Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 761

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

52

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! -

முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.

இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும். ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?

அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.

சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.

கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.

இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.

ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?

உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.

ஹீரோயிசம்தான் பிரச்சினை என்றால் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளமாநிலத்தை சுனாமி வந்தால் கடல் முழுவதும் முழுங்கிவிடும் என்று வீடியோ கிராபிக்ஸ் மூலம் தயாரித்து பிரச்சாரம் செய்யலாமே? அரபிக் கடலை வில்லனாக்கினால் அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையே? இப்படி தேவையின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஏன் விளையாட வேண்டும்?

இப்படி இல்லாத பிரச்சினையை கிளப்பியிருப்பதோடு, அந்த இல்லாத பிரச்சினையை தீர்ப்பதற்கு தடையாக இருப்பதோடு, அந்த தடை மூலம் இரு மாநில மக்களிடம் முரண்பாட்டை முற்றவைக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கிரைம் ரேட் தொடர்ந்து எகிறிக் கொண்டே இருக்கிறது.

இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?

இவர்களது கேரள பங்காளிகள்தானே அந்த உரிமையை தட்டிப் பறித்திருக்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தாலும், தண்டிப்பதாக இருந்தாலும் அவர்களைத்தானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து இவர்கள் யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்? சூடு, சொரணை, உண்மை, நியாயம் இருந்தால் தத்தமது அகில இந்தியக் கட்சிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக மிரட்டியிருக்கலாம். இல்லை டெல்லி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டு கேரள கட்சி அமைப்புகளை கலைக்குமாறு கோரியிருக்கலாம். அதையெல்லாம் செய்யத் துப்பில்லாத ஜென்மங்கள் இங்கே தமிழனுக்காக அழுகிறது என்றால் யாரை ஏய்க்கிறார்கள?

ஆக இந்த இந்திய தேச ஒற்றுமை பேசும் கட்சிகளின் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் சென்டிமெண்டுக்கு ஜால்ரா போட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதே. இதை காவிரிப் பிரச்சினையின் போது கார்நாடகாவிலும் பார்த்திருக்கிறோம். இப்போது கேரளாவில் பார்க்கிறோம். மேலும் தமிழக காங், பா.ஜ.க கும்பல் இரண்டுமே தமது கேரள பிரிவையோ, அரசையோ இதுவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பாரத ஒற்றுமை குறித்த டியூஷனும் எடுக்க வில்லை. அந்த வகையில் கேரளாவில் சண்டித்தனம் செய்யும் காங், பா.ஜ.க பெருச்சாளிகளுக்கு தீனி போட்டு அடை காப்பது தமிழக பெருச்சாளிகள்தான். இந்த பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.

அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.

இதை விடுத்து அப்பாவி மலையாள மக்களை எதிர்ப்பதில் என்ன பயன்? அவர்களா தினந்தோறும் அறிக்கை விட்டோ இல்லை அணைக்கு சென்றோ ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? அப்படி மக்களே நடத்தினாலும் அதன் பின்னணி இவர்கள்தானே? ஆனால் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு துளியுமில்லாத நிலையில் அகில இந்திய தலைமை செல்வாக்கு உள்ள கேரளாவின் பக்கம்தான் சாயுமென்பது தமிழகப் பெருச்சாளிகளுக்கு தெரியாதா என்ன?

இதில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகளின் நிலை மிகவும் சந்தர்ப்பவாதமானது. இவர்கள் ஒரு பேச்சுக்கு கூட முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் உரிமை பற்றி பேசமாட்டார்கள்.

இந்தியாவில் அரசியல்ரீதியாக காலாவதியாகி வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் பரிதாபத்திற்குரிய தமிழக இணைய அவதாரமான மாற்று இணைய தளம் இந்தப் பிரச்சினை குறித்து, ” முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!” என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

அதில்,

“முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல்  ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக  ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது. (அழுத்தம் எம்முடையது)

மேலும், இதில் மார்க்சிஸ்டு கட்சி இரு கோட்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுகிறதாம். ஒன்று தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமாம், இரண்டு கேரள மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமாம், அதன்படி உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளும் பகைமை இன்றி பேசித் தீர்க்க வேண்டுமாம்.

அட, வெளக்கெண்ணெய் வெண்ணைகளா! இதில் இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?

எல்லாம் உங்கள் அச்சுதானந்தன் ஆட்சியில்தானே புழுதி கிளப்பி பிரச்சாரம் செய்யப்பட்டது?

அதன்படி பகைமையை கிளப்பிவிட்டதே உங்களது தோழர்கள்தானே? இதில் ஏன் இரு மாநிலம் என்று குற்றமிழைத்தவனையும், குற்றமிழைக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்துகிறீர்கள்? இதுதான் நீங்கள் பின்பற்றி வரும் மார்க்சியமா இல்லை சந்தர்ப்பவாதமா? இவ்வளவு செய்த பிறகும் தமிழகம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இனவெறியை கிளப்பும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சிகளை கண்டிப்பதற்கு வக்கற்ற நீங்கள் அதை மடை மாற்றி இருமாநில மக்களும், கட்சிகளும் சுமூகமாக பேச வெண்டும் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுகிறீர்களா, இல்லை சந்தர்ப்பவாதத்தையே ஃபுல் மீல்சாக முழுங்குகிறீர்களா?

தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு, பா.ஜ.க கும்பல்களாவது தமிழக மக்களின் நலனை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடவாவது செய்கின்றன. அந்த ‘தரம்’ கூட இல்லாத வெத்து வேட்டாக போயிருக்கும் உங்கள் முட்டாள்தனத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாவது புரிந்து  கொள்வீர்களா?

உங்கள் நோக்கம் புதிய அணை கட்டும் கோரிக்கைக்கு தமிழகத்தை தயார்படுத்துவதுதான். அப்படி அந்த அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் இல்லை, காற்று கூட வராது என்பதை பொறியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நீர் வராத பட்சத்தில் நீங்களும் தமிழகத்திலிருந்து காலி செய்து விட்டு உங்கள் கேரள தோழர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இனவெறியுடன் செயல்படக்கூடாது என்பது சரிதான். மேலும் இங்கே எழுந்திருப்பது இன முரண்பாடு அல்ல. இது கேரள ஓட்டுப்பொறுக்கிகளின் அவதூறுப்பிரச்சாரம். அதை முறியடிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையாக இருக்க முடியுமே அன்றி, அந்த அவதூறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது அல்லை. அந்த வகையில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகள்தான் கேரள கட்சிகளின் ஊளையை ஆதரித்து இருமாநில மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு உதவி புரிகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பகைமை வேண்டாம், சுமூகமாக பேசுவோம், நீதிமன்றத்தை மதிப்போம் என்ற உபதேசம் யாருக்கு பயன்படும்?

ஒருவேளை கேரள மக்கள் அவர்களது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்ப் பிரச்ச்சாரத்திற்கு பலியாகி இருந்தாலும் அங்கே இருக்கும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தன் நியாயத்தை சொல்லித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் அங்கே அவர்களது செல்வாக்கு குறையுமென்றாலும் நீண்ட கால நோக்கில் அது மாறும்.

புரட்சி கூட தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நலனை வைத்துத்தானே நடக்க முடியும்?அப்போது அதற்கு ஆதரவாக வரும் மக்கள் முல்லைபெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அது வேறு இது வேறு அல்ல.

ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.

அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம். அதிலும் வங்கம் பஞ்சராகியும், கேரளம் பிரேக் டவுணாகியும் இருக்கும் நிலையில் அப்படி ஒரு பிரேக் டவுன் வண்டியாவது இருக்கிறதே என்று சீன் காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலிருந்துதான் போலிகளின் முல்லைப்பெரியாறு சந்தர்ப்பவாதம் பொங்கி வழிகிறது.

அந்த வகையில் முல்லைப்பெரியாறு விசயத்தில் துரோகம் புரிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளையும் நாம் குறிவைத்து எதிர்க்க வேண்டும்.

கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.

சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

முன்னுரை:

சில்லறை வர்த்தகத்தில்  தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில்  அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின்  பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

வினவு

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் (2007) அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால், கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.

இந்தக் கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.

ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.

அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.

மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

வால்மார்ட்

ரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.

உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.

இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.

இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.

70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

வால் மார்ட் ! மலிவு விலையில் மரணம் !!
2010ல் வால்மார்ட் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.

இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.

1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சியின் மர்மம்

வால்மார்ட்
வால்மார்டின் வளம் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.

இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.

உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.

உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….

ஏகபோகத்தின் வீச்சு

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%  என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.

இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.

தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.

அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.

இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.

உழைப்புச் சுரண்டல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.

அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.

தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

________________________________________________

புதிய கலாச்சாரம், 2007.

________________________________________________

ஆங்கில மூலம்

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

சிவப்புச் சட்டை!

சிவப்புச் சட்டை!
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி
உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும்,
கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம், என
இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்
இடியென இறங்கியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் போராட்டம்!

பார்ப்பன பாசிச ஜெ! அரசே
உடனே பாட புத்தகங்களை வழங்கு!
தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை
ஒழித்துக் கட்டுவோம்!
கட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்!

மின்னல் கீற்றுக்களாய் வெடித்துக் கிளம்பிய முழக்கங்களால்,
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பு.மா.இ.மு. மூட்டியத் தீ
போயசு தர்ப்பையை போட்டு பொசுக்கியது!

கல்விக்குத் தெய்வம் சரஸ்வதியாய் இருந்திருந்தால்
இந்நேரம் கல்லாவில் பங்குகொடுத்து அவளையும்
சசிகலாவைப் போல் தோழியாக்கி துணைக்குச் சேர்த்திருப்பார் ஜெ!

தடுமாறும் மாணவர், பெற்றோரை தடுத்தாட்கொண்டு
போராட புதுத்தெம்பளித்து, இன்றைய தேதியில் –
‘கல்விக்குத் தெய்வமாய்’ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
காட்சியளிப்பதால்,
சும்மா விடுவாரா அம்மா!

அம்மாவுக்குப் பிடித்தது இரண்டே இரண்டுதான்,
ஒன்று – அம்மா எழுந்து பேசினால்
எல்லோரும் பெஞ்சைத் தட்ட வேண்டும்;
அம்மாவை எதிர்த்துப் பேசினால்
அவர் நெஞ்சைத் ‘தட்ட’ வேண்டும்!

அம்முவுக்கு அடங்குமோ பு.மா.இ.மு!
அடங்காமல் போராடியதால்
அடித்து உதைத்து கைது, சிறை..

புழல் சிறைக்கு அனுப்பியவர்கள் போக
பதிமூன்று பேர் இருபத்தியோரு வயதுக்கும் கீழே உள்ள
இளங் ‘குற்றவாளிகள்’ என்று சைதை
கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வழிநடத்திச் சென்ற ஒரு தோழரைத் தவிர
மற்ற மாணவர்களுக்கு சிறை புதிது.
ஏற்கனவே அங்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையிருக்கும்
இளம் கைதிகள் புதியவர்களை அடிப்பார்கள், அதட்டுவார்கள்,
வேலை வாங்குவார்கள்… என்ற எண்ணத்தில் புதியவர்கள்
அச்சமுற்ற விழிகளுடன் அடியெடுத்து வைத்தனர்.

சிறை ஒன்றும் உலகை விட்டு தனியே இல்லை
சமூகத்திலுள்ள சகல பிரச்சினைகளும் சிறையிலும் உண்டு!
சிறைபடுத்தலோடு முடிவதில்லை… சிறைக்குள்ளும்
தொடர்கிறது போராட்டம்… என புதியவர்களுக்கு
புரியவைத்து நிமிரவைத்தார் வழிநடத்திய தோழர்.

‘என்ன எல்லாம் சமச்சீரா… சரி, சரி எல்லாரும் சட்டைய கழட்டு!
அங்க மச்ச அடையாளம் காட்டு’ என ஆணையிட்டார் ஜெயிலர்.

‘நாங்க ஒண்ணும் கிரிமினல் அல்ல, அரசியல் கைதிகள்
சட்டையை கழட்டமாட்டோம் என பதிலறுத்தனர் மாணவர்கள்.

ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால்
வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும்
சரத்குமார் வாழும் நாட்டில்,
ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின்
உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள்
வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.

‘ஏய் என்ன… விட்டா எங்கிட்டயே எதுத்து பேசுற?
சட்டப்படி சட்டைய கழட்டி மச்சம் பாக்கணுன்டா?’

‘சார்! வாடா போடான்னு பேசாதீங்க… நாங்க
நக்சல்பாரிங்க… மரியாதை கொடுத்துப் பேசுங்க…
நீங்க என்ன செஞ்சாலும் சட்டையை நாங்க கழட்ட
மாட்டோம். வேணும்னா கைல, முகத்துல பாத்துக்குங்க…’

சட்டத்தை கழட்டுவோமே தவிர, சட்டையைக் கழட்ட மாட்டோம்
என்று தீரத்துடன் அவர்கள் கருத்துரைக்க,

‘எலே சின்னப்பயகன்னு பேசுனா, என்னயே
மிரட்டுறிகளா? பெறவு தனித்தனியா செல்லுல
போட்டுர்வேன் ஆமாம்’ என்று பொரிந்து தள்ளியபடி
அவர்களின் கைகளைப் பிடித்து ஜெயிலர் மச்சம் தேடினார்.

வருகிற போகிறவனின் பையைத் தடவி மிச்சம் பார்த்தே
பழக்கப்பட்ட ஜெயிலர், மச்சம் தேடியது பார்த்த
மற்ற கைதிகளுக்கு ஆச்சரியத்திலும், ஆச்சர்யம்.

‘என்னலே, மச்சம் நிறம் மாறிக் கெடக்கு! இது மச்சமாலே?
பேனா மையால புள்ளி வச்சிகிட்டு ஏமாத்துறீக…
இதெல்லாம் நல்லா இல்ல ஆமாம்…’

வெறுப்பேறிய ஜெயிலரின் கோபப்பார்வையை ‘சார்! இது
அதிர்ஷ்ட மச்சம் அப்படித்தானிருக்கும்’ என அலட்சியமாக
மறுத்து ஒதுக்கினர் மாணவர்கள்.

‘என்னமோ போய்த் தொலைவே! சரி எழுதணும்,
நீ என்ன சாதி?’

“சார்! நாங்க சாதி சொல்ல மாட்டோம், சாதி பாக்க மாட்டோம்
இது எங்க கொள்கை!’

‘லே! உன் கொள்கைய நீ வச்சுக்க, ரெக்கார்ட்ல
எழுதணும்ல… என்ன சாதில?’

‘கம்யூனிஸ்டுன்னு எழுதுங்க.. அடிச்சாலும் சொல்லமாட்டோம்!’

என்ன முயற்சித்தும் சாதியை எழுதமுடியாமல்,
முகவரி கேட்பதன் மூலமாக தெரு, ஏரியாவை வைத்து
சாதியை மோப்பம் பிடிக்க முயற்சித்தார் ஜெயிலர்.

‘எலே ஏட்டிக்கு போட்டியாவே போறீக… என்ன பத்தி
தெரியாது. உரிச்சி உப்பு தடவிடுவேன் ஆமாம்!’ என
மிரட்டியும் மாணவர்கள் மசியவில்லை.

பொங்கி வந்த கோபத்தை அங்கிருந்த தண்ணீரைக் குடித்து
தணித்துக் கொண்ட ஜெயிலர்,
‘உங்களப் போல நானும் சிறு வயசுல… கம்யூனிஸ்டு
அது இதுன்னு வெறப்பா திரிஞ்சவன்தான்… படிச்சு
முன்னேற வழிய பாக்கணும்ல. இப்படியே கட்சி
கிட்சின்னு திரியக்கூடாது…’

லத்திசார்ஜ் பலிக்காதபோது புத்திசார்ஜை கையிலெடுக்கும்
போலீசின் தந்திரம் வெளிப்பட்டது ஜெயிலரிடம்.

‘நாங்க பகத்சிங்கைப் போல நாட்டுக்காக இறுதிவரை போராடுவோம்!’
மாணவர்கள் மறுத்துரைக்க…

‘எப்பா.. என்ன ஆளவிட்டா போதுண்டா சாமி…’ என
மேற்கொண்டு பேசாமல் அறைக்குள் அடைத்தார் அவர்களை.

நிமிர்ந்து பார்த்தாலே பொளந்து கட்டும் ஜெயிலர் இந்த
மாணவர்களிடம் இவ்வளவு பொறுமையாக நடந்துக் கொள்வது
மற்ற விசாரணைக் கைதிகளுக்கு புரியாத புதிராகவும், மாணவர்கள்
மேல் ஈடுபாட்டையும் கொடுத்தது.

‘சார்! இது சாப்பாடா? வாய்ல வைக்க முடியல.
நல்ல சோறா கொடுங்க. சாய்ங்காலத்துல டீ வேணும்.
படிக்க புத்தகம் வேணும்…’ என்று
அடுத்தடுத்து தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து
வாதாட ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.

எதுவும் கேட்டாலே, ‘உரிச்சு உப்பு தடவிடுவேன்…’ என
மிரட்டும் ஜெயிலர்… ‘தம்பிகளா… இங்க இவ்வளவுதான் வசதி.
கலாட்டா பண்ணாதீங்க…’ என இறங்கு முகத்தில் பேச ஆரம்பித்தார்.

‘அப்படின்னா எங்களயும் எங்க தோழர்களோட புழல் சிறையிலேயே
சேத்துப் போடுங்க. அதுவரை உண்ணாநிலைப் போராட்டம்தான்’ என
மாணவர்கள் திடமாக முடிவெடுத்து அமர்ந்துவிட்டனர்.

‘சட்டத்துல இடமில்லை புரிஞ்சுக்குங்க.
உங்களுக்காக மேலிடத்துல பேசறேன். சாப்பிடுங்க…’ என்று ஜெயிலர்
எவ்வளவு சமாதானம் பேசியும் ஏற்காமல் மாணவர்கள் தன்நிலையில்
உறுதியாய் இருந்தனர்.

அங்குமிங்கும் ஜெயிலரின் தொலைபேசி பறந்தது.
இறுதியில், ‘எலே! நாளைக்கு புழல் போறீகளே, போய் சாப்டுங்களே…’ என்றார்.
அமைப்பு வழி தகவல் சரிதான் என்று அறிந்த பின்னே மாணவர்கள்
உண்ணாநிலையை முடித்து சாப்பிடச் சென்றனர்.

இரவெல்லாம்… சாதி எதிர்ப்பு, சமூக நடப்பு பற்றி அவர்கள் பாடிய
அமைப்புப் பாடல்கள் அறையைத் தாண்டியும் ஒலிக்க
பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கு
ஓரிரு நாள் பழக்கத்தில் இவர்களோடு நாமும் இல்லையே என்ற ஏக்கம்
இவர்களாக நாமும் இல்லையே என விரிவடைந்தது.

இவர்களைப் பிரியப் போகிறோமே என்ற அவசரத்தில் பலரும்
தங்களுடைய வாழ்நிலை, வழக்கு சூழ்நிலை, மீண்டும் தங்களோடு
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என இரவு நெடுநேரம்
மாணவர்களிடம் உறவாடினர்.

பழகப்பழக விசாரணைக் கைதிகளாக இருக்கும் இளைஞர்களின்
ஆழ்மனதில் கிடக்கும் அழகிய மனித உணர்ச்சிகளை மாணவர்களும்
பயின்றனர்.

விடிந்தது. எல்லா சிறை விதிமுறைகளும் முடிந்து மாணவர்கள்
புழல் சிறைக்குப் புறப்படத் தயாராயிருந்த தருணத்தில்
விடைபெறப்போகும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த
விசாரணைக் கைதிகளில் இளைஞர் ஒருவர்
‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக்
கொடுத்துட்டுப் போங்க!’
‘இது ஏங்க..?’ வியப்புடன் கேட்டார் மாணவத் தோழர்.

‘இல்ல, அதோட
பவர் என்ன, பாதுகாப்பு என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.
தயவு செய்து கொடுத்துட்டுப் போங்க தோழர்…’

இப்போது சட்டையைக் கழட்ட தோழர் தயங்கவில்லை…

_________________________________________________

– துரை.சண்முகம், புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________

நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?

106
  •  நவம்பர் 9-ம் தேதி உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வாரில், ஆசிரமம் ஒன்றில் நடந்த யாக பூஜையில் கலந்து கொள்ளச் சென்ற பக்தர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி..!
  • 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தானின் சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலி..!
  •  ஆகஸ்டு 2008-ல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள நைனா தேவி கோயில் ஏற்பட்ட நெரிசலில் 160க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலி..!
  • ஜனவரி 2005-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் நடந்த வோய்த் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 350 பக்தர்கள் பலி…!
  • கடந்த ஜனவரியில் சபரிமலையில் ஏற்பட்ட நெரிசலில் 104 பேர் பலி..!

கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஏற்பட்ட நெரிசல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலிருக்கும் என்கின்றன பத்திரிகைச் செய்திகள். இங்கே மட்டுமல்லாமல் உலகெங்கும் மக்கள் கூடும் பல்வேறு மதத் திருவிழாக்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் சிக்கிச் செத்துப்போனவர்கள் பற்றிய செய்திகளை நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு முறை இவ்வாறான ‘விபத்துகள்’ நடந்த பின்னும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காத அரசை உண்டு இல்லை என்று கிழித்துத் தொங்கப் போடும் ஊடகங்கள், தன்னை நம்பி வந்த பக்தர்களை அம்போவென்று கைவிட்ட கடவுளைக் கேள்வி கேட்டதில்லை. அரசு மருத்துவமனைகளைத் தீராத நோயில் வீழ்த்தி அப்பாவி மக்கள் பலரின் உயிரைக் காவு வாங்கிய அரசிடம், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர்படுத்த வேண்டுமென்று இது வரை கேட்டேயிராத வாய்கள் தான் ‘சபரிமலைக்குச் செல்லும் சாலைகள் சரியில்லை’ என்று காரணங்களைப் பீராய்கின்றன.

லேசாகப் பெய்த தூரல் மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத சாலைகளை அமைத்து மக்களை பாள்ளத்தாக்குகளுக்குள் பயணிக்க விட்டிருக்கும் அரசு கோயில்களுக்கு ஒழுங்கான சாலைகள் அமைக்க வேண்டுமென்று கேட்கின்றன ஊடகங்கள். மக்களின் வாழ்வியல் அழுத்தங்களையும் துன்ப துயரங்களையும் மக்களை ஆளும் இந்த அரசமைப்பு முறையால் தீர்க்கவியலாத கையாலாகாத்தனம் தானே அவர்களை கோயில் குளங்களை நோக்கி விரட்டியடிக்கின்றன? அவ்வாறிருக்க, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பிரதான கடமை கடவுளுக்கல்லவா இருக்கிறது? கேள்வி கேட்பதானால் முதலில் கடவுளையல்லவா கேட்டிருக்க வேண்டும்.

நாங்கள் ஒன்றும் கடவுளின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவில்லை. பையனுக்கு என்ஜினியரிங் சீட்டு வேண்டும், பொண்ணுக்கு நல்ல வரன் வேண்டும், ஊருக்குப் போக ட்ரெயின் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதில் தொடங்கி வைகுண்டத்திலோ கைலாயத்திலோ பரலோகத்திலோ துண்டு போட்டு சீட்டுப் பிடித்துக் கொடுக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவர் தான் கடவுள் என்பதை பக்தர்களைப் போலவே நாங்களும் நம்பத் தடையாய் இருப்பது ஒன்று தான். இத்தனை வல்லமையும் ஆற்றலும் சக்தியும் கொண்ட அய்யப்பன் தன்னை நாடி வரும் அப்பாவி பக்தர்களின் உயிர்களைக் ஏன் காப்பாற்ற வரவில்லை? பக்தர்களுக்காவது கல்லும் முள்ளும் கொண்ட நடை பயணம் – அய்யப்பனுக்கோ புலியின் மீதல்லவா பயணம்?

