்கிய குரு சத்தம் போடாமல் அமெரிக்காவுக்குத் தப்பினார். இந்த வரலாறு எதுவும் எங்கள் சொந்தச் சரக்கு அல்ல, ஜெயமோகன் தந்த சரக்குகள்தான்.

இந்தக் குட்டை முழுவதும் எஸ்ரா பவுண்டு, கீஸ்லர், டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கி முதலான உலக இலக்கியவாதிகள், நல்லகண்ணு, இ.எம்.எஸ்., காந்தி முதலான அரசியல்வாதிகள், க.நா.சு., லா.ச.ரா போன்ற உள்ளூர் இலக்கியவாதிகள், பட்டுப்புடவை, சினிமா போஸ்டர் முதலான ஜடப் பொருட்கள் போன்ற அனைத்தையும் தமது தத்துவ வாளால் கலக்குகிறார்கள் குருவும் சீடரும். ஆனால் தத்தம் சொந்தப் படைப்புகள் பற்றிய விவாதமோ, கருத்துப் பரிமாற்றமோ வரும்போது மட்டும் ஒரு மகாமவுனம் இருவர் மீதும் கவிந்து விடுகிறது. அந்த மவுனத்தின் ஊடாகவே ஒரு எழுதப்படாத உடன்பாடு அவர்களுக்கிடையில் கையெழுத்தாகி விடுகிறது. “”என்னைப் பற்றி நீ பேசாதே, உன்னைப் பற்றி நான் பேசவில்லை. உலகத்தைப் பற்றி நாம் பேசுவோம்” என்பதே அந்த உடன்படிக்கையின் சாரம். அதுவும் வெகு நாள் நீடிக்க முடியவில்லை. நாச்சார் மட விவகாரமாக வெளியே வந்து புழுத்து நாறியது.

வாழ்க்கையில் தமது குறை நிறைகளை மனம் திறந்து பரிசீலிக்கும் சாதாரண உழைக்கும் மக்களிடம் நிலவும் நாகரிகம் கூட இல்லாத இரண்டு அற்பங்கள், தமிழிலக்கிய உலகில் முடி சூட்டிக் கொள்வதற்காக இலக்கியப் போர் புரிந்ததும், இந்த ஆபாசத்தை ஷகீலா பட ரசிகனின் கிளுகிளுப்புணர்ச்சியோடு பார்த்து ரசித்துப் பரிமாறிக் கொள்ளும் கும்பல் தன்னை “சிற்றிலக்கிய உலகம்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ள முடிவதும்தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் அவமானங்கள்.

_________________________________________________________________________________________

இளநம்பி,
நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்!
புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ள நூலின் முதல் கட்டுரை!- 2006

__________________________________________________________________________________________

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்!

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் - சுஷ்மா சுவராஜ்
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் - சுஷ்மா சுவராஜ்
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் - சுஷ்மா சுவராஜ்
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் – சுஷ்மா சுவராஜ்

இந்தியாவின் மத்திய-கிழக்கு மாநிலங்களில் நடத்தி வரும் போரான காட்டு வேட்டையின் (Operation Greenhunt) அவசியம், நோக்கம் குறித்து, சோனியா – மன்மோகன் சிங் கும்பலின் ஊதுகுழலான சிதம்பரம் சோல்லி வருவதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள். “நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பிரதேசத்தை முன்னேற்றவும் அங்கு வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கத் தடையாகவும் உள்ள மாவோயிச நக்சல்பாரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

“என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள்? யார் யாருக்கான வளர்ச்சித் திட்டங்கள்?” என்று கேட்கிறார்கள், முற்போக்குப் பொருளாதார நிபுணர்கள், நாட்டுப்பற்றுடைய அறிவியல்-சுற்றுச்சூழல் அறிஞர்கள், உண்மையான மனித உரிமைப் போராளிகள், ஜனநாயக அறிவுஜீவிகள், நியாயமான பத்திரிக்கை – வானொளி செய்தியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் நிறையவே சண்டப்பிரசண்டம் செய்யும் சிதம்பரம் இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் சோல்வதில்லை. ஆனால், அவற்றுக்கான பதில்களை, நடைமுறை எடுத்துக்காட்டு மூலம் கர்நாடகா – ஆந்திரா எல்லையில் செய்து காட்டி வருகிறார்கள், இப்போது நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டுவரும் “பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.”

யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? வெங்காய விளைச்சலில் பிரபலமான பெல்லாரி மாவட்டத்தின் தலைநகர் பெல்லாரி நகரின் போலீசு நிலையத் தலைமைக் காவலர் கெங்கா ரெட்டியின் மூன்று மகன்கள்தாம் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. அவர்கள் வளர்ந்த போலீசுக் காலனியில் கற்றுக் கொண்ட இரண்டு பாடங்கள்: அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மிக முக்கிய கருவியாகிய பணம் பாதாளம் வரை பாயும்; சட்டத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அதை ஓய்வின்றி அலைக்கழியச் செய்து விட்டு நீ உன் வேலையைப் பார்; இந்த இரண்டு பாடங்களையும் வைத்து சிட்பண்டு, ஓட்டல், வாரப்பத்திரிகை ஆகிய தொழில்களை நடத்தி, எல்லாவற்றையும் விட முக்கியமாக இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் வெறித்தனமாக இறங்கி, பணத்தைக் குவிப்பதற்காக பல சட்டவிரோத – மோசடி வேலைகளில் ஈடுபட்டு, ஒரு பத்தாண்டுக்குள் கர்நாடகா மாநில அரசியலிலும், பொருளாதாரத்திலும் அசைக்க முடியாத பெரும் புள்ளிகளாகி விட்டார்கள்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் மூத்தவர் கருணாகர ரெட்டி, கர்நாடகா மாநில வருவாத் துறை அமைச்சர். அடுத்தவர் ஜனார்த்தன ரெட்டி – மூவரில் வில்லத்தனமான நாயகன், மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர். மூன்றாமவர், கர்நாடகா மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக உள்ள சோமசேகர ரெட்டி. மாநில மருத்துவ அமைச்சர் பி.சீறீராமுலு – இவர்களின் உடன்பிறவா சகோதரர். கர்நாடகாவின் கடந்த மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு வேண்டி “ஆப்பரேசன் கமல்” (தாமரை நடவடிக்கை) என்ற பெயரில் பணபலமும் ஆள்பலமும் கொடுத்து, பா.ஜ.க.வெற்றியின் சூத்திரதாரர்களாக இருந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்தாம்.

எப்போதும் பல கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி சகோதரர்களின் சட்டைப் பையில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தில் சில அதிகாரிகளை முதலமைச்சர் எடியூரப்பா மாற்றம் செய்ய முயன்றபோது, 40 எம்.எல்.ஏ.களை ஐதராபாத்துக்குக் கடத்திக் கொண்டு போனார்கள், ரெட்டி சகோதரர்கள். எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தமது விசுவாசியை முதலமைச்சராக்கி விடப் போவதாக மிரட்டினர். சுஷ்மா, அத்வானி போன்ற பா.ஜ.க. தலைவர்கள் பேரம் பேசி எடியூரப்பாவை அடக்கி வைத்தனர். பல் பிடுங்கப்பட்ட எடியூரப்பா தன் நிலைக்காக தொலைக்காட்சியிலேயே பகிரங்கமாக கதறி அழுது விட்டார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, ஆந்திராவிலும், பா.ஜ.க. தலைவர்களைவிட காங்கிரசின் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் நெருக்கமானவர்கள். ராஜசேகர ரெட்டியின் மருமகனுடன் இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் நெருங்கிய கூட்டு வைத்திருப்பவர்கள். சோனியாவுக்கு எதிராக சுஷ்மாவை நிறுத்தி பிரதமராக்க முயன்ற ரெட்டி சகோரர்கள், இப்போதும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்குவதற்குப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ரெட்டி சகோதரர்களின் துரித வளர்ச்சி!

இரும்புக் கனிமச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு, அரசு அனுமதியுடன் இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், இலாபம் சம்பாதிப்பதும், அதேபோல அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாவதும் செல்வாக்குப் பெறுவதும் குற்றமா? இதைத்தானே ரெட்டி சகோதரர்கள் செய்தார்கள் என்று பா.ஜ.க. வாதிடுகிறது. “அப்பாவி”கள் பலரும் அவ்வாறே எண்ணலாம்.

ஆனால், “2003-2004-ஆம் ஆண்டு விவரப்படி பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அளவுக்குக்கூட வருமானம் இல்லாதவர்கள். அதன்பிறகு அவர்கள் 50,000 கோடி ரூபா மதிப்புடைய சோத்துக்களைக் குவித்துள்ளார்கள். இந்த செல்வத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?” என்று கேட்கும் கர்நாடகா மேலவை உறுப்பினர் கொண்டையா, அரசு சோத்துக்களைப் பயன்படுத்தி சோத்துச் சேர்த்த குற்றத்துக்காக, ஜனார்த்தன மற்றும் கருணாகர ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களின் உடன்பிறவா சகோதரர் சிறீராமுலு ஆகியோரின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் மூலம் தேர்தல் ஆணையாளரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோதச் செயல்கள் குறித்து மத்திய புலனாவு பிரிவின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப் போவதாக மாநில ஆளுநர் மிரட்டியிருக்கிறார். “காங்கிரசின் எடுபிடியாகச் செயல்படும் சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, மாநில லோகாயுதா விசாரணை நடத்தும்” என்று மாநில பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. மாநில ஊழல் அதிகார முறைகேடுகளை தனிச் சிறப்பாக விசாரிப்பதற்காக உள்ள சிறப்பு ஆணையம் லோகாயுதா. தற்போது அப்பதவியில் உள்ள சந்தோஷ் ஹெக்டே, ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக மாநில அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூனில் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். இதனால் மாநில ஆட்சியாளர்களின் குட்டு வெளிப்பட்டுப் போனதால் பதறிப்போன பா.ஜ.க. தலைமை அத்வானி மூலம் ஹெக்டேயை அணுகியது. “மாநில அரசின் தவறுகள் திருத்தப்படும், லோகாயுதாவுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்படும்” என்ற வாக்குறுதி கொடுக்கவே, ஹெக்டே பதவி விலகலை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால், “தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக காங்கிரசின் சதி” என்ற தயார்நிலை பதிலை பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் தீர்வாக வைத்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல், குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான இசுலாமியர் படுகொலைகள் ஆகியவற்றிலிருந்து குற்றவாளிகளைத் தப்புவிப்பதில் அக்கட்சி எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதோ, அதேபோல பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் விவகாரத்திலும் கடமைப்பட்டுள்ளது. ரெட்டி சகோதரர்களின் பணபலத்தைக் கொண்டு நடத்தப்பட்ட “தாமரை நடவடிக்கை”யால் தான் பா.ஜ.க. கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதும் வீழ்வதும் ரெட்டி சகோதரர்களின் கை அசைவில் இருக்கிறது.

ரெட்டி சகோதரர்களின் ஊழல்-அதிகார முறைகேடுகள் அத்வானி – சுஷ்மா முதல் அனைவருக்கும் தெரியும். பெல்லாரியில் இருந்து 71 இலட்சம் டன்கள், அதாவது 60,000 கோடி ரூபா மதிப்புடைய இரும்பு, கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதை கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவே மாநில சட்டப்பேரவையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு இன்னமும் தனக்கு மேல் பொறுப்பில் இருப்பவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள். ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இமாலய சாதனையை அவர்களால் எப்படிச் சாதிக்க முடிந்தது?

இரும்புக் கனிமச் சுரங்கங்களா?
தங்கக் கனிமச் சுரங்கங்களா?

வட கர்நாடகாவின் ஆந்திர எல்லையில் உள்ள பின்தங்கிய சிறிய மாவட்டம் பெல்லாரி. அதன் பாதிக்கும் மேலான பகுதிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களைக் கொண்டது. 2008-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நூறு கோடி டன்கள் இரும்புக் கனிமங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பூமிக்கடியில் சுரங்கங்கள் வெட்டி, தோண்டி எடுக்க வேண்டிய சிரமம் கூட கிடையாது. பூமியின் மேல் பரப்பில் திறந்தவெளி “சுரங்கம்” வெட்டினால் போதும் என்கிறவாறு சிறு சிறு குன்றுகளாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் 60 சதவீதமானவை இரும்பு மாவைப் போன்ற உயர் ரகத்தைச் சேர்ந்தவை. சீனாவில் 2008-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கான கட்டுமானத் தேவைகளின் காரணமாக எஃகு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. பெல்லாரி உயர்ரக இரும்புக் கனிமத்தில் 65% இரும்பு உலோகம் கிடைப்பதால் சீனத்தில் கூடுதலான விலையும் கிடைத்தது.

இப்போதைய கணக்கின்படி, ஒரு டன்னுக்கு இரும்புக் கனிமத்துக்கு வெறும் 27 ரூபா மட்டும் அரசுக்குச் செலுத்திவிட்டு, ஒரு டன் இரும்பை 7000 ரூபாக்கு விற்று நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபா வீதம் பெல்லாரி சகோதரர்கள் குவித்தார்கள். இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிமத் துறையின் கணக்கின்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பெல்லாரி இரும்புக் கனிம வளத்தை 30 ஆண்டுகளில் வெட்டி எடுக்கவேண்டும். ஆனால், ஆறே ஆண்டுகளில் எல்லாவற்றையும் சூறையாடிவிடும் வேகத்தில் ரெட்டி சகோதரர்கள் அக்கனிமத்தை வெட்டியெடுத்து நாடு கடத்தி வருகிறார்கள். இவர்களின் இலாபவெறியில் பெல்லாரியில் இரும்புக் கனிமக் குன்றுகள் கரைந்து போகின்றன. ரெட்டி சகோதரர்களிடம் பணக் குன்றுகள் உயர்ந்து கொண்டே போகின்றன.

