“ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டுக்கே முன்மாதிரியாய் விளங்குகிறார்” என்கிறார் மும்பை லீலாவதி மருத்துவமனையின் பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் கிரண் கொயல்லோ. மறுநாளே இதை முன்மொழிந்து வழிமொழிந்து இடைமொழிந்து குதூகலித்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை. நடுத்தர வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்ளவே விரும்புவதாகவும், இந்நிலையில் சுகப்பிரசவமே வேண்டும் என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதி நாட்டுமக்களுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்கிறது அந்த செய்திக் கட்டுரை.
சிசேரியன் ஆகி விடக்கூடாது என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதியைக் காட்டிலும் அவர் மேல் பணம் கட்டியிருக்கும் – மற்றும் கட்டவிருக்கும் – படக் கம்பெனி முதலாளிகளில் இருந்து விளம்பர நிறுவனங்கள் வரை அனைருக்கும் இதயம் தாறுமாறாக எகிறியிருக்கும். லீலாவதி மருத்துவமனை மகப்பேறு வார்டின் முன் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்த அமிதாப் பச்சனின் மனசாட்சிக்குக் கூட அது தெரிந்திருக்கும் – வயிற்றில் ஆப்பரேஷன் கோட்டோடு கவர்ச்சி உடையில் தோன்ற முடியாதல்லவா? அதனால் தான் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் அமிதாப் பச்சனே ட்விட்டரில் இது சுகப்பிரசவம் தான் என்று உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்.
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் 2007-ல் திருமணம் முடித்ததில் இருந்து அவர் கருவுற்ற தேதி வரை அந்தக் கால மாமியார் போல ‘அடியே இன்னுமா மசக்கை ஆகலை’ என்று முதலாளித்துவ ஊடகங்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கருவுற்ற பின்னும் வயிறு தள்ளியிருக்கிறதா என்பதில் ஆரம்பித்து அதை மறைக்க எந்த வகை உடை அணிகிறார் – எதை அணியலாம் என்பது வரைக்கும் ஆங்கில ஊடகங்கள் தமது ‘பேஜ் 3’ பக்கங்களில் அக்கறையுடன் பல ஆலோசனைகளை வழங்கி அவற்றைத் தமது வாசகர்களுக்கு சுவைபட விவரித்துக் கொண்டிருந்தன.
குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா எப்போது வெளியே தலைகாட்டுவார் குழந்தையின் புகைப்படம் எப்போது வெளிவரும் என்ன பெயர் வைப்பார்கள் என்று துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பாக எழுதிக் குவித்தனர். இதற்கிடையே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை வைத்து வடநாட்டில் புக்கிகள் பந்தையம் கட்டி சூதாடியது நடந்தது. சூதாட்டம் என்று வந்த பின் கிரிக்கெட்டாவது குழந்தையாவது – தின்னும் சோற்றைக் கூட விட்டு வைக்காமல் சூதாடும் நாட்டில் குழந்தையை வைத்து சூதாடுவது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஆனால் அதையும் பெருமிதத்துடன் பத்திரிகைகள் எழுதுகின்றன என்பதைக் கொண்டே இவர்களின் தரம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இப்போது ஐஸ்வர்யா திரும்பவும் எப்போது திரையில் தோன்றி மகிழ்விப்பார் என்கிற எதிர்பார்ப்பில் மூழ்கிக் கிடக்கும் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஆற்றுப் படுத்தும் விதமாக அவர் தனது உடலை மெலிய வைக்க மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்கிற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை பக்கம் பக்கமாக ஓதுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள். அதிலும் ஒரு படி மேலே போன இந்துஸ்தான் டைம்ஸ், பிரசவத்துக்குப் பின் செய்தியாளர்கள் முன் தோன்றிய ஐஸ்வர்யா பாரம்பரிய வேலைப்பாட்டுடன் கூடிய ஹவாய் செருப்பை அணிந்து வந்தார் என்றும் இது கால் தசைகள் மற்றும் பின்புறத்தில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுமென்றும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது. மட்டுமல்லாமல், அந்த செருப்பை எங்கே வாங்கலாம் அதன் விலை என்ன அது போன்ற செருப்பை அணிவதன் பிற பலன்கள் என்ன அதைப் பற்றி உடற்கூறியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கர்ம சிரத்தையாக ‘செருப்பு’ ஆய்வுக் கட்டுரையாக அதை வளர்த்துச் செல்கிறது.
ஐஸ்வர்யாவுக்கு நடந்த சுகப்பிரசவத்துக்காக மகிழ்ச்சிக் கடலில் முழ்கியுள்ள பத்திரிகைகள் இதே நேரத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 18.65 சதவீதமாக உயர்ந்துள்ளதைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கின்றன. அதிலும் நாட்டின் தலைநகரமான தில்லியில் தான் குழந்தை இறப்பு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேகமாக ‘வளர்ந்து’ வரும் தில்லி நகரத்துக்கு மேக்கப் போடுவதற்காக நடந்துவரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளுக்காக இடம் பெயர்ந்து வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு போதிய மருத்துவவசதிகள் ஏதும் வழங்கப்படாததே இதற்குப் பிரதானமான காரணம். மேலும் தில்லியில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் இருக்கும் பிரசவ வார்டுகளுக்கு போதிய மருத்துவர்களோ செவிலியர்களோ பிற உட்கட்டமைப்பு வசதிகளோ எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.
உலகளவில் குழந்தை இறப்பு விகிதம் குறித்து ஐ.நா வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்தியா 152-ம் இடத்தில் இருக்கிறது. இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளும் துனீஷியா, லிபியா, கோஸ்டாரிகா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் கூட இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரத்தில் வல்லரசாப் போகிற நாடு என்று ராக்கெட்டு விட்ட அப்துல் கலாமே சர்டிபிகேட் கொடுத்துள்ள இந்த தேசத்தில், பிறக்கும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வக்கற்ற தேசம் என்பது யதார்த்தமாக இருக்கும் போது ஒரு நடிகை பிள்ளை பெற்றுள்ளதைப் பற்றி இவ்வாறு விவரித்து எழுத அசாத்தியமான தடித்தனம் தேவை.
அமிதாப் பச்சன் தனக்குப் பிறந்துள்ள பேரக்குழந்தைக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். சரியான பெயர் ஏதும் கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பமே புதிய வரவான அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடி வருவதாகவும் தனது ரசிகர்களும் பொருத்தமான பெயர்களைச் சிபாரிசு செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பெயர் ‘அ’ வரிசையில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை போல – இந்த செய்தி வெளியான எல்லா ஆங்கில செய்தி ஊடகங்களின் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பெயர்களை பரிந்துரைத்து வருகிறார்கள்.
இந்தப் பெயர் வைப்பு வைபவம் என்பது ஐஸ்வர்யாவுக்கு மட்டும் கிடைத்த பேறு அல்ல. கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு ‘க’ வரிசையில் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது – கருமாதி!
கம்பம் – கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பெருந்திரளான மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து “இதனால் யாருக்கு லாபம்” என்றொரு தலையங்கத்தை தினமணி நேற்று 12.12.2011 எழுதியிருந்தது.
எப்படி இவ்வளவு மக்கள் போராடினார்கள், போலீசாரால் அதை தடுக்க முடியவில்லை என்பதும் தினமணியின ஆதங்கம். முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழக மக்களிடையே இப்படி தன்னெழுச்சியான போராட்டங்கள் வளர்ந்து வருவது குறித்து தினமணி ‘பல’விதங்களில் கவலைப்படுகின்றது.
முதல் கவலை இதை யார் செய்தார்கள் என்பதை விட யாரெல்லாம் செய்திருக்கவில்லை என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று ஜெயா விளம்பரம் கொடுத்திருந்ததை வைத்து இந்த போராட்டத்தை அ.தி.மு.க நடத்தவில்லை என்று நிம்மதி அடைகிறார் தினமணியின் ஆசிரியரான வைத்தி மாமா.
இந்த மக்களை ‘அமைதி’ப்படுத்தச் சென்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களிடம் செருப்படி பட்டதையும், ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும் அவர் படித்திருக்கவில்லை போலும். அடுத்து பிரியாணிக்கும், பாட்டிலுக்கும், காசிற்கும் அழைத்து வரப்படும் அ.தி.மு.க கூட்டம் இப்படி போலீசின் தடியடிக்கு பயப்படாமல் எப்படி போராடியிருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட வைத்தி மாமாவிற்கு தெரியவில்லை.
இதில் ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக எந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் இப்படி மக்களைத் திரட்டி போராடியிருக்க முடியாது என்று உறுதிப்படுத்துகிறது தினமணி. அம்மாவின் விருப்பத்திற்கு மாறாக அ.தி.மு.க தளபதிகள் மட்டுமல்ல, வைத்தி மாமா கூடத்தான் நடந்து கொள்ள மாட்டார் என்றது உலகறிந்த விசயம்தானே?
முதலில் இப்படி மக்கள் லட்சக்கணக்கில் போராட்டத்தை கையிலெடுத்திருப்பது தினமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த போராட்டம் கேரள அரசை எரிச்சலூட்டவும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் பயன்படும் என்பது வைத்தி மாமாவின் கவலை. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட பக்தர்களின் ஆன்மீக அரிப்புதான் தினமணிக்கு முக்கியம் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் பத்திரிகைதானே?
முல்லைப் பெரியாறு விவகாரத்தை பிரச்சினையாக்கி இருமாநில மக்களிடையே முரண்பாட்டை தோற்றுவித்தது கேரள தேசியக் கட்சி அரசியல்வாதிகள்தான். தமிழகத்தின் நியாயமான உரிமையை மறுத்து அரசியல் இலாபத்திற்காக பெருங்கூச்சல் போட்டு மக்களிடையே பயபீதியூட்டி குளிர்காய்வது அவர்கள்தான். காங்கிரசு, சி.பி.எம், பா.ஜ.க முதலான அந்தக் கட்சிகளை கண்டிப்பதற்கு துப்பில்லாத தினமணி இங்கே போராடும் தமிழ் மக்களை கண்டிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?
மாறாக இந்த தேசியக் கட்சிகளுக்கு நல்லதோர் ஒளிவட்டத்தை போட்டு தமிழகத்தில் அவர்களின் குற்றச் செயலை மறைப்பது தினமணிதான். இல்லையென்றால் பா.ஜ.க ராதாகிருஷ்ணனும், காங்கிரசு தலைவர்களும் முல்லைப்பெரியாரில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடும் போது அதற்கு செய்தி என்ற பெயரில் கூச்சமில்லாமல் விளம்பரம் தருவது தினமணிதானே?
அடுத்து இந்தப் பிரச்சினை காரணமாக இருமாநில மக்களும் பாதிக்கப்படுவதாக தினமணி கவலைப்படுகிறது. தமிழகத்திலிருந்து பொருட்கள் வராமல் போகும் போது கேரளாவில் விலைவாசி உயர்ந்துவிடும், அப்படி பொருட்கள் அனுப்பவில்லை என்றால் தமிழக விவசாயிகள் நட்டமடைவார்கள் என்று கண்டுபிடித்து எழுதுகிறது தினமணி.
ஒரு பிரச்சினையில் எது நியாயம், எது அநியாயம் என்று பரிசீலித்து பார்த்து விட்டு, அநீதி இழைத்தவர்கள் தண்டிக்க கோருவதுதான் சரியாக இருக்கும். ஈராக்கில் படையெடுத்து வரும் அமெரிக்காவை எதிர்த்தால் ஈராக்கில் சகஜமான வாழ்வு சீர்குலைந்து விடும், எனவே ஈராக் மக்கள் அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்வது சரி என்று சொன்னால் அது அடிமுட்டாள்தனமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தினமணிக்கும் பொருந்தும்.
கேரளாவுக்கு பொருட்கள் அனுப்பி தமிழக விவசாயிகள் பலனடைகிறார்கள் என்றால் அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முல்லைப்பெரியாறு நீர் அவசியம். அந்த நீர் இல்லாமல், எதிர்காலத்தில் அது வராது எனும் பட்சத்தில் எப்படி உற்பத்த்தி செய்ய முடியும்? ஆக இந்த பிரச்சினை காரணமாக கேரள மக்கள் அடையும் பாதிப்பை விவரித்து அவர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் பீதியை அழிப்பதுதான் ஒரு பத்திரிகையின் கடமையாக இருக்கும். தினமணியின் எக்ஸ்பிரஸ் குழும பத்திரிகைகள் தமது கேரள பதிப்புகளில் அப்படி பிரச்சாரம் செய்யாமல் இங்கு போராடும் தமிழக மக்களை குறிவைப்பது ஏன்?
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியிலேயே வைத்திருப்பதால் அணையின் 4000 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அவர்களின் நலனுக்காக இந்த பிரச்சினையை கேரளா எழுப்புகிறது என்று ஜெயாவின் விளம்பரத்தில் பார்த்து தினமணி கண்டுபிடித்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து கம்பம் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்னரே ஒரு சாதாராண விவசாயியிடம் கேட்டிருந்தால் கூட சொல்லியிருப்பார். இந்த முக்கியமான விசயம், அங்கே விவசாயிகள் அனைவரும் அறிந்திருக்கும் விசயம் கூட தினமணியின் வைத்தி மாமாவிற்கு இவ்வளவு நாட்கள் தெரியவில்லை என்பதும் இந்த இலட்சணத்தில் இவர்களெல்லாம் மக்களுக்கு என்ன எழவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பாதிக்கப்படும் தமிழக, கேரள மக்களைக் காட்டிலும், ” அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று இறுதியாக தனது கவலை எது குறித்து என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறது தினமணி.
அதாவது தமிழகத்தில் உள்ள பிரிவினை சக்திகள்தாம் இதை ஊதிப்பெருக்குகின்றன, இதை வைத்து இந்திய ஒற்றுமையை சீர்குலைய வைப்பதை செய்கின்றன, மக்கள் அதற்கு பலியாகிவிடக்கூடாது என்பதுதான் தினமணி சொல்ல வரும் செய்தியின் பின்னணி.
இந்திய அளவு பிரச்சினை என்றால் இவர்கள் அது ஐ.எஸ்.ஐ சதி என்பார்கள். தமிழகம் தழுவியது என்றால் பிரிவினைவாதம் என்பார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் யார் என்ன சதி செய்தார்கள், என்பதை விட யார் சதி செய்ய முடியும், முல்லைப் பெரியாறு பிரச்சினை சூடு பிடித்தால் யாருக்கெல்லாம் ஆதாயம் என்று பார்த்தால் கண்டுபிடித்து விடலாமே?
கூடன்குளம் பிரச்சினையை திசைதிருப்பி, போராடிக் கொண்டிருக்கும் மக்களை தளர்வுறச் செய்வதற்கு முல்லைப்பெரியாறு பிரச்சினை சூடுபிடித்தால் அது யாருக்கு ஆதாயம்? நிச்சயம் மத்திய அரசுக்குத்தான். மேலும் இந்திய அரசும், அதன் உளவுத்துறைகளும், இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல. புரூலியாவில் ஆயுதங்களை விமானத்திலிருந்து போட்டு சதி செய்ததாகட்டும், வடகிழக்கில் பல்வெறு தேசிய இனங்களுக்கிடையே போட்டி குழுக்களை ஆரம்பித்து மோதவிட்டதாகட்டும் எல்லாம் இந்திய அரசின் யோக்கியதைக்கு சான்று பகருபவை.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் சில ஆயிரம் ஓட்டுக்களுக்காக இல்லாத பீதியை எழுப்பும் கேரள அரசியல்வாதிகள் பிரவாகம் இடைத்தேர்தலுக்காக இந்த பிரச்சினையை கிளப்பி ஆதாயம் அடைவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது. இவற்றினைத் தாண்டி இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்? இந்திய அரசு, கேரள தேசியக் கட்சிகள், ஜெயலலிதா இம்மூவரும்தான் இதில் ஆதாயம் அடைகின்றனர் எனும் போது தினமணி இவர்களை குறிவைத்து எழுதாமல் சும்மா பிரிவினைவாதம் என்று பீதி கிளப்புவது எதனால்?
இறுதியாக ,” நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!” என்று தேசபக்தி ஒற்றுமைக்காக சாமியாடுகிறது தினமணி!
ஒரு தேசிய இனத்தின் உரிமையை மறுப்பதின் மூலம் இந்திய ஒற்றுமை எப்படி ஏற்பட முடியும்? முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அனைத்து சட்ட, நீதிமன்ற ஆணைகளை தமிழகம் ஏற்கும் போது கேரளா மட்டும் ஏற்காமல் சண்டித்தனம் செய்யும் போது தமிழகம் என்ன செய்ய முடியும்? இந்திய ஒன்றியத்தில் இருக்கும் தமிழகத்தை பிடித்து வெளியே தள்ளுவதை இந்திய அரசும், கேரள அரசும் செய்வதற்கு தமிழக மக்கள் என்ன செய்ய முடியும்?