சென்றமுறை சபரி மலை நெருக்கடியில் தனது நெருங்கிய உறவினரை பலி கொடுத்த நண்பர் ஒருவர், செத்துப் போனவருக்கு கட்டாயம் மோட்சத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று புல்லரிப்போடு பேசிக் கொண்டிருந்தார் – இத்தனைக்கும் இறந்தவர் ஏரியாவில் ஒன்னாம் நெம்பர் பொறுக்கி. பொறுக்கியாய் இருந்தாலும் சரி நல்லவனாய் இருந்தாலும் சரி – மலையில் செத்துப் போனால் அவர்களும் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதை நாங்கள் மனதார நம்பவே விரும்புகிறோம்.

ஆனால், லோக்கல் பாமரனுக்கு கூட வாய்க்கும் இந்த பாக்கியம்  மன்மோகனுக்கோ சிதம்பரத்துக்கோ அம்பானிக்கோ வாய்க்காமலிருக்கிறதே என்பது தான் எமது ஆச்சரியம். மகாமகக் குளத்தில் உடன்பிறவா சகோதரிகள் தண்ணீரில் குளிக்க, குளத்தின் கரையில் சாமானிய பக்தர்கள் ரத்தத்தில் குளிக்க நேர்ந்த அவலத்தின் காரணம் யாதோ? ஆன்மீக அன்பர்கள் யாரேனும் இதற்கு பதிலளித்தால் நாங்களும் தெளிவு பெற்றுக் கொள்வோம்.

தேர்தலுக்கு முன் நூற்றுக்கணக்கான யாகங்கள் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்த ஜெயாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்த்து வெற்றியைப் பரிசளிக்கும் கடவுள் தேர்தல் வெற்றிக்குப் பின் அப்பாவி பக்தனிடம் அம்மா அடிக்கும் பிக்பாக்கெட்டைத் தடுத்து நிறுத்த முடியாததன் மர்மம் என்னவோ யாமரியோம் பராபரமே!

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் விவசாயம் பொய்த்து கடன் கழுத்தை நெறிக்க மனம் நொந்து பூச்சிக் கொல்லி மருந்து புட்டியைத் திறக்கும் விவசாயி வீட்டுக்குள்ளும் ‘நிறைந்திருப்பான்’ என்று ஆன்மீக அன்பர்களைப் போலவே நாமும் நம்பத் தயார் தான் – ஆனால், அங்கே அவர் அந்தச் சாவுகளைத் தடுக்காமல் எதைக் கழட்டிக் கொண்டிருந்தார் என்பதைத் தெரிவித்தார்களென்றால் நம்புவதற்கு வசதியாய் இருக்கும்.

மனம் கல்லாய்ப் போன மனிதர்களால் கடவுள் கல்லானாரா அல்லது கடவுளே வெறும் கல்லென்பது தெரிந்திருப்பதால் தான் ‘பெரிய’ மனிதர்களின் மனங்கள் கல்லாய்ப் போனதா? கருவறைக்குள்ளேயே கள்ளக்காதலிகளோடு கூத்தடித்த தேவநாதனும் கருவறை முன்னேயே சங்கரராமனைப் போட்டுத் தள்ளிய காஞ்சி சுப்புணியும் பின்னது தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள். நெரிசல்களில் செத்துப் போனது பக்தர்கள் மட்டுமல்ல – கடவுளும் தானென்பதை யாக பலத்தோடு அதிகாரத்தைப் பிடித்து மக்களின் தாலியறுக்கத் துணிந்த ஜெயாவின் நடவடிக்கை காட்டுகிறது.

மதம் மக்களுக்கு அபினி என்ற மார்க்ஸ் அதைத் தொடர்ந்து அதுவே இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது என்கிறார். தம்மை நாளும் நாளும் வாட்டி வதைக்கும் இகலோகத் துன்பங்களினின்றும் தப்பி ஆறுதல் தேட பரலோகத்தின் அருளை வேண்டிக் கூடும் அப்பாவி பக்தர்களின் ஆன்மீக அவலம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருளில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடும் அந்தப் பாமரத்தனம் ஒரு கையறு நிலை. ஆனால், அந்த இருளின் சொந்தக்காரர்களாயும் தூதர்களாயும் விளங்கும் இந்த அமைப்பு முறையையும் ஆளும் கும்பலையும் எதிர்த்துப் போராடி முறியடிப்பதே இந்தத் துன்ப துயரங்களினின்றும்  இறுதி விடுதலையைப் பெற்றுத் தருமென்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் நாளில் சபரி மலையை மொத்தமாக இழுத்து மூடச் சொல்லி விட்டு ஊருக்குள் போட்ட ரோடு ஏன் ஒரு மழையில் காணாமல் போகிறது என்கிற குரலை எழுப்புவார்கள்.

இதுகாறும், இனியும் நெரிசலில் சிக்கி இறந்து போகும் பக்தர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நாம் கடவுளுக்கு கல்லறையை கட்டி விட்டு, கடவுளை விட அதிகாரமுடைய இந்த ஆட்சிமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். புண்ணியத் தலங்களுக்கு போகும் யாத்திரை மறைந்து போராட்டக் களத்துக்கு வரும் பயணம்தான் நமது இகலோக துன்பங்களுக்கு நிவாரணம் தரும். பக்தர்கள் சிந்திப்பார்களா?

______________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

90

பாகம் – 1

பாகம் – 2

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.

மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.

இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.

அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.

அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.

இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.

தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.

இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

படத்தை பாருங்கள், பரப்புங்கள்!

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதை: ஒரு பொம்மையும் சில மனிதர்களும்!

எட்டு மணி நேரம் என் உடலைத் தனக்குள் வைத்து சவைத்துக் கசக்கித் துப்பியது அதி விரைவுப் பேருந்து. மணி மூன்று முப்பது. சேலத்தின் அதிகாலை ஒரு சொர்க்கம். உடன் படித்த நண்பன் ஒருவனின் திருமணத்தை முன்னிட்டு தான் இந்த பயணம். அப்படியே வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பழைய நட்புகளைப் பார்த்துச் செல்வதாக திட்டம்.

நீண்ட நேர பயணத்தில் முதுகுத் தண்டு விறைத்துப் போயிருந்தது. இடமும் வலமுமாக உடலைச் சுழற்றினேன். ‘கட்டட்ர்ர்ராராக்க்க்’ என்று சப்தமாக நெட்டி முறிந்தது. ஆழமாக மூச்சை இழுத்துப் பிடித்து ‘ஷ்ஷ்ஷா’ என்கிற ஒலியோடு வெளியேற்றினேன்.  சூடான தேனீர் ஒன்று பாலைவனமாய் வரண்டு கிடந்த தொண்டைக் குழியை ஈரமாக்கியது.

அடுத்த அரைமணி நேர ஆட்டோ குலுக்கல் எங்கள் வீட்டு முன் என்னை நிறுத்தியது. சேலம் பெங்களூரு சாலையில் இருக்கும் குரங்குச்சாவடியின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்ட ஆட்டோவின் அதிரல்களில் தூக்கம் கலைந்து எழுந்த தெருநாய்கள் என்னைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டே,  ‘உடனே குரைக்கலாமா; இல்லை கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு குரைக்கலாமா’ என்று குழம்பிக் கொண்டிருந்த இடைவெளியில் ஆட்டோகாரரை அனுப்பிவிட்டு முன்புற கேட்டைத் திறந்து நுழைந்தேன். குரைப்புச் சத்தம் இப்போது கேட்டது.

வீட்டு முகப்பில் இருந்த போகென்வில்லா மாரங்களில் பல வண்ணச் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. முற்றத்தின் சிமென்டு தரையெங்கும் சாக்பீஸ் கிறுக்கல்கள். சின்னச் சின்னதாக வாத்துப் படங்கள். யார் இந்த வேலையைப் பார்த்தது என்று யோசித்துக் கொண்டே அழைப்பு மணியை அழுத்தினேன். அம்மாவை எதிர்பார்த்தேன். கதவைத் திறந்தது அக்கா. ‘ஓ.. சரி தான். வாத்துகள் ஜெனியின் வேலையாய் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டேன். ஜெனி அக்காவின் மகள். இது கோடை விடுமுறை சமயம் என்பது அப்போது தான் உறைத்தது. அக்கா குழந்தைகளோடு வந்திருக்கிறாள்.

“வாடா” நான்கு மணிக்கே எழுந்து பளிச்சென்று தெரிந்தாள். அவளிடம் ஒரு பரபரப்பு தென்பட்டது. “டீ வேணுமா” என்றாள்.

“இல்ல.. வேணாம். பஸ்டான்ட்ல குடிச்சேன்.ஆமா என்ன விசேஷம்? ஒரே சீரியல் லைட்டா மின்னுது?”

“ஓஹ்.. அதுவா. இன்னிக்கு ஜெஸியோட பர்த்டே பார்ட்டி”

“என்னாது… ஜெஸிக்கு பிறந்த நாளா? ஏய்.. இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?”  என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டே.

“டேய் அடக்கி வாசிடா. ஜெனி காதில விழுந்திடப் போகுது.. என்றவாறே உள்ளறையை ஒரு முறை எட்டிப் பார்த்துக் கொண்டாள்”

“ஓ.. இவ்ளோ சீக்கிரத்திலேயே ஆள் எழும்பியாச்சா?” பயணப் பையைத் திறந்து இனிப்புப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு உள் அறைக்குள் நுழைந்தேன். உள்ளே ஜெனி ஏஞ்சல் போன்ற ஒரு உடையை அணிந்திருந்தாள். என் அம்மா முன் கைகளைக் குவித்து நின்றிருந்தாள். பாடல் ஒன்றைப் பாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

” திருக்கரத்தால் தாங்கியென்னை திருச்சித்தம் போல் நடத்திடுவீர் குயவன் கையில் களி மண்ணாய் அனுதினமும் நீர் வணைந்திடுவீர்”

ஜெனியின் கீச்சுக் குரலில் அந்த மொக்கைப் பாடல் கூட அழகாய்த் தான் ஒலித்தது.

“ஹேய் ஜெனீய்..”

“ஹை.. மாமா.  இப்போ தான் வர்றீங்களா? மாமா இன்னிக்கு ஜெஸியோட பர்த் டே. நீங்க கண்டிப்பா கலந்துக்கணும். ஜெஸிக்கு என்ன கிப்ட் வாங்கித் தரப் போறீங்க?”

“மாமாவுக்கு இன்னிக்கு வெளியே நிறைய வேலையிருக்கே ஜெனி”

அவள் எனது பதிலை எதிர்பார்க்கவில்லை. கேள்வியை வீசி விட்டு பாட்டுப் பயிற்சியில் தீவிரமானாள். ஜெஸியின் மேல் ஜெனி ஒரு மாதிரி பைத்தியம் போல் தான் இருந்தாள். அது எனக்கு முன்பே தெரியும். ஆனால், அது இப்படி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்குப் போகும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அக்காவுக்கும் அத்தானுக்கும் ஜெனி என்றால் செல்லம்.  மண்ணில் கால் படக்கூட விட மாட்டார்கள். வேறு பிள்ளைகளோடு தெருவில் விளையாடுவது அவளுக்குத் தடுக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த பொம்மைகளும் வீடியோ கேம்ஸ்களுமே அவளது உலகமானது.

எந்த பொருளாக இருந்தாலும் அது வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தாலே போதும்; அதை வாங்கித் தந்து விடுவார் ஜெனியின் அப்பா. சில சமயம் நான் ஊருக்குப் போகும் சமயங்களில் அவளை வெளியே அழைத்துச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் தெருவில் விளையாடும் சின்னப் பிள்ளைகளை ஆசையோடும் ஏக்கத்தோடும் பார்ப்பாள். ஒரு சமயம், அப்படி அவள் பார்த்த போது வண்டியை நிறுத்தி அவளையும் விளையாடி விட்டு வாயேன் என்று கேட்டுப் பார்த்தேன். “நோ அங்கிள்.. டர்ட்டி பீப்புள்ஸோட விளையாடினது தெரிஞ்சா டாடி கோச்சுப்பாரு” என்று மறுத்து விட்டாள்.

எப்போதும் தொழில் வளர்ச்சியைத் துரத்திக் கொண்டு ஓடும் அப்பா, காலையில் வேலைக்குச் சென்றால் மாலை சோர்ந்து போய்த் திரும்பும் அம்மா, அசுவாரசியமாய் கொட்டாவி விடும் வயதான ஆயா இவர்கள் தான் ஜெனியின் உலகத்து மனிதர்கள். தெருப் பிள்ளைகளை அழுக்கு மனிதர்கள் என்று அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. தெருவில் விளையாடினால் ‘ஜெர்ம்ஸ் அட்டாக் பண்ணும்’ என்று கிளிப்பிள்ளை போல் அவள் ஒப்பிக்க பழக்கப்படுத்தப்பட்டிருந்தாள். அவளின் பள்ளிக் கூடத்தி லேசான முணுமுணுப்போ, சப்தமோ இல்லாமல் மயான அமைதியை நிலைநாட்டியிருந்தார்கள். பள்ளிக் கூடத்துக்கு உள்ளே சென்றதும் குழந்தைகள் ஊமைகளாகி விடுவார்கள். ஸ்விட்சு போட்டால் பேசும் ரோபோட்களைப் போல் கேள்வி கேட்கும் போது மட்டும் “யெஸ் மிஸ்” “நோ மிஸ்” சொல்லப் பழக்கியிருந்தார்கள்.

ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள். உறங்கும் போது எப்போதும் கைகளுக்குள் ஜெஸி இருக்க வேண்டும். ரவி அத்தான் இதையெல்லாம் பார்த்து ரசிப்பார். “பாத்தீங்களா தம்பி… ஜெனிக்கு எத்தனை அறிவுன்னு” “பாத்தீங்களா அவளுக்கு எத்தனை அன்புன்னு” என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்.

நான் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினேன். அண்ணனின் பைக் சாவியைப் பார்த்தேன்; ஆணியில் தொங்கும் – இப்போது தொங்கவில்லை.

“டேய் எபின், இங்கே வாடா. உங்கப்பாவோட வண்டி சாவி எங்கேடா?” எபின் அண்ணன் மகன். பத்தாவது படிக்கிறான். அண்ணனுக்கு ஆத்தூரில் வேலை என்பதால் பஸ்ஸில் தான் போகிறான். அவன் தெரு முக்கைத் தாண்டியதும் பெரியவன் எபினும், பொடியன் ரோவனும் அண்ணனின் பைக்கை கள்ளத்தனமாக ரவுண்டு அடிக்க எடுத்துச் சென்று விடுவார்கள். ஊர் சுற்றக் கிளம்பும் முன் மீட்டர் வயரை பிடுங்கி விட்டு திரும்பக் கொண்டு வந்து நிறுத்தும் போது இருந்தது இருந்தபடி மாட்டி வைத்து விடுவதில் பயல் கில்லாடி.

“சித்தப்பா.. டிவி மேல பாருங்க”. திரும்பிப் பார்க்காமல் சொன்னவன் டேபிள் மேல் தலையைக்  கவிழ்த்தியிருந்தான். எதையோ தீவிரமாக நோண்டிக் கொண்டிருந்தான்.

“காலங்காத்தாலே என்னத்தடா நோண்டிகிட்டு இருக்கே” அருகில் சென்றேன். சில அட்டைகள்.. கலர் கலராக ஸ்கெட்சு பேணாக்கள், ஜிகினா தூள்கள், பசை என்று மேசை முழுக்க இரைந்து கிடந்தது.

“இன்னிக்கு சாயந்திரம் ஜெஸியோட பர்த்டே பார்ட்டி இருக்கில்லே… அதான், இன்விடேஷன் கார்ட் தயாரிக்கறேன்”

“டேய்.. நீயுமாடா…”

“நான் மட்டுமில்ல சித்தப்பூ… இன்னிக்கு பர்த்டேக்கு ஜெபம் பண்ணப் போறது உன்னோட மம்மி. பர்த்டே மெஸேஜ் தரப்போறது என்னோட மம்மி. பர்த்டே ஸ்பெஷல் பாட்டு ஜெனி பாடப் போறா.. சாய்ந்திரம் அப்பா வரும் போது ஸ்பெஷல் பர்த்டே கேக் வாங்கிட்டு வருவாங்க.. ரோவன் தான் வீட்டை டெக்கரேட் பண்ணப் போறான்” ரோவன் எபினின் தம்பி. ஆறாம் வகுப்புப் படிக்கிறான்.

“வெளங்கிடும்டா… ஆமா நீங்கெல்லாம் சேர்ந்து ஜெஸிக்கு பிறந்தநாள் கொண்டாடப் போறீங்களே இந்த விஷயம் அதுக்கு முதல்ல தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே கூடத்தில் அம்மா நுழைந்து கொண்டிருந்தாள், “இந்த ஒருநாள் கூத்துக்கு எவ்ளோமா செலவுமா பண்ணப் போறீங்க..?”  என்றேன்.

“அது.. உங்கத்தான் காசு குடுதிருக்காறாம்.. எப்படியும் ஒரு மூவாயிரம் ஆயிடும்” என்றாள்.

“நீ தான் பிறந்தநாள் ஜெபமா?”

“ஆமாம்” பெருமிதமாய்ச் சொன்னாள்.

“சரியாப்போச்சு.. நாட்ல அவனவன் சோறு கிடைக்காம அல்லாடிட்டு இருக்கான் இங்கே ஒரு கோமாளிக் கூத்துக்கு மூவாயிரம் செலவு, பாட்டு, கூத்து, கேக்கு, ஜெபம். அந்தக் கர்த்தர் மட்டும் ஒருவேளை உண்மையாவே இருந்து இதெல்லாம் பார்த்தாருன்னு வைச்சுக்க.. டென்சன்ல தாடிய பிச்சிக்கிட்டு அலைவாரு”

“டேய்..  உன் தலைல சாத்தான் இறங்கியிருக்கான். ஆண்டவரைப் பத்தி தப்பா பேசாதே”

“கர்த்தரே எங்கவீட்டு பாவிகளுக்கு மனமிரங்கும்.. போதுமாம்மா? சரி நான் வர்றேன்” என்றவாறே கிளம்பினேன்.

பைக்கை உதைக்கும் போது தங்கம்மாள் உள்ளே வந்தார்கள். இடுப்பில் ஒரு குட்டிப் பைய்யன் ஒருவன் ஒட்டிக் கொண்டிருந்தான். தங்கம்மாவுக்கு பக்கத்து வீடு. அவர் தான் எங்களையெல்லாம் சின்ன வயதிலிருந்து தோளில் போட்டு வளர்த்தவர்கள். கலியாணம் முடிந்து ஆறாண்டுகளிலேயே கணவனை இழந்தவர். சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்தே இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக நின்று ஆளாக்கினார்.

அம்மாவுக்கு சின்ன வயதிலேயே குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. நான்கு படி ஏறுவதற்குள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குவாள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரையும் பார்த்துக் கொண்டதாகட்டும், அக்கா பிரசவத்துக்கு வந்த போது கவனித்துக் கொண்டதாகட்டும் தங்கம்மா இல்லாவிட்டால் அம்மாவால் சமாளித்திருக்க முடியாது. இப்போதும் வயதான காலத்தில், அப்பா இறந்த பிறகு அம்மாவுக்குத் தங்கம்மா தான் பேச்சுத்துணை.

“தம்பி மெட்ராஸ்லேர்ந்து எப்போ வந்தீங்க” தங்கம்மாவின் முகமெல்லாம் சிரிப்பு. தங்கம்மாவின் இடுப்பிலிருந்த பொடியன் என்னை அந்நியமாய்ப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“காலைல வந்தம்மா.. இது யாரு பேரனா?”

“ஆமா தம்பி. ரெண்டாவது பேரன். மதியம் சாப்பிட வருவீங்களா?”

“இல்லம்மா.. இன்னிக்கு கலியாணச் சாப்பாடு. சாயந்திரமா வருவேன்” அந்தப் பைய்யன் கையில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு தஞ்சாவூர் தலையாட்டிச் செட்டியார் பொம்மை இருந்தது. அதை வாய்க்குள் முழுவதுமாகத் திணித்து விட முயன்று கொண்டிருந்தான்.

“டேய்… பேரு என்ன சொல்லு…” ஒரு மைக்ரோ செக்கண்ட் திரும்பி என்னைப் பார்த்தவன் மீண்டும் வெடுக்கென்று திரும்பிக் கொண்டான்.

“ரவி” தங்கம்மா தான் சொன்னார்.

“டேய் ரவி… மாமாவுக்கு டாடா சொல்லு பாக்கலாம்..” ம்ம்ஹும் அவன் திரும்புவதாயில்லை.  “சரிம்மா அப்புறம் பார்க்கலாம்” சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

மாலை தெரு முக்கில் வண்டியைத் திருப்பும் போதே வீட்டு முன் ஒரு பரபரப்பு தென்பட்டது. அம்மா, வேகமாக வெளியே வந்தவள் அதே வேகத்துடன் உள்ளே நுழைந்தாள். தங்கம்மா வேறு எதையோ தேடும் பாவனையில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நின்றார். வீட்டு முகப்பில் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினேன். ஜெனி கண்கள் வீங்கி அமர்ந்திருந்தாள். அவள் முன்னே பிறந்த நாள் கேக் பெட்டி பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அண்ணன் உட்கார்ந்திருந்தான். முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு உறைந்து போயிருந்தது. தங்கம்மாவின் பேரன் என்ன ஏதென்று புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டு ஜெனிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் அக்கா கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். எபினையும் ரோவனையும் காணோம். அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது.

“என்னாச்சுக்கா..”

“ஜெஸிய காணோம்டா” சொல்லும் போதே கண்கள் அங்கும் இங்கும் அலைந்தது.

” சரி அதுக்கேன் இத்தனை ஆர்பாட்டம்?” என்றேன்… கொலைவெறியுடன் எல்லோரின் பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது. தங்கம்மாள் தான் காப்பாற்ற முன்வந்தார்கள்..

“சரி விடுங்க… கடைல போய் வேற பொம்மை வாங்கிட்டாப் போச்சு..” பொம்மை என்கிற வார்த்தை ஜெனிக்குள் ஒரு பிரளயத்தையே உண்டாக்கி இருக்க வேண்டும். “ங்ஙே…”  என்று அழுகையை ஆரம்பித்து விட்டாள்.

“தங்கம்.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா…” அம்மா சீறினாள். நான் இடையில் புகுந்தேன்.

“அம்மா.. நீ முதல்ல சும்மா இரு… இதெல்லாம் என்ன கோமாளித்தனம்? ஒரு பொம்மைக்கு இந்தளவுக்கு சீராட்டு தேவையா? வேற வாங்கிட்டா போச்சு. அதென்ன கிடைக்காத சரக்கா என்ன?” என்றேன்.

“டேய் நீயும் பொம்மைன்னு சொல்லாதடா…. பாப்பா அதை அவளோட தங்கச்சின்னே நினைச்சிட்டு இருக்கா. நேத்திலேர்ந்து எத்தன ஆசையா எல்லா வேலையும் பார்த்தா தெரியுமா? பாரு வாங்கிட்டு வந்த கேக்கு பாவமா கிடக்கு. வீடெல்லாம் எப்படி அலங்காரம் பண்ணிருக்கு பாரு.. இவ்ளோ ஆசை வச்சிருக்கால்லே? பாவம்டா..”

“இப்படியே கொஞ்சிக் கொஞ்சி செல்லக் கிறுக்கு ஆக்கி வச்சிருக்கீங்க அந்தப் பிள்ளய. ஜெனி நீ அழதாம்மா.. நாம் வேற பொம்மை வாங்கிக்கலாம்”

“ஹாங்… இல்ல.. எனக்கு ஜெஸி தான் வேணும். யாரே ஜெஸிய திருடிட்டாங்க.. வேணும்னே திருடிட்டுப் போய்ட்டாங்க..எனக்கு ஜெஸி தான் வேணும்..” இப்படியாக ஜெனியின் விசும்பல்களின் ஊடாக காணாமல் போனது திருடப்பட்டதானது.

