privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் "இதுதாண்டா போலீஸ்" ரீலோடட் !!

தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!

-

Elangovan – kuwait,குவைத்

2010-11-09 13:35:48 IST

நல்ல தீர்வு, சட்டம் ஒரு இருட்டறை குற்றவாளியை அதன் முன்னால் நிறுத்தினால் குளிர்காய்ந்து கொண்டிருப்பான் என்பதை உணர்ந்து செயல்பட்ட திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் எல்லோர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்….

 

BALAMURUGAN – johor,மலேஷியா

2010-11-09 13:35:11 IST

… (இவனையெல்லாம் அப்படியே உயிரோடு வைத்து சித்திரவதை செய்து, அந்த குழந்தைகள் பட்ட துன்ப வேதனைகளையெல்லாம் இவன் அனுபவிக்காமல் ஒரே encounter லே போய்ட்டான் என்கிற ஆதங்கம் தான் வருது)…

 

சிவா– சென்னை,இந்தியா

2010-11-09 13:29:54 IST

இது போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு குழந்தைய ஒரு பொண்ணு கொன்னு போட்ட அவ பேரு புவிழலி’ன்னு நினைகரன். அவளையும் இப்படி போட்டு தள்ள முடியுமா???????? அப்படி போட்டு தள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். கோவை போலீஸ்’கு என்னுடைய ஆயிரம் நன்றிகள்….

 

selva – coimbatore,இந்தியா

2010-11-09 13:28:49 IST

ஆல் தமிழன்ஸ் ஒன்று சேர்வோம். எழுதுங்கள் சீப் மினிஸ்டருக்கு கோயம்புத்தூர் போலிசை பாராட்டி கமிஷ்நேர் சைலேந்திர பாபு தனது திறமையால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஹாட்ஸ் ஆப் சார்…

 

சுரேஷ்குமார்– coimbatore,இந்தியா

2010-11-09 13:22:10 IST

அரசன் அன்றே கொல்வான். போலீஸ் (தெய்வம்) நின்று கொள்ளும். நன்றி. கோவை மக்களுக்கு தீபாவளி 5 ம் தேதி அல்ல. இன்று தான் உண்மையான தீபாவளி….

 

Raga – சென்னை,இந்தியா

2010-11-09 12:36:26 IST

To Coimbatore Police comissioner: Thanks for saving our Tax payers money and saving time of our judicial system for this kind of criminal activities. அவனை விவேக் ஒரு படத்தில் மைனர் குஞ்சுவை சுட்டது போல் சுட்டிருக்க வேன்டும்! இது மாதிரி விரைந்து தீர்ப்பு அளித்தால் நாட்டில் இது மாதிரியான குற்றங்கள் குறையும்! ஊழல், அக்கிரமும் செய்யும் அரசியல் வாதிக்களுக்கும், அரசாங்க வேலை யாட்ட்களுக்கும் இது மாதிரி உடனடி தண்டனை குடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்!!…

 

தமிழன்– சென்னை,இந்தியா

2010-11-09 12:35:03 IST

இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமையான உணர்வுகளின் வெளிபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெல்க நியாயம் வளர்க மக்களின் ஒற்றுமை ஓங்குக நமது காவல்துறையின் பணி. சிறப்பான இந்த காரியத்தை செய்து முடித்த நமது காவல்துறைக்கும், நமது முதல்வர் மு.க அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி……..

 

ஷபீர்– manama,பஹ்ரைன்

2010-11-09 12:33:03 IST

தமிழக அரசு , திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் என் மணமாந்த வாழ்த்துக்கள்!!!. எது எதுக்கோ பரிசு வழங்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு பாரத ரத்னா போன்ற விருந்துகள் வழங்க வேண்டும்….

 

Krishnas – nj,யூ.எஸ்.ஏ

2010-11-09 12:28:42 IST

“போலிசே தண்டனை கொடுத்தால் சட்டம் என்ன ஊறுகாய் போடவா இருக்கிறது” இது சில மேதாவிகளின் கேள்வி இங்கு. இந்த மாதிரி குழந்தைகளை கடத்துவது, கொல்வது, கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு எதற்கு சட்ட உதவி. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகவேண்டும். அந்த மிருகங்களை குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் அந்த இடத்திலயே கொன்று விடவேண்டும்…..

 

Kumaran – chennai,இந்தியா

2010-11-09 12:18:27 IST

இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி உயிரோட இருக்கு…தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க…. அடி பட்ட போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்…….

 

Sankaran – chennai,இந்தியா

2010-11-09 12:18:17 IST

அது தான் ஐநூறு பேர் போலிசை பாராட்டியிருக்கிரார்களே என்று கருத்து எழுதாமல் இருக்காதீர்கள். ஐந்தாயிரம் பேர் எழுதினாலும் குறைவு தான். வெள்ளைக்காரனின் துருப்பிடித்த சட்டங்களை கட்டிக்கொண்டு அழும் அறிவுஜீவிகளுக்கு சாதா இந்தியனின் ஆத்திரமும் குமுறலும் என்று தான் புரியுமோ? கசாபுக்கும் இந்த முடிவு எப்போது என்று ஏங்கும் கோடானு கோடி இந்தியர்களின் சார்பாக,…

____________________________________________________________

இவை தினமலருக்கு வந்துள்ள 1000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் சில. கோவை முழுவதும் மார்வாடி சேட்டுகள் இனிப்பை வழங்கி பட்டாசுகளையும் அள்ளி தருகிறார்கள். சேட்டுகளின் தயவில் கோவையே சமூக தீபாவளியை கொண்டாடி வருகிறது. தமிழ் பதிவுலகிலும் அதே மனநிலைதான்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மோகன்ராஜ் போலீசை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசு சுட்டதில் மோகன்ராஜ் செத்துப்போய்விட்டதாகவும் போலீசு கொடுத்துள்ள செய்தி கடைந்தெடுத்த பொய் என்பதை 1000 பின்னூட்டக்காரர்களும் அடித்துச் சொல்கிறார்கள். இருந்தபோதிலும் “பொய் வாழ்க, போலீசு வாழ்க, கொலை வாழ்க! ஜெய்ஹிந்த்!” என்று கருத்துக் கூறி முடித்திருக்கிறார்கள்.

வாசகர்களுடைய தர்ம ஆவேசம் தாங்க முடியவில்லை. இப்படி அறவுணர்ச்சி பொங்கி வழியும் தமிழகத்திலா லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது, பொதுச்சொத்துக்கள் கொள்ளை போகின்றன? இந்த தமிழ்நாட்டில்தானா சில போலீசுகாரர்கள் டூட்டி முடிந்தபின் மப்டியில் வந்து திருடுகிறார்கள், பல போலீஸ்காரர்கள் யூனிபார்மிலேயே திருடுகிறார்கள்..? நம்பமுடியவில்லை.

இருந்தாலும் ஒரு கேள்வி. ஒருவேளை… ஒருவேளை மட்டும்தான், மோகன்ராஜ் என்ற நபர் அப்பாவியாக இருந்து, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவர்கள் சேட்டுடைய சொந்தக்காரப் பையன்கள் என்ற சேதி கொஞ்சநாளைக்குப் பின்னர் வெளிவந்தால்? சில நாட்களுக்கு முன் சென்னையில் சிறுவனைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அவனது சொந்தக்கார இளைஞர்கள், ஹை டெக் கிரிமினல்கள். கேட்ட பணத்தைக் கொடுப்பது போலக் கொடுத்து பின்னர் அவர்களை மடக்கிப் பிடித்தது போலீசு என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அதனால்தான் ஒரு சந்தேகமும் வருகிறது.

“இப்படி பணத்தைக் கொடுத்து குற்றவாளியைப் பிடித்திருப்பது போலீசு துறைக்கே அவமானம்” என்றும், “மைனாரிட்டி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் யோக்கியதை இதுதான்” என்றும் மறுநாள் ஜெயலலிதா விட்ட அறிக்கையையும் படித்திருப்பீர்கள்.

சட்டமன்றம் வேறு கூடவிருப்பதால், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை” என்று ஆத்தாளுக்கும் மக்களுக்கும் நிரூபிக்கும் விதத்தில், உடனே “கிடா வெட்டி பொங்கல் வைக்குமாறு” போலீசுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கோவை போலீசுதான் “சேச்சே.. அப்படியெல்லாம் உடனே சுட்டுக்கொல்வது ஐ.பி.எஸ் பதவிக்கு அழகு இல்லீங்கய்யா, ரெண்டு நாளாவது போகட்டும்” என்று கூறி, கிடாவெட்டினை தள்ளி வைத்து நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. எப்படியோ, மோகன்ராஜ் என்ற நபருக்கு “எமன்” ஜெயலலிதா உருவில் வந்திருக்கிறான்.

ஜெயலலிதா மட்டும்தான் எமன் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை திமுகவின் காலை நக்கிப் பிழைத்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கள் “வலிமை”யை கருணாநிதிக்குப் போட்டுக் காட்டும் பத்திரிகைகளும், கருணாநிதி என்னதான் அள்ளிக் கொடுத்தாலும் “தானாடாவிட்டாலும் தசையாடும்” என்று இனப்பாசத்துடன் அம்மாவின் அறிக்கைகளை 5 ஆம் பக்கத்திலிருந்து முதல் பக்கத்துக்கு கொண்டுவந்திருக்கும் பார்ப்பன நாளேடுகளும் கூடத்தான் இந்த என்கவுன்டரில் பங்கேற்றிருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தர்மாவேசம்தான், இந்தக் கொலையை ஒரு திருவிழாவாக கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தயார்படுத்தியிருக்கிறது.

கும்பலோடு சேர்ந்து கொண்டு தர்ம அடி போடும் “வீரர்கள்” அடிவாங்குபவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக தினமலர் பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.

“பாலியல் வன்முறை நடந்திருப்பதாக பிரேத பரிசோதனை கூறுகிறது” என்று போலீசு சொல்கிறது. ஆனால் குழந்தைகளை கடத்தியவர்கள் “பணத்துக்காகத்தான் கடத்தினார்கள்” என்பது கூட இதுவரை உறுதியானதாகத் தெரியவில்லை. பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்தக் கொலை ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலையா (murder for gain), ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலையா, அவசரத்தில் செய்யப்பட்ட கொலையா என்பதைப் பொறுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரித்துச் செல்லும். “எதற்காக கொன்றார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையா, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை… ” என்று முழங்குகிறார்கள் தினமலர் பின்னூட்டக்காரர்கள்.

அதுதான் நீதி என்றால், இதே போன்றதொரு என்கவுன்டரில் ஜெயேந்திரரை அன்று ஆந்திரா பார்டரில் வைத்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே! அந்தக் கிரிமினலின் கையால் வழங்கப்பட்ட ஒண்ணரை கிலோ எடையிலான தங்க கிரீடத்தை தலையில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலையநிலிருந்து வெங்கடாஜலபதி பெருமாளும் தப்பியிருப்பாரே! கோவை என்கவுன்டரை ஆதரிப்பவர்கள் அப்படி ஒரு ஆந்திரா என்கவுன்டர் நடந்திருந்தால் அதனை ஆதரித்திருப்பார்களா?

அன்று “ஹ்யூமன் ரைட் வயலேஷன், மிஸ்யூஸ் ஆஃப் பவர், ஹாரஸ்மென்ட்” என்று பல மாமாக்களும் மாமிகளும் டிவிக்களில் பேட்டி கொடுத்தார்களே! “இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல்தான் சுனாமியே வந்தது” என்று கூட சென்னை அயோத்தியா மண்டபத்தின் பக்கம் பேசிக்கொண்டார்களே! அன்று சென்னை உயர்நீதி மன்றம் விடுமுறை நாளில் சங்கராச்சாரியின் பெயில் பெட்டிசனை விசாரித்ததே, பெரியவாளை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஜட்ஜ் பங்களாவிலேயே ரிமாண்டு பண்ண முடியுமா என்று ஒரு மாட்சிமை தங்கிய நீதிபதி அரசு வக்கீலிடம் கேட்டாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா?

“இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி” என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான சேட்டுகள். வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சங்கரராமனை ஆள் வைத்துப் போட்டுத்தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியவாளையும் அன்றைக்கே போட்டுத்தள்ளியிருந்தால், சங்கரராமனின் மனைவியும் அன்று தீபாவளி கொண்டாடியிருப்பாரே! பாண்டிச்சேரிக்கு கேசை மாற்றி, இழுத்தடித்ததனால்தானே இன்றைக்கு சங்கரராமனின் ஆவியைத் தவிர எல்லா சாட்சிகளும் பல்டியடித்து விட்டார்கள்?

இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே கோவை நகரில் போலீசுக்காரர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணிக் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களில் ஒருவருக்கு கூட இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பதிலுக்கு குண்டு வைத்த அல்உம்மாக் காரர்கள் மட்டுமின்றி பல அப்பாவிகளும் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

“குஜராத் படுகொலையை எப்படி நடத்தினோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம்” என்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோவையே தெகல்கா வெளியிட்டதே.. அதன் பிறகு எத்தனை ஆர்.எஸ்.எஸ் காலிகள் என்கவுன்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்கள்? ரதயாத்திரையில் தொடங்கி மும்பை படுகொலை வரை கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் உயிர்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தற்போது ஆஜ்மீர் முதலான பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களே சங்க பரிவாரத்தினர்தான் என்று குட்டு உடைந்தவுடன், “அரசியல் பழிவாங்கல்” என்று அவர்கள் ஏன் அலறுகிறார்கள்? அதைக் கேட்டு நமக்கு ஏன் கோபம் வரவில்லை?

“இப்படித்தான் கசாப்பையும் போட்டுத்தள்ளவேண்டும்” என்று பின்னூட்டம் போடுகிறவர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இப்படித்தான் போட்டுத்தள்ளவேண்டும்” என்று ஏன் சொல்ல மறுக்கிறார்? அலகாபாத் தீர்ப்பு வந்தவுடன், “கடந்த காலக் கசப்புகளையெல்லாம் மறந்து விடுங்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்கிறாரே பகவத், அதை பெருந்தன்மை என்று பாராட்டுகின்றனவே பத்திரிகைகள், அதையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது? அதே மாதிரி ஒரு அறிவுரையை சொல்லும் உரிமை கசாப்புக்கு கிடையாதா? மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ கிடையாதா?

