Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 759

கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!

15

1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.

அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் இத்தகைய கௌரவக் கொலைகளைப் பற்றிய அதிகார பூர்வமான அரசாங்க புள்ளிவிவரங்கள் இல்லா விட்டாலும், இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி ஹரியானா, பஞ்சாப், உபி மாநிலங்கள் ஆண்டுக்கு 900 கௌரவக் கொலைகளுக்கும் நாட்டின் பிற பகுதிகள் சுமார் 100 முதல் 300 கொலைகளுக்கும் களமாக விளங்குகின்றன.

1. உத்தர் பிரதேசத்தின் பர்சானா போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட மேஹ்ரானா கிராமத்தின் ஜாட் சாதியைச் சேர்ந்த ரோஷ்னி என்ற 14 வயது பெண் ஜாதவ் சாதியைச் சேர்ந்த விஜேந்திர ஜாதவ் மற்றும் ராம் கிஷ்ன் உடன் 1991 மார்ச் 21ஆம் தேதி ஓடிப் போனார். மார்ச் 24ம் தேதி ரோஷினி ஊருக்குத் திரும்பிய பிறகு பஞ்சாயத்து விசாரணைக்கு அமர்ந்தது.

பஞ்சாயத்தில் ரோஷ்னி விஜேந்திரவுடன் வாழ விருப்பம் தெரிவித்ததை ஏற்காத பஞ்சாயத்து, அந்த இளைஞர்கள் மாற்று சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் மூன்று பேரையும் கொல்வதற்கு உத்தரவிட்டது. கிராம மக்கள் மூன்று பேரையும் அடித்து ஒரு மரத்தில் தூக்கில் போட்டார்கள். இதை தடுக்க முயன்ற போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் படுகாயமடைந்தார்கள். தடயங்களை அழித்து விடுவதற்காக மூன்று பேரின் உடல்களும் எரிக்கப்பட்டன.

போலீஸ் விசாரணை குழு, கொலைக்கு உத்தரவிட்ட தலைவர்களையும் சேர்த்து 53 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் இயற்கையாக இறந்து போனார்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரா நீதிமன்றம் ஒன்று அந்த தம்பதியையும் அவர்களது நண்பரையும் கொலை செய்த குற்றத்துக்காக 8 பேருக்கு மரண தண்டனையும், இன்னும் 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்ட இன்னும் மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை சிறுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. அவர்கள் குற்றம் நடந்த சமயத்தில் 18 வயதுக்கும் குறைவானவர்கள். தண்டனை வழங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் 60 வயதைத் தாண்டியவர்கள்.

2. 2010-ல் விமலா என்ற பெண் நியூ ்பிரெண்ட்ஸ் காலனியில் அவரது தந்தை மற்றும் கட்டிட காவலரால் கொல்லப்பட்டார். ஜலந்தரைச் சேர்ந்த ஹரியுடன் விமலா தொடர்பு வைத்திருந்ததால் இந்தக் கொலையை செய்திருக்கிறார்கள்.

3. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா என்பவரை அவரது விருப்பத்துக்கு மாறாக காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு மேனகா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் சிவகுமாருடன் வாழப் போய் விட்டார். மானாமதுரை நகரத்துக்கு அருகில் வாழ்ந்த அவர்களை திருப்பி வரும்படி அன்பொழுகப் பேசி சிவகங்கைக்கு வரவைத்த பெற்றோர்களும் உறவினர்களும் சிவகுமாரை கொலை செய்தனர். அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேனகா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேனகா, சிவகுமார் இரண்டு பேருமே அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அது கௌரவக் கொலை இல்லை என்று காவல்துறை வாதிட்டது.

4. மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இளம் தம்பதியினர் தமது குடும்பத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி காவல்துறை பாதுகாப்புடன் திருமணம் செய்து கொண்டனர். போலீஸ் கவனம் இருந்தும், அப்படி சாதிக்கு வெளியே திருமணம் செய்யத் துணிந்ததற்காக இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இது நடந்தது நாட்டின் தலைநகரமான புதுதில்லியில்.

கௌரவக் கொலை என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அல்லது ஒரே உட்பிரிவுக்குள் (கோத்ரம்)  திருமணம் செய்து கொள்ளும் அல்லது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்று வரையறுக்கப்படுகிறது.

பாரத ஞானமரபின் பாரம்பரிய பெருமைகளில் ஒன்றான இந்த கௌரவக் கொலைகள், 1947 இந்திய பிரிவினையின் போது பஞ்சாபில் பெருமளவில் நடந்தன. இந்திய பெண்கள் பாகிஸ்தானிய ஆண்களையும் பாகிஸ்தானிய பெண்கள் இந்திய ஆண்களையும் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அப்படி கட்டாய மணமுடிக்கப்பட்ட பெண்களை வேட்டையாடி ‘வீட்டுக்கு’ அழைத்து வந்து குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவர்களைக் கொல்வது பல இடங்களில் நடந்தது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 கௌரவக் கொலைகள் சராசரியாக அந்த காலகட்டத்தின் நடந்தன என்று சொல்லப்படுகிறது.

இப்போதெல்லாம் பெண்ணைக் கொல்வதோடு அவளை திருமணம் செய்யத் துணிந்த மருமகனையும் கொன்று போடுவது வழக்கமாக வளர்ந்திருக்கிறது.

இந்த கௌரவக் கொலைகள் கிராமங்களில் மட்டும்தான் நடக்கின்றன என்று நினைத்து விடக் கூடாது. பெரும்பான்மை கொலைகள் கிராமங்களில் நடந்தாலும், மேலே பார்த்த உதாரணங்களைப் போல பாரத தலைநகர் தில்லியிலும், முன்னேறிய மாநிலம் என்று கொண்டாடப்படும் தமிழ்நாட்டிலும் கூட இத்தகைய கொலைகள் அவ்வப்போது நடக்கின்றன. இந்தக் கொலைகள் குறிப்பிட்ட மதத்தில் மட்டும் நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது. முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களிடையேயும் இந்த கொடூர பாரம்பரியம் இருக்கிறது.

இதற்கு ஆதரவாக, நவீன இந்தியாவின் முன்னேறிய பிரிவினர், இணையத்தில் விவாதம் செய்யும் அளவுக்கு வளர்ந்தவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். மாதிரிகள் சில:

‘தனது மாணவன் பணிவாக, புத்திசாலித்தனமாக, திறமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களோ, குழந்தைகளோ தவறான வழியில் போகும் போது, திரும்பி வர முடியாத வழியில் தவறிப் போகும் போது, கோபம் கட்டுமீறி போகிறது. பெற்றோர்களின் மனம் என்ற நீதிமன்றம் தவறிப் போனவர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதை நிறைவேற்றுவதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகி விடுகிறார்கள்’

‘ஒரு பயங்கரவாதியையோ, கொலையாளியையோ, தேசத் துரோகியையோ, சமூக விரோதியையோ ஒரு பெண் தேர்ந்தெடுத்தால் அதன் விளைவுகளை அவள் எப்படி எதிர் கொள்ள முடியும். கௌரவக் கொலைகள் சட்டப்படி தவறாயிருந்தாலும் தர்மப்படி சரிதான்’

‘தவறு செய்யும் குழந்தைகளை கொல்வது சமூகக் குற்றம் என்றால் அப்படி தவறான வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்ந்தெடுப்பதும் சமூகக் குற்றம்தான். பெற்றோர்களுக்கு பணிந்து நடப்பதுதான் எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது.’

‘பெற்றோர்களுக்கு எதிராக நடந்து கொண்டு, திருமணம் போன்ற சென்சிடிவான விஷயத்தில் பெற்றோரின் விருப்பத்துக்கு செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்த பெற்றோராலும் அந்த நேரத்தில் தமது கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாது. தமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்வதுதான் ஒரே வழி என்று அவர்கள் நினைக்கலாம். அவர்களின் கௌரவத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற நாம் வேறு என்ன வழி காட்ட முடியும்?’

‘கௌரவக்கொலைகளை தடுக்கிறோம் என்ற போர்வையில் சமூகத்தில் ஒழுக்கமின்மையை ஊக்குவிக்கக் கூடாது. அனுபவமில்லாத குழந்தைகள் தமது  மனம் போன போக்கில் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தில் போய் மாட்டுவதை தடுக்க வழிகள் காணப்பட வேண்டும். பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர்கள் உடன் இருந்தால் மட்டும்தான் கோவில் பூசாரிகள் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் சட்டவிரோதமானவையாகவும், திருட்டுத் திருமணமாகவும் கருதப்பட வேண்டும்.’

‘பாரம்பரியம், குடும்ப கௌரவம் இவற்றைப் புறக்கணித்து செய்யப்படும் திருமணங்கள், இரண்டு தரப்பு குடும்பத்திலும் உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்றன. அவர்கள் கௌரவக் கொலைகள் செய்யவும் துணிகிறார்கள். பழக்க வழக்கங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், அவற்றுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை’

‘ஒரு மனைவி அமைதியாக இருந்தால் எந்த கணவனும் அவளை அடிக்கப் போவதில்லை. படிப்பறிவின்மையாலும், பேராசையாலும் பெண்கள் ஒத்துழைத்து நடக்காத போது, கணவன் மனைவியை அடிக்கிறார். இப்படிப்பட்ட நிலைமைகள் அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றன”

“சவுதி அரேபியாவில் தாலிபான்கள் வேற்று மனிதனுடன் போனதற்காக ஒரு பெண்ணை பிடித்து அடித்துக் கீழே தள்ளுகிறார்கள். அதன் பிறகு கல்லெறியப்பட்டு அவள் கொல்லப்படுகிறாள். அது போல நமது நாட்டில் நடக்கிறதா? நாம் அவர்களை விட நாகரீகம் அடைந்தவர்கள். இத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்”

“பெண் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவளாக இருக்கும் போது இப்படி நடக்கிறது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவரை பெண் திருமணம் செய்யும் போது அவளது குடும்பம் தாழ்ந்த சாதி குடும்பத்துடன் உறவாட வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர்கள் தமது சாதியினரிடம் எப்படி புழங்க முடியும்? அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் யார் செய்வார்கள்? குடும்ப வட்டங்களில் அவர்களின் அந்தஸ்து தாழ்ந்து விடுகிறது, அது வரை இருந்த மதிப்பை இழக்க நேரிடுகிறது. அந்த மதிப்பை மீண்டும் ஈட்டுவதற்கு என்ன வழி? இந்த தாழ்ச்சிக்கு காரணமான களையைப் பிடுங்கி எறிவதுதான் ஒரே வழி. அதனால் நான் கௌரவக் கொலைகளை எதிர்க்க மாட்டேன். இது பெற்றோர்களின் இயல்பான எதிர்வினைதான்”

“நம்முடைய சட்ட அமைப்பில் பாரம்பரிய பழக்கங்களும் சட்டமாக மதிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. யாராவது அவற்றை மீறும் போது அவர் அதற்காக தண்டிக்கப்படுவது நியாயம்தான். நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் ஏன் நம்மை கொல்ல வேண்டும்? என்பது முக்கியமான கேள்வி? தற்கால தலைமுறை அவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்? அதனால் கௌரவக் கொலைகள் ஓரளவுக்கு நியாயமானவைதான். சமூகத்தின் சட்டங்களை பின்பற்ற விரும்பாத ஒருவர் அந்த சமூகத்தில் வாழும் உரிமையை இழக்கிறார். இது சமூகத்தின் அடிப்படை கோட்பாடு”

சமூகத்தில் குடும்பத்தின் அந்தஸ்தை பாதுகாக்க குழந்தைகளை பலி கொடுப்பது போன்ற இத்தகைய கேடு கெட்ட பழக்கங்கள் முதலாளித்துவ நாடுகளில் இருந்தால் அது பரவலாக கண்டனம் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்கப்படுவதற்கான தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விடும். அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு வளர்ச்சி வெகுவாக முன்னேறி விட்டது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் நாட்டில், அந்த ஒளிரும் தகவல்களுக்குக் கீழே கொடூரமான அழுகிப் போன சமூகக் கட்டமைப்பின் கீழ் இத்தகைய பழமைவாத கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏன்?

‘சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பியாச்சு, பொக்ரானில் அணுகுண்டு வெடித்து வல்லரசு கிளப்பில் அங்கம் வாங்கியாச்சு? இந்த காலத்தில யார் சார் சாதி பார்க்கிறாங்க?’ என்று பேசுவதன் அபத்தம் இன்னும் ஏன் நீடிக்கிறது?

‘தகவல் தொழில் நுட்பத் துறையில் உலக அளவில் முன்னேற்றம், 8% வளர்ச்சி, பழைய மகாபலிபுரம் சாலையில் விண்ணை முட்டும் பளபளக்கும் கட்டிடங்கள், பெரு நகரங்களின் கிடுகிடு விரிவாக்கம் முன்னேற்ற ஒளி வீச, இன்னொரு பக்கம் பஞ்சாப்/அரியானாவில் பெண் குழந்தைகள் விகிதம் கடுமையாக சரிவு, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் சாதீய படுகொலைகள், கௌரவக் கொலைகள்’ என்று பழமை இருள் சூழ்ந்திருப்பது ஏன்?

அறிவியல் வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட பிரம்மாண்ட தொழிற்புரட்சியில் பங்கேற்கும் ஒரு நாடு, தகவல் தொழில்நுட்ப புரட்சியில் முன்னணி பாத்திரம் வகிக்கும் ஒரு நாடு, இத்தகைய பழமையான பிற்போக்கு சமூக பழக்கங்களை உடைத்தெறிந்து நவீன விஞ்ஞான உலகத்துக்கு ஏன் வந்து விடவில்லை? ஹரியானா பிபிஓவில் வேலை செய்யும் இளைஞனுக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது சகோதரியை கொன்று போடும் பொறுப்பு எப்படி ஏற்படுகிறது?

நம் பள்ளி வரலாற்றுப் பாடத்தை நினைவு படுத்திக் கொள்வோம்.

19ஆம் நூற்றாண்டில் நவீன ஆயுதங்களுடனும் படைப்பிரிவுகளுடனும் நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் அதிகாரத்தில் இருந்த வந்த பிற்போக்கு அரசுகளை முறியடித்து வென்று, தமது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது பிற்போக்குத் தனமான சமூக பழக்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.  ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்திய சீர்திருத்த வாதிகளின் துணையுடன் உடன் கட்டை ஏறுவதை தடை செய்வது, குழந்தை மணத்தை எதிர்ப்பது என்று சமூகத்தின் கசடுகளை ஒழிக்கும் கடமை அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பின்பற்றி வந்த அரசுக்கு இயல்பாகவே போய்ச் சேர்ந்தது.

இப்படி ஆங்கிலக் கல்வியும், போராடுவதற்கான ஆயுதங்களும் பெறப்பெற்ற படைவீரர்களும், பொது மக்களும் 1857ல் முதல் சுதந்திர போரில் இறங்கினார்கள். மக்கள் எழுச்சியை சமாளிக்கத் திணறி ஒருவழியாக மீண்ட ஆங்கிலேய வர்த்தக ஆட்சியாளர்கள், அறிவியலும் பகுத்தறிவும் தொழிலுக்கும் வர்த்தகத்துக்கும் சரி, சமூகத்தை மதம், சாதி, மூட நம்பிக்கைகளின் பிடியிலேயே விட்டு வைப்பதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்கள்.  விக்டோரியா ராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியாவை எடுத்துக் கொண்டு, மக்களை பழமை சங்கிலிகளில் கட்டுவித்து, அவர்களது உழைப்பைச் சுரண்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார்கள்.

பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை வைத்து நிலப்பிரபுத்துவ கசடுகளை ஒழித்துக் கட்டியது போல இந்தியாவில் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார்கள்.

1947-ல் ‘சுதந்திரம்’ பெற்ற, இந்திய/பன்னாட்டு முதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரசு அரசுகளும் பாதுகாப்பான அதே கொள்கைகளை பின்பற்றின. இந்திய சட்ட அமைப்பும், நீதி மன்றங்களும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வகுத்துக் கொண்டார்கள்.

தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளியும், பிபிஓவுக்கு வரும் ஊழியரும் 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்துடன் உறவாடினாலும், வீட்டுக்குத் திரும்பியதும் அவரை கட்டிப் போட பழங்கால அடிமைச் சங்கிலிகளை விட்டு வைத்ததோடு அவற்றை உறுதி படுத்துவதற்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள். நிறுவனத்திலேயே டபுள் சிறீ ரவிசங்கர் ஆன்மீக வகுப்பு, அலுவலகத்தில் சாதிரீதியான குழு சேர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விடுவது, ஆயுத பூஜைக்கு பரிசுகள் வழங்குவது என்று நவீன தொழில் நுட்ப சூழலில் அறிவியலுக்கு விரோதமான கொள்கைகளை தடையின்றி அனுமதிக்கிறார்கள்.

அதுதான் ஊழியர்கள் முழுமையான அறிவியல் பார்வை பெற வைத்து தமக்கு எதிராக போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி. நீண்ட கால நோக்கில் அதுதான் இலாபகரமானது. ‘பிரீ மார்கெ’ட்டில் ஆகக் கூடிய லாபம் ஈட்டுவதுதானே உச்ச கட்ட நோக்கமாக இருக்க வேண்டும்!

இப்படியாக நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கொடுமைகளை ஒழித்துக் கட்டும் தகுதியையும் நேர்மையையும் மறுக்கும் இன்றைய முதலாளித்துவ அமைப்பு அவற்றுடன் கள்ளக் கூட்டு ஏற்படுத்தியுள்ளது.

அதனால்தான் நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன. சமூக ரீதியான போராட்டமின்றி வளர்ச்சியின்றி வெறுமனே தொழில்நுட்பமும், பொருளாதார வளர்ச்சியும் மட்டும் முன்னேற்றத்தை சாதித்து விடாது. அந்த முன்னேற்றமும் எளியோரை வதைத்து வரும் முன்னேற்றம் என்பது வேறு விசயம்.

நம்நாட்டில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று தம்மைத்தாமே நினைத்துக் கொள்ளும் மேட்டுக்குடி துவங்கி நடுத்தர வர்க்கம் வரை இந்த கௌரவக் கொலைகளை செய்தோ இல்லை மறைமுகமாக நியாயப்படுத்தியோ வருகின்றன. இவர்கள்தான் வட மாநிலங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.கவிற்கும் அடித்தளமாக இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் இருக்கும் அரசு, அதிகார, நீதிமன்ற, காவல்துறை அமைப்புகள் எல்லாம் கௌரவக் கொலைகளுக்கு தோதான முறையிலேயே செயல்பட்டு வருகின்றன.

அரசியல், பொருளாதார அரங்குகளில் மட்டும் போராடினால் போதாது சமூக அரங்கிலும் நாம் விடாப்பிடியாக போராடியாக வேண்டும் என்பதையே தொடரும் கௌரவக் கொலைகள் நமக்கு சொல்கின்ற உண்மை.

________________________________________________

அப்துல்
________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?

13

ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்ட சூப் சாங் அண்ணா ஹசாரே.

ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.

ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன் ?
ஜெமோ கட்டுரையை வாசிக்க படத்தின் மீது அழுத்தவும்

கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் சூப் சாங்குகள் வைரல் ஆகப் பரவுவது குறித்து மகிழ்ச்சி கொள்பவர்களுக்கு, அந்தக் காய்ச்சல் கொஞ்சநாளைக்கு அப்புறம் விட்டுவிடும்போது, அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சில மாதங்களுக்கு முன் ஹசாரே எழுச்சியால், “பாரதத்தின்” உடல் கொதித்தை காய்ச்சல் என்று புரிந்து கொள்ளாமல், “உள்ளொளியின் உக்கிரம்” என்று புரிந்து கொண்டவர்களும், காய்ச்சலில் பினாத்தியவற்றை கவிதையெனக் கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் முதல்வர் ஜெயமோகன். ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இன்றைய (23.12.2011) தினமணி நடுப்பக்க கட்டுரையையும், ஹசாரே குறித்த ஜெயமோகனின் முந்தைய எழுத்துகளையும் பார்க்கவும்.

 

இன்று ஹசாரேயை கார்ப்பரேட் ஊடகங்கள் கைவிட்டு விட்டன என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்.

சென்ற முறை கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஹசாரே படத்தை நூறு நாள் ஓட்டியதற்கும், அதனை அரசு அனுமதித்ததற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் தலையாயது காங்கிரசு அரசின் குறிப்பான ஊழல்களை மறைப்பதற்கு அண்ணாவின் பொதுவான ஊழல் ஒழிப்பு உதார் பயன்பட்டது என்பதே. இரண்டாவது காரணம், அண்ணா ஹசாரேயின் இயக்கமென்பது லவ் பெயிலியர் பாய்ஸுக்கான ஒரு சூப் சாங்தான் என்பது ஆளும் வர்க்கத்துக்கும் அரசுக்கும் தெளிவாகத் தெரியும். மூன்றாவது காரணம் கார்ப்பரேட் முதலாளிகளுடனான உறவில் மன்மோகன் சிங்கிடம் நிலவும் “ஆண்மைக்குறைவு”.

இத்தகைய “வரலாற்றுக் காரணங்கள்தான்” மைலாப்பூர் மாமியையும், லாஸ் எஞ்செல்ஸ் அம்பியையும், லெட்டர்ஸ் டு எடிட்டர் தாத்தாவையும் ஐ ஆம் அண்ணா என்று பாடவைத்தன. ஹிந்து சம்பிரதாயத்தின் வழிவந்த தீவட்டிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்கள், கிறித்தவத்துக்கே நெருக்கடி ஏற்படும் அளவுக்கு மெழுகுவர்த்தி கொள்முதல் செய்யவும் வைத்தன.

இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. சரத் பவாருக்கு அறை விழுந்ததும், “சிட்டியிலுள்ள டான்களெல்லாம்” கூடிப் பேசிவிட்டார்கள். “இது நல்லதல்ல. இன்று கன்னத்தில் அறை, நாளை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி என்று நிலைமை மோசமாகிவிடும்” என்று முதலாளிகள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, “ஒரு அறைதானா” என்று உளறிவிட்டார் ஹசாரே.

சத்திய சோதனையை தலைக்கு வைத்துப் படுக்கும் அகிம்சாவாதிகளான கார்ப்பரேட் முதலாளிகள் இதைக் கேட்டு அதிர்ந்து விட்டார்கள். காந்தியப் பாதையிலிருந்து ஒரு நூல் வழுவினாலும் தங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை அண்ணாவுக்குப் புரிய வைத்து விட்டார்கள். மேலும் கார்ப்பரேட் ஊடகங்களை பணியவைப்பதற்கு எந்தெந்த இடத்தில் ஊசியால் குத்தவேண்டும் என்ற அக்குபஞ்சர் முறைகள் தெரிந்த அதிகாரிகளையும் காங்கிரசு அரசு களத்தில் இறக்கியிருப்பதால் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.

இதுதான் விசயம். ஆனால் ஜெயமோகனால் இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

“பவார் தாக்கப்பட்டபோது அண்ணா பேசிய சொற்களை வைத்து அவருடைய ஆளுமையை அழிக்கிறார்கள். ஊடகங்களும் அரசும் மெல்ல அவதூறு மற்றும் ஆளுமை அழிப்புத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. அவர் அறிவுஜீவி அல்ல, எளிய மனிதர். அவருடைய பேச்சு திரிக்கப் படுகிறது” என்று தினமணியில் அரைப்பக்கத்துக்கு கண்ணீர் விட்டிருக்கிறார்.