இதைப் பார்த்து, இரும்புக் கனிமங்கள் எங்கே கிடைக்கின்றன, எப்படி, எங்கே ஏற்றுமதி செய்வது என்று கூட அறியாத திடீர் பணக்காரக் கொள்ளைக் கூட்டம் குத்தகை கேட்டு அரசிடம் சாரிசாரியாகப் படையெடுத்தது. பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பட் அல்லது சந்தூர் வட்டத்தின் ஏதாவது வரைபடத்தையும் ஒரு கிராமத்தின் பெயரையும் கொடுத்து, ஏதாவது ஒரு எல்லையைக் குறிப்பிட்டு குத்தகைக்கு அரசிடம் விண்ணப்பித்தார்கள். அதைச் சோதித்தறியும் தகுதியுடைய அதிகாரிகள் மத்திய, மாநில அரசிடம் கிடையாது. இலஞ்சம் வாங்கிக் கொண்டு மானாவாரியாக குத்தகை உரிமம் கொடுத்தார்கள். இப்படி ஒரு குறுகிய காலத்தில் 158 குத்தகை உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
தடைகளைத் தகர்த்தது

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி

கனிமங்கள் வைத்துள்ள முதலாளிகள் யாராவது சில தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ‘மானாங்கானி’யாக கனிமங்களை வெட்டி, விருப்பப்படி லாரியில், கப்பலில் ஏற்றிக் கொண்டு போ விற்றுவிட முடியாது. அப்படிச் செய்தால் நாட்டுவளம் அராஜகமாகச் சூறையாடப்பட்டு சுற்றுச்சூழல் கேடுகள் விளையும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே சுரங்கங்கள் வெட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளும், வரம்பீடுகளும், விதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சுரங்க நிர்வாகிகளுக்கான சான்றிதழ் பெற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் கனிமம் வெட்டி எடுக்கப்பட வேண்டும். வெடிபொருட்களைப் பயன்படுத்துவதாலும், பணியாற்றுபவர்களின் சுவாசம் பாதிக்கப்படுவதும் விபத்துக்கான வாப்புகள் அதிகமாக உள்ளதாலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுரங்கத்திலும் குறிப்பிட்ட அளவுதான் (மண் சரிவும் விபத்தும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆறு மீட்டர் ஆழம் வரைதான்) வெட்டியெடுக்க வேண்டும். ஒரு சுரங்கத்துக்கும் மற்றதுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விடவேண்டும். வனங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் காடு சாராத நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது. வெட்டியெடுக்கப்படும் கனிமத்தை ஒதுக்கப்பட்ட குத்தகைப் பகுதிக்கு வெளியேயோ, ஏற்றுமதிக்காக துறைமுகங்களிலோ இருப்பு வைக்கும்போது அரசு புறம்போக்கு இடங்களில் குவித்து வைக்கக் கூடாது. லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்குத்தான் கனிமச் சுமையேற்றலாம். அதையும் தார்பா போட்டு மூடித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

இத்தனையையும் மேற்பார்வையிட்டு, சோதித்தறிந்து, அமலாக்க வேண்டிய பொறுப்புடையது மைய அதிகார அமைப்புக்குழு (சி.ஈ.சி). ஆனால், அதற்கென்று உள்ளூரில் அதிகாரிகள் கிடையாது. கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மத்திய வருவா மற்றும் தீர்வுத்துறை, துறைமுகத்துறை மற்றும் போலீசு ஆகிய அரசுத் துறைகளின் அதிகாரிகளைக் கொண்டுதான் அப்பணிகள் செயல்படுத்தப்பட வேண்டிய நிலையே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகளைத்தான் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் விலைக்கு வாங்கிவிட முடியும். இந்த உண்மையை அறியாத சுரங்க முதலாளிகளே கிடையாது. அதிலும் குறிப்பாக பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஆள்பலம் – குண்டர்படை, பணபலம், அதிகாரபலம்மிக்கவர்கள். அவர்கள் தமது நரித்தனமான மூளையைப் பயன்படுத்தி கர்நாடகாவின் கனிம வளங்களைச் சூறையாடுவதில் வேறு எவரும் எட்டமுடியாத உச்சத்துக்கு போவிட்டார்கள். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரம்புகள், சட்டவிதிகள் எல்லாவற்றையும் தகர்த்து, பல பத்தாயிரம் கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமத்தை ஒரு சில ஆண்டுகளில் கடத்தி விற்றுள்ளார்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.

இத்தனைக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு பெல்லாரியில் இரும்புக் கனிமம் எடுப்பதற்கு ஒரு துண்டு நிலம் கூட குத்தகை உரிமை கிடையாது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆசியோடு “ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி”யை ரெட்டி சகோதரர்கள் தொடங்கியது ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில்தான். அனந்தபுரத்தில் சுமார் 107 ஹெக்டேர் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், அங்குள்ள இரும்புக் கனிமம் ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானதில்லை. பெல்லாரி இரும்புக் கனிமத்துக்கு சீனத்தில் பெரும் கிராக்கி இருப்பதைக் கண்டு கொண்டு அவர்கள் தம் பார்வையை அங்கு திருப்பியபோது, அவர்கள் கால் வைப்பதற்கு கூட பெல்லாரியில் இடம் கிடையாது. ஒருமுறை குத்தகைக்கு விடப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு அதை இரத்து செய்ய முடியாது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பதற்காக வரும்போதுதான் ரத்து செய்யலாம். இவ்வாறு பெல்லாரியில் மட்டும் 100 குத்தகைகளும், அருகிலுள்ள சித்திர துர்க்கா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் 60 குத்தகைகளும் ஏற்கெனவே தரப்பட்டிருந்தன.

பெல்லாரியில் குத்தகை எடுப்பதற்கு இன்னமும் 20 ஆண்டுகளுக்கு ரெட்டி சகோதரர்கள் காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? பணத்தை வீசி எறிந்தால் ரெட்டி சகோதரர்களுக்குச் சேவை செய்ய ஒரு சதிகார வழக்கறிஞர்கள் கூட்டம் ஆந்திராவில் காத்திருந்தது. அவர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பெல்லாரியில் ஏற்கெனவே குத்தகை எடுத்துவிட்டு, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான இயந்திர மற்றும் போக்குவரத்து வசதியில்லாதவர்கள் பலர் இருந்தனர். குத்தகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளில் வேலை தொடங்காவிட்டால் குத்தகை இரத்து செய்யப்படும். அப்படிப்பட்டவர்களைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களின் பெயரில் உள்ள உரிமத்தைப் பயன்படுத்திக் கொள்வது; குத்தகைதாரர்களுக்கிடையேயான தகராறுகளைப் பயன்படுத்தியும், பணியாத குத்தகைதாரர்களை குண்டர்படையை வைத்து தாக்கியும் மிரட்டியும் வெளியேற்றிவிட்டு சுரங்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது; போலி உரிமத்தைக் காட்டியும் இலஞ்சம் கொடுத்தும், அண்டை ஆந்திராவின் அனந்தபுரத்து சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமம் என்று கணக்குக் காட்டியும் துறைமுகங்களுக்குக் கடத்திக் கொண்டு போ ஏற்றுமதி செய்துவிடுவது – இவைதான் சதிகார வழக்கறிஞர்களின் ஆலோசனை. இனி என்ன! களத்தில் குதித்த ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கக் கொடி ஏற்றப்பட்டது!

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் சாதனை!

“குருவி” திரைப்படத்தில் காட்டப்படும் கடப்பா ரெட்டிகளின் கனிம சுரங்கத் தொழில் கொடூரத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கொடூரம். அந்தப் படத்தில் காட்டப்படுவதைவிடப் பிரம்மாண்டமான பல ஏக்கர் நிலத்தில் ரெட்டி சகோதரர்கள் நவீன மாளிகையை அரண்மனையைப் போல கட்டிவருகிறார்கள். அரை கி.மீட்டருக்கு நீண்ட நெடிய மதில் சுவர்களைக் கொண்ட பாதையில் கண்காணிப்பு காமிராக்களைக் கடந்துதான் அந்த மாளிகையை அடைய முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட புதுக்கட்டிடம் எழுப்பப்படுகிறது. குண்டு துளைக்க முடியாத பாதுகாப்பு அறைகள், இரவுப் பார்வை உடைய அவர்களது ஹெலிகாப்டர்கள் இறங்கக் கூடிய மேடை, நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சிக் கூடம், சாரிசாரியான கார்களில் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் என சினிமாவை விஞ்சுகிறது அந்த மாளிகை. அந்த மாளிகையை ஒட்டி, அதைபோலவே எல்லா வசதிகளும் நிரப்பிய மற்றொரு மாளிகை அவர்களின் நெருங்கிய சகாவும் கர்நாடகா மருத்துவ அமைச்சருமான சீறீராமுலுவுக்கும் உள்ளது.

இவ்வளவு பணத்தையும் சோத்துக்களையும் ஒரு குறுகிய காலத்தில் ரெட்டி சகோதரர்களால் எப்படிக் குவிக்க முடிந்தது?. பெல்லாரியில் உள்ள 68 கனிம வயல் குத்தகைகாரர்களின் 48 பேர்களுடன் மேல் குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். பணியாத குத்தகைதாரர்களின் கனிம வயல்கள் மீது குண்டர் படையை ஏவி ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமத்தை காட்டுவழியே லாரிகளில் கடத்திக் கொண்டு வந்து இந்த ஏ.ஜி.கே.சுரங்கப் பகுதியில் குவித்து வைத்து விடுவார்கள். பிறகு, இக்கனிமம் முழுவதும் ஆந்திராவில் வெட்டியெடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டுவார்கள். கர்நாடகாவில் கள்ளத்தனமாக இரும்புக் கனிமத்தை வெட்டியெடுப்பதற்காக ஆந்திரா-கர்நாடகாவின் எல்லையையே அராஜகமாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள். எல்லைக் கற்களை அவ்வப்போது ரெட்டியின் ஆட்களே பிடுங்கி நட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு 2,3 முறை இப்படி நடக்கும். யாராவது புகார் கொடுத்து மேற்பார்வையிட அதிகாரிகள் வந்தால் இலஞ்சம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஒருபாறைக் கோயிலின் அருகே ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையைக் குறிக்கும் கல்வெட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே செய்துக்கப்பட்டிருந்தது. கோவிலோடு அதை வெடிவைத்துத் தகர்த்து வீசிவிட்டார்கள். அதன்மூலம் ஆந்திராவின் எல்லையை கர்நாடகாவுக்குள் தள்ளிப் போட்டுக் கொண்டு இரும்புக் கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டார்கள். சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து, இரும்புக் கனிமத்தை வெட்டியெடுத்ததோடு, அவற்றைச் சேர்த்து வைக்கவும் கடத்திச் செல்ல பாதை அமைக்கவும் காடுகளை அழித்தார்கள்.

வெட்டியெடுக்கப்பட்ட கனிமத்தை அருகிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒவ்வொரு லாரிக்கும் கனிம மற்றும் தாதுப் பொருட்கள் துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றின் “பர்மிட்கள்” வேண்டும். ஒவ்வொரு லாரியும் குறிப்பிட்ட அளவுதான் சுமை ஏற்றிச் சேல்ல வேண்டும். இவற்றைச் சோதித்தறிவதற்கு வழியில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. ஆனால், ஸ்வத்திக் அல்லது வேறு சின்னம் பொறித்த அட்டைகளை சோதனைச் சாவடிகளில் விசிறிக் காட்டிவிட்டு அந்த லாரிகள் பறக்கின்றன. துறைமுகத்தில் ஏற்றுமதியின் போதும் சோதித்தறியப்படும். ஆனால், போலி “பர்மிட்”டுக்களை தயாரித்தும், இவை எல்லாவற்றையும் மீறி இலஞ்சம் கொடுத்தும் மிரட்டியும் ஏமாற்றியும் இரும்புக் கனிமத்தைக் கடத்திக் கொண்டு போனார்கள்.

துரிதப் பணம் சம்பாதிப்பதற்காக ஒவ்வொரு லாரியிலும் ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு மிகை சுமை ஏற்றினார்கள். 10,000 லாரிகள் ஓட்டப்பட்டன. ஒவ்வொன்றும் நாளுக்கு 600 கி.மீ. தூரத்துக்குப் போ வந்தன. இவ்வளவு லாரிகளையும் ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் கிடைக்காததால், கிளீனர்களே ஓட்டி பல விபத்துகள் நடந்தன. இவ்வளவு சுமை வாகனங்களைத் தாங்க முடியாத சாலைகள் நாசமாகின. தார்ப்பா போட்டு மூடி எடுத்துச் செல்லாததால் (அப்படிச் செய்ய கூடுதல் செலவும் தாமதமும் ஆகும்) வழியெல்லாம் இரும்புக் கனிமத் துகள் பறந்து, எங்கும் செம்மண் புழுதியாகி சுற்றுச் சூழல் நாசமாகின.

ஒருமுறை கர்நாடகா ஊழல் தடுப்பு லோகாயுதா அதிகாரிகள் சோதனையிட்டபோது எந்த லாரிக்கும் உரிம  ஆவணங்கள் “பர்மிட்டுகள்” கிடையாது. இரண்டு கோணிப் பைகள் நிறைய போலி ஆவணங்கள் பிடிபட்டன. 200 கோடி ரூபா மதிப்புடைய இரும்புக் கனிமங்கள் கைப்பற்றப்பட்டு துறைமுகத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது. அவற்றை ஒரே வாரத்தில் திருடி விற்று விட்டுக் காணவில்லை என்று அறிவித்து விட்டார்கள். சோதனையிட்ட அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். சி.பி.ஐ. ரெய்டு வருகிறது என்று அறிந்து, பெல்லாரி அருகே உள்ள தனது சுரங்கக் கம்பெனி அலுவலக ஆவணங்களை இரவோடு இரவாக அள்ளிக் கொண்டுபோன ரெட்டி சகோதரர்கள், அந்த அலுவலகத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

இப்போது 5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபா மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக ஒப்புக் கொள்ளும் மாநில, மத்திய அரசுகளும் ஆளும் கட்சிகளும் முறையே மாநில லோகாயுதா விசாரிப்பதா, சி.பி.ஐ. விசாரிப்பதா என்று இலாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள். கொஞ்சநாள் இது நடக்கும், பிறகு எவ்வித பாதிப்புமில்லாமல் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் தமது “ராஜ்ஜியத்தைத்” தொடர்வார்கள். ஏனெனில் ஆந்திராவில் காங்கிரசும், கர்நாடகாவில் பா.ஜ.க.வும் அவர்களின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் கூறுவதைப் போல அரசாங்கத்தின் சட்டத்திற்குச் சவாலா விளங்கும் காரணத்திற்காக காட்டு வேட்டை நடத்துவது என்றால் முதலில் ரெட்டி சகோதரர்களுக்கெதிராக நடத்த வேண்டும். ஆனால், கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் ரெட்டி சகோதரர்கள் என்ன செய்கிறார்களோ அதை மத்திய-கிழக்கு இந்திய காடுகளில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, போஸ்கோ போன்ற உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோக, பன்னாட்டு, தரகு முதலாளிகள் நடத்துவதற்கு வசதியாக பழங்குடி மக்கள் மற்றும் மாவோயிச நக்சல்பாரிகளை அகற்ற வேண்டியுள்ளது. அதற்காக ஏவிவிடப்பட்டுள்ளதுதான் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் நடத்தும் காட்டுவேட்டை.

_____________________________________

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010
_____________________________________

இளையராஜா : ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !!

இளையராஜா-ராஜா- ilaiyaraja-ilayaraja
பட உதவி thehindu.com
இளையராஜா-ராஜா- ilaiyaraja-ilayaraja
நன்றி thehindu.com

திருச்சி – பெல் (BHEL)   அக்கிரகாரத்தைச் சேர்ந்த குழுவொன்று பாலே நடன நிகழ்ச்சிக்கு சிம்பனி இசைத் துணுக்குகளைச் சேகரித்துத் தொகுக்க (திருட) ஒரு பாடல் பதிவுக் கூடத்திற்கு வந்தது. ஆங்கிலப் படங்களில் சிம்பனி இசை ஒலிக்கத் தொடங்கியவுடனே ஒரு பிராணி வாய் திறந்தது. ”ஆகா… என்ன இமாஜினேஷன்! (கற்பனை). என்னமோ இளையராஜா இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”

தங்களுக்குப் புதியதொரு இசை மேதை கிடைத்துவிட்டானென மகிழ்கிறது லண்டன் பிலார்மோனிக் குழு. ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளோ” (புதுமைப்பித்தன்) சங்கடத்தில் நெளிகின்றன.

இளையராஜாவின் சிம்பனி பற்றி எழுதவேண்டும்; ஆனால் எழுதக்கூடாது. இதைச் சனாதனிகள் செய்து விட்டார்கள் – எழுத வேண்டியதை எழுதாமல் இருட்டடிப்பு செய்ததன் மூலம். ராக் என்றால் என்ன? ராப் என்றால் என்ன? மைக்கேல் ஜாக்சன் கொண்டு வரும் இசைக் கருவிகளின் மொத்த எடை என்ன? பாபாசெகல் வெற்றியின் ரகசியம் என்ன? – என்று கூவத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள், சிம்பனி என்றால் என்ன, இளையராஜாவுடைய சாதனையில் பரிமாணம் என்ன என்ற கேள்விகளை மட்டும் எழுப்பிப் பரிசீலிக்கவில்லை. இந்த மவுனத்திற்குக் காரணம் அழுக்காறு, அச்சம்.

அவாள், ஆசார, நியமங்களை மீறிக் கடல் கடந்தார்கள்; ஆங்கிலக் கல்வி கற்றார்கள்; குடுமியை மறைத்து டர்பன் கட்டினார்கள்; கோட்டு, சூட்டு போட்டார்கள்; வெள்ளைக்காரியைக் கூத்தியாளாக வைத்துக் குடித்தனம் நடத்தினார்கள். எல்லாம் சரிதான், ஒரு சிம்பனி இசை அமைக்க முடியவில்லையே ஏன்? செம்மங்குடியிடமும் பாலமுரளியிடமும் ‘நீங்கள் ஏன் இதுவரை சிம்பனி அமைக்கவில்லை’ என்று பேட்டி எடுத்திருக்கலாமே. ‘சரிகமபதநி’க்குள் சகலமும் அடக்கம் என்கிறீர்களே சிம்பனி அதற்குள் அடங்குமா? அடங்காதா? ”சிவபெருமான் அருளிய இசையில் சிம்பனி உண்டா” என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கலாமே. இவை எதையும் மேற்படி பத்திரிகைகள் செய்யவில்லை. தங்கள் சங்கீத கலாநிதிகளுக்கும் சிம்பனிக்கும் காததூரம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஏனென்றால் இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை. சநாதனிகளுடைய ஆன்மாவின் மொழியோ அக்கிரகாரத்தைத் தாண்டியதில்லை. இசையை மடடுமல்ல, இந்தியச் சமூகத்தையே எந்தத் துறையிலும் வளரவிடாமல் தடுப்பது இந்தப் பார்ப்பன இந்துப் பாரம்பரியம்தான். இந்த உண்மையை அம்பேத்கார் துணிந்து வெளியிட்டபோது அதையும் இருட்டடிப்பு செய்தார்க்ள. அதனால்தான் உயிர்வாழும் பிணமான சங்கராச்சாரி ( செத்துப்போன சீனியர் சங்கராச்சாரி ) முன்னால் மணிக்கணக்கில் மண்டியிட்டுக் கிடக்கும் தொலைக்காட்சிக் காமெரா இளையராஜாவை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது.

ஒருவேளை ”இசை முழுவதுமே – சிம்பனி உட்பட  – தியாகப் பிரும்மத்துக்குள் அடக்கம்” என்று இளையராஜா சரணடைந்து இருந்தால் அவாள் ஆசீர்வதித்திருக்கக்கூடும். மாறாக, ஹேய்டன், பாக், மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் தியாகய்யரையும் சேர்த்தார் இளையராஜா. அப்படிச் சேர்த்தது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. (தியாகய்யரைப் போய் அம்மேதைகளுடன் சேர்த்தது நமக்கும்தான் பொறுக்கவில்லை). அவர்களைப் பொறுத்தவரை ‘கர்நாடக இசையென்னும் மந்திரச் சிமிழுக்குள், உலகமே அடக்கம். ‘சரஸ்வதி மஹாலின் சமஸ்கிருத ஓலைச்சுவடியைத் திருடிச் சென்றுதான் வெள்ளக்காரனே ராக்கெட் விட்டான்’.

‘சங்கரா பரணம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று டஜன் கணக்கில் படமெடுத்து, அவற்றில் இரண்டு மேற்கத்திய இசைத் துணுக்குகளை இசைத்துக் காட்டி எல்லாம் எமக்குள் அடக்கமென்று அற்பத்தனமாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அல்லது மேற்கத்திய இசையை விபச்சாரத்திற்கு இணையாக வைத்துக் கொச்சைப் படுத்தினார்கள். இதையெல்லாம் நடுவீதியில் போட்டு உடைத்தார் இளையராஜா. அந்த ஆத்திரம்தான் இந்த மகா மவுனத்திற்கு காரணம்.

மக்கள் எல்லா அறிவையும் பெற உரிமை படைத்தவர்கள்; இசைத் துறையிலும் மக்களின் பாமரத்தனத்தை அகற்ற வேண்டும். அதைச் செய்யாமல் மக்களின் அறியாமை குறித்து வருந்திப் பயனில்லை. ஆனால் மெல்ல மெல்ல அறிவொளி பெறத் தொடங்கும் மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது எப்படி என்று கவலைப்படுகிறார்கள் சனாதனிகள். இல்லையென்றால் பார்ப்பனர்களிலேயே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேருக்கு பரிச்சயமில்லாத கர்நாடக இசையைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுபவர்கள் சிம்பனியை அறிமுகப்படுத்தி ஏன் எழுதக்கூடாது? சிம்பனி இசை வடிவம் ஐரோப்பியப் பாரம்பரியம். 200 ஆண்டு பாரம்பரியம் இருந்தும் இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் அங்கேயே குறைவு. இசை அமைக்கத் தெரிந்தவர்களோ வெகு குறைவு. இது ஆசியர்களுக்கு, இந்தியருக்கு, தமிழர்களுக்கு வெகுதூரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கோ வெகு வெகுதூரம்.

உலகளவில் விஞ்ஞானிகளோ, ஓவியர்களோ, திரைப்பட இயக்குநர்களோ தத்தமது துறை பற்றி ஒன்றாகக் கூடி விவாதித்துவிட முடியும்; ஆனால், இசைத்துறை அப்படியல்ல. இசை விவரணைக்கு அடங்காதது. உணர்ச்சிச் செறிவானது. வேறு எந்த வடிவத்திலும் சொல்ல முடியாததை இசை சொல்கிறது. மங்கலான மேக வலைப் பின்னல்களாக நம்மைச் சுற்றிக் கவியும் இசை, மாயத தோற்றமல்ல; உண்மை. சுலபமாக உணர்ந்து மற்றவர்க்கும் எடுத்துச் சொல்ல இசை கணிதமல்ல. விஞ்ஞானங்களில் ஆகத் துல்லியமானது கணிதம்; கலைகளில் ஆகச் சூக்குமமானது இசை. மார்க்சிய இசையறிஞர் ஐஸ்லர் சொல்வது போல ஐன்ஸ்டீனின் ”ஆற்றல் பற்றிய விதி”யைக் கூட ஜனரஞ்சகமாக விளக்கிவிடலாம்; ஆனால் பீத்தோவனின் ஆக்கத்தை அவ்வாறு எளிதாக விளக்கிவிட முடியாது.

மோசார்ட் – பாக் -பீத்தோவான்

இத்தகையதொரு துறையில்தான் இளையராஜா சாதனை படைத்திருக்கிறார். பாக், மொசார்ட், பீத்தோவனை ரசிக்கத் தெரிந்தவர்களெல்லாம் புதிதாக சிம்பனியைப் படைத்துவிட முடியாது. அதற்குப் பயிற்சியும், ஆற்றலும் மட்டுமல்ல, மன எழுச்சியும் வேண்டும். அது கர்நாடக இசை ‘மேதை’களிடம் கிடையாது. செக்குமாடுகள் மான்களாக முடியாது. கர்நாடக இசையில் செய்வதாகச் சொல்லிக் கொள்ளப்படும் புது முயற்சிகள் கூட வெறும் கழைக்கூத்துகளே.

இன்னொருபுறம் அவர் பாவலருடன் இசைக் குழுவிலிருந்தார், இசையுடனேயே வளர்ந்தார். இன்று சிம்பனி அமைத்துவிட்டார் என்று கூறுவது பாமரத்தனமானதும் அவரது கடும் முயற்சியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும். இசை பற்றிய நமது அறிவை, ரசனையை விரிவாக்கிக் கொள்ளும்போதுதான் நமக்கு மறுக்கப்பட்ட அறிவின் பரிமாணம் புரியும். இல்லையேல் நாளை ராஜாவின் சிம்பனி வெளிவந்து அதை உலகவே ரசிக்கும் போது நாம் ரசிக்க முடியாது. நம்மூர் ஆள் போட்ட சிம்பனியை நம் காதிலேயே நுழைவிடாமல் இசை மடமை நம் காதை அடைத்துக்கொண்டிருக்கும்.

திரை இசை இல்லாமல் தனியானதொரு மேதைமையிலிருந்தும் ஊற்றெடுத்து சிம்பனி வந்து விடவில்லை. இதை இளையராஜாவே கூறுகிறார். நமக்குத் தெரிந்த இளையராஜா சினிமா இசை அமைப்பாளர்தான். பல படங்களில் அவரது பின்னணி இசையைக் கேட்கும்போது காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. பாடல் இசை அமைப்புக்களைக் கேட்கும்போது அந்தப் படத்தைப் பார்த்துவிடக் கூடாது என்ற உணர்வேற்படுகிறது. ஒருசில இயக்குநர்களின் படங்களைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அவரது இசை பிரம்மாண்டமான வண்ண ஓவியமாக விரிகிறதென்றால் திரைப்படத்தின் காட்சிகள் பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவுபடுத்துகின்றன. இந்தக் கணிப்பில் ஒருவேளை சில பிழைகள் இருக்கலாம்; ஆனால் பொதுவில் இதுவே உண்மை.

அப்படி அவர் இசையில் என்னதான் இருக்கிறது? ‘வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும், தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்…’ – இயற்கையில் தாளகதி இருக்கிறது; மனித உடலின் உள் இயக்கத்தில் இருக்கிறது; மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவில் இருக்கிறது. மனித உணர்ச்சிகளுடன் ஒட்டிப் பிறந்தும் அதன் ஒரு வெளிப்பாடும் தாளம். ‘காட்டுவழி போற புள்ளே கவலைப்படாதே…’ போன்ற ராஜாவின் பழைய பாடல்களிலும், ‘பண்ணைப்புற ராசாவே, கட்டினமெட்டிது லேசா…’,. ‘நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா, ஆமா…’ போன்ற பாடல்களிலும் விதவிதமான தாளகதிகள் வருகின்றன. பறையின் தாள ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இமைக்கும் நேரத்தில் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் ஆட்டம் தாளகதியாகக் காதில் பாய்கிறது. வெகு இயல்பாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்கிறது.

ஆனால், ”செவ்வியல் (Classical)   இசை உயர்ந்தது, நாட்டுப்புற இசை தாழ்ந்தது” என்ற திமிர்த்தனம் கொண்ட சனாதனிகள் இந்த ‘அநீதி’ கண்டு கொதிக்கிறார்கள். ‘குனித்த புருவமும்…’ வேகம் குறைந்த கதியில் தொடங்கி, ‘ராக்கம்மா கையத்தட்டு…’ என்ற வரிகளின்போது, துரிதகதியில், ‘டப்பாங்குத்து’ தாளத்துக்குத் தேவாரத்தை இழுத்துச் சென்றிருப்பதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? (காட்சியில் தேவாரத்திடம் டப்பாங்குத்து மனதைப் பறிகொடுப்பது வேறு விஷயம்.) ஆம்! மேட்டுக்குடி வர்க்க வாழ்க்கை இயக்கத்தின் கதியும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை இயக்க்தின் கதியும் வேறு. இயக்குநர் பாலசந்தர் சொல்லைக் கேட்டுக் கொண்டு, தியாகய்யரின் கீர்த்தனைகளைத் தமிழாக்கி சேரிக்குச் சேரி ஒலிபரப்பினாலும் சத்தம்தான் சேரிக்குச் சேருமே ஒழிய சரக்கு சேரிக்குச் சேரவே சேராது.

உட்கார்ந்து தின்பவனின் நிதானம் உழைப்பவர்கள் வாழ்க்கையில் இருக்காது. அவர்களது இசையின் தாளத்திலும் இருக்காது. ஒன்று மற்றொன்றுக்கு உறுத்தத்தான் செய்யும். அதேபோல, மேற்கத்திய ‘ராக்’ போன்ற இசை வடிவங்களின் வெறிகொண்ட தாளம் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் மற்றும் அராஜகத்தின் வெளிப்பாடு.

நமக்குப் பழக்கமான, நமது வாழ்க்கைக்கு நெருக்கமான தாளகதியில் காலூன்ற வைத்து இசையுலகத்தை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ராஜா. அவர் அமைத்துள்ள சிம்பனி பற்றி கருத்து கூறும்போது மைக்கேல் டவுன் எண்ட் (Michael Townend இவர் ராஜாவின் சிம்பனிக்குப் பதிவு இயக்குநர்) அவற்றில் இளையராஜா பயன்படுத்தியுள்ள தாள வகைகளையே குறிப்பிட்டுச் சொல்லுகின்றார்.

ilayaraja-ilaiyaraja-இளையராஜாஅப்படியானால், தாளம்தான் அவரது தொழில் ரகசியமா? ‘அன்னக்கிளி’ வந்தபோது அப்படித்தான் பலர் சொன்னார்கள். ”இது தவுல் கம்பெனி, ரொம்பநாள் நிக்காது” என்றார்கள். தமிழ்த் திரையிசைக்கு வடக்கே இருந்து ஷெனாய் வந்தது; ஐரோப்பாவிலிருந்து பியானோ, அக்கார்டியன் வந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து டிரம்ஸ் வந்தது; ஆனால் உள்ளூரிலிருந்து (மன்னிக்கவும் ஊர் அல்ல சேரியிலிருந்து) தப்பும் பம்பையும் உறுமியும் மட்டும வரவில்லை. அதற்கு ‘உரியவர்’தான் அவற்றை எடுத்து வந்த தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த இந்தி மயக்கம் என்னும் பேயை விரட்டினார்.

இதற்கு முன்னாலும் திருவிழாவில் தலைகாட்டுவதுபோல அந்த இசைக்கருவிகள் தமிழ்ச் சினிமாவில் தலைகாட்டியிருக்கலாம். ஆனால் அந்தத் தவில் வேறு, இந்த மேளம் வேறு. அந்த நாதஸ்வரம் வேறு. இந்த நாயனம் வேறு; இரண்டுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதைகளும் வேறுவேறுதான்.

பலர் விரும்பியதைப்போல அவர் வெறும் ‘தவுல் கம்பெனி’யாக மட்டும் இருந்திருந்தால் 750 படங்களுக்கு இசை அமைத்திருக்க முடியாது. ‘அன்னக்கிளி’க்கு முன்பு ஜி.கே.வெங்கடேஷ் குழுவில் இசைக்கலைஞனாகப் பணியாற்றி போதே பல இசைத் துணுக்குகளை எழுதி சக கலைஞர்களுடன் சோதனை செய்து பார்த்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர் இசைவாணன் கூறுவதைப்போல ”’அன்னக்கிளி’ முதல் ‘வள்ளி’ வரை அவர் அள்ளி வழங்கியிருப்பவை விதவிதமான ஹார்மனி நெசவுகள். நாட்டுப்புற இசையோடு ஹார்மனியை இணைத்து நெய்து கொடுத்திருப்பது ‘அன்னக்கிளி’யின் சிறப்பம்சம். முதல் படத்தில் அடிவைக்கும்போதே ‘அடாஜியோ’ என்ற குறைந்த வேகத்திலமைந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுது…’ என்ற சோகப் பாடலை முயற்சித்து அவரது துணிச்சலான செயல்.”

துணிச்சலுக்குக் காரணம் புதிய முறைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கிருந்த ஆர்வம், தன்னம்பிக்கை. ‘இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு…’ என்ற பாடலில் திரையில் பிளாஷ் பேக்கில் கதைக் காட்சிகளாக நகர்ந்து செல்லும்போது அதன் பின்புலத்தில் ஓவர்ச்சர் என்னும் (ஓபரா இசை நாடக முன்னுரைப் பாணி – சிம்பனிக்கு முன்னோடியானதொரு வடிவம்) இசை நகர்ந்து செல்லும். ‘நிழல்கள்’ படத்தில் இந்திய இசை முறைகளைக் கையாண்டும், ‘மூடுபனி’யில் ஏற்கனவே புழக்கத்திலுள்ள ராகங்களுக்குப் பதிலாக காட்சியின் தேவைக்கேற்ப புதிதாக ‘இசை கரு’க்களை (Theme)   உருவாக்கியும் காட்டினார். ‘ராஜபார்வை’யில் இந்திய, மேற்கத்திய தாளகதிகளையும், ஹார்மனியையும் சோதனைக் களன்களாக்கினார். நெசவில் டெக்ஸ்ச்சர் (இழை நயம்) என்று கூறுவார்களே, அதை இசையில் காட்டுகிறது ‘பூமாலையே தோள் சேரவா…’ என்ற பாடல். இப்பாடலின் பண்மிசைப் பண்ணாக, ஒன்றின் மீது இன்னொரு பண் உராய்வின்றி மிதந்து செல்லும் அழகைக் காணலாம். ராஜா பெரிதும் போற்றும் இசை மேதை பாக் – கை ‘பண்மிசைப் பண்ணின் (Counter Point))   தந்தை’ என்பார்கள். தந்தைக்கேற்ற தனயன்.

பரிச்சயமற்ற சொற்றொடர்களால் ராஜாவின் இசையை விளக்கிக் கொண்டிருப்பது ஏன், என்று வாசகர்கள் வியக்கலாம். இவை இசையின் நவீன வடிவங்கள், ஆழமான முறைகள். மோனோடோன் என்பது இசையின் புராதன வடிவம், ‘கர்நாடக இசை’, ‘இந்துஸ்தானி இசை’ ஆகியவை இந்த ரகம்தான். ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுரங்களில் ‘கர்நாடக’ இசையில் ஒரு தருணத்தில் ஒன்று மட்டும் ஒலிக்கும். ஒன்றுக்கொன்று இணையாகவோ, ஒன்றின்மீது ஒன்று தவழ்ந்தோ இந்தச் சுரங்கள் வராது. ஒன்றையொன்று பின்தொடர மட்டுமே செய்யும். இந்த இசையை நீண்ட நேரம் கேட்கும்போது அலுப்பு ஏற்படக் காரணம் இதுதான். ‘மனாடனஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் ‘சலிப்பூட்டுவது’ என்பதுதானே பொருள்! மோனோடோனுக்குப் பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படும் பாலிபோனி (Polyphony)  பிறந்தது.

ஹார்மனி, இவையிரண்டிலிருந்தும் வேறுபட்டது. ஒரு பண், சுர இயைபுகளோடும் (Chords)   வேறு ஒலிகளுடனும், (இசைக்கருவிகளுடனும்) இசைய நெய்யப்படுவதே ஹார்மனி. தற்போது ராஜா அமைத்துள்ள சிம்பனியில் 80க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள். நாம் பெருமிதம் கொள்வது கருவிகளின்  எண்ணிக்கையினால் அல்ல;  அவை பயன்படுத்தப்பட்டுள்ள – சிம்பனி – இசை வடிவம் காரணமாகத்தான். மேலும் 10 இசைக் கருவிகளைக் கூட்டி 90 ஆக்கி ‘நம்மூர்’ கர்நாடக சங்கீத வித்வானின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்? மதுரை சோமு கச்சேரியை எட்டால் பெருக்கினால் என்ன விடை கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். ‘எந்தரோ மகானுபாவுலு…’ என்று செம்மங்குடி முதல் குரல் கொடுத்தால் 90 கருவிகளும் பள்ளிக்கூட கடவுள் வாழ்த்து போல அதையே திரும்பச் சொல்லும், அவ்வளவுதான். அதாவது, அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 கருக்கரிவாள்!

 

தியாகராஜ-உத்சவம் - thyagaraja-utsavam

 

கர்நாடக இசையைக் கேவலப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; (இனிமேல் நாம் வந்து கேவலப்படுத்த அதில் ஏதும் மிச்சமில்லை என்பது வேறு விவகாரம்) இதன் வரம்பு அவ்வளவுதான். கர்நாடக இசையில் பாடகன்தான் (அல்லது முக்கியக் கருவி) சர்வாதிகாரி; மற்றவை பக்கவாத்தியங்கள் மட்டுமே. அவற்றுக்கு ‘தனி உரிமைகள்’ கிடையாது. ஆனால் ஹார்மனி ததும்பும் சிம்பனியில் எத்தனைக் கருவிகள் உண்டோ அத்தனைக்கும் தனிப்பங்கும் பாத்திரமும் உண்டு. அதனால்தான் சிம்பனி இசைப்பதிவு முடிந்தபின் அதில் பங்கேற்ற ஒரு கலைஞர் தனது கருவிக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ராஜாவிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லியிருக்கிறார். பக்கவாத்தியக்காரரை முக்கியப் பாடகர் கச்சேரியினூடாகவே கவிழ்ப்பதும், மிரட்டுவதுமே கர்நாடக இசை மரபு.

பத்து வண்ணங்களில் பட்டு நூலைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் கர்நாடக இசை அதைத் தாம்புக்கயிறாக்கும்; நூல் மிச்சமிருந்தால் இன்னும் தடியாக முறுக்கித் தேர்வடமாக்கும். ஆனால் சிம்பனியோ அதைத் தறியில் கொடுத்து நெஞ்சை அள்ளும் வண்ணத்தில் புடவையாக நெய்து காட்டும், பார்டராக, குறுக்குக் கோடுகளாக, புட்டாக்களாக, அள்ளி இறைக்கப்பட்ட புள்ளிகளாக… ஒவ்வொரு வண்ணமும் ஒரு தினுசு (Design)   காட்டும். இந்தத் தினுசுகள்தான் சிம்பனியின் சுருக்கள் (Theme) . மொத்தப் புடவையும் தோற்றுவிக்கும் அழகியல் உணர்வுதான் ஒரு குறிப்பிட்ட சிம்பனி சொல்லும் செய்தி. கர்நாடக இசையில் பாடகன் எஞ்சின்; பக்கவாத்தியங்கள் அவன் பின்னே பிணைக்கப்பட்ட பெட்டிகள். சிம்பனியின் செய்தி என்பது சாலை விதி. அதை மீறாமல் சீறியும், பறந்தும், சுணங்கியும், நிதானமாகவும் செல்லும் பலவகை வாகனங்கள்தான் சிம்பனியின் உட்கூறுகளான இசைக்கருவிகள்.

இப்போது ராஜாவின் ‘நட்டுவச்ச ரோசாச்செடி…’, ‘பூமாலையே…’ போன்ற பல பாடல்களை மீண்டும் கேட்டுப் பாருங்கள். நெஞ்சை அள்ளும் விதவிதமான வண்ணங்கள் உங்கள் மனக்கண்ணில் விரியும். இந்த ‘வித்தை’ நமது சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகய்யருக்குப் பிடிக்காமல் ‘எவனோ ஒரு’ பீத்தோவனுக்கும் மொசார்ட்டுக்கும் கைவந்தது எப்படி? சிம்பனி திருவையாற்றுக் காவிரிக்கரையில் அவதரிக்காமல்  வியன்னாவில் பிறந்தது ஏன்? சங்கீத சிரோன்மணிகளைக் குடையும் கேள்வி இது.

தியாகராஜன், தியாகய்யர்
தியாகராஜன்

ஏனென்றால் பின்னாளில் இரண்டு காதும் கேட்காத பீத்தோவன் ஐரோப்பாவில் உள்ள குமுறலை தன் இதயத்தால் கேட்டார்; தியாகய்யரின் காதில் காலை நேர கோயில் மணி சத்தமும், மதியத்து ஒற்றைக்காக்கை அழைப்பும், இரவில் காவிரிக்கரை தவளைகளின் இரைச்சலுமே விழுந்தது. ‘எழுச்சிபெறும் தொழிலாளி வர்க்கத்திற்கே எதிர்காலம்’ என்று முன்னறிந்த பீத்தோவன்,  ‘தொழிலாளர் படையே வருக’ என்று தனது 9 – வது சிம்பனியையே அதற்கு வரவேற்பிசையாக்கினார். ‘எச்சரிக்ககா ரா… ரா…. ஹே ராமச்சந்திரா’ (பார்த்து வாப்பா ராமா) என்று மோட்டுவளையைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தார் தியாகய்யர்.

முடியரசர்களின் தலையை அப்புறப்படுத்திவிட்டு, குடியரசு அமைக்கும் பாதையில் ஐரோப்பா நடைபோட்டுக் கொண்டிருந்தது; மணிமுடியை பிரிட்டிஷ்காரனிடம் போக்கியத்துக்கு விட்டுவிட்டு, அவனுடைய எச்சில் காசில் வாழ்ந்த ‘சரபோஜி’க்கள் தாங்களும் மகாராஜாக்கள் என்று இங்கே கம்பீரமாக நடமாடிக் கொண்டிருந்தனர் (சரபோஜி – தியாகய்யர் காலத்து தஞ்சை மன்னன்). பீத்தோவனின் மூளையில் மின்னலாக வெட்டிப் பின்னர் பற்றிக் கொண்ட தீப்பிழம்பல்ல சிம்பனி; மொசார்ட்டுக்கு கர்த்தர் அதை அருளிச் செய்யவுமில்லை. மன்னனுக்கும் மக்களுக்கும் அன்று நடந்த யுத்தத்தில் அவர்கள் மக்கள் பக்கம் நின்றார்கள்; ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்த ஃப்ரீமேசோனியச் சிந்தனைகளை ஆதரித்தார்கள்; அதைப் பிரகடனமும் செய்தார்கள்.

”சுதந்திரம் –  சமத்துவம் – சகோதரத்துவம்; இயற்கை – பகுத்தறிவு – பேரறிவு” என்ற தங்கள் நம்பிக்கையை இசையில் வடித்தார்கள். ‘அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்;  பிரம்மம் – பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது. எந்தப் ‘பெரியவாளும்’ இதற்கு ஆசீர்வதிக்கவும் முடியாது. இதுதான் காரணம்; இதுவே உண்மை. ‘வேத கணிதம்’ பற்றிப் பிதற்றிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரப் பயித்தியங்கள் ‘வேதகாலத்திலேயே சிம்பனி இருந்திருக்க வேண்டும்” என்று எங்கேயாவதொரு மூலையில் ஓலைச் சுவடிகளைக் கிளறிக் கொண்டிருக்கும் அபாயமும் உண்டு.

இத்தகையப் பைத்தியங்கள் கர்நாடக இசைக்கு முட்டுக் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட ‘சிந்து பைரவி’ படத்தை இன்னொரு முறை தரிசித்தால் பித்து தெளியக்கூடும். ‘மகா கணபதிம்…’ என்று சிவகுமார் கச்சேரியைத் துவங்கியவுடன் காமெராமேன் காமேராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்கு ஓடுகிறார்; தொலைக்காட்சியாக இருந்தால் பாடகரின் முகத்தையே ஒரு மணி நேரம் காட்டிக் கொண்டிருக்கலாம். இது சினிமாவாயிற்றே. காமெரா கடல், மலை, ஆறு, பிள்ளையார் கோயில் மீண்டும் ஆறு, மலை, கடல், பிள்ளையார் கோயில் என்று திரும்பத் திரும்ப காட்சி படிமங்களைத் தேடி அலைந்து சோர்ந்து கடைசியில் பாடகர் காலிலேயே வந்து விழுகிறது. காரணம் என்ன? இகலோகத்து மாந்தர்களுக்கும் இந்த இசை – கீர்த்தனைக்கும் எள்ளவும் சம்பந்தம் கிடையாது.

மன்னர்கள், பிரபுக்களின் ஒற்றை ஆணைக்குரலை மீறி பல்வேறு மக்கட் பிரிவினரின் குரலும் ஒலிக்கத் தொடங்கியதன் சமூக விளைவு, புரட்சி – ஜனநாயகம். மோனோடோனின் கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் புரட்சியானது இசைத்துறையில் ஹார்மனியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. சமூகத்தைப் போலவே இசையும் அடுத்த நிலைக்கு முன்னேறியது.

இப்படி 18 -ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த, இசைத்துறை முன்னேற்றம் தான் ஹார்மனி. இதன் முக்கிய அங்கமான சுருதிக்கும் ஸ்தாயிக்குமுள்ள உறவை தேவதூதன் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ந்தான் பித்தகோரஸ். (செங்கோண முக்கோணத் தேற்றம் – பித்தாகோரஸ்தான்) வெவ்வேறு அளவில், கம்பிகளை இழுத்துக் கட்டி ஸ்வர வரிசையை எழுப்பினான். செவியால் உணரக்கூடிய ஒலியைக் கணிதத்தால் அளந்தான். இசையே கணிதம் என்றான்; அவன் ஒரு தத்துவஞானி. எனவே ஒருபடி மேலே போய் ‘எல்லாம் கணிதமே’ என்றான். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நம் ‘பாரத தத்துவஞானி’ கிருஷ்ண பரமாத்மா ‘எல்லாம் நானே’ என்று அர்ச்சுனன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தான்.

2500 ஆண்டுகளுக்கு முன் தன் புருவத்தை நெரித்து உலகை ஆராய்ந்து அறிவித்த அந்த மேதையின் வீரம் நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. ஆம்! அறிவியல் துறைகளிலேயே துல்லியமான கணிதம் பேரண்டத்தின் புற உலகின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது; கலைத்துறை அனைத்திலும் சூக்குமான இசை, மன உலகின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முற்படுகிறது. இசையில் கணிதம் உண்டு; ஆனால் இசையே கணிதமல்ல. தாளகதியும் ஸ்வரமும், ஸ்தாயியும் கணிதத்தால் கட்டுப்படுத்தப்படுபவை. இசையைத் தூண்டும் மன உணர்வுகளும், இசையால் தூண்டப்படும் மன உணர்வுகளும் கணிதத்திற்குக் கட்டுப்படாதவை. இதை 2500 ஆண்டுகளுக்கு முன் பித்தகோரஸ் சிந்தித்திருக்க முடியாது.

”என்ன பெரிய இளையராஜா? பீத்தோவன் காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது; இளையராஜா கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. சிம்பனி அமைப்பதில் என்ன கஷ்டம்?” என்று சில மேதாவிகள் தங்கள் அறிவியல் ஞானத்தை காட்டுகிறார்கள். ‘அமெரிக்காவில் ‘டியூன் வங்கி’யில் ஒரு லட்சம் மெட்டுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். வேண்டியவர்கள் வேண்டியதைப் பொறுக்கிக் கொள்ளலாம்’ என்கிறது விகடன். பொறுக்குபவர்கள் தங்கள் தேவைகளுக்கும் தம்மையொத்த பொறுக்கிகளையே பொறுக்கி எடுக்கிறார்கள். மணிரத்னம், ஷங்கர் வகையறா தங்கள் அலைவரிசையில் ரகுமானைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டதில் வியப்பில்லை. ஏற்கனவே ஒரு லட்சம் மெட்டுகள் உள்ளன என்றால் ‘லட்சத்து ஒன்று’ என அடுத்தபடியில் கால் வைப்பவன்தான் இசையமைப்பாளன். புதிது புதிதாய் தன் கண் முன்னே விரியும் வாழ்க்கையை, அதன் உணர்வுகளை பிரதிபலிப்பவனே கலைஞன். ‘எல்லாம் கங்கைக் கரையிலேலே சொல்லியாகிவிட்டது’ எனும் கூட்டம்தான் ‘எல்லாம் கம்ப்யூட்டருக்குள்’ இருப்பதாகவும் கூறுகிறது.

ஹார்மனியில் ஒலி உடன்பாடு, ஒலி முரண்பாடு இரண்டின் இயக்கத்தையும் ஆய்வு செய்து மாபெரும் சிம்பனி இசை ஓவியங்களைத் தீட்டிய மொசார்ட்டும், பீத்தோவனும் இசையின் இயக்கத்தைக் கணக்காக நிரூபித்த பித்தகோரசையே தம் முன்னோடியாக அறிவித்தார்கள். ராஜாவை இருட்டடிப்பு செய்ய முயல்வோர் பித்தகோரஸின் சமகாலத்திய கிருஷ்ண பரமாத்மாவின் வாரிசுகளாக இருக்கிறார்கள்! இது வரலாற்றின் நகைச்சுவை போலும்!

ஹார்மனி ததும்பும் இசைக்கோர்வைகள் திரையிசையில் வந்து விழ விழ ”என்ன, எல்லாம் சினிமா குப்பைதானே” என்று அவாள் முனகிக் கொண்டனர். ஆனால் தனி இசையாக ‘என்ன பெயரிட்டு அழைப்பது’ (How to name it) ‘காற்றைத் தவிர வேறிலலை (Nothing but wind) – ஆகிய இரு இசைப்பேழைகள் வந்தவுடன் இசை அறிஞர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; அவாளோ முகம் திருப்பிக் கொண்டார்கள். இப்போது ‘கிராண்ட் சிம்பனி’ ஒலிப்பேழையாக வருவதற்கு முன்பே ‘இது கலவை இசைதான் (Fusion)  என்று ‘கிசுகிசு’ பரப்புகிறார்கள். ‘அக்மார்க்’ அய்யர்வாள் எல்.சுப்பிரமணியம் போன்றோரே செய்யத் துணியாத, முடியாத ஒன்றை ‘பண்ணைப்புரத்தான்’ செய்வதா என்ற வக்கிரம் தவிர இது வேறென்ன?

இளையராஜா அமைத்திருக்கும் சிம்பனி, ஐந்து இசையோட்டங்களில் அமைந்த முற்றிலும் மேலை இசை முறையிலானதுதான். எனினும் இந்திய இசை மரபிலிருந்து பெற்ற  தாள முறைகள், பாணி, அலங்காரங்கள் ஆகியவை நிறைந்து காணப்படுவதாக பிலார்மோனிக் இசைக் குழுவினர் கூறுகின்றனர். அந்த சிம்பனியின் ஒலிப்பேழை வெளிவரும்போதுதான் அதன் செய்தி (உள்ளடக்கம்) குறித்து நாம் அறிய இயலும்.

”சிறந்த இசைக்கு வார்த்தைகளின் துணை தேவையில்லை” என்கிறார் ராஜா. அதாவது, தன்னளவில் முழுமை பெற்ற சுயேச்சையான கலை வடிவம்தான் இசை. மார்க்சிய இசை அறிஞரும், ஜெர்மனிய இசையமைப்பாளருமான ஐஸ்லர் ‘திரைப்படத்தில் பின்னணி இசை என்பது காட்சிக்குக் கனம் கூட்டுவதாக மட்டும் இருக்கக் கூடாது, காட்சியின் மீதான விமரிசனமாக இருக்க வேண்டும்” என்கிறார். ஆனால், நமக்குக் கோபத்தைத் தூண்டாத காட்சியில் ராஜாவின் இசையில் கோபம் கொப்புளிக்கிறது! நமக்கு அருவெறுப்பூட்டும் காதல் காட்சிகளில் அவரது இசை கொஞ்சுகிறது! நம்மைச் சிரிக்கச் செய்யும் சோகக் காட்சிகளில் அவரது இசை கண்ணீர் விடுகிறது. நாய்குடைகளாய் மறைய வேண்டிய பாடல் வரிகள் இசையமுதம் பருகி ஆலமரமாய் நிலை பெறுகின்றன. ராஜாவின் இசையெனம் நறுமலர்களால் மூடப்பட்ட மலங்கள் வாழ்வு பெற்று விடுகின்றன.

நாம் காறி உமிழ்ந்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறும் காட்சிகளிலிருந்து ‘உணர்வெழுச்சி’ பெற்று அவரால் எங்ஙனம் இசையமைக்க முடிகிறது? ‘நான் ஈடுபாட்டோடுதான் செய்கிறேன்’ என்கிறார் ராஜா. இது அதிர்ச்சியூட்டுகின்ற, ஆனால் நாணயமான பதில். ரே, கோடார்டு, ஃபெலினி என்று பத்திரிகைகளில் அறிவு ஜீவியாக நடித்துவிட்டு, திரையில் ஜிகினா உடையில் அற்பர்களாக வாழும் வேடதாரிகளை ஒப்பிடும்போது இந்தப் பதில் நாணயமானது; அதேநேரத்தில் மசாலாக்களுக்கு ஈடுபாட்டோடு இசையமைக்கும் நபர் சிம்பனி படைக்கும் கலைஞனாக எங்ஙனம் உயர முடியம் என்பது முரண்பாடு.

”அற்பமான காட்சிகளுக்கு இவர் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் விரிவாக இசையமைக்கிறார்?” என்று அதிசயிக்கிறார் ராஜாவின் நண்பர் பம்பாய் இசையமைப்பாளர் சந்த்வார்க்கர். ‘‘நான் பரிசோதனைகள் செய்து பார்க்கிறேன்” என்கிறார் ராஜா. அந்த முரண்பாட்டுக்கு இதுவே பதில். திரையில் ஓடும் காட்சிகளுக்கல்ல. அவை தன் மனக்கண்ணில் தோற்றுவிக்கும் காட்சிகளுக்குத்தான் அவர் இசையமைக்கிறார். காட்சியின் சிறுமை இசையால் பெருமைப் படுத்தப்படுகிறது. இசையின் பெருமை காட்சியால் சிறுமைப்படுத்தப்படுகிறது. பாடல்களைப் பொறுத்தவரை, கதை, காட்சியமைப்பு பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை இசைப் படிமங்களாக்குகிறார் ராஜா. இவ்வாறு ஒலியின் கவிதை எழுதப்பட்டபின் அதன் பரிமாணத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் சொல்லின் கவிதை (பாடல்) தடுமாறுகிறது. இசைப் படிமங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்சிப்படிமம் தோற்று விழுகிறது.

மலங்களும் குப்பைகளும் ‘சாகாவரம்’ பெறுவது இப்படித்தான் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்; ஆனால் இவற்றுக்கு ராஜா ஏன் சாகாவரம் ‘அருள’ வேண்டும்? வியாபாரம் – அதுதான் பதில். அற்ப உணர்வுகளைக் காசாக்கும் நோக்கத்திற்காகவே படம் எடுக்கும் தயாரிப்பாளன், அவற்றின் நெடியைக் கூட்டத்தான் இளையராஜாவை அமர்த்திக் கொள்கிறானேயன்றி, ஐஸ்லர் கூறுவதுபோல இசை விமரிசனம் எழுதி வாங்குவதற்கு அல்ல. இளையராஜா மட்டுமின்றி தொழில் முறைக் கலைஞர்கள் அனைவருமே சந்திக்கும் பிரச்சினை இது. எனினும் கவிதையும் ஓவியமும் பேசும் மொழி இசையைக் காட்டிலும் துல்லியமானது; அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் கூர்மையானது. இசையோ சூக்குமமானது. எளிதில் பிடிக்கு அடங்காதது.

வர்த்தக ஏடுகளின் கதை, கவிதைகளின் கருத்துக்கு ஏற்ப ஓவியம் வரையும் ஓவியன் தன் சொந்தக் கருத்தைச் சொல்ல ஓவியக் காட்சி வைக்கிறான்! ராஜா சிம்பனி அமைக்கிறார்! எனினும் இந்தக் கலை வியாபாரத்தில் ஒரு கலைஞர் செய்து கொள்ளும் சமரசத்தின் அளவு  அவனுடைய நாணயத்தையும், ஆளுமையையும் ‘சகிப்புத் தன்மை’யையும் அளவிடும் அளவு கோலாகிறது. ”எண்சீர் விருத்தம் பாடுவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை” என்ற வாலியின் ‘பிரகடனம்’தான் இதன் பாதாளம் – ஆழம்.

அதேநேரத்தில், இந்தக் ‘குப்பைகளில்’ விழுந்து புரளாமல், மியூசிக் அகாதமியிலும் திருவையாற்றிலும் கச்சேரி நடத்திக் கொண்டிருந்திப்பாரானால், சத்தியமாக ராஜா சிம்பனி அமைத்திருக்க முடியாது. ஏனெனில் சினிமா – கோணல் மாணலாகவாவது – மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. தூய கலையோ தந்தக் கோபுரத்திலிருந்தபடியே குப்பையைச் சபித்துக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம் இகலோகத்திலேயே ‘போகாத ஊருக்கு’ வழிகாட்டுகிறது; நுங்கம்பாக்கமோ (சங்கீத வித்வ சபை) பரலோகத்திற்கு, ‘இல்லாத ஊருக்கு’ – வழி காட்டுகிறது. ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளிக்கக்கூடாது.

இசைதான் சூக்குமமேயொழிய இளையராஜாவின் உலகக் கண்ணோட்டம் ‘பூதக் கண்ணாடி’ வைத்துக் கண்டுபிடிக்குமளவு சூக்குமமானதல்ல; அவர் பெரிதும் விரும்புகின்ற ஐரோப்பிய இசை மேதை பாக்கைப் போலவே ராஜாவிடமும் ஆன்மிகமும் மனிதாபிமானமும் கலந்தே இருக்கிறது. பார்ப்பன மரபுக்கெதிராகச் சிறுமியை வேதம் சொல்ல வைக்கிறார்; ‘நான் இந்து அல்ல’ என்று பிலார்மோனிக் குழுவினரிடம் கூறுகிறார்; கர்நாடக இசைக்குக் கேவலம் சினிமாக்காரர்களாகிய நாங்கள் ‘உயிரூட்ட’ முடியுமா என்று அடிவெட்டு வெட்டுகிறார். கர்நாடக இசையின் சம்பிரதாயங்களை உடைத்துச் சநாதனிகளைச் சீண்டுகிறார்; கர்நாடக இசையின் வரம்புகளைக் கூறி அதன் முட்டாள்தனமான தன்னகங்காரத்தைச் சாடுகிறார்; ‘கர்நாடக வித்துவான்கள் பாடும் இசையைப் போலவே நாய் குரைப்பதும் ஒரு இசைதான்’ என்று அத்வைதிகளின் மொழியிலேயே வியாக்கியானம் செய்து அவாளின் வெறுப்பைத் தேடிக் கொள்கிறார். புகழ்மிக்க பாடகர்களும், இசையமைப்பாளர்களும் ‘இசையுலகின் சூத்திரர்களாக’ அவாளிடம் கைகட்டி நிற்கும் திரையுலகில் இது அதிசயம்தான்; மேடைக் கச்சேரியொன்று நடத்தி வசிட்டர்களின் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்குவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்தின் மத்தியில் இது கலகம்தான்; இதுதான் இசைத்துறையின் உன்னதமான சிம்பனி என்னும் உண்மையை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது.

ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு Royal_Philharmonic_Orchestra
லண்டன் – ராயல் ஃபிலார்மோனிக் இசைக்குழு

சிம்பனி – அது தன்னுடைய ஆன்ம விடுதலையைச் சூனியத்தில் தேடியலைந்த தனியொரு இதயத்திலிருநது கசிந்த இசை வடிவமல்ல; தங்கள் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகளை நொறுக்கி அதன்மூலம் ஆன்ம விடுதலையைச் சாதிக்க முயன்ற மனிதகுலத்தின் இதயத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சி வெள்ளம். அது இறைவனின் படைப்பாற்றலின் முன் வியந்து மண்டியிட்ட மனிதனின் அவலமல்ல; தன்னுடைய படைப்பாற்றலை அறிவித்த மனித குலத்தின் கம்பீரம். மேலைநாட்டின் புரட்சிகர இசைமரபுடன் நமது பறையும், சூழலும் இணைந்து உருவாக இருக்கும் ஒரு பிரம்மாண்டமான இசை ஓவியம் நம் கண்முன் மங்கலாக விரிகிறது. இளையராஜாவின் ஆற்றல் இதைச் சாதிக்கும். அந்த ஓவியம் உருவாக்கவிருக்கும் உணர்வை அவரது சித்தாந்தம் தீர்மானிக்கும்.

அம்பேத்கரின் அரசியல் சட்டத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டு, இந்து மதத்தின் மீதான அவருடைய தாக்குதலை இருட்டடிப்பு செய்தது பார்ப்பனியம்! இளையராஜாவின் ஆன்மீகத்தையும் சீரங்கம் கோபுரத்துக்குக் கொடுக்கும் காசையும் வெட்கமின்றிப் பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனக் கும்பலும், தன் இசை மடமையின் மீதும், போலித்தனத்தின் மீதும் இளையராஜா தொடுக்கும் தாக்குதலை மட்டும் கவனமாக இருட்டடிப்பு செய்கிறது. அதன் கோரமுகத்தைப் பச்சையாக உரித்துக் காட்ட இளையராஜா தயங்கினாலும், தனது எதிர் நடவடிக்கை மூலம் பார்ப்பனியம் தன் அற்பத்தனத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கிறது.

”இருபத்தியொன்றாம் நூற்றாண்டெங்கும் உலகம் இளையராஜாவின் இசையில் திளைக்கும்” என்கிறார் பிலார்மோனிக் குழுவின் நடத்துனர். இருபது நூற்றாண்டுகளாக முகவரியில்லாதவர்கள், வருணத்தில் சேராதவர்கள் என்று யாரை இருட்டடிப்பு செய்ததோ, அவர்களில் ஒருவரின் பெயரை ‘மேற்பார்வை முகவரி’யாகப் போட்டுத்தான் இசை உலகில் இன்று தன்னை பார்ப்பனக் கும்பலும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘மேஸ்டிரோ’ என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள் பிலார்மோனிக் குழுவினர்; ஆசியன் என்கிறது உலகம்; இந்தியன் என்று அவசரமாக முத்திரையிடுகிறது பாராளுமன்றம் – அதுவும் ஒரு தமிழன் முன்மொழிந்த பிறகு. தமிழன் என்று அரவணைக்கிறது தமிழகம்.

மாபெரும் மேதைகளின் வரிசையில் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று பிலார்மோனிக் கலைஞர்கள் பெருமைப் படுகிறார்கள்; பண்ணைப்புரத்துப் பண்ணைகளோ கவலைப்படுகிறார்கள் – இன்னொரு ராஜா உருவாகிவிடக் கூடாதே என்று.

அந்தப் பண்ணைப்புரத்தில், ராசய்யாவின் (இளையராஜா) சகோதரர்கள் தேநீர் அருந்த இன்றும் எமது விவசாயிகள் விடுதலை முன்னணி போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரத்து மக்களுக்கு முறைப்பாரி தெரியும்; தெம்மாங்கு தெரியும், ஒப்பாரி தெரியும்; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்கள் பாட்டன்மார் என்ன மெட்டுகளில் பாட்டுக் கட்டினார்களோ அவையெல்லாம் தெரியும்; அவை மட்டும்தான் தெரியும். அவர்கள் கைமாற்றித் தந்து சென்ற பறை தெரியும்.

அவர்களுக்கு சிம்பனி தெரியாது; புரியாது; அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒரு மெட்டு; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்களை அழுத்தும் சோகத்தை, தாங்கள் அழுத்தி வைத்திருக்கும் கோபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மெட்டு – ஹார்மனியில் ஒரு இழை.

___________________________________

புதிய கலாச்சாரம் – அக்டோபர், 1993.
___________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!

நேபாள்அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள  மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த  ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில்  இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

ராம் குமார் சர்மா, முன்பு லோக்தாந்திரிக் என்ற மாதேசி பிராந்தியக் கட்சியில் இருந்தவர். பின்னர் மாவோயிஸ்டு கட்சியில் இணைந்த அவர், அதன் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார். தற்போது நேபாளத்தில் நடந்துவரும் பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு வேட்பாளரான பிரசந்தாவை ஆதரிக்குமாறு நேபாள மாதேசி கட்சியினரிடம் கோரியதுதான் அவர் செய்த குற்றம். நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதே இந்தியாவின் நோக்கம். எனவேதான் இந்த மிரட்டல்.

கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த ராம் குமார் சர்மா, இதனை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, பணம் கட்டிய பின்னர் திடீரென இடமில்லை என்று அவரது மகளை 11-ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்துள்ளது, பள்ளி நிர்வாகம். தனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு ராம் குமார் சர்மா அரசியல் நிர்ணய சபையிடம் கோரியுள்ளதோடு, நேபாள அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளார்.

இந்திய உளவுத் துறையினரும் இந்தியத் தூதரகத்தினரும் இவற்றை மறுத்த போதிலும், நேபாளத்தில் யாரும் இதை நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், நேபாளத்தின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகவே இந்தியா தலையிட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

“காந்திபூர்’’,”காத்மண்டு போஸ்டு” முதலான நாளேடுகளை நடத்திவரும் நேபாளத்தின் பெரிய பத்திரிகைக் குழுமமான காந்திபூர் பப்ளிகேஷன்ஸ், இந்தியாவின் தலையீட்டை அவ்வப்போது விமர்சித்து எழுதி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவிலிருந்து கொல்கத்தா துறைமுகத்துக்கு கடந்த மே மாதத்தில் வந்த அந்நாளேட்டுக்கான செய்தித்தாள் காகிதம், இந்திய உளவுத்துறையால் நேபாளத்துக்கு அனுப்பப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது.  இதனால் அப்பத்திரிகைக் குழுமம் தொடர்ந்து நாளேடுகளை வெளியிட முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்தியத் தூதர் ராகேஷ் சூட்-இடம் இப்பத்திரிகை நிறுவனத்தினர், தாங்கள் ‘ஆக்கபூர்வமான’ கட்டுரைகள் எழுதுவதாக உறுதியளித்த பின்னரே, பெட்டகங்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதரான  ஷியாமா சரண், நேபாள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஆலோசனை கூறுவது என்ற பெயரில் நேபாளத்துக்கு வந்து பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துள்ளார். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கக் கூடாது என்று அவர் பல கட்சிகளிடமும் எச்சரித்ததாக நேபாள ஊடகங்கள் அம்பலப்படுத்தி செய்தி களை வெளி யிட்டன.

நேபாளத்தில் முடியாட்சிக்கு எதிரான பேரெழுச்சியைத் தொடர்ந்து, ஐ.நா.மேற்பார்வையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. அதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஏப்ரல் 2008-இல் தமது தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவினர். நேபாளத்தில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட போதிலும், மன்னராட்சியால் உருவாக்கப்பட்டு, மன்னராட்சியைக் காத்துவந்த நேபாள இராணுவம் அப்படியே தக்கவைக்கப்பட்டது, நேபாள மக்கள் எழுச்சியின் பலவீனமானமாகும். மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் தேர்தல்கள் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமில்லாத  அரசாங்கங்கள்கூட, இராணுவத்தின் துணையுடன் ஒவ்வொருமுறையும்  கலைக்கப்படுவதும் கவிழ்க்கப்படுவதும் ஏற்கெனவே நடந்துள்ளதால், இனி நேபாள இராணுவம் குடியாட்சிக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள்  அறிவித்தனர்.

ஆனால்,  அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகவும், புதிய இடைக்கால அரசின் ஒப்புதலோ, உத்தரவோ இல்லாமலும் மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவத்தின் தளபதியான ருக்மாங்கத் கடுவால், இந்தியாவின் ஆசியுடன் நேபாள இராணுவத்தில் 2800 பேரை தன்னிச்சையாகச் சேர்த்தார். பல இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு செய்தார். இது சட்டவிரோதமானது என்று மாவோயிஸ்டுகளின் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அவர் உதாசீனம் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குக் கட்டுப்பட மறுத்து, சட்டவிரோதமாகச் செய்யல்படும் இத்தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ய மாவோயிஸ்டுகளின் அரசாங்கத்தின் பிரதமரான பிரசந்தா உத்தரவிட்டார். இருப்பினும், போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவ், சட்டவிரோதமான வழியில் பிரதமர் பிரசந்தாவின் உத்தரவை ரத்து செய்து, இராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்க உத்தரவிட்டார்.

நேபாள அரசியல் கட்சிகள், நேபாள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் ஆதரவுடன் திரைமறைவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடுவதைக் கண்ட மாவோயிஸ்டுகள், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் இடைக்கால அரசிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தனர். நேபாள இராணுவத் தளபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட்டவரா, அல்லது அரசுக்கு மேலான அதிகாரம் கொண்டவரா? என்ற கேள்வியை நாட்டின் முன்வைத்து,  குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு வெளியே மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, நேபாளத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் கூட்டணி அரசை நிறுவின. மா-லெ கட்சியின் மாதவ குமார் நேபாள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்த அரசாங்கமோ வெளிப்படையாகவே இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலி அரசாகவே செயல்பட்டது. அதன் துரோகங்கள்-சதிகளை எதிர்த்து நாடாளுமன்றப் புறக்கணிப்பு, தெருப்போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் -என  மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வந்தனர்.

நேபாள எழுச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக் காலம் கடந்த மே 28- ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இக்காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்ட் மா-லெ கட்சி மற்றும் பிற கட்சிகள் தமது வர்க்க நலன் காரணமாக நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன. இக்கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் சட்டங்களைக்கூட ஏற்கத் தயாராக இல்லை. இவற்றாலும், திரைமறைவில் நடந்த இந்தியாவின் மேலாதிக்க சதிகளாலும் அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டங்களை இயற்றும் பணி நிறைவேறவில்லை.

இதனால் அரசியல் நிர்ணயசபையின் காலம் முடிவடைவதையொட்டி நெருக்கடி தீவிரமானது. பின்னர், கடைசி நேரத்தில் மூன்று பெரிய கட்சிகளான நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி(மாவோயிஸ்ட்), நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுக் கருத்துக்கு வந்தன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது, 2006-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமைதி நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை அளித்து பொதுக் கருத்தின் அடிப்படையிலான தேசிய அரசை நிறுவுவது, மாதவ குமார் நேபாளை பிரதமர் பொறுப்பிலிருந்து விலக்குவது – ஆகிய மூன்று முடிவுகளை அறிவித்தன. இருப்பினும், அரசியல் நிர்ணய சபை நீட்டிக்கப்பட்ட மறுநாளே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் தமது பழைய ஆட்டத்தைத் தொடர்ந்தன.

13 மாதங்கள் பதவியில் இருந்த பிரதமர் மாதவ குமார் நேபாள் கடந்த ஜூன் 30-ஆம்தேதி  பதவி விலகி,  அடுத்த பிரதமர் பதவியேற்கும்வரை தற்காலிகப் பொறுப்பில் இருந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பிரதமராக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற 600 பேர் கொண்ட     நேபாள நாடாளுமன்றத்தில் 301 வாக்குகள் தேவை.

மாவோயிஸ்டுகள் 237 எம்.பி.க்களைக் கொண்டுள்ளனர். நேபாள காங்கிரசு 114 எம்.பி.க்களையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி 109 எம்.பி.க்களையும் கொண்டுள்ளன.  இரு பெரும் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது வேட்பாளர்களை அறிவித்தன. போலி கம்யூனிஸ்டு கட்சியான மா-லெ கட்சி, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்காததால் அக்கட்சி போட்டியிடவில்லை.

மாவோயிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசந்தாவும் நேபாள காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவரான ராமச்சந்திர பௌதேலும் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியடைந்தனர். பிரசந்தாவுக்கு 242 வாக்குகளும் பௌதேலுக்கு 124 வாக்குகளும் கிடைத்தன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாதேசி கட்சிகளும் இதர சிறிய கட்சிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மா-லெ கட்சி நடுநிலை வகித்தது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், அடுத்த கட்டமாக மீண்டும் ஜூலை 23-ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கான மறுதேர்தல் நடந்தது. அப்போதும் இதே அளவில்தான் பெரிய கட்சிகளின் வலிமை இருந்தது. மீண்டும் ஆகஸ்ட் 2,  6,  23 – ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்த போதிலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏறத்தாழ இதே நிலைமைதான் நீடித்தது. இப்போது மீண்டும் ஆறாவது முறையாக செப்டம்பர் 5-ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைக்கான அரசியல்பணித் திட்டக் குழுவின் (UNMIN) கண்காணிப்புக் காலமும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால், இக்குழுவை நீட்டிக்கக் கோருவதா, வேண்டாமா என்பதையொட்டி மாவோயிஸ்டுகளுடன் இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன.

ஐ.நா. குழு கடந்த 2007 ஜனவரி முதலாக நேபாளத்தில் இயங்கி வருகிறது. மாவோயிஸ்டுகளின் செம்படையையும் நேபாள இராணுவத்தையும் இது கண்காணித்து வந்தது. ஓராண்டு காலத்துக்கு இப்பணி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேறுவதில் தாமதமானதால், நேபாள அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இக்குழுவை தொடர்ந்து நீட்டித்து வந்தது.

தற்போது நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியான சத்ரமான்சிங் குருங், ஐ.நா.வின் கண்காணிப்புக் குழு இனி அவசியமில்லை என்கிறார். மேலும், நேபாள இராணுவம் என்பது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் இல்லை என்றும், நேபாள இராணுவம் புதிதாக ஆளெடுப்பையும் ஆயுதக் குவிப்பு செய்வதையும் ஐ.நா. குழு எதிர்ப்பதற்கு எவ்வித உரிமையுமில்லை என்றும் அவர் கொக்கரிக்கிறார்.

ஐ.நா.கண்காணிப்புக் குழுவை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை நேபாளத்தின் குடியாட்சியும், குடியாட்சியின் முக்கிய அங்கமான நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, நேபாள இராணுவம் அல்ல என்கின்றனர், மாவோயிஸ்டுகள். அமைதி நடவடிக்கைகள் நிறைவேறும்வரை ஐ.நா.குழு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், நேபாள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திலும் நேபாள இராணுவத் தளபதியின் முடிவை ஆதரித்து, மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன.

அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப நேபாளத்தின் பிற்போக்கு கட்சிகளும் புரட்டல்வாதக் கட்சிகளும் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகின்றன. அரசியல் நிர்ணய சபையில் தனிப்பெரும் கட்சியான மாவோயிஸ்டு கட்சிக்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர இக்கட்சிகள் மறுக்கின்றன. மன்னராட்சியின் ராணுவத்தையே தற்போதைய நேபாளத்தின் இராணுவம் என்றும், மாவோயிஸ்டுகளின் 19,600 பேர் கொண்ட செம்படையை அதனுடன் இணைக்கமுடியாது என்றும் இவை வாதிடுகின்றன.  ஐ.நா.மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இப்போது இக்கட்சிகளின் ஆதரவோடு நேபாள இராணுவத்துக்கு ஆளெடுப்பதும் ஆயுதங்களைக் குவிப்பதும் நடக்கத் தொடங்கி விட்டன. இச்சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தி,  தாங்களும் செம்படைக்கு ஆளெடுப்பை நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் இராணுவம்-போலீசை ஏவி தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கிறது, நேபாளஅரசு

மன்னராட்சிக்கு எதிரான எழுச்சி உச்சநிலையை அடைந்த போது, மன்னராட்சி இனியும் நீடிக்க முடியாமல் முட்டுச் சந்துக்கு வந்தபோது, மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி கட்டிக் கொண்ட நேபாள அரசியல் கட்சிகள், இன்று அதை முறித்துக் கொண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நிற்பதையும், நிலைமை உச்ச கட்டத்தை எட்டிவிட்டதையும் இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன. “மாவோயிஸ்டுகளை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியாக ஏற்க வேண்டுமானால், செம்படையைக் கலைக்க வேண்டும். போர்க்குணமிக்க இளம் கம்யூனிஸ்டு கழகத்தையும் கலைத்து விட வேண்டும். மன்னராட்சிக்கு எதிரான மக்கள் யுத்தக் காலத்தில் செம்படை கைப்பற்றிக் கொண்டு கூலி-ஏழை விவசாயிகளிடம் விநியோகித்துள்ள நிலப்பிரபுக்களின் நிலங்களையும் வீடுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவையனைத்தையும் நிறைவேற்றாதவரை புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்ற இயலாது” என்று இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி “நாட்டுப்பற்றுகொண்டோரும் இடதுசாரிகளும் ஜனநாயகக் குடியரசை ஆதரிப்போரும் அணிதிரள்க!” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராட விழைகின்றனர். நேபாளத்தில் தேசிய-ஜனநாயக  கூட்டுத்துவ மக்கள் குடியரசை நிறுவவும், அதை அரசியல் நிர்ணயசபையில் சட்டமாக நிறைவேற்றவும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

2009-இல் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டக் கோரி மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, மாவோயிஸ்டுகள் தலைமையில் எந்தவொரு கூட்டணி அரசும் அமையக் கூடாது; இதர கட்சிகளின் தலைமையில் அரசு அமைந்தாலும் அதில் மாவோயிஸ்டுகளைக் கூட்டணி சேர்க்கவும் கூடாது  என்பதுதான் இந்திய மேலாதிக்கவாதிகளின் நோக்கம். இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிராக, சுதந்திரமாக-சுயாதிபத்திய உரிமையுடன் தனது சொந்த அரசியல் சட்டத்தை நேபாளம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் இந்தியா மற்றும் உலகெங்குமுள்ள பிற்போக்கு சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மீண்டும் கம்யூனிச சித்தாந்தம் தலைதூக்கக் கூடாது  என்ற வெறியோடு அமெரிக்கா  தலைமையிலான உலக முதலாளித்துவம் நேபாள உள்விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்து வருகின்றது. இதனால்தான் மக்களிடம் செல்வாக்கிழந்துள்ள போதிலும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அல்லாத இதர அரசியல் கட்சிகளை இந்தியாவும் உலக முதலாளித்துவமும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துகின்றன. இதனால்தான் நேபாளத்தில் நிலவி வரும் நாடாளுமன்ற முட்டுக்கட்டை முடிவுக்கு வராமல், மீண்டும் புதிய நெருக்கடிகளும் இழுபறிகளுமாகத் தொடர்கிறது.

வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிய அண்டை நாடுகளின் சுதந்திரம்-சுயாதிபத்தியம் என்பனவெல்லாம் இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை அடிமை நாடுகளாகக் கருதி தலையிட்டு மேலாதிக்கம் செய்வதையும் தனது இயல்பான நடவடிக்கையாகவே இந்தியா கருதுகிறது. இதற்கேற்ப நாட்டு மக்களிடமும் இம்மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் கருத்தை ஊட்டி வளர்த்துள்ளது. இந்தியாவின் தலையீடு தெற்காசிய வட்டாரத்திலும் குறிப்பாக, நேபாளத்திலும் மேலும் மூர்க்கமாகி வருவதையும், இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா கீழ்த்தரமாக முயற்சித்து வருவதையும் நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன.

___________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010
___________________________________

உலகின் அழகிய மணமக்கள் !

162

புதிய கலாச்சாரத்தின் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியனுக்கும், ம.க.இ.க மையக் கலைக்குழவின் தோழர் அஜிதாவுக்கும் தேனிமாவட்டம் தேவாரத்தில் கடந்த ஞாயிறன்று புரட்சிகர மணவிழா இனிதே நடந்தேறியது. இந்த திருமணத்தில் பங்கு கொண்ட சந்தனமுல்லை இங்கே தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். -வினவு

_________________________________________________________________

மணமேடை
ஊர் மைதானத்தில் அமைக்கப்பட்ட மணமேடை

உலகின்  அழகிய   மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  உலகின் அழகிய  மணமகனை?

ஜோசிய‌ர்  சொன்னார் என்பதற்காக  மாங்கல்ய தோஷத்தை நீக்க மரங்களை இரண்டு  முறைகள் மணந்து, அதற்கு பின்னர்  நடமாடும்  மூன்றாவது  மரத்தை மணந்த ‘உலக அழகி’  ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனையா நினைத்துக் கொண்டீர்கள்  நீங்கள்?    ச்சே..ச்சே….நிச்சயமாக அவர்கள் இல்லை.

உலகின் எந்த மூலைக்குப்  போனாலும், ஏன் சந்திரனுக்கே சென்று வந்திருந்தாலும் சந்தியாவந்தனம் செய்வதை விடுவதில்லை –   ஆவணி அவிட்டத்தை விடுவதில்லை – ஒரு சம்பிரதாயம் விடாமல் எல்லா சடங்குகளையும்  நிறைவேற்றி,காசி யாத்திரைக்குச்  சென்று  அய்யர்  வைத்து ஓதி  நெருப்பை வலம் வந்து அம்மி மிதித்து நமது பண்பாட்டின் படிதான் திருமணம் செய்துக் கொள்வேன்  என்று பெருமையாக  சொல்லிக்கொள்ளும் பல தமிழர்களின் பகட்டான திருமணங்களுக்கு நடுவில் -‍உடலில் ஒரு பொட்டு தங்கம்  இல்லாமல் பெண்களை அடிமையாக்கும் எந்த சம்பிரதாயங்களுககோ, மூடநம்பிக்கைகளுக்கோ, போலி ஆடம்பரங்களுக்கோ  இடம்  தராமல்  தலைநிமிர்ந்து,  ‘இந்த சமூகத்தின் எந்த அழுக்குகளும் கறைகளும் எங்கள் மீது படவிடமாட்டோம்’ என்று  உறுதியான  கொள்கையுடன் நடந்த திருமணத்தின் மணமக்களான  தோழர்.அஜிதா மற்றும் தோழர்.பாண்டியன்-தான் அவர்கள் – உலகின் அழகிய  மணமக்கள்!

ஆம்,அங்கு ஜோடிக்கப்பட்ட  மேடை  அலங்காரங்களோ  கண்கவரும் மேடை வளைவுகளோ இல்லை; ஆனால் போலித்தனமில்லாத  சுயமரியாதை இருந்தது.

கை கூப்பி  வரவேற்கும் ஆட்டோமேடிக் பொம்மைகளோ,  கல்கண்டு டப்பாக்களோ  மணக்கும் சந்தனமோ இல்லை ;  ஆனால்,  பார்க்கும் யாவரையும்  நோக்கி புன்னகைக்கும் எளிமையும் தோழமையும் இருந்தது.

மண்டபத்தில்,  பளபளவென அடுக்கி வைக்கப்பட்ட புத்தம்புதிய சீர்வரிசை பாண்டங்களோ அட்டை பிரிக்கப்படாத வீட்டு உபயோகப்   பொருட்களோ இல்லை ; ஆனால் “நாங்கள்  விரும்பி ஏற்றுக் கொண்ட இவ்வாழ்க்கையை   சமூகத்தின் விடுதலைக்காக இதுவரை  தனியாக போராடிய வாழ்க்கையை இனி இருவருமாக ஒன்றாகத் தொடர்வோம்” என்ற உறுதியும், உத்வேகமும் இருந்தது.

திரை இசையை பாடி மகிழ்விக்கும் ஆர்கெஸ்ட்ராவோ, பட்டுப்புடவை சரசரப்புகளோ இல்லை;  “கலகலப்பு என்பது இவற்றில் இல்லை,   உண்மையான மகிழ்ச்சி என்பது போராட்டத்தில் இருக்கிறது” என்ற உறுதி  இருந்தது.  மக்களை சிந்திக்க வைக்கும் பேச்சாளர்களாலும்,  மக்களுக்கான கலையாலும் களை கட்டிய விழாக்கோலம் அங்கிருந்தது.

காது  பிளக்கும்  இரைச்சலான கெட்டிமேளம், நாயனங்கள்  இல்லை; ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லையும்  தூண்டி  உணர்வுகளை புதுப்பிக்கும் பறையும் புல்லாங்குழலும் இருந்தது.

சாதியோ, மதமோ, காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை; ஆனால் மனிதரை மனிதர் உள்ளன்போடு நேசித்து  அவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்து அங்கீகரிக்கும் உயர்ந்த பண்பு இருந்தது. தங்கள் மகன் மற்றும் மகளுக்காக  காலங்காலமாக மக்களை அழுத்தி வைத்திருக்கும் போலி நம்பிக்கைகளை தூக்கியெறிந்து, புதிய சமூக மாற்றங்களை மனமுவந்து  ஏற்கும் தெளிவும், தைரியமும், எதிர்கொள்ளும் துணிவும் அந்த பெற்றோர்களிடம் இருந்தது.

ஓ, சுய மரியாதைத் திருமணமா என்றா கேட்கிறீர்கள்…இல்லை…இல்லை….இது ஒரு புரட்சிகர   திருமணம்!

சாதி மத சம்பிரதாயங்களை மறுத்த சுயமரியாதைத் திருமணங்களைக் கேள்விப்பட்டிருப்போம்; ஏன்  பார்த்துமிருப்போம்.

ஆனால்,  கோடானுகோடி  மக்களின் நலனுக்காக தங்கள்  வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர்களின் புரட்சிகரத்   திருமணத்தை?

ஆம், முதல் முறையாக ஒரு புரட்சிகரத் திருமணத்திற்கு சென்று பங்கேற்ற  பிரமிப்பிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் இன்னும் மீள  முடியாமலிருக்கிறேன்.

மனித குல விடுதலைக்காக, கம்யூனிசமே தீர்வு என்று  தான் நம்பும் கொள்கைகளுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக  சொந்த   வாழ்க்கையை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக‌களை துச்சமென மதித்து சமூகத்திற்காக வாழும் உன்னத நோக்கத்திற்காக  அர்ப்பணித்துக்கொண்ட  இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட விழா அது! இதுதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாக  இருக்கிறது.

மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை ஈந்து தியாகிகளான தோழர்களை நினைவு கூர்ந்தபடி விழா ஆரம்பமாயிற்று.மணமக்களின் பெற்றோர்கள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட இரு தம்பதிகளும் மேடைக்கு வந்து வணங்கி அமர்ந்தனர்.அதன்பின், மணமக்கள் இருவரும் அழைக்கப்பட மேடையை நோக்கி இருவரும் நடந்து வந்தனர்.

பார்க்கத்தான் அது எவ்வளவு கம்பீரமாக கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!

பெண்ணை  அவமானத்துக்குள்ளாக்காத திருமண முறை  எந்த மதத்திலாவது எந்த சாதியிலாவது இருக்கிறதா?

“திருமண மேடையில் எப்படிப்  பெண்ணுக்குரிய லட்சணங்களோடு நடந்துக் கொள்ள  வேண்டும், நீ பெண் என்பதால் தலைகுனிந்து  நாணி கோணி தன்னியல்பாக இருப்பதை விட இயல்பைவிட்டு ஒதுங்கி  வெட்கத்தை, குடும்ப வளர்ப்பை, மானத்தை நீ நடந்துக்  கொள்ளும் முறையில்தான் காப்பற்ற வேண்டும்” என்றும் “அளவா சிரி, பல்லு தெரியயாம ஸ்மைல் பண்ணக் கத்துக்கோ” என்றும்  அறிவுரைகள் வழங்கி, இத்தனைக்கும் மேலாக தலைகொள்ளாப் பூவை சடையில் தைத்து வைத்து நினைத்தாலும் தலை நிமிர்ந்து  பார்க்க முடியாமல் மணப்பெண்ணை அலங்கார பொம்மையாகவே  மாற்றியிருக்கும் திருமணங்கள் –  முக்காடிட்டு பெண்ணை ஒரு  தனி இடத்திலும், ஆணை ஒரு தனி இடத்திலும்  அமர வைத்து, ஆணை மையமாக  வைத்தே சம்பிரதாயங்களை நிறைவேற்றி,  வரதட்சிணையை பேரேட்டில் குறித்துக் கொண்டு கையெழுத்திட்டு, இருவரையும்  பொதுவாக  ஒரு இடத்தில் இருவரும்  அமரக்  கூட  வழியில்லாமல் மணவிழாச் சடங்குகள் நிறைந்த கட்டுக்கோப்பான திருமணங்கள் – முதலில் மணமகன் நடந்து வர பின்னாலேயே  தலை குனிந்து மணமகள் நடந்து வரும் நடைபெறும் திருமணங்கள் –

இவை நடுவில் மணமகனும் இருவரும் சமமாக நடந்து வர எந்த திருமண மேடை அல்லது திருமண அமைப்பு அனுமதிக்கிறது?

இல்லை, அந்த மாற்றத்தைத்தான்  எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்? படித்திருக்கிறோம், உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம், உலகின்  விலை உயர்ந்த காரை ஓட்டுகிறோம், ஊருக்கே முன்மாதிரியாக இருக்கிறோம்  என்று சொல்லிக்கொள்ளும் உயர் குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் ஏற்க மறுக்கும் மாற்றங்களை இந்தத் தோழர்களின் பெற்றோர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு பின்னுதாரணமாக இருக்கும் பிரபலக் குடும்பங்கள் பார்ப்பனிய சடங்குகளையும் பிற்போக்குத்தனங்களையும்  கடைபிடித்து உலகை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேளையில் இந்த எளிய மக்கள் தங்களின் உயர்பண்பால் உலகை  முன்னோக்கி தள்ளிச் செல்கிறார்கள். அப்பிரபல குடும்பங்களின் பெண்கள் தந்தைகளின் மடியில் அமர்ந்து கன்னிகாதானமாக  வழங்கப்படுகையில், இங்கு ’நாங்களிருவரும் சரிசமமாக வாழ்வோம்’ என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்!

மணமக்கள் தோழர் அஜிதா - தோழர் பாண்டியன்
மணமக்கள் தோழர் அஜிதா - தோழர் பாண்டியன்

எப்படி சாத்தியமாயிற்று இது?

இந்த திருமணத்தில் தாலி இல்லை, சாதி மத சம்பிரதாயங்கள் இல்லை. இது வேறுபட்ட திருமண வடிவம் என்பதை பெற்றோருக்கும்  தோழர் பாண்டியன் சொன்னபோது முதலில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது அவரது தந்தையிடமிருந்து. ஆனால், அவரது தாய் தோழருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அதோடு நில்லாமல், “இந்த சம்பிரதாயங்கள் நம்மோடு  போகட்டும்” என்று மணமகனின் தந்தையிடம் கூறி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார். உறவினர்களையும்  சமாளித்திருக்கிறார்.  சுவாரசியமானதென்னவெனில், அவரொன்றும் பெரும் படிப்போ அல்லது பெண்ணியம் பேசும் மெத்த  படித்தவருமல்லர். தேயிலை தோட்டத்தில் தேயிலைக்க் கொழுந்துகளை பறிக்கும் ஒரு தொழிலாளி.  தனது வாழ்வியல் மூலமாக  அனுபவங்கள் ரீதியாக ஒரு பெண் இதை சொல்லும்போது அந்த  வார்த்தைகள்தான் எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது!

ஒருவேளை படித்தவர் இம்மாறுதலை எளிதாக ஏற்றுக்கொண்டிருந்தால் இதில் எவ்வித சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும். ஆனால்  முரண்பாடுகளின் மொத்த உருவமான நம் நாட்டில்தான் நடைமுறை முற்றிலும் வேறாக அல்லவா இருக்கிறது!

குழந்தை ஒன்று பிறந்துவிட்டாலே அதை எப்படி கரையேத்துவது என்ற கவலைப்படுவர்களை பார்த்திருப்போம். மேலும், அக்குழந்தை  பெண்ணாக பிறந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம். ’வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்ட மாதிரி’தான். ’அதை எப்படி ஒருத்தன்  கையிலே புடிச்சு கொடுக்கிறது’ என்பதே பெற்றோருக்கு மனதை அரிக்கும் கவலையாக இருக்கும். அது எந்த வர்க்கத்து பெற்றோராக  இருந்தாலுமே! இதில் பெற்றோரை அந்த நிர்பந்தத்துக்கு தள்ளுவது எது? திருமணத்தோடு சீரும் காரும் பங்களாவும் குறைந்த பட்சம் பைக்கும் எதிர்பார்க்கும் நமது  சமூகச் சூழல்தானே!

”எங்கே, செக்கோஸ்லாவேகியா சொல்லு” என்றும் இன்று இவ்வளவு முதலீடு செய்தால் 20 வருடங்களில் இவ்வளவு தொகை வரும்  என்றும் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் ஆயிரமாவது கட்டினால் ஐந்து வருடங்களில் இவ்வளவு கிடைக்கும் கணக்கிடும்  தந்தைகளை பார்த்திருப்போம். அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தோழர் அஜிதாவின் தந்தை. எந்திரனில் கையை காலை ஆட்டி கோடிகளில் சம்பாரித்து மகளின் திருமணத்தை நடத்திய தந்தையில்லை அவர்.ஆனால் அந்தத் தந்தைகள் தங்கள் மகள்களுக்கு  கொடுக்காததை தனது மகளுக்கு கொடுத்திருத்திருக்கிறார் இவர்.  விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக திருப்பூருக்கு சென்று  பனியன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்துக் கொண்ட குற்றத்திற்காக மகளை  கொல்லும் தந்தைகள் மத்தியில், ஒரு  பெருமைமிகு வாழ்க்கையை, அதை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை தனது மகளுக்குக்  கொடுத்திருக்கிறார்.

தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை. “எங்களுக்கு மொய் தேவையில்லை, அன்பளிப்பாக கொடுப்பதாக இருந்தால் புத்தகங்களை பரிசளித்து வாழ்த்துங்கள்” என்று சொல்லும்  உயர்ந்த பண்பாடு மிகுந்த பெற்றோர்கள் இவர்கள்.

விழாவின் முக்கிய கவர்ந்த அம்சம் மேடையில் பலரும் பேசிய பேச்சுகளே! மேலும், குழுமியிருந்த மக்களும் மிக நாகரிகமாக பொறுமையாக அமர்ந்து பேசுவதை அமைதியாகக் கேட்டு ரசித்தனர். ஒரு சலசலப்போ கவனச்சிதறலோ இல்லை. சம்பிரதாயத் திருமணங்களில், மேடையில்  மும்முரமாக மணமக்களை ”சொல்றதை பின்னாடியேச் சொல்லுங்கோ” என்று பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கும்  ஐயர் ஒரு புறம்; வேர்த்து விறுவிறுத்தபடி மணமக்களும் அவர்களுக்குப் பின்னால் அதைவிட பரபரப்புடன் காணப்படும் நெருங்கிய சொந்தங்கள் ஒருபுறம்; யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக கல்யாணம் முடியவேண்டுமே என்ற கவலையுடன் வெளியே சிரித்துக்கொண்டிருக்கும் மணமகளின் பெற்றோர் ஒரு புறம் என்ற திருமணக் காட்சிகளிலிருந்து இது முற்றிலும் வேறாக இருந்தது. மேடைப் பேச்சுகளால் விழா களைக் கட்டியது என்பதே உண்மை.

ம க இ கவின் ‌திருச்சிப் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நிர்மலா  பேசும்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி இது. காவல்துறையில் ஏட்டாக பணிபுரியும் ஒருவர் தனது மகளுக்கு சொந்த சாதியில்  ஒரு வரனை தரகர் மூலமாக‌ப் பார்த்து மணமுடிக்கிறார்.  அவன் சரியானவனில்லை,  ஒரு பொறுக்கி என்று விரைவில் தெரிய வருகிறது. ஆறுமாதத்திற்குள்ளாக  அந்த பெண்ணை அவளது த‌ந்தை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுகிறான்.  இன்னொரு தரகரைப்  பார்த்து தனது புகைப்படத்தைக் கொடுத்து வேறு மணமகளைத்  தேடுகிறான். முதல் தரகரின் நண்பரான இவர்  இவனது அயோக்கியத்தனத்தை ஏட்டுவிற்கு தெரியப்படுத்துகிறார். தக்க நேரத்தில் கையும் களவுமாக  பிடிபடுகிறான். ஆனாலும், ஏட்டுவினால் அதைத்  தாண்டி அவனை ஒன்றும் செய்யஇயலவில்லை.இதுதான் யதார்த்தம். திருச்சியைச் சேர்ந்த ஸ்மாலின் ஜெனிட்டாவின் கதையை நாம் அறிவோம். பல  பெண்கள் தாங்கள் ஐடி மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படவேண்டுமென்று விரும்புகிறார்களே தவிர எந்த மாதிரியான வாழ்க்கை வாழவேண்டுமென்று கொள்கைகள் கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டில்பூச்சிகளைப் போல அற்ப வாழ்வு வாழ்ந்து  இரைகளாகிப் மடிகிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் பேசும்போது சொன்னார் – பெண்கள் பலருக்கு கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு என்பது நினைவிலிருக்கும். விநாயகர் சதுர்த்தி நினைவிலிருக்கும்.ஆனால், பெண்களின் விடுதலைக்கு பெரிதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள் என்று. இன்றும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அவரே முக்கியக் காரணம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சேரில் கூட  அமர முடியாது. கல்யாணத்தில் ஆண்களுக்கு மட்டுமே  சேர் இருக்கும்.  பெண்கள்  கீழே தரையிலோ அல்லது ஜமக்காளத்திலோதான் அமர வேண்டும் அல்லது நின்றுக்கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற  ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்த சமூகம்தான் நமது தமிழ்ச்சமூகம். இங்கு ஓரளவு  முன்னேறியிருந்தாலும் இன்னும் முழுமையாக விடுதலை கிடைக்கவில்லை.

மகாபாரத்ததில் அர்ஜூனன் பிச்சைபெற்று மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். தாயிடம் விஷயத்தைச் சொன்னதும், “எதுவாக இருந்தாலும் உனது சகோதரர்களுடன் பங்குப் போட்டுகொள்” என்கிறாள் தாய்.உடனே அர்ஜுனன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “அம்மா, நான் அழைத்து வந்திருப்பது பொருளல்ல, ஒரு பெண்” என்று சொல்லி இருக்க வேண்டும்.

அந்த மணப்பெண்ணுக்காவது கோபம் வந்திருக்க வேண்டும்.அது இயல்பு. அல்லது ஐவரில் முதல்வனான தருமத்திற்கு பெயர் போன தருமர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? எந்தக் கேள்வியுமில்லாமல், அவள்,  ஐவருக்கும் மனைவியாகிறாள். இது ஒரு புனையப்பட்டக் கதையாகவே இருந்தாலும் என்ன சொல்ல வருகிறது?

பெண்  என்பவள் ஒரு சொத்து. கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தம். அவர்கள் சொல்வதை மறுப்பேச்சின்றி கேட்க வேண்டும், அவளே பத்தினி.  இதுவா முன்னுதாரணம்?

ஏகபத்தினி விரதன் ராமனின் கதை என்ன?  சீதையை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்புவதும், பிறர் தவறாக பேசிக்கொண்டதைக் கேட்டு சந்தேகப்பட்டு சீதையை தீக்குளிக்க வைத்ததும்….ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப்பேயே அவன். இவனா ஆண்களுக்கு முன்னுதாரணம் அல்லது தன்னை நிரூபிக்க தீக்குளித்த சீதைதான் பெண்களுக்கு முன்னுதாரணமா?

அடுத்த பிம்பம் கற்புக்கரசி கண்ணகி ‍; மணமேடையிலிருந்து  நேராக தாசி வீட்டுக்கு சென்ற கணவன் வரும்வரை பிடிவாதமாக  அவனுக்காக காத்திருந்து அவனுடன் வாழவே தலைப்படுகிறாள். அவளைத்தான் நமது இலக்கியவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பத்தினிக்கு அடையாளம் என்கிறார்கள்.

நியாயமாக  அவள் என்ன செய்திருக்க வேண்டும்?

தாசி வீட்டுக்குச் சென்ற கணவனை தூக்கியெறிந்திருக்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் பிம்பங்கள் அனைத்தையும்  தூக்கியெறிந்துவிட்டு தோழர்.அஜிதாவைத்தான்  நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

மேலும்  பழைய திருமண முறைக்கும் இந்தத் திருமண வடிவத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? பழைய திருமண முறையின் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி என்ன? பெண்ணை தானமாகக் கொடுத்து தாலியை  கட்டுகிறார்கள். இதன் பொருள் பெண் தந்தையிடமிருந்து வேறு ஒருவருக்குச்  சொந்தமாகிறார். இதற்குத்தான் தாலி. இதை ஒரு சிலர்  பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். பெண்களும்,ஆண்களுமேதான். தாலயின் மகிமை பற்றியெல்லாம் தமிழ்சினிமா பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

சென்ற வாரத்தில் ஒரு  இடுகைக் கூட தமிழ்மணத்தில் இருந்தது. நேற்றும் ஒரு குலக்கொழுந்து அதைத் திருக்குறள் வடிவத்தில் விளக்கி இருந்தார்.

ஏன், பாதுகாப்பு வேண்டுமென்றால் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டியதுதானே?

அல்லது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதுதானே? பெண்களின் பாதுகாப்பு தாலியில் இருப்பதாகவும் ஆண்களின் உயிருக்கு உத்திரவாதம் பெண்களின் தாலியிலும் பொட்டிலும் இருப்பதாகவும் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?

பொட்டு என்பது இந்து முறைப்படி கணவனின் உரிமை. அவன் இறந்துபோனால்  ஒரு பெண்ணின் பொட்டு வைக்கும் உரிமையும் பறி போகிறது. அதோடு பூவும்.

அது போல காலில் மெட்டி. “பசங்க ஒரு பொண்ண பாக்கறாங்கன்னா அதுவும் கொஞ்சம்  நல்லாருந்துச்சுன்னா உடனே காலைத்தான் பார்ப்பாங்க..மெட்டி போட்டிருக்கான்னு..கல்யாணம் ஆய்டுச்னான்னு தெரிஞ்சுடும் இல்லே” ‍‍; வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான நண்பரொருவர் சொன்னது இது.

இல்லையென்றாலும் பார்க்காமலா விடப் போகிறார்கள்? அல்லது அப்பெண்ணை அணுகி அடி வாங்குவதை தடுக்க இந்த மெட்டி உதவுகிறதா?

இவை அனைத்தும் இந்தப் பெண் இன்னொருவனது உடமை என்று அறிவிக்கும் அதிகாரபூர்வ சின்னங்கள். காலங்காலமாக பெண்கள் அணிந்து வந்ததை மாறுதலுக்கு ஆண்கள்தான் அணியட்டுமே?தாலியும், மெட்டியும் பூவும் பொட்டும் ஆண்களும் கொஞ்ச  நாட்கள்  உரிமை கொண்டாடட்டுமே!

இவை எல்லாம் பெண்ணடிமை வடிவங்களே என்றாலும் அவை பெண்களுக்கு அழகூட்டத்தானே செய்கிறது என்று வாதாடும் ஆண்களையும் பெண்களையும் அறிவேன். ஏன், பதிவுலகில் புர்க்காவைப் பற்றி பேசியபோது ஒருவர் எழுதியிருந்தார் ‍; எவ்வளவு அழகழகான விதவிதமான சம்க்கிகளை வைத்து தைத்த புர்க்காக்கள் இருக்கின்றனவே,அதை அணிந்துக்கொள்ள என்ன கசக்கிறதா என்பது போல! ஏன், அவ்வளவு கண்கவரும் அழகெனின்  ஆண்களும் அதை வாங்கி அணிந்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்த திருமண வழிமுறைகள் யாவும் மதங்கள் காட்டுபவையே. பெண்ணை மதிக்கும், பெண்ணை கண்ண்ணீயமாக நடத்தும் எவரும் இதை விரும்புவதில்லை. உண்மையில் பெண்களுக்கு எங்குச் சென்றாலும் என்ன வேலைக்குச்  சென்றாலும் அந்தந்த படி நிலைக்கு ஏற்றவாறு தொல்லைகள் ஆணாதிக்கங்கள்  இருக்கத்தான் செய்கிறது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் ஆணாதிக்கவெறிகளுக்கெராகவும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு  பெண்களும் சிந்திக்க வேண்டும்.

எனது எத்தனையோ தோழிகள், அலுவலகத்தில் மேனேஜரையும், மேனேஜருக்கு மேனேஜரையும் ஏன் சீஇஓ வைக்கூட பெயரிட்டு அழைக்கும்போது, வீட்டில்  தன் கணவரை  “வாங்க போங்க” என்று மரியாதைக்கொடுத்து அழைக்க வேண்டியிருப்பது ஏன்? பதிலுக்கு அவர்களும் இவ்வாறு அழைக்கிறார்களா என்ன? இதைப் பற்றிக் கேட்டால் உடனே பஜாரி வேடமும், அடங்காப்பிடாரி பட்ட்டமும் கொடுக்க  காத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்?

நாள் பார்த்து நேரம் குறித்து ஒரு சம்பிரதாயங்கள்/ அடையாளங்கள் விடாமல் நடத்திய எத்தனை கல்யாணங்கள் ஒரு வருடம் கூட முழுமையடையாமல் உயிரை விட்டிருக்கின்றன?

ஐயரின் ஒன்றும் புரியாத மந்திர உச்சாடனங்களுக்கிடையில் குறித்த வேளைக்குள் தாலியை கட்டிவிட்டால் வம்சம் தழைக்கும்என்ற வெத்து கல்யாணங்களுக்கிடையில் “வாழ்க்கையில் ஒருபோதும் ஆணாதிக்கத்தை பெண்ணடிமையை கடைபிடிக்காமல்  ஒருவர் தேவையை ஒருவர் புரிந்துக் கொண்டு  இணையாக வாழ்வோம்” என்று உறுதி எடுத்துக்கொண்ட  இத்திருமணம்தான்  எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது!

மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்
மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்

தோழர் மருதையன் சிறப்பு வாழ்த்துரை வழங்கும் போது சொன்னதாவது:

தோழர் அஜிதா மக்களின் பணிக்காக  தனது சிறுவயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.தான் சிறுமியாக இருந்தபோது கருவறை நுழைவு போராட்டத்தில் ஆரம்பித்து கிராமம் கிராமமாக  ஊர் ஊராக சென்று அரசியல் பிராச்சாரங்களை மேற்கொண்டவர்.

தோழர் பாண்டியன், சென்னையில் கல்லூரி மாணவர் போராட்டத்தில் பங்கேற்று சிறைவைக்கப்பட்டவர். போராட்டங்களைக் கண்டு அஞ்சி விலகி ஓடியவரல்லர். அதுமுதல்  பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

இருவரும் ம.க.இ.கவின் முழுநேர அரசியல் ஊழியர்கள். தங்கள் வாழ்க்கையை இப்படி மக்கள் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எவ்வவளவு பேர் இருக்கிறார்கள்? இவ்விருவரின் திருமணம் அமைப்புத் தோழர்களால் பரிந்துரைச் செய்யப்பட்டு அமைப்பே முன்னின்று நிறைவேற்றிய  திருமணம்.கணவன் கிழித்தக் கோட்டை தாண்டாத அடங்கிப் போகும் பெண் கணவனோடு இறுதிவரை வாழ்வது பெரிய விஷயம் இல்லை.வேறுபட்ட ஆளுமைகளை கொண்டவர்கள் அவரவர் நியாயங்களை அங்கீகரித்து இணைந்து வாழ்வது, குறைகளை சரி செய்து இருவருமாக  புதியதாக உருமாறுவது.இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துக் கொண்டு வாழ்வது.

இருவரும் தங்கள் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகவும் அமைத்துக் கொள்வதோடு, மக்கள் நலனுக்காக குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டபின்  மாலைகளை மாற்றிக்கொள்ள விழா முடிவடைந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. கலைநிகழ்ச்சிகளில் மணப்பெண்ணும் பாடல்கள் பாடும் போது சேர்ந்துக்கொண்டார். எந்த எளிமை என்னை நிச்சயமாக எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

சாதி இல்லை என்று சொல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நாமொன்றும் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியெல்லாம்  “நாட் அ பிக் டீல் யார்” என்று சொல்பவர்கள் எத்தனை பேர் சாதி விட்டு திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் படிப்பறிவு பெற்றிருக்கிறோம் என்று  சொல்லிக்கொள்ளும் நாம் செய்வது என்ன? சிந்தித்துப் பார்ப்போம்.

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

தாங்கள் கொண்ட அரசியல் ஈடுபாடு காரணமாகவும்,சமூக அக்கறையின் காரணமாகவும் வாழ்க்கையை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்கிய தோழர் அஜிதா நீங்கள்தான் உலகின் அழகிய பெண் – தோழர் பாண்டியன் நீங்கள்தான் உலகின் அழகிய ஆண்!

__________________

– சந்தனமுல்லை
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்