“யாரும்மா திருடினது” அக்கா ஜெனியின் புலம்பலை முக்கியமாக எடுத்துக் கொண்டு விசாரித்தாள்.

“ரவி தான் ஜெஸியோட கடசியா வெளையாண்டான்” ஜெனி எந்த முக்கியத்துவமும் இல்லாமல் சாதாரணமாக சொல்லப் போய் இப்போது எல்லோரின் பார்வையும் ரவியின் மேல் திரும்பியது. தங்கம்மா சங்கடத்தில் கையைப் பிசைந்து கொண்டார். எல்லாரும் தன்னையே உருத்துப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்பது தெரியாமல் ரவி விழித்தான். அவனுக்கு அது வேடிக்கையாய் இருந்திருக்க வேண்டும். கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். கையிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை சுழற்றி விட்டான். அது விருக் விருக்கென்று சுழல ஆரம்பித்தது. இன்னும் சப்தமாகச் சிரித்தான். அம்மா மெல்ல அவனைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

“டேய் ரவிக் குட்டி.. பொம்மைய எங்கடா வச்சிருக்கே..” ரவி அம்மாவின் தலையிலிருந்து தனியே தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை முடிக் கற்றையை ஆர்வமாகப் பற்றிக் கொண்டான்.

“அவங்கிட்டே தான் வேற பொம்மை இருக்கே அக்கா” தங்கம்மாள் வாயெடுக்கவும்..

“அதில்ல தங்கம்.. தெரியாம எங்காவது எடுத்துப் போட்ருப்பானோ?” ரவியின் கையிலிருந்து முடியை விடுவித்துக் கொண்டாள்

“இல்ல இவன் தான் எடுத்தான் எனக்குத் தெரியும்..” ஜெனியின் குரலில் இப்போது திட்டவட்டமான குற்றச்சாட்டு இருந்தது. தொடர்ந்து அழுததில் முகம் சிவந்து விட்டது. வார்த்தைகள் கேவல்களாக திக்கித் திக்கி வெளியானது. அக்கா பொறுமையிழந்தாள்..

“டேய்… பொம்மைய எங்கடா வச்சிருக்கே” அக்காவின் குரல் உயர்ந்தது. அம்மாவின் கையிலிருந்து ரவியை வாங்கிக் கொண்டாள்.

“ஙே.. ஞ்ஞூ..” குழரலாக ஏதோ சொன்னான். பேசக் கூடத் தெரியாதவனிடம் நோண்டி நோண்டிக் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் அதிகப்படியாய்த் தெரிந்தது.

“அக்கா.. அவனுக்கென்னக்கா தெரியும் சின்னப்பையன். அவனை எதுக்கு மிரட்டிகிட்டிருக்கே?”

“நீ சும்மா இருடா.. இப்பல்லாம் சின்ன வயசுலயே எல்லாத்துக்கு ரொம்ப வெவரம் வந்திடுதாக்கும். நம்ம வூட்டு கழுதைங்க தான் வெளுத்ததெல்லாம் பாலுன்னு தங்கிட்ட இருக்கற அத்தினி பொருளையும் எடுத்து தானம் பண்ணுதுங்க” அக்கா வேறெங்கோ பார்த்துக் கொண்டே சொன்னாள். தங்கம்மாவின் முகம் இருண்டது.

“சரிம்மா.. ரவியே திருடிட்டான்னு வச்சிக்கோ.. நாங்க வேணும்னா காசு கொடுத்துடறோம். வேற வாங்கிக்கிடுங்க. குழந்தைய குடு முதல்ல” தங்கம்மா முகத்தில் உயிரே இல்லை. தானே எடுத்து வளர்த்த பிள்ளை தன் சொந்த பேரணுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியதை தங்கம்மாவால் தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து எந்த நேரமும் வழிந்து செல்ல கண்ணீர் காத்துக் கொண்டிருந்தது. அக்கா விடுவதாக இல்லை.

“டேய், சொல்லுடா எங்கே வச்சிருக்கே?”

“ஙீய்ய்ய்ய்…” ரவி வித்தியாசமாக ஒலியெழுப்பிக் கொண்டே அழ ஆரம்பித்தான். தங்கம்மாவின் கண்களில் இத்தனை நேரமாகக் காத்து நின்ற கண்ணீர் கீழே இறங்கியது.

“அக்கா.. கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோ. ஒன்னரை வயசுக் குழந்தைக்கு என்னக்கா தெரியும். எது யாரோட பொருள்னு கூடத் தெரியாது. வலிச்சா கூட சொல்லத் தெரியாது. அவன் கிட்ட போய் அரட்டிகிட்டு இருக்கியே.. போயும் போயும் ஒரு பொம்மைக்காகவா இந்த ஆர்பாட்டம்? முதல்ல அவனை இங்க குடு” ரவியை அக்காவிடம் இருந்து விடுவித்து தங்கம்மாவிடம் கொடுத்தேன்.

சிறுகதை : ஒரு பொம்மையும் சில மனிதர்களும் !“டேய் உனக்கு என்னடா தெரியும்? ஜெனி அதை பொம்மையாவே நினைக்கலை தெரியுமா? தன்னோட தங்கச்சின்னு மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கா? ஜெனி அழுதது மட்டும் உங்க அத்தானுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமில்ல? இப்ப ஜெனியை நீயா சமாதானப்படுத்த போறே? அவ அப்பாவை நீயா சமாளிக்கப் போறே? வீட்டுக்குள்ளே யாரையெல்லாம் விடறதுன்னு உங்களுக்குத் தெரியாதான்னு கேப்பாங்க. நீயே அவர்ட்ட பதில் சொல்லிக்க”

அக்கா சாடைமாடையாக தங்கம்மாவைக் குறிப்பிட்டது சரியான இலக்கைத் தாக்கியது. தங்கம்மா ஏதும் பேசாமல் வெளியே போகத் திரும்பினார். உணர்ச்சிகளற்ற முகத்தில் என்ன சிந்தனை ஓடியது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களையெல்லாம் அம்மா பெற்றிருந்தாலும் வளர்ப்பைப் பொறுத்தவரை தங்கம்மா தான் அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொண்டது. ஜெனி சிசேரியன் செய்து தான் பிறந்தாள். அக்காவால் ஒரு மாதம் வரையில் அசையக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தாள். அந்த நேரத்தில் அவளுக்குப் பீ மூத்திரம் வரை வழித்து சேவை செய்தது தங்கம்மா தான். வேற்று வீட்டுப் பிள்ளைகளாக எங்களை அவர் எப்போதும் கருதியதில்லை. தனது மகளே இப்படிச் சொல்லி விட்டாளே என்று தங்கம்மா திகைத்துப் போயிருந்தார்.

அம்மா நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்றாள்; தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் கூடத்தின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருந்த இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். “யேசப்பா… எப்படியாவது ஜெஸிய எங்க கிட்ட குடுத்திரும் அப்பா… இசுரவேலின் தேவனே….” அவளது ஜெபம் தொடர்ந்தது. எனது பொறுமை மொத்தமாகக் கரைந்தது.

“அடச்சீ… எழும்பி வா இங்க. மனுசங்களுக்கு இல்லாத மரியாதைய ஒரு உயிரில்லாத ஜடத்துக்கு தாரீயே? கேவலம் ஒரு பொம்மைக்குப் போய் ஜெபம் பண்றியே இத்தனை நாள் நம்ம குடும்பத்துல ஒருத்தரா இருந்த தங்கம்மாவை அக்கா இப்படி கேவலப்படுத்திட்டு இருக்கா அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கணும்னு தெரியலையா?” இத்தனை நேரமாகப் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் முதல் முறையாகக் குறுக்கிட்டான்

“ஏம்மா.. இந்த கோமாளித்தனத்துக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா? அது இன்னிக்குன்னு இருக்கட்டுமே? ஜெனியும் வளர்ந்த பிள்ளையாகிட்டாளே.. இனியும் இப்படி பொம்மைகளே உலகம்னு எத்தனை நாளுக்குத் தான் இருந்துடப் போறா? இத்தனை நாளா மனுஷங்களோட உலகம்னா என்னான்னு காட்டாமே வச்சிருந்தது தப்பு தானே? இனியும் அது அப்படியே இருக்கணுமா? பொம்மை அன்பையும் பொம்மைப் பாசத்தையும் தாண்டி அவளுக்கு உண்மையா மனுசங்களோட உணர்ச்சிகளைப் புரியவைக்க வேணாமா? அழுதா அழட்டும். கொஞ்சம் நேரம் அழுத பின்னே சரியாய்டுவா. இப்படி அவ கொஞ்சம் சிணுங்கின உடனே எல்லாரும் பதறியடிச்சு நிக்கறது தான் அவளுக்கு ரொம்ப தொக்கா போச்சு. கொஞ்ச நேரம் அப்படியே விடுங்க. தானே சரியாய்டும்” அண்ணன் சொல்லி முடிக்கவும், தங்கம்மாள் வெளியே செல்லத் திரும்பவும் எபின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

எபினைப் பார்த்ததும் அங்கே ஒரு நிமிடம் எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அதற்கு அவன் காரணமல்ல. அவன் கையிலிருந்த பொம்மை தான் காரணம். அது ஜெஸி.

“எங்கேடா போயிருந்தே?” அண்ணன் தான் சமாளித்துக் கொண்டு கேட்டான்.

“அது வந்து.. ஜெஸியோட கம்மல் பழசாயிடிச்சின்னு ஜெனி நேத்திக்கே சொல்லிச்சா.. அதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு அவளுக்குத் தெரியாம எடுத்துப் போய் வேற புது ஸ்டட் வாங்கிப் போட்டுக் கொண்டாறேன். ஆமா.. ஏன் எல்லாரும் இப்படி நிக்கறீங்க?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. தங்கம்மாள் ஒரு முறை எல்லோரின் முகத்தையும் வெறித்துப் பார்த்தார். முப்பது வருட நட்பு மெல்ல நடந்து  வெளியேறியது.

பொம்மை கிடைத்து விட்டது. ஒரு அற்புதமான மனுஷியை அன்றோடு இழந்து விட்டோம். தங்கம்மாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சிகள் ஒரு கருக்கறிவாளாய் இதயத்தை அறுத்தது. இந்த குடும்பத்திற்காக இத்தனை வருடங்களில் எத்தனையெத்தனை உதவிகள் செய்திருப்பார். அதெல்லாம் ஒரு கணத்தில் என் நினைவுகளில் கடந்து சென்றது. அக்கா, ஜெஸியைக் கையில் பிடித்திருந்தாள். ஜெனியின் முகத்தில் ஒரு சந்தோஷம் பரவியிருந்தது. அக்காவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. அண்ணன், நம்பிக்கையில்லாத ஒரு முக பாவனையைக் காட்டி விட்டு தன் அறைக்குத் திரும்பி நடந்தான்.

அம்மா மீண்டும் தள்ளாடித் தள்ளாடிச் சென்று இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். நன்றி சொன்னாளா மன்னிப்புக் கேட்டாளா என்று தெரியவில்லை. ஆனால், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சென்றதை மட்டும் பார்க்க முடிந்தது.

________________________________________________

– கார்க்கி, புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!

10

தென் கொரியத் துறைமுகத்தின் 85ஆம் எண் கிரேன், இனி தோல்வியின் சின்னமல்ல. ஹன்ஜின் நிறுவன தொழிலாளர்கள், அந்த கிரேனை இனி பார்க்கும்போதெல்லாம் மீட்டெடுத்த தங்கள் உரிமைகளை பெருமையுடன் நினைவுகூறுவார்கள். அதோடு கிம் ஜின் சுக்கையும்.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!கிம் ஜின் சுக் – தென்கொரியாவின் முதல் பெண் வெல்டராக அவரை எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியாது. ஆனால், கிம்மை இன்று அறியாதவர்கள் தென்கொரியாவிலேயே கிடையாது. ஹன்ஜின் நிறுவனத்தை எதிர்த்து ,115 அடி உயரமுள்ள கிரேனில் உச்சியில் ஏறி,  கீழே இறங்க மறுத்து தனது போராட்டத்தை ஆரம்பித்தார், கிம்.

ஹன்ஜின் நிறுவனம் லாபத்தில் நடந்தாலும், கடந்த இரு வருடங்களில் அதன் தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம். நடத்திய போராட்டங்களும் ஏராளம். சேர்மனுக்கும் அவரது குடும்ப நபர்களுக்கும் வருடம் தவறாமல் ஊதிய உயர்வை கொடுத்த நிறுவனம், தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டுகளையும், தற்கொலைகளை மட்டுமே பரிசாகக்கொடுத்தது. கடந்த இரண்டு வருடங்களில், மொத்தமாக‌, 1300 பேரை வேலையிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறது இந்த நிறுவனம்.  நிறுவனத்தின் இந்த அராஜகத்தை எதிர்த்துதான், 85ஆம் எண் கிரேனின் ரூமில் ,கடந்த ஜனவரி 6ஆம் தேதி தன்னை அடைத்துக்கொண்டார், கிம்.

கிம், அந்த கிரேன் அறைக்குள் செல்லும் போது எந்த திட்டங்களுடனோ அல்லது முன்னேற்பாடுகளுடனோ செல்லவில்லை. தன் 51 வயதில், இழப்பதற்கு ஒன்றுமில்லாத நிலையில், மனதிடத்தை மட்டும் துணையாகக் கொண்டு இந்த போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் அந்த கிரேனின் அறைக்குள் செல்லும்போது அவரிடமிருந்ததெல்லாம் ஒரே ஒரு செல்போன் மட்டுமே. அதுவும், ஒன்றிரண்டு நாட்களில் சார்ஜ் இல்லாமல் செயலிழந்தது.

நிர்வாகத்தின் கெடுபிடிகளையும், தென்கொரியாவின் காலநிலைகளையும் தாக்குபிடித்து அவர் உயிருடன் கீழே இறங்கி வருவார் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் அவரிடம் இல்லை. 35 மீட்டர் உயரத்தில் கிம் அந்தரத்தில் தொங்கியபோது தென்கொரியாவை மூன்று பருவகாலங்கள் கடந்திருந்தது. மொத்தமாக 309 நாட்கள். சூறாவளிக் காற்றோ சுட்டெரிக்கும் வெயிலோ, கனமழையோ எதுவும் கிம்மின் உறுதியைக் குலைக்கவில்லை. இத்தனைக்கும், அவரிடம் கதகதப்பான கம்பளி போர்வைகளோ, படுக்கையோ இருக்கவில்லை. இருந்ததெல்லாம் ஒரே ஒரு பக்கெட் – இயற்கை உபாதைகளுக்காக மட்டும் அதை பயன்படுத்தியிருக்கிறார். வெறும் உருளைக்கிழங்குகளும் ,வேக வைத்த பீன்சுமே அவரது உணவு.

கிம்மின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறத் துவங்கியது. தொழிலாளர்களுக்கிடையில் செய்தி பரவியதும் அவருக்கு ஆதரவாக திரளத்  தொடங்கினார்கள். ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத நிர்வாகம் விழித்துக்கொண்டு போராட்டத்தை தடுக்க முனைந்தது. அதன் முதன்முயற்சியாக, கிரேனில் மின்சாரத்தை நிறுத்தியது. கீழே திரண்டிருக்கும் ஆதரவாளர்கள் கிம்முக்கு உணவு, குடிநீர் அனுப்ப முட்டுக்கட்டைகள் போட்டது. அந்தோ பரிதாபம், தன்னந்தனியாக கிரேனுக்குள் சென்ற கிம் இப்போது தனிநபரில்லை என்று ஹன்ஜின் நிர்வாகம் புரிந்துக்கொள்ளவில்லை போலும்.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!கிரேனின் கீழே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தின், அத்தனை சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு முறியடித்தனர். அடுத்த முயற்சியாக, நிர்வாகம் அடக்குமுறைகளை ஏவியது.  உண்மையில், அடக்குமுறைகளால்தான் போராட்டம்  வலுப்பெற்றது. இந்த போராட்டம் கிம்முடையது மட்டுமில்லை, தம்முடையதும்தான் என்று உணர்ந்த தொழிலாளர்கள் 85ஆம் எண் கிரேனுக்குக் கீழாக குவிந்தனர்.

இப்படியே, 309 நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும், வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்தான். ஆனால், கீழே திரண்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை  நோக்கும்போது தனது போராட்டம் ஒன்றுமேயில்லை என்று உணர்ந்திருக்கிறார், கிம். கிம்முக்கும், உலகுக்கும் இருந்த ஒரே தொடர்பு சாதனம்,அவரது ஆதரவாளர்கள் வழங்கியிருந்த ஸ்மார்ட் போன் மட்டும்தான்.

அதன்மூலம், ட்விட்டரில் கொரிய ட்வீட்டுகளை இட்டிருக்கிறார்.  அவருக்கு, இருபதாயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அவரது ட்வீட்டுகளை உடனுக்குடன் மொழிபெயர்த்தும் இருக்கிறார்கள். இதன்மூலம் போராட்டம் இன்னும் பலரை சென்றடைந்தது. செய்தியை கேள்விப்பட்ட மக்களும், தங்கள் ஆதரவை தெரிவிக்க எங்கிருந்தெல்லாமோ கிளம்பி வந்தனர். இதைத் தொடர்ந்து, 700 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் 7000 பேர்  தென்கொரியாவின் பூசான் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.  நிர்வாகமோ, அவர்களை கிம்மிடம் நெருங்கவிடாமல், கலவரமென்று சொல்லி, போலீசின் உதவியோடு மக்கள்திரளை கலைத்தது. அரசாங்கம் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே நின்றது. இரக்கமில்லாமல், அப்பாவி மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரையும் மட்டுமல்லாது, வன்முறையையும் பிரயோகித்தது. இது ஆதரவாளர்களுக்கு இன்னும் கோபமூட்டியது.

மக்களின் கோபத்துக்கு ஆளாக விரும்பாத அரசாங்கமும் நிர்வாகமும், இறுதியாக, கிம்‍மின்  கோரிக்கைகளுக்கு அடிபணிந்தன. நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. வேலையிழந்த 94 பேரை ஒருவருடத்துக்குள் வேலைக்கு திரும்பச் சேர்த்துக்கொள்வதாகவும், அவர்களது இழப்பீட்டுத் தொகையை கொடுப்பதாகவும், தொழிலாளர் நலன்களுக்கெதிராக போடப்பட்ட சட்டதிட்டங்களை மீளப்பெறுவதாகவும் வாக்களித்தது. இதன்பிறகே, கிம் தனது போராட்டத்தை கைவிடுவதாகவும், 85ஆம் எண் கிரேனிலிருந்து கீழே இறங்கி வருவதாகவும் அறிவித்தார்.

கிம், 85ஆம் எண் கிரேனை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது. ஆம், அது பத்து வருட கணக்கு. லாப நட்ட கணக்கைக் காட்டி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது ஹன்ஜினுக்கு புதிதல்ல. பத்து வருடங்களுக்கு முன், இதே ஹன்ஜின் நிறுவனம் நட்டத்தை காட்டி 650 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதனை தட்டிக்கேட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மீது வழக்குகளை பதிவு செய்தது. அதோடு, அவர்களது குடும்பங்களையும், வீடுகளையும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடக்குமுறைக்குள்ளாகி துன்புறுத்தியது.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!ஹன்ஜினின், அராஜகத்தை பொறுக்க முடியாமல் தொழிற்சங்க தலைவர் கிம் ஜூயிக்  85ஆம் எண் கிரேனின் உச்சிக்குச் சென்று தன்னை அடைத்துக்கொண்டார்.  129 நாட்கள் தொடர்ந்த அவரது போராட்டம் இறுதியில் தற்கொலையில் முடிந்தது. அன்று கிம் ஜூயிக் உயிரிழந்த  அதே தளத்தை, இன்று தொழிலாளர் உரிமைகளுக்கான நம்பிக்கையின் குறியீடாக மாற்றியிருக்கிறார், கிம் ஜின் சுக்.

பொதுவாக, நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலையிழப்பு என்றால் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு’ என்று நமது சீட்டை இறுக பிடித்துக் கொள்வதுதான் வழக்கம். வேலையிழந்த தொழிலாளியைப் பற்றியோ, தொழிலாளர் உரிமையைப் பற்றியோ  அல்லது நமக்கும் நாளை அந்த நிலைதான் என்றுகூட‌ நினைத்து பார்க்காமல்தான் பிழைப்பை ஓட்டி வருகிறோம். முதலாளிகளுக்கு லாபம் குறையும்போது அல்லது அமெரிக்காவில் பொருளாதார‌ம் நெருக்கடிக்கு உள்ளாகும்போதெல்லாம் பலியாக்கப்படுபவர்கள் தொழிலாளர்கள்தான்.

இதற்கு மேல் அவர்களால் லாபமில்லை எனும் நிலை வரும்போது நிர்தாட்சணயமின்றி  தெருவில் நீக்கி வீசப்படுபவர்கள் தொழிலாளர்களே.  இப்படி,  உடன் வேலை செய்யும் தொழிலாளரை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள் என்ற செய்தி வந்தால் பொதுவாக, அடுத்தவரிடம் எந்த ரியாக்சனும் இருக்காது. ஒரு உச்சு கொட்டிவிட்டு கடந்து சென்றுவிடுகிறோம்.

முதலாளிக்கு லாபம் குறைந்தால் நம்மை வேலையிலிருந்து தூக்குவதை சரிதான் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், முதலாளிக்கு லாபம் வந்தபோது அந்த லாபத்தில் பங்கு கொடுத்தாரா என்பதை யோசிப்பதில்லை. அந்த லாபமும் தொழிலாளியின் உழைப்பினால் வந்தது என்றும் புரிந்து கொள்வதில்லை. மாறாக, அவரது லாபத்துக்காக தொழிலாளர்களின் குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் வேலையிலிருந்து தூக்குவதை சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஏதோ முதலாளிகள்தான் நமக்கு வேலை கொடுக்கிறார்கள், அவர்களால்தான் உலக மக்கள் பிழைத்திருக்கிறார்கள் என்று முதலாளிகளை தெய்வங்களாக எண்ணிக்கொள்கிறோம்.

தொழிலாளர்களால்தான் முதலாளிகள் பிழைத்திருக்கிறார்கள் என்பதை உணர மறுக்கிறோம். நமது உரிமைகளை பெறக்கூட போராட துணிவதில்லை. ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று கீதோபச்சாரத்தையோ அல்லது விதியை நம்பிக்கொண்டு அடிமைகளாகவோ காலம் கழிக்கிறோம். தொழிலாளரின் உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம்  ‘யாமிருக்க பயமேன்’ என்று சொல்லும் எந்த கடவுளும் தொழிலாளரின் நலன்காக்க வருவதில்லை.

கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!தொழிலாளர்கள்தான் தம் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடவும் வேண்டியிருக்கிறது. உழைக்கும் மக்களிடமிருந்துதான்  சுரண்டலுக்கெதிரான போராட்டமும், தலைமையும், போர்க்குணமும் வெளிப்படுகிறது. இதை நிரூபித்திருக்கிறது ‍ கிம் ஜின் சுக்-கின் போராட்டம்.

வெற்றிக்களிப்புடன் கீழே இறங்கி வந்த கிம்-மை கைது செய்ய கைகளில் விலங்குடன் காத்திருந்தது போலீசு. நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்துக்கொண்டதற்காகவும், அத்து மீறி நடந்துக் கொண்டதற்காகவும் என்கிறது, போலீசு தரப்பு காரணங்கள். காரணங்களை விடுங்கள்…

ஆனால், தென்கொரிய உழைக்கும் மக்களுக்கு மட்டுமில்லை, உலகத்த்தின் அனைத்து உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கமும் அறிந்துக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது.

