privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமதுராவில் நாத்திகக் கூட்டத்தை நிறுத்திய இந்துமத வெறியர்கள் !

மதுராவில் நாத்திகக் கூட்டத்தை நிறுத்திய இந்துமத வெறியர்கள் !

-

த்திரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவுக்கு அருகில் இருக்கும் மதுரா, வட இந்திய ‘இந்துக்களுக்கு’ முக்கியமான நகரம். ஆகவே ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கும் அது கேந்திரமானது என்பதில் ஆச்சரியம் இல்லை. இப்பேற்பட்ட மதுராவில் நாத்திகவாதிகள் நடத்த இருந்த அறைக்கூட்டத்தை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துமதவெறி குண்டர்கள் காவல்துறை துணையுடன் தாக்கி நிறுத்தியுள்ளனர்.

முதலில் ஆன்மீக சாமியாராக இருந்து பின்னர் நாத்திகராக மாறியவர் சுவாமி பாலெண்டு. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுராவில்தான். ஏழைக் குழந்தைகளுக்காக அம்மாஜி என்ற ஒரு உணவகத்தையும் அங்கு நடத்தி வருகிறார்.

Atheists-meeting
ஆசிரமத்தின் முன் ரகளை செய்யும் இந்துமதவெறியர்கள் மற்றும் பெயரளவு முஸ்லீம் அமைப்பினர்.

அக்டோபர் 14-ம் நாள் நடக்கவிருந்த ஒரு நாத்திக அறைக்கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நாத்திகர்கள், முற்போக்கு நண்பர்கள் எல்லாம் அவரது பிந்து சேவா சன்சதன் ஆசிரமத்திற்கு அழைத்திருந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.

கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக அந்த கூட்டத்தைப்பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை, எனவே அது ஒரு கட்டுக்கதை என்று பாலெண்டு குறிப்பிட்டிருந்தார். ஆகவே இவர் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் இந்துமதவெறி கும்பல்களை உசுப்பிவிட்டன.

அதைத் தொடர்ந்து வெறியேறிய விஷ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங் தள் உள்ளிட்ட காவி வானரங்கள் அக்டோபர் 14 காலையில் ஆசிரமத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தி நாசம் செய்தன. இந்து மதம் என்று குறிப்பாக சொல்லாமல் “மதம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இந்துத்துவ ரௌடி கும்பலுடன் சில இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் சேர்ந்து கொண்டனர்.  பாலெண்டு ஒரு விளம்பரப்பிரியர் என்றும் கடவுள் நம்பிக்கையாளர்களைக் காயப்படுத்த அவருக்கு உரிமையில்லை என்றும் சாஹி ஜமா மஸ்ஜிதை சேர்ந்த இமாம் முகமது உமர் குவாத்ரி கூறினார். இந்த முசுலீம் அமைப்பு இந்துமதவெறியர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்களாகவும் இருக்கலாம். அதே நேரம் பகுத்தறிவுவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் இந்து மதவெறியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் தான் இசுலாமிய மதவெறியர்கள்.

தாக்குதலுக்குப் பிறகு காவல்துறை உயரதிகாரிகளை அழைத்து வந்த அந்த வானரக் கும்பல் இது வெறும் தொடக்கம் தான் பாலெண்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினால் நகரத்தில் மோசமான சம்பவங்கள் நிகழும் என்று காவல்துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியிருக்கின்றனர்.

“இது ஒரு தனிப்பட்ட கூட்டம் என்றாலும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருக்கிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரம் மற்றும் கடவுள் நம்பிக்கையின்மைக்கு எதிரான தாக்குதலாக இது இருக்கிறது” என்று சுவாமி பாலெண்டு வருத்தத்துடன் குற்றஞ்சாட்டினார்.

“அந்தச் சந்திப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் அறைக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது என்று காவல்துறை கூறியிருந்தது. என்னுடைய விருந்தினர்கள் சிலர் எனது ஆசிரமத்திற்கு வருவது ஏன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும்? புரியவில்லை” என்று பாலெண்டு கேட்கிறார். எனினும் விருந்தினரின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் உருவாக்க்கப்பட்டுவிட்டதால் பாலெண்டு அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

vrindhavan-balendu
சுவாமி பாலெண்டு

கூட்டதிற்கு வருகை தந்த பலரும் தாங்கள் சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்கள் எதுவும் எழுதக்கூடாது என்று மிரட்டப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த அறைக்கூட்டம் சட்ட ஒழுங்கை எப்படி பாதிக்கும் என்று வியப்படைவதாக வந்திருந்த அனைவரும் கூறினர்.