தற்போது ஊடகங்கள் அண்ணாவின் ஆளுமையை ஏன் அழிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யும் ஜெயமோகன், நேற்று இதே ஊடகங்கள் அண்ணா காலைக்கடன் முடிக்கும் காட்சி தவிர அனைத்தையும் ரியாலிடி ஷோவாக லைவ் ரிலே செய்தது ஏன் என்ற விசாரத்தில் ஈடுபட்டாரா தெரியவில்லை.  அண்ணாவை வீழ்த்துவதற்கு முதலாளிகளுக்கும் அறிவுஜிவிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டென்றால், உயர்த்தியதற்கான நோக்கம் என்ன? கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடியா?

“அவர் மக்கள் நடுவே இருந்து உருவாகி வந்தவர். அவரது மொழி ராஜதந்திரிகளின் மொழி அல்ல” என்று ஜெத்மலானி போல வாதாடுகிறார் ஜெயமோகன். பவாரை அடித்தவுடன், ஒரு அறைதானா என்று கேட்ட அண்ணா, “அமாய்யா அப்படித்தான் கேட்டேன். அதிலென்ன தப்பு?” என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே. “நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொன்னேன்” என்று கோக்கு மாக்கு செய்கிறாரே அது அரசியல்வாதி வேலையில்லாமல் வேறு என்ன?

அண்ணா எப்போதும் தனக்குப் பக்கத்தில் ஒரு தேசியக் கொடி, மற்றும் கிரண்பேடி ஆகிய இரண்டு வஸ்துக்களை வைத்திருக்கிறார். கொடி மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை. ஆனால் பேடியின் யோக்கிதை சந்தி சிரிக்கிறது. தன் மீது மதிப்பு வைத்து நம்பி அழைத்தவர்களையே, திருட்டு கணக்கு கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். கேட்டால் “ஊழல் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்கிறார். “திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், திருப்பிக் கொடுப்பதே தண்டனை” என்று ஜன் லோக் பால் மசோதாவின் எத்தனையாவது ஷரத்து கூறுகிறது? உலகமே காறித்துப்பும் பேடியின் இந்தப் பித்தலாட்டம் இந்த எளிய மக்கள் சேவகருக்கு மட்டும் புரியவில்லையா? ஆ.ராஜாவுக்கு சிறை, கிரண் பேடிக்கு பிராயச்சித்தமா?

தங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன், “நாங்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தவறு செய்திருந்தால் எங்களை தூக்கிலிடுங்கள். ஆனால் லோக் பால் மசோதாவைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார் கேஜ்ரிவால். கிரண்பேடி எந்த தூக்கில் தொங்குகிறார்? தூக்குதண்டனை, கசையடி முதலான எளிய காந்திய தண்டனை முறைகள் தவிர வேறு எதையும் அறியாத, அண்ணா ஹசாரேயின் முனியாண்டி விலாஸ் மூளைக்குள் இந்தக் கேள்வி எழவே இல்லையா?

“காந்தி காங்கிரசை கலைக்கச்சொன்னார், ராணுவத்தைக் கலைக்கச் சொல்லவில்லை”. எனவே அண்ணா காந்தியவாதிதான், முனியாண்டி விலாசும் உடுப்பி ஓட்டல்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஜெயமோகன். காந்தி பிரிட்டிஷ் ராணுவத்துக்கே ஆள் சேர்த்துக் கொடுத்த மகான். அண்ணாவோ இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தவர். எனவே அவர் காந்தியவாதியாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.

“சிறந்த ஊழலற்ற நிர்வாகம்” என்று மோடிக்கு அவர் தெரிவித்த பாராட்டு, இந்து மதவெறியையோ குஜராத் படுகொலையையோ பெயர் சொல்லிக் கூட கண்டிக்காமல் வழுக்கிய அவரது ராஜதந்திரம், பிறகு குஜராத் ஊழல் மாநிலம் என்று விமரிசனம் செய்து தனது பழைய கூற்றை ரத்து செய்த சாதுர்யம், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தை எதிர்ப்பதில் அண்ணா காட்டிய உறுதி போன்ற பலவற்றுடன், இரண்டு பேருக்கும் வாய் பொக்கை என்ற உண்மையையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதிதான். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர்தான் காந்திக்கு வாய் பொக்கையானது என்பது சிறியதொரு வேறுபாடு. அவ்வளவே.

ஹசாரே ஒரு காந்தியவாதி மட்டுமல்ல, அவர் ஜெபி யின் அவதாரம் என்கிறார் ஜெமோ. இந்திய அரசியலில் தனியாகத் தலையெடுக்க முடியாத ஜனசங்கம், 1970 களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் “முழுப்புரட்சி” இயக்கத்துக்குள் நுழைந்து, பாரதிய ஜனதாவாக பரிணாமம் பெற்றது. தற்போது மீண்டும் அதே காங்கிரசு கட்சியின் ஆட்சி. தனியார்மயக் கொள்கைகளாலும், ஊழல்களாலும் நாறிப்போயிருந்த போதிலும், காங்கிரசின் இடத்தைப் பிடிக்கும் வலிமை பாரதிய ஜனதாவுக்கு இல்லை. ராமன் பெயரிலான கோயிலோ, பாலமோ, பை பாஸ் சாலையோ தங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தராது என்பதும் நாக்பூரின் சர்சங்சாலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. எனவே ஒளிந்து கொள்வதற்கு இன்னொரு ஜெ.பி இருந்தால் நல்லது என்பது அவர்களது வேட்கை.

படுகொலை மூலம் இந்துத்துவத்தின் சோதனைச் சாலையை மோடி உருவாக்கியிருந்தாலும், அந்த வழி அனைத்திந்திய அதிகாரத்தை பெற்றுத்தராது என்பது மோடிக்கே தெரிந்து விட்டது. மேலும், அத்தகைய இந்து கிராமத்தை அகிம்சை வழியில் ராலேகான் சித்தியில் அண்ணா ஏற்கெனவே உருவாக்கி விட்டார். அதனை ஆர்.எஸ்.எஸ் அன்றே அடையாளம் கண்டுவிட்டது. இதுதான் நாம் உருவாக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தின் மாதிரிக் கிராமம் என்ற முடிவுக்கும் வந்து விட்டது.

காந்திய சிந்தனையும் இராணுவ இதயமும் கொண்ட ஒரு மனிதரை ஆர்.எஸ்.எஸ் காரர் என்று நாம் புரிந்து கொள்வதற்கு, அவர் காக்கி டவுசரும் கருப்புக் குல்லாவும் அணிந்திருக்க வேண்டுமா என்ன?

கதர் ஆடையை மீறித் திமிரிக் கொண்டு வெளித்தெரியும் அவரது உடல்மொழியைப் பார்த்தாலே அவர் ஒரு “பாசிஸ்ட் நாட்டாமை” என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவரது புகழ்பாடும் ஜெயமோகனின் எழுத்தைப் படித்து, அதில் வெளிப்படும் பதற்றத்தையும், ஆத்திரத்தையும், அசட்டுத்தனத்தையும் அடையாளம் கண்டால், அதிலிருந்தும் அண்ணா ஹசாரே யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்டு பவுண்டேசனின் பினாமியான மகசேசே விருது பெற்றவர்கள், உலகவங்கியின் திட்டத்தை வழிமொழிபவர்கள், ஜிண்டால் உள்ளிட்ட கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளின் பணத்தில் பொதுவாழ்வை சுத்தம் செய்ய வந்தவர்கள் .. .. என்பன போன்ற புறவயமாகத் தெரியும் உண்மைகளிலிருந்து ஹசாரே யார் என்பதை புரிந்து கொள்வது எளிய மக்களுக்கான வழி. அல்லது பகிரங்கமாக விவாதித்து முடிவுக்கு வரும் அறிவியல் பூர்வமான வழி.

“இலக்கியம்தான் எனது அரசியல்” என்று தேர்ந்து, அதன் வழியில் தேடிக் கண்டுணரும் அழகியல் உண்மையே அறுதி உண்மை என்று நம்பும் ஆன்மீகவாதிகள், தம் மனச்சாட்சியுடன் அந்தரங்கமாகப் பேசலாம். அல்லது தமது மனச்சாட்சியின் பவுதிக வடிவமான ஜெயமோகனுடனும் பேசலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.

2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலாபத்தில் இயங்கிவந்த ஏர்இந்தியா நிறுவனம், அதன் பின், குறிப்பாக 2004இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகுதான் நட்டமடையத் தொடங்கியது.  ஏர்இந்தியா நிறுவனம் தனது வியாபாரம் படுத்துப்போனதால் நட்டமடையவில்லை.  மாறாக, ஏர்இந்தியா நிறுவனத்திற்குரிய வர்த்தகச் சந்தையைத் தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததும்; தேவையேயில்லாத விதத்திலும் ஏர்இந்தியாவின் வருமானத்துக்கு மீறிய விதத்திலும் புதிய விமானங்களை வாங்கி அந்நிறுவனத்தின் கடன் சுமையை அதிகரித்ததும்தான் ஏர்இந்தியாவைப் போண்டியாக்கிவிட்டது.  ஏர்இந்தியா நிறுவனத்தை சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்துவது எனக் கூறிக்கொண்டு, காங்கிரசு கூட்டணி இந்தச் சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.

1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மைய அரசு திட்டமிட்டே புறக்கணித்து வந்தது.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மைய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.  மைய அரசின் இந்த திடீர் பாசத்தின் பின்னே ஏர்இந்தியாவின் நலன்களைவிட, அதன் அமெரிக்க அடிவருடித்தனம்தான் மறைந்திருந்தது.

2003ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த 43 உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தகக் குழு, ஏர்இந்தியாவிற்கு விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியது.  இக்கடிதத்தை பிரதம மந்திரி அலுவலகம் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த பின்தான் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 28 விமானங்கள் வாங்குவது தொடர்பான கோப்பு தூசி தட்டி எடுக்கப்பட்டது.  இச்சமயத்தில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில், எத்தனை விமானங்கள் வாங்குகிறீர்களோ, அதற்கு ஏற்றபடி விலையை அனுசரித்துத் தர முடியும் எனத் தூண்டில் போட்டது.

போயிங்கிடமிருந்து இக்கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த சில மாதங்களுக்குப் பின் பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 28 விமானங்களுக்குப் பதிலாக 38,149 கோடி ரூபாய் செலவில் 68 விமானங்களை போயிங் நிறுவனத்திடம் வாங்கும் ஆலோசனையை ஆகஸ்ட் 2004இல் முன்வைத்தது.  பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 2005இல் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இராணுவ ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்குச் செல்லவிருந்தார்.  அவரது இந்தப் பயணத்திற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்திய வெளியுறவுத் துறையைக் கேட்டுக் கொண்டதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

எனினும், விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தம் ஜூலை 2005க்கு முன்பாக முடிவாகவில்லை.  2005ஆம் ஆண்டின் இறுதியில்தான் கையெழுத்தானது.  குறிப்பாக, மன்மோகன் சிங் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பை நவம்பர் 6, 2005இல் ஏற்றுக் கொண்ட பின், அடுத்த 54ஆவது நாளில், அதாவது டிசம்பர் 30, 2005 அன்று இந்த ஒப்பந்தத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியும், பிரதமர் அலுவலகமும் அங்கீகரித்து ஒரே நாளில் கையெழுத்திட்டன.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த இரண்டு மாதங்களிலேயே, ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து ஏறத்தாழ 8,339 கோடி ரூபாய் செலவில் 43 விமானங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கும் ஒப்பந்தமும் முடிவானது.  அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வரவிருந்ததையொட்டியே, இந்த ஒப்பந்தங்களை முடிவு செய்வதில் இத்துணை வேகம் காட்டப்பட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியேற்ற பின், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்கா, கனடா மற்றும் அரபு நாடுகளுக்கும் விமானச் சேவைகளை வழங்கும் உரிமங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன.  அரபு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏர்இந்தியாவின் சந்தையை விழுங்கத் தொடங்கிய அதேசமயம், அரபு நாடுகள் ஏர்இந்தியா துபாய் வழியாக வட அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும் உரிமத்தை வழங்காமல் இழுத்தடித்தன.  இது மட்டுமின்றி, உள்நாட்டிலும் வருமானமிக்க வழித்தடங்களும், நேரங்களும் கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.  அதாவது, தனியார் பஸ் முதலாளிகளின் இலாபத்திற்காக அரசு போக்குவரத்துக் கழகம் மொட்டையடிக்கப்பட்டதைப் போல, ஏர்இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் மொட்டையடிக்கப்பட்டன.  இதனால் இந்த நிறுவனங்களின் வருமானம் குறைந்து, அவை நட்டத்தில் தள்ளப்பட்ட நேரத்தில்தான், வெளிச் சந்தையில் கடன்வாங்கியாவது ஏறத்தாழ 47,000 கோடி ரூபாய் பெறுமான இந்த 111 விமானங்களையும் வாங்கும் ஒப்பந்தத்தை முடிவு செய்தது, மைய அரசு.

இதற்கு முன்பாக விமானம் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்பொழுது, தனது நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, வாங்கும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும் விதியை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை விமான போக்குவரத்து அமைச்சகம் கடைப்பிடித்து வந்தது.  ஆனால், இம்முறையோ ஒப்புக்கொள்ளப்பட்ட 111 விமானங்களையும் வாங்கிக் கொள்ளும்படி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.  மேலும், விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் முடிவான பிறகு ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் ஒன்றாக இணைக்கும் முடிவும் அரசால் எடுக்கப்பட்டது.  விமானங்கள் வாங்குவதில் ஏற்கெனவே இருந்துவந்த நடைமுறையைப் பின்பற்றியிருந்தால்,  ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் ஒன்றாக இணைத்த பிறகு விமானங்களை வாங்கும் முடிவை எடுத்திருந்தால், நட்டத்தை ஒரு குறிப்பிட்ட அளவாவது குறைத்திருக்க முடியும் எனத் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது.

111 விமானங்களை வாங்கும் முடிவு, ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் இணைப்பது என்ற முடிவு  இவையிரண்டும் இப்பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன்தான் எடுக்கப்பட்டுள்ளன.  மார்ச் 2006இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது, போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அவருக்கு நினைவுப் பரிசைப் போல வழங்கப்பட்டது.  அதேசமயம், இந்த ஒப்பந்தங்களாலும், இணைப்பாலும் ஏர்இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தோடு இதனை ஒப்பிட்டால், ஏர்இந்தியா நிறுவனத்தைத் திட்டம் போட்டு நட்டத்தில் சிக்க வைத்த பிரதமர் மன்மோகன் சிங், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல் தொடங்கி அதிகாரிகள் ஈறாக இந்த நம்பிக்கை துரோகத்தோடு தொடர்புடைய அனைவர் மீதும் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், எதிர்க்கட்சிகளும், கார்ப்பரேட் பத்திரிகைகளும் இந்தச் சதித்தனம் பற்றி வாய்திறக்க மறுக்கின்றன.  அதேபொழுதில், இந்த நட்டத்தைக் காட்டி, இந்நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்திவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தைதான் மும்மரமாக நடத்தி வருகின்றன.

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்2ஜி விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் குறிவைத்துத் தாக்கிய பத்திரிகைகள், ஏர்இந்தியாவை நட்டத்திற்குள் தள்ளிவிட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, அவரே ஒரு பெரும் முதலாளி, பொருளாதாரப் பத்திரிகைகளுக்கு நெருக்கமான அன்பர் என்பதுதான் காரணம்.  2ஜி அலைக்கற்றை ஏலவிற்பனையில் நடந்த ஊழலைவிட, மிகப் பிரம்மாண்டமான அளவில் ஊழல் நடந்துள்ள கே.ஜி. எண்ணெய் வயல் ஊழலில் (பார்க்க: பு.ஜ; ஜூலை 2011) தொடர்புடைய முகேஷ் அம்பானியையும், பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் முரளி தியோராவையும் பத்திரிகைகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும், சி.பி.ஐ.யும், நீதிமன்றமும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அம்பானியின் பணபலமும் அரசியல் செல்வாக்கும் காரணமாகும்.  அவர்களின் இந்த செல்வாக்கு இவ்வூழல் தொடர்பான தணிக்கைத் துறையின் அறிக்கையை நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் அளிக்கும் அளவிற்குப் பா#ந்திருக்கிறது.

கார்ப்பரேட் பகற்கொள்ளை தொடர்பான ஊழல்களுள் ஒன்றிரண்டு மட்டுமே அரசியல் காரணங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன; எஞ்சியவை வெளியே தெரிந்த வேகத்திலேயே அமுக்கப்படுகின்றன என்பதற்கு ஏர்இந்தியா ஒப்பந்தம், கே.ஜி எண்ணெய் வயல் ஏலம், இஸ்ரோ ஊழல் எனப் பல உதாரணங்கள் நம் கண் முன்பே வலம் வருகின்றன.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

முந்தைய நாளன்று, ஆயிரம் பேர்கொண்ட படையினர் கிஷன்ஜியைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், ஆனால், இறுதி நேரத்தில் அவர் தப்பிவிட்டதாகவும் போலீசு செய்தி வெளியிட்டது. தோழர் கிஷன்ஜி நவம்பர் 23 அன்றே கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நவம்பர் 24 அன்று போலி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தோழர் வரவரராவ் குற்றம் சாட்டினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஏ.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் தலைவரும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்தா அரசு நியமித்துள்ள குழுவின் உறுப்பினருமான சுஜாதோ பத்ரோவும், வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் இது போலி மோதல் கொலை என்றே கூறியிருக்கின்றனர்.

இது போலி மோதல் கொலை அல்ல என்றும், குறிப்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ‘சுத்தமான’ நடவடிக்கைதான் என்றும் கூறியிருக்கிறார், மத்திய ரிசர்வ் போலீசு படையின் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார். போலீசின் வாய் சுத்தம் நாம் அறிந்ததுதான் என்பது ஒருபுறமிருக்க, விஜயகுமார் தமிழகத்தில் இருந்தபோது, அவர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை வீரப்பன் பிணத்தைச் ‘சுட்டுக் கொன்ற கதை’யும் நமக்குத் தெரியும்.

தோழர் கிஷன்ஜியின் உடலை அடையாளம் காண்பதற்காக நவம்பர் 26 அன்று மித்னாபூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற வரவரராவும், தோழர் கிஷன்ஜியின் அண்ணன் மகள் தீபாவும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக அவரது உடல் முழுதும் காயங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அவரது உடலில் 6 இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம் !

கிஷன்ஜி என்றழைக்கப்பட்ட தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ் ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள பெட்டபள்ளியைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே முற்போக்கு மாணவர் சங்கத்தைத் துவங்குவதில் முன்நின்றதாகவும், 1975 அவசரநிலைக் காலத்தின்போதே தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மக்கள் யுத்தக் குழுவிலும், பின்னர் ஒன்றுபட்ட மாவோயிஸ்டு கட்சியிலும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மூத்த தோழராக இருந்தபோதிலும், லால்கர் போராட்டத்தை ஒட்டித்தான் ஊடகங்களின் வாயிலாக அவர் அறிமுகமானார்.

லால்கர் போராட்டத்தின் போது, பொய் வழக்குகளில் போலீசால் கைது செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களை விடுவிக்கக் கோரி, அக்டோபர் 2009இல் சங்க்ரெயில் போலீசு நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்து, இன்ஸ்பெக்டர் அதீந்திரநாத் தத்தாவைப் பிணையக் கைதியாகப் பிடித்தனர் மாவோயிஸ்டுகள். 14 பழங்குடிப் பெண்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த போலீசு அதிகாரியையும் விடுவித்தனர். மார்க்சிஸ்டு அரசை இந்த நடவடிக்கை கொதிப்புறச் செய்தது. இந்நடவடிக்கையின் போது, ஒரு கட்டம் போட்ட கைத்தறித் துண்டால் தலையைப் போர்த்திக் கொண்டு, தோளில் துப்பாக்கி தொங்க, தொலைக்காட்சி காமெராவுக்கு முதுகைக் காட்டியபடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் ஒரு தோழர். ஒடிசலான உடல்வாகும், மென்மையான குரலும் கொண்ட அவர்,  ‘கிஷன்ஜி’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் பிப்ரவரி 2010இல், சில்டாவில் கிழக்குப் பிராந்திய ரைபிள்ஸ் முகாமின் மீது தாக்குதல் நடத்தி, 24 சிப்பாய்களைக் கொன்று, 47 நவீன ஆயுதங்களையும் மாவோயிஸ்டு படையினர் கொண்டு சென்ற போது, கிஷன்ஜிதான் இதற்கு காரணம் என்று போலீசு குற்றம் சாட்டியது. கிஷன்ஜிக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளை மே.வங்க அரசு முடுக்கி விட்டிருந்த நிலையிலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த வண்ணமிருந்தார். மார்க்சிஸ்டு அரசினால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால், “ஜங்கல் மகல் பகுதியிலிருந்து மத்தியமாநிலக் கூட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவோம், எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வோம், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என வாக்குறுதி அளித்த மம்தாவின் அரசுதான் கிஷன்ஜியைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு மன்மோகன், சோனியா, சிதம்பரம், மம்தா ஆகியோர்தான் பொறுப்பு என்றும் மம்தாவும் மத்திய அரசும் கூட்டாக நடத்திய சதியின் விளைவாகத்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் தோழர் அபய் குறிப்பிட்டிருக்கிறார்.

2004இல் ராஜசேகர் ரெட்டியுடனான பேச்சு வார்த்தையை முறிந்தவுடனே, நல்லமலா காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தோழர் ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ப.சிதம்பரம் நாடகமாடிக் கொண்டிருந்த போதே, கோப்ரா படையினரால் தோழர் ஆசாத் நயவஞ்சகமாகக் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிவில் உரிமை அமைப்பினர் சிலரை மம்தா அரசு நியமித்து, அவர்கள் இரண்டு சுற்றுகள் பேசிவிட்ட நிலையில், கூட்டுப்படைகள் தோழர் கிஷன்ஜியைப் பிடித்துக் கொலை செய்திருக்கின்றன.

அமைதி, சமாதானம், பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மாவோயிஸ்டு கட்சியின் தலைமையைக் கொன்றொழிப்பது, கட்சிக்குள் உளவாளிகளை ஊடுருவச் செய்வது என்ற உத்திகளையே மத்தியமாநில அரசுகளும் போலீசும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.   “கிஷன்ஜி பற்றிய தகவல்களை எங்களுடைய ஆதரவாளர்களே போலீசுக்கு கசிய விட்டிருக்கின்றனர். கடைசியாக நான் கிஷன்ஜியுடன் பேசியபோது, நம்முடைய ஆதரவாளர்களுக்குள்ளேயே எதிரிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் கூறினார்” என மாவோயிஸ்டு கட்சியின் மேற்கு வங்கச் செயலர் ஆகாஷ் தொலைபேசியில் கூறியதாக கொல்கத்தாவிலிருந்து வெளிவரும்டெலிகிராப் நாளேட்டின் (நவம்பர்,26) நிருபர் பிரணாப் மண்டல் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்குர், நந்திகிராம் மக்கள் போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து கொண்ட மம்தா பானர்ஜி, லால்கர் போராட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. லால்கரிலிருந்து துணை இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று சவடால் அடித்தார். ஆசாத்தின் கொலையைக் கண்டிப்பதாக நாடகமாடினார். ஜெயலலிதாவின் ஈழத்தாய் வேடத்தைப் போன்றதே மம்தாவின் இந்தப் ‘புரட்சி’ வேடம் என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து வைத்திருந்தன. வங்கத்து அறிவுஜீவிகள் சிலருக்குத்தான் அது புரியவில்லை.