ஏனெனில், இன்று உலகெங்கும் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். சங்கமாக ஒன்று கூடி உரிமைகளுக்காக குரல் எழுப்பினாலன்றி இதற்கு ஒரு முடிவு கிடைக்காது. கிம்மின் முயற்சி அதற்கான முகாந்திரம் மட்டுமே! முதலாளித்துவதற்கெதிரான இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடாமல் எதையும் சாதிக்க முடியாது. கிம்மின் வார்த்தைகளில் சொல்வதானால், “இறுதி வரை போராடுவோம்”. ஏனெனில், மகிழ்ச்சி என்பது போராட்டமே!

கிம்முக்கும் தென் கொரிய மக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்போம்!

_____________________________________________________

– வேல்விழி

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!

இயலாமையுடன் பேருந்து கட்டண உயர்வை ஏற்க வேண்டுமா அல்லது போராட வேண்டுமா? போராடுவதென்றால் எப்படி போராடுவது, அரசுக்கு எப்படி எதிர்ப்பை தெரியப்படுத்துவது; அரசை எப்படி பணியவைப்பது?

தமிழக உழைக்கும் மக்களிடம் எழுந்திருக்கும் இந்தத் தலையாய கேள்விக்கு சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’யின் போராட்ட வழிமுறை விடையளித்திருக்கிறது. நவம்பர் 24ம் தேதி சென்னை ஆவடியில் சிறு பொறியாக கிளம்பிய அந்தப் போராட்டம், இன்று சென்னை மாநகர பேருந்தில் அன்றாடம் பயணம் செய்யும் மக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளை விட விரைவாக இந்தப் போராட்ட வழிமுறை பரவி வர என்ன காரணம்? அப்படி எந்த முறையில் போராடச் சொல்லி சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’(புமாஇமு – RSYF) மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறது? அப்படி போராடினால் காவல்துறை மூர்க்கத்துடன் பாயாதா? அனைத்தையும் விட, அப்படியென்ன சிறப்பான போராட்டத்தை புமாஇமு கண்டுபிடித்துவிட்டது?

அடுக்கடுக்காக எழும் இந்த அனைத்து வினாக்களுக்கும் பதிலை தெரிந்து கொள்ள சற்றே காலத்தை பின்நோக்கி நகர்த்துவோம்.

(படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

வம்பர் 24 அன்று ஆவடி பேருந்து நிலையத்தில் பயணிகள் குழுமியிருந்தார்கள். அனைவரது நாடி, நரம்புகளிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிட்ட பேருந்து கட்டணம். சல்லிசாக பணத்தை எடுத்து வைத்தால்தான் அலுவலகம் அல்லது கல்லூரி அல்லது வியாபாரத்துக்கு செல்ல முடியும். மாத இறுதி. ஒருவேளை உணவை தியாகம் செய்து பேருந்துக்காக எடுத்து வைத்தப் பணம், இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், மாதம் முடிய இன்னும் 6 நாட்கள் இருக்கின்றன. என்ன செய்வது… யாரிடம் கடன் கேட்பது… எதை அடகு வைப்பது…

என மக்கள் யோசித்தபடியே தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துக்காக மக்கள் காத்திருந்தபோது –

15 மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தார்கள். சட்டென அனைவரது கவனமும் அவர்கள் மீது திரும்பியது. காரணம், 13 பேர் சிவப்பு உடையில் இருந்தார்கள். இருவர் மட்டும் ’வேறொரு’ உடையையும் கூடவே தங்கள் முகத்தை மறைக்க ’இன்னொருவரின்’ முகம் வரைந்த முகமூடியையும் அணிந்திருந்தார்கள். அந்த உடையையும், முகத்தை மறைக்கும் முகமூடியையும் பார்த்ததுமே கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆச்சர்யம்… என அனைத்தும் கலந்த உணர்வு மக்களிடம் பூத்தது. தற்காலிகமாக தங்கள் கவலையை மறந்துவிட்டு, அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருவர், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா போல் ஆடை அணிந்து, ஜெவின் முகம் வரைந்த முகமூடியை, தன் முகத்தில் ஒட்ட வைத்திருந்தார். அடுத்தவரின் தோற்றம், அச்சு அசலாக, உடன்பிறவா சகோதரியான சசிகலாவை பிரதிபலித்தது.

அந்த 15 பேரும், நின்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேருந்திலும் ஏறினார்கள். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் கவனம், தங்கள் மீது திரும்பியதும், ஜெ போல் தோற்றம் அளித்தவர் தொண்டையை கனைத்துக் கொண்டு, தன் கையில் இருந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். அதாவது, ’தவிர்க்க இயலாத காரணத்தால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக’ அறிவித்தார். பிறகு தனக்கு பக்கபலமாக அருகில் நின்றுக் கொண்டிருந்த சசிகலா போல் இருந்தவரை பார்த்து சிரித்தார்.

அவ்வளவுதான். சிவப்பு உடை அணிந்திருந்த மற்ற 13 பேரும், அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு அடித்தார்கள்! ’’மக்களோட வாழ்க்கைத் தரத்தை பத்தி எதுவுமே தெரியாம, கட்டணத்தை எப்படி நீ இஷ்டத்துக்கு உயர்த்தலாம்? நியாயமா பார்த்தா, பேருந்து கட்டணத்த முந்தையதை விட நீ குறைக்கணும்…’’ என நையப்புடைந்தார்கள்.

ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து கண்டபடி திட்ட வேண்டும் என நினைத்திருந்த மக்களும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும், ஜெ – சசி ஆகவே நினைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

அப்போதுதான் ’’அன்பார்ந்த உழைக்கும் மக்களே…’’என கணீரென்று ஒரு குரல் ஒலித்தது. சட்டென்று மக்கள் அமைதியானார்கள். குரலுக்கு உரியவர், அந்த 13 பேரில் ஒருவர்தான். அந்தக் குரலில் இருந்த அழுத்தம், அவர் என்னதான் சொல்கிறார் என காது கொடுத்து கேட்க வைத்தது.

பிசிறில்லாமல், அந்தக் குரலுக்குரியவர் பேச ஆரம்பித்தார். ’’’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்கள். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்க சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு முதலாளிகளுக்கும், அதிகார வர்க்க மற்றும் தரகு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் ஏழை, எளிய மக்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளின் நலன்கள்தான் முக்கியம்.

உலகின் முதல் 5 விஸ்கி வியாபாரிகளில் ஒருவனான விஜய் மல்லையா, இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை. பதிலாக தனது ’கிங் ஃபிஷர்’ஏர்லைன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி, தனக்கு மேலும் பண உதவி செய்யும்படி அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்கிறான்.

நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்திலிருந்து அவனை காப்பாற்ற அரசு முயல்கிறது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களை பேணுவதில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன. ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் அனைத்தும் விதிவிலக்கின்றி ’நலத்திட்டங்கள்’ என்னும் பெயரில் அறிவிப்பதற்கு பின்னால், முதலாளிகளின் நலன்கள்தான் இருக்கின்றன.

சாராயக் கடைகளை அரசே நடத்துகிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு  மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. ஆனால், மக்களின் அன்றாடத் தேவையான – உயிர் வாழ்க்கைக்கு அவசியமான – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன.

இந்த பாசிச நடவடிக்கையை மக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களாகிய நாம்தான். அடுத்தடுத்து நம்மீது திணிக்கப்படும் இந்த விலைவாசி உயர்வுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.

அது நம்மால் முடியும்.

பேருந்து கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதை மவுனமாக நாம் ஏற்றுக் கொண்டால், இந்த வருவாய் விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிக்கும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் பெயரில் நம்மை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவவே பயன்படும்.

எனவே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம். ஒட்டுமொத்த மக்களும் டிக்கெட் வாங்க மாட்டோம் என்று சொன்னால், இந்த அரசால் என்ன செய்ய முடியும்? நிமிர்ந்து நிற்போம். நமது உரிமைகளை நிலை நாட்டுவோம். மக்களுக்கான அரசை நிறுவுவோம்.

அதற்கு முதல் படியாக, இன்று முதல் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…’’

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை நோக்கி அவர் பேசி முடித்த பிறகும், மவுனமே நிலவியது. ஆனால், அது சில விநாடிகள்தான்.

அதன் பிறகு, அந்தப் பேருந்தே குலுங்கும் அளவுக்கு அதிலிருந்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் கர்ஜித்தார்கள். ’’ஆம்.டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’

மக்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை சொல்லிவிட்டு, அந்த 15 பேரும், அந்தப் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அடுத்த பேருந்தில் ஏறினார்கள். முந்தைய பேருந்தில் என்ன நடந்ததோ, அதுவே இங்கும் நடந்தது. அடுத்தடுத்த பேருந்துகளிலும் நிகழ்ந்தது.

என்ன செய்வது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான கண்டனங்களை எப்படி தெரிவிப்பது, எந்த வகையில் போராடுவது என தெரியாமல் தடுமாறிய மக்களுக்கு இப்போது புதிய விடியலை கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் போராட்ட வழிமுறை நிச்சயம் பயனளிக்கும் என அவர்களுக்கு புரிந்தது. உடனே அந்த 15 பேரையும், நேசத்துடன் ’தோழர்’, ’தோழர்’ என அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தானே ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறார்கள்?

காலையில் ஆரம்பித்த பிரச்சாரம், மாலை வரை தொடர்ந்தது. மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்துக்கு பிறகு, மக்களும் உடன் இறங்கி சக பயணிகளிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…

டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…

அன்றைய பொழுது முடிந்ததும் புமாஇமு தோழர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை மறுநாள் செயல்படுத்தவும் முடிவு செய்தார்கள். அந்த முடிவு, போராட்டத்தை மறுகட்டத்துக்கு நகர்த்துவது தொடர்பானது.

அதன்படி, மறுநாள், நவம்பர் 25 அன்று அதே 15 புமாஇமு தோழர்கள், காலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் அருகில் ஒன்று சேர்ந்தார்கள். முந்தைய தினம் போலவே இன்றும் இரு தோழர்கள் ஜெ – சசி போல உடை, முகமூடியை அணிந்துக் கொண்டார்கள். சென்ட்ரல் இரயில்நிலையம் நோக்கி செல்லவிருந்த பேருந்தில் ஏறினார்கள்.

முந்தைய தின நிகழ்வுகளே இன்றும் அரங்கேறின, ஒரேயொரு திருத்தத்துடன். ’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். எங்களுடன் இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும். வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’ என முழங்கினார்கள்.

நல்ல பலன் கிடைத்தது. அந்தப் பேருந்தில் இருந்த கணிசமான மக்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். பலரும் டிக்கெட் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கச் சொல்லி வற்புறுத்திய நடத்துனர், ஒரு கட்டத்துக்கு பிறகு, தோழர்களின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

சென்ட்ரல் இரயில்நிலையத்தில் பேருந்து நின்றதும், தோழர்கள் இறங்கினார்கள். சாலையை கடந்து எதிர்பக்கம் வந்தவர்கள், தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

அண்ணாநகரிலிருந்து தோழர்களை கவனித்து வந்த சிலர், இம்முறையும் தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில், தோழர்களுடன் சேர்ந்து ஏறினார்கள். அதில் ஒரு மூதாட்டியும் இருந்தார்.

அதே தீவிரத்துடன் பிரச்சாரம் தொடர்ந்தது. இங்கும் கணிசமான மக்கள் டிக்கெட் வாங்க மறுத்துவிட்டு தோழர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ’’ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவி எல்லாம் யார் கேட்டாங்க? பால், பேருந்து கட்டணத்தை எல்லாம் எப்படி ஏத்தலாம்?’’என குரல் எழுப்பினார்கள். பாசிச ஜெயாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து எழுதும் பத்திரிகைகளை திட்டித் தீர்த்தார்கள். இங்கும் நடத்துனரும், ஓட்டுநரும் தோழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனாம்பேட்டையில் இறங்கிய தோழர்கள், சேத்துப்பட்டு செல்லும் பேருந்தில் ஏறினார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

தோழர்கள் ஏறிய பேருந்தின் நடத்துனர், தோழர்களின் போராட்டத்தை ஆதரித்தாலும் சற்றே பயந்துவிட்டார். எனவே காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருந்த காவல்நிலைய வாசலில் பேருந்தை ஓட்டுநரின் ஒத்துழைப்புடன் நிறுத்திவிட்டார்.

தோழர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரித்து வந்த மக்களுக்கு இந்தச் செய்கை பிடிக்கவில்லை. ’’நியாயமான போராட்டத்தை ஏன் இப்படி ஒடுக்க வேண்டும்? நாங்கள் தோழர்கள் பக்கம் நிற்கிறோம்…’’ என அறிவித்தார்கள்.

அவர்களை அமைத்திப்படுத்திய சென்னை புமாஇமு-வின் இணைச் செயலாளரும், 15பேரில் ஒருவருமான தோழர் நெடுஞ்செழியன், நடத்துனருடன் இறங்கி காவல்நிலையத்துக்குள் சென்றார். அங்கிருந்த உயரதிகாரியிடம் ஒளிவுமறைவின்றி நடந்ததை, நடந்தவாறே சொன்னதுடன், ’’எங்களை சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்றார்.

தோழர் பேசியதை காது கொடுத்து கேட்ட அந்த காவல்துறை அதிகாரி, சட்டென நடத்துனரிடம் பாய்ந்தார். ஆம், தோழரை அவர் கண்டிக்கவில்லை!

’’இங்க எதுக்குயா பஸ்ஸை நிறுத்தின..?’’

’’சார்…’’ அதிர்ந்த நடத்துனர், ’’நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்? இவர் சொன்னதை கேட்டீங்கல? போராடறாங்க சார்…’’

’’அதுக்கென்ன இப்ப? பஸ்ஸுக்குள்ளதான போராடறாங்க, ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த? உங்க டிப்போவுக்கு போய் பஞ்சாயத்துனா பேசிக்க, இல்ல சமரசம்னா பண்ணிக்க… போ… போ…’’

அதற்கு மேல் அங்கிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த நடத்துனர், தோழருடன் பேருந்தின் அருகில் வந்தார். அதற்குள் மற்ற தோழர்களும், பயணிகளில் சிலரும் இறங்கியிருந்தனர்.

கண்ணாடி வழியே வாடிய முகத்துடன் வந்த நடத்துனரை கண்டதும், ஓட்டுநருக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனடியாக வண்டியை கிளப்பி, பயணிகள் ஏறினார்களா இல்லையா என்றுக் கூட பார்க்காமல் வேகமாக சென்றுவிட்டார்! ஓடிப் போயந்தப் பேருந்தில் ஏறினார் நடத்துனர்.

வாசல் வரை வந்த காவல்துறை அதிகாரி, தோழர் நெடுஞ்செழியனை அழைத்து, ’’பர்மிஷன் வாங்கி போராடினா இதுமாதிரி சிக்கல் வராதே…’’ என்றார்.

’’யார்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு சொல்றீங்க?’’ விலைவாசி உயர்வுக்கு எங்களிடம் பர்மிஷன் வாங்கித்தான் வெளியிட்டார்களா? அது சரின்னா இதுவும் சரிதான் என கறாராக கேட்டார் தோழர் நெடுஞ்செழியன்.

’’உங்க அமைப்புகிட்டயே இதுதாங்க ப்ரச்னை. பதில் பேச முடியாதபடி மடக்கிடறீங்க…’’ என்று அலுத்துக் கொண்டவர், ’’தயவு செஞ்சு அண்ணா மேம்பாலத்துக்கு அந்தப் பக்கம் போய், ஏதாவது செஞ்சுக்குங்க… இங்க வேண்டாம்?’’

’’ஏன்?’’

’’அந்தப் பக்கம்னா என் லிமிட்ல வராதுங்க… புரிஞ்சுக்குங்க…’’ என்றார் பரிதாபமாக.

ஆனால், தோழர்கள், உறுதியுடன் டி.எம்.எஸ். நிறுத்தத்துக்கு சென்று சேத்துப்பட்டு பேருந்தில் ஏறினார்கள். பிறகு சேத்துப்பட்டிலிருந்து மதுரவாயில் வரை பேருந்தில் பிரச்ச்சாரம் செய்தபடியே சென்றார்கள்.

எங்குமே தோழர்கள் மட்டுமல்ல, கணிசமான மக்களும் டிக்கெட் வாங்கவில்லை. வாங்க மறுத்துவிட்டார்கள். பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை விமர்சித்தார்கள். நடத்துனர்களும், ஓட்டுநர்களும் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது.

மதுரவாயிலில் தோழர்கள் இறங்கியபோது, யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பினால், மூதாட்டி.

’’நீங்க பேசினது, போராடினது எல்லாம் சரி… இனிமே எங்க போனாலும் டிக்கெட் எடுக்கறதில்லைனு உறுதியா இருக்கேன்…’’

’’நன்றி பாட்டி… நாங்க உங்களுக்கு துணையா இருப்போம்…’’

’’அதைதான் போலீஸ் ஸ்டேஷன்லயே பார்த்தனே…’’ என புன்னகைத்தார் அந்த மூதாட்டி.

’’என்ன பாட்டி சொல்றீங்க..?’’

’’அட, ஆமா பசங்களா… இல்ல இல்ல தோழர்களா… அண்ணாநகர்லேந்து நீங்க என்னதான் செய்யறீங்கனு பார்க்க உங்க கூடதான் நான் வந்துகிட்டு இருக்கேன்… உங்கள மாதிரி எந்தக் கட்சிக்காரனும் எங்க கஷ்டம் புரிஞ்சு போராடினதில்ல… வூட்டுக்கு போய் அக்கம்பக்கமெல்லாம் ’எங்க போனாலும் டிக்கெட் வாங்காதீங்க’னு சொல்லப் போறேன்…’’

’’செய்ங்க பாட்டி… நாங்க வர்றோம்… ஏதாவதுனா எங்களுக்கு தகவல் கொடுங்க…’’ என்றபடி தங்கள் தொடர்பு எண்ணை அளித்துவிட்டு தோழர்கள், ’’வர்றோம் பாட்டி’’ என கிளம்பினார்கள்.

’’கொஞ்சம் நில்லுங்க… வந்து… நான் வயசுல பெரியவ. உங்களவிட எனக்கு அனுபவம் ஜாஸ்தி. அதனால நான் ஒண்ணு சொல்றேன்… அதை தட்டாம நீங்க செய்யணும்…’’

தோழர்கள் அமைதியாக பாட்டியை பார்த்தார்கள்.

’’இது மட்டும் வேண்டாம். எங்க நானே கோபம் தாங்காம இந்த பாப்பாவ, அந்த ….னு நினைச்சு கொன்னுடுவனோனு அப்பத்துலேந்து பயந்துட்டு இருக்கேன். எல்லாரும் என்னை மாதிரியே கோபத்தை அடக்குவாங்கனு சொல்ல முடியாது. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட போகுது… அதனால அந்த ராட்சசிய காட்டாம பேசுங்க… சரியா? பத்திரமா போயிட்டு வாங்க…’’

என்றபடி அந்தப் பாட்டி சென்றார்.

அந்தப் பாட்டி சுட்டிக் காட்டி, ’இதை அணியாதீர்கள்… அந்த அரக்கியை நினைவுப்படுத்தாதீர்கள்’ என்று சொன்னது ஜெயலலிதாவின் முகம் பொறித்த முகமூடியை!!!

 ___________________________________________________

– வினவு செய்தியாளர்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சரத்பவார் + கொலவெறி ரிமிக்ஸ்: “பாத்தேளா கலி முத்திடுத்து!”

9

“பாத்தேளா பாத்தேளா கலி முத்திடுத்து. மந்திரியவே ஒத்தன் அடிச்சிருக்கான் பாருங்கோ. என்ன அநியாயம்”  என்று வடநாட்டின் இதயத்துடிப்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு ‘தூங்குமூஞ்சி’ இந்து பத்திரிகை வரை பிலாக்கணம் பாடுகின்றன. விஷயம் வேறொன்றுமில்லை – தில்லியில் ஹர்விந்தர் சிங் எனும் சீக்கிய இளைஞர் ஒருவர் விலைவாசி ஏற்றம் மற்றும் ஊழல் முறைகேடுகளால் கடுப்பாகி ‘கொலைவெறி’ தலைக்கேற விவசாயத்துறை கேபினெட் அமைச்சர் சரத் பவாரை பளார் என்று அறைந்துள்ளார் – அவ்வளவு தான்.

இப்போது கொதிக்கும் இதே முதலாளித்துவ ஊடகங்கள் தான், மந்திரிகளும் இன்னபிற அதிகார கும்பலும் சேர்ந்து கொண்டு மக்கள் மேல் கொலைவெறித் தாக்குதல் தொடுத்த போதெல்லாம் ‘நாடு வல்லரசாகுதாக்கும்’ என்று ஒரே குரலில் பாடின. அது ஒரு பக்கமிருக்க, காஷ்மீரின் எல்லையில் குவிக்கப் பட்டிருக்கும் ஆயுதப்படைகளுக்கு நிகராக ஒவ்வொரு மந்திரியும் A டூ Z பல்வேறு பிரிவு பாதுகாப்பு வளையங்களுக்குள் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் வளைய வரும் நிலையில் இப்படி ஒரு ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை’ நிகழ்ந்ததை ஆளும் வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

ஏற்கனவே ஒரு முறை செருப்பு வீச்சுக்கும் உள்ளாகியிருப்பதால் மக்கள் யாரும் பேரழிவு ஆயுதங்களை காலில் அணிந்து நடமாடக் கூடாது என்கிற தடையை விதிக்கலாமா என்று கேபினெட் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டு வருவதாக பேசிக் கொள்கிறார்கள்.

ஒட்டு மொத்த அரசமைப்பு முறையே முற்றாக அழுகி நாறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படித் தனி நபர்களை மட்டும் தாக்குவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது தான். ஆனாலும் இது கோபமுற்றிருக்கும் மக்கள் திரளின் பிரதிநிதியாக இருந்து செய்யப்படும் எதிர்வினை.  இந்த கோபத்தின் உணர்ச்சி உண்மையானது.

இருந்தாலும் ‘எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டா’  என்று காங்கிரஸ் பா.ஜ.கவே உச்சி மோந்து பாராட்டும் அளவுக்குப் புகழ் பெற்ற இந்திய நடுத்தர வர்க்கம் லேசாக முழித்திருப்பது போல் தெரிகிறது.

சரத்பவார் வாங்கிய அடியை கண் குளிரப் பார்த்து மகிழ்ச்சியடைந்த நம்மைப் போன்றோருக்கு போனஸ் மகிழ்ச்சியாக, அதை சமீபத்தில் வெளியான கொலவெறிப் பாட்டோடு ரீமிக்ஸ் செய்தது யுட்யூபில் வழங்கியிருக்கிறார்கள் நமது துடிப்பு மிக்க இளைஞர்கள். செருப்பால் அடித்து சாணி கரைத்து ஊற்றி கழுதையில் ஊர்வலமாய் அழைத்து வந்தாலும் கூட எள் முனையளவும் கூச்சப்படாதவர்கள் தான் நமது ஓட்டுப் பொறுக்கிகள் என்பது ஒரு உண்மையென்றாலும் கூட யுட்யூபின் தயவால் கிடைத்திருக்கும் இந்த திடீர் ‘புகழ்’ அவர்களையே கூட நெளிய வைத்திருக்கும்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோவும் அதன் மொழி பெயர்ப்பும் கீழே –

சீக்கிய இளைஞர் :- நான் பாடுகிறேன்…

‘அறை’ பாட்டு

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி _________________ ஜி..

வெலவாசியெல்லாம் மேலே மேலே

பாவாரு நீயோ கீழே கீழே

நீங்களெல்லாம் திருடன் திருடன்

நானே உங்கள மிதிப்பேன் மிதிப்பேன்..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

பவார் :- பெப்பே பெப்பே பெப்பே பெப்பே.. பெபெப்பெபேபே..

பவார் :- பெப்பே பெப்பே பெப்பே பெப்பே.. பெபெப்பெபேபே..

சீக்கிய இளைஞர்:- ஊழலெல்லாம் மேலே மேலே

நாடு ரொம்பத் தப்பு தப்பு

பேச இது தான் நேரம் நேரம்

பவார்:- என்னெ எப்படி அவன் அடிக்கலாம்

சீ.இளைஞர்:-  உளறுவதை நிறுத்து..

