காங்கிரசின் வருமானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் மாத்திரம் ரூ.556 கோடி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2006-11 இல் வசூலான 1659 கோடி ரூபாயை முழுதும் மக்கள் நலனுக்காக செலவிட்டதாக கூறி வருமான வரிச் சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற்றுள்ளனர். மக்கள் நலனுக்காக இப்பணம் செலவிடப்பட்டதாக கூச்சமே இல்லாமல் வருமான வரித்துறையை காங்கிரசு கட்சி ஏமாற்றி உள்ளது. ஊழல் பெருச்சாளிகள் கதை தான் இப்படி என்றால் திருவாளர் பரிசுத்தம் எனப் பேசும் பாஜக-வினரும் இப்போட்டியில் 2ஆம் இடத்தில் இருக்கின்றனர். வசூலான 851 கோடியில் 281 கோடியை மக்கள் நலன் என்ற பெயரில் வரிவிலக்காக பெற்றுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இத்தகவல்களை மத்திய தகவல் ஆணையத்திடம் மனுச்செய்து பெற்றுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29சி இன் படி ரூ.20,000க்கு மேல் நன்கொடை தருபவர்கள் காசோலையாகத்தான் தர வேண்டும். ஆனால் 25% க்கும் குறைவான பணம்தான் தனிநபர்களிடமிருந்து ரூ.20000க்கு மேல் வசூலிக்கப்பட்டதாக அனைத்துக் கட்சிகளும் கூறுகின்றன•
ஆதித்யா பிர்லா வின் பினாமியான ஜெனரல் எலக்டோரல் டிரஸ்டு 2003-04 மற்றும் 2010-11 காலகட்டத்தில் காங்கிரசுக்கு ரூ. 36.46 கோடியும், பாஜகவுக்கு ரூ.26.07 கோடியும் நன்கொடை தந்துள்ளது. பார்தி குழுமத்தை சேர்ந்த பார்தி எலக்டோரல் டிரஸ்டு 2008-09 கால இடைவெளியில் மாத்திரம் காங்கிரசுக்கு ரூ. 11 கோடியும், பாஜகவுக்கு ரூ.6.10 கோடியும் தந்துள்ளது.வேதாந்தா குழுமத்தின் பொதுமக்கள் மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்கான டிரஸ்டு 2003-05 இல் பாஜகவுக்கு கொடுத்த தொகை ரூ.9.5 கோடி.டாடாவின் எலக்டோரல் டிரஸ்டு 2004-05 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு ரூ.9.96 கோடியும் பாஜகவுக்கு ரூ.6.82 கோடியும், சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 1.58 கோடியும் தந்துள்ளது. 2009-10 இல் மாத்திரம் ஐக்கிய ஜனதா தளத்திற்கு டாடா ரூ.30 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதுபோக ஹார்மனி எலக்டோரல் டிரஸ்டு மற்றும் சத்யா எலக்டோரல் டிரஸ்டு போன்றன காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு குறிப்பிட்ட அளவில் நன்கொடை அளித்துள்ளன•
இந்தியாவில் வருமான வரியை ஏய்ப்தற்காகவே முதலாளிகளால் டிரஸ்டுகள் உருவாக்கப்டுகின்றன. டிரஸ்டுகளைத் தாண்டி பெரு நிறுவனங்களே நேரடியாக கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன• டோரண்ட் மின்சக்தி நிறுவனம் 2003-04, 2007-08, 2009-11 ஆம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு ரூ.14.15 கோடியும், 2007-08, 2010-11 ஆம் ஆண்டுகளில் பாஜகவுக்கு ரூ.13 கோடியும் கொடுத்துள்ளது. ஆசியாநெட் வி ஹோல்டிங் நிறுவனம் 2009-10 இல் பாஜகவுக்கு ரூ.10 கோடியும், காங்கிரசுக்கு ரூ.2.5 கோடியும் தந்துள்ளது. மத்திய இந்தியாவில் நடக்கும் பழங்குடியின மற்றும் மாவோயிஸ்டுகளின் மீதான தாக்குதலுக்கு காரணமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனம் காங்கிரசுக்கு 2004-05 மற்றும் 2010-11 க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரசுக்கு ரூ. 6 கோடி தருகிறது. அதன் துணை நிறுவனமான மால்கோ பாஜகவுக்கு ரூ.3.50 கோடி அளிக்கிறது. மேலும் சதர்ன் எஞ்சினியரிங் ஒர்க்ஸ், அதன் கட்டமைப்புத்துறை நிறுவனம் மற்றும் வீடியோகான் நிறுவனம் போன்றவை பெரிய கட்சிகள் கொடுத்தது மட்டுமல்லாமல் சமாஜ்வாதி (ரூ.78 லட்சம்), அதிமுக (ரூ.55 லட்சம்), லல்லு (ரூ.33 லட்சம்) மற்றும் சிபிஐ போன்ற கட்சிகளுக்கும் நன்கொடை அளித்துள்ளன•
திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பிஜூ ஜனதா தளம், டிஆர்எஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் அகாலிதளம் (பாதல்) போன்ற கட்சிகள் சரிவர தங்களது வருமான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பதில்லையாம். வரிவிலக்கு பெற்ற மற்ற கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சி (ரூ.96 கோடி), தேசியவாத காங்கிரசு (ரூ.32 கோடி) மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (ரூ.67 கோடி). கணக்கு காட்டாத கட்சிகளும் முறையாக காட்டினால் இன்னும் பூதங்கள் சில கிளம்பலாம். எந்தக் கட்சி எந்த பன்னாட்டுக் கம்பெனியிடம் காசு வாங்கியது? எதற்காக வாங்கியது? என்பதெல்லாம் சமகால கட்டங்களில் அந்நிறுவனங்களுக்கு காட்டப்பட்ட சலுகை மற்றும் வாய்ப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.