1984 இல் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக “விதவை விகார்” என்று குடியிருப்பே கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே, அந்த விதவைகள் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது? தண்டகாரண்யாவிலும் காஷ்மீரிலும் நடக்காத பாலியல் வன்முறையா, படுகொலையா? “இந்தியாவிலிருந்து விடுதலை” என்று காஷ்மீரே இன்று கையில் கல்லை எடுத்துக்கொண்டு நிற்கிறதே இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? இந்திய இராணுவமல்லவா?

“போலி என்கவுண்டரில் தங்களை பிள்ளைகளை போட்டுத் தள்ளிய இந்திய இராணுவத்தினரை பதிலுக்கு என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும்” என்று காஷ்மீர் மக்கள் கோரவில்லை. மனித உரிமை அமைப்புகளும் கோரவில்லை. “எல்லோரையும் போல அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்” என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. “எத்தனை கொலை செய்தாலும், வன்புணர்ச்சி செய்தாலும் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடாது” என்று இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள்தான் மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரத்துக்குப் பெயர்தான் “ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசன் பவர் ஆக்ட்”. கொல்லவும், வல்லுறவு கொள்ளவுமான “ஸ்பெஷல் பவர்”!

“இராணுவத்திற்கு கொடுத்திருக்கும் அப்படிப்பட்ட ஸ்பெஷல் பவரை எங்களுக்கும் கொடுங்கள்” என்பதுதான் போலீசின் கோரிக்கை. அதைத்தான் தினமலரின் பின்னூட்டக்காரர்கள் வழிமொழிகிறார்கள். வழக்குகளோ வாய்தாக்களோ இல்லாமல் வாச்சாத்தி, பத்மினி, ரீட்டா மேரி, அந்தியூர் விஜயா .. என்று லாக் அப்பை லாட்ஜாகவும், தூக்குமேடையாகவும் மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தைத்தான் போலீசு கேட்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் அந்த அதிகாரத்தை, அதிகார பூர்வமாக, சட்டப்படியே வழங்க வேண்டும் என்பதுதான் போலிசின் கோரிக்கை.

தா.கிருஷ்ணனைக் கொன்ற கொலைகாரர்கள், மதுரை தினகரன் ஊழியர்கள் மூவரைக் கொன்ற கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதற்காகவா இந்த அதிகாரத்தைக் கேட்கிறது போலீசு?

சென்னையில் ஒரு சரிகா ஷா என்ற பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியானவுடன் மீடியாவும் அரசும் கொந்தளித்தன. உடனே ஈவ் டீசிங்கிற்கு சட்டமெல்லாம் வந்துவிட்டது. இப்போது கோவை கடத்தல் கொலை நடந்தவுடனே என்கவுன்டரைச் சட்டமாக்கச் சொல்கிறார்கள் தினமலர் ரசிகர்கள். பணக்காரனும், பார்ப்பன மேட்டுக்குடியும், சேட்டுகளும் பாதிக்கப்பட்டால்தான்  இவர்களிடம் மனிதாபிமானம் கொப்புளித்து எழும் போலும்!

மேலவளவு படுகொலை நடந்தபோது இப்படியொரு தார்மீக ஆவேசத்தை நாம் மீடியாக்களில் பார்க்கவில்லையே! அந்த வழக்கில் “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பலரும் கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டியவர்களே” என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பின்னரும், அவர்களை தண்டிப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் முயலவில்லையே, அதையெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லையே! தற்போது பெண்ணாடம் மாணவன் பாரத் கொலை பற்றியும் வினவு தளத்தில் எழுதியிருக்கிறோம். அதனைப் படித்து வாசகர்களோ, பதிவுலகமோ பொங்கி எழவில்லையே!

சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் என்று கூறிக்கொண்டு தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறிக் குற்றங்களையும் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் கொங்கு மண்ணில்தான் இன்று தரும ஆவேசம் தலைவிரித்து ஆடுகிறது. என்கவுண்டருக்கு ஆதரவாக வெடி வெடிக்கிறார்கள். “என்” கவுண்டரோ, “உன்” கவுண்டரோ, யாராயிருந்தாலும் “நம்” கவுண்டர்தானே என்றுகூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?

தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?

பலான படங்களைக் காட்டியே ஹிட்ஸை அதிகரித்துக் கொள்ளும் தினகரன் வெப்சைட் பாலியல் குற்றம் பற்றி மூச்சு விடலாமா? அல்லது தங்கள் திருக்குவளை குடும்பத் தகராறுக்கு “தினகரன் குடும்பத்தை” சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேரை காவு கொடுத்துவிட்டு, அப்புறம் மாமாவும் மச்சானும் சமரசமாகி, மந்திரியாகிக் கொண்ட கும்பலுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேசும் அருகதை உண்டா?

பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?

கேட்டால், “நாங்கள் எல்லா என்கவுன்டரையும் ஆதரிக்கவில்லை. சின்னஞ்சிறுவர்களைக் கொலை செய்த கொலைகாரர்கள் என்பதனால், இந்த என்கவுன்டரை மட்டும்தான் ஆதரிக்கிறோம்” என்று ஜகா வாங்குவார்கள். சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான். இந்த விசயத்தில் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்.

“உணவுக்கிடங்குகளில் மக்கிமடிந்தாலும் அந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகத் தரமாட்டேன்” என்று கூறும் பிரதமரின் இரக்கமின்மையையும், கோவைக் கொலைகாரனின் இரக்கமின்மையையும் நாம் ஒப்பிட்டுப் பேசினால் அதை இந்தப் படித்தவர்களின் மனம் ஒப்புமா? நிச்சயம் ஒப்பதாது. “அதெல்லாம் குதர்க்கவாதம். மன்மோகன்சிங் சொல்வது ‘மாக்ரோ’ பாலிசி டெசிஷன். இது ‘மைக்ரோ’ அச்சாசினேஷன். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?” என்று கேள்வி எழுப்புவார்கள்.

கொலையில் கூட பணக்காரன் ஏழை வித்தியாசம் பார்ப்பது வக்கிரமானது என்று சாடுவார்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று வசை பாடுவார்கள். அப்படி வித்தியாசம் பார்த்து ஏழைக் குழந்தைகளின் சாவை அலட்சியப்படுத்துவதும், பணக்காரக் குழந்தைகளின் சாவுக்கு குடம் குடமாய் கண்ணீர் விடுவதும் யார் என்பதை அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.  அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

மோகன்ராஜ் என்பவன் கேடியா, கிரிமினலா எங்களுக்குத் தெரியாது. அவன் எவனாக வேண்டுமானால் இருக்கட்டும். நீதிக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, பட்டினியால் செத்து மடிகிறார்களே அது குறித்துத்தான் நாம் முதன்மையாக கவலைப்படவேண்டும். இப்படி எவனோ ஒருவன் சாவது குறித்து எங்களுக்கு விசேடக் கவலை ஒன்றும் இல்லை.

இப்பிரச்சினையில் கவலைக்குரிய விசயம் ஒன்றுதான். கோவை சம்பவத்தை முன்வைத்து தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது, 1980 களில் வெளிவந்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படத்தின் ரீ மிக்ஸ். ஏற்கெனவே தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் போலீசுக்கு, “விசாரணையே இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தையும் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.

மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

  1. தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !! | வினவு!…

    சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்….

  2. வினவின் இந்த விளக்கம் சிறப்பாக உள்ளது,

    நான் அந்த மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ வக்காலத்து வாங்கவில்லை, இவர்கள் ஏன் இதை செய்தார்கள் இவர்களின் பின்னால் யார் யார் ரெல்லாம் என்பதை மறைத்திருக்கிரார்கள் இந்த போலிசு காரர்கள்,

    இது இருக்கட்டும் பெண்ணாடம் மாணவன் பரத்தை அநியாயமாக கொன்று யாரும் நம்பமுடியாத வண்ணம் ஜன்னலில் தூக்கு போட்டு இறந்ததாக சொல்லி அந்த மாணவனுக்கு கிடைக்க வேண்டிய நீதி பற்றி, தினமலருக்கு பின்னூட்டம் தந்தவர்கள் பதில் சொல்வார்கலா?
    முடியாது ஏன் என்றால் அவன் ஏழை மாணவன் மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவன், அவன் செய்த தவறு என்ன? விடுதியில் நடந்த முறைகேடுகளை தட்டிகேட்டான் அதற்கா அவன் கொல்லப்பட்டான் ,
    கோவையில் கொல்லப்பட்ட அந்த இருவரும் பணம் படைத்த, உயர் மதத்தை சேர்ந்தவரின் பிள்ளைகள், இது மட்டும் தான் நிதர்சனமான உண்மை,

    இந்த இருவரையும் என்கவுண்டரில் சுட்டுத்தல்லிய காவல்துறை இது போல் நாட்டில் பலர் இது போன்ற கொடுமைகளை செய்துவிட்டு அதிகாரத்தாலும்,பணபலத்தாலும் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு சுதந்திரமாக சுத்தி வருகிறார்களே அவர்களை என்ன செய்யப்போகிறது? அவர்களுக்கு விளக்கு பிடிக்குமே தவிர, அவர்களுக்கு இந்த தண்டனையை அளிக்காது, அவர்கள் போடும் எலும்பு துண்டுக்கு விச்வாசமுல்ல நாயை போல வாலை ஆட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.

  3. அந்த பிஞ்சுக் குழந்தைகளை, கொலை செய்தவன், அவன் செய்த தொழில், கொலை செய்த விதம் – இவைபற்றியெல்லாம், உம்மிடம் இருந்து ஏன் இதுவரை விளக்கங்கள் இல்லை! விமர்சனங்கள் இல்லை?

    கொலை செய்தவன் தொழிலாள வர்க்க பிரதி நிதி என்பதாலா? கூலிக்குக் கொலை செய்தாலும், அவனும் ஒரு தொழிலாளிதானே!

    கொலைகளில்கூட வர்க்கம் பார்ப்பது, பொதுமக்களல்ல!குழந்தைகள் பலியான விதமே, இங்கு மக்களை ஆதங்கப்பட வைத்துள்ளது!

    • @rammy

      வினவுத் தோழர்கள், சுரேஷ் கண்ணன் வில்லாளன், மாற்று ஆகியோரது வலைப்பக்கங்களில் வந்த பதிவுகளைப் படித்துவிட்டு, போதும், நம் கருத்தைச் சொல்லியிருக்கின்றனர் என்றுதான் நினைத்திருந்தேன். உங்களது இந்தக் கருத்தைப் படித்ததும் நானும் இதுகுறித்து கொஞ்சம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

      @வினவுத்தோழர்கள்!
      பாராட்டுக்கள்!

      @சென்ஷி!
      அதே!

      • எழுதுங்க தோழரே, நான் கூட உருப்படியாய் (பொதுபுத்திக்கு எதிராய்) எழுதினால் இம்சிக்கும் மொக்கைகள் காரணமா நீங்க எழுதாம விட்டீங்கன்னு நினைச்சேன் 🙂

    • ரம்மி

      இந்த குழந்தைகளின் கொலை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுதான். கொலையாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

      \\குழந்தைகள் பலியான விதமே, இங்கு மக்களை ஆதங்கப்பட வைத்துள்ளது//

      கொலைகள் அனைத்துமே எந்த விதத்தில் செய்யப்பட்டாலும் கொடூரமானவையே. உயிர் போகும் வேதனை ஒன்றுதான்.கொலை செய்யப்பட விதத்தை கொண்டுதான் ஆதங்கம் வர வேண்டுமா.இந்த குழந்தைகளின் கொலைக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள் மற்ற அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழாதது ஏன் என்பதுதான் பதிவு எழுப்பும் மையமான கேள்வி.அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்.

      மேலவளவு தலித்துகளும்,காஞ்சிபுரம் சங்கரராமனும் மயிலிறகால் தடவிக் கொடுத்தே கொல்லப்பட்டார்களா.சிறுவன் பாரத்,அவனை தூங்க வைப்பதற்காக பாடப்பட்ட தாலாட்டை கேட்டு கேட்டு காது வெடித்து இறந்து போனானா.அவர்கள் கொல்லப்பட்ட ”விதத்தை”பார்த்து யாருக்கும் இப்போது வருவது போல் ”ஆதங்கம்” வரவில்லையே. அது ஏன்.

      \\அந்த பிஞ்சுக் குழந்தைகளை, கொலை செய்தவன், அவன் செய்த தொழில், கொலை செய்த விதம் – இவைபற்றியெல்லாம், உம்மிடம் இருந்து ஏன் இதுவரை விளக்கங்கள் இல்லை! விமர்சனங்கள் இல்லை?//

      பதிவை முழுமையாக படித்து பாருங்கள்.
      \\பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.//
      இந்த வரிகளுக்கு என்ன பொருள்.

      \\கொலை செய்தவன் தொழிலாள வர்க்க பிரதி நிதி என்பதாலா? கூலிக்குக் கொலை செய்தாலும், அவனும் ஒரு தொழிலாளிதானே!//

      .நீங்கள் எழுதியுள்ள இந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.குதர்க்க வாதத்திற்கு எல்லை ஏதுமில்லையா.

      • //குதர்க்க வாதத்திற்கு எல்லை ஏதுமில்லையா.//

        same blood!

        கோவைக்கு இது புதுசு!
        அதனால் மக்கள் இங்கு நிறைய கொதித்து எழுந்து விட்டனர்!

        //மேலவளவு தலித்துகளும்,காஞ்சிபுரம் சங்கரராமனும் மயிலிறகால் தடவிக் கொடுத்தே கொல்லப்பட்டார்களா.//

        நீங்கள் குறிப்பிட்ட வகை கொலைகள், இங்கு தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்து விட்டால், மக்கள் பழகி விடுவர்! பிறகு இதைப் போல என்கவுண்டர்களுக்கு, எழுச்சி மிகுந்த ஆதரவு அளிக்க மாட்டர்!

        எனக்குத் தெரிந்து, கோவையில் ராஜீவ் கொலையை அடுத்து, இரட்டை குழந்தைகளின் கொலைதான், மக்களை மிகவும் பாதித்தது!

        • ரம்மி,
          இந்த குழந்தைகள் கொலைக்காக வருந்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

          இந்த கொலைகள் கோவை பகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதை தினமலருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,ஏன்,உலகின் பல பகுதிகளில் இருந்தும் பின்னூட்டங்கள் வந்துள்ளது என்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.வருத்தமும் சினமும் கோவை பகுதிக்கு மட்டுமாக சுருக்கி பார்க்க முடியாது.