பாட்டு இத்தோட முடியுது..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறி ஜி..

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!

13

1. தொழிற்சங்கம் (லேபர் யூனியன்) என்றால் உங்களுக்கு என்ன நினைவு வரும்?

சில பேருக்கு தென்னக ரயில்வேயின் கண்ணையா போன்று தொழிற்சங்கம் என்ற பெயரில் வேலை செய்யாமல் பணக்காரர்களாக வாழும் நபர்கள் நினைவுக்கு வருவார்கள். பலருக்கு, ‘வேலை செய்ய விருப்பம் இல்லாமல் கொடி பிடிப்பவர்கள் கூட்டம்’ என்றும் ‘தொழிற்சங்கம் அமைத்தால் தொழிற்சாலையில் எப்படி ஒழுக்கம் இருக்கும்? வேலை செய்யாதவர்களை எப்படி நிர்வாகம் தட்டிக் கேட்க முடியும்? உடனேயே வேலை நிறுத்தம் என்று அடாவடி செய்ய மாட்டார்களா?’ என்ற எண்ணங்கள் மனதில் எழும்பும்.

‘ஒரு காலத்தில் தொழிற்சங்க இயக்கம் தேவையாக இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் தொழிலாளர் நல சட்ட திட்டங்கள் மூலம் தொழிலாளர் நிலைமை உயர்ந்து விட்டது. குறிப்பாக சந்தையில் நிலவும் போட்டியின் விளைவாக நிர்வாகங்களே அதிக வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கம் எல்லாம் காலாவதி ஆகிப் போன கோட்பாடு’ என்பது சிலரது கருத்து.

2. சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றால் என்ன நினைவு வரும்?

பிபிசி, சிஎன்என் இன்டர்நேஷனல் போன்ற மேற்கத்திய தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களுக்கு ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் ‘சுற்றுச் சூழலுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்’ என்று காட்டுவதற்காக வெளியிடும் காடுகள், மரங்கள், பறவைகள், வெட்டுக் கிளிகள் நடிக்கும் விளம்பரங்கள் நினைவுக்கு வரலாம்.

‘இந்த என்ஜிஓக்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் காரணம் சொல்லி எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் எதிர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்! அணை கட்டினால், இடம் பெயர்த்தப்படும் மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள், அணு மின் உலை அமைத்தால் கதிர் வீச்சு அபாயம் என்று மக்களை போராட தூண்டுகிறார்கள், அனல் மின்நிலையம் அமைத்தால் நிலக்கரி புகையால் மாசுபடுகிறது என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்,’ ‘இப்படியே எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டை போட்டால் நாட்டு முன்னேற்றத்துக்கு மின்சாரம் எங்கிருந்து வரும்?  பொருளாதார வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்?’ இது சிலரது கருத்து.

3. (Sustained Development) நீண்ட கால வளர்ச்சி என்றால் என்ன?

இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தி, எல்லா மக்களுக்கும் வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும்படி ஏற்படும் வளர்ச்சி. கார்பொரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) எனப்படும் வணிகநிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் வணிக நிறுவன குழுமங்கள் இதை சாதிக்க முற்படுவதாக சிலர் நினைக்கலாம்.

தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நீண்ட கால வளர்ச்சி என்ற மூன்று கேள்விகளுக்கும் அளிக்கப்படும் தீர்வுகள் குறையுடையனவாகவே இருப்பதை நாம் உணர்கிறோம். இவ்வளவுதான் சாத்தியம் என்று சமரசம் செய்து கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நடைமுறையில் இந்த பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுடன் தொழில் வளர்ச்சியை ஆதரித்து யார் செயல்பட முடியும்?

“சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான கருத்துக்களும் உருவாகி வருகின்றன. இயற்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான சமநிலையை பராமரிக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்ய முடியும்” – இப்படி சொன்னவர் சத்திஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய சங்கர் குஹா நியோகி.

சங்கர் குஹா நியோகி
சங்கர் குஹா நியோகி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர் குஹா நியோகி 1991-ல் பிலாய் நகரில் தனது 48வது வயதில் வாடகை கொலைகாரர்களால் கொல்லப்பட்டார். அவர் அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்? கண்ணையா போல ஊழல் வாழ்வு வாழ்ந்தாரா? காட்டில் மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தாரா? அல்லது என்ஜிஓ என்ற பெயரில் ஊழல் செய்து கொண்டிருந்தாரா? எதற்காக அவர் கொல்லப்பட்டார்?

1960களில் நியோகி பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டே படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றார். 1964-65-ல் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, பிளாஸ்ட் பர்னஸ் செயல் குழுவின் செயலாளர் ஆக பணியாற்றினார். அடுத்து வந்த ஆண்டுகளில் நியோகி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா-லெ) வின் முன்னோடியான கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

குறுகிய காலத்துக்கு சிபிஐ(எம்எல்) கட்சியில் சேர்ந்து தலைமறைவாக வேலை செய்த பிறகு கட்சியை விட்டு விலகி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார்.

வடக்கு பஸ்தரில் காட்டு வேலை, துர்க் மாவட்டத்தில் மீன் பிடித்து விற்கும் வேலை, கேரி ஜூங்காதாவில் விவசாய வேலை, ராஜ்நந்தகாவில் ஆடு மேய்த்தல் என்று பலவிதமான வேலைகள் செய்து வாழ்ந்து வந்தார். பஸ்தர் பகுதி ஆதிவாசிகளின் போராட்டம், ராஜ்நந்தகாவில் மோங்க்ரா அணைக்கு எதிரான கிளர்ச்சி, தாய்ஹந்த் மக்களின் தண்ணீருக்கான போராட்டம் இவற்றின் மூலம் மக்கள் இயக்கங்களைப் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொண்டார்.

தானி தோலாவின் க்வார்ட்சைட் சுரங்கங்களில் வேலை செய்யும் போது சுரங்கத் துறை மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுடனான அவரது நீண்டகால தொடர்பு ஆரம்பித்தது. இங்குதான் ஆஷா என்ற சுரங்கத் தொழிலாளியை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். சுரங்கத் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் அவரது நடவடிக்கைகள் 1975-ல் நெருக்கடி நிலை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அளவுக்கு வளர்ந்திருந்தன. மிசா சட்டத்தின் கீழ் 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு வெளியில் வந்தார். தல்லி ரஜாராவுக்கு குடி பெயர்ந்து சத்திஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தை (CMSS – சத்திஸ்கர் மைன்ஸ் ஷ்ராமிக் சங்) உருவாக்கினார்.

சத்திஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தின் வடக்கில் துர்க் மாவட்டத்தின் தென்பகுதியை உள்ளடக்கிய இந்த பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணம் செய்யும் ஒருவர் அடர்ந்த காடுகளைக் கடந்துதான் போக வேண்டும். ஒரு நாள், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பகுதியாக இந்திய ஜியாலஜிகல் சர்வே அதிகாரிகள் காட்டிற்கு வந்தார்கள். இந்தப் பகுதியில் இரும்புத் தாது செறிவு அதிகம் என்று அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ரஷ்ய மற்றும் இந்திய பொறியாளர்கள் வந்தார்கள். புல்டோசர்களின் கடூரமான ஓசை அதற்கு முன் இருந்தவை எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த வந்து சேர்ந்தது.

ஆசியாவின் அதிக இரும்பு தாது உற்பத்தி செய்யும்  சுரங்கங்களில் ஒன்று தோண்ட ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. அவை இருந்த இடத்தில் பல மர அறுவை ஆலைகள் முளைத்தன. தவழ்ந்து சென்ற தெளிந்த நீரோடைகள், அவற்றுள் வந்து கலந்த இரும்பு தாது துகள்களால் ரத்தச் சிவப்பாக மாறின. ராஜ்நந்த் காவ் முதல் துர்க் வரை ராய்புர் வரை மர ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மாளிகைகள் முளைத்திருந்தன.

ராஜ்ஹராவின் இரும்புத் தாது சுத்திகரிக்கப்பட்டு பிலாய் ஆலையில் எ்ஃகாக மாற்றப்பட்டது. அதன் புகை போக்கிகளிலிருந்து வரும் புகை ‘வளர்ச்சி’ யை கொண்டாடியது. அழிவின் கறை படிந்த அஸ்திவாரங்களில் ‘புதிய வளர்ச்சி’யின் சிகரங்கள் உருவாயின.

அதைத் தொடர்ந்து சிமென்ட் ஆலை நிறுவப்பட்டது. சிமென்ட் தூசி மழை விளைநிலங்களின் மீது படிந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் விவசாயத்தை அழித்தது. இதற்கிடையில் புதிதாக திறக்கப்பட்ட டிஸ்டிலரியிலிருந்து அழுகும் மொலாசஸின் வாடை எங்கும் நிறைந்தது. கடைசியில் எல்லா ஆறுகளும் மாசுபடுத்தப்பட்டு விட்டன. ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மத்தியில் கொடூரமான அரிப்பு நோய் பரவியது. கால்நடைகளின் இறப்பு வீதம் கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. மக்கள் தொழில் நகரங்களையும், மாநகரங்களையும் மொய்க்க ஆரம்பித்தார்கள். எந்திரங்களின் முடிவில்லாத சத்தம், வேதிப் பொருட்களின் நாற்றம், மற்றும் குப்பைகளின் மத்தியில் குடிசை காலனிகள் வளர்ந்தன. அவற்றில் மக்கள் பூச்சிகளைப் போல வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

இந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள சத்திஸ்கர் விடுதலை முன்னணி (CMM- சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா) ஆரம்பிக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பதற்கான போராட்டத்துக்காக சத்திஸ்கர் கிராம தொழிலாளர்கள் சங்கம் (சத்திஸ்கர் கிராமீன் ஷ்ராமிக் சங் – CGMS) ஆரம்பிக்கப்பட்டது. சிஎம்எம்எஸ், சிஎம்எம், சிஜிஎம்எஸ் மூன்றும் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்தன.

நியோகியின் வழிகாட்டலில் CMMS, CMM, CGMS அமைப்புகள் தொழிலாளர்களின் பணிச் சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டன. அவரது போராட்டங்களின் வரலாற்றில் நியோகி 25 தடவைகளுக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டார். பல தடவை முறையான குற்றப் பத்திரிகையோ விசாரணையோ இல்லாமலேயே சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றமும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை.

A. தொழிலாளர் பொருளாதார/குடும்ப நலனுக்கான பணிகள்

1. சுரங்கத் தொழிலாளர்களின் நாட்கூலி 3 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்து 1990களில் 70 ரூபாய் வரை உயர்ந்தது.

2. தொழிலாளர்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை ஒழிக்க தீவிரமான மது எதிர்ப்புப் போராட்டத்தை தொழிற்சங்கம் முன்னெடுத்தது. இதில் பெருமளவு பெண்கள் பங்கேற்றார்கள்.

3. ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரட்டப்பட்டு, சிஎம்எம்எஸ்சின் பணித் திட்டத்தில் பெண்களுக்கே உரிய தேவைகளும் பிரச்சனைகளும் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் அதன் தலைமைப் பொறுப்புகளிலும் தீவிரமாக பங்கு பெறுகிறார்கள்.

B. குடியிருப்புகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள்

1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள் ‘நல்ல உடல் நலனுக்காக போராடுவோம்’ என்ற இயக்கத்தை மேஜிக் நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், சிறு புத்தகங்கள், உரைகள் போன்ற பல நிகழ்வுகள் மூலம் முறைசாரா தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து நடத்தினார்கள். இந்த இயக்கத்தின் பகுதியாக தொழிற்சங்க உறுப்பினர்களின் சேமிப்பு மற்றும் உழைப்பில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் நவீன ஆபரேஷன் தியேட்டரும் மகப்பேறு பிரிவும் இருக்கிறது.

2. தொழிற்சங்கம் குறைந்தது 6 பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறது. தொழிற்சங்கமே ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருகிறது.

3. சுரங்கத் தொழிலாளர்களின் சேரிகளுக்கு குப்பை வாருதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதற்கு அரசு அமைப்புகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, குப்பைகள் லாரிகளில் அள்ளி அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிகளில் கொட்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். தொழிலாளர் சேரிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வது வரை இந்தப் போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தார்கள்.

C. வன வளங்களை பராமரித்தல்

1. ஒரு மரம் வெட்டும் ஆலை அந்த பகுதியில் இருக்கும் எல்லா தேக்கு மரங்களையும் வெட்டிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் காவல்துறையிலும், வனத்துறைக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகார் அளித்தார்கள். யாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சில தேக்கு மரங்களை தடபுடலாக நடுவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்படி தொழிற்சங்கம் ஆலோசனை வழங்கியது. அங்கு கூடிய மக்கள் பெருந்திரள் எதிர்ப்பின் பலத்தைக் காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேக்கு திருடர்கள் திரும்பி வரவேவில்லை.

2. இப்போதைய வனக் கொள்கையின் கீழ், யூகலிப்டஸ், நீல்கிரி மற்றும் பைன் மரங்கள் அவற்றின் தொழில்துறை பயன்பாட்டுக்காக பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய ஒற்றை மரப் பண்ணைகள் ஏற்படுத்தும் விளைவுகளை விரிவாக விவாதித்த தொழிற்சங்கம் அவற்றுக்கு எதிராக போராடியது.

3. நமது காட்டை அறிவோம் என்ற திட்டத்தின் கீழ் தொழிற்சங்கம் தொழிற்சங்க அலுவலகத்துக்கு அருகில் ஒரு சிறு காட்டுப் பகுதியை வளர்த்தது. பல வகையான மரங்கள் அங்கு நடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலமாக தொழிற்சங்க அலுவலகத்தைச் சுற்றி இருந்த வெற்று இடத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தியது மட்டுமில்லாமல் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே ஆர்வத்தையும் தூண்ட முடிந்தது. சிறிது காலத்திலேயே அவர்கள் தத்தமது வீடுகளைச் சுற்றி மரங்களை நட ஆரம்பித்தார்கள். பசுமையே கண்ணில் படாத தொழிலாளர்கள் வாழும் இடங்கள் எல்லாம் அவர்கள் நட்ட மரங்களின் விளைவாக பசுமை பிரதேசங்களாக மாறின.

4. ‘நமது காட்டை அறிவோம்’ திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட மரங்களில் அவற்றின் வட்டார பெயர், இந்தி பெயர் மற்றும் தாவரவியல் பெயர்களை தரும் சிறு அடையாள பலகைகள் பொருத்தப்பட்டடன. பல்வேறு மர இனங்களை ஒன்றொடு ஒன்று தொடர்புபடுத்தும் தாவரவியல் குடும்பங்கள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டன. இது மரங்களைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவியது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் தாம் பள்ளியில் கற்றதை விரிவுபடுத்தி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஒவ்வொரு மரத்தின் உபயோகங்களையும் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது போன்ற விபரங்கள் அடங்கிய சிறு புத்தகங்களை வெளியிட தொழிற்சங்கம் திட்டமிட்டது.

D. நீர்வளம்

1. பெரிய அணைகள் காட்டின் பெரும் பகுதிகளை மூழ்கடித்து குறிப்பிட்ட சூழலில் மட்டும் வளரும் பல அரிய மரங்களை அழித்து விடுகின்றன. இந்தக் காரணத்தினால், சிஎம்எம்எஸ் போத்காட் அணையை எதிர்த்தது. ராஜ்நந்த்காவ்வில் மோங்க்ரா அணை கட்டப்படுவதை தொழிற்சங்கம் எதிர்த்தது.

2. பெரிய அணை திட்டங்களை போல இந்த சிறிய தடுப்பணைகள் கட்டுவது வனத்துறை அலுவலர்களுக்கு எந்த ஆதாயத்தையும் தரப்போவதில்லை. இருப்பினும், துய்கோடி, ஜூகேரா போன்ற இடங்களில் சிறு அணைகள் கட்ட வைப்பதில் தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.

3. இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து வடியும் மழை நீர் தாதுவின் நுண்ணிய படிவுகளை சுற்றியிருக்கும் பகுதிகளில் கொண்டு வருகிறது. மண்ணின் மேல் அடுக்கில் அது பரவி நிலத்தின் உற்பத்தித் திறனை அழித்து விடுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போராடி தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.

4. தல்லி-ராஜ்ஹரா பகுதி வாழ்க்கை தல்லி மற்றும் ஜாரன் நீரோடைகளை சார்ந்தே பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது. இந்த நீரோடைகள் மாசுபடுத்தப்பட்ட போது தொழிற்சங்கம் அந்த பிரச்சனையை முன்னெடுத்து, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோரி ஓரளவு பலன்களை ஈட்டியது. இன்று இந்த நீரோடைகளின் நீர் இரத்த நிறத்தில் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.

5. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் 89 ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கோரி தொழிற்சங்கம் வெற்றி கண்டது. சுற்றியிருக்கும் கிராமப் புறங்களிலும் அதே போன்ற குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

E. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள், ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள், வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் அதிகரித்திருப்பது, காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே போவது போன்ற கவலை தரும் செய்திகளைத் திரட்டி விவாதித்து வருவது வழக்கம். தமது கிராமங்களில், சாங்கினி ஆறும் தல்லி சுரங்கங்களில் இருந்து வரும் சிறு நீரோடையும் அதிக இரும்புத் தாது கலப்பால் ரத்தச் சிவப்பாக மாறி விட்டதை அவர்கள் கவனித்து வந்தார்கள். டிஸ்டிலரி, உருக்கு ஆலை, மற்றும் உர தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர் காரூன் ஆற்று நீரையும் ஷிவ்நாத் ஆற்று நீரையும் நச்சுப்படுத்திக் கொண்டிருந்தன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்ந்த இந்த அழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிய சூடான விவாதங்கள் தொழிற்சங்கத்துக்குள் அடிக்கடி நடந்தன.

பல விவாதங்களுக்குப் பிறகு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன வளங்களை பராமரித்தல், நீள் வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல் இவற்றைத் தழுவி ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டது. காடுகளின் உரிமையாளர்களான ஆதிவாசிகளின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு வனத்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. வனத்துறை அதிகாரிகளின் திறமையின்மை, பொறுப்பின்மை, ஊழல் இவற்றையும் அம்பலப்படுத்தி அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் வலியுறுத்தியது.

2. தல்லி-ராஜ்ஹரா பகுதி தொழிலாளர்கள் பதினைந்து ஆண்டுகள் முன்பு நாளைக்கு 3 ரூபாய் சம்பாதித்தபோது அதிக ஓசை பற்றிய சமூக சிக்கல் இல்லாமல் இருந்தது. தொழிற்சங்கத்தின் தொடர்ந்த போராட்டங்கள் கூலியை உயர்த்துவதில் வெற்றியடைந்தன. இப்போது தொழிலாளர்களின் குறைந்த கூலி ரூபாய் 70 ஆகியிருக்கிறது. வருமானம் அதிகரித்ததும், மக்கள் ஒலிபெருக்கிகளை அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதிக ஓசையின் தீங்குதரும் விளைவுகள் பற்றிய பொது விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தனது குடியிருப்புப் பகுதி குழுக்கள் மூலம் தொழிற்சங்கம் போராடி வருகிறது. ஷாகீத் மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை குறைக்கும் இந்த இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

3. தெஹரியில் இயற்கையின் எதிரிகள், இயற்கையின் சமநிலையையும் ஒத்திசைவையும் அழிப்பதற்கு முயன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணாவின் பணியை மதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் சிஎம்எம்எஸ் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தது. சிப்கோ இயக்கம் அவர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்தது. ‘அணைகள் வேண்டாம்’ இயக்கம் நர்மதா பள்ளத்தாக்கில் ஆரம்பித்தவுடன் சத்திஸ்கர் மக்கள் அங்கு போய் பாபா ஆம்தே தலைமையிலான போராட்டத்தில் முழு மனதுடன் கலந்து கொண்டார்கள்.

F. தொழிற்சாலைகளில் போராடி பெற்ற வெற்றிகள்

1. பிலாய் ஸ்டீல் தொழிற்சாலை நிர்வாகம் கூட தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த சுற்றுச் சூழல் விழிப்புணர்வை புறக்கணிக்க முடியவில்லை. செப்பனிடப்படாத சாலைகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் நுண்ணிய தூசி காற்றில் பறந்து கொண்டே இருந்தது. பல தொழிலாளர்கள் சிலிகோசிஸ் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது மருத்துவ சோதனைகளில் தெரிய வந்தது. நிர்வாகம் இந்த பிரச்சனைக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரியது. ராஜ்நந்த்காவ் டெக்ஸ்டைல் ஆலையிலும் தொழிற்சங்கம் இது போன்ற சிறப்பு முயற்சிகளை எடுத்தது. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் இருக்கும் சுரங்கங்களிலும் சாலைகளிலும் நிர்வாகம் தண்ணீரைத் தெளித்து பறக்கும் தூசியை கட்டுப்படுத்துகிறது.

2. பணியிடத்தில் அதிக ஓசையால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் முயற்சியால் ஈஎன்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

3. பிலாய் ஸ்டீல் ஆலை போன்ற பெரிய தொழில் நிறுவனங்களில் இப்போது ‘சுற்றுச் சூழல் துறைகள்’ தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த துறையிலும் பணி செய்ய விரும்பாத அதிகாரிகள் இந்த சுற்றுச் சூழல் துறைக்கு நியமிக்கப்படுகிறார்கள். மரம் நடுவதற்காக அவர்கள் கான்டிராக்டுகளை கொடுக்கிறார்கள். ஆனால் மரங்கள் தொடர்ந்தது பராமரிக்கப்படுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய திட்டங்களை தொழிற்சங்கம் உறுதியாக எதிர்க்கிறது.

4. சிம்ப்ளக்ஸ் எஞ்சினியரிங், வி கே எஞ்சினியரிங் போன்ற தனியார் நிறுவனங்கள் மரம் நடுவதற்காக அரசாங்கத்திடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொண்டு, மெதுவாக நிலங்களை தமது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற ஊழலுக்கு எதிராக தொழிற்சங்கம் தீவிரமாக போராடுகிறது.

5. பிலாய் ஸ்டீல் ஆலையின் நிர்வாகம் தல்லியில் சுரங்கங்களை எந்திரமயமாக்க திட்டமிட்ட போது, அது சுற்றுச் சூழலுக்கு பலனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்களது கூற்றுகள் பொய்யானது என்று தொழிற்சங்கம் நிரூபிக்க முடிந்தது.

சத்திஸ்கர் பகுதி சுரங்கத் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட பல்நோக்கு பார்வையுடன், தம்மை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி அறிவுபூர்வமாக விவாதித்து போராட்டங்களை முன்னெடுத்து, முடிந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தார்கள். சட்டத்துக்குட்பட்ட வழிமுறைகளில் தொழிலாளர்களுக்காகவும், தொழில் வளர்ச்ச்சிகாகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவும், ஆதிவாசி, விவசாயிகள் நலன்களுக்காகவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வந்தார்கள்.

ஆனால், தொழிலதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கண்ணையா, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சங்கம் கட்டிய குசேலர் போன்ற தொழிற்சங்க சுல்தான்களைத்தான் விரும்பவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள். தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு சமரச தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து தனிப்பட்ட அளவில் பெருமளவு பணம் சம்பாதித்து ஊழல் வாழ்வு வாழும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மாற்றாக நியோகி போன்று நேர்மையாக போராடுபவர்களை முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியாதது ஆச்சரியமில்லைதான்.