மேலும் இந்தியாவில் பாரத மாதாவை பூசையறை படமாக வழிபடுகிறவர்கள்தான் இந்த இந்திய ஒற்றுமை குறித்து கவலைப்படுகிறார்கள். அதிலும் பாரத மாதா சாய்ந்திருக்கும் சிங்கத்தின் பற்களாக இருந்து சிக்கியிருக்கும் ஆடுகளை பதம் பார்ப்பவர்கள்தான் ஓயாது பாரத ஒற்றுமை குறித்து உபதேசம் செய்கிறார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொல்லப்படும் மக்களையும், போராடும் மக்களை ஒடுக்கியும் இந்திய ஒற்றுமையை காக்க நினைக்கும் இவைதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி நமக்கு தேவையில்லை.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!
கடந்த 11-ம் தேதி முன்மாலை நேரத்தில் கே டி.வியில் பதிவு செய்யப்பட்ட பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மேடையின் முன்னே தெலுங்கு, கன்னட திரையுலகத்தினரோடு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினரும் முகத்தில் ஒட்டவைத்த ஒரு உறைந்து போன போலிச் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். மேடையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றுக்காக கவிஞர் தாமரைக்கு விருது வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலரான கவிஞர் தாமரை படத்தின் இயக்குனர் பற்றி ஏதோ போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
சரியாக அதே நேரத்தில் தமிழக கேரள எல்லையான தேனி -கம்பம் -கூடலூர்- குமுளி பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தமிழக மக்களோ தங்களது உரிமைக்காக அணையை நோக்கி போர்க் கோலத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சி.பி.எம் இறுதியாக ஒளிந்து கொள்ள எத்தனிக்கும் முழக்கம் தான் “கேரளாவுக்கு பாதுகாப்பு – தமிழகத்துக்குத் தண்ணீர்”. தற்போதைய நிலையில் கேரள மக்களின் பாதுகாப்பிற்கு முல்லைப் பெரியாறு அணையால் எந்தவிதமான பங்கமும் இல்லையென்பது பல்வேறு வல்லுனர்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த முழக்கத்தின் உண்மையான நோக்கம் புதிய அணை கட்டுவதை தமிழக மக்கள் ஏற்கச் செய்ய உளவியல் ரீதியில் தயாரிக்கும் நரித்தனமான நோக்கம் தான்.
புதிய அணை கட்டினாலும், தமிழகத்திதற்கு நீர் வராது. மேலும் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது காங்கிரசு, சி.பி.எம் கட்சிகளுக்கு வாழ்வா சாவா எனுமளவுக்கு ஒட்டுப்பொறுக்கும் சண்டையாக நடைபெறுகிறது. ஏற்கனவே நூலிழையில் ஆளும் காங்கிரசு கும்பல் இதில் தோற்றால் ஓரிரு எம்.எல்.ஏக்களை வளைத்து சி.பி.எம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதால் இரு கட்சிகளும் வெறி கொண்ட முறையில் மலையாயள இனவெறியை கட்டவிழ்த்து வருகின்றன. முல்லைப் பெரியாறு எனும் அணை தமிழகத்தின் நீராதாரம் என்பதும் கூட இவர்களைப் பொறுத்தவரை ஓட்டுப் பொறுக்கும் சாக்கடை சண்டைக்கு பயன்படும் பொருள்தான்.
கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே தமிழகத்தில் முரண்பாடு வேண்டாம், சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சிபிஎம் நடத்திக் கொண்டிருக்கும் பித்தலாட்ட நாடகத்திற்கும் பிற தேசியக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் பெரியளவில் வேறுபாடு ஏதுமில்லை. அது காவி, கதர் போட்ட தேசியமென்றால் இது சிவப்பு கட்டிய தேசியம் – வண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்று தான். அது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது தான்.
தமிழனவாத அமைப்புகளோ முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட மேடைகளை சி.பி.எம், சி.பி.ஐ கொலு பொம்மைகளால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய் பேசி பேச்சுமாத்து செய்யும் போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக் கட்சி சந்தர்ப்பவாதிகளை தமிழகத்தில் யாரும் கண்டிக்க முடியாத நிலையில் சாமானிய மக்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு அணையை கைப்பற்ற போர் முரசு கொட்டியிருக்கிறார்கள்.
கடந்த ஓரிரு மாதங்களாகவே கம்பம், தேனி, கூடலூர், குமுளி, ஆகிய தமிழகப் பகுதிகளை ஒட்டிய கேரளப் பகுதிகளிலும், கேரளத்தின் பிற பகுதிகளிலும், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையை ஒட்டிய பகுதிகளிலும் சி.பி.எம், காங்கிரசு பாரதியஜனதா போன்ற ‘தேசிய’ கட்சிகள் முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என்கிற பயபீதியூட்டும் பிரச்சாரங்களையும் தமிழர்களுக்கு எதிரான மலையாள இனவெறிப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
அணை போனால் வாழ்க்கையும் போகும் என்பதை உணர்ந்திருந்த தமிழகப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஏழெட்டு நாட்களாகவே கம்பம் – குமுளி பகுதியில் கேரளா செல்லும் சரக்கு லாரிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே இதில் தலையிடும் தமிழக உள்ளூர் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் தலைவர்கள், எல்லைக்கு அந்தப்புறம் இருக்கும் தங்களுக்குத் தெரிந்த கேரள வியாபாரிகளுக்காகப் பரிந்து பேசி, அவர்களுக்கான வாகனங்களை மட்டுமாவது விடுவிக்க வேண்டுமென்று போராடும் மக்களை அணுகியிருக்கிறார்கள். மக்களோ இந்த நரித்தனத்துக்கு பலியாகாமல் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
செவி வழிச் செய்திகளை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் இருந்து காய்கறிகள் செல்லாததால் குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ ரூ. 150, வெங்காயம் ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 65, மாட்டுக்கறி கிலோ ரூ. 400 முதல் 500 வரை விற்பதாக தெரிகின்றது. இடையில் செங்கோட்டை வழியாக காய்கறிகளை கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்றது. எனினும் அங்கும் தடை விதிக்கும் பட்சத்தில் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் விலைவாசி விண்ணை முட்டுவது உறுதி. முல்லைப் பெரியாறு பிரச்சினையை ஊதிப்பெருக்கி குளிர்காய நினைக்கும் கேரள ஓட்டுப்பொறுக்கிகளால் கேரள மக்கள்தான் துன்பங்களை அடையப் போகிறார்கள். அச்சுதானந்தனுக்கோ, உம்மன் சாண்டிக்கோ ஒரு பாதிப்புமில்லை.
இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் தமிழகப் பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளப் பகுதிக்குள் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் 3000 பேர் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜீப்புகள் சிறைபிடிக்கப்படுகின்றது. வேறு வழியின்றி பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட எல்லா கூலித் தொழிலாளர்களும் கேரள பகுதியிலிருந்து கால் நடையாகவே தமிழகப் பகுதியை நோக்கி பயணமாகிறார்கள்.
இடையே குறுக்கிடும் மலையாளி இனவெறி மற்றும் பொறுக்கி கும்பல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்த அப்பாவிப் பெண் தொழிலாளர்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டது. தமிழர்களை இழிவு படுத்தி கேலி பேசிய அவர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாகக் குறிவைத்திருக்கிறார்கள். அத்தனை அவமானங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு தமிழகப் பகுதிக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை தமிழகத்தில் உள்ள மக்களிடம் சொல்லிக் குமைந்திருக்கிறார்கள்.
அதுவரை கேரள இனவெறியர்களின் இடைவிடாத பிரச்சாரத்தால் தமிழகப் பகுதியிலிருந்த மக்களில் ஒரு சிலர் “அணை தானே கட்டப் போகிறான். கட்டி விட்டுப் போகட்டுமே” என்றே இருந்திருக்கிறார்கள். ஆனால், தங்கள் பெண்களுக்கு நேர்ந்த இந்த அநீதிகளைக் கேட்டதும் ஒட்டுமொத்தமாக எல்லா மக்களின் பொறுமையும் உடைந்து போய் விட்டது. அதே நேரத்தில் கேரள சட்டசபையில் பெரியாறு அணையை உடைப்பதும், புதிய அணை கட்டுவதும் தான் ஒரே தீர்வு என்றும் அதுவரை நீர்மட்டத்தை 120 அடிகளாக குறைத்து விடுவது என்றும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகிறது.
இந்த விஷயங்களைக் கேள்விப்படும் மக்கள் ஆத்திரம் அடைகிறார்கள். இது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வலுவாக இருக்கும் ஒரு அணையை உடைத்து இங்கேயிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்து விட்டு கேரளாவில் மின்சார உற்பத்திக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு வீணாக கடலில் கலக்க விடப்போகிறார்கள் என்பதும், இதற்காக வேலைக்குச் செல்லும் அப்பாவிக் பெண்களைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு எல்லைக்கு அந்தப்புறம் மலையாள இனவெறி தலைவெறித்து ஆடுவதும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆவேசத்தின் உச்சிக்கே தள்ளுகிறது.
இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அணையைக் கைப்பற்றுவது தான் என்கிற முடிவுக்கு மக்கள் வருகிறார்கள். இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ஏற்கனவே ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைக் கொண்டே “முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழு” அமைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
தற்போது பிழைப்புவாதத்திலும் சந்தர்பவாதத்திலும் ஊறித் திளைக்கும் உள்ளூர் அளவிலான ஓட்டுக் பொறுக்கிக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ரவுடிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு மக்களாகவே அணை மீட்புக் குழுக்களை அமைத்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (10.12.2011) ” முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து பெரியாறு அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுருளிப்பட்டி கிராமத்திலிருந்து முதலில் சுமார் 5000 விவசாயிகள் அணிதிரண்டு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி நடை பயணம் ஒன்றைத் துவக்கினர். செல்லும் வழியெங்கும் இருந்த கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள 40,000 ஆயிரத்துக்கும் மேலாகத் திரண்டு விட்ட அந்தக் கூட்டம் 144 தடையுத்தரவைக் கிழித்துக் குப்பைத் தொட்டியிலெறிந்து விட்டு அணையை நோக்கி முன்னேறியது.
இடையில் ஆறு இடங்களில் போலீசு அமைத்திருந்த தடுப்பரண்களைத் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறிய அந்த மக்கள் படை, தம்மை பின்புறத்திலிருந்து போலீசு நெருங்கி விடுவதை தாமதப்படுத்த கற்களாலும் மரங்களாலும் தடுப்புகளை அமைத்தவாறே தொடர்ந்து முன்னேறி அணையிலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை நெருங்கிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டுக் கலைந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (11.12.2011), முந்தைய தினம் கூடியதை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் ஒரு பேரணியை நடத்தினர். சுமார் 70,000க்கும் அதிகமாக கூடிய மக்களில் பெண்கள் கணிசமான அளவு கலந்து கொண்டனர். தங்களைத் தடுக்கக் காத்திருக்கும் போலீசுப் பட்டாளத்திற்கு தகுந்த பதிலை அளிக்க பெண்கள் கையில் கிடைத்த விளக்குமாறு, பிய்ந்த செருப்பு உள்ளிட்ட ‘பேரழிவு’ ஆயுதங்களையும் ஆண்களோ கையில் கிடைத்த கத்தி கடப்பாறை உள்ளிட்ட சாதாரண ஆயுதங்களையும் ஏந்திச் சென்றனர்.
மக்கள் அணையை நெருங்குவதைத் தடுக்க, போலீசு கூடலூருக்கும் லோயர் கேம்புக்கும் இடையில் இருந்த குறுவனூற்றுப் பாலத்தில் தடுப்பரண் அமைத்துள்ளது. அதைத் தகர்த்து மக்கள் முன்னேறிச் சென்றனர். சுமார் 30 கிலோமீட்டர்களுக்கும் மேல் கால் நடையாகவே பேரணியில் நடந்து வந்த மக்கள் எந்தச் சோர்வுமின்றி ஆவேசமாக மத்திய அரசையும் கேரள அரசியல் கட்சிகளையும் எதிர்த்து கோஷங்களை எழுப்பியவாறு முன்னேறிச் சென்றனர்.
அணையை நோக்கி முன்னேறிச் சென்ற மக்களின் பேரணியை குமுளி-கேரள எல்லையில் வைத்து மறித்தது தமிழக டி.ஐ.ஜி தலைமையிலான போலீசு படை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைகள் நியாயமாகத் தீர்க்கப்படும் வரை தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் 13 நெடுஞ்சாலைகளையும் அரசே மூட வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை அரசு உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை தாம் கலைந்து செல்ல முடியாதென்றும் மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அங்கே தனது அடிப்பொடிகளுடன் விஜயம் செய்தார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். போராடும் மக்களிடையே சமரசம் பேசி கலைந்து போகச் செய்து விடலாமென்ற நப்பாசையில் வந்த பன்னீர்செல்வத்துக்கு செருப்பாபிஷேகம் செய்து தகுந்த மரியாதை அளித்தனர் மக்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை போராட்டத்தில் தலையிட அனுமதிக்க மாட்டொமென்று கோஷமிட்ட மக்கள், “ஏழு நாளா போறாடுகிறோம், இப்ப கேரளாக்காரனுக்கு பிரச்சினைன்னு சொன்னதும் எங்களை சமாதானம் செய்ய வந்தியா” என்று அர்ச்சனை செய்து விரட்டியடித்துள்ளனர்.
மக்களின் ஆவேசம் கண்டு பீதியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடிபட்ட கையோடு, குமுளியில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். அமைச்சருக்கு கிடைத்த மரியாதைக் கண்டு கொதித்த தமிழக போலீசு தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தது. இதற்கிடையே கீழே இருக்கும் மக்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு கூடலூர் அருகே அமைச்சரின் வாகன பவனியைத் தடுத்து நிறுத்தினர். “திரும்பிப் போ திரும்பிப் போ கேரளாவுக்கே திரும்பிப் போ” என்று கோஷமிட்டு போர்கோலம் பூண்டு நின்றிருந்த மக்களிடமிருந்து எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோமென்று அமைச்சரும் அடிப்பொடிகளும் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் பிடித்தனர்.
தற்போது கேரளத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சிபிஎம் மட்டுமின்றி மாநில அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் எந்த வேறுபாடுமின்றி ஸ்தாபன ரீதியில் ஒருங்கினைந்து மலையாள இனவெறியை உயர்த்திப் பிடித்து, கேரள மக்களிடையே அச்சமூட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். 200 கிலோ மீட்டர்களுக்கு மனிதச் சங்கிலி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று வரிசையாக அணைக்கும் தமிழர்களுக்கும் எதிராக நடத்தப்படும் பயபீதியூட்டும் பிரச்சாரங்களுக்கு கணிசமான அளவு கேரள மக்கள்ஆட்பட்டுள்ளனர்.
தமிழகத்திலோ, ‘தேசியக்’ கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசு, பாரதிய ஜனதா மற்றும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள் வெண்டைக்காயை வெளக்கெண்ணையில் கழுவிக் கொட்டுவது போல் வழவழா கொழகொழாவென்று மென்று முழுங்குகிறார்கள். அணை பாதுகாப்பானது என்பதை முன்னிறுத்தி தமது கேரளக் கூட்டாளிகளிடையே பேச துப்பில்லாத இவர்கள் தமிழர்களிடம் ஒருமுகமும் மலையாளிகளிடம் ஒருமுகமும் காட்டி இரண்டு பக்கமும் பொறுக்கித் தின்ன வாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
கேரள மக்களின் வயிற்றுப்பாடும் வாழ்க்கையும் தமிழகத்தின் விவசாய விளைச்சலில் தான் அடங்கியிருக்கிறது என்பதை முன்வைத்து கேரள மக்களின் தேவையற்ற அச்சத்தை விளக்குவதை விடுத்து இனவெறி அரசியலில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் முங்கி முத்தெடுக்கப் பார்க்கிறார்கள். இருந்தாலும், இப்போதைக்கு அதில் முன்னணியில் இருப்பது போலி கம்யூனிஸ்டுகள் தாம்.