          இப்படி பரவலாக மக்களிடம் ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் சினத்தையும் பயன்படுத்தி காவல்துறையும் தினமலரும் போலி மோதல் கொலைகளை ஆதரிக்கும் மனநிலையை மக்களிடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதையே பதிவு கண்டிக்கிறது.அதே போன்று மற்ற கொலைகளுக்காக ஏன் இப்படி ஒரு தார்மீக ஆவேசத்தை உருவாக்க ஊடகங்கள் முன் வரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

          இதைத்தான்
          \\ இந்த குழந்தைகளின் கொலைக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள் மற்ற அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழாதது ஏன் என்பதுதான் பதிவு எழுப்பும் மையமான கேள்வி.அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்//
          என்ற கேள்வியாக உங்கள் முன் வைத்தேன்.இதற்கு பதில் சொல்லாமல்
          \\ கோவைக்கு இது புதுசு!அதனால் மக்கள் இங்கு நிறைய கொதித்து எழுந்து விட்டனர்//

          \\எனக்குத் தெரிந்து, கோவையில் ராஜீவ் கொலையை அடுத்து, இரட்டை குழந்தைகளின் கொலைதான், மக்களை மிகவும் பாதித்தது!//
          இப்படி தொடர்பற்ற வாதங்களை எடுத்து வைக்கிறீர்கள்.

      • திப்பு,

        நீர் கொலைகளைப் பற்றி பேசினீர்! நான் மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசினேன்!

        //மேலவளவு தலித்துகளும்,காஞ்சிபுரம் சங்கரராமனும் மயிலிறகால் தடவிக் கொடுத்தே கொல்லப்பட்டார்களா.//

        • ரம்மி
          பதிவின் மைய கருத்து பற்றி நானும் மக்களின் மனநிலை பற்றி நீங்களும் போதுமான அளவுக்கு விவாதித்து விட்டோம் என கருதுகிறேன்.எது சரியான வாதம் என்பதை படிப்பவர்கள் தெரிவு செய்து கொள்ளட்டும்.இப்போது நான் பேச விரும்புவது வேறொரு பொருள் பற்றி.

          இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்
          ”நீங்கள் குறிப்பிட்ட வகை கொலைகள், இங்கு தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்து விட்டால்,”
          என்று பன்மையில் மரியாதை கொடுத்து என்னை விளித்த நீங்கள் அதற்கடுத்த இந்த பின்னூட்டத்தில்
          ”நீர் கொலைகளைப் பற்றி பேசினீர்!”
          என்று ஒருமையில் விளித்துள்ளீர்கள். (நல்ல வாய்ப்பாக ”நீ”என்று சொல்லாமல் விட்டீர்களே,அது வரை எனக்கு மகிழ்ச்சிதான்)

          இந்த இரு பின்னூட்டங்களுக்கு இடையில் நீங்கள் சினம் கொள்ளக்கூடிய எந்த ஒரு ஆத்திரமூட்டலையும் ( provocation ) நான் செய்யவில்லை.மாற்று கருத்து கொண்ட எதிர்வாதம் மட்டுமே எடுத்து வைத்தேன்.இதற்காக சினம் கொண்டு ,மரியாதை கொடுத்து பழகுவதற்கு பெயர் பெற்ற கோவை பகுதியை சேர்ந்த நீங்கள்,ஒருமையில் அழைப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது.இதை எழுதுவது ”நீர்”ஐ ஒரு பிரச்னை ஆக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல,இது சரிதானா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியே.

          முகம் தெரியாத ஊடகத்தின் மூலம் நாம் விவாதித்து கொண்டாலும் கருத்துக்களின் மூலமாக ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி இருக்கிறோம்.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்க நேர்ந்து நான்தான் திப்பு நீங்கள்தான் ரம்மி என தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ”நீங்கள்தானா அது”என்று ஆச்சரியத்துடன் கேட்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளமாட்டோமா. (அந்த சமயத்திலும் ”நீர்தானா அது” என்று கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன் ) ஆகவே கருத்து வேறுபாடுகள் கொண்டோர் கசப்புணர்வும் கொள்ளவேண்டியதில்லை.
          சரிதானே நண்பர் ரம்மி அவர்களே.

        • திப்பு அவர்களுக்கு,

          வருத்தம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!
          தொடரட்டும், நம்மில் ஆரோக்ய விவாதம்!
          மீண்டும் சந்திப்போம்!

  4. //ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?//

    சபாஷ் சொல்லிக்கிறேன்.

    வக்கிரம் பிடித்த எழுத்தாளர்களும் பாலியல் படங்களை போடுபவர்களும் வருந்திவிடாதீர்கள் தயவுசெய்து…உங்களுக்கும் பங்கிருக்கின்றது இக்கொலைகளில்..

    உங்கள் போலி கண்ணீரை உங்க வீட்டு குழந்தைகளுக்கு சேமியுங்கள்…பாவம் செய்த குழந்தைகள் உங்க வீட்டு குழந்தைகளே…

    ———-

    பலி , வன்முறை எங்கே நடந்தால் என்ன ?.
    வலி ஒன்றுதான் வருந்திமட்டும் ஆவதென்ன?.

  5. அய்யா தங்கள் பதிவு நன்றாக இருந்தது. உண்மையான மனித உரிமை விழுமியங்களை மதிக்கும் அளாவுக்கு நம் மக்கள் மனம் இன்னும் வளரவில்லை என்பதையே இதுக் காட்டுகிறது. தினமலர் மட்டுமில்லை, தினகரன், என பல செய்தி தளங்களும் போலீசை ஆகா ஒஹோ என்று பாராட்டுகிறது. அதே வலைப்பதிவர்கள் பல பேரும் இதே தான் மெச்சுகிறார்கள். நானும் ஒரு வலைப்பதிவர் தான். எனக்கு இந்த சம்பவத்தில் போலீசைப் பாராட்ட மனம் செல்லவில்லை. உண்மையான குற்றவாளி தண்டிக்கப்படாமலேயே தப்பிவிட்டானே என்ற உணர்வு தான்.

    அதே போல நம் மக்க்ள் பீசா, பர்கர் என்று தின்றாலும் கற்கால மனோபாவத்தில் இருந்து சற்றும் மாறவில்லை என்பதைத் தான் இந்த வலைப்பதிவர்களின் போலீஸ் பாராட்டு மழை நிரூபிக்கின்றது.

    போலீஸ் லஞ்சம் வாங்கும்போதும், காவல் நிலையத்தில் நிகழும் கற்பழிப்பு சம்பவத்தில் மக்கள் நேரில் போய் அந்தக் காவலை தாக்கி கொன்றால் .. ஆகா ஒகோவென இந்த பதிவுலகம் பாராட்டுமா????

  6. குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு நாம் அனைவருமே , எல்லா பெற்றோர்களுமே எதிரிதான். சைல்ட் அப்யூஸ் என்பது கிரிமினல் குற்றம்தான். குழந்தைகளுக்கு தீங்கில்லாத, சைல்ட் அப்யூஸ் இல்லாத சமூகம் வேண்டும் என்பதுதான், எனது மட்டுமல்ல, எல்லோரது ஆசையுமாக இருக்கும்.

    சில நாடுகளில் இந்த சைல்ட் அப்யூசை தடுக்கப்பதற்காகவே போலீசார் ஸ்டிங் ஆபரேஷன் நடத்துகிறார்கள். இன்டர்னெட் மூலம் 18 பதினெட்டு வயதுக்குக் கீழானவர்கள் போல சாட் செய்து கண்ணி வைத்து பிடிக்கிறார்கள். (இதில் கணிசமான அளவில் மாட்டுபவர்கள் வேலை நிமித்தம் சென்ற இந்தியர்கள்.) இதையெல்லாம் கேள்விப்படும்போது நமது போலிசும் இப்படி ப்ரோஆக்டிவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

    சில வருடங்களுக்கு முன்பு கேந்திர வித்யாலயாவில் நடந்தது முதல் ஈசிஆர் ரோட்டில் ஒரு வயதான வெளிநாட்டு ஆள் ஹோம் வைத்து நடத்தியது வரை இங்குதான் குழந்தைகள் அதிகமாகச் சீரழிக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் போலிசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் தெரியாமலா நடந்திருக்கும்? ஆனால், அவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது? இத்தனைக்கும் சிலவற்றில் வீடியோ ஆதாரங்கள் கூட இருந்ததாக படித்த நினைவு. ஆனால், அவனை நாடுகடத்தியதுதான் அதற்குக் கிடைத்த முடிவு.

    குழந்தைகள் மிகவும் வல்னரபில், அதனால் இந்தக்குற்றத்திற்கு இந்த தண்டனைதான் சரி என்று ஆதரிப்பவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். (பாரத்தோ ,அம்பிகாவோ வல்னரபிளாகத் தெரியவில்லையா என்பது கேட்கக்கூடாதக் கேள்வி.)

    ஆனால், இங்கு நடந்தேறியிருப்பது தாலிபான் ஸ்டைல் கொலை என்பதை உணர மறுக்கிறார்கள்.

    குழந்தைகளை உயிருடன் மீட்டிருக்க வேண்டும், அப்படி செய்யாததிற்காக போலிசின் மீதுதானே உண்மையில் நமக்குக் கோபமும், ஆற்றாமையும் வரவேண்டும்?

    தினமலரின் பின்னூட்டங்களை மட்டுமல்ல, தமிழ் ட்விட்டர்களின் ட்வீட்டுகளையும் சேர்த்திருக்க வேண்டும்,வினவு.

    அதிலும், சில சாத்தான்கள் வேதம் ஓதியிருப்பதுதான் சகிக்க முடியவில்லை.

    என் குழந்தையைக் கொல்வது என்றெல்லாம் (‌”ஆத்திரத்தில் குழந்தையை கொன்னுடபோறான்” ‍‍- புனைவின் கமெண்ட்டில் இருக்கிறது) வக்கிரமாக கமெண்ட் போட்டவர்களும், அதை ஆதரித்தவர்களும், பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தவர்களும், அவர்களோடு இன்றும் நட்பு பாராட்டிக்கொண்டிருப்பவர்களெல்லாம் “நம்ம வீட்டுக்குழந்தையா இருந்தா இப்படி பார்த்துக்கிட்டு சும்மாவா இருப்போம்” என்று மோகன்ராஜ் என்கௌண்ட்டரை ஆர்ப்பரித்து வரவேற்று, குழந்தைப் பாலியல் வன்கொடுமைக்கெதிராக சவுண்ட் விடும் முரணைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை!

    • //என் குழந்தையைக் கொல்வது என்றெல்லாம் (‌”ஆத்திரத்தில் குழந்தையை கொன்னுடபோறான்” ‍‍- புனைவின் கமெண்ட்டில் இருக்கிறது) வக்கிரமாக கமெண்ட் போட்டவர்களும், அதை ஆதரித்தவர்களும், பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தவர்களும், அவர்களோடு இன்றும் நட்பு பாராட்டிக்கொண்டிருப்பவர்களெல்லாம்//

      சரியாகக் கேட்டீர்கள்.

      போலி மனிதாபிமானிகளே சொல்லுங்கள்!!! பதிவுலக மிருகங்களை என்கவுண்டருக்கு இழுத்துவர ரெடியா?

  7. உண்மைத் தமிழன் அண்ணாச்சி இந்த என்கவுண்டரை முன்னிட்டு கிரிமினல் போலீசின் எல்லையற்ற அதிகாரத்தை ஆதரிக்கும் போக்கை கண்டித்து பதிவிட்டுள்ளார்: அ

    http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html

    உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..!

  8. Annamalai universityla doctor pattam vaangarathuku idainchala irundha maanavanai kolai pannina kolaikaarargala (udanthaiya irunthavangalum thaan) itha maathiri encounter panni irundha, thamizhagam ivvalavu kodumaigalai anubavikkathu.

  9. //இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.//

    :)))

    ஏப் பாத்துக்கோ பாத்துக்கோ பாத்துக்கோ.. நானும் ரவுடிதான்.. ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்னும் பதிவு வருமா?

  10. ஆச்சரியப்படுத்தும் விதமாய் பணக்காரர்களுக்கான அநீதிகளுக்கு எல்லாரையும் பொங்கி எழச் செய்யுதலும், நீதி விரைவாய் வழங்க வைத்தலுமான கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. குடந்தையில் பள்ளிக்கூடத்தில் எரிந்து கருகிய தளிர்களின் பலரின் பெற்றோர்கள் மாத சம்பளத்திலும், கூலிவேலையிலும் வாழ்பவர்கள்.. குறைந்தபட்சம் ஒரு குரலாவது அந்த அநீதிக்கு எதிரான தீர்ப்பைக் குறித்தும் பொங்கி இருக்கலாம்.

    குப்பன், சுப்பனின் பிள்ளைகள் செத்தாலும் இதே நீதி கிடைக்குமெனில் போலீஸை வரைமுறையின்றி ஆதரிக்கிறேன்.

    இல்லாட்டி போங்கடாங்… தான்

  11. உண்மையான ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோர் சிந்திக்க வேண்டிய பதிவு. பாராட்டுக்கள்.

  12. //இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.//

    உங்க ஊட்டுப் புள்ள ஒண்ணும் எவனாவது கடத்தல்காரன் கையில ஒரு ராத்திரி ஒரு பகல் சிக்கிக்கனும்கறது அதே வாசகப் பெருமக்களின் ப்ரார்த்தனையாமே?

  13. குற்றத்தை அவனே ஒப்புக்கொண்டு விட்டனே , பிறகு எதற்கு அவனை விட்டு வைக்க வேண்டும். நாளை உனது குழந்தையை இப்படி கொடூரமாக கொலை செய்தால் இப்படித்தான் கட்டுரை எழுதுகொண்டு இருபீர்கள் அல்லவா …

  14. என்ன வேணா சொல்லிட்டு போங்கோ அனாவசியமா ஏன் பெரியவாளை இழுக்கறேள்?மேலவளவுல நாங்களா தேவர்களை கூப்பிட்டு தலித்களை கொலை பண்ண சொன்னோம் அவாளுக்குள்ள நடக்கற பிரச்னைக்கெல்லாம் ப்ராம்னாளை காரணமாய் சொல்லறது நன்னா இருக்கா?நேரடியா அவாளையே நீங்க ஜாதி குறிப்பிட்டு திட்டலாமே ஏன் எங்க பெயரை யூஸ் பண்ணிண்டு?

    • கௌஷிக் பாலாஜி அவர்களே,

      தேவர்கள் ப்ராம்னாளை நக்கி பிழைத்த நாதாரிகள் என்று கேள்வி பட்டுள்ளேன், சரி அதை விடுங்க,

      குஜராத்ல ஆயிரம் கணக்கான முஸ்லிம்களை கண்டம் துண்டமாக வெட்டி கொன்றது தேவர்களா? ப்ராம்னாளா? கொஞ்சம் சிந்தித்து பாருங்க கௌஷிக் பாலாஜி,

      காஞ்சி சங்கரராமன் ஆல் கொலை பண்ணினது உங்க பெரியவா தானே, இத மறுக்க முடியுமா?