நியோகி, 1991-ல் பிலாய்-ராய்பூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். அதுவரை காட்டுப் பகுதிகளிலும், கிராமங்களிலும் செயல்பட்டு வந்த இயக்கம் இப்போது செல்வாக்கு மிகுந்த, பண பலம் படைத்த தொழிலதிபர்களின் நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்திருந்தது. தொழிலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தன. தானும் கொல்லப்படலாம் என்று உணர்ந்த நியோகி, பிலாய் பகுதியின் தொழிலதிபர்கள் தொழிலாளர் இயக்கத்தை முடக்குவதற்காக தன்னைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

1991 செப்டம்பர் 28ஆம் தேதி அதிகாலையில் பிலாயில் உள்ள சிஎம்எம்எஸ் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்த பல்தான் மல்லா என்ற வாடகை கொலையாளி சங்கர் குஹா நியோகியின் மீது 6 குண்டுகளை சுட்டான். அவர் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கூடினார்கள். சத்திஸ்கர் பகுதியில் 150 தொழிற்சாலைகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஒன்றரை லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அவருக்கு வயது 48. அவர் நம்பிக்கை வைத்த சட்டங்களும் அரசு அமைப்பும் அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவரை கொலை செய்ய சதி செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கக் கூட நீதி அமைப்பால் முடியவில்லை.

முன்னாள் பஞ்சாப்/ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி எஸ் தெவதியா, மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் இந்திய தூதருமான குல்தீப் நய்யார், பிரபல நாடக கலைஞர் விஜய் டெண்டுல்கர், கல்வியாளரும் சமூக ஆர்வலருமான அனில் சடகோபல், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ராகேஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய பொதுமக்கள் குழு நியோகி கொலை செய்யப்பட்ட சூழலை பற்றி விசாரித்து தயாரித்த அறிக்கையில்,  “தமது தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும், குறைந்தபட்ச கூலியும் வழங்குவதற்கு கூட மறுக்கும் வலிமையான தொழிலதிபர்களின் கூட்டமைப்பு செயல்படும் பகுதியில் யாரும் அதைத் தட்டிக் கேட்க துணியாத நிலையில் தன்னை அந்த பொறுப்பில் ஈடுபடுத்திக் கொண்டதுதான் நியோகி கொல்லப்பட்டதற்கு காரணம்” என்று குறிப்பிட்டார்கள்.

வழக்கு விசாரணை சிபிஐயின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

நியோகி கொலையில் தொடர்பு உடையவர்களாக 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளர் மூல்சந்த் ஷா, ஆஸ்வால் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரகாந்த் ஷா என்ற இரண்டு தொழிலதிபர்களும் அவர்களில் அடங்குவார்கள். மாவட்ட நீதிமன்றம் வாடகைக் கொலையாளிக்கு (பல்தன் மல்லா) மரண தண்டனையும், தொழிலதிபர்கள் உள்ளிட்ட இன்னும் 5 பேருக்கு (ஞான பிரகாஷ் மிஸ்ரா, அபய் சிங்க், அவதேஷ் ராய்)  ஆயுள் தண்டனையும் வழங்கியது. தொழிலதிபர்கள் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

கோரக்பூரைச் சேர்ந்த பல்தான் மல்லா ஒரு வாடகைக் கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லாமல், பணத்திற்காக மட்டுமே எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த நியோகியை கொன்றதன் மூலம் அவருடைய குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் நமது சமூகத்தின் அடிப்படையான ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் பெரும் தீங்கு செய்திருந்தான் பல்தான் மல்லா. இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு இந்த வழக்கை, ‘அரிதிலும் அரிதான ஒன்றாக’ கருதி மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு சொல்லியிருந்தார்.

இந்த தீர்ப்பு பரவலாக வரவேற்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றார்கள். உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் ஆதாரங்களும் முன்பை விட உறுதியானதாக இருந்ததாக வழக்கை கவனித்து வந்த ஆர்வலர்கள் கருதினார்கள். ஆனால், உயர்நீதி மன்றம் போதுமான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது.

சிபிஐயும் மத்திய பிரதேச அரசாங்கமும் (பின்னர் சத்திஸ்கர் அரசாங்கம்) உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சத்தஸ்கர் முக்தி மோர்ச்சாவும், நியோகியின் மனைவி ஆஷாவும் கூட தமது விண்ணப்பங்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார்கள்.

துர்க் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்த சந்திரகாந்த் ஷா, அபய் சிங், மூல்சந்த் ஷா ஆகியோர், நியோகியின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கும் அவர்களது தொழில்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டிருந்தது என்பதற்கும் சிபிஐ விரிவான ஆதாரங்களை கூடுதலாக சமர்ப்பித்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்நீதி மன்ற தீர்ப்பை பெரிதளவு மாற்றி விடவில்லை. வாடகைக் கொலையாளிக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. செல்வாக்கு வாய்ந்த, சதி செய்து கொலைக்கு ஏவிய தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

சிம்ப்ளெக்ஸ் மற்றும் கேடியா நிறுவனங்கள் தொழிலாளர் போராட்டங்களால் தொழிற்சங்கத்துடன் முரண்பட்டிருந்தார்கள் என்பதையும், ‘இந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் துர்க் மாவட்டத்தின் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாக’ நியோகி டைரியில் எழுதி வைத்திருந்ததையும், குற்றம் சாட்டப்பட்ட ஞான் பிரகாஷ், அவதேஷ் ராய் ஆகியோரை அவர் டைரியில் குறிப்பிட்டிருந்ததையும், சிம்ப்ளெக்ஸ் நிறுவனத்தின் மூல்சந்த் ஷா மூலம் அவருக்கு ஆபத்து இருப்பதாக பதிவு செய்யப்பட்ட ஒரு பேச்சில் அவர் குறிப்பிட்டிருப்பதையும், தொழிலாளர் போராட்டங்களுக்கு எதிராக தொழிலதிபர்கள் கட்டவிழ்த்து விட்டிருந்த வன்முறை நடவடிக்கைகள் பற்றி அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவையும் நீதிமன்றம் ஒதுக்கித் தள்ளி விட்டது.

பல்தான் மல்லா தனது உறவினரான சத்யபிரகாஷ் நிஷாதிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுத்த பணத்துக்காக தான் நியோகியை கொன்றதாக சொன்னதை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் பல்தான் மல்லாவுக்கு சிறைதண்டனை அளித்தது. ஆனால், அதே வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட ஏவி விட்டவர்களுக்கு எதிரான ஆதாரத்தை புறக்கணித்து அவர்களை விடுவித்தது. பல்தான் மல்லா நியோகியை ஏன் கொன்றான் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே வழக்கு மூடப்பட்டது.

நியோகியின் போராட்டங்களால் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு ஏற்பட்ட பண இழப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நியோகியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது, நேபாளத்துக்குப் போய் துப்பாக்கிகள் வாங்கி வந்தது, குற்றம் நடந்த உடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு 20,000 ரூபாய் பணம் கொடுத்தது, குற்றம் நிகழ்ந்த உடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலை மறைவானது இவற்றில் அந்த கேள்விக்கு விடை இருக்கிறது.

இந்த உலகமும், அதன் இயற்கை வளங்களும், அனைத்து மக்களின் நலன்களும் உழைக்கும் மக்களின் கையில்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பேராசையால் தூண்டப்படும் முதலாளிகளின் பொறுப்பில் அவற்றை விட்டு வைப்பது பூனையிடம் அப்பம் பங்கு வைக்க கொடுத்த கதையாகத்தான் போய் முடிகிறது.

மண்ணையும், மக்களையும், தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர் குஹா நியோகியின் கொலையும், நீர்த்துப் போன வழக்கும் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

_______________________________________________________

மேலும் படிக்க

http://en.wikipedia.org/wiki/Shankar_Guha_Niyogi

http://www.tehelka.com/story_main27.asp?filename=Cr100307Justice_mocked.asp

http://www.hindu.com/fline/fl2205/stories/20050311001004400.htmA verdict and some questions

http://otherindia.org/dev/images/stories/niyogihis_work.pdf

____________________________________________________________

அப்துல்

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

மாருதி  தொழிலாளர்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம் – நிகழ்ச்சி தொகுப்பு.

சோசலிசத்தின் தற்காலிக பின்னடைவுக்கு பின்னர் கம்யூனிசம் தோற்றுவிட்டதென்றும், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது என்றும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஏகாதிபத்தியங்களின் கருவறையையே இன்று தாக்கத் துவங்கியிருக்கிறார்கள் மக்கள். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிரான  உழைக்கும் மக்களின் தாக்குதல்கள் அமெரிக்க ஐரோப்பிய வீதிகளில் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது.

நமது நாட்டிலும், உலகமயமாக்கலுக்கு பின்னர் பெயரளவில் இருந்த தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு பறிக்கப்பட்டு, தொழிலாளிகள் அனைவரும் சட்டப்பூர்வ கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் புற்றீசல் போல இந்தியாவிற்குள் படையெடுத்து வந்திருக்கின்றன. சென்னையை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம், மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

நோக்கியா, போர்ட், சாம்சங், ஹுண்டாய், டெல், கேட்டர்பில்லர், செயின்ட்கோபைய்ன், பாக்ஸ்கான், நிசான், ரெனால்ட் போன்ற உலகத்திலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் இங்கு இருக்கின்றன. ஏன் இவர்கள் இப்படி இந்தியாவிற்குள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளைப் பற்றிய சில விவரங்களை மட்டும் பார்ப்போம். இந்த ஆலைகளில் பணிபுரிபவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் ஒப்பந்தத் தொழிலாளிகள் (காண்ட்ராக்ட்) எந்திரங்களைப் போல ஈவிரக்கமின்றி சுரண்டப்படும் இந்த தொழிலாளிகளின் உழைப்பு இல்லை என்றால் இந்த உலகத்தில் நாம் நாகரீக மனிதர்களாக வாழ முடியாது. இந்த தொழிலாளிகள் தான் நமது உலகத்தை படைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹுண்டாய் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். ஹூண்டாய் ஒவ்வொரு ஆண்டும் சாண்ட்ரோ, ஐ10, ஐ20 என்று வித விதமான கார்களை வெளியிடுகிறது. இங்கே மொத்தம் பதினேழாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்டிற்கு, அதாவது எட்டு மணி நேரத்திற்கு நானூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மூன்று ஷிப்டுகளும்,முப்பது நாட்களும் இப்படி ஓடாய் தேயும் ஒரு தொழிலாளிக்கு இந்த பன்னாட்டு நிறுவனம் எவ்வளவு ஊதியம் கொடுக்கும் என்று நினைக்கிறீர்கள் ? 4500 லிருந்து 6000 தான் இவர்களுடைய மாத ஊதியம்.

இதே நிலைமை தான் நோக்கியாவிலும். இதே நிலைமை தான் சி.பொ.ம முழுவதும். தொழிலாளிகளை இப்படி கொடூரமாக சுரண்டுவது மட்டுமின்றி இந்நிறுவனங்கள் பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றன. உதாரணத்திற்கு ட்ரைய்னி என்கிற பயிற்சி பெறும் தொழிலாளிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்பது சட்டம். ஆனால் ஹுண்டாய் நிறுவனம் ட்ரைய்னிகளை கட்டாயமாக உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. இதன் விளைவாக பல தொழிலாளிகள் இயந்திரங்களில் சிக்கி, இயந்திரங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிற்சித் தொழிலாளி இயந்திரத்தை தவறாக இயக்கியதால் கன்னிமைக்கும் நேரத்திற்குள் சீறிப்பாய்ந்த இரும்பு ராடு அவருடைய மண்டையை பிளந்து கொண்டு போனது. ஹுண்டாயில் மட்டும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இது போன்ற விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளனர். நோக்கியா உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இவ்வாறு தான் இயங்குகின்றன.

அடுத்து இந்த தொழிலாளிகளில் பெரும்பான்மையானவர்களை ஒப்பந்தத் தொழிலாளிகளாகவே வைத்திருக்க என்ன காரணம் ? (காண்ட்ராக்டாக இருந்தாலும் 480 நாட்கள் வேலை செய்திருந்தால் நிரந்தரமாக்க (கன்பார்ம்) வேண்டும் என்பது இந்திய அரசு எழுதி வைத்திருக்கும் சட்டம். அதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது என்பது பன்னாட்டு கம்பெனிகள் கடைபிடிக்கும் புதிய சட்டம்) தொன்னூறு சதவிகிதம் தொழிலாளிகளை காண்ட்ராக்டாக வைத்திருப்பது ஏன் என்றால் முப்பது வயதில் தூக்கி வீசத் தான்.

அதாவது இளமை துடிப்புள்ள 18, 20 வயதுகளில் வேலைக்குச் சேரும் தொழிலாளிகளிடம் பத்து, பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமாட்டு கூலிக்கு சக்கையாக உழைப்புச் சக்தியை பிழிந்து எடுத்துக் கொண்ட பிறகு முப்பது வயதில் கரும்புச் சக்கையை வீசியெறிவதை போல வீசி எறிந்து விடுவார்கள். அவர்களை நிரந்தரமாக்கினால் வெளியேற்ற முடியாது. வெளியேற்றப் போகிறவர்களை ஏன் நிரந்தரமாக்க வேண்டும். எனவே 90% பேரை எப்போதும் காண்ட்ராக்டிலேயே வைத்திருக்கிறார்கள். (காண்ட்ராக்ட் முறை சட்டவிரோதமானது என்று உச்சநீதி மன்றம் சில மாதங்களுக்கு முன்பு தான் தீர்ப்பளித்துள்ளது, எனினும் அது பன்னாட்டு கம்பெனிகளிடத்தில் செல்லாது)

ஆனாலும் இவர்கள் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளிகளுக்கு அக்கறையோடு ஊதிய உயர்வும் கொடுத்துவிடுகிறார்கள் ! ஹுண்டாய் இருக்கும் அதே வளாகத்திலிருக்கும் சான்மினா என்கிற நிறுவனம் சென்ற ஆண்டு தனது தொழிலாளிகளுக்கு கொடுத்த இன்க்ரிமெண்ட் எவ்வளவு தெரியுமா ? சொன்னால் மிரண்டு போய்விடுவீர்கள், 95 ரூபாய் ! சான்மினா அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம்!! இந்த பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவை நோக்கி வரிசையாக அணிவகுத்து வருவதற்கு காரணம் என்னவென்றால். இந்தியா ஏகாதிபத்தியங்களின் காலனியாக இருக்கிறது. தூக்கத்தில் கூட ஏகாதிபத்தியவாதிகளின் காலை நக்குவதற்கே பிறப்பெடுத்தவர்களான மன்மோகன், அத்வானி போன்ற கைக்கூலிகளின் ஆட்சி தான் மாறி மாறி வருகிறது.

மூன்றாவதாக ஜெர்மனியிலோ, பிரான்சிலோ அல்லது அமெரிக்காவிலோ நான்காயிரத்துக்கும் ஐயாயிரத்துக்கும் யாராவது வேலைக்கு கிடைப்பார்களா ?!

இந்தியாவின் பிற பகுதிகளான கல்கத்தா, குஜராத், குர்கான், நொய்டா போன்ற பகுதிகளிலும் இதே போல பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. அங்கேயும் தொழிலாளிகளுக்கு இதே நிலைமை தான். சொல்லப்போனால் அவர்கள் இதைவிட கொடூரமான கொத்தடிமை வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பன்னாட்டு கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை இது தான். உழைக்காத சோம்பேறி கூட்டமான முதலாளிகளுக்கு நமது அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், மலிவு விலையில் 365 நாட்களும் தடையற்ற மின்சாரம், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், கோடிக்கனக்கான ரூபாய் வரி விலக்கு என்று தலைமேல் தாங்கிக்கொண்டு நிற்கிறது. ஆனாலும் முதலாளிகள் இரண்டு மூன்று சங்கங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதில்லை என்பதல்ல பிரச்சினை அதை செருப்பாலேயே அடிக்கிறார்கள்.

ஆனால் தொழிலாளிகள் சங்கம் சேரவோ, சட்டரீதியான உரிமைகளை பெறவோ உரிமை இல்லை. வேண்டுமானால் நிர்வாகமே கைக்கூலி சங்கங்களை ஏற்படுத்தி தரும். இப்படி எந்த உரிமைகளுமற்ற அடிமைகளாகத் தான் தொழிலாளிகள் நடத்தப்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சங்கமான போலிக்கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ சங்கத்தின் சங்கப்பலகையை பிடுங்கி எறிந்தது ஹுண்டாய் நிர்வாகம். இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த, பல மாநிலங்களில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பி க்களை வைத்திருந்த போலிகளால் ஹுண்டாயை என்ன செய்ய முடிந்தது ?

பன்னாட்டு கம்பெனிகள் ஏவிவரும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் தொழிற்சங்கங்களோ கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க அரசியலை கற்றுக்கொடுத்து வர்க்க உணர்வையூட்டாமல், நிர்வாகத்திடம் பேசி சில சில்லறை சலுகைகளை பெற்றுத்தருவதும், கட்டைப்பஞ்சாயத்து செய்வதும், சமரசம் பேசுவதும், பின்னர் துரோகமிழைத்துவிட்டு ஓடிவிடுவதுமாகவே இருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்திற்கென்று சரியான அரசியல் தலைமையை கொண்ட சங்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் தொழிலாளிகள் ஓட்டுப்பொறுக்கி சங்கங்களாலும், அரசியல்லற்ற பிழைப்புவாத சங்கங்களாலும் ஏமாற்றப்பட்டும், துரோகமிழைக்கப்பட்டும், முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலுக்கெதிரான போராட்டங்களில் தோல்வியடைகின்றனர். இந்தியாவெங்கும் உள்ள தொழில் வளையங்களிலும், சிறப்பு பெருளாதார மண்டலங்களிலும், இது தான் நிலைமை.

அவநம்பிக்கை நிரம்பிய இத்தகைய மந்த நிலையின் மீது முதல் உடைப்பை ஏற்படுத்தியவர்கள் மாருதி-சுசுகி தொழிலாளர்கள். இந்தியாவில் தொழிலாளிகளை கசக்கிப்பிழிந்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகளில் ஒன்றுக்கு முதல் முறையாக செருப்படி கொடுத்திருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள். பன்னாட்டு கம்பெனி ஆண்டைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஊழியம் செய்யும் கைக்கூலி ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் எப்படி போராட வேண்டும் என்பதை தமது வர்க்க ஒற்றுமை நிறைந்த போராட்டத்தின் மூலம் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு அனுபவமாக வழங்கியிருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள். தமது போராட்டத்தின் மூலம் ஒரு பன்னாட்டு கம்பெனியை தமது காலடியின் கீழ் மண்டியிட வைத்திருக்கிறார்கள் இந்திய தொழிலாளிகள். உலகமயமாக்கலுக்கு பின் இந்திய தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இது ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது. இவர்களுடைய போராட்டத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆனால் தமிழகத்திலிருக்கும் எந்த தொழிற்சங்கமும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தூக்கிப்பிடித்ததாக தெரியவில்லை. ஆனால் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. எனவே தான்  மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!’ என்கிற தலைப்பில் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வசிக்கும் பூந்தமல்லி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கத்தில் பேசப்பட்டவை இங்கு சுருக்கமாக.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

20.11.2011 அன்று காலை 10 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது கருத்தரங்கம். துவங்கிய சில நிமிடங்கள் வரை முதல் மூன்று நான்கு வரிசை இருக்கைகள் மட்டுமே நிறைந்திருந்தன. பின்னர் படிப்படியாக தொழிலாளர்கள் வரத் துவங்கினர். சற்று நேரதிற்கொல்லாம் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பு.ஜ.தொ.மு அமைப்பு செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அமர்விற்கு தலைமை தாங்கினார்.

தோழர் தனது தலைமை உரையில் சென்னையை சுற்றியுள்ள சிப்காட்டிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியே உள்ள குறைந்தப்பட்ச உரிமைகள் கூட கிடைக்காததும், முதலாளிகள் சட்டத்தை மீறுவதும் தான் தொடர்ச்சியான நடைமுறையாக  இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக திரண்டு விடாமல் தடுப்பதற்காகவே முதலாளிகள்  காண்ட்ராக்ட், CL, ட்ரெய்னி, அப்ரண்டீஸ், பெர்மனெண்ட் என்று தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

சிப்காட், சி.பொ.ம களில் நாள்தோறும் பல போராட்டங்கள் நடந்துவருவதை சுட்டிகாட்டிய தோழர், அப்போராட்டங்கள், தொழிலாளி வர்க்கத்திடமுள்ள பல்வேறு பிளவுகளாலும், பிழைப்புவாத, துரோக தலைமையாலும் தான் தோல்வியடைந்து வருவதாக கூறினார். உதாரணமாக ஹுண்டாய் ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு சென்றதால் போராட்டம் தோல்வியடைந்தது. மாறாக பு.ஜ.தொ.மு வழிகாட்டுதலின் கீழ் நடந்த ஹனில் டியூப் தொழிலாளர்களின் போராட்டம் அனைத்து தொழிலாளிகளையும் ஒரே வர்க்கமாக அணிதிரட்டியது.

அதன் விளைவாக சிப்காட் வரலாற்றிலேயே முதன் முறையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அந்த வகையில் தொழிலாளர்கள் மத்தியில் முதலாளிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வேறுப்பாடுகளை புறந்தள்ளிவிட்டு நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே  வெற்றி பெற முடியும் என்பது மாருதி தொழிலாளர்களுடைய போராட்டத்திலும் வெளிப்பட்டிருக்கிறது அவர்களிடமிருந்து நாம் இது போன்ற பல அனுபவங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

_________________________________________

அடுத்ததாக மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்திலிருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டது. காட்சிகளை தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக கவனித்தனர். இதையடுத்து  ’மாருதி கார் தொழிலாளர்களின் வெற்றி! அனுபவம் கற்போம்!’ என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர், தோழர் விஜயகுமார் பேசினார்.

1926 ஆம் ஆண்டு இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற  உரிமை தான் சங்கம் அமைக்கும் உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டியதற்காக தான் தொழிலாளிகளை ஒடுக்கியது மாருதி நிறுவனம். தொழிற்சங்கம் அமைப்பதற்காக துவங்கிய போராட்டம் தான் இன்று இப்படி வளர்ந்திருக்கிறது. அப்போராட்டம் பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்த போராட்டமாக அமைந்திருந்தது.

முதலாவதாக, மாருதி நிறுவனத்தின் மூன்று வெவ்வேறு ஆலைகளின் தொழிலாளர்களை ஒன்றுபடுத்திய வகையில் அது ஒரு முன்னுதாரணமிக்க போராட்டம். அடுத்து தொழிலாளி வர்க்கத்திடம் முதலாளிகள் ஏற்படுத்தி வைத்திருந்த பல வகையான பிரிவுகளை உடைத்து அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்தியது இரண்டாவது முன்னேற்றம். மூன்றாவதாக,  தமது போராட்டத்திற்கு ஆதரவாக மாருதியின் வெண்டார்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும், குர்கானின் ஏனைய ஆலைத் தொழிலாளிகளையும் ஒன்று திரட்டியது. இவ்வாறு தொழிலாளி வர்க்கம் தனது முழு பலத்தையும் காட்டிய பிறகுதான் மாருதி நிர்வாகமும், அரசும் பணிந்தது.

சென்னையை சுற்றியும், இந்தியா முழுவதிலும் கூட கடந்த பத்தாண்டுகளில் தொழிலாளி வர்க்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனால் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மாருதி தொழிலாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் எப்படி என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றிருக்கும் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம்.

மாருதி  நிறுவனம்  இந்திரா காந்தியிலிருந்து மன்மோகன் சிங் வரை பல பிரதமர்களை  ஆட்டுவித்த நிறுவனம். இது துவக்கத்தில் மாருதி உத்யோக் என்கிற பொதுத்துறை நிறுவனமாக தான் இருந்தது. பிறகு சுசுகி என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இயங்கியது. தற்போது சுசுகியே அதை முழுமையாக விழுங்கி பன்னாட்டு கம்பெனியாக்கி விட்டது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்திய சாலைகளில் ஓடும் கார்களில் 50 சதவீத கார்கள் மாருதியுடையது தான். இது தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இப்படி உலகளாவிய கார் சந்தையை தனது கைகளில் வைத்திருக்கும் நிறுவனத்தை தான் நமது தொழிலாளர்கள் பணியவைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பு.ஜ.தொ.மு இப்போராட்டத்தை உயர்த்திப்பிடிக்கிறது, அதிலிருந்து நாம் அனுபவத்தையும் பாடத்தையும் கற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது.

