privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஅற்ற குளத்தின் ஒற்றை பசும் புல்லாய் !

அற்ற குளத்தின் ஒற்றை பசும் புல்லாய் !

-

தியாகிகள்

தோழர் சீனிவாசனுக்கு கவிதாஞ்சலி  !

லவும் முகங்கள்
ஆயிரம்… ஆயிரம்…
நம் நினைவில் நிற்பவை சிலவே!
மறையினும் கூட,
செயல்கள் நிறைந்த முகங்கள்
மறுபடி… மறுபடி வருமே!

உழைக்கும் வர்க்கத்திற்காய்
உழைத்தவர் நினைவுகள்
மரணம் தோற்கும் இடமே…

கம்யூனிஸ்டுகளுக்கு சாவு
உடலில் இல்லை
உணர்வில் உள்ளது.
வர்க்க உணர்வை
இழக்கும் போதெல்லாம்
ஒருவன் வாழா வெட்டி! – பாட்டாளி
வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும்
அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி!

முகம் பார்க்கும் முன்பே
கருவினில் வளரும்
பிள்ளைகள் செயலை
கற்பனை செய்து
உயிர் வாழும் லட்சியம் போல,
கல்லறையில்
தோழனே… உன் முகம் புதைத்த போதும்
எம் செயல்களில் பிறக்கும்
உன் லட்சியத்தின்
முகம் பார்த்து சிலிர்க்கின்றோம்!

சீனிவாசனின் பாச முத்தம் – அவர்
பேத்தியின் கன்னத்தில் மட்டுமா?
உழைக்கும் வர்க்க அரசியலுக்காய்
ஒட்டப்படும்
ஒவ்வொரு சுவரொட்டியிலும்
அந்த.. பாசத்தின் ஈரம் சுரக்கிறது

சீனிவாசனின் இரத்தம்
உடலோடு நிற்கவில்லை
உயிரனைய நம் செங்கொடியில்
உலராத கனவோடு
பிடிவாதம் பிடிக்கிறது!

நிறைவேறாத நம் வேலைகளில்
அவரின்
கணையப் புற்றுநோய் வலி மிகும்.
நிறைவேறும் நம் லட்சியங்களில்
சீனிவாசன் புன்னகை மலரும்

மின்சார ரயில் பெட்டிகளின்
தடம் அதிரும் இரைச்சல்களில்,
பார்வையும் நுழைய முடியாத
மக்கள் கூட்டத்தின் நெருக்கடியில்,
எதிர்த்திசை காற்றைக் கிழித்து
எழும்பும்
நமது அமைப்புப் பிரச்சாரத்தில்
அதோ…
தெளிவாகக் கேட்கிறது
சீனிவாசனின் குரல்!

காலை முதல் மாலை வரை
கால்கள் ஊன்றி
அரசியல் முளைக்கும்,
அடுத்தடுத்தப் பேருந்தில்
ஏறி இறங்கும்
தோழர்கள் உடலில்
வியர்க்கிறது சீனிவாசனின் நினைவு!

தெருமுனைக் கூட்டங்களில்
வர்க்கப் பகையை எட்டி உதைத்து
வரும் போலீசு தடையை
தெருப்புழுதியாய் எத்தி நடந்து…
உழைக்கும் மக்களை
அரசியல் சூடேற்றும் உரைகளில்
துடிக்கிறது
சீனிவாசனின் உணர்ச்சி!

குறைகள், பலகீனங்களையே
குறிக்கோளாக்கி…
குறுக்கு வழியில்
திரும்ப நினைக்கும் மனநிலையை,
தடுத்து நிறுத்தி
விவரிக்கும் இடங்களிலெல்லாம்
வெளிப்படுகிறார் சீனிவாசன்!

மடல்விரித்த வாழைகளின்
உடல் சாய்த்த சூறை போல்,
மடி நிறைந்த தாய்ப்பாலை
இடி விழுந்து கருக்கியது போல்
மனம் நிறைந்த தோழர்களை
மரணத்தால் இழப்பதுவோ?!

மறுகாலனியம் எதிர்த்து நிற்கும்
இதயத்தின் இடி முழக்கில்
நாம் மறுபடியும் பிரசவிப்போம்!
அற்ற குளத்தின்
ஒற்றை பசும் புல்லாய்
வெறுமையின் தருணத்திலும்
வேர்பிடித்த நம்பிக்கையாய்
எத்தனைத் தோழர்கள்…
எத்தனை தியாகங்கள்!

கொளுத்தும் கொடிய
கோடையைப் பிளக்கும்
புரட்சி மழை
வேண்டும் சீக்கிரம்!
பொழியும் துளியில்
தோழனே நீயும் இருப்பாய்…
சீனிவாசா செயல்களில் பிறப்பாய்!

– துரை.சண்முகம்
5/5/2013