      இதல்லாம் போதும்னு நினைக்கிறேன்.

  15. தினமலர் ஒரு பத்திரிகை!! அதற்கு ஒரு வாசகர் கூட்டம்!! அதை மதித்து ஒரு பதிவு!!!! பெரிய காமெடி! நாங்கள் தின மலரையும் மதிப்பதில்லை,உங்களையும்(வினவு) மதிப்பதில்லை…நீங்கள் இருவருமே உண்மைக்கு புறம்பானவர்கள்..(இதை பப்ளிஷ் பண்ண மாட்டீங்க தெரியும் )..
    வழக்கமா எந்திரன் நு தலைப்பு வச்சு கொஞ்சம் ஹிட்ஸ் வாங்குவீங்க…இப்போ எந்திரன் விஷயம் பழைய விஷயம்…எனவே ஹாட் டொபிக் கைல எடுத்துட்டீங்க!! வாழ்த்துக்கள்!! நல்ல மைன்ட் உங்களுக்கு..!! உங்க பதிவுல உள்ள சில கருத்துக்கள் வரவேற்க தக்கது…அதே நேரம்,இவனை சுட்டு கொன்றதும் வரவேற்க வேண்டிய விசயமே..நான் தினமலருக்கு ஆதரவாக சொல்லவில்லை..அந்த பத்திரிக்கை என்னோட……………………………….சமம்…
    உங்க வீட்ல உள்ள குழந்தை கடத்தி இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தா? எப்படி இருக்கும் உங்களுக்கு? அது மார்வாடி ,அல்லது ஹிந்து,அல்லது முஸ்லிம் குழந்தையா இருந்துட்டு போகுது….குழந்தை குழந்தை தான?
    இதற்கும் எதிராக ஒரு பதிவா? அவனை பிடிச்சு வச்சு,பத்து வருஷம் விசாரணை நடத்தி,அப்புறம் ரிலீஸ் பண்ணனும் நு சொல்ல வரீங்களா? இது உங்க வீட்ல நடந்தாலும் இப்டி தான் சொல்வீங்களா? போங்க சார்….ஏதாவது சொல்லிட போறேன்..

  16. அவன் பெயர் மோகன்ராஜ் இல்லை. மோகன “கிருஷ்ணன்” . எந்தக் குழந்தைக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாதென எல்லாம் வல்ல ஆண்டவர் மாவோ பிரானை வணங்குகிறேன்.

    • அப்பா… இத்தனை சோகத்திலயும் போட்டுத் தாக்கி சிரிக்க வைக்கிறார் இந்ததாள்…

  17. //சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான்//

    Well said. Touching Point.

  18. மிகவும் சிந்திக்கத்தூண்டும் கட்டுரை.

    உங்கள் பகுத்தறிவு கட்டுரைகள் தொடந்து வெளிவந்து, உங்களின் மக்கள் விழிப்புணர்வு சேவை தொடரவேண்டுகிறேன்.

  19. தற்போது மிக… மிக… தேவையான பதிவு.

    ஒவ்வொரு ”என்கவுண்டரிலும்”- (காவல்துறையினர் செய்யும் கொலை என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும்) கொல்லப்படுவது ஒரு உயிர் மட்டுமல்ல பல உண்மைகளும் சேர்த்துதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    குழந்தைகளை கொலை செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் குற்றவாளி என்று பிடிக்கப்பட்ட ஒரு நபரை எந்தவொரு விசாரணைக்கும் உட்படுத்தாமல் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? கொலைக்கான நோக்கம் என்ன? என்பது இதுவரை தெளிவு படுத்தப்படவில்லை.

    இந்த என்கவுண்டரை நியாயப்படுத்தியும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பொதுமக்களும் தங்களுடைய வாழ்நாளில் ஒருமறையாவது செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தால் இந்த கொலையை நிச்சயம் கொண்டாட மாட்டார்கள். தங்களை நேரடியாக பாதிக்கும் குடிநீர், மின்சாரம், தெருவாய்க்கால், குப்பை பிரச்சனையை தீர்க்க சிறு துரும்மையும் அசைக்காத “சிறந்த குடிமக்கள்” இந்த என்கவுண்டரை பட்டாசு வெடித்து கொண்டாடுவதை என்னவென்று சொல்வது.

    • //இந்த என்கவுண்டரை நியாயப்படுத்தியும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பொதுமக்களும் தங்களுடைய வாழ்நாளில் ஒருமறையாவது செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தால் இந்த கொலையை நிச்சயம் கொண்டாட மாட்டார்கள். //

      அந்த குழந்தைகள் குற்றம் ஏதும் செய்தது போல் தெரியவில்லையே! அப்படி இருந்தும், அவர்கள் ஏன் தண்டிக்கப்பட்டனர்?

  20. It is right to condemn this encounter in the wake of many fake encounters being perpetrated. I think the popular support for this encounter emerges from two reasons- 1. All these people lose faith in judicial process. 2. They seek to replace their loss of faith with savage thinking. Their pseudo humanism is well exposed.

  21. //கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?//

    செருப்படி

    பொதுவாக நமது மக்களிடம் ஒரு தன்மை இருக்கிறது,ஒட்டு மொத்த சமூகம் அல்லது
    அரசியல் சார்ந்த பிரச்சினைகள் என்றால் ஒதுங்கிக் கொள்வதும்,

    எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடிய இது போன்ற படுகொலைகள், அல்லது தனி நபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகள் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வருவது போன்ற தன்மைகள் உள்ளன.

    அய்யோ! எங்க நம்ம புள்ளைகளுக்கும் இது மாதிரி ஆகிவிடப் போகி்றதே என்கிற கவலையின் உச்ச நிலையாக மட்டுமே இதைப் பார்க்க முடியும்.
    தனி நபர் பிழைப்பு வாதத்தின் மற்றொரு அடியாளம் எனவும் சொல்லலாம்.

    ஒட்டுமொத்தமாக மக்களுக்கு moral decency என்கிற
    பல சமூகப்பிரச்சினைகளுக்கான தார்மீக கோவம் இல்லாமல் போனதே இதற்கு முழு முதல் காரனமாகும்.

    மற்றபடி கொத்துக் கொத்தாக சாவடித்துக் கொண்டிருக்கும் மன்மோகன், சோனியா, ப.சி
    போன்றவர்களும் மோகன்,மனோகரன் போன்றவர்களும்
    ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டியவர்களே.

    அவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளப் போவது எப்போது???????

  22. //*
    மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    *//

    இந்த ஒரு ஜீவன் மட்டுமல்ல.

    ஜுனியர் விகடனில் வந்த செய்தி படி, ராகுல் எனும் பொறுக்கியும் இறந்த அந்த குழந்தைகளின் சேட்டு குடும்ப அல்பத்தை லோக்க காங்கிரஸ் ஆட்களை விட்டு வாங்கி வர சொல்லி இருந்தானாம்.

    அந்த ராகுல் எனும் பொறுக்கி ஓநாய் கோவையில் வந்த நாடகம் போடும் முன்னே கோவை போலிஸ் தனது நாடகத்தை போட்டு முடித்து விட்டது.

    பாவம் பொறுக்கி ஓநாய் ராகுல்.

    இறந்த மோகன்ராஜை விட ஆபத்தனாவன் அந்த குழந்தைகளின் கொலை கொண்டு ஆதாயம் தேட கிளம்பிய ராகுல் எனும் பொறுக்கு ஓநாய்.

  23. கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக“ இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு“ என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

  24. நான் என்கவுண்டருக்கு எதிரானவன்…

    நாட்டில் நீதி அமைப்புகள் மூலம் மட்டுமே தண்டனைகள் உறுதி செய்யப்படல் வேண்டும்..

  25. நான் என்கவுண்டர் கொலைகளை ஆதரிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை போலிஸ் இப்படிக் கொல்வது தவறு என்கிறேன்.

    ஸ்டாலின்,மாவோ ஆட்சி செய்த போது விசாரணையில்லாமல் எத்தனை பேர் கொல்லப்ப்ட்டிருப்பார்கள். போலி விசாரணைகள் மூலம் எத்தனை பேருக்கு மரண தண்டனை தரப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்த ஆட்சிகளை
    புகழ்ந்து எழுதுபவர்கள் என்கவுண்டர்களை விமர்சிப்பது சாத்தான் வேதம் ஒதுவது போல்
    உள்ளது.நீங்கள் வன்முறையின் புரட்சிகர வன்முறையின் ஆதரவாளர்கள்.நீங்கள் மனிதாபிமானி இல்லை.பின் எதற்கு பிறரிடம் நீங்கள் மனிதாபிமானியா என்று கேட்கிறீர்கள்.

    மலேசியாவில் இந்துக்கள் போராட்டம்,காஷ்மீரில் பண்டிட்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலை பற்றி வினவு என்ன எழுதியிருக்கிறார்.இந்துக்கள்
    சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில்
    அவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நீங்கள்
    என்றேனும் எழுதியதுண்டா. சூடானில்
    அரசு உதவியுடன் முஸ்லிம்களே முஸ்லிம்களை கொலகிறார்,பாலியல் வன்புணர்வும் உண்டு.அதைக் கண்டித்து
    வினவு எத்தனை முறை எழுதியிருக்கிறார்.
    பாகிஸ்தானை விமர்சித்து நீங்கள் இதழ் தோறும் எழுதுவதில்லையே.ஏன்.

    உங்கள் அரசியல் மனிதாபிமான அரசியலும் அல்ல, வன்முறை எதிர்ப்பு அரசியலும் அல்ல.
    நீங்கள் அமைக்க விரும்பும் ஆட்சி சர்வாதிகார ஆட்சி, அதில் மனித உரிமைகளுக்கு இடமே இல்லை.

    பின் எதற்கு இத்தனை கூச்சல் போடுகிறீர்கள்.

    • அய்யா என்கவுண்டர்
      //நீங்கள் அமைக்க விரும்பும் ஆட்சி சர்வாதிகார ஆட்சி, அதில் மனித உரிமைகளுக்கு இடமே இல்லை.//

      எது சர்வதிகார ஆட்சி.இது சர்வதிகார ஆட்சிகிடையாதா? ஒரு நேர்மையான அரசியல்வாதியை எடுத்து காட்டுபார்க்கலாம்.நாட்டையே கூட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் நாய்களின் ஆட்சிதான் இது. இப்பொழுது நடைபெரும் ஓட்டுபொறிக்கிகள் ஆட்சி என்பது சிறிய அளவில் இருக்கும் முதலாளிகளுக்கும் பார்ப்பன,பனியாளுக்கு ஜனநாயகத்தையும்,ஏழைகள்,உழைக்கும் மக்களின் மீது சர்வதிகாரத்தை காட்டும் அரசாங்கம் தான் இன்றைய அரசாங்கம். உலகத்திலேயே வறுமையால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. இது எப்படிடா ஜனநாயகமாகும். நீ போய் ஜனநாயகம் என்றால் என்ன என்று திரும்பியும் முதல் வகுப்பில் இருந்து படித்துவா.
      மனித உரிமையைப்பற்றி இன்று இந்தியாவின் காடுகளில் போய் கேட்டுபாரு!காஸ்மீரில் போய் கேட்டுபாரு! வட கிழக்கு மாநிலங்களில் போய் கேட்டுபாரு! உங்க சர்வதிகார இராணுவசட்டத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகத்திலேயே 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துக்கொண்டுஇருக்கும் சர்மிளா சானு அவர்களிடம் போய் கேளு எது சர்வதிகாரம் என்று.

      • //உங்க சர்வதிகார இராணுவசட்டத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகத்திலேயே 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துக்கொண்டுஇருக்கும் சர்மிளா சானு அவர்களிடம் போய் கேளு எது சர்வதிகாரம் என்று.//

        இது போல் ஒருவர் போராடுகிறார் என்பது வெளியே தெரியும் அளவிற்கு இங்கு சுதந்திரம் உள்ளது! சர்வாதிகார சோவியத்தில், இப்படி இருந்தவர் எத்தனை பேரோ?

  26. புரிந்து கொள்ளக் கூடிய உங்களது ஆதங்கமும் கோபமும் அனைத்து இணைய மேல் தாவிகளுக்கும் (!) தேவையானது ஒன்று.

    எந்த ஒரு குற்றவாளியையும் இப்படி அவரசப்பட்டு சுட்டுத் தள்வதில் பல மர்மங்கள் மறைந்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதை நாம் புறந்தள்வது ஆகாது.

    நன்றி.

  27. (பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு)

    wow ithai ithai than etheirpaarthen nandri editor.

    ungalai maathiri pattavarkal kandipaaka intha pathivulakathirukku thevai .

    neengal innum ithaivida periya katuraikal elutha vaalthukkal.

    “” Ithe Seyal oru Yelai Kudumpathai serntha maanavakalukku , nadanthirunthaal evanum kandukka maatan. ippo nadanthathu oru panakaaran(ranjith, tholilathipar) ku nadanthavudan ellarukkum enna vesham poduranga . first ippadi patta pachonthikalai suttu kolla vendum .

  28. You people are talking about Low caste peoples. Go and check in south, what are the idiot and funny things happening. because of rules supporting only low caste peoples. I agreed about the MELA VAZHAVU murder have been done, after that Low caste peoples are doing what others done. do not support anymore to any community. Think all are HUMANS.

  29. சினிமாவையும், சீரியல்களையும் பார்த்து திசை மாறிப்போன (கோவை) மக்கள் குதிப்பதும் கூத்தாடுவதும் ஆக உணர்ச்சி மையத்தில் இருக்கிறார்கள்.உங்கள் குழந்தைக்கு இப்படி ஆகியிருந்தால்?என்கவு ன்ட்டர் -ஐ எதிர்ப்பவர்கள் கோவைக்குள்ளேயே வரமுடியாது, என்பதெல்லாம் இவர்களின் அறியாமையையே காட்டுகிறது.அதை அப்படியே திருப்பி போடுங்கள்? நீங்கள் இது போல ஒரு சூழ்நிலையில் மாட்டியிருந்தால் உங்களை போட்டுத்தள்ளிவிடலாமா?

  30. கட்டுரையாளரின் தார்மீகக் கோபம் புரிகிறது. தங்களின் கோபத்தோடு இணைந்து கொள்கிறேன்.