இந்த போராட்டம் தொழிலாளி வர்க்கத்திடம் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை, அதிகார வர்க்கத்திடமும், முதலாளிகள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஊடகங்கள் தவிர்க்க முடியாமல் இப்போராட்ட செய்திகளை தினமும் வெளியிட்டன. போராட்டச் செய்தி காட்டுத்தீயாக பரவியது. பீதியடைந்த முதலாளிகள் தொழிலாளிகளிடம் சுமுகமான உறவை மேற்கொள்வதாகவும், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதாகவும் பேட்டிகளும் அறிக்கைகளும் விட்டார்கள்.

இந்தியா முழுவதும் தொழிலாளிகள் தான் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாருதி நிர்வாகம் இனி குர்கானில் இருந்தால் தொழிலாளி வர்க்கம் தன்னை சவப்பெட்டிக்குள் அடைத்து ஆணி அடித்து விடும் என்றஞ்சி பாசிச மோடியின் குஜராத்திற்கு ஓடிப்போக உத்தேசித்துள்ளது. மோடியும் மாருதிக்கு டெல்லியிலிருந்து குஜராத்திற்கு பாதுகாப்பான பாலம் அமைத்துக்கொடுத்திருக்கிறான். நாமும் மாருதியிலிருந்து ஹுண்டாய்க்கு பாலத்தை ஏற்படுத்துவோம். மாருதி தொழிற்சாலையில் தெறித்த பொறி இந்தியாவெங்கும் பற்றிப்படர வேண்டும்.

இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், சங்கம் கட்ட முயற்சித்தால் அரசு போலீசை வைத்து ஒடுக்கிகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகளோ, முதலாளிகளின் அடியாட்களாக, ஆட்காட்டிகளாக வேலை செய்கிறார்கள். இப்படி அரசு  எந்திரத்தின் அனைத்து உறுப்புகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக தான் இருக்கிறது. அதையும் எதிர்த்து நின்று முறியடித்திருக்கிறார்கள் மாருதி தொழிலாளர்கள்.

அந்த வகையிலும் நாம் இப்போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டும். காங்கிரஸ், பி.ஜே.பி யிலிருந்து போலிகம்யூனிஸ்டுகள் வரை இந்தியாவிலிருக்கும் எந்த ஓட்டுக்கட்சியும் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை. கட்சி தலைமை எதிராக இருந்த போதிலும்  அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தவிர்க்கமுடியாமல் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கின்றன. மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டால் இனி சங்கம் வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்கிற நெருக்கடி நிலையை உணர்ந்து கொண்ட பிழைப்புவாத சங்கங்கள் கூட கட்சி தலைமையையும் மீறி இப்போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர். அவர்களை இந்த நிபந்தத்திற்கு தள்ளிய வகையிலும் இப்போராட்டத்தை  நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இவை அனைத்து இப்போரட்டத்திலிருந்து நாம் கற்க வெண்டிய நேர்மறை அனுபவங்கள்.

போராடிய தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் ஆனால் சங்க நிர்வாகிகள் முப்பது பேரை மட்டும் நிர்வாகம் ஆலைக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீது முறையான விசாரணை நடத்திய பிறகே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தது. சில வாரங்களுக்கு பிறகு நிர்வாகிகள் அனைவரும் நிர்வாகத்துடன் இனி போராட முடியாது, அவர்கள் பலம் பெருந்தியவர்கள், பெரிய வழக்குகுரைஞர்களை வைத்திருக்கிறார்கள், அவர்களோடு போராடி வெற்றி பெற முடியாது என்று கூறினார்கள்.

காரணம், அனைவரையும் நிர்வாகம் விலைக்கு வாங்கிவிட்டது. தலைமையில் இருந்தவர்கள் அனைவரும் விலை போய்விட்டார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டம், அவர்களை ஆதரித்த பல்லாயிரக்கனக்கான தொழிலாளிகளின் நம்பிக்கை அனைத்தையும் இந்த துரோக கும்பல் விலை பேசி விட்டது. இது பின்னடைவு தான்.   இந்த நிலைக்கு காரணம் அவர்களுடைய சங்கத்திற்கு அரசியல் ரீதியான தலைமையும், வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்ததே.  எவ்வளவு பலம் பொருந்தியவனாக இருந்தால் என்ன, எப்படிப்பட்ட வழக்குரைஞர்களாக இருந்தால் என்ன எல்லோரையும் புஜ.தொ.மு தோழர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

சாராய வியாபாரி ஜேப்பியாருக்கு எதிராக சத்தியபாமா கல்லூரியின் சாதாரண துப்புரவுத்தொழிலாளிகளின் எதிர்வினை  ’ஊமைத்துரை’ என்ற தொழிலாளர் நல அதிகாரியை வாயைத்திறந்து பேசவைத்தது போன்ற சம்பவங்களை விளக்கிய தோழர் இது எவ்வாறு சாத்தியமானது என்றால், புஜதொமு கற்றுக்கொடுத்த அரசியலும், வர்க்க உணர்வும் தான் இதற்கு காரணம் என்றார். சரியான அரசியல் தலைமையும் வழிகாட்டுதல்களும் இல்லாததால் தான் மாருதி தொழிலாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் துரோகத்தால் தோற்றிருக்கிறார்கள். இது எதிர்மறை அனுபவம். இதிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சங்கம் என்றால், அது அரசியலை அடிப்படையாக கொண்ட சங்கமாக தான் துவங்கப்பட வேண்டும். அந்த அரசியல் என்பது மார்க்சிய-லெனினிய சித்தாந்தமாகத் தான் இருக்கவேண்டும். தமிழகத்தில் அவ்வாறு மார்க்சிய லெனினிய அரசியலை, தொழிலாளிவர்க்கத்தின் விடுதலையை தனது கொள்கையாக வரித்துக்கொண்ட ஒரே தொழிற்சங்கம் ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ மட்டும் தான். எனவே தொழிலாளர்களை புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.முவில் அணிதிரளுமாறு அறைகூவி அழைத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

தோழருடைய உரையை தொடர்ந்து வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அமெரிக்க மக்களின் போராட்டங்களை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு ’வால்ஸ்ட்ரீட் முற்றுகை,  திணறும் முதலாளித்துவ தலைமை பீடம்’  என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு வின் மாநில பொதுச்செயலாளர் சு.ப.தங்கராசு பேசினார். வால்ஸ்ட்ரீட் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஒரு தெரு. இந்த தெரு தான் உலகம் முழுமைக்கும் உள்ள பங்குசந்தைகளின் தலைமையகம். அங்கு தான் உலகம் முழுவதும் உள்ள மொத்த விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி என அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இது தான் முதலளித்துவத்தின் தலைமை பீடம் என்று போராட்டம் நடந்து வரும் வால்ஸ்ட்ரீட் பற்றி சுருக்கமாக விளக்கிய பிறகு, இந்த வால்ஸ்ட்ரீட் தான் தங்களது எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், தங்களுடைய வாழ்வாதாரங்களை பறித்துக்கொண்டு நிற்கதியில் நிறுத்திவிட்டது என்றும், தங்களது வரிப்பணத்தில் இயங்கும் அமெரிக்க அரசு, முதலாளிகளுக்கு சேவை செய்கிறது என்றும், வால்ஸ்ட்ரீட்டை மூடக்கேரியும் போராடிவருகிறார்கள் அமெரிக்க மக்கள்.

இந்த போராட்டத்தை எந்த தொழிற்சங்கமும் நடத்தவில்லை, மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள் என பல்வேறு பிரிவு மக்கள் தான் இதை நடத்துகிறார்கள். இந்த போராட்டம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறுகிறது. இந்த போராட்டம் நியாமானது என்று உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு போராட்டங்களை நடத்துகின்றனர். அந்த நாடுகளிலும் பெரும்பான்மை மக்களுடைய நிலை இவர்களைப் போலவே தான் உள்ளது. உலகம் முழுவதும் முதலாளித்துவம் மக்களை மீளமுடியாத இக்கட்டுக்குள் தள்ளியிருக்கிறது.

அவர்களுடைய கோரிக்கை, நாங்கள் 99%  எங்களிடம் வரிகளை வாங்கிக்கொண்டு 1% முதலாளிகளை அமெரிக்க அரசாங்கம் ஊட்டி வளர்க்கிறது, இதற்கு நியாயம் வேண்டும் என்று, அகிம்சை முறையில், (Non-Violent) போராடுவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும், ஈராக்கில், ஆப்கானில், லிபியாவில், இன்னும் பிற நாடுகளில் எல்லாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக்கொள்ளும் அமெரிக்க அரசு, முதலாளித்துவ ஊடகங்கள், அமெரிக்காவில் மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தினமும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த அரசின் ஜனநாயக யோக்கியதை என்ன என்பதை இப்போது திரையில் பார்த்தோம். போராடும் மக்களுக்கு அமெரிக்க அரசு எப்படி கழுத்தை நெறித்து ஜனநாயகம் வழங்குகிறது என்பதை இப்போது பார்த்தோம்.

அம்மக்கள் இவ்வாறு வீதிகளில் இறங்க என்ன காரணம்  என்று விளக்கினார். கடன் அட்டைகள் மூலம் அமெரிக்க வங்கிகள் மக்களை ஒட்டச்சுரண்டியதையும், வீட்டுக்கடன்கள் (பிரைம் – சப் பிரைம் லோன்கள்) மூலமும், பங்குச்சந்தை சூதாடிகளாலும் மக்கள் வீடற்றவர்களாக்கப்பட்டு தெருவுக்கு அனுப்பப்பட்டடார்கள். மறுபுறம், பொருளாதார நெருக்கடியாலும், முதலாளித்துவ லாபவெறியாலும், தொழிலாளர்கள் வேலை இழந்து விரட்டப்பட்டார்கள். வேலையில்லை, வீடில்லை, விலைவாசி உயர்வை சமாளிக்க முடியவில்லை, வாழவே வழியில்லை என்ற நிலையில் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு போராடவேண்டும் என்ற உணர்விருக்கிறது, முதலாளித்துவம் கொல்கிறது என்றும் தெரிகிறது, ஆனால் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ன என்று தெரியவில்லை.

தாங்கள் முதலாளித்துவ ஆதரவாளர்களும் இல்லை, கம்யூனிஸ்டுகளும் இல்லை என்றே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

பல்வேறு நாடுகளிலும் மக்கள் தெருவில் இறங்கி போராடியிருக்கிறார்கள் துனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் நடைபெற்ற போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்கு விடிவு வந்துவிட்டதா என்றால்  இல்லை! எனவே முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று என்பது சோசலிசம் மட்டும் தான். இன்று இந்த முதலாளித்துவ அரசுகள் விலைவாசியை ஏற்றி மக்களை பிச்சைக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ரசியாவில் 1917 ல் நடைபெற்ற சோசலிச புரட்சிக்கு பிறகு நாடு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே விலை தான் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஒரு அத்தியாவசிய பொருளின் விலை கூட உயரவில்லை என்பது விசயமல்ல மூன்று முறை விலைவாசியை குறைத்திருக்கிறது சோவியத் மக்களின் அரசு. எனவே முதலாளியத்திற்கு மாற்று சோசலிசம் மட்டுமே. அத்தகைய சோசலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமானால் அது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரளும் போது மட்டுமே முடியும். அங்கே போராடுகின்ற மக்கள் கம்யூனிசத்தை வரித்துக்கொண்டால் மட்டுமே விடுதலை.  கம்யூனிசம் மட்டும் தான் அவர்களை பாதுகாக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம், முதலாளித்துவ பொய் பிரச்சாரங்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம் நம் நாட்டில் இருப்பதைப் போல போலி கம்யூனிஸ்ட் கட்சி கூட அங்கு இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில் கம்யூனிஸ்டு கட்சி தேர்தலில் நின்றாலும், வெற்றி பெற்றாலும் கூட பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது, ஏனெனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவி ஏற்க்கும் போது “நான் கம்யூனிஸ்டு இல்லை” என்றும் உறுதியளிக்க வேண்டும்.

இந்த மக்கள் போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவம், பாடம், கம்யூனிஸ்ட் கட்சியில் அணிதிரண்டால் மட்டுமே, அதுவும் இந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தை அகற்றி உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவப் போராடும், போல்ஸ்விக் பாணி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் அணிதிரண்டால் மட்டுமே முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட முடியும். நமது நாட்டில் நக்சல்பாரிகள் தான் அத்தகைய  புரட்சிகர சக்திகள் எனவே நகசல்பாரிகள் தலைமையில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவதே விடுதலைக்கான வழி என்று கூறி தனது உரையை முடித்தார்.

மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!

கருத்தரங்கில் முதாலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும்  மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், பாசிச ஜெயா அரசின் பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதை கண்டித்தும், கூடங்குளத்தில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதை கண்டித்தும், அவர்களுடைய போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவாக நிற்போம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரங்கில் கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உரைகளுக்கு இடையிடையே புரட்சிகர மாணவர்- இளைஞர் முண்ணனி கலைக்குழு தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்சி நடத்தப்பட்டது.

உலகை படைத்தலும், காத்தலும், தீயனவற்றை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் தொழிலாளியே அந்த கடவுள், தொழிலாளியே அந்த உலகம் என்பதை விளக்கும்  ‘நான் உலகம்’ இசை சித்திரம் நடத்தப்பட்டபோது அரங்கத்தில் எழுந்த கரகோசங்கள், மாருதி-சுசுகி போராட்டத்தை போன்று தமிழகத்திலுள்ள தொழிலாளிகளும், வால்ஸ்ட்ரீட் போராட்டங்களை போன்ற மாபெரும் போராட்டங்களை தமிழகமும் விரைவில் காணும் என்பதை உணர முடிந்தது. இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

_____________________________________________________

–       வினவு செய்தியாளர்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

 

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !

அரியானா மாநிலம்  குர்கான் நகருக்கு அருகேயுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி கார் தொழிற்சாலையில், அதன் நிர்வாகம் கடந்த அக்டோபர் 7 அன்று திணித்த சட்டவிரோத கதவடைப்பு, தொழிலாளர்களின் 14 நாள் போராட்டத்தின் பின் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மாருதி நிர்வாகத்தின் இச்சட்டவிரோத கடையடைப்புப் போராட்டத்தை எதிர்த்து, அவ்வாலையின் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் மட்டுமின்றி, மாருதியின் டீசல் கார்களுக்கான இஞ்சின்களைத் தயாரித்து வழங்கும் பவர்டிரெய்ன் ஆலைத் தொழிலாளர்களும் மற்றும் மாருதி காஸ்டிங் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து போராடி, குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளனர்.

மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையில் பணியாற்றும் 2,500 தொழிலாளர்களுள், 1,450 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.  இந்த ஆலையில் ஒரு ஷிப்டில் ஏறத்தாழ 600 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இதன் பொருள், தொழிலாளர்கள் தமது எட்டு மணி நேர ஷிப்டில், ஒரு நிமிடம்கூட ஓய்ந்து நிற்க நேரமின்றி  45 வினாடிக்கு ஒரு காரை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும்.  இப்படிக் கசக்கிப் பிழியப்படும் நிரந்தரத் தொழிலாளிக்கு, அவரது தகுதிக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.18,000 வரை மாத ஊதியம் கிடைக்கும்.  இதே வேலைக்கு  ஒப்பந்தத் தொழிலாளி பெறும் மாத ஊதியமோ வெறும் ரூ.3,000 தான்.

தொழிலாளர்கள் ஒருநாள் விடுப்பெடுத்தால் ஊக்கத் தொகையில் ரூ.1,500/ ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் வெட்டப்படும். மதிய உணவுக்கென ஒதுக்கப்படும் 30 நிமிடங்களுக்குள் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு சென்று  நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்று, அவசர அவசரமாக விழுங்கிவிட்டுத் தாமதமின்றி பணிக்குத் திரும்பிடவேண்டும். ஒரு நிமிடத் தாமதத்துக்குக் கூடச் சம்பளம் வெட்டப்படும்.  ஒவ்வொரு ஷிப்டிலும் இரண்டு முறை கழிவறைக்கும் கேண்டினுக்கும்  சென்று திரும்ப ஏழரை நிமிடங்கள் என்ற வீதம் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அடுத்த ஷிப்டிற்கான ஆள் வராவிட்டால் 16 மணிநேர வேலை கட்டாயமாகப் பார்க்க வேண்டும். இவை  போன்ற எண்ணற்ற அநியாய விதிமுறைகளோடு பணியாற்றும் மானேசர் தொழிலாளர்களுக்குத் தங்கள் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க நிர்வாகத்தின் எடுபிடி சங்கத்தைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கென கட்சி சார்பற்ற தொழிற்சங்கம் ஒன்றைக் கட்ட கடந்த  ஜூனில் முயன்றனர்.

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !தொழிற்சங்க அனுமதிக்கான விண்ணப்பங்களை அம்மாநிலத் தலைநகரான சண்டிகரில் கொடுக்கச் சென்றிருந்த தொழிற்சங்க முன்னோடிகள் 11 பேரை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது. இதனைக் கண்டித்து ஜுன், ஜூலை மாதங்களில் முதற்கட்டமாக மானேசர் மாருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.  13 நாட்கள் உறுதியாக நடந்த இந்தப் போராட்டத்தின் முடிவில், அரியானா மாநில அரசு, மாருதி நிர்வாகம், தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவாரத்தையின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக நடத்தாமலிருந்த, மாருதி நிர்வாகத்தின் எடுபிடி சங்கமான “மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கத்தின்’ தேர்தலைத் திடீரென நிர்வாகம் நடத்தியது.  மானேசர் மாருதி ஆலைத் தொழிலாளர்கள் இந்தத் தேர்தலை மொத்தமாகப் புறக்கணித்தனர். வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே அந்தத் தேர்தலில் பதிவாகியது.

இதற்கிடையில்  ஜூலை 26ஆம் நாள், மாருதி தொழிலாளர்கள் விண்ணப்பித்திருந்த புதிய தொழிற்சங்கமான “மாருதி சுசுகி பணியாளர் சங்கத்தை’ அம்மாநில அரசு பதிவு செய்ய மறுத்தது. அதன் பின் மாருதி நிர்வாகம் தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்தத் தொடங்கியது. ஜுலை 28இல் 4 தொழிலாளர்கள் எந்தக் காரணமும் கூறப்படாமல் நிர்வாகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதனை எதிர்த்துத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் (டூல் டவுன்) செய்தனர்.  நிர்வாகமோ பழிவாங்கும் போக்கை மென்மேலும் தொடர்ந்தது. ஆகஸ்டு 23 தொடங்கி ஆகஸ்டு 30க்குள்ளாக 57 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்; 31 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக ஆகஸ்டு 29ஆம் தேதி ஆலைக்குள் நுழைய வேண்டுமானால், தொழிலாளர்கள் அனைவரும் “நன்னடத்தைப் பத்திரம்’ ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டது. தொழிற்சாலையைச் சுற்றிலும் 500 மீட்டர் நீளத்திற்கு  அலுமினியத் தகடுகளால் கோட்டைச் சுவரைப் போலத் தடுப்பு உருவாக்கியும், ஆலையின் வாயில்களை கன்டெயினர் லாரிகளைக் கொண்டு அடைத்தும் யாரும் உள்ளே போகவோ வெளியேறவோ முடியாமல் தடுத்தது. இந்த நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்த தொழிலாளர்களோ அலுமினியச் சுவருக்கு வெளியே புதர்களின் நடுவே குழுமி போராடத் தொடங்கினர்.

நன்னடத்தைப் பத்திரம் என்ற பெயரில் ஒரு கொத்தடிமைத்தனப் பத்திரத்தைத்தான் தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சி செய்தது, மாருதி நிர்வாகம்.  நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளுவதையும், போராடுவதையும் தடுப்பதுதான் “இந்நன்னடத்தையின்’ நோக்கமாகும்.  குறிப்பாக, இப்பத்திரத்தின்படி தொழிலாளர்கள் செய்யும் 8 சிறிய தவறுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை 15 நாட்களுக்குச் சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்யவும்; 103 பெரிய தவறுகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் நிர்வாகத்திற்கு அதிகாரமுண்டு என அறிவிக்கப்பட்டது.  தவறான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுத்தல், கழிப்பறை செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், புகையிலை போடுதல், சுத்தமாக இல்லாமல் இருத்தல்  போன்றவையெல்லாம் பெரிய தவறான நடத்தைகளாக இப்பத்திரத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.  மைய அரசின் தொழிலாளர் நலத் துறையின் முன்னாள் செயலாளர் இந்த நன்னடத்தைப் பத்திரத்தைச் சட்ட விரோதமானது எனச் சுட்டிக் காட்டிய பின்னரும், மைய அரசு மாருதி சுசுகி நிர்வாகத்துக்கு எதிராக சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை; அரியானா மாநில அரசோ மாருதி நிர்வாகத்திற்கு வெளிப்படையாகவே ஜால்ரா தட்டியது.

இக்கொத்தடிமைப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து அனைத்துத் தொழிலாளர்களும் ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 30 முடிய ஏறத்தாழ 33 நாட்கள் தொடர்ந்து போராடினார்கள். அதன் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள். ஆனால், வேலைக்குத் தொழிலாளர்கள் திரும்பியதும், மறுநாளே தொழிலாளர் மீதான அடக்குமுறையை நிர்வாகம் தொடங்கியது. இச்சமயத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர்.  இந்த இருதரப்பினரின் ஒற்றுமையைச் சிதைத்திடத் திட்டமிட்ட நிர்வாகம், 1200 ஒப்பந்தத் தொழிலாளர்களை அக்டோபர் முதல் நாளன்று வேலையை விட்டு நீக்கியது. அத்துடன், நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் வேலைபார்த்த யூனிட்டுகளிலிருந்து வேறு யூனிட்டுகளுக்கு மாற்றிப்போட்டது.  ஏற்கெனவே போதிய அளவிற்கு இயக்கப்படாமலிருந்த பேருந்து வசதியை, நிர்வாகம் முற்றாக நிறுத்தியது.

நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திடாத தொழிலாளர்களை ஆலைக்குள் அனுமதிக்க மறுத்தது, ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மாருதி நிர்வாகம் மறைமுகமான வழியில் ஒரு சட்டவிரோதமான கதவடைப்பைச் செய்துவிட்டு, தனது எடுபிடி முதலாளித்துவப் பத்திரிக்கைகளின் மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துவிட்டதாகவும், உற்பத்தியைச் சீர்குலைப்பதாகவும் புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தியது.  இன்னொருபுறம் அரியானா மாநில அரசு வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற போர்வையில் போலீசு, நீதிமன்றம் மூலம் தொழிலாளர்களை மிரட்டி மாருதிக்கு ஆதரவாக நடந்து கொண்டது.