இந்த சந்தர்ப்பவாத முகமூடிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகளோ தெளிவாக இவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். தங்கள் சொந்த அனுபத்தினூடாகவே துரோகிகளை இனங்கண்டு விலக்கியுள்ள விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
கூடன்குளம் போராட்டத்தை தணிப்பதற்க்காக நாடகமாடிய பாசிச ஜெயா அதே பாணியில் முல்லைப் பெரியாறு போராட்டத்தை ஆப்பு வைப்பதற்க்காக, வரும் 15.12.2011 அன்று சட்டசபையைக் கூட்டி தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று தீர்மானம் போட இருக்கிறார். மூவர் தூக்கிற்கும் இப்படித்தான் தீர்மானம் போட்டு பின்னர் அதை அவரே காறித்துப்பினார் என்பது நினைவு கூறத்தக்கது. ஐந்து காசுக்கு கூட மதிப்பில்லாத இந்த தீர்மானங்களால் எந்த பயனுமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயாவின் நோக்கம் போராடும் மக்களின் கோபத்தை தணித்து நீர்த்து போகச் செய்வதுதான். அதிலும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடிவாங்கிய பிறகு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது.
ஆனால் மக்கள் போராட்டம் அத்தனை சுலபத்தில் தணியப் போவதில்லை. இன்றும் 12.12.2011 – கூடலூர் பகுதியில் மக்கள் திரண்டு செல்லப்போகிறார்கள். தற்போது இந்த போராட்டத்தில் சேர்ந்து கொள்ளும் மக்களின் புவிப்பரப்பு அதிகரித்து வருகின்றது. இன்றைய போராட்டத்தில் சிவகங்கையிலிருந்தும் விவசாயிகள் வரப்போவதாக எமது தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால் இருநாள் அனுபவத்தை பார்த்து போலீசு இன்றுமுதல் வன்முறை நடவடிக்கையையும், முன்னணியாளர்களை கைது செய்து சிறையிலடைக்கும் என்றும் தெரிகிறது.
அப்படி தடியடி அல்லது துப்பாக்கி சூடு மூலம் கூட்டத்தை கலைத்து விடலாமென்று இருமாநில போலீசு நினைத்தாலும் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் சில பல இலட்சங்களுக்கு மாறும் போது யார் என்ன செய்ய முடியும்? அரசுகளும், ஓட்டுக்கட்சிகளும், நீதிமன்றங்களும் செயலற்று போகும் போது மக்களுக்கான உரிமையை அவர்களே மீட்டெடுப்பார்கள். அதற்கு முன்னறிவுப்புதான் இந்த அணை காக்கும் போர்!
‘எங்க அம்மா உருளைக்கிழங்கு-முட்டை கறி செஞ்சிருந்தாங்க, எனக்கு உருளைக் கிழங்கு முட்டை கறி பிடிக்காது. சாப்பிடாமல் என் பிரெண்ட் அலி வீட்டுக்குப் போனேன். “ஏ ஹே, ஏ ஹே, எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு-முட்டே, ஏ ஹே, ஏ ஹே எனக்குப் பிடிக்காது உருளைக்கிழங்கு-முட்டே” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட அலி, அதை ஒரு பாடலாக எடுக்கலாம் என்று சொன்னான், அப்படிப் பிறந்ததுதான் இந்த பாட்டு’
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த தன்யால் மாலிக் என்ற பொருளாதாரத் துறை ஊழியர் எழுதிய பாடல் வரிகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அலி அப்தாப் பாட, 15 வயது ஹம்சா மாலிக் கிடார் இசைக்க உருவான ‘மேரி மா நே பகாயி ஆலூ அண்டே’ என்ற பாடல் பாகிஸ்தானைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ‘மானங்கெட்ட படை’ என்று பெயர் சூட்டிக் கொண்ட இவர்கள் பாகிஸ்தான் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்ற கொடி பிடிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் படைகளுக்கு மத்தியில் மானமின்மையைத் தூக்கிப் பிடிக்க யாராவது வேண்டுமே என்று ‘மானங்கெட்ட படை’ இசைக் குழுவை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.
நாளிதழ்களில் முதல் பக்க செய்திகள் வெளியிடவும், தொலைக்காட்சிகளில் பேச வைக்கவும், சோனி மியூசிக் நிறுவனம் போன்றவைகள் பிண்ணனியில் இல்லாமலேயே, இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானிய அரசியலை புரிந்து கொண்டவர்களிடையேயும் புகழடைந்திருக்கிறது. 2 மாதங்களுக்குள் யூடியூப் தளத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்க்கப்பட்டிருக்கிறது.
பெரிய இடத்துப் பையன்கள் போல பள்ளிச் சீருடை அணிந்த மூன்று இளைஞர்கள், தமக்குப் பிடிக்காத சாப்பாட்டு டப்பாக்களை பழித்து பாடுவதாக வீடியோ. ‘பாகிஸ்தானின் அரசியல், மத, நீதி தலைவர்கள் சமைத்துப் போடும் உணவு தங்களுக்கு போரடித்துப் போய் விட்டது, புதிதாக ஏதாவது வேண்டும்’ என்று பாகிஸ்தானின் புனித பசுக்களை இரக்கமில்லாமல் தாக்கி எழுதப்பட்ட பாடல் வரிகள். பாடல் வரிகளுக்கு பஞ்ச் சேர்க்க இடையிடையே அரசியல் முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள்.
பஞ்சாப் கவர்னராக இருந்த முற்போக்கு அரசியல்வாதி சல்மான் தசீரைக் கொன்ற கொலையாளி மும்தாஜ் கத்ரியையும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பையும் ஹீரோக்களாக கொண்டாடும் பாகிஸ்தான் சமூகம் 1979-ல் இயற்பியல் நோபல் பரிசு வென்ற அப்துஸ் சலாமை மறந்து விட்டதை நையாண்டி செய்கிறார்கள் இந்த மாணவர்கள்.
நவாப் ஷரீப் பை பை – பாபா கயானி நோ லைக் யூ (இராணுவத் தளபதிக்குப் பிடிக்காத அரசியல்வாதிக்கு பை பை தான்)
தெஹ்ரீக்-இ-இன்சாப்- ஒப்பனை போட்ட ஜமாத்-எ-இஸ்லாமி (இம்ரான் கானின் புதிய அரசியல் கட்சி, ஜமாத்-எ-இஸ்லாமியின் முகமூடிதான்)
உனது பணம் + எனது பாக்கெட் = நாம் இன்னும் விரோதிகள்தான் (அமெரிக்க பணம் + பாகிஸ்தான் பாக்கெட்)
என்று இந்நாளைய முன்னாளைய பாகிஸ்தானிய அமைப்பின் தலைவர்களை வாருகின்றன பாடல் வரிகளுக்கிடையே அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அட்டைகள்.
‘இந்த பாடல் பலமாக அடிக்கும், வலிக்கும் படி அடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். வீடியோவை வெளியிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு வரை என்ன விளைவுகள் ஏற்படும், எதிர்பார்ப்புகள், இத்தகைய ரிஸ்க் தேவைதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்’.
மத, அரசியல் அமைப்புகளை விமர்சனம் செய்யும் யாரையும் யூதர்களின் சதி என்று சொல்லியோ, அல்லது ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலமோ வேலையை முடித்து விடும் பாகிஸ்தானிய கலாச்சாரத்துக்கு இடியாக ‘இது ஒரு யூதர்களின் சதி’ என்றும் ‘எங்கள் தலைக்குள் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் இதை லைக் செய்யுங்கள்’ என்றும் காட்டுகிறார்கள்.
இசுலாமியக் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே அதே கேலி செய்யும் தைரியம் பாரட்டத்தக்கது. இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்தப்பாட்டிற்காக தங்களது தலையில் குண்டு பாயும் என்ற யதார்த்தத்தைக் கூட கேலி செய்யும் இந்த இளைஞர்களது நெஞ்சுரம் போற்றத்தக்கது. பாடலை முடிந்த அளவு மொழிபெயர்த்திருக்கிறோம். யூடியூபில் ஆங்கில வரிகளுடன் நீங்கள் இதை ரசிக்கலாம். பிடித்திருந்தால் நண்பர்களிடமும் பரப்பலாம்.
பாடல் வரிகள்:
எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு இஷ்டம் இல்ல உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு சாப்பிட இஷ்டம் ரொட்டியோடு சிக்கன்
பருப்பு விலையை விட விலை குறைஞ்சது சிக்கன்
சொட்டைங்க தொங்குறாங்க பட்டங்களைப் பிடித்து
தலைமை நீதிபதிதான் வெளிச்சம் – கான் போட்ட இருட்டுக்கு
பதவி நீட்டித்தலுக்கான களேபரம்
தலைமை நீதிபதி ஆனாரு கம்முன்னு
கத்ரிக்கு ராஜா போல உபச்சாரம்
கசாப்புக்கு ஹீரோ போல பிரச்சாரம்
முல்லா முக்காடு போட்டு எஸ்கேப்பு
மறந்து போன கதை அப்துஸ் சலாம்
சர்க்கரை கறுப்பு சந்தையில் விற்பனை
அரசியல் கிளிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்
பிளாக்வாட்டர் ஏன் டென்சன்
தாக்குதல்கள் உள்ளே இருந்தே நடக்குது
மாவை எவ்வளவு விரிச்சாலும் சட்டி சின்னதாத்தான் இருக்கு
கொள்ளையனுங்க பார்த்துப் பார்த்து கொல்றான்
போலீசுக்கு யாரு வைப்பாங்க ஆப்பு
“சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் இத்தனை காலமாக இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டி ஏஜென்டுகளாலும் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் பிழைக்க வேண்டுமானால் அது அவர்களை வால்மார்ட்டின் கையில் ஒப்படைத்தால் மட்டுமே நடக்கும்” – படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப்புத்தியில் இவ்வாறான கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்களும் பிற அல்லக்கைகளும் வலிந்து திணிக்கும் கருத்து இது.
வால்மார்ட் எத்தனை நாடுகளில் விவசாயிகளைக் ‘காப்பாற்றி’ இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இங்கே விவசாயத்தின் அழிவுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய விவசாயத்தின் அழிவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது பசுமைப் புரட்சிக்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்ட வரலாறு கொண்டது. ‘பசுமைப் புரட்சியின்’ விளைவாய் மண்ணில் கொட்டப்பட்ட லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களால் மண்ணே மலடாகிப் போன நிலையில் ஓரளவுக்காவது மகசூல் பார்க்க வேண்டுமானால் விலை கூடிய வீரிய ரசாயன உரங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளர்.
மேலும், பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை / நாற்று ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கும் மட்டும் அளிக்கப்படுகிறது. பாசனப் பராமரிப்பு உள்ளிட்ட விவசாய உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது என்பதை ஒரு கொள்கையாகவே செயல்படுத்துகிறார்கள்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் சீறிப்பாய்வதாக பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இது படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காங்கிரசு போய் பாரதிய ஜனதா வந்தாலும் சரி, மூன்றாம் அணி ஆட்சியமைத்தாலும் சரி, நாட்டை அந்நியர்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மட்டும் இவர்களுக்குள் எந்த கொள்கை வேறுபாடும் இருந்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. 80களின் இறுதியில் உணவு தானியக் கொள்முதலில் 45% அரசு செய்தது – இன்றோ அது 75% தனியார்களின் கையில் இருக்கிறது.
2002-ம் ஆண்டு நாட்டில் கடும் வறட்சியும் பஞ்சமும் நிலவிய காலகட்டத்தில் அரசு தனது கையிருப்பில் இருந்த 2.2 கோடி டன் தரமான கோதுமையை ஐரோப்பிய பன்றிகளுக்கு ( ஆம் பன்றிகளுக்குத் தான்) ஏற்றுமதி செய்தது. அதே நேரம் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தரமற்ற கோதுமையை இறக்குமதி செய்தது பஞ்சாப் அரசு. அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘தேசபகதர்’ வாஜ்பாயின் தலைமையிலான பாரதிய ஜனதா.
ஒருபுறம் விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அப்படியே அந்நிய தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகள் கையிலும் ஒப்படைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதனடிப்படையில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்குகிறார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நாம் பத்திரிகைகளில் வாசித்திருப்போம்.
இவர்களின் நோக்கம் விவசாயத்தை வாழ வைப்பதல்ல – அதை ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது தான். இதில் ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சி, மான்சாண்டோ, வால்மார்ட் என்று இவர்களுக்கும் தேச பேதமெல்லாம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்பாம் என்கிற அமைப்பு பல்வேறு நாடுகளில் செய்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற திமிங்கலங்களின் வருகை விவசாயிகளை கடுமையாக பாதித்திருப்பதை வெளிக் கொணர்ந்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க ஆப்பிள்களின் ஏற்றுமதிக்கான கொள்முதல் விலை 33 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளத்து. அமெரிக்காவிலேயே விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் விலை 25 சதவீதமாக குறைந்துள்ள அதே நேரம் நுகர்வோருக்கான விலை 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் விவசாய விளைபொருட்களின் மொத்த சந்தையில் 40 சதவீத அளவுக்கு நான்கு அல்லது ஐந்து பன்னாட்டுக் கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்துகின்றன.
ஆரம்பத்தில் நல்ல விலை கொடுத்து பொருட்கள் கொள்முதல் செய்யும் இவர்கள், தங்களது உள்ளூர் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின் விலையை அடாவடியாகக் குறைப்பது, பணத்தை இழுத்தடித்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். உதாரணமாக, ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில் ஒப்பந்த விவசாயத்தில் விளைவித்த ஆப்பிள்கள், 65மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திய கார்பரேட் கம்பெனி ஒன்று அந்த அளவுக்குக் கீழ் இருக்கும் ஆப்பிள்கள் தரம் குறைந்தது என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
ஆக, இடைத்தரகர்களை ஒழிப்பதல்ல இவர்கள் நோக்கம். ஊருக்குப் பத்து கமிசன் மண்டி ஏஜென்டுகள் என்கிற நிலையை ஒழித்து நாட்டுக்கே நாலு பிரம்மாண்டமான கமிஷன் மண்டிகளை உருவாக்குவது தான் இவர்கள் நோக்கம். இந்த பெரிய சந்தை இன்றைய நிலையில் உள்ளூர் அளவில் பல்வேறு சிறிய போட்டியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை ரிலையன்ஸிடமும் வால்மார்ட்டிடமும் ஒப்படைத்து விட்டால் விவசாயிகளுக்கு வேறு போக்கிடமே இல்லாமல் போய் விடும். இடைத்தரகர்களை ஒழிப்பதே நோக்கம் என்று நீட்டி முழங்கும் இவர்களின் உண்மையான திட்டம் அதற்கு நேர் எதிரானது – இருக்கும் சாதா ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு சூப்பர் ஏஜெண்டுகளை வளர்ப்பது தான் அது.
விலைவாசி குறையும் என்கிற ஏமாற்று – விலைவாசி உயர யார் காரணம்?
“இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் விலைவாசி குறைந்து விடும். இவர்களால் தான் விலைவாசியே உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் சில்லறை வர்த்தகமே முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை முறைப்படுத்துவதன் மூலம் விலைவாசியை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும்” – இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.
இப்போதாவது தனது பொருளை சந்தைக்கு எடுத்து வரும் விவசாயிக்கு பத்து கமிஷன் மண்டிகளில் நல்ல விலை கிடைக்கும் மண்டியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டுமென்றால் அரசே தலையிட்டு குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கலாமே தவிர அந்தப் பொறுப்பிலிருந்து கைகழுவி விட்டு இருக்கும் கமிஷன் மண்டிகளை ஒழித்துக்கட்டி ரிலையன்ஸையும் வால்மார்ட்டையும் அந்த இடத்தில் அமர வைப்பதல்ல தீர்வு.
இது ஒருபக்கமிருக்க, விலைவாசி உயர்வுக்கு கமிஷன் மண்டிகள் மட்டும் தான் காரணம் என்று சொல்வதே பச்சை அயோக்கியத்தனம். விவசாயத்தை ஒரு முனையில் புறக்கணிக்கும் அதே சமயத்தில், உணவு தானியத்தை ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் திறந்து விட்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்தவியலாலாத பங்குச்சந்தை சூதாட்டத்தில் மக்களின் அடிப்படை உணவு ஆதாரம் சிக்குண்டு கிடக்கிறது.
உதாரணமாக, இன்னும் விளைந்திராத ஒரு குவிண்டால் நெல்லுக்கு விலை பத்தாயிரம் என்று விலை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனி, விளையாத அந்த நெல்லுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை பங்குச் சந்தையில் ஏலம் விடுகிறார். பல கைகள் மாறிச் சுழலும் இந்தப் பத்திரங்கள் ஓவ்வொரு சுழற்சியிலும் அபரிமிதமாக விலை கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் அதன் சந்தை விலை பத்து லட்சம் என்று வந்து நிற்கும் போது விளைந்த நெல்லை முன்பு போடப்பட்ட ஒப்பந்த விலையான பத்தாயிரத்துக்கே பறித்துச் செல்கிறது பன்னாட்டுக் கம்பெனி. விளைவித்தவனுக்கே விளைபொருள் மேல் உரிமையில்லை.
இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடிகளுக்கும் அதிகம். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்து வைக்க உணவுக் கிடங்குகள் கட்ட நிதியில்லை என்று புலம்பும் அதே அரசு தான், இந்த பன்னாட்டுப் பதுக்கல்காரர்கள் கட்டும் தானியக் கிடங்குகளுக்கு 50 சதவீத மானியம் வழங்குகிறது.
விலைவாசி உயர்வு என்பதை ‘இடைத்தரகர்கள்’ என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால், பத்ரி போன்ற ‘மெத்தப் படித்தவர்களே’ கூட அவ்வாறு தான் சிந்திக்கிறார்கள். அவர்களின் மண்டையோட்டுக்குள் நிறம்பி வழியும் ஏகாதிபத்திய அடிமைப் புத்தி அதற்கு மேல் அவர்களின் பார்வை செல்லாமல் தடுக்கிறது. ஒருபக்கம் பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப்பின்னலை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்வதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை விவாதத்திற்குட்படுத்தாமல் மறைப்பதும் மாபெரும் மோசடி. ஆனால், இது தான் தமிழில் வலைபதியும் பார்த்தசாரதிகளின் யோக்கியதை.
எட்டப்பன் காலத்தில் மட்டும் கூகிளும் பிளாகரும் இருந்திருந்தால் தனது ஏகாதிபத்திய அடிமைச் சிந்தனையை பத்ரி, நாராயணன், வவ்வால் போன்றோரை விட சிறப்பாக நியாயப்படுத்தியிருப்பான். அப்படித்தான் இவர்கள் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.
வால்மார்ட்டால் விலைவாசி உயர்வு – பிற நாடுகளின் அனுபவம்
வால்மார்ட்டின் பிரம்மாண்ட மூலதன பலமும் உலகளாவிய வலைப்பின்னலும் தொழில் துவங்கிய சில காலத்துக்கு விலையைக் குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இங்கே வரும் நட்டத்தை வேறெங்கோ கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஈடுகட்டிக் கொள்ள முடிகிறது. இந்த ஆரம்பகட்ட விலைக்குறைப்பின் மூலம் உள்ளூர் அளவிலான போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின், அவன் வைத்ததே விலை. உற்பத்தியாளர்களிடம் அடாவடியாக விலையைக் குறைத்து வாங்கும் வால்மார்ட், நுகர்வோருக்கு அதிகவிலையில் விற்பது அவன் ஏற்கனவே கால்நாட்டியிருக்கும் சந்தைகளின் அனுபவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம்.
தாய்லாந்தில் பன்னாட்டு சூப்பர் ஸ்டோர்களின் வருகைக்குப் பின் நுகர்வுப் பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினாவில் காய்கறிகளின் விலை 14 சதவீதம் அதிகம். மெக்ஸிகோவில் சாதாரண கடைகளை விட சூப்ப்ர் ஸ்டோர்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் 2002 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 10 சதவீத அளவுக்கு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது தெரியவந்தது.
நாம் எதை நுகர்வது என்பதை யார் தீர்மானிப்பது?
வால்மார்ட் தனது விற்பனைப் பொருட்களை கொள்முதல் செய்யும் விதம் பற்றி “மலிவு விலையில் மரணம்” கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களை வரவழைத்து தலைகீழ் ஏலம் நடத்தும் வால்மார்ட், அதில் குறைந்த விலைக்கு தனது உற்பத்திப் பொருட்களை விற்க முன்வரும் நிறுவனத்திடமிருந்தே கொள்முதல் செய்கிறது. உதாரணமாக, துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளில் இன்று இருக்கும் பல்வேறு பிராண்டுகளான அரசன், பொன்வண்டு, மகாராஜா போன்றவைகள் சந்தையில் காலம் தள்ள முடியாது. பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளான ரின், சர்ப் போன்றவைகளே வால்மார்ட் எதிர்பார்க்கும் அளவுக்கு உற்பத்தி செய்து குவித்து தாக்குப் பிடிக்க முடியும்.
உணவுப் பொருட்கள் என்று பார்த்தால், ஏற்கனவே இந்தியாவில் ஐ.டி.சி நிறுவனம் தானியக் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் “ஆசீர்வாத் ஆட்டா’ நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல மாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன. தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்கு பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை உற்பத்தி செய்யும் படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.
வால்மார்ட்டுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. அதை ஆதரிப்பவர்களோ “ஆஹா சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு நம்ம ஊர் கிழங்குகள் போகப் போகிறது – விவசாயம் வாழப் போகிறது” என்று குதூகலிக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை. பாரம்பரியமாக விளைவிக்கப்படும் சுதேசி ரகங்கள் என்பது அந்தந்த மண்ணின் தன்மைக்கு உகந்தது. அமெரிக்காவில் உருளை வறுவல் சந்தைக்கான உருளைக் கிழங்கு என்பது அந்த சந்தைக்கேற்ற ரகமாகத் தான் இருக்கும். அந்நிய ரகங்களை நமது மண்ணில் விளைவிக்க வேண்டுமென்றால், நிறைய ரசாயனங்களைக் கொட்டியாக வேண்டும். ஏற்கனவே உரங்களால் செத்துப்போன நிலங்களின் நிலை இன்னும் மோசமாகும்.
மட்டுமல்லாமல், இப்படி அந்நிய ரகங்களுக்கான சாகுபடிக்கு விதையில் இருந்து பூச்சி மருந்து, தொழில்நுட்பம் என்று சகல வகையிலும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். தற்போது, ஒரு பகுதியளவுக்காவது தற்சார்புடன் இருக்கும் விவசாயம் முற்றாக பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி இருந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளுவதாகவே இது அமையும். ஐ.டி.சி ஏற்கனவே கணிசமான அளவுக்கு சந்தையைக் கைபற்றியிருக்கும் நிலையில், முழுமையாக அந்தச் சந்தை அவன் கைகளில் விழுந்தால், நமக்கு நாம் விரும்பிய ரக கோதுமையை உண்ணும் வாய்ப்பு கிடைக்குமா?
வால்மார்ட் வந்தால் சிறு உற்பத்தியாளர்கள் பிழைப்பார்கள் என்கிற புளுகு
வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு மளிகைக்கடைகள் தமது சங்கிலித் தொடர் சூப்பர்மார்ட்டுக்கான கொள்முதலில் 30 சதவீதத்தை உலகெங்கும் உள்ள சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கிக் கொள்வார்கள் என்றும், அப்படி நெல்லுக்கு இறைத்தது புல்லுக்கும் கொஞ்சம் புசியுமாதலால் நமது அம்மி அப்பள கம்பேனியிலிருந்து பூ மார்க் பீடி கம்பேனி வரை பிழைத்துக் கொள்வார்கள் என்றும் இதன் மூலமும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் என அதன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
சிறு உற்பத்தியாளர்கள் ஒருபுறம் இருக்கட்டும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ப்ராக்டர் & காம்பிள் நிறுவனமே வால்மார்ட்டின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டுமென்றும், அதன் கொள்முதல் கொள்கையின் விளைவால் தங்களால் தொழில் நடத்த முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளது. வால்மார்ட்டுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் முதல் பத்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து ஓட்டாண்டிகளாகியுள்ளன.
2004-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க பொம்மைச் சந்தையில் தனக்கு அடுத்த படியாக இருந்த டாய்ஸ் ‘ஆர்’ யூ நிறுவனத்தோடு விலைக்குறைப்புப் போட்டியில் இறங்கிய வால்மார்ட், அந்த நிறுவனம் விற்ற அதே பொம்மைகளை 10 டாலர் குறைவான விலையில் விற்றது. இதன் மூலம் டாய்ஸ் ஆர் யு நிறுவனத்தின் 146 கடைகள் ஜனவரி 2004-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டன. இதில் 3,800 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின் அமெரிக்க பொம்மைச் சந்தையில் 30 சதவீதத்துக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வால்மார்ட், ஏற்கனவே விலைக்குறைப்பில் விட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டது.
இதே போல் டெக்ஸ்டைல் சந்தையை கபளீகரம் செய்த வால்மார்ட், கரோலினா மில்ஸ், லவ்வபிள் கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி தான் கால்பதித்த நாடுகளிலெல்லாம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒழித்துக் கட்டியிருக்கிறது வால்மார்ட். பிற நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் விஷக் கிருமி. ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்றவை மெல்லக் கொல்லும் ஆர்செனிக் என்றால் வால்மார்ட் உடனே வேலையைக் காட்டும் சயனைட்.
இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளை இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.
சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் பல்வேறு வகைகளில் உள்நுழையும் இந்த மூலதனத்தின் தாக்குதலையும் அதையே செயல்திட்டமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதே நாட்டின் இறையாண்மையைக் காக்க நாட்டுப் பற்று மிக்கவர்கள் உடனே செய்ய வேண்டிய கடமை.
அம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா?
வேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே? பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே! கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க! அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக!
அப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ! சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி!
ஏலேய் மளிகை லிஸ்ட் போட்டாலும், மங்காத்தா டிக்கெட்டு புக் பண்ணினாலும் புள்ளையார் சுளி போட்டு ஆரம்பிக்கிறதுதான் நம்ம மரபுலே! அதுமேறி இலக்கியக் கட்டுரைன்னா நம்ம குருஜி இல்லாமலாடே! மொகரம் பண்டிகைக்கு ஆபிசுல லீவு, அம்பத்தூர்ல இருந்து வர பேஜாரா இருக்கும்ணு குருஜி இந்த பங்ஷனுக்கு வரலேன்னு சொன்னதுமே நமக்கு கொஞ்சம் டல்லுதான். என்ன இருந்தாலும் பதிவுலகுல சாநிய ராக்ஸோ ராக்குஸூன்னு எழுதி நம்ம பயலுகள பத்தி விட்டவராச்சே! அதுவும் போன தபா குஷ்பு வரலேன்னு துக்கத்துல இருந்தவருகிட்ட, இந்த வாட்டி ஜோதிர்மயி வருவாக வாங்கப்புன்னு துக்கம் விசாரிச்சாரு நம்ம ராம்ஜி யாஹூ.
ராம்ஜி யாருடே புதுசுன்னு வாயப்பெளக்காதீக. அவுரு அதுக்கு ஒர்த்தான ஆளு! கடவுள்னா தூணுல, துரும்புல, இருப்புல, மப்புல இருப்பான்ங்குற மேறி, இலக்கியம்னா அது ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல்லயும் இருக்கும், ஜெயமோகனது தண்டியான விஷ்ணுபுரத்துலயும் இருக்கும்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டு அந்த அதிர்ச்சியில சுயமோகத்துக்கு கிடைச்ச அடியில ஜெயமோகானந்தா பின்னூட்ட பெட்டியை தூக்கிட்டாருல்ல! இவருதாம்லே பதிவுலக பின்னூட்ட பில்லா!
சீரோ டிகிரியையே கொஞ்சம், நஞ்சமாக மாத்தி மாத்தி தேகம், எக்சைல்னு காத்தால வெடிக்கிற அடிவயத்து கேசு மாதிரி ரிலீஸ் பண்றாரு சாநின்னு குருஜிக்கு தெரிஞ்சாலும் அதே நாத்தத்தை மொகத்தை சிரிச்சாப்புல வச்சிகிட்டு சுவாரசியமா புடிக்கிறாரு. அந்த பீலிங்லதானோ என்னவோ மாலையோரத்து மப்புக்கு குட்டி உருளைக்கிழங்கு ரோஸ்ட், பால்கனி கட்டிங்குல தேன்கனி மூன் ரெய்சிங்கினு எழுதி இம்சிக்கிறாரு? பெறவு நம்மளோட சேந்தா வாழ்க்கையில இருந்து இலக்கியத்தை கண்டுபிடிக்கலாம், சாநியோட சேந்தா அது கட்டிங்கை வுட்டு நகறாது! விடுலே, என்ன இருந்தாலும் மொகரத்துக்கு ஆபிசை லீவுன்னு வுட்டுறுக்காறு, அந்த பாய்மாபிமானாத்துக்கு மட்டும் ஒரு நன்னிய சொல்லிக்கினு மேட்டருக்கு வருவோம்.
குருஜியும் வரல, ராம்ஜியும் வரலயேன்னு போகலாமானு ரோசிச்சிப்ப நம்ம கூட்டுக்காரன், சும்மா டைம் பாசுக்கு போலாம்டேன்னு இழுத்தான். சரி மக்கான்னு சொல்லி வெச்சேன்.
அடியில வெட்டாகுதான்னு பொறுக்கி சாநி சாட் ஸ்கேண்டல் வெளியான பிறகு நடக்குற புக் பங்ஷன்ங்குறதுனால மட்டும் நான் அங்க போகல! சாநியோட ஜால்ராக் கூட்டம் எத்தன பேரு வருவானுக, அதுல எத்தன பேரு வூட்டுக்காரிகளை கூட்டிட்டு வருவானுக, அதுல எத்தனை பேரு வூட்டம்மாக்கள சாநிகிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணுவானுகன்னு ஒரு கணக்கு போடலாம்னு பாத்தா, ஏலே சொன்னா டெரரா இருக்கும், எல்லா பயலும் உசார்டே, ஒருத்தனும் கூட்டிட்டு வரல, ஒன்னு இரண்டுன்னு கூட்டிட்டு வந்தவனுகளும் ஏதோ சில ஐயோ பாவம் கேசு! அதுவும் அந்த சாட் மேட்டரு தெரியாத அப்பாவி பயலுவ!
ஆறு மணி பங்சன்னு சொன்னாப்லயா.. எதுக்கும் ஒரு அஞ்சரைக்கே போலாமேன்னு போய் பாத்தா சுத்துவட்டாரத்துல ஒரு குஞ்சு குளுவானக் கூட காணோம். என்னடா இது காமராசருன்னு சொன்னாப்லயா ராமராசருன்னு சொன்னாப்லயான்னு ஒரே சம்சயமாப் போச்சுங்க.
உள்ளுக்குள்ள போனா மண்டவத்துக்குள்ள நொழஞ்சதுமே லெப்ட் சைடுல நம்ம கெழக்கு கம்பேனிக்காரங்க அந்த புக்கை லோடு லோடா எறக்கி அடுக்கி வச்சிருந்தாங்க. எண்ணிப்பாக்கல. எப்புடியும் ஒரு ஆயிரங்காப்பி அடிச்சிருப்பாகன்னு தெரிஞ்சுது. அல்லாத்தையும் வுத்துப்புடனும்னு ஒரு லச்சிய வெறிய கிழக்கு தம்பிமாருங்கிட்ட பாத்தேணுங்க! அடோ சாமீ… நம்மூர்ல இத்தினி படிப்பாளிங்களான்னு பக்குன்னு ஆயிருச்சு. அனேகமா இன்னிக்கு டாஸ்மாக்குல யாவாரம் படுத்திருக்கும்னு சாநிய பத்தி நெனச்சிட்டே மண்டவத்துக் கதவத் தொறந்தா திரும்பவும் பக்குன்னு ஆயிருச்சு. பின்ன அத்தினி பெரிய மண்டவத்துக்குள்ள எண்ணி பத்தே பேருன்னா எப்புடி இருக்கும்? எனக்கென்னவோ பேய் பங்களாவுக்குள்ள பூந்துட்ட மாதிரியே இருந்துச்சு.
எங்கள மேறி பந்திக்கு முந்துன கேசுகளை குஜாலாக்குற படி கொலைவெறி, இச்சு இச்சு குத்துப்பாட்டைப் போட்டு தாளிச்சாணுக! இந்தபடிக்கு போனா அடுத்த தபா ரிக்கார்டு டான்ஸ் நிச்சயம். அதுக்கு கூட்டம் வருங்குறதும் சத்தியம். இதெல்லாம் யூத்தா காட்டிக்கிறதுக்காவாம்! ஏலே போக்கத்தனுவுகளா அதுல என்ன யூத்து, இன்னம் பேபி யூத்துக்கு போகணும்மான டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் போடலாம்லே, போட்டா அல்லாரும் பால்குடிக்கிற பாப்பான்னு காட்டலாம்லா? இந்த டைமுல பதிவுலகத்தின் யூத் கேபிள் சங்கர் உள்ளேன் ஐயான்னு ஆஜர் வைச்சாரு. இந்த யூத் அக்கப்போருங்கள பாத்தா கே.பி.சுந்தராம்பாள் மேறி நாமளும் கிழடுதட்டி வரம் வாங்கிட்டு போறது மேல்!
மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே.
பங்சன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஜிகு ஜிகு சட்டையில் சாநி அங்கன இங்கன நடந்து, போஸ் கொடுத்து, கை குலுக்கி, சிரிச்சிகிணு உலா வந்தாரு. இதைப்பாத்தா தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனை அம்மாம் பெரிய கோவிலுல நின்னுக்கிணு வர பக்தமாருங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் கொடுத்து தும்பிக்கையில தட்சிணையை அமுக்கின மாறி இருந்துச்சு. அம்மாம் பெரிய ஹாலுல கால்வாசி கூட ரொம்பாத கூட்டத்துல என்னா ஒரு எஃபக்ட்டு!
இதுல சாநி சட்டைக் கலருக்கு செமத்தியா டஃப் கொடுக்குற மேரி மச்சி சார் கண்ணைப்பறிக்கிற பச்சை டீ சர்ட்டுல சும்மா அந்தக்காலத்து ராமராஜன் மேறி என்ட்ரி குட்தாரு. அவரைப்பத்தித்தான் எக்சைலு நாவலோட 323ம் பக்கம் வருதுன்னு நம்ம கூட்டுக்காரன் அந்த புக்கை புரட்டி காண்பிச்சான். இந்த உலகத்துல பலரும் ரசிக்கிற மாதிரி நாமளும் ஒரு துணை நடிகன் கணக்கா இருக்கோம்ங்குற ஆனந்தத்துல அவரும் இதெல்லாம் ஒண்ணுமில்லைனு போகலாம். இருந்தாலும் நமக்குத்தான் மனசு திக்கு திக்குனு அடிக்குது. யாரு பெத்த புள்ளையோ பாவம்!
பெறவு எல்லாரும் செட்டானதும், “‘அஜால் குஜால் பாட்டெழுதும் வாலிப கவிஞர் வாலி வந்திருக்காக, மார்கெட் போன சமஸ்கிருத வித்துவான் இ.பா. வந்திருக்காக, குண்டூசி முதல் கிசுகிசு வரை அல்லாத்தையும் புக் போடும் கார்ப்பரேட் பதிப்பாளர் பத்ரி வந்திருக்காக, மற்றுமுள்ள வாலிப – வயோதிக நண்பர்கள் எல்லாம் வந்திருக்காக… வாம்மா மின்னல்…’ என சாநி சொம்பு தூக்கி வட்டத்துக்காரனுக குரல் எழுப்பனதும் கோட் – சூட்டுல சாநியை கையப்பிடிச்சு ஒருத்தரு அவரும் சூட்டு கோட்டு போட்டுகிணு இருந்தவரு கூட்டிட்டு வந்தாரு. கூட்டிட்டு வந்தவரு கலருல கருப்புங்கிறதானலயோ என்னமோ அவரு கோட்டு சூட்டு போட்டதை ஒத்துக்கிறதுக்கு முடியலடே. நம்மள மேறி உள்ள கருப்புதமிழனுக்கு கோட்டு சூட்டு எப்புடிலே ஒத்துக்கும்?
இதுல அவருதான் சாநிக்கு டை கட்டி விட்டாருன்னு சாநியே மேடையில சொன்னப்போ உண்மையிலேயே புல் அரிச்சிருச்சு. இதுல இன்னோரு ஃபுல்லையும் கேளுடே, மேடைக்கு வந்தவுக அல்லாத்தையும் சாநி சொம்பு தூக்கி காரனுவக கைத்தாங்கலாத்தான் கூட்டிகிணு வந்தானுக, அட ஙொக்கமக்கா என்னா ஒரு ‘யூத்’தாபிமானம்!
அமெரிக்கன் ஜாக்கிக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுன இந்த சாநி இன்னைக்கு வாடகைக்கு எடுத்த கோட்டு சூட்டு போட்டது எதுக்காம்? ரசியல் கல்சுரல் அகாடமியில உலக நாவல பத்தி நம்ப பண்டிதர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வாரம் உபன்யாசம் பேசுனப்போ சாநி அங்கன போனாராம். அதுல ஒருத்தரு குர்தா போட்டுக்கிணு வர, மாமா சாநி ஏனுன்னு கேக்கப் போய், இதுதான் இலக்கியத்துக்கு டிரஸ் கோடுன்னு சொல்ல, சாநிக்கு தூக்கம் வரலயாம். அப்பத்தான் விட்டலச்சார்யா கம்பெனி ஆர்ட்டிஸ்டு காந்தாராவ் கணக்கா ஒரு சங்கல்பம் போட்டு, எக்சைலை ரிலீசு பண்றப்போ கோட்டு சூட்டு போடுவேன்னு மங்கம்மா சபதம் போட்டாராம்.
இதுக்கு மிஷல் ஃபூக்கவ கூப்பிட்டு அவரோட Discipline and Punishment புக்குல டிரெஸ்ங்குறது எப்புடி அதிகாரத்தோட குறியூடு, யூனிஃபார்ம பாத்தா மக்களுக்கு எப்படி கதி கலங்குதுன்னு பல் விளக்குண மாறி விளக்கிட்டு, அவருதான் இந்த யூனிஃபார்மிட்டிய ஒடைக்க வந்த அம்புலிமாமான்னு ஆர்ப்பாட்டம் பண்ணுனாறு. அடிங், யூனிஃபார்மிட்டியை உடைக்கணும்மான கோவணத்த கட்டிக்கிணு வா, இல்லை ஜாக்கி ஜட்டியோட வா, அத வுட்டு கோட்டு சூட்டு போட்டா அது கலகமா இல்லை பிரிஞ்சால் காயா? பேண்டு சட்டை போட்டுகிணு வர கெவர்மண்டு ஆபிசருமாரை பாத்தா கன்னத்துல போட்டுகிணு சாமிண்ணு கும்பிடுற நாட்டுல கோட்டு சூட்டு போட்டா நம்ம மக்கமாறு காலுலேயே வுழுவான். அந்த படிக்கு அந்த டிரெஸ் மேலே இந்த ஊருக்கு அவ்வ்வளு டெரரு இருக்குணு இந்த கஸ்மாலத்துக்கு தெரியாத இன்னா?
இப்புடி சாநி குர்தாவ கிழிச்ச போது பத்திரிகையாளர் ஞாநி குர்தா இல்லேனா ஜிப்பாவோடு செல்போன்ல பாம்பு கேமை ஆடிக்கிட்டிருந்தது அவருட பின்னாடி இருந்து எட்டிப்பாத்த எனக்கு தெரிஞ்சுது. இது என்னன்னா, கூட்டம்னா அதை கம்னு கேட்கணும்ணு இருந்த யூனிஃபார்மிட்டிய ஞாநி கலாய்ச்சு கலகம் பண்ணுராருன்னு எடுத்துக்கலாம்.
பெறவு சாநியோட இந்த புக்கை ஒரு பய 50,000யிரத்துக்கும், இரண்டுபய 25,000த்துக்கும், சிலரு 5, 10 ஆயிரத்துக்கும்னு எடுத்தானுகளாம். அதுல அவனுக யாரும் பேரை சொல்லக்கூடாதுன்னு கண்டிசனா போட்டுட்டுனாகளாம். பெறவு சாட் மேட்டர் போலீசுக்கு போனா, ஸ்பான்சரு ஆருன்னு என்கொயரி வருமே? இது ஏலமா, இல்லை வசூலான்னு உங்களுக்கு தோணுணாலும், அதெல்லாம் தேவமாரு இரகசியம்டே, உள்குத்து என்னண்ணு எவனுக்கு தெரியும்?
பெறவு ஒரு இருபது பேரைக்கூப்பிட்டு சாநி ஜால்ரா போட்டுக்கிணு புக் கொடுத்தாரு. அதுல சீனிவாசன்ங்கிறவரை ஃபிரெண்டு, பிலாசபரு, கைடு ன்னு தூக்கி வுட்டாரு. இந்த கைடுதான் சாநிக்காக பிச்சாவரத்துல மப்போட மான்கறி போட்ட மகான்னு சொல்லுதாக. உண்மையான்னு எங்கிட்ட கேக்காதீக. ஆனா இது போலீசுக்கு போயிரும்னு பயந்து சாநி அந்த பார்ட்டி போஸ்ட்டுகளை தூக்குனது தனிக்கதை. அப்பாலிக்கா வந்த டாக்டர் ரமேஷ், இவரு பங்காரு அடிகளோட கனைக்ஷன் உள்ளவரு. நித்யானந்தா மேட்டருல சந்தி சிரிச்சாலும், சாநியோட ஆஸ்ரம கனக்சனுங்க இன்னும் முடியல. அடுத்து சங்கர மடத்து மேனேஜர் மஹாதேவன் ஐயர் 2012ல வந்தாலும் வரலாம். ஆரு கண்டா?
விவேக் நாராயணன்னு ஒரு அமெரிக்க அம்பி, அதுவும் தமிழ் தெரியாத அம்பியைக் கூப்பிட்டு மத்த தமிழ் பயலுவுகளுக்கு இரண்டு செகண்டுல முடிச்ச சாநி இவரை மட்டும் கூரையில் வைச்சு கொண்டாடுன கணக்கா ஆர்டிக் ஐஸ் பொழிஞ்சாரு. அதுமேறி இங்கிலாந்து எம்பசியிலிருந்து ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் வந்தாரு. என்ன இருந்தாலும் ரஸ்ஸலுக்கே விலை வைச்சு கம்யூனிச எதிர்ப்புல கல்லா கட்டுன நாட்டுக்காரனுக்கு இந்த சாநியை ஆட விட ஒரு பீரு போதுன்னு தெரியாதா?
இது போக அதிமுக பெரும்புள்ளிங்க, அந்துமணி ரமேஷின் தம்பி புதுச்சேரி தினமலர் வெங்கடேஷ்ன்னு ரூலிங் கிளாசின் அல்லா தூண்களும் வந்தானுங்க. அந்துமணி ரமேஷ் மட்டும் ரொம்ப பவ்யமா ஒரு ஓரத்துல இந்தப்பூனையும் பால் குயிக்குமாங்குற கணக்கால குந்தியிருந்தாரு. இவருதான் மேல்மட்டத்து கிசுகிசு கதங்களை பைவ்ஸ்டார் ஓட்டல் பார்ட்டியில சாநிக்கு கொடுக்குற சோர்ஸ். பெறவு அந்த சோர்ஸ் மெட்டீரியலை வைத்து சாநி ஏதாவது எழுதி மண்டபத்துல இருக்குற அந்துமணிக்கு டைம் பாஸ் கொடுப்பாரு. அந்தக் காலத்துல இருந்து மன்னர்மாரு இப்புடி மண்டபத்துல இருக்குற பரதேசி புலவனுங்களெயெல்லாம் தூக்கிப்போட்டு கொண்டு வந்து பால் பாயாசத்தோட சாப்பாடு போட்டு ஜால்ரா பாட்டு கேடு ரசிப்பானுக. இங்க பாயாசத்துக்கு பதில் ஷேம்பைன், அம்புட்டுதான் வித்தியாசம். ஆனா சாநிக்கு வாழ்நாள் சந்தா கட்டுன நல்லி குப்புசாமியும் அவரோட நிழலான தூர்தர்ஷன் நடராஜனும் மிஸ்ஸிங். ஒருவேளை அவுகதான் பிகைண்ட த ஸ்பான்சரோ என்ன எழவோ.
மேடையில பேசுன பெருசுங்க, கூட்டத்த பாத்து ஆயிரம், 700ன்னு கணக்கு சொன்னதுங்க. பாக்கிறது எல்லாம் ரெண்டா தெரிஞ்சா அதுக்கு என்ன காரணமுன்னு அல்லா பயலுகளுக்கு தெரிஞ்சிருக்கும். எதுக்கு வம்புனு கூட்டம் ஆரம்பிக்கையில இருந்து முடியற வரைக்கும் மூணு தபா அம்புட்டு தலைங்களயும் எண்ணிப் பாத்தேன். மேடையில இருந்தவுங்களுயும் சேத்து 340க்கு மேல மீட்டர் போகல. அடப்பாவிங்களா இதுக்கா இத்தனை பில்டப்பு! தினமலருல வெளம்பரம், பத்ரியோட புரொமோ, யூடியூபுல புரமோ,சாநி தளத்துல தொடர்ந்து கீறல் ரிக்கார்டு டயலாக், கெழக்கு கம்பெனியின் வெளம்பரம்… இத வுட தி.மு.க மீட்டிங்குல குமரி முத்துவுக்கு ஆயிரக்கணக்குல கூட்டம் சேருமேடே? அங்கன போனா உருப்படியா நாலு கருத்தையும், காமடியையும் கேட்டுகிணு ராத்திரி அம்சமா உறங்கலாமடே?
கூட்டத்துக்கு வந்த பெரபலங்கள சாநி கூவிக் கூவி வித்துக்கிணு இருந்ததைப் பாத்தா அவுகளுக்கே வெக்கத்துல அட்டாக்கே வந்திருக்கும். ஆடுகளம் இயக்குநர் வெற்றி மாறன், ஞாநி, மதனுன்னு டி.வி சீரியல் ஹமாம் சோப்பு விளம்பரம் போல பீத்துனது போதாதுன்னு அதுக்கு அல்லக்கைங்க கைதட்டுனத பாத்தா தமிழ்நாடு எம்புட்டு பெரபல மோஸ்தர் வறட்சியில இருக்குதுன்ணு தெரியுது. இவனுகதான் செக்ஸ் வறட்சியப் பத்தி பேசுதானுக!
மதனோட ஏற்கனவே பேசி வச்சமாறி அவர பேசக் கூப்பிட்டாரு சாநி. மதனும் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இந்த நாவலு இன்டர்நேஷனல் தரம்னு அடிச்சிவுட்டு அதுக்கு ஆதாரமா அவரும் இ.நேஷனல் ரீடருன்னு சொன்னாரு. என்சைக்ளோப்பீடியாவையும் விக்கிபீடியாவையும் மேயுறவனெல்லாம் இ.நே ரீடருன்னா நம்ப நமீதாவையும் அறிவாளியா ஒத்துக்கலாம். அடுத்து இவரு சாநியை ஒளிவு மறைவு இல்லாம எழுதுற கலகக்காறனா பலூன் ஊதுற மேறி உப்ப வைச்சாரு. ஆ.விகடன்ல ஆரையும் பகைச்சுக்காம, சூடு, சொரணை, காரம், கசப்பு இல்லாம மொக்கை காட்டூன் போடுற ஒரு பயந்தாங்கோளி சாநியை தைரியசாலின்னு உச்சிமோருத பாத்தா, நம்ம ஊருல கோழைக எவனுமே கிடையாதுடே.
இதுல இந்த சூராதி சூரன் சாநியோட எக்சைல் நாவல யூலா போகாம வாசிச்சாராம். சாநியும் இந்த புக்க செய்ஞ்ச போது அதாம்டே எழுதுன போது பலநாளு மூச்சா போலயாம். ஜெயமோகனும் இப்புடித்தான் மூச்சா போகாம எழுதுனாத பலவாட்டி எழுதிக்கிறாரு. இப்புடி மூச்சா புராணத்தை சாநியும், மதனும் விலாவாரியா விளக்குண கேப்புலயும், பெறவும் நானே ரெண்டு முறை மூச்சா போனேன். இவனுக பேச்சைக் கேட்டு அடிவயிறு கலங்கி பீச்சாம இருந்த வரைக்கும் சர்தான்.
பெரிசு இ.பா பேசுற போது ஒருஉண்மைய ஒத்துக்கிட்டாரு. இந்த நாவலு மைல்டு ஃபோர்னா இல்ல ஓய், இது ஹார்டு ஃபோர்னோன்னு வழிஞ்சாரு, என்ன இருந்தாலும் அவரும் தன்னை யூத்துனு காமிச்சிக்கிணும்லா? அதுலயும் ஒரு வேவ் லென்த் இருக்கு. வெண்மணி கொலையை வைச்சு குருதிப்புனல்னு நாவல் எழுதுன இந்த இ.பா. அதுல கோபாலகிருஷ்ண நாயுடு அந்த கொலையை செஞ்சதுக்கு காரணம் அவனோட செக்ஸ் வறட்ச்சின்னு ஒரு கண்டுபிடிப்பை போட்டாரு. நாமளும் இது தெரியாம அமெரிக்காகாரன் ஈராக்கை ஆக்கிரமிச்சதுக்கு ஏதோ ஏகாதிபத்தியம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு கிடக்கோம். சாநியும் அவரது சொந்த வாழ்க்கையில செக்ஸ் வறட்சி உள்ளவருங்கிறதுனாலே இந்த உலகமே காமத்துல காய்ஞ்சி போனதா கண்டுபிடிச்சிருக்காரு. இரண்டு பேரும் மேச்சுதானடே?
அடுத்து சமைஞ்சது எப்புடின்னு பாட்டு எழுதுன வாலி பேசுறப்போ, ஆறு மாதத்துக்கு முந்தி சாநிய தெரியாதுன்னு சொல்லிட்டு, அடுத்த வரியிலேய்யே அவரு எழுத்த எதையும் படிச்சதில்லேன்னுட்டு, பெறவு அகஸ்மாத்தா ஒன்னு ரெண்டு படிச்சேன்னு சொல்லி இவரும் சாநியை கலககாரன்னு தூக்குனாரு. சாநி வாலியை பத்தி ரீலுறப்போ வாலி எப்போதும் சமரசம் செய்ஞ்சதில்லேன்னு அடிச்சு வுட்டாரு. கேக்குறவன் கேனயன்னு நெனைப்பா, தெரியல. கருணாநிதி ஜால்ரா கவியரங்குத்துல இந்த வாலி போட்ட ஆட்டமென்ன, பெறவு ஜெயா மாமி வந்தப்புறம் அவரை ரெங்கநாயகின்னு தொழுததென்ன, மண்டபத்துல இருந்த ஒரு பயலும் நியூஸ் பேப்பர் கூட படிக்கிறதில்லேன்னு தெரியுது.
கடைசியா சாநி பேசுனது எல்லாம் புதுசு இல்லை. எழுத்தாளன தமிழகம் வாழ வைக்கல, சித்த மருத்தவத்தின் பலன், சபரிமலையின் புனித அனுவபம், கிராமத்து உணவு, பாரத மரபுன்னு காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை உள்ள அத்தனை சமாச்சாரத்தையும் கலந்து காக்டெயில்ல அடிச்சு பேசுராறு. அதுல ஒரு உண்மையை பாத்தீகன்னா அல்லாம் அவரு சொந்தப் பிரச்சினையில இருந்து குன்சாவாக கத்துகிட்ட தீர்வுங்கள வைச்சு அல்லாருக்கும் அட்வைசு மழைய பொழிதாரு. ஊர் பிரச்சினையை பாக்க கூட வக்கில்லாதவன் சொந்த பிரச்சினைய எலக்கியமாக்கப் போறேன்னு ஆரம்பிச்சா அது ஆண்மைக்குறைவயும், கைமுட்டியயையும் தாண்டுமாடே?
இதுல இவரு பப்பு தமிழுல வேகலேங்குறதால இனி இங்கிலீசுல நாவல் எழுதி அடுத்த வருசம் வெளியிடப் போராறாம். இங்கிலிசுல இந்த பொறுக்கி சமாச்சாரங்கள்ளாம் டிரிபிள் எக்ஸ் மேட்டரா இலவசமா கிடைக்கிற நேரத்துல இவரு என்னத்த எழுதி என்னத்த கிழிக்க? வேத மரபை ஏத்துக்கிற தயானந்த சரஸ்வதி, சித்த மரபையும் ஏத்துக்கிடணும்னு இந்த சாநி பேசுற போது எவனுக்காவது உரைச்சுச்சா? வேத மரபை மறுத்து வந்ததுதான் சித்த மரபு, அது பாப்பனிய எதிர் மரபுன்னுகூட இந்த லூசு மாமாவுக்கு தெரியல இதுல மத்தவனெல்லாம் எதையும் படிக்கிறதில்லேன்னு இவரு வருத்தப்பட்டதை என்னன்னு சொல்ல? ஒன் யோக்கியதையை கண்ணாடியில பாருயா வெண்ணை!
இதுல இவருக்கும் ஜெயமோகனுக்கும் நடக்குற குழாயடிச் சண்டையை ஏதோ மாபெரும் தத்துவ சண்டைன்னு சொன்னதைக் கேட்டு ஜெயமோகன் அவரோட பார்வதிபுரத்து வூட்டு சுவத்துல முட்டி முட்டி அழுவுறாராம். அவரை தேத்துறதுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்காரனுவ நாகர்கோவிலுக்கு பஸ் ஏறியிருக்கானுகன்னு ஊர் பூரா பேச்சு.
சாநியோட வூட்டுக்காரம்மா வாலி, இ.பா காலுல வுழுந்து கும்பிட்டதும்தான் ஒரு உண்மை தெரிஞ்சிது. அந்த அம்மா, வாலி, இ.பா, மதன், பத்ரி அல்லாரும் அவாளுங்குற சேதியப் பாத்தா என்ன தோணுது? அய்யங்காரு ஆத்துல ஐயரைக்கூட்டி பூணூல் கல்யாணத்துக்கு விருந்து வெச்சா மேறி ஒரு எஃபக்ட்டு.
ஏலேய் போக்கத்த மூதிகளா இதுக்கு மேலயும் இந்த எக்சைலு புக்க வாங்கி காசை விரயமாக்காதிகடே! அந்தக் காசுல பாய் கடையில பத்து பிளேட் பீஃப் வாங்கித் துன்னா ஆண்மைக்குறைவும் வராது, ஆய் குறைவும் வராதுடே! இப்ப சில பதிவருமாரு அந்த புக்குல இருக்குற சமாச்சாரத்தை காப்பி பண்ணி போட்டிருக்காக. அதுல பாத்தா, பத்து பக்கத்துக்கு ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியம், பத்து பக்கத்துக்கு ஐயப்பா சரணம், பத்து பக்கத்துக்கு பாட்டி வைத்தியம், மீதிப்பக்க்த்துக்கு செக்ஸ் மேட்டருன்னு இருக்குறத நம்ப அண்ணாச்சி உண்மைத்தமிழன் தொட்டு சுரேஷ் கண்ணன் வரைக்கும் காறித் துப்புதாக. மீறி வாங்கின்னா அதுக்கு எச்சில் இலையை பொறுக்கி துன்னலாம்.
இதுல சாநியோட புக்கை ஆயிரக்கணக்குல வித்துரலாம்னு தப்புக்கணக்கு போட்டு அம்புட்டையும் மண்டபத்துல இறக்கி, அதுல நூறு வித்தா அதிகம், மிச்சத்தை அள்ளிக்கட்டி கிழக்கு பாய்சை துன்புறுத்திய பத்ரி, வசந்த மாளிகை சிவாஜிகணேசன் துக்கத்துல சிரிச்சது பாக்க சகிக்கலன்னாலும் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. இதுல ஜெயமோகனோட ரைட் ஹேண்ட் ஹரன் பிரசன்னாவுக்கு சாநி தனியா தாங்ஸ் சொன்னத நாம குறிச்சு வச்சக்கணும்டே!
ஜெயமோகனோட விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு வாடகைக்கு எடுத்துக்கிணு, சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?
‘உடலில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத எவரேனும் இருந்தால் என்னோடு வாருங்கள். ஐரோப்பிய ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது எனது அடிமயிருக்குச் சமமானது’ என்று 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட தனது திருச்சிப் பிரகடனத்தில் அன்றைக்கு வாணிபம் செய்ய வந்து நாட்டையே ஆக்கிரமிக்கத் துடித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வீழ்த்த மக்களை அறைகூவி அழைத்தார் சின்ன மருது. தலை சாய மறுத்த அந்த வீரம் ஆற்காடு நவாப் போன்ற கைக்கூலிகளாலும் கௌரி வல்லப உடையத் தேவன் போன்ற துரோகிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.
இரண்டு நூற்றாண்டுகள் கழிந்து போயின. இன்றோ ‘ஐரோப்பியர்களே அமெரிக்கர்களே வாருங்கள். வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள். உங்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தேயிருக்கும்’ என்று காலில் விழுந்து கூப்பிடுகிறார் உலகவங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங். வல்லபத் தேவன்களோ பல வண்ணங்களில் பல வடிவங்களில் அந்நிய மூலதனத்தின் பாதங்களை நக்கிக் கிடக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களின் அறிவுஜீவிகளாக, தமிழ் வலைப்பதிவின் மொக்கைகளாக இந்த துரோகம் எடுத்திருக்கும் வடிவங்கள் எண்ணிறந்தவை.. இவர்கள் வைக்கும் வாதங்களின் சாராம்சம் ஒன்று தான் – “அண்ணாந்து பாருங்கள்; எருமை ஏரோபிளேன் ஓட்டுகிறது”
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகைசெய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறவுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வலையுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் அந்நிய மூலதனத்தை ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.
அண்ணாச்சி ஏமாற்றுவார் அம்பானி ஏமாற்றமாட்டார்!
“அண்ணாச்சிகள் வாங்கும் பொருட்களுக்கு பில் போடுவதில்லை. சிட்டையில் தான் எழுதிக் கொடுக்கிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் அரசுக்கு வரியிழப்பு ஏற்படுகிறது. அரசை ஏமாற்றிய அண்ணாச்சி, அந்தப் பணத்தைக் கொண்டு சென்னைக்கு வெளியே நிலங்களை வளைத்துப் போட்டுக் கொள்கிறார். இதே கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தால் ஒழுங்கான கம்ப்யூட்டர் பில்லிங் இருக்கும். வரி ஏய்ப்பும் இருக்காது.” இது அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் ‘உருப்படாத’ பதிவர் ஒருவரின் கண்டுபிடிப்பு.
அண்ணாச்சி ஏமாற்றுகிறாரா என்பதை பிறகு பார்ப்போம். அம்பானி யார் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். வெறும் மண்ணையும் கல்லையும் பெட்டியில் அடைத்து ‘ஒழுங்காக’ பில் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தி ஏற்றுமதி மானியம் வாங்கிய ஒழுக்க சீலர் தான் சீனியர் திருட்டுபாய் அம்பானி. அவரின் சீமந்த புத்திரனோ வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக கள்ளக்கணக்கெழுதி ‘ஒழுங்காக’ பில் போட்டு தான் 1300 கோடிகளை தேட்டை போட்டவர்.
வரியேய்ப்பு செய்து அரசுக்கு பட்டை நாமம் போடுவதில் ரிலையன்ஸ் உள்ளூர் கேடி என்றால் வால்மார்ட் சர்வதேச மொள்ளமாறி. தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கடைக்கான வாடகையாக செலுத்துவதாக கள்ளக் கணக்கெழுதி அதற்கு வரிவிலக்குப் பெற்றுள்ளது வால்மார்ட். இதில் சம்பந்தப்பட்ட இடங்களும் வால்மார்ட்டிற்கே சொந்தமானவை என்பது பல பத்திரிகைகளால் அம்பலப்படுத்தப்பட்டது. தானே தனக்கே செலுத்திய வாடகைக்கு வரிவிலக்குப் பெற்றதில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை வரியேய்ப்பு செய்துள்ளது. இது மட்டுமின்றி எந்தெந்த வகைகளில் வரி ஏய்ப்பு செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல ‘எர்னஸ்ட் & யங்’ என்கிற தனியார் கணக்குத் தணிக்கை நிறுவனத்தை அமர்த்திக் கொண்டிருக்கும் வால்மார்ட் அடித்திருக்கும் கொள்ளையின் அளவு இன்னதென்று தெரியாமல் மேற்குலக நாடுகளே முழிபிதுங்கி நிற்கின்றன.
எர்னஸ்ட் & யங் நிறுவனத்தை அமர்த்திக் கொள்ளும் வசதிகளெல்லாம் நம்ம அண்ணாச்சிகளுக்குக் கிடையாது தான். அவர்கள் சாமர்த்தியமெல்லாம் ரெண்டு கீத்து தேங்காய் பத்தைக்கு மூன்று ரூபாய் என்று சிட்டையில் எழுதிக் கொடுப்பதோடு சரி. காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் அண்ணாச்சிகளின் உழைப்பு இரவு பன்னிரண்டு வரை நீளும். அவர் மட்டுமின்றி அவர் குடும்பமே சேர்ந்து உழைத்தாலும் நாளொன்றுக்குக் கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் நானூறில் இருந்து ஐநூறு ரூபாய்களாக இருந்தாலே ஆச்சரியம் தான். இதில் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் தக்காளி வெங்காயம் விற்கும் அண்ணாச்சிகளால் கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?
கூடையில் காய்கறி சுமந்து வரும் கிழவி பில் போட்டு வியாபாரம் செய்ய வேண்டும், ஒன்றையணா வியாபாரம் பார்க்கும் அண்ணாச்சி பில் போட்டுக் கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நியாயவாதம் பேசும் இந்த அல்பைகள் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கும் மேல் வங்கிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் ரிலையன்ஸ் பற்றி எத்தனை முறை பேசியிருப்பார்கள்? ரிலையன்சும் வால்மார்ட்டும் லட்சக்கணக்கான கோடிகளில் அரசை ஏமாற்றுவதைக் கண்டுகொள்ளாமல் அவனையும் தெருமுனையில் தள்ளுவண்டியைத் தள்ளி வரும் வியாபாரியையும் ஒரே தராசில் நிறுத்துவதை என்னவென்று அழைக்கலாம்?
உழைப்புச் சுரண்டல், ஒரு சாதி ஆதிக்கம், வேலைவாய்ப்பு!
“மளிகைக் கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து என்ஜினியராகவோ டாக்டராகவோ ஆக்க விரும்புகிறார்கள் நீங்கள் அதைத் தடுத்து விட்டு கடையையே கட்டிக் கொண்டு அழட்டும் என்கிறீர்களா?” என்கிறார் உருப்படாத பதிவர். தலைகீழாய்த் தொங்கும் பதிவரோ, இப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே வியாபாரிகளாக இருக்கிறார்கள் என்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் வந்தால் எல்லோருக்கும் வேலை கிடைக்குமே என்றும் சொல்கிறார். அண்ணாச்சிகள் தங்கள் கடைகளில் வேலை செய்பவர்களிடம் உழைப்புச் சுரண்டல் செய்கிறார்களே என்கிறது இன்னொரு அரைவேக்காடு.
மளிகைக் கடை நடத்துவது அத்தனை இழிந்தது என்றால் அதில் ஏன் சாம் வால்ட்டன் வாரிசுகளுக்கும் அம்பானியின் வாரிசுகளுக்கும் இத்தனை ஆர்வம்? அவர்களிடம் போய் படித்து இன்ஜினியர்களாகச் சொல்ல வேண்டியது தானே? ஊரில் விவசாயம் பட்டுப் போய் பிழைக்க வேறு வழியின்றி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வந்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் தம் தொழிலை இழிந்ததாகக் கருதுவதில்லை. தமது வாரிசுகளும் தம்மைப் போலவே சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதே அவர்களது விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைத்து சிறுவியாபாரிகளின் வயிற்றில் அடிக்க விட்டுவிட்டு இப்போது படித்து வேலைக்குப் போகட்டுமே என்று நொண்ணாட்டியம் பேச அசாத்தியமான திமிர் வேண்டும்.
அடுத்து சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஒரே சாதி தானென்பதும் அதனால் உருவாகும் வேலை வாய்ப்புகள் போவதும் அதே சாதியினருக்குத் தானென்பதும் அடிப்படையில்லாத வாதம். இந்தியாவில் சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல் இருக்கும் சிறு கடைகளை பல்வேறு சாதிகளையும் வெவ்வேறு மதப் பின்னணி கொண்டோரும் தான் நடத்துகிறார்கள். அதே போல், இந்தக் கடைகளை நம்பி வாழும் கோடிக்கணக்கான ‘லைன் வியாபாரிகளும்’ பல சமூகங்களைச் சார்ந்தவர்கள் தான்.
பட்டை கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளில் அடைப்பது , கடலை மிட்டாய் போன்ற சிறிய தின்பண்டங்கள் தயாரிப்பது, பல்வேறு சிறிய பொருட்களை சாஷேக்களில் அடைப்பது போன்ற சிறு தொழில்களைச் செய்யும் லைன் வியாபாரிகள், அவற்றை ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கி சப்ளை செய்கிறார்கள்.
இந்த மொத்த வலைப்பின்னலையும் ஒரிரு பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் காவு கொடுப்பதற்காகவே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. வால்மார்ட்டோ-ரிலையன்ஸோ இந்த வியாபாரிகளிடம் சின்னச் சின்ன சாஷேக்களில் பொருட்கள் ஆர்டர் கொடுக்க முன்வரமாட்டார்கள். அவர்கள் டீலிங்கே பெரு முதலாளிகளிடம்தான். விலை அவர்கள் நிர்ணயிப்பதாகத் தானிருக்கும். தினக்கூலிக்குப் போகும் சாதாரண ஏழை உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஐந்து அல்லது பத்து ரூபாய்களுக்குக் கிடைக்கும் இந்த சாஷேக்களில் வாங்கும் வாய்ப்பை மறுத்து, தேவை இருக்கிறதோ இல்லையோ அரைக்கிலோ அல்லது ஒரு கிலோவாக வாங்க வேண்டிய நிர்பந்தத்தைத் தான் சில்லறை வணிகத்தில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்டாக்கப் போகின்றன.
இந்த நிறுவனங்களால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று நீட்டி முழக்கும் இந்த நடுத்தரவர்க்க அல்பைகள், இதே நிறுவனங்களில் மேலை நாடுகளில் நடக்கும் உழைப்புச் சுரண்டல் குறித்து மூச்சு கூட விடுவதில்லை. வால்மார்ட் தனது சீன உற்பத்தி அலகுகளான அடிமைக் கூடாரங்கள் (sweat shops) மூலம் அடிப்படை மனித உரிமைக்கே எதிரான தொழிற்கொள்கைகளைக் கொண்டிருப்பதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 16 மணி நேரங்கள் உழைக்க நிர்பந்திப்பது, மிகக் குறைந்த கூலி, தொழிற்சங்கம் கட்டும் உரிமை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உழைப்புச் சுரண்டலின் மூலம் தான் இவர்கள் லாபத்தைக் குவிக்கிறார்கள்.
சொந்தக்காலில் நின்று கவுரவமாக பிழைக்கும் சொந்த நாட்டு மக்களைத் தொழிலிருந்து விரட்டியடித்து விட்டு வால்மார்ட்டின் ஸ்வெட் ஷாப்ஸூக்கு துரத்துவதைத் தான் வேலைவாய்ப்பு என்று மன்மோகன் சிங்கிலிருந்து இங்கே தமிழில் வலைபதியும் தலைகீழாய்த் தொங்கும் வவ்வால் வரை பெருமையாகக் கூவுகின்றனர்.
அங்காடித் தெருவின் அண்ணாச்சிகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் தான் – ஆனால், அந்தத் தொழிலாளிகளுக்கு அதிலிருந்து மீண்டு சொந்தமாய்த் தொழில் தொடங்கும் ஒரு வாய்ப்பு ஓரளவுக்காவது இருக்கிறது. ஆனால், வால்மார்ட் நடத்தும் அடிமைக் கூடாரத்திலிருந்து மரணத்தைத் தவிர்த்த வேறொரு வாய்ப்பு சர்வநிச்சயமாய் இல்லை. இவர்களையும் அவர்களையும் இணைவைத்துப் பேசுவதே அயோக்கியத்தனம்.
அண்ணாச்சிகள் மதிப்பதில்லை; வால்மார்ட் மதிக்கிறான்
“சார் அண்ணாச்சி கடைக்குப் போனா அவரு மதிக்கவே மாட்டாருங்க. தெரிஞ்சவங்க வேண்டியவங்களுக்கு முதல்ல பொருள் குடுத்துட்டு நம்மை கடைசில தான் கவனிப்பாங்க. அதே மாதிரி தெருவில தள்ளு வண்டில வரும் வியாபாரி கிட்ட பேரம் பேசியே தாவு தீரும்ங்க. ஆனா, அங்க பாருங்க ஒவ்வொரு காய்கறிக்கும் தெளிவ்வ்வ்வா எம். ஆர்.பி போட்ருக்கான் பாஸ். அப்புறம் சென்ட்ரலைஸ்டு ஏசி.. நல்ல கஸ்டமர் சர்வீஸ்.. பாத்தா சிரிக்கிறான் சார்.. அவன் ரேஞ்சே தனி பாஸ்” என்கிறார்கள் இந்த அடிமைகள்.
உண்மை தான். வால்மார்ட் போனால் பளபளப்பான சிரிப்பும் ஏசி குளிரும் உங்களை வரவேற்கத்தான் செய்யும். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வசதி கூட உண்டு – ஆனால், சிகரெட் கார்டு பயன்படுத்தும் வசதி இருக்குமா? வாரக் கூலிக்கும் சொற்ப மாதச் சம்பளத்துக்கும் வேலை பார்க்கும் சாதாரண உழைக்கும் மக்கள் சிகரெட் அட்டையின் பின்புறத்தில் எழுதி அக்கவுண்ட் வைத்துக் கொண்டு வாரா வாரம் சனிக்கிழமையோ ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதியோ சம்பளம் கிடைத்ததும் திருப்பிச் செலுத்தும் முறை வால்மார்ட்டில் இருக்காது – அந்த வசதி அண்ணாச்சிக் கடையில் தான் உண்டு.
உலகின் முதல் பத்து பணக்காரர்களில் சாம் வால்டனின் குடும்பத்தவரே மூன்று நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர். இது போன்ற பகாசுர பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளோடு சாதாரண மளிகைக் கடை அண்ணாச்சியை மோதவிட்டு அவர்களின் தொழிலைத் துப்புரவாக ஒழித்துக் கட்டிவிட்டால் சாதாரண மக்கள் எங்கே போவார்கள்?
வால்மார்ட்டின் வருகை சிறுவணிகர்களை பாதிக்காதா?
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் வால்மார்ட்டின் வருகையையும் முதலாளித்துவ ஊடகங்களில் வெறிகொண்டு ஆதரித்து எழுதி வரும் அமெரிக்க பூட்சுநக்கிகளோ, வால்மார்ட்டால் சாதாரண சிறு வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். வால்மார்ட்டின் சேவையும், சிறுவணிகர்களின் சேவையும் வேறு வேறு வகையானது என்றும், அங்கே செல்பவர்கள் அங்கே செல்வார்கள் இங்கே வருபவர்கள் இங்கே வருவார்கள். யாரும் யாரையும் அழித்து விட முடியாது; அவரவர் தொழில் அவரவர்க்கு இருக்கும் என்கிறார்கள்.
மேலும் ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி குழுமம், பார்த்தி போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகை பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாது என்றும் சொல்கிறார்கள்.
நுகர்வுச் சந்தையை வால்மார்ட் கைப்பற்றினால் சிறுவணிகர்களின் கதி என்னவாகும் என்பதற்கு பல்வேறு நாடுகளின் உதாரணங்கள் நம் கண்முன்னேயே உள்ளது என்பது ஒரு பக்கமிருக்க நமது சொந்த அனுபவமே இவர்களின் கூற்றுக்கு முரணானதாக இருக்கிறது. தொன்னூறுகளில் கொக்கோ கோலாவும் பெப்சியும் இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்கு முன் ஆயிரக்கணக்கான சுதேசி பானங்கள் தயாரிப்பில் இருந்தன. இன்றோ அவையனைத்தும் மொத்தமாக அழிந்து போய் விட்டது. தனது போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தயங்காமல் ஈடுபட்டன இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும். பல லட்சம் மக்களை வாழ வைத்துக் கொண்டிருந்த சிறு தொழில்கள் அழிந்து இன்றோ இரண்டே இரண்டு நிறுவனங்களின் கையில் மொத்த சந்தையும் சிக்கிக் கொண்டிருக்கிறது.
பிரேசிலில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் தெருவோர காய்கறி அங்காடிகள் 27% சதவீத அளவுக்கு மூடப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினாவிலோ பத்தே ஆண்டுகளில் 30% சிறுகடைகள் இழுத்து மூடப்பட்டு, இந்தத் துறையின் வேலை வாய்ப்பு 26 சதவீத அளவிற்கு குறைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சில்லறை வர்த்தகத்தில் 60 சதவீத அளவுக்கு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன.
சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை உண்டாக்கியுள்ள பாதிப்பைப் புரிந்து கொள்ள சிக்கலான புள்ளிவிவரங்கள் தேவையில்லை. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சியிடம் கேட்டாலே விளக்கமாகச் சொல்வார். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வியாபாரம் குறைந்து போயுள்ள நிலையில் அதை ஈடுகட்ட மளிகை வியாபாரத்தோடு சேர்த்து செல்போன் ரீசார்ஜ், பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் விற்பது என்று நிறைய சிறு சிறு வேலைகளைச் செய்கிறார்கள். பேரங்காடிகளுக்கு அருகில் இருக்கும் சாதாரண அண்ணாச்சிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வியாபாரத்தில் பாதிதான் இன்று நடக்கிறது. வருமானமும், விற்பனையில் இலாபமும் கணிசமாக குறைந்திருக்கிறது.
உள்ளூர் அளவிலான காய்கனிச் சந்தையில் நுழையும் ரிலையன்ஸ், மொத்தமாக காய்கனிகளை வாங்கிச் செல்கிறது. மொத்த வியாபாரிகளுக்கு பத்து கிலோ இருபது கிலோ என்று விற்பதில் கிடைக்கும் லாபத்தை விட இதில் குறைந்த லாபமே கிடைக்கிறது என்றாலும், நீண்ட நேரம் அழுகிப் போகும் தன்மை கொண்ட பொருட்களோடு சந்தையில் அமர்ந்திருக்க வேண்டியதைத் தவிர்க்க வேறு வழியின்று குறைந்த லாபத்துக்கு ரிலையன்ஸிடம் விற்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும் – பலரும் சொல்வது போல் ரிலையன்ஸ் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நேரடிக் கொள்முதல் செய்வதில்லை. தேவைப்படும் போது கமிஷன் மண்டி ஏஜென்டுகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்தளவுக்கு மொத்தமாக வாங்கும் அளவுக்கான சந்தையில்லாத சாதாரண அண்ணாச்சிகள் ரிலையன்ஸோடு போட்டியிட முடியாமல் ஏற்கனவே தவித்து வரும் நிலையில் அவர்களை வால்மார்ட்டுக்கு காவு கொடுக்கத் துடிக்கிறார் மன்மோகன் சிங்.
அடுத்த பகுதியில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம்.
விவசாயிகளை அழிவுக்குள்ளாக்கும் வால்மார்ட்..!
விலை குறையும் என்கிற ஏமாற்று.. பிற நாடுகளின் அனுபவம்
விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
நமது நுகர்வு இன்னதென்று தீர்மானிக்கும் உரிமை!
வால்மார்ட்டால் அழிந்த நிறுவனங்கள் – பல்வேறு நாடுகளின் அனுபவம்
காலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.
ஏதோ அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் நடந்தது என்று நினைக்க முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் தொடரும் தீண்டாமையின் கொடுமைகளுக்குள் இழுத்து விடுகிறது இச் சிறுநூல். அம்பேத்கருக்கு பள்ளிக் கூடத்தில் நடந்தது, இன்று ஐ.ஐ.டி. யில் தலித் மாணவர்களுக்குநடக்கிறது. வடிவங்கள்தான் வேறுபடுகின்றன. ஆதிக்க சாதி வக்கிரங்கள் தொடர்கின்றன. இதோ, நூலின் அனுபவங்களை நீங்கள் வாழும் சமூக அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்.
இளம் வயது, பள்ளிப் பருவ கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்க கோர்கானுக்கு இரயிலில் பயணிக்கிறார்கள் அம்பேத்கரும் அவரது அண்ணன் மற்றும் உறவுக்கார இளைஞர்களும். புதிதாக தனித்து வந்து இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியவுடன் சாதி தரை தட்டுகிறது. தண்ணீரையும் உணவையும் கூட அவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதி அசிங்கங்கள் சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை நீங்களே பாருங்களேன்.
“… நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸடர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கமபோல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினருள் மஹர்களும் ஒன்று). அவர் முகம் திடீரென மாறி விட்டது. அதிசயக்கத்தக்க வெறுப்புணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.
அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை.” ( நூல். பக். 9, 10)
பலவிதமான சூழ்நிலைகளுக்குப் பிறகு ஒரு வழியாக காசுக்கு ஒத்துக் கொண்டது ஜாதி. சாதிக்கு விடை கொடுத்தது மாடு, “… ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?” என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.” (நூல்)
“…இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது… எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்… தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரமபும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று… நான்கு , அய்ந்து மைல் தூரம் நாஙகள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்..” (நூல்)
ஆதிக்க சாதி மனநிலையின் சாதிய, வர்க்க ரசவாதங்களை அம்பேத்கர் விவரிக்கும் இந்த இடத்தில் தெற்கே ‘நான் தேவன்டா’ என்று மீசையை முறுக்கிவிட்டு வடக்கே ‘நான் பாவன்டா’ என்று வடை சட்டியோடு பிழைப்புக்காக ‘அண்ணே’ போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சமூக நிலைமைகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறது.
அம்பேத்கரின் நினைவலைகள் பலவிதமான காட்சிகளையும் கருத்துக்களையும் நம் கண்முன் விரிக்கிறது,
“…எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது
என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்…. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.”(நூல்.)
இப்படிப்பட்ட சமூக அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல என்று மட்டும் சமாதானமடைய நியாயம் உள்ளதா? ஒட்டுமொத்த சமூகமும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைகளால் பயன்பெற்றுக் கொண்டு அவர்களுக்கான இயற்கையான உரிமைகளைக் கூட மறுக்கும் இந்த சமூக அமைப்பு, இதை மௌனமாய் அனுமதிக்கும் ஆதிக்க சாதி மனநிலை கேவலத்தின் உச்சம் என்பதை சுருக்கென உணர வைக்கின்றன பல பகுதிகள்.
வாழ்நாள் முழுக்க வருணாசிரம வெறிக்கு எதிராக சிந்தித்தவர் மட்டுமல்ல, அதையே சந்தித்தவர் அம்பேத்கர் என்பதை அவர் பரோடாவில் பட்ட அனுபவங்கள் விவரிக்கின்றன.
“…நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது? யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்?” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்…. தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராடடுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். …. விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
அந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன். “எவ்வாறு நீ தங்கமுடியும்? இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும் ” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பெர்சி பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“… பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ! இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை…… மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன்….” (நூல்)
ஒரு இளைஞனாக அம்பேத்கர் அழுத கண்ணீர், காலங்கள் கடந்தும் பல இளைஞர்களின் விழிகள் மாறி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணமான சமூக அமைப்பை நினைத்து வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியோடு ஒருவன் தன்னைக் குறுக்கிக்கொள்வது மட்டும் நியாயமாகாது. வெளிப்படையான இந்த சமூக அநீதியை வெளிப்படும் களங்கள், முக்கியமாக ஆதிக்க சாதி உணர்வு நிலைக்கு எதிராக ஒவ்வொருவரும் சுயசாதிக்கு எதிராக கலகம் செய்வதும் ஆதிக்க சாதி அசிங்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும்தான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் வழி. இந்நூலில் அம்பேத்கரின் நினைவலைகள் அனுபவத்தின் வழி உணர்த்துவதும் இதுதான்.
பார்ப்பன இந்துமதம் தொடங்கி பார்சி, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்கள் வரை அனைத்துமே தம்மை தீண்டத்தகாதவனாக நடத்திய அனுபவங்களை அம்பேத்கர் பகிர்ந்துள்ளார். ஒரு புரட்சியைத் தீண்டினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான சுயமரியாதையும் , பொதுவான ஒரு சமூகத்தையும் பெற முடியும் என்று சொல்வதற்கான அனுபவம் அம்பேத்கருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அதை நாம் சொல்வதில் தப்பேதுமில்லை.
உடனே சாதி என்பது இந்தியாவுக்கே உள்ள தனிப்பிரச்சினை, இதை மேலைநாட்டு மார்க்சியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று மேல், கீழ் பார்க்கும் அன்பர்களே! இந்தியாவுக்கே உள்ள இந்த விசேசப் பிரச்சினையை மேலை ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக வழியில் என்று முயன்று அம்பேத்கரே தன் இறுதிநாளில் நொந்து கொண்டதுதான் இந்த போலி ஜனநாயகம். எல்லா சமூக அநீதிகளுக்கும் பாதுகாப்பாகவும் அடிப்படையாகவும் விளங்கும் இந்திய ஆளும் வர்க்க, ஆதிக்க சாதி அரசமைப்பை தகர்த்தெறிவதுதான் இந்நூலை படித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வு. படித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வு பெறுங்கள்…
இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆட்சியைப் பிடித்த இந்துமதவெறியர்கள் 2002 இல் குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்வாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.
பாபர்மசூதி இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள். இத்தகைய இந்துமதவெறி பாசிஸ்டுகளை இந்த நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகள் தண்டிக்காது என்ற உண்மையே சில இசுலாமிய இளைஞர்களை தீவிரவாத பாதையில் தள்ளியிருக்கிறது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தேசத்தின் விவாதப் பொருளாக இருந்து வரும் இந்து மதவெறி பல பிரச்சினைகளை திசை திருப்புவதற்கும் பயன்படுகிறது. காங்கிரசுக்குப் போட்டியாக ஏகாதிபத்திய விசுவாசத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்து மதவெறியர்கள் மறுகாலனியாக்கத்தை அவர்களது ஆட்சியின் போது தீவிரமான அமல்படுத்தினர்.
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்துமதவெறியருக்கு ஆதரவாகவே இருந்தது நீதியின் அடிப்படையில் அல்ல. மறுபுறம் மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு முதலான கட்சிகள் மிதவாத இந்துத்வத்தை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.
வெறுமனே மசூதியை இடிப்பது மட்டுமல்ல அனைத்து துறையிலும் இந்து ராஷ்டிர திட்டத்தை வைத்திருக்கும் இந்து மதவெறியர்கள் இன்றும் அரசியல் ரீதியான செல்வாக்கோடுதான் உள்ளனர். இதையெல்லாம் அன்றே சொன்னது புதிய ஜனநாயகம். படித்துப் பாருங்கள், இந்துமதவெறியை நிர்மூலமாக்க தோள் கொடுங்கள்!
– வினவு
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி
அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
அயோத்தி பாபரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.
பாபரி மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.
ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.
பாபரி மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!
இந்துமதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்கதள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.
பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபரி மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.
“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.
இந்துமதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!
ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக்க ஒன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.
இப்போது பாபரி மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும்,மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.
முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங்தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்துமதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில் முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச்சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.
இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்தும வெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திக்கையாளர்கள் மீதான் தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராம ராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.
அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள,நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.
ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.
இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.
பாபரி மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்க்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவ நம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.
பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக்கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள்சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கநம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச்சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப் போனது. அதோடு சமசரப் பேச்சு,நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமுலாக்கிவிட்டார்கள்.
ஆதிக்கத்தை, அதிகாரத்தை கைப்பற்றவும் காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்துமதவெறி பாசிஸடுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய, இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே, மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.
அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.
விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?
டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.
இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.
அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?
ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதற்கெல்லாம் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.
போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.
போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?
கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!
முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.
இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும். ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?
அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.
சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.
கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.
இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.
ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.
மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?
உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.
ஹீரோயிசம்தான் பிரச்சினை என்றால் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளமாநிலத்தை சுனாமி வந்தால் கடல் முழுவதும் முழுங்கிவிடும் என்று வீடியோ கிராபிக்ஸ் மூலம் தயாரித்து பிரச்சாரம் செய்யலாமே? அரபிக் கடலை வில்லனாக்கினால் அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையே? இப்படி தேவையின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஏன் விளையாட வேண்டும்?
இப்படி இல்லாத பிரச்சினையை கிளப்பியிருப்பதோடு, அந்த இல்லாத பிரச்சினையை தீர்ப்பதற்கு தடையாக இருப்பதோடு, அந்த தடை மூலம் இரு மாநில மக்களிடம் முரண்பாட்டை முற்றவைக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கிரைம் ரேட் தொடர்ந்து எகிறிக் கொண்டே இருக்கிறது.
இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?
இவர்களது கேரள பங்காளிகள்தானே அந்த உரிமையை தட்டிப் பறித்திருக்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தாலும், தண்டிப்பதாக இருந்தாலும் அவர்களைத்தானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து இவர்கள் யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்? சூடு, சொரணை, உண்மை, நியாயம் இருந்தால் தத்தமது அகில இந்தியக் கட்சிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக மிரட்டியிருக்கலாம். இல்லை டெல்லி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டு கேரள கட்சி அமைப்புகளை கலைக்குமாறு கோரியிருக்கலாம். அதையெல்லாம் செய்யத் துப்பில்லாத ஜென்மங்கள் இங்கே தமிழனுக்காக அழுகிறது என்றால் யாரை ஏய்க்கிறார்கள?
ஆக இந்த இந்திய தேச ஒற்றுமை பேசும் கட்சிகளின் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் சென்டிமெண்டுக்கு ஜால்ரா போட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதே. இதை காவிரிப் பிரச்சினையின் போது கார்நாடகாவிலும் பார்த்திருக்கிறோம். இப்போது கேரளாவில் பார்க்கிறோம். மேலும் தமிழக காங், பா.ஜ.க கும்பல் இரண்டுமே தமது கேரள பிரிவையோ, அரசையோ இதுவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பாரத ஒற்றுமை குறித்த டியூஷனும் எடுக்க வில்லை. அந்த வகையில் கேரளாவில் சண்டித்தனம் செய்யும் காங், பா.ஜ.க பெருச்சாளிகளுக்கு தீனி போட்டு அடை காப்பது தமிழக பெருச்சாளிகள்தான். இந்த பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.
அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.
இதை விடுத்து அப்பாவி மலையாள மக்களை எதிர்ப்பதில் என்ன பயன்? அவர்களா தினந்தோறும் அறிக்கை விட்டோ இல்லை அணைக்கு சென்றோ ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? அப்படி மக்களே நடத்தினாலும் அதன் பின்னணி இவர்கள்தானே? ஆனால் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு துளியுமில்லாத நிலையில் அகில இந்திய தலைமை செல்வாக்கு உள்ள கேரளாவின் பக்கம்தான் சாயுமென்பது தமிழகப் பெருச்சாளிகளுக்கு தெரியாதா என்ன?
இதில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகளின் நிலை மிகவும் சந்தர்ப்பவாதமானது. இவர்கள் ஒரு பேச்சுக்கு கூட முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் உரிமை பற்றி பேசமாட்டார்கள்.
இந்தியாவில் அரசியல்ரீதியாக காலாவதியாகி வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் பரிதாபத்திற்குரிய தமிழக இணைய அவதாரமான மாற்று இணைய தளம் இந்தப் பிரச்சினை குறித்து, ” முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!” என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
அதில்,
“முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல் ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது. (அழுத்தம் எம்முடையது)
மேலும், இதில் மார்க்சிஸ்டு கட்சி இரு கோட்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுகிறதாம். ஒன்று தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமாம், இரண்டு கேரள மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமாம், அதன்படி உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளும் பகைமை இன்றி பேசித் தீர்க்க வேண்டுமாம்.
அட, வெளக்கெண்ணெய் வெண்ணைகளா! இதில் இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?
ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?
அதன்படி பகைமையை கிளப்பிவிட்டதே உங்களது தோழர்கள்தானே? இதில் ஏன் இரு மாநிலம் என்று குற்றமிழைத்தவனையும், குற்றமிழைக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்துகிறீர்கள்? இதுதான் நீங்கள் பின்பற்றி வரும் மார்க்சியமா இல்லை சந்தர்ப்பவாதமா? இவ்வளவு செய்த பிறகும் தமிழகம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இனவெறியை கிளப்பும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சிகளை கண்டிப்பதற்கு வக்கற்ற நீங்கள் அதை மடை மாற்றி இருமாநில மக்களும், கட்சிகளும் சுமூகமாக பேச வெண்டும் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுகிறீர்களா, இல்லை சந்தர்ப்பவாதத்தையே ஃபுல் மீல்சாக முழுங்குகிறீர்களா?
தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு, பா.ஜ.க கும்பல்களாவது தமிழக மக்களின் நலனை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடவாவது செய்கின்றன. அந்த ‘தரம்’ கூட இல்லாத வெத்து வேட்டாக போயிருக்கும் உங்கள் முட்டாள்தனத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாவது புரிந்து கொள்வீர்களா?
உங்கள் நோக்கம் புதிய அணை கட்டும் கோரிக்கைக்கு தமிழகத்தை தயார்படுத்துவதுதான். அப்படி அந்த அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் இல்லை, காற்று கூட வராது என்பதை பொறியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நீர் வராத பட்சத்தில் நீங்களும் தமிழகத்திலிருந்து காலி செய்து விட்டு உங்கள் கேரள தோழர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இனவெறியுடன் செயல்படக்கூடாது என்பது சரிதான். மேலும் இங்கே எழுந்திருப்பது இன முரண்பாடு அல்ல. இது கேரள ஓட்டுப்பொறுக்கிகளின் அவதூறுப்பிரச்சாரம். அதை முறியடிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையாக இருக்க முடியுமே அன்றி, அந்த அவதூறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது அல்லை. அந்த வகையில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகள்தான் கேரள கட்சிகளின் ஊளையை ஆதரித்து இருமாநில மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு உதவி புரிகிறார்கள்.
இந்த இலட்சணத்தில் பகைமை வேண்டாம், சுமூகமாக பேசுவோம், நீதிமன்றத்தை மதிப்போம் என்ற உபதேசம் யாருக்கு பயன்படும்?
ஒருவேளை கேரள மக்கள் அவர்களது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்ப் பிரச்ச்சாரத்திற்கு பலியாகி இருந்தாலும் அங்கே இருக்கும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தன் நியாயத்தை சொல்லித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் அங்கே அவர்களது செல்வாக்கு குறையுமென்றாலும் நீண்ட கால நோக்கில் அது மாறும்.
புரட்சி கூட தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நலனை வைத்துத்தானே நடக்க முடியும்?அப்போது அதற்கு ஆதரவாக வரும் மக்கள் முல்லைபெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அது வேறு இது வேறு அல்ல.
ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.
அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.
இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம். அதிலும் வங்கம் பஞ்சராகியும், கேரளம் பிரேக் டவுணாகியும் இருக்கும் நிலையில் அப்படி ஒரு பிரேக் டவுன் வண்டியாவது இருக்கிறதே என்று சீன் காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலிருந்துதான் போலிகளின் முல்லைப்பெரியாறு சந்தர்ப்பவாதம் பொங்கி வழிகிறது.
அந்த வகையில் முல்லைப்பெரியாறு விசயத்தில் துரோகம் புரிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளையும் நாம் குறிவைத்து எதிர்க்க வேண்டும்.
கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.
சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.
சில்லறை வர்த்தகத்தில் தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின் பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
– வினவு
எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.
வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் (2007) அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால், கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.
இந்தக் கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.
ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.
அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.
மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.
இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.
உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.
இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.
இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.
இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.
70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.
உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி
2010ல் வால்மார்ட் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்
தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.
இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.
80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.
1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.
வளர்ச்சியின் மர்மம்
வால்மார்டின் வளம் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்
வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.
இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.
உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.
உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்
ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….
ஏகபோகத்தின் வீச்சு
வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.
அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.
அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.
இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.
வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.
தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்
ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.
அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.
இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.
உழைப்புச் சுரண்டல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.
அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.
தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.
அடுத்த குறி இந்தியா
சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.
மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?
பார்ப்பன பாசிச ஜெ! அரசே
உடனே பாட புத்தகங்களை வழங்கு!
தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை
ஒழித்துக் கட்டுவோம்!
கட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்!
தடுமாறும் மாணவர், பெற்றோரை தடுத்தாட்கொண்டு
போராட புதுத்தெம்பளித்து, இன்றைய தேதியில் –
‘கல்விக்குத் தெய்வமாய்’ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
காட்சியளிப்பதால்,
சும்மா விடுவாரா அம்மா!
அம்மாவுக்குப் பிடித்தது இரண்டே இரண்டுதான்,
ஒன்று – அம்மா எழுந்து பேசினால்
எல்லோரும் பெஞ்சைத் தட்ட வேண்டும்;
அம்மாவை எதிர்த்துப் பேசினால்
அவர் நெஞ்சைத் ‘தட்ட’ வேண்டும்!
அம்முவுக்கு அடங்குமோ பு.மா.இ.மு!
அடங்காமல் போராடியதால்
அடித்து உதைத்து கைது, சிறை..
புழல் சிறைக்கு அனுப்பியவர்கள் போக
பதிமூன்று பேர் இருபத்தியோரு வயதுக்கும் கீழே உள்ள
இளங் ‘குற்றவாளிகள்’ என்று சைதை
கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
வழிநடத்திச் சென்ற ஒரு தோழரைத் தவிர
மற்ற மாணவர்களுக்கு சிறை புதிது.
ஏற்கனவே அங்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையிருக்கும்
இளம் கைதிகள் புதியவர்களை அடிப்பார்கள், அதட்டுவார்கள்,
வேலை வாங்குவார்கள்… என்ற எண்ணத்தில் புதியவர்கள்
அச்சமுற்ற விழிகளுடன் அடியெடுத்து வைத்தனர்.
சிறை ஒன்றும் உலகை விட்டு தனியே இல்லை
சமூகத்திலுள்ள சகல பிரச்சினைகளும் சிறையிலும் உண்டு!
சிறைபடுத்தலோடு முடிவதில்லை… சிறைக்குள்ளும்
தொடர்கிறது போராட்டம்… என புதியவர்களுக்கு
புரியவைத்து நிமிரவைத்தார் வழிநடத்திய தோழர்.
‘என்ன எல்லாம் சமச்சீரா… சரி, சரி எல்லாரும் சட்டைய கழட்டு!
அங்க மச்ச அடையாளம் காட்டு’ என ஆணையிட்டார் ஜெயிலர்.
‘நாங்க ஒண்ணும் கிரிமினல் அல்ல, அரசியல் கைதிகள்
சட்டையை கழட்டமாட்டோம் என பதிலறுத்தனர் மாணவர்கள்.
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால்
வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும்
சரத்குமார் வாழும் நாட்டில்,
ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின்
உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள்
வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
‘நாங்க பகத்சிங்கைப் போல நாட்டுக்காக இறுதிவரை போராடுவோம்!’
மாணவர்கள் மறுத்துரைக்க…
‘எப்பா.. என்ன ஆளவிட்டா போதுண்டா சாமி…’ என
மேற்கொண்டு பேசாமல் அறைக்குள் அடைத்தார் அவர்களை.
நிமிர்ந்து பார்த்தாலே பொளந்து கட்டும் ஜெயிலர் இந்த
மாணவர்களிடம் இவ்வளவு பொறுமையாக நடந்துக் கொள்வது
மற்ற விசாரணைக் கைதிகளுக்கு புரியாத புதிராகவும், மாணவர்கள்
மேல் ஈடுபாட்டையும் கொடுத்தது.
‘சார்! இது சாப்பாடா? வாய்ல வைக்க முடியல.
நல்ல சோறா கொடுங்க. சாய்ங்காலத்துல டீ வேணும்.
படிக்க புத்தகம் வேணும்…’ என்று
அடுத்தடுத்து தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து
வாதாட ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.
எதுவும் கேட்டாலே, ‘உரிச்சு உப்பு தடவிடுவேன்…’ என
மிரட்டும் ஜெயிலர்… ‘தம்பிகளா… இங்க இவ்வளவுதான் வசதி.
கலாட்டா பண்ணாதீங்க…’ என இறங்கு முகத்தில் பேச ஆரம்பித்தார்.
‘அப்படின்னா எங்களயும் எங்க தோழர்களோட புழல் சிறையிலேயே
சேத்துப் போடுங்க. அதுவரை உண்ணாநிலைப் போராட்டம்தான்’ என
மாணவர்கள் திடமாக முடிவெடுத்து அமர்ந்துவிட்டனர்.
‘சட்டத்துல இடமில்லை புரிஞ்சுக்குங்க.
உங்களுக்காக மேலிடத்துல பேசறேன். சாப்பிடுங்க…’ என்று ஜெயிலர்
எவ்வளவு சமாதானம் பேசியும் ஏற்காமல் மாணவர்கள் தன்நிலையில்
உறுதியாய் இருந்தனர்.
அங்குமிங்கும் ஜெயிலரின் தொலைபேசி பறந்தது.
இறுதியில், ‘எலே! நாளைக்கு புழல் போறீகளே, போய் சாப்டுங்களே…’ என்றார்.
அமைப்பு வழி தகவல் சரிதான் என்று அறிந்த பின்னே மாணவர்கள்
உண்ணாநிலையை முடித்து சாப்பிடச் சென்றனர்.
இரவெல்லாம்… சாதி எதிர்ப்பு, சமூக நடப்பு பற்றி அவர்கள் பாடிய
அமைப்புப் பாடல்கள் அறையைத் தாண்டியும் ஒலிக்க
பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கு
ஓரிரு நாள் பழக்கத்தில் இவர்களோடு நாமும் இல்லையே என்ற ஏக்கம்
இவர்களாக நாமும் இல்லையே என விரிவடைந்தது.
இவர்களைப் பிரியப் போகிறோமே என்ற அவசரத்தில் பலரும்
தங்களுடைய வாழ்நிலை, வழக்கு சூழ்நிலை, மீண்டும் தங்களோடு
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என இரவு நெடுநேரம்
மாணவர்களிடம் உறவாடினர்.
பழகப்பழக விசாரணைக் கைதிகளாக இருக்கும் இளைஞர்களின்
ஆழ்மனதில் கிடக்கும் அழகிய மனித உணர்ச்சிகளை மாணவர்களும்
பயின்றனர்.
விடிந்தது. எல்லா சிறை விதிமுறைகளும் முடிந்து மாணவர்கள்
புழல் சிறைக்குப் புறப்படத் தயாராயிருந்த தருணத்தில்
விடைபெறப்போகும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த
விசாரணைக் கைதிகளில் இளைஞர் ஒருவர்
‘தோழர், தயவு செய்து உங்க சிவப்புச் சட்டையை எனக்குக்
கொடுத்துட்டுப் போங்க!’
‘இது ஏங்க..?’ வியப்புடன் கேட்டார் மாணவத் தோழர்.
‘இல்ல, அதோட
பவர் என்ன, பாதுகாப்பு என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.
தயவு செய்து கொடுத்துட்டுப் போங்க தோழர்…’