  31. நாங்கள் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லி விட்டீர்கள்.என்ன செய்வது விருமாண்டி படத்தில் மரணதண்டனை தவறு என்று கூற வந்து உன்னைப்போல் ஒருவனில் என்கவுண்டர் சரி என்று கூறிய உயர்ஜாதியினர் வாழும், அவர்களின் மீடியா சக்தி உள்ள நாடு இது. வெட்கித்தலை குனிவோம்.

  32. இந்த விடயத்தில் வினவின் பார்வை நூற்றுக்கு நூறு சரியானதே.
    காவல் துறை சட்டத்தை கையில் எடுத்துகொண்டு கொலைகள் செய்யலாம் என்றால் சட்டம் எதற்கு?
    இனிமேல் யாரவது கொல்லப்பட்டால் கொல்லப்பட்டவரின் அண்ணன் தம்பிகளோ உறவினர்களோ நண்பர்களோ யாரேனும் கொலையாளியை கொல்லலாமா? அது நியாயமென்றால் இதுவும் நியாயமே.

    காவலர் ஒருவரின் தொழில் அறம்

    நீ மனிதனல்ல போலீஸ்காரன்
    உனது நினைவில் இருக்கவேண்டியது
    உன் பெயர் கூட அல்ல உனது அடையாள எண் மட்டுமே
    உனது கண்களையும் காதுகளையும் கூர்மையாக வைத்திரு
    ஒரு உத்தரவு அல்லது விசில் சத்தம் கேட்டவுடன் சுடு
    உனது எதிரில் இருப்பது தாய்,தந்தை, குழந்தை, மலர் எதுவாகினும்
    அனைத்தையும் தரைமட்டமாக்கு
    எத்தனை தலைகளை கொய்தாய் என்பதைப் பொறுத்து
    உனது தகுதி தீர்மானிக்கப் படும்

  33. Good post…

    How many people are killed/raped by people in government? Why no one of them is killed by encounter. Anything done should be done through proper judicial procedure and not by guns and political decisions.

    In theory Indian law is good. We have to make it to practice. That is where we lag. No fake-encounter is justifiable.

  34. மோகன்கிருஷ்ணன்தான் உண்மையான குற்றவாளி எனும் பட்சத்தில் இந்த என்கவுண்டர் ஞாயமே,,அதை போலிஸ் செய்திருக்கிறதே ! ! !( இன்னுமா இந்த தமிழ்நாடு எங்களை நம்புது ) கண்டிப்பாக இது பணத்துக்காகவோ பத்விக்காகவொ செய்யப்பட்டவைதான்,,போலிஸ் இதை மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது மனசாட்சியின் அடிபடையிலோ செய்திருக்கும் என்று
    யாராவது சொல்ல முடியுமா,,குற்றவாளி உயர்ந்த நிலையில் இருப்பனாயின்
    அவனுக்கு வாலாட்டிவிட்டு எதிப்பவனை போட்டுத் தள்ளி இருக்கும்,,,
    அல்லது அப்பாவி யாரையாவது போட்டு த்ள்ளிவிட்டு பைலை மூடியிருக்கும்,,

    “”பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில்
    ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு? “”

    நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன் இந்த பதிவரின் பதிலை பாருங்களேன்

    “””ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

    இருந்துவிட்டால் ? – கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .

    இல்லாவிட்டால் ? – எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.””

    இவர் சொல்லும் ஞாயம் நன்றாக இருக்கிறதல்லவா ?
    அதாவது ஒரு வேளை செத்தவன் குற்றவாளி இல்லை எனும்பட்சத்தில்
    அவனின் இறப்பை நாம் இப்படி எடுதுக்கொள்ள வேண்டுமாம்
    எந்தபாவமும் அறியாத அவர் வீட்டை சேர்ந்த யாரையாவது போட்டு த்ள்ளி
    இருந்தால் அவர் இப்படி எடுத்துக்கொள்வாரா என்பதை அவ்ர்தான் சொல்ல வேண்டும்,,என்ன பதிவர்களோ ! ! !

    மற்றப்படி நீங்கள் எழுப்பும் கேள்வி ஞாயமானதே

  35. Dear Vinavu,

    I was expecting a more forceful article from you. I fully support you on this.

    I am not able to imagine how well educated people is supporting this act.

    கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?

    THE BIGGEST PROBLEM IS THEY DONT KNOW WHAT THEY ARE DOING/SUPPORTING

    –Sri

  36. பலவீனமான் சந்தர்ப்பங்களில் நியாயத்தை உறுதியாய்ப் பற்றி எழுதப்பட்டிருக்கும் சிறப்பன கட்டுரை. நன்றி.

  37. ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டதை ஆண்டுதோறும் வெடிவெடித்துக் கொண்டாடுவது கனிபாலிசத்திலும் கீழான செயல் என்று ஒரு நண்பர் எஸ்.எம்.எஸ் செய்திருந்தார்.

    பலர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

    முன்னது உறுத்தலை உணர்வது, கேள்விகுள்ளாக்குவது, விடை தேட முயல்வது, மாற்றத்தை விழைவது.

    பின்னதோ கேள்விக்கு இடமின்றி ஜோதியில் கலப்பது. பின்னதன் கூட்டமே பெருத்திருக்கிறது என்பது எதார்த்தம்.

    பழைய தீபாவளியில் கிருஷ்ண பரமாத்மா என்கவுண்டர் செய்தார். அன்று அவரே நீதி அவரே போலிசு. இன்று கோவையில் வாய்த்த புதிய தீபாவளிக்கு போலீசே கிருஷ்ண பரமாத்மாவோ?

    காரணம் எதுவானாலும், இங்கே சிலர் கேட்டிருப்பதுபோல், அது என் குழந்தைக்கே நடந்தாலும் என்கவுண்டர் போட்டுத்தள்ளல்கள் ஏற்புடையதல்ல. தீர்வுமல்ல. சொல்லப்போனால், தீர்க்க முடியாத பலவற்றுக்கு என்கவுண்டர்களால் திரையிடுகிறார்கள்.

    கதை முடிந்தது என்று பலமாய் கையைத் தட்டிவிட்டு, எழுந்து புட்டத்தையும் தட்டிக்கொண்டு பொழப்பப் பாக்கப் போகும் கூட்டத்துக்கு ஜோதியில் கலப்பதுதான் எளிதானது. எதிர்த்துப் பேசுவது எரிச்சலைத் தரும். அவர்களுக்கு வேண்டியது தீர்வு அல்ல, தீனி. தானே தின்னப்பட இருக்கிறோம் என்று அறியாத வென்னீர்த் தவலையில் மிதக்கும் ஆமையின் இளைப்பாறல், மகிழ்ச்சி.

    இப்படிப்பட்டவர்கள் அதோடு சேர்த்து இதையும் கொண்டாடட்டும்: கடந்த மூன்றாண்டுகளில் காவல் நிலைய சாவுகள் 6004 பேர் என்பது மக்களவையில் அறிவிக்கப்பட்ட இன்றைய செய்தி. அதாவது, நடு ரோட்டில் அல்ல காவல் நிலையத்தில் வைத்து என்கவுண்டர் செய்து தீர்ப்பு வழங்கி, வழக்கை விரைவாக முடித்திருக்கிறார்கள் போலீசுக் காரர்கள். எத்தனை தீபாவளிகளை மிஸ் பண்ணிவிட்டீர்கள் பார்த்தீர்களா?

    இந்தியனின் மனசாட்சி நன்றாகவே வளர்க்கப்பட்டிருக்கிறது. மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றமே நிரூபணங்கள், சாட்சிகள் இல்லாவிட்டால் என்ன இந்தியனின் மனசாட்சி போதாதா என்று தீர்ப்பெழுதிய நாடாயிற்றே. மிகப்பெரிய சவலைப் பிள்ளைகளின் கூட்டத்தையும், மிகப்பெரிய பட்டினிப் பட்டாளத்தையும் மட்டுமல்ல சிந்தனையில் சவலைகளாய் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயகத்தையும் கொண்ட நாடு அல்லவா இந்தியா.

    வாழ்க இந்திய ’ஜனநாயகம்’, வளர்க என்கவுண்டர்கள்.

  38. மோகன்ராஜை போலீஸ் போட்டு தள்ள மூன்று காரணம்,
    1 . சட்டமன்ற கூட்ட தொடர் கூடுவது.
    2 . ஜெயாவின் ஆட்டம்.
    3 . ராகுல் கோவை வரப்போவதாக வரும் வதந்திகள் ( இதன் பின்னணி ஜூவியில் ராகுல் செய்தி சேகரிப்பதாக வந்த செய்தி)

    என் சந்தேகங்கள்…
    1 . இன்னும் இரண்டு நபர்கள் தேடப்படுவதாக வரும் தகவல்கள் வழக்கை திசை மாற்றும் என்று தெரிகிறது.
    2 . பணத்துக்காக கடத்தி இருந்தால், பணத்தை கேட்டு ஒரு தொலை பேசி அழைப்பும் வரவில்லை ஏன்?
    3 . கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்ல ஒரு மணி நேரமாவது ஆகும், மேலும் போலீஸ் சொன்ன குற்றங்களை செய்ய குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். செல்பேசி IME நம்பரை வைத்து பிடித்ததாக கூறும் போலீஸ் அதை ஏன் கொலை நடந்த நேரத்திக்கு முன்பே செய்யவில்லை.
    4 . மனோகரனை பிடிக்க தாமதம் ஏன்?
    5 . இரண்டு நபர்கள் மட்டும் இத்தனையும் செய்ய வாயப்பு உள்ளதாக தெரியவில்லை. மோகன்ராஜ் உயிரோடு இருந்தால் மற்றவர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம்.

    இறுதியாக,
    மனோகரனுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாம், விரைவில் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வரும். கோவையிலிருந்து வேலன்.

  39. போலீஸ் போட்டு தள்ளவேண்டிய ஆட்கள் லிஸ்டும் காரணமும்
    1 . ஜெயந்திரன் – மாமிகளை கொடுமை படுத்தியது, சங்கரராமனை போட்டது.
    2 . விஜெயந்திரன் – ஹோமே செக்ஸ் காரணமாக இரண்டு சிறுவர்களை கொன்னது. (பார்க்க நக்கீரனின் அப்போதைய இதழ். அதன் பிரதி இருந்தால் தோழர்கள் ஸ்கேன் செய்து pdf வெளியிடவும்.)
    3 . அட்டாக் பாண்டி அண்ட் கோ – தினகரன் அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்னது.
    4 . ஜெயா அண்ட் கோ – மகாமக வதம்.
    5 . கோவை இந்து முன்னணி கும்பல் – குண்டு வெடிப்பின் போது கோவை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முன்பாக சிலரை எரித்து கொன்னது.
    6 . அப்போதைய B -1 இன்ஸ்பெக்டர் முரளி – கோட்டை மேட்டில் பேசிக்கொண்டு இருந்த இளைஞர்களை கலைந்து போக கோராமல் சுட்டு கொன்றது.

    என் நினைவுக்கு எட்டிய மட்டும் வரிசைபடுத்தியுள்ளேன் தோழர்கள் இந்த பட்டியலை தொடரலாம்.

    • இதெல்லாம் நல்ல நினைவுக்கு வரம் ஆனா கோயமுத்துருல குண்டு வச்சவன் பத்தி நினைவுக்கு வராது…. சபாஷ்!

  40. இ‌து எலக்சன் நேரம்.மீடியாக்கள் இதை உணர்வு பூர்வமாக மக்களிடம் கிளறி விட்டார்கள். ஜெயலலிதா வேறு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது எ‌ன்று கத்த ஆரம்பித்தார். காவல்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் தமிழக முதல்வர். என்கவுண்டர் மூலம் இழந்த மதிப்பும், சட்டம் ஒழுங்கும் மீண்டும் நிலை நாட்டப்பட்டுள்ளதாக ஒரு மாயை தமிழகத்தில் எழுந்துள்ளது. அதாவது இந்த என்கவுண்டர் மூலம் மக்கள் அந்த இளம்குழந்தைகளின் கொலைகளை மறந்துவிட்டார்கள். ஒரு பிரச்சினையை தீர்க்க இன்னொரு பிரச்சினையை உருவாக்கு, அல்லது பிரச்சினையை எழுப்பியவனை தீர்த்துக்கட்டு.ஒருபோதும் பிரச்சினைகளை மட்டும் தீர்த்துவிடாதே. அதுதான் அரசியல் சாணக்யம்.

  41. நாட்டில் எத்தனை கொலைகள் நடந்துள்ளது? அப்போதெல்லாமா மக்கள் இத்தனை ஆவேசப்பட்டார்கள்…? இல்லை. ஏனெனில் இது மேண்மக்களின் சோகம்!

    மீடியாக்கள் இது போன்ற பொதுக்கருத்தை உண்டாக்கப் பார்க்கும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே உயர்நடுத்தர வர்க்க அல்லது பணக்கார் வர்கத்தினராகவே
    இருப்பது தற்செலயானதாக எனக்குத் தெரியவில்லை. சரிகாஷா ஆகட்டும் ஜெஸ்ஸிகா லால் ஆகட்டும்; நமது மனிதாபிமானம் ஏன் செலக்டிவாக வேலை செய்கிறது?

    வில்லவனின் கட்டுரையில் கடைசி பத்தியில் அவர் எழுப்பியிருந்த கேள்வி மிகவும் அர்த்தமுள்ளது.. நடந்துள்ளது சந்தேகமில்லாமல் ஒரு பெரும் குற்றம் தான். அந்தப் பெற்றோரின்
    துன்பம் ஈடு செய்யவியலாத துன்பம் தான். ஆனால், ஒன்றை யோசித்துப் பாருங்கள் நண்பர்களே… இது சட்டென்று ஒரு நாளில் கடந்து போய் விட்டது ரஞ்சித் சேட்டுக்கு. இதே
    மத்திய இந்தியாவில் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சதை உருகி, எலும்பு உருகி, மெலிந்து போய்.. கண்கள் வெளியே தள்ளி… வயிறு ஒட்டி.. எலும்புகள் துருத்திக் கொண்டு
    தெரிய.. தம் தாய் தந்தையர் கண் முன்பாகவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் மடிந்து போகிறார்கள்… “உணவு தானியங்கள் கிடங்குகளில் வீணாய்த் தான் போகும். அது எங்கள்
    அரச கொள்கை” என்று முழங்குகிறார் ஒருவர்.

    அய்யா மனிதாபிமானிகளே….. இதுவும் கொலை இல்லையா? இதற்கும் நீங்கள் இறங்க மாட்டீர்களா?