மம்தா பதவிக்கு வந்தவுடன், கூட்டுப்படை நடவடிக்கையை நிறுத்தாதது மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு சல்வா ஜுடுமைப் போன்ற 10,000 பழங்குடி இளைஞர்களைக்  கொண்ட சிறப்புப் போலீசு படை அமைப்பதாக அறிவித்தார். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தூதர்களை நியமித்து மாவோயிஸ்டுகளுடன் பேசச் சொல்லிவிட்டு, மறுபுறம் தலைவர்களைக் குறிவைத்து அழிக்கும் திட்டத்தையும் முடுக்கி விட்டார். அதன் விளைவுதான் தோழர் கிஷன்ஜியின் படுகொலை.

தன்னுடைய வாழ்க்கையை மக்களின் விடுதலைக்கு அர்ப்பணிப்பதென்று முடிவு செய்து புறப்பட்ட தோழர் கோடேசுவர ராவ், இன்னல்மிக்க தலைமறைவு வாழ்க்கையை ஏற்று, புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, கடந்த நவம்பர் 27 அன்று தியாகி கிஷன்ஜியாக பெட்டபள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின் தனது மகனைப் பிணமாகப் பார்க்க நேர்ந்த அவரது தாய் மதுரம்மா நெஞ்சம் வெடித்துக் கதற, திரண்டிருந்த தோழர்கள் “தியாகி கிஷன்ஜிக்கு செவ்வணக்கம்” என்று முழங்க, ஆயிரக்கணக்கான மக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த தோழர் கிஷன்ஜி விடைபெறுகிறார்.

தலையில் போர்த்திய துண்டும், முதுகில் தொங்கும் துப்பாக்கியுமாக அவர் முன்னே செல்கிறார்.  தோழர் கிஷன்ஜியின் தியாகத்தைப் பின்தொடர்வோம்! வீரவணக்கம் தோழர் கிஷன்ஜி!

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

சில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை! ஒரு கொலை!!

சிலுக்கு
சில்க் ஸ்மிதா

முன்னுரை:

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாகக் கூறும் “டர்ட்டி பிச்சர்” படம் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களும், படைப்பாளிகளும் ஆளுக்கொரு உச்சு கொட்டி விட்டு சிலுக்கை நினைத்துக் கொண்டார்கள். சுமிதாவை தற்கொலைக்குத் தூண்டிய திரையுலகம் இன்றும் அப்படித்தான் இயங்குகிறது. சுமிதா தற்கொலை செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண்மணி உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டாள். அந்தக் கொலை வழக்கில் யாரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. ரூப் கன்வரை ஆண்டு தோறும் தொழும் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் குறையவில்லை. கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் 1997-இல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை படியுங்கள்.

–    வினவு

_____________________________________________

”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”

உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது. விதவை வாழ்க்கையின் துன்பங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒப்பிடும்போது ‘சிறிது நேரம் சிரமப்பட்டாலும்’ போய்ச் சேர்ந்து விடுவதே ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற உண்மையையும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

தமது விருப்பத்துக்கு விரோதமாக ஒரு பெண்ணை உடன்கட்டையேற்றக்கூடாது என்று கூறிய அந்தச் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட விதத்தை- உடன்கட்டையேறும் காட்சியை – எஸ்.ஸி. போஸ் (1881) கூறுகிறார்;

”நான் சிறுவனாக இருந்தபோது அத்தை உடன் கட்டையேறிய காட்சியை அழுது கொண்டே அம்மா என்னிடம் கூறியிருக்கிறாள்.

சவ ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தையிடம் வந்து உடன்கட்டையேற வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார். பயனில்லை. கொஞ்சம் தள்ளி நின்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினார். சிதையை 7 முறை சுற்றிவருமாறு புரோகிதர்கள் அத்தையிடம் கூறினர். ஒவ்வொரு சுற்று வரும்போதும் அவளுடைய கால்கள் தள்ளாடத் தொடங்கின. மயக்கமடையத் தொடங்கினாள். இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒரு முறை அத்தையிடம் வந்து பேசினார். அவளுக்கு எங்கே கேட்டிருக்கும்?

பிறகு அத்தையை சிதையின் மீது ஏற்றி கணவனின் பிணத்துக்கு அருகில் படுக்க வைத்தனர். ஒரு கையை கணவனின் தலைக்குக் கீழும், இன்னொரு கையை அவன் மார்பின் மீதும் வைத்து அணைத்தபடி படுத்திருந்தாள். ஹரி…. ஹரி… என்ற முனகல் அவள் வாயிலிருந்து கேட்டது.”

”பெண்ணே எழுந்திரு, உன் கணவன் இறந்து விட்டான். நீ அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன. இந்த உலகத்தில் உன் வாழ்க்கையைத் தொடர வந்துவிடு” என்று யாரேனும் ஒருவர் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம். யாரும் சொல்லவில்லை.

”அத்தையின் மீது உடனே விறகுகளை அடுக்கினார்கள். தடியான ஒரு ஆள் விறகுகளை ஒரு அமுக்கு அமுக்கினான். சிதையைச் சுற்றியிருந்த மூங்கில்கள் சடசடவென எரியத் தொடங்கின. ஒரு உடலும், இன்னொரு உயிரும் சாம்பலாகும் வரை சுற்றியிருந்தவர்களின் கத்தல் ஓயவில்லை.”

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்தக் கொடூரத்தை, கட்டாயப்படுத்தி நிறைவேற்றும் உரிமையை மன்னர்களும், புரோகிதக் கும்பலும் மன்றாடிக்கேட்டபோதும் பெண்டிங் செவிசாய்க்கவில்லை.

புரோகிதர்கள் தங்கள் மனுவில் குறிப்பிடாமல் விட்ட ஒரு சம்பிரதாயத்தை பெண்டிங் குறிப்பிட்டார். ”உடன் கட்டையேறும் தாயை உயிருடன் கொளுத்துவது மகனின் கடமை. ஒரு வேளை அவள் குழந்தையில்லாத இளம் விதவையாக (சிறுமியாக) இருந்தால், தன்னை யார் கொளுத்தவேண்டும் என்பதை அவள்தான் கூறவேண்டும்” என்பதே அந்த சம்பிரதாயம்.

சிலுக்கு ஸ்மிதா – ரூப்கன்வர் : ஒரு தற்கொலை ஒரு கொலை !
சதிமாதாவாக ரூப் கன்வர்

ரூப் கன்வருக்கும் மகன் இல்லை. அவளுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. எனவே அவளை உயிருடன் கொளுத்தும் பொறுப்பை மைத்துனன் ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் நூற்றுக்கணக்கான ராஜாபுத்திரர்கள் நின்று ‘சதிமாதா கி ஜெய்’ என்று ஆர்ப்பரிக்க அவன் ரூப் கன்வருக்குத் தீ வைத்தான். தீயின் நாக்குகள் தன்னைத் தீண்டத் தொடங்கியதும் அவள் சிதையிலிருந்து தப்பி ஓட முயற்சித்தாள். ஆனால் கையில் வாளுடன் சிதையைச் சுற்றி நின்ற ராஜபுத்திர இளைஞர்கள் அவள் தப்பிவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இவையெல்லாம் பம்பாய் பத்திரிகையாளர் குழுவொன்று சம்பவம் நடந்தவுடனே தியோரலா சென்று நேரில் திரட்டிய செய்திகள். ரூப் கன்வருக்கு போதைமருந்து கொடுத்திருந்தார்கள் என்பதும் அவர்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு.

சுடுகாட்டுக்குப் பெண்கள் செல்வது ‘இந்து’ பாரம்பரியம் இல்லையே. ரூப் கன்வர் ஏன் சென்றாள்? அவளை புடவை, நகைகள்  அணிவித்து அலங்கரித்தவர்கள் யார்?

அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு முன்னால் அவளுடைய பெற்றோருக்குக் கூட செய்தி தெரிவிக்காததன் மர்மம் என்ன? என்று பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. எனினும் கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லையென்ற காரணத்தால் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. போலீசு தரப்பு சாட்சிகளே தங்கள் கூற்றை மறுத்து விட்டதால் வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி.

”நீதி வென்றது. ஒரு வேளை அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்திய ராணுவத்தின் ‘ராஜபுத்திரர் ரெஜிமென்ட்’ கலகத்தில் இறங்கியிருக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் தியோரலாவின் ராஜபுத்திரர்கள்.

”இதுவரை 8 ‘சதி’ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்காக ஆஜராகியிருக்கிறேன். எல்லாவற்றிலும் நான்தான் ஜெயித்தேன். யாரும் தண்டிக்கப்பட்டதில்லை” என்று மார்தட்டுகிறார் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்.

”குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்காக போலீசு திட்டமிட்டே வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகளை உருவாக்கி வைத்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் மகளிர் அமைப்பினர்.

”நீதிபதி மனம் வைத்திருந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வாய்ப்பு இந்த வழக்கிலேயே இருந்தது” என்று முனகுகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள்.

”மகளிர் அமைப்பினர் சொன்னதைக் கேட்டு இதைக் ‘கொலை வழக்கு’ என்று பதிவு செய்ததுதான் தவறு. ”தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற குற்றப்பிரிவில் வழக்கு போட்டிருந்தால் ரூப்கன்வர் கொளுத்தப்பட்ட போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் உள்ளே தள்ளியிருக்கலாம். ‘சதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்களும் தற்கொலையைத் தூண்டும் குற்றத்தை செய்தவர்களே’ என்று கூறும் உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்று ஏற்கனவே உள்ளது ”என்று புது வியாக்கியானம் தருகிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள்.

”தியோரலா சம்பவத்துக்குப் பிறகு ‘சதி’க்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ரொம்பக் கடுமையானது. ‘சதியை ஆதரிப்பவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் இச்சட்டத்தின் மூலம் தண்டித்துவிட முடியும். எனவே இனி குற்றவாளிகள் தப்ப முடியாது” என்கின்றனர் ராஜஸ்தான் அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட இடம் சதி ஸ்தல் என்ற புனிதத் தகுதியுடன்தான் இருந்து வருகிறது. ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட நாளில் ஆண்டு தோறும் ‘சுன்ரிமகோத்ஸவ்’ என்ற விழா நடத்தப்பட்டுதான் வருகிறது. முதல் ஆண்டு விழாவில் ராஜஸ்தான் பா.ஜனதா முதல்வர் செகாவத் பங்கேற்றார்.

‘பாரம்பரியமிக்க’ தலைப்பாகையுடன் கையில் வாளேந்திய ராஜபுத்திர இளைஞர்கள் தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் அடுத்த சதிமாதாவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

______________________

சிலுக்கு
சில்க் ஸ்மிதா

தமிழ்த் திரையுலகம் அடுத்த சில்க் ஸ்மிதாவைத் தேடிக்கொண்டிருக்கிறது. கற்பும் விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே!

கொலையா தற்கொலையா என்ற ஆராய்ச்சி இங்கேயும் தொடர்கிறது. இருப்பினும் தற்கொலைதான் என்று கோப்பினை மூடிவிட்டது காவல்துறை. தற்கொலை என்றே வைத்துக்கொண்டால் ரூப் கன்வரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளைப் பிடிக்க முடியாதது போலவே, ஸ்மிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லையாம்.

ஆனால் இறந்த மறுநாளே ஸ்மிதா உயிர்த்தெழுந்தாள்- பத்திரிகைகளிலும், திரையரங்குகளிலும். ஆனால் இப்பொழுதும் அவளுக்கு முழு ஆடையை அனுமதிக்க பத்திரிகைகள் தயாராக இல்லை. இருப்பினும் எல்லோரும் கண்ணீர் வடிக்கத் தவறவும் இல்லை. அது வேசியைச் சாகக் கொடுத்த விடுதிக்காரியின் கண்ணீர். தரகுக் காசை இழந்த தரகனின் கண்ணீர். அவளுடன் கழித்த நாட்களை எண்ணி வாடிக்கையாளன் வடிக்கும் கண்ணீர். கண்ணீர் வற்றியது. தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப் போதிய ஆதாரமில்லாததால், எது காரணம் என்ற உளவியல் ஆய்வில் இறங்கினார்கள்.

”ஸ்மிதாவுக்குப் போதிய படிப்பறிவு இல்லை அதுதான் காரணம்” என்றார் நடிகை சுகாசினி. இனி கல்வியறிவு இல்லாத யாரையும் கவர்ச்சி நடிகையாக்கக் கூடாது என்றுதான்  கோடம்பாக்கத்தின் முடிவோ! அல்லது விபச்சாரம், அவமானம், ஆணாதிக்கம், முகத்துதி, துரோகம், நடிப்பு, நயவஞ்சகம் போன்ற திரையுலகின் அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டு உயிரோடிருப்பதற்குத் தேவையான அறிவைக் கல்வி அளித்துவிடுமா?

இதே- நியாயத்தை ரூப் கன்வருக்கும் பொருத்தலாம். தீயில் வெந்தது அவளுடைய மூடநம்பிக்கையின் விளைவு என்று வழக்கை முடித்து விடலாம். அதைத்தான் ராஜபுத்திரர்களும் விரும்புகிறார்கள். ”உடன் கட்டைப் பழக்கத்திற்காக இந்து மதத்தை ஏன் சாடுகிறீர்கள்? எல்லோருமா உடன் கட்டை ஏறுகிறார்கள்” என்று கேட்கிறார்கள் இந்து சனாதனிகள். ”ஸ்மிதாவின் தற்கொலைக்காகத் திரையுலகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள், எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்?” என்பதுதான் சுகாசினி வகையறாவின் வாதம். சாக்கடையைக் குற்றம் சொல்லாதீர்கள். கொசுவர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை கிருமிகளுக்கும், புழுக்களுக்கும் இந்தச் சாக்கடை வாழ்வளிக்கிறது!

ஸ்மிதா போன்ற கல்வியறிவற்றவர்கள் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க தாய்லாந்தின் முன்னுதாரணத்தைக் கோடம்பாக்கமும் பின்பற்றலாம். தாய்லாந்தில் எயிட்ஸ் நோயைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள்தான் என்பதால் லட்ச ரூபாய் கொடுத்தாலும் அமெரிக்க வாடிக்கையாளரை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்களாம் தாய்லாந்தின் படிப்பறிவற்ற விலைமாதர்கள். கல்வியறிவற்ற விலை மாதர்களால் தோன்றியுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்களுக்கு ‘எயிட்ஸ் கல்வி’ அளிக்கும் பொருட்டு விளக்கப் படங்களுடன்  கூடிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளதாம் ஒரு தொண்டு நிறுவனம்.

அமெரிக்கர்கள்தான் எயிட்ஸ் பேர்வழிகள் என்பது தவறு. யார் வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம். எனவே அமெரிக்கர்களை மட்டும் புறக்கணிப்பது தவறு. நாம் எச்சரிக்கையாக இருப்பதும், ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்வதும்தான் தீர்வு என்கிறது அந்த எயிட்ஸ் ‘கல்வி’ நூல்.  எயிட்சுக்கெதிரான அமெரிக்கப் பிரச்சார முழக்கமும் இதுதான்; ”விளையாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; ஆனால் பாதுகாப்பாக விளையாடுங்கள்”

இதைத்தான் சுகாசினியும் சொல்கிறார். ஆனால் தியோரலாவின் ராஜபுத்திரர்கள் கேட்கிறார்கள், ”பாதுகாப்பாகக் கொளுத்துவது எப்படி?”

___________________________________________

புதிய கலாச்சாரம்,  ஜனவரி – 1997.

________________________________________   

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!

ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்தில் ருபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.

முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். – நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான ‘நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்’ பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது. போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.

அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப் படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.

முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலைபேசிகளும், 9/11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.

1969 இல் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான ‘தி சன்’ என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.

இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சர்யம்தான் உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் – அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த ‘ரகசியம்’தான்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.

பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.

செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல, வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின. சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.

முர்டோச் தொடங்கி வைத்த வழிமுறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. ‘கதைகள்’ கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தேயிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப்போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் ‘பாப்பராஸி’ என்றழைக்கப்பட்டனர். பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் ‘சுயதொழிலாக’ உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியிதும் 90களின் செய்திகள்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் – அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

முர்டோச்சின் ஊடக நிறுவங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.

இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை ‘தினமலர்’ திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், ‘இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்’, ‘இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது’ என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச். சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப் படவேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.

ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில்தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.

போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை. போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்ன பதில் என்றோ யாரும் கேட்கவில்லை.

பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன. ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின் தலால். (மதமா – வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).

தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோக் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.

எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்பவைக்கப் படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு ‘சுபம்’ போட்டு முடிக்கப் பார்க்கின்றன.

ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு ‘குற்றங்கள்’ என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூட தொடவில்லை என்பதே உண்மை.

அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்துமீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் ‘ப்ரைவசி’ மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!நியூஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் ‘தலையை’ மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்பொரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.

அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொறுத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பி வளைக்க வேண்டும் – அதற்கு நியூஸ் கார்ப்பொரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப்பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுகிறதில்லை.

ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கான லைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் ‘Breaking News’ மற்றும் ‘Exclusive News’ போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்பு பாணி செய்திகள் சுவை கூட்டின.

செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து ‘டைம்ஸ் நௌ’, ‘என்.டி.டி.வி.’, ‘ஐ.பி.என்.’, ‘டி.வி.9’, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.

லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின. ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.

மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.

நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனை முறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.

அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.

____________________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச  நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர்  தாக்கல் செய்தார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். “”சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது”  என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

“”பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை” என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை.  இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.

“”சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் வாங்கிவிட்டதாக” அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.

சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக்பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.

“”சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரைமறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்” என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர்.  பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.

பின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “”இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.

பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு  மாற்றியிருக்கிறார் மோடி.  “”தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக”  கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.

2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.

மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.

குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான  குஜராத்  வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டு விட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் “இரகசிய அறிக்கை’யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)

கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் “நினைவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். “”உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.

சஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !இனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை” என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது “அரசாங்க இரகசியத்தை’ அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.

இனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதாபாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ் ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிறது, மோடி அரசு.

சட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்ஷு பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட  இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா,  “”கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள்  முயற்சிப்பதாக” குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை.  அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.

ஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.

சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ்விவரங்கள் நமக்குத் தேவை.

இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும்  எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச் சாலை!

லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது,  ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும்  2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்  என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் ஆப்கான் சூறையாடப்பட்டது. அதற்கு முன்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் பேரழிவுக்கான ஆயுதங்களை அழிப்பது  என்ற பெயரில் ஈராக் சூறையாடப்பட்டது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, “மனித உரிமைகளைக் காப்பது” என்ற பெயரில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக லிபியா சூறையாடப்பட்டுள்ளது. அன்று, இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து உலகெங்கிலும், ஏன் அமெரிக்காவிலேயே கண்டனங்களும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால், லிபியா மீதான போர்த் தாக்குதலுக்கு எதிராக அவ்வாறு பரவலாக ஆர்ப்பாட்டங்கள் தொடரவில்லை. எதிர்ப்புகளை நீர்த்துப்போக வைக்கும் உத்தியுடன் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது.

இராக், ஆப்கான் போலின்றி, அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் லிபியாவிலேயே விசவாசக் கூலிப் படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு  ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்தன. கடாபியின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளயிடவும் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் ‘கடாபியின் சர்வாதிகாரம்  மனித உரிமை மீறல்’ என்று ஏகாதிபத்தியங்கள் பெருங்கூச்சல் போட்டன.

லிபியாவில் எண்ணெய்வளம் பொதுச் சொத்தாக  நாட்டுடமையாக இருந்தது.  கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தபோதிலும் இதர ஆப்பிரிக்க  மேற்காசிய நாடுகளைப் போல எண்ணெய் வளத்தைத் தனியார்மயமாக்கவில்லை.  பல்வேறு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த சேமநல அரசாக கடாபியின் ஆட்சி நீடிப்பதை ஒழித்து, தனியார்மய கார்ப்பரேட்மய ஆட்சியை நிறுவ ஏகாதிபத்தியங்கள் விழைவதுதான், லிபியாவில் ‘மனித உரிமை மீறலுக்கு எதிரான போராக’ சித்தரிக்கப்பட்டது.

லிபியாவில் அரச படைகளுக்கும் அதை எதிர்த்துப் போராடும் கலகப் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்பது உள்நாட்டுப் போர்தானே தவிர, அது மனித உரிமை மீறல் விவகாரமோ, மனித இனப் படுகொலையோ அல்ல என்று ஆப்பிரிக்க ஒன்றியம் ( ஏ.யூ.) அமெரிக்காவின் வாதத்தையும் போர்த்தாக்குதலையும் எதிர்த்து பலமுறை கண்டனம் தெரிவித்தது. உள்நாட்டுப் போரின் வன்முறையை இனப்படுகொலையாகச் சித்தரித்து அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் தாக்குதல் நடத்துவதென்பது, நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது என்று அது குற்றம் சாட்டியது. ஆப்பிரிக்க ஒன்றியத்தை நடுவராகக் கொண்டு லிபியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறும், சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறும் ஐ.நா.விடம் கோரியது. கடாபியும் ஆப்பிரிக்க ஒன்றியம் முன்வைத்த திட்டத்துக்கு இசைந்தார். ஆனால், லிபியாவிலுள்ள அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகளும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இதனை ஏற்க மறுத்து தாக்குதலை நடத்தின.

லிபியாவில் உள்நாட்டுப் போர் மூர்க்கமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலை நியாயப்படுத்த,  “ நாங்கள் தாக்குதல் நடத்த இன்னும் ஒரு நாள் தாமதத்திருந்தால் பென்காசி நகரமே மயானமாக மாறியிருக்கும்; அந்த வட்டாரமே படுகொலைப் பிரதேசமாக மாறியிருக்கும்; பின்னர் உலகின் பொதுக்கருத்து எங்களுக்கு எதிராகத் திரும்பி,  நாங்கள் மனித உரிமையைக் காக்கத் தவறியவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்போம்” என்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் கூச்சலிட்டார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்று முன்பு அமெரிக்க அதிபராக இருந்த புஷ் கூசாமல் புளுகிக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்ததைப் போல, இப்போது லிபியா மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க புஷ் வழியில் அண்டப்புளுகை ஒபாமா அவிழ்த்துவிட்டார். அவரது முதல்நிலை உதவியாளரோ, ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கடாபியின் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூசாமல் புளுகினார். முதலாளித்துவ ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி லிபியாவில் இரத்த ஆறு ஓடுவதாகப் பீதியூட்டின.  ஆனால், பென்காசி நகரில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக ஒபாமா கூறியதற்கும், ஊடகங்களால் பீதியூட்டப்பட்ட செய்திகளுக்கும் இதுவரை எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

அதேசமயம், நேடோ படைகளும், அவற்றின் விசுவாச  லிபியக்  கூலிப்படைகளும்தான் அப்பட்டமான மனிதத்தன்மையற்ற படுகொலைகளில் ஈடுபட்டன. நேடோ படைகளின் தாக்குதலால் ஏறத்தாழ 50,000 லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் வீடுவாசல் இழந்து அகதிகளாகி நிற்கின்றனர். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளும், குறிப்பாக அமெரிக்க ஆதரவு நைஜீரிய அதிபரும் கூட இப்படுகொலைகளைக் கண்டித்துள்ளனர். தொடரும் வன்முறைத் தாக்குதல்களால் போரில் சிக்கிய அப்பாவி லிபிய மக்களும், அண்டை நாடுகளிலிருந்து  லிபியாவில் பிழைப்புக்காக வந்த கருப்பின மக்களும் அகதிகளாகி, லிபியாவிலிருந்து  ஐரோப்பாவை நோக்கி படகில் தப்பிச் சென்றபோது, அவர்களைக் காப்பாற்ற எந்த ஏகாதிபத்தியமும் முன்வரவில்லை.

ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா நாட்டின் கருப்பினத் தந்தைக்குப் பிறந்த மகனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரான ஒபாமா, அக்கருப்பின அகதிகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித நேயம், மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நேடோ படைகளோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் உணவின்றி தண்ணீரின்றி பட்டினியாலும் நோயாலும் மாண்டுபோனார்கள்.

இனப்படுகொலையும் மனித உரிமை மீறலும் ஒரு நாட்டில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி,  சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் அமெரிக்க  ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இனி நேரடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் என்பதும், லிபியாவைப் போன்ற கதி இனி உலகின் பிற ஏழை நாடுகளிலும் நிகழும் என்பதும் இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

அமெரிக்க விசுவாசக் கூலிப்படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவின் எல்.ஆர்.ஏ.  என்ற அரசு எதிர்ப்பு அடிப்படைவாத பிற்போக்கு கலகக் கும்பலை வீழ்த்த, “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் அமெரிக்க இராணுவப் படைகள் உகாண்டாவில் நிறுத்தப்பட்டன. இதுமட்டுமின்றி, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டு, அந்நாடுகளின் “பாதுகாப்புக்கும் நிலைத்த தன்மைக்கும் இப்படைகள் உதவும்” என்று அறிவித்துள்ளார், ஒபாமா. லிபியா மறுகாலனியாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலி, சாட், நைஜர், பெனின், போஸ்ட்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, செனகல், மொசாம்பிக், கானா, மாலாவி முதலான ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. “எரிபொருள் விநியோகமுறையைப் பாதுகாப்பது” என்ற பெயரில் நைஜர் டெல்டா பகுதியிலும், கினியா வளைகுடாவிலும் அமெரிக்காவும் நேடோ கூட்டணிப் படைகளும் இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பெருமளவு மூலதனமிட்டு செல்வாக்கு செலுத்தும் சீனாவை வெளியேற்றிவிட்டு, மூல வளங்களைக் கைப்பற்றி மேலாதிக்கம் செலுத்துவது என்ற திட்டத்துடன்  வட ஆப்பிரிக்கப் பகுதியில் அமெரிக்கா நிரந்தரமாகப் படைகளை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய கண்டத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு விசுவாசமாக இருப்பதால், இப்பிராந்தியத்தில் பிரச்சினை இல்லை. மேற்காசியாதான் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சிக்கலாக இருந்து வந்தது. இதில் இராக்கும் ஆப்கானும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேற்காசியாவில் அடுத்ததாக சிரியாவில் லிபியாவைப் போன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. அதைத் தொடர்ந்து இரான் மீது குறிவைத்துள்ளது.

ஆப்கானில் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்,  இவர்களில் 1780 பேர் அமெரிக்கர்கள் என்றும் சி.என்.என். தொலைக்காட்சி கூறுகிறது. ஆனால், லிபியாவில் அத்தகைய இழப்புகள் எதுவுமில்லை.  லிபியாவில் தனது தரைப்படைத்  துருப்புகளை நிறுத்தாமல் ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கா வெற்றியைச் சாதித்துள்ளது. தமது விசுவாசக் கூலிப்படைகள் மூலமாகவும், அவற்றுக்கு ஆதரவாக வான்வழி  கடல்வழியே போர்த்தாக்குதலை நடத்தியும் லிபியாவை ஆக்கிரமித்துள்ளது, அமெரிக்கா.  இது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்புடைய புதிய உத்தியாக அமைந்துள்ளதால்,  இந்தப் பாணியில் ஆக்கிரமிப்புப் போரையும் மேலாதிக்கத்தையும் நிறுவ அவை துடிக்கின்றன. அமெரிக்காவின் துணை அதிபரான ஜோ பிடன், “இப்போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்களைச் செலவிட்டது. ஆனால், ஒரு அமெரிக்கன்கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலின்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கிய விசயம் இது” என்கிறார்.  ஒரு அமெரிக்கன்கூட சாகவில்லைதான்; ஆனால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தாக்குதலாலும் கூலிப் படைகளாலும் 50,000க்கும் மேற்பட்ட லிபிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்களே, அவர்கள் மனிதர்கள் இல்லையா? ஏழை நாடுகளின் மனித உயிர்கள் மயிருக்குச் சமம் என்பதுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் இப்போரின் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ள செய்தி.

எல்லாவற்றுக்கும் மேலாக, லிபியாவின் அதிபர் கடாபியின் தலைக்கு விலை வைத்து, கடாபியைக் கொல்லுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தார், அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி கிளிண்டன். இப்படி ஒரு நாட்டின் அதிபரையே கொல்லுவோம் என்று அறிவிப்பது மனித உரிமைக்கு எதிரான அப்பட்டமான கிரிமினல் குற்றம். இருப்பினும், இக்காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து நாகரிக உலகின் எந்த நாடும் வாய்திறக்கவில்லை. லிபியாவின் அதிபராக இருந்த கடாபி, அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் திரிபோலியிலிருந்து சிர்டே நகருக்குத் தப்பிச் சென்றபோது, அவரது வாகனம் நேடோ படைகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டதும்,  அமெரிக்க விசுவாசக் கூலிப்படையினர்  அவரைச் சிறைபிடித்துச் சித்திரவதை செய்து கோரமாக கொன்றொழித்துள்ளனர். போர்க்கைதிகளைக் கொல்லக்கூடாது என்ற ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல் இது.

கடாபியின் இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள், அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐ.நா.மன்றத்திடமும் அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகத்திடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும், அவை எதுவும் ஏற்கப்படவில்லை. கடாபியின் உடலை அரை நிர்வாணமாக்கி இழிவுபடுத்தியதோடு, இறைச்சிக் கூடத்தில் கிடத்தி கெட்டழுக வைத்து அவமானப்படுத்தி, அதைப் புகைப்படம் எடுத்து, அக்காட்டுமிராண்டித்தனத்தைப் பெருமிதமாகக் கொண்டாடின, நேடோவின் கூலிப்படைகள். அன்று காலனியாதிக்கவாதிகள் விடுதலைப் போராளிகளைப் பொது இடத்தில் தூக்கில் போட்டு பிணத்தை வல்லூறுகள் தின்ன விட்டதைப் போல, கடாபியை இழிவுபடுத்திக் கொன்றொழித்துள்ளதன் மூலம் உலகில் யாராவது இத்தகைய ஆக்கிரமிப்பை எதிர்த்தால், இந்தக் கதிதான் ஏற்படும் என்று இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உன்னதத்திற்கு உதாரணமாகக் காட்டப்படும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நாகரிகமும், மனிதநேயமும், ஜனநாயகமும் உயிரினும் மேலானதாக மதிக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை பரப்பப்படுகிறது. இது வெறும் பிரமை என்பதை லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு  ஆக்கிரமிப்புப் போரும் கடாபியின் படுகொலையும்,  அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சூறையாட ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துள்ள புதிய வடிவிலான காலனியாதிக்க ஆக்கிரமிப்புத் திட்டங்களும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியங்கள் ஏறத்தாழ 50,60 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றிய நவ காலனிய போர்த்தந்திர உத்தியை இப்போது கடாசி எறிந்துவிட்டு, புதிய வடிவிலான அப்பட்டமான காலனியாதிக்கத்தை மறுகாலனியாதிக்கத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.

காட்டுமிராண்டித்தனம், சூறையாடல், இனவெறி, ஆக்கிரமிப்பு, போர்வெறி முதலான மத்தியகாலத்தின் இழிந்த பண்புகளை இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கவாதிகள் போற்றிப் புகழ்கின்றனர். நாடு பிடிக்கும் போர்களை நடத்திய நெப்போலியனும் அலெக்சாண்டரும் இப்போது அவர்களின் குலதெய்வங்களாகியுள்ளனர்.

லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேடோ கூட்டணிப் படைகள் ஆக்கிரமிப்புப் போரை தொடுத்ததும், பிரான்சின் போலி சோசலிசக் கட்சியின் மூத்த தலைவரான டொமினிக் ஸ்டாரஸ்கான், “ வடக்கே ஆர்டிக் துருவத்தின் பனிப்பகுதியிலிருந்து தெற்கே சகாரா பாலைவனத்தின் மணற்பகுதிவரையிலான பிராந்தியம் இனி ஐரோப்பா கண்டமாகத் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் மத்தியத் தரைக்கடலை இனி ஐரோப்பாவின் உள்நாட்டுக் கடலாக மாற்ற வேண்டும். நாடு பிடிக்கும் போரில் ரோமானியர்களும் நெப்போலியனும் சாதித்ததைப் போல, ஆப்பிரிக்கக் கண்டத்தை  மீண்டும் அபகரிக்க வேண்டும்” என்று தனது காலனியாதிக்க வெறியை வெளிப்படையாகக் கக்கினார். “ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியாவைத் தனது காலனியாக வைத்திருந்த பிரான்ஸ், அல்ஜீரியா அன்னியக் காலனி அல்ல என்றும், அது பிரான்சின் புறக்கடைப் பிராந்தியம் என்றும் அன்று அறிவித்தது. அதைப்போன்ற நிலை இனி ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகும்” என்று அவர் பூரிப்புடன் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர், பேரழிவு ஆயுதங்களை ஒழித்தல், போக்கிரி அரசுகளைத் தண்டித்தல், ஜனநாயகம்  மனித உரிமையை நிலைநாட்டுதல், போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாத்தல் என்ற முகாந்திரங்களையும் நியாயவாதங்களையும் முன்நிறுத்தி ஏழை நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கவும், படையெடுக்கவும், அவற்றைத் தனது மறுகாலனியாக்கவும், அதற்காக முந்திக் கொண்டு தாக்கவும் தனக்குச் சிறப்பு உரிமை உண்டு என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்காதான் உலகின் முதல் எதிரி என்பதை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. இதுவரை காணாத காட்டுமிராண்டித்தனமும் கொடூரமும் நவீனமும் கொண்ட புதிய உத்தியுடன் போர் தொடுத்து, ஏழை நாடுகளை மறுகாலனியாக்கிவரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசையும் அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் உலகெங்குமுள்ள  உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வீழ்த்த வேண்டிய உடனடிக் கடமையை லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர் மீண்டும் வலியுறுத்துகிறது.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

50
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!
ஜெயலலிதா – சசிகலா

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.

அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.

திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.

90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.

பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.

இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.

இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.

இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.

இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?

இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.

இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.

90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.

எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.

மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.

இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.

அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைகள். இதில் சசிகலா கும்பல் முடிவெடுத்திருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது.

ஒட்டு மொத்தமாக பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை நியாயப்படுத்துவதற்காகவே பார்ப்பன ஊடங்கள் சசிகலா கும்பலை மட்டும் குறிவைத்து தாக்குகின்றது. மேலும் பார்ப்பன புரோக்கர்கள், பா.ஜ.க முதலான பார்ப்பனியக் கட்சிகளும் சசிகலா கும்பலை வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுக்கின்றன. இது புதுப் பணக்காரன் பரம்பரைப் பணக்காரன் மேல் கொண்டிருக்கும் பகையைப் போன்றதுதான். அ.தி.மு.க ஒரு பார்ப்பனியக் கட்சி என்பதோடு தரகு முதலாளிகளின் கட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்து சாதித்திருப்பவர் ஜெயலிலிதா எனில் அதற்கு பொருத்தமான தொண்டர் குண்டர் ரவுடி படைகளை உருவாக்கி தீனி போட்டு உள்ளூர் தளபதிகளை வைத்து அ.தி.மு.கவின் மக்கள் முகத்திற்கு உருவம்கொடுத்தது சசிகலா கும்பல்தான்.

இப்படித்தான் இரண்டின் நலனும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைத்திருக்கின்றன. இதில் சசிகலாவை தவிர்த்து மற்ற ஊழல் தளபதிகளை நீக்குமாறு பார்ப்பன ஊடகங்கள் கோரவில்லை. ஏனெனில் அந்த் தளபதிகளெல்லாம் அம்மா காட்டும் திசையில் ஐந்தடி பள்ளத்தில் விழுந்து வணங்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இடையில் சசிகலா கும்பல் புரட்சித்தலைவியன் கிச்சன் காபினெட்டாக இருப்பதுதான் அவர்களுடைய கவலை. அதனால்தான் மன்னார்குடி கும்பலை தூக்கி எறிந்து விட்டு பார்ப்பனர்களின் கிச்சன் காபினெட்டை திணிக்க அவர்கள் துடிக்கிறார்கள்.

அதன் பொருட்டே சசிகலா நீக்கத்தை அவர்கள் விண்ணதிர கொண்டாடி மகிழ்கிறார்கள். இதன் மூலம் பாசிச ஜெயாவின் குற்றங்களுக்கு அவர் காரணமில்லை என்று சொல்வதன்மூலம் அவரது காட்டு தர்பார் நடவடிக்களை தொடருவதற்கு மக்களிடையே ஒரு நல்லெண்ணப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார்கள். பார்ப்பன ஊடகங்களின் இந்த சதியை நாம் புரிந்துகொள்வதோடு முறியடிப்பதும் அவசியம்.ஃ

நம்மைப்பொறுத்த வரை ஜெயா சசிகலா கும்பல் என்பது ஜெயாவின் தலைமையில் இயங்கக்கூடிய ஒரு பாசிச கும்பல்தான். ஒட்டு மொத்தமாக இந்த கும்பலை தூக்கி ஏறிவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டுமே அன்றி நல்ல பாம்புகளுக்கிடையே கெட்ட பாம்பு, ‘நல்ல பாம்பு’ என்று தேடுவது அறிவீனம். அப்படி தேடச்சொல்லி தமது நலனை நியாயப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களை பலரும் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் என்றால் அதை ஒரு கிசுகிசு நடவடிக்கைகள் போல கற்றுத்தரும் இந்த ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து நாம் விடுபடுவதும், மக்கள் நலனிலிருந்து அரசியல் என்றால் என்னவென்று புரிந்து கொள்வதும்தான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள உதவும். பதிவுலகில் பலரும் இதை ஒரு கிசுகிசு நடவடிக்கையாக பேசி விவாதிப்பது பலன்தராது. மாறாக பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகவே அவை மாறும்.

________________________________

தொடர்புடைய பதிவுகள்:

‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 11

”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். கிறித்துவ – முசுலீம்கடைகளில்அவரவர்தெய்வங்கள்மட்டும்இருக்கும். மேலும்அவர்களுடையமதப்பெயர்களைமறைத்துவிட்டு, ஸ்டார், சந்திரிகா, டீலக்ஸ், கோல்டு, இந்தியா, சங்குமார்க்என்றுபொதுவானபெயர்களைகடைகளுக்குவைத்துக்கொள்கிறார்கள். எனவேஇந்துஉணர்வைக்காட்டும்வகையில், இந்துக்கள்அனைவரும்இந்துக்கடைகளிலேயேபொருள்வாங்கவேண்டும்.”

வருடா வருடம் தீபாவளியின்போது இந்து முன்னணி வெளியிடும் துண்டுப் பிரசுரம்

முசுலீம் எதிர்ப்பு வெறியில் இந்துமதவெறியர்களின் முரண்பாடான பிதற்றலைப் பாருங்கள். சிறுபான்மையினர் தங்கள் கடைகளில் அவரவர் தெய்வங்களை வைத்தால் மதவெறி என்கிறார்கள். கடைப் பெயர்களை மதப்பெயரின்றி ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’ எனப் பொதுவாக வைத்தால் ‘ஒளிந்து கொள்வதாக’க் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் சிரித்தாலும் குற்றம்; அழுதாலும் குற்றம்.

தமிழகத்தில் 80-களுக்குப் பிறகு இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ்.கும்பல் பரப்பி வரும் பிரபலமான விசமப் பிரச்சாரங்களில் இது முக்கியமானது. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்துப் பரவி வரும் இந்நஞ்சை நாம் முறியடிப்பது அவசியம். இன்று வரையிலும்  இந்து, முசுலீம் உழைக்கும் மக்களிடையே இணக்கமான சமூக உறவு மதபேதமின்றி நிலவி வருகிறது.

ஏழு பார்ப்பனப் பெண்களையும், இரண்டு பார்ப்பனக் குழந்தைகளையும் காப்பாற்றும முயற்சியில் உயிர் துறந்த சையது – பக்ருதீன் என்ற பெரியவரின் சமாதிதான் புதுக்கோட்டை, திருமயத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பாவா பள்ளி வாசலாகும். இதற்கு தொண்டைமான், சேதுபதி போன்ற அரசர்கள் ந்னகொடை அளித்தனர். ஆண்டுதோறும் நிகழும் சந்தனக்கூடு விழாவில் அவ்வட்டாரத்தின் கள்ளர் சாதியினர்தான் பெரும்பங்கு வகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தர்காக்கள், நாகூர், வேளாங்கண்ணி, மாரியம்மன் கோவில்களிலும் இத்தகைய சூழ்நிலையைப் பார்க்க முடியும். மதவேறுபாடின்றி உழைக்கும் மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்களாக இவை விளங்குகின்றன. நோன்புக் கஞ்சியும், அம்மன்கூழும் மக்களிடம் இயல்பாகப் பரிமாறப்படும்.

உழைக்கும் மக்களிடையே இத்தகைய சமூக உறவுகள் இருந்த போதிலும் இந்து – முசுலீம் இரு மதங்களிலும உள்ள மேல்சாதி மேட்டுக் குடியினர் இப்படி இயல்பாக ஒன்று கலப்பதில்லை. தமது மதப்புனித ஆச்சாரத்தில் தனித்து நிற்கவே விரும்புகின்றனர். அம்மன், சுடலைமாடன் கோவில்களை ‘சிறு தெய்வ வழிபாடு’ என்று பார்ப்பன மேல்சாதியினர் இகழ்கின்றனர். தர்காக்களுக்கு இசுலாத்தில் இடமில்லை என இசுலாமியப் பழமைவாதிகள் தடை போடுகின்றனர். இவர்களிடமிருந்துதான் இருமத அடிப்படை வாதமும் எழுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்து மதவெறியர்களின் ‘வர்த்தக அரசியலை’ப் பரிசீலிப்போம்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இசுலாமியப் பெயர் வைத்தால் தங்கள் வர்த்தகம் பிரபலமடையாது என்பதால்தான் இசுலாமிய வியாபாரிகள், திரையுலக நடிகர்கள் தங்களது மத அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்கிறார்கள். அல்லது அவர்களில் சிலரது மதச்சார்பற்ற உணர்வுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை மதத்தினரிடம் வளர்க்கப் படும் வகுப்புவாத உணர்வும், வெறியுமே இதற்கு அடிப்படையான காரணம்.

‘இந்துக்களிடமே’ இல்லாத விநாயகர் ஊர்வலத்தை தூத்துக்குடியிலும், திண்டுக்கல்லிலும் முசுலீம்கள் மாலை போட்டு வரவேற்றார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் சில ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கின்றன. தமது மதக் கோட்பாட்டைத் தாண்டி புதிதாகப் பல இடங்களில் இசுலாமியர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் இந்து மதவெறி குறித்த அவர்களது அச்சம்.

ஒரு கடையில் தெய்வங்கள் படம் வைப்பதும், வைக்காததும் அவரவர் விருப்பம். கிறித்தவமும், இசுலாமும் ஓரிறைக் கோட்பாட்டு மதங்கள் என்பதால் பொதுவாக வேறு கடவுளர்களை அவர்கள் வணங்குவதில்லை. மேலும் ‘ஒரு கடவுள் கொள்கை’ என்பது புராதன இனக்குழு – வழிபாட்டிலிருந்து பிறந்து வளர்ந்து முன்னேறிய மதத்தின் முக்கியமான அம்சமாகும். சாதியத்தில் வேறூன்றியிருக்கும் பார்ப்பனிய இந்துமதம் – மதம் என்ற வகையில் பின்தங்கியே இருக்கிறது. காரணம் அது பல கடவுள் மதமாக இருக்கிறது.

இந்து மதத்தில் ஏற்கனவே முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கும்போது அல்லாவையும், இயேசுவையும் சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை. மேலும் இந்து வியாபாரிகளின் கடையிலிருக்கும் கடவுளர்கள் கூட சாதிக்கேற்பவே மாறுபடுவார்கள். மதுரை வீரன், முனியாண்டி, சுடலைமாடன், இசக்கி, மாரியாத்தா போன்ற  சூத்திர – பஞ்சமச் சாமிகளை – ஐயர், ஐயங்கார், சைவப்பிள்ளை, ரெட்டி, நாயுடு, முதலியார் கடைகளில் பார்க்க முடியாது. பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்காக கருணாநிதியை வம்படியாக அழைக்கும் இராம.கோபாலன், ஆத்தாளுக்குப் படைக்கப்படும் ஆட்டுக்கறியை என்றைக்கும் உண்ண மாட்டார்.

இந்தக் ‘கடைப் பிரச்சினை’யின் மையம் என்ன? ஒரு வியாபாரியின் நோக்கம் லாபம் ஈட்டுவதுதான். தமது மதத்துக்குச் சேவை செய்வது அல்ல. அதைப் போல வாங்குகின்ற நுகர்வோருக்கு பொருளின் தரம், மலிவு விலை, கடைக்காரர் அளிக்கும் சேவை – இவைதான் முக்கியம். தத்தமது மதக் கடைகளில் வாங்கினால் ‘சொர்க்கம்’ கிட்டும் என்பதல்ல.

கடை வைத்து விற்பனை செய்யும் இந்துக்களைவிட வாங்குகின்ற நுகர்வோரான இந்துக்கள்தான் கோடிக்கணக்கில் அதிகம். இங்குதான் கீதா ரகசியம் போன்ற சூட்சுமம் உள்ளது. பொருள் வாங்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களின்’ நலனை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்து முன்னணியும் தமது முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அப்படி வைப்பதாக இருந்தால் ‘இந்துக்களுக்கு மட்டும் விற்பனை செய், இந்துக்களுக்கு மட்டும் தள்ளுபடி கொடு’ என்று இந்து முதலாளிகடம் கேட்க வேண்டும். கேட்காததற்குக் காரணம், பார்ப்பன, பனியா தரகு முதலாளிகள்தான். இவர்களே ஆர்.எஸ்.எஸ். கும்பலின் எசமானர்களாக உள்ளனர். ‘எங்கள் இந்து முதலாளிகள் லாபம் பார்க்க இந்துக்களே உதவுங்கள்’ என்று அவர்களால் கோர முடியாது. அதனால்தான் ‘இந்து உணர்வைக் காட்டும்  வகையில் இந்துக் கடைகளில் வாங்குங்கள்’ என்று மக்களிடம் கோருகின்றனர். ஆக, இந்து உணர்வு மக்களுக்கும், வியாபாரத்தின் இலாபம் முதலாளிக்கும் சரியாகப் போய்ச் சேருகின்றது. மொத்தத்தில் முதலாளி ஆதரவு, முசுலீம் வெறுப்பு, மக்களிடம் மதமெறி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கின்றனர்.

இந்து மதவெறியர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், மதப்பிரிவினையால் தமது இலாபத்தை இழக்க முதலாளிகளும், வியாபாரிகளும் தயாராக இல்லை. முசுலீம் – கிறித்தவர்களுக்கு விற்காதே, ரம்சான், கிறிஸ்துமஸ், புத்தாண்டில் தள்ளுபடி விற்பனை செய்யாதே என இந்து முன்னணி தங்கள் முதலாளிகளிடம் கேட்க முடியுமா? புற்றீசல் போல் இந்தியாவை மொய்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களை ‘கிறித்தவன்’ எனத் தடை போட முடியுமா? வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயை ‘இசுலாமியப் பெட்ரோல்’ என்று ஒதுக்க முடியுமா? முன்பு விலையேற்றத்தைத் தடுக்க வெங்காயத்தை ஈரானிலிருந்தும், சர்க்கரையை பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்தது பா.ஜ.க. அரசு. வெங்காயம், சர்க்கரையை மட்டும் வெட்கம் கெட்டுத் தின்னலாமா?

இப்படி ‘வியாபாரத்தில்’ இந்து மத வெறியைத்  திணித்தால் சிக்கல் அவர்களுக்குத்தான். பொருள் வியாபாரத்தில் மட்டுமல்ல, ‘உழைப்பு வியாபாரத்திலும்’ இந்து உணர்வைப் புகுத்தினால், கீழ்க்கண்டவற்றை இந்து முன்னணி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

‘இந்துக்களே துபாய்க்கும், சவுதி அரேபியாவுக்கும் போகாதீர்கள்’ என்று தடுக்க வேண்டும்; சென்னை – அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இராப்பகலாக வரிசையில் நின்று ‘கிறித்தவ’ அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் பார்ப்பன அம்பிகளைப் பிடித்து உதைக்க வேண்டும். கிறித்தவன் கடையில் பொருள் வாங்குவதைவிட அவன் நாட்டிற்குக் கைகட்டிச் சேவகம் செய்வது இழிவில்லையா? மாறாக அமெரிக்காவிலிருக்கும் அம்பிகளிடம் வசூல் செய்வதற்கென்றே பல்வேறு பினாமி அமைப்புகளை அங்கே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.

இவையெல்லாம் போகட்டும், பார்ப்பன – பனியா – மார்வாடி முதலாளிகள் தங்கள் பொருள்களை ‘கிறித்தவப்’ பெயர்களில் விற்கிறார்களே, அதையாவது தடுக்கலாமே? டி.வி.எஸ்.அய்யங்கார் அறிமுகப்படுத்தியிருக்கும் சாமுராய், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வண்டிகளெல்லாம் இந்துப் பெயர்களா? விஜய் மல்லையாவின் மெக்டோவல், பிளாக்நைட் போன்ற சாராய அயிட்டங்களுக்கு ராமன் – கிருஷ்ணன் என்று பெயர் மாற்றக் கேட்டுப் பார்க்கலாமே? ஆணுறைகளில் கூட, நிரோத், பியல்டா, டியூரக்ஸ், மூட்ஸ் போன்ற கிறித்தவ சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு, காமசூத்ரா போன்ற இந்து மணம் கமழும் ஆணுறைகளைத்தான் வாங்க வேண்டும் என்று இந்து முன்னணி தட்டி எழுதி வைக்க வேண்டாமா?

வியாபாரிகளை இந்து – முசுலீம் எனப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து வியாபாரிகளைச் சாதிவாரியாகப் பிரிக்கத் தயாரா? பார்ப்பனர், பனியா, மார்வாடி, சேட், செட்டியார் போன்ற சாதிகள் மட்டுமே தரகு முதலாளிகளாக இருக்கும் மர்மம் என்ன?

– தொடரும்.

_________________________இதுவரை …………………………………………..

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! ரிபோர்ட்!

கஸ்டு புரட்சி – அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

பழைய பேப்பர்கடையில் சேர்ந்திருக்கும் சில கோடி டன் அச்சிடப்பட்ட செய்திக்காகிதங்கள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் விளம்பர வருவாய், நாடு தழுவிய அளவில் அதிகரித்த மெழுகுவர்த்தி மற்றும் தேசியக்கொடி உற்பத்தி போன்ற உடனடி விளைவுகளைத் தவிர, மேற்படி புரட்சி சாதித்தது என்னவென்பதை நாம் அறியோம்.

ஊழல் மட்டுமல்ல, விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலம் பறிப்பு, தனியார்மய – தாராளமயக் கொள்ளைகள், சாதிவெறி வன்கொடுமைப் படுகொலைகள், இந்து மதவெறி பாசிசம் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இணைந்ததுதான் நமது நாட்டு மக்களின் அரசியல் சமூக வாழ்க்கை. ஹசாரே எனும் மீட்பர் இந்த நாட்டின் மற்றப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் என்ன கருதுகிறார்? குஜராத்தில் மோடி அமல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களும், அவரது ஊழலற்ற ஆட்சியும் தனக்குப் பிடித்திருப்பதாக ஹசாரே சொன்னபோதுதான், ஆர்.எஸ்.எஸ். மண்டைகள் கருப்புத் தொப்பிகள் மட்டுமின்றி காந்தித் தொப்பிகளும் அணியக்கூடும் என்ற உண்மை பலருக்குத் தெரிய வந்தது.

ஹசாரேயின் பேச்சுகளைக் கேட்டு அவரைப் புரிந்து கொள்வதை விட, அவருடைய ஊரைப் பார்த்து, அதிலிருந்து அவரைப் புரிந்து கொள்வது எளிதல்லவா? காந்திய வழிமுறைகளைக் கையாண்டு அந்தக் கிராமத்தையே ஒரு மாதிரி கிராமமாகவும் சொர்க்கபுரியாகவும் மாற்றியிருக்கிறார் அண்ணா ஹசாரே என்றும், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் அறம் சார்ந்த தகுதியை அதுதான் அவருக்கு வழங்கியிருப்பதாகவும் அவருடைய பிரச்சாரகர்கள் முழங்கி வருவதால், அந்த மெக்காவைத்தான் பார்த்துவிடுவோமே என்று யாத்திரை கிளம்பினோம்.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு
பஸ் வசதி இல்லாத ஊரை முற்றுகையிடும் மீடியா கேரவேன்கள்

அண்ணா ஹசாரே டெல்லியிலிருந்து ராலேகான் திரும்பிய ஐந்தாவது நாள், நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம். ராலேகான் சித்தி மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டதைச் சேர்ந்த கிராமம். சரியான பேருந்து வசதி இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் காந்திய சொர்க்கம் பற்றி சொன்னவர்கள் எவரும் மேற்படி சொர்க்கத்துக்கு ஒழுங்கான பேருந்து வசதியில்லை என்பதைச் சொல்லவில்லை. கிராமத்தில் கால் வைத்ததும் நாங்கள் கண்டது நேரடி ஒளிபரப்பு வசதிகள் கொண்ட அதிநவீனமான நான்கு மீடியா வேன்களைத்தான். அண்ணா ஹசாரேவின் அங்க அசைவுகள் அனைத்தையும் இந்திய நடுத்தர வர்க்கம் தரிசிக்க உதவும் ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு அவை நின்று கொண்டிருந்தன. உள்ளே வடநாட்டு ஓட்டுநர்களும் செய்தியாளர்களும் சாவகாசமாக பாலிவுட் குத்துப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஊரின் முகப்பில் ஐந்தாறு கடைகளே இருந்தன. தேநீர்க்கடைக்குச் சென்றோம். உடன் வந்த தோழர் மராத்தியில் தேநீருக்குச் சொல்லிக் கொண்டிருந்தபோது காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டோம். கடையின் முன்னே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் ரசித்து ரசித்து பீடி இழுத்துக் கொண்டிருந்தார். என்னது..? சொர்க்கத்திலேயே திருட்டு தம்மா… என்கிற ஆச்சர்யம் தாக்க, எமது புகைப்படக் கலைஞர் கேமராவைப் பிரிக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சட்டெனச் சுதாரித்து பீடியைத் தூர எரிந்தார். தான் புகைப்பிடித்ததை அண்ணா ஹசாரேவிடம் சொல்லி விடுவீர்களா என்று எங்களை அச்சத்தோடு வினவினார். இல்லையென்று சமாதானப்படுத்தினோம். “இந்த கிராமத்தில் புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ இல்லை; அவற்றை விற்பதும் இல்லையென்று சொன்னார்களே..?” என்று நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமலேயே இடத்தைக் காலி செய்தார். ‘நிம்மதியா ஒரு பீடி இழுக்க முடியாமல்’ கெடுத்துவிட்ட எங்களை அவர் சபித்திருக்கக்கூடும்.

நாங்கள் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் ஆவதாக’ சொன்னார். அதுவும் அண்ணா தொலைகாட்சியில் பிரபலமான பின் நிறைய பேர் கிராமத்துக்கு வருவதாகவும், அதனால்தான் இந்தளவுக்கு வியாபாரம் சூடுபிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அங்கே மக்களின் நலவாழ்வை முன்னிட்டு அண்ணா தடை செய்திருப்பதாக சொல்லப்படும் புகையிலை, சிகரெகட் போன்றவற்றை வெளியாருக்கு தெரியும்படி விற்பதில்லை. உள்ளூர்காரர்களுக்கு மட்டும் மறைவாக விற்பதை புரிந்து கொண்டோம். ‘பீடி குடிப்பது பிரச்சினையில்லை; ஆனால், அது வெளியாருக்குத் தெரிந்து குடிப்பதுதான் பிரச்சினை’ என்கிற வினோதமான ஒழுக்கநெறியை வியந்து கொண்டே கிராமத் தகவல் மையம் செல்வதற்கான வழியை கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டோம்.

ஏற்கனவே தகவல் மையம் நோக்கி கோட்சூட் அணிந்த மாணவர் பட்டாளம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகத் துடிப்புடன் காணப்பட்ட ஆஷிஷ் என்கிற மாணவரிடம் பேச்சுக் கொடுத்தோம். தாங்கள் பூனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், எம்.சி.ஏ. படித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிற்சாலை சுற்றுலாவாக இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார். தொழிற்சாலைகளே இல்லாத ராலேகான் சித்திக்கு தொழிற்சாலை சுற்றுலாவா? ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்ற வந்துள்ளீர்கள் என்று விசாரித்தோம்.

ஒரு குறும்பான புன்னகையுடன் எம்மை நோக்கியவர், “இதெல்லாம் சும்மா தமாஷ் தலிவா… ஒரு ஜாலி ட்ரிப் அவ்வளவுதான்” என்றார்.

“அண்ணா ஹசாரேவைப் பார்த்தீர்களா?” என்றோம்.

“ஆங்… பார்த்தோமே… எங்களுக்கு நிறைய நல்லொழுக்க போதனைகள் எல்லாம் கொடுத்தாரே…”  என்றார்.

“ஓ… அப்படின்னா நீங்க இன்றிலிருந்து ஒரு காந்தியவாதி ஆகப் போகிறீர்களா?” என்று சிரிக்காமல் கேட்டோம்.

எங்களை முறைத்தவர், “ஆர் யூ க்ரேஸி? இதெல்லாம் சும்மா ஒரு ஜாலி; வந்தமா என்ஜாய் பண்ணமா; போனமான்னு இருக்கணும். ரொம்ப சீரியஸா எடுத்துக்கக் கூடாது” என்று ஒரு வியாக்கியானமும் கொடுத்தார்.

ஆங்கில சானல்களில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை ஆதரித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியவர்கள், காமெராவின் முன் ‘பாரத்மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டவர்கள், இதோ எங்களுடன் பேசும் ஆஷிஷ்.

“சரி… அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் ஊழலை ஒழித்து விடும் என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டோம்.

“இல்லை..” என்று சிரித்தார். ஏனென்று கேட்டோம்.

“பாஸ்… திஸ் ஈஸ் இண்டியா. நம்ம காலத்துலேன்னு இல்லைங்க; நம்ம பேரன் பேத்தி காலத்திலும் ஊழல் இருக்கும். அப்பவும் ஒரு ஹசாரே வருவார். டி.வி.ல பரபரப்பா வரும். எல்லாம் இப்படியே நடக்கும். ஆனா, ஊழல் மட்டும் ஒழியாது” என்று முடித்தார்.

“அப்படின்னா அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் என்னதான் பயன்?” என்றோம்.

“இப்பப் பாருங்க, இவர் ஒரு பெரியாள் ஆகியிருக்கார். அரசியல்வாதிங்க அப்டியே இவரைப் பார்த்து மிரள்றாங்க. இப்படி ஒரு விஷயம் இருக்கணும் பாஸ். அப்பத்தான் சரியா இருக்கும். அரசியல்வாதி இருக்கான், ஊழல் இருக்கு, லஞ்சம் இருக்கு… அப்படியே அண்ணாவும் இருந்துட்டுப் போகட்டுமே..?”

இந்த தத்துவத்தை மென்று செரிப்பதற்குள் தகவல் மையம் எதிர்ப்பட்டது. அது மூன்று பெரிய ஹால்களைக் கொண்ட ஒரு கான்க்ரீட் கட்டிடம். உள்ளே அண்ணா ஹசாரே பல்வேறு தலைவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், ராலேகான் சித்தியில் நடந்துள்ள பணிகளின் புகைப்படங்களும் அழகாக வைக்கப்பட்டிருந்ததன. ஏர் சுமக்கும் விவசாயி, மண்வெட்டி வேலை செய்யும் விவசாயி, கிராம பஞ்சாயத்தின் மாதிரி வடிவம் போன்றவற்றை அழகான பொம்மைகளாக வடித்து வைத்திருந்தனர். ஏசி குளிரூட்டப்பட்ட அறைக்குள் விவசாயம் சிலுசிலுவென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு
பொம்மையாகிப் போன விவசாயத்துடன் போட்டோ செஷன் – மீடியா சென்டர் பில்டப்புகள்

வந்திருந்த மாணவர்கள் இந்தப் பொம்மைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். விவசாயம் பற்றியும் அதில் மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், கடன்கள், தற்கொலைகள், அழிந்துப் போன குடும்பங்கள் என்று எதைப் பற்றியும் கேள்விப்பட்டிராத அவர்கள், ராலேகான் விஜயம் குறித்து பீற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்கள் வருகையை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டியது அருவருப்பாக இருந்தது.

நாங்கள் தகவல் மையத்தின் பொறுப்பில் இருந்தவரிடம் உரையாடினோம். கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் இருப்பதாகவும், விவசாயமும் விவசாயம் சார்ந்த கூலி வேலைகளுமே பிரதானம் என்றும் குறிப்பிட்டார். கிராமத்தில் தொன்னூறு சதவீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். அருகிலேயே அண்ணா ஹசாரே நிர்மானித்த உறைவிடப் பள்ளி ஒன்று இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சொன்னார். காந்திய சொர்க்கத்திலும் காசுக்குத்தான் கல்வி எனும் யதார்த்தம் முகத்திலறைந்தது.

மேற்படிப்பு பற்றி விசாரித்தோம். கிராமத்தில் இருந்து சுமார் பதினைந்து பேர் வரை டாக்டர்களாகி இருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவருமே இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் என்றும் சொன்னார். குறைந்த மதிப்பெண் பெறும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் ரூபாய் மூன்று – நான்கு லட்சங்கள் கொடுத்து பொறியியல் படிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அகில இந்திய மட்டத்தில் லஞ்ச ஊழலை எதிர்த்து வீரச்சமர் புரிந்து கொண்டிருக்கும் அண்ணாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த “தகுதி”யற்ற மாணவர்கள் பணம் கொடுத்து சீட் வாங்குகிறார்களாம். அண்ணாவின் அகராதிப்படி இது லஞ்ச ஊழலில் சேருமா, கட்டணத்தில் சேருமா அல்லது நன்கொடையா என்று தெரியவில்லை.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போரில் அவரோடு கைகோர்த்து நிற்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் பலர் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் முன்நின்றவர்கள். அவர்கள் எத்தனை பேருக்கு ராலேகான் சித்தியில் இருந்து மருத்துவர்களாகியிருப்பவர் எல்லாம் இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் என்பது தெரிந்திருக்கும்? தொடர்ந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றியும் கேட்டோம். குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள் என்றும், அவர்களே விவசாயக் கூலிகளாகவும் இருப்பதாகச் சொன்னவர், ஆண்களின் கூலி ரூ.200 என்றும் பெண்களின் கூலி ரூ.150 என்றும் தெரிவித்தார் தகவல் மையத்தின் பொறுப்பாளர்.

அதே போல், ராலேகான் சித்தியில், உயர்சாதி மராத்தாக்கள் சிலரிடம் மட்டுமே நிலம் குவிந்திருப்பதும், தலித்துகளான மகர்கள் பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருப்பதும் தெரியவந்தது. மராத்தாக்களிலேயே சில குடும்பங்களிடம் குறைவாகத்தான் நிலம் இருந்தது. இதுதான் அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவத்தின் உண்மையான யோக்கியதை. ‘அண்ணா வருவதற்கு முன் ராலேகான், வந்த பின் ராலேகான்’ என்று வருபவர்களுக்கெல்லாம் தகவல் மையத்தில் பிலிம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரு குழி நிலம் கூட மறுவிநியோகம் செய்யப்படவில்லை என்பதே உண்மை. அண்ணா வருமுன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது நில உடைமை. பல இலட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கும் தகவல் மையத்தின் பளபளப்பில் உண்மையைக் காண முடியாது என்பதால், ஊருக்குள் இறங்கி நடந்தோம்.

ஞான் தேவ் பாலேகர் என்கிற உள்ளூர் இளைஞர் (மாராத்தா சாதி) எம்மோடு இணைந்து கொண்டார். ராலேகான் சித்தியில் நடக்கும் திருமணங்கள் பற்றி அவரிடம் விசாரித்துக் கொண்டே நடந்தோம். ராலேகானில் திருமணங்கள் எளிமையாக நடக்கும் என்றும், வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கிடையாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கிடையே சாலையின் இடது புறம் மற்ற வீடுகளின் மத்தியில் ஒரு சிதிலமான குடிசை தென்பட்டது.

இது யாருடையது, ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்று விசாரித்தோம். “இது மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருவருடைய குடிசை” என்றார்.

“ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது?” என்று கேட்டதற்கு, “ஓ… அதுவா, அவர் மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில் இப்படி ஏழையாகி விட்டார்” என்றார்.

“ராலேகான் சித்தியில் வரதட்சணை கிடையாது, திருமணம் எளிமையாக நடக்கும் என்றெல்லாம் சொன்னீர்களே?” என்று திரும்பவும் கேள்வி எழுப்பினோம்.

“ஆங்… அது வந்து… வரதட்சணை இல்லைதான்… ஆனால், விருப்பப்பட்டு செய்வார்களில்லையா?” என்றவர் எங்கள் பார்வையைத் தவிர்த்துக் கொண்டார்.

‘கம்பெல் பண்ணி வாங்குறதில்லை சார். விருப்பப்பட்டு அவங்களா கொடுக்கிறத வாங்கிக்குவோம்’ என்று சொல்கிறார்களே, அவர்களெல்லாம் அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டத்தின்படி ஊழல் பேர்வழிகளா இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. நாங்கள் அந்தக் குடிசையில் இருந்த முதியவரிடம் பேச முயற்சித்தோம். “இப்போது நேரமில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று தந்தி வாக்கியங்களில் கத்தரித்தார்.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு
வரதட்சிணை கொடுத்து போண்டியானவரின் குடிசை

நாங்கள் அந்த சமயத்திலும் அதன் பின்னும் கவனித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ராலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊரைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிம்பத்தைக் குலைக்கும் விதமான பதில்களை அவர்கள் வெளியாரிடம் சொல்வதில்லை. பொதுவாக ‘இங்கே எல்லாம் நன்றாகத்தான் உள்ளது’ என்பது எந்தக் கேள்விக்கும் தயாரான பதிலாக வருகிறது. குறிப்பான விஷயத்தை நுணுகிக் கேட்டால் ஒன்று தவிர்க்கிறார்கள் அல்லது மழுப்புகிறார்கள்.

இதற்கு சற்று முன்பு மதிய உணவு சமயத்திலும் இதே அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில், இடதுசாரிகள் ராலேகான் சித்தியில் இறைச்சி தடை செய்யப்பட்டிருப்பதாக அவதூறு சொல்வதாகவும், தானே ராலேகானில் குளத்து மீன் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் மீன் உணவு பற்றி அங்கிருந்த இரண்டு உணவகங்களில் கேட்ட போதும் ‘இல்லை’ என்கிற மறுப்பு விறைப்பாக வந்தது. ஆனால், காலையில் தேனீர் குடித்த கடையில் மறைவாக மட்டன் மசாலா தொங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்காமல் இல்லை. மட்டன் மசாலா ஊழலா, அதை மறைப்பது ஊழலா என்பது குறித்து ‘அண்ணா’யிசத்தில்தான் விடை தேட வேண்டும்.

ராலேகானில் அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசன வசதி பற்றி ஞான்தேவ் வெகு உயர்வாகப் பேசினார். அண்ணா உருவாக்கிய தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பயன்கள் அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கே கிடைத்திருப்பதை நேரில் காண முடிந்தது.

சில பணக்கார மராத்தாக்களிடமே பெரும்பாலான நிலம் குவிந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமம் என்பதால், நிலமற்றவர்களான தலித் மக்கள், மராத்தா நிலச்சுவான்தார்களைச் சார்ந்தே இருக்கின்றனர். அண்ணாவின் பக்தர்கள் சொல்லும் ‘தலித்’ மேம்பாடு என்பதன் மெய்யான பொருள் இதுதான்.

இதற்கிடையே கிராமக் கமிட்டியின் உதவித் தலைவர் வீட்டை அடைந்தோம். உள்ளே ஒரு புதிய மாடல் இண்டிகா விஸ்டா கார் நின்று கொண்டிருந்தது. பெரிய முற்றம். அதன் இருபுறமும் தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபது ஜெர்சி பசுமாடுகள் நின்று கொண்டிருந்ததன. உதவித் தலைவரின் தாயாரை சந்தித்தோம். வேலைக்கு உள்ளூர்காரர்களை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம். “உள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் நகரங்களுக்குக் கூலி வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். இங்கே அக்கம்பக்கத்து கிராமத்தவர்கள்தான் கூலி வேலைக்குக் கிடைக்கிறார்கள்” என்றார். கூலி பற்றி கேட்டதற்கு, வருடத்திற்கு முன்னூறு கிலோ தானியமும் ஐயாயிரம் ரூபாயும் கொடுப்பதாகச் சொன்னார்.

ஞான் தேவிடம் உள்ளூர்காரர்கள் நகரங்களுக்குக் கூலிகளாகச் செல்வது பற்றி விசாரித்தோம். நிலமற்ற ஏழைகளுக்கு உள்ளூர் கூலி கட்டாததால் பெரு நகரங்களில் டிரைவர்களாகவோ, சித்தாள்களாகவோ அல்லது அது போன்ற வேலைகளுக்கோ சென்று விடுவதாகச் சொன்னார். அவர் சொன்ன விவரங்களில் இருந்து தமிழகத்தின் வறண்ட மாவட்டமான தர்மபுரியிலிருக்கும் ஒரு கிராமத்தை விட, ராலேகான் சித்தி எந்த வகையிலும் உயர்ந்ததாகத் தெரியவில்லை

ஞான்தேவிடம் பசுவதை பற்றிக் கேட்டோம். தாங்கள் பசுக்களைக் கொல்வதில்லை என்றும் அதற்கும் அண்ணாவின் வழிகாட்டுதல்கள்தான் காரணமென்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “அப்படியானால் வயதான பசுக்களை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர், “அவற்றையெல்லாம் மகர்களிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதை பாரனேரியில் இருக்கும் சந்தையில் அடிமாடாக விற்றுவிடுவார்கள். நமக்கு ஏன் அந்தப் பாவமெல்லாம்?” என்று முடித்தார். ஆதிக்க சாதியினர் அமல்படுத்தும் இந்த ‘கொல்லைப்புறக் கொலை வழியை’, அதாவது பெஞ்சு கிளார்க் மூலம் லஞ்சம் வாங்கும் புனிதர்களான நீதிபதிகளின் வழியை, அண்ணா ஹசாரேதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாராம்.

மெல்ல ஞான்தேவைத் தவிர்த்து விட்டு நாங்கள் மகர் குடியிருப்பை நோக்கிச் சென்றோம். ஊரும் சேரியும் தனித்தனியேதான் இருந்தன. அது நமது கிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கு எந்தவிதத்திலும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அண்ணா, ராலேகானின் தலித்துகளுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கைத் தரத்தை உண்டாக்கித் தந்திருப்பதாகச் சொல்லப்படும் கட்டுக்கதைகளின் உண்மையான யோக்கியதையை அங்கே நேரிடையாகப் பார்த்தோம்.

முதலில் எதிர்பட்ட வீட்டின் வாசலில் முதிய பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மெலிந்து சுருங்கிய உடலில் கிழிசலான சாயம் போன புடவை ஒன்றைச் சுற்றியிருந்தார். பூஞ்சையான கண்களில் இலக்கில்லாத பார்வை ஏதோ கேள்வியுடன் எங்களை வெறித்தது. நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். பொக்கை வாயெங்கும் சிரிப்புடன் எங்களை உள்ளே அழைத்து அமரச் சொன்னார். அவரெதிரே மண்தரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அவரது பெயர் சவித்ரா சீமா ஜாதவ். கணவர் இறந்து விட்டார். ஒரே மகன். அவரும் வெளியூரில் கூலி வேலைக்குச் செல்வதாக தெரிவித்தார்.

அது பத்துக்குப் பத்து அளவில் ஒரே அறை கொண்ட வீடு. தரை சாணி போட்டு மொழுகப்பட்டிருந்தது. சிதிலமான சுவர்களில் சிமெண்டுப் பூச்சு இல்லை. வீட்டினுள் வறுமை தலைவிரித்தாடியது. ஒரே கட்டில். துருப்பிடித்து இற்றுப் போன நிலையில் ஒரு இரும்பு பீரோ, கீழே விழும் நாளை எதிர்நோக்கி நின்றது. அந்த பீரோவின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே வெகு சொற்பமான சாயம் போன துணிமணிகள் நேர்த்தியாக மடித்து அடுக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள் என்று பார்த்தால் இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும் அளவுக்கே இருந்தன. அந்த வீட்டுக்கு மின்சார இணைப்பு இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு புகைபடிந்த குண்டு பல்பு போடப்பட்டிருந்தது.

நாங்கள் ஊடகங்களில் ராலேகான் சித்தி பற்றி சொல்லப்படுவதற்கும் இவரது நிலைமைக்கும் உள்ள முரண்பாட்டை விசாரித்தோம். தங்களுக்கு விதிக்கப்பட்டது இவ்வளவு தானென்று சொன்னவர் தங்கள் குடும்பத்திற்கென்று விவசாய நிலம் ஏதுமில்லையென்றும், தனது மகன் கூலி வேலைக்குச் செல்வதாகவும், அதில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார். தகவல் மையத்தில் 200 ரூபாய் கூலி என்று சொன்னது பச்சைப் பொய்.

தொடர்ந்து பேசியதில் அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதில்லையென்றும், வெளியூருக்குச் செல்லும்போது பிள்ளைகள் அசைவம் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார். குடியும் கூட அப்படித்தானென்று குறிப்பிட்டார். தனது ஏழ்மை காட்சிப் பொருளாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. குடும்பத்தின் ஏழ்மையான நிலை பற்றியோ கிராமத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புப் பற்றியோ கேள்விகள் வைத்தபோது நேரிடையாக பதிலளிப்பதையோ எங்கள் முகத்தைப் பார்ப்பதையோ தவிர்த்தார்.

அதே நேரத்தில் அந்த மக்களின் வாழ் நிலைமைகள் பற்றி வெளி உலகத்தில் சொல்லப்படும் கதைகளைக் கேட்ட அவர் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. அண்ணாவின் சீடர்கள் இணையவெளியெங்கும் இரைத்து வைத்துள்ள ராலேகான் பற்றிய சித்தரிப்புகளில் சிலவற்றை நாங்கள் அவரிடம் சொன்னபோது ஒரு எள்ளல் சிரிப்போடும் பதிலேதும் சொல்லாமலும் கேட்டுக் கொண்டார். நாங்கள் அவரிடம் விடை பெற்ற போதும் அதே சிரிப்போடு எங்களை அவர் வழியனுப்பினார். அந்த எள்ளல் எங்களை நோக்கியதல்ல என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டபோதும், அந்த சிரிப்பை மட்டும் நினைவை விட்டு அகற்ற முடியவில்லை.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு
நாட்டை காப்பாற்ற கிளம்பியிருக்கும் ஹசாரேவின் கிராமத்தில் துணிகளைக் கூட காப்பாற்ற முடியாத நிலை

அடுத்து மகர் வகுப்பைச் சேர்ந்த யதூ பீமாஜி கெய்க்வாட் என்பவரைச் சந்தித்தோம். இவரது குடும்பத்திடம் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மகன்கள் இருவருமே மும்பையில் டிரைவர்களாக இருப்பதாகச் சொன்னார். மும்பையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமென்பதால் குடும்பங்களை கிராமத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர்.

ராலேகான் சித்தியில் விவசாயம் செய்பவர்கள் எல்லாம் சுபீட்சமாக இருப்பதாக பத்திரிகைகளில் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது உங்கள் பிள்ளைகள் ஏன் வெளியூருக்கு கூலி வேலை செய்யப் போக வேண்டும் என அவரிடம் கேட்டோம். அதற்கு தங்கள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் கைக்கும் வாய்க்குமே போதவில்லையென்றும், நிலத்தை சும்மா போட்டால் வீணாகி விடுமே என்பதால்தான் ஏதோ விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மேலும், மூன்று ஏக்கர்கள் என்பதால் கிணற்றுப் பாசனத்துக்கு வசதியில்லை என்றும், நிறைய நிலங்கள் வைத்திருக்கும் மராத்தாக்களுக்கு மட்டும்தான் விவசாயத்தால் ஆதாயம் என்றும் குறிப்பிட்டார்.

பேசிக்கொண்டிருந்த போதே அவரது வீட்டின் முகப்பில் இருந்த விநாயகர் படம் கண்ணில் பட்டது. பௌத்தர்களான அவர்கள் வீட்டில் விநாயகர் படம் இருப்பதைப் பற்றிக் கேட்டபோது, தாங்கள் அசைவம் உட்கொள்வதை நிறுத்திக் கொண்ட பின்னர்தான் அண்ணா ஹசாரேவின் முயற்சிகளால் ஊருக்குள் தடையில்லாமல் நடக்க முடிகிறது என்றும், கோயில்களுக்கும் சரிசமமாக போய் வர முடிகிறது என்றும் சொன்னார்.

தலித் மக்களை அசிங்கமானவர்கள் என்று இழிவுப்படுத்தி, அவர்களை சுத்தப்படுத்தி ‘இந்துக்களாக’ ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவ கும்பலின் பார்ப்பனமயமாக்கம் அண்ணா ஹசாரேவால் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. முன்பொரு காலத்தில் அண்ணா ஹசாரே தங்களின் பகுதிக்குள் வந்து, தங்களது உணவுப் பழக்கங்களை மாற்றுவது பற்றியும், ‘சுத்தமாக’ இருப்பது பற்றியும் அறிவுரைகள் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

நாங்கள் அவரிடம், “அதுதான் அண்ணா ஹசாரே சொல்லியபடி நீங்களெல்லாம் சுத்தமானவர்களாகி விட்டீர்களே, இப்போது உங்கள் இளைஞர்களுக்கு மராத்தா பெண்களை மணம் முடித்துக் கொடுக்கிறார்களா?” என்று கேட்டோம். இந்தக் கேள்வியைச் செவிமடுத்த பீமாஜி, ஏதோ காதில் காய்ச்சிய ஈயத்தைக் கொட்டியதைப் போன்றதொரு முகபாவனையைக் காட்டினார். “அப்படியொரு சம்பவமே நடக்காது” என்று அவசரமாகச் சொன்னவர், ”அப்படியெல்லாம் உலகத்தில் நடக்குமா?” என எதிர்கேள்வியும் எழுப்பினார்.

அவரோடு மேலும் இது குறித்துப் பேசியதிலிருந்து சாதி மறுப்பு என்பது அவர்களின் கற்பனையில் கூட இது நாள் வரையில் தோன்றியிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரே ராலேகானில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவம் என்பது ‘நாமெல்லாம் இந்து’ என்று ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இந்து முன்னணி கூறும் சமத்துவம்தான். இந்த உரிமையற்ற நிலை அங்கே இயல்பாக நிலவுகிறது என்பது மட்டுமல்ல, அந்த இயல்புநிலையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு சிறிய கல் கூட அந்தத் தேங்கிய குளத்தில் விட்டெறியப்படவில்லை.

ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் சொல்வது போல் அது தன்னிறைவு பெற்ற கிராமம் அல்ல. அது ஒரு பச்சைப் பொய். அந்த கிராமத்தின் சாதாரண மக்கள் தங்களின் அடுத்த வேளை உணவுக்கும் கூட நித்தம் நித்தம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ, மருத்துவச் செலவுகள் குறித்தோ அவர்களிடம் திட்டங்கள் ஏதுமில்லை.

பீமாஜியிடம் உங்களது பேரக் குழந்தைகளை என்னவாக ஆக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். ஒரு பேச்சுக்காவது ‘நன்றாகப் படிக்க வைப்போம்’ என்றோ, ‘நல்ல வேலைகளுக்கு அனுப்புவோம்’ என்றோ அவர் கூறவில்லை. “அதை அவர்களின் காலம் தீர்மானிக்கும்” என்றார். நம்பிக்கைகள் வறண்ட பதில்! மேட்டுக்குடி இந்து மனத்தின் கருணை வெள்ளம் பாய்வதற்கு ஒரு தாழ்வான வறண்ட நிலம் தேவை. ராலேகானின் மகர் குடியிருப்புகளில் அதனைக் காண முடிந்தது.

பௌத்தரான பீமாஜியோடு இந்த விவகாரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இந்தியாவின் இசுலாமியர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவேளை ராலேகான் சித்தி இந்தியாவெங்கும் விரிந்தால் இசுலாமியர்களின் நிலை என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.

குடிப்பவர்களையும், புகைப்பவர்களையும் அண்ணா கட்டி வைத்து சவுக்கால் அடிப்பாராம். பதினெட்டு பட்டி வரையில் சவுக்கை வைத்து சமாளிக்கலாம். அதிகாரம் அதைத்தாண்டி விரியும்போது தண்டனை முறைகள் எப்படி இருக்கும்? அண்ணா முத்தி முதல்வரானால் மோடியா?

நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது. மீண்டும் ஊருக்குள் திரும்பினோம். மக்களிடையே ஒரு பரபரப்புத் தோன்றியிருந்தது. இரண்டு ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில மாணவர்களும், வேறு சிலரும் இறங்கினர். விசாரித்தபோது, பூனாவில் இருந்து வருவதாகவும், மாலை நேரத்தில் அண்ணா ஹசாரே நிகழ்த்தப் போகும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

ராலேகான் சித்தியில் ஒரு சொர்க்கத்தை எதிர்பார்த்து வந்து கடுமையாக ஏமாற்றம் அடைந்திருந்ததால், குறைந்தபட்சம் சொர்க்கத்தின் மூலவரான அண்ணாவையாவது பார்க்கலாமே என்று நினைத்தோம். அதிலும், ஜெயமோகன் உள்ளிட்ட அண்ணா பக்தர்கள் ‘அவர் கோயில் திண்ணையில் படுத்துறங்கும் எளியவர்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரது எளிமை குறித்து பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்திருந்ததால், குறைந்த பட்சம் அந்த எளிமையையாவது தரிசிப்போமே என்று அண்ணா தங்கியிருந்த பத்மாவதி கோயிலுக்குச் சென்றோம்.

சுமார் அரை ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர். அதன் ஒரு கோடியில் அண்ணா உரையாற்றுவதற்கு ஏதுவாக ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வலது பக்கம் நவீன வசதிகள் கொண்ட ஒரு ஒற்றைத்தள கட்டிடம் இருந்தது. அதில்தான் அண்ணா ஹசாரே தங்கியிருந்தார். அக்கம் பக்கத்தில் ‘கோயில் திண்ணை’ போன்ற அமைப்பு ஏதும் உள்ளதா எனத் தேடினோம். இல்லை. மண்டபத்தின் முன்னே நிறைய விழுதுகள் கொண்ட மிகவும் வயதான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. வந்திருந்த மாணவர்களும் பிற இளைஞர்களும் அந்த விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஆடிக் கொண்டிருந்தனர்.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு
டைம்ஸ் நவ் வந்திருக்காக, என்டிடீவி வந்திருக்காக, மற்றும் வினவுக்காரவுகளெல்லாம் வந்திருக்காக, வாம்மா மின்னலு

அண்ணா தங்கியிருந்த கட்டிடத்தை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாதபடிக்கு இரும்புக் கிராதி அமைக்கப்பட்டிருந்தது. வெளியே இருக்கும் கூட்ட எண்ணிக்கையையும் நிலவரத்தையும் அண்ணா ஹசாரேவிடம் உடனுக்குடன் தெரிவிக்க நான்கைந்து வேலையாட்கள் தயாராக இருந்தனர். ஐந்து மணிக்கு அண்ணா ஹசாரே தனது இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டார். அவர் தங்கியிருந்த கட்டிடத்திற்கும் மண்டபத்திற்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கும். அவர் நடந்து வந்த இருபுறமும் மக்கள் வரிசைகட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வெளியே திரண்டிருந்த கூட்டத்திலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’, ‘வந்தே மாதரம்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தின் முன்னே அமர்ந்த அண்ணா ஹசாரே, மராத்தியில் தனது உரையை ஆரம்பித்தார்.

நாங்கள் சுற்றும் முற்றும் பார்த்தோம். வந்திருந்த மக்களில் சாதாரண கிராமத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலும் பூனா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வந்திருந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் இருந்தனர். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

அண்ணா ஹசாரே கொச்சையானதொரு பொருளில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் குறிவைத்து ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளைப் பற்றிப் பேசவில்லை; ஊழலைப் பெருகச்செய்த தனியார்மயத்தைப் பற்றிப் பேசவில்லை; தாராளமயம் அழித்த விவசாயத்தைப் பற்றி பேசவில்லை; கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் விளை நிலங்கள் பற்றி பேசவில்லை; சாதி ஆதிக்கம், தீண்டாமைக் கொலைகள், இந்துமதவெறி… போன்ற எதைப்பற்றியும் பேசவில்லை. அவர் பேசாத விசயங்கள் அனைத்திலும் ஆளும் வர்க்கக் கருத்துகளுடன் அநேகமாக அவர் உடன்படுகிறார். அதனால்தான் ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊழல் பெருச்சாளிகளால் அவர் ஸ்பான்சர் செய்யப்படுகிறார். நேரலைத் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், சம்பவங்களே இல்லாத அந்தக் கிராமத்தில் அவ்வப்போது புழுதி கிளப்புகிறார்கள்.

மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப சமூகத்தின் மீது வருண தருமத்தை நிலைநாட்டுகின்ற தனது பாசிச அரசியலுக்கு மிகவும் பொருந்தி வருகிறார் என்பதனால்தான், அண்ணா ஹசாரேயை இலட்சிய மனிதராகவும், அவரது கிராமத்தை இலட்சிய கிராமமாகவும் ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறது.

இராணுவத்தின் கடை நிலை ஊழியருக்கே உரிய அடிமைப்புத்தியும் முரட்டுத்தனமான ஆதிக்க மனோபாவமும், நிலப்பிரபுத்துவ நாட்டாமைத்தனமும், பார்ப்பன இந்து பண்பாட்டு விழுமியங்களும், கொஞ்சம் அசட்டுத்தனமும் நிறைய தற்பெருமையும் கலந்த அந்த ‘நல்லொழுக்கச் சீலரை’ தரிசிக்க வந்த இளைஞர்கள் ஏ.சி. பேருந்திலிருந்து இறங்கி, அவசர அவசரமாக பத்மாவதி கோயிலுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள்.

______________________________________________________________

வினவு செய்தியாளர்கள், ராலேகான் சித்தி – மராட்டிய மாநிலத்திலிருந்து

புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

______________________________________________________________________

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! – ரீமிக்ஸ்!

28

இரு முடி சாமான்கள் விலையேற்றத்தாலும் பொதுவான விலைவாசி உயர்வாலும் மனம் புழுங்கி புலம்பும் கன்னிச்சாமிகளுக்கு இப்பாடல்கள் காணிக்கை.

_______________________________________________

பாடல் 1        இருமுடி  தாங்கி

(பல்லவி)

இரு  முடி  தாங்கி  ஒரு  மன தாகி

கடனுடனே  வந்தோம்

தெருவினில்  துரத்தும்   பார்வையை  வெல்லும்

திருவடியைக்  காண  வந்தோம்!

(அனுபல்லவி)

பஸ் டிக்கட்டு ஏறிப் போச்சு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே  ஐயப்போ
கடங்காரன்  வர்றான்  போ!

(சரணம்)

நெய் அபிஷேகம்  ஸ்வாமிக்கே
நெம்புறான்  சேட்டு  நேத்திக்கே
ஐயப்ப  மார்களும்   கூடிக்கொண்டு
ஐந்து  வட்டிக்கு  வாங்கிடுவார்
சபரி  மலைக்கு   சென்றிடுவார்
(.. சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே  பட்டினி  கிடந்து
பார்த்த சாரதியின் மைந்தனே- நான்
பால் விலைக் கேட்டு நொந்தனே!

இருமுடி சாமான் சந்தனம் வாங்க
ஒருவழியாகி  ’பாட்டில்’ தள்ளி
அடகு  கடைக்கார  நண்பரைத் தொழுது
அய்யனின்  அருள்மலை ஏறிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

அரிசி  விலைதான்  ஏறும்  போது
அரிகரன் மகனைத்  துதித்துச்  செல்வார்
வட்டிக்  காரனும்  வந்திடுவார் – ஐயன்
வன்புலி  ஏறி  வந்திடுவார்!
கற்பூர  விலையும்  கடினம்  கடினம்
கைமாத்து  வாங்கவும்  துணை வருவார்
எரிமலை இறக்கம்  வந்த உடனே
கூடவே  பைனான்சுகாரனைக்  கண்டிடுவார்..

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

தேக  பலம்  தா – பாத பலம் தா
தேங்கா  மூடி  யை –  திருப்பி  த்தா
தேங்கா  பழத்தை  தா  என்றால்  அவரும்
தோலையே  தூக்கி  எறிந்திடுவார்!
பாத  பலம்  தா  என்றால் – அவரும்
பாதத்தில்  அடித்திடுவார் – போலீசு

லாடத்தையே கட்டிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

சபரி  பீடமே  வந்திடுவார்
அவரவர்  மடிதனை  பிடித்திடுவார்
நெய்த்  தேங்காவின்  விலையை நினைத்ததும்
கை  கால் நடுங்கி  கத்திடுவார்!

ஏத்தி விடப்பா… தூக்கி  விடப்பா
ஜெயலலிதாவ  தாங்க  முடியல
ஏத்தி  விடப்பா.. தூக்கி  விடப்பா

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

_____________________________________

பாடல் 2    என்ன மணக்குது  எங்கே மணக்குது

என்ன மணக்குது  எங்கே மணக்குது
கல்லா மணக்குது ஐயப்பன் மலையிலே

அல்லி மலர்  மணமும் எங்கே மணக்குது
அஞ்சு  வட்டிக்  காரனின் மேலே  மணக்குது

ஒல்லித்தேங்கா  வியர்வ  நாத்தம் எங்கே மணக்குது
நம்ப  தரக்கடமூர்த்தியின் மேலே  மணக்குது

சம்பங்கி  ரோஜாவும்  எங்கே  மணக்குது
லஞ்சமஹா  பாலகனின்  மேலே  மணக்குது

பிச்சலும், புடுங்கலும்  எங்கே  மணக்குது
பிரியமுள்ள  ஆட்டோக்காரர்  மேலே  மணக்குது

குங்குமப்பூ  ஜவ்வாது  எங்கே  மணக்குது
கொலுசுக்  கடக்காரன்  மேலே  மணக்குது

மட்ட சாம்பிராணி  எங்கே  மணக்குது
மட்டப்பலகை  பாலகனின்  மேலே  மணக்குது

பன்னீரும்  சந்தனமும்  எங்கே  மணக்குது
வட்டச்  செயலாளர்  மேலே மணக்குது

கற்பூரம்  அணைஞ்சணைஞ்சு  எங்கே  மணக்குது
காய்கறி ஏவாரி  கை மேல  மணக்குது

பாங்கான  நெய்  மணமும் எங்கே  மணக்குது
பேங்கு  ஆபிசரு  பேண்ட்டுல மணக்குது

பழைய சோறு  வெங்காயம்  எங்கே  மணக்குது
கூலிக்காரர்  வாயிலதான்  குப்புனு  மணக்குது .

என்ன  மணக்குது  எங்கே  மணக்குது
கல்லா  மணக்குது  ஐயப்பன்  மலையிலே

_______________________________________________

பாடல்  3    பதினெட்டுப் படி பாட்டு

ஒன்றாம்  திருப்படி  உப்பு  பொன்  ஐயப்பா
உப்பு   ரொம்ப   விலையப்பா, என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

இரண்டாம் திருப்படி  பூண்டு  பொன்  ஐயப்பா
பூண்டோடு  போகும் முன்னே  ஐயப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா !

மூன்றாம்  திருப்படி  மிளகாய்  பொன்  ஐயப்பா
வாங்கவே  வழி  இல்லப்பா,  என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

நான்காம்   திருப்படி  புளி  பொன்  ஐயப்பா
வாங்க   நாக்கு   தள்ளுதப்பா, ஐயனே  என்னை  உய்யப்பா!

ஐந்தாம்  திருப்படி  எண்ணைய்  பொன்  ஐயப்பா

விலையோ  ஐயோ அப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா!

ஆறாம்  திருப்படி  முட்டை பொன்  ஐயப்பா
வீட்டுல  கோழி  இல்லயப்பா,  ஐயனே  ரெண்டு  உய்யப்பா!

ஏழாம்  திருப்படி  பாலு  பொன் ஐயப்பா
வெல ஏறிப் போச்சு ஐயப்பா,  அய்யனே பச்சத் தண்ணியில் உய்யப்பா!

எட்டாம்  திருப்படி  பஸ் டிக்கெட்  பொன்  ஐயப்பா
ஏத்திட்டாளே  ஐயப்பா,  எதுத்து புலிய விட்டு பாரப்பா!

ஒன்பதாம் திருப்படி  கரண்ட்டு  பொன்  ஐயப்பா
கட்டணம் ஷாக்கடிக்குதுப்பா, அய்யனே கரண்ட்டு பில்ல கட்டப்பா!

பத்தாம்  திருப்படி  பள்ளிக்கூடம்  பொன் ஐயப்பா
படிக்க சொத்து இல்லப்பா, அய்யனே கான்வெண்ட்டு பல்லத்தானே பிடுங்கப்பா!

பதினோறாம் திருப்படி கூலி வேலை பொன் ஐயப்பா
கொல்லுறான்  முதலாளியப்பா, அய்யனே உன் பாயும் புலி எங்கப்பா!

பன்னிரெண்டாம்  திருப்படி துக்ளக் சோ  பொன் ஐயப்பா
புடுங்கல் தாங்கல அய்யப்பா,  அய்யனே காட்டுக்கு புடிச்சுட்டு போயிடப்பா!

பதிமூனாம்  திருப்படி  ராகுல்காந்தி  பொன்  ஐயப்பா

பதினான்காம்  திருப்படி ப.சிதம்பரம்  பொன்  ஐயப்பா

பதினைந்தாம்  திருப்படி மோடி  பொன்  ஐயப்பா

பதினாறாம்  திருப்படி   டாடா  பொன்  ஐயப்பா

பதினேழாம்  திருப்படி  அம்பானி  பொன்  ஐயப்பா

மொத்தமும்  சதிவலையப்பா, தப்பிச்சு  நீயாவது  உய்யப்பா!

பதினெட்டாம்  திருப்படி  அமெரிக்கா  பொன்  ஐயப்பா
மன்மோகன்  அவன்  கையப்பா,  ஐயனே  ஒரு  அம்ப விட்டு உய்யப்பா!

(அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொருத்து காத்து இரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன் பதினெட்டாம் படிமேல் வாழும், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், காசி, இராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கியாளும், ஓம் ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!)

குறிப்பு;  எந்தக் குற்றமும் செய்யாதவர்களுக்கு மேற்கண்ட பாராயணம் உசிதமில்லை.

_______________________________________________

–              துரை.சண்முகம்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மைக்கேல் மூரின் Capitalism: A Love Story (2009) – ஆவணப்படம் – அறிமுகம் !

29



அமெரிக்காவின் மிக முக்கிய வீதி, உலகின் மிகப் பெரியவங்கியின் பிரதான கிளையின் வெளியே நின்றபடி தன் கையில் இருக்கும் ஒலிப்பெருக்கியில் பேசத் துவங்குகிறார் ஒருவர்:

“நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது”

பின்னர் அந்த பெரிய கட்டடங்களை சுற்றி “CRIME SCENE DO NOT PASS” (குற்றம் நடந்த இடம் யாரும் வராதீர்கள்) என்ற வாக்கியம் தாங்கிய டேப்பை ஒட்டுகிறார் அவர். அந்த மனிதர் மைக்கல் மூர் என்ற அமெரிக்க ஆவணப்பட இயக்குனர்.

ஒரு நிமிடம் நம்மை திகைக்க வைக்கும் இந்த காட்சி மைக்கல் மூர் இயக்கிய திரைப்படமான  Capitalism A Love Story” யின் இறுதிக்காட்சி. உலக மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்பலப்படுத்திய மிக முக்கிய திரைப்படம் இது.

சமூகத்தில் ஒரு படைப்பாளியின் கடமை என்ன?

சுரண்டப்படுபவர்களை ஒன்று திரட்ட தன் படைப்பை கருவியாக்குவதா? அல்லது சுரண்டித் திரியும் பொறுக்கிகளை மகிழ்விப்பதா?

மேலும் தானும் ஒரு சுரண்டல்வாதியாகி விட்டபின்,  மக்களின் பணத்தில் கொழுத்து திரியும் ஒரு படைப்பாளியின் உன்னத படைப்பே, மக்களை போதையில் ஆழ்த்தி அவர்களை மேலும் சுரண்டுவதாக இருக்கிறது. இது தான் இன்றைய உன்னத உலக படைப்பாளிகளின் சாதனை!

மக்களை ஒன்று திரட்டவும், சமூகத்தின் மிகப் பெரிய ஆவணமாகவும், சமூக முன்னேற்றத்திற்கு இன்றியமையா தூண்டுகோலாகவும் இருக்க வேண்டியது கலை இலக்கிய படைப்புகள் தான்.  ஆனால் அதை இன்றைய படைப்புகள் செய்கின்றனவா?

புனைவு சினிமாக்களின் நடுவே ஆவணப்படத்திற்கென ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி அதை வெகுமக்களின் முன் வெற்றிகரமாக, தான் கொண்ட கருத்தின் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி காட்டியதில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர்.

இவரது கருத்துகள் விமர்சனத்திற்கு உட்பட்டவைதான், ஆனால் புறக்கணிக்கக் கூடியவையல்ல. வியாபாரத்திற்கும், பொழுதுபோக்கிற்கும் அதிகளவு பணத்தை குறுகிய கால முதலீட்டில் சம்பாதிப்பதுதான் சினிமாத் துறை என்ற நிலையில், அதே துறையில் மக்கள் பிரச்சனைகளைப்  பற்றி பேசும் ஆவணப்படத்திற்க்கென ஒரு மதிப்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று தந்தன மைக்கேல் மூரின் திரைப்படங்கள்.

அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் அதே நேரம் அமெரிக்க மக்களை விழிப்படையச் செய்யும் அவரின் ஆவணப் படங்களுள் மிக முக்கிய திரைப்படம்தான் Capitalism, a love story. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை அதன் அழுகிய பக்கங்களை, கெட்டழுகிக் கொண்டிருக்கும் அதன் தனமையையும், அதன் போலி பிரச்சாரங்கள், பொய் வாக்குறுதிகளை அடித்து துவைத்து காயப்போட்டது தான் இந்தப் படத்தின் முதல் சாதனை.

உடலின் வீக்கத்தை வளர்ச்சி என்று பார்க்க வைத்த முதலாளித்துவ மேதைகளை அம்பலபடுத்தி அந்த வீக்கம் சீழ் பிடித்து துர்நாற்றம் வீசுவதை அமெரிக்க மக்களின் வலியிலிருந்து  நமக்கு உணரவைத்த சிறந்த படைப்பு இது.

அமெரிக்கா பூலோக சொர்க்கம்- உண்மையா?

மைக்கேல் மூரின் Capitalism : A Love Story (2009) – அறிமுகம்! இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அள‌வு தொழிற் போட்டியே இல்லை, நாட்டில் பியர்ல் ஹார்பர் தவிர வேறு எந்த சேதத்தையும் பார்க்காத அமெரிக்கா, நிதி மூலதன வளர்ச்சியில் பொங்கிச் சிறந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோசலிச நாடுகள் கொண்டு வந்த விஞ்ஞான வளர்ச்சியும், உலக நாடுகளில் இருந்து பிழைக்க அகதிகளாக வந்து குவிந்த மக்களும் அமெரிக்காவின் வளர்ச்சியை சீராக உயர வழிவகுத்தனர். அமெரிக்கா பூலோக சொர்க்கம் என்ற மாயை உருவாகத் தொடங்கியது (அந்த சொர்க்கத்திலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் விளைவான தேக்க நிலை 10 வருடத்திற்கு ஒரு முறை வந்து போய்க்கொண்டு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). அப்பொழுதும் சரி பின்னர் எப்பொழுதும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை விதியின்படி அமெரிக்காவின் ஒரு சிலரிடம் பெரும்பான்மையான பணம் சேருவதும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களாக, ஒரு நாள் பணக்காரர் ஆகிவிடுவோம் என்ற கனவில் வாழ்வதும் வாடிக்கையாகி விட்டது.

இன்றைய அமெரிக்க மக்கள் வீதிக்கு வந்து போராடுவதற்கான(Occupy wall street) இன்னொரு விதை முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றும் முயற்சியின் விளைவாக வந்த்து. 1917 முன் வரை முதலாளிகள் கசக்கிப் பிழிவதிலும் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலும் மொத்த உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதிலும் கவலையில்லாமல் கணஜோராக ஈடுபட்டு வந்தனர். ஆனால் மார்க்சிசத்தின் வரவும் அதைத் தொடர்ந்த ரஷியப் புரட்சியும், உலகம் முழுவதும் இருந்த உழைக்கும் மக்களின் சோஷலிச கனவும் முதலாளிகளை ஆட்டம் காணச் செய்தது, ‘தங்கள் நாட்டில் புரட்சி வந்து விடக் கூடாது ஆனால் சுரண்டவும் வேண்டும்’ இதற்கு ஒரே வழி வேலை செய்பவர்களுக்கு சில சலுகைகளை கொடுப்பது.

மக்கள் நலத் திட்டங்களை அரசு வகுக்கும், அதனை செயற்படுத்தும், சுரண்டும் பணத்திலிருந்து முதலாளிகள் போனால் போகுது என்று கொஞ்சம் தருவார்கள் அதையே சோசலிசம் என்று திரித்து பிரச்சாரம் செய்ய வேண்டியது தான். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை இப்படி அரசே கல்வி, மருத்துவத் துறையை நடத்துவதை அவர்கள் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டார்கள்

இந்தியாவில் நேரு மேல்மட்டத்தில் அரசே நிறுவனங்களை நடத்துவதை, அதில் கிஞ்சித்தும் மக்களின் நேரடி பங்களிப்பில்லாத முறையை சோசலிசம் என்று ஜல்லியடித்தார். உண்மையான சோசலிசத்தில்  அரசு அனைத்துத் துறைகளையும் வைத்திருக்கும் என்பது உணமை தான் ஆனால் அரசை உழைக்கும் மக்கள் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும்,கட்டமைப்பு நெருக்கடியும் அமெரிக்காவின் வளர்ச்சியில் கையை வைத்தது. எப்பொழுதும் பல பில்லியன் டாலர்களில் கொழுத்த முதலாளிகள் அதை உலகின் இன்னொரு முதலாளியிடம் இழந்தார்கள். பெரும்பான்மையான பணம் உலக முதலாளிகளின் பாக்கட்டுகளில் கைமாறத் தொடங்கியது,

சுழற்சி முறையில் அது பல புது பணக்காரர்களை உருவாக்கியது, ஏற்கனவே தொழிலில் கொழுத்து திரிந்தவர்களை தூக்கியெறிந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள் மியுசிக்கல் சேரில், இடம் கிடைத்தவர் உட்கருவதும் இன்னொரு ரவுண்டில் அவரே தூர ஓடுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்க பொருளாதாரம் எனும் குமிழ் உடைவதும் இன்னொரு குமிழியை அமெரிக்க அரசு உருவாக்குவது எனத் தொடர இந்த சூதாட்டத்தை நடத்த ஒரு நல்ல இடமாகவே வால்ஸ்ட்ரீட் மாறியது. (உலகம் முழுவதிலும் இந்த சூதாட்டத்தை அரசு அனுமதியுடன் நடத்தும் இடங்களாக பங்குச் சந்தைகள் உருவாக்கப்பட்டன. அது தான் நாட்டின் கொள்கைகளையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் களமாக மாறியது).

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முதலாளியை வாழவைக்க, முதலாளித்துவத்தை வாழவைக்க கையில் வாளேந்தி மக்களின் சலுகையில் கை வைத்தனர். இனியும் இழக்க ஒன்றுமில்லை எனும் போது– அமெரிக்கா என்றாலும் என்ன, உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தானே– போராடத் துவங்கிவிட்டனர்.

மைக்கல் மூர் தன் படத்தில் முதல் சில நிமிடங்கள் ரோம் சாம்ராஜ்ஜியம் எப்படி அழிந்தது எனும் வரலாற்று நிகழ்வை விளக்கும் குரலுக்குப் பின்னால் அமெரிக்க நிகழ்வுகள் சிலவற்றை ஒளிப்படங்களாக தருகிறார்.

சோஷலிஸ நாட்டில் ஒரே ஆட்சி! ஒரே ஆட்சி! என்று உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளை தூற்றும் அதே நேரம் அமெரிக்காவிலோ இரண்டு கட்சி, ஆனால் எது வந்தால் என்ன,  ஆளுபவர்கள் அந்த நாட்டின் முதலாளிகள் தான், அவர்கள் சுரண்டுபவர்கள், நிச்சயம் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, சூதாடிகள் என்று படத்தை ஆரம்பிக்கிறார்.

அதாவது அமெரிக்காவில் இரண்டு கட்சி, ஒரே ஆட்சி, முதலாளியின் ஆட்சி. அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா முதல் பல நாடுகளில் இதே நிலைமை தான். யார் முதன்மை அமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அரசு வந்தாலும் ஆளுபவர்கள் முதலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.

2007க்கு பின் பல ஆண்டுகள் வாழ்ந்த தன் வீட்டை காலி செய்யும்படியும் அதை மீறினால் போலிசே வீட்டைக் காலி செய்யும் நிலையும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் தொடர் நிகழ்வாகிவிட்டது. ஒரு காட்சியில் காலி செய்ய மறுக்கும் வீட்டை உடைத்து அங்கிருப்பவர்களை வெளியே தள்ளி காலி செய்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தங்கள் சொந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்த வயதான ஏழை தமபதியினரை மாதத் தவணை கட்டவில்லை என்று காலி செய்யும்படி சொல்லுகிறார்கள் காவலர்கள். அதைத் தொடர்ந்து அந்த வயதான பெண் காமிர முன்னால் அழத் தொடங்குகிறார். பின்பு முனங்கலாக “நாங்கள் சாதரண மக்கள், நன்றாக உழைப்பவர்கள், ஒழுங்காக தவணையை செலுத்தினோம்,  ஆனால்  வேலை இல்லை, வருமானம் இல்லை அதனால் தவணை செலுத்தவில்லை” என்று அழுகிறார்.

பல முதலாளித்துவ மேதைகள் அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, “தகுதியில்லாதோருக்கு கடன் கொடுத்ததுதான் காரணம் அவர்கள் திரும்பக் கட்டவில்லை” என பக்கம் பக்கமாக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதுபவர்கள். ‘அவர்களுக்கு வேலை இல்லை அவர்களின் வேலை பிடுங்கப்பட்டுவிட்டது, அது இன்னொரு நட்டிற்க்கு சென்றுவிட்டது அது தான் காரணம்’ என்பதை மட்டும் மூச்சுவிடுவது இல்லை. ஒரு வேளை முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லுவதுதான் சரி போலும், உலகம் முழுவதிலும், அது முதலாளித்துவ நாடாக  இருந்தாலும் சரி, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகளை கோரத் தகுதியற்றவர்கள்தான்.

இதைவிடவும் கொடுமை மைக்கல் மூர் காட்டும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதல் பாடம் தான். அமெரிக்காவில் பல சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளை தனியார்கள் தான் நடத்துகிறார்கள். ஒரு சிறுவன்/சிறுமிக்கு மாதம் இவ்வளவு என்று அரசு தனியாருக்கு கொடுக்கும் (செலவுகள் போக லாபம் சேர்த்து தான்). நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் முதலாளிக்கு லாபம் வேண்டும், லாபம் வந்தவுடன் அதைவிட அதிக லாபம் வேண்டும், அப்புறம் அதைவிட அதிகமாக.. அப்புறம் அதையெல்லாம் விட அதிகமாக. இந்த லாப வெறிக்கு  பலி, பல சிறுவர்கள்.

ஒரு சீர்த்திருத்த பள்ளியை நடத்தும் முதலாளிக்கு அதிக லாபம் வேண்டும், நேராக அங்கே உள்ளூரில் இருக்கும் போலிஸையும் ஜட்ஜையும் பிடித்தார். பல சிறுவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு, சாதாரண பிரச்சனைக்கெல்லாம் கோர்ட் கேஸ், ஜட்ஜ் குற்றவாளியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார். குற்றம் விசாரிக்கப்படாமல் நேராக குறிப்பிட்ட சீர்திருத்த பள்ளியில் இத்த்னை மாதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்ல வேண்டும். மேலும் இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு தரவேண்டும். அவ்வளவுதான்.  ஜட்சுக்கு டீலிங் ரொம்பப் பிடித்துவிட்டது, அதன் விளைவு பல பதின்ம வயது இளஞர்கள் காரணமே இல்லாமல் தங்கள் இளமையை தொலைத்தனர். லாப வெறியின் முதல் பாடமே நம்மை உறைய வைக்க இரண்டாம் பாடமோ அதிர்ச்சியை தந்தது.

நமக்கு விமானத்தில் பறக்க ஆசையாக இருக்கும், ஆனால் விமானிகள் எந்நேரமும் விமானத்தில்தான். எவ்வளவு மிடுக்கான தோற்றம், எப்பொழுதும் சிரிப்பு, உலகில் கஷ்டமே இல்லாத மக்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருக்க, முதலாளிகளின் லாப வெறிக்கு இவர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல என்று மூர் புரியவைக்கிறார்.

அமெரிக்க தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளுக்கு சம்பளத்தை பலமடங்கு குறைத்தே கொடுக்கின்றன, விமானியால் அந்த வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை அல்லது மிகவும் சிரமமம். இந்தக் கையறு நிலைதான் முதலாளிகளுக்கு முத‌லீடு. குறைந்த சம்பள‌ம் கொடுத்தாலும் அந்த விமானியால் வேலையை விட முடியாது, இன்னொரு நிறுவனம் போனாலும் விமானிக்கு அதே நிலைமை தான்.

ஒரு வேளை நம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் 2001 இரட்டை கோபுரத் தாக்குதல் என பாட ஆரம்பிக்கும் முன் இன்னொரு செய்தி. இந்த நிலைமை 2001க்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஒரு விமானி சொல்லும் விடயம் அதிர்ச்சியானது. அவருக்கு தெரிந்த பல விமானிகள் ரத்த அணுக்களை(Plasma) விற்கிறார்களாம், அதாவது ரத்தத்தை எடுத்து ப்ளாஸ்மாவை பிரித்துவிட்டு மீண்டும் ரத்தத்தை உடலிலேயே ஏற்றிவிடுவார்கள். முதலாளிகள் ரத்த உறிஞ்சி என்பது இங்கு நிஜமே ஆகிவிட்டது.

இப்படியாக அமெரிக்க மக்கள் வேலை இழப்பதும் லாப வெறிக்கு பலியாவதும் தொடர, மக்களை எப்படி ஏமாற்றி இன்னும் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்கு  திட்டமிட்டு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்ந்த சூதாடிகளாக உருவாக்குவதுதான் அமெரிக்க பல்கலைக் கழகங்களின் வேலை. அமெரிக்காவின் ஹார்வாட் முதல் இந்தியாவின் ஐஐஎம் வரை ஒரே கொள்கை தான், சூதாடிகள் வேண்டும். தாங்கள் இப்படி ஒரு இழிவான வேலை செய்கிறோம் என்று கூட அவர்களுக்கே ஆரம்பக்கட்டத்தில் தெரியாமல் இருக்கவே குழப்புகின்ற பாடங்கள்.

இந்த படத்தில் குறிப்பாக அமெரிக்க வால் ஸ்ட்ரிட்டில் பலர் பெருமையாக சொல்லிகொள்ளும் டெரிவேட்டிவிஸ் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை கேட்க ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் ’வாத்தியாரே கன்ப்யூஸ் ஆகிவிட்டார், விளக்க முடியாமல் திணறுகிறார். என்ன வேலை செய்கிறோமோ அதை விளக்க வாத்தியாருக்கே தெரியாத உன்னத கல்வியமைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் கொடை.

ஆனால் இன்னொரு பக்கம் மூர் அமெரிக்கவில் உள்ள  ஒரு தொழிற்சாலையை காட்டுகிறார். அந்தத் தொழிற்சாலையில் அங்கு வேலை செய்பவர்களே முதலாளிகளாக இருக்கிறார்கள் (பார்த்தவுடன் நானும் ஜெர்காகிவிட்டேன்), உழைக்கிறார்கள்.  தங்களுக்கு யார் தலைவாராக வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கிறார்கள். மொத்தம் வெளிப்படையாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் நஷ்டம் இரண்டுமே பங்கிடப்படுகிறது. அவர்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள், நிறைவாக வாழ்கிறார்கள். அங்கு சாதாரண வேலையும் செய்யும் தொழிலாளியின் மாத வருமானம் மிகப் பெரிய விமான நிறுவனத்தில் அனுபவமிக்க விமானியின் மாத சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது உழைப்பவர்கள் நடத்தும் நிறுவனம் இதுவரை சோடைபோகவில்லை என்றாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நடுவே இது தாக்குபிடிப்பது கடினம்தான்.

ஒபாமா – மீட்பாரா?  

இனியும் அரசால் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் பகாசுர பசிக்கு உலகம் முழுவததையும் இரையாக்க போர் புரிய வேண்டும், அமெரிக்கா அதற்க்கு தயாராகிவிட்டது. புஷ் அரசு அமெரிக்க மக்களை நசுக்கி முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்மணமாக்கினார். அடுத்து வரும் ஒபாமா, அதை மீட்பாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் மூர். இந்த படம் வெளிவரும் போது தான் ஒபாமா “மாற்றம் வேண்டும்” என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவரின் போட்டியாளர் மெக்கயினின் ஆட்கள் ஒபாமா ஒரு சோஷலிஸ்ட் என்று பிரச்சாரம் செய்தார்கள் (இது வேற சோஷலிஸ்ட், மேலே பார்க்கவும்). ஆனால் ஒபாமா மீட்பரா என்ற மூரின் கேள்விக்கு பின்னாட்களில் விடை கிடைத்தது.  ஒபாமா கறுப்பு புஷ் என்று.

கடைசியாக மூர் வெறுத்துப் போய் சர்ச்சை நாடுகிறார், நிச்சயம் யேசு ஒரு முதலாளி இல்லை என்று நிரூபிக்கிறார். யேசு ஏழைகளைத் தான் முன்னிறுத்தினார், அவர்களுக்காகத்தான் வாழ்ந்தார் என பல பாதிரியார்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு சாத்தான் என்கிறார்கள். சரிதான் ஒரு வேளை வரலாற்றின் படி அந்த ஏழை ஆச்சாரி ஏசு ஏழைகளுக்காகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரை தொடர்ந்து வந்த மதம்? மூருக்கும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தில் தங்களை தொலைத்துவிட்டு ராசி கல், சனி கோயில், ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கணிப்பொறியில் ஜோதிடம் பார்பவர்களுக்கும் சரி இது தீர்வல்ல.

எதிரி கண் முன் நன்றாக தெரியும் போது கண்ணை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று சொல்வது மதநம்பிக்கையாளரின் வேலை. அதற்குத் தான் திரும்பத் திரும்ப சொல்வது.  ஒரு கம்யுனிஸ்ட் கட்சி தான் முறையே ஆய்ந்து திட்டம் தீட்டி முதலாளிக்கு சாவு மணியடிக்க முடியும் என்று. இல்லையென்றால் இப்படி தான் திரிந்து போய்விடுவார்கள்.

நல்ல வேளையாக எங்கே மூர் சுவிசேஷ கூட்டம் நடத்தப் போய்விடுவாரோ என்று  நினைக்கும் போது சர்ச்சில் இருந்து திரும்ப வந்துவிடுகிறார், அமெரிக்க நாட்டின் ஆரம்ப கால தலைவர்களின் (Founding Fathers) அரசியல் ஏட்டை பார்க்கிறார். மக்களுக்காக , ஒன்றாக இணைந்து, சமதர்ம சமூகமாக வாழ வேண்டும் என்று இருக்கிறது. கடைசியில் மூர் இந்த காபிடலிஸத்திற்க்கு மாற்று என்ன என்று கேட்கிறார். பதிலாக ஜனநாயகத்தை முன்வைக்கிறார்.

அமெரிக்காவில் மக்களின் ஜனநாயகம் வந்தால் போதும் என்கிறார். காலம் காலமாக கம்யுனிஸ்டுகளும் அதைத் தான் சொல்லுகிறார்கள். முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் என்ற சொல்லே வெறும் முகப் பூச்சை போலவும் பிணத்தின் மீதான ஒப்பனை போலத்தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பதே இந்த முதலாளித்துவத்தை தூக்கியெறியும் புரட்சியில் தான் வரும்.

ஒருவேளை அது புரிந்ததனால் தான் என்னவோ, இந்த காப்பிடலிஸத்திற்க்கு மாற்று ஜனநாயகம், உண்மையான ஜனநாயகம்தான் என்று சொல்லிமுடித்தவுடன், ‘உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற சர்வதேசிய கீதத்துடன் படத்தை முடிக்கிறார்.

ஆம், உலகத் தொழிலாளர்கள்  ஒன்றுபடும் அந்த காலத்தில் அமெரிக்காவின் கொலைகார முதலாளித்துவம் சவக்குழிக்கு அனுப்பப்படும்.

____________________________________________________

– ஆதவன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கருமாதியைத் தவிர அனைத்திற்க்கும் சேவை வரி! மக்களே உஷார்!!

24

சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வேலை விஷயமாக அடிக்கடி தென்மாநிலங்களுக்குப் போய் வருவார். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவுக்கு அவர் ரசிகர். அவர் மூலமாக அவரது சென்னை நண்பர்கள் பலரும் அதற்கு ரசிகர்கள். ஒவ்வொரு முறை திருநெல்வேலி வழியாக போகும் போது கால் கிலோ பொதிகளாக ஏழெட்டு வாங்கி பையில் போட்டுக் கொள்வார். சென்னைக்கு வந்து நண்பர்களுக்கு ஒவ்வொரு பொதி கொடுத்து வாங்கின விலை 50 ரூபாய் பெற்றுக் கொள்வார் – ‘எப்போதாவது ஒரு முறை என்றால் காசு வாங்காமல் கொடுக்கலாம், மாதா மாதம் அல்லது மாதத்துக்கு இரண்டு தடவை கட்டுப்படி ஆகுமா’ – நண்பர்களுக்கும் மகிழ்ச்சி, அவருக்கும் ஒரு திருப்தி.

விரைவிலேயே இந்த நண்பருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு சேர்ந்து விடும். அவர் கொண்டு வந்து கொடுக்கும் அல்வா விலையுடன் 10% சேவை வரி சேர்த்து 55 ரூபாய் நண்பர்களிடன் வசூலித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அரசாங்கத்துக்குச் செலுத்தி விடும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டு விடும். மத்திய அரசாங்கம் சேவை வரி விதிப்பில் கொண்டு வர உத்தேசித்திருக்கும் மாற்றங்கள் இதைப் போன்ற எண்ணிலடங்கா சேவைகளை வரி வட்டத்துக்குள் கொண்டு வந்து விடும்.

சேவைகள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 63% ஆக இருக்கின்றன. சேவை வரியை மேலும் மேலும் சேவைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருமானம் 20% அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தற்போது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள இன்னின்ன சேவைகளுக்கு 10% வரி என்று இருக்கும் சட்டத்தை மாற்றி, புதிதாக வெளியிடப்படும் ‘எதிர்மறை’ பட்டியலில் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் 10% (அல்லது எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படும் வீதத்தில்) வரி என்பது விரைவில் அமலுக்கு வரப் போகிறது.

எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்றி செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

சேவை வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் நுகர்வோரிடமிருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் இந்த சேவை வரிச்சுமையை அன்றும் இனியும் சுமப்போர் மக்கள்தான்.

நிறுவனங்களில் லாபத்தின் மீது அல்லது தனி நபரின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வருமான வரி போன்ற நேர்முக வரிகளைப் பொறுத்த வரை வரி செலுத்த வேண்டிய பொறுப்பு வரி கட்ட வேண்டியவரிடமே இருக்கிறது. நிறுவனங்களின் லாபத்தின் மீதான கார்பொரேட் வருமான வரி முதலாளிகளின் வருமானத்தில் கை வைப்பது. அதை எத்தனை வழிகளில் ஏய்க்க முடியுமோ அத்தனை வழிகளிலும் அவர்கள் கில்லாடிகளாக இருப்பதால், அரசாங்கம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல், வரி வீதத்தை வெகுவாகக் குறைத்து, தயவு செய்து வரி செலுத்தும்படி முதலாளிகளை அடிபணிந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வரிச்சலுகை அவர்களுக்கு தரப்படுகிறது.

உதாரணமாக ஒருவரது மாதாந்திர தொலைபேசி கட்டணம் 900 ரூபாய் என்றால் அதில் செலவுகள் போக நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம் 10% ஆக இருக்கலாம் (90 ரூபாய்). அதாவது, நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக அனில் அம்பானிக்கு வழங்கப்படும் பல லட்ச ரூபாய் இயக்குனர் சம்பளம், முதலீடாக வாங்கி வைத்த கருவிகளின்/இயந்திரங்களின் தேய்மானம், வங்கியில் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி உள்ளிட்ட எல்லா செலவுகளும் கழித்த பிறகு 90 ரூபாய் லாபம். அந்தவகையில் இலாபத்திற்கு முன்பாகவே மறைமுக இலாபம் முதலாளிகளுக்கு போய்ச்சேருகிறது.

அந்த 90 ரூபாயில் 33% கார்பொரேட் வருமான வரி விதித்தால் அரசுக்குக் கிடைப்பது சுமார் 30 ரூபாய். இதன் மூலம் அரசாங்க வரி வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் வரி வீதத்தை 50% (45 ரூபாய்) அல்லது 80% (72 ரூபாய்) ஆக்க வேண்டியிருக்கும். நம் அதியமான் சொல்வது போல அது முதலாளிகள் மீது தாங்க முடியாத பாரத்தைச் சுமத்தி அவர்களை வரி ஏய்க்கத் தூண்டி விடும். அத்தகைய கஷ்டத்தை முதலாளிகளுக்குக் கொடுக்க விரும்பாமல் அரசு உச்சபட்ச கார்பொரேட் வருமான வரியை சுமார் 33%ஆக வைத்திருக்கிறது. இதுதான் 80களுக்கு முன்பு 90% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் இப்போது 33% ஆக குறைந்த கதை.

அதிகரித்துக் கொண்டே வரும் அரசு செலவுகளுக்கு வேறு என்னதான் வழி? இங்குதான் வருகின்றன சேவை வரி போன்ற வரிகள். அவை நுகர்வோரின் மடியிலிருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கி அரசுக்குக் கொண்டு சேர்ந்து விடும்.

மேலே சொன்ன தொலைபேசி பில்லில் கட்டணத்துக்குக் கீழே சேவை வரி என்று தனியாக கணக்கிட்டு இதை வசூலித்திருப்பார்கள். 900 ரூபாய் மாதாந்திர கட்டணத்தில் சேவை வரியாக 10%யும் கூடுதல் கட்டணம் 0.3% சேர்த்து 993 ரூபாய் ஆக பில் வந்திருக்கும். நிறுவனத்தின் லாபத்திற்கு பங்கம் இல்லாமல் நேரடியாக பயனாளரிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது. ‘வரி ஏய்க்கப்பட்டு விடுமே’ என்று பயப்படத் தேவையில்லை!

சுமக்கப் போவது நேர்மையான பொதுமக்கள்!

வசூலிக்கப் போவது லாபத்தில் பாதிப்பு ஏற்படாத நேர்மையாக இருக்க முடியாத கார்பொரேட்!

வருமானம் வருவது அரசாங்கத்துக்கு!

கார்பொரேட் லாபத்துக்கு 90% வரி விதித்து முதலாளிகளை கொடுமைப்படுத்துவதை விட, மொத்தக் கட்டணத்தில் 10% சேவை வரி விதித்து பொதுமக்களிடமிருந்து நோகாமல் நொங்கு நோண்டி கொள்கிறார்கள் இந்த ‘மக்கள் நல’ அரசுகள்.

“சேவைகளை வரி விதிப்பிலிருந்து விட்டு வைப்பதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. பொருட்களின் விற்பனைக்கு வரி விதிக்கப்படும் போது, பல நாடுகளில் பொருட்கள் விற்பனையும் சேவை விற்பனையும் வரி விதிப்பைப் பொறுத்த வரை ஒரே மாதிரி கருதப்படும் போது நமது நாட்டிலும் சேவைகளின் மீது வரி விதிக்க என்ற திசை நோக்கிய பயணத்தின் எளிய துவக்கமாக, தொலைபேசி, ஆயுள் காப்பீடு தவிர்த்த காப்பீடு, மற்றும் பங்கு தரகர்களின் சேவைகளின் மீது இந்த நிதியாண்டு முதல் 5% வரி விதிக்கப்படுகிறது”

1994-95க்கான நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தி, அப்போதைய நிதி அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து இந்தியாவை வல்லரசாக்கிய மாமேதை மன்மோகன் சிங், இப்படி சேவை வரியை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்தார். 3 சேவைகளின் மீது 5% வரி என்று ஆரம்பித்த சேவை வரி இப்போது 119 சேவைகளின் மீது 10% ஆக உயர்ந்திருக்கிறது.

நிதியாண்டு

வருமானம் (கோடி ரூபாய்)

முந்தைய ஆண்டை விட அதிகரிப்பு

சேவைகளின் எண்ணிக்கை

வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை

முந்தைய ஆண்டை விட அதிகரிப்பு.

1994-95

410

    Base Year

3

3,943

      Base Year

1995-96

846

106.00

6

4,866

23.41

1996-97

1,022

21.00

6

13,982

187.34

1997-98

1,515

48.00

18

45,991

228.93

1998-99

1,787

18.00

26

107,479

133.70

1999-00

2,072

16.00

26

115,495

7.45

2000-01

2,612

23.00

26

122,326

5.91

2001-02

3,305

26.00

41

187,577

53.34

2002-03

4,125

25.00

52

232,048

23.71

2003-04

7,890

91.00

62

403,856

74.04

2004-05

14,196

80.00

75

774,988

91.89

2005-06

23,053

62.00

84

846,155

9.18

2006-07

37,482

63.00

99

940,641

11.17

2007-08

51,133

36.00

100

1,073,075

14.08

2008-09

60,702

19.00

106

1,204,570

8.78

2009-10

58,319

-3.93

117

1,307,286

8.53

கதை இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் சுவராஸ்யம் ஆரம்பிக்க இருக்கிறது.

எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்று செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”

முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொந்தரவு ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்ல நோக்கத்தில் இந்த சுமையை ஏற்றுக் கொள்வதுதான் தேசப் பற்றுள்ள குடிமகனுக்கு அழகு!

தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படப் போவதாக சொல்லப்பட்டுள்ள சேவைகள், இந்த பட்டியலில் சில நீக்கப்படலாம். ஒவ்வொன்றையும் கவனமாக படித்துப் பார்த்து விடுங்கள். இதில் இல்லாத எந்த ஒரு சேவைக்கும் பணம் வாங்கினால் சேவை வரி கட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து விடும்.

1. அரசு, நீதித் துறை, ரிசர்வ் வங்கி மற்றும் அரசு ஆணையங்கள் அளிக்கும் சேவைகள்.

2. அரசு கழகங்களில் நியமிக்கப்படும் தனிநபர்களின் சேவை

3. ஐநா, பன்னாட்டு அமைப்புகள், தூதரகங்கள் அளிக்கும் சேவைகள்.

4. சமூக சேவையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்புகளின் சேவைகள்.

5. இறுதி ஊர்வலம், புதைத்தல், எரித்தல், சவ அறை சேவைகள்

6. விவசாய விளைபொருட்கள், தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு, பால் துறை, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு நேரடியாக அளிக்கப்படும் சேவைகள்.

7. கடன் பத்திரங்கள் விற்பதும் வாங்குவதும் (நேரடி விற்பனை மட்டும்)

8. வட்டி

9. முதலீடுகளுக்கான ஈவுத் தொகை

10. வங்கிகளுக்கிடையே அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகள்

11. பொது போக்குவரத்து மூலமாக மக்களை அழைத்துச் செல்லும் சேவை

12. வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் சேவை

13. பொருட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளுவருக்கு வண்டி ஓட்டும் சேவை

14. சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே, போக்குவரத்து முனையங்கள் போன்றவை, அரசு கட்டிடங்கள் கட்டுதல், ஒற்றை வீடு கட்டிக் கொடுத்தல், அனாதை விடுதிகள் கட்டுதல் போன்ற சேவைகள்.

15. குடியிருப்புக்காக வீடு வாடகைக்கு விடுதல் (குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் மட்டும்)

16. பள்ளி கல்வி (நன்கொடைகள் சேர்த்தியில்லை)

17. 4 கோடிக்குக் குறைவாக முந்தைய ஆண்டு வருமானம் கொண்ட கிளினிக், மருத்துவமனை, உடல்நலம் பேணும் சேவைகள்.

18. காப்புரிமை சேவைகள்.

19. தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகையாளர்கள் வழங்கும் சேவைகள்.

20. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் அளிக்கும் சேவைகள்.

21. மத ரீதியான சேவைகள்

22. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அளிக்கும் சேவைகள்

23. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவைகள்

24. வக்கீல்கள் தனி நபர்களுக்கு வழங்கும் சேவை

25. தேசிய அல்லது பன்னாட்டு விருதுகள் வழங்குதல்

26. கட்டணங்கள்

27. பெட் கட்டுதல் சூதாடுதல் தொடர்பான சேவைகள்.

சேவை விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலைப் பார்க்கும்போது  இதிலும், வங்கிகள், அரசு, நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முதலாளிகள் முதலானோருக்குத்தான் ஆதாயம் அதிகம். மக்களைப் பொறுத்த வரை பேருந்தில் ஏறி, கருமாதிக்கு போனால் மட்டுமே சேவை வரி இல்லை என்பதாக இருக்கிறது இந்த பட்டியல்.

_____________________________________________

– அப்துல்

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வாவ்! பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!

28

“ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டுக்கே முன்மாதிரியாய் விளங்குகிறார்” என்கிறார் மும்பை லீலாவதி மருத்துவமனையின் பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் கிரண் கொயல்லோ. மறுநாளே இதை முன்மொழிந்து வழிமொழிந்து இடைமொழிந்து குதூகலித்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை. நடுத்தர வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்ளவே விரும்புவதாகவும், இந்நிலையில் சுகப்பிரசவமே வேண்டும் என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதி நாட்டுமக்களுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்கிறது அந்த செய்திக் கட்டுரை.

சிசேரியன் ஆகி விடக்கூடாது என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதியைக் காட்டிலும் அவர் மேல் பணம் கட்டியிருக்கும் – மற்றும் கட்டவிருக்கும் – படக் கம்பெனி முதலாளிகளில் இருந்து விளம்பர நிறுவனங்கள் வரை அனைருக்கும் இதயம் தாறுமாறாக எகிறியிருக்கும். லீலாவதி மருத்துவமனை மகப்பேறு வார்டின் முன் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்த அமிதாப் பச்சனின் மனசாட்சிக்குக் கூட அது தெரிந்திருக்கும் – வயிற்றில் ஆப்பரேஷன் கோட்டோடு கவர்ச்சி உடையில் தோன்ற முடியாதல்லவா? அதனால் தான் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் அமிதாப் பச்சனே ட்விட்டரில் இது சுகப்பிரசவம் தான் என்று உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்.

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் 2007-ல் திருமணம் முடித்ததில் இருந்து அவர் கருவுற்ற தேதி வரை அந்தக் கால மாமியார் போல ‘அடியே இன்னுமா மசக்கை ஆகலை’ என்று முதலாளித்துவ ஊடகங்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கருவுற்ற பின்னும் வயிறு தள்ளியிருக்கிறதா என்பதில் ஆரம்பித்து அதை மறைக்க எந்த வகை உடை அணிகிறார் – எதை அணியலாம் என்பது வரைக்கும் ஆங்கில ஊடகங்கள் தமது ‘பேஜ் 3’ பக்கங்களில் அக்கறையுடன் பல ஆலோசனைகளை வழங்கி அவற்றைத் தமது வாசகர்களுக்கு சுவைபட விவரித்துக் கொண்டிருந்தன.

குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா எப்போது வெளியே தலைகாட்டுவார் குழந்தையின் புகைப்படம் எப்போது வெளிவரும் என்ன பெயர் வைப்பார்கள் என்று துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பாக எழுதிக் குவித்தனர். இதற்கிடையே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை வைத்து வடநாட்டில் புக்கிகள் பந்தையம் கட்டி சூதாடியது நடந்தது. சூதாட்டம் என்று வந்த பின் கிரிக்கெட்டாவது குழந்தையாவது – தின்னும் சோற்றைக் கூட விட்டு வைக்காமல் சூதாடும் நாட்டில் குழந்தையை வைத்து சூதாடுவது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஆனால் அதையும் பெருமிதத்துடன் பத்திரிகைகள் எழுதுகின்றன என்பதைக் கொண்டே இவர்களின் தரம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்போது ஐஸ்வர்யா திரும்பவும் எப்போது திரையில் தோன்றி மகிழ்விப்பார் என்கிற எதிர்பார்ப்பில் மூழ்கிக் கிடக்கும் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஆற்றுப் படுத்தும் விதமாக அவர் தனது உடலை மெலிய வைக்க மீண்டும் பயிற்சிகளை  ஆரம்பித்துள்ளார் என்கிற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை பக்கம் பக்கமாக ஓதுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள். அதிலும் ஒரு படி மேலே போன இந்துஸ்தான் டைம்ஸ், பிரசவத்துக்குப் பின் செய்தியாளர்கள் முன் தோன்றிய ஐஸ்வர்யா பாரம்பரிய வேலைப்பாட்டுடன் கூடிய ஹவாய் செருப்பை அணிந்து வந்தார் என்றும் இது கால் தசைகள் மற்றும் பின்புறத்தில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுமென்றும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது. மட்டுமல்லாமல், அந்த செருப்பை எங்கே வாங்கலாம் அதன் விலை என்ன அது போன்ற செருப்பை அணிவதன் பிற பலன்கள் என்ன அதைப் பற்றி உடற்கூறியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கர்ம சிரத்தையாக ‘செருப்பு’ ஆய்வுக் கட்டுரையாக அதை வளர்த்துச் செல்கிறது.

ஐஸ்வர்யாவுக்கு நடந்த சுகப்பிரசவத்துக்காக மகிழ்ச்சிக் கடலில் முழ்கியுள்ள பத்திரிகைகள் இதே நேரத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 18.65 சதவீதமாக உயர்ந்துள்ளதைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கின்றன. அதிலும் நாட்டின் தலைநகரமான தில்லியில் தான் குழந்தை இறப்பு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேகமாக ‘வளர்ந்து’ வரும் தில்லி நகரத்துக்கு மேக்கப் போடுவதற்காக நடந்துவரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளுக்காக இடம் பெயர்ந்து வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு போதிய மருத்துவவசதிகள் ஏதும் வழங்கப்படாததே இதற்குப் பிரதானமான காரணம். மேலும் தில்லியில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் இருக்கும் பிரசவ வார்டுகளுக்கு போதிய மருத்துவர்களோ செவிலியர்களோ பிற உட்கட்டமைப்பு வசதிகளோ எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.

உலகளவில் குழந்தை இறப்பு விகிதம் குறித்து ஐ.நா வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்தியா 152-ம் இடத்தில் இருக்கிறது. இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளும் துனீஷியா, லிபியா, கோஸ்டாரிகா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் கூட இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரத்தில் வல்லரசாப் போகிற நாடு என்று ராக்கெட்டு விட்ட அப்துல் கலாமே சர்டிபிகேட் கொடுத்துள்ள இந்த தேசத்தில், பிறக்கும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வக்கற்ற தேசம் என்பது யதார்த்தமாக இருக்கும் போது ஒரு நடிகை பிள்ளை பெற்றுள்ளதைப் பற்றி இவ்வாறு விவரித்து எழுத அசாத்தியமான தடித்தனம் தேவை.

அமிதாப் பச்சன் தனக்குப் பிறந்துள்ள பேரக்குழந்தைக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். சரியான பெயர் ஏதும் கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பமே புதிய வரவான அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடி வருவதாகவும் தனது ரசிகர்களும் பொருத்தமான பெயர்களைச் சிபாரிசு செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பெயர் ‘அ’ வரிசையில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை போல – இந்த செய்தி வெளியான எல்லா ஆங்கில செய்தி ஊடகங்களின் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பெயர்களை பரிந்துரைத்து வருகிறார்கள்.

இந்தப் பெயர் வைப்பு வைபவம் என்பது ஐஸ்வர்யாவுக்கு மட்டும் கிடைத்த பேறு அல்ல. கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு ‘க’ வரிசையில் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது – கருமாதி!

_________________________________________________

– தமிழரசன்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்