புல்டோசரைக் கொண்டு ஆசிரமத்தின் முன்னாள் இருக்கும் சாக்கடையை திறந்து விட்டதன் மூலம் ஆசிரமத்திற்கு அத்துமீறி வருபவர்களை தடுத்திருப்பதாக காவல்துறை பொய்யான குற்றத்தை தயாரித்து கூறியது. அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு நடக்கவிருந்த அறைக்கூட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அதற்கெதிராக வன்முறையாட்டம் ஆடிய மதவெறி கும்பலுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

“நகர நிர்வாகம் எங்களைத் தொல்லைப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆசிரமத்தின் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுத்தரமானதாக இல்லை என்று போலியாகக் குற்றஞ்சாட்டி ஆசிரமத்தைப் மூட முயல்கிறது” என்று குற்றஞ்சாட்டுகிறார் பாலெண்டு .

இது போன்ற அருவருப்பான குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் கண்டதில்லை என்கிறார் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வந்த புகைப்படப் பத்திரிக்கையாளரான சர்வேஸ். மூவர்ணக்கொடியை ஏந்தி பயமுறுத்தும் முழக்கங்களைப் போட்டு வந்த அவர்களைப் படம் பிடிக்க முயற்சிக்கையில் அந்த குண்டர்களால் தானும் தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

எண்ணிக்கையில் சிறியதாக இருந்த அந்த குண்டர்களை காவல்துறை மிக எளிதாக கலைத்திருக்க முடியும். ஆனால் இது மோடி அரசு, பா.ஜ.க ஆட்சி, ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு என்பதற்கேற்ப போலீசு காவிக்கறையுடன் செயல்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள், நிகழ்ச்சியை இரத்து செய்து விடுங்கள் என்று தங்களிடம் காவல்துறை கூறியதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த டெல்லிப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அசுதோஷ் குமார் கூறுகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் காந்தி ஆசிரமத்தை நடத்தி வந்த கிமான்சு குமார் இந்த அறைக்கூட்டதில் பங்கேற்க வந்திருந்தார்.  நாத்திகவாதிகளை கைது செய்யச் சொல்லும் பதாகைகள் மற்றும் பி.ஜே.பி விளம்பர அட்டைகளுடன் காவி குண்டர்கள் ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர், அவர்கள் கைகளில் லத்தி கம்புகள் இருந்தன என்றும் கூறுகிறார் குமார். காவல்துறை அச்சுறுத்துதலால் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

சமஸ்கிருதமே உலக மொழிகளுக்கெல்லாம் தாய். விநாயகனின் உருவம்தான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு சான்று,  காந்தாரியின் கருப்பைப் பிண்டத்திலிருந்து உலகின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மகாபாரத காலத்திலேயே உலகின் முதல் தொலைக்காட்சி…… இப்படி அண்டமே நடுநடுங்கும் வகையில் மோடி கம்பெனி ரீல் விடும் நாட்டில் அறிவியலுக்கோ, உண்மைக்கோ, இறை மறுப்புக்கோ என்ன மரியாதை இருக்கும்?

அதன் விளைவுகள் தான் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ரோகித் வெமுலா என அடுத்தடுத்த பகுத்தறிவுவாதிகளின் படுகொலைகள். “ஏன் இந்துக்களின் புனித இடமான பிருந்தாவனில் இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்? நிஜாமுதீன் தர்காவில் இதை நடத்த உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? தைரியம் இருந்தால் மெக்கா மெதினா சென்று இதை நடத்திப் பாருங்கள்” என்று இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் புத்திசாலித்தனமாக கேட்கின்றனர். ஆனால் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் நாத்திகம் பேசும் முற்போக்காளர்களை இருமதவெறியர்களும் கொன்றுதான் வருகின்றனர்.

சரி, இந்துக்கள் அனைவரும் ஒன்று என்பதாலேயே நம்மூர் சுடலைமாடனுக்கு படைக்கப்படும் சுருட்டு, சாராயம், கறி போன்ற பிரசாதங்களை மதுரா கிருஷ்ணன் கோவிலில் படைக்க இவர்கள் தயாரா? இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் ஐயர்-ஐயங்கார் குடும்பங்களில் பெண் கேட்டு மேலவளவு தலித்துக்கள் வருவதை ஏற்றுக் கொள்வார்களா?

இந்தியாவில் பார்ப்பனிய இந்துமதத்திற்கு எப்படி ஒரு மரபும், பழமையும் இருக்கிறதோ அதற்கு குறையாமல் இருக்கிறது நாத்திக மரபு. அதனால்தான் இங்கே சாருவாகர்கள்,புத்தர்,சித்தர்கள் துவங்கி பகத்சிங், பெரியார் வரை பெரும் படையே இருக்கிறது. இந்த மரபைக் கொல்வதுதான் அவர்களின் நோக்கம். இராமனையே எரிக்கும் தமிழ் மரபு இருக்கும் வரை அந்த நோக்கம் நிறைவேறாது!

– சுந்தரம்

செய்தி ஆதாரம்:
Hindutva activists attack, force cancellation of private meeting of atheists in Mathura
In Vrindavan, Communal Goons and ‘Secular’ Police Unite to Deny Atheists Space
‘Atheist’ conclave cancelled after religious leaders protest in Mathura