மாருதி நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் தொடங்கி பல்வேறு வழிகளில் நடந்துவரும் போராட்டத்தை குர்கானைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் ஆதரித்து வந்த நிலையில், தற்பொழுது சுசுகி பவர்டிரைன் ஆலைத் தொழிலாளர்களும், சுசுகி காஸ்டிங்ஸ் மற்றும் சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.  தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம்; பரவுவதைத் தடுத்துவிடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்த மாருதி சுசுகி நிர்வாகத்திற்கு தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை இடியாக இறங்கியது.  இப்பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக் கொண்டே போனால், குர்கான் முழுவதுமே தொழிலாளர்களின் போராட்டம் பரவிவிடும் என அஞ்சிய அரசும், மாருதி நிர்வாகமும் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

மாருதி சுசுகி : முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர் !இப்பேச்சுவார்த்தையின்படி, 1,200 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவும், ஷிப்டுக்குத் தொழிலாளர்களை அழைத்து வரும் பேருந்து வசதியினை மீண்டும் முறையாக நடத்தவும், பணியிடை நீக்கம்/வேலை நீக்கம் செய்யப்பட்ட 94 தொழிலாளர்களில் 64 பேரை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.  தொழிலாளர்களின் புதிய சங்கத்தை அங்கீகரிக்க நிர்வாகம் மறுத்துவிட்டபோதும், நிர்வாகத்தின் எடுபிடி சங்கத்தில் தொழிலாளர்கள் சேர வேண்டும் என நிர்பந்திப்பதைக் கைவிடவும், தொழிலாளர் நல சங்கம் ஒன்றை நிர்வாகமும் தொழிலாளர் பிரதிநிதிகளும் இணைந்து ஏற்படுத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

மாருதி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை எவ்விதச் சலுகையும் கொடுக்காமல் ஒடுக்கிவிடுவதன் மூலம், குர்கான் பகுதியில் இனி எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் தலையெடுக்கவிடாமல் செய்துவிட வேண்டும் என முதலாளித்துவ வர்க்கம் எண்ணிக் கொண்டிருந்தது.  மாருதி ஆலைத் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறாவிட்டாலும், முதலாளிகளின் அந்த எண்ணத்தில் மண் விழுந்திருப்பது இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.  மேலும், இப்போராட்டம் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, தனித்தனி தொழிலகங்களையும் தாண்டி குர்கானைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் ஐக்கியத்தை உருவாக்கி வருகிறது.

இப்போராட்டத் தலைமை பிழைப்புவாதத் தொழிற்சங்கங்களை அண்டாமல், போர்க்குணத்தோடும், தியாக உணர்வோடும் இப்போராட்டத்தை உறுதியாக நடத்தியிருந்தாலும், தொழிலாளர்களின் மீதான இந்தக் கொடிய அடக்குமுறையானது நாடு மறுகாலனியாவதன் வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொள்வதும், அதற்கேற்ப புரட்சிகரத் தொழிற்சங்கங்களில் அணிதிரளுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

2005இல் ஹோண்டாவில், 2009இல் ரிக்கோவில், 2011இல் மாருதியில் என அடுத்தடுத்து குர்கானில் நடந்துவரும் போராட்டங்களினால், மாருதி நிர்வாகம் ஏற்றுமதிக்கான தனது புதிய கார் ஆலையை குஜராத்தில் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமக்குத் தேவைப்படும் மானியங்களையும், வரிச்சலுகைகளையும் வாரி வழங்குவார் என்பதோடு, தொழிலாளர் போராட்டங்கள் எதுவும் முளைத்துவிடாமலும் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கைதான் மாருதி நிர்வாகத்தை அரியானாவை விட்டு குஜராத்தை நோக்கி ஓடச் செய்திருக்கிறது.  இந்த வகையில் குர்கான் மறுகாலனியத் தாக்குதலை எதிர்கொண்டுவரும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும், மோடியின் குஜராத் எதிர்ப்புரட்சியின் மையமாகவும் விளங்குகிறது என்று கூறலாம்.

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

 ”எங்கெல்லாம் அற்பத்தனங்கள் இருக்கிறதோ அவற்றை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தினார் ஆன்டன் செகாவ்” என்றார் மாக்சிம் கார்க்கி. தீடீரென வந்த ஒரு தும்மலுக்காக அல்லும் பகலும் புலம்பித் தீர்த்து, தன்னைத்தானே சித்திரவதை செய்து மாண்டு போன ஒரு அற்பவாதியைப் பற்றிய கதை இது. யோசித்துப் பார்த்தால் அது போன்ற தும்மல் பிரச்சினைகள் நம்மிடம் இல்லையா என்ன? அது என்ன தும்மல் பிரச்சினை? கதையைப் படியுங்கள்………..

_____________________________________________________________________________

அருமையான ஓர் இரவில் அருமையான எழுத்தர் இவான் திமீத்ரிவிச் செர்வியாக்கவ்* நாடகக் கூடத்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து, காட்சிக் கண்ணாடியின் துணை கொண்டு Les Cloches de Corneville நாடகம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். கண்ணும் கருத்துமாய் நாடக மேடையைக் கவனித்த அவர், தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைத்தார்.

அப்பொழுது திடுமென….”திடுமென ” _எதற்கெடுத்தாலும் உபயோகிக்கப்பட்டு சலிப்பூட்டும் தொடராகி விட்டது இது; ஆயினும் வாழ்க்கையானது எதிர்பாராத திடீர் நிகழ்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதால் எழுத்தாளர்கள் இந்தத் தொடரை உபயோகிக்காமல் என்ன செய்வார்கள்? ஆகவே, அப்பொழுது திடுமென அவருடைய முகம் சுருங்கிக் கோணிற்று, விழிகள் உருண்டு விண்ணோக்கி உயர்ந்தன, மூச்சு தடைப்பட்டு நின்றது…. காட்சிக் கண்ணாடியிலிருந்து முகத்தைத் திருப்பி உடலை மடக்கி ஆசனத்தில் கவிழ்ந்தார்.

அதற்குள்_உ-ஊச்சு! அதாவது ஒரு தும்மல் தும்மினார். எவரும் எங்கு வேண்டுமானாலும் தும்மலாம், யாருக்கும் இந்த உரிமை உண்டு. விவசாயிகள், போலிஸ் இன்ஸ்பெக்டர்கள், ஏன் அரசு ஆலோசகர்களுங்  கூட தும்முகிறார்கள். எல்லோரும் தும்மவே செய்கிறார்கள் – யாரும் விதிவிலக்கில்லை. செர்வியாக்கவ் பதைத்துப் போகவில்லை, கைக்குட்டையை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டார் . பிறகு தமது தும்மலால் யாருக்கும் தொந்தரவு எற்பட்டிருக்குமோ என்று, நற்குணச் சீலருக்கு ஏற்ற முறையில் சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். உடனே பதைபதைத்துப் போனார்.

ஏனெனில் அவருக்கு நேர் முன்னால் முதல் வரிசையில் உருவத்தில் சிறியவராய் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர் முணுமுணுத்தபடி வழுக்கைத் தலையையும் கழுத்தையும் கவனமாய்க் கையுறையால் துடைத்துக் கொள்வது அவர் கண்ணில் பட்டது. அந்தக் கிழவர் யாரென்று செர்வியாக்கவ் தெரிந்து கொண்டுவிட்டார் – அவர் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகியான ஜெனரல்** பிரிழாலவ்.

”இவர் மீது அல்லவா தும்மிவிட்டேன்!” என்று செர்வியாக்கவ் தம்முள் கூறிக் கொண்டார். ”இவர் எனது அலுவலகத்தின் அதிபரல்ல, என்றாலும் அசம்பாவிதச் செயலாயிற்றே! மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று முடிவு செய்தார். மெல்ல இருமியபடி முன்னால் சாய்ந்து ஜெனரலின் காதுக்குள் சொன்னார்.

”மேதகையீர், பொறுத்தருள வேண்டும், தும்மிவிட்டேன்…. மனமறிந்து செய்ததல்ல….”

”சரி பரவாயில்லை.”

”மன்னிக்க வேண்டும். நான்….. வேண்டுமென்று நினைத்துச் செய்த காரியமல்ல!”

”போதும் ஐயா! நான் நாடகம் பார்க்கணும், சும்மா இரும்!”

செர்வியாக்கவ் சற்றுப் பதற்றத்துடன் அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, நாடக மேடையில் கவனம் செலுத்த முயன்றார். நடிகர்களை உற்று நோக்கினார், ஆனால் முன்பு போல் இப்பொழுது அவர் தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைக்கவில்லை. தவறிழைத்து விட்டோமே என்ற மன உறுத்தல் அவரை அரித்துத் தின்றது. இடைவேளையின் போது பிரிழாலவின் அருகே நடந்து சிறிது நேரம் தயங்கி நின்றபின் மனதை ஒருவாறு தைரியப்படுத்திக் கொண்டு, பாதி வார்த்தையை விழுங்கியவாறு கரகரக்கும் குரலில் சொன்னார்;

”மேதகையீர், தங்கள் மீது தும்மினேன்…. மன்னிக்க வேண்டும்… தவறாய் நினைக்கலாகாது… வேண்டுமென்று செய்ததல்ல….”

”என்ன இது…. அப்போதே மறந்துவிட்டேன், இன்னுமா அதைப் பற்றி பேசணும்?” என்று, பொறுமை இழந்து அடி உதடு துடிக்கக் கூறினார் ஜெனரல்.

“மறந்து விட்டதாய்ச் சொல்கிறார், ஆனால் அவர் கண்கள் ஒளிர்வதைப் பார்த்தால் நன்றாய் இல்லையே என்று எண்ணிய செர்வியாக்கவ் நம்பிக்கை இல்லாதவராய் ஓரக் கண்களால் ஜெனரலை நோட்டமிட்டார். என்னுடன் பேச அவருக்கு விருப்பமில்லை. விளக்கமாய் அவரிடம் சொல்ல வேண்டும் . தும்ம வேண்டுமென நினைத்துச் செய்ததல்ல…. இயற்கை விதி என்று விளக்க வேண்டும், இல்லையேல் அவர் மீது எச்சில் துப்ப வேண்டுமென்று நான் இதைச் செய்ததாய் நினைத்துக் கொள்வார். இப்பொழுது நினைக்காவிட்டாலும் பிற்பாடு அவர் நினைக்கக்கூடும்!….”

வீட்டுக்குத் திரும்பியதும் செர்வியாக்கவ் தமது கண்ணியக் குறைவான நடத்தை குறித்துத் தம் மனைவியிடம் சொன்னார். ஆனால் மனைவி இதைப் பெரிதாய் நினைக்காமல் அலட்சியப்படுத்தியதாய் அவருக்குத் தோன்றிற்று. கணப் பொழுது கலங்கவே செய்தாள் என்றாலும், பிரிழாலவ் ”நமது” அதிபரல்ல என்பது தெரிந்ததும் அவள் தைரியமடைந்துவிட்டாள்.

”எதற்கும் நீ போய் அவரிடம் மன்னிப்பு கேட்பது நல்லதெனநினைக்கிறேன்” என்றாள். ”இல்லையேல் நாலு பேருக்கு முன்னால் பாங்காய் நடந்து கொள்ளத் தெரியாத ஆளாய் உன்னை அவர் நினைத்துக்  கொள்வார்.”

”ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வார்! மன்னிப்பு கேட்பதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன், ஆனால் அவர் ஒரு விபரீத மனிதர், நல்லபடியாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. தவிரவும் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.”

மறு நாளன்று செர்வியாக்கவ் தமது பணித்துறைக்குரிய புதிய நெடுங் கோட்டு அணிந்து, முடியையும் வெட்டிக் கொண்டு, தமது நடத்தை குறித்து விளக்கம் அளிப்பதற்காக பிரிழாலவிடம் சென்றார். ஜெனரலின் வரவேற்பறையில் நிறைய விண்ணப்பதாரர்கள் கூடியிருந்தனர். ஜெனரலும் அங்கு வீற்றிருந்து விண்ணப்பங்களை வாங்கிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கூடியிருந்தோரில் சிலருடன் பேசி முடித்தபின் ஜெனரல் தமது பார்வையை உயர்த்திச் செர்வியாக்கவின் முகத்தில் பதிய வைத்தார்.

”மேதகையீர். நேற்று இரவு உங்களுக்கு நினைவில் இருக்கும், அர்காதியா நாடக மன்றத்தில்….”என்று ஆரம்பித்து, ”நான் உம் – தும்மினேன், அதனால் உம் – தங்களுக்கு … மிக்க வருந்துகிறேன்….” என்று இழுத்தார்.

”அடே, அபத்தம்! அபத்தம்!” என்றார் ஜெனரல். பிறகு அடுத்தவரைப் பார்த்து ”உங்களுக்கு நான் செய்யக் கூடியது என்ன?”என்று விசாரித்தார்.

செர்வியாக்கவுக்கு முகம் வெளிறி விட்டது.

”காது கொடுத்துக் கேட்க மாட்டேன்கிறாரே!” என்று தன்னுள் கூறிக் கொண்டார். ”அப்படியானால் கோபப்படுகிறார் என்றுதானே அர்த்தம்…. இதை இந்த நிலையில் விட்டுவிட்டு நான் போகக் கூடாது…. விளக்கமாய் அவரிடம் சொல்லியாக வேண்டும்……..”

கடைசி விண்ணப்பதாரருடனும் பேசி முடித்த பின் ஜெனரல் தமது தனி அறைக்குப் போவதற்காகத் திரும்பியபோது செர்வியாக்கவ் அவர் பின்னால் ஓடி முணுமுணுக்கும் குரலில் சொன்னார்;

”மேதகையீர், மன்னிக்கணும்! என் தவறுக்காக உள்ளம் குமைகிறேன், இல்லையேல் எனக்கு இந்தத் துணிவு வந்திருக்காது, மேதகையீரைத் தொல்லை செய்ய நினைத்திருக்க மாட்டேன்…”

ஜெனரல் வாய்விட்டு அழப்போகிறவர் மாதிரி தோன்றினார், விலகிப் போய்விடும்படி கையை வீசிக் காட்டினார்.

”என்னைக் கேலி செய்யாதீர்!” என்று சொல்லி செர்வியாக்கவினுடைய முகத்தின் எதிரே கதவைத் தள்ளி மூடினார்.

”கேலி செய்கிறேனா!” என்று தம்முள் முனகிக் கொண்டார் செர்வியாக்கவ். ”இதில் வேடிக்கை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லையே எனக்கு ஜெனரலாய் இருக்கிறார், இது புரியவில்லையா, என்ன? சரி, இனி நான் இந்த அரிய மனிதரிடம் வந்து மன்னிப்பு கேட்டுத் தொந்தரவு செய்யப் போவதில்லை. நாசமாய்ப் போக! இவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விடுகிறேன், இனி ஒரு போதும் இவரிடம் வர மாட்டேன்! மாட்டவே மாட்டேன்!”

வீட்டுக்குத் திரும்பி நடந்த போது செர்வியாக்கவின் மனத்துள் ஓடிய சிந்தனைகள் இவை. ஆனால் அவர் இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பவில்லை. எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவரால் அதன் வாசகத்தைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகவே, யாவற்றையும் சரிசெய்யும் பொருட்டு அடுத்த நாள் அவர் மீண்டும் ஜெனரலிடம் போக வேண்டியதாயிற்று.

“மேதகையீர், நேற்று நான் தங்களிடம் வந்திருந்தேன்,” ஜெனரலுடைய வினவும் பார்வை தம்மீது திரும்பியதும் இவ்விதம் அவர் தமது விளக்கத்தை ஆரம்பித்தார்.

”மேதகையீர் நினைத்த மாதிரி நான் தங்களைக் கேலி செய்வதற்காக வரவில்லை. எனது தும்மலால் தங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்காக மன்னிப்பு கேட்பதற்காகவே வந்திருந்தேன்…. தங்களைக் கேலி செய்யலாமெனக் கனவிலும் நான் கருதக் கூடியவனல்ல. அம்மாதிரியான ஒரு துணிச்சல் எந்நாளும் வராது எனக்கு. பெரியவர்களைக் கேலி செய்யலாமென்ற எண்ணத்துக்கு நாங்கள் இடந்தருவோமாயின், பிறகு மரியாதையே  இல்லாமற் போய்விடும்…. மேலிடத்தில் இருப்போருக்குக் காட்ட வேண்டிய மரியாதை இல்லாதொழிந்துவிடும்….”

”போ வெளியே!” நிற்காதே, போ!” என்று செக்கச் சிவந்து போய் ஆத்திரம் தாங்காமல் ஆடியவாறு சீறினார் ஜெனரல்.

”புரியலிங்க, என்ன சொல்லறீங்க?” குலைநடுங்கிப் போன செர்வியாக்கவ் மெல்லிய  குரலில் கேட்டார்.

”போ வெளியே!” என்று காலால் தரையைத்  தட்டி மீண்டுமொரு தரம் ஜெனரல் சீறினார்.

செர்வியாக்கவுக்குத் தம்முள் ஏதோ இற்றுப் போனது மாதிரி இருந்தது. காதால் கேட்கவோ, கண்ணால் பார்க்கவோ சக்தியற்றவராய்ப் பின் பக்கமாய் நகர்ந்து கதவை அடைந்தார், பிறகு தெருவிலே இறங்கி மெல்ல நடந்தார். உணர்விழந்த நிலையில் தட்டுத் தடுமாறியபடி வீட்டுக்குத் திரும்பி, தமது பணித்துறை நெடுங்கோட்டுடன் அப்படியே சோபாவில் படுத்து மாண்டு போனார்.

_____________________________________________________

விளக்கக் குறிப்புக்கள்:

*புழுவைக் குறிக்கும் செர்வியாக் என்னும் ருஷ்யச் சொல்லிலிருந்து புனையப்பட்டிருக்கும் பெயர்.

**ஜார் கால ருஷ்யாவில் சிவில் துறை அதிகாரிகளின் உயர் பிரிவுகளைச் சேர்ந்த தனி ஆலோசகர், அரசு உயர்நிலை ஆலோசகர், அரசு ஆலோசகர் ஆகிய பதவிகள் வகித்தோர் ஜெனரல் என்னும் பட்டத்துக்கு உரியோராய் இருந்தனர்.

புதிய கலாச்சாரம், ஜனவரி – 1989

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

37

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா? “பீகார் மாநிலத்தை லல்லு பிரசாத் யாதவ் ஆண்டதால்தான் சீரழிந்து கிடந்தது. 15 ஆண்டுகளாக அவர் நேரடியாகவும், அவரது மனைவி ராப்ரி தேவி மூலமாகவும் புரிந்த கொடுங்கோலாட்சியின் மூலம் ஒற்றை மனிதராக  பீகார் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருங்கச் செய்தார். 2005-ல் முதல்வரான நிதீஷ் குமாரின் தலைமையிலான நிர்வாகத்தில் மாநிலம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே வளர்ச்சி வீதம் அதிகமான மாநிலமாக பீகார் மாறியிருக்கிறது….” என்றெல்லாம் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. அந்த அலையில் மிதந்து 2010-ல் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் இரண்டாவது முறையாக கூடுதல் பெரும்பான்மையுடன் முதலமைச்சரானார்.

அப்படி லல்லுவிடம் இல்லாதது, நிதீஷ் குமாரிடம் என்னதான் இருக்கிறது? அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது? அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பலர் பல விதமாக விடை காண முயற்சித்தார்கள். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தல், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல, சொத்து குவித்த அரசு அதிகாரிகளிடமிருந்து சொத்துக்களைப் பிடுங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்படியான ஆட்சியை நிறுவினார். ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசத்தை இரும்புக் கரத்துடன் ஒடுக்கி சட்ட ஒழுங்கை மேம்படுத்தினார். எனில் பீகார் எப்போது சிங்கப்பூர் போல முன்னேறிய மாநிலமாக மாறப் போகிறது என்ற ஒரே கேள்விதான் எஞ்சியிருக்கிறது

இந்த முன்னேறங்களுக்கு உண்மையில் என்ன அடிப்படை என்ற மர்மம் சமீபத்தில் வெளியானது. முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன் வந்து அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேதிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டதுதான் அவரது ‘சாதனை’களின் ரகசியம்.

11.11.11 அன்று 11 மணி 11 நிமிடத்துக்கு தவறுகள் செய்த 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையைப் பிறப்பித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 2001 முதலே தனது அரசியல் வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை இது போன்று  வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதிகளில்தான் தான் எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுத்து ஆவணங்களில் கையொப்பமிட்டாராம். 2004-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், 2005-ல் கையொப்பமிட பொருத்தமாக எதுவும் கிடைக்காததால் அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் தவற விடப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்தியிருந்தால் பீகார் இதற்குள் வல்லரசின் வல் மாநிலம் ஆகியிருந்திருக்கும். பாழாய்ப் போன ஜனநாயக முறைகள் அதை தவிர்த்து விட்டன.

3-3-2003ம் 1-1-2011ம் அவருக்கு மிகவும் லாபகரமான நாட்களாக அமைந்த நாட்களாம்.

நிதீஷ் குமார் 11 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து இட்ட அதே நேரத்தில் 11.11 மணிக்கு தீர்ஹூத் வனப்பகுதி ஆணையர் எஸ் என் ராஜூ அந்த ஊர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு ஆலமரக் கன்றை நட்டார். “அந்த மரக் கன்றிலிருந்து வளரும் மரம் 400 முதல் 500 ஆண்டுகள் உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் நிதீஷ் குமார் கூறினார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த நாளாக அது அமைந்து விட்டது.

பீகார் மக்கள் மூச்சு விட மறந்து அற்புதங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி சவுபே இன்னும் ஒரு படி மேலே போய் 11.11.11 அன்று 11.11 மணிக்கு பீகாரில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் 18 வயது வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், திருமண நிதி உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை பின்பற்றி நிதீஷ் குமாரும் பீகாருக்கு திறமையான தலைமையை வழங்கியிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.

— பச்சை நிறம்தான் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை என்று அடையாளம் கண்டு பச்சை நிற உடைகளை உடுத்த ஆரம்பித்து கட்சியினரையும், அரசு துறைகளையும் பச்சை நிறத்துக்கு முதலிடம் கொடுக்க வைத்து

— யானைகளுக்கு கஜபூஜை நடத்தினால் நாடு சுபிட்சம் பெறும் என்று நாடெங்கிலும் உள்ள கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று யானை முகாம் நடத்தி

— அன்னதானம் அளித்தால் கடவுளரின் மனம் குளிர்ந்து மக்கள் எல்லோரும் உழைக்காமலேயே கற்பக விருட்சத்தின் கீழ் தமக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நாடெங்கிலும் கோயில்களில் இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்து

தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திய புரட்சித்தலைவி அம்மாவின் உதாரணத்தையும்

— ஆட்சியைப் பிடிப்பதற்கு 13 வயது குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோதிடம் பார்த்து நடந்து கொண்ட மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமாராவின் வழியையும்

— பல விதமான யாகங்கள், வழிபாடுகள், விரதங்கள் மூலம் தேவர்களின் ஆசீர்வாதம் பெற்று தென் மாநிலங்களில் முதன் முறையாக தனது கூட்டணி கட்சி பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவின் எடுத்துக்காட்டையும்

— தேய்பிறையாகப் போனதால் முதலமைச்சராக பதவி ஏற்பதையே 10 நாட்கள் தள்ளிப் போட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முன் உதாரணத்தையும்

கவனமாக ஆராய்ச்சி செய்து நிதீஷ் குமார் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.

இனிமேல் பீகாரின் முன்னேற்றத்தை ஆயிரம் லாலுக்கள் வந்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது, இன்னும் 12-12-2012 என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதி வரவிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டு நிதீஷ் குமார் பீகாரை உலகிலேயே முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் காட்டுவது என்பது கடைசியில் ஜோசியத்தின் கையில்தான் இருக்கிறது என்றான பிறகு இனி இந்தியாவுக்கு ஏது தோல்வி!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக  22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம்.  ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா,  தமிழகத்தின் முதல்வர்,  விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து  “உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

இந்த காட்சியை  கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து “ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்”  என்று மிரட்ட தோழர்கள் “அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம், ஏன் கைது செய்கிறீர்கள்?” என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று அழாத குறையாக விளக்கம் சொன்னது போலீசு.

தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 7 குழந்தைகள், பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.

அன்று மாலையே அதில் பத்து பேரைத் தவிர மற்றவர் அனைவரும் 60 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. அதிலும் ஜெயாவின் வேடமணிந்து நடித்ததை ஏதோ மாபெரும் தீவிரவாத நடவடிக்கை போல சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.

பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. எனினும் புரட்சிகர அமைப்புகள் பேயாட்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். சிறை, மிரட்டலெல்லாம் அவர்களை அச்சுறுத்தாது. தற்போது திருச்சி சிறையில் சிறைவாசிகள் மத்தியில் பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தி தோழர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காவல் துறை என்ன செய்யும்? ஒருவேளை வழியிருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்துவார்களோ?

_____________________________________________________________

–    மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: