ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

அன்பார்ந்த நண்பர்களே,

வினவின் அடுத்த கட்ட பயணமாக ” புதிய ஜனநாயகம்” மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த சேவை புதிய ஜனநாயகம் வெளிவந்த அன்றே உங்களுக்கு கிடைக்கும். இதற்கு அனுமதியும், உதவியும் அளித்த புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு எமது நன்றிகள்.

சவால்கள், சபதங்கள், சவடால்கள் என்று ஒட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிகைகள் மத்தியில், அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை, அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு புதிய ஜனநாயகம்.

பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே இந்த புரட்சிகர அரசியல் ஏடு தமிழகத்தில் 24 ஆண்டுகளாக வெளிவருகிறது. தமிழகத்தில் காங்கிரசு, தி.மு.க, போலிக் கம்யூனிஸ்டுகள் முதலான பெரிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ கட்சிப் பத்திரிகைகளின் விநியோகத்தை விட புதிய ஜனநாயகத்தின் விநியோகம் அதிகம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களால் நேரடியாக மக்களிடையே விற்பனை செய்யப்படும் இந்த இதழ் கால் நூற்றாண்டுகளாக தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மட்டுமல்ல அதற்கு தீர்வையும் வைத்து பரந்து பட்ட மக்களை புரட்சிகர அரசியலுக்காக அணிதிரட்டி வருகிறது.

நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராகவும், இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வூட்டும் புதிய ஜனநாயகம் இதழ் இம்மாதம் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்பதில் வினவு மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறது. கூடிய விரைவில் இவ்விதழின் பழைய இதழ்களை ஆவணப்படுத்தும் வேலையை செய்து முடிப்போம். இந்த பயனை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் பரந்து பட்ட மக்களுக்கு புரட்சிகர அரசியலை கொண்டு சேர்ப்பதற்கு உதவி செய்ய முடியும்.

நட்புடன்

வினவு

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.

கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், கடந்த மே முதல் நாளிலிருந்து 19ஆம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த “தி டைம்ஸ்” நாளேடு கூறுகிறது. செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலும், போர் நிறுத்தப் பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய சாவு எண்ணிக்கையின் அடிப்படையிலும் அந்நாளேடு வெளியிட்டுள்ள இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உற்றார் உறவினர்களைப் பறிகொடுத்துவிட்டு, யாருமே இல்லாத அனாதைகளாக படுகாயமடைந்தும் கைகால்கள் முடமாகியும், முட்கம்பியிடப்பட்ட வதை முகாம்களில் வேதனையில் துடிக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். 1983 ஜூலை கலவரத்தையடுத்து சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பொங்கி எழுந்த தமிழகம், இன்று ஒரு பார்வையாளனாக நிற்கிறது.

இக்கொடிய இன அழிப்புப் போரில் சீனாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வழங்கியுள்ளதோடு, சிங்கள பாசிச அரசுக்கு அரணாகவும் நின்றிருக்கின்றன. அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் ராஜபக்சே அலட்சியப்படுத்திப் பேசிய பின்னரும் அந்நாடுகள் எதையும் செய்யவில்லை. ஐ.நா. மன்றமும் தலையிடவில்லை. எல்லாம் முடிந்த பிறகு எட்டிப் பார்த்துவிட்டு, கடமை முடிந்ததென பறக்கிறார் பான்கிமூன்.

இந்திய அரசோ, இந்த இனப்படுகொலைக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நிர்பந்தத்தால், ஐ.நா மனித உரிமை பாதுகாப்புபு பேரவையில் மேலை நாடுகள் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா, சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அத்தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. “நாங்கள் பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக நடத்திய போர் எங்களுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும்தான்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், ராஜபக்சே.

ஈவிரக்கமின்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படுகொலையின் கடைசி நாட்கள், இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இறுதித் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறியிருப்பார்கள் போலும்!

மூன்று சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (மே 16) தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தோல்வியை நோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளோம் என்பதும், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் அவர்கள் அறியாததல்ல. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போதிலும், கடைசியாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலை ஏற்பட்ட போதிலும், டெல்லியில் ஆட்சி மாறினால், மறுகணமே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூட நம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழினவாதிகள் எதிர்பார்த்தது போல, ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படியொரு பிரமை புலிகளுக்கு இருந்திருந்தால், இங்கிருக்கும் தமிழினவாதிகள் அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அத்தகையதொரு பிரமையை உருவாக்கும் பணியைத்தான் தமிழினவாதிகள் இங்கே செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலில் ஈழ எதிரி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவரையே தனிஈழம் தேவையெனப் பிரச்சாரம் செய்ய வைத்தனர். போரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபத்தையும், இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தீக்குளிப்புகளையும் வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக நம்பி, இதையே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மதிப்பிட்டனர். போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதட்டளவில் விடுத்த கோரிக்கையை, ஏதோ அமெரிக்க வல்லரசே தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யக் கிளம்பி விட்டதைப் போல பிரமையூட்டி, ஒபாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி ரோசாப் பூங்கொத்து ஊர்வலம் நடத்தினார், பழ.நெடுமாறன்.

இவர்கள் உருவாக்கிய பிரமைக்குத் தங்கள் உயிரையும் கவுரவத்தையும் பலி கொடுத்திருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். தேர்தலின் போது தனி ஈழம் பற்றி சவடால் அடித்த ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டார். தேர்தலுக்குப் பின் அவர் விடுத்த அறிக்கையில் தனி ஈழம் பற்றியோ, ஈழத் தமிழினப் படுகொலை பற்றியோ, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றோ ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள், இந்த ஈழ ஆதரவாளர்கள். இவர்கள் யாரை ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களின் பிழைப்புவாத அரசியல்!

தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.

எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.

கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.

புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.

இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?

இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும்  என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.

ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.

தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.

ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.

ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல்  இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.

இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.

அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.

இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு  கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.

இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.

இன்றைய சூழலில், சிங்கள இராணுவ வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை மீளக் குடியமர்த்துவது, தமிழர் பகுதிகளைச் சிங்கள காலனியாக்க முயலும் இந்தியஇலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிப்பது, ராஜபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிப்பது, ஈழ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போரை மீண்டும் கட்டியமைப்பது  ஆகிய பெரும் போராட்டக் கடமைகள் ஈழ மக்களின் முன்னே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முன்னே, ஈழ ஆதரவாளர்களின் முன்னே நிற்கிறது. கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தை விருப்பு வெறுப்பின்றி மீளாய்வு செய்து படிப்பினைகள் பெறுவதும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும் இதற்கு முன்தேவையாக இருக்கிறது.

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

புதிய ஜனநாயகம், ஜூன்’2009 மின்னிதழ் வடிவில் PDF கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்

புதிய ஜனநாயகம், ஜூன்’2009 இதழ் MS WORD கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

215 மறுமொழிகள் (Including 25 Discussion Threads)

  1. 1
    hari says:

    nalla karuthukal anal puligalai ivvalavu vimarsanam seiya venduma

  2. 2

    மிக நல்ல வெளிப்படையான கருத்துக்கள்…கடந்த காலத்தை மறந்து நிகழ் காலத்தைப் பற்றிச் சிந்திப்போம்..

    அன்புடன் இட்டாலி வடை

  3. 3
    Tamilnela says:

    புலிகள் செய்ததெல்லாம் தவறு என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்ட கட்டுரை. பிழைகளை மட்டுமே சொன்ன நீங்கள் புலிகள் என்ன செய்திருந்தால் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்பதையும் நீங்களே சொல்லுங்கள்.

    • 3.1
      வித்தகன் says:

      தமிழ் நிலா. கட்டுரையிலேயே புலிகள் என்னென்ன செய்திருக்கக் கூடாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. சக போராளிகளையும் அப்பாவி சிங்களர்களையும் கொன்றிருக்கக் கூடாது. தான் மட்டுமே ஏகபோக பிரதிநிதி போல காட்டிக் கொண்டிருக்கக்கூடாது (ஈழம் = புலிகள் என்ற நிலை வந்ததுதான் புலிகளைப் பிடிக்காத பட்சத்தில் என்னைப் போன்ற சாதாரணத் தமிழர்கள் வெளிப்படையாக ஈழ ஆதரவு தர முடியாத நெருக்கடி ஏற்பட்டதன் காரணம்). அமைதிப் பேச்சு வார்த்தையில் நாணயம் காட்டியிருக்க வேண்டும். மக்களைத் திரட்டி அரசியல் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் தலையிடுவார்கள் என்று பகல் கனவு கண்டிருக்கக் கூடாது. பொதுமக்களைக் கேடயமாகப் பயன் படுத்தியிருக்கக் கூடாது. தமிழ் முஸ்லீம்களை விரட்டியடித்திருக்கக் கூடாது.

      இது தவிர கட்டுரையில் சொல்லாத கருத்துக்கள். ராஜீவ் காந்தியையும் உடன் 20 அப்பாவிகளையும் கொன்றிருக்கக்கூடாது. தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில் தமிழ் மண்ணில் ஆயுதம் சேர்க்கவும் தன் போராட்டக் கருத்துக்களை பரப்பவும் வன்முறைக் கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சித்திருக்கக் கூடாது. அமிர்தலிங்கம் போன்ற ஒரு தலைவரை அழித்து விட்டு ஆண்டன் பாலசிங்த்தைப் போன்ற ஒருவரைப் போயி உலகத்தலைவர்கள் மதிப்பார்கள் என்று நினைத்தது மிகப் பெரிய தவறு.

      மொத்தத்தில் புலிகள் தன் மமதையால் ஆயிரக்கணக்கான உயிர்களை ஒரு பிரயோசனமும் இல்லாமல் காவு வாங்கி விட்டார்கள்.

      • 3.1.1
        Tamilnela says:

        வித்தகன்
        உங்கள் கருத்து புலி எதிற்பு மட்டுமே அன்றி உண்மையான தமிழ் உணர்வு இல்லை.புலிகள் செய்தது 100 வீதம் சரி என்று நான் சொல்லவில்லை.அவர்களும் சாதாரண மனிதர்களே. விடுதலை இயக்கங்கள் தோன்றிய நாள் முதலே துரோகங்களும் ஆரம்பித்து விட்டன.என்றுமே கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றது புலிகள் மட்டும் தான்.இந்தியா என்றைக்குமே தமிழரின் பிரச்சனை தீரவேண்டும் என்று நினைத்து செயற்படவில்லை.மாறாக தவறான கொள்கைகளையே இந்தியா அன்றும் கொண்டிருந்தது இன்றும் கொண்டிருக்கிறது. கிழற்சியாளர்களை உருவாக்கி இலங்கையில் ஓர் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி அதன் முலமாக இலங்கை அரசு வேறு நாடுகள் பக்கம் சாய்வதை தடுப்பதே இந்தியாவின் நோக்கம்.இதை முழுமையாக விளங்கிக் கொண்டது பிரபாகரனும் அவருடன் கூடஇருந்தவர்கள் மட்டுமே.தாம் வரிந்துகொண்ட இலக்கினை அடைவதற்காக இடையில் இருந்த தடைக்கற்களை புலிகள் அகற்றவேண்டிய நிலை இருந்தது.அதை அவர்கள் செய்தார்கள்.ஓரு விடுதலை இயக்கம் செய்யவேண்டியதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
        புலிகள் இந்திய தமிழக தலைவர்களை நம்பினார்கள் என்பதெல்லாம் எவ்வாறு உண்மையாகும்.
        இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவih புலிகள் மக்களையே நம்பினார்கள்.மக்களின் காலிலேயே நின்றார்கள்.தாங்கள் தான் ஏகபோக பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்றால் இந்திய அரசு அன்று சொன்ன போராளிகளின் செலவுக்கு மாதாந்தம் லட்ச ருபாக்களும் வடக்கின் முதலமைச்சர் பதவியையும் ஏற்றிருந்திருப்பார்கள்.

        இறுதியாக உங்களிடமே ஒரு கேள்வி?

        இன்றுதான் புலிகள் இல்லையே இன்றைய நிலையில் நீங்கள் சொல்வதைப்போல புலிகளால் ஒதுக்கப்பட்டு நீங்களே சொல்லிக்கொள்ளும் யனநாயக நீரோட்டத்தில் இணைந்த உங்களால் இதயசுத்தியோடு தமிழரின் தலமையை ஏற்று உங்களால் ஒடுக்கப்பட்ட மிழ் இனத்திற்கு தன்னாட்சியுடன் கூடிய ஒரு தீர்வை பெற்றுத்கொடுக்கமுடியுமா?

        ஒடுக்கப்பட்ட தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்கமுடியுமா?

        லட்சக்கணக்கில் இன்று வதைமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை சுதந்திரமாக அவரவர் இடங்களில் பாதுகாப்பாக மீழ் குடியேற்ற முடியுமா உங்களால்?

        நன்றி
        தமிழ்நிலா

      • 3.1.2
        Rathi says:

        வித்தகன்,

        //தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில் தமிழ் மண்ணில் ஆயுதம் சேர்க்கவும் தன் போராட்டக் கருத்துக்களை பரப்பவும் வன்முறைக் கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சித்திருக்கக் கூடாது. //

        இது அபாண்டம். அவதூறு. நீங்களாக அபத்தமாக எதையாவது கற்பனை பண்ணிவிட்டு அதை புலிகள் மீது சுமத்தாதீர்கள். தமிழீழம் தமிழ்நாட்டுடன் சேர்வதா? உங்களுக்கு ஏதாவது புத்தி பேதலித்து விட்டதா?

        நாங்கள் இவ்வளவு உயிர்களை காவு கொடுத்தது, தியாகங்கள் செய்வது, சர்வதேசத்திடம் அவமானப்படுவது எல்லாமே எங்களின், ஈழத்தமிழனத்தின், விடிவுக்காய், விடுதலைக்காய் மட்டுமே. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் சுதந்திரத்தை மறுபடியும் நாங்கள் இந்தியாவிடம் அட்கு வைப்போம் என்று நீங்கள் கற்பனை பண்ணுவது உங்கள் அறிவீனம். உங்கள் அறிவீனத்திற்கு பதில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், உங்களின் அபத்தமான கற்பனைக்கும், அறிவீனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த பதில்.

        கனவில் கூட நினைக்காதீர்கள் தமிழீழம் தமிழ்நாட்டுடன் சேரும் என்று.

        தமிழ்நாடு என்றைக்குமே தமிழ்நாடுதான்.

        தமிழீழம் கிடைக்கும் காலத்தில் அது என்றைக்குமே தமிழீழம் மட்டும்தான்.

      • 3.1.3
        வித்தகன் says:

        தமிழ் நிலா! எது உண்மையான தமிழ் உணர்வு எது தமிழ் உணர்வில்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வழங்கியது யார்? நான் பேசுவது புலி எதிர்ப்பு மட்டும்தான். அதைக் கேட்க உங்களுக்கு காது கூசுகிறது. அதற்காக என்னைத் தமிழ் உணர்வில்லாதவன் என்று சொல்ல உங்களுக்கோ மற்றவர்களுக்கோ உரிமை இல்லை. புலிகளை ஆதரிப்பது தமிழர்களை அழிப்பதற்கு சமம். அதனால் புலி ஆதரவாளர்கள் தமிழ் துரோகிகள் என்று நான் பதிலுக்கு சொல்லட்டுமா?

        ரதி. புத்தி பேதலித்தவன், அறிவிலி என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டும் முன் நான் எழுதியதை இன்னும் ஒரு முறை படியுங்கள். தமிழீழம் தமிழ் நாட்டுடன் சேரும் பகல் கனவு என்று நான் எப்போதும் எழுதவில்லை. “தமிழ் நாடும் ஒருநாள் தமிழீத்துடன் சேர விரும்பும் என்ற குருட்டு நம்பிக்கையில்” என்றுதான் எழுதியிருக்கிறேன். இரண்டிற்கும் அடிப்படை வித்தியாசம் கூட உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே மாற்றி எழுதி வெறுப்பை உமிழ்கிறீர்களா?

        உங்கள் புரிதலின் படி ஈழம் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் இணைய விரும்புகிறது என்று நான் சொல்லியதாகப் பொருள் வருகிறது. இது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இருக்கும் நாட்டில் இருந்து பிரிய விரும்பும் இனம் இன்னோரு நாட்டுடன் சேர ஆசைப் படும் என்று நான் ஏன் நினைக்க வேண்டும்? அதோடு எங்களுக்கு இருக்கிற இந்தியாவும் அதன் தலைவலிகளும் போதும். இன்னும் தேவையில்ல.

        நான் சொல்லியிருப்பது ஈழம் உருவானால் தமிழகம் அதில் ஒரு அங்கமாக (தனித் தமிழ் நாடாக, இந்தியாவிலிருந்து பிரிந்து) சேர்ந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் அகதிகளாக வந்த இலங்கைத்தமிழர்கள் அத்து மீறி விட்டார்கள் என்கிறேன். நெடுமாறன் போன்ற இந்திய எதிர்ப்பாளர்கள் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பது போலவும், இலங்கையில் நடக்கும் நியாயமான இனப் போராட்டம் போல இங்கும் ஒன்று நடக்க வேண்டும் என்பது போலவும் பிரமையை விடுதலைப் புலிகளுக்கு உருவாக்கி விட்டார்கள். 90 முதல் 93 வரை தென் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் எத்தனை வெடிப் பொருட்கள் சிக்கின என்று நினைவிருக்கிறதா? விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் தன் நாட்டைப் போல் நினைக்க வில்லையென்றால் இத்தனை ஆயுதங்கள் இங்கு பதுக்கப் பட்டிருக்குமா? அதுவும் IPKF உடன் போர் நடந்து முடிந்திருந்த வேளையில்!!

        பிரபாகரன் தலைமையில் ஈழம் உருவாகி இருந்தால் சில ஆண்டுகளில் தமிழ் நாட்டிலும் பிரிவினை விதை விதைக்கப் பட்டிருக்கும். இப்போது அந்தப் பிரச்சினை இல்லை.

        பிரச்சினை என்னவென்றால் புலிகள் தன்னை மட்டுமே முன்னிறுத்தி (மற்றவர்களை அழிக்க எத்தனையோ காரணம் சொன்னாலும்) அவர்கள் அழிவோடு ஈழ விடுதலையையும் பின்னடைய வைத்து விட்டார்கள். சிங்கள ராணுவம் வெற்றிபெற்ற ராணுவம். இனிமேல் அவர்கள் கொடுப்பதுதான் கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்து சம உரிமையை மனித நேய அடிப்படையில் பெறுவதுதான் இரண்டாவது படி. முதல் படி முகாம்களில் இருக்கும் மக்கள் குடியமர்த்தப் படுவது. அங்கு செல்ல முயற்சிப்பவன் என்ற முறையில் நான் கேள்விப்பட்டது முகாம்களில் கலந்திருக்கும் புலிகள் பிரிக்கப்படும் வரையில் அங்கு உதவிக்கு செல்ல முயல்வது பலன் தராது என்பதே.

        கிட்டத்தட்ட ஒத்த கருத்துடைய தமிழ் நிலா, ரதி, வித்தகன் ஆகி மூவரையும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வைத்ததும் புலிகளின் சாதனைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.

      • 3.1.4
        Tamilnela says:

        வணக்கம் வித்தகன்
        வித்தகன் என்ற பெயரைப் பார்த்தவுடன் கொஞ்சமெண்டாலும் விபரமிருக்கும் என்று தான் நினைத்து தவறு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.எது உண்மையான தமிழ் உணர்வு எது உண்மையான தமிழ் உணர்வு இல்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வளங்கியது யார் என்று கேட்கிறீர்கள் ஒரு கிலோ தகுதியை நான் ஒரு கடையில வாங்கின்னான்.ஏன் உங்களுக்கும் வேணுமா?
        தகுதி என்பது தானாக வருவது.கேட்டு வாங்குவதல்ல முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதரன்.நீங்கள் எதிற்பது யாரை? புpரபாகரனையா? அல்லது புலிகளையா? ஏன் இதற்கான உங்களின் தெளிவான பதில் என்ன? நான் முதலிலேயே கேட்ட கேள்விகளுக்கே நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.புலிகளை எதிற்கிறேன் என்கிறீர்கள்.!புலிகள் செய்தது பிழை என்கிறீர்கள்!புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள் என்று கிளிப்பிள்ளை மாதிரித்தான் சொல்கிறீர்களே அன்றி சிந்தித்து நீங்கள் சொல்லவில்லை. களமாடி விழுந்த ஒவ்வொரு போராளிகளினது தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்.புலிகள் பிழை செய்தார்கள் தான்.பிற ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாது வளைந்து கொடுக்காது இலட்சிய உறுதியோடு கடைசிவரை போரிட்டு மடிந்தது பிழைதான்.திருகோணமலையையும் தலைமன்னாரையும் அமெரிக்க வல்லரசிம் கொடுத்து தமிழரின் வாழ்க்கையை அவர்களுக்கு அடைவுவைத்திருந்தால் புலிகளுக்கு அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் செங்கம்பள வரவேற்பு கிடைத்திருக்கும்.இதை செய்யாமல் விட்டு தமிழருடைய பாரம்பரிய இடங்களை காத்தது புலிகள் செய்த தவறுதான் அன்பரே!
        இன்று உலகத் தமிழ்மக்களிடையே உள்ள சோர்வு நிலையை சாதகமாக்கி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயலாதீர்கள்.அன்றும் இன்றும் என்றுமே உலகத்தமிழரின் மாசற்ற பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே. இதற்குள் உங்களைப் போன்ற விதிவிலக்குகள் அடங்காது.
        இந்தியாவின் போரை சொறிலங்கா நடத்தியது. இந்தியாவின் இறையாண்மையை காத்து எல்லாவற்றையும் இழந்தது புலிகள் இயக்கம்.புலிகள் அனுமதித்திருந்தால் இந்தியாவின் வல்லரசுக் கனவு இந்தியாவின் பாதுகாப்பு என்பன இன்று கேள்விக்குறியாகியிருக்கும்.இது வரலாற்று உண்மை.
        அன்புடன் *

        தமிழ்நிலா

      • 3.1.5
        Tamilnela says:

        வணக்கம் வித்தகன்
        வித்தகன் என்ற பெயரைப் பார்த்தவுடன் கொஞ்சமெண்டாலும் விபரமிருக்கும் என்று தான் நினைத்து தவறு செய்துவிட்டேன் மன்னிக்கவும்.எது உண்மையான தமிழ் உணர்வு எது உண்மையான தமிழ் உணர்வு இல்லை என்று வரையறுக்கும் தகுதியை உங்களுக்கு வளங்கியது யார் என்று கேட்கிறீர்கள் ஒரு கிலோ தகுதியை நான் ஒரு கடையில வாங்கின்னான்.ஏன் உங்களுக்கும் வேணுமா?
        தகுதி என்பது தானாக வருவது.கேட்டு வாங்குவதல்ல முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதரன்.நீங்கள் எதிற்பது யாரை? புpரபாகரனையா? அல்லது புலிகளையா? ஏன் இதற்கான உங்களின் தெளிவான பதில் என்ன? நான் முதலிலேயே கேட்ட கேள்விகளுக்கே நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.புலிகளை எதிற்கிறேன் என்கிறீர்கள்.!புலிகள் செய்தது பிழை என்கிறீர்கள்!புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள் என்று கிளிப்பிள்ளை மாதிரித்தான் சொல்கிறீர்களே அன்றி சிந்தித்து நீங்கள் சொல்லவில்லை. களமாடி விழுந்த ஒவ்வொரு போராளிகளினது தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்.புலிகள் பிழை செய்தார்கள் தான்.பிற ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாது வளைந்து கொடுக்காது இலட்சிய உறுதியோடு கடைசிவரை போரிட்டு மடிந்தது பிழைதான்.திருகோணமலையையும் தலைமன்னாரையும் அமெரிக்க வல்லரசிம் கொடுத்து தமிழரின் வாழ்க்கையை அவர்களுக்கு அடைவுவைத்திருந்தால் புலிகளுக்கு அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் செங்கம்பள வரவேற்பு கிடைத்திருக்கும்.இதை செய்யாமல் விட்டு தமிழருடைய பாரம்பரிய இடங்களை காத்தது புலிகள் செய்த தவறுதான் அன்பரே!
        இன்று உலகத் தமிழ்மக்களிடையே உள்ள சோர்வு நிலையை சாதகமாக்கி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயலாதீர்கள்.அன்றும் இன்றும் என்றுமே உலகத்தமிழரின் மாசற்ற பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே. இதற்குள் உங்களைப் போன்ற விதிவிலக்குகள் அடங்காது.
        இந்தியாவின் போரை சொறிலங்கா நடத்தியது. இந்தியாவின் இறையாண்மையை காத்து எல்லாவற்றையும் இழந்தது புலிகள் இயக்கம்.புலிகள் அனுமதித்திருந்தால் இந்தியாவின் வல்லரசுக் கனவு இந்தியாவின் பாதுகாப்பு என்பன இன்று கேள்விக்குறியாகியிருக்கும்.இது வரலாற்று உண்மை.
        அன்புடன்
        தமிழ்நிலா

      • 3.1.6
        வித்தகன் says:

        அன்புள்ள தமிழ்நிலா. பெயரை வைத்துப் பகடி செய்வதை நீங்கள் நட்பு பாராட்டவே விழைவதாக எண்ணி நான் பதிலுக்கு பதில் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

        நான் புலிகள் இலங்கை இராணுவம் அல்லாத பிறர் மீது திணித்த வன்முறையை வெறுக்கிறேன். சாதாரண சிங்களர்கள், இலங்கைத் தமிழர்கள், இந்தியர்கள் (ராஜீவ் காந்தி உட்பட இறந்த 20 பேர்), புலிகள் அல்லாத மற்ற போராளிகள், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதிகள் இவர்களது கொலைகளை ஒதுக்கி விட்டு புலிகளைப் புகழ்வது ஒரு சிலருக்கு கட்டாயமாக இருக்கலாம். சர்வதேச சமூகத்திற்கு, இந்தியத் தமிழர்கள் உட்பட, அந்த அவசியம் இல்லை.

        ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மட்டுமே திரிபுற்று, படிப்படியாக, நான் முதல் இடுகையில் பட்டியலிட்ட தவறுகள் நடக்கையில், புலிகள் மீது இருந்த பற்று எனக்கு நசிவுற்றுப் போய்விட்டது. தமிழீழம் என்றாலே புலிகள் என்று பிரபாகரனால் வரையறுக்கப் பட்ட காலத்தின் கட்டாயம் இன்று அவர்கள் தோல்வியுற்ற நிலையில் எடுத்துக் கொண்ட கொள்கையையே பலகீனமாக்கி விட்டது.

        மற்றபடி புலிகளின் தவறுகள் என்ற பெயரில் நீங்கள் அவர்களது உன்னதமான நிலைப்பாடுகளைப் பட்டியலிடுவது பிரபலங்கள் பேட்டியளிக்கும் போது என் கணவரின் ஒரே குறை உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குணம்தான் என்று சொல்வது போல இருக்கிறது.

        நண்பரே. எனக்கு என் மொழியின் மீதும் நாட்டின் மீதும் இருக்கும் பற்று ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் மேல் இருக்கும் மதிப்பை விட அதிகமாக இருக்கவே கூடாது. உங்களுக்கு இனப்பற்றும் அதற்கும் மேலாக புலிகள் மீதுள்ள அபிமானமும் தூக்கலாக இருந்து அவர்களின் உண்மையான குறைகளை மறைக்கின்றன என்று எனக்குத் தெரிகிறது.

        புலிகள் மாசற்றவர்கள் என்று உங்களைப் போலவே ஏராளமானோர் ஒருவேளை நினைக்கும் பட்சத்தில் அதற்கு நேர் எதிர் கருத்துக் கொண்டுள்ள சர்வதேச சமூகம் சிரமப்படும் இலங்கைத்தமிழர்களுக்கு உதவ யோசிப்பார்களே என்று வருத்தப் படுகிறேன். உங்கள் எண்ணம் ஆங்காங்கே மட்டும் ஒலிக்கும் மிகச் சிலரது கருத்தாகவே இருந்தால் புலிகள் மீண்டு வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

      • 3.1.7
        Rathi says:

        வித்தகன்,

        //நான் சொல்லியிருப்பது ஈழம் உருவானால் தமிழகம் அதில் ஒரு அங்கமாக (தனித் தமிழ் நாடாக, இந்தியாவிலிருந்து பிரிந்து) சேர்ந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் அகதிகளாக வந்த இலங்கைத்தமிழர்கள் அத்து மீறி விட்டார்கள் என்கிறேன்.//

        உங்கள் நாட்டில் என் சனம் உயிரை காப்பாற்ற தஞ்சம் கோரியுள்ளார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. என் இனமும் என் சனமும் (அதாங்க, உங்கள் பாஷையில் “அகதிகள்”) தமிழ்நாட்டில் எங்கே அத்துமீறினார்கள் என்று கொஞ்சம் விளக்கமாகத்தான் சொலுங்களேன். மேலே நீங்கள் சொன்ன கூற்று நீங்கள் ஏதாவது கருத்து கணிப்பு செய்ததன் முடிவா? எதை வைத்து என் உறவுகள் மீது இப்படி ஒரு பழியைப்போடுகிறீர்கள்.

        வித்தகன், ஒரு உண்மையை நான் கண்டிப்பாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது, இந்த தளத்தில் நான் ஏறக்குறைய எல்லோருடைய கருத்துகளையும் படித்திருக்கிறேன். ஆனால், யாரும் இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசி என்னை குழப்பியது கிடையாது.

        /கிட்டத்தட்ட ஒத்த கருத்துடைய தமிழ் நிலா, ரதி, வித்தகன் ஆகி மூவரையும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வைத்ததும் புலிகளின் சாதனைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.//

        நானும் நீங்களும் எந்த காலத்தில் (கிட்டத்தட்ட ?) ஒத்த கருத்தை கொண்டிருந்தோம்?

        புலிகளுக்கு வேறு வேலையே கிடையாதா? ரதியும் வித்தகனும் நடத்தும் வெட்டிவாரியத்தில் அவரகளின் வேலையற்ற வீணாய்ப்போன வெட்டிப்பேச்சையும் சண்டையும் மூட்டிவிடுவதுதான் அவர்களின் இலட்சியமா? உங்க comedy க்கு ஒரு வரைமுறையே இல்லையா?

      • 3.1.8
        வித்தகன் says:

        //நானும் நீங்களும் எந்த காலத்தில் (கிட்டத்தட்ட ?) ஒத்த கருத்தை கொண்டிருந்தோம்? //

        இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஈழம் என்ற தனி நாடு கிடைத்தால்தான் அவர்களுக்கு வாழ்வுரிமை நிலை பெறும் என்பதில் நாம் மூவருமே ஒத்துப் போவோம் என்று கருதுகிறேன். புலிகள் பற்றிய நிலைப் பாட்டில் நமக்கு ஒத்த கருத்து இல்லாததுதான் இந்த வாக்கு வாதங்களுக்குக் காரணம்.

        நான் பேச்சு மாற்றுவதாக சொல்லுகிறீர்கள். அது உங்கள் புரிதலில் உள்ள குறைபாடு. எனக்கு விடுதலைப்புலிகளின் செயல் பாடுகள் பிடிக்காது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு நிகழும் கொடுமைகளைக் கண்டு மனம் வருந்துகிறது. இலங்கைத் தமிழர்களும் புலிகளும் வேறு வேறு என்ற என் பார்வை உங்களுக்குப் புரிபடவில்லை. அதனால் நான் மாற்றி மாற்றிப் பேசுவதாகக் குறை சொல்கிறீர்கள்.

        //என் இனமும் என் சனமும் (அதாங்க, உங்கள் பாஷையில் “அகதிகள்”) தமிழ்நாட்டில் எங்கே அத்துமீறினார்கள் என்று கொஞ்சம் விளக்கமாகத்தான் சொலுங்களேன்.//

        தமிழ் நாட்டில் வந்து தங்கும்போது டன் டன்னாக வெடி மருந்துகளைக் கடற்கரையோரம் பதுக்கியிருந்தது அத்து மீறல் இல்லையா? பத்ம நாபாவையும் 13 பேரையும் சென்னை மண்ணில் சுட்டுக் கொன்றது அத்து மீறல் இல்லையா? பாண்டி பஜாரிலே பேட்டை ரவுடிகள் போல பிரபாகரனும் வேற்றுக் குழுப் போராளியும் (சபா ரத்தினம் தானே?) பட்டப் பகலிலே துப்பாக்கியில் சுட்டுக் கொண்டது எங்களுக்குத் தேவையா? ராஜிவ்வ் காந்தியையும் 20 பேரையும் மனித வெடி குண்டால் சிதற அடித்தது கூட அத்து மீறல் இல்லையா? என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

        இதையெல்லாம் அத்து மீறல் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவு உங்களுக்கு மூளைச் சலவை ஆகியிருப்பது வருந்தத் தக்கது.

        அல்லது ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட எல்லாமே புலிகள் செய்ததுதான். மொத்தமாக இலங்கைத் தமிழர் மீது பழி போடாதீர்கள் என்று சொல்லுங்கள். அதுதான் நான் 91 ஆம் ஆண்டிற்குப் பிறகு கொண்டுள்ள நிலைப்பாடு. ஒரு வாறாக என் வழிக்கு வந்து விட்டீர்கள் என்று நினத்துக் கொள்கிறேன்.

        என்ன பதில்?

      • 3.1.9
        Rathi says:

        வித்தகன்,

        //என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?//

        இதையே தான் நானும் கேட்கிறேன். இந்தியாவின் தேசிய நலன்களுக்காக ஈழத்தில் எங்களுக்கு பிடிக்காத ஒரு ஒப்பந்தம் போட்டு ஏறக்குறைய ஒரு ஏழாயிரம் அப்பாவித்தமிழனை அழித்தீர்கள். நாங்கள் யாரிடமாவது முறையிட முடிந்ததா?

        இப்போது, புலிகளை அழிக்கிறோம் பேர்வழி என்று ஒரு ஐம்பதாயிரம் உயிர்களை காவு வாங்கியாகிவிட்டது. ஈழத்தமிழன் இனப்படுகொலையில் இந்தியாவிற்கும் பங்குண்டு என்று எத்தனை ஊடகங்கள், ராஜபக்க்ஷேக்கள் சொன்னாலும் வித்தகனுக்கு புரியவே புரியாதா?

        //ஒரு வாறாக என் வழிக்கு வந்து விட்டீர்கள் என்று நினத்துக் கொள்கிறேன்.//

        எது உங்கள் வழி? அதற்கேன் நான் வரவேண்டும்?

      • 3.1.10
        Tamilnela says:

        மீண்டும் வணக்கம் வித்தகன்.

        உங்களுக்குத் தெரியுமா தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது இது உங்களுக்கு 100 வீதம் பொருந்தும் நீங்கள் தூங்குபவன் போல் நடிப்பவர்.

        இதற்கு நீங்களே சொல்லுங்கள் புலிகள் எத்தனை அப்பாவி சிங்கள மக்களை கொன்றார்கள் எத்தனை சிங்கள இளம் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கினார்கள் என்று.
        ரஜீவ் காந்தி! தவறான வழிநடத்தலில் வரலாற்றுப்பிழை செய்தவர் (இன்றும் இதைத்தான் இந்தியா செய்கிறது நிச்சயம் தண்ணிக்கப்படும்) உங்கட மக்கள் 20 பேர் இறந்ததற்காக இவ்வளவு கேட்கிறீர்களே உங்கள் தலைவர் எங்கள் மண்ணிலே எங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் படைகளை அனுப்பி செய்த கொடுமைகளை எப்படி நாங்கள் மறப்போம்.ஈழத்தமிழனெண்டால் அவ்வளவு இழக்காரமாகப் போய்விட்டதா இந்தியாக்காறனுக்கு.நீங்கள் செய்ததுக்கு தண்டனை கொடுத்தோம் அவ்வளவுதான்.

        ஈழத்தமிழனை அடகுவைக்கும் எவனுக்குமான தண்டனை தான் அமிர்தலிங்கம் போன்றோருக்கானது.
        அதென்ன புலிகளை புகழ்வது? ஏனன்காக! ஏன்னைக் காப்பதற்காக உயிரைக் கொடுப்பவனை புகழாமல் என் இனத்தை விற்பவனையா நான் புகழமுடியும்?

        தமிழீழம் என்றால் புலிகள் இல்லை சகோதரா புலிகளால் மட்டுந்தான் தமிழீழம் என்கின்ற உன்னதமான இலக்கை அடையமுடியும்.
        காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் இன்று தோல்வியுறவில்லை.20 நாடுகள் இனத்துரோகிகளின் காட்;டிக்கொடுப்பு இவற்றால்தான் இந்தப்பின்னடைவு.இந்த இழப்பும் பின்னடைவும் உலகிற்கும் தமிழ் இனத்திற்தும் பல உண்மைகளை உணர்த்தம் வரலாறு மீண்டும் திரும்பும் இது காலத்தின் கட்டாயம்.நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்பவன் புனிதன்.
        இன்று புலிகள் இல்லாத நிலையிலே என் இனம் அழிகிறது.இதைத் தடுக்க யாரால் முடியும்? புலிகள் இல்லாதநிலையில் தமிழனுக்கு நீதி வழங்க யார் முன்வருவார்கள்?எவராலும் முடியாது.

        புலிகளால் மட்டுமே முடியும்.

      • 3.1.11
        வித்தகன் says:

        திருவாளர்கள் தமிழ் நிலா, ரதி. நான் உங்களைப் போல் புலிகளைக் கொண்டாட மாட்டேன். புலிகளைத் தியாகிகள் என்று புகழ்ந்தால்தான் இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவன் என்ற மூளைச் சலவை செய்யப் பட்ட கருத்துக்களை மதிக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் புலி ஆதரவு அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்.

        விடுதலைப் புலிகள் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள், தமிழின உணர்வு என்று தவறாக சொல்லிக் கொண்டு புதைத்து வைத்த பூதத்தை திரும்பவும் வெளியே எடுக்காமல் இருங்கள். புலிகள் அழிந்ததால் நிம்மதியாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் அவர்கள் மறுவாழ்வுக்கும் இது போன்ற எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் தடையாக இருக்கும்.

      • 3.1.12
        வித்தகன் says:

        //நீங்கள் செய்ததுக்கு தண்டனை கொடுத்தோம் அவ்வளவுதான்.//

        தமிழ் நிலா. இது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுக்களும் திமிரும்தான் புலிகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன. இந்தியா என்ற ஜனநாயக நாட்டை தண்டிக்க ஆயுதம் தாங்கிய இந்த முரட்டுக் கூட்டத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை. அத்து மீறியதற்கு மன்னிப்புக் கேட்காமல் இன்னமும் இவ்வளவு திமிராகப் பேசுபவர்கள் உயிர் போகும் நிலையில் உதவி கேட்டு இறைஞ்சுவானேன்? இந்தியாவின் காலைப் பிடித்து உயிர்ப் பிச்சை கேட்டுக் கெஞ்சும் போது இந்த தண்டிக்கும் திமிர் எங்கே போச்சாம்? எப்போது உயிர்ப்பிச்சை கேட்டார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். பிரபாகரன் கொல்லப் படும் வரை தினசரி புதினத்திலும் தமிழ் நெட்டிலும் அய்யா சாமி காப்பாத்துங்க கதறல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தியா முகத்தைத் திருப்பிக் கொண்டது சரிதான் என்று இந்த அகங்காரமான (அதுவும் தோற்றுப் போன கூட்டத்தின் அகங்காரம்) வசனம் மீண்டும் நிரூபிக்கிறது. பயங்கரவாதிகள் வேட்டையாடப் பட்டதை தியாகம், வீர மரணம் என்று கூவிக் கூவி விற்காதீர்கள். ஒருவரும் வாங்க மாட்டார்கள்.

        இப்போது புலிகளைப் புதைத்த இடத்தில் புல் முளைத்து விட்டது. அந்த புல்லையும் எரித்து விடுவதுதான் உலகத்துக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு, நல்லது.

      • 3.1.13
        வித்தகன் says:

        //எது உங்கள் வழி? அதற்கேன் நான் வரவேண்டும்?//

        ரதி. எண்பதுகளில் பிரபாகரனை வரலாற்று நாயகனாக வரிந்து கட்டிக் கொண்டிருந்த நான் அமிர்தலிங்கம் கொலைக்குப் பின், ராஜீவ் காந்தி கொலைக்குப் பின், தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பதுக்கல்கள் வெளிவந்த பின் என்று படிப்படியாக புலிகளை இலைங்கைத் தமிழர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என் வழி தமிழ் ஈழ ஆதரவு, புலிகள் மறுப்பு.

        ஏன் அதற்கு வருவது உங்களுக்கு உசிதம் என்றால், 32 நாடுகளால் தடை செய்யப் பட்ட, இப்போது அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு தீவிர வாத இயக்கத்தையும் மக்கள் பிரச்சினையையும் ஒன்றாக்கி அதனால் ஈழ விடுதலைக்கு ஆதரவில்லாமல் ஆக்கி விடாதீர்கள் என்பதுதான்.

      • 3.1.14
        செந்தில் says:

        Mr வித்தகன்,

        //விடுதலைப் புலிகள் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் உங்களைப் போன்றவர்கள், தமிழின உணர்வு என்று தவறாக சொல்லிக் கொண்டு புதைத்து வைத்த பூதத்தை திரும்பவும் வெளியே எடுக்காமல் இருங்கள். புலிகள் அழிந்ததால் நிம்மதியாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் அவர்கள் மறுவாழ்வுக்கும் இது போன்ற எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் தடையாக இருக்கும்.//

        “பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

        சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

        சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

        சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.

        //ராஜிவ்வ் காந்தியையும் 20 பேரையும் மனித வெடி குண்டால் சிதற அடித்தது கூட அத்து மீறல் இல்லையா? என்ன நடந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?//

        காங்கிரஸ்காரர்கள் எது சொன்னாலும் அப்படியே நம்பி விடுவீர்களா? உங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாதா? ராஜீவ் கொலையை புலிகள் மறுத்து ஜெயின் கமிஷனுக்கு கடிதம் அனுப்பிவுள்ளனர். ஆனால் ராஜீவ் கொலை நடந்த அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே சுப்ரமணிய சாமியிடம் புலிகள் தான் ராஜீவ்வை கொலை செய்தார்கள் என்று அவசரமாக கூறுவதற்கு என்ன காரணம்? ஏன் அன்று நடந்த கூட்டத்தில் ராஜீவ் தவிர மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை? முதலில் போபர்ஸ் ஊழலை திருப்பிப் பாருங்கள். அப்புறம் புரியும் யார் ராஜீவ்வை கொலை செய்தார்களென்று. அப்படிப் பார்த்தால் கூட, ராஜீவ் கொலையில் சோனியாதான் குற்றவாளி என்று சுப்ரமணிய சாமி சொன்னான். அதையும் அப்படியே நம்பி விடுவீர்களா?

      • 3.1.15
        வித்தகன் says:

        Mr. செந்தில் விளக்கமான பதிலுக்கு நன்றி. சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று நான் நினைப்பதாக நீங்கள் கூறுவது என்னை அவமானப் படுத்துகிறது. போயும் போயும் சாமி போன்ற அயோக்கியரின் பேச்சையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருப்பது ஆன்டன் பாலசிங்கம் போன்ற கோமாளியின் பேச்சைக் கேட்பதற்கு இணையான முட்டாள்தனம் என்று எனக்குத் தெரியும். புலிகள் ராஜீவைக் கொல்லவில்லையென்பது பூசணித் தோட்டத்தையே ஒரு பருக்கையில் ஒளிக்கும் முயற்சி. நடக்காது.

        மற்றபடி சிங்கள அராஜகம் தான் புலிகளை ஆயுதமெடுக்க வைத்தது என்பதிலோ, ஈழத்தில் தமிழர்கள் வாழ்வு மேம்பட விடுதலைதான் சிறந்த வழி என்பதிலோ எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் படிப் படியாக பிரபாகரன் செய்த தவறுகளாலும, பிற இலங்கைத் தமிழ்ப் போராளிகள் மேல் செய்த வன் சூழ்ச்சிகளாலும் விடுதலைப் போராட்டம் பின் தள்ளப் பட்டு பயங்கரவாதம் மட்டுமே மிஞ்சியது. இப்போது புலிகள் அழிவு தமிழர்கள் மறுவாழ்வுக்கு ஆரம்பமாக இருக்கச் செய்ய வேண்டியது எல்லாரின் கடமை. அதற்கு புலி புராணம் பாடாமல் அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சிறந்த வழி.

      • 3.1.16
        செந்தில் says:

        Mr வித்தகன்,

        //சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று நான் நினைப்பதாக நீங்கள் கூறுவது என்னை அவமானப் படுத்துகிறது.//

        உங்களை நான் அவமானப் படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். சுப்பிரமணிய சாமி சொன்னதால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் காரணம் என்று அர்த்தமல்ல. ராஜீவ் கொலையில் சுப்ரமணிய சாமியையும், அரசியல் சாமியார் சந்திரா சாமியையும் விசாரித்திருந்தாலே போதும் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளி யார் என்று தெரிந்திருக்கும் என்றுதான் கூற வருகிறேன். ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் தப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை. அது மனசாட்சி உள்ளவர்களுக்கும் உண்மையை ஆராய்ந்து உணர்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

        //ஆனால் படிப் படியாக பிரபாகரன் செய்த தவறுகளாலும், பிற இலங்கைத் தமிழ்ப் போராளிகள் மேல் செய்த வன் சூழ்ச்சிகளாலும் விடுதலைப் போராட்டம் பின் தள்ளப் பட்டு பயங்கரவாதம் மட்டுமே மிஞ்சியது.//

        இதை நான் மறுக்கிறேன். பிரபாகரன் செய்த தவறு தமிழீழ லட்சியத்திற்கு சூழ்ச்சி செய்து முட்டுக்கட்டை போட்ட தலைவர்களையும் இனவெறி இலங்கை அரசியல் தலைவர்களுக்கு துணை போனவர்களையும் திருப்பி தண்டித்ததுதான் (மற்றவர்கள் பார்வைக்கு அது வன்முறை ஆகிவிட்டது).

        //இப்போது புலிகள் அழிவு தமிழர்கள் மறுவாழ்வுக்கு ஆரம்பமாக இருக்கச் செய்ய வேண்டியது எல்லாரின் கடமை. அதற்கு புலி புராணம் பாடாமல் அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் சிறந்த வழி.//

        ஈழத் தமிழர்கள் பற்றி கட்டுரை எழுதுபவர்கள் அனைவரும், சிங்களர்கள் செய்த இனப்படுகொலைகள் பற்றியும் அதற்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்கள் செய்ய வேண்டிய போராட்டங்கள் பற்றி எழுதாமல் புலிகள் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் அந்தக் கட்டுரைக்கு திரும்பி மறுமொழியும் போது புலிகள் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது.

      • 3.1.17
        வித்தகன் says:

        நண்பர் செந்தில் அவர்களே. மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை. உங்கள் கருத்து இப்போது புரிகிறது,

        உங்களுக்கும், தமிழ் நிலாவுக்கும், ரதிக்கும் நான் என் தரப்பிலிருந்து சொல்ல இனிமேல் எதுவும் இல்லை. என் கருத்து இவ்வளவுதான். சக தமிழன் என்ற முறையில் என்னால் இலங்கைக்கு சென்று முகாம்களில் பணியாற்றும் விருப்பம் நிரைவேறாத ஏமாற்றத்தை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். விசா கிடைக்காது. கிடைத்துச் சென்றாலும் முகாம்களுக்கு செல்ல அனுமதி மிகவும் கடினம் எனத் தெரிகிறது. டிசம்பரிலாவது இலங்கை செல்ல முடிகிறதா என்று முயற்சிக்கப் போகிறேன். அதற்குள் முகாம்கள் கலைக்கப் பட்டு மக்கள் குடியமர்த்தப் பட்டால் அதை விட மகிழ்ச்சி எதுவும் இருக்காது.

        ஆனால். ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக 6 பிள்ளைகளின் கல்விச் செலவு பள்ளிப் படிப்பு முடியும் வரை ஏற்றுக் கொண்டுள்ளோம். பணக்காரத்தனமான ஒப்புக்குச் செய்யும் சமூகசேவையாக இல்லாமல் உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்கு கரம் கொடுக்க எடுக்கும் முயற்சிதான் இது.

      • 3.1.18
        செந்தில் says:

        தோழர் வித்தகன் அவர்களே,

        //ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக 6 பிள்ளைகளின் கல்விச் செலவு பள்ளிப் படிப்பு முடியும் வரை ஏற்றுக் கொண்டுள்ளோம். பணக்காரத்தனமான ஒப்புக்குச் செய்யும் சமூகசேவையாக இல்லாமல் உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிக் குழந்தைகளுக்கு கரம் கொடுக்க எடுக்கும் முயற்சிதான் இது.//

        உங்களின் இந்த மேலான பணிகளை கடைசி வரை செவ்வென தொடருங்கள். முடிந்த அளவு உங்களுடைய மற்ற தோழர்களையும் உங்களின் இந்தப் பணியில் ஈடுபட முன் வரச் சொல்லுங்கள். ஈழத் தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி விரைவில் தமிழீழத்தை வென்றெடுக்க முனைவோம்.

        ‘தமிழா இருப்பாய் நெருப்பாய், இருந்தது போதும் செருப்பாய்’.

        உங்களின் தோழர் செந்தில்.

      • 3.1.19
        Rathi says:

        வித்தகன்,

        //என் வழி தமிழ் ஈழ ஆதரவு, புலிகள் மறுப்பு.//

        உங்கள் தமிழீழ ஆதரவுக்கு நன்றி. ஆனால், எனக்கு எங்கள் தேசியத்தலைவர் என் தாய் போன்றவர். என் தாயை பழிசொல்லிவிட்டுதான் ஒரு தமிழரான நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என்றால் அதை என் மனம் ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மன்னிக்கவும். நீங்கள் புலிகளை மறுங்கள். அது உங்கள் தனிமனித கருத்து சுதந்திரம்.

        //இப்போது அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு தீவிர வாத இயக்கத்தையும் மக்கள் பிரச்சினையையும் ஒன்றாக்கி அதனால் ஈழ விடுதலைக்கு ஆதரவில்லாமல் ஆக்கி விடாதீர்கள் என்பதுதான்.//

        உங்களோடு அதிகம் வாதம், எதிர்வாதம் செய்ய மனம் எனக்கு இப்போது ஒப்புவதில்லை. ஆனாலும், இறுதியாக இந்தியா, மேற்குலகம், வித்தகன் எல்லோரும் புலிகள் பயங்கரவாதிகள் என்று சொன்னாலும், அதை ஈழப்பிரச்சனையை புரிந்து கொண்டவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. காரணம், நான் மேற்சொன்ன மூன்று பேருமே மக்கள் பிரச்சனை வேறு, புலிகள் வேறு என்று வெட்டிவாதம் செய்பவர்கள். ஈழமக்களின் உரிமைப்பிரச்சனைக்காகத்தான் புலிகள் போராடினார்கள் என்பதை இவர்கள் தங்கள் வச‌திகேற்றவாறு மறைத்துவிடுகிறார்கள். அந்த பொய்யையே திரும்பத்திரும்ப சொல்லி அடுத்த்வரை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

        பொய்யை எத்தனை தரம் திருப்பிச் சொன்னாலும் அது மெய்யாகாது. புலிகள் ஈழமக்கள் பிரச்சனைக்காகத்தான் போராடினார்கள். இன்று, அவர்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் உங்களைப்போன்றவர்களால் ராஜபக்க்ஷேக்களிடமிருந்து எங்களுக்குரிய உரிமைகளை வாங்கித்தர முடியுமா உங்களால்?

        புலிகள் யார் என்பதை ஈழத்தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இன்று ஈழத்தமிழன் பேசினாலே இந்தியா, மேற்குலகம், வித்தகன் போன்றோர்களுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் புலிகளை நேசிக்கிறோம் என்பதற்காகவே “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தப்படுகிறோம். இந்தியாவும், மேற்குலகமும் ஒரு முறை, ஒரேயொருமுறை ஈழத்தமிழனின் மனக்குமுறலை உண்மையான இதயசுத்தியோடு காது கொடுத்து கேட்டாலே எங்கள் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். கேட்பார்களா இதயசுத்தியோடு?

      • 3.1.20
        வித்தகன் says:

        //இன்று ஈழத்தமிழன் பேசினாலே இந்தியா, மேற்குலகம், வித்தகன் போன்றோர்களுக்கு பிடிக்கவில்லை.//

        இல்லவே இல்லை. நான் புலிகளைக் குறை சொன்னால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. உங்களையும் உங்கள் கருத்துக்களையும் யாரும் உதாசீனம் செய்யவில்லை!

        //இந்தியாவும், மேற்குலகமும் ஒரு முறை, ஒரேயொருமுறை ஈழத்தமிழனின் மனக்குமுறலை உண்மையான இதயசுத்தியோடு காது கொடுத்து கேட்டாலே எங்கள் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். கேட்பார்களா இதயசுத்தியோடு?//

        அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். கேட்பார்கள் என்றே நம்புவோம். இந்தியாவும் மேற்குலகும் உங்கள் குரலைக் கேட்க வைப்பதற்கு நீங்களும் கொஞ்சம் வேறு குரலில் பேசத்தான் வேண்டும். புலிகள் தோல்வியுற்றுள்ள நிலையில் அவர்கள் பேரால் இனிமேல் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து வேறு வழிகளில் போராடினால்தான் ஈழக் கனவு அழியாமல் இருக்கும்.

        உங்கள் பதிவில் இருக்கும் பிரபாகரன் பற்றிய கருத்துக்களை நான் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், உங்கள் உணர்வுகளை மதித்து ஒதுங்கிக் கொள்கிறேன்.

      • 3.1.21
        Tamilnela says:

        வணக்கம் வித்தகன்.

        (திருவாளர்கள் தமிழ் நிலா ரதி. நான் உங்களைப் போல் புலிகளைக் கொண்டாட மாட்டேன். புலிகளைத் தியாகிகள் என்று புகழ்ந்தால்தான் இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவன் என்ற மூளைச் சலவை செய்யப் பட்ட கருத்துக்களை மதிக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் புலி ஆதரவு அரசியல் வாதிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்.

        நாங்கள் அல்லது யாராவது வந்து கேட்டார்களா உங்களிடம் புலிகளைக் தூக்கிவைத்து கொண்டாடுங்கள் என்று.ஐயா பெரியவரே மக்களின் ஆதரவு இல்லாமல் புலிகளால் எவ்வளவு காலம் செயற்பட்டிருக்க முடியும்?நீங்கள் சொல்லலாம் புலிகள் ஆயுத முனையில் மக்களை அடக்கி வைத்திருந்தார்கள் என்று! மக்கள் சக்தியை எதிற்து புலிகளால் நிற்கமுடியமா? ஓன்றை மட்டும் விளங்கிக் கொள்ளுங்கள் மக்களால் மக்களுக்காக மக்களில் இருந்து தோன்றியவர்கள் தான் புலிகள்.

        (இந்தியா என்ற ஜனநாயக நாட்டை தண்டிக்க ஆயுதம் தாங்கிய இந்த முரட்டுக் கூட்டத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை.)
        யனநாயகம்
        இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்களை விடுங்கள்.ஏன் ஐயா நீங்களே சொல்லுங்கள் இந்தியா யனனாயக நடா?!!!!!!!!!!உங்கள் நாட்டின் தெருக்களில் மாலை 6 மணிக்குப் பிறகு ஓர் இளம் பெண் தனியாக நடந்துபோக முடியுமா ஐயா?!!! கயவர் காடயர்களை விடுங்கள் உங்கள் நாட்டின் காவல்துறையே கடித்துக் குதறி விடுவார்களே தனியாகப் போகும் பெண்களை.ஓருவேளை இதுதான் உங்கள் யனநாயகமோ?!!!!!!

        ஓன்றைப்பற்றி எழுதுமுன் தெளிவாக தெரிந்துகொண்டு எழுத வேண்டும்.
        புலிகள் கேட்டது மக்களை காப்பாற்றச் சொல்லியே அன்றி தங்களை காப்பாற்றும்படி இல்லை.நேராக மோதமுடியாமல் சிங்களவனின் சேலைக்குப் பின்னால் ஒளித்திருந்து போரை நடத்தியதே இந்தியாதான் என்று உலகத்துக்கே தெரியுமே உங்களுக்கு தெரியாதா?

        மன்னிப்பு

        (இந்தியாவின் காலைப் பிடித்து உயிர்ப் பிச்சை கேட்டுக் கெஞ்சும் போது இந்த தண்டிக்கும் திமிர் எங்கே போச்சாம்? எப்போது உயிர்ப்பிச்சை கேட்டார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள். பிரபாகரன் கொல்லப் படும் வரை தினசரி புதினத்திலும் தமிழ் நெட்டிலும் அய்யா சாமி காப்பாத்துங்க கதறல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தியா முகத்தைத் திருப்பிக் கொண்டது சரிதான் என்று இந்த அகங்காரமான (அதுவும் தோற்றுப் போன கூட்டத்தின் அகங்காரம்) வசனம் மீண்டும் நிரூபிக்கிறது. பயங்கரவாதிகள் வேட்டையாடப் பட்டதை தியாகம் வீர மரணம் என்று கூவிக் கூவி விற்காதீர்கள். ஒருவரும் வாங்க மாட்டார்கள்.)

        இதிலிருந்தே உங்கள் தமிழ் எதிர்பு தெரிகிறது.நீங்களே காட்டிவிட்டீர்கள்.
        புலிகள் தோற்பதுவும் தமிழன் தோற்பதுவும் ஒன்றுதான்.50 ருபாவுக்காக வாக்குரிமையை விற்பவர்களிடம் உணற்சியை ஈழத்தமிழன் எதிர்பார்த்தது பிழைதான் அன்பரே! பயங்கவாதமென்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
        எங்கள் மண்ணில் உங்கள் ராணுவம் செய்ததே அட்டுளியங்கள்.பெண்ணை தெய்வமாக வணங்குறோம் என்று சொல்லும் உங்கள் நாடு எங்களின் பெண்களை ஏன்10 12 வயதுச் சிறுமிகைளைக் கூட காமவெறிகொண்டு சின்னாபின்னப் படுத்தினீங்களே எங்கள் மக்களை தார் வீதியில் படுக்கவைத்து யுத்தடாங்கியை உடல்மேல் ஏற்றிக் கொண்டீர்ககே? புலிகளுடன் மேதமுடியாமல் அப்பாவி மக்களை வயது பால் வேறுபாடின்றி கொன்றுகுவித்தீங்ககே இதுதான் பயங்கரவாதம் இவ்வளவையும் நீங்கள் செய்ய நாங்கள் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டுமா? ஊங்களை மாதிரி 5க்கும் 10 க்கும் சோரம் போவபன் இல்லை ஈழத்தமிழன்.யானநாயகம் என்று வாய்கிழிய கத்துகிறீர்களே நேற்று உங்களிக் மந்திரி சிவசங்கர் மேனன் சொல்லுகிறார் இலங்கை எடுக்கும் எல்லா முடிவுகளையும் இந்தியா ஆதரிக்குமாம்.வெட்கக்கேடு அரைவாசி உலகநாடுகளும் உலகின் ஒட்டுமொத்த மனித உரிமை அமைப்பக்களும் சொல்லுகின்றன வன்னியில் பாரிய இன அழிப்பு நடைபெற்றது ஓர் நீதியான விசாரணை வேண்டும் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300000 மக்களும் விடுதலை செய்யப்பட்டு அவரவர் இடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று.இதற்கு சிறிலற்கா சொல்கிறது முடியாது என்று இதையும் இந்தியா ஆதரிக்குமாம். ஆதரித்துத் தானே ஆக வேண்டும்.மக்கள் வெளியே வந்தால் இந்தியாவின் நடவடிக்கைகள் வன்னியில் மீண்டும் செய்த கொடுமைகள் எல்லாம் வெளி உலகத்திற்கு வந்துவிடுமே? இந்தப்பயம் தான் இந்தியாவுக்கும் வேறு சில அறிவாளிகளுக்கும்.

        (இப்போது புலிகளைப் புதைத்த இடத்தில் புல் முளைத்து விட்டது. அந்த புல்லையும் எரித்து விடுவதுதான் உலகத்துக்கு குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு நல்லது.)

        புலிகளை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் புலி எப்படியானது என்று. இன்று காலத்தின் கட்டாயத்தில் சிலவற்றை சொல்ல முடியவில்லை. இப்போது நேரம் உங்களுக்கானது புலிகளினதும் ஈழத்தமிழன்னதும் அழிவில் நீங்கள் மகிழும் காலம். எதிரிகளையும் துரோகிகளையும் தமிழனுக்கு புலிகள் இல்லையேல் என்ன நடக்கும் என்பதையும் உலகத்திக் கண்முன்னே அடையாளம் காட்டும் எங்களின் காலமுங்கூட.

        நிச்சயம் எமக்கு அவலத்தை தந்தவனுக்கு அது யாராக இருந்தாலும் அவலத்தை திருப்பிக் கொடுப்போம்.

        செந்தில் அண்ணா தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வரலாறு தெரியாதவர்களுக்காக எழுதுங்கள்.

        நன்றி
        அன்புடன்
        தமிழ்நிலா

      • 3.1.22
        வித்தகன் says:

        அப்பாவி மக்களுக்கு ஏற்படும் துயரங்கள், அவர்கள் எந்த ஊராக, இனமாக, மொழியாக இருந்தாலும், அவை மனிதாபிமானமுள்ள எவரையும் தாக்கியே தீரும். அதிலும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் எனும் போது அது இந்தியத் தமிழர்களுக்கு அதிகமாகவே வேதனை தருவது இயல்பு.

        என் புலி எதிர்ப்பை நீங்கள் தமிழ்துரோகம் என்று சொல்வது உங்கள் மூடிய மனநிலையைத்தான் காட்டுகிறது. நான் எத்தனை முறை ஈழத் தமிழர்கள் குறித்த என் மனப்பாரத்தை சொன்னாலும் என் தமிழ் உணர்வை நிரூபிக்க புலி ஆதரவு மட்டும்தான் உங்களுக்கு வேண்டியிருக்கிறது. அது நடக்காது. தமிழர்களை இழித்துப் பேசவும் மாட்டேன். புலிகளை உயர்த்திப் பேசவும் மாட்டேன்.

        இந்தியாவை ஒதுக்கி விட்டு, ஒரு வன்முறை இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு இலங்கைத் தமிழர்களுக்குத் தொடர்ந்து வேதனை கொடுக்காமல் இருக்கும் முதிர்ச்சி பெரும்பாலான இந்தியத் தமிழர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதனால் ஈழத் தமிழர்களின் நலனிலும் உரிமைகளிலும் எங்களுக்கு அக்கறை இல்லாமல் போய் விடவில்லை என்றும் உலகிற்குப் புரியும் என்று எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வித்தியாசம் புரிந்தால் நல்லது.

        ஜனநாயகத்திற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் சட்டம் ஒழுங்கு பற்றிய கருத்துக்களுக்கும் (பெண்களின் பாதுகாப்பு, காவல் துறையின் காட்டு மிராண்டித்தனம்) நேரடி சம்பந்தம் இல்லை. நண்பர் செந்திலை மற்றவர்களுக்கு வரலாறு சொல்லிக்கொடுக்க நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதுபோல், நீங்கள் ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளவும் ஒரு நல்ல ஆசிரியரைத் தேடுங்கள். உங்களைப் போன்ற அழியாத இன உணர்வுள்ள இளைய தலைமுறை எதிர்காலத்தில் ஈழத்தை வென்றால், மற்றவர்களைப் பழிவாங்கும் வேலையை விடுத்து, தமிழர்களை ஆள்பவர்களை தமிழர்களே தேர்ந்தெடுக்கும் நிலை வர அது கண்டிப்பாக உதவும்.

      • 3.1.23
        வித்தகன் says:

        //மன்னிக்கவும் நான் வித்தகன் என்கின்ற புலி+ஈழ எதிர்ப்பாளர் ஒருவருடன் பிரியோசனமே இல்லாத கருத்தாடலில் இருந்ததால் நீங்கள் எழுதியவற்றை கருத்திலெடுக்கத் தவறி விட்டேன்.//

        என்னைப் போயி ஈழ எதிர்ப்பாளன் என்பது உங்கள் புரிதலின் குறைபாடு. நான் புலி எதிர்ப்பாளன். ஈழ ஆதரவாளன். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் விட்டு விடுங்கள். நீங்கள் யாருடன் பிரயோசனமான கருத்தாடல் நடத்துகிறீர்கள் என்று பார்க்க விரும்புகிறேன்..

        //சுயநலமில்லாது மக்களையும் நாட்டையும் நேசிக்கும் ஓர் சிறந்த தலைவர் உங்களுக்கு கிடைத்திருந்தால் உங்களின் நிலமை இன்று எப்படி இருக்குமென எண்ணிப் பார்க்கின்றோம்.//

        நானும் பிரபாகரனைப் போன்ற தற்குறியான வன்முறையாளர் உங்களுக்குத் தலைவராக தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். நான் செந்திலிடமும், ரதியிடமும் கூறியது போல ஈழத்தமிழர்களின் பிரச்சினை எனது பிரச்சினையும்தான். ஆனால் புலி ஆதரவு காட்டித்தான் என் உண்ர்வை நிரூபிக்க வேண்டுமென்ற மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் கருத்துக்களை மதிக்க மாட்டேன். இனிமேல் உங்களிடம் பேச எதுவும் இல்லை. ஈழ மக்களுக்கு என்னால் ஆனதை செய்வேன். அதற்கு யார் அனுமதியும் தேவையில்லை.

      • 3.1.24
        Tamilnela says:

        வணக்கம் வித்தகன்.
        உண்மைகளை உங்களால் மட்டுமல்ல எவராலும் மறைக்க முடியாது.நீங்கள் நினைப்பதெல்லாம் உண்மையாகவும் முடியாது.
        ஏன் அருமைச் சகோதரி ரதி அவர்கள் சொன்னதையே நானும் திரும்பவும் சொல்லுகிறேன்.

        (ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தியா, அதன் தலைவர்கள் மீது எவ்வளவு பாசமும் பற்றும் உள்ளதோ; அதேயளவுக்கு எனக்கும் என் மண், என் மக்கள், என் இனவிடுதலைக்காக போராடும் புலிகள் மீது பாசமும் பற்றும் உள்ளது. நீங்கள் எழுதியதை படித்ததிலிருந்து நான் புரிந்து கொண்டது, உங்களுக்கு தமிழ்நாடு இந்தியாவை விட்டு பிரிந்து விடுமோ என்ற பயம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதற்கு புலிகளையும் ஐயா பழ நெடுமாறன் போன்றோரையும் காரணகர்த்தாக்களாக்கி உங்கள் பயத்தை வெளிப்படுத்துகிறீர்கள்)

        நான் யனநாயகததைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கலாம்.எனக்கு யனனாயகம் கற்றுத் தந்த ஆசிரியர் தவறு செய்திருக்கலாம்.தவறை தவறு என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் உங்களுக்கு புலி எதிர்பு சொல்லிக் கொடுத்த உங்களின் ஆசிரியர் உண்மையை உண்மை என்று ஏற்க வேண்டும் என்று சொல்லித் தரவில்லை என்று விளங்குகிறது.
        யாரையும் பழிவாங்கும் எண்ணம் ஈழத்தமிழனுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.யார் யாரைப் பழிவாங்கியது என்று நீங்கள் வரலாற்றை புரட்டத் தேவை இல்லை. ஓரிரண்டு ஆண்டுகள் பின்னோக்கிப் போங்கள் உங்களுக்கு தெரியும்.
        ஈழத்தில் போய் மக்களுக்கு உதவிசெய்யப் போவதாக கூறிஉள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி சகோதரா!அங்கே போக முன்பு உங்களால் முடிந்தால் யாரால் இந்த மக்களுக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது! யாரால் ஏதுமறியா அப்பாவிச் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப் பட்டார்கள் யார் இவர்களை நம்பவைத்து முதுகில் குற்றியது என்று சிந்தித்துப் பாருங்கள்.
        என்போன்ற இளையவர்கள் நிச்சயம் ஈழம் வென்றெடுப்பார்கள்.வரலாறு நிச்சயமாக தனித் தமிழ் ஈழத்தை விரைவில் பிரசவிக்கும் தயவுசெய்து உங்கள் நாடு உதவி செய்யாவிட்டாலும் பறவாஇல்லை தயவு செய்து உபத்திரவம் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

        மற்றும்படி உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதங்கள் ஏதும் இல்லை கொள்கைகளிலேயே முரண்பட்டு நிற்கிறோம். கடுமையான வார்த்தைகளை நான் பயன்படுத்தி உங்கள் மனம் நோகும்படி எழுதி இருந்தால் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

        அன்புடன்
        தமிழ்நிலா

      • 3.1.25
        வித்தகன் says:

        தமிழ்நிலாவின் கண்ணியமான இந்த வார்த்தைகளுடனேயே இந்த கருத்துப் பறிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் போது நான் உணர்ச்சி வேகத்தில் தவற விட்ட ஒரு விஷயம் உறுத்துகிறது. தமிழ்நிலாவும், ரதியும் ஒருவேளை பெண்களாக இருப்பார்களோ அதை நான் கவனிக்க விட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது. அபப்டி இருக்கும் பட்சத்தில் நான் இன்னமும் கூட வேகம் குறைத்துப் பேசியிருக்க வேண்டுமோ என்று எண்ணுகிறேன். அவர்கள் ஆண்கள் என்ற எண்ணத்தில் என் வார்த்தைகள் அமைந்து விட்டன். மனம் கோணும் வார்த்தைகள் என்னிடமிருந்து வந்திருந்தாலும் இந்த இந்தியத் தமிழ் அண்ணனை அவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

      • 3.1.26
        செந்தில் says:

        தோழர் வித்தகன் அவர்களே,

        கடைசியாக உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

        //ஹமாஸ், சக பாலஸ்தீன விடுதலைக் குழுக்களைக் குறி வைத்து அழித்தது இல்லை. அமைதி வழியில் பாலஸ்தீனம் கேட்டுப் போராடுபவர்களைக் கொன்று ஒழித்ததில்லை.//

        இலங்கையில் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு ஒன்று சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்து கொண்டு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைகளில் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அங்கு நிகழ்ந்த படுகொலைகள் அனைத்தையும் புலிகள்தான் செய்தனர் என்ற அரசின் தவறான பரப்புரைகளை மட்டும் வைத்து நீங்கள் இப்படி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

        இலங்கையில் IPKF முதன்முதலில் கால் வைத்தபோது இந்திய வீரர்கள் சீல் உடைக்கப்படாத AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை புலிகள் அல்லாத பிற போராளிக் குழுக்களுக்கு வினியோகித்தார்கள். இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டு மறைமுகமாக ‘RAW’ அமைப்பினர் தமிழர்கள் பகுதிகளில் உளவு பார்த்தனர். மற்ற போராளிக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் ஏற்படக் காரணமாக இருந்ததே IPKF வீரர்கள்தான். மற்றும் 1987 ஆம் ஆண்டு பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டவர் ராஜீவ்காந்தி. இதை நான் கூறவில்லை. இந்திய அமைதிப்படைக்கு தலைமை ஏற்றுச் சென்ற திரு ஹர்கிரத் சிங் அவர்கள் தான் எழுதிய ‘Intervention in Sri Lanka: The IPKF experience retold’ எனும் புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

        உங்களுக்காக அந்த புத்தகத்தில் கூறிய சிலவற்றை கீழே தந்திருக்கிறேன்.

        “The Tigers continued to surrender their weapons till 21 August 1987. At this point of time, RAW, under directions from the Prime Minister’s Office, commenced the rearming of the other militant groups. Evidence regarding the rearming of some defunct militant groups was brought to the notice of all concerned, including the Indian High Commissioner [J. N. Dixit]. I had shown the High Commissioner and his Military Adviser inColombo a videotape on the induction of small arms with Indian markings. The rearming of militant groups other than the LTTE resulted in inter-group killings among the Tamil militants and the surrender of weapons came to a virtual standstill by the end of August 1987.” [p47-48]

        “Dixit wanted my assessment of the various militant groups that had become
        defunct and had now suddenly become active again. I explained that the ENDLF, PLOTE, and TELO had been lying dormant and it was only after the middle of
        August 1987 that they had re-surfaced with newly acquired arms. … Moreover, the LTTE knew that RAW had an active hand in encouraging these groups.” [p49-50]

        “According to Dixit, the ultimate objective of the IPKF was to discredit the LTTE in the eyes of the local Tamil population. In short, the IPKF was expected to play a double game. I realized that these tactics would not work since the Tamils had already understood that their aspirations for Eelam could be met only by the LTTE.”[p48-49]

        “[Later] the EPRLF, prior to the withdrawal of the IPKF, was equipped with rifles under orders from Lt. Gen. A.S. Kalkat, it was not realized that the EPRLF cadres had no fighting potential and handing weapons to this group was an ill-advised
        venture.” [p50]

        “In September 1987, a political dialogue between the LLTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the [Interim Administration Council] was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by Dixit, was 16-17 September 1987.” [p57]

        “On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit,
        directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the [Overall Forces
        Commander]. Lt. Gen. Depinder Singh.” [p57]

        “Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasizing that I would not obey his directive.” [p57]

        “I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He Rajiv Gandhi has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’” [p57]

        //பாலஸ்தீனத்திலேயே உள்ள பிற இனத்தவரை (ஈழத்தில் இருந்த முஸ்லீம்கள் போல) அவர்கள் வாழும் இடத்திலிருந்து விரட்டவில்லை.//

        முஸ்லீம்கள் வெளியேறியதில் இலங்கை அரசின் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறன்.

        இந்த விவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்த ‘வினவு’ இணையதளத்திற்கு என்னுடைய நன்றிகள். மீண்டும் விவாதிப்போம்.

        உங்கள் தோழர் செந்தில்.

  4. 4
    RV says:

    // இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் //
    முஸ்லிம் வெறி, கிருஸ்துவ வெறியாக இருந்தால், பார்ப்பன பாசிசம் தவிர வேறு விதமான பாசிசமாக இருந்தால் ஆதரவா? இந்த ஜாதி மதம் பார்க்கும்க் கேனத்தனத்தை விடவே மாட்டீர்களா?

    • 4.1
      ஆர்.கே says:

      ஏதாவது பேசனும்னே பேசுவீங்களா? வினவு எங்கே முஸ்லிம் / கிறிஸ்துவ வெறியை ஆதரிப்போம்னு சொன்னார்? இதே தளத்தில் வினவு முஸ்லிம் / கிறிஸ்துவ வெறியைக் கண்டித்து எழுதியதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியலையா? இதே இதழில் தான் பாகிஸ்தான் vs தாலிபன் குறித்தும் கூட ஒரு கட்டுரை வந்துள்ளது..

      இங்கே மக்களை உடனடியாக தாக்கும் பிரச்சினைகளான 1) மறுகாலனியாக்கம் 2) பார்ப்பன பாசிசம் ( என்றால் சாதி ஏற்றத்தாழ்வு, ஆர்.எஸ்.எஸ் காலிகளின் அபாயம், உள்ளிட்டு ) – ஒரு அரசியல் பத்திரிகை என்றால் அடிப்படையாக மக்களை பாதிக்கும் விஷயங்களைக் குறித்து தான் எழுத முடியும்…

      //இந்த ஜாதி மதம் பார்க்கும்க் கேனத்தனத்தை விடவே மாட்டீர்களா?//

      இப்படி கேணத்தனமா கேள்வி கேட்கறத எப்போ விடப் போறீங்க? ஜாதி இருக்கறதாலே தானே அதுபத்தி எழுத வேண்டி இருக்கு? மத வெறி இருக்கறதாலே தானே அதுபத்தியும் எழுத வேண்டி இருக்கு?

      • 4.1.1
        RV says:

        ஆர்கே,

        எதையும் படிக்கவே மாட்டீர்களா? அதுதான் excerpt எடுத்து கொடுத்திருக்கிறேனே, அதையாவது படித்து தொலைக்கலாமே!

        // இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் //
        மதத்தால் பாகுபாடு பார்க்கவில்லை என்றால் மத வெறி என்று எழுத வேண்டியதுதானே? அது என்ன இந்து வெறி? இல்லை மத வெறி ஹிந்துக்களிடம் மட்டும்தான் இருக்கிறதா? இந்த மாதிரி சின்ன விஷயம் கூட சொன்னால்தான் உங்களுக்கு உறைக்குமா? ஜாதி பாகுபாடு பார்க்கவில்லை என்றால் ஜாதீய பாசிசம் என்று எழ்துத வேண்டியதுதானே? தேவரிய பாசிசம் என்று குறிப்பிட்டு எழுதி நான் இது வரை பார்த்ததில்லை. பாசிசம் என்று எழுதுவதில்லை, எப்போதும் பார்ப்பன பாசிசம்தான். அம்பி என்றுதான் எழுதுவார், துலுக்கன் என்று எழுதிவிடுவாரா? இல்லை இது வரை எழுதி இருக்கிறாரா? அதுதான் கேனத்தனம். இதை நான் எடுத்து சொல்ல வேண்டி இருக்கிறது பாருங்கள், அது இன்னும் மோசமான கேனத்தனம்.

        இந்த மாதிரி மடத்தனமாக படிக்காமல் எழுதாதீர்கள்.

        • 4.1.1.1
          வினவு says:

          பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்பது மிக முக்கியமான அரசியல் பொருளை கொண்ட சொற்றொடர்.

          மற்ற மதங்களைப் போல இந்து மதத்தை ஒரு மதம் என அழைக்க முடியாது. இது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை வருண, சாதி அடிப்படையில் பிரித்து அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஒரு கிரிமினல் சட்டத் தொகுப்பு. இதை மேலும் புரிந்து கொள்ள அம்பேத்கரைப் படிக்கவேண்டும். அடுத்து இந்த மதத்தை சாத்திர, புராண, இதிகாச, இலக்கிய அடைப்படையில் நியாயப்படுத்தும் வேலையை பார்ப்பனர்கள் செய்து வந்தனர். சங்கராச்சாரிகள், ஏராளமான மடங்கள், ஆதினங்கள் எல்லாம் அவாள்கள் உருவாக்கியவைதான். அடுத்து இந்து மதத்தை பார்ப்பன மதம் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்துக்களெல்லாம் ஒன்று என எந்த விளக்கத்தையும் அறிவியல்பூர்வமாகவோ, அல்லது பக்திப் பூர்வமாகவோ அளிக்க முடியாது. இங்கே மக்கள் எப்படியெல்லாம் பிரிந்து நிற்கவேண்டும் என்பதைத்தான் இந்த பாரப்பன மதம் அமல்படுத்தி வருகிறது.

          இந்த பாரப்பனமதத்தை அரசியல் ரீதியான வெற்றியின் மூலம் இந்தியாவை பிடிப்பதற்கு சங்க பரிவாரங்கள் தீவிர முயற்சியை செய்து வருகின்றன. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு இது இந்தியாவில் பாசிசத்தை அமலுக்கு கொண்டு வரும் அபாயமாக வாசலில் நிற்கிறது. ஆட்சியை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதன் கோரதாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரிசாவில் தலித்துகளும், கிறித்தவர்களும் வேட்டையாடப்பட்டனர். எனவேதான் பார்ப்ன இந்து மதவெறி பாசிசம் இந்தியாவில் ஒரு அபாயமாக நிற்கிறது. இத்தகைய அபாயத்தை இந்தியாவில் இருக்கும் முசுலீம்களும், கிறித்தவர்களும் செய்யுமளவுக்கு அவர்கள் பெரும்தொகையானவர்கள் இல்லை. எனவே அவர்களை அப்படி இந்தியாவில் அழைக்க முடியாது. சாதியால் பிரித்து வைத்திருக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இந்துக்கள் என்று ஒருபொய்யை சொல்லி அணிதிரட்டும் வேலையை சங்க பரிவாரங்கள் செய்து வருகிறது. இவர்கள் முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு அல்லது இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்று புரியவைப்பதற்கு நாம் ” இந்துக்களிடம்’ இவர்களை பார்ப்பன மதம் என்று சொல்லித்தான் புரிய வைக்க முடியும்.

          நட்புடன்
          வினவு

      • 4.1.2
        ஆர்.கே says:

        தூங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது :(

        ம.க.இ.க, இந்தியாவில் – அதுவும் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கே எந்த மதவெறி முன்னனியில் நின்று மக்களை ஒடுக்குகிறது ? இங்கே இஸ்லாம் மதவெறி என்பது கூட இந்து மதவெறியின் ஒரு எதிர்விளைவு தான்!

        காசுமீரத்தில் ஆரம்பத்தில் இனவிடுதலைப் போராகத் துவங்கிய போராட்டம் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் தானே மதச் சாயல் பூசிக் கொண்டது. பாபர் மசூதி இடிப்பிற்கு முன் தாயாய் பிள்ளையாய் பழகிய மக்களை எந்த மதவெறி இரண்டாய் வெட்டிப் பிளந்தது? நாட்டை ஆளும் நிலைக்கு செல்வாக்குடன் இருப்பது இந்து பாசிச பா.ஜ.கவா? இல்லை முசுலிம் அடிப்படைவாத கட்சிகளா? நாட்டை தன் ஆளுகைக்குள் எடுத்துக் கொள்ளும் அளவு ஒரு விஷ விருட்சமாய் வளர்ந்து ஒரு பாசிச அரசியல் சித்தாந்தம் இந்து மதவெறி சித்தாந்தம் தானே?

        அப்படி இருக்க, இந்து மதவெறி பாசிசம் என்று எழுதினால் ஏன் உங்களுக்கு பொத்துக் கொண்டு வருகிறது? ம.க.இ.க பாகிஸ்தானிலோ ஆப்கனிலோ இயங்கியிருக்குமானால் முசுலிம் மதவெறி பாசிசம் என்று எழுதலாம்.

        மற்றபடி இந்தக் கட்டுரை ஈழம் குறித்ததாக இருப்பதால் இப்போதைக்கு நான் இந்த அம்சத்தில் வாதாடுவதை நிறுத்திக் கொள்கிறேன்.

    • 4.2

      //நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராகவும், இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வூட்டும்//
      ஏன் சரியாத்தானே எழுதியிருக்கு? இந்தியாவுல இதெல்லாம்தானே முக்கிய பிரச்சினைகள்?

      ஆமாம், ஈழம் பற்றிய கட்டுரை பற்றி உங்களுக்கு கருத்து ஏதும் இல்லையா?

      • 4.2.1
        RV says:

        நம்பி.பா.,

        இந்து வெறி, பார்ப்பன பாசிசம் போன்ற சொற்றொடர்கள் உங்களுக்கு சரியாக பட்டால் – மத வெறி என்று எழுதாமல் இந்து வெறி என்று எழுதுவதும், ஜாதி வெறிக்கு பார்ப்பன பாசிசம் என்று பெயர் வைப்பது (கூடிய சீக்கிரம் முஸ்ஸொலிநியெ பார்ப்பன பாசிஸ்ட் ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்) சரியாக தோன்றினால் – நாம் இதை பற்றி எல்லாம் பேசுவதில் பயனில்லை.

        மிக தவறான இந்த் சொற்பிரயோகங்களை பார்த்த பிறகு மேலே படிக்கும் மூட் போய்விட்டது. என்றாவது படித்தால் என் கருத்துகளை எழுதுகிறேன்.

  5. 5

    கொடநாட்டுல ஒளக்காந்துக்கிட்டு இருக்குற வேழம், ஈழம் வாங்கிகொடுத்துரும்னு கணவு கண்டுக்கிட்டு இருந்த சில,பல எணைய பொரட்சியாளய்ங்களுக்கு,புலி யாவாரிகளுக்கும் சூத்துல சூடு வச்ச மாதிரி இருக்குண்ணே .

    ஆனாலும் ஒரு சோகம், கருணாநிதிய விளாசாம விட்டுட்ட.
    எணைய பொரட்சியாளய்ங்க ஒண்ணைய ரவுண்டு கட்டபோறாய்ங்கண்ணய்.

  6. 6
    pligg.com says:

    ஈழம்: ஏன் பின்னடைவும் பேரழிவும் ?…

    ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது…

  7. 7
    manithan says:

    ‘கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தை விருப்பு வெறுப்பின்றி மீளாய்வு செய்து படிப்பினைகள் பெறுவதும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும் இதற்கு முன்தேவையாக இருக்கிறது..’

    ஈழப் போராட்டத்திற்கான காரணிகள் வேறு, உலகமயமாதலை எதிர்ப்பதன் காரணிகள் வேறு.
    ஒன்றுடன் ஒன்றை இணைக்க முடியாது. உலகமயமாதலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியாக ஈழ விடுதலைப்
    போராட்டத்தை மாற்ற முயற்சிப்பது உங்களுடைய ஏகாதிபத்திய உலகமயமாதல் எதிர்ப்பு அரசியலுக்கு ஈழப் போராட்டத்தை பயன்படுத்துவதாகும். இந்த குட்டையை குழப்பும் வேலையை
    இந்திய அளவில் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைய சூழலில் ஈழத்தமிழர் முன் உள்ள கேள்வி உலகமயமாதலை ஆதரிப்பதா இல்லை எதிர்ப்பதா என்பதல்ல.
    சர்வரோக நிவாரணி போல் எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்று இன்னும் எத்தனை ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பீர்கள்.

  8. 8

    வினவு –
    //ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும்//
    ஏகாதிபத்தியம் ஈழத்துக்கு மட்டுமா எதிரி? மொத்த இலங்கைக்கும் இல்லையா?

    //அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது// ஓபாமா மேல என்ன soft corner? ஓபாமா அரசாங்கம் தடுக்கணும்னு நினைச்சிருந்தா ராஜபக்சே செயல்பட்டிருக்கவே முடியாதே?
    கிட்டத்தட்ட ஸவாட் பள்ளத்தாக்கில தாலிபனை அழிக்கிறம்னுட்டு, பாகிஸ்தான் மூலமா மக்களையும் சேர்த்தே அமேரிக்கா தண்டிச்சிட்டுத்தானே இருக்குது? அந்த அமேரிக்காவும் ஒபாமாவும் பாதுகாப்பாங்கன்னு ஈழத்துல யாரும் யோசிக்கறாங்கன்னா அது தன்னைத்தானே ஏமாத்திக்கிறதில்லையா?

    • 8.1
      வினவு says:

      நம்பி,

      இந்த இதழிலேயே இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தும ஒரு கட்டுரை வந்துள்ளது. அது உங்களுக்கு தேவையான விளக்கத்தை தரும். அடுத்து ஒபாமா சொல்லி இலங்கை கேட்கவில்லை என்பதில் உண்மை என்னவென்றால் இலங்கை அரசு நிலையை அமெரிக்கா மறைமுகமாக ஆதரிக்கிறது என்பதுதான். அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்திய அரசு சிங்கள அரசை ஆதரிப்பதை அமெரிக்கா எதிர்க்காமல் மறைமுகமாக ஆசி வழங்குகிறது என்பதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். ஏகாதிபத்தியம் ஈழத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரிதான் என்றாலும் தேசிய இனப்பிரச்சினை என்ற அளவில் அவர்கள் சிங்களத்து ஆதரவாக இருப்பதுதான் ஆதாயம் என செய்கிறார்கள்.

      நட்புடன்
      வினவு

  9. 9
    மனிதன் says:

    ‘அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்திய அரசு சிங்கள அரசை ஆதரிப்பதை அமெரிக்கா எதிர்க்காமல் மறைமுகமாக ஆசி வழங்குகிறது’

    இப்படித்தான்

    வினவு மற்றும் ம.க.இ.க வினர் ஒற்றைக் கண்ணோட்டத்தில் அனைத்தையும் விளக்க முயல்கின்றனர். இந்தியா அமெரிக்காவின் அடியாள் என்பதில் துவங்கி, இந்து மத எதிர்ப்பில் அது முடிகிறது. எனவே அவர்களால் ஈழ தமிழரின் கோரிக்கைகள், பிரச்சினைகளின் தனித்துவமான அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய ‘புரட்சிகர’ அமைப்புகளின் இது போன்ற பார்வைக் கோளாறுகள் வினவிடமும் இருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஈழத்தமிழரைப் பொருத்தவரை அமெரிக்கா நட்பு சக்திதான்,பாகிஸ்தானும்,சீனாவும் நட்பு சக்திகள் அல்ல. இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்கும் ஐரோப்பிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் என்று ம.க.இ.க வகைப்படுத்தலாம். ஈழத்தமிழர் அனுபவத்தில் அவ்வாறு செய்ய முடியாது.
    அனுபவ ரீதியாக உலகைப் புரிந்து கொள்வதும், வரட்டு கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்வதும் வேறுபடும். வினவின் உலக புரட்சிகர அரசியல் லென்ஸ் மூலம் ஈழத்தமிழர் தம் பிரச்சினைகளை, உலகைப் பார்க்கத் தேவையில்லை. இந்தியாவை ஈழத்தமிழர் நம்பத்தேவையில்லை. அதே போல் ஒற்றைக் கண்ணோட்ட புரட்சிகர
    அரசியலையும் அவர்கள் ஏற்கத் தேவையில்லை. தங்கள் அனுபவங்களைக் கொண்டு
    நட்பு சக்திகளை அவர்கள் அடையாளம் காண்பார்கள். ஒபாமா எதிர்ப்பு அரசியலில் ஈழத்தமிழருக்கு அக்கறை இல்லை. ஏனென்றால் ம.க.இ.க வோ அல்லது பிற ‘புரட்சிகர’ அரசியல் சக்திகளோ தமிழக அளவில் கூட எதையும்
    சாதிக்கும் அளவிற்கு வலு உள்ளவை அல்ல. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வலுவுள்ளவை. அவை எதிரிகள் அல்ல. அவை ஈழத்தமிழருக்கு நல்லது செய்யக் கூடும். அவர்களை பகைத்துக் கொள்வதால் ஈழத்தமிழருக்கு பலன் ஏதுமில்லை. இன்றைய சூழலில் அவர்களை நட்பு சக்திகளாக கருதுதல் சிறந்தது. உங்களுடைய எதிரிகளும்,
    எங்களுடைய எதிரிகளும் ஒன்று என்று வினவு நினைக்கலாம். ஈழத்தமிழர் ஏன் அப்படி நினைக்க வேண்டும். ஆகவே வினவு போன்றோரின் அரசியலை ஈழத்தமிழர்
    முழுமையாக ஆதரிக்கவோ, ஏற்கவோ முடியாது.சிலவற்றில் கருத்தொற்றுமையும்,
    பலவற்றில் கருத்து முரணும் இருக்கத்தான் செய்யும்.

    • 9.1
      MamboNo8 says:

      பொதுவாக ஈழத்தமிழர் என நீங்கள் சொல்வதை விட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் என சொல்வது சிறந்தது…அவர்களுக்குத்தான் அமெரிக்காவும், அய்ரோப்பாவும் நட்பு சக்தியாக எண்ணுவதில் பயன் இருக்கின்றது. அடிமைக்கூடாரங்களில் அல்லல் படும் சாதாரண ஈழத்தமிழனுக்கு சந்தேகமேயில்லாமல் அமெரிக்க-அய்ரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எதிரிதான்.

    • 9.2
      Kalaiyarasan says:

      நீங்கள் ஈழத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? ஈழத்தமிழர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியான அரசியலைக் கொண்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? ஒரு குடும்பத்திற்குள் கூட ஒத்த கருத்துள்ளவர்களை காண்பது அருமை. அப்படியிருக்கையில் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏகாதிபத்திய நலன்விரும்பிகள் என்று சொல்வது அறிவீனம்.

      ஈழத் தமிழருக்குள் அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் நட்பு சக்திகளாக கருதும் ஒரு குழுவினர் இருப்பது உண்மை தான். இந்தக் குழுவை சேர்ந்தவர்கள் தமிழ் தேசியவாத அரசியலை பின்பற்றுகிறவர்கள். ஏகாதிபத்தியத்தின் கைகூலியாகவும், ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்யும் அடிமையாகவும் வாழ்வதில் பெருமை கொள்பவர்கள். அதே நேரம் தமது சுதந்திரத்தை பாதுகாக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய, இன்றும் போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் வேண்டுமென்றே மறைக்கின்றீர்கள். மஞ்சள் கண்ணாடி போட்டால் காண்பதெலாம் மஞ்சளாகத் தான் தெரியும். தேசியவாத கண்ணாடிக்கூடாக பார்ப்பவர்கள் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசியவாதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  10. 10

    இனி, புதிய ஜனநாயகம் மாத முதல் தேதியிலேயே கிடைத்துவிடுமா! சந்தோசம். கடைகளில் போடுபவர்கள் சில சமயங்களில் தாமதமாக போட்டால்… வாங்குவதற்கு 5 தேதியாகிவிடுகிறது

  11. 11
  12. 12
    kalagam says:

    யாருக்கு சாதி வெறி, மத வெறி பிடித்தாட்டுகிறது? இல்லை நாட்டில் எந்த இடத்திலும் பார்ப்பன பாசிசம் இல்லை யென்று நிரூபிக்கவேண்டியது தானே? அதை விட்டு விட்டு மொன்னைத்தனமாக கத்தி கிழி கிழிஎன்று கிழிப்பாராம்.

    பாத்து கத்தி கிழி கிழி என கிழித்து காதும் சேர்த்து கிழிந்து விடப்போகிறது.

  13. 13
    kingslin says:

    இப்பதிவை படித்தது முதல் மனம் லேசான வருத்தம் கொள்கிறது

    சரியோ தப்போ இன்று உலகம் முழுமையும் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது கண்டிப்பாக புலிகளுக்கும் தேசியத்தலைவருக்கும் மட்டுமே என்பதை அந்த **** கள் மறந்து விட்டதாலே இந்த பேரிழவை சந்தித்தோம் என்பதே உண்மை.

    வென்று காட்டியிருந்தால் புகழ்வதும் கொண்டாடுவதுமாக இருக்கும் தமிழன் தோல்வி என்று வரும்போது நம்மையே இகழ்ந்து விமர்சனம் செய்ய புறப்பட்டு விடுவான். சினிமாவையும் நடிகர்களை கொண்டாடும் இவனுக்கு என்றுதான் கண்கள் திறக்குமோ தெரியவில்லை.

    இனம் என்ற பற்றி அற்றுப்போன நிலையில் எழுதப்பட்ட இந்த பதிவு. சுயநலம் அதிமாகிவிட்ட இந்த நூற்றாண்டுக்கு ஒரு உதாரணம்.

    வரலாற்றில் பார்த்தோம் என்றால் பல காலகட்டத்தில் தன் இனத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் எல்லாம் மிகப்பெரிய இழப்புகளை காணலாம் இதுவும் அதுபோல் ஒன்று. . . இனியும் போராட்டங்கள் தொடரும் ஆனால் அது உங்களுக்காக இல்லை. தமிழ் இனத்திற்கானதாகத்தான் இருக்கும். .

    சந்தர்பங்களாலும் சூழ்நிலைக்கேற்றவாரும் மாறும் பச்சோந்தி கூட்டங்களை தனித்து அடையாளம் காண ஏற்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் இதை நான் காண்கிறேன் . .இனியாவது நல்லது நடக்கட்டும்

  14. 14

    புதிய ஜனநாயகம் முதல் தேதியிலேயே கிடைக்கும் என்பது மிக மிக மகிழ்வான செய்தி. முடிந்தவரை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் நானும் அதை சில மாதங்களாக மின்னூலாகவும், நகல் பதிவாகவும் பதிவிட்டேன்
    ஆனால் மே மாத இதழ் இன்னும்(9 ஜூன்) எனக்கு கிடைக்கவில்லை.

    தோழமையுடன்
    செங்கொடி

  15. 15
    tamilcircle says:

    அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

    போராட்டத்தின் பெயரில் கடந்தகாலத்தில் நடந்த அரசியல் சீரழிவுகள் மேலான விமர்சனங்களின்றி, மக்களால் சுயமாக முன்னேற முடியாது. கடந்த 30 வருடமாக வலதுசாரிய புலிகள் பேரினவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, தவறான தம் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழினத்தையே அழித்தவர்கள். கடந்த அறுபது வருடமாக இந்த வலதுசாரியம் தமிழினத்தின் பெயரில், வெறும் இனவாதம் மூலம் தமிழினத்தை சுடுகாடாக்கி பிழைத்தவர்கள்.

    இதன் மேல், இன்று எந்த சுயவிமர்சனமும் கிடையாது. விமர்சனம் கிடையாது

    • 15.1
      செந்தில் says:

      Mr tamilcircle,

      “பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

      சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

      சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

      சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.

  16. 16
    tamilcircle says:

    இனி புலிகளிடம் எந்த தியாகமும் கிடையாது. இதைச் சார்ந்த எந்த வீரமும் கிடையாது. இனியும் கூட புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு, கொடிபிடிக்க மட்டும்தான் முடியும். இதைத்தான் தமிழ் மக்களின் விடிவிற்கான, ஒரு பொதுவேலைத்திட்டமாக புலிகள் காட்ட முனைகின்றனர்.

  17. 17
    TSri says:

    உங்கள் கட்டுரையில் இருந்து ராஜினி திரணகம தொடக்கம் ஈழ தமிழர்களில் பல்வேறு தரப்பட்ட பெரும் தொகையானோர் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதும், மக்களை புலிகள் பாதுகாப்புக் கேடயமாக வைத்திருந்து மக்கள் கொல்லப்படும்போது சிங்களவன் தமிழனை கொல்கிறானே உடனடி போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று ஈழ தமிழர்களின் பிணங்களை காட்டி புலிகள் ஓலமிட்டு பிரசாரம் செய்தது வரை நீங்கள் எல்லாவற்றையும் அறிந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் புலிகும்பலை கண்டிக்கவோ கேடயமாக வைத்திருந்து மக்ககளை விட்டுவிடும் படி கேட்கவோ இல்லை. மாறாக புலிகளுக்கு ஆதரவாக படம் காட்டினீர்கள். இந்த செயலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தீர்கள். ஆனால் ஐ.நாவும், மேலை நாடுகள், அமெரிக்கா, இந்தியா கேடயமாக வைத்திருந்து மக்கள் விட்டுவிடும்படியும் புலிகளை சரணடையும் படியும் வேண்டுகோள்விடுத்தன.
    புலிகளை ஆரம்பத்தில் இருந்தே சரியாக விமர்சித்து வரும் இராயகரன், சிறிரங்கன், சோ, ராம், சோபா சக்தி பாராட்டதக்கவர்கள்.

    • 17.1

      TSri – //புலிகளை ஆரம்பத்தில் இருந்தே சரியாக விமர்சித்து வரும் இராயகரன், சிறிரங்கன், சோ, ராம், சோபா சக்தி பாராட்டதக்கவர்கள்.//
      இவர்கள் எல்லோரும் புலிகளை விமர்சித்தாலும், வணிக மற்றும் பிழைப்பு நோக்குக்காக மட்டுமே புலிகள் பற்றி பேசுபவர்கள் சோ மற்றும் இந்து ராம்.
      இவர்களை எப்படி நீங்கள் இரயாகரன், சிறிரங்கன் மற்றும் சோபா சக்தி வரிசையில் சேர்க்கிறீர்கள்?

      • 17.1.1
        TSri says:

        புலிகள் தான் ஈழ தமிழர்களை பாதுகாக்கிறார்கள் என்ற பொய் பிரசாரம் தமிழ்நாட்டில் கலக்கி கொண்டிருந்தது. அந்த நிலையில் வணிக மற்றும் பிழைப்பு நோக்குக்காக மட்டுமே செயல் பட ஆனந்த விகடன் ,நக்கீரன் ,அனிதா பிரதாப் போன்றவர்கள் செயல் பட்டனர். லாபமும் அடைந்து இருக்கலாம்.ஆனால் சோ மற்றும் இந்து ராம் ஆரம்பத்தில் இருந்தே புலிகளை பற்றி எச்சரிக்கை செய்தனர். இரயாகரன்,சிறிரங்கன் , சோபா சக்தி வரிசையில் அவர்களையும் சேர்க்கிறேன் . வைகோ, திருமாவளவன் ,நொடுமாறன், பாரதிராசா வரிசையில் தான் வினவையும் சேர்க்கிறேன். நன்றி நம்பி.பா

    • 17.2
      Srinivasan says:

      சோ,ராம் போன்றவர்கள் புலிகளை விமரிசித்தார்கள் என்பது உண்மையே. ஆனால், பவுத்த இனவெறிதான் தமிழர்கலை ஆயுதம் தூக்க வைத்தது என்பதையும், தமிழர்கலுக்கான ஸம உரிமை மட்டுமே இலன்கையில் இனபிரசினையை முடிவுக்கு கொன்டுவறும் என்று கூற தைரியம் இல்லாத கைகூலிகள்.

      • 17.2.1
        MamboNo8 says:

        TSri, நீ இப்படியே நண்பன் யார் எதிரி யார் என புரியாமல் உளரிக்கொட்டு உன்னைய நான் மென்டல் ஆஸ்பிடலில் சேர்க்கிறேன் :-)

  18. 18
    KA says:

    Etharku intha kujaraath matrum orisa kalavarankalin aathiyai mattum vittuvidukireerkal? Kothra rail erippu, orisa hindu samiyaar kolaiyai ellaam vasathiyaaka maranthuvidukireerkal, ippadi eluthuvathaal naan intha sambavankalai niyaayapaduththavillai. Unkaludaiya ethiri thavaru seyyumpothu perithaaka pEsuvathum, matravar seyyumpothu mounamaaka iruppathum oru nadunilaiyaana, niyaayamaana manithanaaka irukka mudiyaathu, inthupontra unkalin natavadikkaiyaleye neengal sollum nalla karuththukkalai makkal Erkka marukkiraarkal. intraiya sUlnilaiyil innum iruvathu aandukalil indiyaavil muslimkalin sathaveetham 40%, Appoluthu hindukkalukku ippo muslimakalukku natappathaivita kEvalamaaka natakkum, Itharkku Saantru PAK, BANKALADESH. Anthanatkalil perithum paathikkapaduvathu unkalaipontra kadavul illai entru sollum hindu matha ethirpaalarkalumthaan. Tholainokku paarvaivEndum unkalukku

  19. 19
    செந்தில் says:

    Hello ஆர்கே and RV,
    Please we have to stop arguing other’s comments and start doing what is required to move forward the tamils eelam freedom struggle.

    Thanks.

  20. 20
    செந்தில் says:

    Well said Mr Murugan to Mr. RV.

  21. 21
    FIRE says:

    pdf கோப்பில் புதிய ஜனநாயகம் அட்டைப்படதை காணாமே

  22. 22
    mani says:

    மனிதன்… நான் மணி…

    ஈழப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றாகத்தான் இருக்க முடியும். மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரள்வதும், பல்வேறு தேசிய இனப் போராட்டங்களும், ஈழப் போராட்டமும் சாராம்சத்தில் ஒன்றே. மாறாக தனித்தன்மை இருக்கிறது என்றால் அது முதன்மையானதா அல்லது மற்ற போராடும் சக்திகளுடன் இணைந்து பல்வேறு தளத்தில் போராட முயற்சிப்பது முதன்மையானதா…

    அமெரிக்கா உங்களுக்கு நட்பு சக்திதானே.. ஜனநாயகத்திற்கான போராட்டம்தானே ஈழப் போராட்டம்.. ஏன் போர் நடந்த போது 1991 ல் ஈராக் மீது போர் தொடுத்த்து போல, அல்லது ஆப்கன் மீது போர் தொடுத்த்து போல ஒரு பம்மாத்துப் போர் கூட நடத்த அந்நாடு முன்வரவில்லை. இலங்கைக்கு எதிராக வாக்களித்த பல ஐரோப்பிய நாடுகளும் தனி ஈழத்தை ஆதரிக்கின்றார்களா என்ன•.. சரி பாகிஸ்தான் மற்றும் சீனா என்பது தற்போதுதான் எதிரி நாடு என முடிவு செய்தீர்களா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்னரேவா… இலங்கை சார்பாக போரில் கலந்து கொண்ட நாடுகள் பற்றிய முழு விபரமும் வெளிவரவில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஆதரவாளர் என நம்பும் சில நாடுகளும் கலந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்..

    நண்பன் யார் எதிரி யார் என்பதை உங்களது கொள்கைதான் தீர்மானிக்க வேண்டும். வலு இருக்கிறதா என்று பார்த்து சேர்பவர்கள் நியாயமான ஒன்றிற்காக போராடுவதாக தம்மையே நம்பும்படி செய்ய முடியாதவர்கள்தான்.
    ம•க•இ.க அரசியலால் ஈழம் கிடைக்காது. இந்திரா ஆயுதமும் பயிற்சியும் தந்தால் ஈழம் கிடைக்கும் என்று நம்பியவர்கள் இன்று தோற்று விட்டார்கள். எதிரியிடம் தோற்றதை தோல்வி என்றும் சொல்லவில்லை. ஜனநாயகத்திற்கான போராட்டத்தை கொல்லைப்புற வழியாகப் பெற முடியாத என்ற அரிச்சுவடியை புரட்சிகர இயக்கம்தான் தரமுடியும். இந்திராவின் இந்தியா நண்பன், ராஜீவின் இந்தியா துரோகி, 2009 ஏப்ரல் வரை புரட்சித்தலைவி ஈழ எதிரி, அதற்கு அப்புறம் மே 16 வரை ஈழத் தாய், … என்று வகைப்படுத்தலாம் ஆனால் காரியம் அறிவியல் பூர்வமாக செயல்பட்டு நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்காது.

    இல‌ங்கையின் பேரின‌வாத‌ம் என்ற‌ ஆயுத‌ம் உல‌க‌ முத‌லாளிக‌ளின் ந‌ல‌னுக்காக‌த்தான் இய‌ங்குகிற‌து. நீங்க‌ள் இந்திய‌ அர‌சை ஆத‌ரித்தால், காசுமீர் ம‌ற்றும் வ‌ட‌கிழ‌க்கில் ஜ‌ன‌நாய‌க‌த்திற்கான‌ போராட்ட‌ங்க‌ளை எதிர்க்க‌ வேண்டி வ‌ரும். அமெரிக்காவை ஆத‌ரித்தால், பால‌ஸ்தீனையும், போராடும் ஈராக் சிறுவ‌ர்க‌ளையும், அமெரிக்க‌ க‌றுப்பின‌ சேரி ம‌க்க‌ளையும் எதிர்த்தாக‌ வேண்டும். அந்த‌ நாடுக‌ள் செய்யும் அட்டூழிய‌ங்க‌ளுக்கு ச‌ம‌ய‌த்தில் தொண்டூழிய‌மும் செய்ய‌ வேண்டி இருக்கும். அத‌ற்கு கொள்கை தேவையில்லை. வ‌ணிக‌ பேர‌ம்தான் ந‌ட‌க்கும். ம‌க்க‌ளோடு கூட்ட‌ணி அமைத்தால், ஜ‌ன‌நாய‌க‌த்திற்கான‌ போராட்ட‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு தெரிவித்தால் அந்த‌ ம‌க்க‌ள் உங்க‌ளுக்கு ஆப‌த்தான‌ கால‌த்தில் நீங்க‌ள் கோராம‌லே உங்க‌ளுக்காக‌ போராட‌ வ‌ருவார்க‌ள்.

  23. 23

    ஈழத்தமிழர் என்றாலே புலிகள் என்று மொழிபெயர்த்தவர்களெல்லாம் இன்று முடங்கிக்கிடக்கிறார்கள். தோற்றிருக்கும்போது மட்டுமல்ல, ராணுவ ரீதியில் புலிகள் வெற்றிமுகத்தில் இருக்கும் போதும் எங்களின் நிலைபாடு இதுவாகத்தான் இருந்தது. இவர்களின் இதே பெயர்ப்பைத்தான் ராஜபக்சேவும் பயன்படுத்தியிருக்கிறான் எதிர்மறையில்.

    நண்பர் ஆர்வி,

    அப்துல் கலாம், இளையராஜா போன்றோரையும் பார்பனியவாதிகளாகவே அடையாளப்படுத்தி வந்திருக்கிறோம் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  24. 24
    வாயால் வெட்டாதவன் says:

    உங்களுக்கெல்லாம் ஒரு பதிவிலே பதில் தருவதிலே பயனில்லை.
    எடுத்ததெல்லாம் புலி என்பவர்களே, புளொட் தொடக்கம் சிபிஎம் ஊடாக சீனா, கியூபா வரைக்குமான போலி இடதுசாரிப்பயங்கரவாதிகள் ஈழத்தமிழர்களுக்கு இறைத்து இழைக்காத கொடுமையையா புலிகள் செய்துவிட்டார்கள்?
    புலிகள் தோற்றதற்கு எதிர்க்கூட்டணியின் ஆயுதபலம் மட்டுமே காரணம். மேலே வியாக்கியாங்கள், மாற்றுக்கட்சி என்று காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசின் கூலிகளின் பம்மாத்துகளைப் பற்றி எழுதலாம். ஊரிலே இருக்கும் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் அக்காவுக்கும் வினவும் இந்தியாவுமா உயிர் உத்தரவாதம்? சும்மா புலிகளைப் பிடித்துத் தொங்காதீர்கள். ஸ்ரீரங்கன், பேர்லின் தமிழரசன், சுசீந்திரன், ஷோபா சக்தி, சுகன் இந்த அரசுக்கூலிகள் இன்றைக்கு நாடு திரும்பி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கமுடியாதா? முகாம்களிலே இருப்பவர்களே நலமாகவிருக்கின்றார்கள் என்று சொல்லும் தேசம் கொன்ஸ்ரன்ரைன்முதலாக எத்தனை பேரை நாம் அறிவோம்!

  25. 25
    Rathi says:

    ஆமாங்க, எங்களுக்கு சிங்கள பேரினவாதிகளையும் அடக்குமுறை ராணுவத்தையும் இப்படி கட்டுரை எழுதி சரிக்கட்டலாம் என்று தெரிந்திருக்கவில்லை. இப்படி ஏதாவது ஐடியா நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் நாங்கள் அதை பின்பற்றியிருப்போமா?

    நீங்கள் ஈழத்தமிழரின் போராட்டப் பின்னடைவைப் பற்றி பந்தி பந்தியா கவலைப்பட, இதே பதிவில் வேறு சிலர் வேறெதற்கோ கவலைப்பட்டும், சந்தோசப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர் விடயத்தில் இதுதான் யதார்த்தம். இப்படி இருப்பவரகள் மத்தியில் நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்று பிரித்துப்பார்ப்பது மிகவும் கடினம். இதுவே சிறந்த உதாரணம். இப்படித்தான் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் ஆரம்பத்திலிருந்தே சாபங்களாய் எங்களின் கால்களை சுற்றிகொண்டிருக்கின்றன. சிங்கள இனவாத துரோகிகளை இலகுவில் இனங்காணலாம். ஆனால், தமிழின துரோகிகளை இனம் காண்பது மிகவும் கடினம். இதுவும் எங்கள் இன்றைய அவலங்களுக்கு ஒரு காரணம்.

    சிங்கள சமூகத்திலும் எங்களுக்காக குரல் கொடுக்கும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், உதாரணம் பிரயன் செனிவரட்ண. முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் உறவினர் (Cousin). மற்றப்படி, சிங்கள பொதுசனத்தின் ஆதரவை புலிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதெல்லாம் நல்ல கற்பனை. தமிழ் மாகாணத்திலிருந்து ஒரு தமிழன் இலங்கையில் வேறு பகுதிக்கு சென்றால் அவன் முதலில் காவல் நிலையத்தில் தன்சார்ந்த விடயங்கள் அனைத்தையும் பதிவு செய்யவேண்டும். அதற்கு பிறகுதான் அவன் என்ன வேண்டுமானாலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செயது முடிக்க வேண்டும். இந்த யதார்த்தம் உங்களுக்கு தெரியாதா என்ன?

    நீங்கள் சொல்வது போல் புலிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதாவது, இன்று சர்வதேசத்திற்கும் ஈழத்தமிழனுக்கு ஏதோ உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்ற அளவிற்காவது தெரியும் என்றால் அது புலிகளால் தான். இன்று, எல்லாவிதமான வேறுபாடுகளையும் மறந்து ஈழத்தமிழன் (நான் என்னைப் போன்ற பெரும்பான்மையானவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்) ஒரே இலட்சியத்தின் கீழ் அணி திரள்கிறோம் என்றால் அது புலிகளால் தான். புலிகள் இருந்ததால் தான் எங்களால் ஈழப்பிரச்சனையில் எதையும் நேரடியாக செய்ய‌ முடியவில்லை என்று சொல்பவர்கள்/கவலைப்படுபவர்ள், இனிமேல் தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே.உங்களால் ராஜபக்க்ஷேக்களுடன் பேசி ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்யமுடியுமா?

    இது வழக்கம் போல் புலிகளை குறை சொல்லவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையாகத்தான் எனக்கு தெரிகிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு, பெய‌ரளவில் மட்டுமே ஜனநாயகநாடாக இருக்கும் இலங்கையிடமும் அதன் பேரினவாத ஆட்சியாளர்களிடமும் புலிகள் சரியான முறையில் காய்நகர்த்தவில்லை என்று நீங்கள் சொல்வது ஈழவிடுதலை பற்றிய உங்கள் யதார்த்தத்தின் புரிதல் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காட்டுகிறது.

    இறுதியாக, நல்லவேளை 1956, 1958, 1961, 1974, 1977…….களில் ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் என்ற பெயரில் சிங்கள காடையர்களாலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்டதற்கு புலிகள் தான் காரணம் என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றி. புலிகள் என்ற விடுதலை இயக்கம் இல்லாவிட்டாலும் இலங்கையில் தமிழின சுத்திகரிப்பு நடந்த்துதான் இருக்கும். ஆனால், என்ன இன்று புலிகளின் பெயாரால் இலங்கை அரசு அதை நிறைவேற்றியிருக்கிறது. சர்வதேசமும் அதற்கு துணை போயிருக்கிறது. இன்று எங்களை வழிநடத்த ஒரு தலைமை இல்லை என்று சொல்லி சொல்லியே ஈழத்தமிழர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். தயவு செய்து நீங்களும் அதை செய்யாதீரகள். என்னைபோனற ஈழத்தமிழர்களுக்கு ஒரு தலமை இருக்கு, இல்லை எனபதை விட, உண்மையான ஈழத்தமிழன் ஒவ்வொருவனின் முன்னாலும் அவன் தன் விடுதலைக்காகவும், தன் இனவிடுதலைக்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் விரிந்து காத்துக்கிடக்கின்றன. அதில் கவனத்தை செலுத்துவோம். எங்கள் விடுதலைப்பயணத்தில் எங்களுக்கு உதவியவர்களும் இல்லை, உதவப்போகிறவர்களும் இல்லை. இதுதான் யதார்த்தம். எங்கள் விடுதலை எங்கள் கைகளில் தான் உள்ளது.

    • 25.1
      செந்தில் says:

      //இறுதியாக, நல்லவேளை 1956, 1958, 1961, 1974, 1977…….களில் ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் என்ற பெயரில் சிங்கள காடையர்களாலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்டதற்கு புலிகள் தான் காரணம் என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றி. புலிகள் என்ற விடுதலை இயக்கம் இல்லாவிட்டாலும் இலங்கையில் தமிழின சுத்திகரிப்பு நடந்த்துதான் இருக்கும். ஆனால், என்ன இன்று புலிகளின் பெயாரால் இலங்கை அரசு அதை நிறைவேற்றியிருக்கிறது. சர்வதேசமும் அதற்கு துணை போயிருக்கிறது. இன்று எங்களை வழிநடத்த ஒரு தலைமை இல்லை என்று சொல்லி சொல்லியே ஈழத்தமிழர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். தயவு செய்து நீங்களும் அதை செய்யாதீரகள். என்னைபோனற ஈழத்தமிழர்களுக்கு ஒரு தலமை இருக்கு, இல்லை எனபதை விட, உண்மையான ஈழத்தமிழன் ஒவ்வொருவனின் முன்னாலும் அவன் தன் விடுதலைக்காகவும், தன் இனவிடுதலைக்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் விரிந்து காத்துக்கிடக்கின்றன. அதில் கவனத்தை செலுத்துவோம். எங்கள் விடுதலைப்பயணத்தில் எங்களுக்கு உதவியவர்களும் இல்லை, உதவப்போகிறவர்களும் இல்லை. இதுதான் யதார்த்தம். எங்கள் விடுதலை எங்கள் கைகளில் தான் உள்ளது.//

      அருமையாக சொன்னீர்கள். ஈழத் தமிழர்கள் பற்றி கட்டுரை வந்தாலே போதும், அனைவரும் புலிகளால் தான் ஈழத் தமிழர்களுக்கு பின்னடைவு என்று எழுவதிலேயே மகிழ்ச்சியடைகின்றனர். புலிகளில் தோன்றுவதற்கு காரணம் என்ன? திரு செல்வா அவர்களின் கொள்கைக்காகத் தானே புலிகள் இயக்கம் போரிட்டார்கள். இவர்கள் பேசுவதெல்லாம் புலிகள் இயக்கம் வருவதற்கு முன்பு இலங்கை நாடு ஒரு ஜனநாயக நாடு என்றும், புலிகள் இயக்கம் வந்த பிறகுதான் அங்கு இனப்படுகொலைகள் நடைபெற்றது என்பது போல் இருக்கிறது.

    • 25.2
      kalagam says:

      விமர்சனம் என்பதே கூடாததாகிவிட்டதா உங்களுக்கு?

      நன்றாக படியுங்கள் இக்கட்டுரையை ,

      \\புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை. \\

      ஒரு விடுதலைப்போரின் தோல்விக்கான காரணங்களை கண்டறியாது எவ்வகையில் தொடர முடியும்? வெல்ல முடியும்

      //எங்கள் விடுதலைப்பயணத்தில் எங்களுக்கு உதவியவர்களும் இல்லை, உதவப்போகிறவர்களும் இல்லை. இதுதான் யதார்த்தம். எங்கள் விடுதலை எங்கள் கைகளில் தான் உள்ளது//

      உண்மை. இனியும் இந்தியா எங்களது தந்தை நாடு, அவர்களின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பேசுவதை விட்டுவிட்டு தாங்கள் சொல்வதை செய்வதை செய்வது தான் மிகவும் சரியான வழி.

      • 25.2.1
        Rathi says:

        கலகம்,

        //விமர்சனம் என்பதே கூடாததாகிவிட்டதா உங்களுக்கு?//

        விமர்சனத்திற்கு நானோ அல்லது செந்திலோ எதிரானவர்கள‌ல்ல . (மன்னிக்கவும் செந்தில் எங்கள் இருவருக்கும் ஒரே கருத்துள்ளது என்ற நம்பிக்கையில் சொல்லிவிட்டேன்)

        ஆனால், புலிகள் பற்றிய விமர்சனம் அவர்களின் இயல்புநிலைகளில், அவர்களின் போராட்டத்திற்கு சாதகமான, மற்றும் பாதகமான சூழ்நிலையில் வைத்து விமர்சிக்கப்படாம‌ல், ஏதொ “இசம்” என்ற வெளிச்சத்தின் கீழ் விமர்சிக்கப்படுவதாக எனக்கு தோன்றுகிறது. லெனின், கார்ள் மார்கஸ், மற்றும் பலரின் கொள்கைளால் கவரப்ப்ட்டு சமூகப்புரட்சி செய்ய புறப்பட்டவர்கள‌ல்ல புலிகள். எங்கள் உயிர்கள், மானம், உறவுகள், கல்வி, உடமைகள், வாழ்வாதாரங்கள், வாழ்விடங்கள், அமைதி, சந்தோசம் என்று சகலமும் சிங்கள பேரினவாதிகளாலும் ராணுவகாடையர்களாலும் வன்முறையால் குழிதோண்டிப் புதைக்கபட்ட பின்னர்தான் புலிகள் இயக்கம் உருப்பெற்றது, உயிர்பெற்றது. அவர்களின் ஈடிணையற்ற தியாகங்களால் தான் அந்த விடுதலை இயக்கம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான‌ சிங்கள பேரினவாததிற்கும், ராணுவத்திற்கும் எதிராக போரிட்டு அதன் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டது. அவர்களின் தோல்வி பற்றிய விமர்சனங்களில் அவர்களின் தியாகங்களும், இலட்சியமும் ஒன்றுமே இல்லாதது போல் விமர்சனத்திற்குள்ளாவது நியாயமல்ல.

        புலிகளின் சரியான காய்நகர்த்தலால் தான் இன்று ஈழப்பிரச்சனை ஓரளவிற்காவது சரவதேசத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. புலிகள் பற்றி தனக்கு ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் முன்னாள் இலங்கைக்குரிய இந்திய உயர்ஸ்தானிகர் Dixit தன் Assingnment Colombo என்ற புத்தகத்தில் பிரபாகரனின் அரசியல் நகர்வுகளைப்பற்றியும், அவரின் ராணுவ அணுகுமுறைகளையும் சிறப்பாக பாராட்ட தவறவில்லை. அதே போல் என் பார்வையில் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் தவிர புலிகளை அவர்களது போராட்டத்திற்குரிய சாதகமான, பாதகமான காரணிகளின் அடிப்படையில் ஆராய்ந்து விமர்சித்தவர் இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப் என்பவர் மட்டுமே. அவர் புலிகளைப்பற்றி பாதகமான கருத்துக்களை கூறினாலும் அதை புலிகளின் போராட்டப்பின்னணியுடன் சொல்வதனால் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

        மற்றப்படி புலிகள் பற்றிய “ஒப்பீட்டு விமர்சனங்கள்” என் போன்றவர்களை மாற்றுகருத்து எழுத தூண்டுவதில் ஒன்றும் தவறில்லையே?

    • 25.3
      இரங்குவோன் says:

      அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றானதினை ராஜீவ் கொலையில் கண்டோம். அது போபர்ஸோ இலங்கை பிரச்சனையோ…
      நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான். சிங்களவர்கள்.மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களுமே அத்தகைய எதிரிகள்.

      ரதி மற்றும் தமிழ்நிலா நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா….தமிழக மக்களாகிய நாங்கள் விழிப்புணர்வற்ற, இனவுணர்வற்ற, ஹிந்தியா எனும் தேசத்தின் மீது பக்தி கொண்ட சுயநலமான கோழைகளே! இதில் ஏதாவதொன்று மாறினாலும் இன்னபிற தேசபக்தர்களோ அல்லது அரசோ விரைந்து வந்து முடக்கப்ப்டுவோம்.
      வேறு மொழி பேசும், வெவ்வேறு கலாசாரம் கொண்ட இனங்களோடு வாழுமிடம் எம் தேசமாம். தவித்த வாய்க்கு தண்ணீர்கூட இங்கு கிடைக்காது. ஆனால் மொழி கலாசாரம், பரிணாம நாகரிக வளர்ச்சியில் ஒரெ இனமான ஈழத்தமிழர் வேற்று நாட்டவராம்.

      ஒருவர் சொல்லுகிறார் புலிகளின் மீதான தடை விலக்கப்படக்கூடான்று. நிரூபணமாகாத கொலைக்கு அவர்கள் மீது தடை. நீரூபணமே தேவைப்படாத அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய இந்தியா அல்லது குறைந்த பட்சம் அப்போது ஆட்சியிலிருந்த கட்சிக்கு யார் தடை போடுவது? முதலில் இதற்கு தடை விதிக்கட்டும் பிறகு புலிகளின்மீதான தடையைப்பற்றி பேசட்டும்.

      இன்னொருவர் சொல்லுகிறார் புலிகளின் தவறுகளுக்காக அவர்களை எதிர்ப்பதாக..ஆனால் அவர் இந்தியா செய்த தவறுகளுக்காக இந்தியாவை எதிர்ப்பாரா என்றால் மாட்டார். என்னே நீதி? புலிகளால் பிரிவினைவாதம் வரக்கூடும் என்றமட்டில் அவர் கவலைபடுவதோடு சரி என்று புரிகிறது. எப்போதுமே சேராத ஒன்று பிரியவா போகிறது? இவர் இலங்கைக்கு சென்று அடிபட்டவர்க்கு சேவை செய்ய முயலுகையிலேயே இவருடைய ஈழப்போராட்ட அறிவு தெரியவில்லையா? செஞ்சிலுவை சங்கம் போன்ற நடுநிலைமை அமைப்புகளே செய்யமுடியாத காரியத்தை தமிழகத்திலிருந்து ஒரு சாதாரண தமிழர் செய்வாராம். ராஜபக்ஸவும் வெற்றிலை பாக்கு சகிதம் வரவேற்று அனுமதி கொடுப்பாராம். அடா அடா…என்ன விந்தை!
      ஆனால் ரதி அவர்களே நீங்கள் யாருடைய உதவியும் இல்லையென ஏன் சொல்லுகிறீர்கள்? இந்தியம் என்பதையெல்லாம் பொருட்டென கருதாது, வாழ்க்கையை ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிக்க தயாராய் பலரிருக்கிறோம். தமிழ் இணைக்கும் எங்களை உங்களோடு. எப்படி ஒருங்கிணைவது எப்படி தொடருவதென்பதே இப்போதுள்ள பிரச்சினை. தமிழ்நிலா, செந்தில் நீங்களும் தான்…என்ன சொல்லுகிறீர்கள்?

      • 25.3.1
        வித்தகன் says:

        சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு சென்று முகாம்களில் பணியாற்ற விரும்புவது ஈழ விடுதலைக்காக என்று நான் நினைக்கவில்லை. இது மனித நேயம் சம்பந்தப்பட்டது. ஈழ விடுதலை தனி விஷயம்.

      • 25.3.2
        Rathi says:

        இரங்குவோன்,

        //ரதி அவர்களே நீங்கள் யாருடைய உதவியும் இல்லையென ஏன் சொல்லுகிறீர்கள்? இந்தியம் என்பதையெல்லாம் பொருட்டென கருதாது, வாழ்க்கையை ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிக்க தயாராய் பலரிருக்கிறோம். //

        ஒரு கோடி நன்றிகள் சகோதரரே. உங்களைப்போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான் என் போன்றவர்களால் இன்னும் வித்தகன் போன்றோர்களையும் தாண்டி தமிழ்நாட்டை நேசிக்க முடிகிறது. உங்களைபோன்றவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்க இருக்கிறீர்கள் என்பதே எங்களுக்கு யானை பலம். மீண்டும் என் நன்றிகள் சகோதரரே.

      • 25.3.3
        வித்தகன் says:

        //என் போன்றவர்களால் இன்னும் வித்தகன் போன்றோர்களையும் தாண்டி தமிழ்நாட்டை நேசிக்க முடிகிறது. //

        புலிகளுக்கு எதிரான கருத்து இருந்தாலே வெறுப்பீர்களா, ரதி? இணையத்திலேயே இப்படி என்றால் நிஜ உலகில் என்னை என்ன செய்து இருப்பீர்கள்? இப்படி ஒரே கட்சிதான் சரி மற்றவர்கள் ஒடுக்கப் படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இயக்கம் ஆட்சி செய்யும் நாட்டில் எங்கிருந்து நிம்மதி கிடைத்திருக்கும்?

        என் கருத்துக்களைச் சொன்னால் இப்படி வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்தான் பதிலுக்குக் கிடைக்கும் என்றால் எனக்கு உங்களிடம் பேசாமல் இருக்க முடியும். ஆனால், ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கு ஆதரவாக மட்டுமே பேசுபவர்களோடு நீங்கள் பழகிக் கொண்டிருந்தால் எந்த ஒரு பிரச்சினையையும் பல் நோக்குப் பார்வையுடன் அணுகும் பழக்கமே போய்விடும்.

      • 25.3.4
        இரங்குவோன் says:

        //இது மனித நேயம் சம்பந்தப்பட்டது. ஈழ விடுதலை தனி விஷயம்.//
        மனித நேயம் என்று ஒன்று இருந்திருந்தால் இன்று ஈழத்தில் முகாம்களேனிருக்கிறது? ஈழ பிரச்சனையே ஏது? இலங்கையும், இந்தியாவும் பிள்ளையை கிள்ளிவிடும், தேசபக்த மனித நேய இந்தியர்கள் தொட்டிலை ஆட்டுவார்கள்.

      • 25.3.5
        இரங்குவோன் says:

        சகோதரி ரதி!
        //உங்களைபோன்றவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்க இருக்கிறீர்கள் என்பதே எங்களுக்கு யானை பலம். மீண்டும் என் நன்றிகள் சகோதரரே.
        //
        நன்றிகள் எங்களுக்கெதற்கு? இந்தியா செய்த, செய்யும் பாவத்திற்கு பிராயசித்தம் என்ற வகையிலும், ஒரேயினத்து உறவுகள் என்ற வகையிலும் இது எங்களின் கடமையல்லவா?
        என்ன செய்து ஈழ விடுதலைக்கு தோள் கொடுக்க முடியும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னளவில் நான் ஈழ சகோதரர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன்.

      • 25.3.6
        Rathi says:

        வித்தகன்,

        ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தியா, அதன் தலைவர்கள் மீது எவ்வளவு பாசமும் பற்றும் உள்ளதோ; அதேயளவுக்கு எனக்கும் என் மண், என் மக்கள், என் இனவிடுதலைக்காக போராடும் புலிகள் மீது பாசமும் பற்றும் உள்ளது. நீங்கள் எழுதியதை படித்ததிலிருந்து நான் புரிந்து கொண்டது, உங்களுக்கு தமிழ்நாடு இந்தியாவை விட்டு பிரிந்து விடுமோ என்ற பயம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதற்கு புலிகளையும் ஐயா பழ நெடுமாறன் போன்றோரையும் காரணகர்த்தாக்களாக்கி உங்கள் பயத்தை வெளிப்படுத்துகிறீர்கள். என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

        உங்கள் மீது எனக்கு எந்த வெறுப்போ அல்லது காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. தமிழீழம் தமிழ்நாட்டுடன் இணைவது என்ற உங்கள் கூற்றுக்கு நான் என் பதிலில் “அறிவீனம், புத்தி பேதலித்துவிட்டது” என்ற சொற்களை பாவித்திருக்கிறேன். நான் அதை மறுக்கவில்லை. அது உங்கள் மீது எனக்கு காழ்ப்புண்ர்ச்சி உள்ளது என்பதல்ல. தமிழீழம் தமிழ்நாட்டுடன் இணைய நினைக்கிறது என்ற உங்களின் தவறான புரிதலின் மீது எனக்கு உண்டான கோபம். அதை வெளிப்படுத்த தான் நான் அந்த சொற்களை பாவிக்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக இப்போது வருந்துகிறேன்.

        அடுத்து, நீங்கள் புலிகளை வெறுக்கிறீர்கள். அது உங்கள் சொந்த கருத்துரிமை. ஆனால், என் போன்றவர்களுக்கு நீங்கள் புலிகளை வெறுத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்கு உதவுவேன் என்பது கொஞ்சம் ஏற்க கடினமான விடயம். இது என் பார்வை மட்டும் தான். இதை வைத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தாதீர்கள். ஈழத்தமிழர்கள் மத்தியிலேயே புலிகளை வெறுக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்க‌ளில் சிலர் புலிகள் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தால் இலங்கை அரசுக்கு சாதகாமாக செயற்படும்போது என் போன்றவர்களின் மனம் ரணமாகிப்போகிறது. அந்த அனுபவம் தான் உங்கள் புலிகள் மீதானா கருத்துகள் மீதும் எனக்கு மனக்கசப்பை உருவாக்கிவிட்டதோ எனக்கு தெரியவில்லை.

        மற்றப்படி, புலிகள் பற்றி எங்களுக்குள் எப்போதுமே கருத்து உடன்பாடு ஏற்படப்போவதில்லை.

        ஆனாலும், என் உணர்வுகளை மதிக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி. ஒருவர் உணர்வுகளை மற்றவ‌ர் மதிப்போம். தொடர்ந்தும் எங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம். என்னால் முடிந்த வரை “அறிவீனம், புத்தி பேதலித்துவிட்டது” என்ற வார்த்தைகளை பாவிக்காமல் பதில் எழுதுகிறேன்.

      • 25.3.7
        வித்தகன் says:

        உங்கள் பதிவுக்கு நன்றி ரதி. என் பேச்சிலும் என்னை அறியாமல் உங்களைப் புண்படுத்தும் சொற்கள் வெளிப்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள். உங்களோடு, ஈழத்தமிழர்களோடு, எத்தனையோ கருத்து வேறுபாடு வந்தாலும் உங்கள் வலியிலும் வேதனையிலும் கண்டிப்பாக ஒரு சிறு பங்கேனும் நானும் சுமப்பேன். தொடர்ந்து பேசுவோம். இத்தனை நீள நீளமான விவாதங்களை அனுமதித்த வினவிற்கு நன்றி.

      • 25.3.8
        Rathi says:

        இரங்குவோன்,

        //வாழ்க்கையை ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிக்க தயாராய் பலரிருக்கிறோம்//

        ஈழத்தமிழர்களுக்காக யாராவது ஒரு துரும்பை தூக்கி போட்டாலே ஓராயிரம் நன்றி சொல்லி பழக்கப்பட்ட ஈழத்தமிழன், வாழ்க்கையையே ஈழப்போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறோம் என்றால் எப்படி நன்றி சொல்லாமல் இருக்க முடியும்.

        //என்ன செய்து ஈழ விடுதலைக்கு தோள் கொடுக்க முடியும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னளவில் நான் ஈழ சகோதரர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன்.//

        எனக்கு எந்த அரசியல்வாதியிடமோ கொள்கைவகுப்பாளரிடமோ (இந்திய மற்றும் மேற்குலக) நம்பிக்கை கிடையாது. நான், ஈழத்தமிழர்களுக்கு உதவக்கூடியவர்கள் தமிழக உறவுகள் மட்டும்தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவள். தற்போது, தமிழக உறவுகள் அரசியல் மட்டங்களுக்கு கொடுக்கும் அழுத்தங்கள் தான் தமிழ்நாடு மற்றும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் இலங்கை அரசுக்கு முண்டு கொடுப்பதை குறைக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் மீது ஏதாவது அரைகுறையான தீர்வுத்திட்டங்கள் திணிக்கப்படும்போது நிச்சயமாக அதில் இந்தியாவின் பங்கு இருக்கத்தான் செய்யும். இதைத்தான் நாங்கள் தடுக்க நினைக்கிறோம். இல‌ங்கை அரசின் எந்தவொரு அரைகுறை தீர்வுத்திட்டத்திற்கும் இந்தியா துணை போகாமல் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். வவுனியா இடைத்தங்கல்/வதை முகாம்களில் உள்ள எங்கள் உறவுகளை அங்கிருந்து மீட்க வேண்டும். அதற்கான எந்தவொரு செயற்பாடாக இருந்தாலும் சரி. இது தவிர குறிப்பிட்டு சொல்லும்படியாக ஏதாவதென்றால் நிச்சயமாக வினவு தளத்தின் மூலம் உங்கள் உதவியை நாடுவேன். நீங்கள் ஏதாவது பிரத்தியேகமாக இணையத்தளம் வைத்துள்ளீரகளா?

        நான் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். இங்கேயுள்ள அமைப்புகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் நான் சில இணையத்தள முகவரிகளை சிபாரிசு செய்வேன். எல்லாமே இந்த நாட்டு (கனடா) சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான்.

      • 25.3.9
        Tamilnela says:

        வணக்கம் இரங்குவோன்

        மன்னிக்கவும் நான் வித்தகன் என்கின்ற புலி+ஈழ எதிர்ப்பாளர் ஒருவருடன் பிரியோசனமே இல்லாத கருத்தாடலில் இருந்ததால் நீங்கள் எழுதியவற்றை கருத்திலெடுக்கத் தவறி விட்டேன்.

        எமது உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்ட மக்களையும் மாவீரர்களையும் நாம் எவ்வாறு மதிக்கின்றோமோ அவ்வாறே தமிழகத் தமிழர்களாகிய உங்களையும் நாங்கள் மதிக்கின்றோம்.இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து தேவை இல்லை.அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழால் ஒன்றிணைகின்றோம்.
        சுயநலமில்லாது மக்களையும் நாட்டையும் நேசிக்கும் ஓர் சிறந்த தலைவர் உங்களுக்கு கிடைத்திருந்தால் உங்களின் நிலமை இன்று எப்படி இருக்குமென எண்ணிப் பார்க்கின்றோம்.

        இன்று எங்களின் ஏக பிரதிநிதிகள் சிறிலங்கா இந்தியா கூட்டுச்சதியால் பின்னடைவை சந்தித்து நிற்கும் வேளை எமது மக்கள் ஓர் இனப்படுகொலையை சந்தித்து நிற்கும் வேளை இந்த சதிவலையில் இருந்து எம் மக்களை காப்பாற்றும் பாரிய பொறுப்பு இதய சுத்தியுள்ள மறத் தமிழர் எல்லோரினதும் கைகளிலே ஒப்படைக்கப் பட்டுள்ளது.உங்களை நாங்கள் இந்தியனாகப் பார்க்கவில்லை உயிராலும் உணர்வாலும் ஒன்றாக உள்ள தமிழனாய் அழைக்கிறோம்.எங்களோடு சேர்ந்து எங்களுக்காக போராடுங்கள். உங்களால் எமக்கு என்னென்ன வழிகளில் உதவமுடியுமோ உதவுங்கள். உண்மைத் தமிழராய் தமிழ் உணர்வுடன் உதவுங்கள்.தமிழ் மொழி தெரியும் என்ற ஒரே தகுதியை மட்டுமே நம்பி இன்று பலபேர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்கும் நடவடிக்கைகளிலும் தவறான தகவல்களை ஈழத் தமிழர்கள் தொடர்பான தவறான கருத்துக்களை தமிழகத் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.இவர்களை இனங்கண்டு ஒதுக்குங்கள். இன்றைய காலகட்டத்தில் இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது.
        உங்கள் போராட்டங்களில் தயவுசெய்து தீக்குளித்தல் போன்ற உயிர் இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.உயிர் வலி என்னவென்று எங்களுக்கு நிறையவே தெரியும் இழப்புக்கள் எம்முடனேயே முடிவுக்கு வரட்டும்.ஈழத் தமிழன் இந்தியாவுக்கு எதிரியாய் என்றுமே இருந்ததில்லை என்பதை இந்தியாவுக்கும் உலகுக்கும் உரத்துச் சொல்லுங்கள்.
        தொடர்ந்தும் இணைந்திருங்கள்

        அன்புடன்
        தமிழ்நிலா

      • 25.3.10
        செந்தில் says:

        தோழர் இரங்குவோன் மற்றும் வித்தகன் அவர்களுக்கு,

        பாலஸ்தீன மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் ‘ஹமாஸ்’ இயக்கத்தை அம்மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமே பயங்கரவாத இயக்கம் அல்ல என ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மக்களை தாக்கவில்லையா? தாக்கினார்களே. பின்னர் ஏன் பாலஸ்தீன மக்கள் அவர்களை போற்றுகிறார்கள்.

        அது போல ஈழத்திலும் இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடம் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமா அல்லது விடுதலை போராட்ட இயக்கமா என்று ஒரு வாக்கெடுப்பு நடைபெறட்டுமே. அதை விடுத்து இந்தியாவில் உள்ளவர்களிடம் கேட்டால் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டு விட்டார்களே. அந்த ஒரே ஒரு காரணம்தான்.

        இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் அதை நடத்தியவர்கள் அதற்கு துணை போனவர்கள் பற்றி உண்மையை வெளிக்கொண்டுவந்த பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது தெரிந்தும் உங்களைப் போன்றவர்கள் இலங்கை அரசால் வெளியிடப்பட்ட மற்றும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை இன்றும் நம்பிக் கொண்டுருக்கிறீர்கள்.

      • 25.3.11
        வித்தகன் says:

        நண்பர் செந்தில் அவர்களே! நான் இந்த விவாதத்தில் ரொம்பவே பேசி விட்டதாகத் தோன்றுகிறது. நீங்கள் என்னைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதால் பதில் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்.

        //பாலஸ்தீன மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் ‘ஹமாஸ்’ இயக்கத்தை அம்மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமே பயங்கரவாத இயக்கம் அல்ல என ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மக்களை தாக்கவில்லையா? தாக்கினார்களே. பின்னர் ஏன் பாலஸ்தீன மக்கள் அவர்களை போற்றுகிறார்கள்.//

        ஹமாஸ், சக பாலஸ்தீன விடுதலைக் குழுக்களைக் குறி வைத்து அழித்தது இல்லை. அமைதி வழியில் பாலஸ்தீனம் கேட்டுப் போராடுபவர்களைக் கொன்று ஒழித்ததில்லை. பாலஸ்தீனத்திலேயே உள்ள பிற இனத்தவரை (ஈழத்தில் இருந்த முஸ்லீம்கள் போல) அவர்கள் வாழும் இடத்திலிருந்து விரட்டவில்லை. பாலஸ்தீன மக்களையே இஸ்ரேலியப் படை தாக்கும் போது கேடயமாகப் பயன் படுத்தியதில்லை. எனவே பாலஸ்தீனியர்களே அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் நிலை வரவில்லை.

      • 25.3.12
        Rathi says:

        வித்தகன்,

        வீணான விதண்டாவாதங்களால் இந்த தளத்தை நிரப்ப வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

        //ஹமாஸ், சக பாலஸ்தீன விடுதலைக் குழுக்களைக் குறி வைத்து அழித்தது இல்லை. அமைதி வழியில் பாலஸ்தீனம் கேட்டுப் போராடுபவர்களைக் கொன்று ஒழித்ததில்லை. //

        அங்கே RAW என்ற இந்திய உளவு அமைப்பு இருந்திருக்காது. அது தான் காரணம்.

        //ரதியும் ஒருவேளை பெண்களாக இருப்பார்களோ அதை நான் கவனிக்க விட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.//

        ஐயா வித்தகன், Gender மாற்றி வந்து கருத்து பதியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஒரு ஈழத்”தமிழச்சி”.

        வினவு, இவ்வளவு நீண்ட விவாதங்களுக்கு களம் அமைத்து கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் பல.

      • 25.3.13
        வித்தகன் says:

        //ஐயா வித்தகன், Gender மாற்றி வந்து கருத்து பதியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஒரு ஈழத்”தமிழச்சி”.//

        நல்லது சகோதரி ரதி அவ்ர்களே. இதை எதிர்காலத்திலும் நினைவில் கொள்கிறேன். உங்களுக்கு என் அன்பும், உங்கள் கருத்துக்களை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றியும்.

      • 25.3.14
        Chandru95 says:

        நான் ஒரு ஈழத்”தமிழச்சி”. இனத் துவேஷி. நான் ஒரு மனிதப்பிறவியல்ல.

      • 25.3.15
        Rathi says:

        மனிதப்பிறவி இல்லாதவர‌ரோடு பேசும் நீங்கள் யார்? மனித‌ப்பிறவி அல்லாதவரா? ஏனய்யா துவேஷி என்று பெரிய வார்த்தை எல்லாம்?

  26. 26
    Tecan says:

    எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம்.

    ”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”

    -வன்னிக் களமுனையில் இருந்து தப்பிய ஓர் இளம் தாயின் சாட்சியம்

    http://thesamnet.co.uk/?p=12900

    • 26.1
      Tamilnela says:

      அன்பரே நீங்கள் எழுதியுள்ளதைப் போன்று ஓர் இளம் தாய் பேட்டி கொடுத்தது உண்மைதான். அவர் எவ்வாறானதொரு சூழ்நிலைக்குள் சிக்குண்டுநின்று இவ்வாறானதொரு பேட்டியை கொடுத்திருப்பார் என்று சிந்தித்துப் பார்த்தீங்களா?

      • 26.1.1
        Tecan says:

        சிந்திக்க வேண்டியது நீங்கள் தான் அன்பரே. இன்னும் எத்தனை காலம் புலிகள் சொன்ன பொய்களை பரப்புரை செய்வீர்கள்? இன்னும் எத்தனை காலம் தமிழரை ஏமாற்றுவீர்கள்?

    • 26.2
      செந்தில் says:

      தோழர் Tecan அவர்களே,

      //இன்னும் எத்தனை காலம் புலிகள் சொன்ன பொய்களை பரப்புரை செய்வீர்கள்?//

      புலிகள் சொல்வது பொய் என்று சொல்லும் நீங்கள், இலங்கை அரசாங்கம் ஒரு சில ஆயுதக் குழுக்களோடு சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகளை எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டும் கூட (கடந்த 1981 இல் இருந்து 130 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்) இலங்கை அரசாங்கம் வெளியிடும் செய்திகளை மட்டும் உண்மை என்று உங்களால் எப்படி நினைக்கத் தோன்றுகிறது என்று புரியவில்லை.

      //இன்னும் எத்தனை காலம் தமிழரை ஏமாற்றுவீர்கள்?//

      தமிழகத்தில் உள்ள ஒரு சில ஓட்டுக்குழுக்கள் தேர்தல் ஆதாயத்திற்காக புலிகள், ஈழம் என்று பேசினால் அதற்கு புலிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்?

      • 26.2.1
        Tecan says:

        செந்தில், புலிகள் சொல்லும் பொய்களை நம்பும் புத்தி பேதலித்தவர்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். புலிகள் சொல்வது பொய் என்று காட்டிக்கொடுப்பதும் புலிகள் தான். இது தெரியாதா? கே.பி. துரோகியான கதை தெரியாதா? உங்களிடம் யாராவது இலங்கை அரசாங்கம் சொல்வதை நம்பியதாக சொன்னார்களா? நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

        கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலித் தலைவர்களை (புதினம் செய்தி) தமிழினத் துரோகிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்கள். வெட்கமில்லையா?

      • 26.2.2
        Tecan says:

        இதையும் படியுங்கள் செந்தில். நோர்வேயில் பணம் கொடுத்த மக்களை காட்டிக்கொடுக்கும் புலிகள்.

        நோர்வே அரச தொலைக்காட்சியில் தமிழ் மக்களிடம் புலிகள் தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது. அந் நிகழ்வுகளின்போது முன்னாள் புலிகள் மற்றும் ஜனநாயகத்தை நேசிப்போர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இத்தனை காலமும் புலிகள் மேற்கொண்டு வந்த அராஜகங்களை வெளிபடுத்திவருகின்றனர். பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாத அவர்கள் தாம் பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்ததாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
        நீங்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக சேகரித்த பணத்தை புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உபயோகிக்க உடந்தையாக இருந்துள்ளீர்களே என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், தாம் 30 வருடங்களாக மக்களிடம் தொலைபேசிகளுடாகவும் வங்கிகளுடாகவும் பணம் வசூலித்ததாகவும் அப்பணத்தில் ஒரு தொகுதி புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியதுடன், இவ்விடயத்தை மக்கள் நன்கறிந்திருந்தனர் எனக் கூறி பணத்தை வழங்கிய மக்கள் மீது குற்றத்தைச் சுமத்தினர்.

        இப்பணத்தில் புலிகளுக்கு ஆயுதம் வாங்கியதான குற்றச்சாட்டு பொலிஸாரினால் எம்மீது சுமத்தப்படும் பட்சத்தில் இதற்கு உடந்தையாக இருந்த மக்களின் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி அவர்களின் விசாரணகளுக்கு ஒத்துழைக்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

    • 26.3
      செந்தில் says:

      தோழர் Tecan அவர்களே,

      //புலிகள் சொல்லும் பொய்களை நம்பும் புத்தி பேதலித்தவர்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். புலிகள் சொல்வது பொய் என்று காட்டிக்கொடுப்பதும் புலிகள் தான். இது தெரியாதா? கே.பி. துரோகியான கதை தெரியாதா?//

      புலிகள் இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் அதனுள் மறைந்திருந்து செயல்பட்ட சில துரோகிகள்தான். இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் ‘புதினம்’ இணையதளத்தில் இதுவரை புலிகளைப் புகழ்ந்து எழுதியவர் (தி. வழுதி) தற்போது புலிகளின் இயக்கத்தை மறைமுகமாக பழித்து எழுதுவதில் இருந்து உங்களுக்கு இந்த ஈழப் போராட்டத்தை திசை திருப்புவதில் உள்ள காய் நகர்த்தல்கள் மற்றும் சூழ்ச்சிகள் புரியும் என்று நினைக்கிறேன். புலிகள் பற்றி நீங்கள் மேலும் சில இணையதளங்களை ஆராய்ந்து பாருங்கள்.

      புலிகளுக்கு ஆதரவாக BBC வெளியிடும் செய்திகளே தவறானது என்று கூறியவர்தான் கோத்தபாய ராஜபக்சே என்பதை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன் (BBC யின் சேவை உங்களுக்கே தெரியும்). அதனால் ஒரு சில இணையத்தளத்திலுள்ள செய்திகளை மட்டும் வைத்து புலிகள் சொல்வது சரியா அல்லது பொய்யா என்று நம்மால் கூற முடியாது.

      • 26.3.1
        Tecan says:

        அடப்பாவி புதினத்திற்கே துரோகிப் பட்டமா? நீங்க எப்ப பிரபாகாரனுக்கு துரோகிப் பட்டம் கொடுக்க போறீங்க? செந்தில், உங்களுக்கு துரோகி பட்டம் கொடுக்க உங்கட புலி ஆட்களே காத்திட்டு இருக்காங்க.

        //புலிகளுக்கு ஆதரவாக BBC வெளியிடும் செய்திகளே தவறானது என்று கூறியவர்தான் கோத்தபாய ராஜபக்சே என்பதை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.//

        BBC take a break இது புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த இளையோர் சொன்னது. இலங்கை அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக உங்களைப் போல எத்தனையோ புலி ஆதரவாளர்கள் சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன். இல்லை என்று மறுக்காதீர்கள். BBC ஆதாரங்கள் இருக்கின்றன. அது எப்படீங்க? கோத்தபாய ராஜபக்சேயும் நீங்களும் ஒரே மாதிரி பேசுறீங்க?

    • 26.4
      sukdev says:

      புலிகளை இப்போது எல்லாரும் விமர்சிக்கிறார்கள்.இலவச ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள்.புலிகள் மக்களை அரசியல் படுத்தவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. இதற்கு அவர்கள் குறிப்பிடும் யாழ் பகுதியின் உண்மை நிலவரம் பற்றி எதுவும் சொல்லாமல் செத்த பாம்பை அடித்த கதையாக கழுவிலேற்றப்பட்ட புலிகள் மீது தாக்குதலை தொடர்கின்றனர். இதில் அரசியல் நேர்மையும் இல்லை மனிதத்தன்மையும் இல்லை என்பேன். என்னால் யூகிக்க முடிந்த வரையில் யாழ் பகுதி ஒரு இழவு வீடு. இழவு வீட்டில் ஒப்பாரி தான் கேட்க முடியும் போர்க்குரல் கேட்கவில்லை என்பது அநாகரிகமானது.இதை பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் உள்ளது. அந்த அரசியலை ஈழம் அளவுக்கு நெருக்கடி இல்லாத தத்தம் பிரதேசங்களில் எந்தளவுக்கு பரப்பியுள்ளார்கள் என்பதை நேர்மையுடன் சொன்னவர் எவருமில்லை. ஈழ மக்களின் எதிர்காலம் குறித்து எல்லாருமே அனுதாபம் கொள்கின்றனர். இது நல்ல மாற்றமே. உண்மையான அக்கறையுடன் வருகிறவர்களுக்கு புலிகளை கணக்கு தீர்ப்பவர்கள் கொஞ்சம் வழி விடலாமே.

    • 26.5
      செந்தில் says:

      தோழர் Tecan,

      //நீங்க எப்ப பிரபாகாரனுக்கு துரோகிப் பட்டம் கொடுக்க போறீங்க? செந்தில், உங்களுக்கு துரோகி பட்டம் கொடுக்க உங்கட புலி ஆட்களே காத்திட்டு இருக்காங்க.//

      நீங்கள் சொல்வது போல் புலிகள் இயக்கத்தில் கருணா போன்ற துரோகிகள் இருக்கிறார்கள். ஆனால் சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக மனம்தளராமல் விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

  27. 27
    Tecan says:

    புலிப் பொறுப்பாளரை தாக்கிய இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள்.

    A LTTE cemetery keeper in Wanni who was recently attacked by fellow inmates of a Tamil relief camp, is being interrogated by the Sri Lankan Army to dig out information about dead Tamil Tigers, whose records he used to maintain.

    Pon Thiyagam, was once the caretaker of the well-known “Martyrs cemetery” of the LTTE was attacked by some fellow occupants of IDP’s relief camp at Vayunia in northern Sri Lanka. He had disguised himself as a beggar with a long beard. He is now under interrogation by the Army as he had been responsible for the burial of dead LTTE cadres and maintained a record of their details at a Wanni cemetery. Following the melee at the IDP centre in Chettikulam, security officers had to intervene and separate him from the rest of the inmates of the camps. “Those who assaulted him had used abusive language and cursed the LTTE for the deaths of thousands of their kith and kin,” the state run Sunday Observer reported quoting sources.

  28. 28
    Tecan says:

    விடுதலைப்புலிகளின் விவேகமற்ற செயல்தான் அதன் இன்றைய நிலைமைக்குக்காரணம். TNA சம்பந்தர் லண்டன் பி.பி.ஸி.க்கு செவ்வி.

    அனிதா பிரதாப், பிரபாகரன் தமக்குக்கிடைத்த முக்கிய மூன்று சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டார் என்று அவரது தலை தரையில் விழுந்த பின்பு சொல்கிறார். ஏன் முன்பே அவரிடம் அந்த சந்தர்ப்பங்களை நினைவூட்டி, மன்னார், கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த வேளையில் சொல்லித் திருத்தியிருக்கலாமே?

    ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.

    தலைவர் சாகும் வரையில் காத்திருந்துவிட்டு செத்தபின்னர், விவேகமற்றவர் என்று சொல்லும் சம்பந்தராவது புத்திமதி சொல்லி வழிக்குக்கொண்டுவந்திருக்கலாமே?

    பல சர்வதேச நாடுகளுக்குச்சென்று திரும்பிய தமிழ்ச்செல்வனின் பேச்சையும் நீண்டகாலமாக ஆலோசகராக இருந்த அன்டன்(எம்டன்) பாலசிங்கத்தின் ஆலோசனைகளையும் தட்டிக்கழித்தார் என்றெல்லாம் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் புதினம் இணையத்தளத்தில் எழுதும் வழுதி ஏன் இதனையெல்லாம் முன்பே சொல்லவில்லை.

    அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

    தொடர்ச்சியாக அவருக்கு யாராவது புத்திமதி சொல்லியிருந்தால் சிலசமயம் அவரை திருத்தியிருக்கலாம்தானே?

    எவரது பேச்சையும் கவனத்தில் எடுக்காத தலைவரைத்தானா உங்கள் தமிழின தேசியத்தலைவராக இதுகாலம் வரையில் வரித்துக்கொண்டிருந்தீர்கள். எங்கள் தலைவர் பெரிய ஜீனியஸ் அவருக்கு யாரும் புத்தி சொல்லத்தேவையில்லை. அவருக்கு புத்தி புகட்ட முனைபவர்கள் எல்லோரும் துரோகிகள் என்றுதானே முன்னர் சொன்னீர்கள்.

    • 28.1
      செந்தில் says:

      தோழர் Tecan அவர்களே,

      சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

      அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும் உலகமே பாராட்டியதன் பின்னரும் பிரபாகரன் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை.

      அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது. அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். பிரபாகரன் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும், 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே பிரபாகரன் செயற்பட்டார்.

  29. 29
    Tecan says:

    நம்பவைத்து ஏமாற்றுபவர்கள் புலிகள் நம்பி ஏமாறுபவர்கள் தமிழர்கள். குறிப்பாக இங்கே புலம் பெயர்ந்தவர்களை புலன்பெயர வைத்து ஏமாற்றுவதை தமது வாழ்வின் இலக்காக இலக்கணமாக கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடுகெட்ட புலிகள். இதுதான் கடந்த மூன்று தாசாப்தங்களாக இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் மட்டக்களப்புத் தமிழர்களுக்கும் இந்த விடுதலைப்புலிகளின் விடுகதைகள் புளித்துபோனவை.அதனால்தானே எங்கோ தமிழ் நாட்டில் திருமாவளவனின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வைகோ அமைப்பைச் சேர்ந்தவர்களும் அரசியல் வறுமை காரணமாகவும் குடும்ப வறுமை காரணமாகவும் வன்னித் தமிழர்களுக்காக என்ற போர்வையில் புலிகளையும் அதன் தலைமையும் காப்பாற்றுவதற்காக தீக்குளித்து தங்கள் உயிரை நீத்தபோது யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ உள்ள எந்த ஒரு தமிழனாவது அப்படிச் செய்ய முன்வரவில்லை. சரி அங்கே இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகம் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களில் எவராவது ஒருவர் இரகசியமாகவேனும் ஒரு சுவரொட்டிதானும் ஒட்டுவதற்கு ஏன் முன்வரவிலை?

    • 29.1
      Srinivasan says:

      முதலில் நீங்கள் ஒரு தமிழரா, உண்மையிலேயே தமிழுணர்வு கொண்டவரா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லிய ஒரு குற்றச்சாட்டுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.

      தன இனத்து பெண்கள் சிங்களனின் கையில் சிக்கி சீரழிவதை, அதை தடுக்க இயலாத தன் ஊரின், ஊர் பொதுமக்களின் இயலாமையை கண்டு துடித்த ஒரு ஈழ தமிழன் போராளியாகி போனான். வெகு தூரத்தில் நடக்கும் கொடுமையை கேட்டும்,படித்தும் துடித்த ஒரு தமிழ்நாட்டு தமிழன் தன்னை தீக்கு இரையாக்கிகொண்டான்.

      ” குடும்ப வறுமை காரணமாக” என்று கொச்சைப்படுத்திவிட்டீர்களே? ஆமாம், நாங்கள் ஏழைகள்தான். வறுமையில் உழல்பவர்கள்தான். கூலிள்கள்தான். ஆனால் எங்கோ வதைபடும் எம்மின மக்களை நினைத்து வேதனைப்படும் உள்ளம் கொண்டவர்கள். எங்களால் நேரடியாக எதிரிகளை களத்தில் எதிர்க்க முடியவில்லையே என்று துக்கப்படுபவர்கள்.
      தெருவில் ஒரு பெண்ணை யாராவது கேலி செய்தால் பெரும்பாலோனோர் கண்டும் காணாமல் போக, இதயம் துடிக்கும் ஒருவன் தட்டி கேட்கிறானே, அவனுக்குல்ல உல்லம்தான் என்கலுக்கும் உன்டு. . என் இனத்தின் எதிரி என் எதிரி என்று நினைப்பவர்கள்.

      நாங்கள் செய்ய நினைத்ததை புலிகள் செய்தார்கள். அவ்வளவுதான்.

      ஈழ தமிழர்களை(புலிகளை) பற்றி எழுதும் முன், உங்கள் நீங்களே சில கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்:

      1.புலிகள் எங்கிருந்து வந்தார்கள்?
      2.ஏன் ஆயுதம் தூக்கினார்கள்? தூக்க வைத்தது எது?
      3. அவர்கள் செய்தது தவறு என்று , நீங்கள் கருதினால், அவர்களை ஆயுதக் தூக்க வைத்த காரணத்தை களைய நீங்கள் செய்தது என்ன?
      4. இப்போது புலிகள் இல்லை என்ற நிலையில் நீங்கள் ஈழ தமிழ் மக்களின் துயர் தீர்க்க கிழித்தது என்ன?

      • 29.1.1
        Rathi says:

        Srinivasan,

        // குடும்ப வறுமை காரணமாக” என்று கொச்சைப்படுத்திவிட்டீர்களே? ஆமாம், நாங்கள் ஏழைகள்தான். வறுமையில் உழல்பவர்கள்தான். கூலிள்கள்தான். ஆனால் எங்கோ வதைபடும் எம்மின மக்களை நினைத்து வேதனைப்படும் உள்ளம் கொண்டவர்கள். //

        Tecan போன்றோர் சொல்வதை கேட்டு மனம் நோகாதீர்கள். உண்மையான ஈழத்தமிழன் தமிழ்நாட்டு உறவுகள் செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகங்களையும், உதவிகளையும் உயிருள்ளவரை மறக்கவே மாட்டான்.

        இவர் சொன்னதை கேட்டு கோபப்படாமல் பொறுமையாக பதில் சொன்னதிற்கும் எங்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டதற்கும் நன்றி.

      • 29.1.2
        வித்தகன் says:

        //குடும்ப வறுமை கா

        ரணமாக” என்று கொச்சைப்படுத்திவிட்டீர்களே? ஆமாம், நாங்கள் ஏழைகள்தான். வறுமையில் உழல்பவர்கள்தான். கூலிள்கள்தான். ஆனால் எங்கோ வதைபடும் எம்மின மக்களை நினைத்து வேதனைப்படும் உள்ளம் கொண்டவர்கள். //

        குடும்ப வறுமை என்ற ஒரு முக்கியமான காரணத்தை உணர்ச்சிப் பெருக்கில் மறந்து/ அல்லது மறுத்து விடாதீர்கள். தீக்குளித்த எவனாவது வீடு வசதியோடு இருந்திருக்கிறானா? தொழில் ரீதியாக வெற்றிகரமான இடத்தை அடைந்திருக்கிறானா? காதல் நிறைந்த துணையுடன் இருந்தானா? சேர்ந்திருந்த அரசியல் கட்சியிலோ செய்ய விழையும் கலையிலோ (முத்துக் குமார் திரைத்துரையில் எங்கோ உதவி இயக்குனராக இருந்ததைப் போல) உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறானா? வாழ்க்கையில் அடுத்த அடியாக சென்றடைய இலக்குகள் கொண்டிருந்தானா?

        இவர்கள் அனைவரும் வாழ்வில் தோல்வி கண்டவர்கள். தன் உயிரின் மேல் தன் அறிவின் மேல் மரியாதையும் தன்னம்பிக்கையும் இற்றுப் போனவர்கள். தன்னுயிரை மதிப்பவன் தான் பிற உயிரை மதிப்பான். ஈழ மக்கள் மேல் உள்ள பாசப் பெருக்கோடு இவர்களின் சுய பச்சாதாபமும் வாழ்வில் விரக்தியும் சேர்ந்துதான் இவர்களை தற்கொலைக்குத் தள்ளியது. இவர்களுக்கு மனோதத்துவ ரீதியான சிகிச்சையும் பண உதவியும் கொடுத்திருந்தால் குணமாகியிருப்பார்கள். முத்துக்குமாரும் ஒரு இயக்குனராக ஆகியிருந்தால் (அவரது கடிதத்தைப் படித்தால் அவருக்கு அத்தனை அறிவிருந்திருக்காது என்பது தெரிகிறது), ஒரு அன்பான பெண்ணின் காதல் கிடைத்திருந்தால் தன் பெற்றோர்களுக்கு வசதியான வாழ்வமைத்துக் கொடுக்க வழிகிடைத்திருந்தால், தீக்குளித்திருப்பாரா? சீமான் தீக்குளிக்கட்டும். திருமா உண்மையாகவே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கட்டும். அன்புமணி ராமதாஸ் சயனைடு கடிக்கட்டும். அவர்களை வீரர்கள் என்றும் தியாகிகள் என்றும் அழைப்போம். திலீபனுக்கு அருகில் அவர்களுக்கும் இடம் கொடுப்போம். அத்துணை உயரத்தில் இருப்பவர்கள் தியாகம் உலகையே உலுக்கும். எல்லா மனித உயிரும் சமம்தான். ஆனால் உயிரைவிடும் எல்லா முத்துக்குமார்களுக்கும் தியாகிப் பட்டம் கொடுப்பது உண்மையான வீரர்களுக்கு (திலீபன் அல்லது சூசை போன்ற) அவமானம்.

      • 29.1.3
        Tecan says:

        இதுகளின் தலைவன் பிரபாகரன் கூட சயனைட் கடிக்கவில்லை. சிங்களவன் காலில் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினார். உணர்ச்சிவசப்பட்டு துள்ளும் ஐந்தறிவுள்ள பிராணிகளுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் உறைக்காது.

    • 29.2
      Rathi says:

      Tecan,

      //அதனால்தானே எங்கோ தமிழ் நாட்டில் திருமாவளவனின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வைகோ அமைப்பைச் சேர்ந்தவர்களும் அரசியல் வறுமை காரணமாகவும் குடும்ப வறுமை காரணமாகவும் வன்னித் தமிழர்களுக்காக என்ற போர்வையில் புலிகளையும் அதன் தலைமையும் காப்பாற்றுவதற்காக தீக்குளித்து தங்கள் உயிரை நீத்தபோது யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ உள்ள எந்த ஒரு தமிழனாவது அப்படிச் செய்ய முன்வரவில்லை. //

      என்ன ஐயா உங்கள் பிரச்சனை? ஏதோ ராஜபக்க்ஷேக்களின் பிரச்சாரப்பீரங்கி போல் இந்த தளத்தில் வந்து முழங்குகிறீர்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். அப்படி கொண்டாடுபவர்களில் ஒருவரா நீங்கள்?

      இப்படி தமிழராக இருந்து கொண்டு புலிகளை எதிர்க்கிறோம் பேர்வழி என்று சிங்கள பேரினவாதிகளுக்கு துணை போகாதீர்கள். யாழ்ப்பாணத்தமிழன் தீக்குளிக்கவில்லையா? அதுதானா உங்கள் பிரச்சனை? ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன் தீக்குளித்தாரே தியாகி முருகதாஸ், அவர் யார்? யாழ்ப்பாண தமிழனும் மட்டக்களப்பு தமிழனும் தீக்குளித்தால் ஈழத்தமிழனுக்கு உரிமைகள் கிடைத்திருக்கும் என்று சொல்கிறீர்களா?

      வைகோவும் திருமாவளவனும் ஈழத்தமிழர்களுக்காக செய்த உதவிகளை மறந்துவிட்டு பேசாதீர்கள். ஈழத்தமிழனையும் தியாகி முத்துக்குமார் முதல் இன்னும் பல தியாகிகளினதும் தியாகத்தை கொச்சைப்படுத்துவதிலிருந்தே தெரிகிறது நீர் யார் என்று.

      இங்கே செந்தில் குறிப்பிட்டது போல் புதினம் தளத்தில் வழுதி எழுதியதைப் படித்த பொழுது செந்திலுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் எனக்கும் ஏற்ப்பட்டது. புலிகள் தோற்றவுடன் புலி எதிர்ப்பாளர்கள் எல்லோருமே புலிகளைப்பற்றி தங்களால் முடிந்தவரை அவர்கள் பற்றிய எதிரான செய்திகளை சர்வதேச மற்றும் மேற்குலக தேசிய ஊடகங்களின் செய்தியோடு ஒப்பிட்டு எதியோ நிரூபித்துவிட்டது போல் அற்ப சந்தோசப்பட்டுக்கொள்கிறார்கள்.

      புலிகளின் அருமையை ராஜபக்க்ஷேக்கள் மிக விரைவிலேயே உங்களுக்கு புரியவைப்பார்கள்.

      • 29.2.1
        Tecan says:

        புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள்.

      • 29.2.2
        Rathi says:

        Tecan,

        நாங்கள் பைத்தியம் ஆனால் நீங்கள் வைத்தியம் பார்க்கப்போகிறீர்களா? அல்லது வைத்திய செலவை ஏற்கப்போகிறீர்களா? கனடாவில் எனக்கு நல்ல வைத்தியம் கிடைக்கும் அளவுக்கு வருடாவருடம் நான் நிறையவே வரி கட்டுகிறேன். நீங்கள் எனக்கு பைத்தியம் பிடிப்பதை பற்றி கவலைப்படாதீர்கள்.

        உங்களைப்போன்றோர்கள் தான் புலி எதிர்ப்பு பைத்தியத்தில் ஏதோதோ உளறுகிறீர்கள்.

  30. 30
    வினவு says:

    வித்தகன், ரதி, தமிழ்நிலா மற்றும் இந்த கட்டுரையின் விவாதத்தில் பங்கேற்ற நண்பர்களுக்கு…

    நேரமின்மையால் இந்த நெடிய விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை, மன்னிக்கவும். எனினும் இதில் வினவின் கருத்துக்கள் என்னவாக இருக்குமென்று உங்களுக்கு தெரிந்ததுதான். வித்தகன் பட்டியிலிடும் புலிகள் பற்றிய விமரிசனங்களில் சிலவற்றுடன் உடன்பாடு இருந்தாலும் ராஜிவ் கொலை முதலானவற்றில் உடன்பாடு இல்லை. ராஜிவ் கொலை அநீதியென்றால் அது இலங்கையில் இந்திய அமைதிப்படை இழைத்த கொடுமைகளையும், அந்தப் படையை அனுப்பிய இந்திய ஆட்சியாளர்களின் பொறுப்பையும் விசாரிப்பதிலிருந்தே தொடங்க வேண்டும்.மற்றபடி வித்தகன் சொல்லாத பல விசயங்கள், புலிகளின் அரசியல் தவறுகள், அணுகுமுறை தவறுகள், ஆயுத வழிபாடு, மக்களை அரசியல் போராட்டத்தில் ஈடுபடுத்தாமை, சிங்கள உழைக்கும் மக்களை இனவெறியர்களிடமிருந்து மீட்பதற்கான பார்வை இல்லாமை, ஏகாதிபத்திய அரசியல் பற்றிய பார்வை இல்லாமை முதலானவற்றில் எங்களுக்கு புலிகள் மீது விமர்சனம் உண்டு.

    ஆனால் இவற்றை விட இந்திய ஆளும் வர்க்கம், இந்திய அரசின் சதிகள், நயவஞ்சகம், இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்தில் வைத்திருப்பதற்காக ஈழப் போராட்டத்தை பகடைக்காயாக பயன்படுத்தி சீர்குலைத்த்து என்பதும் பாரதூரமான விசயம்தான். சொல்லப்போனால் புலிகளின் தவறுகளெல்லாம் இந்திய உளவுத் துறை வடிமைத்த இயக்க நீதிகளிலிருந்து விளைந்தவை, அல்லது அதற்கு பொருத்தமான அரசியல் செயல்பாட்டை புலிகள் கொண்டிருந்தமை என்று சொல்ல்லாம்.

    ஈழப் போராட்டம் மிகப் பெரிய பின்னடைவையும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழைப்பையும் சந்தித்திருக்கும் வேளையில் நாம் ஈழப் போராட்டம் குறித்து பல மறு பரிசீலனைகளை செய்வது நிச்சயம் வீணகாது. நமது விமரிசனங்களை சில தனிப்பட்ட நபர்கள், பிரச்சினைகள் என்று குறுகிய பரப்பளவில் வைத்துப் பார்க்காமால் விவாதித்தோமானால் உண்மைகளை கண்டையை முடியும். அல்லது நமது வேறுபாடுகள் எவை ஏன் என்ற அளவிலாவது வந்தடைய முடியும். தொடர்ந்து விவாதிப்போம்.

    நட்புடன்
    வினவு

    • 30.1
      Tamilnela says:

      வித்தகன் செந்தில் சகோதரி ரதி; வினவு மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
      ஓவ்வொருவரினதும் கருத்துகளுக்கும் பதில்க் கருத்துக்களும் விதண்டாவாதங்களும் இங்கு நிறையவே இடம்பெற்றுள்ளன.இருந்தும் வினவு அவர்களின் கருத்துக்கள் 100 வீதம் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் ஈழத்தமிழரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றது.வித்தகன் மற்றும் ரீகன் தமிழகத் தமிழர்களாக இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம் ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு பெண்ணின் பிரசவ வலியைப் போன்றது.அழுதாலும் தானே பெற்றெடுக்க வேண்டும். கட்டிய கணவனுக்கே வலி தெரியாது. வலியின் ரணம் தெரியாது.
      இதே நிலைதான் ஈழத்; தமிழனின் இன்றைய நிலையும்.எத்துன்பம் வரினும் எதிர்கொண்டு ஈழம் அமைக்க வேண்டியவர்கள் நாங்களே.எங்கள் வலியை நாங்களே சுமப்போம்.எங்களின் ஈழ மண்ணை நாங்களே வென்றெடுப்போம்.
      ஓன்றுமட்டும் இங்கே மிகத் தெளிவாக தெரிகிறது.எங்களின் உணர்வுகளை எங்களின் வலிகளை எங்களின் எதிர் பார்ப்புக்களை ஈழத் தமிழராகிய எங்களை விட வேறு யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை புரிந்துகொள்ள போவதுமி;லலை.
      இங்கே ஒன்றுமட்டும் நடந்துகொண்டிருக்கிறது. தவறான புரிதல்களை கொண்ட சிலர் புலி எதிர்ப்பை காரணம் காட்டி ஈழத் தமிழரையும் தமிழகத் தமிழரையும் நிரந்தர எதிரிகளாக்கும் காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.
      உண்மையான ஆதரவுக்கரம் நீட்டும் அனைவரையும் உள்வாங்கி எமது அடுத்தகட்ட பயணமான ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற் திட்டப் பணி’யில் ஒன்றிணைவோம்.

      நான் இந்தக் கட்டுரைக்கு எனது முதலாவது கருத்தை ‘புலிகள் செய்ததெல்லாம் தவறு என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்ட கட்டுரை. பிழைகளை மட்டுமே சொன்ன நீங்கள் புலிகள் என்ன செய்திருந்தால் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்பதையும் நீங்களே சொல்லுங்கள்’ எழுதியபோது இது ஒரு முக்கிய விவாதமாக மாறும் என்பதை நினைத்துப் பார்க்க வில்லை. எனினும் என்னோடு சேர்ந்து விவாதித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.தொடர்ந்தும் எழுதுங்கள்.

      என்னுடைய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

      ‘மீண்டும் எழுவோம் தமிழராய் ஒன்றிணைவோம் தாயகம் நோக்கிய திசையில்’
      அன்புடன்
      தமிழ்நிலா

    • 30.2
      Rathi says:

      வினவு,

      //எங்கள் வலியை நாங்களே சுமப்போம்.எங்களின் ஈழ மண்ணை நாங்களே வென்றெடுப்போம்.ஓன்றுமட்டும் இங்கே மிகத் தெளிவாக தெரிகிறது.எங்களின் உணர்வுகளை எங்களின் வலிகளை எங்களின் எதிர் பார்ப்புக்களை ஈழத் தமிழராகிய எங்களை விட வேறு யாருமே சரியாக புரிந்துகொள்ளவில்லை புரிந்துகொள்ள போவதுமில்லை.இங்கே ஒன்றுமட்டும் நடந்துகொண்டிருக்கிறது. தவறான புரிதல்களை கொண்ட சிலர் புலி எதிர்ப்பை காரணம் காட்டி ஈழத் தமிழரையும் தமிழகத் தமிழரையும் நிரந்தர எதிரிகளாக்கும் காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.
      உண்மையான ஆதரவுக்கரம் நீட்டும் அனைவரையும் உள்வாங்கி எமது அடுத்தகட்ட பயணமான ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற் திட்டப் பணி’யில் ஒன்றிணைவோம்.//

      ச‌கோத‌ரி த‌மிழ்நிலா சொன்ன‌து தான் என் நிலையும். இதைத்தான் நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன்.எங்க‌ளுக்கான‌ விடுத‌லையை பெற‌ உழைக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் நாங்க‌ள் தான். த‌மிழ‌க‌ உற‌வுக‌ள் எங்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுத்தால் அது இன்னும் கூடுத‌ல் ப‌ல‌மே. புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம் போல் த‌ங்க‌ள் காரிய‌த்தில் இற‌ங்கிவிட்டார்க‌ள். யார் எதிர்த்தாலும் அல்ல‌து யார் ஆத‌ர‌வ‌ளித்தாலும் த‌மிழீழ‌ க‌ன‌வு நிறைவேறும் வ‌ரையில் இல‌ட்சிய‌ ஈழ‌த்த‌மிழ‌ன் ஓய‌ப்போவ‌தில்லை. கேலி பேசுவோர் கேலி பேச‌ட்டும். நாங்கள் எங்கள் கடமையை செய்வோம்.

      //இந்திய அமைதிப்படை இழைத்த கொடுமைகளையும், அந்தப் படையை அனுப்பிய இந்திய ஆட்சியாளர்களின் பொறுப்பையும் விசாரிப்பதிலிருந்தே தொடங்க வேண்டும்//

      இது எப்படி சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தற்போது ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கே இந்தியா முழுமூச்சாக அதற்கெதிராக வாக்களித்தது. இதில் இந்திய அமைதிப்படையின் குற்றத்தை எப்படி, யார் விசாரிப்பது? ஆனால், இலங்கை அரசு நடத்திக்கொண்டிருப்பது “தமிழினப்படுகொலை” என்று உலகம் ஒப்புக்கொண்டால் தான் மற்ற‌வைகள் அதைத்தொடர்ந்து நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. ஐம்பதாயிரம் ஈழத்தமிழர்களின் உயிர்கள் கடந்த மூன்று மாதங்களில் சிங்கள ராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளன. இதை உலகும் கண்மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு மெள‌னியாக இருக்கிறது. இதை எப்படி நிரூபிப்பது என்பதுதான் எங்கள் முன்னால் உள்ள சவால். மேற்குலகம் ஏதோ மனமிரங்கி (சீனா மீது மேற்குலகுக்கு உள்ள வெறுப்பின் காரணமா?) இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நிரூபிக்க கைகொடுத்தாலும் இந்தியா அதை தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சிக்கலான பூகோள, பிராந்திய அரசியலுக்குள் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகப்படுவது எங்கள் உறவுகளும், இனவிடுதலையும் தான்.

      புலிகள் பற்றிய உங்கள் எல்லாக்கருத்துகளோடும் எனக்கு உடன்பாடில்லை. அவைகளை நிறையவே இங்கே விவாதித்தாயிற்று. //சிங்கள உழைக்கும் மக்களை இனவெறியர்களிடமிருந்து மீட்பதற்கான பார்வை இல்லாமை//. ஆனால், இது மட்டும் எப்படி புலிகளுக்கு சாத்தியமாகியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று விளக்குங்கள்.

      எது எப்படியோ, இந்தியா மறுபடியும் மறுபடியும் எங்கள் முதுகில் குத்துவதை நிறுத்தும் வரையில் எங்கள் போராட்டம் நிறையவே சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் தேசியநலன்களுக்காக ஈழத்தமிழன் எத்த‌னை முறை கொத்து கொத்தாய் சாக‌வேண்டும்?

  31. 31
    Tecan says:

    We want Tamileelam in Canada. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

    • 31.1
      அர டிக்கெட்டு ! says:

      இன்னாது? கனடாவுல எப்டிப்பா? டமாசா இல்ல சீரிசா? ஏதாவது லிங்கு குடுபா!

      • 31.1.1
        Rathi says:

        அர டிக்கெட்,

        Tecan ஏதோ உளறுகிறார் என்றால் நீங்களுமா? இவர்களுக்கு எங்களை கிண்டல் அடிப்பதே பிழைப்பாகிவிட்டது. நான் கனடாவில் தான் இருக்கிறேன். நாங்கள் கனடாவில் தமிழீழம் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துவேன். :) . பிறகு எங்களை கனடாவிலிருந்து துரத்தும் போது ரிகன் வீட்டுக்கா நாங்கள் போவது?

      • 31.1.2
        அர டிக்கெட்டு ! says:

        அதானே பாத்தேன்! ஜெயலலிதா ஈழத்தாய் ஆனதிலிருந்து எதை கொள்ள எதை தள்ள என்பதே குழப்பமாகி விட்டது :-) )

      • 31.1.3
        Rathi says:

        //ஜெயலலிதா ஈழத்தாய் ஆனதிலிருந்து எதை…//

        இந்த அநியாயம் எப்போ நடந்திச்சி. அதாங்க, ஜெயல‌லிதா ஈழத்தாய் ஆனது. இந்த நாட்களில் எல்லோருக்குமே ஈழத்தமிழனுடன் காமெடியாக இருக்கிறது.

      • 31.1.4
        TSri says:

        அர டிக்கெட்டு, இலங்கையில் புலிகள் ஒழிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் உள்ள புலிகள் வேலைக்கு போனால் தான் வருமானம் என்ற நிலமை வந்து விட்டது. வேலை செய்யாமல் தங்களுக்கு வருமானம் பெறும் செயற்திட்டம் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்ச்சி.

      • 31.1.5
        Tecan says:

        ராஜபக்சேவுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து 20000 தமிழர்களை அழித்தார்கள். மிச்சமிருக்கும் தமிழர்களையும் அழிப்பதற்காக நாடு கடந்த தமிழீழம் அமைக்கிறார்கள்.

      • 31.1.6
        Rathi says:

        Tecan, TSri, என்கின்ற இரு புலி எதிர்ப்பாளர்களுக்கு.

        Tecan, நீர் எப்ப பாத்தாலும் ராஜப‌க்க்ஷேக்களுக்கு விசுவாசி போலத்தான் கதைக்கிறீர் அல்லது பரப்புரை செய்கிறீர். உம்முடைய பொய்ப்பிரச்சாரத்திற்கு பதில் எழுதி எனக்கு நேரத்தை வீணடிக்க முடியாது. ஆனால், “தமிழ்தேசியம்” என்பது இனமான உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனின் உயிர்மூச்சு அதற்காக நாங்கள் நாடு கடந்த தமிழீழம் என்ன இன்னும் எங்களால் என்னென்ன நியாயமான வழிகளில் முடியுமோ அதையெல்லாம் முயற்சி செய்வோம். எங்கள் உரிமைகளை வென்றெடுப்போம். நீரும் உம் பொய்ப்பிரச்சாரத்தை தொடரும்.

        TSri,

        //TSri, நீ இப்படியே நண்பன் யார் எதிரி யார் என புரியாமல் உளரிக்கொட்டு உன்னைய நான் மென்டல் ஆஸ்பிடலில் சேர்க்கிறேன்_ ‍Mambo8//

        Mambo8, மன்னிக்கவும். இதைவிட சிறப்பாக TSri ஐப்பற்றி நான் சொல்லியிருக்க முடியாது. அதனால் உங்களுடைய வார்த்தைகளையே என் பதிலாக சொல்ல வேண்டியதாகிவிட்டது.

        TSri,

        வெளிநாட்டிலுள்ள புலிகள் வேலைக்கு போவது இருக்கட்டும். நீர் யார்? Wal-Mart Waltons அல்லது அம்பானி போல் அடுத்தவன் உழைப்பை சுரண்டி பிழைப்பவ‌ரா? அல்லது, ஏதோ நீரும் வேலை செய்து இன்னும் பத்து பேரை வாழவைப்பவரா?

  32. 32
    Tecan says:

    தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.

    நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக் களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது. கிஷோர் எம்.பி. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

    • 32.1
      செந்தில் says:

      தோழர் Tecan,

      //தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.//

      சிங்கள அரசியல் தலைவர்களும் புத்த சந்நியாசிகளும் தமிழர்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்க முன் வந்தால் நாங்கள் ஏன் தமிழீழத் தேசியம் கோருகிறோம். பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்?

      1987 ராஜீவ் – ஜெயவர்தனா ஒப்பந்தத்தின்படி தமிழர்களுக்கு கொஞ்சநஞ்ச உரிமை கூட கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தை போட்ட ராஜீவ்வை இலங்கை விமான நிலையத்தில் வைத்து சிங்கள கடற்படை வீரன் ஒருவன் தன் துப்பாக்கியால் தாக்கினான் என்பது அனைவரும் அறிந்ததே.

      இப்போது புலிகளை அழித்துவிட்டோம் என்று சிங்கள பேரினவாதிகள் கூறுகிறார்களே, அப்படியென்றால் இன்னும் ஏன் அங்குள்ள மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்? இப்போது வடக்குப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தப் போவதாகவும் போரில் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அங்குள்ள நிலங்களை சிங்கள அரசாங்கம் வழங்கப் போவதாக செய்திகள் வருகிறதே. எதற்காக?

      சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்; அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். எனவே எங்களின் அடுத்த கட்ட போராட்டத்தை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது; சிங்கள பேரினவாதிகள்தான் தீர்மானிக்க வேண்டும்.

      தேசியம் தேசியம் என்று கூறிக்கொண்டு எதையும் சாதிக்கவில்லை என்கிறார்கள். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இலங்கையைத் தாண்டி வெளியே எங்கும் அப்போராட்டம் பேசப்படவில்லை. இப்போது உலகம் முழுதும் எங்கள் போராட்டம் பேசப்படுகிறது. அதற்கு காரணமாய் இருந்தவர்கள் புலிகள். புலிகளை அழித்து விட்டோம் என்று சிங்கள தேசியவாதிகள் கூறினாலும் புலிகளின் லட்சியப் போராட்டத்தை அழிக்க முடியாது. அது இப்போது மக்களின் போராட்டமாக உருமாறியுள்ளது.

    • 32.2
      செந்தில் says:

      Tecan,

      //நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக்களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.//

      பல தசாப்தமாக ஆட்சிபீடம் ஏறும் சிங்கள தலைமையுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டுவரும் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் தலைவர்கள் மற்றும் மலையகத்தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமைகளைத்தான் உங்களால் பட்டியல் இடமுடியுமா?
      ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் சந்தர்ப்பங்களில் கூட தம் சார்ந்த இனத்தவரிற்கு குறைந்தபட்ச அரசியல் அங்கீகாரத்தை கூட இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதே கடந்தகால வரலாற்று உண்மை. அரசியலில் ஒட்டி ஏதோ தமது பொருளாதார நிலையினை வளப்படுத்தி கொள்வதற்கு இவர்களால் முடிந்ததே தவிர ஒருதுளி உரிமையினைதானும் தமிழ்மக்களிற்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

      தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக கூறப்படும் கருணா அணியினரால் தான் என்ன உரிமைகளை பெற்றுத்தர முடிந்தது.

      எதுவித அதிகாரமும் அற்ற மாகானசபை ஆட்சியை பெற்று கிழக்கு முதல் அமைச்சர் ஆகியுள்ள பிள்ளையான் என்பவர் படை பந்தோபஸ்துகளுடன் பந்தாவாக வலம் வர முடிகிறதே ஒழிய கிழக்கு மக்களிற்கு எந்தவித உரிமைகளையும் பெற்று கொடுத்து நிம்மதியான வாழ்வை அமைத்து தர முடியாத துர்ப்பாக்கியசாலியாகவே உள்ளார்.

      தமிழ் இனத்தையே வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் சிங்கள இனவெறி அரசிடம் நாம் கைகட்டி என்ன உரிமையை பெற்றுவிடமுடியும் என்பதை நீங்களே தெளிவுபடுத்துங்கள்.

      • 32.2.1
        Tecan says:

        செந்தில், நீங்கள் புலிகளைப் போல அதிகார வெறி பிடித்தலையும் நபர். உங்கள் பதில் அதைத் தான் எடுத்துக் காட்டுகின்றது. உங்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி எந்த அக்கறை இல்லை. உங்களுக்கு தேவை தமிழீழம் என்ற பெயரில் தமிழ் மக்களை அடிமைகளாக அடக்கி ஆளும் அதிகாரம்.

    • 32.3
      செந்தில் says:

      Tecan,

      //உங்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி எந்த அக்கறை இல்லை. உங்களுக்கு தேவை தமிழீழம் என்ற பெயரில் தமிழ் மக்களை அடிமைகளாக அடக்கி ஆளும் அதிகாரம்.//

      தமிழ் மக்கள் சிங்களவர்களிடம் அடிமைகளாக வாழக்கூடாது என்பதற்காகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமே. நீங்கள் என்னவென்றால் தமிழீழம் அமைத்து தமிழ் மக்களை அடிமைகளாக வாழவைக்க புலிகள் முயல்கிறார்கள் என்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி தமிழ் மக்கள் அடிமைகளாகவே இருக்கவேண்டுமென்றால் சிங்களவர்கள் தமிழ் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தபோது உங்களைப் போல் அவர்களும் தனக்கென்ன என்று கண்டுகொள்ளாமலே இருந்திருப்பார்கள். இப்படி தன்னுயிரையும் துச்சமாக கருதி அவர்களுக்கு எதிராக போரிட்டே இருக்கமாட்டார்கள், புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு அவசியமே இருந்திருக்காது. இதிலிருந்தே நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர் என்பது புலப்படுகிறது. நீங்கள் ஒருவர் தமிழீழத்திற்கு எதிரானவர் என்பதால் மற்றவர்கள் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. தமிழீழத்திற்காக போராடுபவர்கள் அந்த லட்சியம் அடையும் வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

      ஏதோ புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருசில துரோகிகளால் ஒட்டுமொத்த இயக்கத்தையே பழிப்பது சரியல்ல. நீங்கள் சொன்னால் மட்டும் உடனே ஈழத் தமிழர்கள் புலிகள் அதிகார வெறி பிடித்தவர்கள் என்று நம்பிவிடுவார்களோ. புலிகள் பற்றி நீங்கள் இப்படியொரு மனநிலையில் இருக்கும் போது உங்களுக்கு எப்படிச் சொன்னாலும் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே அமையும்.

      2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற தீர்மானத்தினை முன்வைத்து 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்றிருந்தனர். வடகிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பிரதேசங்களில்தான் இவ் 22 ஆசனங்களையும் பெற்றிருந்தமை ஈழத்தமிழர்களது நிலைப்பாட்டினை தெளிவு படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களது உரிமைகளை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்காக அயராது உழைத்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.ரவிராஜ், ஜோசப் பரராசசிங்கம், சிவநேசன், சந்திரநேரு போன்றோரும் தமிழ்காங்கிரஸ் கட்சித்தலைவரும் சிறந்த சட்டவாளருமான குமார் பொன்னம்பலம் அவர்கள் 2000 ஆண்டிலும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் போன்றவர்களை சிங்கள அரசு தனது கூலிப்படையை ஏவி கொலை செய்தமையை என்னவென்று சொல்வது.
      இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படும் இறுதிக்கணம் வரை தமிழர்களது விடுதலைக்கான பணியினை மேற்கொண்டிருந்தனர்.

      தமிழர்களது போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மக்களிற்கு வெளிப்படுத்திவந்த ரவிராஜ் சிங்கள தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிவரும் வழியிலே சிங்கள அரசின் கூலிப்படைகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

      இப்போது சொல்லுங்கள் அதிகாரவெறி புலிகளுக்கா அல்லது சிங்கள அரசியல் தலைவர்களுக்கா என்று. ஈழத்தமிழர்களது உரிமையினை வென்றெடுக்கும் உன்னத வேட்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை கொச்சைப்படுத்தாது இருந்தாலே போதுமானது.

      • 32.3.1
        Tecan says:

        நீங்கள் சொன்னால் மட்டும் உடனே ஈழத் தமிழர்கள் புலிகள் விடுதலைக்காக போராடினார்கள் என்று நம்பிவிடுவார்களோ?
        புலிகள் தமது அதிகார வெறிக்காக உங்களை அல்லது உங்கள் சொந்த சகோதரர்களை கொலை செய்யும் வரை நீங்கள் திருந்தப் போவதில்லை. நீங்கள் ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நாளேனும் வாழவில்லை. புலிகள் ஈழத்தமிழரை அடிமைகளை விட கேவலமாக நடத்தியது உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? புலிகளுக்கு ஜால்ரா அடித்து பணம் சேர்க்கும் திருட்டுக் கோஷ்டியை மட்டுமே உங்களுக்கு தெரியும்.

      • 32.3.2
        Tecan says:

        செந்தில் புலிகள் ஈழத்தமிழரை அடிமைகளாக வைத்திருந்த விஷயம் உங்களுக்கு தெரிந்தால் பேச வாருங்கள். தெரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருங்கள். எதற்கு தேவையில்லாத விஷயத்திற்கு தாவுகிறீர்கள்? எந்த சம்பந்தமுமில்லாமல் சிங்களவனை எதற்கு பிடித்திளுக்கிறீர்கள்? புலிகளும் சிங்களவர்களா?

    • 32.4
      செந்தில் says:

      Tecan,

      //உங்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி எந்த அக்கறை இல்லை.//

      எங்கோ வெளிநாட்டில் இருந்துகொண்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து தமிழ் மக்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

      • 32.4.1
        Tecan says:

        செந்தில், புலிகள் உங்கள் 12 வயது மகனை மகளை உங்கள் கண் முன்னாலேயே அடித்து இழுத்து சென்று கட்டாய இராணுவப்பயிற்சி கொடுத்தால் அப்போதும் இப்படித் தான் பேசுவீர்களா? உங்கள் வயதான தந்தையை துன்புறுத்தி கட்டாய வேலை வாங்கினால் இப்படி பேசுவீர்களா? வரிக்கு மேல் வரி வாங்கி உங்களை பிச்சைக்காரனாக்கினால் இப்படிப் பேசுவீர்களா? சொந்த தமிழ் மக்கள் உயிரைப் பாதுகாக்க தப்பி ஓடினால் முதுகுக்கு பின்னே சுட்ட கோழைகளை நீங்கள் விடுதலை வீரர்கள் என்று சொல்கிறீர்கள். ஈழத்தமிழரை கொன்று குவித்த புலிகளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள். உங்களுக்கு இதயமே இல்லையா? நீங்களும் ஒரு தமிழரா? ஈழத்தமிழருக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்கள். புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் சில புல்லுருவிகள் மட்டுமே ஈழத்தமிழரில் அக்கறை உள்ளவர்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களது முட்டாள்தனம்.

      • 32.4.2
        Tecan says:

        சகோதர இயக்கத்தவர்களை கொடூரமாக கொலை செய்தமை. உயிருடன் எரித்தமை சகோதர முஸ்லிம் மக்களை அவர்களது வாழிடங்களிலிருந்து 10 மணித்தியால அவகாசத்தில் விரட்டியடித்தமை. அவர்களை மஸ்ஜிதுகளிலும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் படுகொலை செய்தமை போன்ற இழிசெயல்களை சிங்களத்துக்கு கற்றுக் கொடுத்தவர்களே உங்கள் புலிப்படை தானே செந்தில். எப்படியோ நீங்கள் வயிறு வளர்ப்பதற்காக எதையாவது ஏமாந்த புலம்பெயர் சனத்துக்கு சொல்லிக் கொண்டேயிருங்கோ.

      • 32.4.3
        Tecan says:

        செந்தில், ஈழத்தமிழ் மக்களை பலி கொடுத்து தனது தலைமையை காப்பாற்ற புலிகளின் தலைவரும், புலம் பெயர் புண்ணாக்குகளின் புத்திமதியில் செயற்ப்பட்டார். புலம்பெயர் புலிப்பினாமிகளின் பலர் போரில் இருந்து தப்பிவருபவர்கள் தமிழினத் துரோகிகள். தலைவரை விட்டுவிட்டு ஓடிவரும் துரோகிகள் என்றெல்லாம் துரோகிப்பட்டம் சூட்டினர்.

        புலிகள் பின்னால் நின்று மக்களை சுட்டுக் கொன்றது. எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினரோ அந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் புலிகள். இதனால் புலிகள் துரோகிகள் ஆயினர்.

        புலம் பெயர் நாட்டில் இந்த மக்களை பலிகொடுத்து தலைவரை காப்பாற்றும் கோழைத்தனமான முயற்ச்சி எடுத்தவர்களும் துரோகிகளே. இன்று இந்த புலம் பெயர் புலிகள் மக்களுக்காக சேர்த்த பணத்தை தமதாக்கிக் கொண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல புலிகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் சொல்லத் தொடங்கி விட்டனர்.

    • 32.5
      செந்தில் says:

      Tecan, இவ்வளவு நேரமும் ஒரு சிங்கள விசுவாசியிடம் போய் புலிகள் பற்றி பேசிக்கொண்டு இருந்தேனே அது என்னுடைய முட்டாள்தனம் தான்.

      நீங்கள் ஒரு சிங்களவனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர் போல் தோன்றுகிறது. 1976 ஆம் ஆண்டு புத்தளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு மசூதியில் சிங்கள பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான தமிழ் பேசும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு JVP குழுவினரால் அடுக்கடுக்காக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள், அதை புலிகள்தான் செய்தனர் என பிழைப்பிற்காக தங்களது இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் சிங்கள பேரினவாதிகளுக்காக வெளியிட்டவர்கள் பற்றி தெரிந்துகொண்டு அதன் பிறகு என்னை வாயை மூடச் சொல்லுங்கள்.

      எப்போதும் புலிகளுக்கெதிராக பரப்புரை செய்துகொண்டிருக்கும் உங்களைப் போன்றோர் சிங்களவர்கள் செய்த இனப்படுகொலைகளையும் பரப்புரை செய்யத் தவறிவிடுகிறீர்கள். இப்படி புலிகள் மேல் உள்ள வெறுப்பாலும் அவர்களுக்கெதிரான பரப்புரைகளாலும் ஈழத் தமிழர்கள் மீது சிங்களவர்கள் கட்டவிழ்த்த படுகொலைகள், அவர்கள் செய்யும் வெள்ளை வாகன ஆட்கடத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், வதை முகாம் சித்தரவதைகள் ஆகியவை உங்களைப் போன்றோர்களால் இந்த உலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.

      • 32.5.1
        Tecan says:

        செந்தில் நீங்கள் ஒரு தமிழனத் துரோகி என்பதை மீண்டும் நிரூபிக்கின்றீர்கள். JVP குழு முஸ்லிம்களை படுகொலையை செய்தார்கள் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட புலிகளிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? புலிகள் செய்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இருக்கும் போது நீங்கள் இல்லை என்று சொன்னால் மட்டும் ஈழத்தமிழன் நம்ப வேண்டுமா? தமிழினத்தை நாசமாக்க உங்களைப் போன்ற சில புல்லுருவிகள் போதும். சிங்களவனைக் காணாமலே புலிகள் எங்களை வளர்த்து விட்டிருந்தார்கள். பிறந்த நாள் முதல் புலிகளைய் மட்டுமே கண்டு வளர்ந்த என்னை சிங்கள விசுவாசி என்று அவதூறு சொல்ல்வது உங்களது பொய் பரப்புரைகளை மறைப்பதற்கு தான். உங்களைப் போன்ற புலிகளின் பணத்திற்கு ஆசைப்பட்டு பரப்புரை செய்யும் ஒட்டுக் குழுக்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. .

      • 32.5.2
        Tecan says:

        செந்தில் ஈழத்தமிழர் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாததால் வாயை மூடிக் கொண்டிருங்கள். பொய்களை பரப்புரை செய்யாதீர்கள். நிச்சயமாக நீங்கள் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி. புலிகள் செய்த இனப்படுகொலைகளை மறைக்க JVP மீது பழி போடுகின்றீர்கள். அது 100% பொய் என்று ஈழத்தில் சிறு குழந்தைக்கும் தெரியும். இவ்வளவு வளர்ந்த உங்களுக்கு தெரியவில்லை. இப்படித்தான் புலிகள் உங்களுக்கு பொய்களை சொல்லி உங்களை உலகம் தெரியாத மடையராக வைத்திருந்திருக்கிறார்கள். உங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டிய புலிகளுக்காக இப்போதும் வக்காலத்து வாங்குகிறீர்கள். உங்களுக்கு மானம், ரோஷமே கிடையாதா?

      • 32.5.3
        Tecan says:

        புலிகளுக்கு ஆதரவான தமிழனத் துரோகிகளை ஈழத் தமிழர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணம் செந்தில் போன்ற புலி விசுவாசிகள் தான். ஈழத்தமிழரின் இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை செந்தில் போன்றவர்கள் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் செந்தில் போன்ற புலிகளின் ஆதரவாளர்களே. இப்போது முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    • 32.6
      செந்தில் says:

      Tecan, நீங்கள் இலங்கை ராணுவம் மற்றும் அதை சார்ந்த இணையதளங்கள், இலங்கை அரச செய்தித்தாள்கள் (அதில் வரும் செய்திகள் அரசின் தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு வரும் செய்திகள்) மட்டுமே பார்ப்பவர் போலும்.

      வார்த்தைக்கு வார்த்தை புலிகள்தான் இனப்படுகொலைகள் செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நீங்கள், சிங்கள பேரினவாதிகள் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைகள் பற்றி பேச மறுக்கிறீர்கள், மற்றவர்கள் அதைப் பற்றி பேச முற்பட்டால் உடனே எந்த சம்பந்தமுமில்லாமல் சிங்களவனை எதற்கு பிடித்திளுக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இப்படிக் கேட்கும் போது எந்த ஒரு ஈழத் தமிழனின் மனதிலும் நீங்கள் ஒரு சிங்களவன்தான் என்று நினைக்கத்தோன்றும்.

      புலிகளை அழித்து விட்டோம் என்று தற்போது கூறுகிறது இலங்கை அரசு. அப்படியிருந்தும் வடக்கில் இருந்த தமிழர்கள் இப்போது திறந்தவெளி சிறைச்சாலை போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் (அவர்களையும் புலிகள்தான் அடைத்து வைத்துள்ளார்கள் என்று சொல்லிவிடாதீர்கள்). தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் இப்போது சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்களாம். தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க மாட்டோம், அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வாய்ப்பு அளிப்பதாக அமைந்துவிடும் என்று கோத்தபாய ராஜபக்சேவின் நண்பர் ஜெயசூரிய கோத்தபாயவின் இணையதளத்திலேயே தெரிவித்துவிட்டான்.

      இனியும் உங்களைப் போன்றோர் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக புலிகளை எதிர்த்தும் சிங்கள பேரினவாதிகள் செய்த இனப்படுகொலைகளை மறைத்தும் பேசிக்கொண்டே இருந்தால் எக்காலமும் ஈழத் தமிழனுக்கு விடிவில்லை.

      • 32.6.1
        Tecan says:

        செந்தில், புலிகள் ஈழத்தமிழருக்கு செய்த கொடுமைகளை மூடி மறைக்கும் நீங்கள் எப்படி ஒரு தமிழராக இருக்க முடியும்? இப்படி மறைக்கும் போது எந்த ஒரு ஈழத் தமிழனின் மனதிலும் நீங்கள் ஒரு சிங்களவன்தான் என்று நினைக்கத்தோன்றும்.

        // மற்றவர்கள் அதைப் பற்றி பேச முற்பட்டால் உடனே எந்த சம்பந்தமுமில்லாமல் சிங்களவனை எதற்கு பிடித்திளுக்கிறீர்கள் என்று //
        ஐயா, நீங்கள் ஏன் தேவையில்லாமல் எங்கேயோ தாவுகிறீர்கள் என்று தான் கேட்டேன். முதலில் புலிகள் செய்த குற்றங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்ததை பேசுங்கள். பிறகு சிங்களவன் செய்த குற்றங்களை பிறகு பேசுங்கள். எதற்கு சம்பந்தமில்லாமல் இரண்டையும் போட்டு குழப்புகின்றீர்கள்? புலிகளும் சிங்களவர்களும் ஒன்றா? நீங்கள் அப்படித் தான் கருதுகிறீர்கள். புலிகள் செய்த குற்றங்களை சொல்பவர்கள் சிங்களவன் என்று நீங்கள் அவதூறு கூறுவது உங்களது முட்டாள்தனத்தை காட்டுகின்றது. புலிகளை குறை சொல்லும் இன்றுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் உங்கள் பார்வையில் சிங்களவர்கள் தான். நன்றி. ஈழத்தமிழர்கள் உங்கள் துரோகத்தனத்தை மறக்க மாட்டார்கள்.

        //இப்போது திறந்தவெளி சிறைச்சாலை போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் (அவர்களையும் புலிகள்தான் அடைத்து வைத்துள்ளார்கள் என்று சொல்லிவிடாதீர்கள்). //

        அப்போ இதற்கு முன்னர் புலிகள் அடைத்து வைத்ததை ஒத்துக் கொள்கிறீர்கள்? ஈழத்தமிழர்களை புலிகள் பணயக்கைதியாக பிடித்து வைத்த அந்த 6 மாதங்களும் எங்கே போனீர்கள்? அப்போது உங்களை பேச வேண்டாம் என்று யார் தடுத்தார்கள்?

        //தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் இப்போது சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்களாம்.//

        ஈழத்தில் இருக்கும் தமிழனுக்கு தெரியாததெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் யார்? சிறி லங்கா அரசின் புலனாய்வுத்துறையில் வேலை பார்க்கிறீர்களா?

  33. 33
    Tecan says:

    பிரபாகரனை துரோகி, அதுவும் இனத்தை அழித்த மகா துரோகி என்று சொல்லும் வரலாற்றுக் கடமை புலி ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

    அதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய அளவில்

    ஊரான் பிள்ளையையெல்லாம் பழிகொடுத்தாலும் தன் உயிருக்காக எதிரியின் காலில் விழுந்தமை
    “தமிழன்” அழிகிறான், “தமிழன்” அழிகிறான் என்று உலகத்தையே கதற வைத்துவிட்டு அதே தமிழர்களைச் சுற்றிவர வைத்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டமை
    அவர்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் கட்டாயப்படுத்தி ஆயுதந்தூக்க வைத்து, போய் அவர்கள் நாடாளுமன்றங்கள் முன் நின்றாவது இந்த யுத்தத்தை நிறுத்தித் தாருங்கள் என்று மக்களை எல்லாம் வலிந்து அனுப்பிவைத்துவிட்டு, நோர்வேக்காரன் மூலமாகவும், இங்கிலாந்து பத்திரிகைக்காரர்கள் மூலமாகவும் தன் உயிரைக் காப்பாற்ற விழுந்து விழுந்து துடித்தமை.

    சரணா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று மக்களை உசுப்பேற்றி விடட்டுகூறி விட்டு அதே இராணுவத்தின் கையில் போய் வழி தவறிய முயல் போல் மரணத்தைப் பெற்றுக்கொண்டமை இப்படி பல காரணங்கள் இருக்கிறது, இவற்றை நாம் பட்டியலிட்டால் நம் மீது புலி ஆதரவாளர்களுக்குக் கோபம் வரும், ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நாம் வலியுறுத்தி வந்ததுபோன்று மிக அருகில் வைத்து அதுவும் தலையில் தாக்கப்பட்டு கோழை போல இறந்து கிடக்கும் தம் தலைவரின் சென்சார் செய்யப்படாத புகைப்படங்களைப் பார்த்த பின்னாவது அந்தக் கோபம் அடங்க வேண்டும்.

    உள்ளவனுக்கெல்லாம் சயனைட் மாட்டிவிட்ட தலைவன், இறுதியில் தனது உயிருக்காக எவ்வளவு போராடி, எப்பேற்பட்ட மாவீரனாக மடிந்திருக்கிறான் என்பதை சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

    இராணுவம் நயவஞ்சமாகக் கொன்றதோ இல்லையோ, அந்த இராணுவத்திடம் போய் சரணடைந்த அந்தத் தருணத்திலும் சரி, அதற்கான திட்டம் தீட்டிய முழுப் போர்க் காலத்திலும் சரி, பிரபாகரன் தன்னை நம்பிய மக்களுக்கு செய்தது வடி கட்டிய நயவஞ்சகம், துரோகம் மாத்திரமே.

    மாவீரனாவான் என்று வீரத்துடன் பார்த்திருந்த தன் ஆதரவாளர்களையும் ஏமாற்றி, தன் மீது பந்தயங்கட்டியவர்கள் எப்படியாவது தன்னை சயனைட் அடிக்க வைத்துவிடுவார்கள் என்று பயந்து ஓடிச்சென்று இராணுவத்தின் கைகளில் சரணடைந்தது துரோகமில்லையா?

    அதற்கு முன்னதாக நடேசனையும், புலித்தேவனையும் காவு கொடுத்தது துரோகமில்லையா?

  34. 34
    Tecan says:

    உலகம் முழுவதும் தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கெட்ட பெயர் உருவாக காரணம் புலிகள். அதை இங்கே சில மடத்தமிழர்கள் பெருமை என்று நினைக்கிறார்கள்.

    • 34.1
      Tamilnela says:

      சிங்களவனிடம் கூலி வாங்கிக் கொண்டு கிந்தியாவில கிந்திக்காறனுகளுக்கு தாய்த் தமிழை அடைவுவைத்து கூலி சேவகம் செய்யும் ஈனப் பிறப்புக்ககெல்லாம் மானத் தமிழன் பற்றியும் மறப் புலிகள் மானத்துக்காகவும் சுதந்திரத்திற்காகவும் உயிர் விலை கொடுத்தவர்களை பற்றிக் கதைக்குதுகள். சொந்த மக்கள் கடலிலே மீன் பிடிக்கும் போது சிங்கள கடற் hடையால் சுட்டுக் கொல்லப் படும் போது திரைப்பட நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் ஈனப் பிறப்புக்களே உங்களால் அல்ல உங்களை ஆட்டுவிப்பவர்களாலும் ஈழத் தமிழனை விலை பேச முடியாது.
      சுட்டமண்னும் பச்சை மண்ணும் எப்படி ஒட்ட முடியாதோ அப்படியே சிங்களவனும் ஈழத் தமிழனும் ஓன்று சேர முடியாது.உங்களின் நச்சுக் கருத்துக்களை விதைத்து ஈழத் தமிழனையும் தமிழக உறவுகளையும் பிரிக்க நினைக்காதீர்கள்.சில சலுகைகளுக்காக இனத்தை விற்றுப் பிழைக்கும் உங்களுக்கு ஈழத் தமிழனையோ அவர்தம் உயிரிலும் மேலான ஈழத் தமிழர் ஆகிய எங்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளையோ பற்றிக் கதைக்கும் எந்தவிதமான தகுதிகளும் முதுகு வளைத்து வாளும் உங்களிடம் இல்லை.

  35. 35
    Tecan says:

    தமிழீழம் எனும் பெயரில் வசூலித்த பணத்தில் பல்வேறு நாடுகளில், எத்தனை வியாபரங்கள்,எத்தனை கட்டிடங்கள், எத்தனை வீடுகள்,எத்தனை கப்பல்கள்,எத்தனை நிறுவனங்கள்,எத்தனை ஆயுதக்கொள்வனவு பேரங்கள், போதை மருந்துக் கடத்தல்கள், ஆட் கடத்தல்கள்?

    இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து, வளர்த்து வந்த அத்தனையையும் பிரபாகரன் இறந்த ஒரே காரணத்துக்காக அவ்வளவு சீக்கிரமாக விட்டு விடலாமா?

    பெரும்பாலானவை பினாமிகளின் பெயரில் இருக்கி்ன்றன, அவர்களை இழுத்து வைத்து மீண்டும் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வது என்றால் ஆகக்குறைந்தது ஒரு புற நிலைத் தமிழீழமாவது வேண்டாமா?

    ஆக மொத்தத்தில் ஏற்கனவே முதலிட்ட எல்லாவற்றையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் வரையில், முரண்டு பிடித்தால் ஒரு பங்கீட்டு அடிப்படையிலாவது உடன்பாடு காணும் வரை மக்களை மாயைக்குள் வைத்திருக்க வேண்டும், அதிலிருந்தும் வரும் வருமானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

    எனவே இதன் அடிப்படையில் உண்மையான ஈழத்தில் வாழும் மக்களுக்குத் தேவையோ இல்லையோ பணங்கறக்கக் கூடிய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தமிழீழம் காட்டியே தீர வேண்டும்.

  36. 36
    Tecan says:

    தமிழ் இளைஞர்களை புலிகள் கொல்வதை பார்த்துள்ளேன். நீதிமன்றில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மாஸ்ரர். கடந்த ஏப்ரல் மாதம் படையினரிடம் சரணடைந்து பொலிசாரின் விசாரணையில் உள்ள புலிகளின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தாயா மாஸ்ரர், புலிகள் சில தமிழ் இளைஞர்களை கொல்வதை தான் நேரில் கண்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செந்தில் அவர்களே தயா மாஸ்டரையும் சிங்கள விசுவாசி சிங்களவனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்று சொல்லுங்கள்.

  37. 37
    செந்தில் says:

    Tecan’s Statements:

    //ராஜபக்சேவுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து 20000 தமிழர்களை அழித்தார்கள். மிச்சமிருக்கும் தமிழர்களையும் அழிப்பதற்காக நாடு கடந்த தமிழீழம் அமைக்கிறார்கள்.//

    //உண்மையான ஈழத்தில் வாழும் மக்களுக்குத் தேவையோ இல்லையோ பணங்கறக்கக் கூடிய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தமிழீழம் காட்டியே தீர வேண்டும்.//

    என்ன ஒரு அர்ப்பத்தனமான பேச்சுகள், எண்ணங்கள். ராஜபக்சேவே புலிகளிடம் கூட்டு என்று சொல்லும் Tecan நிச்சயமாக ஒரு JVP ஆதரவாளர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

    இனியும் சிங்கள பேரினவாதியான Tecanனிடம் விவாதிப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் இழைக்கும் துரோகம் ஆகும். இப்படிப்பட்ட எண்ணமுடைய சிங்கள பேரினவாதியான Tecanனிடம் இவ்வளவு நேரம் விவாதித்ததற்கு ஈழத் தமிழர்களும் ஈழ விடுதலைக்காக போராடும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தமிழகத்தில் உள்ள என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்.

    தோழர் செந்தில்.

  38. 38
    Tecan says:

    புலி ஆதரவாளர்கள் சொன்ன பொய்களை புலிகள் அம்பலப்படுத்துகிறார்கள்.
    தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்தி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Tamilwin [ வியாழக்கிழமை, 18 யூன் 2009, 10:44.12 AM GMT +05:30 ]

  39. 39
    செந்தில் says:

    ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்குக் காரணிகள்:

    1. உலக நாடுகளின் மேலாதிக்கப் போட்டி.

    2. இனப்படுகொலைகள் வெளி உலகிற்கு தெரியாதவாறு இலங்கை அரசு மறைத்தது (ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை மிரட்டியும், கொலை செய்தும், நாடு கடத்தியும்).

    3. உலக நாடுகள் மனித உரிமை மீறல் என்று சொன்னதே தவிர, இனப்படுகொலை என்று சொல்லி இலங்கையை கண்டிக்கத் தவறியது.

    4. புலிகளை பயங்கரவாதிகள் என்று பெரும்பாலான உலக நாடுகளில் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் பரப்புரை செய்து தடைசெய்ய வைத்தது.

    5. புலிகள் மேல் இந்திய காங்கிரஸ் அரசு கொண்டிருந்த வெறுப்பு. அதனாலேயே இந்திய அரசு இப்போது பின்னால் இருந்து போரை நடத்தியது.

    6. இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கை.

    7. போரை பின்னால் இருந்து நடத்திய இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாத அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள்.

    8. தமிழகத் தலைவர்கள் மற்றும் இந்திரா காந்தியின் அரசு புலிகளை ஆரம்பத்தில் வளர்த்து விட்டு இப்போது அரசியல் லாபத்திற்காக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

    9. இந்திய அமைதிப் படை இலங்கைக்குள் நுழைந்தது.

    10. முக்கியமாக தங்கள் இயக்கத்துக்குள் ஒற்றுமை இல்லாமல் தன்னுடைய குடும்ப நலனிற்காக சிங்கள பேரினவாதிகளுக்கு துணை போன மற்றும் இலங்கை அரசிடம் தஞ்சமடைந்த கருணா, தயா மாஸ்டர் போன்ற புலிகள் இயக்கத்தினுள் இருந்த சிலர் செய்த துரோகங்கள் மற்றும் சூழ்ச்சிகள்.

    • 39.1
      வித்தகன் says:

      மிகத் தவறான பதிவு, திரு. செந்தில். ஒரு தவறுமே புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலக சாமுதாயமும் அவர்கள் அழிவிற்கு ஆசைப் பட்டிருக்குமா?

      பல்வேறு கால கட்டங்களில் அரசியல், ராணுவ, தத்துவார்த்த, மனித நேய தவறுகளை புலிகள் இழைத்துள்ளார்கள். ஆனால் அது எதையுமே உணராமல், இது துரோகிகளுக்கு தண்டனை, அது “றோ” செய்த சூழ்ச்சி, இது துன்பியல் சம்பவம் என்று எல்லாவற்றையும் நியாயப் படுத்துதலும், புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம்களோ, மனிதக் கேடயமாகப் பயன் படுத்தப் பட்ட பிற தமிழர்களோ அவர்கள் தரப்பு பற்றி சொல்லும் போது அது பொய் – சிங்கள ராணுவ மிரட்டலுக்கு பயந்து சொல்கிறார்கள் என்பதும், தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் மேல் தணியாத அன்பு வைத்திருக்கும் போதும் புலிகள் அழிவதைப் பற்றிக்கவலைப் படாமல் மீண்டும் காங்கிரஸுக்கு வாக்களித்தால் காசுக்கு இன உணர்வை விற்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதும்தான் புலிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் வழக்கமாகப் போய் விட்டது.

      சுய பரிசோதனை செய்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் பயம் காட்டாமல் அன்புக்கு பாத்திரமான ஒரு இயக்கமாக புலிகள் வளர்ந்திருந்தால் இன்று அவர்கள் இன்னும் இருந்திருப்பார்கள். அப்படி நடக்காததால்தான் உலகம் ஈழத்தமிழர்கள் வேறு புலிகள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கியது. அதுதான் புலிகளின் அழிவு காலத்தின் ஆரம்பம். உண்மையில் ராஜீவ் கொலையை விட, கருணா பிரிந்து சென்றதை விட, தான் போராடும் மக்களுக்கும் தங்களுக்கும் உலகின் பார்வையில் வேறுபாடு தோன்றும்படி அவர்கள் நடந்து கொண்டதுதான் அவர்களின் மிகப் பெரிய தவறு.

      இனிமேலும் மற்றவர்களைப் பழி சொல்லி உங்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இனியாவது இலங்கைத்தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் புலிகள் தன் போக்கை மாற்றிக் கொண்டே தீரவேண்டும். அதற்கு முதல் படி தன் கடந்த காலத்தவறுகளை உணருதல்.

      எத்தனையோ ஆதரவும் பணபலமும் நிலப்பரப்பும் ஆயுதமும் அவர்கள் கையிலிருக்கையிலேயே, பிரபாகரன் என்ற ஏகோபித்த தலைவர் இருக்கையிலேயே, புலிகள் பந்தாடப் பட்டார்கள். இப்போது ஒன்றுமே இல்லாத நிலையிலும் கிளிநொச்சியில் ஆட்சி நடத்திய காலகட்டத்தைப் போலவே பேசியோ நடந்தோ வந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள். தான் செய்த தவறுகளை உணறாத வரையில், பிறரை மட்டுமே குறைசொல்லும் வரையில் அது யாராக இருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தால் வெறுக்கப் படுவான் என்பதை நினைவில் கொள்க.

      • 39.1.1
        Rathi says:

        வித்தகன்,

        செந்தில் தன் பதிவில் ஈழப்போரின் பின்னடைவுக்கான காரணங்களை நூற்றுக்கு நூறு வீதம் மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

        //இனிமேலும் மற்றவர்களைப் பழி சொல்லி உங்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை//

        நாங்கள் வேண்டுமென்றே யாரையும் பழி சொல்லவில்லை. உங்களுக்கு மன‌ச்சாட்சி ஒன்று இருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் இந்திய உளவு அமைப்பான றோ எங்கள் போராட்டத்தை, எங்களின் விடுதலையை சீரழிக்கவில்லை, எங்களின் தாங்கமுடியாத வேதனைகளின் சூழ்ச்சிக்குப் பின்னால் அவர்களின் பங்களிப்பு இல்லவே இல்லை என்று. அப்படியல்லாம் இல்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீரகள். எங்களையும் முட்டாள்கள் என்று நினைத்து பதிவு இடாதீர்கள்.

        //தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் மேல் தணியாத அன்பு வைத்திருக்கும் போதும் புலிகள் அழிவதைப் பற்றிக்கவலைப் படாமல் மீண்டும் காங்கிரஸுக்கு வாக்களித்தால் காசுக்கு இன உணர்வை விற்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதும்தான் புலிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் வழக்கமாகப் போய் விட்டது.//

        அப்படி யாரும் தமிழ்நாட்டு உறவுகளை குற்றம் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. இந்த தேர்தல் உண்மையில் ஜனநாயக முறைப்படி தான் நடந்ததா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

        தற்போது, புலம்பெயர்ந்த தமிழர்களால் தான் தமிழிழீழ விடிவுக்கான போராட்டம் நியாயமான வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. இதை முறியடிக்க வேண்டும், புலம் பெயர் தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கே பலபேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அப்படி ஒரு நோக்கத்தோடு இங்கே வினவு தளத்திலும் ஒரு ஜென்மம் உலவுகிறது.

        தமிழிக தமிழர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. நீங்களாக புலிகளின் ஆதரவாளர்கள் தமிழகத்தமிழர்களை குற்றம் சொல்கிறார்கள் என்று எதையாவது கிளப்பி விடாதீர்கள்.

        காங்கிரஸ் அரசு காலங்காலமாக ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துரோகம் இழைக்கிறது என்பதையும் மறக்காதீரகள். சேது சமுத்திரத்திட்டம், சிறிமாவோ_சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஐந்து லட்சம் தோட்டத்தொழிலாளர்களான‌ தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக அனுப்பபட்டது, இன்னுமொரு ஐந்து லட்சம் பேர் நாடற்றவர்களாக்கப்பட்டது, கச்சதீவை இந்தியா/இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்தது, தமிழ்நாட்டு மீனவர்கள் ஏறக்குறைய நானூறு பேர் சிங்கள நேவியால் கொல்லப்பட்டும் சித்திரவதைப்பட்டதும், தற்போது இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுக்காப்புக்கும் பெளத்த இலங்கை காவலாளியாக இருக்குமென்று கண்ணை திறந்து கொண்டே கனவு காண்பது :) ; இதெல்லாம் கூட தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் தான்.

        இதுதவிர, காவேரி பிரச்சனை, ஒக்கேனக்கல், தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டுவது என்று வேறு விடயங்களிலும் காங்கிரஸ் அரசு நல்லாவே உங்கள் தலையில் மிள‌காய் அரைக்கிறது. மறந்துவிடாதீர்கள்.

        இதனால் தான் இன்று தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே தமிழ்நாட்டின் இறையாண்மையை காப்பாற்ற “தமிழ்தேசியம்” (ஈழத்தமிழர்களின் தமிழ்தேசியம் இதில் அடக்கமல்ல) கட்டியெழுப்பப்ப்ட வேண்டுமென்று குரல்கள் கேட்கின்றன. புலிகளை எதிர்க்கிறேன் பேரவழி என்று உங்களுக்கும், உங்கள் தமிழ்நாட்டு உறவுக்களுக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகங்களை மறகாதீர்கள்.

        நீங்கள் ஆயிரம் தான் சொன்னாலும் புலிகள் தான் எங்கள் காவல் தெய்வங்கள். புலிகள் தான் தமிழீழம் கேட்டார்கள், புலிகள் பிரிவினைவாதிகள் என்று கூப்பாடு போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று, இனமான உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனும் “தமிழீழம்” தான் எங்கள் இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று ஒருமித்த குரலில் உலகுக்கு ஓங்கி சொல்லிக்கொண்டிருக்கிறான்.

      • 39.1.2
        செந்தில் says:

        தோழர் வித்தகன் அவர்களுக்கு,

        தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே சுமார் முப்பது ஆண்டு காலம் ஈழத்தின் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் அறவழியில் போராட்டம் நடைபெற்று எத்தனையோ தமிழர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். அத்தனை போராட்டங்களையும் சிங்கள பேரினவாதிகளும் அரசியல் தலைவர்களும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கினார்களே தவிர தமிழர்களுக்கு சம உரிமை வழங்க எள்ளளவு கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதன் பிறகுதான் இனியும் இலங்கைத் தீவில் சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒற்றுமையுடனும் சம உரிமையுடனும் வாழ சிங்கள பேரினவாதிகள் விரும்பமாட்டார்கள் என்பதை உணர்ந்த செல்வநாயகம் அவர்கள் தனித் தமிழீழம் ஒன்றே ஒரே தீர்வு என்பதை நோக்கி தன்னுடைய போராட்டத்தின் பாதையை மாற்றினார். இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில் உலகத் தமிழர்கள் மீண்டும் இலங்கைத் தீவில் தங்களது உரிமைகளுக்காக அறவழியில் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் எத்தனை போராட்டங்கள் அறவழியில் நடத்தினாலும் சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள பேரினவாதிகளும் தமிழர்களை ஒடுக்கி ஆள வேண்டும் என்ற தங்கள் நிலைமையில் இருந்து மாறாமல் இருந்தால் அது மீண்டும் ஒரு கிளர்ச்சிக்கு வழி செய்யும் என்பதே நிதர்சனம்.

        தோழர் செந்தில்.

      • 39.1.3
        Tamilnela says:

        எல்லோருக்கும் வணக்கம்.
        நீண்ட நாட்களாக விவாதத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை.
        மீண்டும் வித்தகன் என்ற இந்திய பார்ப்பாண வக்கிர புத்திகொண்டவர் புலிகளை கொச்சைப்படுத்தி எழுதி இருக்கிறார்.தன் இனம் அழிகையில் பதவிபேரம் பேசும் தலமையின் ஆட்சியின் கீழ் வாழும் முதுகெலும்பு இல்லாத கூட்டம் தங்களைப் போல் ஈழத்தமிழனையும் எண்ணியுள்ளது.
        வித்தகன்
        உங்கள் கண் முன்னால் இந்திய அல்லது இலங்கை ராணுவத்தால் உங்களுடைய சகோதரி சீரளிக்கப்பட்டால் உங்களுக்கு எப்படியான உணர்ச்சி வருமோ உங்களுடைய தாய் துன்புறுத்தப்பட்டால் உங்களுக்கு எப்படியான உணர்ச்சி வருமோ உங்களுடைய தந்தை அல்லது உங்களுடைய சகோதரன் உங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டால் உங்களுக்கு எப்படியான உணர்வு வருமோ அது தான் எங்களுக்கும் வந்தது புலிகளுக்கும் வந்தது.

        ‘50 ருபாவுக்காக வாக்குரிமையை விற்பவர்களிடம் உணற்சியை ஈழத்தமிழன் எதிர்பார்த்தது பிழைதான் அன்பரே’

        நான் சொன்னது 100 வீதம் உண்மைதான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அன்பரே. பணத்திற்குப் பின்புதான் தன்மானம் இன உணர்வு உங்களுக்கு அதற்கான உதாரணம் தான் அண்மையில் நடந்த தேர்தல்.
        ஆதிக்க வெறி கொண்ட உங்களை போன்ற வக்கிர புத்தியுள்ள ஒருவருக்கு நாங்கள் அதாவது புலிகள்+ஈழத்தமிழர் தோற்றுப் போன கூட்டமாக இருக்கலாம். நாங்கள் சர்வதேச அனாதைகளாக இருக்கலாம். ஆனால் நாங்கள் யாரையும் நம்பவைத்து கழுத்தறுக்கவும் இல்லை, யாருக்கும் முதுகிலும் குத்தவில்லை,அதிகார வெறிகொண்டு அலையவுமில்லை.எங்கள் மண்ணில் நாங்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழும் காலம் வரும் வரையில் எதிரிகளை இனங்கண்டு துரோகிகளை கண்டறிந்து ஈழத்தமிழராகிய எங்களின் தலைவன் காட்டிய வழியில் எங்கள் விடுதலைப் பயணம் தொடரும்.

        என் அருமைச் சகோதரி ரதி நாங்கள் யாருக்கும் எதிரியுமில்லை துரோகியாவுமில்லை.யாரையும் யாருக்கும் எதிரியாக்கும் எண்ணமும் இல்லை.உங்கள் பாதை வேறாகவும் எங்கள் பாதை வேறாகவும் இருக்கலாம் ஆனால் எங்கள் இலட்சியம் எங்கள் உயிரிலும் மேலான தாயகத்தை மீட்டெடுத்து உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகள் போல் வாழும் எம் மக்களின் கையில் ஒப்படைப்பதே.எங்கள் பயணத்தில் சிலரை இழந்தும், வேறு சிலரை புதிதாக இணைத்தும் எங்கள் பயணத்தை எத்தடை வரினும் உயிர்விலைகொடுத்து கடப்போமென்று ஈழத் தமிழராகிய நாம் உறுதியெடுக்கும் நேரமிது.ஆதிக்க சக்திகள் எமக்குள்ளே அனலை ழூட்டலாம் இது தமிழன் விழித்தௌ வேண்டிய காலமேயன்றி மன்னிப்புக்கேட்க வேண்டிய காலமல்ல.

        தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளாமல் தங்கள் பிழைகளை புலிகள் மேல் சுமத்தி சுய இன்பம் காணும் இந்திய பார்ப்பாண கூட்டத்தால் புலிகள் அழிந்தனர் என்றும் ஈழத் தமிழன் தொலைந்தான் என்றும் கற்பனையில் மட்டுந்தான் சந்தோசப்பட முடியுமம்.

      • 39.1.4
        வித்தகன் says:

        தமிழ் நிலா! மிகவும் தரக் குறைவான மொழியில் ஒரு சாதியின் பெயரை எல்லாம் இழுத்து அசிங்கமான பதிவு ஒன்று செய்திருக்கிறீர்கள். நான் விளக்கி பதில் சொல்ல வேண்டிய தகுதியை இந்த உளறலுக்குத் தரமாட்டேன்.

        உங்கள் பார்வையில் முதுகெலும்பு இல்லாத நாங்கள்தான் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்கு சோறு போடுகிறோம். அவ்வளவு மான ரோசம் உள்ளவர்களாக இருந்தால் நீங்களே அவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய மண்ணில் நுழையாதீர்கள். ஈழத்தமிழர்களால் எங்களுக்கு எந்தக் காலத்திலும் எந்த பிரயோசனமும் இல்லை. பாசத்தால்தான் குரல் கொடுக்கிறோம். பதிலுக்கு திட்டு தவிற வேறு எதுவும் தரமாட்டேனென்கிறீர்கள்.

        நீங்கள் வேறு எப்போதேனும் மற்ற மனிதர்களையும் சமமாக பாவித்து பேசத் தயாராக இருந்தால் ஒழிய உங்களிடம் பேச நான் தயாராக இல்லை. புலிகளின் இந்த முரட்டு புத்திக்கு கிடைத்த தண்டனைதான் போரில் கிடைத்த தோல்வியும் சர்வ தேச அனாதைகள் என்ற தகுதியும்.

        • 39.1.4.1
          வினவு says:

          தமிழ் நிலா,

          புலிகளை விமரிசப்பவர்கள் எல்லாம் சிங்கள இனவெறிக்கு ஆதரவானவர்கள் என்ற தப்பான அணுகுமுறையில் உங்களிடமிருந்து வார்த்தைகள் தரக்குறைவாக வருகின்றன. அடுத்து ஐம்பது ரூபாய்க்கு விலை போனவர்கள் என எல்லா தமிழ்மக்களையும் பழிப்பது மிகவும் மேட்டிமைத்தனம் நிரம்பிய பழிச்சொல். அல்லது யாழ்ப்பாணத்து வேளாளத் திமிர் என்று கூட சொல்ல்லாம். இதே பார்ப்பன அதிகாரிகளைக் கொண்ட இந்திய அரசு புலிகளுக்கு மட்டுமல்ல எல்லா போராளிக்குழுக்களுக்கும் பயிற்சியும் பணமும் கொடுத்த்தே அப்போதே அதை தவறு என நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? ஈழம் என்றாலே பாசிச அடக்குமுறையை ஏவிவிட்ட ஜெயலலிதா வெற்றி பெறவில்லை என்பதற்காக தமிழக மக்களை இழிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதைப்பற்றி வினவில் தனி பதிவே கூடிய விரைவில் வெளியிடுகிறோம். ஈழப் போராட்டம் பெரும் பின்னடைவு கண்டிருக்கும் இந்நேரத்தில் உங்கள் உணர்ச்சியையும் அது வெடிப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த கஷ்டமான காலத்திலும் கூட நாம் விமரிசனங்களை பரிசீலிக்கவில்லை என்றால் இழப்பு யாருக்கு? தமிழ் நிலா, ஈழப் போரட்டம் என்பது பல இலட்சம் மக்களது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதை தனிநபர் விருப்பு வெறுப்பிலிருந்து பேசுவதும் வசைபாடுவதும் சரியா எனப் பரிசீலிக்குமாறு உங்கள் மீது உள்ள தோழமை உணர்வால் கோருகிறோம்.

          வித்தகன்,

          நீங்களும் உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கியதாக எடுத்துக் கொண்டு ஈழ அகதிகளுக்கு நீங்களே சோறு போடுங்கள் என உணர்ச்சிவசப்படுவது சரியாகச் சொன்னால் இதுவும் மேட்டிமைத்தனம்தான். இப்படி தனிநபர் சண்டையாக ஈழப்பிரச்சினையை சுருக்குவது எந்த விதத்தில் சரி? தமிழ் நிலா அவரது வாதங்களை உணர்ச்சி வெள்ளத்தில் போகிற போக்கில் அதன் பொருள் அறியாமல் அல்லது அதைப்பற்றி கவலைப்படாமல் பேசுவதை அதே அலைவரிசையில் எதிர் கொள்வது சரியா? நீங்கள் இன்னும் பொறுமையாகவே அதை அணுகலாமே? அரசியல் ரீதியான விவாதங்களுக்கு எவ்வளவுதான் தனிநபர் பழிப்பு வந்தாலும் நாம் அதை அரசியல் ரீதியாகவே அணுகுவது சரியாக இருக்கும். ஈழப்பிரச்சினை என்பது ஏதோ தமிழ்நிலாவுக்கும், வித்தகனுக்கும் உள்ள பிரச்சினையா என்ன?

          அடுத்து இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாத நண்பர்களுக்கு

          இது ஏதோ இரண்டு மூன்றுபேருக்குள்ள வாதம் போல நீங்கள் படிப்பதை மட்டும் செய்வது தவறு. பலரும் விவாதத்தில் கலந்து கொள்ளும் போதுதான் அதன் ஜனநாயகத்தன்மையை நிலைநாட்ட முடியும். ஒருவேளை நீங்கள் எல்லாரும் இந்த விவாதத்தில் கல்ந்து கொண்டிருந்தால் இந்த பிரச்சனை இப்படி வந்திருக்காது எனத்தோன்றுகிறது. பரிசீலிக்கவும்.

          வினவு

      • 39.1.5
        Tecan says:

        நாய் வாலை நிமிர்த்த முடியாது. தமிழ் நிலா, ரதி போன்ற பைத்தியங்களை திருத்த முடியாது. தெரு நாய்கள் குரைத்தால் நின்று பதில் சொல்ல முடியாது. வித்தகன் நீங்கள் மனிதத் தன்மை கொண்டவர்களுடன் மட்டும் விவாதியுங்கள்.

    • 39.2
      Tecan says:

      11. புலிகள் மட்டும் எந்த தவறும் செய்யாத புனிதர்கள். புலிகள் மட்டுமே மேதாவிகள். புலிகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே தமிழர்கள். இதை ஏற்றுக்கொள்ளாதவன் துரோகி, ராஜபக்ஷேக்கள், கைக்கூலிகள், சிங்களவன்.

      • 39.2.1
        வித்தகன் says:

        செல்வி. ரதி!

        நான் தமிழகத் தேர்தல் குறித்த புலிகளின் விமர்சனம் பற்றி எழுதியதற்கு உங்கள் பதில் இது.

        //அப்படி யாரும் தமிழ்நாட்டு உறவுகளை குற்றம் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. //

        ஒரு சில இடுகைகளுக்கு முன் செல்வி. தமிழ் நிலாவின் பதிவு இது.

        //50 ருபாவுக்காக வாக்குரிமையை விற்பவர்களிடம் உணற்சியை ஈழத்தமிழன் எதிர்பார்த்தது பிழைதான் அன்பரே! //

        புரிகிறதா? தமிழகத் தமிழர்கள் புலிகள் செத்து அழிவதைத் தடுக்காமல் தன் தேவைக்கு வாக்களித்ததற்கு இந்தத் திட்டு. நானாகவே எதையும் இட்டுக் கட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. புலி ஆதரவாளர்களின் உளறல்கள் எல்லாமே எனக்கு 20 வருட பழக்கம் தான். தான் சொல்வதை மாற்றி சொன்னால் தமிழ் துரோகம் என்று வருணிக்கும் வக்கிர புத்தி உடைய கூட்டம் அது என்று எனக்குத் தெரியும்.

        ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ரதி. உங்களது மூளைச்சலவை செய்யப் பட்ட புத்தியால் சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொண்ட எந்த சுதந்திர மனிதனிடமும் வாக்குவாதம் செய்து வெல்ல முடியாது. அதனால்தான் உங்கள் காவல் தெய்வங்கள் துப்பாக்கி, மனித வெடிகுண்டு, கண்ணி வெடி, சயனைடு என்று திரிந்தார்கள்.

        திரு. செந்திலில் பதிவில் இருக்கும் பிதற்றல்களை தாராளமாகப் பாராட்டிக் கொள்ளுங்கள். ஆனால் புலிகளும் அவர்களின் ஆதரவாளார்களும் சர்வதேச அநாதைகள் என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.

        இந்த உலகில் புலிகள் அழிய வேண்டும் என்ற எண்ணம் எல்லாத் திசைகளிலும் பரவி பல நாளாகி விட்டது. அதனால் தான் உங்கள் கூட்டம் தோற்று விட்டது. இனிமேல் அறவழியில்தான் உங்கள் உரிமைகள் கிடைக்கும். புலிகள் தலை தூக்கவே முடியாது. புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை மிரட்டி இனிமேல் காசு பறிக்க முடியாது. பிரபாகரன் பேர் சொல்லிப் பிழைக்க முடியாது. துப்பாக்கி காட்டி அடிமைப் படுத்த முடியாது. புலிகளின் அத்தியாயம் முடிந்து விட்டது. உங்கள் பாதையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

      • 39.2.2
        Rathi says:

        வித்தகன்,

        வழக்கம் போல் மிக கோபமாக எனக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நிலா என்ன மனநிலையில் அப்படி ஒரு கூற்றை சொன்னாரோ எனக்கு தெரியாது. ஓர் ஈழத்தமிழராக அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். தமிழ்நாட்டு உறவுகளை பற்றி அவர் சொன்ன கூற்றுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.

        நிற்க, இப்படி எங்களையும் உங்களையும் எதிரிகளாக்க முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு விலை போக நான் தயாராக இல்லை. தமிழக உறவுகள் பற்றிய என் கருத்துகளை நிறையவே நான் சொல்லியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

        //அதனால் தான் உங்கள் கூட்டம் தோற்று விட்டது//

        என்னங்க இது, கூட்டம் கீட்டம் என்று ஏதேதோ பேசுகிறீர்கள். நாங்களும் மனிதர்கள் தான். எங்கள் தோல்வியில் சந்தோசப்படும் மனிதரல்ல நிங்க‌ள் என்பது எனக்கு தெரியும். கோபத்தில் வார்த்தைகளை கொட்டாதீர்கள். மீண்டும் சந்திப்போம்.

      • 39.2.3
        வித்தகன் says:

        //நிற்க, இப்படி எங்களையும் உங்களையும் எதிரிகளாக்க முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு விலை போக நான் தயாராக இல்லை. //

        தமிழகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் எந்நாளும், யாராலும் பிரிக்க முடியாது! என்னிடம் இருந்து ஈழத்திற்கும், ஈழ மக்களுக்கும் எதிரான கருத்து வரவே வராது.

        ஆனாலும், உங்களைப் போலல்லாமல், ஒரு சிலர் இந்தியத் தமிழர்களை உசுப்பேற்றும் வகையில் பேசுவது ஈழத்திற்கு உதவி செய்வதற்கு தடையாகவும் தலைவலியாகவும் இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

      • 39.2.4
        Tecan says:

        //இப்படி எங்களையும் உங்களையும் எதிரிகளாக்க முயற்சிகள் நடக்கின்றன.// ரதி, பிரபாகரனை குற்றஞ்சாட்டுகிறீர்கள். ராஜீவ் காந்தியை கொலை செய்து தமிழகத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரமாக பிரித்து வைத்த பிரபாகரனை குற்றஞ்சாட்டுகிறீர்கள். நீங்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நின்றால் புலிகளை வெறுக்க வேண்டும். நீங்கள் புலிகளை ஆதரித்தால் ஈழத்தமிழரை வெறுக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

    • 39.3
      வினவு says:

      தோழர் செந்தில்,

      ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டு நிலைமைகள் தேவையாக இருக்கின்றன. ஒன்று புறச்சூழல் அதாவது எதிரிகள், அவர்களுக்குள்ள முரண்பாடுகள், சேர்க்கைகள், சர்வதேச நாடுகளின் அணிசேர்க்கை இவையெல்லாம் நமது அகநிலைக்கு வெளியே நிலவும் புறச்சூழல். மற்றது அகச்சூழல் அதாவது அந்த விடுதலைக்கு போராடும் இயக்கம் அதன் அரசியல் பார்வை, திட்டம், மக்களையும், நண்பர்களையும் திரட்டும் வல்லமை, அதன் இராணுவ தந்திரம் இவையெல்லாம் அகநிலை சக்தி.

      உங்கள் தொகுப்பில் புறநிலையை மட்டும் அதுவும் பல தவறுகளோடு தொகுத்திருக்கிறீர்கள். காங்கிரசு அரசு புலிகள் இயக்கத்தின் மீது தனிப்பட்ட முறையில் கொண்டுள்ள பகையினால் இந்தியா சிங்கள அரசை ஆதரித்த்து என மதிப்பிடுவது அறிவீனம். இந்திய முதலாளிகளின் நலனுக்காக, இந்தியாவின் மேலாதிக்க நலனுக்கா மட்டும்தான் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்த்து. இதை ஏதோ தவறான வெளியுறவுக் கொள்கையாக மட்டும் சித்தரிப்பதன் மூலம் இந்தியாவின் பங்கை அதாவது ஈழத்திற்கு எதிரான அதன் நிலையை குறைத்து மதிப்பிடுவதற்கே வழி செய்யும்.

      அடுத்து அகநிலையாக புலிகளின் இயக்கத்தில் உள்ள துரோகிகளை மட்டும் காரணமாக குறிப்பிடுகிறீர்கள். இந்திய உளவுத் துறை ஆரம்பத்தில் ஆயுதப்பயிற்சி கொடுத்த போது புலிகள் அதை ஏற்றது தவறில்லையா? அதை இந்தியாவின் தவறு என்று மட்டும் சொல்லவது எப்படி சரி? அடுத்து ராஜீவ் காந்தியை தனிப்பட்ட பகையாக கருதி கொலை செய்தது எத்தனை அரசியல் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியது. இந்திய அரசின் வர்க்கத்தன்மையை பார்த்து எதிர்ப்பற்கு பதில் தனிப்பட்ட தலைவர்களான ராஜீவ், சோனியா என எதிர்ப்பதால் மட்டும் பயனில்லை. ஏனெனில் இவர்கள் சென்றால் புதிய தலைவர்கள் அதே வேலையை செய்வார்கள். தற்போது காங்கிரசுக்கு பதில் பா.ஜ.க அரசு வந்தாலும் இந்திய அரசு சிங்கள அரசை ஆதரிக்கவே செய்யும்.

      அடுத்து புலிகள் தங்களைத் தவிர எந்த அமைப்பையும் தமது பகுதிக்குள் செயல்பட அனுமதிக்கவில்லை அல்லது அழித்தார்கள். இதனால் ஈழத்திற்கு போராடக்கூடிய எல்லா சக்திகளையும் ஒட்டு மொத்தமாக அணிதிரட்டுவது இயலாமல் போய் விட்டது. இப்படி அகநிலையாக புலிகளின் பல தவறுகள் ஈழப் போராட்டத்தின் பின்னடைவுக்கு காரணமாக இருக்கிறது. இதை புறநிலை அம்சங்களை மட்டும் வைத்து மதிப்பிடுவதால் உண்மையில் நமது பலவீனத்தை அறியாமல் இருப்பதற்குத்தான் உதவும்.

      நட்புடன்
      வினவு

      • 39.3.1
        செந்தில் says:

        தோழர் வினவு அவர்களுக்கு,

        //இந்திய முதலாளிகளின் நலனுக்காக, இந்தியாவின் மேலாதிக்க நலனுக்கா மட்டும்தான் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்தது.//

        இதைத்தான் நான் உலக நாடுகளின் மேலாதிக்கப் போட்டி என்று குறிப்பிட்டேனே. சீனா மற்றும் இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தை இலங்கையில் நிலைநாட்ட விரும்புகிறது. சீனா இலங்கையில் துறைமுகம் அமைத்து இந்தியப் பெருங்கடலின் போக்குவரத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது. சீனாவின் ஆதிக்கம் இலங்கை பக்கம் திரும்பியதும் இந்தியா முந்திக்கொண்டு இலங்கைக்கு வட்டியில்லா கடன்களை அள்ளிக் கொடுத்தது. (இதைத்தான் நான் தவறான வெளியுறவுக் கொள்கை என்று சொன்னேன்).

        ஈழத் தமிழர்கள் உயிர்களை விட தன்னுடைய ஆதிக்கமே முக்கியம் எனக் கருதி பல உதவிகளை இலங்கைக்கு செய்தது இந்தியா. இதை இலங்கை அமைச்சர்களே நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டனர். போரை நிறுத்தச் சொல்ல இலங்கை சென்றோம் என்று சொல்லிக்கொண்டிருந்த சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் போர் நிறுத்தம் பற்றி பேசவே இல்லை என்று கோதபாய ராஜபக்சே கூறிவிட்டார். இந்தியா நடத்த இருந்த போரைத்தான் இந்தியாவுக்காக நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்சே கூறினான். அதை சிவ்சங்கர் மேனனும் ஒத்துக் கொண்டார்.

        போர் நடந்த ஐந்து மாத காலத்தில் ஒரு தடவை கூட சோனியா ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதுக்கு வருத்தம் தெரிக்கவில்லை. அவர் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசியதே இந்தியத் தேர்தலுக்கு மூன்று நாள் முன்பு சென்னையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்தான். அதுவும் தமிழ்நாட்டில் அக்கூட்டம் நடைபெற்றதால்தான். அந்தக்கூட்டத்தில் கூட போர் நடந்து கொண்டிருந்த போதே போர் நிறுத்தத்தை நாங்கள் செய்துவிட்டோம் என்றார்.

        பா.ஜ.க அரசு வந்தாலும் இந்திய அரசு சிங்கள அரசை ஆதரிக்கவே செய்யும். உண்மைதான். ஆனால் இவ்வளவு ஈழத் தமிழர்களின் உயிர்களையும் துச்சமாகக் கருதி புலிகளை அழித்தே தீரவேண்டும் என்று எண்ணியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். எங்கள் தொப்புள் கோடி உறவுகளுக்காக தமிழக மக்கள் நாங்கள் அமைதி வழியில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் செய்தோம். அதையெல்லாம் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியினர் எப்படியெல்லாம் நாடகங்கள் போட்டு அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினர் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.

        தோழர் செந்தில்.

  40. 40
    Tecan says:

    புலிகளிடம் இல்லாமல் இருந்த மிகப் பெரும் கொள்கை,குணம் என்னவென்றால் சரியோ,பிழையோ தாம் ஒரு தடவை செய்வதை வாழ்நாள் முழுக்க மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துவதாகும்.

    அதாவது, அதைப் பிழை என்று ஒருக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.

    அப்படி ஏற்றுக்கொண்டால், அது மக்கள் தம் மீது வைத்திருக்கும் உணர்ச்சி மிக்க ஆதரவைப் பாதிக்கும், அது பாதிக்கப்படும் போது, புலிகளும் தவறு செய்வார்கள், எனவே மற்ற இயக்கங்களும் ஒரு வகையில் சரியானவை என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    இந்த ஒரே காரணத்திற்காக, இறுதி வரை இராஜீவைக் கொன்றதைக் கூட புலிகள் ஏற்றுக்கொள்ளவி்ல்லை. அதற்கு மாறாக ரணில்-பிரபா ஒப்பந்த காலத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அதைத் “துன்பியல் வரலாறு” என்று வித்தியாசமான சொற் பிரயோகம் மூலம் வர்ணித்தார்கள்.

    தாம் செய்யும் பிழைகளை ஏற்றுக்கொள்வது, சுய விமர்சனம் செய்வது, தம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வது, அவற்றின் மூலம் மக்கள் நலன் சார்ந்த ஒரு போராட்ட அமைப்பாகத் தம்மை மாற்றிக்கொள்வது என்று புலி எப்போதாவது சிந்தித்திருந்தால் இப்படி மண்டை உடைபட்டு மாண்டு போகும் நிலைமை அவர்கள் தலைவருக்கும் வந்திருக்காது, இந்த அளவு அல்லல் படும் நிலைமை மக்களுக்கும் வந்திருக்காது.

    எனவே,செய்த பிழையை ஒத்துக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பழக்கம் என்பது புலிக்கு இல்லவே இல்லாத ஒரு விடயம்.

    • 40.1
      வினவு says:

      tecan,

      நீங்கள் தனிப்பட்ட முறையில் புலிகளால் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம், அதற்காக புலிகளையும் தனிப்பட்ட முறையில் பகையாக கருதி விமரிசிப்பது சரியல்ல. ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் தவறு என்ன பின்னடைவை கொண்டுவந்திருக்கிறது என்ற கோணத்தில் பேசினால் உணர்ச்சிவசப்படாமல் பேசலாம். புலிகளின் தவறுகள் சிங்கள இனவெறி அரசின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திவிடாது. ஈழத்தின் நலனுக்காக புலிகளை மதிப்பிடுவதும், புலிகளை எதிர்த்தே ஆக வேண்டுமென எதிர்ப்பதும் ஒன்றல்ல. விவாதங்கள் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை முன்வைத்து மட்டும் விவாதித்தால் நலம்.வசைச்சொற்கள், பட்டங்கள் முதலியனவை இங்கிருக்கும் நண்பர்கள் மாறி மாறி சூட்டிக்கொள்வதால் யாருக்கும் நன்மையில்லை.

      • 40.1.1
        TSri says:

        //புலிகளின் தவறுகள் சிங்கள இனவெறி அரசின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திவிடாது. //

        புலிகளின் கொடிய ஒடுக்குமுறை தான் இலங்கை அரசின் ஒடுக்குமுறை பரவாயில்லையே என்பதை உணரவைத்தது .தங்களை ஆதரிக்காவிட்டால் தமிழ் துரோகி போன்ற பட்டங்களை மற்றவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தவர்கள் புலி ஆதரவாளர்களே.

  41. 41
    Tecan says:

    செந்தில் அவர்களே, நன்றி நன்றி. நீங்கள் குறிப்பிட்ட நூலில் புலிகள் இலங்கை அரசின் துணைப்படையாக செயற்பட்ட விபரங்கள் உள்ளன. இலங்கை இராணுவத்திடம் ஆயுதம் வாங்கி தமிழின அழிப்பில் ஈடுபட்டதும் அதில் எழுதப்பட்டுள்ளது. //திரு ஹர்கிரத் சிங் அவர்கள் தான் எழுதிய ‘Intervention in Sri Lanka: The IPKF experience retold’//

  42. 42
    Rathi says:

    பாயாசம்,

    முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை. கல்யாணவீடு அல்ல. கருத்து பதிகிறேன் பேர்வழி என்று இனப்படுகொலையை கல்யாணவீடு போல் விமர்சிக்காதீர்கள்.

  43. 43
    Tecan says:

    ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்? கட்டுரையை பதிவிட்டதற்காக புலி ஆதரவாளர்கள் வினவுக்கு “சிங்களவன்” பட்டமளித்திருப்பதாக கேள்விப்படுகிறேன்.

  44. 44
    Tecan says:

    புலி ஆதரவாளர்கள் என்ற இனவெறியர்கள் தமிழ் இனத்திற்கே சாபக்கேடு. சிட்னியில் கடந்தமாதம் சிங்கள இளைஞர்களின் வீட்டை உடைத்துச் சென்று அவர்களைத்தாக்கி அசிட் ஊற்றிய சம்பவம் எல்லோரும் அறிந்ததே. ஊர்வலம் போய்விட்டு புலிக்கொடியோடு காரில் வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தாக்கினார்கள் தமிழ் இளைஞர்களும் திருப்பித் தாக்கினார்கள். அதில் பொலிசார் தலையிட்டு இளைஞர்களை அந்த இடத்திலிருந்து அனுப்பினார்கள்.

    அன்று இரவு இந்த அசிட் ஊற்றிய நிகழ்வு நடந்தது. அதில் சம்பந்தப்பட்டதாக இளையோர் அமைப்பைச்சேர்ந்த கந்தராஜா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று 01.06.2009இல் இவர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். நீதிமன்றம் வரும் போது தலையை தான் போட்டிருந்த மேலங்கியால் மறைத்து தன்னை அடையாளம் காணமுடியாதவாறு மறைத்துக்கொண்டார். இது அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது.

  45. 45
    வித்தகன் says:

    இந்தியாவையும் தமிழர்களையும் பிரித்துப் பார்ப்பதாக கூறிக் கொள்ளும் செல்வி. தமிழ் நிலா விற்கு ஈழத்தமிழர்களையும் புலிகளையும் நான் வேறு வேறாகப் பார்ப்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

    தமிழகத் தமிழர்கள் ஈழத்திற்கு ஆதரவாகவும் மீதமுள்ள இந்தியாவிற்கு அதை பற்றிக் கவலையே இல்லாமல் இருப்பதும் எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் தமிழகத் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் மேல் இருக்கும் அன்பும் புலிகள் மேல் இருக்கும் வெறுப்பும் (அல்லது அன்பில்லாத நிலையும்).

    • 45.1
      Tecan says:

      //இந்தியாவையும் தமிழர்களையும் பிரித்துப் பார்ப்பதாக கூறிக் கொள்ளும் செல்வி. தமிழ் நிலா விற்கு ஈழத்தமிழர்களையும் புலிகளையும் நான் வேறு வேறாகப் பார்ப்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? // இவர்களுக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்திருந்தால் ஈழப்போராட்டம் எப்போதோ வென்றிருக்கும். புலிகளின் தோல்விக்கு தமிழ்நிலா போன்ற மேல் வீடு காலியானவர்களின் ஆதரவு முக்கிய காரணம். மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் இப்படியானவர்களை “மேல் வீடு காலியானவர்கள்” என்று சொல்வார்.

  46. 46
    Tecan says:

    தமிழ் நிலா நீங்கள் புலிகளை நம்பாமல் ஈழத்தமிழரை நம்பியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. உலகம் முழுவதும் வெறுத்து ஒதுக்கிய புலிகளை நீங்களும் ஒதுக்கி இருந்தால் இந்தியா ஈழத்தமிழருக்கு வேண்டிய உதவியை செய்திருக்கலாம். ராஜீவை காந்தியை கொலை செய்ததன் மூலம் இந்தியாவை ஈழத்தமிழரின் எதிரியாக்கியது யார்? நீங்கள் அப்போதே பிரபாகரனுக்கு புத்தி சொல்லியிருந்தால் இப்போது தெருத்தெருவாக ஒப்பாரி வைக்க வேண்டி வந்திருக்காது. இப்போதாவது தவறை உணர்ந்து திருந்துங்கள். நீங்கள் உலகத்தில் எல்லோரையும் குறை சொல்வீர்கள். ஆனால் புலிகளின் தவறுகளை மட்டும் கண்டுகொள்ள மாட்டீர்கள். உடனே துரோகிகள் காரணம் என்று கேட்டு கேட்டு புளித்துப் போன பல்லவியை பாடாதீர்கள். புலித்தலைமையை பாதுகாக்க வன்னி மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்து பலி கொடுக்க சொன்னதும் துரோகிகளா? இறுதிக்காலத்தில் முட்டாள்தனமான முடிவுகளால் ஒட்டு மொத்த புலித் தலைமையும் அழிந்தது. தன்வினை தன்னைச் சுடும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

  47. 47
    Tecan says:

    இந்தத் தனிநாட்டுப் போராட்டமே பிழை. தமிழர் உரிமை என்ற இந்த கோசத்தின் பின்னாலேயே தமிழ் சமூகத்தை அழிக்கும் ஆணிவேரும் இருக்கு. இந்த போலித் தமிழ் தேசியம் வளர்த்துவிட்ட மிருகம் எல்லாரையும் கடித்துக் குதற, கடைசியில் சிங்கள தேசியம் இதை சிம்பிளாய் நசுக்கிப்போட்டு போகும். புலிகள் இயக்கம் தமிழ் சமூகத்துக்குள் வளர்ந்ததே தமிழ் மக்களின் தோல்விதான். அது வெற்றிகண்டு இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தோல்விதான். இன்று அது மற்றெல்லா சக்திகளையும் அழித்து தானும் அழிந்து போனதும் தமிழருக்குத் தோல்விதான். அதனால்தான் தமிழ் சமூகம் பாரியதொரு வெற்றிடத்தை உணருகிறது. இந்த மிகக் கசப்பான உண்மையை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  48. 48
    Rathi says:

    Tecan,

    //நாய் வாலை நிமிர்த்த முடியாது. தமிழ் நிலா, ரதி போன்ற பைத்தியங்களை திருத்த முடியாது. //

    மற்றவர்கள் கருத்துகளுக்கு உங்கள் எதிர்கருத்து இருந்தால் அதை மட்டும் பதியுங்கள். அதை விடுத்து அடுத்தவர்களை பைத்தியம் என்பது அநாகரீகம். யாரும் யாரையும் திருத்துவது இந்த தளத்தின் நோக்கமல்ல என்று நினைக்கிறேன். இது கருத்து களம் மட்டுமே.

    அடுத்து புலிகளை நேசிப்பவர்கள் எல்லாம் மனிதத்தன்மை இல்லாதவர்கள் என்னும் உங்கள் கூற்று ஒப்புடையதல்ல. நீங்கள் புலிகளை வெறுப்பதால், அவர்களை நேசிப்பவர்களை உங்கள் இஷ்டப்படி கண்டதையும் சொல்லி விமர்சிக்காதீர்கள். கருத்துகளை மட்டும் விமர்சியுங்கள்.

    • 48.1
      Tecan says:

      //அடுத்தவர்களை பைத்தியம் என்பது அநாகரீகம்.// அடுத்தவர்களை ராஜபக்ஷேக்கள், சிங்களவன் என்று திட்டுவது என்ன நாகரீகமோ?

      //கருத்துகளை மட்டும் விமர்சியுங்கள்.// சாத்தான் வேதம் ஓதுகின்றது. தனது புலி சார்பு கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை “ராஜபக்சேக்கள்” என்று அவதூறுகளை அள்ளி வீசியவர் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார். மாற்றுக் கருத்தாளரை புலிகள் படுகொலை செய்த போது நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? புலிகளிடம் அடுத்தவர் கருத்துகளை மட்டும் விமர்சிக்கும் படி புத்திமதி சொல்லவில்லை? புலிகளின் தோல்விக்கு நீங்களும் ஒரு காரணம். ஒத்துக் கொள்ளுங்கள். //அடுத்து புலிகளை நேசிப்பவர்கள் எல்லாம் மனிதத்தன்மை இல்லாதவர்கள் என்னும் உங்கள் கூற்று ஒப்புடையதல்ல.// படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதத் தன்மை உள்ளவர்களா? அமிர்தலிங்கம் போன்ற அரசியல்வாதிகலின் படுகொலைகளை நீங்கள் சரி என்று வாதாடி இருக்கிறீர்கள். நீங்கள் கொலையாளிகளுக்காக பரிந்து பேசிய ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்.

      • 48.1.1
        வினவு says:

        Tecan,
        //படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதத் தன்மை உள்ளவர்களா? அமிர்தலிங்கம் போன்ற அரசியல்வாதிகலின் படுகொலைகளை நீங்கள் சரி என்று வாதாடி இருக்கிறீர்கள். நீங்கள் கொலையாளிகளுக்காக பரிந்து பேசிய ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்.//

        எந்த நீதிமன்றத்தில்? ராஜபக்க்ஷேவின் நீதிமன்றத்திலா? ஆத்திரத்தில் எது வேண்டுமானாலும் எழுதுவீர்களா? இப்படி ப்ளாக் மெயில் செய்வது எதற்கு? உங்கள் கருத்திலேயே நிறைய குழப்பம் இருக்கிறது. புலிகளின் அரசியலை இனவாத அரசியல் என்று விமரிசிக்கிறீர்களோ அதே இனவாத அரசியல்தான் அமிரதலிங்கத்தினுடையதும். என்ன அவர் ஆயுதம் தூக்கவில்லை அவ்வளவுதான். மற்றபடி உங்கள கருத்தை பொறுமையாக வைத்து விவாதிப்பதற்கு பதில் இப்படி வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதால் என்ன பயன்? ஐயா இத்தனை ஆண்டு காலம் புலிகள் இவ்வளவு செல்வாக்கோடு இருந்தார்களே அதை உங்களைப் போன்றவர்கள் மாற்ற முடியவில்லையே ஏன்? காரணம் உங்கள் அணுகுமுறையிலேயே நீங்கள் மட்டும்தான் தனியாக கத்துவீர்கள் என்பது அடிநாதமாக உள்ளது. இதை மாற்றாத வரை உங்களால் ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய அரசயலை கொடுக்க முடியுமா என்பது ஐயமே. முதலில் உங்கள் கருத்தை நாலுபேர் ஏற்பதற்கு என்ன செய்ய முடியும் எனப்பாருங்கள், இப்படி எரிந்து விழாதீர்கள். இந்த ப்ளாக் மெயில் புரூடாவை நிறுத்துங்கள். ஒரு வேளை நீங்கள் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்றால் வினவை நிறுத்துங்கள், வினவு தளத்திற்கு வந்து விவாதிக்கும் நண்பர்களின் பெயர்களை சொல்ல வேண்டாம். ராஜீவ் கொலை புலிகள் செய்த மாபெரும் தவறு என்பது வினவின் கருத்துதான். ஆனால் ராஜீவின் மரணத்திற்கு யாரும் அழவேண்டியதில்லை என்பதும் வினவின் கருத்து என்பதால் ராஜீவ் கொலைக்கு ஆதரவாக வினவு பேசுகிறார் என நீங்கள் எந்த நீதி மன்றத்திலும் புகார் செய்யலாம், வழக்கு பதியலாம்.

        வினவு

      • 48.1.2
        Tecan says:

        //எந்த நீதிமன்றத்தில்?// வினவு, கொலைகள் செய்த எல்லோரையும் மன்னித்து விடச் சொல்கிறீர்களா? ராஜபக்ஷவுக்கும் மன்னிப்பு கொடுப்பீர்களோ? மனிதப் படுகொலைகளை செய்த ராஜபக்ஷேக்களையும், பிரபாகரன்களையும் அவர்களின் செயல்களை ஆதரித்த அத்தனை பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னால் தவறா? ஈழத்தமிழர்களுக்கு ராஜபக்ஷேக்களும் குற்றவாளிகள், பிரபாகரன்களும் குற்றவாளிகள் தான். //ஐயா இத்தனை ஆண்டு காலம் புலிகள் இவ்வளவு செல்வாக்கோடு இருந்தார்களே அதை உங்களைப் போன்றவர்கள் மாற்ற முடியவில்லையே ஏன்? // இதிலே என்ன ஆச்சரியம்? இனவாதம் பேசினால் செல்வாக்கோடு இருக்கலாம். புலிகள் மட்டுமல்ல ராஜபக்ஷேவும் செல்வாக்கோடு தான் இருக்கிறார். செல்வாக்கோடு இருப்பவர்கள் செய்வதெல்லாம் சரியாகுமா? எதற்கும் நீங்கள் வன்னியில் இருக்கும் மக்களுடன் பேசிப்பாருங்கள். புலிகளின் செல்வாக்கு (பாஸிச சர்வாதிகாரம்) என்னவென்று அப்போது புரியும்.

      • 48.1.3
        Tecan says:

        //எந்த நீதிமன்றத்தில்? ராஜபக்க்ஷேவின் நீதிமன்றத்திலா?// இல்லை. கனடிய நீதிமன்றத்தில். இது கனடாத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினை. கனடாவில் கொலை செய்வோம் என புலி ஆதரவாளர்கள் தமிழ் மக்களை மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? செய்து விட்டுப் போகட்டுமே, எனக்கென்ன என்று இருக்கப் போகிறீர்களா? இதுவரை எத்தனை அப்பாவி மக்கள் கப்பம் கேட்டு தாக்கப்பட்டார்கள் தெரியுமா? கனடாவில் இருக்கும் பேட்டை ரவுடிகள் பற்றி தெரியுமா? கையிலே பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கி கப்பம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்வதாக பயமுறுத்துகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு ப்ளாக் மெயிலாக தெரியாதே. இந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் நீதிமன்றம் போகக் கூடாதா? சாதாரண தமிழ் மக்களுக்கு நீதி கேட்க உரிமை இல்லையா?

        இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமா? Tamil Canadians and the Human Rights Watch Report http://transcurrents.com/tamiliana/archives/119

        • 48.1.3.1
          வினவு says:

          tecan

          வினவின மின்னஞ்சல் முகவரியில் உடன் தொடர்பு கொள்க.

    • 48.2
      Tecan says:

      //புலிகளை நேசிப்பவர்கள் எல்லாம் மனிதத்தன்மை இல்லாதவர்கள்.// ரதி அவர்களே, இந்த தளத்திலேயே செந்தில் என்ற புலிப்பினாமி புலிகள் செய்த முஸ்லிம் இனப்படுகொலைகளை மறைத்து அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார். இவர் மனிதத்தன்மை கொண்டவரா? பதில் சொல்லுங்கள். காத்தான்குடியில் நடந்தது இனப்படுகொலை. கல்யாணவீடு அல்ல. கருத்து பதிகிறேன் பேர்வழி என்று இனப்படுகொலையை கல்யாணவீடு போல் விமர்சிக்காதீர்கள். புலிகள் செய்த சிங்கள, முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வன்னியில் புலிகளே ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இல்லை என்று மறுக்கும் நீங்களும் ஒரு ஈழத்தமிழரா? மனிதத் தன்மை கொண்ட யாரும் இந்த உண்மைகளை மறைக்க மாட்டார்கள். அம்னெஸ்டி இன்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகிய சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் தேவையான ஆதாரங்களை அடுக்கி வைத்துள்ளன. அவற்றுக்கும் இலங்கை அரசு பணம் கொடுக்கிறது என்று சொன்னால் உங்களைப் பார்த்து எல்லோரும் வாயால் சிரிக்க மாட்டார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகும் புலிகளின் கொலைவெறியை நியாயப்படுத்துபவர்கள் மனிதத் தன்மை கொண்டவர்களா?

      அன்பான தமிழ் மக்களே, இரக்கமற்ற, இதயமற்ற, மனிதத்தன்மை அற்ற ரதி, தமிழ்நிலா, செந்தில் போன்றவர்களிடம் வாதித்ததற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.

  49. 49
    Tecan says:

    பிரபாகரனின் தோல்வி தமிழர்களினது தோல்வியல்ல. தமிழ் இனவாத அரசியலின் தோல்வி என்பதை நாம் இதயசுத்தியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.. இந்த இனவாத அரசியல் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும் என்பது அரசியலில் அரிச்சுவடியைக் கற்றவர்களுக்கே தெரிந்திருக்கும். ஆனால் அது எப்போது எப்படி நிகழும் என்ற புதிர்தான் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள இனவாத சக்திகளினுடைய முடிவும் இதுபோலவே அமையும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிங்கள இனவாதத்தை காரணம் காட்டி தோல்வியுற்ற தமிழ் இனவாத அரசியலுக்கு முண்டு கொடுக்கும் வேலையை செய்யாதிருப்போம். சிங்கள் இனவாதத்ததால் தமிழ் இனவாதம் செழிப்படைந்தது. அதேபோல தமிழ இனவாதத்தால் சிங்கள இனவாதம் செழித்து வளர்ந்தது. இனவாதத்திற்கெதிரான போராட்டம் இனவாதமாக ஒருகாலமும் இருக்கமுடியாது. ஒரு இனவாதம் இன்னொரு இனவாதத்தை வளர்க்குமேயொழிய அழிக்காது. இனவாத அரசியலை முற்றாக நிராகரித்து சகல மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய ஜனநாயகத்தை கட்டியமைப்பதே இப்போது எமக்குள்ள வரலாற்றுக் கடமை.

    • 49.1
      Tamilnela says:

      எல்லோருக்கும் வணக்கம்.

      Tecan
      நான் எழுதிய கருத்துக்கு நீங்கள் எழுதிய முதல் பதிலின் போதே உங்களுக்கு மேல் வீடு காலி என்று மட்டுமில்லாது உங்களுடைய மேல் வீட்டில் கழிமண் தான் நிறைய இருக்கிறது என்று எனக்கு தெரியும்.அதனால் தான் உங்களுடைய கருத்துக்களுக்கு பதில் எழுதி என்னுடையவும் சக தோழர்களினுடையவும் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.

      (ஆசியாவில் ஒரு இஸ்ரவேலாக தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.// அனைவரும் குறித்துக் கொள்ளுங்கள். தமிழ்நிலா தான் யார் என்பதை இனங்காட்டியுள்ளார். அவர் தனது பாஸிச-சியோனிச சுயரூபத்தை காட்டியதற்கு எமது நன்றிகள்.)

      ஈழத்தமிழனைப் பொறுத்த வரையில் இன்றைய சூழ்நிலையில் எம்மை சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றன.இதை மனதில் கொண்டு ஆற அமர இருந்து யோசித்துப் பாருங்கள் என்னுடைய இந்த கருத்து உங்களுக்கு விளங்கும்.உங்களுடைய புலி எதிர்ப்பும் அதற்குள் ஒழிந்திருக்கும் இழப்பின் வேதனையும் எனக்கு விளங்குகிறது.ஆனால் தனிமனித இழப்புக்களை கருத்தில் கொண்டு ஓரு இனத்தின் விடுதலைக்காக தங்களையே அர்ப்பணித்த ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகத்தை கொச்சைப் படுத்தாரீர்கள்.இங்கே பலர் பல கருத்துக்ககோடு உள்ளார்கள்.10 20 வருடங்களுக்கு முன்பே ஏதோ ஒரு காரணத்துக்காக நாட்டை விட்டு வெளியேறிய பொழுது நடந்தவைகள் மட்டுமே அவர்களின் கண்ணில் தெரியும் சிலவேளைகளில் இவர்களுக்கு புலிகளால் இழப்புக்கள் ஏற்பட்டுக்கூட இருக்கலாம்.இன்னும் சிலபேர் அண்டைநாட்டில் இருந்து வரும் செய்திகளின் அடிப்படையில் ஆய்வுகளை செய்யலாம்.ஆனால் சிலமாதங்கள் முன்னர் வரை ஈழமண்ணிலே வாழ்ந்தவர்களுக்குத் தான் தெரியும் இழப்பின் வலியும் உண்மையான சுதந்திரத்தின் தேவையும்.

      (இந்தியாவையும் தமிழர்களையும் பிரித்துப் பார்ப்பதாக கூறிக் கொள்ளும் செல்வி. தமிழ் நிலா விற்கு ஈழத்தமிழர்களையும் புலிகளையும் நான் வேறு வேறாகப் பார்ப்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? // இவர்களுக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்திருந்தால் ஈழப்போராட்டம் எப்போதோ வென்றிருக்கும்.)

      தமிழர்களிடம் இருந்து தமிழர்களுக்காக தோன்றி அவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் புலிகள்.
      மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவாகி குடுமப அரசியல் என்னும் வட்டத்துள் சுருங்கி மக்களின் பணத்தில் தம்மை மட்டும் வளர்ப்பவர்கள் அரசியல் வாதிகள். இதனால் தான் மக்களையும் இந்தியாவையும் நாம் பிரித்தே பார்க்கிறோம் என்று சொன்னேன்.

      (பிரபாகரனின் தோல்வி தமிழர்களினது தோல்வியல்ல. தமிழ் இனவாத அரசியலின் தோல்வி என்பதை நாம் இதயசுத்தியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்..)

      இன்றைய புலிகள் இல்லாத சூழ்நிலையில் ஈழத்தமிழர்ன் எதிர்காலமே இலங்கையிவ் கேள்விக்குறியாய் உள்ளது.தமிழருக்கான அரசியல் உரிமைகள் இலங்கை அரசினால் ஒரு போதும் வளங்கப்பட மாட்டாது என்பது மிக அண்மைய அரசின் அறிவிப்புக்களால் தெட்டத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.அரசாங்கத்தை ஆதரித்துப் போவோர் எவராலும் தமிழருக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது.எந்த வித பேரம் பேசும் சக்தியோ அல்லது மக்களி;ன் ஆதரவோ அவர்களுக்கு இல்லை.அரசாங்கத்துடன் எதிர்த்து நின்று தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் எந்தவொரு கட்சியும் இலங்கையில் இல்லை.இலங்கை அரசை மீறி இருக்கவும் முடியாது.இந்தியாவும் தன் தனி மனித விருப்பு வெறுப்புக்களால் புலிகளை தோற்கடித்துள்ளதே அன்றி தமிழரின் மேல் கொண்ட அக்கறையால் அல்ல.எந்தவொரு சந்தற்பத்திலும் இந்தியாவால் ஈழத் தமிழர் பிரச்சனையில் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியவே முடியாது.இனிவரும் காலங்களில் இலங்கை மீதான இந்தியாவின் பிடி என்பது தளர்ந்து கொண்டு போவதை காணலாம்.
      காலம் செல்லச் செல்ல அழியப்போவது நாங்களும் எங்களின் உடன் பிறப்புக்களுமே.இதை )ர)P விளங்கிக் பொள்ளுங்கள். புலிகள் செய்தது 100 வீதம் சரி என்று நான் சொல்லவில்லை.ஆனால் எப்போதுமே தமிழர்களின் பேரம் பேசும் சக்தி புலிகளே. இனிவரும் காலங்களிலும் புலிகள் இல்லாவிட்டாலும் புலிகளால் முன்மொழியப்பட்டவர்களே ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்கியாக 70 வீதத்திற்கும் கூடிய ஈழத் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
      எனவே லிகள் உங்களுடைய கோபங்களையும் பழிவாங்கும் உணர்சிகளையும் விட்டுவிட்டு உங்களுடைய உறவுகள் தாயதத்திலே சுதந்திர காற்றை சுவாசிப்பதற்குரிய வழியமைக்க புறப்பட்டு வாருங்கள்.இனிவரும் காலம் ஆயுதங்களற்ற காலம் அரசியல் ராஜதந்திரங்களுடன் கூடிய காலம் நடந்தவற்றை மறந்து மன்னித்து எமக்குள்ளே உள்ள வேற்றுமைகளை களைந்து எம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய போராட்ட களத்தில் தமிழராய் ஒன்றிணைவோம்.

      அன்புடன்
      தமிழ்நிலா

      • 49.1.1
        வித்தகன் says:

        //தமிழர்களிடம் இருந்து தமிழர்களுக்காக தோன்றி அவர்களுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் புலிகள்.
        மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவாகி குடுமப அரசியல் என்னும் வட்டத்துள் சுருங்கி மக்களின் பணத்தில் தம்மை மட்டும் வளர்ப்பவர்கள் அரசியல் வாதிகள். இதனால் தான் மக்களையும் இந்தியாவையும் நாம் பிரித்தே பார்க்கிறோம் என்று சொன்னேன்.//

        ஒப்புக் கொள்ள மாட்டேன். மாற்றுக் கருத்து உள்ளவர்களையெல்லாம் துரோகிப் பட்டம் கட்டி அழித்த முரட்டுக் கூட்டம்தான் புலிகள். தமிழ் பேசும் முஸ்லீம்களை விரட்டியடித்த ஃபாஸிஸ்டுகள் மக்களுக்கானவர்கள் என்பது நகைப்புக்கிடமானது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வீரச்சாவு பற்றி வகுப்பெடுத்த பிரபாகரன் ஏன் சயனைடு கடித்து சாகவில்லை? தனக்கொரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று வாழ்ந்து அழிந்து மண்ணோடு மண்ணாகப் போன கூட்டம்தானே புலித்தலைமை!

        இந்தியாவில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவரையும் எதிர்த்து நான் கூட கட்சி ஆரம்பிக்க முடியும். ஊழலோ, வாரிசு அரசியலோ இந்தியாவில் யார் ஆள்வது என்பதை முடிவு செய்வது மக்களின் வாக்குகள்தான். முரடர்களின் துப்ப்பாக்கிகள் அல்ல.

        இதுவரை எந்தக் காலத்திலும் இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களிடம் எந்தவொரு உதவியும் கேட்காததே அவர்களை விட நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எனவே உங்களைப் பற்றிய உயர்வு மனப் பான்மையை மறந்து விட்டு எங்களையும் இழுத்துவிட்டு வன் கொடுமை செய்யாமல் உங்கள் குறைகளைக் களைந்து திருந்தி வாழுங்கள். அதை விட்ட சிறப்பான யோசனை: உங்களைப் புலிகள் என்று மட்டுமே அடையாளப் படுத்திக் கொள்ளுங்கள். ஈழத்தமிழர்கள் என்று சொல்லாதீர்கள். ஈழச் சகோதரர்களுடன் நாங்கள் உறவு வைத்திருக்க உங்களால் உள்ள தடைகள் அப்போதுதான் அழியும்.

      • 49.1.2
        Tecan says:

        தமிழ்நிலா நீங்கள் ஈழத்தமிழரை வெறுக்கும் புலி அனுதாபியாக இருக்கலாம், அதற்காக ஈழத்தமிழரை நேசிப்பவர்களை மேல்வீட்டில் களிமண் உள்ளவர்கள் என்று திட்டுவது அநாகரீகமானது. மற்றவர்கள் கருத்துகளுக்கு உங்கள் எதிர்கருத்து இருந்தால் அதை மட்டும் பதியுங்கள்.

  50. 50
    செந்தில் says:

    தோழர் வித்தகன் அவர்களுக்கு,

    வணக்கம்.

    //இந்தியாவில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவரையும் எதிர்த்து நான் கூட கட்சி ஆரம்பிக்க முடியும். ஊழலோ, வாரிசு அரசியலோ இந்தியாவில் யார் ஆள்வது என்பதை முடிவு செய்வது மக்களின் வாக்குகள்தான். முரடர்களின் துப்ப்பாக்கிகள் அல்ல.//

    இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை நினைத்துப் பார்த்திருந்தால் நீங்கள் இந்தக் கருத்துக்களை கூறியிருக்கவே மாட்டீர்கள்.

    தோழமையுடன்,

    செந்தில்.

  51. 51
    Tecan says:

    நான் கூறிய கருத்துகள் எவர் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன். யாரையும் ப்ளாக் மெயில் செய்வது எனது நோக்கமல்ல. அதற்காக வருந்துகிறேன்.
    புலி அனுதாபிகள் நாகரீகமாக நடந்து கொள்ளுமிடத்து அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை அள்ளிக் கொட்டினால், அதன் விளைவை அவர்களும் அனுபவிக்க நேரிடும்.

    கொசுறு செய்தி ஒன்று. புலம்பெயர் நாடுகளில் புலி ஆதரவாளர்களை அவர்களை மேய்த்த பொறுப்பாளர்களே (குறுநில மன்னர்கள்) பொலிசிற்கு காட்டிக் கொடுக்கிறார்கள். நீதி மன்றத்தில் எதிராக சாட்சி சொல்கிறார்கள். புலிகள் இயக்க தலைவர் பொட்டம்மான் கூட இலங்கை இராணுவத்திற்கு புலி விசுவாசிகளை காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஐயோ பாவம் இந்த தளத்தில் வரும் அப்பாவி புலி ஆதரவாளர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

  52. 52
    செந்தில் says:

    சிங்கள ஆட்சியாளர்களும் இந்திய அதிகாரிகளும் இராணுவ ரீதியாக தமிழ் மக்களை வென்று அரசியல் ரீதியாக சிங்களர்கள் எழுச்சி பெற்று ஒரு மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்வது போன்ற ஒரு மயக்கத்தைக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் மக்களின் வேதனைகளும் விம்மல்களும் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

    எந்த மக்களுக்காக நாம் தீர்வு குறித்துப் பேச முனைகிறோமோ அவர்கள் இன்று சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு இனமாக இருக்கும் போது அவர்களின் குரல் நெரிக்கப்பட்டிருக்கும் சூழலில் தீர்வு குறித்துப் பேசுவதே இன்னொரு வன்முறைதான். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும், இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டாலும் மட்டுமே அம்மக்கள் நம்மீது நம்பிக்கை கொள்வார்கள்.

    ஆகவே நாம் இப்போது உடனடி செய்ய வேண்டியது, நம் மக்களை முகாம்களில் இருந்து அவர்களின் இடங்களுக்கு அனுப்ப வேண்டும், நிவாரணம் என்ற பெயரில் நிலத்தை மக்களிடம் இருந்து பிடுங்காதே, என்கிற குரல்களை உயர்த்துவதோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்கு எதிராக போராட முன்வரவேண்டும். இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுப்பப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம்.

    அதுவரை ஒரு யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது. இலங்கையில் இனி சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை.

    தோழமையுடன்,

    செந்தில்.

    • 52.1
      வித்தகன் says:

      //இலங்கையில் இனி சிங்களர்களோடு தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை. //

      அப்படியென்றால் இத்தனை நாள் இருந்ததாக சொல்கிறீர்களா?

      முன்பு தமிழ் பேசும் இந்துக்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இருந்தனவா? இருந்தால் ஏன் முஸ்லீம்களை விரட்டி விட்டீர்கள்?

      செந்தில்… புலி ஆதரவாளர்கள் பேசாமல் இருந்தாலே போதும். தானாக எல்லாம் நடக்கும்.

      60 வயதுக்கு மேற்பட்டவர்களை முகாம்களிலிருந்து வெளியேற்றியவுடன் 74 வயதுக்காரர் ஒருவர் சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார். புலிகளின் சொத்துக் கணக்கு விபரம் அவருக்குத் தெரியும் என்று இப்போது தகவல்கள் வருகின்றன. இனிமேல் ராஜபக்க்ஷே முகாம்களிலிருந்து யாரை விடுவிக்கவும் பத்து முறை யோசிப்பார்.
      புரிகிறதா? புலிகளால் சாதாரணா மக்கள் படும்ம் அவதி என்னவென்று!

      தோற்ற கட்சிக்கு பேரம் பேசும் தகுதி கிடையாது. விட்டு விடுங்கள்.

      மற்ற தலைவர்களை அழித்து புலிகளுக்கு மாற்றில்லாத நிலையை உருவாக்கிய உங்களால் தான் இப்போது அரசியல் தலைமைக்கு இலங்கையில் ஆள் பற்றாக்குறை. இனி வரப்போகும் அடுத்த தமிழ்த் தலைவராவது மனிதாபிமானமும் ராஜ தந்திரமும் உலக அறிவும் உள்ள பெருமகனாக இருக்கட்டும். தயவு செய்து நீங்களெல்லாம் ஒதுங்கி விடுங்கள்.

      • 52.1.1
        செந்தில் says:

        தமிழகத்தில் வெளிவந்த செய்தி இது:

        தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அப்படிச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் சத்யாமூர்த்தி பவனில் ஒரு அறையில் முடங்கிக்கிடக்கிறது. சென்னையிலுள்ள செஞ்சிலுவை சங்கத்தில் கேட்டால் அது கட்சிக்காரர்களின் பொறுப்பு, எங்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்க அதிகாரங்கள் கிடையாது என்பது போல் சமாளிக்கிறார்கள்.

        இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் தான் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே அவர்களை ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்’ என்று சித்தரித்து அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

        புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாரும் ஈழத் தமிழர்களுக்கு உதவக்கூடாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. தமிழகத்தில் புலிகளுக்கு எதிராக பேசுபவர்கள் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்றோ, புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றோ தயவுசெய்து எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்.

        முகாமிற்குள் இருக்கும் மக்கள் மறுபடியும் அவர்கள் இடத்தில் குடியமர்த்தப்பட இன்னும் ஆறு மாத காலங்கள் ஆகும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இது தமிழர்களை மனரீதியாக ஒடுக்கும் நடவடிக்கை. தமிழர்களுக்கு உரிமை வழங்குவது பற்றி டிசம்பர் மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் ராஜபக்சே (தேர்தல் நேரம் என்பதால் சிங்கள இனவாதிகளை பகைத்துக்கொள்ள ராஜபக்சே விரும்பவில்லை).

        எனவே, ஈழத் தமிழர்களுக்கு நாங்கள் தான் உதவுவோம் மற்றவர்கள் யாரும் உதவக்கூடாது ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு இது தருணமல்ல.

        சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பொறியாளர்கள் ஒன்றிணைந்து ’save-tamils’ எனும் குழுமத்தை ஆரம்பித்து பேரணிகள், உண்ணவிரதப் போராட்டங்கள், ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறோம். ஈழத் தமிழ்மக்கள் பாதுகாப்பிற்கு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய உங்களுடைய கருத்துக்களை எங்கள் குழுமத்தில் இணைந்து தெரியப்படுத்துங்கள்.

        எங்கள் குழுமத்தின் முகவரிகள்:

        இணையதளம்: save-tamils.blogspot.com

        மின்னஞ்சல்: savetamil@gmail.com

        குழுமத்தின் மின்னஞ்சல்: save-tamils@googlegroups.com

        தோழமையுடன்,

        செந்தில்.

      • 52.1.2
        செந்தில் says:

        //சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பொறியாளர்கள் ஒன்றிணைந்து ’save-tamils’ எனும் குழுமத்தை ஆரம்பித்து பேரணிகள், உண்ணவிரதப் போராட்டங்கள், ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறோம்.//

        உண்ணாவிரதப் போராட்டம் என்பதற்கு பதில் உண்ணவிரதப் போராட்டம் என்று பதித்துவிட்டேன். எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

        தோழமையுடன்,

        செந்தில்.

      • 52.1.3
        வித்தகன் says:

        திரு. செந்தில்.

        //புலிகளுக்கு எதிராக பேசுபவர்கள் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்றோ, புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றோ தயவுசெய்து எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்.//

        புலிகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் தமிழ் உணர்வாளர்கள். அவர்களைக் கேள்வி கேட்பவர்கள் தமிழ் துரோகிகள் என்று வரையறுத்து நூற்றுக்கணக்கான கொலைகள் நடந்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை. எனவே, உங்கள் மனம் கோணும் படி பேச விருப்பம் இல்லாவிட்டாலும், என் உண்மை நிலைப்பாடு அதுதான். புலி ஆதரவாளர்கள் ஈழத்தமிழர்களின் நிம்மதிக்கான தடைக்கற்களே. ஒரே மாதத்தில் இருபது வருட நிகழ்வுகள் எல்லாவற்றையும் மறக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

        //ஈழத் தமிழர்களுக்கு நாங்கள் தான் உதவுவோம் மற்றவர்கள் யாரும் உதவக்கூடாது ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு இது தருணமல்ல.//

        யார் வரலாம் வரக் கூடாது என்பதை சர்வதேச சமூகம் முடிவு செய்கிறது. புலிகளுடன் கை கோர்த்துக்கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது என்றே நினைக்கிறேன். புலிகள் இல்லாமலே உதவிகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தவன் நான். அதனால் எனக்கு இந்தக் குழப்பம் இல்லை.

      • 52.1.4
        Tecan says:

        ஐரோப்பிய புலி ஆதரவாளர்கள் அனுப்பிய வணங்கா மண் கப்பல் இறுதியில் இலங்கை அரசிடம் வணங்கிய மண்ணாக மண்டியிட்டது. புலிப்பினாமி செந்திலின் ’save-tamils’ எனும் குழுமமும் இறுதியில் இலங்கை அரசுக்கு வாலை ஆட்டும். பகிரங்கமாக புலிகளுக்காக வக்காலத்து வாங்கும் இவர்களின் உதவி ஈழத்தமிழர்களுக்கு போய்ச் சேராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஈழத்தமிழர் பெயரைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களின் நோக்கம்.

      • 52.1.5
        Tamilnela says:

        ஒப்புக் கொள்ள மாட்டேன். மாற்றுக் கருத்து உள்ளவர்களையெல்லாம் துரோகிப் பட்டம் கட்டி அழித்த முரட்டுக் கூட்டம்தான் புலிகள். ’

        இந்திய ராணுவம் எங்கள் மண்ணில் செய்த கொடுமைகளையே நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் புலிகள் மீது பழி போடுபவர் இதை மட்டும் ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்.

        ‘மாற்றுக் கருத்து உள்ளவர்களையெல்லாம் ‘
        இதற்கான வாழும் சாட்சி கருணா.இதற்கு மேல் நான் சொல்லத் வேவை இல்லை.அதற்காக புலிகள் செய்த அனைத்துக் கொலைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

        ‘இதுவரை எந்தக் காலத்திலும் இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களிடம் எந்தவொரு உதவியும் கேட்காததே அவர்களை விட நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்

        ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இந்நியாவை எங்கள் தொப்புள் கொடி உறவு நாடு என்று நினைத்தது உண்மைதான். ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் சோறு போடுவதும் உண்மைதான்.சோறு போட்டது மட்டுமா செய்தீர்கள்?சோறு போடுவது மாதிரி போட்டு மீண்டும் நிமிர முடியாது என்று நினைத்து முதுகிலும் அல்லவா குத்திவிட்டீர்கள்.

    • 52.2
      Tecan says:

      //செந்தில்… புலி ஆதரவாளர்கள் பேசாமல் இருந்தாலே போதும். தானாக எல்லாம் நடக்கும்.// Super. 100% correct. ஈழத்தமிழருக்கு அழிவை மட்டுமே தேடித்தந்த புலி ஆதரவாளர்கள் இன்று வரை தங்கள் செயலுக்காக வருந்தவில்லை. மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவர்கள் முதலில் தங்களை சுய விமர்சனம் செய்து விட்டு வர வேண்டும்.

  53. 53
    செந்தில் says:

    Massacre of Tamil Muslims in Kathankudi Mosque.

    இந்தக் கட்டுரையை படியுங்கள்:

    http://www.lankanewspapers.com/news/2008/5/27986_space.html

    • 53.1
      Tecan says:

      செந்தில் நீங்கள் மற்றவர்கள் எல்லோரையும் மடையர்கள் என்று நினைப்பதை முதலில் கைவிட வேண்டும். புலிகளுக்காக பொய் பரப்புரைகளை செய்யும் புலிப் பினாமி அமைப்பான அமெரிக்க தமிழ் சங்கம் தயாரித்த புரூடா கட்டுரையை படிக்க சொல்கிறீர்கள். (Source : http://www.sangam.org) புலிகளுக்கு பணமும், ஆயுதங்களும் சேர்த்ததற்காக அமெரிக்க தமிழ் சங்க நிர்வாகிகளை FBI கைது செய்து விசாரித்த செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா? அல்லது தெரிந்தும் மறைக்கிறீர்களா?

      புலிகள் செய்த இனப்படுகொலைகளை மறைக்கும் ஈனப்பிறவிகள் இருப்பது தமிழ் இனத்திற்கே வெட்கம். காத்தான்குடி இனப்படுகொலைகளை புலிகள் செய்ததற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் எப்போதோ சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பித்து விட்டார்கள். இத்தனை வருடம் கழித்து அமெரிக்க தமிழ் சங்கம் ஒரு புரூடா கட்டுரையை எழுத வேண்டிய அவசியம் என்ன? இராணுவம் செய்த படுகொலைகளை மறைத்து புலிகள செய்ததாக கட்டுரை எழுதுபவர்களுக்கும், இவர்களுக்கும் (அமெரிக்க தமிழ் சங்கம்) இடையில் என்ன வித்தியாசம்? புலிப்பினாமிகளுக்கும் ராஜபக்ஷேக்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? நீங்கள் எல்லோரும் செய்வது ஒன்று தான். நீங்கள் பேசுவதும் ஒரே பாஷை தான். இது மற்றவர்களுக்கு புரியாது என நினைக்கிறீர்கள். புலி ஆதரவாளர்களான நீங்கள் ராஜபக்ஷவை விட வித்தியாசமானவர் என்று இதுவரை தமிழர்கள் காதில் பூச் சுற்றினீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அடிக்கடி உங்கள் வேஷத்தை கலைத்து சுயரூபத்தை காட்டுவதற்கு நன்றி.

    • 53.2
      Tecan says:

      செந்தில், காத்தான்குடியில் நடந்தது இனப்படுகொலை. கல்யாணவீடு அல்ல. கருத்து பதிகிறேன் பேர்வழி என்று இனப்படுகொலையை கல்யாணவீடு போல் விமர்சிக்காதீர்கள்.

      On August 3, around 30 heavily armed Tamil rebels crossed a lagoon and entered the town of Kattankudi. At around 8.10PM, they entered the Meer Jumma, Husseinia, Majid-Jul-Noor and Fowzie Mosques, where hundreds of devotees were attending Friday Isha prayers. The LTTE cadres were disguised as Muslims to avoid suspicion.[1]

      As the civilians knelt in prayer,[3] the Tamil rebels attacked them, spraying automatic fire and hurling hand grenades at the worshipers. Most of the victims were shot in the back or side.[1][3] The rebels fled as Sri Lankan soldiers, notified of the ongoing massacre, arrived at the scene.[3]

      Initial report put the death toll at around 100, but as many of the injured who were rushed to hospital succumbed to their injuries, the final death toll rose to over 147.[1]

      Many amongst the dead were children
      [edit] Eye witness accounts
      Harrowing eye witness accounts appeared in the international press over the next few days. Speaking to the New York Times, Mohammed Ibrahim, a 40-year-old businessman said,

      “I was kneeling down and praying when the rebels started shooting. The firing went on for 15 minutes. I escaped without being hit and found myself among bodies all over the place.”[3]

      Mohammed Arif, a 17-year-old student who also survived the massacre told the New York Times

      “Before I escaped from a side door and scaled a wall, I saw a Tiger rebel put a gun into the mouth of a small Muslim boy and pull the trigger.”[3] http://en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre

  54. 54
    Tecan says:

    இனவெறிப் புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு பற்றிய விபரங்கள்.

    It appears in retrospect that the LTTE was more harsh on Jaffna Muslims than the others. They were given an incredibly short deadline to leave Jaffna. This may have been due to the LTTE deciding that Jaffna be “cleansed” of Muslims by November. Comparatively the tigers came “last” to the Jaffna Muslims. The LTTE D – Day for them was October 30th.

    It was about 11.30 am in the morning that the LTTE vehicles with loudspeakers began plying the roads and lanes of the Jaffna Muslim residential areas. A terse announcement was repeated incessantly that representatives of each Muslim family should assemble at the Jinnah grounds of Osmania College by twelve noon. Armed tigers began patrolling the streets. Some began a house to house anouncement in the thickly populated lanes and by – lanes.

    The people abandoned whatever they were doing and hurried to the grounds. At 12. 30 pm a senior tiger leader Aanchaneyar addressed them. Aanchaneyar now goes by another name Ilamparithy. Yes! the man was none other than present Jaffna commissar Ilamparithy then in charge of Jaffna town sector politics. Aamnchaneyar or Ilamparithy had a brief message.The LTTE high command for reasons of security (Paathukaappu) had decided that all Muslims should leave Jaffna within two hours. Failure to do so meant punishment. No further explanation was given.

    When people started to question him Ilamparithy lost his cool. He barked loudly that the Muslims should simply follow orders or face consequences. He then fired his gun several times in the air. A few of his bodyguards followed suit. The message was clear. The people thought initially that the army was going to invade Jaffna and that the LTTE was asking everyone to leave. Only belatedly did they realise that only the Muslims were ordered to leave.

    With more and more armed tigers coming into the area the perturbed Muslims began packing. Initially they were not told of any restrictions on the things they could carry. So people packed clothes, valuables, jewels and money. Buses, vans and lorries were made available for transport by the tigers. Many Muslims made their private transport arrangements too.

    The Muslims streaming out of their homes were now given a fresh order. They were asked to queue up at the “Ainthumuchanthi” junction. As the hapless people lined up they were in for a terrible shock. Male and female cadres of the LTTE began demanding that the Muslim people hand over all their money, belongings and jewellery to them. Each person would be allowed only 150 rupes each. Each person would be allowed only one set of clothes.

    http://www.uthayam.net/articles/oct30_2005html_2.htm

    இனப்படுகொலைகளை ஆதரிக்கும் புலி ஆதரவாளர்களுக்கு (ஆதாரம் செந்தில் இட்ட பின்னூட்டங்கள்) இனப்படுகொலை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

  55. 55
    Tecan says:

    நண்பர்களே ஒரு நிமிஷம் சிந்தியுங்கள். ரதி, தமிழ்நிலா, செந்தில் போன்றவர்கள் தங்களை புலிப் பினாமிகளாக பகிரங்கமாக இனங்காட்டியவர்கள். ஈழத்தமிழ் மக்களாலும், சர்வதேச நாடுகளாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களின் அணுகுமுறையிலேயே இவர்கள் மட்டும்தான் தனியாக கத்துவார்கள் என்பது அடிநாதமாக உள்ளது. இவர்களால் ஈழத்தமிழருக்கு உதவி செய்ய முடியுமா? இவர்களிடமிருந்து உதவி வருகிறதென்றால் இலங்கை அரசு அனுமதிக்குமா? இவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள சர்வதேச நாடுகள் முன்வருமா? வணங்கா மண் கப்பலுக்கு என்ன நடந்தது? சர்வதேச நாடுகளால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்ட புலி ஆதரவாளர்களால் ஒரு துரும்பைத் தன்னிலும் எடுத்துப் போட முடியாது. இவர்களை வெட்டிப் பேச்சுகளை நம்பி மோசம் போகாதீர்கள்.

    • 55.1
      Tamilnela says:

      Tecan நீர் மேல் வீட்டில் ஒன்றும் இல்லாதவர் என்றுதான் நினைத்தேன்.ஆனால் நீரே படம் போட்டுக் காட்டிவிட்டீர் நீர் யார் என்று!நிச்சயமாக நீர் ஒரு தமிழனாக அதுவும் ஈழத் தமிழனாக இருக்க முடியாது.நீர் தமிழர்களை பிரதிநிதுவப்படுத்தி கதைக்கவில்லை.முஸ்லீம் மக்களை பற்றியே கதைக்கிறீர்.நீர் ஓர் தமிழ் அன்னையின் வயிற்றில் பிறந்திருந்தால் உமது இனம் அழிகையில் தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல ஒரு இன உணர்ச்சி உம்மிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் நீரும் ‘நாங்கள் இடம்பெயர்ந்த ஈழத்தமிழருக்கு சோறு போடுகிறோம்’ என்று தன் முகத்திரையை தானாகவே கிழித்தவரும் ‘தோற்ற கட்சிக்கு பேரம் பேசும் தகுதி கிடையாது’ என்ற தன்னுடைய வக்கிர புத்தியை காட்டி நிற்பவர் தோற்றவர்கள் தமிழர் என்பதையும் தோற்கடிக்க வைத்தவர்கள் தாங்கள் தான் என்பதையும் மறைதது ஏதோ தாங்கள் தான் ஈழத் தமிழரின் உண்மையான ஆதரவாளர்கள் என்றும் தம்மை எதிர்த்து கருத்துக் கூறுபவர்கள் ஓட்டுமொத்த தமிழக மக்களையுமே எதிர்க்கிறார்கள் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி எலும்புத்துண்டுக்கு மாறடிக’கும் வேலையை இங்கே செவ்வனே செய்கிறவர்கள் போலத்தான் நீரும் என்பது தெளிவாகவே உமது கருத்துக்களில் தெரிகிறது.

      ‘//படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதத் தன்மை உள்ளவர்களா? அமிர்தலிங்கம் போன்ற அரசியல்வாதிகலின் படுகொலைகளை நீங்கள் சரி என்று வாதாடி இருக்கிறீர்கள். நீங்கள் கொலையாளிகளுக்காக பரிந்து பேசிய ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்.//’

      இதே காட்டிக் கொடுப்புக்களைத் தான் உம்முடைய முன்னோர்கள் அதுதான் நீர் சொல்லும் புலிகளால் தண்டனை வழங்கபட்டவர்களும் செய்தார்கள்.இல்லை என்றால் இது போன்ற காட்டிக் கொடுப்புக்களால் பாரிய பின்னடைவுகளை விடுதலைப் போராட்டம் ஆரம்பத்திலே சந்தித்திருக்கும்.புலிகளால் கொல்லப்பட்டவர்களை பற்றி தொண்டை கிழிய கத்தும் நீர் கொல்லப்பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை.

      ‘எதற்கும் நீங்கள் வன்னியில் இருக்கும் மக்களுடன் பேசிப்பாருங்கள். புலிகளின் செல்வாக்கு (பாஸிச சர்வாதிகாரம்) என்னவென்று அப்போது புரியும்.’

      உண்மைதான் இன்று வன்னியில் அடைபட்டுக் கிடக்கும் மக்களிடம் கேட்டுபாருங்கள்.வருடங்கள் ஆகவில்லை சிங்களத்தினதும் அதனோடு சேர்ந்த இந்தியாவினதும் வன் கொடுமைகளை சொல்லி கதறி அழத் தொடங்கிவிட்டார்கள்.இப்போது வன்னியில் அடைபட்டுத் தவிக்கும் என் உறவுகளின் வார்த்தைகள் இவைகள் ‘தவறு செய்துவிட்டோம் கடைசி வரைக்கும் பொடியளோட நின்று கடைசியில் நாங்களும் மானத்தோட செத்துப் போயிருக்கலாம்’இதுதான் எம் மக்களின் இன்றைய வார்த்தைகள்.மானம் சுதந்திரம் என்னவென்று தெரியாத உமக்கு இவைகள் எங்கே புரியப் போகிறது.

      இன்று புலிகள் இல்லை புலிகள் செய்தவைகள் பற்றி கத்தும் நீர் அவர்கள் செய்த தவறுகள் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் உம்மால் இந்த மக்களின் சுதந்திர வாழ்வை மீட்டுக் கொடுக்க முடியுமா?

      • 55.1.1
        Tecan says:

        ரதி மற்றும் வினவு அவர்களே, இங்கே தமிழ் நிலாவின் அநாகரீகமான வசவுகள் எல்லாம் உங்களுக்கு நாகரீகமாக தெரிகின்றதா? இவர்களுக்கு மட்டும் எப்படியும் திட்ட சுதந்திரம் கொடுப்பீர்களா?

      • 55.1.2
        Tecan says:

        இங்கே தமிழ் நிலா என்ற இனவெறியர் வார்த்தைக்கு வார்த்தை இனத்துவேசத்தை கொட்டுகிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? தமிழ் நிலா போன்ற இனத் துவேஷிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமா? இனவாதத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் அடக்குகின்றீர்கள்.

      • 55.1.3
        Tecan says:

        தமிழ் நிலா போன்ற இனத்துவேஷிகளை தண்டிப்பது நீதியின் கடமை. அதற்குப் பெயர் காட்டிக் கொடுப்பல்ல. கிரிமினல்களும் தமிழ் நிலா போலவே தங்கள் செயலை நியாயப்படுத்துகின்றனர்.

  56. 56
    Tecan says:

    தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை.

  57. 57
    Tecan says:

    உண்மைகளையறியும் வாய்ப்பை புலிகள் உங்களுக்கு வழங்கியிருந்தால் தமிழர்களின் போராட்டம் ஒரு நியாயமான முடிவை அடைந்திருக்கும். அத்தோடு புலிகளும் அழிந்திருக்கமாட்டார்கள். ஏனைய இயக்கத்தவர்களையும், மாற்றுக்கருத்துள்ளவர்களையும், மற்றும் தமிழ் புத்தி ஜீவிகளையும் கொன்று தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நாசமாக்கியது புலிகள். அந்தப்புலிகளை அழித்தது உங்களைப்போன்ற புலம்பெயர் புலியாதரவாளர்கள்.

  58. 58
    வெளிச்சத்தில் பேசுவோம் says:

    1985ல் யாழ்ப்பாணம், புலோலி கிழக்கில், சந்தாதோட்டம் என்ற கிராமத்தில் நளவர் சமுகத்தை சேர்ந்த மகேந்திரண்ணை என்று ஒருவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். தொழில் ரைக்டர் ஓடுவது மணற்காட்டுக் கடற்கரையிலும், மண்கும்பி மேடுகளிலும் மண்தோண்டி எடுத்து விற்பனை செய்து வந்தார். கடலரிப்பை தடுப்பதற்காக கடற்கரை மண்மேட்டு கும்பிகளிலிருந்து யாரும் மண்ணள்ளக்கூடாது என புலிகள் தடை போட்டு விட்டனர். மகேந்திரண்ணையின் வயிற்றில் அடிவிழுந்தது. சில மாதங்கள் செல்ல புலிகளே அந்தமண் வியாபாரத்தைக் குத்தகைக்கு எடுத்தாற்போல் செய்யத்தொடங்கிவிட்டனர். தங்கம் விற்கும் விலைக்கு மண் விற்றனர். வீடுகட்ட வெளிக்கிட்டவர்களும், வீடு கட்டிப் பாதியில் விட்டவர்களும், இரகசியமாகவும் வெளிப்படையாகவும் புலிகளைத் திட்ட வெளிக்கிட்டனர். தொழில் துறையற்றுப் போன மகேந்திரண்ணை புலிகளை ரோட்டில் நின்று வெளிப்படையாகவே திட்டத் தொடங்கினார். மாலையில் தண்ணி போட்டுவிட்டு கோபக்காரர்களையும், புலிகளையும் அவனே இவனே என எல்லோரையும் ரோட்டில் நின்று திட்டத்தொடங்கினார். “எடேய் மண் மண் எண்டு சொல்லுற புனாமக்களே என்ர வயித்தில மண்ணள்ளிப் போட்டுட்டியளே! என்னை மண்ணள்ள விடாமல் செய்த நீங்கள் எப்பிடியடா மண்ணை மீட்கப் போறியள். அதையும் நான் பாக்கத்தான் போறன்.’’ இதிலிருந்துதான் புலிகளின் மண்மீட்பு யுத்தத்தின் தொடக்கமும் அழிவும் தொடங்குகின்றது.
    மகேந்திரண்ணையின் சாபத்தோடும் வீடுகள்கட்டி பாதியில் விட்டவர்களின் சாபத்தோடும் புலிகளின் அழிவு அரசியல் தொடங்குகின்றது. திட்டுதல், திட்டுவார், திட்டினார், திட்டிக்கொண்டேயிருப்பார் என்ற தமிழ்ச் சொற்களை, ஒரு ஜனநாயக சூழலுக்காக இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் நாங்கள், இதை விமர்சனம் செய்தல் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது புலிகளையும் சேர்த்து விமர்சனம் செய்தார். அடுத்த நாள் புலிகளின் ஏரியா பொறுப்பாளரான வெள்ளாம் பெடியன், ஒரு நளப்புலிப்பெடியன், ஒரு வண்ணாம் புலிப் பெடியன் மூன்று பேரும் வந்து, “என்ன மகேந்திரத்தார் கனக்கக் கதைக்கிறீராம்?’’ எனக்கேட்டுட்டு அந்தாளை சுட்டுப்போட்டு போட்டாங்கள். அடுத்தடுத்த நாள் புலோலி கிராமக் கோட்டுச் சந்தியிலை வைச்சு அந்த மூன்று புலிகளையும் ஆமிகாரர் சுட்டுப் போட்டாங்கள். அதற்கு அடுத்த நாள் உத்திராவத்தையிலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாiயில் படிப்பிக்கும் தமிழ் வாத்தியார், கணேசமூர்த்தி வாத்தியார் சமயபாடம் பிள்ளையளுக்குப் படிப்பித்துக் கொண்டிந்தார். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று படிப்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரைக்டர் மகேந்திரண்ணையின் விடயத்தில் கடவுள் அடுத்த நாளே காட்டிவிட்டார் பிள்ளைகளே பார்த்தீhகளா?. கொன்றுவிட்டார் என்ற தமிழ்பதத்தைக் கூட அவர் பாவிக்கவில்லை, மாறாக “கடவுள் காட்டி விட்டார்’’ என்று நாசூக்காக தனது கடவுள் நம்பிக்கையை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தினார். அடுத்தநாள் மாலை ஏழு மணியளவில் கணேசமூர்த்;தி வாத்தியார் பிள்ளைக்கு சாப்பாடு தீத்திக்கொண்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடவுள் காட்டிவிட்டார் என்றதற்காக புலிகள் வந்து வாத்தியாரைம் சுட்டுப் போட்டு போட்டாங்கள்.

    நான் நினைக்கிறேன் கல்விசார் அல்லது அக்கடமிக்கல் லெவல்ல நடத்தப்பட்ட புலிகளின் முதலாவது கொலை இதுதான். அதன் நீட்சியாக விமலேஸ்வரன்;, இராஜினி திரணகம, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், தலைமையாசிரியர்கள் ஆனந்தாராசா கார்த்திகேசு இன்னும் திட்டியவர்கள், திட்டாதவர்கள், எதிர்த்து கேள்வி கேட்டவர்கள், கோபத்தில் முறைத்துப் பார்த்தவர்கள், அழுதவர்கள், மன்றாடிக் கெஞ்சிக் கேட்வர்களென எல்லோரும் வரைமுறையில்லாமல் புலிகளால் சுட்டு வீசப்பட்டனர். இசுலாமிய சமூகம் யாழ்பாணத்தை விட்டு துரத்தப்படடனர். கிழக்குமாகாணத் தமிழர்கள் கருணாவின் உடைவுக்கு முன்னமே யாழ் மைய அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டனர். குழந்தைகள் ஆயுத அரசியலில் வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்டனர். சிங்களக் கிராமங்களில் அப்பாவிச் சனங்களை வெட்டிப் போட்டனர். பள்ளி வாசலில் போய்ச் சுட்டனர். போர் நடந்தது, மண்மீட்பு யுத்தம் நடந்தது. பின் சமாதானம் செய்தனர். பின்பு யுத்தம் செய்தனர். அரசுடன் பேச்சுவார்த்தை செய்தனர். போர் தொடர்ந்தது. 26 வருடங்களாக மண் மீட்புப் போர் நடந்தது. மக்கள் போராட்டம் மக்களுக்கான போராட்டம் என்று அந்த மக்களையே தங்களைப் பாதுகாக்கும் மண்மூடைகளாகவும் தடுப்புச் சுவர்களுமாக்கினார். மக்கள் போராட்டம் மண் கவ்வியது.

    பருத்தித்துறை முனையிலிருந்து பொத்துவில் வரைக்கும் தமிழீழ வரைபடம் கீறிய தமிழ்த் தேசிய அரசியல் போராட்டம்; கடைசியில் முன்நூறு சதுர மீற்றர் மண் பரப்புக்குள் சரணடைந்தது. சீனா இந்தியா பௌத்த சிங்கள அரசுகளின் யுத்த வியாபாரத்திலும், அரசியற் சூதாட்டத்திலும், புலிகளின் அரசியலற்ற ஆயுத அரசியலாலும். மண் மீட்புப் போராட்டம் வன்னி பெருநிலப்பரப்பில் மண் கவ்வியது.
    மற்றப் பக்கத்தில் புலிகளால் அகதிகளாக்கப்பட்ட இசுலாமிய மக்களின் கண்ணீரும், தமிழ் தேசிய அரசியலில் இருந்து துரத்தப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளும், ரைக்டர் மகேந்திரண்ணையின் சாபமும், கணேசமூர்த்தி வாத்தியாரின் பரிதவித்த ஆன்மாவும் புலிகளின் மண் மீட்புப் போராட்டத்தையும் தமிழ்த் தேசிய அரசியலையும் குழிதோண்டிப் புதைத்தன.

  59. 59
    செந்தில் says:

    வணக்கம், இன்று ‘Times Online’ இல் தாயகம் தொடர்பாக வந்துள்ள ஓர் கட்டுரையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களில் சுமார் 1,400 பேர் ஒவ்வொரு கிழமையும் மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது சிறீலங்கா அரசின் கொடுங்கோல் ஆட்சியில் தினமும் சுமார் 200 பேர் மரணம் அடைகின்றார்கள்.

    Link: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6676792.ece

  60. 60
    செந்தில் says:

    தோழர்களுக்கு வணக்கம்,

    ஈழப் போராட்டத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் இலங்கைத் தீவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் அங்கு தேயிலை தோட்ட வேலைக்கு தமிழகத்தில் இருந்து அவர்களால் அழைத்து வரப்பட்ட தமிழர்களில் இருந்து அது ஆரம்பமாகிறது (அதற்கு முன்பு ஒட்டுமொத்த இலங்கை தீவும் ‘ஈழம்’ என்று அழைக்கப்பட்டதையும், அக்காலத்தில் தமிழ் மன்னர்கள் தான் அங்கு ஆட்சி செய்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்).

    ஆனால் இன்று ஈழப் போராட்டம் பற்றி பேச ஆரம்பித்தாலே ஒரு சிலர் புலிகளை திட்டி மட்டுமே பேசத் தொடங்குகிறார்கள். அவர்கள் பேசுவதெல்லாம் அவர்கள் சொல்லும் தகவல்கள், செய்திகள் மட்டும் தான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்றே வாதாடுகிறார்கள். கேட்டால் புலிகள் செய்ததற்கு அவர்களிடம் ஆதாரம் இருக்கிறது இவர்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று மட்டுமே கூறுகிறார்கள். அதற்கு மறுத்து ஆதாரங்கள் காட்டினால் அது புலிப்பினாமி வெளியிடும் தகவல்கள், தெரு நாய்கள் கதைக்கிறார்கள், பணம் சம்பாதிப்பதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி மறுக்கிறார்கள். இனத்தை விற்று பணம் சம்பாதிக்கும் நிலைமை எந்தத் தமிழனுக்கும் இல்லை. அப்படி செய்கிறார்களே என்றால் நிச்சயமாக அவர்கள் உணர்வுள்ள தமிழச்சியின் வயிற்றில் பிறந்திருக்க மாட்டார்கள்.

    அதற்காக புலி எதிர்ப்பாளர்கள் எல்லாம் ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்பது அர்த்தமல்ல. மனிதாபிமானம் உள்ள உணர்வுள்ள ஒவ்வொருவரும் ஈழத் தமிழர்கள் பால் அக்கறை கொண்டு அவர்களுக்காக படுபடக்கூடியவர்கள் தான் (உதாரணமாக தோழர் திரு.வித்தகன்). ஆனால் அதே மக்கள் ஈழத்தில் ராஜீவ்காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய ராணுவமும் ‘ரா’வும் இணைந்து குறைந்தது சுமார் 6500 பேரை படுகொலை செய்தும் அதை மறுக்கும் பொழுதுதான் அவர்கள் உண்மையிலேயே மனிதாபிமானம் உள்ளவர்களா, ஈழத் தமிழர்களின் நலன் மேல் அக்கறை கொண்டவர்களா போன்ற சந்தேகங்கள் எழுகிறது. ஒருவேளை அத்தனை உயிர்களை விடவும் அவர்கள் நேசிக்கும் ராஜீவ்வின் உயிர் அவர்களுக்கு பெரிது போலும். பொதுவாக இச்சிந்தனை கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை கொண்டு இருந்தாலும் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள் (இலங்கை பிரிந்து விடக்கூடதென்று). தோழர் வித்தகன் அவர்கள் மன்னிக்க வேண்டும் – உங்களை குறிப்பிட்டு இதைச் சொல்லவில்லை.

    ஆனால் Tecan கூறியது – “ஐரோப்பிய புலி ஆதரவாளர்கள் அனுப்பிய வணங்கா மண் கப்பல் இறுதியில் இலங்கை அரசிடம் வணங்கிய மண்ணாக மண்டியிட்டது. புலிப்பினாமி செந்திலின் ’save-tamils’ எனும் குழுமமும் இறுதியில் இலங்கை அரசுக்கு வாலை ஆட்டும்”. இப்படிப்பட்ட கருத்தை உதிர்ப்பவர்கள் எப்படி ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லுவது? இப்படிக் கூறிக் கொண்டு இருப்பவர்கள் கருத்தாடல் செய்வதில் மட்டுமே சுய இன்பம் காண்பவர்கள். வெளியில் இறங்கி செயலாற்ற மறுப்பவர்கள்.

    ஒரு சில புலி ஆதரவாளர்களும் புலிகள் செய்ததும் தவறு என்று கூறுகிறார்களே. ஆனால் புலிகளை வெறுப்பவர்கள், புலிகளால் ‘களை’ எடுக்கப்பட்டவர்கள் (உதாரணமாக அமிர்தலிங்கம், ராஜீவ்காந்தி) செய்ததும் தவறு என்று ஒப்புக்குக்கூட கூற மறுக்கிறார்கள். அப்படி ஒப்புக்கொண்டால் அவர்களின் இந்த நிலைமைக்கு அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த வினையின் எதிர்வினை என்பதை அவர்கள் உணர்வார்கள். அப்படியென்றால் புலிகள் பொது மக்களை கொன்றதும் சரியா என்று நிச்சயம் கேள்வி எழும். அப்படிக் கேட்பவர்கள் அதை உறுதி செய்வதற்கு முன்பு விடுதலைப் புலிகள் காலத்தில் செயல்பட்ட பிற போராளிக் குழுக்கள், சிங்கள இனவாதிகளுக்கு விலைபோன போராளிக் குழுக்கள், சிங்கள இனவாதிகளின் ஆயுதக் குழுக்கள், இலங்கை ராணுவம் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் மற்றும் அவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    பொதுவாக இலங்கையில் குண்டுவெடிப்பு, படுகொலைகள் நடந்தால் முதலில் குற்றம் சாட்டப்படுவது புலிகள் இயக்கம் மீது மட்டும் தான் (புலிகள் உடை அணிந்து சிங்கள ராணுவம் நிகழ்த்திய ஏராளமான படுகொலைகளை புலிகள் தான் செய்தார்கள் என நம்பச் செய்யப்பட்டது). புலிகள் இயக்கம் செய்யும் மாபெரும் பிழை, அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு மட்டும் சொல்லிவிட்டு அக்குற்றச்சாட்டுகளை தவறு என்று நிரூபிக்காமல் விட்டுவிடுவது. இதை கூறினால் உடனே நான் புலிகள் செய்த படுகொலைகளை மறைக்கிறேன், மற்றவர்கள் மீது பழி போடுகிறேன் என்று கதைப்பார்கள்.

    நான் புலிகளைப் பற்றி பரப்புரை செய்பவன் அல்ல. மேலும் விடுதலைப் போராட்டத்தில் தனது இன்னுயிர்களையும் துறந்த அவர்களின் தியாக உணர்வினை மதிப்பவன். இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவில்லை. முதலில் முகாமில் உள்ள மக்களை வெகு விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், போர் குற்றங்களுக்காக ராஜபக்சே, பொன்சேகா, கோதபாய ராஜபக்சே ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பன போன்ற மனுக்களை பிற நாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் (மின்னஞ்சல் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும்).

    தோழமையுடன்,

    செந்தில்.

    • 60.1
      Tecan says:

      //(அதற்கு முன்பு ஒட்டுமொத்த இலங்கை தீவும் ‘ஈழம்’ என்று அழைக்கப்பட்டதையும், அக்காலத்தில் தமிழ் மன்னர்கள் தான் அங்கு ஆட்சி செய்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்).//

      புலிகள் முழு இலங்கைத் தீவையும் கைப்பற்ற நினைத்தார்கள் என்று ராஜபக்ஷே சொன்னதை செந்தில் சரித்திர ஆதாரங்களுடன் உறுதி செய்கிறார். தான் ஒரு குட்டி ராஜபக்ஷே என்று இனங்காட்டியுள்ளார். ராஜபக்ஷேவின் நெருங்கிய ஆலோசகர் செந்தில் என்பது இதுவரை எமக்கு தெரியாமல் இருந்தது. அவருக்கு எமது நன்றிகள்.

      Video: Prabhakaran wanted the whole country – President Rajapakse

      http://transcurrents.com/tc/2009/05/video_prabhakaran_wanted_the_w.html

  61. 61
    செந்தில் says:

    கொழும்புச் செய்தியாளர் திரு.மயூரன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி:

    தமிழர் தாயகத்தில் பௌத்த தலங்களை அமைக்கு நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மிக வேகமாக மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் பல பௌத்த கோவில்கள் கட்டப்படும் வேலைத்திட்டங்கள் துரிதமாக நடைபெற்று வருவதாக, சிறீலங்காவின் மதவிவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

    Link: http://www.pathivu.com/news/2646/68//d,art_full.aspx

    • 61.1
      Tecan says:

      செந்தில் மீண்டும் புலிப்பினாமிகள் நடத்தும் பதிவு என்ற இணையத்தளத்தில் வந்த இனவெறியை தூண்டும் பரப்புரையை செய்தியாக தருகிறார்.

    • 61.2
      Tecan says:

      எச்சரிக்கை: இனவெறியை தூண்டும் வதந்திகளை செந்தில் போன்ற விஷமிகள் பரப்பி வருகின்றனர். பெளத்த தலங்கள் என்று திரிபுபடுத்தி வெளியிட்ட செய்தியின் மூலவடிவம்.

      * Sri Lanka to restore destroyed religious centers in the North

      Wed, Jul 8, 2009, 06:20 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.

      July 08, Colombo: Sri Lanka’s Ministry of Religious Affairs has taken measures to reconstruct all the religious centers in the North destroyed by the LTTE in the past few decades.

      Deputy Minister of Religious Affairs Pandu Bandaranayaka said that his Ministry has already begun to collect the details of those destroyed religious centers in the North.

      The Ministry has instructed the Government Agents and District Secretaries in North to collect those details and directed them to the Ministry, he added.

      The Minister said his Ministry plans to restore every religious center including Buddhist temples, Christian churches, Hindu kovils and mosques and provide all the facilities to them.

      http://www.colombopage.com/archive_091/Jul1247057427RA.html

  62. 62
    செந்தில் says:

    இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்.

    ஈழப் போராட்டத்தின் பின்னடைவும் பேரழிவும் பற்றி இத்தளத்தில் நாம் போதுமான அளவு கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். சில இடங்களில் எனக்கு தெரு நாய்கள், இனவெறியன், இனத்துரோகி, இரக்கமற்றவன் போன்ற பட்டங்கள் கிடைத்தன.

    அதில் எனக்கு வருத்தமில்லை. ஏனென்றால் பொதுவாக இப்படி பேசுபவர்கள் அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்; ஒருவரின் கருத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள்; தனக்கு கிடைக்கும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை, யாருக்கும் கிடைக்காத அறிய தகவல்கள் என்று எண்ணுபவர்கள். அதனால் அவர்களின் பேச்சுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

    ஈழப் போராட்டத்தின் இந்தப் பின்னடைவிற்கும் பேரழிவிற்கும் அடிப்படை இரண்டு விடயங்கள் தான்:

    (1) செப்டம்பர் 11, 2001 ற்குப் பிறகு விடுதலை போராட்ட இயக்கங்களைப் பற்றி உலக நாடுகளின் அணுகுமுறை. அத்தாக்குதலுக்குப் பிறகு ஆயுத இயக்கங்களை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டமை. அமெரிக்காவால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ எனும் வார்த்தை.

    (2) உலக நாடுகளின் விடுதலை போராட்ட வரலாற்றில் அந்நாட்டின் ராணுவத்தை விட பலமான முப்படைகளையும் அமைத்து, தனி நீதிமன்றம், மருத்துவமனை, அரசியற்துறை, நிர்வாகம் என தன் மக்களுக்கென தனி அரசாங்கம் அமைத்து செயல்பட்ட ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த நிலையில் இப்போராட்டத்தை அங்கீகரித்தால் அதுவே மற்ற நாடுகளின் போராட்ட இயக்கங்களுக்கும் ஒரு முன் உதாரணமாகிவிடும் என்றும் அது தன் நாட்டின் வணிகப் பெருக்கத்தை பாதிக்கும் என்றும் கருதி அப்போராட்டத்தை நசுக்கியே ஆக வேண்டும் என்று உலக நாடுகள் காட்டிய வேகம் (இப்போரில் ['போர்' என்ற பெயரில் இனப்படுகொலை] 20 நாடுகள் உதவின என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகோல்லாகம இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்).

    மற்றவர்கள் பார்வைக்கும் மனநிலைக்கும் எது எப்படியோ, நீதி நேர்மையற்ற மானுட நலனில் அக்கறை இல்லாத வணிக மோகமும் அணு ஆயுத பலமும் நிறைந்த இவ்வுலகில் ஈழப் போராட்டத்தின் தற்போதைய அழிவிற்கு இவ்விரண்டும் தான் முக்கிய காரணம் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

    தோழர் திரு.வித்தகன் அவர்களே உங்கள் பணிகளை ஈழத் தமிழர்களுக்காக கடைசி வரை தொடருங்கள்.

    தாய் தமிழகத்து உணர்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தின் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களை அவர்களின் விருப்பத்தையும் மீறி இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதைத் தடுப்பதற்கான முயற்சியில் உணர்வாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் தீவிரம் காட்ட வேண்டும்.

    மீண்டும் மற்றொரு விவாதத்தில் சிந்திப்போம்.

    ‘தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்’.

    தோழமையுடன்,

    செந்தில்குமார்,

    சைதாப்பேட்டை, சென்னை.

    • 62.1
      Tecan says:

      //‘தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்’.// புலிகள் எப்போதிருந்து தமிழர்கள் ஆனார்கள்????????? தமிழர் தலைவர் மேதகு செந்தில்குமார் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  63. RV says:

    வினவு,

    26/11 அன்று இறந்தவர்களை – ஹிந்துக்களை மட்டும் அல்ல, முஸ்லிம்களை, கிருஸ்துவர்களை – கேவலப்படுத்தும் உங்கள் மோசமான பதிலை கிழி கிழி என்று கிழிக்கலாம்தான். ஆனால் நான் இந்த பதிவை இனி மேலும் திசை திருப்ப விரும்பவில்லை.

    உங்களிடம் இந்த ஜாதி வெறியும் மத வெறியும் அடங்காத வரையில் நீங்கள் உங்கள் முயற்சியில் எந்நாளும் வெற்றி பெறப்போவதில்லை.

  64. ali bai says:

    கோவப்படாம அவரது பதிலுக்கு பதில் சொல்லுங்க….

  65. இந்து என்னும் அடிமை(திருடன்) says:

    நான் பல நாட்களுக்கு முன்னர் படித்த -இதே கருத்தாக்கத்தில் எழுதப்பட்ட – “இந்து என்று ஒரு மதமே இல்லை “ என்ற இந்தப் பதிவையும் படியுங்கள்.

    http://arivili.blogspot.com/2008/10/blog-post_4904.html

  66. MamboNo8 says:

    ஆர்விக்கு கோபம் கண்ணை மறைக்கிறது. இந்தா பிடி சாபம் என துர்வாசராய் கிளம்பிவிட்டார், வினவு சூதானமாய் இருங்கள் :-)

  67. murugan says:

    Mr.RV
    I dont understand who is favor to Cast and religion you or vinavu ? from vinavus article i understood that he is against of Cast and religion, but from your comment it seems that you are favoring to cast and religion..i think you have to change your mind set first before giving your comments here, then it seems that you dont have anywork rather just writing some nonsense comments … didnot you know that cast and religion is the only reason that dravidian f*d up from this braminisham all over the history and still its going on…. , didnot you aware about hinusim is the biggest terrorism in india ….come on man, anybody who can think little bit who would accept these points…the tamil idotic people who migrated to all over the world still follows the f*g caste system you know this…they wont change until they die…….

  68. Tamilnela says:

    வணக்கம் வினவு மற்றும் அனைவருக்கும்

    ‘எமது உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்ட மக்களையும் மாவீரர்களையும் நாம் எவ்வாறு மதிக்கின்றோமோ அவ்வாறே தமிழகத் தமிழர்களாகிய உங்களையும் நாங்கள் மதிக்கின்றோம்.இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து தேவை இல்லை.அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழால் ஒன்றிணைகின்றோம்.’

    இது நான் முந்தைய பதிவு ஒன்றில் எழுதியது.எந்தவொரு ஈழத் தமிழனினதும் மனத்தில் இருப்பது இதுதான்.தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு என்பது தொப்புள் கொடி உறவு போன்றது.எமக்காக அவர்கள் செய்த தியாகங்கள் இழப்புக்களை நாம் அறியாதவர்களல்லர்.ஆனால் இந்த மக்களின் உணர்சியின் மேல் சுயலாபம் தேடுவோர் யார்?இந்த மக்கள் சக்திக்கு அணை போடுபவர்கள் யார்?தமிழக அரசின் ஒடுக்குமுறையை தாண்டி இந்த மக்களால் ஏதாவது செய்யமுடியுமா?இன்றைய தமிழக முதல்வர் யாரால் வழிநடத்தப் படுகிறார் என்பதும் தமிழக மக்கள் யாரால் தவறான தகவல்களை வழங்கி வழிநடத்தப் படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.ஈழத்தமிழர் விடயத்தில் நான் இந்தியாவையும் தழிழக அரசையும் தமிழக மக்களையும் பிரித்தே பார்க்கிறேன்.தமிழக மக்களிடம் ஈழத் தமிழர் பால் ஏற்படும் இண உணர்வால் தொடர் போராட்டங்கள் எற்பட்டு அதனால் தமிழக மானில அரசியலில் மாற்றம் வரும் இதனால் இந்திய மத்திய அரசியலில் நிச்சயமான ஈழத்தமிழர் தொடர்பான மாற்றம் வரும் என்றே எண்ணினோம்.ஆனால் நடந்தது என்ன? தமிழக முதல்வர் எவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஒடுக்கினார் அவர் அவ்வாறு செய்ததன் பின்னணியில் யார் இயங்கினார்கள் என்பது யாவரும் அறிந்ததே. தமிழ் உணர்வால் உந்தப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிகள் மேல் எந்தச் சட்டம் ஏவப்பட்டது? நாங்கள் இந்தியாவை நம்பவில்லை.தமிழக மக்களையே நம்பினோம்.இப்போதும் நம்புகின்றோம்.எங்களுக்கும் அவர்களுக்குமான உணர்வு பிரிக்கப்படமுடியாதது.பிரிக்க நினைப்பவர்களின் மன வெளிப்பாடு தான்
    ‘நாங்கள்தான் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்கு சோறு போடுகிறோம். அவ்வளவு மான ரோசம் உள்ளவர்களாக இருந்தால் நீங்களே அவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய மண்ணில் நுழையாதீர்கள். ஈழத்தமிழர்களால் எங்களுக்கு எந்தக் காலத்திலும் எந்த பிரயோசனமும் இல்லை’

    ‘.புலிகள் செய்தது 100 வீதம் சரி என்று நான் சொல்லவில்லை.அவர்களும் சாதாரண மனிதர்களே. விடுதலை இயக்கங்கள் தோன்றிய நாள் முதலே துரோகங்களும் ஆரம்பித்து விட்டன.என்றுமே கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றது புலிகள் மட்டும் தான்.இந்தியா என்றைக்குமே தமிழரின் பிரச்சனை தீரவேண்டும் என்று நினைத்து செயற்படவில்லை.மாறாக தவறான கொள்கைகளையே இந்தியா அன்றும் கொண்டிருந்தது இன்றும் கொண்டிருக்கிறது. கிழற்சியாளர்களை உருவாக்கி இலங்கையில் ஓர் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி அதன் முலமாக இலங்கை அரசு வேறு நாடுகள் பக்கம் சாய்வதை தடுப்பதே இந்தியாவின் நோக்கம்.இதை முழுமையாக விளங்கிக் கொண்டது பிரபாகரனும் அவருடன் கூடஇருந்தவர்கள் மட்டுமே’
    இது சில பதிவுகளுக்கு முன் நான் எழுதியது.அன்றும் சரி இன்றும் சரி இந்தியாவையும் தமிழக மக்களையும் நாம் சரியாகவே புரிந்துகொண்டுள்ளோம்.
    இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக புலிகளையும் ஏனைய இயக்கங்களையும் பயன்படுத்திக் கொண்டது.இதையே புலிகளும் தங்களின் ஆயுத மற்றும் பயிற்சி தேவைகளுக்தாக பயன்படுத்திக் கொண்டனரே தவிர இந்தியா தொடர்பான தெளிவு இருந்தது.

    ஈழத் தமிழர்களாகிய நாங்கள் 1987-1991 காலப் பகுதியிலும் 2000-2009 வரையான காலப் பகுதியிலும் படித்த பட்டறிவை கொண்டு ஆசியாவில் ஒரு இஸ்ரவேலாக தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.இது காலத்தின் தேவை.

  69. Tecan says:

    //ஆசியாவில் ஒரு இஸ்ரவேலாக தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.// அனைவரும் குறித்துக் கொள்ளுங்கள். தமிழ்நிலா தான் யார் என்பதை இனங்காட்டியுள்ளார். அவர் தனது பாஸிச-சியோனிச சுயரூபத்தை காட்டியதற்கு எமது நன்றிகள். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்த புலிகளின் இனவெறியை இப்படியானவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இதிலிருந்தே புலிகளும், அதன் ஆதரவாளர்களும் யார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    //நாங்கள் இந்தியாவை நம்பவில்லை.//
    RAW ஆயுதம் பணம் கொடுத்த போது இந்த அறிவு எங்கே போய்ச்சு?

மறுமொழிக

தமிழை ஆங்கில உச்சரிப்பில் எழுத. அம்மா = AMMA. (To type in English, press Ctrl+g)
குறிப்பு: வார்த்தையை உள்ளீடு செய்த பின்பு SPACE BAR அழுத்தவும்