    From the article…

    //கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?//

  42. வினவின் கட்டுரையை வழிமொழிகிறேன் ……….!!!!!enconter தான் தீர்ப்பு என்றால்
    பணம் இருப்பவனிடம் இது செல்லுபடி ஆகுமா ….தினகரன் பத்திரிகையில் வேலை
    செய்தவர்கள் குடும்ப சண்டைக்காக கொன்றார்களே அவர்களிடம் செல்லுபடியாகுமா ?????
    ஜெயந்தரனிடம் செல்லுபடியாகுமா ???? இல்லை மேலவளவில் செல்லுபடியாகுமா ??????
    தோழர் லீலாவதியை கொலை செய்தார்களே அங்கே செல்லுபடியாகுமா ??????

  43. மனித உரிமை மசிறு உரிமை எல்லாம் கொடூரமான கொலையாளிக்குத்தானா, அந்த அப்பாவி குழந்தைகள் உயிர் வாழ உரிமையில்லையா. அவர்கள் பணக்கார வீட்டு குழந்தைகளாகவே இருக்கட்டும், rose is always rose தானே.

    அவனை என்கவுண்டர் செய்த்தை பற்றி அவனுடைய மனைவியும் தகப்பனாருமே கவலைப்படவில்லை, அதுவே இந்த என்கவுண்டரை நியாயப்பதுத்துகிறது.

  44. வினவு தோழர்களுக்கு,
    இந்த என்கவுண்டர்,சரியா?போலிஸ் அராஜகமா?என்பதெல்லாம் வேறு.அறியப்பட்ட செய்திகளில் இருந்து விசாரணை சரியாக நடந்துள்ளதாகவே தெரிகிறது.கடத்தியவன்,குறுகிய காலம் அந்த கால் டாக்ஸி ஓட்டியவன் என்பதும்,அதனாலேயெ,அந்த குழந்தைகள் நம்பி ஏறியுள்ளதும்.8 மணிக்கௌ கடத்தியவன்,11 மணிக்குள்ளாக பாலகனை வன்புணர்ந்து கொன்றிருப்பதும்.உண்மையாகவே உணரமுடிகிறது.இதில் உண்மை குற்றவாளி தப்பி இருக்கலாம் என்ற எண்ணமும்,போலிஸ் அடியில் அவன் ஒத்துகிட்டு இருக்கலாம் என்பதும்,அதீத கற்பணையே.இதை எல்லா வழக்குகளுக்கும் பொருத்தலாம்..

    தாங்கள் சுட்டிகாட்டும் இந்தியாவின் பல்வேறு கொலைகளும்,அதற்கு ஏன் இது போல் தண்டனை குடுக்கப்படவில்லை என்பதும் சரிதான்.

    சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது குற்றம் நிரூபிக்கப்பட்டும்,அவன் தண்டிக்கப்படாமல் இருப்பதும்,5 அல்லது 10 ஆண்டு ஜெயிலும்,எதற்கும் உதவாது,இத்தகு குற்றத்தை செய்து விட்ட ஒருவன் வாழ தகுதியற்றவன் என்பதே என் கருத்து.அவனுக்கு,,இந்திய நீதித்துரையால் தண்டனை கிடைக்கும் என்பது பகல் கனவே…

    நான் ஒரு முஸ்லீம்.எங்களுக்கு இந்தியாவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அநீதிகள் மூலம்,சமீப பாபர் மசூதி—தப்பு த்ப்பு,ராமர் கோவில் தீர்ப்பு வரை,நாங்கள் இந்திய நீதித்துறையில் நம்பிக்கை இழந்து வருடங்கள் ஆகிரது,,,

    இந்த நிகழ்வை கொண்டு,அவனது மனைவியும்,இந்த சமுதாயம் தங்களை ஏற்க வேண்டும் என கதரியுள்ளாரே தவிர,அவன் அப்பாவி,போலிஸ் கொன்றுவிட்டார்கள் என சொல்லவில்லையே….

    தண்டனைகளில் பாகுபாடு உண்டுதான்.மறுக்க முடியாது,,,இதுவே சமவசதி கொண்ட தொழிலதிபர் செய்து இருந்தால் இதே தண்டனை கிடைக்குமாஎன நாம் எதிர் பார்க்க முடியாது,

    ஆனால் பிஞ்சுகளை குதரியவன்,யாராக இருப்பினும்,,இப்படிப்பட்ட தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அது நிகழாத போது,,,”நம்ம நாடு இப்ப்டிதானே.எங்க வெளங்க போகுதுன்னு,திட்டிடு போயிடுவோம்”அது எங்காவது நடக்கும் போது….அத்துனைக்கும் கிடைக்காத நீதி கிடைத்துவிட்டதுபோல் மகிழ்கிறோம்..அவ்வளவே…

    இதனால் இன்னும் தவறு செய்ய யோசிப்பவர்கள் சற்றே பின்வாங்களாம்…அதனால் 4 பேர் திருந்தலாம்,4 பேர் காப்பாற்றப்படலாம்…

    தண்டனைகள் கடுமையானால் தவறுகள் குறையும் எனபதில் மாற்றுக்கருத்து இல்லை…

    அது முஸ்லீமானாலும்,சரி,பார்பானானாலும் சரி,மாவொயிஸ்டானலும் சரி…தவறு நிரூபணமானால்,வெட்டி வீசிப்பாருங்கள்….அடுத்தவன் தப்புபண்ண யோசிக்கிறானானான்னு பாப்போம்….

  45. Mandai kolambuthu… if we hand over him to judicial which will protect him for next 5 yrs and even death penalty also he can appeal and make it for next 5 yrs.. sari encounter pannarah policeaa paratinalum thappu… neethiyin padi padiyil partha sarinu thonuthu but ithe mathiri ellorkum neethi kedachathana illai….

  46. உண்மையான ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோர் சிந்திக்க வேண்டிய பதிவு. பாராட்டுக்கள்.

  47. மக்களுக்காக தான் அரசாங்கம், காவல் துறை, நீதி மன்றம். இந்த என்கவ்ண்டேரால் மக்களே மகிழ்ச்சியில் தான் உள்ளனர், நாம் மட்டும் ஏன் கட்டுரை எழுதி கொண்டு இருக்க வேண்டும்.

  48. பள்ளி குழந்தைகல் கடத்தி கற்பழித்து மிக கொடுரமான முறையெல் படுகொலை செய்த
    கொடூர மோகனை (மோகன் ராஜ்) விசாரிக்க
    இன்று காலை 5 .00 மணிக்கு கொன்று சென்ற போது
    …இன்ச்பெச்ட்டர் ராய் தாக்கி தப்ப நினைத்த போது போலீஸ் என்கோன்ட்டர் முலம்
    சுட்டு கொன்றது. இந்த செயலை போது மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றனர் . இதுதான் இன்று மாலை வர இருக்கும் பத்தரிகை செய்தி .

    எல்லாம் என்குன்ட்டர் கொலைகளும் மக்களுகாக நடந்தது இல்லை, அனால் இன்று நடந்த என்குன்ட்டர் மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்று மக்கள் யாரும் எண்ணி மகிழ்ச்சில் திளைகாதீர்கள்.

    இவன் ஒருவனை கொன்றதால் இந்த சமூகத்தில் இனி இது போல் வேறு சம்பவம் நடக்காது என்று யாரேனும் ஒருவர் உறுதியாக கூற முடியுமா?

    இது
    தான் சரியான தீர்ப்பு என்று துள்ளும் நடுத்தர வர்க்கம் (அதாவது காலை 6
    மணிக்கு எழுந்து பால் வாங்கி கொடுத்து, எதோ ஒரு சமையல் செய்து
    8மணிக்குல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு 10மணிக்குல் அலுவலகம்
    சென்று மதியம் 2மணிக்குல் மதிய சாப்பட்டை முடித்து மாலை 6மணிக்குல்
    வீட்டுக்குள் சென்று இரவு 10மணிக்குல் படுக்கைக்கு சென்று விடும் எதுவும்
    அறிய மற்றும் அறிய விரும்ப வர்க்கம் ) ரொம்ப துல்லாதிங்க நீங்க உட்காரும்
    ஷேர் உடைந்து விட போக போகிறது.

    இதிலும் கருத்து கூற
    ஆரம்பிச்சுடாங்க என்று கணினில் இருந்து உலகை பார்க்கும் கணினி வர்க்கம்
    எல்லாரும் கொஞ்சம் நிதானமாக என்னுடைய கருத்தை கொஞ்சம் கேளுங்கள் (அதற்க்கு
    முன் ) இந்த மோகன் செய்த கொலையை நான் ஒரு போதும் ஆதற்றிக்க மாட்டேன், அவன்
    செய்தது ஒரு கொடுரமான செயல் தான் அதில் எனக்கு எந்த விதமான மாற்று
    கருத்துகளும் கிடையாது.

    கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் அப்பாவிற்கும் -கார் ஓட்டுனருக்கும் முதலில் அவர்களின் வீடுகளில் வைத்தே சண்டை நிகழ்ந்துள்ளது.
    தான்
    வண்டி ஒட்டிய பணத்தை (வாடகை) தராமல் இழுத்தடித அவரை பழிவாங்கும்
    எண்ணத்துடன் காத்திருந்தான் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி,
    குழந்தைகளை கடத்திய பிறகு, என்ன செய்ய வேண்டும் யோசிக்காமல்
    கடத்திவிட்டான், போலீஸ் துரத்துகிறது என்ற நியூஸ் அவனை மேலும் பயத்தை
    அதிகரித்தது, வேறு வலி இல்லாமல் அந்த குழந்தைககை கொடுரமான முறையில்
    கொன்றுவிட்டான் அந்த கொடூரன். அதற்கு பின் பத்திரிகை செய்தி எவ்வளவு தூரம்
    அந்த குழந்தைகளை கொடூரமாக கொன்றானோ அதை விட அந்த குழந்தைகளின் கொலைகளின்
    மரணத்தை வைத்து வியாபாரம் செய்தனர், அந்த சிறுமியை சரமாரியாக
    கற்பழித்தான், தன் இன்ப வெறி தீரும் வரை கற்பழித்தான் என்று மிகவும்
    செய்தியை மிக மோசமாக வெளிட்டனர். மக்கள் மனதில் ஒரு கோபம் வெளி பட்டது .
    எல்லோரும் அவனை சிக்னல் வைத்து துக்கில் போட வேண்டும் என்றன. விசாரணை
    வேண்டாம் அவனை சுட்டு கொள்ளுங்கள் என்றன.

    இப்போது போலீஸ் அவனை
    சுட்டு கொன்றது. இதன் முலம் ஒரு பத்திரிகை மட்டும் வைத்து இருந்தால்
    மக்கள் மனதில் கோபத்தை உண்டாக்க செய்து எவனை வேணும்னாலும் போலீஸ் மூலம்
    கொலை செய்ய முடியும் என்பது இப்போது நிரூபணம் ஆகிஉள்ளது.

    மோகன்
    ஒன்றும் முழு நேர கம வெறியன் கிடையாது. முழு நேர கொலை செய்பவன் கிடையாது.
    ( அப்படியே இருக்கிண்ட வர்கள் இன்னும் இருக்கிண்டர்கள் அரசியல்
    பாதுகாப்பில் ) ஒரு சந்தர்ப்பம் அவனை கொலை செய்ய துண்டியது. அந்த
    சந்தர்ப்பம் இந்த சமுதயத்தில் புரையோடி கிடக்கும் மனிதனின் எல்லோருதமும்
    இருக்கிறது. ஏற்ற தாழ்வும் இருக்கும் வரை அது தொடரும். அது வரை இப்படி தான்
    நடக்கும்.

    மோகனை கொன்றது மூலம் எல்லோருக்கும் பயம் வரும் என்று யார்ரும் நினைத்து விடதிரிகள். நீங்கள் செய்யாத குற்ற திற்கும்
    இனி என்குன்ட்டர் நடக்கும். எவனும் கேட்க முடியாது ஏன் என்றல் பத்திரிகை உங்களை நார் நாராக செய்திகளின் முலம் கிளிதிரும்.

    1997
    கோவை கலவரத்தில் மருத்துவமனை முன்பு ஒருவனை மத வெறியர்கள் தீயட்டு
    கொளிதினர்ர்கள் அதை போலீஸ் வேடிக்கை பார்த்தது. அப்பொழுது அவர்கள்
    துப்பாக்கி என்ன ஆனது.

    மதுரையேல் குடும்ப சண்டை காரணமாக முன்று பேர் எரித்து கொண்டார்கள். அப்போது எங்க போனது மக்களின் கோபம்.

    இதே மோகன் ஆளும் கட்சில் இருந்திர்ந்தல் இப்படி நடந்திருக்கும ?. அல்லது பெரிய பணக்காரன் நக இருந்திர்ந்தல் நடந்திருக்கும ?

    இதை
    விட குற்றம் செய்தவர்கள் இன்னும் இருகிறங்கள். அவர்கள் செய்த குற்றம்
    எல்லோரும் மறந்து விட்டார்கள் (உதாரணம் கும்பகோணம் தீ விபத்து . அப்போது
    தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்தது. இப்ப என்ன ஆச்சு. )

    தன் குழந்தைகலை பள்ளிக்கு அழைத்து சென்று விட முடியாத அளவிருக்கு இந்த போட்டி சமுதாயத்தில் போட்டி போடும் அப்பாக்கள்
    இப்போது தாங்களே பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுக்கு கொண்டிருகிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியவிள்ளை .

    ஒரு மோகன் செத்து விட்டன இன்னும் பல மோகன் இருக்கிறார்கள் எல்லோரை கொன்று விட்டால் இனி நியூஸ் கிடைக்காது. மீண்டும்
    புதிய மோகனை இந்த மீடியா உருவாக்கும்.

    இந்த போலி ஜனநாயகம் இருக்கும் வரை அது நடக்காது. இவர்களை முதலில் விரட்டியடிப்போம்.

    நாம் வீட்டை நாம் ஆளுவதை போல இந்த நாட்டை நாம் ஆளா வேண்டும் .

  49. உழைக்கும் மக்கள் மீதான வன்முறை ஏவி விடும் அரசு, அம்மக்களுக்கு எதிரான பொதுபுத்தியை அவர்களிடமே உருவாக்குகிறது. இதில் பத்திரிக்கைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மோகன்ராஜ் என்கவுன்ட்டரை கொடுரன் கொலை என பரவசப்படுகிறது காலைக்கதிர், கலிகால நரகாசுரன் இறந்தான் என எழுதுகிறது அறிவுப்பூர்வமாக (!)மாலைமலர் எழுதுகிறது. மோகன்ராஜ் மட்டும்தானா கொடுரன்? என்று கேள்வி எழுப்ப இந்த மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு துப்பில்லை,
    பாலியியல் கொடூரங்களுக்கு புகழ் பெற்றதே போலிசு துறைதான், வீரப்பன் தேடுதலில் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை பாலியியல் வன்புணர்ச்சி செய்த போலிசுக்கு பதவி உயர்வு பரிசாக கிடைத்தது, கேடி மோகன்ராஜீக்கு துப்பாக்கி குண்டுகள், மோகன்ராஜ் சீருடை போட்ட கேடியாக இருந்திருந்தால் அவனுக்கும் பதவி உயர்வு கிடைத்திருக்கும்.

    பத்திரிக்கைகள் லாக்அப் டெத்துக்கும் அங்கிகாரம் வழங்க சொன்னாலும் ஆச்சரியமில்லை. மக்களுக்காக போராடும் போராளிகளை அவன், இவன் என எழுதும் பத்திரிக்கைகள், விபச்சாரிகள் கைது செய்யப்படும்போது அழகிகள் கைது என ஜொள்ளு விடுகின்றன. மொத்தத்தில் மக்களுக்கு எதிரான கருத்துக்களை (பொது புத்தி) மக்களிடமே உருவாக்குவதுதான் இந்த மஞ்சள் பத்திரிக்கைகளின் பணி. இதற்கெல்லாம் குரு வேறு யாருமல்ல திருட்டுவாளர் காந்திதான்.

  50. வினவுக்குப் பாராட்டுகள்.
    வழக்கம் போலவே இந்த சமுதாயத்தில் முட்டாள்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் தேவையற்ற அனுதாபத்தோடும் தேவையற்ற கொந்தளிப்போடும் மக்கள் கருத்துக்கூறும் பொழுதும் மிக சரியான கருத்துகளைப் பதியும் வினாவுக்குப் பாராட்டுகள். பதிவர்கள் புரிந்துகொள்ளட்டும் நாம் கொலைகாரனுக்கு ஆதரவாளர்கள் அல்ல மாறாக எந்த சூழலில் அது யாரார் மீது மட்டும் நடத்தப்படுகிறது மற்றும் எப்படிப்பட்டவர்களால் நடத்தப்படுகிறது என்பதுதான் கவனிக்கப்படவேண்டும். கண் முன்னே கொலை செய்பவனைப் பார்த்தால் கூட கண்டுகொள்ளாமல் செல்பவர்கள்தான் ரொம்பவும் கொதிக்கிறார்கள். ஏன் பேருந்திலோ தெருவிலோ நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கூட தட்டிகேட்க தயங்குபவர்கள் தான் இன்று தாண்டவம் ஆடுகிறார்கள். அதிலும் இந்த சூதாட்டம் கருத்து சொன்னாலே நமக்கு குமுறிக்கொண்டுதான் வருகிறது.
    தங்களின் துணிச்சல் மிக்க பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

  51. அம்பிகாவை துடித் துடிக்கக் கொன்று அந்தக் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் உயிரை அழித்த நோக்கியா முதலாளித்துவத்தை என்கவுண்டர் செய்யனம்னு கோயம்புத்தூர் என்கவுண்டருக்கு நீதி நிலைநாட்டப்பட்டதுன்னு குதிச்ச எந்தப் பயலும் சொல்லலையே ஏன்?

    அம்பிகாவின் உயிர் எந்த வகையில் குறைவு அல்லது மோகன்ராஜ் என்ற கிரிமினலை விட எந்த வகையில் நோக்கியா நல்லவர்கள்?

    பதிவுலக மனிதாபிமானிகள், ‘ரொம்ப’ நல்லவர்களின் கருத்துக்களை அறிய ஆவலுடன்

  52. வினவு – ஒரே கேள்வி. இதே குற்றத்தை, ஒரு தலித் ஏழைக்கேதிரா, ஒரு பணக்கார கவுண்டரோ இல்லை மார்வாடியோ செய்து, இதே தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், இப்படி ஒரு கட்டுரையை எழுதியிருப்பீர்களா? ஏன் கேக்குறன்னா, இதுக்கு முன்னாடி ஒரு கட்டுரையில வெள்ளைக்காரன் மட்டும் தான் ஏழைகளை வன்புணர்வு பண்ணுவான்னு வினவு பொங்கி எழுந்திருந்ததா ஞாபகம்.

    பூவரசி செய்த கொலையில் கோபமும் வன்முறையும் இருந்தது. ஆனா இந்தக் குற்றத்தில் தெறிப்பது வக்கிரம்.

    என்னைக் கேட்டால், இந்தளவு மனம் குன்றிப் போனவன் எவனாயிருந்தாலும், எந்த சாதியாயிருந்தாலும், சுட்டுக் கொல்வதே சரி என்பேன். அந்த சிதம்பரம் லாக்கப் போலீசாளுக உட்பட.

  53. வினவு கும்பல் சார்களே…
    பக்கம் பக்கம் எளுதுங்க… ஆனால் மனசாட்சின்னு ஒன்னு இருந்தா உண்மைய சொல்லுங்க… இந்தக் கொலைய கொண்டாடுனது மார்வாடிங்களா… times now, ndtv hindu tv போன்ற பல செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் பேசியது அனைவரும் பச்சை தமிழர்களே.. உம் கோவை மகஇகவிடம் கேட்டு செய்தி சேகரியும்… வக்கீல்களின் போராட்டத்தையும் அதே மககள்தான தடுத்தார்கள்… அவர்கள் மார்வாடிகளோ மாமிகளோ கிடையாது.. நன்றாக அந்த காட்சி டேப்பை போட்டுப் பாரும்… பொய்யைச் சொல்லி என்ன பயன்…- இது கடைந்ததெடுத்த திசைதிருப்பும் அரசியல் வாதி வேலை… கசப்பாக இருக்கிறது….

  54. வினவுக்கு எதிராக பின்னூட்டம் இடுபவர்கள் கவனிக்கவும்..
    வினவு ஒரு உயர்ந்த லட்சிய கொள்கைகளை கொண்டுள்ளது என்பதை புரியாமல் உளறிக் கொண்டிருக்கிறீர்கள். அவை

    1. பிராமணாள் ஒழிக்கப் பட வேண்டியவர்கள்

    2. இந்துக்கள் எல்லோரும் அழிக்கப் படவேண்டியவர்கள்

    3. தலித் தவிர மத்த ஜாதிக்காரர்கள் எல்லோருமே கெட்டவர்கள்

    4. இந்தியா போன்ற ஒரு கேவலமான நாடு இனிமேலும் நீடிக்க கூடாது. ரசியாவோ சீனாவோ இந்தியாவை அடிமைப்படுத்த வேண்டும்

    அதுவரை எங்கள் போராட்டம் நிற்காது.. நிறுத்தவும் முடியாது.

    வாழ்க ரஷ்யா.
    வாழ்க சீனா
    வாழ்க லெனின்
    வாழ்க ஸ்டாலின்
    வாழ்க மாவோ

    • அய்யா வினோத், வினவை பற்றி எப்படி அவ்வளவு துல்லியமாக அறுதியிட்டுச் சொல்கிறீர்கள்? சரி சரி மிக எச்சரிக்கையாக இருங்கள். ஏன்னா ஒருவரை அவர் வெளிப்படுத்தும் கருத்தியலிலிருந்து புரிந்துகொள்வதற்கு மாறாக நமது அனுமானத்திலிருந்து புரிந்துகொள்ள முற்பட்டால் அது சைக்கோ நோய்க்கான அறிகுறி.

      • அதெல்லாம் இல்ல மணி கண்டன்… பாத்தாச்சு,,, அருந்ததிராயின் ஸ்டாலின் மாவோ கண்ணோட்டத்தை எடிட் பண்ணித்தான் வெளியிடுவாங்க.. தப்பி தவறி முசுலீம் தீவிரவாதத்தை ஒன்னும் சொல்ல மாட்டாங்க… ஏன்னா முற்போக்கு பட்டம் போயிறுமே… முடிஞ்சவ வரைக்கும் தன்னுடைய கொள்கைக்காக நியாயம் வேறு எங்கும் இருந்தாலும் அத கண்டுக்க மாட்டாங்க.. அப்படி கண்டுக்கிட்டுத்தான் ஆவனும்னா அதுக்கு வேற பட்டம் கொடுப்பாங்க… ஒரு வகையில ஆளும் வர்க்கம் என்ன பண்ணுமோ அத இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க.. இவங்க தலையேற்ற என்ன பண்ணுவாங்களோ….

      • கருத்தில் இருந்து ஒருவரை அனுமானிக்க அவருடைய கருது குழப்பம் இல்லாததாக இருக்கவேண்டும்.
        நடு இலையுடன் இருக்க வேண்டும் . இதை வினவிடம் எப்படி எதிர்பார்ப்பது? எனவே தான் நம் அனுமானத்தின் மூலம் அவர்களை அணுக வேண்டிய அவசியம்
        இது சைகோ என்றால் , வினாவை என்ன வென்று சொல்வீர்கள்

  55. உண்மையிலே என்ன நடந்தது என்பது தேவையற்ற தாகி இருக்கும் சூழலில் மிக்க சிறப்பான கட்டுரை//

    சொத்துக்காக பெரியவர்கள் , குழந்தைகள் உட்பட 6 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் வீரபாண்டி ஆறூமுகத்தின் தம்பி மகன் இப்போதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு என் கவுண்டர் கிடைக்குமா? அவருக்கு எதிராய் மூச்சு விட்டால் கூட பதவியே போய் விடும். இன்னும் இருவர் கைது செய்யப்பட வேண்டும் என்று முன்பு சொல்லி இப்போது மோகன் ராஜ் கொல்லப்பட்டவுடன் எப்படி அவர்களை கண்டு பிடிப்பார்கள் போலீசு ஸ்காட்லாந்துக்கு இணாஇயான இவர்கள் எதையும் கண்டறிவார்கள்.

    கலகம்

  56. ” ஜோசப் கல்லூரி வாயிலை மூடி பூட்டுப் போடும் போராட்டத்தைத் திடீரென நடத்தினர். ம.க.இ.க. மாவட்டச் செயலர்”
    “” கல்லூரிக்குள் நுழைந்து அதன் வாயிலுக்குப் பூட்டுபோட முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்”
    https://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/

    சைலேந்திர பாபு செய்தால் மனித உரிமை மீறல் .
    நீங்கள் செய்தால் “மனித சக்தி “

  57. மனித உயிர் மிக விலைமதிப்பற்றது அரசுக்கு வரும் நெருக்கடிகளை தவிர்க்க அரசு இவ்வாறன நடவடிக்கை எடுப்பது தன் வினை தன்னை சுடும் என்பதை தெரியாமல் மற்றொரு உயிரை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை

    நக்சலைட்டுகளிடம் காசு வாங்கிக் கொண்டு, மனித உரிமை பேசுகிறார்கள் என்பது தகப்பன் பேர் தெரியாதவன் சொல்வது நாளை ஆதிக்க சக்திகளின் ஆட்டத்தில் துப்பாக்கி இவர்களை நோக்கி திரும்பாது என என்ன நிச்சயம்

    ஒரு வேளை நக்சலைட்டுகளிடம் மனித உரிமை அமைப்புகள் காசு வாங்கிக் கொண்டு செயல்பட்டாலும் அது பெருமைக்குரிய விசயம் நக்சலைட்டுகள் அநிதிக்கு எதிராக போரடுபவர்கள் அல்லாது மக்களை சுரண்டுபவர்கள் அல்ல மக்கள் உரிமைக்காக போரடுபவர்கள்

    காலம் சக்கரம் போன்றது ஒரு நாள் உண்மைகள் வெளி வரும் அன்று இனிப்புக்கள் தின்ற வயிறுகள் வெடித்து சிதறும் தங்களது தவறுகளை மறைக்க செய்யும் கொலைகளின் பழி தங்கள் சந்ததிகளை வந்து சேரும் என நினைவிருந்தால் சரி

  58. this essay raise so many valuable question- no one can answer it- because there is no answer for it. only a human can understand it.

    our Tamil society highly caste based-one.
    All Tamil people are welcomed this encounter, because the affected party is the north Indian, he has no caste. so they are ready share the sorrow of the family.
    here no one has common interest, common judgment power. they have only caste based thinking.
    if we have no faith in present criminal justice system, it is proper to change the law itself.
    even the killer of the Gandhi was not killed by encounter.
    it is clear -we have -some dangerous cancer in the mind of Tamil society.

  59. 70 களின் இறுதியில் நான் பள்ளிச்சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த இது போன்ற ஒரு நிகழ்வை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் நாற்பது வயதை கடந்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளவும் இங்கு பதிவு செய்கிறேன்.

    அப்போது தில்லியில் இரண்டு பள்ளி மாணவிகளை பணம் பறிக்கும் நோக்கில் கடத்தி கொலை செய்து விட்டனர் பில்லா, ரங்கா என்ற இரு கயவர்கள்.கொலை நடந்து ஒரு சில மாதங்களில் கொலையாளிகளை காவல் துறையினர் கைது செய்து விட்டனர்.அது பற்றிய வழக்கு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    எங்கள் வீட்டில் நாள்தோறும் தினமணி நாளிதழ்தான் வாங்குவார்கள்.அதுதான் ”தரமான”நாளிதழ் என்பதில் எங்கள் தந்தைக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. நாங்கள் ‘கன்னித்தீவிற்காகவும்’ எந்த எந்த திரையரங்குகளில் வசந்த மாளிகையும் நாளை நமதேவும் எத்தனாவது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற வரலாற்றில் தனி இடம் பிடிக்கும் செய்திகளுக்காகவும் தினத்தந்தி வாங்க வேண்டும் என எவ்வளவுதான் போராடினாலும் எங்கள் தந்தையின் தரத்தின் மீதான பற்றுக்கு முன் நாங்கள் தோற்று போனோம்.எனவே நாள்தோறும் சற்று தொலைவில் இருந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
    அந்த பழக்கம் சற்று பெரியவன் ஆனபோது அந்த கடைக்கு அருகில் இருந்த ”அறிஞர் அண்ணா படிப்பகத்துக்கு”சென்று முரசொலி படிப்பதும் அங்கு இருக்கும் பெரியவர்கள் பேசுவதை கேட்பதும் எதிர் வரிசையில் இருந்த ”சிவாசி ரசிகர் மன்றத்துக்கு”(அங்கும் செய்தியேடுகள் இருக்கும்.பெயர் நினைவில்லை) போய் அங்கு நடக்கும் உரையாடல்களை கேட்பதுமாக நீண்டது.

    பில்லா,ரங்கா செய்த கொடூர கொலைகள் பற்றி இப்போது கோவை கொலைகளை தொடர்ந்து மக்களிடம் எழுந்துள்ள சினத்திற்கு எள்ளளவும் குறையாத அதிர்ச்சியும் ,சினமும் இந்தியா முழுவதும் ஏற்பட்டது. பலியான அந்த இளம் குருத்துகளுக்காக நாடே வருந்தி கண்ணீர் வடித்தது என்று கூட சொல்லலாம். மிகையாகாது.படிப்பகத்திலும்.மன்றத்திலும் இருக்கும் அண்ணன்கள் கண்ணில் பில்லாவும் ரங்காவும் தென்பட்டார்கள் என்றால் அவர்களை அடித்தே கொன்று விடுவார்கள் என்று எனக்கு தோன்றும்.அந்த அளவுக்கு அந்த வழக்கு பற்றிய செய்திகளை படிக்கும் போதும்,படித்து முடித்த பின்னரும் கடும் சினம் தெறிக்க பேசுவார்கள்.

    வழக்கு தொடர்ந்து நடைபெற்று அந்த கயவர்கள் இருவருக்கும் சாவு தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

    அதன் பின் தமிழகத்தில் நடந்ததுதான் குரூரமான நகைச்சுவை. பில்லா,ரங்கா என்ற அந்த இரு கயவர்களுக்கும் கிடைத்திருந்த எதிர் மறை புகழையும் காசாக்கி கொள்ளும் கயமையில் இறங்கினர் ஆபாசத்தையே வணிக பொருளாக கொண்ட திரைத்துறை கழிசடைகள்.ரசினிகாந்த் கதாநாயகனாக நடிக்க ”பில்லா”என்றும் ”ரங்கா”என்றும் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து கயவர்கள் மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படும் ஆத்திர உணர்வை மளுங்கடித்தன.இன்றோ
    ”பில்லா ரங்கா பாசாதான்”பிஸ்டல் பேசும் பேசாதான்”
    என்று ஏதோ விடுதலை போராட்ட வீரர்களின் பெயர் போல் பில்லா,ரங்கா என்ற அயோக்கியர்களின் பெயர் பாடப்படுகிறது.

  60. one who is free from passion on emotion level is a healthy man என்று “யார் ஆரோக்கியமானவர்?“ என்பது குறித்து விளக்கம் தருகிறார் வித்தல் காஸ் என்ற ஹோமியோபதியர். யார் உணர்ச்சி வசப்படாமல் இருக்கிறானோ அவனே ஆரோக்கியமானவன்.

    உணர்ச்சி வசப்படும் போது மனிதன் தவறாகத்தான் சிந்திப்பான்,
    தவறாகத்தான் செயல்படுவான் என்பது உளவியல். எனவே ஒரு நிகழ்வை பரிசீலிக்கும் போது உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுபூர்வமாக பரிசீலித்தால் அதுவே ஒருவரின் ஆரோக்கியமான மன நிலையைக் காட்டும்.

    தினமலரில் பின்னூட்டம் இட்டவர்களும் சரி, இங்கே வினவு
    கட்டுரைக்கு பின்னூட்டம் இடும் சிலரும் சரி, ஒரு வகை
    உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
    ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்களே அதுபோலத்தான்
    இவர்களுடைய எதிர்வினையும் அமைந்திருக்கிறது.

    ஆனால் ‘என்கவுண்ட்டர்’ நடத்திய காவல்துறையோ உணர்ச்சிக்கு ஆட்பட்டு ஆத்திரத்தில் செயல்படவில்லை. நன்கு ஆலோசித்து திட்டமிட்டுத்தான் இந்த ‘என்கவுண்ட்டரை’ நடத்தியுள்ளது. நாளை வழக்கு எதுவாக இருந்தாலும், காவல்துறைக்கும் அரசுக்கும் ஒருவர் எதிரானவர் என்றால், தப்பிக்க முயன்றார் என்ற முகாந்திரத்தில் அவரை ‘என்கவுண்ட்டரில்’ போட்டுத்தள்ளலாம்.

    அதற்கான முன்னோட்டமே கோவைச் சம்பவம். “இதுதாண்டா போலீஸ்” இதைத்தானே சொல்ல வருகிறது.

    ஊரான்.

    • //one who is free from passion on emotion level is a healthy man என்று “யார் ஆரோக்கியமானவர்?“ என்பது குறித்து விளக்கம் தருகிறார் வித்தல் காஸ் என்ற ஹோமியோபதியர். யார் உணர்ச்சி வசப்படாமல் இருக்கிறானோ அவனே ஆரோக்கியமானவன்.

      உணர்ச்சி வசப்படும் போது மனிதன் தவறாகத்தான் சிந்திப்பான்,
      தவறாகத்தான் செயல்படுவான் என்பது உளவியல். எனவே ஒரு நிகழ்வை பரிசீலிக்கும் போது உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுபூர்வமாக பரிசீலித்தால் அதுவே ஒருவரின் ஆரோக்கியமான மன நிலையைக் காட்டும்.//

      ஊரான்!

      நீங்கள் வன்முறைப் போராளிகளை, இப்படி கண்டிக்கலாமா?

      மக்கள் ஏதேனும் சில தருணங்களில் மட்டுமே, உணர்ச்சி வயப்படுகின்றனர்! ஆனால் போராளிகள்?

  61. ஊரான், உணர்சிவசப்படுவது என்னவோ செயலுக்கு உதவாத சமநிலையற்ற உளவியல்தான். ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதை மட்டும் வைத்து அந்த காரியத்தை நாம் அங்கீகரித்துவிட முடியுமா? அந்த அறிவுப்பூர்வ நடவடிக்கை எந்த வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்பதை தீர்மானிப்பது உணர்வா ? அறிவா?

  62. திரு rammy அவர்களே,

    நான் போராளிகளைக் கண்டிக்கவில்லை. உணர்ச்சி வசப்படுகிறீர்களே. அறிவுபூர்வமாக சிந்திக்காமல் போராளிகளை பொத்தாம் பொதுவாக வசைபாடும் உங்களைப் போன்ற பதிவர்களுக்குத்தான் எனது பின்னூட்டமே. எனது பின்னூட்டத்த்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

    திரு இரா.மணிகண்டன் அவர்களே,

    உணர்ச்சி என்பது வேறு. உணர்வு என்பது வேறு.

    Awareness, consciousness லிருந்து வருவது உணர்வு. அறிவுபூர்வமாக வருவதே வர்க்க உணர்வு. எனவே அறிவுபூர்வ நடவடிக்கையே வர்க்கச் சேவையை தீர்மானிக்கிறது. அறிவை எந்த வர்க்கத்திற்குப் பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்துதான் விசயத்தைப் பரிசீலிக்க வேண்டும்.

    அறிவபூர்வமாக அல்லாமல் மனக்கிளர்ச்சியிலிருந்து வருவது உணர்ச்சி. இதைப்பற்றித்தான் எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். நீங்களும் ஒருமுறை எனது பின்னூட்டத்தை படிக்கவும்.

    ஊரான்.

    • நண்பர் ஊரான் அவர்களே,
      “உணர்ச்சிவயப்படும்போது மனிதன் தவறுதலாகச் சிந்திப்பான், தவறுதலாகத்தான் செயல்படுவான் என்பது உளவியல். எனவே ஒரு நிகழ்வைப் பரிசீலிக்கும் போது உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுப்பூர்வமாக பரிசீலித்தால் அதுவே ஒருவரின் ஆரோக்கியமான மனநிலையைக் காட்டும்.”
      அடுத்து, “…ஆனால் ‘என்கவுண்ட்டர்’ நடத்திய காவல் துறையோ உணர்ச்சிக்கு ஆட்பட்டு ஆத்திரத்தில் செயல்படவில்லை. நன்கு ஆலோசித்து திட்டமிட்டுத்தான் இந்த ‘என்கவுண்டரை’ நடத்தியுள்ளது.” என்று சொல்லியுள்ளீர்கள். இவை இரண்டிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எனது கேள்வி மீண்டும் இதுதான். அறிவுப்பூர்வமாக சிந்தித்துச் செயல்படுவதை மட்டும் வைத்து அந்த காரியத்தை நாம் அங்கீகரித்து விடமுடியுமா? அந்த அறிவுப்பூர்வமான நட்வடிக்கை எந்த வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்பதை தீர்மானிப்பது உணர்வா? அறிவா? என்பதுதான்.
      உணர்ச்சி என்பது வேறு, உணர்வு என்பது வேறு என்பதை நான் மறுக்கவில்லை. அதற்காக “அறிவுப்பூர்வமாக வருவதே வர்க்க உணர்வு” என்கிறீர்கள். எந்த வர்க்கத்துக்கான உணர்வு என்று சொல்ல முடியுமா? அறிவுப்பூர்வ நடவடிக்கை எந்த வர்க்கத்தின் சேவையைத் தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லுங்களேன்?
      உணர்ச்சியைப் பற்றிய உங்களின் நிலைபாட்டில் எனக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால் அறிவை மட்டுமே முதன்மைப்படுதும் உங்களின் வாதத்தில்தான் நான் முரண்படுகிறேன். அதற்காகத்தான் மேற்சொன்ன எனது அதே கேள்விகளை மீண்டும் எழுப்புகிறேன். வர்க்க சேவையை தீர்மானிக்கும் முதன்மை அம்சம் உணர்வா? அறிவா?

      • திரு.இரா.மணிகண்டன் அவர்களுக்கு,

        “வர்க்க சேவையை தீர்மானிக்கும் முதன்மை அம்சம் உணர்வா? அறிவா?” என்ற உங்களது கேள்வி நியாயமானதுதான்.

        அறிவே என்பதுதான் எனது பதில். அறிவிலிருந்து பெறப்படுவதே உணர்வு. மனக்கிளர்ச்சியால் ஏற்படும் உணர்ச்சியை நீங்கள் உணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களா என்று தெரியவில்லை.

        ஒரு சம்பவத்தை பார்க்கும் போது, ஒரு நூலைப்படிக்கும் போது, ஒரு பாடலைக் கேட்கும் போது ஒருவருக்கு முதலில் ஏற்படுவது ஒருவித மனக்கிளர்ச்சியே். இந்த மனக்கிளர்ச்சி மட்டுமே வர்க்கச் சேவையை தீாமானிப்பதில்லை. பாட்டாளி வர்க்க அரசியல் புரிதல் இருந்தால் மட்டுமே எந்த வர்க்கத்திற்கு சேவை செய்வது என்பதை தீர்மானிக்க முடியும். இந்தப் புரிதல் இல்லை என்றால் விரைவில் மனக்கிளர்ச்சி மறைந்து போகும்.
        மனக்கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பிறகு அரசியல் புரிதல் இல்லாமல் காணாமல் போவதும், அரசியல் புரிதல் உள்ளவர்கள் செயற்களத்தில் இருப்பதும் உங்களுக்குத் தெரியும் எனக் கருதுகிறேன்.

        ஊரான்.

        • நண்பர் ஊரான் அவர்களே,
          அறிவையும், உணர்வையும் பிரிக்கமுடியாது. ஆனால் உணர்வில்லாமல் அறிவுடையவர்கள் இருக்க முடியும், அறிவில்லாமல் உணர்வுடையவர்கள் இருக்க முடியாது. இங்கு அறிவு என்று நாம் எதைச் சொல்கிறோம்? உணர்வு என்று எதைச் சொல்கிறோம்?
          ரசாயனத்தில், பொருட்களின் சிதைவு- சேர்க்கை பௌதீகத்தில் நேர்மின்னாற்றல்- எதிர்மின்னாற்றல்…………. என்று நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விசயத்திலும் அறிவைப் பெறுகிறோம். ஆனால் இவற்றில் என்ன உணர்வைப் பெறுகிறோம்? சமூகத்தில் இரு வர்க்கங்களுக்கு இடையிலான உறவைப் போதிப்பது எது? அரசியல். இவற்றில் மட்டுமே அறிவையும், உணர்வையும் நாம் பெறமுடியும். என்கவுண்டர் செய்த போலீசு நிதானமாக் ஆலோசித்து, திட்டமிட்டுத்தான் இந்த என்கவுண்டரை நடத்தியுள்ளது. இதில் அறிவுப்பூர்வ அம்சம் இல்லாமலா என்ன? ஆனால் உணர்வுப்பூர்வ அம்சம் என்று என்ன உள்ளது? ஆக அறிவுப்பூர்வ நடவடிக்கை என்று சொல்லப்படும் எந்த நடவடிக்கையையும் நாம் ஆதரித்துவிட முடியாது. அதை அரசியல்தான் தீர்மானிக்கும். ஆக எந்த வர்க்கத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது உணர்வுதான்.

        • திரு.இரா.மணிகண்டன் அவர்களே,

          உணர்வு உன்பது மனம் சார்ந்த ஒன்று. மனம் என்பது மூளையின் வெளிப்பாடே. ஒரு துறையைப் பற்றிய அறிவு இல்லாமல் அத்துறையைப் பற்றிய கருத்து எதுவும் இருக்க முடியாது. கருத்து எதுவும் இல்லை என்றால் மனம் எதையும் வெளிப்படுத்தாது. மனம் எதையும் வெளிப்படுத்தாத போது உணர்வை எப்படி அறிந்து கொள்ள முடடியும்?

          எனவே, பாட்டாளி வர்க்க அரசியல் அறிவு பெறும் போது ஒருவர் பாட்டாளி வர்க்க உணர்வைப் பெறுகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கிற அறிவின் அளவைப் பொருத்தே அதற்கேற்ப உணர்வைக் கொண்டுள்ளனர். எனவே உணர்வைப் பெற அறிவே முதன்மையானது என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன்.

          அடுத்து, எந்தத் துறையைப் பற்றிய அறிவைப் பெற்றாலும் அதற்குரிய உணர்வு கண்டிப்பாக ஏற்படும்.

          நம்மிடையே நடக்கும் இந்த விவாதம் தலைப்பிலிருந்து விலகிச் செல்வதாவும் இருக்கிறது. எனவே இது தொடர்பான விவாதத்ததை எனது வலைதளத்தில்(www.hooraan.blogspot.com) தொடரலாம் எனக் கருதுகிறேன்.

  63. நண்பர் ஊரான் அவர்களே, நமது விவாதம் தலைப்பிலிருந்து விலகிச் செல்கிறது என்பது உண்மைதான். பொறுத்தமான வாய்ப்பு கிடைக்கும்போது இவ்விவாதத்தை நாம் மீண்டும் தொடர்